Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘War’ Category

March 30 – LTTE, Eezham, Sri Lanka: News & Updates (BBC Tamil)

Posted by Snapjudge மேல் மார்ச் 30, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 01 ஏப்ரல், 2008

மூதூர் தொண்டர் நிறுவன பணியாளர் கொலைகளை அரசாங்கப் படையினரே செய்ததாக மனித உரிமை அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது

இலங்கையில் சுனாமி நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டு தொண்டு நிறுவனமான அக்ஷன் பெஃய்ம் நிறுவனத்தின் உள்ளூர் பணியாளர்கள் 17 பேர் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் இலங்கை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உறுப்பினர்களின் பெயரை மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் இந்தச் சம்பவத்தை மறைக்க முயற்சிப்பதாகவும் சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

2006 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளுடனான மோதலை அடுத்து மூதூரை கைப்பற்றிய காலப்பகுதியில் நடந்த இந்த கொலைகள் தொடர்பில், இலங்கை ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு ஒன்றும் விசாரணைகளை நடத்தி வருகிறது.

கோபாலசிங்கம் சிறிதரன்
கோபாலசிங்கம் சிறிதரன்

ஆனால், இந்தப் புலன் விசாரணை நடவடிக்கைகளை அரசாங்கம் மறைக்க முயலுவதாகக் குற்றஞ்சாட்டி, இதனைக் கண்காணித்துவந்த, சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு ஒன்று தனது கண்காணிப்புப் பணியில் இருந்து விலகிச் சென்று விட்டது.

துணைப்படையைச் சேர்ந்த ஒரு ஊர்காவற்படைச் சிப்பாயும், இரண்டு பொலிஸ்காரர்களும் இந்தக்கொலைகளைச் செய்ததாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கூறி அவர்களது பெயர்களையும் வெளியிட்டுள்ளது.

இந்த கொலைச் சம்பவங்கள் குறித்த பொதுவிசாரணைகளில் இலங்கை ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு ஈடுபட்டுள்ளதால், மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், அந்த ஆணைக்குழுவின் முன்பாக தமது ஆதாரங்களை காண்பித்து தகவல்களை வெளியிட வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் அமைச்சரான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலளிக்குமுகமாக தமிழோசையிடம் பேசிய மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த கோபாலசிங்கம் சிறிதரன் அவர்கள், இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியை அந்த ஆணைக்குழுவின் முன்பாக ஆஜர் செய்யும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும், ஆனாலும், அந்தச் சாட்சியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மின்னேரியாவில் மின்னல் தாக்கியதில் நான்கு படையினர் மரணம் 59 பேர் காயம்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வட-மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள மின்னேரியா இராணுவத்தளத்திற்கு அண்மையில் அமைந்துள்ள இராணுவமுகாமொன்றினைச் சேர்ந்த ஒரு தொகுதி இராணுவ வீரர்கள் இன்று மாலை பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் மிகவும் சக்திவாய்ந்த மின்னல் ஒன்று தாக்கியதில் சுமார் நான்கு படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் சுமார் 59 படையினர் காயமடைந்து பொலன்நறுவை தளவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் பொலன்நறுவை மாவட்டம் மின்னேரியா கட்டுக்கெலிய இராணுவ முகாம் பகுதியில் வழமையான இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவ அணியினரே இந்த மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அதிதீவிர சத்திர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.

சிறையுடைப்பு முயற்சி

இதேவேளை இன்று மாலை இரத்தினபுரி குருவிட்ட பகுதியிலுள்ள சிறைச்சாலையை உடைத்துத் தப்பி வெளியேறமுயன்ற நான்கு சிறைக்கைதிகள் அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி மரணமாகியிருப்பதாக இரத்தினபுரி பொலிசார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தின் போது மேலும் மூன்று சிறைக்கைதிகள் காயமடைந்து அண்மையிலுள்ள வைத்தியசாலையில் பொலிஸ்காவலுடன் சிகிச்சைபெற்று வருவதாகவும், நிலைமை தற்போது பொலிசாரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் பொலிசார்
தெரிவித்திருக்கின்றனர்.


 

புதுப்பிக்கப்பட்ட நாள்: 31 மார்ச், 2008

இயக்கத்திலிருந்து சிறார் 22 பேரை விடுதலை செய்திருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்

இயக்கத்தில் இளம்பிராயத்தினர் என்பது ஒரு நெடுங்கால சர்ச்சை

விடுதலைப் புலிகள் தமது படையிலிருந்து 22 சிறாரை விடுதலை செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் படையில் நூற்றுக்கணக்கான சிறார் இன்னும் இருப்பதாக யுனிசெஃப் என்ற ஐ.நா.வின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் தெரிவித்திருப்பதையும் புலிகள் மறுத்துரைத்திருக்கின்றார்கள்.

தங்களால் விடுவிக்கப்பட்டுள்ள சிறார் தொடர்பான விபரங்களை யுனிசெஃப் நிறுவனம் உறுதிப்படுத்துவதற்குத் தவறியிருக்கின்றது என்றும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் ஊடாக வெளியிடப்பட்டுள்ள மின்னஞ்சல் வழியாக விடுதலைப் புலிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இருபது சிறாரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் சி.பி.ஏ. என்ற சிறுவர் பாதுகாப்புக்கான தமது அமைப்பின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

நூற்றுக்கணக்கான சிறார் தமது அமைப்பில் இன்னும் இருப்பதாகக் கூறிவரும் யுனிசெஃப் நிறுவனம், இந்தச் சிறார் தொடர்பான பிந்திய தகவல்களை உறுதிசெய்து தனது பட்டியலை மாற்றியமைக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகள் குற்றஞ்சுமத்தியிருக்கின்றார்கள்.

அதேவேளை, தமது அமைப்பில் உள்ள வேறு 41 சிறாருக்கு பெற்றோர்களோ அல்லது பாதுகாவலர்களோ இல்லாத காரணத்தினால் அவர்களை விடுதலை செய்யமுடியாத நிலை தோன்றியிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இது குறித்த மேலதிக விபரங்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை ஏ9 வீதியில் ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி சனிக்கிழமைகளிலும் திறந்திருக்கும்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்

ஓமந்தை சோதனைச் சாவடி

இலங்கையின் வடக்கே ஏ9 வீதியில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மதவாச்சி சோதனைச்சாவடியிலும், வவுனியா, ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியிலும் அரசாங்கத்தினால் மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளினால் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கும், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்திற்கும் இடையிலான பொதுமக்களின் போக்குவரத்து மற்றும் வர்த்தக தேவைகளுக்கான ட்ரக் வண்டிகளின் போக்குவரத்து என்பன தாமதமடைய நேரிட்டிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைக்குழு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருக்கின்றது.

இந்நிலையில் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று சனிக்கிழமைகளிலும் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான வாகனப் போக்குவரத்து நடைபெறுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினர் மேலதிக கடமையில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.

திங்கள் முதல் வெள்ளிவரை என வாரத்தில் 5 தினங்களே ஓமந்தை சோதனைச்சாவடி வழமையாகப் பொதுப் போக்குவரத்துக்காகத் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், சுகாதார அமைச்சினால் அனுப்பப்பட்டு வவுனியாவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள வன்னிப்பிரதேச அரச வைத்தியசாலைகளுக்கான மருந்துப் பொருட்களை வவுனியாவில் இருந்து ஓமந்தை ஊடாகக் கொண்டு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறுவதில் நிலவுகின்ற காலதாமதம் காரணமாக ஓமந்தை சோதனைச்சாவடி சனிக்கிழமைகளிலும் திறக்கப்படுவதனால் பெரிதாகப் பயனேதும் ஏற்படாது என்கிறார் கிளிநொச்சி மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி அவர்கள்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் நேயர்கள் கேட்கலாம்.


இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய இலங்கை வியாபாரிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

இலங்கையிலுள்ள அரிசி வர்த்தகர்கள், தற்போது நாட்டில் நிலவும் அரிசி தட்டுபாட்டை தீர்க்கும் முகமாகவும், வரவுள்ள தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஏற்படும் தேவைகளை சமாளிக்கும் முகமாகவும் இந்தியாவிலிருந்து ஒரு லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய உதவுமாறு இலங்கை ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்கள்.

இது தொடர்பில் தமிழோசையிடம் கருத்து தெரிவித்தார் கொழும்பு பழைய சோணகர் தெரு வர்த்தக சங்கத் தலைவர் பழனியாண்டி சுந்தரம்.

பொதுவாக தங்கள் நாட்டுக்குத் தேவையான அளவுக்கு அரிசியைத் தாங்களே உற்பத்தி செய்துக்கொள்ளக்கூடிய நிலைமை இருக்கும். ஆனால் இந்த முறை மழையில் ஏராளமான பயிர் நாசமடைந்துவிட்டதால், அரிசிக்கான தேவை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அது மட்டுமல்லாமல் இலங்கையிலுள்ள வியாபாரிகள் சோளம் மற்றும் சோயா போன்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் கோழித் தீவனம் மற்றும் கால்நடைத் தீவனங்களை இந்தியாவிலிருந்துதான் பெருமளவு இறக்குமதி செய்ததாகவும், ஆனால் அவற்றின் விலை இரட்டிப்பாகி அரிசி விலையைவிட உயர்ந்துவிட்டதால், கிட்டத்தட்ட 70,000 டன் அரிசி இவ்வாறு தீவனமாக உயயோகிக்கப்பட்டதும் அரிசி பற்றாக்குறைக்கு காரணம் எனவும் அவர் கூறுகிறார்.

சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஏழைகளுக்கு அரிசி வழங்கும் திட்டம் ஒன்றை ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்றும் அத்திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு உதவியாக இறக்குமதி செய்யப்படும் அரிசியின் மீதான தீர்வையையும் அவர் அகற்றியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.


கிழக்கு மாகாண சபைத் தேர்தல்: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை

காத்தான்குடியில் நடந்த கூட்டம்

இலங்கையில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி முஸ்லிம் வேட்பாளர்கள் குறித்து பள்ளிவாசல் சம்மேளனங்களுடன் பிரதேச ரீதியாக பேச்சுவார்ததை நடத்திவருகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பொதுச் செயலாளரான சுசில் பிரேம ஜயந்த், முஸ்லிம் அமைச்சர்கள், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் சகிதம் இப்பேச்சுவார்த்தையை பள்ளிவாசல் சம்மேளனங்களுடன் நடத்திவருகின்றார்.

திங்களன்று மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனத்துடன் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது முஸ்லிம் வேட்பாளர்களைத் தமது கட்சியில் இணைந்து போட்டியிட முன்வருமாறு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவரான எம்.டி.எம். ஹாலித் ஹாஜியார் கூறுகின்றார்.

தமிழர்களும் முஸ்லிம்களும் ஆளும் கட்சியில் இணைந்து போட்டியிடுவதன் மூலம் முதலமைச்சர் பதவியை சுழற்சி அடிப்படையில் பகிர்ந்துகொள்ள முடியும் என்று ஆளும் கட்சியினால் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தமது சம்மேளனமானது அரசியல் சார்பற்ற அமைப்பு என்பதை இக்குழுவினரிடம் தாம் தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.


திருகோணமலை இளம்பெண்ணுக்கு ‘சவுதியரேபியாவில் சித்ரவதை’

மத்திய கிழக்கில் சித்ரவதைக்கு உள்ளாகும் இலங்கைப் பெண்களின் எண்ணிக்கை அதிகம்

சவுதியரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைபார்த்துத் திரும்பியிருக்கும் திருகோணமலை கிண்ணியா மாஞ்சோலைப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், சவுதியில் தான் வேலைபார்த்த வீட்டின் உரிமையாளர் தன்னைக் கொடுமைப் படுத்தியதாக பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

நோய்வாய்ப்பட்ட நிலையில் திருகோணமலை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்ற நலினா உம்மாள் என்ற இளம்பெண், சவுதியரேபியாவிலும் இரண்டுவார காலம் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகக் கூறுகிறார்.

தான் வேலைக்குச் சேர்ந்து ஒரு சில நாட்களில், அந்த வீட்டில் சிறு குழந்தை ஒன்று இறந்துபோகவே. வீட்டின் முதலாளியம்மா, தன்னை தரித்திரம் பிடித்தவள் என்று கூறி பலவித சித்ரவதைக்கும் ஆளாக்கியதாக நலினா தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில், தன்னை குவைத் அனுப்புவதாகச் சொல்லி ஏஜெண்டுகள் சவுதிக்கு அனுப்பிவிட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

இது குறித்து திருகோணமலை செய்தியாளர் ரத்னலிங்கம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 30 மார்ச், 2008

இலங்கை கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு புதிய தமிழ் கூட்டணி

இலங்கையில் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணி ஆகிய தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து தமிழ் ஜனநாயக தேசிய முன்ணணியாக போட்டியிட தீர்மானித்துள்ளது.

தமிழ் ஜனநாயக தேசிய முன்ணணி புதிய அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்று ஞாயிற்றுகிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் போராட்டம் காரணமாகவே 13 வது அரசியல் யாப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டு மாகாண சபை முறை ஏற்படுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், முதலமைச்சராக தமிழரொருவர் வரவேண்டும் என்பதே நியாயமானது என்றும் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு மாகாணம் சட்ட ரீதியாகவே தற்போது பிரிக்கப்பட்டுள்ளதால் இத்தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்று கூறிய அவர் இணைப்பு பற்றி கிழக்கு மாகாண மக்களே தீர்மானிக்க வேண்டியவர்கள் என்றார்.

தமது தமிழ் ஜனநாயக தேசிய முன்னனியில் 5 இடது சாரி கட்சிகள் இணைந்து போட்டியிட முன் வந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்


இலங்கை படையினருக்கு கொசுக்கடியினால் தொற்றுநோய்கள்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் மன்னார், வவுனியா மற்றும் வெலிஓயா எனப்படும் மணலாறு போன்ற வன்னிப்போர்முனைப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட கொசுக்களின் பெருக்கத்தினால் சுமார் 200 துருப்பினர் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

டெங்கு, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட படையினருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு தற்போது நிலைமை முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு அங்கு ஏற்கனவே முகாமிட்டிருக்கும் படையினருக்கும் கொசு வலைகள் போன்றவை கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அப்பகுதிக்கு சென்ற அனுராதபுர வைத்தியசாலை உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள், இந்த தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் பிரிகேடியர் உதயநாணயக்கார கூறினார்.

 


இலங்கையில் விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது குறித்து ஐ நா கவலை

ஐக்கிய நாடுகள் சபை ஆசிய பசிபிக் பகுதிக்கான இந்த ஆண்டின் பொருளாதார சமூக ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ஆசிய பசிபிக் பகுதியில் பல நாடுகள் பொருளாதார நிலையில் வளர்ச்சியடைந்திருந்தாலும் விவசாயத்துறையில் பின்னடைவையே சந்தித்துள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக தெற்காசிய நாடுகளில் இந்த பின்னடைவு கூடுதலாக உள்ளது என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இலங்கையில் விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது பற்றி கவலை வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கை, அது தொடர்பில் கொள்கை வகுப்பாளர்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய தேவையையும் வலியுறுத்தியுள்ளது.

விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது பெருமளவில் வறுமைக்கு வழி செய்யும் எனச் சுட்டிக் காட்டியுள்ள அந்த அறிக்கை, இலங்கை அரசு விவசாயத்துறைக்கு புத்துயிரூட்ட வேண்டியதை வலியுறுத்துவதே கொள்கை வகுப்பாளர்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன்
இலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன்

இலங்கையில் விவசாயத்துறைக்கு பல சலுகைகளை வழங்கியும் கூட விவசாயத்துறையில் உற்பத்தி திறன் அதிகரிக்கவில்லை என சுட்டிக் காட்டுகிறார் இலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன். இதுதான் இலங்கை அரசுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் சவாலாக இருக்கிறது எனவும் அவர் கூறுகிறார்.

விவசாயத்துறையில் பொருளாதார சீர்திருத்தங்களும், விவசாய அணுகுமுறையில் எந்தவிதமான சீர்திருத்தங்களும் ஏற்படாமாலிருப்பததுதான் இதற்கான அடிப்படை காரணம் எனவும் அவர் கருத்து வெளியிடுகிறார். விவசாய நிலங்கள் சீர்திருத்திருத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று என்றும் கலாநிதி சர்வானந்தன் கூறுகிறார்.

அரசும் விவசாயிகளும் நெல் உற்பத்தியில்தான் கூடுதலான கவனம் செலுத்தி வருவதும், பணப்பயிர்களில் கவனம் செலுத்தாததும் விவசாயத்துறையின் தேக்கத்திற்கான காரணங்களாக கருதலாம் எனவும் அவர் தெரிவிக்கிறார். விவசாயிகளுக்கு தொடர்ந்து பயிர் செய்வதற்கு தேவையான நீர் ஆதாரங்களை ஏற்படுத்திக் கொடுத்தி, சந்தை வாய்ப்புகளை அதிகரித்து கொடுத்து, நில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதே உடனடி தேவை எனவும் கலாநிதி சர்வானந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.


இலங்கையின் மொனராகலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் சுட்டுக்கொலை

இலங்கை காவல்துறையினர்
இலங்கை காவல்துறையினர்

இலங்கையின் மொனராகலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் டாக்டர் அண்ணாமலை நாராயணன் முத்துலிங்கம் சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொனராகலை நகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணி முடித்து விட்டு அவர் திரும்பி கொண்டிருந்த வேளை, வேன் ஒன்றில் வந்த ஆயுததாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

இதற்கிடையே, இலங்கையின் கிழக்கு மாகாணசபை தேர்தலில், முஸ்லிம் கட்சிகள் வேறுபாடுகளை மறந்து முதலமைச்சர் பதவியை வெல்வதற்காக ஒன்றுபட்டு தனித்துவமான சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும், அல்லாத பட்சத்தில், மூதூர் பிரதேச முஸ்லிம்கள் தனித்துவமான முறையில் அரசுடன் இணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதாக இன்று சனிக்கிழமை மூதூர் ஆனைச்சேனை திடலில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதேச சபை உறுப்பினர் பி.கே கலில் தெரிவித்துள்ளார்.

 


நீரில் தத்தளிக்கும் விவசாயம் – பெட்டகம்

மழையால் விவசாயம் நாசம்
மழையால் விவசாயம் நாசம்

இலங்கையின் வட மாவட்டங்களிலுள்ள விவசாய நிலங்கள் அண்மையில் பெய்த அடைமழையில் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

வழமைக்குப் புறம்பாக அறுவடைக் காலத்தில் மழை பெய்து பெரும் நஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் ஆற்றாற்றுகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் மட்டும் 12,500 ஏக்கர் விவசாய நிலம் மழை நீரில் மூழ்கி நாசமடைந்ததாக அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகிறது.

வட இலங்கையில் மழைப் பாதிப்புகள் குறித்து வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் தொகுத்தளிக்கும் பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 28 மார்ச், 2008


மனம் மாறும் தற்கொலை குண்டுதாரிக்கு ரொக்கப் பரிசு – கொழும்பில் அனாமதேய சுவரொட்டி

‘தற்கொலை குண்டுதாரியாக நினைப்பவர்கள் மனதை மாற்றிக்கொண்டால் ரொக்கப் பணம் பரிசாகக் கிடைக்கும்’ என்று கூறும் புதிய சுவரொட்டிகள் இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஒட்டப்பட்டுள்ளமை குறித்து பொலிஸார் விசாரணை செய்துவருகிறார்கள்.

கொழும்பில் தமிழர்கள் அதிகம் வாழும் ஒரு பகுதியில் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்தச் சுவரொட்டிகளில் தற்கொலை குண்டுதாரி ஒருவரின் துண்டிக்கப்பட்டத் தலையைக் காட்டி, அதனருகே நீங்களும் வாழப் பிறந்தவர்தான்… ஏன் குண்டுதாரியாகி மடிய வேண்டும்? என்று எழுதப்பட்டுள்ளது.

கரும்புலிகள் என்று சொல்லப்படுகின்ற விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையில் சேர எண்ணம் கொண்டுள்ளவர்கள் தங்களது மனதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் 118 என்று துவங்கும் அரசாங்க தொலைபேசி இலக்கம் ஒன்றை அழைக்க வேண்டும் என்றும் அந்த சுவரொட்டி கூறுகிறது.

அப்படி மனதை மாற்றிக்கொள்பவர்களுக்கு உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க ஒரு கோடி ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தொலைபேசி இலக்கம் இந்தச் சுவரொட்டியில் இடம்பெற்றிருந்தாலும், இப்படி ஒரு திட்டத்தை அரசு அறிவிக்கவில்லை, இது ஏமாற்று வேலை என்று இராணுவம் கூறுகிறது.

இந்தச் சுவரொட்டிகள் குறித்து பொலிஸார் விசாரணை நடத்திவருவதாகக் கூறிய இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயகார, அந்தச் சுவரொட்டியிலுள்ள தொலைபேசி எண்ணை தான் அழைத்தபோது பதிலே இல்லை என்றும் இது ஒரு ஏமாற்று வேலை என்று தான் சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார்.


Posted in A9, BBC, Bombers, Child, Children, dead, Eelam, Eezham, Food, Grains, Hoax, ICRC, Imports, Kids, LTTE, Paddy, Prabakaran, Prabhakaran, rice, Soldiers, Sri lanka, Srilanka, Suicide, UN, War, Warriors | Leave a Comment »

Mar 25: Eezham, Sri Lanka, LTTE, India, Tamil Nadu, War, TR – Updates & News

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 27 மார்ச், 2008 

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்

தேர்தல் வருவதை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகண சபையின் முதலாவது தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வியாழனன்று ஆரம்பமானது.

மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலிருந்து 37 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக நடைபெறும் இத்தேர்தலுக்கான வேட்புமனுக்களை அடுத்த வியாழக்கிழமை வரை மாவட்ட செயலகங்களில் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இத்தேர்தலையொட்டி வீதித் தடைகளும் வீதிச் சோதனைகளும் அதிகரிக்கப்பட்டு பாதுகாப்பு உயர்த்தப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியாக தெரிவுசெய்யப்படும் 35 உறுப்பினர்களுடன் கூடுதல் வாக்குககளைப் பெறும் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு போனஸ் உறுப்பினர்கள் 2 பேர் என மொத்தம் 37 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபைக்கான தேர்தலின்போது, 9 லட்சத்து 82 ஆயிரத்து 728 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள்.

1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, 1988ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த வடக்கு-கிழக்கு மாகாண சபைக்கான தேர்தகள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து திருகோணமலையில் வரதராஜபெருமாள் அவர்கள், ஒருங்கிணைந்த அந்த மாகாண சபையின் முதலமைச்சராக பதவியேற்றார். அவர் தலைமையிலான மாகாணசபையின் ஆட்சிமன்றம் சுமார் ஒரு வருட காலம் செயல்பட்டது.

அதன் பிறகு இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக இந்த தேர்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் முடங்கிப்போயின.

இதனிடையே கடந்த ஆண்டு இலங்கையின் உச்சநீதிமன்றம் வடக்கையும் கிழக்கையும் தனித்தையாக பிரிக்கவேண்டும் என அளித்த தீர்ப்பை அடுத்து இவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாக பிரிக்கப்பட்டன.

