Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Nutrition’ Category

MG Ramachandran: Politics, Cinema, Personality – MGR Biosketch by Panruti Ramachandhran

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

மறைந்தும் மறையாத தலைவர்

பண்ருட்டி ராமச்சந்திரன்

எந்தத் தலைவர்களும் பதவிக்குச் சென்றால் செல்வாக்கு குறைவதுதான் இயல்பு. ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை பதவிக்குச் சென்ற பிறகும்கூட, அவர் செல்வாக்கு வளர்ந்த வண்ணம்தான் இருந்தது.

அவர் ஆட்சியில் இருந்தவரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. அவர் மறைந்து இருபது ஆண்டுகள் சென்ற பிறகும்கூட, அவரது செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை அண்மையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

இருந்தபொழுது மட்டுமல்ல, மறைந்த பிறகும் மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை எவ்வாறு எம்.ஜி.ஆர். பெற்றார் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியதாகும். அவருக்கும் மக்களுக்கும் இருந்த பிடிப்பு மகத்தானது. அவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காலத்தில் இதை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

ஒருமுறை சென்னையிலிருந்து மதுரைக்கு காரில் சென்றோம். திருச்சியை அடைந்த பிறகு எம்.ஜி.ஆர். ஒரு பரீட்சையில் இறங்கினார். காரில் போகும்பொழுதே தொப்பியையும், கறுப்புக் கண்ணாடியையும் கழற்றி வைத்துவிட்டார். வழிநெடுக கூடியிருந்த மக்கள் எம்.ஜி.ஆர். எங்கே என்று தேடினார்களேயொழிய ஆர்ப்பரிக்கவில்லை. பிறகு மேலூரை நெருங்கியபொழுது தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்து கொண்டார். உடனே வழக்கம்போல் இருபுறமும் மக்கள் ஆரவாரம் செய்தனர். அவர் உடனே என்னிடத்தில் “”என்னை விட என் தொப்பிக்கும், கறுப்புக்கண்ணாடிக்கும் தான் மரியாதைபோலும்” என்று சொல்லி சிரித்தார்.

“புகழ்பெற்ற நடிகராக விளங்குவதால் மக்கள் செல்வாக்கா’ என்று கேட்டேன். அதற்கு அவர், “நடிகர்களாகயிருந்தால் மக்களுக்கு எளிதில் அடையாளம் தெரியும். ஆனால் மக்களின் மரியாதையைப் பெறுவதன் மூலமே செல்வாக்கைப் பெற முடியும். அதற்கு மக்கள் நம் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்கவேண்டும்’ என்றார்.

நடிகர்கள் நாடாள ஆசைப்படுவது நியாயமா என்று கேட்பவர்களுக்கு இதுவே சரியான பதில்.

எம்.ஜி.ஆர். மக்களை எவ்வாறு நேசித்தாரோ, அதேபோல் மக்களும் அவரை நேசித்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. குறிப்பாக அவர் நோய்வாய்ப்பட்டபொழுது ஜாதி, மதம் பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் இறைவழிபாடு நடத்தியது இதுவரை வரலாறு காணாத காட்சியாகும். “”நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற” என்ற பாட்டு ஒலி நாடு முழுதும் கேட்காத நாளில்லை.

1984-ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கிறாரா? உணர்வுடன் இருக்கிறாரா? என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் தமிழக மக்கள் சிறிதும் தயக்கமின்றி அவரை வெற்றிபெறச் செய்தனர்.

அமைச்சரவைக் கூட்டத்திலும்கூட எந்தத் திட்டங்கள் ஆனாலும் பட்ஜெட்டுகள் போடுவது என்றாலும் பாமர மக்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று பார்த்தே ஒப்புதல் தருவார். “மத்திய, மாநில அரசுகளுக்கு வரவு, செலவில் பற்றாக்குறை ஏற்பட்டால் மக்களின் மீது வரிபோடலாம் அல்லது வங்கிகள் மூலம் கடன் பெறலாம். ஆனால் குடும்பஸ்தனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அவன் எங்கே போவது? ஆகவே அரசின் திட்டங்கள் பாமர மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வகையில் அமைய வேண்டும்’ என்பார்.

அரிசி விலையையும், பஸ் கட்டணத்தையும் உயர்த்த ஒப்புக்கொள்ள மாட்டார். குடிசைக்கு ஒரு விளக்கு திட்டம், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், சிறு விவசாயிகளுக்கு பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் போன்ற பல திட்டங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. மக்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை. அரசின் நிதிநிலை சரியானால் போதும் என்ற கொள்கையை அவர் ஏற்றுக்கொண்டதே இல்லை. அதனாலேயே அவரது ஆட்சி ஏழைகளின் ஆட்சியாகத் திகழ்ந்தது.

ஒருமுறை அறிஞர் அண்ணாவுடன் எம்.ஜி.ஆர். சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்றார். இது எம்.ஜி.ஆரே சொன்னது. அண்ணா வழக்கம்போல் காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்தார். எம்.ஜி.ஆர். பின் சீட்டிலிருந்தார். பெரம்பலூருக்கு அப்பால் சென்றபொழுது காரை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அப்பொழுது அந்தப் பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் காரிலிருந்த கொடியைப் பார்த்துவிட்டு நேராக முன்சீட்டில் உட்கார்ந்து இருந்த அண்ணாவிடம் அவர் அண்ணா என்று தெரியாமல், எம்.ஜி.ஆர். வந்திருக்கிறாரா என்று கேட்டார்கள். அதற்கு அறிஞர் அண்ணா கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் இதோ பின்னால் இருக்கிறார் என்று அடையாளம் காட்டினார்.

எம்.ஜி.ஆர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனாராம். அண்ணா எத்தகைய தலைவர் என்பதையும் தன்னோடு இருப்பவர்கள் தன்னைவிடச் செல்வாக்காக இருக்கும்பொழுது பொறாமைப்படுவதற்குப் பதிலாகப் பெருமைப்பட்டவர் என்றும் குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆர். இறுதிவரை அண்ணா பெயரை உச்சரிக்காமல் எதையும் செய்ததில்லை. ஒரு தலைவருக்கு இலக்கணம் அறிஞர் அண்ணா என்றால், தகுதியான வாரிசுக்கு இலக்கணம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்தான்.

எம்.ஜி.ஆர். இளமையில் வறுமையைச் சந்தித்தவர். பொதுவாக, வறுமை கொடிது. இளமையில் வறுமை அதைவிடக் கொடியது. தனது அண்ணனும், தானும் சிறுவயதில் கும்பகோணத்தில் இருந்தபொழுது மூன்று நாள்கள் பட்டினி கிடந்ததாகவும் பரிதாபப்பட்டு எதிர்வீட்டைச் சேர்ந்த ஒரு தாய் கொஞ்சம் அரிசியை புரட்சித்தலைவரின் தாயிடம் தந்து குழந்தைகளுக்காவது கஞ்சி காய்ச்சி கொடுக்கும்படிச் சொன்னாராம்.

அன்று அந்த எதிர்வீட்டுத் தாய் செய்த உதவியால் தான் இன்று உங்களுக்கு ஒரு எம்.ஜி.ஆர். கிடைத்துள்ளார் என்று அவரே கூட்டங்களில் பேசியுள்ளார். இந்த அனுபவத்தால் தான் தமிழ்நாட்டில் பிறக்கும் எந்த குழந்தையும் பட்டினி கிடக்கக்கூடாது என்றும் ஒருவேளையாவது உணவுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கருதியதால்தான் சத்துணவுத்திட்டம் உதயமாயிற்று.

சத்துணவுத்திட்டம் கொண்டு வரவேண்டுமென்ற அவரது கருத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் கூட சில அமைச்சர்களுக்கு சந்தேகம் தீரவில்லை. இத்திட்டத்தால் பணம் செலவாகுமே தவிர பயன் இருக்காது என்றே பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் ஊழல் பெருகும் என்றும் சொன்னார்கள். ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்தியே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

மூக்கு என்று இருந்தால் சளிபிடிக்கத்தான் செய்யும்; ஒரு திட்டம் என்றால் சேதாரங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காகத் திட்டத்தைக் கைவிட வேண்டியது இல்லை என்று தீர்மானித்தோம்.

இந்தத் திட்டம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டபொழுது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் சத்துணவுத் திட்டத்திற்குப் பதிலாக ஏழைகளின் குடும்பத்திற்கு குறிப்பிட்ட தொகையை உதவியாக வழங்கலாம் என்றார். அப்படி வழங்கினால் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைப்பதற்கான உத்தரவாதம் இல்லையே என்று அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் அந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மூன்று நன்மைகள் ஏற்பட்டன. ஒன்று அனைத்து பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பதால் சமத்துவம் ஏற்பட்டது. இரண்டு, படிக்கிற காலத்தில் பள்ளியில் பிள்ளைகளுடைய இடைநிற்றல் தவிர்க்கப்பட்டது. மூன்றாவது, சவலைப்பிள்ளைகள் என்ற நிலையை மாற்ற இன்று முட்டை வழங்குவது வரை அது சத்துணவாக ஆக்கப்பட்டுள்ளது.

“”ஆளும் வளரணும், அறிவும் வளரணும் – அதுதாண்டா வளர்ச்சி”, என்பது எம்.ஜி.ஆரின் படத்தில் வரும் பாட்டு.

நல்ல சிந்தனையோடு நாட்டு மக்களுக்குச் செய்யப்படும் நற்காரியங்களுக்குத் தெய்வமும், மடியை வரிந்து கட்டிக்கொண்டு முன்னே ஓடிவந்து துணைசெய்யும் என்பார் திருவள்ளுவர். 1983-ம் ஆண்டு ஐ.நா. சபைக்கு நான் சென்றபொழுது எம்.ஜி.ஆர். பெயரை ஐ.நா. மன்றத்தில் பதிவு செய்ய வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால் இந்தியாவின் சார்பில் சென்றதால் ஒரு மாநில முதலமைச்சர் பெயரைப் பதிவு செய்ய முடியாது என்று எனக்குத் தெரிவித்துவிட்டனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில் ஐ.நா. சபையில் உலக உணவுதினம் கொண்டாட வேண்டி வந்தது. அதில் அப்பொழுது இருந்த 101 அணிசாரா நாடுகளின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

உலக உணவு தினத்தில் அணிசாரா நாடுகள் சார்பில் இந்தியா கலந்துகொள்ள அழைக்கப்பட்டது. இந்தியாவின் சார்பில் ஐ.நா.சபையில் கலந்துகொண்ட எங்களுக்குத் தலைவராக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இருந்தார். அடுத்த நிலையில் அன்றைய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் இருந்தார். இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் நான் இருந்தேன்.

உலக உணவு தினத்தன்று இந்திரா காந்தியும், நரசிம்மராவும் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர். ஆகவே, இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் உணவு தினம் என்பதால் சத்துணவுத் திட்டத்தைப்பற்றி ஐ.நா. சபையில் விரிவாகப் பேசினேன். உலக நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் அதை கைதட்டி வரவேற்றனர். எம்.ஜி.ஆர். பெயரும் ஐ.நா. சபையில் இடம்பெற்றது.

