Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Local Civic Body’ Category

District Collectors: Sales Tax vs Income Tax – Loopholes, Corruption, Kickbacks in Local Administration

Posted by Snapjudge மேல் மார்ச் 10, 2008

புன்னகைக்கும் பொய் ரசீதுகள்

இரா. சோமசுந்தரம்

சில நாள்களுக்கு முன் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகா அலுவலகம் சென்றபோது, அங்கே ஒரு வட்டாட்சியரிடம் ஒருவர் கடுமையான கோபத்தில் திட்டிக் கொண்டிருந்தார்.

ஆனால் அந்த வட்டாட்சியரோ, “”ஒண்ணும் ஆயிடாதுங்க” என்று சமாதானம் செய்து, பேசுபவரின் குரலை மட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

இருந்தும்கூட, அடக்கமுடியாத கோபமும் அச்சமுமாக தொடர்ந்து கொட்டித் தீர்த்த அந்த நபர், “”இன்னும் எந்தெந்த டிபார்ட்மென்ட்லிருந்து எனக்கு என்கொயரி வருமோ? என் ரசீது புஸ்தகத்தை கொடுங்கய்யா” என்று கேட்டும் கிடைக்காததால், மறுபடியும் திட்டிக்கொண்டே வெளியேறினார்.

சுமார் அரைமணி நேரத்துக்கு அந்த அலுவலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இச்சம்பவம் குறித்து விசாரித்ததில் தெரியவந்தது இதுதான்:

2006-ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது, இந்த தாலுகா அலுவலகம் சில படிவங்களை அச்சிட்டதாக சுமார் ரூ.80 ஆயிரத்துக்கு ரசீதுகள் செலவுக் கணக்கில் காட்டப்பட்டுள்ளன.

உள்ளாட்சித் தணிக்கைத் துறை அலுவலர்கள் இதனைத் தணிக்கை செய்தபோது, யாரோ ஒரு நேர்மையான அலுவலர், இந்த செலவுக்கு ஆட்சேபக் குறிப்பை எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் – “”எல்லா படிவங்களும் தேர்தல் ஆணையம் அச்சிட்டுத் தரும்போது, தாலுகா அளவில் எத்தகைய படிவம் அச்சிடப்பட்டது என்பதற்கான சான்றுகள் அளிக்கப்படவில்லை. வாக்காளர்களுக்கு அறிவுரை என்ற நோட்டீஸ் அச்சிடப்பட்டதாக கூறப்பட்டபோதிலும், அதற்கு ரூ.2000-க்கு மேல் செலவாகியிருக்க வாய்ப்பு இல்லை. ஆகவே இந்தச் செலவினத்தை ஆட்சேபிக்கிறேன்” என்று அந்தக் குறிப்பில் அவர் எழுதியுள்ளார்.

உள்ளாட்சித் தணிக்கைத் துறையின் அறிக்கைகள் வழக்கமாக உயர்அதிகாரிகளுக்கும் அரசுக்கும் அனுப்பப்படும் என்பதோடு, தலைமை கணக்கு தணிக்கை (ஏ.ஜி.) அலுவலகத்துக்கும் ஒரு நகல் அனுப்பப்பட வேண்டும்.

அப்படி அனுப்பப்பட்ட இந்த ஆட்சேபக் குறிப்பை கண்ட, தலைமை கணக்கு தணிக்கை அலுவலக அதிகாரி ஒருவர், “”சுமார் 15 நாள்களில் ரூ.80 ஆயிரத்துக்கு அச்சிடும் இத்தகைய அச்சகம், ஓராண்டுக்கு எவ்வளவு சம்பாதிக்கக்கூடும்! இந்த அச்சகம் முறையாக வருமான வரி செலுத்தியுள்ளதா என்பதை ஆய்வு செய்யலாம்” என்று மற்றொரு குறிப்புடன் வருமான வரித்துறைக்கு அனுப்பிவிட்டார்.

