எம்.பி.பி.எஸ். -தேவை அவசர சிகிச்சை
ஜே. ரங்கராஜன்
கம்பவுண்டர்களை டாக்டர்களாக மக்கள் மதித்த காலம் உண்டு. ஆனால் இன்று குறைந்தபட்சம் எம்.டி. பட்டம் பெற்றிருந்தால்தான் ஒருவர் டாக்டராகவே பொதுமக்களால் மதிக்கப்படுகிறார். எம்.பி.பி.எஸ்., எம்.டி. அல்லது எம்.எஸ்., உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளான டி.எம். அல்லது எம்.சிஎச். என மொத்தம் 11 ஆண்டுகள் படித்தால்தான் மருத்துவத் துறையின் சிகரத்தை ஒருவர் எட்டும் நிலை உருவாகி விட்டது.
இந் நிலையில் டாக்டர் என சொல்லிக் கொள்வதற்கான குறைந்தபட்ச எம்.பி.பி.எஸ். கல்விக்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கே கடந்த 50 ஆண்டுகளாக தமிழகம் உள்பட எல்லா மாநில அரசுகளும் திணறிக் கொண்டிருக்கின்றன. மருத்துவக் கல்வியின் தரத்தை ஆய்வு செய்து மருத்துவக் கல்லூரி தொடங்க அங்கீகாரம் அளிக்கும் பணியை தில்லியில் உள்ள தன்னாட்சி அமைப்பான இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் எல்லா மருத்துவக் கல்லூரிகளையும் ஆய்வு செய்து தொடர்ந்து நடத்தும் அனுமதியையும் இந்த அமைப்பு வழங்குகிறது.
ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டுமானால், ஒரே வளாகத்தில் 25 ஏக்கர் பரப்பளவு இடம், ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பேராசிரியர்கள் -கூடுதல் பேராசிரியர்கள் -உதவிப் பேராசிரியர்கள், அவர்களுக்கு குறிப்பிட்ட பரப்பளவில் அறை, 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, சி.டி. ஸ்கேன் உள்பட மருத்துவ சோதனைக் கருவி வசதிகள், சோதனைக்கூட வசதி, உரிமம் பெற்ற வசதிகளுடன் கூடிய ரத்த வங்கி, துறை வாரியான நூலகம், மத்திய நூலகம் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் என மருத்துவக் கல்விக்குத் தேவையான கடுமையான விதிமுறைகளை இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்ணயித்துள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை
- 1835-ல் தொடங்கப்பட்ட சென்னை மருத்துவக் கல்லூரி,
- அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி (1838),
- வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (1942),
- மதுரை அரசு மருத்துவக் கல்லூரி (1954),
- தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி (1959),
- கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி (1960),
- திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி (1965),
- செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி (1965),
- கோவை அரசு மருத்துவக் கல்லூரி (1966)
ஆகியவை மிகவும் பழமையானவை. இந்தக் கல்லூரிகளைக் காலம் காலமாக இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் ஆய்வு செய்து அவ்வப்போது எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்க அனுமதி அளித்து வருகின்றனர்.
போதிய ஆசிரியர்கள், அடிப்படை வசதிகள் இல்லாமல், 1992-ல் திருச்சியில் கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரியைத் தொடங்குவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டபோதுதான் பிரச்னை தொடங்கியது. அரசியல் லாபத்துக்காக இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளை ஏமாற்றும் வேலையை அரசே செய்தது. அதாவது, இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் நிலையில் சென்னை உள்பட வேறு இடங்களிலிருந்து டாக்டர்களைத் திருச்சிக்குக் கடத்தி கணக்குக் காண்பிப்பது, அவர்கள் திருச்சியில் வசிப்பது போன்று தாற்காலிக ரேஷன் அட்டையை அவசர அவசரமாகப் போலியாகத் தயாரிப்பது, ஓய்வு பெற்றோரின் பெயரில் தாற்காலிகமாகப் பணியிடங்களை உருவாக்கி நியமன உத்தரவுகளை அச்சடித்துத் தருவது என மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெறுவதற்காக அனைத்து மோசடி வேலைகளையும் அரசு கடைப்பிடிக்கத் தொடங்கியது.
இந்த மோசடி வேலைகளை ஒருங்கிணைத்துச் செய்து ஆய்வுக்கு வரும் இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளைத் திருப்திப்படுத்த சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் துணை இயக்குநர் அந்தஸ்தில் ஒரு மருத்துவ அதிகாரி நியமிக்கப்பட்டார். இந்த மோசடி வேலைக்கு உடன்படாத நியாயமான டாக்டர்களைப் பணி இடமாற்றம் செய்து அரசு பழிவாங்கியது.
1996-ல் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் வேலூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால், மருத்துவக் கல்லூரிக்கு உரிய இடத்தைத் தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு செயல்வடிவம் பெறவில்லை. ஆனால், 2000-ம் ஆண்டில் போதிய வசதிகள் இல்லாமல் தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் அளிப்பதில் ஒவ்வொரு ஆண்டும் பிரச்னை தொடர்ந்தது.
2001-ல் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அரசியல் அறிவிப்பு செய்யப்பட்டு 2003-ல் கன்னியாகுமரியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரத்தைப் பெற சென்னையிலிருந்து பஸ்ஸில் டாக்டர்கள் கடத்தப்பட்டனர். இதே போன்று அதிமுக ஆட்சியில் தேனியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. 2005-ல் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
வேலூர், தேனி, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் இந்த ஆண்டு மாணவர்களைச் சேர்ப்பதற்கு அனுமதி அளிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் மறுத்து விட்டது. முந்தைய காலங்களைப் போல் டாக்டர்களை இப்போது கடத்தி பொய்க் கணக்கு காண்பிக்க முடியாது. ஏனெனில் அரசின் நிர்பந்தம் காரணமாக ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் வேலை பார்ப்பதாக பொய் சொன்ன 25 டாக்டர்களின் பெயர்ப் பட்டியலை இணையதளத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் ஆய்வுக்கு வரும் நிலையில் இத்தகையோர் இனி ஆசிரியர்களாகப் பணியாற்ற அது தடை விதித்துள்ளது.
இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் படிக்க 12,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 7,000 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.4,000 மட்டுமே உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள் 1,398தான். இந் நிலையில் வேலூர்-தேனி-கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 300 எம்.பி.பி.எஸ். இடங்கள் கேள்விக்குறியாகியுள்ளன. ஆக, இந்த 300 இடங்கள் கிடைக்காமல் போனால் மிஞ்சும் எம்.பி.பி.எஸ். இடங்கள் 1,098தான்.
