Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Srilanka’ Category

April 06 Week – LTTE, Viduthalai Pulikal, Sri Lanka, Eelam: BBC Tamil – News, Attacks

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 7, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 13 ஏப்ரல், 2008

இலங்கையின் மடு மற்றும் மாந்தை பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேற்றம்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் சண்டைகளினால் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தைச் சேர்ந்த மடு மற்றும் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் இருந்து 6500 பாடசாலை மாணவர்கள் உட்பட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து வெள்ளாங்குளம் பிரதேசத்தில் தஞ்சமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உயிலங்குளம் ஊடான மன்னார் மாவட்டத்தின் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கான பாதை மூடப்பட்டிருப்பதனால், மன்னார் நகரில் அமைந்துள்ள அந்த மாவட்டத்தின் அரச செயலகத்திற்கும் இடம்பெயர்ந்த மக்களுக்கும் இடையிலான நிர்வாக ரீதியிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரண உதவிச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக மன்னார் அரசாங்க அதிபர் நீக்கிலாஸ்பிள்ளை கூறுகின்றார்.

ஆசிரியப் பற்றாக்குறை, மாணவர்களுக்கான அரசாங்கம் வழங்கும் இலவச பாட நூல்கள் சென்று கிடைக்காமை போன்ற பல்வேறு சிரமங்களுக்கு இந்த மாணவர்கள் முகம் கொடுக்க நேரிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இது குறித்த மேலதிக தகவல்களை எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கேட்கலாம்.


இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்கள் குறித்து முரண்பட்ட தகவல்கள்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடபகுதியில் தற்போது நடந்துவரும் சண்டை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகிவருகின்றன. கடந்த இரண்டு நாட்களில் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் எழுபது பேர் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை அண்மித்த முன்னரங்கப் பகுதிகளில் பெரும்பாலும் நடந்த மோதல்களில் அரச படைத் தரப்பில் பத்து பேர் கொல்லப்பட்டதாகவும் இராணுவம் சார்பாகப் பேசவல்லவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால் விடுதலைப் புலிகளோ, தமது தரப்பில் மூன்று பேரை மட்டுமே இழந்திருப்பதாகவும், இராணுவத்தினர் முப்பது பேருக்கும் அதிகமானோரை தாங்கள் கொன்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


இலங்கையில் சித்திரையே தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாட இந்துமா மன்றம் முடிவு

அகில இலங்கை கம்பன் கழக அமைப்பாளர் கம்பவாரிதி இ.ஜெயராஜ்
அகில இலங்கை கம்பன் கழக அமைப்பாளர் கம்பவாரிதி இ.ஜெயராஜ்

இந்தியாவில் தமிழ்நாட்டில் சித்திரை வருடப்பிறப்பிற்குப் பதிலாக தைப்பொங்கல் தினத்தையே அங்குள்ள தமிழர்கள் தமது வருடப்பிறப்பாகக் கடைப்பிடிக்கப்போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

இது தொடர்பாக இலங்கை இந்துமா மன்றம் அண்மையில் கொழும்பில் ஒரு கருத்தரங்கு ஒன்றினை நடத்தியிருந்தது. இதில் பிரபல சிவாச்சாரியார்கள், ஆலய அறங்காவலர்கள், தர்மகர்த்தாக்கள், சோதிடர்கள் என்று பலரும் கூடி தமிழ்வருடப்பிறப்பு தையிலா அல்லது சித்திரையிலா என்பது குறித்து தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

கலந்துரையாடலின் பின்னர் இலங்கையின் சமுதாயக்கட்டமைப்பில் காலங்காலமாக கொண்டாடப்பட்டு வந்த சித்திரை வருடப் பிறப்பே தொடந்தும் வருடப்பிறப்பாகக் கொண்டாட வேண்டுமென ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பாக கொழும்பு செய்தியாளர் பி. கருணாகரன் தயாரித்து வழங்கும் பெட்டகத்தினை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 12 ஏப்ரல், 2008


இலங்கை போர்முனைகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மாறுப்பட்ட கருத்து வெளியிடல்கள்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கை அரசப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ள நிலையில், இந்தாண்டில் மட்டும் சுமார் 2000 விடுதலைப் புலிகளை கொன்றுள்ளதாக இலங்கை இராணுவம் கூறுகிறது.

போர்முனைகளுக்கு செல்வதற்கு வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கம் சொல்லும் எண்ணிக்கையை சரி பார்க்க முடியாத நிலை உள்ளது.

கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பாக இருத்தரப்பும் மாறுப்பட்ட கருத்துக்களை கூறுகின்றனர். இது தொடர்பாக பிபிசியின் இலங்கை செய்தியாளர் ரோலண்ட் பேர்க் அவர்கள் அனுப்பியுள்ள செய்தி குறிப்பை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 10 ஏப்ரல், 2008


சிங்கள மீனவர்கள் 10 பேரை தமிழக மீனவர்கள் சென்னைக்கு கொண்டுவந்துள்ளனர்

இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடிக்க முயன்ற இலங்கையைச் சேர்ந்த சிங்கள மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே கடலில் மோதல் ஏற்பட்டதாகவும், இந்த மோதலைத் தொடர்ந்து 10 சிங்கள மீனவர்களை சென்னை மீனவர்கள் சிறைபிடித்து அவர்களை சென்னை காசி மேடு மீனவர் துறைமுகத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் தமிழக காவல் துறை தெரிவித்திருக்கிறது.

சிங்கள மீனவர்கள் வந்த இரண்டு படகுகளும் தமிழக மீனவர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த மோதலில் சிங்கள மீனவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் காவல் துறை கூறுகிறது. மீனவளத் துறை அதிகாரிகளால் சிங்கள மீனவர்கள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 10 ஏப்ரல், 2008


ஜேவிபியில் மோதலுக்கு என்ன காரணம்-ஆய்வு

உறவும் பிரிவும்
உறவும் பிரிவும்

இலங்கையின் மூன்றாவது பெரிய அரசியல் கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல்கள் காரணமாக அந்தக் கட்சி பிளவுபடும் நிலையில் இருக்கிறது என்பது தொடர்பான செய்திகள் தமிழோசையில் ஏற்கனெவே ஒலிபரப்பகியிருந்தன.

ஜே வி பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியானது மார்க்ஸிய சித்தாந்தம் மற்றும் சிங்கள தேசியவாதம் ஆகிய இரு கொள்கைகளையுமே கடைபிடித்து வருகிறது என்றும். அவர்களின் அடிப்படை கொள்கை திட்டங்களான போரை முன்னெடுத்துச் செல்வது மற்றும் தனியார் மயமாதலை நிறுத்துவது போன்ற செயல்களை தற்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷாவே செய்து வருவதால், எதிர்கட்சி வரிசையில் இருந்தாலும், அரசை எதிர்ப்பதற்கு எந்த விடயமும் அதன் கையில் இல்லை என்று ஜேவிபி குறித்த ஆய்வை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தில் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியாளர் ராஜேஷ் வேணுகோபால் கருத்து வெளியிட்டுள்ளார்.

அரசை எதிர்ப்பதற்கு எந்த விடயமும் அவர்களிடத்தில் இல்லாத நிலையில் கட்சியில் ஒரு பிரிவினர் ஜனாதிபதிக்கு ஆதரவாகவும் பெரும்பான்மையாக இருக்கும் குழுவினர் ஜனாதிபதியை மேலும் கடுமையாக எதிர்க்கும் நிலையையும் எடுத்துள்ளார்கள் எனவும் தமிழோசையிடம் அவர் தெரிவித்தார்.

கட்சி மாநாட்டில் தொண்டர்கள்-ஆவனப்படம்
ஜேவிபி மாநாடு ஒன்றில் தொண்டர்கள்-ஆவனப் படம்

கட்சியில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவானது மஹிந்த ராஜபக்ஷவுக்கு வலு சேர்க்கும் எனக் கூறும் அவர், வரக்கூடிய தேர்தல்களில் சிங்களவாத கட்சிகளான ஜேவிபி மற்றும் ஜேஹெச்யூ போன்ற கட்சிகளுக்கான ஆதரவுக் குறையக்கூடும் எனவும் கூறுகிறார்.

கட்சிக்குள் தொண்டர்களின் ஆதரவு, போட்டிக் குழுவின் தலைவரான விமல் வீரவன்ச அவர்களுக்கே அதிகம் இருக்கக் கூடும் என தான் கருதுவதாக ஆராய்ச்சியாளர் ராஜேஷ் வேணுகோபால் கூறினார்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 09 ஏப்ரல், 2008

புனித இருதயநாதர் ஆலயத்தை தாம் சேதப்படுத்தவில்லை என்று இலங்கை இராணுவம் கூறுகிறது

இலங்கையின் வடக்கே மடு மாதா தேவாலய வளாகத்தில் உள்ள புனித இருதயநாதர் தேவாலயத்தை இலங்கை இராணுவம் எறிகணைகளை ஏவி சேதப்படுத்தியதாக விடுதலைப்புலிகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.

தேவாலய வளாகத்தை நோக்கி இலங்கை இராணுவத்தினர் வகைதொகையின்றி எறிகணைகளை ஏவியதாக விடுதலைப்புலிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர். அந்த வளாகத்தில் உள்ள ஒரு தேவாலயம் மிகவும் கடுமையாக சேதமடைந்திருப்பதை அண்மையில் வந்த ஒரு புகைப்படம் காண்பிக்கிறது.

மடு தேவாலயத்தின் மூலத் திருச்சொரூபம் ஏற்கனவே ஆலயத்தில் இருந்து அகற்றப்பட்டு வேறு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மடுவை அண்மித்த பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல்கள் இடம்பெறுவதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

மடு தேவாலயம்
மடு தேவாலயம்

இந்த புனித இருதயநாதர் ஆலயம் சேதமடைந்ததா,இல்லையா என்பது குறித்து தமக்கு இதுவரை பக்கசார்பற்ற தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்கிறார் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வரான அருட்தந்தை விக்டர் சூசை. ஊடகங்கள் மூலமே தாமும் அந்த தகவலை அறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அங்கு பாதிரிமாரோ, அல்லது கன்னியாஸ்திரிகளோ எவரும் இல்லாத காரணத்தினால் அந்தத் தகவலை தம்மால் உறுதி செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஆயினும் போர் மோதல்கள் நடக்கின்ற பரப்பாங்கண்டல், வடமுனை பகுதிகளில் உள்ள பல ஆலயங்கள் சேதமடைந்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தமக்கு தகவல் தந்ததாகவும் அவர் கூறினார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கட்சியில் இருந்து தான் விலக்கப்பட்டதாகக் கூறுகிறார் வீரவன்ச

இலங்கையின் அரசியல் களத்தில் மூன்றாவது பெரிய அரசியல் கட்சியாகக் கருதப்படும் மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளரும், அதன் பாராளுமன்றக் குழுத்தலைவருமான விமல் வீரவன்ச இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றியுள்ள உரையொன்றில் தன்னை கட்சியிலிருந்து வெளியேற்ற தலைமைப்பீடம் முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் கட்சியின் இந்த முடிவானது எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவிருப்பதாகவும் அவர் இன்று பாராளுமன்றில் தெரிவித்திருக்கிறார்.

இதனால் ஜே.வி.பிக்குள் உட்கட்சிப்பூசலினால் பிளவு ஏற்பட்டிருப்பதாக அண்மையில் வெளியான செய்திகள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இதேவேளை, கட்சியின் இந்த முடிவுக்கு எதிப்புத் தெரிவித்தும், வீரவன்சவிற்கு ஆதரவு தெரிவித்தும் அந்தக் கட்சியின் 37 பாராளுமன்ற உறுப்பினர்களில், சுமார் 11 உறுப்பினர்கள் இன்று கொழும்பில் பத்திரிகையாளர் மாநாடொன்றினைக் கூட்டி, கட்சியின் தலைமைப் பீடத்திலுள்ள சில உறுப்பினர்கள் ஏகாதிபத்திய சக்திகளின் சூழ்ச்சியின் வலையில் சிக்கி, கட்சியின் பிரதான கொள்கைகளிற்கு எதிராகச் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டினர்.

இவை குறித்து மேலதிக செய்திகளை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 ஏப்ரல், 2008

விடுதலைப் புலிகளின் முக்கிய நிலைகளை தாக்கி அழித்துள்ளோம்: இலங்கை விமானப் படை

இலங்கையின் வடக்கே மாங்குளம் மற்றும் முகமாலை பகுதிகளில் விமானப் படையினர் நடத்திய வான்வழி தாக்குதல்களில் விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் தளம் ஒன்றும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கான பின்னணி தளம் ஒன்றும் அழிக்கப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது. எனினும் இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதேவேளை, வவுனியா, மன்னார் வெலிஓயா எனப்படும் மணலாறு ஆகிய போர்முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான சண்டைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

இந்தப் பகுதிகளில் ஞாயிரன்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 50க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் ஒரு சில இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

விடுதலைப் புலிகள் இது குறித்து உடனடியாக கருத்து எதனையும் வெளியிடாத போதிலும், மன்னார் போர்க்கள முனைகளில் இந்த மாதத்தின் முதல் 5 தினங்களிலும் இடம்பெற்ற சண்டைகளில் 35 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியிட்டிருக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகளின் மிதிவெடிகள், கண்ணிவெடிகள் போன்றவற்றில் சிக்கியவர்கள் உட்பட இந்தக் காலப்பகுதியில் 120 படையினர் காயமடைந்திருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றார்கள். எனினும் இந்த விபரங்கள் குறித்து படைத்தரப்பிடமிருந்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


அமைச்சர் ஜெயராஜ் படுகொலைக்கு சர்வதேச நாடுகள் கண்டனம்

படுகொலை செய்யப்பட்ட அமைச்சர் ஜெயராஜ்

இலங்கைத் தலைநகர் கொழும்பு அருகே கடந்த ஞாயிறன்று நடந்த ஒரு தற்கொலை குண்டுத் தாக்குதலில் இலங்கை அமைச்சரவையின் மூத்த அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளே உட்பட சுமார் 14 சிவிலியன்கள் கொல்லப்பட்ட சம்பவத்தினை அமெரிக்கா மிகவும் வன்மையாகக் கண்டித்திருக்கிறது.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் கொடூர பயங்கரவாதச் சம்பவத்தினை மேற்கொண்டவர்கள் இலங்கை மக்களுக்கு மேலும் இன்னல்களை விளைவித்திருப்பதனைத் தவிர வேறெதனையும் அடையவில்லை எனத் தெரிவித்திருப்பதோடு, தொடர்ச்சியான வன்முறைகளால் அல்லாது, அரசியல் தீர்வொன்றினைக் காணுவதே இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றினைக் காண்பதற்கான ஒரேவழி என்றும் தெரிவித்திருக்கிறது.

கனடா, பிரான்ஸ், ஐரோப்பியன் ஆணையம் ஆகியவையும் இந்தத் குண்டுத் தாக்குதலை கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.


மடு பிரதேசத்தில் சண்டைகள் முடிவுக்கு வரவேண்டும் எனக் கோரி விசேட பிரார்த்தனை

அரசாங்க அதிபரிடம் மகஜரைக் கையளிக்கிறார் மன்னார் ஆயர்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்கின்ற உக்கிரச் சண்டைகளில் சிக்கியிருக்கும் மடுமாதா ஆலயப் பகுதியை யுத்த சூழலற்ற சமாதான வலயமாக்க வேண்டும் எனக் கோரி வவுனியாவில் இன்று விசேட வழிபாடு நடைபெற்றுள்ளது.

இந்த வழிபாட்டையடுத்து, ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கான கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் வவுனியா அரசாங்க அதிபரிடம் மன்னார் ஆயர் தலைமையிலான கத்தோலிக்க மதகுருக்களினால் கையளிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த பூஜை வழிபாடு இன்று வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. இதில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மடு பிரதேசப் பகுதியில் இடம்பெறுகின்ற கடுமையான மோதல்கள் காரணமாக மடுமாதாவின் திருச்சொரூபம் பாதுகாப்புக்காக அங்கிருந்து வேறிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது

மடுமாதாவும் யத்தச் சூழலினால் பாதிக்கப்பட் பொதுமக்களைப் போன்று இடம்பெயர்ந்துள்ளமையானது பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையைத் தோற்றுவித்திருக்கின்றது என்று கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.


இலங்கை கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் உட்பட 12 பேர் பலி

அமைச்சர் ஜெயராஜ் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் மீது அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கையின் மேல்-மாகாணத்திலுள்ள கம்பஹா மாவட்டத்தில் ஞாயிறு காலை இடம்பெற்ற சக்திவாய்ந்த வெடிகுண்டுத் தாக்குதலொன்றில் இலங்கை அமைச்சரவையின் மூத்த அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே உட்பட சுமார் 12 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஞாயிறு காலை கம்பஹா மாவட்டத்தில் வலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுக்கொண்டிருந்த சிங்கள-தமிழ் புத்தாண்டையொட்டிய மராதான் ஓட்டப்போட்டியொன்றில் பிரதான விருந்திரனாக கலந்துகொண்டிருந்த அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே, அந்த ஓட்டப் போட்டியினை தொடக்கிவைப்பதற்கு சில நிமிடங்கள் முன்னதாக இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றிருக்கிறது.

இதில் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளேயுடன், இலங்கையின் முன்னாள் தடகளவீரரும், தெற்காசிய மராதான் ஓட்டப் போட்டியில் தங்கப்பதங்கம் வென்றிருந்தவருமான கே.எஸ் கருணாரட்ண மற்றும் தேசிய தடகளப் பயிற்றுவிப்பாளருமான லக்ஸ்மன் டீ அல்விஸ் உட்பட சிவிலியன்களும் கொல்லப்பட்டிருப்பதாகவும், சுமார் 90க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கம்பஹா மாவட்டத்தின் மூத்த பொலிஸ் அதிகாரியான எஸ்.எஸ்.பி. ஹெக்டர் தர்மசிறி உட்பட காயமடைந்தவர்கள் அருகிலுள்ள கம்பஹா, மற்றும் ராகம தேசிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களில் மிகவும் மோசமான நிலையிலிருந்த நால்வர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

உள்ளூர் தொலைக்காட்சிகளில் இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுவதற்கு சில மணித்துளிகளுக்கு முன் அந்த நிகழ்ச்சியில் உரையாற்றுவதையும், அதன் பின்னர் மராதான் ஓட்டப் போட்டியினை ஆரம்பித்து வைக்கும்போது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையும் விசேட செய்தி அறிவித்தல்களின்போது காண்பிக்கப்பட்டன.

பாதுகாப்புத்தரப்பினர் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஆனாலும் ஆரம்ப விசாரணைகளில் இருந்து இந்தக் குண்டுவெடிப்புக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைக் குண்டுதாரியே காரணம் என்று ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தேசிய தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் குண்டுத்தாக்குதலையும், அமைச்சரின் படுகொலைச் சம்பவத்தையும் விடுதலைப்புலிகளின் மிருகத்தனமான செயலெனக் கண்டித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டில் பயங்கரவாதத்தினை முற்றாக அழிக்கும் தனது அரசின் நடவடிக்கைகளிலும், திடசங்கற்பத்திலும் எவ்வித மாறுதல்களையும் இது ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியுடன், அமைச்சர் ஜெயராஜ்
இலங்கை ஜனாதிபதியுடன், அமைச்சர் ஜெயராஜ்

55 வயதான அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே ஒரு சட்டத்தரணி ஆவார். 1983ஆம் ஆண்டிலிருந்து ஆளும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்ததோடு, தனது அரசியல் வாழ்வில் சிவில் விமானப் போக்குவரத்து, கிறிஸ்தவ விவகாரங்கள், இனவிவகாரம் மற்றும் நல்லிணக்கம் போன்ற பல துறைகளில் பலவருடங்கள் அமைச்சராகவும் பதவிவகித்திருக்கிறார்.

இறக்கும்போது இவர் ஆளும் கட்சியின் பிரதான கொறடாவாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், பொருளாளராகவும் கடமையாற்றியிருந்ததோடு, அடுத்தமாதம் கிழக்கு மாகாணசபைக்காக இடம்பெறவிருக்கும் மாகாணசபைத் தேர்தலையொட்டி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்துக்கான அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிய வருகிறது.

இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதன் பின்னர் தென்னிலங்கையில் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டாவது அமைச்சர் இவராவார். இதற்கு முன்னர் கடந்த ஜனவரி 8ம் திகதி, அமைச்சரவை அந்தஸ்தற்ற தேசநிர்மாண அமைச்சர் தஸ்ஸநாயக, ஜா-எல பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் குறித்த மேலதிக செய்திகளை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை அமைச்சர் கொல்லப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து தடைகள்

ஏ9 பாதை
ஏ9 பாதை

இலங்கையின் கம்பஹா மாவட்டத்தில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து, வவுனியாவுக்குத் தெற்கே ஏ9 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மதவாச்சி சோதனைச்சாவடியை பொலிசார் உடனடியாக மூடியதாகவும். இதனால் பல மணித்தியாலங்கள் இந்த சோதனைச்சாவடி ஊடான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டதாகவும் மதவாச்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதவாச்சி சோதனைச்சாவடி மூடப்பட்டதைத் தொடர்ந்து, அந்த சோதனைச்சாவடியின் இருபக்கங்களிலும் வந்து குவிந்த பயணிகள் பிற்பகல் ஒரு மணியளவிலேயே சோதனைச்சாவடியைக் கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் இந்தச் சோதனைச்சாவடி பிற்பகல் 3 மணிக்கு மூடப்பட்டு, பொதுமக்கள் போக்குவரத்து மாலை 5 மணிவரையில் தடுக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையில் பயணத் தடை காரணமாக மதவாச்சி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில் ஒரு மணித்தியாலம் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றதாக ரயில்வே திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில் மன்னார், வவுனியா, மணலாறு ஆகிய இடங்களில் உள்ள போர்முனைகளில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் பல விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


மன்னார் மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்ட விவசாயத் தொழிலாளர்கள் வெளியேற்றம்

விவசாய வேலைக்காக சென்ற தொழிலாளர்கள் வெளியேற்றம்
விவசாய வேலைக்காக சென்ற தொழிலாளர்கள் வெளியேற்றம்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடைக்காக வெளிமாவட்டங்களில் இருந்து சென்றிருந்த விவசாயத் தொழிலாளர்கள் அங்கு தங்கியிருப்பதற்கு இராணுவம் அனுமதி மறுத்துள்ளது. இதையடுத்து, கடும் மழையினால் அழிந்ததன் பின்னர் எஞ்சியுள்ள சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலத்திலான நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாக மன்னார் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து நெல் அறுவடைக்கான இயந்திரங்களை மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகக் கொண்டு செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதித்துள்ள போதிலும், வயல்களில் இன்னும் மழைநீர் தேங்கியுள்ளது. அதனால் அவற்றைப் பயன்படுத்தி நெல் அறுவடை செய்ய முடியாத நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருப்பதாக நானாட்டான் பிரதேச செயலாளர் திருஞானசம்பந்தர் அவர்கள் தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பு, அம்பாறை, மற்றும் வவுனியா பிரதேசங்களில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு வந்திருந்த விவசாய தொழிலாளர்களைப் பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவத்தினர் வெளியேறுமாறு கூறியிருப்பதை மன்னார் அரசாங்க அதிபர் நீக்கிலாஸ்பிள்ளை உறுதி செய்தார். இது குறித்த மேலதிக தகவல்களை எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் நேயர்கள் கேட்கலாம்.


மடுமாதாகோவில் பிரதேசத்தை மோதல்கள் அற்ற பிரதேசமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை

மடுமாதா
மடுமாதா

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் மோதல்கள் காரணமாக மடுக்கோவிலில் இருந்து எடுத்துச செல்லப்பட்டுள்ள மடுமாதா திருச்சொரூபத்தைத் தற்காலிகமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள தேவன்பிட்டியில் தொடர்ந்து வைத்திருப்பது என்றும், மடுக்கோவில் பகுதியை மோதல்களற்ற சமாதான பிரதேசமாகப் பிரகடனப்படுத்தி அதனை அமைதி வலயமாக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடமும் விடுதலைப் புலிகளிடமும் நேரடியாக வலியுறுத்துவது என்றும், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டம் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

மன்னார் ஆயர் தலைமையில் அமைக்கப்படுகின்ற விசேட குழு, கிளிநொச்சிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களைச் சந்தித்து தமது கோரிககை குறித்து வலியுறுத்தி எடுத்துக் கூறுவது என்றும், அதேவேளை, இலங்கை ஆயர் மன்றத்தின் ஊடாக மடுக்கோவில் சமாதான வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசாங்கத்திடம் வலியுறுத்துவது என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மன்னார் குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சூசை அவர்கள் தெரிவித்தார்.

மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற மன்னார் மறைமாவட்ட
அருட்தந்தையர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், மடுக்கோவிலில் இருந்து மடுமாதாவின் சொரூபம் தேவன்பிட்டியில் உள்ள தேவாலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து மடுக்கோவில் நிலைமைகள் குறித்து அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் விரிவாக ஆராயப்பட்டிருக்கின்றது.

அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மடுக்கோவில் பிரதேசத்தில் தொடரும் உக்கிரச் சண்டைகளின் பின்னணியில் மடுக்கோவில் பற்றிய உண்மையான நிலைமை குறித்து அறிக்கையொன்றின் மூலம் வெளிக்கொணர்வது என்றும், மடுக்கோவில் பிரதேசத்தை சமாதான வலயமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்துக்களைச் சேகரிப்பது என்றும், வவுனியாவில் பேரணியொன்றை நடத்துவதுடன், மன்னார் மறைமாவட்டத்திற்கு உட்பட்ட கத்தோலிக்கத் தேவாலயங்களில் வெள்ளிக்கிழமைகள் தோறும் உண்ணா நோன்பிருந்து விசேட வழிபாடுகள் நடத்தி பிரார்த்திப்பது என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் மன்னார் குருமுதல்வர் விக்டர் சூசை அவர்கள் கூறினார்.


Posted in Eelam, Eelam People's Democratic Party, Eelam People's Revolutionary Liberation Front, Eelam Revolutionary Organisation, Eezam, Eezham, LTTE, Srilanka, Velupillai Prabhakaran, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal | Leave a Comment »

April 1 – Mannaar, Viduthalai Puligal, Eelam, SriLanka: Elections, Peace (BBC Tamil)

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 03 ஏப்ரல், 2008 

இலங்கையில் மடு தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் கடும் மோதல்கள்

இலங்கையின் வடக்கில் மன்னார் மாவட்டத்தில் கத்தோலிக்கர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமான மடு தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இலங்கை இராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் நடந்துவருவதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

அதேவேளை, மடு மாதா தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினர் தொடர்ந்து எறிகணைகளை வீசி வருவதாக விடுதலைப்புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதற்கு முன்னர் 1999இல் அங்கு நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில், 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால், அதனை மறுத்துள்ள இலங்கை இராணுவத்தினர், மடுமாதா ஆலய வளாகத்துக்குள் விடுதலைப்புலிகள் அத்துமீறி நுழைந்துள்ளதாகவும், அந்தப் பகுதியை சுற்றி கண்ணிவெடிகளை அவர்கள் புதைத்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த மோதல்கள் காரணமாக மடுமாதா தேவாலயம் மற்றும் அதனைச் சுற்றிவரவுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு இடங்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இதற்கிடையே வவுனியா கூமங்குளம் பகுதியில் இரண்டு பொதுமக்கள் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மடு தேவாலயம் – பின்னணித் தகவல்கள்

சுமார் முப்பது வருடமாகத் தொடருகின்ற இலங்கையின் இந்த உள்நாட்டு மோதலில், முதல் தடவையாக, அந்த மடு தேவாலயத்தின் முக்கிய திருச்சொரூபமான கன்னி மரியாளின் சிலை பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆலயத்தில் இருந்து வியாழனன்று அகற்றப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அமைந்துள்ள இந்த தேவாலயத்துக்கு பொறுப்பான மன்னார் மறைமாவட்ட ஆயரான ராயப்பு ஜோசப் அமைதி வேண்டி வெள்ளிக்கிழமையன்று ஒருநாள் உண்ணாவிரதமும், பிரார்த்தனையும் அறிவித்துள்ளார்.

இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் மக்களால் வழிபடப்படுகின்ற இந்த வழிபாட்டிடத்தை இராணுவத்தினாலோ அல்லது விடுதலைப்புலிகளாலோ பாதுகாக்க முடியாது போயுள்ளது. இந்நிலையில் தேவாலயத்தில் இருந்து திருச்சொரூபத்தை அகற்றுவதற்கான ஆயரின் முடிவானது அங்கு நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு ஓர் அடையாளமாகும்.

டச்சுக்காரர்களால் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தேவாலயம் முதன் முதலில் அமைக்கப்பட்டது. தம்மை அழிவிலிருந்து காப்பாற்றியது இந்த கன்னிமரியாளின் சொரூபம்தான் என்று அவர்கள் நம்பினார்கள்.

