Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Kilinochi’ Category

Batticaloa local polls & Pit of bodies discovered in the government-controlled Anuradhapura district

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2008

கர்ணல் கருணாவுக்கு 9 மாதம் சிறைத் தண்டனை: பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற குழுவின் தலைவரான கர்ணல் கருணா, போலி கடவுச்சீட்டு வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக பிரிட்டன் நீதிமன்றம் அவருக்கு ஒன்பது மாதம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

விநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற பெயர்கொண்ட இவர் கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்தில் கைதுசெய்யப்பட்டார்.

வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பின் வாதத்தை எடுத்துரைத்த அரசு தரப்பு பாரிஸ்டர், கருணா, கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி பிரிட்டனுக்குள் கோகில ஹர்ஷ குணவர்த்தன என்ற பெயரில் ராஜிய பாஸ்போர்ட் ஒன்றுடன் நுழைந்தார். இந்த பாஸ்போர்ட்டில் அவருக்கு பிரிட்டனுக்கு வந்து போக ஆறுமாத பலமுறை விஜயம் செய்யும் விசா ஒன்று வழங்கப்பட்டிருந்தது. பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்ட பெயர் வேறு ஒருவருடைய பெயராக இருந்தாலும், அதில் இருந்த புகைப்படம் கருணாவுடையதாக இருந்தது என்றார்.

இந்த விசா, வனவிலங்கு பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாடு ஒன்றில் குறிப்பிட்ட நபர் கலந்துகொள்வதற்காக கோரப்பட்டது என்றும் வழக்குரைஞர் கூறினார்.

பிரிட்டனுக்குள் வந்த கருணா கடந்த நவம்பர் இரண்டாம்தேதி பிரிட்டன் குடிவரவுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டர் என்று கூறிய அரசு வழக்குரைஞர், குடிவரவுத் தடுப்புக்காவலில் இருந்த அவரை, டிசம்பர் 22ம்தேதி, லண்டன் பெருநகரப் போலிசார் அடையாள ஆவணங்கள் மோசடி சட்டத்தின் கீழ் அவரைக் கைதுசெய்து குற்றச்சாட்டை பதிவு செய்தனர்.

போலிசார் கருணாவிடம் நடத்திய விசாரணையின்போது, கருணா தான் ஒரு இலங்கை பிரஜை என்றும், தனக்கு இந்த ராஜிய பாஸ்போர்ட் இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் உதவியால் தரப்பட்டது என்றும் கூறியதாகவும், அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து லண்டனுக்கு வரும்போது, கொழும்பு விமான நிலையத்தில், இலங்கையின் குடிவரவு மற்றும் சுங்க இலாகா வழிமுறைகளுக்கு உட்படாமல் தான் விமானத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும், விமானத்தில் ஏறும் முன்னர் தனக்கு இந்த ராஜிய பாஸ்போர்ட் தரப்பட்டதாகவும் கருணா லண்டன் போலிஸ் விசாரணையில் தெரிவித்ததாக, அரசு வழக்குரைஞர் தெரிவித்தார்.

ஆனாலும், இந்த பாஸ்போர்ட்டில் தனது புகைப்படம் மட்டுமே இருந்ததை கருணா கண்டதாகவும், மற்ற விவரங்கள் பொருந்தவில்லை என்று அவருக்கு தெரிந்திருந்ததாக கருணா கூறியதாக வழக்குரைஞர் குறிப்பிட்டார்.

தனக்கு ராஜிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது குறித்து கருணா போலிசாரிடம் குறிப்பிடுகையில் தான் அரசாங்க அதிகாரியல்ல என்றாலும், இலங்கை அரசால் பாதுகாப்பு வழங்கப்பட்ட ஒருவர் என்று குறிப்பிட்டதாக அரசு வழக்குரைஞர் கூறினார்.

கருணா ஏற்கனவே இந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று கூறிய கருணா தரப்பு வழக்குரைஞர் டேவிட் பிலிப்ஸ், ஆனால் போலிசார் மற்ற விடயங்களைப் பற்றி விசாரித்தபோது அவர்களுக்கு எந்தவித தடயமும் கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தனது கட்சிக்காரருக்கு மனைவி மற்றும் 11, 9 மற்றும் 6 வயதுடைய மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், கைதுசெய்யப்பட்டபோது அவர் தன்னுடைய வீட்டில்தான் இருந்தார் என்றும் குறிப்பிட்ட பிலிப்ஸ், கருணா இதற்கு முன்னர் சிறைத்தண்டனை பெற்றிருக்கவில்லை, இவ்வாறு தடுத்துவைக்கப்படுவது அவருக்கு ஒரு பயங்கரமான அனுபவமாக இருக்கும் என்றார்.

கருணாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை நீதிமன்றத்திலிருந்து அவதானித்திருந்த மணிவண்ணன் தொகுத்து வழங்கும் விரிவான செய்திகளை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


புலிகளின் வாகன தளத்தை விமான குண்டுவீச்சில் அழித்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது

 

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை காலை விமானப்படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் வாகனப் போக்குவரத்துத் தளம் ஒன்று அழிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.

இதனை மறுத்துள்ள விடுதலைப் புலிகள் மக்கள் குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஒரு சிவிலியன் கொல்லப்பட்டதாகவும் 5 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

எட்டு குண்டுகள் இப்பகுதியில் வீசப்பட்டதாகவும் இதனால் 12 வீடுகள் சேதமடைந்தும் முற்றாக அழிந்தும் இருப்பதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றார்கள்.

இந்த விமானத் தாக்குதலையடுத்து, கிளிநொச்சி பிரதேசத்தில் பதட்டம் நிலவியதுடன், பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் மேலும் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் பாடசாலைகளுக்குச் செல்லவில்லை என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் மின்னஞ்சல் வழி அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது.

காயமடைந்தவர்களில் 3 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி மருத்துவமனையின் பதில் மருத்துவ பணிப்பாளர் டாக்டர் பிரசாத்நாயகம் பிரைட்டன் தமிழோசையில் தெரிவித்தார்.


மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் முடிவுற்றது

 

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 6 அரசியல் கட்சிகளும் 22 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபைக்கும் 8 பிரதேச சபைகளுக்கும் 1994ஆம் ஆண்டுக்கு பின்பு நடைபெறவிருக்கும் இத்தேர்தல் மூலம் 101 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவிருப்பதாகக் கூறும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் டி.கிருஷ்ணானந்தலிங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் சயேச்சைக் குழுக்கள் சார்பாக 816 பேர் போடடியிடுவதாகக் குறிப்பிடுகின்றார்.

இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 23 சுயேச்சைக் குழுக்கள் சார்பாகவும் 7 அரசியல் கட்சிகள் சார்பாகவும் மொத்தம் 61 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்படிருந்த போதிலும் பரிசீலனையின் பின்பு 9 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்பிலும் ஏனைய சபைகளுக்கு தமது கட்சி சார்பாகவும் போட்டியிடும் அதேவேளை ஈ.பி.ஆர்.எல்.எஃப். பத்மநாபா அணி, ஈ.பி.டி.பி., பிளொட் ஆகிய கூட்டமைப்பு அனைத்து சபைகளுக்கும் சுயேச்சையாக போட்டியிடுகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.


கெப்பிட்டிகொல்லாவ சடலங்கள்: சனிக்கிழமை பிரேதப் பரிசோதனை

இலங்கை வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கெப்பிட்டிகொல்லாவ பகுதியின் குக்கிராமம் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்ட 16 உடல்களும் நாளை சனிக்கிழமை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என கெப்பிட்டிகொல்லாவ வைத்திய அதிகாரி தெரிவித்திருக்கின்றார்.

கைகள் கட்டப்பட்ட நிலையில் அருகருகே இரண்டு புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட இந்தச் சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என கெப்பிட்டிகொல்லாவ பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

நேற்று காலை முதல் இன்று பகல் வரையிலான காலப்பகுதியில் வன்னிப் போர்முனைகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது நடத்திய தாக்குதல்களில் 41 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் கொல்லப்பட்டுள்ள 16 பேரையும் விடுதலைப் புலிகளே கொலை செய்திருப்பதாகக் குற்றம்சுமத்தியுள்ளது.

எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதுவரையில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆயினும் மணலாறு பகுதியில் தமது பிரதேசத்தினுள் நேற்று வியாழக்கிழமை ஊடுருவ முயன்ற படையினர் மீது விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தியதை அடுத்து படையினர் பின்வாங்கிச் சென்றதாகவும், மன்னார் பாலைக்குழி பகுதியில் நேற்று காலை முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் 3 இராணுவத்தினரும் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

Posted in Anuradhapura, Anuradhapuram, Anurathapura, Arrests, Batticaloa, Eelam, Eezham, Elections, England, Jail, Karuna, Kilinochi, Law, London, LTTE, murders, Nominations, Order, Passport, Polls, Sri lanka, Srilanka, Tigers, UK, Visa, War | Leave a Comment »

