Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Heroes’ Category

MG Ramachandran: Politics, Cinema, Personality – MGR Biosketch by Panruti Ramachandhran

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

மறைந்தும் மறையாத தலைவர்

பண்ருட்டி ராமச்சந்திரன்

எந்தத் தலைவர்களும் பதவிக்குச் சென்றால் செல்வாக்கு குறைவதுதான் இயல்பு. ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை பதவிக்குச் சென்ற பிறகும்கூட, அவர் செல்வாக்கு வளர்ந்த வண்ணம்தான் இருந்தது.

அவர் ஆட்சியில் இருந்தவரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. அவர் மறைந்து இருபது ஆண்டுகள் சென்ற பிறகும்கூட, அவரது செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை அண்மையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

இருந்தபொழுது மட்டுமல்ல, மறைந்த பிறகும் மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை எவ்வாறு எம்.ஜி.ஆர். பெற்றார் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியதாகும். அவருக்கும் மக்களுக்கும் இருந்த பிடிப்பு மகத்தானது. அவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காலத்தில் இதை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

ஒருமுறை சென்னையிலிருந்து மதுரைக்கு காரில் சென்றோம். திருச்சியை அடைந்த பிறகு எம்.ஜி.ஆர். ஒரு பரீட்சையில் இறங்கினார். காரில் போகும்பொழுதே தொப்பியையும், கறுப்புக் கண்ணாடியையும் கழற்றி வைத்துவிட்டார். வழிநெடுக கூடியிருந்த மக்கள் எம்.ஜி.ஆர். எங்கே என்று தேடினார்களேயொழிய ஆர்ப்பரிக்கவில்லை. பிறகு மேலூரை நெருங்கியபொழுது தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்து கொண்டார். உடனே வழக்கம்போல் இருபுறமும் மக்கள் ஆரவாரம் செய்தனர். அவர் உடனே என்னிடத்தில் “”என்னை விட என் தொப்பிக்கும், கறுப்புக்கண்ணாடிக்கும் தான் மரியாதைபோலும்” என்று சொல்லி சிரித்தார்.

“புகழ்பெற்ற நடிகராக விளங்குவதால் மக்கள் செல்வாக்கா’ என்று கேட்டேன். அதற்கு அவர், “நடிகர்களாகயிருந்தால் மக்களுக்கு எளிதில் அடையாளம் தெரியும். ஆனால் மக்களின் மரியாதையைப் பெறுவதன் மூலமே செல்வாக்கைப் பெற முடியும். அதற்கு மக்கள் நம் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்கவேண்டும்’ என்றார்.

நடிகர்கள் நாடாள ஆசைப்படுவது நியாயமா என்று கேட்பவர்களுக்கு இதுவே சரியான பதில்.

எம்.ஜி.ஆர். மக்களை எவ்வாறு நேசித்தாரோ, அதேபோல் மக்களும் அவரை நேசித்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. குறிப்பாக அவர் நோய்வாய்ப்பட்டபொழுது ஜாதி, மதம் பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் இறைவழிபாடு நடத்தியது இதுவரை வரலாறு காணாத காட்சியாகும். “”நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற” என்ற பாட்டு ஒலி நாடு முழுதும் கேட்காத நாளில்லை.

1984-ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கிறாரா? உணர்வுடன் இருக்கிறாரா? என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் தமிழக மக்கள் சிறிதும் தயக்கமின்றி அவரை வெற்றிபெறச் செய்தனர்.

அமைச்சரவைக் கூட்டத்திலும்கூட எந்தத் திட்டங்கள் ஆனாலும் பட்ஜெட்டுகள் போடுவது என்றாலும் பாமர மக்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று பார்த்தே ஒப்புதல் தருவார். “மத்திய, மாநில அரசுகளுக்கு வரவு, செலவில் பற்றாக்குறை ஏற்பட்டால் மக்களின் மீது வரிபோடலாம் அல்லது வங்கிகள் மூலம் கடன் பெறலாம். ஆனால் குடும்பஸ்தனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அவன் எங்கே போவது? ஆகவே அரசின் திட்டங்கள் பாமர மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வகையில் அமைய வேண்டும்’ என்பார்.

அரிசி விலையையும், பஸ் கட்டணத்தையும் உயர்த்த ஒப்புக்கொள்ள மாட்டார். குடிசைக்கு ஒரு விளக்கு திட்டம், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், சிறு விவசாயிகளுக்கு பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் போன்ற பல திட்டங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. மக்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை. அரசின் நிதிநிலை சரியானால் போதும் என்ற கொள்கையை அவர் ஏற்றுக்கொண்டதே இல்லை. அதனாலேயே அவரது ஆட்சி ஏழைகளின் ஆட்சியாகத் திகழ்ந்தது.

