Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Annadurai’ Category

Parimalam – Adopted son of late TN CM Arinjar Annadurai: Ira Sezhiyan

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

பரிமளத்தைப் பறிகொடுத்தோம்

இரா. செழியன்

அறிஞர் அண்ணாவின் மகன் பரிமளம் திடீரென மறைந்தது என்னைப் போன்றோர்க்கு சோகம் மிக்க தாங்கொணாத அதிர்ச்சியைத் தந்துள்ளது.

1944இல் அண்ணாவுடன் நான் முதலில் காஞ்சிபுரம் சென்றபொழுது பரிமளம் மூன்று வயதுச் சிறுவனாக இருந்தான். அவனுடைய தம்பிமார்களாக இளங்கோவன், கௌதமன், பாபு ஆகியோர் இருந்தனர். பரிமளம் அண்ணாவினாலும், எங்களாலும் “பரி’ என்று அன்புடன் அழைக்கப்பட்டான். உற்சாகமான, பொறுப்புள்ள மகனாக, மாணவனாக, பிறகு மருத்துவராக பரிமளம் வளர்ந்தான். அண்ணா ஈடுபடும் ஒவ்வொரு காரியத்திலும், “திராவிட நாடு’ இதழாக இருந்தாலும், நூல் வெளியீடாக இருந்தாலும், அண்ணாவின் நாடகமாக இருந்தாலும், ஒவ்வொன்றிலும் பரிமளத்தின் பங்கு இல்லாமல் போகாது.

மலேசியா, சிங்கப்பூர், கிழக்கு நாடுகளுக்கு அண்ணாவுடன் நானும் சென்றிருந்தபொழுது, அங்கிருந்து அவனுக்காக ஒரு “ஸ்டெதாஸ்கோப்’ வாங்கி வந்தோம். பரிமளம் அப்பொழுது மருத்துவக் கல்லூரியில் மாணவன். அவன் டாக்டராக ஆவதில் அண்ணாவுக்குப் பெரும் மகிழ்ச்சி. பரிவும், பண்பும், பாசமும், நேசமும் உள்ள ஒருவராகவே பரிமளம் வளர்க்கப்பட்டார். அவரும் வளர்ந்து வந்தார்.

அண்ணாவின் காலத்திலேயே பரிமளம் அரசியல் கட்சியில் நேரடியாக ஈடுபாடு காட்டவில்லை. அண்ணாவும் அந்த முறையில் அவரை வளர்க்கவில்லை. அண்ணா முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு கூட நான்கு மாதங்கள் கழித்துத்தான் சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ள அண்ணாவின் அறைக்குப் பரிமளம் சென்றார். அரசாங்க நிர்வாகத்திலும், அதிகாரிகளிடமும் எந்த வகையிலும் அவர் தொடர்பு கொண்டதில்லை.

அண்ணா மறைந்த பிறகு, ஓரிரு ஆண்டுகள் அண்ணாவின் பிறந்த நாள், நினைவு நாள் ஆகிய நிகழ்ச்சிகளின்பொழுது, நானும் கடற்கரைக்கு மற்ற கழகத் தலைவர்களுடனும், தோழர்களுடனும் சென்று அண்ணாவின் சமாதி முன் அஞ்சலி செலுத்துவதுண்டு. ஆனால், வர வர சமாதிக்குச் செல்லும் ஊர்வலத்தில் முந்திச் செல்வதற்கும், முன் நிற்பதற்கும் நடைபெறும் நெருக்கடியை என்னால் ஈடுகொடுக்க முடியாமல் அவ்வாறு செல்வதை நான் தவிர்த்துக் கொண்டேன். ஆனால், ஒவ்வோராண்டும் அண்ணாவின் பிறந்த நாள் – நினைவு நாள் அன்று அண்ணி ராணி அம்மையாரைக் காண பரிமளம் அல்லது இளங்கோவன் இல்லங்களுக்குச் சென்று வருவேன். அண்ணா வாழ்ந்த இடத்தில் அவர்களுடன் இருந்தவர்களைக் காண்பதில், அண்ணாவைப் பற்றிப் பேசுவதில் ஒருவகை ஆறுதல் இருந்தது.

ராணி அம்மையார் மறைந்த பிறகு, ஆண்டுதோறும் அண்ணாவின் பிறந்த நாள், நினைவு நாள் அன்று நுங்கம்பாக்கம் அவென்யு சாலையிலுள்ள அண்ணாவின் தாயகத்திற்குத் தவறாமல் சென்று பரிமளத்தையும், அவர் குடும்பத்தினரையும் நான் காண்பது வழக்கம். பரிமளம் ஒரு முறை கூறினார்: “”நான் கூட அண்ணா சமாதிக்கு இப்பொழுது செல்வதில்லை.”

அண்ணாவின் கட்டுரைகள், கதைகள் ஆகியவற்றில் பல வெளியிடப்படாமல் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அவற்றையெல்லாம் சேகரித்து வெளியிடுவதில் பரிமளம் ஈடுபட்டிருந்தார்.

புதைந்து கிடக்கும் வரலாற்றுச் சான்றுகளைத் தேடி எடுக்கும் அகழ்வாராய்ச்சியாளர்களைப் போல, மறைந்து கிடக்கும் அண்ணாவின் இலக்கியப் படைப்புகளை வெளிப்படுத்துவதில் அரிய அகழ்வாராய்ச்சியாளராக பரிமளம் விளங்கினார். அதன் விளைவாக, இதுவரை மறைந்து கிடந்த அண்ணாவின் பல கட்டுரைகள், பேச்சுகள் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன.

சென்ற மாதம் அண்ணா நினைவு நாளன்று வழக்கம்போல் அவரது இல்லத்தில் பரிமளத்தைச் சந்தித்தேன். அப்பொழுதும் இதுவரை வெளிவராமல் உள்ள அண்ணாவின் கட்டுரைகளைத் திரட்டி வெளியிடுவது பற்றி ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் அவர் பேசினார்.

அண்ணாவின் குடும்பத்துடன் கலந்திருந்த நம்மில் பலருக்கு பரிமளத்தின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும். அன்னாரைப் பிரிந்து துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Posted in Anjali, Anna, Annadurai, Biosketch, Faces, Foster, Memoirs, Parimalam, people, Sezhiyan, Son | Leave a Comment »

Primary vs. General Election funds: USA & India Poll Finances: Madhavan

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

ஊழலின் ஊற்றுக்கண்!

செ. மாதவன்

சரியோ தவறோ, இந்தியப் பொருளாதாரம் அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றிச் செல்கிற நிலைமை. அதைப்போல, இந்திய அரசியல் கட்சிகளும் தேர்தல் நிதி, தேர்தல் செலவுகளிலும் அமெரிக்காவைப் பின்பற்றிச் செல்லாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சிகள் தொடங்க வேண்டும்.

அரசியல் செலவுகள் பெருகி வருகின்றன. இதன் விளைவாக அரசியல் லஞ்சம் பெருகி விடும். இன்றுள்ள நிலையே மோசமாக உள்ளது. அதிகாரம் செலுத்தும் சட்ட வலிமையுள்ள அனைத்து அரசு அமைப்புகளும், அதிகாரம் பெற்றுள்ள அரசியல்வாதிகளும், அரசு அலுவலர்களும் லஞ்சத்தில் மூழ்கி வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை.

விதிவிலக்காக உள்ள சிலர் மிகக் குறைவே. இதில் சதவீத வேறுபாடு இருக்கலாமே தவிர அதிக அளவில் லஞ்சம் பெருகி வருவது உண்மை.

அதிகாரம் செலுத்தும் வாய்ப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சொத்துக் குவிப்பதில் உள்ள சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் நிறைந்த விதிமுறைகள் பயனற்றவைகளாக உள்ளன.

1959ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுப்படி, 1967ஆம் ஆண்டு தமிழகத்தில் அமைச்சரவை பொறுப்பேற்றவுடன், அமைச்சர்கள் எந்தத் தொழிலிலும் ஈடுபடக் கூடாது என்ற சட்டவிதியை அமல்படுத்துமாறு அறிஞர் அண்ணா நடவடிக்கை எடுத்தார்.

அமைச்சர்கள் சொத்துகள் வாங்குவதை முறைப்படுத்தி பகிரங்கப்படுத்த சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து அன்றைய முதல்வர் கருணாநிதி உத்தரவிடக் கூறினார். சில செய்திகள் வெளிவந்தவுடன் நடவடிக்கை எடுத்த நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தனி நபர்களைப் பற்றி நினைப்பதைவிட இதுபோன்று அதிகாரங்களைப் பயன்படுத்திப் பணம் குவிப்பதைத் தடுக்க விதிமுறைகள் வகுக்க வேண்டும்.

ஆட்சியின் அடித்தளத்தில் உள்ள ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளைப் பரிசீலிக்கலாம். வீடு கட்ட அனுமதி கொடுப்பதில் பணம் வாங்கும் நிலை உள்ளது. ஒரு அரிசி ஆலைக்கு அனுமதி கேட்டு முறைப்படி மனுச் செய்த ஒருவர், அனுமதி பெற இயலவில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதி வழங்காவிட்டால், மனுச் செய்த விவரங்கள் சரியாக இருந்தால் அனுமதி பெற்றுவிட்டார் என்று கூறி, அரிசி ஆலை நடத்தலாம் என்று நீதிமன்றத் தீர்ப்பை நான் பெற்றுக் கொடுத்த வழக்கு நினைவில் நிற்கிறது. அனுமதி வழங்கும் விதிகளில் தெளிவான விவரங்கள் வகுக்கப்பட்டு இருந்தால் அனுமதி பெறுவதில் நடமாடும் லஞ்சங்கள் தவிர்க்கப்படலாம்.

