Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஒக்ரோபர், 2007

New Delhi hosts World Toilet Summit: India’s sanitation struggle

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007

தில்லியில் உலக கழிவறை வசதி மாநாடு துவங்கியது

உலக மக்களுக்கு சுகாதாரமான கழிவறை வசதி வழங்கும் சவாலை எப்படி எதிர்கொள்வது, 2015-ம் ஆண்டில் அனைவருக்கும் சுகாதாரமான கழிவறை வசதி செய்து கொடுப்பது என்று ஐ. நா. மன்றம் நிர்ணயித்துள்ள புத்தாயிரமாண்டின் வளர்ச்சி இலக்கை அடைவது எப்படி என்பது குறித்து விவாதிப்பதற்காக, உலக கழிவறை வசதி மாநாடு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் புதன்கிழமை துவங்கியது.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், சீனா, ரஷ்யா, இலங்கை, இந்தியா உள்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் ஒத்துழைப்புடன், புதுடெல்லியை மையமாகக் கொண்ட, சுலாப் இண்டர்நேஷனல் என்ற தன்னார்வ அமைப்பு இந்த மாநாட்டை நடத்துகிறது.

உலக அளவில், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது எவ்வளவு பெரிய சவாலாக இருக்கிறதோ, அதே அளவுக்கு அனைவருக்கும் சுகாதாரமான கழிப்பறை வசதி செய்து கொடுப்பதும் பெரிய சவாலாக உள்ளது.

உலக மக்கள் தொகையில் 40 சதவீதம், அதாவது 2.6 பில்லியன் மக்கள், கழிவறை வசதி இல்லாமல், திறந்த வெளிகளிலும் சுகாதாரமற்ற இடங்களிலும் தங்கள் இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவில் மட்டும் 700 மில்லியன் மக்கள் முறையான கழிவறை வசதி இல்லாமல் இருக்கிறார்கள்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ போதிய கழிவறை வசதி உள்ள நிலையில், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில்தான் சுகாதாரமான கழிவறை என்பது பெரும் பிரச்சினையாக உள்ளன. ஆனால், வளரும் நாடுகளில் அனைவருக்கும் கழிவறை வசதி செய்து தருவதற்கு போதிய தொழில்நுட்பமும், நிதி ஆதாரமும் பெரும் பிரச்சினையாக உள்ளது.

Posted in Bathrooms, Clean, Conf, Conference, Crap, Dalit, Delhi, Disease, Disposal, Hygiene, hygienic, India, Infections, Ladies, Morning, Oppressed, Pay, Railway, Railways, Restrooms, sanitation, Scarcity, She, Shit, Shulab, Shulabh, squat, struggle, Sulab, Sulabh, Sulabh International, Summit, Toilet, Trains, Urine, Use, Water, Women | Leave a Comment »

Passions Revive Over Spanish Civil War: Vatican Beatifying 498 & Parliament passes law condemning Franco

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007

பிரான்சிஸ்கோ ஆட்சியைக் கண்டிக்கும் தீர்மானம்

பிரான்சிஸ்கோ பிரான்கோ
பிரான்சிஸ்கோ பிரான்கோ

ஸ்பெயினில் கடந்த 1975ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த ராணுவ தளபதி பிரான்சிஸ்கோ பிரான்கோவின் நாற்பது ஆண்டுகால ஆட்சியை அதிகாரபூர்வமாக கண்டிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் ஒன்றை ஸ்பெயின் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

பிரான்கோவின் பாஸிச ஆட்சி என்று குறிப்பிட்டு கண்டிப்பதோடு 1936ஆம் ஆண்டுக்கும், 1939ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கூட்டுப் புதைகுழிகள் தோண்டப்படுவதற்கான முயற்சிகளுக்கு பிராந்திய நிர்வாகங்கள் நிதி வழங்க வேண்டும் என்று உத்தரவிடும் மசோதாவை நாடாளுமன்றம் ஆதரித்து வாக்களித்துள்ளது.

ஜெனரல் பிரான்கோவின் ஆட்சியை குறிக்கும் வகையிலான சிலைகள், பதாகைகள் மற்றும் சின்னங்கள் அனைத்தும் பொது கட்டிடங்களிலுருந்து அகற்றப்படவேண்டும் என்றும் இந்த உத்தரவு கூறுகின்றது.

ஆறிய வடுக்களை மீண்டும் கிளறிவிட்டு சமுதாயத்தை பிளவுபடுத்த பார்க்கிறது சோஷலிஸ அரசு என்று பழமைவாத எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

Posted in Angel Acebes, Angels, Assassin, Assassinations, Atrocities, atrocity, Autocracy, autocrat, Autocratic, Aznar, beatification, Beatify, bishop, Catholic, Catholicsm, CCP, Ceremony, Christ, Christian, Christianity, Church, Civil, clergy, Condemn, Conservative, Conservatives, Coup, Criminal, Cruz Laplana y Laguna, Dictator, Dictators, Dictatorship, executed, executions, Fascism, fascist, Fear, Francisco, Francisco Franco, Franco, Gen. Francisco Franco, General, Germans, Germany, graves, inequality, Jose Maria Aznar, Judges, Jury, Justice, Laguna, Law, Left, legislation, massacre, Military, Militia, NCCP, Oppression, Order, parliament, Passions, PM, Popular Party, Power, President, Rebellion, Regime, Religion, repression, Republicans, Right, Ruler, Russia, sainthood, Saints, Senate, Socialism, Socialist, Soviets, Spain, Spanish, USSR, Vatican, victims, War, Wealth, Zapatero | Leave a Comment »

Thanks to Nandhigram – Dinamani op-ed

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007

நந்திகிராமுக்கு நன்றி!

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்கிற பெயரில், ஏற்றுமதியை மட்டும் கருத்தில்கொண்டு தொடங்கப்படும் தொழிற்சாலைகளுக்கு சில சிறப்பு சலுகைகளை வழங்குவது என்கிற மத்திய வணிகம் மற்றும் தொழில்துறையின் முடிவுக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்புகள் இருந்து வந்தன. வரிச்சலுகை, குறைந்த கட்டணத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகள், தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமான தொழிலாளர் நலச் சட்டங்கள் என்று பல்வேறு சலுகைகளை இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அளிப்பது தேவைதானா என்கிற கேள்வி பரவலாகவே காணப்பட்டது.

ஏதாவது ஒரு குறிப்பிட்ட தொழில் சார்ந்த அத்தனை தொழிற்சாலைகளும் ஒரே இடத்தில் நிறுவப்படுகிற ஏற்பாடுதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். அதாவது, ஜவுளித்துறை சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களில், பஞ்சில் தொடங்கி ரெடிமேட் ஆடைகள் வரை ஜவுளி சம்பந்தப்பட்ட எல்லா தொழிற்சாலைகளும் இருக்கும். இதனால், மதிப்புக் கூட்டுவரியிலிருந்து விலக்குக் கிடைக்கும். வரி பளு மற்றும் போக்குவரத்துச் செலவு இல்லாமல் இருப்பதால் தயாரிக்கப்படும் பொருள்களின் விலை குறைவாக இருக்கும்.

சீனாவில் ஏற்றுமதியை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இந்தியாவில் வேறுவிதமாக உருவாக்கப்பட்டன. மொத்த நிலப்பரப்பில் நாற்பது சதவிகிதம் தொழிற்சாலைகளும், இருபது சதவிகிதம் சிறப்புப் பொருளாதார மண்டல ஊழியர்களின் வசதிக்காக அமைந்த வணிக வளாகங்களும் அமைவது பற்றி யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், மீதமுள்ள நாற்பது சதவிகித இடத்தில் அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டி விற்பனை செய்யும் திட்டம்தான் இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சந்தேகப்பட வைத்துவிட்டது.

தனிநபரின் விளைநிலங்களையும், பரம்பரை பரம்பரையாக இருந்துவந்த இடங்களையும் குறைந்தவிலைக்கு அரசு கையகப்படுத்தி, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் தனியாருக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? ஏற்றுமதியின் மூலம் அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பார்களே என்பதுகூட வருத்தமான விஷயமல்ல. அப்பாவி மக்களின் விளைநிலங்களைக் குறைந்தவிலைக்கு வாங்கி, அடுக்குமாடி வீடுகள் கட்டி அதில் கொள்ளை லாபம் அடிக்க விரும்புகிறார்களே என்பதுதான் எதிர்ப்புக்கான அடிப்படைக் காரணம்.

மேற்கு வங்கம் நந்திகிராமில் நடந்த கலவரமும் துப்பாக்கிச் சூடும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பற்றி அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியின் விளைவாக, ஒரு கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் உறுப்பினர்கள் இப்போது சில பரிந்துரைகளையும் செய்திருக்கின்றனர்.

அதன்படி, முன்பு திட்டமிட்டதுபோல வளர்ச்சித்துறை இயக்குநரின் முழுப்பொறுப்பில் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கும் என்றாலும், தொழிலாளர் நலச் சட்டங்களைப் பொருத்தவரை மாநில அரசின் தொழிலாளர் துறையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மட்டும்தான் எதையும் செய்ய முடியும்.

நாடாளுமன்றக் கமிட்டியின் இன்னொரு பரிந்துரை உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பல்வேறு உயர் நீதிமன்றங்களில் சுமார் 1,254 சிறுதொழில்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுமார் எழுபது அரசு நிறுவனங்கள் பல்வேறு பிரச்னைகளால் மூடிக் கிடக்கின்றன. செயல்படாத பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும் இடங்களையும், தொழிற்பேட்டைகளையும் சிறப்புப் பொருளாதார மண்டலமாக மாற்றுவது குறித்துப் பரிசீலனை செய்ய விழைகிறது நாடாளுமன்றக் கமிட்டியின் பரிந்துரை.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு இடமும் கிடைத்துவிட்டது. தொழிலாளர் நலச் சட்டங்களில் எந்தவித மாற்றங்களையும் செய்ய வேண்டாம். நந்திகிராமில் தங்களது உரிமைக்காகப் போராடியதன் விளைவுதான் இப்போது இந்தப் பிரச்னைக்கு நல்லதொரு முடிவைத் தந்திருக்கிறது. நிச்சயமாக, நன்றி நந்திகிராமத்து ஏழை விவசாயிகளுக்குத்தான்!

————————————————————————————————————————————-

முரண்பாடு தேவையில்லை


சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பொருத்தவரை, மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிலைப்பாட்டை, காங்கிரஸ் கட்சியிலேயே பலர் ஆதரிக்கத் தயாராக இல்லை என்பது தெரிகிறது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் கோவா மாநிலத்தின் தற்போதைய முதல்வரான திகம்பர் காமத், முந்தைய பிரதாப் சிங் ரானே தலைமையிலான காங்கிரஸ் அரசு அனுமதி அளித்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களைக் கலைப்பது என்று முடிவெடுத்திருப்பது அதைத் தெளிவுபடுத்துகிறது.

கோவா மாநிலத்தில் 15 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டு, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் ஒத்துழைப்புடன் மூன்று மண்டலங்களில் பணிகளும் தொடங்கிவிட்டன. சுமார் 500 கோடி ரூபாய் மூலதனம் வர இருப்பதாக சம்பந்தப்பட்டவர்கள் கூறுகின்றனர். 12 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசின் அனுமதி இன்னும் பெறப்படவில்லை என்றாலும் இடம் ஒதுக்கப்பட்டு விட்டது.

ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம், மருந்து தயாரிப்புக்காக உருவாக்கப்படுகிறது. இந்த மண்டலத்தில் சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளுக்கான அதிநவீன இயந்திரங்களையும் இறக்குமதி செய்து விட்டோம் என்று பரிதாபக் குரல் கொடுக்கின்றன. சட்டப்படி, அனுமதி பெற்ற மூன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும் நிராகரிக்கும் உரிமை மாநில அரசுக்குக் கிடையாது என்கிறார்கள் இந்த உரிமையாளர்கள்.

மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், கோவா என்று பல மாநிலங்களில் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் பொதுமக்களே போர்க்கொடி தூக்குகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. பெரிய அளவில் தனியாரிடம் இடங்களை வாங்கி இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவது என்பது இயலாத விஷயம். காரணம், ஒரே இடத்தில் 1000 ஏக்கர் இடம் கிடைப்பதில்லை. இந்த விஷயத்தில் அரசின் தலையீடு நிச்சயம் தேவைப்படுகிறது.

அதேநேரத்தில், தனியார் லாபம் சம்பாதிக்க ஏழை விவசாயிகள் தங்களது வாழ்வாதாரங்களை ஏன் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. அதுமட்டுமல்ல, இதற்கு ஏன் நிலத்தைக் குறைந்த விலைக்கு அரசு கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இல்லாமல், சிறப்புச் சலுகைகள் பெறாமல், இந்தத் தயாரிப்பாளர்கள் ஏன் உலகச் சந்தையில் போட்டிபோட முடியாது என்கிற கேள்விக்கும் அவர்கள் தரப்பில் சரியான பதில் தரப்படுவதில்லை. சீனாவுடன் போட்டி போட வேண்டும் என்று பயமுறுத்துகிறார்களே தவிர அதற்குச் சரியான காரணங்கள் தருவதில்லை.

போதிய மகசூல் தராத விளைநிலங்களும், தண்ணீர் இல்லாத விவசாய நிலங்களும் தொழில் மண்டலங்களாக மாறுவது தவறு என்று சொல்லிவிட முடியாது. நமது உணவு உற்பத்தி பாதிக்கப்படாத வரையில், தன்னிறைவுக்குப் பங்கம் ஏற்படாதவகையில் இந்த விவசாயத்திற்குப் பயன்படாத நிலங்கள் தொழில் மண்டலங்களாகவோ, அறுபதுகளில் செய்ததுபோலத் தொழிற்பேட்டைகளாகவோ மாற்றப்படுவதில் தவறில்லை. ஆனால், அந்தத் தொழில் மண்டலங்கள் தனியாருடையதாக இல்லாமல், அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதும், அதில் தங்களது வாழ்வாதாரங்களை இழந்த நிலத்தின் சொந்தக்காரர்களுக்கும், அந்த நிலத்தை நம்பி வாழ்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் அங்கே நிறுவப்படும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிப்பது அரசின் கடமை.

தெளிவான கொள்கையோ, தொலைநோக்குப் பார்வையோ இல்லாத நிலைமை, சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பொருத்தவரை தொடர்வது நல்லதல்ல. ஆளும் கூட்டணிக்குள்ளும், காங்கிரஸ் கட்சிக்குள்ளும் காணப்படும் முரண்பாடும், தெளிவின்மையும் மக்கள் மத்தியில் குழப்பத்தையும், தேவையற்ற பயத்தையும் ஏற்படுத்துவதுதான் மிச்சம். தொழில் வளமும், பொருளாதார முன்னேற்றமும் அடிப்படை இந்தியனின் வயிற்றில் அடிப்பதாக அமைந்தால் அதனால் என்ன பயன்?

சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பொருத்தவரை, தேவை தெளிவும், தொலைநோக்குப் பார்வையும், மக்களின் உணர்வுகளை மதிக்கும் மனோபாவமும். அரசிடம் இவை காணப்படவில்லை என்பதற்கு உதாரணம்தான் கோவாவில் ஏற்பட்டிருக்கும் குழப்பம்!

Posted in Agriculture, Assets, Bengal, China, Clothes, Commerce, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Concessions, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Economy, Employment, Exports, Farmer, Farmers, Farming, Garments, Goa, HR, Industry, IT, Jobs, Knit, Knitwear, Land, maharashtra, Mamta, Mamtha, Manufacturing, Nandhigram, Nandigram, Nanthigram, Op-Ed, peasant, peasants, Property, Resources, Sale, Sector, SEZ, States, Tariffs, Tax, Textiles, VAT, WB, workers | Leave a Comment »

Tehelka on Gujarat riots: Neerja Chowdhury – Sting, Expose, Revelations

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007

தெஹல்கா புலனாய்வுக்கு அப்பால்…!

நீரஜா சௌத்ரி

குஜராத்தில் 2002-ல் நடந்த கலவரங்கள் குறித்து ஏற்கெனவே இருந்துவந்த சந்தேகங்களை தெஹல்காவின் ரகசியப் புலனாய்வு நடவடிக்கை நிரூபித்திருப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கு அப்பாலும் பல விவாதங்களை எழுப்பியிருக்கிறது.

கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து தன்னெழுச்சியாக நடைபெற்றதே அந்தக் கலவரம் என்று பாரதிய ஜனதா கட்சி கூறிவந்ததை அது பொய்யாக்கியிருக்கிறது. பஜ்ரங்க தளம், விசுவ ஹிந்து பரிஷத், பாஜக ஆகியவற்றின் உறுப்பினர்கள் திட்டமிட்டு அரங்கேற்றியதே அப் படுகொலைகள் என்பதை அந்த ரகசியப் புலனாய்வு டேப்புகள் அம்பலப்படுத்தி இருக்கின்றன.

அதில் மிக முக்கியமானது என்னவென்றால், அந்தக் குற்றச்செயல்களைச் செய்தவர்களுக்கு முதல்வர் நரேந்திர மோடியின் ஊக்குவிப்பும் ஆதரவும் இருந்தது என்பதை அம்பலப்படுத்தி இருப்பதுதான். அக் குற்றங்களைச் செய்தவர்களே அவற்றை ஒப்புக்கொண்டு இருப்பது இதுதான் முதல் முறை.

தன்னை ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஹிந்துத்துவ ஆதரவாளர் என்று கூறிக்கொண்டு சென்ற, அன்னியரான தெஹல்கா நிருபரிடம் இத்தனை பேர் தாம் அக் குற்றங்களில் சம்பந்தப்பட்டு இருப்பதைக் கூறியிருப்பதிலிருந்தே, அவர்களை யாரும் தொட முடியாது என்ற தைரியம் அவர்களுக்கு இருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஒருவர் தமது இயக்கத்தின் எவ்வளவு தீவிர ஆதரவாளராக இருந்தபோதிலும், எந்த அரசியல்வாதியும் அரசியல் கட்சி ஊழியர்களும் தமது குற்றங்களைப் பற்றி அவ்வளவு சாதாரணமாக அவரிடம் கூறிவிட மாட்டார்கள். ஆனால், தெஹல்கா நிருபரிடம் தமது செயல்களைப் பற்றிப் பெருமையாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள். “முஸ்லிம் வெறுப்பு’ என்னும் செயல்திட்டத்தின் மூலமாகத்தான் குஜராத்தில் அரசியல் வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள் என்று தெஹல்கா நிருபர் கூறியிருப்பதை நிரூபிப்பதாக அது இருக்கிறது.

மோடிக்கு “விசா’ அனுமதி வழங்குவதற்கு அமெரிக்கா மறுத்த பிறகும், மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்த பிறகும்தான் தனது பாதையை அவர் மாற்றிக்கொண்டிருக்கிறார். அதற்குப் பிறகு, “வளர்ச்சி’யில் அக்கறை கொண்டவராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் மோடி. ஆனால், கடந்த காலச் செயல்கள் அவரைத் துரத்திக்கொண்டே இருக்கின்றன. அதனால் ஏற்பட்ட விரக்தி வெளிப்பாடுதான், கரண் தாப்பருக்கு அளித்துக்கொண்டு இருந்த பேட்டியிலிருந்து அவர் பாதியில் வெளியேறிய செயல்.

மோடியின் சொந்தக் கட்சியோ அவரைக் கண்டிக்க விரும்பவுமில்லை; கட்சியால் கண்டிக்க முடியவுமில்லை. 2002-ல் குஜராத்தில் நடந்த சம்பவங்களால் வேதனைக்கு உள்ளான அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், “ராஜ தர்ம’த்தைக் கடைப்பிடிக்காததற்காக மோடியை லேசாகக் கடிந்துகொண்டார். ஆனால் கோவாவில் அவர் இருந்தபோது, கட்சியிலிருந்து அவருக்கு வந்த கடுமையான நெருக்குதல்கள் காரணமாக, தனது நிலையை அவசரமாக மாற்றிக்கொண்டுவிட்டார் அவர்.

குஜராத் கலவரங்களுக்குப் பிறகுதான் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மோடி என்று கூறி, தெஹல்கா ரகசியப் புலனாய்வை மறுக்கின்றனர் பாஜக தலைவர்கள். அப்படிப் பார்த்தால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள “கறைபடிந்த’ அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கேட்டிருக்கவே கூடாது. எத்தனையோ குற்றங்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி.யான சகாபுதீனைப் போன்ற ஒருவர், தேர்தலில் வெற்றிபெற்றுவிட்ட ஒரே காரணத்தால் புனிதராக ஆகிவிடுவாரா? கடந்த காலக் குற்றமோ, நிகழ்காலக் குற்றமோ எதுவாக இருந்தாலும், தேர்தல் வெற்றியானது அதிலிருந்து ஒருவருக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாது.

காங்கிரஸ் கட்சிக்கும் தெஹல்காவுக்கும் இடையே ரகசிய கூட்டு இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறது பாஜக. இவ்வாறு விட்டேத்தியாகக் கூறியிருப்பதிலிருந்தே மோடி மீது எவ்வித நடவடிக்கை எடுக்கும் திட்டமும் அக் கட்சிக்கு இல்லை என்பது தெளிவாகிவிட்டது.

என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறது காங்கிரஸ். மோடிக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அவரது அனுமதி தேவை; தெஹல்கா ரகசியப் புலனாய்வின் அம்பலங்கள் குறித்து சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டுமென்றாலும் மோடியின் ஒப்புதல் தேவை.

உண்மை என்னவென்றால், குஜராத்தில் இந்துக்களையும் முஸ்லிம்களையும் மத அடிப்படையில் இருகூறாக அணிதிரளச் செய்துவிடக்கூடிய எதையும் செய்துவிடக் கூடாது என்ற கவலையில் தத்தளிக்கிறது காங்கிரஸ். ஏனென்றால், அது மீண்டும் மோடிக்குச் சாதகமாகப் போய்விடும்.

மத்தியில் 2004-ல் இருந்து ஆட்சியில் இருக்கிறது காங்கிரஸ். ஆனால், 2002 கலவரத்தின்போது, அக் கட்சியின் முன்னாள் எம்.பி.யான ஈசான் ஜாப்ரி உயிருடன் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றிகூட உருப்படியான எந்த நடவடிக்கையையும் அது எடுக்கவில்லை. “வளர்ச்சி’ என்னும் கோஷத்தை மோடி சுவீகரித்துக்கொள்ள விட்டுவிட்டது காங்கிரஸ். பயங்கரவாத அச்சுறுத்தலால் குஜராத்தி இந்து மத்தியதர மக்களிடம் ஏற்பட்டிருக்கும் அச்சத்தைப் பயன்படுத்தி, கடந்த 4 ஆண்டுகளில், தமது தீவிர இந்துத்துவா அடித்தளத்தை விரிவுபடுத்தியதுடன், இன்றைய உலகமயமாக்கச் சூழலில் முன்னேற வேண்டும், வெற்றிபெற வேண்டும் என்னும் அவர்களது ஆசைகளை நிறைவேற்றும் வகையில், “வளமை மிக்க குஜராத்’ என்ற கோஷத்தைக் கையில் எடுத்துக்கொண்டுவிட்டார் மோடி. வெளிநாடுவாழ் இந்தியர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கும் இந்தப் பிரிவினர்தான் அவருக்கு இருக்கும் ஆதரவின் அடிப்படையாகும்.

மோடியை எதிர்கொள்ள சரியான திட்டமும் உறுதியும் இல்லாமல் திணறிக்கொண்டிருக்கிறது காங்கிரஸ். பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர், முஸ்லிம்கள் ஆகியவை ஓரணியில் திரட்டும் ஒரு திட்டத்தை ஏற்கெனவே காங்கிரஸ் வகுத்தது. அதோடு, ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரையும் அணிதிரட்டியிருந்தால், மோடிக்குச் சிறந்த மாற்று சக்தியாக அது உருவாகி இருக்கக்கூடும்.

குஜராத் தேர்தல் களத்தில் மாயாவதி போன்றோரும் நுழைந்துவிட்டதால், காங்கிரஸ் இன்னும் தாமதித்துக்கொண்டு இருக்க முடியாது.

தெஹல்கா அம்பலப்படுத்தி இருக்கும் விஷயங்கள், இந்தியாவின் மற்ற பகுதியில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்திலிருந்து குஜராத்தில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் வேறாகவும் இருக்கக்கூடும்.

குஜராத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸýக்கு மிக முக்கியம். இடதுசாரிகளின் ஆதரவை உதறிவிட்டு மக்களவைக்கு இடைத்தேர்தலைச் சந்திக்கலாமா என்பது குறித்து குஜராத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் முடிவுசெய்யக்கூடும்.

அதிகாரத்தைக் கைப்பற்ற மோடி கையாண்டதைப்போல, ஒரு குறிப்பிட்ட பிரிவினரை, ஒரு குறிப்பிட்ட சமூகத்தவரை திட்டமிட்டுக் குறிவைத்துத் தாக்குவதன் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு, தண்டனையிலிருந்தும் தப்பித்துக்கொள்ளும் வழியை மற்ற மாநில முதல்வர்களும் கையாளத் தொடங்கினால், அதை எப்படி தடுப்பது? மொத்த மக்களில் 50 சதவிகிதத்தினர்தான் வாக்களிக்க வருகின்றனர். அதில் 35%-லிருந்து 40% வாக்குகள் கிடைத்தாலே வெற்றிபெற்றுவிட முடிகிறது. ஏதாவது ஓர் உணர்ச்சிகரமான பிரச்னையை முன்வைத்து, மொத்த வாக்காளர்களில் 20 சதவிகிதத்துக்குக் குறைவானவர்களைக் கவர்ந்துவிட்டாலே வெற்றிபெற்றுவிட முடியும் என்ற நிலை.

விசாரணையில் இருக்கும் பல்வேறு வழக்குகளில் சாட்சி கூறவிருக்கும் 200 பேரின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. அது மட்டுமல்ல; இந்திய அரசின் அதிகாரம், அரசியல் சட்டத்தின் புனிதத்தன்மை, கடமைப் பொறுப்பு, குடிமக்களைக் காப்பதில் சட்டத்தின் பங்கு… என, ஜனநாயகம் அர்த்தமுள்ளதாக இருப்பதற்கு அவசியமான அனைத்துமே கேள்விக்குறியாகி இருக்கிறது.

தெஹல்கா புலனாய்வு ஒளிப்பதிவுகளைப் பார்த்தவர்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் நடைபெற்ற புனிதப் போர்கள் நினைவுக்கு வந்திருக்கும். ஆனால், இது 2002-ல் இந்தியாவில் நடந்திருக்கிறது. எனினும், அச் செயல்களில் ஈடுபட்டோர் அதைப் பெருமையாகப் பேசிக்கொண்டு, தண்டனை அனுபவிக்காமல் இன்னும் பகிரங்கமாக நடமாடிக்கொண்டிருக்கின்றனர். தெஹல்கா புலனாய்வு அம்பலப்படுத்தி இருக்கும் விஷயங்கள் குறித்து, குறைந்தபட்சம் விரிவான விசாரணையாவது நடத்தப்பட வேண்டும்.

—————————————————————————————————————–

மோடி வெற்றியின் எதிரொலிகள்

நீரஜா சௌத்ரி

குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், யாராலும் தோற்கடிக்க முடியாதவராக உருவெடுத்துவிட்டார் நரேந்திர மோடி.

பாரதிய ஜனதா கட்சியில் அவர் மீது அதிருப்தி நிலவியபோதிலும், ஆர்எஸ்எஸ், விஎச்பி ஆகியவற்றில் ஒரு பகுதியினர் அவருக்கு எதிராகப் பணியாற்றியபோதிலும், குஜராத்தின் சாதுக்களில் ஒரு பிரிவினர் அவரை எதிர்த்தபோதிலும் அவை அனைத்தையும் சமாளித்து, அதோடு அதிகாரத்திலிருக்கும் கட்சிக்கு எதிராக நிலவக்கூடிய இயல்பான அதிருப்தியையும் முறியடித்து மகத்தான வெற்றிபெற்றிருக்கிறார் நரேந்திர மோடி.

2002-ல் இருந்த ஆதரவை ஏறக்குறைய தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் அவர். கட்சியின் செல்வாக்கையும் கடந்து மாபெரும் தலைவராகிவிட்டார் மோடி. கடந்த 12 ஆண்டுகளில் அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் பாஜகவுக்குக் கிடைத்துவந்த 45 சதவீத மக்களின் ஆதரவை மோடி என்ற தலைவருக்கான வாக்குகளாக மாற்றிவிட்டார் அவர்.

1971-ல் காங்கிரஸ் கட்சியின் சிண்டிகேட் பிரிவுத் தலைவர்களைப் புறந்தள்ளி, துர்க்கையாக உருவான இந்திரா காந்தியை நினைவூட்டுகிறது 2007-ம் ஆண்டின் குஜராத். 2000-மாவது ஆண்டு பிகார் தேர்தலில் அனைத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி, லாலு பிரசாத் பெற்ற வெற்றியையும் ஒத்திருக்கிறது மோடியின் வெற்றி.

மோடியேகூட இந்த வெற்றியை எதிர்பார்த்திருக்க மாட்டோரோ என்று தோன்றுகிறது. தில்லியில் நடந்த தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டபோது அவரது நடவடிக்கைகள் அவ்வளவு உற்சாகமாகக் காணப்படவில்லை என்று அவரைச் சந்தித்தவர்கள் கூறினர். “”எனது கட்சி எனக்கு எதிராகப் போரிட்டபோதிலும் என்னால் முடிந்த அளவுக்கு உழைத்திருக்கிறேன்” என்று, தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு 3 நாள்களுக்குமுன் மத்திய அமைச்சர் ஒருவரிடம் அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.

குஜராத் தேர்தல் முடிவுகளின் விளைவுகள் காந்திநகர், வடோதரா, ராஜ்கோட், மேஹ்சானாவையும் கடந்து எதிரொலிக்கும் என்பது தேர்தல் பிரசாரம் தொடங்கிய நாளில் இருந்தே மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுவந்தது. இந்தத் தேர்தலானது இரு பிரதான கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், மோடி மற்றும் எல்.கே. அத்வானி ஆகிய தனிப்பட்ட இரு தலைவர்களுக்கும் முக்கியமானதாக அமைந்துவிட்டது.

மக்களவைக்கு இடைத்தேர்தலைச் சந்திக்கலாமா என்னும் காங்கிரஸ் கட்சியின் யோசனையைக் கிடப்பில் போடச் செய்துவிட்டது, குஜராத்தில் அக் கட்சிக்குக் கிடைத்த தோல்வி.

மனந்தளர்ந்து போயிருந்த பாஜக தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கக்கூடியதாக குஜராத் வெற்றி அமைந்திருக்கும் நேரத்தில், தில்லியில் தனது ஆட்சியைப் பாதியில் முடிவுக்குக் கொண்டுவரும் அறிவீனத்தில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் ஈடுபடாது. காங்கிரஸýக்கு மற்றொரு அபாய எச்சரிக்கை மாயாவதியிடமிருந்து வந்துகொண்டிருக்கிறது. குஜராத்தில் அதை காங்கிரஸ் சந்திக்க வேண்டியிருந்தது. விரைவிலேயே கர்நாடகத்திலும் தில்லியிலும் தேர்தல் வரவிருக்கிறது. அங்கும் காங்கிரஸýக்குத் தொல்லையாகவே அவர் இருக்கப் போகிறார்.

குஜராத் தேர்தல் முடிவின் எதிரொலி பக்கத்து மாநிலமான மகாராஷ்டிரத்திலும் கொஞ்சம் கேட்கக்கூடும். அங்கு கட்சி அணிகளிடையே கட்டுக்கோப்புக் குலைந்திருந்தபோதிலும், பாஜகவும் சிவசேனையும் ஒன்றுபட்டு உழைக்கும்பட்சத்தில் குஜராத் வெற்றியானது அவற்றுக்குப் பெருமளவில் கைகொடுக்கக்கூடும்.

நரேந்திர மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறார் என்ற தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வந்துகொண்டிருந்த அதே நேரத்தில் மும்பையில் சிவசேனைத் தலைவர் பால்தாக்கரேவைச் சந்திக்கத் திட்டமிட்டுக்கொண்டிருந்தார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார். இதற்குப் பல வகையான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

மறுபுறம், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டின் கதியும் மிகவும் சந்தேகத்துக்கு இடமாகிவிட்டது. 2008-ல் தேர்தல் வரக்கூடும் என தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று இடதுசாரிகள் ஏற்கெனவே அறிவித்துவிட்டனர். காங்கிரஸ் கட்சியும் அணுசக்தி உடன்பாட்டுக்காக ஆட்சியைத் தியாகம் செய்யும் அளவுக்குச் செல்வதற்கு வாய்ப்பில்லை. எனவே, எந்தவிதமான உருப்படியான முடிவுக்கும் வராமல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் காங்கிரஸýம் இடதுசாரிகளும் பேசிக்கொண்டே காலம் கடத்துவர் என எதிர்பார்க்கலாம்.