ஒருமுறை அறிஞர் அண்ணாவுடன் எம்.ஜி.ஆர். சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்றார். இது எம்.ஜி.ஆரே சொன்னது. அண்ணா வழக்கம்போல் காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்தார். எம்.ஜி.ஆர். பின் சீட்டிலிருந்தார். பெரம்பலூருக்கு அப்பால் சென்றபொழுது காரை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அப்பொழுது அந்தப் பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் காரிலிருந்த கொடியைப் பார்த்துவிட்டு நேராக முன்சீட்டில் உட்கார்ந்து இருந்த அண்ணாவிடம் அவர் அண்ணா என்று தெரியாமல், எம்.ஜி.ஆர். வந்திருக்கிறாரா என்று கேட்டார்கள். அதற்கு அறிஞர் அண்ணா கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் இதோ பின்னால் இருக்கிறார் என்று அடையாளம் காட்டினார்.

எம்.ஜி.ஆர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனாராம். அண்ணா எத்தகைய தலைவர் என்பதையும் தன்னோடு இருப்பவர்கள் தன்னைவிடச் செல்வாக்காக இருக்கும்பொழுது பொறாமைப்படுவதற்குப் பதிலாகப் பெருமைப்பட்டவர் என்றும் குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆர். இறுதிவரை அண்ணா பெயரை உச்சரிக்காமல் எதையும் செய்ததில்லை. ஒரு தலைவருக்கு இலக்கணம் அறிஞர் அண்ணா என்றால், தகுதியான வாரிசுக்கு இலக்கணம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்தான்.

எம்.ஜி.ஆர். இளமையில் வறுமையைச் சந்தித்தவர். பொதுவாக, வறுமை கொடிது. இளமையில் வறுமை அதைவிடக் கொடியது. தனது அண்ணனும், தானும் சிறுவயதில் கும்பகோணத்தில் இருந்தபொழுது மூன்று நாள்கள் பட்டினி கிடந்ததாகவும் பரிதாபப்பட்டு எதிர்வீட்டைச் சேர்ந்த ஒரு தாய் கொஞ்சம் அரிசியை புரட்சித்தலைவரின் தாயிடம் தந்து குழந்தைகளுக்காவது கஞ்சி காய்ச்சி கொடுக்கும்படிச் சொன்னாராம்.

அன்று அந்த எதிர்வீட்டுத் தாய் செய்த உதவியால் தான் இன்று உங்களுக்கு ஒரு எம்.ஜி.ஆர். கிடைத்துள்ளார் என்று அவரே கூட்டங்களில் பேசியுள்ளார். இந்த அனுபவத்தால் தான் தமிழ்நாட்டில் பிறக்கும் எந்த குழந்தையும் பட்டினி கிடக்கக்கூடாது என்றும் ஒருவேளையாவது உணவுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கருதியதால்தான் சத்துணவுத்திட்டம் உதயமாயிற்று.

சத்துணவுத்திட்டம் கொண்டு வரவேண்டுமென்ற அவரது கருத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் கூட சில அமைச்சர்களுக்கு சந்தேகம் தீரவில்லை. இத்திட்டத்தால் பணம் செலவாகுமே தவிர பயன் இருக்காது என்றே பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் ஊழல் பெருகும் என்றும் சொன்னார்கள். ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்தியே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

மூக்கு என்று இருந்தால் சளிபிடிக்கத்தான் செய்யும்; ஒரு திட்டம் என்றால் சேதாரங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காகத் திட்டத்தைக் கைவிட வேண்டியது இல்லை என்று தீர்மானித்தோம்.

இந்தத் திட்டம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டபொழுது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் சத்துணவுத் திட்டத்திற்குப் பதிலாக ஏழைகளின் குடும்பத்திற்கு குறிப்பிட்ட தொகையை உதவியாக வழங்கலாம் என்றார். அப்படி வழங்கினால் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைப்பதற்கான உத்தரவாதம் இல்லையே என்று அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் அந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மூன்று நன்மைகள் ஏற்பட்டன. ஒன்று அனைத்து பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பதால் சமத்துவம் ஏற்பட்டது. இரண்டு, படிக்கிற காலத்தில் பள்ளியில் பிள்ளைகளுடைய இடைநிற்றல் தவிர்க்கப்பட்டது. மூன்றாவது, சவலைப்பிள்ளைகள் என்ற நிலையை மாற்ற இன்று முட்டை வழங்குவது வரை அது சத்துணவாக ஆக்கப்பட்டுள்ளது.

