Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘dead’ Category

March 30 – LTTE, Eezham, Sri Lanka: News & Updates (BBC Tamil)

Posted by Snapjudge மேல் மார்ச் 30, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 01 ஏப்ரல், 2008

மூதூர் தொண்டர் நிறுவன பணியாளர் கொலைகளை அரசாங்கப் படையினரே செய்ததாக மனித உரிமை அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது

இலங்கையில் சுனாமி நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டு தொண்டு நிறுவனமான அக்ஷன் பெஃய்ம் நிறுவனத்தின் உள்ளூர் பணியாளர்கள் 17 பேர் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் இலங்கை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உறுப்பினர்களின் பெயரை மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் இந்தச் சம்பவத்தை மறைக்க முயற்சிப்பதாகவும் சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

2006 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளுடனான மோதலை அடுத்து மூதூரை கைப்பற்றிய காலப்பகுதியில் நடந்த இந்த கொலைகள் தொடர்பில், இலங்கை ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு ஒன்றும் விசாரணைகளை நடத்தி வருகிறது.

கோபாலசிங்கம் சிறிதரன்
கோபாலசிங்கம் சிறிதரன்

ஆனால், இந்தப் புலன் விசாரணை நடவடிக்கைகளை அரசாங்கம் மறைக்க முயலுவதாகக் குற்றஞ்சாட்டி, இதனைக் கண்காணித்துவந்த, சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு ஒன்று தனது கண்காணிப்புப் பணியில் இருந்து விலகிச் சென்று விட்டது.

துணைப்படையைச் சேர்ந்த ஒரு ஊர்காவற்படைச் சிப்பாயும், இரண்டு பொலிஸ்காரர்களும் இந்தக்கொலைகளைச் செய்ததாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கூறி அவர்களது பெயர்களையும் வெளியிட்டுள்ளது.

இந்த கொலைச் சம்பவங்கள் குறித்த பொதுவிசாரணைகளில் இலங்கை ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு ஈடுபட்டுள்ளதால், மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், அந்த ஆணைக்குழுவின் முன்பாக தமது ஆதாரங்களை காண்பித்து தகவல்களை வெளியிட வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் அமைச்சரான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலளிக்குமுகமாக தமிழோசையிடம் பேசிய மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த கோபாலசிங்கம் சிறிதரன் அவர்கள், இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியை அந்த ஆணைக்குழுவின் முன்பாக ஆஜர் செய்யும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும், ஆனாலும், அந்தச் சாட்சியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மின்னேரியாவில் மின்னல் தாக்கியதில் நான்கு படையினர் மரணம் 59 பேர் காயம்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வட-மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள மின்னேரியா இராணுவத்தளத்திற்கு அண்மையில் அமைந்துள்ள இராணுவமுகாமொன்றினைச் சேர்ந்த ஒரு தொகுதி இராணுவ வீரர்கள் இன்று மாலை பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் மிகவும் சக்திவாய்ந்த மின்னல் ஒன்று தாக்கியதில் சுமார் நான்கு படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் சுமார் 59 படையினர் காயமடைந்து பொலன்நறுவை தளவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் பொலன்நறுவை மாவட்டம் மின்னேரியா கட்டுக்கெலிய இராணுவ முகாம் பகுதியில் வழமையான இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவ அணியினரே இந்த மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அதிதீவிர சத்திர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.

சிறையுடைப்பு முயற்சி

இதேவேளை இன்று மாலை இரத்தினபுரி குருவிட்ட பகுதியிலுள்ள சிறைச்சாலையை உடைத்துத் தப்பி வெளியேறமுயன்ற நான்கு சிறைக்கைதிகள் அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி மரணமாகியிருப்பதாக இரத்தினபுரி பொலிசார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தின் போது மேலும் மூன்று சிறைக்கைதிகள் காயமடைந்து அண்மையிலுள்ள வைத்தியசாலையில் பொலிஸ்காவலுடன் சிகிச்சைபெற்று வருவதாகவும், நிலைமை தற்போது பொலிசாரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் பொலிசார்
தெரிவித்திருக்கின்றனர்.


 

புதுப்பிக்கப்பட்ட நாள்: 31 மார்ச், 2008

இயக்கத்திலிருந்து சிறார் 22 பேரை விடுதலை செய்திருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்

இயக்கத்தில் இளம்பிராயத்தினர் என்பது ஒரு நெடுங்கால சர்ச்சை

விடுதலைப் புலிகள் தமது படையிலிருந்து 22 சிறாரை விடுதலை செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் படையில் நூற்றுக்கணக்கான சிறார் இன்னும் இருப்பதாக யுனிசெஃப் என்ற ஐ.நா.வின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் தெரிவித்திருப்பதையும் புலிகள் மறுத்துரைத்திருக்கின்றார்கள்.

தங்களால் விடுவிக்கப்பட்டுள்ள சிறார் தொடர்பான விபரங்களை யுனிசெஃப் நிறுவனம் உறுதிப்படுத்துவதற்குத் தவறியிருக்கின்றது என்றும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் ஊடாக வெளியிடப்பட்டுள்ள மின்னஞ்சல் வழியாக விடுதலைப் புலிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இருபது சிறாரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் சி.பி.ஏ. என்ற சிறுவர் பாதுகாப்புக்கான தமது அமைப்பின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

நூற்றுக்கணக்கான சிறார் தமது அமைப்பில் இன்னும் இருப்பதாகக் கூறிவரும் யுனிசெஃப் நிறுவனம், இந்தச் சிறார் தொடர்பான பிந்திய தகவல்களை உறுதிசெய்து தனது பட்டியலை மாற்றியமைக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகள் குற்றஞ்சுமத்தியிருக்கின்றார்கள்.

அதேவேளை, தமது அமைப்பில் உள்ள வேறு 41 சிறாருக்கு பெற்றோர்களோ அல்லது பாதுகாவலர்களோ இல்லாத காரணத்தினால் அவர்களை விடுதலை செய்யமுடியாத நிலை தோன்றியிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இது குறித்த மேலதிக விபரங்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை ஏ9 வீதியில் ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி சனிக்கிழமைகளிலும் திறந்திருக்கும்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்

ஓமந்தை சோதனைச் சாவடி

இலங்கையின் வடக்கே ஏ9 வீதியில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மதவாச்சி சோதனைச்சாவடியிலும், வவுனியா, ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியிலும் அரசாங்கத்தினால் மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளினால் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கும், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்திற்கும் இடையிலான பொதுமக்களின் போக்குவரத்து மற்றும் வர்த்தக தேவைகளுக்கான ட்ரக் வண்டிகளின் போக்குவரத்து என்பன தாமதமடைய நேரிட்டிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைக்குழு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருக்கின்றது.

இந்நிலையில் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று சனிக்கிழமைகளிலும் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான வாகனப் போக்குவரத்து நடைபெறுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினர் மேலதிக கடமையில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.

திங்கள் முதல் வெள்ளிவரை என வாரத்தில் 5 தினங்களே ஓமந்தை சோதனைச்சாவடி வழமையாகப் பொதுப் போக்குவரத்துக்காகத் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், சுகாதார அமைச்சினால் அனுப்பப்பட்டு வவுனியாவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள வன்னிப்பிரதேச அரச வைத்தியசாலைகளுக்கான மருந்துப் பொருட்களை வவுனியாவில் இருந்து ஓமந்தை ஊடாகக் கொண்டு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறுவதில் நிலவுகின்ற காலதாமதம் காரணமாக ஓமந்தை சோதனைச்சாவடி சனிக்கிழமைகளிலும் திறக்கப்படுவதனால் பெரிதாகப் பயனேதும் ஏற்படாது என்கிறார் கிளிநொச்சி மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி அவர்கள்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் நேயர்கள் கேட்கலாம்.


இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய இலங்கை வியாபாரிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

இலங்கையிலுள்ள அரிசி வர்த்தகர்கள், தற்போது நாட்டில் நிலவும் அரிசி தட்டுபாட்டை தீர்க்கும் முகமாகவும், வரவுள்ள தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஏற்படும் தேவைகளை சமாளிக்கும் முகமாகவும் இந்தியாவிலிருந்து ஒரு லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய உதவுமாறு இலங்கை ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்கள்.

இது தொடர்பில் தமிழோசையிடம் கருத்து தெரிவித்தார் கொழும்பு பழைய சோணகர் தெரு வர்த்தக சங்கத் தலைவர் பழனியாண்டி சுந்தரம்.

பொதுவாக தங்கள் நாட்டுக்குத் தேவையான அளவுக்கு அரிசியைத் தாங்களே உற்பத்தி செய்துக்கொள்ளக்கூடிய நிலைமை இருக்கும். ஆனால் இந்த முறை மழையில் ஏராளமான பயிர் நாசமடைந்துவிட்டதால், அரிசிக்கான தேவை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அது மட்டுமல்லாமல் இலங்கையிலுள்ள வியாபாரிகள் சோளம் மற்றும் சோயா போன்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் கோழித் தீவனம் மற்றும் கால்நடைத் தீவனங்களை இந்தியாவிலிருந்துதான் பெருமளவு இறக்குமதி செய்ததாகவும், ஆனால் அவற்றின் விலை இரட்டிப்பாகி அரிசி விலையைவிட உயர்ந்துவிட்டதால், கிட்டத்தட்ட 70,000 டன் அரிசி இவ்வாறு தீவனமாக உயயோகிக்கப்பட்டதும் அரிசி பற்றாக்குறைக்கு காரணம் எனவும் அவர் கூறுகிறார்.

சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஏழைகளுக்கு அரிசி வழங்கும் திட்டம் ஒன்றை ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்றும் அத்திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு உதவியாக இறக்குமதி செய்யப்படும் அரிசியின் மீதான தீர்வையையும் அவர் அகற்றியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.


கிழக்கு மாகாண சபைத் தேர்தல்: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை

காத்தான்குடியில் நடந்த கூட்டம்

இலங்கையில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி முஸ்லிம் வேட்பாளர்கள் குறித்து பள்ளிவாசல் சம்மேளனங்களுடன் பிரதேச ரீதியாக பேச்சுவார்ததை நடத்திவருகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பொதுச் செயலாளரான சுசில் பிரேம ஜயந்த், முஸ்லிம் அமைச்சர்கள், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் சகிதம் இப்பேச்சுவார்த்தையை பள்ளிவாசல் சம்மேளனங்களுடன் நடத்திவருகின்றார்.

திங்களன்று மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனத்துடன் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது முஸ்லிம் வேட்பாளர்களைத் தமது கட்சியில் இணைந்து போட்டியிட முன்வருமாறு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவரான எம்.டி.எம். ஹாலித் ஹாஜியார் கூறுகின்றார்.

தமிழர்களும் முஸ்லிம்களும் ஆளும் கட்சியில் இணைந்து போட்டியிடுவதன் மூலம் முதலமைச்சர் பதவியை சுழற்சி அடிப்படையில் பகிர்ந்துகொள்ள முடியும் என்று ஆளும் கட்சியினால் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தமது சம்மேளனமானது அரசியல் சார்பற்ற அமைப்பு என்பதை இக்குழுவினரிடம் தாம் தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.


திருகோணமலை இளம்பெண்ணுக்கு ‘சவுதியரேபியாவில் சித்ரவதை’

மத்திய கிழக்கில் சித்ரவதைக்கு உள்ளாகும் இலங்கைப் பெண்களின் எண்ணிக்கை அதிகம்

சவுதியரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைபார்த்துத் திரும்பியிருக்கும் திருகோணமலை கிண்ணியா மாஞ்சோலைப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், சவுதியில் தான் வேலைபார்த்த வீட்டின் உரிமையாளர் தன்னைக் கொடுமைப் படுத்தியதாக பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

நோய்வாய்ப்பட்ட நிலையில் திருகோணமலை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்ற நலினா உம்மாள் என்ற இளம்பெண், சவுதியரேபியாவிலும் இரண்டுவார காலம் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகக் கூறுகிறார்.

தான் வேலைக்குச் சேர்ந்து ஒரு சில நாட்களில், அந்த வீட்டில் சிறு குழந்தை ஒன்று இறந்துபோகவே. வீட்டின் முதலாளியம்மா, தன்னை தரித்திரம் பிடித்தவள் என்று கூறி பலவித சித்ரவதைக்கும் ஆளாக்கியதாக நலினா தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில், தன்னை குவைத் அனுப்புவதாகச் சொல்லி ஏஜெண்டுகள் சவுதிக்கு அனுப்பிவிட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

இது குறித்து திருகோணமலை செய்தியாளர் ரத்னலிங்கம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 30 மார்ச், 2008

இலங்கை கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு புதிய தமிழ் கூட்டணி

இலங்கையில் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணி ஆகிய தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து தமிழ் ஜனநாயக தேசிய முன்ணணியாக போட்டியிட தீர்மானித்துள்ளது.

தமிழ் ஜனநாயக தேசிய முன்ணணி புதிய அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்று ஞாயிற்றுகிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் போராட்டம் காரணமாகவே 13 வது அரசியல் யாப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டு மாகாண சபை முறை ஏற்படுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், முதலமைச்சராக தமிழரொருவர் வரவேண்டும் என்பதே நியாயமானது என்றும் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு மாகாணம் சட்ட ரீதியாகவே தற்போது பிரிக்கப்பட்டுள்ளதால் இத்தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்று கூறிய அவர் இணைப்பு பற்றி கிழக்கு மாகாண மக்களே தீர்மானிக்க வேண்டியவர்கள் என்றார்.

தமது தமிழ் ஜனநாயக தேசிய முன்னனியில் 5 இடது சாரி கட்சிகள் இணைந்து போட்டியிட முன் வந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்


இலங்கை படையினருக்கு கொசுக்கடியினால் தொற்றுநோய்கள்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் மன்னார், வவுனியா மற்றும் வெலிஓயா எனப்படும் மணலாறு போன்ற வன்னிப்போர்முனைப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட கொசுக்களின் பெருக்கத்தினால் சுமார் 200 துருப்பினர் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

டெங்கு, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட படையினருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு தற்போது நிலைமை முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு அங்கு ஏற்கனவே முகாமிட்டிருக்கும் படையினருக்கும் கொசு வலைகள் போன்றவை கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அப்பகுதிக்கு சென்ற அனுராதபுர வைத்தியசாலை உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள், இந்த தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் பிரிகேடியர் உதயநாணயக்கார கூறினார்.

 


இலங்கையில் விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது குறித்து ஐ நா கவலை

ஐக்கிய நாடுகள் சபை ஆசிய பசிபிக் பகுதிக்கான இந்த ஆண்டின் பொருளாதார சமூக ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ஆசிய பசிபிக் பகுதியில் பல நாடுகள் பொருளாதார நிலையில் வளர்ச்சியடைந்திருந்தாலும் விவசாயத்துறையில் பின்னடைவையே சந்தித்துள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக தெற்காசிய நாடுகளில் இந்த பின்னடைவு கூடுதலாக உள்ளது என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இலங்கையில் விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது பற்றி கவலை வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கை, அது தொடர்பில் கொள்கை வகுப்பாளர்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய தேவையையும் வலியுறுத்தியுள்ளது.

விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது பெருமளவில் வறுமைக்கு வழி செய்யும் எனச் சுட்டிக் காட்டியுள்ள அந்த அறிக்கை, இலங்கை அரசு விவசாயத்துறைக்கு புத்துயிரூட்ட வேண்டியதை வலியுறுத்துவதே கொள்கை வகுப்பாளர்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன்
இலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன்

இலங்கையில் விவசாயத்துறைக்கு பல சலுகைகளை வழங்கியும் கூட விவசாயத்துறையில் உற்பத்தி திறன் அதிகரிக்கவில்லை என சுட்டிக் காட்டுகிறார் இலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன். இதுதான் இலங்கை அரசுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் சவாலாக இருக்கிறது எனவும் அவர் கூறுகிறார்.

விவசாயத்துறையில் பொருளாதார சீர்திருத்தங்களும், விவசாய அணுகுமுறையில் எந்தவிதமான சீர்திருத்தங்களும் ஏற்படாமாலிருப்பததுதான் இதற்கான அடிப்படை காரணம் எனவும் அவர் கருத்து வெளியிடுகிறார். விவசாய நிலங்கள் சீர்திருத்திருத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று என்றும் கலாநிதி சர்வானந்தன் கூறுகிறார்.

அரசும் விவசாயிகளும் நெல் உற்பத்தியில்தான் கூடுதலான கவனம் செலுத்தி வருவதும், பணப்பயிர்களில் கவனம் செலுத்தாததும் விவசாயத்துறையின் தேக்கத்திற்கான காரணங்களாக கருதலாம் எனவும் அவர் தெரிவிக்கிறார். விவசாயிகளுக்கு தொடர்ந்து பயிர் செய்வதற்கு தேவையான நீர் ஆதாரங்களை ஏற்படுத்திக் கொடுத்தி, சந்தை வாய்ப்புகளை அதிகரித்து கொடுத்து, நில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதே உடனடி தேவை எனவும் கலாநிதி சர்வானந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.


இலங்கையின் மொனராகலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் சுட்டுக்கொலை

இலங்கை காவல்துறையினர்
இலங்கை காவல்துறையினர்

இலங்கையின் மொனராகலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் டாக்டர் அண்ணாமலை நாராயணன் முத்துலிங்கம் சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொனராகலை நகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணி முடித்து விட்டு அவர் திரும்பி கொண்டிருந்த வேளை, வேன் ஒன்றில் வந்த ஆயுததாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

இதற்கிடையே, இலங்கையின் கிழக்கு மாகாணசபை தேர்தலில், முஸ்லிம் கட்சிகள் வேறுபாடுகளை மறந்து முதலமைச்சர் பதவியை வெல்வதற்காக ஒன்றுபட்டு தனித்துவமான சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும், அல்லாத பட்சத்தில், மூதூர் பிரதேச முஸ்லிம்கள் தனித்துவமான முறையில் அரசுடன் இணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதாக இன்று சனிக்கிழமை மூதூர் ஆனைச்சேனை திடலில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதேச சபை உறுப்பினர் பி.கே கலில் தெரிவித்துள்ளார்.

 


நீரில் தத்தளிக்கும் விவசாயம் – பெட்டகம்

மழையால் விவசாயம் நாசம்
மழையால் விவசாயம் நாசம்

இலங்கையின் வட மாவட்டங்களிலுள்ள விவசாய நிலங்கள் அண்மையில் பெய்த அடைமழையில் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

வழமைக்குப் புறம்பாக அறுவடைக் காலத்தில் மழை பெய்து பெரும் நஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் ஆற்றாற்றுகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் மட்டும் 12,500 ஏக்கர் விவசாய நிலம் மழை நீரில் மூழ்கி நாசமடைந்ததாக அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகிறது.

வட இலங்கையில் மழைப் பாதிப்புகள் குறித்து வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் தொகுத்தளிக்கும் பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 28 மார்ச், 2008


மனம் மாறும் தற்கொலை குண்டுதாரிக்கு ரொக்கப் பரிசு – கொழும்பில் அனாமதேய சுவரொட்டி

‘தற்கொலை குண்டுதாரியாக நினைப்பவர்கள் மனதை மாற்றிக்கொண்டால் ரொக்கப் பணம் பரிசாகக் கிடைக்கும்’ என்று கூறும் புதிய சுவரொட்டிகள் இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஒட்டப்பட்டுள்ளமை குறித்து பொலிஸார் விசாரணை செய்துவருகிறார்கள்.

கொழும்பில் தமிழர்கள் அதிகம் வாழும் ஒரு பகுதியில் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்தச் சுவரொட்டிகளில் தற்கொலை குண்டுதாரி ஒருவரின் துண்டிக்கப்பட்டத் தலையைக் காட்டி, அதனருகே நீங்களும் வாழப் பிறந்தவர்தான்… ஏன் குண்டுதாரியாகி மடிய வேண்டும்? என்று எழுதப்பட்டுள்ளது.

கரும்புலிகள் என்று சொல்லப்படுகின்ற விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையில் சேர எண்ணம் கொண்டுள்ளவர்கள் தங்களது மனதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் 118 என்று துவங்கும் அரசாங்க தொலைபேசி இலக்கம் ஒன்றை அழைக்க வேண்டும் என்றும் அந்த சுவரொட்டி கூறுகிறது.

அப்படி மனதை மாற்றிக்கொள்பவர்களுக்கு உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க ஒரு கோடி ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தொலைபேசி இலக்கம் இந்தச் சுவரொட்டியில் இடம்பெற்றிருந்தாலும், இப்படி ஒரு திட்டத்தை அரசு அறிவிக்கவில்லை, இது ஏமாற்று வேலை என்று இராணுவம் கூறுகிறது.

இந்தச் சுவரொட்டிகள் குறித்து பொலிஸார் விசாரணை நடத்திவருவதாகக் கூறிய இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயகார, அந்தச் சுவரொட்டியிலுள்ள தொலைபேசி எண்ணை தான் அழைத்தபோது பதிலே இல்லை என்றும் இது ஒரு ஏமாற்று வேலை என்று தான் சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார்.


Posted in A9, BBC, Bombers, Child, Children, dead, Eelam, Eezham, Food, Grains, Hoax, ICRC, Imports, Kids, LTTE, Paddy, Prabakaran, Prabhakaran, rice, Soldiers, Sri lanka, Srilanka, Suicide, UN, War, Warriors | Leave a Comment »

Investigation sought in Border Security Force (BSF) personnel death in Tripura

Posted by Snapjudge மேல் மார்ச் 24, 2008

திரிபுராவில் இறந்த பி.எஸ்.எப். வீரர் சடலத்தை வாங்க பெற்றோர் மறுப்பு

மதுரை, மார்ச் 19: திரிபுராவில் இறந்த எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்.) வீரரின் சாவில் மர்மம் உள்ளதாகவும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமெனவும் கோரி அந்த வீரரின் சடலத்தை வாங்க அவரது பெற்றோர் மறுத்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜி நகர் சிதம்பரனார் தெருவைச் சேர்ந்தவர் சையது முகமது ஷா. இவரது மகன் ஷேக் அப்துல்லா (24). இவர், 4 ஆண்டுகளுக்கு முன் எல்லைப் பாதுகாப்புப் படையில் சேர்ந்தார்.

அண்மையில் திரிபுராவில் பி.எஸ்.எப். 34-வது பட்டாலியனில் வீரராக இருந்தார்.

இந்நிலையில், கடந்த 16-ம் தேதி ஷேக் அப்துல்லாவின் பெற்றோரை, திரிபுரா பிஎஸ்எப் அலுவலகத்திலிருந்து தொலைபேசியில் அழைத்து “உங்களது மகன் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரது சடலத்தை அனுப்பி வைக்கிறோம்’ எனக் கூறியுள்ளனர்.

தங்களது மகன் சாவில் மர்மம் உள்ளதாக சையது முகமது ஷா புகார் தெரிவித்தார்.

சடலத்தை வாங்க மறுப்பு: இந்நிலையில், திரிபுராவில் இருந்து விமானம் மூலம் கர்நாடகம் கொண்டு வரப்பட்ட ஷேக் அப்துல்லாவின் சடலம், கர்நாடக பிஎஸ்எப் வீரர்கள் சார்பில் விமானம் மூலம் மதுரைக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டது.

திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சடலத்தைக் கொண்டு வந்தபோது, ஷேக் அப்துல்லா சாவில் மர்மம் உள்ளதால் தீவிர விசாரணைக்கு உத்தரவிடாத நிலையில் சடலத்தை வாங்கமாட்டோம் என பெற்றோர் தெரிவித்தனர்.

இதனால், பிற்பகல் 3 மணியளவில் கொண்டுவரப்பட்ட சடலத்தை இரவு 8 மணிவரை அவர்களது பெற்றோர் பெறவில்லை.

பெற்றோர் பேட்டி 2 மாதங்களுக்கு முன் விடுமுறைக்கு வந்திருந்த எனது மகன், “உயர் அதிகாரிகள் தொந்தரவு (டார்ச்சர்) அதிகம் உள்ளது’ என தெரிவித்ததாக அவரது தந்தை சையது முகமது ஷா கூறினார். வேலை பிடிக்கவில்லையென்றால் ராஜிநாமா செய்துவிட்டு வந்துவிடு என அவனிடம் தெரிவித்தேன்.

ஆனால், விடுமுறை முடிந்து பணிக்குச் சென்றிருந்த நிலையில் எனது மகன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறுகின்றனர்.

எனவே சாவில் மர்மம் இருப்பதால் நீதி விசாரணைக்கோ அல்லது சிபிஐ விசாரணைக்கோ உத்தரவிட்டால்தான் சடலத்தை வாங்குவோம் எனத் தெரிவித்தார்.

மறு பிரேத பரிசோதனை?

