Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Water’ Category

Trains: Sewage Discharge & Waste Management – Railways

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2008

யார் காதில் விழப் போகிறது?

ரயில்களில் உள்ள கழிப்பறைகளை நவீனப்படுத்த ரூ. 4000 கோடி செலவிடப்படவுள்ளது. 36,000 ரயில்பெட்டிகளில் இந்த நவீன கழிப்பறைகள் 2011-13-ம் ஆண்டுக்குள் அமைக்கப்படும் என்றும் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

“விமானங்களைப் போன்று, குறிப்பிட்ட நிலையங்களில் ரயில் நிற்கும்போது இக்கழிப்பறைகளை இயந்திரங்களே சுத்தம் செய்யும்’ எனப்படுகிறது.

ரயில் நிலையங்களில் மிகவும் மோசமான சுகாதார சீர்கேட்டுக்குக் காரணமாக இருப்பவை ரயில் தண்டவாளங்களுக்கு இடையே கிடக்கும் மனிதக் கழிவுகள் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ரயில்வே பிளாட்பார மேடையில் உணவுப் பொருள் விற்பனை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, துர்நாற்றமும் ஈக்களும் ஒருபுறம் பரவிக்கொண்டிருக்கும் இத்தகைய சுகாதாரக் கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பது மிகமிக முக்கியம்.

ரயில்வே எடுத்துக் கொண்டுள்ள இந்த நவீன கழிப்பறைத் திட்டத்தால் சுகாதார நோக்கம் உண்மையாகவே நிறைவேறுமா என்று சிந்தித்துப் பார்க்கும்போது இரண்டு காரணங்கள் தயக்கத்தை ஏற்படுத்துகின்றன.

முதலாவதாக, ரயில்வே குறிப்பிடும் நவீன கழிப்பறை என்பது “”கழிவுகள் ஒழுகாப் பசுமைச்சூழல் கழிவறைகள்” என்று அழைக்கப்படுபவை. கழிவுகளில் நீர்பகுதியை மட்டும் வடிகட்டி, குளோரின் சேர்ப்பதன் மூலம் தொற்றுக் கிருமிகள் நீக்கப்பட்ட நீரை தண்டவாளத்திற்கு இடையே கசியச் செய்வதே இதன் செயல்முறை. கெட்டியான கழிவுகள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் அப்புறப்படுத்தப்படும்.

ஆனால் இது நடைமுறையில் வெற்றிகரமாக இல்லை என்பது ஏழு ஆண்டுகளுக்கு முன்பே, சோதனை அடிப்படையில், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் செய்துபார்த்து கைவிடப்பட்டது. நீர் வடிகட்டும் பகுதியில் கழிவுகள் தேங்கி கிருமிகள் சேர்வதும், துர்நாற்றமும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வடிப்பானை மாற்ற வேண்டிய பொருட்செலவும் இதனைக் கைவிடக் காரணங்களாக அமைந்தன.

இரண்டாவதாக, ரயில் நிலையங்களில் ரயில் நிற்கும்போது கழிப்பறையைப் பயன்படுத்தாதீர் என்ற வேண்டுகோளை “”மீறினால் ரூ.100 அபராதம்” என்று மாற்றி அமைத்தாலே போதும்! ரயில் நிலையங்களில் புகைபிடித்தால் அபராதம் என்பது அமலுக்கு வந்தபிறகு ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் புகைபிடிப்போர் எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆகவே, இதற்காக ரூ. 4000 கோடி ஒதுக்க வேண்டுமா என்று யோசிக்கும்போது ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்று மனதில் மின்னி மறைகிறது: “ஓடும் ரயில்களைச் சுத்தப்படுத்தும் பணிகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு’

கூட்டிக் கழித்துப் பார்த்தால் “சுத்தமாகப்’ புரிந்துவிடுகிறது.

தோல்வி கண்ட ஒரு திட்டத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ள ரயில்வே நிர்வாகம், தான் முன்பு அறிவித்த, இந்நேரம் செயல்படுத்தியிருக்க வேண்டிய, “ரயில் குடிநீர்’ திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டது.

ஒவ்வொரு ரயில் பயணியும் குடிநீர் பாட்டில் இல்லாமல் பயணம் செய்ய இயலாது. விலைகொடுத்து வாங்கிய குடிநீர் என்பதால், சக பயணியிடம் ஒரு மிடறு தண்ணீர் கேட்பதுகூட, இரத்தலுக்கு ஒப்பாக கூச்சம் தருகிறது.

ரயில்வே நிர்வாகம் குடிநீர் தயாரித்தால் தரமுள்ளதாக இருக்குமா என்ற கேள்விகள் எழுந்தபோது, தற்போது ரயில்களில் விற்கப்படும் குடிநீரையே, ஒவ்வொரு ரயில் பயணியும் (இரண்டாம் வகுப்பு பயணி சாச்செட்டிலும், முதல்வகுப்பு பயணி பாட்டிலிலும்) பயணச் சீட்டின் ஒரு பகுதியைக் கிழித்துக் கொடுத்து, பயண தூரத்துக்கேற்ப நிர்ணயிக்கப்படும் அளவுகளில் பெறலாம், அதற்கான தொகையை ரயில்வே நிர்வாகம் ஈடுசெய்யலாம் என்ற ஆலோசனைகள்கூட முன்வைக்கப்பட்டன.

ஆனால் விரையும் ரயிலின் பேரோசையில் இதெல்லாம் யார் காதில் விழப்போகிறது!

Posted in Bacteria, Clean, Commuter, Disease, Disinfect, Drink, Environment, hazard, Hazardous, Hygiene, Infection, Infectious, medical, Railways, Recycle, Sewage, Smell, Trains, Virus, Waste, Water | Leave a Comment »

Tamil Nadu Public Works Department (PWD) – Villages’ infrastructure facilities & Support systems for TN river basin resources

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

பொதுப்பணித்துறைக்கு மூடுவிழாவா?

நீதி. செங்கோட்டையன்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் டல்ஹெüசி பிரபுவால் 1849-ம் ஆண்டு இந்தியாவில் பொதுப்பணித்துறை துவக்கப்பட்டது. ஆரம்பத்தில் ரயில், பேருந்து, சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கோடு துவக்கப்பட்ட இத்துறை, நாளடைவில் வேளாண் தொழிலின் உயிரோட்டமான நீர்நிலைகளைச் சீரமைக்கும் தலையாய பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது.

அந்தவகையில் மத்திய பொதுப்பணித்துறையும், அந்தந்த மாநிலங்களுக்குத் தனித்தனியாக மாநிலப் பொதுப்பணித்துறையும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்தைப் பொருத்தவரை ரெகுலர் பிரிவு, தாற்காலிகப் பிரிவு (திருச்சி, வேலூர் ஆகிய இரு வட்ட அலுவலகங்களின் கீழ் பல கோட்ட அலுவலகங்கள்) என இரு பிரிவுகளாகப் பொதுப்பணித்துறை செயல்படுகிறது.

இதில் ரெகுலர் பிரிவு ஆற்றுப்பாசனம் உள்ள பகுதிகளின் நீர்நிலைகளைச் சீரமைத்து வேளாண் தொழிலுக்கு வேண்டிய நீர்வளத்தைப் பெருக்கிக் கொடுக்கும் பணியைச் செய்து வருகிறது.

தாற்காலிகப் பிரிவானது, ஆற்றுப்பாசனம் அல்லாத பகுதிகளில் நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியைச் செய்து வருகிறது.

முக்கியமாக ஏரிப்பாசனத்தில் தமிழகம் முன்னிலையில் திகழ இந்த தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவின் பங்கு அளப்பரியது.

இதுபோன்ற முக்கியப் பணியை ஆற்றிவரும் தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவுக்கு தமிழக அரசு மூடுவிழா நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனால் ஏரிப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள், தங்கள் தலையில் இடி விழுந்தது போல் உணர்கின்றனர்.

தென் மாவட்டங்களின் பெரும்பகுதி வானம் பார்த்த பூமியாகத் திகழ்கிறது. இதனால் அப்பகுதி மக்கள், பிழைப்புத் தேடி நகர்ப்புறத்துக்கும், வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவு மூடப்பட்டால், ஏரிகள் மற்றும் குளங்களைத் தூர்வாரும் பணியில் மேலும் பின்னடைவு ஏற்படும் என்ற கவலை விவசாயிகள் மத்தியில் மேலோங்கியுள்ளது. அத்துடன், ஏரி, குளங்கள் தூர்வாரும் பணி தடைபட்டுப் போனாலும் போகலாம் என்ற அச்ச உணர்வும் பெரும்பாலான விவசாயிகளின் மனத்தைக் கவ்விக் கொண்டுள்ளது.

பொதுப்பணித்துறை ரெகுலர் பிரிவு வேளாண் கட்டமைப்பு தொடர்பான பணிகளை எப்போதுமே குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து முடிப்பதில்லை.

இதனால் தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவுக்கு மூடுவிழா என்ற செய்தி விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதைத் தவிர்த்து, ரெகுலர் பொதுப்பணித்துறை பிரிவில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகள் சுய ஆதாயத்தில்தான் அதிக அக்கறை கொண்டவர்களாக உள்ளனர். அதாவது, தங்களுக்கு கணிசமான கமிஷனை அள்ளிக் கொடுக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மட்டுமே அதிகாரிகள் தனிப்பட்ட சுறுசுறுப்பும் உற்சாகமும் கொண்டுள்ளனர் என்பதையே விவசாயிகள் துணிவாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.

அந்தவரிசையில், தற்போது தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவுக்கு மூடுவிழா நடத்தும் நிலைக்கு தள்ளியது கூட, இந்த ரெகுலர் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கமிஷன் ஆசைதான் என்றும், அவசியம் ஏற்பட்டால் இதை எந்த இடத்திலும் தாங்கள் சொல்லத் தயார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அதாவது ஒருகாலத்தில் ஆற்றுப்பாசனப் பகுதியில் உள்ள நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியை மட்டுமே செய்து வந்த பொதுப்பணித்துறையின் ரெகுலர் பிரிவு, அண்மைக்காலமாக ஆற்றுப்பாசனம் அல்லாத பகுதியிலும் நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியைச் செய்து வருகிறது. ரெகுலர் பிரிவின் இந்த முனைப்புக்கு கமிஷன் தான் காரணம் என்பது தவிர எவ்வித நல்ல நோக்கமும் இல்லை.

மாநிலத்தில் மொத்தம் 39,000 ஏரிகள் உள்ளன. ஏரிப்பாசனத்தின் கீழ் 22 சதவீத நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்நிலையில் 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்கான ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்ட வேண்டுமானால் விவசாயத்தின் உயிரோட்டமான நீராதாரத்தைப் பெருக்குவதில் அரசு அதிக அக்கறை செலுத்துவது அவசியம்.

குறிப்பாக விவசாயத்தின் ஜீவாதாரங்களான ஆறு, ஏரி, குளம், கிணறு போன்றவற்றைச் சீர்படுத்தி அவற்றை எப்போதும் நல்ல நிலையில் வைத்துக் கொள்வது பொதுப்பணித்துறையின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். ஆனால் தமிழகப் பொதுப்பணித்துறையின் செயல்பாடோ திருப்திகரமாக இல்லை.

இதேபோன்று மெத்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தால் தென்மாவட்டங்களில் விவசாயம் நலிவடைந்து, இன்னொரு “விதர்பாவாக’ உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

இதற்கிடையில், “நதிகளை இணைப்போம்’ என்று அடிக்கடி கூறி வரும் மாநிலப் பொதுப்பணித்துறை அமைச்சர், நிதி இல்லாததால்தான் பொதுப்பணித்துறையின் தாற்காலிகப் பிரிவுக்கு மூடுவிழா நடத்தப்பட உள்ளதாக உலா வரும் செய்திகளுக்கு என்ன பதில் கூறப்போகிறார் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு!

Posted in Agriculture, basin, Dams, Duraimurugan, facilities, Farmers, Farming, Flyovers, GIS, Govt, Hydrology, infrastructure, Irrigation, Lakes, Management, Mgmt, Planning, Plng, Projects, Public, PWD, Resources, Rivers, service, Suicides, support, Thiruchi, Thiruchirapalli, Thiruchirappalli, Thiruchy, Trichy, Vellore, Vidarba, Vidharbha, Vitharbha, Water | Leave a Comment »

V Krishnamoorthy: Protecting the Marshy swamp grounds

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2008

சதுப்பு நிலங்களைப் பாதுகாப்போம்!

வி. கிருஷ்ணமூர்த்தி


உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின. பூமியின் மொத்தப் பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளன. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன.

அலையாத்திக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும், ஏரிகள், குளங்கள், நீர்தேங்கும் குவாரிப்பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.

பிரத்யேக குணங்கள் கொண்ட புல் செடிகள், அரிய வகை மரங்கள், நீர் நிலைப் பறவைகள், சில வகை விலங்குகள் என அனைத்தும் ஒருங்கிணைந்து வாழும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உள்ளன.

சதுப்பு நிலங்களில் காணப்படும் ரீடு எனப்படும் பிரத்யேக புல் செடிகள் வெள்ள நீரைத் தடுத்து அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தி அருகில் உள்ள பகுதிகளில் வெள்ளச் சேதங்கள் ஏற்படுவதைத் தடுக்கின்றன. கடலோரப் பகுதிகளில் உள்ள அலையாத்திக் காடுகள் சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின்போது கரையோரப் பகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை வெகுவாகக் குறைக்கின்றன. மேலும், அந்தந்தப் பகுதியில் நிலத்தடி நீர் வளத்தை பாதுகாத்து மறுசுழற்சி செய்வதில் சதுப்பு நிலங்களின் பங்களிப்பு அடிப்படை அம்சமாகியுள்ளது.

இந்தியாவில் 27,403 சதுப்பு நிலங்கள் உள்ளன. இதில் 23,444 சதுப்பு நிலங்கள் உள்பகுதியில் அமைந்துள்ளன. 3,959 சதுப்பு நிலங்கள் மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம், கோவா, மகாராஷ்டிரம், அந்தமான் – நிகோபார் தீவுகள் உள்ளிட்ட மாநிலங்களின் கடலோரங்களில் அமைந்துள்ளன. இதன் பரப்பு 6,750 சதுர கிலோ மீட்டர். இதில் 80 சதவீத சதுப்பு நிலங்கள் அலையாத்திக் காடுகளாக உள்ளன.

ஆசிய சதுப்பு நில இயக்ககத்தின் அறிக்கையில், இந்தியாவில் மொத்தம் உள்ள நிலத்தில் 18.4 சதவீதம் சதுப்பு நிலங்களாக உள்ளன. 70 சதவீத சதுப்பு நிலங்கள் நெல் சாகுபடி உள்ளிட்ட தேவைகளுக்காக விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு உற்பத்தியைக் காரணம்காட்டி விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதே சதுப்பு நிலங்கள் குறைய முக்கியக் காரணமாக உள்ளது.

கேரளத்தில் அஸ்தமுடி, சாஸ்தம் கோட்டா, வெம்பானாடு உள்ளிட்ட சில சதுப்பு நிலங்கள் கடலோரப் பகுதிகளில் மனிதனால் உருவாக்கப்பட்டதற்கு சிறந்த உதாரணங்களாகக் கூறப்படுகின்றன.

19 இடங்களில் சதுப்பு நிலங்கள் பறவைகள் சரணாலயங்களாக அறிவிக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பு, மேம்பாட்டுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் மொத்த சதுப்பு நிலங்களில் 50 சதவீதம் மட்டுமே தற்போது உள்ளது. இவையும் ஆண்டுக்கு 4,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வீதம் குறைந்து வருகின்றன. இதன் மூலம் மொத்த சதுப்பு நிலங்களில் ஆண்டுக்கு 3 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது என ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

எவ்வித திட்டமிடலும் இல்லாமல் வேகமாக அதிகரித்துவரும் நகரமயமாக்கல், வேளாண் உற்பத்தி அதிகரிப்புக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள், அணைகள் உள்ளிட்ட கட்டுமானத் திட்டங்கள், குடியிருப்புகள், தொழிற்சாலைகளுக்காக ஆக்கிரமிப்பு செய்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் இயற்கையின் கொடையான சதுப்பு நிலங்கள் பாழாகி வருகின்றன.

இதனால், வீணாகக் கடலில் கலக்கும் நன்னீரின் அளவு அதிகரிக்கும், நிலத்தடி நீரின் பயன்பாடு வெகுவாக அதிகரிக்கும்போது சதுப்பு நிலங்கள் இல்லாத பகுதிகளில் கடலில் இருந்த உவர்நீர் ஊடுருவல் ஏற்படும். இது தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் மழைக்காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதும், கோடைக்காலங்களில் வறட்சி மற்றும் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாத நிலை ஏற்படும் எனவும் இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு, பாழாகிவரும் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க 1971-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி ஈரான் நாட்டின் ராம்சார் நகரில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் முடிவில் உலகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை மக்களிடம் பரப்புவது, இதற்காக உள்ளூர், மாநில, தேசிய, சர்வதேச அளவில் திட்டங்களை உருவாக்கி சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தும் ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டது. இதுவே ராம்சார் பிரகடனம் எனப்படுகிறது.

இந்தியா உள்ளிட்ட 135 நாடுகள் இந்த பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் தொடர் நடவடிக்கையாக இந்தியாவில் வெம்பாடு, சில்கா ஏரி உள்பட உலகம் முழுவதும் இருந்து 1,235 சதுப்பு நிலங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலின் படி இந்தியாவில் உள்ள சதுப்பு நிலங்கள் அரியவகை பறவைகளை பாதுகாப்பதற்கான இடங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் ஆந்திரத்தின் ஒரு பகுதியில் பரந்து விரிந்திருக்கும் பழவேற்காடு ஏரியை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, ஆண்டுதோறும் பிப்ரவரி 2-ம் தேதி உலக சதுப்பு நில தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சதுப்பு நிலங்களின் அவசியம், சூழலியல் மாற்றங்களால் சதுப்பு நிலங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அதனால் உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இவ்வாறு உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் நாளில் கூடி சதுப்பு நிலங்கள் குறித்து பேசிவிட்டு சென்றுவிடாமல், சதுப்பு நிலங்களை சார்ந்து அதன் அருகில் வசிக்கும் மக்களிடம் அவற்றின் பயன்பாடு, முக்கியத்துவம் குறித்து விளக்கங்கள் அளித்தால் மட்டுமே அடுத்த தலைமுறையினர் சதுப்பு நிலங்களை பார்க்க முடியும்.

Posted in Backwaters, encroachments, endangered, Environment, Flood, Florida, Forests, Industrialization, Lakes, Land, mangrove, Nature, Pollution, Ponds, Protection, Rain, Rainforest, Rivers, Sea, SEZ, subtropical, swamps, Tropical, Water, Wilderness | 1 Comment »

TN Govt will accord priority to housing, water scheme: The Governor of Tamil Nadu

Posted by Snapjudge மேல் ஜனவரி 23, 2008

தைமுதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம்

40 சமத்துவபுரங்களிலும் தந்தை பெரியார் சிலை!

கல்வி, வேலை வாய்ப்பு, சமூகநீதி, தொழில்வளம், வேளாண்மை,
மகளிர் நலம், மருத்துவம்… … அடுக்கடுக்கான திட்டங்கள்

ஆளுநர் உரையில் மின்னும் ஒளிமுத்துகள்!


சென்னை, ஜன. 23- தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம், 240 சமத்துவ புரங்களிலும் தந்தை பெரியார் சிலை உள்ளிட்ட அரிய அறி விப்புகள் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளன.
தமிழக ஆளுநர் மேதகு சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் இன்று காலை 10 மணியளவில், தமிழ்நாடு சட்டமன்றப் பேர வையில் ஆற்றிய உரை வரு மாறு: (ஆளுநரின் ஆங்கில உரையைத் தொடர்ந்து சட்ட மன்றப் பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் அவர்கள் அவ் வுரையைத் தமிழில் படித்தார்). அமைதி தவழும் மாநிலம்
நமது நாட்டின் பிற மாநி லங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாடு அமைதி தவழும் மாநிலமாக விளங்கி வருகிறது.

மாநிலத்தில் தீவிரவாத நட வடிக்கைகள் எவையும் நடை பெறாவண்ணம் இந்த அரசு தொடர்ந்து விழிப்புடன் கண் காணித்து வருகிறது. அண்டை மாநிலங்களிலிருந்து நமது மாநிலத்திற்குள் தீவிரவாதம் ஊடுருவதற்கான முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. மேலும், குற்றச் செயல்களில் ஈடுபடும் கூலிப்படையினருக்கு எதிராக இந்த அரசு கடும் நட வடிக்கைகளை எடுத்துள்ளது. ஏற்றத்தாழ்வற்ற சமுதாய வளர்ச்சி காண்பதும், வறு மையை ஒழிப்பதுமே சாதிப் பூசல்களுக்கும், தீவிரவாதத் திற்கும் நிரந்தரத் தீர்வுகளாகும் என்று இந்த அரசு உறுதியாக நம்புகிறது.

மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கலாம்

நதிநீர்ப் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வான தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தை மத் திய அரசு செயல்படுத்தவேண் டுமென்றும், அதன் முதற்கட் டமாக, தீபகற்ப நதிகளை இணைக்கும் திட்டத்தை உட னடியாகச் செயல்படுத்தவேண் டுமென்றும் இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் கூட, மாநிலங்களிடையே ஒரு மித்த கருத்து எதுவும் எட் டப்படாத நிலையே உள்ளது. எனவேதான், மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக் கும் திட்டத்தையாவது செயல் படுத்திட, மத்திய அரசு பதி னொன்றாவது அய்ந்தாண்டுத் திட்ட காலத்தில் நிதியுதவி வழங்கவேண்டுமென்று தமிழக அரசு கோரியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை யில், மேலும் தாமதமின்றி இந்தத் திட்டத்தைச் செயல் படுத்துவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளை இந்த அரசு விரைந்து மேற்கொள்ளும். மேலும், பருவ காலங்களில் தமிழக நதிகளின் உபரி நீர் கடலில் கலந்து வீணாவதைத் தடுத்து, வறட்சியான பகுதிகள் வளம் பெறும் வகையில் நிலத் தடியில் சேமித்துப் பயன் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய, இந்த அரசு ஒரு வல்லுநர் குழுவை அமைக்கும். நமது மாநிலத்தின் நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதி களில், ஆறுகள், சிற்றாறுகள் மற்றும் ஓடைகளில் வீணாகும் நீரைத் தடுப்பணைகள் மூல மாகச் சேமித்து, ஆண்டு முழு வதும் வேளாண்மை மற்றும் குடிநீர் வசதிக்குப் பயன்படுத்து வதற்கான பெருந்திட்டம் ஒன்று வரும் நிதியாண்டிலி ருந்து செயல்படுத்தப்படும்.

சேதுக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படவேண்டும்

தமிழக மக்களின் நீண்ட காலக் கனவாக விளங்குவதும் – 1860 ஆம் ஆண்டுமுதல் ஆங்கிலேயர் ஆட்சியிலேயே ஆய்வு நடத்திடத் தொடங்கப் பெற்று, பொறியியல் மேதை களால் ஏற்றுக்கொள்ளப் பட்டு, சாத்தியக் கூறுகள் கண் டறியப்பட்டு, சான்றோர்கள் ஆன்றோர்களால் வரவேற்கப் பட்டதுமான – உலகத் தொடர் புகள், வணிகத் தொடர்புகள் விரிவாக்கப்பட்டு நம் நாடு மேலும் வளமும், வலிவும் பெறுவதற்குப் பயன்படக் கூடி யதுமான சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றிடத் தொடங்கி, தற்போது அரசியல் ஆதாயத்திற்காக ஒரு சிலர் முன்னுக்குப் பின் முரணாக எழுப்புகிற வாதங்களுக்கு செவிசாய்த்து திட்டத்தின் செயலாக்கத்தை நிறுத்தி விடா மல் தமிழக மக்களின் எதிர் காலத்தை, ஏற்றமும் வளமும் மிக்க காலமாக மாற்றிடுவதி லிருந்து பின்வாங்காமல் – அந்த அரிய ஆக்கப்பூர்வமான திட் டத்தை நிறைவேற்றிட வேண் டுமென்று மத்திய அரசினை இந்த அரசு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

240 சமத்துவபுரங்களிலும் பெரியார் சிலை

தந்தை பெரியார் சிலை ஒன் றினை 95 அடி உயரத்தில் அமைக்கவேண்டும் என்ற திராவிடர் கழகத் தலைவர் திரு. கி.வீரமணி அவர்களின் வேண் டுகோளினை முதலமைச்சர் அவர்கள் ஏற்றுள்ள நிலையில், ஓரிடத்தில் சிலை அமைப் பதைக் காட்டிலும், பெரியார் பெயரால் மேலும் 95 சமத்துவ புரங்களை அமைத்து; அனைத்து சமூகத்தினரும் சகோதர பாசத் துடன் ஒருமித்து வாழ்கின்ற அந்த ஒவ்வொரு சமத்துவபுரக் குடியிருப்பு முகப்பிலும் தந்தை பெரியார் அவர்களின் சிலையை அமைப்பதால், அவருடைய தலையாய கொள்கையான சமுதாயச் சமத்துவக் கொள்கை பரவுவதற்கு வழி ஏற்படும் என்பதற்காக அந்தப் பணியை இந்த அரசு தொடங்க முடிவு செய்துளள்து. ஏற்கெனவே இவ்வரசு அமைத்துள்ள 145 சமத்துவபுரங்களுடன் சேர்த்து, இப்பணி முடிவுற்ற பின் பெரியார் சிலையுடன் கூடிய 240 சமத்துவபுரங்கள் தமிழ கத்தில் அமையும்.

