Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Gender’ Category

U Nirmala Rani: Women Rights – Perspectives, Timeline, Information

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

“இரும்புத் தாடை தேவதைகள்’

வழக்கறிஞர் உ . நிர்மலா ராணி

இன்று சர்வதேச பெண்கள் தினம். 1908ம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாள் நியூயார்க் நகரில் ஆயிரக்கணக்கான பஞ்சாலை பெண் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை கோரி நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தை நினைவு கூறும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அந்தப் போராட்டத்தின் இரண்டாவது முக்கிய கோரிக்கை தான் பெண்களுக்கு வாக்குரிமை!

அந்தக் காலத்தில் வாக்குரிமை என்பது வசதி படைத்தவர்கள் அதிலும் ஆண்களுக்குத்தான் ஓட்டுரிமை. சொத்து வைத்திருக்காத ஆண்கள், வேலையாட்கள், கிரிமினல்கள் இந்த வரிசையில் இறுதியாகப் பெண்கள். இவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை மறுக்கப்பட்டது.

பெண்களுக்கு வாக்குரிமை கோரி நடந்த ஒரு நூற்றாண்டுப் போராட்டம்கூட வரலாற்றில் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் மறைக்கப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த சமூகப் போராளி எலிசபெத் கேண்டி ஸ்டாண்டன், லண்டனில் நடந்த அடிமை முறை எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றபோது, பெண்கள் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அடிமை எதிர்ப்பு மாநாட்டிலேயே பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவது கண்டு ஆத்திரமுற்ற எலிசபெத், 1848-ல் செனிகா ஃபால்ஸ் என்ற இடத்தில் பெண்களைத் திரட்டி கோரிக்கைப் பிரகடனத்தை வெளியிட்டார். அது தான் அமெரிக்காவில் பெண்கள் வாக்குரிமைக்கான போராட்டத்தின் முதல் வித்து!

ஆரம்பத்தில் வாக்குரிமை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சாத்வீகமான போராட்ட வடிவங்களைக் கையாண்ட பெண்கள், கறுப்பின மக்களுக்கு சம உரிமையளித்த “”சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்று விளம்பும் 14, 15 சட்ட திருத்தங்களிலிருந்து பெண்கள் மட்டும் விலக்கப்பட்டபோது பொங்கி எழுந்தனர்.

அமெரிக்காவில் எலிசபெத் கேண்டி ஸ்டாண்டன், சூஸன் பி ஆண்டனி, ஆலிஸ் பால் ஆகியோரும், இங்கிலாந்தில் எம்மலின் பாங்கர்ஸ்ட் மற்றும் அவரது 2 புதல்விகள் கிறிஸ்டபெல் மற்றும் சில்வியா ஆகியோரும் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தினர். நாடாளுமன்றமும் அரசு அலுவலகங்களும் முற்றுகையிடப்பட்டன. வாயில்களில் வாக்குரிமை கேட்டு பேனர் பிடித்தபடி நாள்கணக்கில் நின்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் காரி உமிழ்ந்தனர்.

கோபமடைந்த பெண்கள் அரசு அலுவலகக் கண்ணாடிக் கதவுகளை சரசரவென்று கல்லெறிந்து உடைத்து நொறுக்கினர். தந்தி வயர்களை வெட்டினர். அதிகாரிகளின் கார் கண்ணாடிகளைத் தூளாக்கினர். எரி குண்டுகளை வீசி அரசு அலுவலகங்களைத் தாக்கினர். கைதாகினர். சிறை சென்றனர். உண்ணாவிரதமிருந்தனர். சிறை அதிகாரிகள் வன்முறையை உபயோகித்த போதும் வாய் வழியாக அவர்களுக்கு உணவூட்ட இயலவில்லை. எனவே தான் இந்தப் பெண் போராளிகளுக்கு “இரும்புத் தாடை தேவதைகள்’ என்ற செல்லப்பெயர் சூட்டப்பட்டது. எனவே சிறை அதிகாரிகள் அவர்களைக் கட்டாயப்படுத்தி மூக்கின் வழியாக, குழாய் மூலமாக உணவைச் செலுத்தினர்.

உச்சகட்டமாக 1913 ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் எமிலி வைல்டிங் டேவிஸன் என்ற பெண்மணி பெண்களின் ஓட்டுரிமைக்காக யாரும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்தார். புகழ்பெற்ற குதிரைப் பந்தய மைதானமான டெர்பியில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் குதிரையான ஆன்மர், புயல் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது கையில் வாக்குரிமை கோரும் அட்டையுடன் குறுக்கே பாய்ந்தார் எமிலி! குதிரையின் கால்களில் மிதிபட்டு சின்னாபின்னமானார். வாக்குரிமைக்காக உயிர்த்தியாகம் செய்த ஒரே பெண் என்ற புகழையும் பெற்றார்.

இதையடுத்து இங்கிலாந்தில் 1918-ல் நிபந்தனையுடன் கூடிய வாக்குரிமையும், 1928-ல் முழுமையான வாக்குரிமையும் வழங்கப்பட்டது.

அமெரிக்காவிலும், 1919-ல் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் மசோதா, 19-வது சட்டத் திருத்தமாக நிறைவேற்றப்பட்டாலும் அமெரிக்க சட்ட விதிகளின்படி இந்தத் திருத்தம் சட்டரீதியாக்கப்பட வேண்டுமென்றால், 4-ல் 3 பங்கு மாகாணங்கள் அதாவது 36 மாகாண நாடாளுமன்றங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாகாண நாடாளுமன்றத்திலும் மசோதா நிறைவேற பெண்கள் போராட வேண்டியிருந்தது. மசோதா எதிர்ப்பாளர்கள் அதைத் தோல்வியடையச் செய்யும் பொருட்டு குறைந்தபட்ச கூட்ட வருகையை (கோரம்) தவிர்க்க இரவோடு இரவாக நாட்டை விட்டுப் பறந்தனர். கூட்டங்கள் நடத்த விடாமல் வெளிநடப்புச் செய்தனர். 35 மாகாணங்கள் அங்கீகரித்துவிட, கடைசி மாகாணமான டென்னிஸீயில் மசோதாவைத் தோற்கடிக்க போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்ப்பாளர்கள் தேற்றி வைத்திருந்தனர். மசோதா ஆதரவாளர்கள் மஞ்சள் ரோஜாவையும் எதிர்ப்பாளர்கள் சிவப்பு ரோஜாவையும் அணிந்திருந்தனர். இதைக் கணக்கெடுத்துப் பார்த்தபோது மஞ்சள் ரோஜாவை அணிந்தவர்கள் 47 பேர் எனவும் சிவப்பு ரோஜாவை அணிந்தவர்கள் 49 பேர் எனவும் தெரியவந்தது.