இவ்வாறு பிரிக்கப்பட்டு மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாண சபைக்கான முதல் தேர்தல் வரும் மேமாதம் நடைபெறவுள்ளது. .

ஏற்கனவே மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள், மத்திய அரசுகளினால் படிப்படியாக பறிக்கப்பட்டுள்ளதாக கூறும் வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான எஸ்.எஸ்.எம் ஹனீபா, நடைபெறவிருக்கும் தேர்தல் முதலமைச்சர் தெரிவுக்கான ஒன்றாகவே தான் நோக்குவதாகக் குறிப்பிடுகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்படும் என மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையார் டி.கிருஷ்னானந்தலிங்கம் தெரிவிக்கிறார்.


‘பிரபாகரன்’ திரைப்பட இயக்குநர் இலங்கையில் உண்ணாவிரதம்

மருத்துவமனையில் இயக்குநர் பீரிஸ்

சென்னையில் ஜெமினி ஸ்டூடியோவுக்கு முன்பாக கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்களினால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இயக்குநர் துஷாரா பீரிஸ், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டிருப்பதோடு, இன்று காலை முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினையும் ஆரம்பித்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.

பிரபாகரன் என்ற தனது திரைப்படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் வேலைகள் சென்னை ஜெமினி ஸ்டூடியோவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும்போதே, சுமார் 200க்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் தனக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் தன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள இவர், தனது படச்சுருள்களும், பிரதிகளும் இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்தால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் இந்திய அரசும், இலங்கை அரசும் இதில் உடனடியாகத் தலையிட்டு தனது படச்சுருள்களை தனக்கு மீளப் பெற்றுத்தரும் வரை தனது சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.

தனது படம் தமிழர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தவில்லை என்றும், இது தமிழர் விரோதத் திரைப்படம் அல்ல என்றும் தெரிவித்த துஷாரா பீரிஸ், 30 வருடகால யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் சிங்கள, தமிழ் பாமர மக்களே என்பதனை எடுத்துக்காட்டுவதையே தனது நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் விளக்கமளித்தார்.

இதனிடையே சர்ச்சைகுரிய இந்தத் திரைப்படம் வியாழனன்று சென்னையில் தமிழ் ஆர்வலர்களுக்குத் திரையிடப்பட்டது. தமிழக திரைப்படத் துறையைச் சேர்ந்த பலருடன் இந்தப் படத்தை பார்த்த விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்ட கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


பிரிட்டனில் தஞ்சம்கோரும் அகதிகள் நிலை மோசம்: சுயாதீன ஆய்வு முடிவு

அகதிகள் நிறைய பேர் அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுகிறார்கள்

பிரிட்டனில் அகதிகளுக்கு தஞ்சம் வழங்கும் விவகாரம் பற்றி ஆராய்ச்சி செய்த சுயாதீன ஆணையம் ஒன்று, மனிதாபிமான மற்றும் நாகரீக வளர்ச்சியடைந்த ஒரு சமூகத்தில் இருக்கவேண்டிய தரத்திலல்லாமல் மோசமான நிலையை அகதிகள் எதிர்கொள்ள நேரிடுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

சர்வதேச அரங்கில் பிரிட்டனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விஷயம் இது. தஞ்சம் கோருவோர் தொடர்பான பிரிட்டனின் கொள்கைகள் குறித்து நடத்தப்பட்ட இந்த சுயாதீன ஆராய்ச்சியில் அதிர்ச்சிதரும் பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர்கள், நீதிபதிகள், ஆர்வலர்கள் என்று பல் வேறு தரப்பினரோடு. தஞ்சம் கோரிய அகதிகளும் இந்த ஆராய்ச்சியில் பங்குகொண்டனர். அவர்களது வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டு இணைய தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அறிக்கையின் முடிவுகளை பிரிட்டனின் எல்லைகள் மற்றும் குடிவரவுத் துறை நிராகரித்துள்ளது. உறுதியாகவும் அதே நேரம் மனிதாபிமானத்துடனும் தமது செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும். கவனமாகவும் பரிவுடனும் தாங்கள் அகதிகளைக் கையாளுவதாகவும் அத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 

புதுப்பிக்கப்பட்ட நாள்: 25 மார்ச், 2008


கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி முடிவு

அஸாத் சாலி

எதிர்வரும் மாதங்களில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட உத்தேசிக்கப்பட்டிருக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் வியாழனன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அதில் போட்டியிடப்போவதாக முடிவு செய்திருக்கின்றது.

இம்மாத முற்பகுதியில், கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒன்பது உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் பாதுகாப்பு காரணங்களைக் கூறி அதில் பங்குபெற ஐக்கிய தேசியக் கட்சி மறுத்திருந்தது.

ஆனால் தற்போது அங்கு இடம்பெற உத்தேசிக்கப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தலில் பங்கேற்பதற்கு கட்சி எடுத்துள்ள முடிவு குறித்து தமிழோசையிடம் கருத்துவெளியிட்ட அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினரும், கொழும்பு மாநகரசபை முன்னாள் மேயருமான அஸாத் சாலி, தமிழ்பேசும் மக்களின் நாளாந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு முயற்சியாகவே கட்சி இதில் போட்டியிடுவதாகத் தெரிவித்தார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுவதற்கு தமது கட்சி முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்த அஸாத் சாலி, இந்தத் தேர்தலின் தானும் ஒரு முக்கிய வேட்பாளராக போட்டியிடப்போவதாகத் கூறினார்.


வவுனியா தூப்பாக்கிசூட்டில் சிவிலியன்கள் பலி

இலங்கையின் வடக்கே வவுனியா ஓமந்தை இராணுவ முன்னரங்க பகுதியை நோக்கி விடுதலைப் புலிகளின் பகுதியில் இருந்து தப்பிவந்ததாகத் தெரிவிக்கப்படும் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மீது இருதரப்பிலிருந்தும் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 3 பேர் காயமடைந்துள்ளனர், 5 பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில் மரணமடைந்தவர்களில் ஒருவர் தமிழர் என்றும் ஏனைய அனைவரும் சிங்களவர்கள் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்களை இராணுவத்தினர் உலங்கு வானூர்தி மூலமாக உடனடியாக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்திருப்பதாகவும் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட 5 பேரும் இராணுவ பொலிசாரின் விசாரணைகளின்போது தெரிவித்துள்ள தகவல்களின்படி, தாங்கள் மொத்தம் 12 பேர் என்றும், தங்களை 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி, 3 வள்ளங்களில் விடுதலைப் புலிகள் கடத்திச் சென்று முரசுமோட்டை – வள்ளிபுனம் பகுதியில் தங்களைத் தடுத்து வைத்திருந்ததாகக் கூறியிருக்கின்றனர்.

அங்கிருந்து 4 தினங்களுக்கு முன்னர் தப்பிவந்து, புதனன்று பகல் ஓமந்தை முன்னரங்கப் பகுதியில் இராணுவ பகுதியை நோக்கி வந்தபோது தங்களைக் கண்ட விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும், எனினும் தாங்கள் தொடர்ந்து ஓடியபோது இராணுவத்தினரும் தங்களை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில் மன்னார் ஆலங்குளம் பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் முன்னரங்கத் தளங்கள் மீதும், கிளிநொச்சி விசுவமடுக்குளம் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் வள்ளங்கள் கட்டும் தளத்தின் மீதும் விமானப்படைக்குச் சொந்தமான தாக்குதல் உலங்கு வானூர்திகளும், தாக்குதல் விமானங்களும் குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தி அவற்றை அழித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.


மட்டக்களப்பில் அதிரடிப் படையினர் மீது கிளேமோர் தாக்குதல்

மருத்துவமனையில் காயம்பட்ட பெண்ணொருவர்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் புதன்கிழமை காலை இடம்பெற்ற கிளேமோர் குண்டு தாக்குதல் சம்பவத்தில் 2 பொலிசார் கொல்லப்பட்டுள்ளார்கள்.

சம்பவத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த 4 பேர், 3 சிவிலியன்கள் என 7 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த பிரதேசத்திற்கு சென்றிருந்த ஜப்பானிய உதவி நிறுவனக் குழுவொன்றின் வாகனத் தொடரனிக்கு பாதுகாப்பின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொலிசாரே இதில் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட வாகனத் தொடரனியும் வழமை போல் காலை நேர வீதிக் கண்கானிப்பில் ஈடுபடும் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரும் வாழைக்காலை சந்தியை அடைந்தபோது, தூரத்திலிருந்து இந்த கிளேமோர் குண்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்திற்கு விடுதலைப் புலிகளே பொறுப்பு என பாதுகாப்பு தரப்பினரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


பிரபாகரன் பற்றிய சிங்களப் படம் இயக்கியவர் சென்னையில் ‘தாக்கப்பட்டார்’

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்த படத்தை இயக்கிய இலங்கை திரைப்பட இயக்குநர் துஷாரா பீரிஸ் அவர்கள், தமிழகத் தலைகர் சென்னையில் செவ்வாய்க்கிழமை மாலை தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த இயக்குநருக்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவத்தில் ஈடுபட்ட திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் நிறுவனர் சுப.வீரபாண்டியன் அவர்கள், இந்த சம்பவத்தின்போது என்ன நடந்தது என்பது குறித்தும், தங்களின் எதிர்ப்பு ஏன் என்பது குறித்தும் தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.

—————————————————————————————————————–

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து ராஜேந்தர் தனது தமிழக அரச பதவியை இராஜினாமா செய்தார்

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தான் குரல் கொடுப்பதற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, தான் வகித்துவந்த தமிழக அரசின் சிறு சேமிப்புத் துறையின் துணைத் தலைவர் பதவியை திரைப்பட இயக்குனரும், லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான டி. ராஜேந்தர் இராஜினாமா செய்துள்ளார்.

இலங்கையில் இருக்கும் தமிழர்களைக் கொன்றுகுவிக்க இலங்கை இராணுவத்துக்கு, இந்தியா கைகொடுப்பதாகக் குற்றஞ்சாட்டும் ராஜேந்தர் அவர்கள், இலங்கை இராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்களையும், உபகரணங்களையும் வழங்குவதையும், பயிற்சிகளை வழங்குவதையும் தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் கூறினார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை இலங்கைத் தமிழர் ஒருவர்தான் கொலை செய்தார் என்பதற்காக, ஒட்டுமொத்த இலங்கைத் தமிழினத்தையும் புறக்கணிப்பது நியாயமல்ல என்றும் ராஜேந்தர் கூறினார்.

தான் எந்த விதமான வன்முறை இயக்கத்துக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை என்றும் இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளுக்காகவே தான் குரல் கொடுப்பதாகவும் அவர் கூறினார்.

விடுதலைப்புலிகள் என்பது ஒரு அங்கம் என்றும், அது மாத்திரமே இலங்கையில் இருக்கக்கூடிய ஒட்டு மொத்தத் தமிழினம் என்று முத்திரை குத்தக் கூடாது என்றும் ராஜேந்தர் தெரிவித்தார்.

அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கடற்புலிகளின் படகை மூழ்கடித்ததாக இலங்கை கடற்படை கூறுகிறது

கடற்புலிகள்
கடற்புலிகள்

இலங்கையின் வடகிழக்குக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் படகுத் தொகுதி ஒன்றுடன் தாம் சண்டையிட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

கடற்புலிகளின் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ள போதிலும், அதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டதா என்று அது எதுவும் கூறவில்லை.

கடற்படைப்படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டு, அதில் பத்து சிப்பாய்கள் கொல்லப்பட்டதை அடுத்த சில தினங்களில் இந்த மோதல் நடந்துள்ளது.

அந்தக் கடற்படைப்படகை தமது தற்கொலைக் கடற்கரும்புலிகள் தாக்கியதாக விடுதலைப்புலிகள் முன்னர் கூறியிருந்தனர்.

ஆனால், அந்தப் படகு கடற்கண்ணி ஒன்றால் மூழ்கடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்திருந்தது.


Posted in Eelam, Eezham, India, LTTE, Rajeev, Rajendar, Rajiv, Sri lanka, Srilanka, Tamil Nadu, TamilNadu, TR, War | 1 Comment »

Mar 7: Eezham, Sri Lanka, LTTE, Elections, Batticaloa, War, Murders – Updates & News

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 18 மார்ச், 2008 

மட்டக்களப்பு உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் ஜனாதிபதி ராஜபக்ஷ முன் பதவியேற்பு

மட்டக்களப்பு நகர மேயராக பதவியேற்ற சிவகீதா
மட்டக்களப்பு நகர மேயராக பதவியேற்ற சிவகீதா

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மாநகரசபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்காக நடாத்தப்பட்ட தேர்தலில் வெற்றிபெற்று தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள், அரச அதிகாரிகள், அரசியல் தலைவர்களெனப் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

இந்த வைபவத்தின்போது உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்த வெற்றிக்கு அடுத்தப்படியாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெற்றி அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளதோடு, விரைவில் வடபகுதி மக்களுக்கும் ஜனநாயக உரிமை, அபிவிருத்தி மற்றும் சுதந்திரம் போன்றவற்றைப் பெற்றுக்கொடுக்க தனது அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நகர மேயராகப் பதவியேற்ற சிவகீதா பிரபாகரன் அவர்கள் கிழக்கில் இடம்பெற்ற தேர்தலின்போது கிடைக்கப்பெற்ற வெற்றியானது, தமது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்குக் கிடைத்த வெற்றி என்பதனைவிட, கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களுக்குக் கிடைத்த ஒட்டுமொத்த வெற்றி என்று கூறினார்.

அத்துடன் இந்த வெற்றியினூடாக அப்பகுதி மக்களுக்குச் சேவையாற்றுவதற்கு தமக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய இந்த வைபவத்தின்போது, இந்த ஒன்பது உள்ளூராட்சிசபைகளின் உடனடி நடவடிக்கைத் தேவைகளுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலா சுமார் 25 லட்சம் ரூபாயையும், ஒவ்வொரு உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கும், அவர்கள் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக தலா ஒரு லட்சம் ரூபாய்களும் சன்மானமாக வழங்கியதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 14 வருடங்களின் பின்னர் இடம்பெற்ற இந்த ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், எட்டு உள்ளூராட்சி சபைகளில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பும், மட்டக்களப்பு மாநகர சபையை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டு முன்னணியும் வெற்றிபெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


மீண்டும் சிவில் நிர்வாகத்திடம் மட்டக்களப்பு மாநகரசபைக் கட்டிடம்

மட்டக்களப்பு மாநகர சபைக் கட்டிடம்
மட்டக்களப்பு மாநகர சபைக் கட்டிடம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்ததையடுத்து, கடந்த 17 வருடங்களுக்கு மேலாக பாதுகாப்பு தரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வந்த மட்டக்களப்பு மாநகர சபைக் கட்டிடத் தொகுதி இன்று மாநகர சபை நிர்வாகத்திடம் அதிகாரபூர்வமாக மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது.

மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை 1990இல் முறிவடைந்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மாநகர சபைக் கட்டிடத்தொகுதி உட்பட சில கட்டிடங்கள் இராணுவத் தேவைகளுக்காக எடுக்கப்பட்டிருந்தன.

இதன் காரணமாக மாநகரசபை, பிரதேச செயலக கட்டிடத் தொகுதிக்கு மாற்றப்பட்டு தொடர்ந்தும் அக் கட்டிடத்திலேயே தற்காலிகமாக இயங்கி வந்தது.

1990 ம் ஆண்டு முதல் 3 வது படைப்பிரிவு இராணுவ தலைமையகத்தின் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இக் கட்டிடத் தொகுதி கடந்த ஆண்டு முற்பகுதியில் விசேட அதிரடிப் படையினரால் பொறுப்பேற்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.


மன்னாரில் தொடரும் கடும் மோதல்கள்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில், இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெற்ற, விடுதலைப் புலிகளின் இருவேறு தாக்குதல் சம்பவங்களில், இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 13 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மன்னார் அருவியாற்றுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டிருந்த படையினர் மீது, இன்று காலை 7.10 மணியளவில் விடுதலைப் புலிகள் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

இந்தச் சம்பவத்தில் இரண்டு இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டிருக்கின்றது.

இதேவேளை, மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் இராணுவ முன்னரங்க பிரதேசத்தில் நேற்றிரவு 8 மணிமுதல் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின்போது, விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை தாக்குதலில் 11 இராணுவத்தினர் காயமடைந்ததாக மன்னாரிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த படையினர் மன்னார் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக அநுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது பெய்து வரும் அடை மழைக்கு மத்தியிலும் இந்த பகுதியில் நேற்றிரவு முதல் இன்று காலை வரையில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாகவும் மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

—————————————————————————————————————-

புதுப்பிக்கப்பட்ட நாள்: 17 மார்ச், 2008

இலங்கை அரச தொலைக்காட்சி ஊழியர்கள் தாக்கப்பட்ட சர்ச்சை: தொழிற்சங்கத்தினரைச் சந்தித்துள்ளார் ஜனாதிபதி

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் சிலர் அண்மையில் தாக்கப்பட்டது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து அந்நிறுவனத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இலங்கை ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது சர்ச்சைக்கு சுமூகமான தீர்வு ஒன்று காணப்பட்டிருப்பதாகவும், தேசிய தொலைக்காட்சி சேவை முழுமையாக இயல்புநிலைக்கு திரும்பிக்கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் சந்திரபால லியனகே தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதாகவும், தேசியத் தொலைக்காட்சி சேவைகளை பாதிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளுக்கு துணைபோக வேண்டாம் என்று ஊழியர் சங்கத்தினரிடம் அவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் சந்திரபால லியனகே கூறினார்.

திங்கட்கிழமை முன்னதாக, தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் பலர் தத்தமது கருமங்களிற்காக நிறுவனக் கட்டிடத் தொகுதிக்குள் செல்லமுடியாதவாறு பொலிசாரினால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், தங்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அணித்தாகவுள்ள இந்தக் கட்டிடத்தொகுதியினைச் சுற்றி வழமைக்கும் அதிகமான பொலிசாரும், இராணுவத்தினரும், கலகம் அடக்கும் பொலிசாரும் நிறுத்தப்பட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தது.


போக்குவரத்துத் தடைகளால் பாதிப்பு: வவுனியா வழக்கறிஞர்கள் புகார்

ஏ9 வீதியில் போக்குவரத்துத் தடைகள் நீடிக்கின்றன

இலங்கையின் வடக்கே ஏ9 வீதியின் மதவாச்சி சோதனைச் சாவடியில் தொடரும் வாகனப் போக்குவரத்துத் தடை காரணமாக வவுனியா மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சட்டத்தரணிகள் இயல்பாக வெளி மாவட்ட நீதிமன்றங்களுக்குச் சென்றுவர முடியாதிருப்பதாகவும் வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தப் பிரயாணக் கஷ்டங்கள் குறித்து உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சட்டத்தரணிகள் தமது வாகனங்களில் மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகப் பிரயாணம் செய்வதற்கு உரிய அனுமதியைப் பெற்றுத் தருமாறு பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அவர்களிடம் கடிதம் மூலமாகக் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக வாகனப் போக்குவரத்துக்கான தடை தொடர்வதனால், முக்கிய வழக்கு விசாரணைகளுக்காக கொழும்பில் இருந்து சிரேஷ்ட சட்டத்தரணிகள் வவுனியாவுக்கு வருவதற்குத் தயக்கம் காட்டுவதாகவும், இதனால் பல வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டு நீதிமன்றச் செயற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், வவுனியா சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் முருகேசு சிற்றம்பலம் தெரிவித்தார்.

இவை குறித்த மேலதிக விபரங்களை வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் வழங்கக் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 16 மார்ச், 2008

அனுரா பண்டாரநாயக காலமானார்

இலங்கையின் மிக முக்கிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் அனுரா

இலங்கையின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவருமான அனுரா பண்டாரநாயக ஞாயிறன்று கொழும்பில் காலமானார்.

அண்மைக் காலமாக நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த இவருக்கு வயது 59.

1977ஆம் ஆண்டு ஜூலை மாதம் நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்த இவர், பலதடவை பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துவந்துள்ளார்.

1983-89 காலப் பகுதியில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய இவர், 2000ஆம் ஆண்டில் நாடாளுமன்ற சபாநாயகராகவும் பதவி வகித்தார்.

இவரது தந்தை எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக, தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோர் இலங்கையின் பிரதமர்களாக விளங்கினர். பின்னர் இவரது சகோதரியான சந்திரிகா குமாரதுங்க சுமார் 11 வருடங்கள் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக விளங்கினார். ஆனாலும் பண்டாரநாயக குடும்பத்தின் ஒரேயொரு புதல்வரான அனுர பண்டாரநாயகவின் அரசியல் வாழ்க்கை என்பது பலத்த சிக்கல்கள் நிறைந்ததாகவே இருந்துவந்தது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.


மன்னார் மோதல் விபரங்கள்

இலங்கையின் வடக்கே இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மன்னார் நகரிலும், வவுனியாவிலும் ஞாயிறன்று நடத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் இராணுவச் சிப்பாய் ஒருவரும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் கொல்லப்பட்டனர். இதில் இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

மன்னார் புறநகர்ப் பகுதியில், தலைமன்னார் வீதியில் கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஞாயிறு காலை சுட்டுக் கொல்லப்பட்டதாக மன்னார் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் பிஸ்டல் குழுவைச் சேர்ந்தவர்கள், இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தைச் செய்துள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

இதேவேளை, வவுனியா, தாண்டிக்குளம் – கல்மடு வீதியில், மருக்காரம்பலை பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில், இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 3 படையினர் காயமடைந்ததாக இராணுவத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 14 மார்ச், 2008

இலங்கையில் ஐரோப்பிய வெளியுறவு அதிகாரிகள்

மனோ கணேசன்

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு இயக்குநரக அதிகாரிகள் ஹெலென் கேம்பெல் அவர்களும், ஆண்ட்ரியா நிகோலஜ் அவர்களும் தற்போது இலங்கை வந்திருக்கிறர்கள்.

மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் இவர்களை சந்தித்து பேசியிருகிறார்.

இந்த சந்திப்பின்போது விவாதிக்கபட்ட விடயங்கள் குறித்து தமிழோசையிடம் பேசிய மனோ கணேசன், இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஆராய்வதற்காக இந்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் வந்திருப்பதாகக் கூறினார்.

இலங்கையின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்த விசாரணைகளைக் கண்காணித்துவந்த சுயாதீன மாண்புமிக்கோர் குழுவினர் தமது பணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் நிலையில், அதற்கு மாற்றாக, தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவை ஏற்பாடு செய்து விசாரணைகளைக் கண்காணிக்கச் செய்வது குறித்து இலங்கை அரசு மாற்று யோசனை தெரிவித்திருப்பது பற்றி ஐரோப்பிய அதிகாரிகள் தன்னிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதாகவும் மனோ கணேசன் கூறினார்.