“”ஆளும் வளரணும், அறிவும் வளரணும் – அதுதாண்டா வளர்ச்சி”, என்பது எம்.ஜி.ஆரின் படத்தில் வரும் பாட்டு.

நல்ல சிந்தனையோடு நாட்டு மக்களுக்குச் செய்யப்படும் நற்காரியங்களுக்குத் தெய்வமும், மடியை வரிந்து கட்டிக்கொண்டு முன்னே ஓடிவந்து துணைசெய்யும் என்பார் திருவள்ளுவர். 1983-ம் ஆண்டு ஐ.நா. சபைக்கு நான் சென்றபொழுது எம்.ஜி.ஆர். பெயரை ஐ.நா. மன்றத்தில் பதிவு செய்ய வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால் இந்தியாவின் சார்பில் சென்றதால் ஒரு மாநில முதலமைச்சர் பெயரைப் பதிவு செய்ய முடியாது என்று எனக்குத் தெரிவித்துவிட்டனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில் ஐ.நா. சபையில் உலக உணவுதினம் கொண்டாட வேண்டி வந்தது. அதில் அப்பொழுது இருந்த 101 அணிசாரா நாடுகளின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

உலக உணவு தினத்தில் அணிசாரா நாடுகள் சார்பில் இந்தியா கலந்துகொள்ள அழைக்கப்பட்டது. இந்தியாவின் சார்பில் ஐ.நா.சபையில் கலந்துகொண்ட எங்களுக்குத் தலைவராக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இருந்தார். அடுத்த நிலையில் அன்றைய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் இருந்தார். இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் நான் இருந்தேன்.

உலக உணவு தினத்தன்று இந்திரா காந்தியும், நரசிம்மராவும் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர். ஆகவே, இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் உணவு தினம் என்பதால் சத்துணவுத் திட்டத்தைப்பற்றி ஐ.நா. சபையில் விரிவாகப் பேசினேன். உலக நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் அதை கைதட்டி வரவேற்றனர். எம்.ஜி.ஆர். பெயரும் ஐ.நா. சபையில் இடம்பெற்றது.

முயற்சி என்னுடையது என்றாலும் அதற்குரிய வாய்ப்பு இயற்கையாக அமைந்தது புரியாத புதிர் தானே!

(கட்டுரையாளர்: அவைத்தலைவர், தேமுதிக)

Posted in Actors, ADMK, AIADMK, Anjali, Anna, Assembly, Biography, Biosketch, Children, Cinema, CM, DMDK, DMK, dynasty, EVR, Films, Food, Free, Freebies, Heartthrobs, Hero, Heroes, Incidents, Indhra, Indira, Indra, Iruvar, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kids, King, KK, Life, Manifesto, Meals, Memoirs, MGR, Midday Meals, Monarchy, Movies, Notes, Nutrition, Panruti, Periyar, Personality, Politics, Poor, PVNR, Ramachandhran, Ramachandran, Ramachanthiran, Ramachanthran, Rao, UN, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth | Leave a Comment »

Gandhi, Nehru, Sachin are Time’s heroes

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

ஆசிய சாதனையாளர்கள் பட்டியலில் காந்தி, நேரு, சச்சின்

புதுதில்லி, நவ. 13: கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியதாக,

  • மகாத்மா காந்தி,
  • ஜவாஹர்லால் நேரு,
  • அன்னை தெரசா,
  • சச்சின் டெண்டுல்கர்,
  • விப்ரோ தலைவர் நாராயணமூர்த்தி

ஆகியோரை ஆசிய சாதனையாளர்கள் பட்டியலில் “டைம்‘ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
“டைம்’ பத்திரிகையின் ஆண்டு சிறப்பிதழ் தற்போது விற்பனையில் உள்ளது. அதில் இந்த விவரம் தரப்பட்டுள்ளது. வியக்கத்தக்க இம்மனிதர்களின் சாதனைக்கு மரியாதை செலுத்துவோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற அஹிம்சை வழியை கடைபிடித்து அதில் வெற்றி பெற்ற உலகின் மாபெரும் மனிதர் காந்திஜி என அந்த இதழ் காந்தியடிகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியரும் இரும்பு ஆலை அதிபருமான லட்சுமி மிட்டல், சர்சைக்குரிய நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் ஆகியோரும் பெருமைக்குரிய இந்தியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தானின் முகம்மது அலி ஜின்னா, ஆப்கானிஸ்தானின் அகமது ஷா மசூத், சீனாவின் டேங் சியோபிங், திபெத்திய மதத் தலைவர் தலாய்லாமா, மியான்மர் ஜனநாயக இயக்கத் தலைவர் ஆங் சான் சூகி ஆகியோரும் ஆசிய சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Posted in Achievers, Asia, Gandhi, Heroes, India, Jinnah, Lists, Nehru, Nusrat, Sachin, Time | Leave a Comment »

