Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Polls’ Category

April 1 – Mannaar, Viduthalai Puligal, Eelam, SriLanka: Elections, Peace (BBC Tamil)

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 03 ஏப்ரல், 2008 

இலங்கையில் மடு தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் கடும் மோதல்கள்

இலங்கையின் வடக்கில் மன்னார் மாவட்டத்தில் கத்தோலிக்கர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமான மடு தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இலங்கை இராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் நடந்துவருவதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

அதேவேளை, மடு மாதா தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினர் தொடர்ந்து எறிகணைகளை வீசி வருவதாக விடுதலைப்புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதற்கு முன்னர் 1999இல் அங்கு நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில், 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால், அதனை மறுத்துள்ள இலங்கை இராணுவத்தினர், மடுமாதா ஆலய வளாகத்துக்குள் விடுதலைப்புலிகள் அத்துமீறி நுழைந்துள்ளதாகவும், அந்தப் பகுதியை சுற்றி கண்ணிவெடிகளை அவர்கள் புதைத்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த மோதல்கள் காரணமாக மடுமாதா தேவாலயம் மற்றும் அதனைச் சுற்றிவரவுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு இடங்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இதற்கிடையே வவுனியா கூமங்குளம் பகுதியில் இரண்டு பொதுமக்கள் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மடு தேவாலயம் – பின்னணித் தகவல்கள்

சுமார் முப்பது வருடமாகத் தொடருகின்ற இலங்கையின் இந்த உள்நாட்டு மோதலில், முதல் தடவையாக, அந்த மடு தேவாலயத்தின் முக்கிய திருச்சொரூபமான கன்னி மரியாளின் சிலை பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆலயத்தில் இருந்து வியாழனன்று அகற்றப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அமைந்துள்ள இந்த தேவாலயத்துக்கு பொறுப்பான மன்னார் மறைமாவட்ட ஆயரான ராயப்பு ஜோசப் அமைதி வேண்டி வெள்ளிக்கிழமையன்று ஒருநாள் உண்ணாவிரதமும், பிரார்த்தனையும் அறிவித்துள்ளார்.

இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் மக்களால் வழிபடப்படுகின்ற இந்த வழிபாட்டிடத்தை இராணுவத்தினாலோ அல்லது விடுதலைப்புலிகளாலோ பாதுகாக்க முடியாது போயுள்ளது. இந்நிலையில் தேவாலயத்தில் இருந்து திருச்சொரூபத்தை அகற்றுவதற்கான ஆயரின் முடிவானது அங்கு நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு ஓர் அடையாளமாகும்.

டச்சுக்காரர்களால் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தேவாலயம் முதன் முதலில் அமைக்கப்பட்டது. தம்மை அழிவிலிருந்து காப்பாற்றியது இந்த கன்னிமரியாளின் சொரூபம்தான் என்று அவர்கள் நம்பினார்கள்.

மடு தேவாலயத்தின் வரலாறு மற்றும் தற்போது அதற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்த செய்திக் குறிப்பினை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்


புதுப்பிக்கப்பட்ட நாள்: 03 ஏப்ரல், 2008

மடு மாதா திருவுருவச்சிலை அகற்றப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது

இலங்கையின் வட பகுதியில் தொடருகின்ற கடுமையான மோதல்கள் காரணமாக, அங்கு பிரபலமான மடு மாதா தேவாலயத்தின் முக்கிய திருவுருவச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு, பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழுகின்ற தமிழ் மற்றும் சிங்கள மக்களால் வணங்கப்படுகின்ற இந்த மடு மாதா தேவாலயம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கு அமைக்கப்பட்டதாகும்.

மடுவை நோக்கி வீசப்படுகின்ற கடுமையான எறிகணை வீச்சுக்கள் காரணமாக மடு மாதா தேவாலயத்தை அண்டியிருந்த மக்கள் எல்லாம் ஏற்கனவே அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும், அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

தேவாலயம்
 

தேவாலய வளாகத்துக்கு அருகில் பல எறிகணைகள் வந்து வீழ்ந்துகொண்டிருப்பதாகவும், இந்த நிலையில் அங்கு இருப்பது பாதுகாப்புக்கு உகந்தது அல்ல என்ற முடிவுக்கு வந்த பங்கிற்கான மதகுருமார், தற்போது ஆலயத்தின் முக்கிய திருவுருவச் சிலையையும் அங்கிருந்து அகற்றி பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு எடுத்துச் செல்வதாகவும், மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஆயரான இராயப்பு ஜோசப்பு தமிழோசைக்குத் தெரிவித்தார்.

அந்தப் பகுதியில் இருந்து தேடிவரும் மக்களுக்கு அருள்பாலித்து வந்த மாதா சிலையை அங்கிருந்து அகற்ற நேர்ந்தமை தமக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆயர் கூறினார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கிழக்கு மாகாணத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிந்தது

மட்டக்களப்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த ஆளும் கட்சிக் கூட்டமைப்பினர்
மட்டக்களப்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த ஆளும் கட்சிக் கூட்டமைப்பினர்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள மாகாண சபைக்கான தேர்தல்களில் 37 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வாக்களிப்புகளில், 1342 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக இலங்கை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் 10 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில் 12 அரசியல் கட்சிகளும், 19 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. 4 அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வந்தவர்கள்
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வந்தவர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில், 11 உறுப்பினர்களுக்கான போட்டியில், 14 அரசியல் கட்சிகளும், 16 சுயேச்சைக்குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. இவற்றில் 2 அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களும் ஒரு சுயேச்சைக்குழுவின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தில், 14 அரசியல் கட்சிகளும், 26 சுயேச்சைக்குழுக்களும் அங்கு வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. ஆனால், அவற்றில் 11 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயேச்சைக்குழுக்களின் வேட்பு மனுக்கள் மாத்திரமே அங்கு ஏற்கப்பட்டிருந்தன.


சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் உள்ளிட்ட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா; கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்குகின்றனர்

இலங்கையின் பிரதான முஸ்லிம் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் பஷீர் சேகுதாவுத் மற்றும் செயலாளர் ஹசன் அலி ஆகியோர் புதனன்று தத்தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

இது குறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை போன்ற மூன்று மாவட்டங்களிலும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் தாம் மூவரும் தலைமை வேட்பாளர்களாகப் போட்டியிடப்போவதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துகொண்டு அதன் சார்பில் எதிர்வரும் போட்டியிடப்போவதாகத் அறிவித்துள்ள கட்சியின் மூத்த உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, கட்சியின் தலைமைப்பீடம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட எடுத்த முடிவினாலேயே தான் அரசுடன் இணைந்துகொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டுமென்பதே முஸ்லிம் மக்களின் பேரவா என்றும் இதனை அடைவதற்கு தான் அரசுடன் இணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிடுவது மிக அவசியம் என்றும் தெரிவித்தார்.

போட்டியிடப்போவதில்லை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இதனிடையே, கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதனன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு புதனன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்த விருப்பமில்லாத இலங்கை அரசு,, பெறுமதியற்ற அரசியல் ஒழுங்கை வடக்கு கிழக்கில் திணிக்க முயல்வதாகவும், இதன் ஒருபடியாகவே அவசர அவசரமாக கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்படுவதாகவும் கூறியுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்ற அமைப்பினரைக் கையாளாக அரசு வைத்திருப்பதாகவும், இவர்கள் மூலம் பலாத்காரமாகவும் வற்புறுத்தியும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறமுயல்வதாகவும், கூட்டமைப்பு குற்றம்சாட்டி, இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தேர்தலில் போட்டியிடாமல் இருக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


மன்னாரின் மடுப் பிரதேசத்தை சமாதான வலயமாக்க வேண்டும்: ஜனாதிபதியிடம் கோரிக்கை

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள மடு தேவாலயத்துக்கு அருகில் இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் தொடரும் நிலையில், மடு தேவாலயப் பகுதியை சமாதான வலயமாகப் பிரகடனப்படுத்தக் கோரி புதன்கிழமையன்று மன்னார் நகரில் அமைதிப் பேரணியொன்று நடைபெற்றுள்ளது.

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர், மடுப்பகுதியை சமாதான வலயமாக்க இலங்கை ஜனாதிபதியிடம் கோரும் மகஜர் ஒன்றை மன்னார் அரச அதிபரிடம் கையளித்தனர்.

இதே கோரிக்கையை அவர்கள் விடுதலைப் புலிகளுக்கும் அனுப்பி வைத்தனர். புனித பாப்பரசருக்கும் அங்குள்ள நிலைமைகள் குறித்த தகவல்களை தாம் அனுப்பி வைத்தாக ஆயர் இல்ல வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில் அனுராதபுரம் மாவட்டம் வில்பத்து சரணாலயப் பகுதியில் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.


Posted in BBC, Eelam, Eezham, Elections, LTTE, Mannaar, Mannar, Peace, Polls, SLMC, Sri lanka, Srilanka, Tigers, TNA, Vote, voters | Leave a Comment »

Primary vs. General Election funds: USA & India Poll Finances: Madhavan

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

ஊழலின் ஊற்றுக்கண்!

செ. மாதவன்

சரியோ தவறோ, இந்தியப் பொருளாதாரம் அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றிச் செல்கிற நிலைமை. அதைப்போல, இந்திய அரசியல் கட்சிகளும் தேர்தல் நிதி, தேர்தல் செலவுகளிலும் அமெரிக்காவைப் பின்பற்றிச் செல்லாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சிகள் தொடங்க வேண்டும்.

அரசியல் செலவுகள் பெருகி வருகின்றன. இதன் விளைவாக அரசியல் லஞ்சம் பெருகி விடும். இன்றுள்ள நிலையே மோசமாக உள்ளது. அதிகாரம் செலுத்தும் சட்ட வலிமையுள்ள அனைத்து அரசு அமைப்புகளும், அதிகாரம் பெற்றுள்ள அரசியல்வாதிகளும், அரசு அலுவலர்களும் லஞ்சத்தில் மூழ்கி வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை.

விதிவிலக்காக உள்ள சிலர் மிகக் குறைவே. இதில் சதவீத வேறுபாடு இருக்கலாமே தவிர அதிக அளவில் லஞ்சம் பெருகி வருவது உண்மை.

அதிகாரம் செலுத்தும் வாய்ப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சொத்துக் குவிப்பதில் உள்ள சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் நிறைந்த விதிமுறைகள் பயனற்றவைகளாக உள்ளன.

1959ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுப்படி, 1967ஆம் ஆண்டு தமிழகத்தில் அமைச்சரவை பொறுப்பேற்றவுடன், அமைச்சர்கள் எந்தத் தொழிலிலும் ஈடுபடக் கூடாது என்ற சட்டவிதியை அமல்படுத்துமாறு அறிஞர் அண்ணா நடவடிக்கை எடுத்தார்.

அமைச்சர்கள் சொத்துகள் வாங்குவதை முறைப்படுத்தி பகிரங்கப்படுத்த சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து அன்றைய முதல்வர் கருணாநிதி உத்தரவிடக் கூறினார். சில செய்திகள் வெளிவந்தவுடன் நடவடிக்கை எடுத்த நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தனி நபர்களைப் பற்றி நினைப்பதைவிட இதுபோன்று அதிகாரங்களைப் பயன்படுத்திப் பணம் குவிப்பதைத் தடுக்க விதிமுறைகள் வகுக்க வேண்டும்.

ஆட்சியின் அடித்தளத்தில் உள்ள ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளைப் பரிசீலிக்கலாம். வீடு கட்ட அனுமதி கொடுப்பதில் பணம் வாங்கும் நிலை உள்ளது. ஒரு அரிசி ஆலைக்கு அனுமதி கேட்டு முறைப்படி மனுச் செய்த ஒருவர், அனுமதி பெற இயலவில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதி வழங்காவிட்டால், மனுச் செய்த விவரங்கள் சரியாக இருந்தால் அனுமதி பெற்றுவிட்டார் என்று கூறி, அரிசி ஆலை நடத்தலாம் என்று நீதிமன்றத் தீர்ப்பை நான் பெற்றுக் கொடுத்த வழக்கு நினைவில் நிற்கிறது. அனுமதி வழங்கும் விதிகளில் தெளிவான விவரங்கள் வகுக்கப்பட்டு இருந்தால் அனுமதி பெறுவதில் நடமாடும் லஞ்சங்கள் தவிர்க்கப்படலாம்.

உள்ளாட்சி மன்றங்கள் திட்டங்களுக்காகச் செலவிடப்படும் முறைகளில் ஒரு பகுதி நிதி ஊழல் செய்ய வழி வகுக்கிறது. சாலைகள், கட்டடங்கள், தொழிற்சாலைகள் அரசின் பல திட்டங்கள் மூலம் நிதி செலவழிக்கும்போது அரசியல்வாதிகள், அதிகாரிகள், பல கட்டங்களில் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பகுதியை பங்கிட்டுக் கொள்வது நடைமுறையாகிவிட்டது. ஒவ்வொரு மட்டத்திலும் சதவீத அடிப்படையில் மக்கள் வரிப்பணம் பாழடிக்கப்படுவது எந்தவிதத்தில் நியாயம்? ஆனால், அதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.

இந்த ஊழலின் தொடக்கம் தேர்தலில்தான் தொடங்குகிறது என்கிற நிலை அண்மைக்காலங்களில் தோன்றிய சரித்திரம். ஊராட்சித் தேர்தலில் லட்சக்கணக்கில் செலவழித்து விட்டேன், அதை ஈடு கட்டுங்கள் என்று ஊராட்சித் தலைவர்களாக வர விரும்புபவர்கள் கூறுகிற விசித்திரத்தைப் பார்க்கிறோம்.

பல லட்சங்கள் செலவழித்துத் தலைவர்களாக வருபவர்கள் கள்ளப் பணத்தைக் குவித்து வைத்திருக்கும் பணக்காரர்களாக இருக்க வேண்டும். அல்லது பதவி கிடைத்தவுடன் மக்கள் வரிப்பணத்தில் கொள்ளை அடித்துப் பணத்தை ஈடுகட்ட முடியும் என்று நினைப்பவர்களாக இருக்க வேண்டும். இந்த உண்மைகள்தான் ஊராட்சித் தேர்தல்களிலும் லஞ்சம் தாண்டவமாடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்த மோசமான தேர்தல் செலவுகள் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் பெருமளவில் நடைபெறத் தொடங்கிவிட்டன. இன்றைய தலைமுறையினருக்கு இது சாதாரணமான நிகழ்ச்சிகளாகத் தோன்றலாம்.

ஆனால் 46 ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல்களைச் சந்தித்தவர்கள், தேர்தல்களை நடத்திய தலைவர்கள், அன்றைய நிலைமைகளுடன் இன்றைய நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்தால், நாடும் மக்களும் சந்திக்கும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பார்த்திடும் தேர்தல் செலவுகள் நாடு எங்கே, எதை நோக்கிச் செல்கிறது என்று கேள்வி கேட்க வைக்கிறது.

1962ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. தேர்தலுக்குப் பணம் கட்டி எழுத்து மூலம் வேட்பாளராகக் கேட்கும் காலம் தோன்றவில்லை. கோவையில் ஒரு மாநாட்டில் தொண்டர்களோடு அமர்ந்து தலைவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது சட்டமன்றத் தேர்தல் வேட்பாளராக என்னுடைய பெயர் அறிவிக்கப்பட்டது. ஒரு சிலரோடு மட்டும் சென்று வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒரு வாடகைக் காரில் மட்டும் தொகுதி முழுவதும் சில தோழர்களுடன் சுற்றி வந்து மக்களைச் சந்தித்தேன். ஊரில் முக்கியமானவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்பது, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்திப்பது என்ற முறைகள் பின்பற்றப்பட்டன. ஊர்ப் பெரியவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அந்த ஊருக்குத் தேவையான பொது வசதிகளை, சாலை அமைத்தல், குடிதண்ணீர் வசதி, பள்ளிக்கூடம் கட்டுதல் போன்ற பொதுக் கோரிக்கைகளை முன்வைத்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காரைக்குடியில் எம்ஜிஆர் கலந்துகொண்ட சிறப்புக்கூட்டத்துக்கு கட்டணம் வசூலித்து, அதில் கிடைத்த 5,000 ரூபாயைத் தேர்தல் செலவுக்குப் பயன்படுத்திய காட்சி நினைவுக்கு வருகிறது. அறிஞர் அண்ணா கட்சியிலிருந்து ரூ. 200 டி.டி. அனுப்பினார். மொத்தத் தேர்தல் செலவு சில ஆயிரங்கள்தான். ஆங்காங்கே கட்சித் தொண்டர்கள்தான் எதையும் எதிர்பார்க்காமல் தேர்தல் வெற்றிக்குப் பாடுபட்டனர்.

அதே போல் 1967ஆம் ஆண்டு தேர்தலின்போதும் எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட சிறப்புக் கூட்டத்தின் மூலம் ரூ. 5,000-ம் வசூல் செய்து கொடுத்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோன்ற சிறப்புக் கூட்டங்கள் நடத்துவது அந்தக்கால அரசியல்.

1962ஆம் ஆண்டு தேர்தலைவிட சில ஆயிரங்கள் கூடுதலாகச் செலவழிந்தது. கட்சிக்காரர்களே முன்னின்று எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தொண்டாற்றி வெற்றி பெறச் செய்தனர். எதிர்த்து நின்றவர் ஒரு ஆலை அதிபர். அவர் வீட்டுக்கே சென்று வாக்குக் கேட்ட நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. பிற்காலத்தில் அவருக்கே அரசின் மூலம் பல உதவிகள் செய்த நிகழ்ச்சிகள் அன்றைய நாகரிக அரசியல் பாரம்பரியத்தை நினைவுபடுத்துகிறது.

ஆனால் இன்று நடைபெறும் தேர்தல்களில் லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவழிப்பது நடைமுறையாகிவிட்டது. தேர்தல் நிதி என்ற பெயரில் ஒவ்வோர் அரசியல் கட்சியும் கோடிக்கணக்கில் நிதி திரட்டுவது நடைபெறுகிறது. லஞ்சம் பெருகிவிட்டதற்குத் தேர்தல் செலவு பெருகிவிட்டதும் காரணமாக அமைந்துவிட்டது.

இப்போது அமெரிக்காவில் நடைபெறும் தேர்தலில் தேர்தல் நிதி திரட்டும் செய்திகள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளன.

அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் ஹில்லாரி கிளிண்டன் மற்றும் ஒபாமா ஆகிய இருவரும், அதிபர் பதவி வேட்பாளராகத் தங்கள் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட, தங்களுக்குள் மக்கள் ஆதரவை நிரூபிக்கும் தேர்தல்தான் இப்போது நடைபெறுகிறது. இதற்கு நிதி சேர்க்கிறார்கள். 2008 ஜனவரி வரை ஒபாமா சேர்த்திருக்கும் நிதி 13,82,31,595 டாலர்கள் அதாவது 552,92,63,800 ரூபாய் என்றும், ஹில்லாரி கிளிண்டன் சேர்த்திருக்கும் நிதி 13,45,36,488 டாலர்கள் அதாவது 538,14,59,520 ரூபாய் என்றும் வெளிவந்துள்ளது. இவர்களைப்போல அந்தக் கட்சியில் வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் இன்னும் பல வேட்பாளர்களும் நிதி திரட்டியுள்ளனர்.

இந்தியாவிலும் அமெரிக்கா போல் பண ஆதிக்கம் தோன்றாமல் இருக்க வேண்டும். நாடாளுமன்றச் சட்டங்கள் இல்லாமலே அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324 தேர்தல் கமிஷனுக்குக் கொடுத்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவுகள் போடலாம். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களைப்போல் நடைமுறைகளைக் கொண்டு வரலாம். ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், விளம்பரங்கள், கார்கள் பயன்படுத்தும் முறைகளை விதிகள் மூலம் வகுக்கலாம். ஊர்வலங்களைத் தடுக்கலாம். பொதுக்கூட்டங்களைக் குறைக்கலாம்.

ஒரு வேட்பாளர் கடந்தகாலச் சாதனைகளைப் பற்றி, எதிர்காலத் திட்டங்கள் பற்றி வாக்காளர்களுக்கு வேண்டுகோளாக அச்சடித்துக் கொடுக்கும் முறையை மட்டும் அனுமதிக்கலாம். வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்குகள் கேட்கலாம்.

46 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா கட்சியினரும் இன்று போலத் தேர்தல் செலவு செய்யவில்லை. அதிகாரத்தைக் காட்டித் தேர்தல் நிதிகளைக் குவித்ததும் இல்லை என்பதுதான் உண்மை. அமெரிக்காவில் பிரசார நிதி என்று சட்டப்படி வசூலிப்பது தேர்தல் கமிஷனால் கண்காணிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கறுப்புப் பணம் தேர்தலில் விளையாடுகிறது.

அரசியல் லஞ்சம் ஒழிந்தால், அதிகாரிகள் லஞ்சமும் ஒழியும். பண ஆதிக்கம் ஒழியும். தேர்தல் போர்வையில் லஞ்சங்களைக் குவிக்கும் அரசியல் அநாகரிகம் ஒழியும். ஏழைத் தொண்டர்களை ஆட்சிபீடத்தில் அமர்த்தும் காமராசர், அறிஞர் அண்ணா வளர்த்த அரசியல் மீண்டும் மலர்ந்திடும். அரசியல் தலைவர்கள் அனைவரும் புதிய சரித்திரம் படைப்பார்கள்.

நல்லாட்சி வேண்டுமானால் நல்ல அரசியல் வேண்டும். நல்ல அரசியல் வேண்டுமானால், தேர்தல் வெற்றிகள் மக்களின் செல்வாக்கின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, பணபலத்தால் அமையக்கூடாது. மக்கள் சக்திக்கு மரியாதை கிடைக்கும் சூழ்நிலையை நமது தேர்தலில் ஏற்படுத்தும் கடமை இன்றைய அரசியல் தலைவர்களுக்கு உண்டு.

(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சர்)

Posted in Actors, AIADMK, America, Anna, Annadurai, Assets, Balance, Bribery, Bribes, Cinema, Clinton, Commission, Conferences, Corruption, DMK, EC, Elections, Expenditure, Films, Finance, Finances, Funds, Huckabee, Income, India, IT, JJ, kickbacks, KK, Madhavan, McCain, MGR, Mitt, Movies, Obama, Party, Polls, Poor, President, Primary, Rich, Romney, Tax, Taxes, US, USA, Wealthy | Leave a Comment »

District Collectors: Sales Tax vs Income Tax – Loopholes, Corruption, Kickbacks in Local Administration

Posted by Snapjudge மேல் மார்ச் 10, 2008

புன்னகைக்கும் பொய் ரசீதுகள்

இரா. சோமசுந்தரம்

சில நாள்களுக்கு முன் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகா அலுவலகம் சென்றபோது, அங்கே ஒரு வட்டாட்சியரிடம் ஒருவர் கடுமையான கோபத்தில் திட்டிக் கொண்டிருந்தார்.

ஆனால் அந்த வட்டாட்சியரோ, “”ஒண்ணும் ஆயிடாதுங்க” என்று சமாதானம் செய்து, பேசுபவரின் குரலை மட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

இருந்தும்கூட, அடக்கமுடியாத கோபமும் அச்சமுமாக தொடர்ந்து கொட்டித் தீர்த்த அந்த நபர், “”இன்னும் எந்தெந்த டிபார்ட்மென்ட்லிருந்து எனக்கு என்கொயரி வருமோ? என் ரசீது புஸ்தகத்தை கொடுங்கய்யா” என்று கேட்டும் கிடைக்காததால், மறுபடியும் திட்டிக்கொண்டே வெளியேறினார்.

சுமார் அரைமணி நேரத்துக்கு அந்த அலுவலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இச்சம்பவம் குறித்து விசாரித்ததில் தெரியவந்தது இதுதான்:

2006-ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது, இந்த தாலுகா அலுவலகம் சில படிவங்களை அச்சிட்டதாக சுமார் ரூ.80 ஆயிரத்துக்கு ரசீதுகள் செலவுக் கணக்கில் காட்டப்பட்டுள்ளன.

உள்ளாட்சித் தணிக்கைத் துறை அலுவலர்கள் இதனைத் தணிக்கை செய்தபோது, யாரோ ஒரு நேர்மையான அலுவலர், இந்த செலவுக்கு ஆட்சேபக் குறிப்பை எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் – “”எல்லா படிவங்களும் தேர்தல் ஆணையம் அச்சிட்டுத் தரும்போது, தாலுகா அளவில் எத்தகைய படிவம் அச்சிடப்பட்டது என்பதற்கான சான்றுகள் அளிக்கப்படவில்லை. வாக்காளர்களுக்கு அறிவுரை என்ற நோட்டீஸ் அச்சிடப்பட்டதாக கூறப்பட்டபோதிலும், அதற்கு ரூ.2000-க்கு மேல் செலவாகியிருக்க வாய்ப்பு இல்லை. ஆகவே இந்தச் செலவினத்தை ஆட்சேபிக்கிறேன்” என்று அந்தக் குறிப்பில் அவர் எழுதியுள்ளார்.

உள்ளாட்சித் தணிக்கைத் துறையின் அறிக்கைகள் வழக்கமாக உயர்அதிகாரிகளுக்கும் அரசுக்கும் அனுப்பப்படும் என்பதோடு, தலைமை கணக்கு தணிக்கை (ஏ.ஜி.) அலுவலகத்துக்கும் ஒரு நகல் அனுப்பப்பட வேண்டும்.

அப்படி அனுப்பப்பட்ட இந்த ஆட்சேபக் குறிப்பை கண்ட, தலைமை கணக்கு தணிக்கை அலுவலக அதிகாரி ஒருவர், “”சுமார் 15 நாள்களில் ரூ.80 ஆயிரத்துக்கு அச்சிடும் இத்தகைய அச்சகம், ஓராண்டுக்கு எவ்வளவு சம்பாதிக்கக்கூடும்! இந்த அச்சகம் முறையாக வருமான வரி செலுத்தியுள்ளதா என்பதை ஆய்வு செய்யலாம்” என்று மற்றொரு குறிப்புடன் வருமான வரித்துறைக்கு அனுப்பிவிட்டார்.

வருமான வரித்துறை இத்தனை விஷயங்களையும் குறிப்பிட்டு, மொத்தக் கணக்குகளுடன் நேரில் வரவும் என்று அச்சக உரிமையாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

வட்டாட்சியரிடம் கடும் கோபத்தில் கத்திக் கொண்டிருந்தவர் அச்சகத்தின் உரிமையாளர். அந்த அச்சகமோ அந்த நகரத்திலேயே மிகச் சிறிய அச்சு இயந்திரத்தை வைத்து, கல்யாணப் பத்திரிகை அச்சடித்து வருவாய் ஈட்டும் மிகச் சிறிய அச்சுக்கூடம். வருமானத்துக்கே திண்டாடும் அவருக்கு வருமான வரித்துறையின் நோட்டீஸ் வந்தால் எப்படி இருக்கும்?