அவர் தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கை மனித உரிமை நிலவரம்: அமெரிக்கக் குற்றச்சாட்டு அவதூறு என்கிறது இலங்கை அரசு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ராபர்ட் ஒ பிளேக்

இலங்கையின் மனித உரிமைகள் சூழலை விமர்சிப்பதிருப்பதன் மூலம், அமெரிக்கா, விடுதலைப் புலிகளுக்கு ஒரு வாழ்க்கைச் சந்தர்ப்பத்தை கொடுக்கிறது என்று இலங்கை அரசு குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்க அரசுத்துறையின் வருடாந்திர அறிக்கையில், இலங்கையின் மனித உரிமை நிலவரம் 2007ல் மோசமடைந்துள்ளது என்று கூறப்பட்டிருப்பது இலங்கை அமைச்சர்களுக்கு எரிச்சலைத் தந்துள்ளது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அடங்கிய அவதூறு, குத்தல் பேச்சு, மிகையான விமர்சனம் என்றெல்லாம் அமெரிக்க அரசுத்துறையின் அறிக்கையை இலங்கை வருணித்துள்ளது.

அரசாங்க தரப்பினர் செய்த சட்டவிரோத ஆட்கொலைகள், அவர்களின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் சிறார்களைப் படையில் சேர்த்தது போன்றவற்றை அமெரிக்க அரசுத்துறை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசின் பதிலடிக்குப் பின்னரும், தமது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே தமது நிலைப்பாடு, அதிலிருந்து தாங்கள் பின்வாங்கவில்லை என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.


திருகோணமலை மாணவர்கள் கொலை: மாணவரின் தந்தை வீடியோ வாக்குமூலம்

2006ல் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டது தொடர்பான மரண விசாரணையில், ராஜீஹர் என்ற மாணவனின் தந்தையான டாக்டர் மனோகரன் வீடியோ மூலம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அந்தத் தமிழ் மாணவர்களை விடுதலைப் புலிகள் என்று சந்தேகித்து இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர் என்று அரசாங்க அமைச்சர் ஒருவர் தன்னிடம் ஒப்புக்கொண்டதாக, இலங்கையை விட்டு தற்போது வெளியேறிவிட்ட மனோகரன் கூறியுள்ளார்.

கொழும்பில் வீடு தருகிறோம், இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று தன்னிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திருகோணமலை சம்பவம் மற்றும் பிற பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளைக் கண்காணித்துவரும் சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு, அரசாங்கம் விசாரணைகளில் தலையிடுவதாகவும், சாட்சிகளைப் பாதுகாக்கத் தவறுவதாகவும் கூறி, தமது பணியிலிருந்து விலகுகின்றனர்.


அடைமழை அல்லலில் மன்னார் அகதிகள்

 

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் வழமைக்கு மாறாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்த குடும்பங்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அங்குள்ள தொண்டு நிறுவனப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள முசலி பிரதேசத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவம் கைப்பற்றியதை அடுத்து, அந்தப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 800 குடும்பங்கள் நானாட்டான் பகுதியில் பல இடங்களில் கொட்டில்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அத்துடன், மன்னார் மாவட்டத்தின் விடுதலைப் புலிகளுடைய பிரதேசத்தில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு அண்மையில் அவ்வப்போது வந்துள்ள சுமார் 18 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேர் களிமோட்டை என்னுமிடத்தில் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் குடும்பங்கள் தாழ் நிலப்பகுதிகளில் தங்க வைக்கப்பட்டிருப்பதனால், இவர்கள் தங்கியுள்ள கொட்டில்கள், கூடாரங்களுக்குள் மழைநீர் புகுந்திருப்பதாகவும், இதன் காரணமாக அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரச அதிகாரிகள் தொண்டு நிறுவனங்கள இவர்களுக்குத் தேவையான அவசர நிவாரண உணவு உதவிகளை வழங்கிவருகின்ற போதிலும், இவர்களுக்கான மாற்று இருப்பிட வசதிகளைச் செய்வதில் சிக்கல்கள் எழுந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இடம்பெயர்ந்தவர்கள் அவர்கள் விரும்பிய இடத்தில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற சர்வதேச முறைமை இங்கு கைக்கொள்ளப்படாததன் காரணமாக சர்வதேச மற்றும் உள்ளுர் தொண்டு நிறுவனங்கள் இவர்களுக்கான மாற்று இருப்பிட வசதிகளைச் செய்ய முடியாதிருப்பதாக மன்னார் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் தெரிவிக்கின்றது.

இது குறித்து அந்த ஒன்றியத்தின் தலைவர் அருட்தந்தை விக்டர் சோசை தெரிவிக்கும் மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

—————————————————————————————————————————————————————-

புதுப்பிக்கப்பட்ட நாள்: 14 மார்ச், 2008

இலங்கை மனித உரிமைகள் நிலவரம்: அமெரிக்க கருத்துக்கு இலங்கை அதிருப்தி

இலங்கை மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் அண்மையில் அமெரிக்க அரசுத்துறையால் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்து இலங்கை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ராபர்ட் ஓ பிளேக் அவர்களை, இன்று அழைத்த இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அவர்கள், அவரிடம் இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்த விடயம் குறித்து அமெரிக்கத் தூதுவருடன் தான் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தமிழோசைக்கு கூறிய இலங்கை வெளியுறவு அமைச்சர், அமெரிக்க அரசுத்துறையின் அந்த அறிக்கை, ஆதரம் எதுவும் அற்றது என்றும், இராணுவ ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் தடுமாறிப்போயிருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு, அது புத்துயிர் அளிப்பதாக அமைந்து விட்டது என்றும் அமெரிக்கத் தூதுவரிடம் தான் குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த விவகாரம் குறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், இலங்கை வெளியுறவு அமைச்சருடனான, அமெரிக்கத் தூதுவரின் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், ஆயினும் தமது நிலைப்பாட்டில் அமெரிக்க அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


இலங்கை கிழக்கு மாகாண சபை தேர்தல்: வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ளன

 

இலங்கையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இலங்கை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

இது தொடர்பில் மார்ச் மாதம் 13ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள சிறப்பு வர்த்தமானி அறிவித்தலில், மார்ச் மாதம் திகதி 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த கிழக்கு மாகாணத்துக்கான தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று அந்த அறிவித்தலில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

1987ஆம் ஆண்டின் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து உருவாக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணம், கடந்த வருடம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றை அடுத்து இரண்டு மாகாணங்களாக பிரிக்கப்பட்டது.

அவற்றில் கிழக்கு மாகாணத்துக்கு தற்போது தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் வேட்பு மனுக்களைக் கோரியுள்ளது.

இந்தத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, கடந்த வெள்ளிக்கிழமை, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தேர்தல் ஆணையர் தயானந்த திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்ததாக முன்னர் செய்திகள் வந்திருந்தன.

கிழக்கு மாகாண சபைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 14 உறுப்பினர்களும், அம்பாறை மாவட்டத்தில் இருந்து 17 உறுப்பினர்களும் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 13 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.

இந்தத் தேர்தல் அறிவிப்புக் குறித்து சில தமிழ் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை நேயர்கள் செய்திரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை அரச தொலைக்காட்சி உதவிப் பணிப்பாளர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

தாக்கப்பட்ட அனுரசிறி ஹெட்டிகே

இலங்கை அரச தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினி நிறுவனத்தின் ஊழியர்கள் அண்மைக்காலமாகத் தாக்கப்பட்டுவருவதன் தொடர்ச்சியாக அதன் பிரதிப்பணிப்பாளரொருவர் இன்று காலை அலுவலகத்திற்கு செல்லும் வழியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் மிகமோசமாகத் தாக்கப்பட்டு, காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் வழங்கல்சேவையின் உதவிப் பணிப்பாளர் அனுரசிறி ஹெட்டிகே வெள்ளிக்கிழமை காலை கொட்டிகாவத்த பகுதியில் அலுவலகம் செல்வதற்காக பஸ் நிலையத்தில் நின்றிருந்த சமயம் மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் இவரை இரும்பு கம்பிகளாலும், கூரிய ஆயுதங்களினாலும் தாக்கியிருக்கின்றனர்.

இவர் கழுத்துப் பகுதியில் கூரிய ஆயுதங்களினால் ஏற்பட்ட வெட்டுக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் மீது உடனடியாக விசாரணை நடாத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷ, பாதுகாப்பு ஆமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

——————————————————————————————————————————————————–

புதுப்பிக்கப்பட்ட நாள்: 11 மார்ச், 2008

மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தலை எதிர்த்து ஐ.தே.க ஆர்ப்பாட்டம்

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகரசபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்காக இவ்வார முற்பகுதியில் நடைபெற்று முடிந்த தேர்தல்களை எதிர்த்து இலங்கையின் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு, இராஜகிரிய தேர்தல் செயலகத்துக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றினை நடத்தியிருக்கிறது.

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தினை நிலைநாட்டும் அரசு கொள்கையின் ஒரு அங்கமாக நடத்தப்பட்ட தேர்தலை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உதவிய சகலருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் என்றாலும், இந்தத் தேர்தல் முடிவுகளை முற்றாகப் புறக்கணிக்கும்படி கோரி ஜக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஆணையாளரிடம் புதன்கிழமை மனு சமர்ப்பித்திருக்கிறது.

பிரதான எதிர்க்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும், முக்கியஸ்தர்களும், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் கலந்துகொண்டு இந்தத் தேர்தலுக்கு எதிராகவும், மஹிந்த ராகபக்ஷ அரசிற்கு எதிராகவும் கோஷங்களை இட்டனர்.

இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் பின்னர் அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் கருத்துவெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் திரு. ரணில் விக்கிரமசிங்க, மட்டக்களப்பில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்தல்கள் ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டியதோடு, படையினரால் ஒரு ஆயுதக் குழுவிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அரசு இன்னொரு ஆயுதக் குழுவிடம் கையளிக்க முற்படுவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்கு கிழக்கில் இடம்பெற்ற தேர்தலின் முக்கியத்துவம், அதன் வெற்றி குறித்து வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தனது அமைச்சில் விரிவாக விளக்கமளித்திருக்கிறார்.

இதன் பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர், இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மிகவும் வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறது என்றும், எதிர்வரும் மே மாதம் அளவில் கிழக்கு மாகாணத்துக்கான மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசு சித்தமாக இருப்பதாகவும் தெரிவித்ததோடு, அரசின் இந்தத் திட்டம் குறித்து தேர்தல் ஆணையாளரிடம் தெரிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.


மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் வெறும் கண்துடைப்பு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

 

கிழக்கு மாகாணத்தில், மீள்குடியேற்றம் போன்ற மக்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில் அங்கு உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தி, அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்ற விளைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் வாக்களிக்குமாறு மக்கள் மிரட்டப்பட்டதாகக் கூறிய அவர், மக்கள் சுயாதீனமாக வாக்களித்திருந்தால் 10 வீதமான வாக்குகளே பதிவாகியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகமான வகையில் அனைத்துக் கட்சிகளும் போட்டியிடக் கூடிய ஒரு சூழ்நிலை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்திருந்தால், அங்கு தேர்தல் நிலைமைகள் வேறுவிதமாக இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை மாகாணசபைகளை 1987 ஆம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டதாகக் கூறும் ஜெயானந்தமூர்த்தி, ஆகவே, கிழக்கு மாகாணத்துக்கான மாகாண சபைத் தேர்தல்கள் நடக்கும் பட்சத்தில், அது குறித்து மக்களின் கருத்துக்களை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் தமது கட்சி முடிவுகளை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

இவை குறித்த அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


வட இலங்கை மோதல்கள்: செவ்வாய்க்கிழமை அன்று 28 புலிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கிறது இராணுவம்

 

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள மடுக்கோவிலுக்கு வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் 3 தளங்கள் மீது புதன்கிழமை காலை விமானப் படைக்குச் சொந்தமான தாக்குதல் விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.

இந்தத் தாக்குதலின்போது, அந்த முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் இந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மன்னார் போர்முனைகளில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் வவுனியா, மன்னார், வெலிஓயா, மற்றும் முகமாலை முன்னரங்கப் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதல்களில் 28 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது. இந்தத் தாக்குதல்கள் குறித்தும் விடுதலைப் புலிகள் தரப்பில் தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

மன்னார் மாவட்டத்தில் இன்று பெய்த கடும் மழை காரணமாக இடம்பெயர்ந்து முருங்கன் பிரதேசத்தில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியிருப்பதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கூடாரங்கள் அமைத்து தங்கவைக்கப்பட்டவர்கள் மழை நீர் கூடாரங்களுக்குள் புகுந்திருப்பதனால் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 11 மார்ச், 2008


கதிர்காமர் கொலை வழக்கில் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் மீது குற்றச்சாட்டு

கொலை செய்யப்பட்ட கதிர்காமர்

இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேர் மீதான குற்றப்பத்திரங்களை, சட்ட மா அதிபர் இன்று தாக்கல் செய்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அந்த அமைப்பின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், சார்ள்ஸ் மாஸ்ட்டர் ஆகியோர் உட்பட 6 பேரின் பெயர்கள், குற்றப்பத்திரத்தில் குற்றவாளிகளாகக் கூறப்பட்டுள்ளன.

2005 ஆம் ஆண்டின் ஜனவரி 5 ஆம் திகதிக்கும், 12 திகதிக்கும் இடையில், கொலைச் சதித்திட்டங்களைத் தீட்டியமை, கொலை செய்த விஜயன் என்பவருக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றங்களும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

சாட்சிகளின் பாதுகாப்புக்காக அவர்கள் ரகசியமாகவே நீதிமன்றத்தில் சாட்சி வழங்குவார்கள் என்றும் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் பெரும் வெற்றி

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 வருடங்களின் பின்பு நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு கைப்பற்றியுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஏனைய 8 பிரதேச சபைகளையும் தமது கட்சிப்பட்டியலின் மூலம் கைப்பற்றியுள்ளனர்.

101 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்ற இந்தத் தேர்தலின், முடிவுகளின்படி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது கட்சி சார்பில் 61 உறுப்பினர்களையும், மக்கள் சுதந்திர முன்னனியின் வெற்றிலைச் சின்னத்தில் கீழ் 11 உறுப்பினர்களையும் பெற்றுள்ளனர்.

பிரச்சாரச் சுவரொட்டிகள்
பிரச்சாரச் சுவரொட்டிகள்

ஈ.பி.டி.பி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் ( பத்மநாபா அணி) ஆகிய தமிழ் கட்சிகளைக் கொண்ட சுயேச்சைக் குழுக்கள் இத் தேர்தலில் 17 உறுப்பினர்களை வென்றிருக்கின்றன.

அதேவேளை ஈழவர் ஜனநாயக முன்னனி மட்டக்களப்பு மாநகர சபையில் மட்டும் ஒரு அங்கத்துவத்தை பெற்றுள்ளது.

இதனைத் தவிர ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 7 பேரும், ஐக்கிய மக்கள் முன்னணி சார்பில் மாநகரசபையைத் தவிர மேலும் 4 பேரும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த தேர்தல் முடிவுகள் குறித்த அரசியல் கட்சிகளின் கருத்துக்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இந்தியா மீது விடுதலைப்புலிகள் கண்டனம்

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன்
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன்

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களை வரவேற்று உயர் கௌரவத்தை வழங்கியமைக்காக இந்திய அரசாங்கத்தை விடுதலைப் புலிகள் அறிக்கையொன்றின் மூலம் கண்டித்திருக்கின்றார்கள்.

போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறியுள்ள இலங்கை அரசு, தமிழர் பிரதேசங்களில் போரை விரிவாக்கியுள்ள இன்றைய காலச் சூழலில், தமிழின அழிப்பிற்குத் தலைமையேற்றுள்ள இராணுவத்தின் தளபதிக்கு இந்திய அரசு வழங்கியுள்ள கௌரவம் ஈழத்தமிழர்களை வேதனைக்குள்ளாக்கியிருப்பதாகவும், இந்தச் செயலுக்காக இந்திய அரசை விடுதலைப் புலிகள் வன்மையாகக் கண்டிப்பதாகவும், விடுதலைப் புலிகள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

இராணுவ வழியில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முற்பட்டுள்ளமைக்காகவும், அதிகரித்துள்ள மனித உரிமை மீறல்களுக்காகவும், அனைத்துலக நாடுகள் வெளிப்படுத்திவரும் கண்டனங்கள் மற்றும் எச்சரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, அதிக அளவிலான ஆட்கடத்தல்கள், படுகொலைகள், இனரீதியான கைதுகள் என்பவற்றை அரச படைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள்.

இவற்றை மூடிமறைத்து, நாட்டில் யுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துவரும் இலங்கை அரசாங்கத்திற்கான உதவிகளை பல ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தமது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்கள்.

பெண் விடுதலைப்புலிகள்
பெண் விடுதலைப்புலிகள்

இந்தச் சூழலில் உண்மையான நிலைமையை இந்திய அரசாங்கம் புரிந்து கொண்டிருந்தாலும், தமிழர் பிரச்சினைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வு காணவேண்டும் என கூறிக்கொண்டு, அதற்கு மாறாக, இராணுவ ரீதியாக இலங்கை அரசாங்கத்திற்கு நம்பிக்கையூட்டும் இந்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஈழத்தமிழர்களை பாரிய இன அழிப்பிற்குள் தள்ளிவிடும் என்று இந்திய அரசுக்குச் சுட்டிக்காட்டுவதாகவும் விடுதலைப் புலிகள் தமது அறிக்கையில் கூறியிருக்கின்றார்கள்.

இந்த நிலைமையைத் தமிழ் நாட்டு மக்கள் புரிந்து கொண்டு இந்திய அரசிற்குத் தமது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் எனவும் விடுதலைப் புலிகள் கோரியிருக்கின்றார்கள்.

நோர்வேயின் அமைதிவழி முயற்சியிலிருந்தும், போரிநிறுத்தத்திலிருந்தும் இன்னும் விலகவில்லை என தெரிவித்துள்ள விடுதலைப்புலிகள் நோர்வே அரசின் தலைமையில் மேற்கொள்ளப்படும் சமாதான முயற்சிகளில் பங்கேற்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு

முன்னைய பணிப்புறக்கணிப்பு ஒன்றின் போது வவுனியா மருத்துவமனை ஊழியர்கள்
முன்னைய பணிப்புறக்கணிப்பு ஒன்றின் போது வவுனியா மருத்துவமனை ஊழியர்கள்( ஆவணப்படம்)

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாண மாவட்டங்களைச் சேர்ந்த அரச மருத்துவர்கள் இன்று மேற்கொண்ட ஒருநாள் அடையாள பணிப் புறக்கணிப்பு காரணமாக அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியசாலைகளின் பணிகள் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கென அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுவந்த விசேட வருடாந்த இடமாற்றப் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த பணிபுறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளராகிய டாக்டர் எஸ்.சிவப்பிரியன் தெரிவிக்கின்றார்.

இன்றைய பணிபுறக்கணிப்பு காரணமாக வடக்கில் வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த வைத்தியசாலைகளிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை மாவட்டங்களின் வைத்தியசாலைகளிலும் அரச வைத்தியர்கள் கடமைக்குச் செல்லவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவராகிய டாக்டர் எம்.பள்ளியகுருகே தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று மாலை வரையிலும் சுகாதார அமைச்சிடமிருந்து தங்களுக்குப் பதிலேதும் கிடைக்கவில்லை என்றும் நாளை மறுதினம் வியாழக்கிழமை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராயவுள்ளதாகவும் அந்தச் சங்கத்தின் பேச்சாளராகிய டாக்டர் சிவப்பிரியன் கூறினார்.

————————————————————————————————–

புதுப்பிக்கப்பட்ட நாள்: 10 மார்ச், 2008

மட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தல்களில் சுமூக வாக்களிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாநகரசபை உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு இன்று நடந்த வாக்களிப்பில் 56 வீத வாக்குகள் பதிவானதுடன், பெரும்பாலும் சுமூகமான வகையில் வாக்களிப்பு இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் கிழக்கு மாகாணம் தமது கட்டுப்பாட்டின் கீழ் முழுமையாக கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பின், மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 வருடங்களின் பின்பு ஒரு மாநகர சபை உட்பட 9 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்துள்ள இந்தத் தேர்தலில், 101 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவிருக்கின்றார்கள். 6 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 831 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.

வாக்களிக்கக் காத்திருக்கும் வாக்காளர்கள்
வாக்களிக்கக் காத்திருக்கும் வாக்காளர்கள்

தேர்தலையொட்டி இம் மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக மக்களின் வழமை நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக வாக்காளர்கள் கூட பாதுகாப்பு கெடுபிடிகளை எதிர்நோக்கியதாகவும் உள்ளுர்வாசிகள் கூறுகின்றனர்.

வாழைச்சேனை பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரொருவரின் வீட்டின் மீது திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலைத் தவிர குறிப்பிடத்தக்க வன்முறைகள் எதுவும் இடம்பெறவில்லை என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை அந்தப் பிரதேசத்தில், அரச பின்புலத்தில் சில தேர்தல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்கானிப்பபு அமைப்பான பப்ரல் கூறுகின்றது.

இந்தத் தேர்தலில் 56 சத வீதமான வாக்குககள் பதிவாகியுள்ளதாகக் கூறும் மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அலுவலர், முதலாவது தேர்தல் முடிவு நள்ளிரவிற்கு பின்பு வெளியாகும் என்றும் கூறுகின்றார்.


கொழும்பு வெள்ளவத்தை குண்டுவெடிப்பில் ஒரு சிவிலியன் பலி, 4 மாணவர்கள் காயம்

குண்டுவெடித்த இடம்
குண்டுவெடித்த இடம்

திங்கட்கிழமை காலை கொழும்பு காலிவீதி வெள்ளவத்தையில் அமைந்துள்ள ரொக்சி சினிமா திரையரங்கிற்கு அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் சிவிலியன் ஒருவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டிருக்கிறார், மேலும் நான்கு பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்துவெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, கொழும்பு காலிவீதி வெள்ளவத்தைப் பகுதியில் வீதியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த பூச்சாடியொன்றினுள் மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டொன்றே வெடித்திருப்பதாகத் தெரிவித்தார்.

 

ஆரம்ப விசாரணைகளின்படி இந்தப் மர்மப்பொதியை பிரித்துப்பார்க்க முயன்ற நபரே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டதாகத் தெரியவந்திருப்பதாகப் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

கொழும்பு களுபோவில அரச வைத்தியசாலை வட்டாரங்களின் தகவல்களின்படி, இன்றைய இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தினைத் தொடர்ந்து இரண்டு பாடசாலை மாணவர்கள், இரண்டு மாணவிகள் என நான்கு பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களின் ஒருவரின் நிலைமை மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தன.

இந்தக் குண்டுவெடிப்புத் தொடர்பாக விசாரணைகளையும், புலன்விசாரணைகளையும் பொலிசாரும் இராணுவத்தினரும் தற்போது மேற்கொண்டுவருகின்றனர்.


மன்னார் மாவட்ட சண்டைகள்: புலிகள் தரப்பிலும் இராணுவத்தினர் தரப்பிலும் சேதம்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில், இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே தொடரும் சண்டைகளில், திங்கட்கிழமை அதிகாலை நடந்த மோதல்களில் 10 விடுதலைப்புலிகளும், 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மோதலில் 10 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் அது கூறியுள்ளது.