தைத்திங்களே தமிழ்ப் புத்தாண்டு

பெரும் புலவரும், தனித் தமிழ் இயக்கத்தைத் தோற்று வித்தவருமான மறைமலை அடிகளார் தலைமையில், அய்ந் நூறுக்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள், 1921 ஆம் ஆண்டு சென்னை – பச்சையப்பன் கல்லூரியில் ஒன்று கூடி, தமிழர்களுக்கென்று ஒரு தனி ஆண்டு தேவை என்று கருதி, அய்யன் திருவள்ளுவர் பெய ரில் தொடர் ஆண்டு ஒன் றினைப் பின்பற்றுவதென்றும், அதையே தமிழ் ஆண்டு என்று கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் முடிவு எடுத் தார்கள். அந்தக் கருத்தினை, முப்பத்தியேழு ஆண்டுகளுக்கு முன்பே மாண்புமிகு முதல மைச்சர் கலைஞர் அவர்கள் ஏற்றுக் கொண்டு, 1971 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அர சிதழிலும் நடைமுறைப்படுத் திட ஆணை பிறப்பித்தார். திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக் கம் என்பது, ஒட்டு மொத்த மாக எல்லாத் தமிழ் அறிஞர் களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால், தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக் கம் என அறிவித்து நடை முறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழ்நாட்டு மக்கள்; இனி – தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகிழ்ச் சியுடன் கொண்டாடும் வகை யில், வாழை, மா, பலா என முக்கனித் தருக்களை நாட்டி; வண்ண வண்ணக் கோலங்க ளிட்டு; வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புது எழில் காட்டிட; புத்தாடை புனைந்து தமிழ் மானம், தன் மானம் போற்றிப் பாடியும் ஆடியும்; சமத்துவ உணர்வு பரப்பியும்; தமிழ்ப் புத்தாண்டு இதுவெனத் துள்ளும் மகிழ்ச் சியால் அன்பை அள்ளிப் பொழிவர்.

திட்ட ஒதுக்கீடு இரு மடங்கு

கடந்த பத்தாவது அய்ந் தாண்டுத் திட்ட காலத்தின் திட்ட ஒதுக்கீடான ரூபாய் 40,000 கோடியை இரு மடங் குக்கும் மேலாக உயர்த்தி, ரூபாய் 85,344 கோடி அளவில், வரும் பதினொன்றாவது அய்ந் தாண்டுத் திட்டக் காலத்தில் திட்டப் பணிகளை மேற் கொள்ள ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. இத்திட்டக் காலத்தில், வேளாண்மைத் துறைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டுவதோடு, சமூகநீதியை உறுதி செய்யும் வகையில் வளர்ச்சித் திட்டங்கள் செயல் படுத்தப்படும்.

மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் தமிழும்!

இந்த அரசின் இடைவிடாத முயற்சியின் காரணமாக மய்ய அரசு தமிழைச் செம்மொழி யாக அறிவித்துப் பெருமைப் படுத்தியது மட்டுமன்றி, மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தையும் சென்னையில் அமைத்து வருகிறது. தமிழ் நாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாட மாக்குவதற்கான சட்டம் இயற் றப்பட்டு, அனைவரும் தமிழ் பயில இவ்வரசு வழிவகுத்துள் ளது. தமிழ் மொழியை மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்கச் செய்யவும், சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளில் தமிழையும் வழக்கு மொழி யாக்கவும், இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும்.

விவசாயிகளின் நலன்

வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்கள் மூலமாக, விவசாயிகளின் வரு வாயைப் பெருக்க இவ்வரசு முனைப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வேளாண் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் கால்நடை மற்றும் மீனளம் வாயிலாகக் கூடுதல் வருவாயை ஈட்டுதல் ஆகியவை மூலமாகவே இது சாத்திய மாகும். உலக வங்கியின் உத வியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் நீர்வள நிலவளத் திட் டத்தின்கீழ், பொதுப்பணித் துறை, வேளாண் துறை, கால் நடைத் துறை, மீனளத் துறை போன்ற பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து திட்டப் பணிகள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயக் கூட் டுறவுக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள தன் வாயிலாக, தமிழக விவசாயிகள் மீண்டும் கடன் பெற வழிவகுக்கப்பட் டுள்ளது. தற்போது அதிகரித் துள்ள உற்பத்திச் செலவு களுக்கு ஏற்ப, விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்கும் வகை யில், மத்திய அரசு அறிவித்த 100 ரூபாய் ஊக்கத் தொகையோடு சேர்த்து, மாநில அரசின் கூடு தல் ஊக்கத் தொகையாக 50 ரூபாய் வழங்கி, இந்த அரசு சன்ன ரக நெல்லுக்கான கொள் முதல் விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 825 ஆக உயர்த்தியுள்ளது.

மூன்று லட்சம் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள்

தரிசு நிலங்களைப் பண் படுத்தி, அவற்றை நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங் களுக்கு இலவசமாக அளிக்கும் திட்டத்தின்கீழ் இதுவரை ஒரு இலட்சத்து 38 ஆயிரம் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 61 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இந்த அரசு இலவச மாக வழங்கியுள்ளது. மேலும், குடியிருக்க இடமற்ற ஏழை எளியவர்களுக்கு 3 லட்சம் இலவச வீட்டு மனைப் பட் டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப் புறம்போக்கு நிலங் களில் பத்து ஆண்டுகளாக வீடுகள் கட்டிக் குடியிருப் போருக்குப் பட்டா வழங் கப்படும் என்பதைத் தளர்த்தி, வருமான வரம்பையும் விலக்கி, அய்ந்தாண்டுகளுக்கு மேலாகக் குடியிருக்கும் அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா கிடைத் திட இந்த அரசு வழிவகுத் துள்ளது.

மின் உற்பத்தி

மத்திய மின் உற்பத்தி நிலை யங்களிலிருந்து பெறப்படும் மின் சக்தியின் அளவு குறைந் ததால், நமது மாநிலத்தில் மின் விநியோகத்தில் அண்மையில் சில இடர்ப்பாடுகள் ஏற்பட் டன. பழுப்பு நிலக்கரித் தட் டுப்பாடு காரணமாக, நெய் வேலி மின் உற்பத்தி நிலையம் ஒப்புக்கொண்ட அளவிற்கு மின் சக்தியை அளிக்க இயல வில்லை. இதேபோன்று, கல் பாக்கம் மற்றும் கைகா அணு மின் உற்பத்தி நிலையங்களும் எரிபொருள் பற்றாக்குறையால் அவற்றின் உற்பத்தித் திறனுக் கேற்ப மின் உற்பத்தி செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, மத்திய மின் உற்பத்தி நிலை யங்களின் மின் உற்பத்தியை அதிகப்படுத்துமாறு சம்பந்தப் பட்ட துறைகளை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத் துக் கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளில் ரூபாய் 925 கோடி மதிப்பீட் டில் 185 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப் படும்.

இவை 18 மாதங்களுக் குள் இயங்கத் தொடங்கும். இதுதவிர, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் உற்பத்தித் திறனை அதிகரிக்க இந்த அரசு பல நடவடிக்கைகளை எடுத் துள்ளது. வட சென்னை, மேட் டூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் கூடுதல் மின் உற்பத்தி நிலையங்களை நிறு வுவதற்கான ஆயத்தப் பணி களை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டு வரு கிறது. மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, மய்ய அரசு தமிழ்நாட்டிற்கு மத்தியத் தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரத்தை ஒதுக்கீடு செய்து வழங்கி வருகிறது.

கல்வியில் கணினிமயம்

தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கடந்த தி.மு. கழக ஆட்சிக் காலத்தின்போதுதான், 1999-2000 ஆம் ஆண்டில் கணினிப் பாடம் அறிமுகப்படுத்தப்பட் டது. கடந்த ஒன்றரை ஆண்டு களில் மாநிலத்தில் உள்ள 1,880 அரசு மேல்நிலைப் பள்ளி களுக்கும், 1,525 அரசு உயர் நிலைப் பள்ளிகளுக்கும் கணி னிகள் வழங்கப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில், எஞ்சி யுள்ள 100 அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 606 உயர் நிலைப் பள்ளிகளுக்கும் கணினிகள் வழங்கப்படும். மேலும், பதினொன்றாவது அய்ந்தாண்டுத் திட்டக் காலத்திற்குள், மாநிலத்தில் உள்ள 6,650 அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நடுநிலைப் பள்ளிகளுக்கும் கணினிகள் அளிக்கப்பட இந்த அரசு ஆவன செய்யும். இதுமட்டுமன்றி, தமிழ்வழிக் கல்வியில் பயின்று 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் முதல் 1,000 மாணவ மாண வியருக்கு ஊக்கப் பரிசாக கணினிகள் அளிப்பதற்கான திட்டம் ஒன்றையும் இந்த அரசு செயல்படுத்தும்.

திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம்

கோயம்புத்தூரில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறு வனம் ஒன்றையும் (அய்.அய். எம்.), மதுரையில் இந்திய தொழில்நுட்பவியல் நிறுவனம் (அய்.அய்.டி.), திருச்சியில் அறி வியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (அய்.அய்.எஸ். இ.ஆர்.) ஒன்றையும் அமைக் குமாறு, மத்திய அரசை, தமிழக அரசு கோரியுள்ளது. தமிழ் நாட்டில் தற்போது ஒரு மத்தியப் பல்கலைக் கழகம் கூட இல்லாத குறையை நீக்க, மாநிலத்தில் மத்திய பல்கலைக் கழகம் ஒன்றை அமைக்கு மாறும் மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களை, முதல மைச்சர் அவர்கள் இதுகுறித்து சந்தித்துப் பேசியுள்ளார்கள். முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோள் குறித்து நம் பிக்கையூட்டும் வகையில் மத்திய அமைச்சர் அவர்கள் உறுதியளித்துள்ளார்கள். இந்த மத்தியப் பல்கலைக் கழகம் திருவாரூர் மாவட்டத்தில் அமைக்கப்படும்.

மருத்துவத் துறை

அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சாமானிய மக்கள் மருத்துவ சிகிச்சை பெற இய லும். இதை மனதில் கொண்டு, அரசு மருத்துவமனைகளில் தேவையான பணியாளர்களும், அனைத்து வசதிகளும் கிடைக் கச் செய்ய இந்த அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், அரசு மருத்துவமனைகளில் காலியாக இருந்த பணியிடங் களில் 2,167 மருத்துவர்கள் மற்றும் 2,341 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதோடு, 468 புதிய மருத்துவப் பணி யிடங்களும், 1,059 புதிய செவி லியர் பணியிடங்களும் தோற் றுவிக்கப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன. கிராமப்புறத்தில் உள்ள மகளிருக்கு 24 மணி நேரமும் மகப்பேறு சிகிச்சைக் கான வசதி கிடைக்கும் வகை யில், 1,000 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஒவ்வொன்றிலும் மூன்று செவிலியர்கள் பணிய மர்த்தப்பட்டுள்ளனர். இதுமட்டுமன்றி, ரூபாய் 597 கோடி ரூபாய் மதிப்பீட்டி லான உலக வங்கி உதவியுடன் கூடிய தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டத்தின்கீழ், மாநிலத்தில் உள்ள அனைத்து வட்ட மற்றும் மாவட்ட மருத் துவமனைகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துவ தற்கான பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.

இவ் வாறு நமது மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதற்குச் சான்றாக, தனியார் மருத்துவ மனைகளில் நடைபெறும் பிள்ளைப் பேறுகளின் எண் ணிக்கை குறைந்து, அரசு மருத் துவமனைகளில் பிள்ளைப் பேறுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. வருமுன் காப் போம் திட்டத்தின்கீழ் இது வரை நடத்தப்பட்டுள்ள 4,872 முகாம்களில் 51 இலட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இந்த அரசு பொறுப்பேற்ற பின், மோட்டரோலா, டெல் கம்ப்யூட்டர்ஸ், சாம்சங், ரெனோ-நிஸ்ஸான் போன்ற பல பெரும் தொழில் நிறுவனங் களுடன் ரூபாய் 15,083 கோடி மதிப்பீட்டிலான 12 புரிந் துணர்வு ஒப்பந்தங்கள் கையெ ழுத்திடப்பட்டு, அவற்றில் நான்கு தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்கியுள் ளன. இதனால் 1,37,140 பேர் களுக்கு நேரடி மற்றும் மறை முக வேலை வாய்ப்புக் கிடைக்கும்.

தொழிற்கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி

ரூபாய், 4,000 கோடி மதிப்பீட்டில் ஹூண்டாய் கார் தொழிற்சாலை ஆண் டொன்றுக்கு 6 லட்சத்து 30 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு விரிவாக் கப்பட்டு வருகிறது. மேலும் ரூபாய், 1800 கோடி மதிப்பீட் டில் போர்டு கார் தொழிற் சாலை ஆண்டொன்றுக்கு கூடுதலாக இரண்டு இலட்சம் கார்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு விரிவாக்கம் செய் யப்படவுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே அமைந்துள்ள இவ்விரு தொழிற்சாலைகளும், தங்களது பெரும் விரிவாக்கத் தையும் நமது மாநிலத்திலேயே மேற்கொள்வதானது, இந்த அரசின் தொழிற்கொள்கைக் குக் கிடைத்த நற்சான்றித ழாகும்.

கப்பல் கட்டும் தளங்கள்

கடந்த வரவு – செலவு திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட் டது போன்று, சென்னையை அடுத்துள்ள எண்ணூரில் ரூபாய் 3,068 கோடி முதலீட் டில் லார்சன் அண்டு ட்யூப்ரோ நிறுவனம் கப்பல் கட்டும் தளம் ஒன்றினை அமைக்கும். இதன் மூலமாக சுமார் பத்தாயிரம் பேர் வேலை வாய்ப்புப் பெறு வார்கள். கடலூர் மாவட்டத் தில், இன்னொரு கப்பல் கட்டும் தளம் அமைப்பதற் கான ஆயத்தப் பணிகள் நடை பெற்று வருகின்றன.

24,58,411 வண்ணத் தொலைக்கட்சிப் பெட்டிகள் இலவசம்

தி.மு.க., தேர்தல் அறிக்கை யில் அறிவிக்கப்பட்டவாறே, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாதோர் அனைவருக்கும் அவற்றை வழங்கும் திட்டம் இவ்வரசால் செயல்படுத்தப்பட்டு, இது வரை 24,58,411 பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மூன்றா வது கட்டமாக, 34 இலட்சத்து 25 ஆயிரம் வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகளைக் கொள்முதல் செய்வதற்கான ஆணைகள் அளிக்கப்பட்டுள் ளன. சர்வதேச ஒப்பந்தப் புள்ளி வாயிலாக சட்டமன்ற கட்சி களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் ஒப்புதல் பெற்று, ஒளிவு மறைவற்ற முறையில் கொள்முதல் செய்யப்பட்டு, எவ்விதப் பாகுபாடுமின்றி மாநி லத்தின் அனைத்துப் பகுதிகளி லும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட குழுக்கள் மூலமாக, ஏழை எளிய குடும்பங்களுக்கு இவை வழங்கப்பட்டு வருவது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத் தப்பட்டு, இந்தியாவிலேயே வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் அனைத்து வீடு களிலும் உள்ள ஒரே மாநிலம் தமிழகம்தான் என்ற சாத னையை விரைவில் எட்டு வோம்.

மெட்ரோ ரயில் திட்டம்

சென்னை – மாநகர்ப் பகுதி தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகின்றது. இப் பகுதியின் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு உடனடி யான மற்றும் நிலையான தீர்வுகள் தேவைப்படுகின்றன. இந்த முக்கியப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, ரூபாய் 9,757 கோடி செலவில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த இந்த அரசு முனைந்துள்ளது. இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை டில்லி மெட்ரோ இரயில் கழகத்தால் தயாரிக்கப்பட்டு, ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கி யின் நிதியுதவி பெறுவதற்காக மத்திய அரசிற்கு அனுப்பப் பட்டுள்ளது. இத்திட்டத்திற் கான ஆரம்பக் கட்டப் பணி கள் நடைபெற்று வருகின்றன.

ஒரு லட்சம் புதிய வீடுகள்

குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்கள் மற்றும் நடுத்தர வகுப்பினர் ஆகியோருக்கு, நகர்ப்புறப் பகுதிகளில் வீட்டு வசதி அளிப்பதற்கு இந்த அரசு முன்னுரிமை அளிக்கும். பல்வேறு நகர்ப்புற மேம் பாட்டுத் திட்டங்களின்கீழ், மாநிலத்தில் உள்ள நகரங்களில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டப்படவுள்ளன. மாநகராட்சிப் பகுதிகளில் வாழும் மக்களின் வீட்டு வசதித் தேவையைக் கருத்தில் கொண்டு, பொதுத் துறை – தனியார் துறை கூட்டு முயற் சியின் வாயிலாக மாநகராட்சி களுக்கு அருகில் உள்ள பகுதி களில் வீட்டு வசதித் திட் டங்கள் செயல்படுத்தப்படும். இதுமட்டுமன்றி, வீட்டு வசதித் திட்டங்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியை குறைந்த வருவாயு டைய மக்களுக்காக ஒதுக்க வேண்டும் என்ற நிபந்தனை யின்படி, திட்டங்களைச் செயல்படுத்தும் கட்டட அமைப்பாளர்களுக்கு, அதிக தரைப் பரப்புக் குறியீட்டள விற்கு இந்த அரசு அனுமதி யளிக்கும்.

தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்

மத்திய அரசின் மிகப் பெரும் சாதனைத் திட்டமான தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், தமிழகத்தில் தற்போது 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டிலுள்ள அனைத்து மாநி லங்களிலும் இத்திட்டத்தின் செயல்பாட்டை சமூக ஆய்வு வாயிலாக ஆய்ந்து வரும் குழு வினர், தமிழகத்தில் இத்திட் டம் மிகச் சிறப்பாகச் செயல் படுத்தப்படுவதாகவும், இத் திட்டத்தின்கீழ் பணிபுரிவோ ருக்கு நாளொன்றுக்கு எண்பது ரூபாய் ஊதியமாக வழங்கப் பட்டு வருவதாகவும், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் இத்திட் டத்தின்கீழ் பெண்களே 82 சதவிகிதம் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளதாகவும் குறிப் பிட்டு பாராட்டியுள்ளனர். இத்திட்டத்தை, மத்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தியுள்ளதையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வரும் நிதியாண்டு முதல் இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப் படும்.

நாங்குநேரியில் சிறப்புப் பொருளாதாரப் பகுதி

தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சியே- அப்பகுதியில் சமுதாயப் பூசல் கள் எழாமல் இருக்க உதவும் அடிப்படையில், இம்மாவட் டங்களின் தொழில் வளர்ச்சிக் கான பல முயற்சிகளை இந்த அரசு தொடர்ந்து மேற் கொண்டு வருகிறது. நாங்கு நேரியில் சிறப்புப் பொருளா தாரப் பகுதி அமைப்பதற்கு குறுக்கிட்ட தடைகள் நீக்கப் பட்டுள்ள நிலையில், 2,500 ஏக்கர் பரப்பளவில் பல் தொழில் சிறப்புப் பொருளா தார மண்டலம் ஒன்று விரை வில் அமைக்கப்படும்.

இதைப் போன்றே, கங்கை கொண்டா னில் தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண் டலம் ஒன்றை ஏற்படுத்தவும், மதுரையைச் சுற்றியுள்ள பகுதி களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்கவும் எல்காட் நிறுவனம் நட வடிக்கை எடுத்து வருகிறது. அண்மையில், கங்கைகொண் டான் மற்றும் மதுரையில் தகவல் தொழில்நுட்ப நிறு வனங்களுக்கு நிலம் ஒதுக்கப் பட்டுள்ளது. இம்மாவட்டங் களில் உள்ள படித்த வேலை யற்ற இளைஞர்கள் பெரு மளவில் வேலை வாய்ப்புப் பெறவும், இப்பகுதிகள் பொரு ளாதார வளர்ச்சி அடையவும் இந்த நடவடிக்கைகள் பெரி தும் உதவும் என நம்புகிறேன்.

மகளிர் நலன்

நமது சமுதாயத்தில் பெண் கள் தமது முழு உரிமைகளைப் பெறவும், உரிய பங்கினை ஆற்றவும் இந்த அரசு எப் பொழுதுமே உறுதுணையாக இருந்துள்ளது. பெண்களுக்கு சமச் சொத்துரிமையையும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு வேலை வாய்ப்பு களில் இட ஒதுக்கீட்டையும் வழங்கி பெண்ணுரிமை காத் தது இந்த அரசுதான் என்பதை அனைவரும் அறிவர். இந்த வகையில், சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு உரிய பிரதி நிதித்துவம் அளிக்கப்பட வழி வகுக்கும் சட்டத்தை, திருமதி சோனியா காந்தி அவர்களின் சீரிய வழிகாட்டுதலுடன், மாண்புமிகு பிரதமர் மன் மோகன்சிங் அவர்கள் தலை மையில் நடைபெறும் அய்க் கிய முற்போக்குக் கூட்டணி அரசு விரைவில் நிறைவேற் றிடும் என நம்புகிறோம்.

சுய உதவிக் குழுத் திட்டம்

1989 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் இந்த அரசால் தொடங்கப் பெற்ற சுய உதவிக் குழுத் திட்டம், இன்று நமது மாநிலத்தில் உள்ள மகளிருக்கு சமூகப் பொருளாதாரச் சுதந் திரம் அளிக்கும் மாபெரும் மக்கள் இயக்கமாக உரு வெடுத்துள்ளது. இதுவரை கிராமப் பகுதிகளில் மட்டுமே அளிக்கப்பட்டு வந்த சுழல் நிதி உதவியை, முதன்முறையாக மாநிலத்தின் நகரப் பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழுக்களுக் கும் இந்த அரசு வழங்கத் தொடங்கியுள்ளது. தற்போது மாநிலத்தில் சுமார் 58 இலட் சம் உறுப்பினர்களைக் கொண்ட மூன்று இலட்சத்து அறுபதாயிரம் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வரு கின்றன. இக்குழுக்கள் ரூபாய் 1,639 கோடி சேமித்துள்ள தோடு மட்டுமன்றி, ரூபாய் 2,566 கோடி வங்கிகளிடமி ருந்து கடனுதவி பெற்றுள்ளன.

இந்த இளைஞர்களுக்கான பல்வேறு பயிற்சித் திட்டங் களை இந்த அரசு செயல் படுத்தி வருகிறது. மேலும், பொது அறிவு, கணினி அறிவு, ஆங்கிலத்தில் நன்றாகப் பேசும் திறன் மற்றும் நேர்முகத் தேர்வு களில் பங்கேற்கும் திறன் ஆகிய வற்றை இளைஞர்கள் பெற இந்த அரசு ஆவன செய்யும். பயிற்சி பெற்ற கனரக வாகன ஓட்டுநர்கள் அதிக அளவில் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு, அரசுப் போக்கு வரத்துக் கழகங்கள் பெருமள வில் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிப்பதற்கான திட் டம் ஒன்று இந்த அரசு செயல்படுத்தும்.

