Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Cinema’ Category

VIP – Prabhudeva: Gossips, Change of Directors, Rani Mukherjee Smoking

Posted by Snapjudge மேல் மார்ச் 27, 2008

திரைப்பட வரலாறு 886
பிரபுதேவா நடித்த “வி.ஐ.பி”
2 டைரக்டர்கள் மாற்றப்பட்ட பின்னணி

பிரபுதேவா நடித்த “வி.ஐ.பி” படத்தை தாணு தயாரித்தார். இதற்கு 2 டைரக்டர்கள் பரிசீலிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் அவர்கள் மாற்றப்பட்டு, எஸ்.டி.சபா டைரக்ட் செய்தார்.

திரையுலக அனுபவங்கள் பற்றி தாணு தொடர்ந்து கூறியதாவது:-

பாரதிராஜாவுக்கு மரியாதை

“கிழக்குச் சீமையிலே படம் வெற்றி பெற்றால், படத்தின் டைரக்டர் பாரதிராஜாவுக்கு நிச்சயமாக ஏதாவது செய்வேன் என்று சித்ராலட்சுமணனிடம் நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன் அல்லவா? இப்போது படம் வசூலைக் குவித்ததால், பாரதிராஜாவின் புதுவீடு கிரகப்பிரவேசத்தன்று திடீரென அவர் வீட்டுக்கு போனேன். தங்க நகைகளையும், கரன்சியையும் ஒரு வெள்ளித் தாம்பாளத்தில் குவித்து வைத்து கொடுத்தேன். இதை கொஞ்சமும் எதிர்பார்த்திராத பாரதிராஜா கண்கலங்கி விட்டார்.

தமிழனின் பெருமையை, திரைவழியே பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றவர், பாரதிராஜா. தமிழர் பண்பாடு, கலாசாரத்தை நிலைக்க வைத்தவர். கிராமத்தின் மண்வாசனையை திரையில் கமழச் செய்தவர். தமிழ் மண் மணக்க வந்த `தரு’ அவர். என்றும் என் போற்றுதலுக்குரியவர் என்பதை என் அன்பினால் வெளிப்படுத்திவிட்டு வந்தேன்.

இதைத்தொடர்ந்து, படத்துக்கு அற்புதமாக பாடல்கள் எழுதிய கவிஞர் வைரமுத்து வீட்டுக்குப் போனேன். சூட்கேசில் எடுத்துப் போயிருந்த 50 ஆயிரம் ரூபாயை கொடுத்தேன். கொஞ்சமும் எதிர்பார்த்திராத ஆனந்த அதிர்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது. அப்போது அவர், “பாரதிராஜா படத்துக்கு பாட்டுக்காக நான் பணம் வாங்குவது இல்லை. இதுதான் முதல் முறை. அதுவும் படத்தின் இமாலய வெற்றியை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் நீங்கள் வழங்கும் இந்த சன்மானம், உங்கள் உயரிய பண்பை என் உள்ளத்தில் என்றென்றும் தேக்கி வைத்திருக்கும். கொடுப்பதில் நீங்கள் ஒரு குட்டி தேவர்” என்றார் வைரமுத்து.

அவரோடு நின்று விடாமல் படத்தில் பணியாற்றிய அத்தனை தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் என் அன்பளிப்பு தொடர்ந்தது.

ரஜினி நடித்த `வீரா’ படத்தின் வெற்றி விழா மேடையில் ரஜினியின் பேச்சு, “கிழக்கு சீமையிலே” படம் பற்றியதாகவே இருந்தது. “ஒரு படத்துக்கு பிரமாண்டம் என்பது கதைதான். கதை பிரமாண்டமாக இருந்தால், பெரிய வெற்றி நிச்சயம் என்பதற்கு சமீபத்தில் வந்து சாதனை படைத்த “கிழக்குச் சீமையிலே” படம் ஒரு உதாரணம். நண்பர் தாணு தயாரிப்பில் வந்த இந்தப் படத்தை பார்த்தபோது படத்தின் வெற்றிக்கு கதைதான் முதுகெலும்பு என்ற உண்மை புரிந்தது” என்றார்.

ரஜினி இப்படி பாராட்டியதை, மறுநாள் பத்திரிகையில் விளம்பரமாக கொடுத்தேன். அதோடு `எழுத்துச்சிற்பி’ என்று கதாசிரியரையும், `கலைச்சிற்பி’ என்று பாரதிராஜாவையும் அடைமொழி கொடுத்து விளம்பரத்தில் போட்டேன்.”

இவ்வாறு தாணு கூறினார்.

வி.ஐ.பி.

தாணு தயாரிப்பில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்த `வி.ஐ.பி’ படத்துக்கு, முதலில் இரண்டு டைரக்டர்கள் பேசப்பட்டு மூன்றாவது டைரக்டர் சபா, படத்தை இயக்கினார். இதுபற்றி தாணு கூறியதாவது:-

“ஜென்டில்மேன் படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் நடனமாடிய பிரபுதேவா, பிரமாதமான டான்ஸ் மாஸ்டர் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவர் `காதலன்’ படத்தில் கதாநாயகனாகவும் நடித்தபோது, நடிப்பாற்றல் கொண்ட நடிகர் என்பதையும் நிரூபித்தார்.

அந்தப்படம் வெற்றி பெற்ற நேரத்தில் சினிமா உலகமே பிரபுதேவா வீட்டில் காத்திருந்தது. தமிழில் புதிதாக ஒரு கதாநாயகன் கிடைத்திருக்கிறார் என்று நான் நினைத்த நேரத்தில், எதிர்பாராமல் ஒரு நாள் பிரபுதேவாவின் தந்தையும், பிரபல டான்ஸ் மாஸ்டருமான சுந்தரம் என்னை பார்க்க வந்தார். அப்போது அவர் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். காவி வேட்டி, காவி சட்டை அணிந்து வந்திருந்தார்.

“வாங்க மாஸ்டர்” என்று அவரை வரவேற்றேன். கொஞ்ச நேரம் பொதுவாக பேசிக்கொண்டிருந்தவர், “பிரபு (தேவா) உங்க பேனர்ல நடிக்க ஆசைப்படறான்” என்றார்.

நான் அதுவரை தயாரித்த என் படங்களில் சுந்தரம் மாஸ்டரையோ, அவரது மகன்கள் ராஜ× சுந்தரத்தையோ, பிரபுதேவாவையோ வைத்து நடனம் அமைத்ததில்லை. அப்படிப்பட்ட நிலையிலும் “வெற்றிகரமான ஹீரோ” என்ற அடையாளத்துடன் வெளிப்பட்டிருக்கும் தனது மகன் பிரபுதேவாவை, எனது படத்தில் நடிக்க வைக்க அவர் விரும்பியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

நான் மகிழ்ச்சியுடன் “நிச்சயமாக பண்ணலாம் மாஸ்டர்! ஒரு நல்ல நாள் பார்த்து வீட்டுக்கு வருகிறேன்” என்றேன்.

மறுநாளே நல்ல நாளாக இருந்தது. சுவீட் பாக்சுடன் பிரபுதேவா வீட்டுக்குப் போனேன். அதுவரை பிரபுதேவாவை நான் நேரில் பார்த்தது இல்லை. பார்க்க ரொம்ப சிம்பிளாக காணப்பட்டார். சுவிட் பாக்சுடன் அட்வான்ஸ் பணம் கொடுத்தேன்.

டைரக்டர் வசந்த்

தயாரிப்பது உறுதியானதும் படத்தை டைரக்டர் வசந்த் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று எண்ணி பிரபுதேவாவே என்னிடம் வசந்த்தை அழைத்து வந்தார்.

நான் வசந்த்திடம், “பிரபுதேவா பண்ணின படங்களிலேயே பெரிய படம், வசூலிலும் சாதனைப் படம் என்ற பெயர் ஒரு தயாரிப்பாளராக இந்தப்படத்தில் எனக்கு உங்கள் மூலமாகக் கிடைக்கவேண்டும்” என்றேன்.

“கண்டிப்பா அப்படியே பண்றேன் சார்” என்று வசந்த்தும் உற்சாகமாய் கூறினார். அதோடு, “உங்க பேனரில் ஒரு படம் டைரக்ட் பண்ணுவது எனக்கும் ஒரு லட்சியமாக இருந்தது” என்றார்.

நான் டைரக்டர் வசந்த்துக்கு அட்வான்ஸ் கொடுக்க முடிவு செய்தேன். அவரிடம் “படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்தால் நல்லது என்று பிரபு (தேவா) சொல்கிறார். ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் அல்லவா” என்று கேட்டேன்.

நான் இப்படிக் கேட்டதும், “சார்! ரிலீஸ் தேதியை மட்டும் தயவு செய்து முன்கூட்டி தீர்மானிக்காதீர்கள்” என்றார்.

“சரி. எப்பத்தான் படம் முடியும்னு சொல்லுங்க” என்றேன்.

“எப்பன்னு முடிவு பண்ணவேணாம் சார்” என்றார், வசந்த்.

நான் விடவில்லை. “ஒரு தயாரிப்பாளருக்கு படத்தின் ரிலீஸ் தேதி முக்கியம். அதை கருத்தில் கொண்டுதான் படத்தின் வியாபார விஷயங்கள் பேசமுடியும்” என்றேன்.

கொஞ்சம் யோசித்தவர், “நாளைக்கு சொல்றேன்” என்றார்.

சொன்னபடி மறுநாள் வந்தார். “சார்! நீங்க சொன்னது பற்றி யோசனை பண்ணினேன். எனக்கென்னவோ படம் எப்ப ரிலீஸ் ஆகும் என்பதை இப்போது முடிவு பண்ண வேண்டாம் என்றே தோணுது” என்றார்.

அப்போதும் நான், “அப்படீன்னா ரிலீஸ் தேதியை ஏப்ரலுக்கு பதிலா ஆகஸ்ட்டுன்னு வெச்சுக்குவோமா?” என்று கேட்டேன்.

டைரக்டர் வசந்த் இந்தக் கேள்விக்கும் யோசிப்பது தெரிந்தது. பதில் தாமதமானதால், நான் “அப்படீன்னா தீபாவளிக்கு?” என்று கேட்டேன்.

அப்போதும் வசந்திடம் இருந்து ரிலீஸ் தேதி வரவில்லை. சரி, படத்தை ரசிச்சு எடுக்க விரும்புகிறார் என்ற எண்ணத்தில் “சரி வசந்த்! படம் ஆரம்பிச்சு சரியா ஒரு வருஷத்தில் ரிலீஸ் தேதி வெச்சுக்கலாமா?” என்று கேட்டேன்.

ரிலீஸ் தேதி சொல்லாமல் நான் விடமாட்டேன் என்பதை ïகித்துக் கொண்டவர், “நாளைக்கு வரேன். அப்ப சொல்றேன்” என்றார்.

டைரக்டர் வசந்த் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி முன்கூட்டியே தீர்மானிக்க முடியாத நிலையில் இருப்பதைப்பற்றி பிரபுதேவாவிடம் பேசினேன். பிரபுதேவா என்னிடம், “சார்! நாளைக்கு ஒருநாள் பாருங்க. நாளைக்கும் அவர் ரிலீஸ் தேதி சொல்லலைன்னா, வேறு முடிவெடுப்போம்” என்றார்.

மறுநாளும் வசந்த் வந்தார். அப்போதும் ரிலீஸ் தேதியை அவரால் உறுதி செய்யமுடியவில்லை.

அன்று மதியம் பிரபுதேவாவை பார்த்து, விஷயத்தை சொன்னேன். “அப்ப வேற டைரக்டரை பார்க்கலாம்” என்றார்.

கதை சொல்ல வந்தவர்

இந்த நேரத்தில்தான் சசி அருண்டேல் என்ற இளைஞர் என்னிடம் கதை சொல்லவேண்டும் என்று வந்தார். `கவிதை’ என்ற பெயரில் ஒரு கதை வைத்திருக்கிறேன்” என்றார். சொல்லச் சொன்னேன்.

கதையை கேட்டு முடித்தபோது “கிழக்குச் சீமையிலே” கதை மாதிரி இதுவும் என்னிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்றே பிரபுதேவாவையும் கதை கேட்க வைத்தேன். அவருக்கும் பிடித்துவிட்டது.

நான் சசியிடம், “இந்தக் கதையை சினிமாவுக்கேற்ற விதத்தில் தயார் செய்யுங்கள்” என்று சொன்னதோடு, சென்னை அண்ணா நகரில் உள்ள திரு.வி.க. பார்க் அபார்ட்மெண்ட்டில் ஒரு பிளாட் வாடகைக்கு எடுத்து, அதில் சசியை தங்கவைத்தேன். அட்வான்ஸ் கொடுத்து திரைக்கதை தயார் செய்யச் சொன்னேன்.

நாற்பதே நாளில் செலவு அதிகம் பண்ணாமல் திரைக்கதையை பிரமாதமாக உருவாக்கி முடித்திருந்தார், சசி.

அதோடு அவரே படத்துக்கு பிரபுதேவா தலையை போட்டு ஒரு டிசைனும் உருவாக்கி கொண்டு வந்தார். அதில் `சசி அருண்டேல்’ என்று மேலே போட்டு, அதற்குக்கீழே `கவிதை’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

வழக்கமாக நான் தயாரிக்கும் படங்களில் தாணுவின் “கூலிக்காரன்” தாணுவின் “நல்லவன்”, தாணுவின் “புதுப்பாடகன்” என்றுதான் பெயர் இடம் பெறும். இப்போது சசி செய்திருந்த டிசைனில் சசி அருண்டேல் என்ற தனது பெயரை மேலே போட்டு, அதற்கு கீழே `கவிதை’ என்று போட்டிருந்தார். சசி அருண்டேல்க்கு கீழே `கலைப்புலி’ தாணு என்று குறிப்பிட்டு இருந்தார்.

புது இளைஞர்! ஆர்வத்தில் இப்படி செய்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு, அவர் விருப்பப்படியே விட்டுக் கொடுத்தேன். நமது பேனரில் ஒரு படத்தின் விளம்பரம் இப்படியும் வரட்டுமே என்று எண்ணி, “நல்லா இருக்கு தம்பி” என்று சொல்லி அனுப்பினேன்.

விபரீதம்

ஆர்வக்கோளாறு என்பது சில நேரங்களில் விபரீத விளைவையும் ஏற்படுத்தி விடும். சசி என்ன செய்தார் தெரியுமா? என்னிடம் டிசைனை காட்டிய அதே வேகத்தில் பிரபுதேவாவிடமும் போய் காட்டியிருக்கிறார். டிசைனை பார்த்த பிரபுதேவா எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல், “நல்லா இருக்கு. போய் உடனே தாணு சாரை பாருங்க” என்று சொல்லியனுப்பி இருக்கிறார்.

சசியை அனுப்பி வைத்த கையோடு, உடனே எனக்கு போன் செய்த பிரபுதேவா, “சார்! நீங்க எவ்வளவு பெரிய தயாரிப்பாளர்! அதைப் புரிந்து கொள்ளாத இந்த டைரக்டர் இயக்கும் படத்தில் நான் நடிக்கமாட்டேன்” என்றார்.

எடுத்த எடுப்பில் பிரபுதேவா இப்படிச் சொன்னதும், என்ன நடந்திருக்கும் என்பது புரிந்து விட்டது. “பிரபு! சசி உங்களிடம் டிசைனைக் கொண்டு வந்து காட்டினாரா?” என்று கேட்டேன். “பார்த்தேன் சார்! பார்த்துட்டுத்தான் உடனே உங்ககிட்ட பேசறேன். வேற டைரக்டரை பார்த்துக்கலாம்” என்றார்.

நான் விடவில்லை. “பிரபு! ஆர்வக்கோளாறில் அவர் பண்ணின விஷயம் இது. தன்னோட பேரை பெரிசா, முதல்ல போட்டுக்கணுங்கற ஆர்வத்தில் இப்படி நடந்திருக்கு. நான் இதை சகஜமா எடுத்துக்கிட்டேன். நீங்களும் `பீல்’ பண்ணாதீங்க” என்று சொல்லிப்பார்த்தேன்.

“இல்லை சார்! உங்க மாதிரி ஒரு தயாரிப்பாளரையே சரியா புரிஞ்சிக்காதவரின் டைரக்ஷன்ல படம் பண்ண விரும்பலை” என்றார் உறுதியான குரலில்.

நான் சசியை அழைத்து, “உங்களை யாரு அந்த டிசைனை பிரபுதேவாகிட்ட காட்டச் சொன்னது?” என்று கேட்டேன்.

இதற்குள் சசிக்கு விஷயம் புரிந்து விட்டது. “சார் ஒரு ஆர்வத்திலே…” என்று ஆரம்பித்தவரை, மறுபடியும் பிரபுதேவாவிடம் அனுப்பி வைத்தேன். அவரும் “சாரி” சொல்லி திரும்பியிருக்கிறார். ஆனாலும் பிரபுதேவா மனம் மாறவில்லை. என்னிடம் பேசியவர், “சார்! எத்தனை தடவை வந்தாலும் அந்த புது டைரக்டர் டைரக்ஷனில் படம் பண்ணக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா நல்ல கதை. அதை மிஸ் பண்ணாமல் வேற ஒரு ஹீரோவை போட்டு நீங்க படம் தயாரிச்சாலும் எனக்கு சந்தோஷமே” என்றார்.

பிரபுதேவா இப்படி பிடிவாதமாக பேசினாலும், ஒரு தயாரிப்பாளருக்கு அவர் கொடுத்த மரியாதைதான் என் முன் நின்றது.

இதன் பிறகு பிரபுதேவா சிபாரிசு செய்த டைரக்டர்தான் எஸ்.டி.சபா.”

திரைப்பட வரலாறு 887
தாணு தயாரித்த “வி.ஐ.பி”
சிம்ரன் அறிமுகம்


கலைப்புலி தாணு தயாரித்த “வி.ஐ.பி” படத்தின் மூலம், தமிழ்ப்பட உலகுக்கு சிம்ரன் அறிமுகமானார்.

“வி.ஐ.பி” படம் தொடங்கப்பட்டது முதல், ரிலீஸ் ஆகும்வரை பல திருப்பங்களை தாணு சந்தித்தார்.

அதுபற்றி அவர் கூறியதாவது:-

“டைரக்டர் சசி உருவாக்கிய கதையில் பிரபுதேவா நடிக்க மறுத்த பிறகு, மனதளவில் சசி ரொம்பவும் உடைந்து போனார். நான்தான் அவரை சமாதானப்படுத்தி, நான் வாடகைக்கு பிடித்திருந்த அறையிலேயே கதை விவாதம் பண்ண வைத்தேன்.

இந்த நேரத்தில், பிரபுதேவா டைரக்டர் சபாவை என்னிடம் சிபாரிசு செய்தார். “பரதன்” பட ஷூட்டிங்கின்போது விஜயகாந்தை பார்க்கப்போன இடத்தில், அந்தப் படத்தை டைரக்ட் செய்த சபாவை பார்த்திருக்கிறேன். எனக்கும் அவருக்குமான அறிமுகம் அந்த அளவில்தான் இருந்தது.

என்றாலும் பிரபுதேவாவே விரும்பி சிபாரிசு செய்ததால் `சபா’ டைரக்டர் ஆனார். தாமதமின்றி கதை விவாதம் தொடங்கிவிட்டார்.

ஏவி.எம். பொன் விழா படம்

கதை விவாதம் முடிவுக்கு வந்து படத்துக்கான திரைக்கதை வடிவம் கிடைத்த நேரத்தில், பிரபுதேவாவின் தந்தை சுந்தரம் மாஸ்டர் என்னைப் பார்க்க வந்தார். வரும்போதே முகத்தில் ஏதோவொரு கோரிக்கை தெரிந்தது.

நான் அவரை வரவேற்று பேசிக்கொண்டிருந்த நேரத்தில், “உங்ககிட்ட ஒரு உதவி கேட்க வந்திருக்கிறேன்” என்றார்.

“சொல்லுங்க சார்!” என்றேன்.

“ஒண்ணுமில்லை சார்! நேற்று ஏவி.எம்.சரவணன் சார் திடீரென என்னிடம் போனில் பேசினார். ஏவி.எம்.மின் பொன் விழா ஆண்டையொட்டி ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும் பிரபுதேவா கால்ஷீட் வேண்டும் என்றும் கூறினார். படத்தை ராஜீவ்மேனன் டைரக்ட் பண்றார். ஏ.ஆர்.ரகுமான் மிïசிக் பண்றார் என்றும் சொன்னார். எனக்கு ஒண்ணுமே ஓடலை. நான் யோசிப்பது தெரிந்ததும், “என்ன விஷயம்னாலும் சொல்லுங்க” என்று வெளிப்படையாக கேட்டார். `பிரபுதேவாவோட கால்ஷீட் இல்ல. தாணு சார் கிட்ட இருக்கு’ என்றேன். `அப்படீன்னா தாணு சார்கிட்டே கேட்டுக்குங்க. அவர் பிரபுதேவா கால்ஷீட்ஸ் எங்களுக்கு தர்றதா இருந்தா, படம் பண்றோம்’ என்றார். இந்த விஷயத்துல முடிவெடுக்கிறது தாணு சார் உங்க கையில்தான் இருக்கு” என்றார் மாஸ்டர்.

நான் மாஸ்டரிடம், “ஹெல்ப்னு கேட்டுட்டீங்க. அதனால் பிரபுதேவா முதலில் ஏவி.எம். படமே பண்ணட்டும். அவங்க படம் முடிஞ்ச பிறகு நான் பண்ணிக்கிறேன்” என்றேன்.

“என்ன பெருந்தன்மை சார் உங்களுக்கு!” என்று நெகிழ்ச்சியாக சொல்லிவிட்டு புறப்பட்டுப் போனார், சுந்தரம் மாஸ்டர்.

பிரபுதேவா கால்ஷீட்டை நான் விட்டுக்கொடுத்த விஷயத்தை ஏவி.எம்.சரவணனிடம் சுந்தரம் மாஸ்டர் சொன்னதும் அவரும் “தாணுவுக்கு என் நன்றியை சொல்லிடுங்க” என்று கூறியிருக்கிறார். இதற்குள் விஷயம் தெரிந்த பிரபுதேவா என்னிடம், “என்ன சார்! விட்டுக் கொடுத்திட்டீங்களாமே” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

“ஆமா பிரபு! ஏவி.எம். பொன் விழா ஆண்டில் படம் எடுக்கிறாங்க. அதுல நீங்க நடிப்பதால், உங்களுக்கும்தானே பெருமை”

என்றேன்.ஏவி.எம். எடுத்த அந்தப்படம் “மின்சாரக்கனவு.”

அந்தப்படத்தை பிரபுதேவா முடித்துக் கொடுத்ததும், எனது “வி.ஐ.பி” படத்தில் நடித்தார். இந்தப் படத்தின் பூஜையை மாலையில் நடத்தினேன். படப்பிடிப்பு நடந்த ஏவி.எம். வளாக வாசல் முகப்பில் வி.ஐ.பி. என்ற பிரமாண்ட ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு பாதை உருவாக்கினேன். அதாவது “ஐ” எழுத்து வழியாக, விழாவுக்கு வந்தவர்கள் அரங்கினுள் வரும்படிபாதை உருவாக்கப்பட்டிருந்தது. இது, விழாவுக்கு வந்த பிரமுகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

ரூ.40 லட்சத்தில் அரங்கு

வி.ஐ.பி. படத்தின் பாடல் காட்சியில் தமிழ் சினிமாவில் அதுவரை யாரும் செய்யாத ஒரு புதுமையை செய்தேன். படத்தில் இடம் பெறும் 3 நிமிட பாடல் காட்சிக்காக 40 லட்சம் ரூபாய் செலவில் ஏவி.எம். ப்ளோரில் செட் போட்டேன். இந்த செட் விஷயம் பட உலகில் பிரமிப்பாக பேசப்பட்ட நிலையில், பிரபல இந்தி, தெலுங்கு தயாரிப்பாளர்கள் என்னை அணுகி, “நீங்கள் இந்த செட்டை பயன்படுத்தி முடித்ததும் எங்களுக்கும் படப்பிடிப்புக்கு தந்தால், நீங்கள் கேட்கிற வாடகையைத்தர தயாராக இருக்கிறோம்” என்றார்கள்.

நான் அவர்களிடம், “இப்படியொரு பிரமாண்ட செட் போட்டது என் படத்துக்காகத்தான். என் படத்தின் பாடல் காட்சிக்காக மட்டுமே இந்த செட்டை பயன்படுத்துவேன். மற்ற தயாரிப்பாளர்களின் படங்களுக்கு இந்த செட்டை வாடகைக்கு விடும் நோக்கம் எனக்கு இல்லை” என்று சொல்லி அனுப்பினேன். 14 நாட்கள் தொடர்ந்து பாடல் காட்சி படமாக்கி முடிந்ததும், அந்த செட்டை பிரித்து விட்டேன்.

சிம்ரன் அறிமுகம்

“வி.ஐ.பி” படத்தில் பிரபுதேவா ஜோடியாக சிம்ரன் நடித்தார். தமிழில் சிம்ரன் அறிமுகமான முதல் படம் இதுதான்.

இந்தப் படத்தில் முதலில் சிம்ரன் நடிப்பதாக இல்லை. லைலாவைத்தான் `புக்’ செய்திருந்தேன். படத்தின் பூஜைக்கும் லைலாதான்

வந்திருந்தார்.தாமதமாக வந்ததுடன், தயாரிப்பு நிர்வாகிக்கு உரிய மரியாதை கொடுக்கத் தவறியது என் கவனத்துக்கு வந்தது.

எனவே, படத்தில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

பிறகு, பூஜா என்ற பெண்ணை “கேமரா டெஸ்ட்” எடுத்துப் பார்த்தோம். `டெஸ்ட்’ திருப்திகரமாக இல்லாததால் அவரையும்

அனுப்பிவிட்டோம்.

ராணி முகர்ஜியின் “புகை வளையம்”

இதனால், மும்பைக்குப்போய் கதாநாயகியை தேர்வு செய்வோம் என்று டைரக்டர் சபாவுடன் புறப்பட்டு சென்றேன். ராணி முகர்ஜியைப் பார்த்தோம். அவர் அப்போதுதான் இந்திப் படத்தில் அறிமுகமாகிறார் என்றார்கள். நான் அவரைப் பார்த்த நேரத்தில் எங்கள் முன்னால் கால்மேல் கால் போட்டுக்கொண்டு சிகரெட் புகைத்தபடி இருந்தார். அந்த புகை வளையத்துக்குள்ளேதான் அவரிடம் பேசவேண்டி இருந்தது! இது எனக்கு அருவறுப்பைத் தர, அப்போதே அங்கிருந்து புறப்பட்டு வெளியேறிவிட்டோம்.

அப்போது மும்பையில் `தேரே மேரே சப்னே’ என்று ஒரு இந்திப்படம் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டிருந்தது.

இதே பெயரில், பல ஆண்டுகளுக்கு முன் தேவ்ஆனந்தும் ஒரு படம் எடுத்திருந்தார். புதிய படத்தில் புதுமுகமாக நடித்தவர்தான் சிம்ரன். அவரது போட்டோவைப் பார்த்ததும், `இவர் நமது படத்துக்கு பொருத்தமாக இருப்பார்’ என்று தோன்றியது.

அதே நேரத்தில் சென்னையில் இருந்து முனுசாமி என்பவர் என்னுடன் போனில் பேசினார். “சார்! நான் புதுமுக நடிகை சிம்ரனின் மானேஜர். உங்க படத்தில் சிம்ரனை நடிக்க வைக்க விரும்புகிறேன்” என்றார்.

இதுபற்றி பிரபுதேவாவிடம் நான் சொன்னபோது, அவரும் சிம்ரன் படத்தைப் பார்த்துவிட்டு, “ஓ.கே.சார்” என்றார்.

இதன் பிறகு சென்னை வந்த நாங்கள் சிம்ரனை முனுசாமி மூலம் சென்னைக்கு வரவழைத்தோம். உடனே 2 படங்களுக்கு அவரை புக் செய்தேன்.”

Posted in Abbas, AVM, Barathiraja, Bharathiraja, Cinema, Dhaanu, Directors, Films, Gossips, Kilakku Seemaiyiley, Kizhakku Cheemaiyile, Lalila, Movies, Mukherjee, Prabhudeva, Prabudeva, Ramba, Rani, Rumba, Sasi, Simran, smoking, Thaanu, Vasanth, VIP | Leave a Comment »

Primary vs. General Election funds: USA & India Poll Finances: Madhavan

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

ஊழலின் ஊற்றுக்கண்!

செ. மாதவன்

சரியோ தவறோ, இந்தியப் பொருளாதாரம் அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றிச் செல்கிற நிலைமை. அதைப்போல, இந்திய அரசியல் கட்சிகளும் தேர்தல் நிதி, தேர்தல் செலவுகளிலும் அமெரிக்காவைப் பின்பற்றிச் செல்லாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சிகள் தொடங்க வேண்டும்.

அரசியல் செலவுகள் பெருகி வருகின்றன. இதன் விளைவாக அரசியல் லஞ்சம் பெருகி விடும். இன்றுள்ள நிலையே மோசமாக உள்ளது. அதிகாரம் செலுத்தும் சட்ட வலிமையுள்ள அனைத்து அரசு அமைப்புகளும், அதிகாரம் பெற்றுள்ள அரசியல்வாதிகளும், அரசு அலுவலர்களும் லஞ்சத்தில் மூழ்கி வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை.

விதிவிலக்காக உள்ள சிலர் மிகக் குறைவே. இதில் சதவீத வேறுபாடு இருக்கலாமே தவிர அதிக அளவில் லஞ்சம் பெருகி வருவது உண்மை.

அதிகாரம் செலுத்தும் வாய்ப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சொத்துக் குவிப்பதில் உள்ள சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் நிறைந்த விதிமுறைகள் பயனற்றவைகளாக உள்ளன.

1959ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுப்படி, 1967ஆம் ஆண்டு தமிழகத்தில் அமைச்சரவை பொறுப்பேற்றவுடன், அமைச்சர்கள் எந்தத் தொழிலிலும் ஈடுபடக் கூடாது என்ற சட்டவிதியை அமல்படுத்துமாறு அறிஞர் அண்ணா நடவடிக்கை எடுத்தார்.

அமைச்சர்கள் சொத்துகள் வாங்குவதை முறைப்படுத்தி பகிரங்கப்படுத்த சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து அன்றைய முதல்வர் கருணாநிதி உத்தரவிடக் கூறினார். சில செய்திகள் வெளிவந்தவுடன் நடவடிக்கை எடுத்த நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தனி நபர்களைப் பற்றி நினைப்பதைவிட இதுபோன்று அதிகாரங்களைப் பயன்படுத்திப் பணம் குவிப்பதைத் தடுக்க விதிமுறைகள் வகுக்க வேண்டும்.

ஆட்சியின் அடித்தளத்தில் உள்ள ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளைப் பரிசீலிக்கலாம். வீடு கட்ட அனுமதி கொடுப்பதில் பணம் வாங்கும் நிலை உள்ளது. ஒரு அரிசி ஆலைக்கு அனுமதி கேட்டு முறைப்படி மனுச் செய்த ஒருவர், அனுமதி பெற இயலவில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதி வழங்காவிட்டால், மனுச் செய்த விவரங்கள் சரியாக இருந்தால் அனுமதி பெற்றுவிட்டார் என்று கூறி, அரிசி ஆலை நடத்தலாம் என்று நீதிமன்றத் தீர்ப்பை நான் பெற்றுக் கொடுத்த வழக்கு நினைவில் நிற்கிறது. அனுமதி வழங்கும் விதிகளில் தெளிவான விவரங்கள் வகுக்கப்பட்டு இருந்தால் அனுமதி பெறுவதில் நடமாடும் லஞ்சங்கள் தவிர்க்கப்படலாம்.

உள்ளாட்சி மன்றங்கள் திட்டங்களுக்காகச் செலவிடப்படும் முறைகளில் ஒரு பகுதி நிதி ஊழல் செய்ய வழி வகுக்கிறது. சாலைகள், கட்டடங்கள், தொழிற்சாலைகள் அரசின் பல திட்டங்கள் மூலம் நிதி செலவழிக்கும்போது அரசியல்வாதிகள், அதிகாரிகள், பல கட்டங்களில் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பகுதியை பங்கிட்டுக் கொள்வது நடைமுறையாகிவிட்டது. ஒவ்வொரு மட்டத்திலும் சதவீத அடிப்படையில் மக்கள் வரிப்பணம் பாழடிக்கப்படுவது எந்தவிதத்தில் நியாயம்? ஆனால், அதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.

இந்த ஊழலின் தொடக்கம் தேர்தலில்தான் தொடங்குகிறது என்கிற நிலை அண்மைக்காலங்களில் தோன்றிய சரித்திரம். ஊராட்சித் தேர்தலில் லட்சக்கணக்கில் செலவழித்து விட்டேன், அதை ஈடு கட்டுங்கள் என்று ஊராட்சித் தலைவர்களாக வர விரும்புபவர்கள் கூறுகிற விசித்திரத்தைப் பார்க்கிறோம்.

பல லட்சங்கள் செலவழித்துத் தலைவர்களாக வருபவர்கள் கள்ளப் பணத்தைக் குவித்து வைத்திருக்கும் பணக்காரர்களாக இருக்க வேண்டும். அல்லது பதவி கிடைத்தவுடன் மக்கள் வரிப்பணத்தில் கொள்ளை அடித்துப் பணத்தை ஈடுகட்ட முடியும் என்று நினைப்பவர்களாக இருக்க வேண்டும். இந்த உண்மைகள்தான் ஊராட்சித் தேர்தல்களிலும் லஞ்சம் தாண்டவமாடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்த மோசமான தேர்தல் செலவுகள் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் பெருமளவில் நடைபெறத் தொடங்கிவிட்டன. இன்றைய தலைமுறையினருக்கு இது சாதாரணமான நிகழ்ச்சிகளாகத் தோன்றலாம்.

ஆனால் 46 ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல்களைச் சந்தித்தவர்கள், தேர்தல்களை நடத்திய தலைவர்கள், அன்றைய நிலைமைகளுடன் இன்றைய நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்தால், நாடும் மக்களும் சந்திக்கும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பார்த்திடும் தேர்தல் செலவுகள் நாடு எங்கே, எதை நோக்கிச் செல்கிறது என்று கேள்வி கேட்க வைக்கிறது.

1962ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. தேர்தலுக்குப் பணம் கட்டி எழுத்து மூலம் வேட்பாளராகக் கேட்கும் காலம் தோன்றவில்லை. கோவையில் ஒரு மாநாட்டில் தொண்டர்களோடு அமர்ந்து தலைவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது சட்டமன்றத் தேர்தல் வேட்பாளராக என்னுடைய பெயர் அறிவிக்கப்பட்டது. ஒரு சிலரோடு மட்டும் சென்று வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒரு வாடகைக் காரில் மட்டும் தொகுதி முழுவதும் சில தோழர்களுடன் சுற்றி வந்து மக்களைச் சந்தித்தேன். ஊரில் முக்கியமானவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்பது, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்திப்பது என்ற முறைகள் பின்பற்றப்பட்டன. ஊர்ப் பெரியவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அந்த ஊருக்குத் தேவையான பொது வசதிகளை, சாலை அமைத்தல், குடிதண்ணீர் வசதி, பள்ளிக்கூடம் கட்டுதல் போன்ற பொதுக் கோரிக்கைகளை முன்வைத்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காரைக்குடியில் எம்ஜிஆர் கலந்துகொண்ட சிறப்புக்கூட்டத்துக்கு கட்டணம் வசூலித்து, அதில் கிடைத்த 5,000 ரூபாயைத் தேர்தல் செலவுக்குப் பயன்படுத்திய காட்சி நினைவுக்கு வருகிறது. அறிஞர் அண்ணா கட்சியிலிருந்து ரூ. 200 டி.டி. அனுப்பினார். மொத்தத் தேர்தல் செலவு சில ஆயிரங்கள்தான். ஆங்காங்கே கட்சித் தொண்டர்கள்தான் எதையும் எதிர்பார்க்காமல் தேர்தல் வெற்றிக்குப் பாடுபட்டனர்.

அதே போல் 1967ஆம் ஆண்டு தேர்தலின்போதும் எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட சிறப்புக் கூட்டத்தின் மூலம் ரூ. 5,000-ம் வசூல் செய்து கொடுத்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோன்ற சிறப்புக் கூட்டங்கள் நடத்துவது அந்தக்கால அரசியல்.

1962ஆம் ஆண்டு தேர்தலைவிட சில ஆயிரங்கள் கூடுதலாகச் செலவழிந்தது. கட்சிக்காரர்களே முன்னின்று எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தொண்டாற்றி வெற்றி பெறச் செய்தனர். எதிர்த்து நின்றவர் ஒரு ஆலை அதிபர். அவர் வீட்டுக்கே சென்று வாக்குக் கேட்ட நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. பிற்காலத்தில் அவருக்கே அரசின் மூலம் பல உதவிகள் செய்த நிகழ்ச்சிகள் அன்றைய நாகரிக அரசியல் பாரம்பரியத்தை நினைவுபடுத்துகிறது.

ஆனால் இன்று நடைபெறும் தேர்தல்களில் லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவழிப்பது நடைமுறையாகிவிட்டது. தேர்தல் நிதி என்ற பெயரில் ஒவ்வோர் அரசியல் கட்சியும் கோடிக்கணக்கில் நிதி திரட்டுவது நடைபெறுகிறது. லஞ்சம் பெருகிவிட்டதற்குத் தேர்தல் செலவு பெருகிவிட்டதும் காரணமாக அமைந்துவிட்டது.

இப்போது அமெரிக்காவில் நடைபெறும் தேர்தலில் தேர்தல் நிதி திரட்டும் செய்திகள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளன.

அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் ஹில்லாரி கிளிண்டன் மற்றும் ஒபாமா ஆகிய இருவரும், அதிபர் பதவி வேட்பாளராகத் தங்கள் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட, தங்களுக்குள் மக்கள் ஆதரவை நிரூபிக்கும் தேர்தல்தான் இப்போது நடைபெறுகிறது. இதற்கு நிதி சேர்க்கிறார்கள். 2008 ஜனவரி வரை ஒபாமா சேர்த்திருக்கும் நிதி 13,82,31,595 டாலர்கள் அதாவது 552,92,63,800 ரூபாய் என்றும், ஹில்லாரி கிளிண்டன் சேர்த்திருக்கும் நிதி 13,45,36,488 டாலர்கள் அதாவது 538,14,59,520 ரூபாய் என்றும் வெளிவந்துள்ளது. இவர்களைப்போல அந்தக் கட்சியில் வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் இன்னும் பல வேட்பாளர்களும் நிதி திரட்டியுள்ளனர்.

இந்தியாவிலும் அமெரிக்கா போல் பண ஆதிக்கம் தோன்றாமல் இருக்க வேண்டும். நாடாளுமன்றச் சட்டங்கள் இல்லாமலே அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324 தேர்தல் கமிஷனுக்குக் கொடுத்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவுகள் போடலாம். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களைப்போல் நடைமுறைகளைக் கொண்டு வரலாம். ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், விளம்பரங்கள், கார்கள் பயன்படுத்தும் முறைகளை விதிகள் மூலம் வகுக்கலாம். ஊர்வலங்களைத் தடுக்கலாம். பொதுக்கூட்டங்களைக் குறைக்கலாம்.

