Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஓகஸ்ட், 2006

State of Public & School Libraries in Tamil Nadu

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 31, 2006

தூங்கும் நூலகங்கள்

அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக புத்தகங்களின் வெளியீடு பெருகியது. புத்தகங்களைப் படிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. தொலைக்காட்சியின் தாக்கம் அதிகரித்து வரும் இன்றையச் சூழ்நிலையிலும் மக்களிடம் படிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்கு நூலகங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று நினைத்தாலும் அதை வாங்கும் நிலையில் பலருக்குப் பொருளாதார வசதி இருப்பதில்லை. எனவே மக்களின் அறிவுத் தாகத்தைத் தணிப்பதில் நூலகங்களின் பங்கு முக்கியமானது. மாணவர்கள் தங்களது பள்ளிப் பாடப்புத்தகங்களைத் தாண்டி பொது அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் நூலகங்கள் முக்கிய வாய்ப்பாகத் திகழ்கின்றன. ஒருகாலத்தில் பட்டிதொட்டிகளெங்கும் தொடங்கப்பட்ட படிப்பகங்கள் சாமானிய மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஊட்டின என்பதை மறக்க முடியாது. வீட்டுக்கு ஒரு நூலகம் வேண்டுமென்றார் அண்ணா. அது சாத்தியமில்லாத பெரும்பாலான மக்களுக்கு அறிவுச்சுடர் ஏற்றி வைக்க உதவியாக இருப்பவை பொது நூலகங்களே.

பொது நூலகங்களில் நூல்கள் போதிய பராமரிப்பின்றி இருப்பதைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். அடிப்படை வசதிகளுக்கே அல்லாடிக் கொண்டிருக்கும் பல அரசுப் பள்ளிகளிலும் மாநகராட்சிப் பள்ளிகளிலும் நூலகங்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. பெரும்பாலான பள்ளிகளில் இந்த நூல்களை மாணவர்களுக்குப் படிக்கக் கொடுப்பது கூட இல்லை. மாணவர்களும் ஆசிரியர்களும் படிப்பதற்குப் பயன்படாமல் அலமாரிகளில் புத்தகங்கள் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இந்த நிலைமை நிலவுவதை சமீபத்திய பத்திரிகைச் செய்தி படம்பிடித்துக் காட்டியது. இதுபோன்ற நிலைமை மேலும் பல பள்ளிகளில் இருக்கக்கூடும். சில நல்ல ஆசிரியர்களின் பொறுப்புணர்வால் இதற்கு விதிவிலக்கான சில பள்ளிகளும் உண்டு. மாணவர்கள் படிப்பதற்கு நூலகங்களில் போதிய புத்தகங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இருக்கின்ற புத்தகங்களை மாணவர்களுக்குப் படிப்பதற்குக் கொடுக்காமல் இருப்பது என்ன நியாயம் என்று புரியவில்லை.

இதுபோன்ற பள்ளி நூலகங்களில் மிகக் குறைவான புத்தகங்களே இருக்கலாம். அதனால் தனி நூலகர்கள் யாரும் இருப்பது கிடையாது. ஆசிரியர்களில் யாராவது ஒருவர் பொறுப்பேற்று இதனைப் பராமரிக்கும் நிலை இருக்கும். புத்தகங்கள் தொலைந்துபோகாமல் கணக்குச் சரியாக இருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி, யாருக்கும் புத்தகங்களைக் கொடுக்காமல் இருப்பதுதான் என்ற எண்ணத்தில் இதுபோல புத்தகங்களை அலமாரிக்குள்ளேயே சிறைவைக்கும் போக்கு நடைபெறுகிறது. இந்த நிலைமையைச் சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். அத்துடன் பள்ளி நூலகங்களுக்கு நூல்கள் என்ற பெயரில் தேவையற்ற, பயனற்ற புத்தகங்களை வாங்கிக் குவிப்பதை விட்டுவிட்டு மாணவர்களுக்கு உண்மையிலேயே பயன்படும் புத்தகங்களை மட்டும் வாங்கச் செய்வதும் முக்கியம். பொது நூலகங்கங்களுக்கு வாங்கப்படும் புத்தகங்கள் பற்றியும் இதேபோல கடுமையான விமர்சனங்கள் இருந்து வந்திருக்கின்றன. தற்போது பொது நூலகங்களுக்கு ஆயிரம் பிரதிகள் வீதம் புத்தகங்களை வாங்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. பொதுமக்கள் பணத்தில் வாங்கப்படும் இந்த நூல்கள் அனைத்தும் அறிவு வளர்ச்சிக்குப் பயன்படுவனவாக இருக்க வேண்டும்.

பொது நூலகத் துறைக்கும் பள்ளி நூலகங்களுக்கும் பணம் ஒதுக்கீடு செய்வதுடன் நின்று விடாமல் அவை சிறப்பாகச் செயல்படுவதற்கு அரசு தகுந்த கண்காணிப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். தற்போதைய கணினி யுகத்தில், உயர்கல்வி நிலையங்களில் உள்ள நூலகங்கள் டிஜிட்டல் நூலகங்களாகத் தரம் உயர்த்தப்படுகின்ற வேளையில், பள்ளி நூலகங்களை அவல நிலையில் வைத்திருக்கக் கூடாது.

Posted in Books, India, Lend, Library, Magazines, Member, Memberships, Op-Ed, Reader, Students, Tamil, Tamil Nadu, TN | 1 Comment »

Cuba’s Fidel Castro Administration

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 31, 2006

எளியவர் விடுதலைக்கான தாகம்

ஜோ அருண்

ஓர் ஆட்சியாளர் பாமரரைக் கண்டு கண்ணீர் விடுகிற கனிந்த இதயமும், சமூகத்தின் பொருள்வளத்தைக் கூட்டுகிற அறிவுநுட்பம் நிறைந்த கூர்மையான மூளையும் கொண்டிருக்க வேண்டும்.

கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ட்ரோ ஒரு புரட்சியாளர். காடுகளில் ஒளிந்திருந்து ஓர் ஆயுதம் தாங்கிய பேரியக்கத்தை வழி நடத்தியவர். இருந்தும் வெறுமனே புரட்சி என்று பொருளாதாரச் சிந்தனையில்லாமல் இருந்துவிடவில்லை. துப்பாக்கி ஏந்திய புரட்சியாளர்கள் கூடாரத்தில் தொழில் முனைவோருடன் பேச்சு நடத்தி கியூபா நாட்டின் தொழில் வளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருக்கிக் கொண்டார். கியூபாவில் ஒரு தன்னிறைவை உருவாக்கியுள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எது வளர்ச்சி தருமோ அதை மனத்தில் வைத்து தனது ஆயுதப்புரட்சி என்கிற இறுகுதலை ஒருவகையான இளகுதலுக்குட்படுத்தியதால் உண்டான வளர்ச்சி அது. எளியவர்களது விடுதலைக்கான தாகமும், பொருளாதார வளர்ச்சிக்கான ஈடுபாடும் சமவேகத்தில் கொண்டு இயங்கும் அரசு, ஆரோக்கியமான அரசு.

இன்று நாம் பின்பற்றுகிற மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையும் அதுதான். மக்களாட்சி என்கிற ஆட்சிமுறையின் மூலம் கிரேக்கத்திலிருந்து வருகிறது. மூன்றாம் நூற்றாண்டுகளில் கிரேக்க அரசியல் சமூகம் ஒரு பெரும் குழப்பத்தில் சிக்கி நின்றது. பணக்காரர்கள் “ஜிம்னாசியம்’ கட்டிக் கலைகள் வளர்த்தனர். ஆனால் கஞ்சிக்குத் தவித்து கடைநிலையில் ஒரு கணிசமான மக்கள் கூட்டம் வாடிக் கிடந்தது. நாளாவட்டத்தில் தொழிலாளர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். இந்த அரசியல் சிக்கலைத் தீர்த்து வைக்க சொலோன் என்ற தத்துவியலாரை நடுவராக நியமித்தனர். அவர் எந்தச் சார்புமின்றித் தீர்ப்புச் சொல்லி, ஒரு முறையான அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தார். நிலக்கிழார்களுக்கு சொத்துகளை வைத்துக்கொண்டு நிர்வகிக்க அனுமதி தந்து, ஆனால் அவர்கள் அதிகமான வரி கட்ட வேண்டும் என்ற ஒழுங்கை முன்வைத்தார். அதேநேரத்தில் அரசைத் தேர்ந்தெடுக்கிற பொறுப்பின் பெரும்பகுதியை ஏழைகளுக்குக் கொடுத்தார்.