மாதாந்திர ஓய்வு உதவி

தி.மு.க. தேர்தல் அறிக்கை யில் அளிக்கப்பட்ட வாக்குறு தியை நிறைவேற்றும் வகையில், 2006-07 ஆம் ஆண்டில் முதி யோர், ஆதரவற்றோர் மற்றும் விதவைகள் ஆகியோருக்கு அளிக்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத் தொகையை ரூ 200 லிருந்து ரூ 400 ஆக இந்த அரசு உயர்த்தியது. தற்போது வறு மைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து முதியோருக்கும் ஓய்வூதியம் அளிக்கும் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. மறைந்த பாரதப் பிரதமர் திரு மதி இந்திரா காந்தி அம்மை யாரின் பிறந்த நாளான 19-11-2007 அன்று இந்தத் திட்டம் நமது மாநிலத்தில் முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள் ளது. இத்திட்டத்தின் வாயி லாக, ஆண் வாரிசுகளின் ஆத ரவுள்ளவர்கள், இல்லாதவர்கள் என்ற பாகுபாடின்றி, 65 வயதுக்கு மேற்பட்ட வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள சுமார் 10 இலட்சம் முதியோர்கள் பயன் அடைவார்கள்.

ஊனமுற்றோருக்கு வழங் கப்படும் உதவித் தொகையை ரூ 200 -லிருந்து ரூ 400- ஆகவும், கடும் ஊனமுற்றோருக்கு வழங் கப்படும் உதவித்தொகையை ரூ 200-லிருந்து ரூபாய் 500-ஆகவும் இந்த அரசு கடந்த ஆண்டு உயர்த்தியுள்ளது. தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள் ளக்கூட இயலாத மன வளர்ச்சி குன்றியோருக்கு, முன் எப் போதும் இல்லாத வகையில், வருமான வரம்பு மற்றும் எண்ணிக்கை வரையறை யின்றி, மாதாந்திர உதவித் தொகையாக 500 ரூபாய் வழங்க இந்த அரசு ஆணை யிட்டது. இதன் அடிப்படை யில், இதுவரை 30,000 பேருக்கு இத்தொகை வழங்கப்பட் டுள்ளதோடு, இவர்களுக்கு சிறப்புக் கல்வி மற்றும் தொழிற் பயிற்சி வசதிகளும் கிடைத்திட இந்த அரசு ஆவன செய்துள் ளது.

ஒரு வகையில் ஊனமுற் றோர் என்றே கருதப்பட்டு, சமுதாயத்தின் ஓரத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அரவாணி களின் நலனில் எப்பொழுதுமே இந்த அரசு அக்கறை கொண் டுள்ளது. சமூக அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச் சினைகளை இவர்கள் எதிர் கொள்வதைக் கருத்தில் கொண்டு, குடும்ப அட்டை களை வழங்குதல், அரசு மருத்துவமனைகளில் இலவச அறுவை சிகிச்சை அளித்தல் போன்ற பல்வேறு திட்டங் களை இந்த அரசு செயல் படுத்தி வருகிறது. இவர்களின் மீது இந்த அரசு கொண்டுள்ள பரிவின் காரணமாக இவர் களுக்கென புதிய நல வாரியம் ஒன்று அமைக்கப்படும்.

நமது மாநிலத்தில், ஏன் நமது நாட்டிலேயே, எங்கும் முன்னர் எப்போதும் வழங்கப் படாத அளவில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த தாய்க் குலத்திற்கு திருமணம் மற்றும் மகப்பேறு உதவிகளை இந்த அரசு வழங்கி வருகிறது. இந்த உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும்போது, அதில் குறுக்கே புகுந்து ஆதாயம் தேடும் நோக்கத்தோடு, சில இடைத் தரகர்களும் அலுவ லர்களும் தவறான செயல்களில் ஈடுபட இந்த அரசு ஒரு போதும் அனுமதிக்காது. இத் தகைய கயவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

அமைப்பு சாராத் தொழிலாளர்கள்

அமைப்பு சாராத் தொழிலா ளர்களின் நலனுக்கு இந்த அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வந்துள்ளது. 1996-2001 ஆண்டு காலத்தில், இந்த அரசு தான் அமைப்பு சாராத் தொழி லாளர் நல வாரியங்களை அமைத்து நலத்திட்ட உதவி களை வழங்கியது. இடையில் கலைக்கப்பட்ட இந்த வாரி யங்களை இந்த அரசு மீண்டும் அமைத்துள்ளது. இந்த வாரி யங்களின் மூலமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில், 2,20,043 அமைப்பு சாராத் தொழிலாளர்கள் சுமார் ரூபாய் 56 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத் திட்ட உதவி களைப் பெற்றுள்ளனர்.

சென்னை சங்கமம் கலை விழா

நாட்டுப்புறக் கலைஞர் களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்காக தனி நல வாரியம் ஒன்றை இந்த அரசு அமைத்துள்ளது. நமது தொன்மையான கலைகளை வாழவைக்கும் அரும்பணியாக, நாட்டுப் புறக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் ஆர்வத்திற்கு ஆதரவு நல்கிடும் வகையிலும், சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, தமிழ் மையம் – சென்னை சங்கமம் கலை விழா, மாநகர் முழுவதும் வெற்றிகரமாகவும், மக்களின் பேராதரவுடனும் நடைபெற் றதை யொட்டி; வரும் ஆண்டு களிலும் படிப்படியாக தமிழ கம் முழுவதும் இவ்விழாவை நடத்துவதற்கு இந்த அரசு ஒத்துழைப்பு வழங்கும்.

தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிவோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் வேகமாக உயர்ந்துள்ளது. இவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் களைய, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் மாநில அளவிலான உயர்நிலை ஆலோசனைக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்.

இலங்கைத் தமிழர்கள் சந்தித்து வரும் இன்னல்கள் தொடர்வதைக் கருத்தில் கொண்டு, பல ஆண்டுகளாக நிலவிவரும் இந்தப் பிரச்சி னைக்கு விரைவில் சுமுகமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்த அரசு, மைய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

நெசவாளர்களின் நலன் காக்கும் வகையில், அவர் களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தியும், இலவச மின்சாரம் அளித்தும் பல்வேறு நலத் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. ரூபாய் 256 கோடி செலவில், மாநிலத் தில் உள்ள 3 கோடியே 28 இலட்சம் ஏழை எளிய மக் களுக்கு இலவச வேட்டி, சேலைகள் அளிக்கும் திட்டம், நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுத்தப் படும்.

என்றும் மீனவர் நலனுக்கு உயர் முன்னுரிமை அளித்து, அவர்களுக்கென தனி நல வாரியம் அமைத்துள்ளதோடு, கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது காணாமல் போகும் மீனவர்களுடைய குடும்பங் களுக்கு உதவுவதற்கான திட் டம் ஒன்றையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. கடலில் மீன் பிடிக்கச் செல் லும்போது அவர்களுக்கு ஏற் பட்டு வரும் இன்னல்களைக் களையத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு தொடர்ந்து எடுக் கும்.

துப்புரவுப் பணியாளர்களின் நலம்

துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் மனிதக் கழிவை எடுத் துச் செல்லும் தொழிலில் ஈடு பட்டு இருந்தோரின் சமூகப் பொருளாதார முன்னேற் றத்திற்கு இந்த அரசு உறு துணையாக இருக்கும். இந்த நோக்குடனேயே, இவர்களின் நலனுக்காக தனி நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இவர் களுக்கு மறுவாழ்வுஅளிக்க வும், மாற்றுத் தொழில்களை மேற்கொள்ள உதவவும் தேவை யான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

அருந்ததியர் வகுப்பினர் சமூகப் பொருளாதார நிலை யில் அடித்தளத்தில் இருப்ப தால், அவர்தம் முன்னேற்றத் திற்குச் சிறப்புச் சலுகைகள் அளிப்பது அவசியம் எனக் கருதி, தற்போது ஆதிதிராவி டருக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டில் இவர்க ளுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்குவது பற்றி, அனைத்துக் கட்சிகளையும் கலந்தாலோ சித்து முடிவு செய்ய இந்த அரசு கருதியுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர் சமூகப் பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைவதற்கு, இப்பிரிவுகளைச் சேர்ந்தோர் அனைத்துத் துறைகளிலும் உயர் வேலை வாய்ப்புகளைப் பெறுவது அவசியம் என்பதை இந்த அரசு நன்கு உணர்ந்துள் ளது. இதனையொட்டி, தற் போது மாநிலத்தில் பெருமள வில் உருவாகிவரும் வேலை வாய்ப்புகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியின இளை ஞர்கள் பெறும் வகையில், 2007-08 ஆம் ஆண்டிற்கான சிறப்பு மாநில உதவி ரூபாய் 25 கோடி தொகையையும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப் பதற்கே இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

கல்வி அறிவிலும், சமுதாய முன்னேற்றத்திலும் சிறுபான் மையினர் பின்தங்கியுள்ள நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீடு கிடைத்திட இந்த அரசு வழி வகுத்துள்ளது. மேலும், அவர்களது முன்னேற் றத்தில் தனி கவனம் செலுத்து வதற்காக இந்த அரசு ஒரு தனி இயக்குநரகத்தையும் அமைத் துள்ளது.

தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு

இந்த அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் அனைத் தும் எப்போதும் சமூக நீதி என்ற குறிக்கோளை மையப் படுத்தியே செயல்படுத்தப் பட்டு வந்துள்ளன. நீதிக்கட்சி யின் வழி வந்த திராவிட முன் னேற்றக் கழக அரசு, சமூக நீதியை நிலை நாட்டுவதில் இந்த நாட்டிற்கே முன்னோடி யாகத் திகழ்ந்து வந்துள்ளதை அனைவரும் அறிவர். இந்த வகையில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் தனி யார் துறை வேலை வாய்ப்பு களிலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப் படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.

இந்த அரசின் கொள்கை கள், செயல்பாடுகள், சாதனை கள் மற்றும் எதிர்காலத் திட் டங்கள் ஆகியவற்றை உங்கள் முன் விரிவாக எடுத்துரைத்து உள்ளேன். இன்று தமிழகம் கண்டுவரும் ஒப்பற்ற வளர்ச்சி யின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்ற டையச் செய்யவும், நலிவுற் றோர் நலம் பேணவும், ஜன நாயக ஒளி பரவிடவும், மத நல்லிணக்கம் வலுப்பெறவும், சமூகநீதியை நிலை நாட்டவும் மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தலை மையிலயான இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. இவை யாவும் செவ்வனே நிறைவேற, நீங்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பை நல்குவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் என் உரையை நிறைவு செய்கிறேன்.

– இவ்வாறு ஆளுநர் உரை யாற்றினார்

Posted in Agriculture, Barnala, Budget, DMK, Economy, Electricity, EVR, Farming, Finance, Governor, Govt, Housing, Industry, MK, Periyar, Planning, Power, priority, Schemes, SEZ, TN, Viduthalai, Water | Leave a Comment »

Farmer suicides – Turning risk into an opportunity: Case study of a Agriculture Success Story

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

முகங்கள்: பத்து லட்சம் கடன்… முப்பது லட்சம் வட்டி!

ந.ஜீவா

“கடன் பெற்றார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பது கம்பராமாயண வரிகள். ஆனால் கடன் பெற்றவர்கள் கலங்கினால் அது தற்கொலையில்தான் முடியும். நாடெங்கும் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. அதற்கு முக்கியக் காரணம், கடன்… வட்டி… விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமை அல்லது தண்ணீர்ப் பஞ்சம், பூச்சிகளினால் விவசாயம் பாதிக்கப்படல் இன்னும் பல.

ஆனால் கோவை ஏ.ஜி.புதூரைச் சேர்ந்த சுப்பையன் என்கிற விவசாயி கலங்கவில்லை. வட்டியும் கடனுமான நாற்பது லட்சம் ரூபாயைத் தனது கலங்காத மன உறுதியாலும் தெளிவாகத் திட்டமிடும் திறனாலும் கடுமையான உழைப்பாலும் திருப்பி அடைத்து வெற்றிகரமாக கடன் தொல்லையில் இருந்து மீண்டிருக்கிறார். அவரிடம் பேசினோம்…

நாற்பது லட்சம் ரூபாய் கடன் எப்படி ஆனது?

நான் நான்கு வருடத்துக்கு முன் கோவையில் இருந்து மைசூர் அருகே உள்ள குண்டன்பேட்டைக்குப் போய் 35 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பண்ணினேன். அதற்காக எங்கள் பகுதியில் உள்ளவர்களிடம் நான்கு வட்டிக்கும் மூன்று வட்டிக்குமாகப் பத்து லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். நானும் இன்னும் நான்கு பேரும் சேர்ந்து மைசூர்-குண்டன்பேட்டைக்குப் போனோம். அங்கே போய் வெங்காயம், கனகாம்பரம், கரும்பு, மஞ்சள் எல்லாம் பயிர் செய்தோம். ஆனால் நாங்கள் விவசாயம் பண்ணின நேரம் உற்பத்தி பண்ணின பொருள்களெல்லாம் விலை குறைந்துபோனது. பத்துலட்சம் வாங்கின கடன் இரண்டு வருடத்துக்குள்ளே வட்டியெல்லாம் சேர்த்து நாற்பது லட்சம் ரூபாய் ஆகிவிட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் ஊருக்குத் திரும்பி வந்துவிட்டேன்.

திரும்பி வந்து என்ன செய்தீர்கள்?

இங்கே எனக்குப் பத்து ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விவசாயம் செய்ய முடியவில்லை. நிலத்தடி நீர் விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாத அளவுக்குக் கெட்டுப் போயிருந்தது. நொய்யல் ஆற்று நீரில் கோயம்புத்தூர் நகர்க் கழிவு எல்லாம் கலந்ததால் அது ஓடுகிற எங்கள் பகுதியில் நிலத்தடி நீரும் உப்பாகப் போய்விட்டது. செடி வளர்க்க இந்தத் தண்ணீர் ஆரோக்கியம் இல்லை.

இந்தக் கெட்டுப் போன தண்ணீரை வைத்துக் கொண்டு எப்படி விவசாயம் பண்ணுவது? என்ன விவசாயம் பண்ணுவது? கடனையெல்லாம் எப்படி அடைப்பது? யோசனை பண்ணிப் பார்த்தேன்.

எங்கள் பகுதிக்குத் தோட்டக்கலைத்துறை, விரிவாக்கத்துறை அதிகாரிகள் எல்லாரும் வருவார்கள். வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் சி.ராமசாமி அடிக்கடி வருவார். அவர்களிடம் கேட்டதில் எங்கள் பகுதியில் நெல், கரும்பு போன்றதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது என்று தெரிய வந்தது. வேறு எந்த வேளாண்மை பண்ண வேண்டும் என்று யோசித்து கீரை விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். இந்தத் தண்ணீருக்குக் கீரை நன்றாக வரும். குதிரை மசால் நன்றாக வரும். தென்னை நன்றாக வரும்.

அரைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, சிறுகீரை என விவசாயம் செய்தேன். இதில் 30 சதம் செலவு ஆகும். 70 சதம் லாபம் வரும்.

குதிரை மசால் என்பது கால்நடைகளுக்கானத் தீனி. இது தவிர கறிவேப்பிலை இரண்டரை ஏக்கரில் விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். எனது 10 ஏக்கர் நிலம் தவிர மேலும் 20 ஏக்கர் நிலத்தைக் குத்தகை எடுத்தேன். 12.5 எச்பி மோட்டார் போட்டு கிணற்றில் தண்ணீர் எடுத்து விவசாயம் பண்ணினேன். கிணற்று தண்ணீர் நாளொன்றுக்கு 3 ஏக்கர் நிலத்திற்குப் பாயும்.

எங்கள் விவசாயத்தில் அதிக அளவு ரசாயன உரங்கள் போடுவதில்லை. மண்புழு உரம், மாட்டுச்சாணம் போடுவோம். கோயம்புத்தூரில் ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் பகுதியில் நிறைய மாடுகள் வளர்க்கிறார்கள். அதனால் மாட்டுச் சாணிக்கென்று நாங்கள் அலைய வேண்டியதில்லை.

விவசாயம் செய்து விளைவித்த பொருள்களை எங்கே விற்பனை செய்கிறீர்கள்?

கீரை ஒரு நாளைக்கு 5000 கட்டிலிருந்து 10000 கட்டு வரை விற்பனையாகும். ஒரு நாளைக்கு சுமார் பத்தாயிரம் ரூபாய்க்கு கீரை விற்பனையாகும். கறிவேப்பிலை ரூ.1500 க்கு விற்பனையாகும். கடைகளுக்கு வாடிக்கையாக கறிவேப்பிலையைக் கொடுத்துவிடுவோம். கிலோ ரூ.10 இலிருந்து ரூ.15 வரை போகும். குதிரைமசால் 400 கிராம் கட்டு சுமார் 3000 கட்டுவரை விற்பனையாகும்.

காலையிலே எங்கள் காட்டுக்குள்ளிருந்து இந்தப் பொருள்களை ஏற்றிக் கொண்டு வண்டிகள் வெளியே போகும். எத்தனை வண்டி எவ்வளவு பொருள் என்பதையெல்லாம் கணக்கு வைத்துக் கொள்வார்கள்.

கால்நடைத் தீவனமாக நாங்கள் விவசாயம் செய்யும் குதிரை மசாலை சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் பகுதியில் மாடு வளர்ப்பவர்களே வாங்கிக் கொள்வார்கள்.

காலையில் டெம்போவில் குதிரை மசாலை ஏற்றிக் கொண்டு கிளம்புவோம். சிட்டி பஸ் குறித்த நேரத்தில் எந்த ஸ்டாப்பில் எந்த நேரத்தில் நிற்குமோ அதைப் போல இந்த டெம்போ ஒவ்வொரு பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிற்கும். அந்தப் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்கள் அங்கு வந்து வாங்கிக் கொள்வார்கள்.

கோயம்புத்தூரில் உள்ள வாடிக்கையாளர்கள் தவிர கொடைக்கானலிலும் எங்கள் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அங்கே உள்ள ஒரு கால்நடைப் பண்ணையில் 67 மாடுகள் வைத்திருக்கிறார்கள். 10 ரேஸ் குதிரைகள் வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய கால்நடைகளுக்குத் தேவையான தீவனத்திற்காக எங்களிடம் ரெகுலராக குதிரை மசால் வாங்குகிறார்கள்.

இவ்வளவு வேலைகளையும் செய்ய வேண்டுமென்றால் ஆட்களை வேலைக்கு வைக்க வேண்டுமே?

எங்களிடம் முதலில் 40 பேர் வேலை பார்த்தார்கள். இப்போது 20 பேர் பார்க்கிறார்கள். வேலைக்கு ஆள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. இத்தனைக்கும் பெண்களே ஒரு நாளைக்கு ரூ.140 வரை சம்பளம் வாங்குகிறார்கள்.

எங்களிடம் வேலை செய்பவர்களை நாங்கள் மரியாதையாக நடத்துகிறோம். வாடா, போடா என்றெல்லாம் பேசுவது கிடையாது. அவர்கள் எல்லாரும் ரொம்பவும் விசுவாசமான ஆட்கள்.

வழக்கமாகப் பயிர் செய்யும் நெல், கரும்பு, வாழை போன்றவற்றைப் பயிர்செய்யாமல் இப்படிக் கீரைகளை விவசாயம் பண்ண வேண்டும் என்று எப்படித் தோன்றியது?

நான் விவசாயத்துக்கு முதன்முதல் வந்த போது எங்கள் ஏரியாவில் பருத்திதான் அதிகம் போடுவார்கள். நான்தான் முதன் முதலில் கனகாம்பரம் துணிந்து பயிர் செய்தேன். எதையும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். எங்கள் பகுதியில் நெல், கரும்பு போன்றவை விளைவிக்க நல்ல தண்ணீர் இல்லாததும் ஒரு காரணம்.

நமது அண்டை மாநிலமான ஆந்திரா, வடமாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்களே?

இந்தியாவில் விவசாயிகள் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகப் பேப்பரில் படிக்கிறோம். எனக்கு மாதிரி அவர்களுக்கு 10 ஏக்கர் நிலம் இருந்திருந்தால் ஒருவேளை என்னைப் போலவே அவர்களும் கடினமாக உழைத்துக் கடனை அடைத்திருப்பார்களோ, என்னவோ. எல்லாருக்கும் எனக்கு போலவே வாய்ப்புக் கிடைக்க வேண்டுமே.

இப்போது மார்க்கெட் வசதி அபாரமாக இருக்கிறது. அரசாங்கம் நிறையக் கடன் கொடுக்கலாம். கந்துவட்டியை ஒழிக்கச் சட்டம் போட்டிருந்தாலும் நாடு முழுக்க கந்துவட்டி இருக்கிறது. அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுத்தால் கந்துவட்டியை ஒழிக்கலாம். பத்துலட்சம் வாங்கின கடனுக்கு முப்பது லட்சம் வட்டி கட்டணும் என்றால் விவசாயி தற்கொலை பண்ணிக் கொள்ளாமல் என்ன செய்வான்?

Posted in Agriculture, Analysis, Banking, Banks, Case study, deaths, Economy, Faces, Farmers, Farming, Farmlands, Finance, Foodgrains, Forests, Fruits, Greens, harvest, horticulture, Incidents, Interview, Life, Loans, markets, Opportunity, Paddy, people, Persons, Prices, Real, rice, Risk, Saline, Salt, success, Suicides, Trees, Turnaround, Vegetables, Vidharaba, Vidharaba Jan Andolan Samithi, Vidharabha, Vidharba, Vidharba Jana Andolan, Vidharbha, Vidhrabha, Vitharabha, Vitharba, Vitharbha, Waste, Water, Wheat | 2 Comments »

Police arrest 2 French journalists for filming Sri Lanka military checkpoint: Rights group

Posted by Snapjudge மேல் திசெம்பர் 28, 2007

தென்னிலங்கையில் இராணுவச் சோதனைச் சாவடியை படம்பிடித்தாகக் குற்றம்சாட்டி பிரான்ஸ் ஊடகவியலாளர்கள் கைது

இலங்கையில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் காலி மாவட்டத்திலுள்ள பூசா தடுப்பு முகாமிற்கு செல்லும் வழியிலுள்ள இராணுவச் சோதனைச் சாவடியொன்றினை படம்பிடித்ததாகக் குற்றஞ்சாட்டி பிரான்ஸ் நாட்டு தொலைக்காட்சி நிறுவனமொன்றைச் சேர்ந்த இரண்டு பெண் ஊடகவியலாளர்கள், இலங்கைப் படையினாரால் கைதுசெய்யப்பட்டு ரத்கம பொலிசாரினால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

இது குறித்து சுதந்திர ஊடக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், காலி மாவட்டத்திலுள்ள பூசா தடுப்பு முகாமிற்கு செல்லும் தமிழ்க் குடும்பம் ஒன்றினை படம்பிடிக்கும் நோக்குடன், பிரான்ஸ் 24 என்ற தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த இந்தப் பத்திரிகையாளர்களும், அந்த தமிழ்க் குடும்பத்துடன் அந்த முகாமிற்கு செல்லும் வழியில் ரத்கம எனும் பொலிஸ் பகுதியில் இந்த சம்பவம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றதாகத் தெரிவித்திருக்கிறது.

கிறிஸ்துமஸ் தினமான இன்று இந்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள், அவர்களுடன் சென்ற தமிழ் குடும்பத்துடன் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்ததையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டி தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தினை இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான செய்திகளை வெளியிட்டுவரும் வெளிநாட்டு ஊடகங்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல் என்று வர்ணித்துள்ள சுதந்திர ஊடக அமைப்பு, தமிழ்க்குடும்பம் ஒன்றை படம்பிடிப்பது சட்டவிரோதமான செயல் அல்ல என்றும் இவர்கள் மீதான விசாரணைகளைத் துரிதப்படுத்தி, இவர்கள் கூடிய சீக்கிரத்தில் விடுவிடுக்கப்பட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இந்தக் கைது தொடர்பாகக் கருத்துவெளியிட்ட உயர் பொலிஸ் அதிகாரியொருவர், பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதனை உறுதி செய்திருப்பதுடன், அவர்கள் பத்திரிகையாளர்கள் என்பதற்கான ஆவணங்கள் எதனையும் தம் வசம் வைத்திருக்கவில்லை என்றும், படம்பிடிக்க அனுமதிக்கப்படாத இடங்களில் அவர்கள் படம்பிடித்ததனாலேயே கைதுசெய்யப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக கொழும்பின் சுதந்திர ஊடக இயக்கத்தைச் சேர்ந்த சிவகுமாரன் தெரிவிக்கும் கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் நேயர்கள் கேட்கலாம்.