Unsung Heroes of Indian Independence Struggle

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 15, 2006

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்…?

தி. இராசகோபாலன், விடுதலை வீரர் பாஷ்யம

இயற்கை உரமிட்ட வயல், மனம் விரும்பும் மகசூலைத் தந்தே தீரும்! தாய்ப்பால் ஊட்டி ஆரோக்கியமாக வளர்க்கப் பெற்ற குழந்தை, கொழுகொழு என்று வளர்ந்தே தீரும்! ஆனால், சர்வ பரித்தியாகத்தை உரமாக்கி, கண்ணீரைத் தண்ணீராக வார்த்து வளர்க்கப் பெற்ற சுதந்திரப் பயிர், எதிர்பார்த்த விளைச்சலைத் தரவில்லையே, ஏன்?

கொஞ்சமோ நம்மவர் தியாகம்? 1772இல், ஆர்க்காடு நவாப் கும்பினியின் படைத்துணையோடு சிவகங்கைச் சீமையை முற்றுகையிட்டான். அரண்மனை அருகே வெடிமருந்து வைக்கோல் போர்போல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. கும்பினியாரின் போர்ப்பிரகடனத்தைச் சந்திப்பதற்காக, வேலுநாச்சியார் படை நடத்தி வருகிறார்.

அன்று ஆயுதபூசை – நவராத்திரி விழா. இராஜேசுவரி அம்மனைத் தரிசிக்க ஆலயம் திறந்து விடப்பட்டது. குயிலி என்ற பணிப்பெண் தன்னுடல் முழுவதும் நெய் பூசிக்கொண்டு, நெருப்பைப் பற்ற வைத்துக்கொண்டு, அரண்மனை மேல் மாடத்திலிருந்து வெடிக்கிடங்கில் குதித்து, ஆயுதக் கிடங்கை அழித்துவிட்டாள். ஆயுதபூசை அன்று, உண்மையிலே ஆயுதபூசை செய்த அந்தக் குயிலியின் தியாகத்திற்கு ஈடு ஏது? இணை ஏது?

பணிப்பெண் மட்டுமன்று; பாலகன் ஒருவன் விடுதலை வேள்வியில் செய்த உயிர்த்தியாகத்தை இன்றைக்கு நினைத்தாலும் சிலிர்க்கின்றது. மகாராஜா ரஞ்சித் சிங் படையில், சீக்கியர்களில் ஒரு பிரிவான நாமதாரிகள் (கூக்கர்கள்) பணிபுரிந்து வந்தனர். குரு ராம்சிங்கைத் தலைவராகக் கொண்ட கூக்கர்கள், ஆங்கில ஆட்சியை முற்றாக அகற்றுவதில் முனைப்பாக நின்றனர். அவர்களைக் கூண்டோடு ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்தான் கவுன் என்ற பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி. 1872ஆம் ஆண்டு அமிர்தசரசில் நீராடுவதற்காகச் சென்ற கூக்கர்களைத் தாக்கும்படி, கவுன் தன் கைக்கூலியான மலர்கோட்லா என்ற சமஸ்தானத்தை ஆண்ட மன்னனுக்குக் கட்டளையிட்டான். போரை எதிர்பார்க்காத கூக்கர்களில் 59 பேர்களைக் கைது செய்து, அவர்கள் வழிபாடு செய்த கோயில் வாசலிலேயே பீரங்கி வாயில் கட்டிச் சுட்டுத் தள்ளினான். 18 கூக்கர்களைச் சாலையோரத்தில் மரத்தில் கட்டித் தூக்கிலிட்டான்.