மடு தேவாலயத்தின் வரலாறு மற்றும் தற்போது அதற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்த செய்திக் குறிப்பினை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்


புதுப்பிக்கப்பட்ட நாள்: 03 ஏப்ரல், 2008

மடு மாதா திருவுருவச்சிலை அகற்றப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது

இலங்கையின் வட பகுதியில் தொடருகின்ற கடுமையான மோதல்கள் காரணமாக, அங்கு பிரபலமான மடு மாதா தேவாலயத்தின் முக்கிய திருவுருவச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு, பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழுகின்ற தமிழ் மற்றும் சிங்கள மக்களால் வணங்கப்படுகின்ற இந்த மடு மாதா தேவாலயம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கு அமைக்கப்பட்டதாகும்.

மடுவை நோக்கி வீசப்படுகின்ற கடுமையான எறிகணை வீச்சுக்கள் காரணமாக மடு மாதா தேவாலயத்தை அண்டியிருந்த மக்கள் எல்லாம் ஏற்கனவே அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும், அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

தேவாலயம்
 

தேவாலய வளாகத்துக்கு அருகில் பல எறிகணைகள் வந்து வீழ்ந்துகொண்டிருப்பதாகவும், இந்த நிலையில் அங்கு இருப்பது பாதுகாப்புக்கு உகந்தது அல்ல என்ற முடிவுக்கு வந்த பங்கிற்கான மதகுருமார், தற்போது ஆலயத்தின் முக்கிய திருவுருவச் சிலையையும் அங்கிருந்து அகற்றி பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு எடுத்துச் செல்வதாகவும், மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஆயரான இராயப்பு ஜோசப்பு தமிழோசைக்குத் தெரிவித்தார்.

அந்தப் பகுதியில் இருந்து தேடிவரும் மக்களுக்கு அருள்பாலித்து வந்த மாதா சிலையை அங்கிருந்து அகற்ற நேர்ந்தமை தமக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆயர் கூறினார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கிழக்கு மாகாணத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிந்தது

மட்டக்களப்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த ஆளும் கட்சிக் கூட்டமைப்பினர்
மட்டக்களப்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த ஆளும் கட்சிக் கூட்டமைப்பினர்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள மாகாண சபைக்கான தேர்தல்களில் 37 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வாக்களிப்புகளில், 1342 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக இலங்கை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் 10 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில் 12 அரசியல் கட்சிகளும், 19 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. 4 அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வந்தவர்கள்
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வந்தவர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில், 11 உறுப்பினர்களுக்கான போட்டியில், 14 அரசியல் கட்சிகளும், 16 சுயேச்சைக்குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. இவற்றில் 2 அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களும் ஒரு சுயேச்சைக்குழுவின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தில், 14 அரசியல் கட்சிகளும், 26 சுயேச்சைக்குழுக்களும் அங்கு வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. ஆனால், அவற்றில் 11 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயேச்சைக்குழுக்களின் வேட்பு மனுக்கள் மாத்திரமே அங்கு ஏற்கப்பட்டிருந்தன.


சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் உள்ளிட்ட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா; கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்குகின்றனர்

இலங்கையின் பிரதான முஸ்லிம் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் பஷீர் சேகுதாவுத் மற்றும் செயலாளர் ஹசன் அலி ஆகியோர் புதனன்று தத்தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

இது குறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை போன்ற மூன்று மாவட்டங்களிலும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் தாம் மூவரும் தலைமை வேட்பாளர்களாகப் போட்டியிடப்போவதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துகொண்டு அதன் சார்பில் எதிர்வரும் போட்டியிடப்போவதாகத் அறிவித்துள்ள கட்சியின் மூத்த உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, கட்சியின் தலைமைப்பீடம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட எடுத்த முடிவினாலேயே தான் அரசுடன் இணைந்துகொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டுமென்பதே முஸ்லிம் மக்களின் பேரவா என்றும் இதனை அடைவதற்கு தான் அரசுடன் இணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிடுவது மிக அவசியம் என்றும் தெரிவித்தார்.

போட்டியிடப்போவதில்லை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இதனிடையே, கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதனன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு புதனன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்த விருப்பமில்லாத இலங்கை அரசு,, பெறுமதியற்ற அரசியல் ஒழுங்கை வடக்கு கிழக்கில் திணிக்க முயல்வதாகவும், இதன் ஒருபடியாகவே அவசர அவசரமாக கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்படுவதாகவும் கூறியுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்ற அமைப்பினரைக் கையாளாக அரசு வைத்திருப்பதாகவும், இவர்கள் மூலம் பலாத்காரமாகவும் வற்புறுத்தியும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறமுயல்வதாகவும், கூட்டமைப்பு குற்றம்சாட்டி, இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தேர்தலில் போட்டியிடாமல் இருக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


மன்னாரின் மடுப் பிரதேசத்தை சமாதான வலயமாக்க வேண்டும்: ஜனாதிபதியிடம் கோரிக்கை

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள மடு தேவாலயத்துக்கு அருகில் இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் தொடரும் நிலையில், மடு தேவாலயப் பகுதியை சமாதான வலயமாகப் பிரகடனப்படுத்தக் கோரி புதன்கிழமையன்று மன்னார் நகரில் அமைதிப் பேரணியொன்று நடைபெற்றுள்ளது.

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர், மடுப்பகுதியை சமாதான வலயமாக்க இலங்கை ஜனாதிபதியிடம் கோரும் மகஜர் ஒன்றை மன்னார் அரச அதிபரிடம் கையளித்தனர்.

இதே கோரிக்கையை அவர்கள் விடுதலைப் புலிகளுக்கும் அனுப்பி வைத்தனர். புனித பாப்பரசருக்கும் அங்குள்ள நிலைமைகள் குறித்த தகவல்களை தாம் அனுப்பி வைத்தாக ஆயர் இல்ல வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில் அனுராதபுரம் மாவட்டம் வில்பத்து சரணாலயப் பகுதியில் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.


Posted in BBC, Eelam, Eezham, Elections, LTTE, Mannaar, Mannar, Peace, Polls, SLMC, Sri lanka, Srilanka, Tigers, TNA, Vote, voters | Leave a Comment »

March 30 – LTTE, Eezham, Sri Lanka: News & Updates (BBC Tamil)

Posted by Snapjudge மேல் மார்ச் 30, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 01 ஏப்ரல், 2008

மூதூர் தொண்டர் நிறுவன பணியாளர் கொலைகளை அரசாங்கப் படையினரே செய்ததாக மனித உரிமை அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது

இலங்கையில் சுனாமி நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டு தொண்டு நிறுவனமான அக்ஷன் பெஃய்ம் நிறுவனத்தின் உள்ளூர் பணியாளர்கள் 17 பேர் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் இலங்கை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உறுப்பினர்களின் பெயரை மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் இந்தச் சம்பவத்தை மறைக்க முயற்சிப்பதாகவும் சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

2006 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளுடனான மோதலை அடுத்து மூதூரை கைப்பற்றிய காலப்பகுதியில் நடந்த இந்த கொலைகள் தொடர்பில், இலங்கை ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு ஒன்றும் விசாரணைகளை நடத்தி வருகிறது.

கோபாலசிங்கம் சிறிதரன்
கோபாலசிங்கம் சிறிதரன்

ஆனால், இந்தப் புலன் விசாரணை நடவடிக்கைகளை அரசாங்கம் மறைக்க முயலுவதாகக் குற்றஞ்சாட்டி, இதனைக் கண்காணித்துவந்த, சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு ஒன்று தனது கண்காணிப்புப் பணியில் இருந்து விலகிச் சென்று விட்டது.

துணைப்படையைச் சேர்ந்த ஒரு ஊர்காவற்படைச் சிப்பாயும், இரண்டு பொலிஸ்காரர்களும் இந்தக்கொலைகளைச் செய்ததாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கூறி அவர்களது பெயர்களையும் வெளியிட்டுள்ளது.

இந்த கொலைச் சம்பவங்கள் குறித்த பொதுவிசாரணைகளில் இலங்கை ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு ஈடுபட்டுள்ளதால், மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், அந்த ஆணைக்குழுவின் முன்பாக தமது ஆதாரங்களை காண்பித்து தகவல்களை வெளியிட வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் அமைச்சரான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலளிக்குமுகமாக தமிழோசையிடம் பேசிய மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த கோபாலசிங்கம் சிறிதரன் அவர்கள், இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியை அந்த ஆணைக்குழுவின் முன்பாக ஆஜர் செய்யும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும், ஆனாலும், அந்தச் சாட்சியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மின்னேரியாவில் மின்னல் தாக்கியதில் நான்கு படையினர் மரணம் 59 பேர் காயம்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வட-மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள மின்னேரியா இராணுவத்தளத்திற்கு அண்மையில் அமைந்துள்ள இராணுவமுகாமொன்றினைச் சேர்ந்த ஒரு தொகுதி இராணுவ வீரர்கள் இன்று மாலை பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் மிகவும் சக்திவாய்ந்த மின்னல் ஒன்று தாக்கியதில் சுமார் நான்கு படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் சுமார் 59 படையினர் காயமடைந்து பொலன்நறுவை தளவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் பொலன்நறுவை மாவட்டம் மின்னேரியா கட்டுக்கெலிய இராணுவ முகாம் பகுதியில் வழமையான இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவ அணியினரே இந்த மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அதிதீவிர சத்திர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.

சிறையுடைப்பு முயற்சி

இதேவேளை இன்று மாலை இரத்தினபுரி குருவிட்ட பகுதியிலுள்ள சிறைச்சாலையை உடைத்துத் தப்பி வெளியேறமுயன்ற நான்கு சிறைக்கைதிகள் அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி மரணமாகியிருப்பதாக இரத்தினபுரி பொலிசார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தின் போது மேலும் மூன்று சிறைக்கைதிகள் காயமடைந்து அண்மையிலுள்ள வைத்தியசாலையில் பொலிஸ்காவலுடன் சிகிச்சைபெற்று வருவதாகவும், நிலைமை தற்போது பொலிசாரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் பொலிசார்
தெரிவித்திருக்கின்றனர்.


 

புதுப்பிக்கப்பட்ட நாள்: 31 மார்ச், 2008

இயக்கத்திலிருந்து சிறார் 22 பேரை விடுதலை செய்திருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்

இயக்கத்தில் இளம்பிராயத்தினர் என்பது ஒரு நெடுங்கால சர்ச்சை

விடுதலைப் புலிகள் தமது படையிலிருந்து 22 சிறாரை விடுதலை செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் படையில் நூற்றுக்கணக்கான சிறார் இன்னும் இருப்பதாக யுனிசெஃப் என்ற ஐ.நா.வின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் தெரிவித்திருப்பதையும் புலிகள் மறுத்துரைத்திருக்கின்றார்கள்.

தங்களால் விடுவிக்கப்பட்டுள்ள சிறார் தொடர்பான விபரங்களை யுனிசெஃப் நிறுவனம் உறுதிப்படுத்துவதற்குத் தவறியிருக்கின்றது என்றும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் ஊடாக வெளியிடப்பட்டுள்ள மின்னஞ்சல் வழியாக விடுதலைப் புலிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இருபது சிறாரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் சி.பி.ஏ. என்ற சிறுவர் பாதுகாப்புக்கான தமது அமைப்பின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

நூற்றுக்கணக்கான சிறார் தமது அமைப்பில் இன்னும் இருப்பதாகக் கூறிவரும் யுனிசெஃப் நிறுவனம், இந்தச் சிறார் தொடர்பான பிந்திய தகவல்களை உறுதிசெய்து தனது பட்டியலை மாற்றியமைக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகள் குற்றஞ்சுமத்தியிருக்கின்றார்கள்.

அதேவேளை, தமது அமைப்பில் உள்ள வேறு 41 சிறாருக்கு பெற்றோர்களோ அல்லது பாதுகாவலர்களோ இல்லாத காரணத்தினால் அவர்களை விடுதலை செய்யமுடியாத நிலை தோன்றியிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இது குறித்த மேலதிக விபரங்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை ஏ9 வீதியில் ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி சனிக்கிழமைகளிலும் திறந்திருக்கும்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்

ஓமந்தை சோதனைச் சாவடி

இலங்கையின் வடக்கே ஏ9 வீதியில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மதவாச்சி சோதனைச்சாவடியிலும், வவுனியா, ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியிலும் அரசாங்கத்தினால் மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளினால் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கும், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்திற்கும் இடையிலான பொதுமக்களின் போக்குவரத்து மற்றும் வர்த்தக தேவைகளுக்கான ட்ரக் வண்டிகளின் போக்குவரத்து என்பன தாமதமடைய நேரிட்டிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைக்குழு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருக்கின்றது.

இந்நிலையில் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று சனிக்கிழமைகளிலும் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான வாகனப் போக்குவரத்து நடைபெறுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினர் மேலதிக கடமையில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.

திங்கள் முதல் வெள்ளிவரை என வாரத்தில் 5 தினங்களே ஓமந்தை சோதனைச்சாவடி வழமையாகப் பொதுப் போக்குவரத்துக்காகத் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், சுகாதார அமைச்சினால் அனுப்பப்பட்டு வவுனியாவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள வன்னிப்பிரதேச அரச வைத்தியசாலைகளுக்கான மருந்துப் பொருட்களை வவுனியாவில் இருந்து ஓமந்தை ஊடாகக் கொண்டு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறுவதில் நிலவுகின்ற காலதாமதம் காரணமாக ஓமந்தை சோதனைச்சாவடி சனிக்கிழமைகளிலும் திறக்கப்படுவதனால் பெரிதாகப் பயனேதும் ஏற்படாது என்கிறார் கிளிநொச்சி மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி அவர்கள்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் நேயர்கள் கேட்கலாம்.


இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய இலங்கை வியாபாரிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

இலங்கையிலுள்ள அரிசி வர்த்தகர்கள், தற்போது நாட்டில் நிலவும் அரிசி தட்டுபாட்டை தீர்க்கும் முகமாகவும், வரவுள்ள தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஏற்படும் தேவைகளை சமாளிக்கும் முகமாகவும் இந்தியாவிலிருந்து ஒரு லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய உதவுமாறு இலங்கை ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்கள்.

இது தொடர்பில் தமிழோசையிடம் கருத்து தெரிவித்தார் கொழும்பு பழைய சோணகர் தெரு வர்த்தக சங்கத் தலைவர் பழனியாண்டி சுந்தரம்.

பொதுவாக தங்கள் நாட்டுக்குத் தேவையான அளவுக்கு அரிசியைத் தாங்களே உற்பத்தி செய்துக்கொள்ளக்கூடிய நிலைமை இருக்கும். ஆனால் இந்த முறை மழையில் ஏராளமான பயிர் நாசமடைந்துவிட்டதால், அரிசிக்கான தேவை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அது மட்டுமல்லாமல் இலங்கையிலுள்ள வியாபாரிகள் சோளம் மற்றும் சோயா போன்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் கோழித் தீவனம் மற்றும் கால்நடைத் தீவனங்களை இந்தியாவிலிருந்துதான் பெருமளவு இறக்குமதி செய்ததாகவும், ஆனால் அவற்றின் விலை இரட்டிப்பாகி அரிசி விலையைவிட உயர்ந்துவிட்டதால், கிட்டத்தட்ட 70,000 டன் அரிசி இவ்வாறு தீவனமாக உயயோகிக்கப்பட்டதும் அரிசி பற்றாக்குறைக்கு காரணம் எனவும் அவர் கூறுகிறார்.

சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஏழைகளுக்கு அரிசி வழங்கும் திட்டம் ஒன்றை ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்றும் அத்திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு உதவியாக இறக்குமதி செய்யப்படும் அரிசியின் மீதான தீர்வையையும் அவர் அகற்றியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.


கிழக்கு மாகாண சபைத் தேர்தல்: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை

காத்தான்குடியில் நடந்த கூட்டம்

இலங்கையில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி முஸ்லிம் வேட்பாளர்கள் குறித்து பள்ளிவாசல் சம்மேளனங்களுடன் பிரதேச ரீதியாக பேச்சுவார்ததை நடத்திவருகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பொதுச் செயலாளரான சுசில் பிரேம ஜயந்த், முஸ்லிம் அமைச்சர்கள், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் சகிதம் இப்பேச்சுவார்த்தையை பள்ளிவாசல் சம்மேளனங்களுடன் நடத்திவருகின்றார்.

திங்களன்று மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனத்துடன் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது முஸ்லிம் வேட்பாளர்களைத் தமது கட்சியில் இணைந்து போட்டியிட முன்வருமாறு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவரான எம்.டி.எம். ஹாலித் ஹாஜியார் கூறுகின்றார்.

தமிழர்களும் முஸ்லிம்களும் ஆளும் கட்சியில் இணைந்து போட்டியிடுவதன் மூலம் முதலமைச்சர் பதவியை சுழற்சி அடிப்படையில் பகிர்ந்துகொள்ள முடியும் என்று ஆளும் கட்சியினால் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தமது சம்மேளனமானது அரசியல் சார்பற்ற அமைப்பு என்பதை இக்குழுவினரிடம் தாம் தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.


திருகோணமலை இளம்பெண்ணுக்கு ‘சவுதியரேபியாவில் சித்ரவதை’

மத்திய கிழக்கில் சித்ரவதைக்கு உள்ளாகும் இலங்கைப் பெண்களின் எண்ணிக்கை அதிகம்

சவுதியரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைபார்த்துத் திரும்பியிருக்கும் திருகோணமலை கிண்ணியா மாஞ்சோலைப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், சவுதியில் தான் வேலைபார்த்த வீட்டின் உரிமையாளர் தன்னைக் கொடுமைப் படுத்தியதாக பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

நோய்வாய்ப்பட்ட நிலையில் திருகோணமலை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்ற நலினா உம்மாள் என்ற இளம்பெண், சவுதியரேபியாவிலும் இரண்டுவார காலம் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகக் கூறுகிறார்.

தான் வேலைக்குச் சேர்ந்து ஒரு சில நாட்களில், அந்த வீட்டில் சிறு குழந்தை ஒன்று இறந்துபோகவே. வீட்டின் முதலாளியம்மா, தன்னை தரித்திரம் பிடித்தவள் என்று கூறி பலவித சித்ரவதைக்கும் ஆளாக்கியதாக நலினா தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில், தன்னை குவைத் அனுப்புவதாகச் சொல்லி ஏஜெண்டுகள் சவுதிக்கு அனுப்பிவிட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

இது குறித்து திருகோணமலை செய்தியாளர் ரத்னலிங்கம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 30 மார்ச், 2008

இலங்கை கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு புதிய தமிழ் கூட்டணி

இலங்கையில் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணி ஆகிய தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து தமிழ் ஜனநாயக தேசிய முன்ணணியாக போட்டியிட தீர்மானித்துள்ளது.

தமிழ் ஜனநாயக தேசிய முன்ணணி புதிய அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்று ஞாயிற்றுகிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் போராட்டம் காரணமாகவே 13 வது அரசியல் யாப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டு மாகாண சபை முறை ஏற்படுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், முதலமைச்சராக தமிழரொருவர் வரவேண்டும் என்பதே நியாயமானது என்றும் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு மாகாணம் சட்ட ரீதியாகவே தற்போது பிரிக்கப்பட்டுள்ளதால் இத்தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்று கூறிய அவர் இணைப்பு பற்றி கிழக்கு மாகாண மக்களே தீர்மானிக்க வேண்டியவர்கள் என்றார்.

தமது தமிழ் ஜனநாயக தேசிய முன்னனியில் 5 இடது சாரி கட்சிகள் இணைந்து போட்டியிட முன் வந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்


இலங்கை படையினருக்கு கொசுக்கடியினால் தொற்றுநோய்கள்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் மன்னார், வவுனியா மற்றும் வெலிஓயா எனப்படும் மணலாறு போன்ற வன்னிப்போர்முனைப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட கொசுக்களின் பெருக்கத்தினால் சுமார் 200 துருப்பினர் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

டெங்கு, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட படையினருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு தற்போது நிலைமை முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு அங்கு ஏற்கனவே முகாமிட்டிருக்கும் படையினருக்கும் கொசு வலைகள் போன்றவை கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அப்பகுதிக்கு சென்ற அனுராதபுர வைத்தியசாலை உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள், இந்த தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் பிரிகேடியர் உதயநாணயக்கார கூறினார்.

 


இலங்கையில் விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது குறித்து ஐ நா கவலை

ஐக்கிய நாடுகள் சபை ஆசிய பசிபிக் பகுதிக்கான இந்த ஆண்டின் பொருளாதார சமூக ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ஆசிய பசிபிக் பகுதியில் பல நாடுகள் பொருளாதார நிலையில் வளர்ச்சியடைந்திருந்தாலும் விவசாயத்துறையில் பின்னடைவையே சந்தித்துள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக தெற்காசிய நாடுகளில் இந்த பின்னடைவு கூடுதலாக உள்ளது என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இலங்கையில் விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது பற்றி கவலை வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கை, அது தொடர்பில் கொள்கை வகுப்பாளர்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய தேவையையும் வலியுறுத்தியுள்ளது.

விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது பெருமளவில் வறுமைக்கு வழி செய்யும் எனச் சுட்டிக் காட்டியுள்ள அந்த அறிக்கை, இலங்கை அரசு விவசாயத்துறைக்கு புத்துயிரூட்ட வேண்டியதை வலியுறுத்துவதே கொள்கை வகுப்பாளர்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன்
இலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன்

இலங்கையில் விவசாயத்துறைக்கு பல சலுகைகளை வழங்கியும் கூட விவசாயத்துறையில் உற்பத்தி திறன் அதிகரிக்கவில்லை என சுட்டிக் காட்டுகிறார் இலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன். இதுதான் இலங்கை அரசுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் சவாலாக இருக்கிறது எனவும் அவர் கூறுகிறார்.

விவசாயத்துறையில் பொருளாதார சீர்திருத்தங்களும், விவசாய அணுகுமுறையில் எந்தவிதமான சீர்திருத்தங்களும் ஏற்படாமாலிருப்பததுதான் இதற்கான அடிப்படை காரணம் எனவும் அவர் கருத்து வெளியிடுகிறார். விவசாய நிலங்கள் சீர்திருத்திருத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று என்றும் கலாநிதி சர்வானந்தன் கூறுகிறார்.

அரசும் விவசாயிகளும் நெல் உற்பத்தியில்தான் கூடுதலான கவனம் செலுத்தி வருவதும், பணப்பயிர்களில் கவனம் செலுத்தாததும் விவசாயத்துறையின் தேக்கத்திற்கான காரணங்களாக கருதலாம் எனவும் அவர் தெரிவிக்கிறார். விவசாயிகளுக்கு தொடர்ந்து பயிர் செய்வதற்கு தேவையான நீர் ஆதாரங்களை ஏற்படுத்திக் கொடுத்தி, சந்தை வாய்ப்புகளை அதிகரித்து கொடுத்து, நில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதே உடனடி தேவை எனவும் கலாநிதி சர்வானந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.


இலங்கையின் மொனராகலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் சுட்டுக்கொலை

இலங்கை காவல்துறையினர்
இலங்கை காவல்துறையினர்

இலங்கையின் மொனராகலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் டாக்டர் அண்ணாமலை நாராயணன் முத்துலிங்கம் சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொனராகலை நகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணி முடித்து விட்டு அவர் திரும்பி கொண்டிருந்த வேளை, வேன் ஒன்றில் வந்த ஆயுததாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

இதற்கிடையே, இலங்கையின் கிழக்கு மாகாணசபை தேர்தலில், முஸ்லிம் கட்சிகள் வேறுபாடுகளை மறந்து முதலமைச்சர் பதவியை வெல்வதற்காக ஒன்றுபட்டு தனித்துவமான சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும், அல்லாத பட்சத்தில், மூதூர் பிரதேச முஸ்லிம்கள் தனித்துவமான முறையில் அரசுடன் இணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதாக இன்று சனிக்கிழமை மூதூர் ஆனைச்சேனை திடலில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதேச சபை உறுப்பினர் பி.கே கலில் தெரிவித்துள்ளார்.

 


நீரில் தத்தளிக்கும் விவசாயம் – பெட்டகம்

மழையால் விவசாயம் நாசம்
மழையால் விவசாயம் நாசம்

இலங்கையின் வட மாவட்டங்களிலுள்ள விவசாய நிலங்கள் அண்மையில் பெய்த அடைமழையில் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

வழமைக்குப் புறம்பாக அறுவடைக் காலத்தில் மழை பெய்து பெரும் நஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் ஆற்றாற்றுகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் மட்டும் 12,500 ஏக்கர் விவசாய நிலம் மழை நீரில் மூழ்கி நாசமடைந்ததாக அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகிறது.

வட இலங்கையில் மழைப் பாதிப்புகள் குறித்து வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் தொகுத்தளிக்கும் பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 28 மார்ச், 2008


மனம் மாறும் தற்கொலை குண்டுதாரிக்கு ரொக்கப் பரிசு – கொழும்பில் அனாமதேய சுவரொட்டி

‘தற்கொலை குண்டுதாரியாக நினைப்பவர்கள் மனதை மாற்றிக்கொண்டால் ரொக்கப் பணம் பரிசாகக் கிடைக்கும்’ என்று கூறும் புதிய சுவரொட்டிகள் இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஒட்டப்பட்டுள்ளமை குறித்து பொலிஸார் விசாரணை செய்துவருகிறார்கள்.

கொழும்பில் தமிழர்கள் அதிகம் வாழும் ஒரு பகுதியில் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்தச் சுவரொட்டிகளில் தற்கொலை குண்டுதாரி ஒருவரின் துண்டிக்கப்பட்டத் தலையைக் காட்டி, அதனருகே நீங்களும் வாழப் பிறந்தவர்தான்… ஏன் குண்டுதாரியாகி மடிய வேண்டும்? என்று எழுதப்பட்டுள்ளது.

கரும்புலிகள் என்று சொல்லப்படுகின்ற விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையில் சேர எண்ணம் கொண்டுள்ளவர்கள் தங்களது மனதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் 118 என்று துவங்கும் அரசாங்க தொலைபேசி இலக்கம் ஒன்றை அழைக்க வேண்டும் என்றும் அந்த சுவரொட்டி கூறுகிறது.

அப்படி மனதை மாற்றிக்கொள்பவர்களுக்கு உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க ஒரு கோடி ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தொலைபேசி இலக்கம் இந்தச் சுவரொட்டியில் இடம்பெற்றிருந்தாலும், இப்படி ஒரு திட்டத்தை அரசு அறிவிக்கவில்லை, இது ஏமாற்று வேலை என்று இராணுவம் கூறுகிறது.

இந்தச் சுவரொட்டிகள் குறித்து பொலிஸார் விசாரணை நடத்திவருவதாகக் கூறிய இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயகார, அந்தச் சுவரொட்டியிலுள்ள தொலைபேசி எண்ணை தான் அழைத்தபோது பதிலே இல்லை என்றும் இது ஒரு ஏமாற்று வேலை என்று தான் சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார்.


Posted in A9, BBC, Bombers, Child, Children, dead, Eelam, Eezham, Food, Grains, Hoax, ICRC, Imports, Kids, LTTE, Paddy, Prabakaran, Prabhakaran, rice, Soldiers, Sri lanka, Srilanka, Suicide, UN, War, Warriors | Leave a Comment »

Mar 25: Eezham, Sri Lanka, LTTE, India, Tamil Nadu, War, TR – Updates & News

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 27 மார்ச், 2008 

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்

தேர்தல் வருவதை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகண சபையின் முதலாவது தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வியாழனன்று ஆரம்பமானது.

மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலிருந்து 37 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக நடைபெறும் இத்தேர்தலுக்கான வேட்புமனுக்களை அடுத்த வியாழக்கிழமை வரை மாவட்ட செயலகங்களில் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இத்தேர்தலையொட்டி வீதித் தடைகளும் வீதிச் சோதனைகளும் அதிகரிக்கப்பட்டு பாதுகாப்பு உயர்த்தப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியாக தெரிவுசெய்யப்படும் 35 உறுப்பினர்களுடன் கூடுதல் வாக்குககளைப் பெறும் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு போனஸ் உறுப்பினர்கள் 2 பேர் என மொத்தம் 37 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபைக்கான தேர்தலின்போது, 9 லட்சத்து 82 ஆயிரத்து 728 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள்.

1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, 1988ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த வடக்கு-கிழக்கு மாகாண சபைக்கான தேர்தகள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து திருகோணமலையில் வரதராஜபெருமாள் அவர்கள், ஒருங்கிணைந்த அந்த மாகாண சபையின் முதலமைச்சராக பதவியேற்றார். அவர் தலைமையிலான மாகாணசபையின் ஆட்சிமன்றம் சுமார் ஒரு வருட காலம் செயல்பட்டது.

அதன் பிறகு இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக இந்த தேர்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் முடங்கிப்போயின.

இதனிடையே கடந்த ஆண்டு இலங்கையின் உச்சநீதிமன்றம் வடக்கையும் கிழக்கையும் தனித்தையாக பிரிக்கவேண்டும் என அளித்த தீர்ப்பை அடுத்து இவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாக பிரிக்கப்பட்டன.

இவ்வாறு பிரிக்கப்பட்டு மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாண சபைக்கான முதல் தேர்தல் வரும் மேமாதம் நடைபெறவுள்ளது. .