இச்சம்பவம் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சியைத் தந்தது. நியாயம் செத்துப்போவதில்லை. உண்மைகள் கொஞ்ச காலம் உறங்கலாம். ஆனால் அது ஒரு நாள் விழிக்கவே செய்கிறது. “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகிறது’. ஆனால் அப்போதே, உடனே அல்ல. சரி, வாழ்க்கையொன்றும் திரைப்படம் அல்லவே, உச்சக் காட்சியில் நொடியில் தர்மம் வெற்றிபெற!

இது குறித்து மேலும் விசாரித்தபோது இன்னொரு தகவலும் தெரியவந்தது. இத்தகைய ரசீதுகள் தொடர்பான ஆட்சேபக் குறிப்புகளை, விற்பனை வரிப்பிரிவினர்தான் முதலில் கையில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் வருமான வரித்துறை கையில் எடுத்திருப்பதைப் பார்க்கும்போது, மாநில அரசு, விழிப்புடன் இல்லை என்றாகிறது.

இத்தகைய போலி ரசீதுகள் உள்ளாட்சி முழுவதிலும் அதிக அளவில் இருக்கின்றன. விற்பனை வரித் துறை அதிகாரிகள் விசாரித்தால், பல பூதங்கள் வெளிக்கிளம்பும் என்கிறார்கள்.

உள்ளாட்சித் துறைகளில் ரசீதுகள் மூலம் பல கோடி ரூபாய் திசைமாறுகிறது. இதற்கு அடிப்படையான காரணம் மாவட்ட ஆட்சியர் வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட விலைப்பட்டியல்தான்.
அரசுக்குத் தேவையான பொருள்கள் வாங்கும்போது கூட்டுறவுத் துறை நிறுவனங்கள் நீங்கலாக அங்கீகரிக்கப்பட்ட பிற நிறுவனங்கள் எவை, அவற்றில் எந்தெந்த பொருள்களுக்கு என்ன விலை என்று மாவட்ட ஆட்சியர் அங்கீகரிக்கும் இந்த விலைப்பட்டியலை ஆதாரமாக வைத்துத்தான் தணிக்கை செய்யப்படுகிறது.

நிறுவனம் பட்டியலில் உள்ளதா, விலை சரியா என்பதை மட்டுமே தணிக்கை அலுவலர்கள் சரிபார்க்க முடியும். இந்த நிறுவனம் வெறும் “”ரசீது நிறுவனமா” என்பதை ஆய்வு செய்ய இயலாது.

பொதுச்சந்தையில் ஒரு பொருள் விற்கப்படும் விலையைக் காட்டிலும் குறைந்தது 10 சதவீதம் கூடுதல் விலையே இந்த அங்கீகரிக்கப்பட்ட விலைப் பட்டியலில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதில் சந்தேகம் இருக்குமானால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரூ.10 செலுத்தி, அந்தப் பட்டியலை வாங்கிப் பார்த்தால் நிறுவனங்களும் விலைகளும் வெளிச்சமாகிவிடும் என்கிறார்கள்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத்தான் போறேன். வர்றீங்களா?

Posted in Administration, administrative units, Audit, Bribery, Bribes, Circle Inspector, Collections, Collector, Collectorate, Corruption, Departments, Dept, District, District Collectors, Elections, Govt, IAS, Income, Inefficiency, Inspection, Inspectors, Investigations, IT, kickbacks, local, Local Body, Local Body election, local body elections, Local Body Polls, Local Civic Body, Local Elections, Local Polls, Local self Governance, Loopholes, Notices, officers, Politics, Polls, revenue collection, Revenue District, Revenues, Reviews, sarkeel, Somasundaram, Somasundharam, Somasuntharam, ST, Tahsil, Taluk, Taluka, Taluq, Tax, Union, zilla collector | Leave a Comment »

U Nirmala Rani: Women Rights – Perspectives, Timeline, Information

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

“இரும்புத் தாடை தேவதைகள்’

வழக்கறிஞர் உ . நிர்மலா ராணி

இன்று சர்வதேச பெண்கள் தினம். 1908ம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாள் நியூயார்க் நகரில் ஆயிரக்கணக்கான பஞ்சாலை பெண் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை கோரி நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தை நினைவு கூறும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அந்தப் போராட்டத்தின் இரண்டாவது முக்கிய கோரிக்கை தான் பெண்களுக்கு வாக்குரிமை!

அந்தக் காலத்தில் வாக்குரிமை என்பது வசதி படைத்தவர்கள் அதிலும் ஆண்களுக்குத்தான் ஓட்டுரிமை. சொத்து வைத்திருக்காத ஆண்கள், வேலையாட்கள், கிரிமினல்கள் இந்த வரிசையில் இறுதியாகப் பெண்கள். இவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை மறுக்கப்பட்டது.

பெண்களுக்கு வாக்குரிமை கோரி நடந்த ஒரு நூற்றாண்டுப் போராட்டம்கூட வரலாற்றில் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் மறைக்கப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த சமூகப் போராளி எலிசபெத் கேண்டி ஸ்டாண்டன், லண்டனில் நடந்த அடிமை முறை எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றபோது, பெண்கள் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அடிமை எதிர்ப்பு மாநாட்டிலேயே பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவது கண்டு ஆத்திரமுற்ற எலிசபெத், 1848-ல் செனிகா ஃபால்ஸ் என்ற இடத்தில் பெண்களைத் திரட்டி கோரிக்கைப் பிரகடனத்தை வெளியிட்டார். அது தான் அமெரிக்காவில் பெண்கள் வாக்குரிமைக்கான போராட்டத்தின் முதல் வித்து!

ஆரம்பத்தில் வாக்குரிமை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சாத்வீகமான போராட்ட வடிவங்களைக் கையாண்ட பெண்கள், கறுப்பின மக்களுக்கு சம உரிமையளித்த “”சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்று விளம்பும் 14, 15 சட்ட திருத்தங்களிலிருந்து பெண்கள் மட்டும் விலக்கப்பட்டபோது பொங்கி எழுந்தனர்.

அமெரிக்காவில் எலிசபெத் கேண்டி ஸ்டாண்டன், சூஸன் பி ஆண்டனி, ஆலிஸ் பால் ஆகியோரும், இங்கிலாந்தில் எம்மலின் பாங்கர்ஸ்ட் மற்றும் அவரது 2 புதல்விகள் கிறிஸ்டபெல் மற்றும் சில்வியா ஆகியோரும் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தினர். நாடாளுமன்றமும் அரசு அலுவலகங்களும் முற்றுகையிடப்பட்டன. வாயில்களில் வாக்குரிமை கேட்டு பேனர் பிடித்தபடி நாள்கணக்கில் நின்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் காரி உமிழ்ந்தனர்.

கோபமடைந்த பெண்கள் அரசு அலுவலகக் கண்ணாடிக் கதவுகளை சரசரவென்று கல்லெறிந்து உடைத்து நொறுக்கினர். தந்தி வயர்களை வெட்டினர். அதிகாரிகளின் கார் கண்ணாடிகளைத் தூளாக்கினர். எரி குண்டுகளை வீசி அரசு அலுவலகங்களைத் தாக்கினர். கைதாகினர். சிறை சென்றனர். உண்ணாவிரதமிருந்தனர். சிறை அதிகாரிகள் வன்முறையை உபயோகித்த போதும் வாய் வழியாக அவர்களுக்கு உணவூட்ட இயலவில்லை. எனவே தான் இந்தப் பெண் போராளிகளுக்கு “இரும்புத் தாடை தேவதைகள்’ என்ற செல்லப்பெயர் சூட்டப்பட்டது. எனவே சிறை அதிகாரிகள் அவர்களைக் கட்டாயப்படுத்தி மூக்கின் வழியாக, குழாய் மூலமாக உணவைச் செலுத்தினர்.

உச்சகட்டமாக 1913 ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் எமிலி வைல்டிங் டேவிஸன் என்ற பெண்மணி பெண்களின் ஓட்டுரிமைக்காக யாரும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்தார். புகழ்பெற்ற குதிரைப் பந்தய மைதானமான டெர்பியில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் குதிரையான ஆன்மர், புயல் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது கையில் வாக்குரிமை கோரும் அட்டையுடன் குறுக்கே பாய்ந்தார் எமிலி! குதிரையின் கால்களில் மிதிபட்டு சின்னாபின்னமானார். வாக்குரிமைக்காக உயிர்த்தியாகம் செய்த ஒரே பெண் என்ற புகழையும் பெற்றார்.

இதையடுத்து இங்கிலாந்தில் 1918-ல் நிபந்தனையுடன் கூடிய வாக்குரிமையும், 1928-ல் முழுமையான வாக்குரிமையும் வழங்கப்பட்டது.

அமெரிக்காவிலும், 1919-ல் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் மசோதா, 19-வது சட்டத் திருத்தமாக நிறைவேற்றப்பட்டாலும் அமெரிக்க சட்ட விதிகளின்படி இந்தத் திருத்தம் சட்டரீதியாக்கப்பட வேண்டுமென்றால், 4-ல் 3 பங்கு மாகாணங்கள் அதாவது 36 மாகாண நாடாளுமன்றங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாகாண நாடாளுமன்றத்திலும் மசோதா நிறைவேற பெண்கள் போராட வேண்டியிருந்தது. மசோதா எதிர்ப்பாளர்கள் அதைத் தோல்வியடையச் செய்யும் பொருட்டு குறைந்தபட்ச கூட்ட வருகையை (கோரம்) தவிர்க்க இரவோடு இரவாக நாட்டை விட்டுப் பறந்தனர். கூட்டங்கள் நடத்த விடாமல் வெளிநடப்புச் செய்தனர். 35 மாகாணங்கள் அங்கீகரித்துவிட, கடைசி மாகாணமான டென்னிஸீயில் மசோதாவைத் தோற்கடிக்க போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்ப்பாளர்கள் தேற்றி வைத்திருந்தனர். மசோதா ஆதரவாளர்கள் மஞ்சள் ரோஜாவையும் எதிர்ப்பாளர்கள் சிவப்பு ரோஜாவையும் அணிந்திருந்தனர். இதைக் கணக்கெடுத்துப் பார்த்தபோது மஞ்சள் ரோஜாவை அணிந்தவர்கள் 47 பேர் எனவும் சிவப்பு ரோஜாவை அணிந்தவர்கள் 49 பேர் எனவும் தெரியவந்தது.

வாக்கெடுப்பின் முதல் சுற்றில் குடியரசுக் கட்சியை சார்ந்த பேங்க் டர்னர், தான் அணிந்திருந்த சிவப்பு ரோஜாவைத் தூக்கியெறிந்துவிட்டு தடாலடியாக அணி தாவினர். இதனால் இரண்டாவது சுற்றில் ஆதரவும், எதிர்ப்பும் 48 – 48 என்று சம நிலையிலிருந்தது.

3-வது சுற்றில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் அமெரிக்க பெண்களின் தலையெழுத்தையே மாற்றியது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 24 வயதான ஹாரிபர்ன் மசோதாவுக்கு எதிர்ப்பாளர். அவர் வாக்களிக்கப் போகும் இறுதி நொடியில் ஒரு துண்டுச் சீட்டு அவருக்கு வந்தது. அதைக் கண்ணால் ஸ்கேன் செய்த ஹாரிபர்ன் மசோதாவுக்கு ஆதரவாக கையைத் தூக்கி விட்டார். மசோதா நிறைவேற்றப்பட்டது. துண்டுச் சீட்டை அனுப்பியது அவருடைய தாயார் ஃபெப் என்ஸ்மிங்கர் பர்ன். அதில் “”நல்ல பையனாக நடந்து கொள்! பெண்கள் வாக்குரிமைக்கு ஆதரவாக ஓட்டுப்போடு” என்றிருந்தது. தாய் – தனயன் சென்டிமென்ட்தான் கடைசியில் அமெரிக்கப் பெண்களுக்கும் கைகொடுத்தது.

ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுப்பதற்கான முதல் படியை பெண்கள் வெற்றிகரமாகக் கடந்த பிறகும் கூட தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து மந்திரியாக நியமிக்கப்படுவது, அவர்களுக்கு வழங்கப்படும் துறைகள் வரை பெண்கள் இன்றும் பாரபட்சங்களை அனுபவித்து வருகிறார்கள். இதற்கு காரணம் பெண்களின் இடம் என்பது வீட்டின் மூலையில் ஒரு சமையலறையே தவிர நாடாளுமன்றம் அல்ல என்ற ஐயாயிரம் ஆண்டு மனப்போக்கு இன்னமும் மாறவில்லை.

பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து (1893). சமீபத்திய நாடு குவைத் (1995). இன்றும் வாக்குரிமை அளிக்க மறுப்பது சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளும்தான்!

உலகத்தின் முதல் பெண் மந்திரி 1917ல் ரஷியாவில் போல்ஷ்விக் கட்சியால் காபினெட் மந்திரியாக நியமிக்கப்பட்ட அலெக்ஸôண்டர் கோலந்தாய். இங்கிலாந்தில் கூட முதன்முறையாக 2006ல் தான் பரோனஸ் ஹேமேன் என்ற பெண்மணி சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

இண்டர் பார்லிமெண்டரி யூனியன் (ஐடம) என்ற அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி சர்வதேச அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 85 சதவீதம் ஆண்கள்தான்! உலக அளவில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகம் கொண்டவை (40 சதவீதம்) நார்வே, ஸ்வீடன், டென்மார்க் எனும் ஸ்காண்டிநேவிய நாடுகள்தான். இதில் இந்தியாவின் நிலைதான் மிக மோசம்.

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் பெண் உறுப்பினர்கள் 8.3 சதவீதம்தான். இதை சரிசெய்ய 1996ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடஒதுக்கீடு மசோதா இன்னமும் வெளிச்சத்தை காணவில்லை.

2002 – 2004ல் 20 சட்டமன்றங்களுக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்ட 2432 வேட்பாளர்களில் பெண்கள் 1525 பேர். அதாவது பாதிக்கு மேல்! ஆனால் ஜெயித்தது 137 பெண்கள்தான். இது 5.6 சதவீதம், 33 சதவீதம் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்திருந்தால் இன்று 811 பெண் உறுப்பினர்கள் சட்டமன்றங்களில் இருந்திருப்பார்கள்.

பெண் போராளி úஸô ஹைட் – 1916-ல் கனடாவின் நாடாளுமன்றத்தில் வாக்குரிமை மனுவைத் தாக்கல் செய்து பேசியபோது “”கணவான்களே! வாக்குரிமை மறுக்கப்பட்டவர்கள் பட்டியலில் பெண்கள் சேர்க்கப்படுவதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம். நாங்கள் முட்டாள்களும் அல்ல! முடியாதவர்களும் அல்ல! நாங்கள் பெண்கள்! வாக்குரிமையில் நாங்கள் சமத்துவம் கேட்பது சலுகையின் அடிப்படையில் அல்ல! நியாயத்தின் அடிப்படையில்” என்று முழங்கினார்.

இந்தியப் பெண்களாகிய நாங்களும் கேட்கிறோம்! நாடாளுமன்றவாதிகளே! தயவுசெய்து பாலின சமத்துவ நீதியின் மொழியிலே பேசுங்கள்! 33 சதவீதம் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுங்கள்! இந்திய நாட்டில் சமத்துவத்தை விரும்பும் ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதை உலகிற்கு உணர்த்துங்கள்!

Posted in Disparity, Elections, Females, Freedom, Gender, History, HR, Independence, Info, MLA, MP, NirmalaRani, Oppression, Politics, Polls, Power, rights, Sex, She, Stats, Timeline, Vote, voters, Women | Leave a Comment »

Mar 7: Eezham, Sri Lanka, LTTE, Elections, Batticaloa, War, Murders – Updates & News

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 18 மார்ச், 2008 

மட்டக்களப்பு உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் ஜனாதிபதி ராஜபக்ஷ முன் பதவியேற்பு

மட்டக்களப்பு நகர மேயராக பதவியேற்ற சிவகீதா
மட்டக்களப்பு நகர மேயராக பதவியேற்ற சிவகீதா

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மாநகரசபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்காக நடாத்தப்பட்ட தேர்தலில் வெற்றிபெற்று தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள், அரச அதிகாரிகள், அரசியல் தலைவர்களெனப் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

இந்த வைபவத்தின்போது உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்த வெற்றிக்கு அடுத்தப்படியாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெற்றி அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளதோடு, விரைவில் வடபகுதி மக்களுக்கும் ஜனநாயக உரிமை, அபிவிருத்தி மற்றும் சுதந்திரம் போன்றவற்றைப் பெற்றுக்கொடுக்க தனது அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நகர மேயராகப் பதவியேற்ற சிவகீதா பிரபாகரன் அவர்கள் கிழக்கில் இடம்பெற்ற தேர்தலின்போது கிடைக்கப்பெற்ற வெற்றியானது, தமது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்குக் கிடைத்த வெற்றி என்பதனைவிட, கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களுக்குக் கிடைத்த ஒட்டுமொத்த வெற்றி என்று கூறினார்.

அத்துடன் இந்த வெற்றியினூடாக அப்பகுதி மக்களுக்குச் சேவையாற்றுவதற்கு தமக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய இந்த வைபவத்தின்போது, இந்த ஒன்பது உள்ளூராட்சிசபைகளின் உடனடி நடவடிக்கைத் தேவைகளுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலா சுமார் 25 லட்சம் ரூபாயையும், ஒவ்வொரு உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கும், அவர்கள் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக தலா ஒரு லட்சம் ரூபாய்களும் சன்மானமாக வழங்கியதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 14 வருடங்களின் பின்னர் இடம்பெற்ற இந்த ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், எட்டு உள்ளூராட்சி சபைகளில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பும், மட்டக்களப்பு மாநகர சபையை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டு முன்னணியும் வெற்றிபெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


மீண்டும் சிவில் நிர்வாகத்திடம் மட்டக்களப்பு மாநகரசபைக் கட்டிடம்

மட்டக்களப்பு மாநகர சபைக் கட்டிடம்
மட்டக்களப்பு மாநகர சபைக் கட்டிடம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்ததையடுத்து, கடந்த 17 வருடங்களுக்கு மேலாக பாதுகாப்பு தரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வந்த மட்டக்களப்பு மாநகர சபைக் கட்டிடத் தொகுதி இன்று மாநகர சபை நிர்வாகத்திடம் அதிகாரபூர்வமாக மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது.

மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை 1990இல் முறிவடைந்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மாநகர சபைக் கட்டிடத்தொகுதி உட்பட சில கட்டிடங்கள் இராணுவத் தேவைகளுக்காக எடுக்கப்பட்டிருந்தன.

இதன் காரணமாக மாநகரசபை, பிரதேச செயலக கட்டிடத் தொகுதிக்கு மாற்றப்பட்டு தொடர்ந்தும் அக் கட்டிடத்திலேயே தற்காலிகமாக இயங்கி வந்தது.

1990 ம் ஆண்டு முதல் 3 வது படைப்பிரிவு இராணுவ தலைமையகத்தின் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இக் கட்டிடத் தொகுதி கடந்த ஆண்டு முற்பகுதியில் விசேட அதிரடிப் படையினரால் பொறுப்பேற்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.


மன்னாரில் தொடரும் கடும் மோதல்கள்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில், இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெற்ற, விடுதலைப் புலிகளின் இருவேறு தாக்குதல் சம்பவங்களில், இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 13 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மன்னார் அருவியாற்றுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டிருந்த படையினர் மீது, இன்று காலை 7.10 மணியளவில் விடுதலைப் புலிகள் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

இந்தச் சம்பவத்தில் இரண்டு இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டிருக்கின்றது.

இதேவேளை, மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் இராணுவ முன்னரங்க பிரதேசத்தில் நேற்றிரவு 8 மணிமுதல் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின்போது, விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை தாக்குதலில் 11 இராணுவத்தினர் காயமடைந்ததாக மன்னாரிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த படையினர் மன்னார் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக அநுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது பெய்து வரும் அடை மழைக்கு மத்தியிலும் இந்த பகுதியில் நேற்றிரவு முதல் இன்று காலை வரையில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாகவும் மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

—————————————————————————————————————-

புதுப்பிக்கப்பட்ட நாள்: 17 மார்ச், 2008

இலங்கை அரச தொலைக்காட்சி ஊழியர்கள் தாக்கப்பட்ட சர்ச்சை: தொழிற்சங்கத்தினரைச் சந்தித்துள்ளார் ஜனாதிபதி

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் சிலர் அண்மையில் தாக்கப்பட்டது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து அந்நிறுவனத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இலங்கை ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது சர்ச்சைக்கு சுமூகமான தீர்வு ஒன்று காணப்பட்டிருப்பதாகவும், தேசிய தொலைக்காட்சி சேவை முழுமையாக இயல்புநிலைக்கு திரும்பிக்கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் சந்திரபால லியனகே தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதாகவும், தேசியத் தொலைக்காட்சி சேவைகளை பாதிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளுக்கு துணைபோக வேண்டாம் என்று ஊழியர் சங்கத்தினரிடம் அவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் சந்திரபால லியனகே கூறினார்.

திங்கட்கிழமை முன்னதாக, தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் பலர் தத்தமது கருமங்களிற்காக நிறுவனக் கட்டிடத் தொகுதிக்குள் செல்லமுடியாதவாறு பொலிசாரினால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், தங்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அணித்தாகவுள்ள இந்தக் கட்டிடத்தொகுதியினைச் சுற்றி வழமைக்கும் அதிகமான பொலிசாரும், இராணுவத்தினரும், கலகம் அடக்கும் பொலிசாரும் நிறுத்தப்பட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தது.


போக்குவரத்துத் தடைகளால் பாதிப்பு: வவுனியா வழக்கறிஞர்கள் புகார்

ஏ9 வீதியில் போக்குவரத்துத் தடைகள் நீடிக்கின்றன

இலங்கையின் வடக்கே ஏ9 வீதியின் மதவாச்சி சோதனைச் சாவடியில் தொடரும் வாகனப் போக்குவரத்துத் தடை காரணமாக வவுனியா மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சட்டத்தரணிகள் இயல்பாக வெளி மாவட்ட நீதிமன்றங்களுக்குச் சென்றுவர முடியாதிருப்பதாகவும் வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தப் பிரயாணக் கஷ்டங்கள் குறித்து உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சட்டத்தரணிகள் தமது வாகனங்களில் மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகப் பிரயாணம் செய்வதற்கு உரிய அனுமதியைப் பெற்றுத் தருமாறு பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அவர்களிடம் கடிதம் மூலமாகக் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக வாகனப் போக்குவரத்துக்கான தடை தொடர்வதனால், முக்கிய வழக்கு விசாரணைகளுக்காக கொழும்பில் இருந்து சிரேஷ்ட சட்டத்தரணிகள் வவுனியாவுக்கு வருவதற்குத் தயக்கம் காட்டுவதாகவும், இதனால் பல வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டு நீதிமன்றச் செயற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், வவுனியா சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் முருகேசு சிற்றம்பலம் தெரிவித்தார்.

இவை குறித்த மேலதிக விபரங்களை வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் வழங்கக் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 16 மார்ச், 2008

அனுரா பண்டாரநாயக காலமானார்

இலங்கையின் மிக முக்கிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் அனுரா

இலங்கையின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவருமான அனுரா பண்டாரநாயக ஞாயிறன்று கொழும்பில் காலமானார்.

அண்மைக் காலமாக நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த இவருக்கு வயது 59.

1977ஆம் ஆண்டு ஜூலை மாதம் நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்த இவர், பலதடவை பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துவந்துள்ளார்.

1983-89 காலப் பகுதியில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய இவர், 2000ஆம் ஆண்டில் நாடாளுமன்ற சபாநாயகராகவும் பதவி வகித்தார்.

இவரது தந்தை எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக, தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோர் இலங்கையின் பிரதமர்களாக விளங்கினர். பின்னர் இவரது சகோதரியான சந்திரிகா குமாரதுங்க சுமார் 11 வருடங்கள் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக விளங்கினார். ஆனாலும் பண்டாரநாயக குடும்பத்தின் ஒரேயொரு புதல்வரான அனுர பண்டாரநாயகவின் அரசியல் வாழ்க்கை என்பது பலத்த சிக்கல்கள் நிறைந்ததாகவே இருந்துவந்தது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.


மன்னார் மோதல் விபரங்கள்

இலங்கையின் வடக்கே இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மன்னார் நகரிலும், வவுனியாவிலும் ஞாயிறன்று நடத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் இராணுவச் சிப்பாய் ஒருவரும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் கொல்லப்பட்டனர். இதில் இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

மன்னார் புறநகர்ப் பகுதியில், தலைமன்னார் வீதியில் கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஞாயிறு காலை சுட்டுக் கொல்லப்பட்டதாக மன்னார் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் பிஸ்டல் குழுவைச் சேர்ந்தவர்கள், இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தைச் செய்துள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

இதேவேளை, வவுனியா, தாண்டிக்குளம் – கல்மடு வீதியில், மருக்காரம்பலை பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில், இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 3 படையினர் காயமடைந்ததாக இராணுவத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 14 மார்ச், 2008

இலங்கையில் ஐரோப்பிய வெளியுறவு அதிகாரிகள்

மனோ கணேசன்

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு இயக்குநரக அதிகாரிகள் ஹெலென் கேம்பெல் அவர்களும், ஆண்ட்ரியா நிகோலஜ் அவர்களும் தற்போது இலங்கை வந்திருக்கிறர்கள்.

மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் இவர்களை சந்தித்து பேசியிருகிறார்.

இந்த சந்திப்பின்போது விவாதிக்கபட்ட விடயங்கள் குறித்து தமிழோசையிடம் பேசிய மனோ கணேசன், இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஆராய்வதற்காக இந்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் வந்திருப்பதாகக் கூறினார்.

இலங்கையின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்த விசாரணைகளைக் கண்காணித்துவந்த சுயாதீன மாண்புமிக்கோர் குழுவினர் தமது பணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் நிலையில், அதற்கு மாற்றாக, தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவை ஏற்பாடு செய்து விசாரணைகளைக் கண்காணிக்கச் செய்வது குறித்து இலங்கை அரசு மாற்று யோசனை தெரிவித்திருப்பது பற்றி ஐரோப்பிய அதிகாரிகள் தன்னிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதாகவும் மனோ கணேசன் கூறினார்.

