லால்குடி ஜெயராமன்: என்றும் ஒளிரும் நாதச் சுடர்!
நேர்காணல்} தொகுப்பு: எஸ்.சிவகுமார்
வயலினை அவரது வில் தொட்ட கணத்தில் நம்மை தன்மறதி ஆட்கொள்கிறது. நாதமண்டலத்தின் அமுததாரை, மனித மனம் இதுவரை அறியாத இளைப்பாறுதலை அளிக்கிறது. வாழ்வின் தொலையாத துயரங்கள், துன்பங்கள் யாவும் அடங்கிக் கிடக்கும் ஆனந்தபோதை அது. இறைமையினது இருப்பின் சாட்சியம் அவரது இசை. இந்த மேதை வாழும் நாளில், நாட்டில் நாமும் வாழ்கிறோம் என்று பெருமிதம் கொள்ள வைக்கிற இணையற்ற கலைஞன் லால்குடி ஜெயராமன். இவருக்கு அறிமுகம் எழுதுவது அசட்டுத்தனம். ஒரு மகாகலைஞனது வாழ்வின் சுவடுகளை அவர் கடந்து வந்த பாதையை அவரே சுருங்கச் சொல்லும் ஒரு நேர்காணல் இது. இனி லால்குடி….
லால்குடியில் கரண்ட் இல்லாத காலம் அது. இருள் விலகாத அதிகாலை. குளிரில் சலனமற்று உறங்கிக் கொண்டிருக்கும் எங்கள் தெரு. தெருக் கடைசியில் எங்கள் வீடு. அந்த பிரம்ம முகூர்த்தத்தில் அப்பா என்னை எழுப்பி சாதகத்துக்கு உட்கார வைப்பார். குளிருக்கு இதமான வெதுவெதுப்பான கூடத்தில் ஓர் அகல் விளக்கை ஏற்றி வைப்பார் அம்மா. அகலின் முத்துச் சுடரில், கூடம் வர்ணிக்க இயலாத தூய்மையும் அழகுமாக ஒளிரும். என் வீடு கடைசி வீடல்லவா?… வீட்டைச் சுற்றி வாழையும் வயலுமாக விரிந்த பெரும் வெளி. அந்தப் பெரு வெளியின் மோனம், வீட்டையும் தெருவையும் புலனாகாத போர்வைபோலப் போர்த்தியிருக்கும். கரிச்சானின் தனிக் கூவல் மெüனத்தைச் செதுக்கும் அதிகாலைப் பேரமைதி. இப்படி அற்புதமாகத் துவங்கும் என் அதிகாலைச் சங்கீத சாதகம். என் வாசிப்பைக் கேட்டபடியே அப்பா சற்று தள்ளி படுத்துக் கொண்டிருப்பார். வயலினின் நாதம் துல்லியமாக எழுந்து வீட்டின் சுவர்களைத் தாண்டி தெருவிலும் ஒலிக்கும். என் தெருக்காரர்களும் கேட்பார்கள். 3 மணிநேரம் தன் நினைவின்றி சங்கீத அமுதத்தில் லயித்துக் கிடப்பேன். சுமார் ஆறரை மணிக்கு என் சாதகம் ஓயும். அப்புறம்தான் காபி இத்யாதிகளெல்லாம். லால்குடியில் என் இளம் வயது இசைக் கல்வியின் ஆரம்ப நாட்கள் அவை. இப்போது நினைத்துப் பார்த்தாலே ஆனந்தமாக இருக்கிறது.
எங்கள் குடும்பமே சங்கீத பரம்பரை என்பதால் எனக்கும் சங்கீதத்தில் இப்படிப்பட்ட ஆழ்ந்த ஈடுபாடு இருந்ததில் ஆச்சரியமில்லை.