இவ்வாறு இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் தர மறுப்பதற்கான முழுமையான காரணம் சுகாதாரத் துறை செயலர் பதவி வகித்த அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரியில் “அனாடமி’, “பிசியாலஜி’, “பயோகெமிஸ்ட்ரி’, “ஃபாரன்சிக் மெடிசின்’ உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் ஒரு பேராசிரியர், இரண்டு கூடுதல் பேராசிரியர்கள், மூன்று உதவிப் பேராசிரியர்கள் இருந்தாக வேண்டும். ஆனால், தமிழகம் முழுவதுமே இந்தத் துறைகளில் மிகவும் சொற்ப எண்ணிக்கையில்தான் பேராசிரியர்கள் உள்ளனர். உதாரணமாக “அனாடமி’ துறையில் தமிழகம் முழுவதும் மொத்தம் 10 பேராசிரியர்கள்-கூடுதல் பேராசிரியர்களே உள்ளனர்.
அரசுப் பணியில் 20 ஆண்டுகள் டாக்டர்கள் இருந்தாலும் அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் அளவுக்கே சம்பளம் கிடைக்கும். ஆனால், முதுநிலை மருத்துவப் பட்டம் பெற்ற அடுத்த நாளே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உதவிப் பேராசியராகச் சேரும் நிலையில் மாதச் சம்பளம் ரூ.45 ஆயிரம் வரை கிடைக்கிறது. இதனால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் ஆய்வுக்கு வரும் நிலையில் போதிய பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் இல்லாத நிலை தொடர்கிறது.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண, முதுநிலைப் பட்டப் படிப்புக்கு டாக்டர்களைச் சேர்க்கும் நிலையில் அரசுப் பணியில் கட்டாயம் மூன்று ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும். அத்துடன் உதவிப் பேராசிரியராக நியமிக்கும்போதே பணியாற்ற விரும்பும் இடம், அதிக சம்பளம் ஆகியவற்றையும் அரசு அளிப்பது அவசியம்.
இந்த அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தினால்தான் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரத்தை அரசு மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் பெறுவதில் பிரச்னை ஏற்படாது. விழுப்புரத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தர்மபுரி, திருவாரூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்ற அரசியல் மத்தாப்பூ அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளின்படி ஏற்கெனவே செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்து முடிக்காமல் வெற்று அறிவிப்புகளால் எந்தப் பலனும் ஏற்படாது. மாறாக மாணவர்களின் எதிர்காலம்தான் பாதிக்கப்படும் என்பதை அரசு உணர வேண்டும்.
————————————————————————————————
அட்மிஷனுக்கு முன்பே விலைபோகும் பி.இ. சீட்டுகள்
சென்னை, ஜூலை 6: தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் அட்மிஷன் நடைமுறை தொடங்கும் முன்பாகவே குறிப்பிட்ட சில தனியார் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். சீட்டுகள் “கொழுத்த தொகைக்கு’ விலைபோகின்றன.
பிரம்மாண்டத் தோற்றத்தால் ஈர்க்கப்பட்டு மாணவரும், பெற்றோரும் இதுபோன்ற கல்லூரிகளை நாடிச் செல்கின்றனர். இதன் காரணமாகவே குறிப்பிட்ட சில கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் கட்டாய நன்கொடைக் கட்டணத்தை உயர்த்திக்கொண்டே செல்கின்றன.
இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளில் அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கவுன்சலிங் ஆகியவை குறித்த வழக்கில் அரசுக்குச் சாதகமான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை காலையில் பிறப்பித்தது.
இதன்படி, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் பி.இ., பி.டெக். படிப்புகளில் 65 சதவீத இடங்களை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஒற்றைச் சாளர முறையில் நிரப்ப வேண்டும். 35 சதவீத இடங்களை கல்லூரி நிர்வாகங்கள் தாங்களே நிரப்பிக் கொள்ளலாம். சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகள் 50 சதவீதத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
இதுவரை 22 பொறியியல் கல்லூரிகள் தங்களிடம் உள்ள அனைத்து இடங்களையும், அண்ணா பல்கலை. மூலம் நிரப்பிக் கொள்ள அரசிடம் ஒப்படைத்துள்ளன. இதுபோல், அரசிடம் அனைத்து இடங்களையும் ஒப்படைப்பது குறித்த விருப்பத்தைத் தெரிவிக்கும்படி கடிதங்கள் அனுப்பப்பட உள்ளன என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே சில தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் பி.இ. படிப்புகளில் மாணவர்களைச் சேர்த்துக் கொண்டதாகத் தெரிய வந்துள்ளது.
“நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதே.. மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாதா?’ என்று கேட்டதற்கு, அதன் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வரும் என்றும், “சேர்க்கப்பட்ட’ மாணவர்களுக்குப் பாதிப்பு வராது என்றும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
கல்வியை வியாபாரம் ஆக்கும் பொருட்டு சில சுயநிதி கல்லூரிகள் இது போல் செய்து வருவதை மாணவர்களும் பெற்றோர்களும் ஒருபுறம் ஆதரிக்கத்தான் செய்கின்றனர் என்பது வேதனையான உண்மை. அதனால்தான், ஒற்றைச் சாளர முறைக்குக் காத்திருக்காமல், அட்மிஷன் நடைமுறை தொடங்கு முன்பே பல கல்லூரிகளில் பணத்தைக் கொடுத்துவிடுகிறார்கள்.
பிரம்மாண்டமான கட்டத் தோற்றம், மயக்கும் பேச்சு மற்றும் மாணவர்கள் படிக்கும்போதே அக்கல்லூரிகளில் முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனங்கள் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்கள் போன்ற “கவர்ச்சி’க்கு மாணவர்களும், பெற்றோரும் மயங்குகின்றனர்.
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அதிக பணம் கொடுத்து சோர்ந்த பின்னர், அம்மாணவருக்கு ஒற்றைச் சாளர முறையில் அட்மிஷன் கிடைக்கும் போது அவர்களுக்கு அந்தப் பணத்தைக் கல்லூரி நிர்வாகம் முழுமையாகத் திருப்பித் தருவதில்லை.
தகுதியுடைய மாணவர்கள் பயன்பெறும் வகையில், சுயநிதிக் கல்லூரிகளின் கூட்டமைப்பு மூலம் ஒற்றைச் சாளர முறையில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதே முறையானது. இதில் அரசின் நிலையே சரியானது என்றும் பல பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.
——————————————————————————————————
“ஏழை’ எம்.பி.பி.எஸ். ரூ. 2.55 லட்சம்
சென்னை, ஜூலை 9: சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் அரசு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு தலா ரூ. 3 லட்சத்தை கட்டணமாக நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஏழை மாணவராக இருந்தால் இந்தக் கட்டணத்தில் 15 சதவீத சலுகையை அளிக்க வேண்டும் என்று செட்டிநாடு கல்லூரி நிர்வாகத்துக்கு ராமன் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. ஆனால், மாணவரை ஏழை என நிர்ணயிக்கப்போவது எது என்பதற்கு அரசு அறிவிப்பில் விளக்கம் இல்லை. அப்படியே “ஏழை’ என ஒரு மாணவருக்கு கல்லூரி நிர்வாகம் சலுகை அளித்தாலும்கூட, அந்த மாணவர் ரூ. 45 ஆயிரம் தள்ளுபடியைப் பெற்று ரூ. 2.55 லட்சத்தை கட்டணமாகச் செலுத்தியாக வேண்டும்.
