Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘MP’ Category

U Nirmala Rani: Women Rights – Perspectives, Timeline, Information

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

“இரும்புத் தாடை தேவதைகள்’

வழக்கறிஞர் உ . நிர்மலா ராணி

இன்று சர்வதேச பெண்கள் தினம். 1908ம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாள் நியூயார்க் நகரில் ஆயிரக்கணக்கான பஞ்சாலை பெண் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை கோரி நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தை நினைவு கூறும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அந்தப் போராட்டத்தின் இரண்டாவது முக்கிய கோரிக்கை தான் பெண்களுக்கு வாக்குரிமை!

அந்தக் காலத்தில் வாக்குரிமை என்பது வசதி படைத்தவர்கள் அதிலும் ஆண்களுக்குத்தான் ஓட்டுரிமை. சொத்து வைத்திருக்காத ஆண்கள், வேலையாட்கள், கிரிமினல்கள் இந்த வரிசையில் இறுதியாகப் பெண்கள். இவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை மறுக்கப்பட்டது.

பெண்களுக்கு வாக்குரிமை கோரி நடந்த ஒரு நூற்றாண்டுப் போராட்டம்கூட வரலாற்றில் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் மறைக்கப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த சமூகப் போராளி எலிசபெத் கேண்டி ஸ்டாண்டன், லண்டனில் நடந்த அடிமை முறை எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றபோது, பெண்கள் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அடிமை எதிர்ப்பு மாநாட்டிலேயே பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவது கண்டு ஆத்திரமுற்ற எலிசபெத், 1848-ல் செனிகா ஃபால்ஸ் என்ற இடத்தில் பெண்களைத் திரட்டி கோரிக்கைப் பிரகடனத்தை வெளியிட்டார். அது தான் அமெரிக்காவில் பெண்கள் வாக்குரிமைக்கான போராட்டத்தின் முதல் வித்து!

ஆரம்பத்தில் வாக்குரிமை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சாத்வீகமான போராட்ட வடிவங்களைக் கையாண்ட பெண்கள், கறுப்பின மக்களுக்கு சம உரிமையளித்த “”சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்று விளம்பும் 14, 15 சட்ட திருத்தங்களிலிருந்து பெண்கள் மட்டும் விலக்கப்பட்டபோது பொங்கி எழுந்தனர்.

அமெரிக்காவில் எலிசபெத் கேண்டி ஸ்டாண்டன், சூஸன் பி ஆண்டனி, ஆலிஸ் பால் ஆகியோரும், இங்கிலாந்தில் எம்மலின் பாங்கர்ஸ்ட் மற்றும் அவரது 2 புதல்விகள் கிறிஸ்டபெல் மற்றும் சில்வியா ஆகியோரும் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தினர். நாடாளுமன்றமும் அரசு அலுவலகங்களும் முற்றுகையிடப்பட்டன. வாயில்களில் வாக்குரிமை கேட்டு பேனர் பிடித்தபடி நாள்கணக்கில் நின்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் காரி உமிழ்ந்தனர்.

கோபமடைந்த பெண்கள் அரசு அலுவலகக் கண்ணாடிக் கதவுகளை சரசரவென்று கல்லெறிந்து உடைத்து நொறுக்கினர். தந்தி வயர்களை வெட்டினர். அதிகாரிகளின் கார் கண்ணாடிகளைத் தூளாக்கினர். எரி குண்டுகளை வீசி அரசு அலுவலகங்களைத் தாக்கினர். கைதாகினர். சிறை சென்றனர். உண்ணாவிரதமிருந்தனர். சிறை அதிகாரிகள் வன்முறையை உபயோகித்த போதும் வாய் வழியாக அவர்களுக்கு உணவூட்ட இயலவில்லை. எனவே தான் இந்தப் பெண் போராளிகளுக்கு “இரும்புத் தாடை தேவதைகள்’ என்ற செல்லப்பெயர் சூட்டப்பட்டது. எனவே சிறை அதிகாரிகள் அவர்களைக் கட்டாயப்படுத்தி மூக்கின் வழியாக, குழாய் மூலமாக உணவைச் செலுத்தினர்.

உச்சகட்டமாக 1913 ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் எமிலி வைல்டிங் டேவிஸன் என்ற பெண்மணி பெண்களின் ஓட்டுரிமைக்காக யாரும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்தார். புகழ்பெற்ற குதிரைப் பந்தய மைதானமான டெர்பியில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் குதிரையான ஆன்மர், புயல் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது கையில் வாக்குரிமை கோரும் அட்டையுடன் குறுக்கே பாய்ந்தார் எமிலி! குதிரையின் கால்களில் மிதிபட்டு சின்னாபின்னமானார். வாக்குரிமைக்காக உயிர்த்தியாகம் செய்த ஒரே பெண் என்ற புகழையும் பெற்றார்.

இதையடுத்து இங்கிலாந்தில் 1918-ல் நிபந்தனையுடன் கூடிய வாக்குரிமையும், 1928-ல் முழுமையான வாக்குரிமையும் வழங்கப்பட்டது.

அமெரிக்காவிலும், 1919-ல் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் மசோதா, 19-வது சட்டத் திருத்தமாக நிறைவேற்றப்பட்டாலும் அமெரிக்க சட்ட விதிகளின்படி இந்தத் திருத்தம் சட்டரீதியாக்கப்பட வேண்டுமென்றால், 4-ல் 3 பங்கு மாகாணங்கள் அதாவது 36 மாகாண நாடாளுமன்றங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாகாண நாடாளுமன்றத்திலும் மசோதா நிறைவேற பெண்கள் போராட வேண்டியிருந்தது. மசோதா எதிர்ப்பாளர்கள் அதைத் தோல்வியடையச் செய்யும் பொருட்டு குறைந்தபட்ச கூட்ட வருகையை (கோரம்) தவிர்க்க இரவோடு இரவாக நாட்டை விட்டுப் பறந்தனர். கூட்டங்கள் நடத்த விடாமல் வெளிநடப்புச் செய்தனர். 35 மாகாணங்கள் அங்கீகரித்துவிட, கடைசி மாகாணமான டென்னிஸீயில் மசோதாவைத் தோற்கடிக்க போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்ப்பாளர்கள் தேற்றி வைத்திருந்தனர். மசோதா ஆதரவாளர்கள் மஞ்சள் ரோஜாவையும் எதிர்ப்பாளர்கள் சிவப்பு ரோஜாவையும் அணிந்திருந்தனர். இதைக் கணக்கெடுத்துப் பார்த்தபோது மஞ்சள் ரோஜாவை அணிந்தவர்கள் 47 பேர் எனவும் சிவப்பு ரோஜாவை அணிந்தவர்கள் 49 பேர் எனவும் தெரியவந்தது.

வாக்கெடுப்பின் முதல் சுற்றில் குடியரசுக் கட்சியை சார்ந்த பேங்க் டர்னர், தான் அணிந்திருந்த சிவப்பு ரோஜாவைத் தூக்கியெறிந்துவிட்டு தடாலடியாக அணி தாவினர். இதனால் இரண்டாவது சுற்றில் ஆதரவும், எதிர்ப்பும் 48 – 48 என்று சம நிலையிலிருந்தது.

3-வது சுற்றில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் அமெரிக்க பெண்களின் தலையெழுத்தையே மாற்றியது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 24 வயதான ஹாரிபர்ன் மசோதாவுக்கு எதிர்ப்பாளர். அவர் வாக்களிக்கப் போகும் இறுதி நொடியில் ஒரு துண்டுச் சீட்டு அவருக்கு வந்தது. அதைக் கண்ணால் ஸ்கேன் செய்த ஹாரிபர்ன் மசோதாவுக்கு ஆதரவாக கையைத் தூக்கி விட்டார். மசோதா நிறைவேற்றப்பட்டது. துண்டுச் சீட்டை அனுப்பியது அவருடைய தாயார் ஃபெப் என்ஸ்மிங்கர் பர்ன். அதில் “”நல்ல பையனாக நடந்து கொள்! பெண்கள் வாக்குரிமைக்கு ஆதரவாக ஓட்டுப்போடு” என்றிருந்தது. தாய் – தனயன் சென்டிமென்ட்தான் கடைசியில் அமெரிக்கப் பெண்களுக்கும் கைகொடுத்தது.

ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுப்பதற்கான முதல் படியை பெண்கள் வெற்றிகரமாகக் கடந்த பிறகும் கூட தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து மந்திரியாக நியமிக்கப்படுவது, அவர்களுக்கு வழங்கப்படும் துறைகள் வரை பெண்கள் இன்றும் பாரபட்சங்களை அனுபவித்து வருகிறார்கள். இதற்கு காரணம் பெண்களின் இடம் என்பது வீட்டின் மூலையில் ஒரு சமையலறையே தவிர நாடாளுமன்றம் அல்ல என்ற ஐயாயிரம் ஆண்டு மனப்போக்கு இன்னமும் மாறவில்லை.

பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து (1893). சமீபத்திய நாடு குவைத் (1995). இன்றும் வாக்குரிமை அளிக்க மறுப்பது சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளும்தான்!

உலகத்தின் முதல் பெண் மந்திரி 1917ல் ரஷியாவில் போல்ஷ்விக் கட்சியால் காபினெட் மந்திரியாக நியமிக்கப்பட்ட அலெக்ஸôண்டர் கோலந்தாய். இங்கிலாந்தில் கூட முதன்முறையாக 2006ல் தான் பரோனஸ் ஹேமேன் என்ற பெண்மணி சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

இண்டர் பார்லிமெண்டரி யூனியன் (ஐடம) என்ற அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி சர்வதேச அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 85 சதவீதம் ஆண்கள்தான்! உலக அளவில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகம் கொண்டவை (40 சதவீதம்) நார்வே, ஸ்வீடன், டென்மார்க் எனும் ஸ்காண்டிநேவிய நாடுகள்தான். இதில் இந்தியாவின் நிலைதான் மிக மோசம்.

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் பெண் உறுப்பினர்கள் 8.3 சதவீதம்தான். இதை சரிசெய்ய 1996ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடஒதுக்கீடு மசோதா இன்னமும் வெளிச்சத்தை காணவில்லை.

2002 – 2004ல் 20 சட்டமன்றங்களுக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்ட 2432 வேட்பாளர்களில் பெண்கள் 1525 பேர். அதாவது பாதிக்கு மேல்! ஆனால் ஜெயித்தது 137 பெண்கள்தான். இது 5.6 சதவீதம், 33 சதவீதம் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்திருந்தால் இன்று 811 பெண் உறுப்பினர்கள் சட்டமன்றங்களில் இருந்திருப்பார்கள்.

பெண் போராளி úஸô ஹைட் – 1916-ல் கனடாவின் நாடாளுமன்றத்தில் வாக்குரிமை மனுவைத் தாக்கல் செய்து பேசியபோது “”கணவான்களே! வாக்குரிமை மறுக்கப்பட்டவர்கள் பட்டியலில் பெண்கள் சேர்க்கப்படுவதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம். நாங்கள் முட்டாள்களும் அல்ல! முடியாதவர்களும் அல்ல! நாங்கள் பெண்கள்! வாக்குரிமையில் நாங்கள் சமத்துவம் கேட்பது சலுகையின் அடிப்படையில் அல்ல! நியாயத்தின் அடிப்படையில்” என்று முழங்கினார்.

இந்தியப் பெண்களாகிய நாங்களும் கேட்கிறோம்! நாடாளுமன்றவாதிகளே! தயவுசெய்து பாலின சமத்துவ நீதியின் மொழியிலே பேசுங்கள்! 33 சதவீதம் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுங்கள்! இந்திய நாட்டில் சமத்துவத்தை விரும்பும் ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதை உலகிற்கு உணர்த்துங்கள்!

Posted in Disparity, Elections, Females, Freedom, Gender, History, HR, Independence, Info, MLA, MP, NirmalaRani, Oppression, Politics, Polls, Power, rights, Sex, She, Stats, Timeline, Vote, voters, Women | Leave a Comment »

Mar 7: Eezham, Sri Lanka, LTTE, Elections, Batticaloa, War, Murders – Updates & News

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 18 மார்ச், 2008 

மட்டக்களப்பு உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் ஜனாதிபதி ராஜபக்ஷ முன் பதவியேற்பு

மட்டக்களப்பு நகர மேயராக பதவியேற்ற சிவகீதா
மட்டக்களப்பு நகர மேயராக பதவியேற்ற சிவகீதா

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மாநகரசபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்காக நடாத்தப்பட்ட தேர்தலில் வெற்றிபெற்று தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள், அரச அதிகாரிகள், அரசியல் தலைவர்களெனப் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

இந்த வைபவத்தின்போது உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்த வெற்றிக்கு அடுத்தப்படியாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெற்றி அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளதோடு, விரைவில் வடபகுதி மக்களுக்கும் ஜனநாயக உரிமை, அபிவிருத்தி மற்றும் சுதந்திரம் போன்றவற்றைப் பெற்றுக்கொடுக்க தனது அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நகர மேயராகப் பதவியேற்ற சிவகீதா பிரபாகரன் அவர்கள் கிழக்கில் இடம்பெற்ற தேர்தலின்போது கிடைக்கப்பெற்ற வெற்றியானது, தமது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்குக் கிடைத்த வெற்றி என்பதனைவிட, கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களுக்குக் கிடைத்த ஒட்டுமொத்த வெற்றி என்று கூறினார்.

அத்துடன் இந்த வெற்றியினூடாக அப்பகுதி மக்களுக்குச் சேவையாற்றுவதற்கு தமக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய இந்த வைபவத்தின்போது, இந்த ஒன்பது உள்ளூராட்சிசபைகளின் உடனடி நடவடிக்கைத் தேவைகளுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலா சுமார் 25 லட்சம் ரூபாயையும், ஒவ்வொரு உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கும், அவர்கள் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக தலா ஒரு லட்சம் ரூபாய்களும் சன்மானமாக வழங்கியதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 14 வருடங்களின் பின்னர் இடம்பெற்ற இந்த ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், எட்டு உள்ளூராட்சி சபைகளில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பும், மட்டக்களப்பு மாநகர சபையை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டு முன்னணியும் வெற்றிபெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


மீண்டும் சிவில் நிர்வாகத்திடம் மட்டக்களப்பு மாநகரசபைக் கட்டிடம்

மட்டக்களப்பு மாநகர சபைக் கட்டிடம்
மட்டக்களப்பு மாநகர சபைக் கட்டிடம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்ததையடுத்து, கடந்த 17 வருடங்களுக்கு மேலாக பாதுகாப்பு தரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வந்த மட்டக்களப்பு மாநகர சபைக் கட்டிடத் தொகுதி இன்று மாநகர சபை நிர்வாகத்திடம் அதிகாரபூர்வமாக மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது.

மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை 1990இல் முறிவடைந்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மாநகர சபைக் கட்டிடத்தொகுதி உட்பட சில கட்டிடங்கள் இராணுவத் தேவைகளுக்காக எடுக்கப்பட்டிருந்தன.

இதன் காரணமாக மாநகரசபை, பிரதேச செயலக கட்டிடத் தொகுதிக்கு மாற்றப்பட்டு தொடர்ந்தும் அக் கட்டிடத்திலேயே தற்காலிகமாக இயங்கி வந்தது.

1990 ம் ஆண்டு முதல் 3 வது படைப்பிரிவு இராணுவ தலைமையகத்தின் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இக் கட்டிடத் தொகுதி கடந்த ஆண்டு முற்பகுதியில் விசேட அதிரடிப் படையினரால் பொறுப்பேற்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.


மன்னாரில் தொடரும் கடும் மோதல்கள்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில், இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெற்ற, விடுதலைப் புலிகளின் இருவேறு தாக்குதல் சம்பவங்களில், இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 13 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மன்னார் அருவியாற்றுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டிருந்த படையினர் மீது, இன்று காலை 7.10 மணியளவில் விடுதலைப் புலிகள் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

இந்தச் சம்பவத்தில் இரண்டு இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டிருக்கின்றது.

இதேவேளை, மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் இராணுவ முன்னரங்க பிரதேசத்தில் நேற்றிரவு 8 மணிமுதல் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின்போது, விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை தாக்குதலில் 11 இராணுவத்தினர் காயமடைந்ததாக மன்னாரிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த படையினர் மன்னார் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக அநுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது பெய்து வரும் அடை மழைக்கு மத்தியிலும் இந்த பகுதியில் நேற்றிரவு முதல் இன்று காலை வரையில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாகவும் மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

—————————————————————————————————————-

புதுப்பிக்கப்பட்ட நாள்: 17 மார்ச், 2008

இலங்கை அரச தொலைக்காட்சி ஊழியர்கள் தாக்கப்பட்ட சர்ச்சை: தொழிற்சங்கத்தினரைச் சந்தித்துள்ளார் ஜனாதிபதி

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் சிலர் அண்மையில் தாக்கப்பட்டது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து அந்நிறுவனத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இலங்கை ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது சர்ச்சைக்கு சுமூகமான தீர்வு ஒன்று காணப்பட்டிருப்பதாகவும், தேசிய தொலைக்காட்சி சேவை முழுமையாக இயல்புநிலைக்கு திரும்பிக்கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் சந்திரபால லியனகே தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதாகவும், தேசியத் தொலைக்காட்சி சேவைகளை பாதிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளுக்கு துணைபோக வேண்டாம் என்று ஊழியர் சங்கத்தினரிடம் அவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் சந்திரபால லியனகே கூறினார்.

திங்கட்கிழமை முன்னதாக, தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் பலர் தத்தமது கருமங்களிற்காக நிறுவனக் கட்டிடத் தொகுதிக்குள் செல்லமுடியாதவாறு பொலிசாரினால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், தங்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அணித்தாகவுள்ள இந்தக் கட்டிடத்தொகுதியினைச் சுற்றி வழமைக்கும் அதிகமான பொலிசாரும், இராணுவத்தினரும், கலகம் அடக்கும் பொலிசாரும் நிறுத்தப்பட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தது.


போக்குவரத்துத் தடைகளால் பாதிப்பு: வவுனியா வழக்கறிஞர்கள் புகார்

ஏ9 வீதியில் போக்குவரத்துத் தடைகள் நீடிக்கின்றன

இலங்கையின் வடக்கே ஏ9 வீதியின் மதவாச்சி சோதனைச் சாவடியில் தொடரும் வாகனப் போக்குவரத்துத் தடை காரணமாக வவுனியா மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சட்டத்தரணிகள் இயல்பாக வெளி மாவட்ட நீதிமன்றங்களுக்குச் சென்றுவர முடியாதிருப்பதாகவும் வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தப் பிரயாணக் கஷ்டங்கள் குறித்து உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சட்டத்தரணிகள் தமது வாகனங்களில் மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகப் பிரயாணம் செய்வதற்கு உரிய அனுமதியைப் பெற்றுத் தருமாறு பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அவர்களிடம் கடிதம் மூலமாகக் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக வாகனப் போக்குவரத்துக்கான தடை தொடர்வதனால், முக்கிய வழக்கு விசாரணைகளுக்காக கொழும்பில் இருந்து சிரேஷ்ட சட்டத்தரணிகள் வவுனியாவுக்கு வருவதற்குத் தயக்கம் காட்டுவதாகவும், இதனால் பல வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டு நீதிமன்றச் செயற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், வவுனியா சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் முருகேசு சிற்றம்பலம் தெரிவித்தார்.

இவை குறித்த மேலதிக விபரங்களை வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் வழங்கக் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 16 மார்ச், 2008

அனுரா பண்டாரநாயக காலமானார்

இலங்கையின் மிக முக்கிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் அனுரா

இலங்கையின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவருமான அனுரா பண்டாரநாயக ஞாயிறன்று கொழும்பில் காலமானார்.

அண்மைக் காலமாக நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த இவருக்கு வயது 59.

1977ஆம் ஆண்டு ஜூலை மாதம் நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்த இவர், பலதடவை பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துவந்துள்ளார்.

1983-89 காலப் பகுதியில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய இவர், 2000ஆம் ஆண்டில் நாடாளுமன்ற சபாநாயகராகவும் பதவி வகித்தார்.

இவரது தந்தை எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக, தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோர் இலங்கையின் பிரதமர்களாக விளங்கினர். பின்னர் இவரது சகோதரியான சந்திரிகா குமாரதுங்க சுமார் 11 வருடங்கள் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக விளங்கினார். ஆனாலும் பண்டாரநாயக குடும்பத்தின் ஒரேயொரு புதல்வரான அனுர பண்டாரநாயகவின் அரசியல் வாழ்க்கை என்பது பலத்த சிக்கல்கள் நிறைந்ததாகவே இருந்துவந்தது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.


மன்னார் மோதல் விபரங்கள்

இலங்கையின் வடக்கே இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மன்னார் நகரிலும், வவுனியாவிலும் ஞாயிறன்று நடத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் இராணுவச் சிப்பாய் ஒருவரும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் கொல்லப்பட்டனர். இதில் இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

மன்னார் புறநகர்ப் பகுதியில், தலைமன்னார் வீதியில் கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஞாயிறு காலை சுட்டுக் கொல்லப்பட்டதாக மன்னார் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் பிஸ்டல் குழுவைச் சேர்ந்தவர்கள், இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தைச் செய்துள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

இதேவேளை, வவுனியா, தாண்டிக்குளம் – கல்மடு வீதியில், மருக்காரம்பலை பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில், இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 3 படையினர் காயமடைந்ததாக இராணுவத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 14 மார்ச், 2008

இலங்கையில் ஐரோப்பிய வெளியுறவு அதிகாரிகள்

மனோ கணேசன்

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு இயக்குநரக அதிகாரிகள் ஹெலென் கேம்பெல் அவர்களும், ஆண்ட்ரியா நிகோலஜ் அவர்களும் தற்போது இலங்கை வந்திருக்கிறர்கள்.

மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் இவர்களை சந்தித்து பேசியிருகிறார்.

இந்த சந்திப்பின்போது விவாதிக்கபட்ட விடயங்கள் குறித்து தமிழோசையிடம் பேசிய மனோ கணேசன், இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஆராய்வதற்காக இந்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் வந்திருப்பதாகக் கூறினார்.

இலங்கையின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்த விசாரணைகளைக் கண்காணித்துவந்த சுயாதீன மாண்புமிக்கோர் குழுவினர் தமது பணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் நிலையில், அதற்கு மாற்றாக, தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவை ஏற்பாடு செய்து விசாரணைகளைக் கண்காணிக்கச் செய்வது குறித்து இலங்கை அரசு மாற்று யோசனை தெரிவித்திருப்பது பற்றி ஐரோப்பிய அதிகாரிகள் தன்னிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதாகவும் மனோ கணேசன் கூறினார்.

அவர் தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கை மனித உரிமை நிலவரம்: அமெரிக்கக் குற்றச்சாட்டு அவதூறு என்கிறது இலங்கை அரசு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ராபர்ட் ஒ பிளேக்

இலங்கையின் மனித உரிமைகள் சூழலை விமர்சிப்பதிருப்பதன் மூலம், அமெரிக்கா, விடுதலைப் புலிகளுக்கு ஒரு வாழ்க்கைச் சந்தர்ப்பத்தை கொடுக்கிறது என்று இலங்கை அரசு குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்க அரசுத்துறையின் வருடாந்திர அறிக்கையில், இலங்கையின் மனித உரிமை நிலவரம் 2007ல் மோசமடைந்துள்ளது என்று கூறப்பட்டிருப்பது இலங்கை அமைச்சர்களுக்கு எரிச்சலைத் தந்துள்ளது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அடங்கிய அவதூறு, குத்தல் பேச்சு, மிகையான விமர்சனம் என்றெல்லாம் அமெரிக்க அரசுத்துறையின் அறிக்கையை இலங்கை வருணித்துள்ளது.

அரசாங்க தரப்பினர் செய்த சட்டவிரோத ஆட்கொலைகள், அவர்களின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் சிறார்களைப் படையில் சேர்த்தது போன்றவற்றை அமெரிக்க அரசுத்துறை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசின் பதிலடிக்குப் பின்னரும், தமது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே தமது நிலைப்பாடு, அதிலிருந்து தாங்கள் பின்வாங்கவில்லை என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.


திருகோணமலை மாணவர்கள் கொலை: மாணவரின் தந்தை வீடியோ வாக்குமூலம்

2006ல் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டது தொடர்பான மரண விசாரணையில், ராஜீஹர் என்ற மாணவனின் தந்தையான டாக்டர் மனோகரன் வீடியோ மூலம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அந்தத் தமிழ் மாணவர்களை விடுதலைப் புலிகள் என்று சந்தேகித்து இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர் என்று அரசாங்க அமைச்சர் ஒருவர் தன்னிடம் ஒப்புக்கொண்டதாக, இலங்கையை விட்டு தற்போது வெளியேறிவிட்ட மனோகரன் கூறியுள்ளார்.

கொழும்பில் வீடு தருகிறோம், இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று தன்னிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திருகோணமலை சம்பவம் மற்றும் பிற பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளைக் கண்காணித்துவரும் சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு, அரசாங்கம் விசாரணைகளில் தலையிடுவதாகவும், சாட்சிகளைப் பாதுகாக்கத் தவறுவதாகவும் கூறி, தமது பணியிலிருந்து விலகுகின்றனர்.


