Archive for the ‘HR’ Category
Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2008
புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 மார்ச், 2008
கிழக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்துவதில் அவசரம் கூடாது என்கிறார் ஆனந்தசங்கரி
 |
|
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி |
கிழக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்துவதில் இலங்கை அரசாங்கம் மிகுந்த வேகம் காட்டக் கூடாது என்று தமிழர் விடுதலைகூட்டணியின் தலைவரான வீ. ஆனந்தசங்கரி அவர்கள் கூறியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில், இன்னமும் ஆயுதக்குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் முழுமையாக களையப்படாத நிலையில், அங்கு மக்கள் சிந்தனை மற்றும் சுதந்திரம் ஆகியவை கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இன்னமும் இருப்பதாகவும் அவர் கூறுகிறார். ஆகவே ஆயுதங்கள் அங்கு களையப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இத்தகைய நிலையில் அவசரமாக அங்கு தேர்தல்களை நடத்துவது உசிதமானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் கருத்தைப் சரியாக பிரதிபலிப்பதாக இருந்தால், கிழக்கு மாகாணத்தில் இன்னமும் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சூழ்நிலை உருவாகவில்லை என்பதே உண்மை என்றும் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 23 மார்ச், 2008
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாது: ஸ்ரீகாந்தா
இலங்கையின் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகந்தா அவர்கள் தமிழோசைக்கு அளித்த சிறப்புச் செவ்வியில் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் தனியாக பிரித்து தேர்தல் நடத்தப்படுவதன் மூலம், வடக்கு கிழக்கை நிரந்தரமாக பிரிப்பதற்கு இலங்கை அரசு முயல்வதாகவும், இந்த முயற்சிக்கு துணை போகக்கூடாது என்பதற்காகவே தமிழ்தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதாகவும் ஸ்ரீகாந்தா அவர்கள் தெரிவித்தார்.
இது தொடர்பில் தமிழோசைக்கு அவர் அளித்த சிறப்புச் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.
வட இலங்கை மோதல்கள்; முரண்பட்ட தகவல்கள்
 |
|
இலங்கை இராணுவத்தினர் |
இலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா, மணலாறு மற்றும் முகமாலை, நாகர்கோவில் போர் முன்னரங்குகளில் சனியன்றும் ஞாயிறன்றும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாக இருதரப்பினரும் தெரிவித்திருக்கின்றனர்.
மன்னார் உயிலங்குளத்திற்கு வடக்கில் உள்ள முன்னரங்கப் பகுதிகளில் இராணுவத்தினர் முன்னேறிச் சென்று விடுதலைப் புலிகளிடமிருந்து ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவான பிரதேசத்தைக் கைப்பற்றியதாகத் தெரிவித்துள்ள இராணுவத்தினர், சண்டைகளின்போது இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், அதன்படி, 22 விடுதலைப் புலிகளும் 4 படையினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் 11 உடல்களும், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டிருக்கின்றது.
மன்னார் பாலைக்குழி, இத்திக்கண்டல் ஆகிய பகுதிகளில் இருந்து சனிக்கிழமை அதிகாலையில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு முயன்ற இராணுவத்தினர் மீது மாலை வரையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 55 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
தமது கடுமையான எதிர்த் தாக்குதல்களையடுத்து, படையினர் தமது முன்னேற்ற முயற்சியைக் கைவிட்டு, தமது பழைய நிலைகளுக்குத் திரும்பியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.
வவுனியா, மணலாறு, முகமாலை, நாகர்கோவில் ஆகிய முன்னரங்கப் பகுதிகளில் இடம்பெற்ற சண்டைகளில் மேலும் 23 விடுதலைப் புலிகளும் 4 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் சனிக்கிழமை யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா, அங்கு போர் நிலைமைகள் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக இராணுவ உயரதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்துள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 21 மார்ச், 2008
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவது பற்றிய முடிவு விரைவில்: மாவை சேனாதிராஜா
இலங்கையின் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த சிலநாட்களாக தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது.
சமீபத்தில் நடந்த மட்டக்களப்பு மாநகரபை உள்ளிட்ட சில உள்ளாட்சி மன்றத்தேர்தல்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிடவில்லை. அந்த தேர்தல்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிடாததற்கு கூறப்பட்ட காரணங்கள், கிழக்கு மாகாணசபை தேர்தல்கள் விடயத்திற்கும் பொருந்தும் என்கிறார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜா அவர்கள்.
அதேவேளை, கிழக்கு மாகாணசபை தேர்தல்கள் விடயத்தில் இறுதி முடிவெடுப்பதற்கு முன்பு, கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லீம் தரப்பு கருத்தை அறிய தமிழ்தேசிய கூட்டமைப்பு விரும்புவதாகவும், இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு தற்போது பேச்சு வார்த்தைகள் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்னமும் இரண்டொரு நாட்களில் இது தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு இறுதி முடிவு எடுத்து அறிவிக்கும் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் மாவை சேனாதிராஜா அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய பிரத்யேக செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.
இலங்கை முல்லைத்தீவு கடற்பரப்பில் நடந்த குண்டுத் தாக்குதலில் இராணுவ தரப்பில் சேதம்
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் நாயாறு கடற்பரப்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் கடற்கண்ணிவெடி தாக்குதல் என்று கருதப்படும், குண்டு வெடிப்பு சம்பவத்தில் கடற்படையின் அதிவேகப்படகு ஒன்று மூழ்கியதாகவும், அதிலிருந்த 16 கடற்படையினரில் 6 பேர் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் காணாமல்போயுள்ள ஏனைய 10 பேரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
எனினும் நாயாறு கடற்பரப்பில் கடற்படையினருடன் இடம்பெற்ற மோதல் ஒன்றின்போது கடற்படையினருக்குச் சொந்தமான அதிவேகப்படகு மூழ்கடிக்கப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றார்கள். தமது தரப்பில் 3 கரும்புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்காரவுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, விடுதலைப் புலிகளின் கடற்கண்ணிவெடியிலேயே கடற்படைக்குச் சொந்தமான அதிவேகப்படகு மூழ்கியதாகத் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் கடற்கண்ணிவெடிகளை வைத்திருந்ததாகக் கூறுகின்றீர்களே, இதேபோன்று கடற்படையினரும் கடலில் கண்ணிவெடிகளைப் புதைத்திருப்பதாகவும், இதற்கு இந்தியத் தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கின்றதே என கேட்டதற்கு, நாயாறு கடற்பரப்பில் கண்ணிவெடி வைக்க வேண்டிய அவசியம் கடற்படையினருக்கு இல்லை என்று அவர் தெரிவித்தார்.
இதேவேளை, நாயாறு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் உள்ள விடுதலைப் புலிகளின் கடற்தளங்கள் மீது விமானப்படையினர் சனிக்கிழமையன்று தாக்குதல்கள் நடத்தியுள்ளனர் என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இந்த மோதல்கள் குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இரகசியத் தகவல்களை இலங்கை வெளியுறவு அமைச்சு தவறாகப் பயன்படுத்தியுள்ளது: செஞ்சிலுவைச் சங்கம் குற்றச்சாட்டு
ஆட்கள் காணாமல்போன சம்பவங்கள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான ஆட்கொலைகள் ஆகியவை குறித்து இலங்கை அரசுக்கு தாம் வழங்கிய தகவல்களை இலங்கை வெளியுறவு அமைச்சு தவறாகப் பயன்படுத்தி விட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.
அண்மையில், அமெரிக்க அரசுத்துறை இலங்கை மனித உரிமைகள் நிலவரம் குறித்து வெளியிட்ட அறிக்கை ஒன்றுக்கான பதில் அறிக்கையிலேயே, தாம் வழங்கிய ரகசிய தகவல்களை இலங்கை அரசு பகிரங்கமாக வெளியிட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
காணாமல் போனவர்கள் குறித்து தாம் கண்டுபிடித்த தகவல்களை இருதரப்புக்கும் இடையேயான பரிமாற்றத்துக்கு மாத்திரமானது என்ற அடிப்படையிலேயே தாம் இலங்கை அரசுக்கு ரகசியமாகத் தந்ததாகவும், ஆனால் அதனை இலங்கை அரசு பகிரங்கப்படுத்திவிட்டது என்றும் செஞ்சிலுவைச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
அதேவேளை அவை வெளியிடப்பட்ட வழியிலும் தவறு இடம்பெற்றுள்ளதாகவும் அது கூறியுள்ளது.
இத்தகைய தகவல்கள் பகிரங்கமாக விவாதிக்கப்படும் பட்சத்தில், இந்த விடயங்களைக் கையாள்வது சிரமமாகிவிடும் என்றும் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.
இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமைப் பேச்சாளர், புளோரியான் வெஸ்வெல் அவர்கள் வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 20 மார்ச், 2008
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூட்டம்
இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்களை நடத்துவது என்று அரசுமுடிவெடுத்துள்ள சூழலில், இந்த தேர்தலில் போட்டியிடுவதா என்பது குறித்து ஆராய, தலைநகர் கொழும்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடந்தது.
இந்த கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதா, அல்லது தவிர்ப்பதா என்பது குறித்த இரு கருத்துக்களும் ஆராயப்பட்டன என்றும் ஆயினும் இது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வட்டாரங்கள் தமிழோசையிடம் தெரிவித்தன.
எதிர்வரும் ஒரிரு நாட்களில் இது குறித்து மேலும் ஆராய்ந்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
ரூபவாஹினி நிர்வாகியாக முன்னாள் இராணுவ அதிகாரியின் நியமனம்: ஊடகங்கள் அதிருப்தி
இலங்கை அரசாங்கத்தின் தொலைக்காட்சியான ரூபவாஹினி நிறுவனத்தின் நிர்வாகியாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டது தொடர்பில் தொடர்பூடக உரிமைச் செயற்பாட்டாளர்கள் இலங்கை அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்கள்.
சுதந்திர ஊடக அமைப்பின் அமைப்பாளர் சுனந்த தேசப்பிரிய, இது தொடர்பில் கருத்துக் கூறுகையில், இந்த நடவடிக்கை மூலம், நெருக்கடி நிலைமைகளில், ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் பெரும் ஆளுமையை அரசாங்கம் செலுத்த முடியும் என்று கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள இலங்கையின் ஊடக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்ப அவர்கள், தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாகத்தைப் பலப்படுத்துவது மாத்திரமே இந்த நியமனத்தின் நோக்கம் என்று கூறியுள்ளார்.
தமது 5 சகாக்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, அந்த நிறுவனத்தின் ஊழியர்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ந்தே, இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Posted in Eelam, Eezham, HR, ICRC, IDP, LTTE, missing, Red Cross, rights, Secrets, Sri lanka, Srilanka | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008
“இரும்புத் தாடை தேவதைகள்’
வழக்கறிஞர் உ . நிர்மலா ராணி
இன்று சர்வதேச பெண்கள் தினம். 1908ம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாள் நியூயார்க் நகரில் ஆயிரக்கணக்கான பஞ்சாலை பெண் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை கோரி நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தை நினைவு கூறும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அந்தப் போராட்டத்தின் இரண்டாவது முக்கிய கோரிக்கை தான் பெண்களுக்கு வாக்குரிமை!
அந்தக் காலத்தில் வாக்குரிமை என்பது வசதி படைத்தவர்கள் அதிலும் ஆண்களுக்குத்தான் ஓட்டுரிமை. சொத்து வைத்திருக்காத ஆண்கள், வேலையாட்கள், கிரிமினல்கள் இந்த வரிசையில் இறுதியாகப் பெண்கள். இவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை மறுக்கப்பட்டது.
பெண்களுக்கு வாக்குரிமை கோரி நடந்த ஒரு நூற்றாண்டுப் போராட்டம்கூட வரலாற்றில் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் மறைக்கப்பட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த சமூகப் போராளி எலிசபெத் கேண்டி ஸ்டாண்டன், லண்டனில் நடந்த அடிமை முறை எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றபோது, பெண்கள் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அடிமை எதிர்ப்பு மாநாட்டிலேயே பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவது கண்டு ஆத்திரமுற்ற எலிசபெத், 1848-ல் செனிகா ஃபால்ஸ் என்ற இடத்தில் பெண்களைத் திரட்டி கோரிக்கைப் பிரகடனத்தை வெளியிட்டார். அது தான் அமெரிக்காவில் பெண்கள் வாக்குரிமைக்கான போராட்டத்தின் முதல் வித்து!
ஆரம்பத்தில் வாக்குரிமை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சாத்வீகமான போராட்ட வடிவங்களைக் கையாண்ட பெண்கள், கறுப்பின மக்களுக்கு சம உரிமையளித்த “”சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்று விளம்பும் 14, 15 சட்ட திருத்தங்களிலிருந்து பெண்கள் மட்டும் விலக்கப்பட்டபோது பொங்கி எழுந்தனர்.
அமெரிக்காவில் எலிசபெத் கேண்டி ஸ்டாண்டன், சூஸன் பி ஆண்டனி, ஆலிஸ் பால் ஆகியோரும், இங்கிலாந்தில் எம்மலின் பாங்கர்ஸ்ட் மற்றும் அவரது 2 புதல்விகள் கிறிஸ்டபெல் மற்றும் சில்வியா ஆகியோரும் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தினர். நாடாளுமன்றமும் அரசு அலுவலகங்களும் முற்றுகையிடப்பட்டன. வாயில்களில் வாக்குரிமை கேட்டு பேனர் பிடித்தபடி நாள்கணக்கில் நின்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் காரி உமிழ்ந்தனர்.
கோபமடைந்த பெண்கள் அரசு அலுவலகக் கண்ணாடிக் கதவுகளை சரசரவென்று கல்லெறிந்து உடைத்து நொறுக்கினர். தந்தி வயர்களை வெட்டினர். அதிகாரிகளின் கார் கண்ணாடிகளைத் தூளாக்கினர். எரி குண்டுகளை வீசி அரசு அலுவலகங்களைத் தாக்கினர். கைதாகினர். சிறை சென்றனர். உண்ணாவிரதமிருந்தனர். சிறை அதிகாரிகள் வன்முறையை உபயோகித்த போதும் வாய் வழியாக அவர்களுக்கு உணவூட்ட இயலவில்லை. எனவே தான் இந்தப் பெண் போராளிகளுக்கு “இரும்புத் தாடை தேவதைகள்’ என்ற செல்லப்பெயர் சூட்டப்பட்டது. எனவே சிறை அதிகாரிகள் அவர்களைக் கட்டாயப்படுத்தி மூக்கின் வழியாக, குழாய் மூலமாக உணவைச் செலுத்தினர்.
உச்சகட்டமாக 1913 ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் எமிலி வைல்டிங் டேவிஸன் என்ற பெண்மணி பெண்களின் ஓட்டுரிமைக்காக யாரும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்தார். புகழ்பெற்ற குதிரைப் பந்தய மைதானமான டெர்பியில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் குதிரையான ஆன்மர், புயல் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது கையில் வாக்குரிமை கோரும் அட்டையுடன் குறுக்கே பாய்ந்தார் எமிலி! குதிரையின் கால்களில் மிதிபட்டு சின்னாபின்னமானார். வாக்குரிமைக்காக உயிர்த்தியாகம் செய்த ஒரே பெண் என்ற புகழையும் பெற்றார்.
இதையடுத்து இங்கிலாந்தில் 1918-ல் நிபந்தனையுடன் கூடிய வாக்குரிமையும், 1928-ல் முழுமையான வாக்குரிமையும் வழங்கப்பட்டது.
