Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Females’ Category

Soundaram Ramachandran, Dr. Rajammal Devadas, Sigappi Aachi, Veerammal, Veena Artist Dhanammal, Dr S Dharmambal

Posted by Snapjudge மேல் மார்ச் 27, 2008

Thiruvengimalai Saravanan

இந்த வார சாதனை மங்கை ஒரு வீரமங்கை. வீரம் என்றதும் வாள் சண்டை, கத்திச் சண்டை, போர் என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள். இந்த மங்கை சங்கீதத்தில் வீரத்தையும் தீரத்தையும் காட்டிய மங்கை.

இந்த சம்பவத்தைப் பாருங்கள். ஒருமுறை ஒரு நாதஸ்வர கச்சேரி நடந்துகொண்டிருந்தது. வாசித்துக் கொண்டிருந்தவர் நாதஸ்வர மாமேதை திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. மிகப் பெரிய இசை மேதைகளெல்லாம் முன்வரிசையில் அமர்ந்து நாதஸ்வர இன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். வீணை தனம்மாளும் அமர்ந்திருக்கிறார். ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரத்திலிருந்து ‘தர்பார்’ ராகம் தவமாய் வந்து கொண்டிருந்தது. அதில் லேசாக ‘நாயகி’ ராகமும் கலந்துவிட்டது. சட்டென்று எழுந்துவிட்டார் வீணை தனம்மாள். தர்பாரில் எப்படி நாயகியைக் கலப்பது என்று அவருக்கு கோபம். எல்லோருக்கும்

அதிர்ச்சி. ராஜரத்தினம் பிள்ளைக்கு விஷயம் புரிந்துவிட்டது. ‘தர்பாரில் நாயகிக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்கக் கூடாதா?’ என்று சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு சமாளித்தார். பிறகு தனம்மாளுக்காக சுத்தமான தர்பாரை வாசித்தார். இது வீணை தனம்மாளின் கோபத்துக்கு ஓர் உதாரணம். அவரது கோபம் எப்போதும் சங்கீதத்தின் அடிப்படையில் வருவது. கர்நாடக சங்கீதத்தின் மேல் அத்தனை காதல். பாசம். சங்கீதத்துக்கு எந்தவித

சங்கடமும் வந்துவிடக்கூடாது.

இவரது கச்சேரிக்குச் செல்பவர்கள் எப்போதும் சற்று கவனத்துடன் இருப்பார்கள். அரங்கில் சின்ன பேச்சு சத்தம் வந்தால்கூட தனம்மாளுக்குப் பிடிக்காது. வாசிப்பதை நிறுத்திவிடுவார். அரங்கில் சங்கீதம் மட்டுமே

கேட்க வேண்டும் என்பது அவர் விருப்பம். இத்தனை கட்டுப்பாடுகள் இருந்தாலும் அவரது இசையைக் கேட்க கூட்டம் அலைமோதும். காரணம் அவரிடமிருந்த இசைக்கலை.

வீணை தனம்மாள் பிறந்தது 1868_ல். ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் அவரது பெயரை மிகுந்த மரியாதையுடன்தான் கர்நாடக சங்கீத மேதைகள் உச்சரிப்பார்கள்.

இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்த தனம்மாளுக்கு சிறு வயதிலேயே இசைமீது ஆர்வம் வந்துவிட்டது. அதற்குக் காரணம் அவரது குடும்பம். இவரது பாட்டி காமாட்சி அந்தக் காலத்தில் சிறந்த வாய்ப்பாட்டு வித்தகி. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஷ்யாமா சாஸ்திரிகளின் சிஷ்யை. இவரது பெண் வழிப் பேத்திதான் தனம்மாள். இவரது தாயார் சுந்தரம்மாளும் நல்ல இசைக்கலைஞர்.

இசைக்குடும்பத்தில் பிறந்துவிட்டதால் ரத்தத்திலேயே இசை ஊறியிருந்தது. என்றாலும் அன்றைய காலத்தில் பெண்கள் இசைத்துறைக்கு வருவது என்பது மிகவும் சிரமமான காரியம். வீட்டைவிட்டே பெண்கள் வெளியே வரக்கூடாது என்றிருந்த சமயத்தில், வீணை தனம்மாளுக்கு வீணை மீது ஆர்வம் பிறந்தது. ஆனால் வீட்டில் தாயாரும், பாட்டியும் வாய்ப்பாட்டுதான் சொல்லிக் கொடுத்தார்கள். அதனால் மிகச்சிறு வயதிலேயே அருமையாகப் பாடுவார் தனம்மாள்.

இந்த வாய்ப்பாட்டே அவருக்கு ஒரு வாய்ப்பை பெற்றுத்தந்தது.

வீணை தனம்மாளின் தாயார், மாணிக்க முதலியார் என்ற பெரிய செல்வந்தர் வீட்டில் பூஜைப் பாத்திரங்களை கழுவிக் கொடுக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தார். தாயுடன் தனம்மாளும் அவரது வீட்டுக்குச் செல்வ துண்டு. ஒருமுறை அங்கே தனம்மாள் பாட, மாணிக்க முதலியாருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. தனம்மாளின் தாயாருக்கு சம்பளத்தை ஏற்றிக்கொடுத்தார். இந்தப் பணத்தைக் கொண்டு தனம்மாள் வீணை பயில ஆரம்பித்தார்.

வீணை தனம்மாளின் முதல் கச்சேரி ஏழு வயதில் நடந்தது என்றால் மிக ஆச்சரியமாக இருக்கிறது. சகோதரி ரூபாவதியுடன் தனம்மாள் வாய்ப்பாட்டு பாட, வயலின் இசைத்தது தம்பி நாராயணசாமி. இந்த சிறுசுகளின் கச்சேரி மெல்ல பிரபலமடையத் துவங்கியது. தனம்மாளின் திறமை வெளிஉலகுக்கு தெரிய ஆரம்பித்தது.

அந்தக் காலத்தில் மயிலை சவுரியம்மாள்தான் வீணை வாசிப்பில் மிகப் பிரபலம். அவரைப் போல வரவேண்டும் என்பதுதான் தனம்மாளின் லட்சியம். அதற்காக வீணைக் கலையை ஒரு தவம் போலவே கற்றார். சவுரியம்மாளின் சீடரான பாலகிருஷ்ணனிடம் வீணை வாசிப்பின் நுணுக்கங்களை கற்றறிந்தார்.

சங்கீதம் பாடுவதில் இளம் வயதிலேயே நிறைய புதுமைகள் செய்யத் துவங்கினார் வீணை தனம்மாள். தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருவருட்பா என்று அனைத்து பாடல்களையும் மேடையில் சீராகப் பாடி சங்கீத ரசிகர்களின் மனம் கவர்ந்தார். எட்டயபுரம் குமார எட்டேந்திரரின் சாகித்யங்களைப் பாடியதில் அவருடைய புகழ் மேலும் பரவியது.

வீணை தனம்மாளின் மிகப் பெரிய புதுமை அவரே பாடி, வீணை வாசித்தது. பொதுவாக கர்நாடக சங்கீத மேடைகளில் பாடுபவர் ஒருவராகவும் வீணை வாசிப்பவர் வேறொருவராகவும்தான் இருப்பார்கள். ஆனால் தனம்மாள் இந்த இரண்டு கலைகளிலும் வித்தியாசமாக இருந்ததால் பாடிக்கொண்டே வீணை வாசிப்பார். இரண்டிலுமே அவரது இசை மேதாவிலாசம் வெளிப்படும். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் பயணித்து இசைக் கச்சேரிகள் நிகழ்த்தினார். இவரது கச்சேரிகள் அனைத்திலும் கட்டுப்பாடுகள் நிறைய இருக்கும். யாரும் பேசக்கூடாது, ‘இந்தப் பாடல் வேண்டும்’ என்று துண்டுச்சீட்டு கொடுப்பது, கை தட்டுவது, ‘பேஷ்’ என்று சொல்வது போன்ற பல சங்கதிகளுக்கு அங்கே தடை. இசை ஒன்றே அங்கே ஆட்சி செய்யவேண்டும்.

1916_ல் பரோடாவில் நடந்த இந்திய இசை மாநாட்டில் கச்சேரி செய்ததும்; 1935_ம் ஆண்டு காங்கிரஸ் இல்லத்தில் பத்தாயிரம் பேர் சபையில் கச்சேரி செய்ததும் இவரது வாழ்க்கையில் திருப்புமுனைகள். கொலம்பியா நிறுவனம்தான் அன்றைய இசைக்கலைஞர்களின் இசைத் தட்டுகளை வெளியிட்டு வந்தது. ஆனால் ஒரு சமூகத்து இசைக்கலைஞர்களை மட்டும் முன்னிலைப்படுத்திக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் வீணை தனம்மாளின் எழுச்சியைக் கண்டு, தவிர்க்க இயலாமல் அவரது இசைத்தட்டுகளையும் வெளியிடத் துவங்கியது.

தனக்குப் பிறகு தனது இசை நின்றுவிடக் கூடாது என்பதற்காக தனது வாரிசுகளுக்கும் இசை அறிவை போதித்தார் தனம்மாள். ராஜலட்சுமி, லட்சுமிரத்தினம் என்ற அவரது மூத்த மகள்கள் சிறந்த பாடகிகளாக உருவானார்கள். ஜெயம்மாள், காமாட்சி என்ற அடுத்த இரண்டு பெண்களையும் ‘இரண்டாவது தனம்மாக்கள்’ என்று இசையுலகத்தினர் அழைத்தார்கள். இவர்களில் ஜெயம்மாளின் மகள் பாலசரஸ்வதி பிற்காலத்தில் மிகப் பெரிய நாட்டிய மேதையாக உருவானார். தனம்மாளின் இரண்டு மகன்களில் ரங்கநாதன் மிருதங்கத்திலும், விஸ்வநாதன் புல்லாங்குழலிலும் கெட்டிக்காரர்கள்.

வீணையிலும் வாய்ப்பாட்டிலும் இசை ரசிகர்களுக்கு சந்தோஷப் பரவசத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த தனம்மாளின் வாழ்க்கை அத்தனை சந்தோஷமாக அமையவில்லை. பெரிய குடும்பம். சம்பாதிக்கும் பணம் முழுவதும் குடும்பச் செலவுக்கே சரியாக இருந்தது. தனம்மாளுக்கு நிரந்தர பணக்கஷ்டம்தான். உடல் தளர்ந்து போன காலத்தில் உறவினர்கள் எல்லோரும் தனம்மாளைக் கைவிட்டார்கள். அப்போதும் கக்சேரிகள் செய்தார். இசை ஆர்வத்தால் ஹிந்துஸ்தானி சங்கீதத்தை அந்தக் கஷ்டமான சூழலிலும் கற்றார். பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டு போக, தனம்மாளின் வீடு ஏலத்தில் போனது. தனது இறுதிக் காலத்தை பேத்தி பாலசரஸ்வதியுடன் கழித்தார்.

1938_ம் வருடம் தனது அறு பதாவது வயதில் தனம்மாள் காலமானார். கர்நாடக இசையுலகம் தனது பேரரசிகளில் ஒருவரை இழந்தது.

ஆனால் அவரது இசை அவரை மறக்கமுடியாத மங்கையாக்கியிருக்கிறது..

நன்றி: டாக்டர் பக்கிரிசாமிபாரதி.

அரசு இசைக்கல்லூரி. சென்னை_28.

பைம்பொழில்மீரானின் ‘தலை சிறந்த தமிழச்சிகள்’ ‘தோழமை’ வெளியீடு. சென்னை_78.


தமிழ் கூறும் நல்லு லகம் அதிகம் அறி யாத பெயர். ஆனால், அறிய வேண்டிய பெயர். வீரம்மாள் என்ற பெயருக்கு ஏற்றபடி வாழ்க்கையை வீரத்துடன் எதிர்கொண்டவர்.

பள்ளியில் படிக் கும்போது விடு முறைக் காலங்களில் கூலி வேலை செய்த, குப்பை சுமந்த, களை எடுத்த, சித்தாள் வேலை செய்த ஒரு பெண், தன் வாழ்க்கையில் செய்த அற்புதமான காரியங்களைத் திரும்பிப் பார்க்கையில் பிரமிப்பாய் இருக்கிறது.

திருச்சி வானொலியில் மிகப் பிரபலமான நிலையக் கலைஞர், ஆதரவற்ற பெண்களுக்காக திருச்சியில் ‘அன்னை ஆசிரமத்தைத் துவக்கி யவர், பெண்கள் தங்கிப் படிக்க ‘நாகம்மை இல்லத்தை நிறுவியவர்… இப்படி அவரது பிற்கால வாழ்க்கையில் சாதித்தவை பல.

சரி, யார் இந்த வீரம்மாள்?

திருச்சி மாவட்டம். திருப்பராய்த்துறையில் தாழ்த்தப்பட்ட ஆதி திராவிட சமுதாயத்தில் ஒரு மண் குடிசையில் பிறந்தவர் தான் அந்த வீரம்மாள். வேம்பு _ பெரியக்காள் என்ற தம்பதியரின் ஏழாவது குழந்தை. 1924_ம் ஆண்டு மே மாதம்

16_ம் நாள் பிறந்தவர். அப்பா வேம்பு சாதாரண விவசாயத் தொழிலாளி.

வீரம்மாளுக்கு வீட்டில் வைத்த பெயர் வீராயி. குழந்தைக்கு ஏழு வயதாகியும் பள்ளிக்கு அனுப்ப யாரும் முயற்சிக்கவில்லை. அண்ணன்மார்களும் அண்ணிமார் களும் ‘பெண்குழந்தை எதற்குப் படிக்கவேண்டும்’ என்று அலட்சியப்படுத்திவிட்டார்கள். அந்தத்தெரு பையன்கள் எல்லோரும் பக்கத்து ஊரில் இருந்த ஆரம்பப்பள்ளிக்குச் செல்வதைக் கண்டு அவர்களோடு வீரம்மாளும் வீட்டார் யாருக்கும் தெரியாமல் போய்விட்டார். 52 பிள்ளைகள் படித்த அந்த ஆரம்பப் பள்ளியில் வீரம்மாள் மட்டுமே பெண் குழந்தை. அதற்காக வீரம்மாள் வெட்கப்படவோ பயப்படவோ இல்லை.

வீரம்மாளின் கல்வி ஆர்வம் வெளியில் தெரிந்ததும் பெற்றோரும் தடை சொல்லவில்லை. அந்தக் காலத்தில் படிப்பில் ஆர்வமும் பெற்றோரின் ஆதரவும் இருந்தால் மட்டும் கல்வி கிடைத்துவிடாது. அதற்கு வேறு சில தடைகளும் அந்தச் சமயத்தில் உண்டு. இந்தத் தடையைப் பாருங்கள்.

ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்புக்காக நடுநிலைப் பள்ளியில் சேர்க்க வீராயியை அவரது தந்தை அழைத்துச் சென்றார். ‘‘இது பிரா மணக் குழந்தைகளும், சாதி இந்துக் குழந்தைகளும் படிக்கும் பள்ளி. இங்கு ஹரிஜனக் குழந்தையான வீராயியைச் சேர்த்தால், தனியாகத்தான் உட்கார வைக்க முடியும். குழந்தைகள் அவளை கல்லால் அடித்து விரட்டினாலும் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.’’ என்று கிராம முன்சீப்பும், தலைமை ஆசிரியரும் சொல்லிவிட்டார்கள். அதனால் அருகில் உள்ள ஜீயபுரத்தில் சேர்ந்து. தினமும் 8 கி.மீ. நடந்தே போய் படிக்க வேண்டியதாகிவிட்டது.

பள்ளியில் இப்படியரு பிரச்சினை என்றால் வீட்டில் ஒரு சிக்கல். வீட்டு வேலைகளைச் செய்தால்தான் பள்ளிக்கு அனுப்ப முடியும் என்று வீட்டில் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள், அதையும் செய்ய வேண்டிய கட்டாயம் அந்தப் பிஞ்சுக் குழந்தை வீராயிக்கு நேர்ந்தது.

ஆறாம் வகுப்பு சரித்திரப் பாடத்தில் மகாவீரர், புத்தர் ஆகியோர் பற்றிய பாடம் ஆசிரியரால் நடத்தப் பெற்றது. அதில் வரும் 1.பொய் சொல்லக் கூடாது. 2. திருடக் கூடாது. 3. உயிர் வதை செய்யக்கூடாது 4. மது அருந்தக் கூடாது. 5. ஒழுக்கம் தவறி நடக்கக் கூடாது என்ற புத்தரின் பஞ்சசீலத்தை வீரம்மாள் பள்ளிப் பருவத்திலேயே கற்று மனதில் பதித்துக் கொண்டார். அவர் இறக்கும்வரை அதைக் கடைப்பிடித்தும் வந்தார். புலால் உண்ணக்கூடாது என்று அன்றே முடிவு செய்து கடைசிவரை அதில் உறுதியாக இருந்தார். தினசரி பள்ளிக்கு நீண்டதூரம் நடந்து செல்லும்போது பாடங்களை மனப்பாடம் செய்து கொண்டே போவார். காலுக்குச் செருப்புகூட கிடையாது. எட்டாம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்பு வரை வீரம்மாள் ஊரிலிருந்து பன்னிரண்டு கி.மீ. தூரம் உள்ள குளித்தலைக்கு ரயில்மூலம் சென்று படித்து வந்தார்.

பள்ளியில் படிக்கும்போதே விடுமுறை நாட்களிலும், கோடை விடுமுறையிலும் கூலி வேலைக்குச் செல்வார். மண் சுமப்பது, வயலுக்கு குப்பை சுமப்பது, வாழைக்கு களை வெட்டுவது, சித்தாள் வேலை என்று செய்து காசு சேர்த்துதான் தன் பள்ளிப் படிப்பை அவரால் தொடர முடிந்தது.

பள்ளி இறுதி வகுப்பு படித்து முடிந்தவுடன் வீரம்மாளுக்குத் திருமணம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இலங்கையைச் சேர்ந்தவரை மணம் முடித்தார்கள். திருமணத் திற்குப் பின்பும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பை படிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால், அவர் கணவர் இதற்கு அனுமதிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் வீரம்மாள் ஆறு மாத கர்ப்பிணி ஆனார். வீட்டில் பல தொல்லைகளுக்கு இடையேயும் தொடர்ந்து படித்தார். ரயில்வே ஸ்டேஷனுக்கு இரண்டு கி.மீ. நடந்து வந்து படிப்பது அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் பயிற்சிப் பள்ளி ஹாஸ்டலிலேயே தங்கிப் படிக்கத் துவங்கினார். இந்தச் சமயத்தில் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று ஒரு நாள் திருச்சி வானொலி நிலையத்திலிருந்து அழைப்பு அவருக்கு வந்தது. ‘யுத்தத்தில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் பேசச் சொல்லி யிருந்தார்கள். வானொலி நிலையத்தில் பத்து நிமிடம் பேசிவிட்டு வந்தார். பிறகு இரண்டுமுறை வெவ்வேறு தலைப்புகளில் ‘பெண் உலகம்’ நிகழ்ச்சியில் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.

1945 மே மாதம் 10_ம் தேதி அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. இதே நேரம் திருச்சி வானொலி நிலையத்தில் நிலையக் கலைஞர் பணியும் கிடைத்தது. வீரம்மாள் அந்த வேலையில் சேர்ந்துகொண்டார். தொடர்ந்து, இரண்டா வதாக ஆண் குழந்தையும் பிறந்தது. அப்போதுதான் தன் கணவருக்கு ஏற்கெனவே ஒரு இலங்கைப் பெண்னோடு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அதனால், அவர் கணவரை விட்டுப் பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை உருவானது.

வானொலியில் ஈரோடு, கோவை, ராமநாதபுரம், திருநெல்வேலி, சென்னை ஆகிய பகுதி மக்கள் பேசும் பாணியிலே பேசி நாடகங்களில் நடித்தார். வீரம்மாளின் பல குரல் திறமை இங்கு உதவியது. பல வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பி வந்த கிராம சமுதாயப் பகுதியான ‘ஆப்பக்கார அங்காயி’ என்ற ஒரு நிகழ்ச்சியில், வீராயி ஆப்பக்கார அங்காயி ஆக இருந்து ஆப்பக்கடைக்கு வரும் பலதரப்பட்ட மக்களுடன் பேசி, வானொலி ரசிகர்களை அசத்தினார்.

வானொலி நிலையக் கலைஞர் வேலைக்கு இடையிலும் தாழ்த் தப்பட்ட _ தீண்டப்படாத மக்கள் முன் னேற்றத்திற்காக கிராமம் கிராமமாய் சென்று சமூக சேவை புரிந்தார்.

அந்தக் காலகட்டத்தில் திராவிட இயக்கம் தமிழகத்தில் வேகமாய் பரவிக் கொண்டிருந்தது. வீரம்மாள் தந்தை பெரியாரின் கொள்கையில் பெரிதும் ஈர்க்கப்பட்டார். பெரியார் திருச்சிக்கு வரும் போதெல்லாம் அவர் தங்கி இருக்கும் வக்கீல் வீட்டிற்கு வீரம்மாளை வரும்படி சொல்லி அனுப்புவார். அவரும் தவறாமல் போய் சமூக சீர்திருத்தம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்துவிட்டு வருவார்.

பேச்சோடு மட்டும் தனது சமுதாயப் பணிகள் நின்றுவிடக் கூடாது என்று நினைத்த வீரம்மாள், கிராமப்புற ஏழை எளிய மாணவிகளுக்கு உதவ நினைத்தார்.

அப்போது கிராம ஆரம்பப் பள்ளிகளில் எங்கோ ஒன்றிரண்டு ஆதிதிராவிட பெண் குழந்தைகள்தான் படித்து வந்தார்கள். அவர்களுக்கும் ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிப்பு கிடையாது. காரணம், அந்தக் காலத்தில் ஏராளமான கிராமங்களில் உயர்நிலைப் பள்ளிகள் கிடையாது.

அதனால் திருச்சியில் தாழ்த்தப் பட்ட பெண்கள் தங்கியிருந்து உயர் நிலைப்பள்ளியில் படிக்க ஏதுவாக ஒரு விடுதி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டு, அதற்காக பல இடங்களில் ஆதரவு திரட்டினார். இப்படி உருவானதுதான் ‘நாகம்மையார் மாணவியர் விடுதி’. அத்துடன் அவரது சேவை நிற்க வில்லை.

திருச்சியில் ‘அன்னை ஆசிரம’த்தை நிறுவி ஆதரவற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவனை இழந்தவர்கள் என்று பலருக்கும் அடைக்கலம் கொடுத்த வேடந்தாங்கல் அவர். திருச்சியிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் ‘அன்னை’ என்றால், அது வீரம்மாள் தான் என்று போற்றும் அளவிற்கு சேவை புரிந்தவர். அதனால் தென்னகத்து அன்னை தெரஸா என்றே அழைக்கப்பட்டார்.

பலதரப்பட்ட பெண்களை ஒருங்கிணைத்து இன்று தமிழ் உலகம் பேசும் சரித்திரமாக மாறியிருப்பதுதான், அவர் உருவாக்கிய ‘தமிழ்நாடு பெண்கள் நலச்சங்கம்’. சின்னஞ்சிறிய திண்ணை ஒன்றில் மூதறிஞர் ராஜாஜியின் வாழ்த்துக்களுடன் பெருந்தலைவர் காமராஜரால் துவக்கி வைக்கப்பட்ட இந்தச் சங்கத்தின் தற்போதைய வயது அறுபதுக்கு மேல்.

கணவனை விட்டுப் பிரிந்த பின்னர் வெள்ளை ஆடை அணிய ஆரம்பித்தவர் கடைசிவரை, வெள்ளை ஆடையுடனேயே வாழ்ந்தார். சேவை மனப்பான்மைக்கு அந்த வெள்ளை உடை ஒரு குறியீடாக அமைந்தது.

2006_ல் வீரம்மாள் மறைந்தார். அவர் உருவாக்கிவிட்டுச் சென்றுள்ள பல நலப் பணிகள் இன்றைக்கும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சோகங்களும், சோதனைகளும், துன்பங்களும், போராட்டங்களும் நிறைந்தது வீரம்மாளின் வாழ்க்கை. இத்தகைய சோகங்களின் சோதனை களிலும் துவண்டு விடாது, மற்றவர்களின் வாழ்க்கையிலாவது அத்தகைய சோகங்கள், துயரங்கள் வராமல் பாடுபட்ட வீரம்மாள் உண்மையிலேயே வீர _ அம்மாதான்..


செல்வச் செழிப்பில் பிறந்தவர்கள் கடுமையான உழைப்பாளிகளாகவும் எளிமைவாதிகளாகவும் இருப்பது மிக அரிது. இந்த அரிதான குணங்களுடன் கல்வி சேவையும் ஆன்மிக சேவையும் கலந்தால்… அப்படியரு ஆச்சரியமான, அபூர்வமான குணங்களுடன் வாழ்ந்தவர்தான் சிகப்பி ஆச்சி. செட்டிநாட்டு அரசர் டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமியின் மனைவி.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் உண்டு என்பதை நாம் காலம் காலமாகக் கேட்டு வருகிறோம். ஆனால் கண்கூடாகப் பார்ப்பது டாக்டர் எம்.ஏ.எம். ராமசாமியின் வாழ்க்கையில்தான். அவரது ஒவ்வொரு வெற்றிகரமான செயலுக்குப் பின்பும் சற்று உற்று நோக்கினால் சிகப்பி ஆச்சியின் கைவண்ணம் இருக்கும்.

கைவண்ணம் என்று சொல்லும்போது இங்கே ஒரு சோகமான, அதேநேரம் தன்னம்பிக்கையான ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்.

சிகப்பி ஆச்சிக்கு இடதுகை பாதி செயலிழந்து விரல்கள் மூடியேதான் இருக்கும். அதேபோல் இடது கால் பலவீனமடைந்து சற்று விந்திவிந்திதான் நடப்பார். ஆனால் சாதாரணமாய் பார்ப்பவர்களுக்கு இது தெரியாது. இந்த சோகம் அவருக்கு பக்கவாத நோயால் ஏற்பட்டது. இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக அந்தக் குறைகளுடன்தான் அத்தனை காரியங்களையும் செய்திருக்கிறார் என்றால், அவர் மறக்க முடியாத மங்கைதானே?

சிகப்பி ஆச்சி பிறந்தது 1938_ம் வருடம். செட்டிநாட்டு பள்ளத்தூரில் இவரது குடும்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. ராணி மெய்யம்மையின் உடன்பிறந்த தம்பி உ.அ.உ.க.ராம.அருணாசலம்தான் சிகப்பி ஆச்சியின் தந்தை. மிக செல்வச் செழிப்பான குடும்பம். செல்வம் குவிந்திருந்தாலும் அந்தக் குடும்பத்தினர் அதிகம் தேடியது கல்விச் செல்வத்தை. பெண்களை பள்ளிக்கு அனுப்பத் தயங்கிய காலகட்டம் அது. ஆனால், நகரத்தார்கள் பொருட்செல்வத்தைத் தேடியது மட்டுமில்லாமல் எப்போதும் கல்விச் செல்வத்தையும் சேர்த்தே தேடினார்கள். சிகப்பி சென்னையிலுள்ள குட் ஷெப்பர்ட் கான்வென்ட்டில் பள்ளிக் கல்வியை முடித்து, பிறகு ராணிமேரி கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். இங்கே இன்னொரு முக்கிய விஷயம், பள்ளியிலும் கல்லூரியிலும் படிப்பில் சிகப்பி ஆச்சிதான் முதலிடம்.

சிகப்பி ஆச்சியின் முறைமாப்பிள்ளைதான் எம்.ஏ.எம்.ராமசாமி. சிறுவயதிலிருந்தே இருவரும் ஒன்றாய் விளையாடி வளர்ந்தவர்கள். இவர்களுக்குத் திருமணம் நடக்கும்போது எம்.ஏ.எம்.முக்கு இருபத்தொரு வயது. சிகப்பி ஆச்சிக்குப் பதினாறு. கல்லூரியில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தார். செட்டிநாட்டு அரசரின் குடும்பத்தில் மருமகளாய் அடியெடுத்து வைத்த பிறகும் தனது படிப்பைத் தொடர்ந்தார். இதற்கு அவரது கணவரும் அவரது குடும்பத்தாரும் நல்ல ஒத்துழைப்புத் தந்தார்கள்.

ராஜா வீட்டின் மருமகள் என்பது சாதாரண விஷயமல்ல. நிறைய குடும்பப் பொறுப்புகள் உண்டு. செட்டிநாட்டு அரசர் ராஜா சர் முத்தையா செட்டியாருக்கு இரண்டு மகன்கள். குமாரராஜா முத்தையா மூத்தவர். இவரது மனைவி குமார ராணி மீனா முத்தையா. எம்.ஏ.எம். ராமசாமி இளையவர். இவரது மனைவிதான் சிகப்பி ஆச்சி.

ஒரே வீட்டில் இரண்டு மருமகள்கள் இருந்தாலும் இருவருக்குள்ளும் எந்த சச்சரவோ சண்டையோ வந்தது கிடையாது. இருவரும் மிக ஒற்றுமையாக குடும்பக் காரியங்களைக் கவனித்தார்கள். அவர்களின் ஒற்றுமை செட்டிநாடு முழுவதும் பிரசித்தி பெற்றது.

குடும்பப் பொறுப்புகள் இருந்தாலும் சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் சிகப்பி ஆச்சி. பொதுவாய் ‘தாயைப்போல பிள்ளை’ என்றுதான் சொல்வார்கள். ஆனால், இங்கு மாமியாரைப் போல் மருமகள். மாமியார் ராணி மெய்யம்மைக்கு கல்வி சேவையில் ஆர்வம் அதிகம். ஏழை மக்களுக்குக் கல்வி கொடுக்கவேண்டும் என்பது அவர்களது தீராத ஆசை. அந்த சேவை மனப்பான்மை சிகப்பி ஆச்சிக்கும் வந்தது.

சென்னை அடையாறிலுள்ள ராணி மெய்யம்மை பள்ளி இவரது முயற்சியில் உருவானதுதான்.

1973_ம் வருடம் துவங்கப்பட்ட இந்தப் பள்ளியின் செயலாளராக தனது இறுதி மூச்சு வரை இருந்தார் சிகப்பி ஆச்சி. இந்தப் பள்ளியைத் தொடர்ந்து ஏழு பள்ளிகளையும் சென்னையில் துவக்கினார். இந்தப் பள்ளிகளில் கிட்டத்தட்ட பதினான்காயிரம் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிகளைத் துவக்கியதோடு அவரது பணி நின்றுவிடவில்லை. ஒவ்வொரு நாளும் அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று அன்றாடப் பணிகளைக் கவனிப்பார். பாரம்பரியமிக்க ஒரு குடும்பத்தையும் நிர்வகித்துக்கொண்டு பள்ளிகளைக் கவனித்துக் கொள்வது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. ஆனால் சிகப்பி ஆச்சிக்கு அது எளிதாய் வந்தது. காரணம் அவர் நேரத்தை மிகவும் திட்டமிட்டு பயன் படுத்துவதில் கெட்டிக்காரர்.

அதிகாலை ஐந்து மணிக்கு அவரது தினசரி வாழ்க்கை துவங்கும். இரவு படுக்கச் செல்லும் நேரம் பதினொன்று. ஆறு மணி நேரம்தான் தூக்கம். பல செல்வந்தர் பெண்களைப் போல் மதியம் உறங்குவது, தோழிகளுடன் அரட்டையடிப்பது போன்ற பழக்கங்கள் சிகப்பி ஆச்சிக்குக் கிடையாது. உழைப்பு, எளிமை இவைதான் அவர் அதிகம் நம்பிய இரண்டு விஷயங்கள்.

நேரத்தை உபயோகமாய் செலவழிப்பது போன்று இன்னொரு நல்ல பழக்கமும் சிகப்பி ஆச்சியிடம் இருந்தது. அது, டைரிக் குறிப்புகள் எழுதுவது. உறவினர்கள், நண்பர்கள், முக்கியமானவர்கள் பற்றிய அத்தனை விவரங்களையும் அதில் எழுதி வைத்திருப்பாராம். கிட்டத்தட்ட முப்பது டைரிகளில் இந்தக் குறிப்புகள் இருந்தனவாம். இந்த டைரிகள் மூலம் எந்த உறவினர், நண்பர் பற்றிய விவரங்களையும் சட்டென்று தெரிந்துகொள்ள இயலும்.