ஒரு வேட்பாளர் கடந்தகாலச் சாதனைகளைப் பற்றி, எதிர்காலத் திட்டங்கள் பற்றி வாக்காளர்களுக்கு வேண்டுகோளாக அச்சடித்துக் கொடுக்கும் முறையை மட்டும் அனுமதிக்கலாம். வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்குகள் கேட்கலாம்.

46 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா கட்சியினரும் இன்று போலத் தேர்தல் செலவு செய்யவில்லை. அதிகாரத்தைக் காட்டித் தேர்தல் நிதிகளைக் குவித்ததும் இல்லை என்பதுதான் உண்மை. அமெரிக்காவில் பிரசார நிதி என்று சட்டப்படி வசூலிப்பது தேர்தல் கமிஷனால் கண்காணிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கறுப்புப் பணம் தேர்தலில் விளையாடுகிறது.

அரசியல் லஞ்சம் ஒழிந்தால், அதிகாரிகள் லஞ்சமும் ஒழியும். பண ஆதிக்கம் ஒழியும். தேர்தல் போர்வையில் லஞ்சங்களைக் குவிக்கும் அரசியல் அநாகரிகம் ஒழியும். ஏழைத் தொண்டர்களை ஆட்சிபீடத்தில் அமர்த்தும் காமராசர், அறிஞர் அண்ணா வளர்த்த அரசியல் மீண்டும் மலர்ந்திடும். அரசியல் தலைவர்கள் அனைவரும் புதிய சரித்திரம் படைப்பார்கள்.

நல்லாட்சி வேண்டுமானால் நல்ல அரசியல் வேண்டும். நல்ல அரசியல் வேண்டுமானால், தேர்தல் வெற்றிகள் மக்களின் செல்வாக்கின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, பணபலத்தால் அமையக்கூடாது. மக்கள் சக்திக்கு மரியாதை கிடைக்கும் சூழ்நிலையை நமது தேர்தலில் ஏற்படுத்தும் கடமை இன்றைய அரசியல் தலைவர்களுக்கு உண்டு.

(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சர்)

Posted in Actors, AIADMK, America, Anna, Annadurai, Assets, Balance, Bribery, Bribes, Cinema, Clinton, Commission, Conferences, Corruption, DMK, EC, Elections, Expenditure, Films, Finance, Finances, Funds, Huckabee, Income, India, IT, JJ, kickbacks, KK, Madhavan, McCain, MGR, Mitt, Movies, Obama, Party, Polls, Poor, President, Primary, Rich, Romney, Tax, Taxes, US, USA, Wealthy | Leave a Comment »

Balu Mahendira’s Vanna Vanna Pookkal – Interview with Producer Thaanu

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

திரைப்பட வரலாறு :(881)
“வண்ண வண்ண பூக்கள்”
பாலு மகேந்திரா டைரக்ஷனில் தாணு தயாரித்த படம்


பிரபல ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான பாலுமகேந்
திராவின் இயக்கத்தில், “வண்ண வண்ணப்பூக்கள்” என்ற படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார்.

இந்தப் படத்தை தயாரித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி தாணு கூறியதாவது:-

பாலு மகேந்திரா சந்திப்பு

“எனது அலுவலகம் அப்போது தி.நகரில் இருந்தது. ஒருநாள் காலை நான் அலுவலகத்தில் இருந்தபோது, டைரக்டர் எம்.ஆர்.பூபதி டைரக்டர் பாலு மகேந்திராவை அழைத்துக்கொண்டு வந்தார்.

நான் அவர்களை வரவேற்று உபசரித்தேன்.

பாலுமகேந்திரா இயக்கிய படங்களை பார்த்திருக்கிறேனே தவிர, அவர் இயக்கிய படம் எதையும் தயாரித்ததில்லை. என்ன நோக்கத்துக்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்று நான் யோசித்த நேரத்தில் பாலு மகேந்திராவே என்னிடம், “தாணு சார்! நான் இதுவரை இயக்கிய படங்களில் ஒரு கமர்ஷியல் தயாரிப்பாளரை தேர்வு செய்யாமல் இருந்து விட்டேன். அதுதான் நான் செய்த பெரிய தவறு. அதன் விளைவாக இன்று நான் கஷ்டத்தை அனுபவிக்கும் நிலைக்கு வந்துவிட்டேன். எனது ஆபீசுக்கு 6 மாத வாடகை பாக்கி என்று சொன்னால் நம்புவீர்களா? அதுதான் உண்மை. இந்த நேரத்தில் எனக்கு ஒரு படம் கொடுத்தீர்களானால், காலத்துக்கும் மறக்கமாட்டேன். இப்போது நீங்கள் எனக்கு அட்வான்சாக ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும், அது எனக்கு ஒரு லட்சம் மாதிரி” என்று கூறினார்.

ஒரு பெரிய இயக்குனர் இப்படி தன் நிலை பற்றி வெளிப்படையாகப் பேசியதில், எனக்கு மனம் பதறிவிட்டது. அப்போதே அவரிடம், “சார்! என் தயாரிப்பில் ஒரு படம் இயக்குங்கள்” என்றேன்.

“ஒரு கதை வைத்திருக்கிறேன். 26 லட்ச ரூபாய் பட்ஜெட். படத்தில் விக்னேஷ், ஆதித்யா, மவுனிகா, வினோதினி நடிக்கிறார்கள். இவர்களுக்கு இந்தக் கதையை சொல்லி, வீட்டிலேயே ரிகர்சல் வைத்து ஷுட் பண்ணியும் இருக்கிறேன். ஏற்கனவே கதையின் கேரக்டர்கள் இவர்களுக்கு அத்துபடி என்பதால், சீக்கிரமாக படப்பிடிப்பை முடித்துவிடுவேன்” என்றார். அதோடு அவர் சொன்ன நட்சத்திரங்கள் நடித்த சில காட்சிகளுக்கான ஸ்டில்களையும் காண்பித்தார்.

பெரிய டைரக்டர் இப்படி சொன்னதும் நான் உடனே `கேஷ் பாக்சை’ திறந்து ஒரு தொகையை அவர் கையில் கொடுத்து “கவலைப்படாதீங்க சார்! நாம படம் பண்றோம்” என்றேன்.

இளையராஜா

அப்போதே அவர் படத்தின் டெக்னிஷியன்கள் பட்டியலையும் சொன்னார். அதில் இசை என்ற இடத்தில் இளையராஜா பெயர் இருந்தது. அந்தப் பெயரை பார்த்ததும் என் மனது மகிழ்ச்சியில் சிறகடித்துப் பறந்தது.

என் மகிழ்ச்சிக்குக் காரணம் இருந்தது. என் தயாரிப்பில் இரண்டாவது படமாக உருவான “நல்லவன்” படத்துக்கு இசைஞானி இளையராஜாவே இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினேன். அதற்காக அவரது தம்பியும் இசையமைப்பாளருமான கங்கை அமரனுடன் சென்று சந்தித்தேன். என் விருப்பம் சொன்னதும் நான் எதிர்பார்த்திராத ஒரு தொகையை சம்பளமாக சொன்னார். அவர் கேட்ட தொகையினால், நான் அதிர்ச்சிவசப்பட்டிருக்கிறேன் என்பதை புரிந்து கொண்டவர், “பொட்டி (ஆர்மோனியம்) போடத் தெரியாதவங்களே உங்க கிட்ட அதிகம் கேட்டு வாங்கும்போது நான் கேட்டாலென்ன?” என்றார்.

அவர் குறிப்பிட்டுச் சொன்ன அந்த இசையமைப்பாளருக்கு, நான் பலமுறை பல சூழ்நிலைகளில் உதவியிருக்கிறேன். அவர் இயக்கிய முதல் படம் ரிலீசின்போது பணப்பிரச்சினை. படத்தை வெளியிட முடியாத நிலையில் என்னிடம் வந்தார். 11/2 லட்சம் ரூபாய் பைனான்ஸ் வாங்கிக்கொடுத்து, ரிலீசுக்கு ஏற்பாடு செய்தேன்.

அடுத்த படத்துக்கு பூஜை போடும்போதே பிரச்சினை. பூஜைக்கான பணத்துக்காக எனக்கு போன் போட்டார். அப்போது எனது வினியோகத்தில் ஆவடி ராமரத்னா தியேட்டரில் “எங்கேயோ கேட்ட குரல்” படம் ஓடிக்கொண்டிருந்தது. அங்கே போய் 10 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்தேன். மூன்றாவதாகவும் ஒரு படத்துக்கு ரிலீசின்போது பிரச்சினை நேர, அப்போது 2 லட்சத்துக்காக ஓடோடி வந்தார். அதையும் பைனான்ஸ் வாங்கிக்கொடுத்து சரி செய்தேன்.

இப்படி வெவ் வேறு சமயங்களில் என்னிடம் உதவி பெற்றவர், நான் தயாரிப்பாளர் ஆனதும் “உங்கள் படத்துக்கு நானே இலவசமாக இசையமைத்துத்தருவேன். உங்களுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் இதுவாகத்தான் இருக்கும்” என்று உருக்கமாகப் பேசியதன் பேரில் இசை வாய்ப்பை அவருக்கு வழங்கினேன். அப்போதும் அவர் தனது அப்பாவுக்கு உடல் நலமில்லை என்று கூறி “ரூ.50 ஆயிரம் மட்டும் கொடுத்தால் போதும்” என்றார்.

இதுவரை நன்றாக இருந்த அவர் பேச்சு, படத்தின் வியாபாரத்தை நான் பேசி முடித்தபோது மாறிவிட்டது. படம் நல்ல விலைக்கு போயிருப்பதை தெரிந்து கொண்டவர், படத்தின் ஹீரோ வாங்கும் சம்பளம் அளவுக்கு தனக்கும் தந்தால்தான் ஆயிற்று” என்று அடம் பிடித்தார். “இது கூட நானல்ல! என் மனைவியின் கட்டாயத்துக்காகவே வாங்க வேண்டியிருக்கிறது” என்று அப்போதும் அவர் சொன்னதுதான் ஹைலைட்.

இந்த விஷயம் இசை ஞானியின் காதுக்கு எப்படியோ போய்ச் சேர்ந்திருக்கிறது. அதனால்தான் அவர் எடுத்த எடுப்பில் அதிக சம்பளம் கேட்டு அதிர வைத்திருக்கிறார். அதற்குப் பிறகு அவரை வற்புறுத்த விரும்பாமல் அப்போது நான் திரும்பி வந்துவிட்டேன்.

அதற்குப்பிறகு இப்போதுதான் அவரது இல்லத்தில் காலெடுத்து வைத்திருக்கிறேன். அவருக்கே உரிய பாணியில் வரவேற்றவர், “உங்களுக்கு இசையமைக்கிறேன். டைரக்டர் யார்?” என்று கேட்டார்.

நான் பாலுமகேந்திராவின் பெயரை சொன்னேன்.

இப்போது அவர் முகத்தில் சின்னதாய் ஒரு மாறுதல் தெரிந்தது.

“தாணு! `ரத்த சம்பந்தலு’ன்னு ஒரு தெலுங்குப்படத்தை பாலுதான் பண்ணினார். பானுசந்தர் – அர்ச்சனா நடிச்சாங்க. 2 வருஷம் ஆகியும் படம் இன்னும் ரிலீஸ் ஆகலை.”

பதிலுக்கு நான், “சார்! இப்ப அவரே என்கிட்ட அவரோட நிலை பற்றி உருக்கமா சொன்னதாலதான் அவரை வெச்சு படம் பண்றதா வாக்குக் கொடுத்திட்டு அட்வான்சும் கொடுத்திட்டு நேரா உங்க கிட்ட வந்திருக்கிறேன்” என்றேன்.

அப்போதும் அவர் இசையமைக்க யோசித்தார்.

நான் பலவாறாக சமாதானப்படுத்தி, அவர் மனதை மாற்றினேன்.

இளையராஜா இசையமைக்க சம்மதம் தந்ததும் மறுநாளே பாலு மகேந்திரா இளையராஜாவை சந்தித்தார். தனது படத்தின் கதை பற்றி விளக்கினார்.

மெட்டுகள்

மறுநாள் காலை 7 மணிக்கு பாடல் கம்போசிங்கிற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள `பிஷர்மேன் கேவ்’ போனோம். 8 1/2 மணிக்கு ஊதுபத்தி ஏற்றி வைத்து ஆர்மோனியத்தை தொட்டதும் முதல் பாட்டு `கண்ணம்மா காதலெனும் கவிதை சொல்லடி’ என்ற பாட்டு பிய்த்துக்கொண்டு வந்தது. அடுத்து `இளம் நெஞ்சே வா’ பாட்டு. அதையடுத்து `சின்னமணி கோவிலிலே’, `ஜின்ஜினாக்கடி’ என தொடர்ந்து மதியத்திற்குள் 6 பாடல்களுக்கான அற்புதமான டிïன்கள் போட்டுக் கொடுத்து விட்டார், இளையராஜா.

அவர் ஆர்மோனியத்தில் இசையமைத்தபோது பாலு மகேந்திரா ஒரு படம் எடுத்தார். அந்த புகைப்படத்தை பெயிண்ட் பண்ணி எனது அன்பளிப்பாக இளையராஜாவுக்குக் கொடுத்தேன். இந்த பெயிண்ட் நூறு வருஷத்துக்கும் மேலாக புகைப்படத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. இளையராஜா தன்னை மறந்து இசையமைக்க, அவரது தாயார் தனது மகனை பார்த்து ரசிப்பது போல அந்த புகைப்படம் இப்போதும் அவரது இல்லத்தில் இருக்கிறது.

திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கியது. பாலு மகேந்திராவிடம் ஏற்கனவே இந்த கதைக்காக நடிப்புப் பயிற்சி பெற்ற நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். 10 நாள் படப்பிடிப்பு தடங்கலின்றி போய்க்கொண்டிருந்த நேரத்தில் திடீர் என்று ஒரு சிக்கல் ஏற்பட்டது. நடிகை அர்ச்சனாதான் அந்த சிக்கலை உருவாக்கினார்.

தேசிய விருது கிடைத்தது!

பாலு மகேந்திரா டைரக்ஷனில் கலைப்புலி தாணு தயாரித்த “வண்ண வண்ணப்பூக்கள்” படத்துக்கு பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருது கிடைத்தது.

இந்தப் படத்தைத் தயாரித்தபோது, சில சிக்கல்களை தாணு சந்திக்க வேண்டி இருந்தது.

அதுபற்றி அவர் கூறியதாவது:-

அர்ச்சனா கோபம்

“வண்ண வண்ணப்பூக்கள்” பத்தாவது நாள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, நடிகை அர்ச்சனா வேகமாக காரில் இருந்து இறங்கி செட்டுக்குள் வந்திருக்கிறார். “நான் சிபாரிசு செய்த ஆதித்யாவை, விக்னேஷ் நடிக்கிற கேரக்டரில் நடிக்க வைக்கவில்லையே, ஏன்?” என்று பாலு மகேந்திராவிடம் கோபம் கோபமாக பேசிவிட்டுப் போயிருக்கிறார்.

இந்த சம்பவம், என் காதுக்கு வந்திருந்தது.

மறுநாள் காலையில் டைரக்டர் பாலு மகேந்திரா என்னைப் பார்க்க வந்தார். “சார்! நான் எதிர்பார்த்த அளவுக்கு விக்னேஷ் நடிப்பு அமையவில்லை. அதனால் அவரை மாற்றிவிட்டு, வேற ஹீரோவைப் போடலாம்” என்றார்.

முந்தின நாள் அடித்த புயலுக்கு இன்று ரியாக்ஷனா? நடந்தது எதுவும் எனக்குத் தெரியாதது போல காட்டிக்கொண்டு, “நடிகர்களுக்கெல்லாம் ஏற்கனவே பயிற்சி கொடுத்து வைத்திருந்ததாகத்தானே சொன்னீர்கள்! இப்போது படப்பிடிப்பு தொடங்கி 10 நாள் கழித்து, நடிப்பு வரவில்லை என்று சொன்னால் எப்படி?” என்று கேட்டேன்.

எனக்கு விஷயம் தெரிந்து விட்டது என்பதை புரிந்து கொண்டவர், “அந்தப் பையனுக்கு காய்ச்சல். குளிர் வந்து கஷ்டப்படற மாதிரி தெரியுது” என்றார்.

புது ஹீரோ

இதற்கு மேல் அவரிடம் பேசிப் பயனில்லை என்று புரிந்து கொண்டு, “இப்போது, புதிதாக ஒரு ஹீரோ வேண்டும், அதானே சார்?” என்றேன். “அதேதான் சார்” என்றார், அவரும்.

அப்போது “வைகாசி பொறந்தாச்சு” என்ற படத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அதுதான் முதல் படம் என்பதால், எங்கள் படத்தில் நடிக்க வைக்க விரும்பி பிரசாந்தின் அப்பா நடிகர் தியாகராஜனை சந்தித்தேன்.

விஷயத்தைச் சொன்னதும் அவருக்கு சந்தோஷம். “உங்கள் படங்களின் பிரமாண்ட விளம்பரங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். “வண்ண வண்ணப் பூக்கள்” படத்துக்கான உங்கள் விளம்பரம் பார்த்தபோது “இந்த படத்தில் என் பையன் இருந்தால் எப்படிப்பட்ட `பப்ளிசிடி’ கிடைத்திருக்கும்” என்று கூட யோசித்திருக்கிறேன். இப்போது உங்களின் அதே படத்துக்கு என் பையனை அழைக்கிறீர்கள். அவன் இனி உங்க வீட்டுப்பிள்ளை” என்று அப்போதே சம்மதம் தந்தார்.

பிரசாந்த் நடிப்பில் படப்பிடிப்பு தொடர்ந்தது. பாதிப்படம் வளர்வதற்குள் பாலுமகேந்திரா முதலில் சொன்ன முழுப்படத்துக்குமான பட்ஜெட்டை தாண்டியது. முழுப்படத்துக்கு அவர் போட்டுக்கொடுத்த பட்ஜெட் 26 லட்சம் ரூபாய். இப்போதோ பாதி படத்துக்குள் 27 லட்சம் செலவாகியிருக்கிறது.

10 நாள் படப்பிடிப்பை நடத்திவிட்டு, மறுபடியும் அதே காட்சிகளை படம் பிடித்ததில் செலவு அதிகமாகியிருக்கிறது.

பாடல் காட்சி

படத்தில் வரும் “இளம் நெஞ்சே வா” பாட்டு, சைக்கிள் ஓட்டிக்கொண்டே பிரசாந்த் பாடும் பாட்டு. இந்தப் பாடல் பதிவு நடந்த நேரத்தில், நான் கோவையில் இருந்தேன். இப்போது ஒகனேக்கல்லில் இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு நடந்தபோது பாட்டைக் கேட்கிறேன். எனக்கு அதிர்ச்சி. உடனே நான் டைரக்டரிடம், “சார்! இந்தப்பாட்டு சைக்கிளில் போகிற மாதிரியாக வரும் பாட்டுத்தானே! அன்றைக்கு ராஜா சார் இந்தப்பாட்டுக்கு போட்ட டிïன் இது இல்லையே! இது நடந்து போகும்போது பாடுகிற மாதிரியல்லவா இருக்கிறது” என்று கேட்டேன்.

நான் இப்படிக் கேட்டதும் பாலு மகேந்திரா கண் கலங்கி விட்டார். “சார்! ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு! 3 நாளைக்கு முன்னாடி திடீர்னு என் அப்பா இறந்து போனதால், பாட்டெழுத வந்த வாலி சாரிடம் `டிïன் கேசட்டை’ மாற்றிக்கொடுத்து விட்டேன்” என்றார்.

என்றாலும் ஜேசுதாஸ் பாடிய அந்தப்பாடல் `ஸ்லோ மெலடியிலும்’ கேட்க இனிமையாகவே அமைந்திருந்தது.

ரூ.60 லட்சம்

ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்தது. 26 லட்சத்தில் போடப்பட்ட பட்ஜெட், 60 லட்சத்தில் வந்து நின்றிருந்தது! அதோடு படத்தில் ஏற்கனவே சொன்ன காமெடி சீன் எதுவும் எடுக்காமல் விட்டுவிட்டார்.

படம் இளையராஜாவின் பின்னணி இசைக்காக (ரீ ரிக்கார்டிங்) வந்தது. நான் இசைக் கூடத்தில் இளையராஜாவை சந்தித்தேன். என்னைப் பார்த்ததுமே, “என்ன தாணு! நான் சொன்னது நடந்ததா?” என்று கேட்டார்.

இசை அமைக்க ஒப்புக்கொண்டபோது, “இந்தப் படத்தால் ரொம்ப கஷ்டப்படுவீங்க” என்று அவர் சொன்னது என் நினைவில் இருந்தது. பட்ஜெட்டைவிட இரண்டு மடங்கு செலவானதைத் தெரிந்து கொண்டுதான் இளையராஜா இப்படிக் கேட்டார்.

நான் அவரிடம், “நீங்க சொன்னீங்க. நானும் படத்தை எடுத்து முடிச்சிட்டு வந்துட்டேன்” என்றேன்.

படம் தயாரானதும் கலைஞருக்கு போட்டுக்காட்டினேன். படம் முடிந்ததும் “இளமை எழுதிய ஓவியம்; காமிரா எழுதிய காவியம்” என்று பாராட்டி, எழுதித் தந்தார்.

தேசிய விருது

படம் ரிலீசானபோது வசூல் ரீதியாக தோல்விப்படமானது. எனக்கும் கணிசமான நஷ்டம். ஆனாலும் சிறந்த பிராந்திய மொழி படத்துக்கான மத்திய அரசின் “தேசிய விருது” கிடைத்து என் நஷ்டத்தை மறக்க வைத்தது.

விருது பற்றிய தகவல் கிடைத்ததும் கலைஞரை சந்தித்தேன். “வருக, வருக! வாழ்த்துக்கள்” என்றார். அப்போது முரசொலி பதிப்பகத்தில் இருந்து வந்து கொண்டிருந்த “தமிழன்” நாளேட்டில் இந்த விருது செய்தியை தலைப்புச் செய்தியாக்கினார்கள்.

படம் விருது பெற்ற பிறகு என்னை சந்தித்த பத்திரிகையாளர்களிடம், “பங்கு பெற்ற கலைஞர்களுக்கு களிப்பை தந்த படம். வினியோகஸ்தர்களுக்கு கவலையை தந்த படம்” என்று சொன்னேன்.

நான் இப்படி சொன்னதற்காக பாலு மகேந்திரா என்னிடம், “இப்படி சொல்லியிருக்க வேண்டுமா?” என்று வருத்தப்பட்டார். நான், “உண்மையைத்தானே சொன்னேன்” என்று அவருக்கு வருத்தத்துடன் மறுமொழி சொன்னேன்.

காயத்துக்கு மருந்து

என்றாலும் டெல்லியில் ஜனாதிபதி ஆர்.வெங்கடராமனிடம் சிறந்த பிராந்திய படத்துக்கான தேசிய விருது பெற்றபோது, இந்தப் படத்தயாரிப்பில் ஏற்பட்டிருந்த என் மனக் காயத்துக்கு மருந்து தடவியது போலிருந்தது.”

இவ்வாறு தாணு கூறினார்.

Posted in Balu Mahendhira, Balu Mahendira, Balu mahendra, Balu Mahenthira, Balu Mahenthra, Cinema, Dhaanu, Dhanu, Films, Ilaiaraja, Ilaiyaraaja, Ilaiyaraja, Interview, IR, Movies, Producer, Thaanu, Thanu | Leave a Comment »

Tamil Cinema Faces – Ku Sa Krishnamoorthy: Biosketch (Dinathanthy)

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

திரைப்பட வரலாறு 873
எம்.ஜி.ஆர். நடித்த “அந்தமான் கைதி”
கதை, வசனம், பாடல் எழுதிய கு.சா.கிருஷ்ணமூர்த்தி


எம்.ஜி.ஆர். நடித்த “அந்தமான் கைதி” படத்துக்கு கதை, வசனம், பாடல் எழுதி புகழ் பெற்றவர் கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி. “ரத்தக்கண்ணீர்” படத்தில் சிதம்பரம் ஜெயராமன் பாடிய “குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது” என்ற பாடல் இவர் எழுதியதே.

ma-po_si_kalainjar.jpg

நாடக உலகிலும், பிறகு சினிமா துறையிலும் புகழ் பெற்று விளங்கியவர், கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி.

இவர், 1914-ம் ஆண்டு மே 19-ந்தேதி கும்பகோணத்தில் பிறந்தார். பெற்றோர் சாமிநாதபிள்ளை – மீனாட்சி அம்மாள்.

நாடக ஆசை

கிருஷ்ணமூர்த்தி மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே, நாடக ஆசை தொற்றிக்கொண்டது. எனவே, படிப்பை விட்டு விட்டு, பாய்ஸ் நாடகக் கம்பெனி ஒன்றில் சேர்ந்தார்.

இவர் நாடக நடிகராக இருந்தபோது, எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், விஸ்வநாததாஸ், வேலுநாயர் போன்றோர், நாடகத்துறையில் புகழ் பெற்று விளங்கினார்கள். இவர்கள் ஸ்பெஷல் நாடகங்கள் நடத்த இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா முதலிய நாடுகளுக்குச் சென்றபோது, கு.சா.கிருஷ்ணமூர்த்தி அந்தக் குழுக்களிலும் இடம் பெற்றார். ஒரு காலகட்டத்தில், கிருஷ்ணமூர்த்திக்கு நாடக வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டது. அதனால் புதுக்கோட்டையில் ஒரு பதிப்பகத்தையும், படக்கடையையும் தொடங்கினார்.

அந்தமான் கைதி

இந்த சமயத்தில், வயதான ஒருவருக்கு இளம் பெண்ணைத் திருமணம் செய்து வைத்த நிகழ்ச்சி, கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தில் நடந்தது. அந்த சம்பவம் அவர் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.

இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, “அந்தமான் கைதி” என்ற நாவலை எழுதினார். அதை நாடகமாக்கி, நண்பர்களுடன் சேர்ந்து நடத்தி வந்தார்.

நாடகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே, அதை புத்தகமாக அச்சடித்து, 11/2 ரூபாய் விலை போட்டு விற்பனை

செய்தார்.டி.கே.எஸ்.சகோதரர்கள், நாடக உலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலக்கட்டம் அது. டி.கே.சண்முகத்துக்கு, “அந்தமான் கைதி”யின் நாடகப் பிரதி ஒன்றை கிருஷ்ணமூர்த்தி அனுப்பி வைத்தார்.

அதைப்படித்த டி.கே.சண்முகம், “எடுத்தேன்; படித்தேன்; முடித்தேன். அற்புதம், அற்புதம், அற்புதம்!” என்று கிருஷ்ணமூர்த்திக்கு பதில் எழுதினார். “இந்த நாடகத்தை, என் நாடக சபை மூலம் மேடை ஏற்ற விரும்புகிறேன்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு கிருஷ்ணமூர்த்தி சம்மதம் தெரிவித்தார். “ஒருநாள் நாடகத்துக்கு, ராயல்டியாக (ஆசிரியருக்கான சம்பளம்) நாலணா கொடுத்தால் போதும்” என்றும் குறிப்பிட்டார்.

மூன்று வார ஒத்திகைக்குப்பின், “அந்தமான் கைதி” நாடகத்தை டி.கே.எஸ்.சகோதரர்கள் அரங்கேற்றினர்.

நாடகம் பெரிய வெற்றி பெற்றது. அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், எழுத்தாளர்கள் “கல்கி”, “வ.ரா” போன்றோர், நாடகத்தைப் பார்த்துப் பாராட்டினர்.

சினிமா

“அந்தமான் கைதி” நாடகத்தை, 1952-ம் ஆண்டில் ராதாகிருஷ்ணா பிலிம்சார் படமாகத் தயாரித்தார்கள்.

எம்.ஜி.ஆர். வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைத்திருந்த நேரம் அது. அவர் இப்படத்தின் கதாநாயகனாக நடித்தார். “அந்தமான் கைதி” நாடகத்தில் கதாநாயகியாக நடித்த எம்.எஸ்.திரவுபதி, திரைப்படத்திலும் கதாநாயகியாக (எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக) நடித்தார்.

மற்றும் பி.கே.சரஸ்வதி, எஸ்.டி.சுப்புலட்சுமி, திக்குரிச்சி சுகுமாரன் நாயர், டி.எஸ்.பாலையா, கே.சாரங்கபாணி ஆகியோரும் நடித்தனர். லலிதா – பத்மினி – ராகினியின் நடனமும் இப்படத்தில் இடம் பெற்றது.

இந்தப் படத்துக்கு கதை, வசனம், பாடல்களை கு.சா.கிருஷ்ணமூர்த்தி எழுதினார். அக்காலத்து பிரபல இசை அமைப்பாளர் ஜி.கோவிந்தராஜ×லு நாயுடு இசை அமைத்தார்.

“அந்தமான் கைதி”, ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. கதையின் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் பெரிதும் பாராட்டப்பட்டன.

இந்தப் படத்தில் ஒரு பாடல். ஒரு பெரிய பை நிறைய காய்கறிகளை வாங்கிக் கொண்டு வரும் பி.கே.சரஸ்வதி, “அஞ்சு ரூபா நோட்டை கொஞ்சம் முன்னே மாத்தி, மிச்சமில்லே. காசு மிச்சமில்லே. கத்திரிக்காய் விலை கூட கட்டு மீறலாச்சு; காலம் கெட்டுப்போச்சு” என்று பாடுவார்!

இது அன்றைய விலை நிலவரம். இப்போது அந்தக் காட்சியை எடுத்தால், “நூறு ரூபா நோட்டை கொஞ்சம் முன்னே மாத்தி…” என்றுதான் பாடலை மாற்றவேண்டும்!

ரத்தக்கண்ணீர்

தொடர்ந்து, பல படங்களுக்கு கு.சா.கிருஷ்ணமூர்த்தி பாடல்கள் எழுதினார்.

எம்.ஆர்.ராதா நடித்த ரத்தக்கண்ணீர் படத்தில் சிதம்பரம் ஜெயராமன் இசை அமைத்துப் பாடிய “குற்றம் புரிந்தவன், வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது!” என்ற பாடல் கு.சா.கிருஷ்ணமூர்த்தி எழுதியதுதான்.

இந்தப்பாடல் பெரிய `ஹிட்’ ஆகி, கு.சா.கிருஷ்ணமூர்த்திக்கு மிகுந்த புகழைத் தேடித்தந்தது. இதில் பலருக்கும் தெரியாத ஒரு செய்தி: கு.சா.கிருஷ்ணமூர்த்தியின் இந்தப் பாடலை, சிதம்பரம் ஜெயராமன் ஏற்கனவே இசை அமைத்துப்பாடி, அது தனி இசைத்தட்டாகவும் வந்துவிட்டது! அதையேதான், “ரத்தக்கண்ணீர்” படத்திலும் பயன்படுத்திக் கொண்டார்கள். இடையிடையே எம்.ஆர்.ராதா பேசும் வசனத்தை சேர்த்துக் கொண்டார்கள். அது மட்டுமே புதிது.

சின்னப்பா நடித்த “மங்கையர்க்கரசி” படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கு.சா.கிருஷ்ணமூர்த்திக்குத்தான் வந்தது. ஆனால், இளைஞரான சுரதாவை பட அதிபரிடம் அழைத்துச் சென்று, “இவர் திறமைசாலி. இவரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார். இதனால், வசனம் எழுதும் வாய்ப்பு சுரதாவுக்கு கிடைத்தது. கு.சா.கிருஷ்ணமூர்த்தியும், கம்பதாசனும் பாடல் எழுதினார்கள்.

ku_saa_krishnamoorthy.jpg
750 பாடல்கள்

கு.சா.கிருஷ்ணமூர்த்தி திரைப்படங்களுக்காக எழுதிய பாடல்கள் சுமார் 750. அவற்றில் மிகவும் பிரபலமான பாடல்கள்:-

* “நிலவோடு வான் முகில் விளையாடுதே…” (“ராஜராஜன்” படத்தில் ஏ.பி.கோமளாவும், சீர்காழி கோவிந்தராஜனும் இணைந்து பாடிய பாடல்)

* எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்… (“தை பிறந்தால் வழி பிறக்கும்” படத்தில் டி.எம்.சவுந்தரராஜன் பாடும் பாட்டு)

* “சொல்லாலே விளக்கத் தெரியலே” (“சக்ரவர்த்தி திருமகன்” படத்தில் பி.லீலா பாடிய பாட்டு)

* “அகில பாரத பெண்கள் திலகமாய்…” (ஏவி.எம். “பெண்” படத்தில் வைஜயந்திமாலா பாடுவதுபோல் அமைந்த காட்சி. பாடியவர்: எம்.எஸ்.ராஜேஸ்வரி)

* “காதல் கனிரசமே” (“மங்கையர்க்கரசி” படத்தில் பாடியவர் பி.யு.சின்னப்பா.)

அனுபவங்கள்

கு.சா.கிருஷ்ணமூர்த்தி, தன் கலை உலக அனுபவங்கள் பற்றி ஒரு கட்டுரையில் கூறியிருப்பதாவது:-

“திரை உலகில், நான் முதன் முதலில் பாடல் ஆசிரியனாகத்தான் நுழைந்தேன். “ஆண்டாள்”, “போஜன்” முதலிய படங்களுக்கு பாடல் எழுதினேன்.

“அந்தமான் கைதி” நாடகம் படமானபோது, கதை, வசனம், பாடல் எழுதினேன்.

நான் சென்னை வர காரணமாக இருந்தவர், ஜுபிடர் அதிபர் சோமு. அவர் என்னிடம் 2 ஆயிரம் ரூபாயை கொடுத்து, என்னை நிரந்தரமாக சென்னையில் குடியேறச் சொன்னார். ஜுபிடர் படங்களுக்கு தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்தேன்.

ஜுபிடர் பிக்சர்சார் “சந்திரகாந்தா” கதையை படமாக்க ஏற்பாடு செய்தனர். அதில் சுண்டூர் இளவரசன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில், நம்மாழ்வார் என்ற நடிகரை நடிக்க வைக்க இருந்தார்கள். நாடகங்களில் நடித்து வந்த பி.யு.சின்னப்பாவைத்தான் அந்த வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று நான் வாதாடி, வெற்றியும் பெற்றேன். சின்னப்பாவுக்கு முதன் முதலாகப் புகழ் தேடித்தந்த படம் சந்திரகாந்தா.

வகீதா ரஹ்மான்

டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் மருமகன், “ஒன்றே குலம்” என்ற படத்தைத் தயாரித்தார். அதற்கு கதை – வசனம் எழுதியது

நான்தான்.அப்போது ஒரு சிறு பெண், தன் தாயாருடன் வந்தார். “ஒரு சிறு வேடமாக இருந்தாலும் எனக்கு வாங்கிக் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். அந்தப் படத்தில் நர்ஸ் வேடம் வாங்கிக் கொடுத்தேன். அந்தப் பெண்தான், பிற்காலத்தில் அகில இந்தியப் புகழ் பெற்ற நடிகை வகீதா ரஹ்மான்!

மெட்டு

பொதுவாக, நான் எழுதும் பாடல்களுக்கு நானே மெட்டமைத்து, பாடிக்காட்டுவேன். பிரபல இசை அமைப்பாளரான ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், சுதர்சனம் போன்றோர், நான் போட்ட மெட்டையே `ஓகே’ செய்வதுண்டு.

டி.கே.எஸ். சகோதரர்களின் “அவ்வையார்” நாடகத்தில், நான் எழுதிய “பெருமை கொள்வாய் தமிழா” என்ற பாடலை டி.கே.சண்முகம் உணர்ச்சி பொங்கப் பாடுவார். நாகர்கோவிலில் இந்த நாடகம் நடந்தபோது, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வந்திருந்தார். இந்தப்பாடல் பாடப்பட்டபோது, அதை எழுதியது நான்தான் என்று கவிமணியிடம் என்னை அறிமுகப்படுத்தினார்கள். அவர் என் கைகளைப் பற்றி தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். மெய்சிலிர்த்துப்போனேன்.”

இவ்வாறு கு.சா.கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

போராட்டம்

கு.சா.கிருஷ்ணமூர்த்தி, 1943-ல் புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி அமைப்பாளராக இருந்தார். அப்போது, புதுக்கோட்டை தனி சமஸ்தானமாக (மன்னர் ஆட்சியில்) இருந்தது. அங்கு மக்கள் ஆட்சி ஏற்பட வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட போராட்டத்தில் கு.சா.கிருஷ்ணமூர்த்தி முக்கிய பங்கு கொண்டார்.

“சிலம்புச் செல்வர்” ம.பொ.சி.யின் நெருங்கிய சீடர்களில் கு.சா.கிருஷ்ணமூர்த்தி முக்கியமானவர். தமிழரசு கழகத்தை ம.பொ.சி. தொடங்கியது முதல், அதில் செயற்குழு உறுப்பினராக அங்கம் வகித்தார். எல்லைப் போராட்டங்களில் பங்கு கொண்டார்.

சுரதா, கு.மா.பாலசுப்பிரமணியம், ஏவி.எம்.ராஜன், அவிநாசிமணி ஆகியோரின் திரை உலகப் பிரவேசத்துக்கு உறுதுணையாக இருந்தவர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி.

“தமிழ் நாடக வரலாறு”, “அருட்பா இசை அமுதம்”, “என் காணிக்கை”, “அந்தமான் கைதி” முதலான நூல்களை எழுதியுள்ளார்.

1966-ல் தமிழக அரசின் “கலைமாமணி” விருது பெற்ற கு.சா.கிருஷ்ணமூர்த்தி, 1990-ம் ஆண்டு மே 13-ந்தேதி தமது 76-வது வயதில் காலமானார்

Posted in Biosketch, Cinema, Dinathanthi, Dinathanthy, Faces, Films, Krishnamoorthy, Krishnamurthy, Movies, people | 1 Comment »

KB Sundarambal – Path breaking Tamil Actress: Chitra Lakshmanan series on Thamizh Cinema History

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

உள்ளதை சொல்கிறேன் – சித்ரா லட்சுமணன்

கே.பி.சுந்தராம்பாள் — எஸ்.ஜி. கிட்டப்பா காதல்

கே.பி.சுந்தராம்பாளின் முழுப் பெயர் : கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்

பிறந்த தேதி : 26.10.1908

மறைந்த தேதி : 24.09.1980

நடித்த படங்கள் : 12

தமிழ் பேசும் படத்தின் முதல் கதாநாயகி டி.பி. ராஜலட்சுமி. அவரைத் தொடர்ந்து எம். எஸ். விஜயாள், கே.டி. ருக்மணி, எஸ்.டி. சுப்புலட்சுமி, எம்.ஆர். சந்தானலட்சுமி என்று எத்தனையோ நடிகைகள் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோதிலும் இவர்கள் அனைவரையும் விட புகழோடு விளங்கியவராக இருந்தார் நாடக மேடைகளில் மட்டுமே பாடி நடித்துக் கொண்டிருந்த இசையரசி கே.பி. சுந்தராம்பாள்.

ஏறக்குறைய ஒரு திரைப்படக் கதையைப் போன்றதுதான் கே.பி. சுந்தராம்பாள் அவர்களுடைய வாழ்க்கையும். ஆம், அவருடைய வாழ்க்கையில் தாழ்வு, உயர்வு, வறுமை, செம்மை, காதல், பிரிவு, சோகம் என்று எல்லா அம்சங்களுமே இடம் பெற்றிருந்தன.