பிஎஸ்எப் வீரர் ஷேக் அப்துல்லா இறந்தது குறித்து இரவு 10.45 மணியளவில் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு இரவு 9.45 மணியளவில் பிரேத பரிசோதனை நடைபெற்றுள்ளது. இறப்புச் சம்பவத்தை வேண்டும் என்றே மிகவும் தாமதமாகத் தெரிவித்துள்ளனர் என ஷேக் அப்துல்லா குடும்ப வழக்கறிஞர் ராஜாமுகமது தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், பிரேதப் பரிசோதனையில், கழுத்துக்குக் கீழ் 3 துப்பாக்கி குணடுகள் பாய்ந்து தலை (நெற்றிப் பகுதியில்) வழியாக வெளியே வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அதுகுறித்து ஆர்டிஓ அளவிலான விசாரணை நடத்தவேண்டும். ஆனால் அதுகுறித்த எந்த ஆவணமும் பிஎஸ்எப் சார்பில் வழங்கப்படவில்லை. எனவே, வீரரின் சடலத்தை மறு பிரேதப் பரிசோதனை செய்யவேண்டும் என அவரது பெற்றோர் விரும்புகின்றனர் எனத் தெரிவித்தார். இதுகுறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Posted in BSF, CBI, dead, Death, Investigation, Murder, Postmortem, Suicide, Tamil, Tripura | Leave a Comment »

Mar 7: Eezham, Sri Lanka, LTTE, Elections, Batticaloa, War, Murders – Updates & News

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 18 மார்ச், 2008 

மட்டக்களப்பு உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் ஜனாதிபதி ராஜபக்ஷ முன் பதவியேற்பு

மட்டக்களப்பு நகர மேயராக பதவியேற்ற சிவகீதா
மட்டக்களப்பு நகர மேயராக பதவியேற்ற சிவகீதா

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மாநகரசபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்காக நடாத்தப்பட்ட தேர்தலில் வெற்றிபெற்று தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள், அரச அதிகாரிகள், அரசியல் தலைவர்களெனப் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

இந்த வைபவத்தின்போது உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்த வெற்றிக்கு அடுத்தப்படியாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெற்றி அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளதோடு, விரைவில் வடபகுதி மக்களுக்கும் ஜனநாயக உரிமை, அபிவிருத்தி மற்றும் சுதந்திரம் போன்றவற்றைப் பெற்றுக்கொடுக்க தனது அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நகர மேயராகப் பதவியேற்ற சிவகீதா பிரபாகரன் அவர்கள் கிழக்கில் இடம்பெற்ற தேர்தலின்போது கிடைக்கப்பெற்ற வெற்றியானது, தமது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்குக் கிடைத்த வெற்றி என்பதனைவிட, கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களுக்குக் கிடைத்த ஒட்டுமொத்த வெற்றி என்று கூறினார்.

அத்துடன் இந்த வெற்றியினூடாக அப்பகுதி மக்களுக்குச் சேவையாற்றுவதற்கு தமக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய இந்த வைபவத்தின்போது, இந்த ஒன்பது உள்ளூராட்சிசபைகளின் உடனடி நடவடிக்கைத் தேவைகளுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலா சுமார் 25 லட்சம் ரூபாயையும், ஒவ்வொரு உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கும், அவர்கள் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக தலா ஒரு லட்சம் ரூபாய்களும் சன்மானமாக வழங்கியதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 14 வருடங்களின் பின்னர் இடம்பெற்ற இந்த ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், எட்டு உள்ளூராட்சி சபைகளில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பும், மட்டக்களப்பு மாநகர சபையை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டு முன்னணியும் வெற்றிபெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


மீண்டும் சிவில் நிர்வாகத்திடம் மட்டக்களப்பு மாநகரசபைக் கட்டிடம்

மட்டக்களப்பு மாநகர சபைக் கட்டிடம்
மட்டக்களப்பு மாநகர சபைக் கட்டிடம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்ததையடுத்து, கடந்த 17 வருடங்களுக்கு மேலாக பாதுகாப்பு தரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வந்த மட்டக்களப்பு மாநகர சபைக் கட்டிடத் தொகுதி இன்று மாநகர சபை நிர்வாகத்திடம் அதிகாரபூர்வமாக மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது.

மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை 1990இல் முறிவடைந்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மாநகர சபைக் கட்டிடத்தொகுதி உட்பட சில கட்டிடங்கள் இராணுவத் தேவைகளுக்காக எடுக்கப்பட்டிருந்தன.

இதன் காரணமாக மாநகரசபை, பிரதேச செயலக கட்டிடத் தொகுதிக்கு மாற்றப்பட்டு தொடர்ந்தும் அக் கட்டிடத்திலேயே தற்காலிகமாக இயங்கி வந்தது.

1990 ம் ஆண்டு முதல் 3 வது படைப்பிரிவு இராணுவ தலைமையகத்தின் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இக் கட்டிடத் தொகுதி கடந்த ஆண்டு முற்பகுதியில் விசேட அதிரடிப் படையினரால் பொறுப்பேற்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.


மன்னாரில் தொடரும் கடும் மோதல்கள்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில், இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெற்ற, விடுதலைப் புலிகளின் இருவேறு தாக்குதல் சம்பவங்களில், இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 13 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மன்னார் அருவியாற்றுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டிருந்த படையினர் மீது, இன்று காலை 7.10 மணியளவில் விடுதலைப் புலிகள் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

இந்தச் சம்பவத்தில் இரண்டு இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டிருக்கின்றது.

இதேவேளை, மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் இராணுவ முன்னரங்க பிரதேசத்தில் நேற்றிரவு 8 மணிமுதல் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின்போது, விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை தாக்குதலில் 11 இராணுவத்தினர் காயமடைந்ததாக மன்னாரிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த படையினர் மன்னார் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக அநுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது பெய்து வரும் அடை மழைக்கு மத்தியிலும் இந்த பகுதியில் நேற்றிரவு முதல் இன்று காலை வரையில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாகவும் மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

—————————————————————————————————————-

புதுப்பிக்கப்பட்ட நாள்: 17 மார்ச், 2008

இலங்கை அரச தொலைக்காட்சி ஊழியர்கள் தாக்கப்பட்ட சர்ச்சை: தொழிற்சங்கத்தினரைச் சந்தித்துள்ளார் ஜனாதிபதி

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் சிலர் அண்மையில் தாக்கப்பட்டது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து அந்நிறுவனத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இலங்கை ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது சர்ச்சைக்கு சுமூகமான தீர்வு ஒன்று காணப்பட்டிருப்பதாகவும், தேசிய தொலைக்காட்சி சேவை முழுமையாக இயல்புநிலைக்கு திரும்பிக்கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் சந்திரபால லியனகே தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதாகவும், தேசியத் தொலைக்காட்சி சேவைகளை பாதிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளுக்கு துணைபோக வேண்டாம் என்று ஊழியர் சங்கத்தினரிடம் அவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் சந்திரபால லியனகே கூறினார்.

திங்கட்கிழமை முன்னதாக, தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் பலர் தத்தமது கருமங்களிற்காக நிறுவனக் கட்டிடத் தொகுதிக்குள் செல்லமுடியாதவாறு பொலிசாரினால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், தங்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அணித்தாகவுள்ள இந்தக் கட்டிடத்தொகுதியினைச் சுற்றி வழமைக்கும் அதிகமான பொலிசாரும், இராணுவத்தினரும், கலகம் அடக்கும் பொலிசாரும் நிறுத்தப்பட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தது.


போக்குவரத்துத் தடைகளால் பாதிப்பு: வவுனியா வழக்கறிஞர்கள் புகார்

ஏ9 வீதியில் போக்குவரத்துத் தடைகள் நீடிக்கின்றன

இலங்கையின் வடக்கே ஏ9 வீதியின் மதவாச்சி சோதனைச் சாவடியில் தொடரும் வாகனப் போக்குவரத்துத் தடை காரணமாக வவுனியா மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சட்டத்தரணிகள் இயல்பாக வெளி மாவட்ட நீதிமன்றங்களுக்குச் சென்றுவர முடியாதிருப்பதாகவும் வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தப் பிரயாணக் கஷ்டங்கள் குறித்து உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சட்டத்தரணிகள் தமது வாகனங்களில் மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகப் பிரயாணம் செய்வதற்கு உரிய அனுமதியைப் பெற்றுத் தருமாறு பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அவர்களிடம் கடிதம் மூலமாகக் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக வாகனப் போக்குவரத்துக்கான தடை தொடர்வதனால், முக்கிய வழக்கு விசாரணைகளுக்காக கொழும்பில் இருந்து சிரேஷ்ட சட்டத்தரணிகள் வவுனியாவுக்கு வருவதற்குத் தயக்கம் காட்டுவதாகவும், இதனால் பல வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டு நீதிமன்றச் செயற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், வவுனியா சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் முருகேசு சிற்றம்பலம் தெரிவித்தார்.

இவை குறித்த மேலதிக விபரங்களை வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் வழங்கக் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 16 மார்ச், 2008

அனுரா பண்டாரநாயக காலமானார்

இலங்கையின் மிக முக்கிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் அனுரா

இலங்கையின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவருமான அனுரா பண்டாரநாயக ஞாயிறன்று கொழும்பில் காலமானார்.

அண்மைக் காலமாக நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த இவருக்கு வயது 59.

1977ஆம் ஆண்டு ஜூலை மாதம் நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்த இவர், பலதடவை பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துவந்துள்ளார்.

1983-89 காலப் பகுதியில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய இவர், 2000ஆம் ஆண்டில் நாடாளுமன்ற சபாநாயகராகவும் பதவி வகித்தார்.

இவரது தந்தை எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக, தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோர் இலங்கையின் பிரதமர்களாக விளங்கினர். பின்னர் இவரது சகோதரியான சந்திரிகா குமாரதுங்க சுமார் 11 வருடங்கள் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக விளங்கினார். ஆனாலும் பண்டாரநாயக குடும்பத்தின் ஒரேயொரு புதல்வரான அனுர பண்டாரநாயகவின் அரசியல் வாழ்க்கை என்பது பலத்த சிக்கல்கள் நிறைந்ததாகவே இருந்துவந்தது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.


மன்னார் மோதல் விபரங்கள்

இலங்கையின் வடக்கே இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மன்னார் நகரிலும், வவுனியாவிலும் ஞாயிறன்று நடத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் இராணுவச் சிப்பாய் ஒருவரும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் கொல்லப்பட்டனர். இதில் இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

மன்னார் புறநகர்ப் பகுதியில், தலைமன்னார் வீதியில் கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஞாயிறு காலை சுட்டுக் கொல்லப்பட்டதாக மன்னார் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் பிஸ்டல் குழுவைச் சேர்ந்தவர்கள், இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தைச் செய்துள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

இதேவேளை, வவுனியா, தாண்டிக்குளம் – கல்மடு வீதியில், மருக்காரம்பலை பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில், இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 3 படையினர் காயமடைந்ததாக இராணுவத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 14 மார்ச், 2008

இலங்கையில் ஐரோப்பிய வெளியுறவு அதிகாரிகள்

மனோ கணேசன்

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு இயக்குநரக அதிகாரிகள் ஹெலென் கேம்பெல் அவர்களும், ஆண்ட்ரியா நிகோலஜ் அவர்களும் தற்போது இலங்கை வந்திருக்கிறர்கள்.

மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் இவர்களை சந்தித்து பேசியிருகிறார்.

இந்த சந்திப்பின்போது விவாதிக்கபட்ட விடயங்கள் குறித்து தமிழோசையிடம் பேசிய மனோ கணேசன், இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஆராய்வதற்காக இந்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் வந்திருப்பதாகக் கூறினார்.

இலங்கையின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்த விசாரணைகளைக் கண்காணித்துவந்த சுயாதீன மாண்புமிக்கோர் குழுவினர் தமது பணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் நிலையில், அதற்கு மாற்றாக, தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவை ஏற்பாடு செய்து விசாரணைகளைக் கண்காணிக்கச் செய்வது குறித்து இலங்கை அரசு மாற்று யோசனை தெரிவித்திருப்பது பற்றி ஐரோப்பிய அதிகாரிகள் தன்னிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதாகவும் மனோ கணேசன் கூறினார்.

அவர் தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கை மனித உரிமை நிலவரம்: அமெரிக்கக் குற்றச்சாட்டு அவதூறு என்கிறது இலங்கை அரசு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ராபர்ட் ஒ பிளேக்

இலங்கையின் மனித உரிமைகள் சூழலை விமர்சிப்பதிருப்பதன் மூலம், அமெரிக்கா, விடுதலைப் புலிகளுக்கு ஒரு வாழ்க்கைச் சந்தர்ப்பத்தை கொடுக்கிறது என்று இலங்கை அரசு குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்க அரசுத்துறையின் வருடாந்திர அறிக்கையில், இலங்கையின் மனித உரிமை நிலவரம் 2007ல் மோசமடைந்துள்ளது என்று கூறப்பட்டிருப்பது இலங்கை அமைச்சர்களுக்கு எரிச்சலைத் தந்துள்ளது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அடங்கிய அவதூறு, குத்தல் பேச்சு, மிகையான விமர்சனம் என்றெல்லாம் அமெரிக்க அரசுத்துறையின் அறிக்கையை இலங்கை வருணித்துள்ளது.

அரசாங்க தரப்பினர் செய்த சட்டவிரோத ஆட்கொலைகள், அவர்களின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் சிறார்களைப் படையில் சேர்த்தது போன்றவற்றை அமெரிக்க அரசுத்துறை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசின் பதிலடிக்குப் பின்னரும், தமது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே தமது நிலைப்பாடு, அதிலிருந்து தாங்கள் பின்வாங்கவில்லை என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.


திருகோணமலை மாணவர்கள் கொலை: மாணவரின் தந்தை வீடியோ வாக்குமூலம்

2006ல் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டது தொடர்பான மரண விசாரணையில், ராஜீஹர் என்ற மாணவனின் தந்தையான டாக்டர் மனோகரன் வீடியோ மூலம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அந்தத் தமிழ் மாணவர்களை விடுதலைப் புலிகள் என்று சந்தேகித்து இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர் என்று அரசாங்க அமைச்சர் ஒருவர் தன்னிடம் ஒப்புக்கொண்டதாக, இலங்கையை விட்டு தற்போது வெளியேறிவிட்ட மனோகரன் கூறியுள்ளார்.

கொழும்பில் வீடு தருகிறோம், இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று தன்னிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திருகோணமலை சம்பவம் மற்றும் பிற பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளைக் கண்காணித்துவரும் சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு, அரசாங்கம் விசாரணைகளில் தலையிடுவதாகவும், சாட்சிகளைப் பாதுகாக்கத் தவறுவதாகவும் கூறி, தமது பணியிலிருந்து விலகுகின்றனர்.


அடைமழை அல்லலில் மன்னார் அகதிகள்

 

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் வழமைக்கு மாறாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்த குடும்பங்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அங்குள்ள தொண்டு நிறுவனப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள முசலி பிரதேசத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவம் கைப்பற்றியதை அடுத்து, அந்தப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 800 குடும்பங்கள் நானாட்டான் பகுதியில் பல இடங்களில் கொட்டில்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அத்துடன், மன்னார் மாவட்டத்தின் விடுதலைப் புலிகளுடைய பிரதேசத்தில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு அண்மையில் அவ்வப்போது வந்துள்ள சுமார் 18 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேர் களிமோட்டை என்னுமிடத்தில் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் குடும்பங்கள் தாழ் நிலப்பகுதிகளில் தங்க வைக்கப்பட்டிருப்பதனால், இவர்கள் தங்கியுள்ள கொட்டில்கள், கூடாரங்களுக்குள் மழைநீர் புகுந்திருப்பதாகவும், இதன் காரணமாக அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரச அதிகாரிகள் தொண்டு நிறுவனங்கள இவர்களுக்குத் தேவையான அவசர நிவாரண உணவு உதவிகளை வழங்கிவருகின்ற போதிலும், இவர்களுக்கான மாற்று இருப்பிட வசதிகளைச் செய்வதில் சிக்கல்கள் எழுந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இடம்பெயர்ந்தவர்கள் அவர்கள் விரும்பிய இடத்தில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற சர்வதேச முறைமை இங்கு கைக்கொள்ளப்படாததன் காரணமாக சர்வதேச மற்றும் உள்ளுர் தொண்டு நிறுவனங்கள் இவர்களுக்கான மாற்று இருப்பிட வசதிகளைச் செய்ய முடியாதிருப்பதாக மன்னார் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் தெரிவிக்கின்றது.

இது குறித்து அந்த ஒன்றியத்தின் தலைவர் அருட்தந்தை விக்டர் சோசை தெரிவிக்கும் மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

—————————————————————————————————————————————————————-

புதுப்பிக்கப்பட்ட நாள்: 14 மார்ச், 2008

இலங்கை மனித உரிமைகள் நிலவரம்: அமெரிக்க கருத்துக்கு இலங்கை அதிருப்தி

இலங்கை மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் அண்மையில் அமெரிக்க அரசுத்துறையால் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்து இலங்கை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ராபர்ட் ஓ பிளேக் அவர்களை, இன்று அழைத்த இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அவர்கள், அவரிடம் இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்த விடயம் குறித்து அமெரிக்கத் தூதுவருடன் தான் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தமிழோசைக்கு கூறிய இலங்கை வெளியுறவு அமைச்சர், அமெரிக்க அரசுத்துறையின் அந்த அறிக்கை, ஆதரம் எதுவும் அற்றது என்றும், இராணுவ ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் தடுமாறிப்போயிருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு, அது புத்துயிர் அளிப்பதாக அமைந்து விட்டது என்றும் அமெரிக்கத் தூதுவரிடம் தான் குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த விவகாரம் குறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், இலங்கை வெளியுறவு அமைச்சருடனான, அமெரிக்கத் தூதுவரின் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், ஆயினும் தமது நிலைப்பாட்டில் அமெரிக்க அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


இலங்கை கிழக்கு மாகாண சபை தேர்தல்: வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ளன

 

இலங்கையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இலங்கை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

இது தொடர்பில் மார்ச் மாதம் 13ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள சிறப்பு வர்த்தமானி அறிவித்தலில், மார்ச் மாதம் திகதி 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த கிழக்கு மாகாணத்துக்கான தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று அந்த அறிவித்தலில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

1987ஆம் ஆண்டின் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து உருவாக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணம், கடந்த வருடம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றை அடுத்து இரண்டு மாகாணங்களாக பிரிக்கப்பட்டது.

அவற்றில் கிழக்கு மாகாணத்துக்கு தற்போது தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் வேட்பு மனுக்களைக் கோரியுள்ளது.

இந்தத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, கடந்த வெள்ளிக்கிழமை, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தேர்தல் ஆணையர் தயானந்த திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்ததாக முன்னர் செய்திகள் வந்திருந்தன.

கிழக்கு மாகாண சபைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 14 உறுப்பினர்களும், அம்பாறை மாவட்டத்தில் இருந்து 17 உறுப்பினர்களும் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 13 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.

இந்தத் தேர்தல் அறிவிப்புக் குறித்து சில தமிழ் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை நேயர்கள் செய்திரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை அரச தொலைக்காட்சி உதவிப் பணிப்பாளர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

தாக்கப்பட்ட அனுரசிறி ஹெட்டிகே

இலங்கை அரச தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினி நிறுவனத்தின் ஊழியர்கள் அண்மைக்காலமாகத் தாக்கப்பட்டுவருவதன் தொடர்ச்சியாக அதன் பிரதிப்பணிப்பாளரொருவர் இன்று காலை அலுவலகத்திற்கு செல்லும் வழியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் மிகமோசமாகத் தாக்கப்பட்டு, காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் வழங்கல்சேவையின் உதவிப் பணிப்பாளர் அனுரசிறி ஹெட்டிகே வெள்ளிக்கிழமை காலை கொட்டிகாவத்த பகுதியில் அலுவலகம் செல்வதற்காக பஸ் நிலையத்தில் நின்றிருந்த சமயம் மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் இவரை இரும்பு கம்பிகளாலும், கூரிய ஆயுதங்களினாலும் தாக்கியிருக்கின்றனர்.

இவர் கழுத்துப் பகுதியில் கூரிய ஆயுதங்களினால் ஏற்பட்ட வெட்டுக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் மீது உடனடியாக விசாரணை நடாத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷ, பாதுகாப்பு ஆமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

——————————————————————————————————————————————————–

புதுப்பிக்கப்பட்ட நாள்: 11 மார்ச், 2008

மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தலை எதிர்த்து ஐ.தே.க ஆர்ப்பாட்டம்

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகரசபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்காக இவ்வார முற்பகுதியில் நடைபெற்று முடிந்த தேர்தல்களை எதிர்த்து இலங்கையின் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு, இராஜகிரிய தேர்தல் செயலகத்துக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றினை நடத்தியிருக்கிறது.

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தினை நிலைநாட்டும் அரசு கொள்கையின் ஒரு அங்கமாக நடத்தப்பட்ட தேர்தலை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உதவிய சகலருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் என்றாலும், இந்தத் தேர்தல் முடிவுகளை முற்றாகப் புறக்கணிக்கும்படி கோரி ஜக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஆணையாளரிடம் புதன்கிழமை மனு சமர்ப்பித்திருக்கிறது.

பிரதான எதிர்க்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும், முக்கியஸ்தர்களும், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் கலந்துகொண்டு இந்தத் தேர்தலுக்கு எதிராகவும், மஹிந்த ராகபக்ஷ அரசிற்கு எதிராகவும் கோஷங்களை இட்டனர்.

இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் பின்னர் அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் கருத்துவெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் திரு. ரணில் விக்கிரமசிங்க, மட்டக்களப்பில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்தல்கள் ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டியதோடு, படையினரால் ஒரு ஆயுதக் குழுவிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அரசு இன்னொரு ஆயுதக் குழுவிடம் கையளிக்க முற்படுவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்கு கிழக்கில் இடம்பெற்ற தேர்தலின் முக்கியத்துவம், அதன் வெற்றி குறித்து வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தனது அமைச்சில் விரிவாக விளக்கமளித்திருக்கிறார்.

இதன் பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர், இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மிகவும் வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறது என்றும், எதிர்வரும் மே மாதம் அளவில் கிழக்கு மாகாணத்துக்கான மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசு சித்தமாக இருப்பதாகவும் தெரிவித்ததோடு, அரசின் இந்தத் திட்டம் குறித்து தேர்தல் ஆணையாளரிடம் தெரிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.


மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் வெறும் கண்துடைப்பு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

 

கிழக்கு மாகாணத்தில், மீள்குடியேற்றம் போன்ற மக்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில் அங்கு உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தி, அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்ற விளைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் வாக்களிக்குமாறு மக்கள் மிரட்டப்பட்டதாகக் கூறிய அவர், மக்கள் சுயாதீனமாக வாக்களித்திருந்தால் 10 வீதமான வாக்குகளே பதிவாகியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகமான வகையில் அனைத்துக் கட்சிகளும் போட்டியிடக் கூடிய ஒரு சூழ்நிலை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்திருந்தால், அங்கு தேர்தல் நிலைமைகள் வேறுவிதமாக இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை மாகாணசபைகளை 1987 ஆம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டதாகக் கூறும் ஜெயானந்தமூர்த்தி, ஆகவே, கிழக்கு மாகாணத்துக்கான மாகாண சபைத் தேர்தல்கள் நடக்கும் பட்சத்தில், அது குறித்து மக்களின் கருத்துக்களை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் தமது கட்சி முடிவுகளை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

இவை குறித்த அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


வட இலங்கை மோதல்கள்: செவ்வாய்க்கிழமை அன்று 28 புலிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கிறது இராணுவம்

 

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள மடுக்கோவிலுக்கு வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் 3 தளங்கள் மீது புதன்கிழமை காலை விமானப் படைக்குச் சொந்தமான தாக்குதல் விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.

இந்தத் தாக்குதலின்போது, அந்த முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் இந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மன்னார் போர்முனைகளில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் வவுனியா, மன்னார், வெலிஓயா, மற்றும் முகமாலை முன்னரங்கப் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதல்களில் 28 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது. இந்தத் தாக்குதல்கள் குறித்தும் விடுதலைப் புலிகள் தரப்பில் தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

மன்னார் மாவட்டத்தில் இன்று பெய்த கடும் மழை காரணமாக இடம்பெயர்ந்து முருங்கன் பிரதேசத்தில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியிருப்பதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கூடாரங்கள் அமைத்து தங்கவைக்கப்பட்டவர்கள் மழை நீர் கூடாரங்களுக்குள் புகுந்திருப்பதனால் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 11 மார்ச், 2008


கதிர்காமர் கொலை வழக்கில் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் மீது குற்றச்சாட்டு

கொலை செய்யப்பட்ட கதிர்காமர்

இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேர் மீதான குற்றப்பத்திரங்களை, சட்ட மா அதிபர் இன்று தாக்கல் செய்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அந்த அமைப்பின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், சார்ள்ஸ் மாஸ்ட்டர் ஆகியோர் உட்பட 6 பேரின் பெயர்கள், குற்றப்பத்திரத்தில் குற்றவாளிகளாகக் கூறப்பட்டுள்ளன.

2005 ஆம் ஆண்டின் ஜனவரி 5 ஆம் திகதிக்கும், 12 திகதிக்கும் இடையில், கொலைச் சதித்திட்டங்களைத் தீட்டியமை, கொலை செய்த விஜயன் என்பவருக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றங்களும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

சாட்சிகளின் பாதுகாப்புக்காக அவர்கள் ரகசியமாகவே நீதிமன்றத்தில் சாட்சி வழங்குவார்கள் என்றும் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் பெரும் வெற்றி

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 வருடங்களின் பின்பு நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு கைப்பற்றியுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஏனைய 8 பிரதேச சபைகளையும் தமது கட்சிப்பட்டியலின் மூலம் கைப்பற்றியுள்ளனர்.

101 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்ற இந்தத் தேர்தலின், முடிவுகளின்படி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது கட்சி சார்பில் 61 உறுப்பினர்களையும், மக்கள் சுதந்திர முன்னனியின் வெற்றிலைச் சின்னத்தில் கீழ் 11 உறுப்பினர்களையும் பெற்றுள்ளனர்.

பிரச்சாரச் சுவரொட்டிகள்
பிரச்சாரச் சுவரொட்டிகள்

ஈ.பி.டி.பி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் ( பத்மநாபா அணி) ஆகிய தமிழ் கட்சிகளைக் கொண்ட சுயேச்சைக் குழுக்கள் இத் தேர்தலில் 17 உறுப்பினர்களை வென்றிருக்கின்றன.

அதேவேளை ஈழவர் ஜனநாயக முன்னனி மட்டக்களப்பு மாநகர சபையில் மட்டும் ஒரு அங்கத்துவத்தை பெற்றுள்ளது.