பள்ளிகளைத் துவக்கிய சிகப்பி ஆச்சி சமூகத்துக்குப் பயன்தரும் இன்னொரு காரியத்தையும் செய்தார். சென்னைக்குப் படிக்க வரும் பெண்கள் தங்க ஒரு பெண்கள் விடுதியையும் எத்திராஜ் சாலையில் முப்பது வருஷத்திற்கு முன்பு துவக்கினார். ராணி மெய்யம்மை ஹாஸ்டல் என்றழைக்கப்படும் அந்தப் பெண்கள் விடுதி, இன்றும் சென்னையில் மிகப் பிரபலமானது.

கல்விப் பணி ஒருபுறமிருக்க, ஆன்மிகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் சிகப்பி ஆச்சி. கணவர் எம்.ஏ.எம். ராமசாமி ஒவ்வொரு வருடமும் விரதமிருந்து சபரிமலைக்குச் சென்று வருவார். அதனால் சென்னையில் ஒரு ஐயப்பன் கோயிலைக் கட்டவேண்டும் என்று தீர்மானித்தார் சிகப்பி ஆச்சி. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அதன் விளைவுதான், ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள ஐயப்பன் கோயில். அதேபோல் சிதம்பரம் அண்ணாமலைபுரத்திலும் ஐயப்பன் கோயிலைக் கட்டினார்.

கல்விப் பணி, ஆன்மிகப் பணியைத் தொடர்ந்து சமூகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் சிகப்பி ஆச்சி. அவரும் குமாரராணி மீனாவும் இணைந்து சென்னைக்கு அருகே உள்ள நாவலூர் கிராமத்தைத் தத்தெடுத்து அந்தக் கிராமத்துக்கு வேண்டிய சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகளைச் செய்து கொடுத்தார்கள்.

சென்ற மாதம் கேளம் பாக்கத்தில் நூறு ஏக்கர் பரப் பளவில் ‘செட்டிநாடு ஹெல்த் சிட்டி’ என்ற ஒரு மருத்துவ நகரத்தின் திறப்புவிழா நடந்தது.

மருத்துவக் கல்லூரிகள், நர்சிங் பயிற்சிக் கல்லூரி, மருத்துவமனை, மருந்தியல் கல்லூரி என முழுக்க முழுக்க மருத்துவ வசதிகளைக் கொண்ட மருத்துவ நகரம் அது. இந்த நகரம் வருவதற்கு மிக முக்கியக் காரணமாயிருந்தவர் சிகப்பி ஆச்சி. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அந்தத் திட்டம் துவக்கப்படும்போது உயிரோடு இருந்தவர், அது முடிக்கப்படும்போது நம்முடன் இல்லை. சென்ற வருடம் சிகப்பி ஆச்சி காலமாகிவிட்டார்.

அவர் காலமாகிவிட்டாலும் அவர் உருவாக்கியவை காலம் காலமாக அவரது பெயரைச் சொல்லிக்கொண்டே இருக்கும்.றீ

மாமியார் மெச்சியவர்!

மாமியார் ராணி மெய்யம்மையார் வெளிநாட்டிற்குச் செல்லும் போதெல்லாம் கூடவே தனது சின்ன மருமகள் சிகப்பி ஆச்சியை அழைத்துச் செல்வது வழக்கம். மாமியாருக்கு உறுதுணையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அவருக்கு சிறந்த மொழி பெயர்ப்பாளராகவும் இருந்தார். ஆங்கில இலக்கியம் படித்ததால் மாமியாருக்கு அழகாக மொழி பெயர்த்துச் சொல்வது அவருக்கு எளிதாக இருந்தது. தங்கள் பள்ளியில் வேலை செய்த ஆசிரியர்கள் பணியில் ஓய்வு பெறும் நாளில் ஆச்சியே வீட்டிலிருந்து குறைந்தது பத்து வகையான பலகாரங்களைச் செய்துகொண்டு வந்து அனைவருக்கும் விருந்து படைப்பது இவருடைய வழக்கமாக இருந்தது. பெண்களுக்கென்று உருவான பள்ளிகளுக்கு தன் மாமியார் பெயரையும், ஆண்களுக்கென்று உருவாக்கிய பள்ளிகளில் தன் மாமனார் பெயரையும் சூட்டுவது இவரது வழக்கம்.

‘‘அய்த்தான் எனக்கு ஒண்ணுமில்ல!’’

சிகப்பி ஆச்சியைப் பற்றி அவரது கணவர் செட்டிநாட்டரசர் டாக்டர். எம்.ஏ.எம்.ராமசாமியிடம் கேட்டோம். ‘‘நாங்கள் கணவன் மனைவியாக 42 வருடங்கள் வாழ்ந்தோம். அதற்கு முன்னால் சிறுவயதிலிருந்தே எனக்கு நல்ல பழக்கம். ஒருமுறை நாங்கள் திருப்பதிக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தோம். வழக்கமாய் அதிகாலைப் பயணங்களின்போது கார் டிரைவர் குளித்துவிட்டுத்தான் வண்டி எடுப்பார். ஆனால் அன்று அவர் தூக்கக் கலக்கத்துடனே வண்டி ஓட்டியிருக்கிறார். திருப்பதி மலையில் ஏறும்போது ஒரு திருப்பத்தில் கார் தலைகீழா கவிழ்ந்து மலையில் உருளத் துவங்கியது. இரண்டாயிரம் அடி பள்ளம். எங்கள் புண்ணியம் கார் மரத்தில் சிக்கி அப்படியே தொங்கியது. எல்லோருக்கும் நல்ல காயம். சிகப்பிக்கு படுகாயம். மேலெல்லாம் ரத்தம். மெல்ல அவரை மேலே தூக்கினோம். என்மேல் உள்ள ரத்தத்தைப் பார்த்துவிட்டு என் ரத்தத்தைக் கழுவப் பார்த்தாங்க. நான் தடுத்து, ‘உனக்குத்தான் ரொம்ப காயம்’ என்றேன். அதற்கு சிகப்பி, ‘அய்த்தான் எனக்கு காயமில்லை. உங்களுக்கு இப்படியாகிவிட்டதே’ என்று சொல்லிக்கொண்டே மயங்கி விழுந்துவிட்டாங்க. ஒரு வாரம் சுயநினைவு இல்லாம இருந்தாங்க. என்னுடைய உலகமாய் இருந்தாங்க. இப்போது நான் தனி உலகமாய் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்’’ என்று சொல்லும்போது வார்த்தைகள் தடுமாறுகிறது. அது தடுமாற்றம் அல்ல மனைவி மேல் அவர் வைத்துள்ள பாசம்.


பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்களில் இரண்டு வகையினர் உண்டு. எல்லா வசதிகளும் இருந்து பொதுத் தொண்டில் ஈடுபடுவது ஒரு ரகம். எந்த வசதியும் இல்லாமலேயே பொதுப்பணிகளில் தங்களை முற்றிலுமாக ஈடுபடுத்திக்கொள்வது மற்றொரு ரகம்.

இதில் இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தவர் டாக்டர் தருமாம்பாள்.

பணம், பதவி எதுவுமே இல்லாமல் மக்களுக்குத் தொண்டு செய்யமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய வீரத்தமிழன்னைஅவர். தனது இறுதிக் காலம் வரை பொதுத் தொண்டிற்காக கடுமையாக உழைத்தவர். மனிதாபிமானத்தை மூலதனமாக வைத்து, எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காத புனிதமான தொண்டுள்ளம் அவருடையது. அதனால்தான் மறக்கமுடியாத மங்கையாக மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்திருக்கிறார் டாக்டர் தருமாம்பாள்.

தஞ்சை மாவட்டம் கருந்தட்டாங்குடிதான் இவரது சொந்த ஊர். அப்பா சாமிநாதன். அம்மா நாச்சியார். வேளாண் செட்டியார் வகுப்பைச் சேர்ந்த இவரது தந்தை சாமிநாதன் மிகப் பெரிய அளவில் துணி வியாபாரம் செய்தவர். கரந்தை தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்த உமாமகேஸ்வரன் பிள்ளை நண்பர். இவரது தாத்தா திவான் பேஷ்கராக இருந்தவர்.

இவருக்கு அம்மா அப்பா வைத்த பெயர் சரஸ்வதி. இவரது பூர்வீகம் கருந்தட்டாங்குடியாக இருந்தாலும், இவர் பிறந்தது திருவையாறு. ஆண்டு 1890. இவ்வூர் இறைவன் பெயர் அய்யாறப்பன். இறைவி அறம் வளர்த்தாள். இறைவியை தர்மசம்வர்த்தினி என்று பேச்சு வழக்கில் அழைப்பதுண்டு. அதைத்தான் பின்னர் தருமாம்பாள் என்று சுருக்கி அழைக்க ஆரம்பித்துவிட்டனர். அந்தப் பெயரே இவருக்கும் நிலைத்துவிட்டது. தருமாம்பாள் இளம்வயதிலேயே தனது பெற்றோரை இழந்துவிட்டதால், ‘லக்குமி’ என்ற பெண்தான் இவரை வளர்த்தார். பெற்றோரை இழந்ததால் அவர் பள்ளிக்குச் சென்று படிக்கும் வாய்ப்பையும் இழக்க நேரிட்டது. இருந்தாலும், தருமாம்பாள் சும்மா இருந்துவிடவில்லை. தானாகவே கல்வி கற்கத் தொடங்கினார். தமிழ் மீது இருந்த அளவுகடந்த பற்றின் காரணமாக வேட்கை சீவகாருண்யம் சுப்ரமணியம், திருநாவுக்கரசு முதலியார், பண்டித நாராயணி அம்மையார் ஆகியோரிடம் சென்று தமிழ் கற்றார். இன்னும் சில பண்டிதர்களைத் தேடிப்போய் தெலுங்கில் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார். ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் பேசும் திறனை வளர்த்துக்கொண்டார்.

நாடகத் தமிழ் மீது இவருக்கு இருந்த பற்றினால், அந்நாளில் நாடக நடிகராக இருந்த குடியேற்றம் முனுசாமி நாயுடுவைக் காதலித்து மணந்துகொண்டார். முனுசாமி நாயுடு ராஜபார்ட் வேஷம் போடுவதில் வல்லவர். கணவரோடு ஆரம்பத்தில் நாகப்பட்டினத்தில் வாழ்ந்தாலும் சென்னையில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டார்.

மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறவியிலேயே அவர் ரத்தத்தில் ஊறியிருந்தது. அதற்குப் பயன்படும் விதத்தில் அவர் சித்த மருத்துவத்தைக் கற்றுத் தேர்ந்தார்.

1930_களின் தொடக்கத்தில் சென்னையில் மருத்துவர்கள் மிகமிகக் குறைவு. வேப்பேரி கங்காதர தேவர், தியாகராய நகர் எஸ்.எஸ்.ஆனந்தன், சைதாப் பேட்டை தணிகாசல வைத்தியர், தங்கசாலை சி.த.ஆறுமுகம்பிள்ளை போன்ற ஒரு சில சித்த வைத்தியர்களே புகழ்பெற்ற மருத்துவர்களாக அறியப்பட்டனர். அந்த வரிசையில் பெத்துநாய்க்கன் பேட்டையில் புகழ்பெற்ற மருத்துவராக இருந்தவர்தான் டாக்டர் தருமாம்பாள். மருத்துவ சேவைதான் இவருக்கு மக்கள் தொடர்பை அதிகளவு ஏற்படுத்திக் கொடுத்தது.

தருமாம்பாள் மருத்துவத்தோடு நிற்காமல் இந்தி எதிர்ப்புப் போராட்டம், தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்கள் உயர்வு, விதவை மறுமணம், கலப்பு மணம், பெண் கல்வி என்று பல தரப்பட்ட பொதுத்தொண்டில் ஈடுபாட்டுடன் செயல்படத் தொடங்கினார். நோய்க்காக மட்டும் தேடி வராமல் பல பிரச்னைகளைத் தீர்ப்பதற்காகவும் இவரைத் தேடி பலர் வரத் தொடங்கினர். நேரடியாக அவரே தலையிட்டு பல பிரச்னைகளைத் தீர்த்து வைக்கத் தொடங்கினார். இதனால் அவரது புகழ் பரவத் தொடங்கியது.

தந்தை பெரியாரின் கருத்துக்களால் கவரப்பட்ட தருமாம்பாள் அவரைப் போலவே விதவைத் திருமணம், கலப்பு மணம் ஆகியவற்றைத் துணிச்சலாக நடத்தி வைத்தார். வேலை கேட்டு வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து, அவர்களுக்கு விதவைகளைத் திருமணம் செய்து வைத்தார். எந்த ஒரு பிரச்னை என்றாலும் தருமாம்பாளிடம் சென்றால் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்பி மக்கள் அவரைத் தேடி வரத் தொடங்கிவிட்டனர்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறைத்தண்டனை பெற்றார். இதில் பெண்கள் பலரும் கலந்துகொள்ள முன் உதாரணமாக இருந்ததே தருமாம்பாள்தான். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியோடு இணைந்து மக்கள் முன்னேற்றப் பணிக்காக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

தருமாம்பாளுக்கு இருந்த செல்வாக்கிற்கு அவர் எவ்வளவோ வசதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் பொருளாசை அற்றவராக இருந்தார். தமது வீட்டை மகளிர் சரணாலயமாகவே மாற்றியிருந்தார். கணவனால் கைவிடப்பட்ட பெண்களை மீண்டும் அவரவர் கணவர்களோடு சேர்ந்து வாழ வைத்திருக்கிறார். ஏராளமான பெண்களுக்குக் கலப்புத் திருமணம் செய்து வைத்தார். படிக்க வசதியற்ற பெண்கள் கல்வி பயில செல்வந்தர்களை உதவ வைத்திருக்கிறார். ஏழைப் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்தார். இப்படி அவரது தொண்டுப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

புகழின் உச்சியில் இருந்தவர்கள்கூட தருமாம்பாளின் அறிவுரையைக் கேட்டு நடக்கும் அளவிற்கு அவரது பண்பு வளர்ந்திருக்கிறது. அந்தக் காலத்தில் தியாகராஜ பாகவதர் பற்றி காதில் விழுந்த தவறான செய்திகளைக் கேள்விப்பட்டு, அவரை அழைத்து புகழுக்கும் உடலுக்கும் கேடு வராமல் நடந்து கொள்ளுமாறு அறிவுரை கூற, அவரும் அதன்படி மாறி நடந்தது பலரை வியப்பால் ஆழ்த்தியது.

1944_ல் ‘இந்து நேசன்’ பத்திரிகையை நடத்தி வந்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், பட்சிராஜா ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாகவதருக்கும், கலைவாணருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, அந்தமான் தீவில் தண்டனையைக் கழிக்க வேண்டும் என தீர்ப்பானது. கலைவாணரின் மனைவி டி.ஏ.மதுரம் செய்வதறியாது தருமாம்பாளை அணுகினார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து லண்டனில் உள்ள பிரிவியூ கவுன்சிலுக்குச் செல்ல முடிவு செய்யப்பட்டது. இது சாதாரண காரியமல்ல என்றாலும், டாக்டர் தருமாம்பாள் சென்னையில் உள்ள பலரை அணுகி பொருள் திரட்டி, அந்த வழக்கினை நடத்தி வெற்றியும் பெற்றார். அப்போது கலை உலகமே தருமாம்பாளை எழுந்து நின்று வணங்கியது.

தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும் தமிழ் அறிஞர்களுக்காகவும் தருமாம்பாள் பல வழிகளில் உதவியுள்ளார். கருந்தட்டான் குடியில் இருந்த தனது வீட்டை கரந்தை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார். 1940_க்கு முன்பு வரை தமிழ் ஆசிரியர்களுக்கு சமூகத்திலும் அரசியலிலும் ஒரு பெரிய மரியாதையே இல்லாமல்தான் இருந்தது. பள்ளி, கல்லூரிகளில் தமிழாசிரியர்கள் இரண்டாந்தரமாக ஒதுக்கப்பட்ட நிலை. ஊதியத்திலும் அவர்களுக்கு அந்த நிலை இருந்ததை எதிர்த்து பெரிய போராட்டமே நடத்தினார். பல கூட்டங்களில் பேசினார்.

‘‘தமிழாசிரியர் களுக்கு சம்பளம் கூட்டவில்லை என்றால், பெண்களை எல்லாம் ஒன்று கூட்டி, ‘இழவு வாரம்’ கொண்டாடுவோம்’’ என்று அரசுக்கே எச்சரிக்கை விடுத்தார். அப்போது கல்வி அமைச்சராக இருந்த அவினாசிலிங்கம் செட்டியார் தருமாம்பாளின் கோரிக்கையையும் போராட்டத்தின் நியாயத்தையும் உணர்ந்து ஏனைய பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையாக தமிழாசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க உத்தரவிட்டார். இது தருமாம்பாள் மூலம் தமிழுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.

தருமாம்பாள் திராவிட இயக்கங்களில் பங்கு கொண்டு அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். என்றாலும், பொதுத்தொண்டு என்று வரும்போது கட்சிக்கு அப்பாற்பட்டு நின்றே தொண்டு செய்ய விரும்பினார். பொதுப் பிரச்னைகளுக்காக மற்ற அரசியல் இயக்கங்களுடன் அனுசரணையாகவே சென்றார்.

இரண்டாம் தமிழிசை மாநாட்டிற்கு தருமாம்பாள் வரவேற்புக் குழு உறுப்பினராக இருந்து பணி ஆற்றினார். இன்று தமிழிசைப் பாடல்கள் மேடையில் முழங்குகிறது என்றால், அதில் அம்மையாரின் பங்கும் உண்டு. தன் வாழ்நாள் முழுவதும் தனக்காக வாழாமல், தனது உழைப்பு, சிந்தனை அனைத்தையும் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இசை, தமிழ் மக்கள் இவற்றுக்காகவே அர்ப்பணித்த தருமாம்பாளுக்கு 1951_ல் திரு.வி.க. தலைமையில் நடந்த மணி விழாவில் தமிழறிஞர் டாக்டர். அ. சிதம்பரநாதன் செட்டியார் ‘வீரத்தமிழன்னை’ என்ற பட்டத்தை வழங்கினார்.

வீரத் தமிழன்னை பட்டம் பெற்ற தருமாம்பாள்தான் ஈ.வெ. ராமசாமி நாயக்கருக்கு ‘பெரியார்’ என்ற பட்டத்தையும், தியாகராஜ பாகவதருக்கு ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டத்தையும், எம்.எம். தண்டபாணி தேசிகருக்கு ‘இசையரசு’ பட்டத்தையும் வழங்கினார்.

மக்கள் தொண்டு ஒன்றை மட்டுமே தன் இறுதி மூச்சுவரை கொண்டு போராடி வெற்றி கண்ட இந்த வீரமங்கையின் மூச்சு 1959_ம் ஆண்டு தனது 69ஆவது வயதில் நின்று போனது.

பெரும் பதவிகளை விரும்பாமல், பண வசதி ஏதுமின்றி அம்மையார் செய்த பல மக்கள் பணிகள் பதிவு செய்யப்படாமலேயே போய்விட்டன. அவற்றை வெளி உலகிற்குக் கொண்டு வருவது ஒன்றே அம்மையாருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய நன்றிக் கடனாக இருக்கும்..

நன்றி : க. திருநாவுக்கரசு, எழுதிய ‘திராவிடஇயக்க வேர்கள்’
நக்கீரன் பதிப்பகம், சென்னை_23.
பைம்பொழில் மீரானின்
‘‘தலை நிமிர்ந்த தமிழச்சிகள்’’ தோழமை வெளியீடு, சென்னை_78.


பிறந்தோம். படித்தோம். வளர்ந்தோம். வாழ்ந்தோம். என்று சிலர் வாழ்க்கை இருக்கும்.

ஆனால் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை அப்படியிருப்பதில்லை. அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் சரித்திரங்களாகி விடுகின்றன.

அப்படி ஒரு சரித்திரப் பெண்தான் டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ்.

எல்லோரும்தான் கல்லூரி சென்று பாடம் படிப்பார்கள். ஆனால், எத்தனைபேர் தான் படித்த பாடத்துக்காகவே ஒரு தனிப்பட்ட கல்லூரியைத் துவக்கியிருக்கிறார்கள்? அது ராஜம்மாள் ஒருவர்தான்.

கல்வி. இதுதான் ராஜம்மாளின் இலட்சியம், ஆர்வம், ஆசை, கனவு எல்லாம்.

ஒரு சின்ன சம்பவம். ராஜம்மாளுக்கு திருமணம் நடக்கிறது. அப்போது அவருக்கு வயது பதினெட்டு. பள்ளி இறுதி வகுப்பு படித்திருந்தார். திருமணமானதும் தன் கணவரிடம் அவர் முதலில் பேசியது தனது மேற்படிப்பு பற்றித்தானாம். தன்னை கல்லூரி சென்று படிக்க அனுமதிக்குமாறு கேட்டிருக்கிறார். கணவர் பெருந்தன்மைக்காரர். மனைவியின் மனம் நோகாமலிருக்க கல்லூரி படிப்புக்காக மனைவியை சென்னை அனுப்பினார். இப்போது படிக்கும்போது இந்த விஷயங்கள் சாதாரணமானதாய் தெரியலாம். ஆனால், இந்த சம்பவம் நடந்தது 1937_ல் என்பதைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.

ராஜம்மாளுக்கு படிப்பின் மீது அத்தனை ஆர்வம். நிறையப் படிக்க வேண்டும். நிறைய பட்டங்கள் பெற வேண்டும் என்றெல்லாம் ஆசை. அதற்கு அவர் தந்தையும் ஒரு காரணம்.

ராஜம்மாளின் தந்தை பெயர் பாக்கியநாதன் மைக்கேல். வனத்துறை அதிகாரி. பூர்வீகம் நாங்குநேரி அருகிலுள்ள பார்கவி நேரில் கிராமம் என்றாலும், அவர் பணிபுரிந்து கொண்டிருந்தது, திருவண்ணாமலை அருகிலுள்ள செங்கம் பகுதியில். ராஜம்மாள்தான் மூத்த பெண். அவரைத் தொடர்ந்து எட்டு குழந்தைகள். பாக்கியநாதனுக்கு ஒரு விருப்பம். தனது பிள்ளைகள் அனைவரும் படித்துப் பட்டம் பெற வேண்டும் என்று. இந்த விருப்பம் சாதாரணமாய் எல்லோருக்கும் வருவதுதான். ஆனால் இதைத் தொடர்ந்து வரும் விஷயத்தில் அதிசயம் இருக்கிறது. தனது பிள்ளைகளுக்குப் படிப்பறிவு இல்லாத குடும்பங்களில்தான் சம்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று. விரும்பினார். படிப்பறிவு இல்லா குடும்பங்களிலிருந்து மருமகள், மருமகன் அமையும்போது, அந்தக் குடும்பங்கள் தன் குடும்பத்துடன் இணையும். படிப்பறிவு பெறும். அந்தக் குடும்பத்தினரும் அவர்களது உறவினரும் கல்வியின் அருமையை உணர்வார்கள் என்பது பாக்கியநாதனின் எண்ணம். இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு சொந்த ஊரில் வேலை பார்த்தால் அங்கே உறவினர்கள் கட்டாயப்படுத்தி அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து விடு வார்கள். படிக்க விடமாட்டார்கள் என்று அஞ்சியே சொந்த ஊருக்கு வராமல் இருந்தாராம். அந்த அளவு படிப்பின்மேல் பிரியம். இப்போது புரிகிறதா மகள் ராஜம்மாளுக்குக் கல்வி மீது வந்த காதலுக்கான காரணத்தை.

எப்போதுமே நல்லவர்களை விதி அதிகம் சோதிக்கும். அந்தப் பொல்லாத விதி ராஜம்மாளின் வாழ்க்கை யிலும் பொய்க்கவில்லை. திடீரென நோய்வாய்ப்பட்டார் அவரது தந்தை. தான் இறப்பதற்கு முன் தன் மூத்த மகள் ராஜம்மாளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். அதனால் பள்ளிப் படிப்பு படித்ததுமே ராஜம்மாளின் திருமணம் நடந்தது. சொந்த தாய்மாமன்தான் மாப்பிள்ளை. திருமணமான சில மாதங்களிலேயே தந்தை இறந்துவிட, குடும்பம் கஷ்டத்தில் தத்தளிக்கத் துவங்கியது. தாயின் நகைகள்தான் குடும்பத்தைக் காப்பாற்ற உதவியது.

கணவரின் உதவியுடன் கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்து ராணி மேரி கல்லூரியில் சேர்ந்தார் ராஜம்மாள். வேதியியல் பிரிவில் சேர்ந்தார். மூன்றாண்டுகள் பட்டப்படிப்பில் தங்கப்பதக்கத்துடன் தேர்ச்சியடைந்தார். அதன்பின் மேற்படிப்புக்கு ‘மனையியல்’ பிரிவுக்கு மாறினார். இப்போது ‘ஹோம் சயின்ஸ்’ என்று ஸ்டைலாக அழைக்கப்படும் படிப்புதான் மனையியல். அந்தக் காலத்தில் இதுவும் ஒரு சாதனைதான். எல்லோரும் இயற்பியல், வேதியியல், என்று படித்துக்கொண்டிருக்க, மனையியல் படிக்க முன்வந்தார் ராஜம்மா. இந்தப் படிப்பை அவர் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இது புதிய அறிவியல் என்பதால்.

நாட்டில் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த சூழல் அது. மாணவியாக இருந்த ராஜம்மாள் தானே கை ராட்டையில் நூல் நூற்று, அதனால் தயாரிக்கப்பட்ட கதராடையேதான் அணிவார்.

மேற்படிப்பு முடிந்ததும் படித்த கல்லூரியிலேயே பேராசிரியை வேலை கிடைத்தது. இதில் ராஜம்மாளுக்கு மகிழ்ச்சி. இப்போதாவது தனது குடும்பத்தினருக்கு உதவ இயலுமே என்று தனது சம்பளத் தில் பாதியைத் தனது அம்மாவுக்குக் கொடுத்து விடுவார்.

இந்தியா சுதந்திரமடைந்த வருடம். அமெரிக்காவில் மனையியல் குறித்து ஆராய்ச்சி செய்ய ராஜம்மாளுக்கு வாய்ப்பு வந்தது. அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு அன்றைய கல்வி அமைச்சர் அவிநாசிலிங்கத்தைச் சென்று சந்தித்தார். அமைச்சருக்குச் சந்தோஷம். அப்போதெல்லாம் அமெரிக்காவில் ஆராய்ச்சிப் படிப்பு என்பது மிகப் பெரிய விஷயம். அமெரிக்காவில் ஒஹையோ பல்கலைக்கழகத்தில் ராஜம்மாளின் ஆராய்ச்சிப் படிப்புத் துவங்கியது. மூன்று ஆண்டுகளில் டாக்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பினார். மூன்றாண்டுகளில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றது இன்னொரு சாதனை. மனையியல் படிப்பில் டாக்டர் பட்டம் வாங்கிய முதல் இந்தியப் பெண் ராஜம்மாள் தேவதாஸ்தான்.

இன்று நமது பள்ளி மாணவர்களுக்கு மதியம் இலவச சத்துணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு முதல் சுழி போட்டவர் ராஜம்மாள் தேவதாஸ் என்பது இன்னொரு ஆச்சர்யமான செய்தி, ஏழை, எளிய மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு சமச்சீர் சக்தி கொண்ட உணவு கிடைப்பதில்லை, பள்ளியிலேயே மதியம் சத்தான உணவு கிடைத்தால் கல்வியும் வளரும், கற்பவர்களும் வளர்வார்கள் என்று ஒரு ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

இவரது திறமைகளை அறிந்து அவிநாசிலிங்கம், மனையியல் படிப்புக்காகவே கோவையில் அவிநாசிலிங்கம் மனையியல் கல்லூரியைத் துவக்கினார். அதற்கு ராஜம்மாள் தேவதாஸை முதல்வராக்கினார். அந்தக் கல்லூரி வளர்ந்து இன்று பல்கலைக்கழகமாக மாறி, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பின்பு வேந்தராகவும் பணியாற்றினார். கல்லூரியில் படித்த காலத்தைப் போலவே எப்போதும் கதராடைதான். எளிமை, வார்த்தைகளில் இனிமை. இதுதான் ராஜம்மாள்.

வாரம் ஒருமுறை மாணவியர்கள் கதர் சேலை அணிய வேண்டும். வாரம் இரண்டு முறை கைத்தறிச் சேலை அணிய வேண்டும் என்று மாணவிகளுக்கு உத்தரவிட்டார். அந்த வழக்கம் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. இந்தச் சின்ன உத்தரவினால் பல நெசவாளர்கள் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள்.

இவருடைய பெண் கல்விச் சேவை, மனையியல் துறைச் சேவை இவற்றைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கௌரவித்தது. ஐ.நா.சபையில் சத்துணவு குறித்து பேசியிருக்கிறார். எழுபத்தொன்பதாவது வயதில்கூட டெல்லியில் நடந்த உலக வங்கிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார். எங்கோ தமிழகத்தின் தென்கோடி கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணின் சாதனைகளைப் பாருங்கள்.

‘அம்மா’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ், 2002ஆம் வருடம் 83_வது வயதில் காலமானார்.

அவர் இன்று இல்லை. ஆனால் அவரது கல்விச் சேவை இன்றும் அவரது சாதனைகளைச் சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றது..


திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பத்தா வது கி.மீ.இல் உள்வாங்கியிருக்கிறது காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம். பல ஆயிரக்கணக்கான ஏழை எளிய கிராம மக்களின் கல்லூரிக் கனவுகளை நனவாக்கிய கல்விக்கூடம் அது. அனாதைகள், அபலைகள், ஆதரவற்ற பெண்கள், ஏழைகள் என்று சமுதாயத்தின் கீழ்நிலையில் இருந்த அத்தனை மக்களுக்கும் இன்றைக்கும் கல்வி கொடுத்து, சுயதொழில் கற்றுக்கொடுத்து ஆதரித்து வரும் அறக்கட்டளை அது.

இன்று பல நூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து இந்தியாவின் முதுகெலும்பாய் விளங்கும் பல ஆயிரம் கிராமங்களுக்குக் கல்விக்கண் திறந்துகொண்டு இருக்கும் அந்த கல்வி நிறுவனத்தைத் தொடங்கிய சௌந்தரம் ராமச்சந்திரனின் போராட்ட வாழ்க்கை பல தமிழ்ப் பெண்களுக்கு வழிகாட்டி.

நசுக்கப்பட்ட_ ஒடுக்கப்பட்ட_ புறக்கணிக்கப்பட்ட சமூகம் அல்ல அவரது சமூகம். அவருக்காகவோ அவர் பிறந்த சமூகத் திற்காகவோ அவர் போராட வேண்டிய கட்டாயமும் இல்லை. சூழலும் இல்லை. அப்படியரு செல்வச்செழிப்புமிக்க குடும்பம் அவருடையது. ஆனாலும் சௌந்தரம் ராமச்சந்திரன் போராடினார். ஏழைப் பெண்கள் பல்லாயிரக்கணக்கானோர் படும் துயர் கண்டு அவரால் சும்மா இருக்கமுடியவில்லை. தன் கண் முன்னால் பல சமுதாய மக்கள் குறிப்பாகப் பெண்கள் நசுக்கப் படுவதையும் _ ஒடுக்கப்படுவதையும் _ புறக்கணிக்கப்படுவதையும் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

தன் குடும்பத்தின் ஆச்சாரங்களை உடைத்துக்கொண்டு வெளியில் வந்தார். தன் சமூகத்தின் கட்டுப்பாடுகளை அறுத்துக்கொண்டு கல்வி கற்று சமூக சேவையில் ஈடுபட்டார். அதற்காக அவர் பட்ட துயரங்கள், இழந்த இழப்புகள் ஏராளம்.