Sri Lanka ticked off over UNICEF Rep’s visit to Kilinochchi & 24 militants, two soldiers killed: army

Posted by Snapjudge மேல் திசெம்பர் 18, 2007

இலங்கை வெளியுறவுத்துறையிடம் தெரிவிக்காமல் யுனிசெஃப் தூதுவர் புலிகளைச் சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் யுனிசெஃப்பின் இலங்கைக்கான புதிய வதிவிடத் தூதுவர் பிலிப்பே டுவாமெல்லே கடந்தவாரம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சிக்குச் சென்று அந்த அமைப்பின் தலைவர்களுடனான சந்திப்பினை தமது அமைச்சுக்கு அறிவிக்காது மேற்கொண்டார் எனக் குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை வெளிநாட்டமைச்சு, திங்களன்று அவரை தனது அமைச்சிற்கு அழைத்து இது குறித்த கண்டனத்தினையும் வெளியிட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது.

இது குறித்து இலங்கை வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பொன்றில், வெளியுறவுச் செயலர் பாலித கொஹென இவருடனான இந்தச் சந்திப்பின்போது, வெளிநாட்டு இராஜதந்திரிகளோ அல்லது உயர்பிரதிநிதிகளோ இலங்கையின் வடமாகாணத்திலுள்ள கட்டுப்பாடற்ற பிரதேசங்களுக்கு விஜயம் செய்வது குறித்து தற்போது வெளிநாட்டமைச்சு அமுல்படுத்திவரும் நடைமுறைகளை, யுனிசெஃப்பின் இலங்கைக்கான புதிய வதிவிடத் தூதுவர் பிலிப்பே டுவாமெல்லே கடைப்பிடிக்கவில்லை என்பதைனைச் சுட்டிக்காட்டி, தனது அதிருப்தியினையும், கண்டனத்தினையும் வெளியிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான இவ்வாறான சந்திப்புக்களை விடுதலைப்புலிகள் அமைப்பினர் தமது பிரச்சார நடவடிக்கைகளுக்கு சாதகமாகப் பயன்படுத்துவதனால், வெளிநாட்டமைச்சு அமல்படுத்திவரும் இவ்வாறான நடைமுறைகளை யுனிசெஃப்பின் இலங்கைக்கான புதிய வதிவிடத் தூதுவர் பிலிப்பே டுவாமெல்லே மீறி நடந்திருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்றும் இலங்கையின் வெளியுறவுச் செயலர் பாலித கொஹென அவரிடம் தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து வெளியுறவு அமைச்சின் செயலரிடம் பதிலளித்த பிலிப்பே டுவாமெல்லே, கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கையில் தனது பதவியினைப் பொறுப்பேற்றுக்கொண்ட தான், வெளிநாட்டமைச்சின் இந்த புதிய நடைமுறைகள் குறித்து அறிந்து வைத்திருக்கவில்லை என்றும், தனது விஜயம் குறித்து இலங்கைப் பாதுகாப்பு அமைச்சினுடனான கலந்துரையாடலின் பின்னரே தான் இந்த விஜயத்தினை மேற்கொண்டதாகவும் இலங்கையின் வெளியுறவுச் செயலரிடம் தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் புலிகள் சிறார்களை தமது படைகளில் சேர்ப்பது தொடர்பில் யுனிசெஃப்பிற்கும், புலிகள் அமைப்புக்கும் இடையில் இடம்பெற்று வரும் வேலைத்திட்டத்தின் வளர்ச்சியினை அவதானிப்பதற்காகவும், அங்கு பணியாற்றும் யுனிசெஃப் அமைப்பின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைகளை நடாத்துவதற்காகவுமே தான் கிளிநொச்சிக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்ததாக அவர் தனது பக்க விளக்கத்தினை முன்வைத்தாகவும் இலங்கை வெளிநாட்டமைச்சு தெரிவித்திருக்கிறது.

இவ்விவகாரம் குறித்து இலங்கையிலுள்ள யுனிசெஃப்ன் அமைப்பின் தலைமை தொடர்பு அதிகாரி கோர்டன் வெய்ஸ் தமிழோசையில் வெளியிட்ட கருத்துக்களை நேயர்கள் கேட்கலாம்.