இந்த மனோலயமும் ஈடுபாடும்தான் என்னை அன்று எல்லாவகையான சங்கீதவித்வான்களை நோக்கியும் கவர்ந்திழுத்தது. நான் சற்று வளர்ந்து ஊரும் சற்று வளர்ந்த காலம் அது. ஊரிலுள்ள பார்க்கில் ஒரு ரேடியோ. அந்த ரேடியோவில்தான் அருமையான கச்சேரிகளைக் கேட்பேன். கச்சேரி நேரம் தெரிந்து அங்கே போய் தயாராக நின்று கொண்டே இருப்பேன். கச்சேரி ஆரம்பித்து வித்வான் பாடுவதை ஆழ்ந்த கவனத்தோடு லயித்துக் கேட்பேன். கச்சேரி முடிந்ததுதான் தாமதம். ஒரே ஓட்டமாக வீட்டுக்கு வருவேன்.
உடனே வயலினை எடுத்து வைத்துக் கொண்டு புதிதாகக் கேட்டவற்றை அப்படியே வாசித்துப் பார்ப்பேன். இப்படிக் கேட்டவற்றிலுள்ள நல்லவற்றையெல்லாம் தேடித் தேடி சேகரித்து அப்படியே ஒரு டேப் ரிகார்டர் போல மனத்தில் பதித்துக் கொள்வேன். அப்படி நான் கேட்ட சங்கீத மேதைகளில் பிஸ்மில்லாகானை என்னால் மறக்கமுடியாது. அவரது வாசிப்பு என்னை அத்தனை தூரம் பாதித்துள்ளது. நான் கேட்ட வித்வான்களின் நல்ல அம்சங்களை கிரகித்துக் கொண்டதும் தீவிரமான சாதகமும்தான் என்னை உயர்த்தின. என் அப்பா பாதி ராத்திரியில் திடீரென்று ஓர் ஐடியா வந்து என்னைத் தூக்கத்திலிருந்து எழுப்பி உட்கார வைத்து வாசிக்க வைத்து போதித்ததும் உண்டு.
பள்ளி சென்று படித்த படிப்பு என்பது கொஞ்சம்தான். சங்கீதம்தான் வாழ்க்கை என்று தீர்மானமாகி விட்ட பிறகு அதில் பயிற்சி எடுப்பதற்குத்தான் நேரம் இருந்தது. பள்ளியில் படிக்க வேண்டிய படிப்பையெல்லாம் வீட்டில்தான் படித்தேன். பள்ளியில் படிக்க வைக்காததற்கு இன்னொரு காரணமும் சொல்ல வேண்டும். என் தந்தை லால்குடி கோபாலய்யருக்கு நான் ஒரே பிள்ளை. மற்ற மூவரும் பெண்கள். ஆகவே அப்பாவுக்கு இயல்பாகவே என் மீது கூடுதலாகப் பாசம் இருந்தது. அப்போது நான் பள்ளிக்கூடத்துக்குப் போய் வந்து கொண்டிருந்தேன். ஒரு தடவை பள்ளிக்கூடத்துக்குப் போகும்போது வழியில் ஒரு குளத்தில் அப்பா குளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு கரையில் போய் நின்றேன். அப்பா தண்ணீரில் முழுகிவிட்டுத் தலையை வெளியே நீட்டினார். அப்போது அவர் நான் கரையில் நிற்பதைப் பார்த்துவிட்டார். பள்ளிக்கூடம் போகிற சின்னக் குழந்தை குளக்கரையில் வந்து நிற்பது பிராண ஆபத்தல்லவா என்று தோன்றிவிட்டது. குளத்துக்கிட்ட உனக்கென்னடா வேலை என்று கேட்டு எழுந்து வந்து என்னை அடித்தார். அதோடு என் பள்ளிக்கூட வாழ்க்கை முடிந்தது.