வாக்கெடுப்பின் முதல் சுற்றில் குடியரசுக் கட்சியை சார்ந்த பேங்க் டர்னர், தான் அணிந்திருந்த சிவப்பு ரோஜாவைத் தூக்கியெறிந்துவிட்டு தடாலடியாக அணி தாவினர். இதனால் இரண்டாவது சுற்றில் ஆதரவும், எதிர்ப்பும் 48 – 48 என்று சம நிலையிலிருந்தது.

3-வது சுற்றில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் அமெரிக்க பெண்களின் தலையெழுத்தையே மாற்றியது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 24 வயதான ஹாரிபர்ன் மசோதாவுக்கு எதிர்ப்பாளர். அவர் வாக்களிக்கப் போகும் இறுதி நொடியில் ஒரு துண்டுச் சீட்டு அவருக்கு வந்தது. அதைக் கண்ணால் ஸ்கேன் செய்த ஹாரிபர்ன் மசோதாவுக்கு ஆதரவாக கையைத் தூக்கி விட்டார். மசோதா நிறைவேற்றப்பட்டது. துண்டுச் சீட்டை அனுப்பியது அவருடைய தாயார் ஃபெப் என்ஸ்மிங்கர் பர்ன். அதில் “”நல்ல பையனாக நடந்து கொள்! பெண்கள் வாக்குரிமைக்கு ஆதரவாக ஓட்டுப்போடு” என்றிருந்தது. தாய் – தனயன் சென்டிமென்ட்தான் கடைசியில் அமெரிக்கப் பெண்களுக்கும் கைகொடுத்தது.

ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுப்பதற்கான முதல் படியை பெண்கள் வெற்றிகரமாகக் கடந்த பிறகும் கூட தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து மந்திரியாக நியமிக்கப்படுவது, அவர்களுக்கு வழங்கப்படும் துறைகள் வரை பெண்கள் இன்றும் பாரபட்சங்களை அனுபவித்து வருகிறார்கள். இதற்கு காரணம் பெண்களின் இடம் என்பது வீட்டின் மூலையில் ஒரு சமையலறையே தவிர நாடாளுமன்றம் அல்ல என்ற ஐயாயிரம் ஆண்டு மனப்போக்கு இன்னமும் மாறவில்லை.

பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து (1893). சமீபத்திய நாடு குவைத் (1995). இன்றும் வாக்குரிமை அளிக்க மறுப்பது சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளும்தான்!

உலகத்தின் முதல் பெண் மந்திரி 1917ல் ரஷியாவில் போல்ஷ்விக் கட்சியால் காபினெட் மந்திரியாக நியமிக்கப்பட்ட அலெக்ஸôண்டர் கோலந்தாய். இங்கிலாந்தில் கூட முதன்முறையாக 2006ல் தான் பரோனஸ் ஹேமேன் என்ற பெண்மணி சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

இண்டர் பார்லிமெண்டரி யூனியன் (ஐடம) என்ற அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி சர்வதேச அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 85 சதவீதம் ஆண்கள்தான்! உலக அளவில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகம் கொண்டவை (40 சதவீதம்) நார்வே, ஸ்வீடன், டென்மார்க் எனும் ஸ்காண்டிநேவிய நாடுகள்தான். இதில் இந்தியாவின் நிலைதான் மிக மோசம்.

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் பெண் உறுப்பினர்கள் 8.3 சதவீதம்தான். இதை சரிசெய்ய 1996ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடஒதுக்கீடு மசோதா இன்னமும் வெளிச்சத்தை காணவில்லை.

2002 – 2004ல் 20 சட்டமன்றங்களுக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்ட 2432 வேட்பாளர்களில் பெண்கள் 1525 பேர். அதாவது பாதிக்கு மேல்! ஆனால் ஜெயித்தது 137 பெண்கள்தான். இது 5.6 சதவீதம், 33 சதவீதம் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்திருந்தால் இன்று 811 பெண் உறுப்பினர்கள் சட்டமன்றங்களில் இருந்திருப்பார்கள்.

பெண் போராளி úஸô ஹைட் – 1916-ல் கனடாவின் நாடாளுமன்றத்தில் வாக்குரிமை மனுவைத் தாக்கல் செய்து பேசியபோது “”கணவான்களே! வாக்குரிமை மறுக்கப்பட்டவர்கள் பட்டியலில் பெண்கள் சேர்க்கப்படுவதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம். நாங்கள் முட்டாள்களும் அல்ல! முடியாதவர்களும் அல்ல! நாங்கள் பெண்கள்! வாக்குரிமையில் நாங்கள் சமத்துவம் கேட்பது சலுகையின் அடிப்படையில் அல்ல! நியாயத்தின் அடிப்படையில்” என்று முழங்கினார்.

இந்தியப் பெண்களாகிய நாங்களும் கேட்கிறோம்! நாடாளுமன்றவாதிகளே! தயவுசெய்து பாலின சமத்துவ நீதியின் மொழியிலே பேசுங்கள்! 33 சதவீதம் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுங்கள்! இந்திய நாட்டில் சமத்துவத்தை விரும்பும் ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதை உலகிற்கு உணர்த்துங்கள்!

Posted in Disparity, Elections, Females, Freedom, Gender, History, HR, Independence, Info, MLA, MP, NirmalaRani, Oppression, Politics, Polls, Power, rights, Sex, She, Stats, Timeline, Vote, voters, Women | Leave a Comment »

Women in India: Serving in the Indian Army – Gender equality in Military, Navy, Air Force

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

சேவை: இராணுவத்தில் பெண்கள்!

மு.வெ.

ஆணுக்கு பெண் நிகர் என்று சொல்லி பல வருடங்களாக ஆகிவிட்டன. உண்மையில் அப்படி இருக்கிறதா? பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீட்டில் இன்னும் பிரச்சினைகள் இருந்தாலும், ஆங்காங்கே சில நம்பிக்கை தரக்கூடிய விஷயங்களும் தென்படுகின்றன. அப்படிப்பட்ட நம்பிக்கை அளிக்கும் ஒன்றுதான், நமது இந்திய இராணுவத்தில் பெண்களின் பங்களிப்பும்.

இந்திய இராணுவத்தில் 1993-ஆம் ஆண்டில்தான் பெண்கள் சேர்க்கப்பட்டனர். ஜூனியர் லெவல் கிரேடில் அப்போது வேலை நிறைய காலியாக இருந்தது. அந்த சமயத்தில் பெண்கள் சேர்க்கப்பட்டனர்.

