Archive for the ‘UK’ Category
Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2008
கர்ணல் கருணாவுக்கு 9 மாதம் சிறைத் தண்டனை: பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற குழுவின் தலைவரான கர்ணல் கருணா, போலி கடவுச்சீட்டு வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக பிரிட்டன் நீதிமன்றம் அவருக்கு ஒன்பது மாதம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
விநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற பெயர்கொண்ட இவர் கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்தில் கைதுசெய்யப்பட்டார்.
வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பின் வாதத்தை எடுத்துரைத்த அரசு தரப்பு பாரிஸ்டர், கருணா, கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி பிரிட்டனுக்குள் கோகில ஹர்ஷ குணவர்த்தன என்ற பெயரில் ராஜிய பாஸ்போர்ட் ஒன்றுடன் நுழைந்தார். இந்த பாஸ்போர்ட்டில் அவருக்கு பிரிட்டனுக்கு வந்து போக ஆறுமாத பலமுறை விஜயம் செய்யும் விசா ஒன்று வழங்கப்பட்டிருந்தது. பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்ட பெயர் வேறு ஒருவருடைய பெயராக இருந்தாலும், அதில் இருந்த புகைப்படம் கருணாவுடையதாக இருந்தது என்றார்.
இந்த விசா, வனவிலங்கு பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாடு ஒன்றில் குறிப்பிட்ட நபர் கலந்துகொள்வதற்காக கோரப்பட்டது என்றும் வழக்குரைஞர் கூறினார்.
பிரிட்டனுக்குள் வந்த கருணா கடந்த நவம்பர் இரண்டாம்தேதி பிரிட்டன் குடிவரவுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டர் என்று கூறிய அரசு வழக்குரைஞர், குடிவரவுத் தடுப்புக்காவலில் இருந்த அவரை, டிசம்பர் 22ம்தேதி, லண்டன் பெருநகரப் போலிசார் அடையாள ஆவணங்கள் மோசடி சட்டத்தின் கீழ் அவரைக் கைதுசெய்து குற்றச்சாட்டை பதிவு செய்தனர்.
போலிசார் கருணாவிடம் நடத்திய விசாரணையின்போது, கருணா தான் ஒரு இலங்கை பிரஜை என்றும், தனக்கு இந்த ராஜிய பாஸ்போர்ட் இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் உதவியால் தரப்பட்டது என்றும் கூறியதாகவும், அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து லண்டனுக்கு வரும்போது, கொழும்பு விமான நிலையத்தில், இலங்கையின் குடிவரவு மற்றும் சுங்க இலாகா வழிமுறைகளுக்கு உட்படாமல் தான் விமானத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும், விமானத்தில் ஏறும் முன்னர் தனக்கு இந்த ராஜிய பாஸ்போர்ட் தரப்பட்டதாகவும் கருணா லண்டன் போலிஸ் விசாரணையில் தெரிவித்ததாக, அரசு வழக்குரைஞர் தெரிவித்தார்.
ஆனாலும், இந்த பாஸ்போர்ட்டில் தனது புகைப்படம் மட்டுமே இருந்ததை கருணா கண்டதாகவும், மற்ற விவரங்கள் பொருந்தவில்லை என்று அவருக்கு தெரிந்திருந்ததாக கருணா கூறியதாக வழக்குரைஞர் குறிப்பிட்டார்.
தனக்கு ராஜிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது குறித்து கருணா போலிசாரிடம் குறிப்பிடுகையில் தான் அரசாங்க அதிகாரியல்ல என்றாலும், இலங்கை அரசால் பாதுகாப்பு வழங்கப்பட்ட ஒருவர் என்று குறிப்பிட்டதாக அரசு வழக்குரைஞர் கூறினார்.
கருணா ஏற்கனவே இந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று கூறிய கருணா தரப்பு வழக்குரைஞர் டேவிட் பிலிப்ஸ், ஆனால் போலிசார் மற்ற விடயங்களைப் பற்றி விசாரித்தபோது அவர்களுக்கு எந்தவித தடயமும் கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தனது கட்சிக்காரருக்கு மனைவி மற்றும் 11, 9 மற்றும் 6 வயதுடைய மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், கைதுசெய்யப்பட்டபோது அவர் தன்னுடைய வீட்டில்தான் இருந்தார் என்றும் குறிப்பிட்ட பிலிப்ஸ், கருணா இதற்கு முன்னர் சிறைத்தண்டனை பெற்றிருக்கவில்லை, இவ்வாறு தடுத்துவைக்கப்படுவது அவருக்கு ஒரு பயங்கரமான அனுபவமாக இருக்கும் என்றார்.
கருணாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை நீதிமன்றத்திலிருந்து அவதானித்திருந்த மணிவண்ணன் தொகுத்து வழங்கும் விரிவான செய்திகளை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
புலிகளின் வாகன தளத்தை விமான குண்டுவீச்சில் அழித்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை காலை விமானப்படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் வாகனப் போக்குவரத்துத் தளம் ஒன்று அழிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.
இதனை மறுத்துள்ள விடுதலைப் புலிகள் மக்கள் குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஒரு சிவிலியன் கொல்லப்பட்டதாகவும் 5 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
எட்டு குண்டுகள் இப்பகுதியில் வீசப்பட்டதாகவும் இதனால் 12 வீடுகள் சேதமடைந்தும் முற்றாக அழிந்தும் இருப்பதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றார்கள்.
இந்த விமானத் தாக்குதலையடுத்து, கிளிநொச்சி பிரதேசத்தில் பதட்டம் நிலவியதுடன், பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் மேலும் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் பாடசாலைகளுக்குச் செல்லவில்லை என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் மின்னஞ்சல் வழி அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது.
காயமடைந்தவர்களில் 3 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி மருத்துவமனையின் பதில் மருத்துவ பணிப்பாளர் டாக்டர் பிரசாத்நாயகம் பிரைட்டன் தமிழோசையில் தெரிவித்தார்.
மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் முடிவுற்றது
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 6 அரசியல் கட்சிகளும் 22 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபைக்கும் 8 பிரதேச சபைகளுக்கும் 1994ஆம் ஆண்டுக்கு பின்பு நடைபெறவிருக்கும் இத்தேர்தல் மூலம் 101 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவிருப்பதாகக் கூறும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் டி.கிருஷ்ணானந்தலிங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் சயேச்சைக் குழுக்கள் சார்பாக 816 பேர் போடடியிடுவதாகக் குறிப்பிடுகின்றார்.
இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 23 சுயேச்சைக் குழுக்கள் சார்பாகவும் 7 அரசியல் கட்சிகள் சார்பாகவும் மொத்தம் 61 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்படிருந்த போதிலும் பரிசீலனையின் பின்பு 9 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்பிலும் ஏனைய சபைகளுக்கு தமது கட்சி சார்பாகவும் போட்டியிடும் அதேவேளை ஈ.பி.ஆர்.எல்.எஃப். பத்மநாபா அணி, ஈ.பி.டி.பி., பிளொட் ஆகிய கூட்டமைப்பு அனைத்து சபைகளுக்கும் சுயேச்சையாக போட்டியிடுகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
கெப்பிட்டிகொல்லாவ சடலங்கள்: சனிக்கிழமை பிரேதப் பரிசோதனை
இலங்கை வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கெப்பிட்டிகொல்லாவ பகுதியின் குக்கிராமம் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்ட 16 உடல்களும் நாளை சனிக்கிழமை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என கெப்பிட்டிகொல்லாவ வைத்திய அதிகாரி தெரிவித்திருக்கின்றார்.
கைகள் கட்டப்பட்ட நிலையில் அருகருகே இரண்டு புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட இந்தச் சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என கெப்பிட்டிகொல்லாவ பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
நேற்று காலை முதல் இன்று பகல் வரையிலான காலப்பகுதியில் வன்னிப் போர்முனைகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது நடத்திய தாக்குதல்களில் 41 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் கொல்லப்பட்டுள்ள 16 பேரையும் விடுதலைப் புலிகளே கொலை செய்திருப்பதாகக் குற்றம்சுமத்தியுள்ளது.
எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதுவரையில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆயினும் மணலாறு பகுதியில் தமது பிரதேசத்தினுள் நேற்று வியாழக்கிழமை ஊடுருவ முயன்ற படையினர் மீது விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தியதை அடுத்து படையினர் பின்வாங்கிச் சென்றதாகவும், மன்னார் பாலைக்குழி பகுதியில் நேற்று காலை முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் 3 இராணுவத்தினரும் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
Posted in Anuradhapura, Anuradhapuram, Anurathapura, Arrests, Batticaloa, Eelam, Eezham, Elections, England, Jail, Karuna, Kilinochi, Law, London, LTTE, murders, Nominations, Order, Passport, Polls, Sri lanka, Srilanka, Tigers, UK, Visa, War | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 11, 2007
லஞ்சத்தில் சிக்கிய தலைவர்கள்
டி. புருஷோத்தமன்
“மக்கள் பணியே மகேசன் பணி’ என்கின்ற நிலைமாறி “பணம் குவிப்பதே குறிக்கோள்’ என்ற பேராசைக்கு அடிமையாகிவிட்டனர் பெரும்பாலான அரசியல்வாதிகள்.
கட்சியை வழிநடத்தவும் அபரிமிதமான தேர்தல் செலவை ஈடுகட்டவும் பதவிபோனாலும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கவும் கோடிக்கணக்கில் பணம் தேவை என்பதில் அரசியல் தலைவர்கள் உறுதியாக இருந்து வருகின்றனர். இந்த பேராசைதான் லஞ்சஊழலுக்கு அடித்தளமாக அமைகிறது.
சாதாரண அரசியல்வாதிகளில் இருந்து கட்சித் தலைவர்கள் வரை இருந்த லஞ்சஊழல் படிப்படியாக அமைச்சர்கள் அளவிலும் பின்னர் முதல்வர்கள் என்ற நிலைக்கும் முன்னேறியது.
இதன் உச்சகட்டமாக பிரதமர், அதிபர் போன்றோரும் லஞ்சலாவண்யத்தில் சிக்குவது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. லஞ்சமும் ஊழலும் செல்வந்த நாடுகளை விட ஏழை நாடுகளில்தான் தலைவிரித்தாடுகிறது. ஏழை மக்களை முன்னேற்ற வேண்டிய அந்நாடுகளின் பிரதமர்களும் அதிபர்களும் சொந்த நலனில் ஈடுபாடு காட்டத் தொடங்கிவிடுகின்றனர்.
இந்தியாவின் அண்டை நாடு வங்கதேசம்.
பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் அடக்குமுறையிலிருந்து விடுதலைபெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது. நாடு சுபிட்சம் அடைந்து நாமும் வளம் பெறுவோம் என வங்கதேச மக்கள் கண்ட கனவு பொய்யாகிவிட்டது.
அந்நாட்டின் அதிபராக இருந்த எர்ஷாத் பல்வேறு குற்றச்செயல்களிலும் ஊழல் விவகாரங்களிலும் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவருடைய பதவிக்காலத்தில் இரு சரக்கு முனையங்களைக் கட்டுவதற்காக தனியார் நிறுவனங்களுக்கு காண்ட்ராக்ட் அளிக்க கோடிக்கணக்கில் அவர் லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக அவருடைய இரு மகன்கள் அராபத் ரஹ்மானும் தாரிக் ரஹ்மானும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காலிதா ஜியாவின் குடும்பமே ஊழலில் சிக்கித் திளைத்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
வங்கதேசத்தின் மற்றொரு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும் லஞ்ச விவகாத்தில் சளைத்தவர் அல்ல என்பதை அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அறிந்துகொள்ளலாம். இரு தொழில் அதிபர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிப்பதற்காக அவர் பெற்ற லஞ்சம் ரூ. 6 கோடி.
ஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது. தனது பதவிக்காலத்தில் அரசியல் எதிரிகளை கொலைசெய்யவும் அவர் தயங்கவில்லை. நான்கு எதிரிகளை அவர் படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வங்கதேச உள்துறை அமைச்சராக இருந்த முகம்மது நசீம் என்பவர் தனது பதவிக்காலத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளார். இதற்கு அவருடைய மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். எனவே இவ்விருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வருமானத்துக்கு முரணான வகையில் அவர்கள் வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தையும் அந்நாட்டு அரசு பறிமுதல் செய்துவிட்டது.
தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷிண் சினவத்ராவும் அவர் மனைவியும் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளனர். நிலபேர விவகாரத்தில் அவர்கள் முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு முறைகேடாக அவர்கள் வாங்கியிருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள 14 ஏக்கர் நிலத்தைப் பறிமுதல் செய்யவேண்டும் என அந்நாட்டு அரசுக்கு அட்டார்னி ஜெனரல் பரிந்துரை செய்துள்ளார்.
தைவான் நாட்டின் முன்னாள் அதிபர் சென்னும் அவருடைய மனைவியும் ஊழல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை அவர்கள் சூறையாடியதாக தைவான் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மீதும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் பெரும் செல்வந்தர்களாக உள்ள நான்கு தொழிலதிபர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் கடன் என்ற பெயரில் பணத்தை தனது கட்சிக்கு லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ மற்றும் அவருடைய கணவர் ஜர்தாரி ஆகியோரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள்தான். சுவிஸ் வங்களில் கோடிக்கணக்கான லஞ்சப் பணத்தை மறைத்து வைத்துள்ளதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜர்தானி மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
பாகிஸ்தான் மற்றொரு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு லஞ்ச வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அவர் நாடு கடத்தப்பட்டார். பலமுறை முயன்றும் அவர் பாகிஸ்தானுக்குத் திரும்ப முடியவில்லை. இறுதியாக தற்போதுதான் நாடு திரும்பியுள்ளார்.
இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகார்தோ ஊழலில் திளைத்தவர். ஏழை நாடு என்ற சிந்தனை ஏதுமில்லாமல் மக்களைச் சுரண்டி, சுகபோக வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை சூறையாடினார்.
பிலிப்பின்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஊழல் புரிவதில் சாதனை படைத்தவர். 20 ஆண்டு பதவிக்காலத்தில் அவர் சுருட்டிய பணத்தின் மதிப்பு ரூ. 4,000 கோடியாகும். என்னே அவருடைய மக்கள் சேவை! அவர் மனைவி இமெல்டா விலைமதிப்புள்ள மூவாயிரம் ஜோடி செருப்புகளை வைத்திருந்தவர் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பெர்டினண்ட் மார்க்கோஸýக்கு பக்கபலமாக இருந்தது அமெரிக்க அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர்களும் பிரதமர்களும்தான் இப்படி என்றால் ராணுவ ஆட்சியாளர்களின் செயல்பாடு அதைவிட மோசம் என்றே கூறலாம். மியான்மர் நாட்டில் 1962 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது. ஜனநாயகம் கோரி கிளர்ச்சி நடத்திய மக்களை ராணுவ ஆட்சியாளர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கினர்.
இராக் முன்னாள் அதிபரும் சர்வாதிகாரியுமான சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில் எண்ணெய்க்கு உணவு பேரத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது.
மக்கள் நலனை மறந்து ஆடம்பர மாளிகையில் சுகபோக வாழ்க்கையில் திளைத்த சதாமை அமெரிக்கா தூக்கிலிட்டு கொன்றுவிட்டது.
எனவே, மன்னராட்சி, மக்களாட்சி, ராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என எந்த ஆட்சியானாலும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது லஞ்சமும் ஊழலும் என்ற நிலை உருவாகி விட்டது.
மக்களைக் காக்க வேண்டிய மன்னர்களும், அதிபர்களும், பிரதமர்களும், சர்வாதிகாரிகளும் லஞ்ச ஊழலில் திளைத்து சுகபோக வாழ்க்கையில் ஈடுபடுவது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.
—————————————————————————————————————————–
லஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா?
இரா. சோமசுந்தரம்
திருக்கழுக்குன்றம் துணை வட்டாட்சியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.48 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்பாகவே, திருச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல் என்ற செய்தி!
இந்த நடவடிக்கைகள் மக்களிடம் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு, இதற்கெல்லாம் மேலான ஓர் அதிர்ச்சியைத் தருவதாக இருக்கிறது. அதாவது: “”அட, எல்லாரும்தான் வாங்குறாங்க. இவங்க, வாங்கினத நியாயமா பங்குபோட்டு மேல கொடுக்காம அமுக்கப் பாத்திருப்பாங்க, ஒரே அமுக்கா அமுக்கிட்டாங்க” என்பதுதான் அந்த விழிப்புணர்வு.
இந்த மனநிலைக்குக் காரணம் அரசு அலுவலகங்களில் இன்று நிலவும் சூழ்நிலைதான்.
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வருவாய்ச் சான்றிதழ் பெற வேண்டுமானால், உண்மைக்கு மாறாக வருமானத்தைக் காட்ட விரும்புபவர் மட்டுமே அரசு அலுவலர்களைக் “கவனிக்க’ வேண்டியிருக்கும். ஏழைகள் இரண்டு நாள்களுக்கு இழுத்தடிக்கப்படுவார்களே தவிர, சான்றிதழ் இலவசமாகக் கிடைத்துவிடும். ஆனால் இப்போது இலவசம்கூட இலவசமாகக் கிடைப்பதில்லை. தகுதி இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற சூழல் ஏற்பட்டிருப்பதுதான் மக்களின் இத்தகைய விமர்சனங்களுக்குக் காரணம்.
அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம் ஆகியவற்றில் காணப்படாத பிரமாண்டம், தமிழக அரசு விழாக்களில் மட்டும் இருக்கிறது. வரம்புக்கு மீறிய, சட்டம் அனுமதிக்காத செலவுகள் நிறைய!
பல அரசு உயர் அதிகாரிகள் அரசு விருந்தினர் மாளிகைகளில் தங்குவதில்லை. ஆனால் அவர்கள் பெயரில் “ரூம்’ மட்டும் போடப்படும். ஆனால் அவர்கள் தங்குவது நட்சத்திர ஓட்டலில். அத்துடன் வேறுசில சொல்லப்படாத செலவுகளும் உண்டு, அந்தச் செலவை உள்ளூர் அதிகாரிகள் ஏற்க வேண்டும்!
சட்டத்தை மீறிய செலவுகளை ஈடுகட்ட ஒவ்வொரு துறையிலும்- வருவாய்த் துறை என்றால் கிராம நிர்வாக அலுவலர் வரை-ஒரு வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இது ஊர் அறிந்த ரகசியம்.
தேன் எடுத்தவன் புறங்கையை சுவைக்காமல் விடுவானா? ருசி பார்த்த பூனைகளுக்கு சூடு மறத்துப் போகிறது. மனிதம் மறைகிறது.
ஆதலால், வாகனம் நன்கு ஓட்டத் தெரிந்தாலும் “டிரைவிங் ஸ்கூல்’ மூலம்தான் உரிமம் பெற்றாக வேண்டும். அதே ஜாதி, அதே சம்பளத்துக்காக சான்றிதழ் கேட்டாலும் “கொடுத்து’தான் பெற முடியும்.
அரசு நிர்ணயிக்கும் நில மதிப்புக்கும் சந்தை மதிப்புக்கும் இடைப்பட்ட ஒரு மதிப்பை தீர்மானிக்கும் அதிகாரம் ஒருவரிடம் இருக்கும்போது, குறைக்கப்படும் பெருந்தொகைக்கு ஏற்ப ஒரு சிறுதொகையை இழக்க வேண்டும்.
விபத்துக்காக முதல் தகவல் அறிக்கை எழுதவேண்டுமானால், காவல்நிலையம் சொல்லும் வழக்கறிஞரை ஏற்று, காப்பீட்டுத் தொகையில் 20 சதவீதம், 30 சதவீதம் தள்ளுபடி தர வேண்டும் என்பதெல்லாம் எழுதப்படாத விதியாக மாறிவிட்டது.
இலவச கலர் டிவி பெறுவதற்கான பட்டியலில் இடம் பெற ரூ.100 வசூலிக்கப்படுகிறது என்ற செய்தி பல நாளிதழ்களில் வந்தாகிவிட்டது. ஆனால் இதை அரசு கண்டுகொள்ளவே இல்லை.
அரசு அறிவிக்கும் பல்வேறு உதவித் திட்டங்களுக்கு பொருளோ, வங்கி வரைவோலையோ தயாராக இருந்தாலும், “ரொக்கத்தை’ கொடுத்தால்தான் அவை கிடைக்கும் என்ற நிலை உள்ளது.
பொதுமக்களிடம் பெறும் லஞ்சத்தைவிட அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் பல மடங்காக இருக்கிறது.
பல ஏழை விவசாயிகளின் நிலங்களில் மானியப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டதாகக் குறிப்பெழுதி, கணக்குக் காட்டி, பல கோடி ரூபாய் மானியம் ஆண்டுதோறும் “முளை’ காட்டாமல் மறைந்து விடுகிறது.
ஒவ்வோர் அரசு அலுவலகங்களிலும் அவர்களது செலவுகள் அனைத்தும் தணிக்கைத் துறையால் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆனால், தணிக்கைத் துறை அலுவலர்களையே ஏமாற்றுகிற அளவுக்கு பொய் ரசீதுகளும் சட்டத்தின் ஓட்டைகளும் சரிபார்ப்பவரை சரிகட்டுவதும் தாராளமாக இருக்கின்றன.
லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுத்தாலும் எத்தனை வழக்குகளில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டார்கள்?
இவை யாவும் மக்கள் ஏற்படுத்திய பழக்கம் என்றும், அரசியல்வாதிகளின் அடாவடித்தனம் என்றும் சொல்லப்படும் பொதுவான கருத்து ஏற்புடையதாக இல்லை.
முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல, அரசு அலுவலகங்களில் பரவியுள்ள ஊழலை அரசு அலுவலர்களால்தான் தடுக்க முடியும்.
எந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்தத் துறை மற்றும் எந்தெந்த அலுவலர் மூலமாக எவ்வளவு தொகை போகிறது என்ற கணக்கெல்லாம்கூட பொதுவாகப் பேசும்போது ஊழியர் சங்கங்கள் வெளிப்படையாகப் பேசுகின்றன. ஆனால் அதை ஓர் அறிக்கையாகக்கூட இச் சங்கங்கள் வெளியிட்டதில்லை.
“”அரசு விழாக்களுக்கு செலவாகும் கூடுதல் தொகைக்காக எங்கள் ஊழியரை வசூல் வேட்டை நடத்த அனுமதிக்க மாட்டோம்” என்று எந்த தொழிற்சங்கமும் போர்க்கொடி தூக்கியதில்லை. ஊழல் செய்யும் அமைச்சரின் முகமூடியைக் கிழிப்பதில்லை.
