Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Representatives’ Category

The case for Mixed member Proportional Representation: Voting and Democracy

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2008

விகிதாசாரப் பிரதிநிதித்துவம்: விவாதம் தேவை

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

ஜனநாயகத்தில் அதிக வாக்குகள் பெற்றவர்தான் மக்கள் பிரதிநிதியாக விளங்க முடியும் என்ற ஒரு கருத்து இருப்பினும், குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் நாடாளுமன்றத்திற்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ அங்கீகாரத்துடன் செல்ல முடியாத நிலை இன்றைக்கு இருக்கிறது. இது ஓர் அரசியல் சூதாட்டம்போல் கருதாமல், மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.

நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் நடக்கின்ற தேர்தலில் ஆளும் முறைமையையும், தேசிய, பன்னாட்டு அளவில் கடமை ஆற்றவும் ஒரு கட்சியைத் தேர்ந்தெடுப்பதுதான் அரசியல் நடைமுறை ஆகும்.

தொகுதி நலன்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும், நாட்டின் முக்கியப் பிரச்னைகள், கொள்கைகள்தான் நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்தில் ஒலிக்கின்றன. தொகுதிகள் என்பது மக்கள் வாக்குகள் அளிக்கும் வசதிக்காக அமைக்கப்பட்டது.

தற்போதுள்ள நடைமுறையில் ஊரில் செல்வாக்கு உள்ள மனிதர் எளிதாக உருவாக்கப்படலாம். பணபலம், ஆள்பலத்தைக் கையில் வைத்து எளிதில் தேர்தலில் வெற்றி பெறலாம். அரசியலில் தனிநபர் செல்வாக்கையும், புகழ்ச்சியையும் விகிதாசார வாக்கு உரிமை மூலம் களையலாம்.

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களுடைய கொள்கைகளைத் தேர்தல் அறிக்கையின் முன் வைத்து விகிதாசார வாக்குரிமை முறையில் தேர்தலில் போட்டியிடலாம்.

மாநில அளவில், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எல்லாத் தொகுதிகளுக்கும் நிற்காமல் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னங்கள்தான் வாக்குச்சீட்டில் இருக்கும். இதில் அந்த தனி நபருடைய பெயரோ, முகமோ இல்லாமல், தேர்தல் காலத்தில் சுவரொட்டியில் கட்சிக் கொள்கை, கட்சியின் தலைமையின் பெயர் மட்டுமே பிரசாரத்தில் இருக்கும். அத்தேர்தலில் போடப்படுகின்ற மக்களுடைய ஓட்டு கொள்கை அடிப்படையில் நிச்சயம் இருக்கும்.

அத்தேர்தலில் மக்கள் அளித்த ஓட்டுகளை மொத்தமாக எண்ணி ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த ஓட்டாகக் கருதி விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். உதாரணத்திற்கு ஒரு கட்சிக்கு 10 நாடாளுமன்றத்திற்கும் 100 சட்டமன்றத்திற்கும் விகிதாசார அடிப்படையில் இடங்கள் கிடைக்கின்றது என்றால், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட கட்சியின் தலைமைக்கு நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு முறையாக 10:100 என்ற விகிதாசாரத்தின்படி உறுப்பினர்களை கட்சித் தலைமை தேர்ந்தெடுத்து அனுப்பும்படி தாக்கீது அனுப்பும். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட கட்சி தலைமை உண்மையான மக்களுடைய பிரதிநிதியாகக் கருதப்படும் நேர்மையானவர்களை 10:100 என்ற அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு எம்.பி., எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுத்த பட்டியலை அனுப்ப வேண்டும். அவ்வாறு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட பதவிக்குத் தகுதியுடையவர் ஆவார்கள்.

பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்து அனுப்புகின்ற பெயர்களை கட்சியின் மேலிடம் முற்றிலும் விவாதித்து, நன்கு பரிசீலனை செய்து அனுப்பப்படும்போது பதவிக்குச் செல்கின்றவர்கள் கட்சிக்கு விசுவாசியாக இருக்கின்ற வகையிலும், தவறு செய்யும் எந்தப் பிரதிநிதியும் கட்சித் தலைமை உடன் அழைக்கும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.

திரும்ப அழைப்பவர்களுக்குப் பதிலாக அதே கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவரை அனுப்புகின்ற வாய்ப்புகள் இருக்க வேண்டும். உறுப்பினர் பதவிக்காலத்தில் காலமானாலும் வீணாக இடைத்தேர்தல் நடத்தாமல் குறிப்பிட்ட கட்சியிலிருந்து வேறு ஒருவரை அனுப்பலாம்.

இதனால் அரசியல் கிரிமினல்கள், ஊழல் பெருச்சாளிகள் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் பொறுப்புக்கு வருவதை எளிதாகத் தடுக்கலாம். அரசியலில் கிரிமினல் குற்றவாளிகள் கலந்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டு மிகவும் பலமாக இருக்கிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட வோரா கமிஷன் அறிக்கையும் இந்திய அரசியலில் கிரிமினல் குற்றவாளிகளால் நாடு புரையோடிவிட்டதென்ற நிலையையும் எடுத்துக் கூறியிருக்கிறது. கட்சி மாறும் தடுப்புச் சட்டத்தைவிட விகிதாசார வாக்குமுறை வந்தால் கட்சி மாறுவதை அறவே ஒழித்துவிட முடியும். தேர்தலில் திறமையானவர்கள் நேர்மையானவர்கள் எளிதாக நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்குச் செல்ல இந்த முறையில் வாய்ப்புகள் இருக்கின்றன.

கட்சிகளின் தேர்தல் காலச் செலவினங்கள், அவசியமற்ற, ஆர்ப்பாட்ட தேர்தல் பிரசாரத்தைக் கட்டுப்படுத்தி, தேர்தல் பிரசாரத்தை எளிமைப்படுத்தலாம். ஓட்டுக்காக பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது. தேர்தல் காலத்தில் கலவரங்கள், மக்களுக்கு ஏற்படும் பீதிகள் இந்த முறையால் தடுக்கப்படலாம்.

