Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Freebies’ Category

MG Ramachandran: Politics, Cinema, Personality – MGR Biosketch by Panruti Ramachandhran

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

மறைந்தும் மறையாத தலைவர்

பண்ருட்டி ராமச்சந்திரன்

எந்தத் தலைவர்களும் பதவிக்குச் சென்றால் செல்வாக்கு குறைவதுதான் இயல்பு. ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை பதவிக்குச் சென்ற பிறகும்கூட, அவர் செல்வாக்கு வளர்ந்த வண்ணம்தான் இருந்தது.

அவர் ஆட்சியில் இருந்தவரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. அவர் மறைந்து இருபது ஆண்டுகள் சென்ற பிறகும்கூட, அவரது செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை அண்மையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

இருந்தபொழுது மட்டுமல்ல, மறைந்த பிறகும் மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை எவ்வாறு எம்.ஜி.ஆர். பெற்றார் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியதாகும். அவருக்கும் மக்களுக்கும் இருந்த பிடிப்பு மகத்தானது. அவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காலத்தில் இதை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

ஒருமுறை சென்னையிலிருந்து மதுரைக்கு காரில் சென்றோம். திருச்சியை அடைந்த பிறகு எம்.ஜி.ஆர். ஒரு பரீட்சையில் இறங்கினார். காரில் போகும்பொழுதே தொப்பியையும், கறுப்புக் கண்ணாடியையும் கழற்றி வைத்துவிட்டார். வழிநெடுக கூடியிருந்த மக்கள் எம்.ஜி.ஆர். எங்கே என்று தேடினார்களேயொழிய ஆர்ப்பரிக்கவில்லை. பிறகு மேலூரை நெருங்கியபொழுது தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்து கொண்டார். உடனே வழக்கம்போல் இருபுறமும் மக்கள் ஆரவாரம் செய்தனர். அவர் உடனே என்னிடத்தில் “”என்னை விட என் தொப்பிக்கும், கறுப்புக்கண்ணாடிக்கும் தான் மரியாதைபோலும்” என்று சொல்லி சிரித்தார்.

“புகழ்பெற்ற நடிகராக விளங்குவதால் மக்கள் செல்வாக்கா’ என்று கேட்டேன். அதற்கு அவர், “நடிகர்களாகயிருந்தால் மக்களுக்கு எளிதில் அடையாளம் தெரியும். ஆனால் மக்களின் மரியாதையைப் பெறுவதன் மூலமே செல்வாக்கைப் பெற முடியும். அதற்கு மக்கள் நம் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்கவேண்டும்’ என்றார்.

நடிகர்கள் நாடாள ஆசைப்படுவது நியாயமா என்று கேட்பவர்களுக்கு இதுவே சரியான பதில்.

எம்.ஜி.ஆர். மக்களை எவ்வாறு நேசித்தாரோ, அதேபோல் மக்களும் அவரை நேசித்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. குறிப்பாக அவர் நோய்வாய்ப்பட்டபொழுது ஜாதி, மதம் பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் இறைவழிபாடு நடத்தியது இதுவரை வரலாறு காணாத காட்சியாகும். “”நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற” என்ற பாட்டு ஒலி நாடு முழுதும் கேட்காத நாளில்லை.

1984-ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கிறாரா? உணர்வுடன் இருக்கிறாரா? என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் தமிழக மக்கள் சிறிதும் தயக்கமின்றி அவரை வெற்றிபெறச் செய்தனர்.

அமைச்சரவைக் கூட்டத்திலும்கூட எந்தத் திட்டங்கள் ஆனாலும் பட்ஜெட்டுகள் போடுவது என்றாலும் பாமர மக்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று பார்த்தே ஒப்புதல் தருவார். “மத்திய, மாநில அரசுகளுக்கு வரவு, செலவில் பற்றாக்குறை ஏற்பட்டால் மக்களின் மீது வரிபோடலாம் அல்லது வங்கிகள் மூலம் கடன் பெறலாம். ஆனால் குடும்பஸ்தனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அவன் எங்கே போவது? ஆகவே அரசின் திட்டங்கள் பாமர மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வகையில் அமைய வேண்டும்’ என்பார்.