இதனைத் தவிர ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 7 பேரும், ஐக்கிய மக்கள் முன்னணி சார்பில் மாநகரசபையைத் தவிர மேலும் 4 பேரும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த தேர்தல் முடிவுகள் குறித்த அரசியல் கட்சிகளின் கருத்துக்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இந்தியா மீது விடுதலைப்புலிகள் கண்டனம்

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன்
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன்

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களை வரவேற்று உயர் கௌரவத்தை வழங்கியமைக்காக இந்திய அரசாங்கத்தை விடுதலைப் புலிகள் அறிக்கையொன்றின் மூலம் கண்டித்திருக்கின்றார்கள்.

போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறியுள்ள இலங்கை அரசு, தமிழர் பிரதேசங்களில் போரை விரிவாக்கியுள்ள இன்றைய காலச் சூழலில், தமிழின அழிப்பிற்குத் தலைமையேற்றுள்ள இராணுவத்தின் தளபதிக்கு இந்திய அரசு வழங்கியுள்ள கௌரவம் ஈழத்தமிழர்களை வேதனைக்குள்ளாக்கியிருப்பதாகவும், இந்தச் செயலுக்காக இந்திய அரசை விடுதலைப் புலிகள் வன்மையாகக் கண்டிப்பதாகவும், விடுதலைப் புலிகள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

இராணுவ வழியில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முற்பட்டுள்ளமைக்காகவும், அதிகரித்துள்ள மனித உரிமை மீறல்களுக்காகவும், அனைத்துலக நாடுகள் வெளிப்படுத்திவரும் கண்டனங்கள் மற்றும் எச்சரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, அதிக அளவிலான ஆட்கடத்தல்கள், படுகொலைகள், இனரீதியான கைதுகள் என்பவற்றை அரச படைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள்.

இவற்றை மூடிமறைத்து, நாட்டில் யுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துவரும் இலங்கை அரசாங்கத்திற்கான உதவிகளை பல ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தமது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்கள்.

பெண் விடுதலைப்புலிகள்
பெண் விடுதலைப்புலிகள்

இந்தச் சூழலில் உண்மையான நிலைமையை இந்திய அரசாங்கம் புரிந்து கொண்டிருந்தாலும், தமிழர் பிரச்சினைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வு காணவேண்டும் என கூறிக்கொண்டு, அதற்கு மாறாக, இராணுவ ரீதியாக இலங்கை அரசாங்கத்திற்கு நம்பிக்கையூட்டும் இந்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஈழத்தமிழர்களை பாரிய இன அழிப்பிற்குள் தள்ளிவிடும் என்று இந்திய அரசுக்குச் சுட்டிக்காட்டுவதாகவும் விடுதலைப் புலிகள் தமது அறிக்கையில் கூறியிருக்கின்றார்கள்.

இந்த நிலைமையைத் தமிழ் நாட்டு மக்கள் புரிந்து கொண்டு இந்திய அரசிற்குத் தமது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் எனவும் விடுதலைப் புலிகள் கோரியிருக்கின்றார்கள்.

நோர்வேயின் அமைதிவழி முயற்சியிலிருந்தும், போரிநிறுத்தத்திலிருந்தும் இன்னும் விலகவில்லை என தெரிவித்துள்ள விடுதலைப்புலிகள் நோர்வே அரசின் தலைமையில் மேற்கொள்ளப்படும் சமாதான முயற்சிகளில் பங்கேற்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு

முன்னைய பணிப்புறக்கணிப்பு ஒன்றின் போது வவுனியா மருத்துவமனை ஊழியர்கள்
முன்னைய பணிப்புறக்கணிப்பு ஒன்றின் போது வவுனியா மருத்துவமனை ஊழியர்கள்( ஆவணப்படம்)

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாண மாவட்டங்களைச் சேர்ந்த அரச மருத்துவர்கள் இன்று மேற்கொண்ட ஒருநாள் அடையாள பணிப் புறக்கணிப்பு காரணமாக அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியசாலைகளின் பணிகள் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கென அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுவந்த விசேட வருடாந்த இடமாற்றப் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த பணிபுறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளராகிய டாக்டர் எஸ்.சிவப்பிரியன் தெரிவிக்கின்றார்.

இன்றைய பணிபுறக்கணிப்பு காரணமாக வடக்கில் வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த வைத்தியசாலைகளிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை மாவட்டங்களின் வைத்தியசாலைகளிலும் அரச வைத்தியர்கள் கடமைக்குச் செல்லவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவராகிய டாக்டர் எம்.பள்ளியகுருகே தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று மாலை வரையிலும் சுகாதார அமைச்சிடமிருந்து தங்களுக்குப் பதிலேதும் கிடைக்கவில்லை என்றும் நாளை மறுதினம் வியாழக்கிழமை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராயவுள்ளதாகவும் அந்தச் சங்கத்தின் பேச்சாளராகிய டாக்டர் சிவப்பிரியன் கூறினார்.

————————————————————————————————–

புதுப்பிக்கப்பட்ட நாள்: 10 மார்ச், 2008

மட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தல்களில் சுமூக வாக்களிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாநகரசபை உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு இன்று நடந்த வாக்களிப்பில் 56 வீத வாக்குகள் பதிவானதுடன், பெரும்பாலும் சுமூகமான வகையில் வாக்களிப்பு இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் கிழக்கு மாகாணம் தமது கட்டுப்பாட்டின் கீழ் முழுமையாக கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பின், மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 வருடங்களின் பின்பு ஒரு மாநகர சபை உட்பட 9 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்துள்ள இந்தத் தேர்தலில், 101 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவிருக்கின்றார்கள். 6 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 831 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.

வாக்களிக்கக் காத்திருக்கும் வாக்காளர்கள்
வாக்களிக்கக் காத்திருக்கும் வாக்காளர்கள்

தேர்தலையொட்டி இம் மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக மக்களின் வழமை நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக வாக்காளர்கள் கூட பாதுகாப்பு கெடுபிடிகளை எதிர்நோக்கியதாகவும் உள்ளுர்வாசிகள் கூறுகின்றனர்.

வாழைச்சேனை பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரொருவரின் வீட்டின் மீது திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலைத் தவிர குறிப்பிடத்தக்க வன்முறைகள் எதுவும் இடம்பெறவில்லை என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை அந்தப் பிரதேசத்தில், அரச பின்புலத்தில் சில தேர்தல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்கானிப்பபு அமைப்பான பப்ரல் கூறுகின்றது.

இந்தத் தேர்தலில் 56 சத வீதமான வாக்குககள் பதிவாகியுள்ளதாகக் கூறும் மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அலுவலர், முதலாவது தேர்தல் முடிவு நள்ளிரவிற்கு பின்பு வெளியாகும் என்றும் கூறுகின்றார்.


கொழும்பு வெள்ளவத்தை குண்டுவெடிப்பில் ஒரு சிவிலியன் பலி, 4 மாணவர்கள் காயம்

குண்டுவெடித்த இடம்
குண்டுவெடித்த இடம்

திங்கட்கிழமை காலை கொழும்பு காலிவீதி வெள்ளவத்தையில் அமைந்துள்ள ரொக்சி சினிமா திரையரங்கிற்கு அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் சிவிலியன் ஒருவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டிருக்கிறார், மேலும் நான்கு பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்துவெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, கொழும்பு காலிவீதி வெள்ளவத்தைப் பகுதியில் வீதியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த பூச்சாடியொன்றினுள் மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டொன்றே வெடித்திருப்பதாகத் தெரிவித்தார்.

 

ஆரம்ப விசாரணைகளின்படி இந்தப் மர்மப்பொதியை பிரித்துப்பார்க்க முயன்ற நபரே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டதாகத் தெரியவந்திருப்பதாகப் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

கொழும்பு களுபோவில அரச வைத்தியசாலை வட்டாரங்களின் தகவல்களின்படி, இன்றைய இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தினைத் தொடர்ந்து இரண்டு பாடசாலை மாணவர்கள், இரண்டு மாணவிகள் என நான்கு பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களின் ஒருவரின் நிலைமை மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தன.

இந்தக் குண்டுவெடிப்புத் தொடர்பாக விசாரணைகளையும், புலன்விசாரணைகளையும் பொலிசாரும் இராணுவத்தினரும் தற்போது மேற்கொண்டுவருகின்றனர்.


மன்னார் மாவட்ட சண்டைகள்: புலிகள் தரப்பிலும் இராணுவத்தினர் தரப்பிலும் சேதம்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில், இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே தொடரும் சண்டைகளில், திங்கட்கிழமை அதிகாலை நடந்த மோதல்களில் 10 விடுதலைப்புலிகளும், 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மோதலில் 10 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் அது கூறியுள்ளது.

இது குறித்து விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மன்னாரில், மாந்தை மேற்குப் பகுதியில், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாந்தை –அடம்பன் வீதியில் ஒரு பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகதத்தகவல் மையம் தெரிவித்துள்ளது.

எனினும், பரப்புக்கடந்தான், பண்டிவிரிச்சான், பாலைக்குழி சேத்தான்குளம் ஆகிய பகுதிகளில் பல முனைகளில் விடுதலைப்புலிகளின் பிரதேசத்துக்குள் முன்னேறுவதற்கு ஞாயிறன்று இராணுவம் மேற்கொண்ட முயற்சி தமது எதிர்த்தாக்குதலின் மூலம் முறியடிக்கப்பட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சண்டைகளில்போது 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 09 மார்ச், 2008்.


மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல் பணிகள் நிறைவு

 

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாநகர சபை உட்பட 9 உள்ளுராட்சி சபைகளுக்கு திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் கடமைக்குரிய அதிகாரிகளும் ஊழியர்களும் பாதுகாப்பிற்குரிய பொலிசாரும் தற்போது உரிய வாக்களிப்பு நிலையங்களை சென்றடைந்துள்ளதாகக் கூறும் அவர், கடந்த கால யுத்த அனர்த்தங்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இத்தேர்தலின்போது வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு அடையாளத்தை உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணமொன்றை சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால் ஆள்-மாறாட்டத்திற்கு வாயப்பு இராது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் பாதுகாப்பு கடமைகளைப் பொறுத்தவரை, வாக்களிப்பு நிலையங்களுக்கு வெளியே பொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் இராணுவுத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தேர்தல் செயலகத்தைச் சேர்ந்த உதவி காவல்துறை அத்தியட்சகர் யு.எஸ்.ஐ.பெரேரா கூறினார்.

101 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெறும் இந்த தேர்தலில் 6 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 831 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.


சிவனேசன் பூத உடலுக்கு பிரபாகரன் அஞ்சலி

 

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் கிளேமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகிய கிட்டிணன் சிவநேசனின் இறுதிக் கிரியைகள் இன்று காலை 11 மணியளவில் மல்லாவி அனிஞ்சியன்குளம் என்ற இடத்தில் நடைபெற்றதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இவரது இறுதிக் கிரியைகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள், விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள், பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பொதுமக்களின் அஞ்சலிக்காக வன்னிப் பிரதேசத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் உடலுக்கு விசேடமான ஓரிடத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது அஞ்சலியைச் செலுத்தினார். புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் உட்பட்ட முக்கியஸ்தர்களும் அஞ்சலி செலுத்தி இரங்கலுரைகள் ஆற்றியதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.

இதனிடையில் மன்னார் மாந்தை பிரதேசத்தில் சனிக்கிழமை விமானப்படையினருடன் ஒன்றிணைந்து இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. இந்தத் தாக்குதலில் 10 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் இராணுவம் கூறியிருக்கின்றது.

இதேவேளை, மன்னார் பரப்பாங்கண்டல், மடு பிரதேசத்தில் உள்ள பண்டிவிரிச்சான் ஆகிய பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு சனிக்கிழமை இராணுவத்தினர் எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். பல மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த மோதல்களில் பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

——————————————————————————————————————————————————-

 

புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 மார்ச், 2008


இலங்கை வன்முறை: புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் இராணுவத் தரப்பில் சேதம்

 

இலங்கையின் மொனராகலை மாவட்டத்திலுள்ள புத்தல-கதிர்காமம் வீதியில் சென்றுகொண்டிருந்த இராணுவ உழவுஇயந்திரமொன்றின் மீது விடுதலைப் புலிகள் நடத்தியுள்ள கிளேமோர் கண்ணிவெடித்தாக்குதலில் ஒரு இராணுவச்சிப்பாய் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் இரண்டு இராணுவ வீரர்கள் காயமடைந்திருக்கிறார்கள்.

இதுகுறித்து தகவல் வெளியிட்டிருக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு, புத்தல பழைய வீதியில் கல்கே காட்டுப் பகுதியூடாக இந்த இராணுவ உழவு இயந்திரம் சென்றுகொண்டிருக்கும்போது புலிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், தாக்குதலில் காயமடைந்து ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்ட படைவீரர் ஒருவர் சிகிச்சைகள் பயனளிக்காத நிலையில் உயிரிழந்ததாகவும் தெரிவித்திருக்கிறது.

இந்தப் பகுதியில் முப்படையினரும் பொலிசாரும் இப்போது தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுவருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கிறது.

இதேவேளை, இந்தச் சம்பவம் குறித்து மின்னஞ்சல்மூலமாக ஊடகங்களிற்குச் செய்தியனுப்பியுள்ள விடுதலைப்புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன், இன்றுகாலை விடுதலைப் புலிகள் அமைப்பினரே இந்தத் இந்தத்தாக்குதலை மேற்கொண்டதாக உரிமை கோரியுள்ளதோடு, இந்தச் சம்பவத்தில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் இரண்டு படைவீரர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அத்துடன் இந்தத் தாக்குதலின்போது, தமது உறுப்பினர்களிற்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் விடுதலைப்புலிகளின் இந்தக் கூற்றை மறுத்துள்ள இலங்கை இராணுவத்தினர் இதன்போது ஒரு இராணுவவீரர் மட்டுமே கொல்லப்பட்டதாக உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இன்று காலை எறிகணை வீச்சு மோதல்கள் இடம்பெற்றதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலை சுமார் 10 மணிமுதல் இரண்டு மணித்தியாலங்கள் இந்த மோதல்கள் இடம்பெற்றதாகவும், இதன்போது மன்னார் – வவுனியா, செட்டிகுளம் வீதி பொது கோப்புவரத்திற்காக மூடப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நண்பகலின் பின்னர் நிலைமை வழமைக்குத் திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த எரிகணை வீச்சுக்களால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை. இதனிடையில், நேற்று முன்தினம் கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டிணன் சிவநேசனுக்கு விடுதலைப் புலிகளின் தலைவரினால், மாமனிதர் பட்டமளித்து கௌரவம் அளிக்கப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.


தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்

 

இந்திய இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 59 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த தாகவும், இதனாலேயே இவர்களை கைது செய்ததாகவும் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், இவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் செல்ல வில்லை என்றும், தமிழக கடற்பரப்பிலேயே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகவும் கூறுகிறார், தமிழ்நாட்டின் கன்யாகுமரியைச் சேர்ந்த தமிழ்நாடு மீன் தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் பீட்டர் தாஸ் அவர்கள்.

இந்திய இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் குறித்து, தமிழக முதல்வர் மு கருணாநிதி அவர்கள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

தமிழ்நாடு மீன் தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் பீட்டர் தாஸ் அவர்களின் செவ்வியையும், முதல்வர் கருணாநிதியின் கடித விவரங்கள் குறித்த செய்திகளையும், நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்


இலங்கையில் தடுப்புக் காவலில் ஊடகவியலாளர்கள்

இலங்கை தலைநகர் கொழும்பில் பயங்கரவாத புலன் விசாரணை காவல்துறையினர், சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரி யரும் சுதந்திர ஊடகவியாலாளர் இயக்கத்திற்காக பேசவல்ல வருமான சிவகுமார் அவர்கள் உள்ளிட்ட ஆறு ஊடகவியலாளர்களை தடுத்து வைத்திருக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்று, இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இணைச்செயலாளர் அமிர்தநாயகம் நிக்சன் அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.

——————————————————————————————————————————————————————

இலங்கையில் ஊடவியலாளர்கள் கைது

இலங்கை தலைநகர் கொழும்பில், பயங்கரவாத புலன் விசாரணை காவல் துறையினர் இரண்டு தமிழ் ஊடக வியலாளர்களையும், ஒரு சிங்கள ஊடகவியலாளரையும் தடுத்துவைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரியரும் சுதந்திர ஊடகவியாலாளர் இயக்கத்திற்காக பேசவல்லவருமான சிவகுமார் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, காவல்துறையினர் தன்னையும் விசாரணைக்கு வரும்படி அழைத்திருப்பதாகக் கூறினார்.

காவல்துறையின் விசாரணைக்கு செல்வதற்கு முன்னர் சிவகுமார் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.


மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது

மட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தல் பதாகை

இலங்கையின் கிழக்கே எதிர்வரும் திங்கள் கிழமை உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவிருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைகின்றன.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முழு நாளும் இறுதிக் கட்டப் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். வீடு வீடாகச் சென்று தமக்குரிய வாக்குககளை திரட்டுவதில் வேட்பாளர்கள் பரவலாக ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தேர்தலின்போது வாக்குச் சாவடிக்கு ஒருவர் என கண்கானிப்பாளர்கள் நியமிக்கப்படவிருப்பதாக பப்ரல் எனப்படும் சுதந்திரமான நியாயமான தேர்தலை கண்காணிக்கும் மக்கள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருட் தந்தை சில்வெஸ்டர் ஸ்ரீதரன் கூறுகின்றார்.

கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத் தக்க வன்முறைகள் இல்லை என்று சுட்டிக் காட்டும் அவர், சில கிராமங்களுக்கும் வாக்குச்சாவடிகளுக்கும் இடையலான தூரம் மக்களின் வாக்களிக்கும் ஆர்வத்திற்கு தடையாக இருக்கும் என்பதால், தேர்தல் திணைக்களமோ அல்லது போட்டியிடும் வேட்பாளர்களோ, அவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார்.



கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசனின் இறுதிச் சடங்குகள் கிளிநொச்சியில் நடக்கவுள்ளது

கொல்லப்பட்ட சிவனேசன்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய கனராயன்குளம் பகுதியில் ஏ -9 வீதியில் கடந்த வியாழனன்று இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்ட யாழ் மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகிய கே.சிவநேசனின் இறுதிக்கிரியைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்காகவும் இறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு அஞ்சலி செலுத்துவதற்குமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சிக்குச் சென்றுள்ளனர்.

காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் உடல் இன்று உறவினர்களின் அஞ்சலிக்காக மல்லாவியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருப்பதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இவரது உடல் நாளை கிளிநொச்சிக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்குள்ள மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனுடன் உயிரிழந்த அவருடைய வாகன சாரதியாகிய 27 வயதுடைய பெரியண்ணன் மகேஸ்வரராஜாவின் உடலை அவரது சொந்த ஊராகிய செட்டிகுளம் வீரபுரத்திற்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டிருக்கின்றார்கள்.


மட்டக்களப்பின் மேயராக பெண்ணொருவர் தெரிவாகும் வாய்ப்பு

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக முதல் தடவையாக பெண் ஒருவர் பொறுப்பேற்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

மட்டக்களப்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் வேட்பாளரான பத்மினி என்று அழைக்கப்படும் சிவகீதா பிரபாகரன் அவர்கள், அங்கு அந்தக் கட்சியின் சார்பில் அதிகப்படியான விருப்ப வாக்குகளைப் பெற்றதால், மாநகரசபையின் மேயராக பொறுப்பேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இறுதியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்ட போது, வாக்களிப்புக்கு இரு தினங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட ராஜன் சத்தியமூர்த்தியின் மகளே இவர்.

தான் மேயராக பொறுப்பேற்கவுள்ளது குறித்து பத்மினி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கிழக்கு மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்த இலங்கை அரசு நடவடிக்கை

அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகரசபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்காக இவ்வார முற்பகுதியில் நடைபெற்று முடிந்த தேர்தல்களை அடுத்து, கிழக்கு மாகாணத்துக்கான மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை அரசு, அதில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கான ஒழுங்குகளை கவனிப்பதற்காக இரு உயரிய குழுக்களை அமைத்திருப்பதாகவும் இன்று அறிவித்திருக்கிறது.

இது குறித்து கொழும்பில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய மகாவலி அபிவிருத்தி மற்றும் விவசாயத்துறை அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமாகிய மைத்திரிபால சிறிசேன தற்போது ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் ஒரே குடையின்கீழ் போட்டியிட்டு வெற்றியீட்ட முன்வருமாறும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்த உத்தேச கிழக்கு மாகாணத்துக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசு எடுத்துள்ள முடிவானது தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது என்றும் இதற்காக திகதி விபரங்களை அவர் இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பாரெனத் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

இவை குறித்த மேலதிக செய்திகளை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 13 மார்ச், 2008


ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்திய மற்றும் தமிழக அரசின் நிலை குறித்து பா.ம.க. அதிருப்தி

டாக்டர் ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இலங்கைக்கு இந்திய அரசு வழங்கி வரும் இராணுவ உதவியினையை நிறுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்திருமாவளவன், திரைப்பட இயககுநர் சீமான் உள்ளிட்ட இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஆர்வங்காட்டும் சிலருடன் ஆலோசனை செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

அண்மைககாலமாக இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை அந்நாட்டு அரசு உககிரப்படுத்தியுள்ளது எனவும் ராமதாஸ் புகார் கூறினார்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகள் செயல்படவேண்டும் என வற்புறுத்தியும், தொடர்ந்து தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் அல்லலுக்கு உள்ளாவதற்கு முற்றுப்புள்ளிவைககவேண்டும் எனக்கோரியும் தொடர்முழக்கப் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் ராமதாஸ் தெரிவித்தார்.

கடந்த சிலமாதங்களாக இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து ராமதாஸ் மௌனமே காத்துவந்தார் என்பதையும், இந்திய அரசைக் கண்டித்து விடுதலைப்புலிகள் அறிக்கை விட்டபோதுகூட அவர் கருத்தெதனையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் ஊடகவியலாளர்கள் கைது நடவடிக்கைக்கு எதிராக ஆர்.எஸ்.எஃப். ஊடகச் சுதந்திரக் குழு கண்டனம்

 

இலங்கையின் பயங்கரவாத தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 5 செய்தியாளர்களின் கதி குறித்து, பாரிஸைத் தளமாகக் கொண்டு செயற்படும் ஆர்.எஸ்.எஃப். என்று அழைக்கப்படும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

அவர்களை தடுத்து வைத்திருப்பதற்கான காரணத்தை கூறவேண்டும் என அது அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

ஒரு இணையத் தளத்துக்காக பணியாற்றும் இந்த செய்தியாளர்கள் விடுதலைப்புலிகளிடம் இருந்து பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சில செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தியாளர்களின் நிலை குறித்து இரு தினங்களுக்கு முன்னர் கவலை வெளியிட்டிருந்த சர்வதேச செய்தியாளர் சம்மேளனமான ஐ.எஃப். ஜே. அமைப்பும், ஆசிய மனித உரிமைகள் ஆணையமும், இந்தச் செய்தியாளர்களின் சட்ட உரிமைகளை இலங்கை அரசாங்கம் நிலை நிறுத்த வேண்டும் என்று கோரியிருந்தன.


Posted in Batticaloa, dead, Eelam, Eezham, Elections, local, LTTE, Media, MP, murders, Polls, Shivanesan, Sivanesan, Sri lanka, Srilanka, War | Leave a Comment »

Feb 27: Eezham, Sri Lanka, LTTE, Dead, War, Rajapakse – Updates & News

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2008

மணலாறு பகுதியில் கொல்லப்பட்ட 14 விடுதலைப் புலிகளின் சடலங்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைப்பு

மணலாறு பகுதியில் விடுதலைப்புலிகளிடம் இருந்து இராணுவத்தால் மீட்கப்பட்டதாக கூறப்படும் பதுங்குகுழி ஒன்று

கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மணலாறு பகுதியில் இராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர மோதல்களின் போது கொல்லப்பட்ட சுமார் 14 விடுதலைப்புலி உறுப்பினர்களின் சடலங்கள் இன்று அநுராதபுரம் வைத்தியசாலை அதிகாரிகளினால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள இராணுவ வட்டாரங்கள், கடந்த வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் மணலாறு பகுதியில் விடுதலைப்புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை நோக்கி முன்னேறிய இராணுவத்தினர் அங்கிருந்த அவர்களது பாதுகாப்பு நிலைகள் சிலவற்றை அழித்திருப்பதோடு, இதன்போது ஏற்பட்ட மோதல்களின் போது கொல்லப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் எண்மரது சடங்களையும், ஆயுதத் தளபாடங்கள் சிலைவற்றையும் கைப்பற்றியிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

இது குறித்து பி.பி.சியிடம் கருத்துவெளியிட்ட அநுராதபுர மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார, வெள்ளிக்கிழமை மாலை ஆறு புலி உறுப்பினர்களது சடலங்களும், சனிக்கிழமை இரவு மேலும் எட்டு புலி உறுப்பினர்களது சடலங்களும், இராணுவத்தினரால் அநுராதபுர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாகவும், பிரேதப் பரிசோதனையின் பின்னர் இன்றைய தினம் இந்த 14 சடலங்களும் விடுதலைப்புலிகளிடம் சேர்ப்பிப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனைவிட நேற்றைய தின மோதல்களின்போது கொல்லப்பட்ட மேலும் ஏழு விடுதலைப்புலிகளின் சடலங்கள் அநுராதபுர வைத்தியசாலைக்கு இராணுவத்தினரால் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், அவை பிரேதப் பரிசோதனையின் பின்னர் நாளையோ அல்லது நாளை மறுதினமோ விடுதலைப்புலிகளிடம் சேர்ப்பிக்கப்படுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கக் குழுவிடம் ஒப்படைக்கப்படவிருப்பதாகவும் அநுராதபுர மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார தெரிவித்தார்.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சந்திப்பு

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின்பேரில் ஜனாதிபதிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் இடையில் இன்று மாலை அலரி மாளிகையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றிருக்கிறது.

அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படும் இன்றைய இந்த சந்திப்பின்போது அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வுத்திட்டம், மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும், 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி செயலக உயர் அதிகாரியொருவர் பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அத்துடன் இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்றினைக் காண்பதற்கு அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு தனது கட்சி ஆதரவினை வழங்குமென எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதியிடம் உறுதி கூறியதாகவும், 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதற்கும் அக்கட்சி ஆதரவினை வழங்கும் என்று அவர் தெரிவித்ததாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்புக்கு முன்னர் இது குறித்துக் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரவி கருணாநாயக்க, இந்த மாத முற்பகுதியில் பாராளுமன்ற வளவினுள் முன்னாள் ஜானாதிபதி ஆர். பிரேமதாஸவின் உருவச்சிலையின் திரைநீக்க விழாவில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நாட்டில் தற்போதுள்ள நிலைமைகள் குறித்து கலந்துரையாட சந்திப்பொன்றுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும், அதன் அடிப்படையிலேயே இன்றைய இந்தச் சந்திப்பு இடம்பெறவிருந்ததாகவும் தெரிவித்தார்.


Posted in dead, Eelam, Eezham, LTTE, Rajapakse, Ranil, Sri lanka, Srilanka, War | Leave a Comment »

1.5 mn Commercial (lorry) vehicles keep off roads in Karnataka – Truckers strike enters second day

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

3-வது நாளாக லாரி ஸ்டிரைக்: பல கோடி வர்த்தகம் பாதிப்பு

நாமக்கல், பிப். 23: தமிழகம் மற்றும் கேரளத்தில் 3-வது நாளாக நடைபெறும் லாரிகள் வேலைநிறுத்தத்தால் பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

வேலை நிறுத்தம் 3-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடிக்கிறது. இதனால், வட மாநிலங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் தீப்பெட்டி, ஜவுளி, மஞ்சள், இரும்பு, உதிரிப் பாகங்கள், தொழிற்சாலை பொருள்கள் என அனைத்தும் மூன்று நாள்களாக வட மாநிலங்களுக்கு செல்லாமல் அப்படியே தேங்கி உள்ளன வட மாநிலங்களில் இருந்து வரும் கோழித் தீவன மூலப் பொருள்கள், எலக்ட்ரானிக் பொருள்கள், மார்பிள்ஸ், பர்னிச்சர்கள், காய்கறிகள், பழங்கள் வரத்தும் தடைபட்டுள்ளது. போராட்டம் காரணமாக பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நீடித்தால் கோழித் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை மேலும் உயரும் அபாயமுள்ளது.

கர்நாடகத்தில் தமிழக லாரிகளை தடையின்றி இயக்கலாம்: போக்குவரத்துத் துறை விளக்கம்

சென்னை, பிப். 23: கர்நாடக மாநிலத்தில் தடையின்றி தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தமிழக லாரி உரிமையாளர்களுக்கு, போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை திரும்பப் பெற வலியுறுத்தி, கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

தமிழக லாரிகளை தடையின்றி கர்நாடக மாநிலத்தில் இயக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, இணைப் போக்குவரத்து ஆணையர் டி.நாராயணமூர்த்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தைச் சேர்ந்த வாகனங்களை கர்நாடகத்தில் இயக்கும் போது, வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவு வரும் ஜூன் மாதம் வரை வற்புறுத்தப்பட மாட்டாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

எனவே, தமிழக லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் எந்தவித தடையுமின்றி கர்நாடக மாநிலம் வழியாக தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலி
தமிழ்நாட்டில் பலகோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்

சென்னை, பிப்.24-

கர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுவதால், தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி உள்ளன.

லாரிகள் வேலைநிறுத்தம்

கர்நாடகத்தில் ஓடும் லாரிகளுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மாநிலத்தில் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு லாரிகள் ஓடவில்லை.

இந்த போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து இருப்பதால், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகம் மற்றும் கர்நாடகத்தின் வழியாக செல்லும் அனைத்து லாரிகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. ஏற்கனவே கர்நாடகத்துக்கு புறப்பட்டு சென்ற லாரிகள் எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.

பல கோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்

மேலும் கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து கர்நாடகத்துக்கு செல்ல வேண்டிய லாரிகள் புறப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அங்குள்ள பார்சல் அலுவலகங்களில் பார்சல்கள் குவிந்து உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி கிடக்கின்றன.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் தீப்பெட்டி, தேங்காய், ஜவுளி, ஜவ்வரிசி, மஞ்சள் போன்ற பொருட்கள் தடைப்பட்டுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு தமிழகம் முழுவதும் ஏறத்தாழ ரூ.100 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்து வருகின்றன. லாரி உரிமையாளர்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வீதம் இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செங்கோடன் கூறினார்.

கோயம்பேடு மார்க்கெட்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் அதிக அளவில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தான் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக தக்காளி, கோஸ், கேரட், பீன்ஸ் போன்ற முக்கியமான காய்கறிகள் அங்கிருந்துதான் வருகின்றன. லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காய்கறி வரத்து பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வராஜிடம் கேட்டபோது, “தினமும் 50 லாரிகளில் தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும். நேற்றைய தினம் வழக்கமாக வரும் அனைத்து காய்கறிகளும் வந்து விட்டன. இன்றைய தினம் தான் வழக்கமாக வரும் லாரிகளில் காய்கறிகள் வருமா என்று எதிர்பார்த்திருக்கிறோம்” என்றார்.

விலை உயர வாய்ப்பு

சென்னை கோயம்பேடு எம்.எம்.சி. உரிமம் பெற்ற வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சவுந்திரராஜன் கூறும்போது, “தக்காளி தவிர 60 லாரிகளில் மற்ற காய்கறிகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருகின்றன. நேற்றைய தினம் வழக்கமாக வரவேண்டிய காய்கறிகள் வந்தன. இன்றைய தினம் குறைந்த அளவில்தான் காய்கறிகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி குறைந்த அளவு காய்கறிகள் வருகின்ற பட்சத்தில் காய்கறிகளின் விலையும் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நாச்சிமுத்து கூறியதாவது:-

வழக்கமாக ஈரோட்டில் இருந்து ஜவுளி, மஞ்சள், எண்ணை போன்ற பொருட்கள் கர்நாடகம் மற்றும் மராட்டியம், அரியானா, டெல்லி உள்பட பல வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். கர்நாடகத்தில் பொருட்கள் ஏற்றி இறக்கும் சுமார் 200 லாரிகள் மற்றும் கர்நாடகம் வழியாக செல்லும் லாரிகள் உள்பட சுமார் 1,500 லாரிகள் ஓடவில்லை. இதனால் ஈரோட்டில் பல கோடி போய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கே.எஸ்.கலியபெருமாள் கூறுகையில், கோவை மாவட்டத்திலிருந்து கர்நாடகத்திற்கு லாரிகள் செல்லாததால் தினமும் ரூ. 25 கோடிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

சேலம்

சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:-

லாரிகளுக்கு வேககட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவு தமிழக லாரி உரிமையாளர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் போகக்கூடாது என்றால், காய்-கறிகள் மற்றும் பழங்கள் போன்ற அழுகும் பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் லாரியில் கொண்டு செல்லமுடியாமல் பாதிப்பு ஏற்படும். கர்நாடக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கால், சேலம் மாவட்டத்தில் இருந்து கர்நாடகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சரக்குகள் ஒரே நாளில் ரூ.10 கோடி மதிப்பில் தேக்கம் அடைந்து உள்ளன.

இவ்வாறு சென்னகேசவன் தெரிவித்தார்.

வேலைநிறுத்தம் தொடரும்

இதற்கிடையே கர்நாடக லாரி உரிமையாளர் மற்றும் ஏஜெண்டுகள் சங்க நிர்வாகிகள் சங்க தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா தலைமையில் கவர்னரின் ஆலோசகர் தாரகன் மற்றும் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் தங்கராஜ் ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது கவர்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தையின் போது அரசு தரப்பில் எந்த ஒரு உறுதி மொழியும் கொடுக்கப்படாததால் வேலை நிறுத்தம் தொடரும் என்று ஜி.ஆர்.சண்முகப்பா கூறினார்.

கர்நாடகத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.100 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனியார் பஸ், வாடகை கார், சுற்றுலா வேன் உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Posted in Accidents, Biz, commercial, Dangerous, dead, Death, drivers, DUI, DWI, Economy, Employment, Erode, Exports, Finance, Food, Freight, Goods, Impact, Jobs, Karnataka, Law, Limits, Lorry, Loss, Operators, Order, Parcel, Perishable, Profit, Salem, Services, Speed, Strike, Transport, Transporters, Truckers, Trucks, Vegetables | Leave a Comment »

Feb 24 – LTTE, Eezham, Batticaloa, Sri Lanka – News & Updates: BBC Tamil

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

கொழும்பில் பேருந்தில் குண்டுத்தாக்குதல்: 18 பேர் காயம்

இலங்கைத் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் பஸ் வண்டி ஒன்றில் விட்டுச் செல்லப்பட்ட வெடிகுண்டு ஒன்றை விழிப்பாக இருந்த பயணி ஒருவர் கண்டறிந்து தெரியப்படுத்தியதால் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

பேருந்து கல்கிசை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் இருக்கைக்கு அடியில் மர்ம மூட்டை ஒன்று கிடப்பதை கண்டு பயணி ஒருவர் பேருந்தின் ஒட்டுநரிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பேருந்தில் இருந்து அனைவரும் இறக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும், இருந்த போதிலும் பொலிஸார் வருவதற்கு முன்பாக குண்டுவெடித்து விட்டதாக பேருந்தின் ஒட்டுநர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பயணிகள் அனைவரும் வெளியேறிவிட்டாலும் குண்டுவெடித்ததில் அருகில் நின்றிருந்தவர்களில் 18 பேர் காயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளே இக்குண்டுவெடிப்பின் காரணம் என்று இராணுவத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

 


உயிர் அச்சத்தில் வடப்பகுதி மக்கள் – பெட்டகம்

வான் தாக்குதலினால் ஏற்பட்ட சேதம்
வான் தாக்குதலினால் ஏற்பட்ட சேதம்

இராணுவ நடவடிக்கை மூலம் கிழக்கை மீட்ட இலங்கை அரசு அதே அணுகுமுறை மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக ஒழிக்க முடியும் என்று நம்புவதாக பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதே நேரம் ஆயுதம் மூலம் தனி ஈழத்தை பெறலாம் என்ற நம்பிக்கையை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அமைதி முயற்சிகள் பின் தள்ளப்பட்டு இராணுவ நடவடக்கைகளுக்கே முன் உரிமை கொடுக்கப்படுகிறது.

தினந்தோரும் நடக்கும் மோதல்களால் தொடர்பாக இரு தரப்பும் மாறுப்டட தகவல்களைத் தந்தாலும் மோதல்களால் கடுமையாக பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான் என்பதே மாறாத உண்மை உள்ளது.

விடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டுகின்ற அரசாங்கம் அவர்களைத் தோற்கடிப்பதில் வெற்றியடைந்து வருவதாகக் கூறுகின்றது.

விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை குறைக்க அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்தில் புலிகளின் முகாம்கள் மீது விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அரசு கூறுகின்றது. ஆயினும் பல சந்தர்ப்பங்களில் பொதுமக்களே இந்தத் தாக்குதல்களில் கொல்லப்படுவதாக விடுதலைப் புலிகள் கூறுகின்றார்கள்.

இந்த வான் தாக்குதல்கள் எப்போது நடக்கும் எங்கு நடக்கும் என்பது எவருக்கும் தெரியாது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் பெரும் அச்சமடைந்திருப்பதாக அங்கிருந்து வருவபர்கள் தெரிவிக்கின்றார்கள்.

வடக்கே நிலவும் போர் சூழலால் மக்கள் நாளாந்தம் உயிரச்சத்துடனேயே தமது வாழ்வைக் கழித்து வருகின்றனர். இது தொடர்பாக நமது வவூனியா செய்தியளர் மாணிக்கவாசகம் தயாரித்து அனுப்பிய பெட்டகத்தை இன்றைய நிகழ்சியில் நேயர்கள் கேட்கலாம்.


இலங்கையின் வடக்கில் விமானப்படை தாக்குதல்

இலங்கை விமானப்படையின் விமானம்
இலங்கை விமானப்படையின் விமானம்

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விமானப்படையினர் விமானக்குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானுக்கு வடகிழக்கில் உள்ள விடுதலைப் புலிகளின் இராணுவ தளம் ஒன்று சனிக்கிழமை காலை தாக்கி அழிக்கப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

எனினும் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள மன்னாகண்டல் என்னுமிடத்தில் சனிக்கிழமை காலை குண்டு வீச்சு விமானங்கள் இரண்டு தடவைகள் 4 குண்டுகளை வீசியதாகவும், இதனால் வீதியில் சென்று கொண்டிருந்த 2 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதனிடையில் நேற்று வெள்ளிக்கிழமை புனகரி பகுதியில் நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 8 பொதுமக்களது இறுதிக்கிரியைகள் நடைபெற்றதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குண்டு வீச்சுச் சம்பவத்தில் காயமடைந்த 11 பேரில் 9 பேர் தொடர்ந்தும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்களில் 4 பேரின் நிலை மோசமாக இருப்பதாகவும் இவர்கள் மேல் சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அனுப்பிவைக்க வேண்டிய தேவை இருந்தபோதிலும் அவரிகளது உடல் நிலை பிரயாணம் செய்யக் கூடியதாக இல்லை என்றும் அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முழங்காவில் வைத்தியசாலையில் ஏனைய 2 காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஐ.நா உயரதிகாரி மட்டக்களப்பிற்கு விஜயம்

ஐ.நா உயரதிகாரி ஏஞ்சலினா கனே
ஐ.நா உயரதிகாரி ஏஞ்சலினா கனே

இலங்கைக்கான ஒரு வாரகால விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐ.நா வின் அரசியல் விவகார துணைச் செயலாளர் ஏஞ்சலினா கனே கிழக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மட்டக்களப்பு சென்றுள்ளார்.

கடந்த கால யுத்த அனர்த்தத்தின் பின்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற் கொள்ளப்படுகின்ற மனிதநேய நிவாரணப் பணிகள், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் கறித்து அறிந்து கொள்வதற்காக இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், யுத்த அனர்த்தத்தின் போது இடம் பெயர்ந்தவர்கள் மீள் குடியமர்த்தப்பட்டுள்ள சில கிராமங்களை பார்வையிட்டதோடு இது வரை மீளக் குடியேற்றப்படாதவர்களையும் சந்தித்து உரையாடினார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தையும் சந்தித்து மாவட்ட நிலவரம் தொடர்பாகவும் குறிப்பாக நடை பெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாகவும் கேட்டறிந்துள்ளார்

இருப்பினும் இந்த விஜயம் தொடர்பாகவோ சந்திப்புகள் தொடர்பாகவோ ஏஞ்சலினா கனே செய்தியாளர்களிடம் கருத்துக் கூற மறுத்து விட்டார்

புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 பிப்ரவரி, 2008

 


இலங்கையின் களுவாஞ்சிக்குடியில் தற்கொலைக்குண்டுத்தாக்குதல்

சம்பவம் நடைபெற்ற இடம்
சம்பவம் நடைபெற்ற இடம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு- கல்முனை நெடுஞ்சாலையிலுள்ள களுவாஞ்சிக்குடியில் ஞாயிற்றுகிழமை முற்பகல் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில், தற்கொலையாளியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த இருவரும் என 3 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் பெண்னொருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் இருவரும் மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த வேளை, குறுக்குவீதியொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் சைக்கிளொன்றுடன் காணப்பட்ட இளைஞரொருவரை அழைத்து விசாரனைக்குட்படுத்தியபோது
அந்நபர் தம் வசமிருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக சம்பவம் தொடர்பாகக் கூறப்படுகின்றது.

தற்கொலையாளி இது வரை அடையாளம் காணப்படவில்லை எனக் கூறும் பொலிசார் விடுதலைப் புலிகள் மீதே குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதே குற்றச்சாட்டை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளரான ஆசாத் மௌலானாவும் முன்வைத்துள்ளனர்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 25 பிப்ரவரி, 2008


பண்டாரவளையில் யாழ் இளைஞர் கடத்தல்

இலங்கையின் மலையகப் பகுதி
இலங்கையின் மலையகப் பகுதி

இலங்கையின் மலையகத்தில் பண்டாரவளைப் பகுதியில் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், வெள்ளை நிற வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

அந்தப் பகுதியில் அண்மைக்காலத்தில் இடம்பெறும் முதலாவது சம்பவம் இதுவென்பதால், அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளதாக அப்பகுதியில் இருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

அப்பகுதியில் உள்ள கடையொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த காரைநகரைச் சேர்ந்த சடாச்சரன் திருவருள் (22 வயது) என்ற இளைஞர், வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து, பொலிஸாரிடமும் ஏனையவர்களிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மலையக மக்கள் முன்னணியின் சார்பிலான ஊவா மாகாணசபையின் உறுப்பினரான அரவிந்தன் அவர்கள் பிபிசிக்குத் தெரிவித்தார்.

Posted in Arms, Attacks, Batticaloa, Blast, Bombs, Bus, Citizens, Colombo, dead, Eelam, Eezham, Explosions, Extremism, Highways, Hurt, Injured, LTTE, Northeast, Peace, Sri lanka, Srilanka, Suicide, Terrorism, Terrorists, UN, War | Leave a Comment »

42 SLA killed in Mannaar clashes – LTTE; Mahindra & Mahindra to develop US$ 100m IT park

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2008

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- ஜேவிபி இடையே கருத்து முரண்பாடு

இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு நடவடிக்கைகள் தொடர்பிலான ஜேவிபி கட்சியின் நிலைப்பாட்டைக் கண்டித்துள்ள இந்தியாவின் முக்கிய இடதுசாரிக் கட்சியான இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதனைக் காரணம் காட்டி, தமது கட்சியின் தேசிய மாநாட்டுக்கு ஜேவியின் பிரதிநிதிகளை, சகோதர பிரதிநிதிகளாக அழைப்பதை தவிர்த்துள்ளது.

ஒரு இடதுசாரிக் கட்சியாக தன்னை விபரிக்கும் ஜேவிபி, இலங்கை தமிழர் விவகாரத்தில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றை எதிர்ப்பதுடன், ஒற்றை ஆட்சியின் கீழ்தான் இந்த விவகாரம் கையாளப்பட வேண்டும் என்று கூறிவருகிறது.

இதனைக் கண்டித்துள்ள இந்திய மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான டபிள்யூ. ஆர். வரதராஜன் அவர்கள், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தமிழர்களுக்கு கூடிய அதிகாரங்களுடனான சுயாட்சி முறையை வழங்குவதை எதிர்க்கும் ஜேவிபின் நிலைப்பாட்டுடன் தாம் முரண்படுவதாக கூறியுள்ளார்.

அதேவேளை, இந்த விவகாரத்தில், ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டையும் ஜேவிபி எதிர்த்தது என்று கூறுகின்ற வரதராஜன் அவர்கள், இது தமது கட்சியின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணானது என்றும் கூறுகிறார்.

அகில உலக மட்டத்தில் சர்வதேச ஏகாதிபத்தியத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஜேவிபியின் நிலைப்பாட்டுடன் தாம் உடன்படுகின்ற போதிலும், இந்தியாவையும், அதனை அண்டிய பிராந்தியத்தையும் பொறுத்த வரை தற்போதைய நிலையில், இலங்கை தமிழர் பிரச்சினையே முன்னிலையில் இருப்பதாகவும், ஆகவே அந்த விவகாரத்தில் தமக்கு ஜேவிபியுடனான முரண்பாட்டை அடுத்தே, தாம் அந்தக் கட்சியின் பிரதிநிதிகளை, தமது கட்சி மாநாட்டுக்கு இந்தத் தடவை அழைக்கவில்லை என்றும் வரதராஜன் தெரிவித்தார்.

இலங்கை தமிழர் விவகாரத்தில் ஜேவிபியின் நிலைப்பாடு, ஏகதிபத்தியத்துக்கு ஆதரவாக அமைந்துவிடும் என்று எச்சரித்துள்ள வரதராஜன் அவர்கள், தமிழர் பிரச்சினையில், பேச்சுவார்த்தை மூலமான, வடக்குக் கிழக்குக்கு கூடிய அதிகாரங்களுடனான தீர்வு ஒன்றே அனைவருக்கும் பலன் தரும் என்றும் கூறினார்.

 


மன்னார் தள்ளாடியில் முகாம் மீதான தாக்குதலில் 6 இராணுவத்தினர் பலி

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள இலங்கை அரசாங்க இராணுவத்தின் முக்கிய முகாம் ஒன்றின் மீது விடுதலைப்புலிகள் தாக்கியதில் 6 சிப்பாய்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 10 பேர் காயமடைந்ததாகவும் இலங்ககை இராணுவம் கூறுகிறது.

இந்தத் தாக்குதலில் தேவாலயம் ஒன்றில் சிரமதானத்தில் ஈடுபட்டிருந்த படையினரே கொல்லப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் பீரங்கித் தாக்குதல் காரணமாக மன்னார் நகரில் பெரும் பதற்றநிலை காணப்பட்டதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.

கடுமையான பீரங்கி மோதல்களை அடுத்து மன்னாருக்கான போக்குவரத்து சில மணிநேரம் துண்டிக்கப்பட்டதாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசிக்குத் தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை வட இலங்கையில் நடந்த மோதல்களில் 40 விடுதலைப்புலிகளும், 10 அரசாங்க சிப்பாய்களும் கொல்லப்பட்டதாகவும் இராணுவம் கூறுகிறது.

விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து இது தொடர்பாக கருத்து எதுவும் வரவில்லை.

தமது தரப்பில் கடுமையான இழப்புகளை இலங்கை இராணுவம் ஒப்புக்கொள்வது குறைவு என்று கொழும்புக்கான எமது செய்தியாளர் கூறுகிறார்.


இலங்கையில் நவீன தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை உருவாக்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா

ஒப்பந்தம் கைச்சாத்தான போது
ஒப்பந்தம் கைச்சாத்தான போது

இலங்கையில் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியில் நவீன தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை உருவாக்கும் நோக்கில் இந்தியாவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் இன்று இலங்கை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருக்கின்றது.

இலங்கைக்கு மூன்று நாட்கள் விஜமொன்றினை மேற்கொண்டிருக்கும் இந்திய இணை வர்த்தக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் முன்னிலையில் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் சரத் அமுனுகமவும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் சார்பில் அதன் பிரதித் தலைவர் ஆருண் நந்தாவும் இன்று காலை இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைக்கப்படவுள்ள இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா குறித்து கருத்து வெளியிட்ட மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் பிரதித் தலைவர் ஆருண் நந்தா, இலங்கை முதலீட்டு சபை இதற்காக சுமார் 53 ஏக்கர் நிலத்தை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் ஒதுக்கியிருப்பதாகவும், இதன் நோக்கமெல்லாம் சர்வதேச தகவல் தொழில்நுட்ப கம்பனிகளை இந்தப் பிரமாண்டமான பூங்காவில் முதலீடு செய்வதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதாகும் என்று தெரிவித்தார்.

Posted in Army, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, dead, Eelam, Eezham, investments, IT, JVP, Left, Lifespace, LTTE, M&M, Mahindra, Mannaar, Mannar, SEZ, Sri lanka, Srilanka | Leave a Comment »

Jan 15 – LTTE, Eezham, Sri Lanka – News & Updates: BBC Tamil

Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2008

இந்திய இலங்கை கடல் எல்லையில் கண்ணிவெடிகளை புதைத்துள்ளதாக இலங்கை கடற்படை அறிவிப்பு.

இந்திய இலங்கை கடல் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக கடல் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் பேச்சாளரான கமோடர் தசநாயக்க தமிழோசையிடம் தெரிவ்த்தார். தமது கடற்படை தளங்களின் பாதுகாப்புக்காவே இந்த ஏற்பாடு எனவும் அவர் கூறுகிறார்.

அந்தப் பகுதிகள் உயர் பாதுகாப்பு வலையமானதாலும், அங்கு பொதுமக்களின் போக்குவரத்து கிடையாது என்பதாலும் இதன் காரணமாக பொதுமக்களுக்கும் மீனவர்களுக்கும் எந்த பாதிப்பும் வராது எனவும் அவர் கூறுகிறார்.

ஏற்கெனெவே இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்கரையருகேயும், அதன் அண்மித்த பிற தீவுகள் அருகேயும் நுழைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கமோடர் தசநாயக்க கூறினார்.

இது தொடர்பில் இலங்கை கடற்படை பேச்சாளர் தசநாயக்க, இந்தியக் கடற்படையின் தமிழகப் பொறுப்பு அதிகாரி கமோடர் பிலிப் வான் ஹால்ட்ரன் நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம் ஆகியோர் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

 

 


வன்னித் தாக்குதல்கள் குறித்து மாறுபட்ட தகவல்கள்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்

இலங்கையின் வடக்கே வன்னிப்பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைவிடம் ஒன்றை இன்று காலை 11.15 மணியளவில் விமானப்படையினர் தாக்கி அழித்துள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

வான்வழி கண்காணிப்பு மற்றும் தரையிலிருந்து கிடைத்த இரகசிய தகவல்களையடுத்து, இந்த இலக்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஆண்ரு விஜேசூரிய தெரிவித்திருக்கின்றார்.