முயற்சி என்னுடையது என்றாலும் அதற்குரிய வாய்ப்பு இயற்கையாக அமைந்தது புரியாத புதிர் தானே!

(கட்டுரையாளர்: அவைத்தலைவர், தேமுதிக)

Posted in Actors, ADMK, AIADMK, Anjali, Anna, Assembly, Biography, Biosketch, Children, Cinema, CM, DMDK, DMK, dynasty, EVR, Films, Food, Free, Freebies, Heartthrobs, Hero, Heroes, Incidents, Indhra, Indira, Indra, Iruvar, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kids, King, KK, Life, Manifesto, Meals, Memoirs, MGR, Midday Meals, Monarchy, Movies, Notes, Nutrition, Panruti, Periyar, Personality, Politics, Poor, PVNR, Ramachandhran, Ramachandran, Ramachanthiran, Ramachanthran, Rao, UN, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth | Leave a Comment »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to maintain a healthy physique

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மெலிந்திருப்பதே மேலானது!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே)
செல் : 9444441771

எனக்கு வயது 45 க்கு மேல் ஆகிறது. உடம்பு ரொம்ப ரெட்டை நாடியான பெரிய சரீரம். என் தொழில் சொந்த வியாபாரம். வேலை செய்தாலே உடம்பில் தண்ணீராகக் கொட்டுகிறது. இரவிலும் குளிக்கிறேன். குளித்தாலும் உடம்பு வாகு முடியவில்லை. பருமன் காரணமாகவே சோர்வு ஏற்படுகிறது. உடம்பு இளைக்க வழியுண்டா?

“கார்ஸ்யமேவ வரம் ஸ்தெüல்யாத் ந ஹி ஸ்தூலஸ்ய பேஷஜம்’ என்று வாக்படர் எனும் முனிவர் தான் இயற்றிய அஷ்டாங்க ஹிருதயம் எனும் நூலில் தெரிவிக்கிறார். அதற்கு அர்த்தம், “பருமனாயிருப்பதைவிட மெலிந்திருப்பது மேலானது. பருமனாயிருப்பவருக்கு மருந்து அரிது’ என்பதாகும். அவர் ஏன் அப்படி ஒரு வினோதமான கருத்தைத் தெரிவிக்கிறார்? அதற்கு அவர் தரும் விளக்கம்தான் என்ன?

குண்டாக இருக்கும் ஒரு நபர் மருத்துவரை அணுகி உடல் இளைக்க மருந்து தாருங்கள் என்று கேட்டால் மருத்துவர் அவருக்கு மூன்றுவிதமான உபதேசங்களை வழங்க வேண்டும். அவை (1)ஆகாரம் – உணவு, (2) விஹாரம் – நடவடிக்கை, (3)ஒüஷதம் – மருந்து.

உணவு மற்றும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தந்து மருந்துக்கு மூன்றாவது இடத்தைத்தான் ஆயுர்வேதம் தந்துள்ளது. இந்தச் சித்தாந்தம் பருமனாயிருப்பவருக்கு மட்டுமல்ல, எல்லா நோய்களுக்கும்தான்.

தன்னிடம் வந்துள்ள நபருக்கு இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை நிறைந்த உணவுப் பண்டங்களைச் சாப்பிடக் கூடாது என்று முதல் அதிர்ச்சி வைத்தியத்தை மருத்துவர் உபதேசிக்கிறார். இரண்டாவதாக இச்சுவைகளுக்கு நேர் எதிரிடையான கசப்பு, உவர்ப்பு, துவர்ப்புச் சுவைகளை அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும் என்று நாக்குக்குத் தண்டனை தரும் உணவைக் கூறுகிறார். இந்த மூன்று சுவைகளும் பருமனாய் உள்ளவனுக்குக் கொழுப்பையும் தோலின் அடியே தங்கியுள்ள கப அடைப்பையும் நீக்கக் கூடியவை. அந்த வகையில் கொள்ளு, காராமணி, பார்லி, கம்பு, மொச்சைப்பயறு போன்ற தானியங்களை உணவாகப் பயன்படுத்த வேண்டும். தேன் கலந்த தண்ணீர், தெளிந்த மோர், கொழுப்பின் உள்ளே ஊடுருவிச் சென்று சூட்டைக் கிளப்பி வறட்சியைத் தோற்றுவித்து கொழுப்பைக் கரைக்கும் கடுகெண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றைத் தாளிக்கப் பயன்படுத்த வேண்டும்.

செய்கைகளில் கவலைப்படுதல், உடற்பயிற்சி, வாந்தி – பேதிக்குக் கொடுத்து உடலைச் சுத்தம் செய்தல், குறைவாகத் தூங்குதல் போன்றவற்றை உடலுக்கு ஏற்றவாறு கடைப்பிடிக்க வேண்டும்.

உடலில் கொழுப்பு அதிகம் வளர்ச்சி பெறுவதால் துவாரங்கள் அடைபடுகின்றன. அப்போது வாயு வயிற்றுக்குள் அதிகம் பரவி பசித்தீயை அதிகம் தூண்டிவிடச் செய்கிறது. அதனால் பசி, தாகம் அதிகப்படுகிறது. மரத்தின் பொந்தில் உள்ள நெருப்பு, காற்றுடன் சேர்ந்து வளர்ந்து மரத்தையே எரிப்பதுபோல், வயிற்றுக்குள் உள்ள பசித்தீயும் வாயுடன் சேர்ந்து வளர்ந்து உடல் பருமன் உள்ள மனிதனை எரித்து விடுகிறது.

மேற்குறிப்பிட்ட உணவு தானியங்கள், சுவைகள் அனைத்து குடல் வாயுவைச் சீற்றமடையச் செய்பவை. பசியை அதிகப்படுத்துபவை. ஆனால் கொழுப்பைக் கரைப்பவை. குடல் வாயுவும், பசியும் தூண்டாமலிருக்க இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை, புலால் உணவு, எண்ணெய்ப் பலகாரம் போன்றவை உதவும். ஆனால் இதனால் கொழுப்பு உடலில் அதிகரிக்கக் கூடும். இப்படி ஒரு சங்கடமான நிலை உருவாவதினாலேயே வாக்படர் பருமனுக்கு மருந்து அரிது என்று குறிப்பிடுகிறார்.

பருமன் குறைய மிக அரிதான சில மருந்துகளை ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

* 5கிராம் திரிபலா சூரணத்தில் 10 மிலி தேன் குழைத்து காலை இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடவும்.

* பார்லி அரிசி 2.5 கிராம், நெல்லிக்காய் வத்தல் 2.5 கிராம் பொடித்து, 10 மிலி தேன் குழைத்து காலை, மாலை வெறும் வயிற்றில் நக்கிச் சாப்பிடவும். இது அதிக பருமனைக் குறைக்கும்.

* லோத்ராஸவம் 15மிலிஅயஸ்கிருதி 15 மிலி 1 கேப்ஸ்யூல் கண்மதம் எனும் சிலாஜது பஸ்மம் இரவில் படுக்கும் முன் சாப்பிடவும்.

* வியர்வையைப் பெருக்கும் நரம்புகள் கொழுப்பிற்கு இருப்பிடமாகையாலும், கொழுப்பு உருகும் தன்மையுடையதாலும், கபத்துடன் கலந்திருப்பதாலும் அதிகப் பருமன் உள்ளவரின் உடலிலிருந்து நாற்றத்துடன் வியர்வை அதிகம் வெளிப்படுகிறது. இதை நீக்க ஏலாதி சூரணத்தை, தயிரின் மேல் தெளிவாக நிற்கும் தண்ணீருடனும், சாதாரண வெந்நீருடனும் குழைத்து உடலில் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தவும்.

Posted in Advice, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Diet, Fat, medical, Medicines, Natural, Nutrition, physique, Silm, Wellness | Leave a Comment »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to avoid Steroids

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உயிர் காக்கும் உயர்ந்த மருந்துகள்!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

அலோபதி மருத்துவத்தில் உயிர்காக்கும் மருந்தான STEROID இருப்பது போல், ஆயுர்வேதத்தில் மருந்து உள்ளதா?

ருக்வேதம் நோய் பற்றிய வர்ணனையில் இருவகையான நோய்களைப் பற்றி குறிப்பிடுகிறது. தோன்றும் வகையறிய முடியாதபடி ஊடுருவிப் பாய்ந்து முழு உருவம் பெற்ற பின்னரே உணரப்படுபவை, ரக்ஷஸ் எனும் பெயர் கொண்டவை. மீண்டும் மீண்டும் தலை தூக்குபவை, அமீவா எனப் பெயர் உடையவை.

இந்த இருவகையான நோய்களும் இன்று பரவலாகக் காணப்படுகின்றன. இவற்றில் தோன்றும் அறிகுறிகளால் மனிதன் வேதனையுறும் போது STEROID மருந்துகள் அந்த அறிகுறிகளை அமுக்கி மனிதனை முடக்கிவிடாமல் அவனை நடக்கும்படி செய்கின்றன. அறிகுறிகளை மட்டுமே அமுக்கி விடுவதால் நோய் நீங்கி விட்டது என்று உறுதியாகக் கூற இயலாது. தடாலடி வைத்திய முறைகளால் நோய் நீங்கி நிரந்தர இன்பத்தை ஒருவரால் பெற இயலாது. ஒரு நோயை ஏற்படுத்தும் காரணம், உடலில் தனக்கு ஏதுவான காலத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும், அந்தக் காலநிலை தனக்கு அனுகூல நிலையை அடைந்ததும், அந்தக் காரணத்திற்கு தக்கபடி நோயின் சீற்றத்தை வெளிப்படுத்துவதாகவும் ஆயுர்வேதம் கூறுகிறது. உடலில் தென்படும் அறிகுறிகளை வைத்து அந்தச் சீற்றத்தை ஏற்படுத்தும் தோஷ நிலைகளை நன்கு கணித்து, அந்த தோஷம் எதனால் கெட்டது என்ற காரணத்தையும் ஒரு மருத்துவனால் கூற இயலுமானால் அந்த மருத்துவர் ஒரு சிறந்த மருத்துவ நிபுணராகவே கருதப்படுகிறார். ஏனென்றால் அவர் நோய்க்கான காரணத்தை நிறுத்தச் சொல்லி, கெட்டுள்ள தோஷத்தை அறிகுறிகளின் வாயிலாக அறிந்து அதைச் சீர்படுத்தும் நோக்கில் உணவும், நடவடிக்கையும், மருந்தையும் உபதேசிக்கிறார். இந்த நல்உபதேசம் நபஉதஞஐஈ மருந்துகளைவிட சிறந்தவை.