அவர் தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கை மனித உரிமை நிலவரம்: அமெரிக்கக் குற்றச்சாட்டு அவதூறு என்கிறது இலங்கை அரசு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ராபர்ட் ஒ பிளேக்

இலங்கையின் மனித உரிமைகள் சூழலை விமர்சிப்பதிருப்பதன் மூலம், அமெரிக்கா, விடுதலைப் புலிகளுக்கு ஒரு வாழ்க்கைச் சந்தர்ப்பத்தை கொடுக்கிறது என்று இலங்கை அரசு குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்க அரசுத்துறையின் வருடாந்திர அறிக்கையில், இலங்கையின் மனித உரிமை நிலவரம் 2007ல் மோசமடைந்துள்ளது என்று கூறப்பட்டிருப்பது இலங்கை அமைச்சர்களுக்கு எரிச்சலைத் தந்துள்ளது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அடங்கிய அவதூறு, குத்தல் பேச்சு, மிகையான விமர்சனம் என்றெல்லாம் அமெரிக்க அரசுத்துறையின் அறிக்கையை இலங்கை வருணித்துள்ளது.

அரசாங்க தரப்பினர் செய்த சட்டவிரோத ஆட்கொலைகள், அவர்களின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் சிறார்களைப் படையில் சேர்த்தது போன்றவற்றை அமெரிக்க அரசுத்துறை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசின் பதிலடிக்குப் பின்னரும், தமது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே தமது நிலைப்பாடு, அதிலிருந்து தாங்கள் பின்வாங்கவில்லை என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.


திருகோணமலை மாணவர்கள் கொலை: மாணவரின் தந்தை வீடியோ வாக்குமூலம்

2006ல் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டது தொடர்பான மரண விசாரணையில், ராஜீஹர் என்ற மாணவனின் தந்தையான டாக்டர் மனோகரன் வீடியோ மூலம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அந்தத் தமிழ் மாணவர்களை விடுதலைப் புலிகள் என்று சந்தேகித்து இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர் என்று அரசாங்க அமைச்சர் ஒருவர் தன்னிடம் ஒப்புக்கொண்டதாக, இலங்கையை விட்டு தற்போது வெளியேறிவிட்ட மனோகரன் கூறியுள்ளார்.

கொழும்பில் வீடு தருகிறோம், இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று தன்னிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திருகோணமலை சம்பவம் மற்றும் பிற பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளைக் கண்காணித்துவரும் சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு, அரசாங்கம் விசாரணைகளில் தலையிடுவதாகவும், சாட்சிகளைப் பாதுகாக்கத் தவறுவதாகவும் கூறி, தமது பணியிலிருந்து விலகுகின்றனர்.


அடைமழை அல்லலில் மன்னார் அகதிகள்

 

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் வழமைக்கு மாறாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்த குடும்பங்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அங்குள்ள தொண்டு நிறுவனப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள முசலி பிரதேசத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவம் கைப்பற்றியதை அடுத்து, அந்தப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 800 குடும்பங்கள் நானாட்டான் பகுதியில் பல இடங்களில் கொட்டில்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அத்துடன், மன்னார் மாவட்டத்தின் விடுதலைப் புலிகளுடைய பிரதேசத்தில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு அண்மையில் அவ்வப்போது வந்துள்ள சுமார் 18 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேர் களிமோட்டை என்னுமிடத்தில் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் குடும்பங்கள் தாழ் நிலப்பகுதிகளில் தங்க வைக்கப்பட்டிருப்பதனால், இவர்கள் தங்கியுள்ள கொட்டில்கள், கூடாரங்களுக்குள் மழைநீர் புகுந்திருப்பதாகவும், இதன் காரணமாக அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரச அதிகாரிகள் தொண்டு நிறுவனங்கள இவர்களுக்குத் தேவையான அவசர நிவாரண உணவு உதவிகளை வழங்கிவருகின்ற போதிலும், இவர்களுக்கான மாற்று இருப்பிட வசதிகளைச் செய்வதில் சிக்கல்கள் எழுந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இடம்பெயர்ந்தவர்கள் அவர்கள் விரும்பிய இடத்தில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற சர்வதேச முறைமை இங்கு கைக்கொள்ளப்படாததன் காரணமாக சர்வதேச மற்றும் உள்ளுர் தொண்டு நிறுவனங்கள் இவர்களுக்கான மாற்று இருப்பிட வசதிகளைச் செய்ய முடியாதிருப்பதாக மன்னார் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் தெரிவிக்கின்றது.

இது குறித்து அந்த ஒன்றியத்தின் தலைவர் அருட்தந்தை விக்டர் சோசை தெரிவிக்கும் மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

—————————————————————————————————————————————————————-

புதுப்பிக்கப்பட்ட நாள்: 14 மார்ச், 2008

இலங்கை மனித உரிமைகள் நிலவரம்: அமெரிக்க கருத்துக்கு இலங்கை அதிருப்தி

இலங்கை மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் அண்மையில் அமெரிக்க அரசுத்துறையால் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்து இலங்கை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ராபர்ட் ஓ பிளேக் அவர்களை, இன்று அழைத்த இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அவர்கள், அவரிடம் இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்த விடயம் குறித்து அமெரிக்கத் தூதுவருடன் தான் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தமிழோசைக்கு கூறிய இலங்கை வெளியுறவு அமைச்சர், அமெரிக்க அரசுத்துறையின் அந்த அறிக்கை, ஆதரம் எதுவும் அற்றது என்றும், இராணுவ ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் தடுமாறிப்போயிருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு, அது புத்துயிர் அளிப்பதாக அமைந்து விட்டது என்றும் அமெரிக்கத் தூதுவரிடம் தான் குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த விவகாரம் குறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், இலங்கை வெளியுறவு அமைச்சருடனான, அமெரிக்கத் தூதுவரின் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், ஆயினும் தமது நிலைப்பாட்டில் அமெரிக்க அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


இலங்கை கிழக்கு மாகாண சபை தேர்தல்: வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ளன

 

இலங்கையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இலங்கை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

இது தொடர்பில் மார்ச் மாதம் 13ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள சிறப்பு வர்த்தமானி அறிவித்தலில், மார்ச் மாதம் திகதி 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த கிழக்கு மாகாணத்துக்கான தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று அந்த அறிவித்தலில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

1987ஆம் ஆண்டின் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து உருவாக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணம், கடந்த வருடம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றை அடுத்து இரண்டு மாகாணங்களாக பிரிக்கப்பட்டது.

அவற்றில் கிழக்கு மாகாணத்துக்கு தற்போது தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் வேட்பு மனுக்களைக் கோரியுள்ளது.

இந்தத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, கடந்த வெள்ளிக்கிழமை, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தேர்தல் ஆணையர் தயானந்த திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்ததாக முன்னர் செய்திகள் வந்திருந்தன.

கிழக்கு மாகாண சபைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 14 உறுப்பினர்களும், அம்பாறை மாவட்டத்தில் இருந்து 17 உறுப்பினர்களும் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 13 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.

இந்தத் தேர்தல் அறிவிப்புக் குறித்து சில தமிழ் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை நேயர்கள் செய்திரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை அரச தொலைக்காட்சி உதவிப் பணிப்பாளர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

தாக்கப்பட்ட அனுரசிறி ஹெட்டிகே

இலங்கை அரச தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினி நிறுவனத்தின் ஊழியர்கள் அண்மைக்காலமாகத் தாக்கப்பட்டுவருவதன் தொடர்ச்சியாக அதன் பிரதிப்பணிப்பாளரொருவர் இன்று காலை அலுவலகத்திற்கு செல்லும் வழியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் மிகமோசமாகத் தாக்கப்பட்டு, காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் வழங்கல்சேவையின் உதவிப் பணிப்பாளர் அனுரசிறி ஹெட்டிகே வெள்ளிக்கிழமை காலை கொட்டிகாவத்த பகுதியில் அலுவலகம் செல்வதற்காக பஸ் நிலையத்தில் நின்றிருந்த சமயம் மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் இவரை இரும்பு கம்பிகளாலும், கூரிய ஆயுதங்களினாலும் தாக்கியிருக்கின்றனர்.

இவர் கழுத்துப் பகுதியில் கூரிய ஆயுதங்களினால் ஏற்பட்ட வெட்டுக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் மீது உடனடியாக விசாரணை நடாத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷ, பாதுகாப்பு ஆமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

——————————————————————————————————————————————————–

புதுப்பிக்கப்பட்ட நாள்: 11 மார்ச், 2008

மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தலை எதிர்த்து ஐ.தே.க ஆர்ப்பாட்டம்

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகரசபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்காக இவ்வார முற்பகுதியில் நடைபெற்று முடிந்த தேர்தல்களை எதிர்த்து இலங்கையின் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு, இராஜகிரிய தேர்தல் செயலகத்துக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றினை நடத்தியிருக்கிறது.

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தினை நிலைநாட்டும் அரசு கொள்கையின் ஒரு அங்கமாக நடத்தப்பட்ட தேர்தலை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உதவிய சகலருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் என்றாலும், இந்தத் தேர்தல் முடிவுகளை முற்றாகப் புறக்கணிக்கும்படி கோரி ஜக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஆணையாளரிடம் புதன்கிழமை மனு சமர்ப்பித்திருக்கிறது.

பிரதான எதிர்க்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும், முக்கியஸ்தர்களும், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் கலந்துகொண்டு இந்தத் தேர்தலுக்கு எதிராகவும், மஹிந்த ராகபக்ஷ அரசிற்கு எதிராகவும் கோஷங்களை இட்டனர்.

இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் பின்னர் அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் கருத்துவெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் திரு. ரணில் விக்கிரமசிங்க, மட்டக்களப்பில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்தல்கள் ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டியதோடு, படையினரால் ஒரு ஆயுதக் குழுவிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அரசு இன்னொரு ஆயுதக் குழுவிடம் கையளிக்க முற்படுவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்கு கிழக்கில் இடம்பெற்ற தேர்தலின் முக்கியத்துவம், அதன் வெற்றி குறித்து வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தனது அமைச்சில் விரிவாக விளக்கமளித்திருக்கிறார்.

இதன் பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர், இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மிகவும் வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறது என்றும், எதிர்வரும் மே மாதம் அளவில் கிழக்கு மாகாணத்துக்கான மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசு சித்தமாக இருப்பதாகவும் தெரிவித்ததோடு, அரசின் இந்தத் திட்டம் குறித்து தேர்தல் ஆணையாளரிடம் தெரிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.


மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் வெறும் கண்துடைப்பு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

 

கிழக்கு மாகாணத்தில், மீள்குடியேற்றம் போன்ற மக்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில் அங்கு உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தி, அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்ற விளைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் வாக்களிக்குமாறு மக்கள் மிரட்டப்பட்டதாகக் கூறிய அவர், மக்கள் சுயாதீனமாக வாக்களித்திருந்தால் 10 வீதமான வாக்குகளே பதிவாகியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகமான வகையில் அனைத்துக் கட்சிகளும் போட்டியிடக் கூடிய ஒரு சூழ்நிலை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்திருந்தால், அங்கு தேர்தல் நிலைமைகள் வேறுவிதமாக இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை மாகாணசபைகளை 1987 ஆம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டதாகக் கூறும் ஜெயானந்தமூர்த்தி, ஆகவே, கிழக்கு மாகாணத்துக்கான மாகாண சபைத் தேர்தல்கள் நடக்கும் பட்சத்தில், அது குறித்து மக்களின் கருத்துக்களை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் தமது கட்சி முடிவுகளை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

இவை குறித்த அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


வட இலங்கை மோதல்கள்: செவ்வாய்க்கிழமை அன்று 28 புலிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கிறது இராணுவம்

 

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள மடுக்கோவிலுக்கு வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் 3 தளங்கள் மீது புதன்கிழமை காலை விமானப் படைக்குச் சொந்தமான தாக்குதல் விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.

இந்தத் தாக்குதலின்போது, அந்த முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் இந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மன்னார் போர்முனைகளில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் வவுனியா, மன்னார், வெலிஓயா, மற்றும் முகமாலை முன்னரங்கப் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதல்களில் 28 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது. இந்தத் தாக்குதல்கள் குறித்தும் விடுதலைப் புலிகள் தரப்பில் தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

மன்னார் மாவட்டத்தில் இன்று பெய்த கடும் மழை காரணமாக இடம்பெயர்ந்து முருங்கன் பிரதேசத்தில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியிருப்பதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கூடாரங்கள் அமைத்து தங்கவைக்கப்பட்டவர்கள் மழை நீர் கூடாரங்களுக்குள் புகுந்திருப்பதனால் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 11 மார்ச், 2008


கதிர்காமர் கொலை வழக்கில் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் மீது குற்றச்சாட்டு

கொலை செய்யப்பட்ட கதிர்காமர்

இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேர் மீதான குற்றப்பத்திரங்களை, சட்ட மா அதிபர் இன்று தாக்கல் செய்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அந்த அமைப்பின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், சார்ள்ஸ் மாஸ்ட்டர் ஆகியோர் உட்பட 6 பேரின் பெயர்கள், குற்றப்பத்திரத்தில் குற்றவாளிகளாகக் கூறப்பட்டுள்ளன.

2005 ஆம் ஆண்டின் ஜனவரி 5 ஆம் திகதிக்கும், 12 திகதிக்கும் இடையில், கொலைச் சதித்திட்டங்களைத் தீட்டியமை, கொலை செய்த விஜயன் என்பவருக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றங்களும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

சாட்சிகளின் பாதுகாப்புக்காக அவர்கள் ரகசியமாகவே நீதிமன்றத்தில் சாட்சி வழங்குவார்கள் என்றும் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் பெரும் வெற்றி

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 வருடங்களின் பின்பு நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு கைப்பற்றியுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஏனைய 8 பிரதேச சபைகளையும் தமது கட்சிப்பட்டியலின் மூலம் கைப்பற்றியுள்ளனர்.

101 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்ற இந்தத் தேர்தலின், முடிவுகளின்படி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது கட்சி சார்பில் 61 உறுப்பினர்களையும், மக்கள் சுதந்திர முன்னனியின் வெற்றிலைச் சின்னத்தில் கீழ் 11 உறுப்பினர்களையும் பெற்றுள்ளனர்.

பிரச்சாரச் சுவரொட்டிகள்
பிரச்சாரச் சுவரொட்டிகள்

ஈ.பி.டி.பி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் ( பத்மநாபா அணி) ஆகிய தமிழ் கட்சிகளைக் கொண்ட சுயேச்சைக் குழுக்கள் இத் தேர்தலில் 17 உறுப்பினர்களை வென்றிருக்கின்றன.

அதேவேளை ஈழவர் ஜனநாயக முன்னனி மட்டக்களப்பு மாநகர சபையில் மட்டும் ஒரு அங்கத்துவத்தை பெற்றுள்ளது.

இதனைத் தவிர ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 7 பேரும், ஐக்கிய மக்கள் முன்னணி சார்பில் மாநகரசபையைத் தவிர மேலும் 4 பேரும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த தேர்தல் முடிவுகள் குறித்த அரசியல் கட்சிகளின் கருத்துக்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இந்தியா மீது விடுதலைப்புலிகள் கண்டனம்

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன்
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன்

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களை வரவேற்று உயர் கௌரவத்தை வழங்கியமைக்காக இந்திய அரசாங்கத்தை விடுதலைப் புலிகள் அறிக்கையொன்றின் மூலம் கண்டித்திருக்கின்றார்கள்.

போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறியுள்ள இலங்கை அரசு, தமிழர் பிரதேசங்களில் போரை விரிவாக்கியுள்ள இன்றைய காலச் சூழலில், தமிழின அழிப்பிற்குத் தலைமையேற்றுள்ள இராணுவத்தின் தளபதிக்கு இந்திய அரசு வழங்கியுள்ள கௌரவம் ஈழத்தமிழர்களை வேதனைக்குள்ளாக்கியிருப்பதாகவும், இந்தச் செயலுக்காக இந்திய அரசை விடுதலைப் புலிகள் வன்மையாகக் கண்டிப்பதாகவும், விடுதலைப் புலிகள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

இராணுவ வழியில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முற்பட்டுள்ளமைக்காகவும், அதிகரித்துள்ள மனித உரிமை மீறல்களுக்காகவும், அனைத்துலக நாடுகள் வெளிப்படுத்திவரும் கண்டனங்கள் மற்றும் எச்சரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, அதிக அளவிலான ஆட்கடத்தல்கள், படுகொலைகள், இனரீதியான கைதுகள் என்பவற்றை அரச படைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள்.

இவற்றை மூடிமறைத்து, நாட்டில் யுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துவரும் இலங்கை அரசாங்கத்திற்கான உதவிகளை பல ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தமது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்கள்.

பெண் விடுதலைப்புலிகள்
பெண் விடுதலைப்புலிகள்

இந்தச் சூழலில் உண்மையான நிலைமையை இந்திய அரசாங்கம் புரிந்து கொண்டிருந்தாலும், தமிழர் பிரச்சினைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வு காணவேண்டும் என கூறிக்கொண்டு, அதற்கு மாறாக, இராணுவ ரீதியாக இலங்கை அரசாங்கத்திற்கு நம்பிக்கையூட்டும் இந்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஈழத்தமிழர்களை பாரிய இன அழிப்பிற்குள் தள்ளிவிடும் என்று இந்திய அரசுக்குச் சுட்டிக்காட்டுவதாகவும் விடுதலைப் புலிகள் தமது அறிக்கையில் கூறியிருக்கின்றார்கள்.

இந்த நிலைமையைத் தமிழ் நாட்டு மக்கள் புரிந்து கொண்டு இந்திய அரசிற்குத் தமது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் எனவும் விடுதலைப் புலிகள் கோரியிருக்கின்றார்கள்.

நோர்வேயின் அமைதிவழி முயற்சியிலிருந்தும், போரிநிறுத்தத்திலிருந்தும் இன்னும் விலகவில்லை என தெரிவித்துள்ள விடுதலைப்புலிகள் நோர்வே அரசின் தலைமையில் மேற்கொள்ளப்படும் சமாதான முயற்சிகளில் பங்கேற்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு

முன்னைய பணிப்புறக்கணிப்பு ஒன்றின் போது வவுனியா மருத்துவமனை ஊழியர்கள்
முன்னைய பணிப்புறக்கணிப்பு ஒன்றின் போது வவுனியா மருத்துவமனை ஊழியர்கள்( ஆவணப்படம்)

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாண மாவட்டங்களைச் சேர்ந்த அரச மருத்துவர்கள் இன்று மேற்கொண்ட ஒருநாள் அடையாள பணிப் புறக்கணிப்பு காரணமாக அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியசாலைகளின் பணிகள் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கென அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுவந்த விசேட வருடாந்த இடமாற்றப் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த பணிபுறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளராகிய டாக்டர் எஸ்.சிவப்பிரியன் தெரிவிக்கின்றார்.

இன்றைய பணிபுறக்கணிப்பு காரணமாக வடக்கில் வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த வைத்தியசாலைகளிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை மாவட்டங்களின் வைத்தியசாலைகளிலும் அரச வைத்தியர்கள் கடமைக்குச் செல்லவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவராகிய டாக்டர் எம்.பள்ளியகுருகே தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று மாலை வரையிலும் சுகாதார அமைச்சிடமிருந்து தங்களுக்குப் பதிலேதும் கிடைக்கவில்லை என்றும் நாளை மறுதினம் வியாழக்கிழமை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராயவுள்ளதாகவும் அந்தச் சங்கத்தின் பேச்சாளராகிய டாக்டர் சிவப்பிரியன் கூறினார்.

————————————————————————————————–

புதுப்பிக்கப்பட்ட நாள்: 10 மார்ச், 2008

மட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தல்களில் சுமூக வாக்களிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாநகரசபை உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு இன்று நடந்த வாக்களிப்பில் 56 வீத வாக்குகள் பதிவானதுடன், பெரும்பாலும் சுமூகமான வகையில் வாக்களிப்பு இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் கிழக்கு மாகாணம் தமது கட்டுப்பாட்டின் கீழ் முழுமையாக கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பின், மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 வருடங்களின் பின்பு ஒரு மாநகர சபை உட்பட 9 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்துள்ள இந்தத் தேர்தலில், 101 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவிருக்கின்றார்கள். 6 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 831 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.

வாக்களிக்கக் காத்திருக்கும் வாக்காளர்கள்
வாக்களிக்கக் காத்திருக்கும் வாக்காளர்கள்

தேர்தலையொட்டி இம் மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக மக்களின் வழமை நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக வாக்காளர்கள் கூட பாதுகாப்பு கெடுபிடிகளை எதிர்நோக்கியதாகவும் உள்ளுர்வாசிகள் கூறுகின்றனர்.

வாழைச்சேனை பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரொருவரின் வீட்டின் மீது திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலைத் தவிர குறிப்பிடத்தக்க வன்முறைகள் எதுவும் இடம்பெறவில்லை என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை அந்தப் பிரதேசத்தில், அரச பின்புலத்தில் சில தேர்தல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்கானிப்பபு அமைப்பான பப்ரல் கூறுகின்றது.

இந்தத் தேர்தலில் 56 சத வீதமான வாக்குககள் பதிவாகியுள்ளதாகக் கூறும் மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அலுவலர், முதலாவது தேர்தல் முடிவு நள்ளிரவிற்கு பின்பு வெளியாகும் என்றும் கூறுகின்றார்.


கொழும்பு வெள்ளவத்தை குண்டுவெடிப்பில் ஒரு சிவிலியன் பலி, 4 மாணவர்கள் காயம்

குண்டுவெடித்த இடம்
குண்டுவெடித்த இடம்

திங்கட்கிழமை காலை கொழும்பு காலிவீதி வெள்ளவத்தையில் அமைந்துள்ள ரொக்சி சினிமா திரையரங்கிற்கு அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் சிவிலியன் ஒருவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டிருக்கிறார், மேலும் நான்கு பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்துவெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, கொழும்பு காலிவீதி வெள்ளவத்தைப் பகுதியில் வீதியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த பூச்சாடியொன்றினுள் மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டொன்றே வெடித்திருப்பதாகத் தெரிவித்தார்.

 

ஆரம்ப விசாரணைகளின்படி இந்தப் மர்மப்பொதியை பிரித்துப்பார்க்க முயன்ற நபரே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டதாகத் தெரியவந்திருப்பதாகப் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

கொழும்பு களுபோவில அரச வைத்தியசாலை வட்டாரங்களின் தகவல்களின்படி, இன்றைய இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தினைத் தொடர்ந்து இரண்டு பாடசாலை மாணவர்கள், இரண்டு மாணவிகள் என நான்கு பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களின் ஒருவரின் நிலைமை மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தன.

இந்தக் குண்டுவெடிப்புத் தொடர்பாக விசாரணைகளையும், புலன்விசாரணைகளையும் பொலிசாரும் இராணுவத்தினரும் தற்போது மேற்கொண்டுவருகின்றனர்.


மன்னார் மாவட்ட சண்டைகள்: புலிகள் தரப்பிலும் இராணுவத்தினர் தரப்பிலும் சேதம்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில், இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே தொடரும் சண்டைகளில், திங்கட்கிழமை அதிகாலை நடந்த மோதல்களில் 10 விடுதலைப்புலிகளும், 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மோதலில் 10 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் அது கூறியுள்ளது.

இது குறித்து விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மன்னாரில், மாந்தை மேற்குப் பகுதியில், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாந்தை –அடம்பன் வீதியில் ஒரு பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகதத்தகவல் மையம் தெரிவித்துள்ளது.

எனினும், பரப்புக்கடந்தான், பண்டிவிரிச்சான், பாலைக்குழி சேத்தான்குளம் ஆகிய பகுதிகளில் பல முனைகளில் விடுதலைப்புலிகளின் பிரதேசத்துக்குள் முன்னேறுவதற்கு ஞாயிறன்று இராணுவம் மேற்கொண்ட முயற்சி தமது எதிர்த்தாக்குதலின் மூலம் முறியடிக்கப்பட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சண்டைகளில்போது 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 09 மார்ச், 2008்.


மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல் பணிகள் நிறைவு

 

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாநகர சபை உட்பட 9 உள்ளுராட்சி சபைகளுக்கு திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் கடமைக்குரிய அதிகாரிகளும் ஊழியர்களும் பாதுகாப்பிற்குரிய பொலிசாரும் தற்போது உரிய வாக்களிப்பு நிலையங்களை சென்றடைந்துள்ளதாகக் கூறும் அவர், கடந்த கால யுத்த அனர்த்தங்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இத்தேர்தலின்போது வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு அடையாளத்தை உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணமொன்றை சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால் ஆள்-மாறாட்டத்திற்கு வாயப்பு இராது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் பாதுகாப்பு கடமைகளைப் பொறுத்தவரை, வாக்களிப்பு நிலையங்களுக்கு வெளியே பொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் இராணுவுத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தேர்தல் செயலகத்தைச் சேர்ந்த உதவி காவல்துறை அத்தியட்சகர் யு.எஸ்.ஐ.பெரேரா கூறினார்.

101 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெறும் இந்த தேர்தலில் 6 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 831 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.


சிவனேசன் பூத உடலுக்கு பிரபாகரன் அஞ்சலி

 

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் கிளேமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகிய கிட்டிணன் சிவநேசனின் இறுதிக் கிரியைகள் இன்று காலை 11 மணியளவில் மல்லாவி அனிஞ்சியன்குளம் என்ற இடத்தில் நடைபெற்றதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இவரது இறுதிக் கிரியைகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள், விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள், பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பொதுமக்களின் அஞ்சலிக்காக வன்னிப் பிரதேசத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் உடலுக்கு விசேடமான ஓரிடத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது அஞ்சலியைச் செலுத்தினார். புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் உட்பட்ட முக்கியஸ்தர்களும் அஞ்சலி செலுத்தி இரங்கலுரைகள் ஆற்றியதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.

இதனிடையில் மன்னார் மாந்தை பிரதேசத்தில் சனிக்கிழமை விமானப்படையினருடன் ஒன்றிணைந்து இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. இந்தத் தாக்குதலில் 10 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் இராணுவம் கூறியிருக்கின்றது.

