Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Citizen’

Aug 17, 18 – SriLanka Updates: LTTE, Eezham

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 18, 2008

இலங்கையில் மாகாணச் சபைத் தேர்தல்கள்

மாகாண சபைத் தேர்தல்கள்
மாகாண சபைத் தேர்தல்கள்

இலங்கையின் சபரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான மாகாணசபைத் தேர்தல்கள் சனிக்கிழமையன்று நடைபெற்றுள்ளது. இதில் ஆங்காங்கே சில வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

சுமார் 21 லட்சம் வாக்காளர்களை கொண்ட இந்த தேர்தலில், சுமார் 65 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 77 பிரதிநிதிகளை தேர்தெடுக்க நடைபெற்ற இந்த தேர்தலில் சுமார் 1698 வேட்பாளர்கள் பங்கேற்றனர். இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது பிரதான அரசியல் கட்சிகள் பல்வேறு விதமான வன்முறையில் ஈடுப்பட்டதாக சுயாதீன தேர்தல் அமைப்புகள் கருத்து வெளியிட்டு இருந்தன.


இலங்கையின் வடக்கே தொடரும் இடம்பெயரல்கள்

இடம்பெயர்ந்த மக்கள்
இடம்பெயர்ந்த மக்கள்

இலங்கையின் வடக்கே – மன்னார் மாவட்டத்தின் வடபகுதியிலிருந்தும் – முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்குப் பிரதேசத்திலிருந்தும் – கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் ஜெயபுரம் வன்னேரிக்குளம் ஆனைவிழுந்தான் அக்கராயன் ஸ்கந்தபுரம் போன்ற பகுதிகளிலிருந்தும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்திருக்கின்றார்.

இவற்றில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை 22 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றன. அடுத்த மாதம் 8 ஆம் திகதி 3 ஆம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தக் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றி வேறிடங்களில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்டிருப்பதாகவும் கிளிநொச்சி அரசாஙக அதிபர் கூறியிருக்கின்றார்.

இடம்பெயர்ந்த மக்களுக்குரிய நிவாரண உதவிகளைச் செய்வதற்குத் தேவையான எரிபொருள் மற்றும் அவர்களுக்கான நிவாரண உணவு போன்றவற்றிற்குப் பற்றாக்குறை நிலவுவதாகவும் கிளிநொச்சி அரசாங்க அதிபர் தெரிவித்திருக்கின்றார்.

இதற்கிடையே, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் திடீரென பொது நிர்வாக அமைச்சுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இன்னும் ஒரு மாதகாலத்தில் எஸ்.சண்முகம் பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார் என்பதும் – வவுனியா மாவட்டத்தில் சுமார் நான்கு வருடங்கள் அரசாங்க அதிபராகப் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


துணுக்காய், உயிலங்குளம், அக்கராயன்குளம் ஆகியவற்றைக் கைப்பற்றியிருப்பதாக இலங்கை இராணுவம் கூறுகிறது

இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்திற்கு மேற்கே உள்ள துணுக்காய், அதனை அண்டிய உயிலங்குளம் மற்றும் அக்கராயன்குளம் பிரதேசத்தின் தென்பகுதி ஆகியவற்றை இராணுவத்தினர் வெள்ளியன்று விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

துணுக்காய் நகரப் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியதையடுத்து இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவ தலைமையகத்தின் முக்கிய இராணுவ அதிகாரிகளுடன் வவுனியாவில் உள்ள வன்னிப் பிராந்திய ஆயுதப்படைகளின் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார். முக்கிய களமுனை இராணுவ தளபதிகளுடன் அவர் கலந்துரையாடியுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

துணுக்காய் நகரப் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பது பற்றி விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

வட இலங்கை மோதல் நிலவரம் குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை கிழக்கு பல்கலைக்கழக்கத்தில் சிங்கள மாணவர் சுட்டுக் கொலை

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலையில் கிழக்கு பல்கலைக்கழக சிங்கள மாணவர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் இறுதியாண்டு கல்வி பயிலும் மாணவரான பசன் சமரசிங்க என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பல்கலைக்கழக சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்தச் சம்பவம் காரணமாக அங்கு கல்வி பயிலும் சிங்கள மாணவர்களிடையே பாதுகாப்பு தொடர்பான அச்ச நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளதாக பல்லைக்கழக நிர்வாகம் கூறுகின்றது.

பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறும் சிங்கள மாணவர்கள்

மறு-அறிவித்தல் வரும்வரை பல்கலைக்கழகத்தின் அனைத்து விரிவுரைகளும் இடைநிறுத்தப்படவேண்டும் என்றும் மாணவர்கள் தத்தமது வீடுகளுக்கு திரும்புமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புடன் சிங்கள மாணவர்கள் குருநாகல் வரை விசேட வாகனங்களில் அனுப்பிவைக்கப்டப்டுள்ளார்கள்.

இச்சம்பவத்தையடுத்து பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், சிங்கள மாணவர்களையும் நிர்வாகத்தினரையும் சந்தித்து உரையாடினார். சிங்கள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அவர் தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



இலங்கையில் வெடிகுண்டுக்கான சாதனங்கள் மற்றும் வெடிகுண்டு கண்டெடுப்பு

கைப்பற்றப்பட்ட இலத்திரனியல் சாதனங்கள்

இலங்கையில் தலைநகர் கொழும்பின் புறக்கோட்டை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றிலிருந்து தற்கொலையங்கிக்குப் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மற்றும் இலத்திரனியல் சாதனைக்களைக் கண்டுபிடித்திருப்பதாக கொழும்பு பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

கொழும்பு புறக்கோட்டை ஓல்கோட் மாவத்தையில் அமைந்துள்ள புனித பிலிப்ஸ் கிறிஸ்தவ தேவாலய வளவினுள் இருந்து சுமார் 19 டெட்டோனேட்டர்கள், 23 ஆளிகள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலைக்குண்டு அங்கியொன்றினை பொருத்துவதற்காக இவை கொண்டுவந்து மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர்.

