Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Admin’ Category

The case for Mixed member Proportional Representation: Voting and Democracy

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2008

விகிதாசாரப் பிரதிநிதித்துவம்: விவாதம் தேவை

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

ஜனநாயகத்தில் அதிக வாக்குகள் பெற்றவர்தான் மக்கள் பிரதிநிதியாக விளங்க முடியும் என்ற ஒரு கருத்து இருப்பினும், குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் நாடாளுமன்றத்திற்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ அங்கீகாரத்துடன் செல்ல முடியாத நிலை இன்றைக்கு இருக்கிறது. இது ஓர் அரசியல் சூதாட்டம்போல் கருதாமல், மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.

நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் நடக்கின்ற தேர்தலில் ஆளும் முறைமையையும், தேசிய, பன்னாட்டு அளவில் கடமை ஆற்றவும் ஒரு கட்சியைத் தேர்ந்தெடுப்பதுதான் அரசியல் நடைமுறை ஆகும்.

தொகுதி நலன்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும், நாட்டின் முக்கியப் பிரச்னைகள், கொள்கைகள்தான் நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்தில் ஒலிக்கின்றன. தொகுதிகள் என்பது மக்கள் வாக்குகள் அளிக்கும் வசதிக்காக அமைக்கப்பட்டது.

தற்போதுள்ள நடைமுறையில் ஊரில் செல்வாக்கு உள்ள மனிதர் எளிதாக உருவாக்கப்படலாம். பணபலம், ஆள்பலத்தைக் கையில் வைத்து எளிதில் தேர்தலில் வெற்றி பெறலாம். அரசியலில் தனிநபர் செல்வாக்கையும், புகழ்ச்சியையும் விகிதாசார வாக்கு உரிமை மூலம் களையலாம்.

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களுடைய கொள்கைகளைத் தேர்தல் அறிக்கையின் முன் வைத்து விகிதாசார வாக்குரிமை முறையில் தேர்தலில் போட்டியிடலாம்.

மாநில அளவில், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எல்லாத் தொகுதிகளுக்கும் நிற்காமல் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னங்கள்தான் வாக்குச்சீட்டில் இருக்கும். இதில் அந்த தனி நபருடைய பெயரோ, முகமோ இல்லாமல், தேர்தல் காலத்தில் சுவரொட்டியில் கட்சிக் கொள்கை, கட்சியின் தலைமையின் பெயர் மட்டுமே பிரசாரத்தில் இருக்கும். அத்தேர்தலில் போடப்படுகின்ற மக்களுடைய ஓட்டு கொள்கை அடிப்படையில் நிச்சயம் இருக்கும்.

அத்தேர்தலில் மக்கள் அளித்த ஓட்டுகளை மொத்தமாக எண்ணி ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த ஓட்டாகக் கருதி விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். உதாரணத்திற்கு ஒரு கட்சிக்கு 10 நாடாளுமன்றத்திற்கும் 100 சட்டமன்றத்திற்கும் விகிதாசார அடிப்படையில் இடங்கள் கிடைக்கின்றது என்றால், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட கட்சியின் தலைமைக்கு நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு முறையாக 10:100 என்ற விகிதாசாரத்தின்படி உறுப்பினர்களை கட்சித் தலைமை தேர்ந்தெடுத்து அனுப்பும்படி தாக்கீது அனுப்பும். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட கட்சி தலைமை உண்மையான மக்களுடைய பிரதிநிதியாகக் கருதப்படும் நேர்மையானவர்களை 10:100 என்ற அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு எம்.பி., எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுத்த பட்டியலை அனுப்ப வேண்டும். அவ்வாறு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட பதவிக்குத் தகுதியுடையவர் ஆவார்கள்.

பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்து அனுப்புகின்ற பெயர்களை கட்சியின் மேலிடம் முற்றிலும் விவாதித்து, நன்கு பரிசீலனை செய்து அனுப்பப்படும்போது பதவிக்குச் செல்கின்றவர்கள் கட்சிக்கு விசுவாசியாக இருக்கின்ற வகையிலும், தவறு செய்யும் எந்தப் பிரதிநிதியும் கட்சித் தலைமை உடன் அழைக்கும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.

திரும்ப அழைப்பவர்களுக்குப் பதிலாக அதே கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவரை அனுப்புகின்ற வாய்ப்புகள் இருக்க வேண்டும். உறுப்பினர் பதவிக்காலத்தில் காலமானாலும் வீணாக இடைத்தேர்தல் நடத்தாமல் குறிப்பிட்ட கட்சியிலிருந்து வேறு ஒருவரை அனுப்பலாம்.

இதனால் அரசியல் கிரிமினல்கள், ஊழல் பெருச்சாளிகள் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் பொறுப்புக்கு வருவதை எளிதாகத் தடுக்கலாம். அரசியலில் கிரிமினல் குற்றவாளிகள் கலந்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டு மிகவும் பலமாக இருக்கிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட வோரா கமிஷன் அறிக்கையும் இந்திய அரசியலில் கிரிமினல் குற்றவாளிகளால் நாடு புரையோடிவிட்டதென்ற நிலையையும் எடுத்துக் கூறியிருக்கிறது. கட்சி மாறும் தடுப்புச் சட்டத்தைவிட விகிதாசார வாக்குமுறை வந்தால் கட்சி மாறுவதை அறவே ஒழித்துவிட முடியும். தேர்தலில் திறமையானவர்கள் நேர்மையானவர்கள் எளிதாக நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்குச் செல்ல இந்த முறையில் வாய்ப்புகள் இருக்கின்றன.

கட்சிகளின் தேர்தல் காலச் செலவினங்கள், அவசியமற்ற, ஆர்ப்பாட்ட தேர்தல் பிரசாரத்தைக் கட்டுப்படுத்தி, தேர்தல் பிரசாரத்தை எளிமைப்படுத்தலாம். ஓட்டுக்காக பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது. தேர்தல் காலத்தில் கலவரங்கள், மக்களுக்கு ஏற்படும் பீதிகள் இந்த முறையால் தடுக்கப்படலாம்.

1930-ம் ஆண்டு லண்டனில் கூடிய தேர்தல் சீர்திருத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் விகிதாசார வாக்குரிமை பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் இனங்கள் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில் விகிதாசார வாக்குரிமை நடைமுறையில் இருக்கிறது. விகிதாசார வாக்குரிமை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, சுவீடன், இத்தாலி, டாஸ்மேனியா, மால்டர், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இந்த முறை நடைமுறையில் இருக்கிறது.

சுவீடன் நாட்டில் ரிக்ஸ்டேக் தேர்தல் சட்டம் 1920-ன் அடிப்படையில் முனிசிபல் தேர்தல் சட்டம் 1930}ன் அடிப்படையில் விகிதாசார வாக்குரிமை முறை நடைமுறையில் இருக்கிறது.

சுவிட்சர்லாந்தில் பல்வேறு மொழி, தேசிய இனங்கள் இருப்பினும், விகிதாசார வாக்குமுறை அந்நாட்டில் சிறப்பாக 1882-லிருந்து செயல்பட்டு வருகிறது.

விகிதாசார வாக்குரிமை என்பது கணித முறைப்படி வகுப்பதாகும். விகிதாசார வாக்குரிமை ஜனநாயகத்தில் சரியாக இருக்காது என்ற வாதங்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும் இதனால் அமைச்சரவையில் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

1961-ம் ஆண்டு டிசம்பர் 16}ல் கோவையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு 17-ம் தேதி கோவை தேர்தல் சிறப்பு மாநாட்டில் அண்ணாவால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ராம் மனோகர் லோகியாவும் இதையே வலியுறுத்தினார்.

