உள்ளதை சொல்கிறேன் – சித்ரா லட்சுமணன்
‘வசனக் காதல்’
கலைஞர் அவர்களை நேரில் காணாமலேயே அவர் மீது பெரும் காதல் கொண்டவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். அதற்குக் காரணம் “அபிமன்யூ’ படத்தில் கலைஞர் எழுதியிருந்த அற்புதமான வசனங்கள்.
“அபிமன்யூ’ படத்தின் வசனச் சிறப்பு காரணமாக ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல ஆறு நாட்கள் தொடர்ந்து அந்தப் படத்தைப் பார்த்தார் கவியரசர்.
நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதைப் போல “அபிமன்யூ’ படத்தின் வசனங்களை கலைஞர் எழுதியிருந்தபோதிலும் திரைப்படத்தில் அவரது பெயர் இடம் பெறவில்லை.
எம்.ஜி.ஆர். அவர்களது சகோதரர் எம்.ஜி.சக்கரபாணிதான் சேலம் அம்பிகா தியேட்டரில் கவியரசு கண்ணதாசன் “அபிமன்யூ’ படத்தைப் பார்க்க போனபோது, அந்தப் படத்தின் வசனங்களை எழுதியவர் கலைஞர் என்ற தகவலை கண்ணதாசன் அவர்களிடம் கூறினார். “அபிமன்யூ’ படம் பார்த்த அனுபவத்தை தனது “வனவாசம்’ நூலில் கீழ்க்கண்டவாறு உணர்ச்சிகரமாக எழுதியுள்ளார் கவியரசர்.
“”அபிமன்யூ’ படத்தில் அவன் கேட்ட தமிழ் என்றும் மறக்கமுடியாத இன்பத் தமிழாகும்.
“ஒடிந்த வாளானாலும் ஒரு வாள் கொடுங்கள்’.
“அண்ணன் செய்த முடிவை கண்ணன் மாற்றுவதற்கில்லை’.
“கண்ணன் மனமும் கல் மனமா?’
“அர்ச்சுனனால் கூட துளைக்க முடியாத சக்ரவியூகத்தை அபிமன்யூ துளைத்து விட்டானென்றால் அங்கேதானிருக்கிறது ஆச்சாரியாரின் விபீஷண வேலை.’
இந்த வசனங்கள் இன்றுவரை அவனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
அம்பிகா தியேட்டரின் சுவையான காப்பியும், “அபிமன்யூ’வில் கண்ட கருணாநிதியின் கைவண்ணமும் அவன் நெஞ்சிலே நிலைத்தன.
“”காணாமலே காதல்” என்பார்கள். அந்தக் “காதலே’ பிறந்து விட்டது அவனுக்குக் கருணாநிதியின் மீது.
“”எப்படியாவது கருணாநிதியைக் கூட்டி வாருங்கள்” என்று அவன் சக்கரபாணியைக் கேட்டான்.
“மாடர்ன் தியேட்டர்ஸ்’க்கு அவரை வரவழைக்க வேண்டுமென்று அவரிடம் சொன்னான்.
அன்று அவன் “மாடர்ன் தியேட்டர்ஸ்’க்கு சொல்லியிருந்தால் எடுப்பட்டிருக்காது.
சக்கரபாணி சொன்னார். அவனும் கூட சேர்ந்து பாடினான்.
கருணாநிதியை வரவழைக்க டி.ஆர்.சுந்தரம் முடிவு செய்தார்.
ஒரு நாள் கருணாநிதியும், சக்கரபாணியும் சேலம் வந்து சேர்ந்தார்கள்.
திறமை என்பதை யாரிடம் கண்டாலும் நேருக்கு நேரே பாராட்டிவிடுவது அவனது சுபாவம்.
தன்னை தாழ்த்திக்கொண்டு இன்னொருவரை உயர்த்துவான்.
அதுதான் திறமைக்கு தரும் மியாதை என்றே அவன் கருதினான்.
அன்று கருணாநிதியை அவன் முதன்முதலாக கோயம்பத்தூர் லாட்ஜில் சந்தித்ததும் ஒரு காதலியைக் காணும் உணர்ச்சியே அவனக்கு ஏற்பட்டது.
சக்கரபாணி அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துவைத்தார்.
அன்று முதல் கருணாநிதியும் அவனை உயிருக்குயிராக நேசிக்கத் தொடங்கினார்.
“மாடர்ன் தியேட்டர்’ஸில் மாதம் 500 ரூபாய் சம்பளத்தில் அவர் வேலைக்கமர்ந்தார்.
ஒரு நாளாவது ஒருவரை ஒருவர் காணாமலிருந்தால் எதையோ பறி கொடுத்தது போலிருக்கும்.
ஒருவர் கையில் இன்னொருவர் தலை வைத்துத் தூங்குகிற அளவுக்கு பாசம் வளர்த்தது.
அவர்கள் இருவருக்கிடையே ரகசியம் என்பதே இல்லாமலிருந்தது.
அவரைப் பற்றி யாராவது தவறாகப் பேசிவிட்டால் அவனால் பொறுக்க முடியாது. அவருக்கும் அப்படியே”.
இவ்வாறு அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் கவியரசு. தன்னைப் பற்றி எழுதும்போது “அவன்’ என்று தன்னடக்கத்தோடு இந்த நூலில் குறிப்பிட்டிருந்தார் கவியரசர்.
இப்படி நெருக்கமான நட்போடு பழகிய அவர்களுக்கு நடுவே பயங்கரமான விரிசல் ஏற்பட்டதும், பின்னர் அந்த இடைவெளி முழுவதுமாக மறைந்து இருவரும் இணைந்ததும் தமிழகம் அறிந்த வரலாறு.
“மணமகள்’ படத்தைத் தொடர்ந்து கலைஞரின் எழுத்தாற்றலில் திரை உலகில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய படமாக “பராசக்தி’ அமைந்தது.
புரட்சிகரமான கருத்துக்களோடு அடுக்கு மொழியில் கலைஞர் அவர்கள் எழுதியிருந்த வசனங்கள் பின்னாளில் தமிழ்த் திரைப் படங்களின் வசன பாணியையே மாற்றி அமைத்தது என்றால் அது மிகையில்லை.
கலைஞர் அவர்களது வசனத்திற்கு தனது அழுத்தம் திருத்தமான தமிழ் உச்சரிப்பால் உயிர் கொடுத்தார் சிவாஜி. ஏற்ற இறக்கங்களோடு அவர் கலைஞரின் தமிழை உச்சரித்தது கண்டு தமிழ்நாடே பரவசப்பட்டது.