1930-ம் ஆண்டு லண்டனில் கூடிய தேர்தல் சீர்திருத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் விகிதாசார வாக்குரிமை பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் இனங்கள் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில் விகிதாசார வாக்குரிமை நடைமுறையில் இருக்கிறது. விகிதாசார வாக்குரிமை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, சுவீடன், இத்தாலி, டாஸ்மேனியா, மால்டர், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இந்த முறை நடைமுறையில் இருக்கிறது.

சுவீடன் நாட்டில் ரிக்ஸ்டேக் தேர்தல் சட்டம் 1920-ன் அடிப்படையில் முனிசிபல் தேர்தல் சட்டம் 1930}ன் அடிப்படையில் விகிதாசார வாக்குரிமை முறை நடைமுறையில் இருக்கிறது.

சுவிட்சர்லாந்தில் பல்வேறு மொழி, தேசிய இனங்கள் இருப்பினும், விகிதாசார வாக்குமுறை அந்நாட்டில் சிறப்பாக 1882-லிருந்து செயல்பட்டு வருகிறது.

விகிதாசார வாக்குரிமை என்பது கணித முறைப்படி வகுப்பதாகும். விகிதாசார வாக்குரிமை ஜனநாயகத்தில் சரியாக இருக்காது என்ற வாதங்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும் இதனால் அமைச்சரவையில் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

1961-ம் ஆண்டு டிசம்பர் 16}ல் கோவையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு 17-ம் தேதி கோவை தேர்தல் சிறப்பு மாநாட்டில் அண்ணாவால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ராம் மனோகர் லோகியாவும் இதையே வலியுறுத்தினார்.

இந்திய சட்டக்கமிஷன் (அளவில்) விகிதாசார முறையைப் பின்பற்றுவதற்கு யோசனை கூறியுள்ளது. ஆயினும், மக்களவைக்கும் மாநிலச் சட்டப் பேரவைகளுக்கும் முற்றிலுமாகப் பட்டியல் முறையில் தேர்தல் நடத்துவதே மிகச் சிறந்தது என்று சட்ட ஆணையம் கருதுகிறது.

ஆனால் நம் நாட்டில் பல அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வெற்றிக்குத் திட்டங்களையும், கொள்கைகளையும் மட்டுமன்றி, வேட்பாளர்களுக்கு உள்ள செல்வாக்கையும் முக்கியமாகக் கருதுவதால் இந்த முறையை ஏற்க மாட்டா. எனவேதான் சட்டக் கமிஷன் நேரடித் தேர்தல் முறை, விகிதாசார முறையை யோசனையாகக் கூறியுள்ளது.

மக்களவைக்கும் சட்டப் பேரவைகளுக்கும் இப்போதுள்ள தேர்தல் முறையை அப்படியே வைத்துக்கொண்டு, இவற்றில் கூடுதலாக 25 சதவீத இடங்களை உருவாக்கி இந்த இடங்களை பொதுத் தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது ஆணையத்தின் யோசனை. பொதுத் தேர்தலின்போது இந்தக் கூடுதல் இடங்களுக்குத் தங்கள் வேட்பாளர்களை அரசியல் கட்சிகளின் தனித்தனிப் பட்டியல்களில் அறிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

ஜெர்மனியில் இருப்பதுபோல 4 சதவீதம் வாக்குகளுக்குக் குறைவாகப் பெறும் கட்சியைச் சட்டமன்றத்தில் இடம் பெறத் தகுதியற்றதாக அறிவிக்கலாம். இதனால் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை வரம்பின்றிப் பெருகுவதை விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மூலம் தடுக்கலாம். படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்சி முறை உருவாகும்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் மக்கள் பங்கெடுப்பு முழுமையாக இருக்கும். ஒரு ஓட்டுகூட சிதறாது. மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.

Posted in abuse, Admin, Administration, Advices, Citizens, Constituency, Cronies, Crony, Democracy, Election, Elections, Electorate, Europe, Federal, Freedom, Govt, Independence, Manifesto, minority, MLA, Money, MP, National, parliament, Party, people, Politics, Polls, Power, Proportion, reforms, Representation, Representatives, Republic, seats, States, Voice, Vote, voters, Votes | Leave a Comment »

Sandalwood smuggler Veerappan’s Area: Encroachments in Sathiyamangalam – Losing ones native lands to power, money & politics

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2007

வீரப்பன் காட்டை குறிவைக்கும் அரசியல்வாதிகள்!

பீ.ஜெபலீன் ஜான் ஆர்.சிவக்குமார் டி.சாம்ராஜ்

ஈரோடு, கோவை மாவட்டத்தில் பிரதானக் கட்சிகளில் முக்கிய பொறுப்பை வகித்த, வகிக்கும் அரசியல்வாதிகள், மற்றும் சத்தி தொகுதியில் இதுவரை இருந்த எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோருக்கு சத்தி வனப் பகுதியில் பண்ணைத் தோட்டங்கள் உள்ளன.

ஈரோடு, டிச.4: சந்தன கடத்தல் வீரப்பனுக்கு புகலிடமாக இருந்த சத்தியமங்கலம் வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அரசியல்வாதிகள் வளைத்துப்போட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு போட்டியாக அரசு அதிகாரிகள் மற்றும் முக்கியத் தொழிலதிபர்களும் நிலத்தை வாங்கி வருவதால் பழங்குடியினரின் பாரம்பரிய விளைநிலங்கள் முற்றிலும் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தி வனப்பகுதியில் தாளவாடி, கடம்பூர், ஆசனூர், பர்கூர் உள்ளிட்ட இடங்களில் ஒருகாலத்தில் வீரப்பன் கால்படாத இடமே இல்லை என்று சொல்லும் நிலை இருந்தது.

அப்போது இப் பகுதியில் பழங்குடியினர் தவிர பிற மக்கள் நடமாட்டம் அறவே இருந்ததில்லை.

வீரப்பன் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு சில மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறியது. மன இறுக்கத்தைப் போக்கும் இயற்கைச் சூழல், உடலை சிலிர்ப்பூட்டி மகிழ்ச்சி தரும் மிதமான குளிர் போன்ற சிறப்பு அம்சங்களால் இப் பகுதி அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய தொழிலதிபர்களின் கண்பார்வையில் பட்டது.