அமெரிக்காவில் ஆட்சியைப் பிடித்தால், தாங்களும் இந்திய- அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை ஆதரிப்போம் என்று ஜனநாயகக் கட்சியும் அறிவித்திருக்கிறது. எனவே, ஜார்ஜ் புஷ்-மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்திலேயே அந்த உடன்பாடு செயலுக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

குஜராத்தில் பாஜக பெற்ற வெற்றியானது, அண்மைக் காலமாக உரசல் போக்கில் இருந்த இடதுசாரிகளையும் காங்கிரûஸயும் கைகோத்துக்கொள்ளச் செய்துவிடக்கூடும். பலம் மிக்க காங்கிரûஸவிட பலவீனமான காங்கிரஸýடன் அரசியல் உறவு வைத்துக்கொள்ளவே இடதுசாரிகள் விரும்பக்கூடும். ஆனால், இப்போது பாஜக புத்துயிர் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகிவரும் சூழலில், காங்கிரûஸ மேலும் பலவீனப்படுத்த இடதுசாரிகள் விரும்ப மாட்டார்கள். ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி என அழைக்கப்படும் 3-வது அணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அளிக்கும் ஆதரவிலும் குஜராத் தேர்தல் முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

ஹிந்துத்துவாவின் புதிய வெற்றிச் சின்னமாக நரேந்திர மோடி அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்திருப்பதானது, மத்தியில் அத்வானியின் தலைமைப் பதவிக்கு ஒரு சவாலாக விளங்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது. உடனடியாகவோ, 2009-ம் ஆண்டிலோ அத்தகைய நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

ஹிந்துத்துவா, பொருளாதார வளர்ச்சி, பலமும் ஆதிக்கமும் மிக்க தலைமை ஆகியவற்றைக் குழைத்து மோடி உருவாக்கி இருக்கும் புதிய அரசியல் பாதையை, பின்பற்ற வேண்டிய முன்னுதாரணமாக பாஜக வரித்துக்கொள்ளக்கூடும். எனினும் குஜராத்துக்கு வெளியே தனக்கு ஆதரவைத் திரட்டுவது மோடிக்கு சவாலாகவே இருக்கும். அடுத்த தலைமுறைத் தலைவர்களில் அருண் ஜேட்லியைத் தவிர அவரை ஆதரிப்போர் யாருமில்லை.

குஜராத்தில் அசைக்க முடியாத வெற்றியை மோடி பெற்றிருப்பதால் அவருக்கு எதிராக யாரும் இப்போதைக்குக் குரல் எழுப்ப மாட்டார்கள். தேர்தல் வெற்றிக்கு முன்பேகூட, கேசுபாய் படேல், கான்ஷிராம் ராணா போன்ற தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு கட்சித் தலைமையை நோட்டீஸ் அனுப்ப வைத்தவர் மோடி.

ஹிந்துத்துவாவின் வெற்றிச் சின்னமாக மோடி உருவெடுத்திருப்பதால், ஆர்எஸ்எஸ்ஸýம் விஎச்பியும்கூட அவருடன் சமாதானம் செய்துகொள்ள முன்வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படத் தக்க தலைவராக உருவாவதும், பாஜக கூட்டணிக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளத் தக்க தலைவராக உருவாவதும்தான் இப்போது நரேந்திர மோடிக்கு முன்னுள்ள சவால்கள். அது அவ்வளவு எளிதானதல்ல. அதனால்தான் தனது 3-வது பதவிக் காலத்தில் பலதரப்பட்டோரையும் அரவணைத்துக் கொள்ளக்கூடிய, நிதானப் போக்கு கொண்ட, அதாவது “காங்கிரஸ் முகம்’ கொண்ட தலைவராகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ள அவர் முயற்சி செய்யக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தேசிய அரசியலில் குதிக்க சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பார் மோடி. 2009-ல் மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கிடைக்கும்பட்சத்தில் அதை தேசிய அரசியலில் நுழைவதற்கான வாய்ப்பாக மோடி பயன்படுத்திக்கொள்ளக்கூடும்.

எனவே, இப்போதைக்கு தமக்கு குஜராத்தில் கிடைத்திருக்கும் ஆதரவை உறுதிப்படுத்திக்கொள்ளும் முயற்சியிலும் அதன் முலம் குஜராத்திலிருந்து தனது ஆதரவாளர்கள் பலர் எம்.பி.க்களாவதை உத்தரவாதப்படுத்திக்கொள்ளும் முயற்சியிலும் அவர் ஈடுபடக்கூடும்.

2004 மக்களவைத் தேர்தலின்போது குஜராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் 92-ல் பாஜகவைவிட கூடுதல் வாக்குகளை காங்கிரஸ் பெற்றிருந்தது. ஆனால், 90 தொகுதிகளில்தான் காங்கிரûஸவிட கூடுதல் வாக்குகளை பாஜக பெற்றிருந்தது. ஆனால், அப்போது நரேந்திர மோடி அரசின் மீது அந்த மாநில ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினர் மத்தியில் நிலவிய அதிருப்தியைப் பயன்படுத்திக்கொள்ள காங்கிரஸ் தவறிவிட்டது. ஆனால், அத் தேர்தல் முடிவுகளின் அறிகுறிகளை உணர்ந்துகொண்ட மோடியோ, அதைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வெற்றிக் கனியைப் பறித்துவிட்டார்.

அண்மையில் பாஜகவால், பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் எல்.கே. அத்வானியைப் பொருத்தவரை, குஜராத் வெற்றியானது இருபுறமும் கூர்மையான வாளுக்கு ஒப்பாகும். அத் தேர்தலில் மோடி தோற்றிருந்தால், அத்வானியின் தலைமையை ஆதரிப்போரின் கரங்களைப் பலப்படுத்துவதாக அது இருந்திருக்கும்.

மோடியின் மகத்தான வெற்றியானது, அவரை அத்வானி சார்ந்திருக்க வேண்டிய நிலையை உருவாக்கக்கூடும். நடந்து முடிந்த தேர்தலில் மோடியின் விருப்பப்படிதான் கட்சி வேட்பாளர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டது. 2009 மக்களவைத் தேர்தலிலும் தனது விருப்பப்படியே தேர்தல் டிக்கெட் வழங்கப்படுவதை அவர் உறுதிசெய்துவிடுவார்.

பாரதிய ஜனதா கட்சிக்கும்கூட மோடியின் வெற்றியானது கசப்பும் இனிப்பும் கலந்த மாத்திரை போன்றுதான் இருக்கிறது. அடுத்த ஆண்டு சட்ட மன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் ஹிந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த, சோர்வுற்றிருந்த கட்சித் தொண்டர்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது குஜராத் தேர்தல் வெற்றி.

அதே நேரத்தில், தனியொருவரின் தலைமைக்குப் பதில் கூட்டுத் தலைமையை வலியுறுத்திவரும் கட்சிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் நரேந்திர மோடியின் எழுச்சியானது, ஏற்றுக்கொண்டாக வேண்டிய புதிய பரிமாணமாக அமைந்துவிட்டது.

சுருக்கமாக கூறவேண்டுமானால் இந்திய அரசியல் வானில் ஒரு புதிய மக்கள் தலைவர் குஜராத்தில் இருந்து உருவாகி வருகிறார் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.


மோடியின் வெற்றியும்- சோவின் துள்ளலும்!Viduthalai Editorial

குஜராத்தில் நரேந்திர மோடியின் தலைமையில் பா.ஜ.க., ஆட்சி அமைந்துவிட்டது. நரேந்திர மோடி தான் வெற்றிக்குக் காரணம். நரேந்திர மோடியின் நேர்மையும், நல்லாட்சியும் தான் இந்த வெற்றிக்குக் காரணம்.
சோனியா தாக்குதல், பிரதமர் பிரச்சாரம், வெளியேறிய பா.ஜ.க.,வினர், டெகல்கா விவகாரம் பத்திரிகைகள் எதிர்ப்பு, டெலிவிஷன்கள் கண்டனம், ஜாதிப் பிளவு – முயற்சி இவற்றை எல்லாம் மீறி மோடி வெற்றி பெற்றுள்ளார் என்று அட்டைப் படத்திலிருந்து தலையங்கம் வரை தீட்டி திருவாளர் சோ ராமசாமி துள்ளிக் குதிக்கிறார்.
நீரோ மன்னன் என்று இந்திய உச்சநீதிமன்றம் எந்த அர்த்தத்தில் விமர்சனம் செய்தது என்பதுபற்றி எல்லாம் அவருக்குக் கவலையில்லை. ஒரு தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதால், அவர் ஆட்சியைப் பயன்படுத்தி சிறு பான்மை மக்களை நரவேட்டையாடிய கொடுமை எல்லாம் சரியானதுதான் என்று திருவாளர் சோ. ராமசாமி சொல்ல வருகிறார் போலும்.

இதன்மூலம், சிறுபான்மை மக்களைப் படுகொலை செய்வது சரிதான் என்ற உற்சாகத்தை இந்து வெறியர் களுக்கு அவர் ஊட்ட முனைகிறார் என்று கருதலாமா?

இந்தியாவில், மதத்தின் அடிப்படையில் வாக்கு வங்கி களைப் பிரித்துவிட்டால் என்ன அக்கிரமம், கொடூரமான – காட்டுவிலங்காண்டித்தனமான முறையில் செயல்பட்டாலும், வெற்றி கிடைக்கும் – அந்த வழியை நரேந்திர மோடி பின் பற்றி வெற்றி பெற்றுவிட்டார். அந்த நிலை இந்தியா முழு வதும் புயல் வேகத்தில் பரவட்டும்; ஒவ்வொரு மாநிலத்திலும் மதக் கலவரத்தை நடத்தினால்தான் வாக்கு வங்கிகளை இரு கூறுகளாகப் பிரித்து குளிர்காயலாம் என்று திருவாளர் சோ எழுதுவதை நிதானமாகக் கவனிக்கத் தவறக்கூடாது. தொடக்க முதலே நரேந்திர மோடியின் பக்கம் நின்று அவருக்குத் தொடர்ந்து சோ பராக்குக் கூவுவது இந்த எண்ணத்தின் அடிப்படையில்தான்.

பா.ஜ.க.,வின் செயற் குழுவில் அவர் பெயர் இல்லை என்ற போது கடுமையாக பா.ஜ.க.,வின் தலைமையைச் சாடி தலையங்கம் தீட்டிய பார்ப்பனர் இவர் என்பதை நினைவுகூர்ந்தால், இவரும் இன்னொரு வகை யிலான நரவேட்டை நரேந்திர மோடியின் மறுபதிப்புதான் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

டெகல்கா படம் பிடித்து அதிகாரப்பூர்வமாக ஆதாரப்பூர்வ மாக வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததே – அவற்றை மோடியால் மறுக்க முடிந்ததா? மக்கள் வாக்களித்து முடிவு செய்கின்ற தீர்ப்பா இது? சொந்த கட்சி சட்டமன்ற உறுப் பினர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தனரே – அவை எல்லாம் இல்லாமல் போய்விடுமா?

ஆட்சியின் சிறப்பைப்பற்றியெல்லாம் ஆகா ஓகோ என்று எழுதித் தள்ளியிருக்கிறார். கடந்த அய்ந்தாண்டுகளில் 500 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது இந்த மோடி ஆளும் குஜராத்தில்தானே?

அய்ந்து ஆண்டுகாலம் அகதிகள் முகாம்களில் சிறு பான்மையினர் இருக்கின்றனர் என்றால், இதன் பொருள் என்ன? பாசிச ஆட்சி என்றுதானே கருதவேண்டும்.

குஜராத் மாநிலத்தில் சாலைகளும், விளக்குகளும், வசதி களும் இந்துக்கள் வாழும் தெருக்களில் மட்டும்தான்; சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகள் எந்த நிலையில் உள்ளன என்பதை தொலைக்காட்சிகளே படம் எடுத்துக் காட்டினவே – மறுக்க முடியுமா?

படுகொலைகளையும், கொள்ளைகளையும் நியாயப் படுத்த தேர்தல் ஒன்றுதான் சரியான வழி – நீதிமன்ற முறை என்ற ஒன்று கூடாது என்று கூறப் போகிறதா இந்தக் கூட்டம்?

இதற்கு முன் தேர்தல் வெற்றி பெற்றவர்களையும், கட்சி களையும் – நரேந்திர மோடி வெற்றியின் கண்ணோட்டத்தில் சோ விமர்சித்ததுண்டா?

அடிப்படை ஆர்.எஸ்.எஸ்.காரரான ஒரு பார்ப்பனரிட மிருந்து வேறு வகையாக எதிர்பார்க்க முடியாதுதான்!

————————————————————————————————————————-
மகேசன் தீர்ப்பு
Dinamani Editorial

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சியையும், இன்னும் சிலருக்கு மகிழ்ச்சியையும், பலருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. முதல்வர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக முதல்வராகிறார் என்பதும், தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதும் சிலரால் ஜீரணிக்க முடியாத விஷயமாக இருந்தாலும், குஜராத் மக்களைப் பொருத்தவரை அவர்களுக்கு ஏற்புடைய தீர்ப்பு என்பதால் வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்.

தீர்ப்பு தவறாகிவிட்டது என்றும், மக்கள் முட்டாள்கள் என்றும் கூறுபவர்கள் மக்களாட்சித் தத்துவத்தில் நம்பிக்கையற்றவர்கள் என்றுதான் கூற வேண்டும். தங்களுக்கு சாதகமான தீர்ப்பு தரப்படும்போது வரவேற்பதும், பாதகமான தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் சரியான அணுகுமுறையாகாது. குஜராத் மக்களின் நன்மதிப்பை நரேந்திர மோடி பெற்றிருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அதைத்தான் இந்தத் தேர்தல் நிரூபித்திருக்கிறது.

ஒருவகையில் பார்த்தால், தமிழகத்தில் ஜெயலலிதாவால் செய்ய முடியாத சாதனையை, குஜராத்தில் நரேந்திர மோடி செய்து காட்டியிருக்கிறார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அத்தனை சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவிய அதிமுக, நடிகர் விஜயகாந்தின் தேமுதிக களத்தில் இறங்காமல் இருந்திருந்தால் ஒருவேளை நரேந்திர மோடி செய்து காட்டியிருக்கும் சாதனையைச் செய்திருக்குமோ என்னவோ?

2004 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, குஜராத்திலுள்ள 180 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 91 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி பாஜகவைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தது. நரேந்திர மோடியின் இறங்கு முகம் தொடங்கிவிட்டது என்று அரசியல் நோக்கர்கள் கணித்தது அதனால்தான். அதே நிலை தொடர்ந்திருந்தால் நிச்சயமாகக் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கும். ஆனால், தனது செல்வாக்குச் சரிவை நரேந்திர மோடி தடுத்து நிறுத்தியது மட்டுமல்ல, மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற முடிந்தது என்றால் அது அரசியலில் ஒரு மிகப்பெரிய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தவகையில் நரேந்திர மோடி என்கிற அரசியல் ராஜதந்திரியைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

நரேந்திர மோடியின் வெற்றிக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவருக்கு நிகரான செல்வாக்குடைய தலைவர் காங்கிரஸ் கட்சியில் இல்லை என்பதும், நரேந்திர மோடியின் நிர்வாகத்தில் குஜராத் மாநிலம் அடைந்த வளர்ச்சியை மக்கள் அங்கீகரிக்கிறார்கள் என்பதும், குஜராத்தியர்களின் சுயமரியாதைக்கு அடையாளமாக நரேந்திர மோடி கருதப்படுகிறார் என்பதும் பொதுவாக எல்லோராலும் சொல்லப்படும் காரணங்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியின் தவறான அணுகுமுறையும், தேர்தல் யுக்திகளும்தான் நரேந்திர மோடியின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணங்கள் என்று சொல்ல வேண்டும்.

தீவிரவாதிகளுக்கு எதிராக நரேந்திர மோடி அரசு எடுத்த நடவடிக்கைகளை, சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் என்பதுபோல காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சித்திரித்ததை, குஜராத்திலுள்ள சிறுபான்மையினரே விரும்பவில்லை என்று தெரிகிறது. சிறுபான்மையினரில் 99 சதவீதம் பேர் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் அல்லர். மற்ற சமுதாயத்தினருடன் இணைந்து வாழ ஆசைப்படுபவர்கள். தங்களுக்குத் தீவிரவாத முலாம் பூசுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், வாக்களிக்காமல் இருந்தவர்கள் ஏராளம் என்று கூறப்படுகிறது.

அது போகட்டும். நரேந்திர மோடியின் வெற்றி தேசிய அளவில் சில நல்ல விஷயங்களுக்கு உதவப் போகிறது. முதலில், நாடாளுமன்றத் தேர்தல் இப்போதைக்கு வராது. இரண்டாவதாக, மன்மோகன் சிங் அரசு தனது அணுசக்தி ஒப்பந்தப் பிடிவாதத்தைத் தளர்த்தி, ஒப்பந்தத்தை ஒத்திப்போட்டுவிடும். மூன்றாவதாக, ஆட்சியைக் கவிழ்த்தால், பாரதிய ஜனதா மீண்டும் பதவிக்கு வந்துவிடுமோ என்கிற பயத்தில், இடதுசாரிகள் அரசை மிரட்ட மாட்டார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம். ஏதோ, ராகுல் காந்தியால் காங்கிரஸ் புத்துயிர் பெற்று மீண்டும் பழைய பலத்தைப் பெற்றுவிடும் என்கிற நப்பாசையும், நரேந்திர மோடியின் தயவால் நைத்துப் போய்விட்டது. உத்தரப் பிரதேசத்திலும் சரி, குஜராத்திலும் சரி அவருக்குக் கூடிய கூட்டம் வேடிக்கை பார்க்கத்தான் வந்ததே தவிர வாக்களிக்க அல்ல என்பது தெளிவாகி விட்டது. இனிமேல், பிரியங்காவை முன்னிறுத்தி வேடிக்கை காட்டுவார்கள் என்று நம்பலாம்.

நரேந்திர மோடியின் வெற்றிக்குப் பின்னால் அவரது உழைப்பும், தன்னம்பிக்கையும் தெரிகிறது. அதற்காக அவரை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும். அதேநேரத்தில், இந்த வெற்றியின் போதைக்கு அவர் அடிமையாகி விடாமல் இருக்க வேண்டும். தான் ஒட்டுமொத்த குஜராத் மக்களின் முதல்வர் என்பதை மறந்துவிடாமல் ஆட்சியில் தொடர சரித்திரத்தின் பக்கங்களை அவர் அடிக்கடி புரட்டிப் பார்ப்பது நல்லது!

————————————————————————————————————————-
குல்தீப் நய்யாரின் கூற்றைக் கவனியுங்கள்

Viduthalai Editorial

பிரபல அரசியல் விமர்சகரான குல்தீப் நய்யார் எழுதி யுள்ள கட்டுரை ஒன்றில் குஜராத் தேர்தல்பற்றி நுணுக்கமாகக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

(1) வகுப்புவாதத்தை எதிர்க்கும் விஷயத்தில் காங்கிரஸ் தன்னுடைய கொள்கையை ஏன் மாற்றிக் கொண்டது என்று தெரியவில்லை.

(2) நரேந்திர மோடிக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் வகுப்புவாதம் மட்டுமே கொள்கையாக இருந்தது – இருக்கிறது.

(3) முசுலிம்களுக்கு எதிராக நபருக்கு நபர் எதிர்பிரச்சாரம் குஜராத்தில் தேர்தலுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டது.

(4) இந்துத்துவா கொள்கையை வைத்து மோடியும், பா.ஜ.க.,வும் இந்துக்கள், முஸ்லிம்கள் என்று இரண்டாக அல்லது மூன்றாக நாட்டைப் பிரித்துக் கொண்டு இருக் கின்றனர்.
ஆர்.எஸ்.எஸின் ஒரு பிரிவான விஸ்வ இந்துபரிசத் கிறித்தவர்களைக் குறி வைக்கிறது. ஒரிசாவில் பி.ஜே.பி., ஆதரவு அரசின் ஒத்துழைப்போடு வி.எச்.பி., செய்து வருவது மிகவும் வெட்கக்கேடானது.

(5) வகுப்புவாதம் மோசமான நிலையில் உள்ளது. சுதந்திரப் போராட்டத்தின் பெருமைகளைச் சீரழித்துக் கொண்டு இருக்கிறது.

(6) வகுப்பு வாதத்தை எதிர்ப்பதை காங்கிரஸ் கைவிட்டுவிடக் கூடாது. ஏனெனில், அது வெற்றி பெற்றால், பாசிசம் உண்டாகும்.

(7) குஜராத் ஒரு மாநிலம் அல்ல; அது இந்துத்துவா என்ற கொள்கையின் அடையாளமாக ஆக்கப்பட்டுவிட்டது. முழுப் பிரச்சாரத்தையும் ஒரே ஒரு பிரச்சினையாக மாற்றிவிட்டனர். நீங்கள் ஒரு இந்து என்றால், எனக்கு வாக்களியுங்கள் என்பதுதான் அது.
அனேகமாக அரசியல் விமர்சகர் குல்தீப் நய்யார் குஜராத் தேர்தலை மட்டுமல்ல; இந்துத்துவாவைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கும் பி.ஜே.பி., அதன் சங் பரிவாரங்களின் நச்சுத் தன்மையின் சாரத்தை அப்படியே பிழிந்து கொடுத்திருக்கிறார் என்பதில் அய்யமில்லை.

இனிமேல் அரசியல் நடத்த விரும்பும் நியாயவாதிகள், முற்போக்குக் கொள்கையாளர்கள், இடதுசாரிகள் யாராக இருந்தாலும் தங்களுக்குள் இருக்கும் வரப்புகளைக் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, பி.ஜே.பி., வகையறாக்களுக்கு எப்படி ஒரு பார்வை – இந்து என்ற பார்வையை மட்டும் மய்யப் படுத்தி மக்கள் மத்தியில் தூபம் போட்டு மதத் தன்மையில் ஒன் றிணைக்க விரும்புகிறார்களோ, அதேபோல, ஒரே நோக்கம், ஒரே பார்வை, ஒரே பாய்ச்சல் இந்த மதவாத – வகுப்புவாத சக்திகளை அவற்றின் ஆணி வேர் வரை சென்று நிர்மூலம் செய்வதில்தான் இருக்க வேண்டும்.

முதன்மையாக தலைமை வகிக்கும் காங்கிரசுக்கு முக்கியமாக இந்த குறிக்கோள் இருக்கவேண்டும்; அதன் அடிப்படையில் மதச் சார்பற்ற சக்திகளைச் சேதாரம் இல்லாமல், வீண் சச்சரவுகளை உண்டாக்கும் பிரச்சினை களை உற்பத்தி செய்யாமல், அணைத்துச் செல்லும் பக்குவத்தோடு பலத்தைப் பெருக்கி, ஒரே மூச்சில் மதவாதத்தை வீழ்த்தித் தள்ளிட வேண்டும்.

குஜராத்தில் இவ்வளவுப் பச்சையாக மதவாதத் தேர்தல் நடந்திருந்தும் தேர்தல் ஆணையம் எப்படி அவற்றை அனுமதித்தது என்றே தெரியவில்லை.

பா.ஜ.க., செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் அதன் பார்வை திரும்பக்கூடும்; அதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். அது பகற்கனவு என்று காட்ட வேண்டியது அம்மாநிலங்களின் கடமையாகும். அடுத்து நடக்க உள்ள நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை மதச் சார்பற்ற சக்திகள் ஒரு சோதனைக் களமாகக் கருதவேண்டும்.

2009 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்த லுக்குமுன் இந்த வகையில் தீவிரமாக திட்டமிட்ட வகையில் அறிவியல் கணிப்போடு செயல்பட்டே தீரவேண்டும்.
சென்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் சில மாநிலங்களில் பா.ஜ.க., வெற்றி பெற்றதுண்டு. அதேநேரத்தில், மக்களவைத் தேர்தலில் மண்ணைக் கவ்வியது என்பதையும் மனதிற்கொண்டு, சோர்வுக்குச் சிறிதும் இடமின்றி, தன்னம்பிக்கையுடன் இடதுசாரிகளும், மதச் சார்பற்ற அணிகளும் ஒன்று சேர்ந்து உழைக்கவேண்டியது அவசியம்.

————————————————————————————————————————-

Posted in Aajtak, abuse, Advani, America, Arrest, Ayodhya, Ayodya, Ayothya, Bajrang, Bharatiya Janata Party, BJP, CBI, Censure, Chowdhry, Chowdhury, CNN, Condemn, Congress, crimes, Criminal, dead, Elections, Expose, Godhra, Gujarat, Hindu, Hinduism, Hindutva, HT, Investigation, Islam, Judges, Justice, Killed, Law, massacre, Media, MLA, Modi, MP, MSM, Muslim, Nanavati, Narendhra, Narendra, Narendra Modi, Narenthira, Neerja, Operation Kalank, Order, Party, pogrom, Police, Polls, Power, Revelations, riots, RSS, Sting, Tehelka, USA, Vajpai, Vajpayee, Vajpayi, VHP, Vidudhalai, Viduthalai, Violence, Visa, Vituthalai | Leave a Comment »

Hike in petro prices: Work out strategy that will not burden common man & nature

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007

குன்றிவரும் எண்ணெய் வளம்

என். ரமேஷ்

பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு தற்போது இல்லை என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தேவ்ரா அண்மையில் தெரிவித்தார். ஆனால், விலைஉயர்வை நீண்ட காலத்துக்குத் தள்ளிப்போட வாய்ப்பில்லை.

கச்சா எண்ணெய் விலை சர்வதேசச் சந்தையில் இதுவரை கண்டிராத அளவுக்கு – ஒரு பீப்பாய் (159 லிட்டர்) 92 அமெரிக்க டாலர் என்ற அளவை எட்டியது.

1978 ஆம் ஆண்டு 13 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, 2007 அக்டோபரில் 92 டாலரை எட்டியுள்ளது. இது விரைவில் 100 டாலரை எட்டக்கூடும். இந்த விலைஉயர்வுக்கு ஈரான்மீது அமெரிக்கா அறிவித்த பொருளாதாரத் தடை காரணமாகக் கூறப்பட்டாலும், எண்ணெய் நிறுவனங்கள், அரசுகள் வெளிப்படையாக கூறத்தயங்கும் உண்மை ஒன்று உள்ளது.

ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்ட “எரிசக்தி கண்காணிப்புக் குழு’ என்ற ஆய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கை, உலகின் உச்சபட்ச பெட்ரோலியப் பொருள்களின் உற்பத்தி அளவு 2006 ஆம் ஆண்டிலேயே எட்டப்பட்டுவிட்டது; இனி ஆண்டுதோறும் சரிவைச் சந்திக்கும் எனத் தெரிவிக்கிறது.

தற்போதைய உற்பத்தி அளவான நாளொன்றுக்கு 8.10 கோடி பீப்பாய்கள் என்பது 2030 ஆம் ஆண்டில் 3.9 கோடி பீப்பாய்களாகக் குறையும் என அந்த அறிக்கை கூறுகிறது. இது ஏறத்தாழ 1980 ஆம் ஆண்டு உற்பத்திக்குச் சமம். ஆனால், அப்போதைய மக்கள்தொகையைக் காட்டிலும் 2030-ல் உலக மக்கள்தொகை இரு மடங்காகியிருக்கும்.

நிலம், கடல், ஆர்க்டிக் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் 1,25,500 கோடி பீப்பாய் அளவு எண்ணெய் இருப்பு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் மதிப்பிட்டிருந்தாலும் இந்த அளவு 85,400 கோடி பீப்பாய்களாக மட்டுமே இருக்கும் என இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

எண்ணெய் உற்பத்தியின் சரிவு காரணமாக விலைஉயர்வு இனி தொடரும். மிக மோசமான பொருளாதார, அரசியல், சமூக விளைவுகள் உண்டாகும் எனப் பல வல்லுநர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

அமெரிக்காவின் இராக் போருக்குக் காரணம் பெட்ரோலியம்தான் என்பதை அந்த நாட்டு மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன் உள்ளிட்டோர் ஒப்புக்கொண்டுள்ளனர். அமெரிக்காவின் அடுத்த குறி ஈரான். (தினமும் 2.06 கோடி பீப்பாய்களை நுகரும் அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி, 83.67 லட்சம் பீப்பாய்கள்தான்).

பெட்ரோலியப் பொருள்களின் விலைஉயர்வால் மோட்டார் சைக்கிள், கார், பஸ், லாரி, டீசல் என்ஜின் ரயில்களின் போக்குவரத்து குறைவது மட்டுமல்ல; மிகப் பெரும் உணவுப் பஞ்சம், அதைத் தொடர்ந்து சமூகச் சீர்குலைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எண்ணெய் உற்பத்தி நாடுகள் தங்களது உற்பத்தியைக் குறைக்க நேரிட்டால், பற்றாக்குறை பன்மடங்கு அதிகரிக்கும். இதனால் தொழில்துறையில் பாதிப்புகளும் வேலையிழப்புகளும் ஏற்படலாம்.

உலகின் மிகப்பெரிய உணவு ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான அமெரிக்கா, தனது உள்நாட்டுத் தேவை காரணமாக, 2025-ல் உணவு ஏற்றுமதியை நிறுத்திவிடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், தற்போது பெட்ரோலியப் பொருள்களின் உதவியால், ஒருவருக்குத் தேவையான உணவை 20 நிமிஷ உழைப்பைக் கொண்டு உற்பத்தி செய்ய முடிகிறது. பெட்ரோலியம் இல்லையெனில் மூன்று வாரம் பாடுபட்டுத்தான் ஒரு நாள் உணவை உற்பத்தி செய்ய முடியும். மற்ற நாடுகளின் நிலையும் ஏறக்குறைய இதேபோலத்தான்.

எனவே, அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உள்ளிட்ட நாடுகள், சமூக ஏற்றத்தாழ்வுகளால் அனுபவித்து வரும் நெருக்கடிபோக, கடும் உணவு நெருக்கடியையும் சந்திக்க உள்ளன.

இந்த நிலைமையைச் சமாளிக்க அரசிடம் திட்டங்கள் இல்லை. தங்களது லாபம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில், உருவாகி வரும் நெருக்கடியை மறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முயலுகின்றன.

இவையாவும் சில “சுற்றுச்சூழல் ஆர்வலர்களின்’ அதீத கற்பனை என யாரும் கூற முடியாத அளவுக்கு காரணிச் சான்றுகள் பெருகி வருகின்றன. எண்ணெய் நிறுவனங்களால் பெரிய அனுகூலங்களைப் பெற்ற அமெரிக்க அதிபர் புஷ்ஷின் பண்ணை வீடு, நாட்டின் மின்சாரத் தொகுப்புடன் இணைக்கப்படவில்லை; முழுக்க முழுக்க காற்றாலைகள், சூரிய ஒளித் தகடுகள் போன்ற மரபுசாரா வளங்களிலிருந்து எரிசக்தி பெறுகிறது! துணை அதிபர் டிக் செனியோ, எண்ணெய் நிறுவனங்களிலிருந்த தமது முதலீடுகளை வேறு நிறுவனங்களுக்கு மாற்றிவிட்டார்.

Posted in Commerce, Deora, Diesel, Economy, energy, Environment, Food, Freight, Gas, GDP, Gulf, Hike, Inflation, Kerosene, LPG, Murali, Natural, Nature, oil, ONGC, Op-Ed, Petro, Petrol, Petroleum, Pollution, Products, Pumps, Resources, Shortage, Solar, Strategy | Leave a Comment »

La Sa Ra: Lalgudi Saptharishi Ramamirtham: Anjali, Memoirs, Reviews

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007

——————————————————————————————————————————————

எழுத்தாளர் லா.ச.ரா. மறைந்தார்

சென்னை, அக். 30: “லாசரா’ என்று அழைக்கப்படும் எழுத்தாளர் லா.ச. ராமாமிருதம் (92) சென்னை அம்பத்தூர் தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (அக்.30) அதிகாலையில் காலமானார். அவர் இரு தினங்களாக உடல் நலம் இல்லாமல் இருந்தார்.

அவருக்கு மனைவி ஹேமாவதி, எழுத்தாளர் லா.ரா. சப்தரிஷி உள்ளிட்ட நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

பெங்களூரில் 1916-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பிறந்த லா.ச.ரா.வின் பூர்விகம் லால்குடி.

ஆரம்ப காலத்தில் அவர் எழுதிய 5 கதைகள் “மணிக்கொடி’ இதழில் பிரசுரமாகி சிறப்புப் பெற்றன.

மனித மனத்தின் மெல்லிய பக்கங்களைத் தனக்கே உரித்தான பாணியில் எழுதி, எழுபதாம் ஆண்டுகளில் இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்குத் தூண்டுகோலாய் அமைந்த லா.ச.ரா. தனது 92-வது பிறந்த நாளிலேயே மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • லா.ச.ரா. எழுதிய “சிந்தாநதி’ நாவலுக்கு 1989-ம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.
  • உலகக் கவிஞர்கள் மன்றத்தின் கெüரவ விருது (1982),
  • தமிழக அரசின் கலைமாமணி விருது,
  • காஞ்சி சங்கராசாரியார்கள் இணைந்து அளித்த “கதாரஸன் சதுரஹ’ என்ற விருது,
  • இலக்கியச் சிந்தனை விருது (1995),
  • அக்னி அட்சர விருது (1992),
  • 1997-ல் வானவில் பண்பாட்டு மையத்தின் பாரதி விருது ஆகியவை இவருக்குக் கிடைத்த சிறப்புகள்.

17 வயதில் அவர் “தி எலிபென்ட்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதிய கதைதான் முதலில் பிரசுரமானது.

லா.ச.ரா. எழுதிய 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 புதினங்கள், 6 கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவர் “அமுதசுரபி’ இதழில் “தி பாய் ப்ரெண்ட்’ என்று எழுதியதே அவரது கடைசி கதையாகும்.

மத்திய அரசின் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றி மேலாளராக ஓய்வு பெற்றவர் லா.ச.ரா.

