Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Rajasthan’ Category

Nuke Deal With US Draws Domestic Opposition – Indian Communists Say US Nuclear Accord Lacks House Support

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 13, 2007

எண்ணங்கள்: 1…2…3… ஷாக் – ஞாநி – ஓ பக்கங்கள் பதில்


இடதுசாரிகளின் இரட்டைவேடம்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பதையும், இடதுசாரிகளின் தயவில்தான் இந்த அரசு ஆட்சியினைத் தொடர்கிறது என்பதையும் அடிக்கடி சுட்டிக் காட்டுவதும் இடதுசாரிக் கட்சிகள்தான். இந்தியாவும் அமெரிக்காவும் இந்த அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வது என்று முடிவெடுத்தது முதல் அதை எதிர்த்து வருவதும் அதே இடதுசாரிக் கட்சிகள்தான்.உண்மையிலேயே, இந்த ஒப்பந்தம் ஏற்படுவது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என்று இடதுசாரிகள் கருதியிருந்தால், ஆரம்ப நிலையிலேயே இந்த முயற்சியைக் கைவிடச் செய்திருக்க முடியும். தொழிலாளர் காப்பீட்டுத் திட்டப் பிரச்னையிலும், பொதுத்துறை நிறுவனங்களின் விஷயத்திலும் அரசை அடிபணிய வைக்க முடிந்த இடதுசாரிகளால் இதுபோன்ற தேசத்துக்கே ஆபத்தான விஷயத்தில் ஏன் தலையிட்டுத் தடுத்து நிறுத்த முடியவில்லை?

இந்திய மற்றும் அமெரிக்க தரப்பினர், அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தத்திற்கு ஒரு முழுவடிவமும் கொடுத்து, இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. நவம்பர் மாதம், காங்கிரஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் வாக்கெடுப்புக்கு விடப்படும். இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ அமெரிக்கக் காங்கிரசுக்கு உரிமை உண்டே தவிர, இந்த ஒப்பந்தத்தில் எந்தவித மாற்றங்களையும் இனிமேல் செய்ய முடியாது என்பதும் இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சம்.

இந்தியத் தரப்பைப் பொருத்தவரை, இதுபோன்ற ஒப்பந்தம் என்பது ஓர் அரசின் நிர்வாக உரிமை (Executive Prerogative). அரசு சம்மதித்தால், இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தின் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். ஆனால், அமெரிக்கக் காங்கிரசுக்கு இதில் மாற்றம் செய்ய எப்படி உரிமை இல்லையோ, அதேபோல, இந்திய நாடாளுமன்றமும் இந்த உடன்படிக்கையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. இதை நிராகரிக்கும் உரிமையும் கிடையாது.

இதெல்லாம், இடதுசாரிகளுக்குத் தெரியாத விஷயமல்ல. ஆரம்பம் முதலே, தாங்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதுபோலப் பேசுகிறார்களே தவிர, இந்த ஒப்பந்தம் கூடாது என்று அரசைத் தடுக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடருமானால் எங்களது ஆதரவு இந்த அரசுக்குக் கிடையாது என்று இடதுசாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தால், அரசு இந்த விஷயத்தைக் கைவிட்டிருக்கும் என்பது ஊரறிந்த ரகசியம்.

அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில், எந்தவித பயமுமின்றி மன்மோகன் சிங் அரசு செயல்பட்ட விதத்தில் இருந்து, இடதுசாரிகளின் மறைமுக ஆதரவுடன்தான் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று தோன்றுகிறது. இல்லையென்றால், “”அணுசக்தி ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது என்பது சாத்தியமில்லை” என்று தைரியமாகப் பிரதமர் மன்மோகன் சிங் கூறுவதிலிருந்தே, இந்த விஷயத்தில் இடதுசாரிகளிடம் பேசி வைத்துக் கொண்டுதான் அரசு செயல்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இன்னொரு விஷயத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மிகவும் புத்திசாலித்தனமாக இந்த ஒப்பந்தம் பற்றி இதுவரை நாடாளுமன்றத்தின் அனுமதி பெற அவசியம் இல்லாமல், நிர்வாக விஷயமாக இதைக் கையாண்டிருக்கிறது அரசு. இனிமேல், நாடாளுமன்றம் வேண்டாம் என்று நிராகரித்தால் மட்டும் போதாது. இந்த அரசு கவிழ்ந்தால் மட்டுமே அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்தாகும். இந்த நிலைமை ஏற்படும்வரை இடதுசாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்களே தவிர, ஒப்பந்தத்தைக் கைவிட நிர்பந்திக்கவில்லையே, ஏன்?

நாளைக்கே, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு என்று வந்தால் நாங்கள் வெளிநடப்பு செய்து அரசைக் காப்பாற்றுவோம் என்கிறார் ஜோதிபாசு. அதாவது, “இந்த ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது சாத்தியமில்லை’ என்று பிரதமர் கூறுவதை சொல்லாமல் சொல்கிறார் அவர்.

தேச நலனுக்கு ஆபத்து என்று தெரிகிறது. தங்களது கட்சியின் கொள்கைகளுக்கு மாறானது என்று அவர்களே கூறுகிறார்கள். இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியா அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டிய துர்பாக்கியம் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள். ஆனால், அரசுக்கு ஆதரவு மட்டும் தொடரும் என்கிறார்கள்.

ஏன் இந்த இரட்டை வேடம்?

——————————————————————————————————————————-
அமெரிக்காவிடம் இந்தியா சரணாகதியா?

என். ராமதுரை

இந்தியாவில் அமெரிக்காவும் பிற நாடுகளும் அணுமின் நிலையங்களை அமைக்க வழி செய்வது தொடர்பாக அமெரிக்கா – இந்தியா இடையே இப்போது விரிவான உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. இதுபற்றி நாட்டில் காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தியா இதன் மூலம் அமெரிக்காவிடம் அடிமைப்பட்டு விட்டது போல ஒரு சாரார் கூறுகின்றனர். ஆளும் கட்சித் தரப்பினரோ இதை வன்மையாக மறுக்கின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படியான ஒப்பந்தம் ஏற்படுவது இது முதல் தடவையல்ல. இந்தியாவில் அமெரிக்க உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்படுவதும் முதல் தடவையல்ல. சொல்லப்போனால் இப்படியான ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க உதவியுடன் 1969-ல் நிறுவப்பட்ட அணுமின் நிலையம் மும்பை அருகே தாராப்பூரில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அதேபோல கனடாவின் உதவியுடன் ராஜஸ்தானில் 1972-ல் நிறுவப்பட்ட அணுமின் நிலையமும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

அணுமின் நிலையம் தொடர்பான கட்டுதிட்டங்கள், கண்காணிப்பு ஏற்பாடுகள் இப்போது இந்தியா மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதாக நினைத்தால் அதுவும் தவறு. தாராப்பூர் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோதும், கனடிய உதவியுடன் ராஜஸ்தானில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோதும் நாம் இப்போது சொல்லப்படுகிற கட்டுதிட்டங்களை – கண்காணிப்பு ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ளத்தான் செய்தோம்.

தமிழகத்தில் கூடங்குளத்தில் ரஷிய உதவியுடன் அணுமின்சார நிலையம் நிறுவப்பட்டு வருகிறது. இது குறித்து ரஷியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதுவும் இப்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள சகலவித கட்டுதிட்டங்கள், கண்காணிப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றின் கீழ்தான் செயல்படும். கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான ஒப்பந்தங்களில் இவை அடங்கியுள்ளன. அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்த விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டு வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன. ரஷியாவுடனான ஒப்பந்த விவரங்கள்~அவசியமில்லை என்ற காரணத்தால்~ வெளியிடப்படவில்லை.

ஆகவே அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை செய்துகொண்டால் அது அமெரிக்காவிடம் சரணாகதி ஆவது போலவும் ரஷியாவுடன் அதே மாதிரியான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டால் அப்படியான சரணாகதி இல்லை போலவும் வாதிப்பதும் தவறு.

அணுசக்தி விஷயத்தில் இந்தியாவிடம் அமெரிக்கா ஒரு விதமாகவும் ரஷியா வேறு விதமாகவும் நடந்து கொள்வதாக நினைத்தால் அதுவும் தவறு. அணுசக்தியைத் தவறாக (அணுகுண்டு தயாரிப்புக்கு) பயன்படுத்தக்கூடிய எந்த ஒரு நாட்டுக்கும் அணுசக்தி எரிபொருள், அணுஉலை இயந்திரங்கள், அணுமின் நிலைய இயந்திரங்கள் முதலியவற்றை அளிக்கக்கூடாது என்று கூறும் 45 நாடுகள் அடங்கிய குழுவில் அமெரிக்காவும் ரஷியாவும் அங்கம் வகிக்கின்றன.

இந்தியாவில் அணுமின் நிலையங்களை அமைக்க ஆரம்பத்தில் உதவிய அமெரிக்காவும் கனடாவும் பின்னர் பின் வாங்கியதற்குக் காரணம் உண்டு. இந்தியா 1974ஆம் ஆண்டில் நிலத்துக்கு அடியில் அணுகுண்டை வெடித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவும் அதைச் சார்ந்த பல நாடுகளும் இந்தியாவுக்கு அணுசக்தி தொடர்பான எந்த உதவியையும் அளிக்க மாட்டோம் என்று அறிவித்தன. இந்தியா மீது பல தடைகளை அமல்படுத்தின. 1988-ல் இந்தியா நிலத்துக்கு அடியில் பல அணுகுண்டுகளை வெடித்தபோது இத் தடைகள் நீடித்தன. இந்தியா மீது 1974-க்குப் பிறகு விதிக்கப்பட்ட தடைகள் இந்தியாவுக்கு ஒருவகையில் நல்லதாகியது. இந்தியா சொந்தமாக அணு ஆராய்ச்சி உலைகளை அமைத்துக் கொண்டது. சொந்த முயற்சியில் பல அணு மின் நிலையங்களை அமைத்துக் கொண்டது. தேவையில்லை என்று கருதி அமெரிக்கா பின்பற்றாத தொழில்நுட்பத்திலும் இந்தியா சிறப்பாக முன்னேறியுள்ளது. அது தோரியத்தைப் பயன்படுத்துகிற முறையாகும்.

ஆனால் இவ்வளவு முன்னேற்றம் இருந்தும் எதற்கு நாம் சுமார் 30 ஆண்டுக்காலத்துக்குப் பிறகு அணுசக்தி விஷயத்தில் பிற நாடுகளின் உதவியை நாட வேண்டும்? முதலாவதாக இப்போது இந்தியாவுக்கு மின்சாரப் பசி உள்ளது. அணுசக்தி மூலம் தான் இதைத் தீர்க்க முடியும். இந்தியா சொந்தமாக உருவாக்கியுள்ள அணுமின் நிலையங்கள் பெரும்பாலானவற்றின் திறன் 220 மெகாவாட் அளவில் உள்ளது. அண்மையில்தான் 500 மெகாவாட் அணுமின் உலையை நிர்மாணித்துள்ளோம். 1000 மெகாவாட் திறனை எட்ட இன்னும் அதிக காலம் ஆகலாம். தவிர, “”நாட்டில் போதுமான யுரேனியம் இல்லை” என்று இந்திய அரசு பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்த யுரேனியத்தை நாம் விலை கொடுத்து வாங்கத் தயாராக இருந்தாலும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம், அணுசக்திப் பொருள் அளிப்போர் குழு பின்பற்றும் கட்டுதிட்டங்கள், சர்வதேச அணுசக்தி அமைப்பின் விதிமுறைகள் ஆகியவை குறுக்கே நிற்கின்றன.

தோரியம் முறை இருக்கிறதே என்று கேட்கலாம். இத் தொழில்நுட்பம் சிக்கலானது. சுருங்கச் சொன்னால் முதலில் யுரேனியத்தை அணு ஆலைகளில் “”அவிக்க” வேண்டும். பிறகு ஈனுலைகளில் (Breeder Reactors) யுரேனியத்தையும் புளூட்டோனியத்தையும் பயன்படுத்தி தோரியத்தை “”அவிக்க” வேண்டும். இப்படியான பல கட்டங்களுக்குப் பிறகுதான் அணுமின் நிலையங்களுக்கான யுரேனியம் – 233 என்ற அணுப் பொருள் கிடைக்கும். இதற்கெல்லாம் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.

அணுசக்தி விஷயத்தில் உலகில் பல கட்டுதிட்டங்கள் இருப்பதற்குக் காரணம் உள்ளது. அணுமின் நிலையம் இருந்தால்போதும். ஒரு நாடு அணுகுண்டு தயாரித்துவிட முடியும். உலகில் சர்வாதிகாரப் போக்கு கொண்ட நாடுகள் அணுகுண்டு தயாரித்து உலகை மிரட்டும் நிலை ஏற்படக்கூடாது என்பதே இவற்றின் நோக்கம். அணு உலையில் (அணுமின் நிலையத்திலும்) யுரேனியம் அடங்கிய நீண்ட குழல்கள் உண்டு. அணுமின் நிலையம் செயல்படும்போது “”முக்கால் வேக்காட்டில்” இந்த தண்டுகளை வெளியே எடுத்தால் ஏற்கெனவே ஓரளவு எரிந்துபோன யுரேனியத்தில் வேறு பல அணுசக்திப் பொருள்கள் இருக்கும். இவற்றில் புளூட்டோனியமும் ஒன்று. இந்த புளூட்டோனியத்தைத் தனியே பிரித்தால் அதைக் கொண்டு அணுகுண்டு செய்து விடலாம். ஆகவே எந்த ஓர் அணுமின் நிலையத்திலும் யுரேனியத் தண்டுகள் எப்போது வெளியே எடுக்கப்படுகின்றன அவை என்ன செய்யப்படுகின்றன என்பதற்கு ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். தானியங்கி கேமராக்களும் வைக்கப்படும்.

இந்தியா இப்போது எல்லா அணுமின் நிலையங்களிலும் இந்தக் கண்காணிப்பு ஏற்பாடுகளைப் பின்பற்ற உடன்பட்டுள்ளது. ஆனால் ஒன்று. இந்தியா ராணுவ காரியங்களுக்கான அணு உலைகள் என்று பட்டியலிட்டு அறிவிக்கின்ற அணு உலைகளில் இந்தக் கண்காணிப்பு இராது. ஆகவே இந்தியா அணு ஆயுதங்களைத் தொடர்ந்து தயாரிப்பதைப் பொருத்தவரையில் எந்தப் பிரச்னையும் கண்காணிப்பும் இராது. எரிந்த யுரேனியத் தண்டுகளிலிருந்து அணுப் பொருள்களைப் பிரிப்பதில் இந்தியாவின் உரிமை பறிபோய்விட்டது போல கூக்குரல் கிளப்பப்படுகிறது. இந்தியாவும் அமெரிக்காவும் பேச்சு நடத்தி இதற்கான ஆலை அமைக்கப்படும் என இப்போதைய ஒப்பந்தம் கூறுகிறது. தவிர, இந்தியாவில் உள்ள ராணுவ காரிய அணு உலைகளுக்கு இது விஷயத்தில் கட்டுப்பாடு கிடையாது.

இந்தியா விரும்பினால் மேற்கொண்டு அணுகுண்டுகளை வெடித்துச் சோதிக்க இயலாதபடி இப்போதைய ஒப்பந்தம் தடுப்பதாகக் கூறுவதும் தவறு. அணுகுண்டுகளை மேலும் செம்மையாகத் தயாரிக்க அணுகுண்டுகளை அடிக்கடி வெடித்துச் சோதிக்கும் முறையை மேலை நாடுகள் முன்பு பின்பற்றின என்பது வாஸ்தவமே. ஆனால் இப்போதெல்லாம் புதிய வகை அணுகுண்டின் திறன் எப்படி இருக்கும் என்பதை கம்ப்யூட்டர் மூலமே கண்டறியும் முறை வந்து விட்டது. ஆகவே புது வகை அணுகுண்டுகளை வெடித்துச் சோதித்தாக வேண்டிய அவசியமும் இல்லை எனலாம்.

இப்போது அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தமானது நாம் அமெரிக்காவிடமிருந்து மட்டுமன்றி பிரான்ஸ், பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளிடமிருந்து அணுமின் நிலைய அணு உலைகள், தேவையான இயந்திரங்கள் ஆகியவற்றையும் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிடமிருந்து யுரேனியத்தை வாங்குவதற்கும் உதவி புரியும்.

இப்படியாக வாங்குவது எல்லாம் அடிப்படையில் வர்த்தக பேரங்களே. இவற்றை அளிக்கப்போவது அந்தந்த நாடுகளின் தனியார் நிறுவனங்களே. அவை இந்தியாவுக்கு இவற்றை விற்றுப் பணம் பண்ணத் துடித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கு அவ்வப்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டு அரசின் மீது நிர்பந்தத்தைச் செலுத்தி~இந்தியாவுக்கு சாதகமான வகையில்~ பிரச்னையைத் தீர்க்க முயலும். ஆகவே அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

——————————————————————————————————————————-

அரசுக்கு “கெடு’ ஆரம்பம்?

நீரஜா செüத்ரி

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொண்டு அமல் செய்யக்கூடாது, அப்படியே கிடப்பில் போட வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் காங்கிரஸýக்கு விடுத்த இறுதி எச்சரிக்கையை அடுத்து, “”இரண்டின் எதிர்காலம்” என்ன என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அதில் ஒன்று, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் எதிர்காலம், மற்றொன்று, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் எதிர்காலம்.

இந்த அரசு போய்விடுமா என்பதல்ல, இப்போதுள்ள கேள்வி, இந்த அரசு எப்போது போகும் என்பதுதான் கேள்வி. நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2008 ஜனவரியிலோ அல்லது மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதத்துக்குள்ளோ நடைபெறலாம்; அது காங்கிரஸின் விருப்பத்தைப் பொறுத்தது.

இனி அரசியல் களத்தில் அரங்கேறக்கூடிய காட்சிகளைப் பின்வருமாறு ஊகிக்கலாம்.

காட்சி 1:

பிரதமர் எடுத்த முடிவுப்படி, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்க விருப்பம் இருந்தால் எங்கள் அரசை ஆதரியுங்கள், இல்லையென்றால் உங்கள் விருப்பப்படி செய்துகொள்ளுங்கள் என்று இடதுசாரிகளிடம் முகத்துக்கு நேராகக் கூறிவிடுவது. இப்போதைய நிலையில், காங்கிரஸ் கட்சியின் கெüரவத்தைக் காக்க இதுவே நல்ல வழி என்று சில காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கின்றனர்.