தமிழில் முதன் முதலாக லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை என்ற புகழினைப் பெற்ற கே.பி. சுந்தராம்பாள் இசையுலக வாழ்க்கை வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ள புகை வண்டியில் பாடி அதன் மூலம் வந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்துகின்ற மோசமான நிலையில்தான் துவங்கியது. ஆனால் அந்த ரயில் பயணங்கள்தான் சுந்தராம்பாள் வாழ்க்கைப் பயணத்தை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி திருப்பிய திருப்புமுனையாகவும் அமைந்தது.

கே.பி.எஸ். பாடியபடி பயணம் செய்த புகை வண்டியில் அதிகாரியாக பணியாற்றிய நடேச அய்யர் அவரது இசைஞானத்தைக் கண்டு வியந்தார். அந்த அதிகாரி ஒரு நடிகர். சிறு சிறு வேடங்களில் நடித்தவர். கலைகளில் ஈடுபாடுடைய கலாரசிகரான அவர்தான் வேலு நாயரின் நாடகக் கம்பெனியில் சுந்தராம்பாள் சேரக் காரணமாக இருந்தவர்.

அந்த காலகட்டங்களில் வேலு நாயரின் நாடகக் கம்பெனியில் சேருவது என்பது சாதாரணமான விஷயமல்ல. நடேச அய்யர் அறிமுகப்படுத்தினாலும் சுந்தராம்பாளுக்கு நாடகக் கம்பெனியில் ஒரு தனி இடத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது அவரது கணீர்க் குரல்தான் என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும். தனித்துவம் பெற்ற கே.பி.எஸ்.ன் குரலைக் கேட்ட வேலு நாயர் மெய்சிலிர்த்தார்.

உடனே “பாலபார்ட்’ பாத்திரத்தில் நடிக்கின்ற வாய்ப்பையும் தந்தார். “நல்ல தங்காள்’ நாடகத்தில் ஏழாவது குழந்தையாக நடித்து தனது பத்தாவது வயதில் நாடக வாழ்க்கையைத் தொடங்கினார் கே.பி.எஸ்.

சங்கரதாஸ் சுவாமிகள் போன்ற மேதைகளின் பாட்டு வரிகள் திருத்தமான உச்சரிப்பு, அற்புதமான சாரீரம், அருமையான பாவம் போன்ற எல்லாவற்றையும் ஒரு சேர பெற்றிருந்த சுந்தராம்பாள் அவர்களின் மூலம் பாட்டாக வெளிப்பட்டபோது தமிழகம் முழுவதும் அதற்கு தலையாட்டத் தொடங்கியது.

சுந்தராம்பாள் அளவிற்கு உச்ச ஸ்தாயியில் பாடக் கூடிய பெண் கலைஞர் யாரும் இல்லை என்பதால் அவரது புகழ் நாளுக்கு நாள் கூடியது. நாடக வாய்ப்புகளும் தொடர்ந்து வரத் தொடங்கியது. தமிழகம் முழுவதும் தன் இசையால் ஈர்த்த கே.பி.எஸ். பாலபார்ட்டில் இருந்து ஸ்திரீ பார்ட்டுக்கு மாறினார். “வள்ளித் திருமணம்’, “பவளக்கொடி’, “சாரங்கதாரா’, “நந்தனார்’ போன்ற நாடகங்களில் தன் தனி முத்திரையைப் பதித்தார் கே.பி.எஸ்.

அப்போதெல்லாம் பேசும் படங்கள் கிடையாது என்பதால் தினமும் நாடகங்கள் நடக்கும். அதிலும் கே.பி. சுந்தராம்பாள் நடிக்கும் நாடகம் என்றால் இன்று ரஜினிகாந்த் திரைப்படங்களுக்கு கூடுவதைப் போல கட்டுக்கடங்காத கூட்டம் கூடும். முருக பக்தையான சுந்தராம்பாள் அவர்களின் பெருமை கடல் கடந்தும் பரவியது. அவரது நாடகங்களை இலங்கையில் நடத்த அழைப்பு வந்தது. அதை ஏற்று 1926 ஆம் ஆண்டு தனது பதினெட்டாவது வயதில் இலங்கைக்கு பயணமானார் கே.பி.எஸ்.

அவரது வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்பத்தை உண்டு பண்ணப் போகிற பயணம் அது என்று அப்போது அவருக்குத் தெரியாது.

கே.பி.எஸ். போன்று உச்ச ஸ்தாயியில் பிசிறின்றி பாடக் கூடிய ஆற்றல் படைத்த அற்புதமான கலைஞராக விளங்கியவர் எஸ்.ஜி. கிட்டப்பா. காங்கிரசில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த கிட்டப்பா கதர் ஆடைகளைத்தான் அணிவார். தீரர் சத்தியமூர்த்தியுடன் கிட்டப்பாவிற்கு நெருங்கிய தொடர்பு உண்டு. சுந்தராம்பாள் ஒரு புறம் தன்து தெய்வீகக் குரலால் நாடக மேடையை கலக்கிக் கொண்டிருந்தார் என்றால் அவருக்கு இணையாக இன்னொரு புறம் மேடைகளை கலக்கிக் கொண்டிருந்தவர் எஸ்.ஜி. கிட்டப்பா.

1906 ஆம் வருடம் ஆகஸ்ட் 25 ஆம் நாள் கங்காதரஅய்யருக்கும், மீனாட்சி அம்மையாருக்கும் திருநெல்வேலி ஜில்லா அம்பாசமுத்திரம் தாலுகா ஆழ்வார்குறிச்சியில் அவதரித்த கிட்டப்பாவின் ஆரம்ப கால வாழ்க்கை வறுமைக் கோட்டிற்கு மிகவும் கீழேதான் தொடங்கியது.

தந்தை கங்காதர அய்யரின் வருமானம் குடும்பத்தை நடத்த போதுமானதாக இல்லாததால் கிட்டப்பாவின் சகோதரர்கள் எஸ்.ஜி. சுப்பையர், எஸ்.ஜி. செல்லப்பா, எஸ்.ஜி. சாமி அய்யர் ஆகிய எல்லோருமே நாடகத் துறையில் ஈடுபட்டனர். சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் குழுவில் பணியாற்றிய இவர்களோடு சேர்ந்து கிட்டப்பாவும் தனது ஐந்தாவது வயதில் நடிக்கத் தொடங்கினார். தனது ஆறாவது வயதில் “நல்லதங்காள்’ நாடகத்தில் ஏழு பிள்ளைகளில் ஒருவராக நடித்தார் கிட்டப்பா.

கிட்டப்பாவின் சங்கீத ஞானமும், அயராத அவரது பயிற்சியும் கிட்டப்பாவிற்கென்று ஒரு தனி ரசிகர்கள் வளையத்தை உருவாக்கியது. ஒவ்வொருநாளும் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்தது. பின்னாளில் அவரது பாட்டைக் கேட்க பைத்தியமாக பலர் அலையத் தொடங்கினார்கள்.

தங்களது வேலைகளை எல்லாம் விட்டு விட்டு அவரது பாடலைக் கேட்பதற்காக நாடகக் கொட்டகைகளில் தவமிருப்போர் எண்ணிக்கை அதிகரித்தது. செம்மங்குடி சீனிவாச அய்யர், மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர், அரியக்குடி ராமானுஜ அய்யர் போன்ற இசை மேதைகள் எல்லாம் “”கிட்டப்பா நாடக மேடையை விட்டு விட்டு கச்சேரி நடத்த சபா மேடைகளுக்கு வந்தால் நம் நிலை என்னவாகும்?” என்று பேசிக் கொள்வார்களாம்.

தன்னைப் போல பாட எவருமில்லை என்பது கிட்டப்பாவிற்கு ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், தனக்கு இணையாக பாடக் கூடிய பெண் நாடகக் கலைஞர் இல்லையே என்ற வருத்தமும் இன்னொரு புறம் அவரை வாட்டியது. அவருடைய சுதியில் சேர்ந்து பாட முடியாதபடி பல பெண் பாடகிகள் திண்டாடினார்கள்.

இந்தச் சூழ்நிலையில் 1924-ஆம் ஆண்டு ஜூன் 23-ம் நாள் திருநெல்வேலி விஸ்வநாத அய்யர் மகள் கிட்டம்மாளுக்கும் கிட்டப்பாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு கிட்டப்பாவும், காசி அய்யரும் ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்க இலங்கைக்குப் பயணமானார்கள். அப்போது கே.பி. சுந்தராம்பாள் இலங்கையில் நாடகங்கள் நடத்தி இலங்கை வாழ் மக்களை தன் பக்கம் முழுமையாக ஈர்த்திருந்தார். தமிழ் நாட்டைப் போலவே இலங்கையிலும் அவரது நாடகங்களுக்கு கூட்டம் அலை மோதியது.

எஸ்.ஜி. கிட்டப்பாவிற்கு இணையாக பாடக் கூடிய பெண் கலைஞர் இல்லாதது போல் கே.பி. சுந்தராம்பாளுக்கு இணையாக பாடக் கூடியவர் இல்லாதது அவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. சுந்தராம்பாளுடன் நடிக்கும் நடிகர்கள் அவரோடு இணைந்தும், ஈடு கொடுத்தும் பாட முடியாததால் நாடகம் பார்க்க வந்த ரசிகர்கள் அவர்களை கேலி பேசத் தொடங்கினர். இதனால் பல நடிகர்கள் கே.பி.எஸ். அவர்களோடு நடிக்கவே அச்சப்படத் தொடங்கினர்.

இந்த நேரத்தில் இலங்கை வந்த கிட்டப்பா “தில்லானா மோகனாம்பாள்’ திரைப் படத்தில் பத்மினி நடனத்தைப் பார்க்க சிவாஜி போவாரே, அது போன்று சுந்தராம்பாள் நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்க கிளம்பினார். அவர்கள் சந்திப்பைப் பற்றி “இசை ஞானம் பேரொளி பத்மஸ்ரீ கே.பி. சுந்தராம்பாள்’ என்ற தனது புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு சுவைபட விவரித்துள்ளார் பாஸ்கரதாசன்.

“”சுந்தராம்பாளின் ஓங்காரமான ரீங்கார நாதத்தைக் கேட்ட கிட்டப்பா கதி கலங்கி, மதி மயங்கி கிறு கிறுத்தும் போனார். “”என்ன சங்கீத ஞானம், என்ன சுகமான சாரீரம், என்ன தெய்வீகமான குரல்” என்று துதிபாட ஆரம்பித்தார். நமக்கு இணையாக பாடக் கூடிய வல்லபி இவர்தான் என்று முடிவு செய்து கொண்டார்.

கிட்டப்பா சுந்தராம்பாளைச் சந்திக்கிறார். ஏற்கனவே கிட்டப்பாவின் மகிமையைக் கேள்விப்பட்டிருந்த சுந்தராம்பாள் அவரை நேரில் பார்த்ததும் காந்தத்தின் வடதுருவமும், தென்துருவமும் சந்திப்பதைப் போல ஈர்க்கப்படுகிறார்.

இருவருமே புகழ் பெற்ற பாடகர்கள். இருவருமே உச்ச ஸ்தாயியில் பாடக் கூடியவர்கள். இருவருமே தங்களுக்கான இசை ஜோடியை தேடிக் கொண்டிருந்தவர்கள். எனவே, இவரும் ஒரு நாடகத்தில் இணைந்து நடிப்பது என்று முடிவு செய்கின்றனர்.
சங்கீத ஜாம்பவான் என்று புகழப்படும் கிட்டப்பாவிற்கு இணையாகப் பாட வேண்டுமே என்ற பயம் சுந்தராம்பாளுக்கும், உச்ச ஸ்தாயியில் பாடும் சுந்தராம்பாளுக்கு ஈடு கொடுத்து பாட வேண்டுமே என்ற அச்சம் கிட்டப்பாவிற்கும் இருந்தது.

இருவரும் சேர்ந்து நடித்த நாடகம் இலங்கையில் அரங்கேறியது. எட்டுக்கட்டை சுதியில் பாடும் கிட்டப்பாவை யாரும் எட்டாத நிலையில் சுந்தராம்பாள் அதே சுதி லயத்தோடு தொட்டுவிட்டார். உச்ச ஸ்தாயியில் பாடலையும், உள்ளத்தையும் ஒரு சேரத் தொட்டுவிட்டார் அவர் என்பது தான் உண்மை.

சுந்தராம்பாளுக்கு இணையாக நடித்த ராஜபார்ட்டுகளை மதிக்காத கலா ரசிகர்கள் சுந்தராம்பாளோடு உச்ச ஸ்தாயியில் ஒன்றிப் போன கிட்டப்பாவின் சங்கீத ரசனையில் மூழ்கித் திளைத்தார்கள்.

ஓங்கிக் குரலெடுத்து இருவரும் பாடினால் ஒரு மைல் தூரத்திற்குக் கேட்கும் என்று பெருமையாக சொல்லிக் கொண்டார்கள். சுந்தராம்பாளும், கிட்டப்பாவும் போட்டி போட்டுக் கொண்டு நடித்தார்கள். ரசிகர்கள் “”இருவரும் நல்ல ஜோடி” என்று அவர்கள் காதுபாட வாழ்த்திப் பேசினார்கள்.

இலங்கைக்குச் சென்ற சில மாதங்களிலேயே இசை மேதைகள் இருவரும் புகழின் உச்சியில் பறந்தார்கள். வானம்பாடியாய் இசை வானில் பாடித் திரிந்தார்கள். ஈடு இணையற்ற ஜோடி என்று நிரூபித்துக் காட்டினார்கள்.

இருவரும் சேர்ந்து நடிப்பதென்றால் நாடகக் கம்பெனிகள் பெரிய தொகையை கொட்டித் தர தயாராக இருந்தனர். அதற்குக் கட்டணமாக ரசிகர்களும் அள்ளித்தர ஆவலாக இருந்தனர். இருவரும் பல இடங்கள் பயணம் செய்து நாடகங்கள் நடித்து ஏராளமாக சம்பாதித்தார்கள். கிட்டப்பா மீது சுந்தராம்பாள் அபரிமிதமான பக்தியும், விசுவாசமும் கொண்டிருந்தார்.

சுந்தராம்பாளின் இசையில் மயங்கிய கிட்டப்பா நாடகத்திற்கு மட்டுமின்றி இல்லறத்திற்கும் சுந்தராம்பாள்தான் சரியான ஜோடி என்ற முடிவில் திட்டவட்டமாக இருந்தார். கலை வாழ்க்கையில் உள்ள உறவும், பரிவும் சுந்தராம்பாளின் வாழ்க்கையிலும் இருந்தது. கிட்டப்பாவையே தனது வாழ்க்கைத் துணையாக ஏற்க சுந்தராம்பாளும் முடிவு செய்தார்.

இந்த முடிவில் சுந்தராம்பாளின் தாய் மாமனான மலைக்கொழுந்துவிற்கு (இவர் தான் கே.பி.எஸ். அவர்களுக்கு நிர்வாகியாக பணியாற்றியவர்) உடன்பாடு இல்லை என்றாலும் சுந்தராம்பாளை எதிர்த்து அவர் ஒன்றும் செய்யவில்லை.

சதிபதிகளின் கலைப் பயணமும், வாழ்க்கைப் பயணமும் ஆரம்பத்தில் இனிதாகவே போய்க் கொண்டிருந்தது.

——————————————————————————————————————————————————————————————

எஸ்.ஜி. கிட்டப்பாவுக்கு
கே.பி.சுந்தராம்பாள் எழுதிய கடிதங்கள்

கிட்டப்பாவும், சுந்தராம்பாளும் ஒருவரை ஒருவர் அளவிட முடியாத அளவுக்கு நேசித்தாலும் மேடையில் மட்டும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். போட்டி போட்டுக் கொண்டு பாடுவார்கள். மேடையில் அவர்கள் போட்டி போட்டு நடிப்பதையும், வசனங்கள் பேசுவதையும் பார்த்த பல ரசிகர்கள் இந்தப் போட்டி அவர்கள் வாழ்க்கையில் எந்த விரிசலையும் ஏற்படுத்திவிடக் கூடாதே என்று அஞ்சினார்கள்.

சுந்தராம்பாள் குணக்குன்று. ஒரு பெண் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர். எந்தவித கெட்ட பழக்கத்திற்கும் ஆளாகாதவர். ஆனால் கிட்டப்பா அப்படிப்பட்டவர் அல்ல. மது போன்ற சில தீய பழக்கங்கள் அவரிடம் குடி கொண்டிருந்தன. இதையெல்லாம் மீறி கிட்டப்பா மீது மாறாத நேசம் கொண்டிருந்தார் கே.பி.எஸ். என்பதுதான் உண்மை.

கிட்டப்பா சுந்தராம்பாளை மணமுடிக்க தன் விருப்பத்தைத் தெரிவித்தபோது கே.பி.எஸ். கேட்டது ஒரே கேள்விதான்.

“”என்னைக் கண்கலங்காமல் கடைசிவரை வைத்துக் கொள்வீர்களா?” என்பதுதான் அக்கேள்வி.

“”கடைசிவரை என்னை கைவிடக் கூடாது” என்று சத்தியம் வாங்கிக் கொண்ட பிறகே கிட்டப்பாவை கணவனாக ஏற்றுக்கொண்டார் கே.பி.எஸ்.

1927-ன் தொடக்கத்தில் மாயவரத்தில் உள்ள கோவிலில் இருவரது திருமணம் நடைபெற்றதாக ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் கே.பி.எஸ்.
தமிழ் நாடாக மேடைகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த ஜோடிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடையாளமாக வாரிசு ஒன்று கே.பி.எஸ். வயிற்றில் வளர ஆரம்பித்தது.

இந்த நேரம் செங்கோட்டை சென்ற கிட்டப்பா, கே.பி.எஸ். அவர்களைப் பார்க்க வரவேயில்லை. கடிதங்கள் மட்டுமே அவரது எண்ணங்களைச் சுமந்து வந்தது. தன் முதல் மனைவியான கிட்டம்மாவுடன் கிட்டப்பா இருந்தாலும் கே.பி.எஸ். அதற்காக பொறாமைப்படவில்லை. ஆனால் யாரோ சிலர் விதைத்த விஷ விதை கிட்டப்பா மனதில் விருட்சமாக வளர்ந்ததால் சுந்தராம்பாளை விட்டு விலகியே இருந்தார்.

நிறைமாத கர்ப்பிணியான கே.பி. சுந்தராம்பாள் தன் கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் அவர் எந்த அளவு கிட்டப்பா மேல் பாசமும் நேசமும் கொண்டிருந்தார் என்பதற்கு சாட்சியாக விளங்குகிறது.

கரூர். நவம்பர் 1927

அன்புள்ள பதி அவர்களுக்கு, அடியாள் அநேக நமஸ்காரம். என்னிடம் நேரில் சொன்னபடி நடப்பதாகத் தெரியவில்லை. நான் செய்த பாக்கியம் அவ்வளவுதான்.

உங்கள் மீது வருத்தப்படுவதில் பிரயோசனமில்லை. தாங்கள் பார்த்துச் செய்வதென்றால் செய்யலாம். “வளைகாப்பு’ இட வேண்டுமென்று தங்களிடமும் சொன்னேன். தங்கள் அண்ணாவிடமும் சொன்னேன். ஒருவரும் கவனிக்கவில்லை.

என்னைப் பற்றி கவனிக்க ஏதாவது கொடுத்து வைத்திருக்கிறேனா? உங்களுடைய சுக துக்கங்களில் பாத்யப்படும் தன்மையில்தான் இருக்கிறேனா!

நான் இங்கும் நீங்கள் அங்கும் இருக்கும் நிலையில் நீங்கள் ஏன் கவனிக்கப் போகிறீர்கள். ஏதோ என் மீது இவ்வளவு அன்பு வைத்து தவறாமல் எழுதியதைப் பற்றி அளவு கடந்த சந்தோஷமடைகிறேன். தவறாமல் கடிதமாவது அடிக்கடி எழுதிக் கொண்டிருக்க வேண்டுமென்று அன்போடு நமஸ்கரித்துக் கொள்கிறேன்.

எது எப்படியிருந்தாலும், தங்கள் உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளவும். தங்கள் உடம்பு இளைத்தால் தங்களைத் திட்டமாட்டேன். கிட்டம்மாளைத்தான் திட்டுவேன் என்று அவளிடம் சொல்லுங்கள்.

அடிக்கடி வெளியில் சுத்த வேண்டாம். தூக்கம் முழிக்க வேண்டாம். காலா காலத்தில் சாப்பிடவும். அனாவசிய விஷயங்களில் புத்தியைச் செலவிட வேண்டாம். நானும் அப்படியே நடக்கிறேன்.

மாதமும் ஆகிவிட்டது. தங்களுக்குத் தெரியாதது அல்ல. அவ்வளவுதான் நான் எழுதலாம். நேரில் வாருங்கள். உங்களை என்ன செய்கிறேன் என்று பாருங்கள்.

இப்படிக்கு,

தங்கள் அன்பையே ஆபரணமாகக் கொண்ட அடியாள்,
சுந்தரம்.

சுந்தராம்பாளை மணமுடிப்பதற்கு முன்னால் கிட்டப்பா அவருக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே அவர் காப்பாற்றவில்லை என்றபோதிலும் கூட கிட்டப்பாவை தன் மனதில் ஏற்றி வைத்திருந்த இடத்திலிருந்து ஒரு அங்குலம் கூட கீழே இறக்கவில்லை சுந்தராம்பாள்.

1928 ஜனவரி மாதம் 28-ஆம் தேதி சுந்தராம்பாளுக்குப் பிறந்த குழந்தை பத்து நாள் மட்டுமே ஜீவித்திருந்தது. குழந்தையின் பிறப்பு, இறப்பு இரண்டிற்குமே கிட்டப்பா வரவில்லை.

சுந்தராம்பாளின் கடிதங்களுக்கு கிட்டப்பா எழுதிய பதில் கடிதங்களிலும் கேலியும் கிண்டலும் நிறைந்திருந்ததாகத் தெரிகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுந்தராம்பாள் தன் மன உணர்ச்சிகளையெல்லாம் கடிதமாக வடித்து கிட்டப்பாவிற்கு அனுப்பினார்.

தேவரீர் அவர்கள் சமூகத்திற்கு எழுதியது.

தங்கள் லெட்டர் கிடைத்துச் சங்கதி அறிந்தேன். தங்களுக்கு எந்த வகையிலும் நான் துரோகம் செய்தவளல்ல, தாங்கள் அறிந்த கிண்டல் வார்த்தைகளை எனக்கு எழுத வேண்டாம். இந்த மாதிரி எழுதி என் மனம் கொதித்தால் தாங்கள் ரொம்ப காலத்திற்கு úக்ஷமமாக இருப்பீர்கள். அம்மாதிரியெல்லாம் எழுதினால் தங்களுக்கு பலன் மீளாத நரகக் குழிதான்.

கிருஷ்ணலீலா பார்த்ததில்லையே என்று பார்க்கப் போனேன். அதைப் பற்றி வித்தியாசம் என்றால் இருக்கட்டும் எத்தனையோ வித்தியாசங்களில் இதுவும் ஒன்று.

மனம் போலிருக்கும் வாழ்வு. என்னைப் பற்றி கவலையே தங்களுக்கு வேண்டாம். நான் இப்படியெல்லாம் எழுதினேன் என்று வருத்தம் வேண்டாம்.

தங்களுக்கு பதில் போட இஷ்டம் இருந்தால் எழுதவும். இல்லையென்றால் வேண்டாம்.

இதுதான் கடைசி லெட்டர். இதுதான் கடைசி. இதுதான் கடைசி. இது உண்மையென்றும், பொய்யென்றும் பின்னால் தெரியும்.

இப்படிக்கு
சுந்தரம்.

“”தங்கள் அன்பையே ஆபரணமாகக் கொண்ட அடியாள் சுந்தரம், தங்கள் அன்பை என்றும் மறவாத காதலி கே.பி. சுந்தராம்பாள்” என்றெல்லாம் எழுதி கடிதத்தை முடித்த சுந்தராம்பாள் மேற்கண்ட கடிதத்தை எந்த அடைமொழியுமின்றி சுந்தரம் என்று முடித்திருப்பதிலிருந்தே அவர் எந்த அளவிற்கு கோபமாக இருந்திருக்கிறார் என்பதை நம்மால் உணர முடிகிறது அல்லவா?

நம்மாலேயே உணர முடியும்போது கிட்டப்பா அதை உணரமாட்டாரா? உணர்ந்தார். அதன் விளைவாக நீண்ட காலத்திற்குப் பின்பு அன்பான கடிதமொன்றை தன் பண்பான மனைவிக்கு எழுதி அனுப்பினார்.

தனியாக இருந்த காலகட்டங்களில் சுந்தராம்பாள் நாடகத்தில் உச்சக் கட்டத்தில் இருந்தபோதிலும் நிம்மதி இல்லாமல் தவித்தார். அதே போன்று கிட்டப்பாவும் நாடகங்களில் புகழோடு இருந்தபோதிலும் சுந்தராம்பாள் இல்லாததால் தவிப்புக்கு ஆளாகியிருந்தார். அவர்களைப் பிரித்த காலமே 1931-ல் மீண்டும் அவர்களை இணைத்தது.

அவர்கள் பெயரிலேயே நாடகக் கம்பெனி அமைத்து இருவரும் நடத்தத் தொடங்கினர். ரசிகர்கள் பெருமகிழ்ச்சியோடு அவர்கள் நாடகத்திற்கு உற்சாக வரவேற்பினைத் தந்தனர். சுந்தராம்பாள் – கிட்டப்பா ஆகிய இருவரது பாடல்களும் இசைத் தட்டாகவும் வெளிவந்து விற்பனையில் சக்கைபோடு போட்டது.

1931-ல் பேசும்பட காலம் வந்த பிறகும் நாடகங்கள் தங்கள் செல்வாக்கை இழக்காது இருந்தன.

“”கே.பி. சுந்தராம்பாள் வேடன், வேலன், விருத்தன் என்று ராஜபார்ட்டாக நடிப்பார். கிட்டப்பா வள்ளியாக ஸ்திரீ பார்ட்டாக நடிப்பார். இருவரும் மேக்அப் போட்டு வெளியில் வருவதற்குள் ரசிகர்களின் ஆர்ப்பாட்டம் அதிகமாக இருக்கும். கிட்டப்பா திரைக்கு முன்னால் வந்து ஒரு ஆலாபனை செய்துவிட்டுப் போனால்தான் ரசிகர்கள் கொஞ்சம் அமைதியடைவார்கள்.

சுந்தராம்பாளும் வந்து பாடமாட்டாரா என்று ஜனங்கள் ஏங்கிக் கிடப்பார்கள். இருவருமே உச்ச ஸ்தாயியில் பாடக் கூடியவர்கள். ஒலிபெருக்கி வசதியில்லாத அந்த காலகட்டத்தில் அவர்கள் குரல் கடைசியில் உள்ளவர்களுக்கும் கேட்கும்” என்று கிட்டப்பா – சுந்தாரம்பாள் நாடகங்கள் பற்றி தன் அனுபவங்களைக் கூறுகிறார் குன்னக்குடி வைத்தியநாதன்.

கிட்டப்பா மதுவுக்கு அடிமையாகி இருந்ததால் நாடகங்களில் நடிக்கும்போது ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கு வருவதற்கு முன் திரையின் ஓரமாக சாராயத்தை சுடுதண்ணீரில் கலந்து சுடச் சுட குடிப்பார். இந்த குடிப்பழக்கம் தனது நாடக முதலாளியான கன்னையா இறந்த பின் அதிகரித்தது. காலையில் எழுந்தவுடன் காப்பி குடிப்பதற்கு பதில் சுடச் சுட சாராயம் சாப்பிட ஆரம்பித்தார் அவர். அதன் விளைவாக அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. வருமானம் குறைந்தது. ஆனால் செலவு கூடியது.

உடல் நலம் சரியாக இல்லாததால் நாடக நிகழ்ச்சிகளை குறைத்துக் கொண்டாலும், நாடகத்தில் நடிக்காமலும், பாடாமலும் இருப்பது பித்து பிடித்திருப்பது போல் உள்ளதாக அவர் உணர்ந்தார்.

இந்த சமயத்தில் மீண்டும் விதி அவர்கள் வாழ்க்கையில் தன் விளையாட்டைத் தொடங்கியது. அவர்கள் இருவருக்குமிடையே இருந்த தீவிரமான அன்பையும் மீறி அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் முளைத்தன. மீண்டும் சுந்தாரம்பாளைப் பிரிந்து சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார் கிட்டப்பா. மீண்டும் தனி மரமானார் சுந்தராம்பாள்.

மதுபானம் போன்ற தீய பழக்கங்களால் கிட்டப்பாவின் உடல் நாளுக்கு நாள் மெலிந்தது. 1933 மார்ச் 29-ஆம் நாள் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. தகவல் அறிந்த சுந்தாராம்பாள் அவரை சென்னைக்கு அழைத்து வந்து டாக்டர் பீமாராவ் அவர்களிடம் காட்டினார். அவரைப் பரிசோதித்த பீமாராவ் குடல் வெந்து புண்ணாகி இருப்பதாகவும், ஈரல் சுருங்கிப் போய்விட்டதாகவும், எவ்வளவு செலவு செய்தாலும் அவர் குணமாவதற்கு உத்திரவாதம் அளிக்க முடியாது என்றும் கூறினார்.

இருப்பினும் செலவுப் பற்றி கவலைப்படாமல் சிகிச்சையைத் துவங்கச் சொன்னார் சுந்தராம்பாள். தீவிர சிகிச்சை தொடங்கியது. கிட்டப்பாவின் அருகிலேயே இருந்து அவரைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டார் சுந்தராம்பாள்.

எந்நேரமும் அவரது நெற்றியில் திருநீறைப்பூசி அவர் செய்த பிரார்த்தனை வீண் போகவில்லை. கிட்டப்பா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று கவனித்துக் கொள்வதற்காக மைலாப்பூரில் பெரிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தார் சுந்தாரம்பாள்.

விதி விரட்டவே பூரண குணமடைவதற்கு முன்பே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் செங்கோட்டைச்குச் சென்றுவிட்டார் கிட்டப்பா.

உடல் பூரண குணமடையாத நிலையில் திருவாரூரில் ஒரு நாடகத்திற்கு ஒப்புக் கொண்ட அவர் அதில் நடித்துக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்தார். அதிலிருந்து படுத்த படுக்கையிலிருக்கும் நிலைக்கு ஆளானார் அவர். கால்கள் வீக்கம் கண்டன. கண்கள் மஞ்சளாயிற்று. நாட்கள் செல்லச் செல்ல அவரது முகம் வெளிறிப் போனது. உடல் துரும்பாக இளைத்தது. மெல்ல பேசும் சக்தியும் குறைந்தது.

1933 டிசம்பர் 2-ஆம் தேதி சனிக்கிழமை காலையில் வயிற்று வலியால் தூடித்த அவரைப் பரிசோதித்த டாக்டர் ஒரு ஊசி போட்டார். கிட்டப்பா நாக்கு வறண்டது. சிறிதளவு தண்ணீரை விழுங்கி விட்டுத் திரும்பிப் படுத்தவர் அதற்குப் பிறகு திரும்பவேயில்லை.

கிட்டப்பாவின் மரணச் செய்தி நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை உண்டு பண்ணியது. சுந்தராம்பாளை யாராலும் தேற்ற முடியவில்லை. உயிருக்குயிராக நேசித்த தன் காதல் கணவனின் மறைவைத் தாங்க முடியாது துடித்தார் அவர்.

கிட்டப்பா இறந்தபோது அவரது வயது 28. தனது 20-வது வயதில் அவரை மணந்த சுந்தராம்பாள் ஆறு வருடங்கள் மட்டுமே அவரோடு வாழ்ந்தார். அதிலும் பல மாதங்கள் இருவரும் தனித்தனியே பிரிந்திருந்தனர்.

சாதாரணமாக பெண்கள் மணமுடிக்கும் வயதான 26 வயதில் தன் கணவரை இழந்த சுந்தராம்பாள் மிகுந்த மன உறுதியோடு பொட்டையும், பூவையும் துறந்தார். வெள்ளைச் சேலை உடுத்தத் தொடங்கினார். இல்லற வாழ்விலிருந்து துறவறத்திற்குள் புகுந்தார்.

கணவன் இறந்த பிறகு பல மாதங்கள் கொடுமுடி வீட்டிற்குள்ளேயே அடைந்து கொண்டிருந்தார்.

——————————————————————————————————————————————————————————————
லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற
முதல் நடிகை சுந்தராம்பாள்

இந்தியாவிலேயே திரைப்படத்தில் நடிக்க ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற முதல் நடிகை சுந்தராம்பாள் அவர்கள்தான். எந்த கால கட்டத்தில் அவர் ஒரு லட்சம் ரூபாயை சம்பளமாகப் பெற்றிருக்கிறார் என்பதை சரியா உணர்ந்தால்தான் கே.பி.எஸ். படைத்திருப்பது எவ்வளவு பெரிய சரித்திரம் என்பதை உணர முடியும்.

கே.பி.எஸ். ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் மதிப்பு 14 ரூபாய். அதன்படி பார்த்தால் ஒரு லட்சம் ரூபாய்க்கு 7143 சவரன் வாங்கலாம். இன்றைய சவரன் விலை தோராயமாக ரூபாய் ஏழாயிரம் என்று வைத்துக்கொண்டு கணக்கிட்டால்கூட கே.பி.எஸ். அன்று பெற்ற தொகை 5 கோடி ரூபாய்க்கு சமம். அதன்படி பார்த்தால் முதலில் மட்டுமல்ல- இன்று வரை அதிக சம்பளம் வாங்கிய ஒரே இந்திய நடிகை கே.பி. சுந்தராம்பாள் மட்டுமே என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

1935-ம் ஆண்டு “பக்த குசேலா’வை முந்திக்கொண்டு “நந்தனார்’ திரைக்கு வந்தது. “நந்தனார்’ வெற்றிப்படமாக அமைந்தபோதிலும் அந்த படத்திற்குப் பின் கே.பி.எஸ். வேறு படங்களில் நடிக்கவில்லை. படங்களில் நடிக்கவில்லையே தவிர காங்கிரஸ் கூட்டங்களில் தேசியப் பாடல்களையும், கோவில் கச்சேரிகளில் தெய்வீகப் பாடல்களையும் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார் அவர். காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியும், செயலாளரான காமராசரும் சுந்தராம்பாளை பல கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

காங்கிரஸ் கூட்டங்களில் கூட்டம் சேர கே.பி.எஸ். அவர்களின் பாட்டுக்கள் பெரிதும் உதவியது என்பதை யாரும் மறுக்க முடியாது. மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜாஜி, “”என்ன இவ்வளவு கூட்டம் கூடியிருக்கிறதே” என்று வியந்தார். “”இது சுந்தராம்பாள் பாட்டுக்கு கூடிய கூட்டம்” என்று சத்தியமூர்த்தி கூறியதும் ராஜாஜி ஆச்சர்யம் அடைந்தார்.

மகாத்மா 1936-ல் தமிழிகத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது சுந்தராம்பாள் பிறந்த ஊரான கொடுமுடி அருகே கார் பழுதடைந்தது. அப்போது காந்தி அடிகளை கே.பி.எஸ். இல்லத்திற்கு அழைத்துச் சென்றார் சத்தியமூர்த்தி. வீட்டிற்கு வந்த காந்தியடிகளுக்கு வெள்ளி டம்ளரில் பால் தரப்பட்டது. “”பாலோடு இந்த டம்ளரும் எனக்குத்தானே” என்று மகாத்மா கேட்க, முகமலர்ச்சியோடு அதைத் தந்தார் கே.பி.எஸ். அதை ஏலமாக விட்டு நிதியாக காங்கிரஸ் இயக்கத்திற்கு அளித்தார் மகாத்மா.

1935-ஆம் ஆண்டு வெளியான “நந்தனார்’ திரைப் படத்திற்குப் பிறகு 1940-ல் வெளியான “மணிமேகலை’ திரைப்படத்தில் நடித்திருந்தார் கே.பி.எஸ். அதற்குப் பின் எந்தப் படத்திலும் நடிக்க அவர் ஒப்புக் கொள்ளவில்லை. கச்சேரி, தேசியப் பாடல்கள் என்று அவரது வாழ்க்கைப் பயணம் நடைபெற்றது.

1940-க்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த கே.பி.எஸ். மீண்டும் 1948-ல் நடிக்க ஒப்புக் கொண்ட படம் “ஒüவையார்’. அந்த நாட்களில் “ஒüவயார்’ நாடகத்தை டி.கே.எஸ். சகோதரர்கள் நடத்தி வந்தனர். அதில் டி.கே. சண்முகம் ஒüவையாராக நடித்தார். மிகச் சிறப்பாக மேடைகளில் ஒüவையாராக நடித்த அவரைத்தான் “ஒüவையார்’ படத்தில் நடிக்க முதலில் அணுகினார் எஸ்.எஸ். வாசன்.

ஆனால் டி.கே. சண்முகம் அவர்கள் “”நான் பெண் வேடம் போட்டது நாடக மேடைக்கு மட்டுமே சரி. சினிமாவிற்கு சரிப்பட்டு வராது. ஒரு பெண் இந்தப் பாத்திரத்தில் நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும்” என்றார். “”அப்படியென்றால் யாரை நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று நீங்களே கூறுங்கள்” என்று எஸ்.எஸ். வாசன் கேட்க, டி.கே. சண்முகம் சொன்ன பெயர்தான் கே.பி. சுந்தராம்பாள்.

ஒüவையாராக நடிப்பதற்கு ஏற்ற தமிழ் உச்சரிப்பும், கணீர்க் குரலும் உள்ள ஒரே நபர் கே.பி.எஸ். அவர்கள்தான். அவர் ஒüவையாராகத் தோன்றினாலே போதும்~ நடிக்கவே தேவையில்லை” என்று டி.கே.எஸ். சொல்ல அதை ஏற்றுக் கொண்டார் எஸ்.எஸ். வாசன்.

கே.பி.எஸ். அவர்களிடம் யார் மூலம் தொடர்பு கொள்வது என்று சிந்தித்த வாசன் அவர்களுக்கு “ஹிந்து’ சீனிவாசன் நினைவு வந்தது. சீனிவாசன் வாசனுக்கு நல்ல நண்பர். கே.பி.எஸ். அவர்களுக்கோ அவர் வழிகாட்டியாக இருந்தார். சீனிவாசன் அவர்கள் துணையுடன் வந்த வாசன் கேட்க தட்டாமல் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார்.

கே.பி.எஸ். படத்தில் நடிக்க வருடம் ஒருலட்ச ரூபாய் சம்பளம், அது தவிர மாதம் ஒரு தொகை தர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த லட்ச ரூபாய் சம்பளத்தின் மதிப்பு எவ்வளவு என்பதை வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இன்னொரு விவரத்தையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த நாளில் ஜெமினி ஸ்டூடியோவை வாங்க வாசன் கொடுத்த பணம் 86,496 ரூபாய்தான்.

1947-ல் தொடங்கப்பட்ட “ஒüவையார்’ படம் 15.8.1953 அன்று சுதந்திரதின வெளியீடாக வெளிவந்தது. “”படம் முடிவடைந்ததும் எஸ்.எஸ். வாசன் அவர்கள் அப்போது ஜெமினியில் பொது மேலாளராக இருந்த நம்பியாரிடம் காசோலையைக் கொடுத்தனுப்பி ஆறு வருடத்துக்குரிய தொகையை அம்மையாரையே எழுதிக் கொடுக்கும்படி சொல்லி அனுப்பியிருந்தார்.

