Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Union’ Category

Employment Opportunities & Education Facilities – Job Guarantee Schemes & Export Processing Zones

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2008

பகல் கனவாகும் வேலை வாய்ப்பு

ப.செ. சங்கரநாராயணன்

ஆண்டுக்கு 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறப்படும் இந்தியாவில், வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மாநிலங்களவையில் அண்மையில் எம்.பி.க்களின் கூச்சல், குழப்பத்துக்கிடையே (மக்களவைத் தலைவருக்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது) தாக்கல் செய்யப்பட்ட தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனத்தின் 61-வது அறிக்கையில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், 55 கோடிப் பேர் 30 வயதுக்கு உள்பட்டவர்கள். அதில், வேலையில்லாதோர் எண்ணிக்கை கோடிக்கணக்கில் அதிகரித்துவரும் தகவல் கவலையளிப்பதாக உள்ளது.

1999-2000-ம் ஆண்டில் வேலையில்லாதோர் சதவிகிதம் 7.3 ஆக இருந்தது. 2004-2005-ல் 8.35 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக, (வளர்ச்சி விகிதத்தை விடக் குறைவு) மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், உழைக்கும் வயதுப் பிரிவினர் எண்ணிக்கை அதிகரித்து வருவதுதான் இதற்குக் காரணம் என்கிறார். (உழைக்காமல் திரிகிறவர்களைச் சேர்க்கவில்லை)

இதற்காக அமைப்புசாரா தொழில்துறையில், புதிய வேலை வாய்ப்புகளைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தொழிற்பயிற்சி மையங்களை மேம்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிராமங்களில் விவசாயத்தை விட்டு நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களை நாடுவோர் எண்ணிக்கை, நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதன் தொடர்விளைவாக, உணவு உற்பத்தி குறைந்து, 2015-ல் உள்நாட்டு தேவைக்கு பெருமளவிலான உணவுப் பொருள்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா தள்ளப்படும் என, மூத்த விவசாய விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார்.

மத்திய அரசு அறிவித்துள்ள ஆயிரக்கணக்கான கோடி கடன் தள்ளுபடி மட்டும், விவசாயிகளை ஒருபோதும், அவர்கள் சந்தித்து வரும் உண்மையான அவலங்களில் இருந்து மீட்டெடுக்காது.

தில்லி இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.என். ராஜசேகரன் பிள்ளை, நாட்டில் 836 மில்லியன் மக்கள் தினமும் ரூ. 20 வருவாயுடன், சுகாதாரமற்ற சூழலில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 546 மில்லியன் பேர் வேலையின்றித் தவிக்கின்றனர்.

33 சதவிகிதம் பேர் எழுத்தறிவு இல்லாதவர்கள். 12 சதவிகிதம் பேர் மட்டுமே, பள்ளிக் கல்வி முடித்தவர்களாக உள்ளனர்.

இந்தியாவில் ஏறத்தாழ 400 பல்கலைக்கழகங்கள் இருந்தும் (போலிப் பல்கலைக்கழகங்கள் தனி), 10 சதவிகிதம் பேர் மட்டும் கல்லூரிக் கல்வி பயிலும் நிலை வேதனையளிப்பதாக உள்ளது என்கிறார் ராஜசேகரன் பிள்ளை.

உயர்கல்வியை 11 சதவிகிதம் பேர் பெற்றுள்ளனர். அதில் 4.3 சதவிகிதம் பேர் பெண்கள்.

இதில் ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில்வோரில் 90 சதவிகிதம் பேர் பன்னாட்டு நிறுவனங்களில் சேர்ந்து வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.

இந்நிலையில், 2007-ம் ஆண்டில் நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுப் பணிக்குச் செல்வோர் 28 சதவிகிதமாகவும், உயர்கல்வி கற்கச் செல்வோர் 33 சதவிகிதமாகவும் குறைந்துவிட்டனர். தாராளமயமாக்கல் கொள்கைகளால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைப்பது, இன்னும் அறிக்கை அளவிலேயே உள்ளது.

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 34,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவிகிதத்துக்கும் குறைவே. (ராணுவத் துறைக்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல்).

இந்தியாவின் 2.5 லட்சம் உள்ளாட்சிகளில் அடிப்படைக் கல்வியை மேம்படுத்தாமல் பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதாலோ, தனியார் பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்தாமல் எண்ணிக்கையை உயர்த்துவதாலோ எவ்விதப் பலனும் ஏற்படப் போவதில்லை.

குறிப்பாகத் தமிழகத்தில் பாலிடெக்னிக்குகளை விட பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதற்குக் காரணம் முற்றிலும் வணிகமயமாகி விட்ட உயர் கல்விதான்.

சாப்ட்வேர் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கில் கிடைக்கும் ஊதியமும், அத்துறையில் எப்பாடுபட்டாவது தங்கள் குழந்தைகளை நுழைக்க விரும்பும் பெற்றோர்களின் ஆசையும் ஒரு காரணம். அனைத்துத் துறைகளிலும் தகவல் தொழில்நுட்பம் தொடங்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் இத்துறையில் வேலைவாய்ப்பு குறையும் நிலையும் உள்ளது.

இந்நிலையில், அதிகமாக வெளிவரும் அரைகுறை பொறியாளர்களால், வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது.

பொறியியல் கல்வி முடித்து வெளிவருவோரில் 22 சதவிகிதம் பேர் மட்டுமே, வேலைக்கான தகுதியுடன் உள்ளதாக, கல்வியாளர் மு. அனந்தகிருஷ்ணன் தெரிவிக்கிறார்.

மத்திய அரசு அடிப்படைக் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கி, பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் மாணவர்களின் முழுமையான திறன்களை மேம்படுத்தும் பாடத் திட்டங்களையும் அமைத்தால்தான், உயர்கல்வியின் நோக்கம் நிறைவேறும் என்பதை மறுப்பதற்கில்லை. அத்துடன் மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்பிற்கான பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களையும் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.

அதுவரை தினம் ஒரு பன்னாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, அதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என, அரசு பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும், கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது பகல் கனவுதான்.

Posted in Agriculture, City, Contract, Contractors, Education, Employment, EPZ, Export, Farmers, Farming, IIM, IIT, Industry, Jobs, Loans, Metro, MNC, Opportunities, SEZ, Suicides, Union, Villages, Work | Leave a Comment »

District Collectors: Sales Tax vs Income Tax – Loopholes, Corruption, Kickbacks in Local Administration

Posted by Snapjudge மேல் மார்ச் 10, 2008

புன்னகைக்கும் பொய் ரசீதுகள்

இரா. சோமசுந்தரம்

சில நாள்களுக்கு முன் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகா அலுவலகம் சென்றபோது, அங்கே ஒரு வட்டாட்சியரிடம் ஒருவர் கடுமையான கோபத்தில் திட்டிக் கொண்டிருந்தார்.

ஆனால் அந்த வட்டாட்சியரோ, “”ஒண்ணும் ஆயிடாதுங்க” என்று சமாதானம் செய்து, பேசுபவரின் குரலை மட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

இருந்தும்கூட, அடக்கமுடியாத கோபமும் அச்சமுமாக தொடர்ந்து கொட்டித் தீர்த்த அந்த நபர், “”இன்னும் எந்தெந்த டிபார்ட்மென்ட்லிருந்து எனக்கு என்கொயரி வருமோ? என் ரசீது புஸ்தகத்தை கொடுங்கய்யா” என்று கேட்டும் கிடைக்காததால், மறுபடியும் திட்டிக்கொண்டே வெளியேறினார்.

சுமார் அரைமணி நேரத்துக்கு அந்த அலுவலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இச்சம்பவம் குறித்து விசாரித்ததில் தெரியவந்தது இதுதான்:

2006-ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது, இந்த தாலுகா அலுவலகம் சில படிவங்களை அச்சிட்டதாக சுமார் ரூ.80 ஆயிரத்துக்கு ரசீதுகள் செலவுக் கணக்கில் காட்டப்பட்டுள்ளன.

உள்ளாட்சித் தணிக்கைத் துறை அலுவலர்கள் இதனைத் தணிக்கை செய்தபோது, யாரோ ஒரு நேர்மையான அலுவலர், இந்த செலவுக்கு ஆட்சேபக் குறிப்பை எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் – “”எல்லா படிவங்களும் தேர்தல் ஆணையம் அச்சிட்டுத் தரும்போது, தாலுகா அளவில் எத்தகைய படிவம் அச்சிடப்பட்டது என்பதற்கான சான்றுகள் அளிக்கப்படவில்லை. வாக்காளர்களுக்கு அறிவுரை என்ற நோட்டீஸ் அச்சிடப்பட்டதாக கூறப்பட்டபோதிலும், அதற்கு ரூ.2000-க்கு மேல் செலவாகியிருக்க வாய்ப்பு இல்லை. ஆகவே இந்தச் செலவினத்தை ஆட்சேபிக்கிறேன்” என்று அந்தக் குறிப்பில் அவர் எழுதியுள்ளார்.

உள்ளாட்சித் தணிக்கைத் துறையின் அறிக்கைகள் வழக்கமாக உயர்அதிகாரிகளுக்கும் அரசுக்கும் அனுப்பப்படும் என்பதோடு, தலைமை கணக்கு தணிக்கை (ஏ.ஜி.) அலுவலகத்துக்கும் ஒரு நகல் அனுப்பப்பட வேண்டும்.

அப்படி அனுப்பப்பட்ட இந்த ஆட்சேபக் குறிப்பை கண்ட, தலைமை கணக்கு தணிக்கை அலுவலக அதிகாரி ஒருவர், “”சுமார் 15 நாள்களில் ரூ.80 ஆயிரத்துக்கு அச்சிடும் இத்தகைய அச்சகம், ஓராண்டுக்கு எவ்வளவு சம்பாதிக்கக்கூடும்! இந்த அச்சகம் முறையாக வருமான வரி செலுத்தியுள்ளதா என்பதை ஆய்வு செய்யலாம்” என்று மற்றொரு குறிப்புடன் வருமான வரித்துறைக்கு அனுப்பிவிட்டார்.

வருமான வரித்துறை இத்தனை விஷயங்களையும் குறிப்பிட்டு, மொத்தக் கணக்குகளுடன் நேரில் வரவும் என்று அச்சக உரிமையாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

வட்டாட்சியரிடம் கடும் கோபத்தில் கத்திக் கொண்டிருந்தவர் அச்சகத்தின் உரிமையாளர். அந்த அச்சகமோ அந்த நகரத்திலேயே மிகச் சிறிய அச்சு இயந்திரத்தை வைத்து, கல்யாணப் பத்திரிகை அச்சடித்து வருவாய் ஈட்டும் மிகச் சிறிய அச்சுக்கூடம். வருமானத்துக்கே திண்டாடும் அவருக்கு வருமான வரித்துறையின் நோட்டீஸ் வந்தால் எப்படி இருக்கும்?

இச்சம்பவம் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சியைத் தந்தது. நியாயம் செத்துப்போவதில்லை. உண்மைகள் கொஞ்ச காலம் உறங்கலாம். ஆனால் அது ஒரு நாள் விழிக்கவே செய்கிறது. “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகிறது’. ஆனால் அப்போதே, உடனே அல்ல. சரி, வாழ்க்கையொன்றும் திரைப்படம் அல்லவே, உச்சக் காட்சியில் நொடியில் தர்மம் வெற்றிபெற!

இது குறித்து மேலும் விசாரித்தபோது இன்னொரு தகவலும் தெரியவந்தது. இத்தகைய ரசீதுகள் தொடர்பான ஆட்சேபக் குறிப்புகளை, விற்பனை வரிப்பிரிவினர்தான் முதலில் கையில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் வருமான வரித்துறை கையில் எடுத்திருப்பதைப் பார்க்கும்போது, மாநில அரசு, விழிப்புடன் இல்லை என்றாகிறது.

இத்தகைய போலி ரசீதுகள் உள்ளாட்சி முழுவதிலும் அதிக அளவில் இருக்கின்றன. விற்பனை வரித் துறை அதிகாரிகள் விசாரித்தால், பல பூதங்கள் வெளிக்கிளம்பும் என்கிறார்கள்.

உள்ளாட்சித் துறைகளில் ரசீதுகள் மூலம் பல கோடி ரூபாய் திசைமாறுகிறது. இதற்கு அடிப்படையான காரணம் மாவட்ட ஆட்சியர் வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட விலைப்பட்டியல்தான்.
அரசுக்குத் தேவையான பொருள்கள் வாங்கும்போது கூட்டுறவுத் துறை நிறுவனங்கள் நீங்கலாக அங்கீகரிக்கப்பட்ட பிற நிறுவனங்கள் எவை, அவற்றில் எந்தெந்த பொருள்களுக்கு என்ன விலை என்று மாவட்ட ஆட்சியர் அங்கீகரிக்கும் இந்த விலைப்பட்டியலை ஆதாரமாக வைத்துத்தான் தணிக்கை செய்யப்படுகிறது.

நிறுவனம் பட்டியலில் உள்ளதா, விலை சரியா என்பதை மட்டுமே தணிக்கை அலுவலர்கள் சரிபார்க்க முடியும். இந்த நிறுவனம் வெறும் “”ரசீது நிறுவனமா” என்பதை ஆய்வு செய்ய இயலாது.

பொதுச்சந்தையில் ஒரு பொருள் விற்கப்படும் விலையைக் காட்டிலும் குறைந்தது 10 சதவீதம் கூடுதல் விலையே இந்த அங்கீகரிக்கப்பட்ட விலைப் பட்டியலில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதில் சந்தேகம் இருக்குமானால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரூ.10 செலுத்தி, அந்தப் பட்டியலை வாங்கிப் பார்த்தால் நிறுவனங்களும் விலைகளும் வெளிச்சமாகிவிடும் என்கிறார்கள்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத்தான் போறேன். வர்றீங்களா?