அமெரிக்காவிலும், 1919-ல் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் மசோதா, 19-வது சட்டத் திருத்தமாக நிறைவேற்றப்பட்டாலும் அமெரிக்க சட்ட விதிகளின்படி இந்தத் திருத்தம் சட்டரீதியாக்கப்பட வேண்டுமென்றால், 4-ல் 3 பங்கு மாகாணங்கள் அதாவது 36 மாகாண நாடாளுமன்றங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாகாண நாடாளுமன்றத்திலும் மசோதா நிறைவேற பெண்கள் போராட வேண்டியிருந்தது. மசோதா எதிர்ப்பாளர்கள் அதைத் தோல்வியடையச் செய்யும் பொருட்டு குறைந்தபட்ச கூட்ட வருகையை (கோரம்) தவிர்க்க இரவோடு இரவாக நாட்டை விட்டுப் பறந்தனர். கூட்டங்கள் நடத்த விடாமல் வெளிநடப்புச் செய்தனர். 35 மாகாணங்கள் அங்கீகரித்துவிட, கடைசி மாகாணமான டென்னிஸீயில் மசோதாவைத் தோற்கடிக்க போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்ப்பாளர்கள் தேற்றி வைத்திருந்தனர். மசோதா ஆதரவாளர்கள் மஞ்சள் ரோஜாவையும் எதிர்ப்பாளர்கள் சிவப்பு ரோஜாவையும் அணிந்திருந்தனர். இதைக் கணக்கெடுத்துப் பார்த்தபோது மஞ்சள் ரோஜாவை அணிந்தவர்கள் 47 பேர் எனவும் சிவப்பு ரோஜாவை அணிந்தவர்கள் 49 பேர் எனவும் தெரியவந்தது.
வாக்கெடுப்பின் முதல் சுற்றில் குடியரசுக் கட்சியை சார்ந்த பேங்க் டர்னர், தான் அணிந்திருந்த சிவப்பு ரோஜாவைத் தூக்கியெறிந்துவிட்டு தடாலடியாக அணி தாவினர். இதனால் இரண்டாவது சுற்றில் ஆதரவும், எதிர்ப்பும் 48 – 48 என்று சம நிலையிலிருந்தது.
3-வது சுற்றில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் அமெரிக்க பெண்களின் தலையெழுத்தையே மாற்றியது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 24 வயதான ஹாரிபர்ன் மசோதாவுக்கு எதிர்ப்பாளர். அவர் வாக்களிக்கப் போகும் இறுதி நொடியில் ஒரு துண்டுச் சீட்டு அவருக்கு வந்தது. அதைக் கண்ணால் ஸ்கேன் செய்த ஹாரிபர்ன் மசோதாவுக்கு ஆதரவாக கையைத் தூக்கி விட்டார். மசோதா நிறைவேற்றப்பட்டது. துண்டுச் சீட்டை அனுப்பியது அவருடைய தாயார் ஃபெப் என்ஸ்மிங்கர் பர்ன். அதில் “”நல்ல பையனாக நடந்து கொள்! பெண்கள் வாக்குரிமைக்கு ஆதரவாக ஓட்டுப்போடு” என்றிருந்தது. தாய் – தனயன் சென்டிமென்ட்தான் கடைசியில் அமெரிக்கப் பெண்களுக்கும் கைகொடுத்தது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுப்பதற்கான முதல் படியை பெண்கள் வெற்றிகரமாகக் கடந்த பிறகும் கூட தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து மந்திரியாக நியமிக்கப்படுவது, அவர்களுக்கு வழங்கப்படும் துறைகள் வரை பெண்கள் இன்றும் பாரபட்சங்களை அனுபவித்து வருகிறார்கள். இதற்கு காரணம் பெண்களின் இடம் என்பது வீட்டின் மூலையில் ஒரு சமையலறையே தவிர நாடாளுமன்றம் அல்ல என்ற ஐயாயிரம் ஆண்டு மனப்போக்கு இன்னமும் மாறவில்லை.
பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து (1893). சமீபத்திய நாடு குவைத் (1995). இன்றும் வாக்குரிமை அளிக்க மறுப்பது சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளும்தான்!
உலகத்தின் முதல் பெண் மந்திரி 1917ல் ரஷியாவில் போல்ஷ்விக் கட்சியால் காபினெட் மந்திரியாக நியமிக்கப்பட்ட அலெக்ஸôண்டர் கோலந்தாய். இங்கிலாந்தில் கூட முதன்முறையாக 2006ல் தான் பரோனஸ் ஹேமேன் என்ற பெண்மணி சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.
இண்டர் பார்லிமெண்டரி யூனியன் (ஐடம) என்ற அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி சர்வதேச அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 85 சதவீதம் ஆண்கள்தான்! உலக அளவில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகம் கொண்டவை (40 சதவீதம்) நார்வே, ஸ்வீடன், டென்மார்க் எனும் ஸ்காண்டிநேவிய நாடுகள்தான். இதில் இந்தியாவின் நிலைதான் மிக மோசம்.
இந்திய நாடாளுமன்ற மக்களவையில் பெண் உறுப்பினர்கள் 8.3 சதவீதம்தான். இதை சரிசெய்ய 1996ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடஒதுக்கீடு மசோதா இன்னமும் வெளிச்சத்தை காணவில்லை.
2002 – 2004ல் 20 சட்டமன்றங்களுக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்ட 2432 வேட்பாளர்களில் பெண்கள் 1525 பேர். அதாவது பாதிக்கு மேல்! ஆனால் ஜெயித்தது 137 பெண்கள்தான். இது 5.6 சதவீதம், 33 சதவீதம் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்திருந்தால் இன்று 811 பெண் உறுப்பினர்கள் சட்டமன்றங்களில் இருந்திருப்பார்கள்.
பெண் போராளி úஸô ஹைட் – 1916-ல் கனடாவின் நாடாளுமன்றத்தில் வாக்குரிமை மனுவைத் தாக்கல் செய்து பேசியபோது “”கணவான்களே! வாக்குரிமை மறுக்கப்பட்டவர்கள் பட்டியலில் பெண்கள் சேர்க்கப்படுவதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம். நாங்கள் முட்டாள்களும் அல்ல! முடியாதவர்களும் அல்ல! நாங்கள் பெண்கள்! வாக்குரிமையில் நாங்கள் சமத்துவம் கேட்பது சலுகையின் அடிப்படையில் அல்ல! நியாயத்தின் அடிப்படையில்” என்று முழங்கினார்.
இந்தியப் பெண்களாகிய நாங்களும் கேட்கிறோம்! நாடாளுமன்றவாதிகளே! தயவுசெய்து பாலின சமத்துவ நீதியின் மொழியிலே பேசுங்கள்! 33 சதவீதம் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுங்கள்! இந்திய நாட்டில் சமத்துவத்தை விரும்பும் ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதை உலகிற்கு உணர்த்துங்கள்!
Posted in Disparity, Elections, Females, Freedom, Gender, History, HR, Independence, Info, MLA, MP, NirmalaRani, Oppression, Politics, Polls, Power, rights, Sex, She, Stats, Timeline, Vote, voters, Women | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008
சுதந்திர இந்தியாவின் துணிச்சல் மிக்க நீதிபதி
டி.ஜே.எஸ். ஜார்ஜ், பத்திரிகையாளர்
சுதந்திர இந்தியாவின் மிகத் துணிச்சலான நீதிபதி யார்? அந்தச் சிறப்புக்குத் தகுதியான நீதிபதி ஹன்ஸ் ராஜ் கன்னாதான். அவரது துணிச்சலை மதிப்பிடுவதற்கு, நெருக்கடிநிலைக் கால பயங்கரங்களை நாம் நினைவுகூர்ந்தாக வேண்டும்.
காவல் துறையினர் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்; சித்திரவதை செய்யலாம்; கொலைகூடச் செய்யலாம்; ஆனால், யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற சூழ்நிலை நிலவிய நாள்கள் அவை.
கைது செய்யப்பட்டவர்களைப் பற்றிய தகவலையும் நாம் தெரிந்துகொள்ள முடியாது; ஏனென்றால், அப்போது செய்திகள் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தன; தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டன. தெருமுனைகளிலும் டீக்கடைகளிலும் சந்தித்துப் பேசுவதற்கே மக்கள் அச்சப்பட்ட காலம் அது. நாடெங்கிலும் அச்சம் பரவி இருந்தது; அனைத்து இடங்களிலும் போலீஸýக்கு உளவு சொல்பவர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை நிலவியது என்பதை இன்றைய தலைமுறையால் நம்பக்கூட முடியாது. அத்தகைய கொடூரச் செயல்களைச் செய்ததோடு மட்டுமல்ல; இந்திரா காந்தியின் அன்றைய இந்தியா, அதை மூடிமறைக்காமல் பகிரங்கமாகவும் செய்தது.
நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டதற்கு மறுநாள், வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம் மற்றும் சமத்துவம் உள்ளிட்ட முக்கியமான அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பறிக்கும் வகையில் ஓர் உத்தரவைப் பிறப்பித்தார் அன்றைய குடியரசுத் தலைவர். ஸ்டாலினின் ரஷியாவிலும் பினோசேவின் சிலியிலும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளைப் போன்றது அது.
நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஆனால், அதை எதிர்த்து அப்போதும் பலர் நீதிமன்றத்துக்குச் சென்றனர். “ஆள்கொணர் மனு’க்களை (ஹேபியஸ் கார்ப்பஸ்) விசாரிப்பதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 9 உயர் நீதிமன்றங்கள் தீர்ப்புக் கூறின. ஆனால், உச்ச நீதிமன்றம் வேறு விதமாகத் தீர்ப்பளித்தது. அரசாங்கத்தின் யதேச்சாதிகாரத்தை அது நியாயப்படுத்தியதுடன், நியாயம் கேட்டு நீதிமன்றத்தை அணுகுவதற்கான குடிமக்களின் உரிமையைப் பறித்ததையும் நியாயப்படுத்தியது.
5 நீதிபதிகள் அடங்கிய அந்த உச்ச நீதிமன்ற பெஞ்சில், 4 நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்பளித்தனர். ஆனால், ஒரேயொரு நீதிபதி மட்டும் மாற்றுக் கருத்தைத் தெரிவித்தார். அவர்தான் நீதிபதி எச்.ஆர். கன்னா.
1978, ஆகஸ்ட் 28-ல் வழங்கப்பட்ட அத் தீர்ப்பு, நமது வரலாற்றின் களங்கமான ஆவணமாகவே இருந்துகொண்டிருக்கும். சட்டவிரோதமான சர்வாதிகார அரசைப் பாதுகாக்க வேண்டும் என்ற துடிப்பினால், அந்த 4 நீதிபதிகளும் உள்ளார்ந்த நீதிநெறிப் பார்வையை வெளிப்படுத்தத் தவறும் அளவுக்கு தமது பகுத்தறிவின் கதவுகளை மூடிக்கொண்டுவிட்டனர்.
“”கைதிகளை நல்ல அறைகளில் அடைத்துவைத்து, அவர்களுக்கு நல்ல முறையில் உணவளித்து, நல்ல முறையில் நடத்திவரும் அரசின் பரிவும் அக்கறையும் ஒரு தாயின் பரிவுக்கு இணையாக இருக்கிறது” என்னும் நீதிபதி எம்.எச். பெக்-கின் அதிர்ச்சிகரமான அறிவிப்பு அதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
தாயுள்ளத்தின் உன்னதப் பண்புகளை அவமதிக்கும் வகையில் அந்த வரிகளை அவர் எழுதிக்கொண்டிருந்தபொழுதுதான், கர்நாடகத்திலே ஜார்ஜ் பெர்னாண்டஸின் சகோதரர் சித்திரவதை செய்யப்பட்டுக்கொண்டு இருந்தார்; கேரளத்தில் பொறியியல் மாணவரான ராஜன் போலீஸôரால் அடித்துக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார். நாடு முழுவதும் இதைப்போல ஆயிரக்கணக்கான அட்டூழியங்கள் நடைபெற்றன.
அதற்குச் சில மாதங்கள் கழித்து, எவ்வித வெட்கமும் இன்றி இந்தியத் தலைமை நீதிபதி பதவியை ஏற்றுக்கொண்டார் நீதிபதி பெக். பணிமூப்பின்படி அப் பதவிக்கு உரியவரல்லர் அவர். நீதிபதி எச்.ஆர். கன்னாதான் அனைவரையும்விட மூத்த நீதிபதி. ஆனால் வரலாற்றில் படுமோசமான முறையில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட ஒரு நொடியினிலே, படுமோசமான முறையில் நீதியைக் குழிதோண்டிப் புதைத்த ஒரு நீதிபதி தனது துரோகத்துக்கான பரிசை ~ 30 வெள்ளிக்காசுகளை யூதாஸ் பெற்றதைப்போல ~ பெற்றுக்கொண்டார். ஆனால், யேசுவைக் காட்டிக் கொடுத்ததற்காக பின்னாளில் வருந்தினார் யூதாஸ் இஸ்காரியோத். அந்த நாகரிகமாவது நீதிபதி பெக்-க்கு இருந்ததா என்பது தெரியவில்லை.
அதைத் தொடர்ந்து கன்னாவும் தமது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். ஆனால், அவரால் தலைநிமிர்ந்து நடக்க முடிந்தது; ஏனென்றால், நீதித் துறையில் நாட்டின் குடிமக்கள் வைத்திருந்த நம்பிக்கையை, தனது மனசாட்சியின் குரலை, பதவியேற்கும் பொழுது தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை நிலைநாட்டுவதற்கான துணிச்சலை, ஐந்து நீதிபதிகளில் தனியொருவராகக் காட்டியவர் அவர். வாழ்வதற்கான, சுதந்திரத்துக்கான மனிதனின் உரிமைகளை உயர்த்திப் பிடித்தவர் அவர். “”ஒரு நீதிமன்ற பெஞ்சின் பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு மாறான கருத்தை ஒரு நீதிபதி பதிவு செய்கிறார் என்றால், அது, நீதிமன்றம் தவறாக அளித்துவிட்டதாக அவர் கருதும் தீர்ப்பு என்றாவது ஒரு நாள் திருத்தப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், எதிர்கால மேதைமைக்கும், நீதிநெறி உணர்வுகளுக்கும் அவர் விடுக்கும் முறையீடாகும்” என்று அமெரிக்க நீதிபதி ஒருவர் கூறியிருப்பதையும் மேற்கோள் காட்டினார் நீதிபதி கன்னா.
எச்.ஆர். கன்னாவைப் போன்றோரின் நீதிநெறி உணர்வுகளின் காரணமாக இன்று நாம் சுதந்திரத்தை பெருமிதத்துடன் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். 95 வயதான நீதிபதி கன்னா, கடந்த வாரம் உறங்கிக்கொண்டிருந்த பொழுது அமைதியாக நல்மரணமடைந்தார். அவரை இறைவன் ஆசீர்வதித்தான். அவரது ஆத்மாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு நொடிப் பொழுது மெüனம் கடைப்பிடிப்போம்.
Posted in abuse, Arrest, Attorneys, Biosketch, Conservative, Correctional, Courts, Faces, HansRaj, HR, Interrogation, Jail, Judge, Justice, Khanna, Law, Lawyers, legal, Liberal, Liberty, names, Obituary, Order, people, rights, SC, Torture | 1 Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008
சொல்றாங்க.. – தமிழுக்காக ஒரு தாற்காலிக வேடந்தாங்கல்!
அ. அருள்தாசன்
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழகத்தின் தென் கோடிக்கு வந்து தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. தமிழில் அனா ஆவன்னா தெரியாதவர்கள் 7 மாதங்களில் தமிழ்ப் பாடல்களை ரசித்துப் பாடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள் என்றால் இந்த ஆச்சர்யம் உங்களுக்கு இரட்டிப்பாகும். நாம் அவர்களைச் சந்திக்கச் சென்ற நேரத்தில் பாரதியின் “சிந்து நதியின்..’ பாடலைப் பாடி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.