நாட்டு நலனில் அக்கறை கொண்டுதான் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது என்று மக்களிடம் விளக்கி, அடுத்த பொதுத் தேர்தலை இடதுசாரிகள் போன்ற தோழமைக் கட்சிகளின் துணை இல்லாமல் சந்தித்து, வெற்றிபெற்று மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சியை அமைப்பது; அப்படியே ஒப்பந்தத்தையும் தொடர முடியும் என்று அத் தலைவர்கள் கூறுகின்றனர்.

அப்படி என்றால் உடனே தேர்தலை நடத்தியாக வேண்டும். தேர்தல் அட்டவணையை தேர்தல் கமிஷன்தான் தீர்மானிக்கும் என்றாலும், அரசு கவிழ்ந்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படலாம்.

மன்மோகன் அரசு ஆட்சியை இழந்தால், இடைக்கால அரசால் ஒப்பந்தத்தை அமல் செய்வதற்கான தொடர் நடவடிக்கைகளை எடுக்க முடியாது, எனவே ஒப்பந்தமே ரத்தாகிவிடும்.

காட்சி 2:

இடதுசாரிகள் ஆதரவைத் திரும்பப் பெற்றாலும் சிறுபான்மை அரசாகவே காலம் தள்ளுவது, அப்படி இருக்கும்போதே இந்த ஒப்பந்தத்தை அமல்செய்ய தொடர் நடவடிக்கைகளை எடுப்பது என்று காங்கிரஸ் தீர்மானிப்பது. அதற்காக மாயாவதி கட்சியின் 18 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற அந்தக் கட்சியையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டு ஆளும் கூட்டணியின் வலுவை 219-லிருந்து 237 ஆக உயர்த்துவது.

ஆதரவை விலக்கிக் கொண்டாலும், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்போது பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து இடதுசாரி கட்சிகள் வாக்களிக்காது, எனவே மேலும் சில மாதங்களுக்கு அரசை இப்படியே ஓட்டலாம்.

அப்போது இடதுசாரிகளுக்கு தருமசங்கடமான நிலைமை ஏற்படும். தாங்கள் தீவிரமாக எதிர்த்த ஒப்பந்தத்தை அமல் செய்யும் அரசை நீடிக்க விடுவதா, அல்லது அதைக் கவிழ்ப்பதற்காக மதவாதிகள் என்று முத்திரை குத்திய பாரதீய ஜனதாவுடன் இணைந்து செயல்படுவதா என்பதே அது.

காட்சி 3:

ஏதாவது ஒரு சாக்கு சொல்லி, அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்தாமல் நிறுத்திவிடுவது, அரசை காப்பாற்றிக் கொண்டு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயார் ஆவது.

அப்படி என்றால் பிரதமர் பதவியில் மன்மோகன் சிங் நீடிக்க முடியாது. அவர்தான் இந்த ஒப்பந்தத்தைத் தீவிரமாக ஆதரித்துப் பேசினார், எனவே தார்மிக அடிப்படையில் அவர் விலகியே தீரவேண்டும்.

அதே சமயம் பிரதமரின் முடிவுக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி காங்கிரஸ் கட்சி விலகி இருக்க முடியாது. அவரது கருத்தைத்தான் காங்கிரஸ் காரியக் கமிட்டியும் ஆதரித்தது, சோனியா காந்தியும் ஒப்புதல் வழங்கினார்.

“”இந்த ஒப்பந்தம் இறுதியானது, இதை ஏற்க முடியாவிட்டால் ஆதரவைத் திரும்பப் பெறுங்கள்” என்று பேசி இடதுசாரிகளை பிரதமர் மன்மோகன் சிங் உசுப்பிவிட்டதை, சோனியா காந்தி விரும்பவில்லை.

அதிகாரிகளுடன் பேசுவதையும் செயல்படுவதையும் மிகவும் விரும்பும் மன்மோகன் சிங், “”இடதுசாரிகளுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்” என்று அவர்களில் யாரோ சொன்ன மந்திராலோசனையைக் கேட்டு, பெரிய வம்பில் மாட்டிக்கொண்டுவிட்டார்.

சிங்குர், நந்திகிராம் விவகாரங்களில் மக்களின் அதிருப்தியைச் சம்பாதித்திருப்பதாலும், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்குள் உள்பூசல் உச்ச கட்டத்தில் இருப்பதாலும் உடனடியாக மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடப்பதை இடதுசாரிகள், குறிப்பாக மார்க்சிஸ்டுகள் விரும்பமாட்டார்கள் என்றாலும் வேறு வழியில்லாவிட்டால், அதற்கும் அவர்கள் தயாராகிவிடுவார்கள்.

காட்சி 4:

பிரதமர் பதவியிலிருந்து மன்மோகனை மாற்றிவிட்டு, புதியவரைக் கொண்டுவருவது. சர்ச்சைக்குரிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஆறப்போடுவது. மக்களை பாதிக்கும் விஷயங்களில் முதலில் கவனம் செலுத்தி மக்களுக்குத் திருப்தி ஏற்படும் வகையில் நடவடிக்கைகளை எடுப்பது. அமெரிக்காவுடன் நெருங்கியதால் புண்பட்ட முஸ்லிம்களின் உள்ளங்களுக்கு மருந்து போடுவது.

இதையெல்லாம் செய்யக் கூடியவர், மார்க்சிஸ்டுகளையும் பாரதீய ஜனதாவையும் ஒரே சமயத்தில் சமாளிக்கத் தெரிந்தவர் – ஜார்ஜ் புஷ்ஷை சமாதானப்படுத்தக்கூடியவர் – பிரணாப் முகர்ஜிதான். வங்காளியான முகர்ஜியைப் பிரதமராக்குவதற்காகவே இடதுசாரிகள் இப்படி நாடகம் ஆடுகின்றனரோ என்றுகூட சில காங்கிரஸ் தலைவர்களுக்கு உள்ளூர சந்தேகம் இருக்கிறது.

இந்தச்சூழலைக் கையாளும் திறமை முகர்ஜியைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பது உண்மையே ஆனாலும், “”இவரைப் பிரதமராக்கினால் நாளை நம் செல்வாக்கு என்ன ஆகும்” என்ற அச்சம் சோனியா காந்திக்கு தொடர்ந்து இருந்து வருகிறது.

————————————————————————————————————————————————

விதியின் விளையாட்டு!

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேய்ந்துகொண்டிருக்கிறது என்று கூறினால், இப்போது அது சிறிது அதிகபட்சமாகத் தோன்றும். அதுவும், அமெரிக்காவுக்கு வளைந்துகொடுக்கும் மனப்போக்கில் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் மன்மோகன் சிங் அரசுக்குக் கடிவாளம் போல இடதுசாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது அவ்வாறு கூறுவது கொஞ்சம் அதிகமாகக்கூடத் தோன்றலாம். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சற்று உற்றுநோக்கினால், நமது பார்வைகள் மாறுகின்றன. சர்வதேச விவகாரமொன்றில் தேசிய நலனைக் காப்பதற்காக பிரகாஷ் காரத் போராடிக்கொண்டிருக்கிறார்; ஆனால், முக்கியமான மாநிலங்களில் ஒழுங்கீனமாக நடக்கும் தனது கட்சியைச் சேர்ந்த சொந்தத் தோழர்களையே கட்டுப்படுத்த முடியாமல் அவர் தவிப்பது தெரிகிறது. இதுதான் பிரச்சினை.

தேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பலம் பொருந்தி இருப்பதற்குக் காரணம், மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் அக் கட்சிக்கு இருக்கும் செல்வாக்கே ஆகும். மேற்கு வங்கக் கட்சியில் உள்ள பிரச்சினைகளை காரத்தால் எதிர்கொள்ள முடியும். ஏனென்றால், “காலத்துக்கு ஏற்ப கட்சியின் கொள்கைகளில் மாற்றம் தேவையா? புதிய பொருளாதாரச் சிந்தனைகளுக்கு இடம் அளிக்க வேண்டுமா?’ என்பது போன்ற தத்துவார்த்தப் பிரச்சினைகள்தான் மேற்கு வங்கத்தில் எழும் பிரச்சினை. அதோடு, புத்ததேவ் பட்டாச்சார்ஜி, ஜோதி பாசு போன்ற பெருமைக்குரிய தலைவர்கள் அங்கே இருக்கிறார்கள். அதைவிட முக்கியமாக, மேற்கு வங்க அரசுக்கும் கட்சிக்கும் இடையே செயல்பாடுகளில் ஒற்றுமை நிலவுகிறது.

ஆனால், கேரளத்தில் இதற்கு நேர்மாறான நிலை. அக் கட்சிக்குள் நடந்துகொண்டிருக்கும் உள்பூசல், பொறுத்துக்கொள்ளத் தக்க எல்லைகளைத் தாண்டிச் சென்றுவிட்டது. முதலாளித்துவ ஊழல் கூட்டத்தின் பிடியில் கட்சி சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது; அதைக் கண்டு அக் கட்சியின் தோழர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர். அங்கு ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தலையிடுவதைப்போல ஒரு நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எடுத்தது. ஆனால், இன்னும் ஒழுங்கீனம்தான் நீடித்துக்கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில், கட்சியின் மாநிலக் குழுச் செயலாளரையும் முதலமைச்சரையும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்தது கட்சி; அவர்கள் பகிரங்கமாக மோதிக்கொள்வதை அந் நடவடிக்கையால்கூட தடுத்து நிறுத்த முடியவில்லை. முதல்வரின் ஆதரவாளர்களைக் “கட்டுப்படுத்தி’ வைக்கும் மாநிலச் செயலரின் நடவடிக்கைகளுக்கு இப்போதைக்கு அரசியல் தலைமைக் குழு தடை போட்டிருக்கிறது. அந்தத் தடையால் பயன் விளையும் என்று யாரும் நினைக்கவில்லை.

கேரளத்தில் மக்களின் நம்பிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி இவ்வளவு வேகமாக இழந்துவிட்டது என்பது குறித்துத்தான் இப்போது பிரகாஷ் காரத் கவலைப்பட வேண்டும். தமது கட்சி மீது எந்த விமர்சனம் வந்தாலும் பொறுத்துக்கொள்வார்கள்; ஆனால், ஊழல் புகார்கள் கூறப்படுவதைத்தான் தொழிலாளி வர்க்கத்தாலும் இடதுசாரி அறிவுஜீவிகளாலும் தாங்கிக்கொள்ளவே முடியாது. அனைத்துப் புகார்களுமே ஒரு குறிப்பிட்ட கோஷ்டியின் மீதே கூறப்படுகின்றன. அதைச் சீர்படுத்துவதற்கு பெயரளவுக்குத்தான் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. நோய் குணமாக வேண்டுமானால் அறுவைச் சிகிச்சையே செய்ய வேண்டும் என்னும் பொழுது, அமிர்தாஞ்சன் பூசிக்கொண்டிருக்கிறது, கட்சியின் அரசியல் தலைமைக் குழு. இதைப் பார்த்து யாரும் ஏமாந்துவிட மாட்டார்கள்.

இதைத் தவிர, காரத் கவலைப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. தற்போதைய பதவிக் காலம் முடிவடைந்த பிறகு, அடுத்த தேர்தலிலும் மீண்டும் இடது முன்னணியே தேர்ந்தெடுக்கப்பட்டு, கேரளத்தில் ஒரு வரலாற்றையே உருவாக்கக்கூடிய அளவுக்கு அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டிருந்தது. சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களையெல்லாம் கைப்பற்றுவதற்கான அதிரடி நடவடிக்கையை கேரள அரசு எடுத்தபொழுது, அந்த அளவுக்கு பொதுமக்கள் அந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். தொடக்கத்தில், உயர் நீதிமன்றமே அதற்கு ஆதரவாக இருந்தது.

ஆனால், விரைவிலேயே தான் அத்தகைய நிலையை எடுத்ததற்கு வெட்கப்படுவதாக நீதிமன்றம் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. காரணம், அரசின் அந்த நடவடிக்கைகளையெல்லாம் அப்பட்டமான அதிகாரப் போட்டி சீர்குலைத்துவிட்டதுதான். அந்தச் சீர்குலைவுச் செயலில் முன்னிலையில் இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியே ஆகும். இடது முன்னணி ஆட்சிக்கு நீடித்த பெருமையைத் தேடித் தந்திருக்க வேண்டிய ஒரு நடவடிக்கையானது, அதிகாரப் போட்டியால், ஓர் அவமானகரமான அத்தியாயமாக மாறிவிட்டது. அடுத்த தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக, அடுத்துக் கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே மக்களால் தூக்கி எறியப்படத்தக்க நிலைக்கு இடது முன்னணி அரசின் மதிப்பு தாழ்ந்துவிட்டது.

கேரளத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் எம்.பி.க்களே தேர்ந்தெடுக்கப்படவில்லையென்றால் என்ன செய்வார் காரத்? பிரகாஷ் காரத் போன்ற பலமான தலைவரைக் கொண்ட வலுவான இடதுசாரிக் கட்சியொன்று தில்லியில் இருக்க வேண்டியது இன்று நாட்டின் தேவை. ஆனால், கொழுத்த மோசடிப் பேர்வழிகளைத் தலைவர்களாகக் கொண்ட பணக்கார நிறுவனமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாறிவிட்டதென்றால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்; சுய லாபத்துக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே இவ்வளவு சுலபமாக சீர்குலைவுச் செயலில் ஈடுபடுமென்றால், அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும். இறுதியில், தான் நினைத்ததை ஜார்ஜ் புஷ் சாதித்துக்கொள்ள காரத் அனுமதிப்பாராயின், அதுவே விதியின் இறுதி விளையாட்டாக ஆகிவிடும்!

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

———————————————————————————————————-

தேர்தலைச் சந்திக்க கட்சிகள் தயாரா?

நீரஜா செüத்ரி

இந்திய ~ அமெரிக்க அணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் காங்கிரஸýக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டிருப்பதை அடுத்து, “கால அவகாசம் தேடும்’ அரசியல் விளையாட்டுதான் தில்லியில் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

எந்தக் கட்சியும் இப்போது தேர்தலைச் சந்திக்கத் தயாரில்லை. எனினும், 2008, மார்ச் அல்லது ஏப்ரலில் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்குமாறு மூத்த தலைவர்களிடம் காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி இருக்கிறது. தேர்தல் பிரசார உத்திகளை வகுப்பதற்கும், கட்சி அமைப்புகளைத் தயார் செய்வதற்கும் இன்னும் சிறிது கால அவகாசம் இருந்தால் நல்லது என்றே ஒவ்வொரு கட்சியும் நினைக்கும்.

“ஹைட் சட்ட’த்தின் விளைவுகள் குறித்து ஆராய ஒரு குழுவை அமைப்பதன் மூலமும், நாடாளுமன்றத்தில் விவாதிப்பதன் மூலமும் அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்னையில், “”ஒன்று, நீங்கள் திருப்திகரமான விளக்கத்தைத் தாருங்கள்; அல்லது, நாங்கள் உங்களுக்குத் திருப்திகரமான விளக்கத்தை அளிக்கிறோம்” என்ற நிலையில் காங்கிரஸýம் இடதுசாரிக் கட்சிகளும் நிற்கின்றன. அடுத்த இரு மாதங்களிலும் தமது நிலைகளை விளக்கிப் பிரசாரம் செய்ய இரு தரப்பும் திட்டமிட்டுள்ளன.

பிரகாஷ் காரத் சென்னையிலிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்; ஏ.பி. பரதன் கோல்கத்தாவிலிருந்து பிரசாரத்தைத் தொடங்குகிறார். இரு பிரசாரப் பயணங்களும் விசாகப்பட்டினத்தில் செப்டம்பர் 8-ம் தேதி பிரமாண்ட பேரணியுடன் நிறைவடைகின்றன. இரு அணுமின் உலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மும்பைக்குச் செல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். அதன் மூலமாக, நாட்டின் அணுமின் திட்டங்களில் எந்த சமரசத்தையும் தாம் செய்துகொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்துவதே அவரது நோக்கம்.

அணுசக்தி உடன்பாட்டைச் செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டால், அதாவது சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கினால், மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எடுப்பதற்கு, அக் கட்சியின் மத்தியக் குழு அதிகாரம் அளித்திருக்கிறது. ஆனால், அக் கட்சியின் மேற்கு வங்க மாநிலக் குழு இப்போது தேர்தலைச் சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. நந்திகிராமும் சிங்குரும் அக் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டிருக்கின்றன.

ஹால்டியாவில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி தோல்வி அடைந்துவிட்டது. காங்கிரஸýடன் மம்தா பானர்ஜி உடன்பாடு செய்துகொண்டதே அதற்குக் காரணம். மக்களவைத் தேர்தல் வந்தால் அதிலும் இது தொடரும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. மம்தாவும் அதை மறுக்கவில்லை; அதோடு, அணுசக்தி உடன்பாட்டில் பிரதமரின் நிலையை ஆதரித்துள்ளார் அவர்.

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்றுவரும் உள்கட்சிப் பூசலைப் பார்க்கும் பொழுது, தற்போதைய ஆதரவை அங்கு அக் கட்சி நிலைநிறுத்திக்கொள்வது கடினம் என்றே தோன்றுகிறது. அமெரிக்காவுக்கு எதிரான நிலையை மார்க்சிஸ்ட் கட்சி எடுத்திருப்பதால் நாடு முழுவதும் முஸ்லிம்களின் ஆதரவு அதற்குக் கிடைக்கக்கூடும். ஆனால், அதை வாக்குகளாக மாற்றுவது அக் கட்சிக்குக் கடினம். ஏனென்றால், நாட்டின் பல பகுதிகளில் அக் கட்சிக்குச் செல்வாக்கு இல்லை. 10,000-த்திலிருந்து 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் அக் கட்சி தோல்வியுற்ற தொகுதிகளில் வேண்டுமானால், அக் கட்சிக்குப் பயன் கிடைக்கலாம்.