Posted in Administration, administrative units, Audit, Bribery, Bribes, Circle Inspector, Collections, Collector, Collectorate, Corruption, Departments, Dept, District, District Collectors, Elections, Govt, IAS, Income, Inefficiency, Inspection, Inspectors, Investigations, IT, kickbacks, local, Local Body, Local Body election, local body elections, Local Body Polls, Local Civic Body, Local Elections, Local Polls, Local self Governance, Loopholes, Notices, officers, Politics, Polls, revenue collection, Revenue District, Revenues, Reviews, sarkeel, Somasundaram, Somasundharam, Somasuntharam, ST, Tahsil, Taluk, Taluka, Taluq, Tax, Union, zilla collector | Leave a Comment »

Tamil Nadu Electricity Board (TNEB) restructuring plans – Path to Privatization

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

இது நல்லது அல்ல: சி. மகேந்திரன்

சென்னை, மார்ச் 5: மின் வாரியத்தை இப்படிப் பிரிப்பது நல்லது அல்ல என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான சி. மகேந்திரன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

இந்தியாவில் இப்படிப் பிரிக்கப்பட்ட பல இடங்களில் தனியாருக்கான வாய்ப்பைக் கூடுதலாக உருவாக்கித் தரும் நிலை உள்ளது. ஆரம்பத்தில் தனியாருக்குத் தர மாட்டோம் என்று கூறுவார்கள். ஆனால் இறுதியில் தனியாருக்குப் பிரித்து தருவார்கள்.

பிகாரில் இப்படி நடந்து, பெரிய போராட்டம் வெடித்து, பிரச்னை இன்னும் முடியாமலேயே உள்ளது. இத்தகைய நடவடிக்கையின் மூலம் ஆட்குறைப்பு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல, மின் கட்டணம் உயரவும் வாய்ப்பு உள்ளது.
————————————————————————————————————————————-
துண்டாடப்படுகிறதா மின்சார வாரியம்?

பா. ஜெகதீசன்

சென்னை, மார்ச் 5: பொன் விழா கொண்டாடிய தமிழ்நாடு மின் வாரியம் துண்டாடப்படும் என்கிற செய்தி அந்த வாரியத்தினரை மின்சாரம் தாக்கிய நிலைக்குத் தள்ளி இருக்கிறது.

தற்போது வாரியத்தின் மிக முக்கிய அங்கமாகத் திகழும் “மின்சாரத்தை எடுத்துச் செல்லும் பிரிவு’ தனித்து இயங்கும் நிறுவனமாக மாற்றப்பட உள்ளது என்கிற தகவல் ஊழியர்களிடையே பரவி உள்ளது.

தற்போதைக்கு அரசின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் தனி நிறுவனமாக இப்பிரிவை உருவாக்கி, இயக்குவதற்குத் தேவையான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு மின் வாரியம் 1.7.1957-ல் உருவானது. அப்போது தனித் தனியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த பல்வேறு மின்சார நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, மாநில அரசின் நிறுவனமாக மின் வாரியம் உருப் பெற்றது.

சமமான முக்கியத்துவம்:

மின் வாரியத்தில்

1) மின் உற்பத்திப் பிரிவு,

2) உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை எடுத்துச் செல்லும் பிரிவு,

3) மின் விநியோகப் பிரிவு,

4) மின் கணக்கீடு -கட்டண வசூலிப்புப் பிரிவு என நான்கு பிரதானப் பிரிவுகள் உள்ளன. இந்த நான்குப் பிரிவுகளுமே ஒன்றுக்கு ஒன்று சமமான முக்கியத்துவத்தைப் பெற்றவை.

ஏற்கெனவே மின் உற்பத்திப் பிரிவில் அரசுக்குப் போட்டியாகவும், வர்த்தக ரீதியிலும் தனியார் துறை முதலீட்டுடன் ஆங்காங்கே மின் உற்பத்தி நிலையங்கள் பல்வேறு கட்டங்களாகத் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. அந்த நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து, மின்சாரத்தை அரசு வாங்கி, மானிய விலையில் மின் வாரியத்தின் மூலம் மக்களுக்கு விநியோகித்தும் வருகிறது.

இப்படி மக்களுக்கு உதவி வரும் அரசும், வாரியமும், மீண்டும் மின் வாரியத்தைத் துண்டு போடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன என வாரியத் தொழிலாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

தனியாகப் பிரிப்பு: உற்பத்திப் பிரிவில் இருந்து விநியோகப் பிரிவுக்கு மின்சாரத்தை எடுத்துச் செல்லும் பிரிவை (பவர் டிரான்ஸ்மிஷன் டவர்) தனி நிறுவனமாகப் பிரிப்பது தான் அந்த நடவடிக்கை.

அதன்படி உற்பத்தியாகும் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் மின் கம்பிகளும், அவற்றைத் தாங்கி நிற்கும் மின் கோபுரங்கள், மின் கம்பங்கள், துணை மின் நிலையங்கள் போன்றவை அந்தத் தனி நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் போய் விடும்.

அந்த நிறுவனத்துக்கு “ஸ்டேட் டிரான்ஸ்மிஷன் யுடிலிட்டி’, ஸ்டேட் டிரான்மிஷன் கார்ப்பரேஷன்’ என்கிற இரு பெயர்களில் ஒன்று சூட்டப்படலாம் என வாரிய வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தற்போதைக்கு இந்தத் தனி நிறுவனத்தின் தலைவராக மின் வாரியத் தலைவரே இருப்பார். அவரைத் தவிர, சில இயக்குநர்களைக் கொண்ட குழுவும் அமைக்கப்படும். தற்போது மின் வாரியத்தில் உள்ள கணக்கியல் உறுப்பினர், தலைமைப் பொறியாளர் (டிரான்ஸ்மிஷன்), தலைமைப் பொறியாளர் (திட்டம் மற்றும் தகவல் தொடர்பு), தலைமைப் பொறியாளர் (இயக்கம்) ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பெறுவார்கள். நிறுவனத்தின் கம்பெனிச் செயலராக அதற்குரிய தகுதி படைத்தவர் நியமிக்கப்படுவார்.

தனியார் வசமாகி விடுமோ?:

சிறிது காலத்துக்குப் பிறகு இந்தத் தனி நிறுவனம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விடலாம் என்கிற சந்தேகம் தொழிலாளர்கள் மத்தியில் வலுவாக நிலவுகிறது.

அதேபோல, தற்போது அயல்பணி (டெபுடேஷன்) அடிப்படையில் இந்நிறுவனத்தில் பணியாற்றும் வாரிய ஊழியர்கள், பின்னர் இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வேலை பார்க்கும் ஊழியர்களாக மாறி விடுவார்கள். தற்போது அவர்கள் பெற்று வரும் சலுகைகள் தொடர்ந்து அவர்களுக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே.

மத்திய அரசின் சட்டம்:

2003-ல் மத்திய அரசு பிறப்பித்த மின் சட்டத்தின்படி இந்தத் தனி நிறுவனம் தொடங்கப்படுகிறது. அந்தக் காலத்தில் இதைக் கடுமையாக எதிர்த்த தொழிற்சங்கங்கள் இன்று இதுதொடர்பாக எத்தகைய எதிர்ப்பையும் வெளிக்காட்டாமல் மெüனமாக இருப்பது வேதனையாக உள்ளது என நவபாரத் எம்ப்ளாயீஸ் ஃபெடரேஷனின் பொதுச் செயலாளர் கி. பழநிவேலு தெரிவித்தார்.

இந்தத் தனி நிறுவனம் அமையுமானால், மின் நுகர்வோர் மிக அதிகக் கட்டணத்தைச் செலுத்த வேண்டி நேரிடும். தொழிலாளர்களும் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என வாரிய நலனில் அக்கறை உள்ள தொழிற்சங்கங்கள், பொது நல அமைப்புகள் அச்சம் தெரிவித்தன.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இத்தகைய நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்வது சரியல்ல. இது பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி விடும் என்று தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் பயப்படுகிறார்கள்.

Posted in ADMK, AIADMK, Arcot, Collections, Department, Dept, Division, DMK, Economy, Electricity, Employment, Expensive, Finance, Govt, Harthal, JJ, Jobs, Kalainjar, Karunanidhi, KK, Operations, Plans, Power, Private, Privatization, restructuring, service, Strike, Tariffs, TNEB, Transmission, Union | 2 Comments »

Is Communism & Socialism exist for namesake in India – TJS George

Posted by Snapjudge மேல் ஜனவரி 15, 2008

சோஷலிஸத்துக்குத் துரோகம் செய்யும் சோஷலிஸ்டுகள்

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

சோஷலிஸத்தை ஒழித்துக்கட்டியவர்கள் யார்? வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், சோஷலிஸத்தை சோஷலிஸ்டுகளே, அதிலும் குறிப்பாக உலகின் பல பகுதிகளில் கம்யூனிஸ்டு அரசுகளை அமைத்தவர்களே ஒழித்துக் கட்டியிருக்கின்றனர் என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டியிருக்கும்.

உலக நாடுகளில் கம்யூனிஸ ஆட்சி நடைபெற்றுவந்த அனைத்து நாடுகளும் ~ ஒன்றே ஒன்றைத் தவிர ~ தம் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு முதலாளித்துவப் பாதையைத் தழுவிக்கொண்டுவிட்டன. விதி விலக்கான அந்த நாடு இந்தியா. அதனால்தான், ஜோதி பாசுவால் தொடங்கிவைக்கப்பட்டிருப்பதை ஆரோக்கியமான விவாதம் என நாம் வரவேற்க வேண்டும்.

நாம் முதலாளித்துவ சமுதாயத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கும் பொழுது, சோஷலிஸம் சாத்தியமல்ல என்றே அவர் கூறியிருக்கிறார். கடுமையான சுரண்டல் நிலவும் சமூகமுறையான முதலாளித்துவத்தை அங்கீகரிப்பதாக அதைக் கொள்ள முடியாது.

எனினும், இந்தியாவின் மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான அவர், மார்க்ஸ் உருவாக்க எண்ணிய சோஷலிஸ சமுதாய முறைக்கு எந்த நாட்டிலும், கம்யூனிஸ ஆட்சிமுறை அமலில் இருந்த நாடுகளில்கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதை உணரத் தவறிவிட்டார்.

எடுத்துக்காட்டாக, சோவியத் ஒன்றியத்தில் மார்க்சிஸம் ஒருபொழுதும் நடைமுறைப்படுத்தப்படவேயில்லை. தொடக்கத்திலிருந்தே அங்கு லெனினிஸம்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. நடைமுறை அரசியலுக்கு ஏற்ப அக் கொள்கையைத் தகவமைப்பதாகக் கூறி, மார்க்சிஸத்துக்கு மறுவிளக்கம் அளித்து, முற்றிலும் புதியதான கொள்கைகளை அறிமுகப்படுத்தினார் லெனின். சோவியத் கம்யூனிஸத்தின் அடிப்படைக் கொள்கையானது, “மார்க்சிஸம் ~ லெனினிஸம்’ என அழைக்கப்பட்டது.

சீனாவில் அது, “மார்க்சிஸம் ~ லெனினிஸம் ~ மா சே துங் சிந்தனைகள்’ என மாறியது. அதன் உட்பொருள் தெளிவானது: சீனாவில் சோஷலிஸக் கொள்கையைப் பொருத்தவரை “மா சே துங் சிந்தனை’களே இறுதியானவை. அந்த நிலைமை மாவோவின் காலத்தோடு முடிந்துபோய்விட்டன. அதன் பிறகு, சிறந்த யதார்த்தவாதியான டெங் சியாவோபிங், “மனிதாபிமானத்துடன்கூடிய சோஷலிஸம்’ என்ற கொள்கையைக் கொண்டுவந்தார். அது ஒரு முக்கியமான கோஷமாகும்.

எந்தப் பெருந்திரளான மக்களை சோஷலிஸத்தை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமோ அவர்களையே கம்யூனிஸம் கவர்ந்திழுக்காமல் போனதற்கு, அதில் மனிதாபிமான அம்சம் குறைவுபட்டிருந்ததே காரணமாகும்.

ஸ்டாலினும் மாவோவும் தனிநபர் சர்வாதிகாரத்தைத்தான் நிறுவினார்களே தவிர, தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தையல்ல. அந்தக் கால கட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பெருமளவிலான மரணதண்டனைகள் சோஷலிஸத்தின் முகத்தையே கோரமாக்கிவிட்டன.

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது மாநாட்டில் நிகிடா குருஷ்சேவ் ஆற்றிய வரலாற்றுப் புகழ்மிக்க உரை அதை அம்பலப்படுத்தியது. அது உணர்ச்சிபூர்வமான உரை. ஆனால், அவர் ஆற்றியது அவரது வரைவு உரையைவிட சற்று மென்மையாக்கப்பட்ட வடிவமாகும்.

மாலட்டோவ் போன்ற பழைய ஸ்டாலினிசவாதிகளின் வற்புறுத்தலை அடுத்து, ஸ்டாலின் “கட்சிக்கு ஆற்றிய பெரும் சேவைகளை’ குருஷ்சேவ் அங்கீகரித்தார். ஆனால், பூர்வாங்க விவாதங்களிலும் மூல வரைவு அறிக்கையிலும், “”கட்சியை ஸ்டாலின் அழித்துவிட்டார். அவர் மார்க்சியவாதியே அல்ல. மனிதன் புனிதமானவை எனக் கருதுவனவற்றையெல்லாம் அவர் அழித்தொழித்துவிட்டார்” என்று குருஷ்சேவ் குறிப்பிட்டிருந்தார். (2007-ல் “த கார்டியன்’ இதழில் கொர்பச்சேவ் எழுதியிருந்த கட்டுரையில் இதைத் தெரிவித்துள்ளார்)

அமைதியின் மீதான விருப்பம், பாதுகாப்பு உணர்வு, உழைப்பின் மூலமாக தானும் தனது குடும்பமும் வளம் பெற முடியும் என்னும் நம்பிக்கை போன்ற, மனிதன் புனிதமாகக் கருதுவனவற்றை எந்தக் கொள்கையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்டுகள் இதைப் புறக்கணித்தனர். அதன் விளைவாக அவர்கள் அதிகாரத்திலிருந்து வீழ்ந்தார்கள் அல்லது அவர்கள் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

60 ஆண்டுகளாகியும் ஏன் வளர்ச்சி அடையவில்லை என்ற கேள்வியை இந்திய இடதுசாரிகள் தமக்குத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

உண்மையில், மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் அவர்கள் தமது செல்வாக்கை இழந்திருக்கின்றனர். மிகச் சிலரால், பெருவாரியான மக்கள் சொல்ல முடியாத அளவுக்குச் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையிலும் அவர்களால் வளர முடியவில்லை.

