Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Children’ Category

Book reading habits for Kids – Children, Literature, Knowledge, Entertainment

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2008

குழந்தைகளைக் கிழிக்காத புத்தகங்கள்

தஞ்சாவூர்க்கவிராயர்

புத்தகங்களைக் கிழித்துவிடாதீர்கள் என்று குழந்தைகளிடம் சொல்லுகிறோம்.

புத்தகங்களே! குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்கிறார் ஒரு புதுக்கவிஞர்.

குழந்தைகள் படிக்கிற புத்தகங்களைப் பார்க்கும்போது அவை எங்கே குழந்தைகளைக் கிழித்து விடுமோ என்று பயமாகத்தான் இருக்கிறது.

மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் போதுமான அளவு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தைகளுக்காக எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் பெரும்பாலும் குழந்தைத்தனமாக இருக்கின்றன.

குழந்தைகளுக்கு இப்படிச் சொன்னால் புரியாது; இதற்கு மேல் சொன்னால் புரியாது என்று நாமாகவே ஓர் அபிப்பிராயம் வைத்துக்கொண்டு எழுதுகிறோம். இது தவறு. குழந்தைகள் நம்மைவிடப் புத்திசாலிகள்.

குழந்தைகளுக்கு இருக்கிற புத்தம்புதுசான பார்வை நமக்குக் கிடையாது. இன்னும் களங்கப்படாத மனசு அல்லவா குழந்தைகள் மனசு?

குழந்தைகள் பார்வையில் தென்படும் உலகம் குற்றமற்றது. அழகு நிரம்பியது. அதனால்தான் குழந்தை எதைப் பார்த்தாலும் சிரிக்கிறது. குழந்தைகளுக்கான புத்தகம் எழுத குழந்தை மனசு வேண்டும். “தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு; அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி…’ அப்படியே ஒரு குழந்தை எழுதிய மாதிரியே அல்லவா இருக்கிறது.

குழந்தைகளுக்கு ஏராளமாகப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. வழவழதாளில் பளீரென்ற வண்ணப் புத்தகங்கள். உள்ளே யானை, குதிரை படங்கள். விலையும் யானை விலை, குதிரை விலையாகத்தான் இருக்கிறது.

நரிக்கு எட்டாத திராட்சைப் பழங்கள் மாதிரி குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் இந்தப் புத்தகங்கள் காய்த்துத் தொங்குகின்றன!

சின்னஞ்சிறு வயதிலேயே நல்ல புத்தகங்களை குழந்தைகளின் நண்பனாக்கி விட வேண்டும். அவை கேட்கிற புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் மேலாளராகப் பணியாற்றும் நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் மேசைமீது ஒரு காமிக்ஸ் புத்தகம் இருந்தது. “பையனுக்கா?’ என்றேன்.

“எனக்குத்தான்’ என்றார் சிரித்தபடி.

“அலுவலக டென்ஷனில் இருந்து விடுபட நான் காமிக்ஸ் புத்தகங்கள்தான் படிப்பேன்’ என்றார்.

குழந்தை வளர வளர குழந்தமை தொலைந்து போகிறது. “இன்னும் என்ன குழந்தையா நீ?’ என்று கேட்டு கொஞ்சநஞ்சம் பாக்கியிருக்கும் குழந்தை மனத்தையும் கருகச் செய்து விடுகிறோம்.

குழந்தையின் கேள்விகள் அற்புதமானவை. அவற்றுக்குப் பதில் சொல்லும்போது நாமும் குழந்தையாகி விடுகிறோம்.

புகைவண்டிப் பயணத்தின்போது எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவர் தன் குழந்தையை “சும்மா இரு, சும்மா இரு’ என்று அதட்டிக் கொண்டே வந்தார்.

“குழந்தை பாவம். என்ன வேண்டுமாம்?’ என்று கேட்டேன்.

“என்னவோ அசட்டுத்தனமாக தொணதொணக்கிறான். எரிச்சலாக வருகிறது’ என்றார்.

அவனை என் அருகே அழைத்து, “சொல்லு, என்ன வேணும்?’ என்று கேட்டேன்.

“மாமா, ரயில் என்ன சாப்பிடும்?’ என்று கேட்டான்.

இதுவா அசட்டுத்தனமான கேள்வி? அழகான கவிதை அல்லவா இது? ரயிலுக்கு உயிர் உண்டு. அதுவும் மனிதர்களைப் போலவே நகர்கிறது. மூச்சு விடுகிறது. கத்துகிறது என்பதால்தானே இந்தக் கேள்வியை குழந்தை கேட்கிறது?

நாம்தான் குழந்தைகளை உதாசீனப்படுத்துகிறோம். மேலைநாடுகளில் குழந்தைகளைப் பெரிய மனிதர்களாகவே நடத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக அண்மையில் ஆங்கில நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி:

லண்டனில் ஒரு குழந்தைகள் பூங்கா. அங்கே வாத்துகளோடு ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அதன் விரலை ஒரு வாத்து கடித்துவிட்டது. காயம் ஒன்றும் பலமில்லை. பூங்கா நிர்வாகமே குழந்தையின் விரலுக்கு மருந்து போட்டுவிட்டது. அங்கே ஓர் அறிவிப்புப் பலகை இருந்தது. அங்கே இருந்த வாத்துகள் மாட்சிமை தங்கிய இங்கிலாந்து மகாராணியாரின் பெயரில் உள்ள கருணை நிதியிலிருந்து பராமரிக்கப்படுவதாக ஒரு குறிப்பு இருந்தது.

குழந்தை உடனே இங்கிலாந்து மகாராணியாருக்கு ஒரு கடிதம் எழுதியது: “நீங்கள் வளர்க்கிற வாத்து என்னைக் கடித்துவிட்டது. விரலில் காயம்’ என்று எழுதியது.

கடிதம் மகாராணியாரின் பார்வைக்குப் போயிற்று. அவர் உடனே பதில் எழுதினார்:

“குழந்தாய்! உன் கடிதம் கிடைத்தது!

நான் வளர்க்கும் வாத்து உன்னை விரலில் கடித்து விட்டதற்காக வருந்துகிறேன். அதற்காக உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். காயம் ஆறியிருக்கும் என்று நம்புகிறேன்.

உன் பிரிமுள்ள,

விக்டோரியா.

நம் நாட்டில் இப்படிப்பட்ட கடிதம் எங்கே போயிருக்கும் என்று சொல்லத் தேவையே இல்லை அல்லவா?

குழந்தைகளை மதிக்கிற, குழந்தைகளைப் புரிந்துகொள்கிற, குழந்தமையைப் பாதுகாக்கிற பொறுப்புணர்ச்சி சமுதாயம் முழுவதும் உண்டாக வேண்டும். அப்போதுதான் அசலான குழந்தை இலக்கியம் இங்கே சாத்தியப்படும். பெரிய பெரிய இலக்கிய ஜாம்பவான்கள் கூட குழந்தை இலக்கியத்தின்பால் அக்கறை காட்டுவதில்லை.

குழந்தைகளுக்கான புத்தகங்கள் போதுமான அளவு இல்லாத சமூகம் என்பது தண்ணீரில்லாத நாற்றங்காலுக்குச் சமம்.

பள்ளிக்கூடங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். குழந்தைகளைப் பந்தயக் குதிரைகளாக மாற்றும் வேலை அங்கே மும்முரமாக நடக்கிறது. குழந்தைகளின் பாடப்புத்தகங்கள் அபத்தக் களஞ்சியமாக இருக்கின்றன.

குழந்தைகளை நூலகங்களில் பார்க்கவே முடிவதில்லை. வாசிக்கும் பழக்கம் குறைந்துகொண்டே வருகிறது. தொலைக்காட்சியும் கணினி விளையாட்டும் குழந்தைகளை கூடத்தை விட்டு வெளியேறாதபடி கட்டிப் போட்டுவிட்டன.

அண்மையில் நடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் குழந்தைகளுக்கான புத்தக அரங்குகளில் கூட்டம் மொய்த்தது. புத்தக வாசிப்புக்காக குழந்தைகள் ஏங்குவதையும், தொலைக்காட்சி தோற்றுப் போய்விட்டதையும் காண முடிந்தது.

தஞ்சாவூரில் அனன்யா பதிப்பக அதிபர் அருள் என்பவரும் இரா. சேதுராமனும் சேர்ந்து ஓசைப்படாமல் ஒரு மாபெரும் குழந்தைகள் கதைக் களஞ்சியத்தை உருவாக்கி வருகிறார்கள்~விழுதுகள் என்ற பெயரில்.

குழந்தைகளால் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது இக் களஞ்சியம் என்பது தான் இதன் சிறப்பு. பாட்டி வடை சுட்ட கதையை ஒரு குழந்தை எப்படிச் சொல்கிறது பாருங்கள்.

“ஒரு ஊரில் காக்கா இருந்தது. அப்போது காக்கா வடை சுட்டது. அந்தக் காக்கா வடை சுட்டு முடித்ததும் காக்காக்கள் பறவைகள் காக்காகிட்ட வந்தது. காக்காவும் பறவையும் சேர்ந்து சாப்பிட்டன. பறவைகளும் காக்காக்களும் சேர்ந்து விளையாடின. பிறகு எல்லோரும் தூங்கினார்கள். மறுநாள் காலையில் எல்லோரும் எழுந்தனர். முகம் கழுவினர். எல்லோரும் சாப்பிட்டன. பறவைகளும் காக்காக்களும் வீட்டுக்குச் சென்றார்கள்.’

இது மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு சிறுமி எழுதிய கதை. மற்றொரு கதையில் கரடியும் யானையும் ஒரே வீட்டில் வசிக்கின்றன. அங்கு விருந்தாளியாக சிங்கம் வருகிறது. ஒரு கதையில் பால் வேண்டும் என்று பூனையிடம் எலி கெஞ்சுகிறது. குழந்தைகளின் மனங்களிலிருந்து புறப்பட்டு வரும் புதிய காற்று அப்பப்பா என்ன ஒரு வாசம். எப்பேர்ப்பட்ட கற்பனை.

உலகம் பூராவும் ஹாரிபாட்டரின் கதைப் புத்தகங்கள் பரபரப்பாக விற்கப்பட்டதன் காரணம் என்ன? குழந்தைகளின் மனசைப் புரிந்துகொண்டு எழுதியதுதான் காரணம்!

தமிழ்நாட்டில் வசதி படைத்த குழந்தைகள் மட்டும் ஹாரிபாட்டர் புத்தகம் வாங்கிப் படித்து மகிழ்ந்தார்கள். “ஏழைக் குழந்தைகள் பாவம் என்ன செய்வார்கள்?’

இப்போதுதானே அவர்களை ஓட்டல்களிலிருந்தும் தொழிற்சாலைகளிலிருந்தும் கல்குவாரிகளிடமிருந்தும் மீட்டிருக்கிறோம்? அவர்களின் கைகளிலிருந்து மேசை துடைக்கும் துணியையும், ஸ்பானரையும், பெட்ரோல் பிடிக்கும் குழாய்களையும் அப்புறப்படுத்தி நல்ல புத்தகங்களைக் கொடுக்க வேண்டும்.

அழகான ஆச்சரியமான புத்தகங்கள்.

குழந்தைகளைக் கிழிக்காத புத்தகங்கள்!

(இன்று உலகக் குழந்தைகள் புத்தக தினம்)

Posted in Books, Children, Comics, Entertainment, family, Fiction, Habits, Intelligence, Kids, Knowledge, Library, Listen, Literature, publications, Publishers, Read, Story | 1 Comment »

March 30 – LTTE, Eezham, Sri Lanka: News & Updates (BBC Tamil)

Posted by Snapjudge மேல் மார்ச் 30, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 01 ஏப்ரல், 2008

மூதூர் தொண்டர் நிறுவன பணியாளர் கொலைகளை அரசாங்கப் படையினரே செய்ததாக மனித உரிமை அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது

இலங்கையில் சுனாமி நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டு தொண்டு நிறுவனமான அக்ஷன் பெஃய்ம் நிறுவனத்தின் உள்ளூர் பணியாளர்கள் 17 பேர் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் இலங்கை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உறுப்பினர்களின் பெயரை மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் இந்தச் சம்பவத்தை மறைக்க முயற்சிப்பதாகவும் சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

2006 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளுடனான மோதலை அடுத்து மூதூரை கைப்பற்றிய காலப்பகுதியில் நடந்த இந்த கொலைகள் தொடர்பில், இலங்கை ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு ஒன்றும் விசாரணைகளை நடத்தி வருகிறது.

கோபாலசிங்கம் சிறிதரன்
கோபாலசிங்கம் சிறிதரன்

ஆனால், இந்தப் புலன் விசாரணை நடவடிக்கைகளை அரசாங்கம் மறைக்க முயலுவதாகக் குற்றஞ்சாட்டி, இதனைக் கண்காணித்துவந்த, சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு ஒன்று தனது கண்காணிப்புப் பணியில் இருந்து விலகிச் சென்று விட்டது.

துணைப்படையைச் சேர்ந்த ஒரு ஊர்காவற்படைச் சிப்பாயும், இரண்டு பொலிஸ்காரர்களும் இந்தக்கொலைகளைச் செய்ததாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கூறி அவர்களது பெயர்களையும் வெளியிட்டுள்ளது.

இந்த கொலைச் சம்பவங்கள் குறித்த பொதுவிசாரணைகளில் இலங்கை ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு ஈடுபட்டுள்ளதால், மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், அந்த ஆணைக்குழுவின் முன்பாக தமது ஆதாரங்களை காண்பித்து தகவல்களை வெளியிட வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் அமைச்சரான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலளிக்குமுகமாக தமிழோசையிடம் பேசிய மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த கோபாலசிங்கம் சிறிதரன் அவர்கள், இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியை அந்த ஆணைக்குழுவின் முன்பாக ஆஜர் செய்யும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும், ஆனாலும், அந்தச் சாட்சியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மின்னேரியாவில் மின்னல் தாக்கியதில் நான்கு படையினர் மரணம் 59 பேர் காயம்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வட-மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள மின்னேரியா இராணுவத்தளத்திற்கு அண்மையில் அமைந்துள்ள இராணுவமுகாமொன்றினைச் சேர்ந்த ஒரு தொகுதி இராணுவ வீரர்கள் இன்று மாலை பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் மிகவும் சக்திவாய்ந்த மின்னல் ஒன்று தாக்கியதில் சுமார் நான்கு படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் சுமார் 59 படையினர் காயமடைந்து பொலன்நறுவை தளவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் பொலன்நறுவை மாவட்டம் மின்னேரியா கட்டுக்கெலிய இராணுவ முகாம் பகுதியில் வழமையான இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவ அணியினரே இந்த மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அதிதீவிர சத்திர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.

சிறையுடைப்பு முயற்சி

இதேவேளை இன்று மாலை இரத்தினபுரி குருவிட்ட பகுதியிலுள்ள சிறைச்சாலையை உடைத்துத் தப்பி வெளியேறமுயன்ற நான்கு சிறைக்கைதிகள் அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி மரணமாகியிருப்பதாக இரத்தினபுரி பொலிசார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தின் போது மேலும் மூன்று சிறைக்கைதிகள் காயமடைந்து அண்மையிலுள்ள வைத்தியசாலையில் பொலிஸ்காவலுடன் சிகிச்சைபெற்று வருவதாகவும், நிலைமை தற்போது பொலிசாரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் பொலிசார்
தெரிவித்திருக்கின்றனர்.


 

புதுப்பிக்கப்பட்ட நாள்: 31 மார்ச், 2008

இயக்கத்திலிருந்து சிறார் 22 பேரை விடுதலை செய்திருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்

இயக்கத்தில் இளம்பிராயத்தினர் என்பது ஒரு நெடுங்கால சர்ச்சை

விடுதலைப் புலிகள் தமது படையிலிருந்து 22 சிறாரை விடுதலை செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் படையில் நூற்றுக்கணக்கான சிறார் இன்னும் இருப்பதாக யுனிசெஃப் என்ற ஐ.நா.வின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் தெரிவித்திருப்பதையும் புலிகள் மறுத்துரைத்திருக்கின்றார்கள்.

தங்களால் விடுவிக்கப்பட்டுள்ள சிறார் தொடர்பான விபரங்களை யுனிசெஃப் நிறுவனம் உறுதிப்படுத்துவதற்குத் தவறியிருக்கின்றது என்றும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் ஊடாக வெளியிடப்பட்டுள்ள மின்னஞ்சல் வழியாக விடுதலைப் புலிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இருபது சிறாரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் சி.பி.ஏ. என்ற சிறுவர் பாதுகாப்புக்கான தமது அமைப்பின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

நூற்றுக்கணக்கான சிறார் தமது அமைப்பில் இன்னும் இருப்பதாகக் கூறிவரும் யுனிசெஃப் நிறுவனம், இந்தச் சிறார் தொடர்பான பிந்திய தகவல்களை உறுதிசெய்து தனது பட்டியலை மாற்றியமைக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகள் குற்றஞ்சுமத்தியிருக்கின்றார்கள்.

அதேவேளை, தமது அமைப்பில் உள்ள வேறு 41 சிறாருக்கு பெற்றோர்களோ அல்லது பாதுகாவலர்களோ இல்லாத காரணத்தினால் அவர்களை விடுதலை செய்யமுடியாத நிலை தோன்றியிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இது குறித்த மேலதிக விபரங்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை ஏ9 வீதியில் ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி சனிக்கிழமைகளிலும் திறந்திருக்கும்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்

ஓமந்தை சோதனைச் சாவடி

இலங்கையின் வடக்கே ஏ9 வீதியில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மதவாச்சி சோதனைச்சாவடியிலும், வவுனியா, ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியிலும் அரசாங்கத்தினால் மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளினால் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கும், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்திற்கும் இடையிலான பொதுமக்களின் போக்குவரத்து மற்றும் வர்த்தக தேவைகளுக்கான ட்ரக் வண்டிகளின் போக்குவரத்து என்பன தாமதமடைய நேரிட்டிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைக்குழு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருக்கின்றது.

இந்நிலையில் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று சனிக்கிழமைகளிலும் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான வாகனப் போக்குவரத்து நடைபெறுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினர் மேலதிக கடமையில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.

திங்கள் முதல் வெள்ளிவரை என வாரத்தில் 5 தினங்களே ஓமந்தை சோதனைச்சாவடி வழமையாகப் பொதுப் போக்குவரத்துக்காகத் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், சுகாதார அமைச்சினால் அனுப்பப்பட்டு வவுனியாவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள வன்னிப்பிரதேச அரச வைத்தியசாலைகளுக்கான மருந்துப் பொருட்களை வவுனியாவில் இருந்து ஓமந்தை ஊடாகக் கொண்டு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறுவதில் நிலவுகின்ற காலதாமதம் காரணமாக ஓமந்தை சோதனைச்சாவடி சனிக்கிழமைகளிலும் திறக்கப்படுவதனால் பெரிதாகப் பயனேதும் ஏற்படாது என்கிறார் கிளிநொச்சி மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி அவர்கள்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் நேயர்கள் கேட்கலாம்.


இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய இலங்கை வியாபாரிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

இலங்கையிலுள்ள அரிசி வர்த்தகர்கள், தற்போது நாட்டில் நிலவும் அரிசி தட்டுபாட்டை தீர்க்கும் முகமாகவும், வரவுள்ள தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஏற்படும் தேவைகளை சமாளிக்கும் முகமாகவும் இந்தியாவிலிருந்து ஒரு லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய உதவுமாறு இலங்கை ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்கள்.

இது தொடர்பில் தமிழோசையிடம் கருத்து தெரிவித்தார் கொழும்பு பழைய சோணகர் தெரு வர்த்தக சங்கத் தலைவர் பழனியாண்டி சுந்தரம்.

பொதுவாக தங்கள் நாட்டுக்குத் தேவையான அளவுக்கு அரிசியைத் தாங்களே உற்பத்தி செய்துக்கொள்ளக்கூடிய நிலைமை இருக்கும். ஆனால் இந்த முறை மழையில் ஏராளமான பயிர் நாசமடைந்துவிட்டதால், அரிசிக்கான தேவை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அது மட்டுமல்லாமல் இலங்கையிலுள்ள வியாபாரிகள் சோளம் மற்றும் சோயா போன்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் கோழித் தீவனம் மற்றும் கால்நடைத் தீவனங்களை இந்தியாவிலிருந்துதான் பெருமளவு இறக்குமதி செய்ததாகவும், ஆனால் அவற்றின் விலை இரட்டிப்பாகி அரிசி விலையைவிட உயர்ந்துவிட்டதால், கிட்டத்தட்ட 70,000 டன் அரிசி இவ்வாறு தீவனமாக உயயோகிக்கப்பட்டதும் அரிசி பற்றாக்குறைக்கு காரணம் எனவும் அவர் கூறுகிறார்.

சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஏழைகளுக்கு அரிசி வழங்கும் திட்டம் ஒன்றை ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்றும் அத்திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு உதவியாக இறக்குமதி செய்யப்படும் அரிசியின் மீதான தீர்வையையும் அவர் அகற்றியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.


கிழக்கு மாகாண சபைத் தேர்தல்: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை

காத்தான்குடியில் நடந்த கூட்டம்

இலங்கையில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி முஸ்லிம் வேட்பாளர்கள் குறித்து பள்ளிவாசல் சம்மேளனங்களுடன் பிரதேச ரீதியாக பேச்சுவார்ததை நடத்திவருகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பொதுச் செயலாளரான சுசில் பிரேம ஜயந்த், முஸ்லிம் அமைச்சர்கள், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் சகிதம் இப்பேச்சுவார்த்தையை பள்ளிவாசல் சம்மேளனங்களுடன் நடத்திவருகின்றார்.

திங்களன்று மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனத்துடன் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது முஸ்லிம் வேட்பாளர்களைத் தமது கட்சியில் இணைந்து போட்டியிட முன்வருமாறு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவரான எம்.டி.எம். ஹாலித் ஹாஜியார் கூறுகின்றார்.

தமிழர்களும் முஸ்லிம்களும் ஆளும் கட்சியில் இணைந்து போட்டியிடுவதன் மூலம் முதலமைச்சர் பதவியை சுழற்சி அடிப்படையில் பகிர்ந்துகொள்ள முடியும் என்று ஆளும் கட்சியினால் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தமது சம்மேளனமானது அரசியல் சார்பற்ற அமைப்பு என்பதை இக்குழுவினரிடம் தாம் தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.


திருகோணமலை இளம்பெண்ணுக்கு ‘சவுதியரேபியாவில் சித்ரவதை’

மத்திய கிழக்கில் சித்ரவதைக்கு உள்ளாகும் இலங்கைப் பெண்களின் எண்ணிக்கை அதிகம்

சவுதியரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைபார்த்துத் திரும்பியிருக்கும் திருகோணமலை கிண்ணியா மாஞ்சோலைப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், சவுதியில் தான் வேலைபார்த்த வீட்டின் உரிமையாளர் தன்னைக் கொடுமைப் படுத்தியதாக பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

நோய்வாய்ப்பட்ட நிலையில் திருகோணமலை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்ற நலினா உம்மாள் என்ற இளம்பெண், சவுதியரேபியாவிலும் இரண்டுவார காலம் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகக் கூறுகிறார்.

தான் வேலைக்குச் சேர்ந்து ஒரு சில நாட்களில், அந்த வீட்டில் சிறு குழந்தை ஒன்று இறந்துபோகவே. வீட்டின் முதலாளியம்மா, தன்னை தரித்திரம் பிடித்தவள் என்று கூறி பலவித சித்ரவதைக்கும் ஆளாக்கியதாக நலினா தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில், தன்னை குவைத் அனுப்புவதாகச் சொல்லி ஏஜெண்டுகள் சவுதிக்கு அனுப்பிவிட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

இது குறித்து திருகோணமலை செய்தியாளர் ரத்னலிங்கம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 30 மார்ச், 2008

இலங்கை கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு புதிய தமிழ் கூட்டணி

இலங்கையில் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணி ஆகிய தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து தமிழ் ஜனநாயக தேசிய முன்ணணியாக போட்டியிட தீர்மானித்துள்ளது.

தமிழ் ஜனநாயக தேசிய முன்ணணி புதிய அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்று ஞாயிற்றுகிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் போராட்டம் காரணமாகவே 13 வது அரசியல் யாப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டு மாகாண சபை முறை ஏற்படுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், முதலமைச்சராக தமிழரொருவர் வரவேண்டும் என்பதே நியாயமானது என்றும் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு மாகாணம் சட்ட ரீதியாகவே தற்போது பிரிக்கப்பட்டுள்ளதால் இத்தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்று கூறிய அவர் இணைப்பு பற்றி கிழக்கு மாகாண மக்களே தீர்மானிக்க வேண்டியவர்கள் என்றார்.

தமது தமிழ் ஜனநாயக தேசிய முன்னனியில் 5 இடது சாரி கட்சிகள் இணைந்து போட்டியிட முன் வந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்


இலங்கை படையினருக்கு கொசுக்கடியினால் தொற்றுநோய்கள்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் மன்னார், வவுனியா மற்றும் வெலிஓயா எனப்படும் மணலாறு போன்ற வன்னிப்போர்முனைப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட கொசுக்களின் பெருக்கத்தினால் சுமார் 200 துருப்பினர் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

டெங்கு, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட படையினருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு தற்போது நிலைமை முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு அங்கு ஏற்கனவே முகாமிட்டிருக்கும் படையினருக்கும் கொசு வலைகள் போன்றவை கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அப்பகுதிக்கு சென்ற அனுராதபுர வைத்தியசாலை உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள், இந்த தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் பிரிகேடியர் உதயநாணயக்கார கூறினார்.

 


இலங்கையில் விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது குறித்து ஐ நா கவலை

ஐக்கிய நாடுகள் சபை ஆசிய பசிபிக் பகுதிக்கான இந்த ஆண்டின் பொருளாதார சமூக ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ஆசிய பசிபிக் பகுதியில் பல நாடுகள் பொருளாதார நிலையில் வளர்ச்சியடைந்திருந்தாலும் விவசாயத்துறையில் பின்னடைவையே சந்தித்துள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக தெற்காசிய நாடுகளில் இந்த பின்னடைவு கூடுதலாக உள்ளது என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இலங்கையில் விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது பற்றி கவலை வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கை, அது தொடர்பில் கொள்கை வகுப்பாளர்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய தேவையையும் வலியுறுத்தியுள்ளது.

விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது பெருமளவில் வறுமைக்கு வழி செய்யும் எனச் சுட்டிக் காட்டியுள்ள அந்த அறிக்கை, இலங்கை அரசு விவசாயத்துறைக்கு புத்துயிரூட்ட வேண்டியதை வலியுறுத்துவதே கொள்கை வகுப்பாளர்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன்
இலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன்

இலங்கையில் விவசாயத்துறைக்கு பல சலுகைகளை வழங்கியும் கூட விவசாயத்துறையில் உற்பத்தி திறன் அதிகரிக்கவில்லை என சுட்டிக் காட்டுகிறார் இலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன். இதுதான் இலங்கை அரசுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் சவாலாக இருக்கிறது எனவும் அவர் கூறுகிறார்.