இதேவேளை, மன்னார் பரப்பாங்கண்டல், மடு பிரதேசத்தில் உள்ள பண்டிவிரிச்சான் ஆகிய பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு சனிக்கிழமை இராணுவத்தினர் எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். பல மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த மோதல்களில் பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

——————————————————————————————————————————————————-

 

புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 மார்ச், 2008


இலங்கை வன்முறை: புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் இராணுவத் தரப்பில் சேதம்

 

இலங்கையின் மொனராகலை மாவட்டத்திலுள்ள புத்தல-கதிர்காமம் வீதியில் சென்றுகொண்டிருந்த இராணுவ உழவுஇயந்திரமொன்றின் மீது விடுதலைப் புலிகள் நடத்தியுள்ள கிளேமோர் கண்ணிவெடித்தாக்குதலில் ஒரு இராணுவச்சிப்பாய் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் இரண்டு இராணுவ வீரர்கள் காயமடைந்திருக்கிறார்கள்.

இதுகுறித்து தகவல் வெளியிட்டிருக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு, புத்தல பழைய வீதியில் கல்கே காட்டுப் பகுதியூடாக இந்த இராணுவ உழவு இயந்திரம் சென்றுகொண்டிருக்கும்போது புலிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், தாக்குதலில் காயமடைந்து ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்ட படைவீரர் ஒருவர் சிகிச்சைகள் பயனளிக்காத நிலையில் உயிரிழந்ததாகவும் தெரிவித்திருக்கிறது.

இந்தப் பகுதியில் முப்படையினரும் பொலிசாரும் இப்போது தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுவருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கிறது.

இதேவேளை, இந்தச் சம்பவம் குறித்து மின்னஞ்சல்மூலமாக ஊடகங்களிற்குச் செய்தியனுப்பியுள்ள விடுதலைப்புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன், இன்றுகாலை விடுதலைப் புலிகள் அமைப்பினரே இந்தத் இந்தத்தாக்குதலை மேற்கொண்டதாக உரிமை கோரியுள்ளதோடு, இந்தச் சம்பவத்தில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் இரண்டு படைவீரர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அத்துடன் இந்தத் தாக்குதலின்போது, தமது உறுப்பினர்களிற்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் விடுதலைப்புலிகளின் இந்தக் கூற்றை மறுத்துள்ள இலங்கை இராணுவத்தினர் இதன்போது ஒரு இராணுவவீரர் மட்டுமே கொல்லப்பட்டதாக உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இன்று காலை எறிகணை வீச்சு மோதல்கள் இடம்பெற்றதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலை சுமார் 10 மணிமுதல் இரண்டு மணித்தியாலங்கள் இந்த மோதல்கள் இடம்பெற்றதாகவும், இதன்போது மன்னார் – வவுனியா, செட்டிகுளம் வீதி பொது கோப்புவரத்திற்காக மூடப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நண்பகலின் பின்னர் நிலைமை வழமைக்குத் திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த எரிகணை வீச்சுக்களால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை. இதனிடையில், நேற்று முன்தினம் கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டிணன் சிவநேசனுக்கு விடுதலைப் புலிகளின் தலைவரினால், மாமனிதர் பட்டமளித்து கௌரவம் அளிக்கப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.


தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்

 

இந்திய இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 59 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த தாகவும், இதனாலேயே இவர்களை கைது செய்ததாகவும் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், இவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் செல்ல வில்லை என்றும், தமிழக கடற்பரப்பிலேயே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகவும் கூறுகிறார், தமிழ்நாட்டின் கன்யாகுமரியைச் சேர்ந்த தமிழ்நாடு மீன் தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் பீட்டர் தாஸ் அவர்கள்.

இந்திய இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் குறித்து, தமிழக முதல்வர் மு கருணாநிதி அவர்கள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

தமிழ்நாடு மீன் தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் பீட்டர் தாஸ் அவர்களின் செவ்வியையும், முதல்வர் கருணாநிதியின் கடித விவரங்கள் குறித்த செய்திகளையும், நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்


இலங்கையில் தடுப்புக் காவலில் ஊடகவியலாளர்கள்

இலங்கை தலைநகர் கொழும்பில் பயங்கரவாத புலன் விசாரணை காவல்துறையினர், சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரி யரும் சுதந்திர ஊடகவியாலாளர் இயக்கத்திற்காக பேசவல்ல வருமான சிவகுமார் அவர்கள் உள்ளிட்ட ஆறு ஊடகவியலாளர்களை தடுத்து வைத்திருக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்று, இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இணைச்செயலாளர் அமிர்தநாயகம் நிக்சன் அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.

——————————————————————————————————————————————————————

இலங்கையில் ஊடவியலாளர்கள் கைது

இலங்கை தலைநகர் கொழும்பில், பயங்கரவாத புலன் விசாரணை காவல் துறையினர் இரண்டு தமிழ் ஊடக வியலாளர்களையும், ஒரு சிங்கள ஊடகவியலாளரையும் தடுத்துவைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரியரும் சுதந்திர ஊடகவியாலாளர் இயக்கத்திற்காக பேசவல்லவருமான சிவகுமார் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, காவல்துறையினர் தன்னையும் விசாரணைக்கு வரும்படி அழைத்திருப்பதாகக் கூறினார்.

காவல்துறையின் விசாரணைக்கு செல்வதற்கு முன்னர் சிவகுமார் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.


மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது

மட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தல் பதாகை

இலங்கையின் கிழக்கே எதிர்வரும் திங்கள் கிழமை உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவிருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைகின்றன.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முழு நாளும் இறுதிக் கட்டப் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். வீடு வீடாகச் சென்று தமக்குரிய வாக்குககளை திரட்டுவதில் வேட்பாளர்கள் பரவலாக ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தேர்தலின்போது வாக்குச் சாவடிக்கு ஒருவர் என கண்கானிப்பாளர்கள் நியமிக்கப்படவிருப்பதாக பப்ரல் எனப்படும் சுதந்திரமான நியாயமான தேர்தலை கண்காணிக்கும் மக்கள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருட் தந்தை சில்வெஸ்டர் ஸ்ரீதரன் கூறுகின்றார்.

கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத் தக்க வன்முறைகள் இல்லை என்று சுட்டிக் காட்டும் அவர், சில கிராமங்களுக்கும் வாக்குச்சாவடிகளுக்கும் இடையலான தூரம் மக்களின் வாக்களிக்கும் ஆர்வத்திற்கு தடையாக இருக்கும் என்பதால், தேர்தல் திணைக்களமோ அல்லது போட்டியிடும் வேட்பாளர்களோ, அவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார்.



கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசனின் இறுதிச் சடங்குகள் கிளிநொச்சியில் நடக்கவுள்ளது

கொல்லப்பட்ட சிவனேசன்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய கனராயன்குளம் பகுதியில் ஏ -9 வீதியில் கடந்த வியாழனன்று இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்ட யாழ் மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகிய கே.சிவநேசனின் இறுதிக்கிரியைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்காகவும் இறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு அஞ்சலி செலுத்துவதற்குமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சிக்குச் சென்றுள்ளனர்.

காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் உடல் இன்று உறவினர்களின் அஞ்சலிக்காக மல்லாவியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருப்பதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இவரது உடல் நாளை கிளிநொச்சிக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்குள்ள மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனுடன் உயிரிழந்த அவருடைய வாகன சாரதியாகிய 27 வயதுடைய பெரியண்ணன் மகேஸ்வரராஜாவின் உடலை அவரது சொந்த ஊராகிய செட்டிகுளம் வீரபுரத்திற்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டிருக்கின்றார்கள்.


மட்டக்களப்பின் மேயராக பெண்ணொருவர் தெரிவாகும் வாய்ப்பு

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக முதல் தடவையாக பெண் ஒருவர் பொறுப்பேற்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

மட்டக்களப்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் வேட்பாளரான பத்மினி என்று அழைக்கப்படும் சிவகீதா பிரபாகரன் அவர்கள், அங்கு அந்தக் கட்சியின் சார்பில் அதிகப்படியான விருப்ப வாக்குகளைப் பெற்றதால், மாநகரசபையின் மேயராக பொறுப்பேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இறுதியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்ட போது, வாக்களிப்புக்கு இரு தினங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட ராஜன் சத்தியமூர்த்தியின் மகளே இவர்.

தான் மேயராக பொறுப்பேற்கவுள்ளது குறித்து பத்மினி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கிழக்கு மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்த இலங்கை அரசு நடவடிக்கை

அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகரசபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்காக இவ்வார முற்பகுதியில் நடைபெற்று முடிந்த தேர்தல்களை அடுத்து, கிழக்கு மாகாணத்துக்கான மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை அரசு, அதில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கான ஒழுங்குகளை கவனிப்பதற்காக இரு உயரிய குழுக்களை அமைத்திருப்பதாகவும் இன்று அறிவித்திருக்கிறது.

இது குறித்து கொழும்பில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய மகாவலி அபிவிருத்தி மற்றும் விவசாயத்துறை அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமாகிய மைத்திரிபால சிறிசேன தற்போது ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் ஒரே குடையின்கீழ் போட்டியிட்டு வெற்றியீட்ட முன்வருமாறும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்த உத்தேச கிழக்கு மாகாணத்துக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசு எடுத்துள்ள முடிவானது தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது என்றும் இதற்காக திகதி விபரங்களை அவர் இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பாரெனத் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

இவை குறித்த மேலதிக செய்திகளை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 13 மார்ச், 2008


ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்திய மற்றும் தமிழக அரசின் நிலை குறித்து பா.ம.க. அதிருப்தி

டாக்டர் ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இலங்கைக்கு இந்திய அரசு வழங்கி வரும் இராணுவ உதவியினையை நிறுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்திருமாவளவன், திரைப்பட இயககுநர் சீமான் உள்ளிட்ட இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஆர்வங்காட்டும் சிலருடன் ஆலோசனை செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

அண்மைககாலமாக இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை அந்நாட்டு அரசு உககிரப்படுத்தியுள்ளது எனவும் ராமதாஸ் புகார் கூறினார்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகள் செயல்படவேண்டும் என வற்புறுத்தியும், தொடர்ந்து தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் அல்லலுக்கு உள்ளாவதற்கு முற்றுப்புள்ளிவைககவேண்டும் எனக்கோரியும் தொடர்முழக்கப் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் ராமதாஸ் தெரிவித்தார்.

கடந்த சிலமாதங்களாக இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து ராமதாஸ் மௌனமே காத்துவந்தார் என்பதையும், இந்திய அரசைக் கண்டித்து விடுதலைப்புலிகள் அறிக்கை விட்டபோதுகூட அவர் கருத்தெதனையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் ஊடகவியலாளர்கள் கைது நடவடிக்கைக்கு எதிராக ஆர்.எஸ்.எஃப். ஊடகச் சுதந்திரக் குழு கண்டனம்

 

இலங்கையின் பயங்கரவாத தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 5 செய்தியாளர்களின் கதி குறித்து, பாரிஸைத் தளமாகக் கொண்டு செயற்படும் ஆர்.எஸ்.எஃப். என்று அழைக்கப்படும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

அவர்களை தடுத்து வைத்திருப்பதற்கான காரணத்தை கூறவேண்டும் என அது அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

ஒரு இணையத் தளத்துக்காக பணியாற்றும் இந்த செய்தியாளர்கள் விடுதலைப்புலிகளிடம் இருந்து பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சில செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தியாளர்களின் நிலை குறித்து இரு தினங்களுக்கு முன்னர் கவலை வெளியிட்டிருந்த சர்வதேச செய்தியாளர் சம்மேளனமான ஐ.எஃப். ஜே. அமைப்பும், ஆசிய மனித உரிமைகள் ஆணையமும், இந்தச் செய்தியாளர்களின் சட்ட உரிமைகளை இலங்கை அரசாங்கம் நிலை நிறுத்த வேண்டும் என்று கோரியிருந்தன.


Posted in Batticaloa, dead, Eelam, Eezham, Elections, local, LTTE, Media, MP, murders, Polls, Shivanesan, Sivanesan, Sri lanka, Srilanka, War | Leave a Comment »

India Cuts Taxes as Election Looms, GDP Slows to 8.4%; aids farmers with big rise in social outlay

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 29, 2008

2008-09 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்

நாடு முழுவதும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி;
கல்விக்கு ரூ.34 ஆயிரம் கோடி
பெண்கள்,குழந்தைகள் மேம்பாட்டுக்கு ரூ.72 ஆயிரம் கோடி;
பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.8 சதவிகிதமாக இருக்கும்!
மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்

புதுடில்லி, பிப். 29- மத்திய நிதிய மைச்சர் ப. சிதம்பரம் இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக் கையில் விவசாயிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்தார்.

விவரம் வருமாறு:

2008 – 09 ஆம் நிதியாண்டுக் கான பொது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பொருளாதார வளர்ச்சி விகி தம் 8.8 சதவீதமாக இருக்கும் என அறிவித்தார். மத்திய பட் ஜெட் இன்று தாக்கல் செய்யப் படும் என்று அறிவிக்கப்பட்டி ருந்த் நிலையில், மிகுந்த எதிர் பார்ப்பு மற்றும் பரபரப்புக்கி டையே பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியது.
நிதியமைச்சர் ப.சிதம்ப ரத்தை பட்ஜெட்டை தாக்கல் செய்யுமாறு சபாநாயகர் சோம் நாத் சாட்டர்ஜி கேட்டுக் கொண்ட அடுத்த வினாடியே, எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் ஒரு சில பிரச்சினைகளை எழுப்பி கூச்சலிட்டனர்.

பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.8 சதவிகிதம்
மிகுந்த சிரமத்திற்கிடையே அவர்களை அமைதிபடுத்தி சிதம்பரம் பட்ஜெட்டை தாக் கல் செய்தார். பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.8 சதவீதமாக இருக்குமென அறிவித்தார். அதேபோன்று பண வீக்கம் கட்டுக்குள் வைக்கப்படும் என் றும் அவர் கூறினார்.
மேலும் பல்வேறு அறிவிப்பு களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கு ரூ.7,200 கோடி
வரும் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.7,200 கோடி ஒதுக்கீடு செய் யப்படுகிறது.
குழந்தைகள் மேம்பாட்டுக் கான ஒதுக்கீடு 24 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி
இன்று தாக்கல் செய்யப் பட்ட மத்திய பொதுபட்ஜெட் டில் சிறிய மற்றும் மிகக் குறைந்த லாபமடையும் விவ சாயிகள் அனைவருக்கும் வேளாண் கடன்கள் முற்றிலும், ஏறக்குறைய ரூ.60,000 கோடி தள்ளுபடி செய்யப்படும் என நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார்.
இதன் மூலம் 4 கோடி விவ சாயிகள் பயனடைவார்கள்.2 ஹெக்டேர் வரை வைத்துள்ள சிறிய மற்றும் மிகக் குறைந்த லாபமடையும் விவசாயிகள் இந்தப் பயனாளிகள் பட்டிய லில் வருவார்கள். தேசிய வேளாண் காப்பீட்டு திட் டத்திற்கு 644 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
நாடு முழுவதும் மண் பரி சோதனைக் கூடங்கள் அமைக்க 500 சோதனைக் கூடங்கள் அமைக்கப்படும்.
200 மாவட்டங்களில் நட மாடும் மண் பரிசோதனைக் கூடங்கள் ஏற்படுத்தப்படும்.
சொட்டு நீர்ப்பாசன திட் டத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக் கீடு செய்யப்படும் 53 சிறு நீர்ப் பாசன திட்டங்கள் அமல் படுத்தப்படும் எனறு சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்புக்கு ஒதுக்கீடு ரூ.1,05,600 கோடியாக உயர்வு
பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு ரூ.1,05,600 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 10 சதவிகிதம் அதிகமாகும். 2007-08-ம் நிதியாண்டில் நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு ரூ.96 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது. கல்விக்கு ரூ.34,400 கோடி ஒதுக்கீடு
2008-09- ஆம் நிதியாண்டுக் கான மத்திய அரசின் பொது பட்ஜெட்டில், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளுக் கான ஒதுக்கீடு 20 சதவிகித அளவில் உயர்த்தப்படுகிறது.
கல்விக்கு ரூ.34,400 கோடி ஒதுக்கீடு
அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு 13,500 கோடி ஒதுக்கீடு.
6,000 மாதிரி உயர்நிலைப் பள்ளிகள் அமைக்கப்படும்.
6 ஆயிரம் மாவட்டங்களில் நவோதய வித்யாலயாக்கள்.
410 கிராமங்களில் வித்யா லயாக்கள்.
மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
மதிய உணவுத் திட்டம் நடு நிலைப் பள்ளிகள் வரை நீட் டிப்பு
புதிதாக 16 மத்திய பல் கலைக்கழகங்கள் அமைக்கப் படும் ஆந்திரா, பிகார் மற்றும் ராஜஸ்தானில் புதிய அய்.அய்.டி. கல்வி நிறுவனங்கள்.
அறிவுசார் சமுதாயம் அமைக்க ரூ.85 கோடி.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு மத்திய பல்கலை.
நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் வீதம் ஒரு மத் திய பல்கலைக்கழகம் அமைக் கப்படும் கல்வி மற்றும் சுகா தாரம் ஆகிய துறைகளுக்கான ஒதுக்கீடு 20 சதவிகித அளவில் உயர்த்தப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டு 16 மாநிலங்களில் மத்திய பல் கலைக் கழகங்கள் முதற்கட்ட மாக அமைக்கப்படுகிறது.

சென்னை அருகே ரூ.300 கோடி செலவில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க ஒதுக்கீடு
அனைவருக்கும் கல்வித் திட் டத்திற்கான ஒதுக்கீடு ரூ.13,500 கோடி.

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான ஒதுக்கீட்டில் 20 சதவிகிதம் உயர்வு.
பாரத் நிர்மாண் திட்டத் திற்கு ரூ.31,250 கோடி ஒதுக்கீடு.
சுகாதாரத் துறைக்கு ரூ.16,534 கோடி ஒதுக்கீடு – 15 சதவிகிதம் உயர்வு.
எய்ட்ஸ் / எச்.அய்.வி. கட்டுப் படுத்த அதிக நிதி ஒதுக்கீடு.
தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்திற்கான ஒதுக்கீட்டில் 15 சதவிகிதம் உயர்வு.
தனி நபர் வருமான வரி – விலக்குக்கான உச்சவரம்பு ரூ.1,10,000-லிருந்து ரூ.1,50,000-ஆக உயர்வு.
பெண்களுக்கு ரூ.1,80,000 ஆக நிர்ணயம்.
மூத்த குடிமக்களுக்கு ரூ.2,25,000 வரை வருமான வரி விலக்கு.
இந்த சலுகை மூலம் வரு மான வரி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் குறைந்தது ரூ.4000 சேமிப்பு.
வருமான வரி விகிதங்கள்:
ரூ.1,50,000 – ரூ.3 லட்சம் வரை 10 சதவிகிதம்.
ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரை 20 சதவிகிதம்.
ரூ.5 லட்சத்திற்கு மேல் 30 சதவிகிதம்.
மத்திய அரசு ஊழியர்களின் 6 ஆவது ஊதியக் குழு அறிக்கை மார்ச் 31-க்குள் சமர்ப்பிக்கப்படும்.
காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுப் போட்டிக ளுக்கு ரூ.624 கோடி ஒதுக்கீடு.
ஜவுளி பூங்காக்கள் அமைக்க ரூ.450 கோடி.
மின்துறை சீரமைப்புக்கு ரூ.800 கோடியில் திட்டம்.
ராஜீவ் காந்தி குடிநீர் திட் டத்திற்கு ரூ.7300 கோடி ஒதுக் கீடு.
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு ரூ.16,447 கோடி ஒதுக்கீடு.
ஒருங்கிணைந்த குழந்தை கள் மேம்பாட்டுத் திட்டத் திற்கு ரூ.6,300 கோடி ஒதுக்கீடு.
சிறுபான்மையினர் அதிக மாக வாழும் மாவட்டங் களுக்கு ரூ.540 கோடி ஒதுக்கீடு.
மகளிருக்கான தனித் திட்டங்களுக்கு ரூ.11,460 கோடி.
தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதியுதவி கழகத் திற்கு ரூ.75 கோடி.
——————————————————————————————————————————–
மேலும் ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு காப்பீடு: சிதம்பரம்

புதுதில்லி, பிப். 29: மேலும் ஒரு கோடி குடும்பங்கள் பயனடையும் வகையில் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அமைப்பு சாரா துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு படிப்படியாக சமூகப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில், சாதாரண மக்களுக்கான காப்பீட்டுத் திட்டம், தேசிய காப்பீட்டுத் திட்டம், இந்திரா தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் மேலும் ஒரு கோடி ஏழைக் குடும்பங்கள் பயனடையும். சாதாரண மக்களுக்கு காப்பீடு திட்ட செயலாக்கத்தின் 2 வது ஆண்டிற்காக ஆயுள்காப்பீட்டு நிறுவனத்திற்கு கூடுதலாக ரூ. 1000 கோடி தருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் வெள்ளிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்த போது தெரிவித்தார்.

தேசிய சுகாதார காப்பீடுத் திட்டம் வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும்.

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கு 2008-09 ம் ஆண்டில் ரூ.3343 கோடி ஒதுக்கப்படும்.

இதன் மூலம் பயனாளிகளின் எண்ணிக்கை 87 லட்சத்திலிருந்து 1 கோடியே 57 லட்சமாக உயரும்.

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவரும் கடந்த நவம்பர் 19 ம் தேதியில் இருந்து இத்திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

————————————————————————————————————————————————————————–
சிதம்பரமும் மேற்கோள்களும்

புது தில்லி, பிப். 29: மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, தமிழ் இலக்கியம் மற்றும் மூத்த அறிஞர்களின் மேற்கோள்களை சுட்டிக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். பெரும்பாலும் இவரது பட்ஜெட் உரையில் திருக்குறள் இடம்பெறும்.

வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட்டிலும் வள்ளுவரின் திருக்குறள் வரிகளுடனே தனது 2 மணி நேர உரையை நிறைவு செய்தார் சிதம்பரம்.

“கொடை அளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்

உடையான்ஆம் வேந்தர்க்கு ஒளி.”

என்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார். அத்துடன் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மேற்கோளான,””யார் அதிகம் செய்கிறானோ, அதிக தடவை முயல்கிறானோ, அவனே அதைத் திறம்பட செய்யத் தகுதியுடையவன்,” என்பதைச் சுட்டிக்காட்டினார்.

பட்ஜெட் உரையில் குறிப்பிட்ட அனைத்தையும் நிறைவேற்றியுள்ளதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டிய அவர், இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பினால், ஆம் நம்மால் நிச்சயம் முடியும் என்பதே பதிலாக இருக்கும் என்று குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த வளர்ச்சி குறித்து ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டதையும் சிதம்பரம் சுட்டிக்காட்டினார்.

1996-97-ம் ஆண்டு சிதம்பரம் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில்,

“”இயற்றலும், ஈட்டலும், காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு.”

என்ற குறளை மேற்கோள் காட்டினார்.

2004-05-ம் ஆண்டு பட்ஜெட்டில் டிக்கன்ஸன் நாவலில் வரும் ஒரு கதாபாத்திரத்துடன் தன்னை உவமைப்படுத்தி, “நல்ல காரியங்கள் நற்செயல்களால் விளையும், நற்சொற்களால் அல்ல,” என்று குறிப்பிட்டார்.

அப்போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் “மேன் ஹுன் நா’ என்றார். அது அப்போது மிகவும் பிரபலமாகும். இறுதியில்

“”அறன்இழுக்காது அல்லவை நீக்கி, மறன் இழுக்கா

மானம் உடையது அரசு.”

என்ற குறளுடன் நிறைவு செய்தார்.

2005-06-ம் ஆண்டு பட்ஜெட்டில்,

“”பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்

அணிஎன்ப நாட்டிற்கு இவ் வைந்து.”

என்ற குறளை சுட்டிக்காட்டினார். அத்துடன் பொருளாதார நிபுணர் அமார்த்தியா சென் தனது புத்தகத்தில் குறிப்பிட்ட,””மேம்பாட்டு நடவடிக்கைகளே உண்மையான சுதந்திரமாகும். இதன்மூலம்தான் மக்கள் மகிழ்ச்சியடைவர்,” என்ற வாசகங்களைச் சுட்டிக்காட்டினார்.

2007-08-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில்,

“”கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு

உரிமை உடைத்து இவ்வுலகு.”

என்ற குறளை மேற்கோள் காட்டினார் சிதம்பரம்.

அத்துடன் ஹென்றி டேவிட் தோரோவின் வாசகங்களான,””காற்றில் அரண்மனை கட்டினால், அதில் உங்கள் உழைப்பு வீணாகாது.

நீங்கள் எப்படி கட்டவேண்டும் என்று நினைத்தீர்களோ அப்படியே இருக்கும். அதற்கான அடித்தளத்தை தற்போது அமையுங்கள்,” என்று குறிப்பிட்டதைப்போல ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வலுவான பொருளாதாரத்துக்கு அடித்தளம் அமைக்கிறது, அதிலிருந்து வரும் தலைமுறையினர் கோட்டையைக் கட்டலாம் என்று குறிப்பிட்டார்.

அத்துடன் விவேகானந்தரின் பொன்மொழிகளான, “”எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம். நமது தலைவிதியை நாமே நிர்ணயிக்கிறோம்.

தற்போது காற்று வீசுகிறது; காற்றின் திசைக்கு எதிர்த் திசையில் சில கப்பலும், காற்றின் திசைக்கேற்ப சில கப்பலும் செல்லும்.

காற்றை பயன்படுத்திக் கொள்ளாததது காற்றின் குற்றமல்ல. அதைப்போல நாம் செல்ல வேண்டிய இலக்கை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்,” என்ற மேற்கோளையும் சிதம்பரம் நினைவுகூர்ந்தார்.

2007-08-ம் ஆண்டு பட்ஜெட்டில்,

“”உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேம்என் பார்க்கும் நிலை.”

என்ற திருக்குறளை சுட்டிக் காட்டினார்.

அதிவேகமான பொருளாதார வளர்ச்சி அவசியம். அதன்மூலம்தான் ஏழ்மையை ஒழிக்க முடியும் என்ற நோபல் அறிஞர் டாக்டர் யூனுஸின் மேற்கோளோடு உரையை நிறைவு செய்தார்.

————————————————————————————————————————————————————————–
சிதம்பரத்தின் சலுகைகள் நிறைந்த தேர்தல் பட்ஜெட்: ரூ. 60 ஆயிரம் கோடி விவசாயக் கடன் ரத்து

ரத்து செய்யப்பட்ட கடன் தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. இதை எந்த வகையில் சமாளிக்கலாம் என்பதை திட்டமிட்டுள்ளோம். }ப. சிதம்பரம்

புது தில்லி, பிப். 29: பல்வேறு சலுகைகள் நிறைந்த தேர்தல் பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்தார்.