உள்ளாட்சி மன்றங்கள் திட்டங்களுக்காகச் செலவிடப்படும் முறைகளில் ஒரு பகுதி நிதி ஊழல் செய்ய வழி வகுக்கிறது. சாலைகள், கட்டடங்கள், தொழிற்சாலைகள் அரசின் பல திட்டங்கள் மூலம் நிதி செலவழிக்கும்போது அரசியல்வாதிகள், அதிகாரிகள், பல கட்டங்களில் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பகுதியை பங்கிட்டுக் கொள்வது நடைமுறையாகிவிட்டது. ஒவ்வொரு மட்டத்திலும் சதவீத அடிப்படையில் மக்கள் வரிப்பணம் பாழடிக்கப்படுவது எந்தவிதத்தில் நியாயம்? ஆனால், அதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.

இந்த ஊழலின் தொடக்கம் தேர்தலில்தான் தொடங்குகிறது என்கிற நிலை அண்மைக்காலங்களில் தோன்றிய சரித்திரம். ஊராட்சித் தேர்தலில் லட்சக்கணக்கில் செலவழித்து விட்டேன், அதை ஈடு கட்டுங்கள் என்று ஊராட்சித் தலைவர்களாக வர விரும்புபவர்கள் கூறுகிற விசித்திரத்தைப் பார்க்கிறோம்.

பல லட்சங்கள் செலவழித்துத் தலைவர்களாக வருபவர்கள் கள்ளப் பணத்தைக் குவித்து வைத்திருக்கும் பணக்காரர்களாக இருக்க வேண்டும். அல்லது பதவி கிடைத்தவுடன் மக்கள் வரிப்பணத்தில் கொள்ளை அடித்துப் பணத்தை ஈடுகட்ட முடியும் என்று நினைப்பவர்களாக இருக்க வேண்டும். இந்த உண்மைகள்தான் ஊராட்சித் தேர்தல்களிலும் லஞ்சம் தாண்டவமாடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்த மோசமான தேர்தல் செலவுகள் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் பெருமளவில் நடைபெறத் தொடங்கிவிட்டன. இன்றைய தலைமுறையினருக்கு இது சாதாரணமான நிகழ்ச்சிகளாகத் தோன்றலாம்.

ஆனால் 46 ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல்களைச் சந்தித்தவர்கள், தேர்தல்களை நடத்திய தலைவர்கள், அன்றைய நிலைமைகளுடன் இன்றைய நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்தால், நாடும் மக்களும் சந்திக்கும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பார்த்திடும் தேர்தல் செலவுகள் நாடு எங்கே, எதை நோக்கிச் செல்கிறது என்று கேள்வி கேட்க வைக்கிறது.

1962ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. தேர்தலுக்குப் பணம் கட்டி எழுத்து மூலம் வேட்பாளராகக் கேட்கும் காலம் தோன்றவில்லை. கோவையில் ஒரு மாநாட்டில் தொண்டர்களோடு அமர்ந்து தலைவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது சட்டமன்றத் தேர்தல் வேட்பாளராக என்னுடைய பெயர் அறிவிக்கப்பட்டது. ஒரு சிலரோடு மட்டும் சென்று வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒரு வாடகைக் காரில் மட்டும் தொகுதி முழுவதும் சில தோழர்களுடன் சுற்றி வந்து மக்களைச் சந்தித்தேன். ஊரில் முக்கியமானவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்பது, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்திப்பது என்ற முறைகள் பின்பற்றப்பட்டன. ஊர்ப் பெரியவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அந்த ஊருக்குத் தேவையான பொது வசதிகளை, சாலை அமைத்தல், குடிதண்ணீர் வசதி, பள்ளிக்கூடம் கட்டுதல் போன்ற பொதுக் கோரிக்கைகளை முன்வைத்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காரைக்குடியில் எம்ஜிஆர் கலந்துகொண்ட சிறப்புக்கூட்டத்துக்கு கட்டணம் வசூலித்து, அதில் கிடைத்த 5,000 ரூபாயைத் தேர்தல் செலவுக்குப் பயன்படுத்திய காட்சி நினைவுக்கு வருகிறது. அறிஞர் அண்ணா கட்சியிலிருந்து ரூ. 200 டி.டி. அனுப்பினார். மொத்தத் தேர்தல் செலவு சில ஆயிரங்கள்தான். ஆங்காங்கே கட்சித் தொண்டர்கள்தான் எதையும் எதிர்பார்க்காமல் தேர்தல் வெற்றிக்குப் பாடுபட்டனர்.

அதே போல் 1967ஆம் ஆண்டு தேர்தலின்போதும் எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட சிறப்புக் கூட்டத்தின் மூலம் ரூ. 5,000-ம் வசூல் செய்து கொடுத்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோன்ற சிறப்புக் கூட்டங்கள் நடத்துவது அந்தக்கால அரசியல்.

1962ஆம் ஆண்டு தேர்தலைவிட சில ஆயிரங்கள் கூடுதலாகச் செலவழிந்தது. கட்சிக்காரர்களே முன்னின்று எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தொண்டாற்றி வெற்றி பெறச் செய்தனர். எதிர்த்து நின்றவர் ஒரு ஆலை அதிபர். அவர் வீட்டுக்கே சென்று வாக்குக் கேட்ட நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. பிற்காலத்தில் அவருக்கே அரசின் மூலம் பல உதவிகள் செய்த நிகழ்ச்சிகள் அன்றைய நாகரிக அரசியல் பாரம்பரியத்தை நினைவுபடுத்துகிறது.

ஆனால் இன்று நடைபெறும் தேர்தல்களில் லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவழிப்பது நடைமுறையாகிவிட்டது. தேர்தல் நிதி என்ற பெயரில் ஒவ்வோர் அரசியல் கட்சியும் கோடிக்கணக்கில் நிதி திரட்டுவது நடைபெறுகிறது. லஞ்சம் பெருகிவிட்டதற்குத் தேர்தல் செலவு பெருகிவிட்டதும் காரணமாக அமைந்துவிட்டது.

இப்போது அமெரிக்காவில் நடைபெறும் தேர்தலில் தேர்தல் நிதி திரட்டும் செய்திகள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளன.

அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் ஹில்லாரி கிளிண்டன் மற்றும் ஒபாமா ஆகிய இருவரும், அதிபர் பதவி வேட்பாளராகத் தங்கள் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட, தங்களுக்குள் மக்கள் ஆதரவை நிரூபிக்கும் தேர்தல்தான் இப்போது நடைபெறுகிறது. இதற்கு நிதி சேர்க்கிறார்கள். 2008 ஜனவரி வரை ஒபாமா சேர்த்திருக்கும் நிதி 13,82,31,595 டாலர்கள் அதாவது 552,92,63,800 ரூபாய் என்றும், ஹில்லாரி கிளிண்டன் சேர்த்திருக்கும் நிதி 13,45,36,488 டாலர்கள் அதாவது 538,14,59,520 ரூபாய் என்றும் வெளிவந்துள்ளது. இவர்களைப்போல அந்தக் கட்சியில் வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் இன்னும் பல வேட்பாளர்களும் நிதி திரட்டியுள்ளனர்.

இந்தியாவிலும் அமெரிக்கா போல் பண ஆதிக்கம் தோன்றாமல் இருக்க வேண்டும். நாடாளுமன்றச் சட்டங்கள் இல்லாமலே அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324 தேர்தல் கமிஷனுக்குக் கொடுத்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவுகள் போடலாம். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களைப்போல் நடைமுறைகளைக் கொண்டு வரலாம். ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், விளம்பரங்கள், கார்கள் பயன்படுத்தும் முறைகளை விதிகள் மூலம் வகுக்கலாம். ஊர்வலங்களைத் தடுக்கலாம். பொதுக்கூட்டங்களைக் குறைக்கலாம்.

ஒரு வேட்பாளர் கடந்தகாலச் சாதனைகளைப் பற்றி, எதிர்காலத் திட்டங்கள் பற்றி வாக்காளர்களுக்கு வேண்டுகோளாக அச்சடித்துக் கொடுக்கும் முறையை மட்டும் அனுமதிக்கலாம். வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்குகள் கேட்கலாம்.

46 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா கட்சியினரும் இன்று போலத் தேர்தல் செலவு செய்யவில்லை. அதிகாரத்தைக் காட்டித் தேர்தல் நிதிகளைக் குவித்ததும் இல்லை என்பதுதான் உண்மை. அமெரிக்காவில் பிரசார நிதி என்று சட்டப்படி வசூலிப்பது தேர்தல் கமிஷனால் கண்காணிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கறுப்புப் பணம் தேர்தலில் விளையாடுகிறது.

அரசியல் லஞ்சம் ஒழிந்தால், அதிகாரிகள் லஞ்சமும் ஒழியும். பண ஆதிக்கம் ஒழியும். தேர்தல் போர்வையில் லஞ்சங்களைக் குவிக்கும் அரசியல் அநாகரிகம் ஒழியும். ஏழைத் தொண்டர்களை ஆட்சிபீடத்தில் அமர்த்தும் காமராசர், அறிஞர் அண்ணா வளர்த்த அரசியல் மீண்டும் மலர்ந்திடும். அரசியல் தலைவர்கள் அனைவரும் புதிய சரித்திரம் படைப்பார்கள்.