இந்திய சட்டக்கமிஷன் (அளவில்) விகிதாசார முறையைப் பின்பற்றுவதற்கு யோசனை கூறியுள்ளது. ஆயினும், மக்களவைக்கும் மாநிலச் சட்டப் பேரவைகளுக்கும் முற்றிலுமாகப் பட்டியல் முறையில் தேர்தல் நடத்துவதே மிகச் சிறந்தது என்று சட்ட ஆணையம் கருதுகிறது.

ஆனால் நம் நாட்டில் பல அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வெற்றிக்குத் திட்டங்களையும், கொள்கைகளையும் மட்டுமன்றி, வேட்பாளர்களுக்கு உள்ள செல்வாக்கையும் முக்கியமாகக் கருதுவதால் இந்த முறையை ஏற்க மாட்டா. எனவேதான் சட்டக் கமிஷன் நேரடித் தேர்தல் முறை, விகிதாசார முறையை யோசனையாகக் கூறியுள்ளது.

மக்களவைக்கும் சட்டப் பேரவைகளுக்கும் இப்போதுள்ள தேர்தல் முறையை அப்படியே வைத்துக்கொண்டு, இவற்றில் கூடுதலாக 25 சதவீத இடங்களை உருவாக்கி இந்த இடங்களை பொதுத் தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது ஆணையத்தின் யோசனை. பொதுத் தேர்தலின்போது இந்தக் கூடுதல் இடங்களுக்குத் தங்கள் வேட்பாளர்களை அரசியல் கட்சிகளின் தனித்தனிப் பட்டியல்களில் அறிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

ஜெர்மனியில் இருப்பதுபோல 4 சதவீதம் வாக்குகளுக்குக் குறைவாகப் பெறும் கட்சியைச் சட்டமன்றத்தில் இடம் பெறத் தகுதியற்றதாக அறிவிக்கலாம். இதனால் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை வரம்பின்றிப் பெருகுவதை விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மூலம் தடுக்கலாம். படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்சி முறை உருவாகும்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் மக்கள் பங்கெடுப்பு முழுமையாக இருக்கும். ஒரு ஓட்டுகூட சிதறாது. மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.

Posted in abuse, Admin, Administration, Advices, Citizens, Constituency, Cronies, Crony, Democracy, Election, Elections, Electorate, Europe, Federal, Freedom, Govt, Independence, Manifesto, minority, MLA, Money, MP, National, parliament, Party, people, Politics, Polls, Power, Proportion, reforms, Representation, Representatives, Republic, seats, States, Voice, Vote, voters, Votes | Leave a Comment »

Public Administration: Accountant General’s Office: IAAS – Indian Audit and Accounts Service

Posted by Snapjudge மேல் திசெம்பர் 13, 2007

தணிக்கை முறையில் தப்புக் கணக்கு!

இரா. செழியன்

இந்தியா கடைப்பிடித்துவரும் நாடாளுமன்ற முறையின் அடிப்படைக் குறிக்கோள் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய பேரவையின் கட்டுப்பாட்டிற்குட்பட்டு அரசு நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதுதான்.

குறிப்பாக, அரசு நிர்வாகத்துக்கும் அரசால் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்கும் நாடாளுமன்றம் மானியங்களை வழங்குகிறது. அந்த மானியத் தொகைகளைக் குறிப்பிட்ட திட்டங்களுக்காகச் சரியாக, சிக்கனமாக, திறமையாக, அரசு நிறைவேற்றுகிறதா என்பதை நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்குக் குழு, மதிப்பீட்டுக் குழு, பொதுத்துறை நிறுவனக் குழு போன்ற கண்காணிப்பு அமைப்புகள் மூலம் ஆராய்கின்றன.

இந்தவகையில், பொதுத்தணிக்கை அமைப்பு என்பது அரசின் வரவு, செலவுக் கணக்குகளைத் தணிக்கை செய்து, அதிலுள்ள குறைபாடுகள் அடங்கிய அறிக்கைகளை குடியரசுத் தலைவர் மூலம் நாடாளுமன்ற அவைகளின் முன் வைக்கிறது.

இந்த வகையில் தலைமைத் தணிக்கை அதிகாரியின் பணி நாடாளுமன்றத்திற்கு மிகவும் முக்கியமானது. இது குறித்து அரசியல்நிர்ணய சபையில் அம்பேத்கர் கூறியதாவது: “”இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள மிக முக்கியமான அதிகாரி, தணிக்கைக் குழுத் தலைவர் என்பதுதான் என் கருத்து. இன்னும் கவனித்தால், தலைமை நீதிபதிக்கு இருப்பதைவிட அதிகமான அளவு தணிக்கைக்குழுத் தலைவருக்கு முக்கியத்துவம் இருக்கிறது. நீதி அமைப்பு இருப்பதைப் போன்று தணிக்கை அமைப்பும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.”

தணிக்கை அமைப்பின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி நீண்ட விவாதம் அரசியல்நிர்ணய சபையில் 1949, மே மாதத்தில் வந்தது. தணிக்கைத் துறையில் திறமையும், நல்ல பயிற்சியும் உள்ளவர்களைத்தான் தணிக்கை அமைப்பின் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் வந்தபொழுது, “”பொதுவாக மாநிலத்தில் கணக்குத் தணிக்கை அதிகாரியாக ( Accountant General) உள்ளவர்களில் தலைசிறந்து விளங்குபவர்களைத்தான் மத்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரியாக நியமிப்போம்” என்று அரசமைப்புச் சட்ட ஆக்கக்குழுவின் சார்பில் டி.டி. கிருஷ்ணமாச்சாரி உறுதிமொழி தந்தார்.

ஆறாண்டு காலம் அல்லது 65 வயதுவரை இவற்றில் எவை முன்னதாக வருகிறதோ அதுவரையில் பணியாற்ற, தலைமைத் தணிக்கைக் குழுத் தலைவர் நியமிக்கப்படுகிறார். அரசியல் நிர்ணயசபையில் தரப்பட்ட உறுதிமொழியின்படி 1948 தொடங்கி 1966 வரை மூன்று கணக்குத் தணிக்கை அதிகாரிகள், வி. நரஹரி ராவ், ஏ.கே. சந்தா, ஏ.கே. ராய் போன்ற இந்திய தணிக்கைப் பிரிவின் உயர் அதிகாரிகள் தணிக்கை அமைப்புத் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

ஆனால், அதன்பிறகு கடந்த 42 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட 7 தணிக்கைத் தலைவர்களில் ஒரே ஒருவர் மட்டும்தான் இந்திய கணக்குத் தணிக்கை ( IAAS – Indian Audit and Accounts Service) பிரிவில் உயர் அதிகாரியாக இருந்தார். மற்ற 6 தடவைகளில் தணிக்கைக் குழுத் தலைவர் பதவி இந்திய ஆட்சிப் பணியாளர் ( IAS – Indian Administrative Service்) பிரிவைச் சேர்ந்தவர்களுக்குத் தரப்பட்டது. இது சரியானதல்ல.

ஓய்வுபெறும் நிலையிலுள்ள இந்திய ஆட்சிப் பணியாளருக்கு கணக்கு – தணிக்கைத் துறைகளில் எத்தகைய பயிற்சியும், திறமையும் இல்லாத நிலைமையில், இந்திய கணக்குத் தணிக்கைக் குழுவின் தலைவராக நியமிக்கப்படுவது நாடாளுமன்ற முறைக்கு மிகவும் முரண்பட்ட ஒன்றாகும்.

உலகில் ஜனநாயக நடைமுறையைப் பின்பற்றும் முக்கியமான நாடுகளில் எவற்றிலும் தணிக்கை அதிகாரியை அரசு தன் விருப்பப்படி நியமித்துவிட முடியாது.