அடைமழை அல்லலில் மன்னார் அகதிகள்

 

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் வழமைக்கு மாறாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்த குடும்பங்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அங்குள்ள தொண்டு நிறுவனப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள முசலி பிரதேசத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவம் கைப்பற்றியதை அடுத்து, அந்தப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 800 குடும்பங்கள் நானாட்டான் பகுதியில் பல இடங்களில் கொட்டில்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அத்துடன், மன்னார் மாவட்டத்தின் விடுதலைப் புலிகளுடைய பிரதேசத்தில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு அண்மையில் அவ்வப்போது வந்துள்ள சுமார் 18 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேர் களிமோட்டை என்னுமிடத்தில் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் குடும்பங்கள் தாழ் நிலப்பகுதிகளில் தங்க வைக்கப்பட்டிருப்பதனால், இவர்கள் தங்கியுள்ள கொட்டில்கள், கூடாரங்களுக்குள் மழைநீர் புகுந்திருப்பதாகவும், இதன் காரணமாக அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரச அதிகாரிகள் தொண்டு நிறுவனங்கள இவர்களுக்குத் தேவையான அவசர நிவாரண உணவு உதவிகளை வழங்கிவருகின்ற போதிலும், இவர்களுக்கான மாற்று இருப்பிட வசதிகளைச் செய்வதில் சிக்கல்கள் எழுந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இடம்பெயர்ந்தவர்கள் அவர்கள் விரும்பிய இடத்தில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற சர்வதேச முறைமை இங்கு கைக்கொள்ளப்படாததன் காரணமாக சர்வதேச மற்றும் உள்ளுர் தொண்டு நிறுவனங்கள் இவர்களுக்கான மாற்று இருப்பிட வசதிகளைச் செய்ய முடியாதிருப்பதாக மன்னார் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் தெரிவிக்கின்றது.

இது குறித்து அந்த ஒன்றியத்தின் தலைவர் அருட்தந்தை விக்டர் சோசை தெரிவிக்கும் மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

—————————————————————————————————————————————————————-

புதுப்பிக்கப்பட்ட நாள்: 14 மார்ச், 2008

இலங்கை மனித உரிமைகள் நிலவரம்: அமெரிக்க கருத்துக்கு இலங்கை அதிருப்தி

இலங்கை மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் அண்மையில் அமெரிக்க அரசுத்துறையால் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்து இலங்கை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ராபர்ட் ஓ பிளேக் அவர்களை, இன்று அழைத்த இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அவர்கள், அவரிடம் இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்த விடயம் குறித்து அமெரிக்கத் தூதுவருடன் தான் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தமிழோசைக்கு கூறிய இலங்கை வெளியுறவு அமைச்சர், அமெரிக்க அரசுத்துறையின் அந்த அறிக்கை, ஆதரம் எதுவும் அற்றது என்றும், இராணுவ ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் தடுமாறிப்போயிருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு, அது புத்துயிர் அளிப்பதாக அமைந்து விட்டது என்றும் அமெரிக்கத் தூதுவரிடம் தான் குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த விவகாரம் குறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், இலங்கை வெளியுறவு அமைச்சருடனான, அமெரிக்கத் தூதுவரின் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், ஆயினும் தமது நிலைப்பாட்டில் அமெரிக்க அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


இலங்கை கிழக்கு மாகாண சபை தேர்தல்: வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ளன

 

இலங்கையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இலங்கை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

இது தொடர்பில் மார்ச் மாதம் 13ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள சிறப்பு வர்த்தமானி அறிவித்தலில், மார்ச் மாதம் திகதி 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த கிழக்கு மாகாணத்துக்கான தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று அந்த அறிவித்தலில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

1987ஆம் ஆண்டின் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து உருவாக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணம், கடந்த வருடம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றை அடுத்து இரண்டு மாகாணங்களாக பிரிக்கப்பட்டது.

அவற்றில் கிழக்கு மாகாணத்துக்கு தற்போது தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் வேட்பு மனுக்களைக் கோரியுள்ளது.

இந்தத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, கடந்த வெள்ளிக்கிழமை, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தேர்தல் ஆணையர் தயானந்த திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்ததாக முன்னர் செய்திகள் வந்திருந்தன.

கிழக்கு மாகாண சபைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 14 உறுப்பினர்களும், அம்பாறை மாவட்டத்தில் இருந்து 17 உறுப்பினர்களும் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 13 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.

இந்தத் தேர்தல் அறிவிப்புக் குறித்து சில தமிழ் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை நேயர்கள் செய்திரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை அரச தொலைக்காட்சி உதவிப் பணிப்பாளர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

தாக்கப்பட்ட அனுரசிறி ஹெட்டிகே

இலங்கை அரச தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினி நிறுவனத்தின் ஊழியர்கள் அண்மைக்காலமாகத் தாக்கப்பட்டுவருவதன் தொடர்ச்சியாக அதன் பிரதிப்பணிப்பாளரொருவர் இன்று காலை அலுவலகத்திற்கு செல்லும் வழியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் மிகமோசமாகத் தாக்கப்பட்டு, காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் வழங்கல்சேவையின் உதவிப் பணிப்பாளர் அனுரசிறி ஹெட்டிகே வெள்ளிக்கிழமை காலை கொட்டிகாவத்த பகுதியில் அலுவலகம் செல்வதற்காக பஸ் நிலையத்தில் நின்றிருந்த சமயம் மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் இவரை இரும்பு கம்பிகளாலும், கூரிய ஆயுதங்களினாலும் தாக்கியிருக்கின்றனர்.

இவர் கழுத்துப் பகுதியில் கூரிய ஆயுதங்களினால் ஏற்பட்ட வெட்டுக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் மீது உடனடியாக விசாரணை நடாத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷ, பாதுகாப்பு ஆமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

——————————————————————————————————————————————————–

புதுப்பிக்கப்பட்ட நாள்: 11 மார்ச், 2008

மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தலை எதிர்த்து ஐ.தே.க ஆர்ப்பாட்டம்

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகரசபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்காக இவ்வார முற்பகுதியில் நடைபெற்று முடிந்த தேர்தல்களை எதிர்த்து இலங்கையின் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு, இராஜகிரிய தேர்தல் செயலகத்துக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றினை நடத்தியிருக்கிறது.

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தினை நிலைநாட்டும் அரசு கொள்கையின் ஒரு அங்கமாக நடத்தப்பட்ட தேர்தலை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உதவிய சகலருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் என்றாலும், இந்தத் தேர்தல் முடிவுகளை முற்றாகப் புறக்கணிக்கும்படி கோரி ஜக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஆணையாளரிடம் புதன்கிழமை மனு சமர்ப்பித்திருக்கிறது.

பிரதான எதிர்க்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும், முக்கியஸ்தர்களும், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் கலந்துகொண்டு இந்தத் தேர்தலுக்கு எதிராகவும், மஹிந்த ராகபக்ஷ அரசிற்கு எதிராகவும் கோஷங்களை இட்டனர்.

இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் பின்னர் அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் கருத்துவெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் திரு. ரணில் விக்கிரமசிங்க, மட்டக்களப்பில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்தல்கள் ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டியதோடு, படையினரால் ஒரு ஆயுதக் குழுவிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அரசு இன்னொரு ஆயுதக் குழுவிடம் கையளிக்க முற்படுவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்கு கிழக்கில் இடம்பெற்ற தேர்தலின் முக்கியத்துவம், அதன் வெற்றி குறித்து வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தனது அமைச்சில் விரிவாக விளக்கமளித்திருக்கிறார்.

இதன் பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர், இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மிகவும் வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறது என்றும், எதிர்வரும் மே மாதம் அளவில் கிழக்கு மாகாணத்துக்கான மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசு சித்தமாக இருப்பதாகவும் தெரிவித்ததோடு, அரசின் இந்தத் திட்டம் குறித்து தேர்தல் ஆணையாளரிடம் தெரிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.


மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் வெறும் கண்துடைப்பு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

 

கிழக்கு மாகாணத்தில், மீள்குடியேற்றம் போன்ற மக்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில் அங்கு உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தி, அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்ற விளைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் வாக்களிக்குமாறு மக்கள் மிரட்டப்பட்டதாகக் கூறிய அவர், மக்கள் சுயாதீனமாக வாக்களித்திருந்தால் 10 வீதமான வாக்குகளே பதிவாகியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகமான வகையில் அனைத்துக் கட்சிகளும் போட்டியிடக் கூடிய ஒரு சூழ்நிலை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்திருந்தால், அங்கு தேர்தல் நிலைமைகள் வேறுவிதமாக இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை மாகாணசபைகளை 1987 ஆம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டதாகக் கூறும் ஜெயானந்தமூர்த்தி, ஆகவே, கிழக்கு மாகாணத்துக்கான மாகாண சபைத் தேர்தல்கள் நடக்கும் பட்சத்தில், அது குறித்து மக்களின் கருத்துக்களை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் தமது கட்சி முடிவுகளை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

இவை குறித்த அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


வட இலங்கை மோதல்கள்: செவ்வாய்க்கிழமை அன்று 28 புலிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கிறது இராணுவம்

 

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள மடுக்கோவிலுக்கு வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் 3 தளங்கள் மீது புதன்கிழமை காலை விமானப் படைக்குச் சொந்தமான தாக்குதல் விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.

இந்தத் தாக்குதலின்போது, அந்த முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் இந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மன்னார் போர்முனைகளில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் வவுனியா, மன்னார், வெலிஓயா, மற்றும் முகமாலை முன்னரங்கப் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதல்களில் 28 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது. இந்தத் தாக்குதல்கள் குறித்தும் விடுதலைப் புலிகள் தரப்பில் தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

மன்னார் மாவட்டத்தில் இன்று பெய்த கடும் மழை காரணமாக இடம்பெயர்ந்து முருங்கன் பிரதேசத்தில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியிருப்பதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கூடாரங்கள் அமைத்து தங்கவைக்கப்பட்டவர்கள் மழை நீர் கூடாரங்களுக்குள் புகுந்திருப்பதனால் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 11 மார்ச், 2008


கதிர்காமர் கொலை வழக்கில் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் மீது குற்றச்சாட்டு

கொலை செய்யப்பட்ட கதிர்காமர்

இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேர் மீதான குற்றப்பத்திரங்களை, சட்ட மா அதிபர் இன்று தாக்கல் செய்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அந்த அமைப்பின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், சார்ள்ஸ் மாஸ்ட்டர் ஆகியோர் உட்பட 6 பேரின் பெயர்கள், குற்றப்பத்திரத்தில் குற்றவாளிகளாகக் கூறப்பட்டுள்ளன.

2005 ஆம் ஆண்டின் ஜனவரி 5 ஆம் திகதிக்கும், 12 திகதிக்கும் இடையில், கொலைச் சதித்திட்டங்களைத் தீட்டியமை, கொலை செய்த விஜயன் என்பவருக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றங்களும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

சாட்சிகளின் பாதுகாப்புக்காக அவர்கள் ரகசியமாகவே நீதிமன்றத்தில் சாட்சி வழங்குவார்கள் என்றும் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் பெரும் வெற்றி

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 வருடங்களின் பின்பு நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு கைப்பற்றியுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஏனைய 8 பிரதேச சபைகளையும் தமது கட்சிப்பட்டியலின் மூலம் கைப்பற்றியுள்ளனர்.

101 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்ற இந்தத் தேர்தலின், முடிவுகளின்படி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது கட்சி சார்பில் 61 உறுப்பினர்களையும், மக்கள் சுதந்திர முன்னனியின் வெற்றிலைச் சின்னத்தில் கீழ் 11 உறுப்பினர்களையும் பெற்றுள்ளனர்.

பிரச்சாரச் சுவரொட்டிகள்
பிரச்சாரச் சுவரொட்டிகள்

ஈ.பி.டி.பி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் ( பத்மநாபா அணி) ஆகிய தமிழ் கட்சிகளைக் கொண்ட சுயேச்சைக் குழுக்கள் இத் தேர்தலில் 17 உறுப்பினர்களை வென்றிருக்கின்றன.

அதேவேளை ஈழவர் ஜனநாயக முன்னனி மட்டக்களப்பு மாநகர சபையில் மட்டும் ஒரு அங்கத்துவத்தை பெற்றுள்ளது.

இதனைத் தவிர ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 7 பேரும், ஐக்கிய மக்கள் முன்னணி சார்பில் மாநகரசபையைத் தவிர மேலும் 4 பேரும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த தேர்தல் முடிவுகள் குறித்த அரசியல் கட்சிகளின் கருத்துக்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இந்தியா மீது விடுதலைப்புலிகள் கண்டனம்

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன்
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன்

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களை வரவேற்று உயர் கௌரவத்தை வழங்கியமைக்காக இந்திய அரசாங்கத்தை விடுதலைப் புலிகள் அறிக்கையொன்றின் மூலம் கண்டித்திருக்கின்றார்கள்.

போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறியுள்ள இலங்கை அரசு, தமிழர் பிரதேசங்களில் போரை விரிவாக்கியுள்ள இன்றைய காலச் சூழலில், தமிழின அழிப்பிற்குத் தலைமையேற்றுள்ள இராணுவத்தின் தளபதிக்கு இந்திய அரசு வழங்கியுள்ள கௌரவம் ஈழத்தமிழர்களை வேதனைக்குள்ளாக்கியிருப்பதாகவும், இந்தச் செயலுக்காக இந்திய அரசை விடுதலைப் புலிகள் வன்மையாகக் கண்டிப்பதாகவும், விடுதலைப் புலிகள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

இராணுவ வழியில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முற்பட்டுள்ளமைக்காகவும், அதிகரித்துள்ள மனித உரிமை மீறல்களுக்காகவும், அனைத்துலக நாடுகள் வெளிப்படுத்திவரும் கண்டனங்கள் மற்றும் எச்சரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, அதிக அளவிலான ஆட்கடத்தல்கள், படுகொலைகள், இனரீதியான கைதுகள் என்பவற்றை அரச படைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள்.

இவற்றை மூடிமறைத்து, நாட்டில் யுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துவரும் இலங்கை அரசாங்கத்திற்கான உதவிகளை பல ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தமது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்கள்.

பெண் விடுதலைப்புலிகள்
பெண் விடுதலைப்புலிகள்

இந்தச் சூழலில் உண்மையான நிலைமையை இந்திய அரசாங்கம் புரிந்து கொண்டிருந்தாலும், தமிழர் பிரச்சினைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வு காணவேண்டும் என கூறிக்கொண்டு, அதற்கு மாறாக, இராணுவ ரீதியாக இலங்கை அரசாங்கத்திற்கு நம்பிக்கையூட்டும் இந்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஈழத்தமிழர்களை பாரிய இன அழிப்பிற்குள் தள்ளிவிடும் என்று இந்திய அரசுக்குச் சுட்டிக்காட்டுவதாகவும் விடுதலைப் புலிகள் தமது அறிக்கையில் கூறியிருக்கின்றார்கள்.

இந்த நிலைமையைத் தமிழ் நாட்டு மக்கள் புரிந்து கொண்டு இந்திய அரசிற்குத் தமது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் எனவும் விடுதலைப் புலிகள் கோரியிருக்கின்றார்கள்.

நோர்வேயின் அமைதிவழி முயற்சியிலிருந்தும், போரிநிறுத்தத்திலிருந்தும் இன்னும் விலகவில்லை என தெரிவித்துள்ள விடுதலைப்புலிகள் நோர்வே அரசின் தலைமையில் மேற்கொள்ளப்படும் சமாதான முயற்சிகளில் பங்கேற்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு

முன்னைய பணிப்புறக்கணிப்பு ஒன்றின் போது வவுனியா மருத்துவமனை ஊழியர்கள்
முன்னைய பணிப்புறக்கணிப்பு ஒன்றின் போது வவுனியா மருத்துவமனை ஊழியர்கள்( ஆவணப்படம்)

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாண மாவட்டங்களைச் சேர்ந்த அரச மருத்துவர்கள் இன்று மேற்கொண்ட ஒருநாள் அடையாள பணிப் புறக்கணிப்பு காரணமாக அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியசாலைகளின் பணிகள் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கென அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுவந்த விசேட வருடாந்த இடமாற்றப் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த பணிபுறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளராகிய டாக்டர் எஸ்.சிவப்பிரியன் தெரிவிக்கின்றார்.

இன்றைய பணிபுறக்கணிப்பு காரணமாக வடக்கில் வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த வைத்தியசாலைகளிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை மாவட்டங்களின் வைத்தியசாலைகளிலும் அரச வைத்தியர்கள் கடமைக்குச் செல்லவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவராகிய டாக்டர் எம்.பள்ளியகுருகே தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று மாலை வரையிலும் சுகாதார அமைச்சிடமிருந்து தங்களுக்குப் பதிலேதும் கிடைக்கவில்லை என்றும் நாளை மறுதினம் வியாழக்கிழமை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராயவுள்ளதாகவும் அந்தச் சங்கத்தின் பேச்சாளராகிய டாக்டர் சிவப்பிரியன் கூறினார்.

————————————————————————————————–

புதுப்பிக்கப்பட்ட நாள்: 10 மார்ச், 2008

மட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தல்களில் சுமூக வாக்களிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாநகரசபை உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு இன்று நடந்த வாக்களிப்பில் 56 வீத வாக்குகள் பதிவானதுடன், பெரும்பாலும் சுமூகமான வகையில் வாக்களிப்பு இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் கிழக்கு மாகாணம் தமது கட்டுப்பாட்டின் கீழ் முழுமையாக கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பின், மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 வருடங்களின் பின்பு ஒரு மாநகர சபை உட்பட 9 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்துள்ள இந்தத் தேர்தலில், 101 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவிருக்கின்றார்கள். 6 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 831 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.

வாக்களிக்கக் காத்திருக்கும் வாக்காளர்கள்
வாக்களிக்கக் காத்திருக்கும் வாக்காளர்கள்

தேர்தலையொட்டி இம் மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக மக்களின் வழமை நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக வாக்காளர்கள் கூட பாதுகாப்பு கெடுபிடிகளை எதிர்நோக்கியதாகவும் உள்ளுர்வாசிகள் கூறுகின்றனர்.

வாழைச்சேனை பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரொருவரின் வீட்டின் மீது திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலைத் தவிர குறிப்பிடத்தக்க வன்முறைகள் எதுவும் இடம்பெறவில்லை என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை அந்தப் பிரதேசத்தில், அரச பின்புலத்தில் சில தேர்தல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்கானிப்பபு அமைப்பான பப்ரல் கூறுகின்றது.

இந்தத் தேர்தலில் 56 சத வீதமான வாக்குககள் பதிவாகியுள்ளதாகக் கூறும் மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அலுவலர், முதலாவது தேர்தல் முடிவு நள்ளிரவிற்கு பின்பு வெளியாகும் என்றும் கூறுகின்றார்.


கொழும்பு வெள்ளவத்தை குண்டுவெடிப்பில் ஒரு சிவிலியன் பலி, 4 மாணவர்கள் காயம்

குண்டுவெடித்த இடம்
குண்டுவெடித்த இடம்

திங்கட்கிழமை காலை கொழும்பு காலிவீதி வெள்ளவத்தையில் அமைந்துள்ள ரொக்சி சினிமா திரையரங்கிற்கு அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் சிவிலியன் ஒருவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டிருக்கிறார், மேலும் நான்கு பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்துவெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, கொழும்பு காலிவீதி வெள்ளவத்தைப் பகுதியில் வீதியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த பூச்சாடியொன்றினுள் மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டொன்றே வெடித்திருப்பதாகத் தெரிவித்தார்.

 

ஆரம்ப விசாரணைகளின்படி இந்தப் மர்மப்பொதியை பிரித்துப்பார்க்க முயன்ற நபரே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டதாகத் தெரியவந்திருப்பதாகப் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

கொழும்பு களுபோவில அரச வைத்தியசாலை வட்டாரங்களின் தகவல்களின்படி, இன்றைய இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தினைத் தொடர்ந்து இரண்டு பாடசாலை மாணவர்கள், இரண்டு மாணவிகள் என நான்கு பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களின் ஒருவரின் நிலைமை மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தன.

இந்தக் குண்டுவெடிப்புத் தொடர்பாக விசாரணைகளையும், புலன்விசாரணைகளையும் பொலிசாரும் இராணுவத்தினரும் தற்போது மேற்கொண்டுவருகின்றனர்.


மன்னார் மாவட்ட சண்டைகள்: புலிகள் தரப்பிலும் இராணுவத்தினர் தரப்பிலும் சேதம்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில், இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே தொடரும் சண்டைகளில், திங்கட்கிழமை அதிகாலை நடந்த மோதல்களில் 10 விடுதலைப்புலிகளும், 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மோதலில் 10 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் அது கூறியுள்ளது.

இது குறித்து விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மன்னாரில், மாந்தை மேற்குப் பகுதியில், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாந்தை –அடம்பன் வீதியில் ஒரு பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகதத்தகவல் மையம் தெரிவித்துள்ளது.

எனினும், பரப்புக்கடந்தான், பண்டிவிரிச்சான், பாலைக்குழி சேத்தான்குளம் ஆகிய பகுதிகளில் பல முனைகளில் விடுதலைப்புலிகளின் பிரதேசத்துக்குள் முன்னேறுவதற்கு ஞாயிறன்று இராணுவம் மேற்கொண்ட முயற்சி தமது எதிர்த்தாக்குதலின் மூலம் முறியடிக்கப்பட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சண்டைகளில்போது 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 09 மார்ச், 2008்.


மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல் பணிகள் நிறைவு

 

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாநகர சபை உட்பட 9 உள்ளுராட்சி சபைகளுக்கு திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் கடமைக்குரிய அதிகாரிகளும் ஊழியர்களும் பாதுகாப்பிற்குரிய பொலிசாரும் தற்போது உரிய வாக்களிப்பு நிலையங்களை சென்றடைந்துள்ளதாகக் கூறும் அவர், கடந்த கால யுத்த அனர்த்தங்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இத்தேர்தலின்போது வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு அடையாளத்தை உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணமொன்றை சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால் ஆள்-மாறாட்டத்திற்கு வாயப்பு இராது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் பாதுகாப்பு கடமைகளைப் பொறுத்தவரை, வாக்களிப்பு நிலையங்களுக்கு வெளியே பொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் இராணுவுத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தேர்தல் செயலகத்தைச் சேர்ந்த உதவி காவல்துறை அத்தியட்சகர் யு.எஸ்.ஐ.பெரேரா கூறினார்.

101 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெறும் இந்த தேர்தலில் 6 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 831 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.


சிவனேசன் பூத உடலுக்கு பிரபாகரன் அஞ்சலி

 

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் கிளேமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகிய கிட்டிணன் சிவநேசனின் இறுதிக் கிரியைகள் இன்று காலை 11 மணியளவில் மல்லாவி அனிஞ்சியன்குளம் என்ற இடத்தில் நடைபெற்றதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இவரது இறுதிக் கிரியைகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள், விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள், பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பொதுமக்களின் அஞ்சலிக்காக வன்னிப் பிரதேசத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் உடலுக்கு விசேடமான ஓரிடத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது அஞ்சலியைச் செலுத்தினார். புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் உட்பட்ட முக்கியஸ்தர்களும் அஞ்சலி செலுத்தி இரங்கலுரைகள் ஆற்றியதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.

இதனிடையில் மன்னார் மாந்தை பிரதேசத்தில் சனிக்கிழமை விமானப்படையினருடன் ஒன்றிணைந்து இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. இந்தத் தாக்குதலில் 10 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் இராணுவம் கூறியிருக்கின்றது.

இதேவேளை, மன்னார் பரப்பாங்கண்டல், மடு பிரதேசத்தில் உள்ள பண்டிவிரிச்சான் ஆகிய பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு சனிக்கிழமை இராணுவத்தினர் எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். பல மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த மோதல்களில் பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

——————————————————————————————————————————————————-

 

புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 மார்ச், 2008


இலங்கை வன்முறை: புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் இராணுவத் தரப்பில் சேதம்

 

இலங்கையின் மொனராகலை மாவட்டத்திலுள்ள புத்தல-கதிர்காமம் வீதியில் சென்றுகொண்டிருந்த இராணுவ உழவுஇயந்திரமொன்றின் மீது விடுதலைப் புலிகள் நடத்தியுள்ள கிளேமோர் கண்ணிவெடித்தாக்குதலில் ஒரு இராணுவச்சிப்பாய் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் இரண்டு இராணுவ வீரர்கள் காயமடைந்திருக்கிறார்கள்.

இதுகுறித்து தகவல் வெளியிட்டிருக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு, புத்தல பழைய வீதியில் கல்கே காட்டுப் பகுதியூடாக இந்த இராணுவ உழவு இயந்திரம் சென்றுகொண்டிருக்கும்போது புலிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், தாக்குதலில் காயமடைந்து ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்ட படைவீரர் ஒருவர் சிகிச்சைகள் பயனளிக்காத நிலையில் உயிரிழந்ததாகவும் தெரிவித்திருக்கிறது.

இந்தப் பகுதியில் முப்படையினரும் பொலிசாரும் இப்போது தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுவருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கிறது.