திருகோணமலையில் மழையை அடுத்து வெள்ளம்; மக்கள் பரிதவிப்பு

இலங்கையில் வெள்ளம் – பழைய படம்

இலங்கையில் நாடளாவிய ரீதியில் பெய்த கடுமையான மழை தற்போது ஓரளவு ஓய்ந்துள்ள போதிலும், திருகோணமலை மாவட்டத்தில், மழையை அடுத்து காட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஈச்சலம்பற்று பிரதேச செயலர் பிரிவில் – குறிப்பாக வெருகல் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்து மாவடிச்சேனை பாடசாலையில் தஞ்சம் அடைந்துள்ளதாக பிரதேச
செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கே மட்டக்களப்பு மாவட்டத்துடனும், வடக்கே திருகோணமலையுடனும் வெருகல் பிரதேசம் போக்குவரத்தின்றி துண்டிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்ச்சியில், இவை குறித்த தகவல்களை தொகுத்துத் திருகோணமலை செய்தியாளர் ரட்ணலிங்கம் தொகுத்து வழங்கக் கேட்கலாம்.


வட இலங்கை மோதல்: 3 சிவிலியன்கள் கொலை

இலங்கை அரச படையினர்

இலங்கையின் வடக்கே வவுனியாவில் திங்கள் இரவு இடம்பெற்ற வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 3 சிவிலியன்கள் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வவுனியா பொலிசார் தெரிவிக்கின்றனர்.

வவுனியா இராசேந்திரன்குளம் பகுதியில் இரண்டு உழவு இயந்திரங்களில் மரக்குச்சிகளைக் களவாடி ஏற்றிவந்த இருவர் மீது குளக்கட்டு பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அந்த இருவரும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா செக்கடிபிலவு பகுதியில் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகள் இருவர், வீட்டிலிருந்த ஒரு குடும்பஸ்தரைத் தேடிவந்து, அவரை வீட்டிற்கு வெளியே அழைத்துச்சென்று சுட்டுக்கொன்றுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதற்கிடையில் மன்னார், மற்றும் முகமாலை மோதல் முன்னரங்கப் பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் திங்களன்று இடம்பெற்ற மோதல்களின்போது 13 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், 5 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


3 வருடங்களாகியும் மட்டக்களப்பில் சுனாமியில் வீடிழந்தவர்கள் பலருக்கு நிரந்தர வீடில்லை – பெட்டகம்

படம் சுனாமி அகதி முகாம்

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 3 வருடங்களாகிவிட்ட நிலையில் பெரிதும் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் வீடுகளை இழந்திருந்த குடுமபங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொடர்ந்தும் நிரந்தர வீடுகளின்றி தற்காலிக கொட்டில்களிலேயே தங்கியிருக்கின்றனர்.

65 மீட்டர் கடலோர பிரதேசங்களில் வசித்து வந்த இக்குடும்பங்களுக்கு வேறு இடங்களில் நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.

அதிகாரிகளின் தகவல்களின்படி, 65 மீட்டர் கடலோர பிரதேசத்திற்குள் வசித்த வந்த 4900 குடும்பங்களில் இதுவரை 2300 குடும்பங்களுக்கு மட்டுமே நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

அநேகமான பிரதேசங்களில் ஒரு பகுதியினருக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்டப்டுள்ள அதேவேளை சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடுகளை இழந்திருந்த 815 குடும்பங்களில் ஒரு குடும்பத்திற்குக்கூட இதுவரை நிரந்தர வீடு வழங்கப்டப்டவில்லை.

இதனை ஏற்றுக் கொண்டுள்ள பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பொருத்தமான காணிகளை தெரிவு செய்தல், மண் போட்டு நிரப்புதல் போன்ற சில காரணங்களினால் தமது பிரதேசத்தில் வீடமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி மீள்கட்டுமானப் பணிகளின் நிலை குறித்த பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


Posted in Boossa, Channels, Colombo, Conflict, Downpour, Eelam, Eezham, Environment, Floods, Freedom, Galle, LTTE, Media, MSM, Nature, Rains, Sinhalese, Sri lanka, Srilanka, Triconamalee, triconmalee, Trincomalee, Tsunami, TV, Vavuniya, Water, wavuniya | Leave a Comment »

Holy Ganges appears in Tanjore? – Viduthalai op-ed

Posted by Snapjudge மேல் திசெம்பர் 12, 2007

செய்தியும் சிந்தனையும்
கங்கை வந்ததா தஞ்சைக்கு

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருவிசைநல்லூர் கிராமத்தில் ஒரு வீட்டில் கிணற்று நீரைப் பெற்றுக் கொள்வதற்காக ஆண்களும் பெண்களும் மிக நீண்ட வரிசையாக நின்றனராம். பெருமிதத்தோடு ஒளிப்படம் எடுத்துப் போட்டிருக்கிறது ஏடு! சிறீதர அய்யவாள் என்பவர், 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வீடாம் அது. அந்த வீட்டுக் கிணற்றில் கார்த்திகை மாத அமாவாசையன்று கங்கை ஆறிலிருந்து நீர் வந்து சேர்க்கிறதாம். அதை வாங்கிக் குடிப்பதற்குத்தான் கூட்டமாம்.

அச்சுப்பிழை சரிவர திருத்தப்படாமல் செய்தி வந்துவிட்டது என்று கூற வேண்டும். சிறீதர அய்யர்வாள் வீடு என்றிருக்க வேண்டும். அவர் வீட்டில்தான் ஒரு தப்பிதமும், ஓர் அற்புதமும் நிகழ்ந்ததாக எழுதியிருக்கிறார்கள்.

அவர் வீட்டில் இறந்து போனவர்க்குச் “சிரார்த்தம் தரும் நாளன்று பசியால் மிகவும் வாடிய ஒருவர் சாப்பிட ஏதாவது கேட்டாராம். சிரார்த்தச் சடங்கு செய்யும் பார்ப்பனர் வரத் தாமதம் ஆகும் என்கிற நிலையில் பசித்தவர்க்கு உணவு தந்துவிட்டாராம் சிறீதர அய்யர். இந்தச் செய்தி தெரிந்ததும் மொத்த அக்ரகாரமும் தாண்டிக் குதித்ததாம்! எப்படி சிரார்த்தம் தரும் முன்பே – பித்ருக்கள் சாப்பிடும் முன்பே – மனிதர்கள் சாப்பிடலாம், சாப்பாடு தரலாம் எனக் கொதிப்புடன் கேட்டதாம் பார்ப்பனச் சேரி.

சிறீதர் அய்யர் சொன்ன சமாதானத்தைப் பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்ளாமல் அவரை ஜாதிப் பிரஷ்டம் செய்து ஊரைவிட்டு விலக்கி வைத்து விட்டார்களாம். வேறு வழியில் இல்லாமல் அவரும் தண்டனையை ஏற்றுக்கொண்டு விட்டாராம்.

யாருடனும் பேசாமல், பழகாமல், உதவியைக் கேட்டுப் பெறாமல் மிகவும் துன்பப்பட்டு வந்த நிலையில் அக்கிராமப் பெரியவாள்கள் பெரிய மனது வைத்துப் பரிகாரம் கூறினார்களாம். மனு தர்மத்திற்கு எதிராக நடந்துகொண்ட தோஷத்தைப் போக்கிடுவதற்காகக் கங்கையில் குளித்துப் பரிகாரம் செய்து வந்தால் பார்ப்பன ஜமாவில் சேர்த்துக் கொள்வதாகக் கூறினார்களாம்.

ஏழையான சிறீதர் அய்யர் அந்தக் காலத்தில் எப்படிக் கங்கை நதிக்குப் போய் கங்கா ஸ்நானம் செய்ய முடியும் எனப் பரிதவித்தாராம். அவரது நிலையைக் கண்ட பகவான் அவர் வீட்டுக் கொல்லைப்புறக் கிணற்றில் கங்கையை வரச் சொன்னாராம். கங்கை கிணற்றில் பாய்ந்து நிரம்பி வழிந்ததாம். நொங்கும் நுரையுமாகப் பொங்கிப் பிரவகித்த கங்கையைக் கண்டு ஊரே ஆச்சரியமடைந்ததாம். பார்ப்பனப் பெரியவாள் எல்லாம் சிறீதர அய்யரிடம் பகவான் கருணை காட்டியதைக் கண்டு சிறீதர அய்யருக்கு அபவாதமும் அபராதமும் விதித்தமைக்காக வருந்தினார்களாம்.

இந்த அற்புதம் நடந்த நாளான கார்த்திகை அமாவாசையன்று அந்த வீட்டின் கிணற்று நீரைக் குடிப்பதற்காகத்தான் கூட்டம் வருகிறதாம். இந்த விளக்கத்தை ஏடு எழுதவில்லை.

சில கேள்விகள் உண்டு. அவற்றிற்கு விடையாவது கிடைக்குமா?

(1) சிறீதர அய்யர் வீட்டுக் கிணற்றில் வந்தது கங்கை நீர்தான் என்பதற்கு ஏதாவது அடையாளம் உண்டா?

(2) இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள கங்கை ஆறு திருவிசைநல்லூர் கிணற்றில் பொங்குவது எப்படி சாத்தியம்?

(3) 2007 இல் கிணற்றில் கங்கை நீர் பொங்கி பிரவகித்ததா?

(4) வாங்கிக் குடிக்கக் கூடிய அளவு தூய நீரா கங்கையில் ஓடுகிறது? (1000 கோடி ரூபாய் செலவு செய்தும் அழுக்கான ஆறுகளில் அதற்குத்தானே முதல் இடம்!)

Posted in Aiyyar, Amavasya, Amawasya, Belief, Brahminism, Caste, Community, EVR, Excommunication, Ganga, Ganges, God, groundwater, Hindu, Hinduism, Iyer, Kaarthigai, Manu, Op-Ed, Paappaan, Paappan, Paarpaneeyam, Paarppaneeyam, Periyar, Poor, Religion, Rich, River, Sect, Tanjore, Thanjavoor, Thanjavur, Thiruvisainalloor, Thiruvisainallur, Viduthalai, Village, Vituthalai, Water, Well, Well water | Leave a Comment »

Water supply & distribution in Tamil Nadu – Inter-state relations, Dam Construction, Rivers

Posted by Snapjudge மேல் திசெம்பர் 10, 2007

மூன்று பக்கமும் துரோகம்; ஒரு பக்கம் கடல்!

கே. மனோகரன்

தமிழகம்போல இன்று தண்ணீருக்காகத் தவித்து நிற்கும் மாநிலம் இந்தியாவில் வேறொன்று இருக்க முடியாது.

கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களும் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகின்றன. நமக்குப் பரந்து விரிந்து கிடக்கும் ஒரே நீர்ஆதாரம் கடல்தான். தாகத்துக்கு கடல்நீரைக் காய்ச்சிக் குடிக்கலாம். ஆனால் விவசாயம் செய்ய முடியுமா?

தண்ணீருக்காக கர்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களுடன் மல்லு கட்டுவதற்கே ஆண்டுகளை இழந்ததுடன், இருக்கும் ஏரி குளங்களையும் நாம் பாழாக்கி இழந்து வருகிறோம்.

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கியது பூண்டி நீர்த்தேக்கம். குசஸ்தலை ஆற்றிலிருந்துதான் இந்த நீர்த்தேக்கத்துக்குத் தண்ணீர் வரவேண்டும். இந்த ஆறு பள்ளிப்பட்டில் இருந்து ஆந்திர மாநில எல்லையில் 12 கி.மீ. தூரத்தில் தொடங்குகிறது.

அங்குள்ள அம்மபள்ளி என்ற இடத்தில் 1975-ம் ஆண்டு தொடங்கி 1982-ம் ஆண்டு வரை இருமலைகளையும் இணைத்து அணை கட்டும் பணி நடந்தது. ஆனால் இப்படி ஓர் அணை கட்டப்படுவதுகூட தெரியாமல் தமிழக அரசு அமைதியாக இருந்தது. அதன் பிறகு குசஸ்தலை ஆறு தமிழகத்துக்குத் தண்ணீர் தரவில்லை. தலைவலி தந்தது. வறண்டுபோனது பூண்டி நீர்த்தேக்கம்.

குசஸ்தலை ஆறு தடைபட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயம் குறித்து தமிழக அரசு கவலைப்படவில்லை. சென்னை நகரின் குடிநீர் தேவையைப் பற்றித்தான் கவலைப்பட்டது. ஆந்திர அரசுடன் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் செய்துகொண்டது. இதில் பல கோடிகளை தமிழக அரசிடம் பங்குத்தொகையாகப் பெற்ற ஆந்திர அரசு, அந்த நிதியில் சித்தூர், கடப்பா போன்ற வறட்சியான மாவட்டங்களில் ஏற்கெனவே உள்ள ஏரிகளைப் புனரமைத்தும், மிகப்பெரிய ஏரியான பிச்சாட்டூர் ஏரியை சீரமைத்தும், புதிய நீர்த்தேக்கங்களையும் கட்டி கால்வாய்கள் மூலம் இணைத்து தன்னை வளப்படுத்திக் கொண்டது.

சென்னைக்கு தண்ணீர் தருவதாகச் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் “ஜீரோ பாய்ண்ட்’ எனப்பட்ட கண்டலேறு வரை தண்ணீர் வந்ததே தவிர சென்னைக்கு வரவில்லை. இதனால் தவிர்க்க முடியாமல் புதிய வீராணம் திட்டத்தை தமிழகம் செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேபோல் பாலாற்றுக்கு முதல் பாதிப்பை ஏற்படுத்தியது கோலார் மாவட்டத்தில் உள்ள பேத்தமங்கலா நீர்த்தேக்கம். கர்நாடகம் படிப்படியாக அதன் கொள்ளளவையும் அதிகரித்துக் கொண்டே சென்றதால் பாலாற்றின் நீர்வரத்து குறைந்து போனது.

கர்நாடகத்துக்கும், தமிழக எல்லைக்கும் இடையில் பாலாற்றுக்கு வரும் உபநதிகளான மல்லிநாயக்கனஹள்ளி ஆறு, பெட்மடு ஆறு ஆகியவற்றின் குறுக்கே தலா 4 ஏரிகளை ஆந்திர அரசு கட்டிவிட்டது. இதேபோல் தமிழக எல்லையின் 3 கி.மீ. தூரத்தில் 2000-ம் ஆண்டில் பாலாற்றின் உப நதியான மண்ணாற்றின் குறுக்கே பெரியபள்ளம் என்ற இடத்தில் ரூ. 65 லட்சத்திலும், அதே நேரத்தில் எல்லையின் சில நூறு அடிகள் தூரத்தில் பிரம்மதேவர் கொல்லை என்ற லட்சுமிபுரத்தில் ரூ. 1.20 கோடியில் இருமலைகளை இணைத்து ஆந்திர அரசு அணைகளை கட்டியது.

இவற்றுக்கு எவ்வித எதிர்ப்பும் தமிழக அரசு தெரிவிக்காமல் இருந்ததன் விளைவுதான் தற்போது குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே பெரிய அளவிலான அணை கட்டுவதற்கு ஆந்திர அரசுக்கு தைரியத்தைக் கொடுத்துள்ளது.

ஆனால் தமிழக அரசு புதிய அணைத் திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என்று விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலங்களில் காவிரி வடிகாலில் கிடைக்கும் கூடுதல் நீர் சராசரியாக 30 டி.எம்.சி. கடலில் வீணாகக் கலக்கிறது. இந்த தண்ணீரில் மட்டுமே 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யலாம்.

ஆளியாறு மூலம் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரையே கொடுக்காத கேரளம், முல்லைப் பெரியாறு அணையில் முரண்டு பண்ணிக்கொண்டு வருகிறது. சிறுவாணி அணைக்கு வரும் நீரின் அளவு குறையும் வகையில், அதன் துணைநதிகளை தனியார் குடிநீர் ஆலைகளுக்கு தாரை வார்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது கேரளம்.

காவிரியை தமிழகத்தின் வாய்க்கால் போலக் கருதி, மிகைநீரை மட்டுமே வழங்குகிற திட்டத்தை கர்நாடகம் எப்போதோ தொடங்கி நடத்திக்கொண்டிருக்கிறது.

தமிழகத்துக்கான நீர் ஆதாரங்கள் அனைத்தையும் இந்த மூன்று மாநிலங்களும் மறித்துக் கொண்டு வருகின்றன.

இழந்த தண்ணீரைப் பெற முடியாவிட்டாலும், கிடைக்கும் நீரையாவது உருப்படியாகப் பயன்படுத்தவும், பாதுகாக்கவும் அரசு முன்வர வேண்டும். இல்லையேல், தமிழர்களின் கண்ணீரால் கடல் நீர் மேலும் கரிக்கும்.

————————————————————————————————————————–
பாலாற்றில் விளையாடும் அரசியல்!

ஆர். ராமலிங்கம்
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு விரைவில் அணை கட்டத் தொடங்கும் என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உறுதிபட கூறியுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், குப்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சந்திரபாபு நாயுடுவின் செல்வாக்கைக் குறைக்கும் முயற்சிகளில் ஒன்றாக பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது.

அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றிய விவரம் கண்ணுக்கெட்டியதூரம் வரை தெரியவில்லை. தமிழக முதல்வரும் இவ்விஷயத்தில் நம்பிக்கையூட்டும் தகவலை இதுவரை தெரிவிக்கவில்லை.

இதை எதிர்க்கட்சிகள் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, பாலாறு விவகாரத்தில் ஆளும் திமுக அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது என்ற ரீதியில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சியைத் தவிர பிற தோழமைக் கட்சிகளும் இதற்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றன.

கர்நாடக மாநிலம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு அந்த மாநிலத்தில் 40 கி.மீ. தூரமும் ஆந்திரத்தில் 31 கி.மீ. தூரமும், தமிழகத்தில் 222 கி.மீ. தூரமும் பயணிக்கிறது.

கடந்த பத்தாண்டுகளாக, அவ்வப்போது பெய்யும் கனமழைதான் தமிழக பகுதியில் உள்ள பாலாற்றுப் படுகையை ஈரப்படுத்தி வருகிறது. 30 ஆண்டுகளில் 6 முறை மட்டுமே பாலாற்றில் நீர்வரத்து இருந்துள்ளது.

பாலாற்றின் குறுக்கே கர்நாடக அரசு பேத்தமங்கலத்தில் அணை கட்டியுள்ளது. அந்த மாநிலம் வெளியேற்றும் உபரி நீரை 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டி ஆந்திர அரசு நீர்நிலைகளை நிரப்பி வருகிறது.

மழைக் காலங்களில் அதிர்ஷ்டவசமாக ஆந்திர எல்லையில் இருந்து ஒருசில தினங்கள் வரும் நீருக்கும் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. கணேசபுரம் என்ற இடத்தில் ஆந்திர அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதனால் பாலாறு பொய்த்துவிடுமே என தமிழகத்தின் வடமாவட்ட மக்களின் அச்சப்படுகின்றனர்.

தற்போது மணல் சுரண்டல், நீர்வளம் பறிபோதல், தோல் தொழிற்சாலைகளும் உள்ளாட்சி அமைப்புகளும் கழிவுநீரை வெளியேற்றுவதால் படுகை மாசுபடுதல் போன்ற மும்முனைத் தாக்குதலில் தமிழக பாலாற்றுப் பகுதி சிக்கியுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியில் 1892-ல் தமிழகத்தில் பாயும் 12 ஆறுகளுக்கு நதிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன. அவற்றில் பாலாறும் இடம் பெற்றுள்ளது.

அன்றைய மைசூர் மற்றும் மதராஸ் அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த ஒப்பந்தங்கள் 1952 வரை அமலில் இருந்தது. அன்றைக்கு சித்தூர் மாவட்டம், சென்னை மாகாணத்தில் இடம்பெற்றிருந்தது.

மொழிவாரி மாநிலங்கள் உருவானபோது சித்தூர் மாவட்டம் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் பாலாற்று நீர்வளத்தில் ஆந்திர மாநிலத்துக்கும் பங்களிக்கும் நிலை ஏற்பட்டது.

இருப்பினும் 1892 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பாரம்பரிய உரிமை அடிப்படையில்தான் இன்றைக்கு தமிழகம் பாலாற்று பிரச்னையை அணுக வேண்டியுள்ளது.

இரு மாநில எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாலாற்று பிரச்னை பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

இதில் பங்கம் ஏற்படாமல் இருப்பதற்கு, காவிரி நீர் பங்கீட்டை போன்று பாலாற்று நீரில் தனக்குள்ள பங்கீட்டு உரிமையை தமிழகம் நிலைநாட்டுவது ஒன்றே தீர்வாக அமையும்.

நதிநீர் பங்கீடு உரிமையை நிலைநாட்டுவதன் மூலம் பாலாற்று நீர்வரத்தில் 60 சதவீதத்தை தமிழகம் பெற வாய்ப்பு உள்ளது என்கின்றனர் விவசாயிகள்.

தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட, மத்திய அரசு 1956-ல் கொண்டு வந்த நதிநீர் வாரியச் சட்டத்தை பயன்படுத்த முடியும். தமிழக அரசு மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி இச்சட்டத்துக்கு உயிரூட்டலாம்.

மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்னை எழுந்தால் இச்சட்டத்தின்படி மத்திய அரசு ஒரு வாரியத்தை ஏற்படுத்த முடியும்.

அதன் மூலம் மாநிலங்களுக்கிடையே உள்ள நீர் பங்கீடு தொடர்பான பிரச்னைகளுக்கு தக்க அறிவுரையை வழங்க முடியும். புதிதாக நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ஒன்றையும் மாநிலங்களுக்கிடையே ஏற்படுத்த முடியும்.

தமிழக அரசியல் கட்சிகளிடையே மக்களின் பொதுப் பிரச்னைகளில் கூட ஒற்றுமையின்மை நிலவுவது உலகறிந்த உண்மை. இது அண்டை மாநிலங்களுக்கு பலமாக அமைந்துள்ளது.

பாலாறு விஷயத்தில் திமுக அரசும், எதிர்கட்சிகளும் ஒன்றையொன்று குறைகூறி அரசியலாக்குவதைத் தவிர்த்து ஒருங்கிணைந்த செயல்பாட்டில் இறங்கினால் மட்டுமே நதிநீர் பங்கீட்டில் அண்டை மாநிலங்களின் அடாவடித்தனத்தைத் தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

நதிநீர் பிரச்னைகளில் தமிழகம் இக்கட்டான சூழலை நோக்கி நகர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி உறுதியான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

இதன் மூலம் பாலாற்று பிரச்னையில் மத்திய அரசும், நீதிமன்றமும் தலையிடுவதற்கான நெருக்கடியை தமிழகத்தால் ஏற்படுத்த முடியும்.

ஆர்ப்பாட்ட அரசியலைக் காட்டிலும், ஆரோக்கிய அரசியலே ஆபத்தைத் தடுக்க முடியும். தமிழக அரசியல் தலைவர்கள் சிந்திப்பார்களா?

—————————————————————————————————————–
மக்கள் திரள் போராட்டம்-காலத்தின் கட்டாயம்

பழ. நெடுமாறன்


தமிழ்நாட்டில் ஏரி, குளம், ஆறுகளுக்குப் பஞ்சம் இல்லை. காடுகள் அடர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் உண்டு. தென்மேற்குப் பருவ மழை, வட கிழக்குப் பருவ மழை ஆகிய இரு பருவ மழைகள் ஒருபோதும் பொய்த்ததில்லை. முப்புறம் கடலும் உள்நாட்டில் ஏராளமான கனிம வளங்களும் உள்ளன. உழைப்பதற்குச் சலிக்காத மக்களும் உண்டு. அறிவாற்றலுக்குப் பஞ்சமில்லை. இத்தனை வளங்களும் நிறைந்திருந்த தமிழ்நாடு இன்றைக்கு என்னவாகியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் வேதனையும் விரக்தியுமே மிஞ்சுகின்றன.