அரிசி விலையையும், பஸ் கட்டணத்தையும் உயர்த்த ஒப்புக்கொள்ள மாட்டார். குடிசைக்கு ஒரு விளக்கு திட்டம், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், சிறு விவசாயிகளுக்கு பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் போன்ற பல திட்டங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. மக்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை. அரசின் நிதிநிலை சரியானால் போதும் என்ற கொள்கையை அவர் ஏற்றுக்கொண்டதே இல்லை. அதனாலேயே அவரது ஆட்சி ஏழைகளின் ஆட்சியாகத் திகழ்ந்தது.

ஒருமுறை அறிஞர் அண்ணாவுடன் எம்.ஜி.ஆர். சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்றார். இது எம்.ஜி.ஆரே சொன்னது. அண்ணா வழக்கம்போல் காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்தார். எம்.ஜி.ஆர். பின் சீட்டிலிருந்தார். பெரம்பலூருக்கு அப்பால் சென்றபொழுது காரை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அப்பொழுது அந்தப் பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் காரிலிருந்த கொடியைப் பார்த்துவிட்டு நேராக முன்சீட்டில் உட்கார்ந்து இருந்த அண்ணாவிடம் அவர் அண்ணா என்று தெரியாமல், எம்.ஜி.ஆர். வந்திருக்கிறாரா என்று கேட்டார்கள். அதற்கு அறிஞர் அண்ணா கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் இதோ பின்னால் இருக்கிறார் என்று அடையாளம் காட்டினார்.

எம்.ஜி.ஆர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனாராம். அண்ணா எத்தகைய தலைவர் என்பதையும் தன்னோடு இருப்பவர்கள் தன்னைவிடச் செல்வாக்காக இருக்கும்பொழுது பொறாமைப்படுவதற்குப் பதிலாகப் பெருமைப்பட்டவர் என்றும் குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆர். இறுதிவரை அண்ணா பெயரை உச்சரிக்காமல் எதையும் செய்ததில்லை. ஒரு தலைவருக்கு இலக்கணம் அறிஞர் அண்ணா என்றால், தகுதியான வாரிசுக்கு இலக்கணம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்தான்.

எம்.ஜி.ஆர். இளமையில் வறுமையைச் சந்தித்தவர். பொதுவாக, வறுமை கொடிது. இளமையில் வறுமை அதைவிடக் கொடியது. தனது அண்ணனும், தானும் சிறுவயதில் கும்பகோணத்தில் இருந்தபொழுது மூன்று நாள்கள் பட்டினி கிடந்ததாகவும் பரிதாபப்பட்டு எதிர்வீட்டைச் சேர்ந்த ஒரு தாய் கொஞ்சம் அரிசியை புரட்சித்தலைவரின் தாயிடம் தந்து குழந்தைகளுக்காவது கஞ்சி காய்ச்சி கொடுக்கும்படிச் சொன்னாராம்.

அன்று அந்த எதிர்வீட்டுத் தாய் செய்த உதவியால் தான் இன்று உங்களுக்கு ஒரு எம்.ஜி.ஆர். கிடைத்துள்ளார் என்று அவரே கூட்டங்களில் பேசியுள்ளார். இந்த அனுபவத்தால் தான் தமிழ்நாட்டில் பிறக்கும் எந்த குழந்தையும் பட்டினி கிடக்கக்கூடாது என்றும் ஒருவேளையாவது உணவுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கருதியதால்தான் சத்துணவுத்திட்டம் உதயமாயிற்று.