தமிழை ஒற்றுப் பிழையில்லாமல் எழுதும் அவர்கள் அனைவரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சிலர் வெளிநாட்டினர். இங்கு மாணவர்களாக இருக்கும் அவர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் ஆசிரியர்கள் என்பது அடுத்த சுவாரஸ்யம். இனியும் காலம் கடத்தாமல் அவர்களைப் பற்றிய தகவல்களைச் சொல்லிவிடுகிறோம்.
மைசூரில் செயல்படும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் தமிழ்த் துறையில் அவர்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சேர்ந்து, தமிழைக் கற்று வருகிறார்கள்.
நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளுடன் தமிழ் மொழி, கலாசாரம், பண்பாடு குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்ய வந்திருந்த அவர்கள்,
- கர்நாடகம்,
- ஹிமாச்சலப்பிரதேசம்,
- மணிப்பூர்,
- ஒரிசா,
- மேற்கு வங்கம்,
- அசாம்,
- இலங்கையைச் சேர்ந்தவர்கள்.
இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் துணையுடன் நாட்டிலுள்ள மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆண்டுதோறும் இதுபோன்று ஆசிரிய, ஆசிரியைகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் இந்த கல்வியாண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட இந்த 24 பேருக்கும் தமிழ் கற்கும் காலத்தில் அவர்களுக்கான மாத ஊதியம் மற்றும் ரூ.800 ஊக்கத் தொகையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்குகிறது. வரும் ஏப்ரல் மாதம் வரையில் இவர்கள் தமிழைக் கற்கின்றனர்.
நாகர்கோவிலுக்கு வந்திருந்த இந்த ஆசிரியர்களை வழிநடத்தும் பேராசிரியர் எஸ். சுந்தரபாலு கூறியதாவது:
இந்தியா, “மொழிகளின் பொக்கிஷம்’. இங்கு 300-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றில் 18 மொழிகள் மட்டுமே அங்கீகாரம் பெற்றவை. அங்கீகாரம் பெற்ற அல்லது பெறாத மொழிகள் குறித்து ஆய்வு செய்யவும், அவற்றைக் கற்றுக் கொள்ளும் வழிகளை உருவாக்கித் தரும் பணியிலும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்நிறுவனத்தில் நாட்டிலுள்ள பல்வேறு மொழிகளைக் கற்க ஆசிரிய, ஆசிரியைகள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
பழமையான, இலக்கியத்துவம் வாய்ந்த, இனிமையான செம்மொழியாகத் தமிழ் இருப்பதால் பல்வேறு மாநிலத்தவரும் தமிழைக் கற்க ஆர்வமாக வருகின்றனர் என்கிறார் சுந்தரபாலு.
தமிழுக்காக இந்துக் கல்லூரியில் தாற்காலிகமாக குழுமியிருந்த வெளிமாநில ஆசிரிய, ஆசிரியைகள் சிலரிடம் தமிழைக் குறித்தும், தமிழ்ப் பண்பாடு, கலாசாரம் குறித்தும் பேசியபோது கொஞ்சும் தமிழில் அவர்கள் கூறிய சில சுவாரஸ்ய தகவல்கள்:
புலேகொடா ஆர்ச்சிகாந்தி (இலங்கை):
“”இலங்கை ருகுண தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறேன். அங்கு சிங்கள, முஸ்லிம், தமிழ் மாணவர்கள் படிக்கின்றனர். தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியைக் கற்பித்து வருகிறேன். ஆனால், சிங்கள மாணவர்களுக்குத் தமிழைக் கற்பிக்க முடியவில்லை. இதனால், தமிழைக் கற்க இங்கு வந்துள்ளேன்.
இலங்கையில் இருக்கும் தமிழர்கள் மற்றும் சிங்களர்களிடையே தகவல் தொடர்பு பிரச்னை இருக்கிறது. அதைத் தவிர்க்க இந்தப் பயிற்சியைப் பயன்படுத்திக் கொள்வேன்” என்றார்.
நெப்ரம் புஷ்பராணிதேவி (மணிப்பூர்):
“”மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகளைக் கற்பது கடினம். இதில் தமிழ் மொழி எனக்குப் பிடித்திருக்கிறது. மணிப்பூரில் முரே மாவட்டத்தில் தமிழ் பேசுவோர் அதிகம் உள்ளனர். அவர்களுக்குத் தமிழ் கற்பிக்க இதனால் எனக்கு முடியும்.”
லொரெம்பம் கோமோடோன்சனா தேவி (மணிப்பூர்):
“”கடந்த 5 ஆண்டுகளுக்குமுன் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சுற்றுலா வந்திருந்தபோது தமிழர்களின் நடவடிக்கைகள் என்னைக் கவர்ந்தது. இங்குள்ள பெண்கள் நெற்றில் பொட்டு வைப்பதும், ஆண்கள் விபூதி வைப்பதும் பிடித்திருக்கிறது. கடவுள் என்றால் அன்பு என்பதைத் தமிழ் மொழி உணர்த்துகிறது” என்றார்.
ஷபியூர் ரஹ்மான், அப்துர் ரஹீம் (அஸ்ஸôம்):
“”அசாம் மாநிலம், போர்பெட்டா மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கள், சமஸ்கிருத ஆசிரியர்கள். தமிழ் மொழி இனிமையானது என்பதனால் இதைக் கற்கிறோம். சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் 30 சதவீதம் தொடர்பு இருக்கிறது. ஏலேலோ ஐலசா போன்ற நாட்டுப்புற பாடல் தெரியும். (இவர்களில் ரஹீமுக்கு அசாமி, பெங்காலி, சமஸ்கிருதம், ஹிந்தி, தமிழ், அரபி ஆகிய 6 மொழிகள் தெரியும்).
அசோதோஸ் மாலிக் (ஒரிசா):
“”ஒரிய மொழி குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன். தற்போது தமிழைக் கற்பதால் தமிழுக்கும் ஒரிய மொழிக்கும் உள்ள தொடர்பு குறித்து தெரிந்து கொள்கிறேன். தமிழைக் கற்றபின் தமிழில் உள்ள நூல்களை ஒரிய மொழியிலும், ஒரிய மொழி நூல்களைத் தமிழிலும் மொழி பெயர்க்கத் திட்டமிட்டுள்ளேன்.
தமிழகத்தில் இலக்கியத்திலும் தீவிர ஆர்வம் மிக்கவராக இருப்பவர் என முதல்வர் கருணாநிதியைப் பற்றி அறிந்திருக்கிறேன்” என்றார்.
தட்டுத் தடுமாறினாலும் தமிழில் பேசிய இந்த வெளிமாநில ஆசிரியர்களின் ஆர்வம் பாராட்டுக்குரியதுதான்.
Posted in Bengal, Ceylon, Foreign, HR, Instructors, Integration, Language, Learn, Literature, Manipur, Manipuri, Nagercoil, Orissa, Singala, Sinhala, Sinhalase, Srilanka, Students, Tamil, Teachers, Unity, University, WB, World | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2008
இலங்கையில் வன்முறைகள் அதிகரித்தால் நிதியுதவி நிறுத்தப்படலாம் என ஜப்பான் அறிவிப்பு
இலங்கையில் இந்த மாதத்தின் முற்பகுதியில் அரசு போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த பிறகு அங்கு இடம் பெற்றுகின்ற வன்முறைகள் மேலும் அதிகரிக்குமாயின் அந்நாட்டுக்கு அளிக்கப்படும் நிதி உதவிகளை நிறுத்த நேரிடலாம் என ஜப்பானின் சிறப்பு சமாதானத் தூதர் யஷூஷி அகாஷி எச்சரித்துள்ளார்.
இலங்கைக்கான நிதியுதவிகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினை ஜப்பான் தான் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வாரங்களில் அதிகரித்துள்ள வன்முறைகள் தொடருமாயின், ஜப்பான் தான் அளித்துவரும் நிதியுதவி குறித்து மீள்பரிசீலனை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என அகாஷி தெரிவித்துள்ளார்.
இருந்தபோதிலும், இலங்கையில் இன்னும் பல தசாப்பதங்களுக்கு இலங்கையுடன் உறவுகளை பேணவே தமது அரசு விரும்புகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உயிரிழப்புகளைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என சர்வதேச அமைப்பு குற்றச்சாட்டு
இலங்கையில் நடைபெறும் உயிரிழப்புக்களை தடுக்கத் தேவையான சர்வதேச நடவடிக்கைகள் மெதுவாகவே மேற்கொள்ளப்படுவதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பான ஹ்யூமன் ரைட் வாட்ச் கூறியுள்ளது.
இலங்கையில் மோசமைடந்து வரும் மனித உரிமைகள் நிலை குறித்து சர்வதேச கவலைகள் அதிகமானாலும், இதைத் தடுக்கத் தேவைப்படும் நடவடிக்கைகள் மெதுவாகவும் , ஒருமித்ததாக இல்லாமல் இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
அதே நேரம் அமெரிக்க அரசின் புத்தாயிரமாவது சவால்களுக்கான நிறுவனம் மனித உரிமைகள் தொடர்பாக எழுந்த கவலைகள் காரணமாக இலங்கைக்கு கொடுக்கப்படவிருந்த 110 மில்லியல் டாலர் உதவியை இடை நிறுத்தி வைத்துள்ளதாகவும், அதே போல பிரிட்டன் 3 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ் கடன் நிவாரணத்தை இடை நிறுத்தி வைத்துள்ளதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
இலங்கையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரிக்கும் – 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் இடையேயான கால கட்டத்தில் 110 பேர் காணமல் போயுள்ளதாகவும் இதில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்றும் கூறியுள்ளது.
இந்த கடத்தல்களுக்கு அரச படைகளும், அரச படைகளுடன் இணைந்து செயல்படும் ஆயுதக் குழுக்களும் காரணமாக இருக்கிறது என்று அது கூறியுள்ளது.
ஹ்யூமன் ரைட் வாட்ச் அமைப்பின் அறிக்கை குறித்த மேலதிகத் தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்
கொழும்பிலுள்ள தமிழர்களிடம் போலீசார் தகவலைத் திரட்டுவதால் அவர்களிடம் அச்சம் நிலவுகிறது எனத் தகவல்
 |
|
யோகராஜன் (இடது புறத்தில்) |
கொழும்பின் வடக்குப் பகுதியிலிருக்கும் மோதரைப் பகுதியிலிருக்கும் தமிழ் குடும்பங்களுக்கு, மோதரைப் போலீஸ் நிலையத்தின் மூலமாக அரசாங்க முத்திரைகள் ஏதும் இல்லாமல் வழங்கப்பட்டிருக்கும் ஒரு படிவத்தின் காரணமாக அங்குள்ள தமிழ் குடும்பங்கள் அச்சமடைந்துள்ளன என செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூத்த துணைத் தலைவரான யோகராஜன், இந்த படிவத்தில் பெயர், விலாசம், வங்கிக் கணக்குத் தகவல்கள், சாதி உட்பட பல விடயங்கள் கோரப்பட்டுள்ளன எனக் கூறுகிறார். குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரின் விபரங்களும் அதில் தெரியப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
இவ்வாறு பெறப்படும் தகவல்கள் சமூக விரோதிகளின் கைகளில் கிடைக்குமாயின் அது குற்றச் செயல்களுக்கு வழிவகுக்கும் எனவும் யோகராஜன் மேலும் தெரிவிக்கிறார். ஒவ்வோரு தனி நபரும் இவ்வாறாக கேட்கப்படும் விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்கிற நியதி எந்த சட்டத்திலும் இல்லை எனவும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
தாம் போலீஸ் உயரதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து யோகராஜன் அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்
இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்த வேண்டும் என இடதுசாரிகள் வலியுறுத்தல்
 |
|
கொழும்பில் இடதுசாரிகள் போராட்டம் |
இலங்கையின் தலைநகர் கொழும்பில் வியாழக்கிழமையன்று அங்கு நடக்கும் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இடதுசாரி முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் பல அரசியல் கட்சிகளின் பரதிநிதிகள், தொழிற்சங்கத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இடது சாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணரட்ணவில்ன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையில் நடைபெற்று வரும் போரினை நிறுத்த வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நாட்டில் நடைபெற்று வரும் யுத்தத்தின் காரணமாக மக்கள் வறுமையை எதிர்கொள்கிறார்கள் என அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா கூறினார்.
இதே கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றொருஉறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் இலங்கை அரசு யுத்தத்துக்காக இந்த ஆண்டு பல ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்கிறது என்றும் அதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களுமே பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் என்றும் கூறினார்.
Posted in Aid, Ceasefire, Colombo, Donor, Economy, Eelam, Eezham, Finance, HR, Japan, Left, LTTE, Peace, Sri lanka, Srilanka, US, USA, Violence, War | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 15, 2008
சோஷலிஸத்துக்குத் துரோகம் செய்யும் சோஷலிஸ்டுகள்
டி.ஜே.எஸ். ஜார்ஜ்
சோஷலிஸத்தை ஒழித்துக்கட்டியவர்கள் யார்? வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், சோஷலிஸத்தை சோஷலிஸ்டுகளே, அதிலும் குறிப்பாக உலகின் பல பகுதிகளில் கம்யூனிஸ்டு அரசுகளை அமைத்தவர்களே ஒழித்துக் கட்டியிருக்கின்றனர் என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டியிருக்கும்.
உலக நாடுகளில் கம்யூனிஸ ஆட்சி நடைபெற்றுவந்த அனைத்து நாடுகளும் ~ ஒன்றே ஒன்றைத் தவிர ~ தம் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு முதலாளித்துவப் பாதையைத் தழுவிக்கொண்டுவிட்டன. விதி விலக்கான அந்த நாடு இந்தியா. அதனால்தான், ஜோதி பாசுவால் தொடங்கிவைக்கப்பட்டிருப்பதை ஆரோக்கியமான விவாதம் என நாம் வரவேற்க வேண்டும்.
நாம் முதலாளித்துவ சமுதாயத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கும் பொழுது, சோஷலிஸம் சாத்தியமல்ல என்றே அவர் கூறியிருக்கிறார். கடுமையான சுரண்டல் நிலவும் சமூகமுறையான முதலாளித்துவத்தை அங்கீகரிப்பதாக அதைக் கொள்ள முடியாது.
எனினும், இந்தியாவின் மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான அவர், மார்க்ஸ் உருவாக்க எண்ணிய சோஷலிஸ சமுதாய முறைக்கு எந்த நாட்டிலும், கம்யூனிஸ ஆட்சிமுறை அமலில் இருந்த நாடுகளில்கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதை உணரத் தவறிவிட்டார்.
எடுத்துக்காட்டாக, சோவியத் ஒன்றியத்தில் மார்க்சிஸம் ஒருபொழுதும் நடைமுறைப்படுத்தப்படவேயில்லை. தொடக்கத்திலிருந்தே அங்கு லெனினிஸம்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. நடைமுறை அரசியலுக்கு ஏற்ப அக் கொள்கையைத் தகவமைப்பதாகக் கூறி, மார்க்சிஸத்துக்கு மறுவிளக்கம் அளித்து, முற்றிலும் புதியதான கொள்கைகளை அறிமுகப்படுத்தினார் லெனின். சோவியத் கம்யூனிஸத்தின் அடிப்படைக் கொள்கையானது, “மார்க்சிஸம் ~ லெனினிஸம்’ என அழைக்கப்பட்டது.
சீனாவில் அது, “மார்க்சிஸம் ~ லெனினிஸம் ~ மா சே துங் சிந்தனைகள்’ என மாறியது. அதன் உட்பொருள் தெளிவானது: சீனாவில் சோஷலிஸக் கொள்கையைப் பொருத்தவரை “மா சே துங் சிந்தனை’களே இறுதியானவை. அந்த நிலைமை மாவோவின் காலத்தோடு முடிந்துபோய்விட்டன. அதன் பிறகு, சிறந்த யதார்த்தவாதியான டெங் சியாவோபிங், “மனிதாபிமானத்துடன்கூடிய சோஷலிஸம்’ என்ற கொள்கையைக் கொண்டுவந்தார். அது ஒரு முக்கியமான கோஷமாகும்.