இடதுசாரித் தலைவர்களில் பலர் தமது தனிப்பட்ட வாழ்க்கையில் முதலாளித்துவ ரசனைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், சுரண்டலுக்கு ஆளான மக்களோ நக்சலிஸம் போன்ற இயக்கங்களை நோக்கியும், மத அடிப்படைவாதத்தை நோக்கியும் சென்றுகொண்டிருக்கின்றனர்.

இடதுசாரிகள் சோஷலிஸத்துக்குத் துரோகம் இழைத்துவிட்டனர். சமத்துவம், சமதர்மம் என்ற அடிப்படையில் ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகள் சோஷலிஸத்தை நெருங்கிச் சென்றுகொண்டிருக்கின்றன.

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 30 ஆண்டுகளாகப் பதவியில் இருந்தபோதிலும் வறுமையின், சிறுமையின் அடையாளமாக விளங்கும் கைரிக்ஷாவை இந்திய இடதுசாரிகளால் ஒழிக்க முடியவில்லை.

இடதுசாரிகளின் தோல்வியானது, அபாயகரமான ஓர் அரசியல் தோன்றுவதற்கு ~ ஜமீன்தாரி சிந்தனை கொண்ட வகுப்புவாத அரசியலுக்கு ~ வழிவகுத்துக் கொண்டிருக்கிறது. என்னே துயரம்!

Posted in Baasu, Basu, Capitalism, China, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Corporate, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, East, Economy, entrepreneurs, Finance, global, Globalization, Growth, HR, Jobs, Jothibasu, Jyothibasu, Kerala, Lazy, Lethargy, Mao, markets, Nandhigram, Nandigram, Nanthigram, Poor, Rich, Russia, SEZ, Socialism, TATA, Union, USSR, West, workers | Leave a Comment »

The management of MRF Limited: lockout & strikes – Viduthalai Editorial

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2008

எம்.ஆர்.எஃப் நிறுவனத்தின் அணுகுமுறை மாறட்டும்!

சென்னையை அடுத்துள்ள திருவொற்றியூரில் கடந்த 43 ஆண்டுகாலமாக நடந்துவரும் எம்.ஆர்.எஃப். டயர் நிறுவனம் 3.12.2007 முதல் சட்ட விரோதமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 1500 தொழிலாளர் குடும்பங்கள் பெரும் அவதியில் சிக்கியுள்ளனர். முன்னறிவிப்பு ஏதுமின்றி சட்ட விரோதமாகக் கதவடைப்புச் செய்யப்பட்டுள்ளது.

சிறு முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்றைய தினம் இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் தொழிலாளர்களின் நேர்மையான உழைப்பும், திறனும்தான்.

இந்த நிறுவனம் அய்ந்து கிளைகளோடு மிகுந்த இலாபகர மாக இயங்கிக் கொண்டு இருந்தும், தொழிலாளர்களை வதைப்பதில் ஏன் இவ்வளவு பேரார்வம் கொண்டு நிருவாகம் நடந்துகொள் கிறதோ தெரியவில்லை.

உரிமை கேட்டுக் குரல் கொடுத்ததற்காக தொழிற்சங்க நிருவாகிகள் இருவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல, தொழிலாளர்கள் 24 பேர்களும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரு தொழிலாளர்களை வேலை நீக்கமே செய்துவிட்டது.

இதுகுறித்து தொழிலாளர் ஆணையத்திடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 28.11.2007 அன்று தொழிலாளர் ஆணையம் பேச்சுவார்த்தை நடத்தி கீழ்க்கண்ட ஆணை பிறப்பிக்கப்பட்டது.

(1) தொழிலாளர்கள் ஏற்கனவே அளித்து வந்த உற்பத்தி அளவினைத் தொடர்ந்து அளிக்கவேண்டும்.

(2) நிருவாகம் விசாரணையை நிலுவையில் வைத்து, இப்பிரிவுகளில் பணிபுரிந்த தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் தற்காலிக வேலை நீக்கத்தை விலக்கிக்கொண்டு, அவர்களுக்கு உடனடியாக பணி வழங்கிட வேண்டும்.

(3) புதிய இயந்திரம் நிறுவப்பட்ட எஃப் 270 பான்பரி பிரிவில் அதற்குரிய உற்பத்தி அளவு, தொழிலாளர்களின் எண்ணிக்கை நிர்ணயம் மற்றும் இதரத் தொடர்புடைய இனங்கள் குறித்து நிருவாகமும், தொழிற்சங்கமும் அதன் முன்னர் நடைபெறும் சமரசப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு தீர்வு காண ஒத்துழைக்கவேண்டும் என்று அந்த ஆணையில் கூறப்பட்டது.

ஆனாலும், நிருவாகம் அரசின் இந்த ஆணையைப் பொருட்படுத்தவில்லை என்பதிலிருந்தே, இதில் அடாவடித்தனம் செய்பவர்கள் யார் என்று தெரியவில்லையா?

28.11.2007 இல் தொழிலாளர் துறை ஆணையரின் ஆணை பிறப்பிக்கப்பட்டும் அதன்மேல் சீரான அணுகு முறையை மேற்கொள்ளாமலேயே தொழிலாளர்களைப் பழி வாங்கும் நோக்கத்தோடு நிருவாகம் கதவடைப்பு செய்து வருகிறது.

அரசின் ஆணையை நிறைவேற்றாமல் தடை செய்ய வழக்கம்போல நீதிமன்றத்தை நாடி இடைக்காலத் தடையையும் பெற்றுள்ளது நிருவாகம்.

நாள்தோறும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைக் குரல்களை எழுப்பி வருகிறார்கள். பல்வேறு தொழிற்சங்கத் தலைவர்களும் உரிமைக்குரல் எழுப்பி வருகின்றனர்.

எதற்கும் நிருவாகம் அசைந்து கொடுப்பதாகத் தெரிய வில்லை. இதன் காரணமாக தொழிலாளர்கள் மத்தியில் அமைதியின்மை நாளும் வளர்ந்து வருகிறது. அடுத்தகட்டமாக இது வேகப்படும்பொழுது பிரச்சினைகள் வேறு பரிணாமத்தை எட்டக்கூடும். அதற்கு நிருவாகமே பொறுப்பேற்கவேண்டி வரும்.

வேலை வாய்ப்பு என்பது இந்தியாவில் பெரும் பிரச்சினை யாக இருக்கிறது. இந்த நிலையில், ஏற்கெனவே வேலை செய்துவரும் தொழிலாளர்களுக்கும் நிறுவனங்கள் பல்வேறு தொல்லைகளைக் கொடுக்குமானால், அதன் விளைவு எங்கே கொண்டு போய் விடும் என்பதைச் சிந்திக்கவேண்டும்.

தொழிற்சங்கங்கள் இதனை ஏதோ தொழிற்சங்கப் பிரச்சினையாக மட்டும் கருதி, அந்த வட்டத்துக்குள்ளேயே இதுபற்றிப் பேசிக் கொண்டு இராமல் பொதுமக்கள் மத்தியிலும் கொண்டு செல்லவேண்டும்.

தொழிலாளர்கள் பொதுமக்களின் ஓர் அங்கம்தான். அவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள் மீது பொதுமக்களுக்கும் அக்கறை உண்டு என்று நிரூபிக்கவேண்டும். அப்பொழுது தான் ஆணவத்தோடு நடந்துகொள்ளும் முதலாளிகள் கொஞ்சம் அடங்கி வருவார்கள்.

மற்ற நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களும் எம்.ஆர்.எஃப். நிறுவனத் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுக்க, போராட முன்வருவார்களாக!

Posted in Ads, Advt, Editorial, employees, Employers, Employment, Expenses, Jobs, lockout, Loss, Management, MRF, Poor, Productivity, Profit, Revenues, Rich, Strikes, Tyres, Union, Viduthalai, Work | Leave a Comment »

PMK Ramadoss to lead protest against NLC land acquisition

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

கேள்விக்குறியாகும் என்.எல்.சி.யின் எதிர்காலம்

என்.முருகவேல்

நெய்வேலி, அக். 16: பல தேசியத் தலைவர்களின் தொலைநோக்குப்பார்வையாலும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடின உழைப்பாலும் உருவாக்கப்பட்ட என்.எல்.சி. நிறுவனம் தற்போது பழுப்பு நிலக்கரி தோண்டி எடுப்பதற்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்னையால் தொடர்ந்து செயல்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

சுதந்திர இந்தியாவில் தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் என்.எல்.சி.யும் ஒன்று. 1957-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந் நிறுவனம் ஒரு சுரங்கத்தையும், ஒரு மின் நிலையத்தையும் கொண்டு 600 மெகாவாட் மின்னுற்பத்தியுடன் செயல்படத் துவங்கி, இன்று சுரங்கம் 1ஏ, 2-ம் சுரங்கம், முதல் அனல்மின் நிலைய விரிவாக்கம், 2-ம் அனல்மின் நிலையம் என வளர்ந்து, தற்போது 2,500 மெகாவாட் மின்னுற்பத்தி செய்து தென் மாநிலங்களுக்கு விநியோகம் செய்துவருகிறது.

இதுதவிர ராஜஸ்தான், ஒரிசா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 45 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கியுள்ளது. இதில் சுமார் 25 ஆயிரம் பேர் படிப்படியாக ஓய்வு பெற்றுள்ளனர். இவர்கள் தவிர சுமார் 10 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர்.

கடந்த ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை அழைத்து தனது பொன்விழா ஆண்டை சிறப்பாகக் கொண்டாடி, ஊழியர்களுக்கு பொன்விழா ஆண்டு வெகுமதியையும் அளித்தது. இவ்விழாவின் போது, நெய்வேலியில் ரூ.4,200 கோடி செலவில் அமையவுள்ள 2-ம் சுரங்க விரிவாக்கம் மற்றும் 2-ம் அனல்மின் நிலையம் விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றார்.

2-ம் அனல்மின் நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அதன் கட்டுமானப் பணிகள் 50 சதம் முடிந்துள்ளது. அதேநேரத்தில் 2-ம் சுரங்கம் விரிவாக்கத்துக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கப்பட்டு, அதன் இயந்திரக் கட்டுமானப் பணிகளும் வேகமாக நடைபெறுகின்றன.

இதனிடையே சுரங்கம் தோண்டுவதற்கான நிலத்தை கையகப்படுத்துவதில் தற்போது பிரச்னை எழுந்துள்ளது. முதல் சுரங்கத்துக்குத் தேவையான 250 ஏக்கர் நிலங்கள் கெங்கைகொண்டான் பகுதியில் அளவீடு செய்து, சம்பந்தப்பட்ட நில உரிமைதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும், மாற்றுக் குடியிருப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் அப்பகுதியிலிருந்து காலிசெய்ய மறுக்கின்றனர். இன்னும் 6 மாதத்துக்குள் இப்பகுதியை கையகப்படுத்தவில்லையெனில் முதல் சுரங்கத்தில் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் பணி தடைபட நேரிடும்.

இதேபோன்று சுரங்கம் 2-ம் மற்றும் 2-ம் சுரங்க விரிவாக்கத்துக்காக வளையமாதேவி, கீழ்பாதி, மேல்பாதி, கோட்டகம், கோ.ஆதனூர், கம்மாபுரம், சாத்தப்பாடி உள்ளிட்ட 69 கிராமங்களில் இருந்து சுமார் 25,000 ஏக்கர் நிலங்களை அளவீடு செய்து, இவற்றில் ஒரு சிலருக்கு இழப்பீட்டுத் தொகையை என்.எல்.சி. வழங்கியுள்ளது.

இந்நிலையில் சுரங்க விரிவாக்கத்துக்கு அளவீடு செய்யப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நில உரிமைதாரர்கள் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும், மேலும் பல நிவாரண உதவிகளை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதுதொடர்பாக பல்வேறு போராட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கண்ட பகுதியில் நிலத்தை கையகப்படுத்தினால் ஒரு ஏக்கருக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவேண்டும் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தவுள்ளனர். இதனால் 2-ம் சுரங்க விரிவாக்கப் பணியின் தொடக்கம் தடைபட்டுள்ளது.

இதனிடையே நிறுவன தலைவர் எஸ்.ஜெயராமன், நிறுவன அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளை வெள்ளிக்கிழமை சந்தித்து, நிறுவனத்தின் தற்போதைய நிலைமையை விளக்கியுள்ளார். இதனால் தொழிற்சங்கத் தலைவர்கள் சற்று அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இன்னும் 6 மாதத்திற்குள் சுரங்கத்துக்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்தவில்லை எனில் நிறுவனம் தொடர்ந்து செயல்படுவது கடினம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல் படி தான் இழப்பீடு வழங்கமுடியும், நிர்வாகமாக எதையும் செய்ய இயலாது. தற்போது கையகப்படுத்தவுள்ள நிலங்களுக்கு கோரப்படும் இழப்பீட்டுத் தொகையை கொடுத்து பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்க இயலாது.