நீரில்லா ஆறுகள்

தமிழ்நாடு எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி மீள முடியாதபடி தவிக்கிறது. காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளை மதிப்பதற்கு கர்நாடகமும் கேரளமும் பிடிவாதமாக மறுக்கின்றன. பாலாற்றில் தமிழகத்திற்கு வரும் தண்ணீரைத் தடுக்கும் வகையில் ஆந்திரம் தனது எல்லைக்குள் அணை கட்ட முற்பட்டுள்ளது.

இந்த மூன்று ஆறுகளின் மூலம் தமிழ்நாட்டில் இருபது மாவட்டங்கள் பயன் அடைந்து வந்தன. ஆனால் இப்போது இந்த மாவட்டங்கள் பாசனத்திற்குரிய நீரை இழந்து வறண்ட பகுதிகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் மூன்றில் இரண்டு பங்கு மாவட்டங்கள் வறண்ட பகுதிகளாக மாறினால் உணவுக்காக பிற மாநிலங்களிடம் தமிழகம் கையேந்தி நிற்கக்கூடிய நிலைமை உருவாகிவிடும்.

விவசாயத்திற்கும் குடிப்பதற்கும் போதுமான நீரில்லாமல் நாம் தவிக்கும்போது, ஆறுகளிலும் நிலத்தடியிலும் எஞ்சியுள்ள சிறிதளவு நீரையும் உறிஞ்சி எடுத்து விற்பனைப் பொருளாக “கோகோ கோலா’, “பெப்சி’ போன்ற அன்னிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் அவலமும் நடைபெறுகிறது.

நகர்ப்புற மக்கள் அன்றாடப் பயன்பாட்டிற்கே குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயச் சூழலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

மணல் கொள்ளை

அண்டை மாநிலங்களின் வஞ்சனையால் வறண்டுவிட்ட இந்த ஆறுகளிலிருந்து மணல் மிக எளிதாகக் கொள்ளை அடிக்கப்படுகிறது. எந்த மாநிலங்கள் நமக்குத் தண்ணீர் தர மறுக்கின்றனவோ அதே கேரள மாநிலத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் லாரிலாரியாகத் தமிழக ஆற்று மணல் கொண்டு செல்லப்படுகிறது. மணல் கொள்ளை அடிப்பதற்கு வசதியாக இந்த ஆறுகளில் நீரோட்டம் இல்லாமல் அண்டை மாநிலங்கள் செய்து விட்டனவோ என்றுகூட சந்தேகம் எழுகிறது. இந்த ஆறுகள் வறண்டு போவதைப் பற்றிக் கொஞ்சமும் கவலை இல்லாமல் தமிழக அரசு இருப்பதற்கு இந்த மணல் கொள்ளையில் ஈடுபட்டிருப்பவர்கள் சென்ற ஆட்சியிலும் சரி, இந்த ஆட்சியிலும் சரி ஆளும் கட்சியினரே என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தமிழகத்தின் மற்ற ஆறுகளிலும் ஓடைகளிலும் மணல் அடியோடு சுரண்டப்படுகிறது. இந்த நிலைமை தொடருமானால் எதிர்காலத்தில் தமிழக ஆறுகளின் இரு பக்கமும் உள்ள கிணறுகளும் நீரூற்றுகளும் வறண்டு போய் மக்கள் குடிநீருக்காக அவதிப்படும் நிலை உருவாகிவிடும். மேலும் இந்த ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள், பாலங்கள் ஆகியவை மணல் கொள்ளையின் விளைவாக பலவீனம் அடைந்து இடியும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. அண்மையில் சென்னைக்கு அருகே காரனோடை பாலம் இடிந்து விழுந்ததற்கு மணல் கொள்ளையே காரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறையும் ஏரிகள்

ஆறுகளின் கதி இதுதான் என்றால் தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி சுருங்கி வருகின்றன. பல ஏரிகள் உண்மையிலேயே காணாமல் போய்விட்டன. தமிழ்நாட்டில் சிறியதும் பெரியதுமான 39 ஆயிரம் ஏரிகள் உள்ளன. தமிழக நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதிக்கு இந்த ஏரிகள் பாசன வசதி அளித்து வந்தன. இவற்றின் மூலம் பத்து லட்சம் ஹெக்டேர்கள் பயன் பெற்றன.

1980-ஆம் ஆண்டில் இந்த ஏரிகளின் பாசன வசதிகளை நவீனமயப்படுத்துவதன் மூலம் மேலும் 54 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பயன் பெறும் என மதிப்பிடப்பட்டது. இத்திட்டத்திற்கு சுமார் ரூ. 200 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டபோது அந்தத் தொகையை ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பு தருவதாக ஒப்புக்கொண்டு இதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. 27 ஆண்டுகள் கழிந்த பிறகும் இந்த வேலைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இது ஏன் என்பதை ஆராய்ந்தால் திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்.

தமிழ்நாட்டில் 100 ஏக்கருக்கு மேல் பரப்பளவுள்ள ஏரிகளைப் பொதுப்பணித்துறையும் அதற்குக் குறைவாக உள்ள ஏரிகளை ஊராட்சி ஒன்றியங்களும் நிர்வகித்து வருகின்றன. இவை தவிர அணை நீரைப் பெற்று பாசனம் செய்யும் 100 ஏக்கருக்கும் குறைவான சில ஏரிகளையும் பொதுப்பணித்துறை நிர்வகிக்கிறது. பொதுப்பணித்துறையின் கீழ் 12 ஆயிரம் ஏரிகளும் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 27 ஆயிரம் ஏரிகளும் உள்ளன.

கடந்த நாற்பதாண்டுகளில் இந்த ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. ஏரிகளில் மட்டுமல்ல; ஏரிகளுக்கு மழை நீரைக் கொண்டு வரும் பகுதிகளும் ஏரியிலிருந்து நீரை நிலங்களுக்குக் கொண்டு செல்லும் கால்வாய்களும்கூட ஆக்கிரமிப்பிலிருந்து தப்பவில்லை. இதன் காரணமாக பல ஏரிகள் முற்றிலுமாக காணாமல் போய்விட்டன. தனி நபர்கள் ஆக்கிரமித்த ஏரிகளை விட அரசுத் தரப்பில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகள் இன்னும் அதிகமாகும். நீதிமன்ற அலுவலகங்கள், அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைகள், தாலுகா அலுவலகங்கள், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் வளாகங்கள், வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள், சமுதாயக் கூடங்கள், நூலகங்கள், பேருந்து நிலையங்கள் என அரசின் பல்வேறு துறை சார்ந்த கட்டடங்கள் ஏரிகளுக்குள்ளாகவே கட்டப்பட்டுள்ளன.

ஏரிகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. ஆனால் அந்த உயர் நீதிமன்றத்தின் கட்டடமே உலகநேரி கண்மாயில் கட்டப்பட்டுள்ளது என்பது வேதனையான உண்மை.

ஊராட்சி ஒன்றியங்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்த 27 ஆயிரம் கண்மாய்களில் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றின் எல்லைகள் சுருங்கி அழிந்து வரும் அபாயம் உள்ளது. ஏரிகளிலும் கண்மாய்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றிச் சீரமைக்கவும் அதன் நீர் வழி எல்லைகளை வகுக்கவும் அண்மையில் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆனால் இந்தச் சட்டம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளது. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை ஆக்கிரமித்திருப்பவர்களை வெளியேற்றும் அதிகாரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கோ அல்லது ஊராட்சித் தலைவர்களுக்கோ இல்லை.

ஆக்கிரமிப்புகள் திடீரென்று ஓரிரு நாள்களில் நடைபெற்றுவிடவில்லை. ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் கையூட்டுப் பெற்றுக் கொண்டோ அல்லது அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு அஞ்சியோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு கடமை தவறிய இந்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து உயர் நீதிமன்ற ஆணையில் எதுவும் கூறப்படவில்லை என்பது திடுக்கிட வைக்கும் உண்மையாகும்.

காடுகள் அழிப்பு

1967-ஆம் ஆண்டுக்கு முன், தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் காடுகள் 23 விழுக்காடாக இருந்தது. இப்போது தமிழகக் காடுகளின் பரப்பளவு என்பது 17 விழுக்காடாகும். 6 விழுக்காட்டிற்கு மேற்பட்ட காடுகள் வெட்டப்பட்டுவிட்டன. காடுகளில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்படுகின்றன. இவற்றைக் கண்காணிக்க வேண்டிய வனத்துறை அதிகாரிகளின் ஊழலால் இது நடைபெறுகிறது. அரசியல்வாதிகளின் ஒப்புதல் இல்லாமல் இது நடைபெறாது. இதன் விளைவாக பருவ மழை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது. மலையின் அடர்ந்த காட்டில் உற்பத்தியாகும் ஆறுகள் வற்றத் தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் கடற்கரை 1000 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்ளது. பல இடங்களில் கரையோரமாக அலையாற்றுக் காடுகள் இருந்தன. தென் மாவட்டங்களில் கடற்கரை நெடுகிலும் தேரிகள் என அழைக்கப்படும் மணற்குன்றுகள் இயற்கையாக அமைந்திருந்தன. ஆனால் இந்தக் காடுகளையும் மரம் வெட்டுபவர்கள் விட்டு வைக்கவில்லை. மணற்குன்றுகளையும் சிதைத்து விட்டார்கள். இதன் விளைவாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சுனாமி அலைகள் வீசியபோது அவற்றைத் தடுக்கும் அலையாற்றுக் காடுகளும் தேரிகளும் இல்லாததன் விளைவாக பேரழிவு ஏற்பட்டது.

மோதல் சாவுகள்

காவல்துறை மக்களை வேட்டையாடும் துறையாக மாறிவிட்டது. ஆளும் கட்சியினரின் ஏவல்படையாக காவல்துறை மாற்றப்பட்டு நீண்ட நாள்களாகிவிட்டது. ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள் மறுக்கப்படுகின்றன. ஊடகங்களுக்கு எதிரான பல்வேறு வகையான அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன.

சொல்லாமலேயே மற்றொரு பெரும் கொடுமை தமிழகத்தில் தங்குதடையின்றி அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியிலும் தி.மு.க. ஆட்சியிலும் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் மோதல் சாவுகள் என்ற பெயரில் காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் சமூக விரோதிகள் எனக் குற்றம்சாட்டி இந்தக் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்க காவல்துறை முயல்கிறது. அது உண்மை என்று வைத்துக்கொண்டால் கூட, குற்றம் சாட்டப்பட்டவர்களை முறையாக நீதிமன்றத்தில் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தண்டனை வழங்கும் அதிகாரத்தையும் நீதிமன்றங்களிடமிருந்து காவல்துறை, தானே பறித்துக் கொண்டது. இந்தக் குற்றவாளிகளை உருவாக்கி வளர்த்துவிட்டதில் அரசியல் கட்சிகளுக்குப் பெரும் பொறுப்பு உண்டு. அதில் சமபங்கு காவல் துறைக்கும் உண்டு.

தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம், கந்து வட்டி, கட்டைப் பஞ்சாயத்து ஆகியவற்றின் மூலம் ஏழை எளிய மக்களும் நடுத்தர மக்களும் ஆட்டிப் படைக்கப்படுகிறார்கள் – சுரண்டப்படுகிறார்கள். அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம், சமூகவிரோதிகள் ஆகிய முத்தரப்பு கூட்டு உருவாகி மேற்குறிப்பிடப்பட்ட மூன்று அக்கிரமங்களையும் தங்குதடையின்றி நடத்துகிறது.

மீறப்படும் சட்டமன்ற மரபுகள்

சட்டமன்றத்தில் இந்த அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வருபவர்கள் பேச முடியாதபடி தடுக்கப்படுகின்றனர். வெவ்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லி அரசுக்கு எதிராக யாரும் எதுவும் கூறிவிடாதபடி தடுக்க முயற்சி வெளிப்படையாகவே நடத்தப்படுகிறது.

ஆளும் கட்சிதான் இவ்வாறு சட்டமன்ற மரபுகளைத் துச்சமாகக் கருதி மதிக்காமல் போனால் முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அவ்வாறே நடந்து கொள்கிறது. எதிர்க்கட்சித் தலைவியான ஜெயலலிதா சட்டமன்றத்திற்கு பெரும்பாலும் வருவதே கிடையாது. வெளியே இருந்து கொண்டு ஆளும் கட்சியை விமர்சனம் செய்து அறிக்கை வெளியிடுவதோடு தன் ஜனநாயகக் கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறார். அவர் முதலமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு. கருணாநிதியும் சட்டமன்றக் கூட்டத்தை அறவே புறக்கணித்தார். முதலமைச்சராக இருந்தால்தான் சட்டமன்றத்திற்கு வருவது. இல்லையேல் வருவது தங்கள் கௌரவத்திற்கு இழுக்கு என்று இருவருமே கருதுகிறார்கள். சட்டமன்ற ஜனநாயகத்தை உண்மையிலேயே இவர்கள் மதிப்பவர்களாக இருந்தால் சட்டமன்ற கூட்டங்களில் தவறாது கலந்துகொள்ள வேண்டும். முடியவில்லை என்றால் தங்கள் பதவியை விட்டு விலகி வெளியேற வேண்டும்.

மக்கள் போராட்டம்

சட்டமன்ற மரபுகள் துச்சமாக மதிக்கப்பட்டு மக்கள் பிரச்னைகள் பற்றி அங்கே பேச முடியாத நிலைமையில் வெளியில் மக்கள் போராட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. மத்திய – மாநில அரசுகளின் ஜனநாயக விரோதப் போக்குகளையும் ஒடுக்குமுறைகளையும் சர்வாதிகார சட்டங்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் முன் எப்போதும் இல்லாதவகையில் இப்போது எழுந்துள்ளது.

பதவிகளைக் காப்பாற்றுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தேர்தலுக்குத் தேர்தல் கொள்கையற்ற கூட்டணிகளை அமைத்துக்கொள்ளும் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

தமிழக அரசியல் சீர்கேடுகளை எதிர்த்தும் மக்கள் விரோதப் போக்குகளைக் கண்டித்தும் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் மக்கள் திரண்டு எழுந்து போராட முன்வர வேண்டும். அந்தந்த ஊரில் இந்த அநீதிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து போராடினால், எத்தகைய அடக்குமுறையாலும் அப்போராட்டத்தை ஒடுக்க முடியாது.

1965ஆம் ஆண்டில் இந்தி திணிப்புக்கு எதிராகத் தமிழக மாணவர்கள் ஒன்றுபட்டு நடத்திய போராட்டம் வரலாறு காணாத மக்கள் திரள் போராட்டமாக நடைபெற்றது. இந்தியை எதிர்த்த திராவிடக் கட்சிகள்கூட அந்தப் போராட்டத்தோடு தங்களை இணைத்துக் கொள்ள முன்வராமல் பதுங்கின. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ் அறிஞர்களான கி.ஆ.பெ. விசுவநாதம், பேராசிரியர் சி. இலக்குவனார், பெருஞ்சித்திரனார் போன்றவர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்களே நடத்திய இந்தப் போராட்டம் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. 1970களின் பிற்பகுதியில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக நாராயணசாமி நாயுடுவின் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு அனைத்து விவசாயிகளின் ஆதரவும் கிடைத்தது. கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் விவசாயிகள் ஒன்றுபட்டுப் போராடினார்கள். 1975ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிராகவும் ஜனநாயகத்தைக் காக்கவும் ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கம் தொடங்கியபோது மக்கள் பேராதரவு அளித்தனர். பெரும் தியாகசீலரும் தன்னலமற்றவருமான அவரை மக்கள் நம்பினார்கள். மக்கள் திரள் போராட்டங்களை நடத்தி இந்திராவின் சர்வாதிகார ஆட்சியை அகற்றி மீண்டும் ஜனநாயக ஆட்சியை அவர் நிலைநாட்டினார்.

மேற்கண்ட போராட்டங்களில் மக்கள் தாமாகவே முன்வந்து கொதிப்புணர்வுடன் போராடினார்கள். இந்த மக்கள் திரள் போராட்டங்களின் விளைவாகத்தான் ஆட்சியாளர்கள் அடிபணிய நேரிட்டது என்பதை நாம் மறக்கக் கூடாது. நாடு பூராவிலும் உள்ள மக்கள் ஒன்றுபட்டு திரண்டு எழுந்து போராடுவதென்பது அத்தனை எளிதானதல்ல. மக்கள் தங்கள் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் லஞ்ச ஊழல், கள்ளச் சாராயம், மணல் கொள்ளை, ஏரிகள் ஆக்கிரமிப்பு, காடுகள் அழிப்பு, காவல் துறையின் காட்டாட்சி மற்றும் சமூகக் கேடுகளை எதிர்த்து அந்தந்தப் பகுதிகளில் மக்கள் திரள் போராட்டங்களை நடத்த வேண்டும். இந்தப் போராட்டங்கள் ஒரு கட்டத்தில் நாடு தழுவிய பெரும் போராட்டமாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

மக்களுக்கு விழிப்புணர்வையும் ஊட்டி அவர்களைத் திரட்டி இத்தகைய வேண்டாத சக்திகளை எதிர்த்துப் போராட முயற்சி எடுக்க வேண்டிய கடமை தன்னலமற்ற மக்கள் தொண்டர்களுக்கு உண்டு.

ஜனநாயகச் சிதைவு, தமிழ்நாட்டின் உரிமைகளை இழந்து நிற்றல் போன்றவற்றிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டுமானால் தமிழக மக்களைத் திரட்டி மக்கள் திரள் போராட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை. மக்கள் திரள் போராட்டம் நமது கடமை மட்டுமல்ல. வரலாற்றுக் கட்டாயமும் ஆகும்.

இந்த வேலையை நாம் செய்யாமல் நமது சந்ததியினர் செய்யட்டும் என்று விட்டுவிடுவோமானால் எதிர்காலத் தலைமுறை நம்மை ஒருபோதும் மன்னிக்காது.

Posted in Agreements, Agriculture, Alliance, Andhra, AP, Bengaluru, Bethamangala, Blind, Border, Cauvery, Center, Chennai, Construction, Dam, Distribution, DMK, Drink, Drinking, Drinking Water, Farming, Farmlands, Flood, Flow, Govt, Inter-state, Interstate, Intrastate, Karnataka, Kaveri, Kerala, Krishna, Kuchasthalai, Kusasthalai, Lakes, Limits, Madras, Management, Mullai, Mullai Periyar, Mullai Periyaru, Mysore, Nature, Nedumaaran, Nedumaran, Paalar, Paalaru, Palar, Palaru, peasants, Periyar, Periyaru, Pethamangala, Pichathoor, Pichathur, Pichatoor, Pichatur, Politics, Poondi, reservoir, River, Rivers, Sea, Shortage, State, Storage, Supply, Tamil Nadu, TamilNadu, TMC, TN, Waste, Water | Leave a Comment »

Electricity Distribution and Power Generation in Tamil Nadu – Energy Crisis and its Impacts

Posted by Snapjudge மேல் திசெம்பர் 4, 2007

கண்ணாமூச்சி ஆடும் மின்சாரம்

எஸ். ஜெய்சங்கர்

உலகமயமாக்கல் கொள்கைக்குப் பிறகு, வெளிநாடுகளுக்கு நமது சந்தையைத் திறந்துவிட்டாகிவிட்டது. வெளிநாட்டு முதலீடுகள் ஏராளமாகக் குவிகின்றன. தொழில்நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பொருளாதார ரீதியில் நமது நாடு 9 சதவீத முன்னேற்றத்தை எட்டியுள்ளது என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களுடன் நம் நாட்டு வணிகர்கள் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதில், அனைத்து வசதிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்ட இந்திய நிறுவனங்கள் மட்டுமே உற்பத்திச் செலவைக் குறைத்து, உலகச் சந்தையில் காலூன்ற முடிகிறது.

சிறு, குறு நிறுவனங்களின் இன்றைய நிலையோ பரிதாபமாக உள்ளது. தொழிலை மிகுந்த லாபகரமாக நடத்தவும் முடியாமல், அதை விட்டு விலகவும் முடியாமல், புலி வாலைப் பிடித்த கதையாகிவிட்டது. இதில் தொழிலை நசுக்க, முன்னறிவிப்பற்ற மின்தடை எனும் இம்சை வேறு இவர்களை வாட்டத் தொடங்கிவிட்டது.

மின்சாரத்தைப் பயன்படுத்தி உற்பத்தியை மேற்கொள்ளும் இந்த சிறு, குறு தொழிற்சாலைகள், தினசரி பல முறை ஏற்படும் மின்வெட்டால் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டுள்ளன.

வேலையே நடக்காதபோது, தங்களது தொழிலாளர்களுக்கு ஊதியத்தை வழங்க முடியாமல் தாற்காலிக விடுமுறைகளும் அறிவித்துள்ளன. மிகப்பெரிய தொழில் துறை நிறுவனங்களாக இருந்தாலும், ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி, உற்பத்திச் செலவை அதிகரிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வருகின்றன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறு, நடுத்தர தொழிற்சாலைகளின் தொகுப்புகள் கொண்ட தொழிற்பேட்டை பகுதிகள், நகர்ப்பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மின்தடையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இவை அமைந்திருப்பது கிராமப் பகுதிகளிலா? நகரப் பகுதிகளிலா? என்பது நிச்சயம் அரசுக்குத் தெரியாமல் இருக்காது.

தமிழகத்தின் மின்தேவை தினசரி 8,500 மெகாவாட். இதுபோக, வெளிமாநிலத்துக்கு 500 மெகாவாட் மின்சாரத்தை விற்பனை செய்து வந்துள்ளது தமிழகம். ஆனால், இன்றைய நிலையில் மின் உற்பத்தி குறைந்து போனதால், வெளி மாநிலத்துக்கு விற்பனை செய்யப்பட்ட மின்சாரம் நிறுத்தப்பட்டு, தமிழகத்துக்கு 7,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தினசரி வழங்கப்படுகிறது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. தினசரி 1,500 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துபோய்விட்டது. காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததே இதற்கு முக்கிய காரணம் என விளக்கம் அளிக்கிறது தமிழக அரசு.

உண்மையில், தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம், தனியார் காற்றாலைகள், தனியார் தொழிற்சாலைகளில் இருந்து 10,500 மெகாவாட் மின்சாரத்தை தினசரி உற்பத்தி செய்ய முடியும். ஆனால், 7,500 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தியாகிறது. எங்கு தவறு நடக்கிறது என்பது அரசுக்குத் தெரியும்.

இதனால், மாநகராட்சிப் பகுதிகளான சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மின்தடை ஏற்படுகிறது.

கிராமப்புறங்களில் மின் தடை ஏற்பட்டால், சிறிது நேரம் வீட்டுக்கு வெளியே காற்றாட இருக்க முடியும். தீப்பெட்டிகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியது போன்ற குடியிருப்புகளில் வசிக்கும் நகர்ப்புற மக்கள், மின்தடையால் தங்களுக்கு ஏற்படும் “புழுக்கத்தை’ தீர்க்க எங்கு செல்வது? ஆனால், நகரில் மின்தடையே இல்லை என்கிறார் மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி.

மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் செயல்படும் துணை மின் நிலையங்களில், தினசரி எத்தனை முறை, எவ்வளவு நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது என்ற விவரங்கள் நிச்சயம் அரசுக்குத் தெரிந்திருந்தும், “தமிழக நகரப் பகுதிகளில் மின்தடை இல்லை, கிராமப்பகுதிகளில் மட்டுமே மின்தடை’ எனும் பதிலைக் கூறியிருக்கிறது அரசு.

அரசின் கூற்றுப்படியே கிராமப் பகுதிகளில் மட்டும் மின்தடை என்றாலும், அங்கும் பாதிப்புகள் அதிகம் உள்ளன. இலவச மின்சாரம், மானிய விலையில் மின் மோட்டார் தந்த அரசு, அதை இயக்கத் தேவையான மின்சாரத்தைச் சரியாகத் தருவதில்லை. ஆற்றுப் பாசனம் அற்ற பகுதிகளில் கிணற்றுப் பாசனம் ஒன்றே வழி. இந்த விளை நிலங்களில் மோட்டார்களை இயக்க முடியாமல், விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

கிராமப் பகுதிகளை ஒட்டிய ஆற்றுப் படுகைகளில் இருந்து, பெரிய மின் மோட்டார்கள் மூலம் நகருக்குக் கொண்டு வரப்படவேண்டிய குடிநீர் விநியோகமும் தடைப்படுகிறது.