நெல்லை மாவட்டத்திலுள்ள சின்னஞ்சிறிய கிராமம் திருக்குறுங்குடி. வேதநெறி தவறாமல் வாழ்ந்த வைதீக பிராமணக் குடும்பங்கள் வாழ்ந்த அந்த அழகிய கிராமத்தில்தான் பெருமைமிகு டி.வி.எஸ். நிறுவனத்தார் குடும்பமும் வாழ்ந்தது. அந்தக் குடும்பத்தில் பிறந்தவர்தான் சௌந்தரம்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே மோட்டார் தொழிலில் ஆர்வம் ஏற்பட, அதனையே தனது குடும்பத் தொழிலாக மாற்றி, இந்திய மோட்டார் வாகன உலகில் கொடி கட்டிப் பறந்தவர் டி.வி.சுந்தரம்அய்யங்கார். அவரது துணைவியார் லட்சுமி அம்மை யாரோ சமூக சேவைகள் மூலம் அவரளவிற்குப் புகழ் பெற்றிருந்தவர். இந்த உன்னதமான தம்பதியருக்கு மகளாக 1905_ல் பிறந்தவர்தான் சௌந்தரம். பேரழகியாக பெண் குழந்தை இருந்ததால் சௌந்தரம் (அழகானவள்) என்றே பெயர் வைத்துவிட்டார்கள் பெற்றோர். விளையும் பயிர் முளையில் தெரியும் என்பார்கள். பத்து வயதிலேயே வீணை வாசிப்பதிலும் வாய்ப்பாட்டிலும் தேர்ச்சி பெற்று வீணைவித்வான் முத்தையா பாகவதர் போன்றோரை வியப்பில் ஆழ்த்தினார்.

சுதந்திரப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த காலம். நன்கு வளர்ந்து கொண்டிருந்த மோட்டார் தொழிலை மட்டும் டி.வி.சுந்தரம் அய்யங்கார் கவனித்துக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால், அவருக்குள் இருந்த சுதந்திர வேட்கை அவரை காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட வைத்தது. அதனால் தேசிய தலைவர்கள் நட்பு கிடைத்தது. பொதுப் பணியில் ஈடுபடுவதில் அவரது துணைவியார் லட்சுமியும் அவருக்கு இணையாகச் செயல்பட்டார்.

இதனால் பாரதியார், சுப்பிரமணிய சிவா போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் இவர் இல்லத்திற்கு அடிக்கடி வந்து தேசிய பிரச்னைகளைப் பற்றி விவாதிப்பதுண்டு. விவாதத்தின்போது சிறுமி சௌந்தரமும் அருகில் இருப்பார். இதனால் சின்ன வயதிலேயே அவர் மனதில் தேசப்பற்று ஆழமாகப் பதிந்துவிட்டது.

அந்தக் காலத்தில் வைதீக குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவது வழக்கம். அதன்படி, டி.வி.சுந்தரம் அய்யங்காரின் சகோதரியின் மகன் சௌந்தரராஜனுக்கும் சௌந்தரத்திற்கும் 1918_ல் திருமணம் நடந்தது. அப்போது சௌந்தரத்திற்கு 12 வயது. கணவருக்கு 16 வயது.

திருமணமான கையோடு அவர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் குடியேறினார்கள். 1922_இல் சௌந்தரத்திற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குறைப்பிரசவம் என்பதால் குழந்தை இறந்தே பிறந்தது. துன்பம் என்பதே தெரியாமல் செல்வச் செழிப்பில் வாழ்ந்த சௌந்தரத்திற்கு இதுதான் முதல் சோகம். அதை மறக்க அவர் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. இந்தச் சோகத்திற்கு மத்தியிலும் கணவர் சௌந்தரராஜன் மருத்துவக் கல்லூரியில் தேர்ச்சி பெற்று மருத்துவர் பட்டம் பெற்றது சௌந்தரம் அம்மையாருக்குப் பெரிய ஆறுதல்.

இங்கிருந்துதான் சௌந்தரத்தின் வாழ்வில் ஒரு திருப்புமுனை விழுகிறது. பட்டம் பெற்ற கணவர் மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவராகிறார். கூடவே தனியாக மருத்துவமனை ஒன்றைத் திறந்து ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தார். ஏழைகளுக்கு வைத்தியம் பார்க்கும்போது சௌந்தரம்தான் கணவர்கூட இருந்து அவருக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்து வந்தார். கூடவே அங்குள்ள மாதர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு முழுநேர பொதுப்பணியில் ஈடுபடத் தொடங்கி விட்டார்.

இந்த இடத்தில்தான் அவரது வாழ்க்கையில் இரண்டாவது திருப்பு முனை விழுகிறது. மதுரையையும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களையும் பிளேக் நோய் தாக்கியது. பிளேக் நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற, கணவரும் மனைவியும் இரவு பகல் பாராமல் உழைத்தார்கள். தொடர்ந்து பிளேக் நோய்க்கு வைத்தியம் பார்த்ததில் கணவருக்கும் அந்த நோய் வந்து விட்டது. இனி பிழைப்பது கடினம் என்ற நிலையில், ‘‘நான் இறந்த பின்னர் நீ விதவைக் கோலம் பூணக் கூடாது. என்னைப் போல் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய். விரும்பினால் மறு மணம் செய்துகொள். பிற்காலத்தில் நீ சிறந்த சேவகியாக வேண்டும் என்பதே என் விருப்பம்’’ என்றபடி அவரது உயிர் பிரிந்தது. கணவர் இறந்த துக்கம் தாளாமல், சௌந்தரம் விஷத்தைக் குடித்துவிட்டார். மருத்துவர்கள் அவரை உயிர் பிழைக்க வைத்தார்கள்.

அன்று சௌந்தரம் முடிவு செய்தார். நாம் எவ்வளவு பெரிய தவறு செய்ய இருந்தோம். நம் கணவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் நம் லட்சியம் என்று முடிவு செய்து மதுரையில் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்தார். கணவர் எண்ணம்போல் டில்லி சென்று மருத்துவப் படிப்பு படித்தார். படிப்பு ஒரு புறம் என்றாலும் சமூக சேவையில் தன்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டார்.

ஏழைக் குழந்தைகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து அவரே பாடமும் கற்றுத்தர ஆரம்பித்தார். இவரது சமூக சேவையில் ஈர்க்கப்பட்டு காந்தியடிகளின் தனி மருத்துவரான சுசிலா நய்யார் நட்பு கிடைத்தது. விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்ற சுசிலா நய்யாரின் நட்பு கிடைத்ததால் பல தேசத் தலைவர் களைச் சந்திக்கும் வாய்ப்பு சௌந்தரம் அம்மையாருக்குக் கிடைத்தது. சுசிலா நய்யார் காந்தியைச் சந்திக்கச் செல்லும் போதெல்லாம் சௌந்தரத்தையும் அழைத்துச் செல்வார். அப்போது மகாத்மா காந்தி சேவாசிரமத்தில் சேர்ந்து பணிபுரிந்த தென்னிந்திய இளைஞரான ஜி.ராமச்சந்திரனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

சௌந்தரம் மருத்துவக் கல்லூரியில் முதல் மாணவியாக தேர்வு பெற்று, சென்னையில் ஒரு மருத்துவமனை தொடங்கி சேவை செய்யத் தொடங்கினார். அப்போது தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கச் செயலாளராக ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டார். டெல்லியில் ஆரம்பித்த அவர்களது நட்பு சென்னையிலும் தொடர்ந்தது. கணவரின் விருப்பத்தை நிறை வேற்றும் விதமாக மதுரை அரசு மருத்துவமனையில் கௌரவ உதவி மருத்துவராகச் சேர்ந்தார். தனியாக ஒரு மருத்துவமனை ஆரம்பித்து ஏழை எளிய மக்களுக்கு உதவினார். மதுரையில் மருத்துவராக சேவை செய்த முதல் பெண்மணி இவர்தான்.

தனி மனுஷியாக இனி இயங்க முடியாத சமூகச் சூழல். அதனால் ஒரு ஆண் துணையைத் தேடினார். காந்தி வழியைப் பின்பற்றி சமூக சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜி. ராமச்சந்திரனைத் தேர்வு செய்தார். ஆச்சாரம்மிக்க அவரது குடும்பம் அதனை எதிர்த்தது. பிராமணப் பெண்கள் மறுமணம் செய்வது பாவம் என்று கருதப்பட்ட காலம் அது.

ராஜாஜிதான் முதலில் இவர்கள் திருமணத்தைப் பற்றி சுந்தரம் அய்யங்காரிடம் பேசினார். அவர் சம்மதிக்கவில்லை. இந்தச் செய்தி காந்தியடிகளுக்குச் சென்றது. உடனே காந்தி அழைத்தார். இருவர் விருப்பத்தையும் கேட்டார். சுந்தரம் அய்யங்காருக்கு கடிதம் எழுதினார். ‘‘சௌந்தரம் ராமச்சந்திரன் திருமணத்தை நடத்தி வையுங்கள். இல்லா விட்டால் நானே நடத்தி வைப்பேன்’’ என்றார். இதற்குப் பெற்றோர் சம்மதிக்காததால், சேவாசிரமத்தில் காந்தி முன்னிலையில் அவர்கள் திருமணம் நடந்தேறியது.

காந்தி இராட்டையில் தன் கையால் நூற்ற நூலில் செய்யப்பட்ட தாலிக் கயிற்றை ராமச்சந்திரன் சௌந்தரம் கழுத்தில் கட்டினார். காந்தி நெய்த நூலில் செய்யப்பட்ட வேட்டியை மணமகனும் கஸ்தூரிபாய் நூற்ற நூலில் செய்யப்பட்ட சேலையை சௌந்தரமும் ஆடையாக அணிந்து கொண்டார்கள்.

திருமணத்திற்குப்பின் சென்னை வந்தனர். சௌந்தரம் டாக்டர் முத்துலட்சுமியோடு இணைந்து கிராம மருத்துவ சேவையில் ஈடுபட்டார். ராமச்சந்திரன் புகழ்பெற்ற ஒரு ஆங்கில தினசரிக்கு ஆசிரியரானார். இருவரும் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றனர்.

திண்டுக்கல் பகுதியில் காந்தி ஆசிரமம் ஒன்றைத் தொடங்கினார். கிராம சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

கிராம சேவைக்கென்றே சின்னாள பட்டியைத் தேர்வு செய்து 1947_ல் ஒரு தொடக்கப்பள்ளி, கிராம சேவை பயிற்சிப் பள்ளி கிராம மருத்துவ விடுதி ஆகியவற்றைத் தொடங்கினார். இன்று அவைதான் காந்தி கிராமிய பல்கலைக்கழகமாகவும், கிராமிய அறக்கட்டளைகளாகவும் நிமிர்ந்து நிற்கின்றன.

1956_ல் டாக்டர் ராஜேந்திர பிரசாத் காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தைத் தொடங்கி வைத்த போது இந்தியாவே சௌந்தரம் அம்மை யாருக்கு நன்றி சொல்லியது.

எங்கு வறுமை தாண்டவமாடு கிறதோ, எங்கு சாதி, மதக் கலவரம் உருவாகிறதோ அங்கு சௌந்தரம் அம்மையார் ஓடோடிச் சென்று அவர்களை நல்வழிப்படுத்துவார். கிராம மருத்துவ சேவைதான் தன் இரு கண்கள் என்று நினைத்தார். இவர் வகிக்காத பதவிகளே இல்லை. 1962_ல் இவரது சேவைக்காக ‘பத்மபூஷண்’ விருது வழங்கப்பட்டது.

காந்தி கிராமத்தில் தயாரிக்கப்படும் எளிய உணவு, எளிய உடை இவற்றையே இறுதிக் காலம் முழுதும் அணிந்தார். 1984 அக்டோபர் 2_ம் தேதி அந்தச் சமூக சேவையின் ஜோதி அணைந்தது. தன் உடல் மீது மலர் அணிவிக்கக் கூடாது. எளிய கதர் ஆடைகள் மட்டுமே அணிய வேண்டும். யாரும் தொட்டு வணங்கக் கூடாது என்ற அவரது கடைசி கட்டளையை நிறைவேற்றிய மக்கள், அவர் வழி இன்றும் கிராம சேவையில் ஈடுபட்டவண்ணம் உள்ளனர். இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களுக்கு ஒரு ஊன்றுகோல் சௌந்தரம் அம்மையார் என்பது கிராம மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை..

நன்றி: பைம்பொழில் மீரானின்

‘தலைநிமிர்ந்த தமிழச்சிகள்’ தோழமை வெளியீடு, சென்னை_78.

Posted in Aachi, Achi, artists, Arts, Carnatic, Chettinad, Classical, Devadas, Devdas, Dhanammal, Dharmaambal, Dharmambal, Faces, Females, Ladies, MAM, music, people, Rajammal, Ramasami, Ramasamy, Segappi, Sekappi, Sevappi, She, Sigappi, Sikappi, Sivappi, Thanammal, Tharmambal, Veena, Veenai, Veerammal | Leave a Comment »

Sixth Pay Panel recommends hefty pay hikes for government staff: Deficit may widen

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

மத்திய அரசு ஊழியர்களுக்கு 40 சதவீதம் ஊதிய உயர்வு: 6-வது ஊதியக் குழு பரிந்துரை

தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த 6 வது ஊதியக்குழுத் தலைவர் நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா.

புதுதில்லி, மார்ச் 24: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தில் 40 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க 6-வது ஊதியக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

புதிய ஊதிய விகிதத்தை 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அமல்படுத்தவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

முன் தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி, இரு தவணைகளில் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான ஊதியக் குழு தனது பரிந்துரைகளை நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் திங்கள்கிழமை சமர்ப்பித்தது.

இந்தப் பரிந்துரைகளை நிதியமைச்சகம் ஆய்வு செய்து அதை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கும். மத்திய அமைச்சரவை இப் பரிந்துரைகளை ஏற்று அமல்படுத்தும்.

இதன் மூலம் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.

புதிய ஊதிய உயர்வு விகிதப்படி மத்திய அமைச்சரவைச் செயலரின் ஊதியம் ரூ. 90,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு செயலரின் ஊதியம் ரூ. 80,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 6,600-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அடிப்படை ஊதியத்தில் 40 சதவீதம் ஊதிய உயர்வு அளித்து அதன் அடிப்படையில் புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 2.5 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி இந்த ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும்.

திறமைக்குப் பரிசு: திறமையான ஊழியர்களை ஊக்குவித்து பாராட்டும் வகையில் “திறமை அடிப்படையிலான ஊதிய உயர்வு’ என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும்.

வீட்டு வாடகைப்படி: வீட்டு வாடகைப்படி உள்பட பெரும்பாலான படிகள் உயர்த்தப்பட்டுள்ளன. குழந்தைகளின் கல்வி செலவு உதவித் தொகை ரூ. 50-லிருந்து ரூ. 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு செவிலியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியமும் 40 சதவீதம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியில் உள்ள 35 கிரேடுகளை (பணி நிலை) 20 கிரேடுகளாக குறைக்கவும் ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளது.

50 சதவீத அகவிலைப் படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமும் ஊதியம் சற்று உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவ வீரர்களுக்கு: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ராணுவ வீரர்களுக்கு ஊதியம் வழங்கவும் ஊதியக் குழு சிபாரிசு செய்துள்ளது.

ராணுவத்தில் பிரிகேடியர் மற்றும் அதற்கு இணையான பதவி வரை மாதப்படி ரூ. 6000- ஆக உயர்த்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியக் குழு பரிந்துரைகளால் அரசுக்கு 2008 – 09 நிதியாண்டில் ரூ. 12,561 கோடி கூடுதல் செலவாகும்.

முன்தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி தொகைக்கு ஆகும் செலவு ரூ. 18,060 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

* அடிப்படை சம்பளத்தில் 40 சதவீதம் உயர்வு

* 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி

யிலிருந்து அமல்படுத்த வேண்டும்.

* முன்தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி இரு தவணை

களாக வழங்கப்பட வேண்டும்.

* அதிகபட்சமாக அமைச்சரவை செயலரின் ஊதியம் ரூ. 90,000

* கீழ்நிலை ஊழியரின் குறைந்தபட்ச

சம்பளம் ரூ. 6600

* ஓய்வு பெறும் வயது 60 என்பதில் மாற்றமில்லை

* பணி நிலை 35 கிரேடுகள் என்பது 20 கிரேடுகளாக குறைப்பு

* மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ராணுவத்தினருக்கும் ஊதியம்

* பிரிகேடியர் பதவி வரை மாதப் படி

ரூ. 6000-ஆக உயர்வு

* வார வேலை நாள் 5 என்பதில் மாற்றமில்லை

* ஆண்டுதோறும் ஊதிய உயர்வு 2.5 சதவீதம்

* திறமை அடிப்படையில் கூடுதலாக ஒரு சதவீதம் ஊதிய உயர்வு

* மத்திய அரசு ஆசிரியர்கள், செவிலியர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு

* வீட்டு வாடகைப் படி உள்பட பெரும்பாலான படிகள் இரு மடங்காக உயர்வு

* குழந்தைகளின் கல்விச் செலவுக்கான உதவித் தொகை ஆண்டுக்கு 50-திலிருந்து ரூ. 1000-ஆக உயர்வு

* விடுதி மானியம் ரூ. 3 ஆயிரமாக உயர்வு

* ஒரு பணி நிலையில், அதிகபட்ச ஊதியத்தை எட்டிய ஓராண்டுக்கு பிறகு, அவருக்குப் பதவி உயர்வு வழங்காவிட்டாலும் அடுத்த பணி நிலைக்கு உரிய ஊதியம் அளிக்கப்பட வேண்டும்.

—————————————————————————————————————————————————–
உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு

புதுதில்லி, மார்ச் 24: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு அளிக்க 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தற்போதுள்ள 6500 – 10,500 என்ற சம்பள விகிதத்தை 8700 – 34,800 என்று மாற்றி கிரேடு சம்பளம் ரூ. 4600-வுடன் வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் பதிவாளர், இணைப் பதிவாளர் பணிகளை இணைத்து அப் பதவிகளுக்கான ஊதிய விகிதம் 18,400 – 22,400 தற்போது 39,200 – 67,000 என்று உயர்த்தி கிரேடு ஊதியம் 9 ஆயிரத்துடன் வழங்கப்படும்.

4 ஆண்டுகள் பணி முடிந்த சீனியர் ஜூடிசியல் உதவியாளர், சீனியர் தனி உதவியாளர், ரீடர், சீனியர் ஜூடிசியல் மொழி பெயர்ப்பாளர், நீதிமன்ற அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஊதியம் 6,500 – 10,500 என்பது தற்போது 8,000 – 13,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோன்று பல்வேறு பணிகளுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

—————————————————————————————————————————————————–
முப்படைத் தளபதிகளுக்கு ரூ. 90,000 ஊதியம்

புதுதில்லி, மார்ச் 24: தரைப்படை, விமானப் படை, கடற்படை தளபதிகளுக்கு ஊதியம் ரூ. 90,000-ஆக உயர்த்த ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ளது.

தற்போது முப்படைத் தளபதிகளுக்கும் மாத ஊதியமாக ரூ. 30 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ. 60 ஆயிரம் உயர்த்தி மொத்தம் ரூ. 90 ஆயிரம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியில் மத்திய அமைச்சரவை செயலருக்குத்தான் ரூ. 90 ஆயிரம் வழங்க ஊதியக்குழு சிபாரிசு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்த ராணுவ வீரர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 40 சதவீத ஊதிய உயர்வு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

—————————————————————————————————————————————————–
ஆணையத் தலைவர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை ஊதியம்

புதுதில்லி, மார்ச் 24: பங்கு பரிவர்த்தனையைக் கண்காணிக்கும் “செபி’ அமைப்பு, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், காப்பீட்டு ஒழுங்கு முறை வளர்ச்சி ஆணையம் உள்ளிட்ட பல்வேறு ஆணையங்களின் தலைமைப் பதவிகளுக்கு மாத ஊதியம் ரூ. 3 லட்சம் வரை உயர்த்தி 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.

திறமையான நபர்களை வெளியிலிருந்து இப் பதவிக்கு ஈர்க்கும் நோக்கில் ஊதியம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஊதியக் குழு நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கூறியுள்ளார்.

இந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக ரூ. 1.5 லட்சமும் ஆணையத்தின் தலைவருக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கார் மற்றும் வீடு அளிக்கப்படாவிட்டால் தலைமைப் பதவிக்கு ரூ. 3 லட்சமும் உறுப்பினர் பதவிக்கு ரூ. 2.5 லட்சமும் வழங்க குழு சிபாரிசு செய்துள்ளது.

—————————————————————————————————————————————————–
வேலை வாய்ப்பின்மையை அதிகரிக்கும்: இந்திய கம்யூனிஸ்ட்

ஹைதராபாத், மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் வேலை வாய்ப்பின்மையை அதிகரிக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கருத்துக் கூறியுள்ளது.

மத்திய அரசுப் பணி நிலைகள் 35 கிரேடுகளில் இருந்து 20 கிரேடுகளாக குறைக்கப்பட்டுள்ளதால் வேலை வாய்ப்புகள் குறையும் என்று அக் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறினார்.

மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை ஊழியர்களுக்கு வெகுவாக ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. அதேநேரத்தில் உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு கணிசமாக ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இந்தியா போன்ற ஏழை நாடுக்கு இது தேவையில்லை என்று அவர் கூறினார்.

—————————————————————————————————————————————————–
ஊதியக் குழு பரிந்துரைகள்: மத்திய அரசு ஊழியர்கள் ஏமாற்றம்

சென்னை, மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் தங்களுக்கு ஏமாற்றம் தருவதாக மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் எம். துரைப்பாண்டியன் கூறினார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:

எங்களுடைய அனுபவத்தில் பெரிய ஏமாற்றத்தைத் தந்திருக்கும் ஊதியக் குழு அறிக்கையாக இது இருக்கிறது. நான்காம் நிலை ஊழியருக்கும், உயர்நிலை அதிகாரிக்கும் இடையிலான ஊதிய வேறுபாடு 12 விழுக்காடு அளவுதான் இருக்க வேண்டும் என்றபோதிலும், அந்தக் கோட்பாடு இப்போது மீறப்பட்டுள்ளது.

நான்காம் நிலை ஊழியர்களின் ஊதிய உயர்வு 18 முதல் 25 விழுக்காடு வரைதான் உள்ளது. அமைச்சரவைச் செயலர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு, ஊதியக் குழு பரிந்துரை அமலுக்கு வரும் காலத்திற்கான நிலுவைத் தொகை மட்டுமே ரூ.17 லட்சம் வரை வரும்.

சமூகத்தில் மிகவும் பின்தங்கியோர் அதிக அளவில் வேலைபார்க்கும் நான்காம் நிலை ஊழியர் பணிகள் இனிமேல் இருக்காது என்ற நிலை உருவாகியுள்ளது.

மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் காப்பீடு, வங்கித் துறைகளில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய திருத்தம் செய்யப்படுகிறது. அவருடைய மேற்பார்வையில் இயங்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஊதியத் திருத்தம் செய்யப்படுகிறது. அதிலும்கூட நான்காம் நிலை ஊழியர்களுக்கு 18 விழுக்காடுதான் உயர்வு கிடைத்துள்ளது.

விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இது மிகவும் ஏமாற்றமான விஷயம்தான்.

இதைக் கண்டித்து புதன்கிழமை (மார்ச் 26) மாநிலத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் எதிரிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம். அடுத்தகட்டமாக அகில இந்திய அளவில் ஆலோசனை செய்து, போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

—————————————————————————————————————————————————–
6-வது ஊதியக் குழு பரிந்துரை: “தனியாருடன் ஒப்பிடக் கூடாது’

சென்னை, மார்ச் 24: நிதித்துறை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம்:

இந்தப் பரிந்துரைகளில் குறிப்பிடும் வகையில் ஏதும் இல்லை. தேர்தல்கால அறிவிப்புகள் போலத்தான் இதுவும் இருக்கிறது. உயரதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு நன்றாக இருக்கிறது என்றாலும், கீழ்நிலை அலுவலர்களுக்கு அதைப் போன்ற நிலை இல்லை. அதனால் அவர்கள் போராடக் கூடிய நிலை ஏற்படுமா என்று தெரியவில்லை. நான்காம் நிலை பணியிடங்களை ஒழித்துவிட மறைமுகமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் இது சாத்தியமாகுமா என்று தெரியவில்லை.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பொருத்தவரை, தனியார் துறையில் தரப்படும் ஊதியத்துடன் ஒப்பிடக் கூடாது. அரசுப் பணியில் உள்ளவரை, வீட்டு வசதி, மருத்துவ வசதி, வாகன வசதி, கல்வி வசதி போன்றவை இருப்பதை மறந்துவிடக் கூடாது. பணிக் காலத்திற்குப் பிறகு ஓய்வூதியம் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தனியார் துறையில் இதைப் போன்ற எந்த வசதியும் கிடையாது.

எனவே, அரசுத் துறையில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தனியார் துறைக்குப் போய்விடுவார்கள் என்பதில் உண்மை ஏதும் இல்லை என்று அவர் கூறினார்.

—————————————————————————————————————————————————–
“ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குத் தரும் சம்பளம் மிகவும் குறைவுதான்’

நமது சிறப்பு நிருபர்

சென்னை, மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி பெரும்பாலான அதிகாரிகளுக்கு உயர்த்தப்படும் ஊதியத்தில் 33 சதவீதம் வருமான வரியாகப் பிடித்தம் செய்யப்பட்டுவிடும் என்பதால், அவர்களின் கைக்குக் கிடைக்கும் கூடுதல் சம்பளம் குறைவாகத்தான் இருக்கும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூறுகின்றனர்.

மத்திய அரசில் வருவாய்த் துறைச் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற எம்.ஆர். சிவராமன் (படம்) இதுபற்றிக் கூறியதாவது:

இப்போது உயர்த்தப்படும் ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் போக அரசுச் செயலாளர்களுக்கு ஏறத்தாழ ரூ.13,000 மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும். அதன்படி பார்த்தால், அறிக்கையில் உள்ளவாறு நிறைய ஊதிய உயர்வு தரப்படுவதைப் போலத் தோன்றினாலும், வருமான வரி மூலமாக கணிசமான தொகை அரசுக்கே திரும்பச் சென்றுவிடும். அதனால், அரசுக்கு நிகர செலவு என்பது குறைவாகத்தான் இருக்கும்.

இயக்குநர், செயலாளர், இணைச் செயலாளர் போன்ற பதவிகளில் இருப்பவர்கள் ஏறத்தாழ 14 மணி நேரம் உழைக்கிறார்கள். நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவைகளுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டியுள்ளது. அவர்கள் மீது நிறைய பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன. அதற்கேற்ப ஊதியம் நிர்ணயித்திருக்க வேண்டும்.

தனியார் துறையில் அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தைவிட இது மிகவும் குறைவானதாகும். செயலாளர் போன்ற பதவிகளில் இருப்பவர்களின் செயல்பாடுகளுக்கு ஒரு இலக்கு நிர்ணயிக்க வேண்டும். அதைச் சிறப்பாகச் செய்து முடிப்பவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் அல்லது ரூ.3 லட்சம் என சம்பளம் தரலாம்.

இதுபோன்ற பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதற்கு முன்பாக, பொதுமக்கள் முன்பாக நிறுத்தி, அவரின் சொத்து விவரம், பணித் திறன் போன்றவற்றைக் கேட்டுப் பதிவு செய்யலாம். அதில் திருப்தி ஏற்பட்டால் அப் பதவிக்கு நியமிக்கலாம். தகுதி, பணித் திறன் அடிப்படையில் அதிகமான சம்பளத்தைத் தரலாம் என்பதுதான் சரியானதாக இருக்கும்.

வெளிநாடுகளில் உயரதிகாரிகளுக்கு வாகனங்கள் தரப்படுவதில்லை. இந்தியாவில் வாகனங்கள், அதற்கு ஓட்டுநர்கள் என தேவையற்ற செலவுகள் இருக்கின்றன. இதையெல்லாம் தவிர்த்துவிட்டு, மொத்தமாக ஒரு சம்பளத்தை உயரதிகாரிக்குக் கொடுத்துவிட்டால், வாகன ஏற்பாடுகளை அவர்களே செய்து கொள்வார்கள். வாகனப் பராமரிப்பு போன்ற செலவுகள் அரசுக்கு மிச்சமாகும்.

மேலும், சில துறைகளில் செயலர் அந்தஸ்துக்கு மேல் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியில் இருப்பது தேவையற்றது என்று அவர் கூறினார்.

தற்போது தமிழக அரசுப் பணியில் இருக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறியதாவது:

15 முதல் 20 ஆண்டு வரை அனுபவம் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை சம்பளம் தருவதற்குத் தனியார் நிறுவனங்கள் தயாராக உள்ளன. இந் நிலையில் இப்போது செயலர் அளவில் ரூ.80 ஆயிரம் என சம்பளம் நிர்ணயித்திருப்பது போதுமானதல்ல. இதில் வரிகள் பிடித்தம் போக ரூ.50 ஆயிரம் அளவுக்குதான் கைக்கு வரும். ஆக, ஏற்கெனவே வாங்கிக் கொண்டிருப்பதைவிட கூடுதலாக ரூ.10 ஆயிரம் மட்டுமே கிடைக்கும்.

அனுபவம் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை, தக்க வைத்துக் கொள்வதற்கு இந்தச் சம்பள விகிதம் உதவாது. ஊதியக் குழு அறிக்கை அமலுக்கு வருவதற்காக பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். இது அமலுக்கு வந்து, நிலுவைத் தொகைகள் கைக்கு வந்ததும் சில மாதங்களில் அவர்கள் விருப்ப ஓய்வு கேட்டு மனு செய்வார்கள்.

வெளியில் மாதம் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். அதிலும் பெரும் பகுதி வருமான வரி பிடித்தத்தில் வராத வகையில் பிரித்துக் கொடுத்துவிடுவார்கள். அதனால், அதைத்தான் எல்லோரும் விரும்புவார்கள்.

20 ஆண்டு அனுபவம் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெளியேறினால், அதிக அனுபவம் இல்லாத, புதிய அதிகாரிகளை வைத்துக் கொண்டு அரசு நிர்வாகத்தைச் செம்மையாக நடத்த முடியுமா என்பது சந்தேகம்தான்.

எனவே, அனுபவம் பெற்றவர்கள் வெளியேறாமல் தடுக்க வேண்டுமானால், தனியார் துறையில் உள்ள சம்பளத்துக்கு இணையான அளவுக்கு சம்பளம் தர அரசு முன் வர வேண்டும். ஏனெனில், 20 வருட அனுபவம் பெற்றவர்களை திடீரென உருவாக்கிட முடியாது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுத் துறையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பார்ப்பதே சிரமமாகிவிடும் என்று அவர் எச்சரிக்கிறார்.

—————————————————————————————————————————————————–
ஊதியக் குழு பரிந்துரை: “பண வீக்கம் அதிகரிக்கும்’

சென்னை, மார்ச் 24 : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தும் நிலையில் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அவைத் தலைவருமான என். முருகன் கூறினார்.

ஊதியக் குழு பரிந்துரை தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகள்:-

“”மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்ட பிறகு, விலைவாசி வெகுவாக உயர்ந்துவிட்டது. மேலும் பண வீக்கமும் 4 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக அதிகரித்துவிட்டது. ஊதியக் குழு பரிந்துரை அமலாகும் நிலையில் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும். இது தன்னிச்சையாக ஏற்படும்.

சம்பள உயர்வு அவசியம்: இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட சம்பளக் கமிஷன்கள், விலைவாசி உயர்வு, தகுந்த ஊதிய ஊக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஊதிய உயர்வு விகிதத்தை பரிந்துரை செய்தன.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் உலக தாராளமயமாக்கலுடன் இந்தியா தன்னை இணைத்துக் கொண்டு விட்டதாலும் தனியார் துறையில் மிக அதிக அளவு தொழிற்சாலைகள், தொழில் வாய்ப்புகள் பெருகியதாலும் அவற்றில் வேலை செய்வோருக்கு சம்பள விகிதங்கள் மிக அதிகமாக உள்ளன.

இதனால் பெரும்பாலான ஐஏஎஸ் அதிகாரிகள் அரசுப் பணியை ராஜிநாமா செய்துவிட்டு தனியார் வேலைக்குப் போக துணிந்து விட்டனர். அரசு வேலையில் சம்பளம் எனும் விஷயம்போக, சம்பளம் அல்லாத பல சலுகைகள் (உதாரணம்: பங்களா வசதி, வாகன வசதி உள்ளிட்டவை) இருப்பதால் கவர்ச்சி இருந்தது. ஆனால், தனியாரும் இத்தகைய வசதிகளைக் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.