எந்தெந்த அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பது சக ஊழியருக்குத் தெரியும். ஊழியர் சங்கத்துக்கும் தெரியும். தெரிந்திருந்தும், லஞ்சம் வாங்கும் ஊழியரை இடைநீக்கம் செய்தாலோ, பதவியிறக்கம் செய்தாலோகூட சங்கம் கொதித்தெழுகிறது. அவரைப் பாதுகாக்கிறது. அதே சமயம், அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பதற்காக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதில்லை. சங்கத்தைவிட்டு அவரை வெளியேற்றியதும் இல்லை.
எத்தனை அறிவார்ந்த தத்துவம் பேசும் அரசியல் கட்சியைச் சார்ந்த சங்கமாக இருந்தாலும் சரி, ஊழல் அலுவலரை உறுப்பினராக வைத்துக்கொள்ள தயக்கம் காட்டுவதில்லை.
இப்போது சொல்லுங்கள்…
லஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா?
Posted in abuse, Allegations, America, Assassinations, Bangladesh, Biz, Blair, Bribery, Bribes, British, Burma, Bush, Business, Cabinet, Campaign, China, Commonwealth, Contribution, Corruption, crimes, Democracy, Dictators, Dictatorship, Dubya, Elections, England, English, Ferdinand, Finance, Food, Freedom, GWB, Haseena, Hasina, Imelda, Independence, India, Indonesia, Iraq, Khaled, Kingdom, Kings, Laundering, Law, Leaders, Lokpal, London, Luxury, Marcos, Military, Minister, MLA, Money, MP, Murder, Mynamar, Nawaz, Needy, nexus, oil, Order, Pakistan, Party, Phillipines, PM, Politics, Polls, Poor, Power, President, Prince, Princes, Princess, Princesses, Queens, Rich, Saddam, Sharif, Sheikh, Shoes, Suhartho, Suharto, Taiwan, Tamil, Thailand, Tony, UK, US, USA, Wealth, Zia | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2007
நவீன திருதராஷ்டிரர்கள்!
டி.ஜே.எஸ். ஜார்ஜ்
திருதராஷ்டிரரின் சிக்கலான குணநலன்களுக்கு அடிப்படையாக அமைந்த அம்சம் என்னவென்றால், தனது ஆவி, பொருள் அத்தனையையும் செலவழித்தாவது தனது மகன்களை மாமனிதர்களாக்கிவிட வேண்டும் என்னும் அவரது ஆசைதான்.
தனது மகன்களின் நலனை தன் ராஜ்ஜியத்தின் நலன்களுக்கும் மேலானதாகக் கருதினார் அவர். செயல்களில் நேர்மை குறித்த கேள்வி ஒருபொழுதும் அவரது நெஞ்சில் எழவில்லை.
வியாசர் இப்பொழுது இருந்திருப்பாரானால், 21-ம் நூற்றாண்டு இந்தியாவைப் பற்றியும் எழுதியிருப்பார். அதில் ஒரே வேறுபாடு என்னவென்றால், அக்கால இந்திரப்பிரஸ்தத்தில் நூறு மகன்களைக் கொண்ட ஒரே ஒரு திருதராஷ்டிரர்தான் இருந்தார். ஆனால் இன்று ஒன்று அல்லது இரு மகன்களைக் கொண்ட நூறு திருதராஷ்டிரர்கள் இருக்கின்றனர்.
பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகியவை அடங்கிய இன்றைய இந்திரப்பிரஸ்தத்தில் நாம் காண்பது என்ன?
பொது வாழ்க்கையின் அடிப்படை நாகரிகங்களையெல்லாம் உதறிவிட்டு, தமது வாரிசுகளை மட்டுமே தலைவர்களாக்குவதற்காக தமது திறமை, சாதுர்யம் அனைத்தையும் பயன்படுத்தும் அபிநவ திருதராஷ்டிரர்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அந்த வியாசருக்கே ஓரிரு சகுனிவித்தைகளைக் கற்றுக்கொடுக்கக்கூடியவர் ஒருவர் உண்டென்றால், அது தேவ கௌடாதான். அவரை நெருங்கிவந்துகொண்டிருப்பவர்கள் கருணாநிதியும் கருணாகரனும். தில்லியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எம்.பி.க்களைக் கொண்டிருப்பதால் கிடைத்திருக்கும் தாற்காலிக செல்வாக்கால் ஒருவர் தனது திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார்.
இன்னொருவரோ, அனைவராலும் வெறுக்கப்படும் ஒரு மகனுக்காக எதையெதையோ செய்துகொண்டு, தள்ளாடிக்கொண்டிருக்கும் பரிதாபத்துக்குரிய நபராகிவிட்டார்.
தேவ கெüடாவின் பிடியும் நழுவிக்கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. நிமிடத்துக்கு நிமிடம் தனது நிலையை மாற்றிக்கொள்வதுடன், தனக்குத்தானே முரண்பாடான நிலைகளை மேற்கொள்ளும் நிலைமைக்கு ஆளாகிவிட்டார் அவர். தனது எதிரிகளே மிரளும் அளவுக்கு வில்லங்கமான சதித் திட்டங்களைத் தீட்டக்கூடிய மூளை அவருக்கு. இப்போதோ அவரது நண்பர்களே அஞ்சி நடுங்கும் மனிதராகிவிட்டார் அவர். இதைப்பற்றி பாஜகவினரைக் கேட்டால் தெரியும்.
கெட்டிக்கார திருதராஷ்டிரராக இருக்க வேண்டுமென்றால், வஞ்சகப் புத்தி மட்டும் இருந்தால் போதாது; இரக்கமற்ற கல்நெஞ்சராகவும் இருந்தாக வேண்டும். நவீன யுகத்தின் மிக வெற்றிகரமான வம்சத் தலைவராக இந்திரா காந்தியை ஆக்கியவை அந்தக் குணங்களே ஆகும். அவர் மறைந்து 23 ஆண்டுகள் ஆன பிறகும் உறுதியாக, வலிமையாக, வெற்றி கொள்ள முடியாததாக, தகர்க்க முடியாததாக… ஓர் அரசாட்சியைப்போல அவரது வம்சம் ஆண்டுகொண்டிருக்கிறது. அது முடிவின்றி நீள்வதைப்போலத் தோன்றுகிறது; மன்மோகன் சிங்கைத் தொடர்ந்து ராகுல் காந்தி வரவிருக்கிறார்; அவருக்குப் பின் பிரியங்கா காந்தி வருவார். இந்திரா காந்தியில் தொடங்கி வழிவழியாக வந்ததைப்போல மீண்டும் அடுத்த வாரிசுகளின் வரிசை தொடங்கிவிடும்போலத் தோன்றுகிறது.
அதனுடன் ஒப்பிட்டால் கெüடாவின் வம்சாவளி ஒன்றுமே இல்லை. அவர் காங்கிரûஸக் காலைவாரி விட்டுவிட்டு பாரதிய ஜனதாவுடன் கைகோத்தபோது, தனது மகனை முதல்வர் சிம்மாசனத்தில் அமர்த்துவதற்கு அவர் மேற்கொண்ட சாதுர்யமான நடவடிக்கையாக அது கருதப்பட்டது.
பிறகு காங்கிரஸýடன் உறவு கொள்வதற்காக பாஜகவைக் காலைவாரிவிட்டார் அவர். பின்னர் மீண்டும் பாஜகவைக் கரம்பிடிக்க காங்கிரûஸக் கைகழுவினார். பிறகு ஏறக்குறைய பாஜகவைக் கவிழ்க்கும் வகையில் புதிய “12 கட்டளைகளை’ அறிவித்தார் கெüடா. அதன் மூலம் அவர் விடுத்த செய்தி என்னவென்றால், பாவப்பட்ட மனிதரான எடியூரப்பா முதல்வராகிவிட்டாலும் சரி, ஒருநாள்கூட அவர் நிம்மதியாக உறங்கிவிட முடியாது என்பதுதான். காலைவாருவதில் மன்னரான கெüடா, அவரை தன் விருப்பம்போல ஆட்டுவித்துவிடுவார் என்பது நிச்சயம்.
இருந்தபோதிலும், தேவ கெüடாவுக்கும் பரிதாபகரமான ஒரு பக்கம் உள்ளது. மதச்சார்பின்மை என்ற துரும்பைப் பிடித்துக்கொள்ள அவர் செய்யும் முயற்சிதான் அது. “மதச்சார்பற்ற ஜனதா தளம்’ (ம. ஜனதா தளம்) (ஜேடி-எஸ் -செக்யூலர்) என்பதற்கு, “மகன்களின் ஜனதா தளம்’ (ம. ஜனதா தளம்) (ஜேடி-எஸ் ~ சன்ஸ்) என்று எப்பொழுதோ விளக்கம் கொடுத்துவிட்டனர் கர்நாடக மக்கள்.
ஆனால், அதன் மூத்த தலைவரால்தான் அந்த உண்மையை ஒப்புக்கொள்ள இயலவில்லை. மாறாக, பாஜகவுடன் கூட்டணி வைப்பதாலேயே தான் மதச்சார்பற்றவர் என்பது இல்லை என்றாகிவிடாது என்று கஷ்டப்பட்டு விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார் கெüடா. அதாவது, மதச்சார்பின்மை என்பது இனி “நேர்மையின்மை’ என்பதாகிவிடும்.
இவ்வளவு அனுபவம் மிக்க மனிதர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்? இதற்கான பதிலை எப்பொழுதோ யுகாந்தவில் கூறிவிட்டார் ஐராவதி கார்வே.
“”திருதராஷ்டிரருக்கு யோசனை கூறும்போது, பேராசையின் அறிவீனம் குறித்தும், நீதியின் அவசியம் குறித்தும், ஆன்மாவின் அழியாத் தன்மை குறித்தும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் விதுரர். ஆனால், அந்த யோசனைகளுக்கு அவர் செவிசாய்க்கவுமில்லை; அதனால் பயன்பெறவும் இல்லை. விழலுக்குப் போய்ச் சேர்ந்தன அந்த யோசனைகள். சரியெது, தவறெது என்று பிரித்தறியும் திறனை இழந்துபோய்விட்டார் திருதராஷ்டிரர்” என்று அப்பொழுதே கூறிவிட்டார் கார்வே.
(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)
—————————————————————————————————————————-
சாணக்கியருக்கு ஒரு தர்மசங்கடம்
நீரஜா செüத்ரி
அரசியல் சாணக்கியர் எனக் கருதப்படும் எச்.டி. தேவ கெüடாவுக்கே இப்போது ஒரு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வதா, வேண்டாமா என்பதுதான் அது. அவருக்கோ கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. பாஜகவின் ஆதரவு இல்லாமலே அவரது மகனின் அரசு தொடரட்டும் என்று முதலில் நினைத்தார். இப்போதோ பாஜகவை ஆதரிக்க விரும்புகிறார்; அதே நேரத்தில் அதை முழுமையாகத் தாம் ஆதரிக்கவில்லை என்று காட்டிக்கொள்ளவும் விரும்புகிறார். இதுதான் இப்போது சிக்கலாகிவிட்டது.
இதே கெüடாதான், 1997-ல் காங்கிரஸ் அளித்துவந்த ஆதரவை சீதாராம் கேசரி திரும்பப் பெற்றவுடன், பாஜக ஆதரவு தர முன்வந்தபோதிலும், அதை நிராகரித்துவிட்டு பிரதமர் பதவியில் இருந்து இறங்கினார் என்பதை மறந்துவிட முடியாது.
2006-ல் பாஜகவுடன் அவரது மகன் கூட்டணி சேர்ந்தவுடன், அதைத் “துரோகச் செயல்’ என்று வர்ணித்தார் கெüடா. தனது பாஜக எதிர்ப்பு நிலையை நிரூபிப்பதற்கு அவர் மேற்கொண்ட நிலைப்பாடுகளில் அதுவும் ஒன்று. அப்போது, “துரோகம்’ செய்ததற்காக தனது மகனைத் தகுதி நீக்கம் செய்யுமாறும், மதச்சார்பற்ற ஜனதா தள சட்டமன்றக் கட்சித் தலைவராக எம்.பி. பிரகாஷை நியமிக்குமாறும் கோரி கர்நாடக ஆளுநருக்கு 2006-ல் கடிதம் எழுதினார் கெüடா. “மனந்திருந்திய மைந்தனை’ சில வாரங்களிலேயே அவர் வரவேற்றுச் சேர்த்துக்கொண்டபோதிலும், அவர் எழுதிய கடிதத்துக்குப் பதிலாக வேறு கடிதம் எதையும் அவர் அனுப்பவில்லை.
இப்போது பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் அறிவித்துள்ள போதிலும், 12 நிபந்தனைகளை விதித்திருக்கிறார் கெüடா. அந்த நடவடிக்கையில் இருந்து தான் விலகியிருப்பதாகக் காட்டிக்கொள்வதே அதன் நோக்கம். கர்நாடகத்தை ஹிந்துத்துவா சோதனைச்சாலையாக மாற்ற பாஜக முயற்சி செய்கிறது என்று கூறியே, முதலில் அக் கட்சிக்கு ஆதரவு தர ம. ஜனதா தளம் மறுத்தது என்பது குறிப்பிடத் தக்கது.
கூட்டணி உடன்பாட்டின்படி, பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராவதற்கு வழிவிட்டு அக்டோபர் 3-ல் எச்.டி. குமாரசாமி பதவியில் இருந்து விலகியாக வேண்டிய நிலை இருந்தது; அப்பொழுது, காங்கிரஸýடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில், அக் கட்சிக்குத் தூது விட்டார் கெüடா. ஆனால், அந்தத் தூண்டிலில் காங்கிரஸ் சிக்கவில்லை; சோனியாவையும் அவரால் சந்திக்க முடியாமல் போனதால், எரிச்சலடைந்தார் கெüடா.
நம்ப முடியாததாகத் தோன்றும் இன்னொரு விஷயம் என்னவென்றால், கர்நாடகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துவிட்ட பிறகு, மாநில சட்டப் பேரவையைக் கலைக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடந்த வாரம் தேவெ கெüடா கடிதம் எழுதியிருப்பதாகக் கூறப்படுவதுதான். பாஜகவுடன் கைகோப்பதைவிட தேர்தலைச் சந்திப்பதற்கு அவர் தயாராக இருந்தார் என்பதைப் பதிவுசெய்வதாக அது இருக்கும் என்று நினைத்திருக்கக்கூடும்.
கர்நாடகத்தில் மதச்சார்பற்ற சக்திகளின் ஆதரவு அவருக்கு இருக்கிறது. மாநிலத்தில் உள்ள வொக்கலிகர் சமுதாயத்தின் பெருந்தலைவராகக் கருதப்படும் அவர், முஸ்லிம்களைக் கவர்ந்திழுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருக்கிறார். அண்மையில்தான், கட்சியின் மாநிலத் தலைவராக ஒரு முஸ்லிமை அவர் நியமித்தார். அண்மையில் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் சிறப்பான வெற்றியை மதச்சார்பற்ற ஜனதா தளம் பெற்றது. சிறுபான்மைச் சமுதாயத்தினர் அக் கட்சிக்கு வாக்களித்திருக்காமல் அந்த வெற்றி கிடைத்திருக்காது. பாரம்பரியமாக ஜனதா தளத்துக்கு இருந்துவந்த முஸ்லிம்களின் ஆதரவில் குறிப்பிடத் தக்க பங்கை தேவெ கெüடா சுவீகரித்துக்கொண்டிருக்கிறார்.
உள்ளாட்சி மன்றத் தேர்தலில், தனது பலத்தை முன்பிருந்ததைவிட மும்மடங்காக மதச்சார்பற்ற ஜனதா தளம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இருந்தபோதிலும் அக் கட்சியைப் பொருத்தவரை தேர்தலைச் சந்திப்பதற்கு இது சரியான நேரமல்ல என்று கருதியதால்தான் பி.எஸ். எடியூரப்பா முதல்வர் ஆவதற்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவுக்கு கெüடா குடும்பம் வந்தது.
கூட்டணி ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல், “தந்தை-மகன்’ கூட்டணியால் ஏமாற்றப்பட்டதால், பாஜக மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டுவிட்டது. நமது சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் (எடியூரப்பா) மாநிலத்தின் தலைமைப் பதவிக்கு வருவதைத் தடுத்துவிட்டார்களே என்று லிங்காயத்து சமுதாயத்தினரும் கோபமுற்றனர். அந்தச் சூழ்நிலையில் தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால், பாஜக சிறப்பான வெற்றியைப் பெற்றிருந்திருக்கும். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மற்றவற்றைவிட அதிக இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பது பாஜகவே என்பது கவனிக்கத்தக்கது.
இன்றைய அரசியலில் வர்த்தக நோக்கங்களும் ஒரு முக்கியப் பங்கை வகித்துக்கொண்டு இருக்கின்றன. பெங்களூர்- மைசூர் அடிப்படைக் கட்டமைப்பு வளாகத் திட்டத்தை நிறைவேறாமல் முடக்கிவிட கெüடாக்கள் விரும்பினர் என்பது அனைவரும் அறிந்ததுதான். பலநூறு கோடியில், “புது பெங்களூர்’ நகரத்தை நிர்மாணிப்பது குறித்தும் பேச்சு இருக்கிறது. உறவை முறித்துக்கொள்வது என்ற முடிவை பாஜகவும் ம. ஜனதா தளமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவ்விரு கட்சிகளையும் அத் திட்டத்தில் அக்கறை கொண்ட சக்திகள் வலியுறுத்தி இருக்கவும்கூடும்.
கெüடாவுடன் கூட்டணி வைக்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது. பெரும்பான்மையினர் அதற்கு எதிராக உள்ளனர். அதுவேதான் காங்கிரஸ் மேலிடத்தின் நிலையும். ஏற்கெனவே கூட்டணி வைத்து, கையைச் சுட்டுக்கொண்ட கட்சி காங்கிரஸ். எனவே, தேவ கெüடாவை நம்ப முடியாது என அக் கட்சி கருதுகிறது. அதோடு, கெüடாவுடன் கைகோப்பது அரசியல் ரீதியில் பயன்தரக்கூடியதுதல்ல என்றும் காங்கிரஸ் கணக்குப் போடுகிறது.
அதோடு, மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து பிரிந்துவந்து காங்கிரஸில் சேர்ந்திருக்கும் சித்தராமய்யாவைப் பகைத்துக்கொள்வதாகவும் அது ஆகிவிடும். மேலும், கர்நாடகத்தின் மூன்றாவது பெரிய சமூகமான குருபா சமூகத்தைச் சேர்ந்தவர் சித்தராமய்யா. அவர்களது ஆதரவு காங்கிரஸýக்குப் பலம் சேர்ப்பதாக அமையும்.
கெüடாவும் அவரது மகனும் இல்லாத மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்துக்கொள்வது குறித்து காங்கிரஸ் ஆலோசித்திருக்கக்கூடும். ஆனால், 12 எம்எல்ஏக்களுடன் தில்லியில் முகாமிட்டிருந்த ம. ஜனதா தளத்தின் மூத்த தலைவரான எம்.பி. பிரகாஷால், தேவையான எண்ணிக்கையில் எம்எல்ஏக்களைத் திரட்ட முடியவில்லை.
கர்நாடகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைவது, விந்திய மலைக்குத் தெற்கே அக் கட்சி முதல் முறையாகக் காலூன்ற வழிவகுத்துவிடும் என்பதால், மாநில சட்டப் பேரவையைக் கலைத்துவிட வேண்டும் என்று சில காங்கிரஸôர் கூறுகின்றனர்.
வேறு சிலர் அதற்கு மாறாக வாதிடுகின்றனர். முதலாவதாக, பேரவையைக் கலைத்தால் உடனடியாகக் கண்டனங்கள் எழும். பாஜக -ம. ஜனதா தள கூட்டணிக்கு 129 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது. குடியரசுத் தலைவர் முன் 125 எம்எல்ஏக்களின் அணிவகுப்பையும் நடத்திவிட்டனர். குடியரசுத் தலைவர் ஆட்சியை கர்நாடகத்தில் பிரகடனம் செய்தபொழுதே சட்டப் பேரவையையும் கலைத்துவிட்டிருந்தால், அது வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
ஆனால் அப்பொழுது அதை பிரதமர் தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பொம்மை வழக்கின் தீர்ப்பு, பிகார் அனுபவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், தற்போது அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்சினையில் இடதுசாரிகளுடனான உரசலை மனத்தில் கொண்டும், இந்த நேரத்தில் இன்னொரு சர்ச்சையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று கருதியும் பிரதமர் அவ்வாறு முடிவுசெய்திருக்கலாம்.
அது மட்டுமல்லாமல், அரசியல் நோக்கங்களும் உள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் சேர்ந்து பாஜக ஆட்சி அமைக்குமானால், அதற்கு அனுதாப ஆதரவு என்பது இனி இருக்க வாய்ப்பில்லை. தேவ கெüடா விதித்திருக்கும் நிபந்தனைகளால் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் அதிகரித்து, ஆட்சி சுமுகமாக நடைபெறுவதைக் கடினமாக்கிவிடும். எனவே, தேர்தல் இப்போது வந்தாலும் சரி, பிறகு வந்தாலும் சரி, பொறுத்திருப்பதன் மூலம் சிறப்பான வெற்றியைப் பெற முடியும் என நினைக்கிறது காங்கிரஸ் கட்சி.
—————————————————————————————————————————-
சந்தர்ப்பவாதமும் வாரிசு அரசியலும்
பொதுவாக, மன்னராட்சி மீதான மோகமும், அடிமைத்தன சிந்தனையும் படித்தவர்கள் மத்தியிலும் பரவலாகவே காணப்படுகிறது என்பதுதான் உலகம் ஒத்துக்கொண்டிருக்கும் உண்மை.
பிரிட்டன், பெல்ஜியம், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற நாடுகளில் பெயரளவிலாவது மன்னராட்சி முறை தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இப்போதும் பிரிட்டிஷ் மகாராணியின் தலைமைக்குத் தலைவணங்குவதாகப் பெயரளவில் சொல்லிக் கொள்கின்றன. இந்தியாவிலும் சரி, முன்னாள் மகாராஜாக்கள் மட்டுமல்ல, ஜமீன்தார்களும் பண்ணையார்களும் இப்போதுகூட அவரவர் இடங்களில் மரியாதைக்குரியவர்கள்தான். இவர்களில் பலர் மக்கள் பிரதிநிதிகளாகவும் வம்சாவளியாகத் தொடர்கின்றனர்.