ஏற்கனவே மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள், மத்திய அரசுகளினால் படிப்படியாக பறிக்கப்பட்டுள்ளதாக கூறும் வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான எஸ்.எஸ்.எம் ஹனீபா, நடைபெறவிருக்கும் தேர்தல் முதலமைச்சர் தெரிவுக்கான ஒன்றாகவே தான் நோக்குவதாகக் குறிப்பிடுகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்படும் என மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையார் டி.கிருஷ்னானந்தலிங்கம் தெரிவிக்கிறார்.


‘பிரபாகரன்’ திரைப்பட இயக்குநர் இலங்கையில் உண்ணாவிரதம்

மருத்துவமனையில் இயக்குநர் பீரிஸ்

சென்னையில் ஜெமினி ஸ்டூடியோவுக்கு முன்பாக கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்களினால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இயக்குநர் துஷாரா பீரிஸ், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டிருப்பதோடு, இன்று காலை முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினையும் ஆரம்பித்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.

பிரபாகரன் என்ற தனது திரைப்படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் வேலைகள் சென்னை ஜெமினி ஸ்டூடியோவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும்போதே, சுமார் 200க்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் தனக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் தன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள இவர், தனது படச்சுருள்களும், பிரதிகளும் இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்தால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் இந்திய அரசும், இலங்கை அரசும் இதில் உடனடியாகத் தலையிட்டு தனது படச்சுருள்களை தனக்கு மீளப் பெற்றுத்தரும் வரை தனது சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.

தனது படம் தமிழர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தவில்லை என்றும், இது தமிழர் விரோதத் திரைப்படம் அல்ல என்றும் தெரிவித்த துஷாரா பீரிஸ், 30 வருடகால யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் சிங்கள, தமிழ் பாமர மக்களே என்பதனை எடுத்துக்காட்டுவதையே தனது நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் விளக்கமளித்தார்.

இதனிடையே சர்ச்சைகுரிய இந்தத் திரைப்படம் வியாழனன்று சென்னையில் தமிழ் ஆர்வலர்களுக்குத் திரையிடப்பட்டது. தமிழக திரைப்படத் துறையைச் சேர்ந்த பலருடன் இந்தப் படத்தை பார்த்த விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்ட கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


பிரிட்டனில் தஞ்சம்கோரும் அகதிகள் நிலை மோசம்: சுயாதீன ஆய்வு முடிவு

அகதிகள் நிறைய பேர் அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுகிறார்கள்

பிரிட்டனில் அகதிகளுக்கு தஞ்சம் வழங்கும் விவகாரம் பற்றி ஆராய்ச்சி செய்த சுயாதீன ஆணையம் ஒன்று, மனிதாபிமான மற்றும் நாகரீக வளர்ச்சியடைந்த ஒரு சமூகத்தில் இருக்கவேண்டிய தரத்திலல்லாமல் மோசமான நிலையை அகதிகள் எதிர்கொள்ள நேரிடுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

சர்வதேச அரங்கில் பிரிட்டனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விஷயம் இது. தஞ்சம் கோருவோர் தொடர்பான பிரிட்டனின் கொள்கைகள் குறித்து நடத்தப்பட்ட இந்த சுயாதீன ஆராய்ச்சியில் அதிர்ச்சிதரும் பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர்கள், நீதிபதிகள், ஆர்வலர்கள் என்று பல் வேறு தரப்பினரோடு. தஞ்சம் கோரிய அகதிகளும் இந்த ஆராய்ச்சியில் பங்குகொண்டனர். அவர்களது வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டு இணைய தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அறிக்கையின் முடிவுகளை பிரிட்டனின் எல்லைகள் மற்றும் குடிவரவுத் துறை நிராகரித்துள்ளது. உறுதியாகவும் அதே நேரம் மனிதாபிமானத்துடனும் தமது செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும். கவனமாகவும் பரிவுடனும் தாங்கள் அகதிகளைக் கையாளுவதாகவும் அத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 

புதுப்பிக்கப்பட்ட நாள்: 25 மார்ச், 2008


கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி முடிவு

அஸாத் சாலி

எதிர்வரும் மாதங்களில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட உத்தேசிக்கப்பட்டிருக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் வியாழனன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அதில் போட்டியிடப்போவதாக முடிவு செய்திருக்கின்றது.

இம்மாத முற்பகுதியில், கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒன்பது உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் பாதுகாப்பு காரணங்களைக் கூறி அதில் பங்குபெற ஐக்கிய தேசியக் கட்சி மறுத்திருந்தது.

ஆனால் தற்போது அங்கு இடம்பெற உத்தேசிக்கப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தலில் பங்கேற்பதற்கு கட்சி எடுத்துள்ள முடிவு குறித்து தமிழோசையிடம் கருத்துவெளியிட்ட அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினரும், கொழும்பு மாநகரசபை முன்னாள் மேயருமான அஸாத் சாலி, தமிழ்பேசும் மக்களின் நாளாந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு முயற்சியாகவே கட்சி இதில் போட்டியிடுவதாகத் தெரிவித்தார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுவதற்கு தமது கட்சி முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்த அஸாத் சாலி, இந்தத் தேர்தலின் தானும் ஒரு முக்கிய வேட்பாளராக போட்டியிடப்போவதாகத் கூறினார்.


வவுனியா தூப்பாக்கிசூட்டில் சிவிலியன்கள் பலி

இலங்கையின் வடக்கே வவுனியா ஓமந்தை இராணுவ முன்னரங்க பகுதியை நோக்கி விடுதலைப் புலிகளின் பகுதியில் இருந்து தப்பிவந்ததாகத் தெரிவிக்கப்படும் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மீது இருதரப்பிலிருந்தும் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 3 பேர் காயமடைந்துள்ளனர், 5 பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில் மரணமடைந்தவர்களில் ஒருவர் தமிழர் என்றும் ஏனைய அனைவரும் சிங்களவர்கள் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்களை இராணுவத்தினர் உலங்கு வானூர்தி மூலமாக உடனடியாக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்திருப்பதாகவும் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட 5 பேரும் இராணுவ பொலிசாரின் விசாரணைகளின்போது தெரிவித்துள்ள தகவல்களின்படி, தாங்கள் மொத்தம் 12 பேர் என்றும், தங்களை 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி, 3 வள்ளங்களில் விடுதலைப் புலிகள் கடத்திச் சென்று முரசுமோட்டை – வள்ளிபுனம் பகுதியில் தங்களைத் தடுத்து வைத்திருந்ததாகக் கூறியிருக்கின்றனர்.

அங்கிருந்து 4 தினங்களுக்கு முன்னர் தப்பிவந்து, புதனன்று பகல் ஓமந்தை முன்னரங்கப் பகுதியில் இராணுவ பகுதியை நோக்கி வந்தபோது தங்களைக் கண்ட விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும், எனினும் தாங்கள் தொடர்ந்து ஓடியபோது இராணுவத்தினரும் தங்களை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில் மன்னார் ஆலங்குளம் பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் முன்னரங்கத் தளங்கள் மீதும், கிளிநொச்சி விசுவமடுக்குளம் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் வள்ளங்கள் கட்டும் தளத்தின் மீதும் விமானப்படைக்குச் சொந்தமான தாக்குதல் உலங்கு வானூர்திகளும், தாக்குதல் விமானங்களும் குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தி அவற்றை அழித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.


மட்டக்களப்பில் அதிரடிப் படையினர் மீது கிளேமோர் தாக்குதல்

மருத்துவமனையில் காயம்பட்ட பெண்ணொருவர்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் புதன்கிழமை காலை இடம்பெற்ற கிளேமோர் குண்டு தாக்குதல் சம்பவத்தில் 2 பொலிசார் கொல்லப்பட்டுள்ளார்கள்.

சம்பவத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த 4 பேர், 3 சிவிலியன்கள் என 7 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த பிரதேசத்திற்கு சென்றிருந்த ஜப்பானிய உதவி நிறுவனக் குழுவொன்றின் வாகனத் தொடரனிக்கு பாதுகாப்பின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொலிசாரே இதில் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட வாகனத் தொடரனியும் வழமை போல் காலை நேர வீதிக் கண்கானிப்பில் ஈடுபடும் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரும் வாழைக்காலை சந்தியை அடைந்தபோது, தூரத்திலிருந்து இந்த கிளேமோர் குண்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்திற்கு விடுதலைப் புலிகளே பொறுப்பு என பாதுகாப்பு தரப்பினரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


பிரபாகரன் பற்றிய சிங்களப் படம் இயக்கியவர் சென்னையில் ‘தாக்கப்பட்டார்’

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்த படத்தை இயக்கிய இலங்கை திரைப்பட இயக்குநர் துஷாரா பீரிஸ் அவர்கள், தமிழகத் தலைகர் சென்னையில் செவ்வாய்க்கிழமை மாலை தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த இயக்குநருக்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவத்தில் ஈடுபட்ட திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் நிறுவனர் சுப.வீரபாண்டியன் அவர்கள், இந்த சம்பவத்தின்போது என்ன நடந்தது என்பது குறித்தும், தங்களின் எதிர்ப்பு ஏன் என்பது குறித்தும் தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.

—————————————————————————————————————–

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து ராஜேந்தர் தனது தமிழக அரச பதவியை இராஜினாமா செய்தார்

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தான் குரல் கொடுப்பதற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, தான் வகித்துவந்த தமிழக அரசின் சிறு சேமிப்புத் துறையின் துணைத் தலைவர் பதவியை திரைப்பட இயக்குனரும், லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான டி. ராஜேந்தர் இராஜினாமா செய்துள்ளார்.

இலங்கையில் இருக்கும் தமிழர்களைக் கொன்றுகுவிக்க இலங்கை இராணுவத்துக்கு, இந்தியா கைகொடுப்பதாகக் குற்றஞ்சாட்டும் ராஜேந்தர் அவர்கள், இலங்கை இராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்களையும், உபகரணங்களையும் வழங்குவதையும், பயிற்சிகளை வழங்குவதையும் தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் கூறினார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை இலங்கைத் தமிழர் ஒருவர்தான் கொலை செய்தார் என்பதற்காக, ஒட்டுமொத்த இலங்கைத் தமிழினத்தையும் புறக்கணிப்பது நியாயமல்ல என்றும் ராஜேந்தர் கூறினார்.

தான் எந்த விதமான வன்முறை இயக்கத்துக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை என்றும் இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளுக்காகவே தான் குரல் கொடுப்பதாகவும் அவர் கூறினார்.

விடுதலைப்புலிகள் என்பது ஒரு அங்கம் என்றும், அது மாத்திரமே இலங்கையில் இருக்கக்கூடிய ஒட்டு மொத்தத் தமிழினம் என்று முத்திரை குத்தக் கூடாது என்றும் ராஜேந்தர் தெரிவித்தார்.

அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கடற்புலிகளின் படகை மூழ்கடித்ததாக இலங்கை கடற்படை கூறுகிறது

கடற்புலிகள்
கடற்புலிகள்

இலங்கையின் வடகிழக்குக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் படகுத் தொகுதி ஒன்றுடன் தாம் சண்டையிட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

கடற்புலிகளின் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ள போதிலும், அதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டதா என்று அது எதுவும் கூறவில்லை.

கடற்படைப்படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டு, அதில் பத்து சிப்பாய்கள் கொல்லப்பட்டதை அடுத்த சில தினங்களில் இந்த மோதல் நடந்துள்ளது.

அந்தக் கடற்படைப்படகை தமது தற்கொலைக் கடற்கரும்புலிகள் தாக்கியதாக விடுதலைப்புலிகள் முன்னர் கூறியிருந்தனர்.

ஆனால், அந்தப் படகு கடற்கண்ணி ஒன்றால் மூழ்கடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்திருந்தது.


Posted in Eelam, Eezham, India, LTTE, Rajeev, Rajendar, Rajiv, Sri lanka, Srilanka, Tamil Nadu, TamilNadu, TR, War | 1 Comment »

Sri Lanka faulted for public use of International Committee of the Red Cross (ICRC)’s confidential findings

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 மார்ச், 2008


கிழக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்துவதில் அவசரம் கூடாது என்கிறார் ஆனந்தசங்கரி

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி

கிழக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்துவதில் இலங்கை அரசாங்கம் மிகுந்த வேகம் காட்டக் கூடாது என்று தமிழர் விடுதலைகூட்டணியின் தலைவரான வீ. ஆனந்தசங்கரி அவர்கள் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில், இன்னமும் ஆயுதக்குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் முழுமையாக களையப்படாத நிலையில், அங்கு மக்கள் சிந்தனை மற்றும் சுதந்திரம் ஆகியவை கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இன்னமும் இருப்பதாகவும் அவர் கூறுகிறார். ஆகவே ஆயுதங்கள் அங்கு களையப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இத்தகைய நிலையில் அவசரமாக அங்கு தேர்தல்களை நடத்துவது உசிதமானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் கருத்தைப் சரியாக பிரதிபலிப்பதாக இருந்தால், கிழக்கு மாகாணத்தில் இன்னமும் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சூழ்நிலை உருவாகவில்லை என்பதே உண்மை என்றும் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 23 மார்ச், 2008

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாது: ஸ்ரீகாந்தா

இலங்கையின் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகந்தா அவர்கள் தமிழோசைக்கு அளித்த சிறப்புச் செவ்வியில் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் தனியாக பிரித்து தேர்தல் நடத்தப்படுவதன் மூலம், வடக்கு கிழக்கை நிரந்தரமாக பிரிப்பதற்கு இலங்கை அரசு முயல்வதாகவும், இந்த முயற்சிக்கு துணை போகக்கூடாது என்பதற்காகவே தமிழ்தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதாகவும் ஸ்ரீகாந்தா அவர்கள் தெரிவித்தார்.

இது தொடர்பில் தமிழோசைக்கு அவர் அளித்த சிறப்புச் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.


வட இலங்கை மோதல்கள்; முரண்பட்ட தகவல்கள்

இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா, மணலாறு மற்றும் முகமாலை, நாகர்கோவில் போர் முன்னரங்குகளில் சனியன்றும் ஞாயிறன்றும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாக இருதரப்பினரும் தெரிவித்திருக்கின்றனர்.

மன்னார் உயிலங்குளத்திற்கு வடக்கில் உள்ள முன்னரங்கப் பகுதிகளில் இராணுவத்தினர் முன்னேறிச் சென்று விடுதலைப் புலிகளிடமிருந்து ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவான பிரதேசத்தைக் கைப்பற்றியதாகத் தெரிவித்துள்ள இராணுவத்தினர், சண்டைகளின்போது இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், அதன்படி, 22 விடுதலைப் புலிகளும் 4 படையினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் 11 உடல்களும், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டிருக்கின்றது.

மன்னார் பாலைக்குழி, இத்திக்கண்டல் ஆகிய பகுதிகளில் இருந்து சனிக்கிழமை அதிகாலையில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு முயன்ற இராணுவத்தினர் மீது மாலை வரையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 55 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

தமது கடுமையான எதிர்த் தாக்குதல்களையடுத்து, படையினர் தமது முன்னேற்ற முயற்சியைக் கைவிட்டு, தமது பழைய நிலைகளுக்குத் திரும்பியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

வவுனியா, மணலாறு, முகமாலை, நாகர்கோவில் ஆகிய முன்னரங்கப் பகுதிகளில் இடம்பெற்ற சண்டைகளில் மேலும் 23 விடுதலைப் புலிகளும் 4 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் சனிக்கிழமை யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா, அங்கு போர் நிலைமைகள் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக இராணுவ உயரதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்துள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

 


 

புதுப்பிக்கப்பட்ட நாள்: 21 மார்ச், 2008


கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவது பற்றிய முடிவு விரைவில்: மாவை சேனாதிராஜா

இலங்கையின் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த சிலநாட்களாக தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது.

சமீபத்தில் நடந்த மட்டக்களப்பு மாநகரபை உள்ளிட்ட சில உள்ளாட்சி மன்றத்தேர்தல்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிடவில்லை. அந்த தேர்தல்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிடாததற்கு கூறப்பட்ட காரணங்கள், கிழக்கு மாகாணசபை தேர்தல்கள் விடயத்திற்கும் பொருந்தும் என்கிறார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜா அவர்கள்.

அதேவேளை, கிழக்கு மாகாணசபை தேர்தல்கள் விடயத்தில் இறுதி முடிவெடுப்பதற்கு முன்பு, கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லீம் தரப்பு கருத்தை அறிய தமிழ்தேசிய கூட்டமைப்பு விரும்புவதாகவும், இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு தற்போது பேச்சு வார்த்தைகள் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்னமும் இரண்டொரு நாட்களில் இது தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு இறுதி முடிவு எடுத்து அறிவிக்கும் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் மாவை சேனாதிராஜா அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய பிரத்யேக செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை முல்லைத்தீவு கடற்பரப்பில் நடந்த குண்டுத் தாக்குதலில் இராணுவ தரப்பில் சேதம்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் நாயாறு கடற்பரப்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் கடற்கண்ணிவெடி தாக்குதல் என்று கருதப்படும், குண்டு வெடிப்பு சம்பவத்தில் கடற்படையின் அதிவேகப்படகு ஒன்று மூழ்கியதாகவும், அதிலிருந்த 16 கடற்படையினரில் 6 பேர் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் காணாமல்போயுள்ள ஏனைய 10 பேரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

எனினும் நாயாறு கடற்பரப்பில் கடற்படையினருடன் இடம்பெற்ற மோதல் ஒன்றின்போது கடற்படையினருக்குச் சொந்தமான அதிவேகப்படகு மூழ்கடிக்கப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றார்கள். தமது தரப்பில் 3 கரும்புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்காரவுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, விடுதலைப் புலிகளின் கடற்கண்ணிவெடியிலேயே கடற்படைக்குச் சொந்தமான அதிவேகப்படகு மூழ்கியதாகத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் கடற்கண்ணிவெடிகளை வைத்திருந்ததாகக் கூறுகின்றீர்களே, இதேபோன்று கடற்படையினரும் கடலில் கண்ணிவெடிகளைப் புதைத்திருப்பதாகவும், இதற்கு இந்தியத் தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கின்றதே என கேட்டதற்கு, நாயாறு கடற்பரப்பில் கண்ணிவெடி வைக்க வேண்டிய அவசியம் கடற்படையினருக்கு இல்லை என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாயாறு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் உள்ள விடுதலைப் புலிகளின் கடற்தளங்கள் மீது விமானப்படையினர் சனிக்கிழமையன்று தாக்குதல்கள் நடத்தியுள்ளனர் என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இந்த மோதல்கள் குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இரகசியத் தகவல்களை இலங்கை வெளியுறவு அமைச்சு தவறாகப் பயன்படுத்தியுள்ளது: செஞ்சிலுவைச் சங்கம் குற்றச்சாட்டு

ஆட்கள் காணாமல்போன சம்பவங்கள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான ஆட்கொலைகள் ஆகியவை குறித்து இலங்கை அரசுக்கு தாம் வழங்கிய தகவல்களை இலங்கை வெளியுறவு அமைச்சு தவறாகப் பயன்படுத்தி விட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

அண்மையில், அமெரிக்க அரசுத்துறை இலங்கை மனித உரிமைகள் நிலவரம் குறித்து வெளியிட்ட அறிக்கை ஒன்றுக்கான பதில் அறிக்கையிலேயே, தாம் வழங்கிய ரகசிய தகவல்களை இலங்கை அரசு பகிரங்கமாக வெளியிட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

காணாமல் போனவர்கள் குறித்து தாம் கண்டுபிடித்த தகவல்களை இருதரப்புக்கும் இடையேயான பரிமாற்றத்துக்கு மாத்திரமானது என்ற அடிப்படையிலேயே தாம் இலங்கை அரசுக்கு ரகசியமாகத் தந்ததாகவும், ஆனால் அதனை இலங்கை அரசு பகிரங்கப்படுத்திவிட்டது என்றும் செஞ்சிலுவைச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

அதேவேளை அவை வெளியிடப்பட்ட வழியிலும் தவறு இடம்பெற்றுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

இத்தகைய தகவல்கள் பகிரங்கமாக விவாதிக்கப்படும் பட்சத்தில், இந்த விடயங்களைக் கையாள்வது சிரமமாகிவிடும் என்றும் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமைப் பேச்சாளர், புளோரியான் வெஸ்வெல் அவர்கள் வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 20 மார்ச், 2008


கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூட்டம்

இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்களை நடத்துவது என்று அரசுமுடிவெடுத்துள்ள சூழலில், இந்த தேர்தலில் போட்டியிடுவதா என்பது குறித்து ஆராய, தலைநகர் கொழும்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடந்தது.

இந்த கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதா, அல்லது தவிர்ப்பதா என்பது குறித்த இரு கருத்துக்களும் ஆராயப்பட்டன என்றும் ஆயினும் இது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வட்டாரங்கள் தமிழோசையிடம் தெரிவித்தன.

எதிர்வரும் ஒரிரு நாட்களில் இது குறித்து மேலும் ஆராய்ந்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

 


ரூபவாஹினி நிர்வாகியாக முன்னாள் இராணுவ அதிகாரியின் நியமனம்: ஊடகங்கள் அதிருப்தி

 

இலங்கை அரசாங்கத்தின் தொலைக்காட்சியான ரூபவாஹினி நிறுவனத்தின் நிர்வாகியாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டது தொடர்பில் தொடர்பூடக உரிமைச் செயற்பாட்டாளர்கள் இலங்கை அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்கள்.

சுதந்திர ஊடக அமைப்பின் அமைப்பாளர் சுனந்த தேசப்பிரிய, இது தொடர்பில் கருத்துக் கூறுகையில், இந்த நடவடிக்கை மூலம், நெருக்கடி நிலைமைகளில், ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் பெரும் ஆளுமையை அரசாங்கம் செலுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள இலங்கையின் ஊடக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்ப அவர்கள், தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாகத்தைப் பலப்படுத்துவது மாத்திரமே இந்த நியமனத்தின் நோக்கம் என்று கூறியுள்ளார்.

தமது 5 சகாக்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, அந்த நிறுவனத்தின் ஊழியர்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ந்தே, இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


 

Posted in Eelam, Eezham, HR, ICRC, IDP, LTTE, missing, Red Cross, rights, Secrets, Sri lanka, Srilanka | Leave a Comment »

Pazha Nedumaran on POTA Detainees – Supporting the LTTE; Freedom of Expression

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2008

நீதி நெறியை மதிக்காத முதல்வர்கள்

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை ஆதரித்துப் பேசினாலும் பிர சாரம் செய்தாலும் அது சட்டப்படி குற்ற மாகும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்திலும் வெளியி லும் இடைவிடாது கூறி வருகிறார்.

உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன் றம், பொடா மறு ஆய்வுக்குழு ஆகியவை அளித்த தீர்ப்புக ளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை முற்றிலும் அறியாதவராக அல்லது அறிந்திருந்தும் உண்மைகளை மறைப்பவராக ஜெயலலிதா விளங்குகிறார். ஜெயலலிதா வால் 1.8.2002 முதல் 8.1.2004 வரை ஏறத்தாழ 525 நாள்கள் பொடா சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டவர்களில் ஒரு வன் என்கிற முறையில் சில உண்மைகளைக் கூற விரும்புகி றேன்.

13.4.2002 அன்று சென்னை ஆனந்த் திரையரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நானும் மற்றும் நண்பர்களும் பிர பாகரனின் நேர்காணல் குறித்துப் பேசினோம்.

ஆனால் 26.4.2002 அன்று முதல்வர் ஜெயலலிதா தலை மைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பின்வருமாறு அறிவித்தார். “”விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்த பின்னர் சென்னையில் ஆனந்த் திரையரங்கத்தில் கூட்டம் நடத்தப் பட்டது. அந்தக் கூட்டத்திற்கு காவல்துறையினர் எப்படி அனுமதி வழங்கினார்கள் என்று கேட்கிறீர்கள். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டது. அன்றைக்கு சட் டவிரோதமாக எந்த நடவடிக்கையிலும் கூட்டம் நடத்திய வர்களோ அல்லது பேசியவர்களோ ஈடுபடவில்லை என்று அரசுக்குத் தகவல் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

(தின மணி 27-4-2002) கூட்டம் நடந்தது ஏப்ரல் 13-ஆம் தேதி. அதற்கு 13 நாள் கள் கழித்து ஏப்ரல் 26-ஆம் தேதி இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கிறார். ஆனால் அந்தக் கூட்டத்தில் நாங்கள் பேசியதற்காக எங்கள் மீது ஆகஸ்ட் முதல் தேதி பொடா சட்டம் ஏவப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்றரை மாதங்களுக்குப் பிறகு எங்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து ஜெயலலிதா அரசு சிறையில் அடைத் தது. ஆனந்த் திரையரங்கக் கூட்டத்தில் சட்ட விரோதமாக எதுவும் நடைபெறவில்லை என அறிவித்த முதலமைச்சரே அது சட்டவிரோதமான கூட்டம் என்று கூறி எங்களைச் சிறையில் அடைக்கிறார்.

பொடா சிறையில் ஓராண்டு காலம் நாங்கள் இருந்த பிறகு எங்களைப் பிணையில் விடுதலை செய்ய வேண்டு மென்று பொடா நீதிமன்றத்தில் மூன்று முறை நாங்கள் தாக்கல் செய்த மனுக்களை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதற்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றத் தில் பிணை கேட்டு நாங்கள் மேல்முறையீடு செய்தோம்.

இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தில் பொடா சட்டம் குறித்து ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வை.கோ. மற்றும் தோழர்கள், நெடுமாறன் மற்றும் தோழர் கள், சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம், மனித உரி மைகள் மற்றும் சமூக நீதிக்கான அனைத்திந்திய முன்னணி, ஜே.சாகுல் அமீது ஆகியோர் பெயரில் தாக்கல் செய்யப் பட்ட 5 மனுக்கள் குறித்து 16.12.2003 அன்று உச்ச நீதிமன் றம் விசாரித்தது.
இந்திய அரசு சார்பில் வாதாடிய அடர்னி ஜெனரல் சோலி சோராப்ஜி, “”திருமங்கலம் கூட்டத்தில் வைகோ பேசி யதும் அமைச்சர் கண்ணப்பன் விடுதலைப் புலிகளை ஆத ரித்துப் பேசியதும் பொடா சட்டத்தின் கீழ் வராது” என்று கூறினார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் எஸ். இராசேந்திரபாபு, ஜி.பி. மாத்தூர் அடங்கிய ஆயம் நடத்திய விசாரணையின் இறுதியில் தங்கள் தீர்ப்பில் பின்வ ருமாறு அறிவித்தனர். “”தீவிரவாத இயக்கத்திற்கு தார்மிக ஆதரவு தெரிவித்து வெறுமனே பேசுவது பொடா சட்டப் படி குற்றம் ஆகாது. பொடா சட்டத்தின் கீழ் கைது ஆகி ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களை வழக்க மான நடைமுறைகளைப் பின்பற்றி பிணையில் விடுதலை செய்யலாம்” என்று குறிப்பிட்டனர்.

இந்தத் தீர்ப்பு குறித்து 3-1-2004 அன்று தினமணி எழுதிய தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டது. “”நமது நாட் டில் தடை செய்யப்பட்டுள்ள இயக்கம் ஒன்றுக்கு வாய் மொழி ஆதரவு தெரிவித்து பேசுவதற்காகப் பொடா சட் டத்தை ஒருவர் மீது பயன்படுத்தக் கூடாது என்ற பொருள் செறிவு உடைய விளக்கத்தையும் உச்ச நீதிமன்றம் அளித்து தனது கனிந்த விசாலமான சட்டநெறிப் பார்வையைப் புலப் படுத்தியது.” நாங்கள் சிறைப்பட்ட ஓர் ஆண்டிற்குப் பிறகு உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எங்களுடைய பிணை மனுவை நீதியரசர் சிர்புர்கர், தணிகாசலம் ஆகியோர் அடங் கிய ஆயம் விசாரித்தது. அதன் பிறகு அவர்கள் அளித்த தீர்ப் பில் பின்வருமாறு கூறினார்கள். “”தீவிரவாத இயக்கத்திற்கு தார்மிக ஆதரவு தருவது, வெறுமனே பேசுவது பொடா சட் டப்படி குற்றம் ஆகாது என்றும் பொடா சட்டத்தில் கைதாகி ஓர் ஆண்டிற்கு மேலாகச் சிறையில் இருப்பவர் களை வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி பிணையில் விடுதலை செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியதன் அடிப்படையில் நெடுமாறன் உள்பட நான்கு பேரை பிணை யில் விடுதலை செய்கிறோம்” என்று அறிவித்தனர்.

மேலும் நீதிமன்றத்தில் எனது பேச்சு முழுவதையும் ஆங் கிலத்தில் மொழி பெயர்த்து தரச்சொல்லி நீதியரசர் சிர்புர் கர் முழுமையாகப் படித்திருக்கிறார். அதைப் பற்றியும் நீதி மன்றத்தில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். “”பிர பாகரன் தந்த பேட்டியைப் பற்றித் தான் தனது பேச்சில் முழுக்க முழுக்க நெடுமாறன் பேசியிருக்கிறார்.
பிரபாகரன் பேட்டி பற்றிய பேச்சுக்கும் விமர்சனத்திற்கும் பொடா வழக்கு போடுவதாக இருந்தால் அந்தப் பேட் டியை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள், செய்தியை வெளி யிட்ட பத்திரிகைகள் என எல்லோர் மீதும் வழக்குப் போட் டிருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை” என்று அர சுத் தரப்பு வழக்கறிஞர்களை நோக்கி அவர் கேட்டார்.