மனிதனின் உயிரைக் காப்பவை மட்டுமே மருந்தல்ல. உடலுக்கும் மனதிற்கும் நலம் தரும் உணவையும் நடவடிக்கைகளையும் அமைத்துக் கொண்டவன், செயலைச் செய்வதற்கு முன் நிதானித்துச் செயலாற்றுபவன், புலன்களால் உணரப்படும் பொருள்களில் நப்பாசை காரணமாக ஈடுபடாதவன், பொறுமை உள்ளவன், உண்மையான நற்செயல்களைத் தயங்காமல் கூறி அதன்படி நடக்கத் தூண்டும் உயர்ந்த நண்பனைப் பின்பற்றுபவன் நோயற்றிருப்பான் என்று ஆயுர்வேத நூலாகிய சரகஸம்ஹிதையில் காணப்படுகிறது.

“”இதையெல்லாம் நான் கடைபிடிக்காது போனதினால்தான் ரக்ஷஸ் வகை வியாதியும், அமீவா வகையும் என்னைப் பீடித்துள்ளன; STEROID மருந்துகளால்தான் காலம் தள்ளுகிறேன். இதிலிருந்து விடுபடுவதற்கான உயிர் காக்கும் மருந்து உள்ளதா” என ஒரு நோயாளி ஆயுர்வேத மருத்துவரை அணுகி கேட்பாரேயானால், அதற்கான தீர்வை அவரால் இருவகையில் மட்டுமே தர இயலும்.

அவை சோதனம் மற்றும் சமனம் எனும் இரு வைத்திய முறைகளேயாகும். உடலின் உட்புறக் கழிவுகளை அகற்றும் பஞ்சகர்மா எனும் ஐவகைச் சிகிச்சைகளான வாந்தி, பேதி, வஸ்தி எனும் எனிமா, நஸ்யம் எனும் மூக்கில் மருந்து விட்டுக் கொள்ளும் முறை மற்றும் ரத்தக் குழாய்களைக் கீறி, கெட்ட ரத்தத்தை வெளிப்படுத்துதல் ஆகியவை சோதனம் எனும் வைத்திய முறைகளாகும். நோயும் பலமாக இருந்து நோயாளியும் பலசாலியாக இருக்கும் நிலையில் மட்டும் இந்தச் சிகிச்சை முறையைச் செய்ய இயலும்.

நோயின் தாக்கம் குறைவாகவும், நோயாளியும் பலமின்மையினால் வருந்துபவராக இருந்தால் சமனம் எனும் 7 வகை சிகிச்சை முறைகளே போதுமானது.

1. உணவைப் பக்குவம் செய்யக்கூடியது.

2. பசித்தீயை வளர்ப்பது.

3. பட்டினியால் உடல் கெடுதியை அகற்றுவது.

4. தண்ணீர் தாகத்துடன் இருக்கச் செய்வது.

5. உடற்பயிற்சி.

6. வெயிலில் அமர்ந்திருப்பது.

7. எதிர்காற்றை உடலில் படும்படி செய்வது.

மேற்கூறிய சிகிச்சை முறைகளை STEROID மருந்தை உட்கொள்ளும் நோயாளிக்குத் தகுந்தவாறு உபயோகித்து அவரை அதிலிருந்து விடுபடச் செய்து, நோயின் தாக்கத்தையும் குறைத்து அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆயுர்வேதத்தால் தர இயலும் என்பதே தங்கள் கேள்விக்கான விடை.

Posted in Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Body, Diet, Good, Habits, Health, Medicines, Natural, Nutrition, Physical, steroids, Swaminathan, Yoga | Leave a Comment »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to purify your Blood

Posted by Snapjudge மேல் ஜூலை 26, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் கருங்காலி!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

எனக்குத் தலையில் சிகப்பாக மருபோல் ஆங்காங்கே வளர்ந்துள்ளது. வளர்ந்து கொண்டே வருகிறது. சீப்பைத் தலையில் வைக்க முடியவில்லை. முனைப்பகுதி கூராக உள்ளது. வலியுடன் கெட்டியாக உள்ளது. மூக்கின் நுனியில் கருப்பாக முட்கள்போல் உள்ளன. இவை ஏன் வருகின்றன? மருந்து கூறவும்.

தலை மற்றும் மூக்குப் பகுதியில் அமைந்திருக்கும் தோல் பகுதியில் தங்களுக்கு ரத்தம் கெட்டுப் போய் மாமிசப் பகுதியில் உறைந்த நிலையில் இருப்பதையே இந்தக் குறிகள் தெரிவிக்கின்றன. தோலில் சஞ்சரிக்கும் ரத்தம் கெடுவதற்கு வெளிக் காரணங்களும் உட்புறக் காரணங்களும் பலவகையில் உள்ளன. பிறர் உபயோகிக்கும் சீப்பு, டவல், சோப், தலை கிளிப், தலையணை, தொப்பி, கைக்குட்டை, பவுடர் போடப் பயன்படுத்தும் பஃப், ரசாயனக் கலவை கொண்ட முகப்பூச்சுகள் போன்றவை சில வெளிப்புறக் காரணங்கள். ரத்தத்தைக் கெடவைக்கும் அதிக சினம், வருத்தம், அச்சம், பட்டினி கிடத்தல், உடல் சூட்டைக் கிளப்பும் காரம், புளி, உப்புச் சுவை கொண்ட உணவுப் பொருள்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுதல், எண்ணெய், புண்ணாக்கு, கொள்ளு, கடுகு, மீன், ஆட்டிறைச்சி, தயிர், திரிந்த மோர், புளிப்பான பழங்கள் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுவது உட்புறக் காரணங்கள். பகல் தூக்கம், நெருப்பின் அருகில் வேலை செய்தல், வெயிலில் அலைதல், வெயிலில் அலைந்து வந்தவுடன் குளிர்ந்த தண்ணீரில் உடனே குளித்தல், குடித்தல் போன்ற செய்கைகளாலும் உடலில் பித்தமும் ரத்தமும் கேடடைந்து தோலில் நீங்கள் குறிப்பிடும் உபாதைகளைத் தோற்றுவிக்கின்றன.

வந்துள்ள இந்த உபாதை நீங்குவதற்கு நீங்கள் மேற்குறிப்பிட்ட காரணங்களைத் தவிர்க்க வேண்டும். அதன் பிறகுதான் மருந்துகளைச் சாப்பிட முழுப் பலனை எதிர் பார்க்க இயலும். தோல் பகுதியின் அடியில் சீற்றமடைந்துள்ள கெட்ட ரத்தத்தை கொத்தி எடுப்பதன் மூலமாக உடனடி நிவாரணம் கிடைக்க வாய்ப்புண்டு. மருந்துகளைச் சாப்பிடுவதால் அவை குடல் பகுதியிலிருந்து உறிஞ்சப்பட்டு ரத்தத்தின் வழியாகத் தலைப்பகுதியிலுள்ள தோல் பகுதிக்கு வந்து கெட்டுள்ள ரத்தத்தைச் சுத்தம் செய்வதற்குக் காலதாமதமாகலாம்.

நீங்கள் பெண் என்பதாலும் இது விஷயத்தில் சகிப்புத்தன்மை குறைவாக இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாலும் இரண்டாவது வகையான மருந்து சாப்பிடுவதையே சரியென தீர்மானிக்கலாம். அந்த வகையில் ஆயுர்வேத மருந்தாகிய சோணிதாமிர்தம் எனும் கஷாயத்தை 15 மிலி எடுத்து 60 மிலி கொதித்து ஆறிய தண்ணீருடன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட நல்லது. “சோணிதம்’ என்றால் ரத்தம், அதற்கு அமிருதம் போன்றதால் இந்தக் கஷாயத்தை சோணிதாமிர்தம் என்று குறிப்பிடுகிறார்கள். மதிய உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மஹாதிக்தகம் எனும் கஷாயத்தை மேற்குறிப்பிட்ட கஷாய அளவில் சாப்பிட ரத்தசுத்தி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் தலைக்கும் மூக்கினருகிலுள்ள கருப்பு முட்கள் போன்ற பகுதிகளில் நால்பாமராதி தைலத்தை ஊறவைத்து பச்சைப்பயிறு, வேப்பிலை, ஆரஞ்சுப்பழத்தோல் பொடியினால் கழுவ பயன்படுத்தவும். இந்தத் தைலத்தைக் காலை இரவு இருவேளை உணவிற்கு முன்பாக ஒரு மணி நேரம் ஊற விடவும்.

ரத்தத்தைச் சுத்தப்படுத்துவதில் கருங்காலி வைரத்திற்கு (கட்டை) நிகராக எதையும் குறிப்பிட இயலாது என்பதால் பத்து கிராம் கருங்காலியை அரை லிட்டர் தண்ணீரில் சீவிப்போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி சாதாரண தண்ணீருக்குப் பதிலாகக் குடிக்கப் பயன்படுத்தவும். மனதில் பதட்டம், படபடப்பு போன்றவை ஏற்படாத வண்ணம் அமைதியாக இருக்க பழகிக் கொள்ளவும். “தைவவியபாச்ரயம்’ எனும் தைவ வழிபாடும் மிகவும் உயர்ந்த முறையாகவே ஆயுர்வேதம் குறிப்பிடுவதால் “சண்முககவசம்’ எனும் முருகனுக்கு உகந்த பாடலை மனமுருகப் பாடி கோயிலுக்குச் சென்று கல் உப்பு கொட்டி வரவும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Blood, cure, Doc, Doctor, haemoglobin, Health, Healthcare, Hindu, Hinduism, Iron, medical, Medicine, Nutrition, Plasma, Platelets, Rbh, Religion, Swaminathan, Tablet | Leave a Comment »

N Vittal – How to bring new synergy into current Agriculture practices: Marketing

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

வேளாண்மையும் “பெருந்தொழிலாக’ வேண்டிய நேரம்!

என். விட்டல்

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான “”ரிலையன்ஸ்”, தகவல் தொடர்புத் துறையில் ஜாம்பவானாக உருவெடுத்துவரும் சுநீல் மித்தலின் “ஏர்-டெல்’ போன்ற நிறுவனங்கள் இப்போது வேளாண்மைத் துறையில் பெரும் அக்கறை எடுத்துவருகின்றன.

மிகப் பிரம்மாண்டமான அளவில் உற்பத்தி, விநியோகம், விற்பனை என்ற தங்களுடைய தொழில்துறை வெற்றி உத்தியை, வேளாண்மைத்துறையிலும் புகுத்த முயல்கின்றன.

“மனிதர்கள் காலில் போட்டுக்கொள்ளும் செருப்புகளும் பூட்ஸ்களும் ஏர்-கண்டிஷன் செய்யப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன; வேளாண்துறையில் விளையும் தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவை மண்டிகளிலும், வெயிலும் தூசும் நிரம்பிய சந்தைகளிலும், வீதிகளிலும் கோணியைப் பரப்பி விற்கப்படுகின்றன’ என்று ஆமதாபாதில் இந்திய நிர்வாகவியல் மாணவர்களிடையே உரை நிகழ்த்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கவலையோடு குறிப்பிட்டிருந்தார்.

மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மூலம், பெருநகரங்களில் உள்ள அங்காடி வளாகங்களில் வேளாண் விளைபொருள்கள் நன்கு சுத்தம் செய்யப்பட்டு, “”பேக்” செய்யப்பட்டு, எடை, தரம், விலை குறியீடுகளுடன் விற்கப்படுமானால் லாலு சுட்டிக்காட்டிய முரண்பாடு மறைந்துவிடும். இது மட்டும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவேறினால், இந்திய வேளாண்மைத்துறையில் “”மூன்றாவது புரட்சி” ஏற்பட்டுவிடும்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது கைக்கும் வாய்க்கும் எட்டுகிற நிலைமையில்தான் நமது உணவு தானிய உற்பத்தி இருந்தது. உணவு தானியத் தேவையில் தன்னிறைவு பெற்றவர்களாகக் கூட இல்லை. 1970-களில் அறிமுகப்படுத்தப்பட்ட “”பசுமைப் புரட்சி”யின் விளைவாக நிலைமை தலைகீழாக மாறியது. அதில் பங்கேற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் போன்றவர்கள் “”இரண்டாவது பசுமைப் புரட்சி” இப்போது அவசியம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

வறுமைக் கோட்டுக்குக்கீழே வாழும் ஏழைகளுக்காக இப்போது மீண்டும் கோதுமை, அரிசி போன்றவற்றை இறக்குமதி செய்யும் நிலையில் இருக்கிறோம்.

கிராமப்புறங்களில் ஏற்பட்ட இரண்டாவது புரட்சி, பால் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக நம்மை இடம் பெறச் செய்த “”வெண்மைப் புரட்சி”யாகும். அமுல் நிறுவனத்தின் தந்தையும் தலைசிறந்த நிர்வாகியுமான டாக்டர் வர்கீஸ் குரியனும், சிறந்த காந்தியவாதியும் கைதேர்ந்த கூட்டுறவு இயக்க நிபுணருமான டாக்டர் திரிபுவன்தாஸ் படேலும் இந்தப்புரட்சிக்கு முழுமுதல் காரணகர்த்தாக்கள். குஜராத்தில் மட்டும் எல்லா மாநிலங்களிலுமே பால் பண்ணைகள் பெருக இவர்களின் நடவடிக்கைகள் முன்னோடியாகத் திகழ்ந்தன.

பசுமைப்புரட்சி காலத்தில் உரிய நேரத்தில் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற இடுபொருள்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்தது. பாசனத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. வீரிய விதைகள் விநியோகிக்கப்பட்டன.

விவசாயிகள் சாகுபடி செய்யும் பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது, சந்தையில் அந்த விலைக்குக் குறைவாக விற்கும் நிலைமை ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு நேரடி நெல் கொள்முதல் திட்டத்தை இந்திய உணவு கார்ப்பரேஷன் மூலம் அமல்படுத்தியது, நெல், கோதுமை, சர்க்கரை போன்றவற்றை போதிய அளவில் கையிருப்பில் வைத்துக் கொள்ள கிடங்கு வசதிகளும், அவற்றுக்கு ரயில் பாதை இணைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.

இப்போது இந்திய வேளாண்மை பற்றிப் பேசினாலே முதலில் நினைவுக்கு வருவது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதுதான். பருத்தி சாகுபடியில் இறங்கியவர்களும், அதிக பொருள் செலவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி வயலுக்கு அடித்தவர்களும்தான் அதிகம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதைத் தடுக்க, முதலில் விவசாயிகளை அழைத்து அவர்களின் மனத்தளர்ச்சி, விரக்தி மனப்பான்மை நீங்க, நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேச வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து மிகுந்த நம்பிக்கையோடு இறக்குமதி செய்யப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளும், அதிக விலைக்கு வாங்கப்பட்ட பூச்சிக் கொல்லிகளும் பலன் தராமல் பருவமழை பொய்த்ததால் கடன் சுமை அதிகரித்து விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். அப்படி இறக்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு தலா ஒரு லட்ச ரூபாயை உதவித்தொகையாகத் தருகிறது.

வறுமை தாளாமல் விவசாயக் கூலிகள் தவிக்கும்போது அவர்களுக்கு அரசின் உதவி உரிய முறையில் கிடைக்காமல் போவதால், நக்சல்களின் நெருப்புப் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டு நக்சல்களாக மாறுகின்றனர்.

தற்கொலைக்கு அடுத்தபடியாக இந்திய வேளாண்மையை மிகவும் பாதிக்கும் அம்சம் உற்பத்தித் திறன் ஆகும். நம்மைவிடக் குறைந்த சாகுபடி பரப்பைக் கொண்டுள்ள சீனா, நம்மைவிட அதிக அளவு தானிய விளைச்சலைத் தருகிறது.

நிலத்திலிருந்து விளைவது குறைவாக இருப்பது ஒருபகுதி என்றால், விளைந்த தானியங்களையும் காய்கறிகளையும் பழங்களையும் அறுவடை செய்து எடுத்து வரும்போது சேதாரப்படுத்துவதன் மூலம் 10 சதவீத உற்பத்தியை வீணாக்குகிறோம்.

எல்லா பருவகாலத்திலும் பூச்சி அரிக்காமல், பறவைகள், எலிகள் பாழ்படுத்தாமல் தானியங்களையும் இதர விளைபொருள்களையும் சேமித்து வைக்க கலன்கள், குதிர்கள், கிடங்குகள், குளிர்பதன வசதி இல்லாமல் 40 சதவீதம் வரை வேளாண் சாகுபடி வீணாகிறது.

ஓராண்டு சாகுபடி பற்றாக்குறையாக இருப்பதும் அடுத்த ஆண்டு உபரியாவதும் தொடர்கிறது. பற்றாக்குறையின்போது பணமே கிடைக்காமல் ஏழ்மையில் மூழ்க நேரிடுகிறது என்றால், உபரியின்போது கொள்முதல் விலை சரிந்து, போட்ட அசலைக்கூட எடுக்க முடியாமல் நஷ்டம் ஏற்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 60 சதவீத பங்கைப் பிடிக்கின்றனர்.

இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தில் நேரடியாக ஈடுபட்டு, நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவீத அளவுக்கு மட்டுமே சாகுபடி செய்கின்றனர்.

இந் நிலையில் பெரிய தொழில்நிறுவனங்கள் இத் தொழிலில் ஈடுபட்டால் நிலங்களை வளப்படுத்துவது, பாசன வசதி அளிப்பது ஆகியவை விரிவான அளவில் நடைபெறும். அடுத்து தரமான விதைகள், விலைகுறைந்த இயற்கை உரங்கள், நவீன சாகுபடி உத்தி ஆகியவற்றைப் பின்பற்ற முடியும்.

திசு வளர்ப்பு மூலம் செடிகளையும் கொடிகளையும் வளர்ப்பது, ஒட்டுச் செடிகளைப் பயன்படுத்துவது என்று வேளாண்மையில் லாப நோக்குடன் புதியவை புகுத்தப்படும். அடுத்தபடியாக விளைபொருள்களைச் சேதம் இன்றி அறுவடை செய்வதும் கிடங்குகளுக்கும் விற்பனை நிலையங்களுக்கும் கொண்டு செல்வது சாத்தியம்.

இடைத்தரகர் இன்றி, உற்பத்தியாளருக்கும் கணிசமான தொகை கிடைக்கும் நுகர்வோருக்கும் கட்டுப்படியாகும் விலையில் பண்டங்கள் கிடைக்கும். கூட்டுறவுத்துறை வலுப்பெறும். உற்பத்தி, விநியோகம், விற்பனை போன்றவை விவசாயிகளுக்குச் சாதகமாக மாறும்.

அதன் பிறகு தொழில் நிறுவனங்களின் தலையீட்டால் ஏற்படும் மூன்றாவது வேளாண்மைப் புரட்சியானது “”விவசாயியைச் சார்ந்த வேளாண்மை” என்ற நிலைமையை மாற்றி, “”வேளாண்-வர்த்தகம் சார்ந்த வேளாண் தொழில்” என்ற நிலைமைக்குக் கொண்டு செல்லும்.

(கட்டுரையாளர்: முன்னாள் ஊழல் ஒழிப்பு, கண்காணிப்பு ஆணையர்.)

——————————————————————————————-

காலச்சுழலில் கழனியும் உழவரும்

 

தமிழக விவசாயி காசி
தமிழக விவசாயி காசி

 

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அறுபது விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் விவசாயத்தையும் அதனைச் சார்ந்த தொழில்களையும் சார்ந்தே வாழ்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தாலும் இப்போது பற்றாக்குறையைப் போக்க உணவு இறக்குமதி தொடங்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில், தமிழகத்தில் மாறிவரும் விவசாயச்சூழல் மற்றும், விவசாயிகள் எதிர்கொள்ளும் பலவிதமான பிரச்சனைகள் குறித்து அன்பரசன் தயாரித்து வழங்கும் சிறப்புத் தொடர்.

———————————————————————————-

ரிலையன்ஸ் கடைகளுக்கு நிபந்தனை விதிக்க ராமதாஸ் யோசனை
சென்னை, ஜூலை 7: சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் கடைகளில் உணவுப் பொருள்களை விற்கக் கூடாது என நிபந்தனை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் யோசனை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

ரிலையன்ஸ் மற்றும் வால்மார்ட போன்ற பன்நாட்டு நிறுவனங்களும் சில்லறை வணிகத்தில் ஈடுபடத் தொடங்கி இருக்கின்றன. நகரங்கள் தோறும் கடைகளைத் திறந்து வைத்துள்ளன.

இதனால் பாரம்பரியமிக்க சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களும், சில்லறை வணிகக் கடைகளால் வேலை வாய்ப்பு பெற்று வரும் பல லட்சம் தொழிலாளர்களும் நடுத் தெருவுக்கு வரும் ஆபத்து உருவாகி வருகிறது.

இந்த ஆபத்தான நிலைமையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்கக் கூடாது என்று தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் சென்னை போன்ற நகரங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தாராள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் இந்த கடைகளால் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள பல லட்சம் பேர் வேலை இழக்கும் ஆபத்து ஏற்படப் போகிறது.

கேரளத்தில் அனுமதி இல்லை: இந்நிலையில் பக்கத்து மாநிலமான கேரளத்தில் ரிலையன்ஸ் கடைகளுக்கு இனிமேல் அனுமதி வழங்குவது இல்லை என்றும் ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அவற்றை ரத்து செய்வது என்றும் அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

மேற்கு வங்கத்தில் ரிலையன்ஸ் கடைகளில் உணவுப் பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை விற்கக் கூடாது என்று மிகக் கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.

கேரளத்தைப் போன்று தமிழகத்திலும் ரிலையன்ஸ் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். இனிமேல் அனுமதி வழங்கக் கூடாது என்று உள்ளாட்சி மன்ற அமைப்புகளுக்கு ஆணையிட வேண்டும். அல்லது மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனையைப் போன்று உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்கக் கூடாது என்ற நிபந்தனையாவது விதிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

———————————————————————————————————————————–

உதட்டளவு அக்கறை கூடாது…!