இது தொடர்பில் இதுவரை யாரும் கைதுசெய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

இதேவேளை, இலங்கையின் மத்திய மலைநகரமான கண்டியின் புறநகர்ப் பகுதியான பலகொல்லவில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவொன்று வீடொன்றின் அருகிலிருந்த மணல்மேடு ஒன்றிலிருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள வெடிகுண்டு ஒன்றைக் கண்டெடுத்துள்ளது.

அக்குண்டு செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உடனடி உதவிகள் தேவை: யாழ் ஆயர்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையேயான மோதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உடனடியாக உதவி வழங்குமாறு யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யுத்தம் காரணமாக ஒரு லட்சத்து 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக குறிப்பிட்ட யாழ் ஆயர், விரைவில் மழைக்காலம் துவங்கவுள்ள நிலையில், ஆதரவற்று திறந்தவெளியில் இருக்கும் மக்களுக்கு இருப்பிடங்களை அமைத்து தருவது உடனடித் தேவை என்று குறிப்பிட்டார்.

உணவு மற்றும் மருந்துப் பொருட்களை தடையற்ற முறையில் கொண்டுவருவதற்கு அரசு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதேநேரம் விடுதலைப் புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற அம்னேஸ்ட்டி இன்டர்னேஷனலின் குற்றச்சாட்டு குறித்து கூறுகையில், இக்குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை இருப்பதாக கூறிய ஆயர், அதேநேரத்தில் இருதரப்பினரும் இச்செயலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்கள் அவர்கள் விரும்பும் பகுதிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், குடும்பத்தில் ஒருவர் கட்டாய இராணுவப் பயிற்சிக்கு உட்படுத்தப்படுவதால், அந்தப் பகுதிகளில் இருந்து அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் அனைவரையும் புலிகளாக அரசு சந்தேகிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் நிலவும் சூழல் குறித்து யாழ் ஆயர் வெளியிட்ட கருத்துக்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


துணுக்காயைச் சுற்றிவளைத்துள்ளோம்: இலங்கை இராணுவம்

இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தளமாகிய துணுக்காய் நகரப்பகுதியை புதன் அதிகாலை முதல் இராணுவத்தினர் சுற்றிவளைத்து தாக்குதல்களை நடத்தி வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

துணுக்காய் நகரத்தின் வடக்கு மற்றும் மேற்குத் திசைகளில் இருந்து நகர்ந்துள்ள படையினர், புதன் காலை இடம்பெற்ற மோதல்களில் 2 விடுதலைப் புலிகளின் சடலங்களைக் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

மாங்குளம் – வெள்ளாங்குளம் வீதியில் அமைந்துள்ள துணுக்காய் நகர் விடுதலைப் புலிகளின் அதிமுக்கிய இடமாகக் கடந்த 25 வருடங்களாகத் திகழ்ந்து வந்துள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையத்தள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது விமானப்படையினர் தொடர்ச்சியாக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், ஓமந்தை பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் அடையாளம் காணப்பட்ட இலக்குகள் மீது உலங்கு வானூர்தி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

ஓமந்தைக்கு வடமேற்கே 7 கிலோ மீற்றர் தொலைவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா பகுதியில் புதன்கிழமை விடுதலைப் புலிகளின் நான்கு இலக்குகள் மீது விமானப்படையினர் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக வன்னிப் பிரதேசத்தில் இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் நேற்றைய சண்டைகளில் 14 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையதள அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் போர்முனைகளிலும், வெலிஓயா மற்றும் யாழ்ப்பாணம் கிளாலி பகுதிகளிலும் இந்த மோதல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.


இலங்கை அமைச்சர் மெர்வின் சில்வா நீதிமன்றத்தில் சரண்

இலங்கை நீதிமன்றம் ஒன்றினால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வா வியாழனன்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கு ஒன்றில் அவர் மீது கடந்த வாரம் இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அதேவேளை, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த பொலிஸார் தயக்கம் காட்டுவதாக குற்றஞ்சாட்டியும், அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது செய்யக் கோரியும் செய்தியாளர்களின் அமைப்புகள் வியாழனன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தின.

ஆயினும் அந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே அமைச்சர் நீதிமன்றில் சரணடைந்துவிட்டதாக கொழும்பில் இருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.


இலங்கையின் வடமத்திய மற்றும் சப்ரகமுவ தேர்தல் பிரச்சார இறுதி தினத்தில் வன்முறைகள்

இலங்கையின் தென்பகுதியில் எதிர்வரும் சனிக்கிழமை தேர்தல் நடக்கவிருக்கின்ற இரண்டு மாகாண சபைகளான வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் முடிவுக்கு வருகின்றன.

அரசியல் கட்சிகளும் மற்றும் சுயேச்சைக் குழுக்களும் தமது இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் இன்று ஈடுபட்டிருந்த அதேவேளை, அந்த மாகாணங்களில் இன்று பல்வேறுபட்ட வன்முறைகள் குறித்தும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அதிலும் குறிப்பாக இன்று தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி தினத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் உட்பட கணிசமான வன்செயல்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரும் மற்றும் உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களும் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், தீவைப்புகள், அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் மீதான தாக்குதல்கள் என்பன உட்பட கடந்த 24 மணி நேரத்துக்குள் மாத்திரம் பத்துக்கும் அதிகமான வன்செயல்கள் இந்த இரு மாகாணங்களிலும் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக அநுராதபுரம் மாவட்டத்தில் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் பிரதி அமைச்சர் துமிந்த திஸாநாயக்காவின் இணைப்பதிகாரி ஒருவர் உட்பட 2 பேர் காயமடைந்துள்ளனர்.