நிலைமை இப்படி இருக்கும்போது, தெற்கு ஆசியாவில் வாரிசு அரசியல் தொடர்வதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இந்தியாவையே எடுத்துக்கொண்டால், அனைத்து மாவட்டங்களிலும், சொல்லப்போனால் தாலுகா வரையில் அனைவருக்கும் தெரிந்த அரசியல் குடும்பம் நிச்சயமாக நேரு குடும்பம் மட்டும்தான். அந்தக் குடும்பத்தின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பது உண்மை என்றாலும், இந்தியாவை ஒரு நாடாகப் பிணைத்து வைத்திருக்கும் பல விஷயங்களில் நேரு குடும்பத்தின் செல்வாக்கும் ஒன்று.
மன்னராட்சி வாரிசுகளுக்கும், இப்போதைய மக்களாட்சி வாரிசுகளுக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. அரச குடும்பத்தினர், அவர்கள் ஆண்ட நாட்டைத் தங்களது உரிமைக்கு உள்பட்ட சொத்து என்று கருதினார்கள். அதனால்தானோ என்னவோ, அரசர்களில் பலரும் தனது நாடும் மக்களும் செழிப்புடன் திகழ வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினர். ஆனால் அரசியல் வாரிசுகள் அந்த அளவுக்கு நாட்டையும் மக்களையும் நேசிக்கிறார்களா என்று கேட்டால், தயக்கம்தான் தலைதூக்குகிறது. அதற்குக் காரணம், எந்தவிதத் தியாகமும் செய்யாமல், உரிமையும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக அடைந்த பதவிகள் பொறுப்புணர்வையும் கடமையுணர்வையும் தருவதில்லை.
அரசியலை ஒரு வியாபாரம் அல்லது தொழில்போலக் கருதி தங்களது வாரிசுகளை கட்சியின்மீதும் ஆட்சியின்மீதும் திணிக்கும் தலைவர்கள், தங்களை மன்னர்களாகக் கற்பனை செய்து கொண்டு, தங்களது வாரிசுகளைத் தயார்படுத்துகின்றனர். அந்த வாரிசுகளுக்கு நாடாளும் திறமை இருக்கிறதா என்று யோசிப்பதில்லை. அதனால்தான், எல்லா வாரிசுகளாலும் அரசியலில் வெற்றி பெற முடிவதில்லை.
மக்களாட்சியில் ஒரு மிகப்பெரிய நன்மை உண்டு. மன்னராட்சியில் இருப்பதுபோல, இறைவனால் அனுப்பப்பட்டவன்தான் அரசன் என்கிற மனப்போக்கு இங்கே செல்லுபடியாகாது. மக்களின் ஏகோபித்த ஆதரவு இல்லாவிட்டால், என்னதான் திணித்தாலும் எந்த வாரிசாலும் தாக்குப்பிடிக்க முடியாது. தங்களை நிலைநிறுத்திக் கொண்ட வாரிசுகளைவிட, வந்த சுவடு தெரியாமல் காற்றோடு கலந்த வாரிசுகளின் எண்ணிக்கைதான் அதிகம்.
அரசியலில் மட்டுமல்ல, எந்தத் துறையில் ஆனாலும் திறமை மட்டும்தான் தாக்குப்பிடிக்க முடியும் என்பதுதான் மக்களாட்சி மலர்ந்ததால் ஏற்பட்டிருக்கும் மகத்துவம். வாரிசு என்கிற அடையாளம் நுழைவுச்சீட்டாக இருக்க முடியுமே தவிர துருப்புச் சீட்டாக முடியாது.
அனுதாப அலையை சாதகமாக்கி அரசியல் லாபம்தேட வாரிசுகளைக் களமிறக்குவது என்பது தெற்கு ஆசியாவின் அத்தனை நாடுகளிலும் பலமுறை கையாளப்பட்ட யுக்திதான். அந்த வரிசையில் இப்போது பேநசீர் புட்டோவின் 19 வயது மகன் பிலாவலைக் களமிறக்கி இருக்கிறது பாகிஸ்தான் மக்கள் கட்சி. பிலாவல் தாக்குப்பிடிப்பாரா இல்லையா என்பதை காலம்தான் கணிக்க வேண்டும்.
ஆனால், ஒரு விஷயம் மட்டும் நிச்சயம். வாரிசுகளை முன்னிறுத்தி அனுதாபம் தேடும் சந்தர்ப்பவாதம் தொடர்ந்து வெற்றி பெறுவதில்லை. நிலையான வெற்றிக்கு உத்தரவாதம் திறமையே தவிர பரம்பரை பாத்தியதை அல்ல!
Posted in Asia, Belgium, Benazir, Bhutto, Congress, DMK, dynasty, Ediyurappa, Greed, India, Jan Morcha, Janata, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, JD, JD(S), JD(U), Kalainjar, Kalainjar TV, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karnataka, Karnatata, Karnatka, Karuna, Karunagaran, Karunakaran, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kerala, Leaders, Maharaja, Monarchy, Money, Muraleetharan, Muralitharan, Neeraja, Neeraja Choudhri, Neeraja Choudhry, Neeraja Chowdhri, Neeraja Chowdhry, Neeraja Chowdhury, Neeraja Chowdry, Neerja, PAK, Pakistan, Politics, Portugal, Power, Raja, Spain, Throne, UK, Yediyurappa | 2 Comments »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2007
பிரிட்டன் நாவலாசிரியைக்கு இலக்கிய நோபல் பரிசு
இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
ஸ்டாக்ஹோம், அக். 12: பிரிட்டனைச் சேர்ந்த பெண் நாவலாசிரியர் டோரிஸ் லெஸ்ஸிங் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இலக்கியத்துக்கான நோபல்பரிசைப் பெறும் 11-வது பெண் இவர். “நாகரிகமயத்தைப் பகுத்தறியும் கடவுள் மறுப்பு, உத்வேகம், தொலைநோக்குத் திறன் கொண்ட பெண்ணியவாதி’ என்று நோபல் கமிட்டி இவரைப் பற்றிக் கூறியுள்ளது.
1962-ல் வெளியான “தி கோல்டன் நோட்புக்’ என்ற இவரது புத்தகம் இவரை பெண்ணுரிமைக்கு குரல் கொடுப்பவராக அடையாளம் காட்டியது. எனினும் தனக்கு இதுபோன்ற அடையாளங்கள் வழங்கப்படுவதை விரும்பாத அவர், தனது படைப்புகளுக்கு அரசியலில் எந்தப் பங்கும் இல்லை என்று கூறிவந்தார்.
தி கிராஸ் இஸ் சிங்கிங், தி குட் டெரரிஸ்ட், எ மேன் கேவ் டூ உமென் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். கம்யூனிசம், சூஃபியிசம் உள்ளிட்ட பல்வேறு சிந்தாந்தங்களின் தாக்கங்கள் அவரது படைப்புகளில் இருக்கும்.
டோரிஸ் லெஸ்ஸிங்
ஈரானில் உள்ள கெர்மான்ஷா நகரில் 1919-ம் ஆண்டு டோரிஸ் லெஸ்ஸிங் பிறந்தார். இவரது தந்தை ராணுவ வீரர்; தாய் ஒரு நர்ஸ்.
பண்ணை ஒன்றில் பணிபுரிவதற்காக அவரது குடும்பம் 1927-ஆம் ஆண்டு வடக்கு ரொடீஷியாவுக்கு (தற்போது ஜிம்பாப்வே) குடிபெயர்ந்தது.
சாலிஸ்பரி நகரில் (தற்போது ஹராரே) உள்ள ரோமன் கத்தோலிக்க பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கிய அவர், தனது 13-வது வயதில் பள்ளியைவிட்டு விலகி சுயமாகப் படிக்கத் தொடங்கினார். டெலிபோன் ஆபரேட்டர், நர்ஸ் என பல்வேறு பணிகளைச் செய்தார்.
1939-ம் ஆண்டு ஃபிராங்க் விஸ்டம் என்பவரைத் திருமணம் செய்தார். அவர் மூலமாக 2 குழந்தைகளுக்குத் தாயான டோரிஸ், 1943-ல் அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றார். அதன் பிறகு காட்ஃபிரைட் லெஸ்ஸிங் என்ற அரசியல்வாதியைத் திருமணம் செய்த டோரிஸ், 1949-ல் அவரையும் விவாகரத்து செய்தார். அதன் பிறகுதான் “தி கிராஸ் இஸ் சிங்கிங்’ என்ற தனது முதல் நாவலை டோரிஸ் எழுதினார்.
“தி கிராஸ் இஸ் சிங்கிங்’
1950 வெளியான டோரிஸின் முதல் நாவல் இது. ஆப்பிரிக்காவில் கறுப்பு இனத்தவர் மீது வெள்ளை இனத்தவரின் அடக்குமுறை குறித்து விளக்கும் நாவல். இந்த கதை முழுவதும் ஜிம்பாப்வேயில் நடப்பதாக எழுதப்பட்டது.
“தி கோல்டன் நோட்புக்’
1962-ல் வெளியான இந்த நாவல் டோரிûஸ பெண்ணுரிமைவாதியாக அடையாளம்
காட்டியது. இந்த நாவல் ஒரு பெண்
எழுத்தாளரின் கதை. பணி, காதல்,
அரசியல் போன்ற பல்வேறு பரிமாணங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்னை பற்றியது.
“தி ஃபிப்த் சைல்ட்’
1988-ல் வெளியான இந்த நாவல் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஒரு மகிழ்ச்சியான தம்பதியின் வாழ்வில் 5-வது குழந்தை பிறந்த பின்னர் நிகழும் சம்பவங்களைக் கூறும் நாவல் இது.
Posted in africa, Award, Bio, Biography, Biosketch, Books, Britain, British, Commonwealth, Doris, England, Female, Feminism, Icon, Label, Lady, laureate, Lessing, Literature, London, manuscript, names, Nobel, Novel, novelist, people, Politics, Prize, Read, Reviews, Rhodesia, She, Synopsis, UK, Woman, Women, Zimbabwe | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 7, 2007
இளையராஜா மகன் யுவன்சங்கர் ராஜா விவாகரத்து வழக்கு : விருப்பத்துடன் பிரிகிறார்கள்
சென்னை, ஆக. 7-
இசைஞானி இளையராஜா வின் இளைய மகன் யுவன்சங்கர் ராஜா. இவரும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார்.
யுவன்சங்கர் ராஜா 2002-ம் ஆண்டு லண்டனில் `பிரண்ட்’ என்ற இடத்தில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த லண்டனை சேர்ந்த சந்திரன் சுஜாயா என்ற பெண்ணுடன் யுவன்சங்கர் ராஜாவுக்கு நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்க
தொடங்கினார்கள்.வீட்டிற்கு தெரியாமலே இருவரும் 3.9.03-ம் ஆண்டு லண்டனில் பதிவுத்திருமணம் செய்து கொண்டார்கள். இந்த விஷயம் இருவரது வீட்டுக்கும் தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இரு வீட்டாரும் பேசி முறைப்படி திருமணம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி 21.3.05-ம் ஆண்டு இந்து வைதீக முறைப்படி சென்னையில் திருமணம் நடந்தது.
யுவன்சங்கர் ராஜா-சந்திரன் சுஜாயா தம்பதிகளுக்கு இது வரை குழந்தை இல்லை.
கடல் கடந்து தொடங்கிய இவர்கள் காதல் இரண்டு ஆண்டுகளிலேயே கசந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர்.
பிரபல இசை அமைப்பாள ராகதிகழும் யுவன்சங்கர் ராஜா வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசலை சரி செய்ய சினிமா பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் அவர்களின் சமரச முயற்சி வெற்றி பெறவில்லை. இருவரும் பிரிந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர்.
இருவரும் பிரிய விரும்புவ தாக பரஸ்பர புரிந்துணர்வுபடி விவாகரத்து பெற முடிவு செய்து இன்று ஐகோர்ட்டில் உள்ள குடும்ப நல கோர்ட்டுக்கு வந்தார்கள். விவாகரத்து கோரி இருவரும் ஒன்றாக சேர்ந்து மனு தாக்கல் செய்தனர்.
கோர்ட்டுக்கு வந்த யுவன் சங்கர் ராஜாவும் அவரது மனைவி சந்திரன் சுஜாயாவும் கோர்ட்டுக்குள் ஒன்றாகவே அமர்ந்து இருந்தனர். அப்போது எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் சிரித்து பேசியபடி இருந்தார்கள்.
Posted in Affair, Alimony, Arranged, Audio, Celebrity, Cinema, Divorce, Faces, Famous, Films, Ilaiaraja, Ilaiyaraaja, Ilaiyaraja, IR, Isai, Legends, London, Love, Marriage, MD, Movies, music, Music Director, Notable, people, Raja, Reception, ShankarRaja, UK, Wedding, YSR, Yuvan, Yuvan Shankar Raja | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 6, 2007
ஒரு கோடி சூரிய ஒளி – கறுப்பு மழை!
என். ரமேஷ்
1945ஆகஸ்ட் 6. காலை 8.15. அதுவரை மனித குலம் அறிந்திராத, அதன் இருப்பையே கேள்விக்குறியாக்கும் அழிவுசக்தி கோரத்தாண்டவமாடியது ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில். அந்நகரின் மீது “ஒரு கோடி சூரியன்கள்’ கண நேரம் ஒளியூட்டி மறைந்தது போன்ற தோற்றம். தொடர்ந்து காரிருள் சூழ்ந்தது; “கறுப்பு மழை’ பெய்தது. அமெரிக்க போர் விமானம் அந்த நகரின் மீது அணுகுண்டு வீசிய ஒரு சில நிமிடங்களில் இவை நிகழ்ந்தன.
அந்தக்கணம் குறித்து, தாக்குதலில் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்த (அப்போது 12 வயதான) காஸ் சூயிஷி கூறுகிறார்,”ஒரு விநாடிக்கு முன் சொர்க்கம் போன்று ஒளிர்ந்தது; மறு விநாடி நரகமாகிவிட்டது’
நகரில் ஆங்காங்கே தீப்பற்றி எரியத் தொடங்கியது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தால் தயாரிக்கப்பட்ட அந்த அணுகுண்டால் ஏற்பட்ட வெடிப்பு, வெப்பம், தீப் பிழம்புகள், கதிரியக்கத்தால் உடலில் தீப்பற்றி, நுரையீரல் வெடித்து, மூச்சுத் திணறி அப்பாவிக் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 90,000 பேர் உடனடியாக இறந்தனர். 1945-ஆம் ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை 1.45 லட்சமாக உயர்ந்தது.
ஹிரோஷிமாவைத் தொடர்ந்து நாகசாகியில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வீசப்பட்ட புளுட்டோனிய அணுகுண்டால் 70,000 பேர் இறந்தனர்.
அணு வெடிப்புக்குப் பிந்தைய 62 ஆண்டுகளில், பின் விளைவுகளால் ஒரு லட்சம் பேர் வரை இறந்திருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.
ஹிரோஷிமா, நாகசாகி அழிவைக் கண்ணுற்ற மகாத்மா காந்தி கூறியது: “அணுகுண்டு விளைவித்த மாபெரும் சோகம் நமக்கு கூறும் நீதி – அணு குண்டை எதிர் – அணுகுண்டு மூலம் அழிக்க முடியாது; வன்முறையை, எதிர்வன்முறையைக் கொண்டு வீழ்த்த முடியாது என்பதைப்போல. அகிம்சையின் மூலமே வன்முறையிலிருந்து உலகம் மீண்டு வர வேண்டும். அன்பால் மட்டுமே வெறுப்பை வெல்ல முடியும்’ என்றார்.
எனினும், 1945 முதல் இதுவரை உலகில் 1,28,000 அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு அணு ஆயுதப் படைக் கலைப்பு ஒப்பந்தங்களுக்குப் பிறகு தற்போது உலகில் ஏறத்தாழ 27,000 அணு ஆயுதங்கள் உள்ளன. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்பட்டவற்றில்,
- அமெரிக்காவில் 9,938 அணு ஆயுதங்கள் உள்ளன.
- ரஷியா – 16,000,
- பிரிட்டன் – 200,
- பிரான்ஸ் – 350,
- சீனா – 200. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்படாத
- இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் மொத்தம் 110 அணு குண்டுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
- இஸ்ரேலிடம் 80 அணு ஆயுதங்கள் உள்ளன.
இவற்றில் 12,000 அணு ஆயுதங்கள், ஏவுகணை உள்ளிட்ட தாங்கிகளில் பொருத்தப்பட்டு தயாராக உள்ளன; இதில் 3,500 ஆயுதங்கள் ஒரு நொடிக்குக் குறைவான நேரத்தில் செலுத்திவிடக்கூடிய தயார் நிலையில் உள்ளன. பெரும்பாலான ஆயுதங்கள், நேரில் போர் நடவடிக்கைகளில் ஈடுபடாத, பொதுமக்கள் அதிக அளவில் வசிக்கும் பெரு நகரங்களைக் குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ளன.
தவறான தகவல்கள், தகவல் இடைவெளிகள் காரணமாக எந்த நேரத்திலும் அணு ஆயுதத் தாக்குதல் நடக்கக்கூடிய சூழலில் நாம் வாழ்கிறோம்.
1945 முதல் இதுவரை நிகழ்த்தப்பட்ட 2,051 அணு வெடிப்பு சோதனைகள் காரணமாக ஏற்பட்ட கதிரியக்கத்தால் வரும் பல நூறு ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கானோர் மடிவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. ஹிரோஷிமா, நாகசாகியில் பேரழிவு ஏற்பட்ட 62-வது ஆண்டு நினைவு தினத்தின் போது வரும் செய்திகள் போரற்ற உலகை விரும்புவோருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுதங்களுக்கான குழு அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு அண்மையில் அளித்த அறிக்கையில்,”அமெரிக்கா, தன்னுடைய நேசநாடுகளின் பாதுகாப்புக்கு அணு ஆயுதங்கள் தேவைப்படுகின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்திய அணு ஆயுதங்களின் பெருக்கத்துக்கே வழிவகுக்கும் என இந்திய, உலக சமாதான இயக்கங்கள் அச்சம் தெரிவிக்கின்றன.
கதிரியக்கம், மரணம் என்ற வகையில் மனித குல அழிவுக்கு நேரடியாகவும், கல்வி, குடிநீர்த் திட்ட நதிகளை மடைமாற்றுவதன் மூலம் மறைமுகமாகவும் காரணமாக உள்ள அணு ஆயுதங்களை அறவே ஒழிக்க வேண்டும் என்பதே உலகம் முழுவதும் உள்ள சமாதான இயக்கங்களின் கோரிக்கையாக உள்ளது.
ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் 1996 ஜூலை 8ஆம் தேதி அணு ஆயுதங்கள் குறித்து தெரிவித்த கருத்து நினைவுகூரத்தக்கதாகும். “அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்ற அச்சுறுத்தலோ, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துதலோ போர்கள் குறித்த சர்வதேச சட்ட விதிகளை மீறுவதாகும்; குறிப்பாக சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை மீறுவதாகும்.
அணு ஆயுதக் கலைப்புக்கு வழிகோலும் சர்வதேச பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்து, அணு ஆயுதக் கலைப்பை சர்வதேச கண்காணிப்புடன் நடைமுறைப்படுத்துவது அனைத்து நாடுகளின் சட்டப்பூர்வ கடமை’ என்பதே அது.
ஏற்கெனவே ஐ.நா. சபையில் சுற்றுக்குவிடப்பட்டுள்ள வரைவு அணு ஆயுத உடன்படிக்கை “அணு ஆயுதங்களின் மேம்பாடு, சோதனை, உற்பத்தி, இருப்பு வைத்தல், மற்ற நாடுகளுக்கு வழங்குவது, பயன்படுத்துவது அல்லது பயன்படுத்தப்படும் என அச்சுறுத்துவது’ ஆகியவற்றைத் தடை செய்வதுடன் அணு ஆயுதங்களை “முற்றிலும் ஒழிப்பது’ ஆகிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்த உடன்படிக்கைக்கு உலக நாடுகளின் அரசுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுகளின் குடிமக்களும், மனித குல அழிவுக்கு வழிவகுக்கும் இவற்றைக் கைவிட வேண்டும் என தங்களது அரசுகளை நிர்பந்திக்க வேண்டும்.
——————————————————————————————————————-
போர் இன்னும் முடியவில்லை!
உதயை மு. வீரையன்
புகழ்பெற்ற அணு விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம் ஒரு நண்பர் கேட்டார்: “”மூன்றாவது உலகப் போரில் என்ன ஆயுதம் பயன்படுத்தப்படும்?…”
அதற்கு அவருடைய பதில்: “”மூன்றாவது உலகப் போரினைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் நான்காவது உலகப் போரில் கல்லும், வில்லும் பயன்படுத்தப்படும்…”
இதன் பொருள் என்ன? மூன்றாவது உலகப் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும். அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் உலகம் சுடுகாடாகிப் போகும். அதன் பின் புதிய மனிதர்கள் உருவாக வேண்டும். அந்த கற்காலத்தில் கல்லும், வில்லும்தானே கருவிகளாகும்?
அணு ஆயுதங்களால் உலக அழிவு நெருங்கிக் கொண்டிருப்பதைக் குறிப்பால் உணர்த்தவே, அந்த அணு விஞ்ஞானி இவ்வாறு உலகை எச்சரித்திருக்கிறார். ஆனால் இந்த எச்சரிக்கை யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை. உலக நாடுகள் மனம்போன போக்கில் போய்க் கொண்டிருக்கின்றன.
ஹிரோஷிமா, நாகசாகி என்ற பெயர்களை உச்சரித்த உடனேயே அணு ஆயுத அழிவுதான் கண் முன்னே காட்சி தரும். இரண்டாம் உலகப் போரின்போது 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இந்த இரு நகரங்களும் “பொடியன்’, “தடியன்’ என்னும் இரு ஆயுதங்களால் சில நொடிகளில் ஏற்பட்ட பேரழிவு மனித சிந்தனைக்கே அப்பாற்பட்டதாக இருக்கிறது.
அணுகுண்டு வீச்சின் விளைவாக மக்கள் நெருக்கமும், கட்டடப் பெருக்கமும் கொண்ட இருபெரு நகரங்களும் இருந்த இடம் தெரியாமல் அந்த நொடியே அழிந்து நாசமாயின. ஹிரோஷிமா நகரில் 76 ஆயிரம் கட்டடங்களில் 92 சதவிகிதத்துக்கும்மேல் வெடித்தும், இடிந்தும், எரிந்தும் போயின. நாகசாகியிலிருந்த 51 ஆயிரம் கட்டடங்களில் 36 சதவிகிதம் அவ்வாறு அழிந்து நாசமாயின.
ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா நகரில் இருந்ததாகக் கணக்கிடப்பட்ட மூன்றரை லட்சம் பேரில் 2 லட்சம் பேருக்கு மேல் 1950 வாக்கில் மடிந்தார்கள். நாகசாகியில் ஆகஸ்ட் 9 அன்று இருந்ததாகக் கணக்கிடப்பட்ட 2,70,000 பேரில் சுமார் 1,40,000 பேர் மாண்டு போயினர்.
இலக்குப் பகுதிகளில் சாவும் அழிவும் கண்மூடித்தனமாக நடந்தேறின. குழந்தைகள், பெண்கள், இளைஞர், முதியோர், படைகள், குடியிருந்தோர், வருகை புரிந்தோர், வீடுகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் } எவையும் விட்டுவைக்கப்படவில்லை. பலியானவர்களில் 90 சதவிகிதத்தினர் பொதுமக்கள். இப்போதும், அந்தக் குண்டுவீச்சு தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது.
ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்த அரைமணி நேரம் கழித்து காலை 8.45 மணியளவில் பெருந்தீ மூண்டது. அப்பகுதியிலிருந்த காற்று சூடேறி விரைவாக மேலே போனது. உடனே எல்லாத் திசைகளிலிருந்தும் குளிர்காற்று உள்ளே புகுந்தது. “தீப்புயல்’ விரைவில் வீசத் தொடங்கியது. மணிக்கு 65 கி.மீ. வேகம். காலை 11 முதல் மாலை 3 வரை வன்மையான சுழல்காற்று நகர மையத்திலிருந்து வடமேற்காகச் சுழன்றது. மாலைக்குள் காற்று தணிந்துவிட்டது. அதற்குள் வெடிப்பு மையத்திலிருந்து 2 கி.மீ. ஆரத்திற்கு நகரம் தீப்புயலால் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது.
நாகசாகியில் குண்டு வெடித்த ஏறக்குறைய 90 நிமிடங்கள் கழித்து பல இடங்களில் தீப்பிடித்தது; அது பரந்து பரவி பெருந்தீயாக வளர்ந்தது. இரவு 8.30 மணி வரை நீடித்த அந்தத் தீயால் ஒரு பரந்த நிலப்பரப்பே எரிந்து பாலைவனமாகப் பாழடைந்து போய்விட்டது.
விமானத் தாக்குதல்கள் மற்றும் பிற அவசரத் தேவைகளுக்கு இந்த இரு நகரங்களும் ஆயத்தமாக இருந்தபோதிலும் அணுகுண்டின் ஆற்றல் அத்தனையையும் பயனற்றதாக ஆக்கிவிட்டது. விமானத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு தரும் காப்பிடங்களில் தஞ்சம் புகுந்தவர்கள் அங்கு புகுந்த வெப்பக் காற்றினால் வெந்து போனார்கள். இதனால் அதிகப்படியான சாவுகள் ஏற்பட்டது என்று கூறலாம்.
ஹிரோஷிமாவில் ஆகஸ்ட் 6 அன்று காலை 9 மணி முதல் 4 மணிவரை நகரின் சில இடங்களிலும், காற்று வீசும் திசையிலிருந்த கிராமப்புறப் பகுதிகளிலும் “கருமழை’ பெய்தது. “கருமழை’ பெய்த இடங்களில் ஆறுகளில் பெருமளவில் மீன்கள் செத்திருக்கக் கண்டனர். பிசுபிசுப்பான மழையால் மாசுபட்ட புல்லை மேய்ந்த கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மழை பெய்த இடங்களில் குடியிருந்த பலருக்கும் பேதி ஏற்பட்டதாகத் தெரிவித்தார்கள்.
அதுபோலவே நாகசாகியிலும் ஆகஸ்ட் 9 அன்று காலை 11 மணியளவில் வெடிகுண்டு வீசப்பட்ட பிறகு சுமார் 20 நிமிடத்தில், அழிவுக்குத் தப்பித்திருந்த மறுபாதி நகரில் “கருமழை’ பெய்தது. இவ்வாறு அணு ஆயுத மேல்படிவின் தீங்குகளினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.
கதிர்வீச்சின் பிந்தைய விளைவுகளால் பாதிப்படைந்தோர் தொடர்ந்து துன்புற்றார்கள் அல்லது இறந்தார்கள். பிந்தைய விளைவுகளில் மிக முக்கியமானது புற்று; உயிருக்கு ஆபத்தான ரத்த வெள்ளையணுப் புற்று; கண்படலம் உருவாதல்; வயதுக்கு முந்தி கிழட்டுத்தன்மையடைதல் போன்றவை.
இவைதவிர, பிறவிக் குறைபாடுகளும் தோன்றுகின்றன. அதிகக் கதிர்வீச்சினால் கருமூல அணுக்கள் சாகின்றன. விந்தையோ முட்டையையோ உற்பத்தி செய்யும் திறனை இழக்கின்றன. அணுத்தாக்குதல் முடிந்து இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் மனிதர்களில் அயனிமயக் கதிர்வீச்சின் மரபின / பிறவிப் பாதிப்புகள் பற்றி உறுதியான இறுதி முடிவுகளை அறிய இந்தக் கால அளவு போதாது என்றே அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
அணுக்கருவிகள் மூன்று வகைகளில் தனித்தன்மை கொண்டிருக்கின்றன: பெருமளவில் உடனடியாக சாவையும் அழிவையும் உண்டாக்குகின்றன; மனித சமூகத்தில் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக கண்ணிமைக்கும் நேரத்தில் அழித்து விடுகின்றன; பாலைவனமாக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில் சிக்கலானதும், நெடுங்காலத்ததுமான சமூக, உளவியல் விளைவுகளை உருவாக்குகின்றன.
அணுகுண்டு போடப்பட்டு இவ்வளவு காலம் கழிந்த பிறகும் அது இன்னும் தொடர்ந்து உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஹிரோஷிமாவில் உள்ள கதிர்வீச்சு விளைவு ஆய்வு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஷிங்கேமத்சு இந்த அழிவைப் பற்றி என்ன கூறுகிறார் தெரியுமா?
“”இவர்களுக்கும், குண்டுவெடிப்பில் பிழைத்திருக்கும் பிறருக்கும் போர் இன்னும் முடியவில்லை. அணுகுண்டின் விளைவான இந்தக் கதிர்வீச்சு நோய்கள் தம்மிடமிருந்து தீருமா? எப்போது தீரும்? என்று அவர்கள் எல்லாம் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்…”
போர், நாசத்தை விளைவிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அணு ஆயுதங்கள் எதிரிகளை மட்டுமல்ல, ஏவியவர்களையே அழித்து விடும்; உலகத்தையே சுடுகாடாக மாற்றிவிடும்; யாருக்காகவும் அழ யாரும் இருக்க மாட்டார்கள்.
வெள்ளைப் புறாவைப் பறக்கவிடுவதால் மட்டும் உலக அமைதி உண்டாகிவிடாது. வெண்புறாவைப் பறக்கவிடுவதும் நாம். அதனைப் பின்தொடர்ந்து வேட்டையாடுவதும் நாம். இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும். காலத்தின் கட்டளை இது. ஆம், போர் இன்னும் முடியவில்லை!
(கட்டுரையாளர்: சமூக ஆர்வலர்).
Posted in Agni, America, Arms, Atom, Baikonur, bhopal, Bombs, Britain, China, dead, Death, Deficiency, Deformity, Destruction, Effects, Electricity, England, Enriched, Enrichment, Fights, France, Hiroshima, Impact, International, Israel, Japan, Killed, leak, London, medical, Missile, Mohawk, Nagasaki, Nuclear, Pakistan, Palestine, Peace, Power, Russia, Technology, Tragedy, UK, Ukaraine, Ukraine, Uranium, US, USA, USSR, War, Weapons, World | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007
அந்நியச் சிறைகளில் வாடும் இந்தியர்கள்
என். சுரேஷ்குமார்
ஆஸ்திரேலியாவில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இந்திய டாக்டர் ஹனீஃபை விடுதலை செய்ய இந்திய நீதிமன்றங்கள் முதல் உள்துறை, வெளியுறவுதுறை அமைச்சகங்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளும் ஒட்டுமொத்தமாகக் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் ஹனீஃப் ஜூலை 29-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, மீண்டும் ஹனீஃப்புக்கு ஆஸ்திரேலியா செல்ல விசா வழங்க வேண்டும் என்று, வெளியுறவுத் துறை அமைச்சகமும், இந்திய தூதரகமும் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், ஹனீஃபை போல சந்தேகத்தின்பேரில் பல ஆண்டுகளாக வெளிநாட்டுச் சிறைகளில் கைதிகளாக அடைபட்டிருக்கும் இந்தியர்களை விடுதலை செய்ய அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும் என்பதே அனைவரின் கேள்வி.
சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அந்தப் புள்ளி விவரத்தில், வெளிநாட்டுக்கு வேலை நிமித்தமாகச் சென்ற இந்தியர்களுள் சுமார் 6,700 பேர் சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில்
- சவூதி அரேபியாவில் உள்ள இந்தியக் கைதிகளின் எண்ணிக்கை 1,116,
- துபாயில் 825,
- சிங்கப்பூரில் 791,
- பாகிஸ்தானில் 655,
- மலேசியாவில் 545 பேர் என்ற புள்ளி விவரத்தை தெரிவித்துள்ளது.
இதேபோல
- லண்டனில் 239 பேர்,
- அமெரிக்காவில் 218,
- ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 64,
- ஆப்பிரிக்காவில் 29 பேர்,
- பெல்ஜியம்,
- டென்மார்க்,
- பிரான்ஸ்,
- ஹாங்காங்,
- லிபேரியா,
- நெதர்லாந்து,
- சுவிட்சர்லாந்து சிறைகளில் கிட்டத்தட்ட 419 பேர்,
- இத்தாலி,
- ஸ்பெயின்,
- கிரீஸ்,
- போர்ச்சுகலில் 103 பேர்,
- செக் குடியரசு,
- போலந்து,
- பெலாரஸ்,
- மால்டோவாவில் சுமார் 150 இந்தியர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை வெளிநாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர்களுள் 1379 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அதே சமயத்தில் 1,343 பேர் புதிதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களது அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டது என்பது வேதனைக்குரிய விஷயம். மேலும், இதுசம்பந்தமாக இந்தியத் தூதரகம் மேற்கொண்ட நடவடிக்கையும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
இவ்வாறு வெளிநாட்டுச் சிறைகளில் அடைபட்டிருக்கும் இந்தியர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் 90 சதவீத குற்றம் முறையான விசா சம்பந்தமான ஆவணங்கள் இல்லாததுதான்.
இக்குற்றத்திற்கு யார் காரணம்? முதலாவது, இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு வேலைக்காக முதன்முதலாகச் செல்லும் இந்தியர்களுக்கு குடிபெயர்தல் குறித்த போதிய விவரமும், விழிப்புணர்வும் இல்லாதது.
இரண்டாவது நமது இந்திய அரசு.
புற்றீசலாய் முளைத்துள்ள வெளிநாட்டிற்கு ஆள்களை அனுப்பும் தனியார் ஏஜென்சிகள். இவற்றின் மூலமாகத்தான் ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் இன்று வெளிநாட்டு சிறைகளில் அடைபட்டு கிடக்கின்றனர்.
வங்கதேச சிறையில் தண்டனைக் காலம் முடிந்து கிட்டத்தட்ட 200 இந்தியக் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அந்நாட்டுத் தூதரகம் நம் இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு, விடுதலையடைந்த கைதிகளை மீட்டுச் செல்லுமாறு அழைப்பு விடுத்தும் இந்தியத் தூதரகம் பாரா முகமாய் இருப்பதாக ஒரு ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
மலேசியாவில் உள்ள தனியார் தொண்டுநிறுவனம் ஒன்று ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மலேசியாவில் வசிக்கிற இந்தியர்கள் மொத்தம் 16 லட்சம். இதுதவிர கடல்கடந்து வேலை நிமித்தமாகச் சென்ற இந்தியத் தொழிலாளர்கள் மொத்தம் 1,39,716 பேர். இதில் தற்போது 20,000 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 90 சதவீத இந்தியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் குடிபெயர்தல் (ஐம்ம்ண்ஞ்ழ்ஹற்ண்ர்ய்) தொடர்பான சரியான ஆவணங்கள் இல்லாதது. மேலும் 10 சதவீதத்தினர் போதைப் பொருள், கொலை, கற்பழிப்பு போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் மட்டும் ஒரு மாதத்திற்கு சராசரியாக 3 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனராம். இவர்களின் உடல்கள் கூட முறையாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவதில்லை என்பது அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கசப்பான உண்மை.
இப்போதைய அவசரத்தேவை புற்றீசலாய் முளைத்துள்ள தனியார் ஏஜென்சிகளைக் கண்காணிப்பது, குடிபெயர்தல் குறித்த தகவல் மையங்களை பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் மக்கள் கூடுகின்ற முக்கியமான இடங்களில் அமைத்தல் ஆகும்.
வெளிநாட்டுக்கு வேலைநிமித்தமாக முதன்முறையாகச் செல்லும் இந்தியர்களுக்குக் குடிபெயர்தல் குறித்த ஆயத்த பயிற்சி, அதாவது அந்நாட்டின் கலாசாரம், அந்நாட்டினுடைய அடிப்படையான சட்ட திட்டங்கள் குறித்த பயிற்சி அவசியமானது.
குடிபெயரும் தொழிலாளர்களுக்கு இலவச சட்ட உதவி, குடிபெயர் தொழிலாளர் பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்துவதன் மூலமே வருங்காலங்களில் இந்த கைது எண்ணிக்கையை குறைக்கலாம்.
இந்திய மருத்துவர் ஹனீஃப் விடுதலைக்காக ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுத்த நமது அரசு இன்னும் வெளிநாட்டுச் சிறைகளில் சந்தேகத்தின் அடிப்படையில் நிராதரவாக வாடிக் கொண்டிருக்கும் நமது இந்திய தொழிலாளர்களுக்கு விடுதலை பெற்று தருவது எப்போது?
Posted in acquit, Affairs, africa, Ambassador, America, Analysis, Arms, Arrest, Australia, Bangladesh, Belarus, British, Civil, Cocaine, Consulate, Convict, Correction, Crime, Diaspora, Drugs, Dubai, Emigration, England, External, Extremism, Extremists, Force, Foreign, Greece, Gulf, guns, Haneef, Hanif, Holland, Immigration, Inmate, International, Issue, Italy, Jail, Judge, Justice, LA, Law, LAX, London, Malaysia, MNC, Netherlands, New Zealand, NRI, NYC, Op-Ed, Order, Pakistan, Passport, PIO, Poland, Police, Portugal, Prison, Prisoner, Saudi, Singapore, Spain, Swiss, Tamils, Terrorism, Terrorists, Tourist, Travel, UAE, UK, US, USA, Visa, Visit, Visitor, Weapons, World | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 22, 2007
கிழக்கிந்திய கம்பெனி சாகவில்லை, உயிரோடு இருக்கிறது!
டி.ஜே.எஸ். ஜார்ஜ்
எவ்வளவு சுலபமாக நாடுகள் தங்களுடைய வரலாற்றை சலவைக்குப் போட்டுவிடுகின்றன! இரண்டாவது உலகப் போரில் ஜப்பானிய ராணுவம் செய்த அக்கிரமங்கள் என்ன என்று அந்நாட்டின் புதிய தலைமுறைக்குத் தெரியவே தெரியாது. வியத்நாமில் அமெரிக்கா செய்த அக்கிரமங்கள் அந்நாட்டு பள்ளிக்கூட குழந்தைகளுக்குத் தெரியாது.
ஆரியர்கள் திருநைனார்குறிச்சியிலிருந்தும், திராவிடர்கள் குலு பள்ளத்தாக்கிலிருந்தும் வந்தார்கள் என்று நம் நாட்டின் சில பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருகின்றனர்!
உண்மை எது என்பது, (வரலாற்று) குப்பையைப் பெருக்க வந்தவர்களின் கண்களில்தான் இருக்கிறது.
பிரிட்டிஷ்காரர்கள்தான் தங்களுடைய ரயில்வே மூலமும் தடையற்ற வர்த்தக நடைமுறைகள் மூலமும் இந்தியாவுக்கு வாழ்வையும் வளத்தையும் கொண்டுவந்து சேர்த்தார்கள் என்று இந்தியாவில் படித்த பெரும்பாலானவர்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மை என்னவோ தலைகீழாக இருக்கிறது. இந்தியாவின் செல்வமும் இயற்கை வளங்களும்தான் பிரிட்டனுக்குப் புது வாழ்வைத் தந்தன.
இந்தியாவின் வளமான பகுதிகள் பல, பிரிட்டிஷாரின் நன்மைக்காக இங்கே அடியோடு அழிக்கப்பட்டன. பிரிட்டனின் “மான்செஸ்டர் டி-73′ ரக பருத்தியை வாழ்விப்பதற்காக டாக்கா மஸ்லின் பூண்டோடு அழிக்கப்பட்டது. அந்தத் துணியை நெய்த திறமைவாய்ந்த நெசவாளர்களின் கட்டைவிரலை வெட்டி வீசினர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனித் துரைமார்கள்!
ஏகாதிபத்திய காலத்தில் நிலவிவந்த உண்மை நிலவரங்களை வெளிக்கொண்டுவரும் வேலையை, ஆய்வு நூல்கள் மூலம் அவ்வப்போது மேற்கொள்கின்றனர் மேற்கத்திய நாடுகளின் அறிஞர்கள்.
இப்போதுள்ள பன்னாட்டு நிறுவனங்களின் (எம்.என்.சி.) முன்னோடியாகத் திகழ்ந்த கிழக்கிந்திய கம்பெனி எப்படி ரத்த வெறி பிடித்து அலைந்தது என்பதை நிக் ராபின்ஸ் என்பவர் தன்னுடைய ‘The Corporation that Changed the World: How the East India Company Shaped the Modern Multinational’ என்ற நூலில் அற்புதமாக விளக்கியிருக்கிறார்.
அச்சத்தில் உறைந்தே போகும் அளவுக்குச் சில உண்மைகளை அவர் அந் நூலில் தெரிவித்துள்ளார். ராபர்ட் கிளைவ், கிழக்கிந்திய கம்பெனியின் வியாபாரத்துக்குள் “ஒரு உள் வியாபாரம்’ செய்து பெரும் தொகையை அள்ளியிருக்கிறார். கம்பெனியின் தலைவரும் அவரே என்பதால் மோசடி செய்வது அவருக்குக் கடினமான வேலையாக இருக்கவில்லை.
பிரிட்டனிலோ, கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திடமிருந்தும் அரசிடமிருந்தும் அவ்வப்போது சலுகைகளைத் தொடர்ந்து பெற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்ந்து லஞ்சம் கொடுத்துக் கொண்டே இருந்துள்ளனர்.
“மேலை நாடுகளின் நாகரிகத்தின் பின்னால் இருப்பது, ஈரானிய எண்ணெய் வயல்களில் அடித்த கொள்ளையில் கிடைத்த லாபம்தான்’ என்று ஈரானிய அதிபர் அகமதி நிஜாத் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.
இதையெல்லாம் எடுத்துச் சொன்னால் அவனை, “மரை கழன்றவன்’ என்றும் “மேலைநாடுகளுக்கு எதிரானவன்’ என்றும் முத்திரை குத்தும் அளவுக்கு எல்லோருடைய மூளையும் அற்புதமாகச் சலவை செய்யப்பட்டிருக்கிறது.
அகமதி நிஜாத் என்ன சொன்னாரோ அது உண்மைதான்! 1950-களின் ஆரம்பத்தில் ஈரானில் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்த மூசாதேக் என்பவர் ஈரானின் மன்னரான ஷாவை நாட்டைவிட்டே ஓடவைத்தார். பிறகு ஈரானின் எண்ணெய் வயல்களை தேச உடைமையாக்கினார். எண்ணெய் வயல்களைச் சொந்தமாக வைத்திருந்த பெரும் பணக்காரர்களும், மேற்கத்திய நாடுகளின் அரசுகளும் சில மாதங்களுக்கெல்லாம் இணைந்து செயல்பட்டு மன்னர் ஷாவை மீண்டும் ஈரானுக்கு அழைத்துவந்து முடிசூட்டின. மூசாதேக் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்டார்.
இது தனிப்பட்ட ஒரு சம்பவம் அல்ல. சூயஸ் கால்வாயை கமால் அப்துல் நாசர் தேச உடைமையாக்கியபோது, எகிப்துடன் யுத்தத்துக்குச் சென்று மூக்குடைபட்டு திரும்பியது பிரிட்டன்.
பனாமா கால்வாய் யாருக்குச் சொந்தம் என்ற நீண்ட கால பிரச்னை முற்றி, 1980-களின் பிற்பகுதியில் அமெரிக்காவுக்கு எதிரான கலவரமாக உருவெடுத்தது. அப்போது அமெரிக்கா பனாமா மீது படையெடுத்து, அதன் அதிபர் மேனுவல் நோரிகாவை போதைப் பொருள் கடத்தல் சட்டப்படி கைது செய்தது.
ஏகாதிபத்தியத்திடம் காலனிகளாக இருந்த நாடுகள் விடுதலை பெற்ற பிறகும் காலனியாதிக்கம் முடியவில்லை; 19-வது நூற்றாண்டில் பிரிட்டன் செய்த வேலையை இப்போது அமெரிக்கா எடுத்துக் கொண்டுவிட்டது. வியாபாரத்தில் உள்ளடி வேலை செய்யும் “உள்-வர்த்தகம்’ என்ற அயோக்கியத்தனத்தை அது கையாள்கிறது. என்ரான், வேர்ல்ட் காம். போன்ற பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் அடையாளம் இல்லாமல் மறைந்த கதையைப் பார்த்தாலே இந்த பித்தலாட்டம் புரியும்.
அரசியல்ரீதியான ஊழல் என்பதை, வாஷிங்டனில் “ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தரகுக் கூட்டம்’ என்று நிலைநிறுத்திவிட்டது அமெரிக்கா. அத்தோடுகூட, அது தனது ராணுவ பலத்தையும் மிதமிஞ்சிப் பயன்படுத்துகிறது.
இராக்கில், அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகள் காலடி எடுத்து வைத்தது அங்குள்ள எண்ணெய் வளத்துக்காகத்தான் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா?
இப்போது “கிழக்கிந்திய கம்பெனி’ உலகம் முழுக்க பரவியிருக்கிறது. ராபர்ட் கிளைவும் வாரன் ஹேஸ்டிங்ஸýம் இன்னமும் உலா வருகின்றனர். அவர்களின் பெயர்தான் “உலக வங்கி’, “உலகமயமாக்கல்’ என்று மாற்றி வழங்கப்படுகிறது!