இது குறித்து விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மன்னாரில், மாந்தை மேற்குப் பகுதியில், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாந்தை –அடம்பன் வீதியில் ஒரு பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகதத்தகவல் மையம் தெரிவித்துள்ளது.

எனினும், பரப்புக்கடந்தான், பண்டிவிரிச்சான், பாலைக்குழி சேத்தான்குளம் ஆகிய பகுதிகளில் பல முனைகளில் விடுதலைப்புலிகளின் பிரதேசத்துக்குள் முன்னேறுவதற்கு ஞாயிறன்று இராணுவம் மேற்கொண்ட முயற்சி தமது எதிர்த்தாக்குதலின் மூலம் முறியடிக்கப்பட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சண்டைகளில்போது 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 09 மார்ச், 2008்.


மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல் பணிகள் நிறைவு

 

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாநகர சபை உட்பட 9 உள்ளுராட்சி சபைகளுக்கு திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் கடமைக்குரிய அதிகாரிகளும் ஊழியர்களும் பாதுகாப்பிற்குரிய பொலிசாரும் தற்போது உரிய வாக்களிப்பு நிலையங்களை சென்றடைந்துள்ளதாகக் கூறும் அவர், கடந்த கால யுத்த அனர்த்தங்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இத்தேர்தலின்போது வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு அடையாளத்தை உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணமொன்றை சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால் ஆள்-மாறாட்டத்திற்கு வாயப்பு இராது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் பாதுகாப்பு கடமைகளைப் பொறுத்தவரை, வாக்களிப்பு நிலையங்களுக்கு வெளியே பொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் இராணுவுத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தேர்தல் செயலகத்தைச் சேர்ந்த உதவி காவல்துறை அத்தியட்சகர் யு.எஸ்.ஐ.பெரேரா கூறினார்.

101 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெறும் இந்த தேர்தலில் 6 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 831 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.


சிவனேசன் பூத உடலுக்கு பிரபாகரன் அஞ்சலி

 

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் கிளேமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகிய கிட்டிணன் சிவநேசனின் இறுதிக் கிரியைகள் இன்று காலை 11 மணியளவில் மல்லாவி அனிஞ்சியன்குளம் என்ற இடத்தில் நடைபெற்றதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இவரது இறுதிக் கிரியைகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள், விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள், பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பொதுமக்களின் அஞ்சலிக்காக வன்னிப் பிரதேசத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் உடலுக்கு விசேடமான ஓரிடத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது அஞ்சலியைச் செலுத்தினார். புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் உட்பட்ட முக்கியஸ்தர்களும் அஞ்சலி செலுத்தி இரங்கலுரைகள் ஆற்றியதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.

இதனிடையில் மன்னார் மாந்தை பிரதேசத்தில் சனிக்கிழமை விமானப்படையினருடன் ஒன்றிணைந்து இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. இந்தத் தாக்குதலில் 10 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் இராணுவம் கூறியிருக்கின்றது.

இதேவேளை, மன்னார் பரப்பாங்கண்டல், மடு பிரதேசத்தில் உள்ள பண்டிவிரிச்சான் ஆகிய பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு சனிக்கிழமை இராணுவத்தினர் எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். பல மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த மோதல்களில் பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

——————————————————————————————————————————————————-

 

புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 மார்ச், 2008


இலங்கை வன்முறை: புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் இராணுவத் தரப்பில் சேதம்

 

இலங்கையின் மொனராகலை மாவட்டத்திலுள்ள புத்தல-கதிர்காமம் வீதியில் சென்றுகொண்டிருந்த இராணுவ உழவுஇயந்திரமொன்றின் மீது விடுதலைப் புலிகள் நடத்தியுள்ள கிளேமோர் கண்ணிவெடித்தாக்குதலில் ஒரு இராணுவச்சிப்பாய் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் இரண்டு இராணுவ வீரர்கள் காயமடைந்திருக்கிறார்கள்.

இதுகுறித்து தகவல் வெளியிட்டிருக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு, புத்தல பழைய வீதியில் கல்கே காட்டுப் பகுதியூடாக இந்த இராணுவ உழவு இயந்திரம் சென்றுகொண்டிருக்கும்போது புலிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், தாக்குதலில் காயமடைந்து ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்ட படைவீரர் ஒருவர் சிகிச்சைகள் பயனளிக்காத நிலையில் உயிரிழந்ததாகவும் தெரிவித்திருக்கிறது.

இந்தப் பகுதியில் முப்படையினரும் பொலிசாரும் இப்போது தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுவருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கிறது.

இதேவேளை, இந்தச் சம்பவம் குறித்து மின்னஞ்சல்மூலமாக ஊடகங்களிற்குச் செய்தியனுப்பியுள்ள விடுதலைப்புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன், இன்றுகாலை விடுதலைப் புலிகள் அமைப்பினரே இந்தத் இந்தத்தாக்குதலை மேற்கொண்டதாக உரிமை கோரியுள்ளதோடு, இந்தச் சம்பவத்தில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் இரண்டு படைவீரர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அத்துடன் இந்தத் தாக்குதலின்போது, தமது உறுப்பினர்களிற்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் விடுதலைப்புலிகளின் இந்தக் கூற்றை மறுத்துள்ள இலங்கை இராணுவத்தினர் இதன்போது ஒரு இராணுவவீரர் மட்டுமே கொல்லப்பட்டதாக உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இன்று காலை எறிகணை வீச்சு மோதல்கள் இடம்பெற்றதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலை சுமார் 10 மணிமுதல் இரண்டு மணித்தியாலங்கள் இந்த மோதல்கள் இடம்பெற்றதாகவும், இதன்போது மன்னார் – வவுனியா, செட்டிகுளம் வீதி பொது கோப்புவரத்திற்காக மூடப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நண்பகலின் பின்னர் நிலைமை வழமைக்குத் திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த எரிகணை வீச்சுக்களால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை. இதனிடையில், நேற்று முன்தினம் கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டிணன் சிவநேசனுக்கு விடுதலைப் புலிகளின் தலைவரினால், மாமனிதர் பட்டமளித்து கௌரவம் அளிக்கப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.


தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்

 

இந்திய இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 59 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த தாகவும், இதனாலேயே இவர்களை கைது செய்ததாகவும் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், இவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் செல்ல வில்லை என்றும், தமிழக கடற்பரப்பிலேயே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகவும் கூறுகிறார், தமிழ்நாட்டின் கன்யாகுமரியைச் சேர்ந்த தமிழ்நாடு மீன் தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் பீட்டர் தாஸ் அவர்கள்.

இந்திய இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் குறித்து, தமிழக முதல்வர் மு கருணாநிதி அவர்கள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

தமிழ்நாடு மீன் தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் பீட்டர் தாஸ் அவர்களின் செவ்வியையும், முதல்வர் கருணாநிதியின் கடித விவரங்கள் குறித்த செய்திகளையும், நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்


இலங்கையில் தடுப்புக் காவலில் ஊடகவியலாளர்கள்

இலங்கை தலைநகர் கொழும்பில் பயங்கரவாத புலன் விசாரணை காவல்துறையினர், சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரி யரும் சுதந்திர ஊடகவியாலாளர் இயக்கத்திற்காக பேசவல்ல வருமான சிவகுமார் அவர்கள் உள்ளிட்ட ஆறு ஊடகவியலாளர்களை தடுத்து வைத்திருக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்று, இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இணைச்செயலாளர் அமிர்தநாயகம் நிக்சன் அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.

——————————————————————————————————————————————————————

இலங்கையில் ஊடவியலாளர்கள் கைது

இலங்கை தலைநகர் கொழும்பில், பயங்கரவாத புலன் விசாரணை காவல் துறையினர் இரண்டு தமிழ் ஊடக வியலாளர்களையும், ஒரு சிங்கள ஊடகவியலாளரையும் தடுத்துவைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரியரும் சுதந்திர ஊடகவியாலாளர் இயக்கத்திற்காக பேசவல்லவருமான சிவகுமார் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, காவல்துறையினர் தன்னையும் விசாரணைக்கு வரும்படி அழைத்திருப்பதாகக் கூறினார்.

காவல்துறையின் விசாரணைக்கு செல்வதற்கு முன்னர் சிவகுமார் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.


மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது

மட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தல் பதாகை

இலங்கையின் கிழக்கே எதிர்வரும் திங்கள் கிழமை உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவிருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைகின்றன.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முழு நாளும் இறுதிக் கட்டப் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். வீடு வீடாகச் சென்று தமக்குரிய வாக்குககளை திரட்டுவதில் வேட்பாளர்கள் பரவலாக ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தேர்தலின்போது வாக்குச் சாவடிக்கு ஒருவர் என கண்கானிப்பாளர்கள் நியமிக்கப்படவிருப்பதாக பப்ரல் எனப்படும் சுதந்திரமான நியாயமான தேர்தலை கண்காணிக்கும் மக்கள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருட் தந்தை சில்வெஸ்டர் ஸ்ரீதரன் கூறுகின்றார்.

கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத் தக்க வன்முறைகள் இல்லை என்று சுட்டிக் காட்டும் அவர், சில கிராமங்களுக்கும் வாக்குச்சாவடிகளுக்கும் இடையலான தூரம் மக்களின் வாக்களிக்கும் ஆர்வத்திற்கு தடையாக இருக்கும் என்பதால், தேர்தல் திணைக்களமோ அல்லது போட்டியிடும் வேட்பாளர்களோ, அவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார்.



கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசனின் இறுதிச் சடங்குகள் கிளிநொச்சியில் நடக்கவுள்ளது

கொல்லப்பட்ட சிவனேசன்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய கனராயன்குளம் பகுதியில் ஏ -9 வீதியில் கடந்த வியாழனன்று இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்ட யாழ் மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகிய கே.சிவநேசனின் இறுதிக்கிரியைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்காகவும் இறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு அஞ்சலி செலுத்துவதற்குமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சிக்குச் சென்றுள்ளனர்.

காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் உடல் இன்று உறவினர்களின் அஞ்சலிக்காக மல்லாவியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருப்பதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இவரது உடல் நாளை கிளிநொச்சிக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்குள்ள மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனுடன் உயிரிழந்த அவருடைய வாகன சாரதியாகிய 27 வயதுடைய பெரியண்ணன் மகேஸ்வரராஜாவின் உடலை அவரது சொந்த ஊராகிய செட்டிகுளம் வீரபுரத்திற்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டிருக்கின்றார்கள்.


மட்டக்களப்பின் மேயராக பெண்ணொருவர் தெரிவாகும் வாய்ப்பு

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக முதல் தடவையாக பெண் ஒருவர் பொறுப்பேற்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

மட்டக்களப்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் வேட்பாளரான பத்மினி என்று அழைக்கப்படும் சிவகீதா பிரபாகரன் அவர்கள், அங்கு அந்தக் கட்சியின் சார்பில் அதிகப்படியான விருப்ப வாக்குகளைப் பெற்றதால், மாநகரசபையின் மேயராக பொறுப்பேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இறுதியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்ட போது, வாக்களிப்புக்கு இரு தினங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட ராஜன் சத்தியமூர்த்தியின் மகளே இவர்.

தான் மேயராக பொறுப்பேற்கவுள்ளது குறித்து பத்மினி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கிழக்கு மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்த இலங்கை அரசு நடவடிக்கை

அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகரசபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்காக இவ்வார முற்பகுதியில் நடைபெற்று முடிந்த தேர்தல்களை அடுத்து, கிழக்கு மாகாணத்துக்கான மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை அரசு, அதில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கான ஒழுங்குகளை கவனிப்பதற்காக இரு உயரிய குழுக்களை அமைத்திருப்பதாகவும் இன்று அறிவித்திருக்கிறது.

இது குறித்து கொழும்பில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய மகாவலி அபிவிருத்தி மற்றும் விவசாயத்துறை அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமாகிய மைத்திரிபால சிறிசேன தற்போது ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் ஒரே குடையின்கீழ் போட்டியிட்டு வெற்றியீட்ட முன்வருமாறும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்த உத்தேச கிழக்கு மாகாணத்துக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசு எடுத்துள்ள முடிவானது தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது என்றும் இதற்காக திகதி விபரங்களை அவர் இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பாரெனத் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

இவை குறித்த மேலதிக செய்திகளை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 13 மார்ச், 2008


ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்திய மற்றும் தமிழக அரசின் நிலை குறித்து பா.ம.க. அதிருப்தி

டாக்டர் ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இலங்கைக்கு இந்திய அரசு வழங்கி வரும் இராணுவ உதவியினையை நிறுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்திருமாவளவன், திரைப்பட இயககுநர் சீமான் உள்ளிட்ட இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஆர்வங்காட்டும் சிலருடன் ஆலோசனை செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

அண்மைககாலமாக இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை அந்நாட்டு அரசு உககிரப்படுத்தியுள்ளது எனவும் ராமதாஸ் புகார் கூறினார்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகள் செயல்படவேண்டும் என வற்புறுத்தியும், தொடர்ந்து தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் அல்லலுக்கு உள்ளாவதற்கு முற்றுப்புள்ளிவைககவேண்டும் எனக்கோரியும் தொடர்முழக்கப் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் ராமதாஸ் தெரிவித்தார்.

கடந்த சிலமாதங்களாக இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து ராமதாஸ் மௌனமே காத்துவந்தார் என்பதையும், இந்திய அரசைக் கண்டித்து விடுதலைப்புலிகள் அறிக்கை விட்டபோதுகூட அவர் கருத்தெதனையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் ஊடகவியலாளர்கள் கைது நடவடிக்கைக்கு எதிராக ஆர்.எஸ்.எஃப். ஊடகச் சுதந்திரக் குழு கண்டனம்

 

இலங்கையின் பயங்கரவாத தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 5 செய்தியாளர்களின் கதி குறித்து, பாரிஸைத் தளமாகக் கொண்டு செயற்படும் ஆர்.எஸ்.எஃப். என்று அழைக்கப்படும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

அவர்களை தடுத்து வைத்திருப்பதற்கான காரணத்தை கூறவேண்டும் என அது அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

ஒரு இணையத் தளத்துக்காக பணியாற்றும் இந்த செய்தியாளர்கள் விடுதலைப்புலிகளிடம் இருந்து பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சில செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தியாளர்களின் நிலை குறித்து இரு தினங்களுக்கு முன்னர் கவலை வெளியிட்டிருந்த சர்வதேச செய்தியாளர் சம்மேளனமான ஐ.எஃப். ஜே. அமைப்பும், ஆசிய மனித உரிமைகள் ஆணையமும், இந்தச் செய்தியாளர்களின் சட்ட உரிமைகளை இலங்கை அரசாங்கம் நிலை நிறுத்த வேண்டும் என்று கோரியிருந்தன.


Posted in Batticaloa, dead, Eelam, Eezham, Elections, local, LTTE, Media, MP, murders, Polls, Shivanesan, Sivanesan, Sri lanka, Srilanka, War | Leave a Comment »

Feb 27: Eezham, Sri Lanka, LTTE, Dead, War, Rajapakse – Updates & News

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2008

மணலாறு பகுதியில் கொல்லப்பட்ட 14 விடுதலைப் புலிகளின் சடலங்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைப்பு

மணலாறு பகுதியில் விடுதலைப்புலிகளிடம் இருந்து இராணுவத்தால் மீட்கப்பட்டதாக கூறப்படும் பதுங்குகுழி ஒன்று

கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மணலாறு பகுதியில் இராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர மோதல்களின் போது கொல்லப்பட்ட சுமார் 14 விடுதலைப்புலி உறுப்பினர்களின் சடலங்கள் இன்று அநுராதபுரம் வைத்தியசாலை அதிகாரிகளினால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள இராணுவ வட்டாரங்கள், கடந்த வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் மணலாறு பகுதியில் விடுதலைப்புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை நோக்கி முன்னேறிய இராணுவத்தினர் அங்கிருந்த அவர்களது பாதுகாப்பு நிலைகள் சிலவற்றை அழித்திருப்பதோடு, இதன்போது ஏற்பட்ட மோதல்களின் போது கொல்லப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் எண்மரது சடங்களையும், ஆயுதத் தளபாடங்கள் சிலைவற்றையும் கைப்பற்றியிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

இது குறித்து பி.பி.சியிடம் கருத்துவெளியிட்ட அநுராதபுர மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார, வெள்ளிக்கிழமை மாலை ஆறு புலி உறுப்பினர்களது சடலங்களும், சனிக்கிழமை இரவு மேலும் எட்டு புலி உறுப்பினர்களது சடலங்களும், இராணுவத்தினரால் அநுராதபுர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாகவும், பிரேதப் பரிசோதனையின் பின்னர் இன்றைய தினம் இந்த 14 சடலங்களும் விடுதலைப்புலிகளிடம் சேர்ப்பிப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனைவிட நேற்றைய தின மோதல்களின்போது கொல்லப்பட்ட மேலும் ஏழு விடுதலைப்புலிகளின் சடலங்கள் அநுராதபுர வைத்தியசாலைக்கு இராணுவத்தினரால் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், அவை பிரேதப் பரிசோதனையின் பின்னர் நாளையோ அல்லது நாளை மறுதினமோ விடுதலைப்புலிகளிடம் சேர்ப்பிக்கப்படுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கக் குழுவிடம் ஒப்படைக்கப்படவிருப்பதாகவும் அநுராதபுர மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார தெரிவித்தார்.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சந்திப்பு

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின்பேரில் ஜனாதிபதிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் இடையில் இன்று மாலை அலரி மாளிகையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றிருக்கிறது.

அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படும் இன்றைய இந்த சந்திப்பின்போது அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வுத்திட்டம், மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும், 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி செயலக உயர் அதிகாரியொருவர் பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அத்துடன் இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்றினைக் காண்பதற்கு அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு தனது கட்சி ஆதரவினை வழங்குமென எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதியிடம் உறுதி கூறியதாகவும், 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதற்கும் அக்கட்சி ஆதரவினை வழங்கும் என்று அவர் தெரிவித்ததாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்புக்கு முன்னர் இது குறித்துக் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரவி கருணாநாயக்க, இந்த மாத முற்பகுதியில் பாராளுமன்ற வளவினுள் முன்னாள் ஜானாதிபதி ஆர். பிரேமதாஸவின் உருவச்சிலையின் திரைநீக்க விழாவில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நாட்டில் தற்போதுள்ள நிலைமைகள் குறித்து கலந்துரையாட சந்திப்பொன்றுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும், அதன் அடிப்படையிலேயே இன்றைய இந்தச் சந்திப்பு இடம்பெறவிருந்ததாகவும் தெரிவித்தார்.


Posted in dead, Eelam, Eezham, LTTE, Rajapakse, Ranil, Sri lanka, Srilanka, War | Leave a Comment »

Feb 24 – LTTE, Eezham, Batticaloa, Sri Lanka – News & Updates: BBC Tamil

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

கொழும்பில் பேருந்தில் குண்டுத்தாக்குதல்: 18 பேர் காயம்

இலங்கைத் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் பஸ் வண்டி ஒன்றில் விட்டுச் செல்லப்பட்ட வெடிகுண்டு ஒன்றை விழிப்பாக இருந்த பயணி ஒருவர் கண்டறிந்து தெரியப்படுத்தியதால் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

பேருந்து கல்கிசை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் இருக்கைக்கு அடியில் மர்ம மூட்டை ஒன்று கிடப்பதை கண்டு பயணி ஒருவர் பேருந்தின் ஒட்டுநரிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பேருந்தில் இருந்து அனைவரும் இறக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும், இருந்த போதிலும் பொலிஸார் வருவதற்கு முன்பாக குண்டுவெடித்து விட்டதாக பேருந்தின் ஒட்டுநர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பயணிகள் அனைவரும் வெளியேறிவிட்டாலும் குண்டுவெடித்ததில் அருகில் நின்றிருந்தவர்களில் 18 பேர் காயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளே இக்குண்டுவெடிப்பின் காரணம் என்று இராணுவத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

 


உயிர் அச்சத்தில் வடப்பகுதி மக்கள் – பெட்டகம்

வான் தாக்குதலினால் ஏற்பட்ட சேதம்
வான் தாக்குதலினால் ஏற்பட்ட சேதம்

இராணுவ நடவடிக்கை மூலம் கிழக்கை மீட்ட இலங்கை அரசு அதே அணுகுமுறை மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக ஒழிக்க முடியும் என்று நம்புவதாக பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதே நேரம் ஆயுதம் மூலம் தனி ஈழத்தை பெறலாம் என்ற நம்பிக்கையை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அமைதி முயற்சிகள் பின் தள்ளப்பட்டு இராணுவ நடவடக்கைகளுக்கே முன் உரிமை கொடுக்கப்படுகிறது.

தினந்தோரும் நடக்கும் மோதல்களால் தொடர்பாக இரு தரப்பும் மாறுப்டட தகவல்களைத் தந்தாலும் மோதல்களால் கடுமையாக பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான் என்பதே மாறாத உண்மை உள்ளது.

விடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டுகின்ற அரசாங்கம் அவர்களைத் தோற்கடிப்பதில் வெற்றியடைந்து வருவதாகக் கூறுகின்றது.

விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை குறைக்க அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்தில் புலிகளின் முகாம்கள் மீது விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அரசு கூறுகின்றது. ஆயினும் பல சந்தர்ப்பங்களில் பொதுமக்களே இந்தத் தாக்குதல்களில் கொல்லப்படுவதாக விடுதலைப் புலிகள் கூறுகின்றார்கள்.

இந்த வான் தாக்குதல்கள் எப்போது நடக்கும் எங்கு நடக்கும் என்பது எவருக்கும் தெரியாது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் பெரும் அச்சமடைந்திருப்பதாக அங்கிருந்து வருவபர்கள் தெரிவிக்கின்றார்கள்.

வடக்கே நிலவும் போர் சூழலால் மக்கள் நாளாந்தம் உயிரச்சத்துடனேயே தமது வாழ்வைக் கழித்து வருகின்றனர். இது தொடர்பாக நமது வவூனியா செய்தியளர் மாணிக்கவாசகம் தயாரித்து அனுப்பிய பெட்டகத்தை இன்றைய நிகழ்சியில் நேயர்கள் கேட்கலாம்.