வருமான வரித்துறை இத்தனை விஷயங்களையும் குறிப்பிட்டு, மொத்தக் கணக்குகளுடன் நேரில் வரவும் என்று அச்சக உரிமையாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

வட்டாட்சியரிடம் கடும் கோபத்தில் கத்திக் கொண்டிருந்தவர் அச்சகத்தின் உரிமையாளர். அந்த அச்சகமோ அந்த நகரத்திலேயே மிகச் சிறிய அச்சு இயந்திரத்தை வைத்து, கல்யாணப் பத்திரிகை அச்சடித்து வருவாய் ஈட்டும் மிகச் சிறிய அச்சுக்கூடம். வருமானத்துக்கே திண்டாடும் அவருக்கு வருமான வரித்துறையின் நோட்டீஸ் வந்தால் எப்படி இருக்கும்?

இச்சம்பவம் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சியைத் தந்தது. நியாயம் செத்துப்போவதில்லை. உண்மைகள் கொஞ்ச காலம் உறங்கலாம். ஆனால் அது ஒரு நாள் விழிக்கவே செய்கிறது. “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகிறது’. ஆனால் அப்போதே, உடனே அல்ல. சரி, வாழ்க்கையொன்றும் திரைப்படம் அல்லவே, உச்சக் காட்சியில் நொடியில் தர்மம் வெற்றிபெற!

இது குறித்து மேலும் விசாரித்தபோது இன்னொரு தகவலும் தெரியவந்தது. இத்தகைய ரசீதுகள் தொடர்பான ஆட்சேபக் குறிப்புகளை, விற்பனை வரிப்பிரிவினர்தான் முதலில் கையில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் வருமான வரித்துறை கையில் எடுத்திருப்பதைப் பார்க்கும்போது, மாநில அரசு, விழிப்புடன் இல்லை என்றாகிறது.

இத்தகைய போலி ரசீதுகள் உள்ளாட்சி முழுவதிலும் அதிக அளவில் இருக்கின்றன. விற்பனை வரித் துறை அதிகாரிகள் விசாரித்தால், பல பூதங்கள் வெளிக்கிளம்பும் என்கிறார்கள்.

உள்ளாட்சித் துறைகளில் ரசீதுகள் மூலம் பல கோடி ரூபாய் திசைமாறுகிறது. இதற்கு அடிப்படையான காரணம் மாவட்ட ஆட்சியர் வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட விலைப்பட்டியல்தான்.
அரசுக்குத் தேவையான பொருள்கள் வாங்கும்போது கூட்டுறவுத் துறை நிறுவனங்கள் நீங்கலாக அங்கீகரிக்கப்பட்ட பிற நிறுவனங்கள் எவை, அவற்றில் எந்தெந்த பொருள்களுக்கு என்ன விலை என்று மாவட்ட ஆட்சியர் அங்கீகரிக்கும் இந்த விலைப்பட்டியலை ஆதாரமாக வைத்துத்தான் தணிக்கை செய்யப்படுகிறது.

நிறுவனம் பட்டியலில் உள்ளதா, விலை சரியா என்பதை மட்டுமே தணிக்கை அலுவலர்கள் சரிபார்க்க முடியும். இந்த நிறுவனம் வெறும் “”ரசீது நிறுவனமா” என்பதை ஆய்வு செய்ய இயலாது.

பொதுச்சந்தையில் ஒரு பொருள் விற்கப்படும் விலையைக் காட்டிலும் குறைந்தது 10 சதவீதம் கூடுதல் விலையே இந்த அங்கீகரிக்கப்பட்ட விலைப் பட்டியலில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதில் சந்தேகம் இருக்குமானால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரூ.10 செலுத்தி, அந்தப் பட்டியலை வாங்கிப் பார்த்தால் நிறுவனங்களும் விலைகளும் வெளிச்சமாகிவிடும் என்கிறார்கள்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத்தான் போறேன். வர்றீங்களா?