அனைத்துத் தரப்பினரையும் குறிப்பாக விவசாயிகளை அதிகம் திருப்திபடுத்தும் வகையிலான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

சிதம்பரம் தாக்கல் செய்யும் ஐந்தாவது முழு பட்ஜெட் இது.

2008-09-ம் ஆண்டின் வரி வருவாய் ரூ. 6,02,935 கோடி. செலவு ரூ. 6,58,119 கோடி. வருவாய் பற்றாக்குறை ரூ. 55,184 கோடி.

2008-09-ம் ஆண்டின் திட்டச் செலவு ரூ. 2,43,386 கோடி. இது மொத்த செலவில் 32 சதவீதமாகும். திட்டம் சாரா செலவு ரூ. 5,07,498 கோடி.

ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை ரூ. 1,33,287 கோடி.

விவசாயக் கடன் ரூ. 60 ஆயிரம் கோடி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 கோடி விவசாயிகள் பயனடைவர்.

இதேபோல மாதாந்திர சம்பளதாரர்களுக்கு ஆண்டு வருமான வரி விலக்கு வரம்பு தற்போது ரூ. 1.10 லட்சத்திலிருந்து ரூ. 1.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு வருமான வரிச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி பண பரிமாற்ற வரி விதிப்பு முறை முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது.

சிறிய ரகக் கார், மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்டவற்றுக்கான உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீர் சுத்திகரிப்பு கருவிகள், காலை உணவு, காகிதம், காகித அட்டை உள்ளிட்டவற்றுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் ஃபில்டர் அல்லாத சிகரெட் விலை உயரும்.

உற்பத்தித் துறைக்கு உத்வேகம் அளிப்பதற்காக சென்வாட் வரி 16 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வரிச் சலுகை அளிக்கப்பட்டதால் மறைமுக வரி ரூ. 5,900 கோடி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வங்கி பண பரிமாற்ற வரி கைவிடப்பட்டதை ஈடுகட்டும் வகையில் பொருள்கள் பரிமாற்றக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய விற்பனை வரி 3 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ராணுவத்துக்கான ஒதுக்கீடு ரூ. 1.05 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் காமன்வெல்த் போட்டி 2010-ம் ஆண்டு நடைபெற உள்ளதால் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவை கட்டுவதற்கு ரூ. 624 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுவிநியோக உணவுப் பொருளுக்கான மானியத் தொகை ரூ. 32,667 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கனவு திட்டமான தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ. 16 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதான திட்டமான “பாரத் நிர்மாண்’ திட்டத்துக்கு ரூ. 31,280 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பப் புரட்சியை கிராமப்பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்காக மாநில தகவல் மையம் ஏற்படுத்தப்படும். இத்தகைய மையத்துக்காக ரூ. 275 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய மையங்களை ஒருங்கிணைக்க ரூ. 450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதியோர் நலனுக்காக ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொழில் பயிற்சி மையங்கள் 300-ஐ மேம்படுத்த ரூ. 750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடன் சுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுப்பதற்காகவும், வேளாண் துறைக்கு உத்வேகம் அளிப்பதற்காகவும் ரூ. 60 ஆயிரம் கோடி சலுகை அளிக்கப்பட்டதை பல கட்சிகள் வரவேற்றுள்ள போதிலும், இது தேர்தலை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

விவசாயக் கடன் தள்ளுபடிக்கான ஒதுக்கீடு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, இதுகுறித்து சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு,””இந்தத் தொகை வங்கிகளுக்கு திரும்ப அளிக்கப்படலாம் அல்லது அளிக்காமலும் போகலாம். இதனால் வங்கிகளுக்கு ஏற்படும் நிதிச் சுமை மூன்று ஆண்டுகளில் அவற்றுக்கு திரும்ப அளிக்கப்படும்,” என்றார்.

ரத்து செய்யப்பட்ட கடன் தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. இதை எந்த வகையில் சமாளிக்கலாம் என்பதை திட்டமிட்டுள்ளோம். அந்த நுணுக்கங்களைக் கடைப்பிடித்து அதை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்பதை நம்புங்கள் என்றார் சிதம்பரம்.

“”இது தேர்தலை மையமாகக் கொண்ட பட்ஜெட் அல்ல. இந்தியாவில் ஆண்டுதோறும் தேர்தல் நடைபெறுகிறது. இதனாலேயே ஆண்டுதோறும் தேர்தலை மையமாகக் கொண்ட பட்ஜெட்,” என்று கூறுவது வழக்கமாக உள்ளது என்றார் சிதம்பரம்.

சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு 300 கோடி

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சென்னை அருகே செயல்படுத்தப்படும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார்-பொதுத்துறை இணைந்து செயல்படுத்தும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டமொன்றுக்கு தமிழக அரசு தற்போது அனுமதி கேட்டுள்ளது. இத்திட்டம் பரிசீலனை செய்யப்படும் என்றார் அவர்.

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இதன் மூலம் ரூ.1000 மாத ஊதியமாக பெற்று வந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும். ரூ.500 பெற்று வந்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு ரூ.750 வழங்கப்படும்.

இதன் மூலம் 18 லட்சம் அங்கன்வாடி ஊழியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6-வது ஊதிய கமிஷன் மார்ச் 31-ல் அறிக்கை

ஆறாவது ஊதிய கமிஷன் மார்ச் 31-ம் தேதி தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கிறது.

நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெள்ளிக்கிழமை பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஊதிய கமிஷன் அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் என்று தெரிவித்தார்.

சாதா சிகரெட்களுக்கு கடும் வரி உயர்வு

மத்திய பட்ஜெட்டில் சாதாரண சிகரெட்களுக்கான உற்பத்தி வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் இவ் வகை சிகரெட்களின் விலையும் கடுமையாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது.

அதேநேரத்தில் பில்டர் சிகரெட்களுக்கான வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நீளம் குறைந்த (60 எம்.எம்) சாதாரண சிகரெட்டுகளுக்கு உற்பத்தி வரி தற்போது 1000-க்கு ரூ. 168 விதிக்கப்படுகிறது. இது ரூ.819 -ஆக உயர்த்தப்படுகிறது.

————————————————————————————————————————————————————————–

வரிச் சலுகைகள் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவும்: சிதம்பரம்

புதுதில்லி, பிப். 29: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள் தொழில்துறை வளர்ச்சிக்கு தூண்டுதலாக அமையும் என்று நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

வரிச் சலுகைகளால் மக்களுக்கு பணம் மிச்சமாகும். கையில் பணம் மிச்சமாகும் போது அதைக் கொண்டு புதிய பொருள்கள் வாங்குவார்கள். இது தொழில்துறை வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும் என்றார் அவர்.

வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டதால் மக்களின் கைகளில் பணப் புழக்கம் அதிகரிக்கும். இதனால் நுகர்வு அதிகரிக்கும். இது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

நுகர்வு அதிகரிக்கும் போது தேவை அதிகரிக்கும். குறிப்பாக கார், இரண்டு சக்கர வாகனங்கள் போன்றவற்றின் தேவை அதிகரிக்கும். இது உற்பத்தி பெருக வழிவகுக்கும் என்றார் அவர்.

நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி வீதம் சராசரியாக 8.8 சதவீதமாக இருக்கும்.

இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி வீதம் 9.1 சதவீதத்திலிருந்து 8.4 சதவீதமாக குறைந்துவிட்டது. இந்த சரிவுக்கு தொழில்துறை உற்பத்தியில் ஏற்பட்ட தேக்கமே காரணம்.

உற்பத்தி வரி 16 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாகக் குறைக்கப்பட்டது, சில பொருள்களுக்கு சுங்க வரிக் குறைப்பு போன்ற மறைமுக வரிக் குறைப்புகளால் அரசுக்கு ரூ. 5900 வருமான இழப்பு ஏற்படும்.

இந்த பட்ஜெட்டில் தொழில்துறை புறக்கணிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டபோது, அவர்களுக்கு என்ன தேவை இருக்கிறது. அவர்கள் மீது எந்த சுமையையும் சுமத்தவில்லையே என்றார் சிதம்பரம்.

அதற்குப் பதிலாக வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் கார்ப்பரேட் துறை பயன் அடையும் என்றார் சிதம்பரம்.

————————————————————————————————————————————————————————–
4 கோடி விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் பட்ஜெட்

புது தில்லி, பிப். 29: நான்கு கோடி விவசாயிகளின் 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்வதாக நிதி அமைச்சர் ப. சிதம்பரம் 2008-09-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்தார்.

அரசு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் 2007 மார்ச் 31 வரை அளித்த கடன்கள் அனைத்தும் ரத்தாகிறது. இவை 3 கோடி சிறு, குறு விவசாயிகள் வாங்கியது. வசூலிக்கப்பட முடியாமல் நிலுவையில் இருந்த 50,000 கோடி ரூபாய் இந்த வகையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சிறு விவசாயிகள் என்போர் 1 ஹெக்டேர் முதல் 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருப்பவர்கள். குறு விவசாயிகள் என்போர் அதிகபட்சம் ஒரு ஹெக்டேர் மட்டுமே நிலம் வைத்திருப்போர்.

வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடனை பாக்கி வைத்திருக்கும் இதர விவசாயிகள், தாங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையில் 75 சதவீதத்தை அதாவது முக்கால் பங்கைச் செலுத்திவிட்டால், அரசு 25 சதவீதத்தை அதாவது கால் பங்கைத் தள்ளுபடி செய்துவிடும். அப்படி தள்ளுபடியாகக் கூடிய தொகை மட்டும் பத்தாயிரம் கோடி ரூபாய். இதனால் ஒரு கோடி விவசாயிகள் கடன் நிவாரணம் பெறலாம். அதாவது 30 ஆயிரம் கோடி ரூபாய் கடனை இவர்கள் திருப்பிச் செலுத்தினால் 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் ரத்தாகிவிடும்.

இந்தக் கடன் தள்ளுபடி நடவடிக்கைகள் 2008 ஜூன் 30-க்குள் முடிக்கப்பட வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்துக் கொண்டுள்ளது.

2,80,000 கோடி: சாகுபடிக்கு புதிதாகக் கடன் தேவைப்படும் விவசாயிகள் உடனடியாக வங்கிகளை அணுகலாம். ரூ.2,80,000 கோடி கடன் தொகை தயாராக இருக்கிறது. குறுகிய கால விவசாயக் கடன்களுக்கான வட்டி 7 சதவீதமாகவே தொடரும். விவசாயத்துக்கான வட்டி குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டும் அரசு 2008-09-ம் நிதி ஆண்டுக்கு ரூ.1,600 கோடியை ஒதுக்கியிருக்கிறது.

பாசனத்துக்கு: பாசன வசதிகளை அளிக்க 2008-09-ம் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இது 11,000 கோடியாகத்தான் இருந்தது.

விரைவுபடுத்தப்பட்ட பாசன பயன்பாட்டுத் திட்டத்தின் கீழ் 24 பெரிய -நடுத்தர திட்டங்களும் 753 சிறு பாசன திட்டங்களும் இந்த நிதியாண்டில் நிறைவேற்றப்படும். இதனால் 5 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்குப் பாசன வசதி கூடுதலாகக் கிடைக்கும்.

4 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு சொட்டுநீர், இறைவைப் பாசனம் மூலம் தண்ணீர் வழங்க ரூ.500 கோடி ஒதுக்கப்படுகிறது.

புதிய கார்ப்பரேஷன்: பெரிய, நடுத்தர பாசன திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்க புதிய பாசன-நீர்வள நிதி கார்ப்பரேஷன் உருவாக்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசு ஆரம்ப மூலதனமாக ரூ.100 கோடி வழங்கப்படவுள்ளது.

தோட்டக்கலை பயிர்: தோட்டக்கலைப் பயிர் சாகுபடியின் கீழ் மேலும் 2,76,000 ஹெக்டேர் நிலங்கள் வந்திருப்பதால் ஊக்குவிப்பு அடைந்துள்ள அரசு தேசிய தோட்டக்கலை இயக்கத்துக்கு ரூ.1,100 கோடி வழங்குகிறது. தென்னை, முந்திரி, மிளகு ஆகியவற்றில் சாகுபடியை ஊக்குவிக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.

2009 மார்ச்சுக்குள் நாட்டின் 250 மாவட்டங்களில் மண் பரிசோதனைக்கான நடமாடும் ஆய்வுக்கூடங்களை நிறுவ ரூ.75 கோடி மத்திய வேளாண் துறைக்கு ஒதுக்கப்படும்.

இதுமட்டும் அல்லாமல் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் அரசுத்துறையிலும் தனியார் துறையிலுமாக 500 மண் பரிசோதனை ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு ஆய்வகத்துக்கும் அரசு ரூ.30 லட்சம் நிதி உதவி அளிக்கும் என்றார் சிதம்பரம்.

————————————————————————————————————————————————————————–
சிறுபான்மையினர் நலனுக்கு நிதிஒதுக்கீடு இருமடங்கு உயர்வு

புதுதில்லி, பிப். 29: மத்திய பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலனுக்கான நிதிஒதுக்கீடு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிறுபான்மையினரின் முன்னேற்றத்துக்காக பல்நோக்கு வளர்ச்சித் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெள்ளிக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சிறுபான்மையினர் நல அமைச்சகத்துக்கு 2007-08 ஆம் ஆண்டு ரூ.500 கோடி மட்டுமே நிதிஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 2008-09 ஆம் ஆண்டில் இந்த நிதி ஒதுக்கீடு இருமடங்காக அதிகரிக்கப்பட்டு ரூ.1000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 90 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு வசிக்கும் சிறுபான்மையின மக்களின் முன்னேற்றத்துக்காக ரூ.3780 கோடியில் பல்நோக்கு வளர்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக இந்த நிதியாண்டில் முதல்கட்டமாக ரூ.540 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இதுதவிர மதரஸôக்களை நவீனப்படுத்த ரூ.45 கோடியும் சிறுபான்மையின பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ரூ.80 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வசிக்கும் மாவட்டங்களில் அரசு வங்கிகளின் 288 கிளைகள் நடப்பு ஆண்டில் கூடுதலாக திறக்கப்படும்.

மத்திய பாதுகாப்புப் படையில் சிறுபான்மை இனத்தவர்கள் கூடுதலாக பணியில் அமர்த்தப்படுவார்கள்.

————————————————————————————————————————————————————————–
ஈரோட்டில் விசைத்தறி மேம்பாட்டுக் கழகம்

புதுதில்லி, பிப். 29: ஈரோட்டில் விசைத்தறி மேம்பாட்டுக்காக மிகப்பெரிய குழுமம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விவரம்:

ஜவுளித்துறையில் உள்கட்டமைப்பையும், உற்பத்தியையும் மேம்படுத்துவதற்காக 6 மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகப்பெரிய குழுமங்களாக உருவாக்கப்படவுள்ளன.

விசைத்தறிக்காக ஈரோடு மற்றும் பிவண்டியும், கைத்தறிக்காக வாராணசி மற்றும் சிப்சாகரும், கைவினைக் கலைகளுக்காக நர்சாபூர் மற்றும் மொராதாபாத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குழுமத்திற்கும் ரூ. 70 கோடி தேவைப்படுகிறது. 2008-09 ம் துவக்க நிதியாண்டில் ரூ.100 கோடியுடன் இத்திட்டதிற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளன.

————————————————————————————————————————————————————————–
ஏழைகளுக்கான வீட்டுவசதி திட்டத்துக்கு மானியம் அதிகரிப்பு

புது தில்லி, பிப். 29: பாரத் நிர்மாண் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படும் இந்திரா வீட்டுவசதி திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் மானியத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:

சமவெளி பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கான மானியம் வீடு ஒன்றுக்கு ரூ.25,000-லிருந்து ரூ.35 ஆயிரமாக ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படும்.

மலை மற்றும் சிக்கலான பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கு இத்தொகை ரூ.27,500-லிருந்து ரூ.38.500 ஆக அதிகரிக்கப்படுகிறது.

தேசிய வேளான் காப்பீட்டுத் திட்டம்: தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.644 கோடி ஒதுக்கப்படும். இத்திட்டம் தற்போதைய நிலையிலேயே கரீப் மற்றும் ராஃபி பருவங்களிலும் தொடரும். ஐந்து மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் சோதனை ரீதியாக செயல்படுத்தப்படவுள்ள தட்ப வெப்ப அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கப்படும்.

தேயிலைச் செடிகளை மறுநடவு செய்யவும், புத்துருயிரூட்டவும் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட தேயிலை நிதியத்துக்கு ரூ.40 கோடி அளிக்கப்படும். இதே போன்று ஏலக்காய்க்கு ரூ.10.68 கோடியும், ரப்பர் பயிருக்கு ரூ.19.41 கோடியும், காபி பயிருக்கு ரூ.18 கோடியும் நிதியுதவி அளிக்கப்படும்.

ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியம்:: ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின் தொகுப்பு நிதியை ரூ.14,000 கோடியாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்தின் கீழ் கிராமப்புற சாலைகளுக்கான தனிப்பிரிவு ரூ.4,000 கோடி தொகுப்பு நிதியுடன் அமைக்கப்படவுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டம்: தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ.10,867 கோடியிலிருந்து ரூ.12,966 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம்: தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த சேவைகளின் வளர்ச்சிக்கான ஒதுக்கீடு ரூ.1,500 கோடியிலிருந்து 1,680 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பொது சேவை மையங்களுக்கு ரூ.75 கோடியும், சவான் திட்டத்துக்கு ரூ.450 கோடியும், மாநில தகவல் மையங்களுக்கு ரூ.275 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான முதலீடுகளுக்கும் அரசு ஊக்கம்: நடப்பு நிதியாண்டில் இறுதியில் சேமிப்பு விகிதம் 35.6 சதவீதமாகவும், முதலீட்டு விகிதம் 36.3 சதவீதமாகவும் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதே போக்கு அந்நிய முதலீட்டிலும் பிரதிபலிக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் அந்நிய நேரடி முதலீடு 12.7 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் அந்நிய நிறுவன முதலீடு 18 பில்லியன் டாலராகவும் இருந்தது.

அனைத்து விதமான முதலீட்டையும் உள்நாடு, வெளிநாடு தனியார் மற்றும் பொதுத்துறையை ஊக்கப்படுத்துவதே அரசின் கொள்கையாகும்.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு பங்குகள் வாயிலாக ரூ.16,436 கோடியும், கடன்கள் வாயிலாக ரூ.3,003 கோடியும் மத்திய அரசு அளிக்கவுள்ளது. இதுவரை 44 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் அதிக நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை மேம்படுத்துவதே அரசின் திட்டம் என்றார் அவர்.

————————————————————————————————————————————————————————–
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ரூ. 22,948 கோடி

புதுதில்லி, பிப். 29: மத்திய பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவருக்கு மொத்தம் ரூ. 22,948 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உதவித் திட்டங்கள் மற்றும் நலத் திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். இதை மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்தார்.

இதில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின விமான ஓட்டிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம், உயிரி தொழில்நுட்பத் துறை மூலம் இப் பிரிவினருக்கான உயிரி தொழில்நுட்பத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கீடு ரூ. 3965 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 3,450 கோடி.

இதுதவிர தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான மொத்த நிதிஒதுக்கீடு ரூ. 22,948 கோடி. இதில் ஊனமுற்றோருக்கான நிவாரண திட்டங்கள், இந்த இனத்தைச் சேர்ந்தவர்களுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களும் அடங்கும்.

————————————————————————————————————————————————————————–
மருத்துவக் காப்பீட்டுக்கு வரிச் சலுகை

புது தில்லி, பிப். 29: பெற்றோரின் மருத்துவ சுகாதாரக் காப்பீட்டுக்கு செலுத்தப்படும் தொகைக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி வழக்கமான வரி சலுகையுடன் கூடுதலாக ரூ.15 ஆயிரத்துக்கு வரிச் சலுகை அளிக்கப்படும். பெற்றோர் மூத்த குடிமக்களாக இருக்கும்பட்சத்தில் ரூ.20 ஆயிரத்துக்கு வரிச்சலுகை அளிக்கப்படும். இது ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

நீதிமன்றங்கள் கணினிமயம்: நீதிமன்றங்களுக்கு அடிப்படைக் கட்டுமான வசதிகள் மற்றும் கணினிமயமாக்குவதற்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறை நிர்வாகத்துக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்குக்கு மேலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பட்ஜெட்டில் ரூ.108.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2008-09 பட்ஜெட்டில் இது 253.12 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வழங்கப்படுவதை விரைவுபடுத்துவதற்காக மாவட்ட மற்றும் கீழ்நீதிமன்றங்களை கணினிமயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காகவே இந்த ஆண்டு ரூ.115 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு நீதிமன்றங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி இந்த பட்ஜெட்டில் ரூ.2 கோடியிலிருந்து ரூ.13 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அருணாசலப் பிரதேசத்துக்கு ரூ.500 கோடி சிறப்பு நிதி: அருணாசலப் பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக சிறப்பு நிதியாக ரூ.500 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநிலத்தில் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய-பாக். எல்லை பணி: இந்தியா -பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.124 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் இரு மடங்காகும்.

இந்திய -வங்கதேச எல்லையில் முள்வேலி உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளுக்காக ரூ.484.23 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.76.74 கோடி குறைவாகும்.

————————————————————————————————————————————————————————–
ராணுவ ஒதுக்கீடு ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது


புதுதில்லி, பிப். 29: பொது பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒரு லட்சத்து 5600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 96 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் 92 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது.

அதிநவீன ஹெலிகாப்டர்கள் மற்றும் 155 மி.மி. பீரங்கிகள் வாங்கும் பேரம் கடைசி நேரத்தில் ரத்தானதால் ரூ.3500 கோடி செலவழிக்கப்படவில்லை.

முதன்முறையாக பாதுகாப்பு பட்ஜெட் ரூ.1 லட்சம் கோடியை தாண்டினாலும், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளோடு ஒப்பிடும்போது இந்த நிதி குறைவு என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ராணுவத்துக்கு இரண்டு சதவீதத்துக்கும் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 5 சதவீதமும், சீனாவில் 7 சதவீதமும் நிதி ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

————————————————————————————————————————————————————————–
கிராமப்புற சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு


புது தில்லி, பிப். 29: தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்திற்கான ஒதுக்கீட்டை ரூ.12,050 கோடியாக உயர்த்துவதற்கு அரசு உத்தேசித்துள்ளது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம்தான் கிராமப்புற மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதற்கான முக்கிய திட்டம்.

சமுதாயமே நடத்தும் பரவலாக்கப்பட்ட சுகாதார கட்டமைப்பை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம். இதற்காக 4,62,000 பணியாளர்களுக்கு பயிற்சி தரப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

1,77,924 கிராம சுகாதார மற்றும் கழிப்பிட குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. 323 மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்திற்கு ரூ.993 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இளம்பிள்ளைவாத நோய் ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.1042 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
————————————————————————————————————————————————————————–

கிராமங்களில் கட்டப்படும் மருத்துவமனைகளுக்கு 5 ஆண்டுகள் வரிவிலக்கு

புதுதில்லி, பிப். 29: கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் புதிதாக கட்டப்படும் மருத்துவமனைகளுக்கு பொது பட்ஜெட்டில் ஐந்து ஆண்டுகள் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்றும், குறிப்பிட்ட சில நகரங்கள் மட்டும் இந்த சலுகையைப் பெற முடியாது என்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இதன்படி 2008 ஏப்ரல் 1 முதல் 2013 மார்ச் 31 வரை வரிவிலக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்ட சுற்றுலாத் தலங்களில், 3 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்கள் கட்டுபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வருமான வரிச் சலுகை அளிக்கப்படும் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

————————————————————————————————————————————————————————–

கல்வித் துறைக்கு ரூ.34,400 கோடி

புது தில்லி, பிப். 29: பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ரூ.34,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். கல்வித்துறைக்கு கடந்த ஆண்டு ஒதுக்கீட்டை விட 20 சதவீதம் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கல்வித்துறைக்கு ரூ.28, 674 கோடி ஒதுக்கப்பட்டது. நடப்பாண்டில் ரூ.34,400 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதில் சர்வசிக்ஷா அபியான் திட்டத்திற்கு ரூ.13,100 கோடியும், மதிய உணவு திட்டத்திற்கு ரூ.8,000 கோடியும், இடைநிலைக் கல்விக்கு ரூ.4,554 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

2008-09-ம் ஆண்டின் மாதிரி பள்ளி திட்டத்தின் கீழ் 6,000 உயர்தர மாதிரிபள்ளிகள் துவக்கப்படவுள்ளன. இந்த திட்டத்திற்காக ரூ.650 கோடி பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

————————————————————————————————————————————————————————–
வடகிழக்கு பகுதிக்கு சிறப்பு கவனம்

புதுதில்லி, பிப். 29: மத்திய பட்ஜெட்டில் வடகிழக்கு பகுதிக்கு தொடர்ந்து சிறப்பு கவனமும், அதிக நிதி ஒதுக்கீடும் அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்திற்கு ரூ.1445 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பிராந்தியத்திற்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு 2007-08 ல் ரூ.14,365 கோடியாக இருந்தது. 2008-09 ல் ரூ.16,447 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு எல்லைப்புற பகுதிகள் சில பிரத்யேக சிக்கல்களை எதிர்கொள்கின்றன. இவற்றை வழக்கமான திட்டங்களின் கீழ் சரி செய்ய இயலாது.

எனவே சிறப்பு ஏற்பாடுகள் மூலம் பூர்த்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

————————————————————————————————————————————————————————–
பட்ஜெட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் திட்டங்கள்: பச்சோரி வரவேற்பு

புதுதில்லி, பிப். 29: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத தொழில்நுட்பம், எண்ணங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நிலையான அமைப்பை ஏற்படுத்த பட்ஜெட்டில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதை ஆர்.கே.பச்சோரி வரவேற்றுள்ளார்.

நோபல் பரிசு பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஐ.நா.வின் தட்பவெப்ப மாறுதல் குழுவின் தலைவருமான ஆர்.கே.பச்சோரி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதைத் தெரிவித்துள்ளார்.

அரசின் முக்கியமான கொள்கைகளில் தட்பவெப்ப மாறுதல் தொடர்பான திட்டங்கள் இடம்பெறும் என்பது நிதியமைச்சர் சிதம்பரத்தின் பட்ஜெட் முலம் விளங்குகிறது. இது திருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

————————————————————————————————————————————————————————–

தகவல் ஒலிபரப்புக்கு ரூ. 300 கோடி கூடுதல் நிதி

புதுதில்லி, பிப். 29: தகவல் ஒலிபரப்புத்துறைக்கு 2008 – 09 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரசார பாரதிக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு 95.7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டுக்கு ரூ. 326.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ. 160 கோடி அதிகம்.