”தமிழர்களில் கணிசமானோரின் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்று குற்றச்சாட்டு”

இதேவேளை இலங்கையின் தென்பகுதியில் தமிழர்களை வாக்காளர்களாக பதிவதில் காட்டப்படும் பாரபட்சத்தின் காரணமாக சப்ரகமுவ மாகாணத்திலும் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியினர் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.

இதன்காரணமாக தோட்டத்தொழிலாளர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் அந்த கட்சியின் உபதலைவரான கணபதி கனகராஜ்

தேர்தல் திணைக்களம் இந்த விடயத்தில் காட்டும் அசிரத்தையும், தோட்டத்தொழிலாளர்களின் அக்கறையீனமுமே இதற்கு காரணம் என்றும் அவர் கூறுகிறார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


வவுனியாவில் சமுர்த்தி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் சமுர்த்தி பணியாளர்கள்
ஆர்ப்பாட்டத்தில் சமுர்த்தி பணியாளர்கள்

இலங்கையில் மக்கள் மத்தியில் வறுமையைத் தணித்து வாழ்க்கையை மேம்படுத்தும் சமுர்த்தி அதிகார சபையின் கீழ் பணியாற்றும் வவுனியா மாவட்ட சமுர்த்தி அலுவலர்கள் பதவி மற்றும் சம்பள உயர்வு கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பை விடுத்திருந்தது.

இதில் வவுனியா மாவட்ட தமிழ் சிங்கள நிர்வாக பிரிவுகளைச் சேர்ந்த சமுர்த்தி அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

இது பற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்


மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டம்

அமைதிப் போராட்டத்தில் மாணவர்கள்
அமைதிப் போராட்டத்தில் மாணவர்கள்

இலங்கையில் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு செல்ல மறுத்த தென்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் கொழும்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாப்பு காரணங்களால் வடக்கு மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாத நிலையில், தமக்கு தென்பகுதியில் உள்ள பல்கலைக்கழகங்களில் அனுமதி வழங்குமாறு பெரும்பாலான சிங்கள மாணவ, மாணவிகள் கோரியிருந்தனர்.

ஆயினும், இதுவரை அவர்களுக்கு இதுகுறித்து எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இவை குறித்த செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களின் நலனுக்கான சட்டமூலம்

இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான பாதுகாப்பு குறித்த சட்டமூலம் ஒன்றினை வரைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அதனை சட்டமாக்குவதற்காக உரிய அமைச்சரிடம் கையளித்துள்ளது.

இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களைப் பாதுகாப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்து அதனை ஒரு சட்டமூலமாக்குவதற்கான முயற்சிகளில் மனித உரிமைகள் ஆணையகம் ஈடுபட்டிருக்கின்றது.

பல வருடங்களாகத் தொடரும் உள்நாட்டு யுத்தம் மற்றும் சுனாமித் தாக்கம், இயற்கை அனர்த்தங்கள், பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவற்றினால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்திருக்கின்றார்கள்.

இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளவர்களில், போர்ச் சூழலினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்திருப்பவர்கள், நாட்டில் உள்ள ஏனைய மக்களைப் போன்று கௌரவமிக்க சுதந்திரமான வாழ்க்கையை வாழ முடியாதவர்களாக இருப்பதாகவும், மனித உரிமைகள் ஆணையகம் குறிப்பிடுகின்றது.

இந்த நிலையில் இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவற்றை மேம்படுத்துவதற்குமான சட்டமூலம் ஒன்றை அது வரைந்திருக்கின்றது.

இதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவிடம் அதனைக் கையளித்திருப்பதாக மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்திருக்கின்றது.

இடம்பெயருகின்ற மக்களின் உரிமைகளைப் பல்வேறு நிலைகளிலும் பாதுகாத்து, சமூக பொருளாதார அடிப்படையில் அவர்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதே இந்த சட்ட வரைவின் முக்கிய நோக்கமாகும் என்றும், இந்த வரைவு குறித்து பொது மக்களின் கருத்துகளைத் திரட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த ஆணையகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


வடக்கு அகதிகளுக்கு உதவுவது என்று கிழக்கு மாகாண சபை முடிவு

கிழக்கு மாகாண சபை
கிழக்கு மாகாண சபை

இலங்கையின் வடக்கே போர் இடம்பெறும் பகுதிகளில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அவசர நிவாரண உதவிகளை வழங்குவதற்கான தீர்மானம் ஒன்றை கிழக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ளது.

மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் கிளிநொச்சி மற்றும் அதனருகே உள்ள பகுதிகளைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு அவசர உதவிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பது என்றும் கிழக்கு மாகாண சபை முடிவெடுத்துள்ளது.

இவை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து பேசுவது என்றும் அங்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

எத்தகைய உதவிகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஜனாதிபதியைச் சந்தித்து பேசிய பின்னரே முடிவு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.


கட்புல வலுவிழந்தோருக்கான கிரிக்கட்

இந்திய கிரிக்கட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணியுடன் விளையாடிவரும் நிலையில் போர்மேகம் சூழ்ந்துள்ள இலங்கையின் வடக்கே வவுனியாவில் பார்வையிழந்தவர்களுக்கான கிரிக்கட் விளையாட்டுப் பயிற்சி நடைபெற்றுள்ளது.