——————————————————————————————————————————–
எகிறியது தனியார் எம்.பி.பி.எஸ். – அரசு சீட் விலை
சென்னை, ஜூலை 9: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கான கட்டணம் ரூ. 1.30 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது ஒரே ஆண்டில் எம்.பி.பி.எஸ். கட்டணம் தனியார் கல்லூரி மொத்த இடத்துக்கு ஏற்ப ரூ. 1.10 லட்சம் முதல் ரூ. 1.70 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, சேலம், கோவை உள்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.4,000 மட்டுமே.
- சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் படூரில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரி,
- கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி,
- கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி,
- ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சாலைப் போக்குவரத்து நிறுவன மருத்துவக் கல்லூரி
என நான்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
- செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களும்,
- பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களும்
- ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களும்
- பெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன மருத்துவக் கல்லூரியில் 60 எம்.பி.பி.எஸ். இடங்களும் உள்ளன.
கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மேலே கூறப்பட்டுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 410 இடங்களில் 65 சதவீதத்தை அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது; மீதமுள்ள 35 சதவீத இடங்களை நிர்வாக ஒதுக்கீட்டு மூலம் நிரப்பிக் கொள்ளலாம் எனக் கூறியது.
கட்டணம் உயர்ந்தது ஏன்? தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் சேர்த்து திங்கள்கிழமை (ஜூலை 9) முதல் எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் சென்னையில் நடைபெறுகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.1.30 லட்சத்தை கடந்த ஆண்டு தமிழக அரசு நிர்ணயித்தது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகள் ரூ.4 லட்சத்தை கட்டணமாக வசூலித்தன.
இதையடுத்து இந்திய மாணவர் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் மாணவர்களிடம் வாங்கிய கூடுதல் கட்டணத்தைத் திருப்பித் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, தனியார் மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ். கட்டணம் குறித்து ஆய்வு செய்யுமாறு நீதிபதி ராமன் கமிட்டியை கேட்டுக் கொண்டது.
புதிய கட்டணம் என்ன?
இந் நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு எம்.பி.பி.எஸ். ஒதுக்கீட்டுக்கான இடத்துக்கான கட்டணத்தை நீதிபதி ராமன் கமிட்டி மூலம் நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அனைத்துத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒரே கட்டணமாக ரூ. 1.30 லட்சம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு தனியார் மருத்துவக் கல்லூரியின் இடங்களுக்கு ஏற்ப தனித் தனியே கீழ்க்கண்ட கட்டணங்களைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் படூரில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரி (98 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்) – ஆண்டு கல்விக் கட்டணம் தலா ரூ. 3 லட்சம் (ஏழை மாணவர்களுக்கு 15 சதவீத சலுகை அளிக்க வேண்டும்).
கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி (65 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்) – தலா ரூ. 2.25 லட்சம்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி (50 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்-இதுவரை இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளிக்கவில்லை.) – தலா ரூ. 2.40 லட்சம்.
பெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன மருத்துவக் கல்லூரியில் அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 66,000.
————————————————————————————-
தனியார் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். : வங்கிக் கடன் எவ்வளவு கிடைக்கும்?
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த மாணவர்களுக்கு இந்தியன் வங்கி கடனுதவி அளிக்கிறது.
எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் நடைபெறும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இந்தியன் வங்கியின் சேத்துப்பட்டு கிளை அதிகாரிகள் கடனுதவி ஆலோசனை மையத்தை அமைத்துள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.4,000-மாக உள்ளது. சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு இந்த ஆண்டு ரூ.3 லட்சம் கட்டணமாகவும், கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ரூ.2.25 லட்சம் கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் 5 ஆண்டுப் படிப்புக்கும் சேர்த்து எவ்வித உத்தரவாதமும் இன்றி ரூ.4 லட்சம் வரை 12.5 சதவீத வட்டிக்கு இந்தியன் வங்கி கடனுதவி அளிக்கும். ரூ.4 லட்சத்துக்கு மேல் ரூ.7.5 லட்சம் வரை உத்தரவாதம் இன்றி 13 சதவீத வட்டிக்கு கடன் கிடைக்கும். கடன் தொகை ரூ.7.5 லட்சத்துக்கு மேல் இருந்தால், அசையாச் சொத்துகள், டெபாசிட் பத்திரங்கள் உள்பட கடன் தொகைக்குச் சமமாக 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்க வேண்டும்; வட்டி விகிதம் 13 சதவீதம். படித்து முடித்து வேலையில் சேர்ந்த பிறகு கடன் தொகையை மாணவர் திருப்பிச் செலுத்தினால் போதும்.
———————————————————————————————————-
செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் மறுப்பு
சென்னை, ஜூலை 20: உச்ச நீதிமன்ற தடை உத்தரவின் எதிரொலியாக தமிழக அரசு அனுமதிக் கடிதம் அளித்த 25 மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரி மறுத்து விட்டது.
இதனால் அரசு ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக் கடிதம் பெற்ற 25 மாணவர்கள், வியாழக்கிழமை நடந்த கவுன்சலிங்கில் இக் கல்லூரியின் அரசு ஒதுக்கீட்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட 62 மாணவர்கள் என மொத்தம் 97 மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் மொத்தம் உள்ள 150 எம்.பி.பி.எஸ். இடங்களில் (150), 65 சதவீதத்தை (97 இடங்கள்) அரசின் ஒதுக்கீட்டுக்கு அளிக்க வேண்டும்; செட்டிநாடு மருத்துவக் கல்லூரி தொடர்ந்த வழக்கில், அக் கல்லூரியில் 65 சதவீத அரசு ஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்துள்ளது.
செட்டிநாடு மருத்துவக் கல்லூரியைப் பொருத்தவரை ராமன் குழு நிர்ணயித்த ஆண்டு கல்விக் கட்டணப் பிரச்சினையுடன் (ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.3 லட்சம்) தற்போது 97 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் தடை உத்தரவும் சேர்ந்து மாணவர்களை பெரும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளது.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள படூரில் கடந்த ஆண்டு செட்டிநாடு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இக் கல்லூரியின் மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 150; இதில் 65 சதவீத அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் 97.
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் கடந்த ஜூலை 15, 16-ம் தேதி கவுன்சலிங் நடைபெற்றபோது, இந்த 97 இடங்களில் 25 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்; அவர்களுக்கு இக் கல்லூரியில் சேர அனுமதிக் கடிதமும் வழங்கப்பட்டது. அவர்களைச் சேர்த்துக் கொள்ள கல்லூரி நிர்வாகம் வியாழக்கிழமை மறுத்து விட்டது.
செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் மீதம் இருந்த 62 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் மீண்டும் வியாழக்கிழமை (ஜூலை 19) கவுன்சலிங் நடந்தது. இந்த இடங்களுக்கு 62 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்; ஆனால் உச்ச நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக இந்த 62 மாணவர்களுக்கு கல்லூரியில் சேர அனுமதிக் கடிதம் வழங்கப்படவில்லை.
பிஎஸ்ஜி பிரச்சினை இல்லை: “”செட்டிநாடு மருத்துவக் கல்லூரி மட்டுமே உச்ச நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றுள்ளது. கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் உள்ள 65 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கவுன்சலிங்கில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அனுமதிக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது; அதில் பிரச்னை இல்லை. இதேபோன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன (ஐ.ஆர்.டி.) மருத்துவக் கல்லூரியின் 39 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களிலும் மாணவர்கள் சேருவதில் பிரச்சினை இருக்காது” என்று மருத்துவக் கல்வி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டணப் பிரச்சினை:
ராமன் குழு நிர்ணயித்த ஆண்டு கல்விக் கட்டணத்தை (சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரி – ரூ.3 லட்சம்; கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி – ரூ.2.25 லட்சம்) எதிர்த்து இக் கல்லூரி நிர்வாகங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடையாணை பெற்றுள்ளன.
இந் நிலையில் அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். அட்மிஷன் கிடைத்த மாணவர்களிடம், ஆண்டுக் கல்வி கட்டணமாக ரூ.4,05,000 செலுத்துமாறு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி கூறியுள்ளது. இதனால், கவுன்சலிங்கின்போது ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.2.25 லட்சமாக இருக்கும் என எதிர்பார்த்து கோவை பிஎஸ்ஜி கல்லூரியைத் தேர்வு செய்த 65 மாணவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
————————————————————————————————–
கொள்ளை போகும் உயர் கல்வி
குமுதம்
சாவித்திரி கண்ணன்
18.07.07 கவர் ஸ்டோரி
‘‘நீ பெரியவனாயிட்டா டாக்டராவியா? இன்ஜினீயராவியா?’’ என்று, நம் குழந்தைகளிடம் அடிக்கடி கேட்கப்படுகிறது. ஏதோ இந்த இரண்டைத்தவிர அடையவேண்டிய உச்சம் வேறொன்றுமேயில்லை என்பது எவ்வளவு பெரிய அபத்தம். இந்த அபத்தத்தினால் உண்டான ஆபத்தாகத்தான் தமிழ்நாட்டில் தேனீர் கடைகளுக்கு இணையாக பொறியியல் கல்லூரிகள் பிறப்பெடுத்துக் கொண்டுள்ளன.
இந்தியாவிலே மட்டுமல்ல, உலகத்திலேயே, தமிழ்நாட்டைப் போல் இவ்வளவு சிறிய நிலப்பரப்பிற்குள் 251 இன்ஜினீயரிங் கல்லூரிகள் கிடையாது. ‘ஆஹா எவ்வளவு வளர்ச்சி!’ என்று சந்தோஷமடைய வழியின்றி பல சங்கடங்கள்! ஏனெனில், இதில் அரசு சார்ந்த 13 கல்லூரிகள்தான் உருப்படியாகச் செயல்படுகின்றன.
அடுத்ததாக சொல்ல வேண்டுமெனில், 238 சுயநிதிக்கல்லூரிகளில் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவான கல்லூரிகளையே வேலைவாய்ப்பு தரும் கல்வி நிலையங்கள் முதல் தர வரிசையில் அங்கீகரித்துள்ளன. அதாவது வருடாவருடம் வெளியேறும் 70,000 மாணவர்களில் சுமார் 10 சதவிகிதத்தினருக்குத்தான் சரியான வேலைக்கு உத்தரவாதமுள்ளது. ஆக இப்படியான கழிசடைக் கல்வியைத்தான் பெரும்பாலான சுயநிதிக்கல்லூரிகள் தந்து கொண்டுள்ளன. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் வேண்டுமெனில், நம்ம ரயில்வேயில் ‘கலாசி’ எனப்படும் கடைநிலை ஊழியர் பணிக்கு 2000 பேரைத் தேர்ந் தெடுக்க 2004_ல் ஒரு விளம்பரம் வெளியானது. இந்த வேலைக்கு 20,000 இன்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த லட்சணத்திலான கல்வியைப் பெறுவதற்காகத்தான் நமது பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் வீட்டையோ, நிலத்தையோ, நகைகளையோ விற்று பிள்ளைகளைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கல்வித்துறை வியாபாரமாகிவிட்டதே என்று சிலர் கோபப்படுகிறார்கள். இப்படிப் பேசுபவர்கள் வியாபாரம் பற்றித் தவறான புரிதல்களைக் கொண்டுள்ளனர். ஒரு பொருளுக்குரிய விலை வைத்து விற்பனை செய்து, அதன் தரம், பயன்பாடு, நியாயமான விலை இவற்றில் வாங்குபவரை திருப்தியடைய வைப்பதே வியாபாரம். இந்த வகையில் பார்த்தால், சுயநிதிக் கல்லூரிகள் நடத்துவது வியாபாரமல்ல, சுரண்டல்.
அடிப்படை வசதிகளற்ற கட்டமைப்பு, தகுதியற்ற ஆசிரியர்கள், மோசமான கல்வித்தரம்… போன்றவற்றோடு மருத்துவம், இன்ஜினீயரிங் படிப்புகள் குறித்த மக்களிடமுள்ள மாயையையே முதலீடாகக் கொள்கின்றன, சுயநிதிக் கல்லூரிகள்.
மாயைகளை உருவாக்குவதிலும், மாயைகளில் பலனடைவதிலும் வேறெவர்களையும் விட, அரசியல்வாதிகளே அதிக அனுகூலமடைகின்—றனர். இந்த வகையில் தமிழகத்தில் 1984_ல் தொடங்கி அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் கல்விச் சுரண்டலை கைகோர்த்து நடத்திக் கொண்டிருக்கின்றன. இதில் பா.ம.க. இதுவரை பார்ட்டனராகவில்லை. ஆகவேதான், ‘‘அநியாய கல்விக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஏன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்கிறார் மருத்துவர் ராமதாஸ்.
கல்வி அமைச்சரும், முதல்வரும், ‘‘அடடா அப்படியா! எங்களுக்கொன்றும் புகார்கள் வரவில்லை. ஆதாரம் தாருங்கள். நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்கிறார்கள். எல்லோருக்கும் புரிந்த உண்மை, கல்வித்துறையை ‘பொன்’ முட்டையிடும் வாத்தாகப் புரிந்து வைத்திருக்கும் அமைச்சருக்கும், முதல்வருக்கும் புரியவில்லை… பாவம்!
