Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Douglas’ Category

Sri Lanka scraps truce pact with LTTE & Ceasefire agreement will end after Thai pongal: Tamil Tigers

Posted by Snapjudge மேல் ஜனவரி 3, 2008

விடுதலைப் புலிகளுடனான போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் உத்தியோகப்பூர்வ முன்னறிவிப்பு

கடந்த 2002ஆம் ஆண்டு பிப்பிரவரி 22 ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்புடன் செய்துகொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் உத்தியோகப்பூர்வமாக 14-நாள் முன்னறிவிப்பினை வழங்கியிருக்கிறது.

போர்நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவதாக இலங்கை அரசாங்கம் கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தது.

இது தொடர்பாக இலங்கை வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், போர்நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் கொடுக்கப்பட்டுள்ள இந்த 14-நாள் முன்னறிவிப்பின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி போர்நிறுத்த உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக முடிவிற்குவரும் என்று தெரிவித்திருக்கிறது.

அத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் 2002ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் திகதி உருவாக்கப்பெற்ற இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் செயற்பாடுகளும் முடிவிற்குவரும் என வெளிநாட்டமைச்சின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை இன்று பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா, பல்லாயிரக்கணக்கான தடவைகள் புலிகள் அமைப்பினரால் மீறப்பட்டு செயலற்றுப்போயுள்ள ஒரு ஒப்பந்தத்தினைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்க அரசு தயாராக இல்லை என்று தெரிவித்தார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் பேச்சுக்களில் ஈடுபடுவது பயனற்றது என்று தெரிவித்த அமைச்சர் யாப்பா, எதிர்காலத்தில் நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, புலிகள் ஆயுதங்களை கீழேவைத்துவிட்டு பேச்சுகளிற்குத் தயார் என்று கூறினால் அது குறித்து பரிசீலிக்க அரசு தயாராக இருக்கிறது என்றும் அதேவேளை அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவினூடாக அரசியல் தீர்வொன்றினைக் காண்பதில் அரசு தீவிரமாக ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

இலங்கை அரசின் இந்த பாரதூரமான முடிவு தமக்குக் கவலையளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள நோர்வேயின் இலங்கைக்கான விசேட சமாதானத்தூதுவர் எரிக் சொல்க்ஹெய்ம், வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு மேலும் வன்முறைகள் அதிகரிக்கவே வழிகோலும் என்றும் அச்சம் வெளியிட்டுள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்ற இலங்கை அரசின் அறிவிப்பு குறித்து இலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இன்னமும் கருத்து எதையும் வெளியடவில்லை. இந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ரவி கருணநாயக அவர்கள் இலங்கை அரசின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக நார்வே அரசுக்கு தெரிவிக்கப்பட்ட பிறகுதான் தங்களது கட்சி இது குறித்து கருத்து வெளியிட முடியுமென்று தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு – கண்டனம்

இரா.சம்பந்தர்

அரசாங்கத்தின் அறிவிப்பு பற்றி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், இலங்கை அரசாங்கம் போர்நிறுத்தத்திலிருந்து விலகியதாக அறிவித்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை ஏனெனில் அந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் அப்பட்டமாக மீறிவந்துள்ளது என்று தெரிவித்தார்.

இராணுவ ரீதியில் ஒப்பந்தம் மீறப்பட்டது மட்டுமின்றி, வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு அவர்கள் சொந்த இடங்களை விட்டு அகதிகளாக வெளியேறும் நிலை இந்த போர்நிறுத்த காலத்தில் ஏற்பட்டதுதான் தாங்கள் இங்கே வலியுறுத்துகின்ற விஷயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் போர்நிறுத்த விலகல் அறிவிப்பு குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா பிரிவின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் யோகராஜன், மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான ராதாகிருஷ்ணன் ஆகியோரது கருத்துகளையும் நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


வட இலங்கை மோதல்கள் – முரண்பட்ட தகவல்கள்

பதுங்கு குழி

மன்னார் பாலைக்குழி பகுதியில் வியாழக்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டைகள் இடம்பெற்றதாகவும், இதில் 6 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் 6 படையினர் காயமடைந்ததாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் 6 பதுங்கு குழிகளைக் கொண்ட முன்னணி பாதுகாப்பு வரிசையொன்றும் படையினரால் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

இந்த மோதல்களை உறுதிப்படுத்தியுள்ள விடுதலைப் புலிகள், மன்னார் பாலைக்குழி அணைக்கட்டு பகுதியில் பெரும் எடுப்பில் முன்னேற முயன்ற இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், இதில் 10 படையினர் கொல்லப்பட்டு 15 பேர் காயமடைந்ததாகவும் தங்கள் தரப்பில் சேதம் எதுவுமில்லை என்றும் அறிவித்திருக்கின்றனர்.