இங்கிலாந்து நாட்டில், மக்கள்சபையின் பொதுக்கணக்குக் குழுவின் ஆலோசனைப்படிதான் தணிக்கை அமைப்பின் தலைவரை நியமிக்கும் தீர்மானத்தை பிரதமர் மக்கள்சபையின் முன் வைப்பார். எவ்வித விவாதமுமின்றி பேரவை அதை ஏற்றுக்கொள்ளும்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உள்ள பொதுக் கணக்கு – தணிக்கைக் குழுவின் தீர்மானத்தையொட்டி மத்தியத் தணிக்கைக் குழுத் தலைவர் நியமிக்கப்படுகிறார்.

ஜெர்மன் நாட்டின் நாடாளுமன்றத்தில் உள்ள உயர்நிலை தணிக்கை அமைப்பின் ஆலோசனையின் பேரில்தான் தணிக்கைக் குழுவின் தலைவர் – துணைத் தலைவர் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

அமெரிக்காவின் மேல்சபையான செனட்டின் தீர்மானத்தின் மீதுதான் தணிக்கை அமைப்புத் தலைவரை, அந்நாட்டின் அதிபர் நியமிக்க முடியும். அப்படி அதிபர் நியமித்தாலும் தணிக்கைக் குழுத் தலைவரை நீக்கும் அதிகாரம் அவருக்குக் கிடையாது. செனட் சபை நிறைவேற்றுகிற குற்றச்சாட்டுத் தீர்மானப்படிதான் அவரை நீக்க முடியும்.

ஆக, மற்ற நாடுகளில் உள்ள முறையைப் போன்று இந்தியாவிலும் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியை மத்திய அரசு தன்போக்கில் எந்த வகையிலும் நியமிப்பது கூடாது. மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றின் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளடக்கிய பாரபட்சமற்ற ஒரு குழு மூலமாகத்தான் அந்தப் பதவிக்கான தலைவர் நியமிக்கப்பட வேண்டும்.

தலைமைக் கணக்குத் தணிக்கை அமைப்பின் முக்கியத்துவம் பற்றி 1950 ஜூலை 21 ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் பின்வருமாறு கூறினார்: “”இந்தியா ஓர் ஏழைநாடு. இங்குள்ள அரசு மூலம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அளவில் செலவு செய்யப்படுகிற நிலைமையில், ஒவ்வொரு ரூபாயும் எவ்வாறு செலவாகிறது என்பதைக் கவனிக்கும் பொறுப்பு தணிக்கைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி அதிகமாகக் கூறத் தேவையில்லை.”

1954 ஆம் ஆண்டு மத்திய – மாநில அரசுகளின் மொத்த செலவு ரூ. 1,254 கோடி. தற்போதைய நிலவரப்படி, 2005 – 2006-இல் மத்திய – மாநில அரசுகளின் மொத்த செலவின் அளவு ரூ. 15,92,000 கோடி.

அப்போது இருந்ததைவிட 1,270 பங்கு அதிகமான அரசு செலவுகளைத் தற்போது தணிக்கை பார்க்க வேண்டிய பொறுப்பு பொதுத்தணிக்கை அமைப்புக்கு இருக்கிறது. ஆனால், முன்பிருந்த தணிக்கைத் துறையின் திறமையாளர்கள் தற்போது அரசால் தணிக்கைத் தலைவராக நியமிக்கப்படுவதில்லை.

அரசு நிர்வாகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வீணாக்கப்படுகிறது அல்லது ஊழலில் கரைக்கப்படுகிறது என்றால், அவை அங்குள்ள அதிகாரிகளின் நிர்வாகத்தில்தான் நடைபெறுகின்றன.

அப்படிப்பட்ட அதிகாரி ஒருவரை திடீரென்று அவருக்குப் பின்னணியான பயிற்சியும், திறமையும் இல்லாத நிலைமையில், தணிக்கைத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுவிட்டால் அவர் சம்பந்தப்பட்ட அரசின் செலவு ஒழுங்கீனங்களின் மீது அவருடைய தலைமையின்கீழ் வரும் தணிக்கைத்துறையால் எப்படி வெளிப்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியும்?

தணிக்கை முறைக்குக் கட்டுப்பட்டு அரசு நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதற்குப் பதில், அரசு நிர்வாகத்துக்குக் கட்டுப்பட்டுத் தணிக்கைத்துறை கொண்டு வரப்படுகிறது.

தற்போதைய தணிக்கைத்துறைத் தலைவர் – அவரும் இந்திய ஆட்சிப் பணி ( IAS) அதிகாரியாக இருந்து இந்தப் பதவிக்கு வந்தவர் – அவருடைய பதவிக்காலம் வருகிற 2008 ஜனவரி 6 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

தணிக்கைக்குழுத் தலைவராக ஒருவரை நியமிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் இந்தச் சமயத்திலாவது மக்களாட்சி முறையில் நம்பிக்கையுள்ள நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களும், அவற்றின் கண்காணிப்புக் குழுவினரும், பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் ஒன்றுபட்டு, பயிற்சிபெற்ற திறமையுள்ள, தணிக்கைக் கணக்குத்துறை பிரிவைச் சேர்ந்த ஒருவரை, பாரபட்சமற்ற முறையில் தேர்ந்தெடுப்பதற்கான கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டும்.

சரியானபடி அரசின் செலவு விவரங்கள் கவனிக்கப்படவில்லை என்றால் தணிக்கை முறை வெற்றி பெறாது.

சரியானபடி தணிக்கை முறை இல்லையென்றால் நாடாளுமன்றக் கண்காணிப்பு வெற்றி பெறாது. இந்த நிலைமை வளர்ந்தால் ஜனநாயக முறையில் மக்களின் பணத்துக்குப் பாதுகாப்புத் தரும் நாடாளுமன்றம் என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

உச்ச நீதிமன்றத்தைவிட முக்கியமான இடத்தை தணிக்கை அமைப்புக்கு அரசமைப்பு ஆசான் அம்பேத்கர் தந்தார். ஆனால் தமது போக்கில் தணிக்கை அமைப்பின் தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத் தொடர்ந்து மத்திய அரசு நியமித்துக்கொண்டே இருந்தால், விரைவில் சட்டப்படிப்பு அறவே இல்லாத ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு பின்வாங்காது.

அதன் பிறகு, நீதிமன்றம், நாடாளுமன்றம், தணிக்கைத்துறை ஆகியவைகளுக்கு உள்ள சுதந்திரமும், தனித்தன்மையும் நீக்கப்பட்டு, எல்லாவற்றுக்கும் ஏகபோக சர்வாதிகாரமாக மத்திய நிர்வாகத்துறை ஆகிவிடும்.

(கட்டுரையாளர்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)

—————————————————————————————————————————————————————-

பொதுத்துறையில் புதிய பார்வை!

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதுதான் பொருளாதாரச் சீர்திருத்தவாதிகளின் முதல் கோஷமாக இருந்தது. ஏதோ, நல்ல புத்தி தோன்றி, நஷ்டத்தில் இயங்கும் சில நிறுவனங்கள் தவிர மற்ற பொதுத்துறை நிறுவனங்களின்மீது மத்திய அரசு கைவைக்காததன் பலன், இப்போது பல நிறுவனங்கள் லாபகரமாக நடக்கின்றன. இதற்கு, தனியார்மயமாக்கப்படுவோம் என்கிற பயம் காரணமா அல்லது நிர்வாகம் முடுக்கி விடப்பட்டது காரணமா என்று தெரியவில்லை.

தற்போது சுமார் 250 பொதுத்துறை நிறுவனங்கள் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் இருந்து வருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவைகளில் 120 நிறுவனங்கள் மட்டும்தான் லாபகரமாக இருந்தன. சமீபத்திய ஆய்வின்படி, கணக்கெடுக்கப்பட்ட 215 நிறுவனங்களில் 157 நிறுவனங்கள் லாபகரமாக நடப்பதாகத் தெரிகிறது. 35 நிறுவனங்களின் தணிக்கை இன்னும் முடிந்தபாடில்லை.