நல்லாட்சி வேண்டுமானால் நல்ல அரசியல் வேண்டும். நல்ல அரசியல் வேண்டுமானால், தேர்தல் வெற்றிகள் மக்களின் செல்வாக்கின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, பணபலத்தால் அமையக்கூடாது. மக்கள் சக்திக்கு மரியாதை கிடைக்கும் சூழ்நிலையை நமது தேர்தலில் ஏற்படுத்தும் கடமை இன்றைய அரசியல் தலைவர்களுக்கு உண்டு.

(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சர்)

Posted in Actors, AIADMK, America, Anna, Annadurai, Assets, Balance, Bribery, Bribes, Cinema, Clinton, Commission, Conferences, Corruption, DMK, EC, Elections, Expenditure, Films, Finance, Finances, Funds, Huckabee, Income, India, IT, JJ, kickbacks, KK, Madhavan, McCain, MGR, Mitt, Movies, Obama, Party, Polls, Poor, President, Primary, Rich, Romney, Tax, Taxes, US, USA, Wealthy | Leave a Comment »

Tamil Movies: Screenplay adaptations from Novels & Books

Posted by Snapjudge மேல் திசெம்பர் 11, 2007

பார்வை: ஒன்பது ரூபாய் நோட்டையொட்டி..!

தமிழ் நாவல்கள் திரைப்படங்களாவது பல சந்தர்ப்பங்களில் பலத்த விமர்சனத்துக்கு ஆளாகும்படிதான் ஆகியிருக்கிறது. எழுத்தின் சுவையை ஃபிலிம் சுருள் சாப்பிட்டுவிட்டதாக உலகு தழுவிய புகார் உண்டு.

இந்தப் பிரச்சினை தீருவதற்கு கதாசிரியர்களே இயக்குநர்கள் ஆனால்தான் உண்டு. உன்னைப் போல் ஒருவன் கதையை எழுதி, அதை இயக்கியும் இருந்தார் ஜெயகாந்தன். அப்படி தானே எழுதி தானே இயக்கியவர் வரிசையில் இடம் பெற்றிருக்கிறார் தங்கர் பச்சான். அவருடைய ஒன்பது ரூபாய் நோட்டு நாவல் சமீபத்தில் சினிமாவாகி உள்ளது.

தமிழில் சிறப்பாகப் போற்றப்பட்ட பல நாவல்கள் சினிமா ஆகியிருக்கின்றன. பரவலாக ரசிக்கப்பட்ட பல நாவல்கள் சினிமாவாக ரசிக்க முடியாமல் போயிருக்கின்றன. “”1935-ல் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் “மேனகா’, “திகம்பர சாமியா’ரில் இருந்தே நாவல்கள் திரைப்படங்களாகியிருக்கின்றன.

அகிலனின் “குலமகள் ராதை’, “பாவை விளக்கு’, “கயல்விழி’ (மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்) நாவல்கள் திரைப்படங்களாகியிருக்கின்றன.

கல்கியின் “தியாக பூமி’, “கள்வனின் காதலி’, “பார்த்திபன் கனவு’ போன்ற கதைகளும் மக்களால் கதையாகவும் சினிமாவாகவும் வரவேற்கப்பட்டன.

கொத்தமங்கலம் சுப்புவின் “தில்லானா மோகனாம்பாள்’, நாமக்கல் கவிஞரின் “மலைக்கள்ளன்’ ஆகியவை நாவலைவிடவும் பெரிய அளவில் சினிமாவாகச் சிலாகிக்கப்பட்டவை” என்கிறார் சினிமா விமர்சகரும் திரைப்பட மக்கள் தொடர்பாளருமான பெரு. துளசி பழனிவேல்.

“”மக்களுக்குச் சினிமா பொழுது போக்கு அம்சமாகவே உள்வாங்கப்பட்டிருக்கிறது. காமெடியும், அடிதடியும், கண்ணீரும் அதில் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து கலர் ஃபுல்லாக வழங்கப்பட வேண்டும். ஆனால் வாசிப்பு அனுபவம் முற்றிலும் வேறுவிதமானது. கதையுலகில் ஆராதிக்கப்படும் ஆயிரம் பக்க “அன்னா கரீனி’னாவையும் “மோகமுள்’ளையும் சினிமாவாக்கும் போது இது இன்னும் பட்டவர்த்தனமாகத் தெரிய ஆரம்பிக்கிறது” என்கிறார் ஓர் உதவி இயக்குநர்.

சுஜாதாவின் “காயத்ரி’, “கரையெல்லாம் செண்பகப் பூ’, “இது எப்படி இருக்கு’ நாவல்களுக்குக் கிடைக்காத வரவேற்பு, மகரிஷியின் “புவனா ஒரு கேள்விக்குறி’, “பத்ரகாளி’ படங்களுக்குக் கிடைத்தது.

வாசக வெற்றி திரைப்பட வெற்றிக்குப் போதுமானதாக இல்லாத நிலை இது. அறிஞர் அண்ணாவின் ரங்கோன் ராதா, படமானபோது அது பரவலாக வரவேற்கப்படவில்லை.

மகேந்திரன் சில படங்களே இயக்கியிருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை நாவல்களே. திறமையான கலைஞர்களால் கதைகளை அதன் சாராம்சம் கெடாமல் திரைப்படங்களாக்க முடியும் என்பதற்கு அவர் ஓர் உதாரணம்.

  • உமா சந்திரனின் “முள்ளும் மலரும்’,
  • புதுமைப்பித்தனின் “சிற்றன்னை’யைத் தழுவி எடுத்த “உதிரிப் பூக்கள்’,
  • பொன்னீலனின் “பூட்டாத பூட்டுகள்’,
  • சிவசங்கரியின் “நண்டு’ போன்ற நாவல்களைப் படமாக்கியிருக்கிறார் மகேந்திரன்.

“”இருந்தாலும் சினிமா இயக்குநர்கள் அவர்கள் நேசித்து உருவாக்கிய கதையை உரசிப்பார்த்துக் கொள்ளவும் சரி பண்ணிக் கொள்ளவும்தான் தமிழ் எழுத்தாளர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதனால்தான் சுஜாதா, பாலகுமாரன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்ற பல எழுத்தாளர்கள் வசனகர்த்தாக்களாக்கப்பட்டிருக்கிறார்கள் இப்போது” என்கிறார் பழனிவேல்.

சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று சாதாரணமாக ஒரு பிரயோகம் உண்டு. சினிமா வேறு; நாவல் வேறு என்பதும் நமக்குப் பொருத்தமாக இருக்கும் போலிருக்கிறது.

Posted in Agilan, Akilan, Anna, Annadurai, Authors, Books, Cinema, dialogues, Directors, Fiction, Films, Kalki, Kothamangalam, Kothamangalam Subbu, Kothamankalam, Kothamankalam Subbu, Literature, Magarishi, Magendhiran, Magendhran, Magenthiran, Maharishi, Mahendhiran, Mahendran, Mahenthiran, Mahenthran, Movies, Novels, Ponneelan, Pudhumai Pithan, Pudhumaipithan, Puthumai Pithan, Puthumaipithan, Screenplay, Sivasankari, Sivashankari, Story, Subbu, Sujatha, Uma Chandhran, Uma Chandran, Uma Chanthiran, Uma Chanthran, Writers | Leave a Comment »

Anna & Vanjinathan’s wife: Pension for Freedom Fighters – Reminiscences from the History: Dinamani Kathir

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 1, 2007

அண்ணா 1967- ஆண்டு முதல்வராகப் பதவியேற்றவுடன் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார். அந்தச் சுற்றுப்பயணத்தின்போது பாளையங்கோட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தார்.

அப்போது ஒரு முதிய பெண்மணி முதல்வரைப் பார்க்க வந்திருக்கிறார். காவல்துறை அதிகாரிகள் முதல்வரைப் பார்க்கவிடாமல் அந்தப் பெண்மணியை விரட்டினார்கள். இதை அந்த மாளிகையில் இருந்த முதல்வர் சன்னல் வழியாகப் பார்த்துவிட்டார். உடனே அந்தப் பெண்மணியை அழைத்து வருமாறு காவலர்களிடம் கூறினார். வந்தவரிடம், “”என்ன விவரம். எதற்காக வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்தப் பெண்மணி, “”சுதந்திரப் போராட்டத்தில் வீர மரணமடைந்த வாஞ்சிநாதரின் மனைவிதான் நான். தியாகிகளுக்கு வழங்கும் ஓய்வு ஊதியம் ஐம்பது ரூபாய்தான் எனக்கும் வழங்குகிறது அரசு. தயவு செய்து இதை உயர்த்தித் தரவேண்டும்” என்று கேட்டிருக்கிறார்.

இதைக் கேட்ட அண்ணா கண்ணீர்விட்டதுடன், வாஞ்சிநாதரின் மனைவியின் ஓய்வு ஊதியம் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியாகிகளின் ஓய்வு ஊதியத்தையும் உயர்த்திக் கொடுத்தார்.