தொடர்ந்து 24 மணி நேரமும் மோட்டார் இயங்கினாலே, நகர்ப்புற குடிநீர்த் தேவையைத் தீர்க்க முடியாத நிலையில், இந்த மின் துண்டிப்பால் 13 நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டிய அவலநிலை. இது அரசுக்குப் பொதுமக்களிடையே அவப்பெயரைத் தேடித் தருகிறது.

இந்நிலை ஓரிரு நாள்களில் சரியாகும் எனத் தொடர்ந்து இரு மாதங்களுக்கும் மேலாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் தமிழக மக்கள்.

சென்னை, மேட்டூர், குந்தா, தூத்துக்குடி, உடன்குடி ஆகிய இடங்களில் புதிய மின்னுற்பத்தி நிலையங்களை அமைத்து, அதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் மூலம் தமிழகத்தின் எதிர்காலப் பற்றாக்குறையைத் தீர்க்கலாம்.

மக்கள் படும் துயரங்களைச் சுட்டிக்காட்டும்போது, அதை ஏற்றுத் தீர்வு காணும் மனோதிடம் அரசுக்கு தேவை. முன்னறிவிப்பற்ற மின்தடை பிரச்னைக்கு தற்போதைய தேவை உடனடித் தீர்வு மட்டுமே. அரசின் மறுப்பறிக்கையும் விளக்கமும் அல்ல.

————————————————————————————————————
மின்வெட்டா, மின்னல் வெட்டா?

தொழில்துறையிலும் விவசாயத்திலும் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் தொடர்ந்து விளங்குவதற்குக் காரணமே மின்சாரத்துறை என்றால் அது மிகையாகாது. அந்தத் துறைக்கு அமைச்சராக இருக்கும் ஆர்க்காடு என். வீராசாமி பழுத்த அரசியல்வாதி, நிர்வாகத்தின் நெளிவு சுளிவுகள் தெரிந்தவர்; எல்லாவற்றுக்கும் மேலாக முதலமைச்சரின் நிழல் போன்றவர், முதல்வரின் மனம் அறிந்து செயல்படுபவர்.

இத்தனை பீடிகைகள் போடுவதற்குக் காரணமே, சமீப மாதங்களாக எல்லா மாவட்டங்களிலும் விவசாயிகள் முதல் தொழிலதிபர்கள் வரை வேதனையோடு பேசிவரும் அறிவிக்கப்படாத மின்சார வெட்டைக் குறைக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லையே என்ற கவலைதான்.

தமிழ்நாட்டின் மொத்த மின்னுற்பத்தித் திறன் 10,098 மெகாவாட். மின்தேவையின் உச்சபட்ச அளவு 8,800 மெகாவாட். ஆனால் இப்போது உற்பத்தி ஆவதோ 7,500 மெகாவாட்தான். எனவே அன்றாடம் சுமார் 2 மணி முதல் 8 மணி நேரம்வரை மின்சாரத் தடை ஏற்படுகிறது. சராசரியாக 4 மணி நேரத்துக்கு மின்சாரம் தடைபடுகிறது.

காற்றாலைகளிலிருந்து கிடைத்துவந்த மின்சாரம் குறைந்துவிட்டதால் 1,500 மெகா வாட் அளவுக்கு மின்சாரவரத்து குறைந்துவிட்டதாகவும், மத்திய தொகுப்பிலிருந்து இப்போது 1,000 மெகாவாட் கிடைக்காததாலும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக மாநில அரசு தெரிவிக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் மின்சாரத் தேவை 4,000 மெகாவாட் அதிகரித்த நிலையில், மின்னுற்பத்தியோ 531 மெகாவாட் அளவுக்கு மட்டுமே அதிகரித்திருப்பதாக அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவிக்கிறார்.

புதிய தொழில்பிரிவுகளால் ஆண்டுக்கு 600 முதல் 700 மெகாவாட் வரை மின்சாரத் தேவை அதிகரித்து வருகிறது என்று இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

மின்சார பற்றாக்குறையால் ஜவுளி ஆலைகளால் முழுத் திறனில் இயங்க முடியாமல் போனதாகவும் இதனால் மட்டும் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள காற்றாலைகளில் கிடைக்கும் மின்சாரத்தைத் தொகுப்பாகப் பெற, மாநில மின்சார வாரியம் நல்ல கட்டமைப்பு வசதிகளைச் செய்துகொண்டால் 3,686 மெகாவாட் மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்று அத்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

அறிவிக்கப்படாத மின்சார வெட்டால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது கோயமுத்தூர் மாவட்டமும் பின்னலாடைத் தொழில் கேந்திரமான திருப்பூரும்தான். கோயமுத்தூர் மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்சார இணைப்புகள் உள்ளன. இவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை உயர் அழுத்த மின் இணைப்புகளாகும். கோவை மாவட்டத்தில் மட்டும் மின்நுகர்வு அளவு 1,200 மெகாவாட் ஆகும். இது மாநிலத்தின் மின் உற்பத்தியில் 13.5%.

இப்போதைய பிரச்னை மின்சார வெட்டு மட்டும் அல்ல, மின்வெட்டு எப்போது ஏற்படும் என்பது நிச்சயமாகத் தெரியாததும் ஆகும். இதனால் ஆலைகளில் உற்பத்தியைத் திட்டமிட முடிவதில்லை.

ஒரு நாளைக்கு 7,000 கிலோ நூல் இழை உற்பத்தி செய்த ஒரு ஜவுளி ஆலையில் இப்போது 600 கிலோ முதல் 1,000 கிலோ வரைதான் அதிகபட்சம் உற்பத்தி செய்ய முடிகிறது. 500-க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகளில் 40% அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு நூற்பாலை சங்கத் தலைவர் ஏ.பி. அப்பாகுட்டி வேதனையோடு தெரிவிக்கிறார்.

மின்வெட்டு காரணமாக டீசல் பம்புகள், ஜெனரேட்டர்கள் விற்பனை 100% அதிகரித்திருப்பது இந்த பிரச்னையின் பரிணாமத்தை இன்னொரு கோணத்தில் உணர்த்துகிறது.

அமைச்சரின் அறிக்கைகளும் புள்ளிவிவரங்களும் அந்தநேரச் சமாதானத்துக்கு வேண்டுமானால் பயன்படலாமே தவிர, பிரச்னையை தீர்க்க உதவாது. நடுநிலைமையுடன் ஆலோசனை கூறக்கூடிய நிபுணரை நியமித்து, உரிய பரிந்துரையைப் பெற்று, அதை மின்னல் வேகத்தில் செயல்படுத்துவது ஒன்றே தமிழக அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

—————————————————————————————————————————————————

தமிழகத்தை வாட்டும் மின்வெட்டு!

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

பொன்விழா கொண்டாடிய தமிழ்நாடு மின்சார வாரியம், ஒரு காலத்தில் தேவைக்கு அதிகமாக மின்உற்பத்தி செய்து பிற மாநிலங்களுக்கு விற்று லாபம் ஈட்டியது. இன்றைக்குத் தமிழகம் தனக்குத் தேவையான மின்சாரம் கிடைக்காமல் அல்லல்பட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மின் வெட்டாலேயே மக்களுக்கு ஷாக் அடிக்கிறது. விவசாயிகள் மட்டுமல்ல, ஆலைத் தொழிலாளிகள், தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் எனச் சகலரும் பாதிக்கப்படுகின்ற நிலை. விவசாயிகள் எந்த நேரம் மின்சாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு தங்களுடைய பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச தூக்கமும் உணவும் இல்லாமல் பம்ப்செட் அருகே காத்துக் கிடக்கின்ற நிலைமை. இரவு நேரங்களில் மின்சாரம் வந்தாலும் பாம்புகளுக்கும், நட்டுவாக்களிகளுக்கும் பயப்படாமல் கடும் இருட்டிலும் பாடுபடுகின்ற நிலையில் இன்றைக்கு விவசாயிகள் இருக்கின்றனர். வியர்வை சிந்தி வியர்வையை அறுவடை செய்யும் விவசாயிக்குப் பலமுனைத் தாக்குதல்கள். விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு விலை இல்லை. உரத்தட்டுப்பாடு. இதற்குமேல் மின்வெட்டு. தலைநகர் சென்னையில் மின்சாரம் கிடைத்தாலும் மற்ற பகுதிகளில் பெரும்பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இதற்கு மேல் அரசுப் பரிவாரங்கள் பகலில் ஆலையை இயக்காமல் இரவில் ஆலைப் பணிகள் நடக்கட்டும், வாரத்திற்கு ஒரு நாள் ஆலையின் இயந்திரச் சக்தியை நிறுத்திவிடுங்கள் என்று கூறும் ஆலோசனைகள். இதெல்லாம் ஆலைகளில் பணியாற்றிவரும் தொழிலாளிகளுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் பெரும் கேடு ஏற்படுத்தும்.

தமிழகத்தில் 10,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 55 சதவீதம் தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தும், 28 சதவீதம் மத்திய அரசு உற்பத்தி நிலையங்களில் இருந்தும், 11 சதவீதம் தனியார் மூலமும், 3.5 சதவீதம் வெளிமாநிலங்களில் இருந்தும் கிடைக்கிறது. காற்றாலையின் மூலம் 3,000 மெகா வாட் தற்பொழுது கிடைக்கிறது.

இப்படி இருக்க, மின்வெட்டு, மின் தட்டுப்பாடு ஏன் என்று தெரியவில்லை. அதற்குக் காரணம் தமிழக அரசின் மெத்தனப் போக்கே ஆகும். பல ஆண்டுகளாக மின் உற்பத்தி மற்றும் விநியோகம் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் சரிசெய்யப்படவில்லை. பழுதுபட்ட இயந்திரங்களைத் திரும்பத் திரும்ப ஓட்டுவது, இயந்திரங்கள் பராமரிப்பில் சரியான கட்டுப்பாடு இல்லாதது, இந்தப் பணியில் நிரப்பப்பட வேண்டிய பொறியாளர்கள், பணியாளர்கள் நிரப்பப்படாமல் இருப்பது, இதற்குமேல் பல்துறை பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்துக்குப் படையெடுத்ததனால் மின்சாரத் தேவை அதிகரித்து வருகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தகவல், தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களுக்குத் தடையின்றி மின்சாரம் வழங்க பல ஒப்பந்தங்கள் தொடர்ந்து கையொப்பமிடப்படுகின்றன. அதற்கேற்ப உரிய திட்டங்கள் இல்லை. 120 தொழிற்பூங்காக்களுக்கு மட்டுமே 700 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட குளறுபடிகளால்தான் இந்தத் தட்டுப்பாடு.

சில ஆண்டுகளுக்கு முன்னால் 0.4 சதவீத மின் உற்பத்தி தனியாரிடம் இருந்தது. தற்பொழுது தனியார் உற்பத்தி 28.18 சதவீதமாக உயர்ந்து விட்டதால் இதற்கான கட்டணங்களும் பன்மடங்கு உயர்ந்துவிட்டன. ஆண்டுக்கு ஒருமுறை மின்சாரத்தை வாங்க 12,016 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்து தமிழக அரசு கொடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளது. விவசாயம் மட்டும் இல்லாமல் நெசவுத் தொழிலும், விசைத்தறிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டம் போன்ற பகுதிகளில் சாதாரண நெசவாளிகள் தத்தளிக்கின்றனர். திருப்பூர் பின்னல் ஆடைதொழில்கூட ஓரளவுதான் ஜெனரேட்டர்களைக் கொண்டு இயங்க முடிகிறது. விசைத்தறி நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் மின்தடையால் உற்பத்தி பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கொங்கு மண்டலத்திலுள்ள ஆலைகள், நூற்பாலைகளில் எட்டு மணிநேரம் மின்வெட்டு உள்ளது என்று செய்திகள் வருகின்றன. திருப்பூரில் மட்டும் மின்வெட்டால் ஆயிரக்கணக்கானோர் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். மின்சாரப் பாதிப்பால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. தாமிரபரணியில் இருந்து விருதுநகர் மாவட்டத்திற்கு வழங்கப்படுகின்ற மானூர் கூட்டுக் குடிநீர்த் திட்டமும் செயல்படாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல் இழந்து உள்ளன.

1991-இல் மின்துறையில் தனியார் மற்றும் அன்னிய மூலதனம் 25 சதவீதத்தை எட்டியது. அதில் ஐந்து மாநிலங்கள் குறிப்பிடும் அளவுக்கு ஆர்வத்தைச் செலுத்தின. மகாராஷ்டிரம் முதலிடமும் தமிழகமும் கர்நாடகமும் அதற்கு அடுத்த இடங்களையும் பிடித்தன. தமிழ்நாட்டில் மட்டும் இதற்காக முடக்கப்பட்ட மூலதனத்தின் பங்கு 8 சதவீதம்.

1995இல் ஒரிசா மாநிலத்திலும் 1998இல் ஆந்திர மாநிலத்திலும் மின்சாரக் கட்டுப்பாடு குழுமங்கள் அமைக்கப்பட்டன. இவை மின் விநியோகத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்து அவற்றைத் தனியாருக்கு விற்கின்ற திட்டங்கள் தொடங்கப்பட்டன. இது தொடர்பான தனியார் அன்னிய மூலதனம் போன்றவற்றில் மின்துறை எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஒழுங்குபடுத்தும் சட்டத்தை 2006 மார்ச் மாதம் மத்திய அரசின் மின் அமைச்சகம் கொண்டு வந்தது. தமிழகம் இன்று சுமார் 17 கோடி குறைந்த அழுத்த மின் பயனீட்டாளர்களையும், சுமார் 6,000 உயர் அழுத்த மின் பயனீட்டாளர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 45 லட்சத்து 22 ஆயிரம் பேர் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தமிழ்நாடு மின் வாரியத்தின் மொத்தத்தில் 58 சதவிகிதத்தை வழங்குபவர்களாக இருக்கிறார்கள். மகாராஷ்டிரத்தை அடுத்து மின்வாரியத்தில் பணியாற்றுகிறவர்கள் இங்குதான் அதிகம். 94 ஆயிரம் பேர் மின்வாரியத்தில் பணியாற்றுகிறார்கள்.

2003 – 2004 மின் கட்டுப்பாடுக் கழகத் தகவலின்படி யூனிட் விற்பனை கீழ்க்கண்டவாறு உள்ளது.

புனல் மின்சாரம் யூனிட் ஒன்றின் விலை ரூ. 0.59, தமிழ்நாடு மின்வாரியத்தின் அனல்மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.09, மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் இருந்து அவசரத்திற்கு வாங்கிய மின்சாரம் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.17, மத்திய அரசின் அனல் மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.22, பி.பி.என். பவர் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.56, தனியார் காற்றாலை யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.70, அணுமின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.71, கரும்புச் சக்கை யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.87, தமிழ்நாடு மின்வாரியத்தின் எரிவாயு மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 3.09, தனியார் அனல்மின் நிலையம் யூனிட் ஒன்றின் விலை ரூ. 3.99, தனியார் எரிவாயு மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 4.65

2003 – 2004இல் வசூல் கட்டணம் ரூ. 10,545 கோடி. மானியமும் ஏனைய வருமானங்களும் மொத்தத்தில் ரூ. 477 கோடி. அந்த ஆண்டின் இழப்புத் தொகை ரூ. 2,743 கோடி. இதனால் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரைகள் எழுந்தன. அந்த ஆண்டின் இழப்பை ரூ. 663 கோடியாகக் குறைக்க வேண்டும் என்பதற்காக மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் மின்வாரியம் மின்சாரம் வாங்குவதற்கு 49 சதவீதமும், எரிபொருளுக்கு 24 சதவீதமும், வட்டிக்கு 7 சதவீதமும், பராமரிப்புக்கு 12 சதவீதமும் ஏனைய மற்ற செலவுகள் 8 சதவீதமுமாக மின்வாரியத்தில் செலவுக் கணக்கு இருந்தது.

தனியார்மயத்தில் 2007 வரை ஐந்து தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்பட்டு இன்றைக்கு பல தனியார்கள் மின் உற்பத்தித் துறையில் தங்கள் கால்களைப் பதிக்க அரசிடம் அணுகி உள்ளனர். 2003 – 2004 கணக்கின்படி ஒரு யூனிட்டுக்கு தனியாரிடம் இருந்து பெற்ற மின்சாரத்தின் விலை, தமிழ்நாடு மின் வாரியத்துக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களில் தயாரித்த மின்சாரத்தின் விலையைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்காக இருந்தது. இப்படித் தேவையில்லாமல் அதிகப்படியான செலவுகளை அரசு தனது தவறான அணுகுமுறையால் செய்ய வேண்டியுள்ளது. 1999-வது ஆண்டின்படி 2,564 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய தனியாருக்கு அனுமதி கொடுக்கலாம் என்ற நிலை வந்தால் தமிழக மின்வாரியம் கடனாளியாகி, திவாலாகி கதவைச் சாத்த வேண்டிய நிலைக்குத்தான் தள்ளப்படும் என்ற பரிந்துரையும் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோதும் அரசு மெத்தனமாக இருந்துள்ளது. 2001-ஆம் ஆண்டில் தனியார் மின்நிலையங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 2.25-க்கு மேல் தரமுடியாது என்று அரசு அறிவித்ததற்கு தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் கடுமையாகப் போராடின.

இவ்வாறு பல எச்சரிக்கைகள், அறிக்கைகள் மூலம் தனியார் மயமாக்கப்படுவது சரியில்லை என்று தமிழக அரசுக்குத் தெரிவிக்கப்பட்டும் பாராமுகமாக இருப்பது கண்டனத்துக்குரியது. இதுகுறித்து நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு மின்சாரக் கட்டுப்பாடுக் கழகத்தை எதிர்த்து இரண்டு வழக்குகள் தொடுத்தார். தனியார் நிறுவனங்களான பன்னாட்டு நிறுவனத்துக்கு நிதியமைச்சரின் துணைவியார் நளினி சிதம்பரம் வாதாடினார். இறுதியில் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மின்சார விலையைக் குறைக்க வேண்டும் என்பதே தீர்ப்பாக அமைந்தது.

தனியார் புகுந்ததால் பல சிக்கல்கள் ஏற்பட்டன. நெய்வேலியை ‘ஞ’ யூனிட் நடத்தி வரும் எஸ்.டி.சி.எம்.எஸ்., சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஏசியா பிரௌன் பொவேரி, அமெரிக்காவின் சி.எம்.எஸ். போன்ற பன்னாட்டு மின் உற்பத்தி நிறுவனங்கள் கொள்ளை லாபத்துக்கு விற்கத் திட்டமிட்டாலும் முடியாமல் 2007-இல் ஒரு சில நிறுவனங்களை அபுதாபி நேஷனல் எனர்ஜி என்ற அமைப்புக்கு விற்றுவிட்டன. மகாராஷ்டிரத்தில் என்ரான் போன்று கொள்ளை அடிக்க முடியவில்லை என்ற விரக்தியில் ஒரு சில நிறுவனங்கள் விட்டுவிட்டு ஓடிவிட்டன. இப்படிப் பல நிறுவனங்கள் கால் வைத்ததும், மின்துறையில் நமக்கு ஏற்பட்ட பாதகங்களாக அமைந்துவிட்டன.

உத்தேசிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டதுதான் இந்தப் பற்றாக்குறைக்கு ஒரு காரணம்.

அத்திட்டங்கள்:

1. தூத்துக்குடியின் தமிழ்நாடு மின்சார வாரியமும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து 1,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க திட்டங்கள் இருந்தபொழுதும் அதை நிறைவேற்றக்கூடிய வகையில் விரைவான செயல்பாடுகள் இல்லை.

2. ஜெயங்கொண்டான் தமிழ்நாடு மின்வாரியம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இணைந்து 500 மெகா வாட் மின்உற்பத்தி செய்யக்கூடிய திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.

3. குந்தாவில் 500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யக்கூடிய அளவில் திட்டங்கள் இருந்தபொழுதும் தமிழ்நாடு மின்சார வாரியம் அதைக் கவனிக்காமல் இருக்கிறது.

4. நெல்லை மாவட்டம் உடன்குடியில் 1,500 மெகா வாட் உற்பத்தி செய்யும் நிலையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு சுணக்கம் காட்டுகிறது.

5. வடசென்னை மின்உற்பத்தி நிலையத்தில் இருந்து மேலும் 600 மெகா வாட் உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் இருந்தும் அதற்கான செயல்பாடுகள் இல்லை.

6. இதேபோன்று மேட்டூரிலும் 500 மெகா வாட் மின் உற்பத்தி அதிகரிக்கக்கூடிய சூழல் இருந்தும் தமிழ்நாடு அரசு பாராமுகமாக இருக்கிறது.

7. கோயம்பேடில் அன்றாடம் கிடைக்கின்ற காய்கறிக் கழிவில் இருந்து மரபுசாரா எரிசக்தி மூலம் 550 மெகா வாட் கிடைக்கக்கூடிய அளவுக்கு மின்உற்பத்தி செய்யலாம் என்ற திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை.

8. தமிழகத்தில் உள்ள காற்றாலைகளுக்குத் தேவையான காற்று வீசவில்லை என்ற காரணத்தால் உரிய உற்பத்தி இல்லை என்று தமிழக அரசு குறிப்பிட்டாலும், இத்துறை தனியார் வசம் இருப்பதால் அதற்குத் தேவையான வசதிகளையும் கட்டுப்பாடுகளையும் அரசு செய்யாததால் காற்றாலைகள் மின்உற்பத்தி பின்தங்கியுள்ளன.

9. சூரியவெப்பம், கடல் நீர், நிலக்கடலைத் தோல் போன்றவற்றில் இருந்து மின் உற்பத்திக்கான சாத்தியக்கூறுகளை அறிய வேண்டும்.

காற்றாலைகள் மூலம் 3626 மெகாவாட், சர்க்கரை ஆலைக் கழிவுகள் மூலம் 213 மெகாவாட், தாவரங்கள் மூலம் (பயோமாஸ்) 99 மெகாவாட், குப்பைகள் மூலம் 4.25 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்று திட்டமிடப்பட்டது.

மரக்காணத்தில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நீர்மின் குழுமம் மூலம் காவிரி புனல்மின் திட்டம், ஓகேனக்கல் புனல்மின் திட்டம் அமைக்கவும் இதன்மூலம் 390 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. காவிரிப் பிரச்னையைப் போல் இதிலும் கர்நாடகம் மூக்கை நுழைக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யூரில் அமைக்க இருந்த மின் உற்பத்தித் திட்டத்தைத் தமிழக அரசு கைவிட்டுவிட்டது.

பல அணைகள் நிரம்பி இருந்தபொழுதும் மின்உற்பத்தி எப்படி முடங்கியது என்று தெரியவில்லை. அதைச் சரிசெய்ய அரசு கவனம் செலுத்தவில்லை.

தொலைநோக்குப் பார்வை இல்லாமல் மின்துறை சீரழிவை நோக்கிச் செல்கிறது.

Posted in Agriculture, Arcot, Commerce, Consumption, Distribution, DMK, Economy, Electricity, energy, Exports, Farmers, Farming, Finance, Fuels, Generation, Generators, Govt, Impact, Impacts, Industry, Inefficiency, Inverters, Kalainjar, Karunanidhi, Megawatts, MK, Motors, MW, NLC, Power, Power cut, Power Cuts, Powercut, Powercuts, Production, SEZ, Stalin, Sufficiency, Veerasamy, Water | 1 Comment »

Ayurvedha Corner – S Swaminathan: Natural therapy for Diabetes (High Sugar)

Posted by Snapjudge மேல் நவம்பர் 30, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை நோய் வருவது எதனால்?

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

வயது 63. கடந்த 25 வருடங்களாக சர்க்கரை நோயாலும், உயர் ரத்த அழுத்தத்தாலும் சிரமப்படுகிறேன். தற்போது வலது கை, இடது கால் மரத்துப் போகிறது. கால் பாத எரிச்சலும் உள்ளது. கூடவே மலச்சிக்கலும். பிராஸ்டெட் சுரப்பி வீக்கத்தின் காரணமாக இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் தூக்கமும் கெடுகிறது. இவை நீங்க வழி என்ன?