“”வெறுமனே கூட்டத்தில் பேசினார் இளைஞர்களைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டுகளை அடுக்காமல் நெடு மாறன் பேச்சைக் கேட்டு இந்த ஊரில் வன்முறையில் ஈடு பட்டனர். கலவரம் நடந்தது என்று ஏதாவது ஒரு நிகழ்ச்சி யைச் சுட்டிக்காட்ட முடியுமா?” என்றும் நீதியரசர் சிர்புர் கர் கேட்டபோது அரசுத் தரப்பு வாயடைத்துப் போய் அமைதியாக இருந்தது.

“”நெடுமாறன் ஓராண்டிற்கு மேல் சிறையில் இருந்திருக்கி றார். சட்டப்படி ஓர் ஆண்டில் பிணை வழங்கப்பட வேண் டும். அவர் ஓர் அரசியல்வாதி. அரசியல் கருத்துகளைக் கூட கூறக்கூடாது என்கிறீர்கள். பொடா சட்டத்தைப் பயன்ப டுத்தி தேவையற்ற அச்சத்தைக் கிளப்பி விடாதீர்கள். இது போல் பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால் தான் அதைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். இந் தப் பொடா சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியது குறித்து நெடுமாறனின் மனு விசாரணைக்கு வரும்போது அரசு நடத்தை பற்றியெல்லாம் நாங்கள் விசாரிப்போம்” என்று காட்டமாகக் கூறினார்கள்.

பொடா சிறையில் நான் இருந்த காலகட்டத்தில் என் மீது திருச்செந்தூர், திண்டுக்கல், கொடைக்கானல், ஆலந்தூர், வண்ணம்பட்டி ஆகிய ஊர்களில் நடைபெற்ற கூட்டங்க ளில் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசினேன், பிரி வினை வாதத்தைத் தூண்டினேன் எனக் குற்றங்கள் சாட்டி வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகள் எல்லாவற் றிலும் எனக்குப் பிணை அளிக்கப்பட்டால் தான் உயர் நீதிமன்றம் அளித்த பிணையின்படி நான் வெளியில் வரமு டியும். ஆகவே இந்த வழக்குகளில் எனக்குப் பிணை கிடைத்து விடாதபடி தடுப்பதற்கான சகல முயற்சிகளையும் ஜெயலலிதா அரசு மேற்கொண்டது.

மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட பொடா மறு ஆய் வுக் குழுவில் நீதியரசர் உஷாமித்ரா தலைவராகவும், கே.இராய்பால், ஆர்.சி.ஜா ஆகியோர் உறுப்பினர்களாக வும் இருந்து தமிழக பொடா வழக்குகள் குறித்து விசார ணையை நடத்தினார்கள். 15.4.2005 அன்று அவர்கள் அளித்த தீர்ப்புரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் கள்.
“”13.4.2002 அன்று ஆனந்த் திரையரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசப்பட்ட பேச்சுக்கள் அரசியல் ரீதியா னவை. பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பதோ அல்லது ஈழத் தமிழர்களுக்காகப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு வாயினால் ஆதரவு தெரிவிப்பதோ தடை செய் யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவு தருவதாகாது. மக்கள் பிரச் சினைகளுக்காகச் ஜனநாயக ரீதியில் போராடுவதாகவும் நெடுமாறன் தனது பேச்சில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டம் ஈழத் தமி ழர்களுக்கான விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல உல கெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு விடிவைக் கொண்டு வரும் போராட்டமாக அவர்கள் அதைக் கருதுகிறார்கள்.

எனவே, இந்தப் பின்னணியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தது தங்கள் வாழ் நாள் கடமை என்றும் அதற்காக அடக்குமுறைகளைச் சந் திக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.

ஈழத் தமிழர்கள் படும் துயரத்தைப் பகிர்ந்து கொள்வதோ அவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதோ அதைப் புரிந்து கொள்ளுமாறு மற்றவர்களை வேண்டுவதோ பயங்கரவாதம் ஆகாது. விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நடவடிக் கைக்கு ஆதரவு தருவதாகாது. எனவே, பொடா சட்டம் 21- வது பிரிவின் கீழ் அவர்களின் பேச்சுக்களைக் குற்றமாகக் கரு தமுடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் பேச்சுக்களின் விளைவாக எத்தகைய வன்முறையும் எங்கும் நிகழவில்லை.
எனவே, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக முதல் தோற்றம் (டழ்ண்ம்ஹ ஊஹஸ்ரீண்ங்) எதுவும் இல்லை. பொடா நீதிமன் றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்குகள் திரும்பப் பெற்ற வையாகக் கருதப்பட வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட 5 நபர்களுக்கும் எதிராக முன்தோற்றம் எதுவும் இல்லையென பொடா மறு ஆய்வுக்குழு முடிவுக்கு வந்துள்ளது. எனவே, பொடா சட்டத்தின் பிரிவு 2(3) ஆகியவற்றின் கீழ் உடனடி யாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தமிழக அர சுக்கு இக்குழு ஆணை பிறப்பிக்கிறது.

உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், பொடா மறு ஆய்வுக்குழு ஆகியவை மிகத் தெளிவாகவும் விளக்கமாக வும் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசு வது பொடா சட்டப்படி குற்றம் இல்லை என்பதை தெளிவு படுத்திய பிறகும் முதலமைச்சராக இருந்த ஒருவர் எதையும் மதிக்காமல் திரும்பத் திரும்ப தவறான வாதங்களையே முன் வைப்பது அவர் வகித்த பதவிக்கு அழகல்ல.

பொடா சட்டத்தை முன்தேதியிட்டு, முழுமையாகத் திரும்பப் பெற வேண்டுமென்று இச்சட்டத்தினால் பாதிக் கப்பட்டவர்கள், சட்ட வல்லுநர்கள், மக்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரசுக் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் ஐக்கிய முற் போக்குக் கூட்டணி வெளியிட்ட குறைந்தபட்ச பொது வேலைத் திட்டத்திலும் பொடா சட்டத்தைத் திரும்பப் பெறுவது குறித்து தெளிவான உத்தரவாதம் அளிக்கப்பட் டிருந்தது.

ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற் றிய பிறகு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொடா சட்டத்தைத் திரும்பப் பெறாமல் காலம் தாழ்த்தியது. அது மட்டுமல்ல, குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியை யும் பறித்ததுபோல் பொடா சட்டத்தை முன்தேதியிட்டு திரும்பப் பெறப்போவதில்லை என்றும் பொடா சட்டத் தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சட்டவிதிகளின் படியே நடத்தப்படும் என்று முடிவு செய்தது. நாடெங்கும் அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியவுடன் பொடா சட்டத் தைத் திரும்பப் பெற முடிவு செய்து மன்மோகன்சிங் அரசு அதிலுள்ள பல கடுமையான பகுதிகளை இந்திய குற்றவியல் (கிரிமினல்) சட்டத்தில் இணைத்துவிட்டது. பொடா சட் டம் திரும்பப் பெறப்பட்ட போதிலும் அதனுடைய கொடும்கரங்கள் மறையவில்லை.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தோற்கடிக்கப்பட்டு, தி.முக. ஆட்சி பீடம் ஏறிய பிறகும் கூட பலரின் மீதுள்ள வழக்குகள் இன்னமும் திரும்பப் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் நாட்டில் பொடா சட்டத்தின் கீழ் ம.தி.மு.க பொதுச் செய லாளர் வைகோ மற்றும் அவரது கட்சி தோழர்கள் எட்டு பேர், நான் மற்றும் எங்கள் அமைப்பைச் சேர்ந்த ஐந்து தோழர்கள், நக்கீரன் கோபால் மற்றும் முற்போக்கு இளை ஞர் அணியைச் சேர்ந்த ஆறு பெண்கள் உட்பட 21 பேர் ஆக மொத்தம் 42 பேர் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டனர். இவர்களில் நான் உட்பட எங்கள் 4 பேர் மீது உள்ள பொடா வழக்கு மட்டுமே தி.மு.க. ஆட்சி வந்த பிறகு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதுவும் பொடா மறு ஆய் வுக் குழு ஆணையை ஏற்க வேண்டிய நிர்பந்தம் இருந்ததால் அது நடந்தது.

ஆனாலும் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த பரந்தாமன், புதுக்கோட்டை பாவாணன், வைகோ மற்றும் தோழர்கள், நக்கீரன் கோபால், முற்போக்கு இளை ஞர் அணியைச் சேர்ந்த
… (Sunday Dinamani)
——————————————————————————————————————————————————————

உண்மையை மறைக்க முயல்கிறார் கருணாநிதி: பழ.நெடுமாறன் பதில்

சென்னை, மார்ச் 17: பொடா வழக்குகள் தொடர்பாக, நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல், உண்மையை மூடி மறைக்க முதல்வர் கருணாநிதி முயற்சி செய்கிறார் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இது குறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

என்னுடைய கட்டுரையில் பொடா சட்டத்தில் யார் யார் கைது செய்யப்பட்டார்கள் என்பதை விவரமாகக் கூறியிருந்தேன். இறுதியாக, முற்போக்கு இளைஞர் அணியைச் சேர்ந்த 21 பேர் எனக் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால், “42 பேரில் 4 பேர் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு மீதி 21 பேர் தானா என்பதை அவரது கட்டுரையை படித்தவர்களே பார்த்துச் சிரிப்பார்கள்’ என்று கருணாநிதி கூறியிருக்கிறார். எந்தப் பிரச்னையையும் ஆழமாக அலசிப் பார்க்காமல் நுனிப்புல் மேயும் கலை அவருக்கே உரியது.

பொடா வழக்குகளை தமிழக அரசே நேரடியாகத் திரும்பப் பெற்று விட முடியாது. வழக்குகளை திரும்பப் பெறுவதாகச் சிறப்பு நீதிமன்றத்தில் எழுதிக் கொடுத்த பிறகும், நீதிமன்றத்தில் அவை நிலுவையில் இருப்பதற்கு அரசு என்ன செய்ய முடியும் என்று முதல்வர் உண்மைக்கு மாறான தகவலைக் கூறியிருக்கிறார்.

வைகோ மற்றும் தோழர்கள் வழக்கில் மறு ஆய்வுக் குழுவின் ஆணைப்படி, அரசு வக்கீல் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கைத் திரும்பப் பெறுவதாக கொடுத்த மனுவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். ஜெயலலிதா ஆட்சியில் இது நடந்தது.

வைகோ சார்பில் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அளித்த முறையீடு நிலுவையில் உள்ளது. எனவே, திமுக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கை திரும்பப் பெறுவதற்கான மனுவை அளித்தால் வைகோ மீதான வழக்குகள் முடிவுக்கு வரும். ஆனால், இதைச் செய்ய திமுக அரசு முன்வரவில்லை.

முன்தேதியிட்டு, பொடா சட்டம் திரும்பப் பெற்றிருந்தால் பொடா வழக்குகள் அத்தனையும் முடிந்திருக்கும். மத்திய அரசின் குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தில் இதுகுறித்து தெளிவாகக் கூறப்பட்டு இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இதற்கு நேர்மாறாக மத்திய அரசு நடந்து கொண்டது.

பொடா வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்ய தான் பாடுபட்டதாகக் கூறும் முதல்வர், தான் பதவியேற்ற பிறகும் அதைச் செய்யவில்லை என்பதுதான் என் கேள்வி.

உண்மைகளை தெரிந்து இருந்தும் அவற்றை மறைப்பதற்கு செய்யப்படும் முயற்சியாக இருக்க வேண்டும் அல்லது நிர்வாகம் அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஆத்திரப்பட்டு அவதூறுகளை அள்ளி வீசுவதால் உண்மைகளை மறைத்துவிட முடியாது.

Posted in Arrest, Bail, BJP, Bonds, Congress, Correctional, Criminal, Eelam, Eezham, expression, Freedom, Gopal, Imprison, Independence, Inquiry, Jail, Jaya, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeyalalitha, Jeyalalithaa, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, KK, Law, Liberation, LTTE, MDMK, Misa, MuKa, Nakkeeran, Nakkiran, Nedumaran, Order, POTA, Prison, Sri lanka, Srilanka, TADA, Tigers, VaiGo, VaiKo, Veerappan | 2 Comments »

Mar 7: Eezham, Sri Lanka, LTTE, Elections, Batticaloa, War, Murders – Updates & News

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 18 மார்ச், 2008 

மட்டக்களப்பு உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் ஜனாதிபதி ராஜபக்ஷ முன் பதவியேற்பு

மட்டக்களப்பு நகர மேயராக பதவியேற்ற சிவகீதா
மட்டக்களப்பு நகர மேயராக பதவியேற்ற சிவகீதா

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மாநகரசபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்காக நடாத்தப்பட்ட தேர்தலில் வெற்றிபெற்று தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள், அரச அதிகாரிகள், அரசியல் தலைவர்களெனப் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

இந்த வைபவத்தின்போது உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்த வெற்றிக்கு அடுத்தப்படியாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெற்றி அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளதோடு, விரைவில் வடபகுதி மக்களுக்கும் ஜனநாயக உரிமை, அபிவிருத்தி மற்றும் சுதந்திரம் போன்றவற்றைப் பெற்றுக்கொடுக்க தனது அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நகர மேயராகப் பதவியேற்ற சிவகீதா பிரபாகரன் அவர்கள் கிழக்கில் இடம்பெற்ற தேர்தலின்போது கிடைக்கப்பெற்ற வெற்றியானது, தமது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்குக் கிடைத்த வெற்றி என்பதனைவிட, கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களுக்குக் கிடைத்த ஒட்டுமொத்த வெற்றி என்று கூறினார்.

அத்துடன் இந்த வெற்றியினூடாக அப்பகுதி மக்களுக்குச் சேவையாற்றுவதற்கு தமக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய இந்த வைபவத்தின்போது, இந்த ஒன்பது உள்ளூராட்சிசபைகளின் உடனடி நடவடிக்கைத் தேவைகளுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலா சுமார் 25 லட்சம் ரூபாயையும், ஒவ்வொரு உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கும், அவர்கள் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக தலா ஒரு லட்சம் ரூபாய்களும் சன்மானமாக வழங்கியதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 14 வருடங்களின் பின்னர் இடம்பெற்ற இந்த ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், எட்டு உள்ளூராட்சி சபைகளில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பும், மட்டக்களப்பு மாநகர சபையை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டு முன்னணியும் வெற்றிபெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


மீண்டும் சிவில் நிர்வாகத்திடம் மட்டக்களப்பு மாநகரசபைக் கட்டிடம்

மட்டக்களப்பு மாநகர சபைக் கட்டிடம்
மட்டக்களப்பு மாநகர சபைக் கட்டிடம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்ததையடுத்து, கடந்த 17 வருடங்களுக்கு மேலாக பாதுகாப்பு தரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வந்த மட்டக்களப்பு மாநகர சபைக் கட்டிடத் தொகுதி இன்று மாநகர சபை நிர்வாகத்திடம் அதிகாரபூர்வமாக மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது.

மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை 1990இல் முறிவடைந்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மாநகர சபைக் கட்டிடத்தொகுதி உட்பட சில கட்டிடங்கள் இராணுவத் தேவைகளுக்காக எடுக்கப்பட்டிருந்தன.

இதன் காரணமாக மாநகரசபை, பிரதேச செயலக கட்டிடத் தொகுதிக்கு மாற்றப்பட்டு தொடர்ந்தும் அக் கட்டிடத்திலேயே தற்காலிகமாக இயங்கி வந்தது.

1990 ம் ஆண்டு முதல் 3 வது படைப்பிரிவு இராணுவ தலைமையகத்தின் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இக் கட்டிடத் தொகுதி கடந்த ஆண்டு முற்பகுதியில் விசேட அதிரடிப் படையினரால் பொறுப்பேற்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.


மன்னாரில் தொடரும் கடும் மோதல்கள்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில், இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெற்ற, விடுதலைப் புலிகளின் இருவேறு தாக்குதல் சம்பவங்களில், இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 13 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மன்னார் அருவியாற்றுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டிருந்த படையினர் மீது, இன்று காலை 7.10 மணியளவில் விடுதலைப் புலிகள் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

இந்தச் சம்பவத்தில் இரண்டு இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டிருக்கின்றது.

இதேவேளை, மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் இராணுவ முன்னரங்க பிரதேசத்தில் நேற்றிரவு 8 மணிமுதல் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின்போது, விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை தாக்குதலில் 11 இராணுவத்தினர் காயமடைந்ததாக மன்னாரிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த படையினர் மன்னார் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக அநுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது பெய்து வரும் அடை மழைக்கு மத்தியிலும் இந்த பகுதியில் நேற்றிரவு முதல் இன்று காலை வரையில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாகவும் மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

—————————————————————————————————————-

புதுப்பிக்கப்பட்ட நாள்: 17 மார்ச், 2008

இலங்கை அரச தொலைக்காட்சி ஊழியர்கள் தாக்கப்பட்ட சர்ச்சை: தொழிற்சங்கத்தினரைச் சந்தித்துள்ளார் ஜனாதிபதி

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் சிலர் அண்மையில் தாக்கப்பட்டது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து அந்நிறுவனத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இலங்கை ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது சர்ச்சைக்கு சுமூகமான தீர்வு ஒன்று காணப்பட்டிருப்பதாகவும், தேசிய தொலைக்காட்சி சேவை முழுமையாக இயல்புநிலைக்கு திரும்பிக்கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் சந்திரபால லியனகே தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதாகவும், தேசியத் தொலைக்காட்சி சேவைகளை பாதிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளுக்கு துணைபோக வேண்டாம் என்று ஊழியர் சங்கத்தினரிடம் அவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் சந்திரபால லியனகே கூறினார்.

திங்கட்கிழமை முன்னதாக, தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் பலர் தத்தமது கருமங்களிற்காக நிறுவனக் கட்டிடத் தொகுதிக்குள் செல்லமுடியாதவாறு பொலிசாரினால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், தங்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அணித்தாகவுள்ள இந்தக் கட்டிடத்தொகுதியினைச் சுற்றி வழமைக்கும் அதிகமான பொலிசாரும், இராணுவத்தினரும், கலகம் அடக்கும் பொலிசாரும் நிறுத்தப்பட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தது.


போக்குவரத்துத் தடைகளால் பாதிப்பு: வவுனியா வழக்கறிஞர்கள் புகார்

ஏ9 வீதியில் போக்குவரத்துத் தடைகள் நீடிக்கின்றன

இலங்கையின் வடக்கே ஏ9 வீதியின் மதவாச்சி சோதனைச் சாவடியில் தொடரும் வாகனப் போக்குவரத்துத் தடை காரணமாக வவுனியா மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சட்டத்தரணிகள் இயல்பாக வெளி மாவட்ட நீதிமன்றங்களுக்குச் சென்றுவர முடியாதிருப்பதாகவும் வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தப் பிரயாணக் கஷ்டங்கள் குறித்து உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சட்டத்தரணிகள் தமது வாகனங்களில் மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகப் பிரயாணம் செய்வதற்கு உரிய அனுமதியைப் பெற்றுத் தருமாறு பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அவர்களிடம் கடிதம் மூலமாகக் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக வாகனப் போக்குவரத்துக்கான தடை தொடர்வதனால், முக்கிய வழக்கு விசாரணைகளுக்காக கொழும்பில் இருந்து சிரேஷ்ட சட்டத்தரணிகள் வவுனியாவுக்கு வருவதற்குத் தயக்கம் காட்டுவதாகவும், இதனால் பல வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டு நீதிமன்றச் செயற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், வவுனியா சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் முருகேசு சிற்றம்பலம் தெரிவித்தார்.

இவை குறித்த மேலதிக விபரங்களை வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் வழங்கக் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 16 மார்ச், 2008

அனுரா பண்டாரநாயக காலமானார்

இலங்கையின் மிக முக்கிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் அனுரா

இலங்கையின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவருமான அனுரா பண்டாரநாயக ஞாயிறன்று கொழும்பில் காலமானார்.

அண்மைக் காலமாக நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த இவருக்கு வயது 59.

1977ஆம் ஆண்டு ஜூலை மாதம் நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்த இவர், பலதடவை பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துவந்துள்ளார்.

1983-89 காலப் பகுதியில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய இவர், 2000ஆம் ஆண்டில் நாடாளுமன்ற சபாநாயகராகவும் பதவி வகித்தார்.

இவரது தந்தை எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக, தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோர் இலங்கையின் பிரதமர்களாக விளங்கினர். பின்னர் இவரது சகோதரியான சந்திரிகா குமாரதுங்க சுமார் 11 வருடங்கள் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக விளங்கினார். ஆனாலும் பண்டாரநாயக குடும்பத்தின் ஒரேயொரு புதல்வரான அனுர பண்டாரநாயகவின் அரசியல் வாழ்க்கை என்பது பலத்த சிக்கல்கள் நிறைந்ததாகவே இருந்துவந்தது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.


மன்னார் மோதல் விபரங்கள்

இலங்கையின் வடக்கே இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மன்னார் நகரிலும், வவுனியாவிலும் ஞாயிறன்று நடத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் இராணுவச் சிப்பாய் ஒருவரும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் கொல்லப்பட்டனர். இதில் இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

மன்னார் புறநகர்ப் பகுதியில், தலைமன்னார் வீதியில் கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஞாயிறு காலை சுட்டுக் கொல்லப்பட்டதாக மன்னார் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் பிஸ்டல் குழுவைச் சேர்ந்தவர்கள், இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தைச் செய்துள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

இதேவேளை, வவுனியா, தாண்டிக்குளம் – கல்மடு வீதியில், மருக்காரம்பலை பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில், இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 3 படையினர் காயமடைந்ததாக இராணுவத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 14 மார்ச், 2008

இலங்கையில் ஐரோப்பிய வெளியுறவு அதிகாரிகள்

மனோ கணேசன்

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு இயக்குநரக அதிகாரிகள் ஹெலென் கேம்பெல் அவர்களும், ஆண்ட்ரியா நிகோலஜ் அவர்களும் தற்போது இலங்கை வந்திருக்கிறர்கள்.

மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் இவர்களை சந்தித்து பேசியிருகிறார்.

இந்த சந்திப்பின்போது விவாதிக்கபட்ட விடயங்கள் குறித்து தமிழோசையிடம் பேசிய மனோ கணேசன், இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஆராய்வதற்காக இந்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் வந்திருப்பதாகக் கூறினார்.

இலங்கையின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்த விசாரணைகளைக் கண்காணித்துவந்த சுயாதீன மாண்புமிக்கோர் குழுவினர் தமது பணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் நிலையில், அதற்கு மாற்றாக, தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவை ஏற்பாடு செய்து விசாரணைகளைக் கண்காணிக்கச் செய்வது குறித்து இலங்கை அரசு மாற்று யோசனை தெரிவித்திருப்பது பற்றி ஐரோப்பிய அதிகாரிகள் தன்னிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதாகவும் மனோ கணேசன் கூறினார்.

அவர் தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கை மனித உரிமை நிலவரம்: அமெரிக்கக் குற்றச்சாட்டு அவதூறு என்கிறது இலங்கை அரசு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ராபர்ட் ஒ பிளேக்

இலங்கையின் மனித உரிமைகள் சூழலை விமர்சிப்பதிருப்பதன் மூலம், அமெரிக்கா, விடுதலைப் புலிகளுக்கு ஒரு வாழ்க்கைச் சந்தர்ப்பத்தை கொடுக்கிறது என்று இலங்கை அரசு குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்க அரசுத்துறையின் வருடாந்திர அறிக்கையில், இலங்கையின் மனித உரிமை நிலவரம் 2007ல் மோசமடைந்துள்ளது என்று கூறப்பட்டிருப்பது இலங்கை அமைச்சர்களுக்கு எரிச்சலைத் தந்துள்ளது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அடங்கிய அவதூறு, குத்தல் பேச்சு, மிகையான விமர்சனம் என்றெல்லாம் அமெரிக்க அரசுத்துறையின் அறிக்கையை இலங்கை வருணித்துள்ளது.

அரசாங்க தரப்பினர் செய்த சட்டவிரோத ஆட்கொலைகள், அவர்களின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் சிறார்களைப் படையில் சேர்த்தது போன்றவற்றை அமெரிக்க அரசுத்துறை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசின் பதிலடிக்குப் பின்னரும், தமது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே தமது நிலைப்பாடு, அதிலிருந்து தாங்கள் பின்வாங்கவில்லை என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.


திருகோணமலை மாணவர்கள் கொலை: மாணவரின் தந்தை வீடியோ வாக்குமூலம்

2006ல் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டது தொடர்பான மரண விசாரணையில், ராஜீஹர் என்ற மாணவனின் தந்தையான டாக்டர் மனோகரன் வீடியோ மூலம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அந்தத் தமிழ் மாணவர்களை விடுதலைப் புலிகள் என்று சந்தேகித்து இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர் என்று அரசாங்க அமைச்சர் ஒருவர் தன்னிடம் ஒப்புக்கொண்டதாக, இலங்கையை விட்டு தற்போது வெளியேறிவிட்ட மனோகரன் கூறியுள்ளார்.

கொழும்பில் வீடு தருகிறோம், இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று தன்னிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திருகோணமலை சம்பவம் மற்றும் பிற பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளைக் கண்காணித்துவரும் சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு, அரசாங்கம் விசாரணைகளில் தலையிடுவதாகவும், சாட்சிகளைப் பாதுகாக்கத் தவறுவதாகவும் கூறி, தமது பணியிலிருந்து விலகுகின்றனர்.


அடைமழை அல்லலில் மன்னார் அகதிகள்

 

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் வழமைக்கு மாறாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்த குடும்பங்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அங்குள்ள தொண்டு நிறுவனப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள முசலி பிரதேசத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவம் கைப்பற்றியதை அடுத்து, அந்தப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 800 குடும்பங்கள் நானாட்டான் பகுதியில் பல இடங்களில் கொட்டில்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அத்துடன், மன்னார் மாவட்டத்தின் விடுதலைப் புலிகளுடைய பிரதேசத்தில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு அண்மையில் அவ்வப்போது வந்துள்ள சுமார் 18 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேர் களிமோட்டை என்னுமிடத்தில் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் குடும்பங்கள் தாழ் நிலப்பகுதிகளில் தங்க வைக்கப்பட்டிருப்பதனால், இவர்கள் தங்கியுள்ள கொட்டில்கள், கூடாரங்களுக்குள் மழைநீர் புகுந்திருப்பதாகவும், இதன் காரணமாக அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரச அதிகாரிகள் தொண்டு நிறுவனங்கள இவர்களுக்குத் தேவையான அவசர நிவாரண உணவு உதவிகளை வழங்கிவருகின்ற போதிலும், இவர்களுக்கான மாற்று இருப்பிட வசதிகளைச் செய்வதில் சிக்கல்கள் எழுந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இடம்பெயர்ந்தவர்கள் அவர்கள் விரும்பிய இடத்தில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற சர்வதேச முறைமை இங்கு கைக்கொள்ளப்படாததன் காரணமாக சர்வதேச மற்றும் உள்ளுர் தொண்டு நிறுவனங்கள் இவர்களுக்கான மாற்று இருப்பிட வசதிகளைச் செய்ய முடியாதிருப்பதாக மன்னார் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் தெரிவிக்கின்றது.

இது குறித்து அந்த ஒன்றியத்தின் தலைவர் அருட்தந்தை விக்டர் சோசை தெரிவிக்கும் மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

—————————————————————————————————————————————————————-

புதுப்பிக்கப்பட்ட நாள்: 14 மார்ச், 2008

இலங்கை மனித உரிமைகள் நிலவரம்: அமெரிக்க கருத்துக்கு இலங்கை அதிருப்தி

இலங்கை மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் அண்மையில் அமெரிக்க அரசுத்துறையால் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்து இலங்கை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ராபர்ட் ஓ பிளேக் அவர்களை, இன்று அழைத்த இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அவர்கள், அவரிடம் இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்த விடயம் குறித்து அமெரிக்கத் தூதுவருடன் தான் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தமிழோசைக்கு கூறிய இலங்கை வெளியுறவு அமைச்சர், அமெரிக்க அரசுத்துறையின் அந்த அறிக்கை, ஆதரம் எதுவும் அற்றது என்றும், இராணுவ ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் தடுமாறிப்போயிருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு, அது புத்துயிர் அளிப்பதாக அமைந்து விட்டது என்றும் அமெரிக்கத் தூதுவரிடம் தான் குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த விவகாரம் குறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், இலங்கை வெளியுறவு அமைச்சருடனான, அமெரிக்கத் தூதுவரின் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், ஆயினும் தமது நிலைப்பாட்டில் அமெரிக்க அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


இலங்கை கிழக்கு மாகாண சபை தேர்தல்: வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ளன

 

இலங்கையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இலங்கை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

இது தொடர்பில் மார்ச் மாதம் 13ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள சிறப்பு வர்த்தமானி அறிவித்தலில், மார்ச் மாதம் திகதி 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த கிழக்கு மாகாணத்துக்கான தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று அந்த அறிவித்தலில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

1987ஆம் ஆண்டின் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து உருவாக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணம், கடந்த வருடம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றை அடுத்து இரண்டு மாகாணங்களாக பிரிக்கப்பட்டது.