வவுனியா நாவற்குளம் பகுதியில் வியாழனன்று இடம்பெற்ற மற்றுமொரு மோதல் சம்பவத்தில், மேலும் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

இதற்கிடையில், மன்னார் உயிலங்குளம் மணற்குளம் பகுதியில் மோட்டார் குண்டு ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 4 சிவிலியன்கள் காயமடைந்ததாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திலிருந்து ஏவப்பட்ட மோட்டார் குண்டே வீழ்ந்து வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு பெண்களும், 13 வயது சிறுவன் ஒருவனும், 7 வயதுடைய சிறுமி ஒருவருமே இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாக மன்னார் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். காயமடைந்தவர்கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கண்ணி வெடி

இதேவேளை, மணலாறு பதவியா பகுதியில் இராணுவ டிரக் வண்டியொன்று அமுக்க வெடியில் சிக்கியதையடுத்து, 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 4 படையினர் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.


மகேஸ்வரன் கொலையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் கடையடைப்பு

சுட்டுக்கொல்லப்பட்ட மகேஸ்வரன்

கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வளவினுள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாழனன்று வவுனியாவில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. வங்கிகள், அலுவலகங்கள் என்பனவும் இயங்கவில்லை.

யாழ் நகரில் கடைகள் திறக்கப்படாதிருந்ததாகவும், இராணுவத்தினர் வந்து கடைகளைத் திறக்குமாறு உத்தரவிட்டதையடுத்து, கடைகள் யாவும் திறக்கப்பட்டதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சொந்த ஊராகிய யாழ்ப்பாணம் காரைநகரில் கறுப்பு வெள்ளை கொடிகள் கட்டப்பட்டு, கடைகள் அலுவலகங்கள், பாடசாலைகள் என்பன மூடப்பட்டு காரைநகர் பிரதேசம் சோகமயமாகக் காட்சியளித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, மகேஸ்வரனின் கொலை தொடர்பாக, யாழ்பாணத்தைச் சேர்ந்த வசந்தன் என்ற நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நபர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழும், மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது அவருடைய பாதுகாப்பு பணியிலும் இருந்துள்ளார் என்றும் ஆனால் இந்தக் கொலை குறித்து யார் மீதும் இலங்கை அரசு சந்தேகப் படவில்லை என்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக பேசவல்ல இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்கவல்ல தெரிவித்திருந்தார்.

ஆனால் ஈ.பி.டி.பி.யுடனோ தன்னுடனோ வசந்தன் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. இந்த செய்தி எவ்வித அடிப்படையும் இல்லாத பொய் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

Posted in Agreement, Assassin, Assassinations, Attacks, Ceasefire, dead, Douglas, Eelam, Eezham, EPDP, Jaffna, Killed, LTTE, Mahesvaran, Maheswaran, Mannaar, Mannar, Murder, Peace, Ranil, Sri lanka, Srilanka, Tamil, Tamil Tigers, Tigers, Truce, Vavuniya, War, wavuniya, Wawuniya | 1 Comment »

Sri Lankan Tamil MP Maheswaran assassinated in Colombo temple

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் புதுவருடத்தினமான இன்று கொழும்பு பொன்னம்பலவாணேசர் ஆலயத்தில் வைத்து துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆலயத்தின் உள்வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், கொழும்பில் மிகவும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று காலை சுமார் 10 மணியளவில் மகேஸ்வரன் தனது குடும்பத்தார் மற்றும் மெய்பாதுகாப்பு உறுப்பினர்கள் சகிதம், மிகவும் சனக்கூட்டம் நிறைந்த இந்த ஆலய உள்வீதியில் வலம் வந்துகொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்ததாகக் கருதப்படும் துப்பாக்கி நபரினால் சரமாரியாகச் சுடப்பட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவத்தின்போது படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விரையப்பட்டபோதிலும், அங்கு அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிற்குள்ளேயே சிகிச்சைகள் பயனின்றி இறந்துவிட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்

இந்தச் சம்பவத்தின் போது அவரது மெய்பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் 12 பேர் வரையில் காயமடைந்தாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலை மேற்கொண்டதாகக் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிநபர் கொட்டாஞ்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாப்பாளரின் பதில்தாக்குதலில் காயமடைந்திருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் உறுதி செய்திருக்கின்றன.