இந்தப் புள்ளிவிவரங்கள் சற்று ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் என்பவை, தேசத்தின் சமச்சீர் வளர்ச்சியையும், நாட்டின் அடிப்படைத் தேவைகளையும் கருத்தில்கொண்டு நிறுவப்பட்டவை. பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ், இந்தியன் ஏரோநாட்டிக்ஸ், செய்ல், ஆயுதத் தொழிற்சாலை போன்றவை, இந்தியாவின் தன்னம்பிக்கையை வளர்த்தன என்பது மட்டுமல்ல, நாம் சுயசார்புடைய நாடாக வளர வழிவகுத்தன என்பதையும் மறந்துவிடக் கூடாது.

சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டிருப்பதுபோல, பண்டித ஜவாஹர்லால் நேரு இந்தியாவுக்கு அமைத்துத் தந்த கலப்புப் பொருளாதாரத்தின் பலன்தான் இப்போது இந்தியா உலகமயமாகி இருக்கும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்க வழிகோலியிருக்கிறது. அதுமட்டுமல்ல, திருச்சி, ராஞ்சி, போபால், புணே, ரூர்கேலா, நாசிக் போன்ற நகரங்களைத் தொழில் நகரங்களாக உருவாக்க முடிந்ததன் காரணம், அங்கெல்லாம் பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவப்பட்டதால்தான்.

ஒரு சில பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் தொடர்ந்தன என்பதும், லாபம் ஈட்டும் நவரத்னங்கள் என்று அழைக்கப்படும் நிறுவனங்களும்கூட, தங்களது முழுமையான உற்பத்தித் திறனை எட்டவில்லை என்பதும் உண்மை. ஆனால், அதற்குக் காரணம் நிர்வாகச் சீர்கேடும், அரசியல் தலையீடும், தொழிலாளர்கள் மத்தியில் காணப்பட்ட மெத்தனமும்தானே தவிர, அந்த நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களாக இருந்ததால் அல்ல. அதைத்தான், இந்த நிறுவனங்களின் தற்போதைய அதிகரித்த உற்பத்தித் திறனும், லாபமும் நிரூபிக்கின்றன.

இந்தப் பொதுத்துறை நிறுவனங்கள் நவீனப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும், அவைகளின் நிர்வாகத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்த நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களைப்போல, லாப நோக்குடனும், திறமையின் அடிப்படையிலும் செயல்பட வேண்டும் என்பதும், மக்கள் வரிப்பணம் இந்த நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுசெய்ய வீணடிக்கப்படக் கூடாது என்பதும் உறுதி. அதற்கு வழி இந்த நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதல்ல. தனியார் முதலீடுகளை குறிப்பிட்ட அளவு வரவேற்பதும், அரசு அதிகாரிகள் மட்டுமன்றி முதலீட்டாளர்களின் பிரதிநிதிகளும் நிர்வாகத்தில் பங்கு பெறுவதும்தான்.

முப்பது அல்லது நாற்பது சதவிகிதம் பங்குகளைத் தனிநபர்களுக்கு பங்குச்சந்தை வழியே விற்பதன் மூலம் இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பங்குதாரர்கள் கேள்வி கேட்க முடியும் என்பதும், நிர்வாகத்தில் பங்குதாரர்களின் பிரதிநிதிகள் இயக்குநர்களாகப் பங்கு பெற முடியும் என்பதும், இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமல்ல, பங்குகளை பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிப்பதால் லாபம் காட்ட வேண்டிய கட்டாயம் நிர்வாகத்துக்கு ஏற்படும். நிறுவனத்தை நவீனப்படுத்த முதலீடும் கிடைக்கும்.

சிறிய அளவில் நமது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள், பங்குச்சந்தை மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவது என்பது காலத்தின் கட்டாயம். அப்போதுதான் அவை உண்மையிலேயே மக்கள் நிறுவனமாகச் செயல்படும். அதுமட்டுமல்ல, இந்த நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படும் அபாயமும் தவிர்க்கப்படும்!

—————————————————————————————

அரசியல்வாதிகளுக்கும் நடத்தை நெறிமுறைகள்

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்


கடந்த வாரம் நமது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சம்பந்தப்பட்ட இரு சம்பவங்கள் செய்தி ஊடகங்களில் இடம்பிடித்திருந்தன. ஜம்மு ~ காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அவைக் காவலர்களுடன் கடுமையாக மோதும் காட்சியை ~ கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு அவைக் காவலர்களுக்குக் குத்து விடும் காட்சியை ~ தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பின. விளையாட்டு தொலைக்காட்சி சேனல்களில் காட்டப்படும் மல்யுத்தப் போட்டி போல இருந்தது அது.

நமது கவனத்தைக் கவர்ந்த மற்றொரு செய்தி, 35-க்கு மேற்பட்ட குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவரும் 8 மாதங்களாக, ஆம்; எட்டு மாதங்களாக தான், குண்டர் படைத் தலைவர்போல தலைமறைவாக இருந்துகொண்டிருந்தவருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டது தொடர்பானதாகும்.

அந்த ஜம்மு ~ காஷ்மீர் எம்எல்ஏவை ஒரு தொலைக்காட்சி சேனல் பேட்டி கண்டு ஒளிபரப்பியது. அவரது கேவலமான நடவடிக்கைக்காக ஒரு துளி வருத்தத்தைக்கூட அப்போது அவர் தெரிவிக்கவில்லை. மாறாக, தேவைப்பட்டால் மீண்டும் அவ்வாறே நடப்பேன் என்று திட்டவட்டமாகக் கூறினார் அந்த எம்எல்ஏ. ஒருவகையில் பார்த்தால், சட்டம் ~ ஒழுங்கைப் பராமரிக்கின்ற காவல் துறையினரைப் போன்றவர்கள்தான் சட்டப் பேரவைக் காவலர்களும். அவையின் கண்ணியத்தைக் காக்கவும் அவைக்குள் நன்னடத்தையை உறுதிசெய்யவும் அவைத் தலைவரின் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுப்பவர்கள் அவர்கள். எனவே அவைக் காவலரை ஓர் எம்எல்ஏ தாக்குவதென்பது, காவல் துறையைச் சேர்ந்த ஒரு காவலரை பொதுஜனம் ஒருவர் தாக்குவதற்குச் சமமாகும். அப்படிச் செய்திருந்தால் பொதுஜனத்துக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் அந்த எம்எல்ஏவோ எவ்விதத் தண்டனையுமின்றித் தப்பிவிடக்கூடும். எம்.பி., எம்எல்ஏக்களுக்கு ஒரு குற்றவியல் சட்டம், சாதாரண மக்களுக்கு வேறொரு குற்றவியல் சட்டமா அமலில் இருக்கிறது?

8 மாதங்களாகத் தலைமறைவாகி ஓடிக்கொண்டிருந்த அந்த எம்.பி., அலாகாபாதில் உள்ள ஃபூல்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒரு காலத்தில் பண்டித ஜவாஹர்லால் நேருவைத் தேர்ந்தெடுத்த பெருமைக்குரியது அத் தொகுதி. அதே தொகுதியின் பிரதிநிதியாக இன்று, நாட்டின் பிரச்னைகளை விவாதித்து முடிவெடுக்கக்கூடிய தேசத்தின் மிக உயர்ந்த அமைப்பான நாடாளுமன்றத்துக்கு குற்றப் பின்னணியைக் கொண்ட ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செல்கிறார் என்றால் அது காலக்கொடுமைதான்.

அரசியல்வாதிகள் மீதும் சாதாரணப் பொதுமக்கள் மீதும் பழிவாங்கும் எண்ணத்தோடு அதிகாரத்தில் இருப்பவர்களால் பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை. அரசியல் எதிரிகள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்குகள் தொடரப்படுவதும் நடக்காமல் இல்லை.