Posted in Administration, administrative units, Audit, Bribery, Bribes, Circle Inspector, Collections, Collector, Collectorate, Corruption, Departments, Dept, District, District Collectors, Elections, Govt, IAS, Income, Inefficiency, Inspection, Inspectors, Investigations, IT, kickbacks, local, Local Body, Local Body election, local body elections, Local Body Polls, Local Civic Body, Local Elections, Local Polls, Local self Governance, Loopholes, Notices, officers, Politics, Polls, revenue collection, Revenue District, Revenues, Reviews, sarkeel, Somasundaram, Somasundharam, Somasuntharam, ST, Tahsil, Taluk, Taluka, Taluq, Tax, Union, zilla collector | Leave a Comment »

Na Gunasekaran – Importance of Local Civic Body in the functioning of a Republic India

Posted by Snapjudge மேல் ஜனவரி 26, 2007

உள்ளாட்சி ஜனநாயகத்துக்கு தேவை, மக்கள் இயக்கமே!

ந. குணசேகரன்

உள்ளாட்சி மன்றங்களின் ஜனநாயக செயல்பாடுக்கு உயிர்நாடியாகத் திகழ்வது கிராமசபை கூட்டங்கள்.

குடியரசு தின நன்னாளன்று, ஊராட்சிகளை வழி நடத்த கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஓராண்டுக்கு குறைந்தது, நான்கு கூட்டங்கள் நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனினும், மக்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்துகிறார்களா என்பதுதான் இப்போதைய கேள்வி.

மத்திய அரசு வெளியிட்டுள்ள, “உள்ளாட்சி அமைப்புகள் பற்றிய இடைக்கால ஆய்வறிக்கை’ கீழ்வருமாறு கூறுகிறது. “”மக்கள் ஒன்றுகூடி தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளலாம் என்று, கற்பனை வடிவில் உள்ள கருத்து, நடைமுறை சாத்தியமா என்ற ஐயப்பாடு நீடிக்கிறது”.

அதாவது, இன்னமும் உள்ளாட்சி மன்றங்களின் பயன்பாடு குறித்து மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை. தங்களது தேவைகள், உரிமைகளைப் பெற, உள்ளாட்சி மன்றங்களைப் பயன்படுத்த வேண்டும் என்கிற ஜனநாயக உணர்வு இன்னமும் வளர்க்கப்படவில்லை. இது தமிழகத்துக்கும் பொருந்தும்.

இதில் ஒரு தவறான கருத்து நிலவுகிறது. மக்களுக்கு வாக்குரிமையை உறுதி செய்தால் போதும்; உள்ளாட்சி மன்றச் செயல்பாடு மேம்படும் எனக் கருதப்படுகிறது. வெறும் வாக்குரிமை மட்டும் உண்மையான ஜனநாயகத்துக்கு இட்டுச் செல்லாது.

ஏனெனில், இந்த வாக்குரிமை தேர்தல்களில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எத்தகைய கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

தேர்தலே நடைபெறாமல், எதிர்வேட்பாளர்கள் விலைக்கு வாங்கப்பட்டு “ஏகமனதாக’த் தேர்ந்தெடுக்கப்படுவதை அரசு தடுத்து நிறுத்தியபோதிலும், பல இடங்களில் பதவிகள் ஏலம் விடப்பட்டன.

எனினும் தேர்தலின்போது பின்பற்றப்பட்ட தகாத வழிமுறைகள், பணபலம் செய்த சாகசங்கள், சாதி, சமயங்களின் வழக்கமான பங்கு என பட்டியல் நீள்கிறது.

ஜனநாயகத்துக்கு ஒவ்வாத இந்த நடைமுறைகள் எதைக் காட்டுகின்றன? வாக்குரிமையை உறுதி செய்தால் மட்டும் போதாது; ஜனநாயக உணர்வுகளை மக்களிடையே வேரூன்றச் செய்ய வேண்டும். தன்னாட்சி என்னும் உள்ளாட்சி மன்றக் கோட்பாட்டின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில், உள்ளாட்சி மன்றச் செயல்பாடுகளில் உள்ள ஊனங்களைக் களைய மக்கள் திரண்டெழ வேண்டும். ஏராளமான மக்கள் நலத் திட்டங்களும், அவற்றுக்கான நிதியும் உள்ளாட்சி நிர்வாகத்தின்கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அரசு செலவினங்களில் பாதியளவு சமூக நலத்துறைக்குச் செலவிடப்படுகிறது.