————————————————————————————————————–
யாருக்காக மானியங்கள்?
விவசாயத்துக்கான மானியங்கள் தொடரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்திருக்கிறார். அதே சமயம், உரங்களுக்குத் தரப்படும் மானியத்தை புதிய முறையில் எப்படி வழங்குவது என்பதை முடிவு செய்து அடுத்த ஆண்டு முதல் அமலுக்குக் கொண்டுவரலாம், இந்த ஆண்டு பழைய முறையிலேயே மானிய உதவியை அளிக்கலாம் என்றும் உயர்நிலைக் குழு கூட்டத்தில் பிரதமர் முடிவெடுத்திருக்கிறார்.
விவசாயத்துக்கு மானியம் என்பது அவசியம். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளுக்கே இதில் இருவித கருத்துகள் இல்லை. அதே சமயம், உர மானியம் என்பது யாருக்குப் போகிறது, அது நீடிப்பது அவசியமா என்பதைக் கட்டாயம் தீர்மானித்தாக வேண்டும்.
கடந்த ஆண்டு உர மானிய நிலுவை ரூ.8,000 கோடி என்றும் இந்த ஆண்டு ரூ.40,000 கோடி என்றும் அரசே வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
மத்திய புள்ளியியல் துறை கணக்கெடுப்பின்படி, 2000-01-ம் ஆண்டில் உர மானியமாக ரூ.13,800 கோடி, மின்சார மானியமாக ரூ.6,449 கோடி, பாசன மானியமாக ரூ.13,681 கோடி, இதர மானியங்களாக ரூ.854 கோடி என்று மொத்தம் ரூ.34,784 கோடி விவசாயத்துக்காக தரப்பட்டுள்ளது.
உணவு தானிய கையிருப்பைப் பொருத்தவரை, 3 மாத கையிருப்பு, 6 மாத கையிருப்பு என்பதெல்லாம், பொது விநியோக முறைக்கு மாதந்தோறும் எடுத்துக்கொள்ளப்படும் அரிசி, கோதுமை போன்றவற்றின் அளவைப் பொருத்ததே தவிர உண்மையில் நம் நாட்டு மக்களின் தேவையைப் பொருத்தவை அல்ல.
லட்சக்கணக்கான டன்கள் கோதுமை, அரிசி கையிருப்பில் இருக்கும் அதேவேளையில் 20 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. ஒரு வேளை சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் இரவில் பட்டினியோடு படுப்பவர்கள் பற்றிய புள்ளிவிவரம் ஏதும் திரட்டப்படுவதில்லை.
“வேலைக்கு உணவு திட்டம்’ என்ற முன்னோடி திட்டம்கூட, தேர்வு செய்யப்பட்ட மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில்தான் முனைப்பாக அமல்படுத்தப்படுகிறது. அதுவும் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் உதவியோடு மேற்கொள்ளப்படும் சில திட்டங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
உர மானியம் தொடர்பாக அடிக்கடி பேசப்படும், அதே வேகத்தில் மறக்கப்படும் இரு விஷயங்கள் நினைவுபடுத்தப்பட வேண்டியவை. உர உற்பத்தியில் பொதுத்துறை (அரசு) நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் ஈடுபடுகின்றன. உர உற்பத்திக்கு அரசு நிறுவனங்கள் எவ்வளவு (விரயமாக) செலவு செய்தாலும், எந்த அளவு உற்பத்தி செய்தாலும் அவற்றை அரசு வாங்கிக் கொண்டு மானியத்தையும் கையோடு வழங்கிவிடுவதால், அரசின் மானியம் விரயமாகிறது என்பது முதல் குற்றச்சாட்டு. நவீனத் தொழில்நுட்பத்தில், செலவைக் குறைத்து தயாரிப்பது அவசியம் என்ற நிர்பந்தம் இல்லாமல் பழைய முறையிலேயே தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் என்பது இக்குற்றச்சாட்டின் சாரம்.
அடுத்தது, ரசாயன உரங்களால் நிலம் தன்னுடைய இயற்கையான சத்தை இழப்பதுடன், சாகுபடியாகும் உணவு தானியங்களும் உண்பவர்களுக்குத் தீங்கை விளைவிப்பனவாக இருக்கின்றன என்பதாகும். எனவே இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும். மக்கிய எருவையும், மண்புழுக்களையும் நிலங்களில் இட்டு மண்ணை வளப்படுத்த வேண்டும் என்ற கூக்குரல் எங்கும் கேட்க ஆரம்பித்துவிட்டது. இயற்கை வேளாண்மை என்ற கருத்தை வலியுறுத்துகிறவர்கள் இதையும் வலியுறுத்துகின்றனர்.
விவசாய விலை நிர்ணயக் குழு என்ற உயர் அமைப்பில், சாகுபடியாளர்களின் நேரடிப் பிரதிநிதிகளை அதிக அளவில் சேர்த்து, அவர்களைக் கொண்டே பிராந்தியங்களுக்கு ஏற்ற வகையில் கொள்முதல் விலைகளையும் சிறப்பு மானியங்களையும் நிர்ணயிக்க வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்துள்ளபடி, சந்தையில் நிலவும் விலைக்குக் குறையாமல் கொள்முதலுக்கு விலைதரப்பட வேண்டும். குறைந்தபட்ச கொள்முதல் விலை என்பது, விவசாயிகளின் அடிவயிற்றில் அடிப்பதாக இருப்பதைக் கைவிட வேண்டும். வேளாண் பொருள்களின் விலை உயர்ந்தால் பணவீக்க விகிதம் கட்டுக்கடங்காமல் போய்விடும் என்று “”நிபுணர்கள்” மிரட்டுவதை கேட்டுக் கொண்டு விவசாயத்தைப் படுகுழியில் தள்ளக்கூடாது.
Posted in abuse, Affairs, Agriculture, America, bank, Barrier, Biz, Business, Canal, Center, CIA, Consumer, Corn, Corporation, Current, Customer, Divide, Duty, Economy, Electric, Electricity, England, ethanol, Exploit, Exploitation, External, Farming, Farms, Fertilizer, Fertilizers, Finance, Foreign, GDP, Govt, Growth, IMF, Incentive, Incentives, Income, Industry, International, Iran, Irrigation, IT, MNC, multinational, Needy, NRI, Panama, Poor, Power, Queen, Relations, Rich, State, Subsidy, Suez, Tamil, Tariffs, Taxes, Trade, UK, Unipolar, USA, War, warlord, WB, Wealthy, World, world bank | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007
நகரம்: சென்னை – 133!
ரவிக்குமார்
தலைப்பைப் பார்த்துவிட்டு “133′-ஐ ஏதோ தபால்துறையில் பயன்படுத்தப்படும் பின்கோட் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். உலக அளவில் வாழ்வதற்கு அதிகமான செலவு பிடிக்கும் நகரங்களில், நமது சென்னை மாநகரம் 133-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. “காஸ்ட் ஆஃப் லிவிங் பெங்களூர்ல ரொம்ப அதிகம்பா’ன்னு யாராவது கூறினால்… நம்பாதீர்கள். ஏனென்றால், பெங்களூர் இந்த வரிசையில் நமக்கு அடுத்துதான் வருகிறது!
மாஸ்கோ, லண்டன், சீயோல், டோக்கியோ, ஹாங்காங், கோபன்ஹெகன் வரிசையில் நம்முடைய சென்னையும். அமெரிக்காவின் புகழ்பெற்ற “மெர்சர்ஸ்’ நிறுவனம் தான் உலகளாவிய இந்தச் சர்வேயை ஆறு கண்டங்களில் எடுத்திருக்கிறது. சென்னைவாசிகள் தங்களின் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் வகையில், அந்தச் சர்வேயில் இருக்கும் இதர விவரங்களைப் பற்றியும், அது தொடர்பாக சிலரின் கருத்துகளும் இதோ:
- கல்வி,
- பொருளாதாரம்,
- அன்னியச் செலாவணியை கவரும் வகையிலான திட்டங்கள்,
- போக்குவரத்து,
- உடை,
- உணவு வகையிலான மாற்றங்கள்,
- மக்களின் வாங்கும் திறன்,
- அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்,
- தனிமனித வருவாய்,
- வீட்டு உபயோகப் பொருள்கள்,
- பொழுதுபோக்கு அம்சங்கள்…
இப்படி 200 வகையான அளவுகோல்களின் மூலம், வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரங்களை தரப்படுத்தியுள்ளனர். இந்த அடிப்படையில் உலகிலேயே வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரமாக தேர்வாகியிருப்பது
- சீயோல் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆசியாவின் எட்டு நகரங்கள் 50-வது இடத்தைப் பிடித்திருக்கின்றன.
- மும்பை 52-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
- புதுதில்லி 62-வது ரேங்கில் இருக்கிறது.
அமெரிக்காவின் மெர்சர்ஸ் நிறுவனம் வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நகரங்களாக 143 நகரங்களை ஆறு கண்டங்களில் அறிவித்திருக்கிறது. இதில் 133-வது இடத்தை சென்னை பெற்றிருப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும்?சென்னையைப் பொறுத்தவரை நகரத்தின் எல்லை விரிவடைந்து கொண்டே போகிறது. வியாபாரம், தொழில் நிமித்தமாகவும், கல்வி, மருத்துவம் போன்ற காரணங்களுக்காகவும் ஒருநாளில், அதிகமான எண்ணிக்கையில் சென்னை நகரத்துக்கு வந்து போகும் மக்கள் தொகை (Floating Population) நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றது.
“”சென்னை ஒரு காஸ்ட்லியான நகரமாக இருப்பதற்கு, பரவலாக அதிகரித்திருக்கும் தனிநபர் வருமானமும் ஒரு காரணம். மற்ற நகரங்களைப் போல மக்கள் இங்கிருந்து புறநகர்களுக்கு இடம்பெயர்வதற்கு விரும்புவதில்லை” என்கிறார் மத்திய வணிக வளர்ச்சிக் குழுமத்தின், தமிழ் மாநிலப் பிரிவைச் சேர்ந்த ரஃபிக் அகமத்.
“”தங்களின் குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைப்பதற்காக, பணி செய்யும் இடத்திற்கு அருகாமையில் வாடகை வீட்டிலாவது இருந்து நிலைமையைச் சமாளிப்போம்” என்ற யோசனையோடு நாளுக்கு நாள் புறநகர் பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கின்றது.
“”கும்மிடிப்பூண்டியில இருந்து நான் மட்டும் வேலைக்கு வந்துட்டிருந்தேன். அப்போது அங்கேயே ஒரு சின்ன ஸ்கூல்ல குழந்தைங்களைப் படிக்க வச்சிட்டிருந்தேன். இப்போ என் மனைவியும் வேலைக்குப் போறாங்க. அதனால தைரியமா சென்னைக்கு வந்துட்டோம். குறைஞ்ச வாடகைக்கு கும்மிடிப்பூண்டியில இருக்கிற எங்க வீட்டை விட்டுட்டு இங்க குடித்தனம் இருக்கிறோம். கஷ்டப்பட்டாலும் பிள்ளைங்கள நாங்க நினைச்சா மாதிரி நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்கிறோம்கிற திருப்தி இருக்கு” என்கிறார் சென்னை, சாலிக்கிராமத்திலிருக்கும் கல்யாணராமன்.
சென்னை நகரத்திற்குள் இடம் கிடைப்பது அரிதாகிவிட்ட நிலையில் ஏற்கனவே இருக்கும் பழைய வீடுகளின் மதிப்பும், ஃபிளாட் வகையான வீடுகளுக்கும் கூட இன்றைக்கு மிகப் பெரிய டிமாண்ட் இருக்கின்றது.
நாளுக்கு நாள் சென்னை நகரத்தில் பெருகிவரும் ஐ.டி. தொழில்நுட்ப வளாகங்களும், தொழிற்சாலைகளும், ரியல் எஸ்டேட் வியாபாரத்தை ஏறுமுகத்தில் கொண்டு செல்வதற்குக் காரணமாக இருக்கின்றன. “”பெங்களூரோடு ஒப்பிடுகையில் நில வியாபாரம் சென்னையில் கடந்த சில மாதங்களில் விலை அதிகம் உயர்ந்திருக்கின்றது” என்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறையில் இருக்கும் சிலர்.
சென்னை-133 எஃபெக்டுக்கு, தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ்நாடு அரசாங்கத்தின் அணுகுமுறையும் ஒரு காரணம். கடந்த 12 மாதங்களில் 6,985 கோடி ரூபாய் பெருமானமுள்ள தொழிற்சாலைகளையும், பன்னாட்டு தொழில் நிறுவனங்களையும் சென்னையில் கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (Memorandum of Understanding) தமிழ்நாடு அரசு, சம்பந்தப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களுடன் செய்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே ஆட்டோ-மொபைல், எலக்ட்ரானிக் போன்ற துறைகளில் புதிய முதலீடுகளைச் செய்வதற்கு ஏற்ற நகரம் என்ற அங்கீகாரத்தை சென்னை பெற்றிருக்கிறது.
உலக அளவில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பங்கு வர்த்தகச் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிக்கும் “நாஸ்காம்’ என்னும் அமைப்பு, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் முதலீடுகளைச் செலுத்துவதற்கு தகுதியான ஒன்பது நகரங்களில், சென்னைக்கு மூன்றாவது ரேங்க் கொடுத்திருக்கின்றது.
-என்ன இருந்தாலும் பாரீஸ் போல வருமா… என்று இழுக்கும் பேர்வழிகளும் இருக்கத்தான் செய்வார்கள். நமக்கும் கீழே பத்து நகரங்கள் லிஸ்ட்டில் இருக்கின்றன என்பதை நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுங்கள்!
Posted in 133, America, Analysis, Bombay, Boston, Chennai, Compensation, Consumer, Customer, Dress, Economy, Education, Exchange, Expenses, Finance, France, GDP, Homes, Household, Houses, Income, India, Inflation, Interest, job, Korea, LA, London, Madras, Moscow, Moskva, MoU, Mumbai, NYC, Paris, Price, Prices, Purchasing, Rates, Recession, Rent, Russia, Salary, Schools, Seoul, Stagflation, UK, US, USA, USSR, Work | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007
நெட்டில் சுட்டதடா…: மைல் கணக்கில் நின்ற மலைப் பாம்பு வரிசை!
ராமன் ராஜா
முன்பு ஒருமுறை போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு மும்பை செல்ல வேண்டிய விமானத்தைக் கோட்டை விட இருந்தேன். ரிஷப ராசிக்கு “விரயம்’ என்று ஒற்றை வார்த்தையில் ரத்தினச் சுருக்கமாக தினப்பலன் போட்டிருந்ததை மதிக்காமல் டாக்ஸியில் புறப்பட்டு, அண்ணா சாலையில் திரும்ப வேண்டிய நேரத்தில் போக்குவரத்து போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டேன். ஒரு முக்கிய பிரமுகர் அந்த வழியாக வருகிறாராம்; அவருக்கு ஓட்டுப் போட்டு முக்கிய பிரமுகராக்கியவர்கள் அனைவரும் காத்திருக்க வேண்டுமாம். அடுத்த நாற்பது நிமிடம், பல்லைக் கடித்துக் கொண்டு எஃப் எம் ரேடியோவில் “தமில்ப்’ பாட்டு கேட்டுக் கொண்டு கழித்தேன். நல்லவேளை, நான் பிரசவத்துக்குப் போய்க் கொண்டிருக்கும் பெண்மணியாக இல்லையே என்று நிம்மதியுடன் அடி வயிற்றைத் தடவிவிட்டுக் கொண்டேன். கடைசியில் விமான நிலையம் போய்ச் சேர்ந்தபோது, ப்ளேனும் ஒரு மணி நேரம் தாமதம் என்று தெரிய வந்தது. (பைலட்டும் பக்கத்துக் காரில்தான் வந்தாரோ?)
போக்குவரத்து நெரிசல் என்பது முன்னேறிய நாடுகள் எல்லாமே முன்னேற்றத்துக்குத் தப்பாமல் கொடுக்கும் விலை. இந்தியாவிலும் வங்கிகள் வண்டிக் கடன்களை “ஊரான் வீட்டு நெய்யே’ என்று வாரி வழங்குவதால், இப்போது ஏழை எளியவர்கள் அனைவரும் வாகனம் வாங்குவது சாத்தியமாகியிருக்கிறது. ஆனால் ஒரு பிரச்னை: தமிழ் நாட்டில் ஓடும் சற்றேறக்குறையத் தொண்ணூறு லட்சம் வாகனங்களில் கால் பாகத்தை, பிடிவாதமாக அவர்கள் சென்னை நகரத்தில்தான் கொண்டு வந்து ஓட்டுகிறார்கள். இதைக் கண்ட பன்னாட்டுக் கம்பெனிகள், “சிக்கியதடா ஒரு மார்க்கெட்’ என்று இங்கே வந்து கடை பரத்தி, நம் ஜனத் தொகையை விட வேகமாகக் கார், டூ வீலர் முதலியவற்றை உற்பத்தி செய்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். விளைவு, எனக்கு இருபது நிமிட தூரத்தில் இருந்த அதே அலுவலகம் இப்போது அறுபது நிமிடமாகிவிட்டது. டெல்லி, கல்கத்தா எங்கும் இதே கதைதான். பெங்களூரோ, ஏற்கனவே “பூட்ட கேஸ்’ என்று முடிவு கட்டப்பட்டு விட்ட நகரம். சென்னையில் நகைச்சுவை உணர்வு மிக்க உணவு விடுதிக்காரர் ஒருவர், தன் கடைக்கு ஹோட்டல் டிராபிக் ஜாம் என்று பெயர் வைத்திருக்கிறார்.
இங்கிலாந்தில் உள்ள எம்6 என்ற நெடுஞ்சாலையில் 87-ம் வருடம் ஒரு நெரிசல் ஏற்பட்டது. ஐம்பதாயிரம் வாகனங்களில் இரண்டு லட்சம் பேர் மாட்டிக் கொண்டார்கள். இருபது லட்சம் கெட்ட வார்த்தைகளில் அரசாங்கத்தைத் திட்டித் தீர்த்தார்கள். உலகத்திலேயே மிக நீளமாக நின்ற டிராபிக் ஜாம் எது என்று கின்னஸ் புத்தகத்தைப் புரட்டினால், மிரட்டுகிறது: 1980-ம் வருடம், காதலர் தினத்துக்கு இரண்டு நாள் கழித்து ஃப்ரான்ஸில் நடந்தது அது. விடுமுறைக்கு ஜாலியாக எல்லாரும் பனிச் சறுக்கு விளையாடிவிட்டு பாரீஸ் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இடையில் எங்கோ ஒரு லாரி மக்கர் செய்ய, மழை வேறு சேர்ந்துகொள்ள, திடீரென்று ட்ராபிக் ஜாம். லியான் நகரில் ஆரம்பித்து பாரீஸ் வரை, சுமார் 176 கிலோ மீட்டருக்கு அடைத்துக் கொண்டு நின்று விட்டது. ஒரு வழியாக விடுபட்டு வீடு போய்ச் சேர்ந்ததும், பல பேர் கடுப்பில் தத்தம் கார்களைக் கொளுத்தியிருப்பார்கள்!
டிராபிக் ஜாம் என்பது ரோட்டில்தான் ஏற்பட வேண்டும் என்பதில்லை; எங்கெல்லாம் அவசரக்காரர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் தவறாமல் இது நடக்கும். வெனிஸ் நகரின் கால்வாய்ப் போக்குவரத்தில் அவ்வப்போது படகுகள் ஜாம் ஆகி நிற்பது உண்டு. பாங்காக் நகரின் மிதக்கும் மார்க்கெட்களில், படகுகள் சிக்கித் திணறுகின்றன என்று கால்வாய்களையெல்லாம் தூர்த்து சாலைகளாக்கினார்கள். இப்போது அவற்றில் கார்கள் நெரிசலாடுகின்றன!
போக்குவரத்து நெரிசல்கள் ஏன், எப்படி ஏற்படுகின்றன என்பதை கம்ப்யூட்டர் உதவியுடன் விஞ்ஞானிகள் அலசிக் கொண்டிருக்கிறார்கள். ஃப்ளூயிட் டைனமிக்ஸ் என்று குழாயின் வழியே தண்ணீர் ஓடுவதுடன் ஒப்பிட்டு, போக்குவரத்தைக் கணித சூத்திரங்களில் அடக்கமுடியும். இப்போது டிராஃபிக் எஞ்சினியரிங் என்பதை பட்டப் படிப்பாகவே எடுத்துப் படிக்கலாம். ஆனால் இந்தியாவுக்கே உரிய சாலைத் தொல்லைகளான சாக்கடைப் பள்ளங்கள், எருமை மாடுகள், வி.வி.ஐ.பிகள் போன்றவற்றை எந்த கம்ப்யூட்டராலும் மாடலிங் செய்ய முடியாது. எனவே என்னதான் புள்ளியியல் புரபசராக இருந்தாலும், தெருவில் இறக்கிவிட்டால் அவருக்கும் இதே கதிதான் ஏற்படுகிறது. ஒரு முறை இந்தியப் பிரதமரின் காரைத் தப்பான சாலையில் திருப்பி விட்டு, அவரும் நம்முடைய அவஸ்தைகளைச் சில மணித் துளிகள் அனுபவித்தார். (அங்கே டூட்டியில் இருந்த போலீஸ்காரர்களைப் பாராட்டுவதற்குப் பதிலாகச் சஸ்பென்ட் செய்தார்கள், பாவம்).