சிவாஜி தனது முதல் படத்திலேயே தமிழ் நாட்டு திரைப்பட ரசிகர்கள் மனதை ஒட்டுமொத்தமாகக் கொள்ளை கொண்டார் என்றால் அதில் கலைஞர் அவர்களுக்கு கணிசமான பங்கு உண்டு என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.
1952-ல் வெளியான “பராசக்தி’க்குப் பிறகு இந்த 55 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் படங்கள் வெளியாகியிருந்தாலும் இன்றும் “பராசக்தி’ தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பெற்றிருக்கிறது என்றால் அதற்கு கலைஞர் -நடிகர் திலகம் ஆகிய இருவரின் கூட்டணியே முக்கிய காரணம்.
“பராசக்தி’ படத்தைத் தொடர்ந்து “பணம்’, “திரும்பிப்பார்’, “நாம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தமிழ்த் திரை உலகை திசை திருப்பிய படமான “மனோகரா’ வெளியானது.
சிவாஜியின் நவரச நடிப்பு, கண்ணாம்பாவின் உணர்ச்சி மிக்க நடிப்பாற்றல், கலைஞர் அவர்களின் வீர வசனங்கள் எல்லாம் சேர்ந்து அப்படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கியது.
நடிப்புப் பயிற்சி பெற விரும்பிய எவரும் “பராசக்தி’, “மனோகரா’ போன்ற படங்களின் வசனத்தை விலக்கிவிட்டு அந்தப் பயிற்சிகளில் ஈடுபட முடியாத சூழ்நிலை உருவாகியது.
தமிழில் வசனங்கள் என்றால் கலைஞர் அவர்கள் மட்டுமே என்ற நிலை உருவானது. இந்த நிலைக்கு இவர் உயரக் காரணம் தமிழ்த்தாய் அவரிடம் கொஞ்சி விளையாடினாள் என்பது மட்டுமல்ல, எந்தத் துறையில் ஈடுபட்டாலும் முழு ஈடுபாட்டோடு நிறைவேற்றக் கூடிய அவரது ஆற்றலுக்கும் அதில் உரிய பங்குண்டு.
கலைஞரின் எழுத்தாற்றல் குறித்து தனது “வியப்பூட்டும் ஆளுமைகள்’ புத்தகத்தில் கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகிறார் நூலாசிரியர் வெங்கட் சாமிநாதன்.
“”பராசக்தி’ படத்தில் சிவாஜி பேசும் வசனங்கள் ஒரு குற்றவாளி கோர்ட்டில் சொல்லும் பதில் அல்ல. கோர்ட்டை நோக்கிய பதிலும் அல்ல. தமிழ் மக்கள் பல கோடிகள் அனைவரையும் நோக்கிவிடும் அறை கூவல். அது ஏதோ திருப்புமுனை, புதிய அத்தியாயம் என்றெல்லாம் பேசப்பட்டது.
அவர் எழுதிய நாடகங்கள் திரைப்படமானதும், திரைப்படமாகவே எழுதப்பட்டதுமான ஒரு பட்டியல் மாத்திரம் நமக்கு கிடைத்துள்ளது.
அதிலும் 1948-லிருந்து 1990 வரையிலான ஒரு பட்டியலை 1990-ல் பிரசுரமான ஒரு புத்தகம் தருகிறது. இந்த எண்ணிக்கை மொத்தம் 57. 1990-க்குப் பின் எழுதியவை எல்லாம் தொலைக்காட்சிப் படைப்புகள். அவை பற்றிய குறிப்புகள் இதில் இல்லை.
1947-லோ எப்போதோ “ராஜகுமாரி’ படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுத ஏ.எஸ்.ஏ.சாமி அழைத்தபோது (அப்போது கருணாநிதிக்கு வயது 23) “”என் கழக வேலைகளுக்கு இடையூறு இல்லாது முடியுமானால் எழுத ஒப்புக் கொள்கிறேன்” என்று நிபந்தனை விதித்து எழுதுகிறார்
-இத்தனையையும் வைத்துக்கொண்டு நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் என்று வேறு -இவற்றிற்குப் பிறகுதான் 40 வருடங்களில் 57 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் சிலவற்றிற்குப் பாடல் எழுதுவதும் என்றால் -இது அலிபாபாவின் அற்புத விளக்கும் விளக்கை உரசினால் “ஹூகும் ஆக்கா’ என்று எதிர் நிற்கும் பூதமும் பணி செய்யக் காத்திருந்தால்தான் சாத்தியம்.
திரைக்கதை, வசனம் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தப் போவதில்லை என்று அதிலேயே முழு மூச்சாக ஆழ்ந்தால்கூட 40 வருடங்களில் 57 படங்கள் சாத்தியமா? தெரியவில்லை. நான் என் ஆயுசில் எழுதிய ஒரே ஒரு திரை நாடகத்திற்கு எழுத உட்காரும் முன் அதைப் பற்றி யோசித்து உள்வாங்கிக் கொள்ள இரண்டு மாதங்கள் பிடித்தன.
பின் எழுத உட்கார்ந்து 15 நாட்களுக்கும் மேல் எதுவும் எழுது ஓடவில்லை. பின்னர் ஒன்றிரண்டு மாதங்கள் ஒதுங்கியிருந்து பின் உட்கார்ந்தால் 15 நாட்கள் ஆயின எழுதி முடிக்க. இந்த மாதிரியெல்லாம் யோசித்திருக்க, மனம் ஆழ்ந்திருக்க, ஓடவில்லை” என்றெல்லாம் கருணாநிதிக்கு சாத்தியப்பட்டு வராது, கட்டி வராது.
ஸ்விட்சைத் தட்டிவிட்டால் ஓடும் யந்திரம் போலத்தான் அவர் உட்கார்ந்தால் எழுதிய காகிதங்கள் மடியிலிருந்து விழுந்துகொண்டே இருக்கவேண்டும். உதவியாளர் பொறுக்கி அடுக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.
“ஓர் இரவு’, “வேலைக்காரி’க்குப் பிறகு சினிமாவுக்குக் கதை வசனம் எழுதாத தி.மு.க. தலைவர் யாரும் உண்டா? தெரியவில்லை. தேடிப் பார்த்தால் ஓரிருவர் கிடைக்கலாம். ஆனால் அண்ணாவையும், கருணாநிதியையும் தவிர வேறு யாரும் நிலைக்கவும் இல்லை, வெற்றி பெறவும் இல்லை.