செல்வந்தர்கள் தங்கள் சொத்தை வளர்த்துக் கொள்கிறபோதே ஏழைகளை அவர்களது வறுமை நிலையிலிருந்து உயர்த்த ஏதாவது ஒரு சமூகப்பொறுப்பை அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் சொலோன் குறிப்பாய் இருந்தார். பணக்காரர்களுக்கு இந்தச் சமூகப்பொறுப்பு இருக்கிறபோது ஒரு நாடு சமநிலை பெறும் என்பதை மனப்பூர்வமாக நம்பினார் அவர். வெறுமனே பாமரர்கள் கத்தியெடுத்து போராட்டத்தில் ஈடுபடுவதால் ஒரு நாட்டில் சமத்துவம் வந்துவிடாது. தங்களை நிர்வகித்து வழிநடத்துகிற தலைவர்களைத் தேர்ந்தெடுக்கிற அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறபோது, அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு வழி வகுப்பார்கள் என்று நம்பினார். செல்வந்தர்களின் பணம் பெருகிடும் சூழலும், பாமரர்களின் அரசு அமைக்கிற அரசியல் பலம் வலுப்பெற்று இருக்கிற நிலையும் உள்ள ஒரு நடுநிலையை உருவாக்கிக் கொள்வது மக்களாட்சியின் அடிப்படை என்று அடிக்கோடிட்டுக் காண்பித்தார். பணக்காரர்களுக்கு ஏழை மக்களின் முன்னேற்றம் பற்றிய அக்கறையும், பாமரர்களுக்கு அரசு அதிகாரத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் என்கிற பொறுப்பும் உள்ள சூழல் ஒரு வளமான அரசியலமைப்பு என்று சொலோன் சிந்தித்தார்.

இந்தத் தத்துவம் இன்று செயலாக்கம் பெற வேண்டும். ஓர் அரசு தனது இதயத்தை பாமரர்களுக்காகத் துடிக்க விட வேண்டும். அதேநேரத்தில் அறிவையும், அரசு அதிகாரத்தையும் பயன்படுத்தி தொழில்வளத்தைப் பெருக்கி பொருளாதாரத்தில் பலம் பெற வேண்டும். அந்தப் பொருளாதாரப் பலத்தைக் கொண்டு வறுமை என்கிற பலவீனத்தைக் களைய வேண்டும். மாடி வீடுகளை மட்டும் வளர விட்டுவிட்டு குடிசைகளைக் கண்டுகொள்ளாத அரசியல் நீதியற்ற அரசியல். தொழில்வளப்படுத்துதல் என்பது ஏழைகளின் முன்னேற்றத்திற்கு எந்தவிதத்திலும் தடையாக அமைந்துவிடக் கூடாது. அதேநேரத்தில் “அன்னிய முதலீடே இருக்கக் கூடாது, தொழிலதிபர்களுக்கு எதிராகப் போர் நடத்திக் கொண்டே இருப்பதுதான் மக்கள் மைய அரசு’ என்றால் அது ஒரு முதிர்ச்சியற்ற சிந்தனை. இதனால் நாம் வளர முடியாது. ஏழ்மையை மகிமைப்படுத்தி (ஞ்ப்ர்ழ்ண்ச்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் ர்ச் ல்ர்ஸ்ங்ழ்ற்ஹ்) ஏழைகளை ஏழைகளாகவே வைத்து, மேடைப்பேச்சிலும் தத்துவப் புலம்பலிலும் நாட்டைச் சிறைப்படுத்த வேண்டி வரும். தொழிலைப் பெருக்குவது, ஏழ்மையை ஒழிப்பது என்ற இரண்டு அடிப்படைச் செயல்பாட்டுத் தளங்களை ஒவ்வோர் அரசும் கொண்டிருக்க வேண்டும்.

மக்களின் துயர் கண்டு கசிந்துருகி நிறைய இலவசமாகப் பொருளையும் பதவியில் ஒதுக்கீட்டையும் கொடுத்து மக்களிடம் புகழ் பெறுவது என்பது ஒரு குறுகிய சிந்தனை. இன்றைக்கு வேண்டுமானால் அது உதவலாம். ஆனால் தொலைநோக்குப் பார்வையில் சிந்தித்து, தாற்காலிகச் செயல்பாடுகளை விடுத்து நிறைவான நீண்டகாலச் செயல்பாடுகளில் இறங்க வேண்டும். மக்களாட்சியில் ஒரு சாபக்கேடு என்னவென்றால் தேர்தலின்போது குடிமக்களைக் கண்டு கொள்கிற அரசியல், ஆட்சியில் அமர்ந்துவிட்ட பிறகு விலகிப் போய் விடுகிறது. வாக்குகள் என்கிற முட்டை மட்டும் போடும் கோழிகளாகக் குடிமக்களை ஆக்கி விடுகிற அரசியல் எஞ்சி நிற்கிறது. முறையான அரசு என்பது ஏழை எளிய மக்களை இதயத்துக்கு நெருக்கமாக வைத்துக்கொண்டு, தொழிலதிபர்களையும், பணக்காரர்களையும் முடுக்கிவிட்டு ஏழ்மை நிலை அகற்றப் பாடுபட வைக்க வேண்டும்.

இது அரசு மட்டும் செய்கிற செயலாக இருந்துவிடக் கூடாது. அரசாங்கத்தைத் தேர்தல் நேரத்தில் பாமரர்கள் உருவாக்குகிறார்கள் என்றால் அந்தத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற அரசாங்கத்தை முடுக்கிவிடுவது தொழில் நிறுவனங்களும் (இர்ழ்ல்ர்ழ்ஹற்ங்ள்) தொழில் அதிபர்களும்! அரசுக்கு எப்படி ஏழைகள் மீது அக்கறையும் கரிசனையும் இருக்க வேண்டுமோ, அதே அளவுக்கு தொழில் நிறுவனங்களுக்கும் அவற்றின் அதிபர்களுக்கும் இருக்க வேண்டும்.

ஒரு தொழில் நிறுவனம் தொடங்க அரசு அனுமதி கொடுக்கிறபோது அந்த நிறுவனம் இயங்குகிற பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு அந்த நிறுவனம் என்ன செய்யப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அரசு அனுமதியும் அங்கீகாரமும் தரக்கூடாது. அனுமதி வாங்கித் தொடங்கிய பிறகு உறுதியளித்ததுபோல் வறுமை ஒழிப்புச் செயல்பாடுகளில் ஈடுபடவில்லையென்றால் அந்த நிறுவனத்தின் அங்கீகாரத்தைத் திரும்பப் பெற்றிட வேண்டும். கணினி நிறுவனங்கள் அதிகமாக உருவாகிக் கொண்டிருக்கிற இதே நேரத்தில் இந்த நிறுவனங்களின் லாபத்தில் பத்து சதவீதத்தையாவது அருகில் உள்ள வறியவர்களின் குடும்பச்சூழல் முன்னேறுவதற்குப் பயன்படுத்த வேண்டும். அந்தக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் படிப்புக்கும் அவர்களது வேலைவாய்ப்புக்கும் உதவ வேண்டும். ஒவ்வொரு நிறுவனமும் ஒரு குடிசைப்பகுதியையோ, ஒரு கிராமத்தையோ தத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நிகர லாபத்தின் கணிசமான பகுதியை ஏழைகளை, அவர்களது வறுமை நிலையிலிருந்து மேலே உயர்த்தப் பயன்படுத்த வேண்டும். கோடிக்கோடியாக லாபம் ஈட்டும் கணினி மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ள சென்னையில் சாக்கடை நாற்றத்தில் குடிசைகள் இருப்பது அசிங்கமாகத் தெரியவில்லையா? இதேபோன்று இடஒதுக்கீட்டில் படித்த ஒரு பொறியாளர், ஒரு மருத்துவர் வேலையில் அமர்ந்த பிறகு குறைந்தபட்சம் மூன்று மாணவர்களை அவர் உயர்ந்திருக்கிற நிலைக்குக் கொண்டு வருகிற பொறுப்பு இருக்கிறது.

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி இதனால் குறையும். ஒருவர் வளர்கிறபோதே தன்னோடு பத்துப்பேரையும் சேர்த்துக் கொண்டு வளர்வது மனிதத்தின் அடிப்படைத் தர்மம். ஒரு நாடு வளர்கிறதென்றால் எத்தனை ஏழைக்குடும்பங்கள் வசதி பெற்று இருக்கிறார்கள் என்று பார்ப்பதுதான் முறையான வளர்ச்சியாகும். ஏழைகளுக்கும் பணக்காரருக்கும் இருக்கும் பொருளாதார இடைவெளியை அழித்திடும் அரசே உண்மையான அரசு.