வட இலங்கை வன்முறையில் விடுதலைப் புலிகள் 24 பேர், படையினர் 2 பேர் பலி: இலங்கை இராணுவம்

இலங்கையின் வடக்கே நாகர்கோவில், முகமாலை, பொன்னாலை, வவுனியா மற்றும் மன்னார் உயிலங்குளம், பரப்பாங்கண்டல், மாந்தை, நரிக்குளம் போன்ற இராணுவ முன்னரங்கப் பகுதிகளில் திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 24 விடுதலைப் புலிகளும், இரண்டு இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

நாகர்கோவில், முகமாலை பகுதிகளில் செவ்வாயன்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் இன்று காலை நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, செவ்வாய் அதிகாலை வவுனியா செட்டிகுளம் வீரபுரம் பகுதிகளில் இராணுவத்தினரின் 20 பேர் கொண்ட சிறிய முகாம் ஒன்றை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்ததாகவும், இதில் 5 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மின்னஞ்சல் வழியாக தெரிவித்திருக்கின்றார்.

இங்கிருந்து ஆயுதத் தளவாடங்கள் தங்களால் கைப்பற்றப்பட்ட பின்னர் முகாம் எரியூட்டப்பட்டதாகவும் தங்கள் தரப்பில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும் இளந்திரையன் கூறியிருக்கின்றார்.

எனினும் வவுனியா உலுக்குளம் பகுதியில் விடுதலைப் புலிகள் செவ்வாய் அதிகாலை இராணுவ காவலரண் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்து சில ஆயுதத் தளபாடங்களைக் கைப்பற்றித் தப்பிச்சென்றுள்ளதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. இதனையடுத்து, அப்பகுதியில் தப்பியோடிய விடுதலைப் புலிகளைக் கண்டு பிடிப்பதற்காகத் தேடுதல் நடவடிக்கையொன்று நடத்தப்பட்டுள்ளது.

திங்களன்று யாழ்ப்பாணம் முகமாலை பிரதேசத்திலும் மன்னார் பிரதேசத்தின் இராணுவ முன்னரங்கப் பகுதிகளிலும் இடம்பெற்ற சண்டைகளில் 18 விடுதலைப் புலிகளும் இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

இதற்கிடையில் யாழ்ப்பாணத்தில் அடையாளம் தெரியாதவர்களினால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் எஸ்.தவராஜாவின் உடல் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Posted in Army, dead, Eelam, Eezham, Kilinochchi, Kilinochi, Killed, LTTE, Militants, Soldiers, Sri lanka, Srilanka, UNICEF | 1 Comment »

Dec 01 – Fighting escalates in Sri Lanka: Eezham, LTTE News & Updates

Posted by Snapjudge மேல் திசெம்பர் 2, 2007

இலங்கை அரசுக்கான ஆதரவை மறுபரீசிலனை செய்வோம் – மலையக மக்கள் முன்ணணி

கொழும்பில் கடந்த சில தினங்களாக கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், இலங்கை அரசுக்கான தங்களது ஆதரவை மறுபரிசீலனை செய்வது குறித்து தமது கட்சி சிந்தித்து வருவதாக மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஆளும் கூட்டணியில் அமைச்சராகவும் உள்ள பெ.இராதாகிருஷ்ணன் தமிழோசையிடம தெரிவித்தார்.

திங்கட்கிழமையன்று நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதத்தின் போது தமிழ் பேசும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து தமிழ் மக்களின் இந்தப் பிரச்சின குறித்து குரல் கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஞாயிறு அன்றும் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளர்கள் என்றும், அவர்களை தாம் பல போலீஸ் நிலையங்களில் சென்று பார்வையிட்டு, அவர்களின் விடுதலை தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஆளும் கூட்டணியில் தமது கட்சி அங்கம் வகித்தாலும், நாடாளுமன்றக் கூட்டத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் தமது கட்சி எண்ணியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது உள்ள சூழலில், அரசாங்கத்துடன் தொடர்ந்து இருக்க முடியுமா என்கிற பெரிய கேள்விக் குறியும் எழுந்துள்ளதாகவும், திங்கட்கிழமை அது குறித்த பதில் தெரியவரும் எனவும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கான ஆதரவை மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு தமது கட்சியான மலையக மக்கள் முன்னணி தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பிரச்சனைகள் குறித்து புகார்

 

கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர் நோக்குவதாகக் கூறப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சில பிரச்சினைகள் தொடர்பாக விரைவில் தீர்வொன்றை பெற்றுத்தர வேண்டும் என கிழக்கு மாகாண அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்று முன் வைக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை பெரிய பள்ளிவாசலில் வெள்ளிகிழமை கூடிய கிழக்கு மாகாண அனைத்து பள்ளிவாலச்கள் சம்மேளனத்தின் விசேட கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்டப்டுள்ளதாக சம்மேளனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இனைப்பாளரான யு.எல்.எம்.முபீன் கூறுகின்றார்.