விவசாயத்துறையில் பொருளாதார சீர்திருத்தங்களும், விவசாய அணுகுமுறையில் எந்தவிதமான சீர்திருத்தங்களும் ஏற்படாமாலிருப்பததுதான் இதற்கான அடிப்படை காரணம் எனவும் அவர் கருத்து வெளியிடுகிறார். விவசாய நிலங்கள் சீர்திருத்திருத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று என்றும் கலாநிதி சர்வானந்தன் கூறுகிறார்.

அரசும் விவசாயிகளும் நெல் உற்பத்தியில்தான் கூடுதலான கவனம் செலுத்தி வருவதும், பணப்பயிர்களில் கவனம் செலுத்தாததும் விவசாயத்துறையின் தேக்கத்திற்கான காரணங்களாக கருதலாம் எனவும் அவர் தெரிவிக்கிறார். விவசாயிகளுக்கு தொடர்ந்து பயிர் செய்வதற்கு தேவையான நீர் ஆதாரங்களை ஏற்படுத்திக் கொடுத்தி, சந்தை வாய்ப்புகளை அதிகரித்து கொடுத்து, நில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதே உடனடி தேவை எனவும் கலாநிதி சர்வானந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.


இலங்கையின் மொனராகலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் சுட்டுக்கொலை

இலங்கை காவல்துறையினர்
இலங்கை காவல்துறையினர்

இலங்கையின் மொனராகலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் டாக்டர் அண்ணாமலை நாராயணன் முத்துலிங்கம் சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொனராகலை நகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணி முடித்து விட்டு அவர் திரும்பி கொண்டிருந்த வேளை, வேன் ஒன்றில் வந்த ஆயுததாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

இதற்கிடையே, இலங்கையின் கிழக்கு மாகாணசபை தேர்தலில், முஸ்லிம் கட்சிகள் வேறுபாடுகளை மறந்து முதலமைச்சர் பதவியை வெல்வதற்காக ஒன்றுபட்டு தனித்துவமான சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும், அல்லாத பட்சத்தில், மூதூர் பிரதேச முஸ்லிம்கள் தனித்துவமான முறையில் அரசுடன் இணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதாக இன்று சனிக்கிழமை மூதூர் ஆனைச்சேனை திடலில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதேச சபை உறுப்பினர் பி.கே கலில் தெரிவித்துள்ளார்.

 


நீரில் தத்தளிக்கும் விவசாயம் – பெட்டகம்

மழையால் விவசாயம் நாசம்
மழையால் விவசாயம் நாசம்

இலங்கையின் வட மாவட்டங்களிலுள்ள விவசாய நிலங்கள் அண்மையில் பெய்த அடைமழையில் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

வழமைக்குப் புறம்பாக அறுவடைக் காலத்தில் மழை பெய்து பெரும் நஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் ஆற்றாற்றுகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் மட்டும் 12,500 ஏக்கர் விவசாய நிலம் மழை நீரில் மூழ்கி நாசமடைந்ததாக அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகிறது.

வட இலங்கையில் மழைப் பாதிப்புகள் குறித்து வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் தொகுத்தளிக்கும் பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 28 மார்ச், 2008


மனம் மாறும் தற்கொலை குண்டுதாரிக்கு ரொக்கப் பரிசு – கொழும்பில் அனாமதேய சுவரொட்டி

‘தற்கொலை குண்டுதாரியாக நினைப்பவர்கள் மனதை மாற்றிக்கொண்டால் ரொக்கப் பணம் பரிசாகக் கிடைக்கும்’ என்று கூறும் புதிய சுவரொட்டிகள் இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஒட்டப்பட்டுள்ளமை குறித்து பொலிஸார் விசாரணை செய்துவருகிறார்கள்.

கொழும்பில் தமிழர்கள் அதிகம் வாழும் ஒரு பகுதியில் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்தச் சுவரொட்டிகளில் தற்கொலை குண்டுதாரி ஒருவரின் துண்டிக்கப்பட்டத் தலையைக் காட்டி, அதனருகே நீங்களும் வாழப் பிறந்தவர்தான்… ஏன் குண்டுதாரியாகி மடிய வேண்டும்? என்று எழுதப்பட்டுள்ளது.

கரும்புலிகள் என்று சொல்லப்படுகின்ற விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையில் சேர எண்ணம் கொண்டுள்ளவர்கள் தங்களது மனதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் 118 என்று துவங்கும் அரசாங்க தொலைபேசி இலக்கம் ஒன்றை அழைக்க வேண்டும் என்றும் அந்த சுவரொட்டி கூறுகிறது.

அப்படி மனதை மாற்றிக்கொள்பவர்களுக்கு உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க ஒரு கோடி ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தொலைபேசி இலக்கம் இந்தச் சுவரொட்டியில் இடம்பெற்றிருந்தாலும், இப்படி ஒரு திட்டத்தை அரசு அறிவிக்கவில்லை, இது ஏமாற்று வேலை என்று இராணுவம் கூறுகிறது.

இந்தச் சுவரொட்டிகள் குறித்து பொலிஸார் விசாரணை நடத்திவருவதாகக் கூறிய இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயகார, அந்தச் சுவரொட்டியிலுள்ள தொலைபேசி எண்ணை தான் அழைத்தபோது பதிலே இல்லை என்றும் இது ஒரு ஏமாற்று வேலை என்று தான் சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார்.


Posted in A9, BBC, Bombers, Child, Children, dead, Eelam, Eezham, Food, Grains, Hoax, ICRC, Imports, Kids, LTTE, Paddy, Prabakaran, Prabhakaran, rice, Soldiers, Sri lanka, Srilanka, Suicide, UN, War, Warriors | Leave a Comment »

Dyslexia & Taare Zameen Par – Raman Raja

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

நெட்டில் சுட்டதடா..: சிதைந்த சொற்களால் கலைந்த கனவுகள்!


எலிமெண்டரி பள்ளிக் கூட ஆசிரியர்கள் அனைவரும் – வேறு வழியே இல்லாவிட்டால் திருட்டு விசிடியிலாவது – பார்த்தே ஆகவேண்டிய இந்திப்படம் ஒன்று வந்திருக்கிறது. அமீர் கான் இயக்கிய “தாரே ஜமீன் பர்’ (மண்ணிற்கு வந்த விண்மீன்கள்) என்ற படம்தான் அது. படத்தின் நாயகன், எட்டுவயதுப் பல் நீண்ட பையன் ஒருவன். சம்பிரதாயமான சினிமாவுக்குத் தேவையான காதல், மோதல், சாதல் எதுவுமற்ற இந்தப் படத்தின் மையக் கரு, டிஸ்லெக்ஸியா ( Dyslexia) என்ற வியாதி பற்றியது.

டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாரையும் போன்ற புத்திசாலித்தனத்துடன்தான் இருப்பார்கள். ஆனால் எழுதப் படிக்க மட்டும் லேசில் வராது. உதாரணமாக “அ’ என்று கரும்பலகையில் எழுதினால் அதன் வரி வடிவத்தையும், மனத்தில் அதன் உச்சரிப்பையும் தொடர்புப்படுத்தி, இதுதான் “அ’ என்று புரிந்து கொள்வதில் இவர்களுக்குச் சிரமம் இருக்கும். நிறைய ஸ்பெல்லிங் தப்பு செய்வார்கள். ஒரே மாதிரி தோற்றமளிக்கும் க்ஷ, க் போன்ற எழுத்துக்களை நிரந்தரமாகக் குழப்பிக் கொள்வார்கள். ஒரு வார்த்தையின் பகுதிகள் இடம் வலமாக இடம் மாறும்.

பச்சைக் கிளி என்பது சப்பைக் கிளியாகும். அவர்கள் எழுதிய ஆங்கிலத்தைப் பார்த்தால் அசப்பில் ரஷ்ய மொழி போல இருக்கும். என்னுடன் நாலாம் வகுப்புப் படித்த இப்ராகிம், நடுநடுவே சில எழுத்துக்களைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் உல்ட்டாவாக எழுதுவான். (அன்று அவனுடைய டிஸ்லெக்சிஸியாவைப் புரிந்து கொள்ளாமல் சாமிநாதனுடன் சேர்ந்து கொண்டு கிண்டல் செய்ததற்கு இன்று உண்மையிலேயே வருந்துகிறேன். ஸôரிடா இப்ராகிம்!)

டிஸ் என்றால் “சிதைந்த’. லெக்ஸிஸ் என்றால் “வார்த்தை’. தமிழாசிரியர்கள் அனுமதித்தால், டிஸ்லெக்ஸியாவிற்கு “சொற்சிதைவு ‘ என்று வைத்துக் கொள்கிறேன். டிஸ்லெக்ஸியா என்பது மனநோய் அல்ல. இந்தக் கணத்தில் உலகத்தில் நூறு கோடிப் பேர் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். டிஸ்லெக்ஸியா குழந்தைகளில் சிலருக்குக் கண்ணும் கையும் ஒத்துழைக்க மறுக்கலாம். வீசி எறியப்பட்ட பந்தை காட்ச் பிடிப்பதில் சிரமம் இருக்கலாம். பந்தின் சைஸ், அதன் வேகம், திசை என்று ஒரே நேரத்தில் மூளையைத் தாக்கும் பல விஷயங்களை அலசிப் புரிந்து கொண்டு கையை நீட்டுவதற்குள் பந்து பவுண்டரியைத் தாண்டிவிடும். சில சமயம் நீண்ட சங்கிலித் தொடரின் ஆணைகளை நினைவு வைத்துக் கொள்வதில் பிரச்சினை. “”வாடகை சைக்கிள் எடுத்துட்டுப் போயி, பொட்டிக் கடையிலே வத்திப் பெட்டியும் மெழுகுவர்த்தியும் வாங்கிட்டு, அப்படியே சிவமணி வீட்டுலேர்ந்து தினமணி வாங்கிட்டு வந்துடு” போன்ற வாக்கியங்களின் மேடு பள்ளங்களில் விழுந்து எழுந்து புரிந்து கொள்வதற்குள் பொழுது விடிந்துவிடும். இதே போன்ற மற்றொரு வியாதி, டிஸ்கால்குலியா ( Dyscalculia). இவர்கள் படிப்பது, எழுதுவது எல்லாம் பண்டிதத்தனமாகச் செய்வார்கள். ஆனால் கணிதம் மட்டும் சுட்டுப் போட்டாலும் வராது!

சொற்சிதைவு ஏன் என்பதற்கு, ஒருவாரம் லீவு போட்டுவிட்டுப் படிக்க வேண்டிய அளவுக்குக் காரணங்கள் சொல்கிறார்கள். எழுதுவது, படிப்பது எல்லாம் மனிதனின் இயற்கையான திறமைகள் அல்ல. பல லட்சம் வருடப் பரிணாம வளர்ச்சியில் , மிகச் சமீபத்தில்தான் அவன் கற்றுக் கொண்ட வித்தைகள் இவை. எனவே பலருடைய மூளைகள் இன்னும் பள்ளிக் கூடத்திற்குப் போகத் தயாராகவில்லை என்பது ஒரு கட்சி. மற்றொரு பக்கம், மரபியல் காரணங்கள், நரம்பியல் நிபுணர் ஒருவர், டிஸ்லெக்ஸியா பையனின் மூளையை ஸ்கான் எடுத்து “”அங்கே பார், இங்கே பார்” என்று குச்சியால் சுட்டிக் காட்டினார். என் பாமரக் கண்ணுக்கு சிவப்பும் பச்சையுமாக ஏதோ பாசிதான் தெரிந்தது.

சொற்சிதைந்த குழந்தைகளுக்கு மிகவும் தேவைப்படுவது, அவர்களைப் புரிந்து கொண்டு ஆதரிக்கும் பெற்றோரும், ஆசிரியர்களும்தான். கை நிறைய மார்க் வாங்குவதில்லை என்ற ஒரே காரணத்தால் இந்தக் குழந்தைகளை முட்டாள், தத்தி, சோம்பேறி என்று பெற்றோர்களே சுலபமாக முத்திரை குத்தி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தன்னம்பிக்கை, தன்மானம் எல்லாவற்றுக்கும் சாவுமணிதான். அதிலும் நன்றாகப் படிக்கும் அண்ணனோ தம்பியோ இருந்துவிட்டால் போச்சு! இதழாகப் பிய்த்துப் போட்டு விட்டுத்தான் மறுவேலை. ஹோம்வொர்க் எழுதவில்லை என்று தினசரி காதுகள் திருகப்பட்டு மணிக்கட்டுகள் நொறுக்கப்படுவதில் , இந்தக் குழந்தைகளுக்குப் பள்ளிக் கூடத்தின் மீதே வெறுப்பு வந்துவிடுவதில் ஆச்சரியமில்லை. தினசரி காலையில் ஸ்கூலுக்குப் போக மறுப்பு, அடம், வகுப்பறை ஜன்னல் வழியே எகிறிக் குதித்துக் காணாமல் போய்த் தெருவில் பாம்பாட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பது, சதா கனவு மேகங்களில் சஞ்சரிப்பது போன்றவை டிஸ்லெக்ஸியாவின் பக்க விளைவுகள்.

சொற்சிதைவுக்கு ஆளான குழந்தைகள் எந்த வகையிலும் அறிவிலோ, திறமையிலோ குறைந்தவர்கள் அல்ல. சொல்லப் போனால் பல மனவியல் டாக்டர்கள், “”டிஸ்லெக்ஸியாவை ஒரு வியாதி என்று வகைப்படுத்துவதையே ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஓர் ஊனமோ, குறைபாடோ அல்ல. நாம் எல்லாருமே எல்லாப் பரீட்சையிலுமே முதல் ராங்க்கா எடுக்கிறோம்? படிப்பில் முன்னே பின்னேதானே இருக்கிறோம்? அதே மாதிரி இந்தக் குழந்தைகளுக்கு சற்று ஸ்பெஷல் உதவி தேவைப்படுகிறது. அவ்வளவுதான்” என்கிறார்கள். சில ஆசிரியர்கள் கூட, “”டிஸ்லெக்ஸியா என்ற வார்த்தையே ஏதோ பயங்கரமாக, தமிழ் சினிமாவின் கடைசிக் காட்சியில் கதாநாயகனுக்கு வரும் வியாதி போல இருக்கிறது. எனவே அதைத் தவிர்த்துவிட்டு சாந்தமாக த.ஈ. (  reading disability) என்று கூப்பிடலாமே?” என்கிறார்கள்.

டிஸ்லெக்ஸியா குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு சின்னக் கேள்வி. எதிர்காலத்தில் உங்கள் குழந்தை இவர்களைப் போலப் புகழ் பெற்றால் போதுமா பாருங்கள்:

விஞ்ஞானிகள் ஐன்ஸ்டைன், எடிசன்?

பிரதமர் சர்ச்சில்?

எழுத்தாளர் அகதா கிறிஸ்டி?

ஐஸ்வர்யா கணவர் அபிஷேக் பச்சன்?

போதும் என்றால், கவலையை விடுங்கள். மேற்குறிப்பிட்ட அத்தனை பேரும் ஆரம்பக் காலத்தில் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள்தான். அரசியல்வாதிகள், ஓவிய மேதைகள், தொழிலதிபர்கள் என்று சொற்சிதைவை வென்று புலிக் கொடி நாட்டிய பிரபலங்களின் பட்டியல் மிகவும் நீளமானது.

டிஸ்லெக்ஸியாவின் பரிதாபத்தையும் தங்களுக்குக் கொழுத்த வியாபாரமாக்கிக் கொண்டுவிட்டவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். பிரத்யேகமாகத் தயாரித்த டப்பா உணவுகள், பத்தியங்கள், சூரியகாந்தி சிகிச்சை, முதுகுத் தண்டைப் பிசையும் ஆஸ்டியோபதி வைத்தியம் என்று அப்பாவி அப்பாக்களிடம் சக்கையாகப் பணம் கறப்பவர்கள் இவர்கள். மற்றொருபுறம், சொற்சிதைவை சமாளிக்க ஆசிரியர்களும் டாக்டர்களும் சேர்ந்து பல உபயோகமான பாடத்திட்டங்கள் தயாரித்திருக்கிறார்கள். இவற்றில் பலவற்றை நாமும் பைசா செலவில்லாமல் பின்பற்ற முடியும். எழுத்துக்களை உடல்ரீதியாக உணர்ந்து கொள்வதற்கு, மணலில் விரலால் எழுதிப் பழகுவது முதல் கட்டம். (நம் முன்னோர்கல் தெரியாமலா எழுதி வைத்தார்கள்!) களிமண்ணில் பொம்மை பொம்மையாக எழுத்து வடிவங்களை உருவாக்குவது, ஒரே மாதிரி சப்த அமைப்பு உள்ள வார்த்தைகளை (தகரம், நகரம், நரகம்) ஒன்றாகத் தொகுத்துப் படிப்பது என்று பல வழிகள் இருக்கின்றன. டிஸ்லெக்ஸியா சொûஸட்டியில் கேட்டால் ஆலோசனைகள் நிறையக் கிடைக்கும். பெற்றோர்கள்தான் இதையெல்லாம் பொறுமையாகச் செய்ய வேண்டும். ஐம்பது பிள்ளைகள் படிக்கும் வகுப்பில் ஆசிரியர்களால் இப்படி தனிக் கவனம் செலுத்த முடியாதுதான். ஆனால் அவர்கள் சொற்சிதைந்த குழந்தைகளை அடையாளம் கண்டு கொண்டு திட்டாமல் மிரட்டாமல் அரவணைத்துப் போனாலே பெரிய உதவியாக இருக்கும். மற்றபடி குழந்தையிடம் இருக்கக் கூடிய ஓவியம், இசை போன்ற திறமைகளைக் கண்டுபிடித்துத் தூண்டிச் சுடர் விடச் செய்தால் குழந்தையின் சுய மதிப்பீடு உயரும்.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட விண்மீன்கள் படத்தில் அமீர்கான் பேசும் ஒரு வசனம், எதிலும் எப்போதும் தன் குழந்தைதான் முதலில் வர வேண்டும் என்ற வெறியில் அவர்கள் வாயில் நுரைதள்ளும் வரை ஓட வைக்கும் பெற்றோர்கள் பற்றியது: “” இவர்களுக்கெல்லாம் ரேஸ் ஓட விட்டுப் பார்க்க வேண்டுமென்றால், அதற்குப் போய் ஏன் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்? பேசாமல் குதிரை வளர்க்க வேண்டியதுதானே?”

Posted in +2, 10, Aamir, Aamir Khan, Achievements, Achievers, Arts, Biz, Books, Business, Challenged, Child, Children, Cinema, Cognition, Colleges, Commerce, Communication, disability, Dyscalculia, Dyslexia, English, entrepreneurs, entrepreneurship, Fashion, Films, Fun, Games, Grades, IIM, IIT, Innovation, Ishaan, Ishan, Khan, Kids, Learn, Learning, Marks, Maths, Merit, Movies, Painting, Professors, Raman Raja, Rank, Reading, Schools, Shrewd, Sports, Students, Teachers, Value | 2 Comments »

Ayurvedha Corner – S Swaminathan: Murungai keerai helps in increasing breast milk

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தாய்ப்பாலுக்கு முருங்கைக்கீரை!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

என்னுடைய இரண்டு மாதக் குழந்தை சளி பிடித்து மிகவும் கஷ்டப்படுகிறான். தொண்டையில் கபம் கட்டிக்கொள்வதால் பால் குடிக்க முடியாமல் கஷ்டப்படுகிறான். பாலைச் சங்கில் எடுத்துக் கொடுத்தேன். குடிக்க மறுக்கிறான். என் சாப்பாட்டின் அளவைக் குறைத்தேன். பாலின் அளவு கம்மியாகிவிட்டது. என்ன சாப்பிட்டால் பாலின் அளவு கூடும்? அவனுக்கு ராகி, கோதுமை ஊற வைத்து கூழாகக் கொடுக்கலாமா?

குழந்தையைப் பொதுவாக மூன்று வகையில் பிரிக்கலாம். முதலாவது “க்ஷீராசீ’ என்பது. அதாவது இந்த வயதில் குழந்தை தாய்ப்பாலை மட்டுமே குடித்து வளரும். குழந்தைக்கு எந்த நோயும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள அம்மா பத்திய உணவாகச் சாப்பிட வேண்டும். இந்த வயதில் குழந்தைக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் தாயாருக்கு மருந்து கொடுத்து, தாய்ப்பாலின் வழியாக குழந்தைக்கு மருந்து சேர குழந்தையின் நோய் தீருவதும் முறையாகும்.

உங்களுக்குத் தாய்ப்பால் குறைந்துவிட்டது. குழந்தைக்கு தொண்டையில் கபம் கட்டி பால் குடிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களுக்குத் தாய்ப்பால் அதிகரிக்கவும் அதன் வழியாக குழந்தைக்குத் தொண்டை சளி குறையவும் உணவில் அடிக்கடி முருங்கைக்கீரையும் பச்சைப் பயறு சுண்டலும் சேர்க்கவும். இதனால் தாய்ப்பால் வேண்டிய மட்டும் குழந்தைக்குக் குறைவில்லாமல் கிடைக்கும். மேலும் ஒரு பல் பூண்டைக் கொஞ்சம் தண்ணீர் கலந்த பாலில் சேர்த்துக் காய்ச்சி பூண்டை எடுத்து விட்டு பாலை வெதுவெதுப்பாக நீங்கள் காலை இரவு உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பாகக் குடிக்க வேண்டும். வாரத்தில் இருமுறை இதுபோல குடித்தால் போதும். நீங்கள் பூண்டுப்பாலைக் குடித்த மறுநாள், தாய்ப்பாலைப் பருகிய குழந்தையின் வாயில் பூண்டின் மணம் வீசும். பூண்டினால் சுத்திகரிக்கப்பட்ட தாய்ப்பால் குழந்தைக்கு எளிதில் சீரணமாகக் கூடியதாகும். தொண்டை கபக்கட்டை நீக்கவும் செய்யும். இதற்குக் காரணம் பாலில் கொழுப்பின் அம்சம் குறைந்து எளிதில் செரிக்க உதவும். குழந்தைக்கு வயிற்றில் மப்பு, உப்புசம், புளிப்பு எதுவும் தட்டாது. மலச்சிக்கல் இருக்காது. நல்ல பசியும் ஜீரணமும் ஏற்படும்.

மேலும் வசம்பின் மேல் தோலைச் சீவி, சட்டியிலிட்டுச் சுட்டு சாம்பலாக்கிப் பொடி செய்யவும். ஓர் அரிசி அளவு இந்தப் பொடியை எடுத்து, சிறிது தேனிலோ, தாய்ப்பாலிலோ தினந்தோறும் அல்லது இரண்டு அல்லது மூன்று தினத்திற்கு ஒரு முறையோ குழந்தைக்குக் கொடுக்கவும். சளி ஜலதோஷம் போன்ற நுரையீரல் நோயோ -வயிறு மப்பு, மந்தம், புளிப்பு, ஜீரணக்கோளாறு, உப்புசம், வாந்தி போன்றவையோ வராமல் தடுக்கும். மலச்சிக்கல் இல்லாமலும் இருக்கும்.

நீங்கள் குறிப்பிடும் ராகி, கோதுமைக் கூழ் போன்றவை குழந்தைக்கு ஆறு அல்லது ஏழு மாதம் ஆகும்போதுதான் கொடுப்பது நல்லது. கொஞ்சம் உணவைச் சாப்பிட்டு, தாய்ப்பாலையும் நம்பி இருக்கும் இந்நிலையில் அதை “க்ஷீரான்னாசி’ என்பர். இந்த ராகி, கோதுமையைக் காட்டிலும் அரிசியைச் சமைத்துக் கொடுப்பது நலம். சுத்தமான அரிசியை ஓர் ஆவி கொதிக்க விட்டுச் சிறிது வெந்ததும் எடுத்து வெய்யிலில் உலர்த்தி அந்த அரிசியை ரவை கணக்கில் ஒரே சீராகப் பொடித்து, ஒரு சிட்டிகை ஜீரகமோ அல்லது ஓமமோ கூட்டிப் பொடி செய்ய வேண்டும். ஒரே ஒரு மிளகையும் சேர்க்கலாம். தண்ணீர் கொதிக்கும்போது சுமார் 2 டீஸ்பூன் இந்த அரிசி நொய்யை இட்டு வேகவிட்டு கஞ்சியாக்கி, துளி உப்பு சேர்த்து ஒருவேளை குழந்தைக்கு ஊட்டி விடவும். 8 மாதம் 9 மாதம் என்று ஆகும்பொழுது இந்தக் கஞ்சியைக் கூழ்போல கெட்டியாகக் கிண்டிக் கொண்டு, அதில் ஒரு சொட்டு நெய்கூட்டி குழந்தைக்கு ஊட்ட, வயிற்றுக்குள் எளிதாக நழுவிச் செல்லும். அதன் பிறகு சிறிது வெந்நீர் புகட்ட எளிதில் கூழ் செரித்து விடும்.

குழந்தை வளர வளர தாயாரை நம்ப வேண்டிய நிலையும் மாறி உணவை மட்டுமே சாப்பிடும் போது அதை “அன்னாசீ’ என்று அழைப்பார்கள்.

ஆயுர்வேத மருந்துகளில் குழந்தைக்குச் சளி குறையும், நன்றாகப் பசி எடுக்கவும் ரஜன்யாதி சூர்ணம் ஒரு சிட்டிகை எடுத்து, சிறிது தேன் நெய் குழைத்து நாக்கில் தடவி விடவும். காலை மாலை, தாய்ப்பால் பருகும் முன்னர் (சுமார் ஒரு மணி நேரம்) கொடுக்கவும். தாய்ப்பால் வளர ஸ்தன்ய ஜனன ரஸôயனம் எனும் லேஹ்யத்தை காலை மாலை வெறும் வயிற்றில் 5-10 கிராம் வரை நக்கிச் சாப்பிடவும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Babies, breast, breastfeeding, Child, Children, Garlic, Herbs, Infants, Keerai, Kids, Medicine, milk, Mom, Mother, Murungai, Natural, Parent, Parenting, Toddlers | 1 Comment »

Staff strength in government hospitals vs secondary health centres in Tamil Nadu: Healthcare

Posted by Snapjudge மேல் ஜனவரி 6, 2008

இது என்ன விபரீதம்?

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கிராமப்புற சேவையில் ஈடுபடுவது தொடர்பான சர்ச்சை இன்னும் முற்றுப்பெறாத நிலையில், ஒரு புதிய சர்ச்சைக்குப் பிள்ளையார்சுழி போட்டிருக்கிறார் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.

அரசு மருத்துவமனைகளில் தேவைக்குக் குறைவான செவிலியர்கள் இருக்கும்நிலையில், அதற்குப் பரிகாரம் தேடுவதை விட்டுவிட்டு துணை சுகாதார நிலையங்களில் எட்டாயிரம் செவிலியர்களை நியமிக்கப் போவதாக அறிவித்திருப்பது ஏன் என்பது புதிராக இருக்கிறது.