இந்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் இவர், தற்போது பொலிசாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

அத்துடன் மகேஸ்வரனின் இன்றைய இந்தப்படுகொலையைக் கேட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருப்பதாகவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இது தொடர்பாக தேவையான விசாரணைகளை மேற்கொண்டு கொலையாளிகளைக் கைதுசெய்யும்படியும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

அதேவேளை மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ள அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இந்தியாவில் இருந்து விடுத்துள்ள ஒரு செய்தியில், இலங்கை அரசாங்கமே இந்தக் கொலைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Posted in Assassination, Assassinations, Batticaloa, Campaign, Civil Monitoring Committee, Colombo, dead, Devananda, Devanandha, Devanantha, Douglas, Douglas Devananda, Eelam, Eezham, Election, Elections, EPDP, Ganesan, guards, Hindu, Jaffna, Joseph, Joseph Pararajasingham, Killed, Kochchikkadai, Kotahena, LTTE, Mageshwaran, Magesvaran, Mageswaran, Maheshwaran, Mahesvaran, Maheswaran, Mahinda, Mahindha, Mahintha, Mano, Mano Ganesan, MP, Murder, Muthukumar, Muthukumar Sivapalan, Nadaraja, Nadarajah, Nadarajah Raviraj, Nataraja, paramilitary, Pararajasingam, Pararajasingham, Pararajasinkam, Parliamentarian, Polls, Ponnambala Vaneswara Hindu Temple, Rajapaksa, Ranil, Raviraj, Security, Sivabalan, Sivapalan, Sri lanka, Srilanka, Tamil, Tamil National Alliance, Temple, terror, Terrorists, Thiagaraja, Thiyagaraja, Thiyagarajah, Thiyagarajah Maheswaran, TNA, UNP, Western Province Peoples Front, Wickremasinga, Wickremasinge, Wickremasingha, WPPF | 2 Comments »

Nov. 28 – Sri Lanka, Batticaloa News & Updates: Bomb Blast reactions

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2007

 


கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையிலான ரயில் சேவை அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

இலங்கை ரயில்

நாட்டின் தலைநகரமாகிய கொழும்பு பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து, கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையில் நடைபெற்று வந்த ரயில் சேவை, இன்று அனுராதபுரம் நகருடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி அதிகாலை புறப்படுகின்ற யாழ்தேவி ரயில் மாத்திரம் மதவாச்சி வரையில் சேவையில் ஈடுபடுவதாகவும், ஏனைய ரயில் சேவைகள் யாவும் அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ரயில் சேவை நேற்று மதவாச்சி வரையில் மாத்திரமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இரண்டாவது நாளாக இன்று வெள்ளிக்கிழமையும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இருந்து பொதுமக்கள் எவரும் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக, வவுனியா நகரம் உட்பட தென்பகுதிக்கு வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலைமை காரணமாய் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா மாவட்ட பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு கடமைக்காகச் சென்ற அரச ஊழியர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பி வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இன்று வெள்ளிக்கிழமை இவர்களில் ஒரு தொகுதியினர் மாத்திரம் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக வவுனியா நகரப்பகுதிக்குள் வருவதற்கு படையினர் அனுமதி வழங்கியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், இலங்கையின் வடக்கே இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இராணுவ சிப்பாய் ஒருவர் மிதிவெடியில் சிக்கிக் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் முகமாலை பகுதியில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து அரச தரப்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.


இலங்கை யுத்தத்தில் பொதுமக்கள் அதிகம் கொல்லப்படுவது குறித்து யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு அதிர்ச்சி

யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு அலுவலக பதாகை

இந்த வாரத்தின் முதல் நான்கு தினங்களில், இலங்கையின் வடக்கிலும் கொழும்பிலும் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களின்போது சுமார் 49 சிவிலியன்கள் கொல்லப்பட்டதோடு, சுமார் 60 பேர்வரையில் காயமைடைந்திருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்றும், இது குறித்து தாம் மிகுந்த கவலையடைந்திருப்பதாகவும் இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு தெரிவித்திருக்கிறது.

இந்தச் சம்பவங்கள் குறித்து இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் விசேட அறிக்கையொன்றில், இம்மாதம் 25 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரையான குறுகிய காலப்பகுதியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் பெருந்தொகையான சிவிலியன்கள் கொல்லப்பட்டிருப்பதோடு, படுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறது.

இந்த சம்பவங்கள் குறித்து இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், இச்சம்பவங்களும் அதன்போது ஏற்பட்ட இழப்புக்களும் 2002 ஆம் ஆண்டு யுத்தநிறுத்த ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்பிருந்த நிலைமையை ஒத்ததாகக் காணப்படுவதாகவும் அது தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.