அவரது மகன் சப்தரிஷியின் வீட்டு முகவரி: ஏ 6, அட்சயா ஹோம்ஸ், சரஸ்வதி நகர், திருமுல்லைவாயல் (சேகர் ஸ்டோர்ஸ் அருகில்), சென்னை -62. தொலைபேசி: 26375470, செல்: 94444 97502.
——————————————————————————————————————————————

சிந்தாநதி சகாப்தம்: – அசோகமித்திரன்

சென்ற திங்கள்கிழமை 29-ம் தேதி மறைந்த லா.சா.ராமாமிர்தம், 1916-ல் லால்குடியில் பிறந்தார். அன்று கீழ்மத்திய வகுப்பினருக்குக் கிடைத்த எளிய படிப்பை வைத்துக் கொண்டே அவர் ஆங்கிலத்தில் எழுத முயன்றார். அன்று அவருடைய பெரிய ஆதரிசம் இளம் அமெரிக்க எழுத்தாளர் ஹெமிங்க்வே. ஆனால், விரைவில் அவருடைய உண்மையான சாதனம் “தமிழ்’ என்று தெரிந்து விட்டது.

அதன்பின் 50 ஆண்டு காலம் லா.சா.ரா. வியந்து ஆராதிக்கத்தக்க தமிழ் எழுத்தாளராக விளங்கினார்.

சிறுகதைகள் எழுதிவந்த அவரை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் “புத்ர’ என்ற நாவல் எழுத வைத்தது. அதன்பின் அவர் இரு நாவல்கள் எழுதினாலும் அவருடைய இலக்கியச் செல்வாக்கு சிறுகதை வடிவத்தில் இருந்தது.

அவருக்கு 1989-ல் “சாகித்ய அகாதெமி விருது’ பெற்றுத் தந்த சுயசரிதை “”சிந்தாநதி” தினமணி கதிரில் தொடராக வந்தது.

ஒரு விதத்தில் லா.சா.ரா. அவர்கள் ஆயுள் முழுக்க ஓர் அம்பாள் உபாசகராக இருந்திருக்கிறார். தன் அன்னை மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி அவருடைய பல படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது. அன்பு, சாந்தம், பரிவு, தியாகம் ஆகிவற்றுடன் கோபம், சாபம், ரெüத்திரம் எனப் பல அம்சங்கள் உள்ளடக்கியது அவருடைய தாய் உபாசனை.

தமிழ் வரையில் இந்து மத தெய்வங்களை அவர் போல இலக்கியக் குறியீடாக பயன்படுத்தியவர் எவருமே இல்லை எனலாம். அதேபோல இந்தியத் தத்துவச் சொற்களையும் அவர் போலக் கையாண்டவர் தமிழில் கூற முடியாது. இக் குறியீடுகள் தவிர அவருடைய படைப்புகளில் இறுக்கமான கதையம்சமும் இருக்கும். ஒரு முற்போக்கு விமரிசகர் இவரையும், இன்னொரு எழுத்தாளரான மெüனியையும் இணைத்து மேலோட்டமாகக் குறிப்பிட்டதைப் பலர் திருப்பி எழுத நவீன தமிழ் இலக்கிய உலகில் ஒரு விசித்திரமான பிரிவு ஏற்பட்டது. அது இரு எழுத்தாளர்களுக்கும் நியாயம் இழைக்காததுடன் அத்தகைய விமரிசகர்களுக்குப் படைப்புகளுடன் நேரிடைப் பரிச்சயம் இல்லை என்றும் தெரியப்படுத்தி விடும்.

லா.சா.ரா.வின் சிறுகதைகளைப் பத்திரிகையில் படித்து அவரைத் தேடிப் போய் அவரை நூல் வடிவத்தில் வாசகர்களுக்கு அளித்தப் பெருமை கலைஞன் மாசிலாமணி அவர்களைச் சேரும். சுமார் 7 ஆண்டுகள் முன்பு லா.சா.ரா.வைக் கெüரவிக்கும் விதத்தில் அவருடைய ஆயுட்காலப் படைப்பிலிருந்து தேர்ந்தெடுத்து ஒரு ரீடர் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது. லா.சா.ரா.வுக்கு இருந்த இலக்கியச் செல்வாக்குக்கு இணையாக அவருக்கு பரிசுகள், விருதுகள் அளிக்கப்படவில்லை.” சிந்தாநதி’ என்ற படைப்புக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதெமி விருது கூட மிகவும் காலம் கடந்து அளிக்கப்பட்ட ஆறுதல் பரிசு.

லா.சா.ரா.வின் படைப்புகள் பல இந்திய மற்றும் அயல் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட “மஹஃபில்’, பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட “நியூ ரைட்டிங் இன் இந்தியா’ செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.சா.ரா.வைக் கருதினார்.

நூற்றுக்கு மேற்பட்ட சிறந்த சிறுகதைகள் லா.சா.ரா. எழுதியிருந்தாலும் அவருடைய “பாற்கடல்’ என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய “புத்ர’ மற்றும் “அபிதா’ நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் “சிந்தாநதி’ அவருடைய இயல்பானக் குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டிருக்கும். லா.சா.ரா. எழுதிய காலத்தில் உயரிய நவீன தமிழ்ப் படைப்பிலக்கியம் புதுமைப்பித்தன், க.நா.சுப்பிரமணியன், கு.ப.ராஜகோபாலன் என்று ஒரு அணியும் கல்கி, ஜெயகாந்தன், விந்தன் என்றொரு அணியுமாக இருந்தது. இரண்டிலும் அடங்காதது லா.ச.ரா. ஒரு தனிப்பாதையில் எழுதினார். அவருடன் ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது.
——————————————————————————————————————————————

தூக்கமே! நீ அதிருஷ்டசாலி! – லா.ச.ராமாமிருதம் :: appusami.com

தூக்கமே, நீ இலாதுபோனால் துக்கங்களுக்கு முடிவு ஏது? மறதி எனும் மருந்து தந்த மாபெரும் மருத்துவம் அல்லவா நீ?

உன் வருகை தெரிகிறது; ஆனால் நீ வந்தது அறியேன்; அறிய நீ விடுவதில்லை.

நான் விழித்திருக்கையிலேயே நீ இழைத்த மருந்தை என் கண் சிமிழில் எப்போது வழித்தாய்? இமைமீது உன் முத்தத்தின் மெத்துதான் இறுதியாக நான் அறிந்தது. என் கண்ணுக்குள் நீ வைத்த மையில் யாவும் மறைந்த இழைவில் நானும் மறைந்தபின் என் கண்ணுக்குள் நீ வந்து புகுந்தது எப்போ? வந்து அங்கு நீ என் செய்கிறாய் என்று நான் அறிய முடியுமா?

உன்முகம் ஆசைமுகம். எப்போதும் மறைவு முகம் எதிர்ப்பட்டு விட்டால் உண்மை உரு தெரிந்துவிடும் என்ற பயமா?

நான் தேடியோ, நீயாக வந்தோ, எப்படியோ நேர்ந்து விடுகிறாய்.

நினைவோடு உன்னை நான் சிந்திக்க நேர்கையில் உன்மை நான் நினைப்பது எப்படி எப்படியோ. தினப்படி உன் மடியில் என்னைத் தாலாட்டு மறுதாய்.

ஆணுக்குப் பெண், பெண்ணுக்கு ஆண், நினைவுக்கு வைப்பாட்டி நீ மானம் அறியாதவரேயில்லை.

மரணத்தின் தன்மையைக் கரணத்தில் ஊட்டும் உபதேச மோனகுரு.

உயிருக்கு காவல். மரணத்தின் தாதி.

என் துயரங்கள் மறக்க உன்னைத் தேடுகிறேன். ஆனால் நீ வந்ததும் உன்மை மறந்து விடுகிறேன். நீ வந்ததும் என்னையே எனக்கு நினைப்பில்லை. உன்னை நினைவில் நிறுத்துவது எப்படி? உன் நன்றி நான் உன்னை மறந்தாலும் என்னை நீ மறப்பதில்லை. இதுவே என் பெருமை, என் வாழ்வு. நன்மையின் தன்மையே இதுதான். இருவர் ஞாபகத்தை அது நம்பியில்லை, ஒருவர் செய்கையில் வேரூன்றி விட்டபின்.

உனை நான் மறந்தாலும், உனக்கு என் நினைவிருக்க, நீ என் சுமைதாங்கி.

நினைவும் மறதியும், விழிப்பும் தூக்கமும் மாறி மாறி இரவு குவிந்த கண் மலரிதழ், செம்முலாம் உன் கண்டு விரிகையில், இன்றைய விழிப்பில் பிறந்த வண்ணங்கள் கூட்டி நேற்றைய நினைப்பில் வரைந்த சித்திரம் ஒளியும் நிழலுமாய் உலகம் தக தக அழகுகள் வீசி காக்ஷ¢ விரியுதம்மா. எல்லாம் இன்பமயம். உடலும் மனமும் லகுவும் லயமுமாய் சிறுத்தையின் சோம்பல் முறித்தெழுகின்றன.

– நன்றி கணையாழி
——————————————————————————————————————————————

லா.ச.ராமாமிர்தம்

– மதுசூதனன் தெ.|பிப்ரவரி 2002

தமிழ்ப் புனைகளத்தில் ‘லா.ச.ரா’ என்ற பெயர் நிலைத்துவிட்டது. தமிழ்ச் சிறுகதை மரபு தனக்கான பயணிப்பில் நின்று கொண்டிருந்த போது தனது திறன்கள் மூலம் படைப்புலகில் புதுமைகளை கொண்டு வந்தவர்.

”பொதுவாக ஒரு தத்துவசாரமும் உக்கிரமான ஆத்மதாபமும் என் எழுத்தின் உள்சரடாக ஓடுவதே என் தனித்துவம்” என்று தன்னைப் பற்றிய சுய அறிமுகத்தில் குறிப்பிடுகிறார்.

லால்குடியில் பிறந்த ராமாமிருதம் 1937ல் எழுதத் தொடங்கி தனக்கென தனிப்பாணி ஒன்றை அமைத்துக் கொண்டார். தனது பதினைந்து பதினாறாவது வயதில் எழுத ஆரம்பித்த அவரது வேகம் லாசராவுக்கு ஓர் தனித்தன்மை கொண்ட ஓர் எழுத்துநடையைக் கொடுத்துள்ளது. சிறுகதை, கவிதை, நாவல்கள், கட்டுரைகள் என பல களங்களிலும் இயங்கியவர். ஆனாலும் எழுதிக் குவித்தவர் அல்ல. ஆனால் அவர் எழுதியவை ஆழமும் அழகும் தனிச்சிறப்பும் கொண்டவை.

‘சாதாரணமாகவே நான் மெதுவாக எழுது பவன். ஆனால் சதா எழுதிக் கொண்டிருப்பவன்’ என்ற கொள்கையை வரித்துக் கொண்டிருந்தவர். மேற்கத்திய இலக்கியங்களில் அதிகம் நாட்டம் கொண்டிருந்தார். அவரது பாத்திரங்கள் பல அவராகவே ஆகி, வார்த்தையாக, கவிதையாக, துடிப்பும் வெடிப்புமாகப் பேசு கின்றது. பேசிக் களைத்தால் சிந்திக்கின்றது. அதுவும் களைப்பாகும் போது, அடிமனம் விடு விப்படைந்து திசையின்றி ஓடுகிறது. வாசக அனுபவத்தில் பல்வேறு சிதறல்களை மனவுணர்வுகளை, மனநெருக்கடிகளை, புதிய உணர்திறன்களை கிளறிவிடுகிறது.

சூழ்நிலைகளில் பாத்திரவார்ப்புகளில் அவற்றின் உணர்ச்சித் தீவிரங்களில் சொல்லா மலே உணர்த்தும் நளினம் கதை முழுவதும் இயல்பாகவே இருக்கும். நனவோடை, மன ஓட்டம், சுயஅமைவு கதையோட்டத்தின் கூட்டமைவுக்கு உயிர்ப்பாக உள்ளன. வாசகர் களின் கற்பனை அனுபவத்துக்கு அப்பால் புதிய தெறிப்புகளாக புதிய உணர்த்திறன்களாக லா.ச.ரா எழுத்துக்கள் உள்ளன.

லாசராவின் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் யாவும் மனிதமனத்துடன் ஆத்மவிசாரணையை வேண்டி நிற்கும் படைப்புகளாகவே உள்ளன. லாசராவின் படைப்புலகு, எழுத்து நடை, தமிழ்ப்புனை கதை மரபின் வளர்ச்சிக்கான ஊக்கிகளாக அமைந்துள்ளன. அன்பு, காதல், தியானம், தியாகம் இவற்றின் அடிசரடாக லாசராவின் உலகம் இயங்கி புதிய வாழ்வியல் மதிப்பீடு களை நமக்கு வழங்கிச் செல்கின்றன.

நானே என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்
இதற்கு எழுத்து எனக்கு வழித்துணை
ஒருவனுக்கு அவன் பக்தி
ஒருவனுக்கு அவன் ஞானம்
ஒருவனுக்கு அவன் குரு
அதுமாதிரி எழுத்து எனக்கு வழித்துணை
ஒரு சமயம் அது என் விளக்கு
ஒரு சமயம் சம்மட்டி
ஒரு சமயம் கம்பு
ஒரு சமயம் கத்தி
ஒரு சமயம் கண்ணாடி

இவை லாசாராவுக்கு மட்டுமல்ல அவரது படைப்புகளுடன் பரிச்சயம் கொள்ளும் வாசகர்களுக்கும் நேர்வது.

லாசராவின் சில படைப்புகள்:

சிறுகதைகள்: ஜனனி, தயா, அஞ்சலி, அலைகள், கங்கா

நாவல்கள்: அபிதா, கல்சிரிக்கிறது, புத்ரா

நினைவுகள்: சிந்தாநதி, பாற்கடல்

கட்டுரைகள்: முற்றுப்பெறாத தேடல், உண்மையான தரிசனம்

மதுசூதனன்
———————————————————————————————————————————-

தனிமையின் நிறம்
எஸ். ராமகிருஷ்ணன்
குற்றாலத்தின் தேனருவிக்குப் போகின்ற வழியில் உள்ள ஒரு பாறை இடுக்கில் படுத்துக்கிடந்த வயதானவர் ஒருவரைக் கண்டேன். அழுக்கேறிய உடையும், பிசுக்குப் பிடித்த தலையும், பிரகாசிக்கும் கண்களும் கொண்டவராக இருந்தார். யாருமற்ற மலையின் மீது அவர் எப்படி வாழ்கிறார் என்று ஆச்சர்யமாக இருந்தது. அவர் அருகில் உட்கார்ந்துகொண்டு, ‘‘எப்படித் தனியாக வாழ்கிறீர்கள்? நீங்கள் சாமியாரா?’’ என்று கேட்டேன்.

அவர் சிரித்தபடி, ‘‘நான் சாமி இல்லை. சாதாரண ஆசாமி. இங்கே இருப்பது பிடித்திருக்கிறது. தங்கிவிட்டேன். நான் தனியாக வாழவில்லை. இத்தனை மரங்கள், பறவைகள், அணில்கள், எறும்புகள் என ஒரு பெரிய உலகமே என்னைச் சுற்றி இருக்கிறதே!’’ என்றார். தவறு என்னுடையது என்பது போலத் தலைகுனிந்தேன். அவர் சிரித்தபடியே தொடர்ந்து சொன்னார்…
ÔÔசூரியனையும் சந்திரனையும் போல் தனிமையானவர்கள் உலகில் வேறு யாருமே கிடையாது. மனிதனுடைய பெரிய பிரச்னை அடுத்த மனிதன் தான். கூடவே இருந்தாலும் பிடிக்காது. இல்லாவிட்டாலும் பயம்!ÕÕ

அருவியை விடவும், என்னைச் சுத்த மாக்கின இந்தச் சொற்கள். வாழ்வின் நுட்பங்களை ஞான உபதேசங்களாக வாசிப்பதைவிடவும் வாழ்ந்து கண்டவனின் நாக்கிலிருந்து கிடைக்கும் போதுதான் நெருக்கமாக இருக்கிறது.

தனியாக இருப்பது பயமானது என்ற எண்ணம் குழந்தையிலிருந்தே நம்முள் ஊறத் துவங்கிவிடுகிறது. உண்மையில் தனிமை பயமானதா? நிச்சயமாக இல்லை. தனிமை ஒரு சுகந்தம். அதை நுகர்வதற்குத் தேவை மனது மட்டுமே!

சில நாட்களுக்கு முன், கடற்கரையில் இரவில் அமர்ந்திருந்தேன். குழந்தை விளையாடிப் போட்ட பலூன் ஒன்றை கடல் அலை இழுத்துக்கொண்டு இருந்தது. பலூன் உள்ளே போவதும் கரையேறுவது மாக ஒரு நாடகம் நடந்துகொண்டே இருந்தது. ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு பெரிய கடலால் இந்தச் சிறிய பலூனை ஒன்றுமே செய்ய முடியவில்லை. எவ்வளவு பெரிய அலைகளின் கைகளால் நீட்டிப் பிடித்தாலும், பலூன் தண்ணீரில் மிதந்துகொண்டுதான் இருக் கிறது. ஆனால், அலைகள் சலிப்புற்று நிறுத்துவதேயில்லை.

நம் தனிமையும் இந்த பலூன் போல அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டே இருந்தாலும், தன்னியல்பு மாறாமல் இருந்துகொண்டே இருக்கிறது. வீட்டில் யாருமற்றுப் போன நேரங்களில்தான் நாம் தனிமையாக இருப்பதாக உணர் கிறோம். அது நிஜமானது இல்லை. ஒவ்வொரு நிமிஷமுமே நாம் தனிமை யானவர்கள்தான்!

நாம் பார்க்கும் காட்சியை, நாம் பார்த்த விதத்தில் இன்னொருவர் பார்ப்பதில்லையே! சாப்பிடும்போது, தண்ணீர் குடிக்கும்போது, படிக்கும் போது, உறங்கும்போது என எப்போ துமே தனிமையாகத்தான் இருக்கிறோம். ஆனால், அதை அறிந்துகொள்வதில்லை. இயற்கையின் முன் மட்டும்தான் தனிமையின் வாசனையை நம்மால் நுகர முடிகிறது. பிரமாண்டமான மலையின் உச்சி யில் நின்றபடி சூரிய அஸ்தமன காட்சியை ஒருமுறை கண்டேன்.

பறவை சிறகடித்துக்கொண்டு இருப்பது போல, மேற்கு வானில் சூரியன் அசைந்து அசைந்து உள்ளே ஒடுங்குவதைக் கண் டேன். பார்த்துக்கொண்டு இருந்த போதே, வெளிச்சம் மறைந்து இருட்டு கசிந்து வரத் துவங்கி, கண்முன் இருந்த பள்ளத்தாக்கும், மரங்களும் காணாமல் போகத் துவங்கின. அதுவரை இல்லா மல், இருட்டின் நெருக்கத்தில்தான் நான் தனியாக இருக்கிறேன் என்ற பயம் எழும்பத் தொடங்கியது. ஆச்சர்யமாக இருந்தது. நம் தனிமையை மறைக்கும் கைகள் சூரியனுடையவைதானா?

தனிமையாக இருப்பது என்றவுடனே மற்றவர்களை விட்டு விலகிப் போய்விடுவது என்று நம் மனதில் தோன்றுகிறது. இரண்டும் ஒன்றல்ல. தனியாக இருப்பது என்பது மாறாத ஒரு நிலை. எத்தனை ஆயிரம் நிறைந்த கூட்டத்திலும்கூட நாம் தனியாள்தானே! கடலில் நீந்துகிறோம் என்றால், கடல் முழுவதுமா நீந்துகிறோம்? ஆறடிக்குள்தானே? அப்படி, வாழ்விலும் பகுதி அனுபவத்தை முழு அனுபவமாக மாற்றிக்கொண்டு விடுகிறோம்.

பௌத்த ஸ்தல மான சாஞ்சியில் ஒரு பிக்குவைச் சந்தித்தேன். அவர் நேபாளத் திலிருந்து நடந்தே வந்திருக்கிறார். அவரது பையில் பௌத்த சாரங்கள் அடங்கிய புத்தகம் இருந்தது. அந்தப் புத்தகத்தில் உலர்ந்து போன அரச மர இலை ஒன்றை வைத்திருந்தார். ‘எதற் காக அந்த இலை?’ என்று கேட்டேன்.

அவர் அமைதியான குரலில், ‘ஒரே மரத்தில் ஆயிரக்கணக்கான இலைகள் இருக்கின்றன. ஒவ்வொரு இலையும் ஒரு வடிவத்தில் இருக்கிறது. ஒரு நேரம் அசைகிறது… ஒரு நேரம் அசைய மறுக்கிறது. ஒரு இலை காற்றில் எந்தப் பக்கம் அசையும் என்று யாருக்காவது தெரியுமா? அல்லது, எப்போது உதிரும் என்றாவது தெரியுமா? இலை மரத்திலிருந்தபோதும் அது தனியானது தான். மரத்திலிருந்து உதிர்ந்த பிறகும் அது தனியானதுதான். உலகில் நாமும் அப்படித்தானே வாழ்கிறோம்! அதை நினைவுபடுத்திக்கொள்ளத்தான் இந்த இலை’ என்றார். மரத்தடியிலிருந்து பிறக்கும் ஞானம் என்பது இதுதானோ என்று தோன்றியது.
ஒரு வெளிநாட்டுக்காரன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக அந்த பிக்குவை அருகில் அழைத்தான். அவர் எழுந்து ஒரு எட்டு நடந்துவிட்டு, மண்டியிட்டு தலையால் பூமியை வணங்கினார். திரும் பவும் மறு எட்டு வைத்துவிட்டு, அதே போல் தலையால் பூமியை வணங்கினார். எதற்காக அப்படி நடந்துகொள்கிறார் என்று எவருக்கும் புரியவேயில்லை.
அவர் சிரித்தபடியே, ‘பூமி எத்தனை பெரிதானது! மனித கால்களால் அதை முழுவதும் சுற்றி நடந்து, கடந்து விட முடியுமா என்ன? அதை விடவும் பேருண்மை என்ன இருக்கிறது? அதை புரிந்துகொண்டதால்தான் இப்படிச் செய்கிறேன்’ என்றார்.

‘இப்படி நடந்தேதான் நேபாளத் திலிருந்து வந்தீர்களா?’ என்று வெள்ளைக் காரன் கேட்க, ‘இதில் ஆச்சர்யப் படுவதற்கு என்ன இருக்கிறது? பத்து வயதிலிருந்து நான் இப்படித்தான் எங்கு போனாலும் நடந்தே போகிறேன். தற்போது எனக்கு வயது எழுபதாகிறது’ என்றார் பிக்கு.
பிக்கு என்னைக் கடந்து போய்விட்ட பிறகும், அவரது புத்தகத்தில் மறைந்திருந்த இலை மனதில் படபடத் துக்கொண்டே இருந்தது. ஒரு இலை காற்றில் எந்த பக்கம் அசையும், எப்போதும் உதிரும் என்பது ஏன் இன்று வரை ஆச்சர்யமாக இல்லை? தனிமையை இதைவிட வும் எளிமையாக விளக்க முடியுமா, என்ன?

புறநானூற்றுப் பாடல் ஒன்றில், இறந்து போன தன் தலைவனைப் பிரிந்த துக்கத்தில் தலைவி, ‘தேர்ச் சக்கரத்தில் ஒட் டிய பல்லியைப் போல அவரோடு வாழ்ந்து வந்தேன்’ என்கிறாள். எத்தனை நிஜமான வார்த்தை! தேர்ச் சக்கரத்தில் ஒட்டிக் கொண்ட பல்லி, தன் இருப்பிடத்தை விட்டு நகர்வதே இல்லை. ஆனாலும், தேரோடு எத்தனையோ தூரம் பயணம் செய்திருக் கிறது. எத்தனையோ மேடு பள்ளங்களைக் கடந்து போயிருக் கிறது. பெண்ணின் தீராத் தனிமையை விளக்கும் கவித்துவ வரிகள் இவை.

தனிமை உக்கிரம் கொள்ளும்போது அதை நாம் எதிர்கொள்ள முடியாமல் எதற்குள்ளாவாவது மூழ்கிக்கொண்டு விடுகிறோம். பெரும்பான்மை குடும்பங் களில் பெண்கள் இருப்பு இப்படித்தான் இருக்கிறது. அவர்கள் தங்களுக்குத் துணை வேண்டும் என்பதற்காகத் திருமணம் செய்துகொண்டு ஒருவரோடு வாழத் துவங்கி, அந்தத் துணை ஏற்படுத்தும் வலியையும் நெருக்கடியையும் தாங்கிக் கொள்ள முடியாமலும், அதை விட்டு விலகி தனது வாழ்வை எதிர்கொள்ள முடியாமலும் அல்லாடுகிறார்கள்.

ஏதோ சில அரிய நிமிஷங்கள்தான் அவர்களை, தான் யாருடைய மனை வியோ, சகோதரியோ, தாயோ இல்லை; தான் ஒரு தனியாள் என்று உணர்த்து கின்றன. அந்த நிமிஷம் கூடப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே புகையென மறைந்துவிடுகிறது.

வாழ்வு அனுபவங்களை உன்னத தரிசனங்கள் போல, கவிதையின்மொழியில் கதைகள் ஆக்கியவர் லா.ச.ராமாமிருதம். அவரது கதைகள் இசை யைப் போல நிசப்தமும், தேர்ந்த சொற்களின் லயமும் கொண்டவை. சொல்லின் ருசியைப் புரிய வைக்கும் நுட்பம் கொண்டது அவரது எழுத்து. லா.ச.ரா&வின் ‘கிரஹணம்’ என்ற கதை, ஒரு பெண் தன் தனிமையை உணரும் அபூர்வ கணத்தைப் பதிவு செய்துள்ளது.

கதை, சூரிய கிரஹணத்தன்று கடலில் குளிப்பதற் காகச் செல்லும் கணவன்&மனைவி இருவரைப் பற்றியது. மனைவி கடலில் குளிக்கப் பயந்து போய் வரமாட்டேன் என்கிறாள். கணவன் கட்டாயப்படுத்தி அழைத்துப் போகிறான். பயந்து பயந்து தண்ணீரில் இறங்குகிறாள். ஒரு அலை அவள் மேல் விழுந்து கணவன் கையிலிருந்து அவளைப் பிடுங்கிக் கடலினுள் கொண்டு போகிறது.

மூச்சடைக்கிறது. ஒரு நூலளவு மூச்சு கிடைத்தால்கூடப் போதும் என்று போராடுகிறாள். அலை புரட்டிப் போடுகிறது. மூச்சுக் காற்று கிடைக்கிறது. தன்னை யாரோ காப்பாற்றியிருப்பது புரிகிறது. அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு யாரோ ஒருவன் சிரித்தபடி நிற்கிறான். யார் அவன், எப்படி இவ் வளவு உரிமையாக கையைப் பிடித்துக் கொண்டு இருக்கிறான் என்று யோசிப்ப தற்குள் இன்னொரு அலை வந்து அவளை உள்ளே இழுத்துப் போகிறது.
அவள் தண்ணீருள் திணரும் நிமிஷத்துக்குள், தான் ஒரு பெண்ணாகப் பிறந் ததுதான் இத்தனைத் துயரத்துக்குக் காரணம் என்று அவளுக்குப் புரி கிறது. தனது ஆசைகளை, தாபங்களை மறைத்துக்கொண்டு எத்தனை காலம் வாழ்ந்து வந்திருக்கிறோம், தனது சுயம் வாசிக்கப்படா மல் வீணயின் தந்தியில் புதைந்துள்ள இசை யைப் போல தனக்குள் ளாகவே புதைந்து போய்க் கிடப்பது புரிகிறது.

அதே ஆள் திரும்பவும் அவளைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றுகிறான். அவளது கணவன் சிறு தொந்தி தெறிக்க, பதறி ஒடி வருகிறார். காப்பாற்றியவன் சிரித்தபடியே, ‘இந்த அம்மா சாக இருந் தாங்க. நல்ல வேளை, நான் பார்த்துக் காப்பாற்றினேன்’ என் கிறான். அதுவரை நடந் தது அவளுக்குள் புதைந்து போய், அவள் பயம் கரைந்து வெறிச் சிரிப்பாகிறது. சிரிப்பு காரணமற்ற அழுகை யாக மாறி, ‘என்னை வீட்டுக்கு அழைச்சிட் டுப் போயிடுங்கோ!’ என்று கத்துகிறாள் என்ப தாக கதை முடிகிறது.

கிரஹணம் பிடித்தது போல வாழ்வில் இப்படிச் சில சம்பவங் கள் கடக்கின்றன. ஆனால், இந்த நிமிஷங் கள்தான் வாழ்வின் உண்மையான அர்த்தத் தைப் புரிய வைக் கின்றன.
சில வேளைகளில் தோன்றுகிறது… பிரமாண்டமான கடல் கூட தனிமையாகத் தானே இருக்கிறது! அதுவும் தனது தனி மையை மறைத்துக் கெள்வதற்குத்தான் இப்படி அலைகளை வீசி ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு இருக் கிறதோ?

‘அலைகளைச் சொல்லிக் குற்றமில்லை, கடலில் இருக்கும் வரை’ என்கிற நகுலனின் கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன!

சாகித்ய அகாடமி பரிசு பெற்ற லா.ச.ராமாமிருதம் தனித்துவமான கதை சொல்லும் முறையும், கவித்துவமான நடையும் கொண்ட அரிய எழுத்தாளர். அவரது கதைகள் இயல்பான அன்றாட வாழ்வின் சித்திரங்களாகும். ஆனால், அதன் அடிநாதமாக மெய்தேடல் ஒன்று இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு சிற்பியைப் போல சொற்களைச் செதுக்கி உருவாக்கும் கவித்துவ சிற்பங்கள் என இவர் கதைகளைச் சொல்லலாம். அபிதா, பச்சைக்கனவு, பாற்கடல், சிந்தா நதி, த்வனி, புத்ரா போன்றவை இவரது முக்கிய நூல்கள். இவரது கதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி உள்ளிட்ட பல முக்கிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. தமிழ் உரைநடையில் லா.ச.ரா. நடை என தனித்துவமானதொரு எழுத்து முறையை உருவாக்கிய பெருமை இவருக்குண்டு. வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற லா.ச.ராமாமிருதம் தற்போது சென்னை, அம்பத்தூரில் வசித்து வருகிறார்.

விகடன் ——————————————————————————————————————————————

லா ச ராமாமிருதம் – கலாச்சாரம் ஒரு கதைச் சிமிழுக்குள்

வெங்கட் சாமிநாதன்

லா ச ரா எழுத ஆரம்பித்த முப்பதுகளின் பின்பாதியில் இருந்தே இடைப்பட்ட நாற்பத்தைந்து வருட காலத்தில் அவரது எழுத்துலகம் அவரது வீட்டையும் வெளியுலகத்தையும் விட்டு வெளியே கால் வைத்ததில்லை. ராமாமிருதத்துக்கு இந்த வட்டத்துக்கு வெளியே உள்ள உலகம் இல்லாத உலகம்தான். அவர்கள் உலகிலேயே காலம் உறைந்து விட்டது போலத் தோன்றும். ஆனால் அவர் கதைகளில் குடும்பப் பாசங்கள், தளைகள், பிரிவுகள், என்ற குறுகிய உலகின் உள்ளேயே நாம் காலத்தின் பிரவாஹத்தைப் பார்க்கிறோம்.

அவர் எழுத்தில் காணும் நனவோடை உத்தி ஜேம்ஸ் ஜாய்ஸிடம் இருந்து பெறப்பட்டதாகச் சொல்லப் பட்டாலும் ராமாமிர்தம் ஜாய்சின் எழுத்தையும் உத்தியையும் ஆபாசம் என்று உதறி விடுவார்.

டச்சு சைத்ரீகர் வான்கோ தனது சகோதரர் தியோவுக்கு எழுதிய கடிதங்கள் ஒன்றில் ஜப்பானிய உக்கியோயி கலைஞர்களைப்பற்றி எழுதுகிறார்: “தன் வாழ்க்கை முழுதும் அவன் ஒரு புல் இதழைத்தான் ஆராய்கிறான்: ஆனால் எல்லா தாவரங்களையும், மிருகங்களையும், பட்சிகளையும், மனித உருவங்களையும் அவனால் வரைந்துவிட ஒரு புல் இதழின் ஆராய்வில் சாத்யமாகிறது. இதற்குள் அவன் வாழ்க்கையே முடிந்து விடுகிறது. அவனுடைய ஆராய்ச்சி மேற்செல்ல முடியாது வாழ்க்கை முடிந்து விடுகிறது. ஏனெனில் வாழ்க்கை மிகக் குறுகியது.”

ரவீந்திரநாத் டாகூரின் கவிதை ஒன்றில் உலகத்தைச் சுற்றிக்காணும் ஆசையில் ஒருவன் மேற்கொண்ட நீண்ட பயணத்தில் எண்ணற்ற மலைகள், நதிகள், தேசங் கள் கடந்து கடைசியில் களைப் புற்றுத் தன் வீடு திரும்புகிறான்.

திரும்பியவன் கண்களில் முதலில் பட்டது, அவன் குடிசையின் முன் வளர்ந்திருந்த புல் இதழின் நுனியில் படிந்து இருந்த பனித்துளி. அவன் சுற்றிவந்த உலகம் முழுதையும் அப்பனித்துளியில் கண்டு அவன் ஆச்சரியப் பட்டுப் போகிறான். சுற்றிய உலகம் முழுதும் அவன் காலடியிலேயே காணக்கிடக்கிறது.

லா.ச.ராமாம்ருதம் எழுத ஆரம்பித்த முப்பதுகளின் பின் பாதியிலிருந்தே, இடைப்பட்ட நாற்பத்தைந்து வருட காலத்தில் அவரது எழுத்துலகம் அவரது வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியே கால் வைத்ததில்லை. அவர் எழுதியதெல்லாம் அந்த குடும்ப எல்லைக்குட்பட்ட உலகைப்பற்றித்தான், அதன் என்றென்றுமான குடும்ப பாசங்களும், உறவுகளும் குழந்தைகள் பிறப்பும், வீட்டில் நிகழும் மரணங்களும், சடங்குகளும்,பெண்களின் ஆளுமை ஓங்கி உள்ள உறவுகளும்தான் அவரது கதைகளின் கருப்பொருள்களாகியுள்ளன. அம்மாக்களும் மாமியார்களும் நிறைந்த உலகம் அது. அந்த மாமியார்களும் அம்மாக்களாக உள்ளவர்கள்தான்.