“குணகர்மவிகல்பம்’ என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. அதாவது நாம் உண்ணும் உணவாகட்டும், செய்யும் செயலாகட்டும், சாப்பிடும் மருந்தாகட்டும் இவை அனைத்திலும் குணமும்; கர்மமும் நிறைந்துள்ளன. குணத்திற்கு உதாரணமாக எளிதில் செரிக்காதவை, எளிதில் செரிக்கக்கூடியவை, குளிர்ச்சியானவை, சூடானவை, எண்ணெய்ப் பசையை உடலுக்குத் தருபவை, வறட்சியை ஏற்படுத்துபவை போன்ற உணவு வகைகளைக் குறிப்பிடலாம். கர்மம் என்றால் செயலைச் செய்பவை, உதாரணமாகக் கடுக்காய்த் தோலைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்குகிறது, தேன் சற்று தூக்கலாகவும், நெய் சற்று குறைவாகவும் குழைத்து வாய்ப்புண்ணில் பூச அது விரைவில் குணமடைவதும் செயல்திறனால் ஏற்படுகின்றன.

இந்தக் குணமும் கர்மமும்தான் சர்க்கரை வியாதியையும் தோற்றுவிக்கின்றன. ஒரே இருக்கையில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்யும் உத்யோகம், அதிக நேரம் படுக்கையில் படுத்து உறங்குதல், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, நீர்வாழ் மிருகங்களையும் அதிகமாக உணவில் சேர்த்துச் சாப்பிடுதல், அடிக்கடி பால் சாப்பிடுதல், புதிய அரிசி, வெல்லத்தினால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிடுதல் போன்ற காரணங்களால் நம் உடலில் நெய்ப்பு, குளிர்ச்சி, உடல்கனம், மந்தநிலை, ரத்தத்திலும், சதையிலும் கொழுப்பு, வழுவழுப்பு போன்ற குணங்கள் அதிகரிக்கின்றன. இதை வெளியேற்றுவதற்கான வழியை உடல் தேடுகிறது. சிறுநீரகம் இந்தக் குணங்களை இழுத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. இதை அறியாது காரணத்தைத் தொடரும்போது இந்தக் குணங்கள் ரத்தத்திலும் சிறுநீரிலும் மிகைப்பட்டு காணுவதால் ரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீர்ப் பரிசோதனையில் நாம் சர்க்கரை நோயாளி என்ற தீர்ப்பு வழங்கப்பட்டு அதன்பிறகு தினமும் ஒரு பயம் காலந்த வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.

முன் குறிப்பிட்ட காரணங்களுக்கு நேர் எதிரான செயல்களைச் செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறோம். அதாவது ஓர் இருக்கையில் அதிகம் அமர வேண்டாம், குறைந்தது ஒருமணிநேரமாவது நடக்கவேண்டும். பகல் தூக்கம் கூடாது, மாமிச உணவில் கட்டுப்பாடு, அரை லிட்டர் அளவுதான் பால், அரிசியைக் குறை, இனிப்புப் பண்டங்கள் வேண்டாம் போன்ற மருத்துவரின் கட்டளைகளை ஏற்று அவற்றிற்கு நேர் எதிரான கசப்பு, துவர்ப்பு, காரச் சுவைகளை உணவில் சேர்க்கத் தொடங்கும்போது பல ரஸôயன மாற்றங்களை நம் உடல் சந்திக்கிறது. இந்தச் செயல்களின் வாயிலாக, குடலில் வாயுவின் சீற்றம் மிகைப்படுகிறது. காரம், கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவை வாயுவிற்கு மிகவும் அனுகூலமானவை. வாயுவின் சீற்றம் ஏற்படுவதால் நீங்கள் குறிப்பிடும் மரத்துப் போதல், கால் பாத எரிச்சல், மலச் சிக்கல், பிராஸ்டேட் சுரப்பி வீக்கம் போன்றவை ஏற்படும்.

குடலில் வாயுவின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த விளக்கெண்ணெய் நல்ல மருந்தாகும். விளக்கெண்ணெய்யை இளஞ்சூடாக வயிற்றின் மீது உருட்டித் தேய்க்கவும். வலது கீழ் வயிற்றுப் பகுதியில் தொடங்கி இடது பக்கமாகக் கீழ் வயிற்றுப் பகுதி வரை சுமார் 20-25 நிமிடங்கள் தடவி விடவும். தொப்புளின் உள்ளேயும் நன்றாக எண்ணெய்யை ஊறவிடவும். கை, கால் மரத்துப் போன பகுதிகளிலும், கால் பாதத்திலும் விளக்கெண்ணெய்யை வெதுவெதுப்பாகத் தடவவும். நன்றாக ஊறிய பிறகு வெது வெதுப்பான தண்ணீரில் குளிக்கவும்.

விளக்கெண்ணெய்யைக் கலந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளும் தங்களுக்கு நல்ல பலனைத் தரக்கூடும். சுகுமாரம் கஷாயத்துடன் 1/4, 1/2 ஸ்பூன் ஹிங்குதிரிகுணம் எனும் எண்ணெய் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட நல்லது. இம்மருந்து மலச்சிக்கலைப் போக்கி, பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். குடல் வாயுவின் சீற்றத்தை அடக்கி, நரம்புகளுக்கு வலுவூட்டும்.

Posted in Alternate, Blood sugar, Bloodsugar, Body, Cures, diabetes, Disease, Disorder, Doctor, Gas, insulin, Liver, medical, Natural, Potassium, Prostate, Restroom, Sodium, Sugar, Swaminathan, Therapy, Toilet, Urine, Water | 1 Comment »

Ramar Sethu Project – Adams Bridge: Environmental Impact & Scientific facts

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007

சேதுத் திட்டம் யாருக்காக?

டி.எஸ்.எஸ். மணி

கடந்த செப்டம்பர்-18, 2007 அன்று “வாஷிங்டன் போஸ்ட்’டில் ஒரு கட்டுரை. “கடல் கால்வாய்த் திட்டம் இந்தியாவில் ஒரு மத உணர்வு தடங்கலால் தடைப்பட்டுள்ளது’ என்ற ராமலட்சுமியின் கட்டுரை.

அதில், “சுற்றுச்சூழல் மற்றும் மீனவர் வாழ்வுரிமைக்கான ஒரு போராட்டம், மத முத்திரையுடன் கெடும் வாய்ப்பாக திசை திரும்பிவிட்டது’ என முடிக்கப்பட்டிருந்தது.

“சுற்றுச்சூழலை அழிக்கும் ஆபத்துகளை, இந்தச் சேது கால்வாய்த் திட்டம் எப்படியெல்லாம் தன்னகத்தே கொண்டுள்ளது எனத் திட்ட ஏற்பாட்டாளர்கள் முன் வைத்த, “”சுற்றுச்சூழல் தாக்கல் பற்றி மதிப்பீடு” மீதே நாம் காணமுடியும்.

* இந்த வங்காள விரிகுடா-பாக் விரிகுடா பகுதி அநேகமாக மென்மையிலிருந்து கடினம் வரையான களிமண்ணை இயற்கையாகக் கொண்டுள்ளது. தனுஷ்கோடிக்கு வடக்கிலும் தெற்கிலும் மணலைக் கொண்டுள்ளது. அதனால்தான் இந்தக் கால்வாய்த் திட்டத்தை, நடைமுறைப்படுத்த முடியாது என 140 ஆண்டுகளாகத் தள்ளிப் போடப்பட்டது. தூர்வாரி ஆழப்படுத்தல் மூலம் கால்வாய் தோண்டினால் ஆண்டுக்கு ஒருமுறை தூர்வார வேண்டி வரும். அதன் செலவு கணக்கிலடங்காது.

* தூத்துக்குடி அருகே உள்ள “வான் தீவு’ ஆதம்பாலத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது. “தேசிய கடல் பூங்கா’விலிருந்து 25 கி.மீ.க்கு எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் வரக்கூடாது என்ற “வனவிலங்குச் சட்டம்’ கூறுகிறது. “தேசிய கடல் பூங்கா’ எனவும், “பல்லுயிரியல் பாதுகாப்பு பகுதி’ எனவும், மன்னார் வளைகுடா, யுனெஸ்கோவால் வரையறுக்கப்பட்டுள்ளது. அத்தகைய “சுற்றுச்சூழல் விதிகளை’ மீறி இந்தத் திட்டம் வருகிறது.

* ஏற்கெனவே பாக் விரிகுடா மண்ணில் அதிகளவு கடின உலோகக் குவிதலும், எண்ணெயும் காணப்படுகிறது. அதனால் மாசுபட்டுள்ளது. அங்கே கால்வாய்த் திட்டம் வருமானால் “பல்லுயிரியல் பாதுகாப்பு பகுதி’ மேலும் கெட்டுவிடும்.

* கடல் விசிறி, கடல் பஞ்சு, முத்துச் சிப்பி, சங்கு, கடல் அட்டை ஆகிய வகைவகையான உயிரியல் ஊற்றுகள் அழியத் தொடங்கும்.

* இங்கு 600 வகை மீன் இனங்கள் உள்ளன. அவற்றில் 200 வகைகள் வணிக முக்கியம் பெற்றவை. அவற்றின் அழிவு வருமானத்தை இழக்கவைக்கும். மீனவர் வாழ்வுரிமையையும் பறித்துவிடும்.

* 1992 முதல் 1996 வரை இந்தப் பகுதியில் மீன் உற்பத்தி 55 ஆயிரம் டன்னிலிருந்து, 2001-ம் ஆண்டு 2 லட்சம் டன்னாக 4 மடங்கு உயர்ந்துள்ளது. அந்த உற்பத்திக்கு இந்தத் திட்டம் ஊறு விளைவிக்கும்.

* தென்மேற்குப் பருவக்காற்று காலத்தில், உயிரினங்கள் மன்னார் வளைகுடாவிலிருந்து, பாக் விரிகுடா செல்லும். மற்ற காலத்தில் மறுதிசை செல்லும். அவை பாம்பன் பாலம் வழியாகவும், அரிமுனை வழியாகவும் செல்லும். கால்வாய் தோண்டுவதால் அந்த உயிரினங்களின் நடமாட்டம் தடைப்படும்.

* தூர்வாரி ஆழப்படுத்தினால், கடலுக்கு அடியில் உள்ள தாவர, விலங்கு இனங்கள் அழிந்துவிடும்.

* “அரிதான உயிரினமான’ கடல் பசுக்கள், பருவ மாற்றத்தில் இடம் பெயர்பவை. அவை அழிந்துவிடுமென, மறைந்த பேராசிரியர் சென்னை பல்கலைக்கழக “மானுடயியல்’ துறை தலைவர் சுதர்சன் எச்சரித்திருந்தார்.

* “தமிழ்நாடு அறிவியல் கழக’ முன்னாள் தலைவரான மறைந்த பேராசிரியர் சுதர்சன், “சேது கால்வாய்த் திட்டம்’, சுற்றுச்சூழலையும், மீனவர் வாழ்வுரிமையையும் அழித்து விடுமென ஓர் ஆய்வு அறிக்கையை 2004-ம் ஆண்டே வெளியிட்டார்.

* கட்டுமான காலத்திலும், செயல்படும் காலத்திலும் கடலை மாசுபடுத்தும் கப்பலிலிருந்து கசியும் எண்ணெய் துளிகள், கிரீஸ், பெயிண்ட், பிளாஸ்டிக் பைகள் போன்ற மாசுபடுத்தும் பொருள்கள், கடல் நீரோட்டத்தில் கலந்து இயற்கையைத் தொடர்ந்து அழித்து வரும்.

* கப்பல் போக்குவரத்தால், அந்நிய பொருள்களும், உயிர்களும், வங்காள விரிகுடாவிலிருந்து, இந்துமகா கடலுக்கும், திசைமாறிப் பயணமாகி, பகுதிசார் உயிரின வகைகளை, சிதறடித்துவிடும் ஆபத்து அதிகமாக உள்ளது.

* “பல்லுயிரியல் பாதுகாப்புப் பகுதி’ யாக இருக்கும் மன்னார் வளைகுடாவின் செழிப்பான இயற்கை சூழலும், அதன் விசித்திரமான வளமாக இருக்கும் தாவர இனமும், விலங்கு இனமும் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது.

* திட்டமிடப்பட்டுள்ள சிறிய கால்வாய் வழியாகச் செல்லும்போது, கப்பல்கள் முட்டிக் கொண்டு விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. அப்போது சிதறும் எண்ணெய், அடித்தள வண்ணப் பூச்சுகள் ஆகியவை கடல் வாழ் உயிரினங்களுக்கும், அவற்றின் வாழ்விற்கும் எதிரானவை.

* அமெரிக்கக் கடலில், 1990 முதல் 1999 வரை 50 ஆயிரம் எண்ணெய் சிதறல்களை, “எண்ணெய் அல்லாத இதர சரக்குகளை ஏற்றி வந்த கப்பல்களே’ ஏற்படுத்தியுள்ளன. அதன் விளைவாக அமெரிக்க கடலில் இப்போதெல்லாம் மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் மிகவும் குறைந்துவிட்டன.

* கடந்த 10 ஆண்டுகளில், இத்தகைய எண்ணெய் அல்லாத சரக்கு கப்பல்கள்தான், “சுற்றுச்சூழலை’ கடுமையாகப் பாதித்துள்ளன.

* பவளப்பாறைகள் “மன்னார் வளைகுடா’வின் சிறப்பு அம்சம். அவை கிடைக்கும் தீவுகள் ராமேசுவரத்திற்கும், தூத்துக்குடிக்கும் மத்தியில் உள்ளன. இவை “எண்ணெய் சிதறல்களால் அழிந்துவிடும்.

* கடல் ஆமைகள் இங்கே அதிகம் உள்ளன. கட்டுமானப் பணியே கூட அவற்றின் உயிரைப் பறித்துவிடும்.

* தூர்வாரி ஆழப்படுத்துதலால் ஏற்படும் கடல் நீரோட்ட பாதிப்புகளைப் பற்றி திட்ட ஆதரவாளர்கள் கவலைப்படுவதில்லை.

* தூத்துக்குடிக்கும், ராமேசுவரத்திற்கும் இடையில் இருக்கும் 21 தீவுகள்தான், சுனாமி தாக்குதலிலிருந்து அந்த இரண்டு கரையோர நகரங்களையும் காப்பாற்றியவை. அத்தகைய தீவுகள் இத்திட்டத்தால் அரிக்கப்பட்டு, அழியும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

* ஐ.நா.வின் ஆய்வில், இந்தியாவில் “பல்லுயிரியல் பாதுகாப்புப் பகுதிகளாக’ 13 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

“யுனெஸ்கோ’வின் அந்தத் தேர்வில், மிக முக்கிய பகுதிகளாக மூன்றை முடிவு செய்தார்கள். அவை நந்தாதேவி, நீலகிரி மற்றும் மன்னார் வளைகுடா. அதில் , “மன்னார் வளைகுடா’வின் பல்லுயிரியலை பாதுகாக்க’ ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டத்திற்கு (UNDP) பெருந்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களது பாதுகாப்பு முயற்சி, சேது கால்வாய்த் திட்டத்தால் வீணாகி விடுமென மத்திய அரசுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

* மத்திய அமைச்சரவை இதை “கிழக்கின் சூயஸ் கால்வாய்’ என அழைக்கிறது. வங்காள விரிகுடாவிலிருந்து, மன்னார் வளைகுடா செல்ல அதிகபட்சம் 24 மணிநேரம் மிச்சப்படும் என்பது அவர்களது வாதம்.

அத்தகைய வாதம் ஒரு மாயை என்பதை கப்பல் துறை நிபுணர்களும், பொருளாதார நிபுணர்களும் கூறுகிறார்கள்.

* பனாமா, சூயஸ் கால்வாய்கள் நிலத்தில் தோண்டப்பட்டவை. சேது கால்வாய் கடல் நீரில் தோண்டப்படுகிறது. பனாமாவும், சூயசும் 1.50 லட்சம் டன் எடையுள்ள கப்பல்கள் பயணிக்க உதவும். ஆனால் சேது கால்வாயில், வெறும் 30 ஆயிரம் டன் எடையுள்ள கப்பல்களை மட்டுமே அனுமதிக்க முடியும்.

ரூ. 2600 கோடி முதல் ரூ. 3500 கோடி வரை சேதுத் திட்டத்துக்குச் செலவாகும். இதுவரை ரூ. 300 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.

* ஜேகப் ஜான் என்ற பொருளாதார நிபுணர் மேற்கண்ட ஆய்வில், “திட்ட அறிக்கை நகல்’ அடிப்படையில் இத்திட்டம் பொருளாதார ரீதியில் லாபம் இல்லை என்கிறார்.

“எகனாமிக் அண்ட் பொலிடிகல்’ வீக்லி-2007, ஜூலை-2ல் வெளியான அவரது கட்டுரையில், இத்திட்ட ஆதரவாளர்களின் வாதம் தவறு என விளக்கியுள்ளார். “எந்த ஓர் இந்திய மேற்கு கடற்கரை நகரிலிருந்து, இந்திய கிழக்கு கடற்கரைக்குச் செல்லும் கப்பலும், சேது வழி செல்வதால் எந்தப் பலனும் பெறப்போவதில்லை. சேது கால்வாய் உள்ளே செல்லவும் திரும்ப வெளியே வரவும் , “பைலட் கப்பல்’ இரண்டு மணி நேரம் எடுக்கும். தனியான சர்வதேச வாடகைக் கட்டணம் கோரப்படும். கால்வாய் வழியே செல்வதற்கு தனிக் கட்டணமும் வசூலிக்கப்படும். இவை கப்பலின் செலவைக் கூட்டிவிடும் என்கிறார் அவர்.

* தூத்துக்குடியிலிருந்து புறப்படும் கப்பல்களுக்கு 22 மணி நேர பயணம் குறையும் என்றால், ஐரோப்பாவிலிருந்து புறப்படும் கப்பல்களுக்கு வெறும் 8 மணி நேரத்தை மட்டுமே மிச்சப்படுத்தும். ஆகவே, வெளிநாட்டுக் கப்பல்களுக்கு சேது கால்வாய் அதிகம் தேவைப்படாது. இதனால் திட்டத்திற்கு ஆகும் செலவைக்கூட ஈடுகட்ட முடியாமல் இழப்புதான் மிஞ்சும் என்கிறார் அவர்.

(கட்டுரையாளர்: மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்)

————————————————————————————————————————————–

சேது: அபாயத்தின் மறுபக்கம்!

ச.ம. ஸ்டாலின்


சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் “தமிழினத் துரோகிகள்’ என முத்திரை குத்தியிருக்கிறது திமுக அரசு.

உலகெங்கும் சூழலியல் மாற்றங்கள் குறித்த பேரச்சமும் விழிப்புணர்வும் விசுவரூபமெடுத்து வரும் நிலையில், இந்தியா தவிர்த்து வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு பிரமாண்டமான ஒரு திட்டத்தை இத்தனை சாதாரணமாக நிறைவேற்ற எத்தனிக்க முடியாது.

சூழலியல் மாறுபாடுகளிலேயே மிக அபாயகரமானதும் மர்மமானதும் கடல் சூழல்தான். இந்தியாவைப் பொருத்தவரையில் இதற்குச் சரியான உதாரணம் சேது சமுத்திரத் திட்டம். ஆழம் குறைந்த இந்திய – இலங்கை கடற்பகுதியில் கால்வாய் அமைப்பதன் மூலம் இலங்கையைச் சுற்றிச் செல்லும் கப்பல் போக்குவரத்தை கால்வாய் வழியே மேற்கொள்வதற்கான திட்டம் இது.

தமிழர்களின் நூற்றாண்டு கனவாகவும் மாபெரும் பொருளாதாரப் புரட்சித் திட்டமாகவும் புனையப்பட்டிருக்கும் இத்திட்டத்துக்கு 1860-ல் அடித்தளமிட்டவர் கமாண்டர் டெய்லர். தொடர்ந்து டென்னிசன், ஸ்டோர்டர்ட், ராபர்ட்சன், ஜான்கோட், பிரிஸ்டோ எனப் பலரால் இத்திட்டத்துக்கான சாத்தியம் குறித்து சாதகமான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டபோதும் ஆங்கிலேயே அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தயக்கம் காட்டியது.

சுதந்திர இந்தியாவில் ஏ. ராமசாமி முதலியார், சி.வி. வெங்கடேசுவரன், நாகேந்திர சிங், எச்.ஆர். லட்சுமிநாராயணன் என அனைவரும் சாதகமான அறிக்கைகளையே அளித்தனர். இவர்கள் அனைவரின் அறிக்கைகளிலும் உள்ள முக்கிய ஒற்றுமை – சூழலியல் பிரக்ஞை இல்லாததுதான்.

இத்தகைய திட்டங்களைச் செயலாக்கும் முன் தீவிரமான பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், சேது சமுத்திரத் திட்டத்தைப் பொருத்தவரையில் அத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. கடலியல் விஞ்ஞானிகள், மீனவர்களின் யோசனைகள் ஏற்கப்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால் நம் விஞ்ஞானிகளின் வாய்கள் அரசால் இறுகக் கட்டப்பட்டுள்ளன. மீனவர்கள் ஊமைகளாக்கப்பட்டுள்ளனர். சூழலியல் சார்ந்து இங்கு மேற்கொள்ளப்பட்ட ஒரே ஆய்வு “நீரி’ (தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம்) மேற்கொண்ட விரைவு சூழல் தாக்கம் குறித்த ஆய்வு மட்டுமே. அதுவும் முழுமையானது அன்று; கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. கடல் வெறும் நீர்ப்பரப்பன்று; அது ஓர் உலகம். கடல் எனக் குறிப்பிடப்படுவது அதனுள் இருக்கும் ஆயிரமாயிரம் உயிரினங்களையும் அற்புதங்களையும் அபாயங்களையும் உள்ளடக்கியதுதான்.

சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படும் மன்னார் வளைகுடா பகுதி ஆசியாவின் உச்சபட்ச பராமரிப்பு கோரும் கடற்கரை உயிரியக்கப் பகுதிகளில் ஒன்று. 5,000-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் இருந்த இப்பகுதியில், ஏற்கெனவே, கடல் சூழல் மாசால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினங்கள் அழிந்துவிட்டன. தற்போதுள்ளதாகக் கருதப்படும் 4000 உயிரினங்களில் 1500 வகைகள் அருகிவரும் வகைகளாகக் கண்டறியப்பட்டவை.

மேலும், இப்பகுதிக்கு கிடைத்துள்ள பெருங்கொடை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதுடைய பவளப்பாறைகள், படிமங்கள். பவளப்பாறை இனங்களில் உலகிலுள்ள 82 சத வகையினங்கள் இங்கு காணப்படுகின்றன.

இத்திட்டத்தால் கடலின் நீரியங்குதிசை, நீரோட்டத்தின் ஒழுங்கு, அலைகளோட்டம், சூரிய ஒளி ஊடுருவல் மாறுபடும். இதன் தொடர்ச்சியாக உயிரினங்களின் வாழ்வியல்பு, உறைவிடம், இடப்பெயர்வு பாதிக்கப்படும்.

சூழலியல் முக்கியத்துவமிக்க இப்பகுதி பேராபத்தானதும்கூட. வானிலையாளர்களால் அதிக கவனத்துடன் கண்காணிக்கப்படும் இப்பகுதி இயற்கைச் சீற்றங்களுக்கு அதிகம் இலக்காகும் அபாயமிக்க பகுதி. இங்கு ஏற்படும் எந்த மாற்றமும் தென்னிந்திய கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இத்தகைய ஒரு பகுதியில் சேது சமுத்திரத் திட்டம் போன்ற அசுரத்தனமான திட்டங்களை மேற்கொள்வதற்கும் அணுகுண்டுகளை வெடித்துப்பார்ப்பதற்கும் அதிக வேறுபாடில்லை.

ஒருபுறம், அடிப்படையிலேயே நகர்வுத்தன்மை வாய்ந்த கடலில் கால்வாயின் நிரந்தரத்தன்மை குறித்து தொழில்நுட்ப ரீதியிலான கேள்வி எழுப்பப்படுகிறது. மறுபுறம், இத்திட்டத்துக்கான செலவு, பராமரிப்பு, சுங்க வரி ஆகியவற்றின் அடிப்படையில் இத்திட்டம் பொருளாதார ரீதியாக லாபகரமானதாக அமையுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இன்னொருபுறம் லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில், சூழலியலில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயமிக்க இத்திட்டத்தைச் செயலாக்கத் துடிப்பது ஏன் என்ற கேள்விக்கு இன்றளவும் அறிவியல்பூர்வமான – நேர்மையான பதில் அரசிடம் இல்லை.