இலங்கையின் வடக்கில் விமானப்படை தாக்குதல்

இலங்கை விமானப்படையின் விமானம்
இலங்கை விமானப்படையின் விமானம்

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விமானப்படையினர் விமானக்குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானுக்கு வடகிழக்கில் உள்ள விடுதலைப் புலிகளின் இராணுவ தளம் ஒன்று சனிக்கிழமை காலை தாக்கி அழிக்கப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

எனினும் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள மன்னாகண்டல் என்னுமிடத்தில் சனிக்கிழமை காலை குண்டு வீச்சு விமானங்கள் இரண்டு தடவைகள் 4 குண்டுகளை வீசியதாகவும், இதனால் வீதியில் சென்று கொண்டிருந்த 2 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதனிடையில் நேற்று வெள்ளிக்கிழமை புனகரி பகுதியில் நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 8 பொதுமக்களது இறுதிக்கிரியைகள் நடைபெற்றதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குண்டு வீச்சுச் சம்பவத்தில் காயமடைந்த 11 பேரில் 9 பேர் தொடர்ந்தும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்களில் 4 பேரின் நிலை மோசமாக இருப்பதாகவும் இவர்கள் மேல் சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அனுப்பிவைக்க வேண்டிய தேவை இருந்தபோதிலும் அவரிகளது உடல் நிலை பிரயாணம் செய்யக் கூடியதாக இல்லை என்றும் அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முழங்காவில் வைத்தியசாலையில் ஏனைய 2 காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஐ.நா உயரதிகாரி மட்டக்களப்பிற்கு விஜயம்

ஐ.நா உயரதிகாரி ஏஞ்சலினா கனே
ஐ.நா உயரதிகாரி ஏஞ்சலினா கனே

இலங்கைக்கான ஒரு வாரகால விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐ.நா வின் அரசியல் விவகார துணைச் செயலாளர் ஏஞ்சலினா கனே கிழக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மட்டக்களப்பு சென்றுள்ளார்.

கடந்த கால யுத்த அனர்த்தத்தின் பின்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற் கொள்ளப்படுகின்ற மனிதநேய நிவாரணப் பணிகள், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் கறித்து அறிந்து கொள்வதற்காக இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், யுத்த அனர்த்தத்தின் போது இடம் பெயர்ந்தவர்கள் மீள் குடியமர்த்தப்பட்டுள்ள சில கிராமங்களை பார்வையிட்டதோடு இது வரை மீளக் குடியேற்றப்படாதவர்களையும் சந்தித்து உரையாடினார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தையும் சந்தித்து மாவட்ட நிலவரம் தொடர்பாகவும் குறிப்பாக நடை பெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாகவும் கேட்டறிந்துள்ளார்

இருப்பினும் இந்த விஜயம் தொடர்பாகவோ சந்திப்புகள் தொடர்பாகவோ ஏஞ்சலினா கனே செய்தியாளர்களிடம் கருத்துக் கூற மறுத்து விட்டார்

புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 பிப்ரவரி, 2008

 


இலங்கையின் களுவாஞ்சிக்குடியில் தற்கொலைக்குண்டுத்தாக்குதல்

சம்பவம் நடைபெற்ற இடம்
சம்பவம் நடைபெற்ற இடம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு- கல்முனை நெடுஞ்சாலையிலுள்ள களுவாஞ்சிக்குடியில் ஞாயிற்றுகிழமை முற்பகல் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில், தற்கொலையாளியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த இருவரும் என 3 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் பெண்னொருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் இருவரும் மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த வேளை, குறுக்குவீதியொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் சைக்கிளொன்றுடன் காணப்பட்ட இளைஞரொருவரை அழைத்து விசாரனைக்குட்படுத்தியபோது
அந்நபர் தம் வசமிருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக சம்பவம் தொடர்பாகக் கூறப்படுகின்றது.

தற்கொலையாளி இது வரை அடையாளம் காணப்படவில்லை எனக் கூறும் பொலிசார் விடுதலைப் புலிகள் மீதே குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதே குற்றச்சாட்டை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளரான ஆசாத் மௌலானாவும் முன்வைத்துள்ளனர்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 25 பிப்ரவரி, 2008


பண்டாரவளையில் யாழ் இளைஞர் கடத்தல்

இலங்கையின் மலையகப் பகுதி
இலங்கையின் மலையகப் பகுதி

இலங்கையின் மலையகத்தில் பண்டாரவளைப் பகுதியில் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், வெள்ளை நிற வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

அந்தப் பகுதியில் அண்மைக்காலத்தில் இடம்பெறும் முதலாவது சம்பவம் இதுவென்பதால், அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளதாக அப்பகுதியில் இருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

அப்பகுதியில் உள்ள கடையொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த காரைநகரைச் சேர்ந்த சடாச்சரன் திருவருள் (22 வயது) என்ற இளைஞர், வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து, பொலிஸாரிடமும் ஏனையவர்களிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மலையக மக்கள் முன்னணியின் சார்பிலான ஊவா மாகாணசபையின் உறுப்பினரான அரவிந்தன் அவர்கள் பிபிசிக்குத் தெரிவித்தார்.

Posted in Arms, Attacks, Batticaloa, Blast, Bombs, Bus, Citizens, Colombo, dead, Eelam, Eezham, Explosions, Extremism, Highways, Hurt, Injured, LTTE, Northeast, Peace, Sri lanka, Srilanka, Suicide, Terrorism, Terrorists, UN, War | Leave a Comment »

Feb 06: Eezham, Sri Lanka, LTTE, India Fishermen, Tamil Nadu, War, Media – Updates & News

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 6, 2008

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இலங்கை புகார்

இலங்கைக் கடற்பரப்பினுள் இந்திய மீனவர்கள் பெரும் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அத்துமீறி மீன்பிடித்துவருவதால் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் இது குறித்து தகுந்த நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும்படி இந்தியாவிடம் இலங்கை கடற்படை முறைப்பாடு செய்திருப்பதாக தெரியவருகிறது.

இலங்கையின் தலைமன்னார் கடற்பகுதியில் திங்கள் கிழமையன்று ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கடற்படையின் வாட்டர்ஜெட் ரோந்து விசைப்படகொன்று சேதமானதை அடுத்தே இந்த முறைப்பாட்டினை இலங்கைக் கடற்படைத் தலைமையகம் கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் மேற்கொண்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இலங்கை கடற்படையினர் இவ்வாறானதொரு முறைப்பாட்டினைச் செய்திருப்பதனை கொழும்பிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உறுதிசெய்திருப்பதோடு, இது குறித்து மத்திய அரசிற்கு தெரியப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தனர்.


பிரயாணத் தடையால் பொதுமக்கள் பாதிப்பு

சோதனைச் சாவடியில் நிற்கும் பேருந்துகள்
சோதனைச் சாவடியில் நிற்கும் பேருந்துகள்

இலங்கையின் வடக்கே வவுனியா மன்னார் மாவட்டங்களில் இருந்து தென்பகுதிக்குச் செல்லும் வாகனங்கள் மீதான பிரயாணத் தடை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முன்னர் அததியாவசிய தேவைகளுக்காகச் செல்லும் வண்டிகள், பயணிகள் செல்லும் பேருந்து வண்டிகள் மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகத் தென்பகுதிக்குச் சென்று திரும்ப அனுமதியளிக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த மூன்று தினங்களாக மதவாச்சி சோதனைச்சாவடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக வவுனியா மன்னார் மாவட்டங்களில் இருந்து எந்த வாகனமும் மதவாச்சி ஊடாகப் பயணம் செய்ய முடியாது என பொலிசாரினால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதனால் பிரயாணிகள், உயர்கல்வி, மாணவர்கள், வைத்தியர்கள் உட்பட்ட துறைசார்ந்தவர்கள், பொதுமக்கள், வர்த்தகரகள் என பலதரப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா வைத்தியசாலைக்குத் தேவையான ஒக்சிஜனைப் பெறுவதற்காக அனுராதபுரத்திற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்ட ட்ரக் வண்டியும் பிரயாண அனுமதி மறுக்கப்பட்டு மதவாச்சி பொலிசாரினால் வவுனியாவுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவிடயம் குறித்து வவுனியா மற்றும் அனுராதபுரம் உயர் பொலிஸ் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா வைத்தியசாலையில் கையிருப்பில் உள்ள ஒக்சிஜனின் அளவு நாளாந்தம் குறைவடைந்து செல்வதனால், அதனை அனுராதபுரத்தில் விரைவில் எடுத்து வராவிட்டால் வைத்தியசாலையின் நோயாளர்களின் உயிர்காக்கும் முக்கிய வைத்திய பணிகள் பாதிப்படையும் அபாயம் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இலங்கை அரசுக்கு ஊடகவியளாளர் அமைப்பு கண்டம்

சுதந்திர செய்தியாளர்களுக்கு அரசு நெருக்கடி அளிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது
சுதந்திர செய்தியாளர்களுக்கு அரசு நெருக்கடி அளிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது

ஊடகவியலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உலகின் மிகப் பெரிய அமைப்பு இலங்கை அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.

ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி அறிக்கையில், அந்நாட்டின் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறையை அரசு அதிகாரிகள் தூண்டிவிடுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

சுதந்திரமாக செய்திகளை சேகரிக்கும் ஊடகவியலாளர்களின் உரிமை குறித்து, இலங்கை அரசு மிகவும் ஆபத்தான அளவுக்கு அலட்சியம் காட்டுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தியாளர்களுக்கு எதிரான வன்முறைகளை உடனடியாக நிறுத்துமாறு, விடுதலைப்புலிகள், மற்றும் பிற ஆயுதக்குழுக் களை அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

 


புதுப்பிக்கப்பட்ட நாள்: 06 பிப்ரவரி, 2008

வவுனியாவில் முழு அடைப்பு

வெறிச்சோடிக் கிடக்கும் வவுனியா சாலை ஒன்று
வெறிச்சோடிக் கிடக்கும் வவுனியா சாலை ஒன்று

இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இன்று கடைகள் மூடப்பட்டு, பணிபுறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. கொழும்பு கோட்டை ரயில் நிலையம், தம்புள்ள மற்றும் தட்சணாமருதமடு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களையும், இவற்றில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதையும் கண்டிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

புளொட் எனப்படும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இதற்கான அழைப்பை விடுத்திருந்தது. இந்த மாவட்டங்களில் அரச, தனியார் துறை அலுவலகங்கள், வங்கிகள், பாடசாலைகள் என்பன இயங்கவில்லை. வாகனப் போக்குவரத்துக்களும் இடம்பெறவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை இங்கு முழுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விமானப்படையினர் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

 


வட இலங்கையில் மோதல்கள் தொடருகின்றன

வடக்கில் வான்வழித் தாக்குதல்கள்
வடக்கில் வான்வழித் தாக்குதல்கள்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி திருவையாறு பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர்கள் ஒன்று கூடும் தளம் ஒன்றின் மீது இன்று காலை 8.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகள், திருவையாறு வடக்கில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது விமானப்படையின் தாக்குதல் விமானங்கள் இன்று காலை 20 குண்டுகளை வீசியதாகவும், இதன்போது அங்கிருந்தவர்கள் பாதுகாப்பு குழிகளுக்குள் இருந்ததாகவும், குடிசையொன்று சேதமடைந்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

கிளிநொச்சி புறநகர்ப்பகுதியாகிய கணேசபுரத்தில் நேற்றுப் பிற்பகல் விமானப்படையினர் நடத்திய வான்தாக்குதலில் 2 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் மேலும் இருவர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் கிளாலி, நாகர்கோவில் உட்பட்ட போர்முனைகளில் இராணுவத்தினர் இன்று காலை 5.50 மணி முதல் 6.30 மணிவரையில் விடுதலைப் புலிகள் மீது நடத்திய தாக்குதலில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

சுமார் 45 நிமிடங்கள் இந்தத் தாக்குதல் நீடித்ததாகத் தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகள் இதில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். தங்கள் தரப்பு சேதங்கள் குறித்து அவர்கள எதுவும் தெரிவிக்கவில்லை.

மன்னார் மற்றும் மணலாறு பகுதிகளில் நேற்றும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாகவும் இதில் இரு தரப்பினருக்கும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டதாகவும் இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது

 


ராமேஸ்வரம் மீனவர்களிடம் தமிழக அரசு விசாரணை

மீன்பிடி தொழிலாளர்கள்
மீன்பிடி தொழிலாளர்கள்

இலங்கை தலைமன்னார் கடற்பகுதியில் கடந்த செவ்வாய்க் கிழமை ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இலங்கை கடற்படையின் வாட்டர்ஜெட் ரோந்து விசைப்படகு ஒன்று சேதமடைந்தது.

இந்த சம்பவம் நடந்தபோது, அங்கிருந்த பெரும் எண்ணிக்கையிலான தமிழக மீனவர்களின் படகுகள் விடுதலைப்புலிகளுக்கு உதவும் விதத்தில் நடந்து கொண்டதாக இலங்கை கடற்படை இந்திய அரசிடம் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, தமிழக அதிகாரிகள் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடம் இன்று புதன்கிழமை விசாரணை நடத்தி யிருக்கிறார்கள்.

தமிழக அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் நடத்திய இன்றைய விசாரணையின்போது, இந்திய கடற்படை அதிகாரிகளும், கடலோர காவல்படையினரும் உடனிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் நடைபெற்ற விசாரணைகள் குறித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரான போஸ் தமிழோசையிடம் கூறிய தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

 


 புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 பிப்ரவரி, 2008

 


இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை-அம்னெஸ்டி இண்டர்நேஷணல்

அம்னெஸ்டி இண்டர்நேஷணல் அமைப்பின் சின்னம்
அம்னெஸ்டி இண்டர்நேஷணல் அமைப்பின் சின்னம்

இலங்கையில் மோதல்கள் அதிகரிக்கும் நிலையில், ஊடகச் சுதந்திரம் பாதிக்கப்படுவதும், ஊடகவியாலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும், அதிகமாவதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷ்னல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்து இதுவரை குறைந்தது 10 ஊடகவியலாளர்கள் சட்ட விரோதமாக கொல்லப்பட்டுள்ளதாகவும், இருவர் காணமல் போயுள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. பலர் சித்திரவதை செய்யப்பட்டதுடன், அவசரகால சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டதாகவும் அந்த அளிக்கை கூறியுள்ளது.

விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் எந்தவொரு சுதந்திர உள்ளூர் ஊடகத்தையும் செயல்பட அனுமதிப்பதில்லை என்றும் ஊடகவியலாளர்களை உன்னிப்பாக கண்காணிப்பதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கை கோரியுள்ளது.

இவை குறித்த மேலதிகத் தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

Posted in Bus, Condemn, Eelam, Eezham, Fish, fishermen, Fishing, LTTE, Media, MSM, Sea, Security, Sri lanka, Srilanka, Tamil Nadu, TamilNadu, Tourists, transit, Transport, Travel, War | Leave a Comment »

Japanese envoy warns Sri Lanka of aid cut if war escalates

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2008

இலங்கையில் வன்முறைகள் அதிகரித்தால் நிதியுதவி நிறுத்தப்படலாம் என ஜப்பான் அறிவிப்பு

இலங்கையில் இந்த மாதத்தின் முற்பகுதியில் அரசு போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த பிறகு அங்கு இடம் பெற்றுகின்ற வன்முறைகள் மேலும் அதிகரிக்குமாயின் அந்நாட்டுக்கு அளிக்கப்படும் நிதி உதவிகளை நிறுத்த நேரிடலாம் என ஜப்பானின் சிறப்பு சமாதானத் தூதர் யஷூஷி அகாஷி எச்சரித்துள்ளார்.

இலங்கைக்கான நிதியுதவிகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினை ஜப்பான் தான் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்களில் அதிகரித்துள்ள வன்முறைகள் தொடருமாயின், ஜப்பான் தான் அளித்துவரும் நிதியுதவி குறித்து மீள்பரிசீலனை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என அகாஷி தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும், இலங்கையில் இன்னும் பல தசாப்பதங்களுக்கு இலங்கையுடன் உறவுகளை பேணவே தமது அரசு விரும்புகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


இலங்கையில் உயிரிழப்புகளைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என சர்வதேச அமைப்பு குற்றச்சாட்டு

இலங்கையில் நடைபெறும் உயிரிழப்புக்களை தடுக்கத் தேவையான சர்வதேச நடவடிக்கைகள் மெதுவாகவே மேற்கொள்ளப்படுவதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பான ஹ்யூமன் ரைட் வாட்ச் கூறியுள்ளது.

இலங்கையில் மோசமைடந்து வரும் மனித உரிமைகள் நிலை குறித்து சர்வதேச கவலைகள் அதிகமானாலும், இதைத் தடுக்கத் தேவைப்படும் நடவடிக்கைகள் மெதுவாகவும் , ஒருமித்ததாக இல்லாமல் இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

அதே நேரம் அமெரிக்க அரசின் புத்தாயிரமாவது சவால்களுக்கான நிறுவனம் மனித உரிமைகள் தொடர்பாக எழுந்த கவலைகள் காரணமாக இலங்கைக்கு கொடுக்கப்படவிருந்த 110 மில்லியல் டாலர் உதவியை இடை நிறுத்தி வைத்துள்ளதாகவும், அதே போல பிரிட்டன் 3 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ் கடன் நிவாரணத்தை இடை நிறுத்தி வைத்துள்ளதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

இலங்கையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரிக்கும் – 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் இடையேயான கால கட்டத்தில் 110 பேர் காணமல் போயுள்ளதாகவும் இதில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்றும் கூறியுள்ளது.

இந்த கடத்தல்களுக்கு அரச படைகளும், அரச படைகளுடன் இணைந்து செயல்படும் ஆயுதக் குழுக்களும் காரணமாக இருக்கிறது என்று அது கூறியுள்ளது.

ஹ்யூமன் ரைட் வாட்ச் அமைப்பின் அறிக்கை குறித்த மேலதிகத் தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்

 


கொழும்பிலுள்ள தமிழர்களிடம் போலீசார் தகவலைத் திரட்டுவதால் அவர்களிடம் அச்சம் நிலவுகிறது எனத் தகவல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் யோகராஜன்
யோகராஜன் (இடது புறத்தில்)

கொழும்பின் வடக்குப் பகுதியிலிருக்கும் மோதரைப் பகுதியிலிருக்கும் தமிழ் குடும்பங்களுக்கு, மோதரைப் போலீஸ் நிலையத்தின் மூலமாக அரசாங்க முத்திரைகள் ஏதும் இல்லாமல் வழங்கப்பட்டிருக்கும் ஒரு படிவத்தின் காரணமாக அங்குள்ள தமிழ் குடும்பங்கள் அச்சமடைந்துள்ளன என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூத்த துணைத் தலைவரான யோகராஜன், இந்த படிவத்தில் பெயர், விலாசம், வங்கிக் கணக்குத் தகவல்கள், சாதி உட்பட பல விடயங்கள் கோரப்பட்டுள்ளன எனக் கூறுகிறார். குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரின் விபரங்களும் அதில் தெரியப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இவ்வாறு பெறப்படும் தகவல்கள் சமூக விரோதிகளின் கைகளில் கிடைக்குமாயின் அது குற்றச் செயல்களுக்கு வழிவகுக்கும் எனவும் யோகராஜன் மேலும் தெரிவிக்கிறார். ஒவ்வோரு தனி நபரும் இவ்வாறாக கேட்கப்படும் விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்கிற நியதி எந்த சட்டத்திலும் இல்லை எனவும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

தாம் போலீஸ் உயரதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து யோகராஜன் அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்

 


இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்த வேண்டும் என இடதுசாரிகள் வலியுறுத்தல்

கொழும்பில் இடதுசாரிகள் போராட்டம்
கொழும்பில் இடதுசாரிகள் போராட்டம்

இலங்கையின் தலைநகர் கொழும்பில் வியாழக்கிழமையன்று அங்கு நடக்கும் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இடதுசாரி முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் பல அரசியல் கட்சிகளின் பரதிநிதிகள், தொழிற்சங்கத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இடது சாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணரட்ணவில்ன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையில் நடைபெற்று வரும் போரினை நிறுத்த வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நாட்டில் நடைபெற்று வரும் யுத்தத்தின் காரணமாக மக்கள் வறுமையை எதிர்கொள்கிறார்கள் என அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா கூறினார்.

இதே கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றொருஉறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் இலங்கை அரசு யுத்தத்துக்காக இந்த ஆண்டு பல ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்கிறது என்றும் அதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களுமே பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் என்றும் கூறினார்.

 


Posted in Aid, Ceasefire, Colombo, Donor, Economy, Eelam, Eezham, Finance, HR, Japan, Left, LTTE, Peace, Sri lanka, Srilanka, US, USA, Violence, War | Leave a Comment »

Batticaloa local polls & Pit of bodies discovered in the government-controlled Anuradhapura district

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2008

கர்ணல் கருணாவுக்கு 9 மாதம் சிறைத் தண்டனை: பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற குழுவின் தலைவரான கர்ணல் கருணா, போலி கடவுச்சீட்டு வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக பிரிட்டன் நீதிமன்றம் அவருக்கு ஒன்பது மாதம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

விநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற பெயர்கொண்ட இவர் கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்தில் கைதுசெய்யப்பட்டார்.

வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பின் வாதத்தை எடுத்துரைத்த அரசு தரப்பு பாரிஸ்டர், கருணா, கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி பிரிட்டனுக்குள் கோகில ஹர்ஷ குணவர்த்தன என்ற பெயரில் ராஜிய பாஸ்போர்ட் ஒன்றுடன் நுழைந்தார். இந்த பாஸ்போர்ட்டில் அவருக்கு பிரிட்டனுக்கு வந்து போக ஆறுமாத பலமுறை விஜயம் செய்யும் விசா ஒன்று வழங்கப்பட்டிருந்தது. பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்ட பெயர் வேறு ஒருவருடைய பெயராக இருந்தாலும், அதில் இருந்த புகைப்படம் கருணாவுடையதாக இருந்தது என்றார்.

இந்த விசா, வனவிலங்கு பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாடு ஒன்றில் குறிப்பிட்ட நபர் கலந்துகொள்வதற்காக கோரப்பட்டது என்றும் வழக்குரைஞர் கூறினார்.

பிரிட்டனுக்குள் வந்த கருணா கடந்த நவம்பர் இரண்டாம்தேதி பிரிட்டன் குடிவரவுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டர் என்று கூறிய அரசு வழக்குரைஞர், குடிவரவுத் தடுப்புக்காவலில் இருந்த அவரை, டிசம்பர் 22ம்தேதி, லண்டன் பெருநகரப் போலிசார் அடையாள ஆவணங்கள் மோசடி சட்டத்தின் கீழ் அவரைக் கைதுசெய்து குற்றச்சாட்டை பதிவு செய்தனர்.

போலிசார் கருணாவிடம் நடத்திய விசாரணையின்போது, கருணா தான் ஒரு இலங்கை பிரஜை என்றும், தனக்கு இந்த ராஜிய பாஸ்போர்ட் இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் உதவியால் தரப்பட்டது என்றும் கூறியதாகவும், அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து லண்டனுக்கு வரும்போது, கொழும்பு விமான நிலையத்தில், இலங்கையின் குடிவரவு மற்றும் சுங்க இலாகா வழிமுறைகளுக்கு உட்படாமல் தான் விமானத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும், விமானத்தில் ஏறும் முன்னர் தனக்கு இந்த ராஜிய பாஸ்போர்ட் தரப்பட்டதாகவும் கருணா லண்டன் போலிஸ் விசாரணையில் தெரிவித்ததாக, அரசு வழக்குரைஞர் தெரிவித்தார்.

ஆனாலும், இந்த பாஸ்போர்ட்டில் தனது புகைப்படம் மட்டுமே இருந்ததை கருணா கண்டதாகவும், மற்ற விவரங்கள் பொருந்தவில்லை என்று அவருக்கு தெரிந்திருந்ததாக கருணா கூறியதாக வழக்குரைஞர் குறிப்பிட்டார்.