ராமாம்ருதத்திற்கு இந்த வட்டத்திற்கு அப்பால் உள்ள உலகம் இல்லாத உலகம்தான். இந்த வட்டத்திற்கு வெளியே சமூகத்தில், வெளி உலகில் நிகழ்ந்துள்ள நிகழும் எதுவும், சமூக மாற்றங்கள், தேசக் கிளர்ச்சிகள், போர்கள், புரட்சிகள், எதையும் ராமாம்ருதமோ, அவர் கதைகளின் பாத்திரங்களோ, கேட்டிருக்கவில்லை போலவும் அவற்றோடு அவர்களுக்கு ஏதும் சம்பந்தமில்லை போலவும் அவர்கள் உலகிலேயே காலம் உறைந்து விட்டது போலவும் தோன்றும். ஆனால் அவர் கதைகளில் குடும்பப் பாசங்கள், தளைகள், பிரிவுகள் என்ற குறுகிய உலகினுள்ளேயே நாம் காலத்தின் ப்ரவாஹத்தையும் பார்க்கிறோம்.

முப்பதுகளிலிருந்து அவருடைய கதைகளில் திரும்பத் திரும்ப வரும் காட்சிகளும், பாத்திரங்களும் 1890களைச் சேர்ந்தவைகளாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்த உறவு களின் உணர்வுகளையும், பாசங்களையும், ராமாம்ருதம் தனது தூரிகையில் தீட்டிவிடுகையில், அவற்றிலிருந்து எழும் மன உலகத் தேடல்களும் தத்துவார்த்த பிரதிபலிப்புகளும் 1990களில் வாழும் நம்மைப் பாதிக்கின்றன. 2090-ல் வாசிக்கக்கூடும் ஒரு வாசகனின் மன எழுச்சிகளும் அவ்வாறு தான் இருக்கும் என்று நாம் நிச்சயித்துக்கொள்ளலாம்.

கண்கள் ப்ரகாசிக்க, குறும்புப் புன்னகையுடன் ராமாம்ருதம் நம்மைக் கேட்கக்கூடும், “ருஷ்ய புரட்சியும் வியட்நாம் யுத்தமும் புல்லின் மீது படிந்திருந்த பனித்துளியை என்ன செய்தன? அது எம்மாற்றமும் அடைந்ததா? அல்லது பனித் துளிதான் உலகத்தில் நிகழும் எண்ணற்ற மாற்றங்களை, அது செர்னோபிள்ளிலிருந்து கிளம்பிய அணுப்புகை நிறைந்த மேகங்களேயாக இருந்தாலும், தன் பனித்திரைக்குள் ப்ரதிபலிக்கத்தான் தவறிவிட்டதா?” இந்த அகங்காரம் நிறைந்த தனிமைக்கு நாம் தலை வணங்கித்தான் ஆகவேண்டும். இத்தனிமை கலைஞனாக சுய ஆராய்வில் தனது ஆளுமைக்கும் நேர்மைக்கும், ஏற்ப அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டது.

ஏனெனில் ராமாமிர்தம் அவர் காலத்திய சரித்திர நிகழ்வு களோடும் இலக்கிய நிகழ்வுகளோடும் வாழ்பவர். அவர் தனது மத்தியத்தர பிராமணக் குடும்பப் பிணைப்புகளையும் பாசங்களையும் பற்றியே எழுதுபவராக இருக்கலாம். ஆனால் அவர் அறிந்த அவருக்கு முந்திய சமஸ்க்ருத, ஆங்கில, தமிழ்ச்செவ்விலக்கியங்களுக்கெல்லாம் அவர் வாரிசான காரணத்தினால் அவற்றிற்கெல்லாம் அவர் கடமைப் பட்டவர்.

லா.ச.ராமாம்ருதம் பிதிரார்ஜாதமாகப் பெற்ற இந்தக் குறுகிய கதை உலகத்தை அவர் மிகக்கெட்டியாக பற்றிக் கொண்டுள்ள தகைமையைப் பார்த்தால் அதை ஏதோ மதம் என எண்ணிப் பற்றியுள்ளது போல் தோன்றும். அவர் எழுத்தில் காணும் நனவோடை உத்தி ஜேம்ஸ் ஜாய்ஸிட மிருந்து பெறப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், ராமாம் ருதம் ஜாய்ஸின் எழுத்தையும் உத்தியையும் ஆபாசம் என்று உதறி விடுவார். அது போக ஜாய்ஸின் நனவோடை உத்தி துண்டாடப்பட்ட சப்த நிலயில் காண்பதற்கு எதிராக ராமாம்ருததின் நனவோடை உருவகங்களின், படிமங்களின் சப்த பிரவாஹம் எனக் காணலாம். (புத்ர பக். 9-10) க.நா.சுப்ரமண்யம் லா.ச.ராமாம்ருதத்தின் எழுத்துக்களைப் பற்றி விசேஷமான கருத்து ஒன்றைச் சொல்லி யிருக்கிறார்.

அதாவது, ராமாம்ருதம் இவ்வளவு வருஷங்களாக ஒரே கதையைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறார் என்று க நா.சு. சொல்கிறார். ராமாம்ருதமும் இதைச் சந்தோஷத்துடன் ஒப்புக்கொள்வார். “நான்தான் நான் எழுதும் கதைகள், என்னைப்பற்றித்தான் என இவ்வளவு நாளும் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறேன்,” என்பார். சாஹித்திய அகாடமி பரிசு வாங்கிய சிந்தாநதி க்கு இணை என்று சொல்லத்தக்க, அதற்கு முந்திய புத்தகமான பாற்கடல் மிகவும் குறிப்பிடத்தக்க விசேஷமான புத்தகம்.

லா.ச.ராமாம் ருதம் பாற்கடலைத் தன் குடும்பத்தைக் குறிக்கும் உருவக மாகப் பயன்படுத்துகிறார். பாற்கடல்- இல் ராமாம்ருதத்தின் குடும்பத்தினதும் அவர் மூதாதையரதும் மூன்று தலைமுறை வரலாற்றை, வருஷவாரியாக அல்ல, அவ்வப்போது நினைவு கூறும் பழம் சம்பவத் துணுக்குகளாக எழுதிச்செல்கிறார். அதில் அவர் நமக்கு அறிமுகப்படுத்தும் ஆண்கள், பெண்கள் எல்லோரும் நம்மில் வெகு ஆழமாகப் பதிபவர்கள்.

அவர்கள் எல்லோர்களுக்கிடையில் அவரது பாட்டனாரும் விதவையாகிவிட்ட அத்தைப்பாட்டியும்தான் காவிய நாயகர்கள் எனச் சொல்லத்தக்கவர்கள். பாற்கடல் ராமாமிர்தத்தின் வாலிப வயது வரையிலான நினைவுகளைச் சொல்கிறது. இதற்குப் பிந்திய கால நினைவுகளைத் தொகுத்துள்ள சிந்தா நதி ராமாம்ருதம் தன் எல்லா எழுத்துக்களிலும் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தினரைப் பற்றியுமே எழுதி வந்துள்ளார் என்பதற்குச் சாட்சிமாக நிற்கிறது. அவர்கள் எல்லோருமே அவரது போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியவர்களாக இருக்கிறார்கள். அவர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் பலவும் ஒரு தேர்வில் அதில் இடம்பெறு கின்றன.

இவற்றைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ராமாம்ருதம் பெரும் திகைப்புக்கும் ஆச்சர்யத்துக்கும் உள்ளாவார். நாற்பது வருடங்களாக அவர்களைப் பற்றி, கிட்டத்தட்ட நூறு கதைகளிலும், மூன்று நாவல்களிலும் எழுதிய பிறகும் கூட, இன்னமும் அவர்களைப் பற்றிய அவரது சிந்தனை வற்றிவிடவில்லை, அப்பிரமையிலிருந்து அவர் இன்னும் விடுதலை பெறவில்லை என்றுதான் அவருக்குத் தோன்றுகிறது.

மற்ற எவரையும் விட, அவரது குடும்பத் தெய்வமான பெருந்திரு, அவருடைய தாத்தா, கொள்ளுப் பாட்டி, பின் அவரது பெற்றோர்கள், இவர்க ளனைவரும் அவர் மீது அதிகம் செல்வாக்கு கொண்டுள்ள னர். இவர்கள்தான் அவருக்கு ஆதரிசமாக இருக்கின்றனர். இவர்களிலும் கூட குடும்பத் தெய்வமான பெருந்திருவும் அவருடைய பாட்டியும்தான் அவர் சிந்தனைகளை அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். அவரது தாத்தா ஒரு கவிஞராக இருந்திருக்கிறார். அவர்களது குடும்ப தெய்வம் பெருந்திரு பற்றி அவருக்குத் தோன்றியதையெல்லாம் அவர் கவிதைகளாக எழுதி நிரப்பிய நோட்டுப் புத்தகங்கள் எல்லாம் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

அவரைத் தவிர வேறு யாரும் அவற்றைத் தொடுவது கிடையாது. எழுதுவது என்ற காரியம், இன்னொருவருக்குச் சொல்ல என்று இல்லாமல், அதை ஒரு தியானமாகக் கருதுவது, எழுதுவதைக் கவிதைப் பாங்கில் எழுதுவது, சக்தி பூஜையும், வாழ்வையும் மரணத்தையும்கொண்டாடுவது போன்ற ராமாம்ருதத்தின் இயல்புகள் அனைத்தும் அவரது பாட்டனாரிடமிருந்து அவர் பெற்றார் போலும். இதைச் சாதாரணமாகச் சொல்லி விடக் கூடாது. அடிக்கோடிட்டு வலியுறுத்த வேண்டிய விஷயம் இது. ராமாம்ருதத்தின் எழுத்தில் காணும் அனேக விசேஷமான அவருக்கே உரிய குணாம்சங்களை அது விளக்கும். ராமாம்ருதம்தான் எவ்வளவு பக்தி உணர்வுகொண்டவர் என்பதோ, அதை எவ்வளவுக்கு வெளியே சொல்வார் என்பதோ நமக்குத் தெரியாது.

ஆனால் ,அவரது கதைப் பாத்திரங்கள் மற்றவரையும் தம்மையும் உக்கிர உணர்ச்சி வசப்பட்ட வேதனைக்கு ஆட்படுத்துவதிலிருந்தும், ராமாமிருதத்தின் பேனாவிலிருந்து கொட்டும் வெப்பமும், சக்தி மிகுந்த வார்த்தைகளும், குடும்பத்தைத் தாம்தான் தாங்கிக் காப்பது போன்று, அதற்கு உயிர்கொடுப்பதே தாம்தான் என்பது போன்றும், குடும்பத்தின் ஏற்றம் இறக்கங்களுக் கெல்லாம் தாம்தான் அச்சு போன்றும் இயங்கும் பெண் பாத்திரங்களின் ஆக்கிரம சித்தரிப்பும், (ராமாம்ருதம் தன் உள்மன ஆழத்தில், தென்னிந்திய சமூகமே அதன் நடப்பிலும் மதிப்புகளிலும் இன்னமும் தாய்வழிச் சமூகம்தான் என்ற எண்ணம் கொண்டவராகத் தெரிகிறது) திரும்பத் திரும்ப அவர் கதைகளில் காட்சி தரும் புஷ்பங்கள், குங்குமம், சடங்கு வழிப்பட்ட ஸ்னானங்கள், அக்னி, சாபங்கள், ஆசீர்வாதங் கள், நமஸ்காரங்கள், – எல்லாமே சக்தி ஆராதனை சம்பந்தப் பட்டவை – எல்லாமே அவர் எழுத்துக்களில் நிறைந்து காணப் படுவதும், அவரது குடும்பத்தின் தேவி வழிபாடு தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருவதன் இலக்கியவெளிப் பாடுதான் ராமாம்ருதத்தின் எழுத்து என்று எண்ணத் தோன்றுகிறது. அவரது எழுத்துக்களில் மிகச்சக்தி வாய்ந்த தும், பரவலாகக் காணப்படுவதுமான கருப்பொருள் மரணம் தான்.

இந்த சக்தி வாய்ந்த கரு அவரை மிகவும் கவர்ந்துள்ளது போலும். அவர் இந்த விஷயத்திற்குத்தான் தன் எழுத்துக்களில் அவர் திரும்பத் திரும்ப வருகிறார்,. இந்த நித்திய உண்மை அவரை ஆட்கொள்ளும் போதெல்லாம் அவர் தன்னை இழந்தவராகிறார். முரணும் வேடிக்கையும் என்னவென்றால், மரணத்தில்தான் ஒருவன் வாழ்க்கையின் மகத்துவத்தை அறிந்துகொள்கிறான்.

ராமாம்ருதம் கதை சொல்லும் பாங்கே அவருக்கேயான தனித்வம் கொண்டது. அவருடைய பாத்திரங்கள் நிச்சயம் நாம் அன்றாட சாதாரண வாழ்க்கையில் காணும் சாதாரண மனித ஜீவன்கள்தான். ஆனால் ராமாம்ருதம் கதைகளில் அவர்கள் உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் கொதிநிலையில் அறிமுகமாகிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் வருத்திக் கொண்டு வேதனைப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நேர் எதிர்முனை நிலைகளில்தான் வாழ்கிறார்கள். அது சந்தோஷம் தரும் வேதனை. வேதனைகள் தரும் சந்தோஷமும்தான் அது. பெரும்பாலும் பின்னதே உண்மை யாகவும் இருக்கும்.

எல்லாம் தடித்த கோடுகளில் வரையப் பட்ட சித்திரங்கள். இத்தகைய அறிமுகத்திற்குப் பிறகு ராமாம்ருதம் நம்மை அப்பாத்திரங்களின் அடிமனப் பிரக்ஞைகளின் பாதைகளுக்கு, அவை அகன்ற சாலைகளோ, குறுக்கு ஒற்றையடிப் பாதைகளோ, சந்துகளோ, அவற்றின் வழி அவர்தான் இட்டுச்செல்கிறார். இவை கடைசியில் பிரபஞ்ச விஸ்தாரத்திற்கு இட்டுச்சென்று அவற்றின் இயக்கத்தின் அங்கங்களாகத்தான், மனித ஜீவன்களின் மற்ற உயிர்களின் இயக்கங்களும் சொக்கட்டான் காய்களாக விதிக்கப்பட்டுள்ளன, விதிக்கப்பட்டதை ஏற்று அனுபவிப்பது தான் என்று சொல்கிறார் போலும்.

இந்நிலையில் ராமாம்ருதத்தின் பாத்திரங்களின் உணர்வுகளின் மனச் சலனங்களின் குணத்தையும் வண்ணங்களையுமே பிரபஞ்சப் பின்னணியும் ஏற்பதாகத் தோன்றுகிறது. இதில் எது எதன் பின்னணி, எது எதன் பிரதிபலிப்பு என்று சொல்வது கடினமாகிவிடும். இது ஒரு பிரம்மாண்ட அளவிலான சலனங் களின், உணர்வுகளின் இசைத்தொகுப்பு.

தரங்கிணி என்னும் அவரது ஒரு சிறுகதைத் தொகுப்பை ‘பஞ்சபூதக் கதைகள்’ என்கிறார் ராமாம்ருதம். அதன் ஒவ்வொரு கதையிலும் பிரதானமாக ஒருபெண்ணின் வாழ்க்கையைத் தீர்மானிப்பது, அதன் ஒவ்வொரு முக்கிய திருப்பத்தையும் பின்னிருந்து பாதித்து மறைமுகமாக நடத்திச் செல்வது பஞ்ச பூதங்களில் ஒன்று. ஒவ்வொரு கதையிலும் ஒன்று, நீர், அக்னி, ஆகாயம், பூமி, காற்று இப்படி.

அந்தந்தக் கதையில் திரும்பத் திரும்ப வரும் படிமம்,பெண்ணின் அலைக்கழிக்கும் மன உளைச்சல், வாழ்க்கையின் ஒவ்வொரு அடிவைப்பையும் தீர்மானிக்கும் சக்தி அந்தப் பூதங்களில் ஒன்றாக இருக்கும். இத்தொகுப்பு, ராமாம்ருதத்தின், எழுத்துத்திறனுக்கும், தரிசனத்திற்கும் சிறந்த அத்தாட்சி. ஆனால் இந்தக் குணங்களை ராமாம்ருதத்தின் எல்லா எழுத்துக்களிலும் காணலாம். நினைவலைகள், சொற் சித்திரங்கள், படிமங்கள் எல்லாம் அவருடைய கதை சொல்லும் வழியில் வெள்ளமெனப் பெருக்கெடுக்கும்.

அவை மனித பிரக்ஞை நிலையின் வெவ்வேறு அடுக்குகளில், படிகளில், முன்னும் பின்னுமாக, மேலும் கீழுமாகப் பாயும். அடிமன நினைவோட்டமாக ஒரு கணம் இருக்கும் ஒன்று அடுத்த கணம் விஷம் கக்கும் சொல்லம்புகளாக பிரக்ஞை நிலையில் உருக்கொள்ளும். அன்றாட வாழ்க்கையின் மனித மன தர்க்கத்திற்கும், காரண காரிய சங்கிலித்தொடர் புரிதலுக்கும், சாவதானமான நின்று நிதானித்த மன ஆராய்வுகளுக்கும் இங்கு இடம் இருப்பதில்லை.

பிரக்ஞை நிலையில் அவர்கள் இரு கோடிகளில் எதிரும் புதிருமாக நின்று வெறிபிடித்துக் கனல் கக்குவதைப் பார்க்கிறோம். ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்? ஒரே பதில், அவர்கள் அப்படித்தான் விதிக்கப்பட்டிருக்கிறார்கள். கிரேக்கத் துன்பியல் நாடகப் பாத்திரங்களைப் போல. விதிக்கப்பட்ட அந்த முடிவுக்குத்தான் அவர்கள் விரைந்துகொண்டிருப்பார் கள்.

ராமாம்ருதத்தின் உலகம் தரும் அசாதாரண மாயமும் மிகுந்த பிரயாசையில் சிருஷ்டிக்கப்பட்ட வார்த்தைகளுமான உலகில், சாதாரண அன்றாட சம்பவங்கள் கூட வாழ்க்கையின் மிக முக்கியத் திருப்பங்களாகின்றன, வெடித்துச் சிதறும் நாடகார்த்த விசேஷம் கொள்கின்றன. சாதாரண மனிதப் பாத்திரங்கள், காவியரூபம் தரித்துக் கொள்கின்றன. சாதாரண அன்றாட வார்த்தைகள் தெய்வ அசரீரி வாக்கு களாக மயிர் கூச்செரியும் சக்தி பெற்றுவிடுகின்றன. எல்லோருமே ஏதோ பேய் பிடித்தவர்களைப் போலப் பேசு கிறார்கள், நடந்துகொள்கிறார்கள். அம்மன் கோயில்களில் காணும் காட்சிபோல. தலைவிரித்த பெண் கால் சம்மட்டி யிட்டு தரையிலமர்ந்திருக்கும் விரித்த தலையும் உடலும் வெறி பிடித்து ஆடக் காணும் காட்சி.

ஏன், ராமாம்ருதமே கூட, எழுதும் போதும், நண்பர்களுடன் பேசும் போதும், சின்ன கூட்டங்களில் கிட்ட நெருக்கத்தில் பேசும்போதும் அவர் உணர்வு மேல் நிலைப்பட்ட மனிதர்தான். அவர் தன் எழுத்துக்கள் பற்றிப் பேசும் போது கூட அவரிடமிருந்து வரும் வார்த்தைகள் அவர் கதைகளின் பாத்திரங்கள் பேசும் பாணியில்தான் இருக்கும். ஒரே சமயத்தில் பயப்படுத்தும், ஆசீர்வதிக்கும், அன்பு பொழியும், அழகிய சிருஷ்டி மனத்தில் இருக்கும் ஊர்த்துவ தாண்டவம்தான் அது. அட்டகாசமான, உடைகளும் தோற்றமும் கொண்டு தன்னை மறந்து உணர்ச்சி வசப்பட்டு ஆடும் தெய்யம் போல.

அல்லது உயர்த்திப் பிடித்த நீண்ட வாளுடன் தாக்கத் தயாராக வந்தது போன்று கோயில் இருளில் அங்குமிங்கும் பலத்த அடி வைப்புகளுடன் எண்ணெய் விளக்கின் ஒளியில் பகவதி அம்மனின் முன் நடந்து வரும் வெளிச்சப்பாடு போல. வெளித்தோற்றத்தில் பயமுறுத்தும் உடைகளும் ஆட்டமும் கொண்ட தெய்யம்தான் பக்தி கொண்டு சூழும் மக்களை ஆசீர்வதிக்கும் தெய்யம், தாயின் மடியிலிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு கனிவோடு ஆசீர்வதிக்கும்தெய்யமும். உணர்வு திரும்பிய வெளிச்சப் பாடு, பழைய சாதுவான மனிதன்தான். ராமாம்ருதமும் சிரித்த முகத்துடன் மெல்லிய குரலில் பேசும் சாது மனிதர்தான்.

அவர் எழுத்துக்களை மா த்திரம் படித்து மனதில் கற்பனை செய்துகொண்டிருக்கும் மனிதரா இந்த ராமாம்ருதம் என்று வியக்கத் தோன்றும். அவரது குலதெய்வம் பெருந்திருவும் அவரது கொள்ளுப்பாட்டி லOEமியும் இன்னும் அவரைப் பிடித்தாட்டத் தொடங்க வில்லை. இரண்டு உணர்வு நிலைகளில் நாம் காணும் வெளிச்சப்பாடு போலச் சாதுவாக சிரித்த முகத்துடன் காணும் ராமாம்ருதமும்.

என்னதான் உணர்ச்சிகளின் வெப்பங்களும், சில்லிட வைக்கும் படிமங்களும் ராமாம்ருதத்தின் எழுத்துக்களில் நிறைந்திருந்த போதிலும் அவர் எழுத்து அதன் சாரத்தில் மனிதனையும் அவன் தெய்வ நிலைக்கு உயரும் நினைப்புகளையும் கொண்டாடும் எழுத்துத்தான். கடந்த ஐம்பது வருடங்கள் நீண்ட தன் எழுத்து முயற்சிகளில் ராமாம்ருதம் தனக்கென ஒரு மொழியையும் நடையையும் சிருஷ்டித்துக் கொண்டுள்ளார்.

அது அவரை மற்ற எல்லா எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்தும். அவரது கதை ஏதும் ஒன்றின் ஆரம்ப சில வரிகளின், வாக்கியத்தின் சொற்களையும் சொற்றொடர்களையும் படித்த மாத்திரத்தி லேயே அவற்றை எழுதியது யாரென்றுதெரிந்துவிடும். படிப்பவருக்கு ராமாம்ருதத்தைப் பிடிக்கிறதா இல்லையா எனபது ஒரு பிரச்சினையே இல்லை. படிக்கத் தொடங்கிய துமே அவரது நடையும் மொழியும் அவரை அடையாளப் படுத்திவிடும். ஒரு பாரா எழுதி முடிப்பதற்கு ராமாம்ருதத் திற்கு சில மணி நேரமாவது ஆகிவிடும். ஒரு கதை எழுதி முடிக்க சில மாதங்கள்.

ஐம்பது ஐம்பத்தைந்து வருடங்கள் நீளும் அவரது எழுத்து வாழ்க்கையில் இதுகாறும் அவர் எழுதியிருப்பது ஒரு நூறு கதைகளே இருக்கும். ஆனால் அவருக்கென ஒரு வாசகர் கூட்டம், அவரை வழிபடும் நிலைக்கு வியந்து ரசிக்கும் ஒரு வட்டம் அவருக்கு உண்டு. அவருடைய சொல்லாட்சிக்கும் மொழிக்கும் மயங்கி மது வுண்ட நிலையில் கிறங்கிக்கிடக்கும் வட்டம் அது. ராமாம்ருதத்தின் கதைகளை மொழிபெயர்த்தல் என்பது சிரம சாத்தியமான காரியம்தான். அவரது மொழியும் நடையும் அவருக்கே உரியதுதான். எந்தத் திறமைசாலியின் மொழி பெயர்ப்பும் போலியாகத்தான் இருக்கும்.

ராமாம்ருதத்திற்கு மொழி என்பது ஒரு வெளியீட்டுச் சாதனம் மாத்திரம் அல்ல, வெளியீட்டுக் காரியம் முடிந்த பிறகு அது ஒன்றுமில்லாமல் போவதற்கு. அவருக்கு ஒவ்வொரு சொல்லும் ஒரு வடிவம், ஒரு ஆளுமை, கலாசார உறவுகளும் காட்சிப் படிமமும் கொண்ட ஒன்று. அதை ராமாம்ருதம் ‘த்வனி’ என்கிறார். இவ்வளவு சிக்கலும் கலவையுமாக சிருஷ்டிக்கப்பட்டுள்ள சொல் எப்படி இன்னொரு மொழியில் பெயர்க்கப்படும்? மொழிபெயர்ப்பில், ராமாம்ருதத்தின் தமிழ்ச்சொற்கள் அதன் மற்ற பரிமாணங்களை, அதன் முழு ஆளுமையை இழந்து நிற்கும். இதன் விளைவு, மொழிபெயர்க்கப்பட்ட ராமாம் ருதம் அதன் சாரத்தில் தமிழர் அறிந்த ராமாம்ருதமாக இருக்கப் போவதில்லை.

ராமாம்ருதத்தின் உரைநடை எவ்வகைப்படுத்தலுக்கும் அடங்காதது. அதை உரைநடை என்று கூறக் காரணம் அது உரைநடை போல் எழுதப்பட்டிருக்கும் காரணத்தால்தான். இல்லையெனில் அதைக் கவிதை என்றுதான் சொல்ல வேண்டும். அதில் நிறைந்திருக்கும் படிமங்கள், குறியீடுகள், உருவகங்கள்ம் பின் அது இயங்கும் சப்த லயம் காரணமாக அதைக் கவிதை என்று சொல்லவேண்டும். ஆனால் லயம் என்பது சங்கீதத்தின் லயமாகவும் இருக்கக் கூடும்.

ஏனெனில் அனேக சமயங்களில் அவர் சிருஷ்டிக்கும் சூழல் இசை உணர்வை எழுப்பும் அவரது உரை இசையின் லயத்தை உணர்த்திச் செல்வது போல. ஒரு வேளை ராமாம்ருதம் மொழி யந்திரத்தனமாக அர்த்தமற்ற உபயோகத்தினால் நச்சுப்படுத்தப்பட்டதால், அதன் இழந்த அர்த்தச்செறிவையும் உக்கிரத்தையும் அதற்குத் திரும்பப் பெற்றுத் தரும் முயற்சியாகவும் இருக்கலாம். நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து போகவேண்டும் என்று கூட அவர் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்.

திரும்ப பல இடங்களில் அவர் சொற்கள் வேதங்களின் மந்திர உச்சாடனம் போலவும் ஒரு நிலைக்கு உயர்கிறது.

குறிப்பாக ரிக் வேதம். அதன் கவித்வ சொல்லாட்சியும், இயற்கையும் மனிதனும் அதில் கொண்டாடப்படுவதும், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான பரஸ்பர பிணைப்பை உணர்த்துவதும், அது தரும் பிரபஞ்ச தரிசன மும், இவை எல்லாவற்றோடும் அதில் முழுதுமாக விரவி யிருக்கும் கவித்வமும். ராமாம்ருதம் சமஸ்கிருதம் அறிந்தவ ரில்லை. பின் இவை அத்தனையையும் அவர் எங்கிருந்து பெற்றார்? நிச்சயமாக அவரது தாத்தாவிடமிருந்து, குடும்பப் பாரம்பரியத்தில் வந்த பிதிரார்ஜிதம்.

ராமாமிருதத்தின் எழுத்துக்களில் புராணங்களும் தொன்மங்களும் நிறைந்திருக்கும். காப்ரியேல் கார்ஸியா மார்க்வேஸின் நாவல்கள், பாப்லோ நெருடாவின் கவிதை, மச்சுப் ப ¢ச்சுவின் சிகரத்திலிருந்து- வில் இருப்பது போல. ஆனால் ராமாம்ருதத்தின் எழுத்தில் அது ரிக் வேத உச்சாடனமாகத் தொனிக்கும்.வெளித் தோற்றத்தில் ஏதோ பாட்டி கதை போலவிருக்கும் ஒன்றில் ஒரு கலாசாரத்தின் பிரவாஹத்தையே கதை என்னும் சிமிழுக்குள் அவரால் எப்படி அடைத்துவிட முடிகிறது! அதுதான் ராமாம்ருதத்தின் கலை செய்யும் மாயம்.

ராமாம்ருதம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரு பிடிவாதத்தோடு சொல்லிவரும் இக்கதைகள், ஒரு பாமர நோக்கில் நவீனத்துமற்றதாக, ·பாஷனற்றதாகத் தோன்றலாம். ஆனால் ராமாம்ருதம் இம்மாதிரியான கவலை ஏதும் இல்லாதே தொடர்ந்து எழுதி வருகிறார். சமீப தமிழ் இலக்கியத்தில் பாட்டி கதைகள் என்ற தோற்றம் தரும் ·பாஷன் அற்ற எழுத்துக்களைப் பிடிவாதமாக ஐம்பதாண்டுகள் எழுதிக்கொண்டு, வழிபாடு என்றே சொல்லத்தக்க ஒரு ரசிகர் கூட்டத்தை மது உண்ட கிறக்கத்தில் கிடக்கும் வாசகர் கூட்டத்தை, வேறு எந்த எழுத்தாளரும் பெற்றது கிடையாது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது பற்றி ஆச்சரியப்பட வேண்டியதில்லை. மேற்கத்திய சிற்ப, சித்திர வரலாற்றில் தாயும் குழந்தையும் என்றென்றும் தொடர்ந்து வரும் படிமம். இன்றைய ஹென்றி மூர் வரை. நாம் வரலாற்றுக்கு முந்திய காலத்திற்கும் அதன் தெரிய வந்த ஆரம்பங்களுக்கே கூட, திரும்பிப் போகலாம். ஆ·ப்ரிக்க மரச்சிற்பங்களானாலும் சரி, மொஹஞ்சாதாரோவின் சுதை மண் சிற்பங்களானாலும் சரி. மனித மனத்தின் ஆழங்களில் உறைந்திருக்கும் தாய்த்தெய்வ வழிபாடு எத்தனையோ ரூபங்களில் தொடர்கிறது, 1990 களில் கூட.

(ஆங்கில மூலம்: Cultural Encapsulation, Indian Literature, No. 138, July-August 1990, Sahitya Akademi, New Delhi.)

——————————————————————————————————————————–

Thinnai: “லா.ச.ரா என்கிற கைவினைஞர் :: மலர்மன்னன்”
———————————————————————————————————————————
Thinnai: “லா.ச.ரா. (92) சொற்களின் சூத்ரதாரி :: எஸ். ஷங்கரநாராயணன்”

(லா.ச.ரா. கடந்த 30 அக்டோபர் 2007ல் தமது பிறந்த நாளன்று காலை நான்கு பத்து மணி அளவில் காலமாகி விட்டார். அவரது சிறப்புச் சிறுகதைத் தொகுதியை 1986ல் ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டது. லா.ச.ரா. நூலுக்கு முதன்முதலாய் வெளிநபர் முன்னுரை தந்தது என அமைந்தது இந்த நூலில்தான். அந்த முன்னரையை நான் எழுதினேன். விதவிதமான சாவிகளின் கொத்து என அட்டைப்படம் வடிவமைத்ததும் நான்தான். ஓவியம் திரு சரண். இன்றைய திரைப்பட இயக்குநர்.

சிறப்புச் சிறுகதை இரண்டாம் தொகுதிக்கு அவரது மகன்கள் லா.ரா.கண்ணன், லா.ரா.சப்தரிஷி இருவரும் முன்னுரை தந்தார்கள். இவை தவிர வேறுநபர் முன்னுரை என லா.ச.ரா. அனுமதித்ததேயில்லை. லா.ச.ரா.வுக்கு நன்றி.)


மு ன் னு ரைஇந்தத் தொகுப்பின் முதல் வாசகனாக அமைவதில் எனக்கு நியாயமான மகிழ்ச்சியும் பெருமையும் உண்டு.>>

எழுத்தாளர்களில் லா.ச.ரா. வித்தியாசமானவர். தனித்தன்மை மிக்கவர். நனவோடை உத்தியை முதலில் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் லா.ச.ரா.

பொதுவாக இவர் கதைகள் எளிமையானவை அல்ல, இவை எளிமையான கருக்களைக் கொண்டிருந்த போதிலும். லா.ச.ரா. தான் வாழ்ந்த வாழ்க்கையை, தான் உணர்ந்தபடி எழுதுகிறார். அல்லது தான் கண்ட, கேட்ட ஒரு வாழ்க்கையைத் தன் வாழ்க்கையாய் உணர்ந்து எழுதுகிறார். பொதுவாக கற்பனைகளுக்கு உண்மையின் சாயத்தைப் பூசிப் படைக்கிற எழுத்தாளர்கள் மத்தியில், தன் தீட்சண்யம் மிக்க ஞானத்தினால், கலாபூர்வமான ரசனைமிக்க கண்ணோட்டத்தினால், மொழி ரீதியான வளமான அறிவினால், லா.ச.ரா. உண்மையை அதன் தீவிரம் விலகாமல் கற்பனையையொத்த அழகும் மெருகும் சேர்த்து வழங்குவதில் பெருத்த வெற்றி பெறுகிறார்.