தமிழகத்தில் 1,417 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 8,683 துணை சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்தத் துணை சுகாதார நிலையங்களில், கிராமப்புற மக்களுக்குச் சேவையாற்றுவதற்குத் தனிப்பயிற்சி பெற்ற கிராம சுகாதார செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

சுமார் 5,000 பேருக்கு ஒருவர் என்கிற விகிதத்தில் நியமிக்கப்படும் இந்தக் கிராம சுகாதார செவிலியர்கள்தான், கிராமப்புறங்களில் வீடுவீடாகச் சென்று அரசின் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துபவர்கள். கிராம மக்கள் மத்தியில், குறிப்பாக, அதிகம் படிப்பறிவோ வசதியோ இல்லாத அடித்தட்டு மக்கள் மத்தியில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் தடுப்பூசி போடுதல், பிரசவம் பார்த்தல் போன்ற பணிகளில் ஈடுபடுபவர்கள் இவர்கள்தான். இவர்கள் செயல்படும் விதமும் செயல்படும் சூழலும் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களின் செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலைமை பாராட்டும்படியாக இருக்கிறதா என்றால் இல்லை. துப்புரவுப் பணியாளர்களில் தொடங்கி மருத்துவமனைப் பணியாளர்கள், ஆய்வகப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் என்று இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் பணியிடங்கள் நிறையவே இருக்கின்றன. ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டு அதை ஓட்டுவதற்கு ஓட்டுநர் இல்லாத நிலைமைகூட சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ளது.

இது ஒருபுறமிருக்க, அரசு மருத்துவமனைகளில் கடுமையான செவிலியர் பற்றாக்குறை நிலவுகிறது. பல இடங்களில் மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாமல் நோயாளிகள் வேதனைப்படுவது அரசு மருத்துவமனைக்குப் போய் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். பயிற்சி மருத்துவர்களைப் போன்று செவிலியர் படிப்பு முடித்தவர்களைத் தாற்காலிக ஊழியர்களாக அரசு மருத்துவமனைகளில் நியமித்து குறைந்தது இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிப்பது என்று அரசு முடிவெடுத்தால் அது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

அதையெல்லாம் செய்யாத மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8,000 செவிலியர்களை ஒப்பந்தப் பணியாளர்களாக நியமிக்கப் போவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்தச் செவிலியர்கள் கிராம சுகாதார நிலைய செவிலியர்களைப்போல வீடுவீடாக, தெருத்தெருவாக, கிராமம் கிராமமாகச் சென்று பணியாற்றுவார்களா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அனுபவம் இல்லாத ஒப்பந்தப் பணியாளர்களாக செவிலியர்களை நியமிப்பதன் மூலம் கிராமப்புற அடித்தட்டு மக்களுக்குத் தரமற்ற மருத்துவ சேவையை வழங்குவதுதான் அரசின் நோக்கமா என்கிற கேள்வி எழுகிறது.

தாற்காலிகமாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிவிட்டு அந்தச் செவிலியர்கள் மீண்டும் மருத்துவத் துறைக்கே சென்று விடுவார்கள் என்கிறார் அமைச்சர். அப்படியானால் அனுபவம் இல்லாத இந்த செவிலியர்களைக் கொண்டு கிராமப்புறங்களில் பிரசவம் பார்க்க அனுமதிப்பது என்பது ஏழை மக்களுக்கு அரசு தெரிந்தே செய்யும் துரோகம் என்று ஏன் கருதக்கூடாது?

இதுபோன்ற முன்யோசனையே இல்லாத, எடுத்தோம் கவிழ்த்தோம் முடிவுகள் மிகப்பெரிய விபரீதங்களுக்கு வழிகோலுமே தவிர, மக்களின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்காது. சேவையைப் பற்றிக் கவலைப்படாமல் செய்யப்படும் தேவையற்ற நியமனங்கள், அரசின் செயல்பாடு பற்றி தேவையில்லாத உள்நோக்கம் கற்பிக்க வழி வகுக்கும் என்பது அமைச்சருக்கு ஏன் புரியவில்லை?

——————————————————————————————————–

ஆரம்ப சுகாதார நிலையங்களில்
1000 செவிலியர்கள் புதிதாக நியமனம்

ஜன.6-இல் முதல்வர் கலைஞர் ஆணை வழங்குகிறார்

சென்னை. ஜன. 5- தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யங்களில் புதிதாக 1000 செவி லியர்கள் நாளை (6-1-2008) நியமிக்கப்படுகிறார்கள். இதற்கான நியமன ஆணை களை முதல்வர் கலைஞர் அவர் கள் தலைமைச் செயலகத்தில் வழங்குகிறார்.
சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இதனைத் தெரிவித்ததோடு, மேலும் கூறியதாவது:
தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு, தமிழ கம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம் படுத்தப்பட்டு வருகின்றன. சுகாதாரத் துறைக்குக் கூடு தல் நிதி ஒதுக்கி, வருமுன் காப் போம், கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பு ஆகிய திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கப் புதிதாக மருத்துவர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். பேறுகால மரணத்தைத் தடுக்கவும், கிராமப்புறச் சேவை யைச் சுகாதாரத் தறை மேம் படுத்தியுள்ளது.

அதன் அடிப் படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேலும் 1000 செவிலியர்கள் நியமிக்கப் பட உள்ளனர். கிராமப்புற மக்க ளுக்கு அடிப்படை மருத்துவ வசதி கிடைக்கவேண்டும் என் பதில் முதல்வர் தீவிரமாக உள் ளதால், கிராமப்புற மருத்துவ சேவையை விரிவு படுத்தி வருகி றோம்.

6 ஆம் தேதி முதல்வர் 5 மருத் துவத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். 10 லட்சம் குழந்தை களுக்கு போலியோ சொட்டு அளிக்கும் திட்டத்தை அன்று காலை தனது இல்லத்தில் அவர் தொடங்கி வைக்கிறார்

11.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பு ஊசித் திட்டம், கிராமப்புற மருத்துவ சேவைக்கு 100 ஆம் புலன்ஸ், புதிதாக 1000 செவிலி யர்கள் நியமன ஆணைகளை வழங்குதல், 1036 ஆரம்ப சுகா தார நிலையங்களுக்கு ரூ 5 . 2 கோடி செலவில் கணினி மற் றும் இணையதள வசதி போன் றவற்றை தலைமைச் செயல கத்தில் காலை 10 மணிக்கு முதல்வர் வழங்குகிறார்.
ஆரம்ப சுகாதார நிலையங் களுக்கு 660 பேரும், அரசு மருத்துவமனைகளுக்கு 340 பேரும் 98 மய்யங்களில் அவசர சிகிச்சைகளுக்காகவும் இந்தப் புதிய செவிலியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இது தவிர 66 சுகாதார ஆய்வாளர்களுக்கு நியமன ஆணைகளையும் வழங்குகிறார். 380 வட்டாரங் களுக்கு மொபைல் ஆம்புலன்ஸ் வழங்கப்படுகிறது. ரூ 6 கோடி செலவில் செயல்படுத் தப்படும் இத்திட்டத்தில் ஒவ் வொரு குழுவிலும் ஒரு மருத் துவர், ஒரு செவிலியர், ஓட்டுநர் ஆகியோர் இடம் பெறுகின் றனர்.

பேறு சாரா மற்றும் குழந்தைகள் நலன் காப்பதற் காக இக் குழுவினர் கிராமங்களுக்குச் சென்று சிகிச்சை அளிப்பார்கள். இதன் முதல் கட்டமாக இன்று 100 வட்டா ரங்களுக்கு ஆம்புலன்ஸ் வழங் கப்படுகிறது. பின்னர் படிப் படியாக மற்ற வட்டாரங் களுக்கு வழங்கப்படும்.

——————————————————————————————————————
ஆரம்பமே சுகாதாரமாக இல்லை!

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுவதைப் பெரும்பாலான ஏழைகள் கூட தவிர்க்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

அதற்கு முக்கியமாக 4 காரணங்கள் கூறப்படுகின்றன. 1. டாக்டர், நர்ஸ், மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட ஊழியர்கள் கிராமப்புற மையங்களுக்குச் சரியாக வேலைக்கு வருவதில்லை. 2. அப்படியே வந்தாலும் நோயாளிகளைக் கனிவாகக் கவனிப்பதில்லை. 3. அவசரத்துக்கு இங்கே வந்துவிட்டோம், அருகில் உள்ள நகரத்துக்குச் சென்றிருந்தால் இன்னும் நன்றாகக் கவனித்திருப்பார்கள் என்றே பெரும்பாலான நோயாளிகள் நினைக்கின்றனர், 4. சுகாதார நிர்வாகத்தில் நிலவும் ஊழல் மற்றொரு முக்கியமான காரணம்.

ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல், வியாதி வந்துவிட்டால் உடனே நாடுவது தனியார் மருத்துவமனைகளைத்தான். டாக்டர் இல்லை, மருந்து இல்லை, படுக்கை இல்லை என்றெல்லாம் அவர்கள் திருப்பி அனுப்புவதில்லை. “முதலில் நீ, அப்புறம் உன் பணம்’ என்று தனியார் மருத்துவமனைகளில் அக்கறை காட்டி வசூலித்துவிடுகிறார்கள். எனவே நோயாளிகளும் செலவைப்பற்றி கவலைப்படுவதில்லை.

மேலை நாடுகளில் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களுக்கு மாத ஊதியம் என்ற முறையைக் கைவிட்டு, அவர்கள் எத்தனை நோயாளிகளைப் பார்க்கின்றனர் என்ற கணக்கை வைத்து ஊதியம் தருகின்றனர். எனவே டாக்டர்களும் அக்கறை காட்டுகின்றனர். அதை இங்கேயும் அமலுக்குக் கொண்டுவரலாம்.

சுகாதாரம் என்பது தடுப்பூசி போடுவது, முகாம்களில் கண், பல், காது-மூக்கு-தொண்டையைச் சோதிப்பது மட்டும் அல்ல. கிராமம் ஆனாலும், நகரம் ஆனாலும் சாக்கடைகள் தேங்காமல் பார்த்துக் கொள்வது, குப்பைகள் சேராமல் அகற்றுவது, கொசுக்கள் பெருகாமல் மருந்து தெளிப்பது, அடிப்படைச் சுகாதாரம் குறித்து மக்களுக்குக் கற்றுத்தருவது போன்றவையுமாகும். டாக்டர்கள், நர்சுகள் மட்டும் அல்ல; ஆசிரியர்கள், பொறியாளர்கள், அரசு ஊழியர்கள் சேர்ந்து இயக்கமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை இது.

நம்முடைய ராணுவத்துக்கும், கல்விக்கும் ஒதுக்கும் தொகையைவிட அதிகத்தொகையை சுகாதாரத்துக்கு ஒதுக்க வேண்டும்.

பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருள்கள், கைனி, ஜர்தா போன்ற போதை பாக்குகள், விஸ்கி, பிராந்தி, ரம், ஜின், பீர் போன்ற மதுபானங்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய அனுமதித்துவிட்டு பிறகு சிகிச்சை அளிப்பதென்பது தும்பைவிட்டு வாலைப்பிடிக்கிற கதை. மக்கள் நலனில் அக்கறை உள்ள, நலவாழ்வை நாடும் முற்போக்கு ஜனநாயக அரசுகள் இவற்றுக்குத் துணிச்சலாக தடை விதித்து மக்களின் சுகாதாரத்துக்கே முன்னுரிமை தர வேண்டும். வருமான இழப்பை ஒரு பொருட்டாகவே கருதக்கூடாது.

எல்லாவற்றுக்கும் மேலாக, வயதுவந்த எல்லோரும் மருத்துவ இன்சூரன்ஸ் செய்துகொள்வது கட்டாயம் என்று சட்டம் இயற்றி, மிகக் குறைந்த பிரீமியத்தை வசூலிக்க வேண்டும். இதனால் திரளும் கோடிக்கணக்கான ரூபாயில் ஏழை நோயாளியின் சிகிச்சைக்குக்கூட எத்தனை லட்சம் செலவானாலும் அதை இன்சூரன்ஸ் நிறுவனமே ஏற்கும் நிலை வேண்டும். அப்படிச் செய்தால்தான் அனைவருக்கும் மருத்துவ வசதி என்பது வெறுங்கனவாக நிற்காமல் நனவாக முடியும்.

நகர்ப்புறங்களில் பெரிய மருத்துவமனைகளில் வேலைபார்ப்பது டாக்டர்களுக்கு மன மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது. அத்துடன் தங்களுடைய குழந்தைகளின் எதிர்கால படிப்புக்கும், எப்போதாவது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் குடும்பத்துடன் பொழுது போக்கவும் நகரமே ஏற்றது என்று டாக்டர்கள் கருதுகின்றனர். இதனாலேயே கிராமங்களுக்குச் செல்லத் தயக்கம் காட்டுகின்றனர். இந்தநிலை மாற கிராமப்புற சேவைகளுக்கு பண ஊக்குவிப்பு முதல், பதவி உயர்வு வரை பலவிதமான சலுகைகளை அளிப்பதே விவேகமான வழிமுறையாக இருக்கும்.

வளமான நாட்டின் சொத்து, வலிமையான அதன் மக்கள்தான். இதைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் அல்ல நம்முடைய நிதி அமைச்சர் ப. சிதம்பரமும், சுகாதார அமைச்சர் அன்புமணியும். எனவே வரும் பட்ஜெட்டில், ஏழைகளுக்கும் முதியோருக்கும் 100% பலன் கொடுக்கும் எளிமையான மருத்துவ இன்சூரன்ஸ் திட்ட அறிவிப்பை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

Posted in Anbumani, Awareness, Birth, Care, Chennai, Child, Childbirth, Children, City, Contract, Contractors, DMK, Doc, Docs, doctors, Employment, Experience, Free, Full-time, GH, Govt, Health, Healthcare, Hospital, Hygiene, Immunization, Jobs, Kids, Labor, Labour, M.R.K.Paneerselvam, Madras, medical, Medicine, Metro, MRK Paneerselvam, newborns, Nurses, Pamphlets, Paneerselvam, Panneerselvam, Pannirselvam, Part-time, PMK, Policy, Polio, Poor, Pregnancy, Prenatal, Ramadoss, Rural, service, Shortage, TN, vaccinations, Vaccines, Villages, Work, workers | 1 Comment »

MG Ramachandran: Politics, Cinema, Personality – MGR Biosketch by Panruti Ramachandhran

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

மறைந்தும் மறையாத தலைவர்

பண்ருட்டி ராமச்சந்திரன்

எந்தத் தலைவர்களும் பதவிக்குச் சென்றால் செல்வாக்கு குறைவதுதான் இயல்பு. ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை பதவிக்குச் சென்ற பிறகும்கூட, அவர் செல்வாக்கு வளர்ந்த வண்ணம்தான் இருந்தது.

அவர் ஆட்சியில் இருந்தவரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. அவர் மறைந்து இருபது ஆண்டுகள் சென்ற பிறகும்கூட, அவரது செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை அண்மையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

இருந்தபொழுது மட்டுமல்ல, மறைந்த பிறகும் மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை எவ்வாறு எம்.ஜி.ஆர். பெற்றார் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியதாகும். அவருக்கும் மக்களுக்கும் இருந்த பிடிப்பு மகத்தானது. அவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காலத்தில் இதை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

ஒருமுறை சென்னையிலிருந்து மதுரைக்கு காரில் சென்றோம். திருச்சியை அடைந்த பிறகு எம்.ஜி.ஆர். ஒரு பரீட்சையில் இறங்கினார். காரில் போகும்பொழுதே தொப்பியையும், கறுப்புக் கண்ணாடியையும் கழற்றி வைத்துவிட்டார். வழிநெடுக கூடியிருந்த மக்கள் எம்.ஜி.ஆர். எங்கே என்று தேடினார்களேயொழிய ஆர்ப்பரிக்கவில்லை. பிறகு மேலூரை நெருங்கியபொழுது தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்து கொண்டார். உடனே வழக்கம்போல் இருபுறமும் மக்கள் ஆரவாரம் செய்தனர். அவர் உடனே என்னிடத்தில் “”என்னை விட என் தொப்பிக்கும், கறுப்புக்கண்ணாடிக்கும் தான் மரியாதைபோலும்” என்று சொல்லி சிரித்தார்.

“புகழ்பெற்ற நடிகராக விளங்குவதால் மக்கள் செல்வாக்கா’ என்று கேட்டேன். அதற்கு அவர், “நடிகர்களாகயிருந்தால் மக்களுக்கு எளிதில் அடையாளம் தெரியும். ஆனால் மக்களின் மரியாதையைப் பெறுவதன் மூலமே செல்வாக்கைப் பெற முடியும். அதற்கு மக்கள் நம் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்கவேண்டும்’ என்றார்.

நடிகர்கள் நாடாள ஆசைப்படுவது நியாயமா என்று கேட்பவர்களுக்கு இதுவே சரியான பதில்.

எம்.ஜி.ஆர். மக்களை எவ்வாறு நேசித்தாரோ, அதேபோல் மக்களும் அவரை நேசித்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. குறிப்பாக அவர் நோய்வாய்ப்பட்டபொழுது ஜாதி, மதம் பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் இறைவழிபாடு நடத்தியது இதுவரை வரலாறு காணாத காட்சியாகும். “”நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற” என்ற பாட்டு ஒலி நாடு முழுதும் கேட்காத நாளில்லை.

1984-ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கிறாரா? உணர்வுடன் இருக்கிறாரா? என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் தமிழக மக்கள் சிறிதும் தயக்கமின்றி அவரை வெற்றிபெறச் செய்தனர்.

அமைச்சரவைக் கூட்டத்திலும்கூட எந்தத் திட்டங்கள் ஆனாலும் பட்ஜெட்டுகள் போடுவது என்றாலும் பாமர மக்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று பார்த்தே ஒப்புதல் தருவார். “மத்திய, மாநில அரசுகளுக்கு வரவு, செலவில் பற்றாக்குறை ஏற்பட்டால் மக்களின் மீது வரிபோடலாம் அல்லது வங்கிகள் மூலம் கடன் பெறலாம். ஆனால் குடும்பஸ்தனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அவன் எங்கே போவது? ஆகவே அரசின் திட்டங்கள் பாமர மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வகையில் அமைய வேண்டும்’ என்பார்.

அரிசி விலையையும், பஸ் கட்டணத்தையும் உயர்த்த ஒப்புக்கொள்ள மாட்டார். குடிசைக்கு ஒரு விளக்கு திட்டம், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், சிறு விவசாயிகளுக்கு பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் போன்ற பல திட்டங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. மக்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை. அரசின் நிதிநிலை சரியானால் போதும் என்ற கொள்கையை அவர் ஏற்றுக்கொண்டதே இல்லை. அதனாலேயே அவரது ஆட்சி ஏழைகளின் ஆட்சியாகத் திகழ்ந்தது.

ஒருமுறை அறிஞர் அண்ணாவுடன் எம்.ஜி.ஆர். சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்றார். இது எம்.ஜி.ஆரே சொன்னது. அண்ணா வழக்கம்போல் காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்தார். எம்.ஜி.ஆர். பின் சீட்டிலிருந்தார். பெரம்பலூருக்கு அப்பால் சென்றபொழுது காரை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அப்பொழுது அந்தப் பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் காரிலிருந்த கொடியைப் பார்த்துவிட்டு நேராக முன்சீட்டில் உட்கார்ந்து இருந்த அண்ணாவிடம் அவர் அண்ணா என்று தெரியாமல், எம்.ஜி.ஆர். வந்திருக்கிறாரா என்று கேட்டார்கள். அதற்கு அறிஞர் அண்ணா கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் இதோ பின்னால் இருக்கிறார் என்று அடையாளம் காட்டினார்.

எம்.ஜி.ஆர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனாராம். அண்ணா எத்தகைய தலைவர் என்பதையும் தன்னோடு இருப்பவர்கள் தன்னைவிடச் செல்வாக்காக இருக்கும்பொழுது பொறாமைப்படுவதற்குப் பதிலாகப் பெருமைப்பட்டவர் என்றும் குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆர். இறுதிவரை அண்ணா பெயரை உச்சரிக்காமல் எதையும் செய்ததில்லை. ஒரு தலைவருக்கு இலக்கணம் அறிஞர் அண்ணா என்றால், தகுதியான வாரிசுக்கு இலக்கணம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்தான்.

எம்.ஜி.ஆர். இளமையில் வறுமையைச் சந்தித்தவர். பொதுவாக, வறுமை கொடிது. இளமையில் வறுமை அதைவிடக் கொடியது. தனது அண்ணனும், தானும் சிறுவயதில் கும்பகோணத்தில் இருந்தபொழுது மூன்று நாள்கள் பட்டினி கிடந்ததாகவும் பரிதாபப்பட்டு எதிர்வீட்டைச் சேர்ந்த ஒரு தாய் கொஞ்சம் அரிசியை புரட்சித்தலைவரின் தாயிடம் தந்து குழந்தைகளுக்காவது கஞ்சி காய்ச்சி கொடுக்கும்படிச் சொன்னாராம்.

அன்று அந்த எதிர்வீட்டுத் தாய் செய்த உதவியால் தான் இன்று உங்களுக்கு ஒரு எம்.ஜி.ஆர். கிடைத்துள்ளார் என்று அவரே கூட்டங்களில் பேசியுள்ளார். இந்த அனுபவத்தால் தான் தமிழ்நாட்டில் பிறக்கும் எந்த குழந்தையும் பட்டினி கிடக்கக்கூடாது என்றும் ஒருவேளையாவது உணவுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கருதியதால்தான் சத்துணவுத்திட்டம் உதயமாயிற்று.

சத்துணவுத்திட்டம் கொண்டு வரவேண்டுமென்ற அவரது கருத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் கூட சில அமைச்சர்களுக்கு சந்தேகம் தீரவில்லை. இத்திட்டத்தால் பணம் செலவாகுமே தவிர பயன் இருக்காது என்றே பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் ஊழல் பெருகும் என்றும் சொன்னார்கள். ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்தியே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

மூக்கு என்று இருந்தால் சளிபிடிக்கத்தான் செய்யும்; ஒரு திட்டம் என்றால் சேதாரங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காகத் திட்டத்தைக் கைவிட வேண்டியது இல்லை என்று தீர்மானித்தோம்.

இந்தத் திட்டம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டபொழுது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் சத்துணவுத் திட்டத்திற்குப் பதிலாக ஏழைகளின் குடும்பத்திற்கு குறிப்பிட்ட தொகையை உதவியாக வழங்கலாம் என்றார். அப்படி வழங்கினால் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைப்பதற்கான உத்தரவாதம் இல்லையே என்று அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் அந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மூன்று நன்மைகள் ஏற்பட்டன. ஒன்று அனைத்து பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பதால் சமத்துவம் ஏற்பட்டது. இரண்டு, படிக்கிற காலத்தில் பள்ளியில் பிள்ளைகளுடைய இடைநிற்றல் தவிர்க்கப்பட்டது. மூன்றாவது, சவலைப்பிள்ளைகள் என்ற நிலையை மாற்ற இன்று முட்டை வழங்குவது வரை அது சத்துணவாக ஆக்கப்பட்டுள்ளது.

“”ஆளும் வளரணும், அறிவும் வளரணும் – அதுதாண்டா வளர்ச்சி”, என்பது எம்.ஜி.ஆரின் படத்தில் வரும் பாட்டு.

நல்ல சிந்தனையோடு நாட்டு மக்களுக்குச் செய்யப்படும் நற்காரியங்களுக்குத் தெய்வமும், மடியை வரிந்து கட்டிக்கொண்டு முன்னே ஓடிவந்து துணைசெய்யும் என்பார் திருவள்ளுவர். 1983-ம் ஆண்டு ஐ.நா. சபைக்கு நான் சென்றபொழுது எம்.ஜி.ஆர். பெயரை ஐ.நா. மன்றத்தில் பதிவு செய்ய வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால் இந்தியாவின் சார்பில் சென்றதால் ஒரு மாநில முதலமைச்சர் பெயரைப் பதிவு செய்ய முடியாது என்று எனக்குத் தெரிவித்துவிட்டனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில் ஐ.நா. சபையில் உலக உணவுதினம் கொண்டாட வேண்டி வந்தது. அதில் அப்பொழுது இருந்த 101 அணிசாரா நாடுகளின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

உலக உணவு தினத்தில் அணிசாரா நாடுகள் சார்பில் இந்தியா கலந்துகொள்ள அழைக்கப்பட்டது. இந்தியாவின் சார்பில் ஐ.நா.சபையில் கலந்துகொண்ட எங்களுக்குத் தலைவராக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இருந்தார். அடுத்த நிலையில் அன்றைய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் இருந்தார். இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் நான் இருந்தேன்.

உலக உணவு தினத்தன்று இந்திரா காந்தியும், நரசிம்மராவும் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர். ஆகவே, இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் உணவு தினம் என்பதால் சத்துணவுத் திட்டத்தைப்பற்றி ஐ.நா. சபையில் விரிவாகப் பேசினேன். உலக நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் அதை கைதட்டி வரவேற்றனர். எம்.ஜி.ஆர். பெயரும் ஐ.நா. சபையில் இடம்பெற்றது.

முயற்சி என்னுடையது என்றாலும் அதற்குரிய வாய்ப்பு இயற்கையாக அமைந்தது புரியாத புதிர் தானே!

(கட்டுரையாளர்: அவைத்தலைவர், தேமுதிக)

Posted in Actors, ADMK, AIADMK, Anjali, Anna, Assembly, Biography, Biosketch, Children, Cinema, CM, DMDK, DMK, dynasty, EVR, Films, Food, Free, Freebies, Heartthrobs, Hero, Heroes, Incidents, Indhra, Indira, Indra, Iruvar, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kids, King, KK, Life, Manifesto, Meals, Memoirs, MGR, Midday Meals, Monarchy, Movies, Notes, Nutrition, Panruti, Periyar, Personality, Politics, Poor, PVNR, Ramachandhran, Ramachandran, Ramachanthiran, Ramachanthran, Rao, UN, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth | Leave a Comment »

‘Vidhyarambam’ V Renganathan: Volunteering for the rural poor with Educational toys

Posted by Snapjudge மேல் திசெம்பர் 12, 2007

சேவை: வந்தாச்சு…பொம்மை வேன்!

அந்த கிராமத்தின் பள்ளம் மேடான சாலையில் புழுதி பறக்க ஒரு வேன் விரைகிறது. அங்குள்ள ஆரம்பப் பள்ளியின் முன் பிரேக் அடித்து நிற்கிறது.

“”வந்தாச்சு, பொம்மை வேன் வந்தாச்சு” படிக்கும் சின்னஞ்சிறு குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கூச்சலிடுகின்றனர். ஆசிரியராலும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பொம்மை வேன் வருவதை நேற்றே கேள்விப்பட்டதால் நேற்று இரவு முழுக்க பொம்மை வேன் வருவதாகக் கனவு கண்டு தூக்கம் கெட்ட குழந்தைகள், கண்முன் அது வருவதைப் பார்த்ததும் உற்சாகத்துடன் கத்துகிறார்கள். அவர்கள் முகத்தில் காணப்படும் மகிழ்ச்சியைப் பார்த்து ஆசிரியர்கள் மெüனமாகிவிடுகிறார்கள்.