மற்ற எல்லோரையும் பின்தள்ளி கருணாநிதியைத்தான் அண்ணாவுக்கு அடுத்த பெருந்தலைவராக காலம் முன் வைத்துள்ளது என்றால் அதில் கணிசமான பங்கு கருணாநிதியின் நாடகம், சினிமா, கற்பனைத் திறன் தந்த எழுத்து இவற்றிலிருந்து பெற்றதாகச் சொல்ல வேண்டும்.”
இவ்வாறு அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் வெங்கட் சாமிநாதன்.
——————————————————————————————————————————————————–
தி.மு.கழகத்தில் உறுப்பினராக இருந்த சிவாஜி கணேசன் சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக தி.மு.க.வை விட்டு விலக வேண்டி வந்தது என்றாலும், அதனால் அறிஞர் அண்ணா மீது கொண்ட பாசத்தில் இம்மியளவு கூட சிவாஜி அவர்களிடம் குறையவில்லை.
அதே போன்று கலைஞர் மீதும் மாறாத பற்று கொண்டிருந்தார் சிவாஜி. அதன் காரணமாகத்தான் தனது ஆரூயிர் நண்பன் நடிகர் திலகத்திற்கு கடற்கரையில் பல எதிர்ப்புகளுக்கு இடையிலேயும் சிலை எடுத்து பெருமைப் படுத்தினார் கலைஞர்.
தனது சுயசரிதையில் பல இடங்களில் கலைஞர் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் சிவாஜி. “திரும்பிப் பார்’ படத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, “”திரும்பிப் பார்’ படத்திற்கு எழுதிய வசனங்களைப் போல கலைஞர் கருணாநிதி அவர்கள் மற்ற எந்தப் படங்களிலும் எழுதவில்லை என்று நான் நினைக்கிறேன்.
அவ்வளவு அருமையான வசனங்களையெல்லாம் அந்தப் படத்தில் எழுதியிருந்தார். அந்தப் படம் ஒரு அருமையான திரைக்காவியம்” என்று தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கும் நடிகர் திலகம், “மனோகரா’ பட அனுபவத்தைப் பற்றி விவரிக்கும்போது, “”எனக்கு “மனோகரா’ படம் புது அனுபவமாகத் தெரியவில்லை.
நாடகத்தின்போது நான் சம்பந்த முதலியாரின் வசனத்தைப் பேசினேன். அது படமாக எடுக்கும்போது கலைஞர் அவர்களின் வசனத்தைப் பேசினேன். அருமையான வசனங்கள். அது வசனம் பேசும் காலம். “மனேகரா’வில் வசனங்கள் மிகச்சிறப்பாக இருக்கும். இப்போது கூட அப்பட வசனங்கள் ஞாபகத்திற்கு வருகிறது.
பொன்னும் மணியும்
மின்னும் வைரமும்
பூட்டி மகிழ்ந்து
கண்ணே! முத்தே!
தமிழ்ப் பண்ணே!
என்றெல்லாம் குலவிக் கொஞ்சி
தங்கத்தில் ஆன கட்டிலிலே
சந்தனத் தொட்டினிலே
என்றெல்லாம் வசனம் இடம் பெற்ற அந்தப் படம் அந்தக் காலத்தில் ஒரு மாபெரும் வெற்றிப் படமாகியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் திலகம் அவர்களது சுயசரிதையைப் போலவே கலைஞர் அவர்களின் சுயசரிதையான “நெஞ்சுக்கு நீதி’ நூலிலும் பல இடங்களில் சிவாஜி அவர்களைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
கலையுலகில் தனது வளமான வசனங்களால் சிவாஜி அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த கலைஞர் அவர்களின் வாழ்க்கையை நடிகர் திலகம் காப்பாற்றிய ஒரு சம்பவத்தை உணர்ச்சி பொங்க தனது “நெஞ்சுக்கு நீதி’ நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் கலைஞர்.
“”ஒரு முறை நானும், கருணானந்தமும், சிவாஜி கணேசனும் காஞ்சிபுரம் சென்று அண்ணாவைப் பார்த்துவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறோம். அப்போதுதான் “பராசக்தி’ படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வரும் வழியில் நல்ல மழை பெய்யத் தொடங்கியது.
காரின் வெளிச்சம் வேறு மங்கலாகி விட்டது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகே வந்து கொண்டிருக்கும்போது அந்தப் பகுதியில் ஒரு பாலம் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்ததால் மாற்று வழிக்கு குறிப்புப் பலகை வைத்து சிவப்புத் துணி கட்டியிருந்தார்கள்.
விளக்கு வெளிச்சம் போதாதால் கார் டிரைவர் அதைக் கவனிக்காமல் மாற்று வழியில் செல்வதற்குப் பதிலாக நேராகச் சென்று விட்டார். உடனே நண்பர் கணேசன் கூச்சல் போடவே கார் டிரைவர் திடீரென்று பிரேக்கை அழுத்திவிட்டார். பிரேக் போடப்பட்ட வேகத்தில் மழைத் தண்ணீர் தேங்கியிருந்த சாலையில் காரின் சக்கரங்கள் வழுக்கி ஒரு சுற்றுச் சுற்றி நின்றது.
கார் எப்படியிருக்கிறது என்பதைக் காருக்குள்ளிருந்த நாங்கள் கவனித்தோம். கார் சக்கரம் ஒரு அங்குலம் நகர்ந்தால் நாங்கள் செங்குத்தான ஒரு பள்ளத்தாக்கில் காரோடு விழுந்து நொறுங்கிப் போய்விடுவோம்.
அப்படிப்பட்ட ஆபத்தான விளிம்பில் கார் நின்று கொண்டிருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார் கலைஞர். தனக்கும் சிவாஜிக்கும் இடையே நிலவி வந்த பாசப் பிணைப்பு எத்தகையது என்பதற்கு எடுத்துக் காட்டாக சிவாஜி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையை தனது “நெஞ்சுக்கு நீதி’ நூலின் இரண்டாம் பாகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“”எனக்கும் சிவாஜிக்கும் இருந்த நட்பு யாராலும் விலக்க முடியாத பாசமாக உருவெடுத்தது. அந்தப் பாசம் எப்படிப்பட்டது என்பதை 1963-ஆம் ஆண்டு என் தாய் அஞ்சுகம் அம்மையார் மறைந்தபோது வெளியிடப்பட்ட ஒரு மலரில் சிவாஜியே வெளிப்படுத்தியிருக்கிறார்.