தனக்கு ராஜிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது குறித்து கருணா போலிசாரிடம் குறிப்பிடுகையில் தான் அரசாங்க அதிகாரியல்ல என்றாலும், இலங்கை அரசால் பாதுகாப்பு வழங்கப்பட்ட ஒருவர் என்று குறிப்பிட்டதாக அரசு வழக்குரைஞர் கூறினார்.

கருணா ஏற்கனவே இந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று கூறிய கருணா தரப்பு வழக்குரைஞர் டேவிட் பிலிப்ஸ், ஆனால் போலிசார் மற்ற விடயங்களைப் பற்றி விசாரித்தபோது அவர்களுக்கு எந்தவித தடயமும் கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தனது கட்சிக்காரருக்கு மனைவி மற்றும் 11, 9 மற்றும் 6 வயதுடைய மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், கைதுசெய்யப்பட்டபோது அவர் தன்னுடைய வீட்டில்தான் இருந்தார் என்றும் குறிப்பிட்ட பிலிப்ஸ், கருணா இதற்கு முன்னர் சிறைத்தண்டனை பெற்றிருக்கவில்லை, இவ்வாறு தடுத்துவைக்கப்படுவது அவருக்கு ஒரு பயங்கரமான அனுபவமாக இருக்கும் என்றார்.

கருணாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை நீதிமன்றத்திலிருந்து அவதானித்திருந்த மணிவண்ணன் தொகுத்து வழங்கும் விரிவான செய்திகளை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


புலிகளின் வாகன தளத்தை விமான குண்டுவீச்சில் அழித்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது

 

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை காலை விமானப்படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் வாகனப் போக்குவரத்துத் தளம் ஒன்று அழிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.

இதனை மறுத்துள்ள விடுதலைப் புலிகள் மக்கள் குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஒரு சிவிலியன் கொல்லப்பட்டதாகவும் 5 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

எட்டு குண்டுகள் இப்பகுதியில் வீசப்பட்டதாகவும் இதனால் 12 வீடுகள் சேதமடைந்தும் முற்றாக அழிந்தும் இருப்பதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றார்கள்.

இந்த விமானத் தாக்குதலையடுத்து, கிளிநொச்சி பிரதேசத்தில் பதட்டம் நிலவியதுடன், பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் மேலும் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் பாடசாலைகளுக்குச் செல்லவில்லை என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் மின்னஞ்சல் வழி அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது.

காயமடைந்தவர்களில் 3 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி மருத்துவமனையின் பதில் மருத்துவ பணிப்பாளர் டாக்டர் பிரசாத்நாயகம் பிரைட்டன் தமிழோசையில் தெரிவித்தார்.


மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் முடிவுற்றது

 

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 6 அரசியல் கட்சிகளும் 22 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபைக்கும் 8 பிரதேச சபைகளுக்கும் 1994ஆம் ஆண்டுக்கு பின்பு நடைபெறவிருக்கும் இத்தேர்தல் மூலம் 101 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவிருப்பதாகக் கூறும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் டி.கிருஷ்ணானந்தலிங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் சயேச்சைக் குழுக்கள் சார்பாக 816 பேர் போடடியிடுவதாகக் குறிப்பிடுகின்றார்.

இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 23 சுயேச்சைக் குழுக்கள் சார்பாகவும் 7 அரசியல் கட்சிகள் சார்பாகவும் மொத்தம் 61 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்படிருந்த போதிலும் பரிசீலனையின் பின்பு 9 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்பிலும் ஏனைய சபைகளுக்கு தமது கட்சி சார்பாகவும் போட்டியிடும் அதேவேளை ஈ.பி.ஆர்.எல்.எஃப். பத்மநாபா அணி, ஈ.பி.டி.பி., பிளொட் ஆகிய கூட்டமைப்பு அனைத்து சபைகளுக்கும் சுயேச்சையாக போட்டியிடுகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.


கெப்பிட்டிகொல்லாவ சடலங்கள்: சனிக்கிழமை பிரேதப் பரிசோதனை

இலங்கை வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கெப்பிட்டிகொல்லாவ பகுதியின் குக்கிராமம் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்ட 16 உடல்களும் நாளை சனிக்கிழமை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என கெப்பிட்டிகொல்லாவ வைத்திய அதிகாரி தெரிவித்திருக்கின்றார்.

கைகள் கட்டப்பட்ட நிலையில் அருகருகே இரண்டு புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட இந்தச் சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என கெப்பிட்டிகொல்லாவ பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

நேற்று காலை முதல் இன்று பகல் வரையிலான காலப்பகுதியில் வன்னிப் போர்முனைகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது நடத்திய தாக்குதல்களில் 41 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் கொல்லப்பட்டுள்ள 16 பேரையும் விடுதலைப் புலிகளே கொலை செய்திருப்பதாகக் குற்றம்சுமத்தியுள்ளது.

எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதுவரையில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆயினும் மணலாறு பகுதியில் தமது பிரதேசத்தினுள் நேற்று வியாழக்கிழமை ஊடுருவ முயன்ற படையினர் மீது விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தியதை அடுத்து படையினர் பின்வாங்கிச் சென்றதாகவும், மன்னார் பாலைக்குழி பகுதியில் நேற்று காலை முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் 3 இராணுவத்தினரும் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

Posted in Anuradhapura, Anuradhapuram, Anurathapura, Arrests, Batticaloa, Eelam, Eezham, Elections, England, Jail, Karuna, Kilinochi, Law, London, LTTE, murders, Nominations, Order, Passport, Polls, Sri lanka, Srilanka, Tigers, UK, Visa, War | Leave a Comment »

Jan 15 – LTTE, Eezham, Sri Lanka – News & Updates: BBC Tamil

Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2008

இந்திய இலங்கை கடல் எல்லையில் கண்ணிவெடிகளை புதைத்துள்ளதாக இலங்கை கடற்படை அறிவிப்பு.

இந்திய இலங்கை கடல் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக கடல் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் பேச்சாளரான கமோடர் தசநாயக்க தமிழோசையிடம் தெரிவ்த்தார். தமது கடற்படை தளங்களின் பாதுகாப்புக்காவே இந்த ஏற்பாடு எனவும் அவர் கூறுகிறார்.

அந்தப் பகுதிகள் உயர் பாதுகாப்பு வலையமானதாலும், அங்கு பொதுமக்களின் போக்குவரத்து கிடையாது என்பதாலும் இதன் காரணமாக பொதுமக்களுக்கும் மீனவர்களுக்கும் எந்த பாதிப்பும் வராது எனவும் அவர் கூறுகிறார்.

ஏற்கெனெவே இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்கரையருகேயும், அதன் அண்மித்த பிற தீவுகள் அருகேயும் நுழைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கமோடர் தசநாயக்க கூறினார்.

இது தொடர்பில் இலங்கை கடற்படை பேச்சாளர் தசநாயக்க, இந்தியக் கடற்படையின் தமிழகப் பொறுப்பு அதிகாரி கமோடர் பிலிப் வான் ஹால்ட்ரன் நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம் ஆகியோர் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

 

 


வன்னித் தாக்குதல்கள் குறித்து மாறுபட்ட தகவல்கள்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்

இலங்கையின் வடக்கே வன்னிப்பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைவிடம் ஒன்றை இன்று காலை 11.15 மணியளவில் விமானப்படையினர் தாக்கி அழித்துள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

வான்வழி கண்காணிப்பு மற்றும் தரையிலிருந்து கிடைத்த இரகசிய தகவல்களையடுத்து, இந்த இலக்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஆண்ரு விஜேசூரிய தெரிவித்திருக்கின்றார்.

தாக்குதல் இடம்பெற்ற வேளை, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அந்த மறைவிடத்தில் இருந்திருக்கக் கூடிய வாய்ப்பு இருந்தது என விமானப்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் புலிகளின் விமான ஓடுபாதை அமைந்துள்ள இரணைமடுக் குளத்திற்கு கிழக்கே கல்மடுக்குளம் என்ற இடத்தில் காட்டுப் பகுதியில் இந்த மறைவிடம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இது, விடுதலைப் புலிகளின் தலைவர் அடிக்கடி வந்து செல்லும் முக்கியமான ஒரு மறைவிடம் எனவும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் இங்கு அடிக்கடி சந்தித்து திட்டங்கள் தீட்டுவது வழக்கம் என்றும் கடற்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் முக்கிய முகாம் ஒன்றின் மீது இன்று வான்படையினர் நடத்திய விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல் குறித்து இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்கள் ஒரு மலிவுப் பரப்புரை என்றும் அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்றும் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்திருக்கின்றார்.

மக்களைக் குழப்புவதற்காகவே இந்தப் பரப்புரையை அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது என்றும் இளந்திரையன் கூறியிருக்கின்றார்.

 

 


அனைத்துக் கட்சி மாநாட்டின் பரிந்துரைகள் ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்டது

இலங்கை ஜனாதிபதியுடன் திஸ்ஸ விதாரண
இலங்கை ஜனாதிபதியுடன் அமைச்சர் திஸ்ஸ விதாரண

இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு அதிகாரப்பரவலாக்கல் ஊடான அரசியல் தீர்வினைக்காணும்நோக்கில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவினால் அமைக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு இன்று தனது தீர்வுத்திட்ட நகல் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்திருக்கிறது.

புதன்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவரும், அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண இந்தத்தீர்வுத்திட்ட யோசனைகளை ஜனாதிபதியிடம் ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களின் முன்னிலையில் கையளித்தார்.

இந்தத் தீர்வுத்திட்ட யோசனையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்கள் குறித்து இதுவரை எந்தத் தகவல்களும் உத்தியோகபூர்வமாக வெளிவரவில்லை. ஆனாலும் அரச தரப்பு தகவல்களின்படி இனப்பிரச்சனைக்குத் தீர்வினைக்காணும்பொருட்டு நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டிருக்கும் சரத்துக்களில் தேவையானவற்றை முழுமையாக அமுல்படுத்தும்படி இதில் பிரதானமாக விதந்துரைசெய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

இவை குறித்த மேலதிக செய்திகளை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் குறித்து அமெரிக்கா கவலை

மட்டக்களப்பின் உரையாற்றும் அமெரிக்கத் தூதர்
மட்டக்களப்பில் உரையாற்றும் அமெரிக்கத் தூதர்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி சபை தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாமாகவும் நடைபெறுமா என்பது குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் ஓ பிளேக் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

புதன்கிழமை மட்டக்களப்புக்கு சென்றிருந்த அவர் அமெரிக்க அரசின் உதவியுடனான அபிவிருத்தி திட்டங்களை தொடங்கிவைத்து உரையாற்றியபோதே இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

அங்கு ஒரு சாரார் ஆயுதங்களை வைத்துக் கொண்டு மற்ற அமைப்புகளை அச்சுறுத்தும்போது சுதந்திரமான நியாமான தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது எனவும் ராபர்ட் ஓ பிளேக் கூறியுள்ளார்.

ஆயுதம் தாங்கிய அமைப்புகள் அந்தப் பகுதியில் செயல்படுவது அந்தப் பகுதி முன்னேறுவதற்கு எப்போதுமே தடையாக இருக்கும் எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உட்பட சகல ஆயுதக் குழுக்களும் ஆயுதங்களை கைவிட்டு, மக்கள் ஆதரவின் மூலமே வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் முக்கிய கருத்து எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ராப்ர்ட் ஓ பிளேக் கூறியுள்ளார்.


இராணுவத் தீர்வில் நம்பிக்கையில்லை; இலங்கை ஜனாதிபதி

இலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவ வழியில் தீர்வினைக் காணமுடியும் என்று தான் நம்பவில்லை என இலங்கை ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சரும், முப்படைகளின் தளபதியுமாகிய மஹிந்த ராஜபக்க்ஷ இன்று தெரிவித்திருக்கிறார்.

செவ்வாய்க் கிழமையன்று அலரி மாளிகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பத்திரிகையாசிரியர்கள் ஆகியோருடன் நடத்திய விசேட சந்திப்பொன்றின்போது கருத்துவெளியிட்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றே காணப்படவேண்டுமென்று கூறியுள்ள அதேவேளை நாட்டில் பயங்கரவாதத்தினை முற்றாக ஒழிக்க தனது அரசு தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுக்குமென்றும் தெரிவித்தார்.

அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவிடம் இனப்பிரச்சினைத் தீர்விற்கான ஒரு தீர்க்கமான அரசியல் நகல்திட்டமொன்றினைத் தருமாறு தான் கோரிவருவதாகவும், மிகவிரைவில் அவர்கள் அதனைத் தருவார்களெனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

தென்னிலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களிற்குப் புலிகள் அமைப்பினரே காரணம் எனக்கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, ஆனாலும் புலிகளிற்கு இவ்வாறான தாக்குதல்களை நடாத்துவதற்கு தென்னிலங்கையிலுள்ள சில தீயசக்திகள் உதவிபுரிந்துவருவதாக தாம் சந்தேகப்படுவதாகவும், இதுகுறித்துத்தீவிர விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.


இலங்கை இனப் பிரச்சினை தீர்வு: அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் இடைக்கால பரிந்துரை வரும் 23ஆம் தேதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றை பரிந்துரைக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு வரும் 23ஆம் தேதி, ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க இருப்பதாகவும், அது இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து உருவாக்கப்பட்ட 13ஆவது சட்டத்திருத்தத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான ஆலோசனைகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்று சில தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்து இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்லஸ் தேவானந்தாவிடம் கேட்டபோது, இந்தக் குழு அளிக்கவிருக்கும் அறிக்கை, ஒரு உடனடி இடைக்கால ஆலோசனையாகவே இருக்கும் என்று கூறினார்.

வடக்கு கிழக்கு மாகாணத்தைப் பிரித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இதற்கு ஒரு இடைஞ்சலாக இருக்குமா என்று கேட்டதற்கு, நீதிமன்றத்தீர்ப்பு மட்டுமல்லாமல், தற்போது நிலவுகின்ற யதார்த்தத்தையும் பார்க்கவேண்டும், இதற்கு மக்கள்தான் பதிலளிக்கவேண்டும் என்று கூறினார் டக்ளஸ்.

நிரந்தரத் தீர்வு வரும் வரை, இரண்டு மாகாணங்களுக்கும் தனித்தனியாக மாகாண சபைகள் அமைக்கப்படலாம் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

இரண்டு தனித்தனி மாகாணங்கள் என்பது , 13ஆவது சட்டத்திருத்தத்தை அடிப்படையாகக்கொண்டதல்லவே, அது எப்படி சாத்தியமாகும் என்று கேட்டதற்கும், அவர் இது ஒரு நிரந்தரத் தீர்வு வரும்வரையிலான இடைக்கால ஏற்பாடுதான் என்று பதிலளித்தார்.

அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு சுயமாக ஒரு தீர்வை முன்மொழியாமல், ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க , 13வது சட்டத்திருத்தத்தை பலப்படுத்துவதை முன்மொழிவது என்பது சரியாக இருக்குமா என்று கேட்டதற்கு, ஜனாதிபதியால் கேட்டுக்கொண்டதற்கு இணங்க என்று கூறுவது சரியல்ல என்றும், பெரும்பான்மையான கட்சிகள் கேட்டுகொண்டதற்கு இணங்கத்தான் அது முன்மொழியப்படுகிறது என்று கூறினார் அவர்.

சுயமான பரிந்துரைகளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு பரிந்துரைக்காமல் இந்த மாதிரி இடைக்காலத் தீர்வாக ஒரு ஏற்பாட்டை முன்வைப்பது என்பது திசை திருப்பும் முயற்சியாக பார்க்கப்படக்கூடுமா என்று கேட்டதற்கு பதிலளித்த டக்ளஸ், அது சரியல்ல, இது ஒரு நிரந்தரத்தீர்வை நோக்கிய ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும் என்றார்.

டாக்டர் விக்னேஸ்வரன்

இதே விடயத்தில், அனைத்துக்கட்சி வல்லுநர் குழுவில் இடம்பெற்றிருந்தவரும், அகில இலங்கை தமிழர் ஐக்கிய முன்னணியின் செயலாளர் நாயகமுமான, டாக்டர் விக்னேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி கேட்டுக்கொண்டது போல, இந்தக் குழு, 13வது சட்டத்திருத்தத்தை எவ்வாறு முழுமையாக நல்லமுறையில் அமல்படுத்துவது என்பது குறித்த அதன் பரிந்துரைகளை எதிர்வரும் 23ம்தேதி சமர்ப்பிக்கும் என்றார்.

இந்தக்குழு தனது இறுதி அறிக்கைக்கு, இறுதி வடிவம் கொடுக்க , மீண்டும் ஓரிரு முறை கூடி, பிப்ரவரி மாத இறுதிவாக்கில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தான் கருதுவதாகவும் அவர் கூறினார்.


மொனராகலை மாவட்டதில் புலிகளின் தாக்குதலில் 10 சிவிலியன்கள் பலி: இலங்கை இராணுவம்

இலங்கையின் தென்பகுதியில் அமைந்திருக்கும் மொனராகலை மாவட்டத்தில் தனமல்வில எனும் பிரதேசத்திலுள்ள கலவல்கல எனும் விவசாயக் கிராமத்தினுள் நுழைந்த விடுதலைப் புலிகளின் ஆயுதக்குழுவொன்று அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சுமார் பத்துக் கிராமத்தவர்கள் கோரமாகக் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

இந்தச் சம்பவத்துடன் சேர்த்து இந்தப்பகுதியில் கடந்த மூன்று தினங்களில் கொல்லப்பட்ட சிவிலியன்களின் எண்ணிக்கை சுமார் 44 ஆக அதிகரித்திருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துவெளியிட்டிருக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு, “நேற்றிரவு சுமார் பத்துமணியளவில் கலவல்கல எனும் இந்த விவசாயக் கிராமத்துக்குச் சென்ற விடுதலைப் புலிகளின் ஆயுதக் குழுவொன்றே இந்தக் கொலைகளைப் புரிந்துள்ளதாக” தெரிவித்திருக்கிறது.

முதலில் கிடைத்த செய்திகளின்படி, மூன்று சிவிலியன்கள் மாத்திரமே இவ்வாறு கொலைசெய்யப்பட்டிருப்பதாகவும், மேலும் மூவர் படுகாயமடைந்ததாகவும் தெரியவந்தது. ஆனால் பிந்திக் கிடைத்த தகவல்களின்படி, அப்பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தினால் உஷார் அடைந்து சிவில் பாதுகாப்பு படையினருக்கு உதவி வழங்கிய மேலும் ஏழு பேர் கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டிருக்கிறது.

மொனாராகலை மாவட்டத்தில் கடந்த புதன்கிழமைகாலை இடம்பெற்ற பயங்கர பஸ்குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் அதில் பயணம்செய்துகொண்டிருந்த சுமார் 28 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, மேலும் 64 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் இடம்பெற்று சுமார் இரண்டு மணித்தியாலத்தின் பின்னர் மொனராகலை மாவட்டத்தில் புத்தல-கதிர்காமம் வீதியில் அமைந்திருக்கும் கல்கே, தம்பாகோட்டே பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ வாகனமொன்றினை இலக்குவைத்து புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு கிளேமோர் குண்டுத் தாக்குதலில் அதில் பயணம் செய்துகொண்டிருந்த மூன்று இராணுவ வீரர்கள் காயமைடைந்திருந்தார்கள்.

அதேதினத்தன்று இப்பகுதியிலுள்ள விவசாயக் கிராமம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மேலும் ஆறு விவசாயிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


இலங்கை நிலைமை குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம்

சைமன் ஹியுஸ்

இலங்கையின் தற்போதைய நிலமைகள் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஒத்திவைப்புத் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டது.

லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் சைமன் ஹியுஸ் அவர்கள் இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டுவந்திருந்தார்.

இப்படி ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்ததன் நோக்கம் என்ன என்று சைமன் ஹியுஸ் பிபிசி சந்தேஷ்யாவிடம் விளக்கினார்.

“இலங்கையில் நடக்கும் விடயங்கள் பிரிட்டனுக்கும், பொதுநலவாய நாடுகளுக்கும் பொதுவாகவே முக்கியத்தும் வாய்ந்தவையாக இருக்கின்றன. குறிப்பாக பிரிட்டனில் வாழும் சுமார் இரண்டரை லட்சம் இலங்கையர்களுக்கு இது முக்கியமான விடயம். இலங்கையில் முப்பது ஆண்டுகளாக நீடித்துவரும் உள்நாட்டுப்போர் மற்றும் அதன் வன்முறைகளை கண்டு உலக நாடுகள் கண்ணீர் சிந்தியிருக்கிறோம். இந்த வாரம் போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக விலகியிருப்பதை பார்த்து மீண்டும் ஒருமுறை அழவேண்டியிருக்கிறது. இன்னும் அதிகமான வன்முறைகளும், கொலைகளும் எதிர்வரும் மாதங்களில் நடக்கக்கூடும் என்று கவலையாக இருக்கிறது. அதனால் இந்த வாரம் இந்த பிரச்சினை குறித்து விவாதிப்பது பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் மூன்று பிரதான கட்சிகளைச்சேர்ந்தவர்களும் முக்கியமாக பங்கேற்றிருந்தார்கள்.” என்றார் சைமன் ஹியுஸ் அவர்கள்.

லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் தெரிவித்த கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை நிலைமை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவலை

இலங்கையில் அதிகரித்துவரும் மோதல்கள் குறித்து கவலை தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு சென்னையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்த தீர்மானம் குறித்து அந்த கட்சியின் தேசிய செயலாளர் ராஜா அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியில், இலங்கை இனப்பிரச்சினைக்கு ராணுவரீதியிலான தீர்வு சாத்தியமல்ல என்றும் அரசியல்ரீதியிலான தீர்வு காண அனைத்து தரப்பின ரும் முயலவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இலங்கை விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு பற்றிய இந்திய இடதுசாரிகளின் நிலை குறித்தும், ஜே.வி.பி. எனப்படும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இந்திய இடதுசாரி கட்சிகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் ராஜா தமது செவ்வியில் தெரிவித்திருக்கும் கருத்துக்களை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

 

 


போர் நிறுத்த உடன்பாடு ரத்தும் பொருளாதார பாதிப்பும்

யாழ்ப்பாணத்தில் ஒரு வங்கி-ஆவனப் படம்
யாழ்ப்பாணத்தில் ஒரு வங்கி-ஆவனப் படம்

இலங்கையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்ட பிறகு முதல் சில ஆண்டுகளில் வடக்கு, கிழக்கு மற்றும் அதை அண்டிய வடமத்தியப் பகுதிகள் உட்பட இலங்கையின் அனைத்துப்பகுதிகளிலும் குறிப்பிடும் அளவுக்கு பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், குறிப்பாக 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியது என்று கருத்து வெளியிடுகிறார் இலங்கை பொருளாதாரப் பகுப்பாய்வாளர் முத்துகிருஷ்ண சார்வானந்தா.

கடந்த நான்கு ஆண்டுகளாகவே தேசியப் பொருளாதாரமும் பிராந்திய பொருளாதாரமும் தொடர்ந்து இறங்குமுமகாவே இருந்து வந்ததாகவும் அவர் கூறினார். இந்த பின்னணியில்,
போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக விலகியிருப்பது பொருளாதார வீழ்ச்சியில் பெரிய பாதிப்புகளை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இல்லை எனவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இலங்கை சுதந்திரமடைந்த பிறகு, அதன் பொருளாதார சரித்திரத்தில் முதல் முறையாக கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பணவீக்கம் தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் இருந்து வருகிறது எனவும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

அவரது பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தால்.