“வித்யாரம்பம்’ எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் நடமாடும் பொம்மை நூலக வாகனம்தான் அது. இரண்டாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, கல்வியறிவூட்டும் பொம்மைகளை விளையாடக் கொடுத்து அறிவூட்டும் பணியைச் செய்து வருகிறது அந்த நிறுவனம். அந்த நிறுவனத்தின் நிறுவனர் வி.ரங்கநாதனைச் சந்தித்துப் பேசினோம்.

குழந்தைகளுக்குப் பொம்மைகளை விளையாடக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?

சுனாமியின் போது நாகப்பட்டினம் பகுதியில் பல குழந்தைகள் தங்கள் தாய், தந்தையை, அன்புக்குரியவர்களை இழந்துவிட்டார்கள். அந்தத் துயரம் அவர்கள் மனதைவிட்டு அகலவில்லை. குழந்தைகள் பள்ளிக்கு வருவது மிகவும் குறைந்துவிட்டது. எல்லாவற்றையும் பறிகொடுத்த அந்தக் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் படிக்க வைப்பதே மிகுந்த சிரமமாகிவிட்டது. ஸ்கூலுக்குப் போவதற்கே பயந்தார்கள். அந்தக் குழந்தைகளைப் பள்ளிக்கு வரவைப்பதற்காக, அவர்களுடைய மனநிலையை மாற்ற பொம்மைகளை அந்தப் பள்ளிகளுக்கு எடுத்துச் சென்றோம். அங்கு எங்களுக்குக் கிடைத்த வெற்றி, பிற பள்ளிகளுக்கும் பொம்மைகளைக் கொண்டு செல்லும் எண்ணத்தை ஏற்படுத்தியது.

பொம்மைகள் என்றால் விளையாட்டுப் பொம்மைகளா?

விளையாட்டுப் பொம்மைகள்தாம். ஆனால் அதேசமயம் அவற்றின் மூலம் குழந்தைகளின் அறிவை வளர்க்க முடியும். பொம்மைகளை வைத்து கணக்குப் போடக் கற்றுக் கொடுப்பது, அறிவியல் அறிவை வளர்ப்பது போன்றவற்றைச் செய்கிறோம்.

இப்போது கல்வி கற்பிக்கும் முறைகள் மாறிவிட்டன. “விளையாட்டுப் போல கல்வி’ என்பது நகர்ப்புறத்தில் உள்ள வசதியான வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. அதைக் குக்கிராமங்களில் உள்ள குழந்தைகள் பெறுவது எப்படி? நாளை இந்தக் குழந்தைகள் படித்துவிட்டு வேலைவாய்ப்பு என்று வரும்போது நகர்ப்புறக் குழந்தைகள்தானே வேலைவாய்ப்பைப் பெற முடியும்? நகர்ப்புறக் குழந்தைகளுக்குச் சமமாக கிராமத்துக் குழந்தைகளையும் படிக்க வைப்பதுதான் எங்கள் நோக்கம்.

ஆண்டுக்கு ஒரு முறை ஒரு கிராமத்துப் பள்ளிக்குப் போய் சில மணி நேரங்கள் பொம்மைகளைக் காட்டுவதால் அவர்கள் அறிவு வளர்ந்துவிடுமா?

எங்களுக்கும் ஆசைதான், எல்லா ஊர்ப் பள்ளிகளிலும் நிரந்தரமாக இப்படிப் பொம்மைகளை வைத்துக் குழந்தைகளின் கல்வியறிவை வளர்க்க வேண்டும் என்று. சுமார் 250 பொம்மைகளை வைத்துக் கல்வி கற்றுக் கொடுக்க 50 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளுக்கு எப்படி எங்களால் நிரந்தரமாகப் பொம்மைகளை வழங்க முடியும்?

இப்போது எங்களிடம் மூன்று பொம்மை வேன்கள் உள்ளன. ஒரு வேனில் நான்கு பேர் போவார்கள். குழந்தைகளுக்கு பொம்மைகளை வைத்து விளையாட்டும் அதேநேரத்தில் கல்வியும் கற்றுத் தருகிறோம். பாட்டு, நடனம் போன்றவற்றையும் அரை மணி நேரம் சொல்லிக் கொடுக்கிறோம்.

நாங்கள் ஒரு பள்ளிக்குப் போய் பொம்மைகளைக் காட்டிவந்தபின்னால் அந்தப் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், தலைமையாசிரியர் போன்றவர்கள் பொம்மைகள் எங்கே கிடைக்கும்? என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் சொல்கிறோம். அவர்கள் தங்கள் பள்ளிக்கென்று பொம்மைகளை வாங்குகிறார்கள்.

எங்களுக்குப் பொம்மை வாங்க உதவுவது ரேயுகாய் – Reiyukai என்ற ஜப்பானிய நிறுவனம். அவர்களின் பிரதிநிதிகள் இங்கே நேரில் வந்து எங்களின் செயல்பாடுகளைப் பார்க்கிறார்கள். அதுமட்டுமல்ல, எங்களின் செயல்பாடுகளைக் கேள்விப்பட்ட பிற வெளிநாட்டவரும் எங்களை வந்து பார்க்கிறார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த ஆன்ட்ரியா என்பவர் கூட அதுபோல இங்கே வந்து பார்த்தார்.

பொம்மைகளைக் குழந்தைகள் உடைத்துவிட்டால் என்ன செய்வீர்கள்?

குழந்தைகள் விளையாடுவதால் பொம்மைகள் உடையும் என்று முன்கூட்டியே குறிப்பிட்ட தொகையை அதற்கென ஒதுக்கித் திட்டம் போட்டிருக்கிறோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததைவிட குறைவான அளவே சேதம் ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகள் என்றால் விளையாடுவார்கள். விளையாடினால் உடைந்து போகும். இதெல்லாம் சகஜம்தானே?

உங்கள் நிறுவனத்தை சுனாமியின் போதுதான் ஆரம்பித்தீர்களா?

இல்லை. நாங்கள் வித்யாரம்பத்தை ஆரம்பித்து 5 வருடங்கள் ஆகின்றன. நான் பல தனியார் நிறுவனங்களில் பல பொறுப்புகள் வகித்து ஓய்வு பெற்றவன். நான் எனது சொந்தக் கிராமத்துக்கு என் குழந்தைகளுடன் போகும்போதெல்லாம் அங்குள்ள குழந்தைகளுக்கும் என் குழந்தைகளுக்கும் அறிவுத்தரத்தில் நிறைய வேறுபாடுகள் இருப்பது எனக்கு உறுத்தலாக இருந்தது. கிராமத்துக் குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அப்போதே தோன்றியது. என் குழந்தைகள் இப்போது வளர்ந்து பெரியவர்களாகிவிட்டார்கள். என்றாலும் என் எண்ணம் அப்படியேதான் இருக்கிறது.

பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் நான் செய்த முதல் காரியம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வட்டக் கோட்டை என்ற கிராமத்துக்குப் போனதுதான்.

அங்குள்ள சிறு குழந்தைகள் கல்வி கற்பதற்காகப் பள்ளிக்குச் செல்வதில்லை. அங்குள்ள சத்துணவுக் கூடத்திற்கு உணவு உண்பதற்காகச் செல்கிறார்கள் என்பதையறிந்து மனம் வேதனைப்பட்டேன். அவர்களுக்கு கல்வி கற்றுத் தர நான் தனிப்பட்ட முறையில் சிறு உதவிகள் செய்தேன். பின்னர் சென்னைக்கு வந்து நண்பர்களுடன் இதைப் பற்றிக் கலந்தாலோசித்ததின் விளைவாக 2002 இல் உருவானதுதான் வித்யாரம்பம் அறக்கட்டளை. எங்களுக்கு முதன் முதலில் ஐந்து லட்சம் ரூபாய்க்கான செக் நன்கொடையாகக் கொடுத்து உதவினார் ஏஇக நிறுவனத்தின் தலைவர் ஷிவ்நாடார். இதை எங்களால் மறக்கவே முடியாது.

வித்யாரம்பம் அறக்கட்டளையின் மூலமாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு “உறுதுணைக் கல்வி’ என்ற பெயரில் கற்றுத் தருகிறோம். 2 – 3 வகுப்புப் படிக்கும் குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சி. 4 – 5 வது வகுப்புப் படிக்கும் குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சி என்று எடுக்கிறோம். குழந்தைகளுக்கு பாடப்புத்தகம், சிலேட்டு போன்றவற்றையும் வழங்குகிறோம். எங்களிடம் பயிற்சி பெறும் குழந்தைகள் அவர்கள் படிக்கும் பள்ளியில் மிகத் திறமையானவர்களாக இருக்கிறார்கள்.

என்ன கற்றுக் கொடுக்கிறீர்கள்?

முதலில் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுக்கிறோம். காலணியைக் கழற்றிச் சரியாக வைக்கிறார்களா? புத்தகப் பைகளை ஒரு பக்கமாக அடுக்கி வைக்கிறார்களா? என்பதையெல்லாம் கண்காணித்துக் கற்றுக் கொடுப்போம். வணக்கம், குட்மார்னிங், தேங்க்யூ சொல்லுதல் போன்றவற்றைச் சொல்லிக் கொடுப்போம். பிறகு பொம்மைகளை வைத்து விளையாட்டுக் கற்றுக் கொடுப்போம். மணிகளைக் கோர்க்கச் சொல்லிக் கற்றுக் கொடுப்போம். மணிகளை வைத்து கணக்குப் போடச் சொல்லித் தருவோம். கணிதம் சொல்லித் தரும் எங்கள் முறையே விளையாட்டுடன் தொடர்புடையதாகத்தான் இருக்கும். மிக எளிய கூட்டல், கழித்தலில் ஆரம்பிக்கும் எங்கள் குழந்தைகள், கோடி மதிப்புள்ள எண்களைக் கூடக் கொஞ்சமும் பயமில்லாமல் கூட்டிக் கழித்துவிடுவார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஒரு வித்யாரம்ப மையத்தில் 20 குழந்தைகள் இருப்பார்கள். ஓர் ஊரில் 30 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் இரண்டு மையங்களை ஏற்படுத்திவிடுவோம். தமிழ்நாட்டில் இப்போது 600 மையங்கள் செயல்படுகின்றன. கிட்டத்தட்ட 50 ஆயிரம் குழந்தைகள் எங்களிடம் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

இதுதவிர குழந்தைகளுக்கான நூலகங்களையும் நடத்தி வருகிறோம்.

Posted in Child, Children, Education, Faces, Games, Instructors, Interview, Japan, Kids, Library, Metro, NGO, people, Play, Poor, Professors, Read, Reiyukai, School, service, Students, Teachers, Tots, Toys, Tsunami, Vidhyaarambam, Vidhyarambam, Village, Vithyarambam, Volunteer | Leave a Comment »

Recipe for ‘Uraimarundhu’: Ayurvedha Corner – Traditions & Herbs

Posted by Snapjudge மேல் திசெம்பர் 12, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அறிவாற்றலுக்கு – உரைமருந்து!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

என் மகனுக்கு ஏழு வயதாகிறது. படிப்பதிலும், வாசிப்பதிலும், எழுதுவதிலும் போதிய வேகம் இல்லை. டி.வி. கார்ட்டூன் பார்க்க அதிக ஆர்வம் காட்டுகிறான். பள்ளிக்குச் செல்வதற்கு, சிணுக்கம், பயம் கொள்கிறான். மற்றபடி பொதுவாக துறுதுறுப்பும் அறிவும் உள்ளவனாகவும் இருக்கிறான். அவனது மெலிந்த உடல் தேறவும், எழுத்து மற்றும் படிப்பில் திறம் பெறவும் வழி கூறவும்.

தனக்குப் பிறந்த குழந்தை நல்ல அறிவாற்றலோடு நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்று ஒரு தாய் நினைப்பது இயற்கையே. இவை அனைத்தையும் பெற அந்தக் காலங்களில் உரை மருந்து ஒன்றைத் தயாரித்து சிசுக்களுக்கும் கொடுப்பார்கள். இந்த உரை மருந்து இன்று மறந்துபோய்விட்டது. அதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குப் பிறந்த 10-15 நாட்களிலிருந்து 5-7 வயது வரை தொடர்ந்து கொடுத்து வந்திருந்தால் நீங்கள் கூறும் உபாதைகள் அனைத்தையும் தவிர்த்திருக்கலாம். காலதாமதமானாலும் பரவாயில்லை, இப்போதும் அந்த உரை மருந்து தங்கள் மகனுக்கு உதவக்கூடும்.

கடுக்காய், சித்தரத்தை, சுக்கு, ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு என்ற ஆறு கடைச்சரக்குகள். நெல்லைப் புழுக்குவதற்கு வேக வைக்கும்போது நெல்லுடன் இவற்றை அப்படியே வெள்ளைத்துணியில் முடித்து வைத்துவிடவும். அரை வேக்காடு ஏற்பட்டதும் (காய்களை அழுத்தினால் அழுந்தும் பதம் வந்தவுடன்) எடுத்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். உரை மருந்து தயார்.

கை அகலத்திலுள்ள உரைகல் ஒன்று தேவை. அதில் வெந்நீர், வெற்றிலைச் சாறு, துளசிச் சாறு, ஓமகஷாயம், இஞ்சிச் சாறு இவற்றில் ஒன்றைவிட்டு ஒவ்வொன்றையும் வயதிற்கேற்றபடி 2-15 தடவை உரைத்து வந்த விழுதைத் தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொடுக்கவும். வாயு, சளி -வெந்நீர்; சளி, மப்பு -வெற்றிலைச்சாறு, துளசிச் சாறு, தேன்; வயிறு மந்தம், வயிற்றுப்போக்கு-ஓமகஷாயம், தேன். மப்பு, ஜ்வரம், வாந்தி -இஞ்சிச்சாறு, தேன் என்று மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

கடுக்காய் :

நல்ல ஜீரண சக்தி, பசி தரும். மலத்தை இளக்கும். புளிப்பு(வயிற்றில்) அதிகமாவதைத் தடுக்கும். அஜீரண பேதியைத் தடுக்கும். குடல், இரைப்பை, கல்லீரல் சரியே இயங்கச் செய்யும்.

சுக்கு :

வயிற்றில் வாயு சேர விடாது. வயிறு உப்புசம், மலஜலம் சரியாக வெளியேறாதிருத்தல், மப்பால் வயிற்றுவலி, அஜீரணம், வாந்தி இவற்றைப் போக்கும். ஆனால் வயிற்றில் அழற்சி, கடுப்புடன் சீதத்துடன் மலம் வெளியாதல் ரத்தப்போக்கு போன்றவை இருந்தால் சுக்கை உரைத்துக் கொடுக்கக்கூடாது.

சித்தரத்தை :

தொண்டை மார்பு இவற்றில் கபக்கட்டு, உடலில் கடுப்பு வலி இவற்றில் நல்லது. எண்ணெய் தேய்த்தால் ஜ்வரம் சளி பிடிக்கும் என்ற நிலையில் இதனைத் தொடர்ந்து கொடுக்கலாம். தொண்டை-வாய்ப்புண், வறட்டிருமல், வயிற்று வேக்காளம் உள்ள நிலையில் சித்திரத்தையைக் கொடுக்கக்கூடாது. கபக்கட்டுள்ள நிலையில் இதனையும், சுக்கையும் அதிகம் உபயோகிக்கலாம்.

ஜாதிக்காய் :

இரைப்பையை நன்கு தூண்டி, ருசி சுவை கூட்டி பசி ஜீரண சக்தி தரும். சிடுசிடுப்பு, பரபரப்பு, காரணம் புரியாத அழுகை முதலியதைக் குறைத்து அமைதியாகத் தூக்கம் வரச் செய்யும். இளகிச் சூட்டுடன் அடிக்கடி மலம் போவதை இது தடுக்கும்.

மாசிக்காய் :

வேக்காளத்தைக் குறைக்கும். வாய்ப்புண், இரைப்பைப் புண், குடல் புண் இவற்றைக் குறைக்கும். பற்களைக் கெட்டியாக அழகாக வளரச் செய்யும். உடலில் விஷசக்தி பரவாமல் தடுக்கும். சிறுநீர் தாராளமாக வெளியாகும். தொண்டைச் சதை வளர்ச்சி, உள்நாக்கு வளர்ச்சி, சீத ரத்தத்துடன் மலப்போக்கு, வாயில் உமிழ்நீர் அதிகம் பெருகுதல் இவற்றைக் கட்டுப்படுத்தும்.

வசம்பு :

இதுவும் கடுக்காயும், பிள்ளை வளர்ப்பான் என்ற பெயர் பெற்றவை. பசியின்மை, சுறுசுறுப்பின்மை, ருசியின்மை இவற்றைப் போக்கும். பரபரப்பு, சிடுசிடுப்பு, அமைதியின்மை இதனைச் சீராக்கும். பால் ஜீரணமாகாமல் வெளுத்து மலம் போவது, கீரிப்பூச்சி, உப்புசம், வயிற்றுவலி, மார்பில் கபச்சேர்வை இவற்றைப் போக்கும். உடல் சீராக வளர உதவும்.

கார மருந்து என இதற்குப் பெயர். அதனால் உரைத்த மருந்தை சிறுகச்சிறுகச் புகட்ட வேண்டும். தேன் சர்க்கரை சேர்த்து இனியதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். சிறு சிசுவிற்கு 10-15 உரைப்பு வரை தேவைப்படும். மூளைக்கும் குடலுக்கும் நல்ல செயல் திறனைத் தரும் இம்மருந்தை நீங்கள், உங்கள் மகனுக்கு ஏழு அல்லது எட்டு வயது முடியும் வரை தொடர்ந்து கொடுத்து வரலாம். எழுத்து மற்றும் படிப்பில் திறமை வளரும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Child, Children, doctors, Herbs, Kids, medical, Newborn, Pregnancy, Pregnant, Therapy, Traditions, Urai marundhu, Urai marunthu, Uraimarundhu, Uraimarunthu | 1 Comment »

National Geographic channel – Reconstructing genius: Soon, a peep into beautiful minds

Posted by Snapjudge மேல் நவம்பர் 19, 2007

“நேஷனல் ஜியாகிரஃபி சேனலில்’ அறிவுஜீவி இளம் இந்தியர்கள் நிகழ்ச்சி

மும்பை, நவ. 18: அறிவுஜீவிகளாகத் திகழும் நான்கு இளம் இந்தியர்களின் திறமையை விவரிக்கும் சிறப்பு நிகழ்ச்சி “நேஷனல் ஜியாகிரஃபி சேனலில்’ ஒளிபரப்பாக உள்ளது.

மனித மனத்தின் தன்மை மற்றும் எதன்மூலம் மனிதர்கள் அறிவாளிகளாகத் திகழ்கிறார்கள் என்பதை விவரிக்கும் “என்னுடைய அபார மூளை’ என்ற தொடராக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

10 தொடர்கள் கொண்ட இந்நிகழ்ச்சி டிசம்பர் 10 முதல் டிசம்பர் 21 வரை ஒளிபரப்பாகவிருக்கிறது, தேசியவிருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நடிகை கொங்கணா சென் சர்மா இந்நிகழ்ச்சியை தொகுத்தளிப்பார்.

நம்மில் பலர் அறிவுஜீவிகளாக உள்ளனர். அத்தகைய திறமை உடையவர்களைப் பற்றிய தகவலை அனைவருக்கும் அறியவைப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம் என்று “நேஷனல் ஜியாகிரஃபி சேனல்’ நிர்வாக இயக்குநர் நிகில் மிர்சந்தானி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்த இதர விவரம்:

இளம்வயதிலேயே அபார திறமையுடன் விளங்கும் ஹைதராபாதை சேர்ந்த சித்தார்த் நாகராஜன் மற்றும் நிசால் நாராயணம், பெங்களூரை சேர்ந்த ததாகத் அவதார் துளசி, மும்பையை சேர்ந்த ராகவ் சச்சார் ஆகிய நான்கு இளைஞர்களைப் பற்றிய சிறப்பு அம்சங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெற உள்ளன.

இவர்களில் சித்தார்த் நாகராஜனின் தற்போதைய வயது 10. குழந்தைப் பருவத்திலேயே, அதாவது தனது மூன்று வயதிலேயே டிரம் இசைநிகழ்ச்சியை தனியாக நடத்திய சிறப்பு அம்சம் பெற்றவர் இவர்.

இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து 12 வயதாகும் நிசால் நாராயணம் கணிதத்தில் அபார திறமை பெற்றவர். கணித கோட்பாடுகள் பற்றிய இவரது ஆறு புத்தகங்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன.

சிறுவயதிலேயே தனது தந்தையின் நிதிநிலை அறிக்கையில் தவறுகள் இருந்ததைக் கண்டறிந்த மேதை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிக இளம் வயதில் கின்னஸ் புத்தகத்தில் சாதனையாளராக இடம்பெற்ற இந்தியர் என்பது அவரது மற்றொரு சிறப்பு.

அடுத்த அறிவுஜீவி ததாகத் அவதார் துளசி, தனது 9 வயதிலேயே பள்ளிப்படிப்பை முடித்தவர். பட்டப்படிப்பு பட்டத்தை மறு ஆண்டிலேயே பெற்றார். 12-வது வயதில் முதுகலைப் பட்டம் பெற்றார். பிஎச்டி பட்டம் பெற்றவர்களில் மிகவும் இளையவர் என்ற பெருமை பெற்றார். தற்போது இவரது வயது 20.

ராகவ் சச்சார் தனது 4 வயதிலேயே இசைக்கருவிகளை லாவகமாக வாசித்து புகழ்பெறத் தொடங்கினார். ஆண்டுதோறும் ஒரு இசைக்கருவி என்ற அடிப்படையில் இதுவரை 24 இசைக்கருவிகளில் தேர்ச்சி பெற்றார். தன்னுடைய இசை நிகழ்ச்சிகளில் குறைந்தபட்சம் 10 இசைக் கருவிகளை வாசிப்பார். இதில் புல்லாங்குழல், ஹார்மோனியம், மூன்று வகையான சாக்சபோன்கள் உள்ளிட்டவையும் அடங்கும். இவரது தற்போதைய வயது 26.

“நேஷனல் ஜியாகிரஃபி சேனலில்’ ஒளிபரப்பாகவிருக்கும் “என்னுடைய அபார மூளை’ நிகழ்ச்சியில் 7 வயது பியானோ இசை மேதை மார்க் யூவை பற்றிய சிறப்பு அம்சங்களும் இடம்பெற உள்ளன.

Posted in Brain, channel, Child, Children, Education, genius, Geography, Guiness, Intelligence, Kids, Maths, Media, minds, music, Musicians, Neurology, Performer, Prodigy, Records, Schools, Students, Study, TV | Leave a Comment »

Child and juvenile labour force in Tamil Nadu – Dinamani Op-ed

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 15, 2007

இது நியாயமா?

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும், நாளைய தலைமுறை கல்வியறிவும் ஆரோக்கியமும் உடைய சமுதாயமாக உருவாக வேண்டும் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமான, கிராமப்புற வளர்ச்சி பெரிய அளவில் ஏற்படாத நாடுகளில் தவிர்க்க முடியாத களங்கம் ஒன்று இருக்குமேயானால், அது கல்வி கற்க வேண்டிய வயதில் எடுபிடி வேலைகளைச் செய்யும் நிலைக்குக் குழந்தைகள் ஆளாக்கப்படுவதுதான்.

சமீபத்தில் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தங்களது மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்திய குற்றத்திற்காக 28 நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து 68 வழக்குகளும் பதிவு செய்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காகவே அமைக்கப்பட்ட 32 கல்விச்சாலைகளில், மீட்கப்பட்ட 1,198 குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கப்படுவதாக அந்த மாவட்டச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதேபோல, மற்ற மாவட்டங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கும் மாவட்ட ஆட்சியாளர்கள் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக முனைப்பாகச் செயல்படுகின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இது ஏதோ தமிழகமோ, இந்தியாவோ மட்டுமே எதிர்நோக்கும் பிரச்னை என்று கருதிவிட வேண்டாம். வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் – அதாவது, பின்தங்கிய நாடுகளில் – ஐந்து முதல் பதினான்கு வயதுவரை உள்ள 25 கோடிக் குழந்தைகள், கல்வி கற்க முடியாமல் ஏதாவது வேலையில் ஈடுபட்டு வருவதாக 1998-ல் வெளியான ஐ.நா. செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. சமீபத்திய ஒரு புள்ளிவிவரப்படி உலகில், எட்டு குழந்தைகளில் ஒரு குழந்தை தனது வருங்காலத்தை வளமாக்க முடியாத, கல்வி கற்க முடியாத நிலைமை.

இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் கல்வியறிவு பெற வழியில்லாமல், குடும்பத் தொழிலிலோ அல்லது வேறு ஏதாவது வேலையிலோ ஈடுபடுத்தப்படுவதாகவும், தமிழகத்தில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இன்னும் கல்விச்சாலைகளுக்குச் செல்லாமல் ஏதாவது வேலை செய்து குடும்பத்துக்கு உதவ வேண்டிய நிலையில் இருப்பதாகவும், மத்திய அரசின் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக, இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் பல சட்டங்களை இயற்றி வந்திருக்கிறோம். குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்குக் கல்வியறிவு அளிப்பதற்கு நிதிநிலை அறிக்கைகளில் தனியாக நிதி ஒதுக்கப்படுகிறது. 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் மட்டும் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புக்காக 228 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தில் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முனைப்பாகச் செயல்பட்டு அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பும் நல்கி வருகின்றன என்பதுதான் உண்மை. பெருந்தலைவர் காமராஜரின் மதிய உணவுத் திட்டமும் சரி, எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு இன்று வரை செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டமும் சரி, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மிகப்பெரிய முயற்சிகள் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை செய்தும், குழந்தைத் தொழிலாளர் முறையை ஏன் கட்டுப்படுத்தவோ, முற்றிலும் அகற்றவோ முடியவில்லை? குழந்தைகள் படித்தே தீர வேண்டும் என்கிற வைராக்கியம் ஏன் பெற்றோர் மத்தியில் ஏற்படவில்லை?

இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள்.

முதலாவது காரணம், கிராமப்புற வறுமை. விவசாயம் வெற்றிகரமாக நடக்காத வரையில் கிராமப்புற வறுமையை ஒழிக்க முடியாது. வறுமை இருக்கும்போது குழந்தைகளைக் கல்விக்கூடங்களுக்கு அனுப்புவதைவிட, குடும்ப வருமானத்தை அதிகரிக்கப் பயன்படுத்துவதற்குத்தான் பெற்றோர்கள் முயல்வார்கள் என்பது இயல்பு. இந்த விஷயத்தில் நமது ஆட்சியாளர்கள்தான் நல்ல தீர்வைத் தர முடியும்.