 

கொழும்புத் தாக்குதல்கள் குறித்து ஐ.நா தலைமைச் செயலர் கண்டனம்

இலங்கையின் தலைநகர் கொழும்பில் நேற்று நடந்த இரண்டு குண்டுத் தாக்குதல்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கி மூண் அவர்கள் கண்டித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலரின் அலுவலகம், கிளிநொச்சியில் நேற்று முன் தினம் உலக உணவுத்திட்டத்தின் அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல் குறித்தும் ஐ.நா தலைமைச் செயலர் கவலை தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

அதேவேளை கொழும்புத் தாக்குதல்களைக் கண்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை மோதல்களில், வன்னியிலும், கொழும்பிலும் ஏனைய இடங்களிலும், அகப்பட்டுள்ள பொதுமக்களின் நிலைமை குறித்து தனது கவலையை வெளியிட்டுள்ளது.


கொழும்புத் தாக்குதல்கள் குறித்து விடுதலைப்புலிகள் மீது இலங்கை ஜனாதிபதி குற்றச்சாட்டு

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடந்த குண்டுத் தாக்குதல்களை இன்றைய தினம் இரானிலிருந்து நாடு திரும்பிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.

இந்தத் தாக்குதல்களுக்கு தமீழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரே காரணம் எனக்குற்றஞ்சாட்டியுள்ள ஜனாதிபதி, பயங்கரவாதத்தின் மாற்றமடையாத இந்த வழிகள் குறித்து சர்வதேச சமூகம் அதிக கவனம் கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்ததாக, ஜனாதிபதி செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறது.

அத்துடன் இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கும்படி அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு அவர் பணித்திருக்கிறார்.

இதேவேளை, நேற்றைய குண்டுவெடிப்பின் பின்னர் கொழும்பின் பாதுகாப்பினை மேலும் அதிகரித்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள், புதிய சில நடைமுறைகளையும் அறிமுகப்படுத்தியிருப்பதாக அறிய முடிகிறது.

இதன் ஒரு அங்கமாக கொழும்பிலிருந்து வவுனியாவிற்கான ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரைக்கும் மதவாச்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மட்டக்களப்பில் சிங்கள வியாபாரிகள் கொலை

அடையாளம் தெரியாத ஆட்களால் கொலை
அடையாளம் தெரியாத ஆட்களால் கொலை

மட்டக்களப்பு மாவட்டம் ஐயன்கேனியில் இன்று முற்பகல் மரத்தளபாட சிங்கள வியாபாரிகள் இருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.

பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் வழமை போல் அந்த பகுதிக்கு வியாபாரத்தின் நிமித்தம் சென்றிருந்த சமயம் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸார் கூறுகின்றனர்.

மேலும் அம்பாறை மாவட்டம் பக்மிட்டியாவ என்னுமிடத்தில் இன்று முற்பகல் விசேட அதிரடிப் படையினர் பயணம் செய்த கவச வாகனமொன்று விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கானதில் 4 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Posted in Anuradapura, Anuradhapura, Anuradhapuram, Anurathapura, Arms, Attacks, Batticaloa, Blasts, Bombs, Cleansing, Colombo, Communications, Concerns, dead, Douglas, Eelam, Eezham, ethnic, EU, Extremism, Extremists, Freedom, LTTE, Mobility, Rails, Railways, reactions, Security, Sri lanka, Srilanka, Suicide, Terrorism, Terrorists, Trains, Transport, Vavuniya, Vidudhalai, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Violence, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, wavuniya, Weapons | Leave a Comment »

Suicide Bomb blast in Nugegoda town near Sri Lankan Capital – Government minister Douglas Devananda escapes

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007

நுகேகொட குண்டுவெடிப்பில் 16 பேர் பலி

குண்டு வெடித்த இடம்
குண்டு வெடித்த இடம்

இலங்கையின் தலைநகர் கொழும்பின் தென்புறமாக நுகேகொட பகுதியில் இன்று பிற்பகல் சனநடமாட்டம் மிக்க இடத்தில் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் முப்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

சனக்கூட்டம் நிறைந்த புடவைக் கடையொன்றில் இருந்தே இந்தப் பாரிய குண்டு வெடித்துள்ளது.

குண்டு வெடித்ததை அடுத்து அப்பகுதியில் இருந்த வாகனங்கள் சிலவும், கடைகளும் தீப்பற்றிக்கொண்டுள்ளன.