———————————————————————————————

அமெரிக்கா கொடுங்கோல் நாடு: காஸ்ட்ரோ

ஹவானா, ஜூலை 10: அமெரிக்காவை ஒரு எதேச்சதிகார, கொடுங்கோல் நாடு என வர்ணித்துள்ளார் கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ.

அவர் எழுதி ஞாயிற்றுக்கிழமை வெளியான கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

1959-ல் இருந்து தனக்கு எதிராக நடந்த கொலை முயற்சிகளை இக் கட்டுரையில் அவர் விளக்கியுள்ளார். 1776-ல் அறிவிக்கப்பட்ட அமெரிக்காவின் சுதந்திரத்துக்கு தலை வணங்குவதாகக் கூறியிருக்கும் அவர், அதுவே அமெரிக்கா உலகின் எதேச்சதிகார நாடாக மாறுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது எனக் குறை கூறியிருக்கிறார்.

சிஐஏ ஆவணங்களை மேற்கோள்காட்டியுள்ள அவர், கியூபாவின் அரசு அதிகாரி ஒருவரைக் கொண்டு தனக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயன்ற அமெரிக்காவின் செயலை வஞ்சகம், ஒழுக்கக் கேடான செயல் என்று கண்டித்துள்ளார்.

1959-ல் கியூபாவின் சர்வாதிகாரி பாடிஸ்டாவுக்கு எதிராகப் புரட்சி செய்தபோது, காடுகளிலும், மலைகளிலும் மறைந்திருந்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார். அதிர்ஷ்டமும், அனைத்து விஷயங்களிலும் கவனமாகச் செயல்படும் குணமுமே தன்னை கொலை முயற்சிகளில் இருந்தும், ராணுவத்திடம் பிடிபடுவதில் இருந்தும் தப்பிக்க உதவின என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு எண்ணிலடங்கா கொலை முயற்சிகளில் இருந்து தப்பித்ததாக அவர் எழுதியுள்ளார்.

எனினும் இந்த விவரங்களை, கடந்த மாதம் வெளியான சிஐஏ ஆவணங்களில் அடிப்படையில் கூறுகிறாரா அல்லது பல ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்த தகவலின் அடிப்படையில் தெரிவிக்கிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Posted in Administration, America, Arun, Castro, civics, Communism, Cuba, Fidel Castro, Havana, Marxism, Politics, Poverty, pub ad, public admin, Society, Tamil, Upliftment, US, USA | Leave a Comment »

Motivation to Achieving Achievements

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 31, 2006

சாதனை-சாதனையாளர்கள்

வி.எஸ். ஸ்ரீதரன்

இப்போதெல்லாம் அடிக்கடி “சாதனை’ என்ற வார்த்தையைக் கேள்விப்படுகிறோம். தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் மேடைகளிலும் சாதனையாளர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் பேசப்படுகின்றன.

சாதனை செய்யும் உணர்வு கீழ்க்கண்ட காரணங்களால் வரலாம்:

1. தான் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு நிற்க வேண்டும் என்ற உணர்வு.

2. தன்னிடம் உள்ள கலை, அறிவு, எழுத்தாற்றல், பேச்சாற்றல் மற்றும் பிற திறமைகளை வெளி உலகுக்குக் காட்ட வேண்டும் என்ற உந்துதல்.

3. சிலசமயங்களில் பிற சாதனையாளர்களால் உந்தப்பட்டு தானும் சாதிக்க வேண்டும் என்று எண்ணுதல்.

4. வாழ்வின் லட்சியம் என்று தேடும்போது எதையாவது சாதிப்பது என்ற இலக்கை வைத்துக் கொள்வது.

5. எந்திரத்தனமாய்ப் போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாதனை என்று ஒன்றைச் செய்ய எண்ணும் மனப்போக்கு.

6. புகழின் மேல் உள்ள நாட்டம்.

7. சமூகத்துக்குத் தான் உபயோகமானவனாக இருக்க வேண்டும் என்ற ஆதங்கம்.

8. தோல்விகளையும் தடங்கல்களையும் வென்று, பிரச்சினைகளோடு போராடி வாழ்க்கையில் – தொழிலில் – பொருளாதார நிலையில் உயர்ந்து நிற்க வேண்டும் என்ற எண்ணம்.

ஆகவே, வெவ்வேறு காரணங்கள் சாதனைக்குப் பின்னணியாய் இருக்கக் கூடும். இயற்கை சிலருக்குச் சில கலைத்திறமைகளை அல்லது அனுகூலமான விஷயங்களைத் தந்திருக்கிறது. அதைக் கண்டறியும்போது, அவர்கள் அதில் தொடர்ந்து முயற்சித்து வெற்றி பெறுகிறார்கள். சிலருக்கு அதுவே தொழிலாகவும் ஆகிப்போய் விடுகிறது. அதாவது, பொருளாதார பலமாகவும் ஆகிறது.

சாதனை உணர்வு மனிதர்களை ஆக்கபூர்வமானவர்களாகவும் படைப்பாளிகளாகவும் மாற்ற உதவுகிறது என்ற அளவில் சிறந்தது. அதேசமயத்தில் அதில் முழுவதும் தன்னைக் கரைத்துக் கொள்வதிலும் சிக்கல்கள் உள்ளன. பேரும் புகழும் தாமாகவே தேடி வர வேண்டும். அவையே ஒருவரின் நோக்கமாக இருக்கக் கூடாது. அதேபோல் அகங்காரம் மிகுந்துவிடக் கூடாது.

சாதனையாளர்களைப் பற்றித் தெரிந்து கொள்பவர்கள் மேற்போக்காக அவர்களைப் பார்த்துத் தாங்களும் அப்படி ஆக வேண்டும் என்று நினைப்பது இயல்பே. ஆனால், அவர்கள் எத்தனை கசப்பான அனுபவங்கள் – உழைப்பு – தடைகள் – மேலும் பல சூழ்நிலைகளைக் கடந்து வந்திருப்பார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் – நினைத்துப் பார்க்க வேண்டும்.

சிலர் அவர்கள் உண்டு – அவர்கள் வாழ்க்கை உண்டு என்றிருப்பார்கள். அதில் சாதனை என்ன இருக்கிறது என்றுகூட நினைப்பார்கள். ஆனால் தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்து கொண்டு வருபவர்களும் சாதனையாளர்கள்தான். புகழ் என்ற பெயரில் வெளிச்சத்துக்கு வரவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அவர்களைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. சில பிரபலமான சாதனையாளர்கள் கூடப் பேசும்போது, நான் சிறந்த மனிதனாக இருக்க வேண்டும்…. சிறந்த மனுஷியாக இருக்க வேண்டும்… என்று கூறுகிறார்கள். அவர்கள் துறையில் அவர்கள் சாதனை படைத்திருந்தாலும், அதைவிடப் பெரியதாக நல்ல மனிதனாக – நல்ல மனுஷியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். காரணம், சாதனையாளனாக இருப்பது வேறு; சிறந்த மனிதனாக இருப்பது வேறு.

ஒருகாலத்தில் ஒரு துறையில் சாதனை புரிந்தவர்கள் இன்னொரு காலகட்டத்தில் அதையெல்லாம் விட்டுவிட்டு வேறு எதிலாவது கவனம் செலுத்துவார்கள். சில படைப்பாளிகள் தங்களுடைய மிகச்சிறந்த படைப்பை இனிமேல்தான் தர வேண்டும் என்பார்கள்.

சில குடும்பங்களில் பல சவாலான சூழ்நிலைகளில் பெண்களும் ஆண்களும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் முன்னேற்றத்துக்காகவும் நல்வாழ்வுக்காவும் தியாகங்களைச் செய்கிறார்கள் – உழைக்கிறார்கள் – சோதனைகளைத் தாங்கிக் கொள்கிறார்கள். சிலர் பிறருக்கு உதவும் சுபாவம் கொண்டவர்கள். சிலர் மற்றவர்களின் நன்மதிப்பைப் பெற்று மற்றவர்களுடன் நட்பையும் உறவையும் நன்றாக வைத்துக் கொள்கிறார்கள். வயதான காலத்தில் கூட சில அப்பாக்களும் தாத்தாக்களும் அம்மாக்களும் பாட்டிகளும் குடும்பப் பொறுப்புகளைக் கவனிக்கிறார்கள்; பிரச்சினைகளைத் தலையில் சுமக்கிறார்கள். அவர்கள் எல்லோருடைய பெருமையும் போற்றத்தக்கதுதான்.