அதேசமயம் குழந்தைகளுக்கே உரிய விளையாட்டுப் பருவத்தை முற்றிலுமாக நான் இழக்கவில்லை. பெரும்பாலும் சின்ன வயசின் நினைவுகளெல்லாம் என் தாத்தா வாளாடி ராதாகிருஷ்ணையரின் ஊரான வாளாடியிலும், லால்குடியிலுமாகச் சுற்றி வருகிறது. அந்த நாட்களில் கதைகள் படிப்பதில் நிறைய ஆர்வம் உண்டு. கல்கியின் நாவல்களையெல்லாம் ஆர்வத்துடன் வாசித்திருக்கிறேன். பின்னாளில் நான் வாசித்த, எனக்கு மிகவும் பிடித்த நாவல் மோகமுள். அதன் ஆசிரியர் ஜானகிராமன் சங்கீதத்தின் ஆத்மானுபவத்தில் மூழ்கி அதை எழுதியிருக்கிறார். வெகுகாலம் கழித்து அவரைச் சந்தித்தேன். மதுரை மணி அய்யரின்கச்சேரி தில்லி ஆல் இண்டியா ரேடியோவில் நடந்த போது நான் பக்கவாத்தியம் வாசித்தேன். அந்த ரேடியோ புரோகிராமின் போது எங்களை அறிமுகம் செய்து அறிவித்தார் அங்கு உயர் அதிகாரியாக இருந்த தி.ஜா. அப்போது என்னைப் பற்றி என் வாசிப்பைப் பற்றி அறிமுகமாக மிக உயர்வாகச் சொன்னார். அப்புறம்தான் அவருடன் நேரே பேசிப் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளி என்பது எனக்குப் புலப்பட்டது.
என் இளமைப் பருவத்தை நான் கழித்த லால்குடி- வாளாடி இடையே கிட்டத்தட்ட நாலரை மைல். இரண்டிலும் என் காலத்துக்கு முன்பு திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர் தொடங்கி எத்தனையோ மகாவித்வான்கள் வந்து கச்சேரி செய்திருக்கிறார்கள். கச்சேரிகளெல்லாம் அக்கால வழக்கப்படி இரவில் நீண்ட நேரம் நடக்குமாம்.
பிற்காலத்தில் ஊரில் நானும் பல பெரிய வித்வான்களின் கச்சேரிகளைக் கேட்டேன். அந்த நாளில் பக்கத்து ஊரில் உள்ள வித்வான்களெல்லாம் வெள்ளிக்கிழமை மற்றும் கிருத்திகைகளில் எங்கள் வீட்டுக்கு வந்து பாடுவார்கள். சேலம் தேசிகன், பூவாளூர் வெங்கட்ராமன் உள்பட பலவித்வான்கள் இப்படி வந்து பாடியிருக்கிறார்கள். அப்படி அவர்கள் வந்து பாடியபோதெல்லாம் அவர்களுக்கு நான் பக்கவாத்தியம் வாசித்திருக்கிறேன்.
பின்னாளில் சென்னைக்கு வந்த பிறகும் கூட வெள்ளிக் கிழமைகளிலும், கிருத்திகைகளிலும் சந்தியாகாலத்தில் அப்பாவும் நானுமாக வாசிப்போம். அன்றைக்கு வீட்டில் பெரிய பெரிய இழைக்கோலங்கள் போடுவாள் என் மனைவி. நான் உதிரிப்பூவாக வாங்கி வைத்திருப்பேன். பூக்களை அப்பாவும் நானும் தொடுப்போம். தொடுத்த மாலைகளை ஸ்வாமி படங்களுக்குப் போட்டு விளக்கேற்றி வைப்பாள் என் மனைவி. பிறகு அப்பாவும் நானும் வயலினுடன் உட்காருவோம். குக்கர் விசிலடிக்கிற சப்தம், குழந்தை அழுகிற சப்தமெல்லாம் இல்லாமல் வீட்டில் ஆழ்ந்த அமைதி நிலவும். ஒன்பது மணி வரை அப்படியே லயித்துப்போய் வாசிப்போம். அப்புறம் தீபாராதனை. இப்படி என் சங்கீதத்தில் நாதானுபவத்தோடு தெய்வானுபவமும் கலந்தது.