இரண்டாவது காரணம், இந்தப் பிரச்னை பற்றிய விழிப்புணர்வும் அக்கறையும் படித்தவர்கள் மத்தியில் இல்லாதது. குழந்தைத் தொழிலாளர்களைக் குறைந்த கூலிக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்கிற மனப்போக்கிலேயே தவறு இருக்கிறது. குழந்தைகளை வேலைக்கு வைத்திருப்பவர்களைச் சமுதாயம் புறக்கணிக்க முற்படுமேயானால், இந்த சமூகக்கேடு பெரிய அளவில் தடுக்கப்படும். நாமே மறைமுகமாக இந்தக் கொடுமையை அங்கீகரிக்கிறோமே, இது நியாயமா?

Posted in Center, Centre, Child, Children, City, Dharmapuri, Education, Employment, Exploit, Exploitation, Females, Food, girls, Govt, Hotels, Hunger, Hungry, Illiteracy, Income, juvenile, Kids, Labor, Labour, Literacy, Metro, Needy, Policy, Poor, Read, Restaurants, Rich, Rural, She, State, Student, Suburban, Tharmapuri, Village, Wealthy, Women, Work, Worker | Leave a Comment »

‘Kaalpurush’, ‘Rang De Basanti’ Receive National Film Awards For 2005

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 8, 2007

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது- சிறந்த இசையமைப்பாளராக லால்குடி ஜெயராமன் தேர்வு

புதுடெல்லி, ஆக. 8-

2005-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுகள் வழங்குவது குறித்து டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த ஆண்டு விருதுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

தேசிய திரைப்பட விருது அறிவிப்பில், 2005-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது அமிதாப்பச்சனுக்கு கிடைத்தது. `பிளாக்’ படத்தில் மன வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் அவர் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனைப் பாராட்டி அமிதாப்பச்சனை சிறந்த நடிகராக தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.

இதே போல் சிறந்த நடிகைக்கான விருதிற்கு சரிகா தேர்வானார். `பர்சானியா’ என்னும் ஆங்கிலப் படத்தில் அவரது சிறப்பான நடிப்பை பாராட்டி சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது.

தேசிய அளவில் சிறந்த படமாக புத்ததேவ் தாஸ் குப்தாவின் வங்காளி மொழிப் படமான `கால்புருஷ்’ தேர்வானது. இந்த படத்திற்கு தங்கத் தாமரை விருதும், 50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும்.

மற்ற முக்கியமான விருதுகள் வருமாறு:

சிறந்த இயக்குனர்– ராகுல் தோடாக்கியா (பர்சானியா)

அறிமுக இயக்குனர்களுக்கான இந்திரா காந்தி விருது பெற்ற படம்- பரிநீதா.

சிறந்த பொழுதுபோக்கு படம்- ரங் கே பசந்தி (இந்தி)

சிறந்த குழந்தைகள் படம்- புளூ அம்பரல்லா.

நடுவர் குழுவின் சிறந்த நடிகர் விருது- அனுபம் கெர் (மைனே காந்தி கோ நாகின் மாரா).

தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படம் (நர்கீஸ் தத் விருது)- தைவனமாதில் (மலையாளம்).

சமூக பிரச்சினைக்கான சிறந்த படம்- இக்பால் (இந்தி)

சிறந்த குழந்தை நட்சத்திரம்- சாய்குமார்( பொம்மலதா-தெலுங்கு)

சிறந்த பின்னணி பாடகர்– நரேஷ் அய்யர் (ரங் கே பசந்தி)

சிறந்த பின்னணி பாடகி– ஸ்ரேயா கோஷால்(பகெலி)

சிறந்த இசையமைப்பாளர்– வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் (சிருங்காரம்-தமிழ்)

சிறந்த பாடலாசிரியர்– பர்குரு ராமச்சந்திரா (தாயி- கன்னடம்)

சிறந்த எடிட்டர்– பி.எஸ்.பாரதி(ரங் கே பசந்தி).

சிறந்த நடன அமைப்பாளர்- சரோஜ் (சிருங்காரம்- தமிழ்)

சிறந்த வசன கர்த்தாக்கள்- பிரகாஷ் ஷா, ஸ்ரீதர் ராகவன், மனோஜ் தியாகி.(அப்காரன்)

சிறந்த ஆர்ட் டைரக்டர்- சி.பி.மோர் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி).

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்- அன்னா சிங் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி), சப்யாச்சி முகர்ஜி (பிளாக்).

தமிழில் சிறந்த படமாக டி.வி. சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து தேர்வாகியுள்ளது.


சேரன் படங்களுக்கு தேசிய விருது08 ஆகஸ்ட் 2007கோவா திரைப்பட விழாவில் தனக்கு அங்கீரகாரம் கொடுக்கவில்லை என்று அரங்கத்தை விட்டு வெளியேறினார் சேரன். இப்போது அவருடைய படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது.

டி.வி.சந்திரன் இயக்கத்தில் சேரன் நடித்த `ஆடும்கூத்து‘ சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது. அதேபோல் அவர் இயக்கி நடித்த `தவமாய் தவமிருந்து‘ படத்திற்கு சிறந்த குடும்ப படத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்தில் தன்னை விட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ராஜ்கிரணுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சேரன்.

ஆனால் அது கிடைக்காவிட்டாலும் சிறந்த குடும்ப படத்திற்கான விருது `தவமாய் தவமிருந்து’ படத்திற்கு கிடைத்ததில் சந்தோசமாய் இருக்கிறார் சேரன்.


 ஷியாம் பெனெகலுக்கு தாதா சாகேப் பால்கே விருது08 ஆகஸ்ட் 2007

திரைப்படத் துறையில் மிக உயரியதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, பழம்பெரும் இயக்குனர் ஷியாம் பெனெகலுக்கு வழங்கப்படுகிறது.

திரைப்படத்துறைக்கு ஆற்றிய சிறப்பான சேவையை பாராட்டி 2005ம் ஆண்டுக்கான விருதுக்கு, 72 வயதாகும் ஷியாம் பெனகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஷியாம் பெனகலுக்கு இந்த விருதையும், ரூ 2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்குவார்.

இவர் இயக்கிய முதல் படமான ‘அன்கூர்‘, மிகச்சிறந்த இயக்குனராக அவரை அடையாளம் காட்டியது. பூமிகா, மந்தான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இவர் இயக்கியுள்ளார்.

இயக்குனர் ஷியாம் பெனெகல் கடந்த 1934ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். இதற்கு முன் பதமஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய உயரிய விருதுகளையும் ஷியாம் பெனெகல் பெற்றுள்ளார்.


Posted in 2005, Aadum Koothu, Aamir, Aamir Khan, Actor, Actress, Amir, Amitab, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Animation, Anniyan, Anupam, Anupam Kher, Apaharan, Art, Audio, Audiography, Award, Awards, Bengal, bengali, Best, Black, Bollywood, Bombay, Bommalata, Bommalatta, Budhadeb, Budhadeb Dasgupta, Camera, CG, Chandhran, Chandran, Cheran, Child, Children, Chopra, choreographer, choreography, Cinematography, Computer, Costume, Costumes, Daivanamathil, Dasgupta, Direction, Director, Dutt, Editing, Effects, Elxsi, Engg, Entertainment, Environment, Film, Gaurav A. Jani, Geek, Ghoshal, Graphics, Gujarat, Hindi, Indira Gandhi, Integration, Iqbal, Jayaraman, Jeyaraman, Kaalpurush, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, Kher, Kid, Lalgudi, Lalgudi Jayaraman, Lalkudi, Lyrics, Malayalam, Mumbai, music, Nargis, National, Paheli, Parineeta, Parineetha, Parzania, Playback, Pradeep Sarkar, Prizes, Rang de basanthi, Rang De Basanti, Recognition, Riding Solo to the Top of The World, Sarika, Screenplay, Sets, Shreya, Singer, Software, Special Effects, Sreya, Sringaram, Swarna Kamal, SwarnaKamal, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Isai, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil Writer, TamilNadu, TATA, Tata Elxsi, Technology, Tharani, Thavamai Thavamirunthu, Thotta, Thotta Tharani, Thutturi, TV Chandran, Urvashi, Urvasi, Vidhu Vinod Chopra, Welfare | Leave a Comment »

Compulsory rural service required for Doctor graduation – Medical Education

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

State of MBBS – Analysis on Medical education « Tamil News


கட்டாய கிராமப்புற மருத்துவ சேவைஜி.ஆர்.ரவீந்திரநாத்

“கிராமப் பகுதிகளில் பணியாற்ற டாக்டர்கள் மறுக்கிறார்கள் என்ற காரணத்தைக் கூறி’ எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவுடன் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் கட்டாய சேவைசெய்ய வேண்டுமென மத்திய அரசு சட்டம் கொண்டு வரவுள்ளது. இந்தச் சேவையை முடித்த பிறகுதான் மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்துகொண்டு தொழில் செய்ய முடியும். இதற்கேற்ப எம்பிபிஎஸ் படிப்புக் காலத்தை ஐந்தரை ஆண்டுகளில் இருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்தவும் மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.இச்சட்டம் இளம் டாக்டர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதோடு நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பெண்கள் மருத்துவம் பயில்வதைத் தடுத்துவிடும். நமது மருத்துவக் கல்வி, மருத்துவத் துறை, மக்கள் நல்வாழ்வுக் கொள்கை ஆகியவற்றில் உலக வங்கியின் விருப்பங்களுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.இந்தியாவில் 70 சதவீத மக்கள் கிராமப்புறங்களிலும் 70 சதவீத மருத்துவர்கள் நகர்ப்புறங்களிலும் இருப்பது வருந்தத்தக்கது. இதற்கு நமது சமூகப் பொருளாதார நிலைமைகளே காரணம். இந்தியாவில்

  • 3,043 சமுதாய மருத்துவ மையங்களும்
  • 22,842 ஆரம்ப சுகாதார மையங்களும்
  • 1, 37, 311 துணை மையங்களும்

உள்ளன என்று 2003-ம் ஆண்டு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

  • ஆரம்ப சுகாதார நிலையங்களில் 13.3% மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

சமுதாய மருத்துவமனைகளில்

  • 48.6% அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள்,
  • 47.9% மகப்பேறு மருத்துவர்கள்,
  • 46.1% பொது மருத்துவர்கள்,
  • 56.9% குழந்தை மருத்துவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கிராமப் புறங்களில்

  • 75% அறுவைச் சிகிச்சை மருத்துவர்களும்
  • 73% மகப்பேறு மருத்துவர்களும்
  • 86% குழந்தை மருத்துவர்களும் பற்றாக்குறையாக உள்ளனர்.

காலிப்பணியிடங்களை நிரப்ப அரசுகள் அக்கறை காட்டாததும் பணி நியமனத் தடை ஆணையும்தான் இந்த நிலைக்குக் காரணம்.
நிரந்தர வேலைவாய்ப்பை வழங்காமல், ஒப்பந்த அடிப்படையில் தாற்காலிகமாக மிகக்குறைந்த தொகுப்பூதியத்தில் மருத்துவர்களை நியமிப்பதால் மருத்துவர்கள் அரசுப்பணிகளில் சேரத் தயங்குகின்றனர்.

கிராமப்புற மருத்துவமனைகளின் வசதிகளை மேம்படுத்தாததும் கிராமப்புறங்களில் மருத்துவர்கள் தங்க குறைந்தபட்ச வசதிகளைக்கூட செய்து கொடுக்காததும் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. பல சமுதாய மருத்துவ மையங்களுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சொந்தக் கட்டடமே இல்லை. நூற்றுக்கணக்கான மையங்களில் கழிப்பிட வசதியே இல்லை.

கிராமப்புற மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்க கட்டாய கிராமப்புற சேவைதான் தீர்வு என்கிறது அரசு. கட்டாய கிராமப்புற சேவை பயனளிக்காது என்பதோடு, மருத்துவர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடும் என்பதுதான் இளம் மருத்துவர்களின் எதிர்வாதம்.

மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு நாட்டின் மொத்த உற்பத்தியில் வெறும் 0.9% மட்டும் ஒதுக்கப்படுகிறது. உலகிலேயே மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மிகக் குறைவாக நிதிஒதுக்கீடு செய்யும் நாடு இந்தியாதான். மொத்த உற்பத்தியில் 5% ஒதுக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இப்பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், ஊரகப்புற மருத்துவமனைகளுக்கு அதிகநிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மருத்துவம் தனியார் மயம் ஆவதும், பெரிய நிறுவனங்களாவதும் மருத்துவர்களை நகரங்களிலேயே குவியச் செய்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

1980-களில் 57% ஆக இருந்த தனியார் மருத்துவமனைகள் 2000-ல் 73% ஆக உயர்ந்துள்ளது. 1980களில் மக்களின் ஒட்டுமொத்த மருத்துவச் செலவில் அரசின் பங்களிப்பு 22% ஆக இருந்தது. இன்று 16% ஆகக் குறைந்துவிட்டது.

மருத்துவர்களை நிரந்தர ஊழியர்களாகப் நியமித்து கிராமப்புறங்களில் 2 ஆண்டு கட்டாய சேவை செய்த பின்னரே பணிவரன்முறை செய்யப்படும் என்ற நடைமுறையைக் கொண்டு வரவேண்டும். டாக்டர்களுக்கு மிகக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. டாக்டர்களின் ஊதியத்தை கணிசமாக உயர்த்த வேண்டும்.

கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றுவோருக்குக் கூடுதல் சம்பளமும் பதவி உயர்வில் முன்னுரிமையும் இதர சலுகைகளும் வழங்க வேண்டும். முதுநிலை மருத்துவம் பயில நுழைவுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும். மிகவும் பின்தங்கிய மலைப்பகுதிகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கலாம். இத்தகைய மருத்துவமனைகளில் மருத்துவர்களை பணியமர்த்த தனியாகவே சிறப்புப் பணி நியமன முறையைக் கையாளலாம். குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு இடமாறுதல் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் உள்ளூர் மருத்துவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கலாம். ஒழுங்காகப் பணிக்கு வராத மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம்.

ஊழல் முறைகேடுகளை ஒழிக்க அனைத்து மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். கட்டாய கிராமப்புறச் சேவையில் எம்பிபிஎஸ் முடித்த டாக்டர்களை பணியாற்ற வைப்பதால் மக்களுக்கு பெரிய அளவில் பயனில்லை. அரசின் புள்ளிவிவரப்படியே மகப்பேறு, குழந்தைகள்நல, பொது மற்றும் அறுவைச் சிகிச்சை மருத்துவர்களின் பற்றாக்குறையே கிராமப்புறங்களில் உள்ளது. இதற்கு முதுநிலை படிப்பு படித்த டாக்டர்கள்தான் கிராமப் பகுதிகளுக்கு அதிகம் தேவைப்படுகின்றனர்.

இக்குறைபாட்டைப் போக்க இப்படிப்புக்கான இடங்களை அதிகப்படுத்த வேண்டும். எம்பிபிஎஸ் படித்த டாக்டர்களுக்கு குறிப்பிட்ட துறைகளில் பயிற்சியளித்து அவர்களைப் பயன்படுத்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மற்றும் பட்டயப் படிப்பு படிக்கும் தனியார் மருத்துவர்களை ஓராண்டு காலம் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் முழு ஊதியத்துடன் பணியாற்றச் செய்ய வேண்டும். சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை சரி செய்யப்பட்டதும் இந்தக் கட்டாயச் சேவையைக் கூட ரத்து செய்ய வேண்டும்.

தற்சமயம் ஆண்டுதோறும் இந்தியாவில் 29, 500 டாக்டர்கள் படித்து முடித்து வெளிவருகிறார்கள். இன்னும் 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 40 ஆயிரம் ஆகஉயர்ந்துவிடும். ஒவ்வோராண்டும் இவர்களைக் கட்டாய கிராமப்புறச் சேவையில் தாற்காலிகமாகப் பணியமர்த்தினால் அது 40 ஆயிரம் டாக்டர்களுக்கான பணியிடங்களை நிரந்தரமாக ஒழித்துக் கட்டிவிடும். மேலும் இந்த திட்டத்துக்கான எம்பிபிஎஸ் படிப்பை ஆறரை ஆண்டுகளாக உயர்த்துவது சரியல்ல. ஒரு நபர் எம்பிபிஎஸ் படிப்பைத் தொடங்கி எந்தவிதமான தடங்கலும் இன்றி எம்சிஎச், டிஎம் போன்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளைத் தொடர்ச்சியாகப் படித்து முடிக்க குறைந்தபட்சம் 13 ஆண்டுகளாவது அவசியம்.

எம்பிபிஎஸ் படிப்பு காலத்தை ஆறரை ஆண்டுகளாக உயர்த்தினால் அது நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் மருத்துவம் பயிலும் ஆர்வத்தைக் குறைத்துவிடும். திருமணம் போன்ற காரணங்களால் பெற்றோர்கள் பெண்களை மருத்துவ படிப்புக்கு அனுப்பத் தயங்குவர். பணபலம் உள்ள ஆண்கள் மட்டுமே படிக்கும் துறையாக மருத்துவக் கல்வி மாறிவிடும்.

தற்பொழுது பிளஸ்2வில் உயிரியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது. இவ்வாண்டு எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைத்த பலர், பொறியியல் படிப்புக்கு மாறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்களின் வேலைவாய்ப்பை, உரிமைகளைப் பாதிக்காத வகையில் கிராமப்புற மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளை நிறைவு செய்ய ஆக்கப்பூர்வமாக அரசு முயலவேண்டும்.

(கட்டுரையாளர், சமூக சமதுத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலர்.)

——————————————————————————————————-
மாறட்டும் மருத்துவமனை நடைமுறைகள்!

இரா. சோமசுந்தரம்

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களில் பெரும்பாலானோர், வெளியிடத்தில் “தனி ஆலோசனைகள்’ வழங்குவதும், தனியார் மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைகள் செய்வதும் நடைமுறையில் உள்ளன. இதனால் அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் அறுவைச்சிகிச்சைகள் மூன்று வகையாக நடைபெறுகின்றன.

அவை: அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கேயே அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு, ஓரளவு குணமாகும்வரை தங்கி, பின்னர் வீடு திரும்புவோர். அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று, அதே அரசு மருத்துவர் ஆலோசனையின்பேரில் தனியார் மருத்துவமனையின் அறுவைக்கூடத்தில் சிகிச்சை முடித்துக் கொண்டு, தொடர் மருத்துவத்துக்கு அரசு மருத்துவமனை படுக்கைக்குத் திரும்புகிற அல்லது புறநோயாளியாக வந்து மருந்து பெற்றுச் செல்வோர். அரசு மருத்துவமனைக்கே வராமல், அரசு மருத்துவரின் தனிஆலோசனையைப் பெற்று, அவர் சொல்லும் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை முடித்து வீடு திரும்புவோர்.

எந்தவொரு மருத்துவச் செலவையும் ஏற்கும் சக்தி இல்லாத பரம ஏழைகள்தான் முதல் வகை சிகிச்சை பெறுகின்றனர்.

“கார்ப்பரேட்’ மருத்துவமனைகளில் ரூ.50 ஆயிரம் செலவழிக்க வசதியில்லாமல், ரூ.20 ஆயிரத்தில் சிகிச்சையை முடித்துக் கொள்ள விரும்புவோர் மூன்றாவது வகையைத் தேர்வு செய்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கை குறைவு.

நடுத்தர வருவாய்க் குடும்பத்தினர்தான் இரண்டாவது சிகிச்சையை மிக அதிக அளவில் தேர்வு செய்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களால் மருத்துவத்துக்குத் தனியாக செலவு செய்யும் சேமிப்புகள் ஏதுமில்லை. நோய்வந்த பிறகே அந்த நோய்க்கான சேமிப்பு அல்லது செலவுத் தொகை ஒதுக்கப்படுகிறது. கார்ப்பரேட் மருத்துவமனை வாசலைக்கூட இவர்களால் மிதிக்க முடியாது. தனியார் மருத்துவமனைகளில் ஆலோசனை பெற்று, மருந்து வாங்கும் சக்தி இருந்தாலும், அறுவைச்சிகிச்சை, ஒரு வாரம் படுக்கையில் இருப்பது ஆகிய செலவுகள் அவர்களது ஓராண்டு வருமானத்தை விழுங்கக்கூடியவை. இதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். அதே நேரத்தில் அறுவைச்சிகிச்சையை மட்டும் தரமான இடத்தில் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இந்த நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு இருக்கிறது.

அரசு மருத்துவமனையை நாடவும், அதே நேரத்தில் உயிருக்கு ஆபத்தில்லாத சிகிச்சையை விரும்பவும் செய்யும் நடுத்தர வருவாய்ப் பிரிவினரின் இந்த தற்காப்பு முயற்சியை அரசு ஏன் சட்டப்படி முறைப்படுத்தக்கூடாது?

தமிழ்நாட்டில் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமே மருத்துவ வசதிகள் கொண்ட அறுவைக்கூடங்கள் உள்ளன. இவற்றில் நவீன துணைக் கருவிகளைக் கொண்டுள்ளவை மிகச் சிலவே.

தாலுகா அளவில் உள்ள மருத்துவமனைகளில் பல கோடி ரூபாய் செலவழித்து எவ்வளவு நல்ல எக்ஸ்-ரே கருவிகள், ஸ்கேன் கருவிகள் வாங்கி வைத்தாலும், அவை சில மாதங்களில் நிச்சயம் பழுதாகிவிடுகின்றன.

ஆகவே, எல்லா நகரங்களிலும் பரவலாக உள்ள தனியார் மருத்துவமனைகளின் அறுவைச் சிகிச்சைக்கூடங்களைப் பயன்படுத்திக் கொள்ள சரியான அணுகுமுறையை அரசு உருவாக்கினால் பயனுள்ளதாக அமையும்.

தனிஆலோசனையின்போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, என்டோஸ்கோபி, ஈசிஜி, எக்ஸ்-ரே, மருந்துகள், அறுவைக்கூடம் வாடகை எல்லாவற்றிலும் குறைந்தபட்சம் 15 சதவிகிதம், ஊக்கத்தொகையாக மருத்துவருக்கு அவர்களால் வழங்கப்படுவது என்பது ஊர் அறிந்த ரகசியம். இந்த ஊக்கத் தொகையை அரசு சட்டப்படி வழங்க முன்வந்தால், மருத்துவத்தில் பட்டுப்போன மனிதாபிமானம் மீண்டும் தளிர்க்கும்.

அரசு மருத்துவமனை மருத்துவர்களும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புவது குற்றமல்ல. அவர்கள் திறமையானவர்களாக இருந்து அவர்களைத் தேடிவரும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் அதிகரிக்கும்போது அதை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தனியார் மருத்துவமனை அறுவைக்கூடங்களுக்கு செலுத்தப்படும் கட்டணத்தில் 20 சதவிகிதத்தை சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கும், 20 சதவிகிதத்தை மருத்துவமனைக்கும் அளிக்க வகை செய்யலாம்.

வருமான வரி ஏய்ப்பு குறித்த தகவலைத் தருபவருக்கு, கண்டுபிடிக்கப்பட்ட வரிஏய்ப்புத் தொகையில் ஒரு பங்கை அரசாங்கமே அளிக்கும்போது, உயிரைக் காக்கும் மருத்துவருக்கும் அரசே சட்டப்படி கமிஷன் கொடுத்தால் என்ன தவறு?

தற்போது அரசு மருத்துவமனையில் பணியாற்ற திறமையான மருத்துவர்கள் தயங்குவதன் காரணம், அவர்களுக்கு வெளியில் நிறைய வருவாய் கிடைக்கிறது என்பதுதான். அந்த வாய்ப்பை அரசு மருத்துவமனையிலேயே ஏற்படுத்திக் கொடுத்தால் தவறில்லை; பணிபுரிய நிறைய மருத்துவர்கள் முன்வருவார்கள்.

விபத்து, தற்கொலை, வெட்டு, குத்து என்றால் முதலில் அரசு மருத்துவமனைக்குப் போக வேண்டும் என்ற நிலைமை இப்போது இல்லை. தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று, காவல்நிலையத்தில் வழக்கைப் பதிவு செய்யும் மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன.

இதேபோன்று தனியார் மருத்துவமனைகளின் அறுவைக்கூடங்களைப் பயன்படுத்தவும், அங்கே அரசு மருத்துவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு சிகிச்சை அளிக்கவும் புதிய மாற்றங்கள் இன்றைய தேவையாக இருக்கிறது.

———————————————————————————————————–
“கருணை’ என்பது கிழங்கு வகை!

இரா. சோமசுந்தரம்
மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் ஓராண்டுக்கு கிராமங்களில் பணிபுரிவதைக் கட்டாயமாக்கும் திட்டத்தை மருத்துவ மாணவர்கள் எதிர்க்கின்றனர். போராட்டங்கள் நடத்துகின்றனர்.

ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள், “நாங்கள் மக்களுக்கு எதிரியல்ல’ என்ற வசன அட்டைகளைத் தாங்கும்போதும் “குக்கிராமத்திலும் சேவை செய்ய நாங்கள் ரெடி, நிரந்தர வேலைதர நீங்கள் ரெடியா?’ என்ற வசன அட்டையை ஏந்தி நிற்பதைப் பார்க்கும்போதும் மருத்துவக் கவுன்சிலின் மெய்யான நோக்கத்தைப் புரிந்துகொண்ட பின்புதான் இந்தப் போராட்டத்தை நடத்துகிறார்களா என சந்தேகம் வருகிறது.

தற்போது நான்கரை ஆண்டுகள் படிப்பு, ஓராண்டு மருத்துவமனையில் தொழில் பழகுதல் என்ற அளவில் ஐந்தரை ஆண்டுகளாக உள்ள மருத்துவப் படிப்பு, கிராமப்பகுதியில் ஓராண்டு சேவையை வலியுறுத்துவதன் மூலம் ஆறரை ஆண்டுகளாக நீட்டிக்கப்பட உள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கும் மருத்துவம் கிடைக்கச் செய்யும் நோக்கத்தில்தான் இந்திய மருத்துவக் கவுன்சில் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

மருத்துவக் கவுன்சிலின் புதிய நடைமுறைப்படி, இந்த இளம் “மருத்துவர்கள்’ கிராமப்பகுதிகளில் ஓராண்டு பணியாற்றிய பின்னர் அவர்களது மருத்துவப் படிப்புக்கான சான்றிதழ் அளிக்கப்படும். அதன் பின்னரே அவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்புகளை, சிறப்பு மருத்துவப் படிப்புகளைத் தொடர முடியும்.

மேற்படிப்புக்குத் தடையாக, ஓராண்டு கிராம மருத்துவ சேவை குறுக்கே வந்து நிற்பதை இம்மாணவர்கள் விரும்புவதில்லை. இந்தப் போராட்டத்தின் அடியிழையாக இருப்பது இந்த நெருடலான விஷயம்தான்.

கிராமங்களில் பணியாற்ற மருத்துவர்கள் வருவதில்லை என்பதுதான் அரசின் பிரச்னை. இந்த மாணவர்கள் கிராமங்களில் பணியாற்றத் தயார் என்றால் இவர்களுக்கு நிரந்தர வேலை தருவதில் அரசுக்கு என்ன சிக்கல் இருக்க முடியும்?