சர்வதேச ஒலிபரப்பு மையத்தைத் தொடங்குவதற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் சிதம்பரம் கூறினார். 2010-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை பிரசார் பாரதி பெற்றுள்ளது.

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்கு 79 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2008 – 09 ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 8 கோடி.

கேளிக்கை மற்றும் ஊடகம், சினிமா துறைகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

————————————————————————————————————————————————————————–

விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன திட்டத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி

புதுதில்லி, பிப். 29: விரைவுபடுத்தப்பட்ட நீர்பாசன திட்டத்திற்கான 2008-09 ம் ஆண்டிற்கான மதிப்பீட்டுச் செலவாக ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் சிதம்பரம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அவர், விரிவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 24 பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசன திட்டங்களும், 753 சிறிய நீர்ப்பாசன திட்டங்களும் இந்த நிதியாண்டியில் நிறைவேற்றப்படுகிறது.

மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒதுக்கீடு ரூ.348 கோடியாகும். மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் குறு நீர்ப்பாசன திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 4 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு பயன்பெறும் என்றார்.

————————————————————————————————————————————————————————–

பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்க முயற்சி

புது தில்லி, பிப். 29: பட்ஜெட் தயாரிப்பின்போது 3 வகையான பற்றாக்குறைகளை குறைப்பது அல்லது கட்டுக்குள் வைப்பதில்தான் நிதியமைச்சரின் திறமை இருக்கிறது. இப்படி பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைப்பதை அனைவருமே கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே “”நிதி பொறுப்பு, பட்ஜெட் நிர்வாகச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது.

பட்ஜெட் பற்றாக்குறை, வருவாய் இனத்தில் பற்றாக்குறை, அரசுக்கு வர வேண்டிய நிதி, அரசு செய்ய வேண்டிய செலவு ஆகியவற்றுக்கு இடையிலான பற்றாக்குறை என்று இவை 3 வகைப்படும்.

பொது வரவு செலவில் பற்றாக்குறை என்பது, அரசு தனக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்று கூறுவதற்கும், தனக்கு எவ்வளவு செலவாகும் என்று கூறுவதற்கும் இடையே உள்ள இடைவெளி ஆகும்.

வருவாய் இனத்தில் பற்றாக்குறை என்பது நேர்முக, மறைமுக வரிகள் மூலம் அரசு எதிர்பார்க்கும் தொகைக்கும் உண்மையில் கையில் கிடைக்கும் (இலக்கைவிடக் குறைவாக உள்ள) தொகைக்கும் இடையிலான பற்றாக்குறையாகும்.

மற்றொரு பற்றாக்குறை அரசுக்கு உண்மையிலேயே கிடைக்கும் வருவாய்க்கும், அதுசெய்யும் செலவுகளுக்கும் இடையிலான பற்றாக்குறை எவ்வளவு என்று பட்ஜெட்டிலேயே தெரிவிக்கப்படுவதாகும்.

பொது வரவு-செலவில் பற்றாக்குறை என்பது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி, சேவை மதிப்பில் 3 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பதுதான் “நிதி பொறுப்பு, பட்ஜெட் நிர்வாகச் சட்டம்’ விதிக்கும் முக்கிய நிபந்தனையாகும்.

நிதியமைச்சர் ப. சிதம்பரம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட்டில் அரசின் பட்ஜெட்படியிலான பற்றாக்குறை ரூ.1,33,287 கோடியாக இருக்கிறது. இது மொத்த உற்பத்தி மதிப்பில் 2.5 சதவீதம்தான்.

2007-08 ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டுடன் ஒப்பிட்டால் இதன் அளவு 3.1% ஆக இருக்கிறது. இதை நிதியமைச்சர் சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்தபோது சுட்டிக்காட்டினார்.

இந்த பட்ஜெட்டில் சிதம்பரம் அறிவித்துள்ள சலுகைகள், வரிச் சீரமைப்பு காரணமாக அரசுக்கு வரும் வருவாய் சற்று குறையும் வாய்ப்பு தெரிகிறது. எனவே அரசுக்கு வருவாய் கணக்கில் பற்றாக்குறை ஏற்படும் என்று தெரிகிறது.

வறுமை ஒழிப்புக்கும், கடன் நிவாரணத்துக்கும், சமூகத்தின் அடித்தள கட்டமைப்பை மேம்படுத்தும் துறைகளுக்கும் இந்த பட்ஜெட்டில் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இப்போது அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய்க்கும் கிடைத்துக் கொண்டிருக்கும் வருவாய்க்கும் இடையிலான பற்றாக்குறை 1.5% ஆக இருக்கிறது. அடுத்த பட்ஜெட்டில் இது 1% ஆக குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மத்திய அரசுக்கு வருவாய் இனங்கள் மூலம் ரூ.6,02,935 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் செலவு ரூ.6,58,119 கோடியாக இருக்கும்.

வருவாய் கணக்கில் இப்போது நிலவும் பற்றாக்குறையை முழுதாகப் போக்க மேலும் ஓராண்டு பிடிக்கலாம் என்று நிதியமைச்சர் சிதம்பரம் சுட்டிக்காட்டினார்.

————————————————————————————————————————————————————————–
ரூ.1.50 லட்சம் வரை வருமான வரி இல்லை

புதுதில்லி, பிப். 29: மாத ஊதியம் பெறுவோருக்கான வருமான வரி விலக்கு ரூ.1.10 லட்சம் ரூபாயில் இருந்து ரூ.1.50 லட்சமாக அதிகரிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மக்களவையில் அறிவித்தார்.

வருமானத்துக்கு ஏற்ப விதிக்கப்படும் வரி விகிதத்தில் சில மாறுதல்களையும் அவர் செய்துள்ளார்.

இதன்படி ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் சுமார் 4000 ரூபாய் வரை பலன் கிடைக்கும். ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம் உள்ளவர்கள் தற்போதுள்ள வரி விகிதத்தின்படி ரூ.2,49,000 வருமான வரி செலுத்துகின்றனர். இனிமேல் புதிய வரி விகிதப்படி அவர்களது வருமானவரி 2,05,000 ரூபாயாகக் குறையும். அதாவது அவர்களுக்கு அதிகபட்சம் ரூ.44,000 வரி குறையும்.

பெண்களுக்குச் சலுகை

ஆண்டுக்கு ரூ.1.45 லட்சம் வரை வருமானம் உள்ள பெண்கள் வருமான வரி செலுத்துவதில் இருந்து இதுவரை விலக்கு அளிக்கப்பட்டது. இனிமேல் (2008-2009) ரூ.1.80 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள பெண்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம் உள்ள பெண்கள் செலுத்த வேண்டிய வருமானவரி 2,45,500 ரூபாயில் இருந்து 2,02,000 ரூபாயாகக் குறையும்.

மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு தற்போதுள்ள ரூ.1.95 லட்சத்திலிருந்து ரூ.2.25 லட்சமாக உயர்த்தப்படும். ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம் உள்ள மூத்த குடிமக்கள் செலுத்த வேண்டிய வருமான வரி 2,36,000 ரூபாயில் இருந்து 1,97,500 ரூபாயாகக் குறையும்.

புதிய வரி விகிதம் கணக்கிடப்படும் முறை

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு அவர்களது வருமானத்தில் ரூ.1.50 லட்சம் வரை வருமான வரி கணக்கிடப்படமாட்டாது.

ரூ.1.50 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 15,000 ரூபாயும், ரூ. 3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 40,000 ரூபாயும், ரூ. 5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரியும் கணக்கிடப்படும்.

பழைய வரி விகிதப்படி இந்த வரியானது ரூ.4000, ரூ.35,000, ரூ.60,000, ரூ.1.50 லட்சம் என்று கணக்கிடப்பட்டது. அதே நேரத்தில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் சர்சார்ஜ் 10 சதவீதம் வசூலிக்கப்படுவது தொடரும்.

பெற்றோருக்காக மருத்துவ இன்சூரன்ஸ் தொகை செலுத்துவோருக்கு வருமான வரியில் இருந்து ரூ.15,000 குறைக்கப்படும். வருமான வரிச் சட்டத்தின் 80 சி பிரிவின்கீழ் தற்போதுள்ள சேமிப்பு உச்சவரம்பான ஒரு லட்சம் ரூபாய் தவிர இந்த 15,000 ரூபாய் வரிக்குறைப்பு இருக்கும்.

————————————————————————————————————————————————————————–
தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட போலீஸôருக்கு சிறப்பு பயிற்சி மையங்கள்

புதுதில்லி, பிப். 29: தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட போலீஸôருக்கு சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ரூ. 12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி மாநில அரசுகள் இந்த சிறப்புப் பயிற்சி மையங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த மையங்களில் போலீஸôருக்கு நவீன பயிற்சி அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் தமது பட்ஜெட் உரையில் கூறினார்.

இது தவிர சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க நேபாளம் மற்றும் பூடான் எல்லைகளில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். இதற்கு ரூ. 35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நக்ஸலைட்டுகள் உள்ளிட்ட தீவிரவாதிகளை ஒடுக்க பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும். பாதுகாப்புப் படையினரின் திறமையை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காக ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிரிமினல் குற்றங்கள் மற்றும் கிரிமினல்களை துப்புத் துலக்கும் நெட்வொர்க் முறைக்கு ரூ. 210 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர காவல் நிலையங்களை நவீனப்படுத்தவும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

————————————————————————————————————————————————————————–
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ரூ. 22,948 கோடி

புதுதில்லி, பிப். 29: மத்திய பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவருக்கு மொத்தம் ரூ. 22,948 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உதவித் திட்டங்கள் மற்றும் நலத் திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். இதை மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்தார்.

இதில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின விமான ஓட்டிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம், உயிரி தொழில்நுட்பத் துறை மூலம் இப் பிரிவினருக்கான உயிரி தொழில்நுட்பத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கீடு ரூ. 3965 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 3,450 கோடி.

இதுதவிர தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான மொத்த நிதிஒதுக்கீடு ரூ. 22,948 கோடி. இதில் ஊனமுற்றோருக்கான நிவாரண திட்டங்கள், இந்த இனத்தைச் சேர்ந்தவர்களுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களும் அடங்கும்.

————————————————————————————————————————————————————————–

மோடி மஸ்தான் பட்ஜெட்…

“அடேங்கப்பா…’ என்று வாயைப் பிளக்கும்படியான சலுகைகள் – 60,000 கோடி ரூபாய் விவசாயக் கடன் ரத்து; வருமானவரி விலக்குக்கான வரம்பு அதிகரிப்பு; மருந்துகள் மீதான கலால் வரி பாதிக்குப் பாதி குறைப்பு; தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், அமைப்புசாரா தொழிலாளர்கள், பெண்கள், முதியோர் என்று அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் நோக்கத்துடன், 55 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார் நமது நிதியமைச்சர்.

“இது ஒரு விவசாயிகள் பட்ஜெட்’ – என்று பிரமிக்க வைக்கும் இந்த நிதிநிலை அறிக்கையின் தாக்கம் எப்படி இருக்குமோ தெரியாது. ஆனால், நோக்கம் என்னவோ நிச்சயமாகத் தேர்தல்தான் என்று அடித்துச் சொல்லும் அளவுக்கு அப்பட்டமாகத் தெரிகிறது. அது பலமா அல்லது பலவீனமா என்பது இப்போது தெரியாது.

இந்த 60,000 கோடி ரூபாய் கடன் ரத்து, நமது விவசாயிகளின் பிரச்னைகளை எல்லாம் தீர்த்து, விவசாயிகள் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மீண்டுமொரு விவசாயப் புரட்சிக்கு வழிகோலும் என்று யாராவது நினைத்தால், மிஞ்சுவது என்னவோ ஏமாற்றமாகத்தான் இருக்கும். அதற்குக் காரணம், இந்தக் கடன் நிவாரணம், பெரும் நிலச்சுவான்தார்களுக்குத்தான் ஆறுதலாக அமையப் போகிறதே தவிர சிறு விவசாயிகளுக்கு அல்ல என்பதுதான் உண்மை.

பொருளாதாரப் புள்ளிவிவர அறிக்கையின்படி, இந்தியாவிலுள்ள மொத்த விவசாயிகளில் 48.6 சதவிகிதம் பேர் கடனில் தத்தளிக்கிறார்கள். அவர்களில் 61 சதவிகிதம் பேர் இரண்டு ஏக்கருக்கும் குறைவாக விவசாயம் செய்பவர்கள். அதுமட்டுமல்ல, விவசாயிகளின் மொத்தக் கடனில் 57.7 சதவிகிதம்தான் வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் போன்றவைகளிலிருந்து பெறப்பட்டவை.

மீதி 42.3 சதவிகிதம் தனியாரிடமும், வியாபாரிகளிடமும், நிலத்தை ஒத்திக்கு வைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் பெற்ற கடன்கள். இதுபோன்று தனியாரிடம் விவசாயிகள் பெற்ற கடன் தொகை 2003 புள்ளிவிவரப்படி சுமார் 4,800 கோடி. இப்போது வட்டி, குட்டி போட்டு எத்தனை ஆயிரம் கோடிகள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

இரண்டு ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருக்கும் ஏழைகளில் மிகக் குறைந்த சதவிகிதத்தினர்தான் வங்கிகளில் கடன் வாங்கியவர்கள். பெரும்பகுதி கிராமப்புற விவசாயிகளும் தனியாரிடம் கடன்பட்டவர்களாக இருப்பதால்தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அவர்களுக்கு இந்த 60,000 கோடி ரூபாய் நிவாரணம் எந்த வகையில் உதவப் போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

அப்படியே அத்தனை கடன்களும் ரத்து செய்யப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் அடுத்த போக விளைச்சலுக்குத் தயாராவார்களா என்றால் அதுவும் இல்லை. அதற்குப் பணம் வேண்டுமே? மீண்டும் கடன் வாங்க வங்கிகளுக்குப் போகப் போகிறார்களா, இல்லை தனியாரிடம் போகப் போகிறார்களா? இனி அடுத்த கடன் தள்ளுபடியை எதிர்பார்த்துக் காலத்தை ஓட்டப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இதேபோலத்தான், இந்த நிதிநிலை அறிக்கையில் வாரி இறைக்கப்பட்ட சலுகைகள் பலவும், குறுகிய கண்ணோட்டத்துடன் செய்யப்பட்டதாகத் தெரிகிறதே தவிர, தொலைநோக்குப் பார்வையுடனும், பிரச்னைகளுக்கு முழுத் தீர்வாக அமையும் விதத்திலும் இருக்கிறதா என்றால் இல்லை. போதாக்குறைக்கு, விலைவாசியை அதிகரிக்கும் விதத்தில் 55,184 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை வேறு.

இந்த நிதிநிலை அறிக்கையைப் பலரும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பட்ஜெட் என்று வர்ணிக்கிறார்கள். தெரிந்து சொல்கிறார்களோ, தெரியாமல் சொல்கிறார்களோ, உண்மையைச் சொல்கிறார்கள். தேர்தலுக்குக் காங்கிரஸ் செலவழிக்க வேண்டிய பணத்தை அரசு கஜானா மூலம் செலவழித்துத் தனது வாக்கு வங்கியை விஸ்தரிக்க முற்பட்டிருக்கும்போது, அதை காங்கிரஸின் தேர்தல் பட்ஜெட் என்று சொல்வதில் தவறே இல்லை.

மோடி மஸ்தான் பாணியில் ஒரு கண்கட்டு வித்தையை, நிதிநிலை அறிக்கை என்கிற பெயரில் அரங்கேற்றி இருக்கிறார் நிதியமைச்சர்

ப. சிதம்பரம். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், ஆஹா ஓஹோ… ஆழ்ந்து சிந்தித்தால், ஊஹும்… ஊஹும்…

Posted in Budget, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Economy, Elections, Farmers, Finance, India, Polls | 1 Comment »

Parliament Constituency reorganization – Woes of MPs

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2008

திருத்தி அமைப்பால் தொகுதியை இழக்கும் எம்.பி.க்கள்

நாடாளுமன்ற தொகுதிகளை திருத்தி அமைப்பதால் பல எம்.பி.க்களும் தலைவர்களும் தங்களது தொகுதிகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவர்களில் மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், பாஜக பிரமுகர் கல்யாண் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி, நடிகர்கள் தர்மேந்திரா, ராஜ் பப்பர் உள்ளிட்டோரும் அடங்குவர்.

தொகுதி மறுநிர்ணயம் காரணமாக இவர்கள் வகித்த தொகுதிகள் ரிசர்வ் தொகுதியாகவோ அல்லது பொதுத் தொகுதியாகவோ அல்லது மாற்றியமைக்கப்பட்ட தொகுதியாகவோ மறுநிர்ணயம் செய்யப்படுகின்றன.

மேற்கு வங்கத்தில் உள்ள போல்பூர் தொகுதியில் பலமுறை வெற்றிபெற்றவர் சோம்நாத் சாட்டர்ஜி. அந்தத் தொகுதி மாற்றியமைக்கப்பட்டுவிட்டதால் இனி அதில் அவர் போட்டியிட இயலாது.

மகாராஷ்டிரத்தில் லட்டூர் தொகுதியில் இருமுறை வெற்றிபெற்ற சிவராஜ் பாட்டீலுக்கும் இதேநிலைதான் ஏற்பட்டுள்ளது.

உ.பி.யில் மாயாவதி பிரதிநிதித்துவம் வகித்த அக்பர்பூர் ரிசர்வ் தொகுதி தற்போது பொதுத் தொகுதியாக மாற்றம் பெற்றுள்ளது.

உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் பிரதிநிதித்துவம் வகித்த எடாவா தொகுதி தற்போது ரிசர்வ் தொகுதியாகிவிட்டது.

கல்யாண் சிங் பிரதிநிதித்துவம் வகித்த புலந்த்சாகர் தொகுதி ரிசர்வ் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

ராஜ் பாப்பர் வெற்றிபெற்ற ஆக்ரா தொகுதியும் ரிசர்வ் தொகுதியாகிவிட்டது.

ராஜஸ்தானில் தர்மேந்திரா வெற்றிபெற்ற பிகானீர் தொகுதியும் ரிசர்வ் தொகுதியாக மாறிவிட்டது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.பி. சச்சின் பைலட் வெற்றிபெற்ற தெüசா தொகுதியும் ரிசர்வ் தொகுதியாகிவிட்டது. கர்நாடகத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியாவும் பாஜக தலைவர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜும் போட்டியிட்ட பெல்லாரி தொகுதியும் ரிசர்வ் தொகுதியாகிவிட்டது. பிகாரில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் சகோதரர் ராமச்சந்திர பாஸ்வான் போட்டியிட்ட ரோசெரா தொகுதி அடுத்த தேர்தலில் இருந்து நீக்கப்படுகிறது.

ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மைத்துனர் சாது யாதவ் போட்டியிட்ட கோபால்கஞ்ச் தொகுதியும் இனி பொதுத் தொகுதியாக இருக்காது.

ஆந்திரத்தில் மத்திய அமைச்சர் பனபாக லட்சுமி போட்டியிட்ட நெல்லூர் தொகுதி பொதுத் தொகுதியாக மாற்றம் பெற்றுள்ளது.

மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி போட்டியிட்ட பாபட்லா தொகுதி ரிசர்வ் தொகுதியாகிவிட்டது. நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.ஜெய்ப்பால் ரெட்டி அங்கம்வகித்த மிரியாலகுடா தொகுதி அகற்றப்பட்டு நலகொண்டா தொகுதி என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உ.பி.யில் அகில இந்திய காங்கிரஸ் செயலர் ஜிதின் பிரசாதா பிரதிநிதித்துவம் வகித்த ஷாஜகான்பூர் ரிசர்வ் தொகுதியாகிவிட்டது.

Posted in Caste, Constituency, Elections, MP, parliament, Polls, reorganization, Reserved, SC, ST, voters, Votes | Leave a Comment »

Orissa tribals up in arms against government: What is behind Hindu-Christian violence?

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2008

ஒரிசாவில் பரிதவிக்கும் ஆதிவாசிகள்

டி.புருஷோத்தமன்

நமது நாடு 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை நோக்கி பீடுநடை போடுகிறது; அன்னியச் செலாவணி இருப்பு திருப்திகரமாக இருந்து வருகிறது.

ஆனால் அடிப்படை வசதியோ, அடுத்தவேளைக்கு உணவோ இன்றி அவதிப்படும் கோடிக்கணக்கான ஆதிவாசி மக்கள் நமது நாட்டில் இருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்த்தோமா என்று கேள்வி எழுப்பினால், இல்லை என்றுதான் பதில் அளிக்கவேண்டியுள்ளது.

நமது நாட்டில் பொருளாதார வளர்ச்சியிலும் கல்வி முன்னேற்றத்திலும் பின்தங்கியுள்ள மாநிலங்களில் ஒரிசாவும் ஒன்று. தலைநகர் புவனேசுவரத்தில் அரசு போக்குவரத்து அறவே இல்லாத அவலம். சாலைகள்தோறும் ஆட்டோக்கள்தான். அரசு பஸ் போக்குவரத்துக் கழகம் திவாலாகிவிட்டதாக கொசுறு செய்தி.

இப்படிப்பட்ட ஒரிசா மாநிலத்தில் மக்களின் வாழ்க்கைத்தரம் எவ்வாறு இருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தால் கண்ணீரும் கவலையும்தான் மிஞ்சும்.

ஒரிசாவில் வனப்பகுதிகளும் மலைகளும் அதிகம். இதனால் மாநிலத்தின் மக்கள் தொகையில் 32 சதவீதம் பேர் மலைவாழ் மக்கள். ஆண்டாண்டுக் காலமாக எவ்வித முன்னேற்றமும் இன்றி அவர்கள் வறுமையில் வாடுகின்றனர். கனிம வளங்கள் ஏராளமாக இருந்தும் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களின் பயன்கள் அவர்களைச் சென்றடைவதில்லை. போதாக்குறைக்கு மலைவாழ் மக்களிடையே பிளவு வேறு.

ஒரிசா மாநிலத்தின் தெற்குப் பகுதியில் கந்தமால் பகுதி அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 6 லட்சம். இதில் சுமார் 75 சதவீதம் பேர் “குயி’ மொழி பேசுகின்ற “கோந்த்’ என்ற பழங்குடி (எஸ்.டி.) இனத்தவர்களாவர். அடுத்து “பானா’ என்கின்ற தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) மக்கள். “குயி’ மொழி பேசும் இவர்கள் 20 சதவீதம் பேர் ஆவர்.

கோந்த் சமூகத்தினர் மிகவும் வறிய நிலையில் இருந்து வருகின்றனர். எந்த அரசு பதவிக்கு வந்தாலும் இவர்களைக் கண்டுகொள்வதே இல்லை. கல்வியறிவும் இல்லாத காரணத்தால் அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

கோந்த் சமூகத்தினரின் அறியாமை, ஏழ்மை, படிப்பறிவின்மை போன்ற பலவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் மீது பானா சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருவதுதான் வேதனை அளிக்கும் விஷயமாகும்.

பானா சமூகத்தினர் பலர் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்டுவிட்டனர். மிஷினரிகளின் உதவியால் கல்வி, வேலைவாய்ப்புகளைப் பெற்று பொருளாதார ரீதியில் வலுவாகிவிட்டனர். மதம் மாறிய பிறகும் எஸ்.சி.க்கான சலுகைகளைப் பெறுவதற்காக போலி சாதிச் சான்றுகளைப் பெறுகின்றனர். இதன்மூலம் அரசின் சலுகைகளையும் அரசு வேலைகளையும் பெற்றுவிடுகின்றனர்.

கோந்த் பழங்குடியினர் எண்ணிக்கையில் அதிக அளவு இருந்தும் கூட பொருளாதார ரீதியில் வலுவாக இல்லாத காரணத்தால் பானா சமூகத்தினரை விட பன்மடங்கு பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகின்றனர். பானா சமூகத்தினரின் சுரண்டலால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கோந்த் சமூகத்தினர்தான் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

மாவட்ட மக்கள்தொகையில் பெரும்பான்மையினராக இருந்தும்கூட கோந்த் சமூகத்தினர் எவரும் இதுவரை சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதனால் அரசியல் செல்வாக்கு அறவே இல்லாதவர்களாகிவிட்டனர்.

அதேசமயம் பானா சமூகத்தினர் அரசியல் செல்வாக்குடன் திகழ்கின்றனர். தங்களுக்குத் தேவையான சலுகைகளை அரசிடமிருந்து பெற்றுவருகின்றனர்.

கோந்த் சமூகத்தினரை அடக்கி ஆள்வதே குறிக்கோள் என்ற ரீதியில் புல்பானி சட்டமன்ற உறுப்பினரும் ஒரிசா அமைச்சரவையில் உருக்கு மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்தவருமான பத்மனாப பேஹ்ரா செயல்பட்டு வந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி கோந்த் பழங்குடி இனத்தவர்கள் மீது பானா சமூகத்தைச் சேர்ந்தவர்களும் நக்சலைட்டுகளும் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர். இதில் கோந்த் இனத்தைச் சேர்ந்த காகேஸ்வர் மாலிக் என்பவர் கொலை செய்யப்பட்டார். பிரம்மணிகால் என்ற கிராமத்தையே வன்முறைக் கும்பல் தீக்கிரையாக்கியது.

நிலைமை கட்டுக்கடங்காமல் போவதைக் கண்ட ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதிரடி நடவடிக்கையாக அமைச்சர் பதவியிலிருந்து பத்மனாப பேஹ்ராவை நீக்கினார்.

எனினும் கோந்த் இனத்தவருக்கும் பானா இனத்தவருக்கும் இடையிலான மோதல் நீருபூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது. அது எப்போது மீண்டும் வெடிக்கும் எனத் தெரியவில்லை.

வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த மானும் சிங்கமும் சேர்ந்து ஒரு துறையில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் பரவாயில்லை என கூறிவிடலாம். ஆனால் ஒரே இனத்தைச் சேர்ந்த மானும் மானுமே சேர்ந்திருக்கவில்லை என்பதைக் கேட்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது.

நகர மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தில் சிறு துளியையாவது ஆதிவாசிகளின் முன்னேற்றத்திலும் அரசியல் தலைவர்கள் காட்ட வேண்டும். அரசு அதிகாரிகளும் ஆதிவாசிகளின் நலனில் அக்கறை காட்டி அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை சரிவர நிறைவேற்ற உதவ வேண்டும். அப்போதுதான் நமது நாட்டின் பூர்வகுடிகளான ஆதிவாசிகளின் வாழ்வில் ஒளிபிறக்கும்.