ஆகவே, சாதனை என்பது தனிமனிதன் வாழ்விலும் குடும்ப வாழ்விலும்கூட நிகழக்கூடியதுதான். எனவே, வெளிச்சத்துக்கு வராதவர்கள்கூட அவரவர் வட்டத்தில் சாதனையாளர்கள்தான்.

இந்தச் சாதனைகளை எல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு வேறு ஒரு சாதனையைப் பற்றி நினைக்க வேண்டும். மனிதன் தன் மகிழ்ச்சியை நிலைநிறுத்திக் கொள்ளவும், கூடியவரை உலக விஷயங்களால் பாதிப்பு அடையாமலும் இருக்கப் பழகிக் கொண்டால் அது வேறுவிதமான சாதனை. உலக விஷயங்கள் சம்பந்தப்பட்ட சாதனைகளில் நாட்டம் குறையக் குறைய – மெய்யறிவைப் பற்றிய நாட்டம் அதிகரிக்கும். அதுதான் மிகப்பெரிய சாதனையாய் இருக்கும். மனத்தை அடக்கி அமைதியை அனுபவிப்பது மாபெரும் சாதனை என்று ஞானிகள் கூறுகிறார்கள். “நான் இனிமேல் எதையும் அடையத் தேவை இல்லை’ என்னும் அளவுக்கு மனம் அமைதி அடைவதுதான் நிரந்தரமான சாதனை.

Posted in Achievements, Dinamani, Heroism, Motivation, Philosophy, Psychology, Saathanai, Sridharan, Tamil, Think, Thoughts | Leave a Comment »

Chennaionline’s Music Service – Listen Tamil Songs

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 31, 2006

தமிழ்ப் பாடல்களுக்கு தனி இணையதளம் முதல்வர் தொடங்குகிறார்

சென்னை, ஆக. 31: தமிழ்ப் பாடல்களுக்கென்று பிரத்யேகமான இணையதளம் வியாழக்கிழமை தொடங்கப்படுகிறது. சென்னை ஆன்லைன் இணையதள இதழ் இந்த இணையதளத்தைத் தொடங்குகிறது.www.tamil-songs.co.in

என்ற இந்த இணையதளத்தை தமிழக முதல்வர் கருணாநிதி முறைப்படி தொடங்கி வைக்கிறார். மத்திய இணை அமைச்சர் ஜி.கே. வாசன், முன்னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர், திரைப்பிரமுகர்கள் எம்.சரவணன், ராம்குமார், கவிஞர் வைரமுத்து ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

Posted in Chennaionline, CM, E-Commerce, Kalainjar, Karunanidhi, MP3, Online, Tamil, Tamil Audio, Tamil Cinema, Tamil Music, Website | 1 Comment »

Deceased Tamil magazine Reporters’ Family gets Aid

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 30, 2006

மறைந்த பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி

சென்னை, ஆக. 30: மறைந்த நான்கு பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு, முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை நிதியுதவி வழங்கினார்.

பத்திரிகையாளர்களின் துணைவியர் நிதியுதவியை பெற்றுக் கொண்டனர்.

சா.விஸ்வநாதன் (ஆனந்த விகடன், தினமணி கதிர், சாவி) – இவரது மனைவி ஜானகி விஸ்வநாதன் ரூ. 50,000 உதவித் தொகையாக பெற்றுக் கொண்டார்.

தி. தேசிங்கு (வண்ணத்திரை வார இதழ், சென்னை) – இவரது மனைவி தே. ஆர்த்தி ரூ. 2 லட்சம் உதவித் தொகையைப் பெற்றுக் கொண்டார்.

எம்.இன்பராஜ் – (மாலைமுரசு, மதுரை) – இவரது மனைவி வேல்தங்கத்திடம் உதவித் தொகையாக ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது.

எம்.சுப்புக்குட்டி (தினகரன்) – இவரது மனைவி சு.சுப்புலட்சுமியிடம் ரூ.50,000 உதவித் தொகை வழங்கப்பட்டது

Posted in Chaavi, Desingu, Dinakaran, Inbaraj, Journal, Journalists, Maalai Murasu, Reporters, Saa Viswanathan, Savi, Subbukutty, Tamil, Tamil Magaizine, Vanna Thirai | Leave a Comment »

US Consulate rejects Visa to Gujarat MLAs & Artistes

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 30, 2006

அமெரிக்கா செல்ல 2 காங். எம்.எல்.ஏ.க்களுக்கு விசா மறுப்பு

ஆமதாபாத், ஆக. 30: குஜராத் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருவர் மற்றும் அந்த மாநில பா.ஜ.க. மூத்த தலைவர் ஆகியோர் அமெரிக்கா செல்ல விசா வழங்க மறுத்துள்ளது அதன் துணைத் தூதரகம்.

வரும் 1 முதல் 3-ம் தேதி வரை அமெரிக்காவில் உள்ள நியூஜெர்ஸியில், உலக குஜராத் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்க குஜராத் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பல்தேவ்ஜி, ஜெகதீஷ் தாகூர் மற்றும் குஜராத் பா.ஜ.க. மூத்த தலைவர் புருஷோத்தம் ரூபலா ஆகியோர் விசா வேண்டி அமெரிக்கா துணைத் தூதரகத்தில் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இந்நிலையில், இவர்களுக்கு விசா வழங்க அந்த தூதரகம் மறுத்துள்ளது.

மேலும், குஜராத் பல்கலைக் கழக துணைவேந்தர் பரிமல் திரிவேதி மற்றும் சில குஜராத் கலைக்குழுக்களுக்கும் விசா மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் நரேந்திர மோடி: கடந்த ஆண்டில் அமெரிக்கா செல்ல குஜராத் முதல்வர் மோடிக்கும் விசா வழங்க அமெரிக்கா மறுத்தது குறிப்பிடத்தக்கது.

Posted in America, Artistes, Baldevji, Congress, Congress(I), Consulate, Immigration, Jagadeesh Thakur, MLA, Modi, Mumbai, New Jersey, Parimal Trivedhi, Purushotham Roobala, Racist, reject, Tamil, US, USA, Visa | Leave a Comment »

Uganda Peace Making Process

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 30, 2006

உகண்டாவில் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது

உகண்டா கிளர்ச்சிக்காரர்கள்
உகண்டா கிளர்ச்சிக்காரர்கள்

20 லட்சம் மக்களின் இடப்பெயர்வுக்குக் காரணமான 20 வருட காலப் போருக்குப் பின்னர், உகண்டா அரசாங்கத்துக்கும் லோர்ட் றெசிஸ்டன்ஸ் ஆர்மி எனப்படும் கிளர்ச்சிக்குழுவுக்கும் இடையே ஒரு போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.

இறுதித் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தொடருகின்ற அதேவேளையில், தெற்கு சுடானில் உள்ள இரண்டு சந்திப்பிடங்களுக்கு கிளர்ச்சிக்காரர்கள் செல்வதற்கான பாதுகாப்புடனான வழி ஒன்றுக்கு உறுதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய தலைவரான யோவெரி முஸெவேனிக்கு விசுவாசமான படைகளால், உகண்டாவின் இரண்டு முன்னாள் அதிபர்கள் தோற்கடிக்கப்பட்ட போது, 1980இல் லோர்ட் றெஸிஸ்டன்ஸ் ஆர்மி அமைப்பினர் தமது போராட்டத்தை ஆரம்பித்தனர்.

ஒரு மதத் தலைவரின் கீழ் ஒரு குறுகிய காலம் கடந்த பின்னர், ஜோசப் கோனி பதவியேற்றார்.

லோர்ட் றெஸிஸ்டன்ஸ் ஆர்மி அமைப்பை, படுகொலைகள், அங்கவீனப்படுத்தல், பல்லாயிரக்கணக்கான சிறார்களை கடத்தி போர்படையில் சண்டையிடச் செய்தல் அல்லது பாலியல் அடமைகளாக பயன்படுத்தல் ஆகிய காரணங்களுகாக அவர் மதிப்பிழக்கச் செய்தார்.

Posted in africa, Peace, Rebels, Tamil, Uganda, War | Leave a Comment »

Kripunandha Vaariyaar – Thanjai Leo Ramalingam

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 28, 2006

பக்திப் பயிர் வளர்த்தவர்

தஞ்சை லியோ இராமலிங்கம்

விடியற்காலை எழுந்து, நாளும் பூஜை செய்வதையும் தினமும் சொற்பொழிவு நிகழ்த்துவதையும் தவமாகக் கொண்டு வாழ்ந்தவர் வாரியார் சுவாமிகள்!