Posted in Adams, Analysis, Aquarium, Bay, Bay of Bengal, Boats, Bribery, Bridge, Carbon, Catamaran, Commerce, Consumption, coral, Corruption, Eco, Ecology, Economy, emissions, energy, Environment, Exports, Facts, Fish, Fisheries, Fisherman, fishermen, Fishery, Fishing, Freight, Gas, Hindu, Hinduism, Hindutva, Impact, Information, infrastructure, kickbacks, Leaks, Life, Mannaar, Mannar, Money, Nature, Nautical, Ocean, oil, Palk Straits, Petrol, Pollution, Project, Ram, Ramar, Rameshvaram, Rameshwaram, Ramesvaram, Rameswaram, RamSethu, Reefs, Religion, Science, Scientific, Sea, Seafood, Sethu, Setu, Ships, Straits, Study, Tourism, Tourists, Transport, Transportation, Trawlers, Tsunami, Tuticorin, UN, UNDP, UNESCO, Water | 1 Comment »

Assam violence – Plantation workers’ protests continue

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007

கொஞ்சம் பொறுங்கள்

அசாம் மாநிலத்தில், குவாஹாட்டியில் ஊர்வலம் நடத்திய அசாம் ஆதிவாசி மாணவர்கள் சங்கத்தினரை பொதுமக்கள் தாக்கியதில் பலர் இறந்துள்ளனர். ஒருவர் மட்டுமே இறந்ததாக அரசு சொல்கிறது. ஆனால் பத்திரிகைகளும் ஊடகங்களும் 12 பேர் இறந்ததாகச் சொல்கின்றன.

பழங்குடியினரான தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று கோரிய இந்த ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், 60 பேருந்துகளில் இவர்கள் வந்திறங்கியபோதே காவல்துறை தடுத்திருக்க வேண்டும். காவல்துறையும் மாநில அரசும் அதைச் செய்யவில்லை.

ஊர்வலத்தில் சில இளைஞர்கள் கடைகளையும் சாலையில் இருந்த வாகனங்களையும் கல்லெறிந்து சேதப்படுத்தியதால்தான் பொதுமக்கள் இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அசாம் மாநிலத் தேயிலைத் தோட்டங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காததால் நீரினால் பரவும் நோய்களால் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ள சூழலில், தொழில் பின்னடைவு காரணமாகத் தேயிலை நிறுவனங்கள் தங்கள் மருத்துவமனைகளைப் புறக்கணித்துவிட்டதால் மருத்துவத்துக்கும் வழியில்லாத சூழலில், நகர்ப்புறத்தில் கிடைக்கும் வசதிகள் மீது ஏற்பட்ட எரிச்சல்தான் இந்த வன்முறைக்கு காரணம். அதற்காக இதை நியாயப்படுத்த முடியாது.

ஆனால், இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த வேண்டியது காவல்துறையே தவிர, பொதுமக்கள் அல்ல. மேலும், வலிய வன்முறையில் ஈடுபடும் கும்பலுக்கு அடிபடாமல் தப்பிச் செல்லும் போக்குகள் தெரியும். காவல்துறையிடமும் பொதுமக்களிடம் அடிபடுவோரில் பெரும்பாலோர், வியூகத்தைவிட்டு வெளியேறும் வழி அறியா அபிமன்யு-க்கள்தான்.

சட்டத்தை யார் வேண்டுமானாலும் கையில் எடுத்துக் கொள்ளலாம் என்ற சூழ்நிலையில், உண்மையான குற்றவாளிகளைவிட அப்பாவிகளும், மிகச் சாதாரண குற்றம் புரிந்தவர்களுமே கொடுமைக்கு ஆளாகிறார்கள். தம்மைவிட மெலிந்தவர்கள் சிக்கும்போது அங்கே மனிதம் விரைவில் மறைந்து போகிறது.

பிடிபட்ட திருடர்களைக் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துக் கொல்வதும், மந்திரக்காரி என்று கருதப்படும் பெண்ணின் மீது கல்லைப்போட்டு சாகடிப்பதும், பேருந்தில் திருடியதாகக் கருதப்படும் பெண் ஆடைக்குள் எந்தப் பொருளையும் ஒளித்து வைத்திருக்கவில்லை என்பதை பொதுஇடத்திலேயே நிரூபிக்கச் சொல்வதும்… என எல்லாமும் உடைமை இழந்தவனின் இயல்பான மனவெழுச்சியாக எடுத்துக்கொளளப்படுகிறது. சமுதாயத்தினுடைய தார்மிகக் கோபத்தின் வெளிப்பாடாக “மதிக்க’வும் படுகிறது.

ஒரு பாம்பு அல்லது தேளை அடித்துக் கொல்வதைப் போன்ற மிக இயல்பாக நடத்தப்படும் இந்த வன்மத்தை சமூகத்தின் கோபமாக நியாயப்படுத்த முடியாது. சமூகம் என்பது நாலு பேர் என்பதற்காக, நாலு பேரின் கோபம் சமுதாயத்தின் கோபமாக மாறிவிட முடியுமா என்ன?

அரசு அலுவலகங்களிலிருந்து அரசியல் கட்சிகள் வரை நிலவும் ஊழல்களின் மீதும், அரசாங்க செயல்பாடுகளில் காணப்படும் முறைகேடுகளின் மீதும் சமுதாயத்துக்கு ஏற்படாத கோபம் இங்குமட்டும் எப்படி சாத்தியமாகிறது? அல்லது, அவற்றின் மீது கோபம் கொள்ள முடியாத இயலாமைதான் இந்த எளிய குற்றவாளிகள் மீது காட்டப்படுகிறதா? கணவனை உதைக்க முடியாத இயலாமையில் குழந்தையை அடித்து நொறுக்கும் தாயின் உளவியல் கோளாறு போன்றதுதானா இவையும்?

சட்டத்தைத் தனியொரு மனிதன் அல்லது ஒரு கும்பல் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதும், அதை மீறிச் செயல்பட்டால் அதிகம் பாதிக்கப்படப்போவது தாங்கள்தான் என்பதும் புரியும் வரை இதுபோன்ற சம்பவங்கள் தொடரத்தான் செய்யும்.

பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லாத பேருந்தை நிறுத்தி அதன் ஓட்டுநரை அடித்தால், அந்த வழித்தடத்தில் பேருந்தே வராது என்கிற உண்மை புரிகிறபோது, அந்தக் கோபம் சாலைமறியலாக மாறி, ஒரு மணி நேரத்தில் தணிகிறது. இதேபோன்ற புரிதலை சமூகத்தின் எல்லா நிலைகளிலும் ஏற்படுத்த முடியும். அதைச் செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

குற்றம் புரிந்தவர் எத்தகைய தவறைச் செய்திருந்தாலும், சட்டம்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கான அதிகாரம் இல்லாத நபர் சட்டத்தைத் தன் கையில் எடுத்தால் அது கையைச் சுடும் என்பது உணர்த்தப்பட வேண்டும்.

Posted in adivasis, Assam, Bandh, clash, Clashes, dead, Disease, Drink, Employment, Guwahathi, guwahati, Hygiene, Infections, Jobs, Law, Mills, Order, Police, Protests, Reservations, SC, ST, Tamil, Tea, Tribals, Violence, Water, workers | Leave a Comment »

Dr MGR Engineering College & Research Institute – AC Shanumgam Educational Organizations to pay 80 lakhs

Posted by Snapjudge மேல் நவம்பர் 16, 2007

ஏ.சி.சண்முகம் கல்வி நிறுவனம் ரூ.80 லட்சம் செலுத்த உத்தரவு

சென்னை: புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு சொந்தமான கல்வி நிறுவனம் ரூ. 80 லட்சம் வாடகை பாக்கியை செலுத்தினால், வீட்டு வசதி வாரிய வீடுகளில் இருக்கும் மாணவர்களை காலி செய்யக் கூடாது என்று சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. சென்னையை அடுத்த மதுரவாயலில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு சொந்தமான டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இதன் சார்பில் பொறியியல் கல்லுõரி, கலை மற்றும் அறிவியல் கல்லுõரி என சில கல்லுõரிகள் செயல்பட்டு வருகின்றன.

2005ம் ஆண்டு டிசம்பரில் பெய்த அடை மழையினால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மதுரவாயலில் உள்ள இந்த கல்லுõரி விடுதியை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மாணவர்களை அங்கிருந்து காலி செய்து முகப்பேரில் உள்ள வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி வீடுகளில் தங்க வைக்கப்பட்டனர். கல்லுõரி கட்டடங்களில் சில பகுதிகள் ஆக்கிரமிப்பில் இருப்பதை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து அதனை இடித்தனர்.

தற்போது எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

கூவம் ஏரி படுகையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் விதமாக எங்கள் கல்லுõரியின் சோதனைக் கூடம், விடுதி கட்டடங்கள் இடிக்கப்பட்டன. விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு மாற்று இடத்தை அளிக்க அப்போதைய முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி முகப்பேர் ஏரி திட்டத்தில் வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகளில் மாணவர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 250 நடுத்தர குடியிருப்புகள் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டன.

மாணவர்கள் தங்கியிருந்த வீடுகளில் 158 குடியிருப்புகளை விலைக்கு வாங்க விருப்பம் தெரிவித்து வீட்டு வசதி வாரியத்துக்கு கடிதம் எழுதினோம். விற்கும் வரை நியாயமான வாடகையை நிர்ணயிக்க வேண்டும் என்றும், 200708ம் கல்வியாண்டு முடியும் வரை மாணவர்கள் அங்கேயே தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினோம். 152 குடியிருப்புகளுக்கும் மாதம் வாடகையாக 12 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் என்றும், மொத்த பாக்கித் தொகை ஒரு கோடியே 54 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று, வீட்டு வசதி வாரியம் எங்களுக்கு கடிதம் அனுப்பியது.

தற்போது மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளை காலி செய்யுமாறு வீட்டு வசதி வாரியம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளோம். வாரியத்தின் உத்தரவு தன்னிச்சையானது. அதனை ரத்து செய்ய வேண்டும். காலி செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. வழக்கை நீதிபதி ஜோதிமணி விசாரித்தார்.

நான்கு வாரங்களுக்குள் ரூ.80 லட்சத்தை வீட்டு வசதி வாரியத்துக்கு மனுதாரர் செலுத்தினால், வீடுகளை காலி செய்ய தடை விதிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார். மனுவுக்கு டிசம்பர் மூன்றாம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வீட்டு வசதி வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Posted in Bhavans, Bhawans, Chennai, College, Cooum, Coovam, Courts, Dr MGR, Education, encroachments, Engineering, Floods, Homes, Hostels, Houses, Housing, Institute, Irrigation, Judges, Justice, Koovam, Lake, Land, Law, Madras, MGR, Natural, Order, Rain, Research, River, Sanumgam, Shanumgam, Shanumgham, Slums, Stay, Students, univ, University, Water | Leave a Comment »

Simpsons – Vedanthangal in Chennai: A retreat for migrating birds (North Madras)

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

சுற்றுச்சூழல்: சென்னையில் ஒரு வேடந்தாங்கல்!

சென்னை என்றாலே ஒருவருக்கு என்ன நினைவுக்கு வரும்?

போக்குவரத்து நெரிசல். புழுதிபடிந்த சாலைகள். வாகனப்புகை நடுவில் சிக்கித் திணறும் மனிதர்கள். வீடுகளில் தோட்டம் வைக்க முடியாத அளவுக்கு இட நெருக்கடி. சாலையில் 30 நிமிஷம் நடந்தால் 300 வகையான மாசுகள் படிந்துவிடும் அளவுக்கு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசுகள். நடக்கவே முடியாத இட நெருக்கடி. ஏதோ கொஞ்சம் வசதியானவர்கள் வீடுகளில் வேண்டுமானால் கொஞ்சம் பச்சைப் பசேல் செயற்கைப் புல் வெளிகளைப் பார்க்கலாம்.

மாநகராட்சியின் புண்ணியத்தால் எங்கேயாவது தென்படும் பூங்காக்கள்.

இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவில் நகர்ப்புறங்களில் விழுந்துவிட்ட இடைவெளி என்னவோ அதிகரித்துக் கொண்டே போகிறது.

அதிலும் வடசென்னையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். எங்கும் குப்பைகள். தெருவில் வழிந்தோடும் சாக்கடை. தொழிற்சாலைகளின் புகை மண்டிய வானம். நெடி வீசும் காற்று. அவசர அவசரமாக வேலைக்குச் செல்லும் மனித இயந்திரங்கள். மனிதர்கள் நிம்மதியாக வாழ்வது சந்தேகம் என்று கூறும் அளவுக்கு நெருக்கடி. புறாக் கூண்டு குடியிருப்புகள்.

ஆனால் இந்த வடசென்னைப் பகுதியில் வனம் போல் ஒரு பகுதி; அங்கே பல வெளிநாட்டுப் பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றன. ஆம்! இங்கே ஒரு பறவைகள் சரணாலயம் இருக்கிறது. நம்புவதற்குக் கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் இது உண்மை.

நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள். ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் நீர்ப்பறவைகள். வேடந்தாங்கல் எல்லாருக்கும் தெரியும். ஆனால் சென்னையில் வேடந்தாங்கல் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆம் அது இருப்பது சென்னை செம்பியம் பகுதியில்தான்.

தொழிற்சாலை என்றாலே அது சுற்றுச் சூழலைக் கெடுக்க வந்தது என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை நீங்கள் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். ஆம் இந்த சென்னை வேடந்தாங்கல் உருவானதே ஒரு தொழிற்சாலையால்தான்.

நிலம் கிடைத்ததா? அதில் தொழிற்சாலையைத் தொடங்கினோமா? லாபம் சம்பாதித்தோமா? என இருக்கும் பல தொழிற்சாலை நிர்வாகங்களின் மத்தியில் வித்தியாசமாக, கிடைத்த நிலத்தில் இருந்த குளங்களை நல்லபடியாகப் பாதுகாத்து, தொடர்ந்து பராமரித்து வந்தது சிம்சன் நிறுவனம். அதன் விளைவாக வந்து சேர்ந்தனர் பல வெளிநாட்டுப் பறவை விருந்தினர்கள்.

முதன் முதலில் 1978-ல் இங்கு “வக்கா’ எனப்படும் இரவில் உணவு தேடும் அரிய வகை பறவைகள் இருப்பதைத் தற்செயலாகப் பார்த்தனர். அடடா! நம் பகுதியை நாடி பறவைகள் வர ஆரம்பித்துவிட்டனவே! என ஆச்சரியப்பட்ட தொழிற்சாலை நிர்வாகம் இங்குள்ள 2 குளங்களையும் அட்டகாசமாகப் பாதுகாக்க வேண்டும் என்று முடிவெடுத்தது.

சென்னையில் மழை வருவதே அக்டோபர், நவம்பர் மாதங்களில்தான். அதிகம் போனால் ஒரு பத்துநாட்கள் பெய்யும். அப்புறம் ஆண்டு முழுதும் வாட்டி வதைக்கும் வெயில்…வெயில்…தண்ணீர் பஞ்சம்…பற்றாக்குறை.

சில வருடங்களில் இந்தப் பத்து நாள் மழையும் கூட ஏமாற்றிவிடும். மக்கள் குடிக்கத் தண்ணீரின்றி படும்பாடு சொல்லி மாளாது. அப்படிப்பட்ட சிங்காரச் சென்னை மாநகரில் ஒரு குளத்தை வற்றாமல் பாதுகாப்பது என்பது சாதாரண விஷயமா? என்ன?

இந்த வளாகத்தில் பெய்யும் மழை நீரில் ஒரு துளி கூட வீணாகாமல் அனைத்தையும் சேகரித்து இந்தக் குளங்களுக்கு வழங்கும் சிறந்த மழை நீர் சேகரிப்பு அமைப்பு இங்கு செயல்படுகிறது.

அதன் விளைவாக – முறையான இயற்கை வழி பராமரிப்பின் காரணமாக – அந்த 2 குளங்களும் தற்போது பறவைகள் சரணாலயமாக மாறியுள்ளன. சென்னையில் மிக வேகமாக அழிந்து வரும் “வக்கா’ எனப்படும் இரவில் உணவு தேடும் அரியவகை கொக்கு, முக்குளிப்பான், பெரிய நீர்க்காகம், சிறிய நீர்க்காகம், கொண்டை நீர்க்காகம், பாம்புதாரா, சின்ன கொக்கு, உன்னி கொக்கு, குருட்டு கொக்கு, செங்குருகு, கம்புள் கோழி, தாழைக்கோழி, நாமக்கோழி, நீர்க்கோழி, நில தாழைக்கோழி, மேற்கத்திய பொன் முதுகு மரங்கொத்தி போன்ற 110 வகை பறவைகள் இங்கு வந்து இளைப்பாறிச் செல்கின்றன.

இவற்றில் இரவில் உணவு தேடும் வக்கா உள்ளிட்ட சில வகைப் பறவைகள் இந்த குளங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள மரங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன.

இவை மட்டுமல்லாது ஐரோப்பா, இலங்கை போன்ற அயல் நாடுகளில் இருந்து “பிட்டா’ உள்ளிட்ட அரிய வகை பறவைகளும் இங்கு வந்து செல்கின்றன.

“”சிம்சன் நிறுவனத்தால் சுமார் 29 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் இந்த குளங்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 22 ஆயிரம் பறவைகள் இருந்தன. அப்போது, பி.என்.எஸ். எனப்படும் மும்பையை சேர்ந்த அமைப்பு சார்பில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில் இந்த தகவல் தெரியவந்தது. இதையடுத்து, இந்த இடம் உலக அளவிலான பறவைகள் சரணாலயங்கள் பட்டியலில் இடம் பெற்றது” என்றார் செம்பியம் எஸ்டேட் மேலாளர் பி. சிவராமமூர்த்தி.

“வக்கா’ எனப்படும் பறவைகள் மட்டும் 8 ஆயிரத்துக்கும் அதிகமாக அப்போது இருந்தனவாம்.

நிறையப் பேருக்கு இப்படியோர் அதிசயம் இருப்பது தெரியாது என்றாலும் தெரிந்தவர்கள் இங்கு வந்து குவிவது சாதாரண நிகழ்வு.

இந்த சரணாலயம் இருக்கும் செம்பியம் பகுதி மட்டுமல்லாது சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு வந்து கண்டுகளிக்கின்றனர். இதற்கு நிறுவனத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

இங்கு வந்து இந்த குளங்களையும், அதில் தங்கும் பறவைகளையும் பார்த்து செல்கின்றனர்.

இந்தப் பறவைகளின் பழக்க வழக்கங்கள், நீர் நிலைகளின் சுற்றுச்சூழல் தன்மை போன்றவை குறித்து நீர்ப்பறவைகள் ஆர்வலர்கள் மற்றும் சென்னை கால்நடை அறிவியல் கல்லூரி மாணவர்களும் ஆராய்ச்சி கட்டுரைகளை உருவாக்கியுள்ளனர்.

110 வகையான பறவைகள் வந்து சென்ற இந்தப் பகுதியில் தற்போது 10, 12 வகைகளை சேர்ந்த சில நூறு பறவைகள் மட்டுமே வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தக் குளங்கள் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி இருந்த மற்ற நீர் நிலைகள் மிக வேகமாக அழிந்து வரும் நிலையில் இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருவது கவலை தரக்கூடிய ஒன்றாகும்.

“”இந்த இடத்தைச் சிறப்பாகப் பராமரிக்க விரும்புகிறோம், இது தொடர்ந்து நடைபெறும், பறவைகள் வந்தாலும், வராவிட்டாலும் இந்தக் குளங்கள் இதே அளவு முக்கியத்துவத்துடன் சிறப்பாகப் பராமரிக்கப்படும்” என்று உறுதியாகக் கூறுகிறார்கள் சிம்சன் நிர்வாகத்தினர்.

சென்னை மக்கள் தொழில் வளர்ச்சி, புதிய குடியிருப்புகள் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இவர்களே பறவைகளைப் பார்க்க வேண்டும் என்றால் பல கிலோமீட்டர் தூரம் சென்று வேடந்தாங்கலை ரசிப்பார்கள். நம்மிடம் அதுபோன்ற இடம் இல்லையே என அப்போது அங்கலாய்ப்பார்கள். இதற்குக் காரணம் இப்படியோர் இடம் இருப்பது பலருக்கும் தெரியாது. இந்தச் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் உள்ள பிற நீர்நிலைகளைக் கான்கிரீட் வனங்களாக மாற்றாமல் இருந்தால்தான் இங்கு பறவைகள் தொடர்ந்து வரும்.

ஆனால் செம்பியம் வளாகத்துக்கு அருகில் இருந்த மாதவரம் ஏரி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

“சிம்சன்’ நிறுவனம் மட்டும் இந்தப் பகுதியைத் தொடர்ந்து பறவைகள் சரணாலயமாக வைத்திருக்க பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது.

ஆனால் நீர் நிலைகளை அரசும், மக்களும் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால் பலருக்கும் தெரியாத இந்தப் பறவைகள் சரணாலயம் இல்லாமலேயே போய்விடும் அபாயம் உள்ளது.

கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகையில் அமைந்த இந்தக் குளிர்வனம் காய்ந்து போவதை யார்தான் கற்பனை செய்ய முடியும்?

Posted in Chennai, employees, Environment, Factory, Industry, job, Kathir, Lakes, Madras, migration, Migratory, Nature, Protection, Rains, Rainwater, retreat, Simpsons, Source, Stream, Summer, Tanks, Vedandhaangal, Vedandhangal, Vedanthaangal, Vedanthangal, Water, Winter, workers | Leave a Comment »

New Delhi hosts World Toilet Summit: India’s sanitation struggle

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007

தில்லியில் உலக கழிவறை வசதி மாநாடு துவங்கியது

உலக மக்களுக்கு சுகாதாரமான கழிவறை வசதி வழங்கும் சவாலை எப்படி எதிர்கொள்வது, 2015-ம் ஆண்டில் அனைவருக்கும் சுகாதாரமான கழிவறை வசதி செய்து கொடுப்பது என்று ஐ. நா. மன்றம் நிர்ணயித்துள்ள புத்தாயிரமாண்டின் வளர்ச்சி இலக்கை அடைவது எப்படி என்பது குறித்து விவாதிப்பதற்காக, உலக கழிவறை வசதி மாநாடு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் புதன்கிழமை துவங்கியது.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், சீனா, ரஷ்யா, இலங்கை, இந்தியா உள்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் ஒத்துழைப்புடன், புதுடெல்லியை மையமாகக் கொண்ட, சுலாப் இண்டர்நேஷனல் என்ற தன்னார்வ அமைப்பு இந்த மாநாட்டை நடத்துகிறது.

உலக அளவில், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது எவ்வளவு பெரிய சவாலாக இருக்கிறதோ, அதே அளவுக்கு அனைவருக்கும் சுகாதாரமான கழிப்பறை வசதி செய்து கொடுப்பதும் பெரிய சவாலாக உள்ளது.

உலக மக்கள் தொகையில் 40 சதவீதம், அதாவது 2.6 பில்லியன் மக்கள், கழிவறை வசதி இல்லாமல், திறந்த வெளிகளிலும் சுகாதாரமற்ற இடங்களிலும் தங்கள் இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவில் மட்டும் 700 மில்லியன் மக்கள் முறையான கழிவறை வசதி இல்லாமல் இருக்கிறார்கள்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ போதிய கழிவறை வசதி உள்ள நிலையில், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில்தான் சுகாதாரமான கழிவறை என்பது பெரும் பிரச்சினையாக உள்ளன. ஆனால், வளரும் நாடுகளில் அனைவருக்கும் கழிவறை வசதி செய்து தருவதற்கு போதிய தொழில்நுட்பமும், நிதி ஆதாரமும் பெரும் பிரச்சினையாக உள்ளது.

Posted in Bathrooms, Clean, Conf, Conference, Crap, Dalit, Delhi, Disease, Disposal, Hygiene, hygienic, India, Infections, Ladies, Morning, Oppressed, Pay, Railway, Railways, Restrooms, sanitation, Scarcity, She, Shit, Shulab, Shulabh, squat, struggle, Sulab, Sulabh, Sulabh International, Summit, Toilet, Trains, Urine, Use, Water, Women | Leave a Comment »