எனவே இந்த ஊதிய உயர்வு பரிந்துரை மிகவும் தேவையான ஒன்று. இந்த ஊதிய உயர்வாவது இல்லையெனில் அரசுப் பணிக்கு திறமையானவர்கள் வர மாட்டார்கள்.

ஊதியக் குழு பரிந்துரை காரணமாக அரசுக்கு ரூ.12,561 கோடி செலவாகும் எனக் கூறப்பட்டுள்ளது. விவசாயக் கடன் ரூ.60,000 கோடி அளவுக்குத் தள்ளுபடி, வருமான வரி வரம்பை அதிகரித்தது போன்ற சலுகைகளைக் கணக்கில் கொள்ளும்போது இது ஒன்றும் பெரிய செலவு அல்ல.

குறிப்பாக இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் 3.2 கோடி சம்பளதாரர்களுக்கு அளிக்கப்பட்ட வருமான வரி வரம்பு உயர்வுச் சலுகையினால் மத்திய அரசுக்கு ஏற்படக்கூடிய இழப்பு ரூ.30,000 கோடி.

ஆனால், இந்த சம்பள உயர்வு பரிந்துரையைப் பார்த்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களது ஊழியர்களுக்கும் அதே விகிதத்தில் மாநில அரசுகள் கொடுத்து விடும். இதுதான் நமது பழைய அனுபவம்.

இவ்வாறு கொடுப்பது மாநில நிதி நிலைமையை வெகுவாகப் பாதிக்கும். ஏனெனில் மத்திய அரசின் பொருளாதார நிலை வேறு, மாநில அரசுகளின் பொருளாதார நிலை வேறு” என்றார் முருகன்.

—————————————————————————————————————————————————–

Posted in 6, Army, Bonus, Bribery, Bribes, Commission, Compensation, Corruption, defence, Defense, Deficit, Economy, employee, Employers, Employment, Females, Finance, Flexitime, Government, Govt, hikes, Hours, Income, Increases, Increments, Inflation, job, kickbacks, Ladies, Military, Navy, panel, Pay, pension, Raises, recommendations, Remuneration, retrospective, salaries, Salary, She, SriKrishna, Staff, Timings, Women | Leave a Comment »

Angayarkkanni – Faces: Thiruchi Uraiyur Panchavaransamy Temple – Muthiah Vellaiyan

Posted by Snapjudge மேல் மார்ச் 24, 2008

முகங்கள்: நான்கு காலமும் ஓதும் குயில்!

முத்தையா வெள்ளையன்

திருச்சி- உறையூர் பஞ்சவர்ணசாமி திருக்கோயில். வைகறைப் பொழுது. கணீரென்று ஒலிக்கிறது தேவாரப் பாடல். “இதிலென்ன ஆச்சரியம்?’ என்று நினைக்கலாம். அந்தக் கோயிலில் தேவாரத்தைப் பாடிக் கொண்டிருந்தது ஒரு பெண்.

அவர் பெயர் அங்கயற்கண்ணி. திருப்பள்ளி எழுச்சி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்… எனப் பஞ்சவர்ணசாமி கோவிலின் நான்குகால பூஜையிலும் தேவாரம் ஒலிப்பது இவரின் குரலில்தான்!

இறைப்பணியைச் செய்து கொண்டிருக்கும் முதல் பெண் ஓதுவாரான அங்கயற்கண்ணி, இந்தப் பணியின் மேன்மை குறித்தும், அவர் இந்தப் பணிக்கு எப்படி வந்தார் என்பதைக் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…

“”திருச்சிக்குப் பக்கத்திலே இருக்கும் செம்பட்டு கிராமம்தான் என்னுடைய சொந்த ஊர். என் கூடப் பிறந்தவங்க ஆறு பேர். நான் நான்காவதா பிறந்தேன். அப்பாவுக்குத் தோல் பதனிடும் தொழிற்சாலையில் பணி. அவருடைய வருமானத்துக்கு ஏற்ப எங்களின் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டோம். நான் பள்ளிப் படிப்பை முடிச்சிட்டு, மேல் படிப்பு படிக்க ஆசைப்பட்டேன். குடும்ப சூழ்நிலையை நினைத்து செலவில்லாமல் படிக்க என்ன செய்யறதுன்னு தேடியபோது, சிலர் திருச்சி மாவட்ட இசைப் பள்ளியில் சேரலாம்னு சொன்னாங்க. என்னோட சின்ன வயசுலே தினமும் எங்க வீட்டுக்குப் பக்கத்திலிருக்கிற அங்களம்மாள் கோவிலுக்குப் போவேன். அங்கு ஒரு பெரியவர் வந்து தினமும் தமிழில் கணீரென்று பாடுவார். எங்களைப் போன்ற பிள்ளைகளையும் பாடச் சொல்லிக் கேட்பார். அந்த அனுபவம்தான் இசைப் பள்ளியில் சேர்வதற்கு எனக்குக் கை கொடுத்தது.

இசைப் பள்ளியில் மூன்றாம் வருடம் படிக்கும் போதுதான், இந்தப் படிப்பை முடித்தவர்கள் தமிழிசை கச்சேரி செய்யலாம் அல்லது கோவிலில் ஓதுவாராகப் பணியாற்ற முடியும்னு தெரிந்தது. சிறிது நாட்கள் கழித்து ஓதுவார் பணியில் சேர்வதற்கான முயற்சியை செய்து கொண்டிருந்தேன்.

எனது ஆசிரியர் சரவணன் மாணிக்கம் ஐயாதான் படிக்கும் போதும் சரி, நான் பணியைத் தேடிக் கொண்டிருந்த போதும் சரி எனக்கு நல் வழிகாட்டினார். நான் சோர்ந்து போன போது எல்லாம் பல கதைகளைச் சொல்லி என்னை உற்சாகப்படுத்துவார்.

இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அரசு இசைப் பள்ளி மாணவிகளை ஓதுவாராக அனுமதிக்க வேண்டும் என்று எப்போதும் கூறிக்கொண்டே இருப்பார் எனது ஆசிரியர்.

என் ஆசிரியரைப் போன்றவர்களின் தொடர் முயற்சியினால், 2006-ம் ஆண்டு அரசு உத்தரவு மூலம் தமிழ்நாட்டின் முதல் பெண் ஓதுவாரானேன். இந்த உத்திரவு வருவதற்கு முன் தினமும் கோவிலுக்குச் சென்று திருமுறைகளைப் பாடி வந்தேன். அந்த பயிற்சியின் போது ஓரளவுக்கு இருந்த பயமும் தெளிந்தது.

திருப்பள்ளி எழுச்சி, கால சந்திக்குப் பிறகு பாராயணம், உச்சிக்காலம்… என்று பாடிய பிறகு வீட்டுக்கு சாப்பிடப் போய்விடுவேன். மாலையில் சாயரட்சை, அதற்குப் பிறகு பாராயணம், அர்த்த ஜாமம்… என்று பாடிய பிறகுதான், ஒருநாள் முழுவதும் இறைவனைப் பாடிய திருப்தியோடு வீட்டிற்குப் போவேன்!

கோவிலில் நான் பாடும்போது, அதைக் கேட்கும் பெண்கள், “”சாமி சன்னதியில் பாடுவதற்கு நீ கொடுத்து வச்சிருக்கணும்மா… எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்காது..” -என்று சொல்வார்கள். எல்லாம் இறைவன் செயல் என்று நினைத்துக் கொள்வேன்.

பொதுவாக கோவிலில் ஆண் பணியாளர்கள் அதிகம் இருந்தாலும் என்னை மரியாதையோடுதான் நடத்துகிறார்கள்.

தேவாரமும், திருவாசகமும் முன்பு எல்லோர் வீடுகளிலுமே பெண்கள் பாடிய காலம் உண்டு. நாளடைவில் இந்தப் பழக்கம் பெண்களிடம் குறைந்துவிட்டது. மீண்டும் பெண்கள் தேவாரம், திருவாசகத்தைப் பாடவேண்டும்!” என்கிறார் அங்கயற்கண்ணி.

Posted in Angayarkanni, Angayarkkanni, Faces, Females, Hindu, Hinduism, Interview, music, people, She, Singer, Temple, Trichy | Leave a Comment »

U Nirmala Rani: Women Rights – Perspectives, Timeline, Information

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

“இரும்புத் தாடை தேவதைகள்’

வழக்கறிஞர் உ . நிர்மலா ராணி

இன்று சர்வதேச பெண்கள் தினம். 1908ம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாள் நியூயார்க் நகரில் ஆயிரக்கணக்கான பஞ்சாலை பெண் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை கோரி நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தை நினைவு கூறும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அந்தப் போராட்டத்தின் இரண்டாவது முக்கிய கோரிக்கை தான் பெண்களுக்கு வாக்குரிமை!

அந்தக் காலத்தில் வாக்குரிமை என்பது வசதி படைத்தவர்கள் அதிலும் ஆண்களுக்குத்தான் ஓட்டுரிமை. சொத்து வைத்திருக்காத ஆண்கள், வேலையாட்கள், கிரிமினல்கள் இந்த வரிசையில் இறுதியாகப் பெண்கள். இவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை மறுக்கப்பட்டது.

பெண்களுக்கு வாக்குரிமை கோரி நடந்த ஒரு நூற்றாண்டுப் போராட்டம்கூட வரலாற்றில் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் மறைக்கப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த சமூகப் போராளி எலிசபெத் கேண்டி ஸ்டாண்டன், லண்டனில் நடந்த அடிமை முறை எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றபோது, பெண்கள் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அடிமை எதிர்ப்பு மாநாட்டிலேயே பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவது கண்டு ஆத்திரமுற்ற எலிசபெத், 1848-ல் செனிகா ஃபால்ஸ் என்ற இடத்தில் பெண்களைத் திரட்டி கோரிக்கைப் பிரகடனத்தை வெளியிட்டார். அது தான் அமெரிக்காவில் பெண்கள் வாக்குரிமைக்கான போராட்டத்தின் முதல் வித்து!

ஆரம்பத்தில் வாக்குரிமை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சாத்வீகமான போராட்ட வடிவங்களைக் கையாண்ட பெண்கள், கறுப்பின மக்களுக்கு சம உரிமையளித்த “”சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்று விளம்பும் 14, 15 சட்ட திருத்தங்களிலிருந்து பெண்கள் மட்டும் விலக்கப்பட்டபோது பொங்கி எழுந்தனர்.

அமெரிக்காவில் எலிசபெத் கேண்டி ஸ்டாண்டன், சூஸன் பி ஆண்டனி, ஆலிஸ் பால் ஆகியோரும், இங்கிலாந்தில் எம்மலின் பாங்கர்ஸ்ட் மற்றும் அவரது 2 புதல்விகள் கிறிஸ்டபெல் மற்றும் சில்வியா ஆகியோரும் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தினர். நாடாளுமன்றமும் அரசு அலுவலகங்களும் முற்றுகையிடப்பட்டன. வாயில்களில் வாக்குரிமை கேட்டு பேனர் பிடித்தபடி நாள்கணக்கில் நின்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் காரி உமிழ்ந்தனர்.

கோபமடைந்த பெண்கள் அரசு அலுவலகக் கண்ணாடிக் கதவுகளை சரசரவென்று கல்லெறிந்து உடைத்து நொறுக்கினர். தந்தி வயர்களை வெட்டினர். அதிகாரிகளின் கார் கண்ணாடிகளைத் தூளாக்கினர். எரி குண்டுகளை வீசி அரசு அலுவலகங்களைத் தாக்கினர். கைதாகினர். சிறை சென்றனர். உண்ணாவிரதமிருந்தனர். சிறை அதிகாரிகள் வன்முறையை உபயோகித்த போதும் வாய் வழியாக அவர்களுக்கு உணவூட்ட இயலவில்லை. எனவே தான் இந்தப் பெண் போராளிகளுக்கு “இரும்புத் தாடை தேவதைகள்’ என்ற செல்லப்பெயர் சூட்டப்பட்டது. எனவே சிறை அதிகாரிகள் அவர்களைக் கட்டாயப்படுத்தி மூக்கின் வழியாக, குழாய் மூலமாக உணவைச் செலுத்தினர்.

உச்சகட்டமாக 1913 ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் எமிலி வைல்டிங் டேவிஸன் என்ற பெண்மணி பெண்களின் ஓட்டுரிமைக்காக யாரும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்தார். புகழ்பெற்ற குதிரைப் பந்தய மைதானமான டெர்பியில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் குதிரையான ஆன்மர், புயல் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது கையில் வாக்குரிமை கோரும் அட்டையுடன் குறுக்கே பாய்ந்தார் எமிலி! குதிரையின் கால்களில் மிதிபட்டு சின்னாபின்னமானார். வாக்குரிமைக்காக உயிர்த்தியாகம் செய்த ஒரே பெண் என்ற புகழையும் பெற்றார்.

இதையடுத்து இங்கிலாந்தில் 1918-ல் நிபந்தனையுடன் கூடிய வாக்குரிமையும், 1928-ல் முழுமையான வாக்குரிமையும் வழங்கப்பட்டது.

அமெரிக்காவிலும், 1919-ல் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் மசோதா, 19-வது சட்டத் திருத்தமாக நிறைவேற்றப்பட்டாலும் அமெரிக்க சட்ட விதிகளின்படி இந்தத் திருத்தம் சட்டரீதியாக்கப்பட வேண்டுமென்றால், 4-ல் 3 பங்கு மாகாணங்கள் அதாவது 36 மாகாண நாடாளுமன்றங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாகாண நாடாளுமன்றத்திலும் மசோதா நிறைவேற பெண்கள் போராட வேண்டியிருந்தது. மசோதா எதிர்ப்பாளர்கள் அதைத் தோல்வியடையச் செய்யும் பொருட்டு குறைந்தபட்ச கூட்ட வருகையை (கோரம்) தவிர்க்க இரவோடு இரவாக நாட்டை விட்டுப் பறந்தனர். கூட்டங்கள் நடத்த விடாமல் வெளிநடப்புச் செய்தனர். 35 மாகாணங்கள் அங்கீகரித்துவிட, கடைசி மாகாணமான டென்னிஸீயில் மசோதாவைத் தோற்கடிக்க போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்ப்பாளர்கள் தேற்றி வைத்திருந்தனர். மசோதா ஆதரவாளர்கள் மஞ்சள் ரோஜாவையும் எதிர்ப்பாளர்கள் சிவப்பு ரோஜாவையும் அணிந்திருந்தனர். இதைக் கணக்கெடுத்துப் பார்த்தபோது மஞ்சள் ரோஜாவை அணிந்தவர்கள் 47 பேர் எனவும் சிவப்பு ரோஜாவை அணிந்தவர்கள் 49 பேர் எனவும் தெரியவந்தது.

வாக்கெடுப்பின் முதல் சுற்றில் குடியரசுக் கட்சியை சார்ந்த பேங்க் டர்னர், தான் அணிந்திருந்த சிவப்பு ரோஜாவைத் தூக்கியெறிந்துவிட்டு தடாலடியாக அணி தாவினர். இதனால் இரண்டாவது சுற்றில் ஆதரவும், எதிர்ப்பும் 48 – 48 என்று சம நிலையிலிருந்தது.

3-வது சுற்றில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் அமெரிக்க பெண்களின் தலையெழுத்தையே மாற்றியது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 24 வயதான ஹாரிபர்ன் மசோதாவுக்கு எதிர்ப்பாளர். அவர் வாக்களிக்கப் போகும் இறுதி நொடியில் ஒரு துண்டுச் சீட்டு அவருக்கு வந்தது. அதைக் கண்ணால் ஸ்கேன் செய்த ஹாரிபர்ன் மசோதாவுக்கு ஆதரவாக கையைத் தூக்கி விட்டார். மசோதா நிறைவேற்றப்பட்டது. துண்டுச் சீட்டை அனுப்பியது அவருடைய தாயார் ஃபெப் என்ஸ்மிங்கர் பர்ன். அதில் “”நல்ல பையனாக நடந்து கொள்! பெண்கள் வாக்குரிமைக்கு ஆதரவாக ஓட்டுப்போடு” என்றிருந்தது. தாய் – தனயன் சென்டிமென்ட்தான் கடைசியில் அமெரிக்கப் பெண்களுக்கும் கைகொடுத்தது.

ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுப்பதற்கான முதல் படியை பெண்கள் வெற்றிகரமாகக் கடந்த பிறகும் கூட தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து மந்திரியாக நியமிக்கப்படுவது, அவர்களுக்கு வழங்கப்படும் துறைகள் வரை பெண்கள் இன்றும் பாரபட்சங்களை அனுபவித்து வருகிறார்கள். இதற்கு காரணம் பெண்களின் இடம் என்பது வீட்டின் மூலையில் ஒரு சமையலறையே தவிர நாடாளுமன்றம் அல்ல என்ற ஐயாயிரம் ஆண்டு மனப்போக்கு இன்னமும் மாறவில்லை.

பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து (1893). சமீபத்திய நாடு குவைத் (1995). இன்றும் வாக்குரிமை அளிக்க மறுப்பது சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளும்தான்!

உலகத்தின் முதல் பெண் மந்திரி 1917ல் ரஷியாவில் போல்ஷ்விக் கட்சியால் காபினெட் மந்திரியாக நியமிக்கப்பட்ட அலெக்ஸôண்டர் கோலந்தாய். இங்கிலாந்தில் கூட முதன்முறையாக 2006ல் தான் பரோனஸ் ஹேமேன் என்ற பெண்மணி சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

இண்டர் பார்லிமெண்டரி யூனியன் (ஐடம) என்ற அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி சர்வதேச அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 85 சதவீதம் ஆண்கள்தான்! உலக அளவில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகம் கொண்டவை (40 சதவீதம்) நார்வே, ஸ்வீடன், டென்மார்க் எனும் ஸ்காண்டிநேவிய நாடுகள்தான். இதில் இந்தியாவின் நிலைதான் மிக மோசம்.

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் பெண் உறுப்பினர்கள் 8.3 சதவீதம்தான். இதை சரிசெய்ய 1996ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடஒதுக்கீடு மசோதா இன்னமும் வெளிச்சத்தை காணவில்லை.

2002 – 2004ல் 20 சட்டமன்றங்களுக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்ட 2432 வேட்பாளர்களில் பெண்கள் 1525 பேர். அதாவது பாதிக்கு மேல்! ஆனால் ஜெயித்தது 137 பெண்கள்தான். இது 5.6 சதவீதம், 33 சதவீதம் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்திருந்தால் இன்று 811 பெண் உறுப்பினர்கள் சட்டமன்றங்களில் இருந்திருப்பார்கள்.

பெண் போராளி úஸô ஹைட் – 1916-ல் கனடாவின் நாடாளுமன்றத்தில் வாக்குரிமை மனுவைத் தாக்கல் செய்து பேசியபோது “”கணவான்களே! வாக்குரிமை மறுக்கப்பட்டவர்கள் பட்டியலில் பெண்கள் சேர்க்கப்படுவதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம். நாங்கள் முட்டாள்களும் அல்ல! முடியாதவர்களும் அல்ல! நாங்கள் பெண்கள்! வாக்குரிமையில் நாங்கள் சமத்துவம் கேட்பது சலுகையின் அடிப்படையில் அல்ல! நியாயத்தின் அடிப்படையில்” என்று முழங்கினார்.

இந்தியப் பெண்களாகிய நாங்களும் கேட்கிறோம்! நாடாளுமன்றவாதிகளே! தயவுசெய்து பாலின சமத்துவ நீதியின் மொழியிலே பேசுங்கள்! 33 சதவீதம் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுங்கள்! இந்திய நாட்டில் சமத்துவத்தை விரும்பும் ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதை உலகிற்கு உணர்த்துங்கள்!

Posted in Disparity, Elections, Females, Freedom, Gender, History, HR, Independence, Info, MLA, MP, NirmalaRani, Oppression, Politics, Polls, Power, rights, Sex, She, Stats, Timeline, Vote, voters, Women | Leave a Comment »

Ilavazhagi, the struggling world champion from Chennai

Posted by Snapjudge மேல் மார்ச் 6, 2008

கவர் ஸ்டோரி

வெற்றி என்னை ‘ஃபாலோ’ செய்யும்

யுகன்

“சுகாதாரமா அப்படின்னா?’ என்று கேட்குமளவுக்கு இறைந்து கிடக்கும் குப்பைக் கூளங்கள். முடை நாற்றம் எடுக்கும் சென்னை, வியாசர்பாடியின் சாமந்திப்பூ(?!) காலனி. ஓர் உலக சாம்பியனின் வீடு இங்கேதான் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும்!

சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடந்த உலகளாவிய கேரம் விளையாட்டில் பெண்கள் பிரிவில் உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார் இளவழகி. பத்தாவது வரை மட்டுமே படித்திருக்கும் இந்த உலக சாம்பியனை, நான்கு பேரோடு சேர்ந்து கேரம் போர்ட் கூட விளையாட முடியாத அளவுக்கு நெருக்கடியில் இருக்கும் அவரின் “ஹவுஸிங் போர்ட்’ வீட்டில் சந்தித்தோம்.

“”என்னுடைய அப்பா இருதயராஜ்தான் என் கேரம் போர்ட் குரு. அவர் ரிக்ஷா ஓட்டுகிறார். அம்மா- செல்வி குடும்பத் தலைவி. தங்கை, இலக்கியா, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.காம். படிக்கிறார். இன்னொரு தங்கை, செவ்வந்தி ஒன்பதாவது படிக்கிறார். என்னுடைய அப்பா, போட்டிகளில் கலந்து கொண்டு மெடல்கள் வாங்கவில்லையே தவிர, எனக்கு கேரம் விளையாட்டில் நிறைய ஆட்ட நுணுக்கங்களைச் சொல்லித் தருவார். அப்பாவின் நண்பர் ஆறுமுகம் என்பவர் எங்களின் வீட்டுக்கருகில் போர்ட்-ரூம் வைத்திருந்தார். அங்கு போய் விளையாடியும், பிறர் விளையாடுவதைப் பார்த்தும்தான் நான் என்னுடைய விளையாட்டை வளர்த்துக் கொண்டேன். நான் விளையாடும் முறையைப் பார்த்து என்னை டோர்னமென்ட்களில் விளையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்னுடைய அப்பாதான்.

நான் மாநில அளவிலும், தேசிய அளவிலும் எல்லாப் போட்டிகளிலும் பங்கெடுப்பதற்கு காரணமாக இருந்தவர், இப்போது நான் பிரான்ஸ் செல்வதற்கும் காரணமாக இருந்தவர் கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ். தான். அவர் அளித்த ஊக்கம்தான் நான் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியனாகியிருப்பதற்கு அடிப்படை. என்னுடைய வெற்றியை அவருக்குத்தான் நான் சமர்ப்பிப்பேன்.

உலக அளவில் கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே கேரம் போர்ட் விளையாட்டைப் பொறுத்தவரையில் இந்தியாதான் சாம்பியன். அதிலும் தமிழ்நாடுதான் முன்னிலையில் இருக்கிறது. இந்த வருடம் பிரான்ஸில் நடந்த உலக சாம்பியன் போட்டியில், 20 நாடுகள் பங்கேற்பதாக அறிவித்திருந்தன. ஆனால் இறுதியாகப் பங்கெடுத்தது 12 நாடுகள்தான். ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, இத்தாலி, கானடா, மாலத்தீவுகள், கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகள் பங்கேற்றன. ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஆண்களில் 8 வீரர்களும், பெண்களில் 8 வீரர்களும் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து சென்றவர்களில் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களே 6 பேர்!

முதலில் அனைத்து நாட்டு வீரர்களையும் நான்கு பிரிவுகளாகப் பிரித்துவிடுவார்கள். ஒவ்வொரு பிரிவில் இருப்பவர்களும், இன்னொரு பிரிவினரோடு மோதுவார்கள். இது “லீக்’. இப்படி நடந்த “லீக்’ ஆட்டத்தில் ஸ்ரீலங்கா வீராங்கனையான குமாரியுடன் ஆடிய ஆட்டம் மிகவும் சிறப்பாக அமைந்தது.

செமி-ஃபைனல் முழுவதும் நாக்-அவுட் முறையில் நடந்தது. செமிஃபைனலில் நான் (25, 11) (25, 14) ஆகிய பாயின்ட்களில் பீகாரைச் சேர்ந்த ராஷ்மி குமாரியைத் தோற்கடித்தேன். இன்னொரு செமிஃபைனலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த நிர்மலா, முன்னாள் உலக சாம்பியனான ரேவதியைத் தோற்கடித்தார்.

ஆக, நான் ஃபைனலில் சக இந்திய வீரரான நிர்மலாவுடன்தான் ஆடினேன். என்னுடைய ஆட்டமுறை, “டிஃபென்ஸ்’ பற்றியெல்லாம் யோசிக்காமல், காய்களைப் பாக்கெட் செய்வதில் குறியாக இருப்பதுதான். மிக..மிக.. நெருக்கடியான போட்டியாக இது அமைந்தது. (25, 11) (25,11) ஆகிய பாயின்ட்களில் நான் வெற்றி பெற்றேன். இந்தப் போட்டியில் பங்கெடுத்த பெண்களிலேயே நான்தான் மிகவும் வயது (23) குறைவானவள். இரட்டையர் போட்டியிலும் நான் “ரன்னர்-அப்’பாக வந்தேன்.

ஸ்ரீலங்கா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் நடந்த கேரம் விளையாட்டுகள் பலவற்றில் நான் ஜெயித்திருக்கிறேன். தில்லியில் 2006-ல் நடந்த உலகக் கோப்பை கேரம் போட்டியிலும் நான் சாம்பியன் பட்டத்தை வென்றேன். ஏறக்குறைய 12 வருடங்களாக கேரம் போர்டில் தேசிய அளவிலும், உலக அளவிலும் சாதித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களின் மீது மீடியாவின் வெளிச்சம் இப்போதுதான் மிக அதிகமாகப் பட்டிருக்கிறது.

வாடகை வீட்டில்தான் வசிக்கிறோம். இருப்பதற்கு வீடும், விளையாட்டுத் துறைக்கான ஒதுக்கீட்டில் எனக்கு ஓர் அரசுப் பணியும்தான் என்னுடைய கோரிக்கை.

“”ரிக்ஷா ஓட்டியான உன்னோட பொண்ணுக்கு கேரம்போர்டெல்லாம் தேவையா? பேசாம ஏதாவது வேலைக்கு அனுப்புறதைப் பார்ப்பியா…” என்று என் காதுபடவே, என் அப்பாவிடம் கிண்டல் தொனிக்கப் பேசியவர்கள்… (கண்கள் கசிய… பேச்சு தடைபடுகிறது.. சமாளித்துக் கொண்டு பேசுகிறார்) எத்தனையோ பேர். அப்பா வாங்கிக் கொடுத்த “பில்லியர்ட்ஸ் பால்’ ஸ்டிரைக்கரில் தான் இப்போதும் ஆடுறேன். எட்டு வருஷத்திற்கு முன்பே இதன் விலை 300 ரூபாய்!

நான் ஒவ்வொரு முறையும் “ரெட்’ காய்னப் பாக்கெட் செய்துவிட்டு, “ஃபாலோ’வுக்குக் குறிபார்க்கும் போதெல்லாம், தொடர்ந்து எங்கள் குடும்பத்தை “ஃபாலோ’ செய்து கொண்டிருக்கும் வறுமைதான் என் நினைவுக்கு வருகிறது. வறுமையில் இருந்தாலும்… என் திறமையின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் வெற்றி என்னை “ஃபாலோ’ செய்கிறது. இனிமேலும் செய்யும். வெளிநாட்டிற்காக விளையாட எனக்கு ஐந்து வருடங்களாகவே வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. என் திறமைக்கு என் நாட்டிலேயே மரியாதை கிடைக்கும் என்று காத்திருக்கிறேன்…” என்றார் சென்டர்-கட் செய்து, ஃபாலோவை போட்டபடி இளவழகி!

Posted in Achievements, Carom, carrom, carroms, Champion, Chennai, Females, Finals, Games, global, Ilavalagi, Ilavazagi, Ilavazhagi, International, Lady, Medals, She, Sports, Women, World, Young, Youth | Leave a Comment »

Women in India: Serving in the Indian Army – Gender equality in Military, Navy, Air Force

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

சேவை: இராணுவத்தில் பெண்கள்!

மு.வெ.

ஆணுக்கு பெண் நிகர் என்று சொல்லி பல வருடங்களாக ஆகிவிட்டன. உண்மையில் அப்படி இருக்கிறதா? பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீட்டில் இன்னும் பிரச்சினைகள் இருந்தாலும், ஆங்காங்கே சில நம்பிக்கை தரக்கூடிய விஷயங்களும் தென்படுகின்றன. அப்படிப்பட்ட நம்பிக்கை அளிக்கும் ஒன்றுதான், நமது இந்திய இராணுவத்தில் பெண்களின் பங்களிப்பும்.

இந்திய இராணுவத்தில் 1993-ஆம் ஆண்டில்தான் பெண்கள் சேர்க்கப்பட்டனர். ஜூனியர் லெவல் கிரேடில் அப்போது வேலை நிறைய காலியாக இருந்தது. அந்த சமயத்தில் பெண்கள் சேர்க்கப்பட்டனர்.

பொதுவாக இருபத்தியொரு வயது முதல் இருபத்தி ஐந்து வரை வயதுள்ள பெண்கள் ஆறு மாதத்திற்கொருமுறை சுமார் 5000 பேர் விண்ணப்பிக்கிறார்கள். ஆனால் அவர்களிலிருந்து தேர்வு செய்யப்படுகிறவர்களோ வெறும் பத்து பேர் மட்டும்தான்! தேர்வு செய்யப்படுகிறவர்கள் ஐந்து வருடம் ஆபீஸர் கிரேடில் பணிபுரிவார்கள். அவர்கள் மேலும் சிறப்பாகப் பணிபுரிந்தால் மேலும் ஐந்து வருடம் பணி நீட்டிக்கப்படும்.

இவர்களுக்கு ஒன்பது மாதம் டிரெயினிங் கொடுக்கப்படுகிறது. இராணுவத்தில் வெவ்வேறு இடங்களில் பணியிலிருக்கும் ஆண், பெண் இருவரும் திருமணம் செய்து கொண்டால், அவர்கள் ஒரே இடத்தில் பணியில் இருக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இராணுவத்தில் பணியிலிருக்கும் காவாலி, “”பொதுவாக ஸ்போர்ட்ஸ், என்.சி.சி.யில் இருந்த பெண்கள்தான் அதிகமாக இராணுவத்தில் சேர்கிறார்கள். ஆண்கள் அளவுக்கு எங்களுக்கு வேலைப் பளு அதிகம் இல்லை என்றாலும், போதிய அளவு சம்பளமும், சமூகத்தில் மரியாதையும் கிடைக்கின்றது. ஆண்களுக்கு இணையாக எங்களுக்கும் பயிற்சி கொடுக்கப்படுகின்றது. நாங்கள் சல்வார் கமீசில் இருக்கும் போதுதான் பெண்கள் என்று உணருகிறோம்” என்கிறார்.

இராணுவத்தில் பொறியியல், கல்வித் துறை, சிக்னல்ஸ், ஹாஸ்பிடல் போன்ற துறைகளில் பெண்களுக்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது. 2005-ன் கணக்குப்படி இராணுவத்தில் 40000 ஆண் அதிகாரிகளுக்கு 918 பெண் அதிகாரிகளும், கடற்படையில் 6000 ஆண் அதிகாரிகளுக்கு 100 பெண் அதிகாரிகளும், விமானப்படையில் 15000 ஆண் அதிகாரிகளுக்கு 454 பெண் அதிகாரிகளும் உள்ளனர்.

அதிகம் படிக்காதவர்கள் தான் பெரும்பாலும் இராணுவத்தில் சேருவார்கள் என்ற நிலை இருபது வருடங்களுக்கு முன்னால் எல்லாம் இருந்தது. ஆனால் இந்த நிலையையும் தற்போதைய பெண்கள் மாற்றி விட்டனர். எம்.பி.ஏ., படித்திருக்கும் ரேணுதத்தா, “”இராணுவப் பணியை பாதுகாப்பானதாகவும், சவாலானதாகவும் உணர்கிறேன்” என்கிறார்.