மட்டக்களப்பில் ஹர்த்தால்
மட்டக்களப்பில் ஹர்த்தால்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேசங்களில் இன்று-புதன்கிழமை ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு காரணமாக அந்தப் பிரதேசங்களில் இன்று இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக செய்திகள் கூறுகின்றன.

கடந்த திங்கட்கிழமை அம்மாவட்டதிலுள்ள ஆரையம்பதி-காத்தான்குடி பிரதேச எல்லையிலுள்ள ஸ்ரீ நரசிம்மர் ஆலயம் சில சமூக விரோதிகளால் சேதமாக்கப்பட்டதை கண்டித்தும், அந்தப் பகுதிகளில் இடம்பெற்று வரும் ஆயுத வன்முறையை கண்டித்தும் இன்று ஹர்த்தாலை அனுசரிக்கும்படி தமிழ் மக்கள் ஒன்றியம் எனற ஒரு அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

இதன் காரணமாக அந்தப் பகுதியில் வழமைக்கு அதிகமான போலீசார் பாதுக்காப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் எனவும், சந்தேக நபர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை இரவு காத்தான்குடிப் பகுதியிலுள்ள ஒரு பள்ளிவாசலுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடைபெற்ற பிறகு முஸ்லிம் பிரதேசங்களில் திங்கட்கிழமையன்று ஹர்த்தால் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 


 

இலங்கையின் தென்கிழக்கில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் குறைந்தது 26 பேர் பலியாகி 60 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மொனாராகலை மாவட்டத்தில் இன்றுகாலை இடம்பெற்ற பயங்கர பஸ்குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் அதில் பயணம்செய்துகொண்டிருந்த சுமார் 26 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, மேலும் 67 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்துவெளியிட்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சு, இன்று காலை சுமார் 7.45 மணியளவில் மொனாராகலை மாவட்டத்திலுள்ள புத்தலவிற்கும் நியாண்டகல பகுதிகளுக்குமிடையே பயணம்செய்துகொண்டிருந்த பஸ்வண்டியொன்று ஹெலகம ஒக்கம்பிட்டிய மூன்றாவது மைல்கல் பகுதியில் புலிகளின் கிளேமோர் குண்டுத்தாக்குதலிற்கு இலக்காகியிருக்கிறது என்றும் இந்தக் குண்டுவெடிப்பினைத் தொடர்ந்து எஞ்சித்தப்பிய சிவில் பயணிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறது.

பிந்திக்கிடைக்கும் தகவல்களின்படி, இதுவரை சுமார் 26 சிவிலியன்கள் இதில் கொல்லப்பட்டிருக்கும் அதேவேளை, காயமடைந்தவர்களின் இரண்டு சிறுவர்கள் உட்பட எட்டுப்பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சு, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள புத்தல மற்றும் மொனராகல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

இந்தச் சம்பவம் இடமெற்றும் சுமார் இரண்டு மணித்தியாலத்திற்குள் மொனராகலை மாவட்டத்தில் புத்தல-கதிர்காமம் வீதியில் அமைந்திருக்கும் கல்கே, தம்பாகோட்டே பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ வாகனமொன்றினை இலக்கு வைத்து புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு கிளேமோர் குண்டுத் தாக்குதலில் அதில் பயணம் செய்துகொண்டிருந்த மூன்று இராணுவ வீரர்கள் காயமைடைந்திருக்கிறார்கள் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

இதேவேளை, மொனராகலை, புத்தல பகுதியில் அமைந்திருக்கும் ஒக்கம்பிட்டிய தம்பேயாய கிராமப்பகுதியில் சேனைப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயிகள் ஐவர் சுடப்பட்டும், வெட்டப்பட்டும் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

இது குறித்து செய்திவெளியிட்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சு, இந்தச் சம்பவத்தினை புலிகளின் அணியொன்றே மேற்கொண்டதாக சம்பவத்தில் காயங்களுடன் உயிர்தப்பிய சிவிலினை மேற்கோள்காட்டி தெரிவித்திருக்கிறது.

ஊவா மாகாணத்தில் அமைந்திருக்கும் மொனராகலை மாவட்டத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த வன்முறைச் சம்பவங்களையடுத்து ஊவா மாகாணத்திலுள்ள பாடசாலைகளை அடுத்த மூன்று தினங்களிற்குத் தற்காலிகமாக மூட உள்ளூர் அதிகாரிகள் தீர்மானித்திருக்கிறார்கள்.

 


புத்தல மக்களின் பாதுகாப்புக்கு துப்பாக்கிகள் வழங்கப்படும் என்கிறார் அமைச்சர்

புத்தலப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு
புத்தலப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கையின் தென்கிழக்கில் இன்று இடம்பெற்ற பஸ் குண்டுத் தாக்குதலையடுத்து அந்தப் பகுதியிலுள்ளவர்களின் பாதுகாப்பு கருதி சுமார் 500 பேருக்கு துப்பாக்கிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் தேச நிர்மாண அமைச்சர் ஜெகத் புஷ்பகுமார பிபிசியின் சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்துக்கு பாதுகாப்பு அகைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அந்தப் பகுதியில் பணியாற்றும் ஊர்காவல் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படியும் ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கையின் கிழக்குப் பகுதியை அரசு முழுமையாக கைப்பற்றிய பிறகு அந்தப் பகுதியிலிருந்த சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டு நடமாடும் காவலர்களே பணியாற்றுவதாகவும், இதன் காரணமாகவே அந்தப் பகுதிக்கு அருகில் இருக்கும் யாலவனப்பகுதியில் மறைந்திருக்கும் சில விடுதலைப் புலிகளுக்கு உணவும் ஆயுதங்களும் கிடைக்க வழிசெய்தது எனவும் அமைச்சர் ஜெகத் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

 


Posted in Attacks, Batticaloa, dead, Economy, Eelam, Eezham, Fights, Finance, Killed, LTTE, Murder, Peace, Sri lanka, Srilanka, Vanni, Wanni, War | 2 Comments »

Jan 12 – Peace Accord, LTTE, AK Anotony, Eelam, Sri Lanka Muslim Congress

Posted by Snapjudge மேல் ஜனவரி 13, 2008

போர் நிறுத்தத்தில் இருந்து இலங்கை அரசு விலகியிருப்பதால் உதவி வழங்கும் நாடுகள் வருத்தம்

இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிக்கொண்டிருப்பதற்கு இலங்கைக்கு உதவி வழங்கும் டோக்கியோ மாநாட்டின் இணைத்தலைமை நாடுகள் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளன. அத்தோடு இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ வழியில் தீர்வினை ஒருபோதும் காணமுடியாது என்றும் அவை தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே மற்றும் ஜப்பான் போன்ற நான்கு நாடுகளும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையொன்றில், பேச்சுக்களினூடாக அரசியல் தீர்வொன்றினைக் காண்பதற்கு தமது முழு ஆதரவினையும் வழங்கதயாராக இருப்பதாகவும், நோர்வேயின் அனுசரணைப்பணி தொடரப்படவும் தமது ஆதரவினை வெளியிட்டுள்ளன.

நின்றுநிலைக்கக்கூடிய அரசியல் தீர்வுத்திட்டமொன்றினை பூர்த்திசெய்யும்படி இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள இணைத்தலைமை நாடுகள், சகலதரப்பினரும் சிவிலியன்களைப் பாதுகாப்பது தொடர்பாக சர்வதேச சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் தெரிவித்திருக்கின்றன.

இணைத்தலைமை நாடுகளின் சார்பில் இலங்கைக்கான நோர்வே தூதரகம் வெளியிட்டுள்ள இந்தக் கூட்டறிக்கையில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினரும் மனிதாபிமான தொண்டு நிறுவனங்களின் உதவிப்பணிகள் தேவைப்பட்ட மக்களைச் சென்றடைவதற்கு அனுமதிக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

 


இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே நல்லது – இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே ஏண்டனி
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே ஏண்டனி

இலங்கை இனப் பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண்பதைவிட, அரசியல் தீர்வு காண்பதே அந்த நாட்டுக்கு நல்லது என்றும் இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. ஏண்டனி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

சனிக்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது, செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில், இலங்கை அரசுக்கு இந்தியா உதவுமா என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, “நமது அணுகுமுறை அடிப்படையானது. இலங்கை தனி இறையாண்மை கொண்ட, அண்டை நாடு என்ற முறையில் அந்த நாட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறோம். அந்த நாட்டில் நடைபெறும் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான அனைத்து உரிமைகளும் அந்நாட்டு அரசுக்கு உண்டு. ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண்பதைவிட, அரசியல் தீர்வு காண்பதே அந்த நாட்டுக்கு நல்லது’’ என்றார் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஏண்டனி.

இதனிடையே, இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரணாப் முகர்ஜி, “இலங்கைப் படைகளுக்கும் எல்டிடிஇ பயங்கரவாதிகளுக்கும் இடையிலான சண்டை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பயங்கரவாதத்தைப் பொருத்தவரை, அதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. எந்த ஒரு நாடு பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தாலும், அந்த நாட்டின் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு உரிமை உண்டு’’ என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

“அதே நேரத்தில், தமிழ் சிறுபான்மையினரின் நியாயமான கோரிக்கைகளை, அந்த நாட்டின் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு நிறைவேற்ற இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது’’ என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்திருக்கிறார்.


இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் உட்கட்சி பூசல்

அமைச்சர் அமீர் அலி
அமைச்சர் அமீர் அலி

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமது கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக சனிக்கிழமையன்று நடைபெற்ற கூட்டமொன்று அமைச்சரொருவரின் பின்னணியில் குழப்பப்பட்டதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.

இக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ள அக்கட்சியின் அரசியல் உயர் பீட உறுப்பினரான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கூட்டத்தை குழப்பிய குழுவினரால தமது வாகனமும் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றார்.

அரசாங்கம் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டு விட்டு ஜனநாயக விரோதப் போக்கை கடைப் பிடிப்பதாகவும் குறிப்பிடும் அவர், இது தொடர்பாக பொலிசிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.

தன்னை தொடர்புபடுத்தி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினால் தெரிவிக்கப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார் அமைச்சர் அமீர் அலி.

Posted in Accord, Anotony, Congress, defence, Defense, Eelam, Eezham, LTTE, Peace, SLMC, Sri lanka, Srilanka, War | Leave a Comment »

Jan 11 – LTTE, Eezham, Sri Lanka News and Updates from BBC

Posted by Snapjudge மேல் ஜனவரி 12, 2008

போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற புலிகளின் கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது

முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ஆகியோரிடையே போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது

இலங்கை அரசாங்கத்துக்கும் தமக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று விடுதலைப்புலிகள் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துவிட்டது.

இருதரப்பாலும் பல தடவைகள் மீறப்பட்ட இந்த 2002ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை கைவிடப்போவதாக அரசாங்கம் ஏற்கனவே முறையாக அறிவித்துவிட்டது.

விடுதலைப்புலிகளின் இந்த கோரிக்கை ஒன்றுமே இல்லாதது என்றும் மிகவும் காலம் தாழ்த்தியது என்றும் அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இலங்கையின் தலைநகர் கொழும்பின் முக்கிய ரயில் நிலையம் அருகே ஒரு சிறிய குண்டு ஒன்று வெடித்ததில், குறைந்தது ஒருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.


ஜப்பான் விசேட சமாதானத் தூதுவர் கொழும்பு விரைகிறார்

யாசூஷி அகாஷி
ஜப்பான் விசேட தூதர் அகாஷி

நோர்வே அனுசரணையுடன் இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 2002 ஆண்டில் செய்து கொண்ட போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக இலங்கை அரசு கடந்த வாரம் வெளியேறியுள்ள நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த முயற்சிகளை வலுவாக ஆதரித்து வந்த இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் விசேட தூதுவர் யாசூஷி அகாஷி அவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு செல்லவிருக்கிறார்.

இது குறித்து இலங்கைக்கான ஜப்பானியத் தூதரகம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இரண்டு நாட்கள் பயணமாக இலங்கை வரவிருக்கும் அகாஷி அவர்கள், சமாதான முயற்சிகள் குறித்த இலங்கை அரசின் தற்போதைய நிலைப்பாடு குறித்தும், அதனது எதிர்காலம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாட உள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.

இவரது பயணம் குறித்து டோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பான் வெளியுறவு அமைச்சர் மசஹிகோ கொமுரோ அவர்கள், போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு விலகியிருக்கும் முடிவு, அங்குள்ள மோதலை மேலும் அதிகரிக்கச்செய்யும் என்று ஜப்பான் கவலைப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.

அகாஷி அவர்கள் தமது இலங்கை பயணத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், மற்ற மூத்த அமைச்சர்களையும் சந்திக்க இருப்பதாகவும், ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.


முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் கடற்புலிகளின் தளம் மீது விமானப்படை குண்டுவிச்சு

வவுனியாவிலிருந்து புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு செல்லத் தயாராகும் படையினர்

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் கடற்புலிகளின் தளமொன்றினைத் தாம் குண்டுவீசித் தாக்கி அழித்திருப்பதாக இலங்கை விமானப்படை தெரிவித்திருக்கிறது.

இது குறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்றில், விமானப்படையின் தரைக்குண்டுவீச்சு விமானங்கள் அலம்பில் பகுதியில் அமைந்துள்ள கடற்புலிகளின் தளமொன்றினைக் குண்டுவீசித் தாக்கியதாகவும், விமானிகளின் தகவல்களின்படி இந்தக் கடற்புலிகளின் முகாம் முற்றாக நிர்மூலம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. ஆனாலும், இது குறித்து விடுதலைப்புலிகள் எவ்வித கருத்துக்களையும் இதுவரை வெளியிடவில்லை.

இதேவேளை, மன்னார் உயிலங்குளம் பகுதியில் விடுதலைப்புலிகளின் படையணிகளுக்கும் முன்னேற முயற்சித்துவரும் அரச படைகளிற்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த நான்கு பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டதாகவும், குறைந்தபட்சம் 13 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

இந்த மோதலின் போது அரச படைத்தரப்பினருக்கு எவ்வித இழப்புக்களும் ஏற்படவில்லை என்றும், கைப்பற்றப்பட்ட மூன்று விடுதலைப்புலிகளின் சடலங்களை சர்வதேச செஞ் சிலுவைச் சங்கத்தினூடாக புலிகளிடம் கையளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்திருக்கிறது.

இதேவேளை இந்த மோதல்கள் குறித்து செய்தி வெளியிட்டுள்ள புலிகள் ஆதரவு இணைய தளங்கள், மன்னார் மாவட்டத்தில் உயிலங்குளம் மற்றும் பாலமோட்டை போன்ற பகுதிகளினூடாக செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்னேற முயற்சித்த படையினரை புலிகளின் தாக்குதல் படையணிகள் வழிமறித்துக் கடும் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் இதனால் படையினர் தமது முயற்சிகளைக் கைவிட்டு பாரிய இழப்புக்களுடன் தமது பழைய நிலைகளிற்குத் திரும்பிவிட்டதாகவும் தெரிவித்திருக்கின்றன.

அத்துடன் பாலமோட்டை பகுதியில் இடம்பெற்ற மோதல்களின்போது ஒரு படைவீரர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இந்தத் தாக்குதலின் போது புலிகள் தரப்பில் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையென்றும் இந்த இணையதளங்கள் தெரிவித்திருக்கின்றன.


Posted in BBC, Colombo, Eelam, Eezham, Japan, LTTE, Manaaar, Manaar, Mannar, Peace, Sri lanka, Tigers, Updates, War | Leave a Comment »

LTTE’s Head of Army Intelligence killed in Claymore ambush

Posted by Snapjudge மேல் ஜனவரி 7, 2008

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர் கொல்லப்பட்டுள்ளார்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய இலுப்பைக்கடவை பகுதியில் வேன் ஒன்றின் மீது இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படை அணியினர் சனிக்கிழமை பிற்பகல் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் ஒன்றில் விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு பொறுப்பாளராகிய சார்ல்ஸ் எனப்படும், கேர்னல் அருள்வேந்தன் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.

ஆனால், அருள்வேந்தன் கிளேமோர் மூலம் கொல்லப்படவில்லை, அவர் மோதலின் போதே கொல்லப்பட்டார் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசியின் சிங்கள சேவையிடம் தெரிவித்தார்.

இவருடன் பயணம் செய்த கேர்னல் தரத்திலான வேறு 3 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

மன்னார் இலுப்பைக்கடவைக்கும் பள்ளமடுவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இவர்கள் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது, விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் நீண்டகாலமாக இருந்து வந்த கேர்னல் சார்ல்ஸ் கடந்த 2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் புதிதாக உருவாக்கப்பட்ட இராணுவ புலனாய்வுத் துறையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் என்றும் விடுதலைப் புலிகள் விபரம் வெளியிட்டிருக்கின்றனர்.

இதற்கிடையே, முகமாலையில் இராணுவத்தின் முன்னரங்க பகுதி மீது விடுதலைப் புலிகள் ஞாயிற்றுக்கிழமை காலை நடத்திய திடீர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

சுமார் 25 நிமிடங்கள் இடம்பெற்ற இந்தத் தாக்குதலின்போது தமது தரப்பில் சேதங்கள் எதுவுமில்லை என்றும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

முகமாலை முன்னரங்க பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது நடத்திய தாக்குதலில் 4 விடுதலைப் புலிகளும் 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்திருக்கின்றது.


ஜயந்த தனபாலா ராஜினாமா

இலங்கை ஜனாதிபதியுடன் ஜயந்த தனபாலா
இலங்கை ஜனாதிபதியுடன் ஜயந்த தனபாலா

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விடுதலைப் புலிகள் உடனான சமாதான முயற்சியில் பிரதான ஆலோசகராக செயற்பட்ட ஜயந்த தனபாலா ராஜினாமா செய்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடன் கடந்த 2002 ம் ஆண்டு செய்து கொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து தன்னிச்சையாக விலகி கொண்டதாக அரசாங்கம் அறிவித்த சில தினத்தில் இந்த ராஜினாமா இடம்பெற்றுள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக ஜயந்த தனபாலா கூறியுள்ளார்.

கலாநிதி ஜயந்த தனபாலவை அரசாங்க சமாதான செயலகத்தின் பணியாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நியமித்திருந்தார், அதன் பின்னர் 2005 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புதிய ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ இவரை தனது பிரதான ஆலோசகராக நியமித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் செயலாளர் நாயகம் பதவிக்கு இலங்கை சார்பில் இலங்கையின் சார்பின் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார் ஜயந்த தனபாலா.

 


Posted in ambush, Army, Charles, CIA, dead, Eelam, Eezham, FBI, I&B, Iluppaikkadavai, Intelligence, Jaffna, KGB, Killed, LTTE, Mannaar, Military, Murder, Pallamadu, Pirapaharan, Ravishankar, RAW, Shanmuganathan, Shanmuganathan Ravishankar, Sri lanka, Srilanka, Vanni, War | Leave a Comment »

Kenya’s elections: A very African coup – Twilight robbery, daylight murder; After a stolen election, ethnic cleansing

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2008

திருடிய வெற்றியும் தொலைந்துபோன அமைதியும்

எம். மணிகண்டன்

இந்தியப் பெருங்கடலையொட்டிய இயற்கை எழில் மிக்க கடற்கரைகள், வண்ண மயமான விளையாட்டு மைதானங்கள் ஆகியவைதான் கென்யாவைப் பற்றி வெளிநாட்டினருக்கு அதிகமாகத் தெரிந்தவை.

Economistரத்த ஆறுகள் ஓடும் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சற்று மாறுபட்டது கென்யா. இந்தியாவுக்கு ஒரு நேருவைப் போல, கென்யாவுக்கு ஒரு கென்யாட்டா கிடைத்தார். சாகும் வரை அவர் அதிபராகவும் இருந்தார்.

கென்யாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறையிலேயே கழித்தவர் என்பதில் நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடத் தகுந்தவர் கென்யாட்டா. வளர்ச்சியை நோக்கிய உள்கட்டமைப்பு, கருணைமிக்க நிலச் சீர்திருத்தம், கரிசனம் கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தம் என ஜோமோ கென்யாட்டாவின் பணிகள் அவருக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தன.

சூடான் மற்றும் சோமாலிய அமைதி முயற்சிகளில் ஈடுபடும் அளவுக்கு கென்யாவை உயர்த்தியது கென்யாட்டாதான் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்க உண்மை. இவ்வளவு பெருமைக்குரியவரான கென்யாட்டா ஒரு சாத்தானையும் விட்டுச் சென்றார். அதுதான் இனப் பாகுபாடு. உலக நாகரிகத்தின் முன்னோடிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு நாடு, ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டிய ஒரு நாடு, மிக மோசமான கலவர பூமியாக மாறிக் கொண்டிருப்பது இனக் கலவரங்களால்தான்.

கென்யாவில் 40-க்கும் அதிகமான பழங்குடி இனத்தவர்கள் வசித்து வந்தாலும், கிக்கூயூ இனத்தவரின் எண்ணிக்கை மற்றவர்களைக் காட்டிலும் அதிகம். 1960-களில் சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை மூன்றே அதிபர்களைத்தான் கென்யா கண்டிருக்கிறது. அவர்களில் இருவர் கிக்கூயூ இனத்தவர். கென்யாட்டாவும், தற்போதைய அதிபர் கிபாகியும்தான் அந்த இருவர். நீண்டகாலமாகவே பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பதும், நாட்டின் முக்கிய விவசாய நிலங்களை வைத்திருப்பதும், பெரிய பதவிகளைக் கைப்பற்றுவதும் கிக்கூயூக்கள்தான்.

தூய்மையான நிர்வாகம் என்ற கோஷத்தோடு, கடந்த 2002 தேர்தலில் வென்றவர்தான் கிபாகி. இவரது அதிகார ஆக்கிரமிப்புதான் இப்போது பிரச்னையாகியிருக்கிறது. அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கிபாகி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் வன்முறை வெடித்திருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நாடு முழுவதும் பதற்றம் நிறைந்திருக்கிறது.

அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றார் என்பது தமக்கு உண்மையிலேயே தெரியாது எனவும், ஆளுங் கட்சியினரின் நெருக்கடி காரணமாகவே கிபாகி வெற்றி பெற்றதாக அறிவித்ததாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. கிபாகியை எதிர்த்துப் போட்டியிட்ட லூ இனத்தைச் சேர்ந்த ஓடிங்கோ தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளவில்லை.

கென்யாவில் கட்சியைப் பார்த்து யாரும் வாக்களிப்பதில்லை. இனம்தான் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நான் உங்கள் இனத்தைச் சேர்ந்தவன்; நீங்கள் தாராளமாக என்னை நம்பலாம் என நேரடியாகவே வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவதுதான் தேர்தல் வெற்றிக்கான சூத்திரம். இந்தப் பின்னணியில், ஏற்கெனவே கிக்கூயூ இனத்தவரால் தாங்கள் ஒடுக்கப்பட்டதாகக் கருதும் மற்ற இனத்தவர் இத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வன்முறையில் இறங்கிவிட்டனர். எங்கெல்லாம் கிக்கூயூ இனத்தவர் இருக்கின்றனரோ அங்கெல்லாம் படுகொலைகள் நடந்தவண்ணம் உள்ளன.