பாரதீய ஜனதாவும் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இல்லை. இடதுசாரி ~ ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி (3-வது அணி) ஆகியவற்றுக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் நடுவில் சிக்கி நசுங்கிப் போய்விடுவோம் என்று அஞ்சுகிறது பாரதீய ஜனதா கட்சி. தேர்தலுக்கு அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்னை காரணமாகிவிட்டால், இடதுசாரிகளின் மறுபிரதியாகக் குறுகிப் போய்விடுவோம் என்று பாஜகவில் உள்ள பல தலைவர்கள் கருதுகின்றனர். விலைவாசி உயர்வுப் பிரச்னையோடு, தமக்கே உரித்தான பிரச்னை ஏதாவது கிடைக்காதா என்று அவர்கள் – எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இன்றைய சூழலில் தேர்தலை எதிர்கொள்ள பாரதீய ஜனதாவுக்குத் தலைமை தாங்கக்கூடிய தகுதி படைத்த தலைவர் எல்.கே. அத்வானிதான். இயல்பாகவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் பதவி வேட்பாளராகவும் அவர்தான் இருக்க முடியும். வாஜ்பாயோ உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்; ராஜ்நாத் சிங்கின் செயல்பாடும் திருப்திகரமாக இல்லை. ஆனால், ஆர்எஸ்எஸ்-ûஸப் பொருத்தவரை விரும்பத்தகாத நபராக ஆகிவிட்டார் அத்வானி. பாரதீய ஜனதாவின் முடிவுகளில் தான் தலையிடாமல் விலகிக்கொள்வதாக ஆர்எஸ்எஸ் இப்போது கூறக்கூடும். ஆனால், பூசல்களால் கட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டது, ஏற்பட்டதுதான்.

நவம்பரில் குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் பாஜக வெற்றிபெற்றால், மக்களவைத் தேர்தலிலும் அது அக் கட்சிக்கு உதவுவதாக இருக்கும். அத்வானியின் செல்வாக்கிலும் அதன் தாக்கம் இருக்கும்.

காங்கிரûஸப் பொருத்தவரை, அணுசக்தி உடன்பாட்டிலிருந்து அது பின்வாங்க முடியாது. அதன் சாதக, பாதகங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அந்த உடன்பாட்டைச் செயல்படுத்துவதைத் தாமதப்படுத்தினால், காங்கிரஸின் அதிகாரத்தை அது பாதிக்கக்கூடும்; சர்வதேச அளவில் அதன் மதிப்பைக் குறைக்கக்கூடும்; இடதுசாரிகளின் நெருக்குதலுக்கு வளைந்து கொடுக்க வேண்டிய நிலைக்கு அதைத் தள்ளிவிட்டுவிடும்; அதோடு, தேச நலனுக்கு விரோதமான எதையோ அக் கட்சி செய்ய முனைந்தது போன்ற ஒரு கருத்தையும் ஏற்படுத்திவிடும்.

இப்போது சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பது பிரதமரது கெüரவம் மட்டுமல்ல; காங்கிரஸýம் அதன் தலைவர் சோனியா காந்தியும் அந்த உடன்பாட்டைப் பகிரங்கமாக அங்கீகரித்து இருப்பதால் அவர்களின் கெüரவத்தையும் பாதிக்கக்கூடியதாகிவிட்டது இப் பிரச்னை. சோனியாவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே. நாராயணன்தான் அமெரிக்காவுடன் அந்த உடன்பாட்டை விவாதித்து முடிவு செய்தார்.

எனவே, உடன்பாட்டுக்கு ஆதரவாகப் போராடுவதைத் தவிர காங்கிரஸýக்கு வேறு வழி இல்லை.

எனவே, 2008 ஏப்ரலில் தேர்தலை எதிர்கொள்வது என்பது அவ்வளவு மோசமான முடிவல்ல என காங்கிரஸ் நினைக்கிறது. அதோடு பாஜகவும் பலமிழந்து காணப்படுகிறது. தேர்தல் வந்தால், ஆந்திரத்திலும் அசாமிலும் காங்கிரஸýக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும்; ஆனால், மம்தாவின் துணையுடன் மேற்கு வங்கத்தில் கூடுதல் இடங்களைப் பிடிக்கக்கூடும்; கேரளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகம், தேசியவாதக் காங்கிரஸ் கூட்டுடன் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கூடுதல் இடங்களைப் பிடிக்கக்கூடும்.

இன்றைய சூழலில் மத்தியதர வர்க்கத்தின் ஆதரவையும் காங்கிரஸ் பெறக்கூடும். அதே நேரத்தில் விலைவாசி உயர்வால் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்; அதோடு, முஸ்லிம்களிடமிருந்தும் அக் கட்சி அன்னியப்பட்டு நிற்கிறது.

காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம், திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போன்றவை கடந்த தேர்தலில் பெற்றதைப் போன்ற வெற்றியை இப்போதும் பெறுமா என்று கூற முடியாது. எனவே, மம்தா, எச்.டி. தேவெ கெüடா மற்றும் பல மாநிலங்களில் உள்ள சிறிய குழுக்களின் ஆதரவு காங்கிரஸýக்கு மிக முக்கியமானதாகிவிடும்.

மக்களவை உறுப்பினர்களிடம் தேர்தலைப் பற்றிப் பேசினாலே கதிகலங்கிவிடுகிறார்கள். இடைத் தேர்தலைத் தவிர்ப்பதற்காக தேசிய அரசை அமைப்பது பற்றி ஆலோசிக்கலாம் என்றுகூட கடந்த வாரம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சிலர் கூறிக்கொண்டிருந்தனர்.

இப்போதைய நெருக்கடியின் இறுதி முடிவு எப்படி இருந்தாலும் சரி; இதுவரை சில விஞ்ஞானிகளும் கொள்கை வகுப்பாளர்களும் மட்டுமே விவாதித்துக்கொண்டிருந்த அணுவிசைப் பிரச்னை குறித்தும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்கள் விவாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் கோயில் ~ மசூதி போன்ற உணர்ச்சிகரமான விஷயங்கள் தேர்தல் பிரச்னைகளாக இருந்ததற்குப் பதிலாக, வரவிருக்கும் தேர்தல்களில் அணுசக்தியும் வெளியுறவுக் கொள்கையும் பிரச்னைகளாக இருக்கும் என்பது நிச்சயம்!

Posted in abuse, Accord, Alliance, America, Army, Artillery, Assembly, Atom, Atomic, Attack, Bombs, Brinda, China, Coalition, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Comunists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), deal, defence, Defense, Duty, EU, Europe, Force, House, Jothibasu, Karat, Left, LokSaba, LokSabha, Manmohan, Marines, MP, Navy, NCC, NSS, Nuclear, Nuke, Opposition, Pakistan, Party, Planes, Pokhran, Politics, Power, Prakash, Rajasthan, Reserve, Russia, Somnath, Sonia, Soviet, support, US, USA, USSR, Wars | 1 Comment »

Education as basic right

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

அடிப்படை உரிமையாகுமா கல்வி?

எஸ். சையது இப்ராஹிம்

“நாடு முழுவதும் 90 ஆயிரம் ஆரம்பப் பள்ளிகளில் கரும்பலகையே இல்லை. இவற்றுள் 21 ஆயிரம் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை’ என்ற அதிர்ச்சியூட்டம் புள்ளிவிவரம் அண்மையில் வெளியாகியுள்ளது.

கல்வித் திட்டமிடல், நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகம் என்ற அமைப்பின் உயர்குழு 35 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 11 லட்சத்து 24 ஆயிரத்து 33 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு இவ்வாறு அறிவித்தது.

கரும்பலகை இல்லாத பள்ளிகளை அதிகம் கொண்ட மாநிலங்களின் வரிசையில் ராஜஸ்தான் (8848), ஜார்க்கண்ட் (7645), பிகார் (5535) முன்னிலை வகிக்கின்றன.

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் கிராமங்களில் 83 சதவீதம் அரசுப் பள்ளிகள். கட்டடம், கழிப்பறை, விளையாட்டுத் திடல் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இந்தப் பள்ளிகள் தவிக்கின்றன. சுமார் 1 லட்சம் ஆரம்பப் பள்ளிகள் ஒரே ஒரு வகுப்பறையில் நடந்து வருகின்றன. பல லட்சம் பள்ளிகளுக்கு அந்த வசதியும் கிடைக்காமல், மரத்தடியில் நடைபெற்று வருகின்றன.

பண்டைய காலத்தில் இருந்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நாடு இந்தியா. உலகின் மிகவும் தொன்மையான நாளந்தா பல்கலைக்கழகம் இருந்தது இந்தியாவில்தான். இந்தப் பல்கலைக்கழகத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் வந்து கல்வி பயின்றுச் சென்றனர். உலகப் பொதுமறை திருக்குறளில் கல்வியின் சிறப்பை வலியுறுத்தும் தனி அதிகாரமே உள்ளது.

இவற்றையெல்லாம் விட, உலகிலேயே கல்வியைத் தெய்வமாகப் போற்றும் வழக்கம் இருப்பது இந்தியர்களிடம் மட்டுமே. கலைமகள் அல்லது சரஸ்வதி வழிபாடு இதையே காட்டுகிறது.

ஆனால், சுதந்திரம் அடைந்து 60-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில், இந்தியப் பள்ளிகளின் அவலம் குறித்து வெளிவந்துள்ள தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன. இதுவரை மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களின் பாராமுகமே இதற்கு காரணம்.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஒவ்வோராண்டும் ஆரம்பப் பள்ளியில் புதிதாகச் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 2006-07-ம் கல்வியாண்டில் நாடு முழுவதும் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. 2007-08-ம் கல்வியாண்டில் இது ஒரு கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது. இதற்கு ஏற்றார்போல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

2006-07-ம் ஆண்டு தொடக்கக் கல்விக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 17,133 கோடி. இது 2007-08-ம் ஆண்டில் ரூ. 23,142 கோடியாக உயர்த்தப்பட்டாலும் இந்தத் தொகை போதுமானது இல்லை.

இதன் விளைவு என்ன? பொற்றோர்கள் வேறுவழியின்றி தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளன. சில தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளை விட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? மத்திய பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கு ராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், கல்விக்கு சொற்பத்தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் வருங்கால சந்ததியினரைத் தீர்மானிக்கும் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

பட்ஜெட்டில் பிற துறைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டாலோ அல்லது புறக்கணிக்கப்பட்டாலோ கடும் ஆட்சேபம் தெரிவிக்கும் கட்சிகள் இந்தப் பிரச்னையில் தலையிட்டு, உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த வேண்டும்.

ஒவ்வோராண்டும், மத்திய பட்ஜெட் தயாரிப்பின்போது தொழிலதிபர்கள், விவசாயிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்களுடன் மத்திய நிதியமைச்சர் ஆலோசனை நடத்துவது வழக்கம். அதேபோல், கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டுக்கு முன் கல்வியாளர்கள், மாணவர் சங்கப் பிரதிநிதிகளின் கருத்துகளையும் மத்திய நிதியமைச்சர் கேட்க வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்த போது, விவசாயம் மற்றும் தொழில்துறைகளை மேம்படுத்தும் நோக்கில் முதல் மற்றும் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டன. அரசின் இந்த முயற்சி பெரும் வெற்றி பெற்றது. இதை உதாரணமாகக் கொண்டு, நாட்டின் கல்வி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கல்விக்காக ஒரு ஐந்தாண்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்கீழ், கல்வி என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது. இதனால், மத்திய அரசு பொறுப்பைத் தட்டிக் கழித்து வந்தது. இதைத் தடுக்க கல்வியை மத்திய -மாநில அரசுகளின் பொதுப்பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும். எழுத்துரிமை, பேச்சுரிமை, வாக்குரிமைப் போல் கல்வியையும் அடிப்படை உரிமையாக்க வேண்டும்.

——————————————————————————————————————-
உயர்கல்வியில் குளறுபடி!

தமிழக அரசின் உயர்கல்விக் கொள்கையில் குழப்பம் நிலவுகிறது என்பது உண்மைதான் என்றாலும், இந்த விஷயத்தில் உயர்கல்வி அமைச்சகத்தை மட்டுமே குறைகூற வழியில்லை. உயர்கல்வித் துறை பற்றிய தொலைநோக்குப் பார்வை நமது ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனதன் விளைவுதான் இந்தக் குளறுபடி.

எண்பதுகளில் அன்றைய அரசு உயர்கல்வியைத் தனியார்மயமாக்குவது என்று தீர்மானித்ததன் பயனைத்தான் இன்றைய இளைஞர் சமுதாயம் அனுபவித்து வருகிறது. அதிக அளவில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்களும் பொறியியல் வல்லுநர்களும் தகவல் தொழில்நுட்பத் துறையினரும் உலக அரங்கில் செயல்படுவதற்குக் காரணமே, அன்றைய அரசு, சுயநிதிக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதித்ததால்தான். தனியார் பொறியியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டமே இல்லை என்கிற அளவுக்கு தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் 9 மட்டுமே; படிப்போர் 3662 பேர்; ஆனால், சுயநிதிக் கல்லூரிகளோ 238. கற்போரோ 70,145 பேர்.

அரசிடம் எந்த மானியமும் பெறாமல், தங்களது சொந்த முயற்சியில் இடங்களை வாங்கி, மத்திய அரசின் கீழ் இயங்கும் அமைப்புகளில் அனுமதியும் பெற்று, வங்கிகளில் கடன் வாங்கி இந்த உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. மாணவர்களிடம் நன்கொடை வசூலித்து அவர்கள் வாங்கிய கடனை அடைக்கவும் செய்கிறார்கள்.

அவரவர் முயற்சியால் ஏற்படுத்தப்படும் இந்தக் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கவோ, அவர்களது செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்தவோ அரசுக்கு அதிகாரம் உண்டா என்பது பரவலாக எழுப்பப்படும் கேள்வி. அது தனியார் நிறுவனமானாலும் சரி, பொதுத்துறை நிறுவனமானாலும் சரி, அதைக் கண்காணிக்கவும், அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் நிச்சயமாக ஓர் அரசுக்கு உரிமை மட்டுமல்ல, கடமையும் உண்டு. அப்படி இல்லாதபட்சத்தில், அந்த அரசுக்கான அவசியமே இல்லாமல் போய்விடும்.

அரசால் போதிய கல்வி நிறுவனங்களை அமைக்க முடியாத நிலையில் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் செயல்பாடுகளும் அவர்கள் வசூலிக்கும் கட்டணத் தொகையும் நிச்சயமாக அரசின் கண்காணிப்புக்கும் ஒப்புதலுக்கும் உட்பட்டதாக அமைந்தே தீரவேண்டும். அப்படி இல்லாமல்போனால், வசதி படைத்தவர்கள் மட்டும்தான் உயர்கல்வி பெற முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டுவிடும்.

அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை இந்த சுயநிதிக் கல்லூரிகளில் பின்பற்றப்படும்போது, அரசின் கட்டணக் கொள்கை மட்டும் ஏன் பின்பற்றப்படக் கூடாது? அரசு சில வரன்முறைகளை விதித்து, அனைத்துக் கல்லூரிகளின் கட்டணமும் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும்படி உத்தரவிடுவதுதான் முறை. அந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாத கல்லூரி நிர்வாகத்தினரிடமிருந்து, அரசே அந்த சுயநிதிக் கல்லூரிகளை ஏற்று நடத்த முற்படுவதுதான் நியாயம்.

தனியார் நிறுவனங்களுக்கு வங்கிகளில் கிடைக்கும் நிதியுதவியும் கடனும் நிச்சயமாக அரசுக்குக் கிடைக்காதா என்ன? தகுந்த நஷ்டஈடு வழங்கி அதுபோன்ற கல்வி நிறுவனங்களை அரசு ஏற்பதை யார் தடுக்க முடியும்? இப்படியொரு சிந்தனையே அரசுக்கு ஏன் எழவில்லை என்பதுதான் புரியவில்லை.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கல்விக் கட்டணமும் இதர கட்டணங்களும் சேர்த்தே ரூ. 9 ஆயிரம்தான். தனியார் கல்லூரிகளிலோ அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கே ரூ. 3 லட்சம் வரை.

பயிற்சிக் கட்டண நிர்ணயம் என்பது இன்றியமையாதது. அதேபோல, நன்கொடை வசூலிப்பதற்கும் ஒரு காலவரம்பு விதிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் ஏன் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவதில்லை என்பதுதான் புதிர். தெரிந்தும் தெரியாததுபோல் இருத்தல், மன்னிக்கவே முடியாத குற்றம்.

இன, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் கல்வி என்கிற நிலைமை ஏற்படுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமான விஷயம் ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் கல்வியின் பயன் போய்ச் சேர வேண்டும் என்பது. பணமில்லாததால் படிக்க முடியவில்லை என்கிற நிலைமை ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பவர்களின் ஆட்சியில் நிலவுதல் கூடாது!

—————————————————————————————————————-
மனித உரிமைக் கல்வி!

ஆர். நடராஜ்

வழக்கமாக நாம் காணும் ஒரு காட்சி – காலையில் சீவி முடித்து, சீருடை அணிந்து ஆரவாரத்துடன் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்; கிராமப்புறங்களில் இக்காட்சி இன்னும் அழகு. அணிஅணியாய் நடந்து செல்லும் காட்சி மனதுக்கு ரம்யமானது, நிறைவைத் தருவது.

“”பள்ளிக்குச் செல்வோம்”, என்று குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவேண்டியதை அறிவுறுத்தும் அரசு விளம்பரப்படம் எல்லோரையும் கவர்ந்திருக்கும். கல்விச் செல்வத்தின் சிறப்பினை திருவள்ளுவரும் வலியுறுத்தியுள்ளார்.

10 ஆண்டுகளுக்குள் அனைவருக்கும் கல்வி தரவேண்டும் என்பதை அரசியல் சட்டம் வலியுறுத்தியுள்ளது. இந்திய அரசியல் சட்டம் பிரிவு 21-ல் உள்ள தனிமனிதனின் சுதந்திரம்பற்றி விவரிக்கும்பொழுது, தரமான கல்வி இந்த அடிப்படை உரிமையில் அடங்கும் என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. 2002-ஆம் ஆண்டு, அரசியல்சாசனத்தில் 21-ஏ பிரிவு சேர்க்கப்பட்டு, 6 முதல் 14 வயதுவரை குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று முக்கிய அடிப்படை உரிமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையானது, கல்வியானது, மனித உரிமைகளில் மிகவும் முக்கியமானது என்று பிரகடனப்படுத்தியுள்ளது.

கட்டாயக்கல்வி அடிப்படை உரிமை என்பதோடு, 14 வயதுக்கு உள்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்றும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத் தடையை மீறி, சிறுவர்களைப் பணியில் ஈடுபடுத்துபவர்களுக்கு 6 மாதம் சிறைத்தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்படும். இருப்பினும் சில இடங்களில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது, வேதனை அளிக்கிறது.