இதேவேளை, இந்தச் சம்பவம் குறித்து மின்னஞ்சல்மூலமாக ஊடகங்களிற்குச் செய்தியனுப்பியுள்ள விடுதலைப்புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன், இன்றுகாலை விடுதலைப் புலிகள் அமைப்பினரே இந்தத் இந்தத்தாக்குதலை மேற்கொண்டதாக உரிமை கோரியுள்ளதோடு, இந்தச் சம்பவத்தில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் இரண்டு படைவீரர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அத்துடன் இந்தத் தாக்குதலின்போது, தமது உறுப்பினர்களிற்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் விடுதலைப்புலிகளின் இந்தக் கூற்றை மறுத்துள்ள இலங்கை இராணுவத்தினர் இதன்போது ஒரு இராணுவவீரர் மட்டுமே கொல்லப்பட்டதாக உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இன்று காலை எறிகணை வீச்சு மோதல்கள் இடம்பெற்றதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலை சுமார் 10 மணிமுதல் இரண்டு மணித்தியாலங்கள் இந்த மோதல்கள் இடம்பெற்றதாகவும், இதன்போது மன்னார் – வவுனியா, செட்டிகுளம் வீதி பொது கோப்புவரத்திற்காக மூடப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நண்பகலின் பின்னர் நிலைமை வழமைக்குத் திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த எரிகணை வீச்சுக்களால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை. இதனிடையில், நேற்று முன்தினம் கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டிணன் சிவநேசனுக்கு விடுதலைப் புலிகளின் தலைவரினால், மாமனிதர் பட்டமளித்து கௌரவம் அளிக்கப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.


தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்

 

இந்திய இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 59 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த தாகவும், இதனாலேயே இவர்களை கைது செய்ததாகவும் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், இவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் செல்ல வில்லை என்றும், தமிழக கடற்பரப்பிலேயே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகவும் கூறுகிறார், தமிழ்நாட்டின் கன்யாகுமரியைச் சேர்ந்த தமிழ்நாடு மீன் தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் பீட்டர் தாஸ் அவர்கள்.

இந்திய இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் குறித்து, தமிழக முதல்வர் மு கருணாநிதி அவர்கள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

தமிழ்நாடு மீன் தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் பீட்டர் தாஸ் அவர்களின் செவ்வியையும், முதல்வர் கருணாநிதியின் கடித விவரங்கள் குறித்த செய்திகளையும், நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்


இலங்கையில் தடுப்புக் காவலில் ஊடகவியலாளர்கள்

இலங்கை தலைநகர் கொழும்பில் பயங்கரவாத புலன் விசாரணை காவல்துறையினர், சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரி யரும் சுதந்திர ஊடகவியாலாளர் இயக்கத்திற்காக பேசவல்ல வருமான சிவகுமார் அவர்கள் உள்ளிட்ட ஆறு ஊடகவியலாளர்களை தடுத்து வைத்திருக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்று, இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இணைச்செயலாளர் அமிர்தநாயகம் நிக்சன் அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.

——————————————————————————————————————————————————————

இலங்கையில் ஊடவியலாளர்கள் கைது

இலங்கை தலைநகர் கொழும்பில், பயங்கரவாத புலன் விசாரணை காவல் துறையினர் இரண்டு தமிழ் ஊடக வியலாளர்களையும், ஒரு சிங்கள ஊடகவியலாளரையும் தடுத்துவைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரியரும் சுதந்திர ஊடகவியாலாளர் இயக்கத்திற்காக பேசவல்லவருமான சிவகுமார் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, காவல்துறையினர் தன்னையும் விசாரணைக்கு வரும்படி அழைத்திருப்பதாகக் கூறினார்.

காவல்துறையின் விசாரணைக்கு செல்வதற்கு முன்னர் சிவகுமார் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.


மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது

மட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தல் பதாகை

இலங்கையின் கிழக்கே எதிர்வரும் திங்கள் கிழமை உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவிருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைகின்றன.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முழு நாளும் இறுதிக் கட்டப் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். வீடு வீடாகச் சென்று தமக்குரிய வாக்குககளை திரட்டுவதில் வேட்பாளர்கள் பரவலாக ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தேர்தலின்போது வாக்குச் சாவடிக்கு ஒருவர் என கண்கானிப்பாளர்கள் நியமிக்கப்படவிருப்பதாக பப்ரல் எனப்படும் சுதந்திரமான நியாயமான தேர்தலை கண்காணிக்கும் மக்கள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருட் தந்தை சில்வெஸ்டர் ஸ்ரீதரன் கூறுகின்றார்.

கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத் தக்க வன்முறைகள் இல்லை என்று சுட்டிக் காட்டும் அவர், சில கிராமங்களுக்கும் வாக்குச்சாவடிகளுக்கும் இடையலான தூரம் மக்களின் வாக்களிக்கும் ஆர்வத்திற்கு தடையாக இருக்கும் என்பதால், தேர்தல் திணைக்களமோ அல்லது போட்டியிடும் வேட்பாளர்களோ, அவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார்.



கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசனின் இறுதிச் சடங்குகள் கிளிநொச்சியில் நடக்கவுள்ளது

கொல்லப்பட்ட சிவனேசன்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய கனராயன்குளம் பகுதியில் ஏ -9 வீதியில் கடந்த வியாழனன்று இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்ட யாழ் மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகிய கே.சிவநேசனின் இறுதிக்கிரியைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்காகவும் இறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு அஞ்சலி செலுத்துவதற்குமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சிக்குச் சென்றுள்ளனர்.

காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் உடல் இன்று உறவினர்களின் அஞ்சலிக்காக மல்லாவியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருப்பதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இவரது உடல் நாளை கிளிநொச்சிக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்குள்ள மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனுடன் உயிரிழந்த அவருடைய வாகன சாரதியாகிய 27 வயதுடைய பெரியண்ணன் மகேஸ்வரராஜாவின் உடலை அவரது சொந்த ஊராகிய செட்டிகுளம் வீரபுரத்திற்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டிருக்கின்றார்கள்.


மட்டக்களப்பின் மேயராக பெண்ணொருவர் தெரிவாகும் வாய்ப்பு

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக முதல் தடவையாக பெண் ஒருவர் பொறுப்பேற்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

மட்டக்களப்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் வேட்பாளரான பத்மினி என்று அழைக்கப்படும் சிவகீதா பிரபாகரன் அவர்கள், அங்கு அந்தக் கட்சியின் சார்பில் அதிகப்படியான விருப்ப வாக்குகளைப் பெற்றதால், மாநகரசபையின் மேயராக பொறுப்பேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இறுதியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்ட போது, வாக்களிப்புக்கு இரு தினங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட ராஜன் சத்தியமூர்த்தியின் மகளே இவர்.

தான் மேயராக பொறுப்பேற்கவுள்ளது குறித்து பத்மினி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கிழக்கு மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்த இலங்கை அரசு நடவடிக்கை

அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகரசபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்காக இவ்வார முற்பகுதியில் நடைபெற்று முடிந்த தேர்தல்களை அடுத்து, கிழக்கு மாகாணத்துக்கான மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை அரசு, அதில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கான ஒழுங்குகளை கவனிப்பதற்காக இரு உயரிய குழுக்களை அமைத்திருப்பதாகவும் இன்று அறிவித்திருக்கிறது.

இது குறித்து கொழும்பில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய மகாவலி அபிவிருத்தி மற்றும் விவசாயத்துறை அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமாகிய மைத்திரிபால சிறிசேன தற்போது ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் ஒரே குடையின்கீழ் போட்டியிட்டு வெற்றியீட்ட முன்வருமாறும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்த உத்தேச கிழக்கு மாகாணத்துக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசு எடுத்துள்ள முடிவானது தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது என்றும் இதற்காக திகதி விபரங்களை அவர் இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பாரெனத் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

இவை குறித்த மேலதிக செய்திகளை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 13 மார்ச், 2008


ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்திய மற்றும் தமிழக அரசின் நிலை குறித்து பா.ம.க. அதிருப்தி

டாக்டர் ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இலங்கைக்கு இந்திய அரசு வழங்கி வரும் இராணுவ உதவியினையை நிறுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்திருமாவளவன், திரைப்பட இயககுநர் சீமான் உள்ளிட்ட இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஆர்வங்காட்டும் சிலருடன் ஆலோசனை செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

அண்மைககாலமாக இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை அந்நாட்டு அரசு உககிரப்படுத்தியுள்ளது எனவும் ராமதாஸ் புகார் கூறினார்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகள் செயல்படவேண்டும் என வற்புறுத்தியும், தொடர்ந்து தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் அல்லலுக்கு உள்ளாவதற்கு முற்றுப்புள்ளிவைககவேண்டும் எனக்கோரியும் தொடர்முழக்கப் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் ராமதாஸ் தெரிவித்தார்.

கடந்த சிலமாதங்களாக இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து ராமதாஸ் மௌனமே காத்துவந்தார் என்பதையும், இந்திய அரசைக் கண்டித்து விடுதலைப்புலிகள் அறிக்கை விட்டபோதுகூட அவர் கருத்தெதனையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் ஊடகவியலாளர்கள் கைது நடவடிக்கைக்கு எதிராக ஆர்.எஸ்.எஃப். ஊடகச் சுதந்திரக் குழு கண்டனம்

 

இலங்கையின் பயங்கரவாத தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 5 செய்தியாளர்களின் கதி குறித்து, பாரிஸைத் தளமாகக் கொண்டு செயற்படும் ஆர்.எஸ்.எஃப். என்று அழைக்கப்படும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

அவர்களை தடுத்து வைத்திருப்பதற்கான காரணத்தை கூறவேண்டும் என அது அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

ஒரு இணையத் தளத்துக்காக பணியாற்றும் இந்த செய்தியாளர்கள் விடுதலைப்புலிகளிடம் இருந்து பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சில செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தியாளர்களின் நிலை குறித்து இரு தினங்களுக்கு முன்னர் கவலை வெளியிட்டிருந்த சர்வதேச செய்தியாளர் சம்மேளனமான ஐ.எஃப். ஜே. அமைப்பும், ஆசிய மனித உரிமைகள் ஆணையமும், இந்தச் செய்தியாளர்களின் சட்ட உரிமைகளை இலங்கை அரசாங்கம் நிலை நிறுத்த வேண்டும் என்று கோரியிருந்தன.


Posted in Batticaloa, dead, Eelam, Eezham, Elections, local, LTTE, Media, MP, murders, Polls, Shivanesan, Sivanesan, Sri lanka, Srilanka, War | Leave a Comment »

Parliament Constituency reorganization – Woes of MPs

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2008

திருத்தி அமைப்பால் தொகுதியை இழக்கும் எம்.பி.க்கள்

நாடாளுமன்ற தொகுதிகளை திருத்தி அமைப்பதால் பல எம்.பி.க்களும் தலைவர்களும் தங்களது தொகுதிகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவர்களில் மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், பாஜக பிரமுகர் கல்யாண் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி, நடிகர்கள் தர்மேந்திரா, ராஜ் பப்பர் உள்ளிட்டோரும் அடங்குவர்.

தொகுதி மறுநிர்ணயம் காரணமாக இவர்கள் வகித்த தொகுதிகள் ரிசர்வ் தொகுதியாகவோ அல்லது பொதுத் தொகுதியாகவோ அல்லது மாற்றியமைக்கப்பட்ட தொகுதியாகவோ மறுநிர்ணயம் செய்யப்படுகின்றன.

மேற்கு வங்கத்தில் உள்ள போல்பூர் தொகுதியில் பலமுறை வெற்றிபெற்றவர் சோம்நாத் சாட்டர்ஜி. அந்தத் தொகுதி மாற்றியமைக்கப்பட்டுவிட்டதால் இனி அதில் அவர் போட்டியிட இயலாது.

மகாராஷ்டிரத்தில் லட்டூர் தொகுதியில் இருமுறை வெற்றிபெற்ற சிவராஜ் பாட்டீலுக்கும் இதேநிலைதான் ஏற்பட்டுள்ளது.

உ.பி.யில் மாயாவதி பிரதிநிதித்துவம் வகித்த அக்பர்பூர் ரிசர்வ் தொகுதி தற்போது பொதுத் தொகுதியாக மாற்றம் பெற்றுள்ளது.

உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் பிரதிநிதித்துவம் வகித்த எடாவா தொகுதி தற்போது ரிசர்வ் தொகுதியாகிவிட்டது.

கல்யாண் சிங் பிரதிநிதித்துவம் வகித்த புலந்த்சாகர் தொகுதி ரிசர்வ் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

ராஜ் பாப்பர் வெற்றிபெற்ற ஆக்ரா தொகுதியும் ரிசர்வ் தொகுதியாகிவிட்டது.

ராஜஸ்தானில் தர்மேந்திரா வெற்றிபெற்ற பிகானீர் தொகுதியும் ரிசர்வ் தொகுதியாக மாறிவிட்டது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.பி. சச்சின் பைலட் வெற்றிபெற்ற தெüசா தொகுதியும் ரிசர்வ் தொகுதியாகிவிட்டது. கர்நாடகத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியாவும் பாஜக தலைவர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜும் போட்டியிட்ட பெல்லாரி தொகுதியும் ரிசர்வ் தொகுதியாகிவிட்டது. பிகாரில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் சகோதரர் ராமச்சந்திர பாஸ்வான் போட்டியிட்ட ரோசெரா தொகுதி அடுத்த தேர்தலில் இருந்து நீக்கப்படுகிறது.

ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மைத்துனர் சாது யாதவ் போட்டியிட்ட கோபால்கஞ்ச் தொகுதியும் இனி பொதுத் தொகுதியாக இருக்காது.

ஆந்திரத்தில் மத்திய அமைச்சர் பனபாக லட்சுமி போட்டியிட்ட நெல்லூர் தொகுதி பொதுத் தொகுதியாக மாற்றம் பெற்றுள்ளது.

மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி போட்டியிட்ட பாபட்லா தொகுதி ரிசர்வ் தொகுதியாகிவிட்டது. நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.ஜெய்ப்பால் ரெட்டி அங்கம்வகித்த மிரியாலகுடா தொகுதி அகற்றப்பட்டு நலகொண்டா தொகுதி என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உ.பி.யில் அகில இந்திய காங்கிரஸ் செயலர் ஜிதின் பிரசாதா பிரதிநிதித்துவம் வகித்த ஷாஜகான்பூர் ரிசர்வ் தொகுதியாகிவிட்டது.

Posted in Caste, Constituency, Elections, MP, parliament, Polls, reorganization, Reserved, SC, ST, voters, Votes | Leave a Comment »

NREGA – National Rural Employment Gurantee Act: Job Guarantee Schemes – Corruption

Posted by Snapjudge மேல் ஜனவரி 15, 2008

வீணாகும் வரிப்பணம்

மக்களின் நல்வாழ்வை முன்னிலைப்படுத்தி நிறைவேற்றப்படும் நல்ல திட்டங்கள் பல, ஒரு சிலரின் சுயநலத்தைப் பூர்த்தி செய்வதற்கும், அரசுப் பணத்தை இந்தத் திட்டங்களின் பெயரால் கொள்ளையடிப்பதற்கும்தான் பயன்படுகின்றன என்பதை சுதந்திர இந்தியா பலமுறை பார்த்தாகிவிட்டது. அந்தப் பட்டியலில் சமீபத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் திட்டம்தான் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மிகப்பெரிய சாதனை என்றும், ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் கை, காங்கிரஸ் கட்சியின் கைச்சின்னம் என்பதை உறுதிப்படுத்தும் திட்டம் என்றும் புகழப்பட்ட தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மிகப்பெரிய ஊழல் மோசடிக்கு வழிவகுத்திருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கை. ஊழல் மற்றும் திறமையின்மை காரணமாக இந்தத் திட்டம் எதற்காக, யாருக்காக நடைமுறைப்படுத்தப்பட்டதோ அவர்களைப்போய் சேராமல், தேசிய அளவில் அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாநில அரசியல்வாதிகள் பயன்பட உதவி இருப்பதாக அந்த அறிக்கை தெளிவுபடுத்தி இருக்கிறது.

இந்தியாவின் 330 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ஆண்டொன்றுக்கு ரூ. 1,200 கோடி. இந்தத் திட்டத்தின்படி, கிராமப்புறத்தில் வேலையில்லாத எந்தவொரு குடும்பமும் ஆண்டில் நூறு நாள்கள் குறைந்தபட்சம் வேலைவாய்ப்புப் பெறும் என்கிற உறுதி அளிக்கப்படுகிறது. அதன் மூலம் கிராமப்புறத்திலுள்ள அத்தனை வேலையில்லாத குடும்பங்களுக்கும் ஆண்டொன்றுக்கு குறைந்தது 8,000 ரூபாய் வருமானம் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதுதான் திட்டத்தின் லட்சியம்.

உன்னதமான லட்சியத்தாலும், கிராமப்புற மக்களுக்குக் “கை’ கொடுக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்துடனும் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் செயல்பாடு குறித்து வேதனை தெரிவித்திருக்கிறது தேசிய தணிக்கை அறிக்கை. குறிப்பாக, காங்கிரஸ் ஆட்சி செய்த, ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில்தான் மிக அதிகமான முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. பிப்ரவரி 2006 முதல் மார்ச் 2007 வரையிலான 14 மாதங்களில், வெறும் 18 நாள்கள்தான் சராசரியாக வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், ஒரு குடும்பத்திற்குத் தரப்பட்ட சராசரி ஆண்டு வருமானம் வெறும் ரூ. 1,500 தான் என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

முறையான ரசீது மற்றும் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் பல லட்சம் ரூபாய்கள் இந்தத் திட்டத்தின் பெயரால் செலவிடப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டிருக்கிறது. ஹரியாணாவில் இத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணம் வேறு திட்டங்களுக்குச் செலவிடப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. வேலையே நடைபெறாமல் செலவுக் கணக்குகள் மட்டும் எழுதப்பட்ட இடங்கள் ஏராளம்.

மத்தியப் பிரதேசத்தில், பதிவேடுகள் எழுதப்படுவதற்கு முன்பே ஓரிடத்தில் ரூ. 10.68 லட்சம் செலவு செய்யப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில், வேலை கோரிய 40,587 குடும்பங்களுக்கு வேலை தரப்படவோ, ஊதியம் தரப்படவோ இல்லை. ஆனால், கணக்கு மட்டும் காட்டப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை எந்தவிதச் சிக்கலுமே இல்லை. இங்கே வேலையில்லாதவர்களே கிராமப்புறங்களில் இல்லை என்று அரசு தெரிவித்து, யாருக்குமே ஊதியம் வழங்கவில்லை. ஒதுக்கப்பட்ட நிதி அப்படியே பயன்படுத்தப்படாமல் இருக்கிறதா அல்லது வேறு திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டதா என்பதைத் தணிக்கை அறிக்கை தெளிவுபடுத்தவில்லை.

இதுபோன்ற நல்ல திட்டங்கள் பல மத்திய அரசால் அறிவிக்கப்பட்டாலும், அவற்றை நடைமுறைப்படுத்தி அதன் பயனை மக்களுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு மாநில அரசுகளுக்குத்தான் உண்டு. மத்தியிலிருந்து கிடைக்கும் பணம் என்றாலே, கேள்வி கேட்க ஆளில்லாத அனாமத்து நிதியாதாரம் என்றுதான் மாநில ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கருதுகிறார்கள். விளைவு? இந்தத் திட்டங்களின் பயன் பொதுமக்களைச் சென்று சேராமல், இடைத்தரகர்களின் கஜானாக்களை நிரப்புகிறது.

முறையாகச் செயல்படுத்தப்பட்டிருந்தால், அகில இந்திய ரீதியில் மத்திய அரசின் செல்வாக்கு அதிகரித்திருக்கும் என்பது ஒருபுறம் இருக்க, கிராமப்புற மக்களின் அவலமும் வறுமையும் சற்று குறைந்திருக்கும். சென்செக்ஸ் உயரவோ குறையவோ செய்யாது எனும்போது, அதைப்பற்றி யாருக்கு என்ன அக்கறை?

Posted in abuse, assurance, Bribery, Bribes, Budget, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Corruption, Employment, Govt, Guarantee, Gurantee, Haryana, households, job, kickbacks, Madhya Pradesh, MP, National, NREGA, Poor, Power, Rural, Schemes, Village, Women, Work | Leave a Comment »

The case for Mixed member Proportional Representation: Voting and Democracy

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2008

விகிதாசாரப் பிரதிநிதித்துவம்: விவாதம் தேவை

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

ஜனநாயகத்தில் அதிக வாக்குகள் பெற்றவர்தான் மக்கள் பிரதிநிதியாக விளங்க முடியும் என்ற ஒரு கருத்து இருப்பினும், குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் நாடாளுமன்றத்திற்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ அங்கீகாரத்துடன் செல்ல முடியாத நிலை இன்றைக்கு இருக்கிறது. இது ஓர் அரசியல் சூதாட்டம்போல் கருதாமல், மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.

நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் நடக்கின்ற தேர்தலில் ஆளும் முறைமையையும், தேசிய, பன்னாட்டு அளவில் கடமை ஆற்றவும் ஒரு கட்சியைத் தேர்ந்தெடுப்பதுதான் அரசியல் நடைமுறை ஆகும்.

தொகுதி நலன்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும், நாட்டின் முக்கியப் பிரச்னைகள், கொள்கைகள்தான் நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்தில் ஒலிக்கின்றன. தொகுதிகள் என்பது மக்கள் வாக்குகள் அளிக்கும் வசதிக்காக அமைக்கப்பட்டது.

தற்போதுள்ள நடைமுறையில் ஊரில் செல்வாக்கு உள்ள மனிதர் எளிதாக உருவாக்கப்படலாம். பணபலம், ஆள்பலத்தைக் கையில் வைத்து எளிதில் தேர்தலில் வெற்றி பெறலாம். அரசியலில் தனிநபர் செல்வாக்கையும், புகழ்ச்சியையும் விகிதாசார வாக்கு உரிமை மூலம் களையலாம்.

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களுடைய கொள்கைகளைத் தேர்தல் அறிக்கையின் முன் வைத்து விகிதாசார வாக்குரிமை முறையில் தேர்தலில் போட்டியிடலாம்.

மாநில அளவில், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எல்லாத் தொகுதிகளுக்கும் நிற்காமல் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னங்கள்தான் வாக்குச்சீட்டில் இருக்கும். இதில் அந்த தனி நபருடைய பெயரோ, முகமோ இல்லாமல், தேர்தல் காலத்தில் சுவரொட்டியில் கட்சிக் கொள்கை, கட்சியின் தலைமையின் பெயர் மட்டுமே பிரசாரத்தில் இருக்கும். அத்தேர்தலில் போடப்படுகின்ற மக்களுடைய ஓட்டு கொள்கை அடிப்படையில் நிச்சயம் இருக்கும்.

அத்தேர்தலில் மக்கள் அளித்த ஓட்டுகளை மொத்தமாக எண்ணி ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த ஓட்டாகக் கருதி விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். உதாரணத்திற்கு ஒரு கட்சிக்கு 10 நாடாளுமன்றத்திற்கும் 100 சட்டமன்றத்திற்கும் விகிதாசார அடிப்படையில் இடங்கள் கிடைக்கின்றது என்றால், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட கட்சியின் தலைமைக்கு நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு முறையாக 10:100 என்ற விகிதாசாரத்தின்படி உறுப்பினர்களை கட்சித் தலைமை தேர்ந்தெடுத்து அனுப்பும்படி தாக்கீது அனுப்பும். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட கட்சி தலைமை உண்மையான மக்களுடைய பிரதிநிதியாகக் கருதப்படும் நேர்மையானவர்களை 10:100 என்ற அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு எம்.பி., எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுத்த பட்டியலை அனுப்ப வேண்டும். அவ்வாறு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட பதவிக்குத் தகுதியுடையவர் ஆவார்கள்.

பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்து அனுப்புகின்ற பெயர்களை கட்சியின் மேலிடம் முற்றிலும் விவாதித்து, நன்கு பரிசீலனை செய்து அனுப்பப்படும்போது பதவிக்குச் செல்கின்றவர்கள் கட்சிக்கு விசுவாசியாக இருக்கின்ற வகையிலும், தவறு செய்யும் எந்தப் பிரதிநிதியும் கட்சித் தலைமை உடன் அழைக்கும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.

திரும்ப அழைப்பவர்களுக்குப் பதிலாக அதே கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவரை அனுப்புகின்ற வாய்ப்புகள் இருக்க வேண்டும். உறுப்பினர் பதவிக்காலத்தில் காலமானாலும் வீணாக இடைத்தேர்தல் நடத்தாமல் குறிப்பிட்ட கட்சியிலிருந்து வேறு ஒருவரை அனுப்பலாம்.

இதனால் அரசியல் கிரிமினல்கள், ஊழல் பெருச்சாளிகள் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் பொறுப்புக்கு வருவதை எளிதாகத் தடுக்கலாம். அரசியலில் கிரிமினல் குற்றவாளிகள் கலந்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டு மிகவும் பலமாக இருக்கிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட வோரா கமிஷன் அறிக்கையும் இந்திய அரசியலில் கிரிமினல் குற்றவாளிகளால் நாடு புரையோடிவிட்டதென்ற நிலையையும் எடுத்துக் கூறியிருக்கிறது. கட்சி மாறும் தடுப்புச் சட்டத்தைவிட விகிதாசார வாக்குமுறை வந்தால் கட்சி மாறுவதை அறவே ஒழித்துவிட முடியும். தேர்தலில் திறமையானவர்கள் நேர்மையானவர்கள் எளிதாக நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்குச் செல்ல இந்த முறையில் வாய்ப்புகள் இருக்கின்றன.