“”சிறு வயது முதல் எங்களுக்குள் நெருக்கமான பழக்கம் உண்டு. இதற்கு எத்தனையோ காரணம். கலையோ, அன்போ, கொள்கையோ, குணமோ, எதுவோ எங்களை உயிராக இணைத்து வைத்திருந்தது. நாளடைவில் அது வளர்ந்து வலுப்பெற்றது. அவர்! அது யார்? வாய் நிறைய “மூனா கானா’ என்று நான் இனிமையோடு அழை க்கும் அவர்தான்.
அந்தக் காலத்தில் இந்த இரண்டு பிள்ளைகளுக்கும் அஞ்சுகம் அம்மையார் அநேக நாட்கள் ஒன்றாகவே உணவு படைப்பது உண்டு. அப்போதெல்லாம் அவர்கள் பரிமாறுவதில் கொஞ்சம் பாரபட்சமாக நடந்து கொண்டதை நான் கவனிப்பதும் உண்டு. நல்ல பண்டங்களை ஒருவருக்கு அதிகமாகவும், ஒருவருக்கு குறைவாகவும் போடுவார்கள்.
“”இப்படிச் செய்யலாமா? இது நீதியா?” என்று நான் கேட்பேன்.
“”நீ செல்லப்பிள்ளை. உனக்கு அதிகம்தான்” என்பார்கள் அந்தத் தாய்.
அந்தச் செல்லத்தை மறந்து விட்டுப் போய்விட்டார்கள். நான் என்றும் அந்த அன்புச் செல்லத்தை மறக்க முடியாது. எனக்கு அஞ்சுகம் அம்மையாரும் ஒரு தாய்”.
இது அந்த மலரில் சிவாஜி எழுதிய கட்டுரையில் ஒரு பகுதி” என்று குறிப்பிட்டுள்ளார் கலைஞர்.
“மனோகரா’வைத் தொடர்ந்து “ரங்கூன் ராதா’, “ராஜாராணி’, “புதையல்’ என்று கலைஞர் அவர்களும் சிவாஜியும் இணைந்து பணியாற்றிய பல படைப்புகள் வெளிவந்தன.
ஆரம்பக் கட்டங்களில் சிவாஜி கணேசன் அவர்களோடு இருந்த அளவு நெருங்கிய நட்பு எம்.ஜி.ஆர்.அவர்களுக்கும் கலைஞர் அவர்களுக்கும் இருந்தது குறித்தும், “ராஜகுமாரி’ படத்தில் எம்.ஜி.ஆர்.தான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதில் கலைஞர் மிகவும் பிடிவாதமாக இருந்து ஜெயித்தது குறித்தும் ஏற்கனவே இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
“ராஜகுமாரி’யைத் தொடர்ந்து “மந்திரிகுமாரி’, “மருதநாட்டு இளவரசி’, “நாம்’, “மலைக்கள்ளன்’, “புதுமைப்பித்தன்’, “காஞ்சித் தலைவன்’ என்று பல படங்களில் எம்.ஜி.ஆரும் கலைஞரும் இணைந்து பணியாற்றினர்.
எம்.ஜி.ஆருக்கு கலைஞர் கதை வசனம் எழுதிய கடைசிப் படமாக “காஞ்சித் தலைவன்’ அமைந்தது. இவர்கள் இருவர் உறவு மற்றும் பிரிவு குறித்து பின்னர் விரிவாக பார்ப்போம்.
கலைஞர் அவர்களின் கைவண்ணத்தில் வெளியான படங்களில் “பூம்புகார்’ மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு படைப்பு. இந்தக் கதையை கலைஞரின் “மேகலா பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.
ஆனால் முதலில் “பூம்புகார்’ படத்தைத் தயாரிக்க திட்டமிட்டவர் ஏவி.எம்.அவர்கள் ஆவார்கள். ஏவி.எம்.அவர்கள் அப்படத்தை ஏன் கைவிட்டார் என்பது குறித்து தனது “தமிழ் சினிமாவின் கதை’ என்ற நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் அறந்தை நாராயாணன்.
“”கல்லக்குடி போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி மு.கருணாநிதி மத்திய சிறைச் சாலையில் இருந்தார். அவரைப் பார்ப்பதற்காக டைரக்டர் கிருஷ்ணன் போயிருந்தபோது, “”என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
“”சிலப்பதிகாரம் படித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார் கருணாநிதி.
சிறையில் கருணாநிதியைச் சந்தித்துவிட்டு வந்த கிருஷ்ணன் தன் சகா பஞ்சுவிடம் சொன்னார். “”கண்ணகி படம் வந்து ரொம்ப நாட்களாகின்றன. மு.க. சிலப்பதிகாரத்தை ஆழ்ந்து படித்து வருகிறார். அந்தக் காவியத்தை மீண்டும் சினிமாவாக்கினால் நன்றாக இருக்கும்”.
இருவரும் புறப்பட்டுச் சென்று ஏவி.எம்.செட்டியாரிடம் சொன்னார்கள்.
“”அவர் இப்பொழுது அரசியலில் ரொம்பவும் பிஸியாக இருக்கிறாரே! எப்படி வசனம் எழுதித் தருவார்?” மேனா கேட்டார்.
அந்தப் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஒரே சமயத்தில் அவரிடமிருந்து ஒட்டு மொத்தமாக எழுதி வாங்கி வந்து விடுகிறோம்.”
மு.கருணாநிதி விடுதலையாகி வந்தார். அவரிடம் நடந்த விஷயங்களைச் சொன்னார்கள் கிருஷ்ணனும், பஞ்சுவும்.
“”எழுதித் தருகிறேன். இதோ படத்தின் தலைப்பு. “பூம்புகார்”.
அன்றைய தினம் நள்ளிரவிலேயே “முரசொலி’ அலுவலகத்திற்கு மெய்யப்பச் செட்டியார் கிருஷ்ணன் பஞ்சுவுடன் வந்தார்.
பேசினார். முன் பணம் கொடுத்தார். 1959-ல் “தங்கப் பதுமை’ படம் வெளி வந்ததும் “பூம்புகார்’ திட்டத்தைச் செட்டியார் கைவிட்டு விட்டார். காரணம் “கண்ணகி’ கதை மாதிரியே “தங்கப் பதுமை’ திரைக்கதை அமைந்திருந்ததுதான்.
இவ்வாறு அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் அறந்தை நாராயணன்.