சம்பந்தப்பட்ட அமலாக்கப்பிரிவு, குற்றம்புரிவோர்மீது நடவடிக்கை எடுத்தாலும், சமுதாயத்திற்கும் பொறுப்பு உள்ளது. சட்டத்துக்குப்புறம்பாகச் சிறுவர்களை வேலையில் ஈடுபடுத்தும் நிறுவனங்களின் பொருள்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சிறார் தொழிலாளர் உள்ள உணவு விடுதிகளை ஆதரிக்கக்கூடாது. உள்ளாட்சித்துறைக்குப் புகார் அளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

தமிழகத்தில், ஆரம்பப் பள்ளிகள் 34,208, நடுநிலைப் பள்ளிகள் 8,017, உயர்நிலைப் பள்ளிகள் 5,046, மேல்நிலைப் பள்ளிகள் 4,536 உள்பட மொத்தம் 51,807 பள்ளிகள் உள்ளன. அடிப்படை வசதியோடு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. தகவல் தொழில்நுட்பப் புரட்சியிலும், மென்பொருள் வடிவமைப்பிலும் இந்தியர்கள் உலக அளவில் தலைசிறந்து விளங்குகிறார்கள். தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற நிலை, ஒவ்வொரு துறையிலும் வியாபித்துள்ளது. 2020-ல் இந்தியா முன்னணி நாடாக விளங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னேற்றத்தால் எல்லோரும் பயனடைய வேண்டும்; இந்த அபரிமித வளர்ச்சியின் நன்மைகள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்தால்தான் சமுதாயம் ஆரோக்கியமாக விளங்கும். சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் ஆங்காங்கே நிகழும் தீவிரவாத சம்பவங்களும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் விரக்தியின் பிரதிபலிப்பு என்பதை உணர வேண்டும்.

தரமான கல்வி மூலம் இளைஞர்களின் மேன்மையான வாழ்க்கைக்கு வழிவகுக்க வேண்டியது சமுதாயத்தின் பொறுப்பு. சமுதாய ஏற்றத்தாழ்வுகளை சமன்செய்யும் சக்தி கல்விக்கு மட்டுமே உண்டு. கல்வியால் பெறக்கூடிய முன்னேற்றமும் வாய்ப்புகளும் சாமானியர்களைச் சென்றடைய வேண்டும். சாதாரண கல்வி, எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் என்ற நிலையை மட்டும் உருவாக்கும். ஆனால் இன்றைய தேவை, தரமான கல்வி.

சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. குடிசைப் பகுதியில் வாழும் சிறுவர்கள் பலர், பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைக்காக, விநாயகர் சிலைகளைக் கடலுக்குள் நீந்திச்சென்று கரைத்தனர். அச்சிறுவர்களில் பலர் பள்ளிக்குச் செல்வதில்லை, சென்றவர்கள் பாதியில் நிறுத்தியவர்கள்.

இவர்களது எதிர்காலம் என்ன? இவர்களின் நிலை உயர்வது எப்போது? இம்மாதிரி படிப்பை நிறுத்தியவர்களைக் கணக்கிட்டு, மேல்படிப்பைத் தொடர்வதற்கும், படிப்பை நிறுத்தாமல் பாதுகாப்பதையும் ஓர் இலக்காகக் கல்வித்துறை கொண்டுள்ளது. இருந்தாலும் இவ்விஷயத்தில் சமுதாயத்தின் பொறுப்புணர்ச்சியும், விழிப்புணர்ச்சியும் மிகவும் முக்கியம்.

திசை தெரியாமல், சமுதாய முன்னேற்றத்தில் பங்குபெறாமல் பரிதவிக்கும் இளைஞர்கள் தீயசக்திகளின் வலையில்சிக்கிச் சிதைவதோடு, சமுதாயத்திற்கும் ஊறுவிளைவிக்கும் நிலை ஏற்படும்.

கல்வி தனி மனிதனின் சொத்து அல்ல; சமச்சீர் கல்வி எல்லோருடைய பிறப்புரிமை. அதைப் பகிர்ந்துகொள்ள மறுப்பதும், விரிவடைய உதவாமல் இருப்பதும் ஒருவகை ஏகாதிபத்தியமே.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம், மனித உரிமைக் கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. 2004-ம் ஆண்டை மனித உரிமைக் கல்வி ஆண்டாகப் பிரகடனப்படுத்தியது. மனித உரிமைக் கல்வி மூலம் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த மேலும் பத்து ஆண்டுகள் முயற்சி தொடர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டால், உரிமைகள் பறிக்கப்படும்பொழுது கேள்வி கேட்கும் உணர்வு ஏற்படும்.

உள்நாட்டு அமைதியைப் பாதுகாப்பதில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், சில மனித உரிமைமீறல் சம்பவங்கள் காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளன. பிகார் மாநிலம் பாகல்பூரில் குற்றவாளியின் கண்களைக் குடைந்த சம்பவம், நாட்டின் வடகிழக்குப் பகுதியிலும் ஜம்மு காஷ்மீரிலும் எழுந்துள்ள மனித உரிமைப் பிரச்னைகள், பிகாரில் காவல்துறை உதவி ஆய்வாளர், குற்றவாளியை மோட்டார்சைக்கிளில் கட்டி இழுத்துச்சென்ற சம்பவம், குஜராத்தில் “”சோராபுதீன் மர்ம மரணம்” – இவ்வாறு தொடர்ந்து மனித உரிமை மீறல் பிரச்னைகள் தலைதூக்குவது, காவல்துறைக்கு தலைக்குனிவு, சமுதாயத்திற்குப் பாதிப்பு.

மனித உரிமைகளைக் காக்கவேண்டிய காவல்துறையினரே மனித உரிமைகளை மீறினால் எப்படி? சீருடை அணிந்த காவல்துறையினர் சீறாமல், சீராகப் பணிபுரிய வேண்டும்; சீறிப்பாய்ந்தால்தான் மக்கள் மதிப்பர் என்பது தவறான அணுகுமுறை.

காவல்துறையின் செயல்பாடுகள் சீராகவும் மனிதநேயத்தை அடிப்படையாகவும் கொண்டிருக்க வேண்டும் என்றால் கல்வி வளர்ச்சி பெறவேண்டும்.

எழுத்தறிவில் பின்தங்கிய இடங்களில் மனித உரிமை மீறல் பற்றி முறையிட வேண்டும் என்ற விழிப்புணர்வு இருக்காது. தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் ஆண்டுதோறும் சராசரி 8,000 மனுக்கள் பெறப்படுகின்றன.

பொதுமக்களை அவமதிப்பது, குறைகளைக் கேட்க மறுப்பது, உரிய தகவல்தராமல் தட்டிக் கழிப்பது, வேண்டியவர்களுக்கு வசதிசெய்து தருவது, கையூட்டு பெறுவது, விதிமுறைகளுக்குப் புறம்பாகச் செயல்படுவது, அரசு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளை பெற்றுத்தராமல் இருப்பது போன்றவையும் ஒருவகை மனித உரிமை மீறல்கள்தான்.

மக்கள் புகார் செய்வார்கள் என்ற நிலை இருந்தால்தான் அரசுத் துறைகளில், மனித உரிமை மீறல்கள் கூடாது என்ற உணர்வு மேலோங்கும். மனித உரிமை மீறல்களும் நாளடைவில் குறையும். இதற்கு அடிப்படை – கல்வி, எழுத்தறிவு, மனித உரிமை குறித்த கல்வியே!

(கட்டுரையாளர்: காவல்துறை கூடுதல் இயக்குநர், மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு).

Posted in Allocation, Analysis, BE, Bihar, Boards, Budget, Colleges, Doctor, DOTE, Education, Engg, Engineering, Expenses, Fees, Finance, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, MBBS, medical, Medicine, Planning, Price, Professors, Rajasthan, rights, Sarasvathi, Sarasvathy, Saraswathi, Saraswathy, Schools, Slates, Statistics, Stats, Statz, Students, Study, Teachers, Tech, Technology, University | 1 Comment »

Funding change hurts Sarva Shiksha Abhiyan – Secondary education for all

Posted by Snapjudge மேல் ஜூன் 27, 2007

அனைவருக்கும் கல்வி

பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தொடங்கப்பட்ட மிக நல்ல திட்டங்களில் “அனைவருக்கும் கல்வி’ முதன்மையானது. “சர்வ சிக்ஷா அபியான்’ என்கிற பெயரில் அறிவிக்கப்பட்ட இந்த “அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் மூலம், பள்ளிக்கூடம் இல்லாத கிராமமே இல்லை என்கிற நிலைமையும், பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளே இல்லை என்கிற லட்சியமும் நிறைவேற வேண்டும் என்பதுதான் திட்ட கமிஷனின் நோக்கம்.

மத்திய அரசு 75 விழுக்காடும், மாநில அரசு 25 விழுக்காடும் இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் அவரவர் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்வது என்பதுதான் “அனைவருக்கும் கல்வி’ திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் தொடர்ந்த நடைமுறை. ஆனால் இப்போதைய 11-வது திட்டத்தில் இந்தப் பங்கீட்டில் திட்டக் கமிஷன் மாற்றம் செய்திருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் சம பங்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது திட்டக் கமிஷனின் புதிய தீர்மானம்.

கடந்த சில ஆண்டுகளாக இந்த “அனைவருக்கும் கல்வி’ என்கிற திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் பள்ளிக்கூட வசதிகள் பெருகி வருகின்றன. அதுமட்டுமல்ல, பல புதிய பள்ளிக்கூடங்கள் ஊராட்சி அமைப்புகளால் நிறுவப்பட்டு அந்தந்த பஞ்சாயத்துகள் மேற்பார்வையில் செயல்படத் தொடங்கியுள்ளன. 11-வது திட்டத்தில், நமது திட்டக் கமிஷன் செய்திருக்கும் மாற்றம் பல மாநிலங்களைத் திகைப்பில் ஆழ்த்தி இருப்பது மட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

குஜராத், உத்தரகண்ட், ஹரியாணா மற்றும் கேரளம் ஆகிய நான்கு மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்கள் இந்த “அனைவருக்கும் கல்வி’ திட்டத்துக்கான நிதி ஆதாரங்களை ஒதுக்கவில்லை. அந்தந்த மாநிலங்கள் செயல்படுத்தும் இலவசத் திட்டங்களுக்கும், அவர்கள் மக்களுக்கு அறிவித்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குமே போதிய நிதியாதாரம் இல்லாமல் மாநில அரசுகள் தடுமாறும் நிலைமை. நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் திட்டத்துக்கு அதிக நிதியை ஒதுக்க மாநிலங்கள் தயங்குவது புரிகிறது.

கல்வி அறிவு இல்லாமை என்பதுதான் இந்தியாவின் மிகப் பெரிய பலவீனமாக இருந்து வருகிறது. எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் இன்னமும் கணிசமாக இருந்து வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்களில் பலர் அவரவர் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாமலும் இருக்கிறார்கள். பொருளாதார நிலைமை மட்டுமன்றி அருகில் பள்ளிக்கூடங்கள் இல்லாமையும் அதற்குக் காரணம்.

அப்படியே பள்ளிக்கூடங்கள் இருந்தாலும், முறையான கட்டடங்கள் இல்லாமல் இன்னும் மரத்தடியில் பாடம் நடத்தும் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் நாடு முழுவதும் இருக்கின்றன. கரும்பலகை இல்லாத பள்ளிகள் கூட இருப்பதாக மற்ற மாநிலங்களில் இருந்து செய்திகள் வருகின்றன. “அனைவருக்கும் கல்வி’ திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, கரும்பலகை போன்ற அடிப்படைத் தேவைகள் அநேகமாக எல்லாப் பள்ளிகளுக்கும் கிடைக்க வழிகோலப்பட்டது. இந்தத் திட்டத்தைத் தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்கள் முறையாகப் பயன்படுத்தி கிராமப்புற கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்தவும் செய்தன.

இந்த நிதியாண்டில் மத்திய அரசு “அனைவருக்கும் கல்வி’ திட்டத்துக்காக 21 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது. இரண்டரை மாதங்கள் கடந்தும் இன்னும் பல மாநிலங்கள் அவர்களது பங்காக 50 விழுக்காடு அளிக்காமல் இருக்கின்றன. அதற்கான ஒதுக்கீடு அவரவர் நிதிநிலை அறிக்கையில் இல்லவே இல்லை.

மத்திய அரசு இந்த விஷயத்தில் மாநில அரசுகளின் பிரச்னையைப் புரிந்துகொண்டு பழைய முறைப்படி தனது பங்குக்கு 75 விழுக்காடு நிதியை ஒதுக்க முன்வரவேண்டும். மாநில அரசுகள் அதிக நிதி தரவில்லை என்பதற்காக இதுபோன்ற நல்லதொரு திட்டம் தொய்வடைவதோ, நடைபெறாமல் இருப்பதோ சரியல்ல. “அனைவருக்கும் கல்வி’ என்பது இந்தியாவின் லட்சியமாக இருக்கும்போது, இந்த விஷயத்தை மத்திய அரசு அலட்சியமாக எதிர்கொள்வது முறையல்ல!

——————————————————————————————————————
ஆட்டம் காணும் ஆரம்பக் கல்வி

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது நிச்சயமாகத் தமிழகம் கல்வியின் தரத்திலும் சரி, கல்விக்கூடங்களின் எண்ணிக்கையிலும் சரி முன்னணியில்தான் இருக்கிறது. இப்படி ஆறுதல்பட்டுக் கொள்வதால், நாம் கல்வித்துறையில் உலகத்தரத்தை எட்டிவிட்டோம் என்பது அர்த்தமல்ல.

இன்னும் அத்தனை கிராமங்களிலும் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் அமைந்தபாடில்லை. முழுமையாக அத்தனை குழந்தைகளையும் பள்ளிக்குக் கொண்டுவந்து எழுத்தறிவிக்க முடிந்துவிட்டதா என்றால் அதுவும் இல்லை. நமது பள்ளிக்கூடங்களாவது அடிப்படை வசதிகளுடன் அமைந்தவையா என்றால், இன்னும் பெரும்பாலான பள்ளிகளுக்கு முறையான கட்டடங்கள்கூட இல்லை.

“சர்வ சிக்ஷா அபியான்’ எனப்படும் “அனைவருக்கும் கல்வி’ என்கிற மத்திய அரசின் திட்டப்படி கடந்த ஆண்டு மட்டும் ரூ. 15,000 கோடி ரூபாய் நமது நிதியறிக்கையில் ஒதுக்கப்பட்டிருந்தும், முப்பது சதவிகிதம் பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகளுக்குத் தனியான கழிப்பறைகள் இல்லாத அவல நிலை. இது அகில இந்திய நிலைமை. தமிழகத்தின் நிலைமை இந்த விஷயத்தில் கொஞ்சம் பரவாயில்லை, அவ்வளவுதான்.

தமிழகத்தில் மட்டும் ஐந்து முதல் பதினெட்டு வயதான குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் ஒன்றரைக் கோடி என்று சொல்லப்படுகிறது. இவர்கள் அனைவருக்கும் முறையான கல்வி அளிக்கப்பட வேண்டுமானால், குறைந்தது 14,300 பள்ளிக்கூடங்கள் தேவை. அந்தப் பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகளை முழுமையாகச் செய்துதர வேண்டுமானால் அதற்கான நிதியாதாரம் மாநில அரசிடம் இல்லை.

அரசின் நேரடிப் பார்வையில் இயங்கும் பள்ளிகள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்து பள்ளிகள் என்று ஏற்பட்டிருப்பவை போதிய இடவசதியும் அடிப்படை சுகாதார வசதியும் பெற்றிருக்கின்றனவா என்றால் இந்த விஷயத்திலும் நிலைமை திருப்திகரமாக இல்லை. தனியார் பள்ளிகள் நன்கொடை வசூலிப்பதில் காட்டும் அக்கறையைப் பள்ளிகளைப் பராமரிப்பதில் காட்டுவதில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் உண்டு.

நாளைய சமுதாயம் என்று உலகெங்கிலும் தனி கவனத்துடன் செயல்படும் கல்வித்துறை, இந்தியாவில் மட்டும் போதிய கௌரவத்துடனும் மரியாதையுடனும் தகுந்த முக்கியத்துவத்துடனும் செயல்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆசிரியர்கள் தரம் தாழ்ந்து விட்டனர் என்று குறை கூறும்போது நாம் மறந்துவிடும் உண்மை, அந்த ஆசிரியர்களின் சமூக அந்தஸ்தை அங்கீகரிக்காமல்விட்டதும், மாணவர்கள் அவர்களுக்குத் தரவேண்டிய மரியாதையைக் குறைத்ததும் நாம்தான் என்பதை. அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் ஆசிரியர்களுக்குத் தரப்பட்ட மரியாதை என்ன என்பதை நினைத்துப் பார்த்தால், கல்வி ஏன் தரம் தாழ்ந்திருக்கிறது என்பதற்குக் காரணம் புரியும்.

காமராஜர் முதலமைச்சராக இருந்த காலம் முதல், குக்கிராமம் வரை அடிப்படைக் கல்வி சென்றடைய வேண்டும் என்றும், எந்தவொரு குழந்தையும் கல்வி அறிவு பெறாமல் இருந்துவிடலாகாது என்றும் எல்லா முதலமைச்சர்களும் அவரவர் பங்கிற்குக் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தனர் என்பது உண்மை. ஆனால், கல்வித்துறையில் அரசியல் தலையீடுகளை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாமல் போனதால்தான் கல்வியின் தரமும், ஆசிரியர்களின் தரமும் குறைந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

அதேபோல, முந்தைய தலைமுறையில், கல்விக்கூடங்களுக்கு நன்கொடை அளிப்பது, கல்விச்சாலைகள் ஏற்படுத்துவது என்பதெல்லாம் தர்மமாகக் கருதி செய்யப்பட்டது. இப்போது, கல்வி என்பதே வியாபாரம் என்று கருதப்படுகிறது. இந்தப் போக்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பது மட்டுமல்லாமல், கல்வியின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்.

நாளைய இந்தியா, இன்றைய கல்வித்துறையின் கையில்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆரம்பப் பள்ளிக்கூடங்கள்தான் நாளைய இந்தியாவின் அடித்தளங்கள். அந்த அடித்தளம் ஆட்டம் காண்பதுபோலத் தெரிகிறது. ஆட்சியாளர்கள் உடனடியாக விழித்துக் கொள்ளாவிட்டால், நாளைய தலைமுறையின் சாபத்தை நாம் சுமக்க நேரிடும்!