கென்ய வன்முறைகளுக்கு அந்நாட்டுக்கு நிதியுதவி செய்யும் பிரிட்டனும் அமெரிக்காவும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. ஆனால் எந்த நாட்டில் சண்டை நடந்தாலும் ஆயுதங்கள் விற்பனையாகும் என்ற எண்ணத்தில் மேலை நாடுகளுக்கு உள்ளூர மகிழ்ச்சிதான்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு நாட்டையும் தங்களது வாடிக்கையாளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்குத்தான் மேலை நாடுகள் உண்மையிலேயே முயன்று வருகின்றன. அதனால் போர் ஏற்படும்வரை காத்திருந்து ஆயுதங்களை விற்பனை செய்வதுதான் அவர்களின் எண்ணம். எண்ணெய் வளங்களில் முதலீடு செய்திருக்கும் சீனாவும் இப்போதைக்கு உதவிக்கு வருவதுபோல் தெரியவில்லை. எனவே, எந்த நாடு உதவிக்கு வந்தாலும் அது லாப நோக்கத்துடன்தான் இருக்கும்.

ஆக, கென்யா இன்னொரு உகாண்டாவாக மாறாமல் தடுக்கும் பொறுப்பு கிபாகிக்கும் ஓடிங்கோவுக்கும்தான் உள்ளது. 300-க்கும் அதிகமானோர் பலியான பின்னரும் அமைதி முயற்சி எதையும் மேற்கொள்ளாத அதிபர் கிபாகி மீது ஆப்பிரிக்க மக்களின் மொத்தக் கோபமும் திரும்பியிருக்கிறது.

பதவியைத் துறந்துவிட்டு இடைக்கால அரசை நியமித்து புதிதாகத் தேர்தல் நடத்துவது ஒன்றுதான் இப்போதைக்கு கிபாகி முன்னால் இருக்கும் ஒரே வாய்ப்பு. பிரச்னை ஏற்படலாம் என்று தெரிந்தவுடன், அதிகாரத்தைத் தூக்கி எறிந்த நெல்சன் மண்டேலா போல் போற்றுதலுக்குரிய தலைவராக மாற கிபாகிக்கு இது நல்ல சந்தர்ப்பம்.

இல்லையெனில், இராக் ஆக்கிரமிப்புக்கு முன்பு டோனி பிளேர் கூறியது போல், நீதியை நிலைநாட்ட “அடித்துக் கொள்ள’ வேண்டியதுதான்; மேலை நாடுகளுக்குச் சாதகமாக!

 


 

கென்யாவில் வன்முறை காரணமாக 1.80.000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்

கென்யாவில் கடந்த வாரம் நடந்த தேர்தலைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில் குறைந்தது ஒரு லட்சத்து எண்பதனாயிரம் பேர் இடம் பெயர்ந்திருப்பதாக ஐநாமன்றத்தின் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இவர்களில் சிலர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக் கிறார்கள். சிலர் காவல்நிலையங்களிலும், சிலர் தேவாலயங் களிலும் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.

இப்படியான அகதிகள் எல்லோருமே பட்டினியாக இருப்ப தாகவும், பல குழந்தைகள் வெயிலுக்கு பலியாகி இறந்து விட்டதாகவும், இந்த வன்முறைகளில் அதிகம் பாதிக்கப்பட்ட கென்யாவின் மேற்கு பிரதேசங்களில் ஒன்றில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
கென்யா முழுவதும் சுமார் ஐந்து லட்சம் கென்யர்கள் அவசர உதவி தேவைப்படும் நிலையில் இருப்பதாக, நைரோபியில் இருக்கும் ஐநா மன்றத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 


புதிய தேர்தலுக்கு தயார்- ஆனால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் என்கிறார் கென்ய அதிபர் கிபாக்கி

கென்ய அதிபர் கிபாக்கி
கென்ய அதிபர் கிபாக்கி

கென்யாவில் புதிதாக தேர்தல் நடத்தப்படுவதை கொள்கை அடிப்படையில் எதிர்க்கவில்லை, ஆனால் நீதிமன்றம் ஒன்று உத்தரவிடும் பட்சத்தில்தான் புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று அதிபர் முவாய் கிபாக்கி விரும்புகிறார் என அந்நாட்டின் அரசு சார்பாகப் பேசவல்லவர் கூறியுள்ளார்.

ரைலா ஒடிங்கா தலைமையிலான ஓ.டி.எம். எதிர்க்கட்சியானது, சர்வதேச நாடுகளின் கண்காணிப்பின் கீழ் மறுபடியும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், ஆனால் இவ்விவகாரத்தை நீதிமன்றத்திடம் கொண்டுசெல்லப்போவதில்லை, ஏனெனில் நீதிமன்ற முடிவின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லையென்று கூறியிருந்தது.

இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கான புதிய ராஜீய முயற்சிகள் நடந்துவருகின்றன. அதிபர் கிபாகு மற்றும் ஒடிங்கா ஆகியோருடன் நொபெல் பரிசு வென்ற தென்னாப்பிரிக்க பிரமுகர் டெஸ்மண்ட் டுடு பேச்சுநடத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் புஷ்ஷின் தூதர் ஜெண்டயி ஃப்ரேஸார் நைரோபி சென்றுகொண்டிருக்கிறார்.

 


தற்போதைய கென்ய அரசியல் நெருக்கடியின் பின்னணி என்ன?

நைரோபியில் தொடர்ந்து பதட்டம்
நைரோபியில் தொடர்ந்து பதட்டம்

தலைநகர் நைரோபி மற்றும் பிற நகர வீதிகளில் அரங்கேறிவரும் அரசியல் நெருக்கடிக்கு, நாட்டின் சக்திவாய்ந்த இரண்டு இனப்பிரிவுகளான – அதிபர் கிபாகியின் ககிகுயு பழங்குடியினத்துக்கும் எதிர்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்காவின் லுஒ இனத்துக்கும் இடையில் வரலாற்று ரீதியாயக நீடித்துவரும் பகைமை ஒரு பங்கில் வேராக அமைந்துள்ளது என்று சொல்லலாம்.

அதிபர் கிபாகியின் இனப்பிரிவான கிகுயுதான் கென்யாவின் மிகப் பெரிய மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் சக்திவாய்ந்த இனமாகும். இவ்வினத்தார் அதிகம் பேர் நைரோபியைச் சுற்றி வாழ்கிறார்கள். இவ்வினத்தாரின் தலைவர் ஜோமோ கென்யாட்டாதான் சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் முதல் அதிபரானவர்.

நாட்டின் மேற்குப் பகுதியில் உகாண்டாவுடனான எல்லைக்கு அருகில் பரவலாக வாழும் லுஒ இனத்தார், பலமுறை அரசுப் பிரதிநிதிகளாக இருந்துள்ளனர் என்றாலும் அவர்களில் மிகப் பிரபலமான தலைவர் காலஞ்சென்ற ஒகிங்கா ஒடிங்கா ஆவார். இவரின் மகன் தான் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்கா.

கிகுயுவுக்கும் லுஒவுக்கும் இடையே நெடுநாளாக அரசியல் போட்டி பகைமை இருந்துவருகிறது என்றாலும் கென்யா பல ஆண்டுகளாக ஒரு அமைதியான நாடாகவே திகழ்ந்துவருகிறது.

சர்ச்சைக்குரிய தேர்தல் முடிவுகள் தொடர்பான தற்போதைய அரசியல் நெருக்கடியின் பின்னணி குறித்து எமது உலக விவகார செய்தியாளர் மார்க் டொய்ல் விளக்கும் செய்திக்குறிப்பின் தமிழ் வடிவத்தை நேயர்கள் கேட்கலாம்.

 


 

 

Posted in africa, Ancestry, Arms, AU, Autocracy, Autocrats, Britain, Cabinet, China, Citizen, Cleansing, Congo, Constituency, Democracy, Dictators, Dictatorship, Eldoret, Election, Elections, Ethiopia, fraud, Government, Govt, Kenya, Kibaki, Kikuyu, Kingdom, Kings, Kisumu, Kivuitu, Luo, margin, Military, Mombasa, Monarchy, Monitors, Murder, Mwai, Nairobi, Nigeria, Nyanza, Odinga, Opposition, people, Polls, Protest, protesters, Race, Racial, Raila, Re-election, rigging, Robbery, Somalia, Vote, voters, War, Weapons | Leave a Comment »

Sri Lanka scraps truce pact with LTTE & Ceasefire agreement will end after Thai pongal: Tamil Tigers

Posted by Snapjudge மேல் ஜனவரி 3, 2008

விடுதலைப் புலிகளுடனான போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் உத்தியோகப்பூர்வ முன்னறிவிப்பு

கடந்த 2002ஆம் ஆண்டு பிப்பிரவரி 22 ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்புடன் செய்துகொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் உத்தியோகப்பூர்வமாக 14-நாள் முன்னறிவிப்பினை வழங்கியிருக்கிறது.

போர்நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவதாக இலங்கை அரசாங்கம் கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தது.

இது தொடர்பாக இலங்கை வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், போர்நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் கொடுக்கப்பட்டுள்ள இந்த 14-நாள் முன்னறிவிப்பின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி போர்நிறுத்த உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக முடிவிற்குவரும் என்று தெரிவித்திருக்கிறது.

அத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் 2002ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் திகதி உருவாக்கப்பெற்ற இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் செயற்பாடுகளும் முடிவிற்குவரும் என வெளிநாட்டமைச்சின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை இன்று பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா, பல்லாயிரக்கணக்கான தடவைகள் புலிகள் அமைப்பினரால் மீறப்பட்டு செயலற்றுப்போயுள்ள ஒரு ஒப்பந்தத்தினைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்க அரசு தயாராக இல்லை என்று தெரிவித்தார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் பேச்சுக்களில் ஈடுபடுவது பயனற்றது என்று தெரிவித்த அமைச்சர் யாப்பா, எதிர்காலத்தில் நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, புலிகள் ஆயுதங்களை கீழேவைத்துவிட்டு பேச்சுகளிற்குத் தயார் என்று கூறினால் அது குறித்து பரிசீலிக்க அரசு தயாராக இருக்கிறது என்றும் அதேவேளை அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவினூடாக அரசியல் தீர்வொன்றினைக் காண்பதில் அரசு தீவிரமாக ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

இலங்கை அரசின் இந்த பாரதூரமான முடிவு தமக்குக் கவலையளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள நோர்வேயின் இலங்கைக்கான விசேட சமாதானத்தூதுவர் எரிக் சொல்க்ஹெய்ம், வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு மேலும் வன்முறைகள் அதிகரிக்கவே வழிகோலும் என்றும் அச்சம் வெளியிட்டுள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்ற இலங்கை அரசின் அறிவிப்பு குறித்து இலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இன்னமும் கருத்து எதையும் வெளியடவில்லை. இந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ரவி கருணநாயக அவர்கள் இலங்கை அரசின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக நார்வே அரசுக்கு தெரிவிக்கப்பட்ட பிறகுதான் தங்களது கட்சி இது குறித்து கருத்து வெளியிட முடியுமென்று தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு – கண்டனம்

இரா.சம்பந்தர்

அரசாங்கத்தின் அறிவிப்பு பற்றி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், இலங்கை அரசாங்கம் போர்நிறுத்தத்திலிருந்து விலகியதாக அறிவித்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை ஏனெனில் அந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் அப்பட்டமாக மீறிவந்துள்ளது என்று தெரிவித்தார்.

இராணுவ ரீதியில் ஒப்பந்தம் மீறப்பட்டது மட்டுமின்றி, வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு அவர்கள் சொந்த இடங்களை விட்டு அகதிகளாக வெளியேறும் நிலை இந்த போர்நிறுத்த காலத்தில் ஏற்பட்டதுதான் தாங்கள் இங்கே வலியுறுத்துகின்ற விஷயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் போர்நிறுத்த விலகல் அறிவிப்பு குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா பிரிவின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் யோகராஜன், மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான ராதாகிருஷ்ணன் ஆகியோரது கருத்துகளையும் நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


வட இலங்கை மோதல்கள் – முரண்பட்ட தகவல்கள்

பதுங்கு குழி

மன்னார் பாலைக்குழி பகுதியில் வியாழக்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டைகள் இடம்பெற்றதாகவும், இதில் 6 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் 6 படையினர் காயமடைந்ததாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் 6 பதுங்கு குழிகளைக் கொண்ட முன்னணி பாதுகாப்பு வரிசையொன்றும் படையினரால் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

இந்த மோதல்களை உறுதிப்படுத்தியுள்ள விடுதலைப் புலிகள், மன்னார் பாலைக்குழி அணைக்கட்டு பகுதியில் பெரும் எடுப்பில் முன்னேற முயன்ற இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், இதில் 10 படையினர் கொல்லப்பட்டு 15 பேர் காயமடைந்ததாகவும் தங்கள் தரப்பில் சேதம் எதுவுமில்லை என்றும் அறிவித்திருக்கின்றனர்.

வவுனியா நாவற்குளம் பகுதியில் வியாழனன்று இடம்பெற்ற மற்றுமொரு மோதல் சம்பவத்தில், மேலும் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

இதற்கிடையில், மன்னார் உயிலங்குளம் மணற்குளம் பகுதியில் மோட்டார் குண்டு ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 4 சிவிலியன்கள் காயமடைந்ததாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திலிருந்து ஏவப்பட்ட மோட்டார் குண்டே வீழ்ந்து வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு பெண்களும், 13 வயது சிறுவன் ஒருவனும், 7 வயதுடைய சிறுமி ஒருவருமே இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாக மன்னார் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். காயமடைந்தவர்கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கண்ணி வெடி

இதேவேளை, மணலாறு பதவியா பகுதியில் இராணுவ டிரக் வண்டியொன்று அமுக்க வெடியில் சிக்கியதையடுத்து, 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 4 படையினர் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.


மகேஸ்வரன் கொலையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் கடையடைப்பு

சுட்டுக்கொல்லப்பட்ட மகேஸ்வரன்

கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வளவினுள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாழனன்று வவுனியாவில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. வங்கிகள், அலுவலகங்கள் என்பனவும் இயங்கவில்லை.

யாழ் நகரில் கடைகள் திறக்கப்படாதிருந்ததாகவும், இராணுவத்தினர் வந்து கடைகளைத் திறக்குமாறு உத்தரவிட்டதையடுத்து, கடைகள் யாவும் திறக்கப்பட்டதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சொந்த ஊராகிய யாழ்ப்பாணம் காரைநகரில் கறுப்பு வெள்ளை கொடிகள் கட்டப்பட்டு, கடைகள் அலுவலகங்கள், பாடசாலைகள் என்பன மூடப்பட்டு காரைநகர் பிரதேசம் சோகமயமாகக் காட்சியளித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, மகேஸ்வரனின் கொலை தொடர்பாக, யாழ்பாணத்தைச் சேர்ந்த வசந்தன் என்ற நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நபர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழும், மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது அவருடைய பாதுகாப்பு பணியிலும் இருந்துள்ளார் என்றும் ஆனால் இந்தக் கொலை குறித்து யார் மீதும் இலங்கை அரசு சந்தேகப் படவில்லை என்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக பேசவல்ல இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்கவல்ல தெரிவித்திருந்தார்.

ஆனால் ஈ.பி.டி.பி.யுடனோ தன்னுடனோ வசந்தன் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. இந்த செய்தி எவ்வித அடிப்படையும் இல்லாத பொய் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

Posted in Agreement, Assassin, Assassinations, Attacks, Ceasefire, dead, Douglas, Eelam, Eezham, EPDP, Jaffna, Killed, LTTE, Mahesvaran, Maheswaran, Mannaar, Mannar, Murder, Peace, Ranil, Sri lanka, Srilanka, Tamil, Tamil Tigers, Tigers, Truce, Vavuniya, War, wavuniya, Wawuniya | 1 Comment »

Sri Lanka to ban Tamil Tigers, abrogate CFA, says Gotabhaya

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு விலகல்

இலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பிபிசியிடம் கருத்து வெளியிட்ட இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், கள நிலவரங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை புலிகள் பத்தாயிரம் தடவைகளுக்கும் மேலாக மீறியிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

அமைதி வழியில் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியுமா என்பதை பார்ப்பதற்காகத் தான் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டதாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் அதற்கு மாறாக தேசத்தின் பாதுகாப்பு பலவகையிலும் அச்சுறுத்தப் படுவதாகவும் ரம்புக்கவெல்ல கூறினார்.

ஒவ்வொருநாளும் இத்தகைய அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், இந்த ஒப்பந்தத்தை இனிமேலும் நடைமுறைப் படுத்தும் நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லை என்பதாலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான நடைமுறைகளை இன்றிலிருந்தே தாங்கள் துவங்கி விட்டதாகவும் அவர் கூறினார்.

 


கொழும்பில் குண்டுத்தாக்குதல்-நான்கு பேர் பலி 28 பேர் காயம்

இலங்கையின் தலைநகர் கொழும்பில் இராணுவத்தினர் பயணம் செய்த ஒரு வாகனத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் பலியாகி, இருபத்தி எட்டு பேர் காயமடைந்துள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

கொழும்பின் இதயப் பகுதியான கொம்பனி வீதியில் இராணுவ பஸ் வண்டியை இலக்கு வைத்து, இன்று-புதன் கிழமை காலை நடத்தப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுத்தாக்குதலில் இராணுவ வீரர் ஒருவரும், மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களில் ஒருவர் பெண். பதினொரு இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 28 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலின்போது பொதுமக்கள் பயணிக்கும் பஸ்வண்டியொன்றும் சேதமடைந்திருக்கிறது.

சம்பவ இடத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
சம்பவ இடத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

இராணுவத் தலைமையகம், விமானப்படைத்தலைமையகம் போன்ற பல்வேறு பாதுகாப்புக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையங்களிலிருந்து சில நூறு மீட்டர் தொலைவிலுள்ள நிப்பொன் ஹோட்டல் சந்திக்கு அருகே நடைபெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் நால்வர் மிகவும் மோசமாக காயமடைந்திருப்பதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குண்டுவெடிப்பில் நிப்பொன் ஹோட்டலின் முன்புறம் மோசமாகச் சேதமடைந்திருக்கிறது.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் நூற்றுக்கணக்கான காவல்துறையினரும், ஆயுதப் படையினரும் குவிக்கப்பட்டதோடு, இந்தப்பகுதியின் போக்குவரத்து பல மணிநேரம் பாதுகாப்பு படையினரால் தடை செய்யப்பட்டிருந்தது.

குண்டு தாக்குதலுக்குள்ளான பேருந்து
குண்டு தாக்குதலுக்குள்ளான பேருந்து

இன்றைய சம்பவம் தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு, இன்று கலை சுமார் 9.30 மணியளவில் நோய்வாய்ப்பட்டுள்ள இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ்வண்டியை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் இந்த குண்டு தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறது. ஆனால் புலிகள் இதை மறுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த சக்திவாய்ந்த கிளேமோர் குண்டு நிப்பொன் ஹோட்டலின் குளிரூட்டும் இயந்திரத்தின் வெளிப்பாகத்தின் உட்புறத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்திருப்பதாகவும், பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் குண்டு வெடிப்பு தொடர்பான புலன் விசாரணைகளை காவ்ல்துறையினர் ஆரம்பித்திருக்கிறார்கள்.

 


மகேஸ்வரன் படுகொலை, கொழும்பு குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கண்டனம்

நேற்று, செவ்வாய்க்கிழமை கொழும்பு கொட்டாஞ்சேனை பொன்னம்பலவாணேசர் ஆலயத்தினுள் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இனந்தெரியாத துப்பாக்கி நபரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் படுகொலையையும், இன்று கொழும்பில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையும் அமெரிக்க அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரன்
படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரன்

இது தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம், மகேஸ்வரனின் கொலை தொடர்பில் இலங்கை அரசாங்கம் பூரண விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அதற்குப் பொறுப்பானவர்களைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு தாக்குதல்களின்போதும் கொல்லப்பட்டவர் களினதும், காயமடைந்தவர்களினதும் குடும்பங்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துள்ள அமெரிக்க அரசாங்கம் இலங்கை இனப்பிரச்சனைக்கு சமாதான வழியில் பேச்சுக்களினூடாக அரசியல் தீர்வொன்றினைக்காண சகல தரப்பினரும் முன்வரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இதேவேளை, மகேஸ்வரனின் பூதவுடல் இன்று அதிகாலை வைத்தியசாலையிலிருந்து வெள்ளவத்தையிலுள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நேற்றையதினம் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் அவரது பூதவுடலிற்கு தமது அஞ்சலிகளைத் தெரிவித்துள்ளனர். இவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை கொழும்பில் இடம் பெறவிருப்பதாக கூறப்படுகிறது.

கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் குறித்த விவரங்கள்

மகேஸ்வரனின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர் குறித்து, இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், பிபிசி தமிழோசையிடம் பின்வரும் விவரங்களை தெரிவித்தார்.

அவரது பெயர் வசந்தன் என்றும் அவரது தனிப்பட்ட விபரங்கள் கிடைத்திருப்பதாகவும், ஆனால் அவரிடம் இருந்து வாக்குமூலம் எதையும் பெறவில்லை என்றும் கூறிய கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், வசந்தன் தற்காலிகமாக தங்கியிருந்த வத்தளை வீட்டில் அவர் பயன்படுத்திய மைக்ரோ பிஸ்டலுக்குத் தேவையான தோட்டாக்கள் இருந்ததாகவும் தெரிவித்தார்.

வசந்தன் 1996 அம் ஆண்டு யாழில் இருந்து வெளியேறியதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழ் பணியாற்றியுள்ளதாகவும், மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது அவருடைய பாதுகாப்பு பணியில் இருந்துள்ளதாகவும், அரசுப் பணியில் இருந்துள்ளதாகவும், காவல்துறை பணியில் இருந்திருப்பார் என்று தாம் கருதுவதாகவும் தெரிவித்த கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், அனால் தமக்கு இது குறித்த காவல்துறை உயரதிகாரியின் முழுமையான அறிக்கை கிடைக்கவில்லை என்றும், அந்த அறிக்கை கிடைக்கும் வரை யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

Posted in Agreement, Blasts, Bombs, Ceasefire, Ceylon, CFA, Colombo, Eelam, Eelam People's Revolutionary Liberation Front, Eelam Revolutionary Organisation, Eezham, EPRLF, EROS, Fight, Gotabaya, Gotabhaya, Liberation Tigers of Tamil Eelam, LTTE, Magesvaran, Mageswaran, Mahesvaran, Maheswaran, Murder, Parliamentary Tamil United Liberation Front, Peace, People's Liberation Organisation of Tamil Eelam, plot, PLOTE, Rajapaksa, Rajapakse, Sri lanka, Srilanka, Tamil, Tamil Eelam Liberation Organisation, TELO, Temple, Thimpu, Tigers, TULF, War | Leave a Comment »