பொதுவாக இருபத்தியொரு வயது முதல் இருபத்தி ஐந்து வரை வயதுள்ள பெண்கள் ஆறு மாதத்திற்கொருமுறை சுமார் 5000 பேர் விண்ணப்பிக்கிறார்கள். ஆனால் அவர்களிலிருந்து தேர்வு செய்யப்படுகிறவர்களோ வெறும் பத்து பேர் மட்டும்தான்! தேர்வு செய்யப்படுகிறவர்கள் ஐந்து வருடம் ஆபீஸர் கிரேடில் பணிபுரிவார்கள். அவர்கள் மேலும் சிறப்பாகப் பணிபுரிந்தால் மேலும் ஐந்து வருடம் பணி நீட்டிக்கப்படும்.

இவர்களுக்கு ஒன்பது மாதம் டிரெயினிங் கொடுக்கப்படுகிறது. இராணுவத்தில் வெவ்வேறு இடங்களில் பணியிலிருக்கும் ஆண், பெண் இருவரும் திருமணம் செய்து கொண்டால், அவர்கள் ஒரே இடத்தில் பணியில் இருக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இராணுவத்தில் பணியிலிருக்கும் காவாலி, “”பொதுவாக ஸ்போர்ட்ஸ், என்.சி.சி.யில் இருந்த பெண்கள்தான் அதிகமாக இராணுவத்தில் சேர்கிறார்கள். ஆண்கள் அளவுக்கு எங்களுக்கு வேலைப் பளு அதிகம் இல்லை என்றாலும், போதிய அளவு சம்பளமும், சமூகத்தில் மரியாதையும் கிடைக்கின்றது. ஆண்களுக்கு இணையாக எங்களுக்கும் பயிற்சி கொடுக்கப்படுகின்றது. நாங்கள் சல்வார் கமீசில் இருக்கும் போதுதான் பெண்கள் என்று உணருகிறோம்” என்கிறார்.

இராணுவத்தில் பொறியியல், கல்வித் துறை, சிக்னல்ஸ், ஹாஸ்பிடல் போன்ற துறைகளில் பெண்களுக்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது. 2005-ன் கணக்குப்படி இராணுவத்தில் 40000 ஆண் அதிகாரிகளுக்கு 918 பெண் அதிகாரிகளும், கடற்படையில் 6000 ஆண் அதிகாரிகளுக்கு 100 பெண் அதிகாரிகளும், விமானப்படையில் 15000 ஆண் அதிகாரிகளுக்கு 454 பெண் அதிகாரிகளும் உள்ளனர்.

அதிகம் படிக்காதவர்கள் தான் பெரும்பாலும் இராணுவத்தில் சேருவார்கள் என்ற நிலை இருபது வருடங்களுக்கு முன்னால் எல்லாம் இருந்தது. ஆனால் இந்த நிலையையும் தற்போதைய பெண்கள் மாற்றி விட்டனர். எம்.பி.ஏ., படித்திருக்கும் ரேணுதத்தா, “”இராணுவப் பணியை பாதுகாப்பானதாகவும், சவாலானதாகவும் உணர்கிறேன்” என்கிறார்.

Posted in Airforce, doctors, Education, Employment, Engg, Engineering, Equality, Females, Gender, Generals, Hospital, inequality, Infantry, Jobs, Males, medical, Men, Military, Navy, NCC, Nurses, officers, Opportunities, Pilots, Signals, Sports, Uniform, Women | Leave a Comment »

Female Infanticide – Gender selections & Abortions in India: Law

Posted by Snapjudge மேல் ஜூலை 27, 2007

பிறப்பது எங்கள் பிறப்புரிமை!

உ . நிர்மலா ராணி, வழக்கறிஞர்

கருவிலிருப்பது ஆணா, பெண்ணா என்று கண்டறிவதற்கான தடையை நீக்க வேண்டும் என்று கோரி மகாராஷ்டிர மாநில உயர் நீதிமன்றத்தில் ஒரு தம்பதி பொதுநல வழக்குத் தொடர்ந்தனர். அம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்ற தாய், மூன்றாவது ஆண் குழந்தை பெற விரும்புவதில் என்ன தவறு என்று வினவியிருப்பது நாடெங்கிலும் அதிர்ச்சியையும், கண்டனக் குரல்களையும் எழுப்பியுள்ளது.

இந்த வழக்கு போடப்பட்ட ஓரிரண்டு தினங்களுக்குள் ஹைதராபாதின் ஒரு பகுதியில் தனது எட்டாவது மகளுக்குப் பிறந்த பெண் குழந்தையைச் சுமையாகக் கருதி அதை, அப்துல் ரஹீம் என்பவர் உயிருடன் மண்ணில் புதைத்த சம்பவம் நடந்திருக்கிறது. புதைக்கப்பட்ட குழந்தையின் கை வெளியே தெரிந்ததைப் பார்த்து, விவசாயி ஒருவர் காப்பாற்ற, அக்குழந்தை அதிசயமாய் உயிர் பிழைத்துக் கொண்டது.

இரண்டாவது சம்பவத்தில் குற்றம் நடந்து விட்டது. முதல் சம்பவத்தில் குற்றம் செய்ய கோர்ட் அனுமதி கேட்கப்படுகிறது. இவை இரண்டிலும் உள்ள பொதுவான அம்சம் என்னவென்றால் – மக்கள்தொகையில் பெண்ணினத்தின் வீழ்ச்சிக்கும் அழிவுக்கும் வழிவகுக்கும் காரணிதான் அது.

மக்கள்தொகையில் ஆண் பெண் விகிதம் என்பது 103:100 இருக்க வேண்டும். அதாவது 1000 ஆண் குழந்தைகளுக்கு 971 பெண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஏனென்றால், ஆண் கரு, பெண் கருவை விட பலவீனமானது. உருவான ஓர் ஆண்டுக்குள் வியாதிகளால் இறந்துவிடக் கூடியது. அவ்வாறு இறந்துவிட்டால் ஆண் – பெண் விகிதம் சமநிலையை அடையும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் நமது நாட்டில் மக்கள்தொகையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. 1901-ல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 972 பெண் குழந்தைகள் இருந்தன. 1991-ல் 945 ஆக குறைந்து 2001-ல் 927-க்கு சரிந்துவிட்டது. பெண்களுக்கெதிராக இந்நாட்டில் நிலவும் பாரபட்சத்தால் அவர்கள் இறந்து போகிறார்கள் என்று நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கான சர்வதேச நிறுவனமாகிய யூனிசெஃப்பும் இதை உறுதி செய்கிறது. இந்தியாவில் இவ்வாறு மாயமான பெண்களின் எண்ணிக்கை 5 கோடியாம்.