கட்சிகளின் தேர்தல் காலச் செலவினங்கள், அவசியமற்ற, ஆர்ப்பாட்ட தேர்தல் பிரசாரத்தைக் கட்டுப்படுத்தி, தேர்தல் பிரசாரத்தை எளிமைப்படுத்தலாம். ஓட்டுக்காக பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது. தேர்தல் காலத்தில் கலவரங்கள், மக்களுக்கு ஏற்படும் பீதிகள் இந்த முறையால் தடுக்கப்படலாம்.

1930-ம் ஆண்டு லண்டனில் கூடிய தேர்தல் சீர்திருத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் விகிதாசார வாக்குரிமை பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் இனங்கள் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில் விகிதாசார வாக்குரிமை நடைமுறையில் இருக்கிறது. விகிதாசார வாக்குரிமை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, சுவீடன், இத்தாலி, டாஸ்மேனியா, மால்டர், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இந்த முறை நடைமுறையில் இருக்கிறது.

சுவீடன் நாட்டில் ரிக்ஸ்டேக் தேர்தல் சட்டம் 1920-ன் அடிப்படையில் முனிசிபல் தேர்தல் சட்டம் 1930}ன் அடிப்படையில் விகிதாசார வாக்குரிமை முறை நடைமுறையில் இருக்கிறது.

சுவிட்சர்லாந்தில் பல்வேறு மொழி, தேசிய இனங்கள் இருப்பினும், விகிதாசார வாக்குமுறை அந்நாட்டில் சிறப்பாக 1882-லிருந்து செயல்பட்டு வருகிறது.

விகிதாசார வாக்குரிமை என்பது கணித முறைப்படி வகுப்பதாகும். விகிதாசார வாக்குரிமை ஜனநாயகத்தில் சரியாக இருக்காது என்ற வாதங்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும் இதனால் அமைச்சரவையில் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

1961-ம் ஆண்டு டிசம்பர் 16}ல் கோவையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு 17-ம் தேதி கோவை தேர்தல் சிறப்பு மாநாட்டில் அண்ணாவால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ராம் மனோகர் லோகியாவும் இதையே வலியுறுத்தினார்.

இந்திய சட்டக்கமிஷன் (அளவில்) விகிதாசார முறையைப் பின்பற்றுவதற்கு யோசனை கூறியுள்ளது. ஆயினும், மக்களவைக்கும் மாநிலச் சட்டப் பேரவைகளுக்கும் முற்றிலுமாகப் பட்டியல் முறையில் தேர்தல் நடத்துவதே மிகச் சிறந்தது என்று சட்ட ஆணையம் கருதுகிறது.

ஆனால் நம் நாட்டில் பல அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வெற்றிக்குத் திட்டங்களையும், கொள்கைகளையும் மட்டுமன்றி, வேட்பாளர்களுக்கு உள்ள செல்வாக்கையும் முக்கியமாகக் கருதுவதால் இந்த முறையை ஏற்க மாட்டா. எனவேதான் சட்டக் கமிஷன் நேரடித் தேர்தல் முறை, விகிதாசார முறையை யோசனையாகக் கூறியுள்ளது.

மக்களவைக்கும் சட்டப் பேரவைகளுக்கும் இப்போதுள்ள தேர்தல் முறையை அப்படியே வைத்துக்கொண்டு, இவற்றில் கூடுதலாக 25 சதவீத இடங்களை உருவாக்கி இந்த இடங்களை பொதுத் தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது ஆணையத்தின் யோசனை. பொதுத் தேர்தலின்போது இந்தக் கூடுதல் இடங்களுக்குத் தங்கள் வேட்பாளர்களை அரசியல் கட்சிகளின் தனித்தனிப் பட்டியல்களில் அறிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

ஜெர்மனியில் இருப்பதுபோல 4 சதவீதம் வாக்குகளுக்குக் குறைவாகப் பெறும் கட்சியைச் சட்டமன்றத்தில் இடம் பெறத் தகுதியற்றதாக அறிவிக்கலாம். இதனால் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை வரம்பின்றிப் பெருகுவதை விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மூலம் தடுக்கலாம். படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்சி முறை உருவாகும்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் மக்கள் பங்கெடுப்பு முழுமையாக இருக்கும். ஒரு ஓட்டுகூட சிதறாது. மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.

Posted in abuse, Admin, Administration, Advices, Citizens, Constituency, Cronies, Crony, Democracy, Election, Elections, Electorate, Europe, Federal, Freedom, Govt, Independence, Manifesto, minority, MLA, Money, MP, National, parliament, Party, people, Politics, Polls, Power, Proportion, reforms, Representation, Representatives, Republic, seats, States, Voice, Vote, voters, Votes | Leave a Comment »

Sri Lankan Tamil MP Maheswaran assassinated in Colombo temple

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் புதுவருடத்தினமான இன்று கொழும்பு பொன்னம்பலவாணேசர் ஆலயத்தில் வைத்து துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆலயத்தின் உள்வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், கொழும்பில் மிகவும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று காலை சுமார் 10 மணியளவில் மகேஸ்வரன் தனது குடும்பத்தார் மற்றும் மெய்பாதுகாப்பு உறுப்பினர்கள் சகிதம், மிகவும் சனக்கூட்டம் நிறைந்த இந்த ஆலய உள்வீதியில் வலம் வந்துகொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்ததாகக் கருதப்படும் துப்பாக்கி நபரினால் சரமாரியாகச் சுடப்பட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவத்தின்போது படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விரையப்பட்டபோதிலும், அங்கு அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிற்குள்ளேயே சிகிச்சைகள் பயனின்றி இறந்துவிட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்

இந்தச் சம்பவத்தின் போது அவரது மெய்பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் 12 பேர் வரையில் காயமடைந்தாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலை மேற்கொண்டதாகக் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிநபர் கொட்டாஞ்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாப்பாளரின் பதில்தாக்குதலில் காயமடைந்திருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் உறுதி செய்திருக்கின்றன.

இந்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் இவர், தற்போது பொலிசாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

அத்துடன் மகேஸ்வரனின் இன்றைய இந்தப்படுகொலையைக் கேட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருப்பதாகவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இது தொடர்பாக தேவையான விசாரணைகளை மேற்கொண்டு கொலையாளிகளைக் கைதுசெய்யும்படியும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

அதேவேளை மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ள அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இந்தியாவில் இருந்து விடுத்துள்ள ஒரு செய்தியில், இலங்கை அரசாங்கமே இந்தக் கொலைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Posted in Assassination, Assassinations, Batticaloa, Campaign, Civil Monitoring Committee, Colombo, dead, Devananda, Devanandha, Devanantha, Douglas, Douglas Devananda, Eelam, Eezham, Election, Elections, EPDP, Ganesan, guards, Hindu, Jaffna, Joseph, Joseph Pararajasingham, Killed, Kochchikkadai, Kotahena, LTTE, Mageshwaran, Magesvaran, Mageswaran, Maheshwaran, Mahesvaran, Maheswaran, Mahinda, Mahindha, Mahintha, Mano, Mano Ganesan, MP, Murder, Muthukumar, Muthukumar Sivapalan, Nadaraja, Nadarajah, Nadarajah Raviraj, Nataraja, paramilitary, Pararajasingam, Pararajasingham, Pararajasinkam, Parliamentarian, Polls, Ponnambala Vaneswara Hindu Temple, Rajapaksa, Ranil, Raviraj, Security, Sivabalan, Sivapalan, Sri lanka, Srilanka, Tamil, Tamil National Alliance, Temple, terror, Terrorists, Thiagaraja, Thiyagaraja, Thiyagarajah, Thiyagarajah Maheswaran, TNA, UNP, Western Province Peoples Front, Wickremasinga, Wickremasinge, Wickremasingha, WPPF | 2 Comments »

Thamizhachi Thangapandian’s Vanapechi by Uyirmai – Book Release

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

“வனப்பேச்சி’ நுõல் வெளியீட்டு விழா

சென்னை:உயிர்மை பதிப்பகத்தின் சார்பில், முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகளும் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய “வனப்பேச்சி’ நுõல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை தாங்கிய இந்திய கம்யூ., தலைவர் ஆர்.நல்லகண்ணு “வனப்பேச்சி’ கவிதை தொகுப்பு நுõலை வெளியிட, மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ராஜா முன்னிலையில், ராஜ்யசபா எம்.பி., கனிமொழி பெற்றுக் கொண்டார்.

விழாவில் அமைச்சர் ராஜா பேசுகையில்,”தமிழர்கள் வாழ்வில் இலக்கணமும், கவிதையும் பிரித்து பார்க்க முடியவில்லை. கவிதை வெளியே இல்லை. ஒவ்வொருவரிடமும் ஆழப் பதிந்திருக்கிறது’ என்றார்.

இந்திய கம்யூ., தலைவர் நல்லகண்ணு பேசுகையில்,”உலகில் எங்கு என்ன நடந்தாலும், அதை தன்னுடைய நிலையை தெளிவாக குறிப்பிட்டுள்ளார். செறிவான கருத்துக்களும், மண்ணின் மொழியும் உள்ளது. நகரம் மற்றும் கிராமம் ஒரே சீரான வளர்ச்சி காண வேண்டும். எனவே, கவிஞர்கள் மக்கள் படும் துன்பங்களை கவிதைகளாக எழுத வேண்டும். அது அரசியலாகிவிடும் என்று ஒதுங்கிக் கொள்ளக் கூடாது’ என்றார்.

முன்னதாக உயிர்மை பதிப்பகத்தின் உரிமையாளரும், ஆசிரியர் மனுஷ்ய புத்திரன் வரவேற்று பேசுகையில், “தமிழச்சி தங்கபாண்டியனின் இரண்டாவது கவிதை தொகுப்பு வனப்பேச்சி. இளம் கவிஞர்கள் மீது விமர்சனங்கள் வரும். அவை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்வதற்கும், மொழி சார்ந்தவற்றை புதுப்பித்துக் கொள்வதற்கும் உதவும். தற்போது அரசியலில் வரும் மாற்றங்களை கவனித்து கொண்டிருக்கிறோம். எனவே, எம்.பி., கனிமொழியும், தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கும் உந்து சக்தியாக திகழும்’ என்றார்.

ஏற்புரையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசுகையில், “நகரவாசிகள் சமரசம் செய்து கொண்டு வாழ்கின்றனர். வணிக பொருளாதாரம், உலகமயமாக்கல் ஆகியவற்றுக்கு நடுவில் நகரவாசிகள் வாழ்க்கை நடத்துகின்றனர். கிராமங் களில், வன்முறை வெளிப்படையாக உள்ளது. ஆனால், நகரத்தில் எப்போது என்ன நடக்கும், என்பது தெரியாத புதிராக இருக்கிறது, என்றார்.

இந்நிகழ்ச்சியில், எழுத்தாளர்கள்

  • ஜெயகாந்தன்,
  • பிரபஞ்சன்,
  • தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவி ராமாத்தாள்,
  • எம்.எல்.ஏ., ரவிக்குமார்,
  • போலீஸ் ஏ.டி.ஜி.பி., திலகவதி,
  • கவிஞர் சுகுமாரன்,
  • பேராசிரியர் சுப்பாராவ்

உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியை நடிகை ரோகிணி தொகுத்து வழங்கினார்.

Posted in Books, DMK, Kanimoli, Kanimozhi, Kanimozi, Literature, Manushiyaputhiran, Manushyaputhiran, MLA, MP, Nallakannu, Poems, Poets, Thamilachi, Thamizachi, Thamizhachi, Thangapandian, Thangapandiyan, Thankapandian, Thankapandiyan, Uyirmai, Uyirmmai, Vanapechi, Vanappechi | 1 Comment »

Is educational credential required for people’s representatives? – D Purushothaman

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

பள்ளி இறுதிவகுப்பைக்கூட எட்டாத எம்.பி.க்கள்!

டி. புருஷோத்தமன்

எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் கூட குறைந்தபட்சம் பள்ளி இறுதிவகுப்பு வரையிலாவது பயின்று இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

ஆனால் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் பள்ளி இறுதிவகுப்புவரை கூட பயிலாதவர்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். 60 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித குறைந்தபட்ச கல்வித் தகுதியையும் நிர்ணயிக்காததால் இந்த அவலநிலை.

பள்ளி இறுதிவகுப்பைக் கூட எட்டாத எம்.பி.க்கள் கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளிலும் இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியில் இத்தகைய எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முகமது சாஹித், ரமேஷ் துபே, பாய் லால் ஆகிய மூவரும் பள்ளி இறுதிவகுப்பைக் கூட எட்டாதவர்கள். இதேபோன்று சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த ஹரி கேவல் பிரசாத்தும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுரேந்திர பிரகாஷ் கோயலும் இப்பட்டியலில் அடங்குவர்.

மேற்குவங்கத்தைப் பொருத்தவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் செüத்ரியும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திரசேகர் துபேயும் இதேபோன்று பள்ளி இறுதிவகுப்பை எட்டாதவர்கள்தான்.

கேரளம் கல்வியறிவு பெற்ற முதன்மை மாநிலம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அங்கு கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரவீந்திரன், பள்ளி இறுதிவகுப்பை முடிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

மகாராஷ்டிரத்தில் பாஜகவை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், சிவசேனை கட்சியை சேர்ந்த மோகன் ரவாலேயும் இந்தப் பட்டியலில் அடங்குவர். இவ்விஷயத்தில் பிற கட்சிகளுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பாஜகவும் சிவசேனையும் நிரூபித்துள்ளன.

ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவதார் சிங் பதானாவும், ஆத்ம சிங் கில்லும் பள்ளி இறுதிவகுப்பை எட்டாதவர்கள். அசாமில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மோனிகுமார் சுபாவும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த பாலிராம் காஷ்யப்பும் இந்தப் பட்டியலைச் சேர்ந்தவர்கள்தான்.

குஜராத்தில் பாஜகவை சேர்ந்த சோமாபாய் கந்தலால் கோலி பட்டேல் பள்ளி இறுதிவகுப்புவரை பயிலாதவர்.

ஆனால் மேற்குறிப்பிட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் சிகரம் வைத்தாற்போல, தொடக்கப்பள்ளி வரை மட்டுமே பயின்றவர் பாஜகவை சேர்ந்த மகேஷ் குமார் கோனோடியா!

பிகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் மன்ஜியும், லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சூரஜ் சிங்கும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த கைலாஷ் பைத்தா ஆகியோரும் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள்தான்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயரிய கல்வித்தகுதியைப் பெற்றிருந்தால்தான் விவாதங்களில் உரியமுறையில் பங்குகொண்டு தங்களது கருத்துகளை வலுவான முறையில் எடுத்துக்கூற இயலும். இல்லாவிடில் எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் அவையை விட்டு வெளிநடப்புச் செய்ய என்பதே தாரக மந்திரமாகிவிடும்.

பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தை எடுத்துக்கொண்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 36 லட்சம் கோடி ரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் திட்ட இலக்குகளை எட்ட கல்வித்தகுதி மிக்க எம்.பி.க்கள் மிக அவசியம் என்பதை எவரும் மறுக்க இயலாது.

துவக்கத்தில் மில்லியன்கள், கோடிகள், பின்னர் பில்லியன்கள், இறுதியாக டிரில்லியன்கள் என அரசின் வரவு-செலவுத் திட்டங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. போதிய கல்வியறிவு இல்லாத காரணத்தால் இதைப்பற்றிய பொருளாதார விவரங்களை அறிய முடியாமல் இத்தகைய எம்.பி.க்கள் அவதிப்படுகின்றனர். நாடாளுமன்ற விவாதங்களில் தீவிரமாக பங்கேற்க இயலாமல் சிரமப்படுகின்றனர்.

உயர்கல்வி கற்றவர்கள் உயர் அதிகாரிகளாகப் பொறுப்பேற்று அரசின் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் பள்ளிப்படிப்பை கூட முடிக்காத அரசியல்வாதிகள் அவர்களை வழிநடத்தும் துர்ப்பாக்கியம் நமது நாட்டில் அதிகமாகவே நிகழ்ந்து வருகிறது. கல்விகற்ற அதிகாரிகள் சொல்வதை அரசியல்வாதிகள் சிறிதும் ஏற்பதில்லை. இதனால் ஐந்தாண்டுத் திட்டங்களின் முழுப்பலன்களும் மக்களைச் சென்றடைவதில்லை. ஏழ்மை இன்னும் தாண்டவமாடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

பல எம்.பி.க்கள் போதிய கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்துவருவதால் தாங்கள் செய்யும் குற்றச்செயல்களின் பாதிப்புகளை தாங்களே உணர்ந்துகொள்வதில்லை.

லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மன்ஜி. போதிய கல்வித்தகுதியற்ற இவர் எம்.பி. என்ற முறையில் செய்த குற்றச்செயல்கள் அனைவரையும் வெட்கித் தலைகுனியவைக்கக் கூடியதாகும். வெளிநாடுகளுக்கு போலி பெயர்களில் ஆள்கடத்தலில் வல்லவர் என்ற பெயருக்கு அவர் ஆளாகிவிட்டார்.

இதற்கும் ஒரு படி மேலே சென்று, தனது காதலியை மனைவி எனக் கூறி வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது தில்லி விமான நிலையத்தில் கையும் களவுமாக பிடிபட்டார். (சட்டபூர்வமாக அப்பெண்ணை திருமணம் செய்யவில்லை என்ற போதிலும்) அந்தக் காதலியை விவாகரத்து செய்யவும் அவர் முயன்று வருகிறார்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது ஜமீன்தாரர்களும் தனவந்தர்களும் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளின் பிரமுகர்களும் தங்களது செல்வாக்கின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது மக்களிடம் போதிய விழிப்புணர்வும் இல்லை. ஆனால் தற்போது மக்களிடம் கல்வியறிவும் விழிப்புணர்வும் வேகமாக ஏற்பட்டு வருகிறது.

அரசு உயர்பதவிகளுக்கு எவ்வாறு உயரிய கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அதைப்போன்றே இனி எம்.பி.க்களுக்கும் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.

100 கோடி மக்களின் பிரநிதிகளாக இருக்க வேண்டிய எம்.பி.க்களுக்கு போதிய கல்வித்தகுதி அவசியம் இருக்க வேண்டுமல்லவா? அரசியல்சாசனத்தில் உரிய திருத்தம் செய்து இதற்கான வழிவகைகளைச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

Posted in Bengal, Bihar, BJP, BSP, Chathisgar, Chathisgarh, Chattisgar, Chattisgarh, Citizen, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), credentials, Education, Election, eligibility, Gujarat, Haryana, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Kamaraj, kamarajar, Kamraj, Kerala, Lalloo, Laloo, Lalu, maharashtra, MLA, MP, people, Polls, Purushothaman, Qualifications, Requirements, RJD, Shiv Sena, Shivsena, Teachers, Uthar Pradesh, Utharakand, Utharakhand, Utharanchal, Utharkhand, Utharpradesh, Uttar Pradesh, Uttarakand, Uttarakhand, Uttaranchal, Uttarkand, Uttarkhand, UttarPradesh, Uttrakand, Votes, WB, West Bengal, Yadav | Leave a Comment »

Colombo withdraws security – Tamil MP Mano Ganesan alleges ‘threat to life’, may flee Sri Lanka

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

விடுதலைப் புலிகளும், கருணா குழுவினரும் தொடர்ந்து சிறார்களை சேர்ப்பதாக ஐ.நா கூறுகிறது

இலங்கையில் விடுதலைப் புலிகளும், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணா குழுவினரும், தொடர்ந்து சிறார்களை கடத்தி அவர்களை சண்டையிட பயன்படுத்துவதாக ஐ.நா கூறியுள்ளது.

சிறார்களை சண்டையிட பயன்படுத்துவது குறைந்து இருந்தாலும், கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த இரு குழுவினரும் நூற்றுக்கணக்கான சிறுவர்களை சேர்த்துள்ளதாக ஐ.நா கூறுகின்றது.

ஐ.நா அதிகாரிகள் முன்னிலையில் சிறார்களை விடுவித்த ஒரு சில நாட்களிலேயே அவர்களை மீண்டும் சேர்த்து கருணா குழுவினர் அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருவதாகவும் ஐ.நா கூறியுள்ளது.

 


பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாடு செல்வதாக கூறுகிறார் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்

கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினறும், மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன், தற்காலிகமாக வெளிநாடு ஒன்றுக்கு செல்ல முடிவெடுத்துள்ளார்.

இலங்கையில் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கிறது என்று காவல் துறையின் புலனாய்வுத் தறை கூறிய பிறகும் தன்னுடைய பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாகத் தெரிவிக்கும் மனோ கணேசன், இதையடுத்து தற்காலிகமாக இலங்கையை விட்டுச் செல்ல முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதாகக் கூறிய இலங்கை அமைச்சர் கெஹ்லியா ரம்புக்வல்ல அவர்கள், கூடுதல் பாதுகாப்பு கோரி மனோ கணேசன் அளித்த மனு பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

 


Posted in Abductions, Colombo, dead, disappearances, Eelam, Eezham, extra-judicial, extra-judicial killings, Freedom, Ganesan, HR, Human Rights, Killed, killings, Life, LTTE, Mahinda, Mahinda Rajapaksa, Mano, Mano Ganesan, MP, Murder, Prabhakaran, Rajapaksa, Security, Sri lanka, Srilanka, Tamils, Threat, Velupillai, Velupillai Prabhakaran | Leave a Comment »

Worldwide tentacles of the nexus between Politics, Bribery & Corruption

Posted by Snapjudge மேல் திசெம்பர் 11, 2007

லஞ்சத்தில் சிக்கிய தலைவர்கள்

டி. புருஷோத்தமன்
“மக்கள் பணியே மகேசன் பணி’ என்கின்ற நிலைமாறி “பணம் குவிப்பதே குறிக்கோள்’ என்ற பேராசைக்கு அடிமையாகிவிட்டனர் பெரும்பாலான அரசியல்வாதிகள்.

கட்சியை வழிநடத்தவும் அபரிமிதமான தேர்தல் செலவை ஈடுகட்டவும் பதவிபோனாலும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கவும் கோடிக்கணக்கில் பணம் தேவை என்பதில் அரசியல் தலைவர்கள் உறுதியாக இருந்து வருகின்றனர். இந்த பேராசைதான் லஞ்சஊழலுக்கு அடித்தளமாக அமைகிறது.

சாதாரண அரசியல்வாதிகளில் இருந்து கட்சித் தலைவர்கள் வரை இருந்த லஞ்சஊழல் படிப்படியாக அமைச்சர்கள் அளவிலும் பின்னர் முதல்வர்கள் என்ற நிலைக்கும் முன்னேறியது.

இதன் உச்சகட்டமாக பிரதமர், அதிபர் போன்றோரும் லஞ்சலாவண்யத்தில் சிக்குவது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. லஞ்சமும் ஊழலும் செல்வந்த நாடுகளை விட ஏழை நாடுகளில்தான் தலைவிரித்தாடுகிறது. ஏழை மக்களை முன்னேற்ற வேண்டிய அந்நாடுகளின் பிரதமர்களும் அதிபர்களும் சொந்த நலனில் ஈடுபாடு காட்டத் தொடங்கிவிடுகின்றனர்.

இந்தியாவின் அண்டை நாடு வங்கதேசம்.

பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் அடக்குமுறையிலிருந்து விடுதலைபெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது. நாடு சுபிட்சம் அடைந்து நாமும் வளம் பெறுவோம் என வங்கதேச மக்கள் கண்ட கனவு பொய்யாகிவிட்டது.

அந்நாட்டின் அதிபராக இருந்த எர்ஷாத் பல்வேறு குற்றச்செயல்களிலும் ஊழல் விவகாரங்களிலும் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவருடைய பதவிக்காலத்தில் இரு சரக்கு முனையங்களைக் கட்டுவதற்காக தனியார் நிறுவனங்களுக்கு காண்ட்ராக்ட் அளிக்க கோடிக்கணக்கில் அவர் லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக அவருடைய இரு மகன்கள் அராபத் ரஹ்மானும் தாரிக் ரஹ்மானும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காலிதா ஜியாவின் குடும்பமே ஊழலில் சிக்கித் திளைத்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

வங்கதேசத்தின் மற்றொரு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும் லஞ்ச விவகாத்தில் சளைத்தவர் அல்ல என்பதை அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அறிந்துகொள்ளலாம். இரு தொழில் அதிபர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிப்பதற்காக அவர் பெற்ற லஞ்சம் ரூ. 6 கோடி.

ஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது. தனது பதவிக்காலத்தில் அரசியல் எதிரிகளை கொலைசெய்யவும் அவர் தயங்கவில்லை. நான்கு எதிரிகளை அவர் படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வங்கதேச உள்துறை அமைச்சராக இருந்த முகம்மது நசீம் என்பவர் தனது பதவிக்காலத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளார். இதற்கு அவருடைய மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். எனவே இவ்விருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வருமானத்துக்கு முரணான வகையில் அவர்கள் வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தையும் அந்நாட்டு அரசு பறிமுதல் செய்துவிட்டது.

தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷிண் சினவத்ராவும் அவர் மனைவியும் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளனர். நிலபேர விவகாரத்தில் அவர்கள் முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு முறைகேடாக அவர்கள் வாங்கியிருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள 14 ஏக்கர் நிலத்தைப் பறிமுதல் செய்யவேண்டும் என அந்நாட்டு அரசுக்கு அட்டார்னி ஜெனரல் பரிந்துரை செய்துள்ளார்.