என் ஊரில் நான் கேட்ட கச்சேரிகள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேனல்லவா? ஜி.என்.பாலசுப்பிரமணியத்தின் கச்சேரியை நான் முதலில் கேட்டது எங்கள் ஊர் கோவிலில்தான். ராஜமாணிக்கம் பிள்ளை வயலின், பழனி சுப்புடு மிருதங்கத்துடன் நடந்த கச்சேரி அது. அந்தக் கச்சேரியில்தான் முதல்முதலில் மைக்கையே நான் பார்த்தேன்.
அந்த நாளில் திருச்சி நூற்றுக்கால் மண்டபத்தில் பெரிய பெரிய வித்வான்களின் கச்சேரிகளெல்லாம் நடக்கும். கச்சேரி நடப்பதற்கு முதல் நாளே ரயில் ஏறிப் போய்விடுவேன். ரயில் சார்ஜ் எட்டணா என்று நினைவு. ஜி.என்.பி. பாட்டு என்றால் கூட்டமான கூட்டம் இருக்கும். முன்னாடியே போய் முன்னால் உட்கார்ந்துகொண்டுவிடுவேன். எப்ப வருவார் என்று பார்த்துக் கொண்டே இருப்பேன். கச்சேரி கேட்ட கையோடு லால்குடிக்குப் போவேன். ஊர் போனதும் முதல்நாள் கச்சேரியில் கேட்டதையெல்லாம் அப்படியே ரெகார்ட் பண்ணியது போல வாசிப்பேன்.
இப்படியெல்லாம் என் வாசிப்பை அபிவிருத்தி செய்து கொண்டேன். பெரியவித்வான்களைக் கேட்பதும் வாசிப்பதுமாக இருந்தாலும் இந்த வித்வான்களுக்கு நான் பிற்காலத்தில் பக்க வாத்தியம் வாசிப்பேன் என்று அன்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஒரு தடவை ஆந்திரத்துக்கு பாலக்காடு மணிஐயருடன் ஒரு கச்சேரிக்குப் போய்க் கொண்டிருந்த போது அவரிடமே இதைச் சொன்னேன். உங்களுடன் கூட சமமாக உட்கார்ந்து வாசிப்பேன் என்று நான் அந்த நாளில் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை என்று நான் சொன்னபோது மணிஐயர் சந்தோஷமாகச் சிரித்தார்.
பிஸ்மில்லா கான்
அன்று சங்கீத உலகில் சீனியராக விளங்கிய அரியக்குடி ராமானுஜய்யங்காருக்கு முதல் முதலில் வாசித்தது தேவகோட்டையில் நடந்த ஒரு கச்சேரியில். அது 1946 ஆம் வருஷம். தேவகோட்டையில் நடந்த பல்லடம் சஞ்சீவராவுக்கு பக்கவாத்தியம் வாசிக்க நான் போயிருந்தேன். அந்த நிகழ்ச்சியில் நடக்க இருந்த மற்றொரு கச்சேரியில் ஐயங்கார்வாளுக்கு பக்க வாத்தியம் வாசிக்க இருந்தவர் பாப்பா வெங்கட்ராமையர். திடீரென்று அவரிடமிருந்து “உடம்பு சரியாக இல்லை…மன்னிக்கவும்’ என்று தந்தி வந்துவிட்டது. கடைசியில் பாப்பாவின் இடத்தில் நான் உட்கார்ந்து ஐயங்கார்வாளுக்கு வாசித்து அவரது பாராட்டையும் பெற்றேன்.
ஜி.என்.சாருக்கு முன்பு அவரது பிரதான சீடராக விளங்கிய டி.ஆர். பாலு எனக்கு அறிமுகமானார். நான் அவருக்கு வாசித்திருக்கிறேன். என் வாசிப்பைக் கேட்டுவிட்டு அவர் “”ரொம்ப நன்றாக வாசிக்கிறீர்களே…. நீங்கள் அவசியம் எங்கள் அண்ணாவுக்கு வாசிக்க வேண்டும்” என்றார். அந்த நாளில் அவர்களெல்லாம் தங்கள் குருவை அண்ணா என்றுதான் சொல்வார்கள். இது தெரியாமல் “”ஓ….உங்க அண்ணா கூட பாடுவாரா?” என்று வியப்பாக நான் கேட்டபோது பாலு சிரித்தார். “”என்ன சார் என் குருநாதர் ஜி.என்.பி.யைச் சொல்கிறேன்… புரியலையா” என்றார். அப்புறம்தான் அது எனக்குப் புரிந்தது.