Posted in Abhiyan, Allocations, Bihar, Budget, Center, Centre, Constitutional, Education, elementary, Females, Finance, Funds, Government, Govt, Gujarat, Haryana, HSC, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Kamaraj, kamarajar, Kamraj, Kamrajar, Kerala, legal, Madhya Pradesh, MadhyaPradesh, MP, Op-Ed, Orissa, Quality, Rajasthan, Sarva Shiksha Abhiyan, Schools, She, SSA, State, Students, Study, Teacher, Utharakand, Utharakhand, Utharkhand, Uttarakand, Uttarakhand, Uttaranchal, Uttarkand, Uttarkhand, Uttrakand, WB, Welfare, West Bengal, WestBengal | Leave a Comment »

President polls: Shekawat contest as independent – Biosketch

Posted by Snapjudge மேல் ஜூன் 26, 2007

ஷெகாவத்தின் வாழ்க்கை வரலாறு: போலீஸ்காரராக இருந்து புகழேணியின் உச்சிக்கு…

புது தில்லி, ஜூன் 26: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் (84) கடுமையான உழைப்பு, விடா முயற்சி மூலம் வாழ்க்கையில் முன்னேறியவர்.

ஏழைக் குடும்பம்: ராஜஸ்தான் மாநிலத்தின் சீகர் மாவட்டத்தில் உள்ள கச்ரியாவாஸ் என்ற இடத்தில் ஏழை ராஜபுத்திர விவசாயக் குடும்பத்தில் ஷெகாவத் பிறந்தார்.

இளவயதிலேயே தந்தையை இழந்தார். எனவே குடும்பப் பொறுப்பைச் சுமக்க நேர்ந்தது. பள்ளிப் படிப்பை முழுமையாக முடித்தார், ஆனால் கல்லூரிப் படிப்பை முடிக்க முடியவில்லை. ராஜஸ்தான் மாநில காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்தார். சில ஆண்டுகள் பணி புரிந்த பிறகு பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டார்.

3 முறை ராஜஸ்தான் மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தார். மொத்தம் 10 ஆண்டுகள் முதல்வராக இருந்திருக்கிறார். அந்தியோதயா, வேலைக்கு உணவு போன்ற வறுமை ஒழிப்புத் திட்டங்களை அமல் செய்தார்.

அரசியல் பிரவேசம்: 1952-ல் பாரதீய ஜனசங்கக் கட்சியில் சேர்ந்தார். அது முதல் 1972 வரை ராஜஸ்தான் சட்டப் பேரவை உறுப்பினராகப் பதவி வகித்தார். 1974 முதல் 1977 வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார். குடியரசு துணைத் தலைவராக 2002 ஆகஸ்டில் பதவியேற்றார்.

  • 1977 முதல் 1980 வரை,
  • 1990 முதல் 1992 வரை,
  • 1993 முதல் 1998 வரை என்று மூன்று முறை மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தார்.

1980-ல் இந்திரா காந்தி மீண்டும் பிரதமராகப் பதவியேற்றதும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசுகளைக் கலைத்தார். அப்போது ஒரு முறையும், 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகும் ஷெகாவத்தின் அரசை மத்திய அரசு கலைத்தது.

ஷிண்டேவைத் தோற்கடித்தார்: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ்காரரான சுசீல் குமார் ஷிண்டே, பிற எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டார். அவரை ஷெகாவத் தோற்கடித்தார். ஆனால் அவர் சார்ந்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இருந்த வாக்குகளைவிட 40 வாக்குகள் அதிகமாக அவருக்கு விழுந்தன. அவை மாற்றுக் கட்சிகளிலிருந்து அவர் மீது உள்ள அன்பு, மரியாதையால் போடப்பட்ட வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்ற ஆதரவு குடியரசுத் தலைவர் தேர்தலிலும் தனக்குக் கிடைக்கும் என்று ஷெகாவத் நம்புகிறார்.

குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் மாநிலங்களவைத் தலைவராக அவையை நடத்திச் செல்ல முற்பட்டார் ஷெகாவத். அப்போது காங்கிரஸýம் அதன் தோழமைக் கட்சிகளும் அங்கே பெரும்பான்மை பலத்துடன் இருந்தன. ஆனால் ஷெகாவத் தனது பொறுமை, திறமை காரணமாக அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் இல்லாமல் நடத்திக்காட்டினார். பாரதீய ஜனதா உறுப்பினர்கள் ரகளை செய்தாலும் கடுமையாகக் கண்டித்து திருத்தினார். கேள்வி நேரம் முக்கியம் என்று கருதியதால் அதற்கு இடையூறு செய்யாமல் பார்த்துக் கொண்டார்.

கிராமப்புற மக்களின், குறிப்பாக விவசாயிகளின் துயரங்களை நன்கு அறிந்தவர். மத்திய, மாநில அரசுகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதையும் அனுபவபூர்வமாக உணர்ந்தவர்.

ராஜஸ்தானில் சிறுபான்மைச் சமூக மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டின் பலன்களை அளித்தவர்.

எல்லா கட்சிகளிலும் நண்பர்களைக் கொண்டவர். ஜாதி, மத வித்தியாசம் பாராது பழகுகிறவர்.
——————————————————————————————–
ஷெகாவத் வேட்பு மனு தாக்கல்: பாஜக அணி தலைவர்களுடன் நட்வர் சிங்கும் வருகை

புதுதில்லி, ஜூன் 26: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட குடியரசு துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் திங்கள் கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். பாஜக உயர் தலைவர்களுடன், காங்கிரஸ் கட்சியில் இருந்த நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நட்வர் சிங்கும் இருந்தார்.

மக்களவைச் செயலரும் குடியரசுத் தலைவர் தேர்தல் அதிகாரியுமான பி.டி.டி. ஆச்சாரியின் அறைக்கு பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் 7 மாநில முதல்வர்கள் புடைசூழ ஷெகாவத் காலை 11.30 மணிக்கு வந்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அங்கு 11.12 மணிக்கே வந்திருந்தார். தனித்தனியாக இரு வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரியிடம் ஷெகாவத் அளித்தார். அவற்றில் 128 எம்.பி.க்கள், 138 எம்.எல்.ஏ.க்கள் ஆக மொத்தம் 266 பேர் கையொப்பமிட்டிருந்தனர்.

வேட்புமனு தாக்கலின்போது

  1. எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி,
  2. பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்,
  3. பாஜக மூத்த தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ்,
  4. ஜஸ்வந்த் சிங்,
  5. முரளி மனோகர் ஜோஷி,
  6. கூட்டணித் தலைவர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ்,
  7. சரத் யாதவ்,
  8. பி.கே.திரிபாதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்

7 முதல்வர்கள்:

  1. நரேந்திர மோடி (குஜராத்)
  2. வசுந்தரா ராஜே சிந்தியா (ராஜஸ்தான்),
  3. நவீன் பட்நாயக் (ஒரிசா),
  4. பி.சி.கந்தூரி (உத்தரகண்ட்),
  5. ரமண் சிங் (சத்தீஸ்கர்),
  6. சிவராஜ் சிங் சௌஹான் (மத்தியப் பிரதேசம்),
  7. பிரகாஷ் சிங் பாதல் (பஞ்சாப்) ஆகிய மாநில முதல்வர்களும் வேட்புமனு தாக்கலின் போது இருந்தனர்.

பாந்தர் கட்சி ஆதரவு: ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் காங்கிரஸýடன் உறவை முறித்துக் கொண்ட பாந்தர் கட்சித் தலைவர் பீம் சிங்கும் வந்திருந்தார். குடியரசுத் தலைவர் பதவிக்கு மிகவும் பொருத்தமான தலைவர் ஷெகாவத் என்று அவர் சொன்னார்.

ஆதரவு கோஷம்: ராஜஸ்தானிலிருந்து ஏராளமான பாஜக தொண்டர்கள் தில்லி வந்திருந்தனர். அவர்கள் ஷெகாவத், தேர்தல் அதிகாரி அலுவலகத்தை அடைந்த போதும், அவர் மனு தாக்கல் செய்து விட்ட போதும் “ராஜஸ்தானின் ஒரே சிங்கம் பைரோன் சிங்’ என்று முழக்கமிட்டனர். “ஹிந்துஸ்தானத்துக்கு ஒரே சிங், அவர் பைரோன் சிங், பைரோன் சிங்’ “ஜெய் ஸ்ரீ ராம்’ என்றும் சிலர் கோஷமிட்டனர்.

திரிணமூல், சிவசேனை ஆப்சென்ட்: ஷெகாவத் வேட்புமனு தாக்கலின்போது பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணமூல் மற்றும் சிவசேனை கட்சியினர் வரவில்லை.

“திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் திரிவேதி பெயரும் ஷெகாவதுக்கு ஆதரவளிப்போர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. திரிவேதி தில்லி வரும் விமானம் தாமதம் காரணமாக அவரது கையொப்பத்தைப் பெற முடியவில்லை. மற்றொரு வேட்புமனு ஷெகாவத்துக்காக தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் திரிவேதி உள்ளிட்டோர் கையொப்பம் இடம்பெறும்’ என்று சுஷ்மா ஸ்வராஜ் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

“வேட்புமனு தாக்கலின்போது நட்வர் சிங் வந்துள்ளதும் அவர் முன்மொழிந்து கையொப்பம் இட்டுள்ளதும் காங்கிரஸ் தரப்பிலிருந்தும் வாக்குகள் கிடைக்க வழிவகுக்கும்.

“குடியரசுத் தலைவர் தேர்தல் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரதிபா பாட்டீல்- சுயேச்சை வேட்பாளர் பைரோன்சிங் ஷெகாவத் இடையிலான நேரடி போட்டியாக இருக்கும். வெற்றியாளராக ஷெகாவத்தே இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

“மனசாட்சிப்படி வாக்குகளிக்குமாறு கேட்டுக் கொள்வதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. காங்கிரஸின் அதிகாரப் பூர்வ வேட்பாளாரைத் தோற்கடிக்க அந்த வார்த்தையைப் பயன்படுத்தி அதற்கு இழிவான பெயரை தேடிக் கொடுத்தவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் வாக்களிக்கும்போது கவனத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.

நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதை ஷெகாவத் தவிர்த்து விட்டார். ஷெகாவத்தின் வெற்றி வாய்ப்பு குறித்து நிருபர்கள் கேட்டதற்கு “தேர்தல் களத்தில் இப்போதுதான் குதித்துள்ளோம்’ என்றார் வாஜ்பாய்.

—————————————————————————————

தன்மீதான குற்றச் சாட்டுகளுக்காக
ஷெகாவத் போட்டியிலிருந்து விலகிவிடுவாரா?
`அவுட்-லுக்’ இதழ் அம்பலப்படுத்துகிறது

சென்னை, ஜூலை 5- “பிரதிபா பாட்டில் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை யில் அவரை காங்கிர° கட்சி வாப° பெறவேண்டும்; அல் லது பிரதிபா பாட்டிலே போட் டியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்” என்று திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறார் ஜெயலலிதா!

“இது ஒரு வெட்கக்கேடான சூழ்நிலை” என்றும் அங்க லாய்த்திருக்கிறார் அவர்!
பிரதிபா பாட்டில் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை – ஆதாரமற்றவை என்று உச்சநீதிமன்றமே தள்ளு படி செய்த அதே தினத்தில் தான் ஜெயலலிதா இப்படிப் பேசியிருக்கிறார் செய்தியாளர் களிடம். இதனை அறியாமை என்பதா? அகம்பாவம் என் பதா?

பிரதிபா பாட்டிலை வெல்ல முடியாது; பா.ஜ.க.,வின் ‘சுயேச்சை வேட்பாளர்’ தோற் பது உறுதி என்ற நிலையில் விரக்தி, ஏமாற்றம் எரிச்சலுக் காளான பா.ஜ.க.,வினர் யார் யாரையோ கிளப்பிவிட்டு பிர திபா பாட்டிலுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் என்ற பெய ரில் சேற்றை வாரி இறைத்த படியே இருக்கிறார்கள்.

பா.ஜ.க.,வினரால் பகிரங்க மாக ஆதரிக்கப்படுபவரும், ஜெயலலிதாவின் மறைமுக ஆதரவு பெற்றவருமான ஷெகா வத் மீது இந்த மாதிரி குற்றச் சாட்டுகள் கூறப்பட்டால் – அவரை போட்டியிலிருந்து விலகிக் கொள்ள வைத்து விடு வார்களா இவர்கள்? அல்லது ஷெகாவத்தான் தாமாகவே போட்டியிலிருந்து விலகிக் கொண்டு விடுவாரா? இரண் டுமே நடக்காது; நடக்கவே நடக்காது.

ஷெகாவத் மீது குற்றச் சாட்டு எதுவுமில்லையா? அவர் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற் பட்டவரா?

9-7-2007 தேதியிட்ட ‘அவுட் லுக்’ ஆங்கில வார ஏடு – ஷெகாவத் மீதும் பல ஊழல் -லஞ்சம் – முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்று ஒரு பட்டியலையே வெளியிட்டுள்ளது.

1947-இல் ஷெகாவத் ஒரு சாதாரணப் போலீ°காரராக இருந்தார். அப்போதே அவர் லஞ்சம் வாங்கினார் – நடத்தை கெட்டவர் என்று குற்றஞ்சாட் டப்பட்டு பணியிலிருந்து ச° பெண்ட் செய்யப்பட்டார்.

1990-இல் அவர் ராஜ°தான் முதல்வராக இருந்தார். அப் போது அவர் தனது மருமகன் செய்த நில மோசடிக்கு முட் டுக்கொடுத்து – மருமகனைப் பாதுகாக்க அதிகார துஷ்பிர யோகம் செய்தார் என்று பத் திரிகைகளில் பரபரப்பாக செய்தி வெளியிடப்பட்டது.

ஷெகாவத்தின் மாப் பிள்ளை நர்வத்சிங் ரஜ்பி. (இவர் இப்போது ராஜ°தான் பா.ஜ.க., அமைச்சரவையில் தொழில் அமைச்சராக பதவி யில் இருக்கிறார்).
ஷெகாவத் முதல்வராவதற்கு முந்தைய காங்கிர° ஆட்சியில் பிகானீர் மாவட்டத்தில் இந் திரா காந்தி பெயரால் பாசனம் – குடிநீருக்காக ஒரு கால்வாய் வெட்டப்பட்டது. அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட போது “கையகப்படுத்தப்பட்ட நிலப் பகுதியில் 650 ஏக்கர் நிலம் எனக்கு சொந்தமானது.

ஆகவே அதற்குரிய நஷ்டஈடு தர வேண்டும்” என்று கோரினார் ஷெகாவத்தின் மாப்பிள்ளை.

அது அவருக்குச் சொந்த மான நிலமல்ல; போலி ஆவ ணங்கள் – மோசடியான ஆதா ரங்களைக் காட்டி நிலம் தன் னுடையது என்று தில்லு முல்லு செய்கிறார் அவர் என்று அப்போது அவர் மீது குற்றச் சாட்டுகள் எழுந்தன – சட்ட மன்றத்திலும் இந்த விவகாரம் வெடித்துக் கிளம்பியது. சுரேந் திர வியா° என்ற காங்கிர° உறுப்பினரின் இடைவிடாத முயற்சி காரணமாக – இந்த விவகாரத்தை விசாரிக்க – வருவாய்த்துறை சார்ந்த விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில், ஷெகாவத் தின் மாப்பிள்ளை சொல்வது உண்மைக்கு மாறானது; அவ ருக்குச் சொந்தமல்ல அந்த நிலங்கள்.

அப்போது, ஷெகாவத்தின் சம்பந்தியும், மாப்பிள்ளையின் தகப்பனாருமானவர் தாசில் தாராக உத்தியோகத்திலிருந் தார். அவர் தனது மகனுக்கு ஆதரவாக செயல்பட்டு – போலி ஆவணங்கள் மூலமாக நிலங்களை மகன் ரஜ்பி பெய ரில் பதிவு செய்து விட்டார். இதிலே அவரையும் அறியாமல் அவர் செய்துவிட்ட தவறு – ரஜ்பி பிறப்பதற்கு முன் தேதி யிட்டு பதிவு செய்திருந்ததினால் – இது முழுக்க முழுக்க மோசடி என்பது அம்பலமாகி விட்டது.

அதே காலகட்டத்தில் முதல் வர் ஷெகாவத்துக்கு மிகவும் நெருக்கமானவரான ஷாலினி சர்மா – மாநில சமூகநல வாரி யத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்! சில காலத் துக்குப் பிறகு விபசாரத் தொழி லில் ஈடுபட்டதாக ஷாலினியும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டார்கள் – இரண்டு பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளித்து நீதிமன்றம் தண்டனை வழங்கியது!

அப்போது அவர் ஏற்கெ னவே பா.ஜ.க., அமைச்சரவை யிலுள்ள முக்கிய அமைச்சர் களுக்கு இந்த மாதிரி விஷயங் களுக்கு சப்ளையர் ஆக இருந் தவர் என்ற திடுக்கிடும் தகவ லும் வெளிவந்தது. ஷெகாவத் – அவரது மருமகன் ரஜ்பி ஆகிய இரண்டு பேருமே ஷாலினியின் உயர்வுக்குப் பாடுபட்டவர்கள் என்பதை பத்திரிகைகள் பத்தி பத்தியாக எழுதின!

1992-இல் ஷெகாவத் அரசு குத்தகைதாரர் சட்டத்தில் திருத்தம் செய்து ஒரு மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. “இந்த மசோதா ஷெகாவத்தின் உற வினர்கள் சிலரை நில மோசடிக் குற்றத்திலிருந்து காப்பாற்றுவ தற்கென்றே கொண்டு வரப் பட்ட மசோதா” என்று அப் போதே சுரேந்திர வியா°-மத்திய உள்துறை அமைச்சர் எ°.பி.சவானுக்குக் கடிதம் எழுதி – ஷெகாவத்தின் உறவி னர்கள் அரசு ஆவணங்களில் செய்த நில மோசடியைப் பாது காக்கும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

2002-2003-இல் ஷெகாவத் துணை ஜனாதிபதி பதவியில் இருக்கும்போதே – 16 முறை டில்லியிலிருந்து தனது சொந்த மாநிலமான ராஜ°தானுக்கு அரசாங்க செலவில் விமானத் தில் பறந்தார். எதற்காக?

அது தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டம். பா.ஜ.க., வேட்பாளர்களைத் தேர்வு செய்ய – பரிந்துரை செய்ய இப்படி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து 16 முறை விமானப் பயணம் செய் தார் ஷெகாவத்.