இவர் கதைகள் என நினைத்ததும் சட்டென்று ‘வித்துக்கள்’ சிறுகதை ஏனோ நினைவில் குதிக்கிறது. பள்ளிக்கூட நாட்களில் ‘My dog’ என ஒரு கவிதை வாசித்திருக்கிறேன். நல்லதொன்றும் செய்யாத, உதவியொன்றும் செய்யாத, பெரிதும் துன்பங்களையே விளைவித்து வந்த ஒரு நாய்பற்றிய அந்தக் கவிதையில், பத்தி பத்தியாக அந்த நாயின் உபத்திரவங்களையும், அதனால் தான் அனுபவித்த துன்பங்களையும் சொல்லிக்கொண்டே வருகிற கவிஞன் கடைசியில் இப்படிச் சொல்வான் – ‘And though my dog is as bad as bad can be, I cant leave my dog for all the treasures of the sea.’

உலகத்தின் பெரிய செல்வமான அன்பு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாதது. சுயநலமற்றது. லா.ச.ரா.வின் ‘வித்துக்கள்’ மிகுந்த துஷ்டத்தனங்கள் நிறைந்த தன் குழந்தைகளை நேசிக்கிற ஒரு தாயின் கதை. சில வருடங்களுக்கு முன் ‘சாவி’ வார இதழில் (என நினைக்கிறேன்) படித்த கதை, என் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.

இன்னொரு கதை – தலைப்பு நினைவில் இல்லை. ‘த்வனி’ தொகுதியில் படித்ததாக நினைவு. வங்கியில் இவர் மேனேஜராக இருந்தபோது ‘அலுவல் நேரம்’ முடிந்தபின் ஒரு மனிதன் லாக்கரிலிருந்து நகைகளை எடுத்துச் செல்ல வருகிறான். மரணப்படுக்கையில் தன் மருமகன் இருப்பதாயும், கடைசியாய் இவன் மகளை மிகுந்த அலங்காரங்களுடன் பார்க்க விரும்புவதாகவும் கூறி நகைகளை எடுத்துப் போகிறான். அதன் பிறகான இவர் மன சஞ்சலங்கள், முகந் தெரியாத அந்த மனிதர்கள் மீதான இவர் பரிவு, கவலை… யாவும் செறிவுடன் அமைந்திருந்தன. பிறகு அந்த நகைகளை லாக்கரில் வைக்க அந்த மனிதன் வரவில்லை. அவரும், அவன் வராதிருப்பதே நல்லது, அவன் வந்து ஏதேனும் மோசமான முடிவைச் சொன்னால் தன்னால் தாள முடியாது, என்று நினைக்கிறதாக அந்தக்கதை முடியும். மனிதாபிமானம் மிக்க இந்தச் சிறுகதை, என்னால் மறக்க முடியாத லா.ச.ரா.வின் கதைகளில் ஒன்று.

பிறகு ‘பா ற் க ட ல்.’ ஒரு கூட்டுக்குடும்பத்தின் அழகினை இவ்வளவு சிறப்பாக நான் வேறு யாரிடமும் வாசித்ததில்லை. பல பகுதிகளாகத் தன் கதைகளைப் பிரிக்கிற லா.ச.ரா. இதை ஒரே வீச்சில் அமைத்ததும் கதையோட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை இவருக்குப் பெற்றுத் தந்தது. ஜனனி, இதழ்கள், கங்கா, த்வனி, மீனோட்டம், பச்சைக்கனவு, உத்தராயணம் (காலரீதியான வரிசை அல்ல) என்கிற இவரது தொகுதிகளில் ‘பச்சைக்கனவு’ மிகவும் சிறப்பானதாக நினைக்க முடிகிறது.

இந்தச் சிறப்புச் சிறுகதைகள் லா.ச.ரா.வே தேர்ந்தெடுத்த கதைகள். முதல் தொகுதி இது. இதில் இடம்பெற்றுள்ள எட்டு கதைகளில் ‘குரு-ஷேத்திரம்’ ஒரு பிரமிக்கத்தக்க சாதனை என்று தோன்றுகிறது. ஒருமுறை நேரில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது இந்தக் கதையின் சில பகுதிகளை இருபது, இருபத்தோரு முறைகள் திருத்தி எழுதியதாய் லா.ச.ரா. என்னிடம் கூறினார்.

‘குரு-ஷேத்திரம்’ ஒரு திருடனின் மனமாற்றம் பற்றிய கதை. வைரங்களை வாரியிறைத்திருக்கிறார் லா.ச.ரா. குறியீடுகளும் சங்கேதங்களும் மிகுந்த கலைநயத்துடன், வார்த்தைகளின் ஓசைநயத்துடன், தத்துவங்களின் தரிசனத்துடன் வெளியாகின்றன.

எத்தனையோ முறை திருடிவிட்டு, திருட்டுக் கொடுத்தவனுடன் சேர்ந்து பொருளைத் தேடுவதாய் நாடகமாடியிருக்கிற திருடன், தான் திருடிய ஒருவன் கோவில் குளத்தில் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு திடுக்கிடுகிறான். மனசாட்சியின் முதல் விழிப்பு. (”எந்த மானத்தைக் காப்பாற்ற இந்தப் பணத்தை நம்பியிருந்தானோ? அந்தப் பணத்தை இழந்ததால், உயிரைத் துறக்கும் அளவுக்கு உயிர்மேல் நம்பிக்கை இழந்தவன். உயிரினும் பெரிதாய் நம்பிக்கை வைத்து, சாவிலும் அவன் வணங்கிய அது எது?” – பக்/83) சிந்தனையின் முதல் உயிரிப்பு.

தன் தாயை, மனைவியை அந்தக் கணத்தில் அவன் நினைத்துப் பார்க்கிறான். அவர்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு தான் பிரிந்து வந்த தன் தவறை உணர்கிறான்.

கதை முழுதும் யதார்த்தத் தளத்தில் நிகழவில்லை எனினும் படிப்படியான அவன் மனமாற்றங்களை ஊடுசரமாய்ப் பற்றிக்கொண்டே வரமுடிகிறது இடையே அற்புதமான தரிசன வரிகள். ”எதையுமே கொல்லாமல் அனுபவிக்க முடியாதா? ஏன் இப்படி பிள்ளைக்கறி தின்றுகொண்டே இருக்கிறோம்?” – பக்/90. ”உலகம் முழுதும் ஒரு உயிர். ஒரே உயிர்தான். அதன் உருவங்கள்தாம் பல்வேறு.” பக்/91.

வாழ்வின் விஷம்போன்ற பொருளாசையை இவன் இன்னும் துறக்கவில்லை என்கிற விதத்தில், பெட்டியைப் பாம்பு பாதுகாக்கிற கதை கனவாக வருகிறது. மனசாட்சியின் உருவோங்குதலில் ”என் எண்ணங்களை நானே நூற்று, என்மேலேயே பின்னிக்கொண்டு, அவை இன்னதெனக்கூடப் புரியாது அவைகளில் சிக்குண்டு தவித்து இரையாகிக் கொண்டிருக்கிறேன்.” – பக்/99. ”வீட்டில் பெண்டு ஒண்டியாய் இருக்கையில், ஒரு அன்னியன் பேசாமல் உள்ளே புகுந்து, கதவைத் தாழிட்டுக்கொண்டாப்போல் பயம் என் உள்ளத்தில்.” – பக்/101. ”என் வீடு காலியானதும், அதில் என் குரல் எழுப்பிய எதிரொலிகளே என்னை எழுப்பியிருக்கின்றன.” – பக்/101.

அவன் மீண்டும் தன் மனைவியையும், குழந்தையிடமும் சென்றடைவதுவரை கதை ஒரு கவிதையின் நளினத்துடன் அற்புதமாய்ச் செல்கிறது.

‘தாட்சாயணி’ கதையைப் படிக்கையில் இவரது இன்னொரு கதை ‘அபூர்வ ராகம்’ நினைவுக்கு வருகிறது. ”சில விஷயங்கள் சிலசமயம் நேர்ந்து விடுகின்றன. அவை நேரும் முறையிலேயே அவைகளுக்கு முன்னும் பின்னும் இல்லை. அவை நேர்ந்ததுதான் உண்டு. அவை நேர்ந்த விதம் அல்லாது வேறு எவ்விதமாயும் அவை நேரவும் முடியாது. நேர்வது அல்லாமலும் முடியாது.” – பக்/71. இதே தன் கருத்தை ‘அபூர்வ ராகம்’ னகதையிலும் வலியுறுத்துகிறார். சங்கீதம் பற்றிய தன் ஆழ்ந்த ரசனையை இந்தக் கதைகளில் முன்வைக்கிறார் லா.ச.ரா. பாத்திரங்கள் மென்மையும் மூர்க்கமும் ஒருங்கே பெற்று வார்த்தைகளின் சிறப்பில் பொலிகின்றன.

லா.ச.ரா. பெண்களை மிக மதிக்கிறார். படித்தவர்களாக, தெளிவானவர்களாக அவர்களை அவர் சித்தரிக்கிறார். இந்தக் கதைகள் எழுதப்பட்ட காலகட்டத்தையும், இந்தக் கதைகள் நிகழ்கிற காலத்தையும் வைத்துப் பார்த்தால் லா.ச.ரா.வின் இந்தத் தன்மையின் சிறப்பு புரியும்.

லா.ச.ரா. தன் கதைகளில் உத்திகளை மிகத் திறமையாய்க் கையாள்கிறார். உவமைகளை மிகுந்த லாவகத்துடன் வெளிப்படுத்துகிறார். ”மெத்தைஉறை போன்ற அங்கி அணிந்த பாதிரி” என்பார். ”மழையில் நனைந்ததில் மார்பில் கொலுசு” என்பார். ”இறந்த பிணத்தின் கண்ணில் பளிங்கு ஏறியிருந்தது” என்பார். இவையெல்லாம் எங்கோ படித்திருந்தும் மனதில் தளும்புகின்றன.

இந்தத் தொகுதியில் ”தலையை இளநீர்போல முடிந்தாள்.” – ”வயிற்றில் பசி தேளாய்க் கொட்டிற்று.” – ”கேசுக்கு அலையும் போலிஸ்காரன் கவனிப்பது போல கவனித்தாள்.” – ”கற்கண்டுக் கட்டிகள்போல் நட்சத்திரங்கள்.” ”தலையில் சுருள்சுருளான மோதிரக் குவியல்.” – என்பனபோன்ற ஏராளமான ஜாலங்கள் மனதை நிறைக்கின்றன.

‘இதழ்கள்’, ‘கொட்டுமேளம்’ இரண்டுமே நீண்ட கதைகள். ‘இதழ்கள்’ ஒரு மனிதன் உறவுக்கிளைகள் ஒவ்வொன்றாய் இழப்பதைச் சொல்லி, அவன் தனிமை ஆழப்பட்டு வருவதை விஸ்தரித்து, அவனது நம்பிக்கை சிதையச் சிதைய உடல் வற்றிவருவதை விவரித்து அவன் மரணத்துடன் முடிகிறது. ‘கொட்டுமேளம்’ முழுக்க யதார்த்தத் தளத்தில் அமைந்த கதை. இளம்விதவையான தன் சகோதரியை நேசிக்கிற சகோதரன் கதாநாயகன். கதை சகோதரியின் பார்வை சார்ந்தது. தன் மனைவி அன்புவழிப்பட்ட பொறாமைரீதியாய் அவர்கள் இருவரையும் பற்றி அவதூறாய்ப் பேசிப் பிறந்தகம் செல்கிறாள். ஊரே மூக்கும் காதும் வைத்துப் பேசுகையில் பொறுமையாய் இவர்கள் வெற்றி பெறுகிற கதை. குழந்தை பிறந்ததும் குழந்தையைக் கூட்டிக்கொண்டு மீண்டும் கதாநாயகனின் மனைவி வீட்டுக்குள் வந்து, (”இத்தனை மதில்கள் எழும்பிய இடத்தில் தொங்குவதற்கு இடம்தேடி அலையும் வெளவால் போன்று…” -பக்/86) மன்னிப்பு கேட்கிறாள். பிறகு அந்தக் குழந்தையின் கல்யாணத்தோடு விதவையின் வாழ்வு முடிகிறதாக கதை முடிகிறது.

‘கஸ்தூரி’, ‘மண்’ திருப்பம் சார்ந்த கதைகள். சொல்நேர்த்தியால் சிறப்பு பெறுகின்றன.

‘பச்சைக்கனவு’ ஒரு வித்தியாசமான கதைதான். இளம் வயதில் கண்ணிழந்த ஒரு குருடன் பற்றிய கதை. கண் இருக்கையில் அவன் கடைசியாய்க் கண்ட நிறம் பச்சை. அக்காரணம் பற்றியே அந்த வர்ணம் மனதைக் கெட்டியாய்ப் பற்றிக்கொண்டு விட்டது. (பக்/5) அதிலிருந்து தான் கேள்விப்படுகிற உணர்கிற பொருட்களுக்கெல்லாம் பச்சை வர்ணமே அமைந்திருப்பதாய்க் கற்பனை செய்துகொள்வது இவனுக்குப் பிடிக்கிறது. லா.ச.ரா.வின் சிறப்பான ஒரு விஷயம் என்னவென்றால், பாத்திரங்களூடே திடீரென்று வாழ்க்கை பற்றிய தரிசனங்களை மிக நெருக்கமாய் நுணுக்கமாய்த் தெரிவிக்க முடிவதுதான்.

‘பச்சைக்கனவு’ கதையில் குருடனின் நினைவோட்டமாக, ”தூங்குவதற்கும் விழித்திருப்பதற்கும் என்ன வித்தியாசம்? எனக்கு இரண்டும் ஒன்றாயிருக்கிறது. எப்பவும் இருள்தான். வெய்யில் உடலில் உறைத்தால் அது பகலா? அப்புறம் வெய்யிலில்லாது, தெருக் கொறடில் நான் கட்டிலில் படுத்துவிட்டால் அது இரவா? இப்பொழுது நான் தூங்குவதாக அர்த்தமா? தூக்கம் நிஜமா? விழிப்பு நிஜமா?” – பக்/14. என்று அற்புதமாய் இவரால் எழுத முடிகிறது.

‘இதழ்கள்’ கதையில் தன் சகோதரனை இழந்த நோயாளி இப்படி நினைக்கிறான். ”சந்துருவின் அகாலமான திடீர் மரணம் தேவலையா? அல்லது நாளுக்கு நாள் அல்லது ஒரு கணக்கில் மூச்சுக்கு மூச்சு ஒருதுளியாய்ச் சுயநினைவோடு என் பிராணனை நான் விட்டுக்கொண்டிருக்கும் இந்நிலை தேவலையா? இம்மரணத்தில் நோயின் அவஸ்தை ஒருபக்கமிருக்கட்டும். இதில் எங்கோ ஒரு மூலையில் ஒருவிதமான அவமானம் ஒளிந்துகொண்டு ஊமையாய் உறுத்துகிறது.” – பக்/ 139-140.

கொட்டுமேளம் கதையிலும் இப்படி ஓரிடத்தை ரசிக்க முடிந்தது. ஜானாவின் மன்னி, தன் கணவனையும், ஜானாவையும் பற்றி அவதூறு பேசிப் பிறந்தகம் செல்கிறாள். பிறந்தவீட்டில் இவள் கணவனை விட்டுவிட்டு வந்த துக்கம்கூடத் தெரியாமலேயே வளைய வருகிறாள். பிறகு அவளுக்கும் அவள் தாயாருக்கும் முதல்பிணக்கு எப்படி ஏற்படுகிறது தெரியுமா? ஜானாவிடம் யாரோ இதுபற்றி இப்படிச் சொல்கிறார்கள். ”ஏன்டி, மருமான் முழிமுழியாப் பேசறானாமே! நான் கேள்விப்பட்டேன். உன் மன்னிக்குப் புதுசா தங்கை பிறந்திருக்காம். அதிலேருந்து என்னமோ கசமுசப்பாயிருக்காம்.” – பக்/180.

‘தரிசனம்’ இந்தத் தொகுப்பிலேயே தனித்தன்மை வாய்ந்தது. ஏனோ திருமணம் குதிராமல் தடைப்பட்டு வருகிற பெண்களை நினைத்த இவர் சோகம், மிகுந்த கலைநயத்துடனும் கவிதையின் அழத்துடனும் வெளிப்பட்டுள்ளது. ”எதிர்வீட்டில் ஒரு பெண் வயது முப்பத்திரெண்டாம். இன்னும் கல்யாணம் ஆகவில்லையாம்… அவளை அவள்பயிலும் வீணையின் இசையாய்த்தான் அறிவேன். தன் ஆவியின் கொந்தளிப்பை வீணையில் ஆஹ¤தியாய்ச் சொரிகிறாள்… நாட்டில் பெண்களுக்குக் குறைவில்லை. பிள்ளைகளுக்கும் குறைவில்லை. ஆனால் தாலிமுடி ஏன் விழுவதில்லை?” – பக்/112. ”கன்யாகுமரி காஷாயினி… காத்திருப்பது என்றால் என்ன? இங்கு இத்தனை அழகும் அங்கு அத்தனை செளரியமும், ஒன்றுடன் ஒன்று ஒன்றாக ஏங்கி, வறட்டுக் கெளரவத்தில் வியர்த்தமாகப் போவதுதானா? கப்பல்களைக் கவிழ்த்த கதைகளைத் தன்னுள் அடக்கிய மூக்குத்தி உண்மையில் கல்யாணம் ஆகாமல் காத்திருக்கும் கன்னிகளின் ஏக்கம் ஒன்றுதிரண்ட கண்ணீர்ச் சொட்டு.” (பக்/117)

லா.ச.ரா.வின் ஒவ்வொரு கதையும் சிறப்புச் சிறுகதைதான். லா.ச.ரா.வின் சொற்செட்டும், கற்பனை அழகும், கவிதை மனமும் மிகுந்த சுவையும், அதேசமயம் கருத்துச் செறிவும் நிரம்பியவை.

எங்களைப்போன்ற இன்றைய இளைய எழுத்தாளர்களுக்கு லா.ச.ரா.வும், ஜானகிராமனும் தவிர்க்க முடியாத ஆதர்சங்கள். இருவரது கதைகளையும் தொடர்ந்து ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டு வருவது மகிழ்ச்சியோடு பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

1) லா.ச.ரா. மரபுரீதியான பழக்கவழக்கங்களை தம் கதைகளில் ஆதரித்தார். எனினும் அவைகளை மரபை உதறிய புது முறைகளில் சொன்னார்.

2) தமிழ்மொழிக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களில் கட்டுரைகளுக்கு சுந்தர ராமசாமியையும், கதைகளுக்கு லா.ச.ரா.வையும் சொல்லியாக வேண்டும்.

3) லா.ச.ரா. உணர்வுகளின் மைக்ராஸ்கோப். சொற்களின் சூத்ரதாரி. இவர் கதைகள் வார்த்தைகளின் விஸ்வரூபம். லா.ச.ரா.வின் உலகம் குறுகியது என்று கூறுபவர்களால்கூட அது ஆழமானது என்பதை மறுக்க முடியாது.

எஸ். ஷங்கரநாராயணன்
சென்னை 101
10.12.1986
(ஐந்திணை பதிப்பகம் – லா.ச.ரா.வின் சிறப்புச் சிறுகதைகள் – முதல் தொகுதி.)

>>>

லா.ச.ரா.வுடன் நட்பு (அடுத்த இதழில்)
————————————————————————————————————————

By Era Murugan in RKK:
ஒரே கதையைத்தான் லா.ச.ர வெவ்வேறு நடைகளில் எழுதுகிறார் என்று கு.அழகிரிசாமி ஒரு தடவை சொன்னார்

இந்தக் குற்றச்சாட்டு கி.ராஜநாராயணனைக் குறித்தும் உண்டு. பிரபஞ்சன் சொன்னதாக நினைவு.

லா.ச.ராவை ‘அழுகுணிச் சித்தர்’ என்பார் க.நா.சு.

இ.பா சார் சொன்னபடி, அவர் ஒரு தலைமுறையின் கல்ட் ஃபிகர். ‘புத்ர’வும் ‘சிந்தாநதி’யும் அவர் பெயரை எக்காலத்துக்கும் சொல்லிக் கொண்டிருக்கும் – கல்ட் பிகர்கள் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துப் போகப்படுவதில்லை என்றாலும்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் (1998 என்று நினைவு) அவரைச் சந்தித்தபோது என்னிடம் சொன்னார் – “கதை நன்றாக வரும்வரை அதை விடாதே. திரும்பத் திரும்ப சோம்பல்படாது எழுது. என் வீட்டுக்கு வா, காண்பிக்கிறேன், புத்ரவுக்கு எத்தனை டிராப்ட் ட்ரங்குப் பெட்டியில் வைத்திருக்கிறேன் என்று”.

அவர் பட்ட கஷ்டம் நாம் படத்தேவையில்லாமல் செய்துவிட்டது டெக்னாலஜி. கம்ப்யூட்டரில் எழுதுவதால், அடித்தலும் திருத்தலும் ஒட்டுதலும் வெட்டுதலும் புதிதாக நுழைத்தலும் நாலே கீபோர்ட் விசைகள் மூலம் நடத்திவிட முடிகிறது. ஆனால் அந்த ‘சிரமத்தை’க்கூட எடுத்துக்கொள்ள எத்தனை எழுத்தாளார்கள் முயல்கிறார்கள் என்பதுதான் கேள்வி.

புத்ர-வை நாவலோடு அங்கங்கே அவர் டூடுல்ஸாகக் கிறுக்கிச் சேர்த்த படங்களுக்காகவும் நினைவு வைத்திருக்கிறேன்.வாசகர் வட்டம் (லட்சுமி கிருஷ்ணமூர்த்தி) கிட்டத்தட்ட ஐம்பது வருடம் முன்னால் நூல் பதிப்பில் செய்த அழகான புதுமை அது.

அன்புடன்
இரா.மு

Thinnai: “லா.ச.ரா.வின் பாற்கடலும் போர்க்களமும் :: பா. உதயகண்ணன்”

Thinnai: “லா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக.. :: மகேஷ்.”

Thinnai: “லா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி :: ம.ந.ராமசாமி”

————————————————————————————————————————————————–

முகங்கள்: எழுத்தையே சங்கீதமாக்க முயற்சித்தவர்!

ந.ஜீவா

“எழுத்து எனது சொந்த ஆத்மார்த்தம்’, “எனக்காகவே நான் எழுதுகிறேன், அதில் பிறர் தன்னை அடையாளம் காண முடிந்தால் அதுவே பெரிய விஷயம்’ என்றெல்லாம் கூறியவர் மறைந்த எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம். கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் நாள் நம்மை விட்டுப் பிரிந்த எழுத்தாளர் லா.ச.ரா.வுக்கு வயது 91.

அவரைப் பற்றிய ஓர் ஆவணக் காட்சிப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார் இயக்குநர் அருண்மொழி.

அவள் அப்படித்தான், ஏழாவது மனிதன், கருவேலம்பூக்கள், மோகமுள் போன்ற தமிழின் குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் பணியாற்றியவர் அருண்மொழி. காணிநிலம், ஏர்முனை ஆகிய படங்களை இயக்கியவர்.

தற்போது எல்.வி.பிரசாத் ஃபிலிம் & டிவி அகாதெமியில் ஆசிரியராகப் பணியாற்றும் அவரைச் சந்தித்தோம்.

லா.ச.ரா.வைப் பற்றிய ஆவணப்படம் எடுக்கும் எண்ணம் எப்படி வந்தது?

நான் லா.ச.ரா.வைப் பற்றிய ஆவணப் படம் எடுப்பதற்குக் காரணம் அவருடைய எழுத்து எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய கவித்துவமான நடை என்னை மிகவும் கவர்ந்தது. எனவே அவருடைய “கழுகு’ கதையை தொலைக்காட்சிக்காகப் படமாக்க வேண்டும் என்று 1992 இல் அவரை முதன்முதலாகச் சந்தித்தேன். அப்போதிருந்து அவருக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது. லா.ச.ரா.வைப் பற்றிய ஆவணப்படம் எடுப்பதற்கு எனக்கு ஆர்வம் வந்ததற்கு இன்னொரு காரணம் அவரது சொந்த ஊரான லால்குடிக்கு அருகேதான் எனது சொந்த ஊரும்.

அவருடைய “கழுகு’ கதையைப் படமாக்கினீர்களா?

நான் கழுகு கதையைப் படமெடுக்கலாம் என அவரை அணுகிய போது அதற்கு அவர் அனுமதி கொடுக்கவில்லை.

“என் கதையைப் படமெடுக்காதீங்க…என் கதையைப் படமெடுத்து நஷ்டம் அடையாதீங்க’ என்று எடுத்த எடுப்பிலேயே கூறிவிட்டார். அவருடைய கதை படமாகும்போது மாறிவிடும் என்பதனால் அப்படிக் கூறுகிறாரோ என்று நினைத்தேன். அவரும், “கதையின் ஜீவன் படமாக்கும்போது வீணாகிவிடும்’ என்றார். நான் திரைக்கதையை அவரிடம் காட்டுகிறேன் என்றெல்லாம் கூறிப் பார்த்தேன். அவர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. மேலும் எனக்கு அந்த ஆண்டு அந்தக் கதையைப் படமாக்குவதற்கான அப்ரூவல் தூர்தர்ஷனில் கிடைக்கவில்லை.

ஆனால் அந்தக் கதையை வேறொருவர் எடுத்தார். ஆனால் லா.ச.ரா., “அந்தப் படத்துக்கும் தனது கதைக்கும் எந்தத் தொடர்புமில்லை’ என்றார்.

லா.ச.ரா.வுக்கு சினிமாவைப் பற்றிய நல்ல அபிப்ராயங்கள் இருந்தனவா? உங்களைப் படமெடுக்க எப்படி அவர் அனுமதித்தார்?

எனக்கும் எல்லாருக்கும் தெரிந்த லா.ச.ரா. ஓர் எழுத்தாளர் என்பதுதான். ஆனால் அவரைச் சந்தித்துப் பேசிய போது அவர் உலகத்தரம் வாய்ந்த ஏராளமான திரைப்படங்களின் ரசிகர் என்பது தெரியவந்தது. 1940 – 50 காலகட்டங்களில் வெளிவந்த தரமான படங்களின் ரசிகர் அவர். ஃபிராங் காப்ராவின் படங்களை எல்லாம் பார்த்து அணுஅணுவாக ரசித்திருந்தது தெரிய வந்தது.

உலகத்தரம் வாய்ந்த படங்களைப் பார்த்து ரசித்த லா.ச.ரா.விற்கு தமிழ்த் திரைப்படங்களில் அவ்வளவு பரிச்சயமில்லை. லா.ச.ரா. தொலைக்காட்சியில் கூட தமிழ் சினிமா பார்க்கமாட்டார் போலிருக்கிறது. 96 – 98 ஆம் ஆண்டில் கமல்ஹாசனைப் பற்றி அவரிடம் பேசினேன். அதற்கு அவர், “கமல்ஹாசனா? யார் அவர்? என்ன பண்றார்?’ என்று கேட்டார். இத்தனைக்கும் கமல்ஹாசன் லா.ச.ரா.வின் தீவிர ரசிகர். அதற்குப் பின் கமல்ஹாசனோடு அவருக்குத் தொடர்பிருந்ததா என்று எனக்குத் தெரியாது. வயோதிகத்தின் காரணமாக ஒருவேளை அப்படி அவர் பேசினாலும் பேசியிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.

அவரை ஆவணப்படம் எடுக்கப் போகிறேன் என்று சொன்ன போது, “உங்களுக்காக நான் நடிக்க எல்லாம் முடியாது. வேண்டுமானால் இயல்பா நான் இருக்கறதை படம் எடுத்துக்கங்க’ என்றார்.

லா.ச.ரா.பற்றிய ஆவணப்படத்தில் என்ன காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன?

அதற்குப்பின் பலமுறை க்ருஷாங்கினியுடன் அவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன். டைனிங் டேபிள் முன் உட்கார்ந்து க்ருஷாங்கினிக்கு அவர் அளித்த பேட்டிகளைப் படமெடுத்தேன். அதன்பின் லா.ச.ரா. பங்கெடுத்த ஐந்து இலக்கியக் கூட்டங்களைப் பதிவு செய்தேன். அக்கூட்டங்களில் சிட்டி, ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்றோர் லா.ச.ரா.வைப் பாராட்டிப் பேசிய நிகழ்வுகளைப் படமெடுத்தேன். இதுதவிர வண்ணநிலவன், ஞானக்கூத்தன் ஆகிய இருவரையும் லா.ச.ரா.வின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளச் செய்து அதையும் படமாக்கியிருக்கிறேன். லா.ச.ரா.வை அவர் வீட்டில் படமெடுக்கும் போதெல்லாம் அவருடைய துணைவியாரும், மகளும் ரொம்ப ஒத்துழைப்புக் கொடுத்துப் படமெடுக்க உதவினார்கள்.

தான் ஓர் எழுத்தாளனாக இருப்பது பற்றி அவர் எண்ணம் எப்படி இருந்தது?

“நான் சம்பாத்தியத்துக்குத் தொழில் வச்சிருக்கேன். எழுத்தை வியாபாரம் பண்ணலை. முத்திரைக் கதையெல்லாம் எழுதமாட்டேன். நான் எழுத்தில் பரிசோதனைகள் பண்றேன்’ என்பார்.

எழுத்தாளர் தி.ஜானகிராமனைப் பற்றி உயர்ந்த அபிப்ராயம் உடையவராக இருந்தார் லா.ச.ரா. “தி.ஜானகிராமன் சங்கீதக்காரனைக் கதாபாத்திரமாக வைத்து எழுதுகிறார். நான் எழுத்தையே சங்கீதமாக்க முயற்சிக்கிறேன்’ என்பார்.

லா.ச.ரா.விடம் உங்களைக் கவர்ந்த பண்பு?

பணத்தைப் பெரிதாக எண்ணாத மனிதர். 1996 இல் இருந்து 2000 க்குள் அவர் மூன்று வாடகை வீடுகள் மாறிவிட்டார்.

அவர் ஒருவரிடம் ஏதோ பேசணும் என்பதற்காகப் பேசமாட்டார். நாம் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக அவரைப் பார்க்கப் போனால் அது பற்றி மட்டுமே அவர் பேசுவார். அதுபோல அவரின் ரசிகர் யாராவது நம்மோடு வந்து அவருடன் பேச ஆவலாக இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் அவர் கண்டு கொள்ளமாட்டார். அவருடன் பேச அவர் இன்னொரு நாள்தான் வரவேண்டும். நேரம் பற்றிய அப்படியொரு விழிப்புணர்வு அவருக்கு இருந்தது.

மேலும் அவரைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்லி அவரைப் பாராட்டிவிட முடியாது. வாசகர்கள் யாராவது அவரை அரைகுறையாகப் படித்துவிட்டுப் பாராட்டினால் லா.ச.ரா.கேட்கும் நுட்பமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் விழிக்க நேரிடும்.

பிற எழுத்தாளர்களைப் பற்றி ஆவணப்படம் எதுவும் எடுத்திருக்கிறீர்களா?

நான் லா.ச.ரா.வை மட்டும் ஆவணப்படம் எடுக்கவில்லை. நகுலனைப் பற்றிய ஆவணப்படமும் எடுத்திருக்கிறேன்.

எப்படி லா.ச.ரா.வை நீண்டகாலமாகப் பதிவு செய்து ஓர் ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறேனோ அதைப் போல பிற எழுத்தாளர்களையும் பதிவு செய்துவருகிறேன்.

கோவை ஞானியை நிறையப் பதிவு செய்திருக்கிறேன். எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், இன்குலாப், இலங்கை இலக்கிய விமர்சகர் கா.சிவத்தம்பி ஆகியோரைப் பற்றிய பதிவுகள் என்னிடம் உள்ளன. மேலும் சில காட்சிகளை எடுத்தால் இவற்றையெல்லாம் ஆவணப்படங்களாக மாற்றிவிடலாம்.

கவிஞர் பழமலய், எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஆகியோரையும் படமெடுக்க ஆசை உள்ளது.

ந.ஜீவா

Posted in 2437706, Academy, Anjali, Author, Awards, Biography, Biosketch, Blogs, Books, Critic, Critique, dead, Dhinamani, Dinamani, Faces, Fiction, Kadhir, Kathir, La Sa Ra, Lalgudi, Lalkudi, LaSaRa, Life, Literature, Manikkodi, Manikodi, Memoirs, Novels, people, Poems, Poet, Prizes, Puthra, Putra, Raamamirtham, Ramamirtham, Reviews, Sahithya, Sahithya Academy, Sahitya, Sahitya Academy, Saptharishi, Sindhanathi, Sindhanathy, Sinthanathi, Tamil, Tamil Blogs, Thinamani, Writer | 8 Comments »

Longest-Lived Animal Found — Clam, 405

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2007

நானூறு வயதான சிப்பி

மிங் எனப் பெயரிடப்பட்டுள்ள சிப்பி
மிங் எனப் பெயரிடப்பட்டுள்ள சிப்பி

சமீபத்தில் ஐஸ்லாந்து நாட்டின் வடக்கு அத்திலாந்திக் பெருங் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒருவகையான சிப்பி, சுமார் 405 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

உலக வரலாற்றில், மிக அதிக நாள் உயிர் வாழ்ந்த உயிரினமாக இந்த கடற் சிப்பி கருதப்படுகிறது. இத்தனை நாள் இந்த சிப்பி உயிர்வாழ்ந்தது எப்படி என்று விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ந்து வருகிறார்கள்.