சத்துணவுத்திட்டம் கொண்டு வரவேண்டுமென்ற அவரது கருத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் கூட சில அமைச்சர்களுக்கு சந்தேகம் தீரவில்லை. இத்திட்டத்தால் பணம் செலவாகுமே தவிர பயன் இருக்காது என்றே பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் ஊழல் பெருகும் என்றும் சொன்னார்கள். ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்தியே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

மூக்கு என்று இருந்தால் சளிபிடிக்கத்தான் செய்யும்; ஒரு திட்டம் என்றால் சேதாரங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காகத் திட்டத்தைக் கைவிட வேண்டியது இல்லை என்று தீர்மானித்தோம்.

இந்தத் திட்டம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டபொழுது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் சத்துணவுத் திட்டத்திற்குப் பதிலாக ஏழைகளின் குடும்பத்திற்கு குறிப்பிட்ட தொகையை உதவியாக வழங்கலாம் என்றார். அப்படி வழங்கினால் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைப்பதற்கான உத்தரவாதம் இல்லையே என்று அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் அந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மூன்று நன்மைகள் ஏற்பட்டன. ஒன்று அனைத்து பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பதால் சமத்துவம் ஏற்பட்டது. இரண்டு, படிக்கிற காலத்தில் பள்ளியில் பிள்ளைகளுடைய இடைநிற்றல் தவிர்க்கப்பட்டது. மூன்றாவது, சவலைப்பிள்ளைகள் என்ற நிலையை மாற்ற இன்று முட்டை வழங்குவது வரை அது சத்துணவாக ஆக்கப்பட்டுள்ளது.

“”ஆளும் வளரணும், அறிவும் வளரணும் – அதுதாண்டா வளர்ச்சி”, என்பது எம்.ஜி.ஆரின் படத்தில் வரும் பாட்டு.

நல்ல சிந்தனையோடு நாட்டு மக்களுக்குச் செய்யப்படும் நற்காரியங்களுக்குத் தெய்வமும், மடியை வரிந்து கட்டிக்கொண்டு முன்னே ஓடிவந்து துணைசெய்யும் என்பார் திருவள்ளுவர். 1983-ம் ஆண்டு ஐ.நா. சபைக்கு நான் சென்றபொழுது எம்.ஜி.ஆர். பெயரை ஐ.நா. மன்றத்தில் பதிவு செய்ய வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால் இந்தியாவின் சார்பில் சென்றதால் ஒரு மாநில முதலமைச்சர் பெயரைப் பதிவு செய்ய முடியாது என்று எனக்குத் தெரிவித்துவிட்டனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில் ஐ.நா. சபையில் உலக உணவுதினம் கொண்டாட வேண்டி வந்தது. அதில் அப்பொழுது இருந்த 101 அணிசாரா நாடுகளின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

உலக உணவு தினத்தில் அணிசாரா நாடுகள் சார்பில் இந்தியா கலந்துகொள்ள அழைக்கப்பட்டது. இந்தியாவின் சார்பில் ஐ.நா.சபையில் கலந்துகொண்ட எங்களுக்குத் தலைவராக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இருந்தார். அடுத்த நிலையில் அன்றைய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் இருந்தார். இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் நான் இருந்தேன்.

உலக உணவு தினத்தன்று இந்திரா காந்தியும், நரசிம்மராவும் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர். ஆகவே, இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் உணவு தினம் என்பதால் சத்துணவுத் திட்டத்தைப்பற்றி ஐ.நா. சபையில் விரிவாகப் பேசினேன். உலக நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் அதை கைதட்டி வரவேற்றனர். எம்.ஜி.ஆர். பெயரும் ஐ.நா. சபையில் இடம்பெற்றது.

முயற்சி என்னுடையது என்றாலும் அதற்குரிய வாய்ப்பு இயற்கையாக அமைந்தது புரியாத புதிர் தானே!

(கட்டுரையாளர்: அவைத்தலைவர், தேமுதிக)

Posted in Actors, ADMK, AIADMK, Anjali, Anna, Assembly, Biography, Biosketch, Children, Cinema, CM, DMDK, DMK, dynasty, EVR, Films, Food, Free, Freebies, Heartthrobs, Hero, Heroes, Incidents, Indhra, Indira, Indra, Iruvar, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kids, King, KK, Life, Manifesto, Meals, Memoirs, MGR, Midday Meals, Monarchy, Movies, Notes, Nutrition, Panruti, Periyar, Personality, Politics, Poor, PVNR, Ramachandhran, Ramachandran, Ramachanthiran, Ramachanthran, Rao, UN, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth | Leave a Comment »

Tamil Language & Medium of Instruction – No Exam Fees

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 18, 2007

ஆவலுடன் தமிழ்த்தாய்!