——————————————————————————————————————————————————–
பண்பிற்கரசோன்
“பூம்புகார்’ திரைப்படத்தில் சிவாஜிகணேசனை கோவலனாகவும், சாவித்திரியை கண்ணகியாகவும், பத்மினியை மாதவியாகவும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார் ஏவி.எம். “தங்கப்பதுமை’ காரணமாக அவர் “பூம்புகார்’ படத்தைத் தயாரிக்கத் தயங்கியதும், தன் சொந்தத் தயாரிப்பில் “பூம்புகார்’ திரைப்படத்தை எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, ராஜஸ்ரீ ஆகியோர் நடிக்க தயாரித்தார் கலைஞர். கெüந்தி அடிகள் வேடத்தில் கே.பி.சுந்தராம்பாள் நடித்தார்.
படம் முடிந்தவுடன் ஏவி.எம்.செட்டியார் அவர்களுக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்டினார் கலைஞர். படத்தை வெகுவாக ரசித்தாலும் பட வெளியீட்டுத் தேதியைத் தள்ளி வைக்குமாறு கலைஞரிடம் கேட்டுக் கொண்டார் ஏவி.எம். அதற்கு அவர் கூறிய காரணம் இதுதான்.
“”இந்தக் கதையை சிறு மாறுதல்களுடன் டைரக்டர் ஸ்ரீதர், “கலைக்கோயில்’ என்ற பெயரில் மிகப் பிரமாதமாக எடுத்திருக்கிறார். நான் கூட படத்தைப் பார்த்து விட்டு அவரைப் பாராட்டினேன். தங்களது “பூம்புகார்’ படமும் மிகச் சிறப்பாக இருக்கிறது, என்றாலும் இப்போது வெளியிட வேண்டாம்” என்றார் ஏவி.எம். “கலைக்கோயில்’ படத்தோடு வெளியானால் “பூம்புகார்’ திரைப்படத்தின் வெற்றி பாதிக்கப்படும் என்பது எவி.எம். அவர்களின் கருத்தாக இருந்தது.
“பூம்புகார்’ திரைப்படத்தைப் பற்றியும், அதன் வெற்றி குறித்தும் கலைஞர் அவர்களுக்கு மிகச் சிறந்த அபிப்ராயம் இருந்தாலும் அனுபவசாலியான ஏவி.எம்.அவர்களது பேச்சு கலைஞரை சோர்வடையச் செய்தது. அந்த மனந்தளர்ச்சியோடு வந்த கலைஞர் முரசொலி மாறனிடம் செட்டியார் சொன்னதையெல்லாம் சொல்லியிருக்கிறார்.
மாறன் கொஞ்சம் கூட நம்பிக்கை இழக்காமல் “பூம்புகார்’ படத்தைப் பொறுத்தவரை கதை சொல்லப்பட்டிருக்கிற முறைக்காகவும், உங்கள் வசனத்திற்காகவும் கண்டிப்பாக அது வெற்றி பெறும். நாம் தைரியமாக படத்தை வெளியிடுவோம். அதுவும் “கலைக்கோயில்’ படம் வெளியாகின்ற நாளன்றே வெளியிடுவோம்” என்று கூறியதோடு மட்டுமின்றி அதே தேதியில் படத்தை வெளியிடவும் செய்தார்.
“கலைக்கோயில்’ மிகப் பெரிய தோல்வியைக் கண்டது. ஆனால் “பூம்புகார்’ படமோ நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.
“பூம்புகார்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் கலைஞருக்கு ஃபோன் செய்த ஏவி.எம், “”என்னுடைய கணக்கு தவறு என்பதை உங்கள் படத்தின் வெற்றி நிரூபித்துவிட்டது. உங்களையும், மாறனையும் நான் மனமாரப் பாராட்டுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
இதே போன்று ஒரு சம்பவம் கலைஞர் வாழ்க்கையில் எல்.வி.பிரசாத் அவர்களாலும் நடைபெற்றிருக்கிறது. அது குறித்து “கலை உலகச் சூரியன் கலைஞர்’ என்ற பாராட்டு விழாச் சிறப்பு மலரில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் அமிர்தம்.
“”மாபெரும் இயக்குனர் எல்.வி.பிரசாத் கலைஞரின் கதை வசனத்தில் “இருவர் உள்ளம்’ என்றொரு படத்தைத் தயாரித்தார். சிவாஜிகணேசன், சரோஜாதேவி ஜோடியாக நடித்த இப்படத்தின் தனிக்காட்சி முக்கியமான கலை உலகப் பிரமுகர்களுக்காக ரேவதி ஸ்டூடியோவில் நடைபெற்றது.
படம் முடிந்ததும் இயக்குனர் பிரசாத், “”படம் நிறைவாக இல்லாதது போன்று எனக்குத் தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன?” என்று கலைஞரிடம் கேட்டார். அதற்கு கலைஞர், “”இந்தப் படம் நிச்சயமாக 100 நாட்கள் ஓடும். மக்கள் பேசக் கூடிய படமாக இது அமையும்” என்றார்.
உறுதியாகத்தான் சொல்கிறீர்களா என்று கேட்ட பிரசாத், “”இந்தப் படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றால் உங்களுக்கு சன்மானமாக பத்தாயிரம் ரூபாய் வழங்குகிறேன்” என்றார்.
படம் சென்னை வெல்லிங்டன் தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்களைத் தொட்டது. நூறாவது நாள் முடிந்த மறுநாள் இயக்குனர் பிரசாத், கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து கலைஞரைச் சந்தித்தார்.
“”நீங்கள் சொன்னபடி படம் நூறு நாட்களையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. உங்கள் கணிப்பு எதிலும் சரியாக இருப்பது போல் “இருவர் உள்ளமும்’ வெற்றி பெற்றுள்ளது. என் வாக்குப்படி இதாங்க ரூபாய் பத்தாயிரம் என்று சொல்லி பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்தார்” என்று அப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள இயக்குனர் அமிர்தம், “மலைக்கள்ளன்’ படத் தயாரிப்பின்போது நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவத்தையும் அந்த மலரில் கீழ்க் கண்டவாறு வர்ணித்துள்ளார்.
“”மலைக்கள்ளன்’ படம். கலைஞரின் உயிரோட்டமான வசனங்கள். எம்.ஜி.ஆர். கதாநாயகன். படம் முடிந்த நிலையில் தயாரிப்பாளர் ஸ்ரீராமுலுவுக்கும் கலைஞருக்கும் இடையில் ஏற்பட்ட மனத்தாங்கலில் இந்தப் படத்தில் திரைக்கதை, வசனம் கருணாநிதி” என்று என் பெயரைப் போடக் கூடாது என்று கடுமையாகக் கூறிவிட்டு கலைஞர் திருவாரூர் போய் விட்டார்.