மேலும் நிறுவனத்தை முன்னிறுத்தித்தான் சுற்றுப்புற கிராம நிலங்களின் மதிப்பு உயர்ந்துள்ளது. இன்றைய போட்டி உலகில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே கையகப்படுத்தும் நிலங்களுக்குத் தேவையான இழப்பீட்டுத் தொகையை உயர்த்த மத்திய அரசைத்தான் வலியுறுத்த வேண்டும்

“”மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டண விகிதப்படி தான் நாம் மின்சாரத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிலையில் உள்ளோம். அதற்கேற்றபடி தான் இழப்பீடு, நிவாரண உதவிகள் வழங்க முடியும். எனவே நிறுவன நிலையைக் கருத்தில் கொண்டு செயல்படுங்கள். கடந்த காலாண்டில் நிறுவனத்தின் லாபம் சொற்ப அளவைத் தான் எட்டியுள்ளது” என்றும் கோடிட்டு காட்டியிருக்கிறார்.

இதற்கு தொழிற்சங்கத் தலைவர்களும் சில சந்தேகங்களையும் எழுப்பத் தவறவில்லை. நிறுவனத்தின் நிலையை நிறுவனத் தலைவரே வெளிப்படையாக அதிகாரிகளிடமும், தொழிற்சங்க நிர்வாகிகளிடமும் பகிர்ந்து கொண்டிருப்பது நிறுவன வரலாற்றில் இதுதான் முதல்முறை.

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக கடந்த காலங்களில் பல பிரச்னைகளை நிர்வாகம் கையாண்டிருந்தாலும், இன்றைய சூழலில் அரசியல் கட்சிகளை சமாளிப்பதில் நிறுவனத்தின் தற்போதைய உயரதிகாரிகளுக்கு போதிய அனுபவம் இல்லை என்றே சொல்லலாம்.

கடந்த காலங்களில் நிலங்களை கையகப்படுத்தும் போது, நில உரிமைதாரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு என்.எல்.சி. மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் கிராமங்களில் உள்ள மக்களின் குறைகளை அறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய மறைமுக தொடர்பாளர் ஒருவரை நியமித்து அதன்மூலம் பல்வேறு உதவிகளையும் மாற்றுக் குடியிருப்பையும் என்.எல்.சி. செய்துவந்ததால் இந்த அளவுக்கு எதிர்ப்பு எழவில்லை.

ஆனால் தற்போது வேலைவாய்ப்பு கிடையாது, அப்படியே வழங்கப்பட்டாலும், மிகுந்த சிரமத்திற்கு இடையே ஒப்பந்தப் பணி மட்டுமே வழங்கப்படுகிறது. சுற்றுப்புற மேம்பாட்டுக்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதன்மூலம் சாலை, குடிநீர் வசதி, பள்ளிக் கட்டட வசதி செய்து கொடுத்தாலும், அவை முழுமையாக பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடையவில்லை.

பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால், தற்போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தித் தரவேண்டும், என்.எல்.சி. மருத்துவமனையில் இலவச மருத்துவ வசதி செய்து தரவேண்டும் என்பது போன்ற அடிப்படை வசதிகளே கிராம மக்களின் பிரதான எதிர்பார்ப்பு.

கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடும், மாற்றுக்குடியிருப்பும் வழங்கியாயிற்று, அதன் பின்னர் அவர்கள் யாரோ நாம் யாரோ என்ற எண்ணம் உதித்ததன் விளைவுதான் இன்று நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்.

இந் நிறுவனத்தை நிர்வகித்து ஓய்வுபெற்ற அதிகாரிகளும், ஊழியர்களும் சுற்றுப்புற கிராம மக்களை அனுசரித்து, அவர்களின் தேவைகளை அறிந்து பூர்த்திசெய்து, நிறுவனத்தை பொன்விழா ஆண்டு கொண்டாடும் நிலைக்கு உயர்த்தி வந்துள்ளனர்.

அடுத்து இந்நிறுவனம் வைரவிழா ஆண்டையும் கொண்டாட வேண்டும் எனில், நிலம் கையகப்படுத்துதலில் நிர்வாகம் கடந்த காலங்களில் கையாண்ட உத்திகளை மீண்டும் தொடர வேண்டும். காலத்திற்கேற்ப எவ்வாறு தொழில் துறையில் மாற்றம் ஏற்படுகிறதோ அதற்கு ஏற்றாற்போல் நிலம் கையகப்படுத்தும்போது நில உரிமைதாரர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகளையும் இன்றைய காலத்திற்கேற்ப மாற்றிக்கொண்டு செயல்பட நிர்வாகம் முன்வரவேண்டும்.

நிர்வாகத் திறன் படைத்தவர்கள் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டுமே தவிர அவற்றிலிருந்து விலகிச் செல்ல முற்படுவது அழகல்ல. தமிழகம் மட்டுமன்றி, தென் மாநிலங்களுக்கும் ஒளி வழங்கும் என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலப் பிரச்னை ஒரு கேள்விக்குறியாக இருந்து விடக்கூடாது. இந் நிறுவனத்தை நம்பி இன்று ஒரு லட்சம் பேர் வாழ்கின்றனர். நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக மாநில அரசும், மத்திய அரசும் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு சரியான வழிகாட்டவேண்டும்.

அதேநேரத்தில் சுமார் 19,000 நிரந்தர ஊழியர்கள் மற்றும் 10,000 ஒப்பந்தத் தொழிலாளர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு நிறுவனத்துக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கவேண்டும் என்பதே பொதுநலத்தில் அக்கறை கொண்டவர்களின் எதிர்பார்ப்பு.

———————————————————————————————————————————

நிலத்திற்கு நிலம்!

கே.எஸ். அழகிரி

அரசின் பொது நோக்கங்களுக்காகவும், தனியார் துறையின் தொழிலியல் நோக்கங்களுக்காகவும், அரசு மூலம் நிலங்களைக் கையகப்படுத்தும் நிகழ்வு, சமீபகாலங்களில் பெரும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறது. மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமத்தில் ஏற்பட்ட எதிர்ப்புணர்வானது, போராட்ட குணம் நிறைந்த இடதுசாரிகளையே திகைக்க வைத்துள்ளது.

விவசாயியைப் பொருத்தவரை, நிலம் என்பது அவனுடைய உயிருக்கும் மேலானது. சொத்துடமையின் சின்னமே நிலம்தான். சமூகத்தின் மரியாதை, அவனுக்குள்ள நில உடமையை வைத்தே இன்னும் கிராமங்களில் அளவிடப்படுகிறது.

ஒரு விவசாயி தன்னுடைய சொத்துகளை விற்கவேண்டிய நிலை வரும்போது நிலத்தைத் தவிர பிற சொத்துகளை விற்கவே விருப்பப்படுகிறான்.

நிலத்தை இழந்து விட்டால் தன்னுடைய இருப்பையே இழந்துவிட்ட உணர்வு விவசாயிக்கு ஏற்படுகிறது. எனவே நிலங்களைக் கையகப்படுத்தும்போது, அரசுகள் மிகுந்த மனிதாபிமான உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.

கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் தொழிலதிபர்களுக்காக, தனக்கிருக்கிற ஒரே ஆதாரமான நிலத்தையும் தனது குடிசையையும் இழந்து எவ்வாறு வாழ்வது என்ற கவலை விவசாயியை நிலைகுலையச் செய்து விடுகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். ஓர் ஆக்கத்திற்காக ஓர் இருப்பை அழித்துவிடக் கூடாது.

ஆலைகளுக்காக நிலங்களைக் கையகப்படுத்துதல் கூடாது எனில், நாம் மீண்டும் களப்பிரர்களின் இருண்ட காலத்திற்குத்தான் செல்ல வேண்டி வரும். இதற்கான மாற்று வழிதான் என்ன? நிலத்திற்குப் பதில் நிலம்!

1957-ல் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் எடுத்தபோது, ஏக்கருக்கு ரூ. 250 முதல் ரூ. 500 வரை ஈட்டுத்தொகையும், குடும்பத்திற்கு 10 சென்ட் வீட்டுமனையும், அதுபோக, குடும்பத்திற்கு இரண்டரை ஏக்கர் மாற்று நிலமும் கூரைப்பேட்டை, மெகாசா பரூர், பூவனூர் போன்ற இடங்களில் கொடுத்தனர். இன்று அந்த நிலங்கள் ஏக்கர் 10 லட்சம்வரை விலைபோகின்றன. எனவே அப்போது நிலம் கொடுத்த விவசாயிகள் இன்று வசதியாக வாழ்கின்றனர்.

ஆனால் இரண்டாம் சுரங்கம் தோண்டும்போது கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு புன்செய் நிலத்துக்கு ரூ. 3000-மும் நன்செய் நிலத்துக்கு ரூ. 7000-மும் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டன. இந்தத் தொகை போதுமானதல்ல என்று கங்கைகொண்டான் ராமசாமி நாயுடு, ஊமங்கலம் ரங்கசாமி ரெட்டியார் ஆகியோர் நிதிமன்றம் சென்று ஏக்கருக்கு ரூ. 60 ஆயிரம் ஈட்டுத்தொகை கோரி தீர்ப்பு பெற்றனர்.

ஆனால் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் உயர் நீதிமன்றம் சென்று ரூ. 60 ஆயிரத்துக்குப் பதில் ரூ. 30 ஆயிரம் என்று குறைத்து ஒரு தீர்ப்பைப் பெற்றுவிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல அந்தப் பகுதி விவசாயிகளின் ஏழ்மைநிலை இடம் தரவில்லை. மேலும் அப்போது அவர்களுக்கு விழிப்புணர்வோ, போராட்டக்குணமோ இல்லை.

அதன் பிறகு, மறைந்த நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி இரண்டாம் சுரங்கத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் வாழ்க்கைநிலை குறித்து ஆய்வு நடத்தியபோது அச்சமூட்டும் உண்மை வெளிப்படத் தொடங்கியது. நிலம்கொடுத்தவர்களில் 90 சதவிகிதத்தினர் கூலித்தொழிலாளிகளாக மாறியுள்ளது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தமிழக, தேசிய விவசாயிகள், தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர் நெய்வேலி ஜான் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், பொதுவுடமைக் கட்சிகளின் தலைவர்கள் விவசாயிகளின் பிரச்னைகளுக்காகப் போராடி வருகின்றனர். ஊருக்கெல்லாம் ஒளிகொடுக்க நிலம் கொடுத்தவர்களின் வாழ்வு இருண்டுபோகக் காரணம் திட்டமிடலில் உள்ள குறைபாடா, மனசாட்சியற்ற அதிகாரவர்க்கமா என மக்கள் மன்றம் தீர்மானிக்க வேண்டும்.

நெய்வேலி விவசாயிகளின் பிரச்னையை 1996-ல் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் எழுப்பினேன். பிரச்னையின் பரிமாணத்தை முதல்வர் கருணாநிதி புரிந்துகொண்டு என்னையும், விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினர் குழந்தை தமிழரசனையும் கொண்ட ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்தார். உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஈட்டுத்தொகையை ரூ. 70 ஆயிரமாக அறிவித்து, விவசாயிகளை இன்ப அதிர்ச்சியில் திளைக்க வைத்தார்.

மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் காந்திசிங்கை சென்னைக்கு வரவழைத்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்து, மூன்று மாதத்தில் விவசாயிகளுக்கு பணத்தையும் வழங்கச் செய்தார். அரசுகளின் ஆமைவேக நடைமுறைகளில் மாறுபட்ட இந்த துரித செயல், மாபெரும் புரட்சியாக அன்று விவசாயிகளால் கருதப்பட்டது.

ஆயினும்கூட, இந்தப் பணத்தைக் கொண்டு விவசாயிகளால் அன்றைய நிலையில் மாற்று நிலங்களை வாங்க முடியவில்லை.

ஆலைகளுக்கு நிலம் கையகப்படுத்தும்போது ஈட்டுத்தொகையாக மாற்று நிலங்களைக் கொடுத்து, ஒரு புதிய குடியிருப்பை உருவாக்கித் தருவதே விவசாயக் குடும்பங்களைக் காக்கும் நல்வழியாகும். திட்டச் செலவோடு இந்தச் செலவையும் இணைத்தே, திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும்.

நிலத்திற்கு இணையாக மாற்று நிலம் வழங்க முடியாத சூழ்நிலையில், தற்போது வழங்குவதுபோல் பத்து மடங்கு வழங்குதல் வேண்டும்.

பொதுவாகவே ஒரு நிலத்தை விற்கும் போது மாவடை மரவடை என்று பத்திரத்தில் சேர்த்து எழுதுவார்கள். நிலத்தின் மதிப்பு வேறு. நிலத்தில் உள்ள மதிப்புமிக்க மரங்களின் விலை தனி. எனவே நிலத்தில் உள்ள மாவடை மரவடைக்குத் தனியாக விலை தருதல் வேண்டும். அந்தவகையில், நெய்வேலியில் நிலங்களுக்கு அடியில் உள்ள பழுப்பு நிலக்கரிக்கும் ஏதாவது ஒரு விலையை நில உடமையாளர்களுக்கு வழங்குதல் வேண்டும்.

விவசாயிகளின் குடும்பங்களில் படித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அப்படி படித்தவர்களிலும் 10-ம் வகுப்பைத் தாண்டியவர்களின் எண்ணிக்கை அதைவிடவும் குறைவு. எனவே நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு வேலை அளிக்க வேண்டும். வேலைபெறத் தகுதியற்ற குடும்பங்களுக்கு ஓர் ஈட்டுத்தொகையை நிலத்தின் விலையோடு சேர்த்து வழங்குதல் வேண்டும். படிப்பறிவற்ற குடும்பங்களை விட்டுவிடக் கூடாது.