தாக்குதல் இடம்பெற்ற வேளை, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அந்த மறைவிடத்தில் இருந்திருக்கக் கூடிய வாய்ப்பு இருந்தது என விமானப்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் புலிகளின் விமான ஓடுபாதை அமைந்துள்ள இரணைமடுக் குளத்திற்கு கிழக்கே கல்மடுக்குளம் என்ற இடத்தில் காட்டுப் பகுதியில் இந்த மறைவிடம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இது, விடுதலைப் புலிகளின் தலைவர் அடிக்கடி வந்து செல்லும் முக்கியமான ஒரு மறைவிடம் எனவும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் இங்கு அடிக்கடி சந்தித்து திட்டங்கள் தீட்டுவது வழக்கம் என்றும் கடற்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் முக்கிய முகாம் ஒன்றின் மீது இன்று வான்படையினர் நடத்திய விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல் குறித்து இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்கள் ஒரு மலிவுப் பரப்புரை என்றும் அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்றும் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்திருக்கின்றார்.

மக்களைக் குழப்புவதற்காகவே இந்தப் பரப்புரையை அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது என்றும் இளந்திரையன் கூறியிருக்கின்றார்.

 

 


அனைத்துக் கட்சி மாநாட்டின் பரிந்துரைகள் ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்டது

இலங்கை ஜனாதிபதியுடன் திஸ்ஸ விதாரண
இலங்கை ஜனாதிபதியுடன் அமைச்சர் திஸ்ஸ விதாரண

இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு அதிகாரப்பரவலாக்கல் ஊடான அரசியல் தீர்வினைக்காணும்நோக்கில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவினால் அமைக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு இன்று தனது தீர்வுத்திட்ட நகல் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்திருக்கிறது.

புதன்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவரும், அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண இந்தத்தீர்வுத்திட்ட யோசனைகளை ஜனாதிபதியிடம் ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களின் முன்னிலையில் கையளித்தார்.

இந்தத் தீர்வுத்திட்ட யோசனையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்கள் குறித்து இதுவரை எந்தத் தகவல்களும் உத்தியோகபூர்வமாக வெளிவரவில்லை. ஆனாலும் அரச தரப்பு தகவல்களின்படி இனப்பிரச்சனைக்குத் தீர்வினைக்காணும்பொருட்டு நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டிருக்கும் சரத்துக்களில் தேவையானவற்றை முழுமையாக அமுல்படுத்தும்படி இதில் பிரதானமாக விதந்துரைசெய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

இவை குறித்த மேலதிக செய்திகளை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் குறித்து அமெரிக்கா கவலை

மட்டக்களப்பின் உரையாற்றும் அமெரிக்கத் தூதர்
மட்டக்களப்பில் உரையாற்றும் அமெரிக்கத் தூதர்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி சபை தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாமாகவும் நடைபெறுமா என்பது குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் ஓ பிளேக் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

புதன்கிழமை மட்டக்களப்புக்கு சென்றிருந்த அவர் அமெரிக்க அரசின் உதவியுடனான அபிவிருத்தி திட்டங்களை தொடங்கிவைத்து உரையாற்றியபோதே இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

அங்கு ஒரு சாரார் ஆயுதங்களை வைத்துக் கொண்டு மற்ற அமைப்புகளை அச்சுறுத்தும்போது சுதந்திரமான நியாமான தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது எனவும் ராபர்ட் ஓ பிளேக் கூறியுள்ளார்.

ஆயுதம் தாங்கிய அமைப்புகள் அந்தப் பகுதியில் செயல்படுவது அந்தப் பகுதி முன்னேறுவதற்கு எப்போதுமே தடையாக இருக்கும் எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உட்பட சகல ஆயுதக் குழுக்களும் ஆயுதங்களை கைவிட்டு, மக்கள் ஆதரவின் மூலமே வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் முக்கிய கருத்து எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ராப்ர்ட் ஓ பிளேக் கூறியுள்ளார்.


இராணுவத் தீர்வில் நம்பிக்கையில்லை; இலங்கை ஜனாதிபதி

இலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவ வழியில் தீர்வினைக் காணமுடியும் என்று தான் நம்பவில்லை என இலங்கை ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சரும், முப்படைகளின் தளபதியுமாகிய மஹிந்த ராஜபக்க்ஷ இன்று தெரிவித்திருக்கிறார்.

செவ்வாய்க் கிழமையன்று அலரி மாளிகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பத்திரிகையாசிரியர்கள் ஆகியோருடன் நடத்திய விசேட சந்திப்பொன்றின்போது கருத்துவெளியிட்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றே காணப்படவேண்டுமென்று கூறியுள்ள அதேவேளை நாட்டில் பயங்கரவாதத்தினை முற்றாக ஒழிக்க தனது அரசு தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுக்குமென்றும் தெரிவித்தார்.

அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவிடம் இனப்பிரச்சினைத் தீர்விற்கான ஒரு தீர்க்கமான அரசியல் நகல்திட்டமொன்றினைத் தருமாறு தான் கோரிவருவதாகவும், மிகவிரைவில் அவர்கள் அதனைத் தருவார்களெனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

தென்னிலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களிற்குப் புலிகள் அமைப்பினரே காரணம் எனக்கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, ஆனாலும் புலிகளிற்கு இவ்வாறான தாக்குதல்களை நடாத்துவதற்கு தென்னிலங்கையிலுள்ள சில தீயசக்திகள் உதவிபுரிந்துவருவதாக தாம் சந்தேகப்படுவதாகவும், இதுகுறித்துத்தீவிர விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.


இலங்கை இனப் பிரச்சினை தீர்வு: அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் இடைக்கால பரிந்துரை வரும் 23ஆம் தேதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றை பரிந்துரைக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு வரும் 23ஆம் தேதி, ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க இருப்பதாகவும், அது இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து உருவாக்கப்பட்ட 13ஆவது சட்டத்திருத்தத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான ஆலோசனைகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்று சில தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்து இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்லஸ் தேவானந்தாவிடம் கேட்டபோது, இந்தக் குழு அளிக்கவிருக்கும் அறிக்கை, ஒரு உடனடி இடைக்கால ஆலோசனையாகவே இருக்கும் என்று கூறினார்.

வடக்கு கிழக்கு மாகாணத்தைப் பிரித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இதற்கு ஒரு இடைஞ்சலாக இருக்குமா என்று கேட்டதற்கு, நீதிமன்றத்தீர்ப்பு மட்டுமல்லாமல், தற்போது நிலவுகின்ற யதார்த்தத்தையும் பார்க்கவேண்டும், இதற்கு மக்கள்தான் பதிலளிக்கவேண்டும் என்று கூறினார் டக்ளஸ்.

நிரந்தரத் தீர்வு வரும் வரை, இரண்டு மாகாணங்களுக்கும் தனித்தனியாக மாகாண சபைகள் அமைக்கப்படலாம் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

இரண்டு தனித்தனி மாகாணங்கள் என்பது , 13ஆவது சட்டத்திருத்தத்தை அடிப்படையாகக்கொண்டதல்லவே, அது எப்படி சாத்தியமாகும் என்று கேட்டதற்கும், அவர் இது ஒரு நிரந்தரத் தீர்வு வரும்வரையிலான இடைக்கால ஏற்பாடுதான் என்று பதிலளித்தார்.

அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு சுயமாக ஒரு தீர்வை முன்மொழியாமல், ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க , 13வது சட்டத்திருத்தத்தை பலப்படுத்துவதை முன்மொழிவது என்பது சரியாக இருக்குமா என்று கேட்டதற்கு, ஜனாதிபதியால் கேட்டுக்கொண்டதற்கு இணங்க என்று கூறுவது சரியல்ல என்றும், பெரும்பான்மையான கட்சிகள் கேட்டுகொண்டதற்கு இணங்கத்தான் அது முன்மொழியப்படுகிறது என்று கூறினார் அவர்.

சுயமான பரிந்துரைகளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு பரிந்துரைக்காமல் இந்த மாதிரி இடைக்காலத் தீர்வாக ஒரு ஏற்பாட்டை முன்வைப்பது என்பது திசை திருப்பும் முயற்சியாக பார்க்கப்படக்கூடுமா என்று கேட்டதற்கு பதிலளித்த டக்ளஸ், அது சரியல்ல, இது ஒரு நிரந்தரத்தீர்வை நோக்கிய ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும் என்றார்.

டாக்டர் விக்னேஸ்வரன்

இதே விடயத்தில், அனைத்துக்கட்சி வல்லுநர் குழுவில் இடம்பெற்றிருந்தவரும், அகில இலங்கை தமிழர் ஐக்கிய முன்னணியின் செயலாளர் நாயகமுமான, டாக்டர் விக்னேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி கேட்டுக்கொண்டது போல, இந்தக் குழு, 13வது சட்டத்திருத்தத்தை எவ்வாறு முழுமையாக நல்லமுறையில் அமல்படுத்துவது என்பது குறித்த அதன் பரிந்துரைகளை எதிர்வரும் 23ம்தேதி சமர்ப்பிக்கும் என்றார்.

இந்தக்குழு தனது இறுதி அறிக்கைக்கு, இறுதி வடிவம் கொடுக்க , மீண்டும் ஓரிரு முறை கூடி, பிப்ரவரி மாத இறுதிவாக்கில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தான் கருதுவதாகவும் அவர் கூறினார்.


மொனராகலை மாவட்டதில் புலிகளின் தாக்குதலில் 10 சிவிலியன்கள் பலி: இலங்கை இராணுவம்

இலங்கையின் தென்பகுதியில் அமைந்திருக்கும் மொனராகலை மாவட்டத்தில் தனமல்வில எனும் பிரதேசத்திலுள்ள கலவல்கல எனும் விவசாயக் கிராமத்தினுள் நுழைந்த விடுதலைப் புலிகளின் ஆயுதக்குழுவொன்று அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சுமார் பத்துக் கிராமத்தவர்கள் கோரமாகக் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

இந்தச் சம்பவத்துடன் சேர்த்து இந்தப்பகுதியில் கடந்த மூன்று தினங்களில் கொல்லப்பட்ட சிவிலியன்களின் எண்ணிக்கை சுமார் 44 ஆக அதிகரித்திருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துவெளியிட்டிருக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு, “நேற்றிரவு சுமார் பத்துமணியளவில் கலவல்கல எனும் இந்த விவசாயக் கிராமத்துக்குச் சென்ற விடுதலைப் புலிகளின் ஆயுதக் குழுவொன்றே இந்தக் கொலைகளைப் புரிந்துள்ளதாக” தெரிவித்திருக்கிறது.

முதலில் கிடைத்த செய்திகளின்படி, மூன்று சிவிலியன்கள் மாத்திரமே இவ்வாறு கொலைசெய்யப்பட்டிருப்பதாகவும், மேலும் மூவர் படுகாயமடைந்ததாகவும் தெரியவந்தது. ஆனால் பிந்திக் கிடைத்த தகவல்களின்படி, அப்பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தினால் உஷார் அடைந்து சிவில் பாதுகாப்பு படையினருக்கு உதவி வழங்கிய மேலும் ஏழு பேர் கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டிருக்கிறது.

மொனாராகலை மாவட்டத்தில் கடந்த புதன்கிழமைகாலை இடம்பெற்ற பயங்கர பஸ்குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் அதில் பயணம்செய்துகொண்டிருந்த சுமார் 28 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, மேலும் 64 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் இடம்பெற்று சுமார் இரண்டு மணித்தியாலத்தின் பின்னர் மொனராகலை மாவட்டத்தில் புத்தல-கதிர்காமம் வீதியில் அமைந்திருக்கும் கல்கே, தம்பாகோட்டே பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ வாகனமொன்றினை இலக்குவைத்து புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு கிளேமோர் குண்டுத் தாக்குதலில் அதில் பயணம் செய்துகொண்டிருந்த மூன்று இராணுவ வீரர்கள் காயமைடைந்திருந்தார்கள்.

அதேதினத்தன்று இப்பகுதியிலுள்ள விவசாயக் கிராமம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மேலும் ஆறு விவசாயிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


இலங்கை நிலைமை குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம்

சைமன் ஹியுஸ்

இலங்கையின் தற்போதைய நிலமைகள் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஒத்திவைப்புத் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டது.

லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் சைமன் ஹியுஸ் அவர்கள் இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டுவந்திருந்தார்.

இப்படி ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்ததன் நோக்கம் என்ன என்று சைமன் ஹியுஸ் பிபிசி சந்தேஷ்யாவிடம் விளக்கினார்.

“இலங்கையில் நடக்கும் விடயங்கள் பிரிட்டனுக்கும், பொதுநலவாய நாடுகளுக்கும் பொதுவாகவே முக்கியத்தும் வாய்ந்தவையாக இருக்கின்றன. குறிப்பாக பிரிட்டனில் வாழும் சுமார் இரண்டரை லட்சம் இலங்கையர்களுக்கு இது முக்கியமான விடயம். இலங்கையில் முப்பது ஆண்டுகளாக நீடித்துவரும் உள்நாட்டுப்போர் மற்றும் அதன் வன்முறைகளை கண்டு உலக நாடுகள் கண்ணீர் சிந்தியிருக்கிறோம். இந்த வாரம் போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக விலகியிருப்பதை பார்த்து மீண்டும் ஒருமுறை அழவேண்டியிருக்கிறது. இன்னும் அதிகமான வன்முறைகளும், கொலைகளும் எதிர்வரும் மாதங்களில் நடக்கக்கூடும் என்று கவலையாக இருக்கிறது. அதனால் இந்த வாரம் இந்த பிரச்சினை குறித்து விவாதிப்பது பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் மூன்று பிரதான கட்சிகளைச்சேர்ந்தவர்களும் முக்கியமாக பங்கேற்றிருந்தார்கள்.” என்றார் சைமன் ஹியுஸ் அவர்கள்.

லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் தெரிவித்த கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை நிலைமை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவலை

இலங்கையில் அதிகரித்துவரும் மோதல்கள் குறித்து கவலை தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு சென்னையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்த தீர்மானம் குறித்து அந்த கட்சியின் தேசிய செயலாளர் ராஜா அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியில், இலங்கை இனப்பிரச்சினைக்கு ராணுவரீதியிலான தீர்வு சாத்தியமல்ல என்றும் அரசியல்ரீதியிலான தீர்வு காண அனைத்து தரப்பின ரும் முயலவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இலங்கை விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு பற்றிய இந்திய இடதுசாரிகளின் நிலை குறித்தும், ஜே.வி.பி. எனப்படும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இந்திய இடதுசாரி கட்சிகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் ராஜா தமது செவ்வியில் தெரிவித்திருக்கும் கருத்துக்களை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

 

 


போர் நிறுத்த உடன்பாடு ரத்தும் பொருளாதார பாதிப்பும்

யாழ்ப்பாணத்தில் ஒரு வங்கி-ஆவனப் படம்
யாழ்ப்பாணத்தில் ஒரு வங்கி-ஆவனப் படம்

இலங்கையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்ட பிறகு முதல் சில ஆண்டுகளில் வடக்கு, கிழக்கு மற்றும் அதை அண்டிய வடமத்தியப் பகுதிகள் உட்பட இலங்கையின் அனைத்துப்பகுதிகளிலும் குறிப்பிடும் அளவுக்கு பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், குறிப்பாக 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியது என்று கருத்து வெளியிடுகிறார் இலங்கை பொருளாதாரப் பகுப்பாய்வாளர் முத்துகிருஷ்ண சார்வானந்தா.

கடந்த நான்கு ஆண்டுகளாகவே தேசியப் பொருளாதாரமும் பிராந்திய பொருளாதாரமும் தொடர்ந்து இறங்குமுமகாவே இருந்து வந்ததாகவும் அவர் கூறினார். இந்த பின்னணியில்,
போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக விலகியிருப்பது பொருளாதார வீழ்ச்சியில் பெரிய பாதிப்புகளை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இல்லை எனவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இலங்கை சுதந்திரமடைந்த பிறகு, அதன் பொருளாதார சரித்திரத்தில் முதல் முறையாக கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பணவீக்கம் தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் இருந்து வருகிறது எனவும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

அவரது பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தால்.

மட்டக்களப்பில் ஹர்த்தால்
மட்டக்களப்பில் ஹர்த்தால்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேசங்களில் இன்று-புதன்கிழமை ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு காரணமாக அந்தப் பிரதேசங்களில் இன்று இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக செய்திகள் கூறுகின்றன.

கடந்த திங்கட்கிழமை அம்மாவட்டதிலுள்ள ஆரையம்பதி-காத்தான்குடி பிரதேச எல்லையிலுள்ள ஸ்ரீ நரசிம்மர் ஆலயம் சில சமூக விரோதிகளால் சேதமாக்கப்பட்டதை கண்டித்தும், அந்தப் பகுதிகளில் இடம்பெற்று வரும் ஆயுத வன்முறையை கண்டித்தும் இன்று ஹர்த்தாலை அனுசரிக்கும்படி தமிழ் மக்கள் ஒன்றியம் எனற ஒரு அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

இதன் காரணமாக அந்தப் பகுதியில் வழமைக்கு அதிகமான போலீசார் பாதுக்காப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் எனவும், சந்தேக நபர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை இரவு காத்தான்குடிப் பகுதியிலுள்ள ஒரு பள்ளிவாசலுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடைபெற்ற பிறகு முஸ்லிம் பிரதேசங்களில் திங்கட்கிழமையன்று ஹர்த்தால் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 


 

இலங்கையின் தென்கிழக்கில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் குறைந்தது 26 பேர் பலியாகி 60 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மொனாராகலை மாவட்டத்தில் இன்றுகாலை இடம்பெற்ற பயங்கர பஸ்குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் அதில் பயணம்செய்துகொண்டிருந்த சுமார் 26 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, மேலும் 67 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்துவெளியிட்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சு, இன்று காலை சுமார் 7.45 மணியளவில் மொனாராகலை மாவட்டத்திலுள்ள புத்தலவிற்கும் நியாண்டகல பகுதிகளுக்குமிடையே பயணம்செய்துகொண்டிருந்த பஸ்வண்டியொன்று ஹெலகம ஒக்கம்பிட்டிய மூன்றாவது மைல்கல் பகுதியில் புலிகளின் கிளேமோர் குண்டுத்தாக்குதலிற்கு இலக்காகியிருக்கிறது என்றும் இந்தக் குண்டுவெடிப்பினைத் தொடர்ந்து எஞ்சித்தப்பிய சிவில் பயணிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறது.

பிந்திக்கிடைக்கும் தகவல்களின்படி, இதுவரை சுமார் 26 சிவிலியன்கள் இதில் கொல்லப்பட்டிருக்கும் அதேவேளை, காயமடைந்தவர்களின் இரண்டு சிறுவர்கள் உட்பட எட்டுப்பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சு, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள புத்தல மற்றும் மொனராகல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

இந்தச் சம்பவம் இடமெற்றும் சுமார் இரண்டு மணித்தியாலத்திற்குள் மொனராகலை மாவட்டத்தில் புத்தல-கதிர்காமம் வீதியில் அமைந்திருக்கும் கல்கே, தம்பாகோட்டே பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ வாகனமொன்றினை இலக்கு வைத்து புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு கிளேமோர் குண்டுத் தாக்குதலில் அதில் பயணம் செய்துகொண்டிருந்த மூன்று இராணுவ வீரர்கள் காயமைடைந்திருக்கிறார்கள் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

இதேவேளை, மொனராகலை, புத்தல பகுதியில் அமைந்திருக்கும் ஒக்கம்பிட்டிய தம்பேயாய கிராமப்பகுதியில் சேனைப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயிகள் ஐவர் சுடப்பட்டும், வெட்டப்பட்டும் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

இது குறித்து செய்திவெளியிட்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சு, இந்தச் சம்பவத்தினை புலிகளின் அணியொன்றே மேற்கொண்டதாக சம்பவத்தில் காயங்களுடன் உயிர்தப்பிய சிவிலினை மேற்கோள்காட்டி தெரிவித்திருக்கிறது.

ஊவா மாகாணத்தில் அமைந்திருக்கும் மொனராகலை மாவட்டத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த வன்முறைச் சம்பவங்களையடுத்து ஊவா மாகாணத்திலுள்ள பாடசாலைகளை அடுத்த மூன்று தினங்களிற்குத் தற்காலிகமாக மூட உள்ளூர் அதிகாரிகள் தீர்மானித்திருக்கிறார்கள்.

 


புத்தல மக்களின் பாதுகாப்புக்கு துப்பாக்கிகள் வழங்கப்படும் என்கிறார் அமைச்சர்

புத்தலப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு
புத்தலப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கையின் தென்கிழக்கில் இன்று இடம்பெற்ற பஸ் குண்டுத் தாக்குதலையடுத்து அந்தப் பகுதியிலுள்ளவர்களின் பாதுகாப்பு கருதி சுமார் 500 பேருக்கு துப்பாக்கிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் தேச நிர்மாண அமைச்சர் ஜெகத் புஷ்பகுமார பிபிசியின் சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்துக்கு பாதுகாப்பு அகைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அந்தப் பகுதியில் பணியாற்றும் ஊர்காவல் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படியும் ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கையின் கிழக்குப் பகுதியை அரசு முழுமையாக கைப்பற்றிய பிறகு அந்தப் பகுதியிலிருந்த சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டு நடமாடும் காவலர்களே பணியாற்றுவதாகவும், இதன் காரணமாகவே அந்தப் பகுதிக்கு அருகில் இருக்கும் யாலவனப்பகுதியில் மறைந்திருக்கும் சில விடுதலைப் புலிகளுக்கு உணவும் ஆயுதங்களும் கிடைக்க வழிசெய்தது எனவும் அமைச்சர் ஜெகத் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

 


Posted in Attacks, Batticaloa, dead, Economy, Eelam, Eezham, Fights, Finance, Killed, LTTE, Murder, Peace, Sri lanka, Srilanka, Vanni, Wanni, War | 2 Comments »

Convert development process into mass movement: Narendra Modi – Thuglak magazine’s anniversary celebrations in Chennai

Posted by Snapjudge மேல் ஜனவரி 15, 2008

எது மதச்சார்பின்மை?: மோடி விளக்கம்

“துக்ளக்’ ஆண்டுவிழாவில் மோடியை வரவேற்கிறார் “சோ’ எஸ். ராமசாமி.

Dondus dos and donts: துக்ளக் 38-வது ஆண்டு விழா கூட்: “துக்ளக் 38-வது ஆண்டு விழா கூட்டம் – 1”

சென்னை, ஜன. 14: சமுதாயத்தில் அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதுதான் மதச்சார்பின்மை என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

வளர்ச்சித் திட்டங்களை மக்கள் இயக்கமாக மாற்றினால் நாடு வளர்ச்சி பெறும் என்றும் அவர் கூறினார்.

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற “துக்ளக்’ பத்திரிகையின் 38-வது ஆண்டு விழாவில் அவர் பேசியது:

நாட்டில் நெருக்கடி நிலை நடைமுறையில் இருந்தபோது தமிழகத்தில் “சோ’ ராமசாமி எழுதிய “இரண்டு கழுதைகள்’ கதை குறித்து எனது நண்பர்கள் மூலம் அறிந்தேன். அப்போதுதான் “சோ’ குறித்து தெரிந்து கொன்டேன்.

தமிழக அரசியலில் “சோ’ ராமசாமி ராஜகுருவாக இருக்கிறார். பாஜக தவறு செய்தாலும் அதை சுட்டிக் காட்ட அவர் தயங்குவதில்லை இதன் மூலம் ஒரு ஜனநாயகத்தை அவர் நிலை நாட்டுகிறார்.

எனக்கு முதல்வர் பதவி கிடைத்துள்ளது என்பதைவிட முதல்வருக்குரிய பணிகளை நான் செய்ய வேண்டும் என மக்கள் என்னை நியமித்துள்ளதாகவே கருதுகிறேன். அவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதே எனது கடமை. என்னால் முடிந்தவரை அந்த கடமையை நிறைவேற்றி வருகிறேன்.

என் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை என இங்கு பேசும்போது “சோ’ ராமசாமி குறிப்பிட்டார். எனது குடும்பம் குறித்து யாருக்கும் தெரியாது. ஒரு பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த நான் பள்ளிப் பருவம் முதல் எந்தப் பதவியையும் வகித்ததில்லை. முதல்வர் பதவியேற்கும் வரை முதல்வர் அலுவலகம் தெரியாது. சட்டப் பேரவை எப்படி இருக்கும் என தெரியாது.

முதல்வர் பதவி வாழ்க்கையில் எனக்கு கிடைத்த முதல் பதவி. எனவே, நேர்மையான, தெளிவான சிந்தனையுடன் செயல்படுகிறேன். அதனால், மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கிறது.

நான் முதல்வராகப் பதவி ஏற்றவுடன் அனைத்து செயலர்களையும் அழைத்து பேசியபோது, குஜராத்தில் அதுவரை நிலவிய பல்வேறு பிரச்னைகள் குறித்து தெரிய வந்தது.

பெண் கல்வியில் நாட்டிலேயே 20-வது மாநிலமாக குஜராத் இருந்தது. தற்போது பெண்கல்வி அதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கை 100 சதவீதமாகியுள்ளது. பள்ளிகளிலிருந்து இடையில் படிப்பை நிறுத்தும் மாணவர்களின் விகிதம், 45 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

குஜராத்தைப் பாதித்த மற்றொரு பிரச்னையான சிசு மரண விகித அதிகரிப்பைக் கட்டுப்படுத்த, “சிரஞ்சீவ்’ என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய “ஜோதிகிராம் திட்டம்’ உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தற்போது 24 மணி நேரமும் தடையற்ற மின் விநியோகம் நடைபெறுகிறது.

மதச்சார்பின்மை: மதச்சார்பின்மை குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற வகையில் மதச்சார்பின்மைக்குப் பல்வேறு விளக்கம் அளித்து வருகின்றனர்.