“விவசாயிகள்தான் இந்தியாவின் முதுகெலும்பு’ என்று தனது சுதந்திர தின உரையில் பிரதமர் வலியுறுத்தி இருப்பதும், விவசாயிகளுக்குப் பல சலுகைகளையும் திட்டங்களையும் அறிவித்திருப்பதும் வரவேற்கப்பட வேண்டிய விஷயங்கள்.

உலகமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம், தாராளமயமாக்கல் போன்ற கோஷங்களுடன் இன்றைய பிரதமர், நிதியமைச்சராக இருந்தபோது இந்தியாவுக்கு ஒரு புதிய பொருளாதாரத் திட்டத்தை வகுத்ததுமுதல் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது என்னவோ விவசாயிகளும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களும்தான்.

கடந்த 15 ஆண்டுகளில் விவசாயம் மிகக் குறைந்த ஊக்கத்தையும், வளர்ச்சியையும்தான் காண நேர்ந்தது என்பதைப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. கிராமப்புறங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தை, நமது பொருளாதாரப் பத்திரிகைகளும் புதிய பொருளாதாரத் திட்ட விற்பனையாளர்களும் உருவாக்க முற்பட்டிருக்கிறார்கள். உண்மை என்னவென்றால், விவசாயமும், விவசாயிகளும் இதுவரை சந்தித்திராத ஒரு சோதனையான கட்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான்.

சமீபத்தில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கமிஷன் ஒன்றின் அறிக்கையின்படி, கடனால் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது. ஆந்திரத்தில் 82 சதவிகிதம், தமிழகத்தில் 75 சதவிகிதம், பஞ்சாபில் 65 சதவிகிதம் விவசாயிகள், விவசாயத்திற்காக வாங்கிய கடனைத் திருப்பி அடைக்க முடியாமல் தவிக்கின்றனர் என்கிறது இந்த அறிக்கை. சராசரியாக, இந்திய விவசாயி ஒவ்வொருவரின் கடன் சுமையும் ஏறத்தாழ ரூ. 25,985 என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இப்படிக் கடன் சுமையில் சிக்கிக்கொள்ளும் விவசாயிகளில் பலரும், தனியாரிடம் கடன் வாங்கியவர்களாக இருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

லாபகரமாக இல்லாவிட்டால், ஏன் விவசாயம் செய்ய வேண்டும்? அந்த விளைநிலங்களைப் “ப்ளாட்’ போட்டு வீடு கட்டவோ, தொழிற்சாலை அமைக்கவோ பயன்படுத்திவிட்டு, நமக்குத் தேவையான உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாமே? இப்படியொரு யோசனையை முன்வைக்கிறார்கள், புதிய பொருளாதாரக் கொள்கையின் விற்பனைப் பிரதிநிதிகள்.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் விவசாயிகளுக்கு ஏகப்பட்ட மானியங்களை அந்த அரசுகள் வழங்குகின்றன. தங்களது தேவைக்கு அதிகமாக உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கின்றன. நச்சுப் புகையால், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை, இந்தியா போன்ற நாடுகளில் நிறுவ ஊக்குவிப்பதும், அவர்களது தேவைக்கான உணவுப் பொருள்களைத் தாங்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதும் இந்த நாடுகளின் நோக்கம் என்று நாம் கூறவில்லை. ஆனால், அந்த நாடுகள் விவசாயத்துக்கு அளிக்கும் ஊக்கத்திற்கு என்ன காரணம் என்று யோசிக்கச் சொல்கிறோம்.

நமது விவசாயிகளுக்குத் தரும் விலையைவிட அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யும் போக்கு சமீபகாலமாகக் காணப்படுகிறது. வேண்டுமென்றே இந்திய விவசாயிகளை விவசாயத்தைப் புறக்கணிக்கச் செய்யும் முயற்சி நடைபெறுகிறதோ என்கிற சந்தேகம்கூட எழுகிறது. அது ஆபத்தை விலைகொடுத்து வாங்கும் செயல்.

ஒரு தேசத்தின் பாதுகாப்பு என்பது எல்லைகளைக் காக்கும் ராணுவத்திடம் மட்டும் இல்லை. தனது நாட்டு மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் தன்னிறைவிலும் இருக்கிறது. அடுத்த வேளைக் கஞ்சிக்கு அயல்நாட்டுக் கப்பலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படுமானால், அதைவிட பலவீனமான நாடு எதுவும் இருக்க முடியாது. இதை எழுபதுகளிலேயே புரிந்து கொண்டிருந்ததால்தான், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி “பசுமைப்புரட்சி’ என்கிற கோஷத்துடன் உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய வழி வகுத்தார்.

இந்திரா காந்தியின் மருமகள் தயவால் பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங்கின், விவசாயிகள் மீதான அக்கறை உதட்டளவில் நின்றுவிடாமல் உணர்வுபூர்வமாக இருக்கும் என்று நம்புவோம். விவசாயம் சார்ந்த பொருளாதாரமாகத் தொடர்வதுதான் இந்தியாவின் வருங்காலத்துக்கு நன்மை பயக்கும்!

——————————————————————————————————————

இது புதுசு: நலம், நலமறிய ஆவல்!

வயதிலும் இளைமையாய் ஜொலிக்க வேண்டும் என்பது மக்களின் ஆசையாக இருக்கிறது. ஆனால் உலர்ந்த தலைமுடியைப் பராமரிப்பது எப்படி?, எண்ணெய் பிசுக்கான முகத்தைச் சரி செய்வது எப்படி?, சத்தான உணவு எது?…. என்பது போன்ற பல்வேறு தகவல்களையும் ஒரே இடத்தில் பெறுவது எப்படி என்ற கவலையும் கூடவே தொற்றிக் கொள்கிறது.

மக்களின் எந்தத் தேவையையும் உடனுக்குடன் தெரிந்து கொண்டு அதைப் பணமாக்கத் தெரிந்திருப்பதுதான் பிசினஸýக்கு அழகு. இதற்கு உதாரணமாக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் மக்களின் இந்த ஆசையையும் பூர்த்தி செய்ய களமிறங்கியிருக்கிறது. ரிலையன்ஸ் வெல்னஸ் என்ற பெயரில் “ஆரோக்கிய வணிக’த்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.

பரீட்சார்த்தமாக முதலில் ஆரம்பித்திருக்கும் இடம் ஹைதராபாத். விரைவில் பெங்களூர், சென்னை, மும்பை நகரங்களில் துவங்க இருக்கிறார்கள்.

இது குறித்து ரிலையன்ஸ் வெல்னஸ் நிர்வாக இயக்குநர் நினு கண்ணாவிடம் பேசினோம்.

“”மக்களுக்கு ஆரோக்கியம் குறித்த ஆர்வம் அதிகரித்திருக்கிறது. ஆனால் ஆரோக்கியம் என்பது ஆரோக்கிய உணவு, ஆரோக்கியம் குறித்த மருந்துகள், அது குறித்த புத்தகங்கள்- சி.டி.கள், உடற்பயிற்சி கருவிகள், யோகா பயிற்சி என பலதுறைச் சம்பந்தமுடையதாக இருக்கிறது. அதை ஒருங்கிணைப்பதற்குத்தான் இந்தத் திட்டம்” என்றார்.

இந்தியா முழுதும் 51 நகரங்களில் இப்படி 1200 நிலையங்களை ஆரம்பிக்க இருக்கிறார்கள். 1500 சதுர அடியில் இருந்து 3,500 சதுர அடி பரப்பில் இது அமையும். காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை இயங்கும் இந் நிலையத்தில் இலவசமாக ஆரோக்கியம் குறித்த ஆலோசனை வழங்குவதற்கான மருத்துவர் ஒருவரும், கண் பரிசோதனை செய்வதற்கான மருத்துவரும் இருப்பார்கள். “”தோல் பொலிவு, தலைமுடி பராமரிப்பு, உயரம்- உடல் எடைக்கான விகிதம், சர்க்கரை அளவு போன்றவற்றுக்கான டிப்ஸ் தருவது மட்டும்தான் இந் நிலையத்தில் மருத்துவர் இருப்பதற்கான பிரதான நோக்கம். இது கிளினிக் போலவோ, அல்லது மருந்து கடை போலவோ நோயாளிகளைக் குணப்படுத்தும் இடமாக இல்லாமல், நோய் வராமல் தடுப்பதற்கான ஆரோக்கிய கூடமாகச் செயல்படும். இதற்காக மாதந்தோறும் ஹெல்த் புரோக்ராம்கள் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் அவர்.

அதே போல இங்கு பதிவு செய்து கொள்ளும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரின் உடல்நிலை குறித்த தகவல்களையும் வெப்சைட்டில் தனிப்பக்கம் ஏற்படுத்திப் பதிவு செய்து வைத்திருப்போம். அதற்கான குறிப்பு அட்டை ஒன்றையும் அவர்களுக்கு வழங்குவோம். திடீர் விபத்து நேரங்களில் அவரைப் பரிசோதிக்கும் மருத்துவர், இந்தக் குறிப்பு அட்டை மட்டும் இருந்தால் அவருடைய ரத்த வகை என்ன, எந்த மாதிரியான அலர்ஜி உள்ளவர், முகவரி என்ன போன்ற தகவல்களை அந்த வெப்சைட்டில் சுலபமாகப் பெறமுடியும்” என்கிறார் நினு கண்ணா.

ரிலையன்ஸ் ஃப்ரஸ்ஸýக்கு சில இடங்களில் எதிர்ப்பு ஏற்பட்டது போல இதற்கு எதிர்ப்புகள் ஏற்பட்டதா? என்றோம். சிரித்துக் கொண்டே சொன்னார்.

“”இந்த நிமிடம் வரை எங்கள் நிலையம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறது” .

Posted in Advice, Agriculture, Air-tel, Airtel, Ambani, Analysis, BBC, BigBox, BMI, Boom, Channels, Chat, Consultation, Consulting, Consumers, Cultivation, Customers, Diet, Distribution, Doc, Doctor, Drinks, Eat, Economy, Farmer, Farming, Fat, Fertilizer, Free, Freight, Goods, Growth, Health, Herbs, Ideas, Industry, Interviews, Investment, Lalloo, LalooY, Lalu, Luxury, Malls, Management, Manufacturing, Marketing, medical, milk, Mittal, Mktg, Necessity, Need, Nutrition, Op-Ed, Operations, Paddy, PMK, Podcast, Production, Protein, Ramadas, Ramadoss, Reliance, Reliance Fresh, Reliance Industries Limited, retail, Sell, service, Shopping, Shops, Snippets, solutions, Specials, Suggestions, support, Swaminathan, Tablets, Telecom, Tummy, Vendors, Vitamins, Wal-Mart, Walmart, weight, Wellness, Yadav | Leave a Comment »

Tuberculosis – Symptoms, Transmission, Diagnosis & Treatment

Posted by Snapjudge மேல் மே 10, 2007

காசநோயும் கட்டுப்பாடும்

எஸ். முருகன்

காசநோய் எளிதில் பரவக் கூடிய தொற்றுநோய். நீள்தண்டு வடிவ பாக்டீரியாக்கள் மைக்கோபாக்டீரியத்தால் ஏற்படும் இந்த நோய் உடலின் எப்பகுதியிலும் ஊடுருவவல்லது. குறிப்பாக நுரையீரல் மிக எளிதில் வசப்படும் பகுதி. பாதிக்கப்பட்ட மனிதரிலிருந்து காற்றின்வழி மூக்கு, தொண்டைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் பரவுகிறது.