Posted in Aadhivaasi, Aadhivasi, Aathivaasi, Aathivasi, Adhivasi, Adivasi, Agriculture, Assets, Athivasi, Balangir, Bamunigan, Biju, BJP, Business, Caste, Census, Christian, Christianity, Church, Community, Culture, Dalit Christians, Dalits, Economy, Education, Elections, Fake, Farmers, Farming, Farms, Gadapur, Gods, Government, Govt, Help, Heritage, Hills, Hindu, Hinduism, Hindutva, Judges, Justice, Kandhamal, Land, Law, Minerals, Missionary, Native, Naveen, Navin, Naxalites, Naxals, Needy, NGO, non-tribals, Order, Orissa, Police, Polls, Poor, Population, Poverty, Property, Religion, Reservations, Rich, RSS, SC, scheduled tribes, Schools, ST, Students, Teachers, Temples, Tradition, Tribals, Tribe, Violence, voters, Wealthy | Leave a Comment »

Batticaloa local polls & Pit of bodies discovered in the government-controlled Anuradhapura district

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2008

கர்ணல் கருணாவுக்கு 9 மாதம் சிறைத் தண்டனை: பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற குழுவின் தலைவரான கர்ணல் கருணா, போலி கடவுச்சீட்டு வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக பிரிட்டன் நீதிமன்றம் அவருக்கு ஒன்பது மாதம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

விநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற பெயர்கொண்ட இவர் கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்தில் கைதுசெய்யப்பட்டார்.

வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பின் வாதத்தை எடுத்துரைத்த அரசு தரப்பு பாரிஸ்டர், கருணா, கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி பிரிட்டனுக்குள் கோகில ஹர்ஷ குணவர்த்தன என்ற பெயரில் ராஜிய பாஸ்போர்ட் ஒன்றுடன் நுழைந்தார். இந்த பாஸ்போர்ட்டில் அவருக்கு பிரிட்டனுக்கு வந்து போக ஆறுமாத பலமுறை விஜயம் செய்யும் விசா ஒன்று வழங்கப்பட்டிருந்தது. பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்ட பெயர் வேறு ஒருவருடைய பெயராக இருந்தாலும், அதில் இருந்த புகைப்படம் கருணாவுடையதாக இருந்தது என்றார்.

இந்த விசா, வனவிலங்கு பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாடு ஒன்றில் குறிப்பிட்ட நபர் கலந்துகொள்வதற்காக கோரப்பட்டது என்றும் வழக்குரைஞர் கூறினார்.

பிரிட்டனுக்குள் வந்த கருணா கடந்த நவம்பர் இரண்டாம்தேதி பிரிட்டன் குடிவரவுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டர் என்று கூறிய அரசு வழக்குரைஞர், குடிவரவுத் தடுப்புக்காவலில் இருந்த அவரை, டிசம்பர் 22ம்தேதி, லண்டன் பெருநகரப் போலிசார் அடையாள ஆவணங்கள் மோசடி சட்டத்தின் கீழ் அவரைக் கைதுசெய்து குற்றச்சாட்டை பதிவு செய்தனர்.

போலிசார் கருணாவிடம் நடத்திய விசாரணையின்போது, கருணா தான் ஒரு இலங்கை பிரஜை என்றும், தனக்கு இந்த ராஜிய பாஸ்போர்ட் இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் உதவியால் தரப்பட்டது என்றும் கூறியதாகவும், அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து லண்டனுக்கு வரும்போது, கொழும்பு விமான நிலையத்தில், இலங்கையின் குடிவரவு மற்றும் சுங்க இலாகா வழிமுறைகளுக்கு உட்படாமல் தான் விமானத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும், விமானத்தில் ஏறும் முன்னர் தனக்கு இந்த ராஜிய பாஸ்போர்ட் தரப்பட்டதாகவும் கருணா லண்டன் போலிஸ் விசாரணையில் தெரிவித்ததாக, அரசு வழக்குரைஞர் தெரிவித்தார்.

ஆனாலும், இந்த பாஸ்போர்ட்டில் தனது புகைப்படம் மட்டுமே இருந்ததை கருணா கண்டதாகவும், மற்ற விவரங்கள் பொருந்தவில்லை என்று அவருக்கு தெரிந்திருந்ததாக கருணா கூறியதாக வழக்குரைஞர் குறிப்பிட்டார்.

தனக்கு ராஜிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது குறித்து கருணா போலிசாரிடம் குறிப்பிடுகையில் தான் அரசாங்க அதிகாரியல்ல என்றாலும், இலங்கை அரசால் பாதுகாப்பு வழங்கப்பட்ட ஒருவர் என்று குறிப்பிட்டதாக அரசு வழக்குரைஞர் கூறினார்.

கருணா ஏற்கனவே இந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று கூறிய கருணா தரப்பு வழக்குரைஞர் டேவிட் பிலிப்ஸ், ஆனால் போலிசார் மற்ற விடயங்களைப் பற்றி விசாரித்தபோது அவர்களுக்கு எந்தவித தடயமும் கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தனது கட்சிக்காரருக்கு மனைவி மற்றும் 11, 9 மற்றும் 6 வயதுடைய மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், கைதுசெய்யப்பட்டபோது அவர் தன்னுடைய வீட்டில்தான் இருந்தார் என்றும் குறிப்பிட்ட பிலிப்ஸ், கருணா இதற்கு முன்னர் சிறைத்தண்டனை பெற்றிருக்கவில்லை, இவ்வாறு தடுத்துவைக்கப்படுவது அவருக்கு ஒரு பயங்கரமான அனுபவமாக இருக்கும் என்றார்.

கருணாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை நீதிமன்றத்திலிருந்து அவதானித்திருந்த மணிவண்ணன் தொகுத்து வழங்கும் விரிவான செய்திகளை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


புலிகளின் வாகன தளத்தை விமான குண்டுவீச்சில் அழித்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது

 

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை காலை விமானப்படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் வாகனப் போக்குவரத்துத் தளம் ஒன்று அழிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.

இதனை மறுத்துள்ள விடுதலைப் புலிகள் மக்கள் குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஒரு சிவிலியன் கொல்லப்பட்டதாகவும் 5 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

எட்டு குண்டுகள் இப்பகுதியில் வீசப்பட்டதாகவும் இதனால் 12 வீடுகள் சேதமடைந்தும் முற்றாக அழிந்தும் இருப்பதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றார்கள்.

இந்த விமானத் தாக்குதலையடுத்து, கிளிநொச்சி பிரதேசத்தில் பதட்டம் நிலவியதுடன், பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் மேலும் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் பாடசாலைகளுக்குச் செல்லவில்லை என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் மின்னஞ்சல் வழி அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது.

காயமடைந்தவர்களில் 3 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி மருத்துவமனையின் பதில் மருத்துவ பணிப்பாளர் டாக்டர் பிரசாத்நாயகம் பிரைட்டன் தமிழோசையில் தெரிவித்தார்.


மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் முடிவுற்றது

 

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 6 அரசியல் கட்சிகளும் 22 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபைக்கும் 8 பிரதேச சபைகளுக்கும் 1994ஆம் ஆண்டுக்கு பின்பு நடைபெறவிருக்கும் இத்தேர்தல் மூலம் 101 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவிருப்பதாகக் கூறும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் டி.கிருஷ்ணானந்தலிங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் சயேச்சைக் குழுக்கள் சார்பாக 816 பேர் போடடியிடுவதாகக் குறிப்பிடுகின்றார்.

இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 23 சுயேச்சைக் குழுக்கள் சார்பாகவும் 7 அரசியல் கட்சிகள் சார்பாகவும் மொத்தம் 61 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்படிருந்த போதிலும் பரிசீலனையின் பின்பு 9 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்பிலும் ஏனைய சபைகளுக்கு தமது கட்சி சார்பாகவும் போட்டியிடும் அதேவேளை ஈ.பி.ஆர்.எல்.எஃப். பத்மநாபா அணி, ஈ.பி.டி.பி., பிளொட் ஆகிய கூட்டமைப்பு அனைத்து சபைகளுக்கும் சுயேச்சையாக போட்டியிடுகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.


கெப்பிட்டிகொல்லாவ சடலங்கள்: சனிக்கிழமை பிரேதப் பரிசோதனை

இலங்கை வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கெப்பிட்டிகொல்லாவ பகுதியின் குக்கிராமம் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்ட 16 உடல்களும் நாளை சனிக்கிழமை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என கெப்பிட்டிகொல்லாவ வைத்திய அதிகாரி தெரிவித்திருக்கின்றார்.

கைகள் கட்டப்பட்ட நிலையில் அருகருகே இரண்டு புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட இந்தச் சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என கெப்பிட்டிகொல்லாவ பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

நேற்று காலை முதல் இன்று பகல் வரையிலான காலப்பகுதியில் வன்னிப் போர்முனைகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது நடத்திய தாக்குதல்களில் 41 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் கொல்லப்பட்டுள்ள 16 பேரையும் விடுதலைப் புலிகளே கொலை செய்திருப்பதாகக் குற்றம்சுமத்தியுள்ளது.

எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதுவரையில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆயினும் மணலாறு பகுதியில் தமது பிரதேசத்தினுள் நேற்று வியாழக்கிழமை ஊடுருவ முயன்ற படையினர் மீது விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தியதை அடுத்து படையினர் பின்வாங்கிச் சென்றதாகவும், மன்னார் பாலைக்குழி பகுதியில் நேற்று காலை முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் 3 இராணுவத்தினரும் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

Posted in Anuradhapura, Anuradhapuram, Anurathapura, Arrests, Batticaloa, Eelam, Eezham, Elections, England, Jail, Karuna, Kilinochi, Law, London, LTTE, murders, Nominations, Order, Passport, Polls, Sri lanka, Srilanka, Tigers, UK, Visa, War | Leave a Comment »

The case for Mixed member Proportional Representation: Voting and Democracy

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2008

விகிதாசாரப் பிரதிநிதித்துவம்: விவாதம் தேவை

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

ஜனநாயகத்தில் அதிக வாக்குகள் பெற்றவர்தான் மக்கள் பிரதிநிதியாக விளங்க முடியும் என்ற ஒரு கருத்து இருப்பினும், குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் நாடாளுமன்றத்திற்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ அங்கீகாரத்துடன் செல்ல முடியாத நிலை இன்றைக்கு இருக்கிறது. இது ஓர் அரசியல் சூதாட்டம்போல் கருதாமல், மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.

நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் நடக்கின்ற தேர்தலில் ஆளும் முறைமையையும், தேசிய, பன்னாட்டு அளவில் கடமை ஆற்றவும் ஒரு கட்சியைத் தேர்ந்தெடுப்பதுதான் அரசியல் நடைமுறை ஆகும்.

தொகுதி நலன்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும், நாட்டின் முக்கியப் பிரச்னைகள், கொள்கைகள்தான் நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்தில் ஒலிக்கின்றன. தொகுதிகள் என்பது மக்கள் வாக்குகள் அளிக்கும் வசதிக்காக அமைக்கப்பட்டது.

தற்போதுள்ள நடைமுறையில் ஊரில் செல்வாக்கு உள்ள மனிதர் எளிதாக உருவாக்கப்படலாம். பணபலம், ஆள்பலத்தைக் கையில் வைத்து எளிதில் தேர்தலில் வெற்றி பெறலாம். அரசியலில் தனிநபர் செல்வாக்கையும், புகழ்ச்சியையும் விகிதாசார வாக்கு உரிமை மூலம் களையலாம்.

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களுடைய கொள்கைகளைத் தேர்தல் அறிக்கையின் முன் வைத்து விகிதாசார வாக்குரிமை முறையில் தேர்தலில் போட்டியிடலாம்.

மாநில அளவில், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எல்லாத் தொகுதிகளுக்கும் நிற்காமல் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னங்கள்தான் வாக்குச்சீட்டில் இருக்கும். இதில் அந்த தனி நபருடைய பெயரோ, முகமோ இல்லாமல், தேர்தல் காலத்தில் சுவரொட்டியில் கட்சிக் கொள்கை, கட்சியின் தலைமையின் பெயர் மட்டுமே பிரசாரத்தில் இருக்கும். அத்தேர்தலில் போடப்படுகின்ற மக்களுடைய ஓட்டு கொள்கை அடிப்படையில் நிச்சயம் இருக்கும்.

அத்தேர்தலில் மக்கள் அளித்த ஓட்டுகளை மொத்தமாக எண்ணி ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த ஓட்டாகக் கருதி விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். உதாரணத்திற்கு ஒரு கட்சிக்கு 10 நாடாளுமன்றத்திற்கும் 100 சட்டமன்றத்திற்கும் விகிதாசார அடிப்படையில் இடங்கள் கிடைக்கின்றது என்றால், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட கட்சியின் தலைமைக்கு நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு முறையாக 10:100 என்ற விகிதாசாரத்தின்படி உறுப்பினர்களை கட்சித் தலைமை தேர்ந்தெடுத்து அனுப்பும்படி தாக்கீது அனுப்பும். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட கட்சி தலைமை உண்மையான மக்களுடைய பிரதிநிதியாகக் கருதப்படும் நேர்மையானவர்களை 10:100 என்ற அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு எம்.பி., எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுத்த பட்டியலை அனுப்ப வேண்டும். அவ்வாறு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட பதவிக்குத் தகுதியுடையவர் ஆவார்கள்.

பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்து அனுப்புகின்ற பெயர்களை கட்சியின் மேலிடம் முற்றிலும் விவாதித்து, நன்கு பரிசீலனை செய்து அனுப்பப்படும்போது பதவிக்குச் செல்கின்றவர்கள் கட்சிக்கு விசுவாசியாக இருக்கின்ற வகையிலும், தவறு செய்யும் எந்தப் பிரதிநிதியும் கட்சித் தலைமை உடன் அழைக்கும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.

திரும்ப அழைப்பவர்களுக்குப் பதிலாக அதே கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவரை அனுப்புகின்ற வாய்ப்புகள் இருக்க வேண்டும். உறுப்பினர் பதவிக்காலத்தில் காலமானாலும் வீணாக இடைத்தேர்தல் நடத்தாமல் குறிப்பிட்ட கட்சியிலிருந்து வேறு ஒருவரை அனுப்பலாம்.

இதனால் அரசியல் கிரிமினல்கள், ஊழல் பெருச்சாளிகள் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் பொறுப்புக்கு வருவதை எளிதாகத் தடுக்கலாம். அரசியலில் கிரிமினல் குற்றவாளிகள் கலந்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டு மிகவும் பலமாக இருக்கிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட வோரா கமிஷன் அறிக்கையும் இந்திய அரசியலில் கிரிமினல் குற்றவாளிகளால் நாடு புரையோடிவிட்டதென்ற நிலையையும் எடுத்துக் கூறியிருக்கிறது. கட்சி மாறும் தடுப்புச் சட்டத்தைவிட விகிதாசார வாக்குமுறை வந்தால் கட்சி மாறுவதை அறவே ஒழித்துவிட முடியும். தேர்தலில் திறமையானவர்கள் நேர்மையானவர்கள் எளிதாக நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்குச் செல்ல இந்த முறையில் வாய்ப்புகள் இருக்கின்றன.

கட்சிகளின் தேர்தல் காலச் செலவினங்கள், அவசியமற்ற, ஆர்ப்பாட்ட தேர்தல் பிரசாரத்தைக் கட்டுப்படுத்தி, தேர்தல் பிரசாரத்தை எளிமைப்படுத்தலாம். ஓட்டுக்காக பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது. தேர்தல் காலத்தில் கலவரங்கள், மக்களுக்கு ஏற்படும் பீதிகள் இந்த முறையால் தடுக்கப்படலாம்.

1930-ம் ஆண்டு லண்டனில் கூடிய தேர்தல் சீர்திருத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் விகிதாசார வாக்குரிமை பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் இனங்கள் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில் விகிதாசார வாக்குரிமை நடைமுறையில் இருக்கிறது. விகிதாசார வாக்குரிமை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, சுவீடன், இத்தாலி, டாஸ்மேனியா, மால்டர், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இந்த முறை நடைமுறையில் இருக்கிறது.

சுவீடன் நாட்டில் ரிக்ஸ்டேக் தேர்தல் சட்டம் 1920-ன் அடிப்படையில் முனிசிபல் தேர்தல் சட்டம் 1930}ன் அடிப்படையில் விகிதாசார வாக்குரிமை முறை நடைமுறையில் இருக்கிறது.

சுவிட்சர்லாந்தில் பல்வேறு மொழி, தேசிய இனங்கள் இருப்பினும், விகிதாசார வாக்குமுறை அந்நாட்டில் சிறப்பாக 1882-லிருந்து செயல்பட்டு வருகிறது.

விகிதாசார வாக்குரிமை என்பது கணித முறைப்படி வகுப்பதாகும். விகிதாசார வாக்குரிமை ஜனநாயகத்தில் சரியாக இருக்காது என்ற வாதங்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும் இதனால் அமைச்சரவையில் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

1961-ம் ஆண்டு டிசம்பர் 16}ல் கோவையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு 17-ம் தேதி கோவை தேர்தல் சிறப்பு மாநாட்டில் அண்ணாவால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ராம் மனோகர் லோகியாவும் இதையே வலியுறுத்தினார்.

இந்திய சட்டக்கமிஷன் (அளவில்) விகிதாசார முறையைப் பின்பற்றுவதற்கு யோசனை கூறியுள்ளது. ஆயினும், மக்களவைக்கும் மாநிலச் சட்டப் பேரவைகளுக்கும் முற்றிலுமாகப் பட்டியல் முறையில் தேர்தல் நடத்துவதே மிகச் சிறந்தது என்று சட்ட ஆணையம் கருதுகிறது.

ஆனால் நம் நாட்டில் பல அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வெற்றிக்குத் திட்டங்களையும், கொள்கைகளையும் மட்டுமன்றி, வேட்பாளர்களுக்கு உள்ள செல்வாக்கையும் முக்கியமாகக் கருதுவதால் இந்த முறையை ஏற்க மாட்டா. எனவேதான் சட்டக் கமிஷன் நேரடித் தேர்தல் முறை, விகிதாசார முறையை யோசனையாகக் கூறியுள்ளது.

மக்களவைக்கும் சட்டப் பேரவைகளுக்கும் இப்போதுள்ள தேர்தல் முறையை அப்படியே வைத்துக்கொண்டு, இவற்றில் கூடுதலாக 25 சதவீத இடங்களை உருவாக்கி இந்த இடங்களை பொதுத் தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது ஆணையத்தின் யோசனை. பொதுத் தேர்தலின்போது இந்தக் கூடுதல் இடங்களுக்குத் தங்கள் வேட்பாளர்களை அரசியல் கட்சிகளின் தனித்தனிப் பட்டியல்களில் அறிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

ஜெர்மனியில் இருப்பதுபோல 4 சதவீதம் வாக்குகளுக்குக் குறைவாகப் பெறும் கட்சியைச் சட்டமன்றத்தில் இடம் பெறத் தகுதியற்றதாக அறிவிக்கலாம். இதனால் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை வரம்பின்றிப் பெருகுவதை விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மூலம் தடுக்கலாம். படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்சி முறை உருவாகும்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் மக்கள் பங்கெடுப்பு முழுமையாக இருக்கும். ஒரு ஓட்டுகூட சிதறாது. மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.

Posted in abuse, Admin, Administration, Advices, Citizens, Constituency, Cronies, Crony, Democracy, Election, Elections, Electorate, Europe, Federal, Freedom, Govt, Independence, Manifesto, minority, MLA, Money, MP, National, parliament, Party, people, Politics, Polls, Power, Proportion, reforms, Representation, Representatives, Republic, seats, States, Voice, Vote, voters, Votes | Leave a Comment »

Election to 9 local district bodies in Batticaloa: Sri Lanka Muslim Congress (SLMC) party parts with government

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

மட்டக்களப்பு தேர்தல்களில் முஸ்லீம் கட்சிகள் தனித்து போட்டி

மட்டக்களப்பில் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது
மட்டக்களப்பில் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை நடைபெறாமல் இருந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், இந்தத் தேர்தல்களில் தனித்து போட்டியிடப் போவதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், முஸ்லீம்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கக் கூடிய மட்டக்களப்பு மாநகர சபை, ஏறாவூர் பற்று மன்முனைப்பற்று பிரதேச சபைகள் உட்பட 5 சபைகளிலே தமது கட்சி போட்டியட தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் உயர்மட்டக் குழுவின் உறுப்பினரான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதனிடையே அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து குறிப்பிட்ட சபைகளில் போட்டியிட உத்தேசித்துள்ளதாக அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் அமீர் அலி குறிப்பிட்டுள்ளார்.

Posted in Batticaloa, District, Eelam, Eezham, Elections, Government, LTTE, Muslim, Muslims, Polls, SLMC, Sri lanka, Srilanka | Leave a Comment »

Human rights watchdog demands UN mission in Sri Lanka & Batticaloa elections

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2008

ஐ நா வின் மனித உரிமை கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டும் என ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.

ஐநாமன்றத்தின் மனித உரிமை கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டியதன் தேவை தற்போது மேலும் அதிகரித்திருப்பதாக அமெரிக்காவில் இருந்து செயல்படும் மனித உரிமை அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு விலகுவதாக அறிவித்திருப்பதை தொடர்ந்து, நார்வே தலைமையிலான போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினரின் பணி, ஜனவரி 16ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என்று கணக்கிடப்படுகிறது.

ஏற்கெனவே, இந்த கண்காணிப்பாளர்கள் தங்களின் பணியிடங்களிலிருந்தும், பணிகளிலிருந்தும், படிப்படியாக பின்வாங்கத் துவங்கியிருப்பதாகவும், இன்னமும் சில நாட்களில் இது முழுமையடையும் என்றும், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் சார்பில் பேசவல்ல அதிகாரி தெரிவித்ததாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பின்னணியில், ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பைச் சேர்ந்த எலைன் பியர்சன் அவர்கள், ஐநா மன்றத்தின் மனித உரிமை கண்காணிப்பாளர்களின் பணி இலங்கையில் உடனடியாக தேவைப்படுவதாக கூறியுள்ளார்.

போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு என்பது பெருமளவு குறைபாடுகளுடைய அமைப்பாக இருந்தாலும், பொதுமக்களின் மனித உரிமை மீறல்களை குறைப்பதில் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் கண்காணிப்பாளர்கள் பெருமளவு உதவியதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அவர்களின் பணிகள் முடிவுக்கு வரும் சூழலில், ஐநா மன்றத்தின் மனித உரிமைகள் கண்காணிப்பாளர்களின் பணி என்பது இலங்கையில் முன் எப்போதையும் விட மேலதிகமாக தேவைப்படுவதாக எலைன் பியர்சன் அவர்கள் கூறியிருக்கிறார்.

 


நார்வேயின் பணிகள் மீள்வரையறை செய்யப்படும் என்கிறது இலங்கை அரசு

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் போகல்லாகம
அமைச்சர் ரோஹித போகல்லாகம

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து ஒருதலைபட்சமாக விலகிக் கொண்ட இலங்கை அரசு, இலங்கை சமாதான முயற்சிகளில் இதுவரை அனுசரணையாளர்களாக பணியாற்றி வந்த நார்வே அரசின் பணியை மீள்வரையறை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

யுத்த நிறுத்த உடன்படிக்கைகியிலிருந்து அரசு விலகுவது தொடர்பாக கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்கு இன்று இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லாகம விளக்கினார்.

நார்வே அரசைப் பொறுத்த வரையில் இலங்கை இனப்பிரச்சினை தீர்வு முயற்சியில் இதுவரை ஒரு கட்டமைப்புக்கு உட்பட்ட பணிகளையே செய்து வந்தனர் எனவும், தற்போது யுத்த நிறுத்த உடன்படிக்கை என்பது இல்லை என்கிற நிலையில், அவர்களுக்கான புதிய வரையறைகளை தெரிவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் ரோஹித போகல்லாகம தெரிவித்துள்ளார்.

எனினும் புதிய வரைமுறைகள் என்ன என்பது இன்னமும் முடிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளிடம் அரசின் நிலைப்பாடு குறித்து தாம் விளக்கியபோது, அரசின் இவ்வாறான நிலைப்பாடு குறித்து யாரும் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை எனவும் இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சர் கூறினார்.

இவ்வாறான ஒரு நிலையில் அரசின் நிலைப்பாட்டை, சர்வதேச சமூகம் நன்கு உணரக்கூடிய நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். அவரது கருத்துக்களை உள்ளடக்கிய செய்திக் குறிப்பை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

 


இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது: இந்தியா கருத்து

இந்திய அரசின் வெளியுறவு பேச்சாளர் சர்னா
இந்திய அரசின் பேச்சாளர் நவ்தேஜ் சர்னா

இலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது என்று உறுதியாக நம்புவதாக இந்தியா கருத்துத் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியா முதல் முறையாக வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவித்திருக்கிறது.

இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இலங்கையில் நடைபெறும் வன்முறைகளையும், மனித சமுதாயம் படும் வேதனைகளையும் குறைப்பதற்கு எடுக்கப்படும் எந்த நடவடிக்கையையும் இந்தியா வரவேற்கிறது. துரதிர்ஷ்டவசமாக, சமீபகாலமாக இலங்கையில் வன்முறையும், பதற்றமும் மோதல்களும் அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில், ஒன்றுபட்ட இலங்கைக்குள், அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, அரசியல், சட்டம் மற்றும் பிற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.

அப்படிப்பட்ட தீர்வின் மூலம்தான், வன்முறையால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த முடியும். இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாக அமையாது என்பதை இந்தியா உறுதியாக நம்புகிறது என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா தெரிவித்திருக்கிறார்.

அதே நேரத்தில், இந்தியாவில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ், பிரதான எதிர்க்கட்சியான பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகள் ஆரம்பம்

வேட்பு மனு தாக்கல் செல்லபவர்கள்
வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெறாத 9 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்த அரசு தீர்மானித்துள்ள நிலையில், அதற்கான வேட்புமனுக்கள் இம்மாதம் 18 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபைக்கும், 8 பிரதேச சபைகளுக்கும் நடைபெறவிருக்கும் இத்தேர்தலில் இரண்டு லட்சத்து எழுபதாயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக உதவி தேர்தல் ஆணையர் கிருஷ்ணானந்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு வசதியாக கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் குறிப்பிட்ட சபைகளுக்கான தேர்தல்கள் இப்போதுதான் நடைபெறவுள்ளன.