Posted in Airforce, doctors, Education, Employment, Engg, Engineering, Equality, Females, Gender, Generals, Hospital, inequality, Infantry, Jobs, Males, medical, Men, Military, Navy, NCC, Nurses, officers, Opportunities, Pilots, Signals, Sports, Uniform, Women | Leave a Comment »

List of Firsts – Tidbits, Trivia on Women achievements

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

சுவடுகள்: பெண்கள் முதல் முதலாய்…

யுகன்

திரும்பிப் பார்ப்பது எப்போதுமே சுகமான விஷயம்தான். அது தனிப்பட்டவர்களின் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, வரலாற்றின் பக்கங்களாக இருந்தாலும் சரி. இன்றைக்குப் பெண்கள் இல்லாத துறையே இல்லை எனலாம். இந்தியாவில் பல துறைகளில், பொறுப்புகளில் முதல் முதலாய் இடம்பிடித்த சிலரைப் பற்றிய ஞாபகங்கள் இங்கே…

1905

சுஸôன்னே ஆர்டி டாட்டா என்னும் பெண்மணிதான் இந்தியாவில் முதன்முதலாக கார் ஓட்டியவர்.

1916

தோண்டோ கேசவ் கார்வ் என்பவரால் பெண்களுக்கான முதல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. முதலாண்டில் எத்தனை மாணவிகள் படித்தார்கள் தெரியுமா? ஐந்து பேர்!

1927

அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது.

1951

டெக்கான் ஏர்வேஸில் பயணிகள் விமானத்தை செலுத்திய முதல் பெண் விமானி பிரேம் மாத்தூர்.

1959

அன்னா சாண்டி இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.

1966

கேப்டன் துர்கா பானர்ஜி, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானச் சேவையின் முதல் பெண் விமானியாவார். இதே ஆண்டில், கமலாதேவி சடோபாத்யாய “மகசேசே’ விருதைப் பெற்றார். இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இந்திரா காந்தி பதவியேற்றார்.

1970

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கமல்ஜித் சாந்து முதன் முதலாக தங்கப் பதக்கம் வென்றார்.

1972

இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ். அதிகாரியாக கிரண் பேடி காவல் துறையில் பதவியேற்றார்.

1989

முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக எம். பாத்திமா பீவி பதவியேற்றார்.

1997

கல்பனா சாவ்லா, விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்னும் சாதனைக்குச் சொந்தக்காரர்.

2005

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த மந்திர் ராஜ்புட், முதல் பெண் ரயில் எஞ்சின் ஓட்டுனராக ஆஸ்திரேலியா வேல்ஸ் ரயில் கார்ப்பரேஷனில் பணிபுரிந்து சாதனை படைத்தார்.

2007

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக இருப்பவர் பிரதிபா பாட்டீல்.

Posted in Achievements, Faces, Females, first, History, Ladies, Lists, names, people, She, Trivia, Woman, Women | Leave a Comment »

The History of Sarees – Art of wearing saris, Tamil Nadu Heritage & Culture, Textile Commerce

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

நீலக் கலரு ஜிங்கிச்சா.. பச்சைக் கலரு ஜிங்கிச்சா!

தேவி கிருஷ்ணா


புடவைக்கு ஆசைப்படாத பெண்ணும் உண்டா? வாங்குகிறார்களோ, இல்லையோ புடவைகளைக் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்ப்பதற்காகவாவது புடவைக் கடைகளுக்கு விசிட் அடிக்காதவர்கள் தமிழ்நாட்டில் கம்மி. புடவை மீது பெண்களுக்கு இருக்கும் ஆசைக்கு சற்றேறத்தாழ மூவாயிரம் ஆண்டு சரித்திரம் இருக்கிறது என்கிறார் “நூலோர்’. புடவையின் சரித்திரத்தைப் பார்ப்போமா?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் வரலாற்றில் சேலை இடம் பெற்றிருந்தது. சங்க காலத்துக்கு முன்பு தாழையையும் பூவையையும் சேர்த்து உருவாக்கப்பட்ட தாழை ஆடைகளை பெண்கள் அணிந்து வந்தார்கள். உடைகளை கொடிகளாலும் நொச்சி இலைகளாலும் ஆக்கிக் கொண்டார்கள். விழாக் காலங்களில் நெய்தல் மலர்களால் தாழையுடை செய்தார்கள். இடுப்பிலும் மார்பிலும் மகளிர் தாழையுடை அணிந்தார்கள் என சங்ககால வாழ்வியல் கூறுகிறது. காலம் செல்ல பருத்தி உடையும் பட்டு உடையும் அணிந்தார்கள்.

பருத்தி உடை முதன்முதலில் தமிழ்நாட்டில்தான் ஆரம்பிக்கப்பட்டது என்றும் இங்கிருந்து மேல் நாடுகளுக்குப் பரவியது என்றும் வயர்சாண் மார்சல் கூறுகிறார். பால் ஆவி போன்ற மெல்லிய துணிகளும் பாம்பு தோல் போன்ற அழகான துணிகளும் காகிதம் மெல்லிய துணிகளும் சாக்கு போன்ற முரட்டுத் துணிகளும் நெய்யப்பட்டன. இங்கிருந்து மாதூரம் எனப் பெயர் பெற்ற புடவைகள் காசி, பாடலிபுரம் முதலிய இடங்களுக்கு அனுப்பப்பட்டது என்று 3-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அர்த்த சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ரோம் முதலிய நாடுகளுக்கும் துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

அன்று நெசவு செய்பவர்கள் காருகர் என்று அழைக்கப்பட்டனர். வடகம், பாடகம், கோங்கலம், சித்திர கம்பி, பேடகம் எனப் பல பெயர்களில் ஆடைகளை சூடி மகிழ்ந்தனர். நீலம், சிவப்பு, மஞ்சள், கருப்பு முதலிய நிறங்களில் ஆடைகள் நெய்யப்பட்டன. அவற்றில் நுண்ணிய வேலைப் பாடுகள் இருந்தன. பருத்தியும் பட்டும் கொண்ட துணிகள் துகில் எனப்பட்டன.

நீளமாக நெய்யப்பட்ட துணிகள் பிறகு வெட்டப்பட்டு வேட்டிகளாகவும் துண்டுகளாகவும் பயன்படுத்தினர். இதனால் இவை அறுவை என்றழைக்கப்பட்டது. பருத்திப் புடவைகளுக்கு கலிங்கம் எனப் பெயர். பட்டு ஆடைகள் நூலாக் கலிங்கம் எனப்பட்டது.

நெய்வதில் தேர்ந்த தமிழன் அதற்கு சாயம் தீட்டுவதிலும் சிறந்து விளங்கினான். மலர்கள், செடி- கொடிகள், இலைகள் ஆகியவற்றின் சாறுகளில் வண்ணமேற்றினான். அவுரி செடியிலிருந்து ஏற்கப்பட்ட சாயம் ஐரோப்பியர்களின் மனதைக் கவர்ந்தது. இதில் இருந்து கிடைத்த நீல நிறச் சாயத்தை இண்டிகோ என்று அழைத்தனர்.

கடுக்காய், கொன்றைப் பூ போன்றவையும் சாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டன.

நாகரிகம் வளர வளர துணிகளின் ரகங்களும் வண்ணங்களும் மேலும் சிறப்படைந்தன. 18-19 ஆம் நூற்றாண்டுக்குச் செல்வோம். புடவைகள் முப்பாக சிறப்படைந்தன. அதாவது உடல், பார்டர், முந்தி என மூன்று பகுதிகள் உள்ள புடவைகள். ஆட்டுமுழி, புளியங் கொட்டை, சொக்கட்டான், வைரஊசி, பாய் பின்னல் மற்றும் மயில் கழுத்து, கிருஷ்ண மேகவர்ணம் போன்ற இரட்டைக் கலப்பு நிறங்களும் மோஸ்தராக இருந்தது.

முன் காலத்தில் காஞ்சிப்பட்டு சேலைகள் கனமாக இருக்கும். ஒரு புடவை 2 சேர், 3 சேர் (பழைய அளவுகள்) எடை இருக்கும். ஜரிகையையும் வேலைப் பாட்டையும் பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படும். ஆனால் இப்போது பெண்கள் வெயிட் இல்லாத புடவைகளையே விரும்புகிறார்கள். டெஸ்ட்டட் ஜரிகைப் புடவைகள் என்பவை தாமிரத்தில் தங்க முலாம் பூசுவார்கள். இவை எடை குறைவாக இருக்கும்.

பெரிய விலை கொடுத்து வாங்கும் பட்டுச் சேலைகளை எப்படி பராமரிப்பது?…

புடவைகளை பீரோக்களில் வைக்கும் போது ஒரு மெல்லிய மல்-மல் துண்டில் சுற்றி வைத்தால் ஜரிகை கருக்காமல் புடவை புத்தம் புதிதாக இருக்கும். கொஞ்சம் சூடம் அல்லது நெப்தலின் உருண்டைகளையும் பீரோ தட்டுகளில் போட்டு வைக்க வேண்டும்.

ஒவ்வொரு தடவையும் புடவையைக் கட்டிய பிறகு அதை காத்தாட வெளியில் போட்ட பிறகு மடித்து வைக்கவும். மழைக்காலத்தில் பட்டுப் புடவைகளை இளம் வெயிலில் கால் மணி நேரம் போட்டு எடுத்து வைக்க வேண்டும். இப்படி செய்தால் புடவை 70 ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும்.

பூந்திக் கொட்டையை இடித்து அதைத் தண்ணீரில் போட்டு ஊர வைத்தால் சோப்புத் தண்ணீர் மாதிரி கிடைக்கும். அதைக் கொண்டு கையினால் புடவைகளைக் கசக்கிப் பிழிந்து காய வைத்தால் பட்டின் பளபளப்பும் மென்மையும் காக்கப்படும்.

போதுமா புடவை கதை?
—————————————————————————————————————————————————————————
ஒலையில் நெய்த சேலை!

நாகரீகத்தின் வேகமான வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும்விதத்தில் புதுப்புது வகைகளிலும், விதங்களிலும் செயற்கை நூலிழைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய சேலை வகைகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. என்னதான் செயற்கை இழைகளின் மீதான மோகம் நம்மை ஈர்த்தாலும், இயற்கை வழியில் தாவர நாரைப் பயன்படுத்தி ஆடைகளை உருவாக்கும் முயற்சிகளும் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன.

இந்த வகையில் ஏழைகளின் கற்பக விருட்சம் என அழைக்கப்படும் பனை மரத்தின் ஓலைகள் தற்போது நவநாகரீக சேலைகள் நெய்யவும் பயன்படும் என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாகச் சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

ஏற்கெனவே, சணல், வாழை நார் உள்பட பல்வேறு தாவர இழைகளைப் பயன்படுத்தி சேலைகளை உருவாக்கிச் சாதனை புரிந்து வரும் இச் சங்கத்தினர் தற்போது பனை ஓலையிலும் சேலை நெய்யமுடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.

விசைத்தறி, செயற்கை இழை ஆடைகள் என பல்வேறு போட்டிகளுக்கிடையே பாரம்பரிய கைத்தறி நெசவுத் துறையை நம்பி அதனை முன்னிலை படுத்தும் பல்வேறு கட்டங்களில் போராடி வருகிறார் அனகாபுத்தூர் சணல் நெசவாளர்கள் சங்கத்தின் தலைவர் சேகர். இந்தச் சோதனையான காலகட்டத்திலும் புதிய சாதனைகளை நிகழ்த்தி வரும் சேகர் “”வாழை நார் உள்ளிட்ட பல்வேறு தாவர இழைகளைப் பயன்படுத்தி சேலைகளை உருவாக்கி வருவதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உள்நாட்டில் மட்டுமல்லாது கடல்கடந்தும் பல்வேறு வெளி நாடுகளிலும் இவ்வாறு தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

குறிப்பாக ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இத்தகைய புதிய முயற்சிகளுக்கு அந்தந்த நாட்டு அரசுகளிடம் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.

சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் இத்தகைய சேலை ரகங்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது.

இந் நிலையில் கோவையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி பனை ஓலையில் சேலை நெய்ய முடியும் என நம்பினார். பல்வேறு தாவர இழைகளைப் பயன்படுத்தி வரும் எங்களை அந்த மாணவி அணுகினார்.

வெளிப்படையாகத் தெரியும் சில அம்சங்களால் பனை ஓலையை ஆடை ரகங்களை நெய்ய பயன்படுத்த முடியாது எனப் பலரும் நினைத்தனர். நாங்கள் பனை ஓலையை மிகமிக மெல்லிய இழைகளாகப் பிரித்தோம். பின்னர் பருத்தி நூலிழைகளுடன் பனை ஓலை இழைகளைக் குறுக்காகப் பயன்படுத்தினோம். இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தது.

சேலையில் டிசைகள் வரும் இடங்களில் வழக்கமான இழைகளுடன் பனை ஓலை இழைகளைப் பயன்படுத்தியது சிறப்பாக அமைந்தது. இது சேலைக்குப் புது பொலிவை அளிப்பதாக அமைந்தது. தற்போது ஒரு சேலையில் பருத்தி இழைகளுடன் சுமார் 40 சதவீத அளவுக்குப் பனை ஓலை இழைகளைப் பயன்படுத்தி வருகிறோம். பனை ஓலை இழைகளை இயந்திரங்களைப் பயன்படுத்தி மேலும் மெல்லிய இழைகள் எடுத்தால் சேலையில் இதன் அளவை மேலும் அதிகரிக்க முடியும். இதற்கு அரசின் தொழில்நுட்ப உதவி அவசியமாகிறது. பனை ஓலையைப் பயன்படுத்தி நெய்யப்படும் சேலைகள் செயற்கை இழை சேலை மோகத்தில் இருந்து மக்களின் கவனத்தைத் தாவர நாரின் பக்கம் இழுக்கும் என்பதில் ஐயமில்லை” என்கிறார் சேகர் நம்பிக்கையுடன்.

ஆதி மனிதன் இலையைத்தான் ஆடையாகப் பயன்படுத்தினான் இப்ப… ஓலை சேலை…!

வி. கிருஷ்ணமூர்த்தி

புதுமை பூக்கும் புடவைகள் « Snap Judgment

Posted in Chennai, Commerce, Cotton, Culture, Deepavali, Designer, Diwali, Expensive, Fabrics, Females, Garments, Her, Heritage, History, Ladies, Lady, Rich, Sarees, Saris, She, Shopping, Silk, Tamil Nadu, TamilNadu, Textiles, Women | Leave a Comment »

Leena Manimekalai: Chennai Loyola College & Thupatta Police

Posted by Snapjudge மேல் திசெம்பர் 17, 2007

துப்பட்டாவில் படபடக்கும் தமிழ்க் கலாசாரம்

லீனா மணிமேகலை

அறிவும் ஆற்றலும் கொண்ட பெண் இந்த சமூகத்தில் தனிமனிதராக மதிக்கப்படுகிறாரா என்ற கேள்விக்கு “இல்லை’ என்று சொல்லவேண்டிய இடத்தில்தான் நாம் இப்போதும் இருக்கிறோம்.

பெண்ணின் இருப்பு வெறும் உடலாகவே கணக்கிடப்படுகிறது. இந்திய – குறிப்பாக – தமிழ்ச் சமூகத்தின் கலாசார நடவடிக்கை என்பது பெண்ணுடல் மீதான கண்காணிப்பாகவும் விசாரணையாகவுமே குறுகிக் கிடக்கிறது.

சமூகம், முதலில் தனது அதிகார இயந்திரங்களான மதத்தையும் சாதியையும் கொண்டு பெண்ணின் விருப்பங்களையும் தேர்வுகளையும் கட்டுப்படுத்துகிறது. அடுத்ததாக கற்பு / தாய்மை போன்ற கற்பிதங்களால் பெண்ணின் காதல் / காமம் ஆகிய உணர்வுகளைக் கட்டமைக்கிறது.

தொடர்ச்சியாக குடும்பம், உழைக்குமிடம் தவிர்த்த பெண்ணின் வெளியையும் மறுதலிக்கிறது. இந்த வரையறையிலிருந்து விலகி தனித்த அடையாளத்துடன் ஒரு பெண் தனக்கென பாதையை வகுத்துக்கொள்ள முற்படும்போது அது குருட்டுச்சந்தாகவே முடிகிறது என்பதுதான் கசப்பான உண்மை.

சமீபத்தில் சென்னை லயோலா கல்லூரியில் காட்சி ஊடகவியல் துறையினர், “கனாக்களம் – 2007′ என்கிற கருத்தரங்கின் கலந்துரையாடலில் “சினிமாவும் சமூகமும்’ என்னும் தலைப்பில் என்னைப் பேச அழைத்திருந்தனர். காலை பத்து மணியளவில் கல்லூரி வாசலை அடைந்த என்னை நிறுத்திய கல்லூரியின் காவலர்கள், அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கேட்டனர். நான் அழைப்பிதழைக் காட்டினேன்.

“உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் ஜீன்ஸýம் குர்தாவும் அணிந்திருக்கிறீர்கள் – துப்பட்டா அணியவில்லை’ என்றார்கள். ஒரு நிமிடம் எனக்குத் தலைசுற்றியது; நான் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேனா அல்லது தாலிபான்களின் ஆப்கானிஸ்தானில் இருக்கிறேனா என்ற இடக்குழப்பம் ஏற்பட்டது.

கிணுகிணுத்த கைபேசியைத் தட்டினால் அமைப்பாளர்கள், “சிறிது நேரம் பொறுங்கள், நாங்கள் வந்துபேசி அழைத்துச் செல்கிறோம்’ என்றார்கள். நிமிடங்களில் ஒரு மாணவி ஓடிவந்து கறுப்புத் துப்பட்டாவைத் தந்து “இதை அணிந்துகொண்டு உள்ளே வாருங்கள்’ எனக் கெஞ்சும் தொனியில் கேட்டபோது எனக்குச் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை.

“”சுதந்திரமாக ஆடையணிந்துகூட வரமுடியாத இடத்தில், சுதந்திரமான சினிமாவை நேசித்துப் பணியாற்றிக் கொண்டிருக்கும் எனக்கு எந்தப் பணியும் இல்லை” என்று மட்டும் குறிப்பிட்டுவிட்டுத் திரும்பிவிட்டேன்.

அழைப்பிதழில் இடம்பெற்றிருந்த மற்ற பேச்சாளர்களான பாலுமகேந்திரா, பாமரன், ஞாநி, வசந்தபாலன், எஸ். ராமகிருஷ்ணன், லெனின், அஜயன்பாலா ஆகியோர் ஆண்களாக இருந்ததால், அவர்களுக்குத் துப்பட்டா பிரச்னை இருந்திருக்காது என்று சிந்தனை ஓடியது.

கல்வி நிலையங்கள் தமிழ்க் கலாசாரத்தைத் துப்பட்டாவில் கட்டிக்காக்கும் அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டனவா என்று கடுங்கோபம் வந்தது. பதினெட்டு வயதில் தங்கள் நாட்டை யார் ஆள வேண்டும் என்று முடிவு செய்யும் ஓட்டுரிமை பெற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்குத் தங்களுக்கான உடையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மறுப்பதையே பல தளங்களில் நான் எதிர்த்துப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன்.

எழுத்தும் சினிமாவுமாக விடுதலையைப் பற்றிய சிந்தனையையும் படைப்புகளையும் மட்டுமே சுவாசித்துக் கொண்டிருக்கும் என்னை, நிகழ்ச்சிக்கு விருந்தினராக அழைத்து, துப்பட்டாவைக் கொடுத்து, என் இருப்பையே கேள்விக்குறியாக்கிவிட்ட லயோலா கல்லூரி எனக்கு என்ன பதில் வைத்திருக்கிறது?

ஒவ்வோர் ஆண்டும் தரத்தின் அடிப்படையிலான சர்வேக்களில், இந்தியாவின் சிறந்த கல்லூரிகளின் தரவரிசையில் ஐந்து முதல் பத்தாம் இடத்திற்குள் ஸ்டார் தகுதியில் இடம்பிடிக்கும் லயோலா கல்லூரி, தனி மனித உரிமைக்குத் தரும் மரியாதையில் எந்த இடத்தில் தன்னை நிறுத்திக் கொள்கிறது?

பல கல்லூரிகளில் நடைமுறையிலிருக்கும் பெண்களுக்கான உடை பற்றிய கோட்பாடுகளின் வரலாறு மிக சுவாரஸ்யமானது. கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள், மாணவிகளின் உடை விஷயத்தால் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள்-படிப்பிலும் கவனம் செலுத்த முடிவதில்லை. அதனால் கல்லூரி மேலாண்மை மாணவிகளின் உடைகளில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்களாம். உடனே கல்லூரி நிர்வாகம் மாணவிகளுக்குத் துப்பட்டா கட்டளைகளைப் பிறப்பித்திருக்கிறது; ஜீன்ஸிற்குத் தடா போட்டிருக்கிறது என்று கேள்வி.

இதை விசாரித்துக் கொண்டிருக்கும்போது எனது தோழரும், பெண்ணிய சிந்தனையாளரும், எழுத்தாளருமான ஓவியா ஒரு வரலாற்று நிகழ்ச்சியை நினைவுபடுத்தினார். சுதந்திரத்திற்கு முன் நமது நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி, கல்லூரியில் அனுமதி கேட்டபோது மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் “ஒரு பெண் கல்லூரிக்கு வருவதா, எங்கள் பிள்ளைகள் கெட்டுப்போவார்கள் – நாங்கள் விண்ணப்பங்களைத் திரும்பப் பெறுவோம்’ என்று சொன்னார்களாம். அதைக் கேள்விப்பட்டு கலக்கமுற்ற தாளாளர், அன்றைய அரசுப் பிரதிநிதியான வெள்ளைக்கார கவர்னரிடம் முறையிட்டாராம்.

வெள்ளைத்துரை அதற்கு, “பரவாயில்லை, அந்தப் பெண் மட்டும் படித்தால் போதும், மாணவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்’ என்றாராம். அந்த வெள்ளைத்துரைக்குப் பாவம் நமது கலாசாரம் தெரியவில்லை. தவறு செய்துவிட்டார்! சுதந்திர இந்தியாவின் கல்லூரி நிறுவனர்கள் அந்தத் தவறைச் செய்வார்களா என்ன? அப்புறம் தமிழ்க் கலாசாரம், பண்பாடெல்லாம் என்னாவது?

பெற்றோர்களை தங்கள் பிள்ளைகளுக்குப் புலனடக்கம் கற்றுத்தரச் சொல்லியனுப்பாமல், மாணவிகளுக்கு உடைக் கோட்பாடுகளைப் பிறப்பிக்கிறார்கள். நிச்சயம் மாணவர்கள் அணியும் உடையில் நமது மாணவிகள் மனக்கிலேசம் அடைய மாட்டார்கள். அப்படியே இருந்தாலும், சிரிப்பையும் சிறுநீரையும்கூட சிறுவயதிலிருந்து அடக்கப் பழகியிருக்கும் நமது பெண்களுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்?

எது எப்படியோ, துப்பட்டாவை எடுத்துவந்து என்னை அணிந்துகொள்ளச் சொன்ன மாணவியின் முகம் என்னைத் தூங்கவிடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது. எப்படிப்பட்ட கோழைப் பூச்சிகளாக மாணவ சமுதாயத்தை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்? “உனக்குச் சுதந்திரம் வழங்க மறுக்கும் சமூகத்திடம் எந்தச் சமரசமும் செய்து கொள்ளாதே’ என்று ஊக்குவிக்காத கல்வியால் பெண்ணுக்கு என்ன பயன் இருக்க முடியும்?

குடும்பம், கல்வி நிறுவனம், சமூகம் என எல்லா அமைப்புகளும் பெண்ணின் உடலை மனதைக் கண்காணிக்கும் காவல் நிலையங்களாகச் செயல்படுவதால் நட்டமடைவது பெண் மட்டுமல்ல, மொத்த சமூகமும்தான்.

அரசோ, ஆணையோ, நிறுவனமோ, ஏன் தனிமனிதனோ, உறவோ, வாழ்க்கைத் துணையோ, சினேகிதனோகூட எதன் பெயராலோ அதிகாரத்தைச் செலுத்தும்போது அதை ஏன் என்று கேள்வி கேட்க முடியாத பூஞ்சைக்காளான்களாக நம்மை உருவாக்கிக் கொள்வதற்கு கல்வி அவசியமே இல்லை. பேசாமல் மாடு மேய்க்கப் போகலாம்.

பெண் விடுதலை உடையில் இல்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதைவிட உண்மை ஆண் ஆதிக்கம் என்பது பெண்களின் உடை விஷயத்தில் இருக்கிறது என்பதுதான்.

பிரச்னை “துப்பட்டா’ அல்ல. பெண்களை துப்பட்டா போடச் சொல்லும் ஆண்களின் மனோபாவம். பாமரன்களும், அஜயன்பாலாக்களும், வசந்தபாலன்களும், ஞாநிகளும் இந்தச் சம்பவத்தை சட்டை செய்யாததிலிருந்தே அவர்களது சமூகத்தில் எப்படிப்பட்ட சிந்தனை நிலவுகிறது என்பது தெரிகிறது. இதுதான் பெருவாரியான ஆண்களின் மனநிலை என்பதே உண்மை.

கல்விக்கூடங்களும் சரி, தங்கள் வகுப்பறைகளை மூடிவிட்டு துப்பட்டா கடைகள் நடத்தலாம். கலாசாரத்தையும் காத்துக் கொள்ளலாம். வருமானத்தையும் பெருக்கிக் கொள்ளலாம். வேறென்ன செய்வது?

(கட்டுரையாளர்: கவிஞர், திரைப்பட இயக்குநர்)

Posted in Censor, Colleges, Culture, Dhupatta, Discrimination, Dress, Fashion, Females, Feminism, Freedom, Her, Heritage, Independence, Lady, Leena, Liberation, Loyola, Manimekalai, Police, She, Society, Thupatta, Woman, Women | 16 Comments »

Book Review: TK Pattammal – Carnatic Legends – Nithya Raj (Kalki)

Posted by Snapjudge மேல் திசெம்பர் 17, 2007

பட்டம்மாள் போட்ட பாதை – கல்கி (கர்னாடக இசை சிறப்பிதழ்)

கர்நாடக சங்கீத மேடையில், இன்று அரை டஜன் ஐச்வர்யாக்கள், ஒரு டஜன் காய்த்ரிகள், கால் டஜன் அம்ருதாக்கள், சங்கீதாக்கள், இன்னும் சாருலதாக்கள்… வண் ணமும் வனப்பும் விஷயதானமும் வழங் கிக்கொண்டிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் அஸ்திவாரம் போட் டவர், தமது எண்பத்தெட்டாவது வயதில் நம்மிடையே இசைபட வாழ்ந்து, சங்கீதக் கலையைக் கற்பித்து மகிழ்ந்துகொண் டிருக்கும் கான சரஸ்வதி டி.கே.பட்டம் மாள். பட்டம்மாளின் அம்மா ராஜம்மாள், ஒரு கல்யாணத்து நலங்கில் பாடியதைக் கூட பொறுக்காமல் அதட்டி நிறுத்தச் செய்துவிட்டார் அவருடைய மாமனார் – அதாவது டி.கே.பி. யின் தாத்தா. ‘குடும்பப் பெண்கள் சங்கீதம் பாடக்கூடாது – அதெல் லாம் தேவதாஸிகளின் பணி’ என்று ஆதிக் கமும் அனர்த்தமும் மிக்க சட்ட திட்டங்கள் நிலவிய காலம். ஆனால், குழந்தை பட்டாவுக்குப் பாட்டு வெகு இயல்பாக வந்தது.

பள்ளிக்கூட நாடகம், போட்டிகளில் பாடி, வெற்றி பெற, பட்டாவின் போட்டோ பேப்பரில் பிரசுரமானபோது, அப்பா தாமல் கிருஷ்ணசாமி அய்யர் வெல வெலத்துப் போனார்! ‘பெண்ணுக்குக் கல்யாணம் நடக்குமா?’

பட்டம்மாளுக்குக் கல்யாணமும் ஆயிற்று; அவரது சங்கீதமும் தழைத்து வளர்ந்தது. ஈசுவர அய்யரைத் திருமணம் செய்துகொண்ட பிறகும் தாமல் கிருஷ்ண சாமி அய்யர் பட்டம்மாள் (டி.கே) என்றே அவரது பெயர் நீடித்தது.

அன்று பட்டம்மாள் போராடி மேடை ஏறியதனால்தான் இன்று சுதாக்களுக்கும் ஜெய்ஸ்ரீகளுக்கும் ஐச்வர்யாக்களுக்கும் பாதை சுலபமாகியிருக்கிறது.

சங்கீத உலகில் அழகும் அமைதியும் மிக்க ஒரு சகாப்தத்தைப் படைத்த டி.கே.பி. கடந்து வந்த பாதை என்ன? அதன் வளைவு – நெளிவுகள், ஏற்ற – இறக்கங்கள், சுக – துக்கங்கள் என்று ஆராய்ந்து அழகான நூல் ஒன்றை வெளியிட்டிருக் கிறது பாரதிய வித்யா பவன். அற்புதமான, அரிய புகைப்படங்கள் வரலாற்றுப் பதிவு களாக இடம் பெற்றுள்ள இந்நூல், உயர்ரக தாளில் அச்சிடப்பட்டுக் கரம் கூப்பிச் சிரிக்கும் டி.கே.பி.யின் கனிந்த முகத்தை அட்டையில் தாங்கி, உடனே எடுத்துப் படிக்கத் தூண்டுகிறது.

நாற்பத்து நான்கு ஆண்டுகளாக டி.கே.பி. வீட்டில் சமையல் செய்து வரும் கிருஷ்ணமூர்த்தி, மலேஷியா விலிருந்து வந்துள்ள சீன சிஷ்யர் சோங் சியூ சென் (இவ ருக்கு சாய் மதனா என்று பெயர் மாற்றம் செய்துள்ளார் டி.கே.பி…) என்று குட்டி சுவாரஸ் யங்கள்…

டி.கே.பி.யுடன் பாடுவதற் காக, தம்பி டி.கே.ஜெயராமனும் மருமகள் லலிதா சிவகுமாரும் எவ்வாறு தங்கள் சுருதியை மாற்றிக்கொண் டார்கள் என்பது போன்ற தீர்க்கமான விஷயங்கள்…

புத்தகத்தைச் சுவாரஸ்யமாகத் தொகுத்து எழுதியிருக்கிறார் நித்யா ராஜ். விஷய கனம் டி.கே.பி.யின் பல்லவி அளவுக்கு இருக்க, ஆங்கில மொழி நடைமட்டும் சர்வதேச தரத்தில் அமையாதது சற்றே நெருடல்.

(தொடர்புக்கு: பாரதிய வித்யா பவன், கோயமுத்தூர் கேந்திரா, 352, ஈ.ஆ. சாலை, ஆர்.எஸ்.புரம், கோவை – 641 002.)

Posted in Biosketch, Books, Carnatic, Faces, Females, Kalki, Ladies, Legends, Margazhi, Margazi, music, Nithiyashree, Nithiyasri, Nithyashree, Nithyasri, Pattammaal, Pattammal, people, Performers, Reviews, Shows, Singers, Stage, TKP | 2 Comments »

Women in Politics – DMK, Thamizhachi, Thankam Thennarasu, Mu Ka Azhagiri

Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2007

Host unlimited photos at slide.com for FREE!
அரசியலில் குதிக்கும் அமைச்சரின் அக்கா

தி.மு.க.காரர்களுக்கு எப்போதுமே ஒரு வருத்தம் உண்டு. தேர்தலில் தாய்மார்களின் ஆதரவு அவர்களுக்குக் கணிசமாக இல்லாதிருப்பதும், அவர்களின் பொதுக் கூட்டம், மாநாடுகளுக்குப் பெண்கள் திரளாக வராததும், அவர்களை அடிக்கடி கவலைக்குள்ளாக்கும். வாக்குப் பதிவு நாளன்று ‘தாய்மார்கள் திரண்டு வந்து வோட்டுப் போட்டார்கள்’ என்று செய்தி வந்தால் உடன்பிறப்புகளுக்குக் கலக்கம் வந்துவிடும்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், எம்.ஜி.ஆர். தனிக் கட்சி கண்ட
பிறகு கலக்கமும் வருத்தமும் அவர்களுக்கு இன்னமும் அதிகமாயின. தி.மு.க.விலும் சத்தியவாணி முத்துவுக்குப் பிறகு பெயர் சொல்லும்படியான ஒரு முன்னணித் தலைவர் வரமுடியவில்லை. அண்ணா காலத்தில் பூங்கோதை – அருள்மொழி என்கிற இரு பெண்கள் தமிழகமெங்கும் தி.மு.க. மேடைகளில் சொற்சிலம்பம் ஆடி கட்சியை வளர்த்தார்கள்.