தனக்கு எதிராக 35-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், ஓர் எம்.பி. தொகுதியின் பிரதிநிதியாகவும் இருக்கக்கூடிய கெüரவத்தை ஒருவர் பெற்றிருப்பதென்றால் அவர் உண்மையிலேயே பெரிய மனிதர்தான்! ஒருவர் எம்எல்ஏயாகவோ, எம்.பி.யாகவோ ஆக விரும்பினால், அவருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதைக் காட்டக்கூடியதாகவும் இருக்கிறது இது. ‘கெüரவமான’ நடுத்தர வர்க்கத்தினர், தொழில் நிபுணர்கள் மற்றும் இதைப் போன்ற சமுதாயத்தின் இதர பிரிவினரெல்லாம் வன்முறை தலைவிரித்தாடும் அரசியல் களத்துக்குள் ஏன் வர விரும்பவில்லை என்பதையும் இது எடுத்துக் காட்டுகிறது. சமுதாயத்தின் கணிசமான பகுதியினர் பொதுவாழ்க்கையில் ஈடுபட முடியாத அளவுக்கு ஒரு மோசமான நிலைமையை அரசியலில் உருவாக்கி விட்டார்கள்.

அந்த எம்.பி., எம்எல்ஏவைப் பற்றி அதே தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான அதே நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான ஜெயந்தி நடராஜனும் பங்குகொண்டிருந்தார். அச் சம்பவங்கள் குறித்து அவரிடம் கேட்டபோது, ‘ஒருவர் குற்றவாளி என்பது நிரூபணமானால், சட்டப்படி அவர் தண்டிக்கப்பட வேண்டியவர்தான்’ என்று சாதாரணமாகக் கூறிவிட்டுச் சென்றார் அவர். சாதாரணமாகப் பார்க்கும்போது, அவர் கூறியது நியாயமானதுதான், சரியானதுதான் என்று தோன்றக்கூடும். அரசியல்வாதிகளைப் பொருத்தவரை அதன் அர்த்தம் சரிதானா என்பதைப் பார்ப்போம்.

மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் மீதான எத்தனையோ வழக்குகள் எத்தனையோ நீதிமன்றங்களில், வெவ்வேறு நிலைகளில் பல ஆண்டுகளாக, ஏன் பத்து ஆண்டுகளுக்கு மேலாகக்கூட விசாரணையில் இருந்துகொண்டு இருப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

பிகார் கால்நடைத் தீவன ஊழல் வழக்கை சுமார் 20 ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் குற்றம் சாட்டப்பட்ட மூத்த அரசியல்வாதிகள் அவ் வழக்குகளில் தண்டிக்கப்படவும் இல்லை, அதிலிருந்து விடுதலை ஆகவுமில்லை. இதைப்போல எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.

எடுத்துக்காட்டாக சுக்ராம் வழக்கை எடுத்துக்கொள்வோம். அவரது வீட்டிலிருந்து ரொக்கமாகப் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அரசிடம் அத்தனை புலன்விசாரணை அமைப்புகள் இருந்தபோதிலும் அவர் மீதான குற்றச்சாட்டுகளை வெற்றிகரமாக நிரூபிக்க முடியவில்லை. சம்பந்தப்பட்ட அரசியல்வாதியோ சட்டையைக் கழற்றி மாட்டுவதைப்போல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்சிக்குத் தாவிக்கொண்டு சந்தோஷமாகக் காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறார். மிகப் பலவீனமான புலனாய்வு அமைப்புகள், ஓட்டைகளுடன்கூடிய அரசுத் தரப்பு இயந்திரங்கள், மென்மைப் போக்கு கொண்ட (வளைந்து கொடுக்கக்கூடிய என்றுதான் குறிப்பிட நினைத்தேன்) நீதித் துறை இவற்றாலெல்லாம் அரசியல்வாதிகளுக்கு எதிரான எந்த வழக்கையும் விசாரணை நடத்தி, அதை உரிய வகையில் முடிவுக்குக் கொண்டுவர முடியாது.

ஓர் அரசு ஊழியர் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டால், உடனடியாக அவர் பணியிடைநீக்கம் செய்யப்படுவது நடைமுறை விதியாக இருந்து வருகிறது. ஒருவேளை அவர் குற்றமற்றவர் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்த காலத்தில் ~ வருமானம், பதவி உயர்வு போன்ற ~ இழந்தவையெல்லாம் இழந்ததுதான். அதாவது, மக்கள் பணியாளர்களாக, அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்ற வழக்கு விசாரணையில் இருக்கும் பொழுது அவர்கள் அரசுப் பணியை ஆற்றுவதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள் என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம். ஆனால், அரசியல்வாதிகள் விஷயத்தில் இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்காமல் இருப்பதற்கு எந்த நியாயமான காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. சொல்லப் போனால், அமைச்சர்களும் எம்எல்ஏ, எம்.பி.க்களும்கூட மக்கள் பணியாளர்கள்தான்; அரசாங்க ஊழியர்களையும்விட கூடுதலாக மக்கள் பணியாளர்கள் அவர்கள். (பலர் தம்மை மாமன்னர்களாகவும் நவாபுகளாகவும் நினைத்துக்கொள்கின்றனர் என்பது வேறு விஷயம்). எனவே, அரசு ஊழியர்கள் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படும் அதே கொள்கை, அரசியல்வாதிகள் விஷயத்திலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்; குற்ற வழக்குகளில் இருந்து விடுதலை ஆகும் வரையில் அரசுப் பதவிகளை அவர்கள் வகிப்பதற்கும், எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கான பணியை ஆற்றுவதற்கும் அவர்களை அனுமதிக்கக் கூடாது. இந்த ஒரே நடவடிக்கை மூலமாகவே சட்ட மன்றங்களும் நாடாளுமன்றமும் குறிப்பிடத் தக்க அளவுக்குத் தூய்மைப்படுத்தப்பட்டுவிடும்.

அரசுப் பதவிகளை வகிப்போர் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க தனி நீதிமன்றங்களையோ, பிரத்தியேக நீதி அமைப்புகளையோ ஏற்படுத்த வேண்டும் என்று பலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. சாதாரணக் குடிமகனாக இருந்தாலும், சமுதாயத்தில் முக்கியமானவர்களாக இருந்தாலும் சட்டம் யாரையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை; எனவே ஒரே மாதிரியான நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது என்னும் வாதம் முன்வைக்கப்படுகிறது. இது சரியானதுபோலத் தோன்றினாலும் உண்மையில் தவறானதாகும்.

முதலாவதாக, சாதாரணக் குடிமகனுக்கும் விரைந்து நீதி கிடைக்க வேண்டியது அவசியம்தான். ஏராளமான வழக்குகள் பல பத்தாண்டுகளாக நீதிமன்றங்களின் விசாரணையில் இருந்துகொண்டு இருக்கின்றன. ஏராளமான விசாரணக் கைதிகள் சிறையில் இருந்துகொண்டு இருக்கின்றனர். கடைசியில் அவர்களில் பலர் வழக்கில் விடுதலை செய்யப்படக்கூடும் அல்லது மிகக் குறைந்த அளவு தண்டனை விதிக்கப்படவும்கூடும்.

இரண்டாவதாக, நமது சமுதாயத்தில் செல்வாக்குடன் இருக்கக்கூடிய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் போன்றோர் புலனாய்வு அமைப்புகள், விசாரணை அமைப்புகள், நீதி நடைமுறைகள் போன்றவற்றின் மீது தமது செல்வாக்கைச் செலுத்தக்கூடிய நிலையில் இருப்பவர்களாவர் என்பதே உண்மை. அவர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க முடியாமல் இருப்பதற்கு எந்தவிதக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை.