வடக்கு கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இந்தப் பயிற்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டதாக இந்தப் பயிற்சியை வழங்கிய கட்புல வலுவிழந்தவர்களுக்கான தேசிய கிரிக்கட் கழகத்தின் தலைவர் ரியன்ஸி பெனடிக்ட் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சியை வவுனியா வலுவிழந்தோருக்கான புனர்வாழ்வு நிறுவனத்தின் தலைவர் வி.சுப்பிரமணியம் அவர்கள் ஒழுங்கு செய்திருந்தார்.

”ஒருவர் பார்வை இழந்திருக்கின்றார் என்பதற்காக அவரது – விளையாட்டுத்துறை சார்ந்த திறமைகள் பண்புகள் என்பன பாதிக்கப்படக் கூடாது, அவ்வாறு கட்புல வலுவிழந்தவர்களை ஊககுவிக்க வேண்டும்” என்பதே தமது கழகத்தின் நோக்கம் என்றும் கட்புல வலுவிழந்தவர்களுக்கான தேசிய கிரிக்கட் கழகத்தின் தலைவர் ரியன்ஸி பெனடிக்ட் கூறுகின்றார்.


வட இலங்கை நிலவரம் தொடர்பில் புலிகள் பொய்ப் பிரச்சாரம்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இலங்கையின் வடக்கில் யதார்த்த நிலை வேறு விதமாக இருக்க, வெளியுலகுக்கு பொய்யான பிரச்சாரம் செய்யப்படுகிறது என்றும், இடம்பெயர்ந்துள்ள மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர் என்றும் இலங்கை அரசின் சமூக சேவைகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கிழக்கில் செய்தது போலவே மக்களை மீட்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது என்றும், இது தொடர்பில் அந்தப் பகுதியிலுள்ள மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் தான் தொடர்பில் இருப்பதாகவும், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை களைவதில் அரசுக்கு மட்டுமல்ல விடுதலைப் புலிகளுக்கும் பொறுப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

தற்போது வடக்கு பகுதியில் ஆயிரக்காண ஏக்கர்கள் அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், அந்த நடவடிக்கையும் தடைபட்டுள்ளது குறித்து கொழும்பிலிருந்து கொண்டு அரசால் மட்டுமே பெரிய அளவில் எதுவும் செய்துவிடமுடியாது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டார்.


விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துகின்றனர்: அனைத்துலக அபய ஸ்தாபனம்

விடுதலைப்புலிகள் அமைப்பினர் இலங்கை அரசாங்கப் படைகளுக்கு எதிராக பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துவதன் மூலம், சர்வதேச சட்டங்களை மீறுவதாக மனித உரிமை அமைப்பான அனைத்துலக அபய ஸ்தாபனம் கூறுகிறது.

இலங்கை இராணுவ நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் வகையில், விடுதலைப்புலிகள் மக்களை பலவந்தமாக தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் தடுத்து வைத்துள்ளது குறித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அனைத்துலக அபய ஸ்தாபனத்தின் ஆய்வாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு உதவுவதற்கு அரசாங்கமும் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் நீண்ட காலமாக தொடரும் மோதலில், இராணுவ இலக்குகளை எட்டுவதற்காக இலங்கையில் போரில் ஈடுபடுகின்ற இரண்டு தரப்பினரும் பொதுமக்களை ஆபத்தில் விடுவதாக அபய ஸ்தாபனம் கூறியுள்ளது.

அபய ஸ்தாபனத்தின் தற்போதைய அறிக்கை குறித்து அந்நிறுவனத்தின் இலங்கை விவகார ஆய்வாளர் யோலாண்டா ஃபாஸ்டர் தமிழோசைக்குத் தெரிவித்தக் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



மன்னார் மடு ஆலயத்தில் ஆவணித் திருவிழாவை ஒட்டி திருப்பலி பூசை

இலங்கையின் வடமேற்கே இராணுவத்தின் வசமாகியுள்ள மடுக்கோவிலின் ஆவணி மாதத் திருநாளையொட்டி வெள்ளியன்று எளிமையான முறையில் திருப்பலி பூசை ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கின்றது.

நான்கு மாதங்களின் பின்னர் இந்த ஆலயத்தை திருச்சபையினரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான யாத்திரிகர்கள் இங்கு சென்றுவர அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

ஆயினும் வெள்ளிக்கிழமை விசேட தினமாதலால் நாட்டின் தென்பகுதியில் இருந்து 700 பேர் அங்கு வந்திருந்ததாக மடு பரிபாலகர் அருட்திரு எமிலியானுஸ்பிள்ளை அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார்.

வடபகுதியில் இருந்து யாத்திரிகர்கள் எவரும் இன்று வரவில்லை என்றும் அவர் கூறினார்.

சேதமடைந்திருந்த மடுக்கோவிலின் கட்டிடங்கள் திருத்தப்பட்டுள்ள போதிலும், பல்வேறு வசதியீனங்களுக்கு மத்தியிலேயே தாங்கள் அங்கு தங்கியிருப்பதாக அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளை தெரிவிக்கின்றார்.


விடுதலைப் புலிகளின் முக்கிய பயிற்சித் தளத்தை கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் கூறுகிறது

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஜீவன் தளம் எனப்படும் முக்கிய பயிற்சித் தளத்தை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் பிரசித்தி பெற்ற தளமாகிய ஒன்ஃபோர் தளம் எனப்படும் முகாமின் முக்கிய பகுதிகளில் ஜீவன் தளமும் ஒன்று என பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.