இதில் கணிசமான நிதி உள்ளாட்சி மன்றங்களின் மூலம் செலவிடப்படுகிறது. ஆனால், பல்வகைத் திட்டங்களும் செயல்பாடுகளும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்துக்கான தேவைகளை நிறைவு செய்யவில்லை.

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய உள்ளாட்சி மன்றங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்தல் வேண்டும். ஆனால் நிதி ஒதுக்கப்பட்டு நிறைவேற்றப்படும் திட்டங்களின் பலன் மக்களைச் சென்றடைய, மக்களின் கண்காணிப்பும் விழிப்புணர்வும் முழுமையான பங்கேற்பும் அவசியம். திட்ட நடைமுறையில் நிலவும் நிர்வாகக் குறைபாடுகள், ஊழல், ஜனநாயக விரோத நடைமுறைகள் ஆகியவற்றை உள்ளூர் மக்கள் சுட்டிக் காட்ட வேண்டும். மக்களின் கண்காணிப்பு, கருத்துகூறல், தலையிடல் ஆகியவை உள்ளூர் மட்டத்தில் ஒரு பண்பாடாகவே வளர்க்கப்படல் வேண்டும்.

கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனும், தனது கிராம வளர்ச்சித் திட்டங்கள், வாழ்க்கை மேம்பாடு குறித்த அனைத்துப் பிரச்சினைகளிலும் உள்ளாட்சி மன்றங்களை ஈடுபடுத்தி தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

மக்கள் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்றால் மட்டும் போதாது. உள்ளூர் சார்ந்த அமைப்புகள், உள்ளூர் மட்டத்தில் ஏராளமான வளர்ச்சிக் கருத்தரங்குகளை நடத்துவதும், அதில் மக்கள் பங்கேற்பதும் வழக்கமான நிகழ்வாக மாற்றப்படல் வேண்டும்.

மக்கள் ஒவ்வொருவரும் தங்களை ஏதாவது ஓர் அமைப்பு சார்ந்தவராக மாற்றிக்கொண்டு செயல்படுவது நன்று. தொழில்சார்ந்த விவசாயிகள் அமைப்புகளிலோ, குடியிருப்பு சார்ந்த சமூக, பண்பாட்டு அமைப்புகளிலோ செயல்பட்டு தங்களது ஜனநாயகக் குரலை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வலுவான மக்கள் இயக்கம், தவறான வழிகளில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை நல்வழிப்படுத்தவும், மேலும் தவறுகள் நிகழாதிருக்கவும் உதவும் என்பதில் ஐயமில்லை.

உள்ளாட்சி மன்ற ஜனநாயகத்தில் மக்கள் பயிற்சி பெற அரசு நிர்வாகம் உதவ வேண்டும். சமூக ஆர்வலர்களும், தன்னார்வ சேவை அமைப்புகளும், உள்ளூர் சார்ந்த மக்கள் இயக்கம் உருவாக முயற்சிக்க வேண்டும்.

ஜனநாயக நெறிகளைக் கொண்ட ஒரு புதிய சமூகப் பண்பாடு கிராமத்திலிருந்து தொடங்கி, ஒவ்வொரு மக்கள் குடியிருப்பிலும் தழைக்க வேண்டும்.

அதிகாரப்பரவல் என்பது நிர்வாக ரீதியான சீர்திருத்தம் மட்டுமல்ல; கோடானுகோடி உழைக்கும் மக்கள் சார்ந்த அரசியல் மாற்றத்துக்கான திறவுகோலாக அமைய வேண்டும்.

(கட்டுரையாளர்: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்).

Posted in Communist, Constituion, CPI (M), Democracy, Local Civic Body, Marxist Communist, Municipality, Na Gunasekaran, Republic, Rural, Suburban, Tamil | Leave a Comment »