கிழக்கு மாகாணம் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட பின்பும் கடத்தல், கொள்ளை உட்பட பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முஸ்லிம்கள் எதிர் நோக்குவதாகவும் குறிப்பிட்ட அவர், நீதிமன்ற உத்தரவு காரணமாக பள்ளிவாசல்களில் இரவு நேர ஒலி பெருக்கி பாவனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, இறைச்சிக்காக கர்நடைகளை எடுத்துச் செல்லுதல் மற்றும் வெட்டுதல் போன்றமை தொடர்பாக எதிர் நோக்கும் பிரச்சினைகள், முஸ்லிம் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடியேற்ற முயற்சிகள் போன்றவற்றையும் எதிர் நோக்குவதாகவும் கூறினார்.

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்ட 3 வது வாக்கெடுப்பிற்கு முன்னதாக இது பற்றி ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமான பேச்சுவார்ததையொன்றை நடத்த வேண்டும் என்ற மற்றுமொரு தீர்மானமும் அக்கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 


இலங்கையின் வடக்கில் தொடரும் மோதல்கள்

 

இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் வெலிஓயா பிரதேசங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சனிக்கிழமை இடம்பெற்ற கடுமையான நேரடி மோதல்களில் குறைந்தது 60 விடுதலைப் புலிகளும் 6 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

வெலிஓயா பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க பகுதிகளில் இரண்டு இடங்களில் தாக்குதல் நடத்துவதற்கு முற்பட்ட இராணுவத்தின் முயற்சி தமது எதிர் தாக்குதலின் மூலம் முறியடிக்கப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மன்னார் மாவட்டத்தில் அடம்பனுக்குத் தெற்கில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னரங்க பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் இரவு வரையில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றதாகவும், இதில் 28 விடுதலைப் புலிகளும் 5 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது, இதில் 57 விடுதலைப் புலிகளும் 26 இராணுவத்தினரும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது,

மன்னார் பெரியதம்பனை பகுதியில் விடுதலைப் புலிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 20 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதுடன், 25 புலிகளும், 9 இராணுவத்தினரும் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது,

இதற்கிடையில் கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசனுக்கும் யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அவர்களுக்கும் இடையில் ஞாயிற்றுக்கிழமை காலை சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Posted in Eelam, Eezham, Islam, Kilinochi, LTTE, Mannar, Moslem, Moslems, Muslim, Muslims, Northeast, Sri lanka, Srilanka, Vavuniya, wavuniya | Leave a Comment »

Tamil Tiger chief says peace with Sri Lanka govt impossible – Air force bombs LTTE radio

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2007

Maaveerar Day – LTTE: Happy Birthday Prabhakaran & Heroes’ Day

விடுதலைப் புலிகளின் வானொலி நிலயம் தாக்கப்பட்டது-பலர் பலி

புலிகளின் ஒலிபரப்பு கோபுரங்கள்
சில மாதங்களுக்கு முன்னர் தாக்கப்பட்ட புலிகளின் ஒலிபரப்பு கோபுரங்கள்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனது வருடாந்திர மாவீர்கள் தின உரையை நிகழ்த்தவிருந்த நிலையில், அவர்களின் முக்கிய வானொலி நிலையத்தை இலங்கை அரசின் விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் என்றாலும் , அது பிரபாகரன் அவர்களின் உரை ஒலிபரப்பாவதை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இன்றைய தனது மாவீர் தின உரையில், இலங்கை அரசுடன் சமாதான வழிமுறைகள் சாத்தியமில்லை என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரன் அவர்கள் கூறியுள்ளார்.

இலங்கை அரசு இனப்படுகொலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர், சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு அளித்து வரும் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.


சர்வதேச சமூகத்தின் மீது பிரபாகரன் அதிருப்தி

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தமது அமைப்பின் மாவீரர் தின உரையின் போது, சர்வதேச சமூகத்தின் மீது தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

மாவீரர்களுக்கான அஞ்சலி மற்றும் தமது அமைப்பு முப்படையாக விரிந்து நிற்பது குறித்த பெருமிதம் ஆகியவற்றுடன் தனது உரையை ஆரம்பித்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர், அதில், சர்வதேச நாடுகள் மீதும் இலங்கைக்கு உதவும் இணைத்தலைமை நாடுகள் மீதும் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதுடன், மஹிந்த ராஜபக்ஷ அரசின் மீதும், தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மற்றும், இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை ஆராயும் அனைத்துக் கட்சிக் குழு ஆகியவற்றின் மீது தனது அவ நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப்புலிகள் பின்வாங்கியதை ஒரு தந்திரோபாய நடவடிக்கையாக விபரித்த பிரபாகரன் அவர்கள், அநுராதபுரம் விமானப்படைத்தளத்தின் மீதான தாக்குதல், இலங்கை இராணுவத்துக்கு கொடுக்கப்பட்ட ஒரு பெரிய அடி என்று வர்ணித்தார்.