கைப்பற்றப்பட்டுள்ள இந்த தளத்தில் 1250 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நான்கு கட்டிடங்களும், 100 பதுங்கு குழிகளும், 35 கழிப்பறைகளும் இருப்பதாகவும், இந்தப் பகுதியில் உயிரிழந்த விடுதலைப் புலிகள் 69 பேரின் கல்லறைகள் காணப்பட்டதாகவும், பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையத்தள அறிக்iயில் தெரிவித்திருக்கின்றது.

எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

வவுனியா பாலமோட்டை, துணுக்காய், வெலிஓயா ஆகிய களமுனைகள் உட்பட்ட வன்னிப் போர்முனைகளில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 38 விடுதலைப் புலிகளும் 5 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

எனினும் வவுனியா பாலமோட்டை பகுதியில் இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியை முறியடித்துள்ளதாகத் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள் இங்கு இராணுவத்தினருடன் இடம்பெற்ற சண்டைகளில் 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளனர்.


வன்னியில் ஒன்றரை லட்சம் மக்கள் இடம்பெயர்ந்து அல்லப்படுவதாக புகார்

இடம்பெயர்ந்த மக்கள்
இடம்பெயர்ந்த மக்கள்

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக அந்தப்பிரதேசத்தினுள் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் இடம்பெயர்ந்து மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வீதியோரங்களில் மர நிழல்களில் பொது இடங்களில் தங்கியுள்ள இவர்கள் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருவதாகவும் இவர்களுக்குத் தேவையான அடிப்படை சுகாதார வசதிகளை வழங்குவது கடினமாகியிருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்ச்சியான எறிகணை வீச்சுக்கள், விமானக் குண்டுத் தாக்குதல்கள் காரணமாகவும் வேறு பல்வேறு பிரச்சினைகள் காரணமாகவும் உளவியல் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

வன்னிப்பிரதேசத்து நிலைமைகள் குறித்து அவர் எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகத்திடம் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


வன்னி பகுதிக்கு மனிதாபிமான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோரிக்கை

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரத்தினம்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரத்தினம்

இலங்கையில் வடக்கே வன்னிப் பிரதேசத்தில் தொடரும் இராணுவ நடவடிக்கை காரணமாக இடம் பெயர்விற்குள்ளாகியிருக்கும் மக்களின் துயர் துடைக்க, கிழக்கு மாகாண சபை அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் கோரிக்கையொன்று முன் வைக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கையை முன் வைத்து கடிதமொன்றை தமிழ் ஜனநாயக தேசியக்கூட்டமைப்பை சேர்ந்த மாகாண சபை உறுப்பினரான இரா.துரைரத்தினம் அனுப்பி வைத்துள்ளார்.

வன்னிப் பிரதேசத்தில் ஏற்கனவே இடம் பெயர்ந்தவர்களும், நிரந்தர வசிப்பாளர்களும் என ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்விற்கு உள்ளாகி அல்லல்படுவதாகவும், உணவு, உடை, குழந்தைகளுக்கான பால்மா உட்பட இவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைப்பது குறித்து அக் கடிதத்தில் தான் முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார்.

அத்தோடு மக்களை வெளியேறவிடாமல் விடுதலைப் புலிகள் தடுத்து மனிதக் கேடயமாக பயன்படுத்துவார்களானால் அது கண்டிக்க வேண்டியது என்றும்,
அதே போல மக்கள் குடியிருப்பு பகுதிகள் மீது அரசாங்கத்தினால்
மேற்கொள்ளப்படும் தாக்குதல்களினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் கூறுகின்றார்.


இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 1 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பெரும்போக விவசாயம்

பெரும்போக விவசாயத்திற்கு இலக்கு
பெரும்போக விவசாயத்திற்கு இலக்கு

இலங்கையின் கிழக்கு மாகாணப் பகுதியில் தற்போது சிறுபோக வேளாண்மைச் செய்கை முடிவடைந்து, பெரும்போக விவசாயச் செய்கையினை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்றன.

இந்த நிலையில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் ஒரு இலட்சம்
ஹெக்டேர் விவசாய விளைநிலத்தில் விவசாயம்
செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருவதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா தெரிவித்திருக்கின்றார்.

அத்தோடு விவசாயிகளுக்கு நிதி உதவி, விதை நெல் உதவி, நில மேம்பாடு மற்றும் இதர வசதிகளை விவசாய அமைச்சு செய்து கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விளைப்பொருட்களை சந்தைபடுத்தல் என்பது சுலபமான விஷயமாக தான் இருக்கும், என்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா தெரிவித்திருக்கின்றார்.

கல்விளான் மற்றும் முழங்காவில் ஆகியவற்றைக் கைப்பற்றியதாக இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கல்விளான் சிற்றூரையும், கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்தில் உள்ள முழங்காவில் பகுதியையும் விடுதலைப் புலிகளிடமிருந்து அரச படைகள் இன்று கைப்பற்றியிருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடமாகிய துணுக்காய்க்கு தென்மேற்கில் உள்ள கல்விளான் பகுதியை நோக்கி முன்னேறிய படையினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் கடுமையான பலநாள் எதிர் தாக்குதல்களுக்குப் பின்னர், இந்தப் பிரதேசத்தை இராணுவம் கைப்பற்றியிருப்பதாகக் கூறியுள்ள பாதுகாப்பு அமைச்சகம், நேற்று இந்தப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் 2 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.

எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

விடுதலைப்புலிகள்
விடுதலைப்புலிகள்

ஆயினும் வவுனியா நவ்வி, குஞ்சுக்குளம் பகுதிகளில் நேற்று இராணுவத்தினருக்கு எதிராக தாங்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் 18 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்தப் பகுதியில் முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

ஆனால், வவுனியா பாலமோட்டை பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் நேற்று மேற்கொண்ட நடவடிக்கைகளில் 9 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், இராணுவச் சிப்பாய் ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் இலங்கை இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

வவுனிக்குளம் மற்றும் வெலிஓயா களமுனைகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நேற்று மேற்கொண்ட தாக்குதல்களில் 5 விடுதலைப் புலிகளும், 4 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

நலன்புரி நிலையத்தில் மீண்டும் தீ

இரண்டாவது தடவையாக தீ விபத்து
இரண்டாவது தடவையாக தீ விபத்து

வவுனியா, பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் இன்று பகல் ஏற்பட்ட தீயினால் அந்த நலன்புரிநியைத் தொகுதியின் இரண்டு பிரிவுகளில் உள்ள 80 வாழ்விடங்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியிருப்பதாக வவுனியா பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில் 70 குடும்பங்கள் வசிப்பிடங்களை இழந்துள்ளதாகவும், சுமார் 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் தெரிவித்திருக்கின்றார்.

கடந்த மாதம் 17 ஆம் திகதியும் இதே இடத்தில் ஒரு தீ விபத்து ஏற்பட்டதும், அதிலும் நூற்ருக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதாகவும், இந்த நலன்புரிநிலையத் தொகுதியில் உள்ள பாடசாலை மண்டபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியோடு இந்த குழும்பங்களுக்குத் தேவையான அடுத்த கட்ட உதவிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் தெரிவித்தார்.



கிழக்கு இலங்கையில் ஆட்கடத்தல்கள், கொலைகள்

அம்பாறை மாவட்டம் கல்முனையில் ஒரு தாயும் மகனும் ஆயுதக் குழுவொன்றினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மேலும் மட்டக்களப்பு கொத்தியாவளை கிராமத்தில் புதன் நள்ளிரவு கடத்தப்பட்ட விவசாயியொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இருப்பினும் இக்கடத்தல்கள் மற்றும் கொலைக்கான பின்னனியோ, சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களோ இதுவரை கண்டறியப்படவில்லை என்று பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டம் நிலாவெளிப் பகுதியில் உள்ள காட்டுப் பிரதேசத்தில், புதன் மாலை விறகு வெட்டச் சென்ற இருவர் சுட்டுக்கொல்லபட்டுள்ளார்கள்.

விடுதலைப்புலிகளே இவர்களை சுட்டுக்கொன்றதாக ஆரம்கட்ட விசாரணைகளில் தெரியவந்ததாக படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் விடுதலைப்புலிகள் தரப்பில் இது குறித்து கருத்துக்கள் எதுவும் வரவில்லை.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

NorthEast Secretariat on Human Rights (NESoHR): 70,000 new Internally Displaced People (IDP) in Vanni in 60 days; SLA shelling targets another hospital zone in Vanni, IDP killed; Sri Lankan Soldiers Kill 15 Tamil Tigers; Jets Raid Rebel Bases

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 10, 2008

வட இலங்கை மோதல்களில் விடுதலைப் புலிகள் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளில், வன்னிக் களமுனைகளிலும், யாழ்ப்பாணத்தில் கிளாலி களமுனைகளிலும் சனியன்று இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 28 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா பாலமோட்டை முன்னரங்க பகுதிகளிலும், வெலிஓயா பகுதியிலும் இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது நேற்று நடத்திய தாக்குதல்களில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் விபரம் வெளியிட்டுள்ளது. பாலமோட்டை பகுதியில் இடம்பெற்ற சண்டைகளின் பின்னர் இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதலில் 2 விடுதலைப் புலிகளின் சடலங்களும் ஆயுதத் தளபாடங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

யாழ்ப்பாணம் கிளாலி பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது இராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதல் ஒன்றில் 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

முகமாலை பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு தாக்குதல் சம்பவத்தில் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

ஆனால் விடுதலைப் புலிகள் தரப்பு தகவல்களோ, வவுனியா பாலமோட்டை, குஞ்சுக்குளம், நவ்வி ஆகிய பகுதிகளில் இருந்து மும்முனைகளில் முன்னேறுவதற்கு முயன்ற இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன. இந்த மோதல்களில் 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.


மடு தேவாலயம் திரும்பியது மாதா திருச்சொரூபம்

மாதா திருச்சொரூபம்
மாதா திருச்சொரூபம்

இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தின் வசமாகியுள்ள மடுக்கோவிலுக்கு, மன்னார் ஆயர் இல்லத்தில் இதுவரை வைக்கப்பட்டிருந்த மடு மாதாவின் திருச்சொரூபம், சனிக்கிழமை மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டு கொலுவேற்றப்பட்டுள்ளதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்தார்.

கடந்த நான்கு மாதங்களாக உரிய பராமரிப்பின்றி இருந்த மடுக்கோவிலின் திருத்த வேலைகள் முடிக்கப்பட்டு உட்கட்டமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை, மடுக்கோவிலை பூஜை வழிபாட்டுக்குரிய புனிதமாக்கும் சமய வைபவங்களை மேற்கொள்வதற்காக கத்தோலிக்க மதகுருமார்கள் திங்கட்கிழமை அங்கு செல்லவிருப்பதாகவும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் தெரிவித்தார்.