எந்தப் பெருந்திரளான மக்களை சோஷலிஸத்தை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமோ அவர்களையே கம்யூனிஸம் கவர்ந்திழுக்காமல் போனதற்கு, அதில் மனிதாபிமான அம்சம் குறைவுபட்டிருந்ததே காரணமாகும்.
ஸ்டாலினும் மாவோவும் தனிநபர் சர்வாதிகாரத்தைத்தான் நிறுவினார்களே தவிர, தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தையல்ல. அந்தக் கால கட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பெருமளவிலான மரணதண்டனைகள் சோஷலிஸத்தின் முகத்தையே கோரமாக்கிவிட்டன.
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது மாநாட்டில் நிகிடா குருஷ்சேவ் ஆற்றிய வரலாற்றுப் புகழ்மிக்க உரை அதை அம்பலப்படுத்தியது. அது உணர்ச்சிபூர்வமான உரை. ஆனால், அவர் ஆற்றியது அவரது வரைவு உரையைவிட சற்று மென்மையாக்கப்பட்ட வடிவமாகும்.
மாலட்டோவ் போன்ற பழைய ஸ்டாலினிசவாதிகளின் வற்புறுத்தலை அடுத்து, ஸ்டாலின் “கட்சிக்கு ஆற்றிய பெரும் சேவைகளை’ குருஷ்சேவ் அங்கீகரித்தார். ஆனால், பூர்வாங்க விவாதங்களிலும் மூல வரைவு அறிக்கையிலும், “”கட்சியை ஸ்டாலின் அழித்துவிட்டார். அவர் மார்க்சியவாதியே அல்ல. மனிதன் புனிதமானவை எனக் கருதுவனவற்றையெல்லாம் அவர் அழித்தொழித்துவிட்டார்” என்று குருஷ்சேவ் குறிப்பிட்டிருந்தார். (2007-ல் “த கார்டியன்’ இதழில் கொர்பச்சேவ் எழுதியிருந்த கட்டுரையில் இதைத் தெரிவித்துள்ளார்)
அமைதியின் மீதான விருப்பம், பாதுகாப்பு உணர்வு, உழைப்பின் மூலமாக தானும் தனது குடும்பமும் வளம் பெற முடியும் என்னும் நம்பிக்கை போன்ற, மனிதன் புனிதமாகக் கருதுவனவற்றை எந்தக் கொள்கையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்டுகள் இதைப் புறக்கணித்தனர். அதன் விளைவாக அவர்கள் அதிகாரத்திலிருந்து வீழ்ந்தார்கள் அல்லது அவர்கள் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
60 ஆண்டுகளாகியும் ஏன் வளர்ச்சி அடையவில்லை என்ற கேள்வியை இந்திய இடதுசாரிகள் தமக்குத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.
உண்மையில், மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் அவர்கள் தமது செல்வாக்கை இழந்திருக்கின்றனர். மிகச் சிலரால், பெருவாரியான மக்கள் சொல்ல முடியாத அளவுக்குச் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையிலும் அவர்களால் வளர முடியவில்லை.
இடதுசாரித் தலைவர்களில் பலர் தமது தனிப்பட்ட வாழ்க்கையில் முதலாளித்துவ ரசனைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், சுரண்டலுக்கு ஆளான மக்களோ நக்சலிஸம் போன்ற இயக்கங்களை நோக்கியும், மத அடிப்படைவாதத்தை நோக்கியும் சென்றுகொண்டிருக்கின்றனர்.
இடதுசாரிகள் சோஷலிஸத்துக்குத் துரோகம் இழைத்துவிட்டனர். சமத்துவம், சமதர்மம் என்ற அடிப்படையில் ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகள் சோஷலிஸத்தை நெருங்கிச் சென்றுகொண்டிருக்கின்றன.
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 30 ஆண்டுகளாகப் பதவியில் இருந்தபோதிலும் வறுமையின், சிறுமையின் அடையாளமாக விளங்கும் கைரிக்ஷாவை இந்திய இடதுசாரிகளால் ஒழிக்க முடியவில்லை.
இடதுசாரிகளின் தோல்வியானது, அபாயகரமான ஓர் அரசியல் தோன்றுவதற்கு ~ ஜமீன்தாரி சிந்தனை கொண்ட வகுப்புவாத அரசியலுக்கு ~ வழிவகுத்துக் கொண்டிருக்கிறது. என்னே துயரம்!
Posted in Baasu, Basu, Capitalism, China, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Corporate, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, East, Economy, entrepreneurs, Finance, global, Globalization, Growth, HR, Jobs, Jothibasu, Jyothibasu, Kerala, Lazy, Lethargy, Mao, markets, Nandhigram, Nandigram, Nanthigram, Poor, Rich, Russia, SEZ, Socialism, TATA, Union, USSR, West, workers | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007
விடுதலைப் புலிகளும், கருணா குழுவினரும் தொடர்ந்து சிறார்களை சேர்ப்பதாக ஐ.நா கூறுகிறது
இலங்கையில் விடுதலைப் புலிகளும், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணா குழுவினரும், தொடர்ந்து சிறார்களை கடத்தி அவர்களை சண்டையிட பயன்படுத்துவதாக ஐ.நா கூறியுள்ளது.
சிறார்களை சண்டையிட பயன்படுத்துவது குறைந்து இருந்தாலும், கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த இரு குழுவினரும் நூற்றுக்கணக்கான சிறுவர்களை சேர்த்துள்ளதாக ஐ.நா கூறுகின்றது.
ஐ.நா அதிகாரிகள் முன்னிலையில் சிறார்களை விடுவித்த ஒரு சில நாட்களிலேயே அவர்களை மீண்டும் சேர்த்து கருணா குழுவினர் அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருவதாகவும் ஐ.நா கூறியுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாடு செல்வதாக கூறுகிறார் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்
 |
|
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் |
கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினறும், மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன், தற்காலிகமாக வெளிநாடு ஒன்றுக்கு செல்ல முடிவெடுத்துள்ளார்.
இலங்கையில் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கிறது என்று காவல் துறையின் புலனாய்வுத் தறை கூறிய பிறகும் தன்னுடைய பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாகத் தெரிவிக்கும் மனோ கணேசன், இதையடுத்து தற்காலிகமாக இலங்கையை விட்டுச் செல்ல முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதாகக் கூறிய இலங்கை அமைச்சர் கெஹ்லியா ரம்புக்வல்ல அவர்கள், கூடுதல் பாதுகாப்பு கோரி மனோ கணேசன் அளித்த மனு பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
Posted in Abductions, Colombo, dead, disappearances, Eelam, Eezham, extra-judicial, extra-judicial killings, Freedom, Ganesan, HR, Human Rights, Killed, killings, Life, LTTE, Mahinda, Mahinda Rajapaksa, Mano, Mano Ganesan, MP, Murder, Prabhakaran, Rajapaksa, Security, Sri lanka, Srilanka, Tamils, Threat, Velupillai, Velupillai Prabhakaran | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 10, 2007
சர்வதேச மனித உரிமைகள் தினம்: இலங்கையில் நாடுதழுவிய நிகழ்ச்சிகள்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை இலங்கையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு கூட்டங்களும், கருத்தரங்குகளும், கண்டன-கவனயீர்ப்பு ஊர்வலங்களும் நடந்தன.
மேலக மக்கள் முண்ணணி தலைமையிலான மக்கள் கண்காணிப்புக் குழு ஒழுங்கு செய்திருந்த ஊர்வலம் ஒன்றும் இன்று கொழும்பில் இடம்பெற்றிருக்கிறது.
கடத்தப்பட்டு காணாமல்போனோரின் உறவினர்கள், தடுப்புச் சிறைகளிலும், பொலிஸ் நிலையங்களிலும் அண்மையில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருப்போரின் உறவினர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இதில் கலந்துகொண்டனர்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சு, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டில், அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் இன்று சிறிலங்கா பவுண்டேஷன் இன்ஸ்டிடியூட்டில் நடத்தப்பட்ட நிகழ்வில் ஐ.நா அமைப்பின் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் மற்றும் விசேட அதிதிகள் கலந்துகொண்டனர்.
இதில் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருக்கிறார்.
இங்கு உரையாற்றியுள்ள அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்பில் மூன்றாம், நான்காம் சரத்துக்களில் மனித உரிமைகளின் சுதந்திரம் குறித்து குறிப்பாக தெரிவிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், சுதந்திரம், பக்கச்சார்பின்மை, நீதித்துறையின் ஆளுமை என்பன மனித உரிமைகள் பேணப்படுவதற்கு மிகவும் அவசியமான அம்சங்கள் என்று தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா, போரினால் சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறப்படுவதையும், போரினால் மனித உரிமைகளை ஏற்படுத்த முடியும் என்று கூறப்படுவதையும் நிராகரித்துப் பேசினார்.
இதற்கிடையில் இங்கே லண்டனிலும் பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன்பாக இலங்கைத் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. தமிழர் ஒருங்கிணைப்பு மையம் என்னும் அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது.
மட்டக்களப்பில் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்ட ஊர்வலம்
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில், யுத்த சூழ்நிழல் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் மீள்குடியமர்த்தப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளியிடுத்தும் வகையில் திங்கட்கிழமை பேரணி ஒன்று நடந்துள்ளது.
இந்தப் பேரணிகளிலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்திலும், பெரும் எண்ணிக்கையினர் கலந்து கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இடம்பெயர்ந்திருந்த மற்றும் மீள்குடியமர்த்தப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் வகையிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சிக்கும் வகையிலும் பேரணிகளில் கலந்து கொண்டவர்கள் வாசக அட்டைகளை ஏந்திச் சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பேரணி சென்ற வீதிகளில், வழமைக்கு மாறாக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுக் கூட்டத்தில் ஈ.பி.டி.பி., பிளாட், ஈ.பி.ஆர்.எல்.எஃப்-பத்மநாபா அணி பிரதிநிதிகளும் பங்குபெற்றனர்.
அவர்கள் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாட்டினையும் விமர்சித்து உரையாற்றினர்.
கூட்ட முடிவில், மக்களின் தேவைகளை வலியுறுத்தி ஜனாதிபதியிடம் கையளிக்கும் முகமாக ஒரு மனு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மகேசன் அவர்களிம் கையளிக்கப்பட்டது.
வடக்கு இலங்கையில் வன்முறை வலுக்கிறது
இலங்கையின் வடக்கே ஞாயிறன்றும் திங்களன்றும் நடைபெற்ற மோதல்களில், 26 விடுதலைப் புலிகளும் ஒரு இராணுவச் சிப்பாயும் கொல்லப்பட்டுள்ளதாகவும், 10 இராணுவ வீரர்கள் காயமடைந்ததுள்ளதாகவும் இலங்கை அரசின் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
மணலாறு பகுதியில் தமது பிரதேசத்துக்குள் முன்னேற முயன்ற இராணுவத்தினரின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் பெரியதம்பனனைப் பகுதியில், நேற்று முந்தினம் கொல்லப்பபட்ட விடுதலைப் புலிகளில், நல்ல நிலையில் உள்ள ஆறு சடலங்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலமாக அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற வன்செயல்களில், மட்டக்களப்பு மாவட்டம் பிள்ளையாரடியில், ஞாயிறு இரவு இரண்டு யுத்த அகதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுளனர் எனவும், துப்பாக்கிச் சூட்டுடன் ஒரு சடலம் கண்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Posted in AHRC, Batticaloa, Displaced, Eelam, Eezham, EPDP, EPRLF, HR, Human Rights, IDP, LTTE, Manalaar, Manalaaru, Manalar, Manalaru, Padhmanaba, Padhmanabha, Padmanaba, Padmanabha, Pathmanaba, Pathmanabha, plot, Refugees, Sri lanka, Srilanka, Vanni, Violence, Wanni, War | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007
ஏன் இந்த பாரபட்சம்?
மற்ற விஷயங்களில்தான் தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது என்றால் நீதித்துறையிலும் தமிழகம் பாரபட்சமாக நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் நீதிநாள் நிகழ்ச்சியில் பேசும்போது, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி. ஷாவே இதைத் தெரிவித்திருக்கிறார் எனும்போது, நமது கோபத்தில் நியாயம் இருப்பது புரியும்.
அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டால்தான் வழக்குகளை விரைவாக விசாரித்துத் தீர்ப்பளிக்க முடியும் என்கிற நிலைமை. இது தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியா முழுமையிலும் இருக்கும் பிரச்னை என்பதில் சந்தேகமில்லை. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனும் இந்த விஷயத்தில் நமது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்தைத்தான் புதுதில்லியில் நடந்த “நீதி நாள்’ விழாவில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஒட்டுமொத்த இந்தியாவின் கீழமை நீதிமன்றங்களிலிருந்து உச்ச நீதிமன்றம் வரையிலான அத்தனை நீதிமன்றங்களையும் சேர்த்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை வெறும் 14,477தான். அதிலும் 2,700 இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் விரைவில் நீதி வழங்குவது என்பது இயலாத விஷயம் என்று பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும். ஆனால், நமது மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை?
மற்ற எல்லா துறைகளுக்கும் ஆயிரம் கோடிகளில் நிதி ஒதுக்கித் தரும் மத்திய அரசு, நீதித்துறைக்கு கடந்த பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒதுக்கித் தந்திருக்கும் நிதி எவ்வளவு தெரியுமா? வெறும் 700 கோடி. அதாவது, மொத்தத் திட்ட ஒதுக்கீட்டில் 0.078 சதவீதம். போதிய நிதி வசதி இல்லாதபோது நீதிபதிகளை நியமிப்பது எப்படி, நீதிமன்றங்களின் செயல்பாடுகளை நவீனப்படுத்துவது எப்படி, தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பு வழங்குவது எப்படி?
கடந்த பத்து ஆண்டுகளாக, உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும்தான் முடிவெடுக்கின்றன என்றாலும், தாங்கள் தேர்ந்தெடுக்கும் பட்டியலை அந்தந்த மாநில முதல்வர்களின் ஒப்புதலுக்கு அனுப்புவது என்கிற வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. அரசியல் மனமாச்சரியங்கள் பல தேர்ந்தெடுக்கப்பட்ட திறமைசாலிகளின் தலையெழுத்தை மாற்றும் துர்பாக்கியம் எல்லா மாநிலங்களிலும் தொடர்கிறது. இதற்கு யார் முடிவு கட்டுவது என்று தெரியவில்லை.
2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 1,58,900 முக்கிய வழக்குகளும், 1,27,060 சிறு குற்றங்களுக்கான வழக்குகளும் இருந்ததுபோய், இப்போதைய நிலவரப்படி, 2,05,194 முக்கிய வழக்குகளும், 2,15,736 சிறு குற்றங்களுக்கான வழக்குகளும் நமது தமிழக நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார். இத்தனைக்கும், அகில இந்திய சராசரியைவிட அதிகமான அளவுக்குத் தமிழக நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையான 49 பேரில் தற்போது நியமிக்கப்பட்டிருப்பது என்னவோ 45 நீதிபதிகள்தான். இன்னும் நான்கு நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கின்றனர். பல ஆண்டுகளாக நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தும் இதுவரை தமிழகத்தைப் பொருத்தவரை நியாயம் கிடைத்தபாடில்லை.
தேங்கிக் கிடக்கும் வழக்குகளைக் கருத்தில்கொண்டு, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மற்ற உயர் நீதிமன்றங்களைப்போல, சென்னை உயர் நீதிமன்றமும் கோரிக்கை வைத்தது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஒப்புதலுடன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 49-லிருந்து 69 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று மத்திய நீதித்துறைக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பரிந்துரைத்தும் எந்தவிதப் பயனும் இல்லை.