மருத்துவக் கவுன்சில் குறிப்பிடும் ஓராண்டு கால கிராம மருத்துவ சேவைக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த மாணவர்கள் முன்வைத்தால் அதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்தப் புதிய திட்டத்திலும்கூட ஓராண்டு முழுவதும் கிராமப்புறங்களில் பணியாற்றும் அவசியம் ஏற்படாது. ஏனென்றால் நான்கு மாதங்களுக்கு தாலுகா அளவில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்ற வேண்டும்.

நான்கு மாதங்களுக்கு மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். நான்கு மாதங்களுக்கு சமுதாய நலக் கூடங்களில் பணியாற்ற வேண்டும். இதன்படி பார்த்தால், கடைசி நான்கு மாதங்கள் மட்டுமே அவர்கள் போக்குவரத்து வசதிகள் குறைந்த கிராமப்பகுதியில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.

அதிலும் தற்போது மினி பஸ்கள் இயக்கப்படுவதால் பஸ்கள் செல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலைமை இருப்பதை மறுக்க முடியாது.

தங்களுடன் சமகாலத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள், நான்காவது ஆண்டிலேயே வளாக நேர்காணல் மூலம் வேலை கிடைக்கப்பெற்று, கைநிறையச் சம்பாதிக்க முடியும் என்றால், மருத்துவர்களுக்கு மட்டும் ஏன் ஆறரை ஆண்டுகள் என்று கேள்வி எழுப்புவது சரியானதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது.

சொல்லப்போனால், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் 5 ஆண்டுகள் படிப்பு மற்றும் ஓராண்டு தொழில் பழகுதல் என 6 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பட்டச் சான்றிதழ் அளிக்கப்படுகிறது.

தனியார் மருத்துவக் கல்லூரி நீங்கலாக, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மூலம் பட்டம்பெறும் ஒவ்வொரு மருத்துவ மாணவருக்கும் அரசு மறைமுகமாக ஏற்கும் செலவினங்கள் பல லட்சம் ரூபாய் வரை ஆகின்றது என்பது இவர்களுக்குத் தெரியாதது அல்ல.

இவர்களில் 69 சதவிகிதத்தினர் அரசு இடஒதுக்கீட்டில் வாய்ப்பு பெற்றவர்கள். அரசு தங்களுக்கு அளித்ததை ஈடு செய்யும் வகையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றவும் ஓராண்டு மருத்துவ சேவையின்போது தங்கள் மருத்துவ அறிவை மேலும் வளப்படுத்திக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இதனை ஏன் கருதக்கூடாது?.

படிப்பின் குறிக்கோள் பணம் என்றாகிவிட்டது. மாணவர்கள் மட்டுமல்ல } மருத்துவப் பேராசிரியர்களுக்கும்!

அதிக அளவு தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ள ஆந்திர மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்றைய சிக்கல் விநோதமானது. கற்பிக்கப் பேராசிரியர்கள் இல்லை.

திறமையானவர்கள் அனைவரும் விருப்ப ஓய்வு பெற்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பல ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்குக்காகச் சென்றுவிட்டனர். மிக அதிக மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களுக்குப் பாடம் நடத்த பேராசிரியர்கள் இல்லை.

குறைந்த மதிப்பெண்களுடன் பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து சேர்ந்த வசதிபடைத்த மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க பேராசிரியர்கள் இருக்கிறார்கள்.

ஏழை சொல் அம்பலம் ஏறாது. அத்தோடு, ஏழையின் நோய்க்கு சிகிச்சையும் கிடையாது. புதுமைப்பித்தன் சொன்னதைப்போல, “கருணை’ என்பது கிழங்கு வகையில் சேர்க்கப்பட்டுவிட்டது!

———————————————————————————————————-
மருத்துவம் வெறும் வியாபாரமல்ல!

Dinamani Op-ed Sep 6, 2007/Thursday
படித்தவர்கள் பெரும்பாலும் சுயநலத்துடன் செயல்படுகின்றனர் என்பதற்கு இப்போதைய உதாரணம், கிராமசேவை செய்ய மறுக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம். ஐந்தரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பு முடிந்த பிறகு மருத்துவர்கள் ஓராண்டு காலம் கிராமப்புறங்களில் கட்டாயம் சேவை செய்ய வேண்டும் என்கிற திட்டத்தை இவர்கள் எதிர்ப்பது ஏன் என்பது புரியவில்லை. மருத்துவர்களுக்கு சமூகக் கடமை உண்டு என்பதை இவர்கள் உணர மறுப்பது நியாயமில்லை.

நம் நாட்டில் மருத்துவ வசதி நகரங்களில்தான் கிடைக்கிறது, கிராமப்புறங்களில் கிடைப்பதில்லை என்பது உலகறிந்த உண்மை. இன்னும் சொல்லப்போனால் பல கிராமங்கள் இப்போதும் நாட்டு வைத்தியத்தையும், முறையாக மருத்துவப் படிப்பு படிக்காத அரைகுறை போலி மருத்துவர்களையும் நம்பித்தான் இருக்கின்றன என்பது அதிர்ச்சி தரும் உண்மை. போதிய மருத்துவ வசதி இன்மையில் ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியாவையும் ஒப்பிடுகிறது உலக சுகாதார நிறுவனம் (ரஏஞ). அமெரிக்கா மற்றும் வளர்ச்சி அடைந்த மேலைநாடுகளில் ஆயிரம் பேருக்கு மூன்று அல்லது நான்கு மருத்துவர்கள் என்கிற நிலைமை இருக்கும்போது, இங்கே இன்னும் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைமைகூட ஏற்படவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

ஒரு விஷயத்தை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளில் குக்கிராமம்வரை ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்தி மருத்துவ வசதி கிராமப்புறங்களைப் போய்ச் சேர வேண்டும் என்பதில் நமது மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட்டன. இதற்காக, நிதிநிலையறிக்கையில் பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 1951-ல் வெறும் 725 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருந்தன. இப்போதோ ஏறத்தாழ 2 லட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆரம்பத்தில் 5,842 பேருக்கு ஒரு மருத்துவர் என்றிருந்த நிலைமை மாறி இப்போது சுமார் 1,500 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இப்போது, இந்தியாவில் சுமார் 6,50,000 மருத்துவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது மருத்துவக் கழகக் குறிப்பு. ஆனால் இந்த மருத்துவர்களில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் நகரங்களில்தான் இருக்கிறார்களே தவிர கிராமங்களில் இருப்பதில்லை. தங்களுக்கு வசதியான வாழ்க்கையும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பள்ளிக்கூடங்களும் கிராமங்களில் கிடைப்பதில்லை என்பதுதான் அவர்களது வாதம்.

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 73 விழுக்காடு மக்கள் வாழும் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் பலவற்றிலும் மருத்துவர்கள் பெயருக்கு அவ்வப்போது வந்து போகிறார்களே தவிர சேவை மனப்பான்மையுடன் அங்கே தங்கிப் பணியாற்றுகிறார்களா என்றால் இல்லை. பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்தவர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதும் தவறுதான்.

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை 11,000. இவர்களில் சென்னை உள்பட நகரங்களில் பணிபுரிபவர்கள்தான் சுமார் 7,500 பேர். அதேபோல, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவர்கள் சுமார் 35,000 பேர் என்றால் இவர்களில் 21,000 பேர் நகரங்களில்தான் மருத்துவசேவை செய்கிறார்கள். சமூக சேவை, சமுதாயத்துக்குத் தங்களது பங்களிப்பு என்கிற வகையில், அசௌகரியங்களையும் வருமான இழப்பையும் கருதாமல் ஓராண்டு காலம் நமது மருத்துவர்கள் கிராமப்புற சேவையாற்ற முன்வர மறுப்பது, மருத்துவத் துறையின் மகத்தான சேவைக்கே களங்கம்.

மருத்துவப் படிப்பு தனியார்மயமாக்கப்பட்டதன் தொடர் விளைவுதான், “நாங்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற மாட்டோம்’ என்கிற மருத்துவர்களின் பிடிவாதத்துக்குக் காரணம். கிராமங்களில் சேவை செய்தால் வேலை நிரந்தரம் செய்து தர முடியுமா என்கிற எதிர்க்கேள்வி அர்த்தமில்லாததாகத் தெரிகிறது. இந்தியாவையும் இந்தியாவின் பெருவாரியான மக்களையும் அவர்களது அவலநிலையையும் சரியாகப் புரிந்துகொள்ளாத மருத்துவர்கள் இருந்தும் என்னதான் பயன்? இவர்களை உருவாக்க அரசும் சமுதாயமும் தனது வரிப்பணத்தை ஏன் விரயமாக்க வேண்டும் என்று கேள்வி கேட்க யாருமே இல்லை என்பதுதான் அதைவிட வருத்தமான விஷயம்.

ஓராண்டு காலம் கிராமப்புற சேவையாற்றும் திட்டம் என்பது கிராமப்புற மக்களின் சமூக பொருளாதார நிலைகளை நமது மருத்துவர்கள் அறிவதற்கு நிச்சயமாக வழிகோலும். வரவேற்கப்பட வேண்டிய இந்தத் திட்டத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு சமூக சிந்தனை இல்லை என்று சொல்வதா, இல்லை சுயநலத்திற்கு அவர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள் என்று சொல்வதா? மருத்துவம் வெறும் வியாபாரமல்ல என்பதை மறந்துவிடக் கூடாது!

———————————————————————————————————————————————————————-

தேவை, கிராமப்புற கட்டாய மருத்துவச் சேவை

நள்ளிரவைத் தாண்டிய நேரம்! தஞ்சை ராஜாமிராசுதார் மருத்துவமனையின் வாயிலை ஒரு மாட்டுவண்டி அவசரமாகத் தாண்டுகிறது. அந்த வண்டி மகப்பேறு மருத் துவப் பிரிவை நோக்கி வருகிறது. வண்டியில் ஒரு பெண்ணின் முனகல் சப்தம்.
பயிற்சி மருத்துவர்களாகிய நாங்கள் அவ் வண்டியை நோக்கி ஓடி, வைக்கோலுக்கு நடுவே பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்த அந்த கிராமத்துப் பெண்ணை, கைத்தாங்கலாகப் பிடித்து வந்து பிரசவ வார்டில் படுக்க வைத்தோம். பிரசவத் தின்போது தலை வருவதற்குப் பதிலாக குழந் தையின் ஒரு கை வெளியே வந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிக் கொண்டி ருப்பது தெரிந்தது.
உடனே மருத்துவச் சிகிச்சை அளித்தும் – குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடிய வில்லை; அதிக உதிர இழப்பு காரணமாக தாயைக் காப்பாற்ற முடியவில்லை; ஏன் முடி யவில்லை? உடனே மருத்துவச் சிகிச்சை அளிக்க முடியவில்லை; ஏன் முடியவில்லை? அவர்கள் இருந்த கிராமத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு சிறப்பு மருத் துவ உதவி இல்லை. அந்தப் பெண் செய்த பாவம் ~ அவள் கிராமத்தில் வாழ்ந்ததுதான்.
இதைப்போல கிராமத்துத் தாய்மார்கள் சரியான சிகிச்சை கிடைக்காமல் இன்றும் மாண்டு போகிறார்கள். தாய்மார்களின் பிர சவ கால உயிரிழப்பை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. அப்படியே பிரசவமானா லும் பச்சிளங்குழந்தைகள் போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் இறக்கும் விகிதத்தை நம் மால் கணிசமாகக் குறைக்க முடியவில்லை.
நாட்டின் முன்னேற்றத்துக்கு சுகாதார மேம் பாடும் முக்கியம். நிலைமை வேறாக உள்ளது.
கிராமத்தில் அனைவருக்கும் அடிப்படை மருத்துவ வசதி அத்தனையும் கிடைக்க வேண்டும். கனடா நாட்டிற்கு மேல்படிப்பு பயிற்சிக்காகச் சென்றிருந்தபோது அங்கு நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலம் அவச ரமாகக் கொண்டு வருவதைக் கண்டு வியந்து போனேன். நம் நாட்டில் அவசர சிகிச்சைப் பிரிவு அடித்தளத்தில் இயங்குவது போல் டொரண்டோ நகரில் 20-வது மாடியின் மேல் தளத்தில் குழந்தைகள் மருத்துவமனை இயங் குவதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.
அங்கே கனடா மக்களின் உயிரைக் காக்க உல கத் தரம் வாய்ந்த மருத்துவமனைகளை காப் பீட்டு உதவியுடன் அரசுதான் நடத்து கிறது. பச்சிளங் குழந்தைகளின் உயிர் காக்க ஹெலிகாப்டர்கள் விரைந்து வருகின்றன. இங்கே வெள்ளத்தில் எத் தனை பேர் உயிரோடு இருக்கிறார்கள் என்பதனைப் பார்க்க அமைச்சர் பெரு மக்களையும் அதிகாரிக ளையும் தான் ஹெலிகாப் டர் சுமந்து வருகிறது.
என்ன வித்தியாசம்! தாஜ்மகாலை உலக அதிசயம் என்று கொண்டாடுகிறோம். ஆனால் அது தன் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய காதல் மாளிகை என்றுதான் பலருக்குத் தெரியும்.
ஆனால் அவரது மனைவியார் பிரசவத்தின் போது இறந்ததையடுத்து அந்த தாஜ்மகால் கட்டப்பட்டது என்பது தனி முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் ஒரு மருத்துவராக அந்த தாஜ்மகாலைப் பார்க்கும்போது எனக்கு அதன் கலைநயம் கண்ணுக்குத் தெரி யாது. பிரசவகால மரணங்களைத் தடுக்கும் ஒரு சின்னமாக இருக்க வேண்டும் என்ற எண் ணமேதான் மேலோங்கும். நமது மருத்துவர் கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் அமெரிக்கா வில் மட்டும் இருக்கிறார்கள் என்பது பெரு மையாக இருக்கிறது. அதனால் நம் நாட்டுக் குப் பயனில்லையே.
நம் நாட்டில் ஏறத்தாழ 450 மருத்துவக் கல் லூரிகளில் ஆண்டுக்கு 30,000 மருத்துவர்கள் படித்துப் பட்டம் பெற்றும், இன்னமும் கிரா மப் பகுதிகளில் தேவையான மருத்துவர்கள் இல்லை. 75 சதவிகிதம் இந்தியர்கள் கிராமத் தில் வாழ்ந்தாலும், அங்கே பணிபுரிவது வெறும் 20 சதவிகிதம் மருத்துவர்கள் மட் டுமே. போதாக்குறைக்கு அங்கே போலி மருத் துவர்கள் தொல்லை வேறு.
வெளிநாடு சென்ற மருத்துவர்கள் குண் டுக்கு அஞ்சி திரும்பியிருக்கிறார்களே தவிர, தொண்டு செய்வதற்காகத் திரும்பி வருவதில் லையே? 2020-ல் வல்லரசு நாடுகளில் ஒன் றாக நம் நாடு வளர வேண்டும் என்று நாம் கனவு காணும் வேளை யில், மகப்பேறு காலத்தில் தாய்மார் கள் உயிரிழக்கும் பரிதாபம், பெண் சிசுக்கொலை, பச்சிளம் குழந்தைக ளின் மரண விகிதம் போன்றவை இன்னும் நம் நாட்டில் அதிகமாகக் காணப்படுகின்றன. பிர சவ கால உயிரிழப்பை வளர்ந்த நாடுகள் தடுத் துவிட்ட நிலையில் நம் நாட்டில் அது தொட ரும் அபாயம் உள்ளது.
கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக் கடிக்கும், நாய்க் கடிக் கும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லாததால் உயிரிழப்பு தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கி றது. இதுபோன்ற அவல நிலையை அடி யோடு நிறுத்த, மத்திய சுகாதாரத்துறையின் கிராமப்புற சேவைத்திட்டம் வரவேற்கத்தக் கதே. ஆனால் இளம் மருத்துவர்களைப் படித்து முடித்த கையோடு கிராமப்புறத்திற்கு அனுப்பி வைப்பதால் மட்டும் கிராமங்களில் மருத்துவத் தேவைகள் பூர்த்தியாகி விடாது.
கிராமப்புற மருத்துவப் பணிக்கான அடிப்ப டைக் கட்டமைப்பைச் சரி செய்ய வேண்டும்.
பணிமுதிர்ச்சி பெற்று ஓய்வு பெற்ற மருத்து வர்களை, கர்நாடக அரசு செய்வது போல் பணியமர்த்தி அவர்களின் மேற்பார்வையில் இளம் மருத்துவர்கள் கிராமங்களில் பணி யாற்றச் செய்யலாம். அவர்களுக்கான ஊதி யம் 8 ஆயிரம் என்பது இந்தக் காலகட்டத்தில் குறைவு என்பதை அரசு உணர்ந்து அதிகப்ப டியான ஊதியத்தை பணி ஊக்கக் கொடை யாக அளிக்க வேண்டும்.
அவர்கள் பணி செய்யும் இடங்களில் தங்கு மிடம், தொலைபேசி வசதி, வாகனவசதி எல் லாம் செய்து தர வேண்டும். மருத்துவக் கல் லூரிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள கிராம ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தத்தெ டுத்து – ஆண்டு முழுவதும் மருத்துவ மாண வர்களை பயிற்சி காலத்திலேயே கிராம சேவைக்குப் பழக்க வேண்டும்.
ஒரு பக்கம் டெலிமெடிசின், மெடிக்கல் டூரி ஸம் என்று பெருமை பேசிக் கொள்கிறோம்.
அதேநேரத்தில் கிராமங்களின் மருத்துவ அவ லங்களை மறக்கவோ, மறைக்கவோ கூடாது.
ஏழை மக்களின் வரிப்பணத்தில் இலவச மருத்துவக் கல்வி பெறும் மாணவர்கள் அவர் களுக்கு நன்றிக் கடனாக சிறிது காலம் சேவை செய்ய மறுத்து வெளிநாடு செல்ல நினைப் பது தவறுதான். இதில் போராடத் தேவை இல்லை. மருத்துவ மாணவர்கள் தங்கள் சமு தாயக் கடமையை உணர வேண்டும்.
கிராம சேவைத்திட்டத்தின் ஆழத்தைப் புரிந்துகொண்டு மருத்துவர்கள் இறைவ னுக்கு அடுத்தபடியானவர்கள் என்ற மக்க ளின் நம்பிக்கையைக் காப்பாற்றும்படி நடந்து கொள்ள வேண்டும். அரசும் அதற் கேற்ற மாதிரித் திட்டங்களை வகுக்க வேண் டும். தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்க ளையும் இதில் கட்டாயமாக ஈடுபடுத்த வேண்டும்.
ஆசிரியர் தொழிலும் மருத்துவத் தொழி லும் புனிதமான பணிகளாக ஆண்டாண்டு காலமாகப் போற்றப்பட்டவை. எனவே மருத் துவர்கள் தங்களுக்குள் ஓர் ஆத்ம பரிசோ தனை செய்து கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தில் மருத்துவம் ஒரு சேவைத் துறையாக இருந்தது. தற்போது மருத்துவ மனை சார்ந்த தொழிலாகியுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் இளம் மருத்துவ மாணவர்களுக்கு சேவைக்கான நல்வழி காட்ட வேண்டியது அனைவரது கடமை.
மருத்துவச் சேவைக்கான அரிய வாய்ப் பைப் பெற்ற மருத்துவ மாணவர்கள் படித்து முடித்தபின் ஓராண்டு கிராம மக்களுக்கு மருத்துவம் செய்வதைப் பெரும் பேறாகக் கருதி இன்முகத்துடன் ஏற்றுச் செல்ல வேண் டும்.
அங்கே ஏழைகளின் சிரிப்பில் இறைவ னைக் காணலாம். அவர்களை கருணையு டன் தொட்டு வைத்தியம் பார்த்தால் நோய் பறந்து விடும். அங்கேதான் நீங்கள் கடவுளாக மதிக்கப்படுவீர்கள்!

கட்டுரையாளர்: நிறுவனர், பெண்சக்தி இயக்கம்.
———————————————————————————————————————————————————————-
நல்லது நடக்கிறது!

சுதந்திர இந்தியாவில் மருத்துவச் சேவையில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது என்பது உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம். மருத்துவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களும், உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளும் சென்னையில் இருக்கும் அளவுக்கு மற்ற பெருநகரங்களில் இல்லை என்றுதான் கூற வேண்டும். அதனால்தானோ என்னவோ, இந்தியா வின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், ஏன் உலகின் பல பாகங்களிலி ருந்தும் மருத்துவச் சிகிச்சைக்காக சென்னைக்கு வரும் நோயாளிக ளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது.
தனியார் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும் தமிழக மருத்துவத்துறை, சாமானிய மக்களுக்குப் பயன்படும் அரசுத்துறை யில் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி யாருமே சிந்திப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் சொல்லப்போனால், அரசு மருத்துவம னைகளின் செயல்பாடு தனியார் துறைக்கு எள்ளளவும் குறையாத அளவுக்குத் தரத்திலும், சேவையிலும் இருக்கிறது என்று சொன்னால் பலரும் நம்ப மாட்டார்கள். காரணம், அரசு மருத்துவமனைகளின் வெளிப்புறத் தோற்றமும், அன்றாடப் பராமரிப்பும்தான்! 29 மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைகள்; 156 தாலுகா அரசு மருத்துவமனைகள்; 1418 ஆரம்ப சுகாதார நிலையங்கள்; இவையெல்லாம் போதாதென்று 14 அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகள். இத்தனை மருத்துவமனைகள் இருந்தும் மருத்துவச் சேவை அனைத்துத் தரப்பு மக்களையும் போய்ச் சேரவில்லை என் றால் அதற்கு முக்கியமான காரணம், மக்கள்தொகைப் பெருக்கம் தான்.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வசதியுள்ளவர் கள் கூடுமானவரை அரசு மருத்துவமனைகளை நாடுவதில்லை.
இதற்குக் காரணம் அவர்களது வறட்டு கௌரவம் அல்லது அரசு மருத் துவமனைகளில் சரியான சிகிச்சை கிடைக்காது என்கிற தவறான கண்ணோட்டம் போன்றவை. முடிந்தவரை அரசை நம்பாமல் தனி யார் மருத்துவமனைகளை நோயாளிகள் நாடும்போது, உண்மையி லேயே வசதியற்றவர்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு அரசு மருத் துவமனைகளுக்குக் கிடைக்கிறது என்பதால் அதுவும் ஒருவகையில் நல்லதுதான்.
இப்போதும்கூட, பெருவாரியான நோயாளிகள் மருத்துவச் சிகிச் சைக்கு அரசு மருத்துவமனைகளைத்தான் நம்பி இருக்கின்றனர் என்ப துதான் உண்மை நிலை. விபத்து சம்பந்தப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு மட்டுமே எடுத்துச் செல்லப்பட வேண்டும் என் கிற தவறான கண்ணோட்டம் இப்போதும் இருப்பதால், அவசர சிகிச் சைப் பிரிவுகள் எந்தவொரு நேரத்திலும் நிரம்பி வழிந்து கொண்டிருக் கும் நிலைமை தொடர்கிறது.

தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு சுமார் 11.5 லட்சம் பிரசவங்கள் நடைபெறுவதாகவும் இவற்றில் 6.5 லட்சம் பிரசவங்கள் அரசு மருத் துவமனைகளில்தான் நடைபெறுகின்றன என்கிற புள்ளிவிவரத்தை சமீபத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டிருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், கிராமப்புற மருத்துவ வசதிக்காகத் தமிழக அரசு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகவும் அறிவித்தி ருக்கிறார்.

இப்போதும், சுமார் அறுபது விழுக்காட்டுக்கும் அதிகமான மக்கள் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் தனியார் மருத்துவமனைக ளில் பெரும் பணம் செலவழித்து சிகிச்சை பெற முடியாத நிலைமை தான். மருத்துவச் செலவுக்குக் கடன் வாங்கி அதனால் வறுமையில் வாடும் கிராமப்புறக் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மருத்துவச் சேவையை ஏழை எளியோரும் பயன்பெறும் வகையில் மாற்ற வேண்டும் என்கிற அரசின் நல்லெண்ணம் கட்டாயமாக வர வேற்கப்பட வேண்டிய விஷயம். இந்த விஷயத்தில், அரசு மருத்துவ மனைகளைத் துப்புரவு செய்தல், அடிப்படை வசதிகளை அதிகரித் தல் போன்றவைகளுக்குத் தன்னார்வ நிறுவனங்களையும், சமூக சேவை நிறுவனங்களையும் ஈடுபடுத்தினால் என்ன? அரசு ஏன்முயற் சிக்கக் கூடாது?

———————————————————————————————————————————————————————-

புதுப்பிக்கப்பட்ட நாள்: 19 நவம்பர், 2007

தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் மீண்டும் தொடங்கியது

மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்கள் கட்டாயம் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டுமென்று இந்திய மத்திய அரசு அறிமுகப்படுத்தவிருக்கும் விதிக்கு எதிராக தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களின் போராட்டத்தினை மீண்டும் தொடங்கியுள்ளார்கள்.

இது தொடர்பில் மருத்துவ மாணவர்கள் திங்கட்கிழமை முதல் வெவ்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகிறார்கள். அரசின் இந்தத் திட்டமானது உண்மையான கிராப்புற சேவையல்ல என்பது மாணவர்களின் வாதமாகவுள்ளது.

இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் பல இடங்கள் காலியாகவுள்ள நிலையில் மருத்துவப் படிப்பை ஆறு ஆண்டுகளாக அதிகரித்தால் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் வருவது குறைந்துவிடும் எனவும் மாணவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இந்தியாவில்தான் உலக அளவில் குழந்தைகள் இறப்பு அதிமாக இருக்கிறது என்றும் 73 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்கின்ற காரணத்தினாலும், கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு எண்ணுகிறதாலும்தான் இவ்வாறான ஒரு திட்டத்தை அரசு முன்னெடுத்துவருகிறது என்று இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி இராமதஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களில் பணிசெய்யவேண்டும் என்பது இருந்தது என்றும், காலகட்டத்தில் அது இல்லாமல் போனது என்றும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் கூட இன்னமும் ஐந்து அல்லது பத்தாண்டுகள்தான் இருக்கும் எனவும் அமைச்சர் அன்புமணி கூறுகிறார்.

இந்த சர்ச்சை குறித்து சுகாதார அமைச்சர், மருத்துவ மாணவர்கள் மற்றும் பலரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்களை நியமிக்க கோரி பா.ம.க., போராட்டம்: ராமதாஸ்துõத்துக்குடி: “தமிழகத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் போதுமான டாக்டர்களை நியமிக்கக்கோரி பா.ம.க., போராட்டம் நடத்தவுள்ளதாக’ அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

துõத்துக்குடியில் அவர் கூறியதாவது: முதல்வர் கருணாநிதியை சந்தித்த மருத்துவ மாணவர்கள், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இன்று வரை நுõதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நானும் ஒரு டாக்டர் தான். டாக்டர்கள் நலனுக்கெதிராக செயல்பட மாட்டேன்.

“கடந்த ஆட்சியில் மாதம் எட்டாயிரம் ரூபாயில் தொகுப்பூதியத்திற்கு அரசு டாக்டர்களை நியமித்த’ ஜெயலலிதா, தற்போது கிராமப்புற சேவையை எதிர்த்து போராடுவது கண்டனத்திற்குரியது. மருத்துவ மாணவர்களின் ஓராண்டு கட்டாய கிராமப்புற சேவை, வெறும் பேச்சளவில் தான் உள்ளது. அரசாணையோ, பார்லியில் சட்ட முன்வரைவோ, மசோதாவோ தாக்கல் செய்யப்படவில்லை. பிரச்னை விவாதப்பொருளாகத்தான் உள்ளது.

கட்டாய கிராமப்புற சேவை குறித்து மருத்துவ மாணவர்களிடம் மூன்று மணி நேரம் பேசிய மத்திய அமைச்சர் அன்புமணி, மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுத்தான் குழு அமைத்தார். எந்த மாநிலத்திலும் இல்லாத போராட்டம் தமிழகத்தில் நடக்கிறது. மத்திய அமைச்சர் அன்புமணி டில்லியில் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களும், கிராமப்புற சேவை திட்டத்தை வரவேற்று உடனடியாக கொண்டு வரவேண்டும் என்றனர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் அதில் கலந்து கொண்டார். கையெழுத்து வேண்டுமானால் அமைச்சர் போடாமல் இருந்திருக்கலாம். தமிழக அமைச்சர் அப்போது எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தது ஏன்?

கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவ மாணவர்களுக்கு கிராமப்புற சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், அவர்கள் அபராதத்தை செலுத்த வேண்டும். நமது நாட்டு மருத்துவமனைகளில் அமெரிக்க தர சிகிச்சை தருவதற்குத்தான், மத்திய அரசு கட்டாய கிராமப்புற சேவை திட்டத்தை கொண்டு வருவதாக கூறியுள்ளது.

இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை துõண்டிவிட்டு அதை அரசியலாக்குகின்றனர். தமிழகத்திலுள்ள ஆயிரத்து 417 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயிரம் டாக்டர்களின் பணியிடம் காலியாக உள்ளது. நோயாளிகள் அவதிப்படுகின்றனர். அங்கு சென்று டாக்டர்கள் பணியாற்றலாம்.

அரசு மருத்துவக் கல்லுõரியில் படிக்கும் ஒரு மாணவருக்கு டாக்டராவதற்கு மக்கள் வரிப்பணம் ரூ.13 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை செலவிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்து 645 டாக்டர்கள் படிப்பு முடிந்து வெளியே வருகிறார்கள்.

கிராமப்புற கட்டாய சேவை குறித்து மருத்துவ மாணவர்களுடன் பேச நானும், மத்திய அமைச்சர் அன்புமணியும் தயாராகவுள்ளோம். அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள டாக்டர்கள், மருந்தாளுனர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரியும், அங்கு மருந்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்த பா.ம.க., முடிவு செய்துள்ளது. அதுகுறித்து வரும் 3ம் தேதி நடைபெறும் கட்சி செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
————————————————————————————————————–

“அன்புமணிக்கு அருகதை இல்லை’: தா. பாண்டியன்

சென்னை, டிச. 14: எங்களைப் பற்றி பேச மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணிக்கு அருகதை இல்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:

மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை ஆதரிப்பவர்களை, கிராம மக்களின் எதிரிகள் என்று அன்புமணி வர்ணித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸýம் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டை அனைத்துக் கட்சிகள் மீதும் கூறிவருகிறார். இதை இந்திய கம்யூனிஸ்ட் நிராகரிக்கிறது.

சிகிச்சை அளிப்பதால் மட்டுமே கிராம மக்களுக்கு சேவை கிடைத்துவிடும் என்று கூற முடியாது. கிராம மக்கள் சேவை என்றால், அவர்களுக்கு வேலை தரவேண்டும், தகுந்த ஊதியம், உற்பத்தி செய்கின்ற பொருள்களுக்கு நியாயமான விலை, கிராமங்களை இணைக்க தரமான சாலைகள், குடிநீர் வசதி மேலும் அங்குள்ள பள்ளிகளுக்கு சரிவர ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும். இதில் கடைசியில் வருவதுதான் மருத்துவ சிகிச்சை.

கேபினட் அமைச்சர் என்ற வகையில் அன்புமணி அங்கம் வகிக்கும் மத்திய சுகாதாரத் துறை, ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். ஆகிய உயர் கல்வித் துறைகளில் இதுவரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடம் ஒதுக்கவில்லை.

கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களில் ஒருவராவது இந்தக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டுள்ளனரா? அல்லது ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளனரா? என்ற விவரத்தை அன்புமணி வெளியிடவேண்டும்.

அதன் பின்னரே கிராம மக்கள் மீது அவர் எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளார் என்பது வெளிச்சத்துக்கு வரும்.

மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கைமீது இதுவரை நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்படவில்லை.

உண்மையில் கிராமப்புற சேவை செய்யவேண்டும் என்றால், மத்திய அமைச்சரவை செய்யத் தவறி இருப்பதை அன்புமணி கண்டித்திருக்கவேண்டும். இதைச் செய்யத் தவறிய அவருக்கு, குறைகளைச் சுட்டிக் காட்டும் எங்களைக் குறித்துப் பேச அருகதை இல்லை.

எம்.ஆர்.எஃப். தொழிலாளர் பிரச்னையை சுமூகமாக தீர்த்துவைத்து, கதவடைப்பை நீக்க நிர்வாகம் முன்வரவில்லை என்றால் அனைத்து தொழிற் சங்கங்களும் இணைந்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏரி மற்றும் நீர்பிடிப்புப் பகுதிகளில் அமைந்துள்ள ஒரு லட்சம் குடியிருப்புகளை இடிக்கப்போவதாக அறிவித்திருக்கும் பொதுப்பணித் துறையின் எச்சரிக்கையை நிறுத்திவைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மேலும் கோவையில் விமான நிலைய விரிவாக்கத்துக்காக, மக்கள் குடியிருக்கும் பகுதிகளை இடிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதை தவிர்க்க மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்துவதாக கருணாநிதி தெரிவித்தார்.

தமிழகத்தில் மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்னையைப் போக்க, அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்து மின் தட்டுப்பாடு இல்லாமல் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் தா. பாண்டியன்.
————————————————————————————————————–

Posted in +2, AIIMS, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Biz, Business, Childbirth, Children, City, Clinic, College, Commerce, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Compulsory, Consumer, Cost, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Critic, Customer, Doctor, Economy, Education, Empty, Engg, Engineer, Engineering, Extortion, facilities, Females, Force, Foreign, Free, GH, GI, Govt, Graduate, Graduation, Health, Healthcare, Higher, Hospitals, HSS, Info, infrastructure, Justice, Law, MBBS, MD, medical, Medicine, Metro, MMC, Money, Moore, Munnabai, Munnabhai, Needy, ObGyn, Op-Ed, Operation, Opportunity, Permanent, PlusTwo, Poor, Postgraduate, Postgraduation, Practice, Pregnancy, Private, Ramachandra, Ramadas, Ramadoss, Rich, Rich vs Poor, Royapettah, Rural, School, seats, service, Sicko, Specialization, Stanley, State, Statistics, Stats, Study, Suburban, surgery, University, Urban, voluntary, Volunteer, Wealthy, WHO, Women | 14 Comments »

Use of minors in wars & extremist forces – Worldwide Analysis & Report

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

போர்முனைக் “கேடயங்கள்’!

எஸ். ராஜாராம்

இலங்கையில் சிறுவர்களைப் படையில் வலுக்கட்டாயமாகச் சேர்ப்பதாக விடுதலைப் புலிகள் மீது அவ்வப்போது புகார்கள் எழுவதுண்டு. ஆனால், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சிறுவர்கள் ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்பட்டு சண்டையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகபட்சமாக சுமார் 2 லட்சம் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெஃப் தெரிவிக்கிறது.

  • புரூண்டி,
  • காங்கோ,
  • ருவாண்டா,
  • லைபீரியா,
  • சோமாலியா,
  • சூடான்,
  • உகாண்டா

உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் ஆயுதக் குழுக்கள் சிறுவர்களுக்கென தனிப்படைப் பிரிவையே உருவாக்கியுள்ளன. “18 வயது நிரம்பும்வரை போர்முனைக்கு சிறுவர்களை அனுப்புவதில்லை’ என இந்த ஆயுதக் குழுக்கள் தெரிவித்தாலும் அது நம்பும்படியாக இல்லை.
உகாண்டாவை சேர்ந்த மக்கள் பாதுகாப்புப் படை என்ற ஆயுதக் குழு, 13 வயது நிரம்பிய சிறுவர்களைக்கூட அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் படையில் சேர்த்துக் கொள்கிறது. லத்தீன் அமெரிக்காவில் சுமார் 11 ஆயிரம் சிறுவர்கள் இரண்டு கெரில்லா படைகளில் உள்ளனர்.

ஆசியாவை பொருத்தவரை

  • இலங்கை,
  • ஆப்கானிஸ்தான்,
  • மியான்மர்,
  • இந்தியா,
  • இந்தோனேஷியா,
  • லாவோஸ்,
  • பிலிப்பின்ஸ்,
  • நேபாளம்

உள்ளிட்ட நாடுகளில் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படையில் சேர்க்கப்படுகிறார்கள்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக அனுப்பப்பட்ட 15 வயது சிறுவனை அரசுப் படையினர் பிடித்தனர். அந்தச் சிறுவன் மனித வெடிகுண்டு எனத் தெரியவந்ததும் அதிபர் ஹமீத் கர்சாய் பேரதிர்ச்சி அடைந்தார். இருப்பினும், பொது மன்னிப்பு அளித்து அந்தச் சிறுவனை அவனது தந்தையிடம் ஒப்படைத்தார். பாகிஸ்தானின் வரிஜிஸ்தான் பகுதியில் மதரஸôவுக்கு படிக்கச் சென்ற அந்தச் சிறுவனை தலிபான்கள் மனித வெடிகுண்டாக அனுப்பியிருந்தது பின்னர் தெரியவந்தது.

“”சிறுவர்களைப் படையில் சேர்ப்பது ஒருபுறம் இருக்க, குழந்தைகளைக் குறிவைத்துக் கொல்லும் சம்பவங்கள் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளன” என்கிறார் குழந்தைகள் உரிமைகளுக்கான ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி.

கடந்த ஜூன் 15-ம் தேதி கூட்டுப் படைக்கு எதிரான தலிபான்களின் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 11 குழந்தைகள் கொல்லப்பட்டனர். பள்ளிக் கட்டடங்களும், பள்ளிக் குழந்தைகளும் தீவிரவாதிகளின் இலக்காகிவருவது கவலை அளிக்கும் விஷயம். மனித கேடயமாக சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்களோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது என்கிறார் அவர்.

18 வயதுக்கு குறைவான சிறுவர்களை படையில் சேர்ப்பதை தடுக்கும் வகையில் ஐ.நா. பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறுவர்களுக்கு கல்வி, உணவு, சுகாதாரம் போன்றவை முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்பதில் யுனிசெப் உறுதிபூண்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் மற்றும் கருணா படையினருக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த மே 11-ம் தேதி கடும் எச்சரிக்கை விடுத்தது. சிறுவர்களைப் படையில் சேர்க்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்; ஏற்கெனவே படையில் சேர்த்த சிறுவர்களை அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

சூடான் நாட்டில் இயங்கும் சூடான் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்புக்கும், யுனிசெஃப்புக்கும் இடையே ஜூன் 11-ம் தேதி ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தனது படையில் உள்ள சிறுவர்களை விடுவிக்க சூடான் விடுதலைப் படை அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. பல மாதங்களாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை யுனிசெஃப் வரவேற்றுள்ளது. எத்தனைச் சிறுவர்கள் விடுவிக்கப்படுவர் என உறுதியாகத் தெரியாவிட்டாலும், சுமார் 7000 சிறுவர்களை சூடான் விடுதலைப் படை விடுவிக்கும் எனத் தெரிகிறது.

ஆயுதக் குழுக்கள் ஒருபுறம் சிறுவர்களைச் சேர்ப்பது இருக்க பல நாடுகளில் அரசுகளே 18 வயது நிரம்பாத சிறுவர்களைப் படைகளில் சேர்க்கின்றன. 2004-ம் ஆண்டில் மியான்மர் அரசுப் படைகள் 12-18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வலுக்கட்டாயமாக படையில் சேர்த்தன. இங்கிலாந்தில் 16 வயது நிரம்பிய சிறுவர்கள் அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

இதுபோல அமெரிக்காவில் 17 வயது நிரம்பிய சிறுவர்கள் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால், அவர்கள் 18 வயது நிரம்பும்வரை சண்டையில் ஈடுபடுத்தப்படுவதில்லை. அமெரிக்கா, இங்கிலாந்தில் ராணுவச் சேவை கட்டாயம் என்பதால், மாணவப் பருவத்திலேயே சிறுவர்கள் படையில் சேர்க்கப்படுகின்றனர்.

மொத்தத்தில் ஆயுதப் போராட்டங்கள் நடைபெறும் நாடுகளில் எல்லாம் சிறுவர்கள் கடத்தப்படுவதும், அவர்கள் வலுக்கட்டாயமாக ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்படுவதும் வேதனை தரும் விஷயம். பள்ளி செல்ல வேண்டிய வயதில் சிறுவர்களை ஆயுதம்தாங்கி சண்டையிட அனுப்பும் தீவிரவாதக் குழுக்களை ஐ.நா. இன்னும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

அனைத்து நாடுகளும் இந்த விஷயத்தில் ஐ.நா.வுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, சிறுவர்களைப் படைகளில் சேர்ப்பதைத் தடுக்க வேண்டும்: ஏற்கெனவே தீவிரவாதக் குழுக்களில் இருக்கும் சிறுவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Posted in 18, abuse, Afghan, Afghanistan, Afghanisthan, africa, Age, AK-47, AK47, Ammunitions, Analysis, Arms, Backgrounder, Burma, Burundi, Child, Children, clash, Clashes, Colombo, Congo, Cyanide, Darfur, Data, Delhi, Dinamani, Extremism, Fights, Force, Guerilla, Hamid, Hindu, India, Indonesia, IPKF, Islam, kalashnikov, Karzai, Kids, Laos, Latin America, Leninist, Liberia, LTTE, Marxists, Minors, Moslem, Muslim, Mynamar, Nepal, Op-Ed, Opinion, Pakistan, Phillipines, Prabakharan, Prabhakaran, Protect, Protection, Report, rights, Rwanda, Somalia, Sri lanka, Srilanka, Statistics, Stats, Statz, Sudan, Suicide, Teen, Teenage, Terrorism, Terrorists, Thinamani, Uganda, UN, Underage, UNICEF, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, War, Warlords, Weapons, Worldwide, Zaire | 1 Comment »

Female Infanticide – Gender selections & Abortions in India: Law

Posted by Snapjudge மேல் ஜூலை 27, 2007

பிறப்பது எங்கள் பிறப்புரிமை!

உ . நிர்மலா ராணி, வழக்கறிஞர்

கருவிலிருப்பது ஆணா, பெண்ணா என்று கண்டறிவதற்கான தடையை நீக்க வேண்டும் என்று கோரி மகாராஷ்டிர மாநில உயர் நீதிமன்றத்தில் ஒரு தம்பதி பொதுநல வழக்குத் தொடர்ந்தனர். அம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்ற தாய், மூன்றாவது ஆண் குழந்தை பெற விரும்புவதில் என்ன தவறு என்று வினவியிருப்பது நாடெங்கிலும் அதிர்ச்சியையும், கண்டனக் குரல்களையும் எழுப்பியுள்ளது.

இந்த வழக்கு போடப்பட்ட ஓரிரண்டு தினங்களுக்குள் ஹைதராபாதின் ஒரு பகுதியில் தனது எட்டாவது மகளுக்குப் பிறந்த பெண் குழந்தையைச் சுமையாகக் கருதி அதை, அப்துல் ரஹீம் என்பவர் உயிருடன் மண்ணில் புதைத்த சம்பவம் நடந்திருக்கிறது. புதைக்கப்பட்ட குழந்தையின் கை வெளியே தெரிந்ததைப் பார்த்து, விவசாயி ஒருவர் காப்பாற்ற, அக்குழந்தை அதிசயமாய் உயிர் பிழைத்துக் கொண்டது.

இரண்டாவது சம்பவத்தில் குற்றம் நடந்து விட்டது. முதல் சம்பவத்தில் குற்றம் செய்ய கோர்ட் அனுமதி கேட்கப்படுகிறது. இவை இரண்டிலும் உள்ள பொதுவான அம்சம் என்னவென்றால் – மக்கள்தொகையில் பெண்ணினத்தின் வீழ்ச்சிக்கும் அழிவுக்கும் வழிவகுக்கும் காரணிதான் அது.

மக்கள்தொகையில் ஆண் பெண் விகிதம் என்பது 103:100 இருக்க வேண்டும். அதாவது 1000 ஆண் குழந்தைகளுக்கு 971 பெண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஏனென்றால், ஆண் கரு, பெண் கருவை விட பலவீனமானது. உருவான ஓர் ஆண்டுக்குள் வியாதிகளால் இறந்துவிடக் கூடியது. அவ்வாறு இறந்துவிட்டால் ஆண் – பெண் விகிதம் சமநிலையை அடையும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் நமது நாட்டில் மக்கள்தொகையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. 1901-ல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 972 பெண் குழந்தைகள் இருந்தன. 1991-ல் 945 ஆக குறைந்து 2001-ல் 927-க்கு சரிந்துவிட்டது. பெண்களுக்கெதிராக இந்நாட்டில் நிலவும் பாரபட்சத்தால் அவர்கள் இறந்து போகிறார்கள் என்று நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கான சர்வதேச நிறுவனமாகிய யூனிசெஃப்பும் இதை உறுதி செய்கிறது. இந்தியாவில் இவ்வாறு மாயமான பெண்களின் எண்ணிக்கை 5 கோடியாம்.

“லான்செட்’ என்ற இதழுக்காக இந்திய மற்றும் கனடா ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவிலுள்ள 11 லட்சம் குடும்பங்களில் ஆய்வு மேற்கொண்டதில், ஆண்டுக்கு 5 லட்சம் பெண் குழந்தைகள் கருக்கொலை காரணமாகவும், கருவுறுவதற்கு முன்பே பாலினத்தைத் தேர்வு செய்யும் முறையாலும் அழிந்து போகின்றனர் என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

இவ்வாறு பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் கொள்ளை நோய்களாகக் கருக்கொலைகளும், சிசுக்கொலைகளும் சமுதாயத்தில் வெகுவேகமாகப் பரவி வருகின்றன. இந்த நோய்களை உற்பத்தி செய்யும் விஷக்கிருமிகள் நமது ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பில் புரையோடிப் போயிருக்கின்றன.

வரதட்சிணை என்ற பெயரிலும், சடங்கு சம்பிரதாயங்கள் என்ற பெயரிலும், பெண்கள், பெற்றோர்களால் ஒரு பொருளாதாரச் சுமையாகவே கருதப்படுகிறார்கள். சொத்துரிமையும் பெற்றோருடனே வாழும் உரிமையும், இறுதிச்சடங்கு செய்யும் உரிமையும், ஆண்களுக்கே அளிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் பெண்களைப் புறக்கணிக்கும் போக்கும் ஆண்குழந்தைகளை விரும்பும் மனப்பாங்கும் நியாயப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றன.

முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்து, இரண்டாவது கருவும் பெண்ணாக உருவாகிவிட்டால் ஆண் குழந்தை வேண்டி கருக்கொலை செய்வதில் என்ன தவறு என்று சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் முதல் குழந்தை ஆணாக உருவானால் யாரும் பெண் குழந்தை வேண்டி ஆண் கருவை அழிப்பதில்லையே? “லான்செட்’ ஆய்வின்படி, முதல் குழந்தை பெண்ணாக இருக்கும்பட்சத்தில் இரண்டாவது பெண் குழந்தைகளின் விகிதம் 759 ஆகவும் மூன்றாவது பெண் குழந்தைகள் விகிதம் 719 ஆகவும் குறைந்து விடுகின்றன. ஆனால் இதுவே முதல் குழந்தை ஆணாக இருந்துவிட்டால் அதன்பிறகு ஆண் பெண் விகிதம் சமமாகவே இருக்கிறது என்று அந்த ஆய்வு பாரபட்சத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

பெண் கருக்கொலை, சிசுக்கொலை என்பது ஏதோ படிக்காத பாமர மக்கள் வசிக்கும் பகுதிகளில்தான் அதிகம் என்பதில்லை. நாட்டின் வளமான மாநிலங்கள் என்று போற்றப்படும் பஞ்சாப், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், குஜராத்தில்தான் மிகக் குறைந்த பாலின விகிதத்தில் பெண்கள் பிறக்கிறார்கள்.

தனிநபர் வருமானத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ள தில்லியில் பெண்களின் விகிதம் 868. மகாராஷ்டிரத்தில் 1991-ல் 946 ஆக இருந்த விகிதம் இன்று 913 ஆக மாறிவிட்டது. மகாபாரதப் புகழ் குருஷேத்ரத்தில் பாலின விகிதம் 770. எங்கெல்லாம் ஸ்கேன் மையங்கள் அதிகமிருக்கின்றனவோ அங்கெல்லாம் பெண்களின் விகிதம் குறைந்தே காணப்படுவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

“”பிறக்கப்போகும் குழந்தைகளின் குறைபாடுகளைக் கண்டறிய உதவும் தொழில் நுட்பம் (முறைப்படுத்துதல் மற்றும் தவறாகப் பயன்படுத்துதலைத் தடுக்கும்) சட்டம்” 1994-ல் கொண்டு வரப்பட்டது. இதன்படி ஸ்கேன் மையங்கள் அரசிடம் பதிவு செய்யப்பட வேண்டும். கருவிலிருப்பது ஆணா பெண்ணா என்று கண்டறிந்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. இதைப் பற்றி விளம்பரம் செய்தாலும் அது குற்றம். முதல் 10 ஆண்டுகளுக்கு எவ்வித அசைவுமில்லை. உச்ச நீதிமன்றத் தலையீட்டிற்கு பிறகு ஓரளவு முன்னேற்றம் உள்ளது. இந்நிலையில்தான் இந்தச் சட்டத்தை எதிர்த்து வழக்குப் போடப்பட்டுள்ளது.

“”ஆணும் பெண்ணும் சமம்” என்கிறது அரசியல் சட்டம். ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்கிறது சமூகச் சட்டம். நீதி பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசியல் சட்டத்தைத்தான் உயர்த்திப் பிடிக்க வேண்டுமே தவிர சமூகச் சட்டத்தை அல்ல. ஒரு சட்டம் எந்தப் பின்னணியில் யாருக்காக உருவாக்கப்பட்டது என்பதை உணராமல் எதிர்மறையான கருத்துகளைக் கூறும்போது சமூகத்தில் குற்றத்தை நியாயப்படுத்துபவர்களுக்கு அவை ஒரு வழிகாட்டுதலாக அமைந்துவிடும் அபாயம் உள்ளது.

சீனாவிலும் பெண் கருக்கொலைகள் அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் 2020-க்குள், திருமணம் செய்ய முடியாத 3 கோடி ஆண்கள் இருப்பர் என்று கூறப்படுகிறது. அங்கும் பாலினத் தேர்வு தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த “”நாமிருவர் நமக்கொருவர்” போன்ற திட்டங்களைக் கடைப்பிடித்ததில் பெண் கருக்கொலைகள் அதிகரித்துள்ளன.

ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட பாலினத்தை விரும்பும் போக்கு மக்களிடம் இல்லாததால் பிரச்னை இல்லை. கரு உருவாவதற்கு முன்னரே பாலினத்தைத் தேர்வு செய்து உருவாக்கிக் கொள்ளும் முறைப்படி, வர்ஜினியாவில் 11 பெற்றோர்களில் 10 பேர் பெண் குழந்தையைத்தான் தேர்வு செய்துள்ளனர். ஐரோப்பிய நாடுகள் பல, பாலினத் தேர்வு செய்யும் முறையைத் தடை செய்துள்ளன.

சமூகவியலாளர், அமித்தாய் எட்ஸியோனி கூறுகிறார்: “”பாலினத் தேர்வு என்பது பாலின விகிதாசாரத்தில் ஒரு கடுமையான அசமத்துவ நிலையை ஏற்படுத்தும். கோடிக்கணக்கான ஆண்களைப் பாலியல் குற்றங்களில் குற்றவாளிகளாக்கும் அல்லது பிரம்மசாரிகளாக்கும்.” ஒரு பெண் பல ஆண்களை மணந்து கொள்ளக் கட்டாயப்படுத்தப்படுவாள்; கடத்தப்படுவாள்; மறுத்தால் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவாள்.

இந்நிலையில், இந்தியாவில் பெண் குழந்தைகளின் சமூக அந்தஸ்து உயர்த்தப்பட வேண்டும். பாதகமான சமூகப் பழக்கவழக்கங்களை, சடங்கு சம்பிரதாயங்களை நாம் புறக்கணிக்க வேண்டும். பெண் குழந்தைகளைக் காக்க, அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவரை கருவிலே அழிக்கப்பட்டாலும், பூமிக்குள் புதைக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் எழுவோம் – ஃபீனிக்ஸ் பறவைகளாய்!

———————————————————————————————————————————————–

ஆண்டுக்கு 10 லட்சம் பெண் கருக்கள் அழிக்கப்படுகின்றன: மத்திய சமூகநல வாரியத் தலைவி தகவல்

புதுச்சேரி, நவ. 4: இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர் என்று மத்திய சமூக நல வாரியத் தலைவி ரஜனி பாட்டீல் தெரிவித்தார்.

புதுச்சேரி மாநில சமூக நல வாரியம் சார்பில் பெண் கரு பாதுகாப்பு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியை புதுவை முதல்வர் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தார். இந் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மத்திய சமூக நல வாரியத் தலைவி ரஜனி பாட்டீல் பேசியது:

21-ம் நூற்றாண்டில் நாம் இதுபோல் ஒரு கருத்தரங்கம் நடத்த வேண்டியிருப்பது வேதனைக்குரியது. இந்தியாவில் பெண் குழந்தைகள் கருவில் அழிக்கப்படுவது குறித்து மார்ச் 8-ம் தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பேசப்பட்டது.

இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர். கருவில் இருக்கும் பெண் ஆணா, பெண் என்பதை கண்டறிவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் சட்டம் கொண்டு வந்தும், அதிலிருந்து தப்பிக்க டாக்டர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாள்கின்றனர். 2020-ம் ஆண்டு இந்தியா வல்லரசாகும் என்று கூறுகின்றனர். பெண் விகிதம் 50 சதவீதம் இல்லாமல் இந்தியா வல்லரசாகி என்ன பயன்? தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் பெண்கள் விகிதம் ஓரளவு உயர்ந்துள்ளது. ஆனால் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பெண்கள் விகிதம் உயரவில்லை என்றார்.