Posted in ammunition, Anna, Annadhurai, Annadurai, Annathurai, Approach, Arinjar Anna, Arms, Ash, dead, Extremism, Fighters, Freedom, Gesture, guns, History, Incidents, Independence, Kill, Leaders, Neta, Netha, pension, Reminiscences, Terrorism, terrorist, Vaanchinadhan, Vaanchinathan, Vaanjinadhan, Vaanjinathan, Vanchinadhan, Vanchinathan, Vanjinadhan, Vanjinathan, Violence, Weapons, Wife | Leave a Comment »

Unmai Online – 50 Questions to Kalainjar Karunanidhi

Posted by Snapjudge மேல் ஜூலை 10, 2007

கலைஞரிடம் 50 கேள்விகள்

1.கேள்வி : சட்டசபையில் முதல்நாள் அனுபவம் எப்படியிருந்தது?
கலைஞர் : பந்தயக் குதிரையைப் படைவீரர் அணிவகுப்பில் நிறுத்தி வைத்தது போல் இருந்தது.

2.கேள்வி : பேசிய முதல் பேச்சு?
கலைஞர் : நான் 1957இல் வெற்றிபெற்ற குளித்தலைத் தொகுதியில் உள்ள “நங்கவரம்” பண்ணை விவசாயிகளின் “கையேரு வாரம்-மாட்டேரு வாரம்” என்ற பிரச்சினைக்காகப் பேசியதே பேரவையில் எனது முதல் பேச்சு.

3.கேள்வி : அதிக நேரம் பேசிய நாள்?
கலைஞர் :அதிக நேரம் பேசிய நாட்கள் பல உண்டு. இருப்பினும் 1997ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு, நான் அளித்த பதிலுரைதான் இரண்டு மணி நேரத்துக்கு நீடித்தது.

4.கேள்வி : உங்களுக்கு பிடித்த சட்டமன்றப் பேச்சு?
கலைஞர் : அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஆட்சியில்: எதிர்கட்சித் தலைவராக நானிருந்த போது, “பூம்புகார்” நிறுவனத்தின் சார்பில் வாங்கப்பட இருந்த “பல்கேரியா பால்டிகா” என்ற கப்பல் பேர ஊழல் குறித்து இருபது ஆதாரங்களை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துவைத்துக் குற்றம் சாட்டிப்பேசியதால், அந்த இரு கப்பல்களுமே வாங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது என்பது சட்டப் பேரவையின் பரபரப்பான வரலாறு.

5.கேள்வி : உங்களுக்குப் பிடித்த சட்டமன்றப் பேச்சாளர்?
கலைஞர் : எந்த மன்றமானாலும் சரி, அங்கே கொடிமரம் போல் உயர்ந்துநிற்கும் ஆற்றல்மிகு பேச்சாளர் அறிஞர் அண்ணாதான்.

6.கேள்வி : பிடித்த சபாநாயகர்?
கலைஞர் : ஆரம்ப காலத்தில் டாக்டர்.யு.கிருஷ்ணராவ்-இடைக்காலத்தில் செல்லப்பாண்டியன்-அடுத்து கே.ராஜாராம்-அண்மைக் காலத்தில் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்.

7.கேள்வி : உங்களுக்குக் கிடைத்த மறக்க முடியாத பதில்?
கலைஞர் : 24.03.1960 அன்று சட்டப் பேரவையில், ஓவியர் வேணுகோபால்சர்மா அவர்களால் “தபால் தலைகளுக்கு என்று வரையப்பட்ட திருவள்ளுவர் ஓவியத்தைச் சட்டமன்றத்தில் வைக்கும் உத்தேசம் அரசாங்கத்திற்கு உண்டா?” என்று நான் கேட்டதற்கு பெரியவர் மாண்புமிகு பக்தவத்சலனார் அவர்கள் எழுந்து, “சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்கள் அம்மாதிரி ஒரு படத்தை இங்கு சமர்ப்பிக்க முன்வந்தால், கனம் சபாநாயகர் அவர்கள் அதைப்பற்றி யோசிப்பார்கள்” என்று கூறிய பதில் தான் எனக்குக் கிடைத்த மறக்க முடியாத பதில் என்று சொல்வேன். ஏனென்றால் அந்தப் பதிலின் காரணமாகத்தான் சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் 22.3.1964 அன்று அன்றையக் குடியரசுத் தலைவர் மேதகு ஜாகீர் உசேன் அவர்களால் திருவள்ளுவரின் திருவுருவப்படம் திறந்து வைத்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாகத்தான் தி.மு.கழக ஆட்சியில் பேருந்துகள், அரசு விருந்தினர் மாளிகைகளில் திருவள்ளுவர் படங்கள் என்று தொடங்கி, வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் வானுயர் வள்ளுவர் சிலை என ஆயிற்று!

8. கேள்வி : நீங்கள் சொன்ன மறக்க முடியாத பதில்?
கலைஞர் : திருச்செந்தூர் கோவிலில் நடைபெற்ற கொலைக்காக அமைக்கப்பட்ட பால் கமிஷன் அறிக்கை மீது விசாரணை நடத்தாதது குறித்தும், திருச்செந்தூர் கோவிலில் வைரவேல் களவாடப்பட்டதைக் கண்டித்தும் நான் எதிர்கட்சித்தலைவராக இருந்த போது திருச்செந்தூர் நடைபயணம் சென்றேன். அதைப்பற்றி அவையிலே ஆளுங்கட்சி உறுப்பினர், “கருணாநிதி திருச்செந்தூர் போனார், முருகனே அவரைப் பார்க்கப்பிடிக்காமல் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு வந்து விட்டார்!” என்றார் கிண்டலாக. உடனே நான் எழுந்து, “திருச்செந்தூரில் முருகனின் வேல்தான் களவாடப்பட்டது என்று நினைத்தேன். சிலையும் காணாமல் போய்விட்ட விஷயம் இப்போது தான் தெரிகிறது!” என்று நான் கூறியதும் அவை சிரிப்பிலே ஆழ்ந்தது. நான் சொன்ன மறக்க முடியாத பதில்களில் இதுவும் ஒன்று.

9.கேள்வி : சட்டமன்றத்தில் சிறப்பான முதல்வர் யார்?
கலைஞர் : பெருந்தலைவர் காமராஜர், அவையிலே பேசாமலேயே அமர்ந்திருந்து, ஆனால் நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்தியவர்.

10.கேள்வி:சட்டமன்றப் பேச்சுக்கும்- பொதுக்கூட்டப் பேச்சுக்கும் என்ன வித்தியாசம்?
கலைஞர் : மனக்கணக்குக்கும்-வீட்டுக்கணக்குக்கும் உள்ள வித்தியாசம்.

11. கேள்வி : 1957இல் முதல்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக ஆனபோது மனைவி, குழந்தைகளைச் சட்டமன்றத்திற்கு அழைத்துச் சென்றதுண்டா?
கலைஞர் : அழைத்துச் சென்றதில்லை. அவர்களாகவே வந்து நான் உரையாற்றும் நாட்களில் சட்டமன்ற நிகழ்ச்சிகளைக் கண்டதுண்டு.

12. கேள்வி : சட்ட மன்றத்தில் உங்களுக்குக் கிடைத்த முதல் பாராட்டு யாரால்?
கலைஞர் : எனது முதல் கன்னிப் பேச்சில், எனது முதல் தொகுதியான குளித்தலையில் இருந்த, “கையேரு வாரம், மாட்டேரு வாரம்” என்ற பிரச்சினை குறித்து நான் வேகமாகப் பேசி அமர்ந்தவுடன், ஒரு துண்டுத் தாளில் பேரவைத் தலைவராக அப்போதிருந்த மேதகு யு.கிருஷ்ணாராவ் அவர்கள், “Very Good Speech” என்று எழுதிச் செயலாளர் மூலமாக என்னிடம் கொடுத்தனுப்பினார். சட்டமன்றத்தில் எனக்குக் கிடைத்த முதல் பாராட்டு அது தான்.

13. கேள்வி : மறக்கமுடியாத சம்பவம்?
கலைஞர் : தமிழகச் சட்டப் பேரவையில் “தமிழ்நாடு” பெயர் வைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, பேரறிஞர் அண்ணா அவர்களே, “நான் மூன்று முறை தமிழ்நாடு என்று சொல்வேன், அனைவரும் வாழ்க! என்று சொல்ல வேண்டுமென்று கூறிவிட்டு அவ்வாறே முழக்கமிட்ட அந்தச் சம்பவம் என்னால் மறக்க முடியாத சம்பவமாகும்.

14. கேள்வி : வருத்தப்பட வைத்த சம்பவம்?
கலைஞர் : 1976ஆம் ஆண்டு ஆட்சி கலைக்கப்பட்டு, அதன் பின்னர் 13 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்து, மீண்டும் 1989இல் பதவிப் பொறுப்புக்கு வந்து முதல் நிதிநிலை அறிக்கையை நான் படிக்க முனைந்தபோது, ஏற்கனவே அவர்கள் வீட்டிலே நடத்திய ஒத்திகைப்படி என் கையிலே இருந்த நிதிநிலை அறிக்கையைப் பறிக்க முயற்சித்து, முகத்திலும் கட்சிக்காரர்களை விட்டுக் குத்துமாறு ஏவிவிட்டு, அதன் பின்னர், தன்னை ஆளுங்கட்சிக்காரர்கள் தாக்கிவிட்டதாகத் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு, செய்தியாளர்கள் முன் வதந்திகளைப் பரப்பிய நிகழ்ச்சிதான் என்னை வருத்தமடையச் செய்த சம்பவமாகும்.