மும்பை, தில்லி, அலகாபாத், கேரளம் போன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உடனடி உத்தரவு பிறப்பித்த மத்திய சட்ட அமைச்சகம், சென்னை உயர் நீதிமன்றத்தின் கோரிக்கையை மட்டும் பரிசீலிக்காமல் இருப்பது ஏன்? இத்தனைக்கும் மத்திய அரசில் சட்டத்துறையின் இணையமைச்சர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அதுதான் வேடிக்கை!
———————————————————————————————————–
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி
கே.வீ. ராமராஜ்
குற்றவியல் நீதி நிர்வாகத்தில் குற்றவாளிகளும், பாதிக்கப்பட்டவர்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவர்கள்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகளின் உரிமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை பிரகடனங்களை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில் குற்றவியல் விசாரணை முறைச் சட்டம், மனித உரிமைச் சட்டம் போன்றவற்றின் மூலம் அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இவ்வளர்ச்சிக்கு இணையாக குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதில் மேம்பாடு அடையாமல், அவர்கள் மறக்கப்பட்ட மக்களாக உள்ளனர் என்று கூறப்படுகிறது.
எனவே பாதிக்கப்பட்டோருக்கு உறுதியாக உதவும் வகையில் குற்றவியல் விசாரணைச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
முதலாவதாக, குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களை காவல்நிலையம், நீதிமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் நல்ல முறையில் கவனிப்பதோடு பாதிக்கப்பட்டோருக்கான நீதி எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இரண்டாவதாக, குற்றங்களால் பாதிக்கப்பட்டோரின் உடைமைகள் கிடைக்கப்பெறுதல் உள்பட எல்லா அம்சங்களிலும் அவர்கள் மறுமலர்ச்சி அடைய வேண்டும்.
மூன்றாவதாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு குற்றவாளிகளிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ இழப்பீடு கிடைக்க வேண்டும்.
நான்காவதாக, மருத்துவ உதவி, பொருள் உதவி, உளவியல் ரீதியில் உதவி உள்ளிட்ட சமூக உதவிகள் கிடைக்க வேண்டும்.
நமது நாட்டைப் பொருத்தவரை குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் தகவல் கொடுப்பவர்களாக, நீதிமன்றத்தில் சாட்சிகளாக மட்டுமே உள்ளனர். அவர்கள் குற்றவியல் விசாரணை நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியாது. இந்திய குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் 357-வது பிரிவு குற்றவாளி என தீர்ப்பு செய்யப்படுபவருக்கு விதிக்கப்படும் அபராதத்தின் ஒரு பகுதியை பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடாக வழங்கலாம் எனத் தெரிவிக்கிறது. குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் போகும்போதும் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்படும்போதும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு கிடைக்க வாய்ப்பில்லை.
குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைச் சிறப்பாக வழங்க மத்திய, மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபை 1998-ல் “”பாதிக்கப்பட்டோர் நீதிக்கான கையேடு” ஒன்றையும் அதனை அமலாக்க “”கொள்கைகள் உருவாக்குபவர்களுக்கான வழிகாட்டியையும்” வெளியிட்டது. இதைப் பின்பற்றி பாதிக்கப்பட்டோர் நீதிக்கான கொள்கைகள் இந்தியாவில் வகுக்கப்பட வேண்டும்.
குற்றங்களால் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும். இதற்கான மாதிரி சட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் செயல்படும் இந்திய பாதிக்கப்பட்டோரியல் கழகம் மத்திய அரசிடம் பத்தாண்டுகளுக்கு முன்பே சமர்ப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே முதன்முறையாக பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆதரவோடு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்டோரியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு நடப்பாண்டில் தொடங்கப்பட்டுள்ளது.
குற்றம் நிகழும்போது பாதிக்கப்பட்டவர் எவ்வாறு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும்? முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதில் காவல் துறையினர் தாமதம் செய்தால் என்ன செய்ய வேண்டும்? புலன் விசாரணை செய்வதில் காவல் துறையினர் கவனக்குறைவாகச் செயல்பட்டால் என்ன செய்வது, போன்ற வழிகாட்டுதலை மேற்கொள்ள பாதிக்கப்பட்டோர் உதவி மையம் அமைக்கப்பட வேண்டும்.
காவல் துறையினர் கைப்பற்றிய பாதிக்கப்பட்டோரின் சொத்துகளை அவர்கள் எளிதில் நீதிமன்றத்திலிருந்து திரும்பப் பெறவும், குற்றவியல் விசாரணை முறைகளைப் பாதிக்கப்பட்டோர் அறிந்து கொள்ளவும், பாதிக்கப்பட்டோரும் சாட்சிகளும் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் அளிப்பதில் உள்ள பிரச்னைகளைக் களையவும் பாதிக்கப்பட்டோர் உதவி மையங்கள் பணியாற்ற வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான நீதிமன்ற விசாரணைகளில் அரசு வழக்கறிஞருடன் பாதிக்கப்பட்டவர் தாமோ அல்லது தமது வழக்கறிஞர் மூலமோ இணைந்து செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனுக்களில் தமது எதிர்ப்பைப் பதிவு செய்யவும் அனுமதி அளிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படும்போதும் குறைந்த தண்டனை வழங்கப்படும்போதும் மேல்முறையீடு செய்ய பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்க வேண்டும்.
இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியற்றவர்களுக்கு அரசே வழக்கறிஞரை அமர்த்தித் தர வேண்டும். இதுகுறித்து மாலிமத் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் பரிந்துரைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
தேசிய அளவிலும் மாநில அளவிலும் “”பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியம்” ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோர் ஆணையாளர் (ஆம்புட்ஸ்மேன்) அலுவலகங்களை அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி, அதன் கீழ் பாதிக்கப்பட்டோர் உதவி மையங்களை ஒருங்கிணைக்க வேண்டும். இவை அனைத்தும் இலவச சட்ட உதவிகள் வழங்கும் தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் மேற்பார்வையில் செயல்படலாம்.
மேலை நாடுகளில் குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ தன்னார்வ அமைப்புகள் செயல்படுகின்றன. இந்தியாவிலும் இதுபோன்று உதவ தன்னார்வ அமைப்புகள் முன்வர வேண்டும்.
Posted in Accused, Allegations, Allocations, Attorney, Bench, Budget, Cabinet, Center, Convicts, Courts, Criteria, Culprits, Economy, Funds, Govt, HC, HR, Judgements, Judges, Judgments, Judiciary, Jury, Justice, Law, Lawyers, Ministry, Numbers, Op-Ed, Order, Perspectives, quantity, rights, SC, selection, Sentence, Sentencing, Tamil Nadu, TamilNadu, Verdicts | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2007
வட இலங்கையில் கடும் மோதல்; உயிர்ச்சேதம் குறித்து அரசு-புலிகள் தரப்புகளிலிருந்து முரண்பட்ட தகவல்கள்
இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில், முகமாலை முதல் கிளாலி வரையிலான இராணுவ முன்னரங்க பகுதியில் புதன்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது இருதரப்பினருக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இத்தாக்குதல்கள் பற்றிக் கூறுகையில், அதிகாலை 5.30 மணியளவில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தை நோக்கி முன்னேறிச் சென்று அவர்களது முன்னரங்க பகுதிகளைக் கைப்பற்றி புலிகளின் 6 பதுங்குகுழிகளை அழித்து, அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரையில் முன்னேறிச் சென்று சேதங்களை ஏற்படுத்திவிட்டு காலை 7 மணியளவில் படையினர் தமது நிலைகளுக்குத் திரும்பியுள்ளார்கள் என்று கூறினார்.
கிளாலி முதல் முகமாலை வரையிலான பகுதிகளில் ஏ9 வீதிக்கு வடக்காகவும், தெற்காகவும் இந்தச் சண்டைகள் நடைபெற்றன. இதில் 52 விடுதலைப் புலிகளும் 11 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். மேலும் 41 படையினர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என உதய நாணயக்கார தெரிவித்தார்.
அதேநேரம் இந்த மோதல் சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகளின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன், கிளாலி முதல் முகமாலை வரையிலான பகுதிகளில் இன்ற இராணுவத்தினர் பெரும் எடுப்பில் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியை விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளார்கள் என்றும், இதன்போது 20க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாகவும், விடுதலைப் புலிகள் தரப்பில் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சண்டையின்போது இராணுவத்தினருக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்றும் உதவியாக தாக்குதலில் ஈடுபட்டதாகவும், இராணுவத்தின் டீ55 ரக யுத்த டாங்கியொன்று தங்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்திடமிருந்து பெருமளவு ஆயுதத் தளவாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரவு செலவுத் திட்டம்: அரசு செலவினங்கள் அதிகரித்தது
 |
 |
ஜனாதிபதி பட்ஜெட் உரையை வாசிக்கிறார். |
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளிற்கு மத்தியில் இலங்கை நிதியமைச்சரும், ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஷ 2008 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினை புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கும் மூன்றாவது வரவு செலவுத்திட்டம் இது.
அடுத்த நிதியாண்டிற்கான அரசின் மொத்த உத்தேச வருமானமாக சுமார் 750.74 பில்லியன் ரூபாய்களும், மொத்த உத்தேச செலவினங்களாக 1044.18 பில்லியன் ரூபாய்களும் காட்டப்பட்டிருப்பதோடு, துண்டுவிழும் தொகை சுமார் 293.44 பில்லியன் ரூபாய்களாகவும் கணக்கிடப்பட்டிருக்கின்றன.
கடந்த மாதம் அரசு முன்வைத்த நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தின்படி, 2008 ஆண்டு தேசிய பாதுகாப்பு செலவினங்களிற்காக 166.44 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது 2007ஆம் ஆண்டிற்கான உத்தேச தேசிய பாதுகாப்பு செலவினங்களுடன் ஒப்பிடும்போது ஏறத்தாழ 20 சதவீத அதிகரிப்பாகும்.
இலங்கையில் கடந்த இரண்டு வருடகால பொருளாதார வளர்ச்சி வீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதமாகக் காணப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த வருடம் இந்த வளர்ச்சி வீத்ததினை 7.5 வீதமாக உயர்த்த சகலரினது ஒத்துழைப்பையும் கோரினார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பினைப் பேணுவதில் தனது அரசிற்கு உண்டான தீவிர கவனத்தினை வெளியிட்டுப் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வினைக் காணுவதற்கு முன்பாக நாட்டிலுள்ள பயங்கரவாதம் முற்றாக ஒழிக்ப்படுவது இன்றியமையாதது என்றும் தெரிவித்தார்.
இந்த வரவு செலவுத்திட்டத்தினை ஒரு யுத்த வரவு செலவுத்திட்டம் எனக் குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபையைப் புறக்கணித்திருந்தார்கள்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வரும் ஆண்டில் 7.5 சதவீதம் இருக்கும் என்று இந்த வரவு செலவுத்திட்டத்தில் மதிப்பிடப்பட்டிருக்கிறது.
போர்ச்சூழலில் இந்த வளர்ச்சியை எட்டமுடியுமா? மேலும், பொதுமக்களை பாதிக்கும் பணவீக்கம்,விலைவாசி உயர்வு போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் இந்த திட்டத்தில் இருக்கின்றனவா? போன்ற கேள்விகளுக்கு கொழும்பில் உள்ள பொருளாதாரப் பகுப்பாய்வாளர் முத்துக்கிருஷ்ணன் சார்வானந்தன் பதிலளிப்பதையும் நேயர்கள் கேட்கலாம்.
லண்டனில் கைதான கருணாவை சித்ரவதை குற்றங்களுக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
 |
 |
விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய தளபதியாக இருந்தவர் கர்ணல் கருணா |
சித்திரவதை செய்தது, சிறார் போராளிகளை பயன்படுத்தியது உட்பட பல்வேறு குற்றங்களை செய்ததாக கர்ணல் கருணா மீது பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் குற்றம்சுமத்துகின்றன.
மனித உரிமை அமைப்புகளை சேர்ந்தவர்கள், கருணாவுக்கு எதிரான ஆதாரங்களை திரட்ட முயன்று வருகிறார்கள்.
இப்படி திரட்டப்படும் ஆதாரங்களை பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் கையளித்து, அவர் மீது வழக்கு தொடர முடியும் என்கிற நம்பிக்கையுடன் இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
இலங்கையில் நடந்த மனித உரிமை துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பான அந்நாட்டின் முக்கிய நபர்களில் ஒருவர் கருணா என்று வர்ணிக்கிறார் ஹூமன் ரைட்ஸ் வாட்ச் என்கிற மனித உரிமை அமைப்பின் சட்ட மற்றும் கொள்கை விவகாரங்களுக்கான இயக்குநர் ஜேம்ஸ் ரோஸ்.
கருணா மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்று தாங்கள் உறுதியாக நம்பு வதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் கருணா நடத்திய மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பாகவும், போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் அவர் மீது இலங்கையில் வழக்கு தொடரப்படும் என்பதில் தங்களுக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை என்றும், காரணம், இலங்கை அரசு, குறிப்பாக ராணுவ தளபதிகள் கருணா குழுவுக்கு ஆதரவாக இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கருணா மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து வழக்கு தொடுக்கக்கூடிய அளவுக்கு தேவையான ஆதாரங்கள் இருக்கிறது என்று பிரிட்டிஷ் அதிகாரிகளை இணங்க வைக்கக்கூடிய வலுவான ஆதாரங்களை திரட்டுவது என்பதும், அந்த ஆதாரங்களை கேணல் கருணா பிரிட்டனில் இருக்கும்போதே பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் அளிப்பது என்பதும் மனித உரிமை அமைப்புகள் முன்பிருக்கும் தற்போதைய சவால்.
பிரிட்டனின் குடிவரவு குடியகல்வு பிரிவின் தடுப்புக்காவலில் கருணா தற்போது தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக, பிரிட்டிஷ் உள்துறை அலுவலகம் உறுதி செய்துள்ளது.
இவர் மீதான வழக்கு குறித்து மேலதிகமாக பேசுவதற்கு அதிகாரிகள் தயாராக இல்லை.
Posted in Abductions, Airforce, Budget, Conflict, Crime, crimes, Defense, enquiry, Extremism, Fight, Freedom, Govt, HR, Independence, Inquiry, Karuna, Law, LTTE, Mahinda, majority, Military, minority, murders, Navy, Order, Peace, Rajapakse, Rebels, Sinhala, Sinhalese, Soldiers, Sri lanka, Srilanka, Tamils, Terrorism, TMVP, Torture, troops, Vidudhalai, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, War | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007
திருக்கோயில்களைக் காப்போம்!
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான கோயில்கள் உள்ளன; அதாவது, சுமார் 32,000 கோயில்கள் இருக்கின்றன. மடாலயங்கள், சமய அறக்கட்டளை போன்ற இந்து சமய அமைப்புகளின் எண்ணிக்கை 34,160. இவற்றின் சொத்துகள் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ. 20 கோடிக்குமேல் வருவாய் கிட்ட வேண்டும். ஆனால் கிடைக்கும் வருமானம் மிகக்குறைவே. இந்தச் சொத்துகளை, இடையே இருப்பவர்கள் அனுபவித்து வருகின்றனர்.
இத்திருக்கோயில்கள் கடந்தகாலங்களில் மன்னர்களாலும் ஜமீன்தார்களாலும் வணிகர்களாலும் கட்டப்பெற்றவை. கோயில்களின் நிர்வாகம், பூஜைகள் தங்குதடையின்றி நடக்கக்கூடிய வகையில், மானியங்கள், கட்டளைகள் நிறுவப்பட்டன.