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குப் பல வழிகளை ஆலோசித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது, ரோட்டில் வண்டி ஓட்டுவதற்குக் காசு வசூலிப்பதுதான். டோல் ரோடுகள், டோல் பாலங்கள் என்று முக்கியமான பிரதேசங்களையெல்லாம் கட்டணப் பகுதிகளாக அறிவிக்க ஆரம்பித்தார்கள். லண்டன் நகரின் பயணம் செய்ய “நெரிசல் கட்டணம்’ ஐந்து பவுண்டு என்று தொடங்கி, வருடா வருடம் விலை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் பல ரோடுகளில் அலுவலகம் போகும் பீக் அவர் நேரங்களில், தெருவில் வீல் வைத்தால் டிக்கெட் வாங்க வேண்டும். சனி, ஞாயிறு இலவசம். அதிலேயே சிக்கனமான சிறிய கார்களுக்கு சற்றுக் குறைந்த கட்டணம், மண்ணெண்ணை கலந்து கரும் புகை கக்கினால் அதிக சார்ஜ் என்று பல பாலிசிகளை ஒன்றாகக் கலந்து குழப்படி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
சாலைக் கட்டணங்களை மறுக்கவும் எதிர்க்கவும் பலர் கோஷ்டிகள் அமைத்து கோஷம் போடுகிறார்கள். “”சாலைகள் போடுவது, அசோகர் காலத்திலிருந்தே அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஏற்கனவே பெட்ரோல் மீது பயங்கரக் கந்து வட்டி வரி என்று உறிஞ்சிக் கொழுத்தது போதாமல், இப்போது தெருவில் போவதற்கும் காசு கேட்கிறீர்களா? இது மனிதனின் அடிப்படையான நடமாடும் உரிமையையே கட்டுப்படுத்துகிறதே” என்பது அவர்களுடைய அனல் மூச்சு. “” வழியில் இருக்கிற ஒவ்வொரு தெருவுக்கும் பாலத்துக்கும் தண்டல் கட்டிவிட்டுத்தான் போக வேண்டும் என்றால், பணக்காரர்கள் எப்படியும் பயணம் செய்துவிடுவார்கள். அடித்தட்டு மக்கள்தான் நாலு இடத்துக்குப் போய் வேலை செய்து பிழைக்க முடியாமல் தன்னுடைய பேட்டைக்குள் சிறைப்பட்டு விடுவார்கள்” என்பதும் நியாயமாகவே படுகிறது.
கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றால் அடுத்த ஆயுதம், வாகனம் ஓட்டுவதில் முடிந்த அளவு தடைகள் ஏற்படுத்துவது. கூட்டம் கூடும் பகுதிகளில் வேண்டுமென்றே பார்க்கிங் வசதிகளைக் குறைத்து விடுவது. தியேட்டர் அருகே காரை நிறுத்த இடமில்லாமல் லொட்டு லொட்டென்று ஒரு கிலோமீட்டர் நடந்து போய் சினிமா பார்க்க வேண்டுமென்றால், பலர் விடுமுறை நாள்களில் அங்கே போய் அம்முவதைத் தவிர்ப்பார்கள். அமெரிக்காவில் ஒற்றை ஆள் ஒருவர் தன்னந்தனியாகக் காரில் சென்றால் பொதுப் பாதையில் நீண்ட வாகன வரிசையில்தான் போக வேண்டும்; ஒரே காரில் இரண்டு மூன்று பேர் சேர்ந்து போனால், ரோடு ஓரத்தில் தனியாக ராஜ பாட்டையில் சல்லென்று சீக்கிரமாகப் போகலாம். கார்பூல் பாதை என்ற இந்த வசதிக்காகவே, ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் முறை போட்டுக் கொண்டு தினம் ஒருவருடைய காரில் சேர்ந்து பயணம் செய்வார்கள். நெரிசலைக் குறைப்பதற்கு எல்லாவற்றையும் விடச் சிறந்த ஆயுதம், பஸ், ரயில்தான்!
சாலைச் சுங்கம் வசூலிக்கும் சாவடிகளில் தினமும் லட்சக் கணக்கான வண்டிகளுக்கு எச்சில் தொட்டு டிக்கெட் கிழித்துக் கொடுத்து நாக்கு உலர்ந்து போய்விட்டதால், ஆட்டோ பாஸ், டெலி பாஸ் போன்ற தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் வந்துவிட்டன. இதனால் சுங்கச் சாவடியில் நிறுத்தவோ, வேகத்தைக் குறைக்கவோ கூடத் தேவையில்லை; ரேடியோ அலைகள் வழியே தொடர்பு கொண்டு காரே போகிற போக்கில் தன் கட்டணத்தைக் கட்டி விடும். சிங்கப்பூரில் நகர மையத்துக்குப் போகிற எல்லா ரோடுகளிலும் வருக வணக்கம் என்று தோரண வாயில்கள், வளைவுகள் உண்டு. எல்லாம் தானியங்கிப் பணம் பிடுங்கி வளைவுகள்! கலீலியோ என்று செயற்கைக் கோள் அமைப்பின் வழியாக ரோட்டில் போகும் அத்தனை வண்டிகளையும் கடவுள் போல் கண்காணித்து நீங்கள் எப்போது, எந்தத் தெருவில் எத்தனை நேரம் பயணம் செய்தீர்கள் என்று கூட துல்லியமாக பில் போட்டு வசூலித்து விடமுடியும். அரசியல், பிசினஸ் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்தத் தொழில் நுட்பத்தில் இருக்கும் துஷ்பிரயோக வசதியைக் கருதி, இதைப் பல நாடுகளில் பரவலாகக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறார்கள். இடது சாரிகள் “உயிரே போனாலும் ஒப்புக் கொள்ள மாட்டேன்’ என்று எதிர்க்கிறார்கள்.
பப்லுவுக்குப் பிடித்த புராதனமான கடி ஜோக் ஒன்று: பசியுடன் இருந்த ஒருவன், காலை உணவுக்கு ப்ரெட் வாங்கி வெண்ணை தடவிக் கொண்டு மவுண்ட் ரோடில் போய்க் காத்திருந்தானாம். ஏன்? அங்கே ட்ராபிக் ஜாம் கிடைக்கும், தொட்டுத் தின்னலாம் என்று!
Posted in Accidents, Auto, Carpool, Cars, Chennai, City, Comfort, Commute, Congestion, Diesel, Dinamani, Driver, Environment, Freeway, Gas, Highway, infrastructure, Insurance, Kathir, LA, Lights, Limo, Limousine, London, Luxury, Manufacturing, Metro, NYC, Paris, Parking, Parkway, Patterns, Petrol, Pollution, Pooling, Raman Raja, Roads, Rotary, Rural, Signals, Singapore, Sprawl, Street, Suburban, Tax, Toll, Traffic, Transport, Travel, UK, Urban, Warming | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 3, 2007
டிராகன் புகுந்த நாடு!
எம். மணிகண்டன்
பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதையொட்டி ஹாங்காங்கில் நடந்த வண்ணமயமான நிகழ்ச்சிகளில், பிரிட்டன் மற்றும் சீனாவைச் சேர்ந்த விஐபிகள் கலந்து கொண்டு பொருளாதாரம், அரசியல், கலாசாரம் உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் விரிவாகப் பேசினர், ஒன்றைத் தவிர. அந்த ஒன்று, ஜனநாயகம். ஹாங்காங் மக்கள் கேட்கும் முழுமையான “மக்கள் ஆட்சி’.
1997-ல் ஹாங்காங்கின் இறையாண்மையை சீனாவின் கையில் ஒப்படைத்தபோது, அடிப்படை அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. முழுமையான மக்கள் ஆட்சி படிப்படியாக ஏற்படுத்தப்படும் என்பதே அதில் கூறப்பட்டிருக்கும் முக்கிய அம்சம்.
ஹாங்காங்கின் பாதுகாப்பு, அயல்நாட்டு விவகாரம் தவிர வேறு எந்தப் பிரச்னையிலும் சீனா தலையிடக் கூடாது என்ற அடிப்படையில்தான் பிரிட்டிஷ் அரசு ஆட்சியை ஒப்படைத்தது. ஹாங்காங்கின் கலாசாரம், நாகரிகம், பொருளாதார அமைப்பு உள்ளிட்ட அடையாளங்கள் அழிக்கப்படக் கூடாது என்பதே இந்த உடன்பாட்டுக்கு முக்கியக் காரணம்.
ஆனால் இந்த எல்லையைக் கடந்து ஹாங்காங்கின் உள்விவகாரங்களில் சீனா மூக்கை நுழைக்கிறது என்பதுதான் மக்களாட்சிக்கு ஆதரவானவர்கள் கூறும் குற்றச்சாட்டு. எடுத்துக்காட்டாக அடிப்படை அரசமைப்புச் சட்டப்படி, ஹாங்காங் அரசின் செயல் தலைவர் (பிரதமர்) மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் சீனா நியமிக்கும் ஹாங்காங்கைச் சேர்ந்த 800 பேர் கொண்ட தேர்தல் செயற்குழுதான் செயல் தலைவரைத் தேர்ந்தெடுத்து வருகிறது.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் யாருக்கு ஆதரவாகச் செயல்படுவார் என்பதைக் கண்டுபிடிக்க உளவுத்துறையின் உதவியை நாட வேண்டியதில்லை. இது தவிர ஹாங்காங்கின் 60 உறுப்பினர் சட்டப்பேரவையில் 30 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமே மக்களிடம் உள்ளது. மீதி 30 பேருக்கு மறைமுக வாக்கெடுப்பு. இப்படிப் பல்வேறு வழிகளிலும் ஹாங்காங் மீதான பிடியை சீனா இறுக்கியிருக்கிறது.
“ஒரு நாடு, இரு அமைப்பு’ என்ற கொள்கையின் அடிப்படையில்தான் சீனா-ஹாங்காங் இடையேயான உறவுப்பாலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இரு அமைப்புகளும் அடிப்படையிலேயே வெவ்வேறானவை. ஒன்று பொதுவுடைமைக் கொள்கைகளைக் கொண்டது. மற்றொன்று முதலாளித்துவ தத்துவத்தை செயல்படுத்தி வருவது. “மக்காவோ’ பகுதியைப் போல ஹாங்காங்குக்கும் சிறப்பு நிர்வாகப் பகுதி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவையனைத்தும் எழுத்தில் மட்டும்தான் இருக்கிறது என்பதுதான் இப்போதைய பிரச்னை.
உலகின் மிகச்சிறந்த விமான நிலையம், பொருளாதாரச் சுதந்திரத்தில் முதலிடம், முதல்தர சரக்குக் கப்பல் தளம் என்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டது ஹாங்காங். சீனாவின் தற்போதைய படுவேகமான பொருளாதார வளர்ச்சிக்கு சோதனைக் களமாகப் பயன்பட்டது ஹாங்காங்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
சீனாவின் ஷென்சென் நகரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு சில ஆயிரம் பேர் வசித்த குக்கிராமமாக இருந்தது. தற்போது அங்கு மக்கள்தொகை 1 கோடியே 30 லட்சம். பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என ஹாங்காங் தொழிலதிபர்களின் முதலீடுகளால் இன்று அந் நகரத்தின் அபார வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. ஹாங்காங் மீதான பிடியைத் தளர்த்த சீனா யோசிப்பதற்கு இவைதான் முக்கியக் காரணங்கள்.
சீனாவின் கட்டுப்பாட்டுக்கு வந்த 10 ஆண்டுகளில் ஹாங்காங் சில சமரசங்களைச் செய்து கொள்ள வேண்டியதாகி விட்டது. ஹாங்காங் பகுதிக்குப் போட்டியாக ஷாங்காய் நகரை சீனா வளர்த்து வருகிறது.
பல்வேறு புதிய நிறுவனங்களை ஷாங்காய் நகருக்குக் கொண்டுபோய், கிட்டத்தட்ட சீனாவின் வர்த்தகத் தலைநகராகவே அதை மாற்றிவிட்டது.
ஹாங்காங்கை விட சீனாவில் தயாரிப்புச் செலவு குறைவு என்பதால் ஹாங்காங் நிறுவனங்கள்கூட தங்கள் கடைகளை சீன நகரங்களில் பரப்பியிருக்கின்றன. பாதி நிறுவனங்கள் சிங்கப்பூரை நோக்கிப் படையெடுத்து வருகின்றன.
இதனால் ஹாங்காங்கின் சிறு தொழில் அதிபர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தாய்நாட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதால் ஹாங்காங் மக்கள் இதுபோன்ற செயல்களை நேரடியாகக் குறைகூற முடியாது என்றாலும், தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதை எப்போதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
இவை ஒருபுறம் இருக்க, சீனாவுடன் இணைந்திருப்பதால் ஹாங்காங் பகுதிக்கும் சில நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. 2003-ல் ஹாங்காங்கில் பொருளாதார மந்தம் ஏற்பட்டபோது, சீனாவின் உதவி இல்லாமல் போயிருந்தால் ஹாங்காங் மீண்டு வந்திருக்க முடியாது. சீனாவின் சரக்குகளைக் கையாளுவதால் ஹாங்காங் துறைமுகம் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
இது தவிர, 1997-க்கு முந்தைய கணக்கை ஒப்பிட்டால் சுற்றுலாப் பயணிகளின் வருகை பல மடங்காகி இருக்கிறது. சீனாவிடம் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக ஹாங்காங் மாறிவிட்டது என்பதை இவை உணர்த்துகின்றன.
சீனாவின் எரிச்சல்களுள் ஒன்றாகக் கருதப்படும் தைவான், சீனாவுடன் சேர்வதற்குத் தயக்கம் காட்டுவதற்குக் கூறப்படும் காரணங்களுள் ஒன்று முழுமையான மக்களாட்சி மறுக்கப்படும் என்பதுதான். எனினும், முன்புபோல் அல்லாமல் மக்களாட்சிக்கு ஆதரவான போராட்டங்களை சீனா சகித்துக் கொண்டிருப்பதே மிகப்பெரிய மாற்றம்தான்.
பொருளாதாரத்தில் ஹாங்காங்கை சோதனைக் களமாகப் பயன்படுத்தி நாடு முழுவதும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்திய சீனா, ஹாங்காங்கில் முழுமையான மக்களாட்சியைக் கொண்டுவந்து, அதையும் நடைமுறைப்படுத்திப் பார்க்கலாமே. செய்வீர்களா தோழர்களே?
Posted in AP, Arts, Arunachal, Autocracy, Beijing, Bejing, Biz, Blair, Britain, Brown, Business, Cabinet, Casinos, Cathay Pacific, CathayPacific, Censor, China, Commerce, Communism, Communist, Communists, Country, defence, Defense, Democracy, Economy, England, Federal, Finance, Freedom, Gordon, Govt, Hongkong, HSBC, Independence, Industry, London, Macau, Manufacturing, Market, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Peking, PM, Politics, Power, Regime, Republic, Ruler, Shangai, Shanghai, Shares, Stocks, Taiwan, Tianamen, Tiananmen, Tianmen, Tibet, UK, World | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007
கார்டன் பிரவுன் கடந்துவந்த பாதை
கார்டன் பிரவுன் டோனி பிளேர்ருக்கு அடுத்தபடியாக பிரதமராக வரக்கூடிய அதிகபட்ச சாத்தியக்கூறுள்ளவர் என்று பல ஆண்டுகளாக கருதப்பட்டவர்.
கடந்த 10 ஆண்டுகளாக, அவர் பிரிட்டனின் நிதித்துறையின் பொறுப்பை வகித்து வந்தார். சுமார் இருநூறு ஆண்டுகளில் இந்த அளவு அதிக காலம் நிதித்துறை அமைச்சராக இருந்தவர் இவர்தான்.
சான்சலராக ( பிரிட்டிஷ் நிதியமைச்சர் அவ்வாறுதான் அழைக்கப்படுகிறார்) அவர் இருந்த காலத்தில், வெகு நீண்ட காலம் பிரிட்டனில், பொருளாதார வளர்ச்சி நீடித்தது. கடந்த மாதம் தனது இறுதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து பேசிய பிரவுன், வர்த்தக முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டுமே அதிகரித்து வருவதாகவும், கடன் வாங்குவது குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஆனால்,பிரவுனை விமர்சிப்பவர்களும் இல்லாமல் இல்லை. ஆளும் தொழிற்கட்சியின் சில உறுப்பினர்கள், சில சமயங்களில், பிரவுன் வெளிப்படுத்துகின்ற உற்சாகமற்ற – முசுட்டுத்தனமான தோற்றம், இளமையான, ஊடகங்களுக்கு நட்பான, எதிர்க்கட்சித் தலைவர், டேவிட் கேமரூனுடன் சாதகமாக கருதப்படாது போகலாம் என்று அஞ்சுகின்றனர்.
பிரவுன், ஸ்காட்லாந்தில் பிறந்து அங்கேயே கல்வி பயின்றவர். அரசியலில் அவருக்கு இருந்த ஆர்வம், எடின்பரோ பல்கலைக்கழகத்தில் அவர் படித்த காலத்திலேயே வெளிப்பட்டது. 1992ல் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருந்த போது, எதிர்க்கட்சியின் நிழல் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றபின்னர், அவர் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற முன்வரிசையில், கஜானவுக்கு அதாவது திரைசேரிக்கு, நிழல் தலைமைச்செயலாரகவும், வர்த்தக மற்றும் தொழில் துறை நிழல் செயலராகவும் இரண்டு மூத்த பொறுப்புகளை வகித்தார்.
புதிய தொழிற்கட்சி என்று அறியப்பட்ட கட்சியை புதுமையாக்கும் முயற்சியின் மையமாக டோனி பிளேரும் கார்டன் பிரவுனும் இருந்தனர். வழமையான சோசலிசத்தை கைவிட்டு அவர்கள் ஒரு மைய இடது சாரி அணுகுமுறையை கைக்கொண்டனர். ஆயினும், இருவருக்கும் இடையே, கருத்து வேற்றுமைகளும் வெளிவந்தன. அவர்களது ஆதரவாளர்கள் முறையே பிளேரைட்ஸ் மற்றும் பிரவுனைட்ஸ் என்று குறிப்பிடப்பட்டனர்.
சர்வதேச அரங்கில், பிரவுன் ஆப்ரிக்காவில் வறுமையைக் குறைக்கும் பிரிட்டனின் முயற்சிகளில் ஒரு முக்கியமான பங்கை வகித்தார். அவரது பரவலான அனுபவம் அவருக்கு கை கொடுக்கும் என்கிறார் பி பி சியின் பொருளாதார செய்தி ஆசிரியர் ஆண்ட்ரூ வாக்கர்
பிரிட்டிஷ் பிரதமராக கார்டன் பிரவுன் பொறுப்பேற்பு
பிரிட்டனில், புதிய பிரதமராக கார்டன் பிரவுன் அவர்கள் முறைப்படி பதவியேற்றுள்ளார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராகப் பதவி வகித்த டோனி பிளேயர் தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு கார்டன் பிரவுன் பதவியேற்றுள்ளார்.
அனைவரும் தங்களுக்குரிய நல்வாயப்புக்களை அடையக் கூடிய நிலையை உருவாக்குவது தனது முக்கியப் பணியாக இருக்கும் என்று எலிசபெத் ராணியால் புதிய அரசு அமைக்குமாறு அழைக்கப்பட்ட பிரவுன் கூறினார்.
தனது பதவியை ராஜினாமா செய்யும் முன்பாக, பிளேயர் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடித்த பிறகு, உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். இது ஒரு அபூர்வ நிகழ்வாகும்.
மனைவியுடன் கார்டன் பிரவுன்

குடும்பத்தினருடன் கார்டன் பிரவுன்
மத்திய கிழக்கு பகுதிக்கு சிறப்புத் தூதராக டோனி பிளையர் நியமனம்
 |
 |
டோனி பிளயரும் பாலத்தீன அதிபர் அப்பாஸும் |
பிரிட்டனின் பிரதமராக புதன்கிழமை பதவி விலகிய டோனி பிளயர் மத்திய கிழக்கு பகுதிக்கான சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா, ரஷியா, ஐ நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நால்வர் அணியால், மத்திய கிழக்கு பகுதிக்கான சிறப்பு தூதர் என புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பதவியில் டோனி பிளையர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அதிகார்வபூர்வ அறிவிப்பை ஐநா வெளியிட்டுள்ளது.
டோனி பிளயருக்கு உதவியாக ஒரு சிறு வல்லுநர் குழு ஜெரூசலத்திலிருந்து செயல்படும். மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்திற்கும் இடையே ஒரு அமைதியை ஏற்படுத்தி அந்தப் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவது டோனி பிளையரின் முக்கிய பணியாக இருக்கும்.
இந்தப் பொறுப்பிற்கு டோனி பிளையர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அரபு உலகத்தில் இது குறித்து கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன என பிபிசியின் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
இது குறித்த பெட்டகத்தை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்
பிரிட்டனின் புதிய அமைச்சரவை அறிவிப்பு
 |
 |
புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் |
பிரிட்டனின் புதிய பிரதமாரக பதவியேற்றுள்ள கார்டன் பிரவுன், தனது அலுவலின் முதல் முழு நாளான இன்று தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார்.
டோனி பிளையரிடமிருந்து நேற்று கார்டன் பிரவுன் பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
டோனி பிளயரின் அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள் அனைவருமே கிட்டத்தட்ட மாற்றப்பட்டுள்ளனர்.
ஆலிஸ்ட்டர் டார்லிங் புதிய நிதியமைச்சாரிகிறார். புதிய உள்துறை அமைச்சாராக ஜாக்கி ஸ்மித் நியமிக்கப்பட்டிருக்கிறார். முதல் முறையாக ஒரு பெண்மணிக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
வெளியுறவுத் துறையில் புதிய அமைச்சராகிறார் டேவிட் மிலிபேண்ட். இவர் முன்னதாக சுற்றுச் சூழல் துறையின் அமைச்சராக இருந்தவர்.
இராக் மீதான போர் மற்றும் லெபனான் மீது இஸ்ரேலின் தாக்குதல் ஆகியவை குறித்து தனிப்பட்ட முறையில் அவர் மாற்றுக் கருத்துக்களை கொண்டிருந்தார்.
பொறுமையும் பயனுள்ளதாகவும் இருக்கக் கூடிய இராஜதந்திர வழிகளை தாம் கையாளவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.
Posted in africa, Arab, Biosketch, Blair, Britain, Brown, Cabinet, Cameron, Chancellor, Charles, Commons, Commonwealth, Conflict, Conservative, Diana, Downing, Dubai, Egypt, Election, England, EU, Faces, Fatah, Finance, financial, Gordon, Gordon Brown, Government, Govt, Gulf, Hamas, Iraq, Ireland, Islam, Israel, Jerusalem, Kuwait, Labor, Labour, Leader, London, Mid-east, Mideast, NATO, Opposition, Palestine, Party, people, PM, Polls, Post, Prime Minister, Ruler, Russia, Saudi, Scotland, Shuffle, Thatcher, Tony, Tory, Treasury, UAE, UK, UN, War | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மே 30, 2007
விபரீத யோசனை
சிப்பாய் புரட்சி ஏற்பட்ட 150-வது ஆண்டு விழாவையொட்டி நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எழுப்பிய ஒரு கருத்து, அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதில் வியப்பில்லை.
பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற மேலைநாடுகளைப் போல் இந்தியாவிலும் இரண்டு கட்சி ஆட்சி முறை ஏற்படுவது நல்லது என்பதுதான் அவர் கூறியிருக்கும் கருத்து. சாதாரணமாக அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கருத்துக் கூறாமல் இருக்கும் குடியரசுத் தலைவர், தனது பதவிக்காலம் முடிய இருக்கும் நேரத்தில் இப்படியொரு சர்ச்சையைக் கிளப்ப வேண்டிய அவசியம் தான் என்ன?