எடுத்துக்காட்டாக, குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பதவியில் இருக்க அனுமதிப்பதாக வைத்துக்கொள்வோம். ஒருவேளை பல ஆண்டு விசாரணைக்குப் பிறகு இறுதியில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டால், கறைபடிந்த ஒருவரை அரசின் உயர் பதவியில் அமரவும் அதன் மூலம் சமுதாயத்தின் செல்வாக்கு செலுத்தவும் அனுமதித்தவர்களாகிவிடுவோம் நாம். இந்தக் காரணங்களால்தான் அரசியல்வாதிகள், எம்.பி., எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க விரைவு நீதிமன்றங்கள் தேவை என வலியுறுத்தப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கிய முறைகேடு, நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி முறைகேடு ஆகிய ‘முன்மாதிரியான’ செயல்களெல்லாம் தண்டிக்கப்பட வேண்டியவை அல்ல என்று இன்றைய அமைப்பு முறை முடிவு செய்துவிட்டது.

இத்தகைய அரசியல்வாதிகளை முறைப்படுத்த நமது அரசியல் அமைப்புச் சட்டச் சிற்பிகள், எந்த ஏற்பாட்டையும் செய்யாமல் போனது நமது துரதிருஷ்டம்தான். அரசியல்வாதிகளெல்லாம் தம்மைப்போல நியாயவான்களாக, சுயநலமற்றவர்களாக, சுத்தமானவர்களாக இருப்பார்கள் என்று ஜவாஹர்லால் நேரு நினைத்திருக்கலாம். அன்று அவர்கள் அந்த ஏற்பாட்டைச் செய்யாமல் போனதற்கான விலையை நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின் நாம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கென குறைந்தபட்ச நன்னடத்தை விதிகள்கூட வகுக்கப்படவில்லை. அத்துமீறல்களை நடத்திவிட்டு எவ்விதத் தண்டனையுமின்றி அவர்கள் தப்புவது வாடிக்கையாகிவிட்டது. சொல்லப் போனால், கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இந்தியாவில் ஜனநாயகப் பாரம்பரியம் என்று ஏதும் இருந்ததில்லை. நமது அரசியல்வாதிகளும் தம்மை முகலாயச் சக்கரவர்த்திகளைப்போல் நினைத்துக்கொள்கின்றனர்.

ஜனநாயக உணர்வுகளும் சிந்தனைகளும் வளர்த்தெடுக்கப்படவும் இல்லை; மாற்றங்களை உருவாக்கும் வகையில் மக்களின் கருத்துகள் நெறிப்படுத்தப்படவும் இல்லை. எனவே, அரசியல்வாதிகளுக்கென குறைந்தபட்ச நடத்தை நெறிமுறைகள் வகுக்கப்பட்டாக வேண்டியது அவசியமாகும். ஆனால் அதை யார் செய்வதென்பதே கேள்வி.

(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவைச் செயலர்.)

Posted in Accountant General, Accounts, Admin, Administration, AGO, Allegations, Arms, Audit, BHEL, Bribes, Cabinet, Capitalization, Collector, Collectorate, Commission, Committee, Corruption, Deficit, Economy, Employment, Finance, financial, Funds, Globalization, Govt, HAL, Hindustan, Hindusthan, IAL, IAS, IMF, Income, Inquiry, Jobs, Lokpal, markets, NLC, parliament, Planning, Poor, Private, PubAd, Pubic, Public Administration, Rich, SAIL, service, SEZ, Shares, Statements, Statistics, Statz, Stocks, Verification, Wages, WB, Wealth, Weapons | Leave a Comment »

Jharkhand govt & Maoists – Naxals, Power, Center: Neeraja Chowdhry

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2007

ஜார்க்கண்டில் ஒரு கேலிக்கூத்து

நீரஜா சௌத்ரி

நாட்டில் நக்சலைட்டுகளின் வன்செயல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் ஜார்க்கண்ட் மாநிலமும் ஒன்று. அங்கு நக்சல்கள் நடத்தும் தாக்குதல்களும் படுகொலைச் சம்பவங்களும் அண்மைக் காலமாக அதிகரித்துக்கொண்டு இருக்கின்றன.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் மகன் உள்பட 18 பேரை கடந்த வாரம் நக்சல்கள் படுகொலை செய்தனர். நக்சல்களின் ஆதிக்கத்தை முறியடிக்க ஒரு குழுவை ஏற்படுத்தியிருக்கிறார் மராண்டி. அதில் முக்கியமானவர் அவரது சகோதரர்.

எனவே, அவரும் மராண்டியின் குடும்பத்தினரும்தான் நக்சல்கள் தாக்குதலின் உண்மையான இலக்காக இருந்தனர். 8000 பேர் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டு இருந்தன. அதைக் கண்டுகளித்துக்கொண்டு இருந்த மக்கள் மத்தியில் ஊடுருவிய நக்சல்கள் திட்டமிட்டபடி தாக்குதலை நடத்தினர்.

அண்மையில் மாவட்ட ஆட்சியர் மீது விஷம் தோய்ந்த அம்பை எய்து தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள, நக்சல்கள் படுகொலைகளை நடத்திக்கொண்டு இருக்கும் ஒரு மாநிலத்தின் மீது யாரும் சிறிதும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. அங்குள்ள 24 மாவட்டங்களில் 18 மாவட்டங்களை நக்சல்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். அங்கு அரசு நிர்வாகம் ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை; ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.

மத்திய அரசுக்கோ, ஜார்க்கண்ட் மாநிலத்தின் மீது எப்போதாவதுதான் கவனம் செல்கிறது. மக்களவைத் தேர்தலில் எக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்படும்பொழுதோ, மாநிலத்தில் எக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போய், எம்எல்ஏக்களை விலை பேசும் நிலை ஏற்படும் பொழுதோதான் மத்திய அரசின் கவனம் ஜார்க்கண்ட் மீது திரும்புகிறது.

ஜனநாயகம் என்றாலே எண்ணிக்கைக்குத்தான் முக்கியத்துவம். எனவே, துரதிருஷ்டவசமாக ஜார்க்கண்ட் போன்ற சிறிய மாநிலங்களின் தலைவிதி அப்படி அமைந்துவிடுகிறது என்று சிலர் வாதிடக்கூடும். ஆனால், பத்திரிகைகள்கூட ஜார்க்கண்டைப் புறக்கணிக்கத்தான் செய்கின்றன.

கனிமவளம் ஏராளமாக இருக்கும் அந்த மாநிலத்தில் நடப்பவை குறித்து தொடர்ந்து அக்கறை செலுத்தாமல் இருந்தோமானால், அதன் பாதிப்பை நாம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். ஆனால், தில்லிக்கு இன்னும் இது உறைத்ததாகத் தெரியவில்லை. ராஞ்சியில் இருக்கும் அரசுக்கோ நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் திறமையும் இல்லை; அதற்கான உறுதியும் இல்லை.

ஜார்க்கண்டின் துயரங்கள் எல்லோரும் அறிந்தவைதான். அங்கு ஒரு பணியிட மாறுதல் அல்லது பணி நியமனத்துக்கு பதவியைப் பொருத்து ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.2 கோடி வரை பகிரங்கமாகப் பேரம் பேசப்படுகிறது. மறுபுறம் மக்களின் வாழ்க்கைத்தரமோ மிகவும் பரிதாபமாக இருக்கிறது. சராசரியாக மாநில மக்களில் 50 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் பரம ஏழைகள். ஒரு சில மாவட்டங்களில் 70 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர்.

மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 8 சதவீத நிலம்தான் பாசன வசதி பெற்றுள்ளது. வாய்க்கால்களோ, பெரிய மின்னுற்பத்தி நிலையங்களோ ஏதுமில்லை. டீசல் நிலையங்கள் வேலைசெய்வதே கிடையாது. பல மாவட்டங்கள் முழுமையுமே மின் வசதி இன்றிக் கிடக்கின்றன. பிரதமரின் சாலை வசதித் திட்டத்தின்கீழ் ஜார்க்கண்டுக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டு, பயன்படுத்தாமல் கிடக்கிறது. பிகாரில் இருந்து பிரிந்து உருவான இச் சிறு மாநிலம் பெரும் வளர்ச்சி அடைய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், காலச் சக்கரம் நின்றுவிட்டதைப்போல உறைந்து கிடக்கிறது ஜார்க்கண்ட்.

நக்சல் பிரச்னை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிகாரிகள் மற்றும் காண்ட்ராக்டர்களின் வருவாயில் 10 சதவீதத்தைக் கமிஷனாக வாங்கிக்கொள்கின்றனர் நக்சல்கள். தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்ட நிதியிலிருந்து 30 சதவீதத்தை நக்சல்கள் பறித்துச் சென்றுவிடுகின்றனர் என்று கூறுகின்றனர் உள்ளூர் மக்கள். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஜார்க்கண்டில் எந்த காண்டிராக்டரும் நக்சல்களால் தாக்கப்படுவதில்லை. ஏனென்றால் கமிஷன் தொகையை அவர்கள் ஒழுங்காகக் கொடுத்துவிடுகின்றனர். அதேபோல்தான் வனத் துறை அதிகாரிகளும்.

சட்டம் ~ ஒழுங்கும், அரசு நிர்வாகமும் இவ்வளவு சீரழிந்து கிடப்பதற்கு முக்கிய காரணம், ஜார்க்கண்டில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் வினோத ஆட்சி. 8 சுயேச்சை எம்எல்ஏக்கள், 3 ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்களின் தலைமையில் நடைபெற்றுவரும் வினோதமான அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துவருகின்றன முக்கிய கட்சிகளான காங்கிரஸýம் ராஷ்ட்ரீய ஜனதா தளமும். அரசை நிர்பந்தித்து தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ளவும் செய்யலாம்; அரசு செய்யும் தவறுகளுக்கான அவப்பெயரில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம் என்பது காங்கிரஸின் எண்ணம்.

ஆனால், இந்த ஏற்பாட்டால் கடந்த ஓராண்டில் அக் கட்சியின் ஆதரவுத் தளம் கரைந்துகொண்டு இருக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன.

இத்தகைய அரசு நீண்ட நாள் நீடிக்காது என்றே அரசியல் நோக்கர்கள் கருதினர். ஆனால், மக்களின் தேவைகளை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாமல், காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொண்டு ஓர் ஆண்டை ஓட்டிவிட்டது அந்த அரசு.

இந்த அரசு நீடிக்க வேண்டும் என்று லாலு பிரசாத் விரும்புவதில் ஒரு நோக்கம் இருக்கிறது. அவர் மீதான வழக்குகளில் சில, ஜார்க்கண்ட் நீதிமன்றங்களில்தான் விசாரணையில் இருக்கின்றன. எப்பொழுதும் ஏதாவது ஒரு மாநிலத்தையாவது தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது நல்லது என்பது அவரது எண்ணம். அதுவும் பிகார் கைநழுவிப் போய்விட்ட நிலையில் இது மிக அவசியம் என அவர் நினைக்கிறார்.

எந்தக் கட்சியிலும் இல்லாமல் மாநிலத்தை ஆண்டுகொண்டு இருக்கும் சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு தொலைநோக்கும் கிடையாது; லட்சியமும் கிடையாது.

கட்சியில் இருந்தாலாவது ஒரு கட்டுப்பாடு, கடமைப் பொறுப்பு என்று ஏதாவது இருக்கும். அதுவும் அவர்களுக்குக் கிடையாது. அதிகபட்சம்போனால், தமது தொகுதியில் அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும்; அடுத்த தேர்தலைச் சந்திக்கத் தேவையான நிதி ஆதாரத்தைத் திரட்டிக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கமாக இருக்கும்.

ஓர் அரசியல் கட்சி, சுயேச்சைகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைப்பது என்பது சாதாரணமாக நடப்பது. ஆனால், கையளவு சுயேச்சைகளையே மாநிலத்தின் அரசை நடத்தும்படி விட்டுவிடுவது என்பது உண்மையிலேயே அசாதாரணமானதாகும்.

வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பதால் அமைக்கப்படும் அரசுகள் செயல்படுவது கிடையாது என்பதற்கும், அந்த முயற்சியில் ஈடுபடக் கூடாது என்பதற்கும் ஏராளமான அனுபவங்கள் நமக்கு உள்ளன.

1991-ல், 54 எம்.பி.க்களைக் கொண்டிருந்த சந்திரசேகர், தமது கட்சியைவிட 4 மடங்கு கூடுதலாக எம்.பி.க்களைக் கொண்டிருந்த காங்கிரஸ், வெளியிலிருந்து அளித்த ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைத்தபோது, அது நடைமுறைக்கு ஒத்துவருமா என்பது குறித்து குடியரசு முன்னாள் தலைவர்கள் பலரும் மாற்றுக் கருத்து கொண்டிருந்தனர். காங்கிரஸ் கட்சி கொடுத்த நெருக்குதலை சந்திரசேகரால் சாமாளிக்க முடியாமல் போனதால், மூன்றே மாதங்களில் அந்த அரசு கவிழ்ந்தது. அதாவது நாய் வாலை ஆட்டுவதற்குப் பதில், நாயையே வால் ஆட்டுவதைப் போன்றது அது.

ராஞ்சியில் இப்போது அரசு என்று சொல்லத்தக்க நிர்வாக ஏற்பாடு ஏதும் இல்லை. அத்தகைய நிலையை ஜார்க்கண்ட் மக்கள் மீது திணிக்க காங்கிரஸýக்கோ, ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கோ எந்த உரிமையும் கிடையாது. ஒன்று, அரசில் சேர்ந்து அதற்கு ஸ்திரத்தன்மையையும் தமது அனுபவத்தையும் அளிப்பதோடு, அதற்கான கடமைப் பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அல்லது புதிதாகத் தேர்தலை அவர்கள் சந்திக்க வேண்டும்.

ஜார்க்கண்டில் இப்போதிருக்கும் ஏற்பாடு, ஜனநாயக சமுதாயத்தின் அரசு என்ற ஆட்சிமுறையைக் கேலிக்கூத்தாக்குவதைத் தவிர வேறெதுவும் இல்லை.

Posted in Admin, Administration, Bribes, Citizen, Corruption, Government, Govt, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Jharkhand Mukti Morcha, Jharkhand Party, Jharkhand Vikas Morcha, kickbacks, Law, Maoists, Naxal, Naxalbari, Naxalite, Naxals, Neeraja, Order, Police, Power, Protect, Protection, Ranchi | Leave a Comment »

The Rich, The Filthy Rich, The Politicians – Justice, Education, Electorate

Posted by Snapjudge மேல் மே 10, 2007

மாம்பழக்கூடையும் அரசியல் பீடையும்!

க.ப. அறவாணன்

இப்போது மாம்பழக் காலம்.

கூடை நிறைய மாம்பழங்கள் கிடைக்கின்றன. அவை அனைத்தும் நிறைந்த சுவை தருபவை. மாம்பழ வியாபாரி, கூடையிலுள்ள மாம்பழம் ஒவ்வொன்றையும் எடுத்துத் துடைத்து அக்கூடையிலேயே வைக்கிறார்.