சிலர் சிறுபான்மையினருக்கு உதவுவது மதச்சார்பின்மை என்கிறார்கள், சிலருக்கு இந்துக்களைத் தாக்குவது மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் பெயரில் தீவிரவாதிகளை ஆதரிப்பது சிலருக்கு மதச்சார்பின்மை என பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.

என்னைப் பொறுத்தவரை அனைத்துதரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதுதான் மதச்சார்பின்மை.

குஜராத்தில் பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் முடங்கும் நிலையில் இருந்தன. இவற்றில் முறைகேடுகளுக்கு காரணமான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தேன். அவர்களில் பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் உள்ளனர். இதுவும் ஒருவகையில் மதச்சார்பின்மைதான்.

தேர்தல் முடிவு வரும்வரை என்னைப் பற்றியே பல்வேறு ஊடகங்கள் விவாதித்தன. தேர்தல் முடிந்த பின்னர் தற்போது குஜராத் மக்களிடம் என்ன கோளாறு என ஊடகங்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றன.

அமெரிக்கா செல்ல எனக்கு விசா மறுக்கப்பட்டது. ஆனால், தற்போது குஜராத்தை அமெரிக்காவாக உருவாக்கி வருகிறேன்.

எங்கள் கட்சியின் வெற்றிக்கு என்ன காரணம் என்று கேட்கிறீர்கள். ஏழை மக்களை உள்ளடக்கிய, தனியார் பங்கேற்புடன் திட்டங்களை நிறைவேற்றுவதே வெற்றிக்கான காரணியாகும். குறைந்தபட்ச அரசு அதிகபட்ச செயலாக்கம் மூலமே நாட்டின் வளர்ச்சியைப் பெருக்க முடியும். அப்போதுதான் அனைத்து தரப்பு மக்களுக்கும் வளர்ச்சியின் பயன் சென்று சேரும்.

வளர்ச்சிப் பணிகளை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அப்போதுதான், குஜராத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வளர்ச்சி நாடு முழுவதற்கு விரிவடையும். 21-வது நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக மாறும் என்றார் மோடி.

  • தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் ரவிசங்கர் பிரசாத்,
  • தமிழக பா.ஜ.க. தலைவர் இல. கணேசன்,
  • கட்டுரையாளர் குருமூர்த்தி,
  • ஜெயா ஜெட்லி,
  • திருநாவுக்கரசர் எம்.பி.,
  • அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அவைத்தலைவர் முருகன்,
  • மதிமுக தலைமைக்கழகச் செயலாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்

மற்றும் பலர் அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.

Posted in America, BJP, Cho, Cho Ramaswamy, Cho S Ramasamy, Civil, Criminal, dead, Editor, Ela Ganesan, Gujarat, Gurumoorthy, Gurumurthy, Hindu, Hinduism, Hindutva, Ila Ganesan, Islam, Jaya, Jeya, Killed, Law, MDMK, minority, Modi, Murder, Muslim, Order, Religion, Sarathkumar, Sharathkumar, Thirunavukkarasar, Thirunavukkarasu, Thuglak, Thuglaq, Thuklak, Thuklaq, US, USA, Vai Gopalasami, Vai Gopalsami, Vai Gopalsamy, Vai Kopalsami, Vai Kopalsamy, VaiGo, VaiKo, Visa | 2 Comments »

Sri Lanka Military Claims LTTE Eastern Leader Shankar was Killed

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2008

விடுதலைப்புலிகள் மூத்த உறுப்பினர் பலி

விடுதலைப்புலிகள்
விடுதலைப்புலிகள்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் சவுக்கடி பகுதியில் இன்று நண்பகல் இலங்கை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் விடுதலைப் புலிகளின் மாவட்ட தலைவரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் கூறுகின்றனர்.

சங்கர் என அடையாளம் காணப்பட்டுள்ள குறிப்பிட்ட நபரின் மறைவிடம், விசேட அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டதாகவும் அவ்வேளை கைக்குண்டு தாக்குதல் நடத்தி விட்டு அவர் தப்பியோட முயன்றபோது அவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொல்லப்பட்டவரிடம் இருந்து சிறிய ரக கைத் துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஆகியன மீட்கப்பட்டதாகவும் பாதுகாப்பு தரப்பினர் கூறுகின்றனர்.

இதேவேளை வடக்கே மன்னார் மாவட்டத்தில் பரப்பகண்டானுக்கு வடக்கே ஒரு சதுர கிலோமீற்றர் பிரதேசம் நேற்றிரவு முதல் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் போது ஏற்பட்ட மோதல்களின் போது 19 விடுதலைப் புலிகள் பலியாகியிருக்கலாம் எனக் கூறும் இராணுவம், தமது தரப்பில் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டதோடு, மேலும் 5 சிப்பாய்கள் காயமடைந்துளளதாகவும் கூறியுள்ளது.

இருப்பினும் விடுதலைப் புலிகள் தரப்பலிருந்து இது தொடர்பாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Posted in Batticaloa, dead, Eelam, Eezham, Killed, LTTE, Military, Sankar, Shankar, Shanker, Sri lanka, Srilanka, STF | Leave a Comment »

LTTE’s Head of Army Intelligence killed in Claymore ambush

Posted by Snapjudge மேல் ஜனவரி 7, 2008

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர் கொல்லப்பட்டுள்ளார்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய இலுப்பைக்கடவை பகுதியில் வேன் ஒன்றின் மீது இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படை அணியினர் சனிக்கிழமை பிற்பகல் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் ஒன்றில் விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு பொறுப்பாளராகிய சார்ல்ஸ் எனப்படும், கேர்னல் அருள்வேந்தன் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.

ஆனால், அருள்வேந்தன் கிளேமோர் மூலம் கொல்லப்படவில்லை, அவர் மோதலின் போதே கொல்லப்பட்டார் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசியின் சிங்கள சேவையிடம் தெரிவித்தார்.

இவருடன் பயணம் செய்த கேர்னல் தரத்திலான வேறு 3 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

மன்னார் இலுப்பைக்கடவைக்கும் பள்ளமடுவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இவர்கள் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது, விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் நீண்டகாலமாக இருந்து வந்த கேர்னல் சார்ல்ஸ் கடந்த 2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் புதிதாக உருவாக்கப்பட்ட இராணுவ புலனாய்வுத் துறையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் என்றும் விடுதலைப் புலிகள் விபரம் வெளியிட்டிருக்கின்றனர்.

இதற்கிடையே, முகமாலையில் இராணுவத்தின் முன்னரங்க பகுதி மீது விடுதலைப் புலிகள் ஞாயிற்றுக்கிழமை காலை நடத்திய திடீர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

சுமார் 25 நிமிடங்கள் இடம்பெற்ற இந்தத் தாக்குதலின்போது தமது தரப்பில் சேதங்கள் எதுவுமில்லை என்றும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

முகமாலை முன்னரங்க பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது நடத்திய தாக்குதலில் 4 விடுதலைப் புலிகளும் 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்திருக்கின்றது.


ஜயந்த தனபாலா ராஜினாமா

இலங்கை ஜனாதிபதியுடன் ஜயந்த தனபாலா
இலங்கை ஜனாதிபதியுடன் ஜயந்த தனபாலா

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விடுதலைப் புலிகள் உடனான சமாதான முயற்சியில் பிரதான ஆலோசகராக செயற்பட்ட ஜயந்த தனபாலா ராஜினாமா செய்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடன் கடந்த 2002 ம் ஆண்டு செய்து கொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து தன்னிச்சையாக விலகி கொண்டதாக அரசாங்கம் அறிவித்த சில தினத்தில் இந்த ராஜினாமா இடம்பெற்றுள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக ஜயந்த தனபாலா கூறியுள்ளார்.

கலாநிதி ஜயந்த தனபாலவை அரசாங்க சமாதான செயலகத்தின் பணியாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நியமித்திருந்தார், அதன் பின்னர் 2005 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புதிய ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ இவரை தனது பிரதான ஆலோசகராக நியமித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் செயலாளர் நாயகம் பதவிக்கு இலங்கை சார்பில் இலங்கையின் சார்பின் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார் ஜயந்த தனபாலா.

 


Posted in ambush, Army, Charles, CIA, dead, Eelam, Eezham, FBI, I&B, Iluppaikkadavai, Intelligence, Jaffna, KGB, Killed, LTTE, Mannaar, Military, Murder, Pallamadu, Pirapaharan, Ravishankar, RAW, Shanmuganathan, Shanmuganathan Ravishankar, Sri lanka, Srilanka, Vanni, War | Leave a Comment »

Sri Lanka scraps truce pact with LTTE & Ceasefire agreement will end after Thai pongal: Tamil Tigers

Posted by Snapjudge மேல் ஜனவரி 3, 2008

விடுதலைப் புலிகளுடனான போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் உத்தியோகப்பூர்வ முன்னறிவிப்பு

கடந்த 2002ஆம் ஆண்டு பிப்பிரவரி 22 ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்புடன் செய்துகொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் உத்தியோகப்பூர்வமாக 14-நாள் முன்னறிவிப்பினை வழங்கியிருக்கிறது.

போர்நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவதாக இலங்கை அரசாங்கம் கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தது.

இது தொடர்பாக இலங்கை வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், போர்நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் கொடுக்கப்பட்டுள்ள இந்த 14-நாள் முன்னறிவிப்பின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி போர்நிறுத்த உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக முடிவிற்குவரும் என்று தெரிவித்திருக்கிறது.

அத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் 2002ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் திகதி உருவாக்கப்பெற்ற இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் செயற்பாடுகளும் முடிவிற்குவரும் என வெளிநாட்டமைச்சின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை இன்று பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா, பல்லாயிரக்கணக்கான தடவைகள் புலிகள் அமைப்பினரால் மீறப்பட்டு செயலற்றுப்போயுள்ள ஒரு ஒப்பந்தத்தினைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்க அரசு தயாராக இல்லை என்று தெரிவித்தார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் பேச்சுக்களில் ஈடுபடுவது பயனற்றது என்று தெரிவித்த அமைச்சர் யாப்பா, எதிர்காலத்தில் நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, புலிகள் ஆயுதங்களை கீழேவைத்துவிட்டு பேச்சுகளிற்குத் தயார் என்று கூறினால் அது குறித்து பரிசீலிக்க அரசு தயாராக இருக்கிறது என்றும் அதேவேளை அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவினூடாக அரசியல் தீர்வொன்றினைக் காண்பதில் அரசு தீவிரமாக ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

இலங்கை அரசின் இந்த பாரதூரமான முடிவு தமக்குக் கவலையளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள நோர்வேயின் இலங்கைக்கான விசேட சமாதானத்தூதுவர் எரிக் சொல்க்ஹெய்ம், வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு மேலும் வன்முறைகள் அதிகரிக்கவே வழிகோலும் என்றும் அச்சம் வெளியிட்டுள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்ற இலங்கை அரசின் அறிவிப்பு குறித்து இலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இன்னமும் கருத்து எதையும் வெளியடவில்லை. இந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ரவி கருணநாயக அவர்கள் இலங்கை அரசின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக நார்வே அரசுக்கு தெரிவிக்கப்பட்ட பிறகுதான் தங்களது கட்சி இது குறித்து கருத்து வெளியிட முடியுமென்று தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு – கண்டனம்

இரா.சம்பந்தர்

அரசாங்கத்தின் அறிவிப்பு பற்றி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், இலங்கை அரசாங்கம் போர்நிறுத்தத்திலிருந்து விலகியதாக அறிவித்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை ஏனெனில் அந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் அப்பட்டமாக மீறிவந்துள்ளது என்று தெரிவித்தார்.

இராணுவ ரீதியில் ஒப்பந்தம் மீறப்பட்டது மட்டுமின்றி, வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு அவர்கள் சொந்த இடங்களை விட்டு அகதிகளாக வெளியேறும் நிலை இந்த போர்நிறுத்த காலத்தில் ஏற்பட்டதுதான் தாங்கள் இங்கே வலியுறுத்துகின்ற விஷயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் போர்நிறுத்த விலகல் அறிவிப்பு குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா பிரிவின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் யோகராஜன், மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான ராதாகிருஷ்ணன் ஆகியோரது கருத்துகளையும் நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


வட இலங்கை மோதல்கள் – முரண்பட்ட தகவல்கள்

பதுங்கு குழி

மன்னார் பாலைக்குழி பகுதியில் வியாழக்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டைகள் இடம்பெற்றதாகவும், இதில் 6 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் 6 படையினர் காயமடைந்ததாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் 6 பதுங்கு குழிகளைக் கொண்ட முன்னணி பாதுகாப்பு வரிசையொன்றும் படையினரால் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

இந்த மோதல்களை உறுதிப்படுத்தியுள்ள விடுதலைப் புலிகள், மன்னார் பாலைக்குழி அணைக்கட்டு பகுதியில் பெரும் எடுப்பில் முன்னேற முயன்ற இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், இதில் 10 படையினர் கொல்லப்பட்டு 15 பேர் காயமடைந்ததாகவும் தங்கள் தரப்பில் சேதம் எதுவுமில்லை என்றும் அறிவித்திருக்கின்றனர்.

வவுனியா நாவற்குளம் பகுதியில் வியாழனன்று இடம்பெற்ற மற்றுமொரு மோதல் சம்பவத்தில், மேலும் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

இதற்கிடையில், மன்னார் உயிலங்குளம் மணற்குளம் பகுதியில் மோட்டார் குண்டு ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 4 சிவிலியன்கள் காயமடைந்ததாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திலிருந்து ஏவப்பட்ட மோட்டார் குண்டே வீழ்ந்து வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு பெண்களும், 13 வயது சிறுவன் ஒருவனும், 7 வயதுடைய சிறுமி ஒருவருமே இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாக மன்னார் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். காயமடைந்தவர்கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கண்ணி வெடி

இதேவேளை, மணலாறு பதவியா பகுதியில் இராணுவ டிரக் வண்டியொன்று அமுக்க வெடியில் சிக்கியதையடுத்து, 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 4 படையினர் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.


மகேஸ்வரன் கொலையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் கடையடைப்பு

சுட்டுக்கொல்லப்பட்ட மகேஸ்வரன்

கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வளவினுள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாழனன்று வவுனியாவில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. வங்கிகள், அலுவலகங்கள் என்பனவும் இயங்கவில்லை.

யாழ் நகரில் கடைகள் திறக்கப்படாதிருந்ததாகவும், இராணுவத்தினர் வந்து கடைகளைத் திறக்குமாறு உத்தரவிட்டதையடுத்து, கடைகள் யாவும் திறக்கப்பட்டதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சொந்த ஊராகிய யாழ்ப்பாணம் காரைநகரில் கறுப்பு வெள்ளை கொடிகள் கட்டப்பட்டு, கடைகள் அலுவலகங்கள், பாடசாலைகள் என்பன மூடப்பட்டு காரைநகர் பிரதேசம் சோகமயமாகக் காட்சியளித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, மகேஸ்வரனின் கொலை தொடர்பாக, யாழ்பாணத்தைச் சேர்ந்த வசந்தன் என்ற நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நபர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழும், மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது அவருடைய பாதுகாப்பு பணியிலும் இருந்துள்ளார் என்றும் ஆனால் இந்தக் கொலை குறித்து யார் மீதும் இலங்கை அரசு சந்தேகப் படவில்லை என்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக பேசவல்ல இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்கவல்ல தெரிவித்திருந்தார்.

ஆனால் ஈ.பி.டி.பி.யுடனோ தன்னுடனோ வசந்தன் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. இந்த செய்தி எவ்வித அடிப்படையும் இல்லாத பொய் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

Posted in Agreement, Assassin, Assassinations, Attacks, Ceasefire, dead, Douglas, Eelam, Eezham, EPDP, Jaffna, Killed, LTTE, Mahesvaran, Maheswaran, Mannaar, Mannar, Murder, Peace, Ranil, Sri lanka, Srilanka, Tamil, Tamil Tigers, Tigers, Truce, Vavuniya, War, wavuniya, Wawuniya | 1 Comment »

Sri Lankan Tamil MP Maheswaran assassinated in Colombo temple

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் புதுவருடத்தினமான இன்று கொழும்பு பொன்னம்பலவாணேசர் ஆலயத்தில் வைத்து துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆலயத்தின் உள்வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், கொழும்பில் மிகவும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று காலை சுமார் 10 மணியளவில் மகேஸ்வரன் தனது குடும்பத்தார் மற்றும் மெய்பாதுகாப்பு உறுப்பினர்கள் சகிதம், மிகவும் சனக்கூட்டம் நிறைந்த இந்த ஆலய உள்வீதியில் வலம் வந்துகொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்ததாகக் கருதப்படும் துப்பாக்கி நபரினால் சரமாரியாகச் சுடப்பட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவத்தின்போது படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விரையப்பட்டபோதிலும், அங்கு அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிற்குள்ளேயே சிகிச்சைகள் பயனின்றி இறந்துவிட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்

இந்தச் சம்பவத்தின் போது அவரது மெய்பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் 12 பேர் வரையில் காயமடைந்தாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலை மேற்கொண்டதாகக் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிநபர் கொட்டாஞ்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாப்பாளரின் பதில்தாக்குதலில் காயமடைந்திருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் உறுதி செய்திருக்கின்றன.

இந்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் இவர், தற்போது பொலிசாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

அத்துடன் மகேஸ்வரனின் இன்றைய இந்தப்படுகொலையைக் கேட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருப்பதாகவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இது தொடர்பாக தேவையான விசாரணைகளை மேற்கொண்டு கொலையாளிகளைக் கைதுசெய்யும்படியும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

அதேவேளை மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ள அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இந்தியாவில் இருந்து விடுத்துள்ள ஒரு செய்தியில், இலங்கை அரசாங்கமே இந்தக் கொலைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Posted in Assassination, Assassinations, Batticaloa, Campaign, Civil Monitoring Committee, Colombo, dead, Devananda, Devanandha, Devanantha, Douglas, Douglas Devananda, Eelam, Eezham, Election, Elections, EPDP, Ganesan, guards, Hindu, Jaffna, Joseph, Joseph Pararajasingham, Killed, Kochchikkadai, Kotahena, LTTE, Mageshwaran, Magesvaran, Mageswaran, Maheshwaran, Mahesvaran, Maheswaran, Mahinda, Mahindha, Mahintha, Mano, Mano Ganesan, MP, Murder, Muthukumar, Muthukumar Sivapalan, Nadaraja, Nadarajah, Nadarajah Raviraj, Nataraja, paramilitary, Pararajasingam, Pararajasingham, Pararajasinkam, Parliamentarian, Polls, Ponnambala Vaneswara Hindu Temple, Rajapaksa, Ranil, Raviraj, Security, Sivabalan, Sivapalan, Sri lanka, Srilanka, Tamil, Tamil National Alliance, Temple, terror, Terrorists, Thiagaraja, Thiyagaraja, Thiyagarajah, Thiyagarajah Maheswaran, TNA, UNP, Western Province Peoples Front, Wickremasinga, Wickremasinge, Wickremasingha, WPPF | 2 Comments »

Colombo withdraws security – Tamil MP Mano Ganesan alleges ‘threat to life’, may flee Sri Lanka

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

விடுதலைப் புலிகளும், கருணா குழுவினரும் தொடர்ந்து சிறார்களை சேர்ப்பதாக ஐ.நா கூறுகிறது

இலங்கையில் விடுதலைப் புலிகளும், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணா குழுவினரும், தொடர்ந்து சிறார்களை கடத்தி அவர்களை சண்டையிட பயன்படுத்துவதாக ஐ.நா கூறியுள்ளது.

சிறார்களை சண்டையிட பயன்படுத்துவது குறைந்து இருந்தாலும், கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த இரு குழுவினரும் நூற்றுக்கணக்கான சிறுவர்களை சேர்த்துள்ளதாக ஐ.நா கூறுகின்றது.

ஐ.நா அதிகாரிகள் முன்னிலையில் சிறார்களை விடுவித்த ஒரு சில நாட்களிலேயே அவர்களை மீண்டும் சேர்த்து கருணா குழுவினர் அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருவதாகவும் ஐ.நா கூறியுள்ளது.

 


பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாடு செல்வதாக கூறுகிறார் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்

கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினறும், மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன், தற்காலிகமாக வெளிநாடு ஒன்றுக்கு செல்ல முடிவெடுத்துள்ளார்.

இலங்கையில் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கிறது என்று காவல் துறையின் புலனாய்வுத் தறை கூறிய பிறகும் தன்னுடைய பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாகத் தெரிவிக்கும் மனோ கணேசன், இதையடுத்து தற்காலிகமாக இலங்கையை விட்டுச் செல்ல முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதாகக் கூறிய இலங்கை அமைச்சர் கெஹ்லியா ரம்புக்வல்ல அவர்கள், கூடுதல் பாதுகாப்பு கோரி மனோ கணேசன் அளித்த மனு பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

 


Posted in Abductions, Colombo, dead, disappearances, Eelam, Eezham, extra-judicial, extra-judicial killings, Freedom, Ganesan, HR, Human Rights, Killed, killings, Life, LTTE, Mahinda, Mahinda Rajapaksa, Mano, Mano Ganesan, MP, Murder, Prabhakaran, Rajapaksa, Security, Sri lanka, Srilanka, Tamils, Threat, Velupillai, Velupillai Prabhakaran | Leave a Comment »

Benazir Bhutto (1953-2007) – Former Pakistan Prime Minister Assassinated

Posted by Snapjudge மேல் திசெம்பர் 27, 2007

பேனசீர் புட்டோ படுகொலை

பாகிஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் அந்த நாட்டின் முன்னாள் பிரதமரான பேனசீர் பூட்டோ அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ராவல்பிண்டியில், தனது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூட்டம் ஒன்றில் அவர் கலந்துகொண்டிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் மேலும் சுமார் 15 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தானின் பிரதமராக இரு தடவைகள் பதவி வகித்த பேனசீர் அவர்கள், ஜனவரி மாதம் நடக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார்.

இது வரை இந்தக் கொலைக்கு யாரும் பொறுபேற்கவில்லை. கடந்த சில மாதங்களில் அவர் மீது நடத்தப்பட்ட இரண்டாவது கொலை முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

பேனசீரைக் கொலை செய்தது தற்கொலை குண்டுதாரி என்கிறது போலீஸ்

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

பேனசீரைக் கொன்ற தற்கொலை குண்டுதாரி தன்னை வெடித்துக் கொள்ளும் முன்னர் அவரை கழுத்திலும் நெஞ்சிலும் சுட்டதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி மாலை 6.16 க்கு அவர் மரணமடைந்ததாக ராவல்பிண்டி மருத்துவமனையை மேற்கோள் காட்டி அவரது கட்சியைச் சேர்ந்த வாசிஃப் அலி கான் தெரிவித்துள்ளார்.

பேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, மருத்துவமனைக்கு சென்ற அவரது ஆதரவாளர்கள் பலர் அழுதனர், பலர் ஆத்திரம் காரணமாக கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

 


பாகிஸ்தான் நிலைமை குறித்து விவாதிக்க ஐ நா வின் சிறப்புக் கூட்டம்

அவசரமாக கூடுகிறது ஐ நா வின் பாதுகாப்பு சபை
அவசரமாக கூடுகிறது ஐ நா வின் பாதுகாப்பு சபை

பேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, பாகிஸ்தானின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை உடனடியாக நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பேனசீர் புட்டோவின் படுகொலையை கண்டித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன், இந்தக் கொலையை படுபாதகமான செயல் எனக் கூறியுள்ளார். இந்தக் கொலையானது பாகிஸ்தானின் ஸ்திரத்தன்மையின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் எனவும் பான் கீ மூன் கூறியுள்ளார்.

 


தமது கட்சிக்கும் பெரும் இழப்பு என்கிறார் நவாஸ் ஷெரீஃப்

பேனசீர் புட்டோவுடன் நவாஸ் ஷெரீஃப்
பேனசீர் புட்டோவுடன் நவாஸ் ஷெரீஃப்

பேனசீர் புட்டோ தனது அரசியல் எதிரியாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் தங்களிடையே ஒரு நல்லுறவு இருந்தது என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை என்று பாகிஸ்தானின் மற்றுமொரு முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.

கிறுஸ்துமஸ் தினத்தன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு தன்னை அழைத்து அவர் வாழ்த்துத் தெரிவித்து ஒரு பூங்கொத்து அனுப்பியிருந்தை நினைவு கூர்ந்த நவாஸ் ஷெரீஃப். மருத்துவமனையில் அவரது உடலைக் கண்டதும் தனது மனது பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மக்களின் உணர்ச்சிகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது எனவும் பேனசீரின் படுகொலையானது. அவரது கட்சிக்கு மட்டுமல்லாமல் தமது கட்சிக்கும் இது பெரிய இழப்பு என்றும், பாகிஸ்தான் நாட்டுக்கும் ஈடு செய்யமுடியாத் இழப்பு என்றும் தனது இரங்கல் செய்தியில் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் அரசியலிலேயே மிகவும் இருண்ட நாள் இதுதான் எனவும் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.


பன்னாட்டுத் தலைவர்கள் கண்டனம்

பேனசீர் புட்டோவின் கொலையை பன்னாட்டுத் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்

பேனசீர் புட்டோவின் படுகொலை அதிர்ச்சியூட்டுவதாகவும், அச்சுறுத்துவதாகவும் இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நில்லுறவுகளை மேம்படுத்த பேனசீர் எடுத்த முயற்சிகளை சுட்டிக் காட்டி அவருக்கு மன்மோகன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார். அவரை ஒரு மிகச் சிறந்த தலைவர் எனவும் இந்தியப் பிரதமர் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்

இந்தப் படுகொலையை கண்டித்துள்ள அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பாகிஸ்தானில் ஜனநாயக வழிமுறைகள் தொடருவதே பேனசீர் புட்டோவுக்கு செலுத்தும் அஞ்சலி என்று கூறியுள்ளார். புட்டோவின் கொலைக்கு காரணமாக இருந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஜார்ஜ் புஷ் கோரியுள்ளார்.