பின்னாளில் ஜி.என்.சாருடன் அறிமுகம் ஏற்பட்டதும் அவருக்கு முதல் கச்சேரி வாசித்ததும் சுவாரஸ்யமான விஷயம். அது 1949 என்று நினைக்கிறேன். மியூசிக் அகாதெமியில் ஒரு மத்தியானக் கச்சேரி. கே.வி.நாராயணசாமிக்கு நான் வயலின். அன்று கச்சேரி வந்திருந்தார் ஜி.என்.பி. நான் அவரைக் கவனிக்கவில்லை. யாரிந்தப் பையன் ரொம்ப நன்றாக வாசிக்கிறானே….என்று அவர் கவனித்திருக்கிறார். கச்சேரி முடிந்ததும் என் முதுகை யாரோ தட்டினார்கள். திரும்பிப் பார்க்கிறேன். சுந்தர ரூபன் ஜி.என்.பி. ஆஜானுபாகுவாக சென்ட் மணக்க அருகில் நிற்கிறார். பேஷ்,பேஷ்…ரொம்ப நன்றாக வாசித்தாய்…என்று தட்டிக் கொடுத்தார். நான் பேச்சற்று நின்று கொண்டிருக்கிறேன். நீ எனக்கு வாசிக்கிறாயா…..உனக்கு பத்தாம் தேதி செüகரியப்படுமா? என்று கேட்கிறார்.
“”இவருக்கு வாசிக்கவா என்னைக் கூப்பிடுகிறார்” என்ற வியப்பில் வாயடைத்து நிற்கிறேன். ஏதோ எனக்கு வரிசையாகக் கச்சேரி இருப்பது போல “செüகரியப்படுமா’ என்கிறாரே… எனக்கு கச்சேரியே இல்லையே…என்று நினைக்கிறேன். அப்போது அவர் என்னிடம் ஒரு பத்து ரூபாய் நோட்டைத் தந்து “”தப்பாய் நினைக்காதே. இப்போது என்னிடம் பத்து ரூபாய்தான் இருக்கு. இப்போ இதை கச்சேரிக்கு அட்வான்ஸôக வெச்சுக்கோ”என்றார். அந்த மேதை எவ்வளவு பெரிய மனிதர் பாருங்கள். பிற்காலத்தில் மல்லேஸ்வரம் சபாவின் சீதாராமனுக்கு அவர் எழுதிய கடிதத்தில் எழுதிய வரிகள் எனக்கு இன்னும் நினைவிருக்கின்றன. “வென் ஜெயராமன் ஈஸ் தேர்….ஒய் கோ ஃபார் அனதர் அகாம்பனிஸ்ட்….வி ஆர் இன்செபரபிள்’ என்று எழுதினார். என்னால் மறக்கமுடியாதது இது. அவர் கூட வாசிக்கும் போது பரிபூரண சுதந்திரம் கொடுப்பார். அவருடன் வாசித்த ஒரு கச்சேரியில் எனக்கு பெரிய கிளாப்ஸ் கிடைத்தபோது “”தி ப்ளஷர் ஈஸ் மைன்” என்று சொன்ன மா மனிதர் அவர்.