மேலைநாடுகளைப் பொருத்தவரை, நமது நாட்டில் இருப்பது போல இந்த அளவு
- சாதி,
- மத,
- மொழி,
- சமுதாய,
- பொருளாதார ரீதியிலான பிரிவினைகள் கிடையாது. அதுமட்டுமல்ல, ஒரு சிலர் தவிர மற்ற அனைவருமே அடிப்படைக் கல்வி கற்றவர்களாக இருப்பதுடன், பொருளாதார ரீதியில் அடிப்படை வருமானம் உடையவர்களாகவும் இருக்கின்றனர்.
இந்தியாவைப் பொருத்தவரை, அத்தனை பிரிவினரின் குரலையும், தேவைகளையும் பிரதிபலிக்கவும், அவர்களது உணர்வுகளை ஆட்சியாளர்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்லவும், தேசியக் கட்சிகளால் இயலாமல் போனதன் விளைவுதான் இத்தனை கட்சிகளும், மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியும்.
ஒட்டுமொத்த தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படும்போது சில பல சிறிய பிரிவினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் போவது சகஜம். பல சந்தர்ப்பங்களில், சில பிரிவினரின் எதிர்ப்பார்ப்புகளும் உணர்வுகளும் புரிந்து கொள்ளப்படாமல் இருக்கும் சாத்தியமும் உண்டு. அதன் விளைவுதான் பல்வேறு அரசியல் கட்சிகள். பல கட்சி ஆட்சிமுறையில், குறிப்பாக நாடாளுமன்ற ஆட்சி முறையில் இது தவிர்க்க முடியாத நிர்பந்தம்.
பிரிட்டன் போன்ற மக்கள்தொகை குறைந்த, பொருளாதார மற்றும் கல்வி ரீதியில் வளர்ச்சி அடைந்த நாடுகளிலும், அதிபர் முறை ஆட்சி அமைப்புள்ள அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடைமுறையில் இருக்கும் இரு கட்சி ஆட்சிமுறை என்பது இந்தியாவைப் போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள, சமுதாய, மொழிவாரிப் பிரிவினைகளை உள்ளடக்கிய நாடுகளுக்குப் பொருந்தாது என்பது அரசியல் நிர்ணய சபை விவாதத்தின்போதே ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம்.
இந்த இரு கட்சி ஆட்சி முறையில் இன்னோர் அபாயமும் உண்டு. சுயநல சக்திகள் விரும்பினால் இரண்டு கட்சிகளையும் விலைக்கு வாங்கி ஜனநாயகத்தையே தனது கைக்குள் போட்டுக்கொண்டுவிட முடியும். அதுவும் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்கிற நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்தம், இதுபோன்ற விஷம சக்திகளுக்கு இரண்டு கட்சி ஆட்சி முறையில் பூரண சுதந்திரத்தை அளித்துவிடும்.
இந்தியப் பொதுமக்கள் அதிபுத்திசாலிகள். எந்த நேரத்தில் தங்களுக்கு எது வேண்டும் என்பதைத் தீர்மானித்துத் தேர்ந்தெடுப்பதில் நமது வாக்காளர்கள் கெட்டிக்காரர்கள். இரண்டு கட்சிக் கூட்டணிக்கு தேசிய அளவில் வழிகோலிய அவர்கள், இரண்டு கட்சி ஆட்சியைப் பல மாநிலங்களில் ஏற்றுக்கொள்ளவும் தயங்கவில்லை.
இரண்டு கட்சி ஆட்சி முறை அதுவாகவே உருவாக வேண்டும். உருவாக்கப்படக் கூடாது. அப்படி உருவாக்கப்பட்டால் அது இந்திய ஜனநாயகத்தையும், பொருளாதாரத்தையும், ஒரு சிலரின் கஜானாவிற்குள் அடகு வைத்துவிடும். பல்வேறு பிரிவினரின் உணர்வுகளைப் பிரதிபலிக்காத ஜனநாயகமாக இந்தியா மாறிவிடும். அதன் விளைவு பிரிவினைவாதத்திற்கு வழிகோலும். அதனால் வேண்டாமே இப்போது இரண்டு கட்சி ஆட்சி முறை!
Posted in ADMK, APJ Abdul Kalam, Assembly, BJP, BSP, Canada, Caste, Citizen, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communists, Community, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Conservative, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, Democracy, Democrats, Dems, Disintegration, DMK, Economy, Election, England, Federal, Foreign, France, Freedom, Globalization, Govt, Identity, Independence, India, Integration, Italy, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, Kalam, Labor, Language, Liberal, LokSaba, Minister, MP, National, Op-Ed, parliament, Party, PM, Politics, Polls, Population, President, Quebec, Region, Religion, Reps, Republic, Republicans, Rule, Sect, SP, Speaker, Tory, UK, USA, Vote | 4 Comments »
Posted by Snapjudge மேல் மே 11, 2007
1857ஆம் ஆண்டும் நீலன் சிலையும்
பு.எ. மோகன்
1857ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போர் எனப்படும் சிப்பாய்க்கலகத்திற்கு முன்னரே தென்னிந்தியா, குறிப்பாக தமிழகம் கங்கணம் கட்டிக்கொண்டு ஆங்கிலேயருக்கு எதிர்ப்பினை அறிவித்தது. இப் புரட்சியில்
- மருதுபாண்டியர்,
- வீரபாண்டிய கட்டபொம்மன்,
- கோபால நாயக்கன்,
- கேரளவர்மன் எதிர்ப்புப் போராட்டங்கள் அடங்கும்.
- வேலூர்க் கலகம் 1806ஆம் ஆண்டு ஏற்பட்டது. இதனை 1857ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குச் செய்த முன்னோட்டம் என வீரசாவர்க்கர் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து 1857 வரை ஏற்பட்ட கிளர்ச்சிகளை ஆங்கில கம்பெனி அரசு நசுக்கியது.
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி, வணிக நிறுவனமாகத் தோன்றி 1801ஆம் ஆண்டு அரசியல் நிர்வாகத்தை வேரூன்றச் செய்தது. கர்நாடக மற்றும் மைசூர் போர்கள் அக் கம்பெனியின் ஆட்சியை தென்னிந்தியாவில் நிறுவின. 1857ஆம் ஆண்டு வடஇந்தியாவில் கிளர்ச்சி தோன்றி மே திங்கள் 11ஆம் நாள் தில்லியை ஆங்கிலேயர்கள் இழந்தனர். கம்பெனி நிர்வாகம் அலறத் தொடங்கியது. தென்னகம் இவ்வேள்விக்குப் பிறிதொரு வழியினைப் பின்பற்றத் தொடங்கியது. 1840ஆம் ஆண்டு ஆங்கில நாடாளுமன்ற உறுப்பினர் டன்பே செமியூர் குடியானவர்களின் குறைகளைக் கேட்க வந்தார். அவர் சென்னையின் அரசியல் விற்பன்னர் லட்சுமி நரசு செட்டியின் இல்லத்தில் தங்கினார், குறைகளைக் கேட்டு அறிந்தார்.
இதைத் தொடர்ந்து 1857ஆம் ஆண்டு கிளர்ச்சிக்கு 5 ஆண்டுகள் முன், சென்னையில் ஆளுநர் டிரிவிலியனது பிரிவு உபசார விழாவில் 7,500க்கும் மேற்பட்ட நபர்கள் கையெழுத்திட்ட வாழ்த்துப் பத்திரத்தில் “பொறுப்பாட்சி வேண்டும்’ என்ற கோரிக்கையைச் சென்னை மக்கள் முன் வைத்தனர். அதற்கு அவர் பொறுப்பு ஆட்சி நடைபெறுவதற்கு முதலில் எங்களது பிரதிநிதித்துவ நிறுவனங்களைப் பார்த்து எவ்வாறு இயக்க வேண்டும் என்று கற்றுக்கொள்ளுங்கள் என்றார். மேலும், பொதுமக்கள் ஒழுக்கம் இல்லையேல் தேசிய அரசாங்கம் சாத்தியமல்ல என்று கூறினார். அவருக்கு இக் கோரிக்கை அதிசயமாகத் தோன்றியது. மேலும், இந்நிகழ்வு (பொறுப்பாட்சி) காலதாமதம் ஆவதற்கு நீங்கள்தான் காரணம் என்றார். இந்நிகழ்ச்சி தென்னிந்தியாவில் குறிப்பாக சென்னையில் பொதுநல எண்ணம் உடையோர் அரசியல் ரீதியாக விடுதலை வேள்வியினைத் தொடங்கினர் என்பதுடன் தற்கால “கோரிக்கை மனு’ முறை மூலம் அதிகாரங்களைப் பெறும் முயற்சியாகவும் அமைந்தது.
இதே தென்னிந்தியாவிலிருந்துதான் 1857ஆம் ஆண்டு மே மாத இறுதியில் கர்னல் ஜேம்ஸ் நீலன் படையுடன் வங்கம் சென்று கிளர்ச்சியை அடக்கினார். அலாகாபாத், காசி ஆகிய நகரங்களைக் கைப்பற்றினார். அனைவரையும் சந்தேகக் கண்களுடன் பார்த்தார்.
ஐரோப்பியர் இறந்து ரத்தம் சிந்தியிருந்த இடங்களைத் தூய்மை செய்ய இந்தியர்களை குறிப்பாக பிராமணர்களைக் கட்டாயப்படுத்தினார். சிறுவர்களையும் விட்டு வைக்கவில்லை. அப் பணியைச் செய்தபோது மிக்க பயங்கரமான வெறுப்புடனும், மிக கோரமான நிறைவேற்றும் சக்தியுடனும் அவர்களையும் சந்தேகத்திற்குரியவர்களையும் தூக்கிலிட்டார்; “கருணை என்பது இறுதிச் செயல்’ என்றார். இத்தகைய நீலன் லக்னௌ நகரில் 1857ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் நாள் கிளர்ச்சியாளர்களுடன் வீதியில் மோதியபோது சுட்டுக் கொல்லப்பட்டார். ஆங்கில அரசு நீலனின் சேவையைப் போற்றியது. சென்னை மாகாண ஆங்கில அரசு ரூ. 12 ஆயிரம் செலவழித்து 1861ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீலனின் சிலையைச் சென்னை ராஜதானியின் மவுண்ட் சாலை (அண்ணாசாலை)யில் நிறுவியது.
இந்தியக் கிளர்ச்சியாளர்களைக் கொன்று குவித்த நீலனின் சிலையை எழுபது ஆண்டுகளுக்கும் மேல் தமிழகம் பார்த்துக் கொண்டிருந்தது. 1927ஆம் ஆண்டு மதுரை நகரிலிருந்து சென்னை வந்த சீனிவாசவரதன், உத்வேகத்துடன் சிலையை அகற்ற வேண்டும் என முடிவு செய்தார். அவர் கண்முன் நீலனின் “சேவை’யும் இந்தியரின் வேதனையும் வந்தது. “தமிழக தொண்டர் படை’ என்ற அமைப்பு தமிழக காங்கிரஸின் செயல்பாடாக அமைந்தது. திருநெல்வேலி சோமையாஜுலு தலைமை ஏற்றார்.
ஆகஸ்ட் மாதம் 11ஆம் நாள் சிலை அகற்றும் அறப்போராட்டம் தொடங்கியது. குழந்தை, ராமநாதபுரம் குப்புசாமி, வடஆர்க்காடு என். அண்ணாமலை பிள்ளை, தென்னார்க்காடு தெய்வநாயக அய்யா, பண்ருட்டி முகமது சாலியா கலந்துகொண்டனர். நீலன் சிலையைத் தாக்கி, இந்திய தேசியக் கொடியினை வைத்தனர். முகமது சலியாவையும் சோமையாஜுலுவையும் காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தது.
எனினும் இந்த அறப்போராட்டம் 1928ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தொடர்ந்தது. அணி அணியாகத் தொண்டர்கள் பங்கேற்றனர். விருத்தாசலம் கே.வி. கணபதி, அவரது மனைவி அங்கச்சி கலந்துகொண்டு ரூ. 50 அபராதமும் சிறைத்தண்டனையும் பெற்றனர். இவர்களைத் தொடர்ந்து முருகையன், அவரது மனைவி அஞ்சலையம்மாள் மற்றும் அவர்களது 9 வயது மகள் அம்மாகண்ணு ஈடுபட்டனர். இவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுமியைக் காப்பகத்தில் வைத்தனர். அடுத்ததாக, கடலூர் சீனிவாசன் அதையடுத்து கன்னையா படையாச்சி, ஞானசுந்தரம், வேலுசாமி இராஜா, கோவிந்தராஜ் சிறை சென்றனர். சென்னையில் கபாலீசுவரர் கோயிலில் இதற்காகக் கூடிய கூட்டத்தில் பேசிய சிதம்பரம் நைனியப்ப பிள்ளை கைது செய்யப்பட்டார். இரண்டு ஆண்டு பாளையங்கோட்டை சிறை வாழ்வு அவருக்குக் கிடைத்தது. இவர் கைதினை எதிர்த்துத் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பேசிய தெய்வநாயக அய்யா, “நீலன் கொடுங்கோலன் என்பதால் அகற்றக் கோருகிறோம்; அயல்நாட்டவர் என்பதால் அல்ல’ என கூறினார். இப்போராட்டத்தினைக் கண்ணுற்ற பி. பக்தவத்சலம் நாயுடு சென்னை சட்டமன்றத்தில் சிலை அகற்றும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அத் தீர்மானத்திற்கு 29 வாக்குகள் ஆதரித்தும், 67 வாக்குகள் எதிர்த்தும் 2 நடுநிலையாகவும் அமைந்தது. இதனைத் தொடர்ந்து கிருட்டிணமூர்த்தி, முகமதுசாலியா, ஆனந்த ஆச்சாரி, தெய்வநாயக அய்யா அறப் போராட்டத்தில் சிறை சென்றனர். இதில் ஆந்திரத்தின் பங்கினைத் தனியாக எழுத வேண்டும்.
1857ஆம் ஆண்டு நிகழ்வு நடந்து 80 ஆண்டுகள் கழித்து 1937ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் நாள், சென்னை மாகாண அரசின் பிரதமராக விளங்கிய சி. இராசகோபாலச்சாரியின் காங்கிரஸ் அமைச்சரவை மக்கள் பார்வையிலிருந்து சிலையினை அகற்ற வேண்டிய தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிச் சிலையைச் சென்னை அருங்காட்சியகத்திடம் ஒப்படைத்தது. நீலன் புரிந்த வன்கொடுமைகள் நூறு ஆண்டுகள் நிறைவு பெறப் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே (1947) இந்தியா விடுதலை அடைந்தது. ஜான்சி ராணிகள், சாதாரண மனிதர்கள் என விடுதலை வேள்விக்குத் தமிழகம் ஈந்தது பெருமையுடைத்து. சாதி சமய வேறுபாடின்றி அவர்கள் தங்களை அர்ப்பணித்தனர். 1857ஆம் ஆண்டு விடுதலை வேள்வியின் வட இந்திய நிகழ்வுக்குத் தமிழகம் அளித்த பங்கு மிக சிறப்பானது; போற்றத்தக்கது.
(கட்டுரையாளர்: பேராசிரியர்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.)
————————————————————————————–
பழங்கதை சொல்வதில் மகிமையில்லை
இரா. சோமசுந்தரம்
வேலூர் கோட்டையில் 1806, ஜூலை 10-ல் நடைபெற்ற சிப்பாய்க் கலகம்தான் இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்று தமிழகத்தில் நாம் சொல்லிக் கொண்டாலும், வரலாற்று ஆசிரியர்களைப் பொருத்தவரை 1857-ல் நடந்த சிப்பாய் புரட்சிதான் இந்தியாவின் முதல் விடுதலைப் புரட்சி. தற்போது நாடு முழுவதும் 150-வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.
ஆங்கிலேயரை போரில் எதிர்ப்பதும், ஆங்கிலேயர் இந்த மண்ணின் கலாசாரத்துக்கு எதிரானவர்கள் என்பதற்காக எதிர்ப்பதும் இருவேறு விஷயங்கள். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குள் வணிகம் செய்ய வந்த நாள் முதல் மன்னர்கள் பலர் எதிர்த்துள்ளனர். அவை அரசைக் கைப்பற்ற நினைப்பவருக்கும், அரசைக் காப்பாற்றிக்கொள்ள நினைப்பவருக்குமான போர்.
1857-ல் நடந்த ராணுவப் புரட்சி என்பது, ஆங்கிலேயர்கள் இந்த மண்ணின் கலாசாரத்துக்கும், மரபுகளுக்கும் எதிரானவர்கள் என்பதால், அவர்களின் நிழலில் நின்றுகொண்டே அவர்களை எதிர்த்த புரட்சி. ஒரு ராணுவ அமைப்புக்குள் இது நடைபெற்றபோதிலும் இந்தப் புரட்சியின் காரணிகளில் இந்திய மக்களின் எதிர்ப்புணர்வு இருந்ததால் இது முக்கியத்துவம் பெறுகிறது.
வேலூர் கோட்டையில் நடந்த சிப்பாய்க் கலகத்தில் இத்தகைய நோக்கம் இல்லை என்பது வரலாற்று ஆசிரியர்களின் எண்ணம். அது தவறு என்பது தமிழர்களின் கருத்து. வரலாற்று ஆசிரியர்களைப் பொருத்தவரை, வேலூர் கோட்டையில் நடந்தது ஒரு போர். அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தானின் குடும்பத்தினரை மீட்கவும், ஆங்கிலேயர்களைப் பழிவாங்கவும் கோட்டையைக் கைப்பற்ற நடத்தப்பட்ட போர்.
திப்பு சுல்தான் குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்தது உண்மைதான். அவர்களோடு வந்த திப்பு சுல்தானின் படை வீரர்கள் கோட்டையைச் சுற்றிலும் இருந்த குடியிருப்புகளில் ஓராண்டுக்கும் மேலாக தங்கியிருந்து சரியான நேரம் பார்த்துக் காத்திருந்தனர் என்பதும் உண்மை.
அதே சமயம், வேலூர் கோட்டையில் ஆங்கிலேய ராணுவத்தில் இடம்பெற்ற சிப்பாய்களிடம் ஆங்கிலேயரின் கலாசார விரோத போக்குக்கு எதிர்ப்பு இருந்ததும் உண்மையே. இத்தகைய வீரர்களின் ஒத்துழைப்புடன்தான் திப்பு சுல்தானின் வீரர்கள் இக்கோட்டைக்குள் புகுந்து ஆங்கிலேயர்களைக் கொன்றனர்.
“”1857-ல் நடந்த முதல் விடுலைப் புரட்சிக்கான அனைத்து காரணிகளும் வேலூர் புரட்சியிலும் இருக்கின்றன. ஆதலால் 1806 ஆண்டு நடந்த வேலூர் கோட்டை சிப்பாய்க் கலகத்தை முதல் விடுதலைப் போர் என்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று தமிழர்கள் கோருகின்றனர். ஆனால் இந்தக் கோரிக்கைக்கு எந்தவிதமான ஆதாரங்களும், ஆவணங்களும் இல்லை என்பதுதான் தமிழகத்தின் பலவீனமாக இருக்கிறது.
பின்னிரவில், சில மணி நேரங்களில் முறியடிக்கப்பட்ட இந்தக் கலகத்தைத் தொடங்கிய சிப்பாய் யார்? எந்தெந்த காரணங்களை முன்னிறுத்தி புரட்சி வெடித்தது? என்பதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை.
இறந்த ஆங்கிலேய வீரர்கள் பெயர்கள் ஆவணங்களில் உள்ளன. ஆனால் இறந்துபோன ராணுவ சிப்பாய்கள், திப்பு சுல்தானின் முக்கிய படைத்தளபதிகள் தொடர்பான எந்தக் குறிப்புகளும் ஆவணம் என்று சொல்லக்கூடிய அளவில் ஏதுமில்லை. அவை ஆங்கிலேயரால் அழிக்கப்பட்டன. ஒரு சாதாரண லாக்-அப் மரணத்தை மறைக்க அல்லது “என்கவுன்ட்டரை’ நியாயப்படுத்த காவல்துறை ஆயிரம் ஜோடனைகள் செய்கிறபோது, ஆங்கிலேய அரசு ஆவணங்களை மறைத்ததில் வியப்பில்லை. ஆனாலும் உண்மைகள், மறைக்க முடியாதவையாக வாழையடி வாழையென தலைகாட்டுபவை.
நடந்த சம்பவங்களுக்கு மிகப் பெரிய சாட்சியும் ஆவணமும் வேலூர் கோட்டைதான். அகழியில் சடலங்கள் வீசப்பட்டதாகவும் கோட்டைக்குள் ஒரு பெருங்கிணற்றில் சடலங்கள் புதைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தியத் தொல்லியல் துறையின் பொறுப்பில் உள்ள வேலூர் கோட்டையிலும் அதன் அகழியிலும் அகழாய்வு செய்தால் பல கூடுதல் சான்றுகள் கிடைக்கும். இந்த சான்றுகள் 1806 ஜூலை 10 இரவின் பேசப்படாத உண்மைகளைப் பேசும். அவை பேசினால்தான் தமிழர் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும்.
சம்பவம் நடந்து 200 ஆண்டுகளே ஆன நிலையில், இங்கு அகழாய்வு செய்தால் இந்தச் சான்றுகள் இன்னும் “ரத்தமும் சதையுமாக’ உயிர்ப்புடன் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
Posted in 1857, Britain, British, defence, Defense, East India Company, English, Fight, Fighter, Flag, Freedom, Gandhi, Independence, India, London, Military, Mutiny, Nation, Neelan, Nelan, Sepia, Sepoy, Statue, Symbol, UK, Vellaloor, Vellalur, Vellore, Vellur, Velore | 2 Comments »
Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2007
லண்டன் டைரி: கோவண்ட் தோட்டத்துப் படைப்புகள்!