தமிழினியன்

இன்னொரு “இலவச’ உத்தரவு! தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கு – தேர்வுக் கட்டணம் இல்லை. தமிழை மேம்படுத்துவதுதான் இச் சலுகையின் நோக்கமென்றால், அது தவறு. பொதுவாக தமிழ்நாட்டில் எதை வளர்க்கிறோமோ இல்லையோ, இலவசங்களை வளர்த்துக்கொண்டே போகிறோம்.

தேர்தலின்போது, வாக்காளர்களுக்குத்தான் எத்தனை இலவசத் திட்டங்கள்! அவை சரியா, இல்லையா, நிலைக்குமா, நிலைக்காதா என்ற கேள்விகளுக்கு அப்பால்~ ஆட்சி அமைக்க அத் திட்டங்கள் அடிகோலியது மட்டும் என்னவோ மறுக்க முடியாத உண்மை.

ஆனால், தமிழ் வளர்ச்சி என்ற சாக்கில் தமிழ்வழிக்கல்வி மாணவர்களுக்கான இச் சலுகை தமிழையும் வளர்க்காது; மாணவர்களுக்கும் பயன் தராது. மாறாக, மாணவர்களிடையே அடுத்த தேர்வில் பார்த்துக் கொள்ளலாம் என்ற மெத்தனப் போக்கைத்தான் ஏற்படுத்தும். இலவசமாகப் படி என்பதாலோ இலவசமாகத் தேர்வு எழுது என்பதாலோ தமிழை வளர்க்க முடியும் என்பது நடைமுறையில் பயன் தராத கற்பனை.

ஏனென்றால், இலவசங்களுக்கு ஆசைப்பட்டுக் கற்கக்கூடிய மொழி அல்ல தமிழ். அப்படி ஒரு நிலைமை தமிழ்நாட்டில் தமிழுக்கு இருக்குமானால் அதைவிட வெட்கக்கேடு வேறில்லை. செம்மொழி என்ற சிகரத்தைத் தொட்டிருக்கும் தமிழை இதுபோன்ற இலவசத் திட்டங்களால் கொச்சைப்படுத்தலாகாது.

தமிழ்வழிக்கல்வியை முழுமையாகக் கொண்டு வருவதற்கான ஒரேவழி, தமிழைத்தான் படிக்க வேண்டும் என்ற சூழலைத் தமிழ்நாட்டில் உருவாக்குவதுதான். இத்தகையச் சூழலை, கேரளத்திலோ, கர்நாடகத்திலோ, ஆந்திரத்திலோ அல்லது மத்தியப் பிரதேசத்திலோ உருவாக்க முடியாது. தமிழ் மண்ணில் மட்டும்தான் அத்தகைய நிலைப்பாட்டை ஏற்படுத்த இயலும்.

அதற்கான ஆக்கப்பணிகளை இப்போதே தொடங்கினால்தான் வரும் கல்வியாண்டில் இருந்து தமிழ்வழிக் கல்வியை அமல்படுத்த முடியும். அதுதான் தமிழ் வளர்ச்சிக்கு நாம் ஆற்றும் உண்மையான தொண்டு.

ஏற்கெனவே மாணவர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள். உதாரணமாக, இலவசப் பேருந்துப் பயணம். இது சலுகைதானா என்பதே ஒரு பெரிய கேள்விக்குறி. எழுத்தறிவு, கண்ணொளிக்கு சமம். கண்ணில்லாவிட்டால் எப்படி உலகத்தைப் பார்க்க முடியாதோ, அதைப்போல் கல்வி இல்லாவிட்டால் உலகத்தை அறிய முடியாது.