ஜி.என்.பியுடனான என் முதல் சந்திப்பு நடந்த சம்பவத்தை எனக்கு மீண்டும் நினைவு படுத்தும் நிகழ்ச்சி ஒன்று சில ஆண்டுகள் முன்பு நடந்தது. நான் திருவண்ணாமலை ரமணாசிரமத்துக்குப் போயிருந்தேன். அங்கு சாப்பிடும் போது ஒருவர் வந்து என்னிடம் பேசினார். அந்தநாளில் ஜி.என்.பி. எனக்குப் பத்து ரூபாய் கொடுத்த நிகழ்ச்சியை நினைவு படுத்தினார். உங்களிடம் ஜி.என்.பி. பத்து ரூபாய் கொடுத்த போது நான் அங்கு இருந்தேன். அன்று சென்னையில் பாதாம் அல்வாவுக்குப் பிரபலமாக விளங்கிய கோயம்புத்தூர் கிருஷ்ணையர் கடையில் அல்வா வாங்க என்னிடம் ஜி.என்.பி பணம் தந்தார். அல்வா வாங்கியது போக மிச்சம் பத்து ரூபாய் இருந்தது. அதை நான் அவரிடம் கொடுத்தேன். அந்த ரூபாயைத்தான் உங்களுக்கு அவர் அட்வான்ஸôகத் தந்தார் என்று அவர் நினைவு படுத்தினார். எத்தனையோ வருஷம் கழித்து அன்றைய சம்பவத்துக்கு சாட்சியமாக இருந்தவர் என் முன் நிற்கிறார்? ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.
அந்தக் காலத்தில் வித்வான்களெல்லாம் காபி, ரவா தோசை, அல்வா எல்லாம் சாப்பிட என்று தங்களுக்குப் பிடித்தமான ஒரு ஹோட்டலைத் தேடிப் போய்ச் சாப்பிடுவார்கள். அன்று அவர்களது சாப்பாட்டு ரசனை மட்டும்மல்ல….வாழ்க்கை ரசனை, நட்பு, ஆத்மார்த்தம் எல்லாமே வித்தியாசமானது. இன்றைய நிலைக்கு நேர் மாறானது. இன்று உலகமே வெறும் பிஸினெஸ் மயமாகப் போய்விட்டதே.
ஜி.என்.பி.க்கு வாசிப்பதற்குமுன் நான் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மதுரை மணி, ஆலத்தூர் பிரதர்ஸ் எல்லாருக்கும் வாசித்திருந்தேன். ரொம்ப சின்ன வயதிலேயே சேலம் தேசிகனோடு பம்பாய்க்குக் கச்சேரிக்காகச் சென்றேன். என்னைப் பார்த்துவிட்டு கச்சேரி ஏற்பாடு செய்தவர்கள் பயந்து போய் தேசிகனிடம் பேசினார்கள். இவ்வளவு சின்னப் பையனை அழைச்சிண்டு வந்திருக்கிறீர்களே….இவன் என்ன வாசிப்பான்? இங்கே இருக்கிற ஜனங்களெல்லாம் பொல்லாதவர்கள்….வேண்டாம் சார் விஷப் பரீட்சை! என்றார்கள். தேசிகன் சிரித்துக் கொண்டே சாயங்காலம் கச்சேரிக்கு அப்புறம் சொல்லுங்கள்….என்று சொல்லிவிட்டார். அதுபோலவே கச்சேரி முடிந்ததும் கச்சேரி ஏற்பாடு செய்தவர்கள் வந்து நான் சொன்னது தப்பு என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்.
சின்னவனாக இருந்த காலத்தில் நான் ரொம்ப நாள் வரைக்கும் குடுமி, கடுக்கன், உருத்ராட்சமுடன்தான் இருந்தேன். ஜி.என்.பி.சார்தான் என் ரோம சாம்ராஜ்ய வீழ்ச்சிக்குக் காரணமானவர். அவர்தான் குடுமியை எடுத்துக் கிராப் வைத்துக் கொண்டால் எவ்வளவு செüகரியம் என விளக்கி என் கல்யாணத்துக்கு முன்பாகவே குடுமியை எடுக்க வைத்தவர்.
குடுமி போன பிறகும் காதில் போட்டிருந்த வைரக் கடுக்கன் இருந்தது. அதை 1963 ம் வருஷம் ஒரு ரயில்வே கம்பார்ட்மென்ட் பாத்ரூமில் தொலைத்தேன். அத்தோடு கடுக்கனும் போயிற்று.