எம்.ஜி.ஆருக்குப் பெரிய கவலை வந்து விட்டது. இன்றைய நிலையில் கலைஞர் பெயரில்லை என்றால் படம் வெற்றி பெறாது. ஏற்பட்டிருக்கிற இந்த ஊடலை எப்படித் தீர்ப்பது என சிந்தித்த எம்.ஜி.ஆர். நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியை அழைத்துக் கொண்டு திருவாரூருக்குச் சென்றார்.
திருவாரூரில் கலைஞரின் இல்லத்தில் அவரைச் சந்தித்த கே.ஆர்.ஆர். கலைஞரிடம் நீண்ட நேரம் பேசி அவரைச் சமாதானப்படுத்தினார். எம்.ஜி.ஆரோ, “”உங்கள் பெயர் படத்தின் டைட்டிலில் வரும்போதே கைதட்டல் அரங்கை அதிர வைக்கிறது. உங்கள் பெயர் இல்லை என்றால் படம் வெற்றி பெறுவது சந்தேகமே. நான் நடித்த படங்கள் எல்லாம் உங்கள் வசனச் சிறப்புகளாலேயே வெற்றி பெறுகின்றன.
இந்தப் படமும் வெற்றி பெற வேண்டும். அதற்குத் திரையில் உங்கள் பெயர் வந்தே ஆக வேண்டும்” என்று உருக்கமுடன் வேண்டினார். கலைஞர் ஒருவாறு சம்மதிக்க, கலைஞர், கே.கே.ஆர்., எம்.ஜி.ஆர். மூவரும் சென்னை வந்தனர். மகிழ்ச்சியான சூழலில் ஸ்ரீராமுலு அவர்களுடன் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது ஸ்ரீராமுலு, “”எத்தனை மாதங்கள் ஆனாலும் சரி! மன நிறைவான உங்கள் ஒப்புதல் இல்லாமல் “மலைக்கள்ளன்’ படத்தை நான் வெளியிடுவதில்லை என்ற முடிவோடு இருந்தேன்” என்றார்.
அதைக் கேட்டதும் எம்.ஜி.ஆர். அவர்கள் நெகிழ்வோடு கண் கலங்கிய நிலையில் ஸ்ரீராமுலு -கலைஞர் இருவரது கரங்களையும் ஒன்றாக இணைத்து முத்தமிட்டார்.
பின்னாளில் கலை உலகில் கொடிகட்டிப் பறந்த கண்ணதாசன், சிவாஜி, எம்.ஜி.ஆர். ஆகிய மூவருடனும் ஆரம்ப காலம் முதலே நெருங்கிய நட்பு கொண்டிருந்த கலைஞர் அவர்களுக்கு காலச் சூழ்நிலை காரணமாக கண்ணதாசன், எம்.ஜி.ஆர். ஆகிய இருவரோடும் பலமான கருத்து வேற்றுமை ஏற்பட்டது.
கண்ணதாசன், எம்.ஜி.ஆர். ஆகிய இருவரோடும் அவர் கொண்ட கருத்து வேற்றுமை அளவிற்கு சிவாஜி அவர்களோடு அவர் மாறுபடவேயில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
அதன் காரணமாகத்தான் கலைஞர் அவர்களது பவள விழாவையொட்டி கலை உலகம் நடத்திய பாராட்டு விழாவில் கலைஞர் அவர்களைப் பாராட்டி நடிகர் திலகம் பேசிய பேச்சு அத்தனை உணர்ச்சிப் பூர்வமாக அமைந்தது. சிவாஜி, கலைஞர் ஆகிய இருவருடைய கண்களும் அந்தப் பாராட்டு விழாவின்போது கலங்கியதைக் கண்ட அனைவரும் அவர்கள் நட்பின் ஆழத்தை அன்று உணர்ந்தனர்.
அரசியல் காரணமாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், கலைஞருக்கும் இடையே இருந்த உறவில் எத்தனை பெரிய விரிசல் ஏற்பட்டது என்பதை அனைவரும் அறிவோம். ஆனாலும் எம்.ஜி.ஆர். இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி அறிந்ததும் அன்று காலை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய கலைஞர் செய்த முதல் காரியம் எம்.ஜி.ஆருக்கு இறுதி மரியாதை செலுத்த ராமாவரம் தோட்டத்திற்குச் சென்றதுதான்.
ஸ்ரீராமுலு நாயுடு அவர்களுடன் ஏற்பட்ட வருத்தத்தைக் களைந்தது போல தனது நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அதை மறந்து அவர்களுக்கு நேசக்கரம் நீட்டுகின்ற மாபெரும் பண்புக்குச் சொந்தக்காரராக கலைஞர் இன்றளவும் விளங்கி வருகிறார். அதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.
மலையளவு நெஞ்சுறுதி
வானளவு சொற்பெருக்கு
கடலளவு கற்பனைகள்
கனிந்துருகும் கவிக்கனிகள்
இலை தலையாய் ஏற்றமுற்று
இளந்தலைகள் வாழ்த்தொலிக்க
அவைத்தலைமை ஏற்றிருக்கும்
அன்புமிகு என் தோழ!
கூட்டத்தைக் கூட்டுவதில்
கூட்டியதோர் கூட்டத்தின்
நாட்டத்தை நாட்டுவதில்
நற்கலைஞன் நீயிலையோ
அந்தச் சிரிப்பலவோ
ஆளையெல்லாம் கூட்டி வரும்
அந்தச் சிறு மீசை
அப்படியே சிறைப்படுத்தும்!
சந்திரனைப்போலத்
தக தகவென்று ஒளிரும்
அந்த வழுக்கையில்தான்
அரசியலே உருவாகும்.
எந்தத் துயரினிலும்
இதயம் கலங்காதோய்!
முத்தமிழ்த் தோழ!
முனை மழுங்கா எழுத்தாள!
திருவாரூர்த் தேரினையே
சீராக்கி ஓட விட்டுப்
பரிசாகப் பெற்றவனே!
கருணாநிதித் தலைவ!
கவிதை வணக்கமிது
என்று கலைஞரைப் பாராட்டி கவிதை பாடிய கண்ணதாசனுக்கும் கலைஞருக்கும் இடையே எழுந்த விரிசல் பலமானது என்றாலும், அந்த விரிசலை மீறி ஒருவர் மீது ஒருவர் மாறா நட்பு கொண்டிருந்தனர்.