ஷெகாவத் முதல்வராக இருந்த காலகட்டத்தில் பெண் கள் மீதான பாலின பலாத் காரம் தொடர்பான அக்கிர மங்கள் முந்தைய காலகட் டத்தைவிட எட்டு மடங்கு அதிகரித்தன. இதுபற்றிக் கருத் துக் கூறிய ஷெகாவத், “அங்கே ஒன்று இங்கே ஒன்று என்று நடைபெறும் கற்பழிப்புச் சம்பவங்களை பெரிதுபடுத்து வதா?

இதற்குப் போய் இவ் வளவு ஆர்ப்பாட்டங்களை பெண்கள் நடத்துவது ஏன்” என்றார்!

இவர் ஆட்சியில் இருந்த காலகட்டங்களில் எல்லாம் ராஜ°தானை ஒரு இந்துத்வா கோட்டையாக மாற்றிட அரும்பாடு பட்டார். “உங்கள் ஆட்சியில் மு°லிம்கள் கொடு மைகளுக்கு ஆளாக்கப்படுகி றார்களே; சிறுபான்மை மக் கள் ஒடுக்குமுறைக்கு ஆளாக் கப்படுகிறார்களே” என்ற கேள்வி எழுந்தபோது, “தொடர்ந்து காங்கிர° கட்சி மு°லிம்களைத் திருப்திப்படுத்த முயன்று கொண்டே இருக்கு மானால் – ராஜ°தானும் இன் னொரு குஜராத் ஆகிவிடும்” என்று கொக்கரித்தார் ஷெகா வத்!

இப்படி `அவுட்-லுக்’ வார ஏடு ஷெகாவத் மீதான லஞ்சம் – மோசடி -மதத் துவேஷம்பற்றி குற்றச்சாட்டுகளை அடுக்கடுக் காகப் பட்டியலிட்டு இருக் கிறது!
இப்படி பா.ஜ.க.,வினர் நிறுத் தியுள்ள வேட்பாளரின் ‘யோக் கியத்தன்மை’ வெட்ட வெளிச் சத்துக்கு வந்துள்ள நிலையில், பிரதிபா பாட்டிலைப் பற்றி குற்றச்சாட்டுகளைக் கூற இவர் களுக்கு என்ன அருகதை இருக் கிறது? குறிப்பாக ஜெயலலிதா இதுபற்றி வாய் கிழியப் பேச என்ன யோக்கியதை இருக் கிறது?

(நன்றி: `முரசொலி’ 5-7-2007)

——————————————————————————————-

சொத்து விவரங்களை வெளியிட்டார் ஷெகாவத்

13 ஜூலை 2007 – 19:39 IST

குடியரசுத் தலைவர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் பைரோன்சிங் ஷெகாவத் தனது சொத்து விவரங்களை இன்று வெளியிட்டார்.

இதன்படி ஷெகாவத்தின் வங்கி கணக்கில் ரூ. 25.60 லட்சமும், கையிருப்பாக ரூ. 1 லட்சமும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷெகாவத்தின் மனைவி சூரஜ் கன்வாரின் வங்கிக் கணக்கில் ரூ. 25.86 லட்சமும், கையிருப்பாக ரூ. 1.25 லட்சமும் உள்ளது. இதுதவிர சூரஜ் சேமிப்புக் கணக்கில் ரூ.5,849 ரொக்கம் உள்ளது.

பைரோன்சிங் ஷெகாவத்துக்கு என ரூ. 1 லட்சம் மதிப்புடைய நகைகள் உள்ளன. இதிலும் ஷெகாவத்தை மிஞ்சியுள்ளார் அவரது மனைவி சூரஜ். அவரிடம் ரூ. 5.25 லட்சம் மதிப்புடைய நகைகள் இருக்கின்றன.

இதுதவிர ரூ. 3.90 லட்சம் மதிப்புடைய வெள்ளி பொருட்களையும் அவர் வைத்துள்ளதாக சொத்துக் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது மூதாதையர் சொத்தாக ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கும் குறைவான நிலம் ஷெகாவத்துக்கு சொந்தமாக உள்ளது. அவரது மனைவியின் பெயரில் ஜெய்பூர் மாவட்டத்தில் 6.28 ஹெக்டேர் நிலம் உள்ளது.

கணவன் மனைவி இருவர் பெயரிலும் எந்த வங்கியிலோ அல்லது அரசு துறைகளிலோ எவ்வித தொகையும் நிலுவையில் இல்லை.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோர் சொத்துக் கணக்கு காட்டவேண்டிய கட்டாயம் இல்லை. எனினும் ஐமுகூ வேட்பாளர் பிரதீபா பாட்டீல் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

இதையடுத்து பிரதீபா பாட்டீல் தனது சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி வலியுறுத்தின.

இந்நிலையில் ஒரு முன்மாதிரி நடவடிக்கையாக தேஜகூ ஆதரவு பெற்ற ஷெகாவத் தனது சொத்து விவரங்களை வெளிட்டுள்ளார்.

———————————————————————————————————–

வருவாய்த் துறை ஊழல் வழக்கிலிருந்து மருமகனைக் காப்பாற்றிய ஷெகாவத்: காங்கிரஸ் தாக்கு

லக்னெü, ஜூலை 16: வருவாய்த் துறை ஊழல் வழக்கில் இருந்து தனது மருமகனைக் காப்பாற்றியவர்தான் ஷெகாவத் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் அசோக் கெலாட் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார்.

மேலும் அவர் கூறியது:

பிரதிபா மீதான பாஜகவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை. குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஷெகாவத்தை நிறுத்துவது தொடர்பாக பாஜக தலைவர்களுக்குள் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இது அவர்களுக்கிடையேயான பிரிவைக் காட்டுகிறது.

இன்னொரு வகையில், கட்சிக்குள் ராஜ்நாத் சிங்குக்கும், அத்வானிக்கும் இடையே நிலவும் பனிப்போர் மீதான கவனத்தை திசை திருப்பும் நோக்கிலும் அவர்கள் பிரதிபா மீதான குற்றச்சாட்டை கையில் எடுத்துள்ளனர்.

பாஜக தலைவர்களான அருண்ஜேட்லியும், ரவிஷங்கரும் பிரதிபா மீது குற்றம்சாட்டினர். இதற்கு ஷெகாவத்தின் தூண்டுதலே காரணம். குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்த போது, யாரையும் விமர்சனம் செய்யப்போவதில்லை, விமர்சனங்களையும் காதில் வாங்கிக் கொள்ளப் போவதில்லை என்று ஷெகாவத் தெரிவித்தார்.

ஆனால், அவரது தூண்டுதலின் பேரில்தான் தற்போதும் பாஜக தலைவர்கள் பிரதிபா மீது ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சுமத்தி வருகின்றனர்.

ஷெகாவத் தோல்வியுற்றவர்: தனது இதுவரையிலான அரசியல் வாழ்க்கையில் தேர்தலில் தோல்வி என்பதே கிடையாது என்று ஷெகாவத் சமீபத்தில் கூறியிருந்தார். இதை நான் மறுக்கிறேன். குஜராத் காந்திநகர் மக்களவைத் தொகுதித் தேர்தலில் ஒரு தடவையும், ராஜஸ்தான் கங்காநகர் சட்டப்பேரவைத் தொகுதித் தேர்தலில் ஒரு தடவையும் ஷெகாவத் தோல்வியைத் தழுவியுள்ளார்.

தற்போது மதச்சார்பின்மையை குறித்து பேசிவரும் ஷெகாவத், குஜராத் இனக் கலவரத்துக்கு பிறகு, ராஜஸ்தானையும் குஜராத் போல மாற்றுவோம் என்று கூறியவர்தான்.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே பிரதிபா பாட்டீல் தனது ஆளுநர் பதவியை உடனடியாக ராஜிநாமா செய்தார். அதுபோல, ஷெகாவத்தும் துணைக் குடியரத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்து தனது துணிச்சலை நிருபிக்க வேண்டும்.

பிரதிபா தனது நீண்டகால அரசியல் வாழ்வில் அப்பழுக்கற்றவர். அவர் மீது எப்போதும் குற்றச்சாட்டுக்கள் எழுந்ததில்லை என்றார் கெலாட்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பை புறக்கணிக்கப் போவதாக மூன்றாவது அணி எடுத்துள்ள முடிவு குறித்து கேட்டபோது, வாக்களிப்பை புறக்கணிப்பதைவிட நாட்டின் உயர்ந்த பதவிக்கு போட்டியிடும் ஒரு பெண்மணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்திருக்கலாம் என்றார் கெலாட்.

————————————————————————————–

தினமலரில் வந்த தகவல்.

ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போட தகுதி உள்ளவர்கள்:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மாநில சட்டசபைகள், லோக்சபா மற்றும் ராஜ்யசபா

ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

ஒவ்வொரு மாநிலமும், அந்த மாநிலத்தில் வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சாரப்படி பிரதிநிதித்துவம் பெறுகிறது. ஒவ்வொரு மாநிலமும் அதன் மொத்த எம்.எல்.ஏ.,க்களின் மூலம் பிரதிநிதித்துவம் பெறுகிறது.

ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும் ஓட்டு மதிப்பு உண்டு. மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையை ஆயிரத்தால் வகுத்தால் வரும் தொகைக்கு இணையாக இருக்கும். இந்த தொகையை மாநிலத்தின் மொத்த எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையால் வகுக்க வேண்டும்.

உதாரணம்:

ஆந்திர மாநிலம்

மொத்த மக்கள் தொகை 43,502,708: ஆயிரத்தால் வகுத்தால் வருவது 43,502.708 , மொத்த எம்.எல்.ஏ.,க்கள் 129, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,யின் ஓட்டு மதிப்பு: 43,502.708 ஐ 129 ஆல்வகுக்க வேண்டும் 147.96 = 148

மிக அதிகபட்ச மற்றும் மிகவும் குறைந்தபட்ச ஓட்டு மதிப்பு கொண்ட மாநிலங்கள்

உத்தர பிரதேசம் 208: சிக்கிம் 7

ஒவ்வொரு மாநிலத்தின் மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது?

* மாநில சட்டசபையில் உள்ள மொத்த சீட்களின் எண்ணிக்கையை ஒரு எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்புடன் பெருக்கி கொள்ள வேண்டும்.

*ஒவ்வொரு ஓட்டின் மதிப்பும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விடுவதால், மாநில வாரியாகவே ஓட்டுக்கள் எண்ணப்படும்.

ஓட்டு எண்ணிக்கை:

* பதிவான மொத்த ஓட்டுக்களில் பாதியளவுக்கு அதிகமான ஓட்டுகளை வேட்பாளர் பெற வேண்டும்.

* ஒவ்வொரு வேட்பாளரும் முன்னுரிமை ஓட்டு மூலம் எவ்வளவு ஓட்டுகள் பெற்றார் என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவு செய்வார். தேவையான அளவுக்கு ஓட்டுகள் பெற்று விட்டால், அந்த வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். இல்லாவிடில் இரண்டாவது சுற்று ஓட்டு எண்ணிக்கை துவங்கும்.

* முன்னுரிமை ஓட்டில் மிகவும் குறைந்த ஓட்டு பெற்ற வேட்பாளர்கள் இரண்டாவது சுற்று ஓட்டு எண்ணிக்கையில் இருந்து விலக்கப்படுவர். அவர் பெற்ற ஓட்டுகள் மீதியுள்ள வேட்பாளர்களுக்கு, இரண்டாவது சுற்று ஓட்டு எண்ணிக்கையின்படி பிரித்து கொடுக்கப்படும்.

* இந்த முறையும், தேவையான அளவுக்கு ஒரு வேட்பாளர் ஓட்டுகளை பெற்றுள்ளாரா என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரி தான் முடிவு செய்வார். அதன்படி ஓட்டுகள் பெற்று இருந்தால், வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

2007ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்

மொத்த ஓட்டுகளின் மதிப்பு . 5,49,408: அனைத்து ஓட்டுகளும் பதிவானது என்று எடுத்து கொண்டால் ஒரு

வேட்பாளர் வெற்றி பெற 5,49,408ஐ 2 ஆல் வகுக்க வேண்டும்.அதில் வரும் தொகையுடன் 1 ஐ கூட்ட

வேண்டும். இதன்படி ஒரு வேட்பாளர் 2,74,705 ஓட்டுக்களை பெற வேண்டும்.

பதவிக்காலம்

* ஐந்து ஆண்டு காலத்துக்கு ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவார்.

ஓட்டுச் சீட்டு

* ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுச்சீட்டில் எவ்வித அடையாளகுறியீடுகளோ, சின்னங்களோ இருக்காது. வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தான் இருக்கும்.

* ஒவ்வாரு வாக்காளரும் தனது முன்னுரிமை ஓட்டு குறித்து ஒவ்வொரு வேட்பாளருக்கு எதிராகவும் குறிப்பிட வேண்டும்.

* குறிப்பிட்ட வேட்பாளருக்கு தன்னை பொறுத்தவரை முன்னுரிமை பெற்றவர் என்பதை குறிக்க அந்த வேட்பாளருக்கு எதிராக “1′ என்று குறிப்பிட வேண்டும். இரண்டாவது முன்னுரிமை பெற்ற வேட்பாளருக்கு எதிராக “2′ என குறிப்பிட வேண்டும்.

Posted in Backgrounder, Bhairon Singh Shekhawat, Biography, Biosketch, BJP, Elections, Faces, History, Independent, Info, Information, NDA, Patil, people, Polls, Pratiba, Pratibha, Pratibha Patil, President, Prez, Raj, Rajasthan, Reference, RSS, Shekavat, Shekavath, Shekawat, Shekawath, Veep, VP | 1 Comment »

India’s Ruling Coalition Nominates Pratibha Patil for President

Posted by Snapjudge மேல் ஜூன் 14, 2007

பதுமை அல்ல குடியரசுத் தலைவர்

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

நாட்டின் 12-ஆவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

குடியரசுக்கான அழகுப் பதுமை என்று குறைத்துக் கூறிவிட முடியாது இந்தப் பதவியை!

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இது உறுதி செய்யப்பட்டே வந்திருக்கிறது. கடந்த காலங்களில் பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் மறைமுகமாகவும் நேரடியாகவும் மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.

விடுதலைக்குப் பின் ராஜாஜியைக் குடியரசுத் தலைவராக்க நேரு விரும்பினாலும் காங்கிரஸ் தலைவர்கள் பலர், ராஜேந்திர பிரசாத்தையே விரும்பினர்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியே ராஜேந்திர பிரசாத்தை அறிவிக்க, நேருவும் ஏற்றுக்கொண்டு 12 ஆண்டுகள் பதவியில் இருந்தார். இவருக்குக் கிடைத்த இரண்டாவது வாய்ப்பு வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை.

ஹிந்து சீர்திருத்த மசோதாவைப் பிரதமர் நேரு கொண்டுவந்தபோது ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார் ராஜேந்திர பிரசாத். மசோதாவில் குறிப்பிட்ட மாற்றத்தை நேரு செய்ய, டாக்டர் அம்பேத்கர் பதவி விலகினார்.

ராஜேந்திர பிரசாத் துவாரகை சென்றபோது மதரீதியாகக் குடியரசுத் தலைவர் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று நேரு தடுத்ததும் பிரச்னைகளை எழுப்பின.

டாக்டர் இராதாகிருஷ்ணனும் இந்திரா காந்தியும் பொறுப்பில் இருந்தபொழுது கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன. பின் வந்த கல்வியாளர் ஜாகீர் உசேன் இரு ஆண்டுகளே பொறுப்பிலிருந்து மறைந்துவிட்டார்.

1969 இல் நீலம் சஞ்சீவ ரெட்டியை எதிர்த்து நின்ற வி.வி. கிரி வெற்றி பெற முழு முயற்சிகளை இந்திரா காந்தி மேற்கொண்டார்.

முதன்முதலாக இரண்டாவது விருப்ப வாக்குகள் என்ற அடிப்படையில் கிரி வெற்றி பெற்றார். இதனால் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டது.

கிரிக்குப் பின் இந்திரா காந்தியின் விருப்பத்தின்பேரில் பதவிக்கு வந்தார் பக்ருதீன் அலி அகமது. அவர் காலத்தில்தான் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். உரிமைகள் மறுக்கப்பட்டன.

ஜனதா கூட்டணி ஆட்சிக் காலத்தில் பதவிக்கு வந்த சஞ்சீவ ரெட்டி, பிரதமரான மொரார்ஜி தேசாய்க்கு விரோதமாகச் செயல்பட்டார் என்ற விமர்சனமும் எழுந்தது.

ரெட்டிக்குப் பின் ஜெயில்சிங். இவர் காலத்தில் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டு, ராஜீவ் காந்தி பிரதமரானார். இவருக்கும் ராஜீவ் காந்திக்கும் அஞ்சல் துறை மசோதா – 1986 தொடர்பாகப் பிரச்னை ஏற்பட்டது.

ஜெயில்சிங்குக்கு ராஜீவ் அரசு தெரிவிக்க வேண்டிய அரசு பரிபாலனம் சம்பந்தமான செய்திகளைத் தெரிவிக்கவில்லை என்றும் அரசியல் அமைப்புச் சட்டத்தை ராஜீவ் காந்தி மீறிவிட்டார் என்றும் மோதல்கள் நடந்தன.

ராஜீவ் மீது போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு, ஏனைய குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சியினர் ஜெயில்சிங்கிடம் வழங்கிய மனு நிலுவையில் இருந்தபோது, பிரதமர் ராஜீவை ஜெயில்சிங் நீக்குவார் என்ற வதந்திகள் எழுந்தன.

சீக்கியரான ஜெயில்சிங் 1984 இல் நடைபெற்ற சீக்கிய கலவரங்களை ஒட்டி அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொண்டது ராஜீவ் காந்திக்குப் பிடிக்கவில்லை.

ஜெயில்சிங்குக்குப் பின் ஆர். வெங்கடராமன். இவர் காலத்தில்தான் வி.பி. சிங்கின் கூட்டணி அமைச்சரவை அமைந்ததும் கவிழ்ந்ததும். அப்போது தேசிய அரசு அமைக்கலாமா என்ற விவாதங்களும் எழுந்தன.

இவர் காலத்தில் சந்திரசேகர் தலைமையிலான குறுகிய கால அரசாங்கம், “அதர்வைஸ்’ என்ற சொல்லைக் கொண்டு பிரிவு 356-ஐ பயன்படுத்தித் தமிழகத்தில் திமுக அரசைக் கலைக்கச் செய்தது.