தைவான் நாட்டின் முன்னாள் அதிபர் சென்னும் அவருடைய மனைவியும் ஊழல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை அவர்கள் சூறையாடியதாக தைவான் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மீதும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் பெரும் செல்வந்தர்களாக உள்ள நான்கு தொழிலதிபர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் கடன் என்ற பெயரில் பணத்தை தனது கட்சிக்கு லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ மற்றும் அவருடைய கணவர் ஜர்தாரி ஆகியோரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள்தான். சுவிஸ் வங்களில் கோடிக்கணக்கான லஞ்சப் பணத்தை மறைத்து வைத்துள்ளதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜர்தானி மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான் மற்றொரு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு லஞ்ச வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அவர் நாடு கடத்தப்பட்டார். பலமுறை முயன்றும் அவர் பாகிஸ்தானுக்குத் திரும்ப முடியவில்லை. இறுதியாக தற்போதுதான் நாடு திரும்பியுள்ளார்.

இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகார்தோ ஊழலில் திளைத்தவர். ஏழை நாடு என்ற சிந்தனை ஏதுமில்லாமல் மக்களைச் சுரண்டி, சுகபோக வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை சூறையாடினார்.

பிலிப்பின்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஊழல் புரிவதில் சாதனை படைத்தவர். 20 ஆண்டு பதவிக்காலத்தில் அவர் சுருட்டிய பணத்தின் மதிப்பு ரூ. 4,000 கோடியாகும். என்னே அவருடைய மக்கள் சேவை! அவர் மனைவி இமெல்டா விலைமதிப்புள்ள மூவாயிரம் ஜோடி செருப்புகளை வைத்திருந்தவர் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பெர்டினண்ட் மார்க்கோஸýக்கு பக்கபலமாக இருந்தது அமெரிக்க அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர்களும் பிரதமர்களும்தான் இப்படி என்றால் ராணுவ ஆட்சியாளர்களின் செயல்பாடு அதைவிட மோசம் என்றே கூறலாம். மியான்மர் நாட்டில் 1962 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது. ஜனநாயகம் கோரி கிளர்ச்சி நடத்திய மக்களை ராணுவ ஆட்சியாளர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கினர்.

இராக் முன்னாள் அதிபரும் சர்வாதிகாரியுமான சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில் எண்ணெய்க்கு உணவு பேரத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது.

மக்கள் நலனை மறந்து ஆடம்பர மாளிகையில் சுகபோக வாழ்க்கையில் திளைத்த சதாமை அமெரிக்கா தூக்கிலிட்டு கொன்றுவிட்டது.

எனவே, மன்னராட்சி, மக்களாட்சி, ராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என எந்த ஆட்சியானாலும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது லஞ்சமும் ஊழலும் என்ற நிலை உருவாகி விட்டது.

மக்களைக் காக்க வேண்டிய மன்னர்களும், அதிபர்களும், பிரதமர்களும், சர்வாதிகாரிகளும் லஞ்ச ஊழலில் திளைத்து சுகபோக வாழ்க்கையில் ஈடுபடுவது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.

—————————————————————————————————————————–
லஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா?

இரா. சோமசுந்தரம்

திருக்கழுக்குன்றம் துணை வட்டாட்சியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.48 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்பாகவே, திருச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல் என்ற செய்தி!

இந்த நடவடிக்கைகள் மக்களிடம் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு, இதற்கெல்லாம் மேலான ஓர் அதிர்ச்சியைத் தருவதாக இருக்கிறது. அதாவது: “”அட, எல்லாரும்தான் வாங்குறாங்க. இவங்க, வாங்கினத நியாயமா பங்குபோட்டு மேல கொடுக்காம அமுக்கப் பாத்திருப்பாங்க, ஒரே அமுக்கா அமுக்கிட்டாங்க” என்பதுதான் அந்த விழிப்புணர்வு.

இந்த மனநிலைக்குக் காரணம் அரசு அலுவலகங்களில் இன்று நிலவும் சூழ்நிலைதான்.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வருவாய்ச் சான்றிதழ் பெற வேண்டுமானால், உண்மைக்கு மாறாக வருமானத்தைக் காட்ட விரும்புபவர் மட்டுமே அரசு அலுவலர்களைக் “கவனிக்க’ வேண்டியிருக்கும். ஏழைகள் இரண்டு நாள்களுக்கு இழுத்தடிக்கப்படுவார்களே தவிர, சான்றிதழ் இலவசமாகக் கிடைத்துவிடும். ஆனால் இப்போது இலவசம்கூட இலவசமாகக் கிடைப்பதில்லை. தகுதி இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற சூழல் ஏற்பட்டிருப்பதுதான் மக்களின் இத்தகைய விமர்சனங்களுக்குக் காரணம்.

அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம் ஆகியவற்றில் காணப்படாத பிரமாண்டம், தமிழக அரசு விழாக்களில் மட்டும் இருக்கிறது. வரம்புக்கு மீறிய, சட்டம் அனுமதிக்காத செலவுகள் நிறைய!

பல அரசு உயர் அதிகாரிகள் அரசு விருந்தினர் மாளிகைகளில் தங்குவதில்லை. ஆனால் அவர்கள் பெயரில் “ரூம்’ மட்டும் போடப்படும். ஆனால் அவர்கள் தங்குவது நட்சத்திர ஓட்டலில். அத்துடன் வேறுசில சொல்லப்படாத செலவுகளும் உண்டு, அந்தச் செலவை உள்ளூர் அதிகாரிகள் ஏற்க வேண்டும்!

சட்டத்தை மீறிய செலவுகளை ஈடுகட்ட ஒவ்வொரு துறையிலும்- வருவாய்த் துறை என்றால் கிராம நிர்வாக அலுவலர் வரை-ஒரு வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இது ஊர் அறிந்த ரகசியம்.

தேன் எடுத்தவன் புறங்கையை சுவைக்காமல் விடுவானா? ருசி பார்த்த பூனைகளுக்கு சூடு மறத்துப் போகிறது. மனிதம் மறைகிறது.

ஆதலால், வாகனம் நன்கு ஓட்டத் தெரிந்தாலும் “டிரைவிங் ஸ்கூல்’ மூலம்தான் உரிமம் பெற்றாக வேண்டும். அதே ஜாதி, அதே சம்பளத்துக்காக சான்றிதழ் கேட்டாலும் “கொடுத்து’தான் பெற முடியும்.

அரசு நிர்ணயிக்கும் நில மதிப்புக்கும் சந்தை மதிப்புக்கும் இடைப்பட்ட ஒரு மதிப்பை தீர்மானிக்கும் அதிகாரம் ஒருவரிடம் இருக்கும்போது, குறைக்கப்படும் பெருந்தொகைக்கு ஏற்ப ஒரு சிறுதொகையை இழக்க வேண்டும்.

விபத்துக்காக முதல் தகவல் அறிக்கை எழுதவேண்டுமானால், காவல்நிலையம் சொல்லும் வழக்கறிஞரை ஏற்று, காப்பீட்டுத் தொகையில் 20 சதவீதம், 30 சதவீதம் தள்ளுபடி தர வேண்டும் என்பதெல்லாம் எழுதப்படாத விதியாக மாறிவிட்டது.

இலவச கலர் டிவி பெறுவதற்கான பட்டியலில் இடம் பெற ரூ.100 வசூலிக்கப்படுகிறது என்ற செய்தி பல நாளிதழ்களில் வந்தாகிவிட்டது. ஆனால் இதை அரசு கண்டுகொள்ளவே இல்லை.

அரசு அறிவிக்கும் பல்வேறு உதவித் திட்டங்களுக்கு பொருளோ, வங்கி வரைவோலையோ தயாராக இருந்தாலும், “ரொக்கத்தை’ கொடுத்தால்தான் அவை கிடைக்கும் என்ற நிலை உள்ளது.

பொதுமக்களிடம் பெறும் லஞ்சத்தைவிட அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் பல மடங்காக இருக்கிறது.

பல ஏழை விவசாயிகளின் நிலங்களில் மானியப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டதாகக் குறிப்பெழுதி, கணக்குக் காட்டி, பல கோடி ரூபாய் மானியம் ஆண்டுதோறும் “முளை’ காட்டாமல் மறைந்து விடுகிறது.

ஒவ்வோர் அரசு அலுவலகங்களிலும் அவர்களது செலவுகள் அனைத்தும் தணிக்கைத் துறையால் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆனால், தணிக்கைத் துறை அலுவலர்களையே ஏமாற்றுகிற அளவுக்கு பொய் ரசீதுகளும் சட்டத்தின் ஓட்டைகளும் சரிபார்ப்பவரை சரிகட்டுவதும் தாராளமாக இருக்கின்றன.

லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுத்தாலும் எத்தனை வழக்குகளில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டார்கள்?

இவை யாவும் மக்கள் ஏற்படுத்திய பழக்கம் என்றும், அரசியல்வாதிகளின் அடாவடித்தனம் என்றும் சொல்லப்படும் பொதுவான கருத்து ஏற்புடையதாக இல்லை.

முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல, அரசு அலுவலகங்களில் பரவியுள்ள ஊழலை அரசு அலுவலர்களால்தான் தடுக்க முடியும்.

எந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்தத் துறை மற்றும் எந்தெந்த அலுவலர் மூலமாக எவ்வளவு தொகை போகிறது என்ற கணக்கெல்லாம்கூட பொதுவாகப் பேசும்போது ஊழியர் சங்கங்கள் வெளிப்படையாகப் பேசுகின்றன. ஆனால் அதை ஓர் அறிக்கையாகக்கூட இச் சங்கங்கள் வெளியிட்டதில்லை.

“”அரசு விழாக்களுக்கு செலவாகும் கூடுதல் தொகைக்காக எங்கள் ஊழியரை வசூல் வேட்டை நடத்த அனுமதிக்க மாட்டோம்” என்று எந்த தொழிற்சங்கமும் போர்க்கொடி தூக்கியதில்லை. ஊழல் செய்யும் அமைச்சரின் முகமூடியைக் கிழிப்பதில்லை.

எந்தெந்த அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பது சக ஊழியருக்குத் தெரியும். ஊழியர் சங்கத்துக்கும் தெரியும். தெரிந்திருந்தும், லஞ்சம் வாங்கும் ஊழியரை இடைநீக்கம் செய்தாலோ, பதவியிறக்கம் செய்தாலோகூட சங்கம் கொதித்தெழுகிறது. அவரைப் பாதுகாக்கிறது. அதே சமயம், அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பதற்காக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதில்லை. சங்கத்தைவிட்டு அவரை வெளியேற்றியதும் இல்லை.

எத்தனை அறிவார்ந்த தத்துவம் பேசும் அரசியல் கட்சியைச் சார்ந்த சங்கமாக இருந்தாலும் சரி, ஊழல் அலுவலரை உறுப்பினராக வைத்துக்கொள்ள தயக்கம் காட்டுவதில்லை.

இப்போது சொல்லுங்கள்…

லஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா?

Posted in abuse, Allegations, America, Assassinations, Bangladesh, Biz, Blair, Bribery, Bribes, British, Burma, Bush, Business, Cabinet, Campaign, China, Commonwealth, Contribution, Corruption, crimes, Democracy, Dictators, Dictatorship, Dubya, Elections, England, English, Ferdinand, Finance, Food, Freedom, GWB, Haseena, Hasina, Imelda, Independence, India, Indonesia, Iraq, Khaled, Kingdom, Kings, Laundering, Law, Leaders, Lokpal, London, Luxury, Marcos, Military, Minister, MLA, Money, MP, Murder, Mynamar, Nawaz, Needy, nexus, oil, Order, Pakistan, Party, Phillipines, PM, Politics, Polls, Poor, Power, President, Prince, Princes, Princess, Princesses, Queens, Rich, Saddam, Sharif, Sheikh, Shoes, Suhartho, Suharto, Taiwan, Tamil, Thailand, Tony, UK, US, USA, Wealth, Zia | Leave a Comment »

Sandalwood smuggler Veerappan’s Area: Encroachments in Sathiyamangalam – Losing ones native lands to power, money & politics

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2007

வீரப்பன் காட்டை குறிவைக்கும் அரசியல்வாதிகள்!

பீ.ஜெபலீன் ஜான் ஆர்.சிவக்குமார் டி.சாம்ராஜ்

ஈரோடு, கோவை மாவட்டத்தில் பிரதானக் கட்சிகளில் முக்கிய பொறுப்பை வகித்த, வகிக்கும் அரசியல்வாதிகள், மற்றும் சத்தி தொகுதியில் இதுவரை இருந்த எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோருக்கு சத்தி வனப் பகுதியில் பண்ணைத் தோட்டங்கள் உள்ளன.

ஈரோடு, டிச.4: சந்தன கடத்தல் வீரப்பனுக்கு புகலிடமாக இருந்த சத்தியமங்கலம் வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அரசியல்வாதிகள் வளைத்துப்போட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு போட்டியாக அரசு அதிகாரிகள் மற்றும் முக்கியத் தொழிலதிபர்களும் நிலத்தை வாங்கி வருவதால் பழங்குடியினரின் பாரம்பரிய விளைநிலங்கள் முற்றிலும் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தி வனப்பகுதியில் தாளவாடி, கடம்பூர், ஆசனூர், பர்கூர் உள்ளிட்ட இடங்களில் ஒருகாலத்தில் வீரப்பன் கால்படாத இடமே இல்லை என்று சொல்லும் நிலை இருந்தது.

அப்போது இப் பகுதியில் பழங்குடியினர் தவிர பிற மக்கள் நடமாட்டம் அறவே இருந்ததில்லை.

வீரப்பன் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு சில மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறியது. மன இறுக்கத்தைப் போக்கும் இயற்கைச் சூழல், உடலை சிலிர்ப்பூட்டி மகிழ்ச்சி தரும் மிதமான குளிர் போன்ற சிறப்பு அம்சங்களால் இப் பகுதி அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய தொழிலதிபர்களின் கண்பார்வையில் பட்டது.

தங்களது அரசியல் செல்வாக்கு, ஆள்பலம், பண பலம் ஆகியவற்றைப் பயன்படுத்திய இவர்கள், பண்ணைத் தோட்டம், விருந்தினர் இல்லம், ஓய்வு இல்லம் உள்ளிட்டவற்றை மலைப் பகுதியில் உருவாக்கினர்.

இந்நிலை இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஈரோடு, கோவை மாவட்டத்தில் பிரதானக் கட்சிகளில் முக்கிய பொறுப்பை வகித்த, வகிக்கும் அரசியல்வாதிகள், மற்றும் சத்தி தொகுதியில் இதுவரை இருந்த எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோருக்கு சத்தி வனப் பகுதியில் பண்ணைத் தோட்டங்கள் உள்ளன. ஒருபுறம் அரசியல்வாதிகள் என்றால் மற்றொருபுறம் முக்கியத் தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகளால் பழங்குடியினர் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.

வீரப்பன் காட்டுப் பகுதியில் ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் பகுதி தொழிலதிபர்களின் ஓய்வு இல்லங்கள், பண்ணைத் தோட்டங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆசனூரில் பல ஏக்கர் வாங்கியுள்ளார். தொலைதூரத்தில் இருக்கும் தொழிலதிபர்களைக்கூட கவர்ந்து இழுக்கும் இடமாக வீரப்பன் காடு மாறிவிட்டது.

சுமார் 30 ஏக்கர், 50 ஏக்கர் என வாங்கியுள்ள தொழிலதிபர்கள், வார விடுமுறை நாள்களில் இங்கே தங்கியிருந்து இரவு நேரங்களில் தங்களது நிலத்துக்குள்ளேயே மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதை பொழுதுபோக்காக வைத்துள்ளனர் என்பது பழங்குடியினரின் பிரதான குற்றச்சாட்டு.

ஈரோடு மாவட்டத்தில் ஏற்கெனவே பணியாற்றிய ஆட்சியருக்கு, ஆசனூரில் பல ஏக்கர் நிலம் உள்ளது என்கின்றனர் பழங்குடியினருக்காக போராடிவரும் தன்னார்வ அமைப்பினர்.

அதுபோல பவானிசாகர் அருகே நரிக் குறவருக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலத்தை முன்னறிவிப்பு இன்றி ஆக்கிரமித்ததாக பிரதான எதிர்க்கட்சி அரசியல்வாதி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழ்நாடு பழங்குடியினர் சங்க மாவட்ட அமைப்பாளர் எஸ்.மோகன்குமார் கூறியது:

ஈரோடு மாவட்ட பழங்குடியினருக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை குடும்பத்தில் ஏதாவது ஒரு வாரிசுதாரர்களிடம் மட்டும் கையெழுத்துப் பெற்றுவிட்டு மற்றவர்களின் கையெழுத்தை போலியாக போட்டு ஆக்கிரமிக்கும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் பலத்துக்கு சமமாக பழங்குடியினரால் ஈடுகொடுக்க முடியவில்லை.

பழங்குடியினரின் நிலங்களுக்கு பட்டா இல்லாததும், அவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததும் நிலத்தை அபகரிப்பவர்களுக்கு சாதகமாக மாறிவிடுகிறது. இதைத் தடுக்க தனிச்சட்டம் தேவை என்றார் மோகன்குமார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் த.உதயச்சந்திரன் கூறியது:

பழங்குடியினர் இடங்களை வேறு நபர்கள் வாங்குவதைத் தடுக்க போதிய சட்டங்கள் இல்லை. இருப்பினும் நிலத்தை அபகரிப்பது, சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவது போன்ற சம்பவங்களைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

வீரப்பன் காட்டில் களைகட்டும் ரியல் எஸ்டேட் தொழில்

பீ.ஜெபலீன் ஜான் ஆர்.சிவக்குமார் டி.சாம்ராஜ்

ஈரோடு, டிச.5: சந்தன வீரப்பன் காட்டில் ரியல் எஸ்டேட் தொழில் களை கட்டியுள்ளது.

5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 ஆயிரமாக இருந்த ஒரு ஏக்கர் நிலம் இப்போது ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனையாகிறது.

“”உதகை, முதுமலை போல வெகுவிரைவில் இதுவும் சுற்றுலாத்தலமாக விளங்கும். விரைவில் பலமடங்கு விலை உயரும்” -இது ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வைத்துள்ள விளம்பரத் தட்டிகளில் இடம்பெற்றுள்ள வாசகங்கள்.

வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கும் இதுபோன்ற பல்வேறு கவர்ச்சிகர வாசகங்கள் அடங்கிய தட்டிகள் மைசூர் பிரதான சாலைகளில் காணப்படுகின்றன.

தங்கும் விடுதி, ரிசார்ட் போன்றவற்றில் இரு நாள்கள், ஒரு வாரம் என தங்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு, மிதமான குளிர் பிரதேசமான இப் பகுதி மிகவும் பிடித்ததாக மாறி வருகிறது.

சொந்தமாகத் தங்கும் விடுதி கட்டிக்கொண்டால் என்ன? என்ற ஆசை எழும் சுற்றுலாப் பயணிகளை எளிதில் கவர்ந்து விடுகின்றனர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர். தங்கும் விடுதிகள் கட்டுவதற்கு ஏதுவாக 15 சென்ட், 20 சென்ட் எனத் தரம் பிரித்து நிலங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

தாளவாடி, கடம்பூர் பகுதியில் கிட்டத்தட்ட 70 சதவீதம் இடம் பழங்குடியினர் வசமிருந்து கைமாறிவிட்டது என்கின்றனர் பழங்குடியினர் நல போராட்ட அமைப்பினர். இப்போது ஆசனூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது.

இப் பகுதியில் ஒரு சென்ட் இடம் ரூ.18 ஆயிரம் (பிரதான சாலையில் இருந்து 2 கி.மீ. உள்பகுதியில்) முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. கோவை, திருப்பூர் ரியல் எஸ்டேட் நிறுவனங்களே இங்கு பெரும்பாலும் நில விற்பனையில் ஈடுபட்டுள்ளன.

மலைப் பகுதியில் இருக்கும் மக்களிடம் ஆசை வார்த்தை காட்டி மலிவு விலையில் இடத்தை வாங்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், சுற்றுலாப் பயணிகளிடம் விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது.

மலைப்பகுதி மக்களிடம் இருக்கும் நிலங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கைமாற்ற இப் பகுதிகளில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் துணைபோகின்றனர் என்பது பழங்குடியினர் நலப் போராட்ட அமைப்பினரின் பிரதான குற்றச்சாட்டு.

தமிழ்நாடு பழங்குடியின மக்கள் சங்க மாநிலத் தலைவரும், நீதிபதி சதாசிவம் கமிஷன் அறிக்கை வெளிவரக் காரணமாக இருந்தவருமான வி.பி.குணசேகரன் கூறியது:

விற்பனைக்காகக் காத்திருக்கும் மனைகள்.

தாளவாடி, கடம்பூர் பகுதியில் கிட்டத்தட்ட 70 சதவீதம் இடம் பழங்குடியினர் வசமிருந்து கைமாறிவிட்டது என்கின்றனர் பழங்குடியினர் நல போராட்ட அமைப்பினர். இப்போது ஆசனூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது.

மலைப்பகுதி மக்களின் நிலத்தை, சமவெளி மக்கள் ஆக்கிரமிப்பதால் பழங்குடியினரின் உரிமை, வேலைவாய்ப்பு பறிபோகிறது. தாளவாடி, கடம்பூர், ஆசனூர் பகுதியில்தான் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடைபெற்று வந்தது. இப்போது பர்கூர் மலைப் பகுதியையும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் குறிவைத்துவிட்டனர்.

பிகார், மத்தியப்பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் பழங்குடியின நிலங்களை பிறர் ஆக்கிரமிப்பதைத் தடுக்க தனிச்சட்டம் உள்ளது. இதுபோன்ற சட்டம் தமிழகத்திலும் தேவை. 1996-ல் அப்போதைய வனத்துறை அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர் செய்த பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார் குணசேகரன்.

இது குறித்து மாநில வனத்துறை வாரிய உறுப்பினரும், மாவட்ட கெüரவ வனஉயிரின காப்பாளருமான ப.கந்தசாமி கூறியது:

தென்னிந்தியாவிலேயே அதிகமாக சத்தியமங்கல வனத்தில்தான் யானைகள், புலிகள், காட்டுமாடுகள், கடமான், புள்ளிமான், கரடி உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள், பல்வேறு ரக பறவைகள் காணப்படுகின்றன. சத்தி வன அழிவுக்குக் காரணமே ரிசார்ட்கள் மற்றும் தங்கும் விடுதிகள்தான். மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் வனவிலங்கள் எண்ணிக்கை குறையத் துவங்கிவிட்டது. வனப் பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்றுவது தவறான நடவடிக்கை. வனப்பரப்பு குறைவது மனித இன அழிவுக்கு துவக்கமாக மாறிவிடும் என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் இதற்குத் தீர்வாக இருக்கும் என்றார் கந்தசாமி.

சமவெளிப் பகுதிகளை வளைத்துப்போட்டு நிலத்துக்கு செயற்கை விலையேற்றத்தை ஏற்படுத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் அடுத்த இலக்கு, மலைப் பகுதியாக மாறியுள்ளது. பழங்குடியினர் மட்டுமன்றி வன உயிரினத்தையும் காப்பாற்ற இதுபோன்ற செயல்களை தடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

Posted in abuse, Acres, ADMK, Agriculture, AIADMK, Assets, Bargoor, Bargur, barkoor, Don, encroachments, Environment, Erode, Estate, Farming, Farmlands, Forest, Govt, Guesthouses, Jaya, Jeya, JJ, Land, MLA, MP, Natives, Plants, PMK, Politics, Power, Real Estate, Representatives, Resorts, Sandal, Sandalwood, Sathiamangalam, Sathiyamangalam, Sathyamangalam, Sathyamankalam, SC, Sightseeing, smuggler, ST, Tourists, Tours, Travel, Travelers, Trees, Tribals, Village, Villager, villagers, Villages, Woods | Leave a Comment »

Opposition forces adjournment of Madhya Pradesh assembly – Dumper trucks row

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007

மத்தியப் பிரதேச சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைப்பு – முதல்வர் மீது ஊழல் புகார்

போபால், நவ. 28: மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செüகான் பதவி விலக வலியுறுத்தி எதிர்க் கட்சிகள் மூன்றாவது நாளாக மேற்கொண்ட அமளி காரணமாக அவை காலவரையின்றி புதன்கிழமை ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு முதல்வருக்கு எதிராக அவையின் மையப் பகுதியில் திரண்டனர். தனது மனைவி சாதனா சிங்கின் பெயரில் ரூ. 2 கோடி மதிப்புமிக்க 4 டம்பர் ரக லாரிகளை வாங்கியுள்ளார் முதல்வர்.

பதவியை தவறாகப் பயன்படுத்தியே இந்த ரூ. 2 கோடியை அவர் சம்பாதித்துள்ளார். எனவே முதல்வர் செüகான் தலைமையிலான பாஜக அரசு ராஜிநாமா செய்யவேண்டும் என்று வலியுறுத்திய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், டம்பர் லாரி படங்களை கையில் ஏந்தியபடி திரண்டுவந்தனர்.

அமைதி காக்கும்படி அவைத் தலைவர் ஈஸ்வர் தாஸ் ரொகானி கோரிக்கை விடுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மசியவில்லை. பதிலடியாக ஆளும் கட்சி உறுப்பினர்களும் கூச்சல் குழப்பத்தில் இறங்கினர்.

கூச்சல், குழப்பத்துக்கு மத்தியில் ரூ. 2144.41 கோடிக்கான துணை பட்ஜெட் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. மூன்று மசோதாக்கள் மீது விவாதம் நடத்த முடியாமல் போனது. இந்நிலையில் 5 நிமிடத்தில் கேள்வி நேரம் முடிந்தது.