இவ்வளவு நிபந்தனைகளை விதித்தால் தொழில் வளருமா என்ற கேள்வி எழுவது இயல்புதான். தொழில்வளர்ச்சி தேசத்தின் வளர்ச்சி; தேசத்தின் வளர்ச்சிக்காக தங்களது சொத்தை அளித்தவர்களும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் இந்தக் கோரிக்கைகளின் மையக்கரு ஆகும்.

அணைகள் கட்ட நிலம் கொடுத்த பழங்குடி விவசாயிகள் – அனல்மின் நிலையம் கட்ட, சுரங்கம் வெட்ட, தொழிற்சாலைகள் அமைக்க நிலம் கொடுத்த விவசாயக் குடும்பங்கள் அனைத்துமே, குடும்ப அமைப்பு சிதைந்து – புலம் பெயர்ந்த நாடோடிக் குடும்பங்களாக மாறியுள்ள அவலம்தான் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன.

இந்த நிலையை மாற்ற தமிழக முதல்வர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பல்வேறு துறைகளில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. நாடு முழுவதும் முக்கியப் பிரச்னையாக உருவாகிவரும் “நிலம் கையகப்படுத்துதலை’ விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் மேற்கொள்ள வழிவகை காண வேண்டும்.

(கட்டுரையாளர்: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்)

Posted in acquisition, Agriculture, Anbumani, arbitrary, Arbitration, Asset, Ban, Bengal, Coal, Commerce, Compensation, Deplete, Depletion, Economy, Electricity, Employment, Farmer, Fight, Govt, Industry, Insurance, Irrigation, Jobs, Land, Lignite, Management, Megawatt, Mgmt, Mine, Minerals, MW, Nandigram, Neiveli, Neyveli, Neyveli Lignite Corporation, peasants, PMK, Power, Private, Protest, Public, Ramadas, Ramadoss, resettlement, rights, Rural, Security, Settlement, Stocks, Strike, Thermal, Trade Union, TU, Union, Uzhavar Paadhukappu Peravai, Valuation, Village, villagers, WB, Work, Worker | Leave a Comment »

Cessation of RCTV in Venezuela – Hugo Chavez & Left Alliance vs Capitalism & USA

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

ஆட்டம் காணும் இடதுசாரி அஸ்திவாரம்

எம். மணிகண்டன்

வெனிசுலாவில் பழம்பெருமை வாய்ந்த “ரேடியோ கராகஸ்’ தொலைக்காட்சி (ஆர்சி டிவி) நிறுவனத்தின் ஒளிபரப்பு அண்மையில் நிறுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் ஹுகோ சாவேஸýக்கு எதிராக தலைநகர் கராகஸில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று வெறுமனே கூறிவிட முடியாது. ஊடகங்களைத் தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்கும் நாடுகள் பட்டியலில் வெனிசுலாவுக்கு எப்போதுமே 100-க்கு பின்னால்தான் இடம் கிடைக்கும். சாவேஸின் ஆட்சியில் அது இன்னும் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

எதிர்கட்சிகளுடன் கைகோர்த்துக் கொண்டு சாவேஸýக்கு எதிராக வெளிப்படையாகவே செயல்பட்டு வந்தது ஆர்சி டிவி. 2002-ஆம் ஆண்டு நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகக் கூறப்பட்டுவந்தாலும், ஆர்சி டிவிக்கும் பெரும்பங்கு இருப்பதாக நம்பப்படுகிறது. தற்போது இந்த தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருப்பது, சாவேஸின் பொதுவுடமை இலக்குகளை நோக்கிய வேகமான பயணத்தின் ஒரு படியே என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கெனவே எண்ணெய் நிறுவனங்களை அரசுடையமையாக்கியது, தனியார் சொத்துக்களை கையகப்படுத்தி ஏழைகளுக்கு வழங்குதற்காக திட்டங்களை அறிவித்தது என அனைத்துமே வெனிசுலாவில் செங்கொடி பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கிவிட்டது என்பதன் அறிகுறிகளே.

இதை மறைமுகமாகக் குறிக்கும் வகையிலேயே, “இந்தப் புரட்சியை யாராலும் தடுக்க முடியாது’ என கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அனைத்துப் பத்திரிகைகளில் ஒரு பக்கத்துக்கு விளம்பரம் செய்தார். “இந்தியா ஒளிர்கிறது’ என்பது போல.

சாவேஸýக்கு பிறகு ஆட்சிக்கு வந்த அண்டை நாடான பொலிவியாவின் ஈவோ மாரல்ஸ், ஓராண்டுக்கு முன்பே எரிவாயு திட்டங்களை அரசுடைமையாக்கி தனது இடதுசாரி பயணத்தைத் துவக்கிவிட்டார். இதனால், சாவேஸ் தனது சீர்திருத்தங்களை முடுக்கி விடவேண்டியதாகிவிட்டது.

லத்தீன் இயக்க விடுதலைக்கு வித்திட்ட சைமன் பொலிவருக்கு நிகரான சீர்திருத்தவாதியாக அறியப்படுபவர் சாவேஸ். இடதுசாரி சிந்தனை கொண்டவர் என்ற முறையில், கியூபாவின் ஆட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் நெருக்கமாக இருப்பவர். லத்தீன் அமெரிக்கா முழுவதையும் இடதுசாரிப் பாதைக்கு திருப்ப வேண்டும் என்பதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார். சிலி, பொலிவியா உள்ளிட்ட நாடுகளில் இடதுசாரி அரசுகளை அமைத்ததில் இவருக்குப் பெரும் பங்குண்டு.

பலமுறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதால் சாவேஸýக்கும் வெனிசுலா மக்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். “சாவேஸ் சர்வாதிகாரி என்று கூறப்படுவது மேற்கத்திய நாடுகள் புனைந்த கதை; புஷ்ஷைவிட சிறந்த ஜனநாயகவாதி அவர்’ என்று கடுமையாகக் கூறுவோரும் உண்டு. புஷ்ஷுக்கு எதிராக அந்நாட்டுத் தொலைக்காட்சி நிறுவனம் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டால் அவர் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாரா எனக் கேட்டு, ஆர்சி டிவி தடை செய்யப்பட்ட சாவேஸின் ஆதரவாளர்கள் நியாயப்படுத்துகின்றனர்.

சீர்திருத்தங்களை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெற்ற சாவேஸýக்கு எதிராக நிறைய விமர்சனங்களும் உண்டு. தனக்கு ஆதரவாக அரசியல் சட்டத்தை திருத்தியது, தேர்தலில் முறைகேடு, அரசுக்கு எதிரானவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவது, பத்திரிகைகளுக்கு கட்டுப்பாடு என சாவேஸ்மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.

அதேபோல், சாவேஸின் அதிரடி நடவடிக்கைகள் அனைத்துக்கும் மக்களின் ஏகோபித்த ஆதரவு இருப்பதாகவும் கூறிவிடமுடியாது. பணக்காரர்களிடம் இருந்து நிலத்தை பிடுங்கி ஏழைகளிடம் ஒப்படைக்கும் திட்டம், அவரது ஆதரவாளர்களிடமே எதிர்ப்பைச் சம்பாதித்தது. இது தவிர, அரசு அதிகாரிகள் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு வீடு வைத்திருப்பவர்களிடம் வீடுகளைப் பறித்துக் கொண்டு தவிக்க விட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்திருக்கின்றன.

ஆர்சி டிவி தடை செய்யப்பட்டதற்கு வெனிசுலாவின் நெருங்கிய நட்பு நாடான பிரேசில் கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் இயற்றி இருக்கிறது. இதற்குப் பதிலடி தரும் வகையில்,”தொழிலாளர்கள் பெயரைச் சொல்லி வோட்டு வாங்கிவிட்டு, அமெரிக்காவின் கைப்பாவையாக பிரேசில் அரசு செயல்பட்டு வருகிறது’ என்று வெனிசுலா நாடாளுமன்றம் கண்டித்திருக்கிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதுவும் வெனிசுலாவுக்கு பின்னடைவே.

எதிர்க்கட்சிக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாக அரசின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, குளோபோவிஷன் மற்றும் சிஎன்என் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்புக்கும் சாவேஸ் அரசு தடைவிதிக்கும் என்று கூறப்படுவதால் பிரச்னை தற்போது பூதாகரமாகியிருக்கிறது.

இதற்கிடையே, தடைசெய்யப்பட்ட ஆர்சி டிவி ஒளிபரப்பை மெக்சிகோவில் இருந்து மீண்டும் துவக்குவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்நிறுனத்தின் தலைவர் மார்சல் கார்னியர் மெக்சிகோவில் இருக்கும் தனது “நட்பு வட்டாரத்தை’ இதற்குப் பயன்படுத்துவார் எனத் தெரிகிறது.

தொலைக்காட்சி, செயற்கைக்கோள், இன்டர்நெட் என ஏதாவது ஒரு வகையில் வெனிசுலா மக்களை தொடர்பு கொள்வேன் என கார்னியர் சபதம் செய்திருப்பதால் சாவேஸýக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

வட கொரியா, ஈரான், சூடான், ரஷ்யா, வெனிசுலா, பெலாரஸ், பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் “சாத்தானின் கூட்டணி’ என்றே அமெரிக்க ஆதரவுப் பத்திரிகைகள் பிரசாரம் செய்து வருகின்றன. இது வெறும் வயிற்றெரிச்சல்தான் என்றாலும், இப்பட்டியலில் வெனிசுலா சேர்க்கப்பட்டிருப்பது சரிதானோ என்ற எண்ணம் உலக உலக நாடுகளுக்கு வராமலிருக்க, சாவேஸ் கவனமாகச் செயல்படுவது நல்லது. அதுதான் லத்தீன் அமெரிக்காவின் இடதுசாரி அஸ்திவாரத்தை பலப்படுத்துவதற்குச் சரியான வழி.

————————————————————————————————————————————–

இன்னொரு ஃபிடல் காஸ்ட்ரோ

எம். மணிகண்டன்

வெனிசுலாவைத் தாக்க அமெரிக்காவும் கொலம்பியாவும் சதி செய்கின்றன என அண்மையில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் வெனிசுலா அதிபர் சாவேஸ். இப்போதைக்கு அமெரிக்காவால் விலை கொடுத்து வாங்கவோ, நேரடியாகப் போரிட்டு அடக்கவோ முடியாத “அச்சுறுத்தல்’களில் வெனிசுலாவும் ஒன்று என்பதால் சாவேஸின் குற்றச்சாட்டு கவனிக்கத்தக்கது. அதற்காக லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து அமெரிக்காவுக்கு எதிராகப் போர் புரிய முடியுமா என்ன?

ஒருநாடு எவ்வளவு வேகமாக வளர்ச்சியடைகிறது என்பது மட்டுமல்ல, அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதை எது என்பதும் முக்கியம் என்பார் சாவேஸ். அவரைப் பொறுத்தவரையில், பொருளாதார வளர்ச்சியின் பயன் அடித்தட்டு மக்கள்வரை சென்றடைய வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி, பொதுவுடமைக் கொள்கைகளைத் தீவிரமாக அமலாக்குவதுதான். இடதுசாரிகள் என்றாலே அமெரிக்காவுக்கு எதிரானவர்கள் என்ற பொதுவான கருத்துக்கு சாவேஸýம் விதிவிலக்கல்ல.

அமெரிக்காவை எதிர்த்து 50 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டுவரும் கியூபாவை முன்மாதிரியாகக் கொண்டிருக்கும் சாவேஸ், தம்மையும் ஃபிடல் காஸ்ட்ரோ போன்றதொரு போராளியாக முன்னிறுத்திக் கொள்பவர். அமெரிக்காவின் அடிமைப்படுத்தும் கொள்கைகளுக்கு எதிராக லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே அவரது வாழ்நாள் லட்சியம். இதனால் அமெரிக்காவுக்குப் போட்டியாகப் பொருளாதார, ராணுவ பலத்தைப் பெருக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

லத்தீன் அமெரிக்க நாடுகளின் விடுதலை இயக்கத் தலைவரான சைமன் பொலிவரின் பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் “அமெரிக்காவுக்குப் பொலிவரிய மாற்று’ (ஆல்பா) என்ற அமைப்பின் கீழ் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளின் ஆதரவை சாவேஸ் திரட்டி வருகிறார். இந்த அமைப்புக்கு வெனிசுலாவும் கியூபாவும்தான் அடித்தளம் அமைத்தன.

பொதுவாக உலகின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள தடையிலா வர்த்தகப் பிராந்தியங்கள் போல் அல்லாமல், சமூக அக்கறையும் அடித்தட்டு மக்கள் மீது கரிசனமும் கொண்ட பொருளாதார வளர்ச்சியை எட்டும் வகையிலான வர்த்தகக் கூட்டுகளைச் செய்துகொள்ளப் போவதாக இந்த அமைப்பு கூறியிருக்கிறது.

இது நிறைவேறினால், தற்போது இடதுசாரிகள் மட்டுமே கூறிக்கொண்டிருக்கும் “அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பொருளாதார வளர்ச்சி’ என்பது உலக நாடுகளில் பலவற்றைக் கவரக் கூடும். இந்தியா போன்ற நாடுகள்கூட தங்களது அமெரிக்க அடிமைத்தனத்தை விட்டுவிடுவது குறித்து யோசிக்கும்.

ஆனால், ஆல்பா அமைப்பில் கியூபாவையும் வெனிசுலாவையும் விட்டால் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த நாடும் இல்லை என்பதுதான் பலவீனம். சாவேஸ் என்ன செய்தாலும் அதை இம்மி பிசகாமால் அப்படியே பின்பற்றும் பொலிவியாவும் இந்த அமைப்பில் இணைந்திருக்கிறது. ஈக்வடார், நிகரகுவா உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகள் இந்த அமைப்பில் சேர்ந்துவிட்ட போதிலும் உள்நாட்டில் எழுந்திருக்கும் எதிர்ப்புகளால் முடிவைப் பரிசீலித்து வருகின்றன. இதுபோக, கரீபியன் கடலில் உள்ள ஆன்டிகுவா, டொமினிகா உள்ளிட்ட குட்டி நாடுகள் மட்டுமே ஆல்பாவில் இணைந்திருக்கின்றன.