இந்த ஆராய்ச்சியின் பயனாக மனிதன் உள்ளிட்ட மற்ற உயிரினங்களின் வாழ்நாளை நீட்டிப்பதற்கு வழி வகைகளை கண்டுபிடிக்க முடியும் என்று இவர்கள் நம்புகிறார்கள்.

இந்த கடற்சிப்பிக்கு விஞ்ஞானிகள் ‘மிங்’ பெயரிட்டிருக்கிறார்கள். அதாவது, 1602 ஆம் ஆண்டு இந்த சிப்பி கடலில் பிறந்த போது, சீனாவில் ஆட்சியில் இருந்த அரச பரம்பரையின் பெயரை விஞ்ஞானிகள் இந்த சிப்பிக்கு சூட்டியிருக்கிறார்கள்.

இந்த சிப்பி பிறந்தபோது இங்கிலாந்தில் முதலாம் எலிசபெத் பேரரசி ஆட்சி செய்துகொண்டிருந்தார். இலக்கியவாதியான ஷேக்ஸ்பியர் தனது படைப்புகளை எழுதிக்கொண்டிருந்தார். இந்த சிப்பி பிறந்து 40 ஆண்டுகள் கழித்து தான் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் பிறந்தார்.

இப்படி உலக வரலாற்றின் பல முக்கிய நிகழ்வுகளை தனது வாழ்நாளில் கண்ட இந்த அதிசய சிப்பி, சுமார் எட்டரை சென்டிமீட்டர் நீளமுள்ள ஓட்டிற்குள் முடங்கியிருந்தது. இந்த சின்னஞ்சிறிய ஓட்டில் இருக்கும் வளையங்களை வைத்து இதன் வயது கணக்கிடப்பட்டிருப்பதாக கூறுகிறார் கடலியல் பேராசிரியர் கிரிஸ் ரிச்சர்ட்சன்.

சிப்பியின் ஓட்டின் மேலிருக்கும் இந்த வருடாந்த வளையங்கள், இதன் வளர்ச்சி பற்றியும், அதற்கு கடலில் கிடைத்த உணவு, கடல் சார் தட்ப வெப்பம் ஆகியவை எப்படி இதன் வளர்ச்சியை பாதித்தது என்பது பற்றியும் அறிவதற்கு உதவியாக இருக்கிறது.

கடலின் கடந்த கால தட்ப வெப்பத்தை மட்டுமல்லாமல், விலங்குகள் நீண்ட காலம் உயிர் வாழ்வது குறித்த ஆராய்ச்சிக்கும் இந்த சிப்பிகள் பயன்படும் என்கிறார் ரிச்சர்ட்சன்.

405 ஆண்டுகள் ஆழ்கடலில் அமைதியாக உயிர்வாழ்ந்த இந்த கடற்சிப்பி, கடந்த வாரம் கடலை விட்டு வெளியில் எடுக்கப்பட்டு ஆராய்ச்சியாளர்களின் விஞ்ஞானக்கூடத்தில் உயிர்விட்டது.

Posted in 405, ageing, Animal, Arctica islandica, Atlantic, Clam, Discover, Discovery, Eat, Fish, Food, Iceland, Live, Longest, Longevity, Ming, mollusk, News, Ocean, quahog, quahog clam, Research, Science, Scientific, Sea, seabed, Seafood, Shells, Tech, Technology, Water | Leave a Comment »

Diwali Releases – Tamil Cinema (Vel, Evano Oruvan, Machakkaran, Kannamoochi Yenada, Azhagiya Thamizhmagan, Polladhavan)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2007

தீபாவளி படங்கள் ஒரு கண்ணோட்டம்

இந்த ஆண்டு தீபாவளிக்கு இறுதியாக 6 படங்கள் போட்டிக்குத் தயாராகியுள்ளன. இன்னும் சில படங்கள் வருமா வராதா என்ற நிலையில் உள்ளன. அழகிய தமிழ்மகன், வேல், எவனோ ஒருவன், கண்ணாமூச்சி ஏனடா, பொல்லாதவன், மச்சக்காரன் ஆகிய 6 படங்களில் தீபாவளி சரவெடியாய் வெடிக்கப்போகும் படம் எது என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்.

வேல்

“ஆறு’ படத்திற்குப் பிறகு ஹரியுடன் சூர்யா இணையும் படம். கஜினிக்குப் பிறகு இரு வேடங்களில் சூர்யா நடித்துள்ளார். “மிராண்டா மீனாட்சி’ என்ற கதாபாத்திரத்தில் தொகுப்பாளினியாக அசினும், வில்லனாக கலாபவன் மணி நடித்துள்ளனர். நாசர், லட்சுமி, சரண்யா ஆகியோரும் நடித்துள்ளனர். இசை யுவன் சங்கர் ராஜா. கிராமத்தில் அட்டகாசம் செய்யும் கலாபவன் மணியை சூர்யா எதிர்க்கிறார். இதனால் ஏற்படும் பிரச்னைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை.

மச்சக்காரன்

நான் அவனில்லை படத்திற்குப் பிறகு ஜீவன் நடிக்கும் படம். இதயத்திருடனுக்குப் பிறகு தமிழில் காம்னா நடித்திருக்கிறார். தோல்விகளையே சந்தித்த ஜீவன், காம்னாவைச் சந்தித்த பிறகு மச்சக்காரனாகிறார். அதன்பிறகு ஏற்படும் பிரச்னைகள்தான் கதை.

“கள்வனின் காதலியை’ இயக்கிய தமிழ்வாணன் இயக்கியுள்ளார். இசை யுவன்சங்கர் ராஜா.

கண்ணா மூச்சி ஏனடா

கண்ட நாள் முதல் படத்திற்குப் பிறகு பிரியா.வி இயக்கும் 2-வது படம். ராதிகாவின் ராடன் நிறுவனமும், யு.டி.வியும் இணைந்து தயாரித்துள்ள படம்.

சத்யராஜ்-ராதிகா தம்பதியின் மகளான சந்தியா, பிருத்திவிராஜை காதலிக்கிறார். சத்யராஜ் சம்மதம் தெரிவிக்க ராதிகா எதிர்கிறார். பிரச்னையில் இருவரும் பிரிய, தம்பதிகளை காதலர்கள் எப்படி சேர்த்து வைக்கிறார்கள் என்பதே கதை. நீண்ட நாள்களுக்குப் பிறகு ராதிகா பெரிய திரையில் வருகிறார். “அன்று வந்ததும் அதே நிலா’ பாடல் இதில் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது.

அழகிய தமிழ்மகன்

முதன்முறையாக விஜய் இருவேடங்களில் நடிக்கும் படம். சிவாஜிக்குப் பிறகு ஸ்ரேயா நடிக்கும் நேரடித் தமிழ்ப்படம். மசாலாவுக்காக நமீதாவும் விஜய்யுடன் இதில் ஜோடி சேருகிறார். எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்ச்சி முன்பாகவே தெரியும் குணாதிசயத்தோடு இருக்கிறார் விஜய். அதனால் ஏற்படும் பரபரப்புத் திருப்பங்களை சொல்வதுதான் படம். தரணியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பரதன் இயக்கியுள்ளார். “உதயா’வுக்குப் பிறகு விஜய்யின் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

பொல்லாதவன்

தனுஷ்-திவ்யா (குத்து ரம்யா) நடிக்க பாலுமகேந்திராவின் உதவியாளர் வெற்றிமாறன் படத்தை இயக்கியுள்ளார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தனுஷ்க்கும் மேல் தட்டு மக்களைப்போல் வாழ வேண்டும் என ஆசை. அதை நிறைவேற்ற அவர் எடுக்கும் தந்திரங்கள்தான் பொல்லாதவனாக உருவாகியிருக்கிறது. தனுஷின் “திருவிளையாடல்’ இதிலும் தொடர்கிறது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். “வேட்டையாடு விளையாடு’வுக்குப் பிறகு டேனியல் பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நினைத்தாலே இனிக்கும் படத்தின் “எங்கேயும் எப்போதும்’ என்ற பாடல் இதில் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது.

எவனோ ஒருவன்

தேசிய விருது பெற்ற மராட்டிய படமான “டோம் பிவாலி பாஸ்ட்’ படம்தான் தமிழில் எவனோ ஒருவனாக உருவாகியிருக்கிறது; நிஷிகாந்த் காமத் இயக்கியுள்ளார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் சமூக பிரச்னையில் சிக்குவதுதான் படம். படத்திற்கு வசனமும், தயாரிப்பும் மாதவனே. சங்கீதா ஜோடியாக நடித்திருக்கிறார். பள்ளிக்கூடத்திற்குப் பிறகு இயக்குநர் சீமான் இதிலும் தலைகாட்டியுள்ளார்.

பழனியப்பா கல்லூரி

கல்லூரி மாணவர்-மாணவிகளின் மூன்று வருட வாழ்க்கையைச் சித்திரிக்கும் படம் இது. பிரதீப், மது சாலினி, அர்ஜுமன் மொகல், அட்சயா ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளார்கள். ஆர்.பவன் இயக்கியுள்ளார்.

இவை தவிர,

  • விக்ரம் நடித்த ‘பீமா,’
  • அஜீத் நடித்த ‘பில்லா’

ஆகிய இரண்டு படங்களும் தீபாவளிக்கு வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது இவை இரண்டும் தீபாவளியைத் தாண்டி வெளியாகின்றன.

Posted in Ajith, Asin, Azhagiya Thamizhmagan, Cinema, Deepavali, Dhanush, Diwali, Evano Oruvan, Films, Kalainjar TV, Kannamoochi enada, Kannamoochi enadaa, Kannamoochi Yenada, Kannamoochi Yenadaa, Kodambakkam, Kollywood, Kuthu, Machakaran, Machakkaran, Madavan, Madhavan, Mathavan, Movies, Pollaadhavan, Polladahavan, Polladavan, Polladhavan, Pollathavan, Prithiviraj, Prithviraj, Priya, Radaan, radan, Radhika, Ramya, Releases, Rumya, Sandhya, Sangeetha, Sangitha, Sankeetha, Sathiaraj, Sathyaraj, Shreya, Shriya, Simbu, Sivaji, Soorya, Sriya, Sun, Surya, Thanush, TV, V Priya, Vel, Vijay | Leave a Comment »

TN CM effects reshuffle of portfolios: Why? MK Stalin vs MK Azhagiri (Kalki)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2007

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரனின் இலாகா பறிப்பு, கருணாநிதி குடும்பத்திலுள்ள அதிகார மையங்களி டையே நடக்கும் உரசலின் வெளிப் பாட்டை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. தென் மாவட்டங் களைப் பொறுத்தமட்டில், ஆட்சி மட்டத் திலும் கட்சி மட்டத்திலும் அழகிரியின் சொல்லே இறுதியானது. மாறன் சகோ தரர்களுடன் நடந்த மோதலில் தான் நினைத்ததை நடத்திக் காட்டிய அழகிரி, கே.கே.எஸ்.எஸ்.ஆரின் இலாகாவைப் பறித்ததன் மூலம் ஸ்டாலினுடன் மீண்டும் உரசத் துவங்கிவிட்டார் என்கிறார்கள்.

தென் மாவட்டங்களில் ஸ்டாலினின் உறுதியான ஆதரவாளர்களில் ஒருவராக இருப்பவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அவருக் கும் அழகிரிக்கும் ஆரம்பம் முதலே சுமுக உறவு இல்லை என்று சொல்லப்படுகிறது. விருதுநகர் மாவட்டச் செயலாளராக கே.கே.எஸ்.எஸ்.ஆர். வருவதில் அழகிரிக் குச் சற்றும் உடன்பாடில்லையாம். “அழ கிரி அண்ணன் அவரை ஒரு முன்னாள் அ.தி.மு.க.காரராகவே பார்த்தார்” என் கிறார்கள். தம்முடைய சிஷ்யர் தங்கம் தென்னரசுக்குச் செயலாளர் பொறுப்பை வாங்கித் தந்துவிட வேண்டும் என்று தீவிரமாக முயன்று பார்த்தாராம் அழகிரி. ஆனால், தென் மாவட்டங்களில் தமக்கு நம்பிக் கையான ஆட்கள் தேவை என்ற அடிப்படையில், கே.கே.எஸ்.எஸ்.ஆர், கருப்பசாமி பாண்டியன், (மறைந்த) தா.கிருஷ்ணன் போன்றவர்களுக்குத் தமது ஆதரவைக் கொடுத்து ஊக்குவித்தாராம் ஸ்டாலின். அந்த
வகையில் மாவட்டச் செயலாளரானவர்தான் கே.கே.எஸ். எஸ்.ஆர்.

இந்நிலையில் 2006ல் கலைஞர் மீண் டும் ஆட்சிக்கு வந்தவுடன் கே.கே.எஸ். எஸ்.ஆர். ஸ்டாலின் ஆசீர்வாதத்துடன் அமைச்சராகி விட்டார். ஆனால், செல் வாக்கு மிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அவருக்குக் கொடுக்கப்பட்டதை கடுமை யாக எதிர்த்தாராம் அழகிரி. என்றாலும், ஸ்டாலின் பக்கபலமாக இருந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை என்கிறார்கள்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மிகச் சுறு சுறுப்பாகவே செயல்பட்டார் என்பது கோட்டை அதிகாரிகளின் கமெண்ட். “அவர் ரொம்ப
பிராக்டிக்கலானவர், கலந்தாலோசித்தே முடிவுகளை எடுப்பார்” என்கிறார்கள். இருந்தும் சென்னையை ஒட்டியுள்ள ஒரு சிறுபான்மை கல்வி நிறுவனம், மருத்துவக் கல்லூரி துவங்கும் விவகாரத்தில் அவர் சர்ச்சையில் சிக்கிவிட்டார் என்ற பேச்சும் இருக் கிறது. இதுதவிர, சமீபத்தில் கிட்னி மோசடி விவ காரத்தில் இரண்டு மருத்துவ
மனைகளின் அங்கீ காரம் ரத்து தொடர்பான பிரச்னை எழுந்தது.

இதில் ஒரு மருத்துவமனை முக்கிய தி.மு.க. பிரமுகா¢ன் நெருங்கிய உறவினர் நடத்துவது. இதுவும் அமைச்சர் பதவி பிடுங்கப்பட காரணம் என்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தின் ஒரு பேரூராட்சியில் அ.தி.மு.க. வெல்வதற்கு மறை முகமாக உதவியதால்தான் அழகிரி சரியான சமயமாகப் பார்த்து வேட்டு வைத்துவிட்டார் என்று சொல்வோரும் உண்டு.

ஸ்டாலினால் இந்த முறை கே.கே.எஸ்.எஸ். ஆரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரைச் சுத்த மாக அமைச்சர் பதவியிலிருந்தே நீக்க வேண்டும் என்பதுதான் மதுரையிலிருந்து வந்த விருப்பமாம். ஆனால், ஜெயலலிதா போல் இல்லாமல் கலை ஞர் தமது அமைச்சர்களைக் கழற்றிவிட விரும்பாத வர். எனவேதான் பிற்பட்டோர் நலத்துறைக்கு அவரை மாற்றி விட்டாராம். இருந்தும் அழகிரியின் கோபம் தணியாததால் அவரைச் சில அமைச்சர்கள் சமாதானம் செய்தார்களாம். மக்கள் நல்வாழ்வுத் துறை இப்போது ஸ்டாலினின் மற்றோர் ஆதர வாளரும் வட மாவட்டத்தைச் சேர்ந்தவருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கொடுக்கப் பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கருப்பசாமி பாண்டியனை அமைச்சராக்க ஸ்டாலின் செய்த முயற்சியும் எடுபடவில்லை என்கிறார்கள்.

நெல்லையில் இளைஞர் அணி மாநாடு நடைபெறப்போகும் நிலையில், ஒரு நல்ல அமைப்பாளர் உற்சாகம் இழக்கும் நிலை ஏற் பட்டுவிட்டதே என்று அப் செட்டில் இருக்கிறாராம் ஸ்டாலின்.

Posted in ADMK, AIADMK, Alagiri, Alakiri, Assassin, Assassination, Assembly, Assembly Election, Assembly elections, assembly polls, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, backward, BC, Chicken, Chicken gunya, Chicken Kuniya, Chicken Kunya, Chicken pox, Chickenkunya, Chickenpox, chickun gunya, CM, Districts, DMK, dynasty, Fights, Health, hierarchy, JJ, K K S S R Ramachandran, Kalainjar, Kalainjar TV, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kalimuthu, Kalinjar, Kalki, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kill, Kingdom, Kings, KKSSR, M R K Pannerselvam, Minister, Ministers, minority, MK, Monarchy, MRK, Panneerselvam, Pannerselvam, Pannirselvam, Party, Politics, Ponmudi, portfolios, Power, Ramachandran, Registration, reshuffle, Stalin, Sureshrajan, TN, Tourism | Leave a Comment »

Maoists kill 18 in Jharkhand village: Giridih Massacre

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2007

தவறான பாதை; தவறான பார்வை

பிகாரிலிருந்து தனியாகப் பிரித்து உருவாக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள கிரிதிக் மாவட்டத்தில் சில்காதியா கிராமத்தில் ஆண்டுதோறும் கால்பந்து போட்டி கோலாகலமாக நடைபெறும். போட்டியின் தொடர்ச்சியாக கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆதிவாசிகள் நிறைந்திருக்கும் மாவட்டமான கிரிதிக்கில் இந்த ஆண்டு நடைபெற்ற கலைவிழாவில்தான் ஆயுதம் தாங்கிய நக்சலைட்டுகள் திடீர்த் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். மத்திய கூடுதல் பாதுகாப்புப் படையினர்போல சீருடை அணிந்து வந்த இந்த நக்சலைட்டு தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதலில் 2 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்திருப்பதாகத் தெரிகிறது. இதுபோன்ற தாக்குதல்கள் ஜார்க்கண்டிலோ அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலோ புதியதல்ல.

மலைவாழ் மக்களும் ஆதிவாசிகளும் அதிகம் வாழும் சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களும் ஆந்திர மாநிலத்தின் தெலுங்கானா பகுதியும் நக்சல் தீவிரவாதிகளின் ஊற்றுக்கண்களாக இருப்பதில் அதிசயமோ ஆச்சரியமோ இல்லை. மலைவாழ் மக்களின் இயற்கை வளங்களை, குறிப்பாக புதைந்து கிடக்கும் கனிமங்களை வெட்டி எடுப்பவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் சம்பாதிக்கின்றபோது, அந்த மக்களின் அன்றாட வாழ்க்கை வறுமையில் தொடர்ந்தவண்ணம் இருப்பதுதான், இந்தப் பகுதிகளில் நக்சல் தீவிரவாதம் விஷஜுரம் போல பரவுவதன் ரகசியம்.

9 சதவிகித பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது; 200 பில்லியன் டாலர்கள் நமது செலாவணி இருப்பு; இந்தியக் கிராமங்கள் செழிப்பாக இருக்கின்றன; தொழிலாளர்களின் தினக்கூலி இப்போது நகரங்களைவிட கிராமத்தில்தான் அதிகம்; வேலைக்கு கிராமத்தில் ஆள் கிடைப்பதில்லை; யார் சொன்னது கிராமங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று? இப்படிப் பேசுபவர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர்.

இதெல்லாம் உண்மைதான். ஆனால், விவசாயிகள் பல மாநிலங்களில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கிராமங்களில் தொழில் இல்லாததால், தினக்கூலிக்காக பலரும் நகரங்களின் தெருக்களில் வேலைதேடி பரிதாபகரமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், படித்தும் வேலையில்லாத பட்டதாரிகள் மனவிரக்தியில் தீவிரவாத சிந்தனையால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். இவையும் உண்மைதானே.

இளைஞர்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும், அரசியல்வாதிகள் மீது ஏற்பட்டிருக்கும் கோபமும், படித்தும் வேலையில்லாததால் ஏற்பட்டிருக்கும் விரக்தியும் அவர்களைத் தீவிரவாத சிந்தனைகளுக்கு சோரம்போக வைக்கின்றன என்கிற உண்மை ஏன் மத்திய அரசில் அமர்ந்திருக்கும் பொருளாதார வல்லுநர்களுக்குப் புரியவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது.

6 ஆண்டுகளுக்கு முன்னால் வெறும் 43 மாவட்டங்களில் மட்டுமே காணப்பட்ட நக்சல் தீவிரவாதம் இப்போது இந்தியாவில் 156 மாவட்டங்களில் காணப்படுகிறது என்கிற புள்ளிவிவரம் அவர்களுக்குத் தெரியாதோ என்னவோ. அதாவது, இந்தியாவிலுள்ள 460 மாவட்டங்களில் 156 மாவட்டங்கள் தீவிரவாதிகளின்பிடியில் சிக்கியிருக்கின்றன. ஏறத்தாழ 8 மாநிலங்களில் பரவியிருக்கும் தீவிரவாதம் இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதியை, அரசின் அதிகாரவரம்பைக் கேலிக்கூத்தாக்கிவிட்டிருக்கிறது.

அப்பாவி ஆதிவாசிகளும், கிராமப்புற மக்களும் பணபலமும், அரசியல்பலமும் உள்ளவர்களால் ஏமாற்றப்பட்டதன் விளைவு விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட அவர்கள் நக்சல் தீவிரவாதிகளாக மாறி திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்குப் பலியாவதும் அவர்களைச் சார்ந்த அப்பாவி ஆதிவாசிகள் என்பதுதான் வேதனையிலும் வேதனை.

ஒருபுறம் மதத்தின் பெயரால் அன்னிய சக்திகளால் கட்டவிழ்த்துவிடப்படும் தீவிரவாதம்; இன்னொருபுறம் நக்சல் தீவிரவாதிகளின் தாக்குதல்கள். இந்திய அன்னையின் பொன்னான மேனியெல்லாம் புண்ணாகிறது. ஒருபாவமும் அறியாத அப்பாவி மக்கள் செத்து மடிகிறார்கள். அதை எதிர்கொண்டு தடுக்கவோ, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவோ நேரமோ மனமோ உறுதியோ இல்லாத மத்திய மாநில அரசுகள்!

இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதி தீப்பிடித்து எரிகிறது. அதை அணைக்க முற்படாமல் 9 சதவிகித வளர்ச்சியைப் பற்றி சந்தோஷப்பட்டால் அது வெறும் அற்ப சந்தோஷமாகத்தான் முடியும்.

Posted in Andhra, AP, Babulal, Bandh, Bihar, carbines, Chathisgar, Chathisgarh, Chattisgar, Chattisgarh, Chhattisgar, Chhattisgarh, Chikadia, Chikhadia, CRPF, Divide, Errabore, Extortion, Extremism, Extremist, Extremists, Gaya, Giridhi, Giridhih, Giridi, Giridih, Girithi, Girithih, Jamui, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Jharkhand Mukti Morcha, Jharkhand Party, Jharkhand Vikas Morcha, JMM, JVM, Madhu Koda, MadhuKoda, Mahato, Maoists, Marandi, Metro, MP, Nation, National, National Games, Nationalisation, Nationalism, Nationalist, Nationalists, Nationality, Nationalization, Nations, Native, Native Folks, Natives, Naxal, Naxalbari, Naxalite, Naxals, Nepal, Nithish, Nitish, Nitish Kumar, Nitish Kumar Singh, NitishKumar, Nunulal, Nunulal Marandi, Poor, Rich, Rural, SC, SLR, SLRs, ST, Sunil Kumar Mahato, SunilKumar Mahato, Telengana, Telugu, Telugu (తెలుగు), Telugu Desam, Telungana, terror, terror networks, Terrorism, terrorist, Terrorists, Tribals, victims, Villages, Violence | Leave a Comment »

Kovi Manisekaran in Tamil Films – Literature & Kollywood: Thinathanthi Movie Series

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2007

திரைப்பட வரலாறு 773
கோவி.மணிசேகரன்
கே.பாலசந்தரிடம் பெற்ற அனுபவங்கள்

டைரக்டர் கே.பாலசந்தரிடம் கோவி.மணிசேகரன் 21/2 ஆண்டு காலம் உதவியாளராகப் பணியாற்றினார். அந்த காலத்தில் டைரக்ஷன் துறையில் அவர் பெற்ற அனுபவங்கள் ஏராளம்.

பாலசந்தரிடம் பணியாற்றியபோது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து கோவி.மணிசேகரன் கூறுகிறார்:

“விஜயதசமி அன்று இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரிடம் உதவியாளனாகச் சேர்ந்தேன். `அரங்கேற்றம்’ படம்தான் எனக்கும் ஆரம்ப அரங்கேற்றம்.

அவரது சிந்தனை நான்கு திசைகளிலும் சிறகடிக்கும். சிந்தனை அளவுக்கு அவரிடம் சினமும் குடிபுகுந்திருந்தது. ஆயினும் முரட்டுக்கோபம் அல்ல; முன்கோபம்.

குருகுல வாசம்

எவருக்கும் `அது இது’ என்று எடுத்துச் சொல்லமாட்டார். புத்தி உள்ளவன் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏறத்தாழ இரண்டரை வருடங்கள் அந்த குருகுலத்து ஏணிப்படிகளை எண்ணலானேன். நானே யோசிப்பேன்; நானே ஆய்வேன்; நானே புரிந்து கொள்வேன்.

டைட்டிலில் பெயர்

அரங்கேற்றம் டைட்டிலில் ஒரு குடுகுடுப்பைக்காரன் `நல்ல காலம் வருது, நல்ல காலம் வருது’ என்று குடுகுடுப்பையைக் குலுக்குவான். அவன் உருவத்தின் மீது என் பெயர் வரும். துணை டைரக்ஷன் – கோவி.மணிசேகரன் என்று! ஆம்; தனி டைட்டில் கார்டுதான்!

இப்படி தனி டைட்டில் போட்டது குறித்து எங்கள் குழுவில் பிரச்சினை எழுந்தது. குரு கே.பாலசந்தர் சொன்னார்: “அவர் இலக்கிய சாம்ராட் விருது பெற்றவர். நான் அவரை இறக்கி மதித்தால், அவருடைய வாசகர்கள் என்னை இறக்கி மதிப்பிடுவார்கள். எனவே இதுதான் அறம்.”

அவரது பதில், பலருக்கு இரும்பைக் காய்ச்சி இறக்கியது போலிருந்தது. அன்று முதலே, என் மீது சிலருக்கு எரிச்சல் ஏற்பட்டது.

இந்திப்படம் செய்கிற போதுகூட, பாலசந்தர் என்னை இறக்கிப் பார்த்ததில்லை. அவருக்கு எழும் இலக்கிய ஐயங்களை நான் அண்ணாந்து வழங்கியதில்லை; அடிபணிந்து வழங்கியிருக்கிறேன்.

இருமுறை அவர் என்னை கோபித்துக் கொண்டிருக்கிறார்.

ஒன்று: வசனத்தாளில் திருத்தப்பட்ட வசனங்களை வரிசையாக எழுதத் தவறியது.

மற்றொன்று: மைசூரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, கன்னடத்தில் அதிகமாகப் பேசப்பட்ட கலை நுணுக்கங்கள் நிறைந்த படம் அருகேயுள்ள ஒரு திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் படத்தைப் பார்க்க விரும்பினேன். துணைக்கு வர யாரும் இல்லை. ஒரு துணை நடிகையும் அந்தப் படத்தைப் பார்க்கத் துடித்தாள்.

இயக்குனருக்கு எங்கே தெரியப்போகிறது என்று நினைத்து படத்துக்குப்போனோமë. திரும்பி வரும்போதுதான் தெரிந்தது, கருகருவென ஆசான் காத்திருந்தது!

நடிகையோ ஓடி ஒளிந்து கொண்டாள். நான் அகப்பட்டுக்கொண்டேன். கே.பி.யின் கண்களில் கோபம். என்னை ஏசிவிட்டு, பிறகு ஒரு குழந்தைக்குக் கூறுவது போல் சொன்னார்:

“கோவி! நீங்கள் பிரபல எழுத்தாளர். அவளோ நடிகை. நாளை இது பத்திரிகைகளில் வந்தால் எவருடைய பெயர் எப்படிக் கெடும் யோசித்தீர்களா?”

இவ்வாறு பாலசந்தர் கூறியதும், நான் தலை குனிந்தேன். தவறுக்காக மன்னிப்பு கேட்டேன்.

விடை பெற்றேன்

பாலசந்தரிடம் 21/2 ஆண்டுகள் பணியாற்றினேன். அவரிடம் இருந்து விடைபெறும் நேரம் வந்தது. கண்ணீருடன் விடைபெற்றேன். அவர் கண்களும் கலங்கின.”

இவ்வாறு கோவி.மணிசேகரன் கூறினார்.

“பாலசந்தரிடம் இருந்து ஏன் விலகினீர்கள்?” என்று கேட்டதற்கு மணிசேகரன் சொன்னார்:

“சினிமா துணை டைரக்டராக பணியாற்றியபோது, எனக்கு கிடைத்த வருமானம் குறைவு. அதற்குமுன் புத்தகம் எழுதுவதன் மூலம்தான் வாழ்க்கை நடந்தது. சினிமாவில் பணியாற்றியபோது, மனைவியின் நகைகளை விற்று குடும்பம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

“திரைத்தொழில் கற்று என்ன சாதித்து விடப்போகிறீர்கள்?” என்று என் அன்பு மனையாள் கண்ணீருடன் கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை.

தவிரவும், பாலசந்தரின் முக்கிய உதவியாளராக விளங்கிய அனந்துடன் எனக்கு மனஸ்தாபம் ஏற்பட்டது.

இத்தகைய காரணங்களால், நான் பிரிய நேர்ந்தது” என்று கூறிய மணிசேகரன், தொடர்ந்து சொன்னார்:

எதிர்பாராத திருப்பம்

இந்த சமயத்தில், என் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.

நான் எழுதிய “தென்னங்கீற்று” என்ற நாவல், புத்தகமாக வெளிவந்தது. அதைப் பாராட்டி, “இந்து” நாளிதழில் விமர்சனம் வெளியாகியிருந்தது.

பெங்களூரைச் சேர்ந்த பாபாதேசாய் என்ற படத்தயாரிப்பாளர், அந்த விமர்சனத்தைப் படித்துவிட்டு, அதைப் படமாக்க விரும்பி, என்னைத் தேடி வந்தார்.

“இந்து பத்திரிகையில் விமர்சனம் படித்தேன். கதை முழுவதையும் சொல்லுங்கள்” என்று கூறினார். எனக்கே புரியாத எதிர்பாராத அதிர்ச்சி.

நான் கதையை ஆங்கிலத்தில் சொன்னேன். பாலசந்தர் பட்டறையில் இருந்ததால், சினிமாவுக்கு ஏற்றபடி கதை சொல்லப் பழகியிருந்தேன். பட அதிபரை கவரும் விதத்தில் கதையைச் சொல்லி கலக்கினேன்.

கதையைக் கேட்டதும் அவர் கண்களில் நீர் மல்கியது. “இக்கதையை கன்னடத்தில் படமாக எடுக்கிறேன். கதைக்கு என்ன விலை?” என்று கேட்டார்.

வெறும் கதையை விற்பதற்கா 21/2 ஆண்டுகள் திரைத்தவம் செய்தேன்!

“தமிழில் எடுப்பதானால், கதையைத் தருகிறேன். அதுவும் வசனத்தை நானே எழுதி, டைரக்ட் செய்ய வேண்டும்” என்று கூறி, பாலசந்தரிடம் பணியாற்றியது பற்றி விவரித்தேன்.

பாலசந்தர் பெயரைச் சொன்னதும், பாபாதேசாய் மகிழ்ந்து போனார். “தமிழிலும், கன்னடத்திலும் எடுப்போம். ஒரே நேரத்தில் இரு மொழிகளில் எடுக்க உங்களால் முடியுமா?” என்று கேட்டார்.

“ஏன் முடியாது?” என்று திருப்பிக் கேட்டேன்.

“அப்படியென்றால் ஆகட்டும். திரைக்கதை எழுதத் தொடங்கலாம்” என்று கூறிவிட்டு, முறைப்படி ஒப்பந்தம் போட்டு, அட்வான்சும் வழங்கினார்.”

—————————————————————————————————————————————————————————–
வரலாற்றுச் சுவடுகள் :திரைப்பட வரலாறு :(774)
கோவி.மணிசேகரன் இயக்கத்தில்
“தென்னங்கீற்று”, 2 மொழிகளில் படமாகியது!
கன்னடத்தில் வெற்றி; தமிழில் தோல்வி

கோவி.மணிசேகரன் எழுதிய “தென்னங்கீற்று” என்ற நாவல், அவருடைய டைரக்ஷனில் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் படமாகியது. இந்தப்படம் கன்னடத்தில் வெற்றி பெற, தமிழில் தோல்வி அடைந்தது.

“தென்னங்கீற்று” கதையின் நாயகி பெயர் வசுமதி. இருபத்தெட்டு வயது வரை பூப்படையாத பெண் அவள்.

ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, கோவி.மணிசேகரன் இந்த நாவலை எழுதியிருந்தார்.

தமிழ்ப் படத்துக்கு கதாநாயகியாக சுஜாதாவும், கதாநாயகனாக விஜயகுமாரும் ஒப்பந்தம் ஆனார்கள்.

கன்னடப்படத்துக்கு “நிரீக்ஷே” (எதிர்பாராதது) என்று பெயரிடப்பட்டது. அப்போது கன்னடத்தில் மிகப்பிரபலமாக இருந்த கல்பனா, (கன்னட) மஞ்சுளா ஆகியோர் கன்னடப்படத்துக்கு ஒப்பந்தம் ஆனார்கள். தமிழில் இரண்டாவது கதாநாயகியாக (டாக்டர் வேடத்தில்) நடிக்கவும் கல்பனா சம்மதித்தார்.

கன்னடப் படவுலகில் நெம்பர் 1 இசை அமைப்பாளராக விளங்கிய ஜி.கே.வெங்கடேஷ், இரு படங்களுக்கு இசை அமைத்தார்.