‘ஆதாரம் திரட்டும் அருகதை ஆட்சி நடத்து பவர்களுக்கு இல்லையா?’ என மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அன்றைய மன்னர்கள் மாறுவேஷமிட்டுச் சென்று மக்கள் குறைகளைக் கேட்டார்களாம். இன்றைய ஆட்சியாளர்களோ நிஜத்திலேயே வேஷம் போடுகிறார்கள்.
இன்றைய நிலவரப்படி, பிரபல பொறியியல் கல்லூரிகளின் நிர்வாக கோட்டாவிற்கான அனைத்து இடங்களும் ஜனவரி, பிப்ரவரியிலேயே 8 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரை விலைபேசி விற்கப்பட்டுவிட்டன.
மற்றொரு புறம் விலை போகாத கல்லூரிகளோ எஜிகேஷன் எக்ஸிபிஷன் நடத்தி, 80,000_தான். ஒரு லட்சம்தான். ஹாஸ்டல் வசதி இருக்கு. வாங்க வாங்க என்று கையைப் பிடித்திழுக்காத குறையாகக் கெஞ்சுகிறார்கள்.
நீதிபதி ராமன் கமிட்டி நிர்ணயித்த கல்விக் கட்டணம் 32,500 முதல் 40,000 ரூபாய் வரைதான். எனில் தனியார் கல்லூரிகளில் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவை எப்படி தங்கள் இஷ்டம் போல் வசூலிக்க முடிகிறது? பொறியியல் கல்லூரிகளில்தான் பொறுக்க முடியாத கொடுமை என்று மருத்துவக் கல்லூரி சென்றால், அங்கோ மகாமோசம். அரசாங்கம் நிர்ணயித்த கட்டணம் 1,30,000 என்றால், இவர்கள் வசூலிக்கும் கட்டணமோ நாலரை லட்சத்திலிருந்து 40 லட்சம் வரை! இப்படி படித்துவிட்டு வருகிறவர்கள் நாளைக்கு மனிதாபிமானத்தையே விலை பேச மாட்டாங்களா?
1992_ல் கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டம் வந்தது. இதுவரை இதில் ஒரு கல்லூரி அதிபர்கூட கைதாகவில்லை.
இந்தச் சட்டம் ஆட்சியாளர்களின் கைகளிலுள்ள ஆயுதம் என்பது, அந்த அதிபர்களுக்கும் தெரியும். அதேசமயம் உரிய வர்களுக்கு பங்கு தரா விட்டால்தான் இது தங்கள் மீது பாயும் என்பதும் புரியும்.
‘‘அரசாங்கத்திற்கு புகார்கள் தந்ததால் கல்லூரியை விட்டே நீக்கப்பட்டவர்களையும், அர சிடமா புகார் செய்தாய் அபராதம் கட்டு என இன்னும் பாதிக்கப்பட்டவர்களின் பட்டி யலையும் தரட்டுமா என்கிறது இந்திய மாணவர்கள் சங்கம். இவ்வளவு ஏன்? தமிழகத்திலுள்ள அனைத்து கல்வியாளர்களும் கொதித்துக் குமுறுகிற வகையில் இதுவரை கறை படியாதிருந்த அண்ணா பல்கலைக்கழகத்தையே இந்த ஆட்சி களங்கப்படுத்திவிட்டது. ‘ஸ்பெஷல் ஸ்கீம்’ என்று பகி ரங்கமாகவே 15 லட்சத்திற்கு இன்ஜினீயரிங் சீட்டை விற்கிறார்கள். சென்ற ஆண்டு இதுபோல் 60 சீட்டுகள் அதிகார பூர்வமாக சில நிறுவனங்களுக்கு விற்றார்கள். இந்தாண்டு இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவுள்ளது. ஏழை எளிய திறமையான மாணவர்களுக்கு கருணை காட்டவென ஒதுக்கப்பட்ட முதல்வர் கோட்டா, கவர்னர் கோட்டா வெல்லாம்கூட கல்விச் சந்தையில் காசாக மாற்றப்பட்டுக் கொண்டுள்ளன.
1948_ல் தாராசந்த் கமிட்டி தொடங்கி, சமீபத்திய ராமன் கமிட்டி சுப்பிரமணியன் கமிட்டி வரை எத்தனையோ கமிட்டிகள், என்னென்னவோ ஆய்வுகள், கட்டண வரைமுறைகள், அட்மிஷன் வரைமுறைகள், எந்த நியாயத்தை நாம் எடுத்துச் சொன்னாலும் நடைமுறையில் கேட்கப்படுகிற கட்டணத்தைக் கொட்டிக் கொடுக்க மக்கள் திரளின் ஒரு பகுதி தயாராக இருக்கிறது என்பதே நிதர்சனம். அப்படி கொட்டுபவர்கள் எங்கேயோ போய்கொட்டாமல் அரசாங்க கஜானாவிலேயே கொட்டிவிட்டுப் போகட்டுமே! மதுக்கடைகளை அரசாங்கமும், கல்வி நிலையங்களை தனியாரும் நடத்துவது அவலம், அநீதி.
மழைக்கும் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர்கள்கூட ஒரு கல்லூரி துவங்கி காசுபார்க்க முடியுமெனில் அரசாங்கம் மேலும் சில கல்லூரிகளை நடத்தினால் என்ன? வசதியானவர்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை ஏழை எளிய நடுத்தர வர்க்க மாணவர்கள் ஏற்றம் பெற பயன்படுத்தலாமே!
—————————————————————————————————————————-
சுயநிதி கல்லூரி இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைக்காமல் போகும் அபாயம்: ஜெயலலிதா எச்சரிக்கை
சென்னை, ஜூலை 25: உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளத் தீர்ப்பால் தமிழகத்தில் உள்ள சுயநிதிக் கல்லூரி இடங்கள் இனி அரசு ஒதுக்கீட்டு கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
திமுக அரசின் தவறான உயர் கல்விக் கொள்கையால் இந்த ஆண்டு பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் சேருவதற்காக காத்திருக்கும் மாணவர்கள் பெரிதும் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த அரசு பொறுப்பேற்றவுடன், சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை தேவையில்லை என்று சட்டம் இயற்றப்பட்டது.
ஒற்றைச் சாளர முறையில்தான் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று அதிமுக சார்பில் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தபோது, நீதிமன்றத்துக்குச் சென்று தடையாணை பெறாத வகையில் உரிய முறையில் இச் சட்டம் நிறைவேற்றி இருக்கிறோம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
2006-ம் ஆண்டு நிறைவேற்றிய சட்டத்தில் சில திருத்தங்களை திமுக அரசு தற்போது கொண்டுவந்தது. அதன்படி சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை ஒற்றை சாளர முறையில்தான் இருக்க வேண்டும்.
தமிழக அரசின் இச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து சுயநிதிக் கல்லூரி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இச் சட்டத்தில் உள்ள சில பிரிவுகள் செல்லாது என்று அறிவித்து இந்த கல்வி ஆண்டு மட்டும் இச் சட்டத்தின்படி மாணவர் சேர்க்க அனுமதி அளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து செட்டிநாடு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது இடைக்கால தீர்ப்பில் இக்கல்லூரி அரசு ஒதுக்கீட்டுக்கு இடம் ஒதுக்கத் தேவையில்லை என்றும் அனைத்து இடங்களையும் அக் கல்லூரியே நிரப்பிக்கொள்ளலாம் என்றும் தீர்ப்புக் கூறியது.