அமெரிக்காவுடன் நெருங்கிய உறவு கொண்டிருக்கும் கொலம்பியா, பிரேசில், அர்ஜென்டினா போன்ற வலுவான நாடுகளின் ஆதரவு சாவேஸýக்கு இன்னும் கிடைக்கவில்லை. கிடைக்கும் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

அமெரிக்க வங்கிகளில் இருக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் நிதியை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது சாவேஸின் மற்றொரு திட்டம். ஆசிய வளர்ச்சி வங்கி போல் பிராந்திய வங்கி ஒன்றை ஏற்படுத்தி அதில் இந்தப் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் அமெரிக்காவுக்கு எதிரான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கலாம் என்பது அவரது எண்ணம்.

ஆனால் அமெரிக்காவுக்கு எதிராகக் கூட்டு ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று சாவேஸ் அழைப்பு விடுத்திருப்பது வலியச் சென்று போரை வரவழைப்பதற்குச் சமம். சமூக, பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவித்துவரும் பொலிவியா போன்ற பின்தங்கிய நாடுகளுக்குக் கூட்டு ராணுவத்தை ஏற்படுத்தி போர்புரியும் திட்டமெல்லாம் ஒத்துவராது. கெட்டதும்கூட. லத்தீன் அமெரிக்க நாடுகளை அமெரிக்கா தாக்கினால் பார்த்துக் கொள்ளலாம்; அதற்காகக் கூட்டு ராணுவம் அமைப்பது என்பது பிராந்திய அமைதியைக் குலைக்கும் வேலை என நிகரகுவாவும், ஈக்வடாரும் கருதுகின்றன.

அண்டை நாடான கொலம்பியாவுடன் சேர்ந்து வெனிசுலாவைத் தாக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக சாவேஸ் கூறுவதையெல்லாம் வெனிசுலா மக்களே நம்பவில்லை. அப்படியே கொலம்பியாவுடன் போர் வந்தாலும் அதை லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும் என்று கூறுவதெல்லாம் சுயநலத்தின் உச்சகட்டம். தொடர்ந்து அதிபராக நீடிக்கும் வகையில் வெனிசுலாவில் அண்மையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் தேர்தலில் சாவேஸýக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். இந்தத் தோல்விகளை மறைத்து தனது செல்வாக்கை நிலைநாட்டுவதற்குத்தான் சாவேஸ் இந்த அபத்தங்களைச் செய்துவருவதாகக்கூட பத்திரிகைகள் எழுதுகின்றன.

வெனிசுலாவில் பத்திரிகைகளுக்குச் சுதந்திரமில்லை, நாட்டின் பல பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள்கூட செய்து தரப்படவில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுகள் சாவேஸின் புரட்சியாளர் என்ற பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. தனது பெயரை மீட்டெடுக்க வேண்டுமானால், அமெரிக்காவுக்கு எதிராகப் போரிடும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு, நாட்டுக்கும் பிராந்தியத்துக்கும் உருப்படியாக ஏதாவது செய்யலாம், கோகோ பயிரிடுவதைத் தவிர!

Posted in America, Autocracy, Belarus, Biz, Bolivia, BP, Brazil, Bush, Business, Capital, Capitalism, Caracas, Castro, Censor, Chavez, Chile, China, Citgo, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communists, Congress, Conoco, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, Cuba, Darfur, Democracy, Democratic, Development, Economy, Elections, Employment, Exchange, Exploit, Exploitation, Exxon, ExxonMobil, Fidel, Finance, Foreign, France, Freedom, GDP, Govt, GWB, Hispanic, Hugo, Independence, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Inflation, investments, Iran, Jobs, Journal, Korea, Latin America, Left, markets, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Media, Minerals, Mobil, Money, MSM, Nationalization, Newspaper, oil, Phillips, Polls, RCTV, Recession, Republic, Resources, Russia, Sudan, Union, USA, Venezuela, workers, Zine | Leave a Comment »

Pavannnan – The divide between wealthy & needy

Posted by Snapjudge மேல் மே 23, 2007

இருவேறு உலகங்கள்

பாவண்ணன்

அதிகாலை நடை முடிந்து திரும்பும் தருணத்தில் வழக்கமாக என் கண்களில் படும் முதல் காட்சி கீரைக்கட்டுகளை விற்றுமுடித்த ஆண்களும் பெண்களும் ஊர்திரும்பும் உற்சாகத்தோடு கூடைகளுடன் நிற்கும் தோற்றமாகும்.

வாய்நிறைய வெற்றிலைச் சாறும் புகையிலையுமாக ஒரு மூதாட்டி எனக்காக எடுத்து வைத்திருந்த கீரைக்கட்டுகளைக் கொடுத்து வியாபாரத்தை முடித்துக்கொள்வது அதற்கடுத்த காட்சி.

ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து பார்வையில் தென்படும் இக்காட்சிகளில் இந்த ஒன்றிரண்டு மாதங்களாக ஏற்பட்ட மாற்றங்கள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. பலருடைய கீரைக்கட்டுகள் எடுத்துப் பார்க்க ஆளின்றிக் கூடைகளில் முடங்கிக் கிடக்கின்றன.

பிரித்து வைத்த கூறுகள் இளஞ்சூரியனின் ஒளியை உள்வாங்கி வாடத் தொடங்குகின்றன. விற்றது பாதி, விற்காதது பாதி என்கிற நிலை சிலருக்கு. காலையிலேயே தெரு உலாவைத் தொடங்கிவிட்ட நகரத்து மாடுகளின் பக்கம் அரைமனத்தோடு கீரைக்கட்டுகளை வீசிவிட்டு அவசரமாக ஊர் திரும்புகிறார்கள் சிலர்.

இந்த எல்லா மாற்றங்களுக்கும் குழப்பங்களுக்கும் அதிர்ச்சிகளுக்கும் காரணம் பணக்கார நிறுவனங்களால் குளிரூட்டப்பட்ட மாபெரும் கட்டடங்களில் அக்கம்பக்கத்தில் தொடங்கப்பட்ட சில்லறை வணிக விற்பனை.

பணக்கார நிறுவனங்கள் நினைத்த நேரத்தில் நினைத்த தொழிலை மிக எளிதாக இந்த நாட்டில் தொடங்கிவிட முடிகிறது. பெட்ரோல் முதல் தேங்காய் எண்ணெய் பாக்கெட் வரை அனைத்தையுமே அவை விற்று வருகின்றன.

இன்சூரன்ஸ் துறை முதல் தொலைபேசித் துறை வரை எல்லாத் துறைகளிலும் கூடாரத்தில் ஒட்டகம் நுழைந்த கதையாக முன்னங்கால்களை ஊன்றிவைத்தாகிவிட்டது. உப்பையும் தண்ணீரையும்கூட விட்டுவைக்கவில்லை.

கோதுமை மாவு, கொழுப்பு அகற்றப்பட்ட எண்ணெய், விதவிதமான குழம்புகளுக்குத் தேவையான விதவிதமான மசாலாப் பொடிகள் எனப் பல சில்லறைப் பொருள்கள்கூட கடைகளில் கண்ணாடிப் பேழைகளிலும் தாங்கிகளிலும் விற்பனைக்காக அடுக்கப்பட்டுவிட்டன. இந்த வரிசையில் இப்போது கீரைக்கட்டுகளும் காய்கறிகளும் இடம்பெறத் தொடங்கிவிட்டன.

காலம் முன்னகரும் வேகத்தில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்பது உண்மை. மாற்றம் என்னும் காந்தம் குறிப்பிட்ட ஒருசில கூட்டத்தினரை மட்டுமே ஈர்த்துத் தன்னுடன் இணைத்துக் கொள்கிற சக்தியாக மட்டுமே இயங்குகிறது என்பதுவும் உண்மை.

ஈர்க்கப்பட்டவர், ஈர்க்கப்படாதவர் என இருபெரும் பிரிவுகளாக உலகம் பிளவுபட்டுத் துண்டுகளாக மாறத் தொடங்கிவிட்டது என்பது மிகவும் கசப்பான உண்மை.

செக்கடிக்குச் சென்று எண்ணெய் வாங்கியது ஒரு காலம். பலசரக்குக் கடைகளில் எண்ணெய்யும் ஒரு விற்பனைச் சரக்காக இடம்பெறத் தொடங்கியது இன்னொரு காலம். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைத்திருக்கிற காலம் இன்று.

உப்பு முதல் புளி வரையான பல பொருள்களின் விற்பனை முறைகள் உருமாறி உருமாறி இன்று வேறொரு விதமாக மாறிவிட்டன. காலந்தோறும் ஒவ்வொரு விற்பனை முறையும் மாற்றமடையும்போதெல்லாம் விற்பனைமுறைகளில் ஈடுபட்டிருந்தவர்களின் பிழைப்புக்கான வழியில்தான் முதல் அடி விழுகிறது. அந்த அடியின் வேகத்தில் பாதியளவினர் சிதறி வேறு வாழ்க்கை முறையைத் தேடிப் போகிறார்கள். மீதியுள்ளவர்கள் புதுமுறையின் நவீனப் பகுதிகளுக்குத் தகுந்தபடி தம்மைத் தகவமைத்துக் கொண்டு மீண்டுமொரு வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள்.

இன்றுவரை உருவாகிவந்த மாற்றங்கள் ஏற்படுத்தித் தந்திருக்கும் சில வசதிகளைப்போலவே இன்று உருவாகும் மாற்றத்திலும் சில வசதிகள் உள்ளதை மறுப்பதற்கில்லை. வேலைநேரம் என்பதே அடியோடு மாறிவிட்ட சூழலில் இருபத்திநாலு மணி நேரமும் இயங்க வேண்டிய நெருக்கடிகளில் சிக்கி நகரங்கள் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் காலம் இப்போது.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளைச் சேர்ந்த அலுவலகங்களின் கிளை அலுவலகங்களால் நிரம்பத் தொடங்கிவிட்டன இந்திய நகரங்கள். ஒன்பது அல்லது பத்து மணிக்குத் தொடங்கி ஐந்து அல்லது ஆறு மணிக்கு வீடு திரும்பிய சூழல் இப்போது இல்லை.

“”சிக்காகோவின் தெருக்களிலே சிந்திய ரத்தம் போதாதா?” என்னும் தொழிற்சங்க முழக்கங்கள் நினைவூட்டும் எட்டு மணி நேர வேலைத் திட்டம் இன்று கண் முன்னிலையிலேயே குளிரூட்டப்பட்ட அலுவலகச் சுவர்களிடையே சிதைந்து கொண்டிருக்கிறது. கசக்கிப் பிழிய ஆளில்லாமலேயே கசங்கிப் போகவும் மணிக்கணக்கில் கண் விழிக்கவும் பழகிவிட்ட இளந்தலைமுறையினரை இந்த அலுவலகங்கள் உருவாக்கிவிட்டன.

இன்றைய தனியார் வணிகத்தின் மாபெரும் இலக்கு இந்த இளந்தலைமுறை. மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள செருப்புமுதல் மூன்று ரூபாய் மதிப்புள்ள கீரைக்கட்டுவரை இனி எதை விற்றாலும் இவர்களை நோக்கிதான் விற்க வேண்டும்.

அகால நேரத்தில் வேலைக்குச் சென்று திரும்புகிற இந்தக் கூட்டத்தினருக்கு ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்க நேரமில்லை.

எல்லாமே ஒரே கூரையின் கீழ் இருக்க வேண்டிய வசதியை எதிர்பார்க்கிறது அவர்கள் மனம். தேவையானவற்றையெல்லாம் அள்ளி ஒரு பெரும் உறையிலிட வேண்டும். எடுத்துச்செல்ல ஒரு வாகனமும் வேண்டும். அவ்வளவுதான். நாள்கணக்கில் பாதுகாக்க குளிர்அறைப்பெட்டி இருக்கும்வரை எக்கவலையும் இல்லை. பதப்படுத்தப்பட்ட கீரைக்கட்டுகள் குளிரூட்டப்பட்ட அடுக்குகளில் வைக்கப்பட்டு விற்கப்படுவது இவர்களுக்காகவே.

வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ சில மாற்றங்கள் இவ்விதத்தில் மௌனமாக நிகழ்ந்தபடியேதான் உள்ளன. இந்த மாற்றங்களை இன்று சப்தம் போட்டு விளம்பரப்படுத்தும் ஊடகங்களின் பெருக்கத்தாலும் நிறுவனங்களின் குறைந்தவிலைத் தந்திரங்களாலும் இது ஏதோ ஒரு மாபெரும் புரட்சியாக உருப்பெருக்கிக் காட்டப்படுகிறது.

இந்த வியாபார அமைப்பு புதிய இளந்தலைமுறையினரையே பிரதான இலக்காகக் கொண்டதாக இருப்பினும் அந்த இலக்கில் விழும் இரையோடு மட்டுமே நிறைவடைய வியாபார நிறுவனங்கள் தயாராக இல்லை. கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஒற்றை இலக்கை மட்டுமே அடைவதில் என்ன லாபம் என்னும் கணக்கால் உருவானதுதான் விலைக்குறைப்புத் தந்திரம்.

ஒரு பொருளுக்கு இரண்டு ரூபாய் என்பது அடக்கவிலையில் பாதிதான் என்பது வாங்குகிறவனுக்கே தெரிகிற நிலையில் விற்றுக்காட்டும் சாகசத்தில் நடுத்தட்டு மக்களையும் அடித்தட்டு மக்களையும் இரையாக்கி உண்ண விரும்பும் வேகமே வெளிப்படுகிறது. முந்தைய மாற்றங்களுக்கும் இன்றைய மாற்றத்துக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இது.