எனவேதான் உணவு, உடை, உறையுள் ஆகிய அத்தியாவசியத் தேவைகளில் நான்காவதாகச் சேர்க்கப்பட்டுள்ளது கல்வி. எனவேதான் பட்டிதொட்டிகளில் எல்லாம் இன்று பாடசாலைகள் உள்ளன. இருந்தும் ஓர் ஊரில் உள்ள மாணவர்கள் இன்னோர் ஊரில் போய் படித்து வரும் நிலை நீடிக்கிறது.

நடுநிலை மற்றும் உயர்நிலைக் கல்வி நிலையங்கள் உள்ளூரில் இல்லை என்று வேற்றூர் போவோர் ஒருசாரார். கல்விக்கூடம் சரியாக இல்லை என்பதும் கற்றுத் தருவார் யாருமில்லை என்பதும் இன்னொரு காரணம்.

முதலாவது காரணத்தில் நியாயம் இருக்கிறது. ஆனால் இரண்டாவது காரணத்துக்காக மாணவர்கள் வெளியூர் செல்வதைத் தவிர்க்க முடியும். கட்டட அமைப்புகளையும் பராமரிப்பையும் முறையாகச் செய்து, ஆசிரியர் நியமனங்களையும் தேவைக்கேற்ப செய்து முறைப்படி கல்வி நிறுவனங்களை நிர்வகித்தால் இரண்டாவது காரணத்தைத் தவிர்ப்பது சாத்தியம்.

இன்னொரு தேவையற்ற காரணமும் இருக்கிறது. இலவசப் பயணத்தை அனுபவிப்பதற்காகவே சில மாணவர்கள் (சிறுவர்கள்தானே) ஊர்விட்டுஊர் செல்கிறார்கள். அவர்களிடையேயும் கல்விபால் நாட்டத்தை ஊட்ட வேண்டும்.

இலவசப் பயணத்தின் எதிர்விளைவுகளைக் கவனிப்போம்:

மனிதநேரம் மதிப்பிட முடியாதது. ஒரு தொழிலாளி ஒருமணி நேரம் உழைக்க இயலாமல்போனால், உற்பத்தி குறையும். அதைப்போல் படிப்பதற்கு ஏற்ற அருமையான காலைப்பொழுதில், பேருந்துப் பயணம் மேற்கொள்வதால் “மாணவர் நேரம்’ விரயமாகிறது. தவிர புத்தக மூட்டையைத் தோளில் சுமந்து கொண்டு அவர்கள் பேருந்து நெரிசலில் படும் அவதி இருக்கிறதே… சொல்லும் தரமன்று. அத் தொல்லைக்கு உள்ளாகும்போது மாணவன் தன் சக்தியை இழந்து விடுகிறான். களைத்தும் சோர்ந்தும் வகுப்பறைக்கு அவன் செல்கிறான். அந்தப் பரிதாப நிலையில் அவனுக்குப் பாடம் கேட்கத் தோன்றுமா? தூக்கம்தான் வரும்.

அரசு மனது வைத்தால் மாணவர்களுக்கு ஏற்படும் இந்த இடையூறுகளைத் தவிர்க்க அல்லது குறைக்க நிச்சயமாக முடியும். ஆனால் இப்பணியில் ஒரு தயக்க நிலையே இன்னும் இருக்கிறது. அதனால்தான் இலவசச் சலுகைகளைக் காட்டி அவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.

பத்து ஆண்டுகள் படித்து, பத்தாவது ஆண்டு முடிவிலோ அல்லது பன்னிரண்டு ஆண்டுகள் பயின்று, பன்னிரண்டாம் ஆண்டு முடிவிலோ, இலவசத்தேர்வு எழுத முடியும் என்பதற்காக தமிழ் படிக்க மாணவர்கள் முன்வருவார்கள் என எதிர்பார்ப்பது பேதைமை.