இரா. முருகன்
வெல்லிங்டன் தெருவில் நடக்கும்போது, வெள்ளைக்காரத் துரைகளைப் பின்னால் தள்ளிக்கொண்டு மனதின் உள்ளறையிலிருந்து, “”எப்படிடா இருக்கே?” என்று ஓங்கிக் குரல் கொடுக்கிறவன் தடிராஜா. ரொம்ப வருடம் முன்னால் பள்ளிக்கூடத்தில் கூடப்படித்தவன். புத்தகம் சேகரிப்பில் பேய்த்தனமான ஆசை. எல்லாமே சோனியான சினிமா பாட்டுப் புத்தகங்கள். அட்டையில் மசமசவென்று படத்தின் ஒரு ஸ்டில் போட்டு, உள் அட்டையில் நாலுவரி திரைக்கதை எழுதி, “மீதியை வெள்ளித்திரையில் காண்க’ என்று தவறாமல் அச்சடித்திருக்கும். மீதிப் பக்கங்களில், அந்தச் சினிமாவில் இடம் பெற்ற பாடல்கள், நடுநடுவே “ஜிஞ்ஜின்னாக்கடி ஜிஞ்ஜின்னாக்கடி’, “கும்தலக்கா கும்தலக்கா கும்மா’ போன்ற அரிய இசைக்குறிப்புகளோடு வெளியாகியிருக்கும் வயசாகி, பைண்ட் செய்த அந்தப் பாட்டு புத்தகங்களை அடுக்கிவைத்துக்கொண்டு கொஞ்சமும் அபஸ்வரம் விலகாத குரலில் அதிலிருந்து நேயர் விருப்பமாக எனக்குக் கொஞ்சம் பாடிக்காட்டினான். அந்த நினைவு வெல்லிங்டன் தெருவில் இப்போது எழக் காரணம் இல்லாமல் இல்லை.
கிட்டத்தட்ட இருநூறு வருடம் முன்புவரை லண்டன் கோவண்ட் தோட்டப் பகுதி நாடகக் கொட்டகைகள் தினசரி அரங்கு நிறைந்த காட்சிகளாக வசூலில் சக்கைப்போடு போட்டது உண்மைதான். ஆனால் ரசிகர்கள் அந்த நாடகங்களைப் பார்த்து ரசித்துவிட்டு மனதில் அசைபோட்டபடி வீட்டுக்குப் போகத்தான் முடியும். நாடகத்தைப் புத்தகமாக அச்சடித்து விற்கத் தடை இருந்ததால், வீட்டில் ஓய்வாக வசனத்தைப் படித்து ரசிக்கவோ, பலகுரலில் நடித்து மற்றவர்களை இம்சிக்கவோ முடியாத சூழ்நிலை. 1830-ம் ஆண்டு தாமஸ் லேக்கி என்ற புத்தக வெளியீட்டாளர் அரும்பாடுபட்டு இதை மாற்றி, வெல்லிங்டன் தெருவில் நாடகங்களை அச்சுப்போட்டு, மலிவுப் பதிப்பாக விற்க ஆரம்பிக்க, அவருக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. தமிழ் சினிமாவுக்கு முதல் பாட்டுப் புத்தகம் போட்டவரை நாம் மறந்துவிட்டாலும், தாமஸ் லேக்கியை கோவண்ட் தோட்டம் இன்னும் நினைவில் வைத்திருக்கிறது.
இந்தக் கோவண்ட் தோட்டம் தலைசிறந்த ஆங்கில இலக்கியப் படைப்புகள் பலவற்றிலும் இடம் பெற்றிருக்கிறது. காரணம் அந்தக் கால இலக்கியப் பிரபலங்கள் பலரும் இந்தப் பேட்டையில் வசித்திருக்கிறார்கள். அல்லது தினசரி ஒரு தடவையாவது இங்கே வந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு, சக எழுத்தாள நண்பர்களோடு கோஷ்டியாகக் கடையில் ஏறி ஆளுக்கு ஒரு கிளாஸ் பியரோ அல்லது ஒரு கப் காப்பியோ குடித்தபடி சண்டை போட்டு, சமாதானமாகித் திரும்பிப் போயிருக்கிறார்கள். ஹென்றி ஃபீல்டிங்க் என்ற எழுத்தாளர் இந்தச் சண்டைகளுக்காகவே கோவண்ட் தோட்ட மதுக்கடைகளை நித்தியப்படி சுற்றி வருவாராம். (அந்தக் காலத்தில் சண்டை போட்டுக்கொள்ள இலக்கியச் சிற்றிதழ் போன்ற வசதிகள் இல்லையோ என்னமோ). வயதாகி நடை
தளர்ந்து சண்டை போடமுடியாமல் போனபோதும் இவர் அசரவில்லை. காசு கொடுத்து யாரையாவது கூட்டிவந்து தன் சார்பில் பொறிபறக்க மோதவைத்துவிட்டு, ஓரமாக ஸ்டூலில் உட்கார்ந்து பியர் குடித்துக்கொண்டு உற்சாகமாக வேடிக்கைப் பார்ப்பாராம்.
புகழ்பெற்ற நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ் கோவண்ட் தோட்டப் பகுதிவாசி. அவருடைய “ஆலிவர் டுவிஸ்ட்’ நாவலில் லண்டனுக்கு வரும் அனாதைச் சிறுவன் ஆலிவர் போய்ச்
சேரும் இடம் கோவண்ட் கார்டன்தான். கோவண்ட் தோட்டப் பகுதியில் சார்லஸ் டிக்கன்ஸ் வசித்த வீட்டைத் தேடியலைகிறேன். “குடும்பத்தைப் பராமரிக்கச் சாமர்த்தியம் போதாது’ என்ற வினோத காரணத்துக்காக இந்தப் பிரபல எழுத்தாளர் அவருடைய மனைவியை விவாகரத்து செய்தபோது எழுதிய கடிதம், அவருடைய நாவல்களின் கையெழுத்துப் பிரதிகள், இவற்றோடு அவருடைய மைத்துனிக்கு எழுதிய அன்புக் கடிதங்களும் இங்கே காட்சியாக வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல். கதை அப்படிப் போகிறதாக்கும்.
இலக்கிய மேதை பெர்னார்ட்ஷா எழுதிய புகழ்பெற்ற நாடகமான “பிக்மாலியன்’ கோவண்ட் தோட்டம் ராயல் ஓபரா வாசலில்தான் தொடங்குகிறது. எலிசா டூலிட்டில் என்ற பூ விற்கும் ஏழையான இளம்பெண்ணை ஒரு பேராசிரியர் நாகரீக சீமாட்டியாக்கும் கதை இது. இந்த நாடகத்தின் அடிப்படையில் சோ தமிழில் எழுதிய “மனம் ஒரு குரங்கு’ கோவண்ட் தோட்டச் சூழ்நிலைக்குப் பொருத்தமான கொத்தவால்சாவடிப் பகுதியில் தொடங்குகிறதா என்பது நினைவில் இல்லை.
பழைய லண்டன் டவர் மிருகக்காட்சி சாலையைச் சுற்றிவந்து “புலிக்கவிதை’ எழுதிய கவிஞர் வில்லியம் ப்ளேக்கும் இன்னொரு கோவண்ட் தோட்டவாசிதான். “ஆவிகளோடு பேசுவதில்’ ஈடுபட்டிருந்த இவர், தனக்கு நூறு வருடம் முன்னால் இறந்துபோன மகாகவி மில்டனின் ஆவியோடு தொடர்பு கொண்டு, அவர் சொல்லச் சொல்ல எழுதியதாக, ஒரு காவியம் வெளியிட்டார். ஆனால் கவிதை ரசிகர்களோ, ஆவி ஆராதகர்களோ அதில் சிறிதும் ஆர்வம் காட்டவில்லையாம்.
ஆவி என்றதும் அடுத்து நினைவுக்கு வருகிறவர், திடுக்கிட வைக்கும் திகில் சினிமாப் படங்களை இயக்கிய ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக். இந்தப் பிரசித்தி பெற்ற ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் கோவண்ட் தோட்டக் காய்கறிக்கடை வியாபாரி ஒருவரின் மகன். சின்ன வயதில் அப்பாவுக்கு உதவியாகக் கடையில் இருந்ததோடு கோவண்ட் தோட்டத்தையும் இண்டு இடுக்கு விடாமல் சுற்றி வந்த ஹிட்ச்காக், தன்னுடைய “பிரன்ஸி’ படத்தில் சாப்பாட்டிலும், கொலையிலும் விருப்பம் கொண்ட கதாநாயகனாக்கியது ஒரு கோவண்ட் தோட்டக் காய்கறிக் கடைக்காரரைத்தான்.
ஹிட்ச்காக்கின் மற்ற படங்களைப் பற்றி யோசித்தபடி லைசியம் தியேட்டரைக் கடக்கிறேன். நீலக் கோட்டும் டையும் அணிந்த ஒரு மத்திய வயசு வெள்ளைக்காரர் மணி கேட்கிறார். கைக்கடியாரத்தைப் பார்ப்பதற்கு முன், எனக்கு முன்னால் ஒரு கத்தை டிக்கெட்டுகள் நீட்டப்படுகின்றன. கோவண்ட் தோட்ட, மற்றும் பக்கத்து ஸ்ட்ராண்ட் பகுதி நாடகக் கொட்டகைகளில் இன்று மாலைக்காட்சிக்கான நுழைவுச் சீட்டுகள். லைசியம் அரங்கத்தில் பத்து பவுண்டுக்கு “சிங்க அரசன்’ பகல் காட்சிக்கே கிடைக்கிறது. இருபது வருடமாக லைசியம் தியேட்டரில் தொடர்ந்து நடக்கிற இசை நாடகம். ஒரு வாரம் முன்னால்தான் இன்னோர் இசை நாடகமான ஈவிதா பார்த்ததால் “லயன் கிங்’ பார்க்கும் படலத்தைச் தள்ளிப்போட உத்தேசித்திருப்பதாக அவரிடம் மரியாதையோடு தெரிவிக்கிறேன். கோட் பாக்கெட்டிலிருந்து வேறு எதையோ எடுத்து நீட்டும் முன்னால் கொஞ்சம் நடையை எட்டிப் போட்டு கோவண்ட் தோட்ட ரயில் நிலையத்தை நோக்கித் திரும்புகிறேன்.
லண்டனில் எங்கெங்கோ எல்லாம் இருந்து புறப்பட்டு பெருவெள்ளமாக ஒரு ஜனக்கூட்டம் ரயில்நிலையத்தை விட்டு வெளியேறி கோவண்ட் தோட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறது. இதில் எதிர் நீச்சல் போட்டு உள்ளே நுழைவது சிரமம். கொஞ்சம் காலாற நடந்தால் சாரிங் கிராஸ் தெரு வரும். அங்கே பழைய புத்தகக்கடைகளை மேய்ந்துவிட்டு சாரிங் கிராஸ் ஸ்டேஷனில் ரயிலைப் பிடிக்க வேண்டியதுதான். பழைய புத்தகக் கடையில் தேடினால் பழைய சினிமா பாட்டுப் புத்தகம் கிடைக்கக் கூடும். பெர்னார்ட் ஷாவின் பிக்மேலியனை இசைச் சித்திரமாக எடுத்த “மைஃபேர் லேடி’, டிக்கன்ஸ் கதையான “ஆலிவர்!’, யூல் பிரின்னர் நடித்த “கிங்க் அண்ட் ஐ’, ஜாலி ஆண்ரூஸின் “சவுண்ட் ஆஃப் ம்யூசிக்’… “கர்ணன்’கூடக் கிடைக்கலாம். தடிராஜா கலெக்ஷனில் அந்தச் சினிமாப் பாட்டுப்புத்தகம் மட்டும் இன்னமும் கிடைக்கவில்லை என்று சொல்லியிருக்கிறான்.
=======================================================
லண்டன் டைரி: விறைபேபான ‘பிக்கடில்’ !
இரா. முருகன்
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் சென்னைக்குக் குடியேறிய புதிதில், சமர்த்தாக ஆபீஸ் போய்க்கொண்டிருந்தேன். மிச்ச நேரம் புதுக்கவிதை எழுதிக் கொண்டிருந்தேன். அஞ்சலில் அனுப்பினால் போய்ச்சேர நாளாகிவிடும் என்பதால், கவிதை எழுதிய காகிதத்தைச் சுருட்டிப் பிடித்துக்கொண்டு ஜெமினி பக்கம் தொடங்கி, அண்ணாசாலை நெடுக நடந்து, அந்தக் கோடியில் அண்ணாசிலைக்கு அருகேயிருந்த பத்திரிகை அலுவலகத்துக்குப் போகிற வழக்கம். சென்னை மாநகரின் பரபரப்பும் இரைச்சலும் வேகமும் நிறைந்த இதயத் துடிப்பை ஒளி, ஒலி, வாடை ரூபமாக நெருக்கத்தில் இருந்து அனுபவித்துக்கொண்டு மூச்சு வாங்கப் பத்திரிகை ஆபீஸ் படியேறிய அந்தக் கணங்களைக் கொஞ்சம்போல் லண்டனில் இப்போது திரும்ப அனுபவிக்கிறேன். லண்டன் மாநகரின் இதயமான பிக்கடலியின் மேற்குப் பக்கத்து கிரீன்பார்க் ரயில் நிலையத்தில் தொடங்கி, கிழக்கே பிக்கடலி சதுக்கத்தை நோக்கி அந்தி சாய்கிற நேரத்தில் ஓய்வாக ஒரு நடை.
“பிக்கடலி’ இந்த வார்த்தை காதில் விழுந்ததும், உலகம் முழுக்கக் கடைவீதி, ஒட்டுச் சந்து, வீட்டுத் திண்ணைகளில் தையல் மிஷினுக்கு முன்னால் உட்கார்ந்து மும்முரமாகத் தைத்துக்கொண்டிருக்கும் லட்சக் கணக்கான தையல்காரர்கள் ஒரு நொடி இயந்திரத்தை நிறுத்திக் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு பெருமைப் பட்டுக்கொள்ளலாம். காரணம், தையல் இல்லாவிட்டால் பிக்கடலி இல்லை.
பிக்கடில் என்பது விறைப்பான சட்டைக் காலருக்கான பெயர். பிக்கடில்களைத் தயாரித்து விற்றுப் பெரும் பணம் சம்பாதித்த ராபர்ட் பேக்கர் 1612-ல் வெற்று வெளியாகக் கிடந்த இந்தப் பகுதியில் முதல் வீட்டுமனை வாங்கிக் கட்டிக் குடிபோனாராம். அவர் தயாரித்த காலர் நினைவாக, இந்தப் பிரதேசமே பிக்கடலி என்று நாமகரணம் செய்யப்பட்டது என்று லண்டன் சரித்திரம் தெரிவிக்கிறது. காலர் மட்டும் தயாரித்தே இப்படி ஒரு பெரிய பிரதேசத்துக்குப் பெயர் கொடுத்த அந்தத் தையல்காரர் சட்டை, பேண்ட், பிளவுஸ் என்று தைத்துத் தள்ளியிருந்தால், லண்டன் நகரத்துக்கே தையல்கடை என்று பெயர் மாற்றியிருப்பார்களோ என்னமோ.
ராபர்ட் பேக்கர் டெய்லர் பிக்கடலியின் குடிபுகுந்த முகூர்த்தம், உள்நாட்டுக் கலகம், சண்டை சச்சரவெல்லாம் ஓய்ந்து நாட்டில் அமைதி நிலவ ஆரம்பித்திருந்தது. பரம்பரைப் பணக்காரர்களான ரோத்சைல்ட், ரோத்மன், பர்லிங்டன் போன்ற பிரபுக்களும் இங்கே வசிக்க ஆரம்பிக்க, பிக்கடலி நவநாகரிகமான பிரதேசமானது. அடுத்த முன்னூறு வருடத்தில் பழைய பங்களாக்கள் இருந்த இடத்தில் பெரிய கடைகள் எழுந்து நிற்க, நகரின் முக்கியமான வியாபார கேந்திரமாக பிக்கடலி மாறியது. இதற்கு வழி செய்தவர் பர்லிங்டன் பங்களாவாசியான கேவண்டிஷ் பிரபு.
“”ஏங்க, நிதம் இங்கே தொந்தரவாப் போச்சு. ஊர்லே திரியற வேலைவெட்டியில்லாத ஆளுங்க சதா அழுகின முட்டை, நத்தை ஓடு, செத்தை குப்பைன்னு வீட்டுக்குள்ளே விட்டெறிஞ்சுட்டுப் போறாங்க. வேலைக்காரங்க சுத்தம் செய்யறதை மேற்பார்வை செஞ்சு செஞ்சு உடம்பெல்லாம் வலிக்குது. இதை உடனே நிறுத்த ஆம்பளையா லட்சணமா ஏதாவது வழி பண்றீங்களா இல்லே…”
காவண்டிஷ் பிரபுவின் வீட்டம்மா மிரட்டியிருக்கலாம். அவர் உடனே விரைவாகச் செயல்பட்டு, பர்லிங்க்டன் பங்களாவை ஒட்டி பர்லிங்டன் ஆர்க்கேட் என்ற கடைப் பகுதியை உருவாக்கினார். கடைகளுக்கு வாடகையாகக் கணிசமான வருமானம். பணப் புழக்கம், வரி என்பதால் அரசாங்க ஆதரவு. கடைச் சிப்பந்திகளுக்கு வேலைவாய்ப்பு என்ற ஜனரஞ்சகமான ஏற்பாடு. அங்காடிக்குக் கடைக்காரர்கள் செலவில் இருபத்துநாலு மணிநேரமும் கட்டுக்காவல் என்பதால் அதை ஒட்டிய தன் வீட்டில் அழுகிய முட்டை விழுவது நிறுத்தம். இப்படி ஒரே கல்லில் ஏகப்பட்ட மாங்காய்களைக் குறிவைத்து 1819-ல் உருவான இந்த பர்லிங்டன் ஆர்க்கேட் தான் லண்டனின் நாகரீகமான பெரிய கடைகள் நிறைந்த முதல் அங்காடி.
இதைக் கட்டிமுடிக்க அந்தக் காலத்திலேயே கிட்டத்தட்ட அரைக்கோடி ரூபாய் செலவு. மொத்தம் நாற்பத்தேழு கடை. ஒரு கடைக்கு அறுபது பவுண்ட் வருட வாடகை. காவண்டிஷ் பிரபு அங்காடியைக் கட்டும்போது, இதைப் பெண் வணிகர்களுக்கு மட்டுமே வாடகைக்கு விடுவேன் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாராம். நகை விற்கிற கடை, புகையிலை விற்கிற கடை, துணிக்கடை, தொப்பி விற்கிற கடை, துப்பாக்கிக் கடை, புத்தகக் கடை என்று நாற்பத்தேழு கடைகளையும் குத்தகைக்கு எடுத்தவர்களில் பெண்களைவிட ஆம்களே அதிகம். என்ன போச்சு? பர்லிங்டன் ஆர்க்கேடில் கடைபோட்ட அய்யாக்களும் அம்மணி(மேடம்) என்றே அழைக்கப்பட, காவண்டிஷ் பிரபுவின் நிபந்தனை நிறைவேறியது.
இங்கே கடை வைத்தவர்கள் கடைக்கு மேலேயே நெருக்கியடித்துக் குடும்பம் நடத்திக் கீழ்த்தளத்தில் வியாபாரம் செய்து வந்ததாகத் தகவல். இங்கிலாந்து ராஜ குடும்பம் இங்கே பல கடைகளின் வாடிக்கையாளராகச் சுருட்டும், துணியும் தொப்பியும் வாங்கியிருக்கிறது. வாடகை அதிகம் என்றாலும் முடிதிருத்தும் நிலையம்கூட நூற்றெழுபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் இங்கே இருந்திருக்கிறது. ” எங்க கடையில் முடிவெட்டினால், ஒவ்வொருத்தருக்கும் புதுச்சீப்பு’ என்று அவர்கள் 1851-ல் “தினச் செய்தி’ பத்திரிகையில் விளம்பரம் செய்திருக்கிறார்கள். சவுரிமுடி, விக் விற்பனையும் கடையில் அமோகமாக நடந்ததாகத் தெரிகிறது.
மேட்டுக்குடிக்கான கடைப்பிரதேசமான இங்கே ஹாலிவுட் கனவுக்கன்னி இன்கிரிட் பெர்க்மென் (உத்தேசமாக நம் நாட்டியப் பேரொளி பத்மினி, சாவித்திரி காலம்) ஷாப்பிங் செய்ய வந்தபோது, கூட்டம் கூடாமல் தடுக்க, அங்காடியின் வெளிக்கதவை அடைத்து வைத்திருந்தார்களாம். அதையும் மீறி உள்ளே நுழைந்து துணிக்கடையில் படியேறிய ஒரு மூதாட்டியிடம் வெளியே நின்ற கடைச்சிப்பந்தி பெருமையாகச் சொன்னார்- “”உள்ளே பாருங்க, யார் இருக்காங்கன்னு..” பாட்டியம்மா கண்ணை இடுக்கி உள்ளே பார்த்துவிட்டு முணுமுணுத்தாராம்- “”ஆமா, தொந்தியும் தொப்பையுமா உங்க முதலாளி யாரோ ஒல்லியா ஒரு பொண்ணு கூடப் பேசிட்டு நிக்கறார். இந்தக் கண்றாவியை எல்லாம் வெளியேபோய் வைச்சுக்கக் கூடாதா? வியாபார நேரத்திலே எதுக்கு?” இன்க்ரிட் பெர்க்மென் கேட்டிருந்தால் தரைக்கு இறங்கியிருப்பார்.
பர்லிங்டன் ஆர்க்கேட் உள்ளே நுழைகிறேன். அதிக விலைக்குச் செருப்பு, கூடுதல் விலைக்கு நகைநட்டு, வாசனை திரவியம், பளிங்கு சமாச்சாரங்கள், ஓவியம், சிற்பம், வெள்ளிப் பாத்திரம் என்று விற்கிற கடைகள் வரிசையாக வரவேற்கின்றன. சமாதானமும் சந்தோஷமுமாகச் சாமானிய வாழ்க்கை நடத்த எதெல்லாம் தேவையில்லை என்று மனதில் பட்டியல் போட இந்த அங்காடி உதவி செய்கிறது.
தங்கக் கலர் ரேக்கு வைத்த நீளத் தொப்பி அணிந்த காவலர்கள் பர்லிங்டன் அங்காடியைச் சுற்றிவந்து காவல் காக்கிறார்கள். லண்டன் மாநகரின் முதலும் கடைசியுமான தனிநபர் காவலர்படை இவர்களுடையது. காவண்டிஷ் பிரபு “பீடில்’ என்ற இந்தக் காவலர்களை நியமித்துக் கடந்த இருநூறு வருடமாக இந்த மரபு தொடர்ந்து வருகிறது.
வெளியே வருகிறேன். அடுத்த கட்டடமான ராயல் அகாதமி சுவரில் மாபெரும் நடராசர் ஓவியம் கண்ணில் படுகிறது. இடது பாதம் தூக்கி ஆடும் பெருமான் பிக்கடலியில் என்ன செய்துகொண்டிருக்கிறார்? அறிய ஆவலாக, அகதாமிக்கு உள்ளே நடக்கிறேன்.
Posted in Covent, Covent Garden, Dinamani, England, Era Murugan, Garden, Journal, Kathir, London, London Diary, Murugan, Tour, Tourist, Travelog, Travelogues, UK | Leave a Comment »