நடுவே, ஒரு மாம்பழம் சிறிதாக அழுகத் தொடங்கி இருக்கிறது. அழுகல் வாடையும், மூக்கைத் தொடத் தொடங்கி விட்டது. நன்கு துடைத்துக் கூடையின் நடுவேயே வைத்து மேலும், கீழுமாக ஏனைய நல்ல மாம்பழங்களை அடுக்கிக் கூடையோடு அப்படியே விற்றுவிடலாம் அல்லது அழுகத் தொடங்கிய மாம்பழத்தை அகற்றி வீசி வெளியே எறிந்துவிட்டு, புதிய நல்ல மாம்பழமொன்றைக் கூடைக்குள் வைத்து விற்று விடலாம்.

நல்ல வியாபாரி இரண்டாவதையே செய்கிறார். காரணம், அழுகிய ஒரு மாம்பழம், ஓரிரு நாளில், தானும் முழுமையாக அழுகிக் கெடுவதுடன் ஏனைய மாம்பழங்களையும் அழுக வைத்துவிடும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். எனவேதான் அழுகிய மாம்பழம் என்று அறிந்தவுடனேயே அதனை மறைக்காமல் எடுத்து எறிந்துவிடுகிறார்.

இப்படித்தான் நாமும் செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யத் தவறியதால் கூடை மாம்பழங்களே அழுகத் தொடங்கிவிட்டன. நாற்றம் மூக்கைத் துளைக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் மூன்று தூண்கள் என்று வர்ணிக்கப்படும் நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை என்பனவற்றுள் நாடாளுமன்ற அரசியல் அழுகத் தொடங்கிவிட்டது. அதனை மறைத்தோம். பொருள்படுத்தவில்லை. காலப்போக்கில் சரியாகிவிடும் என்று நம்பினோம். ஆனால் நடந்தது என்ன?

நாடாளுமன்ற அரசியலைத் தொடர்ந்து நிர்வாகமும், அழுகத் தொடங்கிவிட்டது. அதனைத் தொடர்ந்து நீதித்துறையும் அழுகத் தொடங்கிவிட்டது. இன்று இந்தியாவின் மெய்யான நிலை இதுதான்.

நம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் முப்பது சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் குற்றவாளிகள் (கிரிமினல்கள்) என்பது வேதனைக்குரிய விஷயம்.

உ.பி., சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் நாற்பது சதவீதம் பேர் குற்றவாளிகள் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. எந்த இடம் தூய்மையாக இருக்க வேண்டுமோ, அந்த இடம் தூய்மைக்கேடாக இருக்கிறது. மூன்றில் ஒரு பங்கு மாம்பழங்கள் அழுகிவிட்டால், ஏனைய மாம்பழங்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே வேண்டாம்.

நம் நாட்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நிர்வாக முறை பற்றி நிறைய வெளிச்சத்திற்கு வராத செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன. அரசு நிர்வாகப் பணிக்கு நியமிக்கப்பட்ட பின்பு ஓய்வுபெறும் வயதுவரை தன்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது – இடம் மாற்றம் தவிர! என்று அறிந்துகொண்ட நம் அதிகாரிகள் பதவிக்காலத்தில் தங்களுடைய வசதிகளைப் பெருக்கிக் கொள்வதிலும், சாதிச்சங்கத்தை அமைப்பதிலும், பதவியில் உள்ள கட்சியினருடன் ஒட்டிக் கொள்வதிலும் இன்ன பிறவற்றிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களைப் பற்றி நாடு முழுக்க வழக்குகள் உள்ளன.

கடந்த அறுபது ஆண்டுகளில் இந்திய நிர்வாகம் சீர்குலைந்துவிட்டது என்பதை விவாதிக்க வேண்டியதே இல்லை. அது வெளிப்படையானது. ஏழை ஒருவன் விண்ணப்பம் போட்டால் அந்த மனு எத்தனை மேசைக்கு ஆமைபோல் ஊர்ந்துசென்று அடைய வேண்டிய இடத்தை அடைய முடியாமல் தவிக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம். ஆனால் இதை வெளிப்படையாக தெரிவிக்காதவர்களே மிகுதி என்பதுதான் உண்மை. வெளியே சொல்லிப் புலம்ப முடியாத அளவிற்கு நம் அதிகாரவர்க்க முறையும், சிவப்புநாடா முறையும் கடந்த அறுபது ஆண்டுகளில் கோப்புக் கோபுரமாகத் தடித்து விட்டன. அரசு நிர்வாகம் அனைத்தும் ஒருவழிப்பாதை என்பதால் நியாயத்தை ஒருவர் பெறவே முடியாது.

வெளிப்படை சட்டம் வந்துவிட்டாலும், எல்லாராலும் வழக்கு மன்றத்திற்குச் செல்ல முடியுமா? படிக்காதவர்கள் மிகுந்த நாட்டில், பணமும் செல்வாக்கும் இல்லாத ஏழை நாட்டில்!

இங்கேதான் நம் நீதிமன்றங்கள் வருகின்றன. வழக்கறிஞர் என்பவர் ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர் என்று வேறுபாடு பாராமல் பணம் பிடுங்குபவராகச் செயல்படுகிறார். ரிட் மனு, ஜாமீன், தள்ளிவைப்பு (வாய்தா), மேல்முறையீடு என்பனவற்றின் பெயரால் நீதி நிலைநாட்டப் பெறுகிறதா, நீட்டப்படுகிறதா என்பது இந்திய நீதித்துறை சட்டதிட்டத்தை வகுத்த அரசியல் சாசன அமைப்பாளருக்கே வெளிச்சம். ஏறத்தாழ நானூறு கோடி வழக்குகள் நிலுவையில் ஆண்டுக்கணக்கில் தூங்குகின்றனவாம்.

அரசியல்வாதிகள், துணிந்து தவறு செய்கிறார்கள். அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் தவறிழைக்கிறார்கள். அவர்களைப் பற்றி முறையீடு செய்து நீதி பெற வேண்டிய ஒரே இடம் நீதித்துறை. அந் நீதித்துறையும் நெறி மாறிவிட்டால் யாரிடம் சென்று முறையிடுவது என்று கதறுகிறோம். சிலர், ஊழல் சகஜம்தான், லஞ்சம் சகஜம்தான், அனுசரித்துப் போக வேண்டியதுதான் என்ற நிலைமைக்கு வந்துவிட்டார்கள். இந்தச் சிலரும், பலராகி விட்டார்கள்.

மாணவர்கள் சேர்க்கை, அரசுப் பணிகளில் நியமனம், இடமாற்றம், உரிமம், பர்மிட் போன்ற அனைத்திற்கும் இத்தனை ஆயிரம், இத்தனை லட்சம் என்று பட்டியல் போடாததுதான் பாக்கி. ஆனால், இப்படிப் பட்டியல் நீர்மேல் எழுத்தாகவும், வான்மேல் கல்வெட்டாகவும் இடைத்தரகர்கள் நாவில் கையெழுத்து இடாத தாளில் நாளும் நடமாடுகிறது. இந்நாட்டை இனி யார் காப்பாற்றுவார்? ஒவ்வொன்றுக்கும் காசு தர முடியாத ஏழை, தம் பிள்ளைகளை எப்படிப் படிக்க வைக்கப் போகிறார்? தன் பிள்ளைகளுக்கு எப்படி வேலை வாங்கப் போகிறார்? அவரிடம் ஆயிரக்கணக்கிலோ, லட்சக்கணக்கிலோ கொடுக்கப் பணமில்லையே. அவர் அன்றாடங்காய்ச்சி.

இந்த நிலைமை இப்படியே தொடர வேண்டியதுதானா? இதற்கு முடிவே இல்லையா?

(கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.)

Posted in abuse, Admin, Assembly, Attorney, candidates, Citizen, Convicts, Corruption, Courts, Criminals, EC, Election, Govt, Judge, Jury, Justice, kickbacks, Law, Lawyer, Mango, MLA, MLAs, MP, MPs, Order, Politics, Polls, Poor, Power, Rich, Seller, Students, UP, Vote, voter | Leave a Comment »