சிற்பம், ஓவியம், சமயசாஸ்திரம், கலை, இலக்கிய ஆராய்ச்சி போன்ற அனைத்துக் கலைகளையும் வளர்க்கும் அமைப்புகளாக கோயில்கள் இருந்தன. பஞ்சநிவாரணப் பணிகளைக் கோயில் நிர்வாகம் மேற்கொண்டது என வரலாறு கூறுகிறது. கோயில்களின் சமுதாயப் பணி குறித்தும் கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், கோயில்களில் கொள்ளை தொடர்பான செய்திகளும் தொடர்கின்றன:
- குமரி மாவட்டம், திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் கலசங்கள், கிரீடம் திருட்டு;
- களக்காட்டில் ஒரு கோடி பெறுமான கோயில் நகைக் கொள்ளை;
- திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேல் காணாமல் போனது;
- ராமனைக் கண்விழித்துப் பாதுகாத்த லட்சுமணனின் சிலை, ராமேஸ்வரத்தில் களவு போனது;
- 1971-ல் திருவெள்ளரை ஸ்ரீபுண்டரிகாஷ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம், குத்தகை வருமானம் சரியில்லையென்று காரணம்காட்டி குறைந்தவிலைக்கு அரசியல் கட்சிக்காரர்களுக்கு விற்கப்பட்டது;
- தஞ்சை மாவட்டம் பத்தூர் விசுவநாதசாமி ஆலயத்தில் ரூ. 3 கோடி பெறுமான நடராஜர் விக்ரகம் திருடப்பட்டது; பின்னர் லண்டனுக்குக் கொண்டுசெல்லப்பட்டு மீட்கப்பட்டது;
- தஞ்சை அரண்மனை தேவஸ்தான பொறுப்பில் உள்ள 88 கோயில்களிலும் களவு;
- வறுமை தாங்காமல் 3 அர்ச்சகர்கள் தற்கொலை;
- சமயபுரம் உண்டியலில் தங்கக் காசுகள் மாயம்; மன்னார்குடி கோயிலில் நகைத் திருட்டு; நாகை, நீலாயதாட்சி அம்மன் கோயிலில் “கோமேதக லிங்கம்’ களவு போனது; புதுக்கோட்டை திருப்புனவாசல் கோயில் கலசம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் கலசம் மாயம்; நெல்லையப்பர் கோயில் நகைக் கொள்ளை – நிர்வாக அதிகாரியே உடந்தை;
- காஞ்சி வரதராஜபெருமாள் கோயில் நகைத் திருட்டு;
- மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 112 கிரவுண்டு நிலத்தைக் குறைந்தவிலைக்கு அரசாங்கத்திற்கு பட்டா செய்து தந்ததில் கோயிலுக்கு இழப்பு;
- கோவில்பட்டியில் சிவஞானபுரம் பத்ரகாளியம்மன் கோயில் கொள்ளை;
- விருதுநகர் மாவட்டம், முத்துராமலிங்கபுரம், கங்காபரமேஸ்வரி கோயில் கொள்ளை என – பட்டியல் நீள்கிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மனுக்குச் சாற்றப்பட்ட நகைகளை இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்று அதைப்போல் நகைசெய்துவிட்டு திருப்பித் தருவதாக விக்டோரியா மகாராணி குடும்பத்தினர் கேட்டபோது, கோயில் நிர்வாகம் சம்மதிக்கவில்லை. நகைகளை புகைப்படங்கள் மட்டும் எடுத்துக்கொள்ள அனுமதித்தனர். மத உணர்வுகளை அரச குடும்பத்தினர் அன்று மதித்தனர்.
கோயில்களில் பல கோடி பெறுமான நகைகள், சிலைகள் கொள்ளை போகின்றன. இதைத் தடுக்க ஆட்சியாளர்கள் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கோயில் நிர்வாகம், மாவட்ட ஆட்சியரின் நேரடிப் பார்வையில் இருந்தது. அதற்குப் பின்பு மடாதிபதிகள், ஜமீன்தார்கள், உள்ளூர் வணிகர்கள், செல்வந்தர்கள் பொறுப்பில் நிர்வாகம் அளிக்கப்பட்டது. சொத்துகளைக் கண்காணிக்க சுயஅதிகாரம் கொண்ட குழுவிடம் பொறுப்பு வழங்கப்பட்டது. நீதி கட்சி ஆட்சிக்காலத்தில், கோயில் பாதுகாப்புச் சட்டம் வந்தது. ஆணையர் தலைமையில் வருவாய் வாரியம் நிறுவப்பட்டது.
கோயில் வரவு – செலவுக் கணக்குகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற நெறிமுறைகள் கொண்டு வரப்பட்டன. 1940-ல் ஆர்.பி. கிருஷ்ண அய்யர் தலைமையில் ஒரு குழு, 1943, 1944, 1946, 1954, 1956, 1981-ல் இந்து அறநிலையச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வந்தது. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது நீதிபதி கிருஷ்ணசாமிரெட்டி தலைமையில் கோயில் நிர்வாகச் சீர்திருத்தங்களை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. பல்வேறு பரிந்துரைகளை அக்குழு அளித்தது.
தஞ்சை பெரியகோயிலுக்கு மன்னன் ராஜராஜனால் 12,000 வேலி நிலம் கொடையாக வழங்கப்பட்டது என்பது கல்வெட்டு செய்தி. ஆனால் இந்த நிலம் தற்போது அக்கோயிலுக்குச் சொந்தமில்லை என்பது அதிர்ச்சிதரும் செய்தி. திருச்செந்தூர் கோயில் வேல் திருட்டு தொடர்பாக நீதிபதி பால் குழு சில பரிந்துரைகளைச் செய்தது:
அறங்காவலர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், மக்களால் மதிக்கப்படுபவர்களாகவும், பொருளாதார வசதி உடையவர்களாகவும், சமயப்பற்று உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். அறங்காவலர் குழுத்தலைவர் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கோயில் அமைந்துள்ள அப்பகுதியில் வசிப்பவரே அறங்காவலர் குழுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
அதிக வருமானம் உள்ள பெரிய கோயில் உண்டியல்களுக்கு இரட்டைப்பூட்டு முறை உள்ளது. ஒரு கொத்துச்சாவி நிர்வாக அதிகாரியிடம், மற்றொன்று அறங்காவலர் குழுத் தலைவரிடமும் உள்ளன. இதனால், நிர்வாக அதிகாரியும், குழுத்தலைவரும் ஒன்று சேர்ந்து தவறுசெய்ய வாய்ப்புள்ளது. எனவே, ஒரு சாவிக்கொத்தை உதவிஆணையாளரிடம் அல்லது துணைஆணையாளரிடம் கொடுக்க வேண்டும். உண்டியலைத் திறக்க, சாவிக்கொத்தை அனுமதியளிக்கப்பட்ட ஆய்வாளர் மூலம் அவர்கள் கொடுத்து அனுப்பலாம்; அந்த ஆய்வாளர் உண்டியல் திறக்கும்போதும், எண்ணும்போது இருக்க வேண்டும்.
உண்டியல்களில் இரட்டைப்பூட்டின் ஒரு சாவிக்கொத்தை அறங்காவலர் குழுத்தலைவரிடமிருந்து வாங்கி அதனை வட்டாட்சியாளர் அல்லது கோட்டாட்சி ஆட்சியாளர் பாதுகாப்பில் வட்டக் கருவூலத்தில் வைத்திருப்பது நலம்.
சரிபார்ப்பு அதிகாரி ஒவ்வொருவரும் ஒரு தனி முத்திரையை வைத்திருப்பது அவசியம். அம்முத்திரை குறிப்பிட்ட அதிகாரியின் முத்திரை என்பதுதான் என்பதைக் காட்டும்வகையில், அம்முத்திரைகளின் அடையாளக் குறியீடுகள் அமைந்திருக்க வேண்டும். காணிக்கை எண்ணும்போது பொதுமக்கள் பிரதிநிதிகள் இரண்டு பேராவது இடம்பெற வேண்டும்.
1960-ம் ஆண்டு மத்திய அரசு சர்.சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் ஒரு குழு கோயில் நிர்வாகத்தை ஆராய அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் அறநிலைய ஆணையர், பல்கலைக்கழகத் துணைவேந்தரைப் போன்று சுயஅதிகாரம் கொண்டவராக நியமிக்கப்பட வேண்டும். அறநிலையப் பிரச்னைகளைத் தீர்க்க ஒரு தீர்ப்பாயமும் அமைக்க வேண்டும் என்று பரிந்துரையும் செய்தது. இந்தப் பரிந்துரைகளை எந்த மாநிலமும் இதுவரை செயல்படுத்தவில்லை.
கோயில்கள், ஊழல்பெருச்சாளிகளின் கூடாரங்களாக மாறும்முன், அவற்றின் கலைச்செல்வங்களையும், சொத்துகளையும் பாதுகாக்க வேண்டும். அதை அழிக்கின்ற சூழ்நிலையை நாம் அனுமதிக்கக்கூடாது. எனவே, கோயில்கள் அனைத்தும் சுயஅதிகார அமைப்புக் குழுவின்கீழ் கொண்டு வரப்பட வேண்டும். நீதிபதிகளின் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும்.
கோயில்களின் விவரங்கள் அடங்கிய தொகுப்பு அகராதியை அரசு வெளியிட வேண்டும். தலவரலாறு, சமயநூல்களை மலிவு விலையில் வெளியிட வேண்டும். கோயில் வளாகங்களில் சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும். அதிக வருமானமுள்ள ஆலயங்களில் அனாதை இல்லங்கள், பார்வையற்றோர், காது கேளாதோர் பள்ளிகளை ஏற்படுத்தலாம். அர்ச்சகர்கள், ஓதுவார்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
பண்டைய அரசர்கள் கட்டிய பல கோயில்கள் அழிந்துவிட்டன. பல கோயில்களில் வெளவால்கள், பெருச்சாளிகள் பெருகியுள்ளன. புதர்கள் மண்டியுள்ளன. தெப்பங்களும் சீர்கேடடைந்துள்ளன. இவற்றைச் சீரமைக்க வேண்டும். சில தனியார் நிறுவனங்கள் ஆலயப் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
1984-ல் கோயில் சிலைகளை அமெரிக்காவுக்கு எடுத்துச்செல்ல முயற்சி நடந்தபோது நாடாளுமன்றத்தில் வைகோ கண்டனக் குரல் எழுப்பினார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் இதுகுறித்து பழ. நெடுமாறன் எடுத்துரைத்தார்.
ஆலயங்கள், வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல; நமது வரலாற்றைச் சொல்லும் அற்புதக் கொடைகளும் ஆகும். இவற்றைக் காப்பது நம் கடமை!
(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)
Posted in CE, Culture, Devasthanam, Devaswom, Heritage, Hindu, Hinduism, HR, Hundi, Income, Money, priests, Protect, Protection, Radhakrishnan, Religion, Security, Temples | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007
நந்திகிராமுக்கு நன்றி!
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்கிற பெயரில், ஏற்றுமதியை மட்டும் கருத்தில்கொண்டு தொடங்கப்படும் தொழிற்சாலைகளுக்கு சில சிறப்பு சலுகைகளை வழங்குவது என்கிற மத்திய வணிகம் மற்றும் தொழில்துறையின் முடிவுக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்புகள் இருந்து வந்தன. வரிச்சலுகை, குறைந்த கட்டணத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகள், தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமான தொழிலாளர் நலச் சட்டங்கள் என்று பல்வேறு சலுகைகளை இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அளிப்பது தேவைதானா என்கிற கேள்வி பரவலாகவே காணப்பட்டது.
ஏதாவது ஒரு குறிப்பிட்ட தொழில் சார்ந்த அத்தனை தொழிற்சாலைகளும் ஒரே இடத்தில் நிறுவப்படுகிற ஏற்பாடுதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். அதாவது, ஜவுளித்துறை சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களில், பஞ்சில் தொடங்கி ரெடிமேட் ஆடைகள் வரை ஜவுளி சம்பந்தப்பட்ட எல்லா தொழிற்சாலைகளும் இருக்கும். இதனால், மதிப்புக் கூட்டுவரியிலிருந்து விலக்குக் கிடைக்கும். வரி பளு மற்றும் போக்குவரத்துச் செலவு இல்லாமல் இருப்பதால் தயாரிக்கப்படும் பொருள்களின் விலை குறைவாக இருக்கும்.
சீனாவில் ஏற்றுமதியை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இந்தியாவில் வேறுவிதமாக உருவாக்கப்பட்டன. மொத்த நிலப்பரப்பில் நாற்பது சதவிகிதம் தொழிற்சாலைகளும், இருபது சதவிகிதம் சிறப்புப் பொருளாதார மண்டல ஊழியர்களின் வசதிக்காக அமைந்த வணிக வளாகங்களும் அமைவது பற்றி யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், மீதமுள்ள நாற்பது சதவிகித இடத்தில் அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டி விற்பனை செய்யும் திட்டம்தான் இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சந்தேகப்பட வைத்துவிட்டது.
தனிநபரின் விளைநிலங்களையும், பரம்பரை பரம்பரையாக இருந்துவந்த இடங்களையும் குறைந்தவிலைக்கு அரசு கையகப்படுத்தி, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் தனியாருக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? ஏற்றுமதியின் மூலம் அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பார்களே என்பதுகூட வருத்தமான விஷயமல்ல. அப்பாவி மக்களின் விளைநிலங்களைக் குறைந்தவிலைக்கு வாங்கி, அடுக்குமாடி வீடுகள் கட்டி அதில் கொள்ளை லாபம் அடிக்க விரும்புகிறார்களே என்பதுதான் எதிர்ப்புக்கான அடிப்படைக் காரணம்.
மேற்கு வங்கம் நந்திகிராமில் நடந்த கலவரமும் துப்பாக்கிச் சூடும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பற்றி அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியின் விளைவாக, ஒரு கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் உறுப்பினர்கள் இப்போது சில பரிந்துரைகளையும் செய்திருக்கின்றனர்.
அதன்படி, முன்பு திட்டமிட்டதுபோல வளர்ச்சித்துறை இயக்குநரின் முழுப்பொறுப்பில் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கும் என்றாலும், தொழிலாளர் நலச் சட்டங்களைப் பொருத்தவரை மாநில அரசின் தொழிலாளர் துறையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மட்டும்தான் எதையும் செய்ய முடியும்.
நாடாளுமன்றக் கமிட்டியின் இன்னொரு பரிந்துரை உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பல்வேறு உயர் நீதிமன்றங்களில் சுமார் 1,254 சிறுதொழில்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுமார் எழுபது அரசு நிறுவனங்கள் பல்வேறு பிரச்னைகளால் மூடிக் கிடக்கின்றன. செயல்படாத பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும் இடங்களையும், தொழிற்பேட்டைகளையும் சிறப்புப் பொருளாதார மண்டலமாக மாற்றுவது குறித்துப் பரிசீலனை செய்ய விழைகிறது நாடாளுமன்றக் கமிட்டியின் பரிந்துரை.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு இடமும் கிடைத்துவிட்டது. தொழிலாளர் நலச் சட்டங்களில் எந்தவித மாற்றங்களையும் செய்ய வேண்டாம். நந்திகிராமில் தங்களது உரிமைக்காகப் போராடியதன் விளைவுதான் இப்போது இந்தப் பிரச்னைக்கு நல்லதொரு முடிவைத் தந்திருக்கிறது. நிச்சயமாக, நன்றி நந்திகிராமத்து ஏழை விவசாயிகளுக்குத்தான்!