ஆனால் சுந்தராம்பாள் அந்த காசோலையில் பெருந்தன்மையுடன் நான்கு லட்சும் ரூபாயை மட்டும் பூர்த்தி செய்து கொள்வதாக அவரிடம் சொன்னார்” என்று “”இசைஞானப் பேரொளி பத்மஸ்ரீ சுந்தராம்பாள்” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் பாஸ்கரதாசன். ஆனால் “”இது ராஜபாட்டை அல்ல” என்ற தனது புத்தகத்தில் நட்சத்திரத்தின் பெயரை மட்டும் குறிப்பிடாமல் இந்த சம்பவத்தைப் பற்றி மட்டும் சிவகுமார் எழுதியுள்ள தகவல் பாஸ்கரதாசன் கூற்றுக்கு மாறுபட்டதாக இருக்கிறது.

ஜெமினி உருவாக்கிய ஒரு படம் முடிய ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. படத்தின் கதாநாயகிக்கு (ஆண்டுக்கு) ஒரு லட்சம் சம்பளம் பேசி ஓராண்டுக்குள் படத்தை முடிப்பதாக ஒப்பந்தம். திட்டமிட்ட காலவரைக்குள் படம் முடியவில்லை. காலம் கடந்தாலும் மாபெரும் படைப்பாக அது உருவாகியது.

தனது அந்தரங்கச் செயலாளர் பி.பி. நம்பியாரை அழைத்தார் வாசன். “”ஹீரோயினுக்கு ஓராண்டில் படம் முடிப்பதாகப் பேசி ஒரு லட்சம் சம்பளம் முடிவு செய்தோம். இப்போ ஏழு வருஷம் ஆயிடுச்சு. அதனால நாம கொஞ்சம் கூட்டி நாலு லட்சம் தருவோம்” என்றார்.

பேராசை பிடித்த ஹீரோயின் “”ஐயறு சொன்ன சொல் தவறமாட்டாரு. ஏழு வருஷம் வேலை செஞ்சிட்டு நாலு லட்சம் சந்தா எப்படி?” என்று கேள்வி கேட்டார்.
உடனே நடிகையின் விருப்பப்படி ஏழு லட்சம் தர சம்மதித்தார். ஆனால் அவர் பேராசையைக் கண்டிக்கும் வகையில் ஓராண்டு வருமானம் 7 லட்சம் என்பது போல எழுதி வாங்கிக் கொண்டார்.

வருமானவரி இலாக்காவுக்கு விபரம் தெரிந்தால் ஏழு லட்சத்தில் சுமார் 4.5 லட்சம் ரூபாய் வரியாகப் போய்விடும்” என்பதைப் பின்னர் அறிந்த நடிகை தன் தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்க, உடனே ஏழாண்டுக்கும் வருமானத்தைப் பிரித்து எழுதிக் கொடுத்தார்.”

மேற்கண்டவாறு தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் சிவகுமார்.

“ஒüவையார்’ படத்தைப் பார்த்த டி.கே. சண்முகம் “”நீங்கள் நடிக்கவில்லை. ஒüவையாராகவே வாழ்ந்திருக்கிறீர்கள்” என்று கே.பி.எஸ்.ûஸ புகழ்ந்தார்.

“ஒüவையார்’ திரைப்படத்திற்குப் பிறகு கே.பி.எஸ். நடித்த திரைப்படம் கலைஞரின் கை வண்ணத்தில் உருவான “பூம்புகார்’.

“”பூம்புகார்” திரைப்படத்தை எடுப்பது என்று முடிவெடுத்தவுடன் கவுந்தியடிகளாக கே.பி.எஸ், அவர்கள் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று முடிவெடுத்த கலைஞர் எஸ்.எஸ். ராஜேந்திரனையும் அழைத்துக்கொண்டு கே.பி.எஸ். அவர்களின் சம்மதம் பெற கொடுமுடி புறப்பட்டார். அவர்கள் கோரிக்கையை கேட்டவுடன் முதலில் தனது மறுப்பைத் தெரிவிக்கிறார் கே.பி.எஸ்.

“”கவுந்தியடிகளாக நீங்கள் நடித்தால்தான் சிறப்பாக இருக்கும். பொருத்தமாகவும் இருக்கும்” என்று இருவரும் வற்புறுத்த “”நான் கடவுள் மீது தீவிர பக்தி கொண்டவள், நீங்களோ திராவிடர் கழக கொள்கையுடையவர்கள். எப்படிப் பொருத்தமாக இருக்கும்?” என்று தேங்காய் உடைப்பது போல் பட்டென்று உடைக்கிறார் கே.பி.எஸ்.

கலைஞரும் விடவில்லை. “”நாங்கள் எடுப்பது கடவுள் படமோ, கட்சிப் படமோ அல்ல. கற்புக்கரசி கண்ணகி பற்றிய படம். நீங்கள் நடிக்கப் போவது சமணத்துறவி வேடம்” என்கிறார்.

“”சரி, மகனே. பழனிக்குச் சென்று முருகனின் உத்தரவு பெற்ற பிறகுதான் நடிப்பது பற்றி நான் முடிவு சொல்ல முடியும்” என்று இறுதியாக கே.பி.எஸ். சொல்ல, “”முருகனிடம் கேட்கும்போது கருணாநிதி கேட்டதாகச் சொல்லுங்கள். என் கோரிக்கை என்பதால் முருகன் மறுக்கமாட்டார். உடனே ஒப்புதல் அளித்து விடுவார்” என்று விளையாட்டாகச் சொல்கிறார் கலைஞர்.

அவர் விளையாட்டாகச் சொன்னது பலிக்கிறது. சில நாட்களில் கொடுமுடியில் இருந்து கலைஞருக்குத் தகவல் வருகிறது. “”முருகன் உத்தரவு கொடுத்து விட்டான்” என்று.

தன்னுடைய லட்சியத்தில் யாருக்கும் விட்டுக் கொடுக்காத போக்கை கே.பி.எஸ். கொண்டிருந்தார்.

“”கடவுளை நிந்திக்கும் பாடலைப் பாடமாட்டேன்” என்று “பூம்புகார்’ படப்பிடிப்பில் நிர்த்தாட்சண்யமாக அவரால் சொல்ல முடிந்திருக்கிறது. மாற்றப்பட்டது பாடல் வரிகள்” எனது தனது “வியப்பளிக்கும் ஆளுமைகள்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் வெங்கட் சாமினாதன்.

“பூம்புகார்’ திரைப் படத்திற்குப் பிறகு கே.பி.எஸ். நடித்த படங்களில் குறிப்பிடத்தக்க படங்கள் என்று “திருவிளையாடல்’, “துணைவன்’ ஆகிய படங்களைச் சொல்லலாம். இவைகள் தவிர “மகாகவி காளிதாஸ்’, “கந்தன் கருணை’, “உயிர் மேல் ஆசை’, “சக்திலீலை’, “காரைக்கால் அம்மையார்’, “திருமலை தெய்வம்’ (கடைசி படம்) ஆகிய படங்களிலும் நடித்தார் அவர்.

கே.பி.எஸ். நடித்து வெளிவராத ஒரே படம் சிவாஜி, தேவிகா ஜோடியாக நடித்த “ஞாயிறும் திங்களும்’. படம் ஏழாயிரம் அடி வளர்ந்த நிலையில் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான சடகோபன் இறந்துவிட படமும் நின்று போனது.

அன்று சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்.கே. தியாகராஜ பாகவதரை “ஏண்டாப்பா’ என்றும், கலைஞர் கருணாநிதியை “”மகனே” என்றும் காங்கிரஸ் தலைவர் சத்யமூர்த்தியை “அண்ணா’ என்றும், அழைக்கும் உரிமை பெற்றிருந்த கே.பி. சுந்தராம்பாள் உடல்நிலை 1980-ஆண்டு நலிவடையத் தொடங்கியது.

24.9.80 அன்று இரவு 9.30 மணிக்கு அறிஞர் அண்ணாவால் “”கொடுமுடி கோகிலம்” என்று அழைக்கப்பட்ட கே.பி.எஸ். முருகனடி சேர்ந்தார். உடன் தகவல் அன்றைய முதல்வரான எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கை நடத்த உத்தரவிடும் எம்.ஜி.ஆர். அப்போது நடிகர் சங்கப் பொறுப்பிலிருந்த மேஜர் சுந்தரராஜனை அழைத்து செலவுகளுக்கு தன் சொந்தப் பணத்தைத் தருகிறார்.

கலைஞர் காலையில் கே.பி.எஸ். அவர்கள் வீட்டுக்கு வந்து மலர் அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்ல, நடிகர் சங்கத்தில் 25.9.80 அன்று காலை முதல் மாலை வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கே.பி.எஸ். அவர்களின் உடல் வைக்கப்பட்டது. அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், சிவகுமார், பி.எஸ். வீரப்பா, எஸ்.வி. சஹஸ்ரநாமம், இயக்குநர்கள் முக்தா சீனிவாசன், பா. நீலகண்டன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

கலைஞர் வானொலியில் இரங்கற்பா பாடினார்

கலை உலகில் தமிழ் இன்பம் கொட்டக் கொட்ட
கொடிகட்டிப் பறந்த கோகிலம் மறைந்ததோ

Posted in Actress, Cinema, Drama, Films, History, Hits, KBS, Kittappa, Lakshmanan, Movies, music, Nandhanar, Singer, Stage, Sundarambaal, Sundarambal, Sundharambaal, Sundharambal, Suntharambaal, Suntharambal, Superhits, Theater, Theatre | Leave a Comment »

How to be successful in the Tamil Film Industry – Tips & Backgrounders: Cinema Express

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

நேர்மை வேண்டும்

புரொடக்ஷன் மேனேஜர் கம் புரொட்யூஸர் பாபுராஜா

“”சினிமா…. ஒரு நல்ல தொழில். மற்ற எல்லா தொழில்களிலும் லாபத்தை மட்டும்தான் எதிர்பார்க்க முடியும். ஆனால் சினிமாவில் மட்டுமே லாபத்துடன் சேர்த்து நல்ல பெயரையும் சம்பாதிக்க முடியும்” என்றார் தயாரிப்பாளரான ஆர்.பி.செüத்ரி.

ஒரு படத்தின் தயாரிப்பாளர் ஆக வேண்டுமெனில் பெருமளவு முதலீடு போட வேண்டியிருக்கும். பணமிருந்தால் புரொட்யூஸராகி விடலாம். ஆனால் அந்த பணத்தைக் கொண்டு வராதவர்களும் கூட தயாரிப்பாளர் ஆகிவிடும் அதிசயம் சினிமாவில் மட்டுமே சாத்தியப்படும்! தொடர்ந்து நான்கு படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக (புரொடக்ஷன் மேனேஜர்) வேலை பார்த்தால் போதும். திறமையும், நேரமும் கூடும்பட்சத்தில் அவர்கள் தயாரிப்பாளர் ஆவது சகஜமானதுதான்.

ஆர்.பி. செüத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸில் பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக புரொடக்ஷன் மேனேஜராகவும், ஜெ. ஜெ. குட் ஃபிலிம்ஸின் அதிபராகவும் இருந்து வருபவர் பாபுராஜா.

புரொடக்ஷன் மேனேஜரின் அசிஸ்டெண்ட் ஆக நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி இங்கே நமக்கு வழிகாட்டுகிறார் அவர்.

இந்த இதழில் பாபுராஜா சொல்வதைக் கேட்போம்.

“”நான் உதவி இயக்குனரா வரணும்னு நினைச்சேன். ஆனா வந்த இடத்தில் அப்படி ஆக முடியல. மலேசியா வாசுதேவன் சார் எடுத்த முதல் படமான “நீ சிரித்தால் தீபாவளி’யில் ஆஃபீஸ் பையனா வேலை பார்த்தேன். 1991-ம் வருஷம்னு நினைக்கிறேன். அப்புறம் ஒரு சில படங்கள் வொர்க் பண்ணிக்கிட்டிருந்தேன்.

டைரக்டர் ராஜகுமாரன் சார் மூலமா விக்ரமன் சார் நட்பு கிடைச்சது. அவர் என்னை செüத்ரிசார்கிட்டே அறிமுகப்படுத்தி, “பூவே உனக்காக’ படத்தில புரொடக்ஷன் மேனேஜரா வொர்க் பண்ண வச்சார். என்னோட வொர்க்கைப் பார்த்த செüத்ரி சார், விக்ரமன்கிட்டே, “இவரு இங்கேயே இருக்கட்டும்’னு கேட்டுக்கிட்டார். அதிலிருந்து இருபத்தி அஞ்சு படங்களுக்கு மேல சூப்பர் குட்ல புரொடக்ஷன் மேனேஜரா வொர்க் பண்ணிட்டிருக்கேன்.

“விண்ணுக்கும் மண்ணுக்கும்’ ஷூட்டிங் நடந்துகிட்டிருந்தபோதுதான் சரத்குமார் சாரும், செüத்ரி சாரும் நீங்க புரொட்யூஸர் ஆகிடுங்க’ன்னு சொன்னாங்க. “அரசு’ படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளரா அறிமுகமானேன். அப்புறம் “சத்ரபதி’ தயாரிச்சேன். இப்போ “நினைத்து நினைத்து பார்த்தேன்’னு ஒரு படம் பண்றேன்.

தயாரிப்பு நிர்வாகின்னா ஒரு படத்தின் தயாரிப்பாளருக்கும், டைரக்டருக்கும் பாலமா இருக்கிறவர். சினிமாவைப் பொறுத்தவரை எல்லாத்துக்கும் திறமை முக்கியம். இந்த வேலைக்கு மிகமிக முக்கியம் நேர்மை. அது இருந்தால்தான் லாங் லைஃப்பா நீடிக்க முடியும். சரியான உழைப்பும் அவசியம்.

உங்க மேல நம்பிக்கை இருந்தால்தான் நீங்க நிரந்தரமா ஒரு கம்பெனியில வொர்க் பண்ண முடியும். நம்பிக்கை இல்லைன்னா நீங்க யார்கிட்டேயும் வொர்க் பண்ண முடியாது. புரொடக்ஷன் மேனேஜர்னா நடுநிலைமை வகிப்பது நல்லது.

அதாவது நீங்க புரொட்யூசருக்கும் சப்போர்ட் பண்ணக்கூடாது. டைரக்டர், டெக்னீஷியன், ஆர்ட்டிஸ்ட்கள்னு யாருக்கும் சப்போர்ட்டா இருக்கக்கூடாது. ஒரு நடிகருக்கு இவ்வளவுதான் சம்பளம்னா அதை கரெக்ட்டா வாங்கிக் கொடுக்கணும். யாருக்காகவும் ஒருதலைபட்சமா செயல்பட்டால் பேர் கெட்டுப் போயிடும். நடிகர்- நடிகை, டெக்னீஷியன்கள் எல்லார்க்கும் சம்பளம் ஃபிக்ஸ் பண்றதும் நாங்கதான்.

எல்லா விஷயங்களையும் தயாரிப்பாளருக்கு சொல்வோம். ஒரு சில தயாரிப்பாளர்தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து பார்ப்பாங்க. செüத்ரி சாரெல்லாம் ஒரு படத்துக்கு அதிகபட்சமே நாலஞ்சு தடவைதான் ஸ்பாட்டுக்கு வந்து பார்ப்பார். úஸô, நாங்க ஒரு தயாரிப்பாளர் மாதிரிதான் அங்கே வொர்க் பண்ணிட்டிருப்போம்.

நாங்க சரியா வொர்க் பண்ணலைன்னா அன்னிக்கு ஷூட்டிங்கே நடக்காதுன்னா பார்த்துக்குங்களேன். எங்களுக்கு அடுத்தபடியா அதிக நேரம் வொர்க் பண்றது டிரைவர்கள்தான்.

ஒரு படத்துக்கு, புரொடக்ஷன் மேனேஜர் மினிமம் மூணுபேரையாவது அசிஸ்டெண்ட்டா வச்சிருப்பார். எல்லார்க்கும் ஒவ்வொரு வேலைகள் இருக்கும். ஒருத்தர் கார் புரோக்ராம் பண்ணுவார். அதாவது ஆர்ட்டிஸ்ட்களுக்கு வண்டி அனுப்பி ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கொண்டு வரவைக்கிறது. அப்புறம் ஷூட்டிங் முடிஞ்சதும் அவங்களை ரூம்ல கொண்டு போய் ட்ராப் பண்ற வொர்க்கை கவனிப்பார்.

இன்னொருத்தர், லொக்கேஷனை பார்ப்பார். அதாவது மறுநாள் ஷூட்டிங்குக்கு… ஹீரோயின் கோவில்ல சாமி கும்பிடுற சீன் இருக்குதுன்னு டைரக்டர் எங்ககிட்டே சொல்லியிருப்பார். நாங்க, அதற்குத் தகுந்த மாதிரி கோவில் தேடி அதை டைரக்டர்கிட்ட காட்டி முதல்ல ஓ.கே. வாங்குவோம். அப்புறம் அது செட் ஆச்சுதுன்னா அங்கே பெர்மிஷன் சரியா ஏற்பாடு பண்ணி வச்சிருப்போம்.

சில நேரங்கள்ல என்னால வொர்க்கைக் கவனிக்க முடியலைன்னா ஆர்ட்டிஸ்ட்களுக்கு புரோக்ராம் சொல்றதிலிருந்து என்னோட வொர்க்கை எல்லாம் மூணாவது ஆள் கவனிச்சிக்குவார். பெரிய பட்ஜெட் படம்னாலும் மூணே மூணு அசிஸ்ட்டெண்ட் போதும்.

டைரக்டர்களுடைய தேவைகள் எல்லாத்தையுமே முழுமையா, அவர் கேட்ட நேரத்தில் அதாவது சரியான நேரங்களில் நடிகர்- நடிகைகளின் தேதிகள், டெக்னீஷியன்களின் தேதிகள், லொக்கேஷன் பெர்மிஷன் என எல்லாவற்றையும் அமைத்துக் கொடுப்பதுதான் எங்களின் வேலை.

ஆனால் டைரக்டர் சொல்வதை மட்டுமே கேட்டு, அதன்படி நடப்பது மட்டுமே வேலையின்னு நினைக்கக் கூடாது. படத்தோட முழுக்கதையையும் நாங்க தெரிஞ்சிருந்தால்தான் டைரக்டர் திருப்திபடக்கூடிய அளவிற்கு எங்களால் வொர்க் பண்ண முடியும்.

உதாரணமா, டைரக்டர் எங்ககிட்டே ஒரு லொக்கேஷன் கேட்கிறார்னா, நாங்க அவர் நினைக்கிற மாதிரியான ஏதாவது ஒரு லொக்கேஷனைத்தான் காண்பிக்க முடியும். ஆனா படத்தோட கதை எங்களுக்கும் தெரியும்போது, சரியான லொக்கேஷனை டக்குன்னு காண்பிச்சிடலாம். இப்ப உள்ள டைரக்டர்கள் யாரும் பாகுபாடு பார்க்கறதில்ல. அதனால எல்லாருமே அவங்களோட படத்தோட முழுக் கதையையும் எங்ககிட்ட சொல்லிடுறாங்க. அப்பத்தானே ஒரு கேரக்டருக்கு இவரை மாதிரி ஒரு ஆள் வேணும்னு டைரக்டர் கேட்கிறப்ப கொண்டு வர முடியும்?

புரொடக்ஷன் மேனேஜர் வேலைங்கறது ஒரு சின்ன வேலை கிடையாது. தயாரிப்பாளர் பணம் போடுறதோட சரி! சிலர் ஷூட்டிங் நடக்கற இடத்துக்கே வரமாட்டாங்க.
காலையில ஏழு மணிக்கு ஷூட்டிங் நடத்தணும்னா நாங்க அதிகாலை மூணு மணிக்கு எழுந்திரிச்சால்தான் அந்த ஷூட்டிங்கை நடத்த முடியும்.

புரொடக்ஷன் எக்ஸிகியூடிவ், புரொடக்ஷன் அசிஸ்டெண்ட்ஸ் என நாங்க எல்லாம் மூணு மணிக்கே எழுந்திரிச்சு, எல்லார்க்கும் வண்டிகள் அனுப்பிச்சிடுவோம். நடிகர்- நடிகைகள் எல்லாரையும் ஸ்பாட்டுல அசம்பிள் பண்ண வேண்டியிருக்கும். அப்படி கரெக்ட்டா ஷூட்டிங் ஏழு மணிக்கு தொடங்கிடுச்சின்னா, பல பிரச்சினைகளும் தொடங்க ஆரம்பிக்கும். சில ஆர்ட்டிஸ்ட்டுகள் மதியம் பனிரெண்டு மணிக்கு வரச் சொல்லியிருப்பாங்க.

அவங்களுக்கு தகவல் சொல்லி ரெடி பண்ணனும். அப்புறம் மறுநாள் ஷூட்டிங்கிற்கு தேவையானதையும் ரெடி பண்ணனும். கிட்டத்தட்ட நைட் பதினோரு மணி வரைக்கும் எங்க வொர்க் போயிக்கிட்டு இருக்கும்.

காலையில மூணு மணிக்கு எழுந்திரிச்சதிலிருந்து நைட்டுல பதினோரு மணிக்கு படுக்கப் போறவரைக்கும் நடைமுறை சிக்கல்களாகத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். நிம்மதியான சாப்பாடு சாப்பிட முடியாது. நிம்மதியா தூங்கிட முடியாது. டென்ஷன் இருந்துட்டே இருக்கும்.

டைரக்டர்தான் கேப்டன் ஆஃப் த ஷிப்னு சொல்லுவாங்க. úஸô, படம் ஜெயிக்கணும்ங்கற டென்ஷன்ல டைரக்டர் இருப்பார். ஒரு டைரக்டருக்கு அடுத்தபடியா அத்தனை டென்ஷன்களும் எங்களுக்குத்தான் இருக்கும். சரியான டயத்துல சரியா எடுக்கணுமேங்கற டென்ஷன் அவருக்கு… ஒரு ஆர்ட்டிஸ்ட் வர்றதுக்கு பத்து நிமிஷம் லேட் ஆனாக்கூட டைரக்டருக்கு நாங்க பதில் சொல்லி ஆகணும்.

காலையில உள்ள ஷூட்டிங்கிற்கு வர வேண்டிய நடிகருக்கு நாங்க கார் அனுப்பிச்சிருப்போம். ஆனா அது போய் எங்கேயாவது பிரேக் டவுன் ஆகி நிற்கும். அந்த நடிகர் வரலைன்னு டைரக்டர் எங்க மேல டென்ஷனாயிடுவார். அதுக்கு பதில் சொல்லணும்.

ஒரு லொக்கேஷனை ஃபிக்ஸ் பண்ணி வச்சிருப்போம். அங்கே ஏதோ ஒரு குழப்பத்துல வேற யாருக்காவது அன்னிக்கு அந்த லொக்கேஷனை கொடுத்து வச்சிருப்பாங்க. அதை க்ளீயர் பண்ணி வாங்க வேண்டியிருக்கும். úஸô, எல்லா வகையிலும் எங்களுக்கு டென்ஷன் இருக்கும்.

யூனிட்ல உள்ள யாராவது ஒருத்தர் வர லேட்டானாக்கூட சிரமம்தான். ஒரு படத்துக்கு நூறு பேர் வொர்க் பண்றாங்கன்னா அத்தனை பேரும் ஸ்பாட்டுல இருந்தால்தான் வொர்க் நடக்கும். டைரக்ஷன், எடிட்டிங், கேமரான்னு எல்லாத்தையும் நீங்க இன்ஸ்ட்டியூட்ல படிச்சிட்டு, இல்ல புத்தகங்களை படிச்சு தெரிஞ்சுகிட்டோ வந்திடலாம்.

ஆனா இதுக்கு அப்படி கிடையாது. அனுபவம்தான் அவசியம். இந்த தொழிலுக்கு மெமரி பவர் ரொம்ப முக்கியம். ரொம்பப் பேச வேண்டியிருக்கும். உதாரணமா, நமக்கு தேவைப்படுற லொக்கேஷனுக்கு ரொம்ப அமெüண்ட் கேட்பாங்க. பேரம் பேசி கம்மியான அமெüண்ட்ல அதை முடிக்கணும். செலவை சுருக்கணும்.

டைரக்டர் தன்னோட ஸ்கிரிப்ட் ரெடியானதும், அதை எத்தனை நாள்ல முடிச்சிடலாம்னு ப்ளான் பண்ணிட்டார்ன்னா… அந்த ஸ்கிரிப்ட்டுக்கு எவ்வளவு செலவு பண்ணவேண்டியிருக்கும்னு நாங்க கரெக்டா சொல்லிடுவோம். முன்னாடியெல்லாம் பட்ஜெட் போட்டு, படங்கள் பண்ணினாங்க. ஆனா இப்ப பட்ஜெட்ங்கறது யாரு கையிலேயும் கிடையாது. ஆனா டைரக்டர் நினைச்சா சாத்தியம்.

டைரக்டர் நினைச்சால்தான் பட்ஜெட்டை ஏத்தவோ, இறக்கவோ முடியும். புரொடக்ஷன் மேனேஜர் ஓரளவுதான் செலவுகளை மிச்சப்படுத்த முடியும். பட்ஜெட் அதிகமாகுறதும், கம்மியாகுறதும் டைரக்டர் கையிலதான் இருக்கு. இப்ப யாரும் பட்ஜெட் பத்தி பேசுறதில்ல. டைரக்டர்கிட்டே கதையை கேட்கிறப்பவே, இதை நம்பளால பண்ண முடியுமான்னு புரொட்யூசர்கள் யோசிக்க ஆரம்பிச்சிடுவாங்க. டைரக்டர் சொன்ன கதைக்கு தகுந்த செலவுகளை பண்ணினால் மட்டுமே குவாலிட்டியை எதிர்பார்க்க முடியும்.

அதனால இப்ப செலவு பண்ணிதான் ஆகவேண்டிய கட்டாயம் இருக்கு. நியாயமா ஒரு படத்தோட கதைக்கு என்னென்ன தேவையோ அதற்கு செலவு பண்ணித்தான் ஆகணும். ஆனால் எங்கே பட்ஜெட்டைக் குறைக்க முடியும்னா…. நெகட்டிவ், அப்புறம் ஷூட்டிங் டேட்ஸ் இதுலதான் செலவை கம்மி பண்ண முடியும்.

அதாவது ஒரு படத்துக்கு பதிமூணாயிரம் அடி ஃபிலிம் போதும். ஆனா சிலர் லட்சக்கணக்கான அடி ஃபிலிமை வீணடிப்பாங்க. ஐம்பது சீன் இருக்கிற ஒரு ஸ்கிரிப்ட், கதையைப் பொறுத்து எழுபது நாளைக்குள்ள மொத்த ஷூட்டிங்கை முடிச்சிடலாம். ஆனா அதுக்கு மேல நாட்கள் போறப்பத்தான் பட்ஜெட்டும் மீறிப்போகுது.

ஒரு ஸ்கிரிப்ட் பக்காவா இருந்து, தேவையில்லாத எதையும் (பாட்டு, சீன்கள்) எடுக்காமல் இருந்தால் படத்தோட பட்ஜெட் பக்காவா குறையும். இந்த கேரக்டருக்கு குறிப்பிட்ட நடிகர்தான் வேணும்னு டைரக்டர் நினைச்சார்னா அந்த நடிகருக்கான சம்பளத்தை கொடுத்துத்தான் ஆகணும். எல்லாமே டைரக்டர் கையில தான் இருக்கு.

ஒரு நடிகருக்கு 5 லட்ச ரூபாய் சம்பளம்னு வச்சுக்குங்க. அதுக்குப் பதில் அவரை போடாமல் புதுமுகம் யாரையாவது நடிக்க வச்சுகூட அந்த அஞ்சு லட்ச ரூபாயை மிச்சப்படுத்துறது டைரக்டர் கையிலதான் இருக்கு. தொடர்ந்து படங்கள் எடுத்து வரும் கம்பெனிகள்ல புரொடக்ஷன் மேனேஜர் இருப்பாங்க.

ஆனா புதுசா படம் பண்ண வர்றவங்ககிட்டே படத்தோட டைரக்டர்தான் புரொடக்ஷன் மேனேஜரை சொல்லுவாங்க. காரணம் டைரக்டர்தான் அந்த புரொட்யூஸரை இண்டஸ்ட்ரிக்குக் கூட்டிட்டு வந்திருப்பார். அதனால யார் நல்லா வொர்க் பண்ணு வாங்கறது டைரக்டருக்குத் தெரியும்.

லொக்கேஷன்கள் சரியா ஃபிக்ஸ் பண்ணனும்னா, ஸ்கிரிப்ட், புரோக்ராம் லிட்ஸ்கள் பக்காவா இருக்கணும். புரோக்ராம் லிஸ்ட் சரியில்லைன்னாத்தான் கொஞ்சம் தடுமாற்றங்கள் இருக்கும். லொக்கேஷன்கள் கிடைக்கிறதில ஒருநாள், ரெண்டு நாள் தள்ளி போகலாம்.

கவர்மென்ட் லொக்கேஷன்கள் எல்லாம் முன்கூட்டியே சொல்லி, பெர்மிஷன் வாங்கணும். ரெயில்வே பெர்மிஷன் எல்லாம் ரெண்டு மாசத்துக்கு முன்பே அப்ளை பண்ணினால்தான் கிடைக்கும். அதை வாங்கி வச்சிருப்போம். ஆனா அன்னிக்கு யாராவது ஒரு ஆர்ட்டிஸ்ட்டோட டேட்ஸ் குழப்பமா வரும்.

úஸô, ஷூட்டிங்கை தள்ளிப்போடமுடியாது. காரணம் அப்ப அந்த லொக்கேஷன் பெர்மிஷனை வேற யாருக்காவது கொடுத்து வச்சிருக்கலாம். இந்த மாதிரி நடைமுறை சிக்கல்கள் வரும். அதே சமயம் பிரைவேட் லொக்கேஷன்னா சரி பண்ணிக்கலாம். ரெயில்வே, ஏர்போர்ட் லொக்கேஷன்கள்னா பெர்மிஷன் வாங்கறது கஷ்டமானது. இதெல்லாம் எங்களோட வேலைகள். இதுல குளறுபடி வந்தா ஷூட்டிங் கேன்சலாகக்கூட ஆயிடும்..

சினிமாவைப் பொறுத்தவரை எதற்குமே கல்வித் தகுதி தேவையில்லைன்னுதான் நான் சொல்லுவேன். அதுக்காக எழுதப் படிக்க தெரியாதுன்னு சொல்லக்கூடாது. தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தில உறுப்பினரா சேர்ந்தால்தான் நீங்க புரொடக்ஷன் அசிஸ்டெண்ட்டாக சேரமுடியும். ஒரு தயாரிப்பாளர் அல்லது டைரக்டரோட சிபாரிசு இருந்தால் மட்டுமே உங்களை புரொடக்ஷன் பாயாகவோ / எக்ஸிகியூட்டிவ்வாகவோ சேர்த்துக் கொள்வார்கள்.

அதாவது அதில் மெம்பரானால்தான் நீங்க படத்துக்கு வொர்க் பண்ண முடியும்.
நாங்க வொர்க் பண்ற படத்தோட அசிஸ்டெண்ட் டைரக்டர் தனியா படம் பண்ணும்போது எங்களை கூப்பிட்டுக்குவாங்க. அதனால எங்களுக்கு தொடர்ந்து வொர்க் பண்றதுக்கான வாய்ப்புகள் வரும். கிட்டத்தட்ட பதினேழு வருஷமா சூப்பர்குட்லதான் நான் வொர்க் பண்றேன்.

ஒவ்வொரு படத்துக்கும் நாங்க சிரமப்பட்டுத்தான் ஆகணும். படத்தோட டெக்னீஷியன்கள் படம் ஆரம்பிக்கிறதுக்கு நாலு நாளைக்கு முன்பிருந்து… படம் முடிஞ்சு, பூசணிக்காய் உடைச்சதுக்கு அப்புறம் போயிடலாம். கேமராமேன்னா ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு பத்து நாளைக்கு முன்பே லொக்கேஷன் பார்க்க அப்படி இப்படின்னு வொர்க் இருக்கும்.

ஆனா எங்க புரொடக்ஷன் வொர்க் எப்படின்னா நாங்க படம் தொடங்கறதுக்கு 3 மாசத்துக்கு முன்பே எங்க வொர்க்கை ஆரம்பிக்க வேண்டியிருக்கும். அதே மாதிரி படம் முடிஞ்சும் போஸ்ட் புரொடக்ஷன் அது இதுன்னு 3 மாசம் வொர்க் இருக்கும். ஒரு தயாரிப்பு நிர்வாகிக்குத்தான் அதாவது எங்களுக்குத்தான் சினிமாவில வேலை ஜாஸ்தி.

நான் சரியா வொர்க் பண்ணினதினாலதான் இன்னிக்கு நான் புரொட்யூஸரா புரொமோஷன் ஆகியிருக்கேன். பெரிய முதலீட்டோட வந்தால்தான் படத்தயாரிப்பாளர் ஆக முடியும். ஆனா என்னை மாதிரி மேனேஜர்கள் தயாரிப்பாளர்கள் ஆகுறதுக்குக் காரணம் எக்ஸ்பீரியன்ஸ்களும், சின்ஸியாரிட்டியும் தான்”.

Posted in Actors, Actress, Backgrounders, Chowdhry, Cinema, Directors, executives, Express, Faces, Films, Industry, Kollywood, Life, Managers, Movies, people, Producer, success, Supergood, Tips | Leave a Comment »

Spring, summer, Fall, Winter and Spring – Korean Film Review: Thilagavathy – Cinema Express

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

வசந்தகாலம், கோடைக்காலம், மழைக்காலம், குளிர்காலம் மற்றும் வசந்தகாலம்

(கொரியா)

அவளைப் படகில் ஏற்றி, கரையை நோக்கிச் செலுத்துகிறார். படகு போகிறது. அவன் வீட்டுக்குள் போய், புத்தர் சிலை முன் அமர்ந்து அழுதபடி பிரார்த்திக்கிறான். பிறகு ஓடி வந்து பார்க்கிறான். அவள் படகிலிருந்து இறங்கி நடக்கிறாள். மாஸ்டர் கரையிலிருக்கும் கதவை மூடுகிறார்.

இரவு. இளைஞன் தூக்கம் வராமல் புரண்டு, புரண்டு படுக்கிறான். பிறகு மெதுவாக எழுந்து, ஒரு துணிப்பையில் புத்தர் சிலையைப் போட்டுக் கொள்கிறான். சேவலைத் தூக்கிக் கொண்டு படகில் ஏறி, படகைக் கரைக்கு விடுகிறான். மாஸ்டர் கண்களைத் திறக்கிறார். அமைதியாக அமர்ந்து பிரார்த்தனை செய்கிறார். அவன் கரையில் ஒற்றையடிப் பாதையில் நடக்கிறான். சேவலும் தனியே நடந்து போகிறது.

மழைக்காலம்

மாஸ்டர் எங்கோ வெளியில் போய்விட்டு, வீட்டுக்கு சில பொருட்களை வாங்கிக் கொண்டு வருகிறார். பொருள்களோடு ஒரு பூனையையும் அவர் கொண்டு வந்திருக்கிறார். ஒரு சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரிக்கிறார். அதைச் சுற்றியிருந்த செய்தித் தாளில் ஒரு குட்டிச் செய்தி: “”முப்பது வயது இளைஞன், மனைவியைக் கொன்றுவிட்டு ஓட்டம்.”

மாஸ்டர் அந்தச் செய்தியைப் படித்துவிட்டு, வீட்டுக்குள் வருகிறார். இளைஞனுடைய பழைய உடையை எடுத்துத் தைக்க ஆரம்பிக்கிறார்.

கரையில் அந்த இளைஞன் வந்து நிற்கிறான். ஆளே மாறிப் போயிருக்கிறான். ஜீன்ஸ் பேண்ட், கோட் அணிந்திருக்கிறான். முகம் முழுக்கக் கோபமும் வெறுப்பும் மண்டிக் கிடக்கின்றன. மாஸ்டர் அவனைப் பார்த்துவிட்டுப் படகை எடுத்துக் கொண்டு கரைக்கு வருகிறார்.

அவனைப் படகில் ஏற்றிக் கொள்கிறார். “”நீ ரொம்ப மாறிப் போயிட்டே” என்கிறார். அவனுடைய குடும்ப வாழ்க்கையைப் பற்றி விசாரிக்கிறார். அவன் வெறுப்போடு பேசுகிறான். வீட்டுக்கு வந்ததும், தான் கொண்டு வந்த பையைத் திறந்து புத்தர் சிலையை எடுக்கிறான். அந்தச் சிலையை அது இருந்த பழைய இடத்திலேயே வைக்கிறான்.

தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து ரத்தக்கரை படிந்த ஒரு கத்தியை எடுக்கிறான். தரையில் அமர்ந்து, அந்த மரவீட்டின் தரையை ஆங்காரமாகக் குத்துகிறான். இரவு. மாஸ்டர் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருக்க, இளைஞன் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருக்கிறான்.

காலையில் படகை எடுத்துக் கொண்டு கரைக்குப் போகிறான். கரையில் இருக்கும் குட்டை நீரில் இறங்கி நின்று கொண்டு, ஆங்காரத்தோடு “தொப்! தொப்!’ என்று அடிக்கிறான். அமைதியில்லாமல் இங்குமங்குமாக அல்லாடுகிறான். வீட்டுக்கு வந்து பிரார்த்தனை செய்கிறான். வீட்டுக்கு வெளியே மாஸ்டர் பூனையைத் தடவியபடி அமர்ந்திருக்கிறார்.

பிரார்த்தனை முடிந்ததும், அவன் ஒரு பேப்பரில் “மூடு’ (நட்ன்ற்) என்று எழுதுகிறான். அந்தப் பேப்பரை எடுத்துக் கண், மூக்கு, வாய் ஆகியவற்றில் ஒட்டிக் கொண்டு, மூச்சை அடக்கித் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறான்.

அவன் முனகும் சத்தம் கேட்டு மாஸ்டர் உள்ளே வருகிறார். அவன் தற்கொலைக்கு முயற்சிப்பதைப் பார்க்கிறார். ஒரு கம்பை எடுத்து அவனை அடி அடியென அடிக்கிறார். திட்டுகிறார்.
இளைஞன் கைகால்கள் கட்டப்பட்டு, உத்திரத்தில் தொங்கவிடப்பட்டிருக்கிறான்.

அவனைக் கட்டியிருக்கும் கயிறு ஒரு மெழுகுவர்த்தி ஜ்வாலையில் பட்டுக் கொண்டிருக்கிறது. வீட்டுக்கு வெளியே மாஸ்டர், மரத்தரையில் பூனையின் வாலை ஒரு கறுப்பு மையால் தொட்டுத் தொட்டு எதையோ எழுதுகிறார். மந்திரச் சொற்கள் போல இருக்கிறது.

இளைஞனைக் கட்டியிருந்த கயிறு ஜ்வாலை பட்டுப் பொசுங்கி அறுந்து போகிறது. இளைஞன் கீழே விழுகிறான். தன் கட்டுகளை அவிழ்த்துக் கொள்கிறான். அவனுடைய நீண்ட முடியை, ரத்தக் கரை படிந்த கத்தியால் அவனே வெட்டிக் கொள்கிறான். தன் பழைய ஆசிரம உடையை அணிந்து கொண்டு, வீட்டை விட்டு வெளியே வருகிறான்.