அவற்றில் கிழக்கு மாகாணத்துக்கு தற்போது தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் வேட்பு மனுக்களைக் கோரியுள்ளது.

இந்தத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, கடந்த வெள்ளிக்கிழமை, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தேர்தல் ஆணையர் தயானந்த திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்ததாக முன்னர் செய்திகள் வந்திருந்தன.

கிழக்கு மாகாண சபைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 14 உறுப்பினர்களும், அம்பாறை மாவட்டத்தில் இருந்து 17 உறுப்பினர்களும் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 13 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.

இந்தத் தேர்தல் அறிவிப்புக் குறித்து சில தமிழ் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை நேயர்கள் செய்திரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை அரச தொலைக்காட்சி உதவிப் பணிப்பாளர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

தாக்கப்பட்ட அனுரசிறி ஹெட்டிகே

இலங்கை அரச தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினி நிறுவனத்தின் ஊழியர்கள் அண்மைக்காலமாகத் தாக்கப்பட்டுவருவதன் தொடர்ச்சியாக அதன் பிரதிப்பணிப்பாளரொருவர் இன்று காலை அலுவலகத்திற்கு செல்லும் வழியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் மிகமோசமாகத் தாக்கப்பட்டு, காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் வழங்கல்சேவையின் உதவிப் பணிப்பாளர் அனுரசிறி ஹெட்டிகே வெள்ளிக்கிழமை காலை கொட்டிகாவத்த பகுதியில் அலுவலகம் செல்வதற்காக பஸ் நிலையத்தில் நின்றிருந்த சமயம் மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் இவரை இரும்பு கம்பிகளாலும், கூரிய ஆயுதங்களினாலும் தாக்கியிருக்கின்றனர்.

இவர் கழுத்துப் பகுதியில் கூரிய ஆயுதங்களினால் ஏற்பட்ட வெட்டுக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் மீது உடனடியாக விசாரணை நடாத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷ, பாதுகாப்பு ஆமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

——————————————————————————————————————————————————–

புதுப்பிக்கப்பட்ட நாள்: 11 மார்ச், 2008

மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தலை எதிர்த்து ஐ.தே.க ஆர்ப்பாட்டம்

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகரசபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்காக இவ்வார முற்பகுதியில் நடைபெற்று முடிந்த தேர்தல்களை எதிர்த்து இலங்கையின் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு, இராஜகிரிய தேர்தல் செயலகத்துக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றினை நடத்தியிருக்கிறது.

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தினை நிலைநாட்டும் அரசு கொள்கையின் ஒரு அங்கமாக நடத்தப்பட்ட தேர்தலை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உதவிய சகலருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் என்றாலும், இந்தத் தேர்தல் முடிவுகளை முற்றாகப் புறக்கணிக்கும்படி கோரி ஜக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஆணையாளரிடம் புதன்கிழமை மனு சமர்ப்பித்திருக்கிறது.

பிரதான எதிர்க்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும், முக்கியஸ்தர்களும், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் கலந்துகொண்டு இந்தத் தேர்தலுக்கு எதிராகவும், மஹிந்த ராகபக்ஷ அரசிற்கு எதிராகவும் கோஷங்களை இட்டனர்.

இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் பின்னர் அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் கருத்துவெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் திரு. ரணில் விக்கிரமசிங்க, மட்டக்களப்பில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்தல்கள் ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டியதோடு, படையினரால் ஒரு ஆயுதக் குழுவிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அரசு இன்னொரு ஆயுதக் குழுவிடம் கையளிக்க முற்படுவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்கு கிழக்கில் இடம்பெற்ற தேர்தலின் முக்கியத்துவம், அதன் வெற்றி குறித்து வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தனது அமைச்சில் விரிவாக விளக்கமளித்திருக்கிறார்.

இதன் பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர், இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மிகவும் வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறது என்றும், எதிர்வரும் மே மாதம் அளவில் கிழக்கு மாகாணத்துக்கான மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசு சித்தமாக இருப்பதாகவும் தெரிவித்ததோடு, அரசின் இந்தத் திட்டம் குறித்து தேர்தல் ஆணையாளரிடம் தெரிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.


மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் வெறும் கண்துடைப்பு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

 

கிழக்கு மாகாணத்தில், மீள்குடியேற்றம் போன்ற மக்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில் அங்கு உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தி, அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்ற விளைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் வாக்களிக்குமாறு மக்கள் மிரட்டப்பட்டதாகக் கூறிய அவர், மக்கள் சுயாதீனமாக வாக்களித்திருந்தால் 10 வீதமான வாக்குகளே பதிவாகியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகமான வகையில் அனைத்துக் கட்சிகளும் போட்டியிடக் கூடிய ஒரு சூழ்நிலை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்திருந்தால், அங்கு தேர்தல் நிலைமைகள் வேறுவிதமாக இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை மாகாணசபைகளை 1987 ஆம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டதாகக் கூறும் ஜெயானந்தமூர்த்தி, ஆகவே, கிழக்கு மாகாணத்துக்கான மாகாண சபைத் தேர்தல்கள் நடக்கும் பட்சத்தில், அது குறித்து மக்களின் கருத்துக்களை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் தமது கட்சி முடிவுகளை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

இவை குறித்த அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


வட இலங்கை மோதல்கள்: செவ்வாய்க்கிழமை அன்று 28 புலிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கிறது இராணுவம்

 

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள மடுக்கோவிலுக்கு வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் 3 தளங்கள் மீது புதன்கிழமை காலை விமானப் படைக்குச் சொந்தமான தாக்குதல் விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.

இந்தத் தாக்குதலின்போது, அந்த முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் இந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மன்னார் போர்முனைகளில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் வவுனியா, மன்னார், வெலிஓயா, மற்றும் முகமாலை முன்னரங்கப் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதல்களில் 28 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது. இந்தத் தாக்குதல்கள் குறித்தும் விடுதலைப் புலிகள் தரப்பில் தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

மன்னார் மாவட்டத்தில் இன்று பெய்த கடும் மழை காரணமாக இடம்பெயர்ந்து முருங்கன் பிரதேசத்தில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியிருப்பதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கூடாரங்கள் அமைத்து தங்கவைக்கப்பட்டவர்கள் மழை நீர் கூடாரங்களுக்குள் புகுந்திருப்பதனால் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 11 மார்ச், 2008


கதிர்காமர் கொலை வழக்கில் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் மீது குற்றச்சாட்டு

கொலை செய்யப்பட்ட கதிர்காமர்

இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேர் மீதான குற்றப்பத்திரங்களை, சட்ட மா அதிபர் இன்று தாக்கல் செய்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அந்த அமைப்பின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், சார்ள்ஸ் மாஸ்ட்டர் ஆகியோர் உட்பட 6 பேரின் பெயர்கள், குற்றப்பத்திரத்தில் குற்றவாளிகளாகக் கூறப்பட்டுள்ளன.

2005 ஆம் ஆண்டின் ஜனவரி 5 ஆம் திகதிக்கும், 12 திகதிக்கும் இடையில், கொலைச் சதித்திட்டங்களைத் தீட்டியமை, கொலை செய்த விஜயன் என்பவருக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றங்களும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

சாட்சிகளின் பாதுகாப்புக்காக அவர்கள் ரகசியமாகவே நீதிமன்றத்தில் சாட்சி வழங்குவார்கள் என்றும் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் பெரும் வெற்றி

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 வருடங்களின் பின்பு நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு கைப்பற்றியுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஏனைய 8 பிரதேச சபைகளையும் தமது கட்சிப்பட்டியலின் மூலம் கைப்பற்றியுள்ளனர்.

101 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்ற இந்தத் தேர்தலின், முடிவுகளின்படி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது கட்சி சார்பில் 61 உறுப்பினர்களையும், மக்கள் சுதந்திர முன்னனியின் வெற்றிலைச் சின்னத்தில் கீழ் 11 உறுப்பினர்களையும் பெற்றுள்ளனர்.

பிரச்சாரச் சுவரொட்டிகள்
பிரச்சாரச் சுவரொட்டிகள்

ஈ.பி.டி.பி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் ( பத்மநாபா அணி) ஆகிய தமிழ் கட்சிகளைக் கொண்ட சுயேச்சைக் குழுக்கள் இத் தேர்தலில் 17 உறுப்பினர்களை வென்றிருக்கின்றன.

அதேவேளை ஈழவர் ஜனநாயக முன்னனி மட்டக்களப்பு மாநகர சபையில் மட்டும் ஒரு அங்கத்துவத்தை பெற்றுள்ளது.

இதனைத் தவிர ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 7 பேரும், ஐக்கிய மக்கள் முன்னணி சார்பில் மாநகரசபையைத் தவிர மேலும் 4 பேரும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த தேர்தல் முடிவுகள் குறித்த அரசியல் கட்சிகளின் கருத்துக்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இந்தியா மீது விடுதலைப்புலிகள் கண்டனம்

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன்
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன்

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களை வரவேற்று உயர் கௌரவத்தை வழங்கியமைக்காக இந்திய அரசாங்கத்தை விடுதலைப் புலிகள் அறிக்கையொன்றின் மூலம் கண்டித்திருக்கின்றார்கள்.

போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறியுள்ள இலங்கை அரசு, தமிழர் பிரதேசங்களில் போரை விரிவாக்கியுள்ள இன்றைய காலச் சூழலில், தமிழின அழிப்பிற்குத் தலைமையேற்றுள்ள இராணுவத்தின் தளபதிக்கு இந்திய அரசு வழங்கியுள்ள கௌரவம் ஈழத்தமிழர்களை வேதனைக்குள்ளாக்கியிருப்பதாகவும், இந்தச் செயலுக்காக இந்திய அரசை விடுதலைப் புலிகள் வன்மையாகக் கண்டிப்பதாகவும், விடுதலைப் புலிகள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

இராணுவ வழியில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முற்பட்டுள்ளமைக்காகவும், அதிகரித்துள்ள மனித உரிமை மீறல்களுக்காகவும், அனைத்துலக நாடுகள் வெளிப்படுத்திவரும் கண்டனங்கள் மற்றும் எச்சரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, அதிக அளவிலான ஆட்கடத்தல்கள், படுகொலைகள், இனரீதியான கைதுகள் என்பவற்றை அரச படைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள்.

இவற்றை மூடிமறைத்து, நாட்டில் யுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துவரும் இலங்கை அரசாங்கத்திற்கான உதவிகளை பல ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தமது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்கள்.

பெண் விடுதலைப்புலிகள்
பெண் விடுதலைப்புலிகள்

இந்தச் சூழலில் உண்மையான நிலைமையை இந்திய அரசாங்கம் புரிந்து கொண்டிருந்தாலும், தமிழர் பிரச்சினைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வு காணவேண்டும் என கூறிக்கொண்டு, அதற்கு மாறாக, இராணுவ ரீதியாக இலங்கை அரசாங்கத்திற்கு நம்பிக்கையூட்டும் இந்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஈழத்தமிழர்களை பாரிய இன அழிப்பிற்குள் தள்ளிவிடும் என்று இந்திய அரசுக்குச் சுட்டிக்காட்டுவதாகவும் விடுதலைப் புலிகள் தமது அறிக்கையில் கூறியிருக்கின்றார்கள்.

இந்த நிலைமையைத் தமிழ் நாட்டு மக்கள் புரிந்து கொண்டு இந்திய அரசிற்குத் தமது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் எனவும் விடுதலைப் புலிகள் கோரியிருக்கின்றார்கள்.

நோர்வேயின் அமைதிவழி முயற்சியிலிருந்தும், போரிநிறுத்தத்திலிருந்தும் இன்னும் விலகவில்லை என தெரிவித்துள்ள விடுதலைப்புலிகள் நோர்வே அரசின் தலைமையில் மேற்கொள்ளப்படும் சமாதான முயற்சிகளில் பங்கேற்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு

முன்னைய பணிப்புறக்கணிப்பு ஒன்றின் போது வவுனியா மருத்துவமனை ஊழியர்கள்
முன்னைய பணிப்புறக்கணிப்பு ஒன்றின் போது வவுனியா மருத்துவமனை ஊழியர்கள்( ஆவணப்படம்)

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாண மாவட்டங்களைச் சேர்ந்த அரச மருத்துவர்கள் இன்று மேற்கொண்ட ஒருநாள் அடையாள பணிப் புறக்கணிப்பு காரணமாக அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியசாலைகளின் பணிகள் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கென அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுவந்த விசேட வருடாந்த இடமாற்றப் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த பணிபுறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளராகிய டாக்டர் எஸ்.சிவப்பிரியன் தெரிவிக்கின்றார்.

இன்றைய பணிபுறக்கணிப்பு காரணமாக வடக்கில் வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த வைத்தியசாலைகளிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை மாவட்டங்களின் வைத்தியசாலைகளிலும் அரச வைத்தியர்கள் கடமைக்குச் செல்லவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவராகிய டாக்டர் எம்.பள்ளியகுருகே தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று மாலை வரையிலும் சுகாதார அமைச்சிடமிருந்து தங்களுக்குப் பதிலேதும் கிடைக்கவில்லை என்றும் நாளை மறுதினம் வியாழக்கிழமை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராயவுள்ளதாகவும் அந்தச் சங்கத்தின் பேச்சாளராகிய டாக்டர் சிவப்பிரியன் கூறினார்.

————————————————————————————————–

புதுப்பிக்கப்பட்ட நாள்: 10 மார்ச், 2008

மட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தல்களில் சுமூக வாக்களிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாநகரசபை உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு இன்று நடந்த வாக்களிப்பில் 56 வீத வாக்குகள் பதிவானதுடன், பெரும்பாலும் சுமூகமான வகையில் வாக்களிப்பு இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் கிழக்கு மாகாணம் தமது கட்டுப்பாட்டின் கீழ் முழுமையாக கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பின், மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 வருடங்களின் பின்பு ஒரு மாநகர சபை உட்பட 9 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்துள்ள இந்தத் தேர்தலில், 101 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவிருக்கின்றார்கள். 6 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 831 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.

வாக்களிக்கக் காத்திருக்கும் வாக்காளர்கள்
வாக்களிக்கக் காத்திருக்கும் வாக்காளர்கள்

தேர்தலையொட்டி இம் மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக மக்களின் வழமை நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக வாக்காளர்கள் கூட பாதுகாப்பு கெடுபிடிகளை எதிர்நோக்கியதாகவும் உள்ளுர்வாசிகள் கூறுகின்றனர்.

வாழைச்சேனை பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரொருவரின் வீட்டின் மீது திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலைத் தவிர குறிப்பிடத்தக்க வன்முறைகள் எதுவும் இடம்பெறவில்லை என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை அந்தப் பிரதேசத்தில், அரச பின்புலத்தில் சில தேர்தல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்கானிப்பபு அமைப்பான பப்ரல் கூறுகின்றது.

இந்தத் தேர்தலில் 56 சத வீதமான வாக்குககள் பதிவாகியுள்ளதாகக் கூறும் மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அலுவலர், முதலாவது தேர்தல் முடிவு நள்ளிரவிற்கு பின்பு வெளியாகும் என்றும் கூறுகின்றார்.


கொழும்பு வெள்ளவத்தை குண்டுவெடிப்பில் ஒரு சிவிலியன் பலி, 4 மாணவர்கள் காயம்

குண்டுவெடித்த இடம்
குண்டுவெடித்த இடம்

திங்கட்கிழமை காலை கொழும்பு காலிவீதி வெள்ளவத்தையில் அமைந்துள்ள ரொக்சி சினிமா திரையரங்கிற்கு அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் சிவிலியன் ஒருவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டிருக்கிறார், மேலும் நான்கு பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்துவெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, கொழும்பு காலிவீதி வெள்ளவத்தைப் பகுதியில் வீதியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த பூச்சாடியொன்றினுள் மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டொன்றே வெடித்திருப்பதாகத் தெரிவித்தார்.

 

ஆரம்ப விசாரணைகளின்படி இந்தப் மர்மப்பொதியை பிரித்துப்பார்க்க முயன்ற நபரே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டதாகத் தெரியவந்திருப்பதாகப் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

கொழும்பு களுபோவில அரச வைத்தியசாலை வட்டாரங்களின் தகவல்களின்படி, இன்றைய இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தினைத் தொடர்ந்து இரண்டு பாடசாலை மாணவர்கள், இரண்டு மாணவிகள் என நான்கு பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களின் ஒருவரின் நிலைமை மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தன.

இந்தக் குண்டுவெடிப்புத் தொடர்பாக விசாரணைகளையும், புலன்விசாரணைகளையும் பொலிசாரும் இராணுவத்தினரும் தற்போது மேற்கொண்டுவருகின்றனர்.


மன்னார் மாவட்ட சண்டைகள்: புலிகள் தரப்பிலும் இராணுவத்தினர் தரப்பிலும் சேதம்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில், இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே தொடரும் சண்டைகளில், திங்கட்கிழமை அதிகாலை நடந்த மோதல்களில் 10 விடுதலைப்புலிகளும், 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மோதலில் 10 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் அது கூறியுள்ளது.

இது குறித்து விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மன்னாரில், மாந்தை மேற்குப் பகுதியில், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாந்தை –அடம்பன் வீதியில் ஒரு பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகதத்தகவல் மையம் தெரிவித்துள்ளது.

எனினும், பரப்புக்கடந்தான், பண்டிவிரிச்சான், பாலைக்குழி சேத்தான்குளம் ஆகிய பகுதிகளில் பல முனைகளில் விடுதலைப்புலிகளின் பிரதேசத்துக்குள் முன்னேறுவதற்கு ஞாயிறன்று இராணுவம் மேற்கொண்ட முயற்சி தமது எதிர்த்தாக்குதலின் மூலம் முறியடிக்கப்பட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சண்டைகளில்போது 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 09 மார்ச், 2008்.


மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல் பணிகள் நிறைவு

 

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாநகர சபை உட்பட 9 உள்ளுராட்சி சபைகளுக்கு திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் கடமைக்குரிய அதிகாரிகளும் ஊழியர்களும் பாதுகாப்பிற்குரிய பொலிசாரும் தற்போது உரிய வாக்களிப்பு நிலையங்களை சென்றடைந்துள்ளதாகக் கூறும் அவர், கடந்த கால யுத்த அனர்த்தங்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இத்தேர்தலின்போது வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு அடையாளத்தை உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணமொன்றை சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால் ஆள்-மாறாட்டத்திற்கு வாயப்பு இராது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் பாதுகாப்பு கடமைகளைப் பொறுத்தவரை, வாக்களிப்பு நிலையங்களுக்கு வெளியே பொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் இராணுவுத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தேர்தல் செயலகத்தைச் சேர்ந்த உதவி காவல்துறை அத்தியட்சகர் யு.எஸ்.ஐ.பெரேரா கூறினார்.

101 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெறும் இந்த தேர்தலில் 6 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 831 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.


சிவனேசன் பூத உடலுக்கு பிரபாகரன் அஞ்சலி

 

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் கிளேமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகிய கிட்டிணன் சிவநேசனின் இறுதிக் கிரியைகள் இன்று காலை 11 மணியளவில் மல்லாவி அனிஞ்சியன்குளம் என்ற இடத்தில் நடைபெற்றதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இவரது இறுதிக் கிரியைகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள், விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள், பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பொதுமக்களின் அஞ்சலிக்காக வன்னிப் பிரதேசத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் உடலுக்கு விசேடமான ஓரிடத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது அஞ்சலியைச் செலுத்தினார். புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் உட்பட்ட முக்கியஸ்தர்களும் அஞ்சலி செலுத்தி இரங்கலுரைகள் ஆற்றியதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.

இதனிடையில் மன்னார் மாந்தை பிரதேசத்தில் சனிக்கிழமை விமானப்படையினருடன் ஒன்றிணைந்து இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. இந்தத் தாக்குதலில் 10 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் இராணுவம் கூறியிருக்கின்றது.

இதேவேளை, மன்னார் பரப்பாங்கண்டல், மடு பிரதேசத்தில் உள்ள பண்டிவிரிச்சான் ஆகிய பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு சனிக்கிழமை இராணுவத்தினர் எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். பல மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த மோதல்களில் பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

——————————————————————————————————————————————————-

 

புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 மார்ச், 2008


இலங்கை வன்முறை: புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் இராணுவத் தரப்பில் சேதம்

 

இலங்கையின் மொனராகலை மாவட்டத்திலுள்ள புத்தல-கதிர்காமம் வீதியில் சென்றுகொண்டிருந்த இராணுவ உழவுஇயந்திரமொன்றின் மீது விடுதலைப் புலிகள் நடத்தியுள்ள கிளேமோர் கண்ணிவெடித்தாக்குதலில் ஒரு இராணுவச்சிப்பாய் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் இரண்டு இராணுவ வீரர்கள் காயமடைந்திருக்கிறார்கள்.

இதுகுறித்து தகவல் வெளியிட்டிருக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு, புத்தல பழைய வீதியில் கல்கே காட்டுப் பகுதியூடாக இந்த இராணுவ உழவு இயந்திரம் சென்றுகொண்டிருக்கும்போது புலிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், தாக்குதலில் காயமடைந்து ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்ட படைவீரர் ஒருவர் சிகிச்சைகள் பயனளிக்காத நிலையில் உயிரிழந்ததாகவும் தெரிவித்திருக்கிறது.

இந்தப் பகுதியில் முப்படையினரும் பொலிசாரும் இப்போது தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுவருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கிறது.

இதேவேளை, இந்தச் சம்பவம் குறித்து மின்னஞ்சல்மூலமாக ஊடகங்களிற்குச் செய்தியனுப்பியுள்ள விடுதலைப்புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன், இன்றுகாலை விடுதலைப் புலிகள் அமைப்பினரே இந்தத் இந்தத்தாக்குதலை மேற்கொண்டதாக உரிமை கோரியுள்ளதோடு, இந்தச் சம்பவத்தில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் இரண்டு படைவீரர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அத்துடன் இந்தத் தாக்குதலின்போது, தமது உறுப்பினர்களிற்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் விடுதலைப்புலிகளின் இந்தக் கூற்றை மறுத்துள்ள இலங்கை இராணுவத்தினர் இதன்போது ஒரு இராணுவவீரர் மட்டுமே கொல்லப்பட்டதாக உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இன்று காலை எறிகணை வீச்சு மோதல்கள் இடம்பெற்றதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலை சுமார் 10 மணிமுதல் இரண்டு மணித்தியாலங்கள் இந்த மோதல்கள் இடம்பெற்றதாகவும், இதன்போது மன்னார் – வவுனியா, செட்டிகுளம் வீதி பொது கோப்புவரத்திற்காக மூடப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நண்பகலின் பின்னர் நிலைமை வழமைக்குத் திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த எரிகணை வீச்சுக்களால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை. இதனிடையில், நேற்று முன்தினம் கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டிணன் சிவநேசனுக்கு விடுதலைப் புலிகளின் தலைவரினால், மாமனிதர் பட்டமளித்து கௌரவம் அளிக்கப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.


தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்

 

இந்திய இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 59 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த தாகவும், இதனாலேயே இவர்களை கைது செய்ததாகவும் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், இவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் செல்ல வில்லை என்றும், தமிழக கடற்பரப்பிலேயே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகவும் கூறுகிறார், தமிழ்நாட்டின் கன்யாகுமரியைச் சேர்ந்த தமிழ்நாடு மீன் தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் பீட்டர் தாஸ் அவர்கள்.

இந்திய இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் குறித்து, தமிழக முதல்வர் மு கருணாநிதி அவர்கள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

தமிழ்நாடு மீன் தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் பீட்டர் தாஸ் அவர்களின் செவ்வியையும், முதல்வர் கருணாநிதியின் கடித விவரங்கள் குறித்த செய்திகளையும், நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்


இலங்கையில் தடுப்புக் காவலில் ஊடகவியலாளர்கள்

இலங்கை தலைநகர் கொழும்பில் பயங்கரவாத புலன் விசாரணை காவல்துறையினர், சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரி யரும் சுதந்திர ஊடகவியாலாளர் இயக்கத்திற்காக பேசவல்ல வருமான சிவகுமார் அவர்கள் உள்ளிட்ட ஆறு ஊடகவியலாளர்களை தடுத்து வைத்திருக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்று, இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இணைச்செயலாளர் அமிர்தநாயகம் நிக்சன் அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.

——————————————————————————————————————————————————————

இலங்கையில் ஊடவியலாளர்கள் கைது

இலங்கை தலைநகர் கொழும்பில், பயங்கரவாத புலன் விசாரணை காவல் துறையினர் இரண்டு தமிழ் ஊடக வியலாளர்களையும், ஒரு சிங்கள ஊடகவியலாளரையும் தடுத்துவைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரியரும் சுதந்திர ஊடகவியாலாளர் இயக்கத்திற்காக பேசவல்லவருமான சிவகுமார் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, காவல்துறையினர் தன்னையும் விசாரணைக்கு வரும்படி அழைத்திருப்பதாகக் கூறினார்.

காவல்துறையின் விசாரணைக்கு செல்வதற்கு முன்னர் சிவகுமார் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.


மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது

மட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தல் பதாகை

இலங்கையின் கிழக்கே எதிர்வரும் திங்கள் கிழமை உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவிருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைகின்றன.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முழு நாளும் இறுதிக் கட்டப் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். வீடு வீடாகச் சென்று தமக்குரிய வாக்குககளை திரட்டுவதில் வேட்பாளர்கள் பரவலாக ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தேர்தலின்போது வாக்குச் சாவடிக்கு ஒருவர் என கண்கானிப்பாளர்கள் நியமிக்கப்படவிருப்பதாக பப்ரல் எனப்படும் சுதந்திரமான நியாயமான தேர்தலை கண்காணிக்கும் மக்கள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருட் தந்தை சில்வெஸ்டர் ஸ்ரீதரன் கூறுகின்றார்.

கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத் தக்க வன்முறைகள் இல்லை என்று சுட்டிக் காட்டும் அவர், சில கிராமங்களுக்கும் வாக்குச்சாவடிகளுக்கும் இடையலான தூரம் மக்களின் வாக்களிக்கும் ஆர்வத்திற்கு தடையாக இருக்கும் என்பதால், தேர்தல் திணைக்களமோ அல்லது போட்டியிடும் வேட்பாளர்களோ, அவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார்.



கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசனின் இறுதிச் சடங்குகள் கிளிநொச்சியில் நடக்கவுள்ளது

கொல்லப்பட்ட சிவனேசன்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய கனராயன்குளம் பகுதியில் ஏ -9 வீதியில் கடந்த வியாழனன்று இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்ட யாழ் மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகிய கே.சிவநேசனின் இறுதிக்கிரியைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்காகவும் இறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு அஞ்சலி செலுத்துவதற்குமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சிக்குச் சென்றுள்ளனர்.

காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் உடல் இன்று உறவினர்களின் அஞ்சலிக்காக மல்லாவியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருப்பதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இவரது உடல் நாளை கிளிநொச்சிக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்குள்ள மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனுடன் உயிரிழந்த அவருடைய வாகன சாரதியாகிய 27 வயதுடைய பெரியண்ணன் மகேஸ்வரராஜாவின் உடலை அவரது சொந்த ஊராகிய செட்டிகுளம் வீரபுரத்திற்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டிருக்கின்றார்கள்.


மட்டக்களப்பின் மேயராக பெண்ணொருவர் தெரிவாகும் வாய்ப்பு

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக முதல் தடவையாக பெண் ஒருவர் பொறுப்பேற்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

மட்டக்களப்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் வேட்பாளரான பத்மினி என்று அழைக்கப்படும் சிவகீதா பிரபாகரன் அவர்கள், அங்கு அந்தக் கட்சியின் சார்பில் அதிகப்படியான விருப்ப வாக்குகளைப் பெற்றதால், மாநகரசபையின் மேயராக பொறுப்பேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இறுதியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்ட போது, வாக்களிப்புக்கு இரு தினங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட ராஜன் சத்தியமூர்த்தியின் மகளே இவர்.

தான் மேயராக பொறுப்பேற்கவுள்ளது குறித்து பத்மினி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கிழக்கு மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்த இலங்கை அரசு நடவடிக்கை

அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகரசபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்காக இவ்வார முற்பகுதியில் நடைபெற்று முடிந்த தேர்தல்களை அடுத்து, கிழக்கு மாகாணத்துக்கான மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை அரசு, அதில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கான ஒழுங்குகளை கவனிப்பதற்காக இரு உயரிய குழுக்களை அமைத்திருப்பதாகவும் இன்று அறிவித்திருக்கிறது.