மொத்தம் உள்ள 240 சுயநிதி கல்லூரிகளில் 160 கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களைத் தர முன் வந்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களைத் தர முன்வந்துள்ள இக் ல்லூரிகளில் பெரும்பாலானவற்றில் இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும். அதைத் தான் அக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டு தர முன்வந்துள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களைத் தர முன்வராத 80 கல்லூரிகள் மாணவர்கள் விரும்பிப் படிக்கக் கூடிய முன்னிலை கல்லூரிகளாகும்.
எந்தெந்த சுயநிதிக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களைத் தர முன்வந்துள்ளன எந்தெந்த சுயநிதிக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களைத் தர முன்வரவில்லை என்பதை திமுக அரசு தெளிவுபடுத்தாத காரணத்தால் மாணவர்கள் பெரும் குழப்பத்துக்கு ஆளாகி உள்ளனர்.
அரசின் அலட்சிய போக்காலும் முன்னுக்கு பின் முரணாக செயல்பட்டதாலும் சுய நிதி கல்லூரிகளிடமிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைத்து வந்த இடங்கள் அனைத்தும் இனிமேல் கிடைக்காது போகக் கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.
—————————————————————————————————————————-
ஏழை மாணவர்களின் நலனை கெடுக்க ஜெயலலிதா சூழ்ச்சி: பொன்முடி
சென்னை, ஜூலை 25: சில சுய நிதிக் கல்லூரிகளோடு சேர்ந்துகொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலிலதா ஏழை மாணவர்களின் நலனைக் கெடுக்கச் சூழ்ச்சி செய்கிறார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.
அரசின் தவறான கொள்கையால் மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிக்கை:
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சிறுபான்மை சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு 70 சதவீதமாகவும் அரசாங்க ஒதுக்கீடு 30 சதவீதமாக இருந்தது. சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 50 சதவீத நிர்வாக ஒதுக்கீடும், அரசு ஒதுக்கீடு 50 சதவீதமாகவும் இருந்தது.
திமுக அரசு பொறுப்பேற்றதும் சிறுபான்மை சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதைப் போல சிறுபான்மை அல்லாத சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசின் ஒதுக்கீடு 65 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
முந்தைய அதிமுக ஆட்சியில் ஒற்றைச் சாளர முறையில் இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பதற்கு சட்டம் கூட இயற்றப்படவில்லை.
திமுக அரசு பொறுப்பேற்றதும் அரசு ஒதுக்கீட்டை அதிகம் பெற்றதுடன் நிர்வாக ஒதுக்கீட்டையும் ஒற்றைச் சாளர முறையில் நிரப்ப வேண்டும் என்று சட்டம் இயற்றியது.
மேலும் 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இன்னமும் ஒப்புதல் பெறப்படவில்லை. அந்தச் சட்டத்தில் எந்தத் திருத்தமும் இதுவரை செய்யப்படவில்லை.
2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தில் ஒற்றைச் சாளர முறை தேவையில்லை என்று கூறியிருப்பதாகச் சொல்லும் ஜெயலலிதா அதை நிரூபிக்கத் தயாரா?
நுழைவுத் தேர்வை ரத்து செய்து 2007-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தை ஜெயலலிதா புரிந்து கொள்ளவே இல்லை.
2006-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்திலும் 2007-ம் ஆண்டைய சட்டத்திலும் சொல்லியிருப்பது ஒற்றைச் சாளர முறையே தவிர வேறு அல்ல.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இயற்றப்பட்ட சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் செல்லாது என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
மாணவர்களின் மீது ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் அவரது கட்சியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு கூட செய்யலாம்.
மேலும் இதுவரை உச்சநீதிமன்றம் பொறியியல் கல்லூரிகளுக்கு எவ்வித தடையாணையோ, தீர்ப்போ சொல்லாத நிலையில், சில சுய நிதிக் கல்லூரிகளோடு சேர்ந்துகொண்டு ஜெயலலிதா ஏழை மாணவர்களின் நலனைக் கெடுக்கச் சூழ்ச்சி செய்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் பொன்முடி.
—————————————————————————————————————————-
மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் மிகப் பெரிய குளறுபடி: ஜெயலலிதா குற்றச்சாட்டு
சென்னை, ஜூலை 25: மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மிகப் பெரிய குளறுபடி நடந்துள்ளது, மாணவர்கள் நலன் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களுடன் கூடிய பிரகடனத்தில் தொழிற்கல்வி மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆனால் இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப் படிவத்துடன் கூடிய பிரகடனத்தில் மற்ற தொழிற்கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது என்ற வாசகம் நீக்கப்பட்டுவிட்டது. இதனால் பொறியியல் கல்லூரிகளில் தற்போது 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில விண்ணப்பித்து இடமும் பெற்றிருக்கிறார்கள்.
இதை எதிர்த்து இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றனர். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப் படிவத்துடன் கூடிய பிரகடனத்தில் சில வார்த்தைகள் உள் நோக்கத்துடன் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது பொறியியல் உள்ளிட்ட வேறு தொழில் கல்வி படித்து வரும் மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்தது தவறு. பழைய நடைமுறைப்படியே மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இதற்கிடையில் உயர் நீதிமன்ற உத்தரவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று தங்களுக்குச் சாதகமான உத்தரவை பெற்றிருக்கிறார்கள். கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில் இவர்களை மருத்துவப் படிப்பில் சேர்க்க வேண்டும். இதனால் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மிகப் பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது.
எனவே மாணவர்களின் எதிர்கால நலன் பாதிக்கப்படாத வகையில் இந்தப் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஜெயலலிதா.
———————————————————————————————————————————
Monday November 26 2007
மக்களுக்காக மருத்துவம்சார் கல்வி
எஸ். மணிவாசகம்
மருத்துவத்தில் வியத்தகு சாதனை புரிந்து வரும் நம் நாட்டில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு கல்விகள் கூடுதலாக தேவைப்படுகின்றன.
மருத்துவப் பட்டப்படிப்பு (எம்.பி.பி.எஸ்.), பல் மருத்துவம் (பி.டி.எஸ்.) போன்ற படிப்புகள் ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே இன்றளவும் உள்ளன.
தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர அனைவராலும் முடிவதில்லை. குறிப்பாக, தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 1545 இடங்களும், தனியார் கல்லூரிகள் 5-ல் மொத்தம் 420 இடங்களும் மட்டுமே உள்ளன.
நமது அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரத்தோடு ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவே தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மருத்துவம், பல் மருத்துவப் பட்டப் படிப்புகளில் சேர இயலாத மாணவர்கள் பயனடைவதற்கு ஏற்றவகையில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புகளை அதிக இடங்களில் ஏற்படுத்த வேண்டும்.