தங்களது அரசியல் செல்வாக்கு, ஆள்பலம், பண பலம் ஆகியவற்றைப் பயன்படுத்திய இவர்கள், பண்ணைத் தோட்டம், விருந்தினர் இல்லம், ஓய்வு இல்லம் உள்ளிட்டவற்றை மலைப் பகுதியில் உருவாக்கினர்.

இந்நிலை இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஈரோடு, கோவை மாவட்டத்தில் பிரதானக் கட்சிகளில் முக்கிய பொறுப்பை வகித்த, வகிக்கும் அரசியல்வாதிகள், மற்றும் சத்தி தொகுதியில் இதுவரை இருந்த எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோருக்கு சத்தி வனப் பகுதியில் பண்ணைத் தோட்டங்கள் உள்ளன. ஒருபுறம் அரசியல்வாதிகள் என்றால் மற்றொருபுறம் முக்கியத் தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகளால் பழங்குடியினர் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.

வீரப்பன் காட்டுப் பகுதியில் ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் பகுதி தொழிலதிபர்களின் ஓய்வு இல்லங்கள், பண்ணைத் தோட்டங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆசனூரில் பல ஏக்கர் வாங்கியுள்ளார். தொலைதூரத்தில் இருக்கும் தொழிலதிபர்களைக்கூட கவர்ந்து இழுக்கும் இடமாக வீரப்பன் காடு மாறிவிட்டது.

சுமார் 30 ஏக்கர், 50 ஏக்கர் என வாங்கியுள்ள தொழிலதிபர்கள், வார விடுமுறை நாள்களில் இங்கே தங்கியிருந்து இரவு நேரங்களில் தங்களது நிலத்துக்குள்ளேயே மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதை பொழுதுபோக்காக வைத்துள்ளனர் என்பது பழங்குடியினரின் பிரதான குற்றச்சாட்டு.

ஈரோடு மாவட்டத்தில் ஏற்கெனவே பணியாற்றிய ஆட்சியருக்கு, ஆசனூரில் பல ஏக்கர் நிலம் உள்ளது என்கின்றனர் பழங்குடியினருக்காக போராடிவரும் தன்னார்வ அமைப்பினர்.

அதுபோல பவானிசாகர் அருகே நரிக் குறவருக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலத்தை முன்னறிவிப்பு இன்றி ஆக்கிரமித்ததாக பிரதான எதிர்க்கட்சி அரசியல்வாதி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழ்நாடு பழங்குடியினர் சங்க மாவட்ட அமைப்பாளர் எஸ்.மோகன்குமார் கூறியது:

ஈரோடு மாவட்ட பழங்குடியினருக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை குடும்பத்தில் ஏதாவது ஒரு வாரிசுதாரர்களிடம் மட்டும் கையெழுத்துப் பெற்றுவிட்டு மற்றவர்களின் கையெழுத்தை போலியாக போட்டு ஆக்கிரமிக்கும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் பலத்துக்கு சமமாக பழங்குடியினரால் ஈடுகொடுக்க முடியவில்லை.

பழங்குடியினரின் நிலங்களுக்கு பட்டா இல்லாததும், அவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததும் நிலத்தை அபகரிப்பவர்களுக்கு சாதகமாக மாறிவிடுகிறது. இதைத் தடுக்க தனிச்சட்டம் தேவை என்றார் மோகன்குமார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் த.உதயச்சந்திரன் கூறியது:

பழங்குடியினர் இடங்களை வேறு நபர்கள் வாங்குவதைத் தடுக்க போதிய சட்டங்கள் இல்லை. இருப்பினும் நிலத்தை அபகரிப்பது, சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவது போன்ற சம்பவங்களைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

வீரப்பன் காட்டில் களைகட்டும் ரியல் எஸ்டேட் தொழில்

பீ.ஜெபலீன் ஜான் ஆர்.சிவக்குமார் டி.சாம்ராஜ்

ஈரோடு, டிச.5: சந்தன வீரப்பன் காட்டில் ரியல் எஸ்டேட் தொழில் களை கட்டியுள்ளது.

5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 ஆயிரமாக இருந்த ஒரு ஏக்கர் நிலம் இப்போது ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனையாகிறது.

“”உதகை, முதுமலை போல வெகுவிரைவில் இதுவும் சுற்றுலாத்தலமாக விளங்கும். விரைவில் பலமடங்கு விலை உயரும்” -இது ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வைத்துள்ள விளம்பரத் தட்டிகளில் இடம்பெற்றுள்ள வாசகங்கள்.

வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கும் இதுபோன்ற பல்வேறு கவர்ச்சிகர வாசகங்கள் அடங்கிய தட்டிகள் மைசூர் பிரதான சாலைகளில் காணப்படுகின்றன.

தங்கும் விடுதி, ரிசார்ட் போன்றவற்றில் இரு நாள்கள், ஒரு வாரம் என தங்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு, மிதமான குளிர் பிரதேசமான இப் பகுதி மிகவும் பிடித்ததாக மாறி வருகிறது.

சொந்தமாகத் தங்கும் விடுதி கட்டிக்கொண்டால் என்ன? என்ற ஆசை எழும் சுற்றுலாப் பயணிகளை எளிதில் கவர்ந்து விடுகின்றனர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர். தங்கும் விடுதிகள் கட்டுவதற்கு ஏதுவாக 15 சென்ட், 20 சென்ட் எனத் தரம் பிரித்து நிலங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

தாளவாடி, கடம்பூர் பகுதியில் கிட்டத்தட்ட 70 சதவீதம் இடம் பழங்குடியினர் வசமிருந்து கைமாறிவிட்டது என்கின்றனர் பழங்குடியினர் நல போராட்ட அமைப்பினர். இப்போது ஆசனூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது.