மாஸ்டர் அவனைத் திரும்பிப் பார்க்காமல், தரையில் எழுதியபடி சொல்கிறார்.

“”உன்னை நீயே கொன்னுக்கறது நடக்காது. நான் எழுதியிருக்கிற எழுத்து மேல அந்தக் கத்தியால செதுக்கு. ஒவ்வொரு எழுத்தை வெட்டும்போதும், உன்னைவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாப் போயிடும்.”

அவன் மாஸ்டர் மரத்தரையில் எழுதியிருக்கும் எழுத்துகளை ஒவ்வொன்றாகத் தன் கத்தியால் அழகாக செதுக்க ஆரம்பிக்கிறான்.
கரையில் இரண்டு போலீஸ்காரர்கள் வந்து நின்று குரல் கொடுக்கிறார்கள். மாஸ்டர் படகில் வந்து அழைத்துப் போகிறார்.

அவர்கள் அந்த இளைஞனைக் கைது செய்ய வந்தவர்கள். அவனைப் பார்த்து இருவரும் துப்பாக்கியை உயர்த்த, அவனும் கத்தியைத் தூக்குகிறான். மாஸ்டர் அவனை அதட்டுகிறார். “”நீ என்ன செஞ்சுகிட்டு இருக்கே? ஒழுங்கா உக்காந்து எழுத்துகளை செதுக்கு.”

அவன் மறுபடியும் தரையில் அமர்ந்து எழுத்துகளைச் செதுக்க ஆரம்பிக்கிறான். மாஸ்டர், போலீஸ்காரர்களிடம் அவன் எல்லா எழுத்துகளையும் செதுக்கி முடித்த பிறகு, அவர்கள் அவனை அழைத்துப் போகலாம் என்கிறார்.

“”இது என்ன எழுத்து?”

“”பிரஜனபரமித சூத்ரம்.”

“”செதுக்கி முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?”

“”நாளைக்குக் காலையில் முடிஞ்சுடும்.”

போலீஸ்காரர்கள் இருவரும் ஒரு ஓரமாக அமர்கிறார்கள்.

இளைஞன் தொடர்ந்து எழுத்துகளை செதுக்கியபடி இருக்கிறான்.
போலீஸ்காரர்கள், ஏரித் தண்ணீரில் ஒரு டப்பா மிதப்பதைப் பார்க்கிறார்கள். தங்கள் துப்பாக்கிகளை எடுத்து குறி பார்த்து மாறி மாறிச் சுடுகிறார்கள்.

ஆனால் டப்பாவைச் சுட முடியவில்லை. குறி தப்பிக் கொண்டே இருக்கிறது. துப்பாக்கி சத்தம் இளைஞனை, திடுக்கிட வைக்கிறது. அவன் மிரண்டு போய்க் கோபத்தோடு அவர்களைப் பார்க்கிறான். மாஸ்டர் ஒரு சிறிய கல்லை எடுத்து, வெகு சாதாரணமாக டப்பாவை நோக்கி எறிகிறார். கல் மிகச் சரியாக டப்பாவைத் தாக்குகிறது. போலீஸ்காரர்கள் பிரமித்துப் போய் பார்க்கிறார்கள்.

இரவு முழுக்க இளைஞன், தரையெங்கும் எழுதியிருக்கும் எழுத்துகளைக் கத்தியால் செதுக்குகிறான். போலீஸ்காரர்கள் உட்கார்ந்தபடியே உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இளைஞன் அப்படியே தரையில் சுருண்டு படுத்துத் தூங்குகிறான். போலீஸ்காரர் தன் கோட்டைக் கழற்றி இளைஞனுக்குப் போர்த்திவிடுகிறார்.

மாஸ்டர் படுக்கையிலிருந்து எழுந்து வருகிறார். அவன் செதுக்கிய மரத்தணுக்குகளைப் பெருக்குகிறார். மூலிகைகளில் பெயிண்ட் தயாரித்து, அவன் செதுக்கிய ஒவ்வொரு எழுத்திலும் வர்ணம் பூசுகிறார்.

இளைஞன் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருக்கிறான். போலீஸ்காரர்கள் இருவரும் மாஸ்டருடன் சேர்ந்து, எழுத்துகளுக்கு வர்ணம் பூசுகிறார்கள். உச்சிப் பொழுதில் எல்லா எழுத்துகளும் வண்ணம் பூசப்பட்டு ஒளிர்கின்றன. மாஸ்டர் இளைஞன் படுத்திருக்கும் இடத்துக்கு வருகிறார். அவனை எழுப்புகிறார். “”எந்திரி! போக வேண்டிய நேரம் வந்துடுச்சு!”

இளைஞனை போலீஸ்காரர்கள் படகில் ஏற்றுகிறார்கள். அவனை விலங்கு போடாமல் கெüரவமாக அழைத்துப் போகிறார்கள். படகில் ஏறி துடுப்புப் போடுகிறார்கள். மாஸ்டர் படகில் இருக்கும் இளைஞனை அன்பு ததும்பும், ஏக்கமாகப் பார்க்கிறார்.

போலீஸ்காரர்களுக்குத் திகைப்பு, எவ்வளவு தரம் துடுப்புப் போட்டும் படகு முன்னோக்கி நகராமல் அப்படியே நிற்கிறது.
“”படகு நகர மாட்டேங்குது” என்கிறார் ஒரு போலீஸ்காரர். வீட்டிலிருந்து மாஸ்டர் இளைஞனைப் பார்த்துக் கையசைக்க, இப்போது படகு நகர்கிறது.

அவர்கள் இறங்கியதும், கரையில் இருந்த கதவு தானாக மூடுகிறது. படகு தானாகவே வீடு நோக்கி வருகிறது. மாஸ்டர் வேதனையோடு வீட்டு வாசலில் அமர்ந்திருக்கிறார்.

மாஸ்டர் ஒரு பேப்பரில் Shut’ என்று எழுதுகிறார். படகில் சிதை அடுக்குவது போல சில விறகுகளை அடுக்குகிறார். தன் துறவி ஆடையையும், செருப்பையும், ஜபமாலையையும் சுழற்றி புத்தர் சிலை முன் வைக்கிறார்.

கண், காது, வாய், மூக்கில் Shut’ என்று எழுதிய பேப்பர் ஒட்டப்பட்டிருக்க, படகு துவாரத்தைத் திறந்து விட்டுவிட்டு, சிதையில் ஏறி அமர்ந்து தனக்குத் தானே தீ வைத்துக் கொள்கிறார். சிதை எரிகிறது.

அந்தப் படகிலிருந்து ஒரு பாம்பு வெளிவந்து, ஏரி நீரில் நீந்தியபடி வீட்டுக்குள் வருகிறது. மாஸ்டர் கழற்றி வைத்த ஆடையின் மேல் சுருண்டு படுத்துக் கொள்கிறது.

குளிர்காலம்

கதவு திறக்கிறது. இப்போது வீட்டைச் சுற்றி இருக்கும் ஏரித்தண்ணீர் பனிக்கட்டியாக உறைந்து போயிருக்கிறது. பனி பொழிந்து கொண்டிருக்கிறது. ஜெயிலிலிருந்து இளைஞன் திரும்பி வருகிறான். உறைந்து போயிருக்கும் நீரின் மேல் நடந்து போகிறான். வீடு பூட்டியிருக்கிறது. சற்று தூரத்தில் பாதி மூழ்கிய நிலையிலிருக்கும் படகைக் கும்பிடுகிறான். வீட்டைத் திறக்கிறான்.

மாஸ்டரின் உடை மேல் படுத்திருக்கும் பாம்பு ஊர்ந்து போகிறது. இளைஞன், படகு மூழ்கியிருக்கும் பனியை வெட்டி, மாஸ்டரின் அஸ்தியை எடுக்கிறான். பனிக்கட்டியை வெட்டி ஒரு இடத்தில் ஊற்றுத் தோண்டுகிறான். ஊற்றுத் தண்ணீரில் முகம் கழுவிக் கொள்கிறான்.

புத்தர் சிலை முன் அமர்ந்து பிரார்த்தனை செய்கிறான். மேசை டிராயரைத் திறந்து, மாஸ்டர் வைத்துவிட்டுப் போன புத்தகத்தை எடுத்துப் படிக்கிறான். அதில் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்துப் பார்த்து உடற்பயிற்சி செய்கிறான். பனி கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பிக்கிறது.

இரவு. முகத்தைத் துண்டால் இறுகக் கட்டிய ஒரு பெண் கரைக்கு வருகிறாள். அவள் கையில் ஒரு கைக் குழந்தை. அவனிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு புத்தர்சிலை முன் அமர்ந்து பிரார்த்தனை செய்தபடி அழுகிறாள்.

இரவில் அவள் உறங்கும்போது, அவள் முகத் துணியை விலக்கப் பார்க்கிறான் இளைஞன். அவள் அவன் கையைப் பிடித்துக் கொள்கிறாள். இரவில் இளைஞன் உறங்கியதும், அந்தப் பெண் குழந்தையை விட்டுவிட்டு, வேகமாக வெளியே போகிறான். இளைஞன் ஊற்றுக்காகத் தோண்டிய குழியில் கால் வழுக்கி விழுந்து விடுகிறாள்.

காலை அந்தப் பெண்ணுடைய குழந்தை, அம்மாவைத் தேடி அழுதபடி, தவழ்ந்து தவழ்ந்து வெளியே வருகிறது. அவள் விழுந்த ஊற்றுக்குழிக்கருகே வந்து அழுகிறது. ஊற்று நீரில் அந்தப் பெண் அணிந்திருந்த ஒற்றைச் செருப்பு நீரில் மிதக்கிறது. இளைஞன் ஓடி வந்து குழந்தையைத் தூக்கிக் கொள்கிறான்.

இளைஞன் ஒரு பெரிய துரட்டுக் கோலைக் கொண்டு வந்து, குழிக்குள் விட்டு, அந்தப் பெண்ணின் சட்டையோடு சேர்த்து அவளைத் தூக்கிக் கரையில் இழுத்துப் போடுகிறான். அவள் முகத்தை மூடியிருக்கும் துணியை அவிழ்த்துப் பார்க்கிறான். ஒரு புத்தர் சிலையின் முகம் தெரிகிறது.

இளைஞன் அலமாரியிலிருந்து ஒரு போதிசத்வர் சிலையை எடுக்கிறான். ஒரு ஆட்டுக் கல்லை கயிற்றில் கட்டி, தன் இடுப்போடு சேர்த்துப் பிணைத்துக் கொள்கிறான். சிலையைத் தூக்கிக்கொண்டு, ஆட்டுக்கல்லை இழுத்தபடி நடக்கிறான்.

இழுத்து, இழுத்து, காடு, மேடு எல்லாம் கடந்து, மிகவும் கஷ்டப்பட்டு ஒரு மலை உச்சியில் ஏறி, தான் கொண்டு வந்த போதிசத்வர் சிலையை ஓர் இடத்தில் வைக்கிறான். அது அவன், தனக்குத் தானே கொடுத்துக்கொண்ட தண்டனை. மீன், தவளை, பாம்பு ஆகியவற்றைத் துன்பப்படுத்தியதெல்லாம் இடையிடையே அவன் நினைவுக்கு வருகிறது.

வசந்தகாலம்

இப்போது அந்த இளைஞன்தான் மாஸ்டராக மாறியிருக்கிறான். அந்தப் பழைய மாஸ்டர் மாதிரியே தோற்றம். அந்தக் கைக்குழந்தை வளர்ந்து, நாம் ஆரம்பத்தில் பார்த்த சிறுவனாக மாறியிருக்கிறது. அதே முகம். சிறுவன் அமர்ந்திருக்க, மாஸ்டர் அவன் உருவத்தைப் படமாக வரைகிறார்.

சிறுவன் வீட்டுமேல் ஏறும் ஒரு ஆமையைப் பிடித்து விளையாடுகிறான். அதே பழைய குறும்புத்தனத்துடன் மலைமேல் இருக்கும் போதிசத்வர் சிலை மெüனமாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

“சுழற்சி விதி’ என்பார்களே அதை நேரில் பார்த்ததுபோல ஒரு பிரமை படம் முடிந்ததும் தோன்றுகிறது. மனித வாழ்க்கைத் துளியைப் படமாக எடுத்திருக்கும் இயக்குனர் கீடக்கீம்மை (Ki-duk kim) எவ்வளவு பாராட்டினாலும் தகும். படத்தின் கதையும் இயக்குனருடையதுதான்.

இப்படி ஒரு அற்புதமான சூழலை, நாம் நேரில் பார்த்ததுபோல ஓவியமாக வரைந்து காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டாங் ஹையோன் பேக் (Dong-hyeon Back). ஒவ்வொரு காட்சிக்கும் பொருத்தமான ஜி-ஆங் பார்க்கின் (Ji-Woong park) இசை.

கேள்விகளால் ஆனது உலகம். எத்தனையோ கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் மானுட மந்தை அலைவுற்றிருக்கிறது. இருந்தாலும் விடையைத் தேடிப் புதுப்புதுக் கேள்விகளுடன் மானுடப் பயணம் தொடர்ந்தபடி இருக்கிறது. அன்பு என்ற ஆயுதத்தை ஏந்தியபடி!

Posted in Cinema, Express, Films, Korea, Movies, Reviews, Thilagavathi, Thilagavathy, Thilakavathi, Thilakavathy | Leave a Comment »

Chitra Lakshmanan: Kalainjar Karunanidhi & Kaviarasu Kannadasan – Sivaji, MGR, Mu Ka Muthu: Cinema Express

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

உள்ளதை சொல்கிறேன் – சித்ரா லட்சுமணன்

‘வசனக் காதல்’

கலைஞர் அவர்களை நேரில் காணாமலேயே அவர் மீது பெரும் காதல் கொண்டவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். அதற்குக் காரணம் “அபிமன்யூ’ படத்தில் கலைஞர் எழுதியிருந்த அற்புதமான வசனங்கள்.

“அபிமன்யூ’ படத்தின் வசனச் சிறப்பு காரணமாக ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல ஆறு நாட்கள் தொடர்ந்து அந்தப் படத்தைப் பார்த்தார் கவியரசர்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதைப் போல “அபிமன்யூ’ படத்தின் வசனங்களை கலைஞர் எழுதியிருந்தபோதிலும் திரைப்படத்தில் அவரது பெயர் இடம் பெறவில்லை.

எம்.ஜி.ஆர். அவர்களது சகோதரர் எம்.ஜி.சக்கரபாணிதான் சேலம் அம்பிகா தியேட்டரில் கவியரசு கண்ணதாசன் “அபிமன்யூ’ படத்தைப் பார்க்க போனபோது, அந்தப் படத்தின் வசனங்களை எழுதியவர் கலைஞர் என்ற தகவலை கண்ணதாசன் அவர்களிடம் கூறினார். “அபிமன்யூ’ படம் பார்த்த அனுபவத்தை தனது “வனவாசம்’ நூலில் கீழ்க்கண்டவாறு உணர்ச்சிகரமாக எழுதியுள்ளார் கவியரசர்.

“”அபிமன்யூ’ படத்தில் அவன் கேட்ட தமிழ் என்றும் மறக்கமுடியாத இன்பத் தமிழாகும்.

“ஒடிந்த வாளானாலும் ஒரு வாள் கொடுங்கள்’.

“அண்ணன் செய்த முடிவை கண்ணன் மாற்றுவதற்கில்லை’.

“கண்ணன் மனமும் கல் மனமா?’

“அர்ச்சுனனால் கூட துளைக்க முடியாத சக்ரவியூகத்தை அபிமன்யூ துளைத்து விட்டானென்றால் அங்கேதானிருக்கிறது ஆச்சாரியாரின் விபீஷண வேலை.’

இந்த வசனங்கள் இன்றுவரை அவனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

அம்பிகா தியேட்டரின் சுவையான காப்பியும், “அபிமன்யூ’வில் கண்ட கருணாநிதியின் கைவண்ணமும் அவன் நெஞ்சிலே நிலைத்தன.

“”காணாமலே காதல்” என்பார்கள். அந்தக் “காதலே’ பிறந்து விட்டது அவனுக்குக் கருணாநிதியின் மீது.

“”எப்படியாவது கருணாநிதியைக் கூட்டி வாருங்கள்” என்று அவன் சக்கரபாணியைக் கேட்டான்.

“மாடர்ன் தியேட்டர்ஸ்’க்கு அவரை வரவழைக்க வேண்டுமென்று அவரிடம் சொன்னான்.

அன்று அவன் “மாடர்ன் தியேட்டர்ஸ்’க்கு சொல்லியிருந்தால் எடுப்பட்டிருக்காது.

சக்கரபாணி சொன்னார். அவனும் கூட சேர்ந்து பாடினான்.
கருணாநிதியை வரவழைக்க டி.ஆர்.சுந்தரம் முடிவு செய்தார்.
ஒரு நாள் கருணாநிதியும், சக்கரபாணியும் சேலம் வந்து சேர்ந்தார்கள்.

திறமை என்பதை யாரிடம் கண்டாலும் நேருக்கு நேரே பாராட்டிவிடுவது அவனது சுபாவம்.

தன்னை தாழ்த்திக்கொண்டு இன்னொருவரை உயர்த்துவான்.
அதுதான் திறமைக்கு தரும் மியாதை என்றே அவன் கருதினான்.
அன்று கருணாநிதியை அவன் முதன்முதலாக கோயம்பத்தூர் லாட்ஜில் சந்தித்ததும் ஒரு காதலியைக் காணும் உணர்ச்சியே அவனக்கு ஏற்பட்டது.

சக்கரபாணி அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துவைத்தார்.

அன்று முதல் கருணாநிதியும் அவனை உயிருக்குயிராக நேசிக்கத் தொடங்கினார்.

“மாடர்ன் தியேட்டர்’ஸில் மாதம் 500 ரூபாய் சம்பளத்தில் அவர் வேலைக்கமர்ந்தார்.

ஒரு நாளாவது ஒருவரை ஒருவர் காணாமலிருந்தால் எதையோ பறி கொடுத்தது போலிருக்கும்.

ஒருவர் கையில் இன்னொருவர் தலை வைத்துத் தூங்குகிற அளவுக்கு பாசம் வளர்த்தது.

அவர்கள் இருவருக்கிடையே ரகசியம் என்பதே இல்லாமலிருந்தது.
அவரைப் பற்றி யாராவது தவறாகப் பேசிவிட்டால் அவனால் பொறுக்க முடியாது. அவருக்கும் அப்படியே”.

இவ்வாறு அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் கவியரசு. தன்னைப் பற்றி எழுதும்போது “அவன்’ என்று தன்னடக்கத்தோடு இந்த நூலில் குறிப்பிட்டிருந்தார் கவியரசர்.

இப்படி நெருக்கமான நட்போடு பழகிய அவர்களுக்கு நடுவே பயங்கரமான விரிசல் ஏற்பட்டதும், பின்னர் அந்த இடைவெளி முழுவதுமாக மறைந்து இருவரும் இணைந்ததும் தமிழகம் அறிந்த வரலாறு.

“மணமகள்’ படத்தைத் தொடர்ந்து கலைஞரின் எழுத்தாற்றலில் திரை உலகில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய படமாக “பராசக்தி’ அமைந்தது.

புரட்சிகரமான கருத்துக்களோடு அடுக்கு மொழியில் கலைஞர் அவர்கள் எழுதியிருந்த வசனங்கள் பின்னாளில் தமிழ்த் திரைப் படங்களின் வசன பாணியையே மாற்றி அமைத்தது என்றால் அது மிகையில்லை.

கலைஞர் அவர்களது வசனத்திற்கு தனது அழுத்தம் திருத்தமான தமிழ் உச்சரிப்பால் உயிர் கொடுத்தார் சிவாஜி. ஏற்ற இறக்கங்களோடு அவர் கலைஞரின் தமிழை உச்சரித்தது கண்டு தமிழ்நாடே பரவசப்பட்டது.

சிவாஜி தனது முதல் படத்திலேயே தமிழ் நாட்டு திரைப்பட ரசிகர்கள் மனதை ஒட்டுமொத்தமாகக் கொள்ளை கொண்டார் என்றால் அதில் கலைஞர் அவர்களுக்கு கணிசமான பங்கு உண்டு என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

1952-ல் வெளியான “பராசக்தி’க்குப் பிறகு இந்த 55 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் படங்கள் வெளியாகியிருந்தாலும் இன்றும் “பராசக்தி’ தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பெற்றிருக்கிறது என்றால் அதற்கு கலைஞர் -நடிகர் திலகம் ஆகிய இருவரின் கூட்டணியே முக்கிய காரணம்.

“பராசக்தி’ படத்தைத் தொடர்ந்து “பணம்’, “திரும்பிப்பார்’, “நாம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தமிழ்த் திரை உலகை திசை திருப்பிய படமான “மனோகரா’ வெளியானது.

சிவாஜியின் நவரச நடிப்பு, கண்ணாம்பாவின் உணர்ச்சி மிக்க நடிப்பாற்றல், கலைஞர் அவர்களின் வீர வசனங்கள் எல்லாம் சேர்ந்து அப்படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கியது.

நடிப்புப் பயிற்சி பெற விரும்பிய எவரும் “பராசக்தி’, “மனோகரா’ போன்ற படங்களின் வசனத்தை விலக்கிவிட்டு அந்தப் பயிற்சிகளில் ஈடுபட முடியாத சூழ்நிலை உருவாகியது.

தமிழில் வசனங்கள் என்றால் கலைஞர் அவர்கள் மட்டுமே என்ற நிலை உருவானது. இந்த நிலைக்கு இவர் உயரக் காரணம் தமிழ்த்தாய் அவரிடம் கொஞ்சி விளையாடினாள் என்பது மட்டுமல்ல, எந்தத் துறையில் ஈடுபட்டாலும் முழு ஈடுபாட்டோடு நிறைவேற்றக் கூடிய அவரது ஆற்றலுக்கும் அதில் உரிய பங்குண்டு.

கலைஞரின் எழுத்தாற்றல் குறித்து தனது “வியப்பூட்டும் ஆளுமைகள்’ புத்தகத்தில் கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகிறார் நூலாசிரியர் வெங்கட் சாமிநாதன்.

“”பராசக்தி’ படத்தில் சிவாஜி பேசும் வசனங்கள் ஒரு குற்றவாளி கோர்ட்டில் சொல்லும் பதில் அல்ல. கோர்ட்டை நோக்கிய பதிலும் அல்ல. தமிழ் மக்கள் பல கோடிகள் அனைவரையும் நோக்கிவிடும் அறை கூவல். அது ஏதோ திருப்புமுனை, புதிய அத்தியாயம் என்றெல்லாம் பேசப்பட்டது.

அவர் எழுதிய நாடகங்கள் திரைப்படமானதும், திரைப்படமாகவே எழுதப்பட்டதுமான ஒரு பட்டியல் மாத்திரம் நமக்கு கிடைத்துள்ளது.

அதிலும் 1948-லிருந்து 1990 வரையிலான ஒரு பட்டியலை 1990-ல் பிரசுரமான ஒரு புத்தகம் தருகிறது. இந்த எண்ணிக்கை மொத்தம் 57. 1990-க்குப் பின் எழுதியவை எல்லாம் தொலைக்காட்சிப் படைப்புகள். அவை பற்றிய குறிப்புகள் இதில் இல்லை.

1947-லோ எப்போதோ “ராஜகுமாரி’ படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுத ஏ.எஸ்.ஏ.சாமி அழைத்தபோது (அப்போது கருணாநிதிக்கு வயது 23) “”என் கழக வேலைகளுக்கு இடையூறு இல்லாது முடியுமானால் எழுத ஒப்புக் கொள்கிறேன்” என்று நிபந்தனை விதித்து எழுதுகிறார்

-இத்தனையையும் வைத்துக்கொண்டு நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் என்று வேறு -இவற்றிற்குப் பிறகுதான் 40 வருடங்களில் 57 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் சிலவற்றிற்குப் பாடல் எழுதுவதும் என்றால் -இது அலிபாபாவின் அற்புத விளக்கும் விளக்கை உரசினால் “ஹூகும் ஆக்கா’ என்று எதிர் நிற்கும் பூதமும் பணி செய்யக் காத்திருந்தால்தான் சாத்தியம்.

திரைக்கதை, வசனம் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தப் போவதில்லை என்று அதிலேயே முழு மூச்சாக ஆழ்ந்தால்கூட 40 வருடங்களில் 57 படங்கள் சாத்தியமா? தெரியவில்லை. நான் என் ஆயுசில் எழுதிய ஒரே ஒரு திரை நாடகத்திற்கு எழுத உட்காரும் முன் அதைப் பற்றி யோசித்து உள்வாங்கிக் கொள்ள இரண்டு மாதங்கள் பிடித்தன.

பின் எழுத உட்கார்ந்து 15 நாட்களுக்கும் மேல் எதுவும் எழுது ஓடவில்லை. பின்னர் ஒன்றிரண்டு மாதங்கள் ஒதுங்கியிருந்து பின் உட்கார்ந்தால் 15 நாட்கள் ஆயின எழுதி முடிக்க. இந்த மாதிரியெல்லாம் யோசித்திருக்க, மனம் ஆழ்ந்திருக்க, ஓடவில்லை” என்றெல்லாம் கருணாநிதிக்கு சாத்தியப்பட்டு வராது, கட்டி வராது.

ஸ்விட்சைத் தட்டிவிட்டால் ஓடும் யந்திரம் போலத்தான் அவர் உட்கார்ந்தால் எழுதிய காகிதங்கள் மடியிலிருந்து விழுந்துகொண்டே இருக்கவேண்டும். உதவியாளர் பொறுக்கி அடுக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.

“ஓர் இரவு’, “வேலைக்காரி’க்குப் பிறகு சினிமாவுக்குக் கதை வசனம் எழுதாத தி.மு.க. தலைவர் யாரும் உண்டா? தெரியவில்லை. தேடிப் பார்த்தால் ஓரிருவர் கிடைக்கலாம். ஆனால் அண்ணாவையும், கருணாநிதியையும் தவிர வேறு யாரும் நிலைக்கவும் இல்லை, வெற்றி பெறவும் இல்லை.

மற்ற எல்லோரையும் பின்தள்ளி கருணாநிதியைத்தான் அண்ணாவுக்கு அடுத்த பெருந்தலைவராக காலம் முன் வைத்துள்ளது என்றால் அதில் கணிசமான பங்கு கருணாநிதியின் நாடகம், சினிமா, கற்பனைத் திறன் தந்த எழுத்து இவற்றிலிருந்து பெற்றதாகச் சொல்ல வேண்டும்.”

இவ்வாறு அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் வெங்கட் சாமிநாதன்.

——————————————————————————————————————————————————–

தி.மு.கழகத்தில் உறுப்பினராக இருந்த சிவாஜி கணேசன் சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக தி.மு.க.வை விட்டு விலக வேண்டி வந்தது என்றாலும், அதனால் அறிஞர் அண்ணா மீது கொண்ட பாசத்தில் இம்மியளவு கூட சிவாஜி அவர்களிடம் குறையவில்லை.

அதே போன்று கலைஞர் மீதும் மாறாத பற்று கொண்டிருந்தார் சிவாஜி. அதன் காரணமாகத்தான் தனது ஆரூயிர் நண்பன் நடிகர் திலகத்திற்கு கடற்கரையில் பல எதிர்ப்புகளுக்கு இடையிலேயும் சிலை எடுத்து பெருமைப் படுத்தினார் கலைஞர்.

தனது சுயசரிதையில் பல இடங்களில் கலைஞர் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் சிவாஜி. “திரும்பிப் பார்’ படத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, “”திரும்பிப் பார்’ படத்திற்கு எழுதிய வசனங்களைப் போல கலைஞர் கருணாநிதி அவர்கள் மற்ற எந்தப் படங்களிலும் எழுதவில்லை என்று நான் நினைக்கிறேன்.

அவ்வளவு அருமையான வசனங்களையெல்லாம் அந்தப் படத்தில் எழுதியிருந்தார். அந்தப் படம் ஒரு அருமையான திரைக்காவியம்” என்று தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கும் நடிகர் திலகம், “மனோகரா’ பட அனுபவத்தைப் பற்றி விவரிக்கும்போது, “”எனக்கு “மனோகரா’ படம் புது அனுபவமாகத் தெரியவில்லை.

நாடகத்தின்போது நான் சம்பந்த முதலியாரின் வசனத்தைப் பேசினேன். அது படமாக எடுக்கும்போது கலைஞர் அவர்களின் வசனத்தைப் பேசினேன். அருமையான வசனங்கள். அது வசனம் பேசும் காலம். “மனேகரா’வில் வசனங்கள் மிகச்சிறப்பாக இருக்கும். இப்போது கூட அப்பட வசனங்கள் ஞாபகத்திற்கு வருகிறது.

பொன்னும் மணியும்
மின்னும் வைரமும்
பூட்டி மகிழ்ந்து
கண்ணே! முத்தே!
தமிழ்ப் பண்ணே!
என்றெல்லாம் குலவிக் கொஞ்சி
தங்கத்தில் ஆன கட்டிலிலே
சந்தனத் தொட்டினிலே

என்றெல்லாம் வசனம் இடம் பெற்ற அந்தப் படம் அந்தக் காலத்தில் ஒரு மாபெரும் வெற்றிப் படமாகியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் திலகம் அவர்களது சுயசரிதையைப் போலவே கலைஞர் அவர்களின் சுயசரிதையான “நெஞ்சுக்கு நீதி’ நூலிலும் பல இடங்களில் சிவாஜி அவர்களைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

கலையுலகில் தனது வளமான வசனங்களால் சிவாஜி அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த கலைஞர் அவர்களின் வாழ்க்கையை நடிகர் திலகம் காப்பாற்றிய ஒரு சம்பவத்தை உணர்ச்சி பொங்க தனது “நெஞ்சுக்கு நீதி’ நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் கலைஞர்.

“”ஒரு முறை நானும், கருணானந்தமும், சிவாஜி கணேசனும் காஞ்சிபுரம் சென்று அண்ணாவைப் பார்த்துவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறோம். அப்போதுதான் “பராசக்தி’ படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வரும் வழியில் நல்ல மழை பெய்யத் தொடங்கியது.

காரின் வெளிச்சம் வேறு மங்கலாகி விட்டது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகே வந்து கொண்டிருக்கும்போது அந்தப் பகுதியில் ஒரு பாலம் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்ததால் மாற்று வழிக்கு குறிப்புப் பலகை வைத்து சிவப்புத் துணி கட்டியிருந்தார்கள்.

விளக்கு வெளிச்சம் போதாதால் கார் டிரைவர் அதைக் கவனிக்காமல் மாற்று வழியில் செல்வதற்குப் பதிலாக நேராகச் சென்று விட்டார். உடனே நண்பர் கணேசன் கூச்சல் போடவே கார் டிரைவர் திடீரென்று பிரேக்கை அழுத்திவிட்டார். பிரேக் போடப்பட்ட வேகத்தில் மழைத் தண்ணீர் தேங்கியிருந்த சாலையில் காரின் சக்கரங்கள் வழுக்கி ஒரு சுற்றுச் சுற்றி நின்றது.

கார் எப்படியிருக்கிறது என்பதைக் காருக்குள்ளிருந்த நாங்கள் கவனித்தோம். கார் சக்கரம் ஒரு அங்குலம் நகர்ந்தால் நாங்கள் செங்குத்தான ஒரு பள்ளத்தாக்கில் காரோடு விழுந்து நொறுங்கிப் போய்விடுவோம்.

அப்படிப்பட்ட ஆபத்தான விளிம்பில் கார் நின்று கொண்டிருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார் கலைஞர். தனக்கும் சிவாஜிக்கும் இடையே நிலவி வந்த பாசப் பிணைப்பு எத்தகையது என்பதற்கு எடுத்துக் காட்டாக சிவாஜி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையை தனது “நெஞ்சுக்கு நீதி’ நூலின் இரண்டாம் பாகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“”எனக்கும் சிவாஜிக்கும் இருந்த நட்பு யாராலும் விலக்க முடியாத பாசமாக உருவெடுத்தது. அந்தப் பாசம் எப்படிப்பட்டது என்பதை 1963-ஆம் ஆண்டு என் தாய் அஞ்சுகம் அம்மையார் மறைந்தபோது வெளியிடப்பட்ட ஒரு மலரில் சிவாஜியே வெளிப்படுத்தியிருக்கிறார்.

“”சிறு வயது முதல் எங்களுக்குள் நெருக்கமான பழக்கம் உண்டு. இதற்கு எத்தனையோ காரணம். கலையோ, அன்போ, கொள்கையோ, குணமோ, எதுவோ எங்களை உயிராக இணைத்து வைத்திருந்தது. நாளடைவில் அது வளர்ந்து வலுப்பெற்றது. அவர்! அது யார்? வாய் நிறைய “மூனா கானா’ என்று நான் இனிமையோடு அழை க்கும் அவர்தான்.

அந்தக் காலத்தில் இந்த இரண்டு பிள்ளைகளுக்கும் அஞ்சுகம் அம்மையார் அநேக நாட்கள் ஒன்றாகவே உணவு படைப்பது உண்டு. அப்போதெல்லாம் அவர்கள் பரிமாறுவதில் கொஞ்சம் பாரபட்சமாக நடந்து கொண்டதை நான் கவனிப்பதும் உண்டு. நல்ல பண்டங்களை ஒருவருக்கு அதிகமாகவும், ஒருவருக்கு குறைவாகவும் போடுவார்கள்.

“”இப்படிச் செய்யலாமா? இது நீதியா?” என்று நான் கேட்பேன்.
“”நீ செல்லப்பிள்ளை. உனக்கு அதிகம்தான்” என்பார்கள் அந்தத் தாய்.

அந்தச் செல்லத்தை மறந்து விட்டுப் போய்விட்டார்கள். நான் என்றும் அந்த அன்புச் செல்லத்தை மறக்க முடியாது. எனக்கு அஞ்சுகம் அம்மையாரும் ஒரு தாய்”.

இது அந்த மலரில் சிவாஜி எழுதிய கட்டுரையில் ஒரு பகுதி” என்று குறிப்பிட்டுள்ளார் கலைஞர்.

“மனோகரா’வைத் தொடர்ந்து “ரங்கூன் ராதா’, “ராஜாராணி’, “புதையல்’ என்று கலைஞர் அவர்களும் சிவாஜியும் இணைந்து பணியாற்றிய பல படைப்புகள் வெளிவந்தன.

ஆரம்பக் கட்டங்களில் சிவாஜி கணேசன் அவர்களோடு இருந்த அளவு நெருங்கிய நட்பு எம்.ஜி.ஆர்.அவர்களுக்கும் கலைஞர் அவர்களுக்கும் இருந்தது குறித்தும், “ராஜகுமாரி’ படத்தில் எம்.ஜி.ஆர்.தான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதில் கலைஞர் மிகவும் பிடிவாதமாக இருந்து ஜெயித்தது குறித்தும் ஏற்கனவே இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.

“ராஜகுமாரி’யைத் தொடர்ந்து “மந்திரிகுமாரி’, “மருதநாட்டு இளவரசி’, “நாம்’, “மலைக்கள்ளன்’, “புதுமைப்பித்தன்’, “காஞ்சித் தலைவன்’ என்று பல படங்களில் எம்.ஜி.ஆரும் கலைஞரும் இணைந்து பணியாற்றினர்.

எம்.ஜி.ஆருக்கு கலைஞர் கதை வசனம் எழுதிய கடைசிப் படமாக “காஞ்சித் தலைவன்’ அமைந்தது. இவர்கள் இருவர் உறவு மற்றும் பிரிவு குறித்து பின்னர் விரிவாக பார்ப்போம்.

கலைஞர் அவர்களின் கைவண்ணத்தில் வெளியான படங்களில் “பூம்புகார்’ மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு படைப்பு. இந்தக் கதையை கலைஞரின் “மேகலா பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.

ஆனால் முதலில் “பூம்புகார்’ படத்தைத் தயாரிக்க திட்டமிட்டவர் ஏவி.எம்.அவர்கள் ஆவார்கள். ஏவி.எம்.அவர்கள் அப்படத்தை ஏன் கைவிட்டார் என்பது குறித்து தனது “தமிழ் சினிமாவின் கதை’ என்ற நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் அறந்தை நாராயாணன்.

“”கல்லக்குடி போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி மு.கருணாநிதி மத்திய சிறைச் சாலையில் இருந்தார். அவரைப் பார்ப்பதற்காக டைரக்டர் கிருஷ்ணன் போயிருந்தபோது, “”என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“”சிலப்பதிகாரம் படித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார் கருணாநிதி.
சிறையில் கருணாநிதியைச் சந்தித்துவிட்டு வந்த கிருஷ்ணன் தன் சகா பஞ்சுவிடம் சொன்னார். “”கண்ணகி படம் வந்து ரொம்ப நாட்களாகின்றன. மு.க. சிலப்பதிகாரத்தை ஆழ்ந்து படித்து வருகிறார். அந்தக் காவியத்தை மீண்டும் சினிமாவாக்கினால் நன்றாக இருக்கும்”.

இருவரும் புறப்பட்டுச் சென்று ஏவி.எம்.செட்டியாரிடம் சொன்னார்கள்.

“”அவர் இப்பொழுது அரசியலில் ரொம்பவும் பிஸியாக இருக்கிறாரே! எப்படி வசனம் எழுதித் தருவார்?” மேனா கேட்டார்.

அந்தப் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஒரே சமயத்தில் அவரிடமிருந்து ஒட்டு மொத்தமாக எழுதி வாங்கி வந்து விடுகிறோம்.”

மு.கருணாநிதி விடுதலையாகி வந்தார். அவரிடம் நடந்த விஷயங்களைச் சொன்னார்கள் கிருஷ்ணனும், பஞ்சுவும்.
“”எழுதித் தருகிறேன். இதோ படத்தின் தலைப்பு. “பூம்புகார்”.
அன்றைய தினம் நள்ளிரவிலேயே “முரசொலி’ அலுவலகத்திற்கு மெய்யப்பச் செட்டியார் கிருஷ்ணன் பஞ்சுவுடன் வந்தார்.

பேசினார். முன் பணம் கொடுத்தார். 1959-ல் “தங்கப் பதுமை’ படம் வெளி வந்ததும் “பூம்புகார்’ திட்டத்தைச் செட்டியார் கைவிட்டு விட்டார். காரணம் “கண்ணகி’ கதை மாதிரியே “தங்கப் பதுமை’ திரைக்கதை அமைந்திருந்ததுதான்.

இவ்வாறு அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் அறந்தை நாராயணன்.

——————————————————————————————————————————————————–
பண்பிற்கரசோன்

“பூம்புகார்’ திரைப்படத்தில் சிவாஜிகணேசனை கோவலனாகவும், சாவித்திரியை கண்ணகியாகவும், பத்மினியை மாதவியாகவும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார் ஏவி.எம். “தங்கப்பதுமை’ காரணமாக அவர் “பூம்புகார்’ படத்தைத் தயாரிக்கத் தயங்கியதும், தன் சொந்தத் தயாரிப்பில் “பூம்புகார்’ திரைப்படத்தை எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, ராஜஸ்ரீ ஆகியோர் நடிக்க தயாரித்தார் கலைஞர். கெüந்தி அடிகள் வேடத்தில் கே.பி.சுந்தராம்பாள் நடித்தார்.