மலிவாகக் கிடைக்கிறவரை வாங்கி அனுபவித்துக் கொள்ள வேண்டியதுதான் என்னும் நடுத்தட்டின் மனக்கணக்கு நிறுவனங்களுக்குப் புரியாத புதிரல்ல. வாங்குதல் என்னும் தற்செயல் நிகழ்ச்சி கைப்பழக்கமாகவும் மனப்பழக்கமாகவும் மெல்லமெல்ல மாறும்வரை இந்த மலிவுவிலை நாடகம் தொடரும்.

நாடகம் முடிந்து என்றாவது ஒருநாள் ஒரு கீரைக்கட்டு பத்து ரூபாய் என்று விலைத்தாள் தொங்கவிடப்படும்போது பிரதான இலக்கான இளந்தலைமுறைக்கு அது எவ்விதமான ஆச்சரியத்தையும் தரப்போவதில்லை. கடன் அட்டையில் பதியப்படும் எண்களைக் கவனிக்கக்கூட அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

மூன்றுக்கும் பத்துக்குமான வேறுபாடு பொருள்படுத்தத் தேவையற்ற ஒன்றாக எடுத்துக்கொள்ளக்கூடிய மனநிலையைத் தொட்டுவிட்ட அவர்களுக்கு அந்த உயர்வு ஒரு விஷயமாகவே இருக்கப் போவதில்லை.

அதிர்ச்சியில் குலைந்து சொல்லிச்சொல்லி ஆதங்கப்படப்போவது நடுத்தட்டும் அடித்தட்டும் மட்டுமே. ரோஷத்தில் வெளியேறி மீண்டும் பழைய பழக்கத்தைத் தொடர ஒருபுறம் அவர்கள் மனம் இடம் தரலாம்.

ஆனால் இன்னொரு புறத்தில் பிழைப்பைத் தொடர முடியாத தள்ளுவண்டிக்காரர்களும் கூடைக்காரர்களும் பிழைப்புக்காக மாற்று வழியைக் கண்டறிந்தவர்களாக மாறிவிட்டிருப்பார்கள்.

விலை ஏறும்போது விலகிவிடலாம் என்று மாற்றுத் தந்திரத்தோடு இயங்கியவர்கள் இரண்டு பக்கங்களிலும் திகைப்பையே எதிர்கொள்ள நேரும்.

சூழல்களின் நெருக்கடிகளால் வணிகத்துறை நிர்ணயித்த இலக்குக்குக் கூடுதல் இரைகளாக இவர்களும் படிப்படியாக மாறக்கூடும்.

மாபெரும் சாகசமாக இந்த வணிகச் சாதனையைத் திரித்துக் காட்டும் ஊடகமே இன்னொரு திசையில் நிகழும் வேலை இழப்பை மாபெரும் வலியாக உருக்கமாகக் காட்டுகிறது.

சாகசம், உருக்கம் என்பன அனைத்தும் ஊடகங்கள் அவ்வப்போது அணியும் புனைவுகள். மண் மீது நிகழும் அனைத்தையும் தன் படக்காட்சிகளாக மாற்றிவிடத் துடிக்கிறது நவீன ஊடகம். உண்மையில் வணிகச்சாதனையால் உருவாகத் தொடங்கிவிட்ட சமூகவலி என்பது வேறு விதமானது.

தனியார் நிறுவனங்களின் கட்டற்ற பங்கேற்பு என்பது எவ்வித பேதங்களுமற்று எல்லாவிதத் துறைகளிலும் தன் அசுரக்கால்களை ஊன்றத் தொடங்கிவிட்ட நிலையில் இந்த உலகம் இரு பெரும் பிரிவுகளாகப் பிளவுபட்டு நிற்பது துல்லியமாகத் தெரியத் தொடங்கிவிட்டது.

இன்று பணமுள்ளவர்கள் உலகம் வேறு. பணமற்றவர்கள் உலகம் என்பது வேறு. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், களியாட்டக்கூடங்கள், உணவு விடுதிகள், விளையாட்டு மைதானங்கள், திரையரங்கங்கள் எனச் சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் பணமுள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்டுவிட்ட பெரும்பட்டியலில் இன்னோர் அம்சமாக இன்று விற்பனை நிலையங்களும் சேர்ந்துவிட்டன.

Posted in Analysis, Backgrounder, Bangalored, Call Center, City, Commodity, Communism, Compensation, Consumer, Customer, Deflation, Divide, Economy, Education, Finance, GDP, Globalization, Healthcare, Hospitals, Inflation, InfoTech, Insights, IT, Jobs, Labor, Labour, Marxism, Media, Metro, MNC, Needy, Offshoring, Op-Ed, Outsourcing, Pavannnan, Poor, Prices, Private, Recession, Reliance, Reliance Fresh, Rich, Rural, Salary, Socialism, Spinach, Stagflation, Suburban, Union, Urban, Village, Wal-Mart, Walmart, Wealth, Wealthy, Work, Young, Youth | Leave a Comment »

Thamil Cinema Association not to support Tamil Actresses: Why?

Posted by Snapjudge மேல் மே 22, 2007

ஸ்ரேயாவுக்கு நெருக்கடி!

சென்னை, மே 23: நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ளாத நடிகர், நடிகைகளின் பட சம்பந்தமான பிரச்னைகளில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் தலையிடாது என அச்சங்கங்கள் முடிவுசெய்துள்ளன.

இதையடுத்து ஸ்ரேயா, ஜோதிர்மயி உள்ளிட்ட பல நடிகைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரம்:

நடிகர் சங்கத்தில் தற்போது 3500 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 700 பேர் ஆயுள்கால உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர் கட்டணமாக ரூ.2000 வசூலிக்கப்படுகிறது.

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இன்னும் நடிகர் சங்கத்தில் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ளவில்லை.

ஆனால் தாங்கள் நடிக்கும் படங்களில் சம்பளப் பிரச்னை உள்ளிட்ட இதர பிரச்னைகளுக்காக அவர்கள் நடிகர் சங்கத்தையே நாடுகிறார்கள்.

உறுப்பினராக இல்லாமல் தங்களுடைய பிரச்னைகளுக்கு மட்டும் சங்கத்தை நாடும் நடிகர், நடிகைகள் மீது பல ஆண்டுகளாக உறுப்பினர்களாக உள்ளவர்களும், நடிகர் சங்க நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளனர். ஆனாலும் இவர்களில் பலருக்கு சம்பளப் பிரச்னை ஏற்பட்ட போது நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் அவற்றை சுமுகமாக தீர்த்துவைத்துள்ளன.

முன்னணி நடிகைகளான

  • ஸ்ரேயா,
  • ஜெனீலியா,
  • ஜோதிர்மயி,
  • தமன்னா,
  • நவ்யா நாயர்,
  • சிந்துதுலானி,
  • நடிகர் ஜீவன் உள்ளிட்ட பலர் சங்கத்தில் இன்னும் உறுப்பினராகாமல் உள்ளனர்.

ஆனால் இனி நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு அளிப்பது என்றும், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் நடிகர் சங்கம் முடிவுசெய்துள்ளது. இதைத் தயாரிப்பாளர் சங்கத்திடமும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் கூறியதாவது:

அனைத்து நடிகர், நடிகைகளும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். உறுப்பினர் அல்லாத பலருக்கு இதுவரை பல பிரச்னைகளில் இரண்டு சங்கங்களும் துணையாக இருந்துள்ளன.

இனி வரும் காலகட்டங்களில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு தர முடிவு செய்திருக்கிறோம். நடிகர், நடிகைகள் உறுப்பினர் கட்டணமாகத் தரும் தொகையை மூத்த மற்றும் நலிவுற்ற கலைஞர்களின் நலனுக்காகத்தான் பயன்படுத்துகிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்று பலர் தங்களை உறுப்பினர்களாகப் பதிவுசெய்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கை மேலும் உயர வேண்டும்.

Posted in Actress, Association, Compensation, Dues, Geneelia, Genelia, Geneliya, Issues, Jeevan, Jeneelia, Jenelia, Jeneliya, Jodhirmayee, Jodhirmayi, Jothirmayee, Jothirmayi, Member, Navya, Navya Nayar, Raama Narayan, Raama Narayanan, Rama Narayan, Rama Narayanan, Salary, Shreya, Shriya, Sindhu Dholani, Sindhu Dolani, Sreya, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Theater, Tamil Theatres, Thamanna, Union | Leave a Comment »

Labour Unions – Industry workers association need to get rejuvenated

Posted by Snapjudge மேல் மார்ச் 23, 2007

துயிலெழ வேண்டும் தொழிலாளர் துறை

எஸ். சம்பத்

தொழிலாளர்களுக்கும், தொழிலக நிர்வாகிகளுக்கும் இடையே பாலமாக, சமரச அலுவலராக, நீதித்துறை இணை அதிகாரத்துடன் செயல்பட்டு பிரச்சினைகளை விரைவாக தீர்த்துவைக்க வேண்டியது தொழிலாளர் நலத்துறை.

அந்த அமைப்பு இப்போது “”அதிகாரமற்ற அமைப்பு போல” தூக்கத்தில் இருப்பதால் ஏராளமான தொழிலாளர்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாகிவிட்டது.

தொழிலாளர் நலச் சட்டங்களிலேயே முக்கியமானது 1947-ல் இயற்றப்பட்ட தொழில் தகராறுகள் சட்டம்தான்.

தொழிலாளர்கள் தரப்பில் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி எளிதாகப் பலன்களைப் பெற முடிகிறதா என்று பார்த்தால், இல்லை என்ற பதிலே விடையாகக் கிடைக்கும். இது கடந்த பத்தாண்டு காலமாக தமிழகத்தில் நிலவும் நிலைமை.

தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவது, தொழிலாளர்களுக்கு விரோதமாகச் செயல்படுவது, தொழிலகத்தில் அமலில் உள்ள நடைமுறைகளை முன் அறிவிப்பின்றி மாற்றுவது, தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பிக்கும் தீர்ப்புகளை அமல்படுத்துவது, நிர்வாகத்துக்கும் தொழிலாளிக்கும் இடையே வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது தொழிலாளியை வேலை நீக்கம் செய்வதாக இருந்தால் (தொழிலாளர் நலத்துறையிடம்) முன் அனுமதி பெறுவது, நியாயமாக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பயன் நிலுவையைக் கோருவது போன்றவை தொடர்பாகத்தான் அடிக்கடி தகராறுகள் எழுகின்றன.

சமீப கணக்கெடுப்புகளின்படி சென்னையில் மட்டும் கடந்த ஆண்டில் சுமார் 7,600 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்தால் நூற்றுக்கணக்கில் வருகின்றன.

தொழில் தகராறு சட்டங்கள் பொருந்தி வருகிற நிறுவனங்களில் பணிபுரிகிற தொழிலாளர்கள், தங்கள் பிரச்சினைகளுக்காக நேரடியாக உயர் நீதிமன்றம் செல்ல முடியாது.

மாறாக, சமரச அலுவலர் முன்பு இப் பிரச்சினையை எழுப்பி அதில் சமரச முறிவு ஏற்பட்ட பின்னர், இதை நீதிமன்றத் தீர்ப்புக்கு விடலாமா, கூடாதா என்று அரசின் தொழிலாளர் துறை முடிவு செய்த பின்னரே வழக்கு தொடுக்க முடியும். அப்படியே தொடுத்தாலும் அந்த வழக்கில் தீர்ப்பு வர பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

அப்படியே தொழிலாளர் நீதிமன்றமோ, தீர்ப்பாயமோ ஒரு தீர்ப்பை தொழிலாளருக்குச் சாதகமாக வழங்கிவிட்டாலும், உடனடியாக நிர்வாகத்தின் தரப்பில் அதற்கு மேல் முறையீடு செய்யப்பட்டு நியாயம் கிடைப்பது மேலும் தாமதப்படுத்தப்படும்.

நடுநிலையான தொழிலாளர்துறை ஆணையர்கள் பணியில் இருந்தபோது தொழிலாளி மீதும் நிர்வாகத்தின் மீதும் தமது அதிகாரத்தை சரியாகப் பிரயோகப்படுத்தும் நிலைமை முன்னர் இருந்தது. அவற்றை நிர்வாகங்களும் ஏற்கும் நிலைமையும் இருந்தது.

இப்போது தொழிலாளி தரப்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டால், எதிர் மனுதாரராகிய நிர்வாகத்திடம் ஒருமுறைக்கு இருமுறை கேட்டுக் கொண்ட பிறகே வழக்கை விசாரணைக்கு எடுப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்யப்படுகிறது.

இதையெல்லாம் மீறி ஒரு வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்று பல வருடங்கள் வாதிட்ட பிறகு, “”அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று தீர்ப்பு வருவது தொழிலாளர்களுக்கு பேரிடியாக அமைகிறது. சமீப காலத்தில் இப்படிச் சில தீர்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

அரசு போக்குவரத்துக் கழகங்கள் தோன்றி 23 ஆண்டுகளுக்குப் பிறகு, 1995-ல் பொது நிலையாணைகள் உருவாக்கி சான்றிடப்பட்டது. அதில் சில அம்சங்களை எதிர்த்து நிர்வாகமும், தொழிற்சங்கங்களும் தனித்தனியே மேல்முறையீடு செய்தன.

கடந்த 11 வருடங்களாக தொழிலாளர் துறையால் அவை விசாரிக்கப்பட்டு முடிவுக்கு வராததால், போக்குவரத்துக் கழகங்கள் தோன்றி 34 ஆண்டுகள் ஆனபிறகும் பொது நிலையாணை ஏற்படாத அவல நிலை தொடர்கிறது.