காசநோய் உள்ளோர் இருமும்போதும் தும்மும்போதும் பாடும்போதும் பேசும்போதும் வெளியேறி காற்றில் பரவும் கிருமிகள், பிறர் சுவாசிக்கும்போது தொற்றுகிறது. மேலும் காசநோய் உள்ளவர்களுடன் தொடர்ந்து பழகும்போதும் நோய் தொற்றுகிறது.

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பெரிய பிரச்சினையான காசநோய் பரவ எய்ட்ஸýம் ஒரு காரணம். இந்தியாவில் நிமிஷத்துக்கு ஒருவர் காசநோயால் இறப்பதாக ஒரு தகவல்.

ஊட்டச்சத்து குறைவாக உள்ளோர் காசநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால், உயிரிழப்போர் வளரும் நாடுகளில்தான் அதிகம். எதிர்ப்பு சக்தி குறைவாகவுள்ள மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளை விரைவில், அதிக அளவில் பாதிக்கிறது இந்நோய்.

பெருமளவில் 15-லிருந்து 24 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு நோய் தொற்றுகிறது. இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களில் பாதிப் பேர் 15 முதல் 44 வயதுக்கு உள்பட்டவர்கள் என மதிப்பிடப்படுகிறது.

இந்தியாவில் மட்டும் சுமார் 3 லட்சத்திற்கும் மேலான குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து இந்நோயைப் பெற்றிருக்கின்றனர்.

தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், புதுப்பிக்கப்பட்ட தேசிய காசநோய்த் தடுப்புத் திட்டத்திற்கு சுமார் ரூ. 1,156 கோடி உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தி வருகின்றன.

நேரடியாக உட்கிரகித்தல் சிகிச்சை முறையின் ஐந்து கூறுகள்:

  • அரசு ஆதரவு- தொடர்ச்சியான நிதியுதவி,
  • தரமான பரிசோதனைகள் மூலம் புதிய நோயாளிகளைக் கண்டறிதல்,
  • தக்க மேற்பார்வையின் கீழ் தரமான சிகிச்சை முறை -நோயாளிகளுக்கு ஆதரவு,
  • மருந்து அளிப்பதில் முறையான மேலாண்மை,
  • கண்காணிப்பு மற்றும் மதிப்பிடும் முறை, அதன் விளைவுகளை அளவெடுத்தல் ஆகியவை.

நோய்க் குறிகள்:

  • தொடர்ச்சியான இருமல்,
  • கோழையுடன் கூடிய இருமல்,
  • எப்போதும் சோர்வு,
  • எடை இழப்பு,
  • காய்ச்சல்,
  • ரத்தத்துடன் கூடிய சளி,
  • இரவில் வியர்த்தல்,
  • பசியின்மை ஆகியவை.

நோய் உருவாக்கம்: பல ஆண்டுகளாகக் காசநோய் ஒருவரைத் தாக்கியிருந்தாலும் அவர் நலமாகவே இருப்பார். திடீரென உடல்நலன் பாதிக்கப்படும்; அல்லது மாற்றங்கள் ஏற்படும். காரணம், மற்ற நோயான எய்ட்ஸ் அல்லது நீரிழிவு நோய்த் தாக்குதலாக இருக்கலாம் அல்லது போதை மாத்திரைகள், குடிப்பழக்கம் போன்றவற்றாலும் மாற்றம் அல்லது குறை ஏற்படுகிறது.

காசநோய் வந்தால் உடலானது அதனுடைய நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து குறைந்து பாதிக்கப்படுகிறது. கிருமிகள் ஒரு வாரத்திற்குள் வளர்ந்து உடலைப் பாதிக்கின்றன.

சிகிச்சை முறைகள்: காசநோயால் தாக்கப்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கைத் தடுப்பு சிகிச்சை அளிக்கப்படும். இதன் நோக்கம், நோய்க்கிருமிகளைக் கொல்வது. காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை கிருமிகள் உடனடியாக ஒன்றும் செய்யாது. சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் பின்னர் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களை அணுகி தினமும் அவர்களது ஆலோசனைப்படி, அளவாக ஐசோநியாசிட் எடுத்துக்கொள்ள வேண்டும். இது விலை குறைவான மருந்து. பாதிக்கப்பட்ட நபர் ஆறு மாதம் முதல் ஒன்பது மாதம் வரை, சிலருக்கு ஓர் ஆண்டு ஐசஏ மருந்தைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வர்.

குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனைகளை மேற்கொண்டு தொடர்ந்து இம் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டுமா? என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

காசநோய் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி மார்பு எக்ஸ்-ரே எடுக்க வேண்டும்.

நீண்ட நாள்களாக காசநோயினால் பாதிக்கப்பட்டவர்களைத் தனித்துப் பல மாதங்களுக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளிக்க வேண்டும். சிலருக்கு பல ஆண்டுகள் கூட ஆகலாம். அறுவைச் சிகிச்சை கூட மேற்கொள்ள வேண்டி வரும்.

இந்த நோயை சக்திவாய்ந்த மாத்திரைகளினால் குணப்படுத்த முடியும். இவ்வாறு சிகிச்சை பெற்றவர்கள் வீட்டிலேயே சிகிச்சையைத் தொடரலாம்.

சிகிச்சை முறைகளில் மாற்றம் மற்றும் மாற்று நடவடிக்கைகள் எனப் பல வந்தாலும் இன்னமும் இந் நோயை எதிர்த்து நிற்க முடியவில்லை.

காசநோயைப் போக்கப் பல சிகிச்சைகள் இருந்தாலும் நோயாளிகளின் முழு ஒத்துழைப்பால்தான் சிகிச்சையை முழுமையாக முடிக்க முடியும். நோய்க்குத் தக்க மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

எனவே, நோயாளிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இச் சிகிச்சைக்கு உண்மையான வெற்றி என்பது கிடையாது.

(கட்டுரையாளர்: பேராசிரியர், டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை.)

Posted in AIDS, airborne, Bacteria, Communicable, cure, diagnosis, Disease, Doctor, drug, Evolution, Health, Healthcare, History, Infectious, Malnutrition, Medicine, Nutrition, Pathogenesis, Prevention, References, Symptoms, TB, Transmission, Treatment, Tuberculosis, Vaccines, Virus, Waterborne | 3 Comments »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series

Posted by Snapjudge மேல் மே 1, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கத்தி, நெருப்பு, விஷம் போல் மருந்து!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

என் மனைவிக்கு 56 வயதாகிறது. கடந்த டிசம்பர் மாதம் மூன்று நாட்கள் காய்ச்சல் இருந்தது. காய்ச்சல் குணமான பிறகு, அவள் கால் பாதங்கள் வீங்கி வலிக்கிறது என்கிறாள். மூன்று மாதங்களாக டாக்டரிடம் காட்டி மருந்து, ஊசி போட்டும் குணமாகவில்லை. நடக்க முடியாமல் வேதனைப்படுகிறாள். அவள் நல்ல உடல் நலம் பெற்று சுகத்தோடு இருக்க ஆலோசனை கூறவும்?

ஆர். வாசன், சிவகாசி.

காய்ச்சலை உடனடியாகக் குறைக்க உங்கள் மனைவி சாப்பிட்ட மருந்துகளின் செயலால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம். நோயைத் தீர்ப்பதற்காக உள்ளே செலுத்தப்பட்ட மருந்து நோயாளியின் நோய்க்கு ஒத்ததாயிருந்தாலும், தேக வாகுக்கு ஒவ்வாததாயிருக்கலாம். அதுபோன்ற மருந்தின் சேர்க்கையை எதிர்க்கும் உடலின் சக்தி போதுமானதாக இல்லாதிருந்தால் அம்மருந்தே வேறு ஒரு நோய்க்குக் காரணமாகலாம். தன் வேலை முடிந்ததும் வெளியேறவேண்டிய அம்மருந்து உடலின் உள்ளே தங்கினால் அதன் விளைவாக உள்ளே நிகழும் ரஸôயன பௌதிக மாறுதல்கள் பயங்கர விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

மருந்து கத்திபோல், நெருப்பு போல், விஷம் போல் அறிந்து உபயோகிக்கப்பெற அமிருதமாக உதவும். அறியாமையால் முறை தவறி உபயோகிக்கப் பெற தீங்குகள் விளையும்.

காய்ச்சல் உள்ள நாட்களில் வயிற்றில் ஏற்படும் மப்பு நிலை, அஜீரண நிலையை உதாசீனப்படுத்தி இன்று பலரும் ப்ரட் டோஸ்ட், இட்லி, சட்னி என்றெல்லாம் சாப்பிடுகின்றனர். மருந்து காய்ச்சலை குறைத்துவிடும். பத்திய நிலை தேவையில்லை என்பது அவர்கள் எண்ணம். இதனால் சீற்றம் பெறும் வாயு கப தோஷங்கள் காலில் வலியையும் வீக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.

தங்களுடைய மனைவியின் விஷயத்தில் சாப்பிட்ட மருந்தின் கழிவுகளையும் குடல் தூய்மையை மாசுபடுத்திய தவறான உணவின் சேர்க்கையையும் வெளியேற்ற வேண்டிய நிலை தற்சமயம் ஏற்பட்டுள்ளது. இவ்விரு வேளைகளைச் செய்வதில் ஆயுர்வேத மருந்தாகிய சிலாஜது எனும் கண்மத பஸ்மமும், திரிபலா சூரணமும் உதவிடக் கூடும். திரிபலா சூரணம் 10 கிராம், 800 மிலி கஷாயத்துடன் 1 கேப்ஸ்யூல் கண்மதம் பஸ்மமும், மாலையில் இதுபோலவே கஷாயமும் கேப்ஸ்யூலும் வெறும் வயிற்றில் தொடர்ந்து 1 வாரம் சாப்பிட வீக்கம் வற்றி விட வாய்ப்பிருக்கிறது. இந்நாட்களில் பத்திய உணவாக புழுங்கலரிசியை சிறிது சிவப்பு காணும் வரை லேசாக வறுத்து 1 பங்கு, 20 பங்கு தண்ணீர் சேர்த்து, கால் பங்கு சுண்டும் வரை கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ளவும். பருக்கை நீக்கி, தெளிவாக சிறிது உப்பு கலந்து காலை, மாலை வெதுவெதுப்பாகக் குடிக்கவேண்டும். 5 கிராம் சுக்கு 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, வடிகட்டி குடிக்கப் பயன்படுத்தவேண்டும். அதிகநேரம் நின்று கொண்டு வேலை செய்யாமல், நிறைய ஓய்வு எடுக்கவேண்டும்.