இப் பகுதியில் ஒரு சென்ட் இடம் ரூ.18 ஆயிரம் (பிரதான சாலையில் இருந்து 2 கி.மீ. உள்பகுதியில்) முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. கோவை, திருப்பூர் ரியல் எஸ்டேட் நிறுவனங்களே இங்கு பெரும்பாலும் நில விற்பனையில் ஈடுபட்டுள்ளன.

மலைப் பகுதியில் இருக்கும் மக்களிடம் ஆசை வார்த்தை காட்டி மலிவு விலையில் இடத்தை வாங்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், சுற்றுலாப் பயணிகளிடம் விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது.

மலைப்பகுதி மக்களிடம் இருக்கும் நிலங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கைமாற்ற இப் பகுதிகளில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் துணைபோகின்றனர் என்பது பழங்குடியினர் நலப் போராட்ட அமைப்பினரின் பிரதான குற்றச்சாட்டு.

தமிழ்நாடு பழங்குடியின மக்கள் சங்க மாநிலத் தலைவரும், நீதிபதி சதாசிவம் கமிஷன் அறிக்கை வெளிவரக் காரணமாக இருந்தவருமான வி.பி.குணசேகரன் கூறியது:

விற்பனைக்காகக் காத்திருக்கும் மனைகள்.

தாளவாடி, கடம்பூர் பகுதியில் கிட்டத்தட்ட 70 சதவீதம் இடம் பழங்குடியினர் வசமிருந்து கைமாறிவிட்டது என்கின்றனர் பழங்குடியினர் நல போராட்ட அமைப்பினர். இப்போது ஆசனூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது.

மலைப்பகுதி மக்களின் நிலத்தை, சமவெளி மக்கள் ஆக்கிரமிப்பதால் பழங்குடியினரின் உரிமை, வேலைவாய்ப்பு பறிபோகிறது. தாளவாடி, கடம்பூர், ஆசனூர் பகுதியில்தான் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடைபெற்று வந்தது. இப்போது பர்கூர் மலைப் பகுதியையும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் குறிவைத்துவிட்டனர்.

பிகார், மத்தியப்பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் பழங்குடியின நிலங்களை பிறர் ஆக்கிரமிப்பதைத் தடுக்க தனிச்சட்டம் உள்ளது. இதுபோன்ற சட்டம் தமிழகத்திலும் தேவை. 1996-ல் அப்போதைய வனத்துறை அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர் செய்த பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார் குணசேகரன்.

இது குறித்து மாநில வனத்துறை வாரிய உறுப்பினரும், மாவட்ட கெüரவ வனஉயிரின காப்பாளருமான ப.கந்தசாமி கூறியது:

தென்னிந்தியாவிலேயே அதிகமாக சத்தியமங்கல வனத்தில்தான் யானைகள், புலிகள், காட்டுமாடுகள், கடமான், புள்ளிமான், கரடி உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள், பல்வேறு ரக பறவைகள் காணப்படுகின்றன. சத்தி வன அழிவுக்குக் காரணமே ரிசார்ட்கள் மற்றும் தங்கும் விடுதிகள்தான். மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் வனவிலங்கள் எண்ணிக்கை குறையத் துவங்கிவிட்டது. வனப் பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்றுவது தவறான நடவடிக்கை. வனப்பரப்பு குறைவது மனித இன அழிவுக்கு துவக்கமாக மாறிவிடும் என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் இதற்குத் தீர்வாக இருக்கும் என்றார் கந்தசாமி.

சமவெளிப் பகுதிகளை வளைத்துப்போட்டு நிலத்துக்கு செயற்கை விலையேற்றத்தை ஏற்படுத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் அடுத்த இலக்கு, மலைப் பகுதியாக மாறியுள்ளது. பழங்குடியினர் மட்டுமன்றி வன உயிரினத்தையும் காப்பாற்ற இதுபோன்ற செயல்களை தடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

Posted in abuse, Acres, ADMK, Agriculture, AIADMK, Assets, Bargoor, Bargur, barkoor, Don, encroachments, Environment, Erode, Estate, Farming, Farmlands, Forest, Govt, Guesthouses, Jaya, Jeya, JJ, Land, MLA, MP, Natives, Plants, PMK, Politics, Power, Real Estate, Representatives, Resorts, Sandal, Sandalwood, Sathiamangalam, Sathiyamangalam, Sathyamangalam, Sathyamankalam, SC, Sightseeing, smuggler, ST, Tourists, Tours, Travel, Travelers, Trees, Tribals, Village, Villager, villagers, Villages, Woods | Leave a Comment »

Bill to hike pension for former MLAs, MLCs: Increase in Tamil Nadu Legislature spending

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

நமது கடன்…

ஏனைய ஆட்சிமுறைகளில் உள்ள குறைபாடுகளைக் களைவதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை நோக்கமே. ஆனால், நமது இந்தியாவில் மட்டும் மக்களாட்சி என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்பதுதான் நடைமுறை வழக்கமாக இருக்கிறது.

தமிழக சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டமான மழைக்காலக் கூட்டத் தொடர் நான்கே நாள்கள் நடந்து மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு நாள்களில் பல தீர்மானங்களும், சட்டமுன் வரைவுகளும் தாக்கல் செய்யப்பட்டன என்பது உண்மைதான். ஆனால், சப்தமே இல்லாமல் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு ரூ. 3,500 ஓய்வூதியம் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டியது அவசியம். இனிமேல், சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்த, இருக்கும், இருக்கப்போகிற அனைத்து உறுப்பினர்களின் வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ. 3,500 வழங்கப்படும் என்றும்

இதன் மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 32.4 லட்சம் செலவாகும் என்றும் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். ஓய்வூதியம் பெற நமது சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசு ஊழியர்களா என்று கேட்காதீர்கள். அரசு ஊழியர்கள் நிரந்தரப் பணியாளர்கள். ஆனால் நமது மக்கள் பிரதிநிதிகள், தேர்தலுக்குத் தேர்தல் மக்களின் அங்கீகாரம் பெற்றாக வேண்டிய தாற்காலிகப் பிரதிநிதிகள் மட்டுமே.