15. கேள்வி : மகிழ்ச்சிக்குரிய சம்பவம்?
கலைஞர் : நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார். என்னை அவரது அறைக்குத் தனிமையிலே அழைத்துச் சென்று, சட்டமன்றத்திற்குள் திறக்கப்பட விருந்த பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப் படத்திற்குக் கீழே என்ன வார்த்தைகளை எழுதலாம் என்பதைக் பற்றி என்னை எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டார். நானும் மகிழ்ச்சியுடன், “உழைப்பே உயர்வு தரும்!” என்று எழுதிக் கொடுத்தேன். ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அப்போது நடந்துகொண்ட முறையை நினைக்கும் போது மகிழ்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியும்?

16.கேள்வி : கோபப்படவைத்த சம்பவம்?
கலைஞர்:எதிர்க்கட்சித் தலைவராக நான் இருந்தபோது, ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவர் என்னைப் பற்றி ஒரு குற்றச்சாட்டினைக் கூறினார். தேனியில் நான் இடைத் தேர்தலுக்காகச் சென்ற போது, முத்துத்தேவன்பட்டி என்ற ஊரில் தங்கியிருந்த இடத்தை என் மகன் மு.க.அழகிரி விலைக்கு வாங்கியதாகக் கூறி, அதனை மறுக்கத் தயாரா என்று சவால் விட்டார். நான் அமைதியாக உட்கார்ந்திருந்தேன்.

அமைச்சராக இருந்த துரைமுருகன் எழுந்து அதை மறுத்துக் கூறினார். எனினும் அந்த அமைச்சர் எழுந்து பிடிவாதமாக அந்தக் குற்றச்சாட்டை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் அமைதியாக இருப்பதிலிருந்தே குற்றச்சாட்டு உண்மையாகிறது என்று கூறிய போது தான் நான் எழுந்து குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் நான் அரசியலை விட்டு விலகத் தயார். இல்லாவிட்டால் அவர் வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதுமென்று கூறினேன்.

அதற்குப் பிறகும் மறுநாள் அவர் போலியாக ஒரு பத்திரமே தயாரித்து, அதிலே போலியாக மு.க. அழகிரியின் iகாயழுத்தையும் போட்டு, பேரவைத் தலைவரிடம் அதைக் கொண்டு வந்து நிரூபிக்க முயன்றபோது, நான் உண்மையில் கோபப்பட்டேன். பேரவைத் தலைவராக இருந்த திரு.கே.ராஜாராம் அவையிலேயே வந்து அந்த அமைச்சர் செய்தது பெருந்தவறு என்பதை அறிவித்தார். ஆனால், அதைப் பெரிதாக நான் எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து அந்தப் பிரச்சினையை நீட்டிக்காமல் பெருந்தன்மையாக மன்னித்துவிட்டேன்.

17.கேள்வி:என்னுடைய வளர்ச்சிக்குச் சட்ட மன்றத்தில் இந்த உறுப்பினர் உதவியாக இருந்தார் என்று யாரையாவது சொல்வீர்களா?
கலைஞர்:குறிப்பிட்டு யாரையும் சொல்ல முடியாது.

18. கேள்வி:உங்களைத் தொடர்ந்து பாராட்டும் உறுப்பினர் யார்?
கலைஞர்:ஒருவரல்ல, பலர்.

19. கேள்வி:உங்களை கிண்டல் செய்யும் உறுப்பினர் யார்?
கலைஞர்:என்னை யாரும் கிண்டல் செய்தது கிடையாது, முடியாது.

20. கேள்வி:இப்படிப் பேசியிருக்க வேண்டாம் என்று எப்போதாவது நினைத்ததுண்டா?
கலைஞர்:”சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்”
என்ற குறள் வழி நடக்கின்ற எனக்கு இந்த நிலை ஏற்பட்டதில்லை.

21. கேள்வி: ‘இந்த நேரத்தில் சபையில் இல்லாமல் போய்விட்டோமே!’ என்று நினைத்த சம்பவம் உண்டா?
கலைஞர்:தி.மு.கழகம் ஆளுங்கட்சியாக இருக்கின்ற நேரத்தில் எதிர்க்கட்சிக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே நான் இல்லாத நேரத்தில் ஏதாவது பிரச் சினைகள் ஏற்பட்டுவிட்டதாகப் பின்னர் அறியும்போது, அந்த நேரத்தில் சபையில் இல்லாமல் போய் விட்டோமே என்று நான் நினைத்த சம்பவங்கள் ஒன்றிரண்டு உண்டு.

22. கேள்வி: “இந்த நேரத்தில் இல்லாமல் இருந் திருக்கலாமே!” என்று நினைக்கும் சம்பவம்?
கலைஞர் : அளவுக்கு மீறி ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என்னைப் புகழ்ந்து பேசும்போது நானே ஒருமுறை சபாநாயகர் பழனிவேல்ராஜன் அவர்களிடம், “இந்தப் புகழுரைகளை நிறுத்தச் சொல்கிறீர்களா? அல்லது நான் வெளியே போகட்டுமா?” என்று கோரியதுதான் என் நினைவுக்கு வருகிறது.

23. கேள்வி: சட்டமன்றத்துக்கு உள்ளே போகும் போது என்ன நினைப்பீர்கள்?
கலைஞர் : கற்றுக்கொள்ளும் மாணவனாகவும், கற்பிக்கும் ஆசிரியராகவும் இருக்க வேண்டுமென்று.

24. கேள்வி : முதன்முதலாகச் சென்றபோது உட்கார்ந்த இருக்கை எண் நினைவிருக்கிறதா?
கலைஞர் : 170.

25. கேள்வி : சட்டமன்றத்தில் இவர்கள் எப்படி?
கலைஞர் : 1. காமராஜர்-எளிமையானவர்.
2.பக்தவச்சலம்-நிர்வாகத்தில் திறமையானவர்.
3.அண்ணா-எதிர்க்கட்சியினரையும், உரையினால் ஈர்ப்பவர்.
4.எம்.ஜி.ஆர்.-நாகரிகமாகப் பழகக் கூடியவர்.
5.ஜெயலலிதா-பிடிவாத குணத்தினர்.

26. கேள்வி : திரு.கருத்திருமன் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது நீங்களும், அவரும் அடிக்கடி அவையிலே விவாதத்தில் ஈடுபடுவதுண்டு. அதில் நினைவில் உள்ள ஒன்றைக் கூறுங்களேன்?
கலைஞர் : ஒருமுறை திரு.கருத்திருமன் அவர்கள், “அடைந்தால் திராவிட நாடு, இல்லாவிட்டால் சுடுகாடு என்றீர்கள், இப்போது சுடுகாட்டிலா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நான், “சுடுகாட்டில் இல்லை, உங்களோடு உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்!” என்று கூறினேன். அவையினரோடு சேர்ந்து அவரும் சிரித்துக் கொண்டே அமர்ந்துவிட்டார்.

27. கேள்வி : இந்த அய்ம்பதாண்டுகளில் உங்களுக்குப் பிடித்தமான 5 சட்டமன்றப் பேச்சாளர்கள் யார்?
கலைஞர் : 1.பேராசிரியர் அன்பழகனார்
2. கே.டி.கே.தங்கமணி
3. குமரி அனந்தன்
4. அப்துல் லத்தீப்
5. திருமதி.பாப்பா உமாநாத்

28. கேள்வி : நீங்கள் திக்குமுக்காடிய சம்பவம் ஏதாவது உண்டா?
கலைஞர்: அப்படி எதுவும் இல்லை.

29. கேள்வி : எதிராளியைத் திணற வைத்த ஏதாவது ஒரு சம்பவம்?
கலைஞர் : சட்டமன்றத்தில் ஒரு முறை டாக்டர்.எச்.வி.ஹண்டே அவர்கள் தி.மு.கழக அரசைப் பற்றி விமர்சிக்கும் போது, “இது மூன்றாம் தர சர்க்கார்” என்றார். உடனே ஆளுங்கட்சியினர் வெகுண்டெழுந்தனர். நான் அனைவரையும் கையமர்த்திவிட்டு, “டாக்டர் ஹண்டே அவர்கள் இந்த அரசை மூன்றாந்தர அரசு என்றார். திருத்திக்கொள்ளவேண்டும். இது நாலாந்தர அரசு, பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர என்று கூறப்படும் வர்ணங்களில் நான்காவதாகக் கூறப்படும் சூத்திரர்களின் அரசு!” என்று குறிப்பிட்டேன்.

30. கேள்வி : மறக்க முடியாத சட்டமன்றக் கலவரக் காட்சி?
கலைஞர் : எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, “ஜெயலலிதா” அணியினரும், “ஜானகி” அணியினரும் பேரவைக்குள் மோதிக்கொண்டு காவல் துறையினரும் உள்ளே புகுந்து மன்ற உறுப்பினர்கள் ஒலிபெருக்கியைப் பிடுங்கிக்கொண்டு சண்டையிட்ட காட்சி மறக்க முடியாத ஒன்றாகும்.

31. கேள்வி : சட்ட மன்றப் பேச்சில் எது இருக்கக்கூடாது?
கலைஞர் : மீண்டும் ஒரு நாள் இருவரும் சந்திக்க நேரிடும் போது பர°பரம் பேசிக்கொள்ள முடியாத அளவிற்கு விரோதம் காட்டிக்கொள்ளும் உணர்வு இருக்கக்கூடாது.

32. கேள்வி : விவாதம்-வாக்குவாதம்-விதண்டாவாதம் மூன்றும் எப்படி இருக்கவேண்டும்?
கலைஞர் : விவாதம்-உண்மையாக இருக்க வேண்டும்.
வாக்குவாதம்-சூடு இருந்தாலும், சுவையாக இருக்க வேண்டும்.
விதண்டாவாதம்-தவிர்க்கப்பட்டாக வேண்டும்.