ஓராண்டு சான்றிதழ் படிப்புகள், 2 ஆண்டுகள் டிப்ளமோ படிப்புகள், 3 ஆண்டுகள் கொண்ட பட்டப்படிப்புகள் போன்றவற்றை உருவாக்கி ஏழை மாணவர்களும் மருத்தும் சார்ந்த கல்வி பயில வழிவகுக்க வேண்டும். இதற்கு ஏதுவாக பாடத்திட்டம், கல்விக் கட்டணம் அமைய வேண்டும். குறைந்தபட்சக் கல்வித்தகுதியையும் நிர்ணயம் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் தற்போதும் சில மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நேரடியாகச் சேர்ந்து மருத்துவம்சார் படிப்புகள் பயில்வதற்கு 27 சான்றிதழ், டிப்ளமோவும், தொலைதூரக் கல்வி முறையில் பயில்வதற்கு 12 சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவை போதாது. இன்னும் பல படிப்புகள் தொடங்கப்பட வேண்டும்.
மருத்துவத் துறையில், செவிலியர், மருந்தாளுநர்கள், மருத்துவ ஆய்வுக்கூடம், கண் மருத்துவம், மருந்து தயாரிப்பு, அறுவைச் சிகிச்சை அரங்க தொழில்நுட்பம், பிசியோதெரபி தாய்மை மற்றும் மகப்பேறு, குழந்தை வளர்ப்பு மற்றும் பராமரித்தல், நரம்பியல் புற்றுநோய், இதய நோய், எலும்பு முறிவு, ரத்த அழுத்தம், ரத்த சோகை, நீரிழிவு நோய், சருமநோய் போன்ற பற்பல துறைகளில் சான்றிதழ், டிப்ளமோ பட்டப்படிப்புகள் தொடங்க தீவிரம் காட்ட வேண்டும்.
பல் மருத்துவத்தில் கூட, முகச்சீரமைப்பு, பல் உருவாக்குதல் மற்றும் பொருத்துதல், பல் நோய்களிலிருந்து விடுபடுதல், அறுவைச் சிகிச்சை தொழில் நுட்பங்கள், பல் நோயாளிகளைப் பராமரித்தல் போன்ற துறைகளில்கூட சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்பு வகுப்புகள் நடத்தத் திட்டமிடலாம். மருத்துவம்சார் சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கு உள்நாட்டில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சிறப்பான பணியும், ஊதியமும், வாழ்க்கை வசதியும், குடியுரிமையும் வழங்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு அன்னிய மொழியை அறிந்திருத்தல் கூடுதல் தகுதியாக அமையும்.
கிராமப்புறங்களில் சுகாதாரம் பேணவும், அடிப்படை மருத்துவ ஆலோசனைகளை வழங்கவும் கிராமப்புற மருத்துவப் பணியாளர்களையும் உதவியாளர்களையும் உருவாக்க வேண்டும்.
கிராமப்புறக் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், தாய்மையடைந்தோர், குழந்தை பெற்றவர்கள், கண் நோயாளிகள், சரும நோய் உள்ளவர்கள், சர்க்கரை மற்றும் காச நோயாளிகள், வயதானோர், வறுமைக் கோட்டிற்கு கீழ்நிலையில் உள்ளவர்கள் அனைவருக்கும் தகுந்த ஆலோசனைகளை வழங்க உதவியாளர்கள் தேவை. இத்தகைய பணியாளர்களைத் தயார் செய்ய சான்றிதழ், டிப்ளமோ, பட்டப் படிப்புகள் தொடங்க வேண்டும்.
இந்தியர்களின் சராசரி ஆயுள் அதிகரித்துள்ளது. விரைவில் உலகிலேயே முதியவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியா இரண்டாம் நிலையை எட்டிவிடும். இந்த முதியவர்களைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் நாம் உதவி செய்தல் வேண்டும்.
பிழைப்புக்காக தங்களின் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு, முதியவர்கள் அனைவரும் முதியோர் இல்லங்களை நாடுகிறார்கள். இந்த முதியவர்களுக்காக, அவர்களின் கடைசி கால வாழ்க்கை சுகமாக இருக்க, முதியோர் காப்பகம் சம்பந்தமாக மருத்துவ ரீதியில் தகுதிவாய்ந்த பயிற்சியாளர்களை உருவாக்க சான்றிதழ், டிப்ளமோ படிப்புகள் தொடங்கலாம். வெளிநாடுகளிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் சிகிச்சை பெற பல நோயாளிகள் தமிழகத்துக்கு வருகின்றனர். இதன்மூலம் தமிழகத்துக்கு பல்வேறு வகைகளில் வருவாய் கிடைத்து வருகிறது.
செவிலியர்களின் அன்னை, கைவிளக்கேந்திய காரிகை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பெயரில் செவிலியர் மற்றும் மருத்துவம் சார் பல்கலைக்கழகத்தை தமிழகத்தில் தொடங்கி ஒரு சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தலாம். செவிலியர் படிப்பில் முதியோர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தமாக சான்றிதழ், டிப்ளமோ படிப்புகள் தொடங்கலாம்.
அனைவருக்கும் “ஆரோக்கியமான வாழ்வு’ அமைய வேண்டுமெனில் மருத்துவம்சார் அறிவியல் படிப்புகள் அவசியம்.
சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாக எட்டமுடியாத மருத்துவ வசதிகளை இனியாவது ஏற்படுத்த வழிவகுக்க வேண்டும். இந்த நூற்றாண்டிலாவது அனைவருக்கும் “ஆரோக்கியமான வாழ்வு’ என்ற இலக்கை எட்ட மருத்துவ அறிஞர்களும், கல்வி நிலையங்களும், மத்திய, மாநில அரசுகளும், மருத்துவர்களும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். இதற்கு மருத்துவம்சார் சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்புகள் உறுதுணையாக அமையும் என்பதில் ஐயமில்லை.
—————————————————————————————————————————-
“கிராமப்புற சேவை’யின் மறுபக்கம்
சி. கதிரவன்
இந்தியாவின் உயிர்நாடி கிராமங்கள்தான். ஆனால், கிராமங்களில் வசிக்கும் 72 சதவீத மக்களுக்கு நாடி பிடித்துப் பார்க்க ஆளில்லை என்கிறது ஓர் ஆய்வு.
கிராமப்புறங்களில் மருத்துவ சேவையை மேம்படுத்த வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. அண்மைக்காலமாக பெரிய அளவில் இந்த விஷயம் பேசப்படுவது ஆரோக்கியமானதே. ஆனால், பேச்சு ஆக்கபூர்வமானதாக இல்லை என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
உண்மையில், கட்டாய கிராமப்புற மருத்துவ சேவையின் மறுபக்கம்தான் என்ன?