படம் முடிந்தவுடன் ஏவி.எம்.செட்டியார் அவர்களுக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்டினார் கலைஞர். படத்தை வெகுவாக ரசித்தாலும் பட வெளியீட்டுத் தேதியைத் தள்ளி வைக்குமாறு கலைஞரிடம் கேட்டுக் கொண்டார் ஏவி.எம். அதற்கு அவர் கூறிய காரணம் இதுதான்.

“”இந்தக் கதையை சிறு மாறுதல்களுடன் டைரக்டர் ஸ்ரீதர், “கலைக்கோயில்’ என்ற பெயரில் மிகப் பிரமாதமாக எடுத்திருக்கிறார். நான் கூட படத்தைப் பார்த்து விட்டு அவரைப் பாராட்டினேன். தங்களது “பூம்புகார்’ படமும் மிகச் சிறப்பாக இருக்கிறது, என்றாலும் இப்போது வெளியிட வேண்டாம்” என்றார் ஏவி.எம். “கலைக்கோயில்’ படத்தோடு வெளியானால் “பூம்புகார்’ திரைப்படத்தின் வெற்றி பாதிக்கப்படும் என்பது எவி.எம். அவர்களின் கருத்தாக இருந்தது.

“பூம்புகார்’ திரைப்படத்தைப் பற்றியும், அதன் வெற்றி குறித்தும் கலைஞர் அவர்களுக்கு மிகச் சிறந்த அபிப்ராயம் இருந்தாலும் அனுபவசாலியான ஏவி.எம்.அவர்களது பேச்சு கலைஞரை சோர்வடையச் செய்தது. அந்த மனந்தளர்ச்சியோடு வந்த கலைஞர் முரசொலி மாறனிடம் செட்டியார் சொன்னதையெல்லாம் சொல்லியிருக்கிறார்.

மாறன் கொஞ்சம் கூட நம்பிக்கை இழக்காமல் “பூம்புகார்’ படத்தைப் பொறுத்தவரை கதை சொல்லப்பட்டிருக்கிற முறைக்காகவும், உங்கள் வசனத்திற்காகவும் கண்டிப்பாக அது வெற்றி பெறும். நாம் தைரியமாக படத்தை வெளியிடுவோம். அதுவும் “கலைக்கோயில்’ படம் வெளியாகின்ற நாளன்றே வெளியிடுவோம்” என்று கூறியதோடு மட்டுமின்றி அதே தேதியில் படத்தை வெளியிடவும் செய்தார்.

“கலைக்கோயில்’ மிகப் பெரிய தோல்வியைக் கண்டது. ஆனால் “பூம்புகார்’ படமோ நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.

“பூம்புகார்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் கலைஞருக்கு ஃபோன் செய்த ஏவி.எம், “”என்னுடைய கணக்கு தவறு என்பதை உங்கள் படத்தின் வெற்றி நிரூபித்துவிட்டது. உங்களையும், மாறனையும் நான் மனமாரப் பாராட்டுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதே போன்று ஒரு சம்பவம் கலைஞர் வாழ்க்கையில் எல்.வி.பிரசாத் அவர்களாலும் நடைபெற்றிருக்கிறது. அது குறித்து “கலை உலகச் சூரியன் கலைஞர்’ என்ற பாராட்டு விழாச் சிறப்பு மலரில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் அமிர்தம்.

“”மாபெரும் இயக்குனர் எல்.வி.பிரசாத் கலைஞரின் கதை வசனத்தில் “இருவர் உள்ளம்’ என்றொரு படத்தைத் தயாரித்தார். சிவாஜிகணேசன், சரோஜாதேவி ஜோடியாக நடித்த இப்படத்தின் தனிக்காட்சி முக்கியமான கலை உலகப் பிரமுகர்களுக்காக ரேவதி ஸ்டூடியோவில் நடைபெற்றது.

படம் முடிந்ததும் இயக்குனர் பிரசாத், “”படம் நிறைவாக இல்லாதது போன்று எனக்குத் தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன?” என்று கலைஞரிடம் கேட்டார். அதற்கு கலைஞர், “”இந்தப் படம் நிச்சயமாக 100 நாட்கள் ஓடும். மக்கள் பேசக் கூடிய படமாக இது அமையும்” என்றார்.

உறுதியாகத்தான் சொல்கிறீர்களா என்று கேட்ட பிரசாத், “”இந்தப் படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றால் உங்களுக்கு சன்மானமாக பத்தாயிரம் ரூபாய் வழங்குகிறேன்” என்றார்.
படம் சென்னை வெல்லிங்டன் தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்களைத் தொட்டது. நூறாவது நாள் முடிந்த மறுநாள் இயக்குனர் பிரசாத், கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து கலைஞரைச் சந்தித்தார்.

“”நீங்கள் சொன்னபடி படம் நூறு நாட்களையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. உங்கள் கணிப்பு எதிலும் சரியாக இருப்பது போல் “இருவர் உள்ளமும்’ வெற்றி பெற்றுள்ளது. என் வாக்குப்படி இதாங்க ரூபாய் பத்தாயிரம் என்று சொல்லி பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்தார்” என்று அப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள இயக்குனர் அமிர்தம், “மலைக்கள்ளன்’ படத் தயாரிப்பின்போது நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவத்தையும் அந்த மலரில் கீழ்க் கண்டவாறு வர்ணித்துள்ளார்.

“”மலைக்கள்ளன்’ படம். கலைஞரின் உயிரோட்டமான வசனங்கள். எம்.ஜி.ஆர். கதாநாயகன். படம் முடிந்த நிலையில் தயாரிப்பாளர் ஸ்ரீராமுலுவுக்கும் கலைஞருக்கும் இடையில் ஏற்பட்ட மனத்தாங்கலில் இந்தப் படத்தில் திரைக்கதை, வசனம் கருணாநிதி” என்று என் பெயரைப் போடக் கூடாது என்று கடுமையாகக் கூறிவிட்டு கலைஞர் திருவாரூர் போய் விட்டார்.

எம்.ஜி.ஆருக்குப் பெரிய கவலை வந்து விட்டது. இன்றைய நிலையில் கலைஞர் பெயரில்லை என்றால் படம் வெற்றி பெறாது. ஏற்பட்டிருக்கிற இந்த ஊடலை எப்படித் தீர்ப்பது என சிந்தித்த எம்.ஜி.ஆர். நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியை அழைத்துக் கொண்டு திருவாரூருக்குச் சென்றார்.

திருவாரூரில் கலைஞரின் இல்லத்தில் அவரைச் சந்தித்த கே.ஆர்.ஆர். கலைஞரிடம் நீண்ட நேரம் பேசி அவரைச் சமாதானப்படுத்தினார். எம்.ஜி.ஆரோ, “”உங்கள் பெயர் படத்தின் டைட்டிலில் வரும்போதே கைதட்டல் அரங்கை அதிர வைக்கிறது. உங்கள் பெயர் இல்லை என்றால் படம் வெற்றி பெறுவது சந்தேகமே. நான் நடித்த படங்கள் எல்லாம் உங்கள் வசனச் சிறப்புகளாலேயே வெற்றி பெறுகின்றன.

இந்தப் படமும் வெற்றி பெற வேண்டும். அதற்குத் திரையில் உங்கள் பெயர் வந்தே ஆக வேண்டும்” என்று உருக்கமுடன் வேண்டினார். கலைஞர் ஒருவாறு சம்மதிக்க, கலைஞர், கே.கே.ஆர்., எம்.ஜி.ஆர். மூவரும் சென்னை வந்தனர். மகிழ்ச்சியான சூழலில் ஸ்ரீராமுலு அவர்களுடன் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது ஸ்ரீராமுலு, “”எத்தனை மாதங்கள் ஆனாலும் சரி! மன நிறைவான உங்கள் ஒப்புதல் இல்லாமல் “மலைக்கள்ளன்’ படத்தை நான் வெளியிடுவதில்லை என்ற முடிவோடு இருந்தேன்” என்றார்.

அதைக் கேட்டதும் எம்.ஜி.ஆர். அவர்கள் நெகிழ்வோடு கண் கலங்கிய நிலையில் ஸ்ரீராமுலு -கலைஞர் இருவரது கரங்களையும் ஒன்றாக இணைத்து முத்தமிட்டார்.
பின்னாளில் கலை உலகில் கொடிகட்டிப் பறந்த கண்ணதாசன், சிவாஜி, எம்.ஜி.ஆர். ஆகிய மூவருடனும் ஆரம்ப காலம் முதலே நெருங்கிய நட்பு கொண்டிருந்த கலைஞர் அவர்களுக்கு காலச் சூழ்நிலை காரணமாக கண்ணதாசன், எம்.ஜி.ஆர். ஆகிய இருவரோடும் பலமான கருத்து வேற்றுமை ஏற்பட்டது.

கண்ணதாசன், எம்.ஜி.ஆர். ஆகிய இருவரோடும் அவர் கொண்ட கருத்து வேற்றுமை அளவிற்கு சிவாஜி அவர்களோடு அவர் மாறுபடவேயில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அதன் காரணமாகத்தான் கலைஞர் அவர்களது பவள விழாவையொட்டி கலை உலகம் நடத்திய பாராட்டு விழாவில் கலைஞர் அவர்களைப் பாராட்டி நடிகர் திலகம் பேசிய பேச்சு அத்தனை உணர்ச்சிப் பூர்வமாக அமைந்தது. சிவாஜி, கலைஞர் ஆகிய இருவருடைய கண்களும் அந்தப் பாராட்டு விழாவின்போது கலங்கியதைக் கண்ட அனைவரும் அவர்கள் நட்பின் ஆழத்தை அன்று உணர்ந்தனர்.

அரசியல் காரணமாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், கலைஞருக்கும் இடையே இருந்த உறவில் எத்தனை பெரிய விரிசல் ஏற்பட்டது என்பதை அனைவரும் அறிவோம். ஆனாலும் எம்.ஜி.ஆர். இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி அறிந்ததும் அன்று காலை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய கலைஞர் செய்த முதல் காரியம் எம்.ஜி.ஆருக்கு இறுதி மரியாதை செலுத்த ராமாவரம் தோட்டத்திற்குச் சென்றதுதான்.

ஸ்ரீராமுலு நாயுடு அவர்களுடன் ஏற்பட்ட வருத்தத்தைக் களைந்தது போல தனது நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அதை மறந்து அவர்களுக்கு நேசக்கரம் நீட்டுகின்ற மாபெரும் பண்புக்குச் சொந்தக்காரராக கலைஞர் இன்றளவும் விளங்கி வருகிறார். அதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.

மலையளவு நெஞ்சுறுதி
வானளவு சொற்பெருக்கு
கடலளவு கற்பனைகள்
கனிந்துருகும் கவிக்கனிகள்

இலை தலையாய் ஏற்றமுற்று
இளந்தலைகள் வாழ்த்தொலிக்க
அவைத்தலைமை ஏற்றிருக்கும்
அன்புமிகு என் தோழ!

கூட்டத்தைக் கூட்டுவதில்
கூட்டியதோர் கூட்டத்தின்
நாட்டத்தை நாட்டுவதில்
நற்கலைஞன் நீயிலையோ

அந்தச் சிரிப்பலவோ
ஆளையெல்லாம் கூட்டி வரும்
அந்தச் சிறு மீசை
அப்படியே சிறைப்படுத்தும்!

சந்திரனைப்போலத்
தக தகவென்று ஒளிரும்
அந்த வழுக்கையில்தான்
அரசியலே உருவாகும்.

எந்தத் துயரினிலும்
இதயம் கலங்காதோய்!
முத்தமிழ்த் தோழ!
முனை மழுங்கா எழுத்தாள!

திருவாரூர்த் தேரினையே
சீராக்கி ஓட விட்டுப்
பரிசாகப் பெற்றவனே!
கருணாநிதித் தலைவ!
கவிதை வணக்கமிது

என்று கலைஞரைப் பாராட்டி கவிதை பாடிய கண்ணதாசனுக்கும் கலைஞருக்கும் இடையே எழுந்த விரிசல் பலமானது என்றாலும், அந்த விரிசலை மீறி ஒருவர் மீது ஒருவர் மாறா நட்பு கொண்டிருந்தனர்.
——————————————————————————————————————————————————–
கவிஞருக்கு கலைஞரின் கவிதை

“இல்லற ஜோதி’ படத்திற்காக எழுதப்பட்ட “அனார்க்கலி’ நாடகம்தான் கலைஞருக்கும் கவியரசருக்குமிடையே முதல் விரிசலை ஏற்படுத்தியது. அந்த விரிசலை ஒரு அகழி அளவுக்கு விரிவாக்கியதில் இரு தரப்பிலுமிருந்த “நல்ல’ நண்பர்களின் பங்கு அதிகமாக இருந்தது.

பத்திரிகைகளில் பத்து கவிதைகளும், சினிமா படங்களுக்காக 5 பாடல்களும் மட்டுமே எழுதியிருந்த நிலையில் கண்ணதாசனை “கவிஞர்’ என்று மேடயில் அழைத்து பெருமைப்படுத்தியவர் கலைஞர்தான் என்பதை நான் ஏற்கனவே இக்கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.

கலைஞர் அவர்களோடு கருத்து வேற்றுமை வந்த காலங்களில் கூட அதை மறக்காமல் பல பத்திரிகைகளில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர். “”கருணாநிதியும் நானும் எழுதத் தொடங்கியது ஏறக்குறைய ஒரே காலத்தில்தான்.

நான் அவரது எழுத்தைத்தான் முதலில் காதலித்தேன். என்னுடைய எழுத்துக்களில் அவருக்குள்ள ஈடுபாடுகள் போலவே அவரது எழுத்துக்களில் எனக்கு ஈடுபாடு உண்டு.

அரசியலில் பதவிகள் வரலாம். போகலாம். ஆனால் நிலையான இடத்தைப் பெற்றுத் தரும் “ரிக்கார்டு’ எழுத்துதான். எழுத்துத் துறையில் கருணாநிதியை மிஞ்சக் கூடியவர் எவரும் இல்லை. பதவி போய் விட்டாலும் அவர் நிலைத்து நிற்கப் போவது அவரது எழுத்துக்களில்தான்.

முதல் முதலாக பொள்ளாச்சி கூட்டத்தில்தான் என்னைப் பேச வைத்து பேச்சாளனாக அரங்கேற்றினார் கருணாநிதி. பேசத் தெரியாத நான் பேசப் பழகிக் கொண்டேன். ஆமாம். என்னை அரசியல் மேடையில் பேச “ஆதிமுதலாய்’ அரங்கேற்றி வைத்தவரே அவர்தான்.

அவரோடு பல சுற்றுப் பயணங்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அவரோடு போகும் நான் ஆரம்பத்தில் மேடைகளில் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பேச மாட்டேன். அப்படிக் குறுகிய நேரம் நான் பேசுவதற்கே கலைஞர் என்னைக் கேலி செய்வார் ஆனால் அதற்கடுத்தக் கூட்டத்திலும் என்னைக் கட்டாயம் பேச வைப்பார்.

அப்படி வற்புறுத்தி பேச வைத்தே என்னை அவர் அரை மணி நேரம், முக்கால்மணி நேரம், சில நேரங்களில் ஒரு மணி நேரம்கூடத் தயங்காமல் பேசும் ஒரு வழக்கமான கழகப் பேச்சாளராக்கி விட்டார்.

நான் அரசியலுக்கு வந்தது, பேச்சாளரானது இதெல்லாம் பாவமோ, புண்ணியமோ அவரைத்தான் சேரும்” என்று பல கால கட்டங்களில் குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன்.

கண்ணதாசனது இந்தத் திறந்த மனதை கலைஞர் பல முறை பாராட்டி மகிழ்ந்திருக்கிறார். “”எனக்கும் அவருக்கும் ஆயிரம் மனவேறுபாடுகள், ஆயிரம் கருத்து வேறுபாடுகள் வந்த பிறகும்கூட எந்த ஒரு இடத்திலும் முதன்முறையாக நான்தான் அவரை “கவிஞர்’ என்று அடைமொழியிட்டு அழைத்தேன் என்பதை கண்ணதாசன் என்றைக்கும் சொல்ல மறந்ததில்லை. அப்படி நன்றி உள்ளவர் கண்ணதாசன்.

பல பேர் நன்றியை மறந்துவிடுவார்கள். அதுவும் என்னுடைய வாழ்க்கையில் நன்றி மறந்தவர்கள் ஏராளமானவர்கள். ஆனால் அரசியலில் தனிப்பட்ட முறையில் சில நேரங்களில் அவர் எனக்குப் பகையாக மாறியும்கூட அந்த நன்றியைக் கடைசி வரை மறக்காமல் “என்னை முதன்முதலில் கவிஞர் என்று அழைத்தவர் கருணாநிதிதான்’ என்று கூறுவார் கண்ணதாசன்.

அதை மகிழ்ச்சியான நேரத்தில் மட்டுமல்ல! என்னைத் திட்டி எழுதிய புத்தகத்தில் கூட அதை மூடி மறைக்காமல் மனம் திறந்து அவர் எழுதியிருக்கிறார்” என்று பலமுறை கலைஞர் பரவசப்பட்டதுண்டு.

கவிஞர் மறைந்தபோது கலங்கிய கண்களுடன் அவருக்கு அஞ்சலி செலுத்திய கலைஞர் அவர்கள் எழுதிய இரங்கற்பா அந்த இருவரின் நட்பின் ஆழத்துக்கு சாட்சியாக இன்றும் விளங்குகிறது.

“”என் இனிய நண்பா
இளவேனிற் கவிதைகளால்
இதய சுகம் தந்தவனே! உன்
இதயத் துடிப்பை, ஏன் நிறுத்திக் கொண்டாய்!

தென்றலாக வீசியவன் நீ- என் நெஞ்சில்
தீயாகச் சுட்டவனும் நீ! -அப்போதும்
அன்றிலாக நம் நட்பு திகழ்ந்ததேயன்றி
அணைந்த தீபமாக ஆனதேயில்லை நண்பா!

கண்ணதாசா! என்
எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா!
கவிதை மலர்த் தோட்டம் நீ -உன்னைக்
காலமென்னும் பூகம்பம் தகர்த்துத்
தரை மட்டம் ஆக்கி விட்டதே!

கை நீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம்
கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ!
கல்லறைப் பெண்ணின் மடியினிலும்
அப்படித்தான் தாவி விட்டாயோ;
அமைதிப் பால் அருந்தித் தூங்கிவிட!

இயக்க இசைபாடி களித்த குயில் உன்னை
மயக்க மருந்திட்டுப் பிரித்தார் முள்ளை
தாக்குதல் கணை எத்தனைதான் நீ தொடுத்தாலும்
தாங்கிக் கொண்ட என் நெஞ்சே உன் அன்னை

திட்டுவதும் தமிழில் நீ திட்டியதால்- சுவைப்
பிட்டு என ஏற்றுக் கொண்ட என்னை;
தித்திக்கும் கவித்தமிழா! பிரிவின்
மத்தியிலே ஏன் விட்டுச் சென்றுவிட்டாய்?

அடடா! அந்த இளமைக் கழனியில்
அன்பெனும் நாற்று நட்டோம்!
ஆயிரங் காலத்துப் பயிர் நம் தோழமையென
ஆயிரங் கோடிக் கனவுகள் கண்டோம்!

அறுவடைக்கு யாரோ வந்தார்!
உன்னை மட்டும் அறுத்துச் சென்றார்!
நிலையில்லா மனம் உனக்கு! ஆனால்
நிலை பெற்ற புகழ் உனக்கு!

இந்த அதிசயத்தை விளைவிக்க -உன்பால்
இனிய தமிழ் அன்னை துணை நின்றாள்
என் நண்பா! இனிய தோழா!

எத்தனையோ தாலாட்டுப் பாடிய உன்னை
இயற்கைத் தாய் தாலாட்டித் தூங்க வைத்தாள்!
எத்தனையோ பாராட்டுப் பெற்ற உனக்கு
இயற்கைத் தாயின் சீராட்டுத்தான் இனிக்கிறதா?

எனை மறந்தாய்! எமை மறந்தாய்! உனை
மறக்க முடியாமல் உள்ளமெல்லாம் நிறைந்தாய்!”

என்று கலைஞர் எழுதிய கவிதாஞ்சலி கவிஞரின் பிரிவு எந்த அளவு கலைஞர் அவர்களைப் பாதித்தது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

“”தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் பெயர்களுக்கு இணையாக சுவரொட்டிகளில் வசனகர்த்தாவின் பெயரும் இடம்பெற முன்னோடியாக இருந்தவர் கருணாநிதி.

கதை – வசனம் மு.கருணாநிதி என்று ஒரு படத்தின் விளம்பரம் வந்தாலே அதன் வெற்றிக்கு உத்திரவாத முத்திரை குத்தப்பட்டது” என்று தனது “திரை வளர்த்த தமிழ்’ நூலின் முதல் தொகுதியில் “பேசும் படம்’ ஆசிரியர் ஆசிரியர் திரு. ராம்நாத் அவர்களால் பாராட்டப்பட்ட கலைஞர், “பூம்புகார்’ திரைப் படத்தைத் தொடர்ந்து “மணிமகுடம்’, “மறக்க முடியுமா’, “அவன் பித்தனா’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார்.

அவரது வாழ்க்கையில் அரசியல் -சினிமா என்று வரும்போது அரசியலுக்கே முதலிடம் என்ற திடமான சிந்தனையோடு திரை உலகில் அடி எடுத்து வைத்தவர் என்பதால் 1967-ல் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அவரது கலை உலகப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது என்பது உண்மை.

1967-ல் வெளியான “தங்கத் தம்பி’ “வாலிப விருந்து’ ஆகிய படங்களைத் தொடர்ந்து 1970-ல் “எங்கள் தங்கம்’ திரைப்படம் வெளிவந்தது.

மாடர்ன் தியேட்டர்ஸில் இணைந்த அந்த இரு மாபெரும் கலைஞர்களும் இணைந்து பணியாற்றிய கடைசி திரைப்படம் “எங்கள் தங்கம்’தான். எம்.ஆர். ராதா எம்.ஜி.ஆரைத் துப்பாக்கியால் சுட்டதையும், அதில் அவர் உயிர் மீண்டதையும் குறிக்கும் வகையில்,

“நான் செத்துப் பொழச்சவன்டா-எமனைப்
பார்த்துச் சிரிச்சவன்டா
வாழை போல வெட்ட வெட்ட முளைச்சு
சங்கு போல சுடச்சுட வெளுத்து
வளரும் ஜாதியடா’

என்று தொடங்கும் அப்பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
1972-ல் தனது மகன் மு.க.முத்துவை “பிள்ளையோ பிள்ளை’ திரைப்படத்தின் மூலம் கலையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் கலைஞர். “அஞ்சுகம் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் உருவான இப்படத்தின் சிறப்புக் காட்சியில் பங்கு பெற எம்.ஜி.ஆர் வந்திருந்தார்.

“”புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்தான் என் ஆசான்” என்று மு.க.முத்து பேசியதைப் பற்றி தனது உரையில் குறிப்பிடும்போது, “”துரோணாச்சாரியாரை ஆசானாகக் கொண்டு ஏகலைவன் வில் வித்தையிலே தேர்ச்சிப் பெற்றதைப் போல இங்கே எம்.ஜி.ஆரை ஆசான் என்று கூறிய முத்து அப்படிப்பட்ட புகழையும் சிறப்பையும் பெற வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டார் கலைஞர்.

இறுதியாக மு.க.முத்துவை வாழ்த்திப் பேச வந்த எம்.ஜி.ஆர், “”என்னை ஆசானாக ஏற்றுக் கொண்டிருப்பதாக தம்பி மு.க. முத்து பேசினார். அதைக் கேட்டுப் பெருமைப்படுகிறேன்.

ஆனால் முத்து ஒரு நாள் கூட என்னிடம் நடிப்புக்காக வந்ததில்லை. ஏகலைவன் மானசீகமாகக் குருவை எண்ணி வித்தையில் தேர்ந்தான் என்பது போல என் படங்களைப் பார்த்து அதன்படி நடிக்க விரும்புகிறார் முத்து என்று எண்ணுகிறேன்.

ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்தன்மை- நடிப்பு இருக்கிறது. அதில்தான் செல்ல வேண்டும். முத்து தனக்கென்று தனி வழியை நடிப்பதற்கு வகுத்துக் கொண்டு நடிகராக வளர வேண்டும்” என்று வாழ்த்துகிறேன் என்று பேசினார்.

தி.மு.கழகத்தில் பல நெருக்கடியான சந்தர்ப்பங்களில் எல்லாம் இணைந்து செயலாற்றி பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய வல்லமை படைத்த இரு ஆற்றல் மிகுந்த சக்திகளான கலைஞர் அவர்களுக்கும், எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இடையே இருந்த நெருக்கமான உறவிற்கு குறுக்கே முதல் கோட்டை இழுத்தது மு.க.முத்துவின் திரையுலகப் பிரவேசம்.

Posted in ADMK, Anna, AVM, Biosketch, Chettiyar, Cinema, dialogues, DMK, Express, Faces, Films, Ganesan, History, Incidents, Kalainjar, Kannadasan, Kannadhasan, Kannathasan, Karunanidhi, Kaviarasu, Kavidhai, Kavithai, Life, MGR, Movies, Muthu, people, Poems, Shivaji, Sivaji, Sridhar, Tidbits, Trivia | 1 Comment »

The path to Nirvana: Mahasivarathri to Vaikunda Ekadasi

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

மோட்சத்துக்குப் போகும் வழி!

ராணிப்பேட்டை ரங்கன்


“தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அவர்க்கொரு குணம் உண்டு’ என்பது வெற்று வார்த்தைகள் மட்டும் அல்ல, அனுபவபூர்வமாக உணர்ந்து சொன்னவை.

தமிழ்நாட்டவர்களின் பக்தி, நாட்டின் பிற மாநிலத்தவரின் பக்தியைவிட அலாதியானது. கல்தோன்றி மண்தோன்றா காலத்திலிருந்தே இங்கே பக்தி “”ஒரு மார்க்கமாகத்தான்” வளர்ந்து வருகிறது.

வேப்பிலை ஆடை கட்டுவது, மண் சோறு சாப்பிடுவது, மார்பில் கத்தி போடுவது, தலையில் தேங்காய் உடைப்பது, பாய்ந்து சென்று கோழியை வாயால் கவ்வி ரத்தம் குடிப்பது, திருமணம் ஆகாத கன்னிப்பெண் ஆடை அணியாமல் ஊரை வலம் வருவது (பாரதி ராஜா சொல்லாவிட்டால் நமக்கு இது தெரிந்திருக்கவே வாய்ப்பு இல்லை), தனியா சேர்க்காமல் மிளகாயை மட்டும் யாகத்தில் சேர்ப்பது, பாடைக் காவடியில் படுத்துச் செல்வது, தூக்கம் என்ற நேர்ச்சையில் தொங்குவது, ஏரோப்ளேன் காவடி, லாரி-வேன் டிரெய்லர் காவடி என்று பக்தியில் இத்தனை ரகங்களா என்று வியக்கவைப்பதில் வல்லவர்கள் தமிழர்கள்.

சென்னை மாநகர பஸ்ஸில் வந்துகொண்டிருந்தபோது அந்த சுவரொட்டி சற்றே வித்தியாசமாகக் கண்ணில்பட்டது. “”ஒரே காட்சியில் 3 திரைப்படங்கள்” என்பதே அது.

ஐம்பெரும் அறிஞர் கலைஞரும், சூப்பர் ஸ்டார் ரஜினியும் உச்சத்தில் இருக்கும்போதே தமிழ் திரையுலகுக்கு இப்படிப்பட்ட சரிவா என்று துணுக்குற்றேன். “”ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்” என்பது போய், மூன்றாகிவிட்டதே என்ற சிந்தனையோடு பஸ்ஸிலிருந்து இறங்கி, அதே சுவரொட்டியை அருகில் இருந்து படித்தேன். அப்போதுதான் தெளிவு பிறந்தது.

ஆம்… மகா சிவராத்திரிக்குத்தான் இந்த 3 திரைப்பட சிறப்புக் காட்சி. அடடா… தமிழ்நாட்டில் இன்னாருக்குத்தான் பக்தி, இன்னாருக்கு இல்லை என்று அவசரப்பட்டு நாம் ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. பக்த சிரோன்மணிகளின் நன்மைக்காகவே கோடம்பாக்கத்தார் சிந்தித்து இப்படி ஒரு விரதா வியூகத்தை வகுத்துத் தந்திருக்கிறார்கள்.

வைகுண்ட ஏகாதசியன்று இரவு முழுக்க கண் விழித்திருந்தால் மோட்சம் நிச்சயம் என்பதால், வெவ்வேறு வழிகளில் அதை கடைப்பிடித்தும் எதுவும் வெற்றிகரமாக இல்லாததால், பகுத்தறிவும் பக்தியும் ஒருங்கே கைவரப்பெற்ற தமிழன், ஏகாதசியன்று இரவில் ஒரே காட்சியில் 3 திரைப்படங்களைப் பார்த்து “மோட்சத்துக்குப்’ போக ஆரம்பித்தான். (அப்படி அந்த நாளில் தவறவிட்டவனுக்காகவே சென்னையில் மோட்சம் என்ற பெயரில் தியேட்டரைக் கட்டி வைத்திருக்கிறார்கள்)

வைணவத்துக்கு ஏகாதசி என்றால் சைவத்துக்கு சிவராத்திரி அல்லவா? சைவர்கள் மட்டும் தூங்கி நரகத்துக்குப் போக வேண்டுமா என்ற ஆதங்கத்தில்தான் இந்த 3 திரைப்படங்கள்.

இத் திரைப்படங்களின் பெயர்களை வெளியிட விரும்பவில்லை, ஆனால் நல்ல பேக்கேஜ். அதில் ஒன்று மலையாளப்படம். சிவராத்திரி மட்டும் அல்ல, அதை அடுத்து வரும் ராத்திரிகளுக்கும் கண்விழிப்பு நிச்சயம்.

எங்கு எதைச் செய்தாலும் அதை பக்தி பூர்வமாகச் செய்வதில் தமிழனுக்கு நிகரே கிடையாது. முன்பெல்லாம் தனியார்தான் ஒயின் கடை வைத்திருந்தார்கள். மறக்காமல் விநாயகா ஒயின்ஸ், வெங்கடேஸ்வரா ஒயின்ஸ், அருணாசலா ஒயின்ஸ் என்று எல்லாவற்றையும் அந்த பரம்பொருளுக்கு அர்ப்பணித்துவிட்டே தொழிலை நடத்திவந்தார்கள்.

ஒன்று நிச்சயம் ஐயா, தமிழ்நாட்டில் பிறந்தவன் கூடாத நட்பால் பொதுவுடமைவாதியாகவோ, பகுத்தறிவாளனாகவோ மாறினால்கூட அவனை அந்த நடராஜன், சிவராத்திரி சமயத்தில் காந்தம்போல இழுத்துவிடுகிறான். எப்படி என்று கேட்காதீர்கள், அது “சிதம்பர ரகசியம்’.

Posted in Bakthi, Belief, bhakthi, Cinema, Ekadasi, Films, God, Hindu, Hinduism, Hindutva, Mahashivarathri, Mahasivarathri, Moksha, Movies, Nirvana, Religion, shivarathri, shivrathri, sivarathri, sivrathri, Superstition | Leave a Comment »

‘No protection for Tamil Movie Producers’ – Kasthoori Raja & Selvamani

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 1, 2008


தயாரிப்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை
“சினிமா எடுப்பதை விட கூலி வேலைக்கு போகலாம்”
சினிமா பட விழாவில், டைரக்டர்கள் கஸ்தூரிராஜா-செல்வமணி வேதனை


சென்னை, பிப்.1-

“சினிமா தயாரிப்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. படம் எடுப்பதை விட, கூலி வேலைக்கு போகலாம்” என்று ஒரு பட விழாவில் டைரக்டர்கள் கஸ்தூரிராஜா, செல்வமணி ஆகிய இருவரும் பேசினார்கள்.

சினிமா பட விழா

புதுமுகங்கள் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து, சந்தர்நாத் டைரக்டு செய்துள்ள புதிய படம், `கண்களும் கவிபாடுதே.’ கே.ஜி.ரங்கமணி, ஆர்.நந்தகுமார், பி.ரமேஷ் ஆகிய மூன்று பேர் சேர்ந்து தயாரிக்கும் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது.

விழாவில், `பிலிம்சேம்பர்’ தலைவர் கே.ஆர்.ஜி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம நாராயணன், நடிகர் சத்யராஜ், டைரக்டர்கள் கஸ்தூரிராஜா, செல்வமணி, பட அதிபர் எச்.முரளி, இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம நாராயணன் பேசும்போது, “திரையுலகுக்கு தமிழக அரசு ஏராளமான சலுகைகளை வழங்கி இருக்கிறது. என்றாலும், இந்த வருடம் பொங்கல் வெளியீடாக வந்த 6 படங்களும் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை. இந்த நிலை மாற வேண்டும்” என்று கூறினார்.

கே.ஆர்.ஜி.

`பிலிம்சேம்பர்’ தலைவர் கே.ஆர்.ஜி. பேசும்போது, “50 படங்கள் தயாரித்தவன், நான். ஆனால் இப்போது, செல்வமணியிடம் உதவியாளராக சேர்ந்து விடலாமா? என்ற சூழ்நிலையில் இருக்கிறேன்” என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசவந்த டைரக்டர் கஸ்தூரிராஜா கூறியதாவது:-

“50 படங்கள் தயாரித்த கே.ஆர்.ஜி, செல்வமணியிடம் உதவியாளராக போகலாமா என்ற சூழ்நிலையில் இருப்பதாக குறிப்பிட்டார். நான், 35 படங்களில் உதவி டைரக்டராக வேலை செய்து இருக்கிறேன். 20 படங்களை டைரக்டு செய்துள்ளேன். 12 படங்களை தயாரித்து இருக்கிறேன். இனிமேல் படம் எடுக்க வேண்டுமா? என்ற கேள்விக்குறி பெரிதாக என் முன் நிற்கிறது.

ஒரு நடிகரால் 100 படங்கள் நடிக்க முடிகிறது. ஒரு லைட்மேனால் 100 படங்களில் பணிபுரிய முடிகிறது. ஆனால், இந்த காலத்தில் 10 படங்களுக்கு மேல் யாராவது தயாரிக்க முடிகிறதா? இதற்கு காரணம் என்ன? என்று தெரிந்துகொள்ளும் பொறுப்பை, ராம நாராயணனிடம் ஒப்படைக்கிறேன்.

பாதுகாப்பு இல்லை

தயாரிப்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கடன் வாங்கி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், தன்மானத்துடன் தொழில் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. இப்போது நான் ஒரு படம் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். ஒருநாள் கூட நிம்மதியாக படப்பிடிப்பு நடத்திவிட்டு வீட்டுக்கு வரவில்லை. இந்த நிலை பற்றி திரையுலகம் ஆலோசனை நடத்தவேண்டும். அதற்கான முயற்சியை, ராம நாராயணன் எடுக்க வேண்டும்.”

இவ்வாறு கஸ்தூரிராஜா பேசினார்.

செல்வமணி

அடுத்து பேச வந்த டைரக்டர் ஆர்.கே.செல்வமணி கூறியதாவது:-

“என்னிடம் உதவியாளராக சேர்ந்து விடலாமா என்று யோசிப்பதாக கே.ஆர்.ஜி. வருத்தத்துடன் சொன்னார். படம் எடுப்பது அந்த அளவுக்கு `டார்ச்சர்’ ஆன விஷயமாக இருக்கிறது.

சினிமா துறையில் இருந்தே விலகிவிடலாமா? என்ற எண்ணம் வருகிறது. வேறு ஏதாவது கூலி தொழில் செய்யலாம் போல் இருக்கிறது. சினிமாவில் செலவுகள் அதிகரித்து வருகிறது. நான் டைரக்டு செய்த `புலன் விசாரணை’ படத்தில், மிகப்பெரிய `கிளைமாக்ஸ்’ சண்டை காட்சி இடம்பெற்றது. அப்போது, `கிராபிக்ஸ்’ இல்லை.

ஆனால், இப்போது எல்லா சண்டை காட்சிகளிலும் `ரோப்’ (கயிறு) பயன்படுத்துகிறார்கள். அது படத்தில் தெரியுமே? என்று கேட்டால், `கிராபிக்ஸ்’சில் அழித்து விடலாம் என்கிறார்கள். தயாரிப்பாளர்களால், தொழில்நுட்ப கலைஞர்களை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.”

மேற்கண்டவாறு செல்வமணி பேசினார்.

உடனே கே.ஆர்.ஜி. எழுந்து வந்து, `மைக்’கை பிடித்தார்.

“பிரச்சினைகளை மேடையில் சொல்லக்கூடாது. அதற்கென்று சங்கம் இருக்கிறது. அங்கே சொல்லலாம். இது, மேடையில் விவாதிக்க வேண்டிய விஷயம் அல்ல. அந்தக்காலத்தில் ஸ்ரீதர் எனக்கு `துடிக்கும் கரங்கள்’ படத்தை 40 ரோல்களில் எடுத்துக்கொடுத்தார். பாரதிராஜா `சிவப்பு ரோஜாக்கள்’ படத்தை 30 ரோல்களில் எடுத்துக்கொடுத்தார். இப்போது முடியுமா? இவ்வளவு பேசுகிற கஸ்தூரிராஜாவை, பிரச்சினை வரும்போது தேடிப்பிடிக்க வேண்டியிருக்கிறது. சூழ்நிலை-சந்தர்ப்பத்துக்காக மட்டும் மேடையை பயன்படுத்தக் கூடாது” என்று கூறினார்.

சத்யராஜ் சமரசம்

தொடர்ந்து பேச வந்த சத்யராஜ், இரு தரப்பினரையும் சமரசம் செய்வது போல் பேசினார். “இது, குடும்பத்தில் நடந்த ஒரு கலந்துரையாடல். அவ்வளவுதான். திரையுலக நன்மைக்காக நடந்ததாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

முன்னதாக, டைரக்டர் சந்தர்நாத் வரவேற்று பேசினார். விழா முடிவில், பட அதிபர் ரங்கமணி நன்றி கூறினார்.

Posted in Cinema, Directors, Economy, Expenses, Films, Finance, Graphics, Incentives, Kasthoori raja, KasthooriRaja, kasthuriraja, KRG, Movies, Producers, Production, Protection, Rich, Security, Selvamani, Tax, Wealthy, YSR | Leave a Comment »

‘Sivaji – The Boss’ celebrations – 175th Day Event Coverage: Rajni speech

Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2008

“சிலபேருக்கு கடவுளை பிடிக்காது; ஆனால் அவர்களை கடவுளுக்கு பிடிக்கும்”
கருணாநிதி முன்னிலையில் ரஜினிகாந்த் பேச்சு

சென்னை, ஜன.12-

“சிலபேருக்கு கடவுளை பிடிக்காது. ஆனால் அவர்களை கடவுளுக்கு பிடிக்கும்” என்று ரஜினிகாந்த் பேசினார்.

வெள்ளி விழா

ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் டைரக்ஷனில், ஏவி.எம். நிறுவனம் சார்பில் எம்.சரவணன், எம்.எஸ்.குகன் ஆகிய இருவரும் தயாரித்த `சிவாஜி’ படம் 175 நாட்களை தாண்டி ஓடி வெள்ளி விழா கண்டது. இதையொட்டி அந்த படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பரிசளிக்கும் விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று இரவு நடந்தது.

விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டு `சிவாஜி’ படத்தில் நடித்த நடிகர்-நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கேடயங்களை வழங்கினார்.

ரஜினிகாந்த்

விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

“சிவாஜி படத்தில், சில அரசியல் விஷயங்கள் இருக்கிறது என்று தெரிந்திருந்தும், அந்த படத்தை பார்த்து பாராட்டிய முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த பெருமைக்குரிய படத்தில் நான் இருந்தது, பாக்கியம். ஏவி.எம்.சரவணன், ஷங்கர், படத்தில் வேலை செய்த தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பணம்

பணம் இருந்தால், உன்னையே உனக்கு தெரியாது. பணம் இல்லையென்றால் யாருக்கும் நீ தெரியமாட்டாய் என்று சொல்வார்கள். அந்த பணம் இருந்தபோதும், அது தலைக்கு போகாமல் தொழில்தான் முக்கியம் என்று அப்பா ஸ்தாபித்த நிறுவனத்தை காப்பாற்றுவதற்காக சரவணன் படும் சிரமங்களுக்கும், கஷ்டங்களுக்கும் தலைவணங்குகிறேன்.

அவருடைய மிகப்பெரிய சொத்து, அவருடைய மகன் குகன். தாத்தா மாதிரி நீங்களும் பெரிய பட அதிபர் ஆக, என் மனமார்ந்த வாழ்த்துகள்.

கே.பாலசந்தர்

`சிவாஜி’ படம் பார்த்துவிட்டு என் குருநாதர் கே.பாலசந்தர் எப்படி இப்படி எல்லாம் நடித்தாய்? என்று கேட்டபோது, அவர்கள், மூன்று முடிச்சு, அபூர்வ ராகங்கள் ஆகிய படங்களில் நடித்தபோது, உங்களிடம் எப்படி நான் கேள்வி கேட்காமல் நடித்தேனோ, அதேபோல்தான் ஷங்கர் என்ன சொன்னாரோ, அதைத்தான் செய்தேன் என்று சொன்னேன்.

பாலசந்தர் சாருக்கு பின்னால், நான் புளோரில் ஒரு டைரக்டரை பார்த்தேன் என்றால், அது ஷங்கர்தான். இப்படி சொல்வதால் நான் மற்ற டைரக்டர்களின் திறமையை குறைத்து மதிப்பிட்டதாக அர்த்தம் அல்ல. ஷங்கர், ஏகலைவன் மாதிரி. அது, பூர்வஜென்ம புண்ணியம்.

கபிலமுனி

நான் செய்யும் `சாங்கியோகா’வை கண்டுபிடித்த கபிலமுனி, “ஆசைப்படு…ஆசைப்பட்டதை அடைவதற்கு விஷயத்தை சேர்த்து வை…அப்படி சேர்த்து வைத்த விஷயத்தை சரியாக செயல்படுத்து…அது கொடுக்கும் பலனை முதலில் நீ அனுபவி… அதில் கொஞ்சம் நீ வைத்துக்கொள். மீதியை மற்றவர்களுக்கு கொடுத்து விடு” என்று கூறியிருக்கிறார்.

சாப்பிட்டதை எல்லாம் உடம்பில் வைத்துக்கொண்டால், உடம்பு கெட்டுப்போய்விடும். சம்பாதித்ததை எல்லாம் நாமே வைத்துக்கொண்டால், வாழ்க்கை கெட்டுப்போய்விடும்.

ஆசைப்படுவதற்கு நமக்கு தகுதி இருக்கிறதா? என்று முதலில் பார்க்கணும். சைக்கிள் வாங்குவதற்கே கஷ்டப்படுகிற ஒருவன், கார் வாங்க ஆசைப்பட்டால் எப்படி? ஆசைப்பட்டதை அடைய வேண்டும் என்றால், சரியான ஆட்களை சேர்த்துக்கொள். அதன்பிறகு ஆகாயமே கீழே விழுந்தாலும், `காம்ப்ரமைஸ்’ ஆகாதே. நினைத்ததை செயல்படுத்திவிடு… இதைத்தான் ஷங்கர் செய்துகொண்டிருக்கிறார்.

`ரோபோ’

அடுத்து, நாங்கள் இருவரும் சேர்ந்து செய்யப்போகிற படம், `ரோபோ.’ மிகப்பெரிய படம்.

`ரோபோ’ படம், கடவுள் ஆசீர்வாதத்தில், சிவாஜி அளவுக்கு வெற்றிபெறவேண்டும்.

அடுத்து கே.பாலசந்தர் சாருக்காக ஒரு படம் நடிக்கிறேன். அதையடுத்து சவுந்தர்யா டைரக்ஷனில், `சுல்தான் தி வாரியர்’ படத்தில் நடிக்கிறேன். அதையடுத்து, `ரோபோ’ வரும்.

சாய் பாபா

சாய்பாபாவை நேரில் பார்க்க, நான் நான்கு முறை முயற்சி செய்தேன். பெங்களூரில் இரண்டு தடவை. புட்டபர்த்தியில் ஒரு தடவை. இங்கே சென்னையில் ஒரு தடவை. இங்கே வந்தபோது, அவரை நான் சந்தித்தேன். வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடுங்க, வருவார் என்று சொன்னார்கள். நானும் வீட்டுக்கு வாங்க என்று கூப்பிட்டேன். அவர், பெருந்தலைவர் காமராஜர் `டயலாக்’க்கை சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

கடவுளுக்கு பிடிக்கும்

ஆனால், அதே சாய்பாபா கலைஞர் வீட்டுக்கு வந்து, அவரை சந்தித்தார். நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். சில பேருக்கு கடவுளை பிடிக்காது. ஆனால், கடவுளுக்கு அவர்களை பிடிக்கும்.

வேண்டுகோள்

இந்த சமயத்தில், கலைஞர் அவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். கலையுலக விழாவாக இருந்தாலும் சரி, இலக்கிய விழாவாக இருந்தாலும் சரி, உங்களை தவிர யாரும் கண்ணுக்கு தெரியவில்லை. யாரும் கிடையாது. நீங்கதான் கலந்துகொள்ள வேண்டும்.

அதற்காக, உங்கள் உடல் நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்.”

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

ஷங்கர்

டைரக்டர் ஷங்கர் பேசும்போது, “ரோபோ படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க வேண்டியிருக்கும். அதற்கு தமிழ் பட பட்ஜெட் தாங்காது என்பதால்தான், இந்தியில் படமாக்க முயன்றேன். சில காரணங்களால், அந்த திட்டம் நின்றுபோனது. `சிவாஜி’ படத்தின் வெற்றியும், வசூலும் `ரோபோ’ படத்தை தமிழில் எடுக்கலாம் என்ற நம்பிக்கையை எனக்கு தந்தது. ரஜினி, ஏ.ஆர்.ரகுமான் போன்ற மிகப்பெரிய சக்திகள் ஒன்றாக சேர்ந்துள்ளதால், ரோபோவை மிக சிறந்த படமாக கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

வைரமுத்து

கவிஞர் வைரமுத்து பேசும்போது, “ஏவி.எம். நிறுவனத்தின் மகுடம், `சிவாஜி’ படம். நான் ரஜினியை பற்றி ஒரு விஷயம் பேசவேண்டும். ஒரு மனிதன் பேசுவதில்லை. ஆனால் பேசப்படுகிறார். அவர் விளம்பரத்தை விரும்புவதில்லை. ஆனால், அவர் இல்லாமல் விளம்பரம் இல்லை. அவருக்கு அரசியல் இல்லை. ஆனால், அவரை சுற்றி அரசியல் இல்லாமல் இல்லை. தமிழ்நாட்டுக்கு ரஜினி கொடுத்த உற்சாகம் கொஞ்சம் அல்ல. அவர் நினைத்தால், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு விதம்விதமாக செய்திகள் சொல்லலாம்” என்றார்.

நடிகை ஸ்ரேயா பேசும்போது, “சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடித்தது என் அதிர்ஷ்டம். மீண்டும் அவருடன் நான் நடிக்க விரும்புகிறேன். மீண்டும் மீண்டும் அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன்” என்றார்.

ஏவி.எம்.சரவணன்

நடிகர்கள் சுமன், விவேக், வி.எம்.சி.அனீபா, பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, பேச்சாளர் ராஜா, கவிஞர்கள் பா.விஜய், நா.முத்துக்குமார், எழுத்தாளர் சுஜாதா, ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் ஆகியோரும் பேசினார்கள்.

ஏவி.எம்.சரவணன் வரவேற்று பேசினார். படத்தின் இணை தயாரிப்பாளரான டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் நன்றி கூறினார்.

Posted in 175, Actors, Actress, AVM, Baba, Celebrations, Cinema, Coverage, Events, Films, Functions, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, KB, Loss, Movies, Profit, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Robo, Robot, Saibaba, Sankar, Shankar, Shivaji, Shreya, Shriya, Sivaji, Speech, Sreya, Sriya, Tax, The Boss, Vairamuthu | 1 Comment »

Jallikkattu in Tamil Nadu: Supreme Court ban on bullfight, Alanganallur jallikattu, Bull-taming festival

Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2008

அலங்காநல்லுõர் ஜல்லிகட்டில் சீறி பாய்ந்தன 302 காளைகள்

அலங்காநல்லுõர்: உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லுõர் ஜல்லிகட்டு சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் படி நேற்று சிறப்பாக நடந்தது. இதில் 302 காளைகள் அவிண்ழ்த்து விடப்பட்டன. 347 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிகட்டை காண நேற்று அதிகாலையிலேயே அலங்காநல்லுõரில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் குவிந்தனர். மாடுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வாடிவாசலில் வரிசையாக நிறுத்தப்பட்டன. அவற்றை கால்நடை டாக்டர்கள் சோதித்தனர். மாடுபிடி வீரர்களுக்கு நீலக்கலரில் பனியன், டிரவுசர் வழங்கப்பட்டு அவர்கள் மட்டும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். வி.ஐ.பி.,க்கள், சுற்றுலா பயணிகள், பத்திரிகையாளர்கள், பார்வையாளர்களுக்கு தனித்தனி காலரிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

வீரர்களுக்கு எச்சரிக்கை:

முத்தாலம்மன், முனியாண்டி மற்றும் காளியம்மன் கோயில்களில் கலெக்டர் ஜவஹர், மூர்த்தி எம்.எல்.ஏ., அன்பு எஸ்.பி., நகர் நல கமிட்டி தலைவர் ரகுபதி, செயலாளர் பெரியசாமி, பேரூராட்சி தலைவர் அழகு உமாதேவி, துணைத்தலைவர் செல்வராணி மற்றும் கிராம கமிட்டியினர் வழிபாடு செய்தனர். கலெக்டர் ஜவஹர் முதல் காளையினை அவிழ்த்து ஜல்லிகட்டை துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், “தமிழக பாரம்பரியம், கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் இந்த ஜல்லிகட்டு, பெரிய போராட்டத்திற்கு பிறகு நடக்கிறது. இதனை மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் மனதில் கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் இந்த ஜல்லிகட்டை பார்த்து கொண்டுள்ளனர். மாடுபிடி வீரர்களை தவிர வேறு யாரும் மைதானத்திற்குள் நுழைய கூடாது. மாடுகளின் வாலை பிடிக்கவோ, மண்ணை துõவவோ கூடாது. சுப்ரீம் கோர்ட், தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலை பின்பற்றினால் மட்டுமே தொடர்ந்து ஜல்லிகட்டை நடத்த முடியும்’ என்றார்.

காளையரிடம் சிக்காத காளைகள்:முதலில் கோயில் காளைகளும் பிறகு மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. அந்த காளைகளை பிடிக்க மாடு பிடி வீரர்கள் முயன்றனர். குறிப்பாக பல்லவராயன்பட்டி கண்ணன், ஜெய்ஹிந்துபுரம் முருகேசன் போன்றோரது மாடுகள் வீரர்களிடம் சிக்காமல் மைதானத்திற்குள் 10 நிமிடங்கள் போக்கு காட்டி பார்வையாளர்களை பரவசப்படுத்தின. சில வீரர்களை காளைகள் முட்டி துõக்கி எறிந்தன. இருப்பினும் சில மாடுகளை வீரர்கள் 15 மீட்டர் வரை பிடித்து சென்று பரிசுகளை பெற்றனர். பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

வீரர்கள் வெளியேற்றம்:

காளைகளின் மீது மண்ணை துõவியவர்களை பார்த்த கலெக்டர், மைதானத்திற்குள் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். பார்வையாளர்கள் காலரியில் இருந்து மாடுகளை பிடிக்க முயன்றவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். வாடிவாசலில் இருந்து அவிழ்த்த விடப்பட்ட காளைகள் வழிநெடுகிலும் அமைக்கப்பட்ட மூங்கில் தடுப்புகளால் ஊருக்கு வெளிப்புற தோப்புகளுக்கு சென்றன. பார்வையாளர்களுக்குள் திடீர் மோதல் ஏற்பட்டது. இதனை கூடல்புதுõர் எஸ்.ஐ., முருகன் மற்றும் போலீசார் தடுக்க முயன்றனர். அவர்கள் மீது கூட்டத்தினர் கல் வீசியதில் எஸ்.ஐ.,க்கு காயம் ஏற்பட்டது.

கலெக்டர் பேட்டி:

கலெக்டர் ஜவஹர் கூறுகையில், “கடந்தாண்டு மாடுகளை பிடிக்க முயன்ற 100 பேர் வரை காயமுற்றனர். இந்தாண்டு 4 பேர் மட்டும் காயமுற்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 10 பேர் சிறுகாயம் அடைந்தனர். சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் ஜல்லிகட்டு சிறப்பாக நடந்தது’ என்றார். சிங்கப்பூரை சேர்ந்த லிங் ஜியா என்ற மாணவி கூறுகையில், “மாடுகளை துன்புறுத்தாத அளவு நடந்த ஜல்லிகட்டை பார்க்கும்போது திரில்லாகவுள்ளது. மாடுபிடி வீரர்கள் மிக நேர்த்தியாக மாடுகளை பிடிக்கின்றனர். பசுமையான இந்தஊரில் நடந்த ஜல்லிக்கட்டை மறக்க முடியாது’ என்றார்.

வாடிவாசலில் இருந்து…:

காளையை 2 பேர் பிடித்தால் பரிசுகள் வழங்கப்படவில்லை. வாடிவாசலில் இருந்து 15 மீட்டர் துõரம் வரை காளையின் திமிலை பிடித்து ஒருவராக அடக்குவோருக்கு மட்டும் பரிசுகள் வழங்கப்பட்டன. பார்வையாளர் காலரிக்கும் மைதானத்திற்கும் 2 அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பாகவும் நடந்தது. பிராணிகள் நலச்சங்கத்தினரும் கண்காணித்தனர்.

* ஜல்லிக்கட்டை பார்க்க காலரி கட்டணம் ரூ.100 நிர்ணயம் செய்து அங்குள்ள தியேட்டரில் அதற்கான டிக்கெட் வழங்கப்பட்டது. அவற்றை மொத்தமாக வாங்கிய சிலர் ரூ. 400 வரை விற்றனர்.

*வீட்டு உரிமையாளர்கள் சிலர் பார்வையாளர்களிடம் கட்டணம் வாங்கி கொண்டு மாடிகளில் நின்று ஜல்லிகட்டை பார்க்க செய்தனர். வாகனங்களை நிறுத்தவும் கட்டணம் வசூலித்தனர்.

* முடுவார்பட்டியை சேர்ந்த மூத்த மாடு பிடி வீரர் முனியசாமி வீரர்களுக்கு அடிக்கடி காளைகளை அடக்கும் விதம் குறித்து “டிப்ஸ்’ வழங்கிக்கொண்டு இருந்தார்.

* ஐ.ஜி., சஞ்சீவ்குமார், போலீஸ் கமிஷனர் நந்தபாலன், டி.ஐ.ஜி., ஜெயந்த் முரளி மேற்பார்வையில் 1200 போலீசார் மற்றும் 85 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

*வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்த ஒரு காளையின் திமிலை பிடித்து அடக்கிய வீரர் நாகராஜனுக்கு மு.க.அழகிரி மகன் தயாநிதி ரூ.500 பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார்.

*முத்தையா, சுரேஷ், சரவணன், மகாராஜன் போன்றவர்கள் பல காளைகளை மடக்கி பரிசுகளை பெற்றனர். தங்கம், வெள்ளி நாணயங்கள், பீரோ, மிக்ஸி, அண்டா போன்றவை பரிசுகளாக வழங்கப்பட்டன.

*எஸ்.ஐ., மீது கல்வீச்சையடுத்து ஜல்லிகட்டு சிறிதுநேரம் தடைப்பட்டது. கூட்டத்தினரை போலீசார் அமைதிப்படுத்தியதையடுத்து தொடர்ந்த ஜல்லிகட்டு மாலை 5 மணியுடன் முடிக்கப்பட்டது. அவிழ்த்து விடாத சில மாடுகளுக்கு கிராம கமிட்டி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

42 காளைகளுக்கு அனுமதி மறுப்பு:

அலங்காநல்லுõர் ஜல்லிகட்டில் மொத்தம் 427 காளைகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் 42 காளைகள் மருத்துவ சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படவில்லை. இந்த காளைகள் மது ஊட்டப்பட்டது மற்றும் திமில்களில் விளக்கெண்ணெய் பூசிய காரணங்களால் நிராகரிக்கப்பட்டன. மாலை 5 மணிக்குள் ஜல்லிகட்டை முடிக்க வேண்டும் என்பதால் 302 காளைகள் மட்டுமே அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை பிடிக்க 370 பேர் பதிவு செய்தனர். அவர்களில் 23 பேருக்கு மருத்துவ மற்றும் உடற்கூறு காரணங்களால் காளைகளை பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இவர்களில் சிலர் போதையில் இருந்தது தெரிந்தது.

kutramtop.jpgஒரு லட்சம் பேர் பார்வையிட்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
மாடுகள் முட்டி 66 பேர் காயம்

மதுரை, ஜன.18-

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று பலத்த பாதுகாப்புடன் நடந்தது. இதில், மாடுகள் முட்டி 66 பேர் காயம் அடைந்தனர்.

ஜல்லிக்கட்டு

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெறுமா? என்ற சந்தேகத்தில் குழம்பிப்போய் இருந்த மக்களுக்கு ஆறுதலான முடிவு பொங்கல் அன்று வெளியானது. ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை சுப்ரீம் கோர்ட்டு விலக்கியது. இதனை அடுத்து நேற்று முன்தினம் பாலமேடு ஜல்லிக்கட்டு நடந்தது. அதன்பின்னர் நேற்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக நடந்தது.

இதற்காக ஜல்லிக்கட்டு நடைபெறும் கோட்டை மாரியம்மன் கோவில் திடலில் வாடிவாசலுக்கு முன்பு இருபுறமும் கம்புகளால் 400 மீட்டர் நீளத்துக்கு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அதன்மீது 5 அடி உயரத்துக்கு கம்பி வலை கட்டப்பட்டு இருந்தது.

அதே போல் வாடிவாசலுக்கு உள்ளே மாடுகளை பாதுகாப்பான முறையில் நிறுத்தவும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதுதவிர பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க வசதியாக மரக்கட்டைகளால் ஆன காலரிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

ஜல்லிக்கட்டு மாடுகளை அதன் உரிமையாளர்கள் நேற்று முன்தினம் மாலையே லாரிகளிலும், டிராக்டர்களிலும் கொண்டு வந்து பெயரை பதிவு செய்தனர். மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து மாடுகள் வந்து இருந்தன. அதேபோல் மாடு பிடி வீரர்களும் மதுரை மட்டுமின்றி சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் வந்து தங்கள் பெயரை பதிவு செய்தனர்.

500 காளைகள்

நேற்று காலையில் டாக்டர் காமராஜ் தலைமையில் 24 கால்நடை டாக்டர்கள் உள்பட 50 பேர் கொண்ட குழுவினர் மாடுகளை பரிசோதித்தனர். மாடுகள் நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றனவா? சாராயம், பிராந்தி போன்ற போதை தரும் பொருள் எதுவும் கொடுக்கபட்டு உள்ளனவா? என்று பரிசோதித்தார்கள்.

சில மாடுகளுக்கு கூர்மையான கொம்புகள் இருந்தன. அந்த கொம்பினால் யாருக்கும் ஆபத்து ஏற்படாமல் இருக்க அதை சீவி மட்டுப்படுத்தினர். சிலர் தங்கள் மாட்டின் கொம்புகளுக்கு எண்ணை தடவி வந்தனர். அதிகாரிகள் அதை துடைத்து அப்புறப்படுத்தச் சொன்னார்கள். பின்னர் தேர்வு செய்யப்பட்ட மாடுகளுக்கு முத்திரை குத்தி அனுமதி வழங்கினார்கள். மொத்தம் 500 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன. கால்கடைகளுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையை இந்திய பிராணிகள் நல உறுப்பினர் எல்லப்பன், புளு கிராஸ் அமைப்பைச் சேர்ந்த பனிமா, ராஜேஷ் ஆகியோர் கண்காணித்தனர்.

மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர் கிருஷ்ணன் தலைமையில் 50 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து மாடுபிடிக்க அனுமதி அளித்தனர். குறிப்பாக அவர்கள் மது அருந்தி இருக்கிறார்களா? என்று சோதனை செய்தனர். மொத்தம் 200-க்கும் மேற்பட்டவர்கள் மாடுபிடிக்க தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நீல நிற பனியனும், கால்சட்டையும் சீரூடையாக வழங்கப்பட்டது.

ஒரு லட்சம் பேர்

ஜல்லிக்கட்டை காண நேற்று காலை முதலே பார்வையாளர்கள் திரண்டு வந்தனர். காலரிகள் நிரம்பி வழிந்தன. தடுப்புகளுக்கு வெளியே ஏராளமானோர் கூடி நின்றனர். அந்த பகுதியில் உள்ள மொட்டை மாடிகளிலும் பலர் குவிந்து இருந்தனர். எங்கும் இடம் கிடைக்காத சிலர் அருகில் உள்ள மரங்கள் மீது ஏறி இருந்தனர்.

அமெரிக்கா, ஜப்பான் உள்பட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுமார் 200 பேர் ஜல்லிக்கட்டை காண வந்திருந்தனர். அவர்களுக்கு தனியாக ஒரு காலரி ஒதுக்கப்பட்டு இருந்தது. மொத்தம் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வந்து இருந்தனர்.

பயமுறுத்திய காளைகள்

பகல் 11-30 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதலில் முத்தாலம்மன் முனியாண்டி கோவில் மாடு வாடிவாசலில் இருந்து விடப்பட்டது. அது கோவில் மாடு என்பதால் அதை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் தனியார் மாடுகள் ஒவ்வொன்றாக விடப்பட்டன. காளைகளை வாடிவாசலில் இருந்து விடும்போது அதன் மூக்கணாங்கயிறையும் கழுத்தில் கட்டப்பட்டிருந்த ஜலங்கையையும் அவிழ்த்து விட்டனர். சிலர் தங்கள் காளையின் கழுத்தில் புது துணியை கட்டி அதனுள் பணத்தை வைத்திருந்தனர்.

மாடு வாடிவாசலில் இருந்து வெளியே வரும்முன்னர் அந்த மாடு யாருடையது? அதன் தோற்றம் எப்படி? கொம்புகள் எப்படி வளர்ந்துள்ளன? என்பன போன்ற விவரங்களை அறிவிப்பாளர்கள் அறிவித்தார்கள். ஒரு மாட்டை ஒருவரே அடக்க வேண்டும் என்பதால் வீரம் செறிந்த மாடு வந்தபோது புதுமுக வீரர்கள் ஒதுங்கி விட்டனர்.

பந்தாடிய காளைகள்

ஓங்கிய திமிலுடன் கூடிய காளைகள் வீரர்களை பயமுறுத்தியபடி வந்தன. அவை சிறிது நேரம் வாடிவாசலில் நின்று கால்களால் மண்ணை கிளரி நோட்டம் பார்த்த பின்னரே சீறிப்பாய்ந்தன. அந்த காளைகளையும் அடக்குவதற்கு வீரர்கள் அதிக ஆர்வம் காட்டினர். சில காளைகள் வீரர்கள் பிடியில் சிக்காமல் மைதானத்துக்குள் சுழன்று சுழன்று வந்து முட்டி தள்ளின. இன்னும் சில காளைகள் பிடிக்க வந்த வாலிபர்களை கொம்புகளால் குத்தி பந்தாடியது. அவர்கள் சினிமா சண்டை காட்சியில் வருவதுபோல் தூக்கி வீசப்பட்டனர்.

அதேநேரம் வீரர்களும் சளைக்காமல் காளையை துரத்திச் சென்று அதன் திமிலை பிடித்து அடக்கினர். ஒருசில வீரர்கள் பாய்ந்து வந்த காளையை நேர் எதிரே நின்று அடக்க போரிட்டனர். இந்த காட்சிகள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

மாடுகளை பிடித்த வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளிக் காசு, பீரோ, கட்டில், அண்டா மற்றும் பணமுடிப்புகள் வழங்கப்பட்டன. காளைகளை யாரும் அடக்காவிட்டதால் அந்த பரிசு மாட்டின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டது.

கல்வீச்சு

ஜல்லிக்கட்டை காண நிமிடத்துக்கு நிமிடம் கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது. மாலை 4 மணி அளவில் பார்வையாளர்கள் நிற்க இடம் இல்லாமல் மைதானத்தைவிட்டு மாடுகள் வெளியே வரும் இடத்துக்கு வந்துவிட்டனர். அவர்களை ஒதுங்கி நிற்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள தடுப்பு கம்புகள் உடைந்தன. இதனால் கூட்டத்தினரை கட்டுப்படுத்த போலீசார் திணறினார்கள். லத்தியை சுழற்றியபடி போலீசார் வந்தனர்.

அப்போது சிலர் போலீசாரை நோக்கி கற்களை வீசினார்கள். இதில் கூடல்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூக்கன் மற்றும் கனிராஜ், ஜெயக்கொடி, கணேசன் உள்பட 6 போலீசார் காயம் அடைந்தனர்.

காயம்

பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆண்டு காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. மொத்தம் 66 பேர் காயம் அடைந்தனர்.
சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடை நீங்கியதால் மகிழ்ச்சி
மதுரை அருகே பாலமேட்டில்
ஜல்லிக்கட்டு உற்சாகமாக நடைபெற்றது
அதிகாரிகளின் தீவிர கண்காணிப்புடன் விழா

சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடை நீங்கியதால், மதுரை அருகே உள்ள பாலமேட்டில் ஜல்லிக்கட்டு உற்சாகத்துடன் நடைபெற்றது. அதிகாரிகளின் தீவிர கண்காணிப்புடன் விழா நடைபெற்றது.

மதுரை, ஜன.17-

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மற்றும் சுற்றுப்பகுதியில் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.

பட்டாசு வெடித்து

உலக பிரசித்தி பெற்ற இந்த ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்தது. இதனால் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தமிழக அரசு எடுத்த உடனடி நடவடிக்கையின் பேரில் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது.

சுப்ரீம் கோர்ட்டு தடை நீங்கியதால், சோர்ந்து கிடந்த கிராமங்கள் சுறுசுறுப்படைந்தன. பட்டாசுகளை வெடித்தும், தெருவில் ஆடிப்பாடியும் கிராம மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

பாலமேட்டில் கோலாகலம்

ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களில் ஆயத்த பணிகள் உடனடியாக தொடங்கிவிட்டன. நேற்று மதுரையை அடுத்த பாலமேட்டில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்தது. அனுமதி பெறப்பட்ட காளைகள் மட்டுமே களத்தில் இறக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

மதுரை, அலங்காநல்லூர், வாடிப்பட்டி, நத்தம், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சை, உள்பட பல்வேறு பகுதியில் உள்ள மாடு வளர்ப்பவர்கள் தங்கள் மாடுகளை டிராக்டர்-லாரிகளில் ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் மாலையே பாலமேடு வந்துவிட்டனர்.

டாக்டர்கள் பரிசோதனை

அங்கு கால்நடை டாக்டர்கள் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஒவ்வொரு மாட்டையும் பரிசோதித்தனர். அந்த மாடு ஜல்லிக்கட்டுக்கு தகுதியானதுதானா? அதற்கு மது ஏதும் ஊட்டப்பட்டதா? என்பன போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டன.

பின்னர் தகுதியான காளைகளுக்கு அனுமதி அளித்து அதன் முதுகில் சீல் குத்தினர். மொத்தம் 400-க்கு மேற்பட்ட காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

நீல நிற சீருடை

இதேபோல் அனுமதி பெறப்பட்ட மாடுபிடி வீரர்கள் மட்டுமே காளைகளை அடக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்து இருந்தனர். இதனால் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி போன்ற மாவட்டங்களை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் நேற்று முன்தினமே அனுமதி பெறுவதற்காக பாலமேடு வந்தனர்.

அவர்களின் உடல் தகுதியை டாக்டர்கள் பரிசோதித்து அனுமதி வழங்கினர். இறுதியில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாடுகளை பிடிக்க தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நீல நிற பனியனும், கால்சட்டையும் சீருடைகளாக வழங்கப்பட்டன.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் மஞ்சள்மலை ஆற்று திடலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாடுகளை திறந்துவிடும் வாடிவாசலுக்கு இருபுறமும் சுமார் 300 மீட்டர் நீளத்துக்கு கம்புகளால் ஆன தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது. யாரும் தடுப்பை தாண்டி உள்ளே நுழைந்துவிடாதபடி இருக்க தடுப்புக்கு மேலே கம்பி வலை அமைக்கப்பட்டு இருந்தது.

மதுரை மாவட்ட கலெக்டர் எஸ்.எஸ்.ஜவகர் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டனர். போலீஸ் சூப்பிரண்டு அன்பு, துணை சூப்பிரண்டு தங்கராஜ் ஆகியோர் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மாடுகள் சித்ரவதைக்குள்ளாக்கப்படுகின்றனவா? என்பதை கண்காணிக்க பிராணிகள் நல வாரிய உறுப்பினர் எல்லப்பன், `புளூ கிராஸ்’ அமைப்பை சேர்ந்த பி.டி.மணிமா, ரமேஷ் ஆகியோர் வந்து இருந்தனர்.

வெளிநாட்டு பயணிகள்

நேற்று காலையிலேயே ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வந்து இருந்தனர்.

அவர்கள் தடுப்பு வேலிக்கு இருபுறமும் திரளாக கூடி இருந்தனர். இதுதவிர ஆங்காங்கே சிலர் பரண் அமைத்து அதன்மீது ஏறி அமர்ந்திருந்தனர். அருகே உள்ள மொட்டை மாடிகளிலும், மரங்களிலும் பலர் ஏறி அமர்ந்திருந்தனர்.

சீறிப்பாய்ந்த காளைகள்

காலை 11 மணி அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. மைதானத்துக்குள் மாடுபிடி வீரர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசலில் இருந்து முதலில் கிராமங்களில் உள்ள கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

கோவில் காளைகள் என்பதால் அவைகள் சுதந்திரமாக விடப்பட்டன. அதன்பின் தனியார் காளைகள் ஒவ்வொன்றாக விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த அந்த காளைகளை பலர் வீராவேசத்துடன் அடக்க முனைந்தனர். சில காளைகள் யாரின் பிடியிலும் அடங்காமல் திமிறி ஓடியபடி பந்தய மைதானத்தை கடந்து சென்றன. சில மாடுகளுக்கும், இளைஞர்களுக்கும் இடையே மைதானத்தில் கடுமையாக போட்டி நிலவியது. பலர் காளையின் கால்களுக்கு இடையே சிக்கி மிரண்டனர்.

பரபரப்பான காட்சிகள்

காளைகள் சீறினாலும் சிலர் அதன் திமிலை பிடித்து அடக்கினார்கள். மாடுகளின் திமிலை பிடிக்க முடியாத சிலர் அதன் வாலை பிடித்தபடி ஓடினார்கள்.

சில காளைகள் மைதானத்தில் நின்று அடக்கவந்தவர்களை சுழற்றி எறிந்து பந்தாடின. நீண்ட நேரம் பாய்ச்சல் காட்டி யாரிடமும் பிடிபடாமல் மைதானத்தில் இருந்து வெளியேறின. சில காளைகள் தங்கள் பார்வையாலும், பாய்ச்சலாலும், கால்களை தரையில் பிராண்டியும் மிரள வைத்தன. நிமிடத்துக்கு நிமிடம் மைதானத்தில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறியதால் ஒரே ஆரவாரமாக கணப்பட்டது.

மைதானத்துக்கு வெளியே

ஜல்லிக்கட்டு மைதானத்தில் 300 மீட்டர் நீளத்துக்கு தடுப்பு அமைக்கப்பட்டிருந்தாலும் அதற்கு அப்பாலும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவிழ்த்துவிடப்பட்ட காளைகள் மைதானத்தைவிட்டு வெளியே வந்த பின்னர் பொதுமக்களை கண்டு மிரண்டு மீண்டும் மைதானத்துக்குள் புகுந்தன.

இதனால் ஒரே நேரத்தில் 2 காளைகள் மைதானத்தில் களம் இறக்கப்பட்டது போல் காணப்பட்டது. ஆனாலும் பாதுகாப்பு வீரர்கள் அந்த மாட்டை உடனே வெளியேற்றினர்.

மாடுபிடிக்க அனுமதி இடைக்காத சிலர் மைதானத்துக்கு வெளியே வந்த காளைகளை அடக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று இந்த இடத்தில் மாடுகளை அடக்கக் கூடாது என்று எச்சரித்தனர்.

காயம்

மாலை 5-30 மணி வரை ஜல்லிக்கட்டு நடந்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் உயிர்சேதம் ஏதும் இன்றி ஜல்லிக்கட்டு இனிதே முடிந்தது.

ஆனாலும் காளைகளை அடக்க முயன்றபோது மாடுகள் முட்டியும், அதன் கால்களுக்கு இடையே சிக்கியும் 85 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் பாலமேட்டைச் சேர்ந்த கோபால், கண்ணனேந்தல் பாண்டி, முடுவார்பட்டி முனியாண்டி, புதுக்கோட்டை கார்த்திக் உள்பட 14 பேர் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு பாலமேடு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

மைதானத்தை விட்டு வெளியே மாடுகள் அந்த கூட்டத்தினரை பார்த்து மிரண்டு ஓடியது. அப்போது மாடு முட்டி நாகர்கோவிலைச் சேர்ந்த புவனேஷ், பாறைப்பட்டியைச் சேர்ந்த பூச்சிதேவர், சிச்சிலுப்பை கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன், நத்தம் மணக்காட்டூரைச் சேர்ந்த கண்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு பாலமேடு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பரிசு

போட்டியின் இறுதியில் மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், பீரோ, டிவி, மற்றும் ரொக்கப்பணம் போன்றவை பரிசுகளாக வழங்கப்பட்டன. அதேபோல் யாரிடமும் பிடிபடாமல் வந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் போலீசாரால் வீடியோ படம் எடுக்கப்பட்டது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சூரிïர் ஜல்லிக்கட்டு

திருச்சி அருகே உள்ள சூரிïரிலும் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனைப்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 300-க்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 5 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் ஜல்லிக்கட்டு விழாவை கண்டு ரசித்தனர்.

போட்டியில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில், 46 வீரர்கள் காயம் அடைந்தனர்.

சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல்
ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்குமா?
நாளை தெரியும்

ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கும்படி கோரி, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தடை உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு நீக்குமா? என்பது நாளை (செவ்வாய்க்கிழமை) தெரியும்.

சென்னை, ஜன.14-

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு, சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது.

தமிழக அரசு மனு

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார். அதன்படி, ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கும்படி சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் தேவஜோதி ஜெகராஜன் தலைமையில் உயர் அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை விமானம் மூலம் டெல்லி விரைந்தனர். நேற்று விடுமுறை நாள் என்பதால், சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் வீட்டிற்கு சென்று, தமிழக அரசின் வக்கீல் வி.ஜி.பிரகாசம் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தார். நேற்று இரவு 7 மணி அளவில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

நாளை தெரியும்

இந்த மனு நாளை (செவ்வாய்க்கிழமை) தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது என்று தமிழக அரசின் வக்கீல் வி.ஜி.பிரகாசம் தெரிவித்தார்.

எனவே, ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடை நீங்குமா? என்பது, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி முன்னிலையில் நாளை நடைபெறும் விசாரணையின்போது தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலோசனை

சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வதற்காக அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழுவில், பொதுத்துறை செயலாளர் தேவஜோதி ஜெகராஜன், மதுரை மாவட்ட கலெக்டர் ஜவஹர், உளவுத் துறை போலீஸ் ஐ.ஜி. ஜாபர்சேட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நேற்று காலை அவர்கள் டெல்லி புறப்படுவதற்கு முன்பாக, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் மற்றும் உயர் அதிகாரிகள், சட்டநிபுணர்களுடன் அப்பீல் மனு குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

டெல்லியில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியனிடமும் ஆலோசனை நடத்தியபின்பு மறு ஆய்வு மனு இறுதி செய்யப்பட்டது.

மனு விவரம்

கடந்த வெள்ளிக்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையின்போது, எந்த சட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது? என்று நீதிபதிகள் தமிழக அரசு வக்கீலிடம் கேள்வி எழுப்பி இருந்தனர்.

எனவே, அதற்கான சட்டபூர்வ ஆதாரங்கள் தமிழக அரசு சார்பில் திரட்டப்பட்டு அதன் விவரங்கள் மறு ஆய்வு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளன. காலம் காலமாக நடைபெற்று வரும் நிகழ்வுகளை மதித்து நடக்கவேண்டும் என்று, பாரம்பரிய பண்பாட்டு சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதும் ஒரு ஆதாரமாக மனுவில் எடுத்துக் கூறப்பட்டு இருக்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1909-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் கலெக்டராக பதவி வகித்த தேர்ஸ்டன் என்பவர் எழுதிய புத்தகத்தில் 400 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருவதாகவும், அதனை தடை செய்ய தேவை இல்லை என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த தகவலும் மனுவில் ஆதாரமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத நல்லிணக்கம்

மதம், மொழி, இன மாறுபாடு இல்லாமல், அனைத்து சமூகத்தினருக்கும் இடையே நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஆண்டாண்டு காலமாக இந்த வீர விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. மத அடிப்படையில் நடைபெறும் சடங்குகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று, சர்வதேச சட்டம் வலியுறுத்தி உள்ளது.

அதன் அடிப்படையில், மதச்சடங்குகள், மதம் சார்ந்த வழிபாடு தொடர்புடைய கொண்டாட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிட உரிமை இல்லை என்று உரிமையியல் நடைமுறை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பதும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை
சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

தமிழர்களின் வீர விளையாட்டான `ஜல்லிக்கட்டு’ போட்டிக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது. தடையை நீக்க கோரும் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

புதுடெல்லி, ஜன.12-

தமிழ்நாட்டில், பொங்கல் பண்டிகையின்போது `ஜல்லிக்கட்டு’ போட்டி நடத்தப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட்டு தடை

மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில், ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு, பிரசித்தி பெற்றதாகும்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு தடை விதித்தது. இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், இதற்கான உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்தது.