முருகனின் நாமங்களில் ஒன்றாகிய கிருபானந்த வாரி என்ற பெயரை இவருக்கு இவரின் தந்தையார் சூட்டினார். கிருபை என்றால் கருணை என்று பொருள். ஆனந்தம் என்றால் இன்பம். வாரி என்பதற்கு சமுத்திரம் என்று பொருள். கருணையே உருவான, பிறரை இன்பத்தில் ஆழ்த்திய, இவர் ஓர் தமிழ்க்கடல்! தீர்க்கத் தரிசனமாக இவர் தந்தையார் பொருத்தமான பெயரைச் சூட்டியுள்ளார்!

இவருக்கு இவரின் தந்தையாரே இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்று இறுதிக்காலம் வரை பலருக்கும் வெண்பாவில் வாழ்த்து எழுதி வழங்கினார். பன்னிரெண்டு வயதிலேயே ஏராளமான பாடல்களை மனப்பாடம் செய்யும் திறன் பெற்றிருந்தார். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார்.

தமிழ் வருடங்கள் அறுபதினையும் அடிமாறாமல் உணர்ச்சியோடு ஒரே மூச்சில் அழகுறச் சொல்லும் திறன் பெற்றிருந்தார். இவரது பேச்சில் சங்கீதத்தை ரசிக்கலாம். நாடகத்தைப் பார்க்கலாம். நகைச்சுவையை அனுபவிக்கலாம். இனிய நல்ல கருத்துகளை அறியலாம். நல்லோர் பலரின் வாழ்வில் நிகழ்ந்த நல்ல சுவையான நிகழ்ச்சிகளையும் தெரிந்து கொள்ளலாம்.

படித்தவர், பாமரர், முதியவர், இளைஞர், பெண்கள், குழந்தைகள் எல்லாரும் இவர் பேச்சை விரும்புவர். பலரும் விரும்பும் வகையில் மணிக்கணக்கில் பேசி பக்திப்பயிர் வளர்த்த செந்தமிழ்க் கடல் வாரியார் சுவாமிகள்!

தாய்மாமன் மகளை மணந்து கொண்டாலும் “”கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரின்னு என் வாழ்க்கை தொண்டு செய்வதிலேயே கழிந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு முறை பழநி ஈசான சிவாச்சாரியார் என்பவர் லியோ டால்ஸ்டாய் எழுதிய “நாம் என்ன செய்யவேண்டும்?” என்ற நூலை வாரியாரிடம் தந்தாராம்! அந்த நூலைப் படித்த வாரியாருக்கு பொன், பொருள் உலகம் என்ற பற்று பறந்து போயிற்றாம். தான் அணிந்திருந்த தங்க நகைகளை காங்கேய நல்லூர் முருகனுக்குக் காணிக்கை ஆக்கினராம். இவர் எழுதிய நூல்கள் பல.

அருளாளர்களின் பாடல்களை நாள்தோறும் படிக்க வேண்டும். தினமும் தியானம் செய்ய வேண்டும் என்றார். பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமலும், வந்த இடையூறுகளை நீக்குவதுமே அறமாகும் என்று அறத்திற்கு விளக்கம் அளித்தார்.

சர்க்கரை இல்லையானால் அங்கு எறும்பு வராது. ஆசையான சர்க்கரை இருந்தால் துன்பங்களான எறும்புகள் வந்து சேரும் என்றார்.

“”மனம் அடங்கிய இடத்திலேதான் உண்மையான நலம் ஊற்றெடுத்து ஓடுகின்றது. அலைகின்ற மனத்தை ஒருபுறம் நிறுத்தி வைத்தால் சுகமுண்டாகும்” என்றார். “”தனக்கென்று யாசிப்பது இகழ். அறப்பணிக்கென்று யாசிப்பது புகழ்” என்ற இவர், தனக்கென்று யாசிக்காமல் அறப்பணிக்கு யாசித்து பல அரிய செயல்களைச் செய்தார்.

திருப்பராய்த்துறை இராமகிருஷ்ண குடிலுக்கும் தாம் பிறந்த காங்கேய நல்லூரில் தம் அன்னையின் விருப்பத்திற்கேற்ப ஏற்படுத்திய அன்ன சத்திரத்திற்கும் பெரும் நிதியைத் திரட்டினார். வடலூர் ஞானசபையின் திருப்பணியையும் செய்தார். தமது சொற்பொழிவை இவற்றிற்கெல்லாம் பயன்படுத்திக்கொண்டார். அறுபது ஆண்டுகாலம் ஆன்மிகப் பணிகளைச் செய்தார்.

நியாயம் அல்லாத வழியில் பொருளைச் சேர்க்காதே. இகழையும் புகழையும் சமமாகக் கருது. அது அமைதியை அளிக்கும். பிறரை வன்சொல்கூறி வையாதே. தாழ்மை தேவை’ என்றார்.

“”அழகை விட ஆரோக்கியம் முக்கியம். ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ விரும்புவானானால் உணவு நியதி அவசியமானது. ஓர் உணவுக்கும் மறு உணவுக்கும் போதுமான இடைவெளி இருக்க வேண்டும். பிறருடைய விருப்பத்துக்காகவும் வற்புறுத்தலுக்காகவும் இடையில் உண்ணுதல் கூடாது” என்ற இவர் காலையில் எதுவும் உண்ணாமல் இரவில் கொஞ்சம் பால்கலந்த கோதுமைக் கஞ்சியை அருந்தி வந்தார். இறுதிவரை ஆரோக்கியமாகவே வாழ்ந்தார்.

“”ஆசையின்றிப் பயன் கருதாமல் மக்களுக்குச் சேவை செய்தால் புகழ் தானே வந்து சேரும். புகழுக்கு ஆசைப்படக் கூடாது, மலரை நாடி வண்டுகள் வருவதுபோல பற்றற்ற சேவையால் புகழ் தானே வரும்”.

“”இளமை வளமையாக ஒழுக்கமாக அமையவில்லையானால் இடைப்பகுதியும் கடைப்பகுதியும் ஒழுங்காக அமைய மாட்டா”.

“”பிறர் குற்றங்களை மன்னிப்பதுதான் பெருமையும் பொறுமையுமாகும்”. இவ்வாறெல்லாம் பற்பல நற்கருத்துகளை வழங்கி, கடல்மடை திறந்தாற்போல, ஆன்மிகச் சொற்பொழிவாற்றி வந்த வாரியார் சுவாமிகளுக்கு எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, தமிழக அரசு விருது அளித்து கௌரவித்தது.

(இன்று வாரியார் சுவாமிகள் நூற்றாண்டு நிறைவுநாள் கடைப்பிடிக்கப்படுகிறது.)

Posted in 100, aanmigam, Anniversary, Biography, Biosketch, Books, Dinamani, Kirubunandha Variyar, Kripunandha Vaariyaar, Life, Quotes, Religion, Religious, Tamil, Thanjai Leo Ramalingam, Variyaar | 1 Comment »

Technology & Electronics Trach – Recycle

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 28, 2006

குப்பையோ குப்பை… மின்னணுக் குப்பை!

வைகைச் செல்வி

தகவல் தொழில் நுட்பம் மற்றும் மின்னணுச் சந்தையின் வளர்ச்சி அதீத வேகத்தில் நடைபெறுகையில், இன்றைக்குப் புதியதாக வாங்கும் ஒரு பொருள், நாளையே அரதப் பழசாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரே பொருளின் புதுப் புது மாடல்கள் புற்றீசல் போல நுகர்வோரை மொய்க்கின்றன. மின்னணுச் சந்தையில் புதிய பொருள்கள் உருவாக உருவாக, பழைய பொருள்களின் கழிவும் மின்னல் வேகத்தில் அதிகரிக்கிறது.

பல்வேறு மின்னணு மற்றும் மின் கருவிகள் அவற்றின் உடைமையாளர்களுக்குப் பயன்படாமல் போகும் பட்சத்தில் அவை மின்னணு குப்பையாக உரு மாறுகின்றன. ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்டத் துறை 2005-ல் நடத்திய ஆய்வானது, உலகில் ஒவ்வோர் ஆண்டும் 20 முதல் 50 மில்லியன் டன்கள் மின் குப்பை உருவாகிறது எனத் தெரிவிக்கிறது. மின்னணுக் கருவிகளின் ஆயுள்காலம் அவ்வளவு அதிகமில்லை. உதாரணத்திற்கு ஒரு கம்ப்யூட்டரின் ஆயுள் 5 முதல் 6 ஆண்டுகள்.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் மின்னணுக் கருவிகள் கம்ப்யூட்டர், தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வாஷிங் மெஷின்கள் ஆகும். இவற்றிலிருந்து உருவாகும் கழிவுகள் 2004-2005ல் 1,46,180 டன்கள் எனக் கணக்கிடப்பட்டு, 2012ஆம் ஆண்டில் இது 16,00,000 டன்களாக உயரும் எனக் கணிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், தில்லி, கர்நாடகம், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலிருந்து உருவாகிறது.

நகரங்கள் என்று பார்க்கையில் மும்பை, தில்லி, பெங்களூர், சென்னை, கோல்கத்தா, அகமதாபாத், ஹைதராபாத், புனே, சூரத் மற்றும் நாக்பூராகும். சமீபகாலமாக அதிகரித்து வருவது செல்பேசிக் குப்பையாகும். ஓர் ஆய்வின்படி 2005ல் மட்டும் உலகில் 130 மில்லியின் செல்பேசிகள் கழித்துப் போடப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் கழிவுகள், அதாவது பாட்டரிகள் மற்றும் சார்ஜர்களையும் சேர்த்து, ஆண்டொன்றிற்கு 65,000 டன்கள் ஆகும்.

மின் குப்பையில் அபாயகர வேதிப்பொருள்கள் இருப்பதாலேயே அவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதாயிருக்கிறது. இக் கழிவுகளைச் சரியான முறையில் கையாளாவிட்டால், சுற்றுச்சூழல் கேடுகளும் சுகாதாரக் கேடுகளும் பின்னிப் பிணைந்துவிடும். அது மட்டுமல்லாது, வீடுகளில் இருந்து உருவாகும் மின் குப்பையும் எல்லாக் குப்பையோடும் சேர்ந்து, பெரும்பாலும் சாக்கடைக்கோ அல்லது நகராட்சிக் கழிவிற்கோ செல்லுகிறது. தாமிரம் போன்ற உலோகங்களை மீட்டெடுக்க கேபிள் மற்றும் வயர்களைத் திறந்த வெளியில் மனம் போன போக்கில் எரிக்கையில் நச்சு வாயுக்களால் காற்று மண்டலம் மாசுபடும். இக்குப்பையை யாரோ உருவாக்க, யாரோ பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

இவற்றில் மிகவும் அக்கறை செலுத்தப்பட வேண்டிய கழிவுகள் என்னவெனில், கம்ப்யூட்டர் கழிவுகளே. இவற்றின் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்படுத்தப்படுகிறது. கம்ப்யூட்டர்களின் விலை குறைந்து கொண்டே வருவதாலும், கடன் வசதிகள் பெருகியுள்ளதாலும், நடுத்தரக் குடும்பத்தினரால்கூட எளிதில் கம்ப்யூட்டர் வாங்க இயலுகிறது. தகவல் தொழில் நுட்பத்தில் அசுர வேகத்தில் பயணிக்கும் நம் நாட்டில் ஓர் ஆண்டிற்கு சுமார் 40 மில்லியன் கம்ப்யூட்டர் பாகங்கள் கழிக்கப்படுகின்றன. இதே வேகத்தில் கழிக்கப்பட்டால் 2010 ஆம் ஆண்டிற்குள் இது 100 மில்லியனாக உயரும் எனக் கணிக்கப்படுகிறது.

பெங்களூர் மட்டும் ஒரு வருடத்திற்கு 8000 டன்கள் கம்ப்யூட்டர் கழிவுகளை உருவாக்குவதாகக் கூறப்படுகிறது. இங்கு தகவல் தொழில்நுட்பத் தொழிற்சாலைகளிலிருந்து மட்டும் ஒரு வருடத்தில் 30,000 கம்ப்யூட்டர்கள் பயனற்றதாகக் கழிக்கப்படுகின்றன.

ஒரு கணினியில் உள்ள நச்சுப் பொருள்களின் பட்டியலைப் பார்த்தால் அசந்து போக நேரிடும். தற்சமயம் பிரபலமாயுள்ள தட்டை ஸ்கிரீன் கம்ப்யூட்டரில் பாதரசம் உள்ளது. பொதுவாக கணினி உதிரி பாகங்களில் காரீயம் மற்றும் காட்மியம் என்ற நச்சுத்தன்மை வாய்ந்த கன உலோகங்கள் உள்ளன. மேலும் டயாக்சின் மற்றும் ஃப்யூரான் ஆகிய நச்சு வாயுக்களை வெளிப்படுத்தும் பாலி வினைல் குளோரைடு கேபிள் இன்சுலேஷன்களில் உள்ளது. ஓசோன் படலத்தை மெலிவடையச் செய்யும் ரசாயன நச்சுப்பொருள்கள் உள்ளன. ஒரு கம்ப்யூட்டரில் 20 சதவிகிதம் பிளாஸ்டிக் உள்ளது. இத்தகு நச்சுப் பொருள்கள் எல்லாம், பயனற்ற கம்ப்யூட்டர்கள் தவறான முறையில் கழிக்கப்படுகையில் வெளியாகின்றன.

தகவல் தொழில் நுட்பத்துறை எவ்வளவு வேகமாக வளர்கிறதோ, அவ்வளவு வேகமாய் மின்னணுக் குப்பை விகிதமும் அதிகரிக்கிறது. எனினும், இக் குப்பைக்கு சந்தையில் ஒரு மதிப்பு உள்ளது. ஒரு விலை உள்ளது. மின் குப்பையில் நச்சுத்தன்மை வாய்ந்த உலோகங்களோடு தங்கம் போன்ற விலையுயர்ந்த உலோகங்களும் கிடைக்கின்றன. “குப்பையே செல்வம்’ என்ற கோட்பாட்டிற்கு உதாரணமாக மின் குப்பையைச் சொல்லலாம். பல கழிவுப் பிரச்சினைகளுக்கு ஆதாரமாக விளங்கும் அதே மின் குப்பை மறுசுழற்சி செய்கையில் ஒரு லாபகரமான தொழிலாகவும் மாறலாம். ஆனால் விஞ்ஞானபூர்வமற்ற முறையில் மறுசுழற்சி செய்கையில், தொழிலாளர்களுக்கு சுகாதாரக் கேட்டை விளைவிப்பதோடு, சுற்றுச்சூழலையும் நச்சாக்குகிறது.

வளர்ந்த நாடுகள், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மின்னணுக் குப்பையை “பின் வாசல்’ வழியாகக் கொட்டுகின்றன. அதாவது ஏற்கெனவே பயன்படுத்திய கம்ப்யூட்டர்களை “டொனேஷன்’ என்ற பெயரில் மறுபயன்பாட்டிற்காகத் தொண்டு நிறுவனங்களுக்கோ அல்லது பள்ளிகளுக்கோ தானமாக இங்கு அனுப்புகின்றன. சிறிது காலத்திற்குப் பின் இவை குப்பைகளே. வளர்ச்சியடைந்த நாடுகளில் இக்கழிவை மறு சுழற்சி செய்ய அதிகச் செலவாகும். ஆனால் இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் குறைந்த செலவில் மறு சுழற்சி நடைபெறுவதால் இக்கழிவுகள் இங்கே தள்ளிவிடப்படுகின்றன. எனவே, இந்நாடுகளில் சுற்றுச்சூழலும் சுகாதாரமும் கெடுகிறது.

அபாயகரக் கழிவுகளை உலகின் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அனுப்புவதை முறைப்படுத்த உலக நாடுகளிடையே பேசல் ஒப்பந்தம் உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பேசல் செயல் திட்டத்தின் (Basel Action Network) அறிக்கையின்படி, அமெரிக்காவில் உருவாகும் மின்னணுக் குப்பையில் 50 முதல் 80 சதவிகிதம் வளரும் நாடுகளுக்கு, மறுசுழற்சி செய்வதற்காகத் தள்ளிவிடப்படுகிறது. மின் குப்பைக்கென நம் நாட்டில் தனியே சட்டம் இல்லாத நிலையில் மத்திய அரசு ஜூலை 2004-ல் தேசிய மின்னணு மற்றும் மின் கழிவிற்கான பணிக்குழுவை (National Waste of Electronic and Electrical Equipment Task Force) நியமித்துள்ளது.

நகராட்சிக் கழிவுகளையே இன்னும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்துப் போடும் மனநிலையில் இல்லாத பொது மக்கள் மின்னணுக் குப்பையைச் சரியான முறையில் கையாளுவது சிரமம். எனவே “சுற்றுச்சூழல் சீர்கேட்டினை உண்டுபண்ணுபவரே, அதற்கான இழப்பை ஈடு செய்ய வேண்டும்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இச்சாதனங்களின் உற்பத்தியாளரே இக்கழிவுகளை விஞ்ஞான முறையில் சுத்திகரித்து இறுதி நிலைக்குத் தள்ள வேண்டும் என்பதையும் பரிசீலனை செய்யலாம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் தற்சமயம் காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர மற்றும் உயர் நிலைத் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளன. சென்னையிலுள்ள தரமணி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் போன்ற இடங்களில் பல தொழில்நுட்பப் பூங்காக்கள் அமையவுள்ளன. மின்னணுக் கழிவுகளை முறையாகக் கையாள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து தமிழ்நாட்டில் உருவாகும் மின்னணுக் கழிவுகளின் அளவைக் கண்டறிய தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒரு குழுவை அமைத்துள்ளது. பொதுவாக இக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு எளிதான, செலவு குறைந்த தொழில் நுட்பமே இந்தியாவைப் போன்ற வளரும் நாடு களுக்குத் தேவை.

Posted in Analysis, Anti-dumping, cell phones, Cities, computers, Dumping, Electronics, Environment, Global Warming, India, Laws, Op-Ed, Recycle, States, Statistics, Tamil, Technology, Trash, Vaigai Chelvi, Vaigai Selvi, Waste Management | Leave a Comment »

Rajni will act as Lord Krishna after Sivaji

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 28, 2006

கிருஷ்ணர் வேடத்தில் ரஜினிகாந்த்

தெலுங்கில் என்.டி.ராமராவ் கிருஷ்ணர் வேடத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “பாண்டுரங்கா மகாத்மயம்‘.

இப்போது இதே பெயரில் மோகன்பாபுவை வைத்து ராகவேந்திர ராவ் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் வரும் கிருஷ்ணர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ரஜினிகாந்தை மோகன்பாபு கேட்டுக்கொண்டார்.

ரஜினியும் “”சிவாஜி‘ படப்பிடிப்பு முடியட்டும்; அதன் பிறகு முடிவு செய்யலாம்” என்று கூறியிருக்கிறார். சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த காலகட்டத்தில் இருந்து ரஜினியும், மோகன்பாபுவும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் “பாண்டுரங்கா மகாத்மயம்’ படத்தில் ரஜினி உறுதியாக நடிப்பார் என்று தெரிகிறது.

இதற்கு முன்பு “நாட்டாமை‘ படத்தின் தெலுங்கு ரீ மேக்கான “பெத்தராயுடு‘ படத்தில் மோகன்பாபு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவருக்கு தந்தையாக நடித்திருந்தார் ரஜினிகாந்த்.

Posted in Krishna, Mohan Babu, NTR, Paanduranga Mahathmiyam, Peddarayudu, Raghavendra Rao, Rajini, Rajniganth, Shivaji the boss, Sivaji, Tamil, Telugu, The Boss Sivaji | Leave a Comment »

Rajasthan Floods – More than 150 Dead

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 28, 2006

இராஜஸ்தான் மாநிலத்தில் வெள்ளத்தால் 150 க்கும் அதிகமானோர் பலி

பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின
பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

இந்தியாவில் பாலைவன மாநிலமான இராஜஸ்தான் மாநிலத்தின் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் குறைந்தது 130 பேர் பலியாகியுள்ளனர் என அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த மாநிலத்தின் பார்மர் மாவட்டம் தான் மிகுந்த பாதிப்படைந்திருக்கிறது. அந்தப் பகுதியில் கடற்படையினர் சடலங்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள் என அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

இந்த வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கிராமவாசிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்க ஹெலிகாப்டர்களும், வீடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்ட இராணுவப் படககுகளும் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்தப் பகுதிகளில் கழிவுநீர் வெளியேறும் வசதிகள் போதுமானதாக இல்லாததால் வெள்ள நீர் வடிவது தடுக்கப்பட்டுளளது எனவும், இதன் காரணமாக நிவாரணப்பணிகளை மேற்கொள்ள கடினமாகவுள்ளது எனவும் உள்ளூர் உதவி அமைப்புகள் எச்சரித்துள்ளன.

Posted in Aid, BBC, Floods, Help, India, Rains, Rajasthan, Tamil | Leave a Comment »

Indian States Performance – 2004

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 28, 2006

Posted in 2004, Chief Ministers, CM, Comparison, Economic Analysis, India, Ranking, States, Survey, Tamil, Tamil Nadu | Leave a Comment »

Profit law allows her but Sonia not likely to return to NAC job

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 28, 2006

பதவியில் இல்லாமலே சாதித்தவர் சோனியா!

நீரஜா சௌத்ரி
தமிழில்: சாரி.
தேசிய ஆலோசனைக் கவுன்சில் என்ற அமைப்பு 2004 ஜூன் மாதம் ஏற்படுத்தப்பட்டது. “”பொறுப்பில் இல்லாமலே அதிகாரம் செலுத்தவும் அதை நியாயப்படுத்தவும் சோனியா காந்திக்காக ஏற்படுத்தப்பட்டதுதான் இந்தக் கவுன்சில்” என்று எதிர்க்கட்சிகள் அப்போது குற்றஞ்சாட்டின.

இந்த கவுன்சிலுக்காக ஆண்டுக்கு 18 கோடி ரூபாய் செலவில் பட்ஜெட், 12 உறுப்பினர்கள், 50 அலுவலகப் பணியாளர்கள் – அதில் ஒருவர் செயலர், இணைச் செயலர் அந்தஸ்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி – எண்.10 ஜன்பாத் இல்லத்துக்கு எதிரிலேயே மிகப் பெரிய பங்களா என்று வசதிகள் செய்துதரப்பட்டபோது, சோனியாவுக்காக தனி அலுவலகமே தயார் செய்யப்பட்டது போன்ற தோற்றம்தான் ஏற்பட்டது.

அன்றிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த அமைப்பின் தலைவராக சோனியா காந்தி மீண்டும் பதவியேற்க மாட்டார் என்ற நிலையில், நிலைமையே வேறாக் காட்சி தருகிறது. இந்த அமைப்பையே கலைத்துவிட்டார்கள் என்றால் அதைவிட பரிதாபம் வேறு எதுவும் இருக்க முடியாது.

ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆதாயம் தரும் பதவிகளுக்கு விதிவிலக்கு தந்து, இரட்டைப் பதவி மசோதாவை நிறைவேற்றி, அதை குடியரசுத் தலைவரும் ஏற்று கையெழுத்திட்டுவிட்ட நிலையில், தேசிய ஆலோசனைக் கவுன்சில் கதி என்ன ஆகும் என்று தெரியவில்லை. இந்த மசோதாவே செல்லாது என்று அறிவிக்கக் கோரி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதை நீதிமன்றமும் ஏற்று அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்த வழக்கு நடந்து முடிய நிரம்ப கால அவகாசம் பிடிக்கும்.

குறைந்தபட்ச பொது திட்டத்தில் கூறப்பட்டுள்ள சமூக நல திட்டங்களை அமல் செய்வதற்கு, தேசிய ஆலோசனைக் கவுன்சில்தான் அரசுக்கு மூல விசையாகச் செயல்பட்டிருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டம், தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டம், அனைத்துப் பகுதிகளிலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு திட்டம், சத்துணவு திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, கிராமப்புற சுகாதார மேம்பாட்டுத் திட்டம் போன்றவற்றுக்கு நிதி அமைச்சகம் கூடுதல் நிதி ஒதுக்க, முக்கிய காரணமாக இருந்ததே தேசிய ஆலோசனைக் கவுன்சில்தான்.

பெண்களைக் கணவன்மார்களும், அவருடைய உறவினர்களும் அடித்து உதைத்து கொடுமை செய்வதைத் தடுக்க வேண்டும், சட்டம் இயற்ற வேண்டும் என்று 1975-லேயே வலியுறுத்தப்பட்டது. ஆனால் சட்ட வடிவம் பெற்றது இப்போதுதான். இது ஆரம்பம்தான். போகப்போக இச் சட்டம் மேலும் வலிவு பெறும். பெண்களின் பறிக்கப்பட்ட உரிமைகள் ஒவ்வொன்றாக மீட்டெடுக்கப்படும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சாதனைகள் பற்றிய பேச்சு வரும்போது தேசிய ஆலோசனைக் கவுன்சில் ஆற்றிய பங்கும் கூடவே நினைவுகூரப்படும். தகவல் அறியும் சட்டம் தொடர்பாக இடதுசாரிகள் உரிமை கொண்டாட முற்பட்டாலும், அதில் அதிகாரிகளின் குறிப்புகளை வெளியே தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அதிகார வர்க்கம் கூறியதை அரசுத்தரப்பில் ஏற்று சட்ட திருத்தமும் சேர்க்கப்பட்டது. அதை சோனியா காந்தி வன்மையாக ஏற்க மறுக்கவே, அது கிடப்பில் போடப்பட்டது.

இதற்கெல்லாம் பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம், தேசிய ஆலோசனைக் கவுன்சிலின் தலைவராக சோனியா காந்தி இருந்ததே. 14-வது மக்களவையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மைய விசையாக இருப்பது காங்கிரஸ் கட்சியே. அதன் தலைவர் என்ற வகையில் சோனியா காந்தி மட்டற்ற அதிகாரம் பெற்று விளங்குகிறார். அதிகாரமுள்ள பதவி எதிலும் இல்லாமலே, “”அதிகாரம் செலுத்தும் செல்வாக்கு” அவருக்கு இருக்கிறது.

நேரடியாக அதிகாரம் உள்ள பதவியில் அவர் இருந்திருந்தால், அதிகாரிகளின் ஆலோசனைகளையும் விளக்கங்களையும் கேட்டு, மக்களின் கோரிக்கைகளை முழுக்க உள்வாங்கும் சக்தியை இழந்தவராகக்கூட மாறியிருப்பார். பெரும்பாலான அரசியல் தலைவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இப்படித்தான் மக்களுடைய தொடர்பை இழந்து, அதிகாரிகளின் ஆலோசனையைக் கேட்டு செயலிழந்து நிற்கிறார்கள்.

சோனியா காந்தி இல்லாமல், தேசிய ஆலோசனைக் கவுன்சிலால் இனி வலுவாகச் செயல்பட முடியாது. கடந்த 3 மாதங்களாகச் செயல்பட்டதைப்போல, எவருக்கும் தெரியாதபடி வேண்டுமானால் செயல்படலாம். அல்லது சோனியாவின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவரின் தலைமையில் ஓரளவு வலுவுடன் செயல்படலாம். ராகுல் காந்தியைக் கூட தலைவராக நியமிக்கலாம். ஆனால் கவுன்சிலில் இருக்கும் சிலரே ராகுலின் தலைமையை ஏற்கக் தயக்கம் காட்டக்கூடும்.

பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் போல இதையும் பிரதமர் தலைமையில் செயல்படும் அமைப்பாக மாற்றிவிடலாம் என்ற யோசனையும் இருக்கிறது. தொழில், வர்த்தகப் பிரமுகர்கள் தங்கள் நோக்கத்துக்கு அரசு இயந்திரத்தை வளைக்க முற்படும்போது, அதை எதிர்த்து நிற்கும் சக்தியாக, மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக இது செயல்பட வேண்டும் என்றே பலரும் கருதுகின்றனர்.

தேசிய ஆலோசனைக் கவுன்சிலுக்கு கடந்த ஆண்டு, ஓராண்டு பதவிக்காலம் நீட்டிப்பு தரப்பட்டது. இந்த ஆண்டு 6 மாதங்கள்தான் தரப்பட்டுள்ளது. எனவேதான், இதைக் கலைத்துவிடுவார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இந்த அமைப்பும் அது மேற்கொண்ட பணிகளும், “”காங்கிரஸýம், சோனியா காந்தியும் ஏழை பங்காளர்கள்” என்ற மதிப்பைப் பெற்றுத் தந்துள்ளன. பொருளாதார சீர்திருத்தத்துக்கு ஆதரவாக பிரதமரும் நிதி அமைச்சரும் செயல்படும்போது, மக்களின் சார்பாக சோனியா செயல்பட்டு அரசியல்தளத்தில் சமநிலையை ஏற்படுத்தினார்.

அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசத்திலும் பஞ்சாபிலும் சட்டப் பேரவை பொதுத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. 2009-ல் மக்களவைக்கே பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும். சீர்திருத்தங்களால் ஏற்படும் அரசியல் லாபங்களைவிட, தேசிய ஆலோசனைக் கவுன்சிலின் மக்கள் நல திட்டங்களால்தான் அதிக அரசியல் லாபம் கிட்ட முடியும்.

தமிழில்: சாரி.

Posted in Cong(I), Congress, Congress (I), Elections, Gandhi, India, Indira Congress, Manmohan, Manmohan Singh, NAC, National Advisory Council, PM, Rahul, Sonia, Tamil | Leave a Comment »

Demoted Pluto is no longer part of Planteary System

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 28, 2006

புளூட்டோ இனி ஒன்பது கோள்களில் ஒன்றல்ல

புளூட்டோவும் அதன் நிலவுமான சரோனும்
புளூட்டோவிற்கு ஆதரவாக உலமெங்கும் இருந்து பல விஞ்ஞானிகள் குரல்

சூரியகுடும்பத்தில் இருக்கும் ஒன்பது கோள்களில் ஒன்றான புளூட்டோ, இனிமேல் கோள் என்று கருதப்படாது என்று, சர்வதேச வானவியல் கழகம் முடிவெடுத்துள்ளது. செக் குடியரசின் தலைநகரான பிராக்கில் கூடிய இந்த கழகத்தைச்சேர்ந்த விஞ்ஞானிகள், சூரிய குடும்பத்தின் கோள்கள் எவை என்று நிர்ணயிப்பதற்கான அடிப்படை தகுதிகள் சிலவற்றை வரையறை செய்துள்ளனர். இந்த புதிய தகுதிகளின் அடிப்படையில் பார்த்தால் புளுட்டோ இனிமேல் ஒரு கோளாக கருதப்பட முடியாது என்று, இந்த விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

1930 ஆம் ஆண்டு புளூட்டோவினை கண்டுப்பிடித்த அமெரிக்கர் கிளைட் டாம்பெவுக்

ஆனால், 1930 ஆம் ஆண்டு அமெரிக்காவினை சேர்ந்த கிளைட் டாம்பெவுக்வினால் கண்டுபிடிக்கப்பட்ட புளூட்டோவுக்கு ஆதரவாக உலகின் பல பகுதிகளிலிருந்தும் வானியல் விஞ்ஞானிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சூரிய குடும்ப கோள்களுக்காக தற்போது வரையறை செய்யப்பட்டுள்ள புதிய தகுதிகளின் அடிப்படையில் பார்த்தாலும் புளூட்டோ ஒரு கோள்தான் என்று வானியல் விஞ்ஞானிகள் பலர் எதிர்ப்பு குரல்கொடுத்து வருகின்றனர்.

இந்த சர்ச்சைக்குரிய முடிவின் பின்னணி பற்றி, சென்னையிலுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் நிர்வாக இயக்குனர் முனைவர் பி. ஐயம்பெருமாள் அவர்களின் பேட்டியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கில் கேட்கலாம்

 

Posted in 12, 9, Earth, Milky Way, Moon, Planets, Pluto, Solar System, Sun, Tamil | Leave a Comment »

EU largest Hindu Temple

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 28, 2006

ஐரோப்பாவின் மிகப் பெரிய இந்துக் கோயிலின் குடமுழுக்கு விழா

வெங்கடேசப் பெருமாள் ஆலயம்
வெங்கடேசப் பெருமாள் ஆலயம்

ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய இந்துக் கோவிலாக கருதப்படுகின்ற வெங்கடேசப் பெருமாள் கோவிலின் குடமுழுக்கு விழா இன்று ஐக்கிய இராஜ்ஜியத்தில உள்ள டிவிடேல் நகரில் நடைபெற்றது.

மேற்கு மிட்லாண்ட்ஸில் இருக்கும் ஐரோப்பாவின் மிகப்பெரிய இந்து கோயிலான இக்கோயிலுக்கு இன்று ஆயிரக்கணக்கான இந்துக்கள் வருகை தந்தனர்.

தென்னிந்தியாவின் திருப்பதி திருமலை கோயிலின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் ஐக்கிய ராஜ்ஜியத்தில் திட்டமிடப்பட்டு கட்டப்பட்ட மிகச் சில இந்து கோயில்களில் ஒன்றாகும். இது இந்திய கட்டிடக்கலையின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது.

இந்தக் கோயில் பிரித்தானியாவில் இந்துக்களுக்காக சமீபகாலமாக உருவாகி வரும் அடையாளங்களில் ஒன்று என்று இந்து கோயில்கள் கூட்டமைப்பின் தலைவரான பிமல் கிருஷ்ண தாஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

சுமார் 55 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலினை நிர்மாணிப்பதற்கான செலவில் ஒரு பங்கு பிரித்தானிய அரசாங்கத்தின் மில்லேனியம் கமிஷன் கொடுத்தது என்றாலும், பெரும்பாலான செலவினை இந்து சமூக மக்களே ஏற்று கொண்டனர்.

Posted in Balaji, Dividale, England, EU, Hindu, Tamil, Temple, Thirumala, Thirupathy, Tividale, TTD, UK, Venkateswara, West Midlands | Leave a Comment »