மருத்துவம் ஓர் இன்றியமையாத தேவை. மருத்துவக் கொள்கையைப் பொருத்த அளவில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான கொள்கையைப் பின்பற்றி வருகிறது. பிரிட்டன் மருத்துவத் துறையைத் தன் முழுப் பொறுப்பில் வைத்திருக்கிறது. அந்நாட்டின் தேசிய சுகாதாரச் சேவை மிகச் சிறப்பானது. பொது மருத்துவத்துக்கான மொத்தச் செலவில் அந்நாட்டு அரசு 94 சதவீதத்தை தானே செலவிடுகிறது.
அமெரிக்கக் கதையோ வேறு. காப்பீட்டுத் திட்டங்கள் சார்ந்த மருத்துவ சேவை அங்கு பின்பற்றப்படுவதால் அரசுக்கும், பொது மருத்துவத்துக்கும் கிட்டத்தட்ட தொடர்பே இல்லை.
நம் நிலைதான் பரிதாபத்துக்குரியது. மொத்த ஆண்டு வருவாயில் மத்திய அரசு 1.3 சதவீதமும், மாநில அரசு 5.5 சதவீதமுமே மருத்துவத்துக்காக ஒதுக்கீடு செய்கின்றன. இவை இரண்டும் மருத்துவத்துக்காக நாம் செலவு செய்யும் மொத்தத் தொகையில் கால் பகுதியே ஆகும்.
இந்நிலையில், இந்திய மருத்துவத்துறை வேகமாக தனியார்மயமாகி வருகிறது. மக்கள்தொகைப்படி நமது நாட்டில் 40 லட்சம் மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில் 14 லட்சம் மருத்துவர்களே இருக்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் காலிப் பணியிடங்கள். பெரும்பாலான அரசு மருத்துவக் கல்லூரிகள் பேராசிரியர்கள் இன்றி தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.
இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் மட்டும் வேலைவாய்ப்பகத்தில் 15 ஆயிரம் மருத்துவர்கள் பதிவு செய்து, வாய்ப்பின்மையால் தனியார் மருத்துவமனைகளில் குறைந்த ஊதியத்துக்குப் பணியாற்றி வருகின்றனர்.
பல ஆயிரம் கிராமங்களில் மக்களின் நாடி பிடித்துப் பார்க்க மருத்துவர் இல்லாத நமது நாட்டில், நகரங்களை நோக்கிய தொலை மருத்துவ மையங்களின் வருகையின் நோக்கத்தை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
மருத்துவத்தை அமெரிக்கப் பாணியில் முழுவதும் தனியார்மயமாக்குவதன் தொடக்கமே “கார்ப்பரேட் கிளினிக்குகள்’ நகரங்களை நோக்கி வருவதும் நகரங்களிலிருந்து மருத்துவ மாணவர்கள் கிராமங்களுக்கு அனுப்பப்படுவதும்.
கட்டாய கிராமப்புற சேவைத் திட்டம் என்றால் என்ன? எம்.பி.பி.எஸ். படிப்பு மேலும் ஓர் ஆண்டு நீட்டிக்கப்பட்டு, அந்த ஓர் ஆண்டில் 4 மாதம் ஆரம்பச் சுகாதார நிலையம், 4 மாதம் தாலுகா மருத்துவமனை, 4 மாதம் மாவட்ட மருத்துவமனைகளில் என சுழற்சி முறையில் மாணவர்கள் பணியாற்றுவதுதான்.
இதில் முதல் முரண்பாடு என்னவென்றால், ஆண்டில் 8 மாதங்கள் கிராமப்புறம் அல்லாத இடங்களில் பணியாற்ற வைக்கப்படுவதுதான். இத்திட்டம் எப்படி கிராமப்புற சேவையாகும்?
உண்மை என்னவென்றால் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்களைப் பெயரளவில் நிரப்பும் அரசின் குறுக்கு வழியே இது. உள்ளபடியே இந்திய மருத்துவக் கல்வியும் மருத்துவத் துறையும் பெரும் சவாலை எதிர்கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் நிகழாண்டில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நான்கு முறை நடைபெற்றது. இது இதுவரை மருத்துவத்துறை வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாகும். இதில் முதலாமாண்டு மாணவர்களில் 131 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பை விட்டுவிட்டு மற்ற தொழிற்படிப்புகளுக்குச் சென்றுவிட்டனர்.
வேலூர், கன்னியாகுமரி, தேனி மருத்துவக் கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள், உள் கட்டமைப்பு இல்லாத காரணத்தால் இந்திய மருத்துவக் கழகத்தின் அனுமதியையே பெற முடியவில்லை. தமிழகத்தில் உள்ள 21 மருத்துவக் கல்லூரிகளில் ஒரு சில கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளில் இதே நிலைதான். நாட்டிலேயே மருத்துவத் துறையில் சிறப்பாக இருப்பதாகக் கூறப்படும் தமிழகத்தின் நிலையே இது என்றால் மற்ற மாநிலங்களின் நிலைமையை சொல்ல வேண்டியதில்லை.
இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கொண்டு வர முனையும் திட்டத்தை நாம் ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது. 2006-ல் தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் கிராமங்களில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் 800 மருத்துவர்களைப் பணி நியமனம் செய்வதற்கான தேர்வு நடைபெற்றது. அதற்கு 12,000 மருத்துவர்கள் விண்ணப்பம் செய்தனர். இதிலிருந்தே மருத்துவர்கள் கிராமங்களுக்குச் செல்லத் தயங்குகிறார்களா என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
உள்ளபடியே கிராமப்புற மருத்துவ சேவைதான் அரசின் பிரதான நோக்கம் என்றால் அதற்குச் செய்ய வேண்டிய செயல்திட்டங்கள் நிறையவே இருக்கின்றன.
எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தவுடன் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரிந்தவர்கள் மட்டுமே பட்ட மேல்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். எந்தெந்த ஆரம்பச் சுகாதார நிலையங்ளுக்கு மருத்துவர்கள் இல்லையோ அப் பணியிடங்களுக்கு நிரந்தர மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும். குறிப்பாக கிராமப் பகுதிகளில் இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைய வேண்டும்.
மருத்துவப் படிப்பில் கிராமப்புற மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். ஆரம்பச் சுகாதார மையங்களும் மக்கள்தொகைக்கேற்ப அதிகரிக்கப்பட வேண்டும். தொடக்க நிலை சுகாதார மேம்பாட்டுக்கென கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசியல் சட்டத்தில் வாழ்வுரிமையைப்போல அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மருத்துவச் சிகிச்சை பெறுவதையும் உறுதி செய்து சட்டமியற்ற வேண்டும்.
மருத்துவ மாணவர்கள் மீது கட்டாய கிராமப்புற சேவையைத் திணிப்பது ஒன்றே இப்பிரச்னைக்குத் தீர்வு என திசை மாற்றுவதைவிடுத்து அரசு உண்மையாக, ஆக்கபூர்வமான செயலில் இறங்க வேண்டும்.