 


 


இலங்கையின் தற்போதைய நிலை குறித்து பாதுகாப்பு ஆய்வாளரின் கருத்து

இலங்கை படையினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையில் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு விலகிவிட்ட நிலையில், உடனடியாகப் போர் வருமா என்பதை தன்னால் உறுதியாகக் கூற முடியவில்லை என்று தெரிவித்த இலங்கை பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ், அதே நேரம் விடுதலைப் புலிகள் பலம் இழந்து விட்டார்கள் என்று செய்யப்படும் பிரசாரத்தை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் கூறினார்.

இலங்கையில் போர்களத்தில் நடக்கும் சம்பவங்களை அப்படியே எழுத முடியாத சூழல் ஊடகங்கள் மத்தியில் இருப்பதன் காரணமாக போரில் இலங்கை அரசு படைகளின் கை ஒங்குவது போன்ற எண்ணம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்று இலங்கைப் பாதுகாப்பு பகுப்பாய்வாளர் இக்பால் அத்தாஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் தினந்தோறும் பெரிய அளவில் இழப்புக்களை சந்திப்பதாக அரசு வெளியிடும் புள்ளி விபரங்களின் நம்பகத்தன்மை குறித்த கருத்து வெளியிட்ட இக்பால் அத்தாஸ், இலங்கையின் தற்போதைய அரசு மட்டுமல்லாமல், முந்தைய அரசுகள் வெளியிட்ட இத்தகைய புள்ளி விபரங்களை கணக்கிட்டால் இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூட தற்போது இருக்க மாட்டார்கள் என்று இக்பால் அத்தாஸ் தெரிவித்தார்.

 


திருகோணமலைக்கும் யாழ் குடாநாட்டிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தம்

கிரீன் ஒசியானிக் கப்பல்
கிரீன் ஒசியானிக் கப்பல்

திருகோணமலைக்கும் யாழ் குடாநாட்டுக்குமான பயணிகள் கப்பல் சேவையினை தற்காலிகமாக இடைநிறுத்தும் நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருகோணமலை பட்டணமும் சூழலுக்குமான பிரதேச செயலாளர் சசிகலா ஜலதீபன் தெரிவித்திருக்கின்றார்.

கப்பல் பயணசேவை முகவர் நிலையம் இதனை அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார். இத்தகைய நடவடிக்கையின் விளைவாக திருகோணமலைக்கும் யாழ் குடாநாட்டுக்கும் இடையே கடந்த பதினோரு மாத காலமாக இடம்பெற்று வந்த கடற்பயண சேவைகள் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் திருத்த வேலைகளுக்கென கொழும்புக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் பத்து தினங்களில் மீண்டும் சேவைக்கு விடப்படும் எனவும் பிரதேச செயலாளர் தெரிவித்திருக்கின்றார்.

விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரம் அடந்த நிலையில், ஏ ஒன்பது வீதி மூடப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ஏழாம் திகதி திருகோணமலைக்கும் யாழ் குடாநாட்டின் காங்கேசன்துறைக்கும் இடையே கிரீன் ஓசியானிக் என்ற பயணிகள் கப்பல் சேவைக்கு விடப்பட்டது.

இந்தக் கப்பல் திருகோணமலைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் தனது சேவையினை மேற்கொண்டு வந்த நிலையிலேயே இந்த சேவை திருத்த வேலைகளுக்கென இடைநிறுத்தப்படவுள்ளது.

Posted in Batticaloa, Eelam, Eezham, Elections, Human Rights, LTTE, mission, Polls, Sri lanka, Srilanka, UN | Leave a Comment »

Kenya’s elections: A very African coup – Twilight robbery, daylight murder; After a stolen election, ethnic cleansing

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2008

திருடிய வெற்றியும் தொலைந்துபோன அமைதியும்

எம். மணிகண்டன்

இந்தியப் பெருங்கடலையொட்டிய இயற்கை எழில் மிக்க கடற்கரைகள், வண்ண மயமான விளையாட்டு மைதானங்கள் ஆகியவைதான் கென்யாவைப் பற்றி வெளிநாட்டினருக்கு அதிகமாகத் தெரிந்தவை.

Economistரத்த ஆறுகள் ஓடும் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சற்று மாறுபட்டது கென்யா. இந்தியாவுக்கு ஒரு நேருவைப் போல, கென்யாவுக்கு ஒரு கென்யாட்டா கிடைத்தார். சாகும் வரை அவர் அதிபராகவும் இருந்தார்.

கென்யாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறையிலேயே கழித்தவர் என்பதில் நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடத் தகுந்தவர் கென்யாட்டா. வளர்ச்சியை நோக்கிய உள்கட்டமைப்பு, கருணைமிக்க நிலச் சீர்திருத்தம், கரிசனம் கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தம் என ஜோமோ கென்யாட்டாவின் பணிகள் அவருக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தன.

சூடான் மற்றும் சோமாலிய அமைதி முயற்சிகளில் ஈடுபடும் அளவுக்கு கென்யாவை உயர்த்தியது கென்யாட்டாதான் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்க உண்மை. இவ்வளவு பெருமைக்குரியவரான கென்யாட்டா ஒரு சாத்தானையும் விட்டுச் சென்றார். அதுதான் இனப் பாகுபாடு. உலக நாகரிகத்தின் முன்னோடிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு நாடு, ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டிய ஒரு நாடு, மிக மோசமான கலவர பூமியாக மாறிக் கொண்டிருப்பது இனக் கலவரங்களால்தான்.

கென்யாவில் 40-க்கும் அதிகமான பழங்குடி இனத்தவர்கள் வசித்து வந்தாலும், கிக்கூயூ இனத்தவரின் எண்ணிக்கை மற்றவர்களைக் காட்டிலும் அதிகம். 1960-களில் சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை மூன்றே அதிபர்களைத்தான் கென்யா கண்டிருக்கிறது. அவர்களில் இருவர் கிக்கூயூ இனத்தவர். கென்யாட்டாவும், தற்போதைய அதிபர் கிபாகியும்தான் அந்த இருவர். நீண்டகாலமாகவே பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பதும், நாட்டின் முக்கிய விவசாய நிலங்களை வைத்திருப்பதும், பெரிய பதவிகளைக் கைப்பற்றுவதும் கிக்கூயூக்கள்தான்.

தூய்மையான நிர்வாகம் என்ற கோஷத்தோடு, கடந்த 2002 தேர்தலில் வென்றவர்தான் கிபாகி. இவரது அதிகார ஆக்கிரமிப்புதான் இப்போது பிரச்னையாகியிருக்கிறது. அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கிபாகி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் வன்முறை வெடித்திருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நாடு முழுவதும் பதற்றம் நிறைந்திருக்கிறது.

அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றார் என்பது தமக்கு உண்மையிலேயே தெரியாது எனவும், ஆளுங் கட்சியினரின் நெருக்கடி காரணமாகவே கிபாகி வெற்றி பெற்றதாக அறிவித்ததாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. கிபாகியை எதிர்த்துப் போட்டியிட்ட லூ இனத்தைச் சேர்ந்த ஓடிங்கோ தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளவில்லை.

கென்யாவில் கட்சியைப் பார்த்து யாரும் வாக்களிப்பதில்லை. இனம்தான் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நான் உங்கள் இனத்தைச் சேர்ந்தவன்; நீங்கள் தாராளமாக என்னை நம்பலாம் என நேரடியாகவே வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவதுதான் தேர்தல் வெற்றிக்கான சூத்திரம். இந்தப் பின்னணியில், ஏற்கெனவே கிக்கூயூ இனத்தவரால் தாங்கள் ஒடுக்கப்பட்டதாகக் கருதும் மற்ற இனத்தவர் இத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வன்முறையில் இறங்கிவிட்டனர். எங்கெல்லாம் கிக்கூயூ இனத்தவர் இருக்கின்றனரோ அங்கெல்லாம் படுகொலைகள் நடந்தவண்ணம் உள்ளன.

கென்ய வன்முறைகளுக்கு அந்நாட்டுக்கு நிதியுதவி செய்யும் பிரிட்டனும் அமெரிக்காவும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. ஆனால் எந்த நாட்டில் சண்டை நடந்தாலும் ஆயுதங்கள் விற்பனையாகும் என்ற எண்ணத்தில் மேலை நாடுகளுக்கு உள்ளூர மகிழ்ச்சிதான்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு நாட்டையும் தங்களது வாடிக்கையாளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்குத்தான் மேலை நாடுகள் உண்மையிலேயே முயன்று வருகின்றன. அதனால் போர் ஏற்படும்வரை காத்திருந்து ஆயுதங்களை விற்பனை செய்வதுதான் அவர்களின் எண்ணம். எண்ணெய் வளங்களில் முதலீடு செய்திருக்கும் சீனாவும் இப்போதைக்கு உதவிக்கு வருவதுபோல் தெரியவில்லை. எனவே, எந்த நாடு உதவிக்கு வந்தாலும் அது லாப நோக்கத்துடன்தான் இருக்கும்.

ஆக, கென்யா இன்னொரு உகாண்டாவாக மாறாமல் தடுக்கும் பொறுப்பு கிபாகிக்கும் ஓடிங்கோவுக்கும்தான் உள்ளது. 300-க்கும் அதிகமானோர் பலியான பின்னரும் அமைதி முயற்சி எதையும் மேற்கொள்ளாத அதிபர் கிபாகி மீது ஆப்பிரிக்க மக்களின் மொத்தக் கோபமும் திரும்பியிருக்கிறது.

பதவியைத் துறந்துவிட்டு இடைக்கால அரசை நியமித்து புதிதாகத் தேர்தல் நடத்துவது ஒன்றுதான் இப்போதைக்கு கிபாகி முன்னால் இருக்கும் ஒரே வாய்ப்பு. பிரச்னை ஏற்படலாம் என்று தெரிந்தவுடன், அதிகாரத்தைத் தூக்கி எறிந்த நெல்சன் மண்டேலா போல் போற்றுதலுக்குரிய தலைவராக மாற கிபாகிக்கு இது நல்ல சந்தர்ப்பம்.

இல்லையெனில், இராக் ஆக்கிரமிப்புக்கு முன்பு டோனி பிளேர் கூறியது போல், நீதியை நிலைநாட்ட “அடித்துக் கொள்ள’ வேண்டியதுதான்; மேலை நாடுகளுக்குச் சாதகமாக!

 


 

கென்யாவில் வன்முறை காரணமாக 1.80.000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்

கென்யாவில் கடந்த வாரம் நடந்த தேர்தலைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில் குறைந்தது ஒரு லட்சத்து எண்பதனாயிரம் பேர் இடம் பெயர்ந்திருப்பதாக ஐநாமன்றத்தின் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இவர்களில் சிலர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக் கிறார்கள். சிலர் காவல்நிலையங்களிலும், சிலர் தேவாலயங் களிலும் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.

இப்படியான அகதிகள் எல்லோருமே பட்டினியாக இருப்ப தாகவும், பல குழந்தைகள் வெயிலுக்கு பலியாகி இறந்து விட்டதாகவும், இந்த வன்முறைகளில் அதிகம் பாதிக்கப்பட்ட கென்யாவின் மேற்கு பிரதேசங்களில் ஒன்றில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
கென்யா முழுவதும் சுமார் ஐந்து லட்சம் கென்யர்கள் அவசர உதவி தேவைப்படும் நிலையில் இருப்பதாக, நைரோபியில் இருக்கும் ஐநா மன்றத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 


புதிய தேர்தலுக்கு தயார்- ஆனால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் என்கிறார் கென்ய அதிபர் கிபாக்கி

கென்ய அதிபர் கிபாக்கி
கென்ய அதிபர் கிபாக்கி

கென்யாவில் புதிதாக தேர்தல் நடத்தப்படுவதை கொள்கை அடிப்படையில் எதிர்க்கவில்லை, ஆனால் நீதிமன்றம் ஒன்று உத்தரவிடும் பட்சத்தில்தான் புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று அதிபர் முவாய் கிபாக்கி விரும்புகிறார் என அந்நாட்டின் அரசு சார்பாகப் பேசவல்லவர் கூறியுள்ளார்.

ரைலா ஒடிங்கா தலைமையிலான ஓ.டி.எம். எதிர்க்கட்சியானது, சர்வதேச நாடுகளின் கண்காணிப்பின் கீழ் மறுபடியும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், ஆனால் இவ்விவகாரத்தை நீதிமன்றத்திடம் கொண்டுசெல்லப்போவதில்லை, ஏனெனில் நீதிமன்ற முடிவின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லையென்று கூறியிருந்தது.

இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கான புதிய ராஜீய முயற்சிகள் நடந்துவருகின்றன. அதிபர் கிபாகு மற்றும் ஒடிங்கா ஆகியோருடன் நொபெல் பரிசு வென்ற தென்னாப்பிரிக்க பிரமுகர் டெஸ்மண்ட் டுடு பேச்சுநடத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் புஷ்ஷின் தூதர் ஜெண்டயி ஃப்ரேஸார் நைரோபி சென்றுகொண்டிருக்கிறார்.

 


தற்போதைய கென்ய அரசியல் நெருக்கடியின் பின்னணி என்ன?

நைரோபியில் தொடர்ந்து பதட்டம்
நைரோபியில் தொடர்ந்து பதட்டம்

தலைநகர் நைரோபி மற்றும் பிற நகர வீதிகளில் அரங்கேறிவரும் அரசியல் நெருக்கடிக்கு, நாட்டின் சக்திவாய்ந்த இரண்டு இனப்பிரிவுகளான – அதிபர் கிபாகியின் ககிகுயு பழங்குடியினத்துக்கும் எதிர்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்காவின் லுஒ இனத்துக்கும் இடையில் வரலாற்று ரீதியாயக நீடித்துவரும் பகைமை ஒரு பங்கில் வேராக அமைந்துள்ளது என்று சொல்லலாம்.

அதிபர் கிபாகியின் இனப்பிரிவான கிகுயுதான் கென்யாவின் மிகப் பெரிய மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் சக்திவாய்ந்த இனமாகும். இவ்வினத்தார் அதிகம் பேர் நைரோபியைச் சுற்றி வாழ்கிறார்கள். இவ்வினத்தாரின் தலைவர் ஜோமோ கென்யாட்டாதான் சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் முதல் அதிபரானவர்.

நாட்டின் மேற்குப் பகுதியில் உகாண்டாவுடனான எல்லைக்கு அருகில் பரவலாக வாழும் லுஒ இனத்தார், பலமுறை அரசுப் பிரதிநிதிகளாக இருந்துள்ளனர் என்றாலும் அவர்களில் மிகப் பிரபலமான தலைவர் காலஞ்சென்ற ஒகிங்கா ஒடிங்கா ஆவார். இவரின் மகன் தான் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்கா.

கிகுயுவுக்கும் லுஒவுக்கும் இடையே நெடுநாளாக அரசியல் போட்டி பகைமை இருந்துவருகிறது என்றாலும் கென்யா பல ஆண்டுகளாக ஒரு அமைதியான நாடாகவே திகழ்ந்துவருகிறது.

சர்ச்சைக்குரிய தேர்தல் முடிவுகள் தொடர்பான தற்போதைய அரசியல் நெருக்கடியின் பின்னணி குறித்து எமது உலக விவகார செய்தியாளர் மார்க் டொய்ல் விளக்கும் செய்திக்குறிப்பின் தமிழ் வடிவத்தை நேயர்கள் கேட்கலாம்.

 


 

 

Posted in africa, Ancestry, Arms, AU, Autocracy, Autocrats, Britain, Cabinet, China, Citizen, Cleansing, Congo, Constituency, Democracy, Dictators, Dictatorship, Eldoret, Election, Elections, Ethiopia, fraud, Government, Govt, Kenya, Kibaki, Kikuyu, Kingdom, Kings, Kisumu, Kivuitu, Luo, margin, Military, Mombasa, Monarchy, Monitors, Murder, Mwai, Nairobi, Nigeria, Nyanza, Odinga, Opposition, people, Polls, Protest, protesters, Race, Racial, Raila, Re-election, rigging, Robbery, Somalia, Vote, voters, War, Weapons | Leave a Comment »

Sri Lankan Tamil MP Maheswaran assassinated in Colombo temple

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் புதுவருடத்தினமான இன்று கொழும்பு பொன்னம்பலவாணேசர் ஆலயத்தில் வைத்து துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆலயத்தின் உள்வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், கொழும்பில் மிகவும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று காலை சுமார் 10 மணியளவில் மகேஸ்வரன் தனது குடும்பத்தார் மற்றும் மெய்பாதுகாப்பு உறுப்பினர்கள் சகிதம், மிகவும் சனக்கூட்டம் நிறைந்த இந்த ஆலய உள்வீதியில் வலம் வந்துகொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்ததாகக் கருதப்படும் துப்பாக்கி நபரினால் சரமாரியாகச் சுடப்பட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவத்தின்போது படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விரையப்பட்டபோதிலும், அங்கு அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிற்குள்ளேயே சிகிச்சைகள் பயனின்றி இறந்துவிட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்

இந்தச் சம்பவத்தின் போது அவரது மெய்பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் 12 பேர் வரையில் காயமடைந்தாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலை மேற்கொண்டதாகக் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிநபர் கொட்டாஞ்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாப்பாளரின் பதில்தாக்குதலில் காயமடைந்திருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் உறுதி செய்திருக்கின்றன.

இந்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் இவர், தற்போது பொலிசாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

அத்துடன் மகேஸ்வரனின் இன்றைய இந்தப்படுகொலையைக் கேட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருப்பதாகவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இது தொடர்பாக தேவையான விசாரணைகளை மேற்கொண்டு கொலையாளிகளைக் கைதுசெய்யும்படியும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

அதேவேளை மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ள அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இந்தியாவில் இருந்து விடுத்துள்ள ஒரு செய்தியில், இலங்கை அரசாங்கமே இந்தக் கொலைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Posted in Assassination, Assassinations, Batticaloa, Campaign, Civil Monitoring Committee, Colombo, dead, Devananda, Devanandha, Devanantha, Douglas, Douglas Devananda, Eelam, Eezham, Election, Elections, EPDP, Ganesan, guards, Hindu, Jaffna, Joseph, Joseph Pararajasingham, Killed, Kochchikkadai, Kotahena, LTTE, Mageshwaran, Magesvaran, Mageswaran, Maheshwaran, Mahesvaran, Maheswaran, Mahinda, Mahindha, Mahintha, Mano, Mano Ganesan, MP, Murder, Muthukumar, Muthukumar Sivapalan, Nadaraja, Nadarajah, Nadarajah Raviraj, Nataraja, paramilitary, Pararajasingam, Pararajasingham, Pararajasinkam, Parliamentarian, Polls, Ponnambala Vaneswara Hindu Temple, Rajapaksa, Ranil, Raviraj, Security, Sivabalan, Sivapalan, Sri lanka, Srilanka, Tamil, Tamil National Alliance, Temple, terror, Terrorists, Thiagaraja, Thiyagaraja, Thiyagarajah, Thiyagarajah Maheswaran, TNA, UNP, Western Province Peoples Front, Wickremasinga, Wickremasinge, Wickremasingha, WPPF | 2 Comments »

Is educational credential required for people’s representatives? – D Purushothaman

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

பள்ளி இறுதிவகுப்பைக்கூட எட்டாத எம்.பி.க்கள்!

டி. புருஷோத்தமன்

எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் கூட குறைந்தபட்சம் பள்ளி இறுதிவகுப்பு வரையிலாவது பயின்று இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

ஆனால் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் பள்ளி இறுதிவகுப்புவரை கூட பயிலாதவர்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். 60 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித குறைந்தபட்ச கல்வித் தகுதியையும் நிர்ணயிக்காததால் இந்த அவலநிலை.

பள்ளி இறுதிவகுப்பைக் கூட எட்டாத எம்.பி.க்கள் கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளிலும் இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியில் இத்தகைய எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முகமது சாஹித், ரமேஷ் துபே, பாய் லால் ஆகிய மூவரும் பள்ளி இறுதிவகுப்பைக் கூட எட்டாதவர்கள். இதேபோன்று சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த ஹரி கேவல் பிரசாத்தும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுரேந்திர பிரகாஷ் கோயலும் இப்பட்டியலில் அடங்குவர்.

மேற்குவங்கத்தைப் பொருத்தவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் செüத்ரியும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திரசேகர் துபேயும் இதேபோன்று பள்ளி இறுதிவகுப்பை எட்டாதவர்கள்தான்.

கேரளம் கல்வியறிவு பெற்ற முதன்மை மாநிலம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அங்கு கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரவீந்திரன், பள்ளி இறுதிவகுப்பை முடிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

மகாராஷ்டிரத்தில் பாஜகவை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், சிவசேனை கட்சியை சேர்ந்த மோகன் ரவாலேயும் இந்தப் பட்டியலில் அடங்குவர். இவ்விஷயத்தில் பிற கட்சிகளுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பாஜகவும் சிவசேனையும் நிரூபித்துள்ளன.

ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவதார் சிங் பதானாவும், ஆத்ம சிங் கில்லும் பள்ளி இறுதிவகுப்பை எட்டாதவர்கள். அசாமில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மோனிகுமார் சுபாவும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த பாலிராம் காஷ்யப்பும் இந்தப் பட்டியலைச் சேர்ந்தவர்கள்தான்.

குஜராத்தில் பாஜகவை சேர்ந்த சோமாபாய் கந்தலால் கோலி பட்டேல் பள்ளி இறுதிவகுப்புவரை பயிலாதவர்.

ஆனால் மேற்குறிப்பிட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் சிகரம் வைத்தாற்போல, தொடக்கப்பள்ளி வரை மட்டுமே பயின்றவர் பாஜகவை சேர்ந்த மகேஷ் குமார் கோனோடியா!

பிகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் மன்ஜியும், லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சூரஜ் சிங்கும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த கைலாஷ் பைத்தா ஆகியோரும் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள்தான்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயரிய கல்வித்தகுதியைப் பெற்றிருந்தால்தான் விவாதங்களில் உரியமுறையில் பங்குகொண்டு தங்களது கருத்துகளை வலுவான முறையில் எடுத்துக்கூற இயலும். இல்லாவிடில் எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் அவையை விட்டு வெளிநடப்புச் செய்ய என்பதே தாரக மந்திரமாகிவிடும்.

பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தை எடுத்துக்கொண்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 36 லட்சம் கோடி ரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் திட்ட இலக்குகளை எட்ட கல்வித்தகுதி மிக்க எம்.பி.க்கள் மிக அவசியம் என்பதை எவரும் மறுக்க இயலாது.

துவக்கத்தில் மில்லியன்கள், கோடிகள், பின்னர் பில்லியன்கள், இறுதியாக டிரில்லியன்கள் என அரசின் வரவு-செலவுத் திட்டங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. போதிய கல்வியறிவு இல்லாத காரணத்தால் இதைப்பற்றிய பொருளாதார விவரங்களை அறிய முடியாமல் இத்தகைய எம்.பி.க்கள் அவதிப்படுகின்றனர். நாடாளுமன்ற விவாதங்களில் தீவிரமாக பங்கேற்க இயலாமல் சிரமப்படுகின்றனர்.

உயர்கல்வி கற்றவர்கள் உயர் அதிகாரிகளாகப் பொறுப்பேற்று அரசின் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் பள்ளிப்படிப்பை கூட முடிக்காத அரசியல்வாதிகள் அவர்களை வழிநடத்தும் துர்ப்பாக்கியம் நமது நாட்டில் அதிகமாகவே நிகழ்ந்து வருகிறது. கல்விகற்ற அதிகாரிகள் சொல்வதை அரசியல்வாதிகள் சிறிதும் ஏற்பதில்லை. இதனால் ஐந்தாண்டுத் திட்டங்களின் முழுப்பலன்களும் மக்களைச் சென்றடைவதில்லை. ஏழ்மை இன்னும் தாண்டவமாடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

பல எம்.பி.க்கள் போதிய கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்துவருவதால் தாங்கள் செய்யும் குற்றச்செயல்களின் பாதிப்புகளை தாங்களே உணர்ந்துகொள்வதில்லை.

லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மன்ஜி. போதிய கல்வித்தகுதியற்ற இவர் எம்.பி. என்ற முறையில் செய்த குற்றச்செயல்கள் அனைவரையும் வெட்கித் தலைகுனியவைக்கக் கூடியதாகும். வெளிநாடுகளுக்கு போலி பெயர்களில் ஆள்கடத்தலில் வல்லவர் என்ற பெயருக்கு அவர் ஆளாகிவிட்டார்.

இதற்கும் ஒரு படி மேலே சென்று, தனது காதலியை மனைவி எனக் கூறி வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது தில்லி விமான நிலையத்தில் கையும் களவுமாக பிடிபட்டார். (சட்டபூர்வமாக அப்பெண்ணை திருமணம் செய்யவில்லை என்ற போதிலும்) அந்தக் காதலியை விவாகரத்து செய்யவும் அவர் முயன்று வருகிறார்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது ஜமீன்தாரர்களும் தனவந்தர்களும் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளின் பிரமுகர்களும் தங்களது செல்வாக்கின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது மக்களிடம் போதிய விழிப்புணர்வும் இல்லை. ஆனால் தற்போது மக்களிடம் கல்வியறிவும் விழிப்புணர்வும் வேகமாக ஏற்பட்டு வருகிறது.

அரசு உயர்பதவிகளுக்கு எவ்வாறு உயரிய கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அதைப்போன்றே இனி எம்.பி.க்களுக்கும் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.

100 கோடி மக்களின் பிரநிதிகளாக இருக்க வேண்டிய எம்.பி.க்களுக்கு போதிய கல்வித்தகுதி அவசியம் இருக்க வேண்டுமல்லவா? அரசியல்சாசனத்தில் உரிய திருத்தம் செய்து இதற்கான வழிவகைகளைச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

Posted in Bengal, Bihar, BJP, BSP, Chathisgar, Chathisgarh, Chattisgar, Chattisgarh, Citizen, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), credentials, Education, Election, eligibility, Gujarat, Haryana, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Kamaraj, kamarajar, Kamraj, Kerala, Lalloo, Laloo, Lalu, maharashtra, MLA, MP, people, Polls, Purushothaman, Qualifications, Requirements, RJD, Shiv Sena, Shivsena, Teachers, Uthar Pradesh, Utharakand, Utharakhand, Utharanchal, Utharkhand, Utharpradesh, Uttar Pradesh, Uttarakand, Uttarakhand, Uttaranchal, Uttarkand, Uttarkhand, UttarPradesh, Uttrakand, Votes, WB, West Bengal, Yadav | Leave a Comment »