“லான்செட்’ என்ற இதழுக்காக இந்திய மற்றும் கனடா ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவிலுள்ள 11 லட்சம் குடும்பங்களில் ஆய்வு மேற்கொண்டதில், ஆண்டுக்கு 5 லட்சம் பெண் குழந்தைகள் கருக்கொலை காரணமாகவும், கருவுறுவதற்கு முன்பே பாலினத்தைத் தேர்வு செய்யும் முறையாலும் அழிந்து போகின்றனர் என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

இவ்வாறு பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் கொள்ளை நோய்களாகக் கருக்கொலைகளும், சிசுக்கொலைகளும் சமுதாயத்தில் வெகுவேகமாகப் பரவி வருகின்றன. இந்த நோய்களை உற்பத்தி செய்யும் விஷக்கிருமிகள் நமது ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பில் புரையோடிப் போயிருக்கின்றன.

வரதட்சிணை என்ற பெயரிலும், சடங்கு சம்பிரதாயங்கள் என்ற பெயரிலும், பெண்கள், பெற்றோர்களால் ஒரு பொருளாதாரச் சுமையாகவே கருதப்படுகிறார்கள். சொத்துரிமையும் பெற்றோருடனே வாழும் உரிமையும், இறுதிச்சடங்கு செய்யும் உரிமையும், ஆண்களுக்கே அளிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் பெண்களைப் புறக்கணிக்கும் போக்கும் ஆண்குழந்தைகளை விரும்பும் மனப்பாங்கும் நியாயப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றன.

முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்து, இரண்டாவது கருவும் பெண்ணாக உருவாகிவிட்டால் ஆண் குழந்தை வேண்டி கருக்கொலை செய்வதில் என்ன தவறு என்று சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் முதல் குழந்தை ஆணாக உருவானால் யாரும் பெண் குழந்தை வேண்டி ஆண் கருவை அழிப்பதில்லையே? “லான்செட்’ ஆய்வின்படி, முதல் குழந்தை பெண்ணாக இருக்கும்பட்சத்தில் இரண்டாவது பெண் குழந்தைகளின் விகிதம் 759 ஆகவும் மூன்றாவது பெண் குழந்தைகள் விகிதம் 719 ஆகவும் குறைந்து விடுகின்றன. ஆனால் இதுவே முதல் குழந்தை ஆணாக இருந்துவிட்டால் அதன்பிறகு ஆண் பெண் விகிதம் சமமாகவே இருக்கிறது என்று அந்த ஆய்வு பாரபட்சத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

பெண் கருக்கொலை, சிசுக்கொலை என்பது ஏதோ படிக்காத பாமர மக்கள் வசிக்கும் பகுதிகளில்தான் அதிகம் என்பதில்லை. நாட்டின் வளமான மாநிலங்கள் என்று போற்றப்படும் பஞ்சாப், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், குஜராத்தில்தான் மிகக் குறைந்த பாலின விகிதத்தில் பெண்கள் பிறக்கிறார்கள்.

தனிநபர் வருமானத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ள தில்லியில் பெண்களின் விகிதம் 868. மகாராஷ்டிரத்தில் 1991-ல் 946 ஆக இருந்த விகிதம் இன்று 913 ஆக மாறிவிட்டது. மகாபாரதப் புகழ் குருஷேத்ரத்தில் பாலின விகிதம் 770. எங்கெல்லாம் ஸ்கேன் மையங்கள் அதிகமிருக்கின்றனவோ அங்கெல்லாம் பெண்களின் விகிதம் குறைந்தே காணப்படுவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

“”பிறக்கப்போகும் குழந்தைகளின் குறைபாடுகளைக் கண்டறிய உதவும் தொழில் நுட்பம் (முறைப்படுத்துதல் மற்றும் தவறாகப் பயன்படுத்துதலைத் தடுக்கும்) சட்டம்” 1994-ல் கொண்டு வரப்பட்டது. இதன்படி ஸ்கேன் மையங்கள் அரசிடம் பதிவு செய்யப்பட வேண்டும். கருவிலிருப்பது ஆணா பெண்ணா என்று கண்டறிந்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. இதைப் பற்றி விளம்பரம் செய்தாலும் அது குற்றம். முதல் 10 ஆண்டுகளுக்கு எவ்வித அசைவுமில்லை. உச்ச நீதிமன்றத் தலையீட்டிற்கு பிறகு ஓரளவு முன்னேற்றம் உள்ளது. இந்நிலையில்தான் இந்தச் சட்டத்தை எதிர்த்து வழக்குப் போடப்பட்டுள்ளது.

“”ஆணும் பெண்ணும் சமம்” என்கிறது அரசியல் சட்டம். ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்கிறது சமூகச் சட்டம். நீதி பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசியல் சட்டத்தைத்தான் உயர்த்திப் பிடிக்க வேண்டுமே தவிர சமூகச் சட்டத்தை அல்ல. ஒரு சட்டம் எந்தப் பின்னணியில் யாருக்காக உருவாக்கப்பட்டது என்பதை உணராமல் எதிர்மறையான கருத்துகளைக் கூறும்போது சமூகத்தில் குற்றத்தை நியாயப்படுத்துபவர்களுக்கு அவை ஒரு வழிகாட்டுதலாக அமைந்துவிடும் அபாயம் உள்ளது.

சீனாவிலும் பெண் கருக்கொலைகள் அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் 2020-க்குள், திருமணம் செய்ய முடியாத 3 கோடி ஆண்கள் இருப்பர் என்று கூறப்படுகிறது. அங்கும் பாலினத் தேர்வு தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த “”நாமிருவர் நமக்கொருவர்” போன்ற திட்டங்களைக் கடைப்பிடித்ததில் பெண் கருக்கொலைகள் அதிகரித்துள்ளன.

ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட பாலினத்தை விரும்பும் போக்கு மக்களிடம் இல்லாததால் பிரச்னை இல்லை. கரு உருவாவதற்கு முன்னரே பாலினத்தைத் தேர்வு செய்து உருவாக்கிக் கொள்ளும் முறைப்படி, வர்ஜினியாவில் 11 பெற்றோர்களில் 10 பேர் பெண் குழந்தையைத்தான் தேர்வு செய்துள்ளனர். ஐரோப்பிய நாடுகள் பல, பாலினத் தேர்வு செய்யும் முறையைத் தடை செய்துள்ளன.

சமூகவியலாளர், அமித்தாய் எட்ஸியோனி கூறுகிறார்: “”பாலினத் தேர்வு என்பது பாலின விகிதாசாரத்தில் ஒரு கடுமையான அசமத்துவ நிலையை ஏற்படுத்தும். கோடிக்கணக்கான ஆண்களைப் பாலியல் குற்றங்களில் குற்றவாளிகளாக்கும் அல்லது பிரம்மசாரிகளாக்கும்.” ஒரு பெண் பல ஆண்களை மணந்து கொள்ளக் கட்டாயப்படுத்தப்படுவாள்; கடத்தப்படுவாள்; மறுத்தால் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவாள்.