அருவருக்கத்தக்க இந்தக் கொலையை மிகக்கடுமையான வார்த்தைகளால் கண்டிப்பதாக பிரெஞ்சு அதிபர் நிக்கொலா சர்கோசி கூறியுள்ளார். ஜனநாயகத்தில் வன்முறைக்கும் தீவிரவாதத்துக்கும் இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு அதிபர் சர்கோசி
பிரெஞ்சு அதிபர் சர்கோசி

இந்தப் படுகொலையின் பின்னணியில் பாகிஸ்தானில் மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும், பன்முகத்தன்மையுடன் கூடிய வகையில் தேர்தல் நடைபெற வேண்டியது அவசியமாகிறது எனவும் நிக்கொலா சர்கோசி கூறியுள்ளார்.

 


பேனசீர் புட்டோ மறைவுக்கு மூன்று நாள் துக்கம் அணுசரிக்கப்படுகிறது

அதிபர் முஷாரஃப்
அதிபர் முஷாரஃப்

படுகொலை செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பேனசீர் புட்டோவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என பாகிஸ்தானின் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் அறிவித்துள்ளார்.

நாட்டின் தேசியத் தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், மக்கள் அமைதி காக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தானில் தீவிரவாதம் ஒழிக்கப்படும் வரை அரசு ஓயாது எனவும் முஷாரஃப் கூறியுள்ளார். பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு தீவிரவாதம் ஒரு பெரிய தடையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது
பலபகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது

பாகிஸ்தானைய மக்கள் அனைவரும் தீவிரவாதத்தை ஒழிக்க உறுதிபூண வேண்டும் எனவும் பர்வேஸ் முஷாரஃப் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, போலீசாரும் இராணுவமும் அதி உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பல நகரங்களில் போராட்டங்களும் வன்முறைகளும் நடைபெற்றுள்ளன. பிரதமரின் ஊரான ஜகோபாபாதில் பல கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.


some of the key events in her career:April 4 1979: Bhutto’s father, Zulfikar Ali Bhutto, is executed for the murder of a political opponent, two years after he was ousted as prime minister in a military coup.April 10 1986: Bhutto returns from exile in London to lead the Pakistan People’s party that her father founded.December 1 1988: Bhutto, aged 35, becomes the first female prime minister of a Muslim nation after winning parliamentary elections.August 6 1990: President Ghulam Ishaq Khan dismisses Bhutto’s government, citing corruption and a failure to control ethnic violence.October 19 1993: Bhutto takes the oath for a second term as prime minister.November 5 1996: President Farooq Leghari dismisses Bhutto’s second administration amid accusations of nepotism and undermining the justice system.April 14 1999: A court finds Bhutto guilty of corruption while she is out of the country. The conviction is later quashed, but Bhutto remains in exile.October 5 2007: President General Pervez Musharraf signs a corruption amnesty covering other cases against Bhutto, opening the way for her return and a possible power-sharing agreement.October 18 2007: Bhutto flies in to Karachi, where tens of thousands of supporters give her a rousing welcome amid tight security. Two bombs go off near her vehicle. More than 140 people are killed in the assassination attempt.

December 27 2007: Bhutto dies after a suicide bomb attack in Rawalpindi.


பேனசீர் புட்டோவின் வாழ்க்கை ஒரு பார்வை….

 

1953 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி பிறந்தார் பேனசீர் புட்டோ. தெற்கு ஆசியாவின் பிரபலமான ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் பேனசீர் புட்டோ. அவரது தந்தையான ஜுல்ஃபிகர் அலி புட்டோ 1970 களில் மக்களின் ஆதரவைப் பெற்ற பிரதமராக திகழ்ந்தார்.

இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் ஆட்சியை இழந்த ஜுல்ஃபிகர் அலி புட்டோ பதவியிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தூக்கிலிடப்பட்டார். தனது தந்தை பதவியிலிருந்து நீக்கப்பட்டு தூக்கிலடப்பட்ட சம்பவங்களே அவரை அரசியலில் நுழைய வைத்தது எனக் கூறப்படுகிறது.

 

அவரது தந்தையை தூக்கிலிட்ட ஜியாவுல் ஹக் பேனசீரையும் சிறையிலடைத்தார். ஜியாவுல் ஹக் ஒரு விமான விபத்தில் பலியான பிறகு, நடைபெற்ற ஜனநாயக முறையிலான தேர்தலில் வெற்றி பெற்று உலகளவில் ஒரு இஸ்லாமிய நாட்டில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பெண் பிரதமராக பொறுப்பேற்றார்.

1988 ஆம் ஆண்டு முதல் முறையாக அவர் பிரதமராக பொற்பேற்ற போது, நவீனத்துவமும், ஜனநாயகத்தையும் பிரதிபலிக்கும் ஒருவராக பேனசீர் புட்டோ பார்க்கப்பட்டார். தம்மை ஒரு மதச்சார்பற்றவராகவும், தீவிரவாதத்தை எதிர்ப்பவராகவும் தம்மை அவர் வெளிக்காட்டிக் கொண்டார். பாகிஸ்தானின் கொந்தளிப்பு மிக்க அரசியல் களத்தில் அவரது இந்தக் கொள்கைகள் அவருக்கு எதிராகச் செல்லக் கூடும் என 1979 ஆண்டிலேயே கூறப்பட்டது. இதை அவரும் ஏற்றுக் கொண்டார்.

 

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த முஸ்லீம் உலகில், இளைமையாக, நன்றாக படித்த கவர்ச்சி மிக்கவரான பேனசீர் புட்டோ இஸ்லாமிய உலகில் ஒரு புதிய காற்றாக பார்க்கப்பட்டார்.

இவ்வாறு இருந்தாலும், 1996 ஆம் ஆண்டு அவர் இரண்டாவது முறையாக பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது, அவர் மீதும் அவரது கணவர் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இதன் பிறகு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வந்த பேனசீர் புட்டோ, கடந்த அக்டோபர் மாதம்தான், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு மூன்றாவது முறையாக பிரதமராகும் நோக்கில் நாடு திரும்பினார்.

 

ஆனால், அவர் நாடு திரும்பிய தருணத்திலேயே அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் அவர் தப்பினாலும், அவரது வாகனத் தொடரணியைத் தொடர்ந்து வந்த கூட்டத்திலிருந்த 130 பேர் பலியானார்கள்.

நாடு திரும்பிய அவர் அதிபர் முஷாரஃப் அவர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வார் என மேற்குலகம் எதிர்பார்த்தது. ஆனால், அதிபர் முஷாரஃப் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல் படுத்திய பிறகு அவர் தலைமையில் தாம் பிரதமராக பணியாற்ற மாட்டேன் எனக் கூறிவிட்டார்.

 

தனது தந்தை இராணுவ ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டதையடுத்து அவரிடம் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான ஒரு எண்ணமே இருந்து வந்தது.

அவர் பிரதமராக இருந்த இரண்டு முறையும் அவரது ஆட்சி ஊழல்களால் பீடிக்கப்பட்டிருந்தது.

மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்று, பாகிஸ்தானியர்கள் முன் தன்னை ஒரு சிறந்த தலைவராக நிரூபிக்க விழைந்த பேனசீர் புட்டோவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவேயில்லை.

 


சிதைந்த கனவுகள்! துர்மரணம் என்பது சில குடும்பங்களைப் பிடித்த சாபக்கேடா அல்லது சில நாடுகளின் துரதிர்ஷ்டமா என்று தெரியவில்லை. குறிப்பாக, தெற்காசியாவைப் பொருத்தவரை பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் எதுவுமே படுகொலைகளுக்கும், கோரமான விபத்துகளுக்கும் முக்கியமான தலைவர்களைப் பலி கொடுத்த சரித்திரத்திற்கு விதிவிலக்கல்ல. இந்த வரிசையில் நேற்றைய அதிர்ச்சி பேநசீர் புட்டோவின் படுகொலை!தந்தை சுல்ஃபிகர் அலி புட்டோவைத் தூக்கில் போட்டது முதலே அந்தக் குடும்பத்தை மரணம் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. பேநசீரின் சகோதரர் ஷாநவாஸ், பிரான்ஸ் நாட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார் என்றால், அவரது இன்னொரு சகோதரர் முர்சாவும், பேநசீர் பிரதமராக இருக்கும்போது 1996-ல் கொலை செய்யப்பட்டு இறந்தார். இப்போது சகோதரியின் முடிவு…பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தனிப்பட்ட செல்வாக்குடன் திகழ்ந்த புட்டோவின் குடும்பம், நிச்சயமாக பாகிஸ்தானின் சரித்திரத்தில் மிக முக்கியமான பங்கு வகித்தது என்பதை மறுக்க முடியாது. அதிலும் குறிப்பாக, பேநசீரின் பதவிக்காலம் பல ஊழல் குற்றச்சாட்டுகளையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் சந்தித்தன என்றாலும், வெளியுறவு விஷயத்தில் அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை வளர்த்துக் கொள்வதில் முனைப்புக் காட்டியது என்பதை மறுக்க முடியாது. சமீபகாலத்தில் இந்திய – பாகிஸ்தான் உறவு மிகவும் சுமுகமாக இருந்தது பேநசீர் புட்டோ பிரதமராக இருந்தபோது மட்டும்தான்.பர்வீஸ் முஷாரபின் வளர்ச்சியும், அவர் ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரத்தை பாகிஸ்தானில் நிலைநிறுத்திய விதமும் பேநசீர் புட்டோவை வெளிநாடுகளுக்குத் துரத்தியது என்பது மட்டுமல்ல, அவரது அரசியல் எதிரியான முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபை நாடு கடத்தவும் செய்தது. பஞ்சாப் மாகாணத்தில் செல்வாக்குப் பெற்ற நவாஸ் ஷெரீபும், சிந்து மாகாணத்தில் செல்வாக்குடைய பேநசீரும் ஆரம்பத்திலேயே கைகோர்த்து செயல்பட்டு ஜனநாயகத்துக்குக் குரல் கொடுத்திருந்தால், நிச்சயமாக முஷாரபின் நிலைமை பலவீனப்பட்டிருக்கும்.ஆனால், அதை விட்டுவிட்டு, எதிரியின் எதிரி நண்பன் என்று முஷாரபுடன் பேநசீர் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதும், முஷாரப் அதிபராகத் தொடர்வது, தான் பிரதமராக வெற்றி பெறுவது என்று நடத்திய பேரமும்தான் இப்போது அவரது உயிருக்கே உலைவைக்கும் சம்பவத்துக்கு அச்சாரம் போட்டன. பேநசீர், முஷாரபுடன் ரகசிய உடன்பாடு செய்து கொண்டிருக்கிறார் என்று பாகிஸ்தானில் பலர் நம்புகிறார்கள் என்பதை மறுக்க முடியவில்லை.

சமீபகாலமாக, பாகிஸ்தானில் நடக்கும் அரசியல் கேலிக்கூத்துகள் தீவிரவாதிகளின் கரங்களைப் பலப்படுத்தி இருப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. முஷாரபை அமெரிக்காவின் கைப்பாவை என்று தீவிரவாதிகள் கருதுவதில் எப்படி தவறு காண முடியும்?

அமெரிக்க அதிகாரிகள் வெளிப்படுத்தி இருக்கும் தகவலின்படி, தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக பாகிஸ்தானுக்கு சுமார் ஐந்து பில்லியன் டாலர்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், காவல்துறையினரும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் உயிரிழந்திருக்கின்றனர். இவையெல்லாம், பாகிஸ்தானிய மக்கள் மத்தியில் முஷாரப் மீது எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருந்தால் ஆச்சரியமில்லை.

முஷாரபின் ஆதரவாளராகி விட்டார் என்கிற கோபம் தீவிரவாதிகளுக்கு ஏற்பட்டதன் விளைவு இந்தப் படுகொலையா அல்லது தனக்கு ஆதரவளிப்பதாகக் கூறி இப்போது தன்னையே எதிர்க்கத் துணிந்துவிட்டார் பேநசீர் என்கிற முஷாரபின் கோபத்தின் விளைவுதான் இந்தப் படுகொலையா என்பது தெரியவில்லை. பாகிஸ்தானில் நடக்கும் அரசியல் படுகொலைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்கப்படுவது கிடையாது!

அடுத்த இலக்கு, முஷாரபா அல்லது நவாஸ் ஷெரீபா? அதுவும் தெரியாது. ஒன்று தெளிவாகத் தெரிகிறது~பாகிஸ்தானில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது. இன்னொன்றும் தெரிகிறது~அதை அமெரிக்கா வேடிக்கை பார்த்து ரசிக்கிறது.

சிதைந்திருப்பது, மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல; முகம்மது அலி ஜின்னாவின் கனவுகளும்~அதுதான் வேதனை!


துணிச்சல் மிக்க பெனசிரின் சோக முடிவு!இஸ்லாமாபாத் :இஸ்லாமிய நாடுகளிலேயே மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குரிய பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பெனசிர் புட்டோ (54) நேற்று ராவல்பிண்டியில் படுகொலை செய்யப்பட்டார். அரசியலில், துணிவு மிக்கவராக விளங்கிய அவரது வாழ்க்கை சோகமாக முடிந்துவிட்டது.பெனசிரின் தந்தையும் பாகிஸ்தானின் அதிபருமான ஜுல்பிகார் அலி புட்டோவைப் போலவே இவரும் பாகிஸ்தான் அரசியலில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். ஜுல்பிகார் துõக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். பெனசிரின் இரு தம்பிகளும் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது, பெனசிர் தற்கொலை படையினரின் குண்டுவெடிப்புக்கு பலியானார்.1953 ஜூன் 21ம் தேதி கராச்சியில் பிறந்த பெனசிர் தொடக்க கல்வியை பாகிஸ்தானிலும், கல்லுõரிப்படிப்பை அமெரிக்காவின் ஹார்வர்டு (1969), பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு (1979) பல்கலைகழகங்களில் நிறைவு செய்தார். 1979ம் ஆண்டு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு அவர் தந்தை துõக்கிலிடப்பட்டார்.இதன் பின்னணியில் இருந்தவர் அன்றைய பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக்.கல்லுõரிப்படிப்பை நிறைவு செய்து விட்டு பாகிஸ்தான் திரும்பிய பெனசிருக்கு வீட்டுச்சிறை காத்திருந்தது.ஜியாவுக்கு எதிரான போராட்டங்களுக்கு அவர் துணிச்சலுடன் தலைமையேற்றார். அவரது தந்தை துõக்கிலிடப்படும் வரை அவரது சிறைக்காவல் தொடர்ந்தது. 1984ல் பிரிட்டன் செல்ல அனுமதிக்கப்பட்டார். பிரிட்டனிலிருந்த போதே பாகிஸ்தானின் மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். எனினும், அதிபர் ஜியா உல் ஹக்கின் மறைவுக்கு பின்னரே அவரால் பாகிஸ்தான் திரும்ப முடிந்தது.1987ல் ஆசிப் அலி ஜர்தாரியை திருமணம் செய்து கொண்டார். அதிபர் ஜியா உல் ஹக் விமான விபத்தில் கொல்லப்பட்ட பின்னர், நடந்த 1988 தேர்தலில் புட்டோவின் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது.35வது வயதில் பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமராக பெனசிர் பொறுப்பேற்றார்.

அப்போது ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக 20 மாதங்களிலேயே அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, நடந்த தேர்தலில் நவாஸ் ஷெரீப் வெற்றி பெற்றார். 1993ல் இரண்டாவது முறையாக பாகிஸ்தானின் பிரதமராக பெனசிர் பொறுப்பேற்றார். 1996ல் அவரது ஆட்சி மீண்டும் கலைக்கப்பட்டது. 1997ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளால் அவரது கணவர் சிறையிலடைக்கப்பட்டதால், 1998ம் ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறி பெனசிர் துபாய் சென்றார். இருமுறை பிரதமராக பெனசிர் பதவி வகித்துள்ளார்.

மக்களை கவர்ந்த அரசியல்வாதியாக திகழ்ந்த அவர், இரண்டாவது முறையாக ஊழல் குற்றச்சாட்டுகளால், அவர் செல்வாக்கில் கொஞ்சம் சரிந்தது. 1999ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பதால் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. என்றாலும், அப்போது பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மற்றும் நீதிபதி இடையே நடந்த உரையாடலின் ஆடியோ டேப், நவாஸ் கோர்ட்டை நிர்பந்தித்தார் என்பது தெரியவந்தது.1999ல் முஷாரப் அதிகாரத்தை கைப்பற்றியதால் பெனசிர், நவாஸ் ஷெரீப்பும் பாகிஸ்தானில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

முஷாரப்பின் ஆட்சியை தொடக்கம் முதலே கடுமையாக விமர்சித்து வந்தார் பெனசிர். 2004ல் பெனசிருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் கொலை, ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெனசிரின் கணவர் ஜர்தாரியை முஷாரப் விடுவித்தார். பாகிஸ்தானில் ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்பதில் பெனசிர் உறுதியாக இருந்தார். பெனசிர் முஷாரப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக இந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி, மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பினார். அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

அவர் நாடு திரும்பிய போது நடந்த பேரணியிலும் குண்டு வெடித்தது. அதில் அதிர்ஷ்டவசமாக தப்பிய அவர், நேற்று நடந்த பேரணியில் கொல்லப்பட்டுவிட்டார்.1972ம் ஆண்டு காஷ்மீர் பிரச்னையின் போது சிம்லா உடன்படிக்கைக்காக இந்தியா வந்த தந்தையுடன் முதன்முறையாக பெனசிர் இந்தியா வந்தார். அதன் பின் இருமுறை இந்தியா வந்திருக்கிறார்.2008 தேர்தலில் வென்று மீண்டும் அரியாசனம் ஏறிவிடலாம் என்ற அவரது கனவு தகர்ந்துவிட்டது. இன்னொரு அரசியல் படுகொலை நடந்துவிட்டது.

புட்டோ குடும்பத்தினரை துரத்தும் கொடூர மரணங்கள் :

பெனசிரையும் சேர்த்து, புட்டோ குடும்பத்தில் இதுவரை நான்கு பேர் கொடூரமாக மரணமடைந்துள்ளனர்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர், நேற்று நடந்த தற்கொலை படை தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அரசியலில் புகழ் பெற்ற புட்டோ குடும்பத்தினர் இயற்கைக்கு மாறான வகையில் மரணமடைவது வழக்கமாகி விட்டது. பெனசிரையும் சேர்த்து புட்டோ குடும்பத்தில் இதுவரை நான்கு பேர் கொடூரமாக மரணமடைந்துள்ளனர். முதலாவதாக பெனசிரின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ஜுல்பிகார் அலி புட்டோ, கடந்த 1979ல் துõக்கிலிடப்பட்டார்.

புட்டோ விஷயத்தில் கருணை காட்டும்படி உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை துõக்கி எறிந்துவிட்டு, அப்போதைய தற்காலிக அதிபர் ஜியா உல் ஹக், புட்டோவை துõக்கிலிட உத்தரவிட்டார். சர்வதேச நாடுகளை உலுக்கிய இச்சம்பவத்தின் நினைவுகள் நெஞ்சைவிட்டு நீங்கும் முன், புட்டோ குடும்பம் மீண்டும் ஒரு மரணத்தை எதிர்கொண்டது. புட்டோ இறந்து ஒரு ஆண்டுக்குள் பெனசிரின் சகோதரர் ஷா நவாஸ் மர்மமான முறையில் பிரான்சில் கொல்லப்பட்டார்.

மூன்றாவதாக கடந்த 1996ல் பெனசிரின் மற்றொரு சகோதரர் மிர் முர்தாஷா கொலை செய்யப்பட்டார். பெனசிர் பிரதமராக இருக்கும்போதே இந்த துயரம் நிகழ்ந்தது.தற்போது, பெனசிரும் கொல்லப்பட்டுள்ளார். புட்டோ குடும்பத்தினரை கொடூர மரணங்கள் தொடர்ந்து துரத்தி வருவது பாகிஸ்தான் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

கொலைக்கார பகுதி :

பெனசிர் கொல்லப்பட்ட பகுதி, பாகிஸ்தான் வரலாற்றில் கொலைக்கார பகுதியாகவே கருதப்படுகிறது.ராவல்பிண்டி நகரில் லியாகத் பாக் பூங்கா பகுதி அருகே தான் பெனசிர் நேற்று மாலை, சுடப்பட்டு இறந்தார். பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலி கான் இந்த இடத்தில் தான் 1951ம் ஆண்டு அக்டோபரில் சுடப்பட்டு இறந்தார். இந்த பூங்கா அருகில் தான், பெனசிரின் தந்தை ஜுல்பிகர் அலி புட்டோ துõக்கிலிடப்பட்டார்.


பேநசீர் படுகொலைராவல் பிண்டியில் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பேநசீர் புட்டோவும், இதர தொண்டர்களும் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் கதறி அழுகிறார் தொண்டர். (இடது) பேநசீர் புட்டோ.இஸ்லாமாபாத்,டிச.27: பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான பேநசீர் புட்டோ (54) ராவல்பிண்டியில் வியாழக்கிழமை மாலை சுட்டுக் கொல்லப்பட்டார். தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறிய அவரை, சதிகாரர்கள் மிக அருகிலிருந்து சுட்டுக் கொன்றனர்.பேநசீருக்குக் காவலாக வந்தவர்கள் தங்களைப் பிடித்துவிடக் கூடாது என்று அவர்களில் ஒருவர் மனித குண்டாகச் செயல்பட்டு இடுப்பில் கட்டிய வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.அதில் 20-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி இறந்தனர். மனித வெடிகுண்டாக வந்தவனின் தலை 70 மீட்டர் தொலைவுக்கும் அப்பால் போய் விழுந்தது.

ராவல்பிண்டியில் லியாகத் பாக் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேநசீர் பேசினார். பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறச் சென்றபோது, மர்ம நபர்கள் பேநசீரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர் குனிந்து கொண்டே ஓடிச் சென்று காரில் ஏற முயன்றார்.

அவரது கழுத்திலும் மார்பிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. உடனே ராவல்பிண்டி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். மாலை 6.46 மணிக்கு அவர் இறந்தார்.

கடந்த அக்டோபர் 19-ம் தேதி கராச்சியில் பேநசீர் புட்டோ ஊர்வலமாகச் சென்ற போது அவரது கார் அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது.

அந்தத் தாக்குதலில் அவர் தப்பிவிட்டார். அப்போது 140 பேர் பலியானார்கள்.

இரண்டாவது முறையாக ராவல்பிண்டியில் நடந்த தாக்குதலில் பேநசீர் பலியாகிவிட்டார். லியாகத் பாக் என்ற இடத்தில்தான் பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலிகான் 1951-ம் ஆண்டு அக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். அந்த இடத்துக்குச் சற்று தொலைவில் உள்ள இடத்தில்தான், பேநசீரின் தந்தை சுல்பிகர் அலி புட்டோ, தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.

பேநசீரின் உயிருக்கு மதப்பழமைவாதிகளால் அச்சுறுத்தல் இருந்த நிலையில்கூட அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க முஷாரப் மறுத்துவிட்டார்.

கூடுதலாக மெய்க் காவலர்களும், செல்போன் உள்ளிட்ட நவீன எலக்ட்ரானிக் சாதனங்களைச் செயலிழக்க வைக்கும் ஜாமர் போன்ற கருவிகளும் உடன் இருந்திருந்தால் பேநசீருக்கு இந்த ஆபத்து வந்திருக்காது என்று அவருடைய ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டினர்.

லண்டனிலிருந்து வந்தார்: பிரிட்டனில் பல ஆண்டுகள் தங்கியிருந்த பேநசீர், தேர்தலில் போட்டியிடுவதற்காக பாகிஸ்தானுக்கு வந்தார்.

அவர் வந்தபிறகு பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவியது. தீவிரவாதிகள் அவரைக் கொல்லப்போவதாக அடிக்கடி மிரட்டி வந்தனர். அவர்கள் சொன்னதை செய்து முடித்துவிட்டனர்.

கடைசி 46 நிமிடங்கள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ, ராவல் பிண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பேரணியில் பங்கேற்றுவிட்டு, மாலை 5.30 மணி அளவில் புறப்படத் தயாரானார்.

அவர் காரில் ஏறும் தறுவாயில் அவரை நோக்கி இருவர் ஏ.கே.47 ரகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பேநசீரின் தலை மற்றும் மார்புப் பகுதி கடுமையாகத் துளைக்கப்பட்டன.

இதனால் அவர் கீழே சரிந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். அவரை உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அறுவைச் சிகிச்சை அறைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் மரணமடைந்ததாக 6.16 மணிக்கு அறிவிக்கப்பட்டது.


பெனாசிர் கொலை: அல்-கொய்தா பொறுப்பேற்புஇஸ்லாமாபாத்: அல் கொய்தா அமைப்பை அழிக்க பெனாசிர் பூட்டோ முயன்றதால், நாங்கள்தான் அவரைக் கொன்றோம் என அல் கொய்தா அமைப்பு கூறியுள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ நேற்று ராவல்பிண்டி அருகே அடையாளம் தெரியாத இருவரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் அந்த இருவரும் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.பெனாசிருக்கு ஏற்கனவே பல்வேறு தீவிரவாத அமைப்புகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் இருந்ததால் யார் அவரைக் கொன்று என்பது தெரியாமல் இருந்தது.இந்த நிலையில் அல் கொய்தா அமைப்பு பெனாசிர் படுகொலைக்கு பொறுப்பேற்றுள்ளது.