வட இலங்கையில் அறுபதினாயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதை இலங்கை அமைச்சர் உறுதி செய்துள்ளார்

அமைச்சர் ரிசாத் பதியுதீன்
அமைச்சர் ரிசாத் பதியுதீன்

இலங்கைப் படையினருக்கும், விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும் இடையில் இலங்கையின் வட பகுதியில் தொடரும் மோதல்கள் காரணமாக அப்பகுதியில் அறுபதினாயிரம் மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் சபையின் முகவராண்மை கூறியதை இலங்கையின் மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஒப்புக்கொண்டுள்ளார்.

இருந்த போதிலும், அங்குள்ள மக்களுக்கான நிவாரண உதவிகள் ஆகஸ்டு மாதம் 15 திகதி வரைக்குமான அளவுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆனாலும், அங்குள்ள அரசாங்க அதிகாரிகளை தற்போதைய சூழ்நிலையில் தொடர்புகொண்டு மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதில் சில சிரமங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவை குறித்து அமைச்சர் ரிசாத் பதியுதீனின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


விமானக் குண்டுவீச்சில் விடுதலைப்புலிகளின் தளங்கள் அழிக்கப்பட்டதாக இராணுவம் கூறுகிறது- பொதுமக்கள் கொல்லப்பட்டதாக விடுதலைப்புலிகள் அறிவிப்பு

விமானக் குண்டு வீச்சு( ஆவணப்படம்)
விமானக் குண்டு வீச்சு( ஆவணப்படம்)

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய வன்னிப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட இலக்குகள் மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவிலும், சனிக்கிழமை காலையிலும் விமானப்படையினர் வான்வழி தாக்குதல்களை நடத்தி விடுதலைப் புலிகளுக்கு சேதம் ஏற்படுத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புக்கு மேற்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்தள்ள விஸ்வமடுக்குளம் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் ஒன்றின் மீது சனிக்கிழமை காலை 10 மணிக்கும், புதுக்குடியிருப்புக்கு வடக்கே உள்ள இரணைப்பாலையில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவு தளம் ஒன்றின் மீது இன்று காலை 9.55 மணிக்கும் விமானப்படையினர் விமானக்குண்டுத் தாக்குதல்களை நடத்தி அந்தத் தளங்களை அழித்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

பூநகரி பகுதியில் உள்ள நாகதேவன்துறைக்கு அருகில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் கண்காணிப்பு நிலையத்தையும், அதனோடு இருந்த படகுகள் நிறுத்துமிடத்தையும் விமானப்படையின் எம்.ஐ.24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகள் குண்டு வீசி தாக்கி அழித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டிருக்கின்றது.

எனினும் இரணைப்பாலை பகுதியில் இன்று காலை விமானப்படைக்குச் சொந்தமான தாக்குதல் விமானங்கள் மக்கள் குடியிருப்புக்கள் மீதே குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதில் ஆசிரியர் ஒருவர் உட்பட 2 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும், 12 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

ஆனால், அக்கூற்றினை விமானப்படையினர் மறுத்துள்ளனர். இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

One fatal accident every five minutes on Indian roads: Motor Vehicles Amendment Bill

Posted by Snapjudge மேல் ஜூன் 25, 2008

சாலை விபத்து உயிரிழப்புகளில் இந்தியா முதலிடம்

உலகில் வாகன விபத்துகளில் அதிகம் பேர் உயிரிழக்கும் நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்திக்ககொண்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது இந்தியா.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோர் இந்தியச் சாலைகளில் அகால மரணம் அடைகின்றனர். இருபது லட்சம் பேர் மோசமாக காயமடைகின்றனர்.

இந்தச் சாலை விபத்துகளினால் சமூகமும் பொருளாதாரமும் சந்திக்கும் இழப்பு மிகப்பெரியது.

ஆனால் இப்போதுதான் இந்திய அரசு இவ்விவகாரத்திற்கு முக்கியத்துவம் தருவதாகத் தெரிகிறது

தேசிய சாலை பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ள உயர்- அதிகார ஆணையம் ஒன்று பரிந்துரைத்துள்ளது.

சாலை பாதுகாப்பு, பாதுகாப்புமிக்க சாலைகள் பாதுகாப்புமிக்க வாகனங்கள் தொடர்பான பொறுப்பு அனைத்தையும் ஒருங்கிணைக்கிற ஒரு முயற்சி இது.

மலேரியா, காசநோய், எய்ட்ஸ் இவை எல்லாமும் சேர்ந்து பலிகொள்ளும் உயிர்களின் எண்ணிக்கையைவிட இந்தியாவில் வாகன விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். ஆதலால் இவ்விவகாரத்தை இனியாவது கண்டுகொள்வதே இந்தியாவுக்கு நல்லது.

Posted in Economy, Finance, Govt, India | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Arputharaj: Political conferences & Public hassle – Disturbing normal life with Abundant Exuberance

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2008

அற்புதராஜுக்கு நன்றி!

அரசியல் கட்சிகள் தங்களது செல்வாக்கை வெளிப்படுத்தவும், தங்கள் பின்னால் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று அரசியல் தலைவர்கள் தங்களைத் தாங்களே தைரியப்படுத்திக் கொள்ளவும் மாநாடு, பேரணி என்று நடத்தி விடுகிறார்கள். இதனால் எத்தனை லட்சம் ரூபாய்கள் விரயமாக்கப்படுகின்றன, எத்தனை மணிநேர மனித உழைப்பு வீணாகிறது என்பதைப் பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை.

இந்த மாநாடுகளும், பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் இன்றைய ஊடகப்புரட்சிக்குப் பிறகு தேவைதானா என்பது சந்தேகம்தான். தொலைக்காட்சிப் பெட்டிகள் மூலம் தமிழகத்திலுள்ள 95% மக்களை நேரில் சந்தித்துத் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கும் வாய்ப்பு ஏற்பட்ட பிறகும் இதுபோன்ற தேசிய விரயங்களில் அரசியல் கட்சிகள் ஈடுபடுவது என்பது எந்த அளவுக்கு நமது தலைவர்கள் பொறுப்பற்ற விதத்தில் செயல்படுகிறார்கள் என்பதைத்தான் எடுத்துக் காட்டுகிறது.