மேலும் பீரங்கியால் சுடப்பட இருந்தவர்களில் பதிமூன்று வயது பாலகனும் ஒருவன். இக்கொடுமையைக் காணச் சகியாத துணைக்கமிஷனரின் மனைவி, அந்தப் பாலகனை மட்டும் விட்டுவிடுமாறு கணவனிடம் கெஞ்சினாள். அதற்கிணங்க அந்தக் கொடும்பாதகன் அந்தப் பாலகனைப் பார்த்து, “”அந்த நீசன் ராம்சிங்கின் கூட்டத்தில் இனிச் சேர மாட்டேன் என வாக்களித்தால், விட்டு விடுகிறேன்’ எனச் சொன்னவுடனேயே, அந்தப் பாலகன் துணைக் கமிஷனரின் தாடியைப் பிடித்து உலுக்கி, “”என் குருவை அவமதிக்க உனக்கு என்ன தைரியமடா” என்றான். உடனே அந்தப் பாவி அப் பாலகனின் கைகளைத் தனியாக வெட்டி, அதற்குப் பின், பீரங்கி வாயில் அவனையும் கட்டிச் சுட்டுவிட்டான். இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்த சோவியத் ஓவியர் “விர்ஷெக்தசின்’ அந்தக் கோரக் கொலையைக் கண்டு, ஓவியமாகவே தீட்டிவிட்டார். ரத்த சாட்சியாக வரையப்பட்ட அந்த ஓவியம், பொற்கோயிலின் கண்காட்சியில் வைக்கப்பட்டிருப்பதை இன்றைக்கும் காணலாம்.

பணிப்பெண் – பாலகன் மட்டுமன்றி, விடுதலைப் போராட்டத்தில் ஆதிவாசிகள் ஆற்றிய தியாகமும் அளப்பரியது. பஞ்சாப் படுகொலையால் சினந்தெழுந்த அல்லூரி சீதாராம ராஜு, ஆதிவாசிகளுக்கு மத்தியில் விடுதலைப் பறையை வேகமாகத் தட்டினார். அல்லூரியைக் கண்டுபிடித்து அவர் கதையை முடித்து விட வேண்டுமென்று கணக்குப் போட்ட ஆங்கில அதிகாரிகளுக்கு அவர் கோதாவரி மாவட்டத்தில், மலைப்பகுதியில், ஆதிவாசிகளுக்கிடையில் தலைமறைவாக வாழ்வதாகச் செய்தி கிடைத்தது. அல்லூரியைச் சரணடைய வைப்பதற்காக ஆங்கில அதிகாரிகள், ஆதிவாசிகளைச் சித்திரவதை செய்தனர். மலபார் ஸ்பெஷல் போலீûஸ ஏவி, ஆதிவாசிகளின் குழந்தைகளைத் துப்பாக்கி முனையிலுள்ள குத்தீட்டியால் குத்திக் கொன்றனர்; போராளிகளைக் கொன்று குவித்தனர். இறுதியில் ஆதிவாசிப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்த முனைகையில், அல்லூரி சீதாராம ராஜு அக் கொடுமையிலிருந்து பெண்களைக் காக்க, தானே சரணடைந்தார். சரணடைந்த இடத்திலேயே அல்லூரி சுட்டுக் கொல்லப்பட்டார். அல்லூரி செய்த தியாகம், அன்னியரை விரட்டியது; ஆனால், நமக்கு அது ஆனந்த சுதந்திரத்தைத் தந்ததா?

இந்திய விடுதலைப் போரில் முன்னணித் தலைவர்கள் ஆற்றிய தொண்டு வெளியில் தெரிகின்றது; ஆனால், முகவரியே தெரியாத பலர் ஆற்றிய தொண்டு இன்னும் இருட்டில்தானே கிடக்கின்றது! மன்னார்குடி சேரன்குளத்தில் பிறந்த ஓர் ஓவியர், 1932 ஜனவரி 25ஆம் தேதி இரவு, ஓவியத்தில்கூட வரைய முடியாத அர்ப்பணிப்பைச் செய்திருக்கிறார். சென்னை ஜார்ஜ் கோட்டையிலுள்ள நீண்டு உயர்ந்த 200 அடிக்கம்பத்தில், தன் கையாலேயே தீட்டிய மூவர்ணக் கொடியை ஏற்றி விட்டார். நள்ளிரவில் கலங்கரை விளக்கத்தின் ஒளி வினாடிக்கு வினாடி சுற்றி வரும்போது, கம்பத்தோடு உடலை ஒட்டிக் கொண்டு உச்சியில் ஏறி, அந்த அரும்பெரும் பணியைச் செய்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த ஆங்கில அதிகாரிகள், கே. பாஷ்யம் ஐயங்கார் என்ற அந்த ஓவியரைப் பெல்லாரி சிறையில் தள்ளினர்.