இத்தாலியில் உள்ள ஒரு செய்தி நிறுவனத்தை இன்று தொடர்பு கொண்ட அல் கொய்தா அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அல் யாசின் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

பெனாசிர் படுகொலைக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், பெனாசிர் பூட்டோ அமெரிக்காவின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். மேலும் எங்களது அமைப்பையும் ஒழித்துக் கட்ட அவர் தீவிரமாக இருந்து வந்தார்.

இதனால்தான் அவரைக் கொல்ல நேரிட்டு விட்டது. அல் கொய்தா அமைப்பின் 2வது நிலை தலைவரான அல்ஜவாஹிரிதான் பெனாசிர் பூட்டோவைக் கொல்லும் முடிவை எடுத்தார். இதையடுத்து திட்டத்தை நிறைவேற்ற தற்கொலைப் படைகள் அமைக்கப்பட்டன. அதில் ஒரு பிரிவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றும் அல் யாசின் கூறியுள்ளார்.

தான் எங்கிருந்து பேசுகிறேன் என்பதை அல் யாசின் தெரிவிக்கவில்லை என்று இத்தாலிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எப்.பி.ஐ:

இதற்கிடையே பெனாசிரைக் கொல்ல அல் கொய்தாவின் தலைவரான ஒசாமா பின் லேடனும், அந்த அமைப்பின் நம்பர் டூ ஆன அய்மான் அல் ஜவாஹிரியும் கடந்த அக்டோபரிலேயே திட்டம் தீட்டியதாக அமெரிக்காவின் எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

இன்று உடல் அடக்கம்:

இதற்கிடையே, பெனாசிரின் உடல் இன்று அவரது சொந்த ஊரான சிந்து மாகாணம், லர்ஹானாவில் அடக்கம் செய்யப்படுகிறது. இதையொட்டி அங்கு அவரது கட்சியினர் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.

பாகிஸதானில் இன்று 2வது நாளாக பெரும்பாலான பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடருகின்றன. பல ஊர்களில் கலவரம் வெடித்துள்ளது.


பேநசிரின் உடலடக்கம்

படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர் பேநசிர் பூட்டோவுக்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

நாட்டின் தென்பகுதியிலுள்ள லார்கானாவில் பூட்டோவின் குடும்பக் கல்லறை தோட்டத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

பூட்டோவின் சடலப்பெட்டி புதைக்கும் இடத்திற்கு எடுத்துவரப்பட்டபோது, ஏராளமான ஆதரவாளர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

மறைந்த தமது தலைவியின் நினைவாக கோஷங்களை எழுப்பிய அவர்கள் பாகிஸ்தான் அதிபர் முஷாரஃபே, அவரின் மறைவுக்குக் காரணம் என்று பழிசுமத்தினர்.

மற்றொரு முன்னாள் பிரதமரான தனது தந்தை சுல்பிகர் அலி பூட்டோவின் சமாதிக்கு அருகில் பேநசிர் அடக்கம் செய்யப்பட்டார்.

நேற்று வியாழக்கிழமை ராவல்பிண்டியில் ஒரு பிரச்சார கூட்டத்தை முடித்துச் செல்கையில் பேநசிர் பூட்டோ கொல்லப்பட்டிருந்தார்.


பேநசிரின் கொலையை அடுத்து பெரும் வன்முறை

கார்களும், கடைகளும் அரசாங்கக் கட்டிடங்களும் எரிக்கப்பட்டன
கார்களும், கடைகளும் அரசாங்கக் கட்டிடங்களும் எரிக்கப்பட்டன

பேநசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் எங்கிலும் நடந்த வன்செயல்கள் மற்றும் மோதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அவரது முக்கிய ஆதரவுத் தளமான சிந்து மாகாணத்திலேயே பெரும்பாலானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

பூட்டோ அவர்களின் இறுதி ஊர்வலத்துக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமாகலாம் என்று அஞ்சப்படுவதாக, மாகாண உட்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

ஒழுங்கை நிலைநிறுத்த உதவுமாறு சிந்து மாகாண அரசாங்கம் இராணுவத்தைக் கோரியுள்ளது.

கடைகள், கார்கள் மற்றும் அரசாங்கக் கட்டிடங்கள் தீவைக்கப்பட்டதாக, கராச்சியில் உள்ள ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாடெங்கிலும் பல நகரங்கள் கிட்டத்தட்ட ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.


பாகிஸ்தானில் தேர்தல் நடக்குமா?

 

பாகிஸ்தானில் ஜனவரி எட்டாம் தேதி நாடாளுமன்றத் தேர்தல்களை தள்ளிப்போட வேண்டும் என்று இப்போதே தீர்மானிப்பது கடினம் என்று அதிபர் முஷாரஃப்பின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டும். அப்போதுதான் கருத்தொருமித்த முடிவொன்றை எடுக்க முடியும் என்று காபந்து பிரதமர் முகமது மியான் சூம்ரோ கோரியுள்ளார். கொல்லப்பட்ட பேநசிர் பூட்டோதான் முன்னணி எதிர்கட்சி வேட்பாளராக இருந்தவர்.

இனியும் தேர்தலில் போட்டியிடுவதா என்பது பற்றி பரிசீலித்துவருவதாக அவருடைய பாகிஸ்தான் மக்கள் கட்சி கூறுகிறது. பூட்டோவின் படுகொலை தொடர்பாக ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவரது முக்கிய அரசியல் போட்டியாளர் நவாஸ் ஷெரிஃப் கூறியுள்ளர்.

தனது கட்சி தேர்தல்களைப் புறக்கணிக்கும் என்று ஏற்கனவே கூறியிருந்த நவாஸ் ஷெரிஃப் தேர்தல் நடந்தாலும் அதில் எந்த நம்பகத் தன்மையும் இருக்காது என்று இன்று பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.



பாகிஸ்தான் எதிர்காலம்? – நிபுணர் கருத்து

 

பேநசிர் பூட்டோ அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எதிர்காலம் குறித்தும், எதிர்கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்தும், பாகிஸ்தானில் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடக்குமா என்பது குறித்தும் பிபிசியின் கராச்சி செய்தியாளர் இலியாஸ்கான் அவர்களின் ஆய்வுக்கண்ணோட்டத்துடன் கூடிய செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.

அடிப்படையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இடதுசாரி கொள்கைகளையுடைய ஒரு கட்சியாகவே பார்க்கப்படுவதாக கூறும் இலியாஸ்கான், அதேநேரம் புட்டோ குடுமபத்தின ருடையே பெயரும் பலவகையில் அந்தக் கட்சியோடு இணைத்துப் பார்க்கபடுவதாகவும் தெரிவிக்கிறார்.

பூட்டோ குடும்பத்தின் கடைசி முக்கிய உறுப்பினரும் பலியாகியுள்ள நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சி படிப்படியாக சிதறுண்டு போகக்கூடும் என்றும் அவர் தெரிவிக்கிறார். ஏனெனில், அந்தக் கட்சியில் பூட்டோவுக்கு அடுத்த நிலையிலுள்ள தலைவர்களிடம் பேநசிருக்கு உண்டான ஒரு ஆளுமையோ அல்லது பாகிஸ்தான் முழுவதும் மக்களால் ஏற்கப்படக்கூடிய ஒரு பொதுத்தன்மையோ இல்லை என்றும், பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களிலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்ற கடைசி அரசியல் தலைவர் பேநசிர் பூட்டோவாகத்தான் இருக்கக்கூடும் என்றும் இலியாஸ் கூறுகிறார்.

பேநசிரின் திடீர் மறைவு, பாகிஸ்தான் எதிர்கட்சிகள் மத்தியில் ஒருவித ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடும் என்றும் இலியாஸ்கான் கூறுகிறார். .

தற்போதைய நிலையில் பேநசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்கள், தேர்தல்கள் தள்ளிவைக்கப்படுவதைத்தான் விரும்புவார்கள் என்றும், தற்போதைய நிலையில் அநேகமாக எல்லா எதிர்கட்சிகளுமே அதையே விரும்புவதாகவும், இலியாஸ் தெரிவிக்கிறார்.

அதேநேரம், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃபை பொறுத்த வரையில், தேர்தல்களை விரைவில் நடத்தி ஒரு ஆட்சியை ஏற்படுத்தவே விரும்புவார் என்கிறார் இலியாஸ்கான். ஒரு தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதன் மூலம், தனது பிரச்சினைகளை குறைக்க அவர் முயலக்கூடும் என்றும் இல்யாஸ் கருத்து தெரிவித்தார்.

ஆனால், பாகிஸ்தானின் அட்வகேட் ஜெனரல் நாட்டில் தற்போது இருக்கும் சூழல் தேர்தல்கள் நடத்துவதற்கு ஏதுவாக இல்லை என ஏற்கெனெவே குறிப்புணர்த்தியிருப்பதையும் இலியாஸ்கான் சுட்டிக்காட்டுகிறார்.

————————————————————————————————————————————————————-
பேநசீருக்குப் பின் யார்?

இஸ்லாமாபாத், டிச. 28: பேநசீர் புட்டோவுக்குப் பின் பாகிஸ்தான் மக்கள் கட்சியை தலைமையேற்று வழிநடத்தி செல்வது யார் என்ற கேள்வி பூதாகாரமாக உருவெடுத்துள்ளது.

வியாழக்கிழமை மாலை தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பேநசீர் புட்டோ, பாகிஸ்தான் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்.

இரண்டு முறை பிரதமராக பதவி வகித்த அவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீவிரவாதிகள் குறுக்கே புகுந்து அவரது வாழ்க்கையில் விளையாடி விட்டனர்.

அவரது மறைவு சோகம் ஒருபுறமிருக்க, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அடுத்த தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது அக்கட்சியினருக்கு பெரும் சவாலாக உள்ளது.

பேநசீரின் மூன்று குழந்தைகளும் கட்சிப் பொறுப்பை ஏற்கும் வயதை எட்டவில்லை என்பதால் வருங்காலத்தில் மட்டுமே அவர்கள் அரசியலில் நுழைய வாய்ப்புள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

பேநசீரின் உடன் பிறந்த வாரிசான சனாம் புட்டோ அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார். எந்த சூழ்நிலையிலும் அவர் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில், பேநசீரின் வலது கரம் என்று அழைக்கப்பட்ட மக்தூம் அமின் ஃபாஹிம், பேநசீரின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரி, மூத்த வழக்கறிஞர் அஜாஸ் ஹசன் ஆகியோரின் பெயர்கள் கட்சித் தலைவர் பதவிக்கு அடிபடுகின்றன.

மக்தூம் அமின் ஃபாஹிமுக்கு கட்சித் தொண்டர்களிடையே செல்வாக்கு உள்ளது.

ஆனால் பேநசீர் போன்று அவர் கவர்ச்சிகரமான தலைவர் அல்ல. பேநசீரின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரி, பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கியவர் என்பதால் அவருக்கும் மக்கள் மத்தியில் நன்மதிப்பு இல்லை.

எனினும் பேநசீரின் கணவர் என்ற அடிப்படையில் அவர் கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றக்கூடும் என்று கூறப்படுகிறது. மூன்றாவதாக முன்நிறுத்தப்பட்டாலும் வழக்கறிஞர் அஜாஸ் ஹசனை புதிய தலைவராக தேர்ந்தெடுக்கலாம் என்று அனுபவம்வாய்ந்த கட்சித் தலைவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவராக உள்ள அஜாஸ் ஹசன் அதிபர் முஷாரபுக்கு எதிராக துணிச்சலாக செயல்பட்டவர்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இஃப்திகார் முகமது சௌத்ரி பதவி நீக்கம் செய்யப்பட்டபோது

அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார்.

பேநசீருடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த சில மாதங்களாக கட்சியில் ஓரங்கட்டப்பட்டார் அஜாஸ் ஹசன். எனினும் கட்சித் தொண்டர்கள் மத்தியிலும், படித்தவர்கள் மத்தியிலும் அவருக்கு செல்வாக்கு உள்ளது.

இதனால் அஜாஸ் ஹசன், அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு ஜனவரி 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், கட்சியின் புதிய தலைவர் யார் என்பது விரைவில் தெரிந்து விடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

————————————————————————————————————————————————————-
“பேநசீர் கொலையில் ஐஎஸ்ஐ-க்கு பங்கு’

லண்டன், டிச. 28: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ கொலை செய்யப்பட்டதில் பாகிஸ்தானின் உளவுப் படை மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு முக்கிய பங்குண்டு என்று பிரிட்டனிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவித்துள்ளன.

இஸ்லாமிய பழமைவாதிகள், பேநசீரை மேற்கத்திய கலாசாரத்தைக் கடைப்பிடிப்பவர் என்றும், அமெரிக்காவின் கைக்கூலியாக செயல்படுபவர் என்றும் கருதினர். இதனாலேயே அவரது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வந்தனர்.

1970-ம் ஆண்டுகளிலிருந்தே இத்தகைய இஸ்லாமிய பழமைவாத அமைப்புகளுடன் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது.

கடந்த அக்டோபர் மாதம் பேநசீர் நாடு திரும்பியபோதே, அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதற்குப் பிறகு அவருக்கு மிரட்டல் கடிதம் வந்ததாகவும் பேநசீர் குறிப்பிட்டுள்ளார். அதில் ஆட்டை வெட்டுவதைப் போல கொலை செய்யப் போவதாக மிரட்டியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வட மேற்கு மாகாணத்தில் இயங்கிவரும் பாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்களும் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளன. இதில் ஒன்று பைதுல்லா மெஹ்சூத் விடுத்ததாகும். மற்றொறு மிரட்டலை ஹாஜி ஓமர் விடுத்திருந்தார்.

இத்தகைய சூழலில் பேநசீருக்கு உரிய பாதுகாப்பை அளிக்க அரசு தவறிவிட்டது என்றும் அந்த பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.
————————————————————————————————————————————————————-

தேர்தலை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்கவுள்ளது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்த மாதம் நடக்கவிருந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்களை ஒத்தி வைக்க வேண்டுமா என்பது குறித்து ஆலோசிக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அவசர கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.

பெனசீர் பூட்டோ படுகொலையை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால், தேர்தல் ஏற்பாடுகளில் தடை ஏற்பட்டுள்ளதாகவும், ஒன்பது தேர்தல் அலுவலங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பெட்டிகள், வாக்காளர் பட்டியல் போன்றவை நாசமாக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

பெனசீர் பூட்டோவின் ஆதரவாளர்கள் ஈடுபட்ட வன்முறையில் கடந்த இரு தினங்களில் குறைந்தப்பட்சம் முப்பத்தெட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பை நிலை நிறுத்த வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதிபர் பர்வேஷ் முஷாராப் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, தேர்தலை புறக்கணிப்பது குறித்து பெனசீர் பூட்டோவின் அவர்களின் கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் நாளை ஆலோசிக்கவுள்ளனர்.

 


பெனசீர் பூட்டோ கொல்லப்பட்ட விதம் குறித்த அரசின் விளக்கத்தை பூட்டோ கட்சி நிராகரிப்பு

படுகொலை செய்யப்பட்ட பெனசீர் பூட்டோ
படுகொலை செய்யப்பட்ட பெனசீர் பூட்டோ

பெனசீர் பூட்டோ உயிரிழந்த விதம் குறித்து பாகிஸ்தான் அரசு தந்த விளக்கத்தை பூட்டோவின் கட்சியினர் நிராகரித்துள்ளனர். பூட்டோவை பாதுகாக்கத் தவறிய தமது பிழையை மூடிமறைக்க அரசாங்கம் செய்யும் கேலிக்கூத்தானது என பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் கூறியுள்ளனர்.

பூட்டோவின் தலை காரின் மேற்கூரையில் மோதியதில்தான் அவர் உயிரிழந்தார் என்று அரசாங்கம் கூறுகிறது ஆனால் பூட்டோவின் கழுத்தில் குண்டு துளைத்த காயத்தைப் நேரடியாகப் பார்த்ததாக அவரது கட்சி சார்பாக பேசவல்லவர் கூறியுள்ளார்.

தாக்குதலுக்கு இஸ்லாமியத் தீவிரவாதிகளே காரணம் என்று அரசாங்கம் வலியுறுத்துவதற்கு ஆதரவாக திட்டவட்டமான தடயம் எதுவும் இல்லை என்று கட்சிப் பிரமுகர்கள் கூறினர்.

பூட்டோவின் கொலையில் அரசாங்கத்துக்குப் பங்குள்ளது என்று குற்றம்சாட்டிய தாலிபான் ஆதரவுத் தலைவர் பைதுல்லா மெஹ்சூத் சார்பாகப் பேசவல்ல ஒருவர், தங்களுக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 


துபைக்குச் சென்றார் பேநசீர் மகன்

கராச்சி, ஜன. 1: படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவின் மகன் பிலாவல் பாகிஸ்தானிலிருந்து துபைக்கு செவ்வாய்க்கிழமை சென்றார்.

பேநசீர் கொல்லப்பட்டதை அடுத்து பிலாவல் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் சகோதரிகள் பக்தவார், ஆசிஃபா ஆகியோரும் துபைக்குச் சென்றனர்.

துபையில் சில நாள்கள் பிலாவல் தங்கியிருப்பார். பின்னர் அங்கிருந்து லண்டன் செல்கிறார். பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடருவதற்காக அவர் அங்கு செல்கிறார்.

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு 1999-ல் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் பேநசீர். அப்போதிலிருந்து அவர் தனது குடும்பத்தாருடன் துபையில் வசித்து வந்தார்.

பேநசீர் புட்டோ கடந்த வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பேநசீரின் கணவர் ஜர்தாரி மகன் பிலாவல் மற்றும் 2 மகள்களுடன் பாகிஸ்தானுக்குத் திரும்பினார்.

19-வயதாகும் பிலாவல் பேநசீரைத் தொடர்ந்து பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் படிப்பை முடிப்பதற்காக தற்போது பிரிட்டன் செல்கிறார்.

தலைவராக நியமிக்கப்பட்டாலும் இன்னும் 6 ஆண்டுகள் கழித்துத்தான் பிலாவல் தேர்தலில் போட்டியிட முடியும்.

தம்மை அடுத்து கணவர் ஜர்தாரிதான் கட்சியின் தலைவர் என்று பேநசீர் உயிலில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஜர்தாரி தமது மகன் பிலாவலை தலைவராக அறிவித்துவிட்டார். அவர் தற்போது இணைத் தலைவராக உள்ளார்.

பேநசீர் படுகொலையால் ஏற்பட்டுள்ள அனுதாப அலையை தங்கள் கட்சிக்குச் சாதகமாக்கிக் கொள்ளவே மகனை தலைமைப் பொறுப்புக்கு ஜர்தாரி நியமித்துள்ளார் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.
—————————————————————————————————————————————————————-

பேநசீர் படுகொலை: அமைச்சர் திடீர் பல்டி

இஸ்லாமாபாத், ஜன. 1: பேநசீர் புட்டோ படுகொலை குறித்து தவறான தகவல் தெரிவிக்கப்பட்டதற்கு அந்நாட்டு உள்துறை அமைச்சர் நவாஸ் கான் மன்னிப்பு கேட்டார் என்று செய்தி வெளியானது.

பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பில் “இதை மன்னித்து மறந்துவிடுங்கள்’ என்று கூறியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டது.

ஆனால் அமைச்சர் நவாஸ் கான் இதை மறுத்துள்ளார். பேநசீர் படுகொலை தொடர்பாக அரசின் நிலையில் எந்த மாற்றமுமில்லை. கார் மேற்கூரையில் இருந்த இரும்புக் கம்பியில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்ததாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. அதுதான் தற்போதும் அரசின் நிலையாக இருக்கிறது என்றார் அவர்.

பேநசீர் படுகொலை குறித்து உள்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் சீமா வெளியிட்ட செய்தியில், பயன்படுத்திய கடுமையான வார்த்தைகளுக்காகத்தான் மன்னிப்பு கேட்டேன் என்றும் அவர் கூறினார்.

—————————————————————————————————————————————————————-
பேநசீர் படுகொலை பற்றி தவறான தகவல்: பகிரங்க மன்னிப்பு கேட்டது பாகிஸ்தான் அரசு

இஸ்லாமாபாத், ஜன. 1: குண்டு வெடிப்பின்போது பேநசீர் புட்டோ காரின் மேல்பகுதியில் உள்ள இரும்புக் கம்பி அவரது தலையில் பலமாக மோதி, தலைக் காயத்தின் காரணமாகவே அவர் இறந்தார். அவர் மீது துப்பாக்கிக் குண்டடிக் காயம் இல்லை என்று பாகிஸ்தான் அரசு திரும்பத் திரும்பக் கூறி வந்தது.

ஆனால் தற்போது அந்த நிலையில் இருந்து “பல்டி’ அடித்துள்ளது. நாங்கள் அப்படிச் சொன்னது தவறு. அதற்காக மன்னித்துவிடுங்கள். அவசரத்தில் அதுபோன்ற தவறு நடந்துவிட்டது. அதை விட்டுவிடுங்கள் என்று உள்துறை அமைச்சர் ஹமீது நவாஸ் கான் கூறினார்.

உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர்தான் ஜாவித் இக்பால் சீமாதான் அதுபோன்று தவறான தகவலைக் கூறிவிட்டார் என்றும் அமைச்சர் சமாதானப் படுத்த முயன்றார்.

இஸ்லாமாபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பில் அரசுத் தரப்பில் இவ்வாறு பகிரங்க மன்னிப்பு கேட்கப்பட்டது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் மக்கள் கட்சித் தலைவருமான பேநசீர் புட்டோ கடந்த வியாழக்கிழமை ராவல்பிண்டியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததாக முதலில் செய்தி வெளியானது. ஆனால் பின்னர் அரசுத் தரப்பில் வேறு விதமான தகவல் கூறப்பட்டது. குண்டு வெடிப்பின்போது காரில் உள்ள இரும்புக் கம்பி பேநசீரின் தலையில் பலமாக மோதி மண்டை ஓடு உடைந்து இறந்தார் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவித் இக்பால் சீமா கூறினார்.

இதற்கு பாகிஸ்தானிலும் வெளிநாடுகளிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பேநசீரை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுடும் புகைப்படங்களும் விடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டன. மேலும் பேநசீரின் உறவினர்களும் மக்கள் கட்சித் தலைவர்களும் அரசு வெளியிட்ட செய்தி தவறானது என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். குண்டடிக் காயம் இருந்ததற்கான ஆதாரங்களை அவர்கள் வெளியிட்டனர்.

இதனால் பாகிஸ்தான் அரசுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர்களைக் கூட்டி அவர்கள் முன்னிலையில் உள்துறை அமைச்சர் ஹமீது நவாஸ்கான் அரசு சார்பில் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

உள்துறை அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்டாலும், பிரதமர் முகமது மியான் சூம்ரூ, உள்துறை அமைச்சர் செய்தித்தொடர்பாளர் சீமாவுக்கு ஆதரவாகப் பேசினார்.

படுகொலை குறித்து தன்னிடம் சொல்லப்பட்ட செய்தியைத்தான் சீமா வெளியிட்டார். இதில் வேறு காரணம் ஏதுமில்லை என்றார் பிரதமர்.

நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். உங்களுக்கு கிடைத்துள்ள எல்லா ஆதாரங்களையும் கொடுத்து உதவுங்கள் என்று சூம்ரூ கூறினார்.

ஆனால் அரசுத் தரப்பில் சொல்லப்பட்ட விளக்கத்தில் பத்திரிகை ஆசிரியர்கள் சமாதானம் அடையவில்லை. அவர்கள் பிரதமரையும் உள்துறை அமைச்சர் நவாஸ் கானையும் கேள்விக்கணைகளால் துளைத்தனர்.

பேநசீர் மரணம் குறித்து டாக்டர்கள் அளித்த மருத்துவ அறிக்கையில் பல சந்தேகங்களை எழுப்பினர். மேலும் டாக்டர்கள் அளித்த அறிக்கையில் தலைக்காயம் என்ன காரணத்தால் ஏற்பட்டது என்று கூறப்படவில்லை. அப்படியிருக்கையில் இரும்பு கம்பி மோதியது என்று சீமா எப்படிக் கூறினார் என்றும் கேட்டனர்.

பேநசீர் பயணம் செய்த கார் குண்டு துளைக்காத கார், துப்பாக்கி குண்டுபட்டோ அல்லது குண்டு வெடித்தாலோ அந்த கார் சேதம் அடையாது.

பேநசீர் காரின் உள்ளே இருக்கும் வரை அவருக்கு எந்த ஆபத்தும் நேராது. ஆனால் பேநசீர் காரின் மேல்பகுதியில் உள்ள திறந்தபகுதி வழியாக எட்டிப்பார்த்தபோதுதான் சுடப்பட்டிருக்கிறார் என்று பதிலளித்தார் அமைச்சர் நவாஸ்கான்.

விசாரணைக்காக வெளிநாட்டு உதவியைப் பெறுவீர்களா என்று கேட்டபோது, நமது புலனாய்வு அதிகாரிகள் திறமையானவர்கள். அவர் இதை திறம்படச் செய்வார்கள் என்று பிரதமர் சூம்ரூ கூறினார்.

துப்புக் கொடுத்தால் ரூ. 1 கோடி பரிசு: இதனிடையே பேநசீரை நோக்கிச் சுடும் பயங்கரவாதி குறித்து துப்புக் கொடுத்தால் ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படும் என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்படும்.

பேநசீரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இரு நபர்களின் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. துப்புக் கொடுப்பவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

—————————————————————————————————————————————————————-

—————————————————————————————————————————————————————-

Posted in Assassinations, Benazir, Bhutto, Bombs, Campaign, dead, Elections, Killed, Murder, Musaraf, Musaraph, Musharaf, Musharaff, Musharaph, Musharraf, Navaaz, Navas, Navaz, PAK, Pakistan, PM, Polls, PPP, Rawalpindi, Sharif, Suicide, Violence, Zulfikar, Zulfikar Ali Bhutto | 4 Comments »