இன்னொரு விஷயம். ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது தொகுதி மக்களுக்கு முறையாகச் சேவை செய்யாமல், மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தவர்களுக்கும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்கிற முறையில், மக்களின் வரிப்பணத்திலிருந்து ஓய்வூதியம் உண்டு. இனிமேல், அவரது வாரிசுகளுக்கும் ஓய்வூதியம் தரப்படும். தவறுதலாகத் தவறான நபர் ஒருவரைத் தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்குத் தரப்படும் தண்டனை இது. இதுதான் இந்திய மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவமே!

இது ஏதோ தமிழகத்தில் மட்டும்தான் நடைபெறும் விஷயம் என்று நினைத்து விடாதீர்கள். இந்திய நாடாளுமன்றத்தில் தொடங்கி, அத்தனை மாநில சட்டப்பேரவைகளிலும் நடைபெறும் ஜனநாயகக் கூத்தின் ஓர் அங்கம்தான் இந்த அநியாயம். ஒரு சாதாரண இந்தியக் குடிமகனின் சராசரி வருமானத்தைவிட நாற்பது மடங்கு அதிக சம்பளம் பெறுகிறார் நமது நாடாளுமன்ற உறுப்பினர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நமது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு, அவர்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாள்களில் மட்டும், போக்குவரத்துச் செலவுக்காக 15 ரூபாயும், இதர செலவுகளுக்காக 30 ரூபாயும் படியாகத் தரப்பட்டது. இப்போது நிலைமை என்ன தெரியுமா?

அவரது செலவுகளுக்காக மாதம் ரூ. 20,000 தரப்படுவதுடன், அவர் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்குபெறும் ஒவ்வொரு நாளும் தினசரி பயணப்படியாக ரூ. 500 பெறுகிறார். இப்போது, தொகுதிப் பயணப்படி என்று மாதம் ஒன்றிற்கு ரூ. 5,000 தரப்படுகிறது. இலவச தொலைபேசி வசதி, சென்னையில் இருப்பிட வசதி, மருத்துவ வசதி என்று ஏராளமான வசதிகள் போதாதென்று ரூ. 7,000 ஓய்வூதியம் வேறு.

அமெரிக்காவில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் ஊதிய உயர்வு, மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டு, மக்களின் ஒப்புதலுக்குப் பிறகுதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம், தங்களுக்குத் தாங்களே தங்களது சம்பளத்தையும் வசதிகளையும் மக்கள் பிரதிநிதிகள் அதிகரித்துக் கொள்ளும் ஜனநாயக விரோதப் போக்கு தடுக்கப்படுகிறது. மக்களுக்குச் சேவை செய்ய எந்தவொரு அரசியல்வாதியையும் வாக்காளர்கள் விரும்பி அழைக்கவில்லை. தாங்களாகவே மக்களுக்குச் சேவை செய்ய விழைகிறோம் என்று கூறித் தேர்தலில் நிற்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தங்களுக்குத் தாங்களே தங்களது வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள். இது எந்த ஜனநாயகத்திற்கு உட்பட்ட விஷயம்?

மக்களாட்சியில் உண்மையிலேயே மக்களுக்குத் தொண்டாற்றிய தலைவர்களையும் பிரதிநிதிகளையும் மக்கள்தான் கௌரவிக்க வேண்டும். அவர்களது தேவைகளை மக்கள் வலியச் சென்று பூர்த்தி செய்ய வேண்டும். மக்கள் மீது நம்பிக்கை இல்லாத மக்கள் பிரதிநிதிகள்தான், மக்களின் வரிப்பணத்திலிருந்து தங்களது வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும், தங்களது வருங்காலத்திற்கு உத்தரவாதம் தேடிக் கொள்ளவும் விழைவார்கள் என்று நாம் சொன்னால், இவர்கள் ஏற்றுக்கொள்ளவா போகிறார்கள்? நமது கடன் வாக்களித்து ஓய்வதே!

————————————————————————————————————————————————-

மக்கள் பிரதிநிதிகள்…?

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, நீதிமன்ற வரம்பு தொடர்பாக தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் நல்லதொரு கருத்தை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் பொறுப்பில்லாமல் நடந்துகொள்பவர்களை குறிப்பாக, அவையில் ரகளையில் ஈடுபடும் உறுப்பினர்களை, மக்களே திரும்பி அழைக்கும் முறையைக் கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார். பணிகளைச் சரியாகச் செய்யாவிட்டால் அவர்களுக்கு ஊதியம் வழங்கக்கூடாது என்று கருத்தையும் ஏற்கெனவே அவர் கூறியிருந்தார்.

சாட்டர்ஜியின் கருத்துக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது. நாடாளுமன்றக் கூட்டத்துக்கு ஒரு நிமிடத்திற்கு ரூ. 24,500 செலவாகின்றது. நாடாளுமன்றத்தின் அரிய நேரத்தையும் மக்களின் வரிப்பணத்தையும் பாழடிக்கும் உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 1997-ல் விடுதலைப் பொன்விழா மக்களவை சிறப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2006-ம் ஆண்டு அறிக்கையின்படி, 20 சதவிகித உறுப்பினர்களே விவாதத்தில் ஓரளவு ஆர்வம் காட்டுகின்றனர். ஊழல் குற்றச்சாட்டால் நட்வர்சிங் பதவி விலகிய சில நாள்களிலேயே, 11 உறுப்பினர்கள் அவையில் கேள்வி எழுப்புவதற்கு லஞ்சம் வாங்கியதை ஆஜ்தக் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது.

1951-ல் எச்.ஜி. முடகல் இம்மாதிரி கேள்வி கேட்க தொழிலதிபர்களிடம் லஞ்சம் பெற்றார். நாடாளுமன்றக் குழு அதை உறுதி செய்த பின்னர், நேரு அவரை அவையை விட்டு நீக்கக் கோரி தீர்மானம் முன்மொழிந்தார். பிரிட்டனில் 1990-ல் பணத்திற்காக அவையில் கேள்வி எழுப்பியதில் ஊழல் ஏற்பட்டது என்று புகார் எழுந்தது.