ஆனாலும் இலங்கை அரசு தொடர்ந்தும் ஆதிக்க வெறியோடு செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், உலக கவனத்தை திசை திருப்பவே அரசு அனைத்துக் கட்சிக்குழுவை ஏற்படுத்தியுள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார்.

அதேவேளை, தமிழர் பிரச்சினையை நீதியான வகையில் தீர்த்து வைக்கும் அரசியல் நேர்மையும், உறுதிப்பாடும் எந்தவொரு தென்னிலங்கை அரசியல் கட்சியிடமும் கிடையாது என்றும் பிரபாகரன் தனது உரையில் குறிப்பிட்டார்.

கிழக்குத் திமோர் மற்றும் மொன்ரி நீக்ரோ ஆகிய நாடுகளில் பிரச்சினைகள் தீர சர்வதேச சமூகம் ஆதரவும் அனுசரணையும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரபாகரன், ஆயினும், தமது தேசியப் பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும், நடவடிக்கைகளும் திருப்தியாக இல்லை என்றும் கூறியுள்ளார்.

இலங்கை அரசின் போக்கை சர்வதேச நாடுகள் கண்டித்திருந்தால் தமிழ்ச்செல்வனின் மரணம் இடம்பெற்றிருக்காது என்று கூறிய பிரபாகரன், இணைத்தலைமை நாடுகளும் சமாதானத்துக்கான பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியா முன்னர் விட்ட தவறையே சர்வதேச நாடுகள் தற்போது விட்டு நிற்கின்றன என்றும் பிரபாகரன் குற்றம் சாட்டினார்.

தமது அமைப்பு இழந்துவிட்ட இறையாண்மைக்காகவும், சுதந்திர தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவும் போராடுவதாகக் கூறிய அவர், தமது மக்கள் அல்லல் பட்ட வேளைகளில் உலகம் கண்ணை மூடி நின்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.

ஆகவே உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமது போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் தனது உரையின் இறுதிப் பகுதியில் கேட்டுக்கொண்டுள்ளார்.


வட இலங்கை தாக்குதல்களில் 20 பேர் பலி

கிளெமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவிகள்
கிளெமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவிகள்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் மற்றும் விடுதலைப் புலிகளின் வானொலி நிலையத்தின் மீது, அரச படையினர் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதல் என்பவற்றில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் மாவீரர் தின வாரத்தின் இறுதி நாளாகிய இன்று அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முக்கியத்துவம் மிக்க தனது கொள்கை விளக்க உரையை ஆற்றுவதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதாக கிளிநொச்சி திருவையாறு பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் வானொலியாகிய புலிகளின் குரல் நிலையக் கட்டிடத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழி குண்டுத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் மீது தாக்குதல்

புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் 5 ஊழியர்களும், அந்த நிலையத்தின் அயலில் உள்ள வீடுகளில் இருந்ததாகக் கூறப்படும் மேலும் 4 பேருமே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மின்னஞ்சல் வழியாக அனுப்பியுள்ள செய்திக் குறிப்பொன்றில் தெரிவித்திருக்கின்றார். இறந்தவர்களில் ஒருவர் 14 வயது சிறுமி என்றும் இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலின் போது விமானப்படையினர் பத்துக்கும் மேற்பட்ட குண்டுகளை அடுத்தடுத்து வீசி வானொலி நிலையத்தைத் தரைமட்டமாக்கியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

புலிகளின் குரல் வானொலி நிலையம் அரச படைகளின் விமானக் குண்டுத் தாக்குதலில் பெரும் சேதமடைந்துள்ள போதிலும் அதன் ஒலிபரப்ப்பு வழமைபோல இடம்பெற்றது என்பதுடன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் உரையும் அந்த வானொலியில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒலிபரப்பாகியுள்ளது.