————————————————————————————————————————————-
முரண்பாடு தேவையில்லை
சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பொருத்தவரை, மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிலைப்பாட்டை, காங்கிரஸ் கட்சியிலேயே பலர் ஆதரிக்கத் தயாராக இல்லை என்பது தெரிகிறது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் கோவா மாநிலத்தின் தற்போதைய முதல்வரான திகம்பர் காமத், முந்தைய பிரதாப் சிங் ரானே தலைமையிலான காங்கிரஸ் அரசு அனுமதி அளித்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களைக் கலைப்பது என்று முடிவெடுத்திருப்பது அதைத் தெளிவுபடுத்துகிறது.
கோவா மாநிலத்தில் 15 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டு, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் ஒத்துழைப்புடன் மூன்று மண்டலங்களில் பணிகளும் தொடங்கிவிட்டன. சுமார் 500 கோடி ரூபாய் மூலதனம் வர இருப்பதாக சம்பந்தப்பட்டவர்கள் கூறுகின்றனர். 12 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசின் அனுமதி இன்னும் பெறப்படவில்லை என்றாலும் இடம் ஒதுக்கப்பட்டு விட்டது.
ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம், மருந்து தயாரிப்புக்காக உருவாக்கப்படுகிறது. இந்த மண்டலத்தில் சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளுக்கான அதிநவீன இயந்திரங்களையும் இறக்குமதி செய்து விட்டோம் என்று பரிதாபக் குரல் கொடுக்கின்றன. சட்டப்படி, அனுமதி பெற்ற மூன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும் நிராகரிக்கும் உரிமை மாநில அரசுக்குக் கிடையாது என்கிறார்கள் இந்த உரிமையாளர்கள்.
மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், கோவா என்று பல மாநிலங்களில் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் பொதுமக்களே போர்க்கொடி தூக்குகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. பெரிய அளவில் தனியாரிடம் இடங்களை வாங்கி இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவது என்பது இயலாத விஷயம். காரணம், ஒரே இடத்தில் 1000 ஏக்கர் இடம் கிடைப்பதில்லை. இந்த விஷயத்தில் அரசின் தலையீடு நிச்சயம் தேவைப்படுகிறது.
அதேநேரத்தில், தனியார் லாபம் சம்பாதிக்க ஏழை விவசாயிகள் தங்களது வாழ்வாதாரங்களை ஏன் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. அதுமட்டுமல்ல, இதற்கு ஏன் நிலத்தைக் குறைந்த விலைக்கு அரசு கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இல்லாமல், சிறப்புச் சலுகைகள் பெறாமல், இந்தத் தயாரிப்பாளர்கள் ஏன் உலகச் சந்தையில் போட்டிபோட முடியாது என்கிற கேள்விக்கும் அவர்கள் தரப்பில் சரியான பதில் தரப்படுவதில்லை. சீனாவுடன் போட்டி போட வேண்டும் என்று பயமுறுத்துகிறார்களே தவிர அதற்குச் சரியான காரணங்கள் தருவதில்லை.
போதிய மகசூல் தராத விளைநிலங்களும், தண்ணீர் இல்லாத விவசாய நிலங்களும் தொழில் மண்டலங்களாக மாறுவது தவறு என்று சொல்லிவிட முடியாது. நமது உணவு உற்பத்தி பாதிக்கப்படாத வரையில், தன்னிறைவுக்குப் பங்கம் ஏற்படாதவகையில் இந்த விவசாயத்திற்குப் பயன்படாத நிலங்கள் தொழில் மண்டலங்களாகவோ, அறுபதுகளில் செய்ததுபோலத் தொழிற்பேட்டைகளாகவோ மாற்றப்படுவதில் தவறில்லை. ஆனால், அந்தத் தொழில் மண்டலங்கள் தனியாருடையதாக இல்லாமல், அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதும், அதில் தங்களது வாழ்வாதாரங்களை இழந்த நிலத்தின் சொந்தக்காரர்களுக்கும், அந்த நிலத்தை நம்பி வாழ்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் அங்கே நிறுவப்படும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிப்பது அரசின் கடமை.
தெளிவான கொள்கையோ, தொலைநோக்குப் பார்வையோ இல்லாத நிலைமை, சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பொருத்தவரை தொடர்வது நல்லதல்ல. ஆளும் கூட்டணிக்குள்ளும், காங்கிரஸ் கட்சிக்குள்ளும் காணப்படும் முரண்பாடும், தெளிவின்மையும் மக்கள் மத்தியில் குழப்பத்தையும், தேவையற்ற பயத்தையும் ஏற்படுத்துவதுதான் மிச்சம். தொழில் வளமும், பொருளாதார முன்னேற்றமும் அடிப்படை இந்தியனின் வயிற்றில் அடிப்பதாக அமைந்தால் அதனால் என்ன பயன்?
சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பொருத்தவரை, தேவை தெளிவும், தொலைநோக்குப் பார்வையும், மக்களின் உணர்வுகளை மதிக்கும் மனோபாவமும். அரசிடம் இவை காணப்படவில்லை என்பதற்கு உதாரணம்தான் கோவாவில் ஏற்பட்டிருக்கும் குழப்பம்!
Posted in Agriculture, Assets, Bengal, China, Clothes, Commerce, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Concessions, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Economy, Employment, Exports, Farmer, Farmers, Farming, Garments, Goa, HR, Industry, IT, Jobs, Knit, Knitwear, Land, maharashtra, Mamta, Mamtha, Manufacturing, Nandhigram, Nandigram, Nanthigram, Op-Ed, peasant, peasants, Property, Resources, Sale, Sector, SEZ, States, Tariffs, Tax, Textiles, VAT, WB, workers | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007
தகவல் பெறும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க பல துறைகள் கோரிக்கை
‘அரசு நிர்வாகத்தில் வெளிப்படையான போக்கு இருக்க வேண்டும், ஊழல் குறைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தகவல் பெறும் உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், பல அரசு துறைகள் இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன’ என்று மத்திய தகவல் கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.
மத்திய தகவல் கமிஷனின் ஆண்டு அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கோரி வருகிறது.
தகவல் கொடுப்பதால், நீதித்துறையின் தனித்தன்மை, நீதித்துறையின் நிர்வாகம் பாதிக்கப்படும் என்பது உச்சநீதிமன்றத்தின் வாதமாக உள்ளது.
இதே போல சி.பி.ஐ., மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி.,) ஆகியவையும் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளன.
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை உளவு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கிறது. ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான தகவல்களை தவிர பிற தகவல்களை இரண்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள துறைகள் அளிக்க வேண்டாம். இந்த இரண்டாவது அட்டவணையில் தங்கள் துறையையும் சேர்க்க வேண்டும் என்பது சி.பி.ஐ.,யின் கோரிக்கையாக உள்ளது.
தேர்வு மற்றும் பணி நியமன தகவல்களை வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கோரி வருகிறது. டில்லி மெட்ரோ ரயில் திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்ற வகையில் செயல்பட்டு வருவதால், எவ்வித தகவலும் அளிக்க டி.எம்.ஆர்.சி., முன்வர மறுக்கிறது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் செயல்பட்டால், கூடுதல் சுமை ஏற்படும் என்பது அந்த அமைப்பின் கருத்தாக உள்ளது.
கட்டணம் உயர்வு?
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என நுகர்வோர் விவகாரம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், சுரங்கம் ஆகிய அமைச்சகங்கள் ஆலோசனை வழங்கியுள்ளன. கேட்கப்படும் தகவல் நீண்ட காலத்துக்கு உரியதாக இருந்தால், முறையான அமைப்பில் இடம் பெறாத தகவல்களாக இருந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என அந்த அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால், அதை பாதுகாக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுத்துறை நிறுவனமான பி.எச்.இ.எல்., தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் தகவலை அளிக்க போதிய கட்டமைப்பு வசதி இல்லை என சில துறைகள் தெரிவித்துள்ளன.
மத்திய நகர மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய கட்டடங்கள் கட்டுமான கார்ப்பரேஷன், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தனியார் துறையையும் கொண்டு வர வேண்டும். இல்லாவிடில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
அரசு துறைகளை சேர்ந்தவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்கள் மீது ஏகபோக உரிமை கொண்டாடுகின்றனர். குறைந்த கட்டணத்துக்கு அதிக தகவல்களை தெரிவிப்பதா என்ற எண்ணம் அவர்களிடம் காணப்படுகிறது. இது போன்ற எண்ணம் கொண்ட அதிகாரிகளின் கருத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Posted in Affairs, Afraid, Architecture, authority, Avoid, BHEL, Buildings, CBI, Central Information Commission, CIC, Construction, Consumer, Corruption, Courts, CPSC, Customer, Delays, Delhi, Disclosure, DMRC, Economy, Exempt, Express, family, Fast, Government, Govt, HC, Health, Hide, HR, immunity, Info, Information, Intelligence, Judges, Judiciary, Jury, Justice, kickbacks, Law, Metro, mines, NBCC, Order, OSA, parliament, Protect, Protection, PSU, PSUs, Rails, Railways, Recommendation, rights, RTI, SC, Scared, Secrets, Security, Trains, Transparency, Transport, Violation, Welfare | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2007
பர்மா போராட்டங்களில் பல்லாயிரக் கணக்கானோர்
பர்மாவின் இராணுவ அரசாங்கத்துக்கு எதிராக இன்றும் பல்லாயிரக் கணக்கான மக்கள், புத்த துறவிகளின் தலைமையில் ரங்கூன் நகரின் தெருக்களிலும் வீதிகளிலும் பேரணியாகச் சென்றனர்.
அரசாங்கத்து எதிரான பதாகைகளைச் சுமந்து சென்ற அவர்கள், அரச எதிர்ப்புக் கோஷங்களையும் எழுப்பினார்கள்.
தற்போது இந்தப் பேரணிகள் முடிவுக்கு வந்ததை அடுத்து பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் வீதிகளில் ரோந்தில் ஈடுபட்டுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.
மேலும் குறைந்தது 10 நகரங்களில் இப்படியான பேரணிகளைக் காணக்கூடியதாக் இருந்தது.
இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ஒலிபெருக்கிகள் மூலம் இராணுவத்தினர் கேட்டுக்கொண்டிருந்தனர்.
தாம் இப்படியான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பலத்தைப் பிரயோகிப்போம் என்று இராணுவத்தினர் எச்சரித்திருந்தனர்.
யார் இந்த பர்மா ஜெனரல்கள்?
 |
 |
ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சியும், இராணுவ ஆட்சித் தலைவர் தான் சுவேயும் |
பர்மாவின் 5 கோடி மக்களும், மிகவும் நெருக்கமாக இறுக்கப்பட்ட, 12 உயர் ஜெனரல்களைக் கொண்ட ஒரு இராணுவக் குழுவால் ஆட்சி செய்யப்படுகிறார்கள்.
அரச சமாதான மற்றும் அபிவிருத்திக் குழு என்ற பெயரில் செயற்படுகின்ற இந்தக் குழுவே பர்மாவில் முக்கிய முடிவுகள் அனைத்தையும் எடுக்கிறது.
இந்தக் குழுவின் தலைவராகச் செயற்படுபவர் மூத்த தளபதி ஜெனரல் தான்-சுவே. இவரே அரசாங்கத்தின் தலைவரும் இராணுவத்தின் நேரடி தளபதியுமாவார்.
 |
 |
பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக தான் சுவே |
பர்மா மீது தாக்கம் செலுத்தக் கூடிய முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, ஜோதிடர்களை ஆலோசிக்கின்ற ஒருவராகவும், ஒரு ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவராகவும் இவர் இருகின்ற போதிலும், ஒரு கடும் போக்காளராகவே இவர் பார்க்கப்படுகிறார்.
பொதுமக்கள் மத்தியில் மிகவும் குறைவாகவே பிரசன்னமாகும் ஒருவரான தான்-சுவே அவர்கள், மிகவும் சுகயீனமுற்று இருக்கிறார் என்று வதந்திகள் வருகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களை, போராட்டங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில், இறுதி முடிவு இவர் வசம் இருப்பது போல்தான் தென்படுகின்றன.
எப்படியிருந்த போதிலும், எவ்வாறு நிலைமையை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்பது தொடர்பில், இராணுவத் தலைமைப்பீடத்தின் மத்தியில் கருத்து முரண்பாடு காணப்படுவதாக வதந்திகள் வருகின்றன.
 |
 |
தனது இரண்டாம் நிலைத் தலைவர்களுடன் தான் சுவே |
தான்-சுவா அவர்களுக்கு, அவரது இரண்டாம் நிலைத் தலைவரான , மாவுங் ஆயி அவர்களுடன் ஒரு பதற்றமான உறவே காணப்படுகிறது.
ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சி அவர்களை, பர்மாவின் அரசியல் பொது வாழ்வில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்பதில், இவர்கள் இருவரும் உடன்படுகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களின் அளவும், ஆட்சிக்கு எதிராக அதிகரித்து வருகின்ற அச்சுறுத்தலும், இவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டை அதிகரிக்கலாம்.
இந்த ஜெனரல்களின் அனைத்து முடிவுகளும், மூடிய கதவுகளுக்கு பின்னாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. ஆகவே அவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்பது குறித்து, சமிக்ஞைகள் கிடைப்பது முடியாத காரியமாகும்.
1988இல் இடம்பெற்ற கிளர்ச்சியின் போது தமது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தாம் பயன்படுத்திய யுக்திகளையே- அதாவது ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர வன்செயலைப் பயன்படுத்தும் யுக்தியையே – இராணுவ அரசாங்கம் கைக்கொள்ளும் என்று, பர்மாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பலர் அஞ்சுகிறார்கள்.
பர்மாவின் மீது மேலும் பொருளாதாரத் தடைகளுக்கு அதிபர் புஷ் பரிந்துரை
 |
 |
அதிபர் புஷ் |
பர்மாவின் இராணுவ ஆட்சியின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்பதனை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உறுதி செய்துள்ளார்.
இந்த ஆண்டிற்கான ஐ நா வின் பொதுச் சபையின், துவக்க மாநாட்டின் போது உரையாற்றிய புஷ் அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
பர்மியத் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீதான விசா கட்டுப்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அப்போது அவர் கூறினார்.
பத்தொன்பது ஆண்டுகளாக ஒரு பயங்கர ஆட்சியை மக்கள் மீது திணித்து வருவதாக பர்மிய அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ள புஷ் அவர்கள், அந்த அரசாங்கத்தின் மீது மற்ற நாடுகளும் தமது வழியில் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறித்தியுள்ளார்.
முன்னதாக இந்த மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன், அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பர்மிய அதிகாரிகள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.
புத்தம் சரணம் கச்சாமி!
மியான்மரில் கடந்த ஒரு வாரமாக வெடித்திருக்கும் போராட்டத்தின் விளைவுகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துமா இல்லையா என்று உலகமே உற்றுநோக்கும் அளவுக்கு மக்கள் புரட்சி வலுவடைந்திருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்.
இந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பர்மா, இப்போது மியான்மர், 1948ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. தன்னைச் சுதந்திர நாடாக அறிவித்த பர்மாவால் ஒரு குடியரசாக சுமார் 14 ஆண்டுகள்தான் தொடர முடிந்தது. அன்றைய பர்மா அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய தளபதி நீ வின்னின் தலைமையில் ராணுவ ஆட்சி நிறுவப்பட்டது என்பது மட்டுமல்ல, ராணுவத்தின் அசுரப்பிடியில் இப்போதும் பர்மா, மியான்மர் என்கிற பெயர் மாற்றத்துடன் தொடர்கிறது என்பதுதான் வருத்தமான விஷயம்.