இது குறித்து கொழும்பில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய மகாவலி அபிவிருத்தி மற்றும் விவசாயத்துறை அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமாகிய மைத்திரிபால சிறிசேன தற்போது ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் ஒரே குடையின்கீழ் போட்டியிட்டு வெற்றியீட்ட முன்வருமாறும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்த உத்தேச கிழக்கு மாகாணத்துக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசு எடுத்துள்ள முடிவானது தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது என்றும் இதற்காக திகதி விபரங்களை அவர் இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பாரெனத் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

இவை குறித்த மேலதிக செய்திகளை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 13 மார்ச், 2008


ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்திய மற்றும் தமிழக அரசின் நிலை குறித்து பா.ம.க. அதிருப்தி

டாக்டர் ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இலங்கைக்கு இந்திய அரசு வழங்கி வரும் இராணுவ உதவியினையை நிறுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்திருமாவளவன், திரைப்பட இயககுநர் சீமான் உள்ளிட்ட இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஆர்வங்காட்டும் சிலருடன் ஆலோசனை செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

அண்மைககாலமாக இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை அந்நாட்டு அரசு உககிரப்படுத்தியுள்ளது எனவும் ராமதாஸ் புகார் கூறினார்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகள் செயல்படவேண்டும் என வற்புறுத்தியும், தொடர்ந்து தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் அல்லலுக்கு உள்ளாவதற்கு முற்றுப்புள்ளிவைககவேண்டும் எனக்கோரியும் தொடர்முழக்கப் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் ராமதாஸ் தெரிவித்தார்.

கடந்த சிலமாதங்களாக இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து ராமதாஸ் மௌனமே காத்துவந்தார் என்பதையும், இந்திய அரசைக் கண்டித்து விடுதலைப்புலிகள் அறிக்கை விட்டபோதுகூட அவர் கருத்தெதனையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் ஊடகவியலாளர்கள் கைது நடவடிக்கைக்கு எதிராக ஆர்.எஸ்.எஃப். ஊடகச் சுதந்திரக் குழு கண்டனம்

 

இலங்கையின் பயங்கரவாத தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 5 செய்தியாளர்களின் கதி குறித்து, பாரிஸைத் தளமாகக் கொண்டு செயற்படும் ஆர்.எஸ்.எஃப். என்று அழைக்கப்படும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

அவர்களை தடுத்து வைத்திருப்பதற்கான காரணத்தை கூறவேண்டும் என அது அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

ஒரு இணையத் தளத்துக்காக பணியாற்றும் இந்த செய்தியாளர்கள் விடுதலைப்புலிகளிடம் இருந்து பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சில செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தியாளர்களின் நிலை குறித்து இரு தினங்களுக்கு முன்னர் கவலை வெளியிட்டிருந்த சர்வதேச செய்தியாளர் சம்மேளனமான ஐ.எஃப். ஜே. அமைப்பும், ஆசிய மனித உரிமைகள் ஆணையமும், இந்தச் செய்தியாளர்களின் சட்ட உரிமைகளை இலங்கை அரசாங்கம் நிலை நிறுத்த வேண்டும் என்று கோரியிருந்தன.


Posted in Batticaloa, dead, Eelam, Eezham, Elections, local, LTTE, Media, MP, murders, Polls, Shivanesan, Sivanesan, Sri lanka, Srilanka, War | Leave a Comment »

Feb 29: Eezham, Sri Lanka, LTTE – Updates & News

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 29, 2008


கொழும்பு முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுவெடிப்பில் ஏழு பேர் காயம்

சம்பவ இடம்

கொழும்பு வடக்கு முகத்துவாரம் அலுத்மாவத்தை இக்பாவத்தை சந்திப்பகுதியில் அமைந்துள்ள மாடிவீடு ஒன்றில் பொலிசார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முற்பட்ட சமயம் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தன்னைத்தானே வெடிக்கவைத்து தற்கொலை செய்திருக்கிறார்.

இந்தத் தற்கொலைக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் மூன்று பொலிசார் உட்பட ஏழு பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துவெளியிட்ட இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, பொலிசாருக்குக் கிடைத்த தகவலொன்றின் பேரிலேயே இப்பகுதியில் அவர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என்றும், ஒரு வீட்டினைச் சோதனை செய்வதற்காக பொலிசார் அங்கு நுழைய முயன்ற சமயம், திடீரென அந்த வீட்டிலிருந்து வெளியேவந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆண் தற்கொலைக் குண்டுதாரியொருவர் தன்னைத்தானே வெடிக்கவைத்து தற்கொலை செய்திருக்கிறார் என்று தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூன்று பொலிசாரும், இரண்டு பெண்கள் உட்பட நான்கு சிவிலியன்களும் அடங்குவதாகவும் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, குண்டுவெடிப்பின்னர் அந்த வீட்டிலிருந்து 9 மில்லி மீட்டர் பிஸ்டல் கைத்துப்பாக்கி ஒன்றினையும் அதற்குரிய தோட்டாப் பெட்டி ஒன்றையும், ஐந்து தோட்டாக்களையும் பொலிசார் கண்டெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.


இலங்கையின் உள்நாட்டு அகதிகளுக்காக 186 லட்சம் டாலர்கள் கோருகிறது யூ.என்.ஹெச்.சி.ஆர்.

வாகரையில் அகதிகள்

இலங்கையில் பல்லாண்டுகளாக நடந்துவரும் ஆயுத மோதல்கள் காரணமாக உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழுந்துவரும் அகதிகளுக்கு உதவுவதற்காக ஒரு கோடியே 86 லட்சம் டாலர்கள் உதவித் தொகை கோருவதாக அகதிகள் நலனுக்கான ஐ.நா.மன்ற உயர் ஆணையர் கூறியுள்ளார்.

இலங்கையில் சுமார் 5 லட்சம் பேர் இவ்வாறு உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழ்வதாக மதிப்பிடப்பபடுகிறது.

இலங்கையின் மனிதாபிமான செயற்பாடுகளுக்கான பொது செயல் திட்டத்தின் அங்கமாக கோரப்படும் இந்த நிதி, இடம்பெயர்ந்தவர்கள், தமது சொந்த இடங்களில் மீள்குடியமர திரும்பிவருபவர்கள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிற மக்களின் பாதுகாப்புக்காகவும், தங்குமிட வசதிக்காகவும், உணவு அல்லாத பிற பொருட்கள் வாங்குவதற்கும், அகதி முகாம்களின் நிர்வாகத்திற்காகவும் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 01 மார்ச், 2008


மூதூர் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் இடங்களை பார்க்க கோரிக்கை

இடம்பெயர்ந்த மக்கள்
இடம்பெயர்ந்த மக்கள்

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து கடந்த 2 வருடங்களாக அகதிகளாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியிருப்பவர்கள் தங்களின் மீள் குடியேற்றத்திற்கு முன்னதாக சொந்த கிராமங்களைச் சென்று பார்வையிட ஒழுங்குகளைச் செய்து தருமாறு மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை அரசாங்க அதிபர்களிடம் கோரிக்கையொன்றை முன் வைத்துள்ளனர்.

மூதூர் கிழக்கு பிரதேசத்தில் ஏற்கனவே 11 கிராம சேவையாளர்கள் பிரிவுகள் உயர் பாதுகாப்பு வலயமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட நிலையில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் மீள் குடியேற்றங்களில் தாமதங்கள் ஏற்பட்டன.

இருப்பினும் அரசாங்கத்தினால் தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானமொன்றின் படி பாடட்டாளிபுரம், நல்லூர், பள்ளிக்குடியிருப்பு ஆகிய பிரிவுகளில் முழுமையாகவும், நவரத்னபுரம், சேனையூர், கட்டைப்பறிச்சான் தெற்கு ஆகிய பிரிவுகளில் ஒரு பகுதியிலும் மீள் குடியேற்றம் மேற்கொள்ளப்படவிருப்பதாக சிவில் அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே தமது கிராம பிரமுகர்களை உள்ளடக்கிய குழுவொன்றை மீள் குடியேற்றத்திற்கு முன்னதாக சென்று பார்வையிட அழைத்துச் செல்லுமாறு இவர்கள் கோரிக்கையொன்றை முன் வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கூறுகின்றார்.


விடுதலைப்புலிகளின் உடல்கள் கையளிப்பு

விடுதலைப் புலிகள்
விடுதலைப் புலிகள்

இலங்கையின் வடக்கே வவுனியா மற்றும் மன்னார் ஆகிய போர்முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் மோதல்களில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 8 விடுதலைப் புலிகளின் உடல்களை சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளித்திருப்பதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

இது தொடர்பாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்லவரான பிரிகேடியர் உதயநாணயக்கார கூறும்போது, வவுனியாவில் கடந்த வாரம் கொல்லப்பட்ட 7 விடுதலைப்புலிகளின் உடல்கள் மற்றும் மன்னாரில் இருந்து எடுக்கப்பட்ட பெண் விடுதலைப்புலி உடல் ஒன்றையும் ஒப்படைத்திருப்பதாக கூறினார்.

இதற்கிடையே, இலங்கை இராணுவத்தின் தளபதி சரத் பொன்சேகோ இந்தியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கின்றார். ஆனால் இது தொடர்பான விபரங்களை எதுவும் தெரிவிக்க பிரிகேடியர் உதயநாணயக்கார மறுத்துவிட்டார்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 02 மார்ச், 2008


இலங்கையின் வவுனியாவில் வன்முறை

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா நகர்ப்புறத்திலும், வவுனியா பம்பைமடு இராணுவ முகாம் பகுதியிலும் இன்று ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற இருவேறு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டார். ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட 4 படையினரும், 6 பொதுமக்களும் காயமடைந்ததாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா புகை வண்டி நிலைய வீதியில் கதிரேசு வீதிச் சந்தியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரை இலக்கு வைத்து மாலை 5 மணியளவில் நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் உட்பட 2 பொலிசாரும் 2 ஊர்காவல் படையினரும் காயமடைந்ததாக வவுனியா பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில் 6 பொதுமக்களும் காயமடைந்ததாகவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். படையினரை இலக்கு வைத்து சைக்கிள் ஒன்றில் இந்தக் கண்ணிவெடி பொருத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிசார் கூறுகின்றனர்.

வவுனியா மன்னார் வீதியில் பம்பைமடுவில் அமைந்துள்ள முக்கிய இராணுவ முகாம் பகுதியில் இராணுத்தினரை இலக்கு வைத்து இன்று ஞாயிற்றுகிழமை காலை விடுதலைப் புலிகள் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இதனையடுத்து அந்தப் பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.


மட்டகக்களப்பு உள்ளூராட்சி தேர்தல்கள் கிழக்கு மக்களுக்கு மிக முக்கியமானது – புளொட் தலைவர்

புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன்
புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன்

இலங்கையின் கிழக்கே, எதிர் வரும் 10 ம் திகதி திங்கள் கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடை பெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தலானது, வடக்கு கிழக்கு மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடிய தேர்தலாக அமையப் போவதாக புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறுகின்றார்.

தமது கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தற்போது மட்டக்களப்பில் தங்கியுள்ள அவர், இன்று ஞாயிற்றுகிழமை மாலை அங்கு நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

பாரியளவு தேர்தல் வன்முறைகள் இது வரை இடம் பெறாது விட்டாலும், தேர்தல் தினமன்று என்ன நடக்கும் என்பதை தற்போதைக்கு ஊகிக்க முடியாதிருப்பதாகவும், ஆயுத நடமாட்டங்கள் மக்களிடையே ஒரு வித அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தாலும், தேர்தல் சுதந்திரமாக நடைபெறும் என்ற உத்தரவாதத்தை பாதுகாப்பு தரப்பு வழங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.


மட்டக்களப்பில் பிக்கு உண்ணாவிரதம்

உண்ணாவிரதமிருக்கும் பிக்கு
உண்ணாவிரதமிருக்கும் பிக்கு

விடுதலைப் புலிகளுடன் தன்னைத் தொடர்புபடுத்தி பொலிஸில் செய்யப்பட்டுள்ள புகாரொன்றை வாபஸ் பெற வேண்டும் எனக் கோரி மட்டக்களப்பு நகரில் பௌத்த பிக்கு ஒருவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.

மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் பிரதம குருவான அம்பிட்டியே சுமனரத்ன தேரோவே இந்த போராட்டத்தை இன்று ஆரம்பித்துளார்.

ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேத்தானந்த தேரோவினால் தனக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸில் செய்யப்பட்டுள்ள புகாரொன்றில் விடுதலைப் புலிகளுடன் தன்னை தொடர்புபடுத்தியிருப்பதாக கூறும் அம்பிட்டியே சுமனரத்ன தேரோ, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு படுத்தப்பட்டிருப்பதை வாபஸ் பெற வேண்டும், அது மட்டுமன்றி இது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்றும் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளின் பெயரை பயன்படுத்தி தொலைபேசி ஊடாக எல்லாவெல மேத்தானதந்த தேரோவிற்கு தன்னால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டையும் அவர் முற்றாக நிராகரித்தார்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 04 மார்ச், 2008

விடுதலைப்புலிகளின் பகுதிகள் சிலவற்றைக் கைப்பற்றியதாக இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தின் பாலைக்குழி பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர சண்டையில், ஒரு சதுர கிலோ மீற்றர் பரப்பளவான இடத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவம் கைப்பற்றியிருப்பதாகவும், உயிலங்குளம் சோதனைச்சாவடி தொகுதியில் விடுதலைப் புலிகளின் பொருட்களை மாற்றி ஏற்றும் நிலையம் அமைந்திருந்த இடம் உட்பட ஒன்றரை கிலோ மீற்றர் நீளமான வீதியைக் கைப்பற்றியிருப்பதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

எனினும் பாலைக்குழி பகுதியில் இன்று அதிகாலை 4 மணிமுதல் காலை 10.30 மணிவரையில் இரு தரப்பினருக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றதாகவும், எம்.ஐ 24 ரக உலங்கு வானூர்திகளும் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், அப்பகுதியில் இராணுவம் முன்னேறியிருக்கின்றதா என்பது குறித்த தகவல்களை வெளியிடவில்லை.

விடுதலைப்புலிகள்
விடுதலைப்புலிகள்

ஆனால், இந்தச் சண்டையில் இராணுவத்தினருக்குப் பெரும் இழப்புகள் நேர்ந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதனிடையில் மன்னார் மாவட்டத்தின் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் அமைந்துள்ள தட்சணாமருதமடு பகுதியில் உள்ள தமது வீடுகளைப் பார்ப்பதற்காக, உழவு இயந்திரம் ஒன்றில் சென்ற 4 சிவிலியன்கள் இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினரின் கிளேமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் மின்னஞ்சல் வழியான அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தச்சம்பவம் குறித்து மீண்டும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவிடம் கேட்டபோது, அந்தப் பகுதியில் இராணுவத்தினர் இல்லை, அங்கு படையினர் நடவடிக்கையில் ஈடுபடுவதும் இல்லை எனப் பதிலளித்தார்.


இலங்கையில் காணாமல் போனவர்களில் பலர் திரும்பிவிட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழு கூறுகிறது

காணாமல்போன தனது உறவினரின் படத்தை ஏந்தியவாறு ஒரு பெண்
காணாமல்போன தனது உறவினரின் படத்தை ஏந்தியவாறு ஒரு பெண்

இலங்கையில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் திரும்பி வந்து விட்டதாக காணாமல் போதல் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட தனி நபர் ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாடெங்கிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் இதுவரை ஏழாயிரத்து நூற்று முப்பது பேர் காணாமல் போனதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அறிவித்த இந்த ஆணைக்குழுவின் ஆணையரான, மஹாநாம திலகரட்ண அவர்கள், இவற்றில் 6543 பேரது விடயங்கள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 6633 பேர் ஏற்கனவே வீடு திரும்பி விட்டதாக தெரியவந்துள்ளது என்றும் கூறினார்.

அதேவேளை 525 பேர் கடத்தப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றில் 295 பேரது விடயங்கள் தொடர்பில் புலன்விசாரணைகள் முடிவடைந்துவிட்டதாகவும், அதில், 250 பேர் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முடிவடைந்த புலன்விசாரணைகளைக் கொண்டு பார்க்கும் போது, இந்த காணாமல் போனவர்கள் குறித்த விவகாரத்தில் பாதுகாப்புப்படையினருக்கோ அல்லது பொலிஸாருக்கோ எந்த தொடர்பும் கிடையாது என்று தெரியவந்திருப்பதாகவும் திலகரட்ண குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரங்கள் பொலிஸ் சம்பந்தப்பட்டவை என்பதால் இவை குறித்து ஆணைக்குழு விசாரிப்பதற்கான தேவை எதுவும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், இந்தக் கருத்துக்களை மறுக்கிறார் மேலக மக்கள் முன்னணியின் தலைவரான மனோ கணேசன்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மட்டக்களப்பு தேர்தல் மனு குறித்த தீர்ப்பு

 

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பில், இலங்கையின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து இலங்கை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக, அங்கு செயற்படும் ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும், வாக்களிப்பு முறைகேடுகள் நடக்கும் பட்சத்தில் மறு வாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட வேண்டும், அரச சொத்துக்களின் துஸ்பிரயோகம் நிறுத்தப்பட வேண்டும் போன்றவற்றை முன்வைத்தே பவ்ரல் அமைப்பு இந்த மனுவை தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவில் எதிர்த்தரப்பினராக, தேர்தல் ஆணையர், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைப்பு, பொலிஸ் மா அதிபர் உட்பட 35 பேர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உட்பட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பாக இந்த மனு பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விடயங்கள் குறித்து ஏதேனும் தேவைகள் இருப்பின் தேர்தல் ஆணையருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் அவற்றை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அத்துடன் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் மறு வாக்குப் பதிவுக்கு உத்தரவிடும் அதிகாரம் தேர்தல் ஆணையருக்கே இருக்கிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே மட்டக்களப்பு நகரில் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த பௌத்த பிக்கு, இன்று தனது போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.

திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாகவே இந்தப் போராட்டத்தை கைவிட்டதாகவும், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தன்னை விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புபடுத்தி பொலிஸில் செய்யப்பட்ட புகார் ஒன்றை அடுத்தே இவர் இந்த உண்ணாவிரதத்தை நேற்று ஆரம்பித்திருந்தார்.

—————————————————————————————————

புதுப்பிக்கப்பட்ட நாள்: 05 மார்ச், 2008

கடந்த பிப்ரவரி மாதத்தில் மாத்திரம் 104 இலங்கைப் படையினர் பலி என இலங்கை அரசு அறிவிப்பு

இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிரான மோதல்களில் கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் இலங்கைப் படையினரும் மற்றும் பொலிஸாருமாக 104 பேர் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

தவிர 822 பாதுகாப்புப் படையினர் இந்த மோதல்களில் காயங்களுக்கு உள்ளானதாக, புதன்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில், அவசரகால நிலையை நீடிப்பதற்கான சட்டமூல விவாதத்தில் உரையாற்றிய இலங்கை அமைச்சரும், அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

படையினரின் இழப்புக்கு அப்பால், இந்த ஒரு மாத கால மோதல்களில் 80 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

அதேவேளை, அவசரகாலச் சட்டம் 88 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களும் பெருமளவில் கொல்லப்பட்டுள்ளனர்
பொதுமக்களும் பெருமளவில் கொல்லப்பட்டுள்ளனர்

இதற்கிடையே இலங்கையின் வடக்கே வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதியில் நான்காம் கட்டை பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது புதன்கிழமை காலை நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் ஒரு பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் உட்பட இரண்டு பொலிசார் படுகாயமடைந்ததாகவும், அவர்களில் ஒருவர் பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலையில் உயிரிழந்ததாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுப் போக்குவரத்தின்றி மூடப்பட்டுள்ள இந்த வீதியில் இடம்பெற்றுள்ள இந்த கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் காரணமாக இப்பிரதேசத்தில் காலையில் பெரும் பதற்றம் நிலவியது.

இளைஞர்கள் கொலை தொடர்பில் நீதிமன்றில் இராணுவத்தினர்

வவுனியா நீதிபதி இளஞ்செழியன்
வவுனியா நீதிபதி இளஞ்செழியன்

அதேவேளை, வவுனியா தவசிகுளம் பகுதியில் கடந்த நவம்பர் மாதத்தில் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 5 இளைஞர்களின் கொலைகள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில், 6 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு, புதன்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

இவர்களை இராணுவ சட்டத்தரணியின் வேண்டுகோளுக்கிணங்க, வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வரையில் இராணுவ பொலிஸ் பாதுகாப்பில் தடுத்துவைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

கொல்லப்பட்ட 5 இளைஞர்களில் ஒருவர் வழங்கிய மரண வாக்குமூலத்தின் அடிப்படையில், சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கமைய, இந்த 6 இராணுவத்தினரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதாகவும், இந்தக் கொலை வழக்கு தொடர்பான புலன் விசாரணைகள் நடைபெறுவதனால், இவர்களை இராணுவ பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்க உத்தரவிடுமாறு இராணுவத்தின் சார்பில் ஆஜராகிய இராணுவ சட்டத்தரணி விடுத்த வேண்டுகோளை அடுத்தே இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இந்தக் கொலைகள் தொடர்பான புலன் விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

——————————————————————————————

புதுப்பிக்கப்பட்ட நாள்: 06 மார்ச், 2008 

இலங்கையின் மனித உரிமை மீறல் விசாரணைகள் தொடர்பான சர்வதேச கண்காணிப்புக் குழு பணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது

இலங்கையில் நடந்த படுகொலைகள் உள்ளிட்ட பாரிய அளவிலான 16 மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிப்பதற்காக ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட தேசிய விசாரணைக் குழுவின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக, சர்வதேச முக்கியஸ்தர்கள் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த குழு, தனது பணியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்திருக்கிறது.

Action contre la faim என்ற பிரஞ்சு தொண்டு நிறுவனத்தின் 17 ஊழியர்கள் கொல்லப்பட்டது, பள்ளிப் படிப்பு நிறைவடைந்ததை கொண்டாடிக்கொண்டிருந்த ஐந்து இளைஞர்கள் திருகோணமலையில் கொல்லப்பட்டது போன்ற பெரிய அளவிலான கொலைச் சம்பவங்களை, இலங்கை ஜனாதிபதி நியமித்த தேசிய விசாரணைக் ஆணையம் எவ்வாறு விசாரிக்கிறது என்று மேற்பார்வையிட வேண்டியது இந்த சர்வதேச மேற்பார்வைக் குழுவினரின் பணியாகும்.

தமது கண்காணிப்புப் பணிகளுக்கு இலங்கை அரச அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டுவருகிறார்கள் என்றும், அரசின் விசாரணை முறைகளில் குறைகள் பல இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் இக்குழுவில் அங்கம் வகிக்கும் பிரிட்டிஷ் பிரதிநிதி சர் நைஜல் ரோட்லி குறிப்பிட்டிருக்கிறார்.

இது குறித்த மேலதிக விபரங்களையும், சர் நைஜல் ரோட்லி பிபிசிக்கு வழங்கிய பேட்டியையும் நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


கண்ணிவெடி தாக்குதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் பலி

கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகிய கே.சிவநேசனும் அவரது வாகனச் சாரதியும் கொல்லப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்றுவிட்டு கொழும்பில் இருந்து வன்னிப் பிரதேசத்தில் மல்லாவி பகுதியில் உள்ள தமது வீட்டுக்கு அவர் திரும்பிச் சென்ற வேளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

வவுனியா ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடியைக் கடந்து சென்ற இவரது வாகனம் ஓமந்தையிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் மல்லாவி வீதியில் உள்ள ஓரிடத்தில் கிளேமோர் கண்ணி வெடி தாக்குதலில் சிக்கியுள்ளது.

இந்த குண்டுத் தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுறுவும் அணியைச் சேர்ந்த படையினரே நடத்தியிருப்பதாக விடுதலைப் புலிகள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை இராணுவம் மறுத்துள்ளது. இந்தச் சம்பவம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இடம்பெற்றிருப்பதனால் அதற்கான பொறுப்பை விடுதலைப் புலிகளே ஏற்க வேண்டும் என இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசியிடம் தெரிவித்திருக்கின்றார்.

இன்றைய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் உயிரிழந்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவநேசனுக்கு வயது 51. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதல்கள் தீவிரமடைந்த கடந்த சுமார் 2 வருட காலப்பகுதியில் கொல்லப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மூன்றாவது நாடாளுமன்ற உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் வாகனத்தைச் செலுத்திச் சென்று உயிரிழந்த வாகன சாரதியாகிய 27 வயதுடைய பெரியண்ணன் மகேஸ்வரராஜா வவுனியா இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள செட்டிக்குளத்தைச் சேர்ந்தவராவார்.


ஆட்கடத்தல்கள் மோசமாக அரங்கேறும் இடம் இலங்கை: ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்

 

உலகில் மிக மோசமான அளவில் ஆட்கடத்தல்களைச் செய்யும் அமைப்பாகியுள்ளது இலங்கை அரசு என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

2006ல் உள்நாட்டுப் போர் மீண்டும் தொடங்கியதிலிருந்து பாதுகாப்புப் படையினரும் அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களுமாக நூற்றுக்கணக்கானோரைக் கடத்தியுள்ளனர் என்று அந்த அமைப்பு கூறுகிறது.

இலங்கையில் நடக்கும் ஆட்கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கையை ஒரு தேசிய நெருக்கடி என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் வருணித்துள்ளது.

முக்கியமாக தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அடிக்கடி கடத்தப்படுகிறார்கள். விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இவர்களின் கடத்தலுக்கு பெரும்பான்மைக் காரணமாக அமைந்துள்ளது.

கடத்தப்பட்டவர்களில் பலர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று அஞ்சப்படுகிறது. ஆட்கடத்தலுக்குக் காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் இலங்கை அரசு கிஞ்சித்தும் உறுதியாக இல்லை என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகிறது.

ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் குற்றச்சாட்டு மற்றும் அது குறித்து இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள பதில் ஆகியவை தொடர்பாக எமது கொழும்பு செய்தியாளர் தரும் செய்திக் குறிப்பின் தமிழ் வடிவத்தை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


மட்டக்களப்பில் பள்ளி மாணவிகள் இருவர் கடத்தல்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்தில் இரண்டு பாடசாலை மாணவிகள் அவர்களுடைய வீடுகளில் வைத்து இரவுவேளை ஆயததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்குடா நாமகள் விதிதியாலயத்தில் ஜி.சி.ஈ. கல்வி பயிலும் மாணவிகளே இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

வாகனமொன்றில் வந்த குறிப்பிட்ட ஆயததாரிகள் தமது வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தேடுதல் நடத்தி பலாத்காரமான முறையில் இவர்களை கடத்திச்சென்றுள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

இக்கடத்தலுடன் தொடர்புடைய நபர்களோ இதன் பின்னியோ தங்களுக்கு தெரியாது என்று கூறும் உறவினரக்ள், மனிதாபிமான ரீதியில் இவர்களை விடுதலை செய்யுமாறும் கோருகின்றனர்.

கடத்தப்பட்ட மாணவிகளின் உறவுகள் வெளியிடும் கருத்துகள் அடங்கிய செய்திக் குறிப்பினை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

Posted in Eelam, Eezham, LTTE, Sri lanka, Srilanka | Leave a Comment »

Feb 28: Eezham, Sri Lanka, LTTE – Updates & News

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 29, 2008

இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச தலையீட்டு முயற்சிகளுக்கு இந்தியா தலைமை: ஜே.வி.பி

இலங்கையில் தமிழ் பிரிவினைவாதத்தினை வளர்த்து, 1980 களில் தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சிகளையும், ஆயுதங்களையும் இந்தியா வழங்கியதாகக் குற்றஞ்சாட்டியுள்ள மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி, இந்தியா தற்போது இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச தலையீடுகள் இடம்பெறுவதற்கு முன்னின்று செயற்படுவதாகவும் தெரிவித்திருக்கிறது.

புதன்கிழமையன்று இலங்கை வெளிநாட்டுப் பத்திரிகையாளர் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கருத்துவெளியிட்ட ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, புதுடெல்லியுடன் சேர்த்து இந்தக் கொடிய சர்வதேச தலையீடு எனும் கூட்டுமுயற்சியில், நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்றவையும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று தெரிவித்தார்.

இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுமுயற்சிக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவினால் முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனைகள் எதனையும் தமது அமைப்பு ஏற்றுக்கொள்ளமாட்டாது என்று தெரிவித்த சோமவன்ச அமரசிங்க, இலங்கையின் 13வது திருத்தச் சட்டமூலத்தினை அடிப்படையாகக் கொண்ட எந்த யோசனைகளையும் தாம் ஏற்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் ஆட்சியிலுள்ள தற்போதைய அரசின் நன்மதிப்பு என்பது மக்கள் மத்தியில் நலிவடைந்து செல்வதாகத் தெரிவித்த அவர், ஆனாலும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கெதிராக அரசாங்கத்தினால் முன்னெடுத்துச் செல்லப்படும் இராணுவ நடவடிக்கைகளுக்கு தமது முழுமையான ஆதரவு உண்டென்றும் தெரிவித்தார்.