2001-ல் போனஸ் தொடர்பான வழக்கு நிலுவையிலிருக்கும்போது போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் அனைத்திலும் சுமார் 600 பேர் வரை பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

அது தொடர்பாக, தொழில் தகராறு சட்டப்பிரிவு 33 (1) (ஏ)-ன்படி வேலை நீக்கத்துக்கு ஒப்புதல் கேட்ட மனுக்கள் மீது இன்னமும் முடிவெடுக்கப்படாமல் நிலுவையில் இருக்கின்றன. இதனால் வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இந்த உதாரணம் அரசுத்துறை நிறுவனத்தைப் பொறுத்தது. தனியார் துறை தொடர்பாக எப்படி இருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.

தொழிலாளர் நலத்துறையை தட்டி எழுப்பி, நிலுவையிலிருக்கிற வழக்குகளை முடித்து வைத்தால் மட்டுமே, “”தொழில் தாவா சட்டம்” இயற்றப்பட்டதன் நோக்கம் நிறைவேறும்.

(கட்டுரையாளர்: தொழிற்சங்க நிர்வாகி).

Posted in Benefits, Biz, Commerce, Communism, Communist, employee, Employer, Employment, Factory, Finance, Fire, HR, Human Resources, Industry, Insurance, Jobs, Judge, Justice, Labor, Labour, Law, Layoff, Management, Minister, Ministry, Order, Permanent, Strike, Temporary, Union, Wages, workers | Leave a Comment »

Wheat vs Rice – TN farmers seek sweet sugar price

Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007

கோதுமைக்கு அதிக விலை; நெல்லுக்கு குறைவா?: விவசாயிகள் விரக்தி

சென்னை, மார்ச் 21: பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கோதுமைக்கு அரசின் கொள்முதல் விலை அதிகமாக உள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது, தமிழகத்தில் நெல்லுக்கு அரசின் கொள்முதல் விலை மிகக் குறைவாக உள்ளது என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இதுபோன்ற 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதுகுறித்த விவரம்:

காவிரி டெல்டா பகுதிகளில் உள்ளது போன்று, தமிழகத்தின் பிறபகுதிகளிலும் நேரடி நெல் கொள் முதல் நிலையங்களை அரசு அமைக்க வேண்டும்.

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளின் செயலாளர்கள் மூன்று ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றக் கூடாது. வேளாண் மின் இணைப்பு கேட்கும் அனைத்து விவசாயிகளுக்கும் உடனடி மின் இணைப்பு வழங்க வேண்டும்.

பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து விவசாயக் கடன்களுக்கும் 4 சதவீதம் வட்டியில் கடன் வழங்க பொதுத் துறை வங்கிகளும், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளும் முன்வர வேண்டும்.

மேலும், ஒவ்வொரு வங்கிக் கிளையும் தனது எல்லைக்கு உட்பட்ட கிராமத்தில் 10,000 மூட்டைகளை சேமிக்கக் கூடிய கிடங்குகளை ஏற்படுத்த வேண்டும்.

பிற மாநிலங்களில் சர்க்கரைக்கு டன்னுக்கு ரூ. 1,500 வரை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் ரூ. 1,025 மட்டுமே அளிக்கப்படுகிறது. மேலும், எரிசாராய ஆலைகளுக்குப் பயன்படும் கரும்புச் சக்கை, பிற மாநிலங்களில் டன்னுக்கு ரூ. 2,500 வரை விற்கப்படுகிறது. தமிழகத்தில் மிகக் குறைந்த அளவு தொகைக்கே விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு, உரிய விலை நிர்ணயத்தை அரசு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. கோரிக்கை மனு, தமிழக வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் வழங்கப்பட்டது.

==========================================
தமிழகத்தில் அதிக உணவு உற்பத்தி: அமைச்சர் தகவல்

சென்னை, ஏப். 5: தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிகபட்சமாக 95.4 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்தார்.

பேரவையில் வேளாண் மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு செவ்வாய்க்கிழமை பதிலளித்து அமைச்சர் பேசியது:

நல்ல இடுபொருள், சீரிய ஆலோசனைகள் போன்றவற்றின் காரணமாக திமுக ஆட்சியில் அதிக அளவு உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உணவு உற்பத்தி செய்யப்பட்டாலும் நமது தேவை 115.2 லட்சம் மெட்ரிக் டன்னாகும். உற்பத்தி 95 லட்சத்தை எட்டினாலும் பற்றாக்குறை 19 லட்சம் டன்னாக உள்ளது.

நெல் சாகுபடி குறைந்துவிட்டது. புதிய வீரிய ரக விதைகள் மூலமும் புதிய தொழில்நுட்ப மூலம் அதிக அளவு உற்பத்தியை பெருக்க வேண்டியுள்ளது. சாகுபடி நிலப்பரப்பு குறைந்தபோதிலும் உணவு உற்பத்தி குறையவில்லை.

விவசாயிகள் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 கோடியே 15 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 73 லட்சம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

நிலமுள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மஞ்சள் வணிக வளாகம்: ஈரோடுக்கு அருகில் நசியனூர், வில்லரசம்பட்டி ஆகிய கிராமங்களில் ரூ. 36.32 கோடியில் மஞ்சள் வணிக வளாகம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் கோயம்புத்தூர் மாவட்டம் பொங்கலூரில் வெங்காயத்துக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரியில் மாங்கனிக்கும் குளிர்பதன வசதியுடன் கூடிய வணிக வளாகம் தலா ரூ. 2 கோடியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் வீரபாண்டி ஆறுமுகம்.
==========================================

Posted in Agriculuture, Cauvery, Commodities, Commodity, ethanol, Exchanges, Farmer, Farming, Food, Grains, Interest, Interest Rates, Kavery, Kaviri, Loans, markets, minimum support price, molasses, MSP, Needs, Paddy, Price, Production, Punjab, Request, rice, SAP, state advised price, Sugar, Sugarcane, support, tonne, Trading, Union, Veerapandi Aarumugam, Veerapandi Aarumukam, Veerapandi Arumugam, Wants, Wheat | 1 Comment »

Pension Funds for Industrial workers & union Labourers – PF Interest Rates

Posted by Snapjudge மேல் ஜனவரி 28, 2007

பி.எப். வட்டி

நாட்டிலுள்ள 4 கோடி தொழிலாளர்கள், ஊழியர்கள் ஆகியோரின் சம்பளத்திலிருந்து மாதாமாதம் கட்டாயமாகப் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புநிதிக்கு (பி.எப்.) எவ்வளவு வட்டி அளிப்பது என்ற பிரச்சினை வழக்கம்போல இந்த ஆண்டும் இழுபறியாக உள்ளது.

இந்த வட்டிவிகிதத்தை 8 சதவீதமாகக் குறைக்க அரசு விரும்புகிறது. இவ்விதம் குறைக்கக் கூடாது என்று தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

வருங்கால வைப்புநிதித் திட்டம் 1952-ல் தொடங்கப்பட்டதாகும். தொழிலாளர்களும், ஊழியர்களும் தாங்களாக முன்வந்து எதிர்கால நலன் கருதி, சேமிப்பில் பணம் போட இயலாதவர்கள்.

ஆகவே அவர்கள் ஓய்வு பெறும்போது கணிசமான பணம் கிடைக்கச் செய்ய இத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வைப்புநிதி வகையில் பிடிக்கப்படும் தொகை ஒவ்வொருவர் கணக்கிலும் சேர்ந்துகொண்டே போகிறது. இதற்காகக் கணக்கிடப்படும் வட்டித்தொகை ஏற்கெனவே உள்ள தொகையுடன் ஆண்டுதோறும் சேர்க்கப்படுகிறது.

ஒருகாலகட்டத்தில் இதற்கான வட்டித்தொகை 12 சதவீதமாக இருந்தது. ஆனால் 2000-ம் ஆண்டில் தொடங்கி இது படிப்படியாகக் குறைக்கப்பட்டு இப்போது 8.5 சதவீதமாக உள்ளது. ஆனால் இதைக் கொடுப்பதே பெரும்பாடு என்பதுபோல அரசு சித்திரிக்க முற்பட்டுள்ளது. வைப்புநிதிக்காகப் பிடித்தம் செய்யப்படுகிற தொகையுடன் நிர்வாகம் சம அளவில் அளிக்கின்ற தொகையும் சேர்ந்து மொத்தப் பணம் பெருகிக் கொண்டே போகிறது. 2004 மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி மொத்த வைப்புநிதித் தொகையில் உள்ள பணம் ரூ. 1 லட்சத்து 28 ஆயிரம் கோடியாகும். இது தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் உரியது. ஆகவே இது அரசுக்கு அவர்கள் அளித்துள்ள கடன் போன்றதே.

கடந்த சில ஆண்டுகளாக வங்கிகளில் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு கூடுதல் வட்டி வழங்கப்படுகிற அதேநேரத்தில், வைப்புநிதிக்கு அரசு அளிக்கும் வட்டித்தொகை குறைந்து கொண்டே வருகிறது. நாட்டில் பணவீக்க விகிதம் 5 சதவீத அளவை எட்டியுள்ள நிலையில் வைப்புநிதிக்கு அளிக்கப்படுகிற வட்டி மிகக் குறைவே. இதை மேலும் குறைப்பது என்பது எந்தவகையிலும் நியாயமற்றது. இந்தியாவில் யாராவது பல ஆயிரம் கோடி ரூபாயை 8.5 சதவீத வட்டியில் நீண்டகாலக் கடனாக அளிப்பார்களா என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம். ஆனால் வைப்புநிதித் திட்டத்தின் கீழ் வருகிற தொழிலாளர்களும், ஊழியர்களும் மட்டும் அப்படி குறைந்த வட்டியில் கடன் தர வேண்டுமென அரசு எதிர்பார்ப்பது எப்படி என்பது புரியவில்லை.

வருங்கால வைப்புநிதிக்கான வட்டிவீதத்தை இப்போதுள்ள அளவில் நீடித்தால் அல்லது உயர்த்தினால் அரசுக்கு நஷ்டம் ஏற்படும் என்று வாதிக்கப்படுகிறது. இது பொருளற்ற வாதமாகும். வருங்கால வைப்புநிதி வகையில் பெறப்படும் தொகையில் 79 சதவீதம் சிறப்பு டெபாசிட் திட்டத்தில் போடப்படுகிறது. இத் திட்டத்துக்கு உண்டான வட்டி 8 சதவீதமே என்றும் ஆகவே அதற்கு மேல் கொடுத்தால் நஷ்டம் என்றும் வாதிக்கப்படுகிறது. சிறப்பு டெபாசிட் திட்டத்துக்கான வட்டி 8 சதவீதம் என்பதை நிர்ணயித்தது யார்? அதாவது அரசு தானாக ஒரு வட்டி வீதத்தை நிர்ணயித்துவிட்டு அதற்கு மேல் கொடுத்தால் நஷ்டம் என்று கூறுவது விசித்திரக் கணக்கு ஆகும்.

வருங்கால வைப்புநிதிக்கான வட்டிவீதம், முன்பு இருந்த அளவுக்காவது உயர்த்தப்பட வேண்டும். அதற்கு தொழிற்சங்கங்கள் போராட வேண்டும். 8 சதவீதமாகக் குறைக்கும் திட்டத்தை முறியடித்துவிட்டோம் என்று பெருமைப்படுவதோடு நின்று விடலாகாது.

Posted in 401 K, Bonds, Dinamani, Economy, Finance, India, Industry, Interest, Interest Rates, Labor, Labourers, markets, Pension Funds, PF, Security, Share, Society, Stocks, Union, workers | Leave a Comment »

‘Telecom & IT workers has every right to strike’ – Jyothi Basu

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 27, 2006

தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியருக்கும் வேலைநிறுத்த உரிமை உண்டு: ஜோதி பாசு

கோல்கத்தா, அக். 28: தொழிலாளர்களிடம் இருந்து வேலைநிறுத்த உரிமையைப் பறிக்கக் கூடாது; தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் வேலைநிறுத்த உரிமை உண்டு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான ஜோதி பாசு கூறினார்.

தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமை தொடர்பாக கட்சிக்குள் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை. தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமையை நாம் பறிக்க முடியாது; அதே நேரத்தில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அடிக்கடி வேலைநிறுத்தம் ஏற்பட்டு, உற்பத்தி பாதிக்கப்பட்டுவிடாமல் தடுக்க, அத் துறையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கலாமா என்பது குறித்து ஆராயலாம் என்றும் அவர் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம், கோல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடந்தது. அதில் பங்கேற்ற ஜோதி பாசு, பின்னர் நிருபர்களிடம் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தார்.

ஆனால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை வலுக்கட்டாயமாக, பலத்தைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்தக் கூடாது என்று கூறியுள்ளார் மேற்கு வங்க மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா. மேற்கு வங்கத்தில் புதிதாக பல தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கும் புத்ததேவ், வேலைநிறுத்தத்தால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுவிடாமல் தடுப்பதிலும் அக்கறை காட்டிவருகிறார்.

அண்மையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தியது. அப்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொண்டார் புத்ததேவ்.

மத்திய அரசின் மக்கள்~விரோத பொருளாதாரக் கொள்கைகளையும் தனியார்மயமாக்கல் மற்றும் அரசு நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கும் விற்கும் கொள்கையையும் எதிர்த்து டிசம்பர் 14-ம் தேதி பொது வேலைநிறுத்தம் செய்ய சிஐடியூ தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இப் பின்னணியில், வேலைநிறுத்த உரிமை குறித்து ஜோதி பாசு தெரிவித்துள்ள கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

Posted in Buddhadeb Bhattacharya, Calcutta, CITU, CPI (M), employees, I&B, Industry, Information & Broadcasting, InfoTech, Jothi Basu, Jothy Basu, Kolkata, Mamtha bannerjee, Marxist, Strike, Technology, Telecom, Trinamool, Union, WB, West Bengal, workers | Leave a Comment »