  • அலமேலு அப்பாத்துரை,
  • சற்குண பாண்டியன்,
  • சுப்புலட்சுமி ஜெகதீசன் (அ.தி.மு.க.விலிருந்து வந்தவர்)

ஆகியோர் தி.மு.க.வில் குறிப்பிடத்தக்க பெண் பிரமுர்கள். பல்வேறு கட்டங்களில், பெண் களுக்கு ஆதரவாகப் பல சட்டங்களை கருணாநிதி கொண்டு வந்தாலும் தாய்மார்களிடம் ஆதரவு பெருகவில்லை. இந் நிலையில்தான் அரசியலில் நேரடியாகக் குதித்தார் கனிமொழி. அவர் கட்சியில் சேர்ந்த பிறகு நடந்த மகளிர்இட ஒதுக்கீடு பேரணியில் கணிசமாகவே பெண்கள் திரண்டு வந்திருந்தனர். இப்போது கனிமொழிக்குத் தோள் கொடுக்கும் தோழியாக அரசியல் களத்தில் குதித்திருக்கிறார் கவிஞர் தமிழச்சி. சேர்ந்தவுடனேயே, நெல்லை இளைஞரணி மாநாட்டில் கொடியேற்றும் வாய்ப்பு தமிழச்சிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எதிர்கால அரசியலில் அவருக்கு என்ன காத்திருக்கிறது என்பதைவிட, அவரது அரசியல் எதிர் காலம் என்பது தி.மு.க. அதிகார மையங்களின் செல்வாக்கைப் பொறுத்தே அமைய விருக்கிறது. ஆனால், படித்த, நல்ல பொறுப்பில் இருந்த தமிழச்சி, அரசியலில் குதித்ததை கவிஞர்கள், படைப்பாளிகள் இருகரம் தட்டி வரவேற் கிறார்கள்.

“நமது அரசியலில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் நிறைய வர வேண்டும். அதுவும் கல்வியைப் பின்புலமாகக் கொண்டவர்கள் வந்தால், மக்கள் பிரச்னைகளைச் சுலபமாகப் புரிந்துகொள்வதுடன் தீர்வும் காண முடியும். காலப்போக்கில் பொரிய மாற்றம் வரும். பல நாடுகளில் படைப்பாளிகள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழச்சியின் அரசியல் பிரவேசம் வரவேற்கப்பட வேண்டியதே” என்கிறார் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்.

தி.மு.க. நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்க வேண்டுமென்று முனைந்து, இப்போது துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார் சற்குண பாண்டியன். மாவட்ட அளவிலும் பல பெண்கள் பொறுப்பில் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் ஸ்டாலின் முன்னணிக்கு வரும்போது, கனிமொழிக்குத் துணைப் பொதுச் செயலாளர் அந்தஸ்து கிடைக்கும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த வகையில் ஏற்றத்தைக் கணிக்கும்போது தமிழச்சிக்கும் நல்வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

“தலைவர் கலைஞர் அவர்கள் கடந்த ஒரு மாத காலமாகவே முரசொலியில் இளைய தலைமுறையினர் அரசியலுக்கு வரவேண்டும் என்று எழுதிக் கொண்டிருக்கிறார். பல தலைவர்கள், புரட்சியாளர்கள் செய்த தியாகங்களை எடுத்து வைத்து, அவர்களை இளைய தலைமுறை வழிகாட்டிகளாக ஏற்றுச் செயல்பட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். அந்த எழுச்சியூட்டும் கடிதங்கள் தமிழச் சியை உடனடியாக அரசியலில் குதிக்கத் தூண்டியிருக்கலாம். அவரைப் போன்ற அறிவுஜீவிகள், படைப்பாளிகள் அரசியலுக்கு வந்துகொண்டே இருக்க வேண் டும்” என்கிறார் கவிஞர் சல்மா.
—————————————————————————————————-

எந்தவிதப் பின்புலமும் இல்லாத தனிப்பட்ட பெண்கள், ஏன் ஆண்களேகூட அரசியலில் முன்னணிக்கு வர முடிவதில்லை. தி.மு.க. அமைச்சர்கள், முன்னணித் தலைவர்கள் ஆகியோ¡ரின் மகன், மகள், பேரன், பேத்திகள் ஆகியோர்தான் இளைய தலைமுறை பிரமுகர்களாகவும், மாவட்டச் செயலாளர்களாகவும் வலம் வருகிறார்கள். சின்ன வயதிலிருந்தே அரசியல் சூழலில் வளரும் குழந்தைகளுக்குப் பொரியவர்களானவுடன் அரசியலில் நுழைவது எளிதாக இருக்கிறது.

“தமிழச்சி போன்று அரசியல் குடும்பத்திலிருந்து வருபவர்களுக்கு வேறுவிதமான போராட்டங்கள் இருந்திருக்கும். தமிழச்சி அறிவுசார்ந்த துறையிலிருந்து அரசியலுக்கு வருகிறார். இது மிக நல்ல விஷயம். இவரைப் போல் நிறைய பேர் வரணும். அரசியல் கட்சிகளும், பெண்களுக்குப் பொறுப்புகளில் ஐம்பது சதவிகிதம் தரவேண்டும்” என்கிறார் கவிஞர் இளம்பிறை.

“அரசியல் பின்னணி, ஒருவர் முன்னுக்குவர உதவியாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்ளும் அதே சமயத்தில், ஒருவர் தமது சொந்தத் தகுதிகளை வளர்த்துக் கொள்ளா விட்டால், நிலைத்து நிற்க முடியாது என்பதையும் உணர வேண்டும். தங்கம் தென் னரசு தான் அமைச்சர் பொறுப்புக்குத் தகுதியானவர் என்று இப்போது நிரூபித்து விட்டார். அதேபோல, தமிழச்சிக்கும் செயல்படும் வகையில், முடிவுகள் எடுக்கும் பொறுப்புக் கொடுத்தால் அசத்துவார்” என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.

“அரசியல் முகம் வன்முறைமயமாகத் தோற்றமளிக்கும் இன்றைய காலகட்டத்தில் ¨தாரியமாகக் களம் இறங்கியுள்ள தமிழச்சி பாராட்டுக்கு¡ரியவர். தி.மு.க. போன்ற பொரிய இயக்கங்கள் நிர்வாகப் பொறுப்பு மற்றும் கொடியேற்றும் கௌரவத்தைப் பெண்களுக்குக் கொடுப்பது மற்ற இயக்கங்களுக்கும் நல்ல வழிகாட்டுதல்” என்றும் சொல்கிறார் அவர்.

தமிழச்சி பேராசி¡ரியர் பதவியை ராஜி ¡மா செய்துவிட்டு அரசியலில் குதித்தது, வேறுவிதமான கவலையை ராணிமோரி கல்லூ¡ரி ஆங்கிலத் துறை பேராசி¡ரியர்களுக்கு உண்டாக்கியிருக்கிறது.

“எங்கள் துறையில் 32 பேர் இருந்தோம். இப்போது பதினான்கு பேர்தான் இருக்கிறோம். மற்றபடி சுமதி ஒரு நல்ல கவிஞர்; பழகுவதற்கு இனியவர். கடந்த இரண்டு வருடங்களாகப் பாடம் எடுப்பதை நிறுத்திவிட்டு ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டிருக்கிறார். நல்ல வாய்ப்பு வரும்போது அரசியலில் ஈடுபடுவேன் என்று சொல்லி வந்தார். அவருக்குப் பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துகள் என்கிறார்கள்” பேராசி¡ரியர்களான மாலதியும், மாலினியும்.

– ப்¡ரியன்
———————————————————————————————–

மு.க.அழகி¡ரி மதுரைக்குப் போய் செட்டிலான 1980களின் இறுதியில், உள்ளூர் தி.மு.க. தலைவர்கள் ‘எதிர்காலத்தில் இவர் எப்படி வருவாரோ?’ என்று தொரியாமல் அவரைவிட்டுக் கொஞ்சம் தூரம் மாரியாதையுடன் தள்ளி நின்றனர். அந்தச் சமயத்தில் அழகி¡ரியிடம் பாசம் காட்டிப் பழகிய சிலாரில், சுமதி என்கிற தமிழச்சியின் தந்தை தங்கபாண்டியனும் ஒருவர்.

ராமநாதபுரம் (விருதுநகரம் உள்ளடக்கிய) மாவட்டத்தில் கழகத்தை வளர்த்ததில் சுயமாரியாதைக்காரரான தங்கபாண்டியனுக்கு முக்கிய இடம் உண்டு. தங்கபாண்டியன் குடும்பத்துக்கும், அழகி¡ரி குடும்பத்துக்கும் இடையே உண்டான பாசம் கலந்த நட்பு இன்றுவரை தொடர் கிறது. தங்கபாண்டியன் மறைவுக்குச் சில காலத்துக்குப் பின் தங்கம் தென்னரசுவை அரசியலில் கொண்டு வந்து அமைச்சராக அழகு பார்த்தார் அழகி¡ரி.

இன்று அவரது அக்கா தமிழச்சிக்கும் அரசியலில் ஒரு நல்ல தளத்தை உருவாக்கும் விதத்தில், பின்னணியாக இருக்கிறார்.

தி.மு.க. குடும்பப் பின்னணி, இலக்கிய ஆர்வம் போன்றவை இயல்பாகவே கனிமொழியிடம் தமிழச்சிக்கு நெருக்கத்தைக் கொண்டு வந்தது. இன்று தி.மு.க.வில் இருக்கும் இரு அதிகார மையங்களுக்கிடையே, தமிழச்சி பாலமாக இருக்கிறார் என்று சொன்னால், அது மிகைப்படுத்தல் இல்லை. ‘வனப்பேச்சி’ மற்றும் ‘எஞ்சோட்டுப் பெண்’ என்கிற இவரது கவிதைத் தொகுப்புகள் வந்திருக் கின்றன.

இவருக்கு மேடை நாடகங்களில் மிகுந்த ஆர்வம் உண்டு. பிரசன்னா ராமசாமியின் பல நவீன நாடகங்களில் நடித்திருக்கிறார் தமிழச்சி.

புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் பற்றி டாக்டர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். இரண்டு பெண் குழந்தைகள். கணவர் சந்திரசேகர், காவல் துறையின் நுண்ணறிவுத் துறையில் பணியாற் றும் அதிகா¡ரி. ஜெ. அரசு ராணிமோரிக் கல்லூ¡ரி இடத்தைத் தலைமைச் செயலகத்துக்காக எடுக்க முயன்ற போது நடந்த போராட்டத்தில் இவர் கலந்து கொண்டபின், ‘சிவகங்கைக்கு மாற்றிவிடுவோம்’ என்று பயமுறுத்திப் பார்த்தார்களாம்.

2006-ல் ஆட்சி மாற்றத்துக்கு முன்னர் அரசு குடியிருப்பைக் காலி செய்ய அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். “நான் திடீரென்று அரசியலில் குதிக்கவில்லை. ஏற்கெனவே இடஒதுக்கீடு தொடர்பான மகளிர் பேரணி மற்றும் சேது சமுத்திரம் பிரச்னையில் உண்ணா விரதம் ஆகியவற்றில் கலந்துகொண்டிருக்கிறேன். அரசியல் என் இரத்தத்திலேயே ஊறியதுதானே” என்று நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறார் தமிழச்சி.

எதிர்கால தி.மு.க. அரசியலில் யார் யாருக்கு எந்தெந்த பாத்திரங்கள் என்று சதுரங்கத்தில் காய்களை நகர்த்துவது போல் கழகத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சதுரங்கக் கட்டத்தில் ஒருவராக இணைந்து விட்டார் தமிழச்சி. இதுபோன்ற புதியவர்களின் வரவு கட்சியின் களப்பணியாளர்களிடையே அதிருப்தி, பி¡ரிவினை போன்றவற்றைத் தோற்றுவிக்க வாய்ப்புகள் அதிகம்.

அவற்றை எதிர்கொண்டு அனைவரையும் அரவணைப்பதுடன், இந்தப் படித்த புதுவரவுகள் லஞ்ச – ஊழலற்ற சூழலுக்கான அஸ்திவாரத்தை ஏற்படுத்தினால்தான் தமிழகம் வாழ்த்தும்.

——————————————————————————————————————————————————

தி.மு.க., மாநில இளைஞரணி மாநாட்டில் இன்று பேசுவோரும், அவர்களின் தலைப்புகளும்

திருநெல்வேலி:நெல்லையில் நடைபெறும் தி.மு.க., மாநில இளைஞரணி மாநாட்டில் இரண்டாம் நாளான இன்று மொத்தம் 28 சிறப்பு பேச்சாளர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர்.

அது குறித்த விவரம்:

1.இளைஞர் எழுச்சியே இனத்தின் மறுமலர்ச்சி திருச்சி சிவா எம்.பி.,

2. மகளிர் முன்னேற்றத்தில் தி.மு.க., கவிஞர் கனிமொழி எம்.பி.,

3. சேது சமுத்திரத்திட்டம் நுõற்றாண்டு கனவு சபாபதி மோகன்

4.கலைஞர் ஆட்சியில் சமூக நலப்பணிகள் ச.தங்கவேலு

5. கலைஞர் அழைக்கின்றார், இளைஞனே எழுந்து வா! குத்தாலம் அன்பழகன் எம்.எல்.ஏ.,

6. சமத்துவபுரங்களும் சாதி ஒழிப்பும் வி.பி.,இராசன்

7. உலகை குலுக்கிய புரட்சிகள் கோ.வி.,செழியன்

8. நீதிக்கட்சி தோன்றியது ஏன்? நெல்லிக்குப்பம் புகழேந்தி

9.இந்திய அரசியலில் தி.மு.க., புதுக்கோட்டை விஜயா

10. அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு தாயகம் கவி

11. புதிய புறநானுõறு படைப்போம்! கரூர் கணேசன்

12.வீழ்வது நாமாக இருப்பினும்,வாழ்வது தமிழாக இருக்கட்டும்! தாமரை பாரதி

13.வர்ணாசிரமத்தால் வந்த கேடு தஞ்சை காமராஜ்

14. பெண்ணுரிமை பேசும் திருநாட்டில் தாட்சாயணி

15. திராவிட இயக்கப் பயணத்தில் ஈரோடு இறைவன்

16. சிறுபான்மை சமுதாய காவல் அரண் கரூர் முரளி

17. சமூக நீதிப்போரில் தி.மு.க., திப்பம்பட்டி ஆறுச்சாமி

18. அண்ணாவும் கலைஞரும் காத்த அரசியல் கண்ணியம் சரத்பாலா

19. மத நல்லிணக்கமும், மனித நேயமும் சைதை சாதிக்

20. சாதி பேதம் களைவோம்! வி.பி.ஆர்., இளம்பரிதி

21. திராவிட இயக்க முன்னோடிகள் குடியாத்தம் குமரன்

22. அன்னைத்தமிழில் அர்ச்சனை செய்வோம்! சென்னை அரங்கநாதன்

23. உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு கந்திலி கரிகாலன்

24. கலைஞர் ஆட்சியில் தொழிற்புரட்சி! புதுக்கோட்டை செல்வம்

25. தமிழர் நிலையும் கலைஞர் பணியும் கனல் காந்தி

26. திராவிட இயக்கமும் மகளிர் எழுச்சியும் இறை.கார்குழலி

27.தீண்டாமையை ஒழிக்க சபதமேற்போம்! திருப்பூர் நாகராஜ்

28. மனித உரிமை காக்கும் மான உணர்வு! வரகூர் காமராஜ் >

——————————————————————————————————————————————————

தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டுச் சிறப்புகள்

> நெல்லையில் நேற்று (15.12.2007) தொடங்கிய தி.மு.க. இளைஞரணி முதல் மாநில மாநாட்டில் 31 மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க. இளைஞர் அணியினர் சீருடையில் அணிவகுத்துச் சென்றனர்.

> நெல்லை மருத்துவக் கல்லூரி மய்தானத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலின் மொத்த பரப்பளவு 100 ஏக்கர் ஆகும்.

> மாநாட்டுத் திடலில் முன் முகப்பு 60 அடி உயரத்தில், 500 அடி நீளத்தில் கோட்டை வடிவ முகப்பு போன்று அமைக்கப்பட்டு உள்ளது. அதன் முன்பு கலைஞரின் வயதைக் குறிக்கும் வகையில் 84 அடி உயரக் கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது. அதில் தி.மு.க. கொடி பட்டொளி வீசிப் பறந்தது.

> மேலும் மாநாட்டின் முன்பு 84 அடி உயரம் 444 அடி அகலத்தில் பனை ஓலையால் வேயப்பட்ட பந்தல் முன் முகப்பு வடிவமைக்கப்பட்டுப் பேரழகுடன் திகழ்ந்தது.

> மாநாட்டுப் பந்தல் 500 அடி நீளம், 450 அடி அகலத்தில் மழை பெய்தால் ஒழுகாத வண்ணம் பிரம்மாண்ட இரும்புப் பந்தலாக உருவாக்கப்பட்டு பொலிவுடன் காட்சி அளித்தது.

> பந்தலின் உள்புறம் வெல்வெட் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு செயற்கை மலர்கள் தொங்கவிடப்பட்டிருந்தன.

> தலைவர்கள் பங்கேற்றுப் பேசும் மேடை 70 அடி நீளம், 60 அடி அகலம் 5. 5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு, அதில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. ஒரு நட்சத்திர மாளிகை போன்று மாநாட்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது.

> மாநாட்டில் தொண்டர்களுக்கு 30 சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. சுற்றுப் புறங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு 120 ஏக்கர் நிலம் சீர் செய்யப்பட்டு அமைக்கப் பட்டிருந்தது.

> நெல்லை நகரில் கண்ணைக் கவரும் வகையில் 55 மின் ஒளிக் கோபுரங்களும், ஆர்ச் தகடும் வைக்கப்பட்டிருந்தன. இது தவிர ஊர்வலம் சென்ற பாதையில் பல்வேறு மாவட்டங்களின் சார்பில் கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன.

Posted in ADMK, Anna, Arulmoli, Arulmozhi, Arulmozi, College, DMK, Elections, Females, Ilampirai, Instructors, JJ, Kalainjar, Kalki, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kavinjar, Ladies, Lady, Literature, Manushyaputhiran, MGR, MK, Nellai, Poems, Poets, Polls, Poongothai, Poonkothai, Professors, QMC, Queen Marys, Raani Mary, Rani Mary, Rani Mary College, Ravikkumar, Ravikumar, Reservations, Salma, Sarguna pandian, Sarguna pandiyan, Sargunapandian, Sargunapandiyan, Sarhunapandiyan, Sathiavani Muthu, Sathiavanimuthu, Sathiyavani Muthu, Sathiyavanimuthu, She, Teachers, Thamilachi, Thamizachi, Thamizhachi, Thangam, Thangam Thennarasu, Thennarasu, Tirunelveli, Votes | Leave a Comment »

Taslima Nasreen Security – West Bengal & Calcutta – Islam & Bangladesh: The great Indian dilemma

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2007

புதுப்பிக்கப்பட்ட நாள்: 29 நவம்பர், 2007 


புத்தகத்தின் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிக்கொள்வதாக தஸ்லிமா நஸ்ரின் அறிவிப்பு

தஸ்லிமா நஸ்ரின்

வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், தான் எழுதிய
‘த்விக்ஹோண்டிதோ’ புத்தகத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பகுதிகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்.

கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருக்கும் தஸ்லிமா நஸ்ரின், தனது புத்தகத்தில் இஸ்லாமுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக இஸ்லாமிய அமைப்புக்கள் பல போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

சமீபத்தில், மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் அவருக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தஸ்லிமாவை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு அனுப்பப்பட்ட அவர், பின்னர் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது, மத்திய அரசின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்.

இரு தினங்களுக்கு முன்பு தஸ்லிமா தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள், பொதுமக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். அதேநேரத்தில், தஸ்லிமா தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருக்க அனைத்துப் பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தனது புத்தகத்தில் சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பகுதிகளை நீக்க முடிவுசெய்திருப்பதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அவர் தெரிவித்திருக்கிறார்.

“மதச்சார்பின்மையின் மகத்துவத்துக்காகக் குரல் கொடுத்தவர்களுக்கு ஆதரவாக இந்தப் புத்தகத்தை எழுதினேன். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. தற்போது இந்தியாவில் உள்ள சிலர், இது அவர்களது உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கருதுவதால், அந்தப் புத்தகத்தில் உள்ள சில வரிகளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்” என்று தஸ்லிமா தெரிவித்திருக்கிறார்.

இந்த முடிவின் காரணமாக, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும், இனி இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தா, தஸ்லிமாவின் இந்த முடிவு, அவர் மீண்டும் கொல்கத்தா திரும்வுதற்கு வழிவகுக்கும் என்றார்.

தஸ்லிமாவின் முடிவை, ஜமியதுல் உலாமை ஹிந்த் அமைப்பின் பொதுச்செயலர் மஹமூத் மதனியும் வரவேற்றுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக பெண் முஸ்லிம் எழுத்தாளர் சல்மா, இலங்கை எழுத்தாளர் நுஹ்மான் ஆகியோரின் கருத்துக்களை நேயர்கள் கேட்கலாம்.


நானாக வெளியேறவில்லை – கோல்கத்தா திரும்பவே விரும்புகிறேன்: தஸ்லிமா

கோல்கத்தா, நவ. 26: கோல்கத்தா நகரை விட்டு வெளியேறத் தானாக முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்த வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், எனினும், இவ்விஷயத்தில் மெüனத்தைக் கடைப்பிடிக்கவே விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

தில்லியிலிருந்தவாறு வங்க மொழித் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்குத் தொலைபேசி வழியே பேட்டியளித்தார் தஸ்லிமா.

பேட்டியில் “நானாக எதற்காக இந்த முடிவு எடுக்க வேண்டும்? யாராவது ஒருவர் வந்து என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று என் மனதுக்குத் தோன்றியது. பலர் என்னுடைய எழுத்துகளை விரும்புகிறார்கள்; மேலும் பலர் வெறுக்கிறார்கள்’ என்றார் அவர்.

விசாவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சிறுபான்மையினர் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், உயிருக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கருதி, கோல்கத்தாவைவிட்டு வெளியேற முடிவெடுத்தீர்களா? என்று அவரிடம் கேட்கப்பட்டது.

“இங்கே கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. கையளவே உள்ள சிலரின் எதிர்ப்புக்காக எதற்காக நான் கடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்?’ என்று பதிலளித்தார் தஸ்லிமா.

“கோல்கத்தா திரும்பவே நான் விரும்புகிறேன். ஆனால், இன்னமும் இதற்கு ஆதரவாக எவ்வித குறிப்பும் கிடைக்கவில்லை. எங்கிருந்து பச்சைக்கொடி காட்டப்படும் என்று எனக்கு பரபரப்பாக இருக்கிறது’ என்றும் குறிப்பிட்டார் அவர்.

கோல்கத்தாவிலிருந்து “நெருக்குதல்’ காரணமாக வெளியேறினீர்களா? என்று கேட்டபோது, “இதுபற்றிப் பேச நான் விரும்பவில்லை; கோல்கத்தாவுக்குத் திரும்பவே நான் விரும்புகிறேன். எந்த அளவுக்கு விரைவாக அது நடைபெறுமோ அந்த அளவுக்கு நல்லது’ என்றார் தஸ்லிமா.

1994-ல் எழுத்துக்காக அவருடைய தலைக்கு முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் விலை வைத்தபோது, வங்கதேசத்திலிருந்து வெளியேறி வந்து கோல்கத்தாவில் தங்கியவரான தஸ்லிமா, “கோல்கத்தாவில் தங்கியிருக்கவே விரும்புகிறேன். ஐரோப்பாவுக்குச் செல்ல விரும்பவில்லை. வங்கதேசம் அனுமதித்தாலும் அங்கே செல்ல மாட்டேன்; இங்கிருந்தே என் உரிமைக்காகக் குரல் கொடுப்பேன்’ என்று குறிப்பிட்டார்.

———————————————————————————————————————————————————————–

தஸ்லிமா நஸ்ரீனுக்கு விசா: மேற்கு வங்கம் எதிர்த்தது

புது தில்லி, நவ. 26: வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனுக்கு விசா காலம் நீட்டிக்கப்பட்டதற்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்புத் தெரிவித்தது.

மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு தலையிட்டு விசா காலத்தை நீட்டித்ததாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியது:

மத்திய அரசின் அனுமதியின்றி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அவரைக் கொண்டு செல்ல எவருக்குமே உரிமை கிடையாது.

இத்தகையோருக்கு விசா வழங்குவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படுவது வழக்கம். இதற்கு முன்னர் திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு விசா வழங்கப்பட்டபோது சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதே நிபந்தனைகள்தான் தற்போது தஸ்லிமா நஸ்ரீனுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. மேலும் பிற நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள வெளியுறவு பாதிக்கப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற விதிமுறையும் விதிக்கப்பட்டுள்ளது என்றார் சிங்வி.

———————————————————————————————————————————————————————–

“விரும்பிதான் வெளியேறினார்’

கோல்கத்தா, நவ. 26: மேற்கு வங்கத்திலிருந்து அவராக விரும்பியே எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் வெளியேறினார் என்று கோல்கத்தா மாநகர காவல் ஆணையர் கெüதம் மோகன் சக்ரவர்த்தி தெரிவித்தார்.

கோல்கத்தாவில் மாநில தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய சக்ரவர்த்தி, “அவருடைய விருப்பத்தின் பேரில்தான் தஸ்லிமா வெளியேறினார்’ என்றார்.

இதனிடையே, கடந்த புதன்கிழமை கோல்கத்தாவில் நடந்த வன்முறை தொடர்பாக, மேலும் 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஏற்கெனவே, 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

———————————————————————————————————————————————————————–
தஸ்லிமாவை கைகழுவியது மார்க்சிஸ்ட்

புது தில்லி, நவ. 26: வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் விஷயத்தில் பல்முனைத் தாக்குதலுக்கு உள்ளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தப் பிரச்னையிலிருந்து தற்போது கைகழுவிக் கொண்டுவிட்டது.

மேற்கு வங்கத்திலிருந்து தஸ்லிமா நஸ்ரீன் அவராகவேதான் ராஜஸ்தானுக்கு சென்றார்; இனி அவர் எங்கே தங்கியிருக்க வேண்டும் என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கட்சி குறிப்பிட்டுள்ளது.

“சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா, மேற்கு வங்கத்திலுள்ள இடதுசாரி அரசால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை; எனவே, அவர் எங்கே தங்குவது என்பதை முடிவு செய்வதில் மேற்கு வங்கத்துக்கு எவ்விதப் பங்கும் இல்லை’ என்று கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினரான சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

தில்லியில் திங்கள்கிழமை இதுதொடர்பான செய்தியாளர்களிடம் ஏராளமான கேள்விகளை எதிர்கொண்ட யெச்சூரி, “தஸ்லிமா எங்கே தங்கியிருப்பது என்பது முற்றிலுமாக மத்திய அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயம்; அவர் எங்கே செல்கிறாரோ அங்கே அவருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த மாநிலத்தையே சாரும்’ என்றார்.

“இந்தியாவில் தஸ்லிமா தங்கியிருக்கலாமா? வேண்டாமா? அல்லது அவருடைய விசா காலம் நீட்டிக்கப்படலாமா? கூடாதா? என்பதெல்லாமும் மத்திய அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயம்’ என்றார் யெச்சூரி.

மேற்கு வங்கத்தைவிட்டு வெளியேறுமாறு தஸ்லிமாவை இடதுசாரி அரசு கேட்டுக்கொண்டதாக வெளியான செய்திகள் பற்றிக் கேட்டதற்கு, “யாரும் அவரை வற்புறுத்தவில்லை, மத்திய அரசு அனுமதித்தால் அவர் விருப்பத்துக்கேற்ப எங்கே வேண்டுமானாலும் தஸ்லிமா செல்லலாம்’ என்று பதிலளித்தார் சீதாராம் யெச்சூரி.

தஸ்லிமா திரும்பிவர வேண்டும் என்பதில் இடதுசாரி அரசு அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படும் செய்திகளையும் அவர் மறுத்தார்.

“இந்தப் பிரச்னைக்குள் மேற்கு வங்க அரசையோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையோ இழுத்துவிட முயலாதீர்கள். கடந்த மூன்றாண்டுகளாக அவர் கோல்கத்தாவில் தங்கியிருந்தார்; அவருக்குத் தேவையான பாதுகாப்பை மாநில அரசு அளித்து வந்தது’ என்றும் சீதாராம் யெச்சூரி குறிப்பிட்டார்.

நஸ்ரீனை வரவேற்று பாதுகாப்புத் தர இடது முன்னணி தயாராக இருக்கிறதா? என்றபோது, இந்தப் பிரச்னையில் மேற்கு வங்க அரசு சம்பந்தப்படவில்லை. இந்த அழைப்பை மத்திய அரசுதான் பரிசீலிக்க வேண்டும் என்றார் அவர்.

தஸ்லிமாவை மீண்டும் அனுமதிக்க கோல்கத்தா காவல்துறையினர் மறுத்துவிட்டதாக ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது பற்றிக் கேட்டபோது, இந்தக் கேள்விக்கு மேற்கு வங்க அரசுதான் பதிலளிக்க வேண்டும் என்றார் யெச்சூரி.

தஸ்லிமாவுக்கு அடைக்கலம் தருவது பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை என்ன? என்ற கேள்வியைத் தவிர்த்த யெச்சூரி, இதுதொடர்பாக ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட சட்டமும் விதிகளும் இருக்கின்றன. இதுபற்றித் தனக்குள்ள தகவல்களின் அடிப்படையில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

ஓவியர் எம்.எப். ஹுசைன் நாடு திரும்பும் விஷயத்திலும் தஸ்லிமா பிரச்னையில் இரட்டை நிலையைக் கடைப்பிடிப்பதாக பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டினார் அவர்.

ஆர்எஸ்எஸ், விஎச்பி மற்றும் சார்ந்த அமைப்புகள் வழக்குத் தொடுத்துள்ள நிலையில் ஹுசைன் நாடு திரும்புவதைத் தடுக்கிறார்கள். குறிப்பிட்ட சமுதாயத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகத் தெரிவிக்கின்றனர். எதற்காக இந்த இரட்டை நிலை? என்றும் கேள்வி எழுப்பினார் சீதாராம் யெச்சூரி.

நந்திகிராமம் வன்முறையைக் கண்டித்தும் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த வாரத்தில் கோல்கத்தாவில் சிறுபான்மையினர் அமைப்பின் சார்பில் போராட்டமும் தீவைப்பும் நடைபெற்றது; ராணுவமும் அழைக்கப்பட்டது.

———————————————————————————————————————————————————————–

Posted in Asylum, Bangladesh, Bengal, BJP, Books, Calcutta, Citizen, Communalism, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, dilemma, expression, Faces, fanaticism, Fathva, Fathwa, Fatva, Fatwa, Females, Freedom, Fundamentalists, Govt, Gujarat, Hussain, Hussein, Immigrants, India, Islam, Kolkata, Lajja, Left, Life, Literature, MF Hussain, minority, Modi, Muslim, Narendra Modi, Nasreen, Nasrin, Outcast, people, Refugee, RSS, Rushdie, Salman, Secular, Security, Sensation, She, Taslima, Thoughts, UPA, Voices, WB, West Bengal, Women | Leave a Comment »

Child and juvenile labour force in Tamil Nadu – Dinamani Op-ed

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 15, 2007

இது நியாயமா?

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும், நாளைய தலைமுறை கல்வியறிவும் ஆரோக்கியமும் உடைய சமுதாயமாக உருவாக வேண்டும் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமான, கிராமப்புற வளர்ச்சி பெரிய அளவில் ஏற்படாத நாடுகளில் தவிர்க்க முடியாத களங்கம் ஒன்று இருக்குமேயானால், அது கல்வி கற்க வேண்டிய வயதில் எடுபிடி வேலைகளைச் செய்யும் நிலைக்குக் குழந்தைகள் ஆளாக்கப்படுவதுதான்.