வர்த்தக நிறுவனம் ஒன்றில் காணப்பட்ட சந்தேகத்துக்குரிய பொதி ஒன்றை பாதுகாவலர்கள் அகற்ற முயன்ற போதே அந்தப் பொதி வெடித்ததாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 37 பேர் காயமடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப்புலிகள் மீதே அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த குண்டுத் தாக்குதல்களை அடுத்து கொழும்பு உள்ளடங்கலாக மேல்மாகாணத்தில் உள்ள பள்ளிக்கூடங்களை திங்கட்கிழமை வரை இலங்கை அரசு மூடியுள்ளது.


இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் முயற்சி

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

கொழும்பு நாரஹேன்பிட்டி இசப்பத்தான மாவத்தையில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின், சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சகவளாகத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினைச் சேர்ந்ததாகக் கருத்தப்படும் பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் இன்று காலை நடாத்திய குண்டுத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் இருவர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

ஈ.பி.டி.பி கட்சி வட்டாரங்களின்படி இன்று புதன்கிழமை அமைச்சர் தேவானந்தா வழமையாக பொதுமக்களைச் சந்திக்கும் தினமாகையால், அங்கு வரும் பொதுமக்களை பாதுகாப்புக் கடமையிலிருந்த அதிகாரிகள் அவர்களைச் சோதனையிடுவது வழக்கம் என்றும், இவ்வாறு அங்கு வந்திருந்த நடுத்தரவயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தியபோது அந்தப் பெண் தான் அணிந்திருந்த தற்கொலை குண்டு அங்கியினை வெடிக்கவைத்ததாகத் தெரியவருகிறது.

சம்பவம் இடம்பெற்ற அறை
சம்பவம் இடம்பெற்ற அறை

ஆனாலும், அமைச்சர் தேவானந்தா எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பியிருப்பதாகவும், விடுதலைப் புலிகள் அமைப்பினர் அவரைக் கொல்லுவதற்கு எடுத்த மற்றுமொரு முயற்சி பயனின்றித் தோல்வியில் முடிவடைந்திருக்கிறது என்றும் அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்த்தன.

இந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்புத்துறை வட்டாரங்கள், இந்தச் சம்பவத்தில் இறந்த தற்கொலைப்பெண் ஒரு போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட அங்கவீனமுற்றவர் என்று ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவருவதாகவும், குண்டுவெடிப்பினால் அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி ஸ்டீபன் பீரிஸ் என்பவர் படுகாயமைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் அங்கு மரணமாகியிருப்பதாகவும் தெரிவித்தனர்.

காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தரினதும், அமைச்சர் தேவனாந்தாவின் தனிப்பட்ட பாதுகாப்பு உறுப்பினர் ஒருவரும் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 2004 ஆம் ஆண்டு இதேபோன்றதொரு பாணியிலான பெண் தற்கொலைக்குண்டுத் தாக்குதல் முயற்சியிலிருந்து அமைச்சர் தேவானந்த தப்பியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கை நேயர்கள் கவனத்திற்கு

நேயர்களே, நேற்றைய தமிழோசை ஒலிபரப்பில் இலங்கை நேயர்களுக்கு நேரிட்ட சில பிரச்சினைகள் குறித்து விளக்க விரும்புகிறோம்.

நேற்று நவம்பர் 27 ஆம் திகதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை வலையமைப்பு மூலமாக இலங்கை நேயர்கள் கேட்ட எமது நிகழ்ச்சி, எமது முழுமையான நிகழ்ச்சி அல்ல.

இலங்கை நேயர்கள் கேட்ட அந்த நிகழ்ச்சி, காலதாமதமாக மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது, அது மட்டுமல்லாமல், எங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படாமலும், எமது அனுமதியைப் பெறாமலும், நிகழ்ச்சியின் சில பகுதிகள் வெட்டப்பட்டன. அந்த நிகழ்ச்சி எங்களால் வெட்டப்படவில்லை என்பதை நேயர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

சிற்றலை ஒலிபரப்பு மூலமாகவும், இணைய தளம் மூலமாகவும் கேட்கும் நேயர்கள் முழுமையாக இந்த நிகழ்ச்சியை கேட்டிருப்பார்கள்.


Posted in Arms, Attacks, Blasts, Bombs, Capital, Colombo, dead, Devananda, Douglas, Douglas Devananda, Eelam People's Democratic Party, EPDP, Government, Govt, LTTE, Military, Minister, Nugegoda, Polio, Social Services, Sri lanka, Srilanka, Suicide, Tamil Tiger, Weapons, Welfare | Leave a Comment »