——————————————————————————————————————————————————–
கவிஞருக்கு கலைஞரின் கவிதை
“இல்லற ஜோதி’ படத்திற்காக எழுதப்பட்ட “அனார்க்கலி’ நாடகம்தான் கலைஞருக்கும் கவியரசருக்குமிடையே முதல் விரிசலை ஏற்படுத்தியது. அந்த விரிசலை ஒரு அகழி அளவுக்கு விரிவாக்கியதில் இரு தரப்பிலுமிருந்த “நல்ல’ நண்பர்களின் பங்கு அதிகமாக இருந்தது.
பத்திரிகைகளில் பத்து கவிதைகளும், சினிமா படங்களுக்காக 5 பாடல்களும் மட்டுமே எழுதியிருந்த நிலையில் கண்ணதாசனை “கவிஞர்’ என்று மேடயில் அழைத்து பெருமைப்படுத்தியவர் கலைஞர்தான் என்பதை நான் ஏற்கனவே இக்கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.
கலைஞர் அவர்களோடு கருத்து வேற்றுமை வந்த காலங்களில் கூட அதை மறக்காமல் பல பத்திரிகைகளில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர். “”கருணாநிதியும் நானும் எழுதத் தொடங்கியது ஏறக்குறைய ஒரே காலத்தில்தான்.
நான் அவரது எழுத்தைத்தான் முதலில் காதலித்தேன். என்னுடைய எழுத்துக்களில் அவருக்குள்ள ஈடுபாடுகள் போலவே அவரது எழுத்துக்களில் எனக்கு ஈடுபாடு உண்டு.
அரசியலில் பதவிகள் வரலாம். போகலாம். ஆனால் நிலையான இடத்தைப் பெற்றுத் தரும் “ரிக்கார்டு’ எழுத்துதான். எழுத்துத் துறையில் கருணாநிதியை மிஞ்சக் கூடியவர் எவரும் இல்லை. பதவி போய் விட்டாலும் அவர் நிலைத்து நிற்கப் போவது அவரது எழுத்துக்களில்தான்.
முதல் முதலாக பொள்ளாச்சி கூட்டத்தில்தான் என்னைப் பேச வைத்து பேச்சாளனாக அரங்கேற்றினார் கருணாநிதி. பேசத் தெரியாத நான் பேசப் பழகிக் கொண்டேன். ஆமாம். என்னை அரசியல் மேடையில் பேச “ஆதிமுதலாய்’ அரங்கேற்றி வைத்தவரே அவர்தான்.
அவரோடு பல சுற்றுப் பயணங்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அவரோடு போகும் நான் ஆரம்பத்தில் மேடைகளில் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பேச மாட்டேன். அப்படிக் குறுகிய நேரம் நான் பேசுவதற்கே கலைஞர் என்னைக் கேலி செய்வார் ஆனால் அதற்கடுத்தக் கூட்டத்திலும் என்னைக் கட்டாயம் பேச வைப்பார்.
அப்படி வற்புறுத்தி பேச வைத்தே என்னை அவர் அரை மணி நேரம், முக்கால்மணி நேரம், சில நேரங்களில் ஒரு மணி நேரம்கூடத் தயங்காமல் பேசும் ஒரு வழக்கமான கழகப் பேச்சாளராக்கி விட்டார்.
நான் அரசியலுக்கு வந்தது, பேச்சாளரானது இதெல்லாம் பாவமோ, புண்ணியமோ அவரைத்தான் சேரும்” என்று பல கால கட்டங்களில் குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன்.
கண்ணதாசனது இந்தத் திறந்த மனதை கலைஞர் பல முறை பாராட்டி மகிழ்ந்திருக்கிறார். “”எனக்கும் அவருக்கும் ஆயிரம் மனவேறுபாடுகள், ஆயிரம் கருத்து வேறுபாடுகள் வந்த பிறகும்கூட எந்த ஒரு இடத்திலும் முதன்முறையாக நான்தான் அவரை “கவிஞர்’ என்று அடைமொழியிட்டு அழைத்தேன் என்பதை கண்ணதாசன் என்றைக்கும் சொல்ல மறந்ததில்லை. அப்படி நன்றி உள்ளவர் கண்ணதாசன்.
பல பேர் நன்றியை மறந்துவிடுவார்கள். அதுவும் என்னுடைய வாழ்க்கையில் நன்றி மறந்தவர்கள் ஏராளமானவர்கள். ஆனால் அரசியலில் தனிப்பட்ட முறையில் சில நேரங்களில் அவர் எனக்குப் பகையாக மாறியும்கூட அந்த நன்றியைக் கடைசி வரை மறக்காமல் “என்னை முதன்முதலில் கவிஞர் என்று அழைத்தவர் கருணாநிதிதான்’ என்று கூறுவார் கண்ணதாசன்.
அதை மகிழ்ச்சியான நேரத்தில் மட்டுமல்ல! என்னைத் திட்டி எழுதிய புத்தகத்தில் கூட அதை மூடி மறைக்காமல் மனம் திறந்து அவர் எழுதியிருக்கிறார்” என்று பலமுறை கலைஞர் பரவசப்பட்டதுண்டு.
கவிஞர் மறைந்தபோது கலங்கிய கண்களுடன் அவருக்கு அஞ்சலி செலுத்திய கலைஞர் அவர்கள் எழுதிய இரங்கற்பா அந்த இருவரின் நட்பின் ஆழத்துக்கு சாட்சியாக இன்றும் விளங்குகிறது.
“”என் இனிய நண்பா
இளவேனிற் கவிதைகளால்
இதய சுகம் தந்தவனே! உன்
இதயத் துடிப்பை, ஏன் நிறுத்திக் கொண்டாய்!
தென்றலாக வீசியவன் நீ- என் நெஞ்சில்
தீயாகச் சுட்டவனும் நீ! -அப்போதும்
அன்றிலாக நம் நட்பு திகழ்ந்ததேயன்றி
அணைந்த தீபமாக ஆனதேயில்லை நண்பா!
கண்ணதாசா! என்
எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா!
கவிதை மலர்த் தோட்டம் நீ -உன்னைக்
காலமென்னும் பூகம்பம் தகர்த்துத்
தரை மட்டம் ஆக்கி விட்டதே!
கை நீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம்
கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ!
கல்லறைப் பெண்ணின் மடியினிலும்
அப்படித்தான் தாவி விட்டாயோ;
அமைதிப் பால் அருந்தித் தூங்கிவிட!