33. கேள்வி:நீங்கள் கொண்டு வந்ததில் மகிழத்தக்க சட்டம்?

கலைஞர் : பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை-குடியிருப்புமனைச் சட்டம்-நில உச்ச வரம்புச் சட்டம்-அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆணை.

34. கேள்வி : சட்டமன்றப் பதவியை 1984, 1991 இரண்டு முறை ராஜினாமா செய்தது ஏன்?
கலைஞர் : 1984ஆம் ஆண்டு நான் இலங்கைத் தமிழர்களுக்காகச் சட்டமன்றப் பதவியை ராஜினாமா செய்தேன். 1991இல் நான் ஒருவன் மட்டுமே வெற்றிபெற்று மற்ற எல்லா இடங்களிலும் கழகம் தோற்றதால், அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று அந்தப் பதவியை ராஜினாமா செய்தேன்.

35.கேள்வி:நினைவாற்றல், சொல்லாற்றல், வாதத்திறன்-ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு எது முக்கியம்?
கலைஞர் : நினைவாற்றலுடன் கூடிய வாதத்திறன்மிக்க சொல்லாற்றல் ஒவ்வொரு சட்டமன்ற உறுப் பினருக்கும் முக்கியம்.

36. கேள்வி : சட்டமன்றத்தை அரசியல் விவாத மேடையாக்கலாமா?
கலைஞர் : விவாத மேடையாக ஆக்கலாம்-விரோத மேடையாகத்தான் ஆக்கக்கூடாது.

37. கேள்வி : 2001-2006 சட்டமன்றப் பணிகளில் உங்களை அதிகம் ஈடுபடுத்திக் கொள்ளாதது ஏன்?
கலைஞர் : யாரையும் மதிக்க விரும்பாத அன்றைய ஆளுங்கட்சியின் நடவடிக்கைகள்.

38. கேள்வி : நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்று நினைத்ததே இல்லையா?
கலைஞர் : தொடக்கம் முதலே தமிழ், தமிழ்நாடு, தமிழ்மக்கள் என்ற அளவில் என்னை அய்க்கியப்படுத்திக்கொண்டு விட்டேன்.

39. கேள்வி : நீங்கள் கொண்டு வந்ததிலேயே விருப்பமான மக்கள் நலத்திட்டம்-முதன்மை இடத்தைப் பிடிப்பது எது?
கலைஞர் : சாதிமத பேதமின்றி ஏழைப்பெண்களுக்குத் திருமண உதவித் திட்டம். அதே நோக்கத்தில் உருவாக்கப்பட்ட சமத்துவபுரத் திட்டம்.

40. கேள்வி : சட்டமன்ற மரபு மீறப்பட்ட செயல் என்று எந்த நிகழ்வைச் சொல்வீர்கள்?
கலைஞர் : முரசொலிப் பத்திரிகை ஆசிரியரைச் சட்டமன்றத்திற்கு அழைத்துக் கூண்டிலே ஏற்றிக் கண்டனம் தெரிவித்த செயல்.

41. கேள்வி : சட்டமன்ற நிகழ்வுகளில் உங்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் என்று எதைச் சொல்வீர்கள்?
கலைஞர் : சட்டமன்ற மேலவையில் எதிர்க்கட்சித் தலைவராக நான் வரக்கூடாது என்று முயற்சிசெய்து, அது நடக்காத நேரத்தில், மேலவையையே தமிழ் நாட்டில் என் ஒருவனுக்காகக் கலைத்த செயல் எனக்கு துரோகம் செய்வதாக நினைத்துச் செய்யப்பட்ட காரியமாகும்.

42. கேள்வி : உங்களைக் கவர்ந்த பெண் சட்ட மன்ற உறுப்பினர் யார்?
கலைஞர் : திருமதி.ஜோதியம்மாள்.

43. காமெடியாகப் பேசும் சட்டமன்ற உறுப்பினர் யார்?
கலைஞர் : ஈரோடு சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த திரு.தெட்சணாமூர்த்திக் கவுண்டர்.

44. கேள்வி : கேள்வி கேட்பது எளிதா? பதில் சொல்வது எளிதா?
கலைஞர் : பதில் சொல்லமுடியாத கேள்வி கேட்பது எளிதல்ல.

45. பொன்னான நாள் என்று எதைச் சொல்வீர்கள்?
கலைஞர் : மண்டல் கமிஷன் பரிந்துரையையொட்டி, மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தீர்மானத்தை நான் முன்மொழிந்து பேரவையில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்ட நாளைப் பொன்னான நாள் என்று கூறலாம்.

46. கேள்வி : தி.மு.க. ஆட்சி இரண்டு முறை (1976 மற்றும் 1991) டி°மி° ஆனபோது என்ன நினைத்தீர்கள்?
கலைஞர் : பதவியைத் தோளில் போட்டுக் கொள்ளும் துண்டு என்றும், மக்களுக்காக ஓடியாடி உழைப்பதே சிறந்த தொண்டு என்றும் எண்ணியிருப்பவனுக்கு ஆட்சிக்கலைப்பு என்பது ஒன்றும் பெரிதல்ல.

47. கேள்வி : உங்கள் பேச்சைக் கேட்க அஞ்சுகம் அம்மையார் சட்டமன்றம் வந்திருக்கிறாரா?
கலைஞர் : வந்ததில்லை. ஆனால், ஒவ்வொரு நாளும் நான் சட்டமன்றத்திற்குச் சென்று வந்தவுடன், சட்ட மன்றத்தில் அன்று நடந்ததைப் பற்றி என்னைக் கேட்கத் தவறுவதில்லை.

48. கேள்வி : அஞ்சுகத் தாய் உங்கள் சட்டமன்றப் பேச்சை பத்திரிக்கையில் படித்துவிட்டுப் பாராட்டியது உண்டா?
கலைஞர் : அவர் உயிரோடு இருந்தவரை என்னுடைய பேச்சு ஒவ்வொன்றையும் பாராட்டியிருக்கிறார்.

49.கேள்வி : அண்ணா அவர்கள் பாராட்டிய சட்ட மன்றப் பேச்சு எது?
கலைஞர் : பெரும்பாலும் சட்டமன்றத்தில் நான் பேசிய அத்தனை பேச்சுகளையுமே அண்ணா அவர்கள் பாராட்டியிருக்கிறார்.

50. கேள்வி : உங்கள் அமைச்சரவையிலே உள்ளவர் களில் மனதிலே இடம் பெற்ற சிலரை வரிசைப் படுத்துங்களேன்?
கலைஞர் : மனதிலே இடம் பெற்ற பிறகு தானே, அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள். மந்திரிசபையில் இடம் பெறாதவர்கள் என் மனதில் இடம் பெறாதவர்கள் அல்ல.

Posted in ADMK, Anna, Annadurai, Answers, Chat, DMK, Interview, Jayalalitha, JJ, Kalainjar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, MGR, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, Party, Politics, Questions | Leave a Comment »

Is it the treatment meted out to a 84 Year octogenarian – Mu Karunanidhi

Posted by Snapjudge மேல் மே 1, 2007

84 வயதில் எனக்கு இது தேவையா? கண்ணீர் விட்ட கருணாநிதி-கலங்கிய சட்டசபை

சென்னை: பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அண்ணா ஆகியோருடன் பழகி அரசியல் நடத்தி விட்டு, ஜெயலலிதாவைப் போன்றவர்களுடன் அரசியல் நடத்தும் அளவுக்கு வந்து விட்டதே, 84 வயதில் எனக்கு இது தேவையா என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் கண் கலங்கிக் கூறியதால் சபையில் சில நிமிடம் பரபரப்பு நிலவியது.

சட்டசபையில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆளுநர் பர்னாலா, மத்திய அரசு, காவல்துறை, ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோரை கடுமையாக விமர்ச்சித்து அறிக்கை விட்டது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சி்களின் உறுப்பினர்களின் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசினர். பின்னர் முதல்வர் கருணாநிதி பேசுகையில், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார்.

கருணாநிதி பேசுகையில், தோழை கட்சிகளின் கருத்தோடு என் கருத்தையும் இணைத்து கூறுகிறேன். காவல்துறையில் எல்லோரும் நல்லவர்களும் அல்ல, தீயவர்களும் அல்ல. இதில் கருங்காலிகளும் உள்ளனர்.

அதற்காக காவல்துறையே வேண்டாம் என முடிவு செய்ய கூடாது. ஒரு ஆட்சி செம்மையாக இருந்தால்தான் எல்லா துறையும் சீராக செயல்படும். இதை பொறுத்து கொள்ள முடியாமல் எரிச்சலடையும் புகைச்சலாகத்தான் ஜெயலலிதாவின் அறிக்கை உள்ளது.

இதற்காகத்தான் நீங்கள் சட்டசபையில் எனக்கு பொன்விழா நடத்த வேண்டும் என்ற போது நான் வேண்டாம் என மறுத்தேன். பிடிவாதமாக சம்மதிக்க வைத்தீர்கள்.