ஜி.என்.பி.க்கு முன்னாலேயே ஆலத்தூர் பிரதர்ஸýக்கு வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். பொதுவாக பல்லவி வாசிக்கும் போது வயலினுக்கு சான்ஸ் கொடுப்பதில்லை. ஆனால் அன்று நான் ஆலத்தூர் கச்சேரியில் அவர்கள் பல்லவி பாடி திரிகாலம் பண்ணிவிட்டவுடன் நான் வில்லைப் போட்டேன். ஆலத்தூர் சுப்பைய்யர் உடனே என்னைப் பார்த்து சிரித்து, “”அட…இது கூட உனக்குத் தெரியுமா” என்பது போல பேஷ்…பேஷ்…என்றார்.
பின்னால் ஆலத்தூர் சுப்பையருக்கு “சங்கீத கலாநிதி’ கொடுத்த வருஷம். அந்தக் கச்சேரியில் புதுப்பல்லவி பாட பாப்பா வெங்கட்ராமையர் வீட்டில் ரிகர்சல் நடந்தது. ஆனால் பல்லவி ரிகர்சலுக்கு என்னைக் கூப்பிடவில்லை. அங்கு வந்திருந்த மணி ஐயர், “” என்ன ஜெயராமனுக்குச் சொல்லலியா” என்று கேட்டார். உடனே சுப்பையர், “”அதெல்லாம் வேண்டாம். ஜெயராமன் தன்னால வாசிப்பான்.” என்றாராம். மறுநாள் கச்சேரியில் அவர் பாடிய சங்கீர்ணஜாதியில், அவர் பாடிய பல்லவியை நான் நிர்வாகம் செய்தது கண்டு ரொம்ப சந்தோஷப்பட்டார். வேர்த்து உடம்போடு ஒட்டிக் கொண்ட சட்டையோடு என்னைத் தழுவி சிங்கக் குட்டி என்று பாராட்டியது நினைவுக்கு வருகிறது.
அந்த நாளில் ஆலத்தூர் பிரதர்úஸôடு பல கச்சேரிகளில் வாசித்தேன். ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ காரணமாக என்னை அவர்கள் பக்க வாத்தியத்துக்குப் போட்டுக் கொள்ளாமல் இருந்தார்கள். அந்த நாளில் என் கூடப் பிறக்காத சகோதரன் போல இருந்தவர் பழனி சுப்பிரமணிய பிள்ளை. அவருக்கு இது தெரிந்தபோது நேராக ஆலத்தூரிடம் பேசினார். “”ஏன்யா….இந்தப் பிள்ளை மாதிரி யாருய்யா உங்களுக்கு வாசிச்சிருக்காங்க. பல்லவி முதக் கொண்டு நிர்வாகம் பண்ணுதே. பாட்டுக்கு போஷணையா வாசிக்குதே….இந்தத் தம்பியை விட்டுட்டீங்கன்னா உங்க கச்சேரி கெட்டுப் போகுமேய்யா….” என்றார். பழனி அண்ணாவுக்கு என் மீது அத்தனை அன்பு. அவர் சொன்ன பிறகு மறுபடியும் ஆலத்தூருடன் வாசிக்க ஆரம்பித்தேன்.
மற்றொரு மறக்கமுடியாத வித்வான் மதுரை சோமு. அவருக்கும் நிறைய வாசித்திருக்கிறேன். சோமு பாட ஆரம்பித்துவிட்டால் நேரம் காலம் பார்க்கமாட்டார். 3 மணி நேரம் ஆனதும் அவருக்கு புதிய தெம்பு பிறந்துவிடும். அப்புறம் விடியற்காலையில்தான் முடிப்பார். நான் கூட அவரிடம் வேடிக்கையாக உங்கள் கச்சேரிக்கு ஒரு செட் பக்கவாத்தியம் போதாது. ரெண்டு செட் வெச்சாத்தான் கட்டுப்படியாகும் என்பேன்.