பின்னர், அவையை சுமுகமாக நடத்த எதிர்க் கட்சிகள் ஒத்துழைக்கவில்லை என்ற தீர்மானத்தை அவைத் தலைவர் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் ஆட்சேபம் எழுந்தபோதும் குரல் வாக்கெடுப்பில் அவையில் அது நிறைவேறியது.

இதையடுத்து அவையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் ரொகானி அறிவித்தார்.

பேரவையின் குளிர் காலக் கூட்டத் தொடர் நவம்பர் 26-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 7 வரை கூட்டத்தை நடத்துவது என்று ஏற்கெனவே முடிவாகி உள்ளது.

இதனிடையே, முதல்வர் செüகான் பேரவைக்கு வெளியே மகாத்மா காந்தி சிலையின் அருகே நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தன் மீதான புகார்கள் ஆதாரமற்றது என்றார். துணிவிருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரலாமே. விவாதம் நடத்துவதை எதிர்க்கட்சிகள் தவிர்க்கின்றன என்றார்.

காந்தி சிலையை தண்ணீர் ஊற்றி கழுவிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள்: இதனிடையே, ஊழலில் சிக்கியுள்ள முதல்வர், காந்தி சிலை அருகே செல்லத் தகுதியில்லை. சிலை அருகே அவர் சென்றதால் அதன் புனிதத்தன்மை கெட்டுவிட்டது என்று கூறி காங்கிரஸ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் எதிர்க் கட்சித் தலைவர் ஜமுனா தேவி தலைமையில் சிலையை கழுவி விட்டனர்.

பின்னர் ஆளுநர் பல்ராம் ஜாக்கரைச் சந்தித்து முதல்வர் மீதான ஊழல் புகார் தொடர்பாக மனு கொடுத்தனர்.

Posted in adjournment, Assembly, Bribery, Bribes, Budget, Chouhan, Corruption, Dumper, FIR, kickbacks, Law, Lokayukta, Madhya Pradesh, Madyapradesh, MP, Opposition, Order, Police, Sadhana, Sadhana Singh, Shivraj Singh Chouhan, ShivrajSingh Chouhan, Spouse, Trucks, Wife | Leave a Comment »

Convict to MLAs – State of BJP and Gujarat Police & Politics nexus

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2007

தினமலர்

காக்கி சட்டையிலிருந்து கதருக்கு மாறும் குஜராத் மாஜி போலீசார்

ஆமதாபாத் :குஜராத்தில், காக்கி சீருடையில் இருந்து அரசியலுக்கு தாவுவது சாதாரணமாக நடந்து வருகிறது. பணியில் இருந்து சஸ்பெண்ட் செய் யப்படும் போலீசார், அரசியலில் வெகு கைத் தேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

தற்போதைய நிலையில், லிம்டி தொகுதியின் காங்., எம்.எல்.ஏ., பவன் பர்வாத், ஆரம்பத்தில் ஆமதாபாத் நகரில் ஏட்டாக பணியாற்றியவர். ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட் டார். இந்த போலீஸ் வேலை யே வேண்டாம் என்று அரசியலுக்கு வந்தவர், எம்.எல். ஏ.,வாகிவிட்டார்.

இவர் மட்டுமின்றி, இவர் போல ஏராளமானோர், போலீஸ் துறையில் இருந்து அரசியலுக்கு தாவி உள்ளனர்.கடந்த 1990ம் ஆண்டுகளின் துவக்கத்தில், ஆமதாபாத் நகர் சோலா சாலையில் பா.ஜ., தொண்டர் ஒருவர் கொலை வழக்கில் சிக்கினார் பர்வாத்.

இதற்கு நேரடி சாட்சி பா.ஜ.,வின் இன்னொரு இளம் தொண்டர் அமித் ஷா. ஆனால், கோர்ட்டில் சாட்சியத்தை மாற்றி கூறியதால், பர்வாத் இன்னொரு தண்டனையில் இருந்து தப்பினார்.

இப்போது அமித் ஷாவின் நிலை என்ன தெரியுமா?

அவர் தான் மாநிலத்தின் உள் துறை இணை அமைச்சர்.ஆமதாபாத்தை சேர்ந்த இன்னொரு கான்ஸ்டபிள், ஜெதா பர்வாத்தும், சிறை உடைப்பு குற்றத்துக்காக, கைதியை தப்ப விட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட் டார். இப்போது தோடா மாவட்டம், ஷெகிரா தொகுதியின் பா.ஜ., எம்.எல்.ஏ., இவர். இப்போது, இந்த பட்டியலில் இன்னும் பலர் சேர்ந்துள்ளனர்.

சூரத் மாவட்டம் கொரியாசி தொகுதியில் பா.ஜ., டிக்கெட் கேட்டிருப்பவர் சி.ஆர்.பட்டேல். சூரத் நகரில் கான்ஸ்டபிளாக வேலை பார்த்தவர் இவர். இவர் மீதும் ஏராளமான ஊழல் புகார்கள் குவிந்ததால், 1991ம் ஆண்டில் அரசியலுக்கு தாவிவிட்டார். நாளிதழ் நடத்தி பிரபலமடைந்தார். வைரவிழா கூட்டுறவு வங்கியில் ரூ. 58 கோடி கடன் வாங்கி, அதை திரும்ப செலுத்தாததால், ஒன்பது மாதம் சிறை தண்டனையும் அனுபவித்த சி.ஆர்.பட்டேல், இப்போது பா.ஜ.,வில் ஒரு முக்கியப் பிரமுகர்.

இவர் முதல்வர் நரேந்திரமோடி தீவிர ஆதரவாளர். அவரை இன்னொரு சத்திரபதி சிவாஜியாக வர்ணிப்பவர். மோடிக்காக பல இயக்கங்களை நடத்தியவர். சமீபத்தில் கூட ஜென்மாஷ்டமியின் போது, மோடியை கடவுள் கிருஷ்ணர் போல சித்தரித்து இளைஞர்களுக்கு 12 ஆயிரம் டி ஷர்ட்கள் வழங்கியவர். இதனால், தனக்கு உறுதியாக, “சீட்’ கிடைக்கும் என்று சி.ஆர்.பட்டேல் நம்புகிறார்.

குட்ச் தொகுதிக்கு பா.ஜ.,வில் சீட் கேட்டு இருப்பவர் ஜயேஷ் காத்வி. இவரும் முன்னாள் கான்ஸ்டபிள் தான். சூரத்தில் வேலை பார்த்துவிட்டு, சாராய வழக்கு காரணமாக, குட்ச்சுக்கு தண்டனை இடம் மாற்றம் பெற்றவர். அரசியலுக்கு தாவிவிட்டதால், இனி போலீஸ் வேலையில் நீடிக்க அவர் விரும்பவில்லை.

ஆமதாபாத் கிரைம் பிராஞ்சில் வேலை பார்த்த பி.கே.ஜடேஜாவும் குட்ச் தொகுதி, “சீட்’டுக்கு விண்ணப்பித்திருக்கிறார். ஆனால், இவர் தன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்ற அடிப்படையிலும், குஜராத் பூகம்பத்தின் போது, புதையுண்ட பகுதிகளில் பொருட்களை திருட முயன்ற பலரையும் கைது செய்து சிறையில் அடைத்தவர் இவர்.

இதேபோல, எந்த தண்டனையும் பெறாத, சூரத் நகர உதவி போலீஸ் கமிஷனர் எம்.கே.பும்படியாவும், சபர்காந்தா மாவட்டத்தில் பா.ஜ.,வில், “சீட்’ கேட்டிருக்கிறார். தனக்கு எப்படியும், “சீட்’ கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தனது போலீஸ் பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டார்.

மறைந்த சிமன்பாய் பட்டேலின் நம்பிக்கைக்குரிய ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.எம்.ஷா, தனது சொந்த தொகுதியான தான்துகாவில் காங்., “சீட்’டுக்கு விண்ணப்பித்திருக்கிறார்.

Posted in Ahmedabad, Allegations, Arrest, Belief, BJP, Bribe, Bribery, Campaign, Congress, Convict, Correctional Forces, Corrupt, Corruption, crimes, Elections, Employment, escape, Exploit, Finance, God, Gujarat, Hinduism, Hindutva, inmates, Jail, job, Justice, kickbacks, Kutch, Law, Loans, MLA, Modi, MP, Narendhra Modi, Narendra Modi, Narenthira Modi, Narenthra Modi, nexus, Order, Police, Politics, Polls, Power, Prison, Prisoners, Religion, resign, resignation, Retired, Scams, State, Surat, Suspend, Suspension, Vote, voters | Leave a Comment »

Bill to hike pension for former MLAs, MLCs: Increase in Tamil Nadu Legislature spending

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

நமது கடன்…

ஏனைய ஆட்சிமுறைகளில் உள்ள குறைபாடுகளைக் களைவதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை நோக்கமே. ஆனால், நமது இந்தியாவில் மட்டும் மக்களாட்சி என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்பதுதான் நடைமுறை வழக்கமாக இருக்கிறது.

தமிழக சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டமான மழைக்காலக் கூட்டத் தொடர் நான்கே நாள்கள் நடந்து மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு நாள்களில் பல தீர்மானங்களும், சட்டமுன் வரைவுகளும் தாக்கல் செய்யப்பட்டன என்பது உண்மைதான். ஆனால், சப்தமே இல்லாமல் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு ரூ. 3,500 ஓய்வூதியம் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டியது அவசியம். இனிமேல், சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்த, இருக்கும், இருக்கப்போகிற அனைத்து உறுப்பினர்களின் வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ. 3,500 வழங்கப்படும் என்றும்

இதன் மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 32.4 லட்சம் செலவாகும் என்றும் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். ஓய்வூதியம் பெற நமது சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசு ஊழியர்களா என்று கேட்காதீர்கள். அரசு ஊழியர்கள் நிரந்தரப் பணியாளர்கள். ஆனால் நமது மக்கள் பிரதிநிதிகள், தேர்தலுக்குத் தேர்தல் மக்களின் அங்கீகாரம் பெற்றாக வேண்டிய தாற்காலிகப் பிரதிநிதிகள் மட்டுமே.

இன்னொரு விஷயம். ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது தொகுதி மக்களுக்கு முறையாகச் சேவை செய்யாமல், மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தவர்களுக்கும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்கிற முறையில், மக்களின் வரிப்பணத்திலிருந்து ஓய்வூதியம் உண்டு. இனிமேல், அவரது வாரிசுகளுக்கும் ஓய்வூதியம் தரப்படும். தவறுதலாகத் தவறான நபர் ஒருவரைத் தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்குத் தரப்படும் தண்டனை இது. இதுதான் இந்திய மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவமே!

இது ஏதோ தமிழகத்தில் மட்டும்தான் நடைபெறும் விஷயம் என்று நினைத்து விடாதீர்கள். இந்திய நாடாளுமன்றத்தில் தொடங்கி, அத்தனை மாநில சட்டப்பேரவைகளிலும் நடைபெறும் ஜனநாயகக் கூத்தின் ஓர் அங்கம்தான் இந்த அநியாயம். ஒரு சாதாரண இந்தியக் குடிமகனின் சராசரி வருமானத்தைவிட நாற்பது மடங்கு அதிக சம்பளம் பெறுகிறார் நமது நாடாளுமன்ற உறுப்பினர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நமது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு, அவர்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாள்களில் மட்டும், போக்குவரத்துச் செலவுக்காக 15 ரூபாயும், இதர செலவுகளுக்காக 30 ரூபாயும் படியாகத் தரப்பட்டது. இப்போது நிலைமை என்ன தெரியுமா?

அவரது செலவுகளுக்காக மாதம் ரூ. 20,000 தரப்படுவதுடன், அவர் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்குபெறும் ஒவ்வொரு நாளும் தினசரி பயணப்படியாக ரூ. 500 பெறுகிறார். இப்போது, தொகுதிப் பயணப்படி என்று மாதம் ஒன்றிற்கு ரூ. 5,000 தரப்படுகிறது. இலவச தொலைபேசி வசதி, சென்னையில் இருப்பிட வசதி, மருத்துவ வசதி என்று ஏராளமான வசதிகள் போதாதென்று ரூ. 7,000 ஓய்வூதியம் வேறு.

அமெரிக்காவில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் ஊதிய உயர்வு, மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டு, மக்களின் ஒப்புதலுக்குப் பிறகுதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம், தங்களுக்குத் தாங்களே தங்களது சம்பளத்தையும் வசதிகளையும் மக்கள் பிரதிநிதிகள் அதிகரித்துக் கொள்ளும் ஜனநாயக விரோதப் போக்கு தடுக்கப்படுகிறது. மக்களுக்குச் சேவை செய்ய எந்தவொரு அரசியல்வாதியையும் வாக்காளர்கள் விரும்பி அழைக்கவில்லை. தாங்களாகவே மக்களுக்குச் சேவை செய்ய விழைகிறோம் என்று கூறித் தேர்தலில் நிற்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தங்களுக்குத் தாங்களே தங்களது வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள். இது எந்த ஜனநாயகத்திற்கு உட்பட்ட விஷயம்?

மக்களாட்சியில் உண்மையிலேயே மக்களுக்குத் தொண்டாற்றிய தலைவர்களையும் பிரதிநிதிகளையும் மக்கள்தான் கௌரவிக்க வேண்டும். அவர்களது தேவைகளை மக்கள் வலியச் சென்று பூர்த்தி செய்ய வேண்டும். மக்கள் மீது நம்பிக்கை இல்லாத மக்கள் பிரதிநிதிகள்தான், மக்களின் வரிப்பணத்திலிருந்து தங்களது வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும், தங்களது வருங்காலத்திற்கு உத்தரவாதம் தேடிக் கொள்ளவும் விழைவார்கள் என்று நாம் சொன்னால், இவர்கள் ஏற்றுக்கொள்ளவா போகிறார்கள்? நமது கடன் வாக்களித்து ஓய்வதே!

————————————————————————————————————————————————-

மக்கள் பிரதிநிதிகள்…?

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, நீதிமன்ற வரம்பு தொடர்பாக தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் நல்லதொரு கருத்தை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் பொறுப்பில்லாமல் நடந்துகொள்பவர்களை குறிப்பாக, அவையில் ரகளையில் ஈடுபடும் உறுப்பினர்களை, மக்களே திரும்பி அழைக்கும் முறையைக் கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார். பணிகளைச் சரியாகச் செய்யாவிட்டால் அவர்களுக்கு ஊதியம் வழங்கக்கூடாது என்று கருத்தையும் ஏற்கெனவே அவர் கூறியிருந்தார்.

சாட்டர்ஜியின் கருத்துக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது. நாடாளுமன்றக் கூட்டத்துக்கு ஒரு நிமிடத்திற்கு ரூ. 24,500 செலவாகின்றது. நாடாளுமன்றத்தின் அரிய நேரத்தையும் மக்களின் வரிப்பணத்தையும் பாழடிக்கும் உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 1997-ல் விடுதலைப் பொன்விழா மக்களவை சிறப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2006-ம் ஆண்டு அறிக்கையின்படி, 20 சதவிகித உறுப்பினர்களே விவாதத்தில் ஓரளவு ஆர்வம் காட்டுகின்றனர். ஊழல் குற்றச்சாட்டால் நட்வர்சிங் பதவி விலகிய சில நாள்களிலேயே, 11 உறுப்பினர்கள் அவையில் கேள்வி எழுப்புவதற்கு லஞ்சம் வாங்கியதை ஆஜ்தக் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது.

1951-ல் எச்.ஜி. முடகல் இம்மாதிரி கேள்வி கேட்க தொழிலதிபர்களிடம் லஞ்சம் பெற்றார். நாடாளுமன்றக் குழு அதை உறுதி செய்த பின்னர், நேரு அவரை அவையை விட்டு நீக்கக் கோரி தீர்மானம் முன்மொழிந்தார். பிரிட்டனில் 1990-ல் பணத்திற்காக அவையில் கேள்வி எழுப்பியதில் ஊழல் ஏற்பட்டது என்று புகார் எழுந்தது.

அமெரிக்காவில் செனட் சபைத் தலைவராக இருந்த நிவேட்ஞ்ரிச் என்பவர் தவறான தகவல் அளித்து பயணப்படியைப் பெற்றார் என்பதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

மக்கள் பிரதிநிதிகள்மீது குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தவண்ணம் உள்ளன. 1998-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது ஜே.எம்.எம். உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்க லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவாகியது. ஆனால் லஞ்சம் வாங்கிய எம்.பி.க்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட லஞ்ச விவகாரம்பற்றி பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லையென்று சட்டத்தில் வழிவகை உள்ளதாக நீதிபதி பரூச்சா கூறியுள்ளார்.

சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்த, உறுப்பினர்களைத் திரும்ப அழைக்கும்முறை நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது. 1970-ல் ஜெயபிரகாஷ் நாராயணன், திரும்ப அழைக்கும் உரிமையை மக்களுக்கு அளிக்க வேண்டுமென்று தாம் ஏற்படுத்திய புரட்சியின் மூலம் அறைகூவல் விடுத்தார். அதுபோன்று, எம்.ஜி.ஆர். தம்முடைய இயக்கத்தைத் தொடங்கியபொழுது, திரும்பஅழைக்கும் உரிமையை வலியுறுத்தினார்.

கலிபோர்னியா மாநிலத்தில் ஆளுநர் பொறுப்பிலிருந்த கிரே டேவிஸ் திரும்ப அழைக்கப்பட்டார். 82 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஜே.பி. ரேசர் என்பாரும் தன்னுடைய பதவிக் காலத்திற்கு முன்பே ஆளுநர் பதவியிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டார் என்ற முன்னுதாரணங்கள் இருக்கின்றன. சோவியத் அரசியல்சட்டம்~1936~பிரிவு 106-ல் திரும்பஅழைக்கும் உரிமை மக்களுக்கு உண்டு என்று நீதிபதி கிருஷ்ணய்யர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவையில், உறுப்பினர்கள் பொறுப்பான விவாதங்களில் ஈடுபடாமல், கைகலப்பு, ரகளை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத்தான் காண்கிறோம். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் சுமார் ரூ. 2 லட்சம் வரை பல இனங்களில் அரசு வழங்குகிறது.

மாத ஊதியம், தொகுதிப் படி, அலுவலகப் படி, உதவியாளர் ஊதியம், அவையில் பங்கேற்புப் படி, தில்லி வீடு, மின்சாரம், தொலைபேசி, விமானப் பயணம், ரயில் பாஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உறுப்பினர்களுக்குக் கிடைக்கின்றன.

கடந்த 55 ஆண்டுகளில் 90 முறை நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய ஊதியங்கள், படிகள், ஓய்வூதியங்களை உயர்த்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் குரல் கொடுத்து தங்கள் உரிமைகளைச் சாதித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், தங்களுடைய ஊதியம், படிகளை உயர்த்துவதில் மட்டும் ஒட்டுமொத்த ஒற்றுமை எப்பொழுதும் இருந்து வந்துள்ளது. ராஜிவ் சுக்லா போன்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள “ஆபீஸ் ஆஃப் பிராஃபிட்’ என்று சொல்லக்கூடிய “பொறுப்பின் பயன்களை’ப் பெறும் தடைகளை நீக்கவும் முயற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பு சபை அமைக்கப்பட்டபொழுது உறுப்பினர்களுக்கு வாடகை, செலவுகள் சேர்த்து ஒரு நாளைக்கு ரூ. 45 படியாக வழங்கப்பட்டது. அக்காலத்தில் எளிமையாக காந்திய லட்சியங்களை மனதில்கொண்டு மக்கள் பிரதிநிதிகள் கடமையை ஆற்றினர்.

1955-ல் நாடாளுமன்றத்திற்கு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகை லட்சக்கணக்கில்தான் இருந்தது. இன்றைக்கு நாடாளுமன்றத்தின் மொத்த செலவு ரூ. 300 கோடிக்கு மேலாக உள்ளது. இதுபோக உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி என்று ரூ. 2,000 கோடி வரை தனியாகவும் ஒதுக்கப்படுகின்றது.

அரசியலமைப்பு சட்டத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஆரம்பத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 2003-ல் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பினர் ஒரு நாள் பதவியில் இருந்தாலே ஓய்வூதியம் கிடைக்கும்படி மாற்றங்கள் செய்யப்பட்டன. பிரிட்டனில் ஓர் எம்.பி.க்கு ஓர் அறை உள்ள அலுவலகம் மட்டும் வழங்கப்படுகின்றது. இந்தியாவில் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஊதியங்களையும் தங்களுக்குச் சேரவேண்டிய படிகளையும் தாங்களே நிர்ணயித்துக் கொள்கின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியங்களை நிர்ணயிக்க சுயாட்சி தன்மை கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று சாட்டர்ஜி கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. பிரிட்டன், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்ற குழுக்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் சலுகைகளை நிர்ணயிக்கின்றன. பொதுவாழ்வுக்கு வந்தவர்கள் அர்ப்பணிப்புடன் பணிசெய்வதை விட்டுவிட்டு, எவருக்கும் கிடைக்காத சலுகைகளைப் பெறுவது தேவைதானா என்று யோசிக்க வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் நடக்கின்ற அமளி, உறுப்பினர்களின் பொறுப்பின்மை ஆகியவற்றைப் பார்க்கின்றபொழுது, இந்திய ஜனநாயகம் எங்கே செல்கின்றது என்ற கவலை ஏற்படுகிறது. மாநில சட்டப்பேரவைகளிலும் பல தருணங்களில் இதுபோன்ற நிலையைக் காணமுடிகிறது.

நரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது, தொகுதி மேம்பாட்டுத் திட்டம் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தை நரசிம்மராவ் அறிவித்தபொழுது, சோம்நாத் சாட்டர்ஜி இந்தத் திட்டத்தை எதிர்த்தார். மற்ற அனைத்துக் கட்சிகளும் இத்திட்டத்தை வரவேற்றன. கணக்காயர் அறிக்கையும் இந்தத் திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியது.

இத்திட்டத்தை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஈ.எஸ். வெங்கட்ராமய்யா அரசியலமைப்பு சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறினார். கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு “கோட்டா’ வழங்குவதை நீதிமன்றங்களும் கண்டித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினருக்கு ரூ. 2 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்குவது நியாயமற்றதாகும்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிதியைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்ற நிதியிலிருந்துதான் மத்திய அரசு இந்த நிதியை வழங்குகிறது என்பது பல மாநில அரசுகளுக்குத் தெரியாது. மாநில சுயாட்சிக்குக் குரல்கொடுக்கின்றவர்களும் இதைத் தட்டிக் கேட்கவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், மக்களின் திருப்திக்கேற்ற வகையில் செயல்படவில்லை எனில், திரும்பஅழைக்கும் முறை சட்டமாக்கப்பட வேண்டும். அவர்களை விசாரணைக்கு உட்படுத்துகின்ற லோக்பால் மசோதாவை 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றத் தயக்கம் காட்டுவது வேடிக்கைதான்.

தகுதியற்றவர்களை மக்கள் பிரதிநிதிகளாக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும். கட்சித்தலைவர்கள், தங்கள் குடும்ப ஆதிக்கம், தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டும்வகையில், வேட்பாளர்களைத் தேர்வு செய்வது ஜனநாயகப் படுகொலைக்குச் சமம்!

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

———————————————————————————————————————————————————–

பயனுள்ளதாகட்டும் நாடாளுமன்றம்!

பி. சக்திவேல், சமூக சிந்தனையாளர்

நாடாளுமன்றத்தின் பணி சட்டம் இயற்றுவதுடன் முடிந்துவிடுவதில்லை.

மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கவும், தேசத்தின் முக்கியப் பிரச்னைகளை விவாதிப்பதற்கும், முடிவு எடுப்பதற்கும் உள்ள ஓர் அமைப்புதான் நாடாளுமன்றம்.

சமீபகாலமாக உறுப்பினர்களின் கடும் அமளியாலும், விவாதங்கள் முறையாக நடைபெறாததாலும் நாட்டு மக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே, கடும் விமர்சனத்திற்கு நாடாளுமன்றம் உள்ளாகியுள்ளது.

மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகளைப் பற்றி விவாதிக்காமலேயே நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர்கள் முன்னதாகவே முடிவடைவது நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேள்விக்குரியதாக்கியுள்ளது.

நாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் கடும் அமளியால் மக்களவை மொத்தம் 41 மணி நேரம் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் முடக்கப்பட்டது. இது மொத்த கூட்டத்தொடரில் 40 சதவிகித நேரமாகும்.

இதேபோல, மாநிலங்களவை 42 மணி நேரம், அதாவது 49 சதவிகித நேரம் முடக்கப்பட்டது. சென்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் (பிப்ரவரி-மார்ச்) மக்களவை 73 மணிநேரம் எவ்வித அலுவல்களும் நடைபெறாமல் உறுப்பினர்களின் கூச்சல், அமளி காரணமாக முடங்கியது.

இவ்வாறு அமளியால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாகும்.

பிரதமர் தன்னுடைய அமைச்சரவை சகாக்களை அவையில் அறிமுகம் செய்வதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை, அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்கள் சரியாக விவாதிக்கப்படவில்லை, பல மசோதாக்கள் எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது, கேள்வி நேரம் மற்றும் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் அர்த்தமற்றதாகிவிட்டன. இவை அனைத்தும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளது.

ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் குடியரசுத் தலைவர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறுவதில் தடைகள் உருவாகின்றன.

மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜியால் அவையில் உரை நிகழ்த்த இயலவில்லை. “”மக்களவைத் தலைவர் பேசும் போதும் நீங்கள் பேசுகின்றீர்கள், அமளி துமளியில் ஈடுபடுகின்றீர்கள். இது இப்போது வியாதியாகவே பரவிவிட்டது” என்று வருத்தப்பட்டுக் கூறும் அளவுக்கு அமளி ஏற்பட்டுள்ளது. அவை நிகழ்ச்சிகளை நடத்தவிடாமல் தடுப்பது என்ற நடைமுறையால், எதிர்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்ன ஆகும் என்ற கேள்வி அனைவரின் மனதில் எழுந்துள்ளது.

நம் நாட்டில், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் முதல் பொதுத் தேர்தல் 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்பொழுது ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றம் அதிக நேரம் அதனுடைய அலுவல்களுக்காகவே செலவிட்டது. இதன் வாயிலாக சமூக வளர்ச்சிக்காகவும் மக்களாட்சித் தத்துவத்தை மேம்படுத்துவதற்காகவும் நாடாளுமன்றம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் தழைத்தோங்கியது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற்றன. இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பெரும் பங்காற்றினர்.

ஒவ்வொரு முறை பொதுத் தேர்தல் நடத்துவதற்கும் அரசு கோடிக்கணக்கில் பணத்தைச் செலவிடுகிறது. கடந்த 14-வது மக்களவைத் தேர்தலுக்கு அரசு செலவிட்ட தொகை சுமார் ரூ. 1,300 கோடியாகும். நாடாளுமன்றம் செயல்பட ஒரு நிமிடத்திற்கு அரசு சுமார் ரூ. 34,500 செலவு செய்கிறது. ஒரு மணி நேரத்திற்கு ரூ. 21 லட்சமும், ஒரு நாள் நாடாளுமன்றம் செயல்பட சுமார் ரூ. ஒன்றரை கோடியும் செலவாகிறது. மொத்தத்தில், ஒரு கூட்டத்தொடர் நடத்துவதற்கு ரூ. 250 கோடி செலவாகிறது.

உண்மையாக, ஆரோக்கியமான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றால் மக்களுடைய வரிப்பணம் வீணாகாது. ஆனால் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்தோமானால் நாடாளுமன்றத்தின் பொன்னான நேரம், பணம் மற்றும் மக்களுடைய நம்பிக்கைகள் வீணாகிக் கொண்டிருப்பதை அறிந்துகொள்ளலாம்.

நாடாளுமன்ற அமர்வுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதும் மிகவும் கவலை அளிக்கக்கூடிய மற்றொரு விஷயமாகும். கடந்த காலங்களில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 125 முறை நாடாளுமன்றத்தின் அமர்வுகள் நடைபெற்றன. ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் அமர்வுகள் 70 ஆக குறைந்துவிட்டன. இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் நடைபெற்ற அமர்வுகளில் மிகவும் குறைந்த அமர்வுகளாகும். குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 அமர்வுகளாவது நடைபெற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்புகளாகும்.

நாடாளுமன்ற அமர்வுகள் அதிக அளவில் நடைபெற்றால்தான் மசோதாக்களை முறையாக அறிமுகம் செய்து விவாதிக்க முடியும். மேலும் கேள்வி நேரங்கள் சரியாகப் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் அரசை நெறிப்படுத்த வாய்ப்புகள் உருவாகும்.

நாடாளுமன்றத்தின் அலுவல்கள் நடைபெறவில்லை என்றாலோ அல்லது அவை முடக்கப்பட்டாலோ உறுப்பினர்களுக்கு தினசரி சலுகைகள் மற்றும் தினசரி படிகள் வழங்கப்படக்கூடாது என்று மக்களவைத் தலைவர் யோசனை தெரிவித்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் ஒரு மனதாக இந்த யோசனையை நிராகரித்துவிட்டன.

1949 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் நாள் வி.ஐ. முனுசாமி என்பவரால் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி உறுப்பினர்களின் தினப்படியை 45-லிருந்து 40 ரூபாயாகக் குறைக்க வேண்டும். அதற்கான காரணம், “”நாட்டு மக்கள் வறுமையில் உள்ளபோது உறுப்பினர்களுக்கு அதிக சலுகைகளை அளிக்கக் கூடாது. எனவே, இதைக் கருத்தில்கொள்ளும்போது 5 ரூபாய் என்பது ஒரு மிகச்சிறிய தியாகம்தான். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நாடாளுமன்றத்தின் ஒரு மிகச்சிறிய பங்களிப்புதான் இது” என்றார் முனுசாமி.

இந்தத் தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். இதன்படி 5 ரூபாய் குறைக்கப்பட்டு தினப்படி 40 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு வரை இவ்வாறு வழங்கப்பட்டதை இத்தருணத்தில் நிச்சயமாக குடிமக்கள் அனைவரும் நினைவுகொள்ள வேண்டியது அவசியமாகும். இந்தச் சம்பவம் எவ்வாறு நாடாளுமன்றமும் அதன் உறுப்பினர்களும் சமூக, பொருளாதார சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட்டார்கள் என்பதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும்.

1954 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் சலுகைகளில் 27 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர்களுக்கு ஊதியம் மற்றும் சலுகைகளை உயர்த்த வேண்டுமென்றால் குரல் வாக்கெடுப்பின் மூலமாக மிகவும் எளிதாக நிறைவேற்றப்படுகிறது.

அதேவேளையில் அரசு அலுவலர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றால் ஊதியக் குழு நியமிக்கப்பட்டு பல்வேறு விவாதங்கள் மற்றும் திருத்தங்களோடுதான் உயர்த்தப்படுகிறது. இதற்கு குறைந்தபட்சம் சில ஆண்டுகளாவது ஆகிறது. எனவே இதையும் மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

எனவே கூச்சல், குழப்பம் போன்றவற்றின் மூலம் அவை நடவடிக்கைகளை முடக்கி மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

நமது நாட்டின் 26 சதவிகித மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், பல கோடிகள் செலவு செய்து ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றம் முறையாகச் செயல்படாமல் முடக்கப்படுவது சரியல்ல. இதனால் விரயமாகும் வரிப்பணம் தேசிய பேரிழப்பாகும்.

ஏற்கெனவே பல்வேறு விரும்பத்தகாத நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் அதன் மதிப்பையும் கண்ணியத்தையும் இழந்து காணப்படுகிறது. இத்தகைய போக்கு கட்டாயமாக மாற வேண்டும்.

ஆரோக்கியமான விவாதம், அவை நடவடிக்கைகளில் அதிக உறுப்பினர்கள் கலந்துகொள்ளுதல், நாடாளுமன்றத்தை முறையாகச் செயல்பட அனுமதித்தல், நாட்டு மக்களுக்கு குறிப்பாக, இளைய தலைமுறைக்கு உதாரணமாகத் திகழ்வது போன்ற கண்ணியத்தைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இதன்மூலம்தான் நாடாளுமன்ற ஜனநாயகத் தத்துவம் முழுமை அடையும். நாடாளுமன்றமும் பயனுள்ளதாகும்.

இதைச் செய்யத் தவறினால் மக்களவைத் தலைவர் கூறியதுபோல “”இந்த அமைப்பை எந்த சக்தியாலும் ஏன், ராணுவத்தாலும் கூட காப்பாற்ற முடியாது.”

Posted in 5, ADMK, Allocation, Allowances, Anbalagan, Anbazagan, Anbazhagan, Appraisal, Assembly, Attendance, Bribery, Bribes, Budget, Cell, Checks, Chennai, Citizen, City, Congress, Cops, Corruption, Council, DA, Decorative, Decorum, Democracy, Disqualify, DMK, Economy, Election, Elections, Employed, Employment, Exceptions, Expenses, Exploit, Exploitation, Finance, Freedom, Funds, Government, Governor, Govt, Hike, Impeach, Income, Independence, Issues, IT, JJ, Jobs, kickbacks, KK, Legislature, Lifelong, Limits, Lok Ayuktha, Lok Saba, Lok Sabha, Lokpal, LokSaba, LokSabha, Madras, Metro, MGR, MLA, MLC, MP, MuKa, NGO, Office, Operations, parliament, pension, people, Performance, Phones, Polls, Power, Query, Questions, Raise, Rajya Saba, Rajya Sabha, Rajyasaba, Rajyasabha, Recall, Representation, Representative, Representatives, responsibility, Retirement, Rich, Role, Ruler, Salary, Senate, service, Sincere, Sincerity, Somnath, State, Suspend, TamilNadu, Tax, Telephone, Terms, Transport, Verification, Verify, Vote, voters, Walkouts, Woes, Years | Leave a Comment »

Tehelka on Gujarat riots: Neerja Chowdhury – Sting, Expose, Revelations

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007

தெஹல்கா புலனாய்வுக்கு அப்பால்…!

நீரஜா சௌத்ரி

குஜராத்தில் 2002-ல் நடந்த கலவரங்கள் குறித்து ஏற்கெனவே இருந்துவந்த சந்தேகங்களை தெஹல்காவின் ரகசியப் புலனாய்வு நடவடிக்கை நிரூபித்திருப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கு அப்பாலும் பல விவாதங்களை எழுப்பியிருக்கிறது.

கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து தன்னெழுச்சியாக நடைபெற்றதே அந்தக் கலவரம் என்று பாரதிய ஜனதா கட்சி கூறிவந்ததை அது பொய்யாக்கியிருக்கிறது. பஜ்ரங்க தளம், விசுவ ஹிந்து பரிஷத், பாஜக ஆகியவற்றின் உறுப்பினர்கள் திட்டமிட்டு அரங்கேற்றியதே அப் படுகொலைகள் என்பதை அந்த ரகசியப் புலனாய்வு டேப்புகள் அம்பலப்படுத்தி இருக்கின்றன.

அதில் மிக முக்கியமானது என்னவென்றால், அந்தக் குற்றச்செயல்களைச் செய்தவர்களுக்கு முதல்வர் நரேந்திர மோடியின் ஊக்குவிப்பும் ஆதரவும் இருந்தது என்பதை அம்பலப்படுத்தி இருப்பதுதான். அக் குற்றங்களைச் செய்தவர்களே அவற்றை ஒப்புக்கொண்டு இருப்பது இதுதான் முதல் முறை.

தன்னை ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஹிந்துத்துவ ஆதரவாளர் என்று கூறிக்கொண்டு சென்ற, அன்னியரான தெஹல்கா நிருபரிடம் இத்தனை பேர் தாம் அக் குற்றங்களில் சம்பந்தப்பட்டு இருப்பதைக் கூறியிருப்பதிலிருந்தே, அவர்களை யாரும் தொட முடியாது என்ற தைரியம் அவர்களுக்கு இருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஒருவர் தமது இயக்கத்தின் எவ்வளவு தீவிர ஆதரவாளராக இருந்தபோதிலும், எந்த அரசியல்வாதியும் அரசியல் கட்சி ஊழியர்களும் தமது குற்றங்களைப் பற்றி அவ்வளவு சாதாரணமாக அவரிடம் கூறிவிட மாட்டார்கள். ஆனால், தெஹல்கா நிருபரிடம் தமது செயல்களைப் பற்றிப் பெருமையாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள். “முஸ்லிம் வெறுப்பு’ என்னும் செயல்திட்டத்தின் மூலமாகத்தான் குஜராத்தில் அரசியல் வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள் என்று தெஹல்கா நிருபர் கூறியிருப்பதை நிரூபிப்பதாக அது இருக்கிறது.

மோடிக்கு “விசா’ அனுமதி வழங்குவதற்கு அமெரிக்கா மறுத்த பிறகும், மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்த பிறகும்தான் தனது பாதையை அவர் மாற்றிக்கொண்டிருக்கிறார். அதற்குப் பிறகு, “வளர்ச்சி’யில் அக்கறை கொண்டவராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் மோடி. ஆனால், கடந்த காலச் செயல்கள் அவரைத் துரத்திக்கொண்டே இருக்கின்றன. அதனால் ஏற்பட்ட விரக்தி வெளிப்பாடுதான், கரண் தாப்பருக்கு அளித்துக்கொண்டு இருந்த பேட்டியிலிருந்து அவர் பாதியில் வெளியேறிய செயல்.

மோடியின் சொந்தக் கட்சியோ அவரைக் கண்டிக்க விரும்பவுமில்லை; கட்சியால் கண்டிக்க முடியவுமில்லை. 2002-ல் குஜராத்தில் நடந்த சம்பவங்களால் வேதனைக்கு உள்ளான அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், “ராஜ தர்ம’த்தைக் கடைப்பிடிக்காததற்காக மோடியை லேசாகக் கடிந்துகொண்டார். ஆனால் கோவாவில் அவர் இருந்தபோது, கட்சியிலிருந்து அவருக்கு வந்த கடுமையான நெருக்குதல்கள் காரணமாக, தனது நிலையை அவசரமாக மாற்றிக்கொண்டுவிட்டார் அவர்.

குஜராத் கலவரங்களுக்குப் பிறகுதான் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மோடி என்று கூறி, தெஹல்கா ரகசியப் புலனாய்வை மறுக்கின்றனர் பாஜக தலைவர்கள். அப்படிப் பார்த்தால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள “கறைபடிந்த’ அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கேட்டிருக்கவே கூடாது. எத்தனையோ குற்றங்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி.யான சகாபுதீனைப் போன்ற ஒருவர், தேர்தலில் வெற்றிபெற்றுவிட்ட ஒரே காரணத்தால் புனிதராக ஆகிவிடுவாரா? கடந்த காலக் குற்றமோ, நிகழ்காலக் குற்றமோ எதுவாக இருந்தாலும், தேர்தல் வெற்றியானது அதிலிருந்து ஒருவருக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாது.

காங்கிரஸ் கட்சிக்கும் தெஹல்காவுக்கும் இடையே ரகசிய கூட்டு இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறது பாஜக. இவ்வாறு விட்டேத்தியாகக் கூறியிருப்பதிலிருந்தே மோடி மீது எவ்வித நடவடிக்கை எடுக்கும் திட்டமும் அக் கட்சிக்கு இல்லை என்பது தெளிவாகிவிட்டது.

என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறது காங்கிரஸ். மோடிக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அவரது அனுமதி தேவை; தெஹல்கா ரகசியப் புலனாய்வின் அம்பலங்கள் குறித்து சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டுமென்றாலும் மோடியின் ஒப்புதல் தேவை.

உண்மை என்னவென்றால், குஜராத்தில் இந்துக்களையும் முஸ்லிம்களையும் மத அடிப்படையில் இருகூறாக அணிதிரளச் செய்துவிடக்கூடிய எதையும் செய்துவிடக் கூடாது என்ற கவலையில் தத்தளிக்கிறது காங்கிரஸ். ஏனென்றால், அது மீண்டும் மோடிக்குச் சாதகமாகப் போய்விடும்.

மத்தியில் 2004-ல் இருந்து ஆட்சியில் இருக்கிறது காங்கிரஸ். ஆனால், 2002 கலவரத்தின்போது, அக் கட்சியின் முன்னாள் எம்.பி.யான ஈசான் ஜாப்ரி உயிருடன் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றிகூட உருப்படியான எந்த நடவடிக்கையையும் அது எடுக்கவில்லை. “வளர்ச்சி’ என்னும் கோஷத்தை மோடி சுவீகரித்துக்கொள்ள விட்டுவிட்டது காங்கிரஸ். பயங்கரவாத அச்சுறுத்தலால் குஜராத்தி இந்து மத்தியதர மக்களிடம் ஏற்பட்டிருக்கும் அச்சத்தைப் பயன்படுத்தி, கடந்த 4 ஆண்டுகளில், தமது தீவிர இந்துத்துவா அடித்தளத்தை விரிவுபடுத்தியதுடன், இன்றைய உலகமயமாக்கச் சூழலில் முன்னேற வேண்டும், வெற்றிபெற வேண்டும் என்னும் அவர்களது ஆசைகளை நிறைவேற்றும் வகையில், “வளமை மிக்க குஜராத்’ என்ற கோஷத்தைக் கையில் எடுத்துக்கொண்டுவிட்டார் மோடி. வெளிநாடுவாழ் இந்தியர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கும் இந்தப் பிரிவினர்தான் அவருக்கு இருக்கும் ஆதரவின் அடிப்படையாகும்.

மோடியை எதிர்கொள்ள சரியான திட்டமும் உறுதியும் இல்லாமல் திணறிக்கொண்டிருக்கிறது காங்கிரஸ். பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர், முஸ்லிம்கள் ஆகியவை ஓரணியில் திரட்டும் ஒரு திட்டத்தை ஏற்கெனவே காங்கிரஸ் வகுத்தது. அதோடு, ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரையும் அணிதிரட்டியிருந்தால், மோடிக்குச் சிறந்த மாற்று சக்தியாக அது உருவாகி இருக்கக்கூடும்.

குஜராத் தேர்தல் களத்தில் மாயாவதி போன்றோரும் நுழைந்துவிட்டதால், காங்கிரஸ் இன்னும் தாமதித்துக்கொண்டு இருக்க முடியாது.

தெஹல்கா அம்பலப்படுத்தி இருக்கும் விஷயங்கள், இந்தியாவின் மற்ற பகுதியில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்திலிருந்து குஜராத்தில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் வேறாகவும் இருக்கக்கூடும்.

குஜராத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸýக்கு மிக முக்கியம். இடதுசாரிகளின் ஆதரவை உதறிவிட்டு மக்களவைக்கு இடைத்தேர்தலைச் சந்திக்கலாமா என்பது குறித்து குஜராத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் முடிவுசெய்யக்கூடும்.

அதிகாரத்தைக் கைப்பற்ற மோடி கையாண்டதைப்போல, ஒரு குறிப்பிட்ட பிரிவினரை, ஒரு குறிப்பிட்ட சமூகத்தவரை திட்டமிட்டுக் குறிவைத்துத் தாக்குவதன் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு, தண்டனையிலிருந்தும் தப்பித்துக்கொள்ளும் வழியை மற்ற மாநில முதல்வர்களும் கையாளத் தொடங்கினால், அதை எப்படி தடுப்பது? மொத்த மக்களில் 50 சதவிகிதத்தினர்தான் வாக்களிக்க வருகின்றனர். அதில் 35%-லிருந்து 40% வாக்குகள் கிடைத்தாலே வெற்றிபெற்றுவிட முடிகிறது. ஏதாவது ஓர் உணர்ச்சிகரமான பிரச்னையை முன்வைத்து, மொத்த வாக்காளர்களில் 20 சதவிகிதத்துக்குக் குறைவானவர்களைக் கவர்ந்துவிட்டாலே வெற்றிபெற்றுவிட முடியும் என்ற நிலை.

விசாரணையில் இருக்கும் பல்வேறு வழக்குகளில் சாட்சி கூறவிருக்கும் 200 பேரின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. அது மட்டுமல்ல; இந்திய அரசின் அதிகாரம், அரசியல் சட்டத்தின் புனிதத்தன்மை, கடமைப் பொறுப்பு, குடிமக்களைக் காப்பதில் சட்டத்தின் பங்கு… என, ஜனநாயகம் அர்த்தமுள்ளதாக இருப்பதற்கு அவசியமான அனைத்துமே கேள்விக்குறியாகி இருக்கிறது.

தெஹல்கா புலனாய்வு ஒளிப்பதிவுகளைப் பார்த்தவர்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் நடைபெற்ற புனிதப் போர்கள் நினைவுக்கு வந்திருக்கும். ஆனால், இது 2002-ல் இந்தியாவில் நடந்திருக்கிறது. எனினும், அச் செயல்களில் ஈடுபட்டோர் அதைப் பெருமையாகப் பேசிக்கொண்டு, தண்டனை அனுபவிக்காமல் இன்னும் பகிரங்கமாக நடமாடிக்கொண்டிருக்கின்றனர். தெஹல்கா புலனாய்வு அம்பலப்படுத்தி இருக்கும் விஷயங்கள் குறித்து, குறைந்தபட்சம் விரிவான விசாரணையாவது நடத்தப்பட வேண்டும்.

—————————————————————————————————————–

மோடி வெற்றியின் எதிரொலிகள்

நீரஜா சௌத்ரி

குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், யாராலும் தோற்கடிக்க முடியாதவராக உருவெடுத்துவிட்டார் நரேந்திர மோடி.

பாரதிய ஜனதா கட்சியில் அவர் மீது அதிருப்தி நிலவியபோதிலும், ஆர்எஸ்எஸ், விஎச்பி ஆகியவற்றில் ஒரு பகுதியினர் அவருக்கு எதிராகப் பணியாற்றியபோதிலும், குஜராத்தின் சாதுக்களில் ஒரு பிரிவினர் அவரை எதிர்த்தபோதிலும் அவை அனைத்தையும் சமாளித்து, அதோடு அதிகாரத்திலிருக்கும் கட்சிக்கு எதிராக நிலவக்கூடிய இயல்பான அதிருப்தியையும் முறியடித்து மகத்தான வெற்றிபெற்றிருக்கிறார் நரேந்திர மோடி.

2002-ல் இருந்த ஆதரவை ஏறக்குறைய தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் அவர். கட்சியின் செல்வாக்கையும் கடந்து மாபெரும் தலைவராகிவிட்டார் மோடி. கடந்த 12 ஆண்டுகளில் அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் பாஜகவுக்குக் கிடைத்துவந்த 45 சதவீத மக்களின் ஆதரவை மோடி என்ற தலைவருக்கான வாக்குகளாக மாற்றிவிட்டார் அவர்.

1971-ல் காங்கிரஸ் கட்சியின் சிண்டிகேட் பிரிவுத் தலைவர்களைப் புறந்தள்ளி, துர்க்கையாக உருவான இந்திரா காந்தியை நினைவூட்டுகிறது 2007-ம் ஆண்டின் குஜராத். 2000-மாவது ஆண்டு பிகார் தேர்தலில் அனைத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி, லாலு பிரசாத் பெற்ற வெற்றியையும் ஒத்திருக்கிறது மோடியின் வெற்றி.

மோடியேகூட இந்த வெற்றியை எதிர்பார்த்திருக்க மாட்டோரோ என்று தோன்றுகிறது. தில்லியில் நடந்த தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டபோது அவரது நடவடிக்கைகள் அவ்வளவு உற்சாகமாகக் காணப்படவில்லை என்று அவரைச் சந்தித்தவர்கள் கூறினர். “”எனது கட்சி எனக்கு எதிராகப் போரிட்டபோதிலும் என்னால் முடிந்த அளவுக்கு உழைத்திருக்கிறேன்” என்று, தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு 3 நாள்களுக்குமுன் மத்திய அமைச்சர் ஒருவரிடம் அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.

குஜராத் தேர்தல் முடிவுகளின் விளைவுகள் காந்திநகர், வடோதரா, ராஜ்கோட், மேஹ்சானாவையும் கடந்து எதிரொலிக்கும் என்பது தேர்தல் பிரசாரம் தொடங்கிய நாளில் இருந்தே மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுவந்தது. இந்தத் தேர்தலானது இரு பிரதான கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், மோடி மற்றும் எல்.கே. அத்வானி ஆகிய தனிப்பட்ட இரு தலைவர்களுக்கும் முக்கியமானதாக அமைந்துவிட்டது.

மக்களவைக்கு இடைத்தேர்தலைச் சந்திக்கலாமா என்னும் காங்கிரஸ் கட்சியின் யோசனையைக் கிடப்பில் போடச் செய்துவிட்டது, குஜராத்தில் அக் கட்சிக்குக் கிடைத்த தோல்வி.

மனந்தளர்ந்து போயிருந்த பாஜக தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கக்கூடியதாக குஜராத் வெற்றி அமைந்திருக்கும் நேரத்தில், தில்லியில் தனது ஆட்சியைப் பாதியில் முடிவுக்குக் கொண்டுவரும் அறிவீனத்தில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் ஈடுபடாது. காங்கிரஸýக்கு மற்றொரு அபாய எச்சரிக்கை மாயாவதியிடமிருந்து வந்துகொண்டிருக்கிறது. குஜராத்தில் அதை காங்கிரஸ் சந்திக்க வேண்டியிருந்தது. விரைவிலேயே கர்நாடகத்திலும் தில்லியிலும் தேர்தல் வரவிருக்கிறது. அங்கும் காங்கிரஸýக்குத் தொல்லையாகவே அவர் இருக்கப் போகிறார்.

குஜராத் தேர்தல் முடிவின் எதிரொலி பக்கத்து மாநிலமான மகாராஷ்டிரத்திலும் கொஞ்சம் கேட்கக்கூடும். அங்கு கட்சி அணிகளிடையே கட்டுக்கோப்புக் குலைந்திருந்தபோதிலும், பாஜகவும் சிவசேனையும் ஒன்றுபட்டு உழைக்கும்பட்சத்தில் குஜராத் வெற்றியானது அவற்றுக்குப் பெருமளவில் கைகொடுக்கக்கூடும்.

நரேந்திர மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறார் என்ற தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வந்துகொண்டிருந்த அதே நேரத்தில் மும்பையில் சிவசேனைத் தலைவர் பால்தாக்கரேவைச் சந்திக்கத் திட்டமிட்டுக்கொண்டிருந்தார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார். இதற்குப் பல வகையான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

மறுபுறம், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டின் கதியும் மிகவும் சந்தேகத்துக்கு இடமாகிவிட்டது. 2008-ல் தேர்தல் வரக்கூடும் என தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று இடதுசாரிகள் ஏற்கெனவே அறிவித்துவிட்டனர். காங்கிரஸ் கட்சியும் அணுசக்தி உடன்பாட்டுக்காக ஆட்சியைத் தியாகம் செய்யும் அளவுக்குச் செல்வதற்கு வாய்ப்பில்லை. எனவே, எந்தவிதமான உருப்படியான முடிவுக்கும் வராமல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் காங்கிரஸýம் இடதுசாரிகளும் பேசிக்கொண்டே காலம் கடத்துவர் என எதிர்பார்க்கலாம்.