அமெரிக்காவில் செனட் சபைத் தலைவராக இருந்த நிவேட்ஞ்ரிச் என்பவர் தவறான தகவல் அளித்து பயணப்படியைப் பெற்றார் என்பதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

மக்கள் பிரதிநிதிகள்மீது குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தவண்ணம் உள்ளன. 1998-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது ஜே.எம்.எம். உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்க லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவாகியது. ஆனால் லஞ்சம் வாங்கிய எம்.பி.க்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட லஞ்ச விவகாரம்பற்றி பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லையென்று சட்டத்தில் வழிவகை உள்ளதாக நீதிபதி பரூச்சா கூறியுள்ளார்.

சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்த, உறுப்பினர்களைத் திரும்ப அழைக்கும்முறை நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது. 1970-ல் ஜெயபிரகாஷ் நாராயணன், திரும்ப அழைக்கும் உரிமையை மக்களுக்கு அளிக்க வேண்டுமென்று தாம் ஏற்படுத்திய புரட்சியின் மூலம் அறைகூவல் விடுத்தார். அதுபோன்று, எம்.ஜி.ஆர். தம்முடைய இயக்கத்தைத் தொடங்கியபொழுது, திரும்பஅழைக்கும் உரிமையை வலியுறுத்தினார்.

கலிபோர்னியா மாநிலத்தில் ஆளுநர் பொறுப்பிலிருந்த கிரே டேவிஸ் திரும்ப அழைக்கப்பட்டார். 82 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஜே.பி. ரேசர் என்பாரும் தன்னுடைய பதவிக் காலத்திற்கு முன்பே ஆளுநர் பதவியிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டார் என்ற முன்னுதாரணங்கள் இருக்கின்றன. சோவியத் அரசியல்சட்டம்~1936~பிரிவு 106-ல் திரும்பஅழைக்கும் உரிமை மக்களுக்கு உண்டு என்று நீதிபதி கிருஷ்ணய்யர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவையில், உறுப்பினர்கள் பொறுப்பான விவாதங்களில் ஈடுபடாமல், கைகலப்பு, ரகளை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத்தான் காண்கிறோம். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் சுமார் ரூ. 2 லட்சம் வரை பல இனங்களில் அரசு வழங்குகிறது.

மாத ஊதியம், தொகுதிப் படி, அலுவலகப் படி, உதவியாளர் ஊதியம், அவையில் பங்கேற்புப் படி, தில்லி வீடு, மின்சாரம், தொலைபேசி, விமானப் பயணம், ரயில் பாஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உறுப்பினர்களுக்குக் கிடைக்கின்றன.

கடந்த 55 ஆண்டுகளில் 90 முறை நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய ஊதியங்கள், படிகள், ஓய்வூதியங்களை உயர்த்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் குரல் கொடுத்து தங்கள் உரிமைகளைச் சாதித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், தங்களுடைய ஊதியம், படிகளை உயர்த்துவதில் மட்டும் ஒட்டுமொத்த ஒற்றுமை எப்பொழுதும் இருந்து வந்துள்ளது. ராஜிவ் சுக்லா போன்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள “ஆபீஸ் ஆஃப் பிராஃபிட்’ என்று சொல்லக்கூடிய “பொறுப்பின் பயன்களை’ப் பெறும் தடைகளை நீக்கவும் முயற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பு சபை அமைக்கப்பட்டபொழுது உறுப்பினர்களுக்கு வாடகை, செலவுகள் சேர்த்து ஒரு நாளைக்கு ரூ. 45 படியாக வழங்கப்பட்டது. அக்காலத்தில் எளிமையாக காந்திய லட்சியங்களை மனதில்கொண்டு மக்கள் பிரதிநிதிகள் கடமையை ஆற்றினர்.

1955-ல் நாடாளுமன்றத்திற்கு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகை லட்சக்கணக்கில்தான் இருந்தது. இன்றைக்கு நாடாளுமன்றத்தின் மொத்த செலவு ரூ. 300 கோடிக்கு மேலாக உள்ளது. இதுபோக உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி என்று ரூ. 2,000 கோடி வரை தனியாகவும் ஒதுக்கப்படுகின்றது.

அரசியலமைப்பு சட்டத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஆரம்பத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 2003-ல் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பினர் ஒரு நாள் பதவியில் இருந்தாலே ஓய்வூதியம் கிடைக்கும்படி மாற்றங்கள் செய்யப்பட்டன. பிரிட்டனில் ஓர் எம்.பி.க்கு ஓர் அறை உள்ள அலுவலகம் மட்டும் வழங்கப்படுகின்றது. இந்தியாவில் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஊதியங்களையும் தங்களுக்குச் சேரவேண்டிய படிகளையும் தாங்களே நிர்ணயித்துக் கொள்கின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியங்களை நிர்ணயிக்க சுயாட்சி தன்மை கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று சாட்டர்ஜி கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. பிரிட்டன், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்ற குழுக்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் சலுகைகளை நிர்ணயிக்கின்றன. பொதுவாழ்வுக்கு வந்தவர்கள் அர்ப்பணிப்புடன் பணிசெய்வதை விட்டுவிட்டு, எவருக்கும் கிடைக்காத சலுகைகளைப் பெறுவது தேவைதானா என்று யோசிக்க வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் நடக்கின்ற அமளி, உறுப்பினர்களின் பொறுப்பின்மை ஆகியவற்றைப் பார்க்கின்றபொழுது, இந்திய ஜனநாயகம் எங்கே செல்கின்றது என்ற கவலை ஏற்படுகிறது. மாநில சட்டப்பேரவைகளிலும் பல தருணங்களில் இதுபோன்ற நிலையைக் காணமுடிகிறது.

நரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது, தொகுதி மேம்பாட்டுத் திட்டம் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தை நரசிம்மராவ் அறிவித்தபொழுது, சோம்நாத் சாட்டர்ஜி இந்தத் திட்டத்தை எதிர்த்தார். மற்ற அனைத்துக் கட்சிகளும் இத்திட்டத்தை வரவேற்றன. கணக்காயர் அறிக்கையும் இந்தத் திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியது.