தமிழக அரசு அப்பீல்

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று கோரி, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஜே.எம்.பாஞ்சால் ஆகியோரைக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் முன்னிலையில் இந்த அப்பீல் மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

தடை நீடிப்பு

தமிழக அரசு மற்றும் விலங்குகள் நல வாரிய தரப்பின் விவாதங்களை கேட்ட நீதிபதிகள், ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீடித்து உத்தரவிட்டனர். தடையை நீக்க கோரும் தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நேரத்தில், அதிகாரிகளின் மேற்பார்வையில் தகுந்த பாதுகாப்புடன் ரேக்ளா போட்டி நடத்த நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “பாரம்பரிய வழக்கம் என்ற பெயரில் விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதை தொடர அனுமதிக்க முடியாது. ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க விரும்பவில்லை. மனித நேயத்துடன், மேலும் நாகரீகமான முறையில் இந்த போட்டியை மாற்ற முயற்சிக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டனர்.

நீதிபதிகள் கேள்வி

தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அந்திஅர்ஜ×னா, தனது வாதத்தின்போது “ஜல்லிக்கட்டு, கடந்த 400 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டுவரும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியின்போது, விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை” என்று குறிப்பிட்டார்.

விலங்குகள் நல வாரியம் சார்பில் ஆஜரான வக்கீல் வேணுகோபால் ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக்கூடாது என்று வாதாடினார். விவாதத்தின்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த போட்டியின் போது யாரும் காயம் அடையாமல் பார்த்துக் கொள்வதாக தமிழக அரசு சார்பில் உறுதியளிக்க முடியுமா? அதுகுறித்து போலீஸ் டி.ஜி.பி. உத்தரவாதம் அளிக்க தயாரா?” என்று கேள்விக்கணை தொடுத்ததுடன், அதுபற்றி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படியும் கேட்டுக்கொண்டனர்.

வீடியோ ஆதாரம்

போட்டியின் போது சிலர் காயம் அடையலாம் என்பதால் அதுபற்றி உத்தரவாதம் அளிக்க இயலாது என்று தமிழக அரசின் வக்கீல் அந்தி அர்ஜ×னா கூறினார். மராட்டிய மாநிலத்தில் `ஜென்மாஷ்டமி’ பண்டிகையின்போது நடத்தப்படும் `உறியடி’ நிகழ்ச்சியின் போது ஒருவர் மீது ஒருவர் ஏறும்போது சிலர் காயம் அடைவதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அந்த நிகழ்ச்சியின்போது விலங்குகள் எதுவும் கொடுமைப்படுத்தப்படுவதில்லை என்று பதில் அளித்தனர்.

முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது, ஐகோர்ட்டு விதித்த நிபந்தனையின்படி யாருக்கும் எந்தவித பாதிப்பும் இன்றி போட்டி நடைபெற்றதற்கு ஆதாரமான வீடியோ மற்றும் பத்திரிகைகளில் வெளியான ஆவணங்களை மதுரை மாவட்ட கலெக்டர் சார்பில் நீதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகாப்புடன் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் விதிமுறைகள் பற்றி தமிழக அரசு சார்பில் எடுத்துச்சொல்லப்பட்டும் தடையை நீக்குவதற்கு நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

ஒரு மாவட்டத்திலாவது

தங்கள் வாதத்தில் நீதிபதிகள் திருப்தி அடையாததை புரிந்து கொண்ட தமிழக அரசின் வக்கீல் குறைந்த பட்சம் ஒரு மாவட்டத்திலாவது ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தடையை நீக்கும்படி கோரி மனு தாக்கல் செய்துள்ள ஒரு கிராம கமிட்டி சார்பில் ஆஜரான வக்கீல்கள் சட்டத்தில் தடை செய்யப்படாத ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

இதனால் கோபம் அடைந்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், “எந்த சட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக சொல்கிறீர்கள்? எந்த சட்டத்திலும் அனுமதி வழங்கப்படவில்லை. மனிதர்களுக்கும், காளைகளுக்கும் எந்தவித மோதலும் இருக்கக்கூடாது. காளைகள் கொடுமைப்படுத்தப்படவில்லை என்றால், விலங்குகள் நல வாரியத்தினர் ஏன் கோர்ட்டுக்கு வருகிறார்கள்?” என்றார்.

கண்களில் மிளகாய்ப்பொடி

விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் வாதாடிய வக்கீல் கே.கே.வேணுகோபால் கூறியதாவது:-

“ஜல்லிக்கட்டு நடத்துவது விலங்குகள் கொடுமைப்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தை மீறுவதாகும் என்பதால், அதை தடை செய்வது மாநில அரசின் கடமை. அது பாரம்பரியமான நிகழ்ச்சி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், விதிமுறைகளை மீறி அந்த போட்டியை நடத்துவதை நிறுத்த வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரியானதுதான்.

போட்டி நடைபெறுவதற்கு முன்பு காளைகளுக்கு ஆக்ரோஷம் வருவதற்காக மது (சாராயம்) கொடுக்கப்படுவதுடன் கண்களில் மிளகாய்ப்பொடியும் தூவப்படுகிறது. பல கிலோமீட்டர் தூரத்துக்கு காளைகள் விரட்டப்படுவதுடன் நூற்றுக்கணக்கான இளைஞர்களால் காளைகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன.”

இவ்வாறு வக்கீல் வேணுகோபால் வாதாடினார்.

மேனகா காந்தி மகிழ்ச்சி

ஜல்லிக்கட்டுக்கு தடையை நீடித்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை, முன்னாள் மத்திய மந்திரியும் விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி மகிழ்ச்சியுடன் வரவேற்று இருக்கிறார். “சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, விலங்குகளை வதைக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு எதிரான போராட்டத்தில் முன்னேற்றகரமான ஒரு நடவடிக்கை. பல உயிர்களை பலிகொண்ட ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டத்தை மேற்கொண்ட விலங்குகள் நல வாரியத்தை பாராட்டுவதாக” அவர் குறிப்பிட்டார். என்றாலும் ரேக்ளா போட்டியை நடத்துவதற்கு அனுமதி வழங்கியதற்கு மேனகா வருத்தம் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும்படி போராடி வெற்றி பெற்றுள்ள விலங்குகள் நல வாரிய தலைவர் டாக்டர் கர்ப், தீர்ப்பு குறித்து தனது மகிழ்ச்சியை வெளியிட்டார். “ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டி போன்ற நிகழ்ச்சிகளுக்கு நிரந்தர தடை விதிக்கவேண்டும் என்று, சென்னையை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் தாராராவ் வற்புறுத்தி இருக்கிறார்.

`மிருகம்’ படத்தில்
ஜல்லிக்கட்டு காட்சி நீக்கத்தை எதிர்த்து படஅதிபர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை, ஜன.12-

சாமி டைரக்ஷனில் உருவான `மிருகம்’ படத்தில் ஜல்லிக்கட்டு காட்சியை நீக்க உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று படஅதிபர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜல்லிக்கட்டு காட்சி

சாமி டைரக்ஷனில் உருவான படம் `மிருகம்’. நடிகர் ஆதி கதாநாயகனாகவும், நடிகை பத்மபிரியா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்த படத்தின் நிர்வாக இயக்குனர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

`எய்ட்ஸ்’ விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் `மிருகம்’ படம் தயாரிக்கப்பட்டது. `எய்ட்ஸ்’ நோயாளி என்னென்ன துன்பங்களை அனுபவிக்கிறார் என்பதை இப்படத்தில் சித்தரித்து காட்டியுள்ளோம். கதாநாயகன் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதாக காட்சியை உருவாக்கினோம். இதற்காக பிராணிகள் நல வாரியத்திடம் தகவல் தெரிவித்தோம். படப்பிடிப்பு முடிந்ததும் தணிக்கை சான்றிதழ் பெற பிராணிகள் நல வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் கேட்டோம். கடைசி நேரத்தில் சான்றிதழ் தர வாரியம் மறுத்துவிட்டது.

காட்சி நீக்கம்

இந்த படத்தில் ஜல்லிக்கட்டு காட்சி முக்கியம் என்று கூறியும், பிராணிகள் நல வாரியம் கேட்கவில்லை. ஜல்லிக்கட்டு காட்சியை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டதால் அதை நீக்கிவிட்டோம். இந்த காட்சியை நீக்கிய பிறகுதான் தணிக்கை சான்றிதழ் கிடைத்தது. இதன் பின்னர் இந்த படத்தை வெளியிட்டோம்.

இந்த காட்சியை நீக்கியதால் படத்தின் ஒட்டுமொத்த கதையும் மாறிவிட்டது. இந்த காட்சியை நீக்கியதால் எங்களுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, ஜல்லிக்கட்டு காட்சியை நீக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை இக்கோர்ட்டு ரத்து செய்யவேண்டும். மீண்டும் அந்த காட்சியை இணைத்து திரையிட அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நோட்டீசு

இந்த மனுவை நீதிபதி வி.தனபாலன் விசாரித்தார். இதுபற்றி வருகிற 22-ந் தேதிக்குள் பதில் தருமாறு பிராணிகள் நல வாரியத்திற்கு நோட்டீசு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

Posted in 4213917, abuse, Alanganalloor, Alanganallur, Alankanalloor, Alankanallur, Animals, Ban, Beef, Bull, Bull-taming, bullfight, Chauvinism, Cinema, Courts, Culture, Custom, Customs, Euthanasia, Festival, Films, Games, Heritage, Hindu, Hinduism, Inhumane, jallikattu, Jallikkattu, Judges, Justice, Law, Literature, Maadu, Males, Maneka, Meat, Men, Menaka, milk, Mirugam, Movies, Order, Padmapriya, Palamedu, Pathmapriya, Pongal, Prime ribs, Religion, RSS, Rural, Sallikattu, Sallikkattu, Sangam, SC, Society, SPCA, Sports, Steak, Steakhouses, Tamil Nadu, TamilNadu, taming, TN, Torture, Tradition, Vegans | Leave a Comment »

New Cinema Releases for Pongal – Tamil Film updates & Movie Reviews

Posted by Snapjudge மேல் ஜனவரி 15, 2008

பொங்கல் படங்கள் முன்னோட்டம்

இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு விக்ரம், மாதவன், சேரன், சிம்பு, பரத், அசோக், சத்யராஜ், வடிவேலு ஆகியோரின் எட்டு படங்கள் வெளியா கின்றன. அவற்றைப் பற்றிய முன்னோட்டம்…

காளை

சிம்பு, வேதிகா, நிலா நடித்துள்ள படம். “திமிரு’ படத்தை இயக்கிய தருண்கோபி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். காதல், ஆக்ஷன் கலந்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின்போது வழக்கம்போல சிம்புவுக்கும் இயக்குநருக்கும் பிரச்னை ஏற்பட்டது. அது ஒரு வழியாகத் தீர்க்கப்பட்டவுடன் தயாரிப்பாளரின் ஃபைனான்ஸ் பிரச்னை தொடங்கியது. இளைஞர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன.

இசை -ஜி.வி.பிரகாஷ்குமார். பாடல்கள் -வாலி. ஒளிப்பதிவு -ஆர்.டி.ராஜசேகர். சண்டைப் பயிற்சி -கனல்கண்ணன். படத்தொகுப்பு -ஆண்டனி. தயாரிப்பு -நிக் ஆர்ட்ஸ்.

பலம் -ஆக்ஷன்.

பிரிவோம் சந்திப்போம்

இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடிக்கும் இன்னொரு படம். சினேகா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயராம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கூட்டுக் குடும்பத்தின் மேன்மையை வலுவான கதை, திரைக்கதையின் பின்னணியில் உருவாக்கியிருக்கிறார் கரு.பழனியப்பன். “பார்த்திபன் கனவு’, “சிவப்பதிகாரம்’ படங்களுக்குப் பிறகு இவர் இயக்கும் படம் இது. முன்னது வெற்றியையும் பின்னது தோல்வியையும் சந்தித்ததால் இந்தப் படத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முனைப்புடன் கடுமையாக உழைத்திருக்கிறார் கரு.பழனியப்பன். பாடல்கள் மிகச் சிறப்பாக வந்துள்ளன.

இசை -வித்யாசாகர். பாடல்கள் -யுகபாரதி, கபிலன், ஜெயந்தா. ஒளிப்பதிவு -எம்.எஸ்.பிரபு. தயாரிப்பு -ஞானம் ஃபிலிம்ஸ் (பி) லிட்.

பலம் -இயக்கம்.

இந்திரலோகத்தில் நா.அழகப்பன்

“இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தையடுத்து வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் பிரமாண்டமான படம். இதில் பூலோகவாசி, இந்திரன், எமன் என வித்தியாசமான மூன்று வேடங்களில் நடித்துள்ளார் வடிவேலு. தீதா சர்மா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார். பூலோகத்தில் வாழும் வடிவேலு இந்திரலோகத்துக்கும் எமலோகத்துக்கும் சென்று காமெடி கலாட்டா செய்வதுதான் கதை. படத்தை வடிவேலுவின் நண்பரும் அவருக்குக் காமெடி ட்ராக் எழுதுபவருமான தம்பி ராமையா இயக்கியுள்ளார். படத்துக்கு மிகப் பெரிய பலம் தோட்டாதரணி உருவாக்கியுள்ள பிரமிக்க வைக்கும் அரங்குகள். “சிவாஜி’யில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்ரேயா இந்தப் படத்தில் வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

இசை -சபேஷ்முரளி. பாடல்கள் -புலமைப்பித்தன். ஒளிப்பதிவு -கோபிநாத். படத்தொகுப்பு -ஹர்ஷா. தயாரிப்பு -செவன்த் சேனல் நிறுவனம்.

பலம் -புதுமையான நகைச்சுவை.

வாழ்த்துகள்

“தம்பி’ வெற்றிப் படத்துக்குப் பிறகு இயக்குநர் சீமான்-மாதவன் கூட்டணி சேர்ந்துள்ள படம். தன்னைப் போல பிறரையும் நேசிக்க வேண்டும்; பெற்றவர்களைக் காப்பாற்றாதவன் மற்றவர்களைக் காப்பாற்ற முடியாது என்ற கருத்தை மையமாக வைத்து ஆபாசம், ஆங்கிலக் கலப்பில்லாமல் படத்தை உருவாக்கியிருக்கிறார் சீமான். “ஆரியா’ படத்துக்குப் பிறகு மாதவனுடன் பாவனா ஜோடியாக நடிக்கிறார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தயாரிப்பாளர் சிவா இந்தப் படத்தை சாய்மீரா நிறுவனத்தின் உதவியுடன் தயாரித்திருக்கிறார். சிவாவின் “அரவிந்தன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன்ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

பாடல்கள் -நா.முத்துக்குமார். ஒளிப்பதிவு -பெ.லோ.சஞ்சய். படத்தொகுப்பு -கா.பழனிவேல். தயாரிப்பு -அம்மா கிரியேஷன்ஸ்.

பலம் -வலுவான கதை.

பிடிச்சிருக்கு

“முருகா’ படத்தில் நடித்த அசோக், புதுமுகம் விசாகா நடித்துள்ள படம். சம்பத், சரண்யா, கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லிங்குசாமியின் உதவியாளர் கனகு இயக்கியிருக்கிறார். காதலில் வெற்றி பெற கத்தியின்றி ரத்தமின்றி ஒரு புதுமையான வழியைக் காட்டும் படம். சண்டைக் காட்சிகள் இல்லாத குறையை இந்தப் படத்தின் திருப்பம் நிறைந்த திரைக்கதை நீக்கும் என்கிறார் இயக்குநர். இசைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் மூலம் மனு ரமேஷன் என்ற புதிய இசையமைப்பாளர் அறிமுகமாகிறார். கதாநாயகன் அசோக் மும்பையில் நடன இயக்குநராகப் பணியாற்றியதால் நடனக் காட்சிகள் புதுமையாக அமைக்கப்பட்டுள்ளன.

பாடல்கள் -யுகபாரதி, விவேகா, ச.ரமேஷன் நாயர். ஒளிப்பதிவு -த.வீ.ராமேஸ்வரன். படத்தொகுப்பு -கு.சசிகுமார். நடனம் -காதல் கந்தாஸ். தயாரிப்பு -கூல் புரொக்ஷன்ஸ்.

பலம் -திரைக்கதை.

பழனி

“திருப்பதி’ படத்துக்குப் பிறகு பேரரசு இயக்கும் படம். பரத், புதுமுகம் காஜல் அகர்வால், குஷ்பு ஆகியோர் நடித்துள்ளனர். அக்கா-தம்பி பாசத்தை மையமாக வைத்து காமெடி, சென்டிமெண்ட் கலந்து படத்தை உருவாக்கியுள்ளார் பேரரசு. வழக்கம்போல இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ள பேரரசு முதல்முறையாக இந்தப் படத்தில் சொந்தக் குரலில் ஒரு பாடலையும் பாடியுள்ளார். பரத் முதல்முறையாக முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். பாடல் காட்சிகள், பிரமாண்டமான க்ளைமாக்ஸ் காட்சி ரசிகர்களைக் கவரும். வழக்கமான பரத் படங்களை விட இந்தப் படத்தை அதிக பட்ஜெட்டில் தயாரித்துள்ளார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம்.

வசனம் -ரவிமரியா. இசை -ஸ்ரீகாந்த் தேவா. ஒளிப்பதிவு -விஜய் மில்டன். படத்தொகுப்பு -வீ.ஜெய்சங்கர். சண்டைப் பயிற்சி -தளபதி தினேஷ். தயாரிப்பு -சினிமா பாரடைஸ்.

பலம் -ஆக்ஷன், சென்டிமெண்ட்.

பீமா

லிங்குசாமி இயக்கத்தில் விக்ரம்-த்ரிஷா நடித்துள்ள படம். பல பிரச்னைகளால் இரண்டு வருடம் தாமதமாக வெளியாகிறது. நிழல் உலக தாதாக்கள் பற்றிய இந்தப் படத்துக்காக சுமார் 15 கிலோ எடையைக் கூட்டி முரட்டு இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விக்ரம். த்ரிஷாவின் காஸ்ட்யூம்களுக்காகவே இந்தப் படம் பேசப்படும் என்கிறார்கள். ஹாலிவுட் தரத்துக்கு நிகரான சண்டைக் காட்சிகள் வித்தியாசமான கோணங்களில் படமாக்கப்பட்டுள்ளன. பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. லிங்குசாமி, விக்ரம் ஆகியோரை விட படத்தின் வெற்றியை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.

வசனம் -எஸ்.ராமகிருஷ்ணன். இசை -ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்கள் -தாமரை, நா.முத்துக்குமார், பா.விஜய், யுகபாரதி. ஒளிப்பதிவு -ஆர்.டி.ராஜசேகர். சண்டைப் பயிற்சி -கனல் கண்ணன். படத்தொகுப்பு -ஆண்டனி. தயாரிப்பு -ஸ்ரீசூர்யா மூவிஸ்.

பலம் -பெரிய கலைஞர்களின் கூட்டணி.

Posted in Actors, Actress, Alagappan, Ashok, Azhagappan, Barath, Bharath, Bhavana, Bhavna, Bhawana, Bhawna, Bheema, Cheran, Cinema, Films, INA, Indralogathil Naa Azhagappan, Kaalai, Kalai, Karu Pazhaniappan, Lingusami, Lingusamy, Madhavan, Mathavan, Movies, Nila, Palani, Palaniappan, Pazani, Pazhani, Pazhaniappan, Perarasu, Pidichirukku, Pongal, Privom Santhippom, Releases, Reviews, Sathyaraj, Satyaraj, Seemaan, Seeman, Seran, Simbu, SNEHA, Thambi, Thimiru, Thirupathi, Thirupathy, Thiruppathi, Thiruppathy, Thrisha, Trisha, Vaalthugal, Vaazhthugal, Vaazhthuhal, Vaazhthukkal, Vaazthukkal, Vadivelu, Vedhika, Vethika, Vikram | Leave a Comment »

Dyslexia & Taare Zameen Par – Raman Raja

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

நெட்டில் சுட்டதடா..: சிதைந்த சொற்களால் கலைந்த கனவுகள்!


எலிமெண்டரி பள்ளிக் கூட ஆசிரியர்கள் அனைவரும் – வேறு வழியே இல்லாவிட்டால் திருட்டு விசிடியிலாவது – பார்த்தே ஆகவேண்டிய இந்திப்படம் ஒன்று வந்திருக்கிறது. அமீர் கான் இயக்கிய “தாரே ஜமீன் பர்’ (மண்ணிற்கு வந்த விண்மீன்கள்) என்ற படம்தான் அது. படத்தின் நாயகன், எட்டுவயதுப் பல் நீண்ட பையன் ஒருவன். சம்பிரதாயமான சினிமாவுக்குத் தேவையான காதல், மோதல், சாதல் எதுவுமற்ற இந்தப் படத்தின் மையக் கரு, டிஸ்லெக்ஸியா ( Dyslexia) என்ற வியாதி பற்றியது.

டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாரையும் போன்ற புத்திசாலித்தனத்துடன்தான் இருப்பார்கள். ஆனால் எழுதப் படிக்க மட்டும் லேசில் வராது. உதாரணமாக “அ’ என்று கரும்பலகையில் எழுதினால் அதன் வரி வடிவத்தையும், மனத்தில் அதன் உச்சரிப்பையும் தொடர்புப்படுத்தி, இதுதான் “அ’ என்று புரிந்து கொள்வதில் இவர்களுக்குச் சிரமம் இருக்கும். நிறைய ஸ்பெல்லிங் தப்பு செய்வார்கள். ஒரே மாதிரி தோற்றமளிக்கும் க்ஷ, க் போன்ற எழுத்துக்களை நிரந்தரமாகக் குழப்பிக் கொள்வார்கள். ஒரு வார்த்தையின் பகுதிகள் இடம் வலமாக இடம் மாறும்.

பச்சைக் கிளி என்பது சப்பைக் கிளியாகும். அவர்கள் எழுதிய ஆங்கிலத்தைப் பார்த்தால் அசப்பில் ரஷ்ய மொழி போல இருக்கும். என்னுடன் நாலாம் வகுப்புப் படித்த இப்ராகிம், நடுநடுவே சில எழுத்துக்களைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் உல்ட்டாவாக எழுதுவான். (அன்று அவனுடைய டிஸ்லெக்சிஸியாவைப் புரிந்து கொள்ளாமல் சாமிநாதனுடன் சேர்ந்து கொண்டு கிண்டல் செய்ததற்கு இன்று உண்மையிலேயே வருந்துகிறேன். ஸôரிடா இப்ராகிம்!)

டிஸ் என்றால் “சிதைந்த’. லெக்ஸிஸ் என்றால் “வார்த்தை’. தமிழாசிரியர்கள் அனுமதித்தால், டிஸ்லெக்ஸியாவிற்கு “சொற்சிதைவு ‘ என்று வைத்துக் கொள்கிறேன். டிஸ்லெக்ஸியா என்பது மனநோய் அல்ல. இந்தக் கணத்தில் உலகத்தில் நூறு கோடிப் பேர் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். டிஸ்லெக்ஸியா குழந்தைகளில் சிலருக்குக் கண்ணும் கையும் ஒத்துழைக்க மறுக்கலாம். வீசி எறியப்பட்ட பந்தை காட்ச் பிடிப்பதில் சிரமம் இருக்கலாம். பந்தின் சைஸ், அதன் வேகம், திசை என்று ஒரே நேரத்தில் மூளையைத் தாக்கும் பல விஷயங்களை அலசிப் புரிந்து கொண்டு கையை நீட்டுவதற்குள் பந்து பவுண்டரியைத் தாண்டிவிடும். சில சமயம் நீண்ட சங்கிலித் தொடரின் ஆணைகளை நினைவு வைத்துக் கொள்வதில் பிரச்சினை. “”வாடகை சைக்கிள் எடுத்துட்டுப் போயி, பொட்டிக் கடையிலே வத்திப் பெட்டியும் மெழுகுவர்த்தியும் வாங்கிட்டு, அப்படியே சிவமணி வீட்டுலேர்ந்து தினமணி வாங்கிட்டு வந்துடு” போன்ற வாக்கியங்களின் மேடு பள்ளங்களில் விழுந்து எழுந்து புரிந்து கொள்வதற்குள் பொழுது விடிந்துவிடும். இதே போன்ற மற்றொரு வியாதி, டிஸ்கால்குலியா ( Dyscalculia). இவர்கள் படிப்பது, எழுதுவது எல்லாம் பண்டிதத்தனமாகச் செய்வார்கள். ஆனால் கணிதம் மட்டும் சுட்டுப் போட்டாலும் வராது!

சொற்சிதைவு ஏன் என்பதற்கு, ஒருவாரம் லீவு போட்டுவிட்டுப் படிக்க வேண்டிய அளவுக்குக் காரணங்கள் சொல்கிறார்கள். எழுதுவது, படிப்பது எல்லாம் மனிதனின் இயற்கையான திறமைகள் அல்ல. பல லட்சம் வருடப் பரிணாம வளர்ச்சியில் , மிகச் சமீபத்தில்தான் அவன் கற்றுக் கொண்ட வித்தைகள் இவை. எனவே பலருடைய மூளைகள் இன்னும் பள்ளிக் கூடத்திற்குப் போகத் தயாராகவில்லை என்பது ஒரு கட்சி. மற்றொரு பக்கம், மரபியல் காரணங்கள், நரம்பியல் நிபுணர் ஒருவர், டிஸ்லெக்ஸியா பையனின் மூளையை ஸ்கான் எடுத்து “”அங்கே பார், இங்கே பார்” என்று குச்சியால் சுட்டிக் காட்டினார். என் பாமரக் கண்ணுக்கு சிவப்பும் பச்சையுமாக ஏதோ பாசிதான் தெரிந்தது.

சொற்சிதைந்த குழந்தைகளுக்கு மிகவும் தேவைப்படுவது, அவர்களைப் புரிந்து கொண்டு ஆதரிக்கும் பெற்றோரும், ஆசிரியர்களும்தான். கை நிறைய மார்க் வாங்குவதில்லை என்ற ஒரே காரணத்தால் இந்தக் குழந்தைகளை முட்டாள், தத்தி, சோம்பேறி என்று பெற்றோர்களே சுலபமாக முத்திரை குத்தி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தன்னம்பிக்கை, தன்மானம் எல்லாவற்றுக்கும் சாவுமணிதான். அதிலும் நன்றாகப் படிக்கும் அண்ணனோ தம்பியோ இருந்துவிட்டால் போச்சு! இதழாகப் பிய்த்துப் போட்டு விட்டுத்தான் மறுவேலை. ஹோம்வொர்க் எழுதவில்லை என்று தினசரி காதுகள் திருகப்பட்டு மணிக்கட்டுகள் நொறுக்கப்படுவதில் , இந்தக் குழந்தைகளுக்குப் பள்ளிக் கூடத்தின் மீதே வெறுப்பு வந்துவிடுவதில் ஆச்சரியமில்லை. தினசரி காலையில் ஸ்கூலுக்குப் போக மறுப்பு, அடம், வகுப்பறை ஜன்னல் வழியே எகிறிக் குதித்துக் காணாமல் போய்த் தெருவில் பாம்பாட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பது, சதா கனவு மேகங்களில் சஞ்சரிப்பது போன்றவை டிஸ்லெக்ஸியாவின் பக்க விளைவுகள்.

சொற்சிதைவுக்கு ஆளான குழந்தைகள் எந்த வகையிலும் அறிவிலோ, திறமையிலோ குறைந்தவர்கள் அல்ல. சொல்லப் போனால் பல மனவியல் டாக்டர்கள், “”டிஸ்லெக்ஸியாவை ஒரு வியாதி என்று வகைப்படுத்துவதையே ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஓர் ஊனமோ, குறைபாடோ அல்ல. நாம் எல்லாருமே எல்லாப் பரீட்சையிலுமே முதல் ராங்க்கா எடுக்கிறோம்? படிப்பில் முன்னே பின்னேதானே இருக்கிறோம்? அதே மாதிரி இந்தக் குழந்தைகளுக்கு சற்று ஸ்பெஷல் உதவி தேவைப்படுகிறது. அவ்வளவுதான்” என்கிறார்கள். சில ஆசிரியர்கள் கூட, “”டிஸ்லெக்ஸியா என்ற வார்த்தையே ஏதோ பயங்கரமாக, தமிழ் சினிமாவின் கடைசிக் காட்சியில் கதாநாயகனுக்கு வரும் வியாதி போல இருக்கிறது. எனவே அதைத் தவிர்த்துவிட்டு சாந்தமாக த.ஈ. (  reading disability) என்று கூப்பிடலாமே?” என்கிறார்கள்.

டிஸ்லெக்ஸியா குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு சின்னக் கேள்வி. எதிர்காலத்தில் உங்கள் குழந்தை இவர்களைப் போலப் புகழ் பெற்றால் போதுமா பாருங்கள்:

விஞ்ஞானிகள் ஐன்ஸ்டைன், எடிசன்?

பிரதமர் சர்ச்சில்?

எழுத்தாளர் அகதா கிறிஸ்டி?

ஐஸ்வர்யா கணவர் அபிஷேக் பச்சன்?

போதும் என்றால், கவலையை விடுங்கள். மேற்குறிப்பிட்ட அத்தனை பேரும் ஆரம்பக் காலத்தில் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள்தான். அரசியல்வாதிகள், ஓவிய மேதைகள், தொழிலதிபர்கள் என்று சொற்சிதைவை வென்று புலிக் கொடி நாட்டிய பிரபலங்களின் பட்டியல் மிகவும் நீளமானது.

டிஸ்லெக்ஸியாவின் பரிதாபத்தையும் தங்களுக்குக் கொழுத்த வியாபாரமாக்கிக் கொண்டுவிட்டவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். பிரத்யேகமாகத் தயாரித்த டப்பா உணவுகள், பத்தியங்கள், சூரியகாந்தி சிகிச்சை, முதுகுத் தண்டைப் பிசையும் ஆஸ்டியோபதி வைத்தியம் என்று அப்பாவி அப்பாக்களிடம் சக்கையாகப் பணம் கறப்பவர்கள் இவர்கள். மற்றொருபுறம், சொற்சிதைவை சமாளிக்க ஆசிரியர்களும் டாக்டர்களும் சேர்ந்து பல உபயோகமான பாடத்திட்டங்கள் தயாரித்திருக்கிறார்கள். இவற்றில் பலவற்றை நாமும் பைசா செலவில்லாமல் பின்பற்ற முடியும். எழுத்துக்களை உடல்ரீதியாக உணர்ந்து கொள்வதற்கு, மணலில் விரலால் எழுதிப் பழகுவது முதல் கட்டம். (நம் முன்னோர்கல் தெரியாமலா எழுதி வைத்தார்கள்!) களிமண்ணில் பொம்மை பொம்மையாக எழுத்து வடிவங்களை உருவாக்குவது, ஒரே மாதிரி சப்த அமைப்பு உள்ள வார்த்தைகளை (தகரம், நகரம், நரகம்) ஒன்றாகத் தொகுத்துப் படிப்பது என்று பல வழிகள் இருக்கின்றன. டிஸ்லெக்ஸியா சொûஸட்டியில் கேட்டால் ஆலோசனைகள் நிறையக் கிடைக்கும். பெற்றோர்கள்தான் இதையெல்லாம் பொறுமையாகச் செய்ய வேண்டும். ஐம்பது பிள்ளைகள் படிக்கும் வகுப்பில் ஆசிரியர்களால் இப்படி தனிக் கவனம் செலுத்த முடியாதுதான். ஆனால் அவர்கள் சொற்சிதைந்த குழந்தைகளை அடையாளம் கண்டு கொண்டு திட்டாமல் மிரட்டாமல் அரவணைத்துப் போனாலே பெரிய உதவியாக இருக்கும். மற்றபடி குழந்தையிடம் இருக்கக் கூடிய ஓவியம், இசை போன்ற திறமைகளைக் கண்டுபிடித்துத் தூண்டிச் சுடர் விடச் செய்தால் குழந்தையின் சுய மதிப்பீடு உயரும்.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட விண்மீன்கள் படத்தில் அமீர்கான் பேசும் ஒரு வசனம், எதிலும் எப்போதும் தன் குழந்தைதான் முதலில் வர வேண்டும் என்ற வெறியில் அவர்கள் வாயில் நுரைதள்ளும் வரை ஓட வைக்கும் பெற்றோர்கள் பற்றியது: “” இவர்களுக்கெல்லாம் ரேஸ் ஓட விட்டுப் பார்க்க வேண்டுமென்றால், அதற்குப் போய் ஏன் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்? பேசாமல் குதிரை வளர்க்க வேண்டியதுதானே?”

Posted in +2, 10, Aamir, Aamir Khan, Achievements, Achievers, Arts, Biz, Books, Business, Challenged, Child, Children, Cinema, Cognition, Colleges, Commerce, Communication, disability, Dyscalculia, Dyslexia, English, entrepreneurs, entrepreneurship, Fashion, Films, Fun, Games, Grades, IIM, IIT, Innovation, Ishaan, Ishan, Khan, Kids, Learn, Learning, Marks, Maths, Merit, Movies, Painting, Professors, Raman Raja, Rank, Reading, Schools, Shrewd, Sports, Students, Teachers, Value | 2 Comments »

Sun TV Top 10 Movies & Rights to a Cinema – Collusion, Mixing news with monetary interests

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

சர்ச்சை: டாப் 10… 20… 30..!

உலக அதிசயங்களை ஏழு என்று வகைப்படுத்தியதற்கு என்ன காரணமோ அதே காரணம்தான் “டாப் டென்’ என்று டி.வி. சானல்கள் வரிசைப்படுத்தியதற்கும். அதாவது ஏழு, பத்து என்பதெல்லாம் பழக்க தோஷம்தான். வார வாரம் டாப் டென் நிகழ்ச்சிகள் போக ஆண்டுக்கு ஒருமுறை டாப் டென் தேர்ந்தெடுக்கிறார்கள். சன் டி.வி., இப்போது கலைஞர் டி.வி. இரண்டிலும் இந்த வரிசைப்படுத்தல் நடக்கிறது.

சன் டி.வி.யில் நடக்கிற அரசியல் சுவாரஸ்யமானது. எப்போதும் விஜய் நடித்த படத்தை மட்டுமே டாப் டென்னில் முதலாவதாகக் கொண்டுவருவது அவர்கள் வாடிக்கை. வாரப் பட்டியலிலும் அவர்தான் எப்போதும் முதலிடத்தைப் பிடிப்பார். அப்படியில்லை என்றால் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரித்த படம் முதலிடத்தைப் பிடிக்கும். அல்லது ரஜினி படம் வெளிவந்தால் அது முதலிடத்தைப் பிடிக்கும்.

கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு “ஆட்டோகிராஃப்’ தேசிய விருது பெற்ற போது அதற்கு சன் டி.வி. போதிய விளம்பரம் செய்யவில்லை என்று வருத்தப்பட்டார் சேரன். விளைவு அடுத்த ஆண்டில் அவர் இயக்கிய “தவமாய் தவமிருந்து’ திரைப்படம் ஆண்டு டாப் டென்னில் இடம்பெறவேயில்லை. அடுத்து வெளியான “மாயக் கண்ணாடி’ முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டது. ஒரு வழியாக சேரன் இறங்கிவந்து சன் தரப்பில் பேசி, பிறகு அந்தச் சானலிலும் அவருடைய பேட்டி இடம் பெற்றது. அந்த வகையில் புறக்கணிக்கப்பட்டு இப்போது பேட்டி கொடுக்க வைக்கப்பட்டிருப்பவர் அஜீத்.

விஜய் நடித்த “வசீகரா’ படத்தையும் நிராகரித்திருக்கிறார்கள். காரணம் அதை ஜெயா டி.வி. வாங்கியிருந்தது.

அவர்கள் முடிவு செய்தால் அது பட்டியலில் இடம் பெறும். வேறு சானல்களில் வாங்கப்பட்ட படங்களை அவர்கள் பட்டியலில் சேர்ப்பதில்லை. ரஜினி, விஜய், ஆஸ்கர் ஃபிலிம்ஸ் போக அவர்களுக்குப் படம் விற்றவர்கள் அந்தப் பட்டியலில் இடம் பெறுவார்கள்.

ஜெயா டி.வி.யில் இவர்களில் இருந்து விடுபட்ட மற்ற படங்கள் இடம் பெறும். உதாரணத்துக்கு அவர்களுக்கு “பில்லா’, “சென்னை -28′ உள்ளிட்ட படங்கள் அவர்களால் சிலாகிக்கப்பட்ட படங்கள்.

செய்திகளே அப்படி அவரவர் வசதிக்கு ஏற்ப உருவாக்கப்படுவதும் ஒளிபரப்பப்படுவதுமாக இருக்கும்போது டாப்டென்கள் எம்மாத்திரம்.

கலைஞர் டி.வி.க்குத்தான் தர்மசங்கடம் அதிகம். அவர்கள் தற்போது வெளியாகும் எல்லா திரைப்படங்களையும் வெளியிடும் உரிமையை வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம். அது தவிர திரைத்துறையினரை தம் வசம் வைத்திருப்பது அவர்களுக்கு மறைமுக ஆதரவாக நினைக்கிறார்கள். (கடந்த இரண்டாண்டு திரைத்துறை அரசு விருதுகள் பட்டியலிலேயே அனைத்துத் திரைப்படங்களுக்கும் ஏதோ ஒரு விதத்தில் கெüரவித்தவர்கள் ஆயிற்றே?)

வாங்கிய படங்கள், பெரிய நடிகர்கள்- பெரிய இயக்குநர்களின் படங்கள் என எல்லோரையும் டாப் டென்னில் இடம் பெறச் செய்ய வேண்டும். “பெரியார்’, “ஒன்பது ரூபாய் நோட்டு’ போன்ற “சன்’னால் புறந்தள்ளப்பட்ட படங்களுக்கு இங்கே ஆதரவு காட்ட வேண்டிய நெருக்கடி. கூட்டிப் பார்த்தால் படத்தின் பட்டியல் 17-ஐத் தாண்டியது. என்ன செய்வதென்று புரியவில்லை. எந்த ஏழு பேரை நீக்குவது என்று குழப்பம். இறுதியாக ஒரு உத்தி கண்டார்கள். ஏன் டாப் டென்? அது யார் போட்ட சட்டம்? இனி ஒரு விதி செய்வோம் என டாப்- 20 ஆக்கினார்கள். புத்தாண்டு படப்பட்டியலில் 20 படங்கள் இடம் பெற்றன. புதிதாக இன்னொரு மூன்று படத்தைச் சேர்ப்பதுதானா கஷ்டம்?

ஆக, டாப் இருபது இப்போது மட்டும்தானா என்பது தெரியவில்லை. தேவைப்பட்டால் “டாப் 25′, “டாப் 30′ என்று பெருகவும் வாய்ப்பு உண்டு.

இறுதியாக ஒரு கேள்வி… கலைஞர்களின் மனம் புண்படாத வண்ணம் இந்த ஆண்டு ரிஸீஸôன திரைப்படங்களின் பட்டியலை வாங்கி அத்தனை டாப்புகளையும் போட்டு புண்ணியம் கட்டிக் கொள்ளப் போகும் சானல் எது?

Posted in Actors, Actress, Ajith, Arrogance, Arts, Business, Cheran, Cinema, Corporate, Critic, Critique, deal, Distribution, Distributors, Economy, Films, Finance, Jaya, Jeya, K, K TV, Kalainjar, Lists, Maran, Media, Monetary, Money, Movies, MSM, News, Raj, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Reviews, Seran, Star, Star Vijay, Sun, Sun TV, Sunday, Top 10, TV, Vijay | 2 Comments »