இந்நிலையில், இந்தியாவில் பெண் குழந்தைகளின் சமூக அந்தஸ்து உயர்த்தப்பட வேண்டும். பாதகமான சமூகப் பழக்கவழக்கங்களை, சடங்கு சம்பிரதாயங்களை நாம் புறக்கணிக்க வேண்டும். பெண் குழந்தைகளைக் காக்க, அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவரை கருவிலே அழிக்கப்பட்டாலும், பூமிக்குள் புதைக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் எழுவோம் – ஃபீனிக்ஸ் பறவைகளாய்!

———————————————————————————————————————————————–

ஆண்டுக்கு 10 லட்சம் பெண் கருக்கள் அழிக்கப்படுகின்றன: மத்திய சமூகநல வாரியத் தலைவி தகவல்

புதுச்சேரி, நவ. 4: இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர் என்று மத்திய சமூக நல வாரியத் தலைவி ரஜனி பாட்டீல் தெரிவித்தார்.

புதுச்சேரி மாநில சமூக நல வாரியம் சார்பில் பெண் கரு பாதுகாப்பு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியை புதுவை முதல்வர் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தார். இந் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மத்திய சமூக நல வாரியத் தலைவி ரஜனி பாட்டீல் பேசியது:

21-ம் நூற்றாண்டில் நாம் இதுபோல் ஒரு கருத்தரங்கம் நடத்த வேண்டியிருப்பது வேதனைக்குரியது. இந்தியாவில் பெண் குழந்தைகள் கருவில் அழிக்கப்படுவது குறித்து மார்ச் 8-ம் தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பேசப்பட்டது.

இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர். கருவில் இருக்கும் பெண் ஆணா, பெண் என்பதை கண்டறிவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் சட்டம் கொண்டு வந்தும், அதிலிருந்து தப்பிக்க டாக்டர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாள்கின்றனர். 2020-ம் ஆண்டு இந்தியா வல்லரசாகும் என்று கூறுகின்றனர். பெண் விகிதம் 50 சதவீதம் இல்லாமல் இந்தியா வல்லரசாகி என்ன பயன்? தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் பெண்கள் விகிதம் ஓரளவு உயர்ந்துள்ளது. ஆனால் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பெண்கள் விகிதம் உயரவில்லை என்றார்.

புதுவை முதல்வர் என்.ரங்கசாமி பேசும்போது, புதுச்சேரியில் 1000 ஆண்களுக்கு 1001 பெண்கள் உள்ளனர். பெண்கள் முன்னேற்றத்துக்கு நாங்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். புதுச்சேரியில் பெண்கள் பெயரில் சொத்துகள் வாங்கினால் பதிவுக் கட்டணத்தில் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது. பெண்கள் நிறுவனங்களை நிறுவினால் 25 சதவீதம் மானியம் அளிக்கிறோம். தலித் பெண்களின் முன்னேற்றத்துக்கும் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறோம் என்றார்.

சமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி பேசும்போது, பெண்கள் கருவுறும் நாளில் இருந்து இறக்கும் வரை அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. நவம்பர் மாதத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு நாளாக அறிவிக்க உள்ளோம். அந்த நாளில் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம் என்றார்.

இக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் பேராசிரியர் மு.ராமதாஸ், எம்எல்ஏ ஆர்.விசுவநாதன், புதுச்சேரி சமூக நல வாரியத் தலைவி ழான் பூரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

“பொறுப்பும் செயல்திறனும் கொண்ட தன்னார்வ அமைப்புகளை அரசு தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் பெண் குழந்தை பிறப்பை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். கிராமப் புறங்களில் தன்னார்வ அமைப்புகள் மூலம் பெண் சிசுக்கள் கொல்லப்படுவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பிறந்தது முதல் பெண் குழந்தைகளுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டம் இயற்றிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் கல்வியுடன் இணைந்த வாழ்க்கை கல்வியை பள்ளிகளில் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியே 8-ம் வகுப்பு முதல் கற்றுத்தர வேண்டும்’ உள்ளிட்ட கருத்துக்கள் இக் கருத்தரங்கில் பரிந்துரைக்கப்பட்டன.

———————————————————————————————————————————————————–

ஆடாமல் நிற்குமா அரசுத் தொட்டில்?

எஸ். ஜெய்சங்கர்

உள்ளாட்சி முதல் உலக அளவில், பல நிலைகளில் பெண்கள் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளனர். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் எனப் பல துறைகளில் காலடி எடுத்து வைத்துள்ளனர். வர்த்தக நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுள்ளனர். பாரத நாட்டின் முதல் குடிமகள் முதல் நாட்டின் பல்வேறு பொறுப்புகளைப் பெண்கள் வகித்து வருகின்றனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் என்றாலும், பாரதியின் கனவை நனவாக்க, விண்கலமேறி விண்வெளிக்குப் புறப்பட்ட கல்பனா சாவ்லா, திரும்பி வரும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், காற்றோடு கலந்தார். அவரது வரிசையில் சுனிதா வில்லியம்ஸ், தொழில்நுட்பத்தையும் தாண்டி வெற்றி பெற்றார். இந்திய நாடே அவரைப் போற்றுகிறது. இது பெண்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் செய்தி.

அண்டவெளியில், காற்றில்லா இடத்தில், காலடி எடுத்து வைத்து, நடைபழகிய பெண்கள் நம் பாரதப் பெண்கள் என எண்ணி மகிழ்ந்தாலும், தாயின் கருப்பை எனும் இருண்ட பிரதேசத்தில் தோன்றி, வெளிச்சத்தைப் பார்த்தும், பார்க்காமலும் கருகிய மொட்டுகள் நம் தமிழகத்தில் ஏராளம்.

மிகவும் பின்தங்கிய மாவட்டமான தருமபுரியில், 1999 ஆம் ஆண்டு 657 பெண் சிசுக்கள் கொல்லப்பட்டன. 2000 ஆம் ஆண்டு 439 பெண் சிசுக்கள் உயிரிழக்க நேரிட்டது. மற்ற மாவட்டங்களிலும் இச்சம்பவங்கள் நிகழ்ந்தன.

தமிழகத்தின் ஆண் -பெண் குழந்தைகளின் விகிதத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாறுதல், பெண் சிசுக்கொலை ஆகியவை தமிழக அரசை கவலையடையச் செய்தது.

இதன் விளைவாக, 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொட்டில் குழந்தைகள் திட்டம், முழுவீச்சில் 2001 ஆம் ஆண்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. திட்டம் தொடங்கப்பட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகும், தருமபுரியில் 2001 ஆம் ஆண்டு 178 பெண் சிசுக் கொலைகள் நடந்துள்ளன எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பெண் சிசுவைக் கொல்வோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதை அறிந்த பொதுமக்கள், தாங்களாகவே முன்வந்து, விரும்பாத பெண் சிசுக்களை அரசுத் தொட்டிலில் போட்டுச் சென்றுவிட்டனர். அக்குழந்தைகளைப் பராமரிக்கும் அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம், விரும்புவோருக்குத் தத்து கொடுக்கிறது.