இத்திட்டத்தை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஈ.எஸ். வெங்கட்ராமய்யா அரசியலமைப்பு சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறினார். கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு “கோட்டா’ வழங்குவதை நீதிமன்றங்களும் கண்டித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினருக்கு ரூ. 2 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்குவது நியாயமற்றதாகும்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிதியைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்ற நிதியிலிருந்துதான் மத்திய அரசு இந்த நிதியை வழங்குகிறது என்பது பல மாநில அரசுகளுக்குத் தெரியாது. மாநில சுயாட்சிக்குக் குரல்கொடுக்கின்றவர்களும் இதைத் தட்டிக் கேட்கவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், மக்களின் திருப்திக்கேற்ற வகையில் செயல்படவில்லை எனில், திரும்பஅழைக்கும் முறை சட்டமாக்கப்பட வேண்டும். அவர்களை விசாரணைக்கு உட்படுத்துகின்ற லோக்பால் மசோதாவை 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றத் தயக்கம் காட்டுவது வேடிக்கைதான்.

தகுதியற்றவர்களை மக்கள் பிரதிநிதிகளாக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும். கட்சித்தலைவர்கள், தங்கள் குடும்ப ஆதிக்கம், தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டும்வகையில், வேட்பாளர்களைத் தேர்வு செய்வது ஜனநாயகப் படுகொலைக்குச் சமம்!

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

———————————————————————————————————————————————————–

பயனுள்ளதாகட்டும் நாடாளுமன்றம்!

பி. சக்திவேல், சமூக சிந்தனையாளர்

நாடாளுமன்றத்தின் பணி சட்டம் இயற்றுவதுடன் முடிந்துவிடுவதில்லை.

மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கவும், தேசத்தின் முக்கியப் பிரச்னைகளை விவாதிப்பதற்கும், முடிவு எடுப்பதற்கும் உள்ள ஓர் அமைப்புதான் நாடாளுமன்றம்.

சமீபகாலமாக உறுப்பினர்களின் கடும் அமளியாலும், விவாதங்கள் முறையாக நடைபெறாததாலும் நாட்டு மக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே, கடும் விமர்சனத்திற்கு நாடாளுமன்றம் உள்ளாகியுள்ளது.

மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகளைப் பற்றி விவாதிக்காமலேயே நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர்கள் முன்னதாகவே முடிவடைவது நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேள்விக்குரியதாக்கியுள்ளது.

நாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் கடும் அமளியால் மக்களவை மொத்தம் 41 மணி நேரம் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் முடக்கப்பட்டது. இது மொத்த கூட்டத்தொடரில் 40 சதவிகித நேரமாகும்.

இதேபோல, மாநிலங்களவை 42 மணி நேரம், அதாவது 49 சதவிகித நேரம் முடக்கப்பட்டது. சென்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் (பிப்ரவரி-மார்ச்) மக்களவை 73 மணிநேரம் எவ்வித அலுவல்களும் நடைபெறாமல் உறுப்பினர்களின் கூச்சல், அமளி காரணமாக முடங்கியது.

இவ்வாறு அமளியால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாகும்.

பிரதமர் தன்னுடைய அமைச்சரவை சகாக்களை அவையில் அறிமுகம் செய்வதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை, அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்கள் சரியாக விவாதிக்கப்படவில்லை, பல மசோதாக்கள் எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது, கேள்வி நேரம் மற்றும் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் அர்த்தமற்றதாகிவிட்டன. இவை அனைத்தும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளது.

ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் குடியரசுத் தலைவர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறுவதில் தடைகள் உருவாகின்றன.

மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜியால் அவையில் உரை நிகழ்த்த இயலவில்லை. “”மக்களவைத் தலைவர் பேசும் போதும் நீங்கள் பேசுகின்றீர்கள், அமளி துமளியில் ஈடுபடுகின்றீர்கள். இது இப்போது வியாதியாகவே பரவிவிட்டது” என்று வருத்தப்பட்டுக் கூறும் அளவுக்கு அமளி ஏற்பட்டுள்ளது. அவை நிகழ்ச்சிகளை நடத்தவிடாமல் தடுப்பது என்ற நடைமுறையால், எதிர்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்ன ஆகும் என்ற கேள்வி அனைவரின் மனதில் எழுந்துள்ளது.

நம் நாட்டில், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் முதல் பொதுத் தேர்தல் 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்பொழுது ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றம் அதிக நேரம் அதனுடைய அலுவல்களுக்காகவே செலவிட்டது. இதன் வாயிலாக சமூக வளர்ச்சிக்காகவும் மக்களாட்சித் தத்துவத்தை மேம்படுத்துவதற்காகவும் நாடாளுமன்றம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் தழைத்தோங்கியது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற்றன. இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பெரும் பங்காற்றினர்.

ஒவ்வொரு முறை பொதுத் தேர்தல் நடத்துவதற்கும் அரசு கோடிக்கணக்கில் பணத்தைச் செலவிடுகிறது. கடந்த 14-வது மக்களவைத் தேர்தலுக்கு அரசு செலவிட்ட தொகை சுமார் ரூ. 1,300 கோடியாகும். நாடாளுமன்றம் செயல்பட ஒரு நிமிடத்திற்கு அரசு சுமார் ரூ. 34,500 செலவு செய்கிறது. ஒரு மணி நேரத்திற்கு ரூ. 21 லட்சமும், ஒரு நாள் நாடாளுமன்றம் செயல்பட சுமார் ரூ. ஒன்றரை கோடியும் செலவாகிறது. மொத்தத்தில், ஒரு கூட்டத்தொடர் நடத்துவதற்கு ரூ. 250 கோடி செலவாகிறது.

உண்மையாக, ஆரோக்கியமான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றால் மக்களுடைய வரிப்பணம் வீணாகாது. ஆனால் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்தோமானால் நாடாளுமன்றத்தின் பொன்னான நேரம், பணம் மற்றும் மக்களுடைய நம்பிக்கைகள் வீணாகிக் கொண்டிருப்பதை அறிந்துகொள்ளலாம்.