சமீபத்தில் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தங்களது மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்திய குற்றத்திற்காக 28 நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து 68 வழக்குகளும் பதிவு செய்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காகவே அமைக்கப்பட்ட 32 கல்விச்சாலைகளில், மீட்கப்பட்ட 1,198 குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கப்படுவதாக அந்த மாவட்டச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதேபோல, மற்ற மாவட்டங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கும் மாவட்ட ஆட்சியாளர்கள் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக முனைப்பாகச் செயல்படுகின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இது ஏதோ தமிழகமோ, இந்தியாவோ மட்டுமே எதிர்நோக்கும் பிரச்னை என்று கருதிவிட வேண்டாம். வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் – அதாவது, பின்தங்கிய நாடுகளில் – ஐந்து முதல் பதினான்கு வயதுவரை உள்ள 25 கோடிக் குழந்தைகள், கல்வி கற்க முடியாமல் ஏதாவது வேலையில் ஈடுபட்டு வருவதாக 1998-ல் வெளியான ஐ.நா. செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. சமீபத்திய ஒரு புள்ளிவிவரப்படி உலகில், எட்டு குழந்தைகளில் ஒரு குழந்தை தனது வருங்காலத்தை வளமாக்க முடியாத, கல்வி கற்க முடியாத நிலைமை.

இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் கல்வியறிவு பெற வழியில்லாமல், குடும்பத் தொழிலிலோ அல்லது வேறு ஏதாவது வேலையிலோ ஈடுபடுத்தப்படுவதாகவும், தமிழகத்தில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இன்னும் கல்விச்சாலைகளுக்குச் செல்லாமல் ஏதாவது வேலை செய்து குடும்பத்துக்கு உதவ வேண்டிய நிலையில் இருப்பதாகவும், மத்திய அரசின் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக, இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் பல சட்டங்களை இயற்றி வந்திருக்கிறோம். குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்குக் கல்வியறிவு அளிப்பதற்கு நிதிநிலை அறிக்கைகளில் தனியாக நிதி ஒதுக்கப்படுகிறது. 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் மட்டும் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புக்காக 228 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தில் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முனைப்பாகச் செயல்பட்டு அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பும் நல்கி வருகின்றன என்பதுதான் உண்மை. பெருந்தலைவர் காமராஜரின் மதிய உணவுத் திட்டமும் சரி, எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு இன்று வரை செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டமும் சரி, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மிகப்பெரிய முயற்சிகள் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை செய்தும், குழந்தைத் தொழிலாளர் முறையை ஏன் கட்டுப்படுத்தவோ, முற்றிலும் அகற்றவோ முடியவில்லை? குழந்தைகள் படித்தே தீர வேண்டும் என்கிற வைராக்கியம் ஏன் பெற்றோர் மத்தியில் ஏற்படவில்லை?

இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள்.

முதலாவது காரணம், கிராமப்புற வறுமை. விவசாயம் வெற்றிகரமாக நடக்காத வரையில் கிராமப்புற வறுமையை ஒழிக்க முடியாது. வறுமை இருக்கும்போது குழந்தைகளைக் கல்விக்கூடங்களுக்கு அனுப்புவதைவிட, குடும்ப வருமானத்தை அதிகரிக்கப் பயன்படுத்துவதற்குத்தான் பெற்றோர்கள் முயல்வார்கள் என்பது இயல்பு. இந்த விஷயத்தில் நமது ஆட்சியாளர்கள்தான் நல்ல தீர்வைத் தர முடியும்.

இரண்டாவது காரணம், இந்தப் பிரச்னை பற்றிய விழிப்புணர்வும் அக்கறையும் படித்தவர்கள் மத்தியில் இல்லாதது. குழந்தைத் தொழிலாளர்களைக் குறைந்த கூலிக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்கிற மனப்போக்கிலேயே தவறு இருக்கிறது. குழந்தைகளை வேலைக்கு வைத்திருப்பவர்களைச் சமுதாயம் புறக்கணிக்க முற்படுமேயானால், இந்த சமூகக்கேடு பெரிய அளவில் தடுக்கப்படும். நாமே மறைமுகமாக இந்தக் கொடுமையை அங்கீகரிக்கிறோமே, இது நியாயமா?

Posted in Center, Centre, Child, Children, City, Dharmapuri, Education, Employment, Exploit, Exploitation, Females, Food, girls, Govt, Hotels, Hunger, Hungry, Illiteracy, Income, juvenile, Kids, Labor, Labour, Literacy, Metro, Needy, Policy, Poor, Read, Restaurants, Rich, Rural, She, State, Student, Suburban, Tharmapuri, Village, Wealthy, Women, Work, Worker | Leave a Comment »

Corruption & Kickbacks Charge on Congress (I) – Job opportunity plan implementation in Indian states

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 8, 2007

ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில்… மெகா ஊழல்! * பல மாநிலங்களிலும், பல கோடி “சுவாகா’

Dinamalar.Com

மத்திய அரசின், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில், மெகா ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம், அரசியல்வாதிகள், அதிகாரிகள் பாக்கெட்டில் போய்க் கொண்டிருக்கிறது.

மத்தியில், 2004ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த, காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிக முக்கிய திட்டம், கிராம மக்களுக்கு வேலை தரும், “ஊரக வேலை உத்தரவாத திட்டம்!’

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, மிகவும் பின்தங்கிய 200 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதற்கு பல கோடி பணத்தை மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் ஒதுக் கியது.அந்த பணத்தை வைத்து, கிராமங்களில் வேலையின்றி உள்ள தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்சம் வருடத்துக்கு 100 நாட்களாவது வேலை தர ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த திட்டத்தை இந்தாண்டு இறுதிக்குள் மேலும், 150 மாவட்டங்களுக்கு விரிவுப் படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், திட்டத்தில் ஊழல், நிர்வாக குளறுபடி, விழிப்புணர்வு ஏற்படுத்தாதது போன்றவை குறித்து புகார்கள் வந்ததால், மத்திய நிதிக்கமிஷன், இதற்கு நிதி ஒதுக்க மறுத்தது.பல மாநிலங்களிலும், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில், அரசியல் வாதிகள் முதல் பஞ்சாயத்து உறுப்பினர்கள் வரை, பணத்தை சுருட்டுவதாக, தன்னார்வத் தொண்டு அமைப்புகள், அரசு ஆய்வு அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்ததால், நிதிக்கமிஷன், இதுபற்றி ஆலோசிக்க விரும்பியது.எனினும், இந்த விஷயத்தில், பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு, இந்தாண்டு 130 மாவட்டங்களை கூடுதலாக இந்த திட்டத்தில் சேர்க்கும்படி உத்தரவிட்டார்.காங்கிரஸ் பொதுச்செயலராக ராகுல் பொறுப்பேற்றதும், அடுத்த திருப்பம் ஏற்பட்டது.”ஊரக வேலை உத்தரவாத திட்டத்தை, நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். குறிப்பிட்ட மாவட்டங்கள் மட்டும் பயனடையும் வகையில் நிறைவேற்றுவது பாரபட்சமானது’ என்று பிரதமரிடம் கூறினார். இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமலாக்க முடிவு செய்துள்ளார்.பல்வேறு ஆய்வுகளின் மூலம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஊரக வேலை உத்தரவாத திட்டம் தொடர்பான மாத அறிக்கைகள் மூலம் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. திட்டத்தை அறவே அமல்படுத்துவதில்லை என்பது இந்த மாத அறிக்கையை பார்த்தாலே தெரியும்.ஊரக வேலை உத்தரவாத திட்டம் தொடர் பான ஆய்வுகளில் கிடைத்த சில தகவல்கள்:

மேற்கு வங்கம்:

எல்லா மட்டங்களிலும் திட்டப்பணத்தில் பெரும் ஊழல் நடக்கிறது. பல கிராமங்களில் தொழிலாளர்களுக்கு “வேலை அட்டை’ தருவதில்லை. அப்படியே தந்தாலும், பதிவு எண் தரவில்லை. கற்பனை பெயர்களில் “பயனாளிகள்’ பெயர் எழுதி, பணம் சுரண்டப்படுகிறது.

ஆந்திரா:

இந்த மாநிலத்தில், “வேலை அட்டை’ தந்து, வேலை தந்தாலும், குறைந்தபட்ச கூலி தரப்படுவதில்லை. சம்பள பணம் பிடித்துக்கொண்டுதான் தரப்படுகிறது.

சட்டீஸ்கர்:

திட்டத்தில் பலரும் ஊழல் செய்கின்றனர்; சரிவர வேலை தரப்படுவதில்லை; சரியான நிர்வாகமும் இல்லை.

ஜார்க்கண்ட்:

கிராம மக்களுக்கு வேலை தந்ததாக எழுதி விட்டு, பணம் சுரண்டப் படுகிறது. கற்பனை பெயர்களில் “பயனாளிகள்’ பெயர்களை பட்டியல் எடுத்து, பணத்தை பஞ்சாயத்து மட்டத்தில் மோசடி செய்கின்றனர். எதிர்த்து கேட்ட கிராம மக்கள் மிரட்டப்படுகின்றனர். பெண்கள் சித்ரவதைக்கு ஆளாகின்றனர்.

மத்தியப்பிரதேசம்:

பயனாளிகளுக்கு மிகக்குறைந்த பணத்தை தந்துவிட்டு, கான்ட்ராக்டர்கள் அதிக பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். இதற்கு அதிகாரிகள் உடந்தை. லஞ்சம் தந்து தான் சம்பளத்தையே கிராம மக்கள் பெற வேண்டியிருக்கிறது.

ஒரிசா:

கிராம மக்களில் பலருக்கு இப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரியவில்லை. அதை மறைத்து, அதிகாரிகள், அரசியல்வாதிகள், பணத்தை சுரண்டுகின்றனர்.

உத்தரப்பிரதேசம்:

மிக அதிக ஊழல் என்றால், இந்த மாநிலத்தில் தான். பல மாவட்டங்களில், இந்த திட்டத்தை அமல்படுத்தியதாக சொல்லி, பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.”இப்படி பல மாநிலங்களிலும், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில் மெகா ஊழல் நடந்து வருகிறது. இதை நாடு முழுவதும் விரிவுப்படுத்துவதால், கிராம மக் களுக்கு பலன் கிடைக்கப்போவதில்லை. மாறாக, திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப் படலாம்’ என்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.இவ்விவகாரம் பூதாகாரம் அடையும் நிலையில் உள்ளதால், மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

Posted in Andhra, AP, Bengal, Chathisgar, Chathisgarh, Chattisgar, Chattisgarh, Compensation, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Contractors, Corruption, Employment, Females, Guarantee, Implementation, India, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Jharkhand Mukti Morcha, Jharkhand Party, Jobs, kickbacks, Lady, MadhyaPradesh, Madyapradesh, Manmohan, Metro, MNC, MP, NGO, Orissa, Party, Planning, Politics, Poor, Private, Public, Rahul, Reddy, Rural, Scheme, Sonia, State, Suburban, UP, Utharpradesh, UttarPradesh, Villages, WB, Women, YSR | Leave a Comment »

Compulsory rural service required for Doctor graduation – Medical Education

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

State of MBBS – Analysis on Medical education « Tamil News


கட்டாய கிராமப்புற மருத்துவ சேவைஜி.ஆர்.ரவீந்திரநாத்

“கிராமப் பகுதிகளில் பணியாற்ற டாக்டர்கள் மறுக்கிறார்கள் என்ற காரணத்தைக் கூறி’ எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவுடன் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் கட்டாய சேவைசெய்ய வேண்டுமென மத்திய அரசு சட்டம் கொண்டு வரவுள்ளது. இந்தச் சேவையை முடித்த பிறகுதான் மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்துகொண்டு தொழில் செய்ய முடியும். இதற்கேற்ப எம்பிபிஎஸ் படிப்புக் காலத்தை ஐந்தரை ஆண்டுகளில் இருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்தவும் மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.இச்சட்டம் இளம் டாக்டர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதோடு நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பெண்கள் மருத்துவம் பயில்வதைத் தடுத்துவிடும். நமது மருத்துவக் கல்வி, மருத்துவத் துறை, மக்கள் நல்வாழ்வுக் கொள்கை ஆகியவற்றில் உலக வங்கியின் விருப்பங்களுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.இந்தியாவில் 70 சதவீத மக்கள் கிராமப்புறங்களிலும் 70 சதவீத மருத்துவர்கள் நகர்ப்புறங்களிலும் இருப்பது வருந்தத்தக்கது. இதற்கு நமது சமூகப் பொருளாதார நிலைமைகளே காரணம். இந்தியாவில்

  • 3,043 சமுதாய மருத்துவ மையங்களும்
  • 22,842 ஆரம்ப சுகாதார மையங்களும்
  • 1, 37, 311 துணை மையங்களும்

உள்ளன என்று 2003-ம் ஆண்டு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

  • ஆரம்ப சுகாதார நிலையங்களில் 13.3% மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

சமுதாய மருத்துவமனைகளில்

  • 48.6% அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள்,
  • 47.9% மகப்பேறு மருத்துவர்கள்,
  • 46.1% பொது மருத்துவர்கள்,
  • 56.9% குழந்தை மருத்துவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கிராமப் புறங்களில்

  • 75% அறுவைச் சிகிச்சை மருத்துவர்களும்
  • 73% மகப்பேறு மருத்துவர்களும்
  • 86% குழந்தை மருத்துவர்களும் பற்றாக்குறையாக உள்ளனர்.

காலிப்பணியிடங்களை நிரப்ப அரசுகள் அக்கறை காட்டாததும் பணி நியமனத் தடை ஆணையும்தான் இந்த நிலைக்குக் காரணம்.
நிரந்தர வேலைவாய்ப்பை வழங்காமல், ஒப்பந்த அடிப்படையில் தாற்காலிகமாக மிகக்குறைந்த தொகுப்பூதியத்தில் மருத்துவர்களை நியமிப்பதால் மருத்துவர்கள் அரசுப்பணிகளில் சேரத் தயங்குகின்றனர்.

கிராமப்புற மருத்துவமனைகளின் வசதிகளை மேம்படுத்தாததும் கிராமப்புறங்களில் மருத்துவர்கள் தங்க குறைந்தபட்ச வசதிகளைக்கூட செய்து கொடுக்காததும் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. பல சமுதாய மருத்துவ மையங்களுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சொந்தக் கட்டடமே இல்லை. நூற்றுக்கணக்கான மையங்களில் கழிப்பிட வசதியே இல்லை.

கிராமப்புற மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்க கட்டாய கிராமப்புற சேவைதான் தீர்வு என்கிறது அரசு. கட்டாய கிராமப்புற சேவை பயனளிக்காது என்பதோடு, மருத்துவர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடும் என்பதுதான் இளம் மருத்துவர்களின் எதிர்வாதம்.

மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு நாட்டின் மொத்த உற்பத்தியில் வெறும் 0.9% மட்டும் ஒதுக்கப்படுகிறது. உலகிலேயே மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மிகக் குறைவாக நிதிஒதுக்கீடு செய்யும் நாடு இந்தியாதான். மொத்த உற்பத்தியில் 5% ஒதுக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இப்பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், ஊரகப்புற மருத்துவமனைகளுக்கு அதிகநிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மருத்துவம் தனியார் மயம் ஆவதும், பெரிய நிறுவனங்களாவதும் மருத்துவர்களை நகரங்களிலேயே குவியச் செய்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

1980-களில் 57% ஆக இருந்த தனியார் மருத்துவமனைகள் 2000-ல் 73% ஆக உயர்ந்துள்ளது. 1980களில் மக்களின் ஒட்டுமொத்த மருத்துவச் செலவில் அரசின் பங்களிப்பு 22% ஆக இருந்தது. இன்று 16% ஆகக் குறைந்துவிட்டது.

மருத்துவர்களை நிரந்தர ஊழியர்களாகப் நியமித்து கிராமப்புறங்களில் 2 ஆண்டு கட்டாய சேவை செய்த பின்னரே பணிவரன்முறை செய்யப்படும் என்ற நடைமுறையைக் கொண்டு வரவேண்டும். டாக்டர்களுக்கு மிகக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. டாக்டர்களின் ஊதியத்தை கணிசமாக உயர்த்த வேண்டும்.

கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றுவோருக்குக் கூடுதல் சம்பளமும் பதவி உயர்வில் முன்னுரிமையும் இதர சலுகைகளும் வழங்க வேண்டும். முதுநிலை மருத்துவம் பயில நுழைவுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும். மிகவும் பின்தங்கிய மலைப்பகுதிகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கலாம். இத்தகைய மருத்துவமனைகளில் மருத்துவர்களை பணியமர்த்த தனியாகவே சிறப்புப் பணி நியமன முறையைக் கையாளலாம். குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு இடமாறுதல் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் உள்ளூர் மருத்துவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கலாம். ஒழுங்காகப் பணிக்கு வராத மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம்.

ஊழல் முறைகேடுகளை ஒழிக்க அனைத்து மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். கட்டாய கிராமப்புறச் சேவையில் எம்பிபிஎஸ் முடித்த டாக்டர்களை பணியாற்ற வைப்பதால் மக்களுக்கு பெரிய அளவில் பயனில்லை. அரசின் புள்ளிவிவரப்படியே மகப்பேறு, குழந்தைகள்நல, பொது மற்றும் அறுவைச் சிகிச்சை மருத்துவர்களின் பற்றாக்குறையே கிராமப்புறங்களில் உள்ளது. இதற்கு முதுநிலை படிப்பு படித்த டாக்டர்கள்தான் கிராமப் பகுதிகளுக்கு அதிகம் தேவைப்படுகின்றனர்.

இக்குறைபாட்டைப் போக்க இப்படிப்புக்கான இடங்களை அதிகப்படுத்த வேண்டும். எம்பிபிஎஸ் படித்த டாக்டர்களுக்கு குறிப்பிட்ட துறைகளில் பயிற்சியளித்து அவர்களைப் பயன்படுத்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மற்றும் பட்டயப் படிப்பு படிக்கும் தனியார் மருத்துவர்களை ஓராண்டு காலம் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் முழு ஊதியத்துடன் பணியாற்றச் செய்ய வேண்டும். சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை சரி செய்யப்பட்டதும் இந்தக் கட்டாயச் சேவையைக் கூட ரத்து செய்ய வேண்டும்.

தற்சமயம் ஆண்டுதோறும் இந்தியாவில் 29, 500 டாக்டர்கள் படித்து முடித்து வெளிவருகிறார்கள். இன்னும் 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 40 ஆயிரம் ஆகஉயர்ந்துவிடும். ஒவ்வோராண்டும் இவர்களைக் கட்டாய கிராமப்புறச் சேவையில் தாற்காலிகமாகப் பணியமர்த்தினால் அது 40 ஆயிரம் டாக்டர்களுக்கான பணியிடங்களை நிரந்தரமாக ஒழித்துக் கட்டிவிடும். மேலும் இந்த திட்டத்துக்கான எம்பிபிஎஸ் படிப்பை ஆறரை ஆண்டுகளாக உயர்த்துவது சரியல்ல. ஒரு நபர் எம்பிபிஎஸ் படிப்பைத் தொடங்கி எந்தவிதமான தடங்கலும் இன்றி எம்சிஎச், டிஎம் போன்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளைத் தொடர்ச்சியாகப் படித்து முடிக்க குறைந்தபட்சம் 13 ஆண்டுகளாவது அவசியம்.

எம்பிபிஎஸ் படிப்பு காலத்தை ஆறரை ஆண்டுகளாக உயர்த்தினால் அது நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் மருத்துவம் பயிலும் ஆர்வத்தைக் குறைத்துவிடும். திருமணம் போன்ற காரணங்களால் பெற்றோர்கள் பெண்களை மருத்துவ படிப்புக்கு அனுப்பத் தயங்குவர். பணபலம் உள்ள ஆண்கள் மட்டுமே படிக்கும் துறையாக மருத்துவக் கல்வி மாறிவிடும்.

தற்பொழுது பிளஸ்2வில் உயிரியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது. இவ்வாண்டு எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைத்த பலர், பொறியியல் படிப்புக்கு மாறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்களின் வேலைவாய்ப்பை, உரிமைகளைப் பாதிக்காத வகையில் கிராமப்புற மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளை நிறைவு செய்ய ஆக்கப்பூர்வமாக அரசு முயலவேண்டும்.

(கட்டுரையாளர், சமூக சமதுத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலர்.)

——————————————————————————————————-
மாறட்டும் மருத்துவமனை நடைமுறைகள்!

இரா. சோமசுந்தரம்

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களில் பெரும்பாலானோர், வெளியிடத்தில் “தனி ஆலோசனைகள்’ வழங்குவதும், தனியார் மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைகள் செய்வதும் நடைமுறையில் உள்ளன. இதனால் அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் அறுவைச்சிகிச்சைகள் மூன்று வகையாக நடைபெறுகின்றன.

அவை: அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கேயே அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு, ஓரளவு குணமாகும்வரை தங்கி, பின்னர் வீடு திரும்புவோர். அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று, அதே அரசு மருத்துவர் ஆலோசனையின்பேரில் தனியார் மருத்துவமனையின் அறுவைக்கூடத்தில் சிகிச்சை முடித்துக் கொண்டு, தொடர் மருத்துவத்துக்கு அரசு மருத்துவமனை படுக்கைக்குத் திரும்புகிற அல்லது புறநோயாளியாக வந்து மருந்து பெற்றுச் செல்வோர். அரசு மருத்துவமனைக்கே வராமல், அரசு மருத்துவரின் தனிஆலோசனையைப் பெற்று, அவர் சொல்லும் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை முடித்து வீடு திரும்புவோர்.

எந்தவொரு மருத்துவச் செலவையும் ஏற்கும் சக்தி இல்லாத பரம ஏழைகள்தான் முதல் வகை சிகிச்சை பெறுகின்றனர்.

“கார்ப்பரேட்’ மருத்துவமனைகளில் ரூ.50 ஆயிரம் செலவழிக்க வசதியில்லாமல், ரூ.20 ஆயிரத்தில் சிகிச்சையை முடித்துக் கொள்ள விரும்புவோர் மூன்றாவது வகையைத் தேர்வு செய்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கை குறைவு.

நடுத்தர வருவாய்க் குடும்பத்தினர்தான் இரண்டாவது சிகிச்சையை மிக அதிக அளவில் தேர்வு செய்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களால் மருத்துவத்துக்குத் தனியாக செலவு செய்யும் சேமிப்புகள் ஏதுமில்லை. நோய்வந்த பிறகே அந்த நோய்க்கான சேமிப்பு அல்லது செலவுத் தொகை ஒதுக்கப்படுகிறது. கார்ப்பரேட் மருத்துவமனை வாசலைக்கூட இவர்களால் மிதிக்க முடியாது. தனியார் மருத்துவமனைகளில் ஆலோசனை பெற்று, மருந்து வாங்கும் சக்தி இருந்தாலும், அறுவைச்சிகிச்சை, ஒரு வாரம் படுக்கையில் இருப்பது ஆகிய செலவுகள் அவர்களது ஓராண்டு வருமானத்தை விழுங்கக்கூடியவை. இதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். அதே நேரத்தில் அறுவைச்சிகிச்சையை மட்டும் தரமான இடத்தில் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இந்த நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு இருக்கிறது.

அரசு மருத்துவமனையை நாடவும், அதே நேரத்தில் உயிருக்கு ஆபத்தில்லாத சிகிச்சையை விரும்பவும் செய்யும் நடுத்தர வருவாய்ப் பிரிவினரின் இந்த தற்காப்பு முயற்சியை அரசு ஏன் சட்டப்படி முறைப்படுத்தக்கூடாது?

தமிழ்நாட்டில் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமே மருத்துவ வசதிகள் கொண்ட அறுவைக்கூடங்கள் உள்ளன. இவற்றில் நவீன துணைக் கருவிகளைக் கொண்டுள்ளவை மிகச் சிலவே.

தாலுகா அளவில் உள்ள மருத்துவமனைகளில் பல கோடி ரூபாய் செலவழித்து எவ்வளவு நல்ல எக்ஸ்-ரே கருவிகள், ஸ்கேன் கருவிகள் வாங்கி வைத்தாலும், அவை சில மாதங்களில் நிச்சயம் பழுதாகிவிடுகின்றன.

ஆகவே, எல்லா நகரங்களிலும் பரவலாக உள்ள தனியார் மருத்துவமனைகளின் அறுவைச் சிகிச்சைக்கூடங்களைப் பயன்படுத்திக் கொள்ள சரியான அணுகுமுறையை அரசு உருவாக்கினால் பயனுள்ளதாக அமையும்.

தனிஆலோசனையின்போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, என்டோஸ்கோபி, ஈசிஜி, எக்ஸ்-ரே, மருந்துகள், அறுவைக்கூடம் வாடகை எல்லாவற்றிலும் குறைந்தபட்சம் 15 சதவிகிதம், ஊக்கத்தொகையாக மருத்துவருக்கு அவர்களால் வழங்கப்படுவது என்பது ஊர் அறிந்த ரகசியம். இந்த ஊக்கத் தொகையை அரசு சட்டப்படி வழங்க முன்வந்தால், மருத்துவத்தில் பட்டுப்போன மனிதாபிமானம் மீண்டும் தளிர்க்கும்.

அரசு மருத்துவமனை மருத்துவர்களும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புவது குற்றமல்ல. அவர்கள் திறமையானவர்களாக இருந்து அவர்களைத் தேடிவரும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் அதிகரிக்கும்போது அதை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தனியார் மருத்துவமனை அறுவைக்கூடங்களுக்கு செலுத்தப்படும் கட்டணத்தில் 20 சதவிகிதத்தை சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கும், 20 சதவிகிதத்தை மருத்துவமனைக்கும் அளிக்க வகை செய்யலாம்.

வருமான வரி ஏய்ப்பு குறித்த தகவலைத் தருபவருக்கு, கண்டுபிடிக்கப்பட்ட வரிஏய்ப்புத் தொகையில் ஒரு பங்கை அரசாங்கமே அளிக்கும்போது, உயிரைக் காக்கும் மருத்துவருக்கும் அரசே சட்டப்படி கமிஷன் கொடுத்தால் என்ன தவறு?

தற்போது அரசு மருத்துவமனையில் பணியாற்ற திறமையான மருத்துவர்கள் தயங்குவதன் காரணம், அவர்களுக்கு வெளியில் நிறைய வருவாய் கிடைக்கிறது என்பதுதான். அந்த வாய்ப்பை அரசு மருத்துவமனையிலேயே ஏற்படுத்திக் கொடுத்தால் தவறில்லை; பணிபுரிய நிறைய மருத்துவர்கள் முன்வருவார்கள்.

விபத்து, தற்கொலை, வெட்டு, குத்து என்றால் முதலில் அரசு மருத்துவமனைக்குப் போக வேண்டும் என்ற நிலைமை இப்போது இல்லை. தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று, காவல்நிலையத்தில் வழக்கைப் பதிவு செய்யும் மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன.

இதேபோன்று தனியார் மருத்துவமனைகளின் அறுவைக்கூடங்களைப் பயன்படுத்தவும், அங்கே அரசு மருத்துவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு சிகிச்சை அளிக்கவும் புதிய மாற்றங்கள் இன்றைய தேவையாக இருக்கிறது.

———————————————————————————————————–
“கருணை’ என்பது கிழங்கு வகை!

இரா. சோமசுந்தரம்
மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் ஓராண்டுக்கு கிராமங்களில் பணிபுரிவதைக் கட்டாயமாக்கும் திட்டத்தை மருத்துவ மாணவர்கள் எதிர்க்கின்றனர். போராட்டங்கள் நடத்துகின்றனர்.

ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள், “நாங்கள் மக்களுக்கு எதிரியல்ல’ என்ற வசன அட்டைகளைத் தாங்கும்போதும் “குக்கிராமத்திலும் சேவை செய்ய நாங்கள் ரெடி, நிரந்தர வேலைதர நீங்கள் ரெடியா?’ என்ற வசன அட்டையை ஏந்தி நிற்பதைப் பார்க்கும்போதும் மருத்துவக் கவுன்சிலின் மெய்யான நோக்கத்தைப் புரிந்துகொண்ட பின்புதான் இந்தப் போராட்டத்தை நடத்துகிறார்களா என சந்தேகம் வருகிறது.

தற்போது நான்கரை ஆண்டுகள் படிப்பு, ஓராண்டு மருத்துவமனையில் தொழில் பழகுதல் என்ற அளவில் ஐந்தரை ஆண்டுகளாக உள்ள மருத்துவப் படிப்பு, கிராமப்பகுதியில் ஓராண்டு சேவையை வலியுறுத்துவதன் மூலம் ஆறரை ஆண்டுகளாக நீட்டிக்கப்பட உள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கும் மருத்துவம் கிடைக்கச் செய்யும் நோக்கத்தில்தான் இந்திய மருத்துவக் கவுன்சில் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

மருத்துவக் கவுன்சிலின் புதிய நடைமுறைப்படி, இந்த இளம் “மருத்துவர்கள்’ கிராமப்பகுதிகளில் ஓராண்டு பணியாற்றிய பின்னர் அவர்களது மருத்துவப் படிப்புக்கான சான்றிதழ் அளிக்கப்படும். அதன் பின்னரே அவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்புகளை, சிறப்பு மருத்துவப் படிப்புகளைத் தொடர முடியும்.

மேற்படிப்புக்குத் தடையாக, ஓராண்டு கிராம மருத்துவ சேவை குறுக்கே வந்து நிற்பதை இம்மாணவர்கள் விரும்புவதில்லை. இந்தப் போராட்டத்தின் அடியிழையாக இருப்பது இந்த நெருடலான விஷயம்தான்.

கிராமங்களில் பணியாற்ற மருத்துவர்கள் வருவதில்லை என்பதுதான் அரசின் பிரச்னை. இந்த மாணவர்கள் கிராமங்களில் பணியாற்றத் தயார் என்றால் இவர்களுக்கு நிரந்தர வேலை தருவதில் அரசுக்கு என்ன சிக்கல் இருக்க முடியும்?

மருத்துவக் கவுன்சில் குறிப்பிடும் ஓராண்டு கால கிராம மருத்துவ சேவைக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த மாணவர்கள் முன்வைத்தால் அதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்தப் புதிய திட்டத்திலும்கூட ஓராண்டு முழுவதும் கிராமப்புறங்களில் பணியாற்றும் அவசியம் ஏற்படாது. ஏனென்றால் நான்கு மாதங்களுக்கு தாலுகா அளவில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்ற வேண்டும்.

நான்கு மாதங்களுக்கு மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். நான்கு மாதங்களுக்கு சமுதாய நலக் கூடங்களில் பணியாற்ற வேண்டும். இதன்படி பார்த்தால், கடைசி நான்கு மாதங்கள் மட்டுமே அவர்கள் போக்குவரத்து வசதிகள் குறைந்த கிராமப்பகுதியில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.

அதிலும் தற்போது மினி பஸ்கள் இயக்கப்படுவதால் பஸ்கள் செல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலைமை இருப்பதை மறுக்க முடியாது.

தங்களுடன் சமகாலத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள், நான்காவது ஆண்டிலேயே வளாக நேர்காணல் மூலம் வேலை கிடைக்கப்பெற்று, கைநிறையச் சம்பாதிக்க முடியும் என்றால், மருத்துவர்களுக்கு மட்டும் ஏன் ஆறரை ஆண்டுகள் என்று கேள்வி எழுப்புவது சரியானதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது.

சொல்லப்போனால், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் 5 ஆண்டுகள் படிப்பு மற்றும் ஓராண்டு தொழில் பழகுதல் என 6 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பட்டச் சான்றிதழ் அளிக்கப்படுகிறது.

தனியார் மருத்துவக் கல்லூரி நீங்கலாக, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மூலம் பட்டம்பெறும் ஒவ்வொரு மருத்துவ மாணவருக்கும் அரசு மறைமுகமாக ஏற்கும் செலவினங்கள் பல லட்சம் ரூபாய் வரை ஆகின்றது என்பது இவர்களுக்குத் தெரியாதது அல்ல.