புதுவை முதல்வர் என்.ரங்கசாமி பேசும்போது, புதுச்சேரியில் 1000 ஆண்களுக்கு 1001 பெண்கள் உள்ளனர். பெண்கள் முன்னேற்றத்துக்கு நாங்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். புதுச்சேரியில் பெண்கள் பெயரில் சொத்துகள் வாங்கினால் பதிவுக் கட்டணத்தில் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது. பெண்கள் நிறுவனங்களை நிறுவினால் 25 சதவீதம் மானியம் அளிக்கிறோம். தலித் பெண்களின் முன்னேற்றத்துக்கும் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறோம் என்றார்.

சமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி பேசும்போது, பெண்கள் கருவுறும் நாளில் இருந்து இறக்கும் வரை அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. நவம்பர் மாதத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு நாளாக அறிவிக்க உள்ளோம். அந்த நாளில் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம் என்றார்.

இக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் பேராசிரியர் மு.ராமதாஸ், எம்எல்ஏ ஆர்.விசுவநாதன், புதுச்சேரி சமூக நல வாரியத் தலைவி ழான் பூரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

“பொறுப்பும் செயல்திறனும் கொண்ட தன்னார்வ அமைப்புகளை அரசு தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் பெண் குழந்தை பிறப்பை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். கிராமப் புறங்களில் தன்னார்வ அமைப்புகள் மூலம் பெண் சிசுக்கள் கொல்லப்படுவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பிறந்தது முதல் பெண் குழந்தைகளுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டம் இயற்றிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் கல்வியுடன் இணைந்த வாழ்க்கை கல்வியை பள்ளிகளில் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியே 8-ம் வகுப்பு முதல் கற்றுத்தர வேண்டும்’ உள்ளிட்ட கருத்துக்கள் இக் கருத்தரங்கில் பரிந்துரைக்கப்பட்டன.

———————————————————————————————————————————————————–

ஆடாமல் நிற்குமா அரசுத் தொட்டில்?

எஸ். ஜெய்சங்கர்

உள்ளாட்சி முதல் உலக அளவில், பல நிலைகளில் பெண்கள் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளனர். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் எனப் பல துறைகளில் காலடி எடுத்து வைத்துள்ளனர். வர்த்தக நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுள்ளனர். பாரத நாட்டின் முதல் குடிமகள் முதல் நாட்டின் பல்வேறு பொறுப்புகளைப் பெண்கள் வகித்து வருகின்றனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் என்றாலும், பாரதியின் கனவை நனவாக்க, விண்கலமேறி விண்வெளிக்குப் புறப்பட்ட கல்பனா சாவ்லா, திரும்பி வரும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், காற்றோடு கலந்தார். அவரது வரிசையில் சுனிதா வில்லியம்ஸ், தொழில்நுட்பத்தையும் தாண்டி வெற்றி பெற்றார். இந்திய நாடே அவரைப் போற்றுகிறது. இது பெண்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் செய்தி.

அண்டவெளியில், காற்றில்லா இடத்தில், காலடி எடுத்து வைத்து, நடைபழகிய பெண்கள் நம் பாரதப் பெண்கள் என எண்ணி மகிழ்ந்தாலும், தாயின் கருப்பை எனும் இருண்ட பிரதேசத்தில் தோன்றி, வெளிச்சத்தைப் பார்த்தும், பார்க்காமலும் கருகிய மொட்டுகள் நம் தமிழகத்தில் ஏராளம்.

மிகவும் பின்தங்கிய மாவட்டமான தருமபுரியில், 1999 ஆம் ஆண்டு 657 பெண் சிசுக்கள் கொல்லப்பட்டன. 2000 ஆம் ஆண்டு 439 பெண் சிசுக்கள் உயிரிழக்க நேரிட்டது. மற்ற மாவட்டங்களிலும் இச்சம்பவங்கள் நிகழ்ந்தன.

தமிழகத்தின் ஆண் -பெண் குழந்தைகளின் விகிதத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாறுதல், பெண் சிசுக்கொலை ஆகியவை தமிழக அரசை கவலையடையச் செய்தது.

இதன் விளைவாக, 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொட்டில் குழந்தைகள் திட்டம், முழுவீச்சில் 2001 ஆம் ஆண்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. திட்டம் தொடங்கப்பட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகும், தருமபுரியில் 2001 ஆம் ஆண்டு 178 பெண் சிசுக் கொலைகள் நடந்துள்ளன எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பெண் சிசுவைக் கொல்வோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதை அறிந்த பொதுமக்கள், தாங்களாகவே முன்வந்து, விரும்பாத பெண் சிசுக்களை அரசுத் தொட்டிலில் போட்டுச் சென்றுவிட்டனர். அக்குழந்தைகளைப் பராமரிக்கும் அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம், விரும்புவோருக்குத் தத்து கொடுக்கிறது.

மேலும், 2-வது பிரசவத்தைக் கண்காணிப்பது, பெண் குழந்தை பிறந்தால் பெற்றோருக்குக் கவுன்சலிங் தந்து, குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சைக்கு அறிவுறுத்துவது போன்றவற்றால் பெண் சிசுக்கொலைகள் படிப்படியாகக் குறைந்தன.

பெண் சிசுக்கொலை குறைந்தாலும், தொட்டிலுக்கு வரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறையவில்லை. அண்மையில் 1000-மாவது தொட்டில் குழந்தையைப் பெற்றுள்ளது தருமபுரி அரசுத் தொட்டில் குழந்தைகள் மையம். இதில் சுமார் 120 குழந்தைகள் மட்டுமே ஆண் சிசுக்கள். ஆண் சிசுக்கள் தொட்டிலுக்கு வந்ததற்கும் சமுதாயச் சீர்கேடே காரணம்; தவறான உறவால் பிறந்த குழந்தைகளை வெளிக்காட்ட முடியாமல், அவை தொட்டிலில் போடப்பட்டன.

பெண் குழந்தை விஷயத்தில், அவர்களைப் படிக்க வைத்து, வரதட்சிணை, நகை எனச் செலவு செய்து திருமணம் செய்து வைக்க வேண்டும்; ஆண் குழந்தையாக இருந்தால், மாற்றான் வீட்டுப் பெண் மூலம் குடும்பத்துக்கு வரவு என வரவு- செலவு கணக்கு பார்க்கும் எண்ணம், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களிடமும், கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கத்தினரிடம் அதிகம். அதனால், பெண் குழந்தை என்றால் வளர்ப்பது கடினம் என்ற சலிப்பு. தொட்டில் குழந்தைகள் மையம் தொடங்கப்பட்டு, தருமபுரியில் மட்டுமே 1000 குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கிறோம் எனும் தகவல் பெண்ணினத்துக்குப் பெருமை அளிப்பதாக இல்லை. காரணம், பெண் சிசுவைக் கொன்றால் சிறைத்தண்டனை உறுதி என்ற பயம் மட்டுமே, சிசுக்கொலைகளைக் குறைத்து, அவற்றை அரசுத் தொட்டிலில் போடச் செய்திருக்கிறது.

சிசுக்கொலைகளைத் தடுக்கவும்; பெண் குழந்தைகளைத் தத்து பெறவும் எடுக்கப்பட்ட முயற்சிகள் முதல்கட்ட நடவடிக்கைகளே. பெண் குழந்தைகளைத் தத்து பெறுவதோடு தனது கடமை முடிந்தது என அரசு ஒதுங்கிக்கொள்ளாமல், அரசுத் தொட்டிலுக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான, ஆக்கபூர்வ முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இதற்கான அடுத்தகட்ட திட்டங்கள் தேவை.

மேலும், பெண் குழந்தைகளை அரசுத் தொட்டிலில் போடுவதைத் தவிர்க்கும் எண்ணம் பெற்றோருக்கு வர வேண்டும். இதற்கு, சமூக, பொருளாதார மாற்றம் மிக அவசியம். பொருளாதார வசதி கொண்ட எவரும் தங்களது பெண் சிசுக்களைக் கொல்வதும், அரசுத் தொட்டிலில் போடுவதும் கிடையாது. வருவாயற்ற ஏழைகளே பெரும்பாலும் இச்செயலில் ஈடுபடுகின்றனர்.

அரசின் முயற்சியாலும், பொதுமக்களிடையே ஏற்படும் மன மாற்றத்தாலும், “அரசுத் தொட்டிலுக்கு பெண் சிசுக்கள் வருவது நின்று 1000 நாள்களாகின்றன’ என்ற அறிவிப்பு வெளியாகுமானால், அது நிச்சயமாக பெண் சமுதாயத்துக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக இருக்கும்.

Posted in Abortion, Analysis, Backgrounders, Birth, Census, Child, Childbirth, Children, Conservative, Culture, Disease, Equal, Female, Feminism, Gender, Growth, Health, Infanticide, Insights, Kids, Law, Liberal, male, Malnutrition, Needy, Op-Ed, Opportunities, Opportunity, Order, parents, Poor, Population, ratio, Rich, rights, Sex, solutions, State, Stats, Statz, Values, Wealthy | Leave a Comment »

Art therapy as a mental health profession – Treatment of Psychological Disorders

Posted by Snapjudge மேல் ஜூலை 26, 2007

இது புதுசு: அமெரிக்காவிலிருந்து வந்த ஆர்ட் தெரபிஸ்ட்கள்!

ந.ஜீவா

சில குழந்தைகள் எப்போது பார்த்தாலும் துருதுருவென்று இருப்பார்கள். அவர்களை ஓர் இடத்தில் பிடித்து வைப்பது என்பது பெரும்பாடு. இங்கிருந்து அங்கே குதிப்பார்கள். அங்கிருந்து இங்கே குதிப்பார்கள். சில குழந்தைகளோ அதற்கு நேர்மாறாக எப்போதும் அமைதியாக இருப்பார்கள். “துருதுரு’ குழந்தையோ, அமைதிக் குழந்தையோ அவர்களின் மனதைப் படிப்பது எப்படி? அவர்களுடைய மனப்பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி? இதற்கு விடை சொல்லும் வகையில் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மிகவும் பிரபலமாக உள்ள ஆர்ட் தெரபியை இந்தியாவில் அறிமுகப்படுத்த வந்திருக்கிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ஜூடித் ஆரோன் ரூபினும், போடா நாரோவும். இருவரையும் இங்கே அழைத்து வந்தவர் அமெரிக்காவில் வாழும் சங்கீதா பிரசாத். இவரும் கூட ஒரு ஆர்ட் தெரபிஸ்ட்தான். சென்னையிலும், பிற நகரங்களிலும் ஆர்ட் தெரபியைப் பற்றிய அறிமுக நிகழ்ச்சியையும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆர்ட் தெரபி ட்ரெயினிங் புரோக்ராமையும் நடத்த வந்திருக்கும் அவர்களைச் சந்தித்துப் பேசினோம். அதிலிருந்து…

“”ஆர்ட் தெரபி 60 ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் புழக்கத்தில் வந்துவிட்ட ஒன்று. குழந்தைகளுக்கு என்றில்லை, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் அனைவருக்கும் இந்த ஆர்ட் தெரபி மூலம் மனதை அமைதிப்படுத்தலாம். ஆரோக்கியமாக்கலாம்.

இந்த ஆர்ட் தெரபி தொடர்பான ஐடியா முதன் முதலில் ஒரு மனநல மருத்துவருக்குத்தான் வந்தது. மனநல மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் சிலர் படம் வரைந்து கொண்டிருந்ததை அங்கிருந்த மருத்துவர் பார்த்தார். சாதாரணமாக ரொம்பவும் ஆர்ப்பாட்டம் செய்யும் அவர்கள் படம் வரையும் போது மிகவும் அமைதியாகக் காணப்பட்டனர். இது அவருக்கு வித்தியாசமாகப்பட்டது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்றன. அதிலிருந்து பிறந்ததுதான் இந்த ஆர்ட் தெரபி.

அமெரிக்காவைச் சேர்ந்த மார்க்கெரெட் நாம்பர்க் 1947 இல் முதன் முதலாக ஆர்ட் தெரபியைப் பற்றி புத்தகம் எழுதினார்.

ஆர்ட் என்றவுடன் ஏதோ படம் வரைவது மட்டும் என்று நினைத்துவிடாதீர்கள். படம் வரைவது, களிமண் சிற்பங்கள் செய்தல், ஏன் நாடகம் போடுதல், நடனம் ஆடுதல் எல்லாம் ஆர்ட் என்பதில் அடங்கிவிடும். இந்தக் கலை முயற்சிகளில் ஈடுபடும் பெரியவரோ சிறியவரோ தங்களை மறந்து ஈடுபட்டிருப்பார்கள். அவர்கள் வரைந்த படங்களைப் பார்த்தோமானால் அது அவர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கும். இதிலிருந்து அவர்களுடைய மனதைப் படித்துவிடலாம். அவர்களுடைய மனநிலைக்கேற்ப ஆர்ட் தெரபி பயிற்சிகள் கொடுத்து அவர்களுடைய மனதை ஆரோக்கியமான நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம். இந்தப் பயிற்சி மூன்றுவிதங்களில் நடைபெறும். உளவியல் அடிப்படையிலான அணுகுமுறையுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசுவது, ஆலோசனை கூறுவது, அப்புறம் அவர்களைப் படம் வரையச் சொல்வது. இதில் படம் வரைவதன் மூலம் நோயாளியின் மனநிலையை ஓர் ஆர்ட் தெரபிஸ்ட் படிக்க முடியும். அதே சமயம் படம் வரையும் அந்தச் செயலே மனநலக் குறைபாட்டிற்கான ஒரு மருந்து போலச் செயல்படும். சாதாரணமாக ஒருவர் படம் வரையும் போது அவர் மனம் ரொம்ப ரிலாக்ஸôக இருக்கும். உதாரணமாக எப்போதும் பதட்டமாக எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் ஒருவரை இந்த ஆர்ட் தெரபி மூலம் அமைதியாக்கிவிடலாம். அவருடைய கவனத்தை ஒருமுகப்படுத்தலாம்” என்கிறார் அமெரிக்காவில் தங்கியிருந்து ஆர்ட் தெரபிஸ்டாகப் பணிபுரியும் சங்கீதா பிரசாத்.

“”அமெரிக்காவில் முதலில் எல்லாம் மனநல மருத்துவர்கள்தாம் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆர்ட் தெரபி பண்ணலாம் என்று எங்களுக்குப் பரிந்துரை செய்வார்கள். இப்போதெல்லாம் நோயாளிகளே நேரடியாக எங்களை அணுகுகிறார்கள். குறிப்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த ஆர்ட் தெரபி அங்கு நல்ல பலனளிக்கிறது. ஸ்கூல் டீச்சரே ஒரு பையன் வித்தியாசமாக இருந்தால் எங்களிடம் சொல்லி விடுகிறார்கள். நாங்கள் அந்தப் பையனுக்கு ஆர்ட் தெரபி மூலம் ட்ரீட்மென்ட் கொடுப்போம். ஸ்கூல் டீச்சர்களுக்கு ஆர்ட் தெரபி பயிற்சியும் கொடுக்கிறோம்” என்று சொல்லும் ஜூடித் ஆரோன் ரூபின் ஆர்ட் தெரபித் துறையில் நீண்ட கால அனுபவம் உள்ளவர். ஆர்ட் தெரபி தொடர்பான திரைப்படங்களும் எடுத்துள்ளவர்.

“”ஆர்ட் தெரபியைக் குழந்தைகளுக்கு மட்டுமில்லை, எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் பயன்படுத்தலாம். எய்ட்ஸ் நோயாளிகள் வாழ்வின் விளிம்பில் நின்று கொண்டிருப்பவர்கள். விரக்தியின் உச்சியில் வாழ்பவர்கள். அவர்களுக்கு மனநலப் பிரச்சினை ஏற்படுவது இயல்பானதே.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஆர்ட் தெரபி செய்ய முடியும். முதலில் அவர்களுடைய வியாதியைப் பற்றி அவர்களுக்குப் புரிதல் ஏற்பட உதவுவோம். சிலர் மருந்து சாப்பிடக் கூட மாட்டார்கள். சாப்பிட்டு என்ன ஆகப் போகிறது? எதற்கு வாழ வேண்டும்? என்றெல்லாம் யோசிப்பார்கள். வாழ்க்கையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த இந்த ஆர்ட் தெரபி பயன்படுகிறது. நோயாளிகளுக்கு மனநிலை சரியாக இருந்தால்தான் அவர்கள் உட்கொள்ளும் மருந்து நன்றாக வேலை செய்யும். மனநிலையைச் சரிசெய்ய ஆர்ட் தெரபி உதவுகிறது.” என்கிறார் போடா நாரோ. இவர் இந்தியாவுக்கு வந்திருப்பது இப்போது இரண்டாவது முறை.

சுனாமியால் பாதிக்கப்பட்ட அந்தமானுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு போடா நாரோ ஆர்ட் தெரபி முறையில் சேவை செய்திருக்கிறார். தீவிர சைவரான இவருக்கு இந்தியா பிடித்திருப்பதற்கு ஒரே காரணம், அங்கே கிடைக்காத விதவிதமான சைவ உணவுகள் இங்கே கிடைப்பதுதானாம்.

“”புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் ஆர்ட் தெரபி மூலம் மனதை அமைதிப்படுத்தலாம். உடலில் எந்த அளவுக்கு அவர்களுக்கு வலி உள்ளதை என்பதை அவர்கள் சொன்னாலும் யாரும் அதை உணரப் போவதில்லை; தெரிந்து கொள்ளப் போவதில்லை. அவர்களைப் பார்த்துக் கொள்ளும் நர்சுகளுக்கே கூட தெரியாது. அவர்களைப் படம் வரையச் செய்து அதைப் பார்த்தால் அவர்களின் உடல் வேதனையும் அதனால் நேர்ந்த மனவேதனையும் தெரிய வரும். “நாளைக்குச் செத்துப் போவேன்’ என்று அவர்கள் நினைப்பது அவர்கள் வரைந்த படத்தின் மூலமாகத் தெரிய வந்தது.

குழந்தைகள் உடல் தொடர்பாக ஏதாவது சொன்னால் சாதாரணமாக, “சும்மா இருடா’ என்று ஒரு வார்த்தையில் அடக்கி விடுவோம். அவர்களுடைய மனதைப் புறக்கணித்துவிடுவோம். ஆனால் அவர்களைப் படம் வரையச் சொன்னால் அவர்களுடைய மனதையே வரைந்து கொடுத்துவிடுவார்கள்.” என்கிறார் சங்கீதா பிரசாத். அவர் மற்ற இருவரையும் சந்தித்தது சமீபத்தில்தானாம். அவர்கள் மூவரும் இத்தனைக்கும் அமெரிக்காவில் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்கள். ஒருவர் கேன்ஸ். இன்னொருவர் பென்சில்வேனியா. மற்றவர் வெர்ஜினியா.

அமெரிக்காவில் நியூ ஆர்லியன்ஸில் நடந்த ஆர்ட் தெரபி தொடர்பாக நடந்த ஒரு கான்ஃபரன்ஸின் போது, “இந்தியாவிற்கு என்னோடு வந்து ஆர்ட் தெரபியைப் பற்றி அறிமுகம் செய்ய யார் வரப் போகிறீர்கள்?’ சங்கீதா பிரசாத் அறைகூவல் விட்டிருக்கிறார். அந்த அறைகூவலின் விளைவுதான் அமெரிக்கப் பெண்களின் இந்த வருகை.

“இந்த ஆர்ட் தெரபி அமெரிக்காவில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு எட்டுமா? இல்லை பணக்காரக் குழந்தைகளுக்கு மட்டும்தானா?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தோம்.

“”எங்களுடைய முன்னாள் பிரசிடென்ட் ஜான் எஃப் கென்னடி காலத்திலேயே “வறுமைக்கு எதிரான போரை’ அமெரிக்காவில் தொடங்கிவிட்டோம். எனவே அமெரிக்காவில் உள்ள சேரிக் குழந்தைகளுக்கு எங்களுடைய சேவை தொடர்கிறது” என்றார் சற்றுச் சூடாக ஜூடித் ஆரோன் ரூபின்.

———————————————————————————————-

நனவாகுமா இவர்கள் கனவு?

வி. கிருஷ்ணமூர்த்தி

ஓரளவு மனவளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பு வசதிகள், இன்னமும் எட்டாக்கனியாகவே உள்ளன.

குழந்தை கருவாக இருக்கும்போது, குழந்தை பிறக்கும்போது, குழந்தை பிறந்தவுடன் ஆகிய மூன்று நிலைகளில் பல்வேறு காரணங்களால் குழந்தைகளின் மூளை நரம்புகளில் வளர்ச்சிக் குறைபாடு ஏற்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை மனவளர்ச்சி குன்றியவர்கள் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

இந்த பாதிப்பை மூன்று நிலைகளாக டாக்டர்கள் வகைப்படுத்துகின்றனர். இதில் மூன்றாவது பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு இருப்பதை அவர்களுடன் பேசிப் பழகினாலொழிய, அவர்களைக் கூர்ந்து பார்த்தாலொழிய கண்டுபிடிக்க முடியாது.

உடலளவில் பெரிய பாதிப்பு இல்லாத இவர்களுக்கு, பேசுவதில், சிந்திப்பதில் சிரமம் இருக்கும். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள மற்ற குழந்தைகளைக் காட்டிலும் இவர்களுக்கு அதிக நேரம் பிடிக்கும். மேலும் ஏற்கனவே புரிந்த விஷயத்தை நினைவுபடுத்தி எழுதுவதற்கும் காலதாமதம் ஏற்படும். மனவளர்ச்சி குன்றியவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் – சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் – இத்தகைய நிலையில் உள்ளனர்.

முறையான பயற்சி மற்றும் செயல்வழி கல்வி போன்ற முறைகளில் சில ஆண்டுகளில் இவர்களைப் பூரணமாகக் குணமாக்க முடியும். பிற குழந்தைகளுடன் போட்டி போடும் அளவுக்குத் தயார்படுத்த முடியும். ஆனால், இதற்கான சூழல் தமிழகத்தில் நிலவுகிறதா என்பது கேள்விக்குறியே.

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தமிழகத்தின் பின்தங்கிய மலைக்கிராமங்களில் ஒன்றான கீழானவயல் என்ற ஊரில் மிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் இத்தகைய பாதிப்பு காரணமாக தனது மகன் பிரேம்குமாரை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டார். சிறுவன் பிரேம்குமாரால் படிக்க முடியாது என முடிவு செய்த பெற்றோர், அவனை மாடு மேய்ப்பது, வீடுவீடாகச் சென்று பால் விற்பனை செய்வது போன்ற வீட்டு வேலைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றார். இந்தப் பணிகளை எவ்விதக் குறையும் இல்லாமல் பிற குழந்தைகளைப் போலச் சரியாக செய்வதில் பிரேம்குமாரின் சாமர்த்தியம் தெளிவாகத் தெரிகிறது. “நாமும் மற்ற குழந்தைகளை போல பள்ளிக்குச் சென்று படிக்க மாட்டோமா?’ என்ற ஏக்கம் அவனுக்கு இல்லாமல் இல்லை.

இவனைப் போல பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் சூழல் காரணமாக வீட்டு வேலைக்கும், தோட்ட வேலைக்கும் பெற்றோர்களால் பயன்படுத்தப்படுகின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை மாநிலப் பாடத்திட்டம் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இத்தகைய குழந்தைகளை வயது வரம்பு பார்க்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இத்தகைய குழந்தைகள் தேர்வு எழுதுவதற்கு, பார்வையற்றவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பது போல, ஓர் உதவியாளரை வைத்துக் கொள்வது, டேப்ரெக்கார்டர் வைத்துக்கொள்வது போன்ற பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. தேசிய திறந்த நிலை கல்வித் திட்டத்திலும் இத்தகைய குழந்தைகள் கல்வி பெற மத்திய அரசு பல்வேறு வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.

“ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு’ என்ற அமைப்பு மூலம் இவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளை அரசு நடத்தி வருகிறது.

அரசின் இந்தத் திட்டங்கள் எல்லாம் அணையில் தேங்கியுள்ள நீராகவே உள்ளன. அது பிரேம்குமார் போன்ற கடைமடைப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்குச் சென்று சேரவில்லை. இந்தத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல அரசு சமுதாய அடிப்படையிலான செயல் திட்டங்களை வகுத்து அனைத்து மாவட்டங்களிலும் குழுக்களை அமைத்துள்ளது.

அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் செயல்படும் இந்தக் குழுக்களின் செயல்பாடு பல மாவட்டங்களில் இன்னமும் பெயரளவிற்குத்தான் உள்ளது. களப்பணிக்கு இந்தக் குழுக்கள் நம்பியுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தொலைதூர கிராமங்களுக்குத் தேடிச்சென்று இத்தகைய குழந்தைகளைத் தேடிப்பிடித்து பள்ளிகளில் சேர்ப்பதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.

நகர்ப்புறங்களில் செயல்படும் தொண்டு நிறுவனங்களில் பணம் படைத்தவர்களின் குழந்தைகளே அதிக அளவில் சேர்க்கப்படுகின்றனர். குறைந்த வருவாய்ப் பிரிவினரில் பல குழந்தைகள் உள்ள குடும்பங்களில், மனவளர்ச்சி குன்றிய ஒரு குழந்தைக்கு மட்டும் சிறப்புக் கவனம் செலுத்துவதற்கு அவர்களுடைய பெற்றோர்களால் முடிவதில்லை. இதுவே பல குழந்தைகள் கல்வி பெற முடியாததற்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.

புரிந்து கொள்ளும் திறன் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க வேண்டியது தங்களின் கடமை என்பதைப் பெற்றோர்களும், அரசு நிர்வாகமும் புரிந்து கொண்டால் மட்டுமே பிரேம்குமார் போன்ற குழந்தைகளின் கல்விக் கனவு நனவாகும்.

இத்தகைய குறைபாடு இனி பிறக்கும் எந்தக் குழந்தைக்கும் இருக்கக் கூடாது என்பதற்கு போலியோ ஒழிப்புப் பிரசாரம் அளவுக்கு விழிப்புணர்வுப் பிரசாரப் பணிகள் தேவை. அதேசமயம் இவ்வாறு பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதைப் பற்றி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

திட்டங்களை அறிவித்து விட்டோம் என்பதுடன் நின்றுவிடாமல், அந்தத் திட்டம் சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர்கிறதா? அவ்வாறு சென்று சேரவில்லை என்றால் அதற்கு என்ன காரணம்? என்பன போன்றவற்றை ஆய்வு செய்து அதற்கேற்ப செயல்பட வேண்டியது அரசின் கடமை.

Posted in Active, Add, Affected, AIDS, Arts, Attention, Baby, Brain, Challenged, Child, Children, Colleges, Community, Crafts, cure, Deficiency, Disabled, Disorder, Donate, Education, Europe, Group, Handicrafts, Health, Help, Kid, medical, Mental, Needy, Neuro, NGO, Patient, Poor, Procedure, Project, Pshychic, Pshychology, Relax, Releiver, Reliever, Rich, Schizo, School, service, Shrink, Sick, SNEHA, Spastic, Stress, Suicide, Tax, Tension, Therapist, Therapy, Trauma, Treatment, univ, University, univs, US, USA, Volunteer, Wealthy, Work | Leave a Comment »