1988-ல் வெடித்த மக்கள் போராட்டம், ராணுவ ஆட்சியைக் கலகலக்க வைத்தது. போராட்டத்தின் விளைவாக நடந்த தேர்தலில் ஆங் சாங் சூகியின் கட்சி மகத்தான வெற்றி பெற்றதே தவிர, ராணுவத் தளபதிகளால் ஆட்சி அமைக்க அனுமதிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, சூகி கைது செய்யப்பட்டு இன்றுவரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
அடங்கி இருந்த மக்களின் எழுச்சி மறுபடியும் எழுந்திருக்கிறது. இந்த முறை, மக்களின் போராட்டத்துக்குத் தலைமை தாங்க முன்வந்திருப்பது அரசியல்வாதிகளோ, சுதந்திரப் போராளிகளோ அல்ல, புத்த பிக்குகள்! அதுதான், ராணுவ ஆட்சியாளர்களை நெருக்கடியில் ஆழ்த்தியிருக்கும் பிரச்னை. ராணுவத்தினரிடமிருந்து “பிச்சை’ வாங்க மாட்டோம் என்று புத்தபிக்குகள் அறிவித்திருப்பது, ஆட்சியாளர்களுக்குத் தரப்பட்டிருக்கும் சம்மட்டி அடி.
புத்தமத வழக்கப்படி, ஒவ்வொரு பௌத்தரும் புத்த பிக்குவுக்குத் தினசரி அருந்த உணவு வழங்குவது என்பது மதக்கடமைகளில் ஒன்று. இதை புத்தபிக்கு ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது, எந்தவொரு பௌத்தருக்கும் அவமானகரமான விஷயம். அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. இந்த நிலையில், தங்களது ராணுவ வீரர்களே எதிராக எழுவார்கள் என்று ஆட்சியாளர்கள் பயப்படத் தொடங்கி இருக்கிறார்கள். உங்களிடமிருந்து பிச்சை வாங்குவதாக இல்லை என்பதைத் தெரிவிக்கும்வகையில் தங்களது பிச்சைப் பாத்திரத்தைத் தலைகீழாகப் பிடித்தபடி ஊர்வலமாக புத்தபிக்குகள் சென்றிருக்கிறார்கள் என்பது தகவல்.
யாங்கூனில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான மக்கள் புத்தபிக்குகளின் தலைமையில் ஊர்வலத்தில் பங்கு பெற்றிருக்கிறார்கள். இதேபோன்ற போராட்டங்கள், மாண்டாலே உள்ளிட்ட சுமார் ஏழு முக்கிய நகரங்களில் நடைபெற்றிருக்கின்றன. சுமார் ஐந்தரைக் கோடி மக்கள்தொகையுள்ள மியான்மரில் ஏறத்தாழ நான்கு லட்சத்துக்கும் அதிகமான புத்தபிக்குகள் உள்ளனர் என்பது மட்டுமல்ல, மதம் இந்த நாட்டு மக்களின் உணர்வுடன் கலந்த விஷயமாகவும் இருக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் மக்களில் பலர் காயமடைந்திருப்பதும் சிலர் இறந்திருப்பதும் போராட்டத்தை வலுப்படுத்துமா பலவீனப்படுத்துமா என்பது தெரியவில்லை. ஆனால், புத்தபிக்குகள் போராட்டத்திற்குத் தலைமை தாங்க முன்வந்திருப்பது நிச்சயமாக ராணுவத் தலைமையைப் பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
சீனாவின் துணையோடு, பாகிஸ்தானின் ரகசிய உதவியுடன் மியான்மர் ராணுவ ஆட்சி அணுகுண்டு தயாரிப்பில் இறங்கி, எந்த நிமிடத்திலும் குண்டை வெடித்துப் பரிசோதனை நடத்தும் நிலையில் இருக்கிறது என்று தெரிகிறது. ராணுவ ஆட்சியின் கையில் அணுகுண்டு என்பது போன்ற ஆபத்து எதுவுமில்லை. இந்தியாவில் ஒருபுறம் பாகிஸ்தான், மறுபுறம் மியான்மர். அதைப் பற்றி நமது அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மியான்மரில் மக்களாட்சி மலராவிட்டால் ஆபத்து நமக்கும்தான்.
எதற்கெடுத்தாலும் ராணுவம் வர வேண்டும், ராணுவ ஆட்சிதான்மேல் என்று விவரம் புரியாமல் சொல்பவர்களுக்கு நமது பதில் – ராணுவ ஆட்சியின் லட்சணத்தை மியான்மரில் பாருங்கள்!
Posted in activism, Activists, Airforce, Army, Arrest, Aung, Aung San, Aung San Suu Kyi, Ban, Bangkok, Buddha, Buddhism, Buddhist, Burma, Bush, civilians, Corruption, crowd, Curfew, dead, defence, Defense, Democracy, Demonstration, demonstrators, Fight, Fighter, Freedom, General, Government, Govt, HR, Jail, kickbacks, Kingdom, Kyi, Leaders, Mandalay, march, marches, Military, Mob, Monarchy, monks, Myanmar, Navy, Nobel, nuns, Opposition, Oppression, Pakokku, Peace, Prison, Protests, Rangoon, Republic, rights, Rule, Ruler, San, sanctions, Sathyagraha, Satyagraha, Tianamen, Tiananmen, tiananmen square, Torture, US, USA | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 29, 2007
ஆண்களுக்கு சங்கம் தேவையா?
உ . நிர்மலா ராணி
பெண்கள் நலச்சட்டங்கள், குறிப்பாக வரதட்சிணைத் தடுப்புச் சட்டம், இ.பீ.கோ. பிரிவு 498-ஏ – மற்றும் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் ஆகியவை பெண்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் அவற்றிலிருந்து ஆண்களைக் காக்க சங்கம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் விவாதங்களும் ஊடகங்களில் இடம்பெறுகின்றன.
பெண்களுக்கெதிரான வன்முறை அதிக அளவு குடும்பம் என்ற அமைப்பில் தான் நடக்கிறது. இந்தியாவில் மட்டுமே மூன்றில் இரு பங்கு மணமான பெண்கள் குடும்ப வன்முறைக்கு உள்ளாவதாக ஐ.நா. சபை கூறுகிறது. இந்தக் குடும்ப வன்முறைக்குக் காரணம் வரதட்சிணை. பணத்தாசையையும் பொருளாசையையும் மனைவி வீட்டார் தீர்க்க இயலாதபோது, வேறு திருமணம் செய்து கொள்ள ஏதுவாகக் கணவர் வீட்டாரால் கண்டுபிடிக்கப்பட்ட யுக்தி தான் “”மனைவி எரிப்பு”. 1970 – 80களில் நாடெங்கிலும் இந்தச் சம்பவங்கள் அதிகம் நடந்தன. இவற்றில் 90 சதவிகிதம் தீ விபத்துகளாக முடிக்கப்பட்டன. 5 சதவிகிதம் வழக்குகள் தற்கொலைகளாக முடிந்தன. 5 சதவிகிதம் சம்பவங்களில் தடயங்களும் ஆதாரங்களும் கிடைக்காததால் குற்றவாளிகள் விடுதலையானார்கள்.
1961-ல் இயற்றப்பட்டு இரண்டு முறை திருத்தப்பட்ட வரதட்சிணைத் தடுப்புச் சட்டத்தால் இந்தக் குற்றங்களின் தீவிரத்தைக் குறைக்கக்கூட முடியாதபோதுதான், பெண்களைக் கொடுமைப்படுத்துவது குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டத்தில் (இ.பீ.கோ.) 498-ஏ பிரிவும் வரதட்சிணைத் சாவுகளுக்காகத் தனியாக 304-பி என்ற பிரிவும் ஏற்படுத்தப்பட்டன. குற்றத்தின் விசேஷ தன்மை கருதி அதை நிரூபிக்க ஏதுவாக இந்திய சாட்சியச் சட்டத்திலும் திருத்தங்கள் செய்யப்பட்டன.
இதன் பிறகும் கூட, இந்தியாவில் 102 நிமிடங்களுக்கு ஒரு பெண் வரதட்சிணைக்குப் பலியாவதாக அரசு புள்ளிவிவரமே கூறுகிறது. அதாவது ஒரு நாளைக்கு 14 பெண்கள் உயிர் துறக்கிறார்கள்.
உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளின் விளைவாக உருவான நுகர்பொருள் கலாசாரமும் வரதட்சிணைக் கொடுமையை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
நம்மில் பலருக்கு வரதட்சிணைக் கொடுமைதான் குற்றம் என்றும் உடல்ரீதியான துன்புறுத்தல்தான் கொடுமை என்றும் ஒரு தவறான பார்வை உள்ளது. இதற்கும் அப்பாற்பட்டு ஒரு மனைவி என்பவள் பல்வேறு காரணங்களுக்காகவும், உடல், மன, பாலியல், பொருளாதார ரீதியாகவும் கொடுமைப்படுத்தப்படுகிறாள். நோய் மற்றும் விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளைவிட குடும்ப வன்முறையால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்தான் அதிகம் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 1.40 கோடி பெண்களில், பெரும்பான்மையினருக்கு வாழ்க்கைத் துணையால் தான் அந்தக் கிருமி தொற்றியிருக்கிறது என்பதையும் குடும்ப வன்முறையின் ஒரு பகுதியாகப் பார்க்க வேண்டும்.
498-ஏ – பிரிவின் கீழ், கொடுமைப்படுத்தும் கணவருக்குத் தண்டனை உண்டு என்றாலும்கூட, புகார் கொடுக்கும் பெரும்பான்மையான பெண்கள் கணவரையோ அவரது வீட்டாரையோ சிறைக்கு அனுப்புவதை விரும்புவதில்லை. தங்களுக்கும் குழந்தைகளுக்கும் சட்டரீதியாகக் கிடைக்க வேண்டிய சீர்பொருள்கள், நகைகள், ஜீவனாம்சம் மற்றும் குடியிருக்கும் உரிமை போன்ற நிவாரணங்களைத்தான் பெற விரும்புகிறார்கள்.
சில சமயங்களில் கணவர் வீட்டால் விரட்டப்பட்ட பெண்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கும் இந்தப் பிரிவைப் பயன்படுத்துகிறார்கள். வரதட்சிணை இல்லாமல் வேறுவித கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள்கூட வரதட்சிணை என்று சொன்னால்தான் அது குற்றமாகக் கருதப்படும் என்ற தவறான சட்ட ஆலோசனைகளால் வரதட்சிணைக் குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.
பதிவு செய்யப்படும் 80 சதவிகிதத்திற்கும் மேலான வழக்குகளில், சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்டு ஏதாவது ஒரு காலகட்டத்தில் வழக்கு வாபஸ் பெறப்படுகிறது. சுமார் 12 சதவிகிதம் வழக்குகளில்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்திற்குச் செல்கிறது. அவற்றிலும்கூட, பல சமூக காரணங்களால் பெண்கள் வழக்கைத் தொடர்ந்து நடத்த முடிவதில்லை. இதனாலேயே 80 சதவிகிதம் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில்தான், 2005-ல் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் இயற்றப்பட்டது. குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுமே தவிர, அடிப்படையில் இது ஒரு சிவில் சட்டமே. கொடுமையைத் தவிர்க்க பாதுகாப்பு உத்தரவு, மனைவி குழந்தைகளை நடுத்தெருவில் நிற்க வைக்காமலிருக்க குடியுரிமை உத்தரவு, அவர்களைப் பராமரிக்காமல் இருப்பதைத் தடுக்க ஜீவனாம்ச உத்தரவு, சீர்பொருள்களைத் திரும்பப்பெற உத்தரவு போன்றவற்றை, முழுமையான விசாரணைக்குப் பிறகு, குற்றம் நிரூபிக்கப்படுமானால் நீதிபதி பிறப்பிப்பார். இந்த உத்தரவுகளை மீறும்போதுதான் ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அளிக்கப்படும்.
இந்தச் சட்டம் அமலுக்கு வந்தாலும் நடைமுறையில் பயன்பட ஆரம்பிக்கவில்லை. நிரந்தரப் பாதுகாப்பு அதிகாரிகளை அரசு நியமிக்க வேண்டும். சட்ட செயல்பாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
துஷ்பிரயோகம் என்ற குற்றச்சாட்டை முன்வைப்பவர்களோ அல்லது மனைவிகள் தான் கணவர்களைக் கொடுமைப்படுத்துவதாக கூறுபவர்களோ விஞ்ஞானபூர்வமாக ஆதாரங்களையோ புள்ளிவிவரங்களையோ முன்வைப்பது இல்லை.
பெண்கள் நலச் சட்டங்கள் துஷ்பிரயோகம் ஆவதே இல்லை என்று மாதர் அமைப்புகள் கூறுவதில்லை. எந்த ஒரு சட்டமும் துஷ்பிரயோகத்திற்கு விதிவிலக்கல்ல. இதுபோன்ற துஷ்பிரயோகத்தைத் தடுக்க வேண்டுமென்றால் சட்டத்தை முதலில் முறையாகப் பயன்படுத்த வேண்டும். சட்டத்தைச் செயல்படுத்தும் அரசு அமைப்புகள் கடமை உணர்வோடும் பாலினச் சமத்துவப் பார்வையோடும் புகாரைச் சீர்தூக்கிப் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓர் ஆண், அவன் வகிக்கும் சமூகப்பாத்திரங்களில் பாதிக்கப்படும்போது, தன் உரிமைகளைப் பெற சங்கம் தேவைப்படுகிறது. பாலியல் ரீதியாக, ஆணாகப் பிறந்த காரணத்தாலேயே அவன் வன்முறையை அனுபவிக்க வேண்டி வருமானால், அதற்கு ஆண்களுடைய தாழ்ந்த சமூக அந்தஸ்து காரணமாக இருக்குமானால் அப்போது கண்டிப்பாக சங்கம் தேவை.
ஆனால் சர்வதேச அளவில் பாலின ரீதியான வன்முறை என்றாலே அதைப் பெண்கள்தான் அனுபவிப்பதாகவும் அதைத் தொடுப்பவர்கள் பெரும்பான்மையான ஆண்கள் என்றும் அரசு புள்ளிவிவரங்களும் சரி, ஐ.நா. சபை மற்றும் இதர நிறுவன அறிக்கைகளும் சரி அறுதியிட்டுக் கூறுகின்றன.
உலக நாடுகளில் சிலவற்றில் ஆண்கள் சங்கங்கள் இருக்கின்றன. கிளௌசெஸ்டர் ஆண்கள் சங்கத்தின் குறிக்கோளே குடும்ப வன்முறையை எதிர்ப்பதுதான். “”கைகள் அடிப்பதற்கு அல்ல! அரவணைப்பதற்கு, கொடுப்பதற்கு, உதவுவதற்கு, நம்பிக்கையை கூட்டுவதற்கு” என்ற கோஷத்தை அவர்கள் முன் வைத்துள்ளார்கள். கனடாவின் ஆண்கள் சங்கம் நவம்பர் 25 முதல் டிசம்பர் 6 வரை ஒவ்வோர் ஆண்டும் பெண்களுக்கெதிரான வன்முறையை எதிர்த்துப் பிரசாரம் மேற்கொள்கிறார்கள். 1997-ல் பெண்களுக்கெதிரான வன்முறைத் தடுப்புப் பிரசாரத்தில் சர்வதேச விருது வாங்கியதே ஓர் ஆண்கள் சங்கம்தான்.
ஆகவே இந்தியாவிலும் ஆண்கள் சங்கம் தேவைதான் – குடும்ப வன்முறையிலிருந்து தங்கள் சகோதரிகளைக் காக்க! வரதட்சிணைக் கொடுமையிலிருந்து தங்கள் மகள்களை மீட்க! குடும்பம் என்ற அமைப்பை – அன்பும் பாசமும் பரஸ்பர மரியாதையும் நம்பிக்கையும் நிலவும் இடமாக மாற்றியமைக்க!
(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)
Posted in 304B, 498-A, 498A, abuse, Accidents, Alimony, Death, Divorce, Dowry, family, Female, HR, Human, Husband, in-laws, IPC, Law, Life, Maculine, male, Marriage, rights, Suicide, Violence, Wedding, Wife, Women | Leave a Comment »