பெல்லாரி சிறையில் குல்லாய் அணிய மறுத்தமைக்காகத் தேசபக்தர் மகாவீர் சிங்கினுடைய கை – கால்களைக் கட்டி, மற்ற கைதிகள் பாடம் பெற வேண்டி, அனைவரும் பார்க்கும்படியாக 30 கசையடிகள் கொடுக்க ஆணையிட்டான் மேஜர் ஜெனரல் இன்ஸ். மகாவீர் சிங்கிற்குக் கொடுக்கப்பட்ட தண்டனையைக் கண்டு மனங்கொதித்த ஓவியர் பாஷ்யத்திற்குப் பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது. சிறையதிகாரிகளிடம் தனக்குப் பேதி மருந்து வேண்டும் என்று கேட்டு வாங்கி, அதை வாயிலேயும் போட்டுவிட்டார். ஆனால், அதை விழுங்கிவிடாமல் ஒருபக்கத்தில் வாயிலேயே ஒதுக்கி வைத்து, வெளியில் துப்பிவிட்டார். “அவசரம்’ என்று சொன்னவுடன் கழிப்பிடம் போக, கைவிலங்குகளை அவிழ்த்து விட்டனர். வெளியே வந்த ஓவியர் யாரும் எதிர்பார்க்காத வகையில், பூட்ஸ் காலால் ஜெனரல் இன்ஸ் தலைமேலே ஆத்திரம் தீர ஓங்கி ஓங்கி உதைத்தார். “எங்கள் வீரர் மகாவீர் சிங்கிற்குக் கொடுத்த தண்டனைக்கு இதுதான் பரிசு” என்றார். வெறி கொண்டெழுந்த மேஜர் இன்ஸ், ஓவியர் பாஷ்யத்தைத் தனியறையில் தள்ளி சதைநார்கள் பிய்ந்து ரத்தம் பீறிட்டு அடிக்குமாறு சவுக்கால் அடித்தான். ஒவ்வோர் அடி விழும்போதும் ஒரு சொட்டுக் கண்ணீர் விடாமல், “வந்தேமாதரம் ஜெயபேரிகை கொட்டடா’ என முழங்கினார். கசையடி முடிந்ததும் அவர் வாய் “ஜயமுண்டு பயமில்லை மனமே’ எனும் பாரதியின் பாடலை முணுமுணுத்தது. இவ்வாறு பெற்ற சுதந்திரம் எதிர்பார்த்த பலனைத் தந்ததா?

1947ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, அரசியல் நிர்ணய சபையில் பேசிய நேரு பெருமானார், “”உலகம் உறங்குகின்ற நடுநிசி வேளையில் இந்தியா விழித்தெழுந்தது. வாழ்வும் விடுதலையும் பெறுகின்றது” என்றார். அவர் சொன்னவாறு விடுதலை வந்தது; வாழ்வு வராமல் போனதேன்? இன்றைக்கும் நாட்டில் 30 கோடிப் பேர் ஒருவேளை உணவுக்கும் உத்தரவாதமின்றி வாழும் நிலைதானே உள்ளது! உழவுத்தொழில் செய்தும், தரித்திரம் தீராததால் தற்கொலை செய்துகொண்ட 22 திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குடும்பங்களுக்கு, முதல்வர் நிவாரணம் வழங்கத்தானே வேண்டியிருக்கிறது!

“ஏழ்மை மிக்கவரும் இது தங்கள் நாடு என்றும், இதை உருவாக்குவதில் தங்களுக்கும் பங்கும் பொறுப்பும் உண்டு என்றும் உணர்வு கொள்ளும் வகையில் அமையும் இந்திய நாட்டை உருவாக்கவே நான் பாடுபடுவேன்” என மகாத்மா காந்தியடிகள் பிரகடனம் செய்தாரே, அந்த மகான் கண்ட கனவு நனவாகாமல் போனதேன்?

இந்த மண்ணின் மைந்தர்கள் தங்களுக்கு வாழ்வு விடியாததால்தானே, அன்னிய தூதரகங்களுக்கு முன்னர் விடிவதற்கு முன்னால் வரிசையில் நிற்கிறார்கள்! இவற்றுக்குரிய காரணங்களை எண்ணிப் பார்த்தால், இந்தநாள், இனியநாள் ஆகும்!

Posted in Activist, Award, Biography, Biosketch, Dinamani, Freedom, Heroes, Independence, India, Tamil | 1 Comment »