என் முதல் சோலோ கச்சேரி நடந்தது ஜார்ஜ் டவுனில் நடந்த ஓர் ஐயப்ப சபை நிகழ்ச்சியில். அதன் பிறகு எத்தனையோ ரசிகர்கள் எனக்கு. லதாமங்கேஷ்கர், எம்.ஜி.ஆர். ஆகியோர் இவர்களில் மறக்க முடியாதவர்கள். நானோ சினிமா பார்க்காதவன். ஒரு தடவை நடிகர் பாலையா அவர் வீட்டுக் கல்யாணத்துக்கு மதுரை மணி கச்சேரியை ஏற்பாடு செய்துவிட்டு பக்கவாத்தியத்துக்கு என்னை ஏற்பாடு செய்ய வீட்டுக்கு வந்தார். வீட்டு முன்பு பாலையா…பாலையா என்றபடி கூட்டம். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பாலையாவாவது லையாவாவது….கூட்டம் போடாதீர்கள் போங்கள் என்றேன். அப்புறம்தான் பாலையா சினிமா நடிகர்; அவரைப் பார்க்கவே இத்தனைக் கூட்டம் என்ற விஷயம் புரிந்தது. பாலையா என் பரம ரசிகர். நல்ல சங்கீத ஞானம் உள்ளவர். எம்.ஜி.ஆரும் அப்படித்தான். நல்ல ஞானஸ்தர். எனக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றில் அவர் எழுதியிருந்தது இன்னும் நினைவிருக்கிறது. “”உங்களது பல்லாயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்” என்று எழுதியிருந்தார். அந்த அடக்கம், பண்பு என்னால் மறக்கமுடியாதது. அந்த நாளின் பெரிய வயலின் வித்வானாகிய திருவாலங்காடு சுந்தரேசய்யருக்கு என் வாசிப்பில் ரொம்ப ஆசை. முன்னால் உட்கார்ந்து கேட்பார். நான் சின்னப் பையனல்லவா…செல்லமாக அவர் என் காதுகளை முறுக்குவது இன்றும் நினைவுக்கு வருகிறது.
சங்கீதம் எனக்கு அருமையான ரசிகர்களையும் நண்பர்களையும் பெற்றுத் தந்தது. ஒரு தடவை என் மைத்துனருடன் கல்கத்தாவில் உள்ள ஒரு தியேட்டரில் சத்யஜித்ராயின் புகழ்பெற்ற காஞ்சன்ஜங்கா படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் படத்தின் கலை நுட்பத்தில் சொக்கிப்போய் என் மைத்துனரிடம் “”சத்யஜித்ராய் எப்படிப்பட்ட மேதை பார்த்தாயா?” என்று வியந்து சொன்னேன். பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.
“”நீங்கள் மட்டுமென்ன சாதாரணமா…நீங்களும் மேதை இல்லையா?”
கல்கத்தா தியேட்டரின் இருட்டில் ஒரு தமிழ்க் குரல். அதுவும் என்னை மேதை என்று அழைக்கும் குரல். ஆச்சரியத்துடன் யார் என்று திரும்பிப் பார்த்தேன். பின்னால் இருந்தவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அவர்தான் பிரபல வாய்பாட்டு விதூஷி அனந்தலட்சுமியின் கணவர் சடகோபன் என்று தெரிந்தது. எனக்கு ஒரு புதிய நண்பர் கிடைத்தார்.
இத்தனை ரசிகர்களை, பாராட்டுகளை, புகழைப் பெற்றதற்கு அனைத்துக்கும் வித்து எது என்று நினைத்துப் பார்க்கிறேன். லால்குடியின் அதிகாலை வேளையும், அகல் விளக்கு ஒளிரும் கூடமும் என் அருகே படுத்திருந்தவாறு என் வாசிப்பை ஆழ்ந்து கவனிக்கும் அப்பாவும்தான் நினைவுக்கு வருகிறார்கள். அப்பா ஏற்றி வைத்தது வெறும் அகல் சுடரல்ல….என் இதயத்தில் என்றும் ஒளிரும் நாதச் சுடர்.
நேர்காணல்} தொகுப்பு: எஸ்.சிவகுமார்