வேடிக்கை என்னவென்றால், அநேகமாக எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுக்கென தொலைக்காட்சிச் சேனல்களையே வைத்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான். அந்த தொலைக்காட்சிச் சேனல்களில் தங்கள் முகத்தையே திருப்பித் திருப்பிக் காட்டித் திருப்தி அடைவது மட்டுமல்லாமல், தொலைக்காட்சி வாடிக்கையாளர்களை வேறு வெறுப்படையச் செய்து விடுகிறார்கள். இத்தனையும் போதாதென்று பொதுக் கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகள் எல்லாம் எதற்கு?

கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்த என்கிற வாதத்திலும் உண்மை இல்லை. இதுபோன்ற மாநாடுகளில் முக்கால்வாசிப் பேர் பணம் கொடுத்து அழைத்து வரப்படுபவர்கள்தான் என்பதை அந்தக் கூட்டத்தினரைப் பார்த்தாலே தெரியும். ஊர் சுற்றிப் பார்க்க வரும் அப்பாவி மக்கள் சிலர். சாப்பாடும் பணமும் கிடைக்கிறதே என்கிற ஆசையில் வருபவர்கள் பலர்.

அது போகட்டும். கட்சி சாராத நம்மைப் போன்ற பொதுமக்களின் நிலைமைதான் இதுபோன்ற மாநாடுகள் மற்றும் பேரணிகள் நடக்கும்போது மிகவும் பரிதாபம். ஓரிடத்துக்கு நிம்மதியாகப் பயணிக்க முடியாது என்பது மட்டுமல்ல, அந்தந்த ஊர்களில் அன்றாட வாழ்க்கை வேறு பாதிக்கப்பட்டு விடுகிறது. தெருவெல்லாம் இவர்கள் வைக்கும் கட்-அவுட்டுகள், கொடிகள் மற்றும் போஸ்டர்கள் முகம் சுளிக்க வைப்பதுடன், போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் இருக்கின்றன.

பொதுக்கூட்ட மேடைகளுக்கும், “கட்-அவுட்’டுகளுக்கும் ரகசியமாக மின்சாரத்தைத் திருடும் சாகசம் நடப்பது தனிக்கதை.

இந்தப் பேரணிகள் முடிந்த பிறகு வீசி எறியப்படும் உணவுப் பொட்டலங்கள், மதுபான பாட்டில்கள், பீடி, சிகரெட் துண்டுகள், கழிவுகள் என்று அந்த நகரமே நரகமாக்கப்பட்டு விடுகிறது. அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஒருபுறம் இருக்க, நகராட்சி மற்றும் மாநகராட்சித் துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தேவையில்லாத அதிகரித்த வேலைப்பளு!

இதற்கெல்லாம் விடிவுகாலம் பிறக்காதா, இந்த அரசியல் கட்சிகளின் பொறுப்பற்ற செயல்களை யாராவது கண்டித்துக் கடிவாளம் போட மாட்டார்களா என்று ஏங்கிய அப்பாவிப் பொதுமக்களின் சார்பில் போர்க்கொடி தூக்கினார் சென்னை ஸ்ரீகஜலெட்சுமி காலனி குடிசைப்பகுதி மக்கள் நல்வாழ்வுச் சங்கத் தலைவரான 72 வயது அற்புதராஜ். அவர் தொடுத்த பொதுநல வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு அனைத்துத் தரப்பினரின் ஏகோபித்த கரகோஷ வரவேற்புக்கு உரியது.

உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி அசோக் குமார் கங்குலியும், நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாவும் அளித்திருக்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில், ஏழு முக்கிய நிபந்தனைகளை அரசியல் கட்சிகளுக்கு விதித்திருக்கிறார்கள். அதன்படி இனிமேல் இரவு பத்து மணிக்கு மேல் சென்னை போன்ற நகரங்களில் பொதுக்கூட்டங்கள் தடை செய்யப்படுகின்றன. மூன்று மணி நேரத்துக்கு மேல் ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை என்பது மட்டுமல்ல, போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத வகையில்தான் ஊர்வலங்கள் நடத்தப்படவும் வேண்டும்.

பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகள் முடிந்ததும் அரசியல் கட்சிகள் தங்களது பேனர்கள் மற்றும் கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றும்போது பொதுச்சொத்துகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தக் கூடாது என்கிற கண்டிப்பான உத்தரவும் பிறப்பிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, இதுபோன்ற மாநாடுகள் மற்றும் பேரணிகளுக்கு அனுமதி வழங்கும்போது முன்பணமாக ஒரு தொகை பெறப்பட வேண்டும் என்றும், பொதுச்சொத்துக்குச் சேதம் ஏற்படுமானால் அந்தத் தொகை ஈடாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு தெளிவாக்குகிறது.

ஒரு விஷயத்தை மட்டும் தீர்ப்பு ஏனோ விட்டுவிட்டது. இதுபோன்ற மாநாடுகள் மற்றும் பேரணிகள் நடத்தும் கட்சிகளிடமிருந்து சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் துப்புரவுக் கட்டணம் பெற வேண்டும் என்பதுதான் அது.

கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இதுபோன்ற மாநாடுகள், பேரணிகள் முறைப்படுத்தப்பட வேண்டும்.

Posted in Govt, India, Law, Order, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »