Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘MGR’ Category

Primary vs. General Election funds: USA & India Poll Finances: Madhavan

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

ஊழலின் ஊற்றுக்கண்!

செ. மாதவன்

சரியோ தவறோ, இந்தியப் பொருளாதாரம் அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றிச் செல்கிற நிலைமை. அதைப்போல, இந்திய அரசியல் கட்சிகளும் தேர்தல் நிதி, தேர்தல் செலவுகளிலும் அமெரிக்காவைப் பின்பற்றிச் செல்லாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சிகள் தொடங்க வேண்டும்.

அரசியல் செலவுகள் பெருகி வருகின்றன. இதன் விளைவாக அரசியல் லஞ்சம் பெருகி விடும். இன்றுள்ள நிலையே மோசமாக உள்ளது. அதிகாரம் செலுத்தும் சட்ட வலிமையுள்ள அனைத்து அரசு அமைப்புகளும், அதிகாரம் பெற்றுள்ள அரசியல்வாதிகளும், அரசு அலுவலர்களும் லஞ்சத்தில் மூழ்கி வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை.

விதிவிலக்காக உள்ள சிலர் மிகக் குறைவே. இதில் சதவீத வேறுபாடு இருக்கலாமே தவிர அதிக அளவில் லஞ்சம் பெருகி வருவது உண்மை.

அதிகாரம் செலுத்தும் வாய்ப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சொத்துக் குவிப்பதில் உள்ள சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் நிறைந்த விதிமுறைகள் பயனற்றவைகளாக உள்ளன.

1959ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுப்படி, 1967ஆம் ஆண்டு தமிழகத்தில் அமைச்சரவை பொறுப்பேற்றவுடன், அமைச்சர்கள் எந்தத் தொழிலிலும் ஈடுபடக் கூடாது என்ற சட்டவிதியை அமல்படுத்துமாறு அறிஞர் அண்ணா நடவடிக்கை எடுத்தார்.

அமைச்சர்கள் சொத்துகள் வாங்குவதை முறைப்படுத்தி பகிரங்கப்படுத்த சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து அன்றைய முதல்வர் கருணாநிதி உத்தரவிடக் கூறினார். சில செய்திகள் வெளிவந்தவுடன் நடவடிக்கை எடுத்த நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தனி நபர்களைப் பற்றி நினைப்பதைவிட இதுபோன்று அதிகாரங்களைப் பயன்படுத்திப் பணம் குவிப்பதைத் தடுக்க விதிமுறைகள் வகுக்க வேண்டும்.

ஆட்சியின் அடித்தளத்தில் உள்ள ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளைப் பரிசீலிக்கலாம். வீடு கட்ட அனுமதி கொடுப்பதில் பணம் வாங்கும் நிலை உள்ளது. ஒரு அரிசி ஆலைக்கு அனுமதி கேட்டு முறைப்படி மனுச் செய்த ஒருவர், அனுமதி பெற இயலவில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதி வழங்காவிட்டால், மனுச் செய்த விவரங்கள் சரியாக இருந்தால் அனுமதி பெற்றுவிட்டார் என்று கூறி, அரிசி ஆலை நடத்தலாம் என்று நீதிமன்றத் தீர்ப்பை நான் பெற்றுக் கொடுத்த வழக்கு நினைவில் நிற்கிறது. அனுமதி வழங்கும் விதிகளில் தெளிவான விவரங்கள் வகுக்கப்பட்டு இருந்தால் அனுமதி பெறுவதில் நடமாடும் லஞ்சங்கள் தவிர்க்கப்படலாம்.

உள்ளாட்சி மன்றங்கள் திட்டங்களுக்காகச் செலவிடப்படும் முறைகளில் ஒரு பகுதி நிதி ஊழல் செய்ய வழி வகுக்கிறது. சாலைகள், கட்டடங்கள், தொழிற்சாலைகள் அரசின் பல திட்டங்கள் மூலம் நிதி செலவழிக்கும்போது அரசியல்வாதிகள், அதிகாரிகள், பல கட்டங்களில் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பகுதியை பங்கிட்டுக் கொள்வது நடைமுறையாகிவிட்டது. ஒவ்வொரு மட்டத்திலும் சதவீத அடிப்படையில் மக்கள் வரிப்பணம் பாழடிக்கப்படுவது எந்தவிதத்தில் நியாயம்? ஆனால், அதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.

இந்த ஊழலின் தொடக்கம் தேர்தலில்தான் தொடங்குகிறது என்கிற நிலை அண்மைக்காலங்களில் தோன்றிய சரித்திரம். ஊராட்சித் தேர்தலில் லட்சக்கணக்கில் செலவழித்து விட்டேன், அதை ஈடு கட்டுங்கள் என்று ஊராட்சித் தலைவர்களாக வர விரும்புபவர்கள் கூறுகிற விசித்திரத்தைப் பார்க்கிறோம்.

பல லட்சங்கள் செலவழித்துத் தலைவர்களாக வருபவர்கள் கள்ளப் பணத்தைக் குவித்து வைத்திருக்கும் பணக்காரர்களாக இருக்க வேண்டும். அல்லது பதவி கிடைத்தவுடன் மக்கள் வரிப்பணத்தில் கொள்ளை அடித்துப் பணத்தை ஈடுகட்ட முடியும் என்று நினைப்பவர்களாக இருக்க வேண்டும். இந்த உண்மைகள்தான் ஊராட்சித் தேர்தல்களிலும் லஞ்சம் தாண்டவமாடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்த மோசமான தேர்தல் செலவுகள் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் பெருமளவில் நடைபெறத் தொடங்கிவிட்டன. இன்றைய தலைமுறையினருக்கு இது சாதாரணமான நிகழ்ச்சிகளாகத் தோன்றலாம்.

ஆனால் 46 ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல்களைச் சந்தித்தவர்கள், தேர்தல்களை நடத்திய தலைவர்கள், அன்றைய நிலைமைகளுடன் இன்றைய நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்தால், நாடும் மக்களும் சந்திக்கும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பார்த்திடும் தேர்தல் செலவுகள் நாடு எங்கே, எதை நோக்கிச் செல்கிறது என்று கேள்வி கேட்க வைக்கிறது.

1962ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. தேர்தலுக்குப் பணம் கட்டி எழுத்து மூலம் வேட்பாளராகக் கேட்கும் காலம் தோன்றவில்லை. கோவையில் ஒரு மாநாட்டில் தொண்டர்களோடு அமர்ந்து தலைவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது சட்டமன்றத் தேர்தல் வேட்பாளராக என்னுடைய பெயர் அறிவிக்கப்பட்டது. ஒரு சிலரோடு மட்டும் சென்று வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒரு வாடகைக் காரில் மட்டும் தொகுதி முழுவதும் சில தோழர்களுடன் சுற்றி வந்து மக்களைச் சந்தித்தேன். ஊரில் முக்கியமானவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்பது, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்திப்பது என்ற முறைகள் பின்பற்றப்பட்டன. ஊர்ப் பெரியவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அந்த ஊருக்குத் தேவையான பொது வசதிகளை, சாலை அமைத்தல், குடிதண்ணீர் வசதி, பள்ளிக்கூடம் கட்டுதல் போன்ற பொதுக் கோரிக்கைகளை முன்வைத்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காரைக்குடியில் எம்ஜிஆர் கலந்துகொண்ட சிறப்புக்கூட்டத்துக்கு கட்டணம் வசூலித்து, அதில் கிடைத்த 5,000 ரூபாயைத் தேர்தல் செலவுக்குப் பயன்படுத்திய காட்சி நினைவுக்கு வருகிறது. அறிஞர் அண்ணா கட்சியிலிருந்து ரூ. 200 டி.டி. அனுப்பினார். மொத்தத் தேர்தல் செலவு சில ஆயிரங்கள்தான். ஆங்காங்கே கட்சித் தொண்டர்கள்தான் எதையும் எதிர்பார்க்காமல் தேர்தல் வெற்றிக்குப் பாடுபட்டனர்.

அதே போல் 1967ஆம் ஆண்டு தேர்தலின்போதும் எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட சிறப்புக் கூட்டத்தின் மூலம் ரூ. 5,000-ம் வசூல் செய்து கொடுத்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோன்ற சிறப்புக் கூட்டங்கள் நடத்துவது அந்தக்கால அரசியல்.

1962ஆம் ஆண்டு தேர்தலைவிட சில ஆயிரங்கள் கூடுதலாகச் செலவழிந்தது. கட்சிக்காரர்களே முன்னின்று எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தொண்டாற்றி வெற்றி பெறச் செய்தனர். எதிர்த்து நின்றவர் ஒரு ஆலை அதிபர். அவர் வீட்டுக்கே சென்று வாக்குக் கேட்ட நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. பிற்காலத்தில் அவருக்கே அரசின் மூலம் பல உதவிகள் செய்த நிகழ்ச்சிகள் அன்றைய நாகரிக அரசியல் பாரம்பரியத்தை நினைவுபடுத்துகிறது.

ஆனால் இன்று நடைபெறும் தேர்தல்களில் லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவழிப்பது நடைமுறையாகிவிட்டது. தேர்தல் நிதி என்ற பெயரில் ஒவ்வோர் அரசியல் கட்சியும் கோடிக்கணக்கில் நிதி திரட்டுவது நடைபெறுகிறது. லஞ்சம் பெருகிவிட்டதற்குத் தேர்தல் செலவு பெருகிவிட்டதும் காரணமாக அமைந்துவிட்டது.

இப்போது அமெரிக்காவில் நடைபெறும் தேர்தலில் தேர்தல் நிதி திரட்டும் செய்திகள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளன.

அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் ஹில்லாரி கிளிண்டன் மற்றும் ஒபாமா ஆகிய இருவரும், அதிபர் பதவி வேட்பாளராகத் தங்கள் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட, தங்களுக்குள் மக்கள் ஆதரவை நிரூபிக்கும் தேர்தல்தான் இப்போது நடைபெறுகிறது. இதற்கு நிதி சேர்க்கிறார்கள். 2008 ஜனவரி வரை ஒபாமா சேர்த்திருக்கும் நிதி 13,82,31,595 டாலர்கள் அதாவது 552,92,63,800 ரூபாய் என்றும், ஹில்லாரி கிளிண்டன் சேர்த்திருக்கும் நிதி 13,45,36,488 டாலர்கள் அதாவது 538,14,59,520 ரூபாய் என்றும் வெளிவந்துள்ளது. இவர்களைப்போல அந்தக் கட்சியில் வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் இன்னும் பல வேட்பாளர்களும் நிதி திரட்டியுள்ளனர்.

இந்தியாவிலும் அமெரிக்கா போல் பண ஆதிக்கம் தோன்றாமல் இருக்க வேண்டும். நாடாளுமன்றச் சட்டங்கள் இல்லாமலே அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324 தேர்தல் கமிஷனுக்குக் கொடுத்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவுகள் போடலாம். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களைப்போல் நடைமுறைகளைக் கொண்டு வரலாம். ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், விளம்பரங்கள், கார்கள் பயன்படுத்தும் முறைகளை விதிகள் மூலம் வகுக்கலாம். ஊர்வலங்களைத் தடுக்கலாம். பொதுக்கூட்டங்களைக் குறைக்கலாம்.

ஒரு வேட்பாளர் கடந்தகாலச் சாதனைகளைப் பற்றி, எதிர்காலத் திட்டங்கள் பற்றி வாக்காளர்களுக்கு வேண்டுகோளாக அச்சடித்துக் கொடுக்கும் முறையை மட்டும் அனுமதிக்கலாம். வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்குகள் கேட்கலாம்.

46 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா கட்சியினரும் இன்று போலத் தேர்தல் செலவு செய்யவில்லை. அதிகாரத்தைக் காட்டித் தேர்தல் நிதிகளைக் குவித்ததும் இல்லை என்பதுதான் உண்மை. அமெரிக்காவில் பிரசார நிதி என்று சட்டப்படி வசூலிப்பது தேர்தல் கமிஷனால் கண்காணிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கறுப்புப் பணம் தேர்தலில் விளையாடுகிறது.

அரசியல் லஞ்சம் ஒழிந்தால், அதிகாரிகள் லஞ்சமும் ஒழியும். பண ஆதிக்கம் ஒழியும். தேர்தல் போர்வையில் லஞ்சங்களைக் குவிக்கும் அரசியல் அநாகரிகம் ஒழியும். ஏழைத் தொண்டர்களை ஆட்சிபீடத்தில் அமர்த்தும் காமராசர், அறிஞர் அண்ணா வளர்த்த அரசியல் மீண்டும் மலர்ந்திடும். அரசியல் தலைவர்கள் அனைவரும் புதிய சரித்திரம் படைப்பார்கள்.

நல்லாட்சி வேண்டுமானால் நல்ல அரசியல் வேண்டும். நல்ல அரசியல் வேண்டுமானால், தேர்தல் வெற்றிகள் மக்களின் செல்வாக்கின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, பணபலத்தால் அமையக்கூடாது. மக்கள் சக்திக்கு மரியாதை கிடைக்கும் சூழ்நிலையை நமது தேர்தலில் ஏற்படுத்தும் கடமை இன்றைய அரசியல் தலைவர்களுக்கு உண்டு.

(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சர்)

Posted in Actors, AIADMK, America, Anna, Annadurai, Assets, Balance, Bribery, Bribes, Cinema, Clinton, Commission, Conferences, Corruption, DMK, EC, Elections, Expenditure, Films, Finance, Finances, Funds, Huckabee, Income, India, IT, JJ, kickbacks, KK, Madhavan, McCain, MGR, Mitt, Movies, Obama, Party, Polls, Poor, President, Primary, Rich, Romney, Tax, Taxes, US, USA, Wealthy | Leave a Comment »

DK vs PMK – DMK, Kalainjar Karunanidhi x Pattali Makkal Katchi Ramadoss

Posted by Snapjudge மேல் மார்ச் 10, 2008

எச்சரிக்கையாம் கருஞ்சட்டைக்கு!

கலி. பூங்குன்றன்
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

வீரமணியை எச்சரிக்கிறேன்; வீரமணி நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று ஹிட்லர் பாணியில் அறிக்கை வெளியிட்டு இருப்பவர் ஜனநாயக நாட்டில் அரசியல் நடத்துவதாகக் கூறிக்கொண்டு இருக்கும் பா.ம.க. தலைவர் மருத்துவர் திரு. இராமதாசு. மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பாக பா.ம.க. நிலைப்பாடு குறித்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் செய்தியா ளர்கள் கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு விடையளித்தார் (7.3.2008).

இதற்கு நான் பதில் சொன்னால், மருத்துவர் இராமதாசு அவர் களுக்குக் கோபம் வரும். இவர் அரசியல்வாதியா? இவருக்குத் தகுதி உண்டா? என்றெல்லாம் கேட்பார் என்று சொல்லி, நீங்கள் கேட்பதால், பதில் சொல்லுகிறேன் என்று தம் கருத்தினை எடுத்துரைத்தார். திராவிடர் கழகத் தலைவர் பா.ம.க. நிறுவனத் தலைவரை மிகச் சரியாகக் கணித்து வைத்துள்ளார் என்பதற்கு அடையாளம் தான் மருத்துவரின் பெயரால் அறிக்கையாக வெளிவந்துள்ளது.

என்னைக் கேட்பதற்கு நீங்கள் யார்? நாங்கள் யார் தெரியுமா? என்ற உருட்டல் மிரட்டல் எல்லாம் ஒரு காலகட்டத்தில் எஜமானர்கள், ஜமீன்தார்கள், மடாதிபதிகள் மத்தியில் இருந்த பாணியாகும். இப்பொழுது காலம் எவ்வளவோ தலைகீழ் மாற்றம் அடைந்து இருக்கிறது என்பதை மட்டும் மருத்துவருக்குச் சொல்லி வைக்கிறோம்.

தோழமையாக இருக்கிற இரண்டு அரசியல் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை இது. ஆனால், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி இதில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, பா.ம.க.வை கடுமையாக விமர்சித்திருக்கிறார். கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறிய வேண்டாம் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என்று பழைய காலத்து மேட்டுக்குடி நிலச்சுவான்தார்போல அறிக்கை விட்டுள்ளார்!

தனிப்பட்ட பிரச்சினையா?
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுக்கும், பா.ம.க. நிறுவனர் தலைவர் இராமதாசு அவர்களுக்கும் இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சினை என்று மாநிலங்களவைத் தேர்தலைப்பற்றி அவர் கருதுவாரே யானால், அதுபற்றியெல்லாம் எதற்காக தாம்-தூம் என்று அறிக்கைத் தர்பார் நடத்தவேண்டும் – பா.ம.க.வை தி.மு.க. தொடர்ந்து வஞ்சிக் கிறது என்று ஏன் வார்த்தைகளைக் கொட்டவேண்டும்? காதும் காதும் வைத்தாற்போல பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவேண்டியது தானே!

பிரச்சினை வீதிக்கு வந்த பிறகு, மாறி மாறி பொது அறிக்கைகளாக வெளியிடும்போது, செய்தியாளர்கள் அதுகுறித்து கருத்துக் கேட்கும்போது, பொது வாழ்க்கையில் இருக்கக் கூடிய தலைவர்கள் அது பற்றி கருத்துக் கூறுவதில் என்ன தவறு? அதுவும் செய்தியாளர் வினா தொடுக்கும்போது தம் கருத்தைப் பதிவு செய்வது பஞ்சமா பாதகமா? விமர்சனத்தைத் தாங்கும் பக்குவம் வேண்டாமா?

ஏடுகளும், இதழ்களும் இதுகுறித்து விமர்சித்து எழுதுகின்றனவே – எங்கள் இரு கட்சிகளுக்குள் அல்லது எங்கள் இருவருக்குள் நடக்கும் பிரச்சினை குறித்து நீங்கள் எப்படி எழுதலாம் என்று கூட கேட்பார் போலிருக்கிறதே! திராவிடர் கழகத் தலைவர் கேள்விக்குப் பதில் சொல்லும்பொழுது மட்டும் விட்டேனா பார் என்று எகிறிக் குதிப்பானேன்? திராவிடர் கழகத் தலைவர் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து பா.ம.க.வை கடுமையாக விமர்சித்திருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் செய்தியாளரின் கேள்விக்கு என்ன பதில் சொன்னார்? அதில் தேவையில்லாதது எது என்று கொஞ்சம் கருத்துச் செலுத்தி விவாதிக்க முன்வரவேண்டாமா? தி.மு.க. தலைவர் பா.ம.க.வை வஞ்சிக்கிறார் என்று பா.ம.க. தலைவர் கூறியிருக்கிற காரணத்தால், உள்ளாட்சித் தேர்தலில்கூட பா.ம.க.வுக்கு எவ்வளவு இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதைப் புள்ளி விவரங்களுடன் எடுத்துக் கூறினார். திண்டிவனம் நகராட்சியில் பா.ம.க.வுக்கு பெரும்பான்மையில்லாத நிலையில்கூட, தி.மு.க. ஆதரவு தந்து, பா.ம.க.வை வெற்றி பெற வைத்ததே என்று உண்மையை எடுத்துக் கூறினார்.

உண்மையை இப்படி எல்லாம் பட்டாங்கமாகக் கூறலாமா? உண்மை என்பது எங்களைப் பொறுத்து கடுமையான விமர்சனம் – எங்கள் மூக்கின்மேல் கோபத்தை ஏற்படுத்தக்கூடியது என்று ஒருக்கால் பா.ம.க. தலைவர் கருதுகிறார் என்பது இதன்மூலம் தெரியவருகிறது. தி.மு.க.வுடன் கூட்டணி என்பது தேர்தலோடு முடிந்துவிட்டது என்று ஒரு நேரம் கூறுகிறார்; அதன்பின் தி.மு.க.வோடு கூட்டணி தொடரும் – இது நூற்றுக்கு இரு நூறு சதவிகிதம் உண்மை என்கிறார்.

அதற்கு அடுத்த நாள் 15 ஆம் நாள்வரைதான் தி.மு.க.வுக்கு கெடு என்கிறார் – ஒரு அரசியல் கட்சித் தலைவர் இப்படி முன்னுக்குப்பின் முரணாகப் பேசிக் கொண்டு இருக்கிறாரே – ஒரே குழப்பமாக உள்ளதே என்று தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் சொன்னதில் என்ன தவறு? இல்லாத ஒன்றை எந்த இடத்திலாவது கூறியிருக்கிறாரா என்பதை நடுநிலையோடு மக்கள் சிந்திக்கத்தான் செய்வார்கள்.

எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா கூறி வருகின்ற – தி.மு.க. மைனாரிட்டி ஆட்சி என்பதை – பா.ம.க. தலைவரும் கூறுகிறாரே – இது சரியா? என்ற வினாவையும் தொடுத்தார். இதற்கெல்லாம் பதில் கூற, சரக்கு இல்லாததால், உண்மை தம் பக்கம் இல்லாத வெறுமையால், ஆத்திரம் புரையேறி, பந்தை அடிக்க முடியாதபோது, எதிரியின் காலை அடிக்கும் தப்பான விளையாட்டை (குடிரட ழுயஅந) ஆடுகிறார் பரிதாபத்திற்குரிய மருத்துவர்.
நாங்கள் அரசியல் இயக்கமல்ல; சமுதாய இயக்கம்தான் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு செயல்படுகிறவர்,அதற்கான எல்லையை மீறுவது தேவையற்றது மட்டுமல்ல, வரம்பை மீறுவதும் ஆகும்.

பெரியார் இயக்கக் கொள்கை வரம்பிற்கு அப்பாற்பட்டு யாரையோ திருப்திபடுத்து வதற்காக அண்மைக்காலமாகக் கடுமையாக விமர்சித்துக் கொண்டு வருகிறார். இப்படிச் செய்வது தந்தை பெரியார் கண்ட இயக்கத்திற்கும், அவரது இலட்சியங்களுக்கும் செய்யும் துரோகம் – இப்படியும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெரியார் இயக்கக் கொள்கையின் வரம்பு என்ன, எல்லையென்ன என்பதைச் சற்றுப் புரியும்படி விளக்கியிருக்கலாமே!

எந்தப் பிரச்சினைமீதும் கருத்துக் கூறவோ, விமர்சனம் வைக்கவோ எந்த எல்லையும், குறுக்குச் சுவரும் பகுத்தறிவுக்குக் கிடையாது. தாராள சிந்தனை என்பதுதான் பகுத்தறிவின் பாலபாடம். நாங்கள் அக்னிக் குண்டத்தில் பிறந்தோம் என்று பேசுவது எல்லாம் பகுத்தறிவு ஆகாது.

யாரையும் திருப்திப் படுத்தவேண்டிய அவசியம் திராவிடர் கழகத் திற்குக் கிடையாது. நாங்கள் என்ன சீட்டுக்காகக் கச்சேரியா நடத்திக் கொண்டு இருக்கிறோம்?. ஆட்சியை ஆதரித்துக் கொண்டு இருக்கும் போதே, தேவைப்படும்பொழுது எதிர்ப்புக் குரல் கொடுக்கவும் தயங் காதது திராவிடர் கழகம் என்பது, அதன் வரலாற்றை உணர்ந்தவர்கள் அறிவார்கள்.

திராவிடர் கழகம் அரசியல் பேசக்கூடாதா?
திராவிடர் கழகம் என்றால், அரசியல் பற்றிப் பேசக்கூடாது – விமர்சனம் செய்யக்கூடாது என்று மருத்துவர் இராமதாசு அவர்கள், அவராகவே ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு சகட்டு மேனிக்குப் பேசுகிறார் – அவருக்காகவும் சிலர் எழுதுகிறார்கள்.

திராவிடர் கழகம் அரசியலில் ஈடுபடுவதில்லை என்பது – தேர்தலில் நிற்பதில்லை என்கிற அளவில்தான், அதற்காக அரசியல் போக்கு எப்படி யிருந்தாலும், அரசியல் பெயரால் எது நடந்தாலும், இராமன் ஆண்டா லென்ன – இராவணன் ஆண்டால் என்ன என்று அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமலும், பொறுப்பில்லாமலும் கண்களையும், காதுகளையும், வாயையும் – காந்தியார் சொன்ன குரங்குகள்போல இறுகப் பொத்திக் கொண்டிருக்கவேண்டும் என்று பொருளல்ல.

தந்தை பெரியார்பற்றி புரிந்துகொண்டது பொட்டுக்கடலை அளவு மட்டும்தானா என்று நினைத்து நகைக்க வேண்டியுள்ளது.
நீதிக்கட்சியை தந்தை பெரியார் ஆதரித்ததும், காங்கிரசை எதிர்த் ததும், இந்தியா சுதந்திரம் அடைந்த நிலையில் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே (1952) காங்கிரசுக்கு எதிராக தந்தை பெரியார் செயல்பட்டதும், அய்க்கிய முன்னணியை வெற்றி பெறச் செய்ததும், 1954 இல் ஆச்சாரியாரை ஆட்சிப் பீடத்திலிருந்து விரட்டிப் பச்சைத் தமிழர் காமராசரை ஆட்சியில் அமர்த்தியதும், 1967 வரை கல்வி வள்ளல் காமராசரின் நல்லாட்சியை நிலைக்கச் செய்ததும் எல்லாம் அரசியலில் ஈடுபடாது அந்தரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த நிலையிலா?

ஒவ்வொரு தேர்தலின்போதும் யாரை ஆதரிப்பது என்ற முடிவை திரா விடர் கழகம் எடுத்ததில்லையா – பிரச்சாரத்தில் ஈடுபட்டது இல்லையா? வெகுதூரம் போவானேன்? பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து திரா விடர் கழகத் தலைவர் பேசியதில்லையா? அப்பொழுது எல்லாம் திரா விடர் கழகம் சமுதாயம் இயக்கம் – அதனைத் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற ஞானோதயம் ஏற்படவில் லையோ!

பல தேர்தல்கள் சமுதாயப் பிரச்சினையை மையப்படுத்திதானே நடந்துகொண்டு இருக்கின்றன.

சமூகநீதியை முன்னிறுத்தியும், மதவாதத்தைப் புறந்தள்ளி மதச் சார்பற்ற தன்மையை மய்யப்படுத்தியும், தேர்தல் களம் சூடு பறக்கவில்லையா? அப்பொழுது தேர்தலில் ஈடுபடும் அரசியல் கட்சிகளையெல்லாம் தாண்டி தந்தை பெரியாரின் கருத்துகள் முன்னிறுத்தப்படுவதில்லையா? திராவிடர் கழகம் தேர்தல் களத்தில் தன் பங்கை முழு வீச்சில் நடத்துவதில்லையா?

தந்தை பெரியார் அவர்கள் போட்டுத் தந்த இந்தப் பாதையில் திரா விடர் கழகம் நடைபோட்டால், அது பெரியாருக்குச் செய்யும் துரோகமாம்! ஏ, அப்பா எப்படிப்பட்ட வார்த்தைகளையெல்லாம் உதிர்க்கிறார்.

பார்ப்பனர் சோவிடம் பெரியாரைக் காட்டிக் கொடுத்தது யார்?
பெரியார் கொள்கைகள் மீது அப்படிப்பட்ட வெறி மருத்துவருக்கு – அப்படித்தானே? பார்ப்பனத் தன்மையின் முழு வடிவமாகத் தன்னை வரித்துக் கொண்டிருக்கும் பச்சைப் பார்ப்பனரான திருவாளர் சோ ராமசாமியிடம் தந்தை பெரியார் அவர்களைக் காட்டிக் கொடுத்துப் பேட்டி கொடுத்தவர்தான் மருத்துவர் இராமதாசு என்பது எங்களுக்குத் தெரியாதா?

கேள்வி: பெரியார் ஜாதியை ஒழிக்கப் போராடினார் என்றெல்லாம் சொல்கிறீர்கள். அவர் ஆதரித்த நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்து என்ன செய்தது? மருத்துவர் ராமதாசின் பதில் என்ன தெரியுமா?

எல்லாருமே சேர்ந்துதான் எங்களை ஏமாற்றினார்கள். பிராமணர், பிராமணரல்லாதார் என்ற கோஷத்தைக் கொண்டு வந்தார்கள். பிராமணரல்லாதார் என்று சொல்லும்பொழுது, நாங்கள் எல்லாம் முன்னுக்கு வருவதுபோல் இருக்கிறது என்று நினைத்தோம்; ஆனால், ஏமாந்தோம்.
(துக்ளக், 15.4.1988)

இப்படி பார்ப்பன ஏட்டுக்குப் பதில் சொல்லி சபாஷ் பட்டம் பெற்றவர்தான் தந்தை பெரியாரைப்பற்றிப் பேசுகிறார். அவர் கொள்கையைப்பற்றிப் பேசுகிறார். அவர் கொள்கைக்குத் துரோகம் செய்யலாமா என்று ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்!
பார்ப்பன – பார்ப்பனர் அல்லாதார் என்று தந்தை பெரியார் பேசியது வெறும் கோஷமாம் – அப்படி சொல்லி பெரியார் ஏமாற்றினாராம்! பா.ஜ.க.,வில் இருக்கவேண்டிய ஒரு தலைவர் பாட்டாளி மக்களைப்பற்றிப் பேசுகிறாரே, என் செய்வது!

இன்றைக்குத் தமிழ்நாட்டுல எந்தக் கட்சி கொள்கைக்காக நடக்குது? எங்கள் கட்சி உள்பட. எல்லாத்துக்குமே அரசியல் ஆதாயம் ஒண்ணுதான் அடிப்படை என்று பச்சையாக ஆனந்தவிகடனுக்குப் (13.9.1998)

பேட்டி கொடுத்த ஒரு தலைவர் கொள்கையைப்பற்றியெல்லாம் பேசலாமா? பெரியாருக்குத் திராவிடர் கழகம் துரோகம் இழைக்கிறது என்றெல்லாம் துடுக்குத்தனமாக எழுதலாமா?

வி.பி. சிங் அழுகிய பழமாம்!
மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒரு பகுதியான பிற்படுத்தப்பட்டோ ருக்கு வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் ஆணையைப் பிறப்பித்த சமூகநீதிக்காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தார். அவருக்கு சிறந்த முறையில் வரவேற்பு அளிப்பது குறித்து திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட அமைப்புகளின் கலந்துரையாடல் கூட்டத்தை திராவிடர் கழகம் சென்னை – பெரியார் திடலில் கூட்டியது (29.11.1990) மிகுந்த மகிழ்ச்சியோடு அதனை அனைவரும் ஒருமனதாக வரவேற்றனர்.

ஆனால், அப்பொழுது பா.ம.க. தலைவர் மருத்துவர் ச. ராமதாசு என்ன அறிக்கை கொடுத்தார்?

இன்றைய சூழ்நிலையில் எதிர்வரும் 7, 8, 9 நாள்களில் கருணா நிதியுடன் வி.பி. சிங் பங்கேற்கும் தமிழ்நாட்டு நிகழ்ச்சிகளின்போது, பாட்டாளி மக்கள் கட்சி, மற்றும் வன்னியர் சங்கத்தினர் விலகியே நிற்கவேண்டும்; வேடிக்கை பார்க்கக்கூட வீதிக்கு வரக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் (1.2.1990) என்று அறிக்கை விட்டாரா இல்லையா?

இதில் கடைந்தெடுத்த ஒரு பரிதாபம் என்னவென்றால், பெரியார் திடலில் திராவிடர் கழகத்தால் கூட்டப்பட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் வன்னியர் சங்க மாநிலத் தலைவரான பெரியவர் திரு. சா. சுப்பிரமணியம் அய்.ஏ.எஸ். (ஓய்வு) அவர்கள் கலந்துகொண்டு, வி.பி. சிங் அவர்களுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கவேண்டும் என்று கருத்துக் கூறினார் என்பதுதான்.

அதைக் கூடக் கருத்தில் கொள்ளாமல், எடுத்தேன் – கவிழ்த்தேன் என்ற போக்கில் – சமூகநீதியாவது – வெங்காயமாவது என்ற தோர ணையில் அறிக்கை விட்டாரே! அதற்குப்பின் வி.பி. சிங்கை அழைத்து வாழ்வுரிமை மாநாட்டையே நடத்தினாரே!

மேல்ஜாதி (ராஜபுத்திரர்) வெறி பிடித்த வி.பி. சிங் அழுகிக் கொண் டிருக்கும் இந்திய அரசியல் பழத்தில் அழுகாததுபோல் தோற்றமளிக்கும் பகுதிதான். செல்லாத நாணயத்தின் ராஜீவ் ஒரு பக்கம் என்றால், வி.பி. சிங் மறுபக்கம் ஆவார் இவையெல்லாம் இவர் ஏட்டின் (தினப்புரட்சி) வீர தீர தலையங்கப் பகுதிகள்.

ஆள்காட்டி வேலை
ஈழத் தமிழர்களுக்காக, விடுதலைப் புலிகளுக்காக தாம் மட்டும் அவதாரம் எடுத்ததுபோல ஆவேசமாகப் பேசுகிறார். (ஆனால், தமிழ் நாடு சட்டப்பேரவையில் இந்தப் பிரச்சினை வந்தபோது, செல்வி ஜெய லலிதா கடுமையாக விமர்சித்தபோது, 18 பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் களும் வாய்மூடி மவுனியாக இருந்தனர் என்பதையும் கவனத்தில் கொள்க!).

பிரபாகரன் இறந்துவிட்டதாக தினமலர் என்ற கருமாதிப் பத்திரிகை முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டபோது, அவர்களோடு சேர்ந்துகொண்டு தித்திப்பு வழங்கியதுதான் இவரின் தினப்புரட்சி! (13.5.1989) அந்தத் தலையங்கத்தின் தலைப்பு என்ன தெரியுமா? புலிகளின் சரணாகதி என்பதுதான்.

அதைவிட ஒரு துரோகம்! (துரோகத்தைப்பற்றி அதிகம் பேசும் தலைவர் அல்லவா!) விடுதலைப்புலிகளின் தலைவர்கள் எங்கே பதுங்கியிருக்கிறார்கள் என்று ஆள்காட்டி வேலை செய்ததும் இவர்கள் தினப்புரட்சி ஏடுதான்!

தமிழகத்தில் மத்திய போலீஸ் மற்றும் புலனாய்வுத் துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு இருப்பதால், விடுதலைப்புலி தலைவர்களான கிட்டு, யோகி ஆகியோர் கருணாநிதியின் பாராளுமன்றச் செயலாளர் எல். கணேசன் வீட்டில் தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. (தினப்புரட்சி, 29.6.1989).

இது துரோகமா? அல்லது தூக்கிப் பிடித்துப் பாராட்டப்பட வேண்டிய தூய்மையான காரியமா?

10 ஆண்டுகள் எம்.ஜி.ஆரை எதிர்க்கவில்லையா?
இத்தகையவர்கள்தான் இனமானம், தன்மானம், சமூகநீதி, இலட்சியம் என்றெல்லாம் வீர வசனம் பேசுகிறார்கள்.
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மாறி மாறி கட்சிகளை ஆதரித்துள்ளார். ஆளும் கட்சிகளை ஆதரிப்பதுதான் இவர் வேலை என்று பொத்தாம் பொதுவில் புழுதிவாரித் தூற்றியுள்ளார்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையிலான ஆட்சியை – 10 ஆண்டுகள் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டு இருந்தது திராவிடர் கழகம் என்ற வரலாறுகூட இவருக்குத் தெரியவில்லையே! ஆனால், இவருடைய நிலை என்ன? இப்பொழுது நினைத்தால்கூட வயிறு குலுங்க சிரிப்பு முட்டிக்கொண்டு மோதுகிறது!

இதோ ஒரு எம்டன் குண்டு!
1996 சென்னை மாநகராட்சி தேர்தல்; தி.மு.க. சார்பில் மு.க. ஸ்டாலின், ஜனதா கட்சி சார்பில் திருமதி சந்திரலேகா (அ.இ.அ.தி.மு.க. ஆதரவு), ம.தி.மு.க. சார்பில் எஸ்.எஸ். சந்திரன் ஆகியோர் போட்டி யிட்டனர். பா.ம.க. நிறுவனர் யாருக்கு ஆதரவு தெரிவித்தார் தெரியுமா? சுப்பிரமணியசாமியின் கட்சி வேட்பாளரான சந்திரலேகாவுக்குத்தான் பச்சைக் கொடி காட்டினார்.

போயும் போயும் சுப்பிரமணியசாமியின் வேட்பாளரை ஆதரிக்க லாமா? என்று கேட்டதற்கு, மருத்துவரின் அமுதவாக்கு, அரசியலில் நிரந்தர நண்பனோ, எதிரியோ இல்லை என்றாரே பார்க்கலாம்.

சரி… அதிலேயாவது உறுதியாக இருந்தாரா? அடுத்த சில நாள்களிலேயே எங்கள் ஆதரவு தி.மு.க.வின் மு.க. ஸ்டாலினுக்கே என்று தோசையைத் திருப்பிப் போட்டார். என்ன ஆனார் டாக்டர்…! என்று எல்லோரும் கேலி செய்யும் நிலை ஏற்பட்டது. என்ன சமாதானம் சொன்னார் தெரியுமா? நாங்கள் ஆதரித்த ஆதரவை ஏற்றுக் கொண்டதாகவோ அல்லது நிராகரித்ததாகவோ சுப்பிரமணியசாமி ஏதும் தெரிவிக்கவில்லை என்று எம்டன் குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டார்.

இதுபோன்ற நகைச்சுவைக் காட்சிகள் மருத்துவர் விஷயத்தில் ஏராளம் உண்டு.

1977 வரையில் தி.மு.க.வை ஆதரித்தார், கலைஞரைப் புகழ்ந்தார். எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும், அவருக்குத் துதிபாடத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். 1979 ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வியினால், இட ஒதுக்கீட்டிற்குக் கொண்டு வந்த வருமான உச்சவரம்பை நீக்கினார் எம்.ஜி.ஆர். பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டின் அளவை 31 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தினார். அவரது இந்த நடவடிக்கைகள் மக்களின் எழுச்சிக்கும், எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி என்பதை வீரமணி மறுதலித்தார். எம்.ஜி.ஆருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தினார் என்று குற்றப் பத்திரிகை படித்துள்ளார்.

அண்டப் புளுகு – ஆகாசப் புளுகு என்பார்களே – அது இதுதான் போலும். 1977 வரை தி.மு.க.வை ஆதரித்ததாகவும், அதன் பின்பு எம்.ஜி.ஆரை வீரமணி ஆதரித்ததுபோலவும் அறிக்கை வெளியிடுகிறாரே – எம்.ஜி.ஆர். அவர்களை எந்த ஒரு தேர்தலிலும் திராவிடர் கழகம் ஆதரித்ததில்லை என்பது விஷயம் தெரிந்தவர்கள் அறிவார்கள்.

ஆசிரியர் வீரமணிபற்றி எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். அவர்களின் வருமான வரம்பு ஆணையைப்பற்றிப் பேசுகிறார். அந்தக் காலகட்டத்தில் மருத்துவர் ராமதாசு எங்கேயிருந்தார் என்றே அடையாளம் கிடையாது. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு என்றெல்லாம் பேசுகிறாரே – அந்தப் பட்டியலில் இவர் உண்டா என்பதைத் தெரிந்துகொள்ள நாடு விரும்புகிறது.

வருமான வரம்பு ஆணை ரத்துக்கு முக்கியமாக யார் காரணம் என்பதை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களே செய்தியாளர்களிடம் கூறினாரே! திராவிடர் கழகமும், வீரமணியும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஆட்சி அ.இ.அ.தி.மு.க. ஆட்சி என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்தனர். மக்கள் அதனை நம்பினர் என்று கூறவில்லையா?

31 சதவிகிதத்தை 50 சதவிகிதமாக ஒரு ஆட்சி உயர்த்தியது என்றால், அதற்காக நன்றி தெரிவிப்பது, பாராட்டுவது பஞ்சமா பாதகமா? நன்றி என்பதற்கு ஒருக்கால் அவர் அகராதியில் வேறு பொருள் இருக்கிறதோ! அதே எம்.ஜி.ஆரை வன்னியர்களை வாழ வைத்த தெய்வம் என்றெல்லாம் இவர்கள் புகழவில்லையா? (வன்னியர் சங்கத்தின் கனல் 1987 ஜனவரி இதழின் தலையங்கம்).

பா.ம.க. நிறுவனரின் மனப்போக்கு எத்தகையது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு (அவர் அறிக்கையில் உள்ளதுதான்!).
69 விழுக்காடு இடஒதுக்கீடு வழக்குத் தொடர்பாக நீதிபதிகள் கொடும்பாவிகளை எரிக்கப் போவதாக அறிவித்தாராம் – வீரமணி யையும், மற்றவர்களையும் கலைஞர் கைது செய்தாராம்.

விடுதலை ஆக தூதுவிட்டது யார்?
எப்படியிருக்கிறது கதை? எரிக்கப் போவதாக வீரமணி அறிவித்தாராம். இதன்மூலம் எரிக்கவில்லை என்று சொல்லவேண்டும் என்று ஆசைப்படுகிறார்…. ஆமாம், இவர் உண்மையைத் தவிர வேறு எதையும் பேசமாட்டார்… நம்புங்கள். நீதிபதிகளின் கொடும்பாவிகளை எரித்து, அதன் சாம்பலும் சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு அனுப்பப்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதன் காரணமாக சிறை செல்ல நேரிட்டது – சிறையிலிருந்து வெளிவர முதலமைச்சருக்குச் சிபாரிசு – தூது அனுப்பவில்லை மானமிகு வீரமணி அவர்களும், அவர்தம் கருஞ்சட்டைத் தோழர்களும்!

யார் யாரையெல்லாம் வீரமணி மாறி மாறி ஆதரித்தார் என்று கூறி, அதற்கான காரணங்களையும், அவரை அறியாமலேயே மருத்துவர் இராமதாசு தம் அறிக்கையிலே தெரிவித்துவிட்டார். 69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்ததற்காக ஜெய லலிதாவை ஆதரித்தார் என்றெல்லாம் கூறிவிட்ட பிறகு, நாம் விளக்கம் கூறவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தவில்லை.

கலைஞர் அவர்களை கைது செய்த நேரத்தில் திராவிடர் கழகத் தலைவர் வெளியிட்ட கருத்துகள்பற்றி விவரித்திருக்கிறார். அந்தக் கருத்துக்கு எவ்வித உள்நோக்கமும் கிடையாது; அதேநேரத்தில், கலைஞர் அவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டதோடு, தேவையான அழுத்தத்தையும் கொடுத் தவர்தான் மானமிகு வீரமணி என்ற தகவலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சாட்டையடி – நினைவிருக்கிறதா?
அரசியலில் புகுந்து அன்றாடம் அற்புதச் சாகசங்களை நடத்திக்கொண்டு இருக்கும் இதே மருத்துவர் அரசியலைப்பற்றியும், அரசியல்வாதிகளைப்பற்றியும் என்னென்னவெல்லாம் கூறி இருக்கிறார் என்பதை நாட்டு மக்கள் மறந்திருந்தாலும், திராவிடர் கழகத்தினர் மறக்கமாட்டார்கள். அய்ந்தும் மூன்று எட்டு; அரசியல்வாதியை வெட்டு! என்று சுவர் எழுத்து முழக்கம் செய்தவர்கள் இவர்கள்.

அரசியல் பொறுக்கிகளே, உள்ளே நுழையாதீர்கள்! என்று கிராமங்களின் நுழைவு வாயில்களில் தட்டிகளை எழுதி வைத்தவர்களும் இவர்களே! அதற்குப் பிறகு, வாக்கு அளிக்காதவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவேண்டும் என்று கூறியவரும் இவரே!

அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை வெட்டிச் சாய்த்த வீரமும் இவர்களுடையதுதான்!

நானோ, என் குடும்பத்தவர்களோ தேர்தலில் ஈடுபட்டால், முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்! என்று பறைசாற்றியவரும் இவரே!

அடடா, என்னென்ன வினோதங்கள் – அந்தர்பல்டிகள்!

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி வழிகாட்டவேண்டும்; அவர் பின்னால் வரத் தயாராக இருக்கிறோம் என்றெல்லாம் (வடலூர் உள்பட) எத்தனை எத்தனைக் கூட்டங்களில் மருத்துவர் பேசியிருப்பார். மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்ட நேரத்தில், அவருக்காக ஆதரவளித்து அறிக்கை கொடுத்தவர் வீரமணிதான் என்று இதே டாக்டர்தான் கூறினார். அப்போது அரசியல் ஆகத் தெரியவில்லையோ!

எவ்வளவோ எழுதலாம் – வண்டி வண்டியாக ஆதாரக் குவியல்கள் காத்திருக்கின்றன – எச்சரிக்கை விடுவது – உருட்டல் மிரட்டல் பாணியில் அறிக்கை விடுவதையெல்லாம் பா.ம.க. நிறுவனர் நிறுத்திக் கொள்வதுதான் நல்லது – நாகரிகம் என்பதை அடக்கமாகவே தெரி வித்துக் கொள்கிறோம்.

விபூதி வீரமுத்துசாமி பாணியா?
கருஞ்சட்டையினர் எத்தனையோ அச்சுறுத்தல்களையும், எச்சரிக்கை களையும் சந்தித்து வந்த பட்டாளம்! அதனிடம் வேண்டாம் விபூதி வீர முத்துசாமி, அணுகுண்டு அய்யாவு பாணி மிரட்டல்கள்!

Posted in Anbumani, Anna, Contradictions, DK, Dravidar Kazhagam, EVR, family, Jaya, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, Jeyalalithaa, JJ, Kalainjar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, MGR, MK, Party, Pattali Makkal Katchi, Periyar, PMK, Politics, Ramadoss, TamilNadu, Veeramani, Viduthalai | 2 Comments »

Chitra Lakshmanan: Kalainjar Karunanidhi & Kaviarasu Kannadasan – Sivaji, MGR, Mu Ka Muthu: Cinema Express

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

உள்ளதை சொல்கிறேன் – சித்ரா லட்சுமணன்

‘வசனக் காதல்’

கலைஞர் அவர்களை நேரில் காணாமலேயே அவர் மீது பெரும் காதல் கொண்டவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். அதற்குக் காரணம் “அபிமன்யூ’ படத்தில் கலைஞர் எழுதியிருந்த அற்புதமான வசனங்கள்.

“அபிமன்யூ’ படத்தின் வசனச் சிறப்பு காரணமாக ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல ஆறு நாட்கள் தொடர்ந்து அந்தப் படத்தைப் பார்த்தார் கவியரசர்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதைப் போல “அபிமன்யூ’ படத்தின் வசனங்களை கலைஞர் எழுதியிருந்தபோதிலும் திரைப்படத்தில் அவரது பெயர் இடம் பெறவில்லை.

எம்.ஜி.ஆர். அவர்களது சகோதரர் எம்.ஜி.சக்கரபாணிதான் சேலம் அம்பிகா தியேட்டரில் கவியரசு கண்ணதாசன் “அபிமன்யூ’ படத்தைப் பார்க்க போனபோது, அந்தப் படத்தின் வசனங்களை எழுதியவர் கலைஞர் என்ற தகவலை கண்ணதாசன் அவர்களிடம் கூறினார். “அபிமன்யூ’ படம் பார்த்த அனுபவத்தை தனது “வனவாசம்’ நூலில் கீழ்க்கண்டவாறு உணர்ச்சிகரமாக எழுதியுள்ளார் கவியரசர்.

“”அபிமன்யூ’ படத்தில் அவன் கேட்ட தமிழ் என்றும் மறக்கமுடியாத இன்பத் தமிழாகும்.

“ஒடிந்த வாளானாலும் ஒரு வாள் கொடுங்கள்’.

“அண்ணன் செய்த முடிவை கண்ணன் மாற்றுவதற்கில்லை’.

“கண்ணன் மனமும் கல் மனமா?’

“அர்ச்சுனனால் கூட துளைக்க முடியாத சக்ரவியூகத்தை அபிமன்யூ துளைத்து விட்டானென்றால் அங்கேதானிருக்கிறது ஆச்சாரியாரின் விபீஷண வேலை.’

இந்த வசனங்கள் இன்றுவரை அவனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

அம்பிகா தியேட்டரின் சுவையான காப்பியும், “அபிமன்யூ’வில் கண்ட கருணாநிதியின் கைவண்ணமும் அவன் நெஞ்சிலே நிலைத்தன.

“”காணாமலே காதல்” என்பார்கள். அந்தக் “காதலே’ பிறந்து விட்டது அவனுக்குக் கருணாநிதியின் மீது.

“”எப்படியாவது கருணாநிதியைக் கூட்டி வாருங்கள்” என்று அவன் சக்கரபாணியைக் கேட்டான்.

“மாடர்ன் தியேட்டர்ஸ்’க்கு அவரை வரவழைக்க வேண்டுமென்று அவரிடம் சொன்னான்.

அன்று அவன் “மாடர்ன் தியேட்டர்ஸ்’க்கு சொல்லியிருந்தால் எடுப்பட்டிருக்காது.

சக்கரபாணி சொன்னார். அவனும் கூட சேர்ந்து பாடினான்.
கருணாநிதியை வரவழைக்க டி.ஆர்.சுந்தரம் முடிவு செய்தார்.
ஒரு நாள் கருணாநிதியும், சக்கரபாணியும் சேலம் வந்து சேர்ந்தார்கள்.

திறமை என்பதை யாரிடம் கண்டாலும் நேருக்கு நேரே பாராட்டிவிடுவது அவனது சுபாவம்.

தன்னை தாழ்த்திக்கொண்டு இன்னொருவரை உயர்த்துவான்.
அதுதான் திறமைக்கு தரும் மியாதை என்றே அவன் கருதினான்.
அன்று கருணாநிதியை அவன் முதன்முதலாக கோயம்பத்தூர் லாட்ஜில் சந்தித்ததும் ஒரு காதலியைக் காணும் உணர்ச்சியே அவனக்கு ஏற்பட்டது.

சக்கரபாணி அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துவைத்தார்.

அன்று முதல் கருணாநிதியும் அவனை உயிருக்குயிராக நேசிக்கத் தொடங்கினார்.

“மாடர்ன் தியேட்டர்’ஸில் மாதம் 500 ரூபாய் சம்பளத்தில் அவர் வேலைக்கமர்ந்தார்.

ஒரு நாளாவது ஒருவரை ஒருவர் காணாமலிருந்தால் எதையோ பறி கொடுத்தது போலிருக்கும்.

ஒருவர் கையில் இன்னொருவர் தலை வைத்துத் தூங்குகிற அளவுக்கு பாசம் வளர்த்தது.

அவர்கள் இருவருக்கிடையே ரகசியம் என்பதே இல்லாமலிருந்தது.
அவரைப் பற்றி யாராவது தவறாகப் பேசிவிட்டால் அவனால் பொறுக்க முடியாது. அவருக்கும் அப்படியே”.

இவ்வாறு அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் கவியரசு. தன்னைப் பற்றி எழுதும்போது “அவன்’ என்று தன்னடக்கத்தோடு இந்த நூலில் குறிப்பிட்டிருந்தார் கவியரசர்.

இப்படி நெருக்கமான நட்போடு பழகிய அவர்களுக்கு நடுவே பயங்கரமான விரிசல் ஏற்பட்டதும், பின்னர் அந்த இடைவெளி முழுவதுமாக மறைந்து இருவரும் இணைந்ததும் தமிழகம் அறிந்த வரலாறு.

“மணமகள்’ படத்தைத் தொடர்ந்து கலைஞரின் எழுத்தாற்றலில் திரை உலகில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய படமாக “பராசக்தி’ அமைந்தது.

புரட்சிகரமான கருத்துக்களோடு அடுக்கு மொழியில் கலைஞர் அவர்கள் எழுதியிருந்த வசனங்கள் பின்னாளில் தமிழ்த் திரைப் படங்களின் வசன பாணியையே மாற்றி அமைத்தது என்றால் அது மிகையில்லை.

கலைஞர் அவர்களது வசனத்திற்கு தனது அழுத்தம் திருத்தமான தமிழ் உச்சரிப்பால் உயிர் கொடுத்தார் சிவாஜி. ஏற்ற இறக்கங்களோடு அவர் கலைஞரின் தமிழை உச்சரித்தது கண்டு தமிழ்நாடே பரவசப்பட்டது.

சிவாஜி தனது முதல் படத்திலேயே தமிழ் நாட்டு திரைப்பட ரசிகர்கள் மனதை ஒட்டுமொத்தமாகக் கொள்ளை கொண்டார் என்றால் அதில் கலைஞர் அவர்களுக்கு கணிசமான பங்கு உண்டு என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

1952-ல் வெளியான “பராசக்தி’க்குப் பிறகு இந்த 55 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் படங்கள் வெளியாகியிருந்தாலும் இன்றும் “பராசக்தி’ தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பெற்றிருக்கிறது என்றால் அதற்கு கலைஞர் -நடிகர் திலகம் ஆகிய இருவரின் கூட்டணியே முக்கிய காரணம்.

“பராசக்தி’ படத்தைத் தொடர்ந்து “பணம்’, “திரும்பிப்பார்’, “நாம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தமிழ்த் திரை உலகை திசை திருப்பிய படமான “மனோகரா’ வெளியானது.

சிவாஜியின் நவரச நடிப்பு, கண்ணாம்பாவின் உணர்ச்சி மிக்க நடிப்பாற்றல், கலைஞர் அவர்களின் வீர வசனங்கள் எல்லாம் சேர்ந்து அப்படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கியது.

நடிப்புப் பயிற்சி பெற விரும்பிய எவரும் “பராசக்தி’, “மனோகரா’ போன்ற படங்களின் வசனத்தை விலக்கிவிட்டு அந்தப் பயிற்சிகளில் ஈடுபட முடியாத சூழ்நிலை உருவாகியது.

தமிழில் வசனங்கள் என்றால் கலைஞர் அவர்கள் மட்டுமே என்ற நிலை உருவானது. இந்த நிலைக்கு இவர் உயரக் காரணம் தமிழ்த்தாய் அவரிடம் கொஞ்சி விளையாடினாள் என்பது மட்டுமல்ல, எந்தத் துறையில் ஈடுபட்டாலும் முழு ஈடுபாட்டோடு நிறைவேற்றக் கூடிய அவரது ஆற்றலுக்கும் அதில் உரிய பங்குண்டு.

கலைஞரின் எழுத்தாற்றல் குறித்து தனது “வியப்பூட்டும் ஆளுமைகள்’ புத்தகத்தில் கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகிறார் நூலாசிரியர் வெங்கட் சாமிநாதன்.

“”பராசக்தி’ படத்தில் சிவாஜி பேசும் வசனங்கள் ஒரு குற்றவாளி கோர்ட்டில் சொல்லும் பதில் அல்ல. கோர்ட்டை நோக்கிய பதிலும் அல்ல. தமிழ் மக்கள் பல கோடிகள் அனைவரையும் நோக்கிவிடும் அறை கூவல். அது ஏதோ திருப்புமுனை, புதிய அத்தியாயம் என்றெல்லாம் பேசப்பட்டது.

அவர் எழுதிய நாடகங்கள் திரைப்படமானதும், திரைப்படமாகவே எழுதப்பட்டதுமான ஒரு பட்டியல் மாத்திரம் நமக்கு கிடைத்துள்ளது.

அதிலும் 1948-லிருந்து 1990 வரையிலான ஒரு பட்டியலை 1990-ல் பிரசுரமான ஒரு புத்தகம் தருகிறது. இந்த எண்ணிக்கை மொத்தம் 57. 1990-க்குப் பின் எழுதியவை எல்லாம் தொலைக்காட்சிப் படைப்புகள். அவை பற்றிய குறிப்புகள் இதில் இல்லை.

1947-லோ எப்போதோ “ராஜகுமாரி’ படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுத ஏ.எஸ்.ஏ.சாமி அழைத்தபோது (அப்போது கருணாநிதிக்கு வயது 23) “”என் கழக வேலைகளுக்கு இடையூறு இல்லாது முடியுமானால் எழுத ஒப்புக் கொள்கிறேன்” என்று நிபந்தனை விதித்து எழுதுகிறார்

-இத்தனையையும் வைத்துக்கொண்டு நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் என்று வேறு -இவற்றிற்குப் பிறகுதான் 40 வருடங்களில் 57 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் சிலவற்றிற்குப் பாடல் எழுதுவதும் என்றால் -இது அலிபாபாவின் அற்புத விளக்கும் விளக்கை உரசினால் “ஹூகும் ஆக்கா’ என்று எதிர் நிற்கும் பூதமும் பணி செய்யக் காத்திருந்தால்தான் சாத்தியம்.

திரைக்கதை, வசனம் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தப் போவதில்லை என்று அதிலேயே முழு மூச்சாக ஆழ்ந்தால்கூட 40 வருடங்களில் 57 படங்கள் சாத்தியமா? தெரியவில்லை. நான் என் ஆயுசில் எழுதிய ஒரே ஒரு திரை நாடகத்திற்கு எழுத உட்காரும் முன் அதைப் பற்றி யோசித்து உள்வாங்கிக் கொள்ள இரண்டு மாதங்கள் பிடித்தன.

பின் எழுத உட்கார்ந்து 15 நாட்களுக்கும் மேல் எதுவும் எழுது ஓடவில்லை. பின்னர் ஒன்றிரண்டு மாதங்கள் ஒதுங்கியிருந்து பின் உட்கார்ந்தால் 15 நாட்கள் ஆயின எழுதி முடிக்க. இந்த மாதிரியெல்லாம் யோசித்திருக்க, மனம் ஆழ்ந்திருக்க, ஓடவில்லை” என்றெல்லாம் கருணாநிதிக்கு சாத்தியப்பட்டு வராது, கட்டி வராது.

ஸ்விட்சைத் தட்டிவிட்டால் ஓடும் யந்திரம் போலத்தான் அவர் உட்கார்ந்தால் எழுதிய காகிதங்கள் மடியிலிருந்து விழுந்துகொண்டே இருக்கவேண்டும். உதவியாளர் பொறுக்கி அடுக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.

“ஓர் இரவு’, “வேலைக்காரி’க்குப் பிறகு சினிமாவுக்குக் கதை வசனம் எழுதாத தி.மு.க. தலைவர் யாரும் உண்டா? தெரியவில்லை. தேடிப் பார்த்தால் ஓரிருவர் கிடைக்கலாம். ஆனால் அண்ணாவையும், கருணாநிதியையும் தவிர வேறு யாரும் நிலைக்கவும் இல்லை, வெற்றி பெறவும் இல்லை.

மற்ற எல்லோரையும் பின்தள்ளி கருணாநிதியைத்தான் அண்ணாவுக்கு அடுத்த பெருந்தலைவராக காலம் முன் வைத்துள்ளது என்றால் அதில் கணிசமான பங்கு கருணாநிதியின் நாடகம், சினிமா, கற்பனைத் திறன் தந்த எழுத்து இவற்றிலிருந்து பெற்றதாகச் சொல்ல வேண்டும்.”

இவ்வாறு அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் வெங்கட் சாமிநாதன்.

——————————————————————————————————————————————————–

தி.மு.கழகத்தில் உறுப்பினராக இருந்த சிவாஜி கணேசன் சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக தி.மு.க.வை விட்டு விலக வேண்டி வந்தது என்றாலும், அதனால் அறிஞர் அண்ணா மீது கொண்ட பாசத்தில் இம்மியளவு கூட சிவாஜி அவர்களிடம் குறையவில்லை.

அதே போன்று கலைஞர் மீதும் மாறாத பற்று கொண்டிருந்தார் சிவாஜி. அதன் காரணமாகத்தான் தனது ஆரூயிர் நண்பன் நடிகர் திலகத்திற்கு கடற்கரையில் பல எதிர்ப்புகளுக்கு இடையிலேயும் சிலை எடுத்து பெருமைப் படுத்தினார் கலைஞர்.

தனது சுயசரிதையில் பல இடங்களில் கலைஞர் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் சிவாஜி. “திரும்பிப் பார்’ படத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, “”திரும்பிப் பார்’ படத்திற்கு எழுதிய வசனங்களைப் போல கலைஞர் கருணாநிதி அவர்கள் மற்ற எந்தப் படங்களிலும் எழுதவில்லை என்று நான் நினைக்கிறேன்.

அவ்வளவு அருமையான வசனங்களையெல்லாம் அந்தப் படத்தில் எழுதியிருந்தார். அந்தப் படம் ஒரு அருமையான திரைக்காவியம்” என்று தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கும் நடிகர் திலகம், “மனோகரா’ பட அனுபவத்தைப் பற்றி விவரிக்கும்போது, “”எனக்கு “மனோகரா’ படம் புது அனுபவமாகத் தெரியவில்லை.

நாடகத்தின்போது நான் சம்பந்த முதலியாரின் வசனத்தைப் பேசினேன். அது படமாக எடுக்கும்போது கலைஞர் அவர்களின் வசனத்தைப் பேசினேன். அருமையான வசனங்கள். அது வசனம் பேசும் காலம். “மனேகரா’வில் வசனங்கள் மிகச்சிறப்பாக இருக்கும். இப்போது கூட அப்பட வசனங்கள் ஞாபகத்திற்கு வருகிறது.

பொன்னும் மணியும்
மின்னும் வைரமும்
பூட்டி மகிழ்ந்து
கண்ணே! முத்தே!
தமிழ்ப் பண்ணே!
என்றெல்லாம் குலவிக் கொஞ்சி
தங்கத்தில் ஆன கட்டிலிலே
சந்தனத் தொட்டினிலே

என்றெல்லாம் வசனம் இடம் பெற்ற அந்தப் படம் அந்தக் காலத்தில் ஒரு மாபெரும் வெற்றிப் படமாகியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் திலகம் அவர்களது சுயசரிதையைப் போலவே கலைஞர் அவர்களின் சுயசரிதையான “நெஞ்சுக்கு நீதி’ நூலிலும் பல இடங்களில் சிவாஜி அவர்களைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

கலையுலகில் தனது வளமான வசனங்களால் சிவாஜி அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த கலைஞர் அவர்களின் வாழ்க்கையை நடிகர் திலகம் காப்பாற்றிய ஒரு சம்பவத்தை உணர்ச்சி பொங்க தனது “நெஞ்சுக்கு நீதி’ நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் கலைஞர்.

“”ஒரு முறை நானும், கருணானந்தமும், சிவாஜி கணேசனும் காஞ்சிபுரம் சென்று அண்ணாவைப் பார்த்துவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறோம். அப்போதுதான் “பராசக்தி’ படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வரும் வழியில் நல்ல மழை பெய்யத் தொடங்கியது.

காரின் வெளிச்சம் வேறு மங்கலாகி விட்டது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகே வந்து கொண்டிருக்கும்போது அந்தப் பகுதியில் ஒரு பாலம் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்ததால் மாற்று வழிக்கு குறிப்புப் பலகை வைத்து சிவப்புத் துணி கட்டியிருந்தார்கள்.

விளக்கு வெளிச்சம் போதாதால் கார் டிரைவர் அதைக் கவனிக்காமல் மாற்று வழியில் செல்வதற்குப் பதிலாக நேராகச் சென்று விட்டார். உடனே நண்பர் கணேசன் கூச்சல் போடவே கார் டிரைவர் திடீரென்று பிரேக்கை அழுத்திவிட்டார். பிரேக் போடப்பட்ட வேகத்தில் மழைத் தண்ணீர் தேங்கியிருந்த சாலையில் காரின் சக்கரங்கள் வழுக்கி ஒரு சுற்றுச் சுற்றி நின்றது.

கார் எப்படியிருக்கிறது என்பதைக் காருக்குள்ளிருந்த நாங்கள் கவனித்தோம். கார் சக்கரம் ஒரு அங்குலம் நகர்ந்தால் நாங்கள் செங்குத்தான ஒரு பள்ளத்தாக்கில் காரோடு விழுந்து நொறுங்கிப் போய்விடுவோம்.

அப்படிப்பட்ட ஆபத்தான விளிம்பில் கார் நின்று கொண்டிருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார் கலைஞர். தனக்கும் சிவாஜிக்கும் இடையே நிலவி வந்த பாசப் பிணைப்பு எத்தகையது என்பதற்கு எடுத்துக் காட்டாக சிவாஜி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையை தனது “நெஞ்சுக்கு நீதி’ நூலின் இரண்டாம் பாகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“”எனக்கும் சிவாஜிக்கும் இருந்த நட்பு யாராலும் விலக்க முடியாத பாசமாக உருவெடுத்தது. அந்தப் பாசம் எப்படிப்பட்டது என்பதை 1963-ஆம் ஆண்டு என் தாய் அஞ்சுகம் அம்மையார் மறைந்தபோது வெளியிடப்பட்ட ஒரு மலரில் சிவாஜியே வெளிப்படுத்தியிருக்கிறார்.

“”சிறு வயது முதல் எங்களுக்குள் நெருக்கமான பழக்கம் உண்டு. இதற்கு எத்தனையோ காரணம். கலையோ, அன்போ, கொள்கையோ, குணமோ, எதுவோ எங்களை உயிராக இணைத்து வைத்திருந்தது. நாளடைவில் அது வளர்ந்து வலுப்பெற்றது. அவர்! அது யார்? வாய் நிறைய “மூனா கானா’ என்று நான் இனிமையோடு அழை க்கும் அவர்தான்.

அந்தக் காலத்தில் இந்த இரண்டு பிள்ளைகளுக்கும் அஞ்சுகம் அம்மையார் அநேக நாட்கள் ஒன்றாகவே உணவு படைப்பது உண்டு. அப்போதெல்லாம் அவர்கள் பரிமாறுவதில் கொஞ்சம் பாரபட்சமாக நடந்து கொண்டதை நான் கவனிப்பதும் உண்டு. நல்ல பண்டங்களை ஒருவருக்கு அதிகமாகவும், ஒருவருக்கு குறைவாகவும் போடுவார்கள்.

“”இப்படிச் செய்யலாமா? இது நீதியா?” என்று நான் கேட்பேன்.
“”நீ செல்லப்பிள்ளை. உனக்கு அதிகம்தான்” என்பார்கள் அந்தத் தாய்.

அந்தச் செல்லத்தை மறந்து விட்டுப் போய்விட்டார்கள். நான் என்றும் அந்த அன்புச் செல்லத்தை மறக்க முடியாது. எனக்கு அஞ்சுகம் அம்மையாரும் ஒரு தாய்”.

இது அந்த மலரில் சிவாஜி எழுதிய கட்டுரையில் ஒரு பகுதி” என்று குறிப்பிட்டுள்ளார் கலைஞர்.

“மனோகரா’வைத் தொடர்ந்து “ரங்கூன் ராதா’, “ராஜாராணி’, “புதையல்’ என்று கலைஞர் அவர்களும் சிவாஜியும் இணைந்து பணியாற்றிய பல படைப்புகள் வெளிவந்தன.

ஆரம்பக் கட்டங்களில் சிவாஜி கணேசன் அவர்களோடு இருந்த அளவு நெருங்கிய நட்பு எம்.ஜி.ஆர்.அவர்களுக்கும் கலைஞர் அவர்களுக்கும் இருந்தது குறித்தும், “ராஜகுமாரி’ படத்தில் எம்.ஜி.ஆர்.தான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதில் கலைஞர் மிகவும் பிடிவாதமாக இருந்து ஜெயித்தது குறித்தும் ஏற்கனவே இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.

“ராஜகுமாரி’யைத் தொடர்ந்து “மந்திரிகுமாரி’, “மருதநாட்டு இளவரசி’, “நாம்’, “மலைக்கள்ளன்’, “புதுமைப்பித்தன்’, “காஞ்சித் தலைவன்’ என்று பல படங்களில் எம்.ஜி.ஆரும் கலைஞரும் இணைந்து பணியாற்றினர்.

எம்.ஜி.ஆருக்கு கலைஞர் கதை வசனம் எழுதிய கடைசிப் படமாக “காஞ்சித் தலைவன்’ அமைந்தது. இவர்கள் இருவர் உறவு மற்றும் பிரிவு குறித்து பின்னர் விரிவாக பார்ப்போம்.

கலைஞர் அவர்களின் கைவண்ணத்தில் வெளியான படங்களில் “பூம்புகார்’ மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு படைப்பு. இந்தக் கதையை கலைஞரின் “மேகலா பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.

ஆனால் முதலில் “பூம்புகார்’ படத்தைத் தயாரிக்க திட்டமிட்டவர் ஏவி.எம்.அவர்கள் ஆவார்கள். ஏவி.எம்.அவர்கள் அப்படத்தை ஏன் கைவிட்டார் என்பது குறித்து தனது “தமிழ் சினிமாவின் கதை’ என்ற நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் அறந்தை நாராயாணன்.

“”கல்லக்குடி போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி மு.கருணாநிதி மத்திய சிறைச் சாலையில் இருந்தார். அவரைப் பார்ப்பதற்காக டைரக்டர் கிருஷ்ணன் போயிருந்தபோது, “”என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“”சிலப்பதிகாரம் படித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார் கருணாநிதி.
சிறையில் கருணாநிதியைச் சந்தித்துவிட்டு வந்த கிருஷ்ணன் தன் சகா பஞ்சுவிடம் சொன்னார். “”கண்ணகி படம் வந்து ரொம்ப நாட்களாகின்றன. மு.க. சிலப்பதிகாரத்தை ஆழ்ந்து படித்து வருகிறார். அந்தக் காவியத்தை மீண்டும் சினிமாவாக்கினால் நன்றாக இருக்கும்”.

இருவரும் புறப்பட்டுச் சென்று ஏவி.எம்.செட்டியாரிடம் சொன்னார்கள்.

“”அவர் இப்பொழுது அரசியலில் ரொம்பவும் பிஸியாக இருக்கிறாரே! எப்படி வசனம் எழுதித் தருவார்?” மேனா கேட்டார்.

அந்தப் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஒரே சமயத்தில் அவரிடமிருந்து ஒட்டு மொத்தமாக எழுதி வாங்கி வந்து விடுகிறோம்.”

மு.கருணாநிதி விடுதலையாகி வந்தார். அவரிடம் நடந்த விஷயங்களைச் சொன்னார்கள் கிருஷ்ணனும், பஞ்சுவும்.
“”எழுதித் தருகிறேன். இதோ படத்தின் தலைப்பு. “பூம்புகார்”.
அன்றைய தினம் நள்ளிரவிலேயே “முரசொலி’ அலுவலகத்திற்கு மெய்யப்பச் செட்டியார் கிருஷ்ணன் பஞ்சுவுடன் வந்தார்.

பேசினார். முன் பணம் கொடுத்தார். 1959-ல் “தங்கப் பதுமை’ படம் வெளி வந்ததும் “பூம்புகார்’ திட்டத்தைச் செட்டியார் கைவிட்டு விட்டார். காரணம் “கண்ணகி’ கதை மாதிரியே “தங்கப் பதுமை’ திரைக்கதை அமைந்திருந்ததுதான்.

இவ்வாறு அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் அறந்தை நாராயணன்.

——————————————————————————————————————————————————–
பண்பிற்கரசோன்

“பூம்புகார்’ திரைப்படத்தில் சிவாஜிகணேசனை கோவலனாகவும், சாவித்திரியை கண்ணகியாகவும், பத்மினியை மாதவியாகவும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார் ஏவி.எம். “தங்கப்பதுமை’ காரணமாக அவர் “பூம்புகார்’ படத்தைத் தயாரிக்கத் தயங்கியதும், தன் சொந்தத் தயாரிப்பில் “பூம்புகார்’ திரைப்படத்தை எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, ராஜஸ்ரீ ஆகியோர் நடிக்க தயாரித்தார் கலைஞர். கெüந்தி அடிகள் வேடத்தில் கே.பி.சுந்தராம்பாள் நடித்தார்.

படம் முடிந்தவுடன் ஏவி.எம்.செட்டியார் அவர்களுக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்டினார் கலைஞர். படத்தை வெகுவாக ரசித்தாலும் பட வெளியீட்டுத் தேதியைத் தள்ளி வைக்குமாறு கலைஞரிடம் கேட்டுக் கொண்டார் ஏவி.எம். அதற்கு அவர் கூறிய காரணம் இதுதான்.

“”இந்தக் கதையை சிறு மாறுதல்களுடன் டைரக்டர் ஸ்ரீதர், “கலைக்கோயில்’ என்ற பெயரில் மிகப் பிரமாதமாக எடுத்திருக்கிறார். நான் கூட படத்தைப் பார்த்து விட்டு அவரைப் பாராட்டினேன். தங்களது “பூம்புகார்’ படமும் மிகச் சிறப்பாக இருக்கிறது, என்றாலும் இப்போது வெளியிட வேண்டாம்” என்றார் ஏவி.எம். “கலைக்கோயில்’ படத்தோடு வெளியானால் “பூம்புகார்’ திரைப்படத்தின் வெற்றி பாதிக்கப்படும் என்பது எவி.எம். அவர்களின் கருத்தாக இருந்தது.

“பூம்புகார்’ திரைப்படத்தைப் பற்றியும், அதன் வெற்றி குறித்தும் கலைஞர் அவர்களுக்கு மிகச் சிறந்த அபிப்ராயம் இருந்தாலும் அனுபவசாலியான ஏவி.எம்.அவர்களது பேச்சு கலைஞரை சோர்வடையச் செய்தது. அந்த மனந்தளர்ச்சியோடு வந்த கலைஞர் முரசொலி மாறனிடம் செட்டியார் சொன்னதையெல்லாம் சொல்லியிருக்கிறார்.

மாறன் கொஞ்சம் கூட நம்பிக்கை இழக்காமல் “பூம்புகார்’ படத்தைப் பொறுத்தவரை கதை சொல்லப்பட்டிருக்கிற முறைக்காகவும், உங்கள் வசனத்திற்காகவும் கண்டிப்பாக அது வெற்றி பெறும். நாம் தைரியமாக படத்தை வெளியிடுவோம். அதுவும் “கலைக்கோயில்’ படம் வெளியாகின்ற நாளன்றே வெளியிடுவோம்” என்று கூறியதோடு மட்டுமின்றி அதே தேதியில் படத்தை வெளியிடவும் செய்தார்.

“கலைக்கோயில்’ மிகப் பெரிய தோல்வியைக் கண்டது. ஆனால் “பூம்புகார்’ படமோ நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.

“பூம்புகார்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் கலைஞருக்கு ஃபோன் செய்த ஏவி.எம், “”என்னுடைய கணக்கு தவறு என்பதை உங்கள் படத்தின் வெற்றி நிரூபித்துவிட்டது. உங்களையும், மாறனையும் நான் மனமாரப் பாராட்டுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதே போன்று ஒரு சம்பவம் கலைஞர் வாழ்க்கையில் எல்.வி.பிரசாத் அவர்களாலும் நடைபெற்றிருக்கிறது. அது குறித்து “கலை உலகச் சூரியன் கலைஞர்’ என்ற பாராட்டு விழாச் சிறப்பு மலரில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் அமிர்தம்.

“”மாபெரும் இயக்குனர் எல்.வி.பிரசாத் கலைஞரின் கதை வசனத்தில் “இருவர் உள்ளம்’ என்றொரு படத்தைத் தயாரித்தார். சிவாஜிகணேசன், சரோஜாதேவி ஜோடியாக நடித்த இப்படத்தின் தனிக்காட்சி முக்கியமான கலை உலகப் பிரமுகர்களுக்காக ரேவதி ஸ்டூடியோவில் நடைபெற்றது.

படம் முடிந்ததும் இயக்குனர் பிரசாத், “”படம் நிறைவாக இல்லாதது போன்று எனக்குத் தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன?” என்று கலைஞரிடம் கேட்டார். அதற்கு கலைஞர், “”இந்தப் படம் நிச்சயமாக 100 நாட்கள் ஓடும். மக்கள் பேசக் கூடிய படமாக இது அமையும்” என்றார்.

உறுதியாகத்தான் சொல்கிறீர்களா என்று கேட்ட பிரசாத், “”இந்தப் படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றால் உங்களுக்கு சன்மானமாக பத்தாயிரம் ரூபாய் வழங்குகிறேன்” என்றார்.
படம் சென்னை வெல்லிங்டன் தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்களைத் தொட்டது. நூறாவது நாள் முடிந்த மறுநாள் இயக்குனர் பிரசாத், கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து கலைஞரைச் சந்தித்தார்.

“”நீங்கள் சொன்னபடி படம் நூறு நாட்களையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. உங்கள் கணிப்பு எதிலும் சரியாக இருப்பது போல் “இருவர் உள்ளமும்’ வெற்றி பெற்றுள்ளது. என் வாக்குப்படி இதாங்க ரூபாய் பத்தாயிரம் என்று சொல்லி பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்தார்” என்று அப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள இயக்குனர் அமிர்தம், “மலைக்கள்ளன்’ படத் தயாரிப்பின்போது நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவத்தையும் அந்த மலரில் கீழ்க் கண்டவாறு வர்ணித்துள்ளார்.

“”மலைக்கள்ளன்’ படம். கலைஞரின் உயிரோட்டமான வசனங்கள். எம்.ஜி.ஆர். கதாநாயகன். படம் முடிந்த நிலையில் தயாரிப்பாளர் ஸ்ரீராமுலுவுக்கும் கலைஞருக்கும் இடையில் ஏற்பட்ட மனத்தாங்கலில் இந்தப் படத்தில் திரைக்கதை, வசனம் கருணாநிதி” என்று என் பெயரைப் போடக் கூடாது என்று கடுமையாகக் கூறிவிட்டு கலைஞர் திருவாரூர் போய் விட்டார்.

எம்.ஜி.ஆருக்குப் பெரிய கவலை வந்து விட்டது. இன்றைய நிலையில் கலைஞர் பெயரில்லை என்றால் படம் வெற்றி பெறாது. ஏற்பட்டிருக்கிற இந்த ஊடலை எப்படித் தீர்ப்பது என சிந்தித்த எம்.ஜி.ஆர். நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியை அழைத்துக் கொண்டு திருவாரூருக்குச் சென்றார்.

திருவாரூரில் கலைஞரின் இல்லத்தில் அவரைச் சந்தித்த கே.ஆர்.ஆர். கலைஞரிடம் நீண்ட நேரம் பேசி அவரைச் சமாதானப்படுத்தினார். எம்.ஜி.ஆரோ, “”உங்கள் பெயர் படத்தின் டைட்டிலில் வரும்போதே கைதட்டல் அரங்கை அதிர வைக்கிறது. உங்கள் பெயர் இல்லை என்றால் படம் வெற்றி பெறுவது சந்தேகமே. நான் நடித்த படங்கள் எல்லாம் உங்கள் வசனச் சிறப்புகளாலேயே வெற்றி பெறுகின்றன.

இந்தப் படமும் வெற்றி பெற வேண்டும். அதற்குத் திரையில் உங்கள் பெயர் வந்தே ஆக வேண்டும்” என்று உருக்கமுடன் வேண்டினார். கலைஞர் ஒருவாறு சம்மதிக்க, கலைஞர், கே.கே.ஆர்., எம்.ஜி.ஆர். மூவரும் சென்னை வந்தனர். மகிழ்ச்சியான சூழலில் ஸ்ரீராமுலு அவர்களுடன் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது ஸ்ரீராமுலு, “”எத்தனை மாதங்கள் ஆனாலும் சரி! மன நிறைவான உங்கள் ஒப்புதல் இல்லாமல் “மலைக்கள்ளன்’ படத்தை நான் வெளியிடுவதில்லை என்ற முடிவோடு இருந்தேன்” என்றார்.

அதைக் கேட்டதும் எம்.ஜி.ஆர். அவர்கள் நெகிழ்வோடு கண் கலங்கிய நிலையில் ஸ்ரீராமுலு -கலைஞர் இருவரது கரங்களையும் ஒன்றாக இணைத்து முத்தமிட்டார்.
பின்னாளில் கலை உலகில் கொடிகட்டிப் பறந்த கண்ணதாசன், சிவாஜி, எம்.ஜி.ஆர். ஆகிய மூவருடனும் ஆரம்ப காலம் முதலே நெருங்கிய நட்பு கொண்டிருந்த கலைஞர் அவர்களுக்கு காலச் சூழ்நிலை காரணமாக கண்ணதாசன், எம்.ஜி.ஆர். ஆகிய இருவரோடும் பலமான கருத்து வேற்றுமை ஏற்பட்டது.

கண்ணதாசன், எம்.ஜி.ஆர். ஆகிய இருவரோடும் அவர் கொண்ட கருத்து வேற்றுமை அளவிற்கு சிவாஜி அவர்களோடு அவர் மாறுபடவேயில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அதன் காரணமாகத்தான் கலைஞர் அவர்களது பவள விழாவையொட்டி கலை உலகம் நடத்திய பாராட்டு விழாவில் கலைஞர் அவர்களைப் பாராட்டி நடிகர் திலகம் பேசிய பேச்சு அத்தனை உணர்ச்சிப் பூர்வமாக அமைந்தது. சிவாஜி, கலைஞர் ஆகிய இருவருடைய கண்களும் அந்தப் பாராட்டு விழாவின்போது கலங்கியதைக் கண்ட அனைவரும் அவர்கள் நட்பின் ஆழத்தை அன்று உணர்ந்தனர்.

அரசியல் காரணமாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், கலைஞருக்கும் இடையே இருந்த உறவில் எத்தனை பெரிய விரிசல் ஏற்பட்டது என்பதை அனைவரும் அறிவோம். ஆனாலும் எம்.ஜி.ஆர். இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி அறிந்ததும் அன்று காலை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய கலைஞர் செய்த முதல் காரியம் எம்.ஜி.ஆருக்கு இறுதி மரியாதை செலுத்த ராமாவரம் தோட்டத்திற்குச் சென்றதுதான்.

ஸ்ரீராமுலு நாயுடு அவர்களுடன் ஏற்பட்ட வருத்தத்தைக் களைந்தது போல தனது நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அதை மறந்து அவர்களுக்கு நேசக்கரம் நீட்டுகின்ற மாபெரும் பண்புக்குச் சொந்தக்காரராக கலைஞர் இன்றளவும் விளங்கி வருகிறார். அதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.

மலையளவு நெஞ்சுறுதி
வானளவு சொற்பெருக்கு
கடலளவு கற்பனைகள்
கனிந்துருகும் கவிக்கனிகள்

இலை தலையாய் ஏற்றமுற்று
இளந்தலைகள் வாழ்த்தொலிக்க
அவைத்தலைமை ஏற்றிருக்கும்
அன்புமிகு என் தோழ!

கூட்டத்தைக் கூட்டுவதில்
கூட்டியதோர் கூட்டத்தின்
நாட்டத்தை நாட்டுவதில்
நற்கலைஞன் நீயிலையோ

அந்தச் சிரிப்பலவோ
ஆளையெல்லாம் கூட்டி வரும்
அந்தச் சிறு மீசை
அப்படியே சிறைப்படுத்தும்!

சந்திரனைப்போலத்
தக தகவென்று ஒளிரும்
அந்த வழுக்கையில்தான்
அரசியலே உருவாகும்.

எந்தத் துயரினிலும்
இதயம் கலங்காதோய்!
முத்தமிழ்த் தோழ!
முனை மழுங்கா எழுத்தாள!

திருவாரூர்த் தேரினையே
சீராக்கி ஓட விட்டுப்
பரிசாகப் பெற்றவனே!
கருணாநிதித் தலைவ!
கவிதை வணக்கமிது

என்று கலைஞரைப் பாராட்டி கவிதை பாடிய கண்ணதாசனுக்கும் கலைஞருக்கும் இடையே எழுந்த விரிசல் பலமானது என்றாலும், அந்த விரிசலை மீறி ஒருவர் மீது ஒருவர் மாறா நட்பு கொண்டிருந்தனர்.
——————————————————————————————————————————————————–
கவிஞருக்கு கலைஞரின் கவிதை

“இல்லற ஜோதி’ படத்திற்காக எழுதப்பட்ட “அனார்க்கலி’ நாடகம்தான் கலைஞருக்கும் கவியரசருக்குமிடையே முதல் விரிசலை ஏற்படுத்தியது. அந்த விரிசலை ஒரு அகழி அளவுக்கு விரிவாக்கியதில் இரு தரப்பிலுமிருந்த “நல்ல’ நண்பர்களின் பங்கு அதிகமாக இருந்தது.

பத்திரிகைகளில் பத்து கவிதைகளும், சினிமா படங்களுக்காக 5 பாடல்களும் மட்டுமே எழுதியிருந்த நிலையில் கண்ணதாசனை “கவிஞர்’ என்று மேடயில் அழைத்து பெருமைப்படுத்தியவர் கலைஞர்தான் என்பதை நான் ஏற்கனவே இக்கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.

கலைஞர் அவர்களோடு கருத்து வேற்றுமை வந்த காலங்களில் கூட அதை மறக்காமல் பல பத்திரிகைகளில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர். “”கருணாநிதியும் நானும் எழுதத் தொடங்கியது ஏறக்குறைய ஒரே காலத்தில்தான்.

நான் அவரது எழுத்தைத்தான் முதலில் காதலித்தேன். என்னுடைய எழுத்துக்களில் அவருக்குள்ள ஈடுபாடுகள் போலவே அவரது எழுத்துக்களில் எனக்கு ஈடுபாடு உண்டு.

அரசியலில் பதவிகள் வரலாம். போகலாம். ஆனால் நிலையான இடத்தைப் பெற்றுத் தரும் “ரிக்கார்டு’ எழுத்துதான். எழுத்துத் துறையில் கருணாநிதியை மிஞ்சக் கூடியவர் எவரும் இல்லை. பதவி போய் விட்டாலும் அவர் நிலைத்து நிற்கப் போவது அவரது எழுத்துக்களில்தான்.

முதல் முதலாக பொள்ளாச்சி கூட்டத்தில்தான் என்னைப் பேச வைத்து பேச்சாளனாக அரங்கேற்றினார் கருணாநிதி. பேசத் தெரியாத நான் பேசப் பழகிக் கொண்டேன். ஆமாம். என்னை அரசியல் மேடையில் பேச “ஆதிமுதலாய்’ அரங்கேற்றி வைத்தவரே அவர்தான்.

அவரோடு பல சுற்றுப் பயணங்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அவரோடு போகும் நான் ஆரம்பத்தில் மேடைகளில் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பேச மாட்டேன். அப்படிக் குறுகிய நேரம் நான் பேசுவதற்கே கலைஞர் என்னைக் கேலி செய்வார் ஆனால் அதற்கடுத்தக் கூட்டத்திலும் என்னைக் கட்டாயம் பேச வைப்பார்.

அப்படி வற்புறுத்தி பேச வைத்தே என்னை அவர் அரை மணி நேரம், முக்கால்மணி நேரம், சில நேரங்களில் ஒரு மணி நேரம்கூடத் தயங்காமல் பேசும் ஒரு வழக்கமான கழகப் பேச்சாளராக்கி விட்டார்.

நான் அரசியலுக்கு வந்தது, பேச்சாளரானது இதெல்லாம் பாவமோ, புண்ணியமோ அவரைத்தான் சேரும்” என்று பல கால கட்டங்களில் குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன்.

கண்ணதாசனது இந்தத் திறந்த மனதை கலைஞர் பல முறை பாராட்டி மகிழ்ந்திருக்கிறார். “”எனக்கும் அவருக்கும் ஆயிரம் மனவேறுபாடுகள், ஆயிரம் கருத்து வேறுபாடுகள் வந்த பிறகும்கூட எந்த ஒரு இடத்திலும் முதன்முறையாக நான்தான் அவரை “கவிஞர்’ என்று அடைமொழியிட்டு அழைத்தேன் என்பதை கண்ணதாசன் என்றைக்கும் சொல்ல மறந்ததில்லை. அப்படி நன்றி உள்ளவர் கண்ணதாசன்.

பல பேர் நன்றியை மறந்துவிடுவார்கள். அதுவும் என்னுடைய வாழ்க்கையில் நன்றி மறந்தவர்கள் ஏராளமானவர்கள். ஆனால் அரசியலில் தனிப்பட்ட முறையில் சில நேரங்களில் அவர் எனக்குப் பகையாக மாறியும்கூட அந்த நன்றியைக் கடைசி வரை மறக்காமல் “என்னை முதன்முதலில் கவிஞர் என்று அழைத்தவர் கருணாநிதிதான்’ என்று கூறுவார் கண்ணதாசன்.

அதை மகிழ்ச்சியான நேரத்தில் மட்டுமல்ல! என்னைத் திட்டி எழுதிய புத்தகத்தில் கூட அதை மூடி மறைக்காமல் மனம் திறந்து அவர் எழுதியிருக்கிறார்” என்று பலமுறை கலைஞர் பரவசப்பட்டதுண்டு.

கவிஞர் மறைந்தபோது கலங்கிய கண்களுடன் அவருக்கு அஞ்சலி செலுத்திய கலைஞர் அவர்கள் எழுதிய இரங்கற்பா அந்த இருவரின் நட்பின் ஆழத்துக்கு சாட்சியாக இன்றும் விளங்குகிறது.

“”என் இனிய நண்பா
இளவேனிற் கவிதைகளால்
இதய சுகம் தந்தவனே! உன்
இதயத் துடிப்பை, ஏன் நிறுத்திக் கொண்டாய்!

தென்றலாக வீசியவன் நீ- என் நெஞ்சில்
தீயாகச் சுட்டவனும் நீ! -அப்போதும்
அன்றிலாக நம் நட்பு திகழ்ந்ததேயன்றி
அணைந்த தீபமாக ஆனதேயில்லை நண்பா!

கண்ணதாசா! என்
எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா!
கவிதை மலர்த் தோட்டம் நீ -உன்னைக்
காலமென்னும் பூகம்பம் தகர்த்துத்
தரை மட்டம் ஆக்கி விட்டதே!

கை நீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம்
கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ!
கல்லறைப் பெண்ணின் மடியினிலும்
அப்படித்தான் தாவி விட்டாயோ;
அமைதிப் பால் அருந்தித் தூங்கிவிட!

இயக்க இசைபாடி களித்த குயில் உன்னை
மயக்க மருந்திட்டுப் பிரித்தார் முள்ளை
தாக்குதல் கணை எத்தனைதான் நீ தொடுத்தாலும்
தாங்கிக் கொண்ட என் நெஞ்சே உன் அன்னை

திட்டுவதும் தமிழில் நீ திட்டியதால்- சுவைப்
பிட்டு என ஏற்றுக் கொண்ட என்னை;
தித்திக்கும் கவித்தமிழா! பிரிவின்
மத்தியிலே ஏன் விட்டுச் சென்றுவிட்டாய்?

அடடா! அந்த இளமைக் கழனியில்
அன்பெனும் நாற்று நட்டோம்!
ஆயிரங் காலத்துப் பயிர் நம் தோழமையென
ஆயிரங் கோடிக் கனவுகள் கண்டோம்!

அறுவடைக்கு யாரோ வந்தார்!
உன்னை மட்டும் அறுத்துச் சென்றார்!
நிலையில்லா மனம் உனக்கு! ஆனால்
நிலை பெற்ற புகழ் உனக்கு!

இந்த அதிசயத்தை விளைவிக்க -உன்பால்
இனிய தமிழ் அன்னை துணை நின்றாள்
என் நண்பா! இனிய தோழா!

எத்தனையோ தாலாட்டுப் பாடிய உன்னை
இயற்கைத் தாய் தாலாட்டித் தூங்க வைத்தாள்!
எத்தனையோ பாராட்டுப் பெற்ற உனக்கு
இயற்கைத் தாயின் சீராட்டுத்தான் இனிக்கிறதா?

எனை மறந்தாய்! எமை மறந்தாய்! உனை
மறக்க முடியாமல் உள்ளமெல்லாம் நிறைந்தாய்!”

என்று கலைஞர் எழுதிய கவிதாஞ்சலி கவிஞரின் பிரிவு எந்த அளவு கலைஞர் அவர்களைப் பாதித்தது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

“”தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் பெயர்களுக்கு இணையாக சுவரொட்டிகளில் வசனகர்த்தாவின் பெயரும் இடம்பெற முன்னோடியாக இருந்தவர் கருணாநிதி.

கதை – வசனம் மு.கருணாநிதி என்று ஒரு படத்தின் விளம்பரம் வந்தாலே அதன் வெற்றிக்கு உத்திரவாத முத்திரை குத்தப்பட்டது” என்று தனது “திரை வளர்த்த தமிழ்’ நூலின் முதல் தொகுதியில் “பேசும் படம்’ ஆசிரியர் ஆசிரியர் திரு. ராம்நாத் அவர்களால் பாராட்டப்பட்ட கலைஞர், “பூம்புகார்’ திரைப் படத்தைத் தொடர்ந்து “மணிமகுடம்’, “மறக்க முடியுமா’, “அவன் பித்தனா’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார்.

அவரது வாழ்க்கையில் அரசியல் -சினிமா என்று வரும்போது அரசியலுக்கே முதலிடம் என்ற திடமான சிந்தனையோடு திரை உலகில் அடி எடுத்து வைத்தவர் என்பதால் 1967-ல் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அவரது கலை உலகப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது என்பது உண்மை.

1967-ல் வெளியான “தங்கத் தம்பி’ “வாலிப விருந்து’ ஆகிய படங்களைத் தொடர்ந்து 1970-ல் “எங்கள் தங்கம்’ திரைப்படம் வெளிவந்தது.

மாடர்ன் தியேட்டர்ஸில் இணைந்த அந்த இரு மாபெரும் கலைஞர்களும் இணைந்து பணியாற்றிய கடைசி திரைப்படம் “எங்கள் தங்கம்’தான். எம்.ஆர். ராதா எம்.ஜி.ஆரைத் துப்பாக்கியால் சுட்டதையும், அதில் அவர் உயிர் மீண்டதையும் குறிக்கும் வகையில்,

“நான் செத்துப் பொழச்சவன்டா-எமனைப்
பார்த்துச் சிரிச்சவன்டா
வாழை போல வெட்ட வெட்ட முளைச்சு
சங்கு போல சுடச்சுட வெளுத்து
வளரும் ஜாதியடா’

என்று தொடங்கும் அப்பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
1972-ல் தனது மகன் மு.க.முத்துவை “பிள்ளையோ பிள்ளை’ திரைப்படத்தின் மூலம் கலையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் கலைஞர். “அஞ்சுகம் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் உருவான இப்படத்தின் சிறப்புக் காட்சியில் பங்கு பெற எம்.ஜி.ஆர் வந்திருந்தார்.

“”புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்தான் என் ஆசான்” என்று மு.க.முத்து பேசியதைப் பற்றி தனது உரையில் குறிப்பிடும்போது, “”துரோணாச்சாரியாரை ஆசானாகக் கொண்டு ஏகலைவன் வில் வித்தையிலே தேர்ச்சிப் பெற்றதைப் போல இங்கே எம்.ஜி.ஆரை ஆசான் என்று கூறிய முத்து அப்படிப்பட்ட புகழையும் சிறப்பையும் பெற வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டார் கலைஞர்.

இறுதியாக மு.க.முத்துவை வாழ்த்திப் பேச வந்த எம்.ஜி.ஆர், “”என்னை ஆசானாக ஏற்றுக் கொண்டிருப்பதாக தம்பி மு.க. முத்து பேசினார். அதைக் கேட்டுப் பெருமைப்படுகிறேன்.

ஆனால் முத்து ஒரு நாள் கூட என்னிடம் நடிப்புக்காக வந்ததில்லை. ஏகலைவன் மானசீகமாகக் குருவை எண்ணி வித்தையில் தேர்ந்தான் என்பது போல என் படங்களைப் பார்த்து அதன்படி நடிக்க விரும்புகிறார் முத்து என்று எண்ணுகிறேன்.

ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்தன்மை- நடிப்பு இருக்கிறது. அதில்தான் செல்ல வேண்டும். முத்து தனக்கென்று தனி வழியை நடிப்பதற்கு வகுத்துக் கொண்டு நடிகராக வளர வேண்டும்” என்று வாழ்த்துகிறேன் என்று பேசினார்.

தி.மு.கழகத்தில் பல நெருக்கடியான சந்தர்ப்பங்களில் எல்லாம் இணைந்து செயலாற்றி பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய வல்லமை படைத்த இரு ஆற்றல் மிகுந்த சக்திகளான கலைஞர் அவர்களுக்கும், எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இடையே இருந்த நெருக்கமான உறவிற்கு குறுக்கே முதல் கோட்டை இழுத்தது மு.க.முத்துவின் திரையுலகப் பிரவேசம்.

Posted in ADMK, Anna, AVM, Biosketch, Chettiyar, Cinema, dialogues, DMK, Express, Faces, Films, Ganesan, History, Incidents, Kalainjar, Kannadasan, Kannadhasan, Kannathasan, Karunanidhi, Kaviarasu, Kavidhai, Kavithai, Life, MGR, Movies, Muthu, people, Poems, Shivaji, Sivaji, Sridhar, Tidbits, Trivia | 1 Comment »

Former TN Assembly Speaker K Rajaram passes away: Anjali, Memoirs

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 10, 2008

மூத்த அரசியல் தலைவர் க. ராசாராம் காலமானார்

சென்னை, பிப். 8: தமிழகத் தின் மூத்த அரசியல் தலைவர்க ளில் ஒருவரான க.ராசாராம் (82) வெள்ளிக்கிழமை மாலை சென் னையில் காலமானார்.
பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகி யோரின் நம்பிக்கையையும், நன்ம திப்பையும் பெற்றவராக ராசா ராம் திகழ்ந்தார்.

ஆரம்பகாலத்தில் பெரியாரின் செயலாளராக இருந்தார்.

தமது கடுமையான உழைப்பால் சட் டப் பேரவை உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும், சட்டப் பேரவைத் தலைவராக வும், மாநில அமைச்சராகவும், தில்லியில் தமிழக அரசின் சிறப் புப் பிரதிநிதியாகவும் நிலை உயர்ந்தார்.

கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவைகளில் இடம் பெற் றிருந்தார். தாம் சார்ந்திருந்த கட் சியினரிடம் மட்டுமின்றி, அனைத்துக் கட்சியினரிடமும் அன்புடன் பழகி, நல்லுறவு கொண்டிருந்தார். வட மாநிலத் தலைவர்கள், பல்வேறு துறைப் பிரமுகர்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்தார்.
ஆத்தூரில் 1926-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி பிறந்தார். பி.ஏ. பட்டம் பெற்றார்.

1962 முதல் 1967 வரையிலும், 1967 முதல் 1971 வரையிலும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1971 முதல் 1976 வரை திமுக ஆட்சியிலும், 1985 முதல் 1989 வரை அதிமுக ஆட்சியிலும் அமைச்சராகப் பதவி வகித்தார்.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 1980 முதல் 1984 வரை சட்டப் பேரவைத் தலைவராக இருந் தார்.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில், 1978 முதல் 1979 வரை தில்லியில் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநி தியாகச் செயல்பட்டார் ராசா ராம். அப்போது, மாநில அரசுக் கும், மத்திய அரசுக்கும் இடையே பாலமாகத் திகழ்ந் தார். 1991-ல் ஜெயலலிதா முதல் வரானபோது, குறுகிய காலம் அமைச்சராக இருந்தார் ராசா ராம்.

தீவிர அரசியலில் இருந்து… அதன்பின்பு, தீவிர அரசியலில் இருந்து விலகி இருந் தார். ஆன்மிக -சமூகப் பணிக ளில் ஈடுபட்டு வந்தார். இலக்கி யம் தொடர்பான நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வந் தார்.

சமீபகாலமாக, அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந் தார். வெள்ளிக்கிழமை மாலை காலமானார்.

எம்.ஜி.ஆருக்கு ஆறுதல் தந்தவர்

சென்னை, பிப். 8: 1980 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. படு தோல்வி அடைந்தபோது எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய ஆறு தலை அளித்தவர் ராசாராம்.
அந்தத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகு திகள், புதுவை மக்களவைத் தொகுதி ஆகிய 40 தொகுதிகளில் இரண்டே தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க. வென்றது. மற்ற தொகுதிகளில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.

மக்களவைத் தேர்தலுடன் இணைத்து பனைமரத்துப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்த லில் அ.தி.மு.க. வேட்பாளரான ராசாராம் வென்றார். அதன்மூ லம் எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய ஆறுதலை அளித்தார்.
மக்களின் நம்பிக்கையை அ.தி.மு.க. இழந்து விட்டது என்று தி.மு.க. அணி விமர்சித்தபோது, அதை எதிர்கொள்ள ராசாரா மின் வெற்றியைக் கேடயமாக அ.தி.மு.க. பயன்படுத்தியது.

“மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் இடம் பெற்ற அணியை ஆதரித்து மக்கள் வாக்களித்தனர். ஆனால், சட்டப் பேரவை இடைத் தேர்தலைப் பொருத்தவரை அ.தி.மு.க.வையே மக்கள் ஆதரித்து உள்ளனர்.

அ.தி.மு.க.வுக்கே மக்களின் ஆதரவு தொடருகிறது’ என அ.தி.மு.க.வினர் அப்போது வாதிட்டனர்.


ரகுபதி ராகவ ராசாராம்!
இரா செழியன்

சென்னை, பிப். 8: நான்கு வாரங்க ளுக்கு முன்னர் க. ராசாராமை தற் செயலாகச் சந்தித்தபொழுது, எப் படி இருக்கிறீர்கள் என்று நான் கேட்டேன். உடனே, “நாமெல்லாம் ஆயிரம் பிறைகளைத் தாண்டியவர் கள், இன்னமும் எவ்வளவு பிறை கள் நமக்கு தோன்றுமோ தெரிய வில்லை!’ என்று வேடிக்கையாகச் சொன்னார் என்று ராசாராமைப் பற்றிய மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் மூத்த நாடா ளுமன்றவாதி இரா. செழியன்.

இளம் வயதில் இருந்தே அவருக் குப் பொது வாழ்வில் பிடிப்பு உண் டாகியிருந்தது. அவருடைய தந் தையார் கஸ்தூரிபிள்ளை நீண்ட காலமாக ஜஸ்டிஸ் கட்சியில் தீவிர மாக விளங்கியவர். பெரியாரும் மற்ற பெருந்தலைவர்களும் சேலம் வந்தால், கஸ்தூரிபிள்ளையின் வீட்டில்தான் தங்குவார்கள். அண் ணாவுடன் சேலம் வட்டாரத்தில் சுற்றுப்பயணம் செய்தால், நிச்சய மாக ராசாராம் வீட்டில்தான் தங்கு வோம். எங்களுடன் சுற்றுப் பய ணத்தில் ராசாராம் இருப்பது கலக லப்பாக இருக்கும்.
1962-ல் கிருஷ்ணகிரியில் திமுக வேட்பாளராக ராசாராம் போட்டி யிட்டு வெற்றி பெற்றார். அடுத்தப டியாக, 1967-ல் சேலத்தில் நின்று மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1962-ல் அண்ணா மாநி லங்களவை உறுப்பினராக வந்து விட்டார். அப்போது மக்களவை யில் இருந்த 8 திமுக உறுப்பினர்க ளும் எப்போதும் அவரைச் சூழ்ந்த படி இருப்போம். ராசாராமைப் பார்த்தால் அண்ணா, “ரகுபதி ராகவ ராசாராம்’ என அழைக்கத் தொடங்கிவிடுவார்.

சபையில் ராசாராம் உற்சாகமா கப் பணியாற்றக்கூடியவர். ஒரு பிரச்னை என்று வந்துவிட்டால், கடுமையாக வாதிடுவார், வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று உரத்த குரலில் தமது கருத்தைச் சொல்லத் தயங்கமாட்டார். நாடா ளுமன்ற மைய மண்டபத்தில் அவ ரின் குரல் பலமாக ஒலித்தபடி இருக்கும்.

உதவி என்றால், ராசாராம் உடன டியாக முன்வந்துவிடுவார். கட்சி சார்பில் ஏதாவது பொறுப்பு கொடுக்கப்பட்டால், அதை முனைந்து நின்று நிறைவேற்று வார். மக்களவையில் கட்சி மாறு பாடு இல்லாமல் எல்லோரிடமும் நட்பும் பரிவும் அவருக்கு இருக் கும். ஆனால், பொது மேடையி லும், நாடாளுமன்றம், சட்டப்பேர வைக் கூட்டங்களிலும் தாம் சார்ந்த கழகக் கொள்கைகளுக்காக வும் திட்டங்களுக்காகவும் தீவிரமா கப் பேசுவார்; போராடுவார்.

திமுகவில் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை யில் அவர் இடம் பெற்றிருந்தார்.

பின்னர் அதைவிட்டு விலகி அதிமு கவில் சேர்ந்தபொழுது எம்.ஜி.ஆர். காலத்தில் சட்டப் பேரவைத் தலைவராகவும், அமைச் சராகவும் பணியாற்றினார். அதன் பிறகு ஜெயலலிதா அமைச்சரவை யிலும் ராசாராம் இடம் பெற்றிருந் தார்.

தில்லியில் இருந்த காலத்தில் “நார்த் அவென்யு’வில் காலையில் தவறாமல் ராசாராம் நடந்து செல் வதைக் காணலாம். அதேபோல், சென்னையில் கடற்கரை நடையி னர் சங்கத்தின் தலைவராக அவர் இருந்தார்.

நடப்பதில் அவர் செலவழித்த நேரத்தைவிட வழியில் நின்று பேசு பவர்களிடம் செலவழிக்கும் நேரம் தான் அதிகம் இருக்கும். 1940-ல் இருந்து 20 ஆண்டுகளாக அவர் திராவிடக் கழகத்தில் பெரியா ருக்கு உற்ற துணைவராக இருந் தார். வெளிநாடுகளுக்கு பெரியார் பயணம் சென்றபோது ராசா ராமை துணைக்கு அழைத்துச் செல்வார்.
திமுகவை அண்ணா தொடங்கி யதும், அவர் மிகுந்த ஈடுபாட்டு டன் செயல்பட்டார். கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பின ராகவும், சட்டப்பேரவை அவைத் தலைவராகவும், அமைச்சராகவும் இருந்த போதும் பெரியாரிடத்தில் அவர் வைத்திருந்த மதிப்பும், மரி யாதையும் குறையாமல் இருந்தது.
கொள்கையின் அடிப்படையில் மற்றவர்களுடன் அவர் மாறுபட் டாலும், மனித நேயத்துடன் தலை வர்களை மதிக்கும் பண்பாடு இருந் தது.
சேலத்தில் இரும்பு உருக்கு ஆலை உருவானதில் முக்கிய நப ராக இருந்தவர் ராசாராம்.

1969-க்கு பிறகு காங்கிரஸில் பிளவு ஏற்பட்டதும் பிரதமர் இந்திரா காந்திக்கு திமுக ஆதரவு தந்தது.

1971 பொதுத் தேர்தலிலும் தமிழ கத்தில் திமுகவின் ஆதரவை இந்தி ராகாந்தி பெற்றிருந்தார்.

அந்த காலகட்டத்தில் ராசாராம், இந்திரா காந்தியை அடிக்கடிச் சந் தித்து 1981-ல் சேலத்தில் ஸ்டெ யின்லெஸ் ஸ்டீல் உற்பத்திக்கான இரும்பு உருக்கு ஆலை அமைப்ப தில் முக்கியப் பங்காற்றினார்.

இதில் அவர் ஆற்றிய பணி பாராட் டிற்கு உரியதாகும்.

ராசாராம் நல்ல நண்பர். எப் போதும் சிரித்துப் பேசும் பண்பு உடையவர். சலியாது உழைத்து ஏற்றுக்கொண்ட பொறுப்பை நிறைவேற்றுபவர். அவருடைய மறைவு தமிழக அரசியலில் ஒரு பெரும் இழப்பு ஆகும். துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத் துக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
——————————————————————————————————————–
எல்லோருக்கும் நல்லவர்

கே. வைத்தியநாதன்


அப்போது க.ராசாராம் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாக தில்லியில் இருந்த நேரம். ஒருபுறம் ஆளும் ஜனதா அரசுடன் இணக்கமாக இருக்கவேண்டிய கட்டாயம். மறுபுறம், எதிர்க்கட்சியாக இருந்த இந்திரா காங்கிரஸ் கட்சியுடன் நல்லுறவைத் தொடர வேண்டிய சூழ்நிலை.

அவருடன் அந்த காலகட்டத்தில் நான் நெருக்கமாகப் பழகவில்லை என்றாலும், பலமுறை சந்திக்க நேர்ந்தது. இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பதால் தில்லியிலுள்ள அத்தனை இடங்களும் அவருக்கு அத்துப்படி. முக்கியமான தலைவர்களும் சரி, அதிகாரிகளும் சரி அவரது நண்பர்களாக இருப்பார்கள்.

ராசாராம் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாக இருந்தபோதுதான், ஒரு மிகப் பெரிய முயற்சி நடந்தது. அப்போது மத்திய அமைச்சராக இருந்த பிஜு பட்நாயக்கின் விருப்பத்துக்கு ஏற்ப, திமுகவையும் அதிமுகவையும் இணைக்கும் முயற்சிக்குத் துணைபுரிந்தவர் ராசாராம்தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த முயற்சியைத் தான் மேற்கொண்டதே, ராசாராம் தனக்குத் துணைபுரிவார் என்கிற நம்பிக்கையில்தான் என்று பிஜுபாபுவே என்னிடம் கூறியிருக்கிறார்.

என் பத்திரிகை நண்பர்களான ராணி மைந்தனும், லேனா தமிழ்வாணனும் அவரிடம் கொண்டிருந்த அளவுக்கு எனக்கு ராசாராமிடம் நெருக்கம் கிடையாது. ஆனால், நான் சாவி வார இதழில் உதவி ஆசிரியராக இருந்தபோது, பல சந்தர்ப்பங்களில் ஆசிரியர் சாவியுடன் அப்போது அமைச்சராக இருந்த ராசாராமை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதிலும் குறிப்பாக அவரது மணிவிழா மலர் ஒன்றை “சாவி’ இதழில் நாங்கள் தயாரித்தபோது அவரை நெருக்கமாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஒருவரது மணிவிழா மலருக்குத் திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்த்துரை என்பது நினைத்துப் பார்க்க முடியுமா? முடியும். அந்த நபர் க.ராசாராமாக இருந்தால்.

“”எந்தப் பதவியில் எப்படியிருக்கிற வாய்ப்பினை எந்த முறையில் அவர் பெற்றாலும், அப்பதவியின் காரணமாக என்றுமே அவர் எல்லோரிடமும் எளிமையாக -அன்பாகப் பழகுகிற அந்தப் பண்பாட்டை எப்போதுமே மறந்ததில்லை” என்றும், “”சேலத்து கஸ்தூரிப் பிள்ளைக் குடும்பத்துப் பிள்ளை என்ற சிறப்பும் -பெரியாரிடம் சுயமரியாதைப் பாடத்தையும், அண்ணாவிடம் தமிழின உணர்வையும் பெற்ற பெருமைக்குரியவர் இனிய நண்பர் இராசாராம் அவர்களுக்கு இன்று அவர் ஏற்றுக்கொண்டுள்ள அடிப்படையின் தொடர்பாக “சஷ்டியப்த பூர்த்தி’ நடைபெறுகிறது” என்றும் கருணாநிதியின் வாழ்த்துச் செய்தியில் இருந்த வரிகளைப் படித்து, அதில் இழையோடிய கேலியையும், எதிரணியில் இருந்தாலும் அவரைப் பாராட்ட முன்வந்த பண்பும் என்னைத்தான் கவர்ந்தது என்று நினைத்தேன். அன்று மாலையில் ஆசிரியர் சாவியை சந்திக்கவந்த அமைச்சர் ராசாராம் அதைப் படித்துவிட்டு சிரித்து ரசித்ததையும், “கலைஞரால் மட்டும்தான் இப்படி எழுத முடியும்’ என்று நெகிழ்ந்ததையும் இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

எம்.ஜி.ஆரிடம் அவருக்கு எந்த அளவுக்கு நெருக்கம் இருந்ததோ அதே அளவு நெருக்கமும், நட்பும், மரியாதையும் திமுக தலைவர் கருணாநிதியிடமும் இருந்தது என்பதை எங்கள் ஆசிரியர் சாவியின்கீழ் என்னுடன் பணிபுரிந்த சி.ஆர்.கண்ணன், ராணி மைந்தன் போன்றவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் க.ராசாராமை சந்தித்தபோது, நான் “தினமணி’ ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருப்பதில் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்த கையோடு, “எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்துடனும், குறிப்பாக காலம்சென்ற ராம்நாத் கோயங்காவுடன் தனக்கிருந்த நட்பையும் நெருக்கத்தையும் விவரித்தார்.

அப்போது முதலமைச்சராக இருந்த அண்ணாவுக்கு அமெரிக்கா செல்வதற்கும், சிகிச்சைப் பெறுவதற்கும் எல்லா உதவிகளையும் செய்தவர்கள் ஜி.பார்த்தசாரதியும், ராம்நாத் கோயங்காவும்தான் என்கிற தகவலை தெரிவித்தார். ராம்நாத் கோயங்காவிடம் அவர் செலவழித்த பணத்தைத் திருப்பிக் கொடுக்கச் சென்றபோது, அதை வாங்க மறுத்துவிட்டார் என்றும், அரசு செலவழித்த தொகையை திமுக கட்சி கொடுத்துவிட்டது என்றும் தெரிவித்தார். தனது மருத்துவச் செலவைக்கூட அண்ணா அரசின் தலையில் கட்டவில்லை என்று கூறி நெகிழ்ந்தார் அவர். அதேபோல, ராம்நாத் கோயங்காவின் ஒரே மகன் பகவான்தாஸ் கோயங்கா காலமானபோது, முதல் நபராக ஆஜரானவர் ராசாராம்தான். “”பெரியவர் ராம்நாத் கோயங்காவுக்கு ஆறுதலும் தேறுதலும் அளித்தபோது அதை நான் அண்ணாவுக்கு அவர் செய்த உதவிக்குச் செய்த நன்றிக்கடன் என்று கருதினேன்” என்று கூறினார்.

நகமும் சதையும்போல என்பார்களே, அதுபோல நெருக்கமாக இருந்தவர்கள் ராசாராமும் எனது எழுத்துலக ஆசான் ஆசிரியர் சாவியும். ராசாராமின் பொன் விழா மலர் கட்டுரையில் தனக்கு ஏன் ராசாராமைப் பிடிக்கிறது என்பதற்கு ஆசிரியர் சாவி சொல்லி இருக்கும் காரணம், ராசாராமின் முழுமையான பரிமாணத்தை நமக்கு உணர்த்தும். “”இருபத்து நான்கு மணி நேரமும் “நான் ஓர் அரசியல்வாதி’ என்ற பிரக்ஞையோடு அவர் இல்லாமல் இருக்கும் காரணத்தாலேயே அவரை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.”

சினிமாத் துறையில் அவருக்குத் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். அவர் பார்க்காத படங்களே இருக்காது. நல்ல திரைப்படமாக இருந்தால் முதல் விமர்சனம் ராசாராமிடமிருந்துதான் வரும் என்பார்கள் அவரது நண்பர்கள். பத்திரிகைத் துறையில் பலர் குடியிருக்கும் வீடுகள் அவரது உதவியுடன் வாங்கியதாக இருக்கும். ஆன்மிகவாதிகள், பகுத்தறிவாளர்கள், இசைக் கலைஞர்கள், இலக்கியவாதிகள் என்று எல்லோருக்கும் நல்லவராக ஒருவர் இருக்க முடியுமா? முடியும். அதை நிரூபித்துக் காட்டியவர் க.ராசாராம்.

Posted in ADMK, AIADMK, Anjali, Assembly, Biosketch, DMK, EVR, Faces, JJ, K Rajaram, Ka Rajaram, Kalainjar, Karunanidhi, KK, Life, Memoirs, MGR, Minister, MK, people, Periaar, Periar, Periyaar, Periyar, Rajaram, Rasaram, Speaker, TN | Leave a Comment »

MG Ramachandran: Politics, Cinema, Personality – MGR Biosketch by Panruti Ramachandhran

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

மறைந்தும் மறையாத தலைவர்

பண்ருட்டி ராமச்சந்திரன்

எந்தத் தலைவர்களும் பதவிக்குச் சென்றால் செல்வாக்கு குறைவதுதான் இயல்பு. ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை பதவிக்குச் சென்ற பிறகும்கூட, அவர் செல்வாக்கு வளர்ந்த வண்ணம்தான் இருந்தது.

அவர் ஆட்சியில் இருந்தவரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. அவர் மறைந்து இருபது ஆண்டுகள் சென்ற பிறகும்கூட, அவரது செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை அண்மையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

இருந்தபொழுது மட்டுமல்ல, மறைந்த பிறகும் மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை எவ்வாறு எம்.ஜி.ஆர். பெற்றார் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியதாகும். அவருக்கும் மக்களுக்கும் இருந்த பிடிப்பு மகத்தானது. அவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காலத்தில் இதை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

ஒருமுறை சென்னையிலிருந்து மதுரைக்கு காரில் சென்றோம். திருச்சியை அடைந்த பிறகு எம்.ஜி.ஆர். ஒரு பரீட்சையில் இறங்கினார். காரில் போகும்பொழுதே தொப்பியையும், கறுப்புக் கண்ணாடியையும் கழற்றி வைத்துவிட்டார். வழிநெடுக கூடியிருந்த மக்கள் எம்.ஜி.ஆர். எங்கே என்று தேடினார்களேயொழிய ஆர்ப்பரிக்கவில்லை. பிறகு மேலூரை நெருங்கியபொழுது தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்து கொண்டார். உடனே வழக்கம்போல் இருபுறமும் மக்கள் ஆரவாரம் செய்தனர். அவர் உடனே என்னிடத்தில் “”என்னை விட என் தொப்பிக்கும், கறுப்புக்கண்ணாடிக்கும் தான் மரியாதைபோலும்” என்று சொல்லி சிரித்தார்.

“புகழ்பெற்ற நடிகராக விளங்குவதால் மக்கள் செல்வாக்கா’ என்று கேட்டேன். அதற்கு அவர், “நடிகர்களாகயிருந்தால் மக்களுக்கு எளிதில் அடையாளம் தெரியும். ஆனால் மக்களின் மரியாதையைப் பெறுவதன் மூலமே செல்வாக்கைப் பெற முடியும். அதற்கு மக்கள் நம் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்கவேண்டும்’ என்றார்.

நடிகர்கள் நாடாள ஆசைப்படுவது நியாயமா என்று கேட்பவர்களுக்கு இதுவே சரியான பதில்.

எம்.ஜி.ஆர். மக்களை எவ்வாறு நேசித்தாரோ, அதேபோல் மக்களும் அவரை நேசித்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. குறிப்பாக அவர் நோய்வாய்ப்பட்டபொழுது ஜாதி, மதம் பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் இறைவழிபாடு நடத்தியது இதுவரை வரலாறு காணாத காட்சியாகும். “”நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற” என்ற பாட்டு ஒலி நாடு முழுதும் கேட்காத நாளில்லை.

1984-ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கிறாரா? உணர்வுடன் இருக்கிறாரா? என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் தமிழக மக்கள் சிறிதும் தயக்கமின்றி அவரை வெற்றிபெறச் செய்தனர்.

அமைச்சரவைக் கூட்டத்திலும்கூட எந்தத் திட்டங்கள் ஆனாலும் பட்ஜெட்டுகள் போடுவது என்றாலும் பாமர மக்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று பார்த்தே ஒப்புதல் தருவார். “மத்திய, மாநில அரசுகளுக்கு வரவு, செலவில் பற்றாக்குறை ஏற்பட்டால் மக்களின் மீது வரிபோடலாம் அல்லது வங்கிகள் மூலம் கடன் பெறலாம். ஆனால் குடும்பஸ்தனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அவன் எங்கே போவது? ஆகவே அரசின் திட்டங்கள் பாமர மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வகையில் அமைய வேண்டும்’ என்பார்.

அரிசி விலையையும், பஸ் கட்டணத்தையும் உயர்த்த ஒப்புக்கொள்ள மாட்டார். குடிசைக்கு ஒரு விளக்கு திட்டம், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், சிறு விவசாயிகளுக்கு பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் போன்ற பல திட்டங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. மக்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை. அரசின் நிதிநிலை சரியானால் போதும் என்ற கொள்கையை அவர் ஏற்றுக்கொண்டதே இல்லை. அதனாலேயே அவரது ஆட்சி ஏழைகளின் ஆட்சியாகத் திகழ்ந்தது.

ஒருமுறை அறிஞர் அண்ணாவுடன் எம்.ஜி.ஆர். சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்றார். இது எம்.ஜி.ஆரே சொன்னது. அண்ணா வழக்கம்போல் காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்தார். எம்.ஜி.ஆர். பின் சீட்டிலிருந்தார். பெரம்பலூருக்கு அப்பால் சென்றபொழுது காரை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அப்பொழுது அந்தப் பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் காரிலிருந்த கொடியைப் பார்த்துவிட்டு நேராக முன்சீட்டில் உட்கார்ந்து இருந்த அண்ணாவிடம் அவர் அண்ணா என்று தெரியாமல், எம்.ஜி.ஆர். வந்திருக்கிறாரா என்று கேட்டார்கள். அதற்கு அறிஞர் அண்ணா கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் இதோ பின்னால் இருக்கிறார் என்று அடையாளம் காட்டினார்.

எம்.ஜி.ஆர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனாராம். அண்ணா எத்தகைய தலைவர் என்பதையும் தன்னோடு இருப்பவர்கள் தன்னைவிடச் செல்வாக்காக இருக்கும்பொழுது பொறாமைப்படுவதற்குப் பதிலாகப் பெருமைப்பட்டவர் என்றும் குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆர். இறுதிவரை அண்ணா பெயரை உச்சரிக்காமல் எதையும் செய்ததில்லை. ஒரு தலைவருக்கு இலக்கணம் அறிஞர் அண்ணா என்றால், தகுதியான வாரிசுக்கு இலக்கணம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்தான்.

எம்.ஜி.ஆர். இளமையில் வறுமையைச் சந்தித்தவர். பொதுவாக, வறுமை கொடிது. இளமையில் வறுமை அதைவிடக் கொடியது. தனது அண்ணனும், தானும் சிறுவயதில் கும்பகோணத்தில் இருந்தபொழுது மூன்று நாள்கள் பட்டினி கிடந்ததாகவும் பரிதாபப்பட்டு எதிர்வீட்டைச் சேர்ந்த ஒரு தாய் கொஞ்சம் அரிசியை புரட்சித்தலைவரின் தாயிடம் தந்து குழந்தைகளுக்காவது கஞ்சி காய்ச்சி கொடுக்கும்படிச் சொன்னாராம்.

அன்று அந்த எதிர்வீட்டுத் தாய் செய்த உதவியால் தான் இன்று உங்களுக்கு ஒரு எம்.ஜி.ஆர். கிடைத்துள்ளார் என்று அவரே கூட்டங்களில் பேசியுள்ளார். இந்த அனுபவத்தால் தான் தமிழ்நாட்டில் பிறக்கும் எந்த குழந்தையும் பட்டினி கிடக்கக்கூடாது என்றும் ஒருவேளையாவது உணவுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கருதியதால்தான் சத்துணவுத்திட்டம் உதயமாயிற்று.

சத்துணவுத்திட்டம் கொண்டு வரவேண்டுமென்ற அவரது கருத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் கூட சில அமைச்சர்களுக்கு சந்தேகம் தீரவில்லை. இத்திட்டத்தால் பணம் செலவாகுமே தவிர பயன் இருக்காது என்றே பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் ஊழல் பெருகும் என்றும் சொன்னார்கள். ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்தியே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

மூக்கு என்று இருந்தால் சளிபிடிக்கத்தான் செய்யும்; ஒரு திட்டம் என்றால் சேதாரங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காகத் திட்டத்தைக் கைவிட வேண்டியது இல்லை என்று தீர்மானித்தோம்.

இந்தத் திட்டம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டபொழுது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் சத்துணவுத் திட்டத்திற்குப் பதிலாக ஏழைகளின் குடும்பத்திற்கு குறிப்பிட்ட தொகையை உதவியாக வழங்கலாம் என்றார். அப்படி வழங்கினால் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைப்பதற்கான உத்தரவாதம் இல்லையே என்று அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் அந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மூன்று நன்மைகள் ஏற்பட்டன. ஒன்று அனைத்து பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பதால் சமத்துவம் ஏற்பட்டது. இரண்டு, படிக்கிற காலத்தில் பள்ளியில் பிள்ளைகளுடைய இடைநிற்றல் தவிர்க்கப்பட்டது. மூன்றாவது, சவலைப்பிள்ளைகள் என்ற நிலையை மாற்ற இன்று முட்டை வழங்குவது வரை அது சத்துணவாக ஆக்கப்பட்டுள்ளது.

“”ஆளும் வளரணும், அறிவும் வளரணும் – அதுதாண்டா வளர்ச்சி”, என்பது எம்.ஜி.ஆரின் படத்தில் வரும் பாட்டு.

நல்ல சிந்தனையோடு நாட்டு மக்களுக்குச் செய்யப்படும் நற்காரியங்களுக்குத் தெய்வமும், மடியை வரிந்து கட்டிக்கொண்டு முன்னே ஓடிவந்து துணைசெய்யும் என்பார் திருவள்ளுவர். 1983-ம் ஆண்டு ஐ.நா. சபைக்கு நான் சென்றபொழுது எம்.ஜி.ஆர். பெயரை ஐ.நா. மன்றத்தில் பதிவு செய்ய வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால் இந்தியாவின் சார்பில் சென்றதால் ஒரு மாநில முதலமைச்சர் பெயரைப் பதிவு செய்ய முடியாது என்று எனக்குத் தெரிவித்துவிட்டனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில் ஐ.நா. சபையில் உலக உணவுதினம் கொண்டாட வேண்டி வந்தது. அதில் அப்பொழுது இருந்த 101 அணிசாரா நாடுகளின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

உலக உணவு தினத்தில் அணிசாரா நாடுகள் சார்பில் இந்தியா கலந்துகொள்ள அழைக்கப்பட்டது. இந்தியாவின் சார்பில் ஐ.நா.சபையில் கலந்துகொண்ட எங்களுக்குத் தலைவராக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இருந்தார். அடுத்த நிலையில் அன்றைய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் இருந்தார். இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் நான் இருந்தேன்.

உலக உணவு தினத்தன்று இந்திரா காந்தியும், நரசிம்மராவும் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர். ஆகவே, இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் உணவு தினம் என்பதால் சத்துணவுத் திட்டத்தைப்பற்றி ஐ.நா. சபையில் விரிவாகப் பேசினேன். உலக நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் அதை கைதட்டி வரவேற்றனர். எம்.ஜி.ஆர். பெயரும் ஐ.நா. சபையில் இடம்பெற்றது.

முயற்சி என்னுடையது என்றாலும் அதற்குரிய வாய்ப்பு இயற்கையாக அமைந்தது புரியாத புதிர் தானே!

(கட்டுரையாளர்: அவைத்தலைவர், தேமுதிக)

Posted in Actors, ADMK, AIADMK, Anjali, Anna, Assembly, Biography, Biosketch, Children, Cinema, CM, DMDK, DMK, dynasty, EVR, Films, Food, Free, Freebies, Heartthrobs, Hero, Heroes, Incidents, Indhra, Indira, Indra, Iruvar, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kids, King, KK, Life, Manifesto, Meals, Memoirs, MGR, Midday Meals, Monarchy, Movies, Notes, Nutrition, Panruti, Periyar, Personality, Politics, Poor, PVNR, Ramachandhran, Ramachandran, Ramachanthiran, Ramachanthran, Rao, UN, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth | Leave a Comment »

Tamil Actor Sathyaraj – Biosketch in Dhinathanthi

Posted by Snapjudge மேல் திசெம்பர் 12, 2007

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(811)
சத்யராஜ் சினிமா தயாரிப்பு நிர்வாகி ஆனார்

நாடகத்தில் நடித்துக்கொண்டே சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு தேடினார் சத்யராஜ். ஆனால் கிடைத்ததோ தயாரிப்புத் துறையில் நிர்வாகம் பார்க்கும் வாய்ப்பு!

இதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:-

“கோமல் சுவாமிநாதன் இயக்கிய “ஆட்சி மாற்றம்”, “சுல்தான் ஏகாதசி”, “கோடுகள் இல்லாத கோலங்கள்” என்ற மூன்று நாடகங்களிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த மூன்று நாடகத்திலும் நடித்ததற்காக எனக்கு நாடகம் ஒன்றுக்கு பத்து ரூபாய் வீதம் 30 ரூபாய் தந்தார்கள்.

இந்த 30 ரூபாயில் 10 ரூபாய்க்கு சுவீட் வாங்கினேன். என்னை நாடகத்தில் சேர்த்துவிட்ட நடிகர் சிவகுமார் அண்ணன் வீட்டுக்கு போனேன். நடிப்புக்கு கிடைத்த என் முதல் சம்பளத்தில் அவர் வீட்டுக்கு சுவீட் வாங்கிப்போக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இப்படிச் செய்தேன்.

நான் எம்.ஜி.ஆர். ரசிகன் அல்லவா! எம்.ஜி.ஆர். கொடுத்து கொடுத்து சிவந்த கரம் கொண்டவர். அதனால் 5 ரூபாயை, தர்மத்துக்கு கொடுத்தேன். மீதி பணத்தில் நண்பர்களுடன் சினிமாவுக்கு போனேன்.

சூர்யா, கார்த்தி

நான் சிவகுமார் அண்ணன் வீட்டுக்கு போன காலகட்டத்தில் சூர்யா, கார்த்தி இருவருமே குழந்தைகள். இந்தக் குழந்தைகளும் வளர்ந்து இன்றைக்கு நடிக்க வந்துவிட்டார்கள்! கார்த்தி நடிக்க வரும் முன்பாக ஒரு வேலையில் சேர்ந்திருக்கிறார். முதல் மாத சம்பளத்தில் அவர் எங்கள் வீட்டுக்கு `சுவீட்’ வாங்கிக்கொண்டு வந்தார்! அப்போதுதான் என் முதல் சம்பளத்தில் நான் அவர்கள் வீட்டுக்கு `சுவீட்’வாங்கிப்போனதை சிவகுமார் அண்ணன் தனது பிள்ளைகளிடம் சொல்லியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

நாடகத்தில் அவ்வப்போது 10 ரூபாய் சம்பளம் வந்து கொண்டிருந்தது. பணம் குறைவாக இருக்கிறதே என்று நான் கவலைப்படவில்லை. அண்ணன் மாதம்பட்டி சிவகுமார் கொடுத்த பணம்தான் இருக்கிறதே. அதை முழுவதுமாக செலவழிக்க நாளாகும். அந்த அளவுக்கு, சிக்கனமாகவே என் செலவுப் பட்டியலை வைத்துக்கொண்டேன்.

விவேகானந்தா பிக்சர்ஸ் என்ற கம்பெனி சார்பில் “ரோசாப்பூ ரவிக்கைக்காரி” போன்ற படங்களை தயாரித்த திருப்பூர் மணி, அண்ணன் மாதம்பட்டி சிவகுமாரின் நண்பர். அவரது மைத்துனர் கே.பாலு, அந்த நாட்களில் என் நண்பராகி விட்டார். பின்னாளில் இவர் பிரபு நடிக்க மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த “சின்னத்தம்பி” படத்தை தயாரித்தார். பாலு என்னிடம் சினிமா வாய்ப்பு வரும்போது நிச்சயம் நடிக்க வைப்பதாக சொன்னார்.

வாடகை அறை

அப்போது நான் சென்னை தி.நகர் உஸ்மான் ரோட்டில் மாதம் 85 ரூபாய் வாடகையில் ஒரு அறையில் இருந்தேன். என் சைசுக்குதான் அந்த அறை இருக்கும். காலை முழுசாக நீட்டி படுக்க முடியாத அளவுக்கு இருந்தது அந்த அறை.

ஒருநாள் என்னைப் பார்ப்பதற்காக என் தங்கை கல்பனாவும், தங்கை கணவர் அர்ஜ×ன் மன்றாடியாரும் அங்கே வந்துவிட்டார்கள். என் அறையை பார்த்த இருவருமே கண் கலங்கிவிட்டார்கள்.

அவர்கள் அப்படி கலங்கியதற்கு காரணம் இருக்கிறது. கோயமுத்தூரில் உள்ள எங்கள் வீடு 5 கிரவுண்டு கொண்டது. ஊரில் இருந்த செல்வாக்குக்கு தொழில் துறையில் ஈடுபடலாம். உறவு முறையில் யாரைக் கேட்டாலும் தொழில் தொடங்க உதவுவார்கள். இப்படி செல்வமும் செல்வாக்குமாய் இருக்க வேண்டியவன் இப்படி எங்கோ ஆறு அடி ரூமுக்குள் அரைகுறையாக முடங்கிக் கிடக்கவேண்டுமா என்ற கவலை அவர்களுக்கு.

என் சித்தி இந்திராணி (அம்மாவின் தங்கை) சித்தப்பா துரைராஜ். ஊரில் சித்தி குடும்பமும் எங்களுடன்தான் இருந்தது. அம்மா மாதிரியே என் மேல் அன்பு காட்டி வளர்த்தவர் சித்தி. நான் சென்னையில் சரியான இருப்பிடம்கூட இல்லாமல் சிரமப்படுவதாக சித்தப்பாவுக்கு சொல்லப்பட்டதும், அவர் உடனே சென்னைக்கு வந்து விட்டார். “கோவைக்கு வா! உனக்கு தொழில் தொடங்க ஏற்பாடு செய்கிறேன்” என்று அழைத்தார். நான்தான் சித்தப்பாவிடம் பிடிவாதமாக, “நிச்சயம் சினிமாவில் எனக்கு வாய்ப்பு வரும். அதுவரை முயற்சி செய்கிறேன்” என்று சொல்லிவிட்டேன்.

ஓவியப்போட்டி

நாடகத்திலும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் எழுத்தாளர் மணியன் நடத்திய பத்திரிகையில் சிறுகதைக்கு முக ஓவியப்போட்டி அறிவித்தார்கள். ஓரளவு நல்ல முகவெட்டு கொண்டவர்களை மாடலாக ஏற்றுக்கொண்டு அந்த முகங்களை தொடர் கதைக்குள் கொண்டு வருவார்கள். இப்படி பத்திரிகை மூலம் பிரபலமாகும் முகம், நாளடைவில் சினிமா வாய்ப்புக்கும் உரியதாகி விடும்.

சரி, இதாவது நடக்கட்டும் என்று என் மாதிரியே நல்ல வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருந்த நண்பர் ராஜ்மதனும் நானும் அந்த `ஓவிய முகத் தேர்வுக்கு போனோம். (இந்த ராஜ்மதன் ரஜினிக்கும் மிகச்சிறந்த நண்பர்) ஏராளமான பேர் திரண்டு வந்திருந்த இந்த போட்டியில் நாங்கள் முதல் ரவுண்டிலேயே ஓரம் கட்டப்பட்டோம்.

வெறுத்துப்போயிற்று எனக்கு. ஒரு பத்திரிகையில் படம் வரையக்கூட உதவாத நம் முகத்தை வைத்து சினிமாவில் எப்படி நடிக்கப்போகிறோம் என்றுகூட தோன்றியது. என்றாலும் சினிமா முயற்சியில் முன்வைத்த காலை பின்வைப்பதில்லை. முயன்று பார்ப்போம். ஆனது ஆகட்டும் என்ற மனநிலையில் சினிமா வாய்ப்புக்கு முயன்று கொண்டிருந்தேன்.

தயாரிப்பு நிர்வாகி

திருப்பூர் மணி விவேகானந்தா பிக்சர்ஸ் பட நிறுவனம் தொடங்கி சிவகுமாரை கதாநாயகனாக்கி “கண்ணன் ஒரு கைக்குழந்தை” படம் எடுக்க இருந்தார். படத்தில் அவருக்கு ஜோடி சுமித்ரா. சுருளிராஜன் – மனோரமாவும் படத்தில் இருந்தார்கள்.

இந்த படத்துக்கு என்னை புரொடக்ஷன் வேலை பார்க்கச் சொன்னார், திருப்பூர் மணி. சினிமாவுக்கும் எனக்கும் அதுவரை இருந்த இடைவெளியை இந்த வேலை குறைக்கும் என்ற நம்பிக்கையில் வேலையை ஒப்புக்கொண்டேன்.

இந்த சமயத்தில் பிரபல கேமிரா மேனாக இருந்த என்.கே.விஸ்வநாதனிடம் கே.பாலு உதவியாளராகச் சேர்ந்தார். பாலு மூலம் எனக்கு என்.கே.விஸ்வநாதன் சாரின் அறிமுகம் கிடைத்தது. அறிமுகம், பிறகு நட்பாகியது. அவரிடம், “நீங்க ஒர்க் பண்ற படங்களில் ஏதாவது ரோல் இருந்தா சொல்லுங்க” என்று கேட்டுக்கொண்டேன். `சரி’ என்றவர், “எதற்கும் உங்களை பல கோணங்களில் படம் எடுத்து போட்டோ ஆல்பம் ரெடி செய்து கொள்ளுங்கள். டைரக்டர் யாராவது அழைக்கும்போது உங்களை வெளிப்படுத்த இந்த ஆல்பம் உதவும்” என்றார்.

பிரபல கேமிராமேன் இப்படி சொன்னால் போதாதா? உடனே “ஸ்டில்ஸ்” ரவியிடம் விஷயத்தை சொல்லி, படங்கள் எடுத்தேன். அவர் போட்டுக்கொடுத்த படங்களை பார்த்ததும் நொந்துபோனேன். புகைப்பட கோணத்தில் என் படம் படுகேவலமாக இருந்தது. இந்த படங்களை சினிமா கம்பெனியில் கொண்டு போய் காட்டினால் கிடைக்கிற வாய்ப்பும் கிடைக்காது என்பது தெளிவாக புரிந்தது. அதனால் அந்தப் படங்களை தூர எறிந்துவிட்டு, பட சான்ஸ் தேடுவதை தொடர்ந்தேன். ஒருவேளை என் உயரம், அதற்கான பர்சனாலிட்டியை பார்த்துகூட ஒரு வாய்ப்பு வரலாம். போட்டோவைக் கொடுத்து, அதை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்!

சட்டம் என் கையில்

டைரக்டர் டி.என்.பாலு அப்போது “சட்டம் என் கையில்” என்ற படத்தை இயக்கினார். கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த படம். அந்த படத்தில் ஒரு சின்ன ரோல் இருப்பதாக கேமராமேன் என்.கே.விஸ்வநாதன் சார் என்னை அழைத்துப் போனார்.

அப்போது ஏவி.எம். ஐந்தாவது புளோரில் “சட்டம் என் கையில்” படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கமல் – ஸ்ரீபிரியா நடிக்க ஒரு பாடல் காட்சியை எடுத்துக் கொண்டிருந்தார், டைரக்டர்.

பாடல் காட்சியை முடித்து விட்டு என்னை அழைத்தார், டி.என்.பாலு. அப்போதுதான் கமலஹாசனை முதன் முதலாக நேரில் பார்த்தேன். “இவ்வளவு அழகாய் இருக்கிறாரே. இவரெல்லாம் நடிக்கும்போது நாமும் ஊரில் இருந்து நடிக்க வந்திருக்கிறோமே!” என்று எனக்குத் தோன்றியது.

என்னைப் பார்த்த டைரக்டர், போட்டோ எடுத்துப் பார்க்கவில்லை (பார்த்திருந்தால் அவ்வளவுதான்) என்னிடம், “கார் ஓட்டத்தெரியுமா?” என்று கேட்டார். ஊரில் கார் ஓட்டக் கற்றுக் கொண்டிருந்ததால் “தெரியும் சார்” என்றேன்.

அப்போதே மனசுக்குள் ஒரு பயம். “நடிக்கத் தெரியுமா?” என்று கேட்காமல், “கார் ஓட்டத் தெரியுமா?” என்று கேட்கிறாரே, என்ன அர்த்தம்? ஒருவேளை படக்கம்பெனிகளுக்கு கார் ஓட்டும் டிரைவராக தேர்வு செய்யப் போகிறாரோ என்னவோ என்று உள் மனதில் உதறல் ஆரம்பித்தது.

ஆனால் டைரக்டர் அடுத்த கேள்வியாக “பைட் (சண்டை) தெரியுமா?” என்று கேட்டு உடனடியாக என் டென்ஷனை குறைத்தார். உடனே நான் “நான் `கராத்தே’யில் பிளாக் பெல்ட் சார்” என்றேன்.

உண்மையில் புரூஸ்லி நடித்து அப்போது வெளிவந்திருந்த “எண்டர் தி டிராகன்” படத்தை பார்த்த பிறகு, எல்லாருக்கும் வருகிற `கராத்தே’ ஆசை எனக்கும் வந்தது. அதனால் ஒரு ஆறு மாத காலம் கராத்தே கற்றுக்கொண்டேன். ஆனால் `பெல்ட்’ எல்லாம் வாங்கவில்லை. அந்த வகையில் டைரக்டரிடம் சொன்னது மட்டும் பொய்.

“டயலாக் பேசுவியா?” டைரக்டரின் அடுத்த கேள்வி.

“பேசுவேன் சார்!”

“சின்னதாய் ஒரு வில்லன் வேஷம் இருக்கு. நாளைக்கு காலையில் வந்துரு” என்றார், டைரக்டர்.

நாளை முதல் சினிமாவில் நடிகனாகப் போகும் சந்தோஷத்தில் அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

—————————————————————————————————–

திரைப்பட வரலாறு 812
கமல் நடித்த “சட்டம் என் கையில்”:
வில்லனாக சத்யராஜ் அறிமுகம்

டி.என்.பாலு டைரக்ட் செய்த “சட்டம் என் கையில்” படத்தில் கமலஹாசனுக்கு வில்லன் ஆனார், சத்யராஜ். இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைத்தார்.

முதல் படத்தில் அறிமுகமானது குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

“டைரக்டர் டி.என்.பாலு என்னைப் பார்த்த பார்வையில் நான் வில்லனாக தெரிந்திருக்கிறேன். மறுநாள் நான் அவரை சந்தித்தபோது, ”விக்கி என்றொரு வில்லன் கேரக்டர் இருக்கிறது. சின்ன கேரக்டர்தான். பண்ணுங்கள்” என்றார்.

நானும் நடிக்கும் நேரத்துக்காக காத்திருந்தேன். முதல் நாள் எனக்கு டயலாக் எதுவும் இல்லை. மலையில் இருந்து ஓடிவருகிற மாதிரி எடுத்தார்கள்.

முதல் வசனம்

இந்தப்படத்தில் டைரக்டர் எனக்கு கொடுத்த முதல் வசனம் “எனக்கு இப்ப நேரம் நல்லா இருக்கு.”

வில்லனுக்குப் போய் இப்படியொரு டயலாக்கா என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். கதைப்படி, நான் செய்கிற கொலைக்கு கதாநாயகன் மாட்டிக் கொள்வார். அதனால், “இப்ப எனக்கு நேரம் நல்லா இருக்கு. அதனால்தான் நான் செய்த கொலைக்கு அவன் மாட்டிக்கிட்டான்” என்ற வசனத்தை தந்து பேசச் சொன்னார்கள்.

ஏற்கனவே டைரக்டர் டி.என்.பாலு என்னிடம், “பைட் தெரியுமா?” என்று கேட்டபோது, “தெரியும்” என்று சொல்லிவிட்டேன். நடிக்க வந்த மூன்றாவது நாளே சென்னை வளசரவாக்கத்தில் இருந்த `ஜெய்’ தோட்டத்தில் சண்டைக்காட்சி எடுப்பதாகச் சொன்னார்கள். அப்போதே எனக்கு உள்ளுக்குள் உதறல் ஆரம்பித்து விட்டது. நமக்குத்தான் `சினிமா பைட்’ தெரியாதே!

அதனால், ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா சங்கரை சந்தித்து உண்மையை சொல்லி விட்டேன். அவரும் பெருந்தன்மையுடன் தனது அசிஸ்டெண்டை என்னுடன் மெரினா பீச்சுக்கு அனுப்பி வைத்தார். அந்த உதவியாளர் எனக்கு பீச் மணலில் `சினிமா பைட்’ கற்றுக் கொடுத்தார். அதாவது கதாநாயகனிடம் அடிவாங்குவது போல் நடிக்கும்போது அடிவாங்காமல் எப்படி தப்பிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார்! அப்போதுதான், ஸ்டண்ட் காட்சியில் `டைமிங்’ எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டேன்.

கமலுடன் சண்டைக்காட்சி

மறுநாள் படப்பிடிப்பில் கமல் சாருடன் சண்டைக்காட்சி. முந்தின நாள் பெற்ற பயிற்சி உதவியாக இருந்தது.

பொதுவாக, சண்டைக் காட்சியின்போது `வாட்ச்’ போட்டு நடிக்க மாட்டார்களாம். அது எனக்குத் தெரியாது. சண்டைக்காட்சி முடிந்த நேரத்தில், நான் போட்டிருந்த 600 ரூபாய் வாட்ச் உடைந்து போய்விட்டது! கமல் சார் இதைப் பார்த்ததும் `அடடா! உங்களிடம் முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். கம்பெனி வாட்சை போட்டுக்கொண்டு சண்டைக்காட்சியில் நடித்திருக்கலாமே” என்றார்.

இப்படி 600 ரூபாய் வாட்சை உடைத்துவிட்டு, நடிப்புக்கு 500 ரூபாய் `செக்’ வாங்கினேன். 1975 வாக்கில் 500 ரூபாய் என்பது பெரிய தொகை. அந்த செக்குக்காக பாங்கியில் கணக்கு ஆரம்பித்தேன். முதல் சம்பளத்தில் அம்மா, சின்னம்மாவுடன் என் 5 தங்கைகளான கல்பனா, ரூபா, நந்தினி, அகிலா, அபராஜிதா ஆகியோருக்கும் புடவைகள் எடுத்துக் கொடுத்தேன்.

100-வது நாள்

முதல் படமே நூறாவது நாள் கண்டதில் எனக்கும் மகிழ்ச்சி. இந்த விழாவை சென்னை நிïஉட்லண்ட்ஸ் ஓட்டலில் கொண்டாடினார்கள். கலைஞர் தலைமை தாங்கி விருதுகள் வழங்கினார். எனக்கும் கேடயம் கிடைத்தது.

இதற்கிடையே, தயாரிப்புத் துறையில் நான் பணியாற்றிய “கண்ணன் ஒரு கைக்குழந்தை” படம் ரிலீஸ் ஆயிற்று. இந்தப் படத்தில் சிறு வேடத்தில் நடித்தும் இருந்தேன். அதனால் டைட்டில் கார்டில் நடிகர்கள் பட்டியலில் `நடிகர் சத்யராஜ்’ என்று வரும். டெக்னிஷியன் பட்டியலில் அலுவலக நிர்வாகம் என்ற இடத்தில் ரெங்கராஜ் பி.எஸ்.சி. என்று வரும்.

பெயர் மாற்றம்

பெற்றோர் எனக்கு வைத்த பெயர் ரெங்கராஜ்தான். சினிமாவில் அறிமுகமாகும் போது, எனக்கு நானாக வைத்துக்கொண்ட பெயர்தான் சத்யராஜ். அண்ணன் மாதம்பட்டி சிவகுமாரின் மகன் பெயர் சத்யன். (இப்போது சத்யனும் நடிகராகி விட்டார்) அந்த `சத்ய’னில் இருந்து `சத்ய’வையும் ரெங்கராஜில் இருந்து `ராஜை’யும் எடுத்துக்கொண்டு சத்யராஜ் ஆகிவிட்டேன்!

நடிகனாக சத்யராஜ் என்றிருந்தாலும், அலுவலக நிர்வாகம் என்ற இடத்தில் ஒரிஜினல் பெயரை கல்வித் தகுதியுடன் போட விரும்பினேன்.

இப்படி ஒரு படத்தில் 2 பெயரில் தனித்தனி பிரிவில் பெயர் வந்தது அனேகமாக எனக்கு மட்டும்தான் இருக்கும்.

“சட்டம் என் கையில்” படம் நன்றாக ஓடியும், தொடர்ந்து எனக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. நடிகர் சிவகுமார் சிபாரிசில் “முதல் இரவு”, “ஏணிப்படிகள்” போன்ற படங்கள் கிடைத்தன. டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் தனது “காதலித்துப்பார்” என்ற படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

“முதல் இரவு” படத்தை தயாரித்த கோவை செழியன் எனக்கு தூரத்து உறவினர். ஆனாலும் நடிகர் சிவகுமார் அண்ணன்தான் என்னை படக்கம்பெனிக்கு அழைத்துச் சென்று வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். இதெல்லாம், திருப்பூர் மணி ஆபீசில் தங்கிக்கொண்டு, தயாரிப்பு வேலையையும் பார்த்துக் கொண்டிருந்தபோது நடந்தது.

டைரக்டர் பி.மாதவன் அப்போது “தங்கப்பதக்கம்”, “வியட்நாம் வீடு” என்று சிவாஜி படங்களை இயக்கி, பெரிய பெயரோடு இருந்தார். அவர் சிவகுமார் – ஷோபா நடித்த “ஏணிப்படிகள்” படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் நடிகர் சிவகுமார் அண்ணன் உபயத்தில் ஷோபாவின் அண்ணன் வேடம் எனக்கு கிடைத்தது. அதுவரை நான் நடித்த படங்களில், என்னை `பளிச்’சென்று வெளிப்படுத்திய படம் இதுதான்.

என்றாலும், இந்தப்படத்தில் நடித்த போது இன்னொரு காரியமும் செய்தேன். படத்தின் வில்லன் ஜெய்கணேஷின் “பைக்” சேஸிங் காட்சியில், அவருக்கு நான் `டூப்’ ஆக நடித்தேன். ஏற்கனவே கார் ஓட்டிய அனுபவம் எனக்கு இருந்ததால், இந்த `பைக்’ சேஸிங் சிறப்பாக அமைந்தது.

போராட்டம்

நான் பல போராட்டங்களைக் கடந்துதான் நடிகனானேன். வந்த பிறகும் கிடைத்ததோ வில்லத்தனமான வேடங்களே. அதிலும் `கொஞ்ச நேர’ வில்லன்தான் அதிகம்.

`இப்படியான கேரக்டர்களில் நடிக்கத்தான் சினிமா சினிமா என்று அலைந்தாயா!’ என்று என்னிடம் உறவினர்கள் வருத்தத்துடன் கூறினார்கள். அவர்களின் `அப்செட்’டுக்கு மத்தியிலும், தொடர்ந்து சினிமாவில் நான் நீடிக்கக் காரணம், அண்ணன் மாதம்பட்டி சிவகுமார்தான். என் வளர்ச்சியில் என் அளவுக்கு அவருக்கும் நம்பிக்கை இருந்தது.

திருமண ஏற்பாடு

சினிமாவில் சின்னதாய் ஒரு வளர்ச்சி நிலையில் நான் இருந்த சமயத்தில், வீட்டில் எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள். பெண் பார்க்க அவசியமில்லை. மாதம்பட்டி சிவகுமார் அண்ணனின் அக்கா மகள்தான் எனக்கு மணப்பெண் என்று, ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தார்கள்.

பெண்ணும் பிறந்தது முதலே எனக்குத் தெரிந்தவர். குழந்தை பிறந்து தொட்டிலில் போட்டிருந்தபோது, நான் போய் எட்டிப் பார்த்தேன். அப்போது பெண்ணின் அப்பா (என் மாமா சண்முகசுந்தரம்) என்னிடம், “மாப்பிள்ளை இப்போதே பெண்ணைப் பார்க்க வந்துவிட்டார்” என்று கிண்டல் செய்திருக்கிறார்.

இப்படி உறவு முறையில் பெண் இருந்தாலும், சினிமாவில் சொந்தக் காலில் நின்ற பிறகுதான் திருமணம் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

திரைப்பட வரலாறு 814
மொட்டைத் தலையுடன் சத்யராஜ் நடித்த
“நூறாவது நாள்” மகத்தான வெற்றி
ஒரே ஆண்டில் 27 படங்களில் நடித்தார்

டைரக்டர் மணிவண்ணன் இயக்கிய “நூறாவது நாள்” படத்தில் மொட்டைத் தலை வில்லனாக நடித்து பிரபலமானார் சத்யராஜ். இதைத் தொடர்ந்து, அவருக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன. ஒரே ஆண்டில் 27 படங்களில் நடித்தார்.

தனது கலைப்பயணத்தின் வளர்ச்சி குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

“வாய்ப்புகள் கிடைப்பது அரிதாக இருந்த நேரம். அப்படிக் கிடைத்தாலும், திறமையை வெளிப்படுத்த முடியாத சின்ன ரோல்கள்தான் வந்து கொண்டிருந்தன.

சுந்தர்ராஜன் அறிமுகம்

இப்படி உள்ளும் புறமுமாய் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜனின் அறிமுகம் கிடைத்தது.

ஆர்.சுந்தர்ராஜன் அப்போது “பயணங்கள் முடிவதில்லை” என்ற பெரிய வெற்றிப்படம் கொடுத்திருந்தார். என்னை ஒரு நடிகனாக மட்டுமின்றி ஒரே ஊர்க்காரன் (கோவை) என்ற அளவிலும் என்னை அவர் தெரிந்து வைத்திருந்தார். ஒருமுறை கோவைக்கு ரெயிலில் போனபோது, மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் என்னிடம், அடுத்து எடுக்கப்போகும் படத்தின் கதையைக் கூறினார். நான் அந்தக் கதை தொடர்பாக எனது கருத்துக்களைக் கூறினேன். அப்போது அவர், `உங்களுக்கும் நல்ல கதை ஞானம் இருக்கிறதே’ என்று சொல்லி வியந்தார். அதோடு, `நீங்கள் ஏன் கதை விவாதத்தில் கலந்து கொள்ளக்கூடாது’ என்றும் கேட்டார்.

கதை விவாதத்தில் கலந்து கொண்டால், அதற்கென்று தனி சன்மானம் எதுவும் கிடையாது. என்றாலும் டைரக்டர் சொன்னது என்னை உற்சாகப்படுத்தி விட்டது. என்னாலும் கதையை உருவாக்க முடியும் என்று அவர் கருதியதால், மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

சினிமா கதை

இந்த சந்தோஷ வேகத்தில், சினிமாவுக்கான ஒரு கதையை நானே தயார் செய்தேன். கிரைம் – ஆக்ஷன் கதை. இதே காலகட்டத்தில் எனக்கு நண்பராகி இருந்த டைரக்டர் மணிவண்ணனிடம் இந்தக் கதையை சொன்னேன்.

அவர் என்னிடம் `நன்றாகத்தான் இருக்கிறது. இதை பிறகு திரைக்கதையாக தயார் செய்யலாம். என்னிடம் ஒரு கதை இருக்கிறது. அதை கேளுங்கள்’ என்று கூறி, ஒரு கதையை சொன்னார்.

ஆர்.சுந்தர்ராஜன் என்னிடம் ரெயிலில் சொன்ன கதை மோகன், நளினி, விஜயகாந்த் நடிக்க “சரணாலயம்” என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருந்தது. மணிவண்ணன் சொன்ன கதையை படமாக்க எஸ்.என்.திருமால் முன்வந்தார்.

இப்போது, எனக்குள் நடிப்பைவிட டைரக்ஷன் ஆர்வம் அதிகமாகி விட்டது. ஒரு கதை தயார் செய்யும் அளவுக்கு வந்துவிட்டேனே! இந்தக் கதையை டைரக்ட் செய்து, டைரக்ஷன் பக்கம் போய்விடலாம் என்று நினைத்தேன்.

நூறாவது நாள்

நண்பர் மணிவண்ணன் சொன்ன கிரைம் சப்ஜெக்ட்தான் “நூறாவது நாள்” என்ற பெயரில் படமானது. இந்தப்படத்தின் கதை விவாதத்துக்கு மணிவண்ணன் என்னையும் அழைத்திருந்தார். படத்தின் கிளைமாக்சில் ஒரு மொட்டை வில்லன் வருவதாக காட்சி வைத்திருந்தார். இந்த கேரக்டருக்கு யாரைப் போடலாம் என்ற பேச்சு வந்தபோது, அந்த வேடத்தில் நான் நடிப்பது என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

நான்தான் டைரக்ஷன் கனவில் இருக்கிறேனே! அதனால் கொஞ்சம் தயங்கவே செய்தேன். விஜயகாந்த் “சரணாலயம்” படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில், அவரிடமும் நான் உருவாக்கிய கதையை சொன்னேன். அவருக்கும் கதை பிடித்துப்போய், அதைப் படமாக்கலாம் என்று சொல்லி விட்டார்.

இந்த நேரத்தில்தான் நூறாவது நாள் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிவந்தது.

நான் தயங்கினாலும் மணிவண்ணன் விடவில்லை. எனக்கு மேக்கப் போட்டுப் பார்த்தார். “ஆலிவுட் நடிகர் மாதிரி இருக்கீங்க, தலைவா!” என்றார்.

இதனால் நம்பிக்கை வந்தது, சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஒரு சலூனில் மொட்டை அடித்துக் கொண்டேன். மொட்டை கெட்டப்பில் என் கேரக்டர் படமாக்கப்பட்டபோதே, அந்த கேரக்டர் பேசப்படும் என்பது தெரிந்தது.

படம் வெளியானது. பெரிய வெற்றி. என் மொட்டை கேரக்டரும் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்தப்படம் வெளிவந்த சமயத்தில், ஜெயப்பிரகாஷ் என்பவர் 7 கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவர், “நூறாவது நாள் படத்தைப் பார்த்த பிறகே இப்படி கொலை செய்யும் எண்ணம் வந்தது” என்று சொல்லப்போக, படத்துக்கு இன்னும் `பப்ளிசிட்டி’ ஆகிவிட்டது! இந்தப்படம் வெளியான சமயத்தில் குழந்தைகள் என்னை நெருங்கவே பயப்பட்டார்கள்!

24 மணி நேரம்

இந்த வெற்றியைத் தொடர்ந்து டைரக்டர் மணிவண்ணன் சூட்டோடு சூடாக அதே நிறுவனத்துக்கு, “24 மணி நேரம்” என்று ஒரு படம் பண்ணினார். இதிலும் மோகன் – நளினிதான் ஜோடி. ஆனால் இதன் கதையமைப்பு வில்லனுக்காகவே உருவான கதை மாதிரி அமைந்திருந்தது.

இந்தக் கதையில் வரும் வில்லன் கேரக்டரில் முதலில் நான் நடிப்பதாகவே இல்லை. நான் மணிவண்ணன் சாரிடம், “படத்தின் ஜீவனே இந்த வில்லன் கேரக்டர்தான். `வீணை’ பாலச்சந்தர் நடித்தால் நல்லா இருக்கும்” என்றேன்.

மணி சார் என்னைப் பார்த்தார். அவர் என்ன நினைக்கிறார் என்பது புரியாமல், “வீணை பாலச்சந்தர் இல்லாவிட்டால் நம்ம நம்பியார்சாமி நடிக்கட்டும்” என்றேன்.

அந்த கேரக்டரின் முக்கியத்துவம் தெரிந்து நான் இப்படி சொல்லிக் கொண்டிருக்க, அவரோ, `நீங்களே நடிச்சிருங்க தலைவா’ என்றார்.

அந்த கேரக்டரில் நான் நடித்தால் சரியாக இருக்கும் என்று அவர் எண்ணினாலும், அவர் என் மீதான அக்கறையில்தான் அப்படிச் சொல்கிறார் என்று நான் நினைத்தேன். அதனால் அவரது விருப்பத்தை மறுக்கும்விதமாக, `தயாரிப்பாளர் திருமால் சார் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார். அந்த அளவுக்கு இது ஹீரோவுக்கு இணையான கேரக்டர்’என்றேன்.

அப்போதும் டைரக்டர் மணிவண்ணன் என்னை விடவில்லை. நேராக தயாரிப்பாளரை போய்ப் பார்த்தவர், `படத்தில் வரும் வில்லன் கேரக்டரில் சத்யராஜை நடிக்க வைக்கலாம் என்றிருக்கிறேன்’ என்று சொன்னார். தயாரிப்பாளரும், `தாராளமாக நடிக்கட்டும்’ என்று பச்சைக்கொடி காட்டினார்.

வில்லனுக்கு புது இலக்கணம் வகுத்த அந்த கேரக்டர்தான் என்னை ரசிகர்களிடம் முழுமையாக கொண்டு சேர்த்தது. இந்தப் படத்தில் நான் அடிக்கடி பேசும், “என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே” என்ற வசனம், பட்டித்தொட்டிவரை கூட பிரபலம் ஆனது.

ஒரே ஆண்டில் 27 படங்கள்

இந்த படத்துக்குப் பிறகு நான் பிஸி நடிகனாகி விட்டேன். காலை 7 மணி தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை தினமும் 3 படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கும் அளவுக்கு பிஸியாகி விட்டேன். 1985-ம் ஆண்டில் மட்டும், நான் நடித்து 27 படங்கள் ரிலீஸ் ஆயின.

இப்படி பிஸியாக இருந்தாலும் நான் உருவாக்கி வைத்திருந்த கதையை `அம்போ’ என்று விட்டுவிட முடியவில்லை. டைரக்டர் மணிவண்ணன் தெலுங்கில் படம் இயக்கப்போன நேரத்தில் என் கதையை இயக்கினார். `தர்ஜா தொங்கா’ என்ற பெயரில் (தமிழில் `கவுரவத் திருடன்’) உருவான அந்தப் படத்தில் சுமன் – விஜயசாந்தி நடித்தார்கள். இந்தப் படத்தில் நான் கதாசிரியர் மட்டுமே. படம் வெளியாகி 6 சென்டர்களில் நூறு நாட்களை தாண்டி ஓடியது.

இந்த வகையில், ஒரு சினிமா கதாசிரியராகவும் ஜெயித்த சந்தோஷம் எனக்கு.

இந்தப்படத்தின் கதைக்காக டைரக்டர் மணிவண்ணன் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்தார். தமிழில் `மர்ம மனிதன்’ என்ற பெயரில் `டப்’ செய்யப்பட்டு வெளியானது.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

திரைப்பட வரலாறு 819
பாலாஜி தயாரித்த “காவல்”
சிறிய வேடத்தில் விரும்பி நடித்தார், சத்யராஜ்

சத்யராஜ் பிசியாக இருந்த நேரத்திலும், பாலாஜி தயாரித்த ஒரு படத்தில், சிறிய வேடத்தை கேட்டு வாங்கி நடித்தார். படத்தில் ஐந்து நிமிடமே வந்து போகிற வேடம் அது.

வெற்றிகரமான ஹீரோ என்ற நிலைக்கு வந்து விட்ட சத்யராஜ், நடிகரும், தயாரிப்பாளருமான பாலாஜியின் படங்களிலும் நடித்தார். பாலாஜி தயாரித்த “மங்கம்மா சபதம்”, “அண்ணி” ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர், “விடுதலை” படத்தில் மட்டும் வில்லனாக நடிக்க மறுத்துவிட்டார்.

அதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:-

“ஹீரோவாக வளர்ந்து விட்டேன். என்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர்கள் வந்துவிட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் இனி `வில்லன்’ வேடத்தையும் செய்தால், என்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்கள் வியாபார ரீதியாக பாதிக்கப்படலாம் என்பதை உணர்ந்தேன். அதனால்தான் பாலாஜி சாரின் மங்கம்மா சபதம், அண்ணி படங்களில் வில்லனாக நடித்த நான், அடுத்து அவர் தயாரித்த `விடுதலை’ படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தபோது, அந்த வாய்ப்பை தவிர்த்து விட்டேன்.

வெளிநாட்டில் படப்பிடிப்பு

இத்தனைக்கும் அந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளை லண்டனில்தான் எடுத்தார்கள். நான் அதுவரை லண்டனை பார்த்ததில்லை. “எந்த வேடமாக இருந்தால் என்ன! லண்டன் பயணத்தை அனுபவித்து விடுவோம்” என்று எண்ணியிருந்தால் ஒருவேளை அந்த வில்லன் வேடத்தை ஒப்புக் கொண்டிருந்திருப்பேன். ஆனால் நான் பாலாஜி சாரிடம், “நான் ஹீரோவாக நடித்த படங்கள் வரத் தொடங்கிவிட்ட இந்த நேரத்தில் வில்லனாக நடித்தால் சரியாக இருக்காது” என்று சொன்னேன்.

பாலாஜி சார் என்னை கூர்மையாகப் பார்த்தார். “இனி வில்லனாக நடிப்பதில்லை என்பதில் அவ்வளவு நம்பிக்கை வந்துவிட்டதா?” என்று கேட்டார்.

“ஆமாம் சார்! அதில் நான் தெளிவாக இருக்கிறேன்” என்றேன்.

“உங்கள் தன்னம்பிக்கை வெற்றி பெறட்டும்” என்று வாழ்த்தியவர், என் தன்னம்பிக்கைக்கு அவரும் கைகொடுக்கும் விதமாய் எனக்குத் தந்த படம்தான் “மக்கள் என் பக்கம்.” மலையாளத்தில் பாலாஜி சாரின் மருமகன் மோகன்லால் நடித்த “ராஜா வின்டெ மகன்” படத்தைத்தான் இந்தப் பெயரில் தமிழில் `ரீமேக்’ செய்தார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அந்தப்படம், தமிழிலும் பெரிய வெற்றி பெற்றது.

பாலாஜி சார், மற்ற எந்த நிறுவனத்திலும் செய்திராத ஒரு ஏற்பாட்டை தனது நிறுவனத்தில் கலைஞர்களுக்கு கவுரவம் அளிக்கும் வகையில் செய்தார். நடிகர் – நடிகைகள், டைரக்டர் ஆகியோர், படப்பிடிப்பின்போது உட்காரும் நாற்காலியில், அவர்களின் பெயரை குறிப்பிட ஏற்பாடுசெய்தார். இதனால், ஒருவர் நாற்காலியில் பிறர் உட்கார்ந்து கொள்ள முடியாது.

கூடுதல் சம்பளம்

“மங்கம்மா சபதம்” படத்தில் நடித்தபோது என் வில்லன் நடிப்புக்கு பேசிய சம்பளம் 25 ஆயிரம் ரூபாய். ஆனால் எனக்கு வந்து சேர்ந்ததோ 40 ஆயிரம் ரூபாய்! கணக்கில் ஏதோ தவறு நடந்து விட்டது என்று நினைத்த நான், பாலாஜி சாரை பார்த்து மீதி 15 ஆயிரத்தை கொடுக்கப்போனேன். அவரோ, “நன்றாக நடித்திருந்தீர்கள். அதனால், பேசினதைவிட அதிகமாகக் கொடுக்கத் தோன்றியது. கொடுத்தேன்” என்று சர்வசாதாரணமாக சொல்லிவிட்டார்.

படத்தின் தரத்துக்காக செலவை பொருட்படுத்தாதவர் இவர். “மக்கள் என்பக்கம்” படத்தின் ஒரு காட்சியில் ஆட்டோக்கள் தேவை என்று டைரக்டர் கேட்டபோது, 100 ஆட்டோக்களை உடனடியாக ஏற்பாடு செய்து விட்டார். நான்கூட அவரிடம், “சார்! 20 ஆட்டோ போதுமே” என்றேன். “கதைக்கு தேவையான பிரமாண்டத்துக்கு 100 ஆட்டோக்கள் இருக்கட்டுமே” என்று சொல்லிவிட்டார். 28 நாட்களில் முழு படப்பிடிப்பும் முடிந்து இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

பாலாஜி சாரின் “திராவிடன்” படத்திலும் ஹீரோவாக நடித்தேன்.

ஐந்து நிமிட வேடம்

நடிக்க வந்த பிறகு, இந்தக் கேரக்டரில் நடிக்கிறேன் என்று நானாக கேட்டு வாங்கி நடித்தது “காவல்” படம் மட்டும்தான். பாலாஜி சாரின் தயாரிப்பான இந்தப்படம், ஒரு இந்திப்படத்தின் ரீமேக். அந்த இந்திப்படத்தில் ஹீரோவாக ஓம்புரியும், ஐந்து நிமிடமே வந்து போகிற போலீஸ்காரர் கேரக்டரில் நசுருதீன்ஷாவும் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை நான் பார்த்தபோது, நசுருதீன்ஷா நடித்த அந்த கேரக்டர் என்னை மிகவும் கவர்ந்தது. அதே படம் தமிழில் ரீமேக் ஆகிறது என்று தெரிந்ததும், பாலாஜி சாரை நானே போய் சந்தித்தேன். “சார்! எனக்கு சம்பளம் வேண்டாம். இந்தியில் நசுருதீன் ஷா நடித்த அந்த கவுரவ கேரக்டரை தமிழில் எனக்கு கொடுத்து விடுங்கள்” என்றேன். அவரும், “தாராளமாய் நடியுங்கள்” என்றார்.

படத்தில் என் போர்ஷனை இரண்டே நாளில் எடுத்து முடித்தார்கள். நான் பாலாஜி சாரை சந்தித்து, என் `நடிப்பு விருப்பம்’ நிறைவேற்றியதற்காக நன்றி சொல்லி புறப்பட்டபோது, தடுத்து நிறுத்தி, என் கையில் 3 பவுன்களைத் திணித்தார். நான், “சார்! எனக்கு சம்பளமே வேண்டாம்” என்று கூற, அவரோ, “இது என் அன்பளிப்பு. சம்பளம் அல்ல. நீங்கள் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்” என்று கூறிவிட்டார். எனது 2 நாள் நடிப்புக்கு கிடைத்த 3 பவுனை கணக்கில் கொண்டால் அப்போது நான் படங்களுக்கு வாங்கிய சம்பள அடிப்படையில் அதிக சம்பளம் வாங்கியது இந்த படத்துக்குத்தான்!

டைரக்டர் பாசில்

தமிழ் சினிமாவில் அப்போது மலையாளத் திரையுலகில் இருந்து வந்து புரட்சி ஏற்படுத்தியவர் டைரக்டர் பாசில். தமிழில், ஜெய்சங்கர், பத்மினி, நதியா, எஸ்.வி.சேகர் நடித்த “பூவே பூச்சூடவா” படம் மூலம் ரொம்பவே பாப்புலராகி விட்டார். வித்தியாசமான கதைப் பின்னணிக்காக அந்தப்படம் பேசப்பட்டதோடு வெற்றியும் பெற்றது.

நான் அப்போது படங்களில் இரவு, பகலாக ஓய்வின்றி நடித்த நேரம். தனது அடுத்த படத்தில் நடிக்கும்படி பாசில் என்னிடம் கேட்டுக்கொண்டார். பாம்குரோவ் ஓட்டலில், ஒரு இரவில் கதையைச் சொன்னார். ஓய்வே இல்லாததால், களைப்பு அடைந்திருந்த நான், கதையுடன் ஒன்ற முடியவில்லை. கதை சொல்லி முடித்த பாசில், “கதை எப்படி இருக்கிறது” என்று கேட்டபோது கூட, உடனே நான் பதில் சொல்லவில்லை. பாசில் புறப்பட்டுப்போனதும் எனது மானேஜர் ராமநாதனிடம் “அவர் கதை சொன்னார். நான் களைப்பாக இருந்ததால், கதையுடன் என்னால் ஒன்ற முடியவில்லை. இந்தக் கதையில் நடிக்கவில்லை என்று கூறிவிடலாமா?” என்று கேட்டேன்.

அவரோ, “சார்! பாசில் மலையாளத்தில் பெரிய டைரக்டர். தமிழிலும் அவர் பெரிய அளவில் வருவார். நிச்சயம் அவர் வித்தியாசமான கதைக்குத்தான் உங்களைத் தேடி வந்திருக்கிறார். பேசாமல் `சரி’ என்று சொல்லிவிடுங்கள்” என்றார்.

அப்படி நான் ஒப்புக்கொண்ட படம்தான் “பூவிழி வாசலிலே.”

கேரள உணவு

இந்தப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள ஆலப்புழையில் நடந்தது. எந்த மாநிலத்தில் படப்பிடிப்பு நடந்தாலும் எனக்கு சாப்பாட்டுப் பிரச்சினை கிடையாது. அந்தந்த ஊரில் உள்ள உணவுக்கு என்னை பழக்கப்படுத்திக் கொள்வேன். ஆனால் ஆலப்புழையில் மட்டும் எனக்கு கேரள உணவுக்குப் பதிலாக தமிழ்நாட்டு உணவு வகைகளையே தந்தார்கள். இரண்டொரு நாள் பொறுத்துப் பார்த்த பிறகு நானே தயாரிப்பாளரிடம் “உங்க ஊர் உணவையே எனக்கு கொடுங்கள்” என்று கேட்டு வாங்கி சாப்பிட்டேன். பிரவுன் கலர் அரிசி சாப்பாடு, புட்டு, மீன் குழம்பு, நேந்திரம் பழம் என்று படப்பிடிப்பு நடந்த நாட்களில் கேரள ஸ்பெஷல் உணவுகளுடனேயே ஐக்கியமாகிவிட்டேன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை பார்க்க மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் வருவார்கள். செட்டே கலகலப்பாக இருக்கும். இந்தப் படத்தில் சிறுவனாக முக்கிய கேரக்டரில் நடித்த சுஜிதா, பெண் குழந்தை என்று முதலில் எனக்குத் தெரியாது. படப்பிடிப்பு தொடங்கி 10 நாட்களுக்குப் பிறகே தெரியும். குழந்தை என்றாலும் சுஜிதா நடிப்பில் மிரட்டியிருந்தாள். படம் “சூப்பர்ஹிட்” ஆனது.

சமீபத்தில் ஒரு டப்பிங் தியேட்டரில் டப்பிங் பேசப்போனபோது ஒரு அம்மா என்னிடம் ஒரு இளம் பெண்ணை அறிமுகப்படுத்தினார். “சார்! இது என் பெண் சுஜிதா. நீங்கள் நடித்த “பூவிழி வாசலிலே” படத்தில் சிறுவனாக நடித்தது இவள்தான்” என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. குட்டிப்பெண் வளர்ந்து பெரியவளாக நிற்கும்போதுதான், நமக்கும் வயதாகியிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது!

“பூவிழி வாசலிலே” படத்தில் நடித்த பிறகு, மறுபடியும் பாசில் டைரக்ஷனில் “பொம்முகுட்டி அம்மாவுக்கு” படத்திலும் நடித்தேன். இந்தப் படத்தில்தான் சுஹாசினி எனக்கு முதன் முதலாக ஜோடியானார். ஒரு சாதாரண குடும்பத் தலைவனாக என்னை நடிக்க வைத்து இந்தப் படத்தையும் வெற்றி பெறச்செய்தார், பாசில்.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(821)
சத்யராஜ் சிவாஜியுடன் இணைந்து நடித்த “ஜல்லிக்கட்டு”

சிவாஜிகணேசன் நடித்த “ஜல்லிக்கட்டு” படத்தில் இன்னொரு ஹீரோவாக சத்யராஜ் நடித்தார். இந்தப்படமும் வெற்றி பெற்றது.

சிவாஜியுடன் “ஜல்லிக்கட்டு” படத்தில் நடித்த சத்யராஜ×க்கு, படத்தில் முக்கியமான கேரக்டர். நீதிபதி ஒருவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை ஒரு அதிரடி இளைஞன் மூலம் சரி செய்து கொள்ளும் கதை. இதில் பாதிக்கப்பட்ட நீதிபதியாக சிவாஜியும், அவருக்கு உதவும் இளைஞராக சத்யராஜ×ம் நடித்தார்கள். வித்தியாசமான கதைக்கருவைக் கொண்ட இந்தப்படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

எம்.ஜி.ஆர்.

இந்தப் படத்தின் வெற்றி விழாவில், அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு சிவாஜி உள்ளிட்ட கலைஞர்களை வாழ்த்தினார்.

எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட கடைசி சினிமா விழா இதுதான்.

சிவாஜியுடன் நடித்த “ஜல்லிக்கட்டு” அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

“ஜல்லிக்கட்டு படத்தை நண்பர் மணிவண்ணன்தான் இயக்கினார். சித்ரா லட்சுமணன் தயாரித்தார்.

கதையைக் கேட்கும்போதே இது நன்றாக ஓடும் என்று தோன்றியது. சில கதைகளை கேட்டதுமே, அது வெற்றி பெறும் என்று சொல்லிவிட முடியும். ஜல்லிக்கட்டு அப்படியொரு கதை.

தலைவா…!

அப்போதெல்லாம் நானும் மணிவண்ணனும் செட்டிலே ஒருவரை ஒருவர் `தலைவா!’ என்று கூப்பிட்டுக் கொள்வோம். இந்த `தலைவா’ பழக்கம் செட்டில் இருந்த மற்ற டெக்னீஷியன்களையும் தொற்றிக் கொண்டது.

இது எதில் போய் முடிந்தது தெரியுமா? செட்டில் சிவாஜி சாரிடம் போன டான்ஸ் மாஸ்டர் பாபு அவரிடம், “தலைவா! ஷாட் ரெடி” என்று சொல்லப்போக, பதிலுக்கு சிவாஜி சார் அவரை கேலி செய்யும் அளவுக்குப் போய்விட்டது. “ஏண்டா! உங்க `தலைவா’ என் வரைக்கும் வந்தாச்சா?” என்று கேட்க, மாஸ்டர் அவசரமாய் `எஸ்கேப்’ ஆகியிருக்கிறார்.

நானும் பிரபுவும் `தலைவரே’ என்று அழைத்துக் கொள்வதும் சிவாஜிசாருக்கு தெரிந்திருக்கிறது. இப்போது ëஅவரே செட்டில் “தலைவா” என்று அழைக்கப்பட்டு விட்டதால், அன்று படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போனவர், பிரபு வரும் வரை காத்திருந்திருக்கிறார். பிரபு வீட்டுக்குப் போனதும் “வாங்க தலைவரே!” என்று அழைத்து அவரை வெலவெலக்க வைத்திருக்கிறார்.

மறுநாள் இதுபற்றி பிரபு என்னிடம் சொன்னபோது, எங்களுக்கெல்லாம் அடக்கமுடியாத சிரிப்பு.

நேரத்தை மதிப்பவர்

நேரத்துக்கு மதிப்பு கொடுப்பதில் சிவாஜி சாருக்கு நிகர் அவரேதான். காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் நான் 7 மணிக்கு செட்டில் இருப்பேன். ஆனால் அதற்கு முன்பே சிவாஜி சார் செட்டில் இருப்பார்.

ஒருநாளாவது அவரை முந்திவிடவேண்டும் என்று இன்னும் சீக்கிரம் வரத்தொடங்கினேன். அப்போதும் சிவாஜி சார் எனக்கு முந்தி வந்திருந்தார். நடிப்பில் மட்டுமின்றி, `பங்ச்சுவாலிட்டி’யிலும் சிவாஜி சாருக்கு இணையாக யாருமில்லை என்பதை நானும் இந்த நாட்களில் கண்கூடாக உணர்ந்தேன்.

“ஜல்லிக்கட்டு” படப்பிடிப்புக்காக பெங்களூரில் இருந்து மங்களூருக்கு விமானத்தில் போனோம். நான், மணிவண்ணன், கேமராமேன் சபாபதி, சித்ரா லட்சுமணன் எல்லோரும் ஒரே ரூமில் தங்கினோம். சிவாஜி சார் பக்கத்து ரூமில் தங்கினார்.

படப்பிடிப்பு முடிந்து ஊருக்கு கிளம்ப வேண்டிய நாள். காலை 6 மணிக்கு விமானம் ஏறவேண்டும். சிவாஜி சார் அதிகாலை 4 மணிக்கு விழித்தவர் எங்கள் அறைக்கு வந்திருக்கிறார். நாங்கள் முந்தின நாள் இரவு சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டு அப்படியே தூங்கியிருக்கிறோம். அதிகாலையில் எங்களை வந்து பார்த்தவர், நாங்கள் படுத்திருந்த இடத்துக்கு அருகில் சிக்கன் எலும்புகள் கிடந்ததை பார்த்திருக்கிறார். அப்போதைக்கு ஒன்றும் சொல்லாமல் போனவர், நாங்கள் புறப்பட்டு தயாராகி வந்தபோது பிடித்துக்கொண்டார். “ஏண்டா! காலையிலேயே எழுப்பலாம்னு வந்தால் செத்துப்போன கோழியோட ஒண்ணா படுத்திருக்கீங்களே” என்று கிண்டல் செய்தார். அந்த கிண்டலில் ஒரு தந்தைக்கே உரிய அக்கறை இருந்தது.

அவசரப்பயணம்

விமான நிலையத்துக்கு புறப்பட சிவாஜி சார் அவசரப்படுத்தின தால், ஆளாளுக்கு சீக்கிரமே கிளம்பி விட்டோம். கமலா அம்மாளும் சிவாஜி சாருடன் வந்திருந்தார்கள். “மாமா இப்படித்தான் அவசரப்படுத்துவாங்க. நாமபோறப்போ விமான நிலைய கேட்டை திறந்திருக்க மாட்டாங்க” என்றார்.

கமலா அம்மாள் சொன்னதுபோலவே ஆயிற்று. நாங்கள் போய்ச் சேர்ந்த பிறகுதான் விமான நிலைய பயணிகள் கேட்டையே திறந்தார்கள்! அப்போது மங்களூரில் இருந்து பெங்களூருக்கு தினமும் ஒரு விமானம்தான். எனவே விமானத்தை தவறவிட்டால் தேவையில்லாமல் ஒருநாள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த வகையில் சிவாஜி சாரின் `அவசரம்’ நியாயமானதுதான்.

பார்த்ததுமே “வாங்க கவுண்டரே!” என்பார். படப்பிடிப்பின்போது கிடைக்கிற இடைவெளி நேரத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேசுவார். எங்கள் சித்தப்பா அவரது நண்பர் என்ற முறையில் எங்கள் குடும்பம் பற்றி ஆர்வமாய் விசாரிப்பார். என் சிறுவயதிலேயே விவசாய நிலங்கள் விற்கப்பட்டதை தெரிந்து கொண்டவர், “நீ சம்பாதிச்சு சொந்த ஊர்லயே நிறைய தென்னந்தோப்பு வாங்கணும்” என்று சொன்னார். அவர் சொன்னதுபோலவே பொள்ளாச்சி பகுதியில் வாழவாடி ஊரில் 95 ஏக்கர் தென்னந்தோப்பு வாங்கியிருக்கிறேன்.

“ஜல்லிக்கட்டு” படம் எதிர்பார்த்த மாதிரியே நன்றாக ஓடி, வெற்றி பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகே பாரதிராஜாவுடன் “வேதம் புதிது” படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(822)
நடிகர் சத்யராஜ் பாலுத்தேவராக வாழ்ந்த “வேதம் புதிது”
6 விருதுகளை வாங்கித்தந்த படம்

“வேதம் புதிது” படத்தில் பாலுத்தேவராக வாழ்ந்து காட்டினார், சத்யராஜ். பாரதிராஜாவின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான “வேதம் புதிது” படம் சத்யராஜை மிகச்சிறந்த குணசித்ர நடிகராகவும் வெளிப்படுத்தியது. அவருக்கு 6 விருதுகள் கிடைத்தன.

“முதல் மரியாதை” படத்தில் சிறு வேடத்தில் மட்டும் நடித்த சத்யராஜை, தனது கிராமத்துக் காதல் கதையான “கடலோரக் கவிதைகள்” படத்தில் கதாநாயகன் ஆக்கினார், பாரதிராஜா. “கடலோரக் கவிதைகள்” படத்தின் வெற்றிக்குப் பிறகு, “மதங்களை கடந்தது மனிதநேயம்” என்ற கருத்தை வெளிப்படுத்தும் “வேதம் புதிது” படத்திலும் சத்யராஜையே நடிக்க வைத்தார். பாலுத்தேவர் என்ற கம்பீரமான குணச்சித்திர வேடத்தில் சத்யராஜ் வாழ்ந்து, ரசிகர்களை பிரமிக்க வைத்தார். படமும் வெற்றி பெற்றது.

இந்தப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி சத்யராஜ் கூறியதாவது:-

மைல்கல்

“என் நடிப்பு வரலாற்றில் நிச்சயம் ஒரு மைல்கல் `பாலுத்தேவர்’ கேரக்டர்.

பாரதிராஜாவின் “வேதம் புதிது” கதையை என்னிடம் சொல்லும்படி சித்ரா லட்சுமணனிடம் பாரதிராஜா கூறியிருக்கிறார். அவர் என்னிடம், “கதையின் அவுட்லைனை கேட்டுக் கொள்ளுங்கள்” என்றார்.

“நான் டைரக்டர் பாரதிராஜா சாரிடம் முதல் மரியாதை படத்தில் என் கேரக்டர் என்ன என்பது பற்றி கேட்கவில்லை. கடலோரக் கவிதைகள் படத்திலும் கதை கேட்கவில்லை. இந்தப் படத்திலும் கதை கேட்கப்போவதில்லை. நான் கதை கேட்டு முடிவு செய்கிற நிலையை கடந்தவர் அவர்” என்று சித்ரா லட்சுமணனிடம் கூறி, கதை கேட்க மறுத்துவிட்டேன்.

இந்தப் படத்தில் நடித்த பிறகு வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மத்தியிலும், எனக்கு பெரிய அளவில் மரியாதை கிடைத்தது.

நான் அப்போது பெரியார் கொள்கைகளுக்குள் வந்திருந்த நேரம். படத்தில் வரும் பாலுத்தேவர் கேரக்டர் `நாத்திகர்’ என்பது எனக்கு மிகவும் வசதியாகி விட்டது.

அருமையான வசனம்

படத்துக்கு கண்ணன் என்பவர் வசனம் எழுதியிருந்தார். இந்தப்படத்துக்கு அவர் வசனம் எழுதிய பிறகு, `வேதம் புதிது கண்ணன்’ என்று அழைக்கப்பட்டார். அந்த அளவுக்கு படத்துக்கு வசனங்களும் உயிர் நாடியாக அமைந்தன.

“பராசக்தி”, “வீரபாண்டிய கட்டபொம்மன்”, “மனோகரா” போன்ற படங்கள் வசனங்களுக்காகவும் பேசப்பட்டவை. “காக்கி சட்டை” படத்தில் நான் இரண்டு தடவை சொன்ன `தகடு தகடு’ வசனம் சினிமாவில் என் நடிப்புக்கு புதிய பாதையை உருவாக்கித் தந்தது.

இப்படி வசனங்கள் மூலம் கிடைக்கும் பெருமை, இந்தப் படத்தில் கண்ணன் வசனத்துக்கும் கிடைத்தது. கதைப்படி, என் மகன் தாமிரபரணி ஆற்றில் விழுந்து இறந்திருப்பான். அது தெரியாத உறவினர்கள், அவனைக் காணோம் என்று தேடிப்போயிருப்பார்கள். அவர்கள் வீட்டுக்கு வந்ததும் நான் பதட்டத்திலும் பரபரப்பிலும் “கிடைச்சிட்டானா?” என்று கேட்பேன். அவர்கள் பதிலோ, “கிடைச்சிட்டுது” என்பதாக இருக்கும்.

மகன் உயிரோடு இல்லை என்பதை இந்த வசனம் நெற்றிப்பொட்டில் அடிக்கிற மாதிரி உணர்த்தி விட்டது.

ஆளுக்குத்தானே மரியாதை!

மகன் உயிரோடு இல்லை என்பதை இந்த ஒரு வரி வசனத்தில் சொல்லி, கதைக்கே ஒரு ஜீவன் கொடுத்திருந்தார், கண்ணன். படத்தில் இந்தக் காட்சிக்கு, காட்சியின் சோகம் தாண்டியும் கைதட்டிய ரசிகர்கள் அதிகம். என் படங்களில் நான் பேசிய வசனங்களிலேயே சிறந்த வசனமாக இதைக் கருதுகிறேன்.

ரஜினி புகழாரம்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடந்தபோது, ஊர்க்காவலன் படப்பிடிப்புக்காக ரஜினி சாரும் அங்கே வந்திருந்தார். அவர் நடித்த படப்பிடிப்பு முடிந்ததும் எங்கள் படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார். 2 மணி நேரம் எங்களுடன் இருந்தார். என் `பாலுத்தேவர்’ கெட்டப் அவரை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. அதுபற்றிப் பேசி பாராட்டினார்.

படத்தில் நடிகை அமலா என் மருமகளாக நடித்திருந்தார். இதே அமலா என் அடுத்த படமான “ஜீவா”வில் என் ஜோடியாக நடித்தார்! அதுமாதிரி, `மிஸ்டர் பாரத்’ படத்தில் அம்பிகா எனக்கு மருமகள். அடுத்து வந்த “மக்கள் என் பக்கம்” படத்தில் என் ஜோடி! இரண்டு விதமான வேறுபாட்டையும், ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

6 விருதுகள்

“வேதம் புதிது” படத்தில் பாலுத்தேவராக நடித்த என் நடிப்புக்கு `பிலிம்பேர்’ பத்திரிகை உள்பட 6 பத்திரிகைகள் விருது கொடுத்து சிறப்பித்தன.

மத்திய அரசின் விருது கமிட்டியில் அப்போது ஜுரியாக இருந்தவர்களில் நடிகை லட்சுமியும் ஒருவர். இந்தப்படத்தில் என் நடிப்புக்கு விருது கொடுப்பதற்கான பரிசீலனையில், சின்ன விஷயத்துக்காக `விருது’ வாய்ப்பு தவறி விட்டதாக லட்சுமி என்னிடம் சொன்னார். அதாவது என் கேரக்டருக்கு `விக்’ பயன்படுத்தியிருந்தது விருதுக்கு தடையாக அமைந்திருந்ததை தெரிந்து கொண்டேன். ஆனாலும் ரசிகர்களின் பாராட்டை எனக்கு கிடைத்த பெரிய விருதாக ஏற்றுக்கொண்டு மகிழ்ந்தேன்.

ஜெயலலிதா மேடம் முதல்-அமைச்சராக இருந்தபோது ஒரு தடவை அவர்களை சந்தித்து பேசினேன். அப்போது நான் பல படங்களில் நடித்திருந்தாலும் `பாலுத்தேவர்’ கேரக்டர் பற்றியே அதிகம் பாராட்டிப் பேசினார்கள்.

படத்தில் ஒரு காட்சியில் நானே ஆடிப்போய்விட்டேன். என் வளர்ப்பு மகனாக வரும் சிறுவனை நான் தோளில் தூக்கி வைத்தபடி கதை சொல்லிக்கொண்டே வருவேன். ஆற்றைக்கடக்கும்போது அந்த சிறுவன் என்னிடம், “உங்க பெயர் என்ன?” என்று கேட்க, “நான் பாலுத்தேவர்” என்பேன். “பாலு உங்கள் பெயர். தேவர் என்பது நீங்கள் படிச்சு வாங்கின பட்டமா?” என்று அந்த சிறுவன் கேட்பான்.

இந்தக் காட்சியை, தனக்கே உரிய ஆற்றலில் மிகத் திறமையாக இயக்கினார், பாரதிராஜா. இந்தக் கேள்வியால் அந்தச் சிறுவன் என்னை கன்னத்தில் அறைவதாக உணர்வேன். `ஜாதிய சமூகத்தை தாண்டியது மனித நேயம்’ என்பதை சொல்லாமல் சொல்கிற அந்தக் காட்சி, என் நடிப்பிலும் மறக்க முடியாத காட்சியாகி விட்டது.

எம்.ஜி.ஆர். பார்த்தார்

படம் தயாரான பிறகு வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பிட்ட மதத்தை புண்படுத்துவதாக ஒரு தகவல் உலாவந்து படத்துக்கு பிரச்சினையாக அமைந்தது. இதுபற்றி முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு சொல்லப்பட்டபோது அவர் படத்தை பார்க்க விரும்பினார். ஏவி.எம். தியேட்டரில் படம் பார்த்தபோது என்னையும் அவர் அருகே அமர வைத்துக்கொண்டார். முழுப்படத்தையும் ரசித்துப் பார்த்தவர், “இந்தப்படத்தில் சர்ச்சைக்குரிய விஷயம் எதுவும் இல்லையே!” என்றார். என் நடிப்பையும் பாராட்டினார்.

முதல்-அமைச்சர் பாராட்டிய பிறகு, படத்தின் வெளியீட்டுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. ரசிகர்கள் உணர்ச்சி மயமாய் ரசித்ததோடு, படத்தையும் வெற்றி பெறச்செய்தார்கள்.

“வேதம் புதிது” பாலுத்தேவர் கேரக்டர் என்னை ரசிகர்களிடம் பெரிய அளவில் வெளிப்படுத்தியதால்தான் இன்றைக்கு “பெரியார்”, “ஒன்பது ரூபாய் நோட்டு” போன்ற படங்களிலும் நடிப்பில் என்னை நிலைநிறுத்த முடிந்தது.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

திரைப்பட வரலாறு 823
சத்யராஜ×க்கு எம்.ஜி.ஆர். அழைப்பு
“எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் படத்தில் நடியுங்கள்”

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, அவரை சத்யராஜ் சந்தித்தார். அப்போது, “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடியுங்கள்” என்று எம்.ஜி.ஆர். அழைப்பு விடுத்தார்.

சினிமாவில் இடைவிடாமல் நடித்துக் கொண்டிருந்த சத்யராஜ×க்கு, கொஞ்சநாள் குடும்பத்துடன் ஓய்வெடுக்கலாமே என்று தோன்றியது.

அமெரிக்கா பயணம்

அவரது சகோதரிகளில் ஒருவரான ரூபா, தனது கணவர் சேனாதிபதியுடன் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் இருந்தார். இதனால், ஒரு மாதம் நடிப்புக்கு `லீவு’ கொடுத்துவிட்டு, குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு பறந்தார், சத்யராஜ்.

இந்த அமெரிக்க பயணத்தைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் சத்யராஜ் மிகவும் நெருக்கமாகப் பழகக்கூடிய வாய்ப்பு வந்தது.

அந்த அனுபவம் பற்றி, சத்யராஜ் கூறியதாவது:-

“தங்கை வீட்டுக்கு அமெரிக்காவுக்கு போக முடிவு செய்து புறப்பட்ட நாளில் என் நண்பர் டைரக்டர் மணிவண்ணன், “தினத்தந்தி”யில் என்னை வாழ்த்தி முழுப்பக்க விளம்பரம் கொடுத்துவிட்டார். இது, என் மீதான அவரது அதிகபட்ச அன்பு என்றாலும், இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. “என் நண்பன் சத்யராஜின் அமெரிக்கப் பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்ற அந்த ஒருபக்க வாழ்த்துதான் எனக்கும், எம்.ஜி.ஆர். சாருக்குமான நட்புக்கான அடித்தளம் அமைக்கப்போகிறது என்பது, அப்போது எனக்குத் தெரியாது.

எம்.ஜி.ஆர். தந்தி

அப்போதுநாங்கள் சென்னை வாலஸ் கார்டனில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தோம்.

ஒரு மாதம் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் கதவைத் திறந்ததுமே கண்ணில் பட்டது ஒரு தந்தி. பிரித்த மாத்திரத்தில் அது என் அமெரிக்க பயணத்தை வாழ்த்தி அனுப்பப்பட்ட தந்தி என்பதும், அதை எனக்கு அனுப்பியது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். என்பதும் தெரிந்தது!

அதிர்ந்து போனேன். தந்தி வந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. நாங்கள் அமெரிக்காவுக்கு புறப்பட்டுப் போன கொஞ்ச நேரத்தில், அந்த தந்தி எங்கள் வீட்டுக்குள் போடப்பட்டிருக்கிறது. ஒரு மாதம் கழித்து அப்படியொரு தந்தி வந்திருப்பது தெரிந்ததும் மகிழ்ச்சியையும் தாண்டி அதிர்ச்சியே எனக்குள் ஏற்பட்டது.

பின்னே! என்னை வாழ்த்தி தந்தி அனுப்பியிருப்பது மதிப்பிற்குரிய முதல்வர். ஒரு மாதம் வரை அதற்கு பதில் நன்றிகூட சொல்லாமல் இருததால், தவறாக நினைத்துக் கொள்ளமாட்டாரா?

உடனே அவரை சந்தித்து, வாழ்த்துக்கு நன்றி சொல்வதுதான் பண்பாடு. ஆனால் அவர் அழைப்பில்லாமல் எப்படிப் போவது? அப்படிப் போனாலும் அவரை சந்தித்துப் பேசமுடியுமா?

இப்படியான குழப்பம் என்னை ஆட்கொண்டபோது, டைரக்டர் பாரதிராஜாவிடம் யோசனை கேட்டேன். அவரோ, “யாரிடமும் முன்கூட்டியே அனுமதி பெறத் தேவையில்லை. நேராக தோட்டம் (எம்.ஜி.ஆரின் ராமாவரம் இருப்பிடம்) போங்க! போய், வாழ்த்துக்கு நன்றி சொல்லிட்டு வந்துடுங்க” என்றார்.

எம்.ஜி.ஆர். வீட்டில்

அவர் சொன்னது நல்ல யோசனையாகப்பட்டது. மறுநாளே மனைவியுடன் தோட்டத்துக்கு கிளம்பினேன். காலை 8 மணிக்கு தோட்டத்தை நெருங்கும்போது இன்னொரு சந்தேகம். `ஒருவேளை கேட்டில் நிற்கும் காவலாளி தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி விட்டால்?’

நான் சராசரி மனிதன் என்றால் பரவாயில்லை. என்னோடு அந்த விஷயம் முடிந்து விடும். நான் இப்போது நடிகன். பார்க்கிற எல்லோருக்குமே என்னைத் தெரியும். ஒருவேளை அப்படி திருப்பி அனுப்பிவிட்டால், “எம்.ஜி.ஆரை பார்க்கப்போன நடிகர் சத்யராஜ் திருப்பி அனுப்பப்பட்டார்” என்றல்லவா செய்தி வரும்!

ஆனால் அப்படியெல்லாம் எந்தத் தடையும் இருக்கவில்லை. கேட்டில் என் வருகைக்கு வரவேற்புதான் இருந்தது. அங்கிருந்தவர்கள் எங்களை வரவேற்பு அறைக்கு அழைத்துப்போய் உட்கார வைத்தார்கள். தோட்டத்தில் நிறைய குழந்தைகளை எம்.ஜி.ஆர். படிக்க வைத்துக் கொண்டிருந்தார். அந்தக் குழந்தைகள் என்னைப் பார்த்ததும் உற்சாகமாய் ஓடிவந்து `ஆட்டோகிராப்’ வாங்கினார்கள்.

கொஞ்ச நேரத்தில் நாங்கள் வந்திருந்த தகவல் எம்.ஜி.ஆர். சாருக்கு சொல்லப்பட்டு, எங்களை இன்னொரு வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது அங்கிருந்த ஒருவர் எங்களை நெருங்கி வந்து, “என்ன சாப்பிடறீங்க?” என்று கேட்டார்.”

நான், “வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு வந்து விட்டோம் என்றேன். “இந்த இடத்துக்கு வந்து அப்படியெல்லாம் சொல்லக்கூடாது” என்றார், அவர்.

எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு போகிறவர்களுக்கு முதலில் வயிறார சாப்பாடு. அதன்பிறகுதான் அவருடன் சந்திப்பு என்பதாக நானும் ஏற்கனவே அறிந்திருந்தேன். என்றாலும் காலை டிபன் முடித்துவிட்டுப் போனபிறகு, உடனே மறுபடி டிபன் சாப்பிட முடியுமா? எனவே `டீ` கொடுங்க போதும்” என்றேன்.

`டீ’ வந்த கொஞ்ச நேரத்தில் ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர். சார் நாங்கள் இருந்த அறைக்கே வந்துவிட்டார். இருவருக்கும் கையோடு கொண்டு போயிருந்த மாலைகளை அணிவித்து ஆசி பெற்றுக்கொண்டோம்.

எங்களைப் பார்த்ததுமே எம்.ஜி.ஆர். சார் கேட்ட முதல் கேள்வி, “ஏன் குழந்தைகளை அழைத்து வரவில்லை?” என்பதுதான்! நான் விழிக்க, என் மனைவியை பார்த்த எம்.ஜி.ஆர், “உங்க வீட்டுக்காரருக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்காது. நீங்கதாம்மா குழந்தைகளையும் அழைச்சிட்டு வந்திருக்கணும்” என்றார்.

குழந்தைகளையும் நேசிக்கும் அவர் அன்பு புரிந்தது. பேச வார்த்தை வராமல் நின்றோம். அவரே, “அடுத்த தடவை வரும்போது கண்டிப்பா குழந்தைகளையும் அழைச்சிட்டு வரணும். சரியா?” என்று எங்கள் தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அடுத்து அவர் கேட்ட கேள்வி இன்னும் பாசப்பிணைப்பானது.

“ஏன் இத்தனை நாளா வரலை?” என்பதே அவர் கேள்வி.

“அண்ணே! எப்படி திடீர்னு வர்றது? ஒருவேளை நான் வந்து கேட்டைத்தாண்டி உள்ளே விடமாட்டேன்னுட்டாங்கன்னா தமிழ்நாடு முழுக்க தெரிஞ்சிடுமே” என்றேன்.

நான் இப்படிச் சொன்னதை எம்.ஜி.ஆர். சார் ரொம்பவே ரசித்தார். என் தோளில் தட்டி சிரித்தார். பிறகு அவரே, “அப்படியெல்லாம் பண்ணமாட்டாங்க” என்றார்.

அமெரிக்கா அனுபவம்

பிறகு என் குடும்பம் பற்றியெல்லாம் ஆர்வமாக விசாரித்தார். வாஷிங்டனில் இருக்கும் தமிழர்கள் எனக்கு கொடுத்த சிறப்பான வரவேற்பு பற்றி அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.

“தொடர்ந்து படப்பிடிப்பு படப்பிடிப்புன்னு இருந்ததுக்கு ஒரு மாத ஓய்வு பயனுள்ளதாக இருந்திருக்குமே” என்றார், ஜானகி அம்மாள்.

உடனே எம்.ஜி.ஆர், “எங்கே ஓய்வெடுக்கிறது! அமெரிக்காவிலும் தமிழ்ச்சங்கம் வரவேற்பு அது இதுன்னு போய் வந்ததுல ஓய்வு எப்படி எடுக்க முடியும்?” என்று என் சார்பில் ஜானகி அம்மாளுக்கு பதில் கூறினார்.

தொடர்ந்து என் படங்களையெல்லாம் பார்த்ததாகவும், சிறப்பாக நடிக்கிறேன் என்றும் சொன்னபோது சந்தோஷத்தில் இறக்கையில்லாமல் பறந்தேன்.

நடிக்க அழைப்பு

திடீரென்று, “சத்யராஜ்! நீங்க எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் படத்தில் நடிக்கிறீங்களா?” என்று கேட்டார், எம்.ஜி.ஆர்.

“நீங்க இப்படி கேட்டிருக்க கூடாதுண்ணே! உத்தரவே போட்டிருக்கணும். அப்படி உங்க எம்.ஜி.ஆர். பிக்சர்சில் நடிக்கிற வாய்ப்பு அமைந்தால் அது என் பாக்கியம்” என்றேன்.

இப்போது ஜானகி அம்மாள், “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் மூலமா நாலைந்து படம் எடுத்திருக்கிறோம்” என்றார்கள்.

நான் உடனே, “3 படம்தான் எடுத்திருக்கீங்க. 1958-ல் “நாடோடி மன்னன்”, 1969-ல் “அடிமைப்பெண்”, 1973-ல் “உலகம் சுற்றும் வாலிபன்” என 3 படம்தான் எடுத்திருக்கீங்க” என்றேன்.

நான் இப்படி புள்ளி விவரங்களுடன் சொன்னது எம்.ஜி.ஆர் சாரை ஆச்சரியப்படுத்தி விட்டது. “சரி! எங்க கம்பெனிக்கு எப்ப நடிக்கிறே?” என்று கேட்டார்.

“நாளையில் இருந்தே ஷூட்டிங் வைத்தாலும் நான் ரெடி” என்றேன்.

உடனே எம்.ஜி.ஆர். சார் என் வார்த்தையை பிடித்துக்கொண்டார். “அப்ப, இப்போது உன்னை வெச்சு படம் எடுக்கிறவங்க கதி? அவங்க படத்தை முடிச்சிட்டு அப்புறமா நடி” என்றார்.

தயாரிப்பாளர்களை `முதலாளி ஸ்தானத்தில்’ வைத்து மரியாதை செய்யும் அவரது வார்த்தைகளில் தயாரிப்பாளர்கள் மீது எத்தனை கரிசனம் என்று எண்ணி வியந்தேன்.

“கண்டிப்பாக நடிக்கிறேன். ஆனால் நீங்களே டைரக்ட் பண்ணணும்” என்றேன்.

பதிலுக்கு அவர், “எனக்கும் விருப்பம்தான். ஆனால் `சி.எம்’ ஆயிட்டேனே!” என்றார். பிறகு அவரே, “படத்துக்கு நல்ல டைரக்டராக போட்டு விடுவோம். நான் எடிட்டிங் சமயத்தில் வந்து விடுகிறேன்” என்றார். சினிமாவை அப்போதும் அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது.

முத்தம்

விடைபெறும் நேரம் வந்தபோது கன்னத்தில் முத்தமிட்டு என்னை வாழ்த்தினார். அடுத்த தடவை குழந்தைகளோடுதான் வரணும் என்று அன்புக் கட்டளையிட்டு அனுப்பி வைத்தார்.

வீட்டுக்கு வந்த பிறகும் கூட எனக்கு எம்.ஜி.ஆர். சாரின் அந்த அன்பே கண்ணுக்குள் நின்றது. என் மனைவி என்னிடம், எம்.ஜி.ஆர். சார் கொடுத்த முத்தத்தை நினைவுபடுத்தி, “10 நாள் நீங்கள் உடம்புக்கு மட்டும்தான் குளிப்பீங்க. முத்தம் கிடைச்ச சந்தோஷத்துல முகம் கழுவப் போறதில்லை” என்று கிண்டல் செய்தார்.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

திரைப்பட வரலாறு 824
சத்யராஜ் தங்கைகள் திருமணம்
“எம்.ஜி.ஆர். நேரில் சென்று வாழ்த்து”

நடிகர் சத்யராஜின் 2 தங்கைகள் திருமணம் கோவையில் நடந்த போது,முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அங்கு சென்று மணமக்களை வாழ்த்தினார்.

எம்.ஜி.ஆரை அவரது இல்லத்தில் சத்யராஜ் சந்தித்த பிறகு, அவர் எம்.ஜி.ஆரின் அன்புக்குரியவராகி விட்டார். இந்த சமயத்தில் சத்யராஜின் இரண்டு தங்கைகளுக்கு நடந்த திருமணத்திலும் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதுகுறித்து சத்யராஜ் கூறிய தாவது:-

தங்கைகள் திருமணம்

“எனது தங்கைகள் நந்தினி, அகிலா இருவருக்கும் கோவையில் திருமணம் நிச்சயமானது. “மலைக் கள்ளன்” “சிவகவி” போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த பட்சிராஜா ஸ்டூடியோ கோவையில் இருந்தது. பின்னாளில் இந்த ஸ்டூடியோ கல்யாண மண்டபமாக மாற்றப்பட்டது.

இந்த திருமண மண்டபத்தில்தான் தங்கைகள் திருமணம் நடந்தது. தங்கைகளின் திருமண பத்திரிகையை எம்.ஜி.ஆரிடம் கொடுக்க நான் ராமாவரம் தோட்டத்துக்கு போயிருந்தபோது அவர் கோட்டைக்கு போயிருந்தார். ஜானகி அம்மாள் மட்டும் வீட்டில் இருந்தார். நான் ஜானகி அம்மாவிடம் திருமண பத்திரிகையை கொடுத்து, “அம்மா! இது அழைப்பிதழ் அல்ல. கோவையில் திருமணம் நடக்கிறது என்பதை சொல்லும் தகவல் மட்டும்தான். ஒரு சாதாரண நடிகனின் தங்கைகள் திருமணத்துக்காக 600 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. கோவையில் திருமணம் முடிந்ததும், நானே மணமக்களை இங்கே அழைத்து வருகிறேன்” என்றேன்.

இதற்குப் பிறகு நான் கல்யாண வேலைகளில் பிசியாகி விட்டேன். சித்தப்பா வகையில் சிவாஜி எங்கள் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் நிச்சயம் வந்து விடுவார். நாமே வர வேண்டாம் என்று சொன்னதால், எம்.ஜி.ஆர். வரமாட்டார் என்றே எண்ணினேன்.

திருமணத்திற்கு முந்தின நாள், முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். எனது தங்கைகள் திருமணத்துக்காக கோவை வருகிறார் என்ற தகவல் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் கோவை மாவட்ட கலெக்டர் எனக்கு போன் செய்தார். “ஏன் சார்! சி.எம். வரப்போறார் என்பதை முதலிலேயே எனக்கு தெரிவித்திருக்கலாமே” என்றார்.

நாம் வரவேண்டாம் என்று சொல்லியும் முதல்வர் வருகிறாரே என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எத்தனை அன்பு இருந்தால் அவராகவே வர முடிவு செய்வார்!

“எப்படி?”

மறுநாள் மதியம் கோவை விமான நிலையத்தில் காத்திருந்தேன். விமானத்தில் இருந்து முதல்வரும் ஜானகி அம்மாளும் இறங்கி வந்தார்கள். நான் பரவசமாய் வணங்கி நின்றபோது, என்னிடம் “எப்படி?” என்று குதூகலமாகக் கேட்டார், முதல்வர்.

அவர் “எப்படி?” என்று கேட்பதே தனி அழகு. அவரிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு அந்த “எப்படி” வார்த்தையின் வல்லமை தெரியும். என்னிடம் சொன்ன “எப்படி”க்கு அர்த்தம், “நீ வரவேண்டாம் என்று சொல்லியும் வந்துவிட்டேன் பார்த்தாயா!” என்கிற அர்த்தம்.

நேராக சர்க்ïட் அவுசில் தங்கியவர், மறுநாள் காலை 5 மணிக்கு முகூர்த்தம் என்பதால் ஜானகி அம்மாளுடன் 4.45 மணிக்கே வந்து விட்டார்.

எம்.ஜி.ஆர். வரும் அதே நேரத்தில் சிவாஜியும் கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்தார்! இப்போது யாரை வரவேற்பது என்பதில் எனக்கே சிறு தடுமாற்றம். நிலைமையை `சட்’டென்று புரிந்து கொண்ட சிவாஜி, என்னிடம், “டேய்! இது என் வீட்டுக் கல்யாணம். நீ அண்ணன் (எம்.ஜி.ஆர்.) கூடப் போ” என்றார். இந்த ஒரு வார்த்தையில் நான் ரிலாக்ஸ் ஆனேன்.

அம்மா எங்கே?

திருமண மேடையை நெருங்கிய எம்.ஜி.ஆர். என்னிடம், “உங்கம்மா எங்கே?” என்று கேட்டார். நான் பார்வையாளர்கள் பகுதியில் முதல் வரிசையில் இருந்த அம்மாவிடம் அழைத்துப்போனேன். அம்மாவை பார்த்து “வணக்கம்மா” என்று கைகூப்பினார். அம்மா எழுந்து பதிலுக்கு கைகூப்ப, ஒட்டுமொத்த கூட்டமும் அம்மாவுடன் சேர்ந்து எழுந்து எம்.ஜி.ஆருக்கு வணக்கம் செய்தார்கள். இந்த வகையில் எம்.ஜி.ஆர். சாரால் என் தாய்க்கு மிகப் பெரிய மரியாதை கிடைத்தது.

திருமணம் நல்லபடியாக முடிந்து முதல்வர் சென்னை புறப்பட இருந்தார். விமான நிலையத்துக்கு சென்று அவரை வழியனுப்பினேன்.

என்ன வேண்டும்?

சிவாஜி சாருடன் நான் நடித்த “ஜல்லிக்கட்டு” பட விழாவுக்கு அவரை அழைக்க தோட்டத்துக்கு போன போதுதான், “உனக்கு ஏதாவது வேண்டுமா?” என்று கேட்டார்.

நான், “வேணாங்க! எந்தவித அப்பாயின்மெண்ட்டும் இல்லாம உங்களை வந்து பார்த்துப் போக முடியுதே! இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்?” என்றேன்.

“நான் உனக்கு ஏதாவது பண்ணணுமா?” என்று மறுபடியும் கேட்டார்.

இதற்கும் “வேண்டாம்” என்றேன்.

“எதையாவது இப்ப நீ என்கிட்ட கேளு” என்றார், உறுதியான குரலில்.

அவர் கொடுக்க நினைப்பதும் நான் தவிர்ப்பதுமாய் ரொம்ப நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இப்போது எதையாவது கேட்டே ஆக வேண்டும் என்று கிடுக்கிப்பிடி போட்டு விட்டார்.

எனவே, “நீங்க உடற்பயிற்சி பண்ணுகிற கர்லாக்கட்டை வேண்டும்” என்றேன்.

நான் இப்படிக் கேட்டதும் தலையில் அடித்து சிரித்தார். உடற்பயிற்சியின் போது அவர் பயன்படுத்தி வந்த கர்லாக் கட்டையை எனக்கு வழங்கினார். இப்போதும் அவர் தந்த கர்லாக் கட்டையைக் கொண்டுதான் பயிற்சி செய்து வருகிறேன்.

“ஜல்லிக்கட்டு” நூறாவது நாள்

1987 டிசம்பர் 5-ந் தேதி “ஜல்லிக்கட்டு” படத்தின் நூறாவது நாள் விழா வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. படத்தின் விழாவுக்கு முதலில் வருவதாகச் சொல்லி எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிந்த நிலையில், நிகழ்ச்சி நாளன்று `வரவில்லை’ என்பதாக தகவல் அனுப்பி விட்டார். தோட்டத்தில் இருந்து வந்த போன் இந்த தகவலை உறுதி செய்ததும் அதிர்ந்துபோய் விட்டேன்.

இப்போது போல் அப்போது செல்போன் வசதியெல்லாம் கிடையாது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. அவர் வரவில்லை என்று சொன்னாலும் அவரை போய் பார்த்து அதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன்.

ஆனால் அவர் எப்படிப்பட்டவர்? எங்கே நான் போய் அவரை சந்தித்து மனதை மாற்றி விடுவேனோ என்று யோசித்தவர், மறுபடியும் வீட்டுக்கு போனில் தகவல் சொல்லச் சொல்லியிருக்கிறார். “முதல்வர் வரவில்லை என்பதற்காக, அவரை பார்க்க சத்யராஜ் வரவேண்டாம்” என்பதுதான் அந்த தகவல்.

ஆனால் வீட்டில் நான் ஏற்கனவே சொல்லி வைத்தபடி, “அவர் அப்பவே உங்களை பார்க்க வர்றதா சொல்லிட்டுப் போயிட்டாரே” என்று சொல்லி விட்டார்கள்.

நான் தோட்டம் போயிருந்தபோது என் வருகை தெரிவிக்கப்பட்டதும், மாடியில் இருந்த அவரது தனியறைக்கு அழைத்துப் போனார்கள். எம்.ஜி.ஆர். சட்டை, லுங்கியில் 10 நாள் ஷேவ் பண்ணாத முகமாய் தெரிந்தார். அவருடன் 5 அதிகாரிகள் இருந்தார்கள். பக்கத்தில் பைல்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்ததும் அவருக்கிருந்த வேலைப்பளுவும் தெரிந்தது; அவரது உடல் சோர்வும் புரிந்தது. என்னைப் பார்த்ததும், “இன்னிக்கு மழை வர்ற மாதிரி இருக்குல்ல!” என்றார்.

நான் என்ன பதில் சொல்வது? விழாவை தவிர்க்கப் பார்க்கிறார் என்பது புரிந்தது. “ஆமாண்ணே” என்றேன்.

இதற்குள் அவருக்கு பால் வருகிறது. எனக்கும் வருகிறது. சாப்பிடும்போது, “நான் வரலைன்னா வருத்தப்படுவியா?” என்று கேட்டார்.

“வருத்தமாகத் தான் இருக்கும். ஆனாலும் நாங்களே நடத்திக்கிறோம் அண்ணே!” என்றேன்.

ஒரு கணம் என்னையே கூர்மையாகப் பார்த்தார். என் ஏமாற்றத்தை முகத்தில் கண்டவர், “உனக்காக வர்றேன்” என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.

சொன்னது போலவே மிகச் சரியாக விழா தொடங்கும் மாலை 6 மணிக்கு காரில் வள்ளுவர் கோட்டத்தில் வந்திறங்கினார். அவரை வரவேற்றபோது, என்னை அருகில் அழைத்தவர் “எப்படி?” என்றார், உற்சாகமாக அதாவது சொன்னபடி வந்ததற்காக இந்த `எப்படி’ என்பது புரிந்து எனக்கும் மகிழ்ச்சி.

முத்தம்

இந்த விழாவில் அவருக்கு உற்சாகம் என்றால் அப்படி ஒரு உற்சாகம். சிவாஜியை கட்டிப் பிடித்து முத்தமிட்டார். விருது வாங்க வந்த எம்.என்.நம்பியார் தனக்கும் முத்தம் வேண்டும் என்றார். “முத்தமா? தர முடியாது. குத்துவேன்” என்றார், ஜாலியாக.

நம்பியாரோ, “அப்படியென்றால் எனக்கு ஷீல்டு வேண்டாம்” என்றார்.

இதனால் எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே அவரை அழைத்து, ஒரு முத்தம் கொடுத்து விட்டு, ஷீல்டை கொடுத்தார்.

நடிகர் திலகம் சிவாஜி பட வெற்றி விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இதுதான் என்றார்கள். அதுவே முதலும் கடைசியுமாகி விட்டது. அவர் கலந்து கொண்ட கடைசி சினிமா விழாவும் அதுதான்.

டிசம்பர் 5-ந் தேதி இந்த விழா நடந்தது. அதற்கு 19 நாள் கழித்து, அதாவது டிசம்பர் 24-ந் தேதி எம்.ஜி.ஆர். அமரர் ஆனார். அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அவரது பொன்னுடலுக்கு `உப்பு’ போடும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த `உப்பு’ வாய்ப்பு கிடைக்கப் பெற்ற ஒரே நடிகன் நான்தான்.

ஒரு ரசிகனாக அவரை வியந்தவன், நடிகனான போது அவரது நேசத்துக்குரியவனானேன். இப்போதும் என்னுடைய உணர்வுகளில் கலந்து போயிருப்பவர் அவர்”.

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

————————————————————————————————————–

திரைப்பட வரலாறு :(835)
“பெரியார்” படம் உருவானது எப்படி?
சத்யராஜ் வெளியிட்ட ருசிகர தகவல்கள்

பெரியார் வேடத்தில் நடித்தது பற்றியும், படப்பிடிப்பின்போது நடந்த சுவையான நிகழ்ச்சிகள் பற்றியும் நடிகர் சத்யராஜ் விவரித்தார்.

பல்வேறு கேரக்டர்களில் நடித்திருந்தாலும் சத்யராஜ் நடிப்பில் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைந்தது `பெரியார்’ படம். இந்த படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-

ஞானராஜசேகரன் அழைப்பு

`பாரதி’ டைரக்டர் ஞானராஜசேகரன் என்னை சந்தித்தார். எடுத்த எடுப்பிலேயே, “சார்! பெரியாரின் வாழ்க்கைச் சம்பவங்களை படமாக எடுக்கலாம். நீங்கள் பெரியாராக நடிக்கிறீர்கள்” என்றார்.

எப்போதோ சொன்னது இப்போது நடந்துவிடும் போலிருக்கிறதே என்று உள்ளுணர்வு சொன்னாலும், பெரியார் வேடத்துக்கு நான் எந்த அளவுக்கு பொருத்தமாக இருப்பேன் என்பது தெரியவில்லையே! எனவே, என் சந்தேகத்தை கேள்வியாக்கி, “நீங்கள் பெரியார் படம் பண்றது நல்ல விஷயம். ஆனால் நான் பெரியார் தோற்றத்துக்கு எந்த அளவுக்கு பொருத்தமாக இருப்பேன் என்று தெரியவில்லையே” என்றேன்.

நான் இப்படிச் சொல்வேன் என்று எதிர்பார்த்தோ என்னவோ, சட்டென ஒரு புகைப்படத்தை எடுத்து என்னிடம் கொடுத்தார், ஞானராஜசேகரன்.

கம்பீரத் தோற்றத்தில் காணப்பட்ட ஒரு இளைஞரின் படம் அது. படத்தை பார்த்ததும், “யார் இந்த இளைஞர்? காக்கி சட்டை படத்தில் நான் இருந்த தோற்றத்தையொட்டி காணப்படுகிறாரே?” என்றேன், ஆச்சரியமாய்!

ஞானராஜசேகரனோ, “சார்! பெரியாரின் 25 வயதில் எடுத்த படம் அது. பெரியாரின் சாயல் உங்களிடமும் இருப்பதால், படத்துக்கு தாடி, மீசை வைத்து கிராபிக்ஸ் செய்து பார்த்தேன். உங்களுக்கு அச்சாகப் பொருந்துகிற மாதிரி அமைந்திருக்கிறது” என்றார். “எனக்கும் தந்தை பெரியார் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற லட்சியம் உண்டு. அதைத்தான் மேடையிலும் வெளிப்படுத்தினேன். உங்கள் டைரக்ஷனில் நான் நடிக்கிறேன். தயாரிப்பாளரை தயார் செய்துவிடுங்கள்” என்றேன்.

தயாரிப்பாளர் யார்?

ஆனால் தயாரிப்பாளர்தான் கிடைத்தபாடில்லை. பெரியார் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக தயாரித்தால் `சாமி கண்ணைக் குத்திவிடும்’ என்று தவறாக எண்ணிக் கொண்டு ஒதுங்கினார்களோ என்னவோ!

இதற்கிடையே நானும் மற்ற படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தேன். இந்த சமயத்தில் ஒருமுறை கி.வீரமணியை சந்தித்தேன். அவரை `ஆசிரியர் ஐயா’ என்றே அழைப்பேன். நான் அவரிடம் “பெரியார்” படம் தொடர்பாக டைரக்டர் ஞானராஜசேகரன் என்னை சந்தித்த விவரத்தை சொன்னேன். அதோடு தயாரிப்பாளர் கிடைக்காததால்தான் படம் தொடங்குவதில் தாமதம் என்பதையும் விவரித்தேன்.

“தயாரிப்பாளர் கிடைப்பதுதான் பிரச்சினை என்றால் நாங்களே தயாரிக்கிறோம்” என்று அவர் முன்வந்தார். “பெரியாரின் தொண்டர்கள் தயாரிப்பில் பங்கேற்பார்கள். எனவே பட வேலைகளை தொடங்கச் சொல்லுங்கள்” என்றார்.

ஆசிரியர் வீரமணி பற்றி நான் அவருடன் பழகிய நாட்களில் என் அனுபவத்தை சொல்லியாக வேண்டும். எப்போதுமே அவருடனான உரையாடலில் பெரியார் பற்றியும், திராவிடர் கழக செயல்பாடுகள் பற்றியுமே அதிகம் இடம் பெறும். அவரது ஒரு மகள் அருள் அமெரிக்காவில் குடும்பத்துடன் இருக்கிறார். மகளை பார்க்க அமெரிக்கா போய் வந்த நேரத்தில் அவரை சந்தித்தபோதுகூட, மகள் பற்றியோ மகளின் குடும்பம் பற்றியோ, அமெரிக்கா பற்றியோ அவர் பேசவில்லை. `அமெரிக்காவில் உள்ள இணையதளத்தில் கூட பெரியாரை பார்க்க முடிகிறது’ என்பதையே பரவசமாய் சொல்லிக் கொண்டிருந்தார்.

சிங்கப்பூர் பயணம்

சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் நேசத்துக்குரிய தமிழ்த் தலைவராக இருந்தவர் `தமிழ்வேள்’ கோ.சாரங்கபாணி. அவரது 125-வது ஆண்டு விழா சிங்கப்பூரில் கொண்டாடப்பட்ட நேரத்தில், தந்தை பெரியாரின் நினைவு நாளையும் இணைத்து கொண்டாடினார்கள். இதில் கலந்து கொள்ள ஆசிரியர் வீரமணி தனது மனைவியுடன் புறப்பட்டார். அப்போது என்னையும் குடும்பத்துடன் வருமாறு கேட்டுக்கொண்டதால் என் மனைவியுடன் பயணப்பட்டேன்.

சிங்கப்பூருக்கு போன பிறகுதான் அவருக்கு அங்கே கவிதா என்ற மகள் இருப்பதே எனக்குத் தெரியவந்தது. கவிதாவின் இல்லத்துக்குப் போனபோது அங்கேயும் பெரியார் பற்றிதான் அதிகம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பெரியாராக நான் நடிப்பது பற்றி பேச்சு வந்ததும் ஆசிரியர் வீரமணியின் மனைவி என்னிடம், “பெரியார் வேஷத்துக்கு நீங்க பொருத்தமாகவே இருப்பீங்க. ஆனால் பெரியாரைவிட நீங்கள் உயரம் மட்டும் கொஞ்சம் அதிகம்” என்றார். (படத்தில் உயரம் தெரியாதபடி சரிசெய்து கொண்டு விட்டோம்)

படப்பிடிப்பில் பிரச்சினை

“பெரியார்” படத்தின் படப்பிடிப்பு ஒருவாறு தொடங்கியது. காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் படப்பிடிப்பு நடந்தது.

காஞ்சீபுரம் கோவிலில் காலை 7 மணிக்கே பெரியார் படப்பிடிப்பு தொடங்க இருந்தது. ஆனால் `பெரியார்’ படத்துக்கான காட்சிகளை கோவிலில் எடுக்கக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது. இதனால் படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிற்பகல் 3 மணி வரை இதே நிலை நீடித்ததில் ரொம்பவே வருத்தமாகி விட்டது.

அப்போது படப்பிடிப்புக்கு உதவியாக வந்த பெரியார் தொண்டர்களில் சிலர் என்னிடம் வந்து, “கண்டிப்பாகப் படப்பிடிப்பு நடக்கும் `அன்பு’ பார்த்துக்குவார்” என்றார்கள்.

எட்டு மணி நேரம் முயன்றும் முடியாத ஒரு விஷயத்தை, `அன்பு’ என்பவர் வந்து முடித்து விடுவார் என்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டேன்.

அதுமாதிரியே அன்பு வந்தார். பேசவேண்டியவர்களிடம் பேசினார். அடுத்த ஒரு சில நிமிடங்களில் படப்பிடிப்பு தடையின்றி நடந்தது. என் ஆச்சரியம் இப்போது எல்லை தாண்டிவிட்டது. “யார் அந்த அன்பு” என்று விசாரித்தபோது என் ஆச்சரியம் இன்னும் பல மடங்கானது. ஆசிரியர் வீரமணியின் மகன்தான் அந்த அன்பு!

சமீபத்தில் ஆசிரியரின் 75-வது ஆண்டையொட்டி நடந்த விழாவின்போது முதல்-அமைச்சர் கலைஞர் கலந்து கொண்டார். அந்த விழாவுக்கு போயிருந்தபோது தான் அவருக்கு அசோக் என்றொரு மகன் இருப்பதும் தெரியவந்தது!

இப்படி தங்களை மறைத்து பெரியாரின் கொள்கைக்காகவே வாழுகிற ஒரு குடும்பம் “பெரியார்” படம் தயாரிக்க முன்வந்தது பொருத்தம்தானே.

5 வருட ஆராய்ச்சி

பெரியாரை டைரக்ட் செய்த ஞானராஜசேகரன் ஐ.ஏ.எஸ். முடித்தவர். `பாரதி’ படத்தின் மூலம் ஒரு `மகாகவி’யின் வாழ்க்கையை கவிதையாக திரைக்குத் தந்தவர் என்ற முறையில் அவர் மீது என் மரியாதை கூடியிருந்தது. இப்போது அவரே பெரியார் படத்தை உருவாக்கவும், தயாராகி இருந்தது வரலாற்றுத் தலைவர்கள் மீதான அவரது ஈடுபாட்டை உணர்த்தியது. அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது பெரியார் படம் எடுக்கும் ஆர்வத்தில் பெரியார் பற்றி ஐந்தாறு வருடமாக பல்வேறு ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டதும் தெரியவந்தது. பெரியார் பற்றிய புத்தகம் எங்கே கிடைத்தாலும், அதை வாங்கி பெரியாரின் வாழ்க்கை தொடர்பான விஷயங்களை சேகரித்திருக்கிறார். அதுமாதிரி பெரியாருடன் பழகியவர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்திருக்கிறார்.

இப்படியெல்லாம் அவர் முழுமையாக தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் நான் பெரியாராக நடிக்கும் என் ஆர்வத்தை வெளியிட்டு இருக்கிறேன். இருவரின் ஒருமித்த சிந்தனையும் எங்களை `பெரியாருக்குள்’ இணைத்துவிட்டது.

இந்த நேரத்தில்கூட எனக்கு பெரியாராக நடிப்பதில் ஒரு சின்ன தயக்கம் ஓடிக்கொண்டிருந்தது. பெரியாருடன் பழகியவர்கள் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். `பெரியார் நடிப்பில்’ அவர்களை நான் திருப்திபடுத்தியாக வேண்டும். அதோடு பெரியார் வேடத்தில் நடிப்பதை நடிகர் திலகம் தனது லட்சியமாக வைத்திருந்தார். காலம் அந்த வாய்ப்பை அவருக்கு வழங்காமலே போய்விட்டது. இப்படி நடிகர் திலகம் விரும்பிய ஒரு கேரக்டரை நான் செய்யும்போது, ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் என் நடிப்பு அமையவேண்டும். இப்படி இரு தரப்பிலும் விரும்பும் விதத்தில் `பெரியாரை’ சரியாக நடிப்பில் பிரதிபலித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.

“சந்தோசங்க…”

பெரியார் இளைஞராக இருந்த காலகட்டம் பற்றி யாரும் கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் முதிய தோற்றத்தில் அவரைப் பார்த்து உணர்ந்தவர்களுக்கு, என் நடிப்பு கொஞ்சம் மாறிப்போனால்கூட ஏமாற்றமாகி விடும். இப்படி நினைத்த நேரத்தில் 75 வயதில் பெரியார் நிகழ்ச்சி அடங்கிய கேசட்டை என்னிடம் தந்தார்கள். அதைப் போட்டுப் பார்த்தபோது பெரியாரின் குரல் நடுக்கம், அவர் உட்கார்ந்து பேசும் விதம் பற்றி கவனித்துக் கொண்டேன்.

அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்போது “சந்தோசங்க! ரொம்ப சந்தோசங்க!” என்று சொல்வார் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். பெரியாருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற கலைஞரிடம் இதுபற்றி கேட்டபோது, அவர் பெரியார் உச்சரிக்கும் விதமாகவே இந்த `சந்தோசங்க’ வார்த்தையை சொல்லிக் காட்டினார்.

1967-ம் ஆண்டில் அறிஞர் அண்ணாவை தலைவராகக் கொண்ட தி.மு.கழகம் முதன் முதலாக தமிழகத்தில் ஆட்சி பீடம் ஏறியது. ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல்-அமைச்சர் அண்ணா தலைமையில் நாவலர், கலைஞர் உள்ளிட்ட அமைச்சர்கள் திருச்சியில் உள்ள பெரியார் மாளிகைக்குப் போய் பெரியாரை சந்தித்து அவரது வாழ்த்தைப் பெறுகிறார்கள்.

தன்னால் அரசியலில் உருவாக்கப்பட்டவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், மறக்காமல் தன்னைத் தேடி ஆசி பெற வந்ததை பார்த்தபோது பெரியார் மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். அதே உணர்வில் “சந்தோசங்க! ரொம்ப சந்தோசங்க” என்று சொல்லி வாழ்த்தியிருக்கிறார்.

இதை கலைஞர் என்னிடம் நடித்தே காட்டியபோது, பெரியார் அவருக்குள்ளும் எப்படி உள்வாங்கியிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன்.

கலைஞர் சொன்ன இதே சம்பவத்தை முன்பு பெரியார் இருந்த அதே திருச்சி `பெரியார் மாளிகை’யில் படமாக்கியபோது, என்னையும் மீறி ஒரு பரவசம் ஓடிக்கொண்டிருந்தது. இப்போது பெரியாராக நடிப்பது நானல்லவா?”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

Posted in Actor, Actors, Biography, Biosketch, Cinema, Dhinathanthi, EVR, Faces, Films, Kalainjar, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, Karunanidhi, Life, MGR, Movies, names, people, Periyar, Rajini, Rajni, Sathiaraj, Sathiyaraj, Sathyaraj, Satyaraj, Shivaji, Sivaji, Sivakumar | Leave a Comment »

Women in Politics – DMK, Thamizhachi, Thankam Thennarasu, Mu Ka Azhagiri

Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2007

Host unlimited photos at slide.com for FREE!
அரசியலில் குதிக்கும் அமைச்சரின் அக்கா

தி.மு.க.காரர்களுக்கு எப்போதுமே ஒரு வருத்தம் உண்டு. தேர்தலில் தாய்மார்களின் ஆதரவு அவர்களுக்குக் கணிசமாக இல்லாதிருப்பதும், அவர்களின் பொதுக் கூட்டம், மாநாடுகளுக்குப் பெண்கள் திரளாக வராததும், அவர்களை அடிக்கடி கவலைக்குள்ளாக்கும். வாக்குப் பதிவு நாளன்று ‘தாய்மார்கள் திரண்டு வந்து வோட்டுப் போட்டார்கள்’ என்று செய்தி வந்தால் உடன்பிறப்புகளுக்குக் கலக்கம் வந்துவிடும்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், எம்.ஜி.ஆர். தனிக் கட்சி கண்ட
பிறகு கலக்கமும் வருத்தமும் அவர்களுக்கு இன்னமும் அதிகமாயின. தி.மு.க.விலும் சத்தியவாணி முத்துவுக்குப் பிறகு பெயர் சொல்லும்படியான ஒரு முன்னணித் தலைவர் வரமுடியவில்லை. அண்ணா காலத்தில் பூங்கோதை – அருள்மொழி என்கிற இரு பெண்கள் தமிழகமெங்கும் தி.மு.க. மேடைகளில் சொற்சிலம்பம் ஆடி கட்சியை வளர்த்தார்கள்.

  • அலமேலு அப்பாத்துரை,
  • சற்குண பாண்டியன்,
  • சுப்புலட்சுமி ஜெகதீசன் (அ.தி.மு.க.விலிருந்து வந்தவர்)

ஆகியோர் தி.மு.க.வில் குறிப்பிடத்தக்க பெண் பிரமுர்கள். பல்வேறு கட்டங்களில், பெண் களுக்கு ஆதரவாகப் பல சட்டங்களை கருணாநிதி கொண்டு வந்தாலும் தாய்மார்களிடம் ஆதரவு பெருகவில்லை. இந் நிலையில்தான் அரசியலில் நேரடியாகக் குதித்தார் கனிமொழி. அவர் கட்சியில் சேர்ந்த பிறகு நடந்த மகளிர்இட ஒதுக்கீடு பேரணியில் கணிசமாகவே பெண்கள் திரண்டு வந்திருந்தனர். இப்போது கனிமொழிக்குத் தோள் கொடுக்கும் தோழியாக அரசியல் களத்தில் குதித்திருக்கிறார் கவிஞர் தமிழச்சி. சேர்ந்தவுடனேயே, நெல்லை இளைஞரணி மாநாட்டில் கொடியேற்றும் வாய்ப்பு தமிழச்சிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எதிர்கால அரசியலில் அவருக்கு என்ன காத்திருக்கிறது என்பதைவிட, அவரது அரசியல் எதிர் காலம் என்பது தி.மு.க. அதிகார மையங்களின் செல்வாக்கைப் பொறுத்தே அமைய விருக்கிறது. ஆனால், படித்த, நல்ல பொறுப்பில் இருந்த தமிழச்சி, அரசியலில் குதித்ததை கவிஞர்கள், படைப்பாளிகள் இருகரம் தட்டி வரவேற் கிறார்கள்.

“நமது அரசியலில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் நிறைய வர வேண்டும். அதுவும் கல்வியைப் பின்புலமாகக் கொண்டவர்கள் வந்தால், மக்கள் பிரச்னைகளைச் சுலபமாகப் புரிந்துகொள்வதுடன் தீர்வும் காண முடியும். காலப்போக்கில் பொரிய மாற்றம் வரும். பல நாடுகளில் படைப்பாளிகள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழச்சியின் அரசியல் பிரவேசம் வரவேற்கப்பட வேண்டியதே” என்கிறார் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்.

தி.மு.க. நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்க வேண்டுமென்று முனைந்து, இப்போது துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார் சற்குண பாண்டியன். மாவட்ட அளவிலும் பல பெண்கள் பொறுப்பில் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் ஸ்டாலின் முன்னணிக்கு வரும்போது, கனிமொழிக்குத் துணைப் பொதுச் செயலாளர் அந்தஸ்து கிடைக்கும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த வகையில் ஏற்றத்தைக் கணிக்கும்போது தமிழச்சிக்கும் நல்வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

“தலைவர் கலைஞர் அவர்கள் கடந்த ஒரு மாத காலமாகவே முரசொலியில் இளைய தலைமுறையினர் அரசியலுக்கு வரவேண்டும் என்று எழுதிக் கொண்டிருக்கிறார். பல தலைவர்கள், புரட்சியாளர்கள் செய்த தியாகங்களை எடுத்து வைத்து, அவர்களை இளைய தலைமுறை வழிகாட்டிகளாக ஏற்றுச் செயல்பட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். அந்த எழுச்சியூட்டும் கடிதங்கள் தமிழச் சியை உடனடியாக அரசியலில் குதிக்கத் தூண்டியிருக்கலாம். அவரைப் போன்ற அறிவுஜீவிகள், படைப்பாளிகள் அரசியலுக்கு வந்துகொண்டே இருக்க வேண் டும்” என்கிறார் கவிஞர் சல்மா.
—————————————————————————————————-

எந்தவிதப் பின்புலமும் இல்லாத தனிப்பட்ட பெண்கள், ஏன் ஆண்களேகூட அரசியலில் முன்னணிக்கு வர முடிவதில்லை. தி.மு.க. அமைச்சர்கள், முன்னணித் தலைவர்கள் ஆகியோ¡ரின் மகன், மகள், பேரன், பேத்திகள் ஆகியோர்தான் இளைய தலைமுறை பிரமுகர்களாகவும், மாவட்டச் செயலாளர்களாகவும் வலம் வருகிறார்கள். சின்ன வயதிலிருந்தே அரசியல் சூழலில் வளரும் குழந்தைகளுக்குப் பொரியவர்களானவுடன் அரசியலில் நுழைவது எளிதாக இருக்கிறது.

“தமிழச்சி போன்று அரசியல் குடும்பத்திலிருந்து வருபவர்களுக்கு வேறுவிதமான போராட்டங்கள் இருந்திருக்கும். தமிழச்சி அறிவுசார்ந்த துறையிலிருந்து அரசியலுக்கு வருகிறார். இது மிக நல்ல விஷயம். இவரைப் போல் நிறைய பேர் வரணும். அரசியல் கட்சிகளும், பெண்களுக்குப் பொறுப்புகளில் ஐம்பது சதவிகிதம் தரவேண்டும்” என்கிறார் கவிஞர் இளம்பிறை.

“அரசியல் பின்னணி, ஒருவர் முன்னுக்குவர உதவியாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்ளும் அதே சமயத்தில், ஒருவர் தமது சொந்தத் தகுதிகளை வளர்த்துக் கொள்ளா விட்டால், நிலைத்து நிற்க முடியாது என்பதையும் உணர வேண்டும். தங்கம் தென் னரசு தான் அமைச்சர் பொறுப்புக்குத் தகுதியானவர் என்று இப்போது நிரூபித்து விட்டார். அதேபோல, தமிழச்சிக்கும் செயல்படும் வகையில், முடிவுகள் எடுக்கும் பொறுப்புக் கொடுத்தால் அசத்துவார்” என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.

“அரசியல் முகம் வன்முறைமயமாகத் தோற்றமளிக்கும் இன்றைய காலகட்டத்தில் ¨தாரியமாகக் களம் இறங்கியுள்ள தமிழச்சி பாராட்டுக்கு¡ரியவர். தி.மு.க. போன்ற பொரிய இயக்கங்கள் நிர்வாகப் பொறுப்பு மற்றும் கொடியேற்றும் கௌரவத்தைப் பெண்களுக்குக் கொடுப்பது மற்ற இயக்கங்களுக்கும் நல்ல வழிகாட்டுதல்” என்றும் சொல்கிறார் அவர்.

தமிழச்சி பேராசி¡ரியர் பதவியை ராஜி ¡மா செய்துவிட்டு அரசியலில் குதித்தது, வேறுவிதமான கவலையை ராணிமோரி கல்லூ¡ரி ஆங்கிலத் துறை பேராசி¡ரியர்களுக்கு உண்டாக்கியிருக்கிறது.

“எங்கள் துறையில் 32 பேர் இருந்தோம். இப்போது பதினான்கு பேர்தான் இருக்கிறோம். மற்றபடி சுமதி ஒரு நல்ல கவிஞர்; பழகுவதற்கு இனியவர். கடந்த இரண்டு வருடங்களாகப் பாடம் எடுப்பதை நிறுத்திவிட்டு ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டிருக்கிறார். நல்ல வாய்ப்பு வரும்போது அரசியலில் ஈடுபடுவேன் என்று சொல்லி வந்தார். அவருக்குப் பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துகள் என்கிறார்கள்” பேராசி¡ரியர்களான மாலதியும், மாலினியும்.

– ப்¡ரியன்
———————————————————————————————–

மு.க.அழகி¡ரி மதுரைக்குப் போய் செட்டிலான 1980களின் இறுதியில், உள்ளூர் தி.மு.க. தலைவர்கள் ‘எதிர்காலத்தில் இவர் எப்படி வருவாரோ?’ என்று தொரியாமல் அவரைவிட்டுக் கொஞ்சம் தூரம் மாரியாதையுடன் தள்ளி நின்றனர். அந்தச் சமயத்தில் அழகி¡ரியிடம் பாசம் காட்டிப் பழகிய சிலாரில், சுமதி என்கிற தமிழச்சியின் தந்தை தங்கபாண்டியனும் ஒருவர்.

ராமநாதபுரம் (விருதுநகரம் உள்ளடக்கிய) மாவட்டத்தில் கழகத்தை வளர்த்ததில் சுயமாரியாதைக்காரரான தங்கபாண்டியனுக்கு முக்கிய இடம் உண்டு. தங்கபாண்டியன் குடும்பத்துக்கும், அழகி¡ரி குடும்பத்துக்கும் இடையே உண்டான பாசம் கலந்த நட்பு இன்றுவரை தொடர் கிறது. தங்கபாண்டியன் மறைவுக்குச் சில காலத்துக்குப் பின் தங்கம் தென்னரசுவை அரசியலில் கொண்டு வந்து அமைச்சராக அழகு பார்த்தார் அழகி¡ரி.

இன்று அவரது அக்கா தமிழச்சிக்கும் அரசியலில் ஒரு நல்ல தளத்தை உருவாக்கும் விதத்தில், பின்னணியாக இருக்கிறார்.

தி.மு.க. குடும்பப் பின்னணி, இலக்கிய ஆர்வம் போன்றவை இயல்பாகவே கனிமொழியிடம் தமிழச்சிக்கு நெருக்கத்தைக் கொண்டு வந்தது. இன்று தி.மு.க.வில் இருக்கும் இரு அதிகார மையங்களுக்கிடையே, தமிழச்சி பாலமாக இருக்கிறார் என்று சொன்னால், அது மிகைப்படுத்தல் இல்லை. ‘வனப்பேச்சி’ மற்றும் ‘எஞ்சோட்டுப் பெண்’ என்கிற இவரது கவிதைத் தொகுப்புகள் வந்திருக் கின்றன.

இவருக்கு மேடை நாடகங்களில் மிகுந்த ஆர்வம் உண்டு. பிரசன்னா ராமசாமியின் பல நவீன நாடகங்களில் நடித்திருக்கிறார் தமிழச்சி.

புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் பற்றி டாக்டர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். இரண்டு பெண் குழந்தைகள். கணவர் சந்திரசேகர், காவல் துறையின் நுண்ணறிவுத் துறையில் பணியாற் றும் அதிகா¡ரி. ஜெ. அரசு ராணிமோரிக் கல்லூ¡ரி இடத்தைத் தலைமைச் செயலகத்துக்காக எடுக்க முயன்ற போது நடந்த போராட்டத்தில் இவர் கலந்து கொண்டபின், ‘சிவகங்கைக்கு மாற்றிவிடுவோம்’ என்று பயமுறுத்திப் பார்த்தார்களாம்.

2006-ல் ஆட்சி மாற்றத்துக்கு முன்னர் அரசு குடியிருப்பைக் காலி செய்ய அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். “நான் திடீரென்று அரசியலில் குதிக்கவில்லை. ஏற்கெனவே இடஒதுக்கீடு தொடர்பான மகளிர் பேரணி மற்றும் சேது சமுத்திரம் பிரச்னையில் உண்ணா விரதம் ஆகியவற்றில் கலந்துகொண்டிருக்கிறேன். அரசியல் என் இரத்தத்திலேயே ஊறியதுதானே” என்று நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறார் தமிழச்சி.

எதிர்கால தி.மு.க. அரசியலில் யார் யாருக்கு எந்தெந்த பாத்திரங்கள் என்று சதுரங்கத்தில் காய்களை நகர்த்துவது போல் கழகத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சதுரங்கக் கட்டத்தில் ஒருவராக இணைந்து விட்டார் தமிழச்சி. இதுபோன்ற புதியவர்களின் வரவு கட்சியின் களப்பணியாளர்களிடையே அதிருப்தி, பி¡ரிவினை போன்றவற்றைத் தோற்றுவிக்க வாய்ப்புகள் அதிகம்.

அவற்றை எதிர்கொண்டு அனைவரையும் அரவணைப்பதுடன், இந்தப் படித்த புதுவரவுகள் லஞ்ச – ஊழலற்ற சூழலுக்கான அஸ்திவாரத்தை ஏற்படுத்தினால்தான் தமிழகம் வாழ்த்தும்.

——————————————————————————————————————————————————

தி.மு.க., மாநில இளைஞரணி மாநாட்டில் இன்று பேசுவோரும், அவர்களின் தலைப்புகளும்

திருநெல்வேலி:நெல்லையில் நடைபெறும் தி.மு.க., மாநில இளைஞரணி மாநாட்டில் இரண்டாம் நாளான இன்று மொத்தம் 28 சிறப்பு பேச்சாளர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர்.

அது குறித்த விவரம்:

1.இளைஞர் எழுச்சியே இனத்தின் மறுமலர்ச்சி திருச்சி சிவா எம்.பி.,

2. மகளிர் முன்னேற்றத்தில் தி.மு.க., கவிஞர் கனிமொழி எம்.பி.,

3. சேது சமுத்திரத்திட்டம் நுõற்றாண்டு கனவு சபாபதி மோகன்

4.கலைஞர் ஆட்சியில் சமூக நலப்பணிகள் ச.தங்கவேலு

5. கலைஞர் அழைக்கின்றார், இளைஞனே எழுந்து வா! குத்தாலம் அன்பழகன் எம்.எல்.ஏ.,

6. சமத்துவபுரங்களும் சாதி ஒழிப்பும் வி.பி.,இராசன்

7. உலகை குலுக்கிய புரட்சிகள் கோ.வி.,செழியன்

8. நீதிக்கட்சி தோன்றியது ஏன்? நெல்லிக்குப்பம் புகழேந்தி

9.இந்திய அரசியலில் தி.மு.க., புதுக்கோட்டை விஜயா

10. அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு தாயகம் கவி

11. புதிய புறநானுõறு படைப்போம்! கரூர் கணேசன்

12.வீழ்வது நாமாக இருப்பினும்,வாழ்வது தமிழாக இருக்கட்டும்! தாமரை பாரதி

13.வர்ணாசிரமத்தால் வந்த கேடு தஞ்சை காமராஜ்

14. பெண்ணுரிமை பேசும் திருநாட்டில் தாட்சாயணி

15. திராவிட இயக்கப் பயணத்தில் ஈரோடு இறைவன்

16. சிறுபான்மை சமுதாய காவல் அரண் கரூர் முரளி

17. சமூக நீதிப்போரில் தி.மு.க., திப்பம்பட்டி ஆறுச்சாமி

18. அண்ணாவும் கலைஞரும் காத்த அரசியல் கண்ணியம் சரத்பாலா

19. மத நல்லிணக்கமும், மனித நேயமும் சைதை சாதிக்

20. சாதி பேதம் களைவோம்! வி.பி.ஆர்., இளம்பரிதி

21. திராவிட இயக்க முன்னோடிகள் குடியாத்தம் குமரன்

22. அன்னைத்தமிழில் அர்ச்சனை செய்வோம்! சென்னை அரங்கநாதன்

23. உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு கந்திலி கரிகாலன்

24. கலைஞர் ஆட்சியில் தொழிற்புரட்சி! புதுக்கோட்டை செல்வம்

25. தமிழர் நிலையும் கலைஞர் பணியும் கனல் காந்தி

26. திராவிட இயக்கமும் மகளிர் எழுச்சியும் இறை.கார்குழலி

27.தீண்டாமையை ஒழிக்க சபதமேற்போம்! திருப்பூர் நாகராஜ்

28. மனித உரிமை காக்கும் மான உணர்வு! வரகூர் காமராஜ் >

——————————————————————————————————————————————————

தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டுச் சிறப்புகள்

> நெல்லையில் நேற்று (15.12.2007) தொடங்கிய தி.மு.க. இளைஞரணி முதல் மாநில மாநாட்டில் 31 மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க. இளைஞர் அணியினர் சீருடையில் அணிவகுத்துச் சென்றனர்.

> நெல்லை மருத்துவக் கல்லூரி மய்தானத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலின் மொத்த பரப்பளவு 100 ஏக்கர் ஆகும்.

> மாநாட்டுத் திடலில் முன் முகப்பு 60 அடி உயரத்தில், 500 அடி நீளத்தில் கோட்டை வடிவ முகப்பு போன்று அமைக்கப்பட்டு உள்ளது. அதன் முன்பு கலைஞரின் வயதைக் குறிக்கும் வகையில் 84 அடி உயரக் கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது. அதில் தி.மு.க. கொடி பட்டொளி வீசிப் பறந்தது.

> மேலும் மாநாட்டின் முன்பு 84 அடி உயரம் 444 அடி அகலத்தில் பனை ஓலையால் வேயப்பட்ட பந்தல் முன் முகப்பு வடிவமைக்கப்பட்டுப் பேரழகுடன் திகழ்ந்தது.

> மாநாட்டுப் பந்தல் 500 அடி நீளம், 450 அடி அகலத்தில் மழை பெய்தால் ஒழுகாத வண்ணம் பிரம்மாண்ட இரும்புப் பந்தலாக உருவாக்கப்பட்டு பொலிவுடன் காட்சி அளித்தது.

> பந்தலின் உள்புறம் வெல்வெட் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு செயற்கை மலர்கள் தொங்கவிடப்பட்டிருந்தன.

> தலைவர்கள் பங்கேற்றுப் பேசும் மேடை 70 அடி நீளம், 60 அடி அகலம் 5. 5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு, அதில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. ஒரு நட்சத்திர மாளிகை போன்று மாநாட்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது.

> மாநாட்டில் தொண்டர்களுக்கு 30 சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. சுற்றுப் புறங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு 120 ஏக்கர் நிலம் சீர் செய்யப்பட்டு அமைக்கப் பட்டிருந்தது.

> நெல்லை நகரில் கண்ணைக் கவரும் வகையில் 55 மின் ஒளிக் கோபுரங்களும், ஆர்ச் தகடும் வைக்கப்பட்டிருந்தன. இது தவிர ஊர்வலம் சென்ற பாதையில் பல்வேறு மாவட்டங்களின் சார்பில் கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன.

Posted in ADMK, Anna, Arulmoli, Arulmozhi, Arulmozi, College, DMK, Elections, Females, Ilampirai, Instructors, JJ, Kalainjar, Kalki, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kavinjar, Ladies, Lady, Literature, Manushyaputhiran, MGR, MK, Nellai, Poems, Poets, Polls, Poongothai, Poonkothai, Professors, QMC, Queen Marys, Raani Mary, Rani Mary, Rani Mary College, Ravikkumar, Ravikumar, Reservations, Salma, Sarguna pandian, Sarguna pandiyan, Sargunapandian, Sargunapandiyan, Sarhunapandiyan, Sathiavani Muthu, Sathiavanimuthu, Sathiyavani Muthu, Sathiyavanimuthu, She, Teachers, Thamilachi, Thamizachi, Thamizhachi, Thangam, Thangam Thennarasu, Thennarasu, Tirunelveli, Votes | Leave a Comment »

Telugu Actor Chiranjeevi to launch new political party in Andhra Pradesh

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2007


நடிகர் சிரஞ்சீவி, அடுத்த மாதம் புதிய கட்சி தொடங்குகிறார்?
ஆந்திராவில் பெரும் பரபரப்பு

நகரி, டிச.5-

நடிகர் சிரஞ்சீவி புதிய அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியானதால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார்

தெலுங்கு திரை உலகில் இருந்து ஆந்திர அரசியலுக்குள் நுழைந்து வெற்றிக்கனி பறித்தவர் என்.டி.ராமாராவ். அவர் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திர அரசியலில் முக்கிய சக்தியாக விளங்கி வருகிறது. இதனை தொடர்ந்து, லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி, பிரபல நடிகை ரோஜா என ஏராளமான திரை உலக பிரபலங்கள் ஆந்திரா அரசியல் களத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளார். சமீப காலமாகவே இது குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியான போதிலும் இதுவரை அவர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அரசியலில் குதித்தால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து அவர் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

கம்ïனிஸ்டு தலைவர்கள்

ஆந்திராவில் நாயுடு மற்றும் ரெட்டி இனத்தை சேர்ந்தவர்களே தொடர்ந்து ஆட்சியில் இருப்பதால் அந்த இனத்தவர்களே பயன் பெறுவதாக பிற இனத்தை சேர்ந்தவர்கள் கருதுகின்றனர். எனவே பிற்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட இனத்தவர் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவு சிரஞ்சீவிக்கு கிடைக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். அதே நேரத்தில் மார்க்சிஸ்டு தலைவர் ராகவலு மற்றும் இந்திய கம்ïனிஸ்டு தலைவர் நாராயணா ஆகியோர் சிரஞ்சீவியை சந்தித்து பேசினர்.

எனவே சிரஞ்சீவி புதிய கட்சியை தொடங்கினால் அவரது தலைமையில் மூன்றாவது அணி அமையும் வாய்ப்பும் உருவாகும். இதற்கிடையே சிரஞ்சீவியின் சகோதரரான நடிகர் பவன் கல்யாண், பகுஜன் சமாஜ் கட்சியுடன் பேசி வருகிறார். கட்சி ஆரம்பித்தால் மக்கள் மத்தியில் ஆதரவு எப்படி இருக்கும் என்பது குறித்து நெருங்கிய பத்திரிகையாளர்களிடம் சிரஞ்சீவியின் நண்பர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

மைத்துனர் ஆர்வம்

புதிய கட்சி தொடங்கும் விஷயத்தில் சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்து, சகோதரர் பவன் கல்யாண் ஆகியோர் தீவிரமாக இருக்கின்றனர். எனவே புதிய கட்சி தொடங்குவது குறித்து சிரஞ்சீவி நேற்று அறிவிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் அவ்வாறு எந்த அறிவிப்பையும் சிரஞ்சீவி வெளியிடவில்லை. எனினும் எந்த நேரத்திலும் தொலைக்காட்சியில் தோன்றி அறிவிப்பு வெளியிடுவார் என்று கூறப்படுவதால் அவரது ரசிகர்கள் எதிர் பார்ப்புடன் காத்திருக்கின்றனர். டி.வி. சேனல்களும் சிரஞ்சீவியை சுற்றி வருகின்றன. இதற்கிடையே, ஜனவரி மாதத்தில் முறைப்படி புதிய கட்சியை தொடங்குவார் என்று சிரஞ்சீவியின் நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.


முந்தைய சிரஞ்சீவி செய்திகள்:1. Andhra Pradesh Cinema Politics – Mohan Babu & Chiranjeevi refuse to accept awards from Congress CM « Tamil News: “தெலுங்கு பட விழாவில் நடிகர் சிரஞ்சீவி மீது மோகன்பாபு பாய்ச்சல்: இருவரும் விருது பெற மறுப்பு”

2. ‘Desamuduru’ hero Allu Arjun gets robbed by fans « Tamil News: “ரசிகர்கள் போல் முற்றுகை: நடிகரின் நகைகளை பறித்த திருடர்கள்”

3. Chiranjeevi’s second daughter weds secretly « Tamil News: “நடிகர் சிரஞ்சீவியின் மகள் காதல் திருமணம்: குடும்பத்தினர் மிரட்டுவதாக புகார்”

4. Telugu Actor Chiranjeevi’s brother Pawan Kalyan refuses to give Alimony « Tamil News: “வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக புகார்: நடிகர் சிரஞ்சீவி தம்பிமீது மனைவி வழக்கு”

Posted in Andhra, Andhra Pradesh, AP, Chandrababu, Chandrababu Naidu, Chanthirababu, Chanthirababu Naidu, Chanthrababu, Chanthrababu Naidu, Cinema, CM, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Eenadu, Election, Films, Media, MGR, Movies, MSM, Muslim, Naidu, Nayudu, NTR, Party, Pavan, Pavan kalyan, Pawan, Polls, Reddy, Roja, Sun, Superstar, TDP, Telugu, Telugu Desam, Tollywood, TV, voters, Votes | Leave a Comment »

Actor, Politician ‘Nizhalgal’ Chandrasekar – Biosketch

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2007

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(803)
ஹீரோ, வில்லன், குணசித்ர வேடம்
300 படங்களில் நடித்து சந்திரசேகர் சாதனை

சினிமாவில் எந்தப் பின்னணியும் இல்லாமல் சொந்த முயற்சியால் நடிகரானவர் சந்திரசேகர். ஹீரோ, குணசித்ரம், வில்லன் என்று எந்த கேரக்டரிலும் தன்னை இயல்பாக வெளிப்படுத்திக் கொள்ளும் சந்திரசேகர், சினிமாவில் ஏற்று நடிக்காத கேரக்டர்களே இல்லை. 28 வருடங்களில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தொடர்ந்து நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

சந்திரசேகருக்கு சொந்த ஊர் திண்டுக்கல்லை அடுத்த வாகைக்குளம். திண்டுக்கல்லில் உள்ள டட்லி பள்ளியில்தான் ஆரம்பப்படிப்பு. பள்ளியில் ஆறாவது படிக்கும்போது, மற்ற மாணவர்களிடம் இல்லாத ஒரு திறமை இவரிடம் இருந்தது. அதாவது பாடம் நடத்தும் ஆசிரியர்களின் `மேனரிசம்’ என்னவோ, அதை அப்படியே உள்வாங்கி, அந்த ஆசிரியர் பாடம் நடத்தி விட்டுப் போனதும் அதை அப்படியே நடித்துக் காட்டுவார்!

சினிமா ஆசை

இப்படி நடிக்க ஆரம்பித்தவருக்கு, நிறைய சினிமா பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தினமும் வீட்டில் காய்கறி வாங்க கொடுக்கும் காசில் கமிஷன் பார்த்து அதை படம் பார்க்க வைத்துக் கொள்வார். 25 பைசா தேறினால் ஒரு படத்துக்கான கட்டணம் ஆகிவிடும். சைக்கிள் பாசுக்கு 5 பைசா. 30 பைசாவுக்குள் படம் பார்க்கும் கனவு நிறைவேறி விடும். இதனால் எப்போது கையில் 30 பைசா தேறுகிறதோ, அன்றெல்லாம் வகுப்புக்கு `கட்’ அடிக்க ஆரம்பித்தார்.

படம் பார்த்து முடித்த பிறகு படத்தில் நடித்தவர்கள் பற்றி அறிய ஆசை ஏற்பட்டது. திண்டுக்கல் பஜாரில் ஞாயிறு தோறும் பிளாட்பாரத்தில் புத்தக கடை போடப்பட்டிருக்கும். அந்தக் கடையில் “பேசும் படம்”, “பிலிமாலயா” முதலிய சினிமா பத்திரிகைகளும் இருக்கும். தேடிப்பிடித்து அதை படிக்கும் சந்திரசேகர், நடிகராகவேண்டும் என்ற கனவை தனக்குள் விதைத்துக் கொண்டது அப்போதுதான்.

கலைஞரின் “பராசக்தி”, “மனோகரா” வசனங்கள் அவரைக் கவர்ந்தன. அந்த வசனங்கள் அவருக்கு மனப்பாடம்.

1965-ல் தி.மு.கழகம் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அப்போது 6-வது படித்துக் கொண்டிருந்த சந்திரசேகர் தன் சக மாணவர்களுடன் கலந்து கொண்டார்.

11-வது வகுப்பை முடித்த சந்திரசேகரின் அண்ணன் பாண்டியன் ஓவியக் கல்லூரியில் சேர சென்னை புறப்பட்டார். அண்ணனின் சென்னைப் பிரவேசத்தில் சந்திரசேகர்தான் அதிகம் மகிழ்ந்தார். சென்னையில்தான் அவரை கலையால் ஆட்டி வைக்கும் நடிகர் – நடிகைகள் இருக்கிறார்கள்.

அண்ணனின் சென்னை பிரவேசம் தன்னை எப்படி பரவசப்பட வைத்தது என்பதை சந்திரசேகர் கூறுகிறார்:-

“சென்னை வந்த அண்ணன் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து விட்டார். எனக்கு எஸ்.எஸ்.எல்.சி. (அப்போதைய 11-ம் வகுப்பு) முடிந்ததும் சென்னை வந்து நடிப்புக் கல்லூரியில் சேர ஆசை. அண்ணன் ஏற்கனவே சென்னை வந்துவிட்டதால், எனக்கும் வீட்டில் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அப்பாவிடம் என் ஆசையை சொன்னபோது, “முதலில் டிகிரி (பட்டப்படிப்பு) முடி! அப்புறம் பார்த்துக்கலாம். ஒரு டிகிரி இருந்தால் நிச்சயம் உனக்கு சோறு போடும்” என்றார் அப்பா.

அப்பா சொன்னதை தட்ட முடியவில்லை. அதனால் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் சேர விண்ணப்ப படிவம் வாங்கப்போனேன். அதற்கும் பெரிய கூட்டம். வரிசையில் நின்றேன். கடைசியாக எனக்கு முன்நின்று கொண்டிருந்த 2 பேர் பணம் கட்டிவிட்டால் அடுத்து நான்தான் கட்ட வேண்டும்.

அப்போது மறுபடியும் என் மனத்திரை சினிமா பக்கமாக ஓடியது. கல்லூரியில் சேர்ந்து விட்டால் 3 ஆண்டுகளுக்கு சினிமாவை நினைத்துக்கூட பார்க்க முடியாது. எனவே “படிப்பா, நடிப்பா?” என எனக்குள் கேட்டுக்கொண்டு தடுமாறி நின்ற நேரத்தில் எனக்கு முன்னதாக நின்றவரும் பணத்தை கட்டிவிட்டார். அடுத்து நான். இப்போது என் சினிமா ஆசை வென்றது. எனக்குப்பின் நின்றவருக்கு வழிவிட்டுவிட்டு, வரிசையை விட்டு வெளியே வந்தேன். விண்ணப்ப படிவத்தை கிழித்துப் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். பீஸ் கட்ட அப்பா கொடுத்த பணத்தை திரும்பக் கொடுத்தேன். கொடுக்கும்போதே அழுகை வந்துவிட்டது.

“ஏண்டா என்னாச்சு?” அப்பா கேட்டார்.

நான் அப்பாவிடம், “கல்லூரியில் சேர்ந்து 3 வருஷம் படித்த பிறகும் சினிமாவுக்குத்தான் போகப்போகிறேன். இப்போதே முயற்சி செய்தால் இந்த மூன்று வருஷம் மிச்சமாகுமே” என்றேன். அப்பா என்னையே கூர்ந்து பார்த்தார். முகத்தில் கோபம் இல்லை. “சினிமாவுக்குள் இத்தனை தீவிரமா?” என்கிற மாதிரி பார்வை இருந்தது. “சரிப்பா! இவ்வளவு ஆர்வமாக இருக்கிறாய்! முயற்சி செய்து பார்” என்றார். இது போதாதா? அடுத்த வாரமே சென்னைக்கு புறப்பட்டேன்.

கே.பாலசந்தர்

ஏற்கனவே சினிமா பத்திரிகையில் டைரக்டர்களின் முகவரியை பார்த்து குறித்து வைத்திருந்தேன். சென்னையில் நான் நடிக்க வாய்ப்பு கேட்க முடிவு செய்திருந்த முதல் இயக்குனர் கே.பாலசந்தர். சென்னை வாரன் ரோட்டில் இருந்த அலுவலகத்தில் கே.பாலசந்தர் சாரை போய் பார்த்தேன். அரை டிராயருடன் 11-வது வகுப்பு முடித்த பையனுக்கு எப்படி ஹீரோ வாய்ப்பு கொடுக்க மனம் வரும்? என் நடிப்பு ஆர்வத்தை தெரிந்து கொண்டவர், “படிச்சிட்டு தானே இருக்கே! முதல்ல நல்லா படி. படிப்பை முடிச்சிட்டு வந்து என்னைப்பார்” என்றார்.

நான் சோர்ந்து போனேன். என்றாலும் அடுத்து டைரக்டர் பட்டு, கதாசிரியர் – வசனகர்த்தா பாலமுருகன் ஆகியோரை சந்தித்தேன். அவர்களும் அதே மாதிரி சொல்லிவிட்டார்கள்.

டைரக்டர்களை இனி பார்ப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தேன். அடுத்து என் மனக்கண் முன் தோன்றியவர் கலைஞர். பொதுக்கூட்டங்களில் அவர் பேச்சைக் கேட்டிருக்கிறேன். “பராசக்தி” வசனம் எனக்கு தலைகீழ் பாடம். கலைஞரை சந்தித்து, வசனம் பேசிக் காட்டுவோம். அவர் சொன்னால் டைரக்டர்கள் கேட்கத்தானே செய்வார்கள்” என்று என் மனசு கணக்குப்போட, கோபாலபுரம் போனேன்.

கலைஞர் வீட்டு முன் நான் அங்கும் இங்கும் நடைபோட்டுக் கொண்டிருப்பதை பார்த்த ஒருவர் என்னிடம் வந்தார். “யாருப்பா நீ?” என்று கேட்டார். நான் விவரத்தை சொல்லி, “கலைஞர் மட்டும் நான் வசனம் பேசுவதை கேட்டால் நிச்சயம் என்னை நடிக்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்வார். அவரை பார்த்துப் போகவே வந்தேன்” என்றேன்.

நான் சொன்னதை கேட்ட அந்த மனிதரோ, “நடிக்க வந்திருக்கிற ஆளைப் பாரேன்! படிக்கிற வயசில என்னடா இதெல்லாம்?” என்று முதுகில் ஒரு போடு போட்டார் (செல்லமாகத்தான்). இப்போதும் கலைஞரிடம் உதவியாளராக இருக்கும் செயல்மணிதான் அன்று என்னை படிக்கச் சொல்லி துரத்தி விட்டவர்!

சினிமா பத்திரிகை

யார் யாரையோ பார்த்தும் எதுவும் நடக்காத நிலையில், சினிமா பத்திரிகையில் பணிபுரிய வாய்ப்பு வந்தது. அப்போது “திரைவானம்” என்ற சினிமா பத்திரிகையை நரசிம்மன் என்பவர் நடத்தி வந்தார். அப்போது புகழேணியின் உச்சியில் இருந்த எம்.ஜி.ஆர் – சிவாஜி இருவர் பெயரிலும் தனித்தனி சினிமா பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தன. `திரைவானம்’ பொதுவாக எல்லா சினிமா நடிகர்கள் பற்றிய செய்திகளையும் தருவதாக அமைந்திருந்தது.

சினிமா பத்திரிகை என்பதால் ஸ்டூடியோவுக்கு போய் நடிகர் – நடிகைகளை சந்தித்து பேட்டி எடுக்கும் வாய்ப்பு அமையும்; அதன் மூலம் நாமும் நடிகராகி விடலாம் என்று எண்ணினேன். சினிமா பத்திரிகை நிருபரை பத்திரிகையாளராக பார்த்தார்களே தவிர, `நாளைய நடிகர்’ என்ற கண்ணோட்டத்தில் யாரும் பார்க்கவில்லை!

லாரி கம்பெனி

இதற்கிடையே சென்னை யானைக்கவுனியில் உள்ள ஒரு லாரி கம்பெனியில் மானேஜராக சேர்ந்தேன்.

வரும் லாரிகளுக்கு தேவையான சரக்கை ஏற்றி `டிரிப்ஷிட்’ போட்டு அனுப்புவது என் வேலை. ஆனால் எப்போதும் சினிமா நினைவிலேயே இருந்ததால், வேலையில் கோட்டை விட்டேன்.

லாரி புக்கிங் கம்பெனி உரிமையாளருக்கு வியாபாரிகள் போன் செய்தார்கள். “என்ன அண்ணாச்சி! துவரம் பருப்பு லோடு கேட்டால் அரிசி மூட்டைகள் வந்திருக்கு!” என்றும், “புளி, மிளகாய் லோடுதானே கேட்டேன். துவரம் பருப்பு, பனைவெல்லம் வந்திருக்கு” என்று புகாருக்கு மேல் புகார்!

முதலாளி என்னை அழைத்தார். “முப்பது வருஷத்துக்கு மேல் பிசினசில் கொடிகட்டிப் பறந்த என் செல்வாக்கை ஒரே வாரத்தில் ஆட்டம் காண வைத்த புண்ணியவானே! போயிட்டு வா!” என்று கூறி, என் சீட்டைக் கிழித்து அனுப்பி வைத்தார்.

அப்போது, என் உறவினர் பெரிய கருப்பத்தேவர் நாடக கம்பெனியில் நடிகராக இருந்தார். நாடகத்தில் இருந்துதான் எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், மனோரமா போன்றோர் சினிமாவுக்கு போனதாக சொன்னார். நாடகத்தில் நடித்தால், சினிமா வாய்ப்பு எளிதில் கிடைக்கும் என்றும் சொன்னார்.

இது போதாதா! அப்போது பிரபலமாக இருந்த தேவி நாடக சபாவிலும், பிறகு வைரம் நாடக சபாவிலும் சேர்ந்தேன்.

1974-ல் தொடங்கி 1976 வரை நான் நடிப்பில் பட்டை தீட்டப்பட்டது இந்த சபாக்களில்தான். ராஜாதேசிங்கு நாடகம் நடந்தபோது, அதில் ஒரு போர் வீரனாக வேடம் கிடைத்தது. நாடகத்தின் அத்தனை கேரக்டர்களின் வசனங்களையும் மனதில் பதித்துக் கொண்டேன். இரண்டே வருடத்தில் நானே ராஜாதேசிங்கு கேரக்டரில் நடிக்கும் அளவுக்கு நடிப்பில் வளர்ந்தேன்.

திரைப்பட வரலாறு 804
நடிகர் சந்திரசேகர்
நாடகங்களில் நடித்த அனுபவம்

சினிமாவில் நடிக்க விரும்பிய சந்திரசேகருக்கு, முதலில் நாடகங்களில் வாய்ப்பு கிடைத்தது.

4 வருடங்களில் படிப்படியாக முன்னேறி நாடக கதாநாயகனாக உயர்ந்தார்.

நாடகத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து சந்திரசேகர் கூறியதாவது:-

“முதலில், சாதாரணமாக தலைகாட்டி விட்டுப் போகும் வேடங்கள்தான் கிடைத்தன. அதுவே போதும் என்றிராமல், நாடகத்தின் ஒட்டுமொத்த கேரக்டர்கள் பற்றியும், அந்த கேரக்டர்களுக்கான வசனங்கள் பற்றியும் தெரிந்து கொண்டேன். ஏற்ற இறக்கங்களோடு பேசிப் பார்த்தேன்.

கதாநாயகன்

ஒரு நாடகத்தில் யாராவது ஒருவர் வராமல் இருந்தால் அவருக்குப் பதிலாக நான் நடிக்கும் அளவுக்கு தேர்ந்திருந்தேன். அதனால்தான் சின்ன வேடத்தில் தோன்றிய அதே நாடகத்தில், கதாநாயகன் வேடம் வரை வர முடிந்தது.

நடிப்பு என்பது எனக்குள் வெறியாகவே மாறிப்போனதால், ஊர் ஊராக நாடகம் போடப்போகிற இடத்தில்கூட, ரசிகர்கள் கிடைத்தார்கள். சீர்காழியை அடுத்த கோவில்பத்து என்ற ஊரில் எங்கள் நாடகக் குழு கேம்ப் போட்டிருந்தபோது வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. அதாவது பகல் முழுக்க காய்ச்சலாக இருக்கும். மாலை 6 மணி ஆனதும், காய்ச்சல் விட்டுவிடும்!

பகலில் காய்ச்சல் காரணமாக சாப்பிட முடியாத நிலை. இரவில் நாடகத்தில் நடித்தாக வேண்டும். `பசி’யையும், காய்ச்சலையும் மறந்து ஏற்ற கேரக்டரோடு ஒன்றி விடுவேன். ரசிகர்களின் கரகோஷம்தான் எனக்கு சாப்பாடு!

ஒரு மாதம் இப்படி நீடித்த அந்த மர்மக் காய்ச்சலில், உடம்பு பாதியாகிவிட்டது.

சுய மரியாதை

எனக்கு எப்போதுமே சுய மரியாதை உணர்வு அதிகம். நாடக கம்பெனி முதலாளி கொஞ்சம் முரட்டுக் குணம் கொண்டவர். அவரை பார்த்தாலே நாடகக் குழுவில் உள்ள அத்தனை பேரும் பயப்படுவார்கள். நான் மட்டும் இதில் விதிவிலக்கு. முதலாளி என்ற மரியாதை உண்டு என்றாலும், `தேவையில்லாமல் ஏன் பயப்பட வேண்டும்’ என்று நினைப்பேன்.

“டீ வாங்கி வா!”

இந்த என் சுய மரியாதைக்கும் ஒரு நாள் சோதனை வந்தது. ஒருநாள் மேக்கப் ரூமில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த முதலாளி என்னை அழைத்தார். “டீ வாங்கிட்டு வாப்பா” என்றார்.

வழக்கமாக வரும் டீக்கடை பையன் அன்று வரவில்லை என்பதால்தான் என்னிடம் `டீ’ வாங்கி வரச்சொன்னார். என்றாலும் அவர் கேட்ட தோரணை என் தன்மானத்தை உசுப்பி விட்டது. உடனே நான் அவரிடம், “உங்களுக்கு டீ வாங்கிட்டு வர்றது என் வேலையில்லை. நடிக்கிறதுதான் என் வேலை” என்று சொல்லிவிட்டேன்.

நான் இப்படிச் சொன்னதும் மேக்கப் ரூமில் இருந்த நடிகர்கள் முகத்தில் ஒருவித பதட்டம் தெரிந்தது. அடுத்து முதலாளியின் `ரியாக்ஷன்’ என்ன மாதிரி இருக்குமோ என்பதில் ஏற்பட்ட பயம் அது.

ஆனால் நடந்தது என்ன தெரியுமா? முதலாளி என் பதிலை சர்வசாதாரணமாக எடுத்துக் கொண்டார். நான் `டீ’ விஷயமாக அவரிடம் பேசியதை காட்டிக் கொள்ளாமல், வேறு சப்ஜெக்ட் பற்றி பேசத் தொடங்கி விட்டார்.

நாடக அறிவிப்பு

நாடகத்தில் நடித்த காலக்கட்டத்தில் என் குரல் சன்னமாக இருக்கும். குரல் கம்பீரமாக இருக்க, தொடர்ந்து பேசி பயிற்சி பெற விரும்பினேன்.

எங்கள் நாடகம் நடக்கும் இடத்தைச் சுற்றி 50 கிராமங்களுக்கு மேல் இருக்கும். காலை நேரத்தில் இந்த கிராமங்களுக்கு வண்டி கட்டி மைக்கில் நாடகம் பற்றி அறிவிப்பார்கள். இப்படி மைக்கில் அறிவிக்கும் பொறுப்பை, நானாகக் கேட்டு பெற்றுக்கொண்டேன்! காலை 10 மணிக்கு இப்படி அன்பார்ந்த பெரியோர்களே! என்று ஆரம்பித்தால், அது முடிய மாலை 6 மணி ஆகிவிடும்.

அதன் பிறகு 61/2 மணிக்கு தொடங்கும் நாடகத்தில் நடிக்கத் தயாராக வேண்டும். இப்படி பகல் முழுக்க `மைக்’கில் கத்திப் பேசிவிட்டு, நாடகத்திலும் உணர்ச்சி மயமான காட்சிகளில் நடிக்கும்போது வாயில் இருந்து ரத்தம் கசியும். ஆனாலும் இப்படியான கடினப் பயிற்சிதான், என் குரலை வளமாக்கியது.

அப்பாவின் ஆசி

மழை சீசனில் நாடகம் நடத்த முடியாது. அதனால் ஊருக்குப்போய் விடுவேன். அப்பாவிடம் என் நாடக அனுபவங்களை சொல்லுவேன். ராஜாதேசிங்கு நாடகத்தில் தேசிங்காக நடித்ததை அப்பாவிடம் சொன்னபோது “தேசிங்காக நடித்துக்காட்டு” என்றார் அப்பா. உடனே வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் தேசிங்குராஜனாகவே மாறி அப்பாவிடம் நடித்துக்காட்டினேன்.

கண் கலங்கிப்போன அப்பா என்னிடம், “நடிக்கணும்னு ஆசைப்பட்டே! அதில் திறமை இருந்தாதான் வரமுடியும். இப்போது உன் திறமையில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நிச்சயம் நீ சினிமாவிலும் ஜெயிப்பாய். நீ சிங்கக் குட்டியடா!” என்று சொன்னபடி என் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

ஆனால், என் சினிமாக் கனவு பலிக்கும் முன்பே அப்பா இறந்து போனார்.

வீட்டில் நான்தான் கடைசிப் பையன். அப்பா இறந்ததற்கு மொட்டை போட்டு, 16-ம் நாள் காரியம் முடியும் வரை வீட்டில் இருந்தேன். அதன் பிறகு திருவெண்காட்டில் நடந்த எங்கள் நாடகத்துக்குப் போனேன்.

எதிர்பாராதது

அந்த நாடகத்தில் எனக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம். ஒரு காட்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய வேகத்தில் தொப்பியைக் கழற்றிவிட்டேன். என் மொட்டைத் தலையைப் பார்த்து, ரசிகர்கள் சிரித்து விட்டார்கள். உடனே நான் நடிப்பதை நிறுத்திவிட்டு, ஒலிபெருக்கியில் ரசிகர்களிடம் பேசினேன். “பலதரப்பட்ட வேடங்களில் என் நடிப்பை பார்த்திருப்பீர்கள். இந்த போலீஸ் கேரக்டரில் என் நடிப்பைத்தாண்டி நீங்கள் சிரிக்கிற காரணம், என் அப்பாவின் மரணத்துக்காக நான் போட்ட மொட்டை. இது தந்தையின் இழப்புக்காக ஒரு மகனின் கடமை. அந்தக் கடமையை முடித்து விட்டுத்தான் உங்கள் முன்பாக மேடையேறியிருக்கிறேன். இதற்குப் பிறகும் என் மொட்டைத் தலைக்காக நீங்கள் சிரிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்” என்றேன்.

நான் பேசி முடித்ததும் ரசிகர்கள் மத்தியில் ஒரு அசாதாரண அமைதி நிலவியது. சிலருடைய கண்கள் கலங்கியிருந்தன. என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு நடித்து முடித்தேன்.

லாரியில் பயணம்

எனக்கு அப்போது 20 வயதுதான். அந்த ஊரில் இருந்துதான் சினிமாவில் நடிக்க சென்னைக்கு புறப்பட்டேன். திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு மல்லிகைப்பூ ஏற்றி வந்த லாரியில், மல்லிகை வாசனையை முகர்ந்து கொண்டே சென்னை வந்து சேர்ந்தேன்.

அது 1975-ம் வருஷம். அப்போதுதான் டெலிவிஷன் மக்களிடையே அறிமுகமாகியிருந்தது. நான் மைலாப்பூர் மாங்கொல்லையில் உள்ள, ஒரு லாட்ஜில் மாதம் 150 ரூபாய் வாடகையில் தங்கியபடி சினிமா வாய்ப்புக்கு முயன்றேன்.

டெலிவிஷன் சீரியல்

அப்போது சென்னை டெலிவிஷனில் பணியாற்றிய கவிஞர் தஞ்சை வாணனின் நட்பு கிடைத்தது. அவரது நாடகங்கள் டெலிவிஷனுக்காக சீரியலாக உருவானபோது, எனக்கும் வாய்ப்பு கொடுத்தார். மாதம் ஒரு டெலிவிஷன் நாடகம் கிடைத்தது. நாடகத்தில் நடிக்க எனக்கு கிடைத்தது 75 ரூபாய்.

நான் நடித்த முதல் நாடகம் ஒளிபரப்பான நாளில் அதை டிவியில் எப்படியாவது பார்த்துவிட ஆசை. நான் இருந்த லாட்ஜ் ரூமில் டெலிவிஷன் கிடையாது. எனவே அப்போது எனக்கு அறிமுகமாகியிருந்த ஆர்ட் டைரக்டரின் வடபழனி வீட்டுக்கு நானும் அவரும் மைலாப்பூரில் இருந்து பஸ்சில் புறப்பட்டோம்.

பஸ் வடபழனி வந்து சேரவும், நாடகம் ஒளிபரப்பாகும் நேரம் வரவும் சரியாக இருந்தது. அங்கிருந்து ஓட்டமாய் ஓடி, நான் வாசலில் கால் வைத்தபோது தெரிந்தது என் முகம்தான். அப்போதுதான் நான் நடித்த காட்சி டிவி திரையில் ஓடிக்கொண்டிருந்தது. என் முகத்தை நானே திரையில் பார்த்தது அதுதான் முதல் தடவை என்பதால், அந்த நேரத்தில் ஏற்பட்ட என் பரவச உணர்வை என்னால் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியவில்லை. அப்போதே சினிமாவில் நடித்து ஜெயித்து விட்ட மாதிரி அப்படி ஒரு சந்தோஷம்.

நழுவிய வாய்ப்பு

இப்படி டிவி நாடகங்கள் தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில் தஞ்சை வாணனிடம் இருந்து நாடகத் துறை இன்னொருவர் கைக்கு மாறிவிட்டது. அவருக்கு ஏனோ என்னை பிடிக்காமல் போயிருக்கிறது. அடுத்த நாடகத்தில் நடிப்பதற்காக அவரை சந்தித்தபோது, “கேரக்டர் இருக்கிறது” என்றார். மற்ற நடிகர் – நடிகைகளுக்கு இன்னின்ன கேரக்டர் என்று சொன்னவர், என்னிடம் மட்டும் எதுவும் சொல்லவில்லை. கடைசியில் எனக்கு கிடைத்தது “இறந்து போன கணவனின் அசரீரி குரல்!”

அதாவது, நாடகத்தில் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும். நான் பேச வேண்டிய வசன பேப்பரை உதவி இயக்குனர் என்னிடம் நீட்டியபோது, எனக்கு வந்ததே கோபம். “இது டிவி நாடகம். ரேடியோ நாடகத்துக்குத்தான் குரல் தேவை” என்று சொன்னபடி, அந்த பேப்பரை வீசி எறிந்தேன்.

இந்த விஷயம் புது டிவி இயக்குனருக்கு போக, என்னை வரச்சொன்னார். போனேன். என்னைப் பார்த்ததும், “எல்லோருடைய முன்னிலையிலும் ஸ்கிரிப்ட் பேப்பரை தூக்கி வீசினாயாமே?” என்று கேட்டார். என்னை கோபப்படுத்த வேண்டும் என்பதற்காக அவரே இப்படியொரு சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறார் என்பது புரிந்தது.

“நடிப்பாயா? மாட்டாயா?” என்று கேட்டார்.

“முடியாது” என்றேன்.

டிவி நாடகம் கை நழுவியது.

காலம் மாறியது

அன்று என்னை விரட்டி அடித்த அதே டிவி டைரக்டர்,
5 ஆண்டுகள் கழித்து என்னை கை குலுக்கி பாராட்டிய சம்பவமும் நடந்தது.

பாரதிராஜா இயக்கத்தில் நான் நடித்த “நிழல்கள்” படத்தின் பிரத்தியேக காட்சி மைலாப்பூரில் உள்ள “மேனா” தியேட்டரில் நடந்தது. படம் பார்த்த முக்கிய பிரமுகர்கள் டைரக்டர் பாரதிராஜாவுக்கு கைகொடுத்து வாழ்த்து சொல்கிறார்கள். அப்போது ஒரு கரம் என் பக்கம் நீளுகிறது. பார்த்தால் டிவி இயக்குனர். “வாழ்த்துக்கள்! பிரமாதமா நடிச்சிருக்கீங்க” என்று கை குலுக்கி வாழ்த்தினார்.

—————————————————————————————————————————————————————

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(805)
“புதிய வார்ப்புகள்”
பாரதிராஜா படத்தில் சந்திரசேகர் அறிமுகம்

நாடக நடிகராக இருந்த சந்திரசேகர், பாரதிராஜாவின் “புதிய வார்ப்புகள்” படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானார்.

நாடக வாய்ப்பு, அதைத் தொடர்ந்து டிவி சீரியல் வாய்ப்பு என்று தொடர்ந்து கொண்டிருந்த சந்திரசேகரின் கலை வாழ்க்கையின் அடுத்த முயற்சி சினிமாவாக இருந்தது.

16 வயதினிலே

இந்த சமயத்தில்தான், பாரதிராஜா இயக்கிய முதல் படமான “16 வயதினிலே” திரைக்கு வந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, நம்மை சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டிய டைரக்டர் பாரதிராஜாதான் என்ற முடிவுக்கு வந்தார், சந்திரசேகர்.

இதுபற்றி சந்திரசேகர் கூறியதாவது:-

“சினிமாவில் நடிக்கும் முயற்சியில் சில டைரக்டர்களை சந்தித்த வண்ணம் இருந்தேன். இந்த சமயத்தில் மிட்லண்ட் தியேட்டரில் “16 வயதினிலே” படம் ரிலீசாகியிருந்தது.

ரிலீசான அன்றே படம் பார்க்கப்போனேன். தியேட்டரில் அதிக கூட்டம் இல்லை. டைட்டில் பாடலாக “சோளம் விதைக்கையிலே” பாடலைக் கேட்டதுமே, “ஆஹா! நம்ம ஊர் மண் வாசனையுடன் கூடிய படமாக இருக்கும் போலிருக்கிறதே” என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

படம் முடியும்போது, `சீட்’ நுனிக்கே வந்துவிட்டேன். படம் முடிந்ததும் எனக்குள் எழுந்த கேள்வி: `இந்தப் படத்தின் டைரக்டர் பாரதிராஜா எங்கிருக்கிறார்?’

அப்போதே எனக்குத் தெரிந்த கலை நண்பர்களிடம் போனில் டைரக்டர் பாரதிராஜாவின் முகவரியை கேட்டு வாங்கினேன்.

பாரதிராஜா அப்போது தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார்.

மறுநாள் காலையில் அந்த வீட்டின் கதவைத் தட்டினேன். கொஞ்ச நேரத்தில் தலை நிறைய முடியுடன் தூக்கக் கலக்கத்தில் ஒருவர் வந்தார். அவரிடம், “டைரக்டர் பாரதிராஜாங்கறது…” என்று இழுக்க, அவரோ, “நான்தான் பாரதிராஜா” என்றார்.

அப்போதுதான் முதன் முதலாக அவரைப் பார்க்கிறேன். இந்த இளைஞருக்குள்ளா அப்படியொரு கலைஞானம் என்ற வியப்பினால் பேச வார்த்தை வராமல், நின்று கொண்டிருந்தேன்.

அவரது ஊர் மதுரை பக்கம் என்பதை தெரிந்து கொண்டதும், நானும் மதுரை பக்கம்தான் என்றேன். “படம் எப்படி இருக்குது?” என்று என்னிடம் பாரதிராஜா கேட்டார். “நன்றாக இருக்கிறது. அதனால், நிச்சயமாக நன்றாக ஓடும். உங்களுக்குப் பெரிய அளவில் பெயர் கிடைக்கும்” என்று சொல்லிவிட்டு, “நானும் நடிக்கத்தான் ஊரில் இருந்து வந்தேன். நான் நடிக்கிற முதல் படம் நீங்க டைரக்ட் செய்ற படமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்றேன். “வாய்ப்பு தருகிறேன். எனக்கு வருகிற வாய்ப்புகளை பொறுத்து இது அமையும்” என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.

தினசரி தரிசனம்

அதன் பிறகு தினமும் அவரைப் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். பேசிக்கொள்ள முடியாவிட்டாலும், ஒரு வணக்கத்தையாவது போட்டுவிட்டுப் போய்விடுவேன்.

இதற்குள் “16 வயதினிலே” படம், மிகப்பெரிய வெற்றிப்படமானது. எங்கு பார்த்தாலும், பாரதிராஜா பேசப்பட்டார். பட உலகம் வியந்து பார்க்கிற ஒரு மாமனிதராகி விட்டார்.

அடுத்தபடி “கிழக்கே போகும் ரெயில்” படத்தை இயக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. விடுவேனா? மறுநாள் காலையில் அவர் வீட்டு முன் போய் நின்றேன்.

என்னைப் பார்த்த பாரதிராஜா, “இந்தப் படத்தில் இரண்டு மூன்று கேரக்டர்தான் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தவை. அதனால் உனக்கு கேரக்டர் தர்றதுக்கு வாய்ப்பு இல்லே. நீ என்னிடம் அசிஸ்டெண்ட்டா சேர்ந்துக்க. நடிக்கிற வாய்ப்பு தானாய் அமையும்” என்றார். எனக்கு நடிப்பின் மீது மட்டுமே நோக்கமாக இருந்ததால், `உதவி இயக்குனர்’ வாய்ப்பை தவிர்த்து விட்டேன். “சரி.தினமும் என்னை வந்து பார்த்துப்போ” என்றார் பாரதிராஜா.

“கிழக்கே போகும் ரெயில்” படமும், பாரதிராஜாவின் வித்தியாசமான கைவண்ணத்தில் மகத்தான வெற்றி பெற்றது.

பாரதிராஜா இப்போது மேலும் பிஸியாகி விட்டார். அடுத்து “சிவப்பு ரோஜாக்கள்” படத்தை இயக்கி அதுவும் வெற்றி. இப்போது மனோபாலா என்ற புதியவர் அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்திருந்தார். ஏற்கனவே மனோபாலா எனக்கு நண்பர். நாகேஸ்வரராவ் பார்க்கில் என்னை உட்கார வைத்து போட்டோவெல்லாம் எடுத்திருக்கிறார். நடிகனாக வேண்டும் என்ற என் ஆர்வத்துக்கு பக்கபலமாகவும் இருந்திருக்கிறார்.

இப்போது மனோபாலா, டைரக்டர் பாரதிராஜாவிடம் சேர்ந்து விட்டதால் நான் நடிகனாகும் வாய்ப்பு நெருங்கி விட்டதாகவே உணர்ந்தேன்.

கொட்டும் மழையில்…

“சிவப்பு ரோஜாக்கள்” படத்தை அடுத்து, புதிய படத்தின் கதை மற்றும் `ஷெட்ïல்’ முடிவு செய்யப்பட்டு நடிகர்- நடிகைகளும் முடிவாயினர். நடிகர்கள் பட்டியலில் என் பெயர் இல்லை என்பதை மனோபாலா மூலம் தெரிந்து கொண்டதும் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.

அன்றிரவு 9 மணிக்கு மழை கொட்டிக் கொண்டிருந்தது. மழையில் நனைந்தபடி பாரதிராஜாவின் வீட்டை நோக்கி நடந்தேன். நான் நனைந்து வருவதை தூரத்தில் இருந்தே கவனித்து விட்டார், பாரதிராஜா. என்னைப் பார்த்ததும், “என்னய்யா! மழையில் நனைந்து வர்ற அளவுக்கு என்ன விசேஷம்?” என்று கேட்டார்.

நான்தான் ஏகப்பட்ட கடுப்பில் இருக்கிறேனே. அந்த கடுப்பை வேறுவிதமாக அவரிடம் வெளிப்படுத்த எண்ணினேன். “ஒரு மகிழ்ச்சியான செய்தி. எனக்கு படம் `புக்’ ஆகியிருக்கிறது” என்றேன்.

“ரொம்ப சந்தோஷம்யா! யாருடைய படம்?” என்று கேட்டார், பாரதிராஜா.

“உங்க படம்தான்!” என்றேன்.

“யோவ்! என்னய்யா சொல்றே?” என்று திகைப்புடன் கேட்டார், பாரதிராஜா.

“பாலா (மனோபாலா) வந்து ஆர்ட்டிஸ்ட் லிஸ்ட்ல என் பேர் இல்லைங்கிறார். நான் உங்க கூட அவுட்டோர் வரப்போறேன். படத்தில் எனக்கு சின்ன ரோலாவது நீங்க கொடுத்தே தீரணும்” என்றேன்.

கொஞ்சம் யோசித்தவர் என் முகத்தை பார்த்தார். பிறகு, “சரி வாய்யா!” என்றார்.

இப்போது எனக்குள் இருந்த பல நாள் சந்தேகத்தை அவரிடம் கேட்டேவிட்டேன். “என் மூஞ்சி அழகாக இல்லேன்னுதான் எனக்கு நடிக்க சான்ஸ் தராம இருந்தீங்களா?” என்று கேட்டேன்.

பாரதிராஜாவுக்கு கோபம் வந்துவிட்டது. “உன் நடிப்பை ஜனங்க ஏத்துக்கிட்டாங்கன்னா அப்புறம் மூஞ்சி என்னடா மூஞ்சி?” என்றார்.

அப்போதே அவர் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன்.

அந்தப் படத்துக்கு `புதிய வார்ப்புகள்’ என்று பெயர் சூட்டிய பாரதிராஜா, தனது உதவியாளர் பாக்யராஜையே படத்தின் கதாநாயகனாக்கினார்.

தேனியில்தான் படப்பிடிப்பு. படப்பிடிப்பு தொடங்கி 20 நாட்கள் வரை நான் சும்மாவே இருந்தேன். படப்பிடிப்பில் சின்னச்சின்ன வேலைகள் செய்தபடி எனக்கான வாய்ப்பை எதிர் நோக்கியிருந்தேன்.

21-வது நாளில் என்னை அழைத்தார் பாரதிராஜா. “யோவ்! நீ நடிக்கிறே! நாளைக்கு காலைல மேக்கப்போட்டு ரெடியா இரு” என்றார். மறுநாள் காலை 5 மணிக்கே மேக்கப் போட்டு நான் ரெடி. `அல்லி நகரம்’ ராஜேந்திரன்தான் மேக்கப் மேன். அவர் என்னிடம், “பாரதிராஜாவுக்கு சொந்தமா?” என்று கேட்டார்.

“ஆமாம்ணே” என்றேன்.

“ஊரில் இருந்து ஒரு ஆள் சினிமாவுக்கு வந்துடக்கூடாதே! உடனே நடிக்கணும்னு எல்லோரும் புறப்பட்டு வந்துருவீங்களே! வர்றதுதான் வரீங்க! வரும்போது கண்ணாடியில் முகத்தைப் பார்த்துட்டு வந்திருக்கலாமில்லே!” என்றார்.

கல்யாண மாப்பிள்ளை

நான் அதை கண்டுகொள்ளவில்லை. நடிக்கத் தயாரானேன். கதைப்படி படத்தின் கதாநாயகி ரதியை நான் பொண்ணு பார்க்கப்போகிற காட்சி. நான் மாப்பிள்ளைக் கோலத்தில், கொஞ்சம் காலை சாய்த்து நடந்தபடி பெண் வீட்டுக்குப் போகவேண்டும். நான் போகிற வரப்பு வழியில் கொஞ்சம் மாட்டுச் சாணத்தைப் போடச் சொன்னார், பாரதிராஜா. நான் அதில் மிதித்து விட்டு பெண்ணின் தந்தையை பார்த்து, “மாமா! நடந்து வர்றப்ப சாணியை மிதிச்சிட்டேன்” என்று சொல்ல வேண்டும்.

டைரக்டர் சொன்னபடி செய்தேன். முதல் `ஷாட்’டிலேயே காட்சி ஓ.கே.யானது. மகிழ்ச்சியுடன் என்னை அழைத்த டைரக்டர், “நீ நடந்து வரும்போது எதுக்காக சாணியில் மிதிச்சிட்டு வரச்சொன்னேன் தெரியுமா? சாணி என்பது மங்களகரமானது. முதன் முதலா நடிக்க வர்றே. நிறைய படங்களில் நடிச்சு பெயர் வாங்கணும். புகழ் கிடைக்கணும். அப்படி உன் நடிப்பு வாழ்க்கை அமையணும்னுதான் சாணியில் மிதிச்சிட்டு வர்ற மாதிரி முதல் காட்சியை எடுத்தேன்” என்றார்.

என் மேல் எத்தனை அன்பு, எத்தனை அக்கறை! அவரது அந்த அன்பில் நெகிழ்ந்து போனேன்.”

இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.
————————————————————————————————————————————————-

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(806)
“பாலைவனச்சோலை”க்குப்பின் சந்திரசேகர் ஹீரோ ஆனார்
தொடர்ந்து வெற்றிப்படங்கள்

பாரதிராஜாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட சந்திரசேகர், “பாலைவனச்சோலை”யில் ஐந்து ஹீரோக்களில் ஒருவராக நடித்தார். அதைத்தொடர்ந்து, பல வெற்றிப்படங்களில் ஹீரோவாக நடித்தார்.

கதாநாயகன் அந்தஸ்தை எட்டிய அந்தக் காலக்கட்டம் பற்றி, சந்திரசேகர் கூறியதாவது:-

நிழல்கள்

“புதிய வார்ப்புகள்” படத்தில் பெரிய கேரக்டர் இல்லை என்றாலும், ரசிகர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள்.

பாரதிராஜா தனது அடுத்த படமான “நிழல்கள்” படத்தில், முன்னேறத் துடிக்கும் இசையமைப்பாளன் கேரக்டரை தந்தார். திறமை இருந்தும் முன்னேற முடியாமல் முட்டுக்கட்டைகளை மட்டுமே சந்திக்கும் இளம் இசையமைப்பாளனின் வாழ்க்கைப் போராட்டம் என் நடிப்புக்கு புதுசு. என்னை அந்த கேரக்டரில் பார்த்த டைரக்டர் பாரதிராஜா, “சேகர்! உன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று மட்டும் சொன்னார். டைரக்டர் இப்படிச் சொன்ன பிறகு, அந்தக் கேரக்டர் என்னுடன் ஒன்றிப்போய் விட்டது. இரவும் பகலும் அந்த கேரக்டர் பற்றிய சிந்தனையிலேயே இருந்தேன்.

இந்த இசையமைப்பாளன் ஜெயித்தால், வசதியான வாழ்க்கைக்கு வருவான் என்பதைக் காட்ட ஒரு பாடல் காட்சி வைத்திருந்தார், பாரதிராஜா. “மடை திறந்து தாவும் நதியலை” என்ற அந்த பாடலினூடே, “நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்! இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்” என்ற வரிகள் வரும். இந்த வரிக்காக காரின் பின்சீட்டில் கோட்-சூட் போட்டு பணக்கார தோரணையுடன் `555′ சிகரெட்டை நான் ஸ்டைலாக புகைத்துக்கொண்டு போவதாக ஒரு காட்சி எடுத்தார். இந்தக் காட்சியின்போது நான் இருந்த காரை பாரதிராஜாவே ஓட்டினார்.

இந்தக் காட்சி முடிந்ததும் டைரக்டர் பாரதிராஜா என்னிடம், “நடிக்கணும்னு சான்ஸ் கேட்டு என்கிட்ட வந்தே. நானும் கொடுத்தேன். இன்றைக்கு கோடீஸ்வர தோற்றத்தில் உன்னை கார்ல உட்கார வெச்சு நான் கார் ஓட்டறேன். சினிமா ஏற்படுத்திய மாற்றம் பார்த்தாயா?” என்று கேட்டு சிரித்தார்.

“நிழல்கள்” படம் இளம் கலைஞர்களின் கனவை கனவாகவே வைத்து விட்டதால், படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை என்றார்கள். என்றாலும் ஒரு நல்ல இயக்குனரின் நல்ல படத்தில் நடித்த திருப்தி எனக்கு.

ராம.நாராயணன்

பாரதிராஜாவின் “கல்லுக்குள் ஈரம்” படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான், டைரக்டர் ராம.நாராயணன் என்னை சந்தித்தார். “முழுக்க முழுக்க உங்க மேலேயே போகும் கதை” என்று சொல்லிவிட்டு, அப்போதே படத்தின் கதையையும் கூறினார். படத்துக்கு “சுமை” என்று பெயர் வைத்திருப்பதையும் சொன்னார். `ஒரு ஏழைக் குடும்பத்தின் மூத்த மகன், தம்பி, தங்கைக்காக தன் வாழ்க்கையை, உருகும் மெழுகுவர்த்தியாக்கிக் கொள்கிறான்’ என்ற பின்னணியில் அமைந்த அந்தக் கதையில் மூத்த மகனாக உணர்ந்து நடித்தேன். படம் பெரிய வெற்றி.

“சுமை” படத்தை சென்னை அமைந்தகரையில் உள்ள லட்சுமி தியேட்டரில் பார்க்கப் போயிருந்தேன். படத்தின் கடைசியில் நான் இறந்து போகும் காட்சியுடன் படம் முடியும். படம் முடிந்து வெளியே வந்ததும் படம் பார்க்க வந்திருந்த தாய்மார்கள் என்னை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டபடி, “நீ நல்லா இருக்கணும் ராசா!” என்றார்கள். அந்த அன்பில் நானும் உருகிப்போனேன்.

பாலைவனச்சோலை

இந்தப் படத்துக்குப் பிறகு, எனக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த படம் “பாலைவனச்சோலை.” டைரக்டர்கள் ராபர்ட் – ராஜசேகர் இயக்கினார்கள்.

படத்தில் நான், ராஜீவ், தும்பு, ஜனகராஜ், தியாகு என 5 நாயகர்கள். டைரக்டர்களில் ராபர்ட் சீனியர். எங்க பெரியண்ணன் மாதிரி ஆலோசனை சொல்வார். ராஜசேகர் எங்க செட். நண்பர் மாதிரி பழகுவார். 24 மணி நேரமும் படம் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். எப்போதும் அவருடன் இருப்போம்.

இந்தப் படத்தை, கமலிடம் உதவியாளராக இருந்த ஆர்.வடிவேல் தயாரித்தார். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்ததும், தயாரிப்பாளர் எங்களை அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்வார். மணக்க மணக்க சாப்பாடு போடுவார். அடுத்து தலையணை பெட்ஷீட் வரும். ஓய்வு நிலையில் அடுத்த நாள் எடுக்க வேண்டிய காட்சி பற்றி டைரக்டர்கள் விளக்குவார்கள். யாருக்காவது மறுநாள் முக்கிய `சீன்’ என்றால், அதை ஸ்பெஷலாக விளக்கி, அந்தக் காட்சிக்கு ஏற்றபடி நடிகர்களை தயார்படுத்துவார்கள்.

படத்தில் 5 ஆண்களை சுற்றி புதிய கோணத்தில் அமைக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை ரசிகர்களை ரொம்பவும் கவர, “பாலைவனச்சோலை” 25 வாரம் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.

படத்தில் “மேகமே மேகமே”, “ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு”, “பவுர்ணமி நேரம் பாவை ஒருத்தி” போன்ற பாடல்களும் ஹிட் ஆயின.

சிவப்பு மல்லி

“சுமை” படத்தின்போதே டைரக்டர் ராம.நாராயணன் எனக்கு நண்பராகவும் ஆகிவிட்டார். பாலைவனச்சோலை படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு மாலைப்பொழுதில் என்னை அழைத்து “எர்ர மல்லு” என்ற தெலுங்குப்படத்தை போட்டுக் காண்பித்தார். 2 ஹீரோக்களின் பின்னணியில் அமைந்த கதை. “இந்தப் படத்தை தமிழில் ஏவி.எம். நிறுவனம் தயாரிக்கிறது. `சிவப்பு மல்லி’ என்று பெயர் வைத்திருக்கிறேன்” என்றார், ராம.நாராயணன்.

தெலுங்கில் சந்திரமோகன் நடித்த கேரக்டரில் என்னை ஒப்பந்தம் செய்தார். இன்னொரு கேரக்டருக்கு நடிகர் சிவகுமாரை `பிக்ஸ்’ பண்ணினார்.

சிவகுமாருக்கு முரட்டு கேரக்டர். படத்தின் விளம்பரம் தொடர்பாக இரண்டு பேரும் வருகிற மாதிரி சில ஸ்டில்கள் எடுக்க டைரக்டர் விரும்பினார். ஆனால் இரண்டு பேருமே பிஸியாக இருந்ததால் தனித்தனியாக `ஸ்டில்’ எடுத்தார்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மனைவிக்கு மல்லிகைப்பூ வாங்கி வரும் கதாநாயகனை எதிரிகள் கத்தியால் குத்திவிட, ரத்தத்தால் மல்லிகைப்பூ சிவப்பு நிறமாகும் என்று `சிவப்பு மல்லி’க்கு விளக்கம் சொன்னார், டைரக்டர். அந்த சீனை சொன்னதும் சிவகுமார், “நான் அந்த கேரக்டரில் நடிக்கிறேனே” என்று சொல்லியிருக்கிறார். ஆனால் ராம.நாராயணன் “உங்களுக்கான கேரக்டர் வேறு. அந்த கேரக்டர் வேறு. எனவே நீங்கள் முரட்டு கேரக்டரில் நடிப்பதே சரியாக இருக்கும்” என்று சொல்லிவிட, நட்பு ரீதியாகப் பேசி, படத்தில் இருந்து சிவகுமார் விலகிக்கொண்டார்.

மறுநாள் படத்தின் பூஜை. எதிர்பாராத விதமாக சிவகுமார் படத்தில் இருந்து விலகிக் கொள்கிறார். ராம.நாராயணன், ஒரு இரவுக்குள் ஒரு ஹீரோவை ஒப்பந்தம் செய்தாக வேண்டிய நிலையில் இருந்தார். இந்தக் கேரக்டருக்கு யார் சரியாக இருப்பார்கள் என்று யோசித்தவர், ராஜபாதர் தெருவில் உள்ள தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்த விஜயகாந்தை எழுப்பி, அப்போதே ஏவி.எம். ஸ்டூடியோவுக்கு அழைத்து வந்து, ஸ்டில் எடுக்க ஏற்பாடு செய்தார். நானும் விஜயகாந்தும் அரிவாள் – சுத்தி சகிதம் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தோம்.

திட்டமிட்டபடி படம் எடுப்பதில் ராம.நாராயணன் திறமையானவர். 18 நாளில் “சிவப்பு மல்லி” படத்தின் வசனப்பகுதியை எடுத்து முடித்து விட்டார். படத்தில் நானும் விஜயகாந்தும் பாடுவதாக வரும் “எரிமலை எப்படி பொறுக்கும்? நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?” என்ற பாடல் காட்சியை ஏவி.எம். காலனியில் எடுத்தார்கள். பாடலில் இருந்த நெருப்பு வரிகள் படத்துக்கு பக்கபலமாக அமைந்தது. படம் வெற்றி பெற்றது.

கதைப்படி, இந்தப் படத்தின் ஹீரோ நான்தான். எனவே விஜயகாந்தை விடவும் சம்பளமும் எனக்குத்தான் அதிகம்!

இந்தப்படம் வந்த பிறகு என் மíது கம்ïனிச முத்திரை விழுந்து விட்டது. `தொழிலாளர் தோழன்’ என்கிற மாதிரியான படத்தின் காட்சியமைப்புகள் ரசிகர்கள் என்னை “தோழரே” என்று அழைக்கும் அளவுக்குப் போயிற்று.

வெற்றிப்பயணம்

தொடர்ந்து படங்களின் எண்ணிக்கை அதிகரித்தன. “வீட்டுக்காரி”, “பட்டம் பறக்கட்டும்”, “இனிமை இதோ இதோ”, “அர்ச்சனை பூக்கள்”, “பூம்பூம் மாடு” என பிஸியாக நடித்துக் கொண்டிருந்தேன். ஹீரோவா, கேரக்டர் ரோலா கதையின் முக்கியத்துவம் கருதி எந்த வேடத்தையும் ஏற்று நடித்தேன்.

இந்த காலகட்டத்தில் அடுத்தடுத்து ஐந்தாறு வருடங்களில் வருஷத்துக்கு 15 படம் நடித்த ஹீரோ நான்தான். அந்த வருஷங்களில் அதிக படங்களில் நடித்த ஹீரோவும் நான்தான்.

கலைஞர் அழைப்பு

ஒருநாள் கலைஞர் வீட்டில் இருந்து எனக்கு போன் வந்தது. கலைஞரின் செயலாளர் சண்முகநாதன் என்னிடம், “தலைவர் (கலைஞர்) உங்களை பார்க்க விரும்புகிறார்” என்று தெரிவித்தார்.

எனக்கு உடம்பு சிலிர்த்து விட்டது. எந்தத் தலைவரை ஊரில் சிறுவனாக இருந்த காலகட்டங்களில் பார்க்கத் துடித்தேனோ, எந்த தலைவர் பிரசாரத்துக்கு ஊர் வந்தால் அவர் பேச்சைக் கேட்டு மகிழ அவர் கார் போகிற இடமெல்லாம் மூச்சு விடாமல் ஓடித் துரத்தினேனோ அந்த தலைவர் என்னைப் பார்க்க விரும்புவதாக சொன்னால் எனக்கு எப்படி இருக்கும்?

மறுநாள் காலையில் ஒருவித பரவசத்துடன் கலைஞரின் வீட்டுக்குப் போனேன்.

——————————————————————————————————————————————————————

திரைப்பட வரலாறு 807
கலைஞர் மு.கருணாநிதி கதை-வசனம் எழுதிய
“தூக்கு மேடை”யில் சந்திரசேகர் 20 பக்க வசனத்தை ஒரே மூச்சில் பேசி நடித்தார்

கலைஞர் மு.கருணாநிதி கதை-வசனம் எழுதிய “தூக்குமேடை” படத்தில், சந்திரசேகர் நடித்தார். 20 பக்க வசனத்தை ஒரே “டேக்”கில் பேசி நடித்தார்.

கலைஞரை சந்தித்தபோது நிகழ்ந்த சம்பவங்கள் பற்றி சந்திரசேகர் கூறியதாவது:-

பாராட்டு

“நான் தலைவரை (கலைஞர்) மிக அருகில் சந்தித்தது அப்போதுதான். பார்த்ததுமே என்னிடம் ரொம்ப நாள் பழகியவர் போல பேசத்தொடங்கி விட்டார். “சுமை”, “சிவப்பு மல்லி”, “பாலைவனச்சோலை” படங்களெல்லாம் பார்த்தேன். ரொம்ப அருமையாக நடிக்கிறாய்” என்று பாராட்டினார். இப்படிப் பாராட்டியதோடு நில்லாமல், “சிவாஜி, எஸ்.எஸ்.ஆருக்குப் பிறகு நல்ல தமிழை உன் மூலம் கேட்க முடிகிறது. நல்ல தமிழ் பேசும் நடிகராகத் தமிழ்நாட்டுக்கு கிடைத்திருக்கிறாய்” என்று கூறினார். அப்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியையும், பரவசத்தையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.

கொஞ்சம் இடைவெளியில், என் குடும்பம் பற்றியெல்லாம் அக்கறையுடன் விசாரித்தவர், என்னை அழைத்த நோக்கம் பற்றி பேசினார். “தூக்குமேடை நாடகத்தை திரைப்படமாக எடுக்கலாம் என்றிருக்கிறேன். நீ நடித்தால் அதை படமாக எடுக்கலாம்” என்றார்.

“நீங்கள் இப்படி கேட்டதற்கு பதிலாக, `நீ நடிக்க வேண்டும்’ என்று உத்தரவே போட்டிருக்கலாம். அதை என் பாக்கியமாக கருதி நடிப்பேன். நான் இப்படி உரிமையுடன் சொல்லக்காரணம், நானும் உங்கள் கட்சியைச் சேர்ந்தவன்” என்றேன்.

கலைஞர் என்னை ஆச்சரியமாக பார்த்தார். “உன் படங்களைப் பார்த்து நீ கம்ïனிஸ்டு என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன். நம் ஆளா? மகிழ்ச்சி. மகிழ்ச்சி” என்றார்.

“தூக்கு மேடை” படத்தில் நான் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டது. மறுநாளே பத்திரிகையாளர் சந்திப்பில் “தூக்கு மேடை” படத்தில் நான் கதாநாயகனாக நடிக்கும் தகவலை சொன்னார் கலைஞர்.

தூக்குமேடை நாடகமாக நடிக்கப்பட்டபோதே அதற்கு பக்கம் பக்கமாக வசனம் உண்டு என்பது எனக்குத் தெரியும். படத்திலும் அதே வசனங்கள்தானே.

படப்பிடிப்பு தொடங்கி, மோகன் ஸ்டூடியோவில் காட்சிகள் படமாகிக் கொண்டிருந்தன. ஒருநாள் நான் ஒரே டேக்கில் 20 பக்க வசனம் பேசும் காட்சியை எடுக்க இருந்தார்கள். இப்போது மாதிரி முதலில் நடித்து விட்டு பிறகு “டப்பிங்” பேசும் வசதியெல்லாம் அப்போது கிடையாது. நடிக்கும்போதே, வசனத்தை பேசியாக வேண்டும். நான் வசனம் பேசத் தயாராக இருந்தபோது, தலைவர் திடீரென்று வந்துவிட்டார். அவரைப் பார்த்ததும் எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அவரிடம், “தலைவரே! உங்கள் முன்னாடி பேசினால் தடுமாறி விடுவேன்” என்றேன்.

அவரும் புரிந்து கொண்டார். டைரக்டர் அமிர்தத்தை அழைத்து, “நல்லபடியா பண்ணுங்க” என்றவர், சில ஆலோசனைகளை கொடுத்து விட்டு செட்டில் இருந்து கிளம்பிப் போனார்.

எதிர்பாராதது

அடுத்த கணமே 20 பக்க வசனத்தையும் ஏற்ற இறக்கத்தோடு ஒரே டேக்கில் பேசி முடித்து விட்டேன். அந்த சந்தோஷத்தில் ஒரு காபி சாப்பிடலாம் என்று செட்டுக்கு வெளியே வந்தால், `ஹெட்போனை’ தலையில் மாட்டியபடி நான் பேசிய வசனத்தை தலைவர் கேட்டுக்கொண்டிருந்ததை கண்டு எனக்கு ஆனந்த அதிர்ச்சி ஏற்பட்டது. தனது படைப்புக்கு உயிர் கொடுக்கும் வசனம் எந்த மாதிரி வந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்பிய அவருடைய ஆர்வத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன்.

இந்தப்படம் வளரும்போது எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் கலைஞரின் படத்தில் நான் நடித்ததால், “சந்திரசேகருக்கு எதற்கு கட்சி முத்திரை?” என்ற சலசலப்பும் ஏற்பட்டது. “இந்தப் படத்தில் நடிக்கக்கூடாது” என்று போனில் சிலர் மிரட்டவும் செய்தனர். நான் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. “நான் தி.மு.க. காரன். என் தலைவர் அழைத்து நடிக்கச் சொன்னார்; நடிக்கிறேன். அதற்கு எந்த மாதிரியான எதிர்ப்பு வந்தாலும் சந்திக்க தயார்” என்று பதில் சொன்னேன்.

“முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரை ஒருமுறை சந்தித்துப் பேசுங்கள்” என்று அன்றைய அமைச்சர் ஒருவர் கூட போனில் என்னிடம் கூறினார்.

இப்படி நான் உறுதியாக நின்றதால் கலைஞருக்கு என் மீது ரொம்பவே பிரியமாகி விட்டது. தூக்குமேடை ரிலீசான பிறகு `தலைவர்’ என்பதையும் தாண்டி “அப்பா” என்று அழைக்கும் அளவுக்கு நானும் அந்த அன்பில் ஐக்கியமாகி விட்டேன்.

எம்.ஜி.ஆருடன் சந்திப்பு

இப்படி தலைவருடன் நெருக்கம் காட்டிய பிறகு, முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கலந்து கொள்ளும் விழாக்களை தவிர்த்தேன். விசு டைரக்ஷனில் பெரும் வெற்றியை எட்டிய ஏவி.எம்.மின் “சம்சாரம் அது மின்சாரம்” படத்தின் விழாவுக்கு கூட நான் போகாததற்கு இதுதான் காரணம்.

இருந்தாலும் ஏவி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு போயிருந்தபோது அவரிடம் மாட்டிக்கொண்டேன்! நான் டைரக்டர் ஆர்.சி.சக்தியுடன் மண்டபத்துக்குள் நுழைந்த நேரத்தில், முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். காரில் வந்து இறங்கினார். மண்டப வாயிலில் அவருக்கு முன்னதாக போய்விட்ட நான், மேற்கொண்டு அவர் போவதற்காக ஒதுங்கி நிற்கும்படி ஆயிற்று. அப்போது என் அருகில் நடிகர் சாருஹாசன், டைரக்டர் ஆர்.சி.சக்தி, கதை-வசன கர்த்தா ஏ.எல்.நாராயணன் ஆகியோர் இருந்தார்கள்.

எம்.ஜி.ஆர். எங்களை தாண்டிச் சென்றபோது, முதலில் சாருஹாசன் அவருக்கு வணக்கம் செய்ய, பதிலுக்கு எம்.ஜி.ஆரும் வணங்கினார். அடுத்தவர் ஆர்.சி.சக்தி, அவரும் வணங்க, எம்.ஜி.ஆரும் வணங்கினார். மூன்றாவதாக என் முறை! இப்போது அவரைப் பார்த்து கைகுவித்தேன். 5 நொடிகள் என்னையே உற்று நோக்கியவரிடம் வேறு எந்தவித ரியாக்ஷனும் இல்லை. என் அருகில் நின்ற ஏ.எல்.நாராயணனை அழைத்துக்கொண்டு மண்டபத்துக்குள் போய்விட்டார்.

அரசியலில் `எதிரும் புதிரும்’ நிலை சகஜம். கலைஞரும், எம்.ஜி.ஆரும் கலைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள். கலைத்துறையில் இருந்தபோது மிகச்சிறந்த நண்பர்களாகவும் இருந்தார்கள். அரசியலுக்கு வந்த பிறகும் நீடித்த நட்பு, ஒரு காலகட்டத்தில் பிரிவில் முடிந்தது. அந்த மாதிரியான காலகட்டத்தில், எதிர்க்கட்சி தலைவரின் விருப்பம் ஏற்று நான் அவரது லட்சியப்படைப்பான `தூக்குமேடை’ படத்தில் நடித்ததை முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரிடம் யாராவது முரண்பட்ட கண்ணோட்டத்தில் சொல்லியிருக்க கூடும். அதைத்தொடர்ந்து என்னை சந்திக்க விரும்பி விடப்பட்ட அழைப்பையும் தவிர்த்து விட்டதால், இயல்பாக என் மீது அவருக்கு கோபம் இருந்திருக்கலாம். அதனால்தான் அன்றைய திருமண மண்டபத்தில் என்னைப் பார்த்ததும் ஒன்றும் பேசாமல் போயிருக்கலாம். அரசியலில் இதெல்லாம் சகஜம்தான் என்று, எம்.ஜி.ஆரின் அன்றைய மவுனத்தை எடுத்துக்கொண்டேன்.

“தூக்குமேடை” படத்தில் நடித்த பிறகு, தேர்தல் கூட்டங்கள், மாநாடுகள் என்று தி.மு.க. மேடையில் பேசத்தொடங்கினேன். வாரம் ஒரு முறை தலைவரை சந்திப்பேன். கடந்த 25 வருஷமாய் என் ஒவ்வொரு பிறந்த நாளிலும் குடும்பத்துடன் அவரை சந்தித்து வாழ்த்து பெறுவதையும் வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறேன்.”

இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.

மணிவண்ணன்

டைரக்டர் கிருபாசங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த மணிவண்ணன் “கல்லுக்குள் ஈரம்” படத்தில் இருந்து பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தார். அவரிடம் தொடர்ந்து நாலைந்து படங்கள் பணியாற்றிய பிறகு “கோபுரங்கள் சாய்வதில்லை” படம் மூலம் இயக்குனரானார். அந்தப் படம் அவருக்குப் பெரிய பெயர் வாங்கித் தந்தது.

மணிவண்ணன் இயக்கிய “இங்கேயும் ஒரு கங்கை” படத்தில் சந்திரசேகருக்கு `பாகப்பிரிவினை’ சிவாஜி மாதிரி அற்புதமான வேடம். இந்தப்படம் சந்திரசேகரின் நடிப்பை புதிய கோணத்தில் வெளிப்படுத்தி ரசிகர்களை ரசிக்க வைத்தது. மணிவண்ணனுக்கும் தனக்குமான நட்பு பற்றி சந்திரசேகர் கூறியதாவது:-

கே.ஆர்.ஜி.

“நானும் மணிவண்ணனும் சென்னையில் சுற்றாத இடமே இல்லை. நடிப்பதற்கு நானும், இயக்குனராவதற்கு அவரும் முயன்ற அந்த காலக்கட்டத்தில் எங்களையும் ஒருவர் வாழ்த்தி பசியும் ஆற்றினார். அவர் பட அதிபர் கே.ஆர்.ஜி. எங்கள் சினிமா தாகத்தைப்பற்றி முழுக்க தெரிந்தவர் அவர். எப்போதாவது ரொம்பவே பண நெருக்கடி ஏற்பட்டால், நடந்தே போய் அவரை பார்ப்போம்.

“வணக்கம் முதலாளி” என்போம். எங்கள் பட விஷயங்களை ஆர்வமாய் கேட்பவர், “நல்ல வருவீங்கடா! தன்னம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்கள்” என்பார். அப்படிச் சொல்வதோடு மட்டும் நின்று விடாமல்
500 ரூபாய் பணத்தை எடுத்து எங்கள் கையில் திணிப்பார்.

1975-ம் வருடவாக்கில் 500 ரூபாயின் மதிப்பு மிக அதிகம்.

சினிமாவில் வளர்ந்த நிலையில் நானும் மணிவண்ணனும் இப்போது சந்தித்துக் கொண்டாலும், எங்கள் எதிர்காலத்தை `வாழ்த்தாக’ முன்கூட்டியே சொன்ன தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. பற்றி மறக்காமல் நினைவு கூர்வதுண்டு. சினிமாவில் நான் சந்தித்த அபூர்வ மனிதர் கே.ஆர்.ஜி.”

இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.

ஆபாவாணன்

திரைப்பட கல்லூரியில் பயின்ற இளைய தலைமுறை கலைஞர்களை ஊக்குவித்தவர், சந்திரசேகர். அடையாறு திரைப்படக் கல்லூரியில் படித்து விட்டு இயக்கும் நோக்கத்துடன் படத் தயாரிப்பாளர்களை சந்தித்து கதை சொல்லிக் கொண்டிருந்தார், சின்னச்சாமி என்ற இளைஞர்.

புதியவர்கள், அதுவும் மாணவர்களாக இருந்து சினிமாவில் கற்றவர்கள் என்பதால் திரைப்படக் கல்லூரி மாணவர்களை வைத்து படம் இயக்க தயாரிப்பாளர்கள் தயங்கினார்கள். சந்திரசேகர் படப்பிடிப்பில் இருந்த நேரத்தில் நண்பர் ஒருவர், “திரைப்படக் கல்லூரி மாணவர் ஒருவர் ஒரு கதை வைத்திருக்கிறார். கேளுங்கள்” என்று சொல்லி அந்த மாணவரை அனுப்பி வைத்தார். அன்றைய படப்பிடிப்பு முடிந்து சந்திரசேகரும் கதை கேட்டார். 21/2 மணி நேரமும் கதை சொன்ன திரைப்படக் கல்லூரி மாணவரான சின்னச்சாமி, சந்திரசேகரை ரொம்பவே ஆச்சரியமாய் உணரவைத்தார். இதுபற்றி சந்திரசேகர் கூறுகிறார்:-

“சின்னச்சாமி சொன்னது அதுவரை நான் கேட்டிராத கதை. படத்தில் வருகிற மாதிரி காட்சி காட்சியாக வரிசைப்படுத்தி கதை சொன்னார். கதை கேட்டு முடித்ததும், நான் அவரிடம் “நீங்க சொன்னதுல பாதியை படமா எடுத்தாக்கூட படத்துக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்” என்றேன்.

நான் விஜயகாந்திடம், “இன்ஸ்டிïட் மாணவர் சொன்ன கதை அற்புதம். நீங்கள் கதாநாயகனாக நடித்தால் உங்கள் சினிமா கேரியரில் பெரிய மாற்றம் ஏற்படும்” என்றேன்.

விஜயகாந்த் என் வார்த்தையை நம்பினார். கால்ஷீட் கொடுத்தார். படம் “ஊமை விழிகள்” என்ற பெயரில் தயாராகி திரைக்கு வந்தபோது, பிரமாண்ட வெற்றியை அடைந்தது. சின்னச்சாமி என்ற அந்த இயக்குனர் `ஆபாவாணன்’ என்ற பெயரில் பிரபலமானார். அவரது அடுத்த படமான “செந்தூரப்பூவே” படமும் விஜயகாந்துக்கு பெரிய வெற்றி தேடித்தந்தது. இந்தப் படங்களில் எனக்கும் முக்கிய கேரக்டர் கிடைத்து, பெயரும் கிடைத்தது.

இதன் பிறகு திரைப்படக் கல்லூரி மாணவர்களை வைத்து “உழவன் மகன்” என்று சொந்தப்படமே எடுத்தார், விஜயகாந்த். அதுவும் வெற்றி.

இந்த வகையில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் சினிமாவுக்குள் அடியெடுத்து வைக்க ஒரு வகையில் நான் காரணமாக இருந்ததில் இன்றளவும் எனக்கு பெருமைதான்.”

இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.

——————————————————————————————————————————————————————

திரைப்பட வரலாறு 808
படங்களில் பிசியாக இருந்தபோது
சந்திரசேகருக்கு திருமணம் நடந்தது
பட்டதாரி பெண்ணை மணந்தார்


நடிகர் சந்திரசேகர் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது ஜெகதீஸ்வரியை மணந்தார். இவர் “பி.ஏ” ஆங்கில இலக்கியம் படித்தவர்.

இதுபற்றி சந்திரசேகர் கூறியதாவது:-

“இரவு பகலாக படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டம். எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன.

சிவாஜி சிபாரிசு

நடிகர் திலகம் சிவாஜி சாரின் குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு பெண் வீட்டார் என்னைப்பற்றி அவரது வீட்டில் விசாரித்திருக்கிறார்கள். சிவாஜி சாரும், “நல்ல பையன். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருக்கிறான். தாராளமா பெண் கொடுக்கலாம்” என்று சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார். சிவாஜி சாரின் மகன்கள் ராம்குமாரும், பிரபுவும் என்னுடைய நல்ல நண்பர்கள். அவர்களும் “சந்துருவுக்கு (சந்திரசேகர் என்பதன் சுருக்கம்) தாராளமாகப் பெண் கொடுக்கலாம்” என்று அப்பாவின் கருத்தை வழிமொழிந்திருக்கிறார்கள்.

1987-ல் குன்றத்தூர் கோவிலில் என் திருமணம் நடந்தேறியது. திருமண நாளில் குன்றத்தூர் மலையைச் சுற்றிலும் இருந்து மக்கள் கூட்டமாக வந்து வாழ்த்தினார்கள். சினிமா நட்சத்திரங்கள் பலரும் வந்திருந்தார்கள்.

திருமண வரவேற்புக்கு டாக்டர் கலைஞர் வந்திருந்து வாழ்த்தினார்.

பட்டதாரி

என் மனைவி ஜெகதீஸ்வரி கல்லூரியில் “பி.ஏ” ஆங்கில இலக்கியம் படித்தவர். அவர் கல்லூரிப் படிப்பின்போது ஆஸ்டலில் தங்கிப் படித்திருக்கிறார்.

ஆஸ்டல் மாணவிகளுக்கு மாதம் ஒரு சினிமாப்படம் திரையிட்டுக் காட்டுவார்களாம். ஒருமுறை நான் நடித்த “சிவப்பு மல்லி” படம் போட இருந்திருக்கிறார்கள். அந்தப் படம் பார்க்க ஜெகதீஸ்வரியின் தோழி அவரை அழைத்திருக்கிறார். “நம்ம ஊர்க்காரர் நடிச்ச படம்” என்று தோழி சொல்ல, ஜெகதீஸ்வரியோ, “சந்திரசேகர் நடிச்ச படமா? கிராமத்து ஆளை பிடிச்சிட்டு வந்து நடிக்க வெச்ச மாதிரி இருக்கு. ஊர்ல உழுதுக்கிட்டு இருந்தவரை நடிக்க வெச்சிட்டாங்க” என்று கமெண்ட் அடித்திருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு ஒருநாள் இதை என்னிடம் சொன்ன ஜெகதீஸ்வரி, “உங்களைப் பற்றிய என் கணிப்பு அப்போது இப்படி இருந்தது. ஆனால் இப்போது அப்படி அல்ல. பகுத்தறிவு சிந்தனை, மனித நேயம் நிறைந்தவர் நீங்கள்” என்று பாராட்டியபோது ஒரு நடிகனாக அல்ல, கணவனாக பெருமைப்பட்டேன்.

இரட்டைக் குழந்தை

1989-ல் எங்களுக்கு இரட்டைக் குழந்தைகளாக சிவஹர்ஷன் – சிவரஞ்சனி பிறந்தார்கள்.

மனைவி மதுரை மண்ணுக்கே உரிய வீரத்திலும் சிறந்திருக்கிறார். ஒருமுறை ஈரோட்டில் ஒரு கிராமத்தில் தி.மு.க. மேடையில் பேசிக் கொண்டிருக்கிறேன். பத்து மணி தாண்டிய நிலையில் நான் பேசிக்கொண்டிருந்த மேடையை நெருங்கிய ஒரு போலீஸ் அதிகாரி, “சீக்கிரம் பேச்சை முடியுங்கள்” என்றார்.

ஒரு ஜனநாயக நாட்டில் பேச்சுரிமைக்கு தடையா? பொங்கிவிட்டேன். அப்புறம்தான் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் ராஜீவ்காந்தி பலியான சம்பவம் தெரிந்தது. கிராமம் என்பதால் தகவல் தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறது.

ஒருவழியாக அவசர அவசரமாக ஈரோட்டில் நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு விரைந்தேன். நள்ளிரவை நெருங்கிய அந்த நேரத்தில் ஈரோடு நகரமே தீப்பிடித்து எரியும் காட்சியை கண்டு அதிர்ந்தேன். இதற்குள் என்னைப்பார்த்துவிட்ட ஒரு கும்பல் லாட்ஜ் வரை என்னைத் துரத்தியது. அப்போது எனக்குத் துணையாக இருந்த தி.மு.க. நண்பர் இளஞ்செழியன், அவரது தோட்ட வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார். இதனால் அன்று நேரவிருந்த ஆபத்தில் இருந்து தப்பினேன்.

காலையில் என்னிடம் போனில் தொடர்பு கொண்ட ஜெகதீஸ்வரி, “பத்திரமாய் இருக்கீங்களா?” என்று கேட்டார். “இங்கே நாங்களும் பத்திரம்தான்” என்றார்.

அவர் சொன்னதன் உட்கருத்து அதன் பிறகே புரிந்தது. அதாவது கட்சிக்காரன் என்ற முறையில் என்னைத் தாக்க ஈரோட்டில் முயற்சி நடந்தது போலவே, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள என் வீட்டிலும் தாக்குதல் முயற்சி நடந்திருக்கிறது. 8 அடி உயர காம்பவுண்டு சுவர் கொண்ட வீடு என்பதால், வெளியில் இருந்து வீட்டுக்குள் ஒரு கும்பல் கல்வீசித் தாக்கியிருக்கிறார்கள். ஜன்னலில் உள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியிருக்கின்றன.

இந்தத் தகவலை மனைவி என்னிடம் பகிர்ந்து கொண்டபோது, “பிறகு எப்படித்தான் சமாளித்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அவங்க வீசின கல்லையே எடுத்து திரும்ப வெளியில் வீசினோம். கொஞ்ச நேரத்தில் வந்தவங்க ஓடிட்டாங்க” என்றார். இக்கட்டான நேரத்தில் சமாளிக்கத் தெரிந்த ஒரு வீரப்பெண்மணியாகவே என் மனைவி ஜெகதீஸ்வரி என் கண்களுக்கு அப்போது தெரிந்தார்.”

இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.

சம்சாரம் அது மின்சாரம்

ஏவி.எம். நிறுவனம் தயாரித்த “சம்சாரம் அது மின்சாரம்” என்ற படத்தை டைரக்டர் விசு இயக்கினார். படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு, மத்திய அரசின் தேசிய விருதையும் பெற்றது.

இந்தப் படத்தில் நடிகர் சந்திரசேகருக்கும் முக்கிய வேடம். படத்தில் நடிக்க அழைக்கப்பட்டது தனி அனுபவம் என்கிறார், சந்திரசேகர்.

அதுபற்றி அவர் கூறியதாவது:-

“ஒருநாள் கிஷ்மு (டைரக்டர் விசுவின் தம்பி) என்னைப் பார்க்க வந்தார். ஒரு படம் பண்றோம். விசுதான் டைரக்டர். நீங்க நடிக்கணும்” என்றார்.

விசு அப்போது “குடும்பம் ஒரு கதம்பம்”, “மணல் கயிறு” என்று வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்து வளர்ந்திருந்த நேரம். அவருடைய படத்தில் நடிக்க அழைப்பு என்றதுமே திருப்தி. என்றாலும், “படத்தில் என் கேரக்டர் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?” என்று கிஷ்முவிடம் கேட்டேன்.

அவரும் சளைக்காமல், “எங்கள் படத்தில் நீங்கள் நடித்த பிறகு இதுவரை நீங்கள் சேர்த்து வைத்துள்ள பெயரோடு இன்னமும் அதிக பெயர் தேடிவரும்” என்றார்.

பதிலுக்கு நான், “சாரி சார்! நான் கதை கேட்காமல் நடிக்கிறதில்லை” என்றேன்.

நான் இப்படிச் சொன்னதும் கிஷ்மு பதிலுக்கு, “நம்புங்க சார்! உங்களுக்கான கேரக்டர்ல நிச்சயம் நீங்க பிரகாசிப்பீங்க. இதுக்கு மேலும் உங்களுக்கு சந்தேகம்னா மொத்த ஸ்கிரிப்ட்டும் ரெடியா இருக்கு. தரேன். படிச்சுப் பாருங்க” என்றார்.

இந்த வார்த்தை என்னைத் தொட்டது. கதை மேல் வைத்திருந்த அவரது நம்பிக்கை என் கேரக்டர் மீது இருக்கத்தானே செய்யும்! உடனே மறுப்பேதும் இன்றி ஒப்புக்கொண்டேன்.

இந்தப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றதோடல்லாமல், சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் (தங்கப்பதக்கம்) பெற்றுத்தந்தது. படத்தில் நடித்த அத்தனை பேரின் அந்தஸ்தும் உயர்ந்தது.

இந்த நட்பு இறுகிப்போனதில் தொடர்ந்து “புயல் கடந்த பூமி”, “அவள் சுமங்கலிதான்” என்று விசு சாரின் பல படங்களில் நடித்தேன்.

ராஜாங்கம்

டைரக்டர் ஆர்.சி.சக்தி இயக்கத்தில் நான் நடித்த “ராஜாங்கம்” படம் மறக்க முடியாதது. படத்தில் நான் ரவுடி. ஒரு பங்களாவுக்குள் நடக்கிற இந்தக் கதையில் எனது ஜோடியாக விஜயசாந்தி நடித்தார். இதே ஆர்.சி.சக்தியின் “கூட்டுப் புழுக்கள்” படத்திலும் நடித்தேன்.

எனக்கொரு ராசியோ அல்லது என் அணுகுமுறையோ ஒரு டைரக்டரின் படத்தில் நடித்த பிறகு அதே டைரக்டரின் அடுத்தடுத்த படங்களுக்கும் நிச்சயம் அழைப்பு வந்துவிடும். டைரக்டர்கள் விசு, ராம.நாராயணன், ஆர்.சி.சக்தி, மணிவண்ணன் போன்ற இயக்குனர்கள் படங்களில் எனக்கொரு கேரக்டர் நிச்சயம் என்கிற அளவுக்கு தொடர்ந்து அவர்கள் இயக்கும் படங்களில் வாய்ப்பு வந்து கொண்டிருந்தது.

இவ்வாறு கூறினார், சந்திரசேகர்.

சபரிமலை

கலைத்துறையில் நண்பர்களுடன் ஆண்டுக்கொரு முறை சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபட்டு வருவது சந்திரசேகர் வழக்கம். 9 வருடங்களுக்கு முன்பு நடிகர் சந்திரசேகரும், டைரக்டர்கள் ராம.நாராயணன், கோலப்பன், நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்ட நண்பர்களுடன் சபரிமலைக்கு வேனில் புறப்பட்டார். இந்த பயணத்தின்போது விபத்து ஏற்பட்டு அதில் காயமின்றி கலைக்குழுவினர் மீண்டனர். அதுபற்றி சந்திரசேகர் கூறியதாவது:-

“முறைப்படி விரதம் இருந்து மலைக்கு புறப்பட்டோம். மஹீந்திரா வேனில் 4 நாட்களுக்கு தேவையான புளியோதரை கட்டிக்கொண்டு பயணித்தோம். வேனில் டிரைவர் சீட் அருகில் ஐயப்பன் படத்தை வைத்து, மாலை அணிவித்து இருந்தோம்.

வேன் சென்னையைத் தாண்டியதும் ஆளுக்கு ஆள் ஒரே ஜோக் மழைதான். அதிலும் எஸ்.எஸ்.சந்திரன் இருந்தால் காமெடிக்கு கேட்கவா வேண்டும்? திருச்சி தாண்டிய பிறகும் இந்த நகைச்சுவை மழை நின்றபாடில்லை. எங்கள் ஜோக்குக்கு டிரைவரும் சிரித்தபடி வாகனத்தை ஓட்டினார்.

விடியற்காலை நேரம் திடீரென ரோட்டின் மையத்தில் இரண்டு மாடுகள் குறுக்கே வர, டிரைவர் அடித்த `சடன் பிரேக்’கில், வண்டி அருகில் இருந்த பெரிய குளத்தருகே குட்டிக்கரணம் அடித்தது.

ஆனாலும் பாருங்கள். ஐயப்பன் படம் உடையவில்லை. போட்டிருந்த மாலை சிதறவில்லை. நாங்கள் சாப்பிட வைத்திருந்த புளியோதரை கூட அப்படியே இருந்தது. ஒரு வழியாக அங்கு வந்தவர்கள் உதவியுடன் வேனை தூக்கி நேராக நிமிர்த்தியபோது, உடனே ஸ்டார்ட்டும் ஆனது! பக்திப்பூர்வமான ஒரு பயணத்தின்போது, எதற்கு கிண்டலும் கேலியுமான விஷயங்கள் என்று அந்த ஐயப்பனே எங்களுக்கு இப்படி ஒரு `ஷாக் ட்ரீட்மெண்ட்’ கொடுத்தது போல் உணர்ந்தோம். அதன்பிறகு சபரிமலைக்கு போய்விட்டு வரும் போது கூட, அதாவது சென்னையில் வீடு வந்து சேரும் வரையில் ஜாலியாக ஒரு வார்த்தைகூட நாங்கள் பேசாமல் வந்தோம். இந்த பயணத்தின்போது எங்கள் வாயில் இருந்து உதிர்ந்ததெல்லாம் “சாமியே சரணம்” கோஷம் மட்டும்தான்.”

இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.
——————————————————————————————————————————————————————

Posted in Aabaavaanan, Aabavaanan, Aabavanan, Abavaanan, Abavanan, Actor, AVM, Biography, Biosketch, Chandrasegar, Chandrasekar, Chanthrasekar, Cinema, DMK, Faces, Films, History, Kalainjar, Karunanidhi, KRG, Manivannan, MGR, MK, Movies, MuKa, names, Nizhalgal, Nizhalkal, people, Politician, Politics, Visu | 1 Comment »

Dr MGR Engineering College & Research Institute – AC Shanumgam Educational Organizations to pay 80 lakhs

Posted by Snapjudge மேல் நவம்பர் 16, 2007

ஏ.சி.சண்முகம் கல்வி நிறுவனம் ரூ.80 லட்சம் செலுத்த உத்தரவு

சென்னை: புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு சொந்தமான கல்வி நிறுவனம் ரூ. 80 லட்சம் வாடகை பாக்கியை செலுத்தினால், வீட்டு வசதி வாரிய வீடுகளில் இருக்கும் மாணவர்களை காலி செய்யக் கூடாது என்று சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. சென்னையை அடுத்த மதுரவாயலில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு சொந்தமான டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இதன் சார்பில் பொறியியல் கல்லுõரி, கலை மற்றும் அறிவியல் கல்லுõரி என சில கல்லுõரிகள் செயல்பட்டு வருகின்றன.

2005ம் ஆண்டு டிசம்பரில் பெய்த அடை மழையினால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மதுரவாயலில் உள்ள இந்த கல்லுõரி விடுதியை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மாணவர்களை அங்கிருந்து காலி செய்து முகப்பேரில் உள்ள வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி வீடுகளில் தங்க வைக்கப்பட்டனர். கல்லுõரி கட்டடங்களில் சில பகுதிகள் ஆக்கிரமிப்பில் இருப்பதை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து அதனை இடித்தனர்.

தற்போது எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

கூவம் ஏரி படுகையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் விதமாக எங்கள் கல்லுõரியின் சோதனைக் கூடம், விடுதி கட்டடங்கள் இடிக்கப்பட்டன. விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு மாற்று இடத்தை அளிக்க அப்போதைய முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி முகப்பேர் ஏரி திட்டத்தில் வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகளில் மாணவர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 250 நடுத்தர குடியிருப்புகள் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டன.

மாணவர்கள் தங்கியிருந்த வீடுகளில் 158 குடியிருப்புகளை விலைக்கு வாங்க விருப்பம் தெரிவித்து வீட்டு வசதி வாரியத்துக்கு கடிதம் எழுதினோம். விற்கும் வரை நியாயமான வாடகையை நிர்ணயிக்க வேண்டும் என்றும், 200708ம் கல்வியாண்டு முடியும் வரை மாணவர்கள் அங்கேயே தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினோம். 152 குடியிருப்புகளுக்கும் மாதம் வாடகையாக 12 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் என்றும், மொத்த பாக்கித் தொகை ஒரு கோடியே 54 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று, வீட்டு வசதி வாரியம் எங்களுக்கு கடிதம் அனுப்பியது.

தற்போது மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளை காலி செய்யுமாறு வீட்டு வசதி வாரியம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளோம். வாரியத்தின் உத்தரவு தன்னிச்சையானது. அதனை ரத்து செய்ய வேண்டும். காலி செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. வழக்கை நீதிபதி ஜோதிமணி விசாரித்தார்.

நான்கு வாரங்களுக்குள் ரூ.80 லட்சத்தை வீட்டு வசதி வாரியத்துக்கு மனுதாரர் செலுத்தினால், வீடுகளை காலி செய்ய தடை விதிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார். மனுவுக்கு டிசம்பர் மூன்றாம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வீட்டு வசதி வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Posted in Bhavans, Bhawans, Chennai, College, Cooum, Coovam, Courts, Dr MGR, Education, encroachments, Engineering, Floods, Homes, Hostels, Houses, Housing, Institute, Irrigation, Judges, Justice, Koovam, Lake, Land, Law, Madras, MGR, Natural, Order, Rain, Research, River, Sanumgam, Shanumgam, Shanumgham, Slums, Stay, Students, univ, University, Water | Leave a Comment »

Tamil Actress Latha in TN Politics – ADMK, Thirunavukkarasu & BJP

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2007

திரைப்பட வரலாறு 789
அரசியலில் லதா


சினிமாவில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தபோதே, நடிகை லதாவை அரசியலுக்கு அழைத்தார், எம்.ஜி.ஆர். ஆனால், அப்போது அரசியலைத் தவிர்த்த லதா, அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது அதில் சேர்ந்தார்.

எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. சந்தித்த முதல் பொதுத்தேர்தலில், நடன நிகழ்ச்சி மூலம் கட்சிக்கு நிதி திரட்டிக் கொடுத்தார் லதா.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த திருநாவுக்கரசின் அழைப்பின் பேரில், அப்போது அவர் தொடங்கிய “எம்.ஜி.ஆர். அ.தி.மு.க”வில் இணைந்தார்.

எம்.ஜி.ஆருடனான அரசியல் அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-

ஆர்வம் உண்டா?

“எம்.ஜி.ஆர். படங்களில் நான் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒருநாள் அவர் என்னிடம், “லதா! உனக்கு அரசியலில் ஆர்வம் உண்டா?” என்று கேட்டார். “ஆர்வம் இல்லை. அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்றேன்.

”அரசியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதானே தேர்தலின்போது சரியானவர்களை தேர்ந்தெடுக்க முடியும்” என்றார்.

ஆனால் காலச்சூழலில் அவரே அ.தி.மு.க.வை தொடங்க வேண்டியதாயிற்று. கட்சியில் நானும் சேர்ந்தேன். கட்சியில் சேரும்படி என்னை அவர் கேட்கவில்லை. என்றாலும், சினிமாவில் என்னை இந்த அளவுக்கு உருவாக்கியவருக்கு காட்டும் நன்றிக்கடனாக, அவர் கேட்காமலே கட்சியில் சேர்ந்து விட்டேன்.

நடன நிகழ்ச்சி

எம்.ஜி.ஆர். கட்சி, முதல் பொதுத்தேர்தலை சந்தித்த நேரத்தில், “தேர்தலுக்கு நான் என்ன செய்தால் சரியாக இருக்கும்?” என்று கேட்டேன். “உனக்கு எது சரியாக இருக்குமோ, அதைச் செய்தால்தான் சிறப்பாக வரும்” என்றார், எம்.ஜி.ஆர். பிறகு அவரே “லதா! நீ முக்கிய நகரங்களில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொள். கட்சிக்கு நிதி திரட்டிய மாதிரியும் இருக்கும்” என்றார்.

உடனே தாமதமின்றி நான் உருவாக்கிய நாட்டிய நாடகம்தான் “சாகுந்தலம்.” முப்பதுக்கும் மேற்பட்ட நடனக்குழுவினருடன் நான் கட்சிக்கூட்டம் நடக்கும் இடங்களில் இந்த நாட்டிய நாடகத்தை நடத்துவேன். மக்கள் திரண்டு வந்து, இந்த நிகழ்ச்சியை ரசித்தார்கள். திருச்சியில் நடந்த பொதுக்கூட்ட மேடையில் அதுவரை நடன நிகழ்ச்சிக்கு வசூலான தொகையை எம்.ஜி.ஆரிடம் அளித்தேன்.

இந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று முதல்-அமைச்சரானார். தேர்தலில் நேரம் காலம் பார்க்காமல் விடிய விடிய நாட்டிய நாடகம் நடத்தியதை அவர் மறக்காமல் மனதில் வைத்திருந்தார். ஒருநாள் என்னை அழைத்துப் பேசியவர், “லதா! மக்களின் அன்பு எத்தகையது என்பதை நேரில் காண, இந்த தேர்தல் உனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. நீ முழுநேர அரசியலுக்கு வரலாம் என்று எண்ணுகிறேன். உன் விருப்பம் என்ன?” என்று கேட்டார்.

நான் அவரிடம், “அரசியலிலும் நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்காகவே நடன நிகழ்ச்சியையும் உற்சாகமாக செய்தேன். மற்றபடி அரசியலில் ஈடுபடும் அளவுக்கு இன்னமும் எனக்கு பக்குவம் இல்லை” என்று கூறினேன்.

எம்.ஜி.ஆர். என்னைப் புரிந்து கொண்டார். அதன்பிறகு என்னை அரசியலுக்கு அழைக்கவில்லை.”

இவ்வாறு லதா கூறினார்.

சந்திரபாபு நாயுடு

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரின் அழைப்பு தவிர, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவும் லதாவை அரசியலுக்கு அழைத்தார்.

அதுபற்றி லதா கூறியதாவது:-

ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல்தான் எங்கள் பூர்வீகம். அங்குள்ள அம்மன் கோவில் பிரபலம். ஊர் எல்லையில் இருக்கிற இந்த கோவிலை என் அம்மா விருப்பப்படி 1977-ல் நான் புதுப்பித்தேன். இப்போதும் தம்பி ராஜ்குமார் இந்த கோவிலை பராமரிக்கும் பொறுப்பில் இருக்கிறான்.

தெலுங்கில் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தது மூலமாக தெலுங்கு ரசிகர்களிடமும் நான் பிரபலமாகியிருந்தேன். இப்போது கோவிலை புதுப்பித்ததன் மூலம் அந்தப் பகுதி மக்களிடமும் நல்லவிதமாக அறியப்பட்டிருந்தேன்.

இதனால் சந்திரபாபு நாயுடு என்னை தனது கட்சி சார்பில் இந்த தொகுதியில் நிற்கச்சொன்னார். அப்போது அவர் போட்ட ஒரே கண்டிஷன், “தேர்தலுக்குப்பிறகு, ஆந்திராவிலேயே செட்டிலாகி விடவேண்டும்” என்பதுதான்.

நான் அவரிடம், “நான் பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாமே தமிழ்நாட்டில்தான். அங்கேதான் நடிகையாக அறிமுகமானேன். எம்.ஜி.ஆர். மட்டும் அவரது ஜோடியாக படங்களில் என்னை அறிமுகப்படுத்தாமல் இருந்திருந்தால், `லதா’ என்ற பெண்ணை யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். எனவே எனக்கு புகழ் தேடித்தந்த தமிழ்நாட்டில், தமிழ் மக்களிடையே இருக்கவே விரும்புகிறேன்” என்று சொல்லி, நாயுடு தந்த அரசியல் வாய்ப்பை தவிர்த்து விட்டேன்.

இவ்வாறு கூறினார், லதா.

திருநாவுக்கரசு

எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சராக இருந்த திருநாவுக்கரசு, எம்.ஜி.ஆர். காலமான பிறகு “எம்.ஜி.ஆர். அ.தி.மு.க” என்றொரு கட்சியை தொடங்கினார். இதில் சேரும்படி நடிகை லதாவை கேட்டுக்கொண்டார். லதாவும் இந்தக் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார்.

1998-ல் நடந்த “எம்.பி” தேர்தலில், திண்டுக்கல்லில் தனது கட்சி சார்பில் போட்டியிட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் 60 ஆயிரத்துக்கு மேல் ஓட்டு வாங்கி, அரசியல் வட்டத்தை ஆச்சரியப்படுத்தினார்.

திருநாவுக்கரசு, தனது கட்சியை பாரதீய ஜனதாவுடன் இணைத்த நேரத்தில் லதாவும் பாரதீய ஜனதாவில் ஐக்கியமானார். கட்சியில் அவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

லதா இப்போது சினிமா, சின்னத்திரை என இரண்டிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த பிஸி நிலை, அவருக்கும் அரசியலுக்கும் ஒரு இடைவெளி இருப்பதுபோல் காட்டுகிறது. தொடர்ந்து அரசியலில் நீடிக்கும் எண்ணம் லதாவுக்கு உண்டா? அவரே கூறுகிறார்:-

“திருநாவுக்கரசரின் `எம்.ஜி.ஆர். அ.தி.மு.க‘ சார்பில் நான் திண்டுக்கல் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டபோது, கட்சிக்கென்று அங்கீகார சின்னம் எதுவும் தரவில்லை. அப்போது சுயேச்சை சின்னங்களில் ஒன்றாக இருந்த மாம்பழம் சின்னம் ஒதுக்கினார்கள். பிரசாரத்தின்போது மக்களை சந்தித்தேனே அந்த
30 நாட்கள்தான் என் வாழ்க்கையில் திருப்பம். “தலைவர்
(எம்.ஜி.ஆர்) கூட நடிச்ச பொண்ணு” என்று சொல்லி என்னைக் கொண்டாடினார்கள். “உங்க முகத்துல தலைவரைப் பார்க்கிறோம்மா” என்றார்கள்.

வயதானவர்கள்கூட என் காலில் விழ வந்தார்கள். அவர்களை தடுத்து அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இதெல்லாம் எம்.ஜி.ஆர். மீது அவர்கள் வைத்திருந்த அன்பைத்தான் எடுத்துக்காட்டின.

சிலர் என்னிடம், தங்கள் ஊரில் உள்ள “குழாயில் தணணீர் வரவில்லை” உள்ளிட்ட பல குறைகளை உரிமையுடன் சொல்லத் தொடங்கி விட்டார்கள். எம்.ஜி.ஆருடன் நடித்தவள் என்ற உரிமையில், அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையாகவே அது எனக்குப் பட்டது. சிலர், “மதியம் சாப்பாட்டுக்கு எங்க வீட்டுக்கு வாங்க”, “இரவு சாப்பாட்டுக்கு எங்க வீட்டுக்குத்தான் வரணும்” என்றெல்லாம் அன்போடு கேட்டு, அழைத்துப்போய் சாப்பாடும் கொடுத்தார்கள். சூதுவாது தெரியாத அன்பை மட்டுமே பொழியத் தெரிந்த இந்த மக்களுக்காக அவர்களுக்கு நல்லது செய்யும் அரசியலில் நான் நீடிப்பதுதான் சரியாக இருக்கும்.

இந்த பிரசாரத்தில் ஒரு வேடிக்கையும் நடந்தது. நான் எங்கள் “எம்.ஜி.ஆர். அ.தி.மு.க” கட்சி வேட்பாளராக போட்டியிட்ட அதே தொகுதியில், தி.மு.க.வுக்கு ஓட்டு கேட்டு என் தோழி ராதிகா பிரசாரம் செய்தார். அரசியலுக்கு அப்பாற்பட்ட தோழிகள் என்பதால், பிரசாரத்தில் எதிரும் புதிருமாக சந்தித்துக்கொண்டபோதுகூட மறக்காமல் “ஹாய்! ஹலோ” சொல்லிக்கொண்டோம். நட்பு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது அல்லவா?

இப்போது படங்களிலும், தொடர்களிலும் நடிப்பதை தொடர்ந்தாலும், அரசியல் ஈடுபாடும் இருக்கவே செய்கிறது. அரசியலில் முழு மூச்சாக இறங்கும் காலம் வரும்போது நிச்சயம் அதில் என்னை முழுவீச்சில் வெளிப்படுத்தவே செய்வேன். தேசியக்கட்சியில் (பா.ஜ.க) இருந்தாலும் எனது அரசியல் தமிழ்நாட்டில் இருக்கும்.

மக்கள் தந்த ஆதரவில் வளர்ந்த நான், மக்கள் பிரச்சினைக்காக என்னை அர்ப்பணிப்பேன்.”

Posted in Actress, ADMK, AIADMK, Biosketch, BJP, Cinema, Faces, Films, History, Jaya, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeyalalitha, JJ, Latha, Leaders, MGR, MGRADMK, Movies, people, Politics, Serial, Sun, Tamil, TamilNadu, Thirunavukkarasar, Thirunavukkarasu, TV | Leave a Comment »

Bill to hike pension for former MLAs, MLCs: Increase in Tamil Nadu Legislature spending

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

நமது கடன்…

ஏனைய ஆட்சிமுறைகளில் உள்ள குறைபாடுகளைக் களைவதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை நோக்கமே. ஆனால், நமது இந்தியாவில் மட்டும் மக்களாட்சி என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்பதுதான் நடைமுறை வழக்கமாக இருக்கிறது.

தமிழக சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டமான மழைக்காலக் கூட்டத் தொடர் நான்கே நாள்கள் நடந்து மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு நாள்களில் பல தீர்மானங்களும், சட்டமுன் வரைவுகளும் தாக்கல் செய்யப்பட்டன என்பது உண்மைதான். ஆனால், சப்தமே இல்லாமல் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு ரூ. 3,500 ஓய்வூதியம் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டியது அவசியம். இனிமேல், சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்த, இருக்கும், இருக்கப்போகிற அனைத்து உறுப்பினர்களின் வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ. 3,500 வழங்கப்படும் என்றும்

இதன் மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 32.4 லட்சம் செலவாகும் என்றும் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். ஓய்வூதியம் பெற நமது சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசு ஊழியர்களா என்று கேட்காதீர்கள். அரசு ஊழியர்கள் நிரந்தரப் பணியாளர்கள். ஆனால் நமது மக்கள் பிரதிநிதிகள், தேர்தலுக்குத் தேர்தல் மக்களின் அங்கீகாரம் பெற்றாக வேண்டிய தாற்காலிகப் பிரதிநிதிகள் மட்டுமே.

இன்னொரு விஷயம். ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது தொகுதி மக்களுக்கு முறையாகச் சேவை செய்யாமல், மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தவர்களுக்கும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்கிற முறையில், மக்களின் வரிப்பணத்திலிருந்து ஓய்வூதியம் உண்டு. இனிமேல், அவரது வாரிசுகளுக்கும் ஓய்வூதியம் தரப்படும். தவறுதலாகத் தவறான நபர் ஒருவரைத் தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்குத் தரப்படும் தண்டனை இது. இதுதான் இந்திய மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவமே!

இது ஏதோ தமிழகத்தில் மட்டும்தான் நடைபெறும் விஷயம் என்று நினைத்து விடாதீர்கள். இந்திய நாடாளுமன்றத்தில் தொடங்கி, அத்தனை மாநில சட்டப்பேரவைகளிலும் நடைபெறும் ஜனநாயகக் கூத்தின் ஓர் அங்கம்தான் இந்த அநியாயம். ஒரு சாதாரண இந்தியக் குடிமகனின் சராசரி வருமானத்தைவிட நாற்பது மடங்கு அதிக சம்பளம் பெறுகிறார் நமது நாடாளுமன்ற உறுப்பினர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நமது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு, அவர்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாள்களில் மட்டும், போக்குவரத்துச் செலவுக்காக 15 ரூபாயும், இதர செலவுகளுக்காக 30 ரூபாயும் படியாகத் தரப்பட்டது. இப்போது நிலைமை என்ன தெரியுமா?

அவரது செலவுகளுக்காக மாதம் ரூ. 20,000 தரப்படுவதுடன், அவர் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்குபெறும் ஒவ்வொரு நாளும் தினசரி பயணப்படியாக ரூ. 500 பெறுகிறார். இப்போது, தொகுதிப் பயணப்படி என்று மாதம் ஒன்றிற்கு ரூ. 5,000 தரப்படுகிறது. இலவச தொலைபேசி வசதி, சென்னையில் இருப்பிட வசதி, மருத்துவ வசதி என்று ஏராளமான வசதிகள் போதாதென்று ரூ. 7,000 ஓய்வூதியம் வேறு.

அமெரிக்காவில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் ஊதிய உயர்வு, மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டு, மக்களின் ஒப்புதலுக்குப் பிறகுதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம், தங்களுக்குத் தாங்களே தங்களது சம்பளத்தையும் வசதிகளையும் மக்கள் பிரதிநிதிகள் அதிகரித்துக் கொள்ளும் ஜனநாயக விரோதப் போக்கு தடுக்கப்படுகிறது. மக்களுக்குச் சேவை செய்ய எந்தவொரு அரசியல்வாதியையும் வாக்காளர்கள் விரும்பி அழைக்கவில்லை. தாங்களாகவே மக்களுக்குச் சேவை செய்ய விழைகிறோம் என்று கூறித் தேர்தலில் நிற்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தங்களுக்குத் தாங்களே தங்களது வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள். இது எந்த ஜனநாயகத்திற்கு உட்பட்ட விஷயம்?

மக்களாட்சியில் உண்மையிலேயே மக்களுக்குத் தொண்டாற்றிய தலைவர்களையும் பிரதிநிதிகளையும் மக்கள்தான் கௌரவிக்க வேண்டும். அவர்களது தேவைகளை மக்கள் வலியச் சென்று பூர்த்தி செய்ய வேண்டும். மக்கள் மீது நம்பிக்கை இல்லாத மக்கள் பிரதிநிதிகள்தான், மக்களின் வரிப்பணத்திலிருந்து தங்களது வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும், தங்களது வருங்காலத்திற்கு உத்தரவாதம் தேடிக் கொள்ளவும் விழைவார்கள் என்று நாம் சொன்னால், இவர்கள் ஏற்றுக்கொள்ளவா போகிறார்கள்? நமது கடன் வாக்களித்து ஓய்வதே!

————————————————————————————————————————————————-

மக்கள் பிரதிநிதிகள்…?

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, நீதிமன்ற வரம்பு தொடர்பாக தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் நல்லதொரு கருத்தை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் பொறுப்பில்லாமல் நடந்துகொள்பவர்களை குறிப்பாக, அவையில் ரகளையில் ஈடுபடும் உறுப்பினர்களை, மக்களே திரும்பி அழைக்கும் முறையைக் கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார். பணிகளைச் சரியாகச் செய்யாவிட்டால் அவர்களுக்கு ஊதியம் வழங்கக்கூடாது என்று கருத்தையும் ஏற்கெனவே அவர் கூறியிருந்தார்.

சாட்டர்ஜியின் கருத்துக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது. நாடாளுமன்றக் கூட்டத்துக்கு ஒரு நிமிடத்திற்கு ரூ. 24,500 செலவாகின்றது. நாடாளுமன்றத்தின் அரிய நேரத்தையும் மக்களின் வரிப்பணத்தையும் பாழடிக்கும் உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 1997-ல் விடுதலைப் பொன்விழா மக்களவை சிறப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2006-ம் ஆண்டு அறிக்கையின்படி, 20 சதவிகித உறுப்பினர்களே விவாதத்தில் ஓரளவு ஆர்வம் காட்டுகின்றனர். ஊழல் குற்றச்சாட்டால் நட்வர்சிங் பதவி விலகிய சில நாள்களிலேயே, 11 உறுப்பினர்கள் அவையில் கேள்வி எழுப்புவதற்கு லஞ்சம் வாங்கியதை ஆஜ்தக் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது.

1951-ல் எச்.ஜி. முடகல் இம்மாதிரி கேள்வி கேட்க தொழிலதிபர்களிடம் லஞ்சம் பெற்றார். நாடாளுமன்றக் குழு அதை உறுதி செய்த பின்னர், நேரு அவரை அவையை விட்டு நீக்கக் கோரி தீர்மானம் முன்மொழிந்தார். பிரிட்டனில் 1990-ல் பணத்திற்காக அவையில் கேள்வி எழுப்பியதில் ஊழல் ஏற்பட்டது என்று புகார் எழுந்தது.

அமெரிக்காவில் செனட் சபைத் தலைவராக இருந்த நிவேட்ஞ்ரிச் என்பவர் தவறான தகவல் அளித்து பயணப்படியைப் பெற்றார் என்பதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

மக்கள் பிரதிநிதிகள்மீது குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தவண்ணம் உள்ளன. 1998-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது ஜே.எம்.எம். உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்க லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவாகியது. ஆனால் லஞ்சம் வாங்கிய எம்.பி.க்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட லஞ்ச விவகாரம்பற்றி பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லையென்று சட்டத்தில் வழிவகை உள்ளதாக நீதிபதி பரூச்சா கூறியுள்ளார்.

சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்த, உறுப்பினர்களைத் திரும்ப அழைக்கும்முறை நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது. 1970-ல் ஜெயபிரகாஷ் நாராயணன், திரும்ப அழைக்கும் உரிமையை மக்களுக்கு அளிக்க வேண்டுமென்று தாம் ஏற்படுத்திய புரட்சியின் மூலம் அறைகூவல் விடுத்தார். அதுபோன்று, எம்.ஜி.ஆர். தம்முடைய இயக்கத்தைத் தொடங்கியபொழுது, திரும்பஅழைக்கும் உரிமையை வலியுறுத்தினார்.

கலிபோர்னியா மாநிலத்தில் ஆளுநர் பொறுப்பிலிருந்த கிரே டேவிஸ் திரும்ப அழைக்கப்பட்டார். 82 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஜே.பி. ரேசர் என்பாரும் தன்னுடைய பதவிக் காலத்திற்கு முன்பே ஆளுநர் பதவியிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டார் என்ற முன்னுதாரணங்கள் இருக்கின்றன. சோவியத் அரசியல்சட்டம்~1936~பிரிவு 106-ல் திரும்பஅழைக்கும் உரிமை மக்களுக்கு உண்டு என்று நீதிபதி கிருஷ்ணய்யர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவையில், உறுப்பினர்கள் பொறுப்பான விவாதங்களில் ஈடுபடாமல், கைகலப்பு, ரகளை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத்தான் காண்கிறோம். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் சுமார் ரூ. 2 லட்சம் வரை பல இனங்களில் அரசு வழங்குகிறது.

மாத ஊதியம், தொகுதிப் படி, அலுவலகப் படி, உதவியாளர் ஊதியம், அவையில் பங்கேற்புப் படி, தில்லி வீடு, மின்சாரம், தொலைபேசி, விமானப் பயணம், ரயில் பாஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உறுப்பினர்களுக்குக் கிடைக்கின்றன.

கடந்த 55 ஆண்டுகளில் 90 முறை நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய ஊதியங்கள், படிகள், ஓய்வூதியங்களை உயர்த்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் குரல் கொடுத்து தங்கள் உரிமைகளைச் சாதித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், தங்களுடைய ஊதியம், படிகளை உயர்த்துவதில் மட்டும் ஒட்டுமொத்த ஒற்றுமை எப்பொழுதும் இருந்து வந்துள்ளது. ராஜிவ் சுக்லா போன்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள “ஆபீஸ் ஆஃப் பிராஃபிட்’ என்று சொல்லக்கூடிய “பொறுப்பின் பயன்களை’ப் பெறும் தடைகளை நீக்கவும் முயற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பு சபை அமைக்கப்பட்டபொழுது உறுப்பினர்களுக்கு வாடகை, செலவுகள் சேர்த்து ஒரு நாளைக்கு ரூ. 45 படியாக வழங்கப்பட்டது. அக்காலத்தில் எளிமையாக காந்திய லட்சியங்களை மனதில்கொண்டு மக்கள் பிரதிநிதிகள் கடமையை ஆற்றினர்.

1955-ல் நாடாளுமன்றத்திற்கு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகை லட்சக்கணக்கில்தான் இருந்தது. இன்றைக்கு நாடாளுமன்றத்தின் மொத்த செலவு ரூ. 300 கோடிக்கு மேலாக உள்ளது. இதுபோக உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி என்று ரூ. 2,000 கோடி வரை தனியாகவும் ஒதுக்கப்படுகின்றது.

அரசியலமைப்பு சட்டத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஆரம்பத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 2003-ல் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பினர் ஒரு நாள் பதவியில் இருந்தாலே ஓய்வூதியம் கிடைக்கும்படி மாற்றங்கள் செய்யப்பட்டன. பிரிட்டனில் ஓர் எம்.பி.க்கு ஓர் அறை உள்ள அலுவலகம் மட்டும் வழங்கப்படுகின்றது. இந்தியாவில் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஊதியங்களையும் தங்களுக்குச் சேரவேண்டிய படிகளையும் தாங்களே நிர்ணயித்துக் கொள்கின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியங்களை நிர்ணயிக்க சுயாட்சி தன்மை கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று சாட்டர்ஜி கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. பிரிட்டன், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்ற குழுக்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் சலுகைகளை நிர்ணயிக்கின்றன. பொதுவாழ்வுக்கு வந்தவர்கள் அர்ப்பணிப்புடன் பணிசெய்வதை விட்டுவிட்டு, எவருக்கும் கிடைக்காத சலுகைகளைப் பெறுவது தேவைதானா என்று யோசிக்க வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் நடக்கின்ற அமளி, உறுப்பினர்களின் பொறுப்பின்மை ஆகியவற்றைப் பார்க்கின்றபொழுது, இந்திய ஜனநாயகம் எங்கே செல்கின்றது என்ற கவலை ஏற்படுகிறது. மாநில சட்டப்பேரவைகளிலும் பல தருணங்களில் இதுபோன்ற நிலையைக் காணமுடிகிறது.

நரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது, தொகுதி மேம்பாட்டுத் திட்டம் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தை நரசிம்மராவ் அறிவித்தபொழுது, சோம்நாத் சாட்டர்ஜி இந்தத் திட்டத்தை எதிர்த்தார். மற்ற அனைத்துக் கட்சிகளும் இத்திட்டத்தை வரவேற்றன. கணக்காயர் அறிக்கையும் இந்தத் திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியது.

இத்திட்டத்தை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஈ.எஸ். வெங்கட்ராமய்யா அரசியலமைப்பு சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறினார். கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு “கோட்டா’ வழங்குவதை நீதிமன்றங்களும் கண்டித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினருக்கு ரூ. 2 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்குவது நியாயமற்றதாகும்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிதியைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்ற நிதியிலிருந்துதான் மத்திய அரசு இந்த நிதியை வழங்குகிறது என்பது பல மாநில அரசுகளுக்குத் தெரியாது. மாநில சுயாட்சிக்குக் குரல்கொடுக்கின்றவர்களும் இதைத் தட்டிக் கேட்கவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், மக்களின் திருப்திக்கேற்ற வகையில் செயல்படவில்லை எனில், திரும்பஅழைக்கும் முறை சட்டமாக்கப்பட வேண்டும். அவர்களை விசாரணைக்கு உட்படுத்துகின்ற லோக்பால் மசோதாவை 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றத் தயக்கம் காட்டுவது வேடிக்கைதான்.

தகுதியற்றவர்களை மக்கள் பிரதிநிதிகளாக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும். கட்சித்தலைவர்கள், தங்கள் குடும்ப ஆதிக்கம், தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டும்வகையில், வேட்பாளர்களைத் தேர்வு செய்வது ஜனநாயகப் படுகொலைக்குச் சமம்!

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

———————————————————————————————————————————————————–

பயனுள்ளதாகட்டும் நாடாளுமன்றம்!

பி. சக்திவேல், சமூக சிந்தனையாளர்

நாடாளுமன்றத்தின் பணி சட்டம் இயற்றுவதுடன் முடிந்துவிடுவதில்லை.

மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கவும், தேசத்தின் முக்கியப் பிரச்னைகளை விவாதிப்பதற்கும், முடிவு எடுப்பதற்கும் உள்ள ஓர் அமைப்புதான் நாடாளுமன்றம்.

சமீபகாலமாக உறுப்பினர்களின் கடும் அமளியாலும், விவாதங்கள் முறையாக நடைபெறாததாலும் நாட்டு மக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே, கடும் விமர்சனத்திற்கு நாடாளுமன்றம் உள்ளாகியுள்ளது.

மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகளைப் பற்றி விவாதிக்காமலேயே நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர்கள் முன்னதாகவே முடிவடைவது நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேள்விக்குரியதாக்கியுள்ளது.

நாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் கடும் அமளியால் மக்களவை மொத்தம் 41 மணி நேரம் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் முடக்கப்பட்டது. இது மொத்த கூட்டத்தொடரில் 40 சதவிகித நேரமாகும்.

இதேபோல, மாநிலங்களவை 42 மணி நேரம், அதாவது 49 சதவிகித நேரம் முடக்கப்பட்டது. சென்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் (பிப்ரவரி-மார்ச்) மக்களவை 73 மணிநேரம் எவ்வித அலுவல்களும் நடைபெறாமல் உறுப்பினர்களின் கூச்சல், அமளி காரணமாக முடங்கியது.

இவ்வாறு அமளியால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாகும்.

பிரதமர் தன்னுடைய அமைச்சரவை சகாக்களை அவையில் அறிமுகம் செய்வதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை, அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்கள் சரியாக விவாதிக்கப்படவில்லை, பல மசோதாக்கள் எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது, கேள்வி நேரம் மற்றும் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் அர்த்தமற்றதாகிவிட்டன. இவை அனைத்தும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளது.

ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் குடியரசுத் தலைவர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறுவதில் தடைகள் உருவாகின்றன.

மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜியால் அவையில் உரை நிகழ்த்த இயலவில்லை. “”மக்களவைத் தலைவர் பேசும் போதும் நீங்கள் பேசுகின்றீர்கள், அமளி துமளியில் ஈடுபடுகின்றீர்கள். இது இப்போது வியாதியாகவே பரவிவிட்டது” என்று வருத்தப்பட்டுக் கூறும் அளவுக்கு அமளி ஏற்பட்டுள்ளது. அவை நிகழ்ச்சிகளை நடத்தவிடாமல் தடுப்பது என்ற நடைமுறையால், எதிர்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்ன ஆகும் என்ற கேள்வி அனைவரின் மனதில் எழுந்துள்ளது.

நம் நாட்டில், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் முதல் பொதுத் தேர்தல் 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்பொழுது ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றம் அதிக நேரம் அதனுடைய அலுவல்களுக்காகவே செலவிட்டது. இதன் வாயிலாக சமூக வளர்ச்சிக்காகவும் மக்களாட்சித் தத்துவத்தை மேம்படுத்துவதற்காகவும் நாடாளுமன்றம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் தழைத்தோங்கியது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற்றன. இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பெரும் பங்காற்றினர்.

ஒவ்வொரு முறை பொதுத் தேர்தல் நடத்துவதற்கும் அரசு கோடிக்கணக்கில் பணத்தைச் செலவிடுகிறது. கடந்த 14-வது மக்களவைத் தேர்தலுக்கு அரசு செலவிட்ட தொகை சுமார் ரூ. 1,300 கோடியாகும். நாடாளுமன்றம் செயல்பட ஒரு நிமிடத்திற்கு அரசு சுமார் ரூ. 34,500 செலவு செய்கிறது. ஒரு மணி நேரத்திற்கு ரூ. 21 லட்சமும், ஒரு நாள் நாடாளுமன்றம் செயல்பட சுமார் ரூ. ஒன்றரை கோடியும் செலவாகிறது. மொத்தத்தில், ஒரு கூட்டத்தொடர் நடத்துவதற்கு ரூ. 250 கோடி செலவாகிறது.

உண்மையாக, ஆரோக்கியமான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றால் மக்களுடைய வரிப்பணம் வீணாகாது. ஆனால் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்தோமானால் நாடாளுமன்றத்தின் பொன்னான நேரம், பணம் மற்றும் மக்களுடைய நம்பிக்கைகள் வீணாகிக் கொண்டிருப்பதை அறிந்துகொள்ளலாம்.

நாடாளுமன்ற அமர்வுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதும் மிகவும் கவலை அளிக்கக்கூடிய மற்றொரு விஷயமாகும். கடந்த காலங்களில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 125 முறை நாடாளுமன்றத்தின் அமர்வுகள் நடைபெற்றன. ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் அமர்வுகள் 70 ஆக குறைந்துவிட்டன. இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் நடைபெற்ற அமர்வுகளில் மிகவும் குறைந்த அமர்வுகளாகும். குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 அமர்வுகளாவது நடைபெற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்புகளாகும்.

நாடாளுமன்ற அமர்வுகள் அதிக அளவில் நடைபெற்றால்தான் மசோதாக்களை முறையாக அறிமுகம் செய்து விவாதிக்க முடியும். மேலும் கேள்வி நேரங்கள் சரியாகப் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் அரசை நெறிப்படுத்த வாய்ப்புகள் உருவாகும்.

நாடாளுமன்றத்தின் அலுவல்கள் நடைபெறவில்லை என்றாலோ அல்லது அவை முடக்கப்பட்டாலோ உறுப்பினர்களுக்கு தினசரி சலுகைகள் மற்றும் தினசரி படிகள் வழங்கப்படக்கூடாது என்று மக்களவைத் தலைவர் யோசனை தெரிவித்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் ஒரு மனதாக இந்த யோசனையை நிராகரித்துவிட்டன.

1949 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் நாள் வி.ஐ. முனுசாமி என்பவரால் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி உறுப்பினர்களின் தினப்படியை 45-லிருந்து 40 ரூபாயாகக் குறைக்க வேண்டும். அதற்கான காரணம், “”நாட்டு மக்கள் வறுமையில் உள்ளபோது உறுப்பினர்களுக்கு அதிக சலுகைகளை அளிக்கக் கூடாது. எனவே, இதைக் கருத்தில்கொள்ளும்போது 5 ரூபாய் என்பது ஒரு மிகச்சிறிய தியாகம்தான். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நாடாளுமன்றத்தின் ஒரு மிகச்சிறிய பங்களிப்புதான் இது” என்றார் முனுசாமி.

இந்தத் தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். இதன்படி 5 ரூபாய் குறைக்கப்பட்டு தினப்படி 40 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு வரை இவ்வாறு வழங்கப்பட்டதை இத்தருணத்தில் நிச்சயமாக குடிமக்கள் அனைவரும் நினைவுகொள்ள வேண்டியது அவசியமாகும். இந்தச் சம்பவம் எவ்வாறு நாடாளுமன்றமும் அதன் உறுப்பினர்களும் சமூக, பொருளாதார சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட்டார்கள் என்பதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும்.

1954 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் சலுகைகளில் 27 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர்களுக்கு ஊதியம் மற்றும் சலுகைகளை உயர்த்த வேண்டுமென்றால் குரல் வாக்கெடுப்பின் மூலமாக மிகவும் எளிதாக நிறைவேற்றப்படுகிறது.

அதேவேளையில் அரசு அலுவலர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றால் ஊதியக் குழு நியமிக்கப்பட்டு பல்வேறு விவாதங்கள் மற்றும் திருத்தங்களோடுதான் உயர்த்தப்படுகிறது. இதற்கு குறைந்தபட்சம் சில ஆண்டுகளாவது ஆகிறது. எனவே இதையும் மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

எனவே கூச்சல், குழப்பம் போன்றவற்றின் மூலம் அவை நடவடிக்கைகளை முடக்கி மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

நமது நாட்டின் 26 சதவிகித மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், பல கோடிகள் செலவு செய்து ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றம் முறையாகச் செயல்படாமல் முடக்கப்படுவது சரியல்ல. இதனால் விரயமாகும் வரிப்பணம் தேசிய பேரிழப்பாகும்.

ஏற்கெனவே பல்வேறு விரும்பத்தகாத நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் அதன் மதிப்பையும் கண்ணியத்தையும் இழந்து காணப்படுகிறது. இத்தகைய போக்கு கட்டாயமாக மாற வேண்டும்.

ஆரோக்கியமான விவாதம், அவை நடவடிக்கைகளில் அதிக உறுப்பினர்கள் கலந்துகொள்ளுதல், நாடாளுமன்றத்தை முறையாகச் செயல்பட அனுமதித்தல், நாட்டு மக்களுக்கு குறிப்பாக, இளைய தலைமுறைக்கு உதாரணமாகத் திகழ்வது போன்ற கண்ணியத்தைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இதன்மூலம்தான் நாடாளுமன்ற ஜனநாயகத் தத்துவம் முழுமை அடையும். நாடாளுமன்றமும் பயனுள்ளதாகும்.

இதைச் செய்யத் தவறினால் மக்களவைத் தலைவர் கூறியதுபோல “”இந்த அமைப்பை எந்த சக்தியாலும் ஏன், ராணுவத்தாலும் கூட காப்பாற்ற முடியாது.”

Posted in 5, ADMK, Allocation, Allowances, Anbalagan, Anbazagan, Anbazhagan, Appraisal, Assembly, Attendance, Bribery, Bribes, Budget, Cell, Checks, Chennai, Citizen, City, Congress, Cops, Corruption, Council, DA, Decorative, Decorum, Democracy, Disqualify, DMK, Economy, Election, Elections, Employed, Employment, Exceptions, Expenses, Exploit, Exploitation, Finance, Freedom, Funds, Government, Governor, Govt, Hike, Impeach, Income, Independence, Issues, IT, JJ, Jobs, kickbacks, KK, Legislature, Lifelong, Limits, Lok Ayuktha, Lok Saba, Lok Sabha, Lokpal, LokSaba, LokSabha, Madras, Metro, MGR, MLA, MLC, MP, MuKa, NGO, Office, Operations, parliament, pension, people, Performance, Phones, Polls, Power, Query, Questions, Raise, Rajya Saba, Rajya Sabha, Rajyasaba, Rajyasabha, Recall, Representation, Representative, Representatives, responsibility, Retirement, Rich, Role, Ruler, Salary, Senate, service, Sincere, Sincerity, Somnath, State, Suspend, TamilNadu, Tax, Telephone, Terms, Transport, Verification, Verify, Vote, voters, Walkouts, Woes, Years | Leave a Comment »

History of Movies & Politics – Tamil Cinema series in BBC Tamil

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 21, 2007

நெஞ்சம் மறப்பதில்லை – பாகம் ஐந்து

நன்றி: பிபிசி தமிழ்

தமிழக மக்களிடம் திரைப்படங்களுக்கு தனி இடம்
தமிழக மக்களிடம் திரைப்படங்களுக்கு தனி இடம்

தமிழ் திரையுலகில் புராண பக்தி கதைகள் ராஜா ராணிக் கதைகள் மட்டுமே வந்துகொண்டிருந்த நிலை மாறி சமுதாய விழிப்புணர்வு, பகுத்தற்றிவுக் கொள்கைகள் ஆகியவற்றைக் கதைக்களமாக கொண்ட திரைப்படங்கள் வரத்தொடங்கியது தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் வேரூன்றிய காலகட்டமான ஐம்பதுகளின் துவக்கத்தில்தான்.

சமூக சீர்திருத்தப் படங்களை இயக்குவதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றிருந்த அப்போதைய இயக்குநர்களாக கருதப்பட்டவர்கள் கிருஷ்ணன்,பஞ்சு என்கிற கூட்டு இயக்குநர்கள். ஏ.வி.எம். நிறுவனத்துக்காக பல வெற்றிப்படங்களைத் தந்தவர்கள் இவர்கள்.

பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, முரசொலி மாறன் போன்ற வித்தகர்கள் கிருஷ்ணன் பஞ்சு படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கிறார்கள்.

முரசொலி மாறன் கதை வசனத்தில் உருவான குலதெய்வம் என்ற திரைப்படத்திலிருந்த வசன பாணி மற்றும் சமூக சீர்திருத்த கருத்துகளை விவரிப்பதோடு, திராவிடர் கழகத்தைச் சேர்ந்த திருவாரூர் தங்கராசுவின் கதையில் எம்.ஆர்.ராதா அற்புதமாக நடித்து பெருவெற்றி பெற்ற ரத்தக் கண்ணீர் திரைப்படம் முன்வைத்த முற்போக்கு கருத்துகளை ஆராய்கிறது இந்த ஐந்தாம் பாகம்.

தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்கள் பற்றிய தொடர்.

நடிப்புக்கு இலக்கணம் வகுத்த மேதைகள்,சிரிக்க வைத்த சிந்தனையாளர்கள், நையாண்டி நாயகர்கள், நடிப்புச் சுடர்கள் மற்றும் சிந்திக்க வைத்த எண்ணற்ற இயக்குனர்கள் என்று, தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த வித்தகர்கள் பற்றிய தொடர். பி.பி.சி.யின் முன்னாள் தயாரிப்பாளர் சம்பத்குமார் தயாரித்து வழங்குகிறார்.

பகுதி 5

பகுதி 4

பகுதி 3

பகுதி 2

பகுதி 1

Posted in ADMK, AIADMK, Anna, Audio, AVM, BBC, Cinema, dialogues, DK, DMK, Films, History, Kalainjar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, MGR, MK, Movies, Pictures, Podcast, Podcasting, Politics, Series, Story, Tamil | Leave a Comment »

Unmai Online – 50 Questions to Kalainjar Karunanidhi

Posted by Snapjudge மேல் ஜூலை 10, 2007

கலைஞரிடம் 50 கேள்விகள்

1.கேள்வி : சட்டசபையில் முதல்நாள் அனுபவம் எப்படியிருந்தது?
கலைஞர் : பந்தயக் குதிரையைப் படைவீரர் அணிவகுப்பில் நிறுத்தி வைத்தது போல் இருந்தது.

2.கேள்வி : பேசிய முதல் பேச்சு?
கலைஞர் : நான் 1957இல் வெற்றிபெற்ற குளித்தலைத் தொகுதியில் உள்ள “நங்கவரம்” பண்ணை விவசாயிகளின் “கையேரு வாரம்-மாட்டேரு வாரம்” என்ற பிரச்சினைக்காகப் பேசியதே பேரவையில் எனது முதல் பேச்சு.

3.கேள்வி : அதிக நேரம் பேசிய நாள்?
கலைஞர் :அதிக நேரம் பேசிய நாட்கள் பல உண்டு. இருப்பினும் 1997ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு, நான் அளித்த பதிலுரைதான் இரண்டு மணி நேரத்துக்கு நீடித்தது.

4.கேள்வி : உங்களுக்கு பிடித்த சட்டமன்றப் பேச்சு?
கலைஞர் : அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஆட்சியில்: எதிர்கட்சித் தலைவராக நானிருந்த போது, “பூம்புகார்” நிறுவனத்தின் சார்பில் வாங்கப்பட இருந்த “பல்கேரியா பால்டிகா” என்ற கப்பல் பேர ஊழல் குறித்து இருபது ஆதாரங்களை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துவைத்துக் குற்றம் சாட்டிப்பேசியதால், அந்த இரு கப்பல்களுமே வாங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது என்பது சட்டப் பேரவையின் பரபரப்பான வரலாறு.

5.கேள்வி : உங்களுக்குப் பிடித்த சட்டமன்றப் பேச்சாளர்?
கலைஞர் : எந்த மன்றமானாலும் சரி, அங்கே கொடிமரம் போல் உயர்ந்துநிற்கும் ஆற்றல்மிகு பேச்சாளர் அறிஞர் அண்ணாதான்.

6.கேள்வி : பிடித்த சபாநாயகர்?
கலைஞர் : ஆரம்ப காலத்தில் டாக்டர்.யு.கிருஷ்ணராவ்-இடைக்காலத்தில் செல்லப்பாண்டியன்-அடுத்து கே.ராஜாராம்-அண்மைக் காலத்தில் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்.

7.கேள்வி : உங்களுக்குக் கிடைத்த மறக்க முடியாத பதில்?
கலைஞர் : 24.03.1960 அன்று சட்டப் பேரவையில், ஓவியர் வேணுகோபால்சர்மா அவர்களால் “தபால் தலைகளுக்கு என்று வரையப்பட்ட திருவள்ளுவர் ஓவியத்தைச் சட்டமன்றத்தில் வைக்கும் உத்தேசம் அரசாங்கத்திற்கு உண்டா?” என்று நான் கேட்டதற்கு பெரியவர் மாண்புமிகு பக்தவத்சலனார் அவர்கள் எழுந்து, “சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்கள் அம்மாதிரி ஒரு படத்தை இங்கு சமர்ப்பிக்க முன்வந்தால், கனம் சபாநாயகர் அவர்கள் அதைப்பற்றி யோசிப்பார்கள்” என்று கூறிய பதில் தான் எனக்குக் கிடைத்த மறக்க முடியாத பதில் என்று சொல்வேன். ஏனென்றால் அந்தப் பதிலின் காரணமாகத்தான் சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் 22.3.1964 அன்று அன்றையக் குடியரசுத் தலைவர் மேதகு ஜாகீர் உசேன் அவர்களால் திருவள்ளுவரின் திருவுருவப்படம் திறந்து வைத்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாகத்தான் தி.மு.கழக ஆட்சியில் பேருந்துகள், அரசு விருந்தினர் மாளிகைகளில் திருவள்ளுவர் படங்கள் என்று தொடங்கி, வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் வானுயர் வள்ளுவர் சிலை என ஆயிற்று!

8. கேள்வி : நீங்கள் சொன்ன மறக்க முடியாத பதில்?
கலைஞர் : திருச்செந்தூர் கோவிலில் நடைபெற்ற கொலைக்காக அமைக்கப்பட்ட பால் கமிஷன் அறிக்கை மீது விசாரணை நடத்தாதது குறித்தும், திருச்செந்தூர் கோவிலில் வைரவேல் களவாடப்பட்டதைக் கண்டித்தும் நான் எதிர்கட்சித்தலைவராக இருந்த போது திருச்செந்தூர் நடைபயணம் சென்றேன். அதைப்பற்றி அவையிலே ஆளுங்கட்சி உறுப்பினர், “கருணாநிதி திருச்செந்தூர் போனார், முருகனே அவரைப் பார்க்கப்பிடிக்காமல் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு வந்து விட்டார்!” என்றார் கிண்டலாக. உடனே நான் எழுந்து, “திருச்செந்தூரில் முருகனின் வேல்தான் களவாடப்பட்டது என்று நினைத்தேன். சிலையும் காணாமல் போய்விட்ட விஷயம் இப்போது தான் தெரிகிறது!” என்று நான் கூறியதும் அவை சிரிப்பிலே ஆழ்ந்தது. நான் சொன்ன மறக்க முடியாத பதில்களில் இதுவும் ஒன்று.

9.கேள்வி : சட்டமன்றத்தில் சிறப்பான முதல்வர் யார்?
கலைஞர் : பெருந்தலைவர் காமராஜர், அவையிலே பேசாமலேயே அமர்ந்திருந்து, ஆனால் நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்தியவர்.

10.கேள்வி:சட்டமன்றப் பேச்சுக்கும்- பொதுக்கூட்டப் பேச்சுக்கும் என்ன வித்தியாசம்?
கலைஞர் : மனக்கணக்குக்கும்-வீட்டுக்கணக்குக்கும் உள்ள வித்தியாசம்.

11. கேள்வி : 1957இல் முதல்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக ஆனபோது மனைவி, குழந்தைகளைச் சட்டமன்றத்திற்கு அழைத்துச் சென்றதுண்டா?
கலைஞர் : அழைத்துச் சென்றதில்லை. அவர்களாகவே வந்து நான் உரையாற்றும் நாட்களில் சட்டமன்ற நிகழ்ச்சிகளைக் கண்டதுண்டு.

12. கேள்வி : சட்ட மன்றத்தில் உங்களுக்குக் கிடைத்த முதல் பாராட்டு யாரால்?
கலைஞர் : எனது முதல் கன்னிப் பேச்சில், எனது முதல் தொகுதியான குளித்தலையில் இருந்த, “கையேரு வாரம், மாட்டேரு வாரம்” என்ற பிரச்சினை குறித்து நான் வேகமாகப் பேசி அமர்ந்தவுடன், ஒரு துண்டுத் தாளில் பேரவைத் தலைவராக அப்போதிருந்த மேதகு யு.கிருஷ்ணாராவ் அவர்கள், “Very Good Speech” என்று எழுதிச் செயலாளர் மூலமாக என்னிடம் கொடுத்தனுப்பினார். சட்டமன்றத்தில் எனக்குக் கிடைத்த முதல் பாராட்டு அது தான்.

13. கேள்வி : மறக்கமுடியாத சம்பவம்?
கலைஞர் : தமிழகச் சட்டப் பேரவையில் “தமிழ்நாடு” பெயர் வைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, பேரறிஞர் அண்ணா அவர்களே, “நான் மூன்று முறை தமிழ்நாடு என்று சொல்வேன், அனைவரும் வாழ்க! என்று சொல்ல வேண்டுமென்று கூறிவிட்டு அவ்வாறே முழக்கமிட்ட அந்தச் சம்பவம் என்னால் மறக்க முடியாத சம்பவமாகும்.

14. கேள்வி : வருத்தப்பட வைத்த சம்பவம்?
கலைஞர் : 1976ஆம் ஆண்டு ஆட்சி கலைக்கப்பட்டு, அதன் பின்னர் 13 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்து, மீண்டும் 1989இல் பதவிப் பொறுப்புக்கு வந்து முதல் நிதிநிலை அறிக்கையை நான் படிக்க முனைந்தபோது, ஏற்கனவே அவர்கள் வீட்டிலே நடத்திய ஒத்திகைப்படி என் கையிலே இருந்த நிதிநிலை அறிக்கையைப் பறிக்க முயற்சித்து, முகத்திலும் கட்சிக்காரர்களை விட்டுக் குத்துமாறு ஏவிவிட்டு, அதன் பின்னர், தன்னை ஆளுங்கட்சிக்காரர்கள் தாக்கிவிட்டதாகத் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு, செய்தியாளர்கள் முன் வதந்திகளைப் பரப்பிய நிகழ்ச்சிதான் என்னை வருத்தமடையச் செய்த சம்பவமாகும்.

15. கேள்வி : மகிழ்ச்சிக்குரிய சம்பவம்?
கலைஞர் : நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார். என்னை அவரது அறைக்குத் தனிமையிலே அழைத்துச் சென்று, சட்டமன்றத்திற்குள் திறக்கப்பட விருந்த பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப் படத்திற்குக் கீழே என்ன வார்த்தைகளை எழுதலாம் என்பதைக் பற்றி என்னை எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டார். நானும் மகிழ்ச்சியுடன், “உழைப்பே உயர்வு தரும்!” என்று எழுதிக் கொடுத்தேன். ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அப்போது நடந்துகொண்ட முறையை நினைக்கும் போது மகிழ்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியும்?

16.கேள்வி : கோபப்படவைத்த சம்பவம்?
கலைஞர்:எதிர்க்கட்சித் தலைவராக நான் இருந்தபோது, ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவர் என்னைப் பற்றி ஒரு குற்றச்சாட்டினைக் கூறினார். தேனியில் நான் இடைத் தேர்தலுக்காகச் சென்ற போது, முத்துத்தேவன்பட்டி என்ற ஊரில் தங்கியிருந்த இடத்தை என் மகன் மு.க.அழகிரி விலைக்கு வாங்கியதாகக் கூறி, அதனை மறுக்கத் தயாரா என்று சவால் விட்டார். நான் அமைதியாக உட்கார்ந்திருந்தேன்.

அமைச்சராக இருந்த துரைமுருகன் எழுந்து அதை மறுத்துக் கூறினார். எனினும் அந்த அமைச்சர் எழுந்து பிடிவாதமாக அந்தக் குற்றச்சாட்டை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் அமைதியாக இருப்பதிலிருந்தே குற்றச்சாட்டு உண்மையாகிறது என்று கூறிய போது தான் நான் எழுந்து குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் நான் அரசியலை விட்டு விலகத் தயார். இல்லாவிட்டால் அவர் வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதுமென்று கூறினேன்.

அதற்குப் பிறகும் மறுநாள் அவர் போலியாக ஒரு பத்திரமே தயாரித்து, அதிலே போலியாக மு.க. அழகிரியின் iகாயழுத்தையும் போட்டு, பேரவைத் தலைவரிடம் அதைக் கொண்டு வந்து நிரூபிக்க முயன்றபோது, நான் உண்மையில் கோபப்பட்டேன். பேரவைத் தலைவராக இருந்த திரு.கே.ராஜாராம் அவையிலேயே வந்து அந்த அமைச்சர் செய்தது பெருந்தவறு என்பதை அறிவித்தார். ஆனால், அதைப் பெரிதாக நான் எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து அந்தப் பிரச்சினையை நீட்டிக்காமல் பெருந்தன்மையாக மன்னித்துவிட்டேன்.

17.கேள்வி:என்னுடைய வளர்ச்சிக்குச் சட்ட மன்றத்தில் இந்த உறுப்பினர் உதவியாக இருந்தார் என்று யாரையாவது சொல்வீர்களா?
கலைஞர்:குறிப்பிட்டு யாரையும் சொல்ல முடியாது.

18. கேள்வி:உங்களைத் தொடர்ந்து பாராட்டும் உறுப்பினர் யார்?
கலைஞர்:ஒருவரல்ல, பலர்.

19. கேள்வி:உங்களை கிண்டல் செய்யும் உறுப்பினர் யார்?
கலைஞர்:என்னை யாரும் கிண்டல் செய்தது கிடையாது, முடியாது.

20. கேள்வி:இப்படிப் பேசியிருக்க வேண்டாம் என்று எப்போதாவது நினைத்ததுண்டா?
கலைஞர்:”சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்”
என்ற குறள் வழி நடக்கின்ற எனக்கு இந்த நிலை ஏற்பட்டதில்லை.

21. கேள்வி: ‘இந்த நேரத்தில் சபையில் இல்லாமல் போய்விட்டோமே!’ என்று நினைத்த சம்பவம் உண்டா?
கலைஞர்:தி.மு.கழகம் ஆளுங்கட்சியாக இருக்கின்ற நேரத்தில் எதிர்க்கட்சிக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே நான் இல்லாத நேரத்தில் ஏதாவது பிரச் சினைகள் ஏற்பட்டுவிட்டதாகப் பின்னர் அறியும்போது, அந்த நேரத்தில் சபையில் இல்லாமல் போய் விட்டோமே என்று நான் நினைத்த சம்பவங்கள் ஒன்றிரண்டு உண்டு.

22. கேள்வி: “இந்த நேரத்தில் இல்லாமல் இருந் திருக்கலாமே!” என்று நினைக்கும் சம்பவம்?
கலைஞர் : அளவுக்கு மீறி ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என்னைப் புகழ்ந்து பேசும்போது நானே ஒருமுறை சபாநாயகர் பழனிவேல்ராஜன் அவர்களிடம், “இந்தப் புகழுரைகளை நிறுத்தச் சொல்கிறீர்களா? அல்லது நான் வெளியே போகட்டுமா?” என்று கோரியதுதான் என் நினைவுக்கு வருகிறது.

23. கேள்வி: சட்டமன்றத்துக்கு உள்ளே போகும் போது என்ன நினைப்பீர்கள்?
கலைஞர் : கற்றுக்கொள்ளும் மாணவனாகவும், கற்பிக்கும் ஆசிரியராகவும் இருக்க வேண்டுமென்று.

24. கேள்வி : முதன்முதலாகச் சென்றபோது உட்கார்ந்த இருக்கை எண் நினைவிருக்கிறதா?
கலைஞர் : 170.

25. கேள்வி : சட்டமன்றத்தில் இவர்கள் எப்படி?
கலைஞர் : 1. காமராஜர்-எளிமையானவர்.
2.பக்தவச்சலம்-நிர்வாகத்தில் திறமையானவர்.
3.அண்ணா-எதிர்க்கட்சியினரையும், உரையினால் ஈர்ப்பவர்.
4.எம்.ஜி.ஆர்.-நாகரிகமாகப் பழகக் கூடியவர்.
5.ஜெயலலிதா-பிடிவாத குணத்தினர்.

26. கேள்வி : திரு.கருத்திருமன் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது நீங்களும், அவரும் அடிக்கடி அவையிலே விவாதத்தில் ஈடுபடுவதுண்டு. அதில் நினைவில் உள்ள ஒன்றைக் கூறுங்களேன்?
கலைஞர் : ஒருமுறை திரு.கருத்திருமன் அவர்கள், “அடைந்தால் திராவிட நாடு, இல்லாவிட்டால் சுடுகாடு என்றீர்கள், இப்போது சுடுகாட்டிலா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நான், “சுடுகாட்டில் இல்லை, உங்களோடு உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்!” என்று கூறினேன். அவையினரோடு சேர்ந்து அவரும் சிரித்துக் கொண்டே அமர்ந்துவிட்டார்.

27. கேள்வி : இந்த அய்ம்பதாண்டுகளில் உங்களுக்குப் பிடித்தமான 5 சட்டமன்றப் பேச்சாளர்கள் யார்?
கலைஞர் : 1.பேராசிரியர் அன்பழகனார்
2. கே.டி.கே.தங்கமணி
3. குமரி அனந்தன்
4. அப்துல் லத்தீப்
5. திருமதி.பாப்பா உமாநாத்

28. கேள்வி : நீங்கள் திக்குமுக்காடிய சம்பவம் ஏதாவது உண்டா?
கலைஞர்: அப்படி எதுவும் இல்லை.

29. கேள்வி : எதிராளியைத் திணற வைத்த ஏதாவது ஒரு சம்பவம்?
கலைஞர் : சட்டமன்றத்தில் ஒரு முறை டாக்டர்.எச்.வி.ஹண்டே அவர்கள் தி.மு.கழக அரசைப் பற்றி விமர்சிக்கும் போது, “இது மூன்றாம் தர சர்க்கார்” என்றார். உடனே ஆளுங்கட்சியினர் வெகுண்டெழுந்தனர். நான் அனைவரையும் கையமர்த்திவிட்டு, “டாக்டர் ஹண்டே அவர்கள் இந்த அரசை மூன்றாந்தர அரசு என்றார். திருத்திக்கொள்ளவேண்டும். இது நாலாந்தர அரசு, பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர என்று கூறப்படும் வர்ணங்களில் நான்காவதாகக் கூறப்படும் சூத்திரர்களின் அரசு!” என்று குறிப்பிட்டேன்.

30. கேள்வி : மறக்க முடியாத சட்டமன்றக் கலவரக் காட்சி?
கலைஞர் : எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, “ஜெயலலிதா” அணியினரும், “ஜானகி” அணியினரும் பேரவைக்குள் மோதிக்கொண்டு காவல் துறையினரும் உள்ளே புகுந்து மன்ற உறுப்பினர்கள் ஒலிபெருக்கியைப் பிடுங்கிக்கொண்டு சண்டையிட்ட காட்சி மறக்க முடியாத ஒன்றாகும்.

31. கேள்வி : சட்ட மன்றப் பேச்சில் எது இருக்கக்கூடாது?
கலைஞர் : மீண்டும் ஒரு நாள் இருவரும் சந்திக்க நேரிடும் போது பர°பரம் பேசிக்கொள்ள முடியாத அளவிற்கு விரோதம் காட்டிக்கொள்ளும் உணர்வு இருக்கக்கூடாது.

32. கேள்வி : விவாதம்-வாக்குவாதம்-விதண்டாவாதம் மூன்றும் எப்படி இருக்கவேண்டும்?
கலைஞர் : விவாதம்-உண்மையாக இருக்க வேண்டும்.
வாக்குவாதம்-சூடு இருந்தாலும், சுவையாக இருக்க வேண்டும்.
விதண்டாவாதம்-தவிர்க்கப்பட்டாக வேண்டும்.

33. கேள்வி:நீங்கள் கொண்டு வந்ததில் மகிழத்தக்க சட்டம்?

கலைஞர் : பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை-குடியிருப்புமனைச் சட்டம்-நில உச்ச வரம்புச் சட்டம்-அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆணை.

34. கேள்வி : சட்டமன்றப் பதவியை 1984, 1991 இரண்டு முறை ராஜினாமா செய்தது ஏன்?
கலைஞர் : 1984ஆம் ஆண்டு நான் இலங்கைத் தமிழர்களுக்காகச் சட்டமன்றப் பதவியை ராஜினாமா செய்தேன். 1991இல் நான் ஒருவன் மட்டுமே வெற்றிபெற்று மற்ற எல்லா இடங்களிலும் கழகம் தோற்றதால், அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று அந்தப் பதவியை ராஜினாமா செய்தேன்.

35.கேள்வி:நினைவாற்றல், சொல்லாற்றல், வாதத்திறன்-ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு எது முக்கியம்?
கலைஞர் : நினைவாற்றலுடன் கூடிய வாதத்திறன்மிக்க சொல்லாற்றல் ஒவ்வொரு சட்டமன்ற உறுப் பினருக்கும் முக்கியம்.

36. கேள்வி : சட்டமன்றத்தை அரசியல் விவாத மேடையாக்கலாமா?
கலைஞர் : விவாத மேடையாக ஆக்கலாம்-விரோத மேடையாகத்தான் ஆக்கக்கூடாது.

37. கேள்வி : 2001-2006 சட்டமன்றப் பணிகளில் உங்களை அதிகம் ஈடுபடுத்திக் கொள்ளாதது ஏன்?
கலைஞர் : யாரையும் மதிக்க விரும்பாத அன்றைய ஆளுங்கட்சியின் நடவடிக்கைகள்.

38. கேள்வி : நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்று நினைத்ததே இல்லையா?
கலைஞர் : தொடக்கம் முதலே தமிழ், தமிழ்நாடு, தமிழ்மக்கள் என்ற அளவில் என்னை அய்க்கியப்படுத்திக்கொண்டு விட்டேன்.

39. கேள்வி : நீங்கள் கொண்டு வந்ததிலேயே விருப்பமான மக்கள் நலத்திட்டம்-முதன்மை இடத்தைப் பிடிப்பது எது?
கலைஞர் : சாதிமத பேதமின்றி ஏழைப்பெண்களுக்குத் திருமண உதவித் திட்டம். அதே நோக்கத்தில் உருவாக்கப்பட்ட சமத்துவபுரத் திட்டம்.

40. கேள்வி : சட்டமன்ற மரபு மீறப்பட்ட செயல் என்று எந்த நிகழ்வைச் சொல்வீர்கள்?
கலைஞர் : முரசொலிப் பத்திரிகை ஆசிரியரைச் சட்டமன்றத்திற்கு அழைத்துக் கூண்டிலே ஏற்றிக் கண்டனம் தெரிவித்த செயல்.

41. கேள்வி : சட்டமன்ற நிகழ்வுகளில் உங்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் என்று எதைச் சொல்வீர்கள்?
கலைஞர் : சட்டமன்ற மேலவையில் எதிர்க்கட்சித் தலைவராக நான் வரக்கூடாது என்று முயற்சிசெய்து, அது நடக்காத நேரத்தில், மேலவையையே தமிழ் நாட்டில் என் ஒருவனுக்காகக் கலைத்த செயல் எனக்கு துரோகம் செய்வதாக நினைத்துச் செய்யப்பட்ட காரியமாகும்.

42. கேள்வி : உங்களைக் கவர்ந்த பெண் சட்ட மன்ற உறுப்பினர் யார்?
கலைஞர் : திருமதி.ஜோதியம்மாள்.

43. காமெடியாகப் பேசும் சட்டமன்ற உறுப்பினர் யார்?
கலைஞர் : ஈரோடு சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த திரு.தெட்சணாமூர்த்திக் கவுண்டர்.

44. கேள்வி : கேள்வி கேட்பது எளிதா? பதில் சொல்வது எளிதா?
கலைஞர் : பதில் சொல்லமுடியாத கேள்வி கேட்பது எளிதல்ல.

45. பொன்னான நாள் என்று எதைச் சொல்வீர்கள்?
கலைஞர் : மண்டல் கமிஷன் பரிந்துரையையொட்டி, மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தீர்மானத்தை நான் முன்மொழிந்து பேரவையில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்ட நாளைப் பொன்னான நாள் என்று கூறலாம்.

46. கேள்வி : தி.மு.க. ஆட்சி இரண்டு முறை (1976 மற்றும் 1991) டி°மி° ஆனபோது என்ன நினைத்தீர்கள்?
கலைஞர் : பதவியைத் தோளில் போட்டுக் கொள்ளும் துண்டு என்றும், மக்களுக்காக ஓடியாடி உழைப்பதே சிறந்த தொண்டு என்றும் எண்ணியிருப்பவனுக்கு ஆட்சிக்கலைப்பு என்பது ஒன்றும் பெரிதல்ல.

47. கேள்வி : உங்கள் பேச்சைக் கேட்க அஞ்சுகம் அம்மையார் சட்டமன்றம் வந்திருக்கிறாரா?
கலைஞர் : வந்ததில்லை. ஆனால், ஒவ்வொரு நாளும் நான் சட்டமன்றத்திற்குச் சென்று வந்தவுடன், சட்ட மன்றத்தில் அன்று நடந்ததைப் பற்றி என்னைக் கேட்கத் தவறுவதில்லை.

48. கேள்வி : அஞ்சுகத் தாய் உங்கள் சட்டமன்றப் பேச்சை பத்திரிக்கையில் படித்துவிட்டுப் பாராட்டியது உண்டா?
கலைஞர் : அவர் உயிரோடு இருந்தவரை என்னுடைய பேச்சு ஒவ்வொன்றையும் பாராட்டியிருக்கிறார்.

49.கேள்வி : அண்ணா அவர்கள் பாராட்டிய சட்ட மன்றப் பேச்சு எது?
கலைஞர் : பெரும்பாலும் சட்டமன்றத்தில் நான் பேசிய அத்தனை பேச்சுகளையுமே அண்ணா அவர்கள் பாராட்டியிருக்கிறார்.

50. கேள்வி : உங்கள் அமைச்சரவையிலே உள்ளவர் களில் மனதிலே இடம் பெற்ற சிலரை வரிசைப் படுத்துங்களேன்?
கலைஞர் : மனதிலே இடம் பெற்ற பிறகு தானே, அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள். மந்திரிசபையில் இடம் பெறாதவர்கள் என் மனதில் இடம் பெறாதவர்கள் அல்ல.

Posted in ADMK, Anna, Annadurai, Answers, Chat, DMK, Interview, Jayalalitha, JJ, Kalainjar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, MGR, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, Party, Politics, Questions | Leave a Comment »

Desiya Murpokku Dravida Kazhagam & Vijaikanth – Biosketch

Posted by Snapjudge மேல் ஜூலை 6, 2007

நடிகர் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தது ஏன்?- வெளிவராத `பிளாஷ்பேக்’ தகவல்கள்

நிருபர்கள் “நீங்கள் அரசியலுக்கு வரப்போகிறீர்களா?” என்று பரபரப்புக்காக விஜயகாந்த்திடம் 1996-ல் ஒரு கேள்வி கேட்டார்கள்.

“நான் ஏன் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும். காலம் அழைத்தால் வந்து விட்டு போகிறேன்” என்று கேசுவலாக பதில் சொன்னார் விஜயகாந்த்.

இதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக நிருபர்கள் இந்தக் கேள்வியை சுமார் 100 முறை கேட்டு விட்டார்கள்.

இன்றைய சூழ்நிலையில் தமிழக அரசியலில் விஜயகாந்தின் தே.மு.தி.க.வும் தவிர்க்க முடியாத ஒரு கட்சியாகி விட்டது.

ஆறு கோடி ஜனங்களும், அனைத்துக் கட்சி தலைவர்களும், உளவுத் துறையும் தே.மு.தி.க. வளர்ச்சி மீது ஒரு கண் வைத்தபடியே இருக்கிறார்கள்.

விஜயகாந்த்தின் அரசியல் `என்ட்ரி’க்கும், அவரது `பிளாஷ் பேக்’ வாழ்விற்கும் நிறைய தொடர்புகள் இருக்கிறது.

விஜயகாந்த்தின் தந்தை அழகர் சாமிக்கு சொந்த ஊர் அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரம்.

அழகர்சாமி-ஆண்டாள் தம்பதிகளுக்கு 2 மகன், 2 மகள்கள். முதலாமவர் விஜயலட்சுமி, அடுத்தவர் நாகராஜ், மூன்றாவது விஜயராஜ், அதற்கடுத்தவர் திருமலாதேவி.

மேற்கண்ட விஜயராஜிற்கு டைரக்டர் எம்.ஏ. காஜா வைத்த பெயர் தான் “விஜயகாந்த்”.

கடைக்குட்டி பெண்ணான திருமலாதேவி பிறந்த 20-வது நாளில் தாயார் ஆண்டாள் இறந்து விட, உற்றார் -உறவின ரின் கட்டாயத்தின் பேரில் அழகர்சாமிக்கு ருக்மணியம் மாள் என்பவருடன் 2-வது திரு மணம் நடந்தது. இவர்க ளுக்கு 7 குழந்தைகள்.

இவர்கள் அனைவருமே மதுரை மேலமாசி வீதியில் சவுராஷ்டிரா செக்கடி சந்தில் உள்ள ஒரு வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்தார்கள்.

சிறு வயது விஜயகாந்த் மிகவும் சேஷ்டைக்காரர். எப்பொழுதும் தன்னைச்சுற்றி 10 பேருடன் உலா வரும் விஜய காந்த் படித்தது 10-ம் வகுப்பு வரை தான்.

இதையே அவர் மதுரை புனித ஜோசப் பள்ளி, தெப்பக் குளத்தில் உள்ள ஆர்.சி. ரோசரி சர்ச் பள்ளி, மதுரை ரெயில் நிலையம் அருகில் உள்ள “மெஜுரா காலேஜ் ஆப் ஸ்கூல்”, தேவ கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி, நாடார் வித்யாசாலை உயர் நிலைப் பள்ளி, விக்கிரமசிங்க புரம் செயின்ட் மேரீஸ் பள்ளி ஆகிய 6 இடங்களில் படித்து கரை சேர்ந் திருக்கிறார்.

சிறிய `புரஜக்டர்’ ஒன்றை வீட்டில் வைத்துக் கொண்டு அக்கம், பக்கத்து சிறுவர்களிடம் `நாலணா’ டிக்கெட் வாங்கி `மகாதேவி’ படத்தை ஓட்டுவதில் தான் ஆர்வம் இருந்ததே தவிர விஜயகாந்த்திற்கு படிப்பில் துளியும் அக்கறை இல்லை.

பள்ளிக்கூடத்தை `கட்’ அடித்து விட்டு நண்பர்களுடன் சேர்ந்து எம்.ஜி.ஆர்.நடித்த உலகம் சுற்றும் வாலிபனை இரண்டே நாளில் ஐந்து முறை பார்த்திருக்கிறார்.

அப்பாவின் ரைஸ்மில்லில் அரிசி திருடி விற்று காசாக்கி வடை, பிஸ்கெட், புரோட்டா என்று விளாசியிருக்கிறார்.

செத்த பாம்பை வாத்தி யாரின் இருக்கையில் வைத்து அவரை `ஓ’ வென அலற வைத்திருக்கிறார்.

நள்ளிரவு தெருக்கூத்தை பார்க்கப் போய் நடனம் ஆடுபவர் மீது `நல்லா இருடா’ என்று முட்டை-தக்காளியை வீசியிருக்கிறார்.

இதற்கெல்லாம் விஜய காந்தின் முக்கிய கூட்டாளியாக இருந்தவர் இப்போதைய இப்ராகிம் ராவுத்தர் தான்! எந்தச் சேஷ்டை செய்தாலும் இருவரும் இணை பிரியாமல் செய்வது தான் வழக்கம்.

இப்ராகிம் ராவுத் தரின் வீடு மதுரை வெத்தலைப் பேட்டையில் இருந்தது. அவரது தந்தை வெத்தலை கமிஷன் மண்டி வைத்திருந்தார்.

இது பற்றி விஜயகாந்த் சொல்கிறார்.

“அப்பவெல்லாம் படிப்பு பத்தியோ, எதிர்காலம் பத்தியோ நாங்க சிந்திக்க மாட்டோம். எம்.ஜி.ஆர். படம் பார்க்கணும்ங்கிறதத் தவிர வேற எதுவும் தெரியாது. என் பள்ளி வாழ்க்கையில நான் இங்கிலீசையும், சயின்சையும் படிச்சதே இல்லை. நாம் தான் சரியா படிக்கலை.

படிச்சு முன்னேற விரும்பு ஏழை மாணவர்களுக்காவது உதவணும். அவங்க படிச்சு பட்டம் வாங்கினா….நானே படிச்சு வாங்குன மாதிரிங்கிற எண்ணத்தில தான் என்னால முடிஞ்ச அளவு படிப்புக்கு உதவுகிறேன்” என்கிறார் அவர்.

தாயில்லாத பிள்ளை என் பதால் விஜயகாந்த் செய்யும் இந்தச் சேஷ்டைகளை கண்டு கொள்ளாமலேயே வளர்த்து வந்தார் அழகர்சாமி.

இளம் வயது விஜயகாந்த் திற்கு இரண்டு முறை காதல் அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.

அப்போதெல்லாம் விஜய காந்த் கூட்டாளிகள் ஒன்றாகச் சந்திப்பது இப் போதைய தே.மு.தி.க. பொதுச் செயலாளரான ராமு வசந்த னின் வீடு இருக்கும் மதுரை மேல ஆவணி வீதியில் தான்!

இங்குள்ள சேனாஸ் பிலிம்ஸ் என்ற சினிமா கம்பெனி அருகே தான் அரட்டைக்கச்சேரி நடக்கும்.

இந்த தெருவில் உள்ள ஒரு வீட்டு ஜன்னலில் தற்செயலாக தெரிந்த ஒரு பெண்ணை `சைட்’ அடித்து, ஜாடை காட்டி, ஒருவரை ஒருவர் காதலிக் கவும் ஆரம்பித்தனர்.

இந்த விவகாரம் இரு வீட்டு பெற்றோருக்கும் தெரிந்து முடிவில் அந்தப் பெண்ணின் வீட்டார் வீட்டைக்காலி செய்து விட்டே போய் விட்டனர்.

இதன் பிறகு அமெரிக்கன் கல்லூரியில் படித்த ஒரு பெண்ணை காதலித்து, அவருக்கு பின்னாடியே அலைந்து திரிந்து கடைசியில் “காதலிச்சு திருமணம் செஞ்சா என் தங்கச்சி வாழ்க்கை பாதிக்கும்” என்று அவள் டாட்டா காட்டி விட்டு போனது, விஜயகாந்த் சினிமா நட்சத்திரமான பிறகு அவளே தேடி வந்ததெல்லாம் ஒரு குறும்படக் கதை.

இப்படியெல்லாம் சேஷ்டை கள் செய்து கொண்டிருந்த விஜயகாந்த்தை “நீ படிச்சு, கிழிச்சது போதும் இனிமே ரைஸ் மில்லை கவனி” என்று அழகர்சாமி பிரம்பால் அடித்து பின்னி எடுத்த இந்த இடத்தில் “இடைவேளை” விட்டு, விஜயகாந் தின் அதிரடி ஆக்ஷன் இனி

தொடர்கிறது.விஜயகாந்த்தின் ரைஸ்மில் வாழ்க்கை காலை 6 மணிக்கு எழுந்து, இரவு 8 மணி வரை அரிசி விற்பது, விலை நிர்ணயம் செய்வது, மூட்டைகளை மாற்றுவது, நெல்லைக் கிண்டுவது, வெளியே சென்று பணம் வசூலிப்பது என வேலை `டைட்’ ஆகிவிட்டது. இதே சமயத் தில் இப்ராகிம் ராவுத்தரும் வெத்தலை கமிஷன் மண்டியை கவனிக்க ஆரம்பித்து விட்டார்.

விஜயகாந்த்தை சமூக பார்வை பார்க்க வைத்தது இந்த ரைஸ்மில் தான்!

இங்கு வேலை பார்த்த பெண்களுக்கிடையே மேல்ஜாதி, கீழ்ஜாதி என்ற வேறுபாடு இருப்பது விஜயகாந்த்திற்கு தெரிய வந்தது.

இதனைக் களைவதற்கு விஜயகாந்த் ஒரு யுக்தியை கையாண்டார். கீழ் ஜாதியினர் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வரச் செய்து சாப்பிடலானார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மேல் ஜாதி பெண்களிடம் சமாதானமாக பேசி அதுவரை தனித்தனியாக இருந்த தண்ணீர் பானையை ஒன்றாக்கினார். அனைவருமே ஒன்றாக அமர்ந்து சாப்பிடலானார்கள்.

இதே கால கட்டத்தில் தான் சினிமா ரசிகராக இருந்த விஜயகாந்த் அரசியல் களமிறங் கியதும்!

மதுரை மாநகராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது விஜயகாந்த்தின் தந்தை காங்கிரஸ் கட்சியின் வேட்பா ளராக கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார்.

விஜயகாந்த்தும், அவரது அண்ணன் நாகராஜும் எம்.ஜி.ஆரின் ஆதரவாளர்கள் என்பதால் தந்தையை எதிர்த்து தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். சுவர்களில் எழுதுவது, கட்சி கொடியுடன் சைக்கிளில் வலம் வருவது, கலைக்குழுவுக்கு ஏற்பாடு செய்வது, மீட்டிங் நடத்தியது என கடைசியில் விஜயகாந்த்தின் அப்பா 100 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.

இது பற்றி விஜயகாந்த் கூறும் போது “தேர்தல் முடிவு எங்க அணிக்கு வெற்றியாக இருந்தாலும் அப்பா தோத்ததும் என்னவோ போல்

இருந்தது.அடுத்த தேர்தல்ல அவருக்கு ஆதரவாக இறங்கி அப்பாவை ஜெயிக்க வைச்சுட்டோம்” என்கிறார்.

விஜயகாந்த் சினிமாவுக்கு வருவதற்கும் `ஆட்டுக்கார அலமேலு’ படத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.

விஜயகாந்த் கோஷ்டியினர் அரட்டை அடிக்கும் இடத்திற்கு அருகே உள்ள சேனாஸ் பிலிம்ஸ் உரிமையாளர் முகம்மது மர்சூக் `ஆட்டுக்கார அலமேலு’ படத்தை வாங்கியிருந்தார். அவருக்கு போட்டியாக அதே படம் தெலுங்கில் வெளிவந்த “பொட்டேல் பொன்னம்மா”ங்கிற படத்தை மற்றொரு வினியோகஸ்தர் ரிலீஸ் செய்திருந்தார்.

இதனால் ஆட்டுக்கார அலமேலு படத்தை வெற்றி பெறச் செய்ய விஜயகாந்த்திடம் யோசனை கேட்டார் முகம்மது மர்சூக்.

“இந்த இரண்டு படத்திலேயும் நடிச்சது ஒரே ஆடு தான். அந்த ஆடு சோழவந்தான் பக்கத்துல இருக்கிற மட்டப்பாறையில தான் இருக்கு. ஆட்டுக்காரன் நம்ம நண்பன் தான். அந்த ஆட்டை அழைத்து வந்து நம்ம படம் ஓடுற தியேட்டர்களில் நிக்க வைச்சு இடைவேளை சமயத்துல சாகசங்கள் செய்ய வைக்கலாம்” என்று ஆலோசனை சொன்னார் விஜயகாந்த்.

அதன்படியே விஜயகாந்த்தும், இப்ராகிம் ராவுத்தரும் அந்த ஆட்டை பிடித்து வந்து டேப் ரெக்கார்டரை `ஆப்’ பண்றது, `ஆன்’ பண்றது என்று செய்து காட்டி மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தார்கள்.

இதனால் விஜயகாந்த்தை மிகவும் பிடித்துப் போன முகமதுமர்சூக் டைரக்டர் பி.மாதவனிடம் அறிமுகம் செய்து வைத்து “இவன் என் தம்பி மாதிரி. உங்க படத்துல ஒரு நல்ல ரோல் தரணும்” என்று கேட்டுக் கொண்டார்.

101 ரூபாய் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு “என் கேள்விக்கு என்ன பதில்ப” படத்தில் வில்லனாக 3 நாள் மட்டுமே நடித்தார். உள்பிரச்சினைகளால் விஜயகாந்த் மாற்றம் செய்யப்பட்டு சிலோன் மனோகர் நடித்து அந்தப்படம் வெளிவந்தது.

இதன் பிறகு சினிமாவில் நடிக்க விஜயகாந்த் நீண்ட நாள் போராட்டம் நடத்தியிருக்கிறார். இதே கட்டத்தில் தான் சத்யராஜும் பட வாய்ப்புகள்தேடி அலைந்தது. எனவேசினிமாவுக்கு முன்பே இருவரும் அலைந்து திரிந்ததில் நன்றாக அறிமுகம் ஆனவர்கள்.

முகமது மர்சூக் மீண்டும் விஜயாந்த்தை டைரக்டர் எம்.ஏ.காஜாவிடம் அறிமுகம் செய்து வைத்து `இனிக்கும் இளமை’ படத்தில் நடிக்க வைத்தார். இதன் பிறகு தூரத்து இடி முழக்கத்தில் கதாநாயகன் ஆனார்.

இருந்த போதிலும் தொடர்ந்து வந்த பல படங்கள் தோல்விக்குள்ளாகி விஜயகாந்த் முடங்கிப்போனார்.

ஒரு சாப்பாடு வாங்கி இப்ராகிம் ராவுத்தரும், விஜயகாந்த்தும் சாப்பிட்டது மட்டுமல்ல, பல நாட்கள் வெறும் தண்ணீரைக் குடித்தே பொழுதைக் கழித்ததும் இந்த கால கட்டத்தில் தான்.

18 படங்கள் தோல்வியாகி ஏராளமான வினியோகஸ்தர்கள் “விஜயகாந்த்தை வைத்து படம் எடுத்தால் ஓடாது” என்று முன்னுதாரணங்கள் சொன்ன போதிலும், வடசுரான் கம்பைன்ஸ் பட அதிபர் சிதம்பரம் துணிச்சலுடன் தயாரித்து, விஜயகாந்த்த நடித்து, டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய “சட்டம் ஒரு இருட்டறை” படம் 100 நாட்களையும் தாண்டி ஓடியது. விஜயகாந்த் பக்கம் அனைவரின் பார்வையும்

திரும்பியது.திரைப்படக் கல்லூரி மாணவர்களான ஆபாவாணனும், அரவிந்தராஜும் விஜயகாந்த்தை வைத்து இயக்கிய `ஊமை விழிகள்’ படம் ஒரு பிரமாண்ட திருப்பு முனை. தொடர்ந்து செந்தூரப்பூவே, கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, மாநகரக்காவல், சின்னக் கவுண்டர் என அனைத்துமே 100 நாள் படமாக அமைந்தன.

சுந்தர்ராஜனின் திருப்பு முனை இயக்கத்தில் வைதேகி காத்திருந்தாளை தொடர்ந்து அம்மன் கோயில் கிழக்காலே, பூந்தோட்டக்காவல்காரன், நினைவே ஒரு சங்கீதம், வானத்தை போல ஆகிய படங்கள் பெண் ரசிகர்களையும் கவர்ந்தன.

வல்லரசு, ரமணா படங்கள் மிகப்பெரிய ஆக்ஷன் படங்களாக அமைந்தன. விஜயகாந்த் சொல்கிறார்.

என் வாழ்க்கையில் நிறைய வெற்றி, தோல்விகளை சந்தித்து விட்டேன். என் ரசிகர்கள் பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவங்க தான். ஆனா கடுமையான உழைப்பாளிகள். அவங்களுக்கு வாழ்க்கை மேல ஒரு நம்பிக்கையும், தைரியமும் ஏற்படுத்தும் வகையிலான கதைகளைத்தான் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். லட்சக்கணக்கான எனது ரசிகர்கள் மூலமா நாட்டுக்கு நல்லது செய்ய முடியும் என்கிற உத்வேகம் தான் என்னைத் தானாகவே அரசியலுக்கு இழுத்து வந்து விட்டது. எனக்கு தெரிந்தது கடின உழைப்பு ஒன்று மட்டும் தான்” என்கிறார்.

“தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமாப”-ஊமை விழி கள்.

`ஆராய்ச்சி செய்து பார்த்த விஜயகாந்த்’

விஜயகாந்த்தின் விக்ரம சிங்கபுரம் செயின்ட் மேரிஸ் பள்ளி வகுப்பு டீச்சரான “ஸ்டான்லிஜாண்” சொல் கிறார்.

விஜயராஜா படு சேஷ் டைக்கார மாணவன். சினிமாவில் அவன்செய்யும் காமெடி மாரியே பள்ளி வாழ்க்கையிலும் செய்திருக் கிறான்.

ஒரு முறை நாங்கள் எல்லாம் உலகத்தமிழ் மாநாட்டை பார்ப்பதற்காக சென்னைக்கு `டூர்’ புறப்பட்டோம். ரெயில் பயணம் செய்த போது விஜய ராஜா யாருக்கும் தெரியாமல் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தி விட்டான்.டி.டி.ஆர். இத னைக் கண்டு பிடித்து அவனி டமிருந்து ரூ. 50 அபராதமாக வசூலித்தார்.

நான் “ஏண்டா இப்படி செய்தாய்” என்று கேட்டேன்.

“நீங்க தானே சார் எதையும் ஆராய்ஞ்சு பார்த்து உண்மைய தெரிஞ்சுக்கிடணும்”னீங்க என்றான். கோபம் மறந்து அனைவரும் சிரித்து விட்டோம் என்றார்.

—————————————————————————————————————————————————-

தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத் தலைவர் நடிகர் விஜயகாந்தின் அரசி யல் பிரவேசம் என்பது திடீரென்று ஏற்பட்ட விபத்தல்ல. மிகவும் கவனமாக ஆரம்பம் முதலே திட்டமிட்டு நகர்த்தப்பட்ட விஷயம். ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாகத் தனது ரசிகர் மன்றங்களை அவர் அமைத்ததே, வருங்காலத்தில் தனது ரசிகர் மன்றங்கள் அரசியல் கட்சிக் கிளைகளாகச் செயல்பட வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருந்ததால்தான். அதுவே இப்போது அவரது அரசியல் பிரவேசத்துக்கு மிகப்பெரிய அடித்தளமாக இருக்கிறது.

அரசியலுக்கு எந்தத் தமிழ் நடிகருக்கும் இல்லாத பெருமை நடிகர் விஜய காந்துக்கு உண்டு. எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., சிவாஜி கணேசன், ஜெயல லிதா என அனைவருமே ஏதாவது பலமான அரசியல் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டுதான் வளர முடிந்தது. தனக்கென ஓர் அமைப்பை ஏற்ப டுத்தி, அந்த அமைப்பை அரசியல் கட்சியாக்கி, எந்தவோர் அரசியல் கட்சி யின் நிழலும் தன்மீது படாமல், தேர்தலில் நின்று வெற்றியும் பெற்ற முதல் தமிழ் நடிகர் – அரசியல்வாதி விஜயகாந்த் மட்டுமே!

சந்தித்த முதல் தேர்தலிலேயே எட்டு சதவிகித வாக்குகள். தனக்கு சம்பந் தமே இல்லாத விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி. தமிழகத் தில் இருக்கும் பஞ்சாயத்து வார்டுகள் வரை பரவிக் கிடக்கும் பலமான கட்சிக் கிளைகள். திமுக மற்றும் அதிமுகவுக்கு ஒரு மாற்று ஏற்படாதா என்று ஏங்கும் வாக்காளர்களைக் கவரும் வகையில் தனித்துப் போராடும் துணிவு. இவை தான் நடிகர் – அரசியல்வாதி விஜயகாந்தின் பலங்கள்.

தத்துவ ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் தன்னைக் கட்டிப் போட்டுக் கொள்ளாத, அதேசமயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விழையும் விஜயகாந்தின் வேகம் அவரது சொற்களில் தெரிகிறது. தனித்துப் போராடி வெற்றிபெற முடி யும் என்ற தன்னம்பிக்கை, அவரது செயல்பாடுகளில் காணப்படுகிறது. நடிக ராகவோ, அரசியல் தலைவராகவோ அல்லாமல், மிகச் சாதாரணமாக அவர் பேட்டி அளிக்கும் பாணியில் அவரது தனித்தன்மை வெளிப்படுகிறது.

—————————————————————————————————————————————————-

நீங்கள் நடிகராக இருந்ததற்கும் இப்போது அரசியல் தலைவ ராக இருப்பதற்கும் என்ன வித்தியாசம் இருப்பதாக நினைக் கிறீர்கள்?

சினிமா நிச்சயமாக எனக்குள் இருக்கும் அந்த நியாயமான சமூக சிந்தனைக்கு வடிகாலாக அமைந்தது. பல சமூகப் பிரச் னைகளை, சராசரி மனிதனின் இடர்பாடுகளைக் கதாபாத்தி ரங்கள் மூலம் என்னால் மக்கள் மன்றத்துக்குப் படம்பிடித்துக் காட்ட முடிந்தது. ஆனால், ஓர் அரசியல்வாதியாக இப்போது எந்தக் கதாபாத்திரத்திற்குள்ளும் ஒளிந்து கொள்ளாமல், நான் நானாகவே பொதுமேடையில் சமுதாயப் பிரச்னைகளை எழுப்ப முடிகிறது.
அவ்வளவுதான்.

நீங்கள் நடிகராக இருந்து பார்த்த அரசியலுக்கும் அரசியல்வாதியாகப் பார்க் கும் அரசியலுக்கும் என்ன வித்தியாசம் தெரிகிறது?

நான் அரசியல்வாதியாக மாறிய பிறகு தெரிந்து கொண்ட முதல் விஷயம், ஜன நாயக நாட்டின் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கக்கூட முடியவில்லை என்பதே.

திருவள்ளுவரைப் பற்றியும், தமிழ் இலக்கியம் பற்றியும், அரசியல் நாகரிகம் பற்றி யும் அடிக்கொருதரம் பேசும் கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில், மாற்றுக் கட்சி யினர் பேனர் வைப்பதற்குக் கூட பிரச்னைகள் தரப்படுகின்றன என்றால் எந்த அளவுக்கு அரசியல் தரம் தாழ்ந்து போயிருக்கிறது என்று பார்த்துக் கொள்ளுங் கள்.

திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இணையாகத் தமிழகத்தில் போஸ்டர்களும் கொடிக்கம்பங்களும் அமைத்திருக்கும் ஒரே கட்சி தேமுதிகதான் போலிருக்கிறதே!

ஐம்பது வருடக் கட்சியும், முப்பத்தைந்து வருடக் கட்சியும் இப் படியொரு கலாசாரத்தை நிலைநிறுத்தி விட்டார்கள். அதை என் னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லைதான். இதை மாற்ற வேண்டும் என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், அந்தக் கட்சிகளின் மீதிருக்கும் பொதுமக்களின் வெறுப்பு, இளைஞர்க ளின் கோபம் தேமுதிகவுக்கு ஆதரவாகத் திரும்பி இருக்கிறது. நீங் கள் பார்க்கும் ஒவ்வொரு தேமுதிக கொடியும், தேமுதிக பேனரும் திமுக மற்றும் அதிமுகவுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்க வைத்த ஒன்று என்றுதான் கருத வேண்டும். அதனால்தான் அந்த இளைஞர்களின் ஆர்வத்தை நான் குலைக்க முற்படவில்லை.

தனியாக நின்று நீங்கள் பெறும் இந்த வாக்குகள் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் வல்லமை படைத்தவை அல்லவே என்பதுதான் கேள்வி.

தொடங்கிய ஒரு வருடத்தில் தேர்தலைச் சந்தித்து இவ்வளவு வாக்குகள் பெற முடியும் என்றால், தனியாகவே போட்டியிட்டு மக் களின் ஏகோபித்த ஆதரவை நாங்கள் நிச்சயம் பெற முடியும். தாக் குப் பிடிக்கும் தைரியமும், பொறுமையும் எங்களுக்கு இருக்கிறது.
எங்களது இளைஞர் படைக்கு இருக்கிறது. மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக் கும் கட்சி என்பதால் நிச்சயம் தனித்து நின்று எங்களால் வெற்றி பெற முடியும்.

நமது நாடாளுமன்ற ஜனநாயக முறையில், மற்றவர்கள் கூட்டணி அமைத் துப் போட்டியிடும்போது, நீங்கள் தனித்து நின்றால், வெற்றியடைய முடியாது என்று மக்கள் உங்களுக்கு வாக்களிக்காமல் இருந்து விடுவார்களே?

தோற்கும் கட்சிக்கு எப்படி வாக்களிப்பார்கள்? இவரிடம் ஆட்சியை ஒப்படைத்தால் தங்களுக்கு நன்மை கிடைக்கும் என்று மக் கள் நினைத்தால், அப்போது கூட்டணியா, தனியாகப் போட்டியா என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள். மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் எனும்போது, அவர் கள் எங்களைத் தேர்ந்தெடுப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அதனால் நாங்கள் தனியாக நிற்பதைத்தான் விரும்புகிறோம்.

ஒத்த கருத்துடைய சக்திகளை நீங்கள் ஏன் அணி திரட்டக் கூடாது?

ஒத்த கருத்து கொள்ளை அடிப்பதில்தான் இருக்கிறது. ஆட்சியையும் அதிகாரத் தையும் கைபற்றித் தங்கள் உற்றார் உறவினர்களைப் பலப்படுத்திக் கொள்வதில் ஒத்த கருத்து இருக்கிறது. தேர்தலில் இடங்களைப் பகிர்ந்து கொண்டு, வெற்றி பெறுவதற்கும், ஆட்சி அமைத்து மக்களின் வரிப் பணத்தில் தங்களைப் பலப்படுத் திக் கொள்ளவும் கூட்டணி அமைவதை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடி யும்?

திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளின் ஊழலையும், அராஜகத்தையும், மக்கள் விரோதப் போக்கையையும் எதிர்க்கும் தேமுதிக, அந்தக் கட்சிகளுடன் எப்படி கூட்டணி அமைக்க முடியும்? தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் கூட்டணி அமைப்பார்கள். மக்கள் தேமுதிகவை இந்தக் கூட்டணிகளுக்கு மாற்றாக நினைக் கிறார்கள். அவர்களது உணர்வுகளுக்கு நான் மதிப்பளிக்க விரும்புகிறேன்.

தேமுதிகவின் அடிப்படைப் பொருளாதாரக் கொள்கைதான் என்ன?

பொதுவுடைமை, முதலாளித்துவம், சந்தைப் பொருளாதாரம் என்றெல்லாம் பெயர் வைத்து அழைப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும். அதுவும், விரைவில் வந்தடைய வேண்டும். அதற்கு, அந்தந் தப் பிரச்னைக்குத் தகுந்தவாறு, எது பயன்படுமோ அந்த வழியைப் பின்பற்றுவது தான் சரி என்று நினைப்பவன் நான். இதுதான் கொள்கை என்று கண்களுக்குக் கடி வாளம் போட்டுக் கொள்ள நான் விரும்பவில்லை. பிரச்னையைப் பொருத்துத் தீர்வு அமைய வேண்டும். அதுதான், இந்தியாவுக்கும் பொருந்தும் என்பது எனது கருத்து.

அணுசக்தி ஒப்பந்தம் விஷயத்தில் உங்களது நிலைப்பாடு, மத்திய அரசுக்கு சாதகமாக இருப்பதுபோலத் தோன்றுகிறதே?

நான் முன்பு சொன்னதுபோல, தமிழகத்தின் மின் தேவைக்கு இப்போதைக்கு அணுசக்தியை விட்டால் வழியில்லை என்கிற நிலைமை. நீர் மின்சக்திக்கும், அனல் மின்சக்திக்கும் அதிக வாய்ப்பில்லை என்பதால், தமிழகம் அணுமின்சக்தி மூலம்தான் தனது தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். இந்தியாவுக்கு அணுசக்தி தேவையா என்று எனக்குத் தெரியாது. தமிழகத்துக்குத் தேவை. அத னால் அதை நான் ஆதரிக்கிறேன்.

சில விஷயங்களில் மத்திய அரசின் திட்டங்களை ஆதரிக்கிறீர்கள். சிலவற் றில் எதிர்க்கிறீர்கள். அதிமுகவை எதிர்க்கிறீர்களா, ஆதரிக்கிறீர்களா என்று தெரி யவில்லை. ஏனிந்தத் தெளிவற்ற தன்மை?

மனதுக்கு எது நியாயமோ அதை நான் பேசுகிறேன். நண்பன் என்பதற்காகக் குற்றத்தை மறைக்கவும், எதிரி என்பதற்காக நல்லதைப் பாராட்டாமல் இருக்கவும் எனக்குத் தெரியாது. என்னைப் பற்றி அதிமுக தலைவி ஜெயலலிதா என்னவெல் லாமோ சொன்னார்கள். அதற்காக, அவர்கள் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வரும்போது நான் பேசாமல் இருப்பது எப்படி நியாயமாகும்? அத னால் எதிர்த்தேன்.

முதல்வரின் மகள் செல்வியின் வீடு தாக்கப்பட்டபோது அதைக் கண்டித்தேன். என்னைப் பொருத்தவரை, மனசாட்சிதான் எனது கொள்கை, வழிகாட்டி எல்லாமே!

நீங்கள் திமுகவை எதிர்க்கும் அளவுக்கு அதிமுகவை எதிர்ப்பதில்லை என்று தோன்றுகிறதே?

வெறும் தோற்றம்தான். இப்போது, அதிமுக ஆட்சியில் இல்லை. திமுகதான் ஆட்சியில் இருக்கிறது. ஆட்சியாளர்களின் குறையைத்தானே நான் சுட்டிக்காட்ட முடியும்? எதிர்க்கட்சியை விமர்சனம் செய்வதில் என்ன பயன்?

அதிமுக செய்யாத எதையும் திமுக செய்துவிடவில்லை என்பதால், திமு கவை மட்டும் நீங்கள் குறை சொல்வது எப்படி நியாயம்?

அதற்குத்தான் மக்கள் அதிமுகவைத் தண்டித்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்த்தி விட்டார்களே? எதற்கெடுத்தாலும், அவர்கள் ஆட்சியில் நடந்ததே என்று சொல்வதற்கு இவர்கள் ஏன் ஆட்சியில் அமர வேண்டும்? ஐம்பது வருட அரசியல் அனுபவம் இருந்து என்ன பிரயோஜனம்? அதிமுக ஆட்சியில் உள் ளாட்சித் தேர்தல்கள் முறையாக நடக்கவில்லை என்று குறைகூறிய திமுக என்ன செய்திருக்க வேண்டும்? முறையாக நகராட்சித் தேர்தலை நடத்தினார்களா? மக் களை வாக்களிக்க அனுமதித்தார்களா?

ஜெயலலிதாவையும், அதிமுகவையும் குற்றம் சொல்ல கலைஞருக்கும் திமுகவுக்கும் அருகதை கிடையாது. மக்களின் பார்வையில் இரண்டுமே ஒன்றுதான்.

இந்த அரசியல் கலாசாரத்தைக் குறுகிய காலகட்டத்தில் மாற்றிவிட முடியும் என்று நினைக்கிறீர்களா?

அதற்காக, மாற்றாமல் விட்டுவிடுவதா? இதுதான் தலையெழுத்து என்று சகித் துக் கொள்வதா? படித்தவர்கள் இப்படிப் பேசலாமா? சமுதாயம் தடம்புரள்வதை நாம் பார்த்துக் கொண்டு வாளாவிருப்பது சரியா? அதனால்தான், தேமுதிகவை மக்கள் ஆதரிக்கிறார்கள். இவர்களுக்கு மாற்றாகக் கருதுகிறார்கள்.

மாற்று, மாற்று என்று சொல்கிறீர்கள். ஆனால், கரை வேட்டி கட்டுவதிலி ருந்து, உங்களை “கேப்டன்’ என்று அழைப்பது வரை, திமுக – அதிமுக கலாசா ரத்தைத்தான் தேமுதிக பின்பற்றுகிறது. அப்படி இருக்கும்போது எப்படி உங்க ளால் ஒரு மாறுபட்ட அரசியல் கலாசாரத்தை இங்கே கொண்டு வந்துவிட முடி யும்?

கேப்டன் என்று என்னை அழைக்க வேண்டும் என்று நான் சொல்லவுமில்லை, வற்புறுத்தவுமில்லை. அவர்கள் என்மீது இருக்கும் அன்பாலும், மரியாதையாலும் அப்படி அழைக்கும்போது அதை நான் எப்படி தடுக்க முடியும்? கேப்டன் என் றால் என்ன அர்த்தம்? தலைமை தாங்கி நடத்துபவர் என்று பொருள். கட்சியின் தலைவனான என்னைத் “தலைவா’ என்று அழைப்பதற்குப் பதிலாகக் “கேப்டன்’ என்று அழைக்கிறார்கள். பத்திரிகை ஆசிரியரான உங்களை உங்களது உதவி ஆசி ரியர்களும், நிருபர்களும் எப்படிப் பெயரைச் சொல்லி அழைப்பதில்லையோ, அதுபோலத்தான் இதுவும்.

கேப்டன் என்று அழைப்பது சரி; ஆனால், அந்தக் கட்சிகளின் செயல்பாடுக ளுக்கும் தேமுதிகவின் செயல்பாடுகளுக்கும் வித்தியாசமே இல்லையே?

ஏன் இல்லை? நாங்கள் அவர்களைப் போல அராஜகக் கும்பலல்ல. ஊழல் செய்வதற்காக அரசியலுக்கு வந்தவர்களல்ல. மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்கிற ஒரே ஒரு குறிக்கோளுடன் அரசியலுக்கு வந்தவர்கள். இது வித்தியாசமில்லையா? கருணாநிதியும் சரி, எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி, இப்படிச் சொல் லித்தான் அரசியலுக்கு வந்தார்கள். ஆனால், ஆட்சியில் அமர்ந்த பிறகு அவர் கள் மாறிவிட்டார்கள்.

நீங்கள் மட்டும் மாற மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்?

தயவுசெய்து இந்த வரிசையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைச் சேர்க்காதீர் கள். அவர் உயிரோடு இருந்திருந்தால், இன்றுவரை அவர்தான் முதல்வராக இருந் திருப்பார். தேமுதிகவுக்கு மக்களின் ஆதரவு அதிகரிப்பதற்கு முக்கியமான கார ணம், அவரைப் போல தங்களது உணர்வுகளைப் புரிந்தவனாக நானும் இருப் பேன் என்று தமிழக மக்கள் நம்புவதால்தான். இவர்களிடம் ஆட்சியைக் கொடுத் துப் பார்த்துவிட்டு நாம் ஏமாந்தோம். என்னிடம் ஆட்சியைத் தந்தபிறகு நான் மாறுகிறேனா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டுமே தவிர இப்போதே நீங் கள் எப்படி ஒரு முடிவுக்கு வர முடியும்?

சொல்லுங்கள், ஆட்சியில் அமர்ந்தால் உங்களால் என்னதான் செய்துவிட முடியும்? லஞ்சத்தை ஒழித்துவிட முடியுமா, வறுமையைப் போக்கிவிட முடி யுமா?

முடியும். ஏன் முடியாது? இவர்கள் ஒரு தொழிற்சாலை கொண்டு வரும்போதே, அதில் தங்களது குடும்பத்துக்கு எத்தனை ஷேர் என்று கணக்குப் பார்க்கிறார்கள். ஒரு திட்டம் போடும்போது, அதில் தங்க ளுக்கு எவ்வளவு பங்கு என்று கணக்குப் போடுகிறார்கள். நமது இந் தியக் குடிமகனின் தேவைகள் ஏசி அறையும், மோட்டார் வாகான மும் அல்ல. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், செய்யத் தொழில், ஆரம்பப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற அடிப்படை வசதிகள்தான். அதைக்கூட நம்மால் செய்து தர முடியா மல் போனதற்குக் காரணம், நமது ஆட்சியாளர்கள் அதில் அக்கறை செலுத்தாததுதான். எங்களிடம் ஒருமுறை ஆட்சியை ஒப்படைத்துப் பாருங்கள். அதற்குப் பிறகு இந்த சுயநலக் கும்பல்கள் அரசியலை விட்டே ஒதுங்கி விடுவார்கள்.

வெளியில் இருந்து பேசுவது எளிது. சினிமா வசனமல்ல, நிர்வா கம் என்பது. திறமையான நிர்வாகிகளான கருணாநிதியாலும், ஜெயலலிதாவாலும் முடியாததை உங்களால் செய்ய முடியும் என்று எப்படி நம்புவது?

1967-ல் முதல்வர் கலைஞர் அமைச்சரானபோதும், 1991-ல் அதி முக தலைவி ஜெயலலிதா முதல்வரானபோதும் அவர்களுக்கு அனு பவம் இருந்ததா என்ன? மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என் கிற நல்லெண்ணம் இருந்தால் நிச்சயமாக நல்லது செய்ய முடியும். அதைக் காமரா ஜரும், அண்ணாவும், எம்.ஜி.ஆரும் செய்து காட்டினார்கள். என்னாலும் செய்து காட்ட முடியும்.

தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளில் முக்கால்வாசி வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றி விட்டது என்று முதல்வர் கூறுவதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா?

“நமக்கு நாமே’ என்று திட்டமிட்டுச் செயல்படும் இந்த ஆட்சியைப் பற்றி மக் கள் என்ன சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியமே தவிர, முதல்வர் கலைஞர் என்ன சொல்கிறார் என்பதல்ல முக்கியம். அவரே அவருக்கு நூற்றுக்கு நூறு மதிப் பெண்கள் கொடுத்துக் கொள்வது கேலிக்கூத்தாகத்தான் எனக்குத் தெரிகிறது.

உருப்படியாக இந்த அரசு எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்கவும் இல்லை. செயல்படுத்தவும் இல்லை. இரண்டு ரூபாய் அரிசி என்று சொல்லி, அவர்களது கட்சிக்காரர்கள் வெளிமாநிலங்களுக்கு அரிசி கடத்தி சம்பாதிக்க வழிகோலிய தும், இலவச தொலைக்காட்சி என்கிற பெயரில், கட்சி உறுப்பினர்க….

Posted in ADMK, Biosketch, DMDK, DMK, Faces, Madurai, MGR, people, Politics, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth | 2 Comments »