இவர்களில் 69 சதவிகிதத்தினர் அரசு இடஒதுக்கீட்டில் வாய்ப்பு பெற்றவர்கள். அரசு தங்களுக்கு அளித்ததை ஈடு செய்யும் வகையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றவும் ஓராண்டு மருத்துவ சேவையின்போது தங்கள் மருத்துவ அறிவை மேலும் வளப்படுத்திக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இதனை ஏன் கருதக்கூடாது?.

படிப்பின் குறிக்கோள் பணம் என்றாகிவிட்டது. மாணவர்கள் மட்டுமல்ல } மருத்துவப் பேராசிரியர்களுக்கும்!

அதிக அளவு தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ள ஆந்திர மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்றைய சிக்கல் விநோதமானது. கற்பிக்கப் பேராசிரியர்கள் இல்லை.

திறமையானவர்கள் அனைவரும் விருப்ப ஓய்வு பெற்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பல ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்குக்காகச் சென்றுவிட்டனர். மிக அதிக மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களுக்குப் பாடம் நடத்த பேராசிரியர்கள் இல்லை.

குறைந்த மதிப்பெண்களுடன் பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து சேர்ந்த வசதிபடைத்த மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க பேராசிரியர்கள் இருக்கிறார்கள்.

ஏழை சொல் அம்பலம் ஏறாது. அத்தோடு, ஏழையின் நோய்க்கு சிகிச்சையும் கிடையாது. புதுமைப்பித்தன் சொன்னதைப்போல, “கருணை’ என்பது கிழங்கு வகையில் சேர்க்கப்பட்டுவிட்டது!

———————————————————————————————————-
மருத்துவம் வெறும் வியாபாரமல்ல!

Dinamani Op-ed Sep 6, 2007/Thursday
படித்தவர்கள் பெரும்பாலும் சுயநலத்துடன் செயல்படுகின்றனர் என்பதற்கு இப்போதைய உதாரணம், கிராமசேவை செய்ய மறுக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம். ஐந்தரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பு முடிந்த பிறகு மருத்துவர்கள் ஓராண்டு காலம் கிராமப்புறங்களில் கட்டாயம் சேவை செய்ய வேண்டும் என்கிற திட்டத்தை இவர்கள் எதிர்ப்பது ஏன் என்பது புரியவில்லை. மருத்துவர்களுக்கு சமூகக் கடமை உண்டு என்பதை இவர்கள் உணர மறுப்பது நியாயமில்லை.

நம் நாட்டில் மருத்துவ வசதி நகரங்களில்தான் கிடைக்கிறது, கிராமப்புறங்களில் கிடைப்பதில்லை என்பது உலகறிந்த உண்மை. இன்னும் சொல்லப்போனால் பல கிராமங்கள் இப்போதும் நாட்டு வைத்தியத்தையும், முறையாக மருத்துவப் படிப்பு படிக்காத அரைகுறை போலி மருத்துவர்களையும் நம்பித்தான் இருக்கின்றன என்பது அதிர்ச்சி தரும் உண்மை. போதிய மருத்துவ வசதி இன்மையில் ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியாவையும் ஒப்பிடுகிறது உலக சுகாதார நிறுவனம் (ரஏஞ). அமெரிக்கா மற்றும் வளர்ச்சி அடைந்த மேலைநாடுகளில் ஆயிரம் பேருக்கு மூன்று அல்லது நான்கு மருத்துவர்கள் என்கிற நிலைமை இருக்கும்போது, இங்கே இன்னும் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைமைகூட ஏற்படவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

ஒரு விஷயத்தை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளில் குக்கிராமம்வரை ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்தி மருத்துவ வசதி கிராமப்புறங்களைப் போய்ச் சேர வேண்டும் என்பதில் நமது மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட்டன. இதற்காக, நிதிநிலையறிக்கையில் பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 1951-ல் வெறும் 725 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருந்தன. இப்போதோ ஏறத்தாழ 2 லட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆரம்பத்தில் 5,842 பேருக்கு ஒரு மருத்துவர் என்றிருந்த நிலைமை மாறி இப்போது சுமார் 1,500 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இப்போது, இந்தியாவில் சுமார் 6,50,000 மருத்துவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது மருத்துவக் கழகக் குறிப்பு. ஆனால் இந்த மருத்துவர்களில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் நகரங்களில்தான் இருக்கிறார்களே தவிர கிராமங்களில் இருப்பதில்லை. தங்களுக்கு வசதியான வாழ்க்கையும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பள்ளிக்கூடங்களும் கிராமங்களில் கிடைப்பதில்லை என்பதுதான் அவர்களது வாதம்.

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 73 விழுக்காடு மக்கள் வாழும் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் பலவற்றிலும் மருத்துவர்கள் பெயருக்கு அவ்வப்போது வந்து போகிறார்களே தவிர சேவை மனப்பான்மையுடன் அங்கே தங்கிப் பணியாற்றுகிறார்களா என்றால் இல்லை. பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்தவர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதும் தவறுதான்.

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை 11,000. இவர்களில் சென்னை உள்பட நகரங்களில் பணிபுரிபவர்கள்தான் சுமார் 7,500 பேர். அதேபோல, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவர்கள் சுமார் 35,000 பேர் என்றால் இவர்களில் 21,000 பேர் நகரங்களில்தான் மருத்துவசேவை செய்கிறார்கள். சமூக சேவை, சமுதாயத்துக்குத் தங்களது பங்களிப்பு என்கிற வகையில், அசௌகரியங்களையும் வருமான இழப்பையும் கருதாமல் ஓராண்டு காலம் நமது மருத்துவர்கள் கிராமப்புற சேவையாற்ற முன்வர மறுப்பது, மருத்துவத் துறையின் மகத்தான சேவைக்கே களங்கம்.

மருத்துவப் படிப்பு தனியார்மயமாக்கப்பட்டதன் தொடர் விளைவுதான், “நாங்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற மாட்டோம்’ என்கிற மருத்துவர்களின் பிடிவாதத்துக்குக் காரணம். கிராமங்களில் சேவை செய்தால் வேலை நிரந்தரம் செய்து தர முடியுமா என்கிற எதிர்க்கேள்வி அர்த்தமில்லாததாகத் தெரிகிறது. இந்தியாவையும் இந்தியாவின் பெருவாரியான மக்களையும் அவர்களது அவலநிலையையும் சரியாகப் புரிந்துகொள்ளாத மருத்துவர்கள் இருந்தும் என்னதான் பயன்? இவர்களை உருவாக்க அரசும் சமுதாயமும் தனது வரிப்பணத்தை ஏன் விரயமாக்க வேண்டும் என்று கேள்வி கேட்க யாருமே இல்லை என்பதுதான் அதைவிட வருத்தமான விஷயம்.

ஓராண்டு காலம் கிராமப்புற சேவையாற்றும் திட்டம் என்பது கிராமப்புற மக்களின் சமூக பொருளாதார நிலைகளை நமது மருத்துவர்கள் அறிவதற்கு நிச்சயமாக வழிகோலும். வரவேற்கப்பட வேண்டிய இந்தத் திட்டத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு சமூக சிந்தனை இல்லை என்று சொல்வதா, இல்லை சுயநலத்திற்கு அவர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள் என்று சொல்வதா? மருத்துவம் வெறும் வியாபாரமல்ல என்பதை மறந்துவிடக் கூடாது!

———————————————————————————————————————————————————————-

தேவை, கிராமப்புற கட்டாய மருத்துவச் சேவை

நள்ளிரவைத் தாண்டிய நேரம்! தஞ்சை ராஜாமிராசுதார் மருத்துவமனையின் வாயிலை ஒரு மாட்டுவண்டி அவசரமாகத் தாண்டுகிறது. அந்த வண்டி மகப்பேறு மருத் துவப் பிரிவை நோக்கி வருகிறது. வண்டியில் ஒரு பெண்ணின் முனகல் சப்தம்.
பயிற்சி மருத்துவர்களாகிய நாங்கள் அவ் வண்டியை நோக்கி ஓடி, வைக்கோலுக்கு நடுவே பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்த அந்த கிராமத்துப் பெண்ணை, கைத்தாங்கலாகப் பிடித்து வந்து பிரசவ வார்டில் படுக்க வைத்தோம். பிரசவத் தின்போது தலை வருவதற்குப் பதிலாக குழந் தையின் ஒரு கை வெளியே வந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிக் கொண்டி ருப்பது தெரிந்தது.
உடனே மருத்துவச் சிகிச்சை அளித்தும் – குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடிய வில்லை; அதிக உதிர இழப்பு காரணமாக தாயைக் காப்பாற்ற முடியவில்லை; ஏன் முடி யவில்லை? உடனே மருத்துவச் சிகிச்சை அளிக்க முடியவில்லை; ஏன் முடியவில்லை? அவர்கள் இருந்த கிராமத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு சிறப்பு மருத் துவ உதவி இல்லை. அந்தப் பெண் செய்த பாவம் ~ அவள் கிராமத்தில் வாழ்ந்ததுதான்.
இதைப்போல கிராமத்துத் தாய்மார்கள் சரியான சிகிச்சை கிடைக்காமல் இன்றும் மாண்டு போகிறார்கள். தாய்மார்களின் பிர சவ கால உயிரிழப்பை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. அப்படியே பிரசவமானா லும் பச்சிளங்குழந்தைகள் போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் இறக்கும் விகிதத்தை நம் மால் கணிசமாகக் குறைக்க முடியவில்லை.
நாட்டின் முன்னேற்றத்துக்கு சுகாதார மேம் பாடும் முக்கியம். நிலைமை வேறாக உள்ளது.
கிராமத்தில் அனைவருக்கும் அடிப்படை மருத்துவ வசதி அத்தனையும் கிடைக்க வேண்டும். கனடா நாட்டிற்கு மேல்படிப்பு பயிற்சிக்காகச் சென்றிருந்தபோது அங்கு நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலம் அவச ரமாகக் கொண்டு வருவதைக் கண்டு வியந்து போனேன். நம் நாட்டில் அவசர சிகிச்சைப் பிரிவு அடித்தளத்தில் இயங்குவது போல் டொரண்டோ நகரில் 20-வது மாடியின் மேல் தளத்தில் குழந்தைகள் மருத்துவமனை இயங் குவதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.
அங்கே கனடா மக்களின் உயிரைக் காக்க உல கத் தரம் வாய்ந்த மருத்துவமனைகளை காப் பீட்டு உதவியுடன் அரசுதான் நடத்து கிறது. பச்சிளங் குழந்தைகளின் உயிர் காக்க ஹெலிகாப்டர்கள் விரைந்து வருகின்றன. இங்கே வெள்ளத்தில் எத் தனை பேர் உயிரோடு இருக்கிறார்கள் என்பதனைப் பார்க்க அமைச்சர் பெரு மக்களையும் அதிகாரிக ளையும் தான் ஹெலிகாப் டர் சுமந்து வருகிறது.
என்ன வித்தியாசம்! தாஜ்மகாலை உலக அதிசயம் என்று கொண்டாடுகிறோம். ஆனால் அது தன் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய காதல் மாளிகை என்றுதான் பலருக்குத் தெரியும்.
ஆனால் அவரது மனைவியார் பிரசவத்தின் போது இறந்ததையடுத்து அந்த தாஜ்மகால் கட்டப்பட்டது என்பது தனி முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் ஒரு மருத்துவராக அந்த தாஜ்மகாலைப் பார்க்கும்போது எனக்கு அதன் கலைநயம் கண்ணுக்குத் தெரி யாது. பிரசவகால மரணங்களைத் தடுக்கும் ஒரு சின்னமாக இருக்க வேண்டும் என்ற எண் ணமேதான் மேலோங்கும். நமது மருத்துவர் கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் அமெரிக்கா வில் மட்டும் இருக்கிறார்கள் என்பது பெரு மையாக இருக்கிறது. அதனால் நம் நாட்டுக் குப் பயனில்லையே.
நம் நாட்டில் ஏறத்தாழ 450 மருத்துவக் கல் லூரிகளில் ஆண்டுக்கு 30,000 மருத்துவர்கள் படித்துப் பட்டம் பெற்றும், இன்னமும் கிரா மப் பகுதிகளில் தேவையான மருத்துவர்கள் இல்லை. 75 சதவிகிதம் இந்தியர்கள் கிராமத் தில் வாழ்ந்தாலும், அங்கே பணிபுரிவது வெறும் 20 சதவிகிதம் மருத்துவர்கள் மட் டுமே. போதாக்குறைக்கு அங்கே போலி மருத் துவர்கள் தொல்லை வேறு.
வெளிநாடு சென்ற மருத்துவர்கள் குண் டுக்கு அஞ்சி திரும்பியிருக்கிறார்களே தவிர, தொண்டு செய்வதற்காகத் திரும்பி வருவதில் லையே? 2020-ல் வல்லரசு நாடுகளில் ஒன் றாக நம் நாடு வளர வேண்டும் என்று நாம் கனவு காணும் வேளை யில், மகப்பேறு காலத்தில் தாய்மார் கள் உயிரிழக்கும் பரிதாபம், பெண் சிசுக்கொலை, பச்சிளம் குழந்தைக ளின் மரண விகிதம் போன்றவை இன்னும் நம் நாட்டில் அதிகமாகக் காணப்படுகின்றன. பிர சவ கால உயிரிழப்பை வளர்ந்த நாடுகள் தடுத் துவிட்ட நிலையில் நம் நாட்டில் அது தொட ரும் அபாயம் உள்ளது.
கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக் கடிக்கும், நாய்க் கடிக் கும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லாததால் உயிரிழப்பு தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கி றது. இதுபோன்ற அவல நிலையை அடி யோடு நிறுத்த, மத்திய சுகாதாரத்துறையின் கிராமப்புற சேவைத்திட்டம் வரவேற்கத்தக் கதே. ஆனால் இளம் மருத்துவர்களைப் படித்து முடித்த கையோடு கிராமப்புறத்திற்கு அனுப்பி வைப்பதால் மட்டும் கிராமங்களில் மருத்துவத் தேவைகள் பூர்த்தியாகி விடாது.
கிராமப்புற மருத்துவப் பணிக்கான அடிப்ப டைக் கட்டமைப்பைச் சரி செய்ய வேண்டும்.
பணிமுதிர்ச்சி பெற்று ஓய்வு பெற்ற மருத்து வர்களை, கர்நாடக அரசு செய்வது போல் பணியமர்த்தி அவர்களின் மேற்பார்வையில் இளம் மருத்துவர்கள் கிராமங்களில் பணி யாற்றச் செய்யலாம். அவர்களுக்கான ஊதி யம் 8 ஆயிரம் என்பது இந்தக் காலகட்டத்தில் குறைவு என்பதை அரசு உணர்ந்து அதிகப்ப டியான ஊதியத்தை பணி ஊக்கக் கொடை யாக அளிக்க வேண்டும்.
அவர்கள் பணி செய்யும் இடங்களில் தங்கு மிடம், தொலைபேசி வசதி, வாகனவசதி எல் லாம் செய்து தர வேண்டும். மருத்துவக் கல் லூரிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள கிராம ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தத்தெ டுத்து – ஆண்டு முழுவதும் மருத்துவ மாண வர்களை பயிற்சி காலத்திலேயே கிராம சேவைக்குப் பழக்க வேண்டும்.
ஒரு பக்கம் டெலிமெடிசின், மெடிக்கல் டூரி ஸம் என்று பெருமை பேசிக் கொள்கிறோம்.
அதேநேரத்தில் கிராமங்களின் மருத்துவ அவ லங்களை மறக்கவோ, மறைக்கவோ கூடாது.
ஏழை மக்களின் வரிப்பணத்தில் இலவச மருத்துவக் கல்வி பெறும் மாணவர்கள் அவர் களுக்கு நன்றிக் கடனாக சிறிது காலம் சேவை செய்ய மறுத்து வெளிநாடு செல்ல நினைப் பது தவறுதான். இதில் போராடத் தேவை இல்லை. மருத்துவ மாணவர்கள் தங்கள் சமு தாயக் கடமையை உணர வேண்டும்.
கிராம சேவைத்திட்டத்தின் ஆழத்தைப் புரிந்துகொண்டு மருத்துவர்கள் இறைவ னுக்கு அடுத்தபடியானவர்கள் என்ற மக்க ளின் நம்பிக்கையைக் காப்பாற்றும்படி நடந்து கொள்ள வேண்டும். அரசும் அதற் கேற்ற மாதிரித் திட்டங்களை வகுக்க வேண் டும். தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்க ளையும் இதில் கட்டாயமாக ஈடுபடுத்த வேண்டும்.
ஆசிரியர் தொழிலும் மருத்துவத் தொழி லும் புனிதமான பணிகளாக ஆண்டாண்டு காலமாகப் போற்றப்பட்டவை. எனவே மருத் துவர்கள் தங்களுக்குள் ஓர் ஆத்ம பரிசோ தனை செய்து கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தில் மருத்துவம் ஒரு சேவைத் துறையாக இருந்தது. தற்போது மருத்துவ மனை சார்ந்த தொழிலாகியுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் இளம் மருத்துவ மாணவர்களுக்கு சேவைக்கான நல்வழி காட்ட வேண்டியது அனைவரது கடமை.
மருத்துவச் சேவைக்கான அரிய வாய்ப் பைப் பெற்ற மருத்துவ மாணவர்கள் படித்து முடித்தபின் ஓராண்டு கிராம மக்களுக்கு மருத்துவம் செய்வதைப் பெரும் பேறாகக் கருதி இன்முகத்துடன் ஏற்றுச் செல்ல வேண் டும்.
அங்கே ஏழைகளின் சிரிப்பில் இறைவ னைக் காணலாம். அவர்களை கருணையு டன் தொட்டு வைத்தியம் பார்த்தால் நோய் பறந்து விடும். அங்கேதான் நீங்கள் கடவுளாக மதிக்கப்படுவீர்கள்!

கட்டுரையாளர்: நிறுவனர், பெண்சக்தி இயக்கம்.
———————————————————————————————————————————————————————-
நல்லது நடக்கிறது!

சுதந்திர இந்தியாவில் மருத்துவச் சேவையில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது என்பது உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம். மருத்துவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களும், உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளும் சென்னையில் இருக்கும் அளவுக்கு மற்ற பெருநகரங்களில் இல்லை என்றுதான் கூற வேண்டும். அதனால்தானோ என்னவோ, இந்தியா வின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், ஏன் உலகின் பல பாகங்களிலி ருந்தும் மருத்துவச் சிகிச்சைக்காக சென்னைக்கு வரும் நோயாளிக ளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது.
தனியார் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும் தமிழக மருத்துவத்துறை, சாமானிய மக்களுக்குப் பயன்படும் அரசுத்துறை யில் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி யாருமே சிந்திப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் சொல்லப்போனால், அரசு மருத்துவம னைகளின் செயல்பாடு தனியார் துறைக்கு எள்ளளவும் குறையாத அளவுக்குத் தரத்திலும், சேவையிலும் இருக்கிறது என்று சொன்னால் பலரும் நம்ப மாட்டார்கள். காரணம், அரசு மருத்துவமனைகளின் வெளிப்புறத் தோற்றமும், அன்றாடப் பராமரிப்பும்தான்! 29 மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைகள்; 156 தாலுகா அரசு மருத்துவமனைகள்; 1418 ஆரம்ப சுகாதார நிலையங்கள்; இவையெல்லாம் போதாதென்று 14 அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகள். இத்தனை மருத்துவமனைகள் இருந்தும் மருத்துவச் சேவை அனைத்துத் தரப்பு மக்களையும் போய்ச் சேரவில்லை என் றால் அதற்கு முக்கியமான காரணம், மக்கள்தொகைப் பெருக்கம் தான்.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வசதியுள்ளவர் கள் கூடுமானவரை அரசு மருத்துவமனைகளை நாடுவதில்லை.
இதற்குக் காரணம் அவர்களது வறட்டு கௌரவம் அல்லது அரசு மருத் துவமனைகளில் சரியான சிகிச்சை கிடைக்காது என்கிற தவறான கண்ணோட்டம் போன்றவை. முடிந்தவரை அரசை நம்பாமல் தனி யார் மருத்துவமனைகளை நோயாளிகள் நாடும்போது, உண்மையி லேயே வசதியற்றவர்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு அரசு மருத் துவமனைகளுக்குக் கிடைக்கிறது என்பதால் அதுவும் ஒருவகையில் நல்லதுதான்.
இப்போதும்கூட, பெருவாரியான நோயாளிகள் மருத்துவச் சிகிச் சைக்கு அரசு மருத்துவமனைகளைத்தான் நம்பி இருக்கின்றனர் என்ப துதான் உண்மை நிலை. விபத்து சம்பந்தப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு மட்டுமே எடுத்துச் செல்லப்பட வேண்டும் என் கிற தவறான கண்ணோட்டம் இப்போதும் இருப்பதால், அவசர சிகிச் சைப் பிரிவுகள் எந்தவொரு நேரத்திலும் நிரம்பி வழிந்து கொண்டிருக் கும் நிலைமை தொடர்கிறது.

தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு சுமார் 11.5 லட்சம் பிரசவங்கள் நடைபெறுவதாகவும் இவற்றில் 6.5 லட்சம் பிரசவங்கள் அரசு மருத் துவமனைகளில்தான் நடைபெறுகின்றன என்கிற புள்ளிவிவரத்தை சமீபத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டிருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், கிராமப்புற மருத்துவ வசதிக்காகத் தமிழக அரசு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகவும் அறிவித்தி ருக்கிறார்.

இப்போதும், சுமார் அறுபது விழுக்காட்டுக்கும் அதிகமான மக்கள் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் தனியார் மருத்துவமனைக ளில் பெரும் பணம் செலவழித்து சிகிச்சை பெற முடியாத நிலைமை தான். மருத்துவச் செலவுக்குக் கடன் வாங்கி அதனால் வறுமையில் வாடும் கிராமப்புறக் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மருத்துவச் சேவையை ஏழை எளியோரும் பயன்பெறும் வகையில் மாற்ற வேண்டும் என்கிற அரசின் நல்லெண்ணம் கட்டாயமாக வர வேற்கப்பட வேண்டிய விஷயம். இந்த விஷயத்தில், அரசு மருத்துவ மனைகளைத் துப்புரவு செய்தல், அடிப்படை வசதிகளை அதிகரித் தல் போன்றவைகளுக்குத் தன்னார்வ நிறுவனங்களையும், சமூக சேவை நிறுவனங்களையும் ஈடுபடுத்தினால் என்ன? அரசு ஏன்முயற் சிக்கக் கூடாது?

———————————————————————————————————————————————————————-

புதுப்பிக்கப்பட்ட நாள்: 19 நவம்பர், 2007

தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் மீண்டும் தொடங்கியது

மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்கள் கட்டாயம் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டுமென்று இந்திய மத்திய அரசு அறிமுகப்படுத்தவிருக்கும் விதிக்கு எதிராக தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களின் போராட்டத்தினை மீண்டும் தொடங்கியுள்ளார்கள்.

இது தொடர்பில் மருத்துவ மாணவர்கள் திங்கட்கிழமை முதல் வெவ்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகிறார்கள். அரசின் இந்தத் திட்டமானது உண்மையான கிராப்புற சேவையல்ல என்பது மாணவர்களின் வாதமாகவுள்ளது.

இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் பல இடங்கள் காலியாகவுள்ள நிலையில் மருத்துவப் படிப்பை ஆறு ஆண்டுகளாக அதிகரித்தால் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் வருவது குறைந்துவிடும் எனவும் மாணவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இந்தியாவில்தான் உலக அளவில் குழந்தைகள் இறப்பு அதிமாக இருக்கிறது என்றும் 73 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்கின்ற காரணத்தினாலும், கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு எண்ணுகிறதாலும்தான் இவ்வாறான ஒரு திட்டத்தை அரசு முன்னெடுத்துவருகிறது என்று இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி இராமதஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களில் பணிசெய்யவேண்டும் என்பது இருந்தது என்றும், காலகட்டத்தில் அது இல்லாமல் போனது என்றும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் கூட இன்னமும் ஐந்து அல்லது பத்தாண்டுகள்தான் இருக்கும் எனவும் அமைச்சர் அன்புமணி கூறுகிறார்.

இந்த சர்ச்சை குறித்து சுகாதார அமைச்சர், மருத்துவ மாணவர்கள் மற்றும் பலரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்களை நியமிக்க கோரி பா.ம.க., போராட்டம்: ராமதாஸ்துõத்துக்குடி: “தமிழகத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் போதுமான டாக்டர்களை நியமிக்கக்கோரி பா.ம.க., போராட்டம் நடத்தவுள்ளதாக’ அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

துõத்துக்குடியில் அவர் கூறியதாவது: முதல்வர் கருணாநிதியை சந்தித்த மருத்துவ மாணவர்கள், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இன்று வரை நுõதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நானும் ஒரு டாக்டர் தான். டாக்டர்கள் நலனுக்கெதிராக செயல்பட மாட்டேன்.

“கடந்த ஆட்சியில் மாதம் எட்டாயிரம் ரூபாயில் தொகுப்பூதியத்திற்கு அரசு டாக்டர்களை நியமித்த’ ஜெயலலிதா, தற்போது கிராமப்புற சேவையை எதிர்த்து போராடுவது கண்டனத்திற்குரியது. மருத்துவ மாணவர்களின் ஓராண்டு கட்டாய கிராமப்புற சேவை, வெறும் பேச்சளவில் தான் உள்ளது. அரசாணையோ, பார்லியில் சட்ட முன்வரைவோ, மசோதாவோ தாக்கல் செய்யப்படவில்லை. பிரச்னை விவாதப்பொருளாகத்தான் உள்ளது.

கட்டாய கிராமப்புற சேவை குறித்து மருத்துவ மாணவர்களிடம் மூன்று மணி நேரம் பேசிய மத்திய அமைச்சர் அன்புமணி, மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுத்தான் குழு அமைத்தார். எந்த மாநிலத்திலும் இல்லாத போராட்டம் தமிழகத்தில் நடக்கிறது. மத்திய அமைச்சர் அன்புமணி டில்லியில் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களும், கிராமப்புற சேவை திட்டத்தை வரவேற்று உடனடியாக கொண்டு வரவேண்டும் என்றனர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் அதில் கலந்து கொண்டார். கையெழுத்து வேண்டுமானால் அமைச்சர் போடாமல் இருந்திருக்கலாம். தமிழக அமைச்சர் அப்போது எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தது ஏன்?

கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவ மாணவர்களுக்கு கிராமப்புற சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், அவர்கள் அபராதத்தை செலுத்த வேண்டும். நமது நாட்டு மருத்துவமனைகளில் அமெரிக்க தர சிகிச்சை தருவதற்குத்தான், மத்திய அரசு கட்டாய கிராமப்புற சேவை திட்டத்தை கொண்டு வருவதாக கூறியுள்ளது.

இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை துõண்டிவிட்டு அதை அரசியலாக்குகின்றனர். தமிழகத்திலுள்ள ஆயிரத்து 417 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயிரம் டாக்டர்களின் பணியிடம் காலியாக உள்ளது. நோயாளிகள் அவதிப்படுகின்றனர். அங்கு சென்று டாக்டர்கள் பணியாற்றலாம்.

அரசு மருத்துவக் கல்லுõரியில் படிக்கும் ஒரு மாணவருக்கு டாக்டராவதற்கு மக்கள் வரிப்பணம் ரூ.13 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை செலவிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்து 645 டாக்டர்கள் படிப்பு முடிந்து வெளியே வருகிறார்கள்.

கிராமப்புற கட்டாய சேவை குறித்து மருத்துவ மாணவர்களுடன் பேச நானும், மத்திய அமைச்சர் அன்புமணியும் தயாராகவுள்ளோம். அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள டாக்டர்கள், மருந்தாளுனர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரியும், அங்கு மருந்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்த பா.ம.க., முடிவு செய்துள்ளது. அதுகுறித்து வரும் 3ம் தேதி நடைபெறும் கட்சி செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
————————————————————————————————————–

“அன்புமணிக்கு அருகதை இல்லை’: தா. பாண்டியன்

சென்னை, டிச. 14: எங்களைப் பற்றி பேச மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணிக்கு அருகதை இல்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:

மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை ஆதரிப்பவர்களை, கிராம மக்களின் எதிரிகள் என்று அன்புமணி வர்ணித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸýம் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டை அனைத்துக் கட்சிகள் மீதும் கூறிவருகிறார். இதை இந்திய கம்யூனிஸ்ட் நிராகரிக்கிறது.

சிகிச்சை அளிப்பதால் மட்டுமே கிராம மக்களுக்கு சேவை கிடைத்துவிடும் என்று கூற முடியாது. கிராம மக்கள் சேவை என்றால், அவர்களுக்கு வேலை தரவேண்டும், தகுந்த ஊதியம், உற்பத்தி செய்கின்ற பொருள்களுக்கு நியாயமான விலை, கிராமங்களை இணைக்க தரமான சாலைகள், குடிநீர் வசதி மேலும் அங்குள்ள பள்ளிகளுக்கு சரிவர ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும். இதில் கடைசியில் வருவதுதான் மருத்துவ சிகிச்சை.

கேபினட் அமைச்சர் என்ற வகையில் அன்புமணி அங்கம் வகிக்கும் மத்திய சுகாதாரத் துறை, ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். ஆகிய உயர் கல்வித் துறைகளில் இதுவரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடம் ஒதுக்கவில்லை.

கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களில் ஒருவராவது இந்தக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டுள்ளனரா? அல்லது ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளனரா? என்ற விவரத்தை அன்புமணி வெளியிடவேண்டும்.

அதன் பின்னரே கிராம மக்கள் மீது அவர் எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளார் என்பது வெளிச்சத்துக்கு வரும்.

மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கைமீது இதுவரை நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்படவில்லை.

உண்மையில் கிராமப்புற சேவை செய்யவேண்டும் என்றால், மத்திய அமைச்சரவை செய்யத் தவறி இருப்பதை அன்புமணி கண்டித்திருக்கவேண்டும். இதைச் செய்யத் தவறிய அவருக்கு, குறைகளைச் சுட்டிக் காட்டும் எங்களைக் குறித்துப் பேச அருகதை இல்லை.

எம்.ஆர்.எஃப். தொழிலாளர் பிரச்னையை சுமூகமாக தீர்த்துவைத்து, கதவடைப்பை நீக்க நிர்வாகம் முன்வரவில்லை என்றால் அனைத்து தொழிற் சங்கங்களும் இணைந்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏரி மற்றும் நீர்பிடிப்புப் பகுதிகளில் அமைந்துள்ள ஒரு லட்சம் குடியிருப்புகளை இடிக்கப்போவதாக அறிவித்திருக்கும் பொதுப்பணித் துறையின் எச்சரிக்கையை நிறுத்திவைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மேலும் கோவையில் விமான நிலைய விரிவாக்கத்துக்காக, மக்கள் குடியிருக்கும் பகுதிகளை இடிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதை தவிர்க்க மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்துவதாக கருணாநிதி தெரிவித்தார்.

தமிழகத்தில் மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்னையைப் போக்க, அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்து மின் தட்டுப்பாடு இல்லாமல் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் தா. பாண்டியன்.
————————————————————————————————————–

Posted in +2, AIIMS, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Biz, Business, Childbirth, Children, City, Clinic, College, Commerce, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Compulsory, Consumer, Cost, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Critic, Customer, Doctor, Economy, Education, Empty, Engg, Engineer, Engineering, Extortion, facilities, Females, Force, Foreign, Free, GH, GI, Govt, Graduate, Graduation, Health, Healthcare, Higher, Hospitals, HSS, Info, infrastructure, Justice, Law, MBBS, MD, medical, Medicine, Metro, MMC, Money, Moore, Munnabai, Munnabhai, Needy, ObGyn, Op-Ed, Operation, Opportunity, Permanent, PlusTwo, Poor, Postgraduate, Postgraduation, Practice, Pregnancy, Private, Ramachandra, Ramadas, Ramadoss, Rich, Rich vs Poor, Royapettah, Rural, School, seats, service, Sicko, Specialization, Stanley, State, Statistics, Stats, Study, Suburban, surgery, University, Urban, voluntary, Volunteer, Wealthy, WHO, Women | 14 Comments »