பாலசந்தர் எச்சரிக்கை

“தென்னங்கீற்று” படப்பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடந்தது. மணிசேகரன் கேட்டுக்கொண்டதன் பேரில், கே.பாலசந்தர் இந்த படப்பூஜையில் கலந்து கொண்டு, கேமராவை முடுக்கி வைத்து, படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

ஒரே நேரத்தில் இரு மொழிகளிலும் படத்தை இயக்கப் போகிறேன் என்று கோவி.மணிசேகரன் சொன்னதும், “என்ன கோவி! முதன் முதலாக டைரக்ட் செய்யப் போகிறீர்கள். எதற்கு இந்த விஷப்பரீட்சை?” என்று கேட்டார்.

“ஒரு சோதனைதான்!” என்றார், மணிசேகரன்.

“அதற்கில்லை. நானும் தென்னங்கீற்று நாவலைப் படித்திருக்கிறேன். படம் எடுக்க முடியுமா என்று பலநாள் யோசித்து, `முடியாது’ என்று கைவிட்டேன். ஒரு பெண் பருவம் அடையவில்லை என்று, 13,000 அடி வரை எப்படி சொல்லப்போகிறீர்கள்? கத்தி மேல் நடப்பது போன்ற இந்தக் கதையை, ஒரே நேரத்தில் இரு மொழிகளில் தயாரிக்கிறீர்கள். இது விஷப்பரீட்சை. ஜாக்கிரதையாக இருங்கள்” என்று எச்சரித்தார்.

படப்பிடிப்பை, இரு மொழிகளிலும், ஏக காலத்தில் வேகமாக நடத்தி, குறிப்பிட்ட காலத்தில் முடித்தார், மணிசேகரன்.

படத்தை வாங்க, விநியோகஸ்தர்கள் ஈபோல் மொய்த்தனர். இரு மொழிகளிலும் பட அதிபருக்கு கொள்ளை லாபம்.

“தென்னங்கீற்று” 4-7-1975-ல் ரிலீஸ் ஆயிற்று. அதே சமயத்தில் கன்னடப்படமும் கர்நாடகத்தில் வெளியாயிற்று.

கன்னடப்படம் 75 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. தமிழ்ப்படம் 4 வாரம்தான்!

கதையின் மையக்கருத்தை பெண்கள் ஏற்காததால், தமிழ்ப்படம் பெண்களை கவரவில்லை. ஆனால், கர்நாடக ரசிகர்கள், புதுமையை ஏற்றுக்கொண்டார்கள்.

“தென்னங்கீற்று” படத்தைப் பார்த்த டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், “இது விருதுக்கு உரிய படம். அனுப்பி வைக்கலாம்” என்று யோசனை சொன்னார்.

அவர் கூறியபடியே, “தென்னங்கீற்று” தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் சங்க விருதைப் பெற்றது. கன்னட “நிரீக்ஷே”, கர்நாடக அரசின் விருதைப் பெற்றது.

பட அதிபர் எங்கே?

பட அதிபர் பாபாதேசாய் புத்திசாலி. நிறைய லாபத்தை சம்பாதித்தவர், மீண்டும் படம் எடுப்பதில்லை என்று முடிவு செய்து, வேறு வியாபாரத்துக்கு போய்விட்டார்.

“தென்னங்கீற்று” படம் தயாராகி முடிந்திருந்தபோது, அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் தர பல பட அதிபர்கள் கோவி.மணிசேகரன் வீட்டுக்கு படையெடுத்தனர். அவற்றை மணிசேகரன் ஏற்கவில்லை. “படம் வரட்டும்; பிறகு பார்ப்போம்” என்று கூறிவிட்டார்.

படம் வெளிவந்து, சரிவர ஓடாததால், அந்தப் பட அதிபர்களில் ஒருவர்கூட மணிசேகரனைத் தேடி வரவில்லை. மூலைக்கு ஒருவராக ஓடி மறைந்துவிட்டனர்!

“இலக்கியத் துறையில் வெற்றி மேல் வெற்றி பெற்றோம். கலைத்துறையில் மட்டும் ஏனிந்த தோல்வி?” என்று எண்ணி வருந்தினார், மணிசேகரன்.

`இனி திரைப்படத்துறையே வேண்டாம்’ என்று தீர்மானித்து, மீண்டும் இலக்கியப்பணியில் ஈடுபட்டார். பாதியில் நின்றிருந்த “யாகசாலை” என்ற நாவலை எழுதி முடித்தார்.

மனோரஞ்சிதம்

இந்த சமயத்தில், சிவகாசியில் காலண்டர் வியாபாரம் செய்து வந்த சிதம்பரம் என்ற தொழில் அதிபர், மணிசேகரனை சந்தித்தார்.

“தென்னங்கீற்று” படத்தால் ஈர்க்கப்பட்டவர் அவர்.

மணிசேகரனிடம் சிதம்பரம் சொன்னார்:

“மணிசேகரன் அய்யா! தென்னங்கீற்றில், வயதுக்கு வராத ஒரு பெண்ணை கதாநாயகியாகப் படைத்தது பெரிதல்ல. அவள் வயதுக்கு வந்து விட்டாள் என்பதை உணர்த்த, திரையில் ரத்தச் சிதறலைக் காட்டினீர்களே… ஆ! அது அற்புதம். அதில் மயங்கியே, உங்களை வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறேன்” என்றார்.

மணிசேகரன், தனது “யாகசாலை”, “மனோரஞ்சிதம்” ஆகிய கதைகளைச் சொன்னார். “மனோரஞ்சிதம்” அவருக்குப் பிடித்துப்போயிற்று. அதை படமாக்குவதாகச் சொன்னார்.

பட வேலைகள் தொடங்கின. டைரக்டர் துரையால் தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்ட சுமித்ராதான் கதாநாயகி. விஜயகுமார் கதாநாயகன். மற்றும் எஸ்.வி.சுப்பையா, மனோரமா, தேங்காய் சீனிவாசன், புதுமுகம் எம்.எஸ்.வசந்தி, எம்.என்.ராஜம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

திரைக்கதை, வசனத்தை எழுதி முடித்தார், மணிசேகரன்.

“மனோரஞ்சிதம்” படத்தொடக்க விழா அமர்க்களமாக நடந்தது. விழாவுக்கு வந்த அனைவருக்கும் மனோரஞ்சித மலர் வழங்கப்பட்டது!

—————————————————————————————————————————————————————————–

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(776)
கோவி.மணிசேகரன் சினிமாவில் தோல்வி; சின்னத்திரையில் வெற்றி

சினிமாவில் தோல்வியைச் சந்தித்த கோவி.மணிசேகரன், டெலிவிஷனுக்கு தொடர்கள் எழுதி வெற்றி பெற்றார்.

“மனோரஞ்சிதம்” திரைப்படம் வெளிவராமல் போனதால் மணிசேகரன் மனம் வருந்தினார் என்றாலும், சினிமா மோகம் அவரை விடவில்லை.

யாகசாலை

கீதையை அடிப்படையாக வைத்து அவர் எழுதிய “யாகசாலை” என்ற நாவலை சொந்தமாக படமாக்க எண்ணினார். 1,200 பக்கங்கள் கொண்ட பெரிய நாவல் இது.

“இலக்கிய உலகில் பேரும் புகழுமாக இருக்கிறீர்கள். சினிமா நமக்குத் தேவையா?” என்று மனைவி சொன்னதை அவர் கேட்கவில்லை.

வேகமாக வசனங்களை எழுதி முடித்தார்.

இவருடைய நாவல்களில் மனதைப் பறிகொடுத்து, இவருக்கு நண்பரானவர் ஜெமினிகணேசன். அவருக்கு படத்தில் ஒரு முக்கிய வேடம் கொடுக்கத் தீர்மானித்தார்.

இதன்பின் நடந்தது பற்றி மணிசேகரன் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர்.

“யாகசாலை நாவலைப் படித்துப் பாராட்டியவர், எம்.ஜி.ஆர். நான் அந்த நாவலைப் படமாக்கப்போகிறேன் என்பதை அறிந்து `இது புரட்சிகரமான நாவல். படமாக வந்தால், நாவலின் ஜீவன் கெட்டுப்போகும். படமாக்கும் முயற்சியைக் கைவிடுங்கள் என்று கூறினார்.

நான் கேட்கவில்லை. அதாவது, என் விதி, அவர் அறிவுரையைக் கேட்க மறுத்து விட்டது!

படப்பிடிப்பைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்தன.

இந்தப் படத்தின் கதாநாயகி, நல்ல குடும்பத்தில் பிறந்து, விதி வசத்தால் கற்பை இழக்க, பிறகு அதுவே தொழிலாய் போய்விட, கடைசியில் நோய்வாய்படுகிறாள்.

இந்தக் காலக்கட்டத்தில் “சிவப்பு ரோஜாக்கள்” படத்தில் அறிமுகமாகியிருந்த வடிவுக்கரசிக்கு, கதாநாயகி வேடம் கொடுத்தேன்.

படத்தில் இரு கதாநாயகர்கள். ஒருவர், கீதையில் வரும் கண்ணன் பாத்திரத்துக்கு ஒப்பானவர். அந்தக் கண்ணன் தேர் ஓட்டினான். இந்த கண்ணன் குதிரை ஓட்டுபவன். இந்தப் பாத்திரத்துக்கு பொருத்தமான நடிகர் அமையவில்லை. பலபேரை பார்த்தும் திருப்தி ஏற்படவில்லை.

விஜயகாந்த்

இன்று திரை உலகிலும், அரசியலிலும் விஸ்வரூபம் எடுத்துள்ள விஜயகாந்த், அப்போதுதான் திரைப்பட உலகுக்கு வந்திருந்தார். அவரை என்னுடைய `கண்ணன்’ கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்த நேரத்தில், விதி விளையாடியது.

என் கையில் போதிய பணம் இல்லை. படப்பிடிப்புக்கு செல்ல, மேலும் ரூ.30 ஆயிரம் தேவைப்பட்டது. அப்போது ஒரு புதுமுக நடிகர் என்னிடம் வந்தார். நல்ல கதாபாத்திரம் கொடுத்தால் ரூ.30 ஆயிரம் `பைனான்ஸ்’ செய்வதாகக் கூறினார். இதனால் நான் விஜயகாந்தை இழக்க நேரிட்டது. அன்று நான் அவரை பயன்படுத்தி இருந்தால், ஒரு சரித்திரத்தின் முதல் அத்தியாயத்தைப் பார்த்தவனாக இருந்திருப்பேன். விதியின் சதியால், அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டாமல் போயிற்று.

கிராமத்தில் படப்பிடிப்பு

படப்பிடிப்பு தொடங்கியது. முதலில் வெளிப்புறக் காட்சிகளை எடுக்கத் தீர்மானித்தேன். மதராந்தகத்தின் அருகேயுள்ள கோட்டைக்காடு கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தது. ஒய்.ஜி.மகேந்திரன், கே.நட்ராஜ், டி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் நடித்தனர்.

மேற்கொண்டு, ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டபோது, மீண்டும் பணமுடை ஏற்பட்டது. அப்போது, இப்ராகிம் என்ற தயாரிப்பாளர் என்னை நாடி வந்தார். என்னுடைய “அகிலா” என்ற நாவல், நடிகை சுஜாதாவுக்கு மிகவும் பிடித்தமானதாகும். அவர் சொல்லி, அக்கதையை என்னுடைய இயக்கத்தில் படமாக்க விரும்பி, இப்ராகிம் வந்திருந்தார்.

வெளிப்படங்களுக்கு வசனம் எழுதி, டைரக்ட் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தேன். அதை அவரிடம் தெரிவித்து, “வேண்டுமானால் கதையை வாங்கிக் கொண்டு, நீங்களே தயாரியுங்கள். கூடுதலோ, குறைவோ, ஒரு தொகையை தவணை முறையில் கொடுக்காமல் மொத்தமாக கொடுத்துவிடவேண்டும்” என்று தெரிவித்தேன்.

அதன்படி அவர்கள் ஒரே `செக்’ கொடுத்தார்கள். அந்தத் தொகை, “யாகசாலை” படத்தை தொடர்ந்து உருவாக்க உதவியது.

யாகசாலை தயாராகிக் கொண்டிருந்தபோதே, “அகிலா” கதை “மீண்டும் பல்லவி” என்ற பெயரில் படமாக வெளிவந்தது. `கதை: கோவி.மணிசேகரன்’ என்று டைட்டிலில் போட்டார்கள்.

“யாகசாலை” 95 சதவீதம் முடிந்து விட்டது. ஜெமினிகணேசன் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் பாக்கி. இந்த நிலையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவருடைய சம்மதத்தைப் பெற்று அந்தப் பாத்திரத்தில் பூரணம் விஸ்வநாதனை நடிக்க வைத்தேன். அவரும் நன்றாக நடித்தார்.

நிலத்தை விற்றேன்

படம் ரிலீஸ் தேதியை நெருங்கியபோது, ஒரு கடன்காரர் வந்து மென்னியைப் பிடித்தார். படத்தை, “அவுட்ரைட்” முறையில் நான் விற்று விட்டதால், படம் வெளியான பின்னர் பணம் வராது என்று அவர் நினைத்து விட்டார் போலும்!

வீடு கட்டுவதற்காக வாங்கியிருந்த நிலத்தை விற்று, கடனை அடைத்தேன்.

“யாகசாலை” ரிலீஸ் ஆகியது. நான்கே நாளில் ரிசல்ட் தெரிந்து விட்டது. படம் “அவுட்!” சென்னை எமரால்டு தியேட்டரில் மட்டும் நான்கு வாரம் ஓடியது.

அன்றே சினிமாவுக்கு தலைமுழுகத் தீர்மானித்தேன். ஒரு சனிக்கிழமையன்று, எண்ணை வாங்கி வரச்செய்து, தலைமுழுகினேன்!

என்னிடம் புகழ்வாய்ந்த – உறுதியான பேனா இருந்ததால், என் வாழ்க்கை தப்பியது. இல்லையென்றால், `நடுத்தெரு நாராயணன்’ ஆகியிருப்பேன். நான் வணங்கும் சக்தி என்னைக் காப்பாற்றினாள்.

இலக்கியப்பணி

தொடர்ந்து இலக்கியப்பணிகளில் ஈடுபட்டேன்.

சென்னை தொலைக்காட்சிக்கு, புதுமுகங்களை வைத்து நான் தயாரித்த “ஊஞ்சல் ஊர்வலம்” என்ற தொடர், பெரிய வெற்றி பெற்றது.

அதன் பிறகு திரிசூலி, அக்னிப் பரீட்சை முதலான தொடர்களும் வெற்றி பெற்றன.

பெரிய திரையில் வெற்றி பெறாமல் போன நான், சின்னத்திரையில் வெற்றி கண்டேன்.

சினிமாவில் இருந்து விடுபட்டு இலக்கியத்தில் கவனம் செலுத்தியதால், 3,571 பாடல்கள் கொண்ட “கோவி.ராமாயண”த்தை என்னால் எழுத முடிந்தது.

ரஜினிகாந்த்

நான் விதி பற்றி பல முறை குறிப்பிட்டேன். நமக்கு நல்ல வாய்ப்பு வரும்போது, விதி குறுக்கிட்டு கெடுத்து விடும். உதாரணத்துக்கு ஒன்று சொல்வேன்.

இந்நாளைய இணையற்ற நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 1973-ல் சினிமா உலகில் நுழைய முயற்சி செய்து கொண்டிருந்த சிவாஜிராவ். நான் பாலசந்தரிடம் பயிற்சி பெற்றுவிட்டு, சினிமா தயாரிக்கலாம் என்று இருந்த நேரம்.

ரஜினியுடன் நடிப்பு பயின்ற கோபால் என்ற நண்பர், ரஜினிக்கு வாய்ப்பு கேட்டு வந்தார். படம் தொடங்கும்போது நிச்சயம் அவர் இடம் பெறுவார் என்று கூறினேன்.

ரஜினி என் வீட்டுக்கு வருவார். சிகரெட் வித்தைகளை பிள்ளைகளிடம் காட்டி மகிழ்விப்பார்.

இதற்கிடையே ரஜினி, “அபூர்வராகங்கள்” படத்தில் அறிமுகம் ஆகிவிட்டார். ஏராளமான படங்களுக்கு ஒப்பந்தம் ஆனார்.

“தென்னங்கீற்று” படம் ஆரம்பம் ஆனதும், ரஜினியிடம் பேசினேன். “குரு! இருபது நாட்களுக்கு என்னை விட்டு விடுங்கள். அப்புறம் ஒரு வாரம் பெங்களூர் வந்து உங்கள் மனதைக் குளிரச் செய்கிறேன்” என்றார்.

ஆனால், படத் தயாரிப்பாளரோ இதற்கு சம்மதிக்கவில்லை. ஏற்கனவே, மற்ற நடிகர் – நடிகைகளிடம் பெற்ற `கால்ஷீட்’படி உடனே படத்தைத் தொடங்க வேண்டும் என்றார். இதனால் என் படத்தில் ரஜினி இடம் பெறவில்லை. இதை விதி என்று சொல்லாமல், வேறு எப்படி சொல்வது?

சினிமா ரசிகர்களுக்கு…

சினிமா உலகில் நுழைந்து விடவேண்டும் என்ற ஆசை கொண்ட இளைஞர்களும், இளம் நங்கையர்களும் ஏராளம். அவர்களுக்கு ஒன்று சொல்வேன்:

`சினிமா என்பது பல ரசவாத வித்தைக் தெரிந்த ஒரு அழகான மாயமோகினி. அந்த மோகினியிடம் சென்றால், மீள்வது அரிது. அந்த மோகினியின் வித்தையில் பாதியேனும் தெரிந்தவர்கள் தப்பித்து திரும்பி வரலாம்; அல்லது மோகினியை அடிமைப்படுத்தி, அவளைக் காதலிக்கச் செய்யலாம். அந்த வித்தை தெரியாதவர்கள் நுழைந்து விட்டால், அந்த மோகினி நம் ரத்தத்தை உறிஞ்சி, சக்கையாகத்தான் துப்புவாள்!”

இவ்வாறு கோவி.மணிசேகரன் கூறினார்.

குடும்பம்

மணிசேகரன் – சரசுவதி தம்பதிகளுக்கு அம்பிகாபதி, மாமல்லன், செல்வக்கண்ணன் என்ற மூன்று மகன்கள். பீலிவளை, அம்மங்கை, ஸ்ரீ, சமயபுரி, வானதி என்று ஐந்து மகள்கள்.

மூத்த மகன் அம்பிகாபதி, இளம் வயதில் காலமாகிவிட்டார். மற்ற 7 பேரும் படித்து, பட்டம் பெற்றவர்கள். எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

—————————————————————————————————————————————————————————–
திரைப்பட வரலாறு 775
“மனோரஞ்சிதம்” படப்பிடிப்பின்போது
எஸ்.வி.சுப்பையா கோபம்
படப்பிடிப்பு நின்றது

“மனோரஞ்சிதம்” படமாகும்போது, பல சோதனைகளைச் சந்தித்தது.

அதுபற்றி கோவி.மணிசேகரன் கூறியதாவது:-

“மனோரஞ்சிதம் நாவல், அக்காலத்தில் மிகப்பிரபலம்.

ஒரு சலவைத் தொழிலாளியின் மகள் தன் வீட்டுக்கு வரும் அழுக்குத் துணிகளில், ஒரு பட்டு ஜிப்பாவில் மட்டும் மனோரஞ்சிதம் வாசனை மணப்பதை கவனிப்பாள். அந்த சென்ட் வாசனையை வைத்து, அதை அணிபவன் எத்தகைய அழகான இளைஞனாக இருப்பான் என்று கற்பனை செய்வாள்; காதல் கொள்வாள். கடைசியில் அவன் ஒரு குஷ்டரோகி என்பதுதான் கிளைமாக்ஸ்!

எஸ்.வி.சுப்பையாதான், அந்த சென்ட் வாசனை ஜிப்பாக்காரராக நடித்தார்.

படப்பிடிப்பு நின்றது

4 பக்கங்கள் கொண்ட நீண்ட வசனத்தை அவர் பேசி நடிக்க வேண்டிய காட்சியைப் படமாக்கும்போது அவருக்கு சோதனை ஏற்பட்டது; எனக்கும் சோதனைதான்!

“ரத்தக்கண்ணீர்” படத்தில், எம்.ஆர்.ராதா பேசிக்கொண்டே உடம்பை சொறிந்து கொள்வார். அந்த பாணியில் நடிக்க வேண்டிய சுப்பையா, பேசும்போது சொறிய மறந்து விடுவார்; சொறியும்போது வசனம் மறந்துவிடும்!

10 முறை படம் எடுத்தும் காட்சி “ஓகே” ஆகவில்லை.

நேரம் பகல் ஒரு மணி. சாப்பாட்டு நேரம். இந்த காட்சியை எடுத்து விட்டால், நிம்மதியாக இருக்கும் என்று நினைத்தேன். “ஒன் மோர் டேக்” என்றேன்.

சுப்பையாவோ, “சாப்பிட்டு விட்டு வந்து முயற்சிக்கலாமே” என்றார்.

நான் விடவில்லை. “அண்ணே! இந்த ஒரு டேக்கில் ஓகே ஆகிவிடும் ப்ளீஸ்!” என்றேன்.

ஆனால் சுப்பையா, தன் “விக்”கை கழற்றி எறிந்தார். “பிரேக்” என்று கூறிவிட்டார்.

படப்பிடிப்பு முடிந்தது என்பதை குறிப்பிடும் “பிரேக்” என்ற சொல்லை டைரக்டர்தான் கூறவேண்டும். அதை சுப்பையா கூறியதால் கோபம் அடைந்தேன்.

“மிஸ்டர் சுப்பையா! `பிரேக்’ சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை. பிளீஸ் கெட் அவுட்!” என்றேன்.

சுப்பையா கோபித்துக்கொண்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டார். படப்பிடிப்பு ரத்து ஆனது. ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடைபெறவில்லை.

சிவாஜிகணேசன் தீர்ப்பு

நான் எஸ்.வி.சுப்பையாவை அவமானப்படுத்தி விட்டதாக, அவர் தரப்பில் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்கள். நான் டைரக்டர்கள் சங்கத்தில், சுப்பையா மீது புகார் செய்தேன்.

அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். செயலாளர் மேஜர் சுந்தரராஜன்.

இரு தரப்பையும் அழைத்து சிவாஜி விசாரித்தார்.

பிறகு எஸ்.வி.சுப்பையாவை நோக்கி, “நீங்கள் இப்படி நடந்திருக்கக் கூடாது. ஒரு துரும்பைக் கிள்ளி, டைரக்டர் என்று சொன்னாலும், உரிய மரியாதை தரவேண்டும். கோவி.மணிசேகரன் பெரிய இலக்கியவாதி. விருதுகள் பெற்றவர். நாம் எல்லோரும் மதிக்கும் கே.பி.யின் மாணவர். ஒரு டேக் எடுக்க விட்டுக் கொடுக்காமல் `பிரேக்’ என்று நீங்கள் சொன்னது தவறு” என்றார்.

ஆனால், எஸ்.வி.சுப்பையா தொடர்ந்து நடிக்க மறுத்துவிட்டார். வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாகக் கூறினார்.

“வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடலாம். ஆனால் இதுவரை ஆன செலவை யார் தருவது? தயவு செய்து நடிக்க வாருங்கள்” என்று நான் கேட்டுக்கொண்டும், சுப்பையா பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

நான் கோர்ட்டுக்குப் போகப்போவதாகக் கூறினேன்.

சிவாஜியின் அன்பு

அப்போது சிவாஜி, மேஜர் சுந்தரராஜனை அழைத்து, “சுந்தர்ராஜா! நீ போய் அந்த குஷ்டரோகி வேடத்தில் நடித்துவிடு. பணம் எதுவும் கேட்காதே!” என்றார்.

சிவாஜி இவ்வாறு கூறியதும் மெய்சிலிர்த்துப் போனேன்.

சிவாஜி சொன்னபடியே, மேஜர் சுந்தரராஜன் அந்த வேடத்தில் நடித்துக் கொடுத்தார்.

மீண்டும் சிக்கல்

படம் 90 சதவீதம் வளர்ந்தபோது, படத்தயாரிப்பாளர் சிதம்பரத்துக்கும் அவருடைய பார்ட்னருக்கும் ஏதோ மனத்தாங்கல் ஏற்பட்டது. அந்த பார்ட்னருடன், என்னால் நியமனம் செய்யப்பட்ட இசை அமைப்பார் வி.குமாரும் சேர்ந்து கொண்டார்.

மூவரும் என்னை சந்தித்தார்கள். டைரக்டர் பொறுப்பில் இருந்து என்னை விலகிக் கொள்ளச் சொன்னார்கள்.

சிதம்பரம் நல்லவர். ஆனால், மற்ற இருவரும் செய்த சூழ்ச்சியினால் நான் டைரக்டர் பொறுப்பில் இருந்து விலகினேன்.

கிருஷ்ணன் – பஞ்சு

மீதிப்பகுதியை டைரக்டர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவை வைத்து, படத்தை முடிக்க முயற்சி செய்தார்கள்.

அவர்கள், அதுவரை படமாக்கியிருந்த காட்சிகளைப் போட்டு பார்த்தார்கள். பாதி புரிந்தது; பாதி புரியவில்லை.

நான் காட்சிகளைப் பகுதி பகுதியாக படமாக்கியிருந்தேன். அதனால் மேற்கொண்டு எப்படி எடுப்பது என்று அவர்கள் குழம்பினார்கள். “முக்கால்வாசி எடுத்த படத்தில் அரை பாகத்தை நீக்கிவிட்டு, கால் பாகத்தை வைத்துக்கொண்டு மீதி படத்தை எடுக்கலாம். சம்மதமா?” என்று டைரக்டர் பஞ்சு கேட்டார்.

மீண்டும் கால்ஷீட் பெறுவதில் உள்ள சிக்கல்கள், மேற்கொண்டு ஆகக்கூடிய செலவுகள் என்று யோசித்தபோது, சிதம்பரத்துக்கு தலை சுற்றியது.

“கோவி.மணிசேகரன் வந்து விளக்கங்கள் சொன்னால் தவிர, நாங்கள் இந்தப் படத்தை தொடர்ந்து டைரக்ட் செய்ய இயலாது” என்று கிருஷ்ணன் – பஞ்சு முடிவாக கூறிவிட்டார்கள்.

பட அதிபர்கள் வன்நெஞ்சம் அவர்களையே சுட்டது. இனி எப்படி அவர்கள் என்னிடம் வரமுடியும்?

படம் நின்று போனது.

சிதம்பரத்தை எண்ணி நான் வருந்தினேன் என்பதை விட, கண்ணீர் விட்டேன். அப்படிப்பட்ட நல்ல மனிதர் அவர்.

மனோரஞ்சிதம் வெளிவராமல் போனதில், இன்னமும் எனக்கு வருத்தம் உண்டு. நட்சத்திரங்கள் நிறைந்த படம். முக்கால்வாசி முடிந்தும், நின்று போய்விட்டது. என்ன செய்வது? இதுதான் விதி!”

இவ்வாறு மணிசேகரன் கூறினார்.

—————————————————————————————————————————————————————————–

Posted in Films, Govi, Govi Manisekaran, Kollywood, Kovi, Kovi Manisekaran, Manisegaran, Manisekaran, Movies, Series | Leave a Comment »

Puthumaipithan in Tamil Movies: Cinemavukku Pona Chithaalu (Dinathanthi Film History Series)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2007

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(777)
“சிறுகதை மன்னன்”
புதுமைப்பித்தனின் திரை உலக அனுபவங்கள்

“சிறுகதை மன்னன்” என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திரை உலகத்துடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பது பலருக்குத் தெரியாது.

புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருதாசலம். தந்தை பெயர் சொக்கலிங்கம் பிள்ளை. தாயார் பர்வதம் அம்மாள்.

இவர்கள் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனினும், சொக்கலிங்கம் பிள்ளை தாசில்தாராக வேலை பார்த்ததால், ஊர் ஊராகப் போகவேண்டியிருந்தது.

இந்நிலையில், கடலூரை அடுத்த திருப்பாதிரிப்புலிïரில், 1906-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி புதுமைப்பித்தன் பிறந்தார்.

தாயாரை இழந்தார்

புதுமைப்பித்தனுக்கு எட்டு வயதானபோது, தாயார் பர்வதம் அம்மாள் காலமானார்.

அதன்பின், சொக்கலிங்கம் பிள்ளை மறுமணம் செய்து கொண்டார்.

புதுமைப்பித்தன் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில் ஆரம்பக் கல்வி பயின்றார்.

சொக்கலிங்கம் பிள்ளை 1918-ல் ஓய்வு பெற்ற பின், சொந்த ஊரான திருநெல்வேலியில் குடியேறினார்.

“பி.ஏ” பட்டதாரி

புதுமைப்பித்தன், திருநெல்வேலி யோவான் கல்லூரியிலும், பின்னர் இந்துக் கல்லூரியிலும் படித்து 1931-ல் “பி.ஏ” தேறினார்.

மகன் அரசாங்க உத்தியோகத்துக்குச் செல்ல வேண்டும் என்று சொக்கலிங்கம் பிள்ளை விரும்பினார். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.

1931 ஜுலை மாதத்தில், புதுமைப்பித்தனுக்கும், திருவனந்தபுரத்தில் மராமத்து இலாகா அதிகாரியாக இருந்த பி.டி.சுப்பிரமணிய பிள்ளையின் மகள் கமலாவுக்கும் திருமணம் நடந்தது.

புதுமைப்பித்தன் நண்பர்களுடன் இலக்கிய சர்ச்சைகளில் ஈடுபடுவது, புத்தகங்கள் படிப்பது ஆகியவற்றில் ஆர்வம் காட்டினார். ஆனால் மகன் வெட்டிப்பொழுது போக்கிக் கொண்டிருப்பதாக சொக்கலிங்கம் பிள்ளை நினைத்தார். இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டன.

மணிக்கொடி

இந்தச் சமயத்தில், கே.சீனிவாசன் “மணிக்கொடி” என்ற இலக்கியப் பத்திரிகையை சென்னையில் தொடங்கினார். டி.எஸ்.சொக்கலிங்கம், “வ.ரா” ஆகியோர் அவருக்குத் துணையாக இருந்தனர்.

“மணிக்கொடி”யில் புதுமைப்பித்தன் கதைகள் எழுதினார். மற்றும் டி.எஸ்.சொக்கலிங்கத்தின் “காந்தி”, சங்கு சுப்பிரமணியத்தின் “சுதந்திரச் சங்கு” ஆகிய பத்திரிகைகளிலும் அவருடைய கதைகள் பிரசுரமாயின.

புதுமைப்பித்தனின் சிறுகதைகள் புதிய கோணத்தில், தனித்தன்மையுடன் திகழ்வதை “வ.ரா”வும், டி.எஸ்.சொக்கலிங்கமும் பாராட்டி, புதுமைப்பித்தனுக்குக் கடிதங்கள் எழுதி உற்சாகப்படுத்தினார்கள்.

புதுமைப்பித்தனுக்கு இருந்த இலக்கிய மோகம் அவரைச் சென்னைக்கு இழுத்துச் சென்றது. “மணிக்கொடி”யில் எழுதியதுடன், ராய.சொக்கலிங்கத்தின் “ஊழியன்” பத்திரிகையில் உதவி ஆசிரியர் பணியையும் கவனித்தார். எனினும், அந்தப்பதவியில் அவர் அதிக காலம் நீடிக்கவில்லை.

“மணிக்கொடி”யில் எழுதி வந்த புதுமைப்பித்தன், பின்னர் டி.எஸ்.சொக்கலிங்கத்தின் அழைப்பின் பேரில், “தினமணி” நாளிதழின் துணை ஆசிரியர் பொறுப்பில் சேர்ந்தார்.

“தினமணி” ஆண்டு மலரைத் தயாரிக்கும் பொறுப்பு புதுமைப்பித்தனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த ஆண்டு மலர்களைச் சிறந்த இலக்கியப் பெட்டகங்களாகப் புதுமைப்பித்தன் கொண்டு வந்தார். “நாசகாரக்கும்பல்” போன்ற அவருடைய சிறந்த சிறுகதைகள், “தினமணி” ஆண்டு மலரில் வெளிவந்தவைதான்.

1943-ல் டி.எஸ்.சொக்கலிங்கம் “தினமணி”யை விட்டு விலகி, “தினசரி”யைத் தொடங்கினார். புதுமைப்பித்தனும் “தினசரி”யில் சேர்ந்தார். பிறகு சொக்கலிங்கத்துடன் மனத்தாங்கல் ஏற்பட்டு, தினசரியை விட்டு விலகினார்.

சினிமா ஆசை

“தினமணி”யில் புதுமைப்பித்தனுடன் பணியாற்றிய சிலர் சினிமாத்துறையில் புகுந்து முன்னேறிக் கொண்டிருந்தார்கள். “இளங்கோவன்” என்ற புனைப்பெயர் கொண்ட ம.க.தணிகாசலம், சினிமா வசனகர்த்தாவாக கொடிகட்டிப் பறந்தார். “மணிக்கொடி” ஆசிரியராக இருந்த பி.எஸ்.ராமையா சினிமா டைரக்டராக உயர்ந்திருந்தார். “மணிக்கொடி” துணை ஆசிரியர் கி.ரா. (கி.ராமச்சந்திரன்) ஜெமினி கதை இலாகாவில் சேர்ந்து பணிபுரிந்து கொண்டிருந்தார்.

எனவே சினிமா துறையில் நுழைய விரும்பினார், புதுமைப்பித்தன். “காமவல்லி” என்ற படத்திற்கு வசனம் எழுதினார். அதற்குக் கணிசமான பணமும் கிடைத்தது.