ராஜீவ் படுகொலையைத் தொடர்ந்து நரசிம்மராவ் பிரதமர் ஆனார். புதிய பொருளாதாரத் திட்டங்களுக்கு அடிகோலப்பட்டது. சங்கர் தயாள் சர்மா, கே.ஆர். நாராயணன் எனப் பொறுப்புக்கு வந்தனர். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நரசிம்ம ராவ் ஆட்சியைக் கண்டித்தார் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா.

பிகார், உத்தரப்பிரதேச அரசுகளைக் கலைக்கும் வாஜ்பாய் அரசின் தீர்மானங்களைத் திருப்பி அனுப்பினார் கே.ஆர். நாராயணன்.

கலாமின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ல் முடிவடைகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த ராஜாஜியும் கலாமும்தான் பதவியிலிருந்து வெளியேறும்போது தங்களுடைய உடைமைகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வராதவர்கள் என்பதன் மூலம் தமிழகத்துக்குப் பெருமை சேர்ப்பவர்களாக இருப்பார்கள்.

குடியரசுத் தலைவரின் அதிகாரங்களின் தன்மை என்ன? இதுவரை நடந்த நடைமுறைகளும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பார்வையிலும் வெறும் “ரப்பர் ஸ்டாம்ப்’ மாதிரி இருந்தாலும், பிரதமர் மற்றும் அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் அவர்.

ஐந்து ஆண்டு காலத்திற்கு மாதம் ரூ. 50 ஆயிரம் ஊதியத்துடன் வசதியான வாழ்க்கை, சிம்லா, ஹைதராபாதில் அரண்மனை போன்ற பங்களாக்கள் போன்ற சகல வசதிகளுடன், முப்படைகளின் தளபதி, நாட்டின் இறையாண்மையைக் காக்கும் பாதுகாவலர், முதல் குடிமகன் எனப் பல பெருமை.

எனினும், பிரதமர் தலைமையில் இருக்கின்ற அமைச்சரவை வழங்குகின்ற ஆலோசனையின் பேரில்தான் அவர் இயங்குகிறார்.

பல நேரங்களில் நிலையற்ற அரசுகள் மத்தியில் அமையும்போது குடியரசுத் தலைவரின் பங்களிப்பு முக்கியமாகக் கருதப்பட்டது.

ஜனதா ஆட்சி விழுந்தவுடன் சரண்சிங்கைப் பதவி ஏற்க சஞ்சீவ ரெட்டி அழைத்ததும், ’96 தேர்தலுக்குப் பின் வாஜ்பாயை ஆட்சி அமைக்க அழைத்ததும் அந்தப் பதவியின் அதிகார மேலாண்மையை வெளிப்படுத்தின.

பிரதமர்களான நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் போன்றவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளே குடியரசுத் தலைவர் என்பவர் பதுமை அல்ல என்பதைத் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு விருப்பத்திற்கேற்றவாறு மாநில அரசுகளைக் கலைத்தாலும் நாடாளுமன்றத்தில் யாருக்கு ஆதரவு அதிகம் என்பது போன்ற நெருக்கடியான காலத்தில் சர்வ அதிகாரமிக்கவராக மாறுகிறார் குடியரசுத் தலைவர்.

குடியரசுத் தலைவர் மாளிகை போன்று 200 ஆயிரம் சதுர அடி கொண்ட வசிப்பிடமும், மொகல் தோட்டத்துடன் 13 ஏக்கர் பரப்பளவுள்ள இருப்பிடமும் உலகில் எந்த நாட்டின் அதிபருக்கும் கிடையாது.

ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்த காலத்தில் மாளிகையின் 350 அறைகளில் ஒரேயொரு அறையைத்தான் பயன்படுத்தினார். (அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில்கூட 132 அறைகள்தான் உள்ளன.) இவ்வளவு வசதிகளையும் பெறப் போகும் 12-ஆவது குடியரசுத் தலைவர் யார் என்பது இன்றைய கேள்வி.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தங்கள் வேட்பாளராக பிரதிபா பாட்டீலை அறிவித்துள்ளது காங்கிரஸ் கூட்டணி.

வெற்றி பெற்றால் நாட்டின் மிக உயர்ந்த பதவியை அலங்கரிக்கப்போகும் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெறுவார் இவர்.

எதிரணியில் சுயேச்சை வேட்பாளராகத் தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் நிறுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம்.

தேர்தல் சதுரங்கத்தில் வென்று குடியரசுத் தலைவர் மாளிகைக்குக் குடியேறப் போகும் பெருந்தகையாளர், நாட்டின் நலனையும் பன்மையில் ஒருமையான இந்தியாவையும் தொலைநோக்கோடு கொண்டுசெல்ல வேண்டியதுதான் இன்றைய தேவை.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்.)


தேர்தல்களில் தோல்வியே காணாதவர் பிரதிபா பாட்டீல்!புது தில்லி, ஜூன் 15: குடியரசுத் தலைவர் பதவிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள் ஆதரவில் நிறுத்தப்படும் பிரதிபா பாட்டீல் (72) தேர்தல்களில் தோல்வியே அறியாதவர். ஆண்கள் மட்டுமே வகித்துவந்த குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரிக்கப் போகும் முதல் பெண்மணி.மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பிரதிபா எந்த அரசியல் சர்ச்சையிலும் சிக்காதவர். வழக்கறிஞர். கல்லூரி நாள்களில் சிறந்த டேபிள் டென்னிஸ் ஆட்டக்காரர்.ஜல்காவோன் மாவட்டத்தில் 1934 டிசம்பர் 19-ம் தேதி பிறந்தார். எம்.ஏ. எல்.எல்.பி. பட்டம் பெற்றார். படித்து முடித்ததும் அதே நகரில் வழக்கறிஞராகத் தொழில் செய்தார்.மகாராஷ்டிர சட்டப் பேரவை உறுப்பினராக 1962 முதல் 1985 வரை பதவி வகித்தார். நகர்ப்புற வளர்ச்சி, வீடமைப்பு, கல்வி, சுற்றுலா, சட்டமன்ற நடவடிக்கைகள்துறை, பொது சுகாதாரம், சமூக நலம், கலாசாரத்துறை ஆகியவற்றில் அமைச்சராகப் பணி புரிந்தவர். துணை அமைச்சராக முதலில் அமைச்சரவையில் இடம் பெற்றவர், காபினட் அந்தஸ்துள்ள அமைச்சராக நியமனம் பெறும் அளவுக்குத் திறமையாகப் பணியாற்றினார்.மகாராஷ்டிர முதலமைச்சராக சரத் பவார் 1979 ஜூலையில் பதவி வகித்தபோது, எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியவர் பிரதிபா பாட்டீல்.1985-ல் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டுக்குப் பிறகு மாநிலங்களவை துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986 நவம்பர் 18 முதல் 1988 நவம்பர் 5 வரை அப்பதவியில் இருந்தார். இதே காலத்தில் நாடாளுமன்றத்தின் உரிமைக்குழு தலைவராகவும் இருந்தார்.1988 முதல் 1990 வரை மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவி வகித்தார்.1991-ல் அமராவதி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.சட்டப் பேரவை, மக்களவை ஆகியவற்றுக்குப் போட்டியிட்டபோதெல்லாம் வெற்றியே கண்டவர் பிரதிபா.மக்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிந்த பிறகு அரசியலிலிருந்தே ஓய்வு பெற்றவர் போல சற்று ஒதுங்கி இருந்தார். பிறகு தேர்தல் பிரசாரத்தின்போது தீவிரமாக ஈடுபட்டார்.2004 நவம்பரில் கட்சித் தலைமையே அவரை அழைத்து ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமித்தது.குடும்ப வாழ்க்கை: பிரதிபா பாட்டீலுக்கு 1965 ஜூலை 7-ம் தேதி திருமணம் நடந்தது. கணவர் டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத். சிறந்த கல்வியாளர். இத் தம்பதியருக்கு ஜோதி ரதோர் என்ற மகளும், ராஜேந்திர சிங் என்ற மகனும் உள்ளனர்.பிரதிபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத், அமராவதி மாநகராட்சியின் முதல் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விளையாட்டுத்துறையிலும் கல்வித்துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஷெகாவத் 1985-ல் மகாராஷ்டிர பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இந்தியாவில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் கூட்டணி சார்பில் பிரதீபா பாட்டில் போட்டி

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளராக ராஜஸ்தான் மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் பிரதிபா தேவிசிங் பாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இதை அறிவித்தார் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி.

பிரதிபா பாடீலை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்திருப்பது, இந்தியக் குடியரசின் 60-வது ஆண்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்று மகிழ்ச்சி தெரிவித்தார் சோனியா.

சட்டத் துறையில் பட்டம் பெற்ற பிரதிபா பாட்டில் 72 வயதானவர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அவர், தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுவார்.
மகாரஷ்டிர மாநிலத்தின் காபினட் அமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும், நாடாளுமன்ற மேலவை துணைத் தலைவராகவும், மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.

உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் உள்பட காங்கிரஸ் பரிந்துரைத்த பெயர்களை இடதுசாரிக் கட்சிகள் நிராகரித்ததை அடுத்து, பிரதிபா பாடீலுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கபடுவதற்கான ஒரு துவக்கமாக தான் கருதுவதாக தமிழக முதல்வர் கருணாநிதி கருத்து வெளியிட்டுள்ளார்.


பிரதிபா பாட்டீல், இந்தியப் பெண்களுக்கு கெüரவம்!நீரஜா செüத்ரிஉங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே!இந்தியா சுதந்திரம் பெற்ற 60-வது ஆண்டில், குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒரு “”பெண்ணை”த் தேர்வு செய்திருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று சோனியா காந்தி வர்ணித்துள்ளார்.நான்கு சுவர்களுக்குள் அடைந்துகிடந்த பெண் இனத்துக்கே பெருமை தேடித்தரும் வகையில், நாட்டின் உயர்ந்த பதவிக்கு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.இத் தேர்வு இப்படி சுபமாக முடிந்திருந்தாலும், காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள் ஆகிய முத்தரப்பும் அவரை முதல் விருப்பமாகத் தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.யார் யாரின் பெயர்களையோ வரிசையாகச் சொல்லி, இவர்களுக்குப் பிடிக்கவில்லை, அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று கழித்துக் கட்டி, கடைசியில் எப்படியோ தேர்வு செய்யப்பட்டவர்தான் அவர் என்பதில் சந்தேகமே இல்லை.”சிவராஜ் பாட்டீலைத்தான் தேர்வு செய்ய வேண்டும்’ என்று சோனியா காந்தி கூற, “கூடவே கூடாது’ என்று இடதுசாரிகள் விடாப்பிடியாக எதிர்க்க அவரைக் கைவிட நேர்ந்தது.அப்துல் கலாமை எப்படி தேர்ந்தெடுத்தார்களோ அதே போலத்தான் பிரதிபாவையும் தேர்வு செய்திருக்கிறார்கள்.2002-ல் இதே போன்ற சூழலில் அப்போதைய குடியரசு துணைத் தலைவர் கிருஷ்ணகாந்த்தான் குடியரசுத் தலைவர் ஆவார் என்று நம்பப்பட்டது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய்கூட கிருஷ்ண காந்திடமே, “”நீங்கள்தான் வேட்பாளர்” என்று கூறியிருந்தார்.ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே ஒரு பிரிவினர் அவரைக் கடுமையாக நிராகரித்ததால், சர்ச்சைக்கு அப்பாற்பட்டவரான அப்துல் கலாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். (கிருஷ்ண காந்த் அந்த அவமானத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியிலேயே சில வாரங்களுக்கெல்லாம் மரணம் அடைந்தார்.)குடியரசுத் தலைவராக வரவேண்டியவரின் நேர்மை, கல்வி, அனுபவம், சேவை, நடத்தை ஆகியவற்றை ஒப்புநோக்கி, விருப்பு, வெறுப்பு இல்லாமல் விவாதம் நடத்தி தேர்வு செய்திருந்தால் பிரதிபாவை கடைசியாகத் தேர்வு செய்ததைக் கூட குறையாகச் சொல்ல முடியாது.ஆனால் கலாமும் சரி, பிரதிபாவும் சரி முதல் தேர்வு அல்ல. இதற்கு மூல காரணம் கூட்டணி அரசு என்ற நிர்பந்த அரசியல் சூழலே.அர்ஜுன் சிங் வேண்டாம் என்று சோனியாவும், சிவராஜ் பாட்டீல், சுசில் குமார் ஷிண்டே, கரண் சிங் வேண்டாம் என்று இடதுசாரிகளும் நிராகரித்த பிறகு, “வேட்பாளர் பெண்ணாக இருந்தால் எப்படி?’ என்று கேட்கப்பட்டது.

அப்போதும்கூட பிரபல காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டே, மோஷினா கித்வாய் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக பிரதிபா தேர்வு செய்யப்பட்டார். அவருடைய கணவர் தேவிசிங் ஷெகாவத், சீகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜஸ்தானியர், பைரோன் சிங் ஷெகாவத்தைப் போலவே தாக்குர் சமூகத்தவர் என்றதும் பிரதிபாவுக்கு ஒப்புதல் கிடைத்தது.

சொல்லப் போனால், வேட்பாளராக பிரதிபா தேர்ந்தெடுக்கப்பட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அல்ல, பைரோன் சிங் ஷெகாவத்தான் காரணம்!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரி கட்சிகள், மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகியவற்றின் மொத்த வாக்கு எண்ணிக்கையால் காங்கிரஸ் தேர்வு செய்யும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்றாலும் பைரோன் சிங் ஷெகாவத்துக்கு பிற கட்சி உறுப்பினர்களிடையே இருக்கும் செல்வாக்கு, மரியாதை ஆகியவற்றால் காங்கிரஸ் தலைமை மிகவும் அரண்டு போயிருக்கிறது.

எனவேதான் “”ஷெகாவத்” என்ற பின்னொட்டுப் பெயர் வருகிற பிரதிபாவைத் தேடிப்பிடித்து நிறுத்தியிருக்கிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் ஆகியவற்றைச் சேர்ந்த எவராவது மாற்றி வாக்களித்தால்தான் பிரதிபா தோற்பார். அப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதால் பிரதிபா தேர்ந்தெடுக்கப்படுவது நிச்சயமாகிவிட்டது. அவரும் தாக்குர் என்பதால் தாக்குர்கள் அணி மாறி வாக்களிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்குகள்தான் சிதறும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மராட்டியத்தைச் சேர்ந்த எவரும் இதுவரை குடியரசுத் தலைவராகவோ, துணைத் தலைவராகவோ பதவி வகித்ததில்லை, எனவே நம் மாநிலத்தைச் சேர்ந்தவரைத் தோற்கடிப்பதா என்ற கேள்வி சிவ சேனையினரின் நெஞ்சத்திலே கனன்று கொண்டிருக்கிறது.

வலுவான வேட்பாளர் தேவை. எனவே பிரணாப் முகர்ஜியைத்தான் நிறுத்த வேண்டும் என்று இடதுசாரிகள் ஆரம்பத்தில் வற்புறுத்திக் கொண்டிருந்தனர். பிரதிபா அப்படி வலுவானவர் அல்ல என்றாலும் இடதுசாரிகள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். “”வலுவானவர்”, “”வலுவற்றவர்” என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. ஆர்ப்பாட்டம், பந்தா ஏதும் இல்லாமல் பணிபுரிந்தால் அவர் வலுவற்றவரா?

பிரதிபாவின் அரசியல் வாழ்க்கையைப் பார்க்கும்போது நிரம்ப அனுபவமும், அறிவும், பொறுமையும், திறமையும் உடையவர் என்பது புலனாகிறது.

பொதுவாழ்வில் நேர்மை, நன்னடத்தை, அடக்கம் ஆகியவற்றின் சின்னமாகத் திகழ்ந்திருக்கிறார். திறமைக்கேற்ப கிடைத்த பதவிகளை முறையாக வகித்திருக்கிறார்.

பதவிக்காக ஆசைப்பட்டு தன்னை தரம் தாழ்த்திக் கொள்ளாமல் இருந்திருக்கிறார். சமூகப் பணி செய்த பிறகே அரசியலுக்கு வந்திருக்கிறார். இதுவரை அவரைப்பற்றி பரபரப்பாக எதுவுமே பேசப்படவில்லை என்பதே அவருக்குச் சாதகமானது. அவரால் எவருடைய அரசியல் வாழ்வுக்கும் எதிர்காலத்துக்கும் ஆபத்து இல்லை என்பதால் எளிதாகத் தேர்வு பெற்றுவிட்டார்.

பிரதிபா, ஷெகாவத் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று முதலில் சோனியாவிடம் கூறியவரே சரத் பவார்தான். மகாராஷ்டிரத்தில் பவாருக்கு எதிரான காங்கிரஸ்காரர்கள் வரிசையில் பிரதிபாவுக்கு முக்கிய இடம் உண்டு என்றாலும் அவருடைய தகுதிகளை மெச்சினார் பவார்.

இதுவரை பதவியில் இருந்த குடியரசுத் தலைவர்கள் தங்களுடைய சிறப்பான செய்கைகள் மூலம் முத்திரை பதித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

ஆர். வெங்கட்ராமனை “”சட்ட புத்தகத்தில் சொல்லியபடியே நிர்வகிப்பவர்” என்றார்கள்.

அரசியல் ஸ்திரமற்ற தேர்தல் முடிவுகள் வந்து அடுத்த நிர்வாகி யார் என்ற இருள் சூழும்போது, வானில் நம்பிக்கையூட்டும் மின்னல்கீற்று போன்றவர்தான் குடியரசுத் தலைவர் என்று நிரூபித்தவர் ஆர்.வெங்கட்ராமன்.

“”செயல்படும் குடியரசுத் தலைவர்” என்று தன்னை அழைத்துக் கொண்ட கே.ஆர். நாராயணன், வாஜ்பாய் அரசின் பல முடிவுகளைக் கேள்வி கேட்டு திருப்பி அனுப்பினார்.

அப்துல் கலாம் மக்களுடன் ஒன்றிவிட்டவர். மக்களும் அவரைத் தங்களுடையவர் என்று மனதார ஏற்றுக் கொண்டனர். எனவே அவர் “”மக்களின் குடியரசுத் தலைவராக” பெயர்பெற்றுவிட்டார்.

பிரதிபா பாட்டீல் எப்படி பேர் வாங்குகிறார் என்று பார்ப்போம்.