இது குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

கிளெமோர் தாக்குதல்களில் 8 பொதுமக்கள் பலி

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களில், 8 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தக் குண்டுத் தாக்குதல்களை இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினரே நடத்தியிருப்பதாகவும், இரண்டு சம்பவங்களிலும் உழவு இயந்திரங்களில் சென்றவர்களே கொல்லப்பட்டதாகவும், விடுதலைப் புலிகள் மின்னஞ்சல் வழியான அறிக்கையொன்றின் மூலம் கூறியிருக்கின்றார்கள்.

எனினும் இந்தத் தாக்குதல்களைத் தாங்கள் செய்யவில்லை என இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.

நேற்று பிற்பகல் 1.50 மணியளவில் பனங்காமம் பிரதேசத்தில் உள்ள மூன்றுமுறிப்பு பகுதியில் உழவு இயந்திரத்தில் சென்றுகொண்டிருந்த 4 பேரும், சில மணித்தியாலங்களின் பின்னர் நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள மருதமடு என்னுமிடத்தில் இருந்து ஒலுமடு என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்தின் மீது நடத்தப்பட்ட மற்றுமொரு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் மேலும் 4 சிவிலியன்களும் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தமது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தச்சம்பவங்கள் குறித்து இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது தமது படையணியினர் எவரும் நேற்று வன்னிப்பிரதேசத்தினுள் செல்லவில்லை எனக் கூறிய அவர் இந்தத் தாக்குதல்களுக்கும் இராணுவத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார்.

Posted in Eelam, Eezham, LTTE, Sri lanka, Srilanka | Leave a Comment »

Feb 27: Eezham, Sri Lanka, LTTE, Dead, War, Rajapakse – Updates & News

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2008

மணலாறு பகுதியில் கொல்லப்பட்ட 14 விடுதலைப் புலிகளின் சடலங்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைப்பு

மணலாறு பகுதியில் விடுதலைப்புலிகளிடம் இருந்து இராணுவத்தால் மீட்கப்பட்டதாக கூறப்படும் பதுங்குகுழி ஒன்று

கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மணலாறு பகுதியில் இராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர மோதல்களின் போது கொல்லப்பட்ட சுமார் 14 விடுதலைப்புலி உறுப்பினர்களின் சடலங்கள் இன்று அநுராதபுரம் வைத்தியசாலை அதிகாரிகளினால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள இராணுவ வட்டாரங்கள், கடந்த வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் மணலாறு பகுதியில் விடுதலைப்புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை நோக்கி முன்னேறிய இராணுவத்தினர் அங்கிருந்த அவர்களது பாதுகாப்பு நிலைகள் சிலவற்றை அழித்திருப்பதோடு, இதன்போது ஏற்பட்ட மோதல்களின் போது கொல்லப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் எண்மரது சடங்களையும், ஆயுதத் தளபாடங்கள் சிலைவற்றையும் கைப்பற்றியிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

இது குறித்து பி.பி.சியிடம் கருத்துவெளியிட்ட அநுராதபுர மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார, வெள்ளிக்கிழமை மாலை ஆறு புலி உறுப்பினர்களது சடலங்களும், சனிக்கிழமை இரவு மேலும் எட்டு புலி உறுப்பினர்களது சடலங்களும், இராணுவத்தினரால் அநுராதபுர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாகவும், பிரேதப் பரிசோதனையின் பின்னர் இன்றைய தினம் இந்த 14 சடலங்களும் விடுதலைப்புலிகளிடம் சேர்ப்பிப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனைவிட நேற்றைய தின மோதல்களின்போது கொல்லப்பட்ட மேலும் ஏழு விடுதலைப்புலிகளின் சடலங்கள் அநுராதபுர வைத்தியசாலைக்கு இராணுவத்தினரால் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், அவை பிரேதப் பரிசோதனையின் பின்னர் நாளையோ அல்லது நாளை மறுதினமோ விடுதலைப்புலிகளிடம் சேர்ப்பிக்கப்படுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கக் குழுவிடம் ஒப்படைக்கப்படவிருப்பதாகவும் அநுராதபுர மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார தெரிவித்தார்.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சந்திப்பு

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின்பேரில் ஜனாதிபதிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் இடையில் இன்று மாலை அலரி மாளிகையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றிருக்கிறது.

அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படும் இன்றைய இந்த சந்திப்பின்போது அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வுத்திட்டம், மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும், 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி செயலக உயர் அதிகாரியொருவர் பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அத்துடன் இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்றினைக் காண்பதற்கு அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு தனது கட்சி ஆதரவினை வழங்குமென எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதியிடம் உறுதி கூறியதாகவும், 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதற்கும் அக்கட்சி ஆதரவினை வழங்கும் என்று அவர் தெரிவித்ததாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்புக்கு முன்னர் இது குறித்துக் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரவி கருணாநாயக்க, இந்த மாத முற்பகுதியில் பாராளுமன்ற வளவினுள் முன்னாள் ஜானாதிபதி ஆர். பிரேமதாஸவின் உருவச்சிலையின் திரைநீக்க விழாவில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நாட்டில் தற்போதுள்ள நிலைமைகள் குறித்து கலந்துரையாட சந்திப்பொன்றுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும், அதன் அடிப்படையிலேயே இன்றைய இந்தச் சந்திப்பு இடம்பெறவிருந்ததாகவும் தெரிவித்தார்.


Posted in dead, Eelam, Eezham, LTTE, Rajapakse, Ranil, Sri lanka, Srilanka, War | Leave a Comment »

Feb 24 – LTTE, Eezham, Batticaloa, Sri Lanka – News & Updates: BBC Tamil

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

கொழும்பில் பேருந்தில் குண்டுத்தாக்குதல்: 18 பேர் காயம்

இலங்கைத் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் பஸ் வண்டி ஒன்றில் விட்டுச் செல்லப்பட்ட வெடிகுண்டு ஒன்றை விழிப்பாக இருந்த பயணி ஒருவர் கண்டறிந்து தெரியப்படுத்தியதால் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

பேருந்து கல்கிசை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் இருக்கைக்கு அடியில் மர்ம மூட்டை ஒன்று கிடப்பதை கண்டு பயணி ஒருவர் பேருந்தின் ஒட்டுநரிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பேருந்தில் இருந்து அனைவரும் இறக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும், இருந்த போதிலும் பொலிஸார் வருவதற்கு முன்பாக குண்டுவெடித்து விட்டதாக பேருந்தின் ஒட்டுநர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பயணிகள் அனைவரும் வெளியேறிவிட்டாலும் குண்டுவெடித்ததில் அருகில் நின்றிருந்தவர்களில் 18 பேர் காயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளே இக்குண்டுவெடிப்பின் காரணம் என்று இராணுவத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

 


உயிர் அச்சத்தில் வடப்பகுதி மக்கள் – பெட்டகம்

வான் தாக்குதலினால் ஏற்பட்ட சேதம்
வான் தாக்குதலினால் ஏற்பட்ட சேதம்

இராணுவ நடவடிக்கை மூலம் கிழக்கை மீட்ட இலங்கை அரசு அதே அணுகுமுறை மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக ஒழிக்க முடியும் என்று நம்புவதாக பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதே நேரம் ஆயுதம் மூலம் தனி ஈழத்தை பெறலாம் என்ற நம்பிக்கையை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அமைதி முயற்சிகள் பின் தள்ளப்பட்டு இராணுவ நடவடக்கைகளுக்கே முன் உரிமை கொடுக்கப்படுகிறது.

தினந்தோரும் நடக்கும் மோதல்களால் தொடர்பாக இரு தரப்பும் மாறுப்டட தகவல்களைத் தந்தாலும் மோதல்களால் கடுமையாக பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான் என்பதே மாறாத உண்மை உள்ளது.

விடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டுகின்ற அரசாங்கம் அவர்களைத் தோற்கடிப்பதில் வெற்றியடைந்து வருவதாகக் கூறுகின்றது.

விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை குறைக்க அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்தில் புலிகளின் முகாம்கள் மீது விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அரசு கூறுகின்றது. ஆயினும் பல சந்தர்ப்பங்களில் பொதுமக்களே இந்தத் தாக்குதல்களில் கொல்லப்படுவதாக விடுதலைப் புலிகள் கூறுகின்றார்கள்.

இந்த வான் தாக்குதல்கள் எப்போது நடக்கும் எங்கு நடக்கும் என்பது எவருக்கும் தெரியாது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் பெரும் அச்சமடைந்திருப்பதாக அங்கிருந்து வருவபர்கள் தெரிவிக்கின்றார்கள்.

வடக்கே நிலவும் போர் சூழலால் மக்கள் நாளாந்தம் உயிரச்சத்துடனேயே தமது வாழ்வைக் கழித்து வருகின்றனர். இது தொடர்பாக நமது வவூனியா செய்தியளர் மாணிக்கவாசகம் தயாரித்து அனுப்பிய பெட்டகத்தை இன்றைய நிகழ்சியில் நேயர்கள் கேட்கலாம்.


இலங்கையின் வடக்கில் விமானப்படை தாக்குதல்

இலங்கை விமானப்படையின் விமானம்
இலங்கை விமானப்படையின் விமானம்

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விமானப்படையினர் விமானக்குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானுக்கு வடகிழக்கில் உள்ள விடுதலைப் புலிகளின் இராணுவ தளம் ஒன்று சனிக்கிழமை காலை தாக்கி அழிக்கப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

எனினும் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள மன்னாகண்டல் என்னுமிடத்தில் சனிக்கிழமை காலை குண்டு வீச்சு விமானங்கள் இரண்டு தடவைகள் 4 குண்டுகளை வீசியதாகவும், இதனால் வீதியில் சென்று கொண்டிருந்த 2 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதனிடையில் நேற்று வெள்ளிக்கிழமை புனகரி பகுதியில் நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 8 பொதுமக்களது இறுதிக்கிரியைகள் நடைபெற்றதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குண்டு வீச்சுச் சம்பவத்தில் காயமடைந்த 11 பேரில் 9 பேர் தொடர்ந்தும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்களில் 4 பேரின் நிலை மோசமாக இருப்பதாகவும் இவர்கள் மேல் சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அனுப்பிவைக்க வேண்டிய தேவை இருந்தபோதிலும் அவரிகளது உடல் நிலை பிரயாணம் செய்யக் கூடியதாக இல்லை என்றும் அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முழங்காவில் வைத்தியசாலையில் ஏனைய 2 காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஐ.நா உயரதிகாரி மட்டக்களப்பிற்கு விஜயம்

ஐ.நா உயரதிகாரி ஏஞ்சலினா கனே
ஐ.நா உயரதிகாரி ஏஞ்சலினா கனே

இலங்கைக்கான ஒரு வாரகால விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐ.நா வின் அரசியல் விவகார துணைச் செயலாளர் ஏஞ்சலினா கனே கிழக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மட்டக்களப்பு சென்றுள்ளார்.

கடந்த கால யுத்த அனர்த்தத்தின் பின்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற் கொள்ளப்படுகின்ற மனிதநேய நிவாரணப் பணிகள், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் கறித்து அறிந்து கொள்வதற்காக இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், யுத்த அனர்த்தத்தின் போது இடம் பெயர்ந்தவர்கள் மீள் குடியமர்த்தப்பட்டுள்ள சில கிராமங்களை பார்வையிட்டதோடு இது வரை மீளக் குடியேற்றப்படாதவர்களையும் சந்தித்து உரையாடினார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தையும் சந்தித்து மாவட்ட நிலவரம் தொடர்பாகவும் குறிப்பாக நடை பெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாகவும் கேட்டறிந்துள்ளார்

இருப்பினும் இந்த விஜயம் தொடர்பாகவோ சந்திப்புகள் தொடர்பாகவோ ஏஞ்சலினா கனே செய்தியாளர்களிடம் கருத்துக் கூற மறுத்து விட்டார்

புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 பிப்ரவரி, 2008

 


இலங்கையின் களுவாஞ்சிக்குடியில் தற்கொலைக்குண்டுத்தாக்குதல்

சம்பவம் நடைபெற்ற இடம்
சம்பவம் நடைபெற்ற இடம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு- கல்முனை நெடுஞ்சாலையிலுள்ள களுவாஞ்சிக்குடியில் ஞாயிற்றுகிழமை முற்பகல் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில், தற்கொலையாளியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த இருவரும் என 3 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் பெண்னொருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் இருவரும் மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த வேளை, குறுக்குவீதியொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் சைக்கிளொன்றுடன் காணப்பட்ட இளைஞரொருவரை அழைத்து விசாரனைக்குட்படுத்தியபோது
அந்நபர் தம் வசமிருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக சம்பவம் தொடர்பாகக் கூறப்படுகின்றது.

தற்கொலையாளி இது வரை அடையாளம் காணப்படவில்லை எனக் கூறும் பொலிசார் விடுதலைப் புலிகள் மீதே குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதே குற்றச்சாட்டை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளரான ஆசாத் மௌலானாவும் முன்வைத்துள்ளனர்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 25 பிப்ரவரி, 2008


பண்டாரவளையில் யாழ் இளைஞர் கடத்தல்

இலங்கையின் மலையகப் பகுதி
இலங்கையின் மலையகப் பகுதி

இலங்கையின் மலையகத்தில் பண்டாரவளைப் பகுதியில் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், வெள்ளை நிற வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

அந்தப் பகுதியில் அண்மைக்காலத்தில் இடம்பெறும் முதலாவது சம்பவம் இதுவென்பதால், அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளதாக அப்பகுதியில் இருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

அப்பகுதியில் உள்ள கடையொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த காரைநகரைச் சேர்ந்த சடாச்சரன் திருவருள் (22 வயது) என்ற இளைஞர், வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து, பொலிஸாரிடமும் ஏனையவர்களிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மலையக மக்கள் முன்னணியின் சார்பிலான ஊவா மாகாணசபையின் உறுப்பினரான அரவிந்தன் அவர்கள் பிபிசிக்குத் தெரிவித்தார்.

Posted in Arms, Attacks, Batticaloa, Blast, Bombs, Bus, Citizens, Colombo, dead, Eelam, Eezham, Explosions, Extremism, Highways, Hurt, Injured, LTTE, Northeast, Peace, Sri lanka, Srilanka, Suicide, Terrorism, Terrorists, UN, War | Leave a Comment »

Learning Tamil as a Foreign Language – South Travancore Hindu College, Nagercoil

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

சொல்றாங்க.. – தமிழுக்காக ஒரு தாற்காலிக வேடந்தாங்கல்!

அ. அருள்தாசன்

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழகத்தின் தென் கோடிக்கு வந்து தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. தமிழில் அனா ஆவன்னா தெரியாதவர்கள் 7 மாதங்களில் தமிழ்ப் பாடல்களை ரசித்துப் பாடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள் என்றால் இந்த ஆச்சர்யம் உங்களுக்கு இரட்டிப்பாகும். நாம் அவர்களைச் சந்திக்கச் சென்ற நேரத்தில் பாரதியின் “சிந்து நதியின்..’  பாடலைப் பாடி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

தமிழை ஒற்றுப் பிழையில்லாமல் எழுதும் அவர்கள் அனைவரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சிலர் வெளிநாட்டினர். இங்கு மாணவர்களாக இருக்கும் அவர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் ஆசிரியர்கள் என்பது அடுத்த சுவாரஸ்யம். இனியும் காலம் கடத்தாமல் அவர்களைப் பற்றிய தகவல்களைச் சொல்லிவிடுகிறோம்.

மைசூரில் செயல்படும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் தமிழ்த் துறையில் அவர்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சேர்ந்து, தமிழைக் கற்று வருகிறார்கள்.

நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளுடன் தமிழ் மொழி, கலாசாரம், பண்பாடு குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்ய வந்திருந்த அவர்கள்,

  1. கர்நாடகம்,
  2. ஹிமாச்சலப்பிரதேசம்,
  3. மணிப்பூர்,
  4. ஒரிசா,
  5. மேற்கு வங்கம்,
  6. அசாம்,
  7. இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் துணையுடன் நாட்டிலுள்ள மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆண்டுதோறும் இதுபோன்று ஆசிரிய, ஆசிரியைகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் இந்த கல்வியாண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட இந்த 24 பேருக்கும் தமிழ் கற்கும் காலத்தில் அவர்களுக்கான மாத ஊதியம் மற்றும் ரூ.800 ஊக்கத் தொகையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்குகிறது. வரும் ஏப்ரல் மாதம் வரையில் இவர்கள் தமிழைக் கற்கின்றனர்.

நாகர்கோவிலுக்கு வந்திருந்த இந்த ஆசிரியர்களை வழிநடத்தும் பேராசிரியர் எஸ். சுந்தரபாலு கூறியதாவது:

இந்தியா, “மொழிகளின் பொக்கிஷம்’. இங்கு 300-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றில் 18 மொழிகள் மட்டுமே அங்கீகாரம் பெற்றவை. அங்கீகாரம் பெற்ற அல்லது பெறாத மொழிகள் குறித்து ஆய்வு செய்யவும், அவற்றைக் கற்றுக் கொள்ளும் வழிகளை உருவாக்கித் தரும் பணியிலும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்நிறுவனத்தில் நாட்டிலுள்ள பல்வேறு மொழிகளைக் கற்க ஆசிரிய, ஆசிரியைகள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

பழமையான, இலக்கியத்துவம் வாய்ந்த, இனிமையான செம்மொழியாகத் தமிழ் இருப்பதால் பல்வேறு மாநிலத்தவரும் தமிழைக் கற்க ஆர்வமாக வருகின்றனர் என்கிறார் சுந்தரபாலு.

தமிழுக்காக இந்துக் கல்லூரியில் தாற்காலிகமாக குழுமியிருந்த வெளிமாநில ஆசிரிய, ஆசிரியைகள் சிலரிடம் தமிழைக் குறித்தும், தமிழ்ப் பண்பாடு, கலாசாரம் குறித்தும் பேசியபோது கொஞ்சும் தமிழில் அவர்கள் கூறிய சில சுவாரஸ்ய தகவல்கள்:

புலேகொடா ஆர்ச்சிகாந்தி (இலங்கை):

“”இலங்கை ருகுண தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறேன். அங்கு சிங்கள, முஸ்லிம், தமிழ் மாணவர்கள் படிக்கின்றனர். தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியைக் கற்பித்து வருகிறேன். ஆனால், சிங்கள மாணவர்களுக்குத் தமிழைக் கற்பிக்க முடியவில்லை. இதனால், தமிழைக் கற்க இங்கு வந்துள்ளேன்.

இலங்கையில் இருக்கும் தமிழர்கள் மற்றும் சிங்களர்களிடையே தகவல் தொடர்பு பிரச்னை இருக்கிறது. அதைத் தவிர்க்க இந்தப் பயிற்சியைப் பயன்படுத்திக் கொள்வேன்” என்றார்.

நெப்ரம் புஷ்பராணிதேவி (மணிப்பூர்):

“”மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகளைக் கற்பது கடினம். இதில் தமிழ் மொழி எனக்குப் பிடித்திருக்கிறது. மணிப்பூரில் முரே மாவட்டத்தில் தமிழ் பேசுவோர் அதிகம் உள்ளனர். அவர்களுக்குத் தமிழ் கற்பிக்க இதனால் எனக்கு முடியும்.”

லொரெம்பம் கோமோடோன்சனா தேவி (மணிப்பூர்):

“”கடந்த 5 ஆண்டுகளுக்குமுன் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சுற்றுலா வந்திருந்தபோது தமிழர்களின் நடவடிக்கைகள் என்னைக் கவர்ந்தது. இங்குள்ள பெண்கள் நெற்றில் பொட்டு வைப்பதும், ஆண்கள் விபூதி வைப்பதும் பிடித்திருக்கிறது. கடவுள் என்றால் அன்பு என்பதைத் தமிழ் மொழி உணர்த்துகிறது” என்றார்.

ஷபியூர் ரஹ்மான், அப்துர் ரஹீம் (அஸ்ஸôம்):

“”அசாம் மாநிலம், போர்பெட்டா மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கள், சமஸ்கிருத ஆசிரியர்கள். தமிழ் மொழி இனிமையானது என்பதனால் இதைக் கற்கிறோம். சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் 30 சதவீதம் தொடர்பு இருக்கிறது. ஏலேலோ ஐலசா போன்ற நாட்டுப்புற பாடல் தெரியும். (இவர்களில் ரஹீமுக்கு அசாமி, பெங்காலி, சமஸ்கிருதம், ஹிந்தி, தமிழ், அரபி ஆகிய 6 மொழிகள் தெரியும்).

அசோதோஸ் மாலிக் (ஒரிசா):

“”ஒரிய மொழி குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன். தற்போது தமிழைக் கற்பதால் தமிழுக்கும் ஒரிய மொழிக்கும் உள்ள தொடர்பு குறித்து தெரிந்து கொள்கிறேன். தமிழைக் கற்றபின் தமிழில் உள்ள நூல்களை ஒரிய மொழியிலும், ஒரிய மொழி நூல்களைத் தமிழிலும் மொழி பெயர்க்கத் திட்டமிட்டுள்ளேன்.

தமிழகத்தில் இலக்கியத்திலும் தீவிர ஆர்வம் மிக்கவராக இருப்பவர் என முதல்வர் கருணாநிதியைப் பற்றி அறிந்திருக்கிறேன்” என்றார்.

தட்டுத் தடுமாறினாலும் தமிழில் பேசிய இந்த வெளிமாநில ஆசிரியர்களின் ஆர்வம் பாராட்டுக்குரியதுதான்.

Posted in Bengal, Ceylon, Foreign, HR, Instructors, Integration, Language, Learn, Literature, Manipur, Manipuri, Nagercoil, Orissa, Singala, Sinhala, Sinhalase, Srilanka, Students, Tamil, Teachers, Unity, University, WB, World | Leave a Comment »

Feb 12: Eezham, Sri Lanka, LTTE, Wanni, Food Shortages, Murders – Updates & News

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 13, 2008

வன்னியில் உணவுத் தட்டுப்பாடு

இலங்கையின் வடக்கே மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக நேரடி வாகனப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருப்பதனாலும், வவுனியா வரையில் நடைபெற்று வந்த வடபகுதிக்கான ரயில் சேவை மதவாச்சியுடன் நிறுத்தப்பட்டிருப்பதனாலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களுக்கான அத்தியாவசிய பொருட்களைக் அங்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான நிவாரண உணவு விநியோகம் தடைபட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் அவர்கள் தமிழோசைக்குத் தெரிவித்த விபரங்களையும், பாதுகாப்பு தரப்பில் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நாணயக்கார கூறியுள்ள கருத்துக்களையும் எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கேட்கலாம்.


இலங்கை உயிரிழப்புகள் குறித்து செஞ்சிலுவைச் சங்கம் கவலை

 

இலங்கை உள்நாட்டுப் போரில் கொல்லப்படும் மற்றும் காயமடையும் பொதுமக்களின் எண்ணிக்கையானது மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் 6 வாரங்களில் 180 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பினால் வெளியிடப்பட்ட புதிய எண்ணிக்கை கூறுகிறது.

மேலும் சுமார் 270 பேர் காயமடைந்துள்ளார்கள்.

ஒரு தற்கொலைத் தாக்குதலில் மாத்திரம் ஒரு உயர் பள்ளிக்கூடத்தின் பேஸ் போல் குழுவின் அரைவாசிப்பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த மாதத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசாங்கம் முறையாக வெளியேறியதை அடுத்து அங்கு வன்செயல்கள் அதிகரித்தன.


தமிழர் கைதின் போதான முறைகேடுகளை ஆராய குழு நியமிக்க உத்தரவு

 

கொழும்பில் தமிழர்கள் கைது செய்யப்படும் போது ஏற்படுவதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஆராய குழுவொன்றை நியமிக்ககுமாறு இன்று உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தாக்கல்செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிப்பிக்கப்பட்டது.

இக் குழுவில் நீதி அமைச்சின் செயலாளர், சட்ட மாஅதிபர் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள்.

தமிழர்களிடம் வங்கிக் கணக்கு எண் மற்றும் அதில் உள்ள பணம் போன்றவற்றின் விபரங்களைக் கேட்பது, கொழும்பில் அவர்கள் தங்கும் நாட்களை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் கேட்கப்பட்ட விவரங்களும் மனித உரிமையை மீறும் செயலாகும் என்றும் நீதிபதி அறிவித்துள்ளதாக, இந்த வழக்கில் இ.தொ.கா தரப்பில் ஆஜரான சட்டத்தரணி சுமந்திரன் தமிழோசையிடம் தெரிவிததார்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 14 பிப்ரவரி, 2008


வவுனியா மருத்துவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

போராட்டத்தில் மருத்துவர்களுக்கு துணையாக தாதிமாரும் ஈடுபட்டனர்
போராட்டத்தில் மருத்துவர்களுக்கு துணையாக தாதிமாரும் ஈடுபட்டனர்

இலங்கையின் வடக்கே மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக வாகனங்களில் பிரயாணம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் விடுத்த வேண்டுகோளை பரிசீலிப்பதாக இராணுவத் தரப்பிலிருந்து கிடைத்த சாதகமான பதிலையடுத்து, அந்த வைத்தியர்கள் இன்று மேற்கொண்டிருந்த ஒருநாள் அடையாள கவன ஈர்ப்புப் போராட்டம் மதியத்துடன் கைவிடப்பட்டது.

மதவாச்சி சோதனைச்சாவடியின் ஊடாக பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனங்கள் எதுவும் பிரயாணம் செய்ய முடியாது என்ற தடை கடந்த இரண்டு வாரங்களாக நடைமுறைப் படுத்தப்பட்டுவருகின்றது.

இந்தத் தடையினால் பல்வேறு தரப்பினரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய வடபகுதி மாவட்டங்களில் இதனால் சுகாதார சேவைகள் உட்பட அத்தியாவசிய சேவைகள் பல பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

சுகாதார சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை போக்குவதற்காக, திணைக்கள வாகனங்கள் மற்றும் வைத்தியர்களின் தனியார் வாகனங்கள் என்பவற்றை மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக பிரயாணம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என வவுனியா, மன்னார் வைத்தியாசாலை வைத்தியர்கள் கோரி வருகின்றனர்.

இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து இரு தினங்களில் மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத் தரப்பில் இன்று உறுதியளிக்கப்பட்டதையடுத்தே இன்றைய அடையாள கவன ஈர்ப்புப் போராட்டம் மதியத்துடன் கைவிடப்பட்டதாக அரச வைத்தியர்கள் சங்கத்தின் பேச்சாளார் டாக்டர் சிவராஜசிங்கம் சிவப்பிரியன் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் தொடர்பூடக அடக்கு முறைக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஊர்வலம்

 

இலங்கையில் இடம்பெறுவதாகக் கூறப்படுகின்ற தொடர்பூடக அடக்கு முறைக்கு எதிராக புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஊடக அடக்கு முறைக்கு எதிரான அமைப்பினால், இன்று கொழும்பில் பெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலமும், கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

பல நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்களும், ஏனைய அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்துகொண்டார்கள்.

கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள டி மெல் பூங்காவில் ஆரம்பமான இந்த ஊர்வலம் ஜெயவர்த்தன நிலையம் வரை தொடர்ந்தது. அதன் பின்னர் அங்கு ஒரு கூட்டமும் நடைபெற்றது.

இலங்கையைச் சேர்ந்த 5 ஊடக அமைப்புக்களுடன், வேறு பல தொழிற்சங்கங்களும், பொது அமைப்புக்களும் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த ஊர்வலத்துக்கான ஏற்பாடு மற்றும் நோக்கம் குறித்து இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரான ஆர். பாரதி மற்றும் சுதந்திர ஊடக இயக்கத்தின் பேச்சாளர் சிவகுமார் ஆகியோரது கருத்துக்களடங்கிய மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 14 பிப்ரவரி, 2008


மன்னார் கடற்பரப்பில் மீட்கப்பட்ட மீனவர்கள் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்

இந்திய மீனவர்கள்
இந்திய மீனவர்கள்

இலங்கையின் வடமேற்குக் கடற்பரப்பில் இயந்திரக்கோளாறு காரணமாக தத்தளித்துக் கொண்டிருந்த மீன்பிடி இழுவைப்படகில் இருந்து தலைமன்னார் கடற்படையினரால் நேற்று முன்தினம் மீட்கப்பட்ட 3 தமிழக மீனவர்களையும் கொழும்பு மீரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயந்திரக் கோளாறு காரணமாகக் கடலில் தத்தளித்த இந்த மீன்பிடி இழுவைப் படகை, இன்னுமொரு இந்திய மீன்பிடி இழுவைப்படகு கட்டி இழுக்க முற்பட்டபோது கயிறு அறுந்து இரு படகுகளும் மோதிக்கொண்டதன் காரணமாகவே தாங்கள் காயமடைந்ததாக 3 தமிழக மீனவர்களும் தெரிவித்திருக்கின்றனர்.