என்றைக்காவது 50 ஆண்டு காலத்தில் எந்த விழாவாவது இந்த அவையில் நடந்ததுண்டா. நான் தம்பி என்று கருதிக் கொண்டிருந்தவரும் கூட அறிக்கை விட்டிருக்கிறார். ஏனென்றால் அவர்களால் எல்லாம் இவற்றைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, இந்த அவையில் எம்ஜிஆர் படம் திறக்கப்பட்ட போது என்னை அழைக்கவில்லை. அப்போது, சபாநாயகர் இருக்கையில் அவர் அமர்ந்திருந்தார், நாங்கள் அமர்ந்த இடத்தில் சசிகலா அமர்ந்திருந்தார். இந்த அவை ஒரு தர்பார் போல காட்சியளித்தது.

நீங்கள் எல்லாம் பார்த்து ஏதோ, ஐம்பதாண்டு காலம் இருந்தானே, எங்கேயோ பிறந்தவன், சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவன், இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறானே என்று என்னையும் சிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் கருதியதை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள்தான் இன்றைக்கு இதையெல்லாம் செய்கிறார்கள்.

இதில் டிஜிபியும், கவர்னரும் என்ன செய்வார்கள், அவர்களை பற்றி அறிக்கை வெளியிடுகிறார்கள். உலக மகா பொய்யர் கருணாநிதி என்று கூறியுள்ளார். என்னெல்லாம் பேசியிருக்கிறார்.

நடமாடும் பொம்மையாக டிஜிபி இருக்கிறார் என்கிறார். காவல்துறையைப் பற்றி உருக்குலைந்து போன, செயல் திறன் இழந்து விட்ட, சர்வ நாசமாகி விட்ட அமைப்பு என்று கூறியுள்ளார். துர்வாச முனிவரால் கூட இப்படி திட்ட முடியாது.

ஆளுநரைப் பார்த்து நபர் என்கிறார். நாம் பதிலுக்குப் பதில் பெண்களைப் பற்றிப் பேசக் கூடாது. நாம் பெண்களை பற்றி பேசக்கூடாது, பெண்களும் இப்படி பேசக்கூடாது.

நாம் புராணங்களை நம்புவதில்லை, கட்டுகதைகளையும் நம்புவதில்லை. ஆனால் இதையெல்லாம் பார்க்கும்போது அல்லி ராணிகள் இருக்கத்தான் செய்தார்கள் என எண்ண வேண்டியுள்ளது.

முதலில் நரசிம்மராவ், வாஜ்பாய், அத்வானி, ராஜீவ் காந்தி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், சந்திரபாபு நாயுடு எல்லோரையும் குறை கூறிவிட்டு, இப்போது உ.பி சென்று அவர் கையை பிடித்துள்ளார்.

வாஜ்பாயைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா. தமிழ் நாட்டு மக்களுக்கு இவரை யார் என்றே தெரியாது. நான்தான் பட்டி தொட்டிகளுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினேன் என்றார். அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியா என்றார்.

இரவு 10 மணிக்கு ராஜீவ் காந்திக்குப் போன் செய்தேன். அவர் தூங்கப் போய் விட்டார் என்றார்கள். ஒரு நாட்டின் பிரதமர் இவ்வளவு சீக்கிரம் தூங்கினால் நாடு உருப்படுமா என்றும் கூறினார்.

ஆளுநர் சென்னாரெட்டியை சந்திக்கச் சென்றபோது அவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்றார். சந்திரபாபு நாயுடுவை மோசடிப் பேர்வழி என்றார்.

எம்.ஜி.ஆர். என்னை விட்டு, திமுகவை விட்டுப் பிரிந்து சென்றார். அப்படி இருந்தும் என் மீது மரியாதையாக இருந்தார். நட்பு பட்டுப் போய் விடவில்லை. அவருடைய காரிலே ஒரு நண்பர், இப்போதும் அவர் சென்னையிலே பெரிய புள்ளியாக உள்ளார்.

டிரைவர் என்று கூறக் கூடிய அளவுக்கு எம்.ஜி.ஆரிடத்திலே நெருக்கமாக இருந்தவர் அவர். ஒருமுறை காரில் எம்.ஜி.ஆருடன் சென்றபோது தவறிப் போய் எனது பெயரைக் குறிப்பிட்டு, கருணாநிதி என்று கூறி விட்டார்.

உடனே காரை நிறுத்தச் சொன்ன எம்.ஜி.ஆர்.அவரை நடந்தே வீட்டுக்கு வருமாறு உத்தரவிட்டார். ஏன் என்று அவர் கேட்டபோது, நானே கருணாநிதி என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை. நீ எப்படிக் கூப்பிடலாம் என்றாராம். இதை அந்த நண்பர் பின்னர் ஒருமுறை என்னிடம் சொல்லி கண் கலங்கியிருக்கிறார்.

அப்படி, ஒரு கட்சி பிரிந்த பிறகும் கூட அந்த உணர்வுகள் அப்படியேதான் இருந்தன. நான் காமராஜரைப் பற்றிப் பேசாத பேச்சா. காமராஜர் என்னைப் பற்றியோ, கழகத்தைப் பற்றியோ பேசாத பேச்சா. பக்தவச்சலம் என்னைப் பற்றி பேசாத பேச்சா, நான் அவரைப் பற்றிப் பேசாத பேச்சா. அப்படி இருந்தாலும், என்னுடைய தாயின் பெயரில் திருக்குவளையில் தாய் சேய் நல விடுதியைத் திறக்க வேண்டும் என கேட்டபோது பக்தவச்சலம் உடனடியாக ஒத்துக் கொண்டார்.

அதேபோல நான் அவருக்கு மணிமண்டபம் கட்டியபோது அவர் இந்தியைக் கொண்டு வந்தார், உங்களை பாளையங்கோட்டை சிறையில் போட்டார். அவருக்கு மணி மண்டபா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் அது வேறு, இது வேறு. மனித நாகரீகம் இது, தடுக்காதீர்கள் என்றேன்.

பெருந்தலைவர் காமராஜரை நான் எவ்வளவு தூரம் விமர்சித்திருப்பேன். எனது தாயார் இறந்தபோது நான் சவத்துக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தேன். எனது வீட்டு வாசலில் காமராஜர் நின்று கொண்டிருந்தார். எனது தாயாருக்கு முதல் மரியாதை செலுத்தி விட்டு வீட்டு வாசலில் காமராஜர் நின்று கொண்டிருந்தார்.

அரசியலில் மற்றவர்களை தாக்கி பேசும்போது அவர்களை மீண்டும் சந்திக்க வேண்டி வரும் என்பதை மறந்து விடக்கூடாது. ஜெயலலிதா அந்த நாகரீகத்தை கற்றவர் அல்ல, காப்பாற்றுபவரும் அல்ல. மனித இதயத்தோடு தொடர்பு இல்லாமல் அரசியல் நடத்துகிறார்.

இதையெல்லாம் தாங்கிகொண்டுதான் ஆக வேண்டும். இந்த அளவிற்கு நாகரீகமற்ற, பண்பாடற்ற அரசியல் வந்துவிட்டதே என வருத்தப்பட வேண்டியுள்ளது.

84 வயது, 84 வயது என்று சொல்கிறீர்களே, இவ்வளவு நாள் இருந்ததால் அல்லவா, தமிழ்நாட்டிலே காமராஜரைப் போன்ற, பெரியாரைப் போன்ற, பகத்வச்சலத்தைப் போன்ற, அண்ணாவைப் போன்ற பெரிய மனிதர்களுன் பழகி விட்டு, இன்றைக்கு யார் யாரோடெல்லாம் அரசியல் நடத்திய வேண்டிய நிலை வந்து விட்டது.

இப்படியெல்லாம் 84 வயது வரை வாழ வேண்டுமா என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன் என்று கூறியபோது முதல்வரின் கண்கள் பணித்தன, குரல் தழுதழுத்தது. அவையே பெரும் அமைதியில் உறைந்து போனது.

முதல்வர் கண் கலங்குவதைப் பார்த்த அமைச்சர்கள் கீதா ஜீவன், பூங்கோதை, தமிழரசி, பாமக தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் கண்கலங்கினர்.

————————————————————————————————

சாதனைகள் :
– ப்ரியன்
* தமிழகம் இதுவரை 13 சட்டமன்றப் பொதுத் தேர்தல்களைச்
சந்தித்துள்ளது. இவற்றில் தாம் போட்டியிட்ட 11 சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பவர் இந்தியாவில் கலைஞர் மட்டுமே!

* அன்றிலிருந்து இன்று வரை, சட்டமன்றத்தில் எரிமலையாகப்
பேசினாலும், எந்தக் கட்டத்திலும், சபைக் குறிப்புகளிலிருந்து நீக்கப்படும் அளவுக்கு, கலைஞருடைய பேச்சு அமையவில்லை.

* சென்னை மாநகராட்சியை தி.மு.க. முதன் முறையாகப் பிடித்ததற்கு முக்கியமான காரணம் அவரது திட்டமிடுதலும் உழைப்பும்.

* இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைக்குச் சென்றது.

* கை ரிக்ஷாக்களை ஒழித்தது. பேருந்துகளை தேசிய மயமாக்கியது போன்ற திட்டங்கள்.

* நிலச் சீர்திருத்தச் சட்டங்களை அறிமுகப்படுத்தியது.

* தமிழ்நாடு அரசின் கீழ் பல பொதுத்துறை நிறுவனங்கள் வரக் காரணமாக இருந்தவர். சிப்காட் தொழிற் பேட்டைகள் தமிழகத்தில் உருவாகக் காரணமாக இருந்தவர்.

* சேலம் உருக்காலை மற்றும் தூத்துக்குடி துறைமுகம் ஆகியவை வரக்காரணமாக இருந்தவர்.

* மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் பெற, நீதிபதி ராஜ மன்னார் கமிஷனை அமைத்தது.

* தமிழ்மொழி, ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வகை செய்யும் விதத்தில் முனைந்து பணியாற்றி வருகிறார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் இவரது முயற்சியால் வந்ததுதான். தமிழுக்குச் செம்மொழி பெற முனைந்தது.

* குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பை உண்டாக்கியவர்.

* பெண்களுக்குச் சொத்தில் பங்கு உண்டு என்கிற புரட்சிகரமான சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர். பெண்களுக்குத் திருமண உதவித்திட்டம், பேறுகால உதவி போன்றவையும் அமுல்படுத்தியவர்.

* காவிரி நடுவர் மன்றம் நியமிக்க முழு மூச்சாகச் செயலாற்றினார்.

* பெரியார் சமத்துவபுரம், உழவர் சந்தை ஆகியவை இவரது
திட்டங்களே.

* சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தியது.

* கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்குப் விநியோகித்தது.

* சுதந்திரப் போராட்ட வீரர்கள், மற்றும் மறைந்த தலைவர்களுக்கு
நினைவில்லங்கள், மணி மண்டபங்கள் கட்டியது.

பின்னடைவுகள்:

* 1983-ல் இலங்கைத்தமிழர்கள் பிரச்னையில் ராஜினாமா செய்த
பின்னரும் மற்றும் 1986-ல் எம்.ஜி.ஆர். மேலவையைக் கலைத்துவிட்ட பின்னரும் கிட்டத்தட்ட நான்கு வருட காலம், சட்டமன்றத்திலோ மேலவையிலோ உறுப்பினராக இல்லாமல் இருந்திருக்கிறார் கலைஞர்.

* 1991-ல் துறைமுகம் தொகுதியில் வென்றபோதும், தி.மு.க.வின் தோல்வியை ஏற்றுக்கொண்டு ராஜினாமா செய்து விட்டார்.

* 2001-ல் சேப்பாக்கத்தில் வெற்றி பெற்றாலும், அவைக்குச் சென்று ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் இருந்ததும் விமர்சனத்துக்கு உள்ளானது.

* எமர்ஜென்சியைத் தொடர்ந்து, இவர் மீது போடப்பட்ட

  • வீராணம்,
  • பூச்சி மருந்து,
  • கோதுமை பேரம் ஆகிய ஊழல் வழக்குகளை பின்னர் மத்திய அரசு வாபஸ் பெற்றுக் கொண்டாலும், இவை கரும்புள்ளிகளாக அமைந்துவிட்டன.

* எம்.ஜி.ஆர்.கட்சியை விட்டு விலகியதைத் தொடர்ந்து, சட்டசபையை இரு சபாநாயகர்கள் நடத்தும் சூழல் உருவானது இந்தக் காலகட்டத்தில்தான்.

* சட்டசபையில் இவரது கையில் இருந்த பட்ஜெட் புத்தகத்தை
ஜெயலலிதா பறிக்க முயன்றபோது துரைமுருகன் ஜெயலலிதாவை மிக அநாகரிகமான முறையில் தாக்கியது களங்கமாய் அமைந்துவிட்டது.

* 1996-ல் இவர் ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் தென்
மாவட்டங்களில் ஜாதிமோதல்கள் நடந்தன.

* மூதறிஞர் ராஜாஜி, கலைஞர் வீட்டுக்குச் சென்று கேட்டுக் கொண்டதையும் பொருட்படுத்தாமல் ஒரு தலைமுறைக்கு
அறிமுகமில்லாத கள், சாராயத்தை தமிழகத்தில் கொண்டு வந்து அந்த அவலம் இன்று வரை தொடர்வதற்குக் காரணமானவர்.

* அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தபோது, மாணவர்கள் மீது போலீஸ் தாக்கியதில் உதயகுமார் என்ற மாணவர் இறந்து விட்டார். பின்னர் விடப்பட்ட மிரட்டல்கள் காரணமாக, உதயகுமாரின் தந்தையே பெற்ற மகனை “தன் மகன் இல்லை” என்று சொல்ல நேர்ந்த கொடுமை.

* திருச்சி மற்றும் பாளையங்கோட்டையில் மாணவர்கள் மீது நடந்த தாக்குதல்.

* காவிரி பிரச்னை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு போட்ட வழக்கை வாபஸ் வாங்கியது இன்று வரை தொடர்
பிரச்னைகளுக்குக் காரணமாக இருந்து வருகிறது.

* தி.மு.க. ஆட்சியில் சென்னையில் ஈழப் போராளி பத்மநாபா மற்றும் அவர் தோழர்களைக் கொன்ற புலிகள், கோடியக்கரை வழியாக
தப்பிச் சென்றது.

* மின்சாரக் கட்டண உயர்வுக்காகப் போராடிய விவசாயிகள் காவல் துறையால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம்.

* 1972-ல் கச்சத்தீவை விட்டுக் கொடுத்தது.

* மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் தினகரன் அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்கியதில் மூன்று ஊழியர்கள் இறந்தது.

– ப்ரியன்

Posted in 50, 84, ADMK, Advani, AIADMK, Allegations, Anna, Annadurai, Assembly, Backgrounder, Barnala, Biography, Biosketch, Chandrababu, Chandrababu Naidu, Communist, Congress, DMK, EVR, Faces, Gandhi, History, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, Kamaraj, kamarajar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Lament, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, MGR, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Naidu, Narasimha Rao, Narasimharao, Nayudu, Party, people, Periyaar, Periyar, PMK, Politics, Rajeev, Rajiv, Speech, Statistics, Vajpayee, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Vituthalai Chiruthaigal | Leave a Comment »

Yale University’s Tamil Chair Role to be Expanded by Kanchana Dhamodharan Efforts

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 11, 2006

அமெரிக்க யேல் பல்கலை.யில் தமிழ் விரிவாக்கப் பணி: எழுத்தாளர் காஞ்சனா தாமோதரன் முயற்சி

சென்னை, செப். 12: அமெரிக்காவின் முன்னணிப் பல்கலைக்கழகமான யேல் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையின் விரிவாக்கப் பணிக்கு அமெரிக்கவாழ் தமிழ் எழுத்தாளர் காஞ்சனா தாமோதரனும் அவரது கணவர் டாக்டர் தாமோதரனும் நன்கொடை வழங்கியுள்ளனர்.

“”இதன்படி இப்பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு, கற்பித்தல் பணியுடன், தமிழ் மொழி, அரசியல், சமூகம் குறித்த கூடுதலாகப் பாடங்கள் சேர்க்கப்படும்” என்று காஞ்சனா தாமோதரன் தெரிவித்தார்.

யேல் பல்கலைக்கழகத்துக்கும் தமிழகத்துக்கும் பல தொடர்புகள் உள்ளன.

காலனி ஆதிக்க காலத்தில் சென்னை கோட்டையில் ஆளுநராக இருந்த எலைஹு யேல் என்பவரது பெயரைத் தாங்கியுள்ளது இப்பல்கலைக்கழகம்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவை அழைத்து கெüவர டாக்டர் பட்டம் அளித்து சிறப்பித்தது யேல் பல்கலைக்கழகம்.

இது மட்டுமின்றி, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், கடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜான் கெர்ரி, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், நியூயார்க் செனட்டர் ஹில்லரி கிளிண்டன், நியூயார்க் மாநில ஆட்சியாளர் பட்டாக்கி ஆகியோர் யேல் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்.

வர்த்தக நிபுணரான காஞ்சனா தாமோதரன் யேல் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையின் வளர்ச்சி குறித்து அப்பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுடன் அண்மையில் தொடர்ந்து விரிவாக ஆலோசித்தார்.

அதன் பயனாக யேல் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான துறையை மேலும் விரிவுபடுத்துவது என்று பல்கலைக்கழகம் உத்தேசித்துள்ளது.

இப்பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியியல் வல்லுநராக பேராசிரியர் ஈ. அண்ணாமலை, மானிடவியல் பேராசிரியர் பார்னி பேட் ஆகியோர் தமிழ்சார்ந்த சில ஆய்வுகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

தற்போது இப்பல்கலைக்கழகத்தில் தொடக்கநிலைத் தமிழ் முதல் உயர்நிலைத் தமிழ் வரை கற்பிக்கப்படுகின்றன.

இனி மொழி, சமூக, அரசியல் குறித்த கூடுதல் பாடங்களும் இனிமேல் சேர்க்கப்படும்.

இப்பல்கலைக்கழகத்தின் தமிழ் வளர்ச்சிக்காக நிதியுதவி அளித்த காஞ்சனா தாமோதரன், “”இந்திய மக்களின் வரிப்பணத்திலும் அமெரிக்க மக்களின் வரிப் பணத்திலும் சிறந்த கல்வியைப் பெற்றவர்கள் நாங்கள். எங்களை வளர்த்த இரு சமுதாயங்களுக்கும் திருப்பி அளிக்கக் கடமைப்பட்டவர்கள்” என்றார்.

காஞ்சனா “தினமணி’, “தினமணி -சிறுவர் மணி’ ஆகியவற்றில் எழுதியுள்ளார். தமிழகத்தில் சுனாமியால் தாக்கப்பட்ட மக்களுக்கு ஆரவாரம் இன்றி உதவியுள்ளார்.

Posted in Annadurai, CT, Damotharan, E Annamalai, Kanchana Dhamodharan, Tamil, Thamizh Chair, University, US, Yale | Leave a Comment »