அடிப்படைக் கல்வி அவசியம் என்றுதான் ஆரம்பக்கல்வியை இலவசமாக்கினோம். ஆறாம் வகுப்பிலிருந்து கட்டணம் செலுத்தி படிக்கும் நிலைமை ஐம்பதுகளில் இருந்தது. அப்போது அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் தமிழே பயிற்று மொழியாக இருந்தது. அப்போது இந்தப் பயிற்றுமொழிப் பிரச்னை எழவே இல்லை. தமிழில்தான் அனைவரும் உயர் கல்வி பயின்றார்கள். பட்டப்படிப்பு முடித்து, வேலையும் கிடைத்து வாழ்க்கையில் உயர்ந்தார்கள். நிலைத்தார்கள்.

ஆனால் அறுபதுகளின் ஆரம்பத்தில் அத் தவறு நேர்ந்துவிட்டதே. ஆமாம்: உயர்கல்வியும் இனி இலவசம் என்ற சட்டம் வந்தது அப்போதுதான்.

மேலோட்டமாகப் பார்த்தால் அரசின் தாராளமானபோக்காக அது தோன்றும். உண்மையும் அதுதான். ஏனெனில் வசதிக்குறைவான மாணவர்களும் தவறாமல் உயர் கல்வி பெற வேண்டும் என்ற பரந்த நோக்கத்தைக் கொண்டதல்லவா அத்திட்டம். எனவே அதற்கு பெருத்த வரவேற்பு கிடைத்ததில் நியாயம் உண்டு.

ஆனால் அதன் தாக்கம் எதிர்விளைவாகி ஒரு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டது.

உயர்கல்வி இலவசமானதும் கல்வியின் தரம் குறைந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் இருதரப்பிலும் இலவசக் கல்வியை “பத்தியக்கஞ்சியாக’ பார்க்கத் தலைப்பட்டார்கள். இது ஒரு பக்கம். இன்னொரு தாக்கம்~ சமூகப் பார்வையிலானது.

நடுத்தர மக்களும் மேல்தட்டுவாசிகளும் இலவசக் கல்வி தரக்குறைவு என்பதோடு கௌரவக் குறைவு என்றும் கருதினார்கள். இத் தருணத்துக்கென்றே காத்திருந்த வியாபாரக் கல்வியாளர்கள் தங்கள் பணியைத் தொடங்கிவிட்டனர். கட்டணத்துடன் தமிழ்க்கல்வி என்றால் கவர்ச்சி இருக்காதே, ஆகவே கட்டணத்துடன் ஆங்கிலக் கல்வி என்று கடைவிரித்தார்கள். வியாபாரம் சூடு பிடித்தது. ஆங்கிலம் களைகட்ட, தமிழ் களைஇழந்தது.

இதிலிருந்து, ஆங்கிலக் கல்வி, தேவை அடிப்படையில் ஏற்பட்டது அல்ல; தற்செயலாக நேர்ந்த விபத்து என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் தாய்த் தமிழ்நாட்டில் தாய்த்தமிழை இலவசமாகவேனும் படியுங்கள் என்பது கேவலமாகத் தோன்றுகிறது. தமிழின் பெயரால் கொண்டுவரும் சலுகை எதுவாயினும், அது தமிழுக்குப் பின்னடைவே தவிர, தமிழ் வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவாது.

சமச்சீர் கல்வி பற்றி பேசப்படுகிறது. இதன் சாராம்சம் உயர்கல்வி வரை தமிழ்தான் சகலருக்கும் பயிற்று மொழி என்று இருக்குமானால் – மாநில அரசும் அதை முழு மனதுடன் அமலாக்கத் துணியுமானால், தமிழ்நாட்டில் தமிழ் மீண்டும் அரியணை ஏறும்.

அந்த இனிய திருநாள் வாய்க்குமா? தமிழ்த்தாய் ஏக்கத்துடன் எதிர்பார்க்கிறாள்!

Posted in Cho, Education, English, Exam, Examination, Fees, Free, Freebies, Hindi, HSC, Instruction, Language, Necessity, Passion, Schools, Students, Survival, Tamil, Teachers, Test | Leave a Comment »