இவர்களில் ஒருவர் மேல் சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டிருப்பதாகவும், ஏனைய இருவரையும் சிறைச்சாலை அதிகாரிகள் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு இன்று அழைத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


புதுப்பிக்கப்பட்ட நாள்: 16 பிப்ரவரி, 2008

போக்குவரத்து தடையினால் கிளிநொச்சி வைத்தியசாலைகளுக்கு மருந்துப்பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது

வவுனியா இரயில் நிலையம்
வவுனியா இரயில் நிலையம்

இலங்கையின் வடக்கே மதவாச்சி சோதனைச்சாவடியில் பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீவிரமான வாகனப் போக்குவரத்துத் தடையினாலும், வவுனியா வரையில் நடைபெற்று வந்த ரயில் சேவை மதவாச்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதனாலும், கிளிநொச்சி மாவட்டத்தின் வைத்தியசாலைகளுக்கான மருந்துப் பொருட்கள் மற்றும் சுகாதாரத் திணைக்களத்திற்கான எரிபொருளை அங்கு எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அங்கு மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

சுகாதார அமைச்சினால் கொழும்பில் இருந்து அனுராதபுரத்திற்கு கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டிருந்த கிளிநொச்சி மாவட்டத்திற்கான இந்த வருடத்தின் முதல் காலாண்டுக்குரிய ஒரு தொகுதி மருந்துப் பொருட்கள் தமது நடவடிக்கையையடுத்து மதவாச்சி வரையில் ரயிலில் கொண்டு வரப்பட்டு, பின்னர் லொறிகள் மூலமாக வவுனியாவிற்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தமிழோசைக்குத் தெரிவித்தார்.

வவுனியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள அந்த மருந்துப் பொருட்களை ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாகக் கிளிநொச்சிக்கு எடுத்துச் செல்வதற்குரிய பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்காகக் காத்திருப்பதாகவும் டாக்டர் சத்தியமூர்த்தி கூறுகின்றார்.

கிளிநொச்சி வைத்தியசாலைகளில் குழந்தைகளுக்கான முக்கிய மருந்துப் பொருட்கள், அன்ரி பயட்டிகள் எனப்படும் நுண்ணியிர் கொல்லிகள், கிளினிக் மருந்துகள் என்வற்றிற்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், புதிய கையிருப்புகள் உடனடியாக அங்கு போய்ச் சேராவிட்டால் நிலைமை மோசமடையலாம் என்றும் அவர் கூறுகின்றார்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 17 பிப்ரவரி, 2008

மட்டக்களப்பில் வேட்பாளர்களுக்கு மிரட்டல்

மட்டுநகர்
மட்டுநகர்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் தமது வேட்பாளர்கள் பலருக்கு விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட எச்சரிக்கை கடிதங்கள் கிடைத்துள்ளதாக இந்த தேர்தலில் கூட்டாக சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் ஈ.பி.டி.பி, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபா அணி) ஆகிய கட்சிகள் கூறுகின்றன.

இருப்பினும் தமது வேட்பாளர்களுக்கு கிடைத்துள்ள இந்த எச்சரிக்கையானது விடுதலைப்புலிகளால்தான் மேற்கொள்ளப்பட்டது என்று தம்மால் உறுதியாகக் கூறமுடியாது இருப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எப் அணியின் சார்பிலான துரைரட்ணம் அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார்.

மேலும் மாவட்டத்தின் பல பாகங்களிலும் குறிப்பாக களுவாஞ்சிக்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களில் ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுவைச் சார்ந்தவர்கள் ஆயுதமுனையில் அச்சுறுத்தப்பட்டு வருவதாகவும் இந்தக் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்தத் தேர்தல் வன்முறைகள் தொடர்பாக பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு தங்களால் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்பாறையில் கிறிஸ்தவ மதபோதகர் கொலை

இதற்கிடையே அம்பாறையில் கிறிஸ்தவ மதப்பிரிவொன்றைச் சேர்ந்த மத போதகர் ஒருவர் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட இந்த மதபோதகர், குருநாகலைச் சேர்ந்த நீல் சம்சன் எதிரிமன்ன என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் அவரது மனைவியும், அதிர்ச்சிக்குள்ளான நிலையில் ஒன்றரை வயதுக் குழந்தையும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய கொலையாளிகளோ, அல்லது சம்பவத்தின் பின்னணியோ இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 19 பிப்ரவரி, 2008


வவுனியா மக்கள் ஜனாதிபதிக்கு மகஜர்

மகஜரில் கையெழுத்திடும் மக்கள்
மகஜரில் கையெழுத்திடும் மக்கள்

இலங்கையின் வடக்கே மதவாச்சி சோதனைச்சாவடியில் வாகனப் போக்குவரத்துக்கு விதிக்க்பபட்டுள்ள தடையை நீக்கி, மதவாச்சி வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள ரயில் சேவையை வவுனியா வரையில் நீடிக்கக் கோரி வவுனியா பிரதேச மக்கள் ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

இதற்காக இன்று காலை வவுனியா நகரில் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து வேட்டையில் மதத்தலைவர்கள், வர்த்தகர்கள், அரச ஊழியர்கள், அரசியல்வாதிகள் என பலதரப்பட்டவர்களும் தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களில் இருந்து கலந்து கொண்டார்கள்.

சுதந்திரமாக பிரயாணம் செய்ய முடியாதவாறு தடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த பலரும் இந்தத் தடை நீக்கப்பட்டு சுமுகமான நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் எனக் கோருகின்றார்கள்.

இந்தக் கையெழுத்து வேட்டையை ஒழுங்கு செய்திருந்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளருமாகிய பி.எச்.சாந்தகுமார வவுனியா, மன்னார் பிரதேசங்களில் இருந்து மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக மோட்டார் சைக்கிளில் கூட செல்ல அனுமதி மறுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

இப்பிரதேசங்களின் விவசாய உற்பத்திப் பொருட்களைத் தென்பகுதிக்குக் கொண்டு செல்லமுடியவில்லை. சோதனை கெடுபிடிகள் காரணமாக வவுனியாவில் பொருட்களின் விலைகளும் அதிகரித்திருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

சோதனை நடவடிக்கைகள் அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கின்ற அவர், அந்தச் சோதனை நடவடிக்கைகள் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்பதாக இருப்பதை சுட்டிக்காட்டி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்களின் கையெழுத்துக்களுடன் கூடிய மகஜரில் கோருவதாகக் கூறுகின்றார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெறும், எமது வவுனியா செய்தியாளர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 20 பிப்ரவரி, 2008


இலங்கையின் கதிர்காமம் புத்தல பிரதேசத்தில் புலிகளின் தாக்குதலில் மூன்று படையினர் பலி

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் மொனறாகலை மாவட்டத்தின் கதிர்காமம் புத்தல பிரதேசத்தில் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் ஒன்றில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்புப்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இது குறித்து கருத்துவெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு, இன்று காலை சுமார் பதினொரு மணியளவில் கதிர்காமம்-புத்தல பிரதான வீதியில் தம்பகோட்டே என்னுமிடத்தில் அமைக்கப்பட்டிருந்த வீதிச் சோதனைச் சாவடிமீது புலிகளின் சிறிய அணியொன்று தாக்குதல் நடாத்தியதாகவும், இதன்போது இங்கு காவல் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது.

இதன்போது படையினர் திருப்பித் தாக்கியதில் புலிகளிற்கும் இழப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் எனத் தாம் நம்புவதாகத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சு இந்தப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துவதற்காகவும், தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காகவும் மேலதிக படையினர் அங்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.


மன்னாரில் கடும் மோதல்

விடுதலைப்புலிகள்

இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மன்னார் முன்னரங்கப் பகுதிகளில் கடும் மோதல்கள் நடைபெற்று வருவதாக மன்னார் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னாரில் நிலைகொண்டுள்ள இலங்கை அரச படையினர், விடுதலைப் புலிகளின் நிலைகளை நோக்கி பீரங்கித் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

மோதல் காரணமாக புதன்கிழமை காலை மன்னாருக்கும், வவுனியாவுக்கும் இடையேயான போக்குவரத்து ஒரு மணிநேரம் தடைபட்டிருந்தது.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதனிடைய வவுனியா செம்பந்தோட்டம் பகுதியில் 2 விடுதலைப் புலிகள் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

இவர்களது உடல்கள் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன

புதுப்பிக்கப்பட்ட நாள்: 21 பிப்ரவரி, 2008


கிளிநொச்சியில் இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் 8 பேர் பலி என்கிறார்கள் விடுதலைப் புலிகள்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய கிளிநொச்சி மாவட்டத்தின் புனகரி, கிராஞ்சி பகுதியில் உளள் கடற்கரைக் குடியிருப்பின் மீது இன்று காலை 9 மணியளவில் அரச விமானப்படையினர் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதலில் 3 சிறுவர்கள் உட்பட 8 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் லிகள் கூறியிருக்கின்றனர்.

ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரப் பகுதியில் அமைந்துள்ள கடற்புலிகளின் பாரிய முகாம் ஒன்றை விமானப்படையினர் தாக்கியழித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

இந்தக் கரையோரத்தில் உள்ள பேய்முனையில் இருந்து மேற்குப் பகுதியில் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராஞ்சி என்ற பகுதியிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

இந்தச் சம்பவத்தில் 5 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும், 3 பேர் வைத்தியசாலையில் மரணமாகியதாகவும் விடுதலைப் புலிகள் மின்னஞ்சல் வழியான அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருக்கின்றார்கள்.

காயமடைந்தவர்கள் முதலில் முழங்காவில் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து 9 பேர் கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டதாக கிளிநொச்சி வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து வைத்தியசாலை அதிகாரி ஒருவரும் குடும்பத்தினரை இழந்த மீனவர் ஒருவரும் இலங்கை இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்காரவும் தமிழோசைக்கு வழங்கிய கருத்துகளை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பங்குதந்தை பொன்னையா ஜோசப் ஆயராக நியமனம்

ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பங்குதந்தை பொன்னையா ஜோசப்

இலங்கையில் கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் முதற் தடவையாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு தன்னாமுனையைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பொன்னையா ஜோசப் ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1980ஆம் ஆண்டு குருத்துவ பட்டம் பெற்ற இவர், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல தேவாலயங்களில் பங்கு தந்தையாக பணியாற்றியதோடு 2006ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு – திருகோணமலை மறை மாவட்டத்தின் குருமுதல்வராகப் பணியாற்றினார்.

பரிசுத்த பாப்பரசரினால் வழங்கப்பட்டுள்ள இந்நியமனத்தை இலங்கைக்கான வத்திக்கான் பிரதிநிதி பேராயர் மரியோ செனாரி நேரடியாக கையளித்துள்ளார்.

புதிய ஆயராக நியமனம் பெற்றுள்ள பொன்னையா ஜோசப் தமது மறை மாவட்டத்தில் துணை ஆயராக திருநிலைப் படுத்தப்படவிருப்பதாக மட்டக்களப்பு – திருகோணமலை ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் ஆயராக வரவேண்டும் என்ற கத்தோலிக மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறியிருப்பதாக ஆயர் பொன்னையா
ஜோசப் தமிழோசையிடம் தெரிவித்தார்.

 

Posted in Eelam, Eezham, LTTE, Sri lanka, Srilanka, Tamil | Leave a Comment »

42 SLA killed in Mannaar clashes – LTTE; Mahindra & Mahindra to develop US$ 100m IT park

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2008

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- ஜேவிபி இடையே கருத்து முரண்பாடு

இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு நடவடிக்கைகள் தொடர்பிலான ஜேவிபி கட்சியின் நிலைப்பாட்டைக் கண்டித்துள்ள இந்தியாவின் முக்கிய இடதுசாரிக் கட்சியான இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதனைக் காரணம் காட்டி, தமது கட்சியின் தேசிய மாநாட்டுக்கு ஜேவியின் பிரதிநிதிகளை, சகோதர பிரதிநிதிகளாக அழைப்பதை தவிர்த்துள்ளது.

ஒரு இடதுசாரிக் கட்சியாக தன்னை விபரிக்கும் ஜேவிபி, இலங்கை தமிழர் விவகாரத்தில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றை எதிர்ப்பதுடன், ஒற்றை ஆட்சியின் கீழ்தான் இந்த விவகாரம் கையாளப்பட வேண்டும் என்று கூறிவருகிறது.

இதனைக் கண்டித்துள்ள இந்திய மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான டபிள்யூ. ஆர். வரதராஜன் அவர்கள், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தமிழர்களுக்கு கூடிய அதிகாரங்களுடனான சுயாட்சி முறையை வழங்குவதை எதிர்க்கும் ஜேவிபின் நிலைப்பாட்டுடன் தாம் முரண்படுவதாக கூறியுள்ளார்.

அதேவேளை, இந்த விவகாரத்தில், ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டையும் ஜேவிபி எதிர்த்தது என்று கூறுகின்ற வரதராஜன் அவர்கள், இது தமது கட்சியின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணானது என்றும் கூறுகிறார்.

அகில உலக மட்டத்தில் சர்வதேச ஏகாதிபத்தியத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஜேவிபியின் நிலைப்பாட்டுடன் தாம் உடன்படுகின்ற போதிலும், இந்தியாவையும், அதனை அண்டிய பிராந்தியத்தையும் பொறுத்த வரை தற்போதைய நிலையில், இலங்கை தமிழர் பிரச்சினையே முன்னிலையில் இருப்பதாகவும், ஆகவே அந்த விவகாரத்தில் தமக்கு ஜேவிபியுடனான முரண்பாட்டை அடுத்தே, தாம் அந்தக் கட்சியின் பிரதிநிதிகளை, தமது கட்சி மாநாட்டுக்கு இந்தத் தடவை அழைக்கவில்லை என்றும் வரதராஜன் தெரிவித்தார்.

இலங்கை தமிழர் விவகாரத்தில் ஜேவிபியின் நிலைப்பாடு, ஏகதிபத்தியத்துக்கு ஆதரவாக அமைந்துவிடும் என்று எச்சரித்துள்ள வரதராஜன் அவர்கள், தமிழர் பிரச்சினையில், பேச்சுவார்த்தை மூலமான, வடக்குக் கிழக்குக்கு கூடிய அதிகாரங்களுடனான தீர்வு ஒன்றே அனைவருக்கும் பலன் தரும் என்றும் கூறினார்.

 


மன்னார் தள்ளாடியில் முகாம் மீதான தாக்குதலில் 6 இராணுவத்தினர் பலி

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள இலங்கை அரசாங்க இராணுவத்தின் முக்கிய முகாம் ஒன்றின் மீது விடுதலைப்புலிகள் தாக்கியதில் 6 சிப்பாய்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 10 பேர் காயமடைந்ததாகவும் இலங்ககை இராணுவம் கூறுகிறது.

இந்தத் தாக்குதலில் தேவாலயம் ஒன்றில் சிரமதானத்தில் ஈடுபட்டிருந்த படையினரே கொல்லப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் பீரங்கித் தாக்குதல் காரணமாக மன்னார் நகரில் பெரும் பதற்றநிலை காணப்பட்டதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.

கடுமையான பீரங்கி மோதல்களை அடுத்து மன்னாருக்கான போக்குவரத்து சில மணிநேரம் துண்டிக்கப்பட்டதாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசிக்குத் தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை வட இலங்கையில் நடந்த மோதல்களில் 40 விடுதலைப்புலிகளும், 10 அரசாங்க சிப்பாய்களும் கொல்லப்பட்டதாகவும் இராணுவம் கூறுகிறது.

விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து இது தொடர்பாக கருத்து எதுவும் வரவில்லை.

தமது தரப்பில் கடுமையான இழப்புகளை இலங்கை இராணுவம் ஒப்புக்கொள்வது குறைவு என்று கொழும்புக்கான எமது செய்தியாளர் கூறுகிறார்.


இலங்கையில் நவீன தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை உருவாக்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா

ஒப்பந்தம் கைச்சாத்தான போது
ஒப்பந்தம் கைச்சாத்தான போது

இலங்கையில் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியில் நவீன தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை உருவாக்கும் நோக்கில் இந்தியாவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் இன்று இலங்கை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருக்கின்றது.

இலங்கைக்கு மூன்று நாட்கள் விஜமொன்றினை மேற்கொண்டிருக்கும் இந்திய இணை வர்த்தக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் முன்னிலையில் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் சரத் அமுனுகமவும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் சார்பில் அதன் பிரதித் தலைவர் ஆருண் நந்தாவும் இன்று காலை இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைக்கப்படவுள்ள இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா குறித்து கருத்து வெளியிட்ட மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் பிரதித் தலைவர் ஆருண் நந்தா, இலங்கை முதலீட்டு சபை இதற்காக சுமார் 53 ஏக்கர் நிலத்தை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் ஒதுக்கியிருப்பதாகவும், இதன் நோக்கமெல்லாம் சர்வதேச தகவல் தொழில்நுட்ப கம்பனிகளை இந்தப் பிரமாண்டமான பூங்காவில் முதலீடு செய்வதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதாகும் என்று தெரிவித்தார்.

Posted in Army, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, dead, Eelam, Eezham, investments, IT, JVP, Left, Lifespace, LTTE, M&M, Mahindra, Mannaar, Mannar, SEZ, Sri lanka, Srilanka | Leave a Comment »

Sripathi Sooriyaarachchi killed in accident – LTTE, Eezham, Batticaloa, Sri Lanka – News & Updates: BBC Tamil

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 11, 2008

இலங்கையின் வடக்கில் கடும் மோதல்

மடு தேவாலயம்
மடு தேவாலயம்

இலங்கையின் வடக்கில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்ற சண்டைகளில் இரு தரப்பிலும் உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளதாக படைவட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

எனினும் மன்னார், வவுனியா முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சிகள் தமது எதிர் தாக்குதல்களின் மூலம் முறியடிக்கப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள்
தெரிவித்திருக்கின்றனர். ஆயினும் இந்த மோதல்களில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்து பக்கசார்பற்ற தரப்புக்களில் இருந்து தகவல்கள் எதனையும் பெறமுடியவில்லை.

மன்னார் மடுக்கோவிலைச் சூழ்ந்த பிரதேசங்களில் இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் கடும் மோதல்களில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த நிலைமை குறித்து தமிழோசையிடம் கருத்து தெரிவித்த மடுக்கோவில் பரிபாலகர் அருட்தந்தை எமிலியாஸ்பிள்ளை அவர்கள், கடந்த இரண்டு தினங்களாக பண்டிவிரிச்சான் பகுதியில் கடுமையான மோதல்கள்
இடம்பெற்று வருவதை தங்களால் உணர முடிந்ததாகத் தெரிவித்தார்.

தொடர்ச்சியான எறிகணை வீச்சுக்களோடு நேரடி மோதல்களில் இரு தரப்பினரும் ஈடுபட்டிருப்பதற்கு அடையாளமாக துப்பாக்கிச் சூட்டுப் பரிமாற்றச் சத்தங்களையும் தங்களால் கேட்கக் கூடியதாக இருப்பதாகவும் அருட்தந்தை எமிலியாஸ் பிள்ளை கூறுகின்றார்.

மடுக்கோவிலின் அருட்தந்தையர் மற்றும் அருட்பணியாளர்களுடன் மடுக்கோவில் பகுதியில் 50 குடும்பங்கள் இருப்பதாகவும், இவர்கள் பெரும் பதட்டத்துடன் அச்சத்திற்கு மத்தியிலேயே வாழ்ந்து வருவதாகவும், எனினும் மடுக்கோவிலை விட்டு தாங்கள் வேறு எங்கும் செல்வதாக இல்லை என்றும் அருட்தந்தை எமிலியாஸ்பிள்ளை கூறுகின்றார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையில் அதிகரித்துள்ள தாக்குதலால் பொதுமக்களுக்கு பாதிப்பு – சர்வதேச செஞ்சிலுவை சங்கம்

இலங்கையில் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிகளில் இடம்பெற்று வரும் கண்மூடித்தனமான தாக்குதல் சம்பவங்களானது பொது மக்களுக்கு அதிக இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகக் சர்வதேச செஞ்சிவைச் சங்கம் கூறுகின்றது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்பு அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், வடக்கில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அதிகரித்த மோதல்களினால் இடம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிகரித்துச் செல்லும் வன்முறைகள் பொது மக்களுக்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தாம் அதிக கரிசனை கொண்டுள்ளதாக அந்த அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி டூன் வன்டன்ஹோவ் கூறியிருக்கின்றார்.

வடக்கில் அதிகரித்து வரும் மோதல்கள் மனித நேய பணியாளர்களுக்கு பெரும் ஆபத்தை விளைவித்திருப்பதுடன் நிவாரண உதவி விநியோகத்தையும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் சிறிபதி சூரியாராச்சி பலி

விபத்தில் சிக்கிய வாகனம்
விபத்தில் சிக்கிய வாகனம்

இலங்கையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் அமைப்பாளருமான சிறிபதி சூரியாராச்சி சனிக்கிழமையன்று அனுராதபுரம் தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் பலியாகியுள்ளார்.

வேகமாகச் சென்றுகொண்டிருந்த இவரது சொகுசு ஜீப் வாகனம் வீதியோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியதில் இவருடன் சென்று கொண்டிருந்த மேலும் இருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். இவ்விபத்தில் இவரது மெய்ப்பாதுகாப்பாளர்கள் இருவர் படுகாயமடைந்து தம்புத்தேகம மற்றும் அனுராதபுர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த 2007 ம் ஆண்டு பிப்ரவரி 9ம் திகதி அன்று அமைச்சர்கள் சிறிபதி சூரியாராச்சி, மங்கள சமரவீர, மற்றும் அனுர பண்டாரநாயக்க ஆகியோர் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்கள்.

ஆளும் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, அதிலிருந்து முன்னாள் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீரவுடன் வெளியேறிய இவர், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவினை அமைத்து ,பிரதான எதிர்க்கட்சியுடன் இணைந்து போட்டி அரசியலில் ஈடுபட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


மதவாச்சி வீதிச்சோதனையில் புதிய நடைமுறைகள் காரணமாக போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக புகார்

வவுனியா இரயில் நிலையம்
வவுனியா இரயில் நிலையம்

இலங்கையின் வடக்கே அனுராதபுரத்திற்கும் வவுனியாவுக்கும் இடையில் அமைந்துள்ள மதவாச்சி நகரில் உள்ள முக்கிய வீதிச்சோதனையில் கடந்த ஒரு வாரகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தீவிரமான பாதுகாப்புச் செயற்பாடுகள் காரணமாக கெப்பிட்டிகொல்லாவ, பதவியா மற்றும் வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் போக்குவரத்துக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சோதனைச்சாவடி ஊடாக பாதுகாப்பு பிரிவினரின் வாகனங்கள் தவிர்ந்த வேறு எந்த வாகனங்களும் பிரயாணம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

கொழும்பிற்கும் வவுனியாவுக்கும் இடையில் நடைபெற்று வந்த வடபகுதிக்கான ரயில் சேவையும் மதவாச்சியுடன் நிறுத்தப்பட்டிருக்கின்றது.

மதவாச்சி வீதிச்சோதனைச்சாவடி ஊடாக சைக்கிள், மோட்டார் சைக்கிள் உட்பட தனியார் வாகனங்கள் எதுவுமே செல்ல முடியாதவாறு தடை விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அனைவரும் நடந்து செல்வதற்கு மாத்திரமே அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.

வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் வரும் வாகனங்கள் அனைத்தும் இந்தச் சோதனைச்சாவடியின் இரு பக்கங்களிலும் நிறுத்தப்பட்டு, பிரயாணிகள் சோதனையிடப்பட்டதன் பின்னர் மறுபக்கத்தில் உள்ள வாகனங்களில் ஏறி பிரயாணம் செய்யும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் எடுத்துச் செல்லப்படுகின்ற உற்பத்திப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் என்பனவும் வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு சோதனையிடப்பட்டதன் பின்னர் மறுபக்கத்தில் உள்ள வாகனங்களில் மாற்றி ஏற்றி கொண்டு செல்லப்படும் நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வாகனங்களில் வெடிப்பொருட்கள் மற்றும் கிளேமோர் கண்ணி வெடி குண்டுகள் கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்தும், தம்புள்ளை, கொழும்பு மற்றும் தென்பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்தும், இத்தகைய இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாதுகாப்புத் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.


வர்த்த முதலீடு குறித்து ஆராய இந்திய உயர்தூதுக்குழு இலங்கை வருகை

இந்திய வர்த்தக இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்
இந்திய வர்த்தக இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்

இலங்கையில் இந்திய வர்த்தக முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் குறித்து ஆராய்வதற்காக இந்திய இணைவர்த்தக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையிலான உயர் வர்த்தக தூதுக்குழுவொன்று ஞாயிற்றுகிழமை கொழும்பு வந்தடைந்திருக்கிறது.

சுமார் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இங்கு வந்துள்ள இந்தத் தூதுக்குழு, திங்கட்கிழமை இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் சரத் அமுனுகம, பிரதி அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் முதலீட்டுச் சபையின் உயர்பிரதிநிதிகளுடன் இலங்கையில் இந்திய முதலீட்டிற்கான வாய்ப்புக்கள் குறித்து ஆராயவிருக்கின்றது.

இந்த விஜயம் குறித்து பி.பி.சி தமிழோசைக்கு அளித்த விசேட பேட்டியின்போது கருத்து வெளியிட்ட இந்திய வர்த்தக இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், இந்தியாவின் முக்கிய பல தனியார் அமைப்புக்கள் இலங்கையில் வர்த்தக முதலீடு செய்வதில் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

 


மூதூரில் இருந்து வெளியேறிய மக்களிடம் விரும்பிய இடத்தை தேர்வு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது

இடம்பெயர்ந்த மக்கள்
இடம்பெயர்ந்த மக்கள்

கிழக்கே திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலய பிரதேசத்தில் ஏற்கனவே வசித்து வந்த குடும்பங்களை வேறு இடத்தில் குடியமர்த்துவது என்று அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தின் பேரில் விரும்பிய இடத்தை தெரிவு செய்யுமாறு அக்குடும்பங்களிடம் கேட்கப்பட்டுள்ளது.

சம்பூர் கிழக்கு-மேற்கு, கூனித்தீவு, நவரத்தினபுரம், கடற்கரைச்சேனை மற்றும் கட்டைப்பறிச்சான் வடக்கு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்களிடம் இதற்கான எழுத்து மூல சம்மதம் பிரதேச செயலாளர்களினால் கேட்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பிரதேசத்தில் அரசாங்கத்தினால் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் கிழக்கு புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் எம்.சி.எம்.ஷரீப், ஏற்கனவே அங்கு வாழ்ந்த குடும்பங்களுக்கு பள்ளிக்குடியிருப்பிலும், இறால்குளியிலும் காணி அடையாளம் காணப்பட்டு, அடிப்படை வசதிகளுடன் புதிய குடியிருப்பு வசதிகள் அவர்களின் சம்மதத்துடன் ஏற்படுத்தப்பட்டவிருப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.

இக்கிராமங்களைச் சேர்ந்த 2500 குடும்பங்கள் 2006 ஆம் ஆண்டு நடுப்பகுதி முதல் யுத்த அகதிகளாக இடம்பெயர்ந்து கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களிலும் தங்கியிருக்கின்றனர்.


மருத்துவ வாகனங்களின் போக்குவரத்து அனுமதி கோரி வவுனியா மருத்துவ ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

 

இலங்கையின் வடக்கே வவுனியாவுக்கும் அனுராதபுரத்திற்கும் இடையில் ஏ9 வீதியில் மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த வாகனங்கள், டாக்டர்களின் அலுவலக மற்றும் தனியார் வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவத்றகான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக்கோரி வவுனியா, மன்னார் அரச வைத்தியசாலைகளைச் சேர்ந்த டாக்டர்கள். தாதியர் மற்றும் ஊழியர்கள் இன்று காலை இரண்டு மணித்தியால அடையாள பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

மதவாச்சி சோதனைச்சாவடியில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள் குறித்து தமக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை என தெரிவிக்கும் அரச வைத்தியர்கள், அத்தியாவசிய சேவையாகிய உயிர் காக்கும் வைத்திய சேவையை சீரான முறையில் மேற்கொள்வதற்கு பாதுகாப்பு தரப்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோருகின்றனர்.

இது குறித்து இலங்கை அரச வைத்தியர் சங்கத்தின் மன்னார் பிராந்திய தலைவர் டாக்டர் அரவிந்தன் அவர்கள் தமிழோசைக்குத் தெரிவித்துள்ள கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

இதனிடையே, இலங்கையின் வடக்கே வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இன்று இடம்பெற்ற இரு வேறு கிளெமோர் தாக்குதல்களில் இரு பொலிஸ்காரர்கள் கொல்லப்பட்டதாகவும், ஒரு பொலிஸ்காரர் காயமடைந்ததாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 11 பிப்ரவரி, 2008

வவுனியாவில் கடையடைப்பு

வடக்கில் நடைபெற்ற சில தாக்குதல்கள் மற்றும் ஆட்கடத்தல்கள் ஆகியவற்றைக் கண்டிக்கு முகமாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுமாறு ஒரு அநாமதேய கடிதத்தில் கேட்கப்பட்டதை அடுத்து வவுனியா நகரில் பல கடைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்ததாகவும், எனினும் புளொட் அமைப்பினரின் முயற்சியை அடுத்து கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

Posted in Eelam, Eezham, LTTE, Sri lanka, Srilanka | Leave a Comment »