இதுபோன்ற பத்திய உணவினால் நாக்கில் ருசியும், வயிற்றில் பசியும் மேம்படும். மருந்துகள் உடலின் உட்புறக் கழிவுகளை வெளியேற்றும். குடல் பகுதி தூய்மையான பிறகு ஆயுர்வேத மருந்தாகிய தசமூலஹரீதகீ எனும் லேஹ்யத்தை காலை, மாலை வயிற்றில் 10 கிராம் அளவு நக்கிச் சாப்பிட வீக்கம், வலி குறையும். சாப்பிடும் உணவு சூடாகவும், சரியான நேரத்திலும் சாப்பிடவேண்டும். தயிர், புளிப்புச் சுவை கொண்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். புனர்நவாஸவம் எனும் மருந்தை 30 மிலி காலை இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடலாம். இந்நாட்களில் நெருஞ்சி முள்ளைத் தூளாக்கி, சமம் கொள்ளு வறுத்துப் பொடித்துக் கலந்து துணியில் முடிந்து சட்டியில் சூடாக்கி, கால் வீக்கம் , வலி உள்ள பகுதிகளில் காலை, இரவு உணவிற்கு முன்பாக 1/2 மணி நேரம் ஒத்தடம் கொடுக்கலாம்.

காய்ச்சலின் சீற்றத்தை அடக்க, சாப்பிடப்பட்ட

மருந்துகளால் ஜீவாணுக்கள்,கிருமிகள் போன்ற ஜீவனுள்ள பொருள்களை அழிக்கும் மருந்து உடலில் ஜீவ இயக்கத்திற்காகத் திசுக்களில் தோன்றும் பாதுகாப்பான ஜீவாணுக்களையும் அழித்திருக்கக் கூடும். அதை ஈடுகட்ட புனர்நவாதி மண்டூரம் எனும் மாத்திரையை தங்கள் மனைவி மோர்சாதத்துடன் கலந்து சுமார் 14 முதல் 21 நாட்கள் வரை சாப்பிட வேண்டும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Cleansing, Cold, Doctor, Fever, Food, Health, Healthcare, Medicine, Nutrition | 2 Comments »

Neeraja Chowdhury – Encouraging signs by 5 new MPs: Lok Saba Politics

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 3, 2007

புதிய பாதை காட்டும் 5 இளம் எம்.பி.க்கள்!

நீரஜா செüத்ரி

அவையில் போதிய உறுப்பினர்கள் இல்லை என்று “”கோரம்” மணி ஒலிக்கிறது; நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் உறுப்பினர்களை உள்ளே வருமாறு கூவிக்கொண்டே, அழைத்துச் செல்ல நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான அமைச்சர் பரபரப்பாக ஓடி வருகிறார்.

காபியை குடித்துக் கொண்டும், சாம்பாரில் ஊறிய வடையை ஸ்பூனில் எடுத்து ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டும் உறுப்பினர்கள், நாட்டு நடப்பு குறித்து தங்களுக்குள் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

  • “”இந்த அர்ஜுன் சிங்குக்கு எதையாவது செய்து பேப்பரில் பெயர் வரவழைப்பதே வேலை” என்கிறார் ஒருவர்,
  • “”நீதிமன்றங்கள் வரம்போடு இருக்க வேண்டும்பா” என்கிறார் மற்றொருவர்.
  • “”இந்த மூக்குக் கண்ணாடி வெளிநாட்டில் வாங்கியதா?” என்று அக்கறையோடு விசாரிக்கிறார் மற்றொருவர்.
  • ஐஸ்வர்யா-அபிஷேக் திருமணம் பற்றி இத்தனை சந்தடிக்கிடையிலும் ஒருவர் கிசுகிசுக்கிறார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான அமைச்சராக பிரமோத் மகாஜன் இருந்த காலத்திலிருந்தே இதுதான் மைய மண்டபக் காட்சி. முக்கியமான விவாதங்களின்போதுகூட உள்ளே இருக்க பல உறுப்பினர்கள் விரும்புவதில்லை.

இந்தப் பின்னணியில்தான் அந்த 5 இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல் எனக்கு வியப்பையும் மகிழ்ச்சிப் பரவசத்தையும் ஏற்படுத்தியது. பொழுது விடிந்தும் விடியாத காலை நேரத்தில் 5 இளம் எம்.பி.க்கள் வியர்க்க விறுவிறுக்க கைகளில் பெட்டிகளுடன் புது தில்லி ரயில் நிலையத்துக்கு ஓடி வருகின்றனர். ரயில் புறப்படுவதற்கு முன்னதாக வந்துவிட்டதை உறுதி செய்துகொண்டு நிம்மதியாக ஆசுவாசப்படுகின்றனர்.

வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த இந்த 5 பேரும் அதிகாலையிலேயே ரயிலைப் பிடிக்க வந்திருப்பதற்குக் காரணம் அரசியல் அல்ல, அவர்களுடைய தொகுதிப் பிரச்சினையும் அல்ல. அதைத் தெரிந்து கொண்டபோதுதான், கடந்த 20 ஆண்டுகளாக அரசியல் நடவடிக்கைகளைப் பின்பற்றி செய்தி சேகரிக்கும் எனக்கு பூரிப்பு ஏற்பட்டது.

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில், குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்து குறைவுக்குக் காரணம் என்ன? அரசின் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் எந்த அளவுக்குப் பயன் தருகிறது? அதை வெற்றியடைய வைக்க என்ன செய்யலாம் என்று நேரில் அறிந்துவரத்தான் அவர்கள் இப்படி ஒன்றாகக் கிளம்பிவிட்டனர்.

காங்கிரஸ், பாரதீய ஜனதா என்று எல்லா கட்சிகளையும் சேர்ந்தவர்கள் அவர்கள்.

காலை 6.15 மணிக்குப் புறப்படும் குவாலியர் “சதாப்தி’ எக்ஸ்பிரûஸப் பிடிக்க காலை 5.45-க்கு வரவேண்டும் என்று தீர்மானித்த

  1. சச்சின் பைலட்,
  2. சுப்ரியா சுலே,
  3. ஷாநவாஸ் உசைன்,
  4. ஜெய பாண்டா,
  5. பிரேமா கரியப்பா என்ற அந்த 5 பேரும் 5.30 மணிக்கெல்லாம் வந்துவிட்டனர். முதல் வகுப்பில் இலவசமாகவே செல்லலாம் என்றாலும் குளிர்பதன வசதியுடன் கூடிய “சேர்-கார்’ வகுப்பிலேயே அமர்ந்து கொண்டனர். அவர்களுடன் கஜல் பாடகர் பினாஸ் மசானி, நடிகர் கெüர் கர்ணிக் ஆகியோரும் மும்பையிலிருந்து வந்து சேர்ந்து கொண்டனர்.

“”ஊட்டச்சத்து குறைவுக்கு எதிரான மக்கள் கூட்டணி” என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு இப் பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.

நம் நாட்டில் 3 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில் 80 சதவீதம் பேர் ரத்த சோகை நோயால் அவதிப்படுகின்றனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் 60 சதவீத குழந்தைகளுக்கு ரத்த சோகை நோய் காணப்படுகிறது. முதலில் பாஜக ஆளும் மாநிலத்துக்குப் போனாலும் அடுத்து காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிரம், அடுத்து பாஜக-பிஜு ஜனதா தளம் ஆளும் ஒரிசா என்று எல்லா மாநிலங்களுக்கும் செல்ல இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

குறைகளைக் கண்டுபிடித்து அதை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தாமல், அரசுக்கு நல்ல யோசனைகளைக் கூறுவதே இவர்கள் நோக்கம். மகாராஷ்டிரத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர், அங்கன்வாடி ஊழியர்களுடன் சேர்ந்து இதில் செயல்பட ஆரம்பித்ததால் நல்ல பலன்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன.

சதாப்தி எக்ஸ்பிரஸ் குவாலியரை அடைந்ததும் ரயில் நிலையத்தில் திரண்ட காங்கிரஸ் இளைஞர்கள் பட்டாளம் ஒன்று, “”சச்சின் பைலட் வாழ்க” என்று விண் அதிர கோஷமிட்டது. தருமசங்கடத்தில் நெளிந்த பைலட், அவர்களைக் கையமர்த்தி, “”அரசியல் விஷயமாக நான் இங்கே வரவில்லை, என் பின்னால் வராதீர்கள்” என்று அடக்கமாகக் கூறிவிட்டு, பாஜகவின் ஷாநவாஸ் உசைனை அருகில் அழைத்து அணைத்தபடி நின்றார். தொண்டர்கள் அதைப் புரிந்துகொண்டு உற்சாகமாக கை அசைத்து விடை பெற்றனர்.

கலிங்க நகர், சிங்குர், நந்திகிராமம், விவசாயிகளின் தற்கொலை என்று பத்திரிகைகளில் அடிபடும் செய்திகள் அனைத்துமே, “”நாட்டில் வளர்ச்சி இருந்தாலும் அது சமத்துவமாக இல்லை” என்பதையே காட்டுகிறது. இந்தியாவின் குழந்தைகளில் சரிபாதி ரத்த சோகையுடன் இருந்தால் இந்தியா எப்படி வல்லரசாக முடியும்?

ஐந்து இளம் எம்.பி.க்கள் சரியான பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். இது முதல் அடிதான். இவர்களுடைய ஒற்றுமையும், லட்சியமும் மேலும் வலுவடைந்து, இது மாபெரும் இயக்கமாக மாறுமா, மாரத்தான் ஓட்டமாக உருவெடுக்குமா, இவர்களுக்கு அதற்குண்டான தெம்பு இருக்குமா என்பதெல்லாம் காலம் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள்.

ஆனால் இந்த முயற்சி, நம் அனைவராலும் மனமாரப் பாராட்டப்பட வேண்டியது என்பதில் சந்தேகமே இல்லை.

தமிழில்: சாரி.

Posted in Anganvadi, Appearance, Assembly, Biju Janata Dal, BJD, BJP, Children, Congress, Delhi, Female, Field, Food, Gwalior, Hygiene, Janata Dal, Jaya Panda, Kariappa, Kid, Lok Saba, Madhya Pradesh, maharashtra, Malnutrition, MP, NCP, Neeraja, Neeraja Chowdhury, New Delhi, NGO, Non-profit, Nutrition, Orissa, Panda, parliament, pilot, Politics, Pramod, Pramod Mahajan, Prema Kariyappa, Promotion, Sachin Pilot, Shanavaz, Shanawaz Hussein, Shatabdi, Shupriya Sule, Tour, Trip, Women | 1 Comment »

Indian Government spends 0.035% of budgetary funds on Child Development Programmes

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

குழந்தைகள் பாதுகாப்புக்கு அற்பத் தொகையை செலவிடும் அரசு

புது தில்லி, பிப். 12: குழந்தைகள் பாதுபாப்புக்காக அற்பத் தொகையையே அரசு செலவிடுகிறது என்பது அதன் செலவின விவரத்தை ஆராய்ந்தால் தெரியவருகிறது.