இயக்க இசைபாடி களித்த குயில் உன்னை
மயக்க மருந்திட்டுப் பிரித்தார் முள்ளை
தாக்குதல் கணை எத்தனைதான் நீ தொடுத்தாலும்
தாங்கிக் கொண்ட என் நெஞ்சே உன் அன்னை
திட்டுவதும் தமிழில் நீ திட்டியதால்- சுவைப்
பிட்டு என ஏற்றுக் கொண்ட என்னை;
தித்திக்கும் கவித்தமிழா! பிரிவின்
மத்தியிலே ஏன் விட்டுச் சென்றுவிட்டாய்?
அடடா! அந்த இளமைக் கழனியில்
அன்பெனும் நாற்று நட்டோம்!
ஆயிரங் காலத்துப் பயிர் நம் தோழமையென
ஆயிரங் கோடிக் கனவுகள் கண்டோம்!
அறுவடைக்கு யாரோ வந்தார்!
உன்னை மட்டும் அறுத்துச் சென்றார்!
நிலையில்லா மனம் உனக்கு! ஆனால்
நிலை பெற்ற புகழ் உனக்கு!
இந்த அதிசயத்தை விளைவிக்க -உன்பால்
இனிய தமிழ் அன்னை துணை நின்றாள்
என் நண்பா! இனிய தோழா!
எத்தனையோ தாலாட்டுப் பாடிய உன்னை
இயற்கைத் தாய் தாலாட்டித் தூங்க வைத்தாள்!
எத்தனையோ பாராட்டுப் பெற்ற உனக்கு
இயற்கைத் தாயின் சீராட்டுத்தான் இனிக்கிறதா?
எனை மறந்தாய்! எமை மறந்தாய்! உனை
மறக்க முடியாமல் உள்ளமெல்லாம் நிறைந்தாய்!”
என்று கலைஞர் எழுதிய கவிதாஞ்சலி கவிஞரின் பிரிவு எந்த அளவு கலைஞர் அவர்களைப் பாதித்தது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
“”தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் பெயர்களுக்கு இணையாக சுவரொட்டிகளில் வசனகர்த்தாவின் பெயரும் இடம்பெற முன்னோடியாக இருந்தவர் கருணாநிதி.
கதை – வசனம் மு.கருணாநிதி என்று ஒரு படத்தின் விளம்பரம் வந்தாலே அதன் வெற்றிக்கு உத்திரவாத முத்திரை குத்தப்பட்டது” என்று தனது “திரை வளர்த்த தமிழ்’ நூலின் முதல் தொகுதியில் “பேசும் படம்’ ஆசிரியர் ஆசிரியர் திரு. ராம்நாத் அவர்களால் பாராட்டப்பட்ட கலைஞர், “பூம்புகார்’ திரைப் படத்தைத் தொடர்ந்து “மணிமகுடம்’, “மறக்க முடியுமா’, “அவன் பித்தனா’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார்.
அவரது வாழ்க்கையில் அரசியல் -சினிமா என்று வரும்போது அரசியலுக்கே முதலிடம் என்ற திடமான சிந்தனையோடு திரை உலகில் அடி எடுத்து வைத்தவர் என்பதால் 1967-ல் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அவரது கலை உலகப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது என்பது உண்மை.
1967-ல் வெளியான “தங்கத் தம்பி’ “வாலிப விருந்து’ ஆகிய படங்களைத் தொடர்ந்து 1970-ல் “எங்கள் தங்கம்’ திரைப்படம் வெளிவந்தது.
மாடர்ன் தியேட்டர்ஸில் இணைந்த அந்த இரு மாபெரும் கலைஞர்களும் இணைந்து பணியாற்றிய கடைசி திரைப்படம் “எங்கள் தங்கம்’தான். எம்.ஆர். ராதா எம்.ஜி.ஆரைத் துப்பாக்கியால் சுட்டதையும், அதில் அவர் உயிர் மீண்டதையும் குறிக்கும் வகையில்,
“நான் செத்துப் பொழச்சவன்டா-எமனைப்
பார்த்துச் சிரிச்சவன்டா
வாழை போல வெட்ட வெட்ட முளைச்சு
சங்கு போல சுடச்சுட வெளுத்து
வளரும் ஜாதியடா’
என்று தொடங்கும் அப்பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
1972-ல் தனது மகன் மு.க.முத்துவை “பிள்ளையோ பிள்ளை’ திரைப்படத்தின் மூலம் கலையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் கலைஞர். “அஞ்சுகம் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் உருவான இப்படத்தின் சிறப்புக் காட்சியில் பங்கு பெற எம்.ஜி.ஆர் வந்திருந்தார்.
“”புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்தான் என் ஆசான்” என்று மு.க.முத்து பேசியதைப் பற்றி தனது உரையில் குறிப்பிடும்போது, “”துரோணாச்சாரியாரை ஆசானாகக் கொண்டு ஏகலைவன் வில் வித்தையிலே தேர்ச்சிப் பெற்றதைப் போல இங்கே எம்.ஜி.ஆரை ஆசான் என்று கூறிய முத்து அப்படிப்பட்ட புகழையும் சிறப்பையும் பெற வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டார் கலைஞர்.
இறுதியாக மு.க.முத்துவை வாழ்த்திப் பேச வந்த எம்.ஜி.ஆர், “”என்னை ஆசானாக ஏற்றுக் கொண்டிருப்பதாக தம்பி மு.க. முத்து பேசினார். அதைக் கேட்டுப் பெருமைப்படுகிறேன்.
ஆனால் முத்து ஒரு நாள் கூட என்னிடம் நடிப்புக்காக வந்ததில்லை. ஏகலைவன் மானசீகமாகக் குருவை எண்ணி வித்தையில் தேர்ந்தான் என்பது போல என் படங்களைப் பார்த்து அதன்படி நடிக்க விரும்புகிறார் முத்து என்று எண்ணுகிறேன்.
ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்தன்மை- நடிப்பு இருக்கிறது. அதில்தான் செல்ல வேண்டும். முத்து தனக்கென்று தனி வழியை நடிப்பதற்கு வகுத்துக் கொண்டு நடிகராக வளர வேண்டும்” என்று வாழ்த்துகிறேன் என்று பேசினார்.
தி.மு.கழகத்தில் பல நெருக்கடியான சந்தர்ப்பங்களில் எல்லாம் இணைந்து செயலாற்றி பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய வல்லமை படைத்த இரு ஆற்றல் மிகுந்த சக்திகளான கலைஞர் அவர்களுக்கும், எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இடையே இருந்த நெருக்கமான உறவிற்கு குறுக்கே முதல் கோட்டை இழுத்தது மு.க.முத்துவின் திரையுலகப் பிரவேசம்.