“அவ்வையார்” படத்தைத் தயாரிக்க முதன் முதலாக ஜெமினி திட்டமிட்டபோது, கி.ரா.வும், புதுமைப்பித்தனும் சேர்ந்து வசனம் எழுதினார்கள். (பின்னர் கே.பி.சுந்தரம்பாள் நடிக்க, ஜெமினி தயாரித்த அவ்வையார் படத்தில் புதுமைப்பித்தனின் வசனம் இடம் பெறவில்லை)

சொந்தப்படம்

1945-ம் ஆண்டைப் பொறுத்தவரை புதுமைப்பித்தனுக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தது. சொந்தத்தில் சினிமாப்படம் எடுக்கத் தீர்மானித்து, தன் தாயார் பெயரில் “பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்” என்ற படக் கம்பெனியையும் தொடங்கினார். குற்றாலக் குறவஞ்சி கதையை “வசந்தவல்லி” என்ற பெயரில் படமாக்க வேண்டும் என்பது, அவரது திட்டம்.

இதில், கதாநாயகனாக நாகர்கோவில் மகாதேவன் நடிப்பதாக இருந்தது. மகாதேவனை, சில நண்பர்கள் புதுமைப்பித்தனிடம் அழைத்து வந்தனர். பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்து முடிந்தது.

“கதாநாயகனுக்கு அட்வான்ஸ் கொடுங்கள்” என்று ஒருவர் கூற, புதுமைப்பித்தன் தன்னிடம் இருந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அட்வான்சாகக் கொடுத்தார்!

அதன்பின், சில பத்திரிகைகளில் “வசந்தவல்லி” பற்றி விளம்பரங்கள் வெளிவந்தன. படம் தயாரிக்கப்படவில்லை.

பாகவதர் அழைப்பு

அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைதாகி, சட்டத்துடன் 2 1/2 ஆண்டு காலம் போராடி, 1947 ஏப்ரலில் விடுதலையானார்.

அவருடைய மகத்தான வெற்றிப்படங்களான “ஹரிதாஸ்”, “சிவகவி”, “அசோக்குமார்”, “அம்பிகாபதி” முதலான படங்களுக்கு வசனம் எழுதியவர் இளங்கோவன். அவருடன் மனத்தாங்கல் கொண்டிருந்த பாகவதர், விடுதலைக்குப்பின் சொந்தமாகத் தயாரித்த ”ராஜமுக்தி” படத்துக்கு வசனம் எழுத புதுமைப்பித்தனை அழைத்தார்.

படப்பிடிப்பு முழுவதும், புனாவில் அகில இந்தியப் புகழ் பெற்ற பிரபாத் ஸ்டூடியோவில் நடந்தது. புனாவுக்குச் சென்று, அங்கேயே தங்கி வசனம் எழுதினார், புதுமைப்பித்தன்.

வசனம் எழுதும் பணி முடிவடையும் தருணத்தில், அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

காசநோய் காரணமாக, அவர் உடல் நிலை வரவர மோசம் அடைந்தது. 1948 மே மாதம் முதல் வாரத்தில் மனைவி கமலா தங்கியிருந்த திருவனந்தபுரத்துக்கு வந்து சேர்ந்தார். நடக்க முடியாமல் கம்பு ஊன்றி நடக்க வேண்டிய அளவுக்கு, அவர் உடல்நிலை மோசமடைந்திருந்தது.

மரணம்

“ராஜமுக்தி”க்கு வசனம் எழுதியதில் ஓரளவு பணம் கிடைத்திருந்த போதிலும், முழு நேர எழுத்தாளராக வாழ்ந்த காரணத்தாலும், தந்தையுடன் சுமுக உறவு இல்லாததாலும், புதுமைப்பித்தன் இறுதிக்காலத்தில் வறுமையுடன் போராட வேண்டியிருந்தது.

மனைவி கமலாவையும், ஒரே மகள் தினகரியையும், தமிழ் இலக்கிய உலகையும் தவிக்க விட்டு, 30-6-1948 அன்று புதுமைப்பித்தன் காலமானார்.

புதுமைப்பித்தன் வரலாற்றில் ஆச்சரியமான ஒரு நிகழ்ச்சி:

தமிழ் இலக்கியத்துக்கு இணையற்ற சேவை செய்த புதுமைப்பித்தன் வறுமையுடன் போராடி தமது 42-வது வயதில் காலமானார். இதற்கு 20 ஆண்டுகளுக்குப்பின், தமிழக அரசு லாட்டரியில் அவர் மனைவி கமலாவுக்கு ரூ.2 லட்சம் பரிசு கிடைத்தது.

அந்த சமயத்தில், புதுமைப்பித்தனின் ஒரே மகள் தினகரிக்கு திருமண ஏற்பாடு நடந்து வந்தது. “மகள் திருமணத்துக்கு, தந்தை கொடுத்த சீதனமாக இந்த பணத்தைக் கருதுகிறேன்” என்றார், கமலா விருதாசலம்.

தினகரி திருமணம் சிறப்பாக நடந்தது. கணவர் பெயர் சொக்கலிங்கம். இவர் என்ஜினீயர்.

அரசுடைமை

புதுமைப்பித்தன் நூல்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது.

புதுமைப்பித்தன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.

Posted in Cinema, Faces, Films, History, Literature, Movies, people, Pudhumaipithan, Puthumaipithan | Leave a Comment »

Famous People & Tidbits – Life Incidents: Sunday Dinamani

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 22, 2007

துணுக்குத் தோரணம்

பொறுமையாளன்

“”சின்ன வயதில் எனக்குப் பெரிதும் பொறுமை கிடையாது. திருமணத்திற்குப் பின்தான் நான் பொறுமையாளன் என்று பலராலும் பாராட்டப்பெற்றேன். பொறுமை பொலிவது உண்மையானால், அது இயற்கையில் அரும்பியதாகாது. அது கமலாம்பிகையினின்று இறங்கிக் கால் கொண்டது என்றே சொல்வேன்”- என்று சுயவிமர்சனம் செய்துகொண்டவர் தமிழ்த்தென்றல் திரு.வி.க., அமைதிக் கொள்ள வைத்த கமலாம்பிகை யார் தெரியுமா? அவர் மனைவி.

மதிநுட்பம் இல்லாத மாநிலம்?

எஃப்.ஏ. தேர்வில் முதல் மாணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பீகாரைச் சேர்ந்த அந்த மாணவர். இதற்கு மாதம் இருபத்தைந்து ரூபாய் உபகாரச் சம்பளமாக வழங்கியது கல்லூரி. இந்த உதவித் தொகை தொடர்ந்து பல ஆண்டுகள் அவருக்குக் கிடைத்து வந்தது. பின்னர் பி.ஏ. தேர்விலும் முதல் மாணவராகத் தேர்வானார். உபகாரச் சம்பளம் மாதம் தொண்ணூறு ரூபாயாக உயர்த்தித் தரப்பட்டது.

இவ்வாறு முதல் மாணவராகவே படிப்பில் தேர்ச்சி பெற்றுக் கொண்டே அந்த மாணவர் வந்ததில் ஒரு சிறப்பு உண்டு. அந்தக் காலகட்டத்தில் பீகார் மாநிலம் வங்காள மாநிலத்தில் சேர்ந்திருந்தது. பீகார் மாநில மாணவர்கள் எல்லோரும் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில்தான் சேர்ந்து படிக்க வேண்டும்.

வங்க மொழி பேசுவோர் பீகாரிகளைப் படிப்பறிவு இல்லாதவர்கள், மதிநுட்பம் இல்லாதவர்கள் எனப் பேசுவார்கள். இப்படி கேவலமாய்ப் பார்ப்பதை மாற்றியமைக்க வேண்டும் என்ற வெறியோடுதான் அந்த மாணவர் படித்து முதல் மாணவராக வந்திருக்கிறார்.

அந்த மாணவர் யார் என்றுதானே கேட்கிறீர்கள்? இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திரபிரசாத்.

கோர்ட்டுக்குப் போன குதிரை!

நீதிமன்றத்திற்கு தினமும் இராஜாஜி தனது குதிரை வண்டியில் செல்வது வழக்கம். ஒருநாள் நீதிமன்றத்திற்குப் புறப்படும்போது வண்டியில் பூட்டிய குதிரையின் மீது புழுதியும் சாணமும் படிந்திருப்பதைக் கண்டார். குதிரையைக் குளிப்பாட்டி வரும்படி கூறினார்.

வண்டிக்காரன் குதிரையைக் குளிப்பாட்டி வண்டியில் பூட்டினான். இராஜாஜி ஏறி அமர்ந்தார். குதிரைக்காரன் ஏறி உட்கார்வதற்குள் குதிரை வண்டியை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கிவிட்டது. இராஜாஜியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஏதாவது ஓர் இடத்தில் குதிரை களைப்படைந்து நிற்கத்தானே போகிறது என்ற நம்பிக்கையில் அமைதியாக உட்கார்ந்துவிட்டார்.

குதிரை ஓடி கடைசியாக ஓரிடத்தில் போய் நின்றது. அது எந்த இடம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அது இராஜாஜி வழக்கமாகச் செல்லும் நீதிமன்றம்.

பிரதமரைச் சந்திக்க மறுத்த ஜனாதிபதி?

மும்பை நேரு விஞ்ஞான மையத்தில் அப்துல்கலாம் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது எஸ்.எல்.வி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நேரம். “”பிரதமர் இந்திரா காந்தி தங்களைச் சந்திக்க விரும்புகிறார். நாம் இருவரும் சேர்ந்து சென்று சந்திக்கலாம்” என்று இஸ்ரோ தலைவர் தவான், அப்துல்கலாமை அழைத்தார்.

கலாம் செல்வதற்குத் தயங்கினார். தவான் காரணம் கேட்டதற்கு கலாம் சொன்னார்: “”நான் எப்போதும்போல் சாதாரண நீலவண்ணச் சட்டையே அணிந்திருக்கிறேன். கால்களுக்குப் பூட்சுகள் இல்லை. செருப்புகள்தான் அணிந்துள்ளேன். இந்தக் கோலத்தில் பிரதமரைச் சந்திக்கத் தயக்கமாக இருக்கிறது” என்றார்.

அதற்கு தவான், “”உடையைப் பற்றி கவலைப்படாதீர்கள். வெற்றி என்கிற பேரழகான ஆடையை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்” என்று கூறி பிரதமரிடம் அழைத்துச் சென்றார்.

பற்று அற!

“”என்ன செய்கிறாய்?” என்று வேதனையோடு கேட்ட தாய்க்கு சாதாரணமாகச் சொன்னான் சிறுவன் “”வேறொன்றுமில்லை, என்னுடைய மெட்ரிகுலேஷன் சான்றிதழ்களை எரிக்கிறேன்”

“”ஏன் இப்படிச் செய்கிறாய்?” என்று கேட்ட தாய்க்குச் சொன்னான்: “”இவற்றால் ஒன்றும் பயனில்லை. அம்மா, சூர்யாஜி போன்று பந்தக் கயிறுகளை அறுக்கவேண்டும். ஆசைகளை வேரிலேயே களைய வேண்டும். எனது அகங்காரம் ஒழிய வேண்டும்” என்றான் சிறுவன்.

சரி.. யார் அந்த சூர்யாஜி?

மராட்டிய சிவாஜியின் தளபதியான தானாஜி தம்பி.

சிம்மகட் என்ற பகுதியில் நடந்த யுத்தத்தில் தொடர்புடையவன். போரின் போது உறுதியான கயிற்றைக் கோட்டைமேல் கட்டிவிட்டு, அக்கயிற்றைப் பிடித்துக் கொண்டு போர் வீரர்கள் கோட்டை மேல் ஏறிக் கடந்துகொண்டிருந்தனர். கடுமையாகப் போரிட்ட தானாஜியின் வீரர்கள் களைப்பு அடைந்தனர். தன் வீரர்கள் பின்வாங்கிவிடுவார்களோ என்று தானாஜி பயந்தார். அப்போது தானாஜியின் தம்பியான சூர்யா, “”அஞ்ச வேண்டாம். கயிற்றை முன்பே அறுத்து விட்டேன். இனி வீரர்கள் திரும்பிச் செல்லமுடியாது. போரிட்டுத்தான் தீரவேண்டும்” என்றார்.

சரி… இந்தக் கதையைத் தன் தாயிடம் சொன்ன அந்த சிறுவன் யார் என்று தெரியுமா? வினோபா பாவே.

Posted in APJ, Bave, Bengal, Bhave, Bihar, Dinamani, Education, Faces, Famous, Freedom, Horse, Incidents, Independence, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Kalam, Kalyanasundaram, Kalyanasundaranar, Kalyanasuntharam, Kalyanasuntharanar, Life, Maharasthra, Marathi, people, President, Rajaji, Rejendra Prasad, Shivaji, Sivaji, State, ThiruViKa, Vinoba, Vinobha, Vinobha Bhave, War, WB | குறிச்சொல்லிடப்பட்டது: , | Leave a Comment »

Don’t rush to cut policy rates: Monetary, fiscal recipe for overheating India

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 22, 2007

வங்கிகளில் அரசு தலையீடு?

எஸ். கோபாலகிருஷ்ணன்

வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மோட்டார் வாகனத் தொழில் சார்ந்த மூத்த நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், வங்கிக் கடன்களுக்கான வட்டிவீதத்தைக் குறைக்க வேண்டும் என்று யோசனை கூறினார். இது வெறும் யோசனை அல்ல, அரசின் ஆணை என்றே பலர் கருதினர்.

அதற்கேற்ப, ஓரிரு தினங்களில், சில வங்கிகளின் உயர்நிலை நிர்வாகிகள் வட்டி குறைக்கப்பட வேண்டியதுதான் என்று வழிமொழிந்தனர். அக்டோபர் 10, பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன், மோட்டார் வாகனக் கடன், டிரக் கடன் ஆகியவற்றுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்தது. இதர வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வட்டியைக் குறைத்தன.

வங்கிகள் தங்கள் கடனுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், இந்த நிகழ்வு, வேறு சில கருத்துகளுக்கும் இடம் அளித்துவிட்டது. பொதுமக்களிடமிருந்து டெபாசிட் திரட்டுவதும், திரட்டிய பணத்தை வாடிக்கையாளர்களுக்குக் கடனாக வழங்குவதும் வங்கிகளின் தலையாய தொழில். அதேபோல், பொதுமக்களின் டெபாசிட் தொகைக்கு எவ்வளவு வட்டி கொடுப்பது மற்றும் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு எவ்வளவு வட்டி வசூலிப்பது என்பதை நிர்ணயிப்பதும் வங்கிகளின் பணியே.

இந்த நியதி, அரசு உள்பட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால், பொருளாதார சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டபின்னர், மத்திய அரசு இந்த நியதியைப் பெரும்பாலும் கடைப்பிடிக்கவும் செய்தது.

விவசாயக் கடன், சிறுதொழில் கடன், மாணவர்களுக்குக் கல்விக் கடன் உள்ளிட்ட முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் கடன்கள் தொடர்பான விதிமுறைகள் தவிர பிறகடன்களுக்கான வட்டிவீதத்தை வங்கிகளே வணிகரீதியில் நிர்ணயிக்கின்றன.

வைப்புத்தொகைகளுக்கான வட்டிவீதத்தையும் ஒவ்வொரு வங்கியும் அவ்வப்போது தனது தேவைகளுக்குத் தகுந்தபடி கூட்டியோ குறைத்தோ வழங்குகிறது. எல்லா வங்கிகளுக்கும் ஒரே சீரான வட்டிவீதத்தை நிர்ணயிக்கும் வழக்கத்தை ரிசர்வ் வங்கி கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விதிவிலக்காக, சேமிப்பு கணக்குக்கான வட்டிவீதம் மட்டுமே அனைத்து வங்கிகளுக்கும் ஒரே சீராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் வட்டிவீதத்தைக் குறைக்கும்படி யோசனை கூறியதும், அதை வங்கிகள் விரைந்து செயல்படுத்தியதும், ஒரு பொது விவாதத்திற்கு இடமளித்திருப்பதில் வியப்பேதும் இல்லை.

பொதுத்துறை வங்கிகளின் பெரும்பான்மைப் பங்குதாரர் மத்திய அரசுதான். முன்னதாக பாரத ஸ்டேட் வங்கியின் பெரும்பான்மைப் பங்குகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்தன. ஆனால், அண்மையில் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளை மத்திய அரசு வாங்கிக் கொண்டது.

நாட்டின் 80 சதவிகித வங்கிப் பணிகளை பொதுத்துறை வங்கிகள்தான் மேற்கொள்கின்றன. புதிய தலைமுறை தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி போன்றவை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தபோதிலும், நாட்டின் ஒட்டமொத்த வங்கிச்சேவையில் தனியார்துறை வங்கிகளின் பங்கு குறைவாகவே உள்ளது.

இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளின் கடன்களுக்கான வட்டிவீதம் உயர்ந்ததால் மோட்டார் வாகன உற்பத்தியும் விற்பனையும் சரிந்துள்ளன. புதிய வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனை நம்பியிருந்தவர்கள் மனம் தளர்ந்து போனார்கள். காரணம், வட்டிவீதம் அதிகரித்ததால் மோட்டார் வாகனங்கள் மற்றும் வீடுகளின் அடக்கவிலைகளும் அதிகரித்துவிட்டன. இது பொருளாதார மந்தநிலைக்கு வழி வகுக்கக்கூடும் என்ற கவலை மேலீட்டால் மத்திய நிதி அமைச்சர் தமது யோசனையை வெளியிட்டிருக்கக்கூடும். ஆகவே, இதை அரசியல் தலையீடாகக் கருதக்கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.

இது ஒருபுறமிருக்க, பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கும், இயக்குநர் குழுக்களுக்கும் சமுதாயக் கடமை உண்டு. வணிக ரீதியில் வெறும் லாபநோக்கோடு மட்டுமல்லாமல், பொருளாதார மந்தநிலை ஏற்படும் நிலைமை தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பு பொதுத்துறை வங்கிகளுக்கு இருக்கிறது.

அண்மையில் நிகழ்ந்த கடன்களுக்கான வட்டி உயர்வுக்கு காரணம், வங்கிகள் அல்ல; ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கையே என்பது புலனாகும்.

ரிசர்வ் வங்கியின் தலையாய கடமைகளில் ஒன்று, நிதி மற்றும் கடன் கொள்கையை முடிவு செய்து 6 மாதங்களுக்கு ஒரு முறை அறிவிப்பதாகும். இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, விலைவாசியையும் பணவீக்க வீதத்தையும் கட்டுப்படுத்துவது. இரண்டாவது, தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடனைத் தங்குதடையின்றி கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது.

முன்னதாக, அசுர வேகத்தில் உயர்ந்து கொண்டிருந்த பணவீக்கவீதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

வங்கிகளின் உபரிப் பணத்தை உறிஞ்சுவதற்காக, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பை மேலும் அரை சதவிகிதம் அதிகரித்தது. அதற்கு முன்பு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டிவீதத்தையும் (ரெப்போ ரேட்) உயர்த்தியது.

இந்த நடவடிக்கைகளால் பணவீக்கவீதம் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில், வங்கிகளின் கடனுக்கான வட்டிவீதம் உயர்வதற்கும் அது வழிவகுத்துவிட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கிகளில் வைப்புத்தொகை அதிகரித்ததைவிட, வங்கிக்கடன் தொகையே அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 30 சதவீதம் அளவுக்கு வங்கிக்கடன் அதிகரித்து வந்துள்ளது. வட்டி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

இந்நிலையில், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற சமிக்ஞை ரிசர்வ் வங்கியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டுமே அல்லாமல், அரசுத் தரப்பிலிருந்து அல்ல என்பது தெளிவு.

இதற்கிடையே, டெபாசிட்களுக்கான வட்டியும் குறையத் தொடங்கியுள்ளது என்பது கவலை தரும் விஷயம். தங்களது வாழ்நாள் சேமிப்பிலிருந்து கிடைக்கக்கூடிய வட்டியை மட்டுமே நம்பி வாழ்க்கைநடத்தும், பணி ஓய்வுபெற்றவர்களுக்கும், நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் யார்?

நடுத்தர மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும்விதத்தில் அவர்களுடைய வைப்புத்தொகைக்கான வட்டிவீதத்தைக் குறைக்காமல் பார்த்துக்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

இந்த உயிர்நாடிப் பிரச்னையை வெறும் வணிகரீதியில் அணுகாமல், மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய இழப்பை ஒரு சுமையாக ரிசர்வ் வங்கி கருதலாகாது. ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் உதவுவதை ஒரு சமுதாயக் கடமையாகக் கருத வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

Posted in Agriculture, Assets, Auto, Automotive, Banking, Banks, BOB, Bonds, BSE, Cars, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chit Funds, Chitfunds, Chithambaram, Commerce, Cooperative, Credit, CRR, Deflation, Deposits, Dollar, Economy, Enforcement, Exchange, Farmers, FD, Finance, Financing, fiscal, Govt, HDFC, ICICI, Index, Indices, Inflation, Insurance, Interest, investments, IOB, KVB, Land, liquidity, Loans, markets, Micro-financing, Microloans, Minister, Monetary, Motor, NIFTY, NSE, Overnight, Overnite, Parts, Policy, Property, Rates, RBI, reserves, ROI, Rupee, Rupees, Rupya, SBI, Schemes, Shares, Spare, Stocks, Student, Treasury | Leave a Comment »

Pakistan’s political mess – Benazir Bhutto makes triumphant return

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 22, 2007

என்று தணியும் சுதந்திர தாகம்?

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய பேநசீர் புட்டோ, மனித குண்டுத் தாக்குதலுடன் பாகிஸ்தானில் வரவேற்கப்பட்டிருப்பது ஒன்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. இப்படியொரு வெடிகுண்டு கலாசாரத்தை அரசும், பாகிஸ்தானிய ராணுவமும் ஆதரித்ததன் விளைவை இப்போது அந்த நாட்டு அப்பாவி மக்கள் அனுபவிக்கிறார்கள் என்பதுதான் வருத்தமான விஷயம்.

தீவிரவாத சக்திகள் தங்களுக்கு மத முலாம் பூசிக் கொள்வதன் மூலம் அரசின் ஆதரவும், ராணுவத்தின் உதவியும் கிடைக்கும் என்று தெரிந்து கொண்டதன் விளைவுதான், பாகிஸ்தானைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பல்வேறு தீவிரவாத அமைப்புகள்.

ஜெனரல் பர்வீஸ் முஷாரஃப் எந்தத் தீவிரவாத சக்திகளின் துணையோடு ஆட்சியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாரோ அந்த சக்திகளை அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்கி அடக்கவும் ஒடுக்கவும் முயன்றால், அந்தத் தீவிரவாத சக்திகள் எப்படிப் பேசாமல் இருக்கும்?

பாகிஸ்தானைப் பொருத்தவரை ஆட்சியில் அமர்வதற்கு ஒன்று பஞ்சாபியராக இருக்க வேண்டும் அல்லது சிந்தியாக இருக்க வேண்டும். லாகூரைத் தலைநகராகக் கொண்ட மாகாணம் பஞ்சாப் என்றும், கராச்சியைத் தலைநகராகக் கொண்ட மாகாணம் சிந்து என்றும் அழைக்கப்படும். ஜெனரல் முஷாரஃபும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃபும் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். சிந்துப் பகுதியைச் சார்ந்தவர் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ. அமெரிக்காவின் துணையோடு பிரதமர் முஷாரஃபும், பேநசீர் புட்டோவும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, முஷாரஃப் அதிபராகத் தொடர்வது என்றும், பேநசீர் புட்டோ பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதான் பிரச்னைக்கு அஸ்திவாரமே. அரசியல்வாதிகளான முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷரீஃபும், பேநசீர் புட்டோவும் கைகோர்த்து மீண்டும் மக்களாட்சி நிலவப் போராடுவதை விட்டுவிட்டு பேநசீர் புட்டோ, அதிபர் பர்வீஸ் முஷாரஃபுடன் கைகோர்த்துக் கொண்டிருப்பதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இந்த ஒப்பந்தத்திற்காக பேநசீர் புட்டோவுக்கு, அதிபர் முஷாரஃப் தந்திருக்கும் விலை என்ன தெரியுமா? பேநசீர் மீது சாட்டப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்படும் என்பதுதான்.

பேநசீர் புட்டோவுக்கு சிந்து மாகாண மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பது மறுக்க முடியாத உண்மை. அதேபோல, நவாஸ் ஷரீஃபும் சரி, பஞ்சாப் மாகாணத்தின் நன்மதிப்பைப் பெற்றிருப்பவர்தான். ஆனால் இருவருக்குமே இருக்கும் பொதுவான பலவீனம், அவர்களது சுயநலமும், ஊழல் குற்றச்சாட்டுகளும். ராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு, அதிபராகவும் முஷாரஃப் தொடரலாமா என்கிற கேள்விக்கு விரைவிலேயே பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் பதிலளிக்க இருக்கிறது.

பாகிஸ்தானிய அரசியலும் சரி, அரசியல் தலைவர்களும் சரி அமெரிக்காவின் கைப்பாவைகளாகத்தான் செயல்பட முடியும் என்பதுதான் சரித்திரம் கூறும் உண்மை. அந்த அளவுக்கு ராணுவத்திலும் அரசியலிலும் அமெரிக்க ஆதிக்கம் ஊடுருவி இருக்கிறது. இதன் விளைவுதான் அதிகரித்து வரும் தீவிரவாதம். இதுவரை அண்டை நாடான இந்தியாவை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்த இந்தத் தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தானிலேயே தங்களது கைவரிசையைக் காட்ட வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

மத முகமூடியை அணிந்துகொண்டு அப்பாவி மக்களை உயிர்ப்பலி கொள்ளும் இந்தத் தீவிரவாத இயக்கங்கள் ஒரு முடிவுக்கு வர வேண்டுமானால், முதலில் அமெரிக்கா மற்றும் சீனாவின் தலையீடு பாகிஸ்தானில் இருக்கக் கூடாது; இரண்டாவது, ஆட்சியில் ராணுவம் தலையிடுவது தடுக்கப்பட வேண்டும்; மூன்றாவது, பாகிஸ்தானில் முறையான தேர்தல் நடைபெற்று மக்களாட்சி மலர வேண்டும். இல்லையானால், எல்லாம் வல்ல இறைவன்தான் பாகிஸ்தானைக் காப்பாற்ற வேண்டும்!

———————————————————————————————————————————————-

நம்பிக்கை நட்சத்திரமல்ல, பேநசீர்!

எம். மணிகண்டன்

அரசியல்வாதிகள் அடிக்கடி ஏற்றத்தாழ்வுகளைச் சந்திப்பார்கள் என்பதால் அரசியலை, பரமபத விளையாட்டுடன் ஒப்பிடுவதுண்டு. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவுக்கு இந்த ஒப்பீடு மிக நன்றாகவே பொருந்தும்.

புட்டோ தூக்கிலிடப்பட்ட பிறகு, வெளிநாட்டில் இருந்து பாகிஸ்தான் திரும்பியபோது, ராணுவ ஆட்சியாளர்களின் பிடியில் இருந்து மக்களைக் காப்பாற்ற வந்த நம்பிக்கை நட்சத்திரமாகத் தோன்றினார் பேநசீர். ஆனால் 1988-ல் அவர் அமோக வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்த சில மாதங்களில் அவர்மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டபோது, மக்களின் மதிப்பை இழந்தார்.

1993-ல் மீண்டும் பிரதமரானபோது, அவர் மீது முன்பைவிட அதிகமான ஊழல் குற்றச்சாட்டுகளே எழுந்தன. அதனால் 3 ஆண்டுகளுக்குள் மீண்டும் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. சுவிட்சர்லாந்து, போலந்து, ஸ்பெயின், பிரான்ஸ், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் பேநசீரும் அவரது கணவர் ஸர்தாரியும் முறைகேடாகப் பணம் சம்பாதித்ததற்கான ஆதாரங்களைக் காட்டின.

இதனால் சிறைக்குச்செல்ல வேண்டும் என்று அஞ்சியே நாட்டைவிட்டு வெளியேறினார் பேநசீர். அவர் ஆட்சியில் இருந்தபோதும் சரி, நாட்டைவிட்டே வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்தபோதும் சரி, அவரும் அவரது கட்சியினரும் மக்களைப்பற்றிக் கவலைப்பட்டதே இல்லை என்பதுதான் உண்மை.

கடந்த 18-ம் தேதி பேநசீர் பாகிஸ்தான் திரும்பியபோது, அவர் நடத்திய பேரணியில் குண்டுவெடித்து 139 பேர் இறந்த சம்பவம் உலகையே உலுக்கியது. ஆனால் சம்பவம் நடந்த சில வினாடிகளுக்குள் பேநசீர் கட்சியைச் சேர்ந்த பெரிய தலைவர்கள்முதல் குட்டித் தலைவர்கள்வரை அனைவரும் தங்களது சொகுசு கார்களில் ஏறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டனர் என்பதுதான் இறந்தோர் குடும்பங்களுக்கு வேதனை அளித்த சேதி.

குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களைக் கொண்டுசெல்வதற்குக்கூட போதுமான வாகனங்கள் இல்லை. இறந்தவர்கள் அனாதைப் பிணங்களாகத் தெருவிலே கிடந்தார்கள். இந்தச் சம்பவத்துக்கு பேநசீரைத் தவிர வேறு யாரைக் குறை கூறினாலும் அது ஒருதலைப்பட்சமாகவே இருக்கும். ஏனென்றால் தனது வருகை ரத்தகளறியாக மாறப் போகிறது என்பது பேநசீருக்கும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் முன்பே தெரியும்.

முஷாரப் ஆட்சியில் மக்களைத் தவிக்கவிட்டு இவ்வளவுகாலம் பேநசீர் எங்கே போயிருந்தார் என அவரது கட்சியினரே கேள்வி எழுப்புகின்றனர். முஷாரபுடன் முறையின்றி ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகே அவர் பாகிஸ்தான் திரும்பியிருக்கிறார் என்பதில் மக்களுக்கும் கோபமிருக்கிறது.

முஷாரப் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளது. உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் முன்பைவிடச் சுதந்திரமாக இருக்கின்றன. பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உதவி செய்தவர் என்பதால் முஷாரபுக்கு மேலைநாடுகளின் ஆதரவு இருக்கிறது.

லால் மசூதி, பழங்குடி பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் மத அடிப்படைவாதிகளுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கினார். அப்படியிருந்தும் முஷாரபை மக்களுக்குப் பிடிக்காமல் போனதற்கு காரணம், அவர் பதவிக்கு வந்தவிதமும், பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அவர் செய்யும் தந்திரங்களும்தான்.

ஆனால், இந்தத் தந்திரங்கள் அனைத்தையும் இதற்கு முன்பே செய்தவர்தான் பேநசீர். அவரும் தனது வசதிக்கேற்ப அரசியல் சட்டத்தைத் திருத்தியவர்தான். தனது குடும்பத்தினருக்கு வானாளாவிய அதிகாரம் வழங்கி சட்டம் ஒழுங்கைக் கேலிக்கூத்தாக்கியவர்தான்.

பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பேநசீர் பிரதமரானாலும், இப்போது அவருக்கும் முஷாரபுக்கும் இடையே இருக்கும் சுமுக உறவு தொடர்ந்து இருக்கப்போவதில்லை. அதற்குக் காரணம் முஷாரப் கையில் இருக்கும் ஆட்சிக் கலைப்பு அதிகாரம்தான். இதற்கான அரசியல்சட்டத் திருத்தத்தை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு வேண்டும்.

ஆட்சியைப் பிடிப்பதே சிரமம் என்பதால், இரண்டில் மூன்று பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெற்று அரசியல் சட்டத்தைத் திருத்துவது என்பது முடியாத விஷயம். இச் சட்டத் திருத்தத்தால் ஏற்கெனவே ஒருமுறை பதவியை இழந்த பேநசீர், பதவியில் நீடிக்க வேண்டுமானால் முஷாரபுக்கு அடிபணிந்தே சென்றாக வேண்டும். அதனால், தத்தமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காக முஷாரபும் பேநசீரும் புதிய தந்திரங்களை பிரயோகிப்பார்கள்.

அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற காரணத்துக்காக முஷாரபை எதிர்க்கும் மத அடிப்படைவாதிகள், பேநசீருக்கு எதிராக இன்னும் ஆக்ரோஷமாகச் செயல்படுவார்கள். ஏனென்றால் முஷாரபைக் காட்டிலும் அமெரிக்காவின் பேச்சை அப்படியே கேட்டு நடப்பவர் பேநசீர். முஷாரபுக்கு ஒருபடி மேலேபோய், பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடுவதற்காக அமெரிக்கப் படைகளை பாகிஸ்தானுக்குள் அனுமதிக்கக்கூட பேநசீர் தயங்கமாட்டார்.

பேநசீரும், முஷாரபும் திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால், பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பேநசீர் பிரதமராவார். ஆனால் முன்புபோல் பேநசீரிடம் பாகிஸ்தான் மக்கள் எதையும் எதிர்பார்க்கமாட்டார்கள். பாகிஸ்தானை ஆட்சி செய்ய அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? புட்டோவின் மகள் என்பதைத் தவிர.

Posted in Al Qaida, Al Quaeda, Al quaida, al-Qaeda, Al-Queda, Benazir, Bhutto, Bribery, Bribes, Corruption, kickbacks, Musharaf, Musharaff, Musharaph, Musharraf, Navaaz, Navas, Navaz, Nawaz, Pakistan, Pervez, Pervez Musharraf, political, Punjab, Sharif, Sind, terror, terror networks, Terrorism, terrorist, Terrorists | Leave a Comment »