மேலும், 2-வது பிரசவத்தைக் கண்காணிப்பது, பெண் குழந்தை பிறந்தால் பெற்றோருக்குக் கவுன்சலிங் தந்து, குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சைக்கு அறிவுறுத்துவது போன்றவற்றால் பெண் சிசுக்கொலைகள் படிப்படியாகக் குறைந்தன.

பெண் சிசுக்கொலை குறைந்தாலும், தொட்டிலுக்கு வரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறையவில்லை. அண்மையில் 1000-மாவது தொட்டில் குழந்தையைப் பெற்றுள்ளது தருமபுரி அரசுத் தொட்டில் குழந்தைகள் மையம். இதில் சுமார் 120 குழந்தைகள் மட்டுமே ஆண் சிசுக்கள். ஆண் சிசுக்கள் தொட்டிலுக்கு வந்ததற்கும் சமுதாயச் சீர்கேடே காரணம்; தவறான உறவால் பிறந்த குழந்தைகளை வெளிக்காட்ட முடியாமல், அவை தொட்டிலில் போடப்பட்டன.

பெண் குழந்தை விஷயத்தில், அவர்களைப் படிக்க வைத்து, வரதட்சிணை, நகை எனச் செலவு செய்து திருமணம் செய்து வைக்க வேண்டும்; ஆண் குழந்தையாக இருந்தால், மாற்றான் வீட்டுப் பெண் மூலம் குடும்பத்துக்கு வரவு என வரவு- செலவு கணக்கு பார்க்கும் எண்ணம், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களிடமும், கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கத்தினரிடம் அதிகம். அதனால், பெண் குழந்தை என்றால் வளர்ப்பது கடினம் என்ற சலிப்பு. தொட்டில் குழந்தைகள் மையம் தொடங்கப்பட்டு, தருமபுரியில் மட்டுமே 1000 குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கிறோம் எனும் தகவல் பெண்ணினத்துக்குப் பெருமை அளிப்பதாக இல்லை. காரணம், பெண் சிசுவைக் கொன்றால் சிறைத்தண்டனை உறுதி என்ற பயம் மட்டுமே, சிசுக்கொலைகளைக் குறைத்து, அவற்றை அரசுத் தொட்டிலில் போடச் செய்திருக்கிறது.

சிசுக்கொலைகளைத் தடுக்கவும்; பெண் குழந்தைகளைத் தத்து பெறவும் எடுக்கப்பட்ட முயற்சிகள் முதல்கட்ட நடவடிக்கைகளே. பெண் குழந்தைகளைத் தத்து பெறுவதோடு தனது கடமை முடிந்தது என அரசு ஒதுங்கிக்கொள்ளாமல், அரசுத் தொட்டிலுக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான, ஆக்கபூர்வ முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இதற்கான அடுத்தகட்ட திட்டங்கள் தேவை.

மேலும், பெண் குழந்தைகளை அரசுத் தொட்டிலில் போடுவதைத் தவிர்க்கும் எண்ணம் பெற்றோருக்கு வர வேண்டும். இதற்கு, சமூக, பொருளாதார மாற்றம் மிக அவசியம். பொருளாதார வசதி கொண்ட எவரும் தங்களது பெண் சிசுக்களைக் கொல்வதும், அரசுத் தொட்டிலில் போடுவதும் கிடையாது. வருவாயற்ற ஏழைகளே பெரும்பாலும் இச்செயலில் ஈடுபடுகின்றனர்.

அரசின் முயற்சியாலும், பொதுமக்களிடையே ஏற்படும் மன மாற்றத்தாலும், “அரசுத் தொட்டிலுக்கு பெண் சிசுக்கள் வருவது நின்று 1000 நாள்களாகின்றன’ என்ற அறிவிப்பு வெளியாகுமானால், அது நிச்சயமாக பெண் சமுதாயத்துக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக இருக்கும்.

Posted in Abortion, Analysis, Backgrounders, Birth, Census, Child, Childbirth, Children, Conservative, Culture, Disease, Equal, Female, Feminism, Gender, Growth, Health, Infanticide, Insights, Kids, Law, Liberal, male, Malnutrition, Needy, Op-Ed, Opportunities, Opportunity, Order, parents, Poor, Population, ratio, Rich, rights, Sex, solutions, State, Stats, Statz, Values, Wealthy | Leave a Comment »

Pakistan ‘same-sex’ couple jailed

Posted by Snapjudge மேல் மே 22, 2007

பாகிஸ்தான் திருமணம் ஒன்றில் சர்ச்சை

பிரச்சினையை எதிர்நோக்கும் தம்பதிகள்
பிரச்சினையை எதிர்நோக்கும் தம்பதிகள்

பாகிஸ்தானில் திருமணம் செய்து கொண்ட இருவரில், கணவனாகக் கருதப்பட்டவர் உண்மையில் ஒரு பெண் என்று தீர்ப்பளித்த லாகூர் நீதிமன்றம் ஒன்று, அந்த இருவரையும் நீதிமன்றக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது.

கணவர் என்று சொல்லிக் கொள்பவரது பாலின மாற்று அறுவை சிகிச்சை சரியாக, முறையாக நடக்காத நிலையில், இந்த இருவரும், அவரது பாலினத்தைப் பற்றி பொய் சொல்லிவிட்டார்கள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மணப்பெண்ணின் தந்தை, இரண்டு பெண்கள் திருமணம் செய்துகொள்வது என்பது இஸ்லாத்துக்கு விரோதமானது என்ற காரணத்தால், தனது மகளின் திருமணம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று கோருகிறார்.

Posted in couple, Female, Gender, GLBT, Husband, Identity, Islam, Law, legal, Lesbian, male, Marriage, Muslim, Nikkah, Operation, Order, Pakistan, Relation, Relationship, same-sex, Sex, sex-change, Spouse, surgery, Transgender, Wedding, Wife | 1 Comment »

TN Govt announces cash award to Santhi Soundarajan – 800 Meters Race Silver Medalist

Posted by Snapjudge மேல் திசெம்பர் 11, 2006

ஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை சாந்திக்கு ரூ. 15 லட்சம் பரிசு: முதல்வர்

சென்னை, டிச. 11: ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை சாந்திக்கு ரூ. 15 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த சாந்தி, புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருடைய பெற்றோர் கூலித் தொழிலாளி.

போட்டியின் போது சாந்தி

போட்டியின் போது சாந்தி

தற்போது தோஹாவில் நடைபெற்றுவரும் 15-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாந்தி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் தடகளத்தில் இந்தியா தனது பதக்கக் கணக்கைத் தொடங்கியுள்ளது. அத்துடன் தமிழகத்திலிருந்து பதக்கம் வென்றவர் என்ற பெருமையையும் சாந்தி ஏற்படுத்தியுள்ளார்.