கிளெமோர் தாக்குதலில் 9 மாணவிகள் பலி

இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் ஐயங்கன்குளம் பாடசாலையைச் சேர்ந்த முதலுவி மாணவர்கள் பயணம் செய்த அம்புலன்ஸ் வண்டி மீது இன்று காலை 11.30 மணியளவில் நடத்தபட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கிளிநொச்சியில் இருந்து மேற்குத் திசையில் 25 கிலோ மீற்றர் தொலைவில் துணுக்காய் – கொக்காவில் வீதியில் மல்லாவி – ஐயங்கேணி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அரச படைகளின் ஆழ ஊடுருவும் அணியினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் 9 மாணவிகளும், அம்புலன்ஸ் வண்டியின் சாரதியும் மற்றும் ஒருவருமே பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இரண்டு மாணவிகள் காயமடைந்திருக்கின்றனர்.

இந்தத் தாக்குதலில் தமக்குத் தொடர்பில்லை என்று இராணுவத்தினர் மறுத்துள்ளனர்.


Posted in Air Force, Airforce, Arms, Attack, Bombs, Communications, dead, Eelam, Eezham, infrastructure, Kilinochi, Kosovo, LTTE, Military, mines, montenegró, Norway, Peace, Prabaharan, Prabakaran, Prabakharan, Radio, Sri lanka, Srilanka, Tigers, Timor, War, Weapons, World | Leave a Comment »

Nov 25: Srilanka Updates – Eezham, LTTE News

Posted by Snapjudge மேல் நவம்பர் 26, 2007

வடமத்திய மாகாணத்தில் புலிகள் 4 கிராமவாசிகளை சுட்டுக்கொன்றதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தகவல்

சம்பவ இடம்

இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் வில்பத்து சரணாலயத்தை அண்மித்த மாவிலாச்சிய என்ற கிராமப்பகுதியில் இன்று காலை 4 கிராமவாசிகளை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் விவசாயிகளான மூன்று ஆண்களும் ஒரு பெண்ணுமே கொல்லப்பட்டுள்ளதாக அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த இவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிரதேசத்தைச் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் அரச படையினர் ஈடுபட்டிருப்பதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

எனினும், இந்தச் சம்பவம் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து கருத்துக்கள் எதுவும் வெளியாகவில்லை.


மன்னார் பாடசாலையில் விடுதலைப் புலிகள் நடத்தியதாக இராணுவத்தினர் குற்றம்சாட்டும் மோர்டார் தாக்குதலில் 7 பேர் காயம்

 

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தின் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள மல்லவராயன் கட்டையடம்பன் பாடசாலை மீது இன்று திங்கட்கிழமை பிற்பகல் விடுதலைப் புலிகள் மோர்டார் தாக்குதல் நடத்தியதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் 2 ஆசிரியைகளும், 5 மாணவ மாணவியரும் காயமடைந்துள்ளதாகவும் அது தெரிவித்திருக்கின்றது.

ஆனால் இதனை விடுதலைப் புலிகள் மறுத்துள்ளதுடன், குறிப்பிட்ட பகுதியில் இன்று தாங்கள் எந்தத் தாக்குதல்களையும் நடத்தவில்லை என்றும், இந்தத் தாக்குதலுக்கும் தமக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார்கள்.

மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில் விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய புதுக்குடியிருப்பு மற்றம் கிளிநொச்சியின் மேற்குப் பிரதேசம் என்பவற்றில் அடையாளம் காணப்பட்ட புலிகளின் மறைவிடங்கள் மீது இன்று திங்கட்கிழமை மாலை விமானப்படையினர் தர்ககுதல் நடத்தி சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள தகவலில், கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, யாழ் குடாநாட்டின் விடுதலைப் புலிகள் பிரதேசமாகிய இயக்கச்சி ஆகிய இடங்களில் இன்று காலையிலும் மாலையிலும் அரசின் மிக் 27 ரக தாக்குதல் விமானங்கள் குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் மக்கள் குடியிருப்புக்களே சேதமடைந்துள்ளதாகவும், சிவிலியன் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் கூறியிருக்கின்றனர்.

இன்று மாலை, புதுக்குடியிருப்பு நகரை அண்மித்த மக்கள் குடியிருப்புக்கள் மீது 2 குண்டுகளையும், புதுக்குடியிருப்பு 2 ஆம் வட்டாரப் பகுதியை வட்டமிட்டு 10 குண்டுகளையும் இந்தத் தாக்குதல் விமானங்கள் வீசியதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

புதுக்குடியிருப்பு பகுதியில் 4 வீடுகள் முற்றாக அழிந்துள்ளதாகவும், மேலும் 7 வீடுகளும், அப்பகுதியில் உள்ள கத்தோலிக்க கன்னியர் மடமும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. குண்டுத் தாக்குதலின்போது பொதுமக்கள் பாதுகாப்பைத் தேடிக் கொண்டதனால் அவர்களுக்கு சேதம் ஏற்படவில்லை.