ஆனால், உத்தரப் பிரதேசம் நிதாரியில் குழந்தைகள் மற்றும் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நமக்கு உணர்த்துவது குழந்தைகள் பாதுகாப்புக்கு அதிக நிதியை அரசு செலவிடவேண்டும் என்பதே.

2005-06-ம் ஆண்டில் குழந்தைகள் பாதுகாப்புக்கு என பல திட்டங்களுக்கு செலவிடப்பட்ட தொகை நாட்டின் மொத்த செலவில் 0.035 சதவீதமே. இதிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் அரசு காட்டும் அக்கறை மிகக் குறைவாக உள்ளது என்பது புரியும்.

கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு பட்ஜெட் மூலம் ஒதுக்கப்படும் நிதி பற்றி மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வு செய்தது.

இதன்படி குழந்தைகள் பாதுகாப்புக்காக நிதி ஒதுக்கீடு அதிகரித்துக் காணப்பட்டாலும் அது மிக குறைவானதே என்பது தெரிய வந்துள்ளது.

2005-06ல் குழந்தைகள் பாதுகாப்புக்காக பட்ஜெட்டில் 0.035 சதவீத நிதி ஒதுக்கப்பட்டது. இது 2001-02ல் 0.027 சதவீதமாக இருந்தது.

குழந்தைகள் பாதுகாப்புக்காக அற்பத்தொகையை மத்திய அரசுக்கு ஒதுக்குவது பற்றி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 2005-06ம் ஆண்டுக்கான தனது அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.

குழந்தைகள் நல திட்டத்துக்காக பத்தாயிரம் கோடி ரூபாய் தேவை!

புது தில்லி, பிப். 17: குழந்தைகள் நல திட்டத்துக்காக மத்திய பட்ஜெட்டில் இம் முறை பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடமும் திட்டக்குழுவிடமும் முறையிட்டிருக்கிறார் மகளிர்-குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் ரேணுகா செüத்ரி. மத்திய பட்ஜெட்டில் தொழில்வாரியாக, பிரதேச வாரியாக, சமூகவாரியாக முக்கியத்துவம் தந்து நிதி ஒதுக்கக் கோரிக்கைகள் வந்துள்ளன. ஆனால் குழந்தைகளுக்கென்று தனி முக்கியத்துவம் தந்து போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரேணுகா தான் முதலில் வலியுறுத்தியுள்ளார்.

“குழந்தைகள் நலம் என்பது சாதாரண விஷயம் அல்ல; சமுதாயத்தின் முக்கிய அங்கமான குழந்தைகள்தான் மனித ஆற்றல் வளத்தில் முக்கிய பங்குதாரர்கள். எதிர்காலம் அவர்களைத்தான் நம்பியிருக்கிறது. இப்போது நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் 14 வயதுக்கு உள்பட்டவர்கள். 2020-ல் நமது நாடு இந்தத் தலைமுறையினரைத்தான் பெரிதும் சார்ந்திருக்கப் போகிறது. எனவே இப்போதே அவர்களுடைய நலனுக்கு சிந்தித்து செலவு செய்வது நல்லது.

“ஊட்டச் சத்து இல்லாத குழந்தைகளை வளரவிட்டு, பிறகு அவர்களுக்கு ஊட்டச் சத்து வழங்குவதற்கும், நோய்த்தடுப்பு மருத்துகளைத் தருவதற்கும் அரசுக்கு 3 மடங்கு செலவாகிறது. அதற்குப் பதிலாக சிறு வயதிலேயே அவர்களுக்கு சத்துள்ள உணவு கிடைக்க செலவிடுவது நிரந்தரப் பலன்களைத்தரும்.

“2005-06-ல் மத்திய பட்ஜெட்டில் குழந்தைகள் நலனுக்காக என்று மொத்தம் ரூ.3,550 கோடி மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. இது மொத்த பட்ஜெட் செலவில் 0.69 சதவீதம்தான். அதாவது ஒரு சதவீதம் கூட இல்லை.

மத்திய அரசு மட்டும் அல்ல, மாநில அரசுகளும் குழந்தைகளின் நலனுக்காக என்று தனி ஒதுக்கீடுகளைச் செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி எல்லா மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்.

குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அரசு அதிக அளவில் செலவிட வேண்டும். ஊட்டச் சத்து குறைவாக உள்ள குழந்தைகளின் சுகாதாரத்தை மேம்படுத்த, முதலில் செய்திருக்கக்கூடிய சாதாரணச் செலவைப் போல 32 மடங்கு செய்ய வேண்டியிருக்கிறது என்று அரசின் ஆய்வு தெரிவிக்கிறது. எனவே முதலிலேயே குழந்தைகள் நலனுக்கு நேரடியாகச் செலவிடுவது நல்லது. குழந்தைகளின் ஊட்டச்சத்து, படிப்பு என்று தனித்தனியாகவோ, அல்லது தவணை முறையிலோ செலவிடாமல், குழந்தை வளர்ப்பின் அனைத்து முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கி அதை அமல் செய்வது அவசியம். எங்களுடைய அமைச்சகம் அத்தகைய திட்டத்தைத் தயாரித்துவருகிறது.

இப்போதுள்ள அங்கன்வாடிகளையும் குழந்தைகள் பராமரிப்பு மையங்களையும் எல்லா மாவட்டங்களிலும் தொடங்க விரும்புகிறோம். குழந்தைகளின் ஊட்டச்சத்தை, குறைபாடுள்ள பகுதிகளில் மட்டும் மேம்படுத்தாமல் எல்லா பகுதிகளிலும் மேம்படுத்த திட்டம் தீட்டியிருக்கிறோம். எனவே இவற்றுக்கெல்லாம் மேலும் அதிக நிதி தேவைப்படுகிறது. இதை மத்திய நிதி அமைச்சகத்திடமும், திட்டக் குழுவிடமும் கேட்டிருக்கிறோம்’ என்றார் ரேணுகா செüத்ரி.

=============================================================
அமலுக்கு வந்து 6 மாதங்களாகியும் ஏட்டுச் சுரைக்காயாக செயலற்றுக் கிடக்கும் குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டம்

புதுதில்லி, ஏப். 10: வீடுகளில் சிறார்களை பணிக்கும் அமர்த்தும் போக்கு இன்னும் தொடர்கிறது. அமலுக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் ஏட்டுச் சுரைக்காயாக செயலற்றுக் கிடக்கிறது குழந்தைத் தொழிளாளர் தடைச் சட்டம்.

உலகிலேயே குழந்தைத் தொழிலாளர்கள் மிகுந்த நாடு இந்தியாதான். இங்கு, சமூக அக்கறையற்ற நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகச் சிந்திப்பதற்குப் பதிலாக அதை ஊக்குவிக்கும் போக்கு உள்ளது.

தில்லி, சென்னை போன்ற பெருநகரங்களின் பங்களாக்களில், நடுத்தர வர்க்க வீடுகளில் தரை துடைக்க, வீடு கழுவ, பத்துப் பாத்திரம் தேய்க்க சிறுமிகளை வேலைக்கு அமர்த்தும் போக்கு சர்வ சாதாரணமாக உள்ளது.

துள்ளித் திரிந்து படித்து மகிழும் வயதில் சிறுவர், சிறுமியர்க்கு வீட்டு வேலை என்பது கொடூரமல்லவா? ஆனால் “செல்வச் செழிப்புள்ள அல்லது நன்கு பணம் சம்பாதிக்கும், கல்வி கற்ற, நவீனமான, சிறார் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வுள்ள மனிதர்கள்தான் சிறார்களை வேலைக்கு அமர்த்துகின்றனர் என்பது வேதனையான உண்மை’ என்கிறார் யுனிசெஃப் அமைப்பைச் சேர்ந்த கார்லட்டோ பார்கரோ.

தொழிற்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் பிற ஆபத்தான பணிகளில் 14 வயதுக்குட்பட்ட சிறார்களை பணிக்கு அமர்த்துவதை 1986-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் தடை செய்கிறது. 1986-லேயே குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டம் வந்து விட்டாலும், வீடுகள் மற்றும் உணவகங்களில் சிறார்களை வேலைக்கு அமர்த்தும் விவகாரத்தில் கடந்த சில ஆண்டுகளாகத்தான் கவனம் திரும்பியுள்ளது.

“நீதித்துறை மற்றும் அதிகார வர்கத்தைச் சேர்ந்த பலரது வீடுகளில் சிறார்களை வேலைக்கு வைத்திருப்பது எந்த விதத்திலும் வியப்புக்கு இடமில்லாத சாதாரணமான செய்தி’ என்கிறார் குழந்தை உரிமைகளுக்காகப் போராடும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்.

குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்தை மீறுபவர்களுக்கு ரூ.20 ஆயிரம் வரை அபராதம், 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை என்பது வலிமையான ஆயுதமாகத் தோன்றினாலும் அதிகாரிகள் அதை ஏன் பிரயோகிப்பதில்லை?

“இந்தத் தடை அமலுக்கு வந்து சில மாதங்களே ஆகியுள்ளது. முதல்கட்டமாக, பத்திரிகை, தொலைக்காட்சி ஆகிய ஊடகங்கள் வழியாக தொடர் பிரசாரத்தின் மூலம் இது குறித்து விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை செய்துள்ளோம். இதன் பிறகே மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு எங்களுக்கு சிறிது அவகாசம் வேண்டும்’ என்கிறார் தொழிலாளர் துறையைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி.

அரசு ஊழியர்கள் தங்கள் வீடுகளில் சிறார்களை பணிக்கு அமர்த்தக் கூடாது என்ற விதி 1999-ல் இருந்து அமலில் உள்ளது. ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் இது தொடர்பாக ஒரு வழக்குக் கூட பதிவாகவில்லை. தங்கள் கடமையைச் சரிவரச் செய்யாத ஆய்வாளர்களுக்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது? சட்டத்தின் அமல் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடக்கூடாது? பிரச்சினை என்னவெனில் ஆய்வாளர்களைப் பொருத்தவரையில் இந்தக் கணக்கெல்லாம் காட்ட வேண்டியதில்லை.

அது மட்டுமன்றி, குழந்தைத் தொழிலாளர் முறை என்பது தனித்த பிரச்சினை அல்ல. தொழிலாளர், கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
=============================================================

Posted in Analysis, Anganwadi, Backgrounder, Budget, Child Abuse, Child Protection, Child Welfare, Children, Development Funds, Domestic, Economy, Finance, Healthcare, Help, History, Household, HR, Human Resources, Kid, Kids, Labor, Labour, Law, Nutrition, Order, Percentage, Plan, Police, Reference, Renuka Choudhry, Renuka Chowdhry, Rich, Schemes, Society, UNICEF, Welfare | 1 Comment »