இத்தகைய சாதனை படைத்துள்ள சாந்தியின் பெற்றோர்கள் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகின்றனர்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஆசிய அளவில் தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை தேடித் தந்துள்ள விளையாட்டு வீராங்கனை சாந்தியின் சாதனையைப் பாராட்டி அவருக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.

சாந்திக்கு தமிழக முதல்வர் பரிசு வழங்குகிறார்

சாந்திக்கு தமிழக முதல்வர் பரிசு வழங்குகிறார்இப்போட்டியில் பந்தய தூரத்தை 2 நிமிடம் 3.16 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

சென்னையில் உள்ள செயின்ட் ஜோசப் என்ஜினியரிங் பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாதமியில் பயிற்சி பெற்றவர்.

வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து சாந்தி கூறுகையில், “”தகுதிச் சுற்றில் நான் சற்று பின்தங்கியிருந்தேன். இருப்பினும் இறுதிப் போட்டியில் நம்பிக்கையுடன் பங்கேற்றேன். பயிற்சியாளர் நாகராஜனின் ஆலோசனைப்படி புதிய உத்திகளைப் பயன்படுத்தினேன். இதனால் வெள்ளிப் பதக்கம் வசமானது,” என்றார் சாந்தி.

25 வயதான சாந்தி இதற்கு முன்னர் கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதேபோல 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாந்தி விவகாரம் குறித்து விளையாட்டுத் துறையினரின் கருத்துகள்

சாந்தியின் குடும்பத்தினர் பணியாற்றும் செங்கல் சூளை
சாந்தியின் குடும்பத்தினர் பணியாற்றும் செங்கல் சூளை

இந்த சர்ச்சை குறித்து இது வரை இந்திய தடகள சங்கத்திற்கோ அல்லது தமிழ்நாடு தடகள சங்கத்திற்கோ எந்த வகையிலும் அதிகாரப்பூர்வமான தகவல் வரவில்லை என அகில இந்திய தடகள சங்கத்தின் துணைத் தலைவர் வால்டர் தேவாரம் கூறுகிறார்.

அவ்வாறு ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை கிடைக்க பெற்றால் பிறகு அவரால் மகளிர் பிரிவில் பங்குபெற முடியாது எனவும் அவர் கூறுகிறார். மேல் முறையீடு செய்வது தனிப்பட்ட வீரர் வீராங்கனையின் பொறுப்பு எனவும், சங்கத்திற்கு அதில் எந்த பொறுப்பும் கிடையாது என்றும் கூறினார் தேவாரம்.

இந்த வருடம் கொரியாவிலும், இலங்கையிலும் இரண்டு சர்வதேச போட்டிகளில் அவர் பங்கு பெற்றிருந்தாலும், இவ்வாறான பிரச்சினை ஏதும் எழவில்லை எனவும் கூறும் தேவாரம், ஒரு போட்டியில் பங்குபெற ஒரு வீராங்கனை வரும் போது அவர் ஆணா அல்லது பெண்ணா என்று பார்ப்பது ஒழுங்கற்ற செயல் எனவும் அவர் மேலும் கூறினார்.

சாந்தியின் செம்மண் வீடு
சாந்தியின் செம்மண் வீடு

1986 வரை பாலியல் தொடர்பான சோதனை நடத்தப்பட்டன எனவும், அது பெண்மைக்கு இழுக்கு எனக் கருதப்பட்டதால், அதன் பிறகு அந்தச் சோதனை நடத்தப்படுவதில்லை எனக் கூறுகிறார் தோஹா போட்டிகளுக்கு தொழிற்நுட்ப நடுவராக சென்றிருந்த சி.கே.வல்சன். போட்டியில் பங்கு பெற்ற யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே பெண்மை குறித்த இந்த பாலியல் சோதனை நடத்தப்படும் எனவும் அவர் கூறினார். ஆனால் சாந்தி விடயத்தில் அவ்வாறு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தம்மால் உறுதியாக் கூறமுடியும் எனவும் மேலும் கூறினார் வல்சன்.

அறிவியல் ரீதியாக ஹார்மோன்களின் அளவின் அடிப்படையிலேயே ஆணா பெண்ணா எனத் தீர்மானிக்கப்படும் எனக் கூறுகிறார் விளையாட்டு மருத்துவ வல்லுநர் டாகடர். கண்ணன் புகழேந்தி.

சாதாரணமாக சிறுநீர் தான் பரிசோதிக்கப்படும் எனவும் இது போன்ற சிக்கலான சூழலில் ரத்தப் பரிசோதனை அவசியம் எனவும், அதில் தான் ஹார்மோன்களின் அளவு தெரியவரும் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

இவ்வாறான சோதனைகளுக்கு அப்பாற்பட்டு மரபணு சோதனை நடத்தப்பட்டால் அதன் மூலம் ஒருவரது பாலியல் தன்மை உறுதியாக தெரிந்துவிடும் எனவும் அவர் கூறினார்.

 

 

சாந்தியின் பதக்கம் திரும்பப் பெறப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சாந்திக்கு ஏற்பட்ட சரிவு
சாந்திக்கு ஏற்பட்ட சரிவு

அண்மையில் முடிவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த சாந்தி சவுந்திரராஜனின் பதக்கம் திரும்பப் பெறப்படும் என இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்த ஆசிய ஒலிம்பிக் சங்கத்தின் கடிதம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மூலம் தமக்கு கிடைத்திருப்பதாக இந்திய தடகள சங்கத்தின் செயலர் லலித் பானோட் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் யாரும் தனிப்பட்ட பொறுப்பேற்க முடியாது எனக் கூறும் அவர், சாந்தியின் பிறப்புச் சான்றிதழில் அவர் பெண் என்று குறிபிடப்பட்டுள்ளது எனவும், அவரது கடவுச்சீட்டிலும் அவ்வாறே உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இது தனிப்பட்ட நபருக்கும், சங்கத்திற்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், இதனால் நாட்டிற்கு எந்த ஒரு களங்கமும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறுகிறார்.

போட்டியாளரின் பாலியல் குறித்து கண்டறிய சர்வதேச சங்கம் தடைவிதித்துள்ள காரணத்தால், இது குறித்து போட்டிக்கு முன்னர் சோதிக்க இயலாது எனவும் கூறுகிறார் பானோட். ஒரு ஆணிடம், அவர் ஆடவர் தானா எனக் கேட்க முடியாத போது எப்படி ஒரு பெண்ணிடம் அப்படி கேட்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இருப்பினும் இனிவரும் காலங்களில் இது போன்ற அசாதாராண விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

 

 

 

தமிழக வீராங்கனை சாந்திக்கு ரூ.15 லட்சம்- டெலிவிஷன் பரிசு கருணாநிதி வழங்கினார்

சென்னை, டிச. 18-

கத்தார் நாட்டில் நடந்த 15-வது ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழ் நாட்டை சேர்ந்த 4 பேர் பதக்கம் வென்றனர்.