நாடாளுமன்ற அமர்வுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதும் மிகவும் கவலை அளிக்கக்கூடிய மற்றொரு விஷயமாகும். கடந்த காலங்களில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 125 முறை நாடாளுமன்றத்தின் அமர்வுகள் நடைபெற்றன. ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் அமர்வுகள் 70 ஆக குறைந்துவிட்டன. இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் நடைபெற்ற அமர்வுகளில் மிகவும் குறைந்த அமர்வுகளாகும். குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 அமர்வுகளாவது நடைபெற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்புகளாகும்.

நாடாளுமன்ற அமர்வுகள் அதிக அளவில் நடைபெற்றால்தான் மசோதாக்களை முறையாக அறிமுகம் செய்து விவாதிக்க முடியும். மேலும் கேள்வி நேரங்கள் சரியாகப் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் அரசை நெறிப்படுத்த வாய்ப்புகள் உருவாகும்.

நாடாளுமன்றத்தின் அலுவல்கள் நடைபெறவில்லை என்றாலோ அல்லது அவை முடக்கப்பட்டாலோ உறுப்பினர்களுக்கு தினசரி சலுகைகள் மற்றும் தினசரி படிகள் வழங்கப்படக்கூடாது என்று மக்களவைத் தலைவர் யோசனை தெரிவித்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் ஒரு மனதாக இந்த யோசனையை நிராகரித்துவிட்டன.

1949 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் நாள் வி.ஐ. முனுசாமி என்பவரால் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி உறுப்பினர்களின் தினப்படியை 45-லிருந்து 40 ரூபாயாகக் குறைக்க வேண்டும். அதற்கான காரணம், “”நாட்டு மக்கள் வறுமையில் உள்ளபோது உறுப்பினர்களுக்கு அதிக சலுகைகளை அளிக்கக் கூடாது. எனவே, இதைக் கருத்தில்கொள்ளும்போது 5 ரூபாய் என்பது ஒரு மிகச்சிறிய தியாகம்தான். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நாடாளுமன்றத்தின் ஒரு மிகச்சிறிய பங்களிப்புதான் இது” என்றார் முனுசாமி.

இந்தத் தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். இதன்படி 5 ரூபாய் குறைக்கப்பட்டு தினப்படி 40 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு வரை இவ்வாறு வழங்கப்பட்டதை இத்தருணத்தில் நிச்சயமாக குடிமக்கள் அனைவரும் நினைவுகொள்ள வேண்டியது அவசியமாகும். இந்தச் சம்பவம் எவ்வாறு நாடாளுமன்றமும் அதன் உறுப்பினர்களும் சமூக, பொருளாதார சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட்டார்கள் என்பதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும்.

1954 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் சலுகைகளில் 27 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர்களுக்கு ஊதியம் மற்றும் சலுகைகளை உயர்த்த வேண்டுமென்றால் குரல் வாக்கெடுப்பின் மூலமாக மிகவும் எளிதாக நிறைவேற்றப்படுகிறது.

அதேவேளையில் அரசு அலுவலர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றால் ஊதியக் குழு நியமிக்கப்பட்டு பல்வேறு விவாதங்கள் மற்றும் திருத்தங்களோடுதான் உயர்த்தப்படுகிறது. இதற்கு குறைந்தபட்சம் சில ஆண்டுகளாவது ஆகிறது. எனவே இதையும் மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

எனவே கூச்சல், குழப்பம் போன்றவற்றின் மூலம் அவை நடவடிக்கைகளை முடக்கி மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

நமது நாட்டின் 26 சதவிகித மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், பல கோடிகள் செலவு செய்து ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றம் முறையாகச் செயல்படாமல் முடக்கப்படுவது சரியல்ல. இதனால் விரயமாகும் வரிப்பணம் தேசிய பேரிழப்பாகும்.

ஏற்கெனவே பல்வேறு விரும்பத்தகாத நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் அதன் மதிப்பையும் கண்ணியத்தையும் இழந்து காணப்படுகிறது. இத்தகைய போக்கு கட்டாயமாக மாற வேண்டும்.

ஆரோக்கியமான விவாதம், அவை நடவடிக்கைகளில் அதிக உறுப்பினர்கள் கலந்துகொள்ளுதல், நாடாளுமன்றத்தை முறையாகச் செயல்பட அனுமதித்தல், நாட்டு மக்களுக்கு குறிப்பாக, இளைய தலைமுறைக்கு உதாரணமாகத் திகழ்வது போன்ற கண்ணியத்தைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இதன்மூலம்தான் நாடாளுமன்ற ஜனநாயகத் தத்துவம் முழுமை அடையும். நாடாளுமன்றமும் பயனுள்ளதாகும்.

இதைச் செய்யத் தவறினால் மக்களவைத் தலைவர் கூறியதுபோல “”இந்த அமைப்பை எந்த சக்தியாலும் ஏன், ராணுவத்தாலும் கூட காப்பாற்ற முடியாது.”

Posted in 5, ADMK, Allocation, Allowances, Anbalagan, Anbazagan, Anbazhagan, Appraisal, Assembly, Attendance, Bribery, Bribes, Budget, Cell, Checks, Chennai, Citizen, City, Congress, Cops, Corruption, Council, DA, Decorative, Decorum, Democracy, Disqualify, DMK, Economy, Election, Elections, Employed, Employment, Exceptions, Expenses, Exploit, Exploitation, Finance, Freedom, Funds, Government, Governor, Govt, Hike, Impeach, Income, Independence, Issues, IT, JJ, Jobs, kickbacks, KK, Legislature, Lifelong, Limits, Lok Ayuktha, Lok Saba, Lok Sabha, Lokpal, LokSaba, LokSabha, Madras, Metro, MGR, MLA, MLC, MP, MuKa, NGO, Office, Operations, parliament, pension, people, Performance, Phones, Polls, Power, Query, Questions, Raise, Rajya Saba, Rajya Sabha, Rajyasaba, Rajyasabha, Recall, Representation, Representative, Representatives, responsibility, Retirement, Rich, Role, Ruler, Salary, Senate, service, Sincere, Sincerity, Somnath, State, Suspend, TamilNadu, Tax, Telephone, Terms, Transport, Verification, Verify, Vote, voters, Walkouts, Woes, Years | Leave a Comment »