அமெரிக்காவில் ஆட்சியைப் பிடித்தால், தாங்களும் இந்திய- அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை ஆதரிப்போம் என்று ஜனநாயகக் கட்சியும் அறிவித்திருக்கிறது. எனவே, ஜார்ஜ் புஷ்-மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்திலேயே அந்த உடன்பாடு செயலுக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

குஜராத்தில் பாஜக பெற்ற வெற்றியானது, அண்மைக் காலமாக உரசல் போக்கில் இருந்த இடதுசாரிகளையும் காங்கிரûஸயும் கைகோத்துக்கொள்ளச் செய்துவிடக்கூடும். பலம் மிக்க காங்கிரûஸவிட பலவீனமான காங்கிரஸýடன் அரசியல் உறவு வைத்துக்கொள்ளவே இடதுசாரிகள் விரும்பக்கூடும். ஆனால், இப்போது பாஜக புத்துயிர் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகிவரும் சூழலில், காங்கிரûஸ மேலும் பலவீனப்படுத்த இடதுசாரிகள் விரும்ப மாட்டார்கள். ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி என அழைக்கப்படும் 3-வது அணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அளிக்கும் ஆதரவிலும் குஜராத் தேர்தல் முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

ஹிந்துத்துவாவின் புதிய வெற்றிச் சின்னமாக நரேந்திர மோடி அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்திருப்பதானது, மத்தியில் அத்வானியின் தலைமைப் பதவிக்கு ஒரு சவாலாக விளங்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது. உடனடியாகவோ, 2009-ம் ஆண்டிலோ அத்தகைய நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

ஹிந்துத்துவா, பொருளாதார வளர்ச்சி, பலமும் ஆதிக்கமும் மிக்க தலைமை ஆகியவற்றைக் குழைத்து மோடி உருவாக்கி இருக்கும் புதிய அரசியல் பாதையை, பின்பற்ற வேண்டிய முன்னுதாரணமாக பாஜக வரித்துக்கொள்ளக்கூடும். எனினும் குஜராத்துக்கு வெளியே தனக்கு ஆதரவைத் திரட்டுவது மோடிக்கு சவாலாகவே இருக்கும். அடுத்த தலைமுறைத் தலைவர்களில் அருண் ஜேட்லியைத் தவிர அவரை ஆதரிப்போர் யாருமில்லை.

குஜராத்தில் அசைக்க முடியாத வெற்றியை மோடி பெற்றிருப்பதால் அவருக்கு எதிராக யாரும் இப்போதைக்குக் குரல் எழுப்ப மாட்டார்கள். தேர்தல் வெற்றிக்கு முன்பேகூட, கேசுபாய் படேல், கான்ஷிராம் ராணா போன்ற தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு கட்சித் தலைமையை நோட்டீஸ் அனுப்ப வைத்தவர் மோடி.

ஹிந்துத்துவாவின் வெற்றிச் சின்னமாக மோடி உருவெடுத்திருப்பதால், ஆர்எஸ்எஸ்ஸýம் விஎச்பியும்கூட அவருடன் சமாதானம் செய்துகொள்ள முன்வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படத் தக்க தலைவராக உருவாவதும், பாஜக கூட்டணிக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளத் தக்க தலைவராக உருவாவதும்தான் இப்போது நரேந்திர மோடிக்கு முன்னுள்ள சவால்கள். அது அவ்வளவு எளிதானதல்ல. அதனால்தான் தனது 3-வது பதவிக் காலத்தில் பலதரப்பட்டோரையும் அரவணைத்துக் கொள்ளக்கூடிய, நிதானப் போக்கு கொண்ட, அதாவது “காங்கிரஸ் முகம்’ கொண்ட தலைவராகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ள அவர் முயற்சி செய்யக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தேசிய அரசியலில் குதிக்க சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பார் மோடி. 2009-ல் மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கிடைக்கும்பட்சத்தில் அதை தேசிய அரசியலில் நுழைவதற்கான வாய்ப்பாக மோடி பயன்படுத்திக்கொள்ளக்கூடும்.

எனவே, இப்போதைக்கு தமக்கு குஜராத்தில் கிடைத்திருக்கும் ஆதரவை உறுதிப்படுத்திக்கொள்ளும் முயற்சியிலும் அதன் முலம் குஜராத்திலிருந்து தனது ஆதரவாளர்கள் பலர் எம்.பி.க்களாவதை உத்தரவாதப்படுத்திக்கொள்ளும் முயற்சியிலும் அவர் ஈடுபடக்கூடும்.

2004 மக்களவைத் தேர்தலின்போது குஜராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் 92-ல் பாஜகவைவிட கூடுதல் வாக்குகளை காங்கிரஸ் பெற்றிருந்தது. ஆனால், 90 தொகுதிகளில்தான் காங்கிரûஸவிட கூடுதல் வாக்குகளை பாஜக பெற்றிருந்தது. ஆனால், அப்போது நரேந்திர மோடி அரசின் மீது அந்த மாநில ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினர் மத்தியில் நிலவிய அதிருப்தியைப் பயன்படுத்திக்கொள்ள காங்கிரஸ் தவறிவிட்டது. ஆனால், அத் தேர்தல் முடிவுகளின் அறிகுறிகளை உணர்ந்துகொண்ட மோடியோ, அதைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வெற்றிக் கனியைப் பறித்துவிட்டார்.

அண்மையில் பாஜகவால், பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் எல்.கே. அத்வானியைப் பொருத்தவரை, குஜராத் வெற்றியானது இருபுறமும் கூர்மையான வாளுக்கு ஒப்பாகும். அத் தேர்தலில் மோடி தோற்றிருந்தால், அத்வானியின் தலைமையை ஆதரிப்போரின் கரங்களைப் பலப்படுத்துவதாக அது இருந்திருக்கும்.

மோடியின் மகத்தான வெற்றியானது, அவரை அத்வானி சார்ந்திருக்க வேண்டிய நிலையை உருவாக்கக்கூடும். நடந்து முடிந்த தேர்தலில் மோடியின் விருப்பப்படிதான் கட்சி வேட்பாளர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டது. 2009 மக்களவைத் தேர்தலிலும் தனது விருப்பப்படியே தேர்தல் டிக்கெட் வழங்கப்படுவதை அவர் உறுதிசெய்துவிடுவார்.

பாரதிய ஜனதா கட்சிக்கும்கூட மோடியின் வெற்றியானது கசப்பும் இனிப்பும் கலந்த மாத்திரை போன்றுதான் இருக்கிறது. அடுத்த ஆண்டு சட்ட மன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் ஹிந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த, சோர்வுற்றிருந்த கட்சித் தொண்டர்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது குஜராத் தேர்தல் வெற்றி.

அதே நேரத்தில், தனியொருவரின் தலைமைக்குப் பதில் கூட்டுத் தலைமையை வலியுறுத்திவரும் கட்சிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் நரேந்திர மோடியின் எழுச்சியானது, ஏற்றுக்கொண்டாக வேண்டிய புதிய பரிமாணமாக அமைந்துவிட்டது.

சுருக்கமாக கூறவேண்டுமானால் இந்திய அரசியல் வானில் ஒரு புதிய மக்கள் தலைவர் குஜராத்தில் இருந்து உருவாகி வருகிறார் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.


மோடியின் வெற்றியும்- சோவின் துள்ளலும்!Viduthalai Editorial

குஜராத்தில் நரேந்திர மோடியின் தலைமையில் பா.ஜ.க., ஆட்சி அமைந்துவிட்டது. நரேந்திர மோடி தான் வெற்றிக்குக் காரணம். நரேந்திர மோடியின் நேர்மையும், நல்லாட்சியும் தான் இந்த வெற்றிக்குக் காரணம்.
சோனியா தாக்குதல், பிரதமர் பிரச்சாரம், வெளியேறிய பா.ஜ.க.,வினர், டெகல்கா விவகாரம் பத்திரிகைகள் எதிர்ப்பு, டெலிவிஷன்கள் கண்டனம், ஜாதிப் பிளவு – முயற்சி இவற்றை எல்லாம் மீறி மோடி வெற்றி பெற்றுள்ளார் என்று அட்டைப் படத்திலிருந்து தலையங்கம் வரை தீட்டி திருவாளர் சோ ராமசாமி துள்ளிக் குதிக்கிறார்.
நீரோ மன்னன் என்று இந்திய உச்சநீதிமன்றம் எந்த அர்த்தத்தில் விமர்சனம் செய்தது என்பதுபற்றி எல்லாம் அவருக்குக் கவலையில்லை. ஒரு தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதால், அவர் ஆட்சியைப் பயன்படுத்தி சிறு பான்மை மக்களை நரவேட்டையாடிய கொடுமை எல்லாம் சரியானதுதான் என்று திருவாளர் சோ. ராமசாமி சொல்ல வருகிறார் போலும்.

இதன்மூலம், சிறுபான்மை மக்களைப் படுகொலை செய்வது சரிதான் என்ற உற்சாகத்தை இந்து வெறியர் களுக்கு அவர் ஊட்ட முனைகிறார் என்று கருதலாமா?

இந்தியாவில், மதத்தின் அடிப்படையில் வாக்கு வங்கி களைப் பிரித்துவிட்டால் என்ன அக்கிரமம், கொடூரமான – காட்டுவிலங்காண்டித்தனமான முறையில் செயல்பட்டாலும், வெற்றி கிடைக்கும் – அந்த வழியை நரேந்திர மோடி பின் பற்றி வெற்றி பெற்றுவிட்டார். அந்த நிலை இந்தியா முழு வதும் புயல் வேகத்தில் பரவட்டும்; ஒவ்வொரு மாநிலத்திலும் மதக் கலவரத்தை நடத்தினால்தான் வாக்கு வங்கிகளை இரு கூறுகளாகப் பிரித்து குளிர்காயலாம் என்று திருவாளர் சோ எழுதுவதை நிதானமாகக் கவனிக்கத் தவறக்கூடாது. தொடக்க முதலே நரேந்திர மோடியின் பக்கம் நின்று அவருக்குத் தொடர்ந்து சோ பராக்குக் கூவுவது இந்த எண்ணத்தின் அடிப்படையில்தான்.

பா.ஜ.க.,வின் செயற் குழுவில் அவர் பெயர் இல்லை என்ற போது கடுமையாக பா.ஜ.க.,வின் தலைமையைச் சாடி தலையங்கம் தீட்டிய பார்ப்பனர் இவர் என்பதை நினைவுகூர்ந்தால், இவரும் இன்னொரு வகை யிலான நரவேட்டை நரேந்திர மோடியின் மறுபதிப்புதான் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

டெகல்கா படம் பிடித்து அதிகாரப்பூர்வமாக ஆதாரப்பூர்வ மாக வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததே – அவற்றை மோடியால் மறுக்க முடிந்ததா? மக்கள் வாக்களித்து முடிவு செய்கின்ற தீர்ப்பா இது? சொந்த கட்சி சட்டமன்ற உறுப் பினர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தனரே – அவை எல்லாம் இல்லாமல் போய்விடுமா?

ஆட்சியின் சிறப்பைப்பற்றியெல்லாம் ஆகா ஓகோ என்று எழுதித் தள்ளியிருக்கிறார். கடந்த அய்ந்தாண்டுகளில் 500 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது இந்த மோடி ஆளும் குஜராத்தில்தானே?

அய்ந்து ஆண்டுகாலம் அகதிகள் முகாம்களில் சிறு பான்மையினர் இருக்கின்றனர் என்றால், இதன் பொருள் என்ன? பாசிச ஆட்சி என்றுதானே கருதவேண்டும்.

குஜராத் மாநிலத்தில் சாலைகளும், விளக்குகளும், வசதி களும் இந்துக்கள் வாழும் தெருக்களில் மட்டும்தான்; சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகள் எந்த நிலையில் உள்ளன என்பதை தொலைக்காட்சிகளே படம் எடுத்துக் காட்டினவே – மறுக்க முடியுமா?

படுகொலைகளையும், கொள்ளைகளையும் நியாயப் படுத்த தேர்தல் ஒன்றுதான் சரியான வழி – நீதிமன்ற முறை என்ற ஒன்று கூடாது என்று கூறப் போகிறதா இந்தக் கூட்டம்?

இதற்கு முன் தேர்தல் வெற்றி பெற்றவர்களையும், கட்சி களையும் – நரேந்திர மோடி வெற்றியின் கண்ணோட்டத்தில் சோ விமர்சித்ததுண்டா?

அடிப்படை ஆர்.எஸ்.எஸ்.காரரான ஒரு பார்ப்பனரிட மிருந்து வேறு வகையாக எதிர்பார்க்க முடியாதுதான்!

————————————————————————————————————————-
மகேசன் தீர்ப்பு
Dinamani Editorial

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சியையும், இன்னும் சிலருக்கு மகிழ்ச்சியையும், பலருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. முதல்வர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக முதல்வராகிறார் என்பதும், தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதும் சிலரால் ஜீரணிக்க முடியாத விஷயமாக இருந்தாலும், குஜராத் மக்களைப் பொருத்தவரை அவர்களுக்கு ஏற்புடைய தீர்ப்பு என்பதால் வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்.

தீர்ப்பு தவறாகிவிட்டது என்றும், மக்கள் முட்டாள்கள் என்றும் கூறுபவர்கள் மக்களாட்சித் தத்துவத்தில் நம்பிக்கையற்றவர்கள் என்றுதான் கூற வேண்டும். தங்களுக்கு சாதகமான தீர்ப்பு தரப்படும்போது வரவேற்பதும், பாதகமான தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் சரியான அணுகுமுறையாகாது. குஜராத் மக்களின் நன்மதிப்பை நரேந்திர மோடி பெற்றிருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அதைத்தான் இந்தத் தேர்தல் நிரூபித்திருக்கிறது.

ஒருவகையில் பார்த்தால், தமிழகத்தில் ஜெயலலிதாவால் செய்ய முடியாத சாதனையை, குஜராத்தில் நரேந்திர மோடி செய்து காட்டியிருக்கிறார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அத்தனை சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவிய அதிமுக, நடிகர் விஜயகாந்தின் தேமுதிக களத்தில் இறங்காமல் இருந்திருந்தால் ஒருவேளை நரேந்திர மோடி செய்து காட்டியிருக்கும் சாதனையைச் செய்திருக்குமோ என்னவோ?

2004 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, குஜராத்திலுள்ள 180 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 91 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி பாஜகவைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தது. நரேந்திர மோடியின் இறங்கு முகம் தொடங்கிவிட்டது என்று அரசியல் நோக்கர்கள் கணித்தது அதனால்தான். அதே நிலை தொடர்ந்திருந்தால் நிச்சயமாகக் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கும். ஆனால், தனது செல்வாக்குச் சரிவை நரேந்திர மோடி தடுத்து நிறுத்தியது மட்டுமல்ல, மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற முடிந்தது என்றால் அது அரசியலில் ஒரு மிகப்பெரிய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தவகையில் நரேந்திர மோடி என்கிற அரசியல் ராஜதந்திரியைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

நரேந்திர மோடியின் வெற்றிக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவருக்கு நிகரான செல்வாக்குடைய தலைவர் காங்கிரஸ் கட்சியில் இல்லை என்பதும், நரேந்திர மோடியின் நிர்வாகத்தில் குஜராத் மாநிலம் அடைந்த வளர்ச்சியை மக்கள் அங்கீகரிக்கிறார்கள் என்பதும், குஜராத்தியர்களின் சுயமரியாதைக்கு அடையாளமாக நரேந்திர மோடி கருதப்படுகிறார் என்பதும் பொதுவாக எல்லோராலும் சொல்லப்படும் காரணங்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியின் தவறான அணுகுமுறையும், தேர்தல் யுக்திகளும்தான் நரேந்திர மோடியின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணங்கள் என்று சொல்ல வேண்டும்.

தீவிரவாதிகளுக்கு எதிராக நரேந்திர மோடி அரசு எடுத்த நடவடிக்கைகளை, சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் என்பதுபோல காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சித்திரித்ததை, குஜராத்திலுள்ள சிறுபான்மையினரே விரும்பவில்லை என்று தெரிகிறது. சிறுபான்மையினரில் 99 சதவீதம் பேர் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் அல்லர். மற்ற சமுதாயத்தினருடன் இணைந்து வாழ ஆசைப்படுபவர்கள். தங்களுக்குத் தீவிரவாத முலாம் பூசுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், வாக்களிக்காமல் இருந்தவர்கள் ஏராளம் என்று கூறப்படுகிறது.

அது போகட்டும். நரேந்திர மோடியின் வெற்றி தேசிய அளவில் சில நல்ல விஷயங்களுக்கு உதவப் போகிறது. முதலில், நாடாளுமன்றத் தேர்தல் இப்போதைக்கு வராது. இரண்டாவதாக, மன்மோகன் சிங் அரசு தனது அணுசக்தி ஒப்பந்தப் பிடிவாதத்தைத் தளர்த்தி, ஒப்பந்தத்தை ஒத்திப்போட்டுவிடும். மூன்றாவதாக, ஆட்சியைக் கவிழ்த்தால், பாரதிய ஜனதா மீண்டும் பதவிக்கு வந்துவிடுமோ என்கிற பயத்தில், இடதுசாரிகள் அரசை மிரட்ட மாட்டார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம். ஏதோ, ராகுல் காந்தியால் காங்கிரஸ் புத்துயிர் பெற்று மீண்டும் பழைய பலத்தைப் பெற்றுவிடும் என்கிற நப்பாசையும், நரேந்திர மோடியின் தயவால் நைத்துப் போய்விட்டது. உத்தரப் பிரதேசத்திலும் சரி, குஜராத்திலும் சரி அவருக்குக் கூடிய கூட்டம் வேடிக்கை பார்க்கத்தான் வந்ததே தவிர வாக்களிக்க அல்ல என்பது தெளிவாகி விட்டது. இனிமேல், பிரியங்காவை முன்னிறுத்தி வேடிக்கை காட்டுவார்கள் என்று நம்பலாம்.

நரேந்திர மோடியின் வெற்றிக்குப் பின்னால் அவரது உழைப்பும், தன்னம்பிக்கையும் தெரிகிறது. அதற்காக அவரை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும். அதேநேரத்தில், இந்த வெற்றியின் போதைக்கு அவர் அடிமையாகி விடாமல் இருக்க வேண்டும். தான் ஒட்டுமொத்த குஜராத் மக்களின் முதல்வர் என்பதை மறந்துவிடாமல் ஆட்சியில் தொடர சரித்திரத்தின் பக்கங்களை அவர் அடிக்கடி புரட்டிப் பார்ப்பது நல்லது!

————————————————————————————————————————-
குல்தீப் நய்யாரின் கூற்றைக் கவனியுங்கள்

Viduthalai Editorial

பிரபல அரசியல் விமர்சகரான குல்தீப் நய்யார் எழுதி யுள்ள கட்டுரை ஒன்றில் குஜராத் தேர்தல்பற்றி நுணுக்கமாகக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

(1) வகுப்புவாதத்தை எதிர்க்கும் விஷயத்தில் காங்கிரஸ் தன்னுடைய கொள்கையை ஏன் மாற்றிக் கொண்டது என்று தெரியவில்லை.

(2) நரேந்திர மோடிக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் வகுப்புவாதம் மட்டுமே கொள்கையாக இருந்தது – இருக்கிறது.

(3) முசுலிம்களுக்கு எதிராக நபருக்கு நபர் எதிர்பிரச்சாரம் குஜராத்தில் தேர்தலுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டது.

(4) இந்துத்துவா கொள்கையை வைத்து மோடியும், பா.ஜ.க.,வும் இந்துக்கள், முஸ்லிம்கள் என்று இரண்டாக அல்லது மூன்றாக நாட்டைப் பிரித்துக் கொண்டு இருக் கின்றனர்.
ஆர்.எஸ்.எஸின் ஒரு பிரிவான விஸ்வ இந்துபரிசத் கிறித்தவர்களைக் குறி வைக்கிறது. ஒரிசாவில் பி.ஜே.பி., ஆதரவு அரசின் ஒத்துழைப்போடு வி.எச்.பி., செய்து வருவது மிகவும் வெட்கக்கேடானது.

(5) வகுப்புவாதம் மோசமான நிலையில் உள்ளது. சுதந்திரப் போராட்டத்தின் பெருமைகளைச் சீரழித்துக் கொண்டு இருக்கிறது.

(6) வகுப்பு வாதத்தை எதிர்ப்பதை காங்கிரஸ் கைவிட்டுவிடக் கூடாது. ஏனெனில், அது வெற்றி பெற்றால், பாசிசம் உண்டாகும்.

(7) குஜராத் ஒரு மாநிலம் அல்ல; அது இந்துத்துவா என்ற கொள்கையின் அடையாளமாக ஆக்கப்பட்டுவிட்டது. முழுப் பிரச்சாரத்தையும் ஒரே ஒரு பிரச்சினையாக மாற்றிவிட்டனர். நீங்கள் ஒரு இந்து என்றால், எனக்கு வாக்களியுங்கள் என்பதுதான் அது.
அனேகமாக அரசியல் விமர்சகர் குல்தீப் நய்யார் குஜராத் தேர்தலை மட்டுமல்ல; இந்துத்துவாவைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கும் பி.ஜே.பி., அதன் சங் பரிவாரங்களின் நச்சுத் தன்மையின் சாரத்தை அப்படியே பிழிந்து கொடுத்திருக்கிறார் என்பதில் அய்யமில்லை.

இனிமேல் அரசியல் நடத்த விரும்பும் நியாயவாதிகள், முற்போக்குக் கொள்கையாளர்கள், இடதுசாரிகள் யாராக இருந்தாலும் தங்களுக்குள் இருக்கும் வரப்புகளைக் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, பி.ஜே.பி., வகையறாக்களுக்கு எப்படி ஒரு பார்வை – இந்து என்ற பார்வையை மட்டும் மய்யப் படுத்தி மக்கள் மத்தியில் தூபம் போட்டு மதத் தன்மையில் ஒன் றிணைக்க விரும்புகிறார்களோ, அதேபோல, ஒரே நோக்கம், ஒரே பார்வை, ஒரே பாய்ச்சல் இந்த மதவாத – வகுப்புவாத சக்திகளை அவற்றின் ஆணி வேர் வரை சென்று நிர்மூலம் செய்வதில்தான் இருக்க வேண்டும்.

முதன்மையாக தலைமை வகிக்கும் காங்கிரசுக்கு முக்கியமாக இந்த குறிக்கோள் இருக்கவேண்டும்; அதன் அடிப்படையில் மதச் சார்பற்ற சக்திகளைச் சேதாரம் இல்லாமல், வீண் சச்சரவுகளை உண்டாக்கும் பிரச்சினை களை உற்பத்தி செய்யாமல், அணைத்துச் செல்லும் பக்குவத்தோடு பலத்தைப் பெருக்கி, ஒரே மூச்சில் மதவாதத்தை வீழ்த்தித் தள்ளிட வேண்டும்.

குஜராத்தில் இவ்வளவுப் பச்சையாக மதவாதத் தேர்தல் நடந்திருந்தும் தேர்தல் ஆணையம் எப்படி அவற்றை அனுமதித்தது என்றே தெரியவில்லை.

பா.ஜ.க., செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் அதன் பார்வை திரும்பக்கூடும்; அதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். அது பகற்கனவு என்று காட்ட வேண்டியது அம்மாநிலங்களின் கடமையாகும். அடுத்து நடக்க உள்ள நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை மதச் சார்பற்ற சக்திகள் ஒரு சோதனைக் களமாகக் கருதவேண்டும்.

2009 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்த லுக்குமுன் இந்த வகையில் தீவிரமாக திட்டமிட்ட வகையில் அறிவியல் கணிப்போடு செயல்பட்டே தீரவேண்டும்.
சென்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் சில மாநிலங்களில் பா.ஜ.க., வெற்றி பெற்றதுண்டு. அதேநேரத்தில், மக்களவைத் தேர்தலில் மண்ணைக் கவ்வியது என்பதையும் மனதிற்கொண்டு, சோர்வுக்குச் சிறிதும் இடமின்றி, தன்னம்பிக்கையுடன் இடதுசாரிகளும், மதச் சார்பற்ற அணிகளும் ஒன்று சேர்ந்து உழைக்கவேண்டியது அவசியம்.

————————————————————————————————————————-

Posted in Aajtak, abuse, Advani, America, Arrest, Ayodhya, Ayodya, Ayothya, Bajrang, Bharatiya Janata Party, BJP, CBI, Censure, Chowdhry, Chowdhury, CNN, Condemn, Congress, crimes, Criminal, dead, Elections, Expose, Godhra, Gujarat, Hindu, Hinduism, Hindutva, HT, Investigation, Islam, Judges, Justice, Killed, Law, massacre, Media, MLA, Modi, MP, MSM, Muslim, Nanavati, Narendhra, Narendra, Narendra Modi, Narenthira, Neerja, Operation Kalank, Order, Party, pogrom, Police, Polls, Power, Revelations, riots, RSS, Sting, Tehelka, USA, Vajpai, Vajpayee, Vajpayi, VHP, Vidudhalai, Viduthalai, Violence, Visa, Vituthalai | Leave a Comment »