அதில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த சாந்தி வெள்ளிப் பதக்கம் வென்று உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பாராட்டும், பரிசும் குவிந்த நிலையில் சாந்தி பாலின சோதனையில் தோல்வி அடைந்ததாக திடீர் சர்ச்சை எழுந்தது. அவருக்கு வழங்கப்பட்ட வெள்ளிப் பதக்கம் திரும்ப பெறப்படக்கூடும் என்று தகவல் வெளியானது.

இதனால் அவருக்கு தமிழக அரசின் ரூ.15 லட்சம் பரிசு கிடைக்குமா என்ற கேள்விக் குறி எழுந்தது. ஆனால் தங்களுக்கு இது தொடர்பாக எந்த தகவலும் வரவில்லை என்று அறிவித்த தமிழக அரசு, இன்று திட்டமிடப்படி சாந்திக்கு ரொக்கப் பரிசு வழங்கி கவுரவித்தது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தோஹாவில் நடைபெற்று முடிந்துள்ள பதினைந்தாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியில் இடம் பெற்றுத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டு சாதனைகள் படைத்த வீரர்களில், தடகளப் பிரிவில் மகளிருக்கான 800 மீட்டர் ஓட் டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை சாந்திக்கு 15 லட்சம் ரூபாயும், சதுரங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த வீரர் சசிகிரன்கிருஷ்ணனுக்கு 20 லட்சம் ரூபாயும், வீராங்கனை அஞ்சு பி. ஜார்ஜ் நீளம் தாண்டுதல் போட் டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மைக்கு 15 லட்சம் ரூபாயும், ஸ்குவாஷ் ஒற்றையர் போட் டியில் வெண்கலப் பதக் கம் வென்ற வீரர் சௌரவ் கோசலுக்கு 10 லட்சம் ரூபா யும் பரிசுத் தொகையாக வழங் கப்படும் எனத் தமிழக அரசினால் ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தது.

அந்த அறிவிப்பின்படி இன்று தலைமைச் செயலகத்தில், தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகள் படைத்த தமிழக விளையாட்டு வீரர்களான சசிகிரன்கிருஷ்ணனுக்கு 20 லட்சம் ரூபாயையும், அஞ்சு பி. ஜார்ஜ×க்கு 15 லட்சம் ரூபாயையும், சாந்திக்கு 15 லட்ச ரூபாயையும், சௌரவ் கோசலுக்கு 10 லட்சம் ரூபா யையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி தமது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை சாந்தியின் பெற்றோர்கள் தம்வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இல்லாததால் தமது மகள் தோஹாவில் நிகழ்த்திய சாதனையைக் காண முடியாமல் போனது எனக்கூறியதன் அடிப்படையில், வீராங்கனை சாந்திக்கு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றையும் முதல்-அமைச்சர் கருணாநிதி பரிசாக வழங்கினார்.

இந்நிகழ்வின் போது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டி.பி.எம். மொய்தீன்கான், விளையாட் டுத் துறை செயலாளர் அம் பேத்கர் ராஜ்குமார், தமிழ் நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் -செயலர் அபூர்வா ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள் ளது.

சாந்திக்கு பரிசு வழங்கியது பற்றி அமைச்சர் மொய்தீன் கான் நிருபர்களிடம் கூறியதாவது:-

வீராங்கனை சாந்தி குறித்து வேறுவிதமான செய்திகள் வந்துள்ளன. என்றாலும் ஆசிய விளையாட்டு போட்டி அமைப்பாளர்களிடம் இருந்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை.

சாந்திக்கு மனிதாபிமான அடிப்படையில் முதல்-அமைச்சர் அறிவித்த பரிசை கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண் ஆசிய அளவில் பரிசு பெற்று வந்து இருப்பதை நாம் பாராட்டி, வாழ்த்தி, ஊக்குவிக்க வேண்டும். இதை விடுத்து எதற்கு பரிசு கொடுக்க வேண்டும் என்று கேள்வி கேட்கக்கூடாது.

இவ்வாறு அமைச்சர் மொய்தீன்கான் கூறினார்.

 வெள்ளிப்பதக்கம் என்னிடம்தான் உள்ளது: வீராங்கனை சாந்தி பேட்டி

முதல் அமைச்சர் கருணாநிதியிடம் பரிசு பெற்று திரும்பியதும் ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

கேள்வி:- முதல் அமைச்சரை சந்தித்து இருக்கிறீர்களே…?

பதில்:- முதல் அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றேன். அவர் தந்த பரிசையும் பெற்றுக் கொண்டேன்.

கேள்வி:- ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று தமிழ் நாட்டுக்கு பெருமை தேடி தந்ததாக நேற்று வரை செய்திகள் வந்தன. இன்று உங்கள் பதக்கத்தை திரும்ப பெறப் போவதாக தகவல் வெளியாகி உள்ளதே?

பதில்:- தோகாவில் நான் வெள்ளிப்பதக்கம் பெற்றது பெருமையாக இருந்தது. அந்த வெள்ளிப்பதக்கம் இப்போதும் கூட என்னிடம்தான் இருக்கிறது. பத்திரிகைகளில் இன்று வந்த செய்திகளை நானும் படித்தேன். ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் எனக்கு வரவில்லை.

இவ்வாறு சாந்தி கூறினார்.

தோகாவில் நடந்த பாலின சோதனை குறித்து சாந்தியிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகள் கேட்டனர். ஆனால் எந்த கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை.

இது தொடர்பாக இப்போது நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்றார். முன்னதாக பரிசு பெற வந்த சாந்தியிடம் கருணாநிதி அக்கறையுடன் விசாரித்தார். டிவி பெட்டி கொடுத்து இருப்பதாக கூறி உற்சாகப்படுத்தினார். அவருக்கு சாந்தியின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Posted in 800 M, 800M, Allegation, Answers, Asiad, Asian Games, Asian Grand Prix, athletics, championships, Charges, Committee, Doha, Doping, Gender, Interview, IOA, Karunanidhi, Kathakurichi, Manimekelai, Mariam Yusuf Jamal, Operation, Opinion, Puthukottai, Saanthi, Santhi Soundarajan, Santhi Sounthararajan, Santhy, Santhy Soundararajan, Sex, Shaanthi, silver medal, South Korea, Sports, St. Joseph’s College of Engineering, Stripped, Tamil Nadu, Test | 10 Comments »