இதற்கிடையில், மன்னார் இராணுவ முன்னரங்கப் பகுதிகளாகிய நாவற்குளம், குறிசுட்டகுளம், உயிலங்குளம் வடக்கு ஆகிய பகுதிகளில் இன்றும் நேற்றும் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற மோதல்களில் 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


Posted in Eelam, Eezham, Jaffna, Kilinochi, LTTE, Mannaar, Mannar, MIG27, Sri lanka, Srilanka | Leave a Comment »

Dinamani Editorial on Eezham – Sri Lanka Situation

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

மற்றொரு முயற்சி

இலங்கையில் மீண்டும் லேசான நம்பிக்கைக் கீற்று தென்படுகிறது. அண்மைக்காலத்தில் நிகழ்ந்து வரும் ரத்தக்களரி ஓய்வதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

இலங்கையில் அரசுப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஜூலை 22 லிருந்து செப்டம்பர் 26 வரை நடந்த சண்டையில் 200க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் இறந்துள்ளனர். இது, இலங்கைத் தீவில் மனிதாபிமானத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரும் சோதனையை வெளிப்படுத்துகிறது என்று அங்கு போர் நிறுத்தக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நார்வே தலைமையிலான கண்காணிப்புக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள பாசனக் கால்வாயை மூடியதால் ஆத்திரமடைந்த இலங்கை ராணுவம் கடும் தாக்குதல் தொடுத்தது. புலிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். அதே சமயம், திரிகோணமலை மாவட்டத்தில் ஏற்கெனவே புலிகள் வசம் இருந்த பகுதியை ராணுவம் கைப்பற்றியதால் சண்டை தொடர்ந்தது. இதன் மூலம் இரு தரப்பினருமே சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரலிலிருந்து அவ்வப்போது நடைபெறும் மோதல்களால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளைக் காலி செய்து விட்டு, பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்று விட்டனர். இது நாட்டின் கிழக்கு வடக்குப் பகுதிகளில் புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய நெடுஞ்சாலை ஒன்று கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டுள்ளதால் நாட்டின் இதர பகுதிகளிலிருந்து யாழ். நகரும், யாழ்ப்பாண தீபகற்பப் பகுதியும் ஏறக்குறைய துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளன. உணவுப்பொருள், மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் படிப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

யாழ். நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல், இலங்கை செலாவணிப்படி ரூ. 500க்கு உயர்ந்து விட்டது. 10,000 பேர் கொழும்பு வழியாக திரிகோணமலை செல்ல அரசிடம் விண்ணப்பித்துள்ளனர். மேலும் நிதி நிறுவனங்களிலிருந்து பணம் எடுக்க அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதால் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள வன்னி பகுதியில் பெரும்பாலான பொருளாதார, உற்பத்தி நடவடிக்கைகள் முடங்கியுள்ளன என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2002 ல் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட சண்டை நிறுத்த உடன்பாடு அர்த்தமில்லாததாகி விட்டது. எனவே, இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை முலம் தீர்வு காண இரு தரப்பினரும் முன்வர வேண்டும் என்று கண்காணிப்புக் குழுவினர் யோசனை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அமைதிப் பேச்சைத் தொடங்குவது குறித்து விவாதிக்க நார்வே தூதர் ஜான் ஹான்சன் பாயர் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வருகிறார். அமைதிப் பேச்சைத் தொடங்க புலிகள் தலைவர் பிரபாகரன் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் முதலில் அரசுத் தலைவர்களையும் பின்னர் கிளிநொச்சி சென்று பிரபாகரனையும் சந்தித்துப்பேச திட்டமிட்டுள்ளார். இந்த ஆண்டு ஜனவரியில் பிரபாகரனை நார்வே தூதர் சோல்ஹைம் சந்தித்துப் பேசினார். இதையடுத்து வன்முறை ஓய்ந்து அமைதிப் பேச்சு தொடங்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இரு தரப்பினரும் சந்தித்துப் பேச கடந்த 7 மாதங்களாக மேற்கொண்ட முயற்சி ஏதாவது ஒரு காரணத்தால் தள்ளிப்போடப்பட்டது. இப்போது அக்டோபர் 2 வது வாரத்துக்குள் பேச்சு தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை இரு தரப்பினரும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதார நிலை, மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான அடிப்படையை உருவாக்க வேண்டும்.

Posted in Dinamani, Editorial, Eezham, Ilanagai, Kilinochi, LTTE, Negotiation, Norway, Peace, Situation, Sri lanka, Tamil, Triconamalee, War | Leave a Comment »