—————————————————————————————

பிரதிபாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

சென்னை, ஜூன் 20: வட இந்தியாவில் ஹிந்துப் பெண்கள், முஸ்லிம் ஆட்சியாளர்கள் காலத்தில்தான் தங்களை காத்துக்கொள்ள தலைக்கு முக்காடு போடும் பழக்கம் வந்தது என்று கூறியதற்காக, பிரதிபா பாட்டீலுக்கு நாடு முழுக்க எதிர்ப்பு வலுத்து வருகிறது.

குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக காங்கிரஸ் கட்சியால் முன்மொழியப்பட்டுள்ளவர் பிரதிபா பாட்டீல் என்பது குறிப்பிடத்தக்கது.

“குங்கட்’ என்று அழைக்கப்படும் முக்காடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் தெரிவித்த கருத்து காரணமாக எதிர்ப்பு கொழுந்து விட்டு எரியத் தொடங்கி உள்ளது.

தேசியக் கட்சிகளும், மாநில அளவிலான கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் பிரதிபாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

சர்ச்சையைக் கிளப்பிய பேச்சு: மகாராணா பிரதாப்பின் 467-வது பிறந்த நாள் நிகழ்ச்சி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதிபா பாட்டீல்,””வட இந்தியாவில் ஹிந்துப் பெண்கள் முக்காடு போட்டு முகத்தை மறைக்கும் முறை மொகலாயர்களின் காலத்தில் ஏற்பட்டது. மொகலாய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ளவே பெண்கள் முக்காடு அணியத் தொடங்கினர்” என்றார்.

சுதந்திர இந்தியாவில் இந்த முக்காடு முறை கைவிடப்பட வேண்டும், இதுபோன்ற முறைகள் தொடராமல் தடுத்து நிறுத்துவது நமது கடமை என்றார் அவர்.

“”இந்தியாவில் முக்காடு முறை 13-வது நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. மொகலாயர் ஆட்சிக் காலத்தில் இந்த முறை தொடங்கப்பட்டது எனக் கூறுவது சரியல்ல” என்று கோல்கத்தாவைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் கௌசிக் ராய் தெரிவித்தார்.

த.மு.மு.க. கண்டனம்: பர்தா அணிவது முஸ்லிம் பெண்களின் கடமையும், உரிமையும் ஆகும். அதை விமர்சிப்பது ஒரு மாநில ஆளுநருக்கு அழகல்ல. இவ்வாறு கூறுவதன் மூலம் சங்கப் பரிவாரின் குரலை அவர் எதிரொலிக்கிறார் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கண்டித்துள்ளார்.

தர்மசங்கடம்: சிறுபான்மையினரின் எதிர்ப்பு வலுத்து வருவது காங்கிரஸின் தலைமைக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களுக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
———————————————————————————————–
பிரதிபாவுக்கு எதிரான தகவலுடன் சிறிய புத்தகத்தை வெளியிட்டது பாஜக

புதுதில்லி, ஜூன் 28: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி- இடதுசாரி வேட்பாளராக போட்டியிடும் பிரதிபா பாட்டீலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய சிறிய புத்தகத்தை பாஜக புதன்கிழமை வெளியிட்டது.

இப் புத்தகத்தில் இரண்டு கட்டுரைகளை முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சௌரி எழுதியுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையை ஊழலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தில்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் இப் புத்தகம் விநியோகிக்கப்பட்டது.

கொலையில் தொடர்புடைய சகோதரரைப் பாதுகாத்தார், தான் தலைவராக இருந்த சர்க்கரை ஆலை வங்கிக் கடனை செலுத்தவில்லை, அவரது பெயரில் ஏற்படுத்தப்பட்ட ஏழை பெண்கள் முதலீடு செய்த கூட்டுறவு வங்கி திவலானது என்று பிரதிபா மீது புகார் படலமாக அமைந்துள்ளது புத்தகம்.

இந்தியாவின் குடியரசுத் தலைவராக களங்கம் நிறைந்தவரும் ஊழல்பேர்வழியும் வர வேண்டுமா? பெண்களுக்கு அநீதி இழைந்தவர் குடியரசுத் தலைவர் ஆகலாமா என்று கேள்வி எழுப்புகிறது இந்தப் புத்தகம்.

மன்மோகன் கண்டனம்

பிரதிபா பாட்டீல் புகழுக்கு களங்கம் கற்பிக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. ஆனால் அந்த முயற்சியில் அவை வெற்றி பெறாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

பிரதிபாவுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் எந்தவித புகாரும் இல்லை என்றும் அவர் சொன்னார்.

கலாம் விவகாரம்:

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது உயர் மதிப்பு வைத்துள்ளோம். “வெற்றி உறுதி என்று தெரிந்தால் மீண்டும் போட்டி’ என்று அவர் கூறியதாக வந்த செய்தியின் அடிப்படையிலேயே மத்திய அமைச்சர்கள் பிரியரஞ்சன் தாஷ் முன்ஷி, சரத் பவார் கருத்து தெரிவித்தனர். தேர்தலில் போட்டியிட ஒருவர் விரும்பினால் வெற்றி உறுதி என்று தெரிந்தால் மட்டுமே போட்டி என்று கூறுவது சரியானது இல்லை என்றார் பிரதமர்.

———————————————————————————————–

பிரதீபா பட்டீல் உறவினர்களால் திவாலான பெண்கள் வங்கி: ஊழியர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

ஜலகோன், ஜுன். 28-

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் பிரதீபா பட்டீல் உறவினர்கள் மீது தனியார் தொலைக்காட்சி சானல் ஒன்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை தனது புலனாய்வு செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

அதில் கூறப்படுவதாவது:-

பிரதீபா பட்டீல் பெயரில் 1973-ம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள ஜலகோனில் “பிரதீபா மகிளா சககாரி” என்ற பெயரில் பெண்கள் கூட்டுறவு வங்கி ஆரம்பிக்கப்பட்டது. இந்த வங்கியை நிறுவியர் பிரதீபா பட்டீல் என்றாலும் தற்போது அவருக்கும் இந்த வங்கிக்கும் சம்பந்தமில்லை.

எனினும் இந்த வங்கியில் பிரதீபா பட்டீலின் அண்ணன் திலீப் சிங் பட்டீல் மற்றும் அவரது உறவினர்கள் லட்சக்கணக்கான ரூபாயை கடனாக பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர். இதனால் ரூ.2.24 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு கடந்த 2003-ம் ஆண்டு அந்த வங்கி திவாலானது என்று அந்த தனியார் தொலைக்காட்சி தனது புலனாய்வுச் செய்தியில் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் அந்த கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்த ஊழியர்கள் கோர்ட்டில் திலீப் சிங் பட்டீல் மற்றும் பிரதீபா பட்டீலின் உறவினர்களுக்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

“திலீப்சிங் பட்டீல் “பிரதீபா மகிளா சககாரி வங்கியின்” தொலைபேசியின் மூலமாக மும்பையில் உள்ள பங்கு சந்தை தரகர்களுக்கு மணிக் கணக்கில் அடிக்கடி தொலை பேசியில் பேசினர். இந்த வகையில் ரூ.20 லட்சத்தை தொலைபேசி கட்டணமாக வங்கி கட்ட வேண்டியிருந்தது.

கார்கில் வீரர்களுக்கு உதவுவதற்காக ஊழியர்கள் அனைவரும் தங்களது ஒரு நாள் சமபளத்தை அளித் தோம். ஆனால் அந்த பணம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு போய் சேரவில்லை. இடையில் ஊழல் நடந்துள்ளது. பிரதீபா பட்டீலின் உறவினருக்கு சொந்தமான சர்க்கரை ஆலைக்கு வங்கி பெரும் பணம் கடனாக கொடுத்திருந்தது. ஆனால் அப்பணம் திருப்பித் தரவில்லை. இதனால் வங்கி திவாலானது.

இவ்வாறு பல்வேறு குற்ற சாட்டுக்களை பிரதீபா பட்டீலின் உறவினர்கள் மீது பிரதீபா மகிளா சககாரி வங்கி யின் ஊழியர்கள் தாங்கள் தாக்கல் செய்த மனுவில் குறிப் பிட்டுள்ளனர்.

———————————————————————————————–

பிரதிபா முகத்திரையை விலக்கினால்… (2)

ஜலகாம் கூட்டுறவு வங்கி சமூக நீதி காத்த விதம்!

பிரதிபா மகிளா சஹகாரி வங்கியில், “”சமூக நீதி”யை எப்படிக் காப்பாற்றினார்கள் என்பதை ஊழியர்கள் சங்கம் சொல்லியிருப்பது தனிக்கதை.

வங்கியில் ஊழியர்களை வேலைக்குச் சேர்ப்பதில் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச நியதிகளைக்கூட வங்கியின் நிர்வாகிகள் கடைப்பிடிக்கவில்லை. இதனால் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு உரிய எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு தரப்படவில்லை. நிர்வாக இயக்குநர்கள் தங்களுடைய உறவினர்களுக்கே அந்த வேலைகளை வழங்கினார்கள்.

கடனில் வங்கி மூழ்குவதைத் தடுக்க, பிரதிபா பாட்டீல் அவருடைய அண்ணன் திலீப் சிங் பாட்டீல் மற்றும் பிற உறவினர்களின் சொத்துகளை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் சங்கம் தனது மனுவில் கோரியிருந்தது. அவர்களுக்கு எப்படி அவ்வளவு சொத்து குறுகிய காலத்தில் சேர்ந்தது என்று விசாரணை நடத்துமாறும் கோரியிருந்தது. மகாராஷ்டிர மாநில அரசின் கூட்டுறவுத்துறையும் இந்த நோக்கில் விசாரணையைத் தொடங்கியது.

அதே சமயத்தில், அந்த வங்கி ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அனந்த்சிங் பாட்டீல் என்பவர், சங்க லெட்டர் பேடில் பிரதிபா பாட்டீலுக்கு ஒரு கடிதம் எழுதினார். வங்கியின் முறைகேடுகளில் உங்களுக்கு பங்கு ஏதும் இல்லை என்று அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கும் ஒரு படி மேலே போய், சங்கத்தின் சார்பில் பிரதிபாவிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறார்.

பிரதிபாவின் உறவினர்கள் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்பட்டதை ரிசர்வ் வங்கியும் இதே காலத்தில் விசாரிக்க ஆரம்பித்தது. பிரதிபாவின் நெருங்கிய உறவினர்கள் வாங்கிய கடன்கள் முறைகேடாக தள்ளுபடி செய்யப்பட்டது உண்மைதான் என்று தனது ரகசிய அறிக்கையில் 2002 ஜூன் 18-ல் அது குறிப்பிட்டது. பிரதிபாவின் 3 உறவினர்களின் கடன் ரத்து தொடர்பான குறிப்பிட்ட குற்றச்சாட்டு முழுக்க முழுக்க உண்மைதான் என்று அது தனது அறிக்கையில் பதிவு செய்தது. கடன்களை ரத்து செய்வதை பரிசீலிப்பதற்கென்றே ரிசர்வ் வங்கியில் இருக்கும் உதவி துணை மேலாளரை, பிரதிபா மகிளா சஹகாரி வங்கி அணுகி ஒப்புதல் பெறவில்லை என்பதையும் ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஊழியர் சங்கங்களின் புகார் மனுக்கள் கூட்டுறவுத்துறை, ரிசர்வ் வங்கி, மத்திய, மாநில அரசுகள் ஆகியவற்றுக்கு மட்டும் அல்லாமல் பிரதிபாவுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

ஊழியர் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் ஆகியோர் 2002 மார்ச் 13-ல் அனுப்பியுள்ள கடிதத்தில், பிரதிபாவின் அண்ணன் திலீப் சிங் பாட்டீல், வங்கியின் தொலைபேசியைச் சொந்த பயன்பாட்டுக்கு முறைகேடாகப் பயன்படுத்தியிருப்பதை சுட்டிக்காட்டினர்.

வங்கியின் 224672 என்ற எண்ணுள்ள தொலைபேசியை அவர் தன்னுடைய வீட்டில் வைத்துக்கொண்டு, பங்கு பரிவர்த்தனை வியாபார விஷயங்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். அவற்றுக்கான டெலிபோன் கட்டணம் ரூ.20 லட்சம். அந்த தொலைபேசியிலிருந்து மும்பையில் உள்ள பங்குத் தரகர்களுடன் பேசியிருப்பதை தொலைபேசி பில் தெரிவிக்கிறது.

இந்த ஆவணங்கள் பின்னர் அழிக்கப்பட்டன. ஆனால் தொலைபேசியைத் தவறாகப் பயன்படுத்தியதை மறைக்க முடியவில்லை. வங்கியின் நிர்வாக அதிகாரியாக ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட அமோல் கைர்னார், இந்த தொலைபேசி பில்லுக்கு விளக்கம் தருமாறு வங்கி மேலாளர் பி.டி. பாட்டீலுக்கு 2003 பிப்ரவரி 1-ம் தேதி எழுதிய கடிதத்தில் கோரியிருக்கிறார்.

பிரதிபா மகிளா சஹகாரி வங்கி, சந்த் முக்தாபாய் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அவ்வப்போது முறைகேடாக கடன் வழங்கியிருப்பதையும் ரிசர்வ் வங்கியின் நோட்டீஸ் சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்த சர்க்கரை ஆலைதான் கிராமப்புற இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக பிரதிபா பாட்டீல் நிறுவியது. 1999-ல் சோனியா காந்தி இதைத் தொடங்கி வைத்தார்.

பிரதிபா மகிளா சஹகாரி வங்கியைப் போலவே இந்த சர்க்கரை ஆலையும் மூடப்பட்டுவிட்டது. ரூ.20 கோடி மதிப்புக்கு கடனை வாங்கிவிட்டு அதைத் திருப்பிச் செலுத்த முடியாததால் இந்த ஆலை மூடப்பட்டது. ஆனால் அந்த 20 கோடி ரூபாய் மதிப்புக்கு அது எந்த நாளிலும் சர்க்கரையை உற்பத்தி செய்யவே இல்லை என்பதுதான் அதன் சிறப்பு!

சந்த் முக்தாபாய் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பங்குகளை வாங்க, பிரதிபா மகிளா சஹகாரி வங்கி தகுதியற்றவர்களுக்கெல்லாம் கடன் வழங்கியிருக்கிறது. சர்க்கரை ஆலையும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக பிரதிபாவின் சகோதரர்கள் இப்படித் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கடனை அள்ளி வழங்கினர்.

பொதுமக்கள் தங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்து கூட்டுறவு வங்கியில் முதலீடு செய்தால், உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் அதில் புகுந்துகொண்டு இப்படி ஊழல் செய்யும்பட்சத்தில் மக்கள் யாரைத்தான் நம்புவது என்றும் ஊழியர் சங்கம் கேட்டுள்ளது.

“நீங்கள்தான் இந்த கூட்டுறவு வங்கியின் நிறுவன தலைவர். ஆனால், சுயலாபத்துக்காக நீங்களே இந்த வங்கியை அழித்து விட முயற்சிகளைச் செய்து வருகிறீர்கள். 2002 மார்ச்சுக்குள் வங்கியின் நிலைமை மேம்படாவிட்டால் உரிமத்தை ரத்து செய்யப் போவதாக ரிசர்வ் வங்கி எச்சரித்திருக்கிறது.

உங்களுக்குள்ள அரசியல் செல்வாக்கு காரணமாக, வங்கியில் நிகழ்ந்துள்ள ஊழல்களையும் முறைகேட்டையும் வெளியே தெரியவிடாமல் தடுத்துவிட முடியும். உங்களால் எங்களுக்கும் எங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் உயிர்களுக்கும் ஆபத்து நேரிட்டிருக்கிறது. ஏற்கெனவே உங்களை நாங்கள் சந்திக்கும்போதே இதை குறிப்பால் உணர்த்திவிட்டீர்கள். உண்மை வெளிவர வேண்டும் என்பதற்காக எங்களுடைய உயிரைவிடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தற்செயலாகவோ, வேறு வகையிலோ எங்களுக்கோ, எங்கள் குடும்பத்தவருக்கோ ஏதேனும் நேர்ந்துவிட்டால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு’ என்று வங்கி ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.

கடன் வாங்கிய “”பெண்கள்” யார் என்பதைச் சொல்லிவிட்டோம். பணம் போட்டவர்கள் யார்? அதை அவர்களே பின்வருமாறு வங்கி நிர்வாகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

“காய்கறி, பழங்கள் விற்பது, குப்பை பொறுக்குவது போன்ற சிறு வேலைகளைச் செய்யும் ஏழைகளான நாங்கள்தான், நல்ல சேமிப்பாக இருக்கட்டும் என்று உங்கள் வங்கியில் முதலீடு செய்தோம். இப்போது நாங்கள் கேள்விப்படும் விஷயங்கள் எங்களுக்குக் கவலை தருவதாக இருக்கின்றன. ஏழைகளுக்கு உதவத்தான் இந்த வங்கியைத் திறந்திருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் சிறுகச்சிறுக சேர்த்த பணத்தையெல்லாம் இதில் முதலீடு செய்துள்ளோம். எனவே நமது வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்களின் முகவரிகளை வெளியிடுங்கள்’ என்று வங்கியில் பணம் போட்டவர்கள் கோரியுள்ளனர்.

மகளிர் முன்னேற்றத்துக்காகவும், ஊரக வளர்ச்சிக்காகவுமே 24 மணி நேரம் உழைக்கத் துடித்துக்கொண்டிருக்கும் பிரதிபா பாட்டீல் வகையறா சமூக சேவகர்கள் இதற்கு அளித்த பதில்தான் என்ன?


பிரதிபா முகத்திரையை விலக்கினால்… (3): மறந்துவிடாதீர்கள், கணவரும் உண்டு!அருண் செüரி
மகளிருக்கு அதிகாரம் அளிப்பதில் உள்ள பிரச்னை என்னவென்றால், “”அதிகாரம் பெறும் மகளிருக்கு கணவர் உண்டு” என்பதை எல்லோருமே மறந்துவிடுவதுதான்!இணையதளத்தில், பிரதிபா பற்றிய வாழ்க்கைக் குறிப்பில் -“”பிரதிபா மகிளா சஹகாரி வங்கியின் நிறுவனர், தலைவர்” என்று அவரைக் குறிப்பிட்டுள்ளனர். வங்கி பற்றி எழுத ஆரம்பித்ததும், அவருக்கு 1994 முதல் அந்த வங்கியுடன் தொடர்பு ஏதும் கிடையாது என்று திடீரென்று அறிவிக்கின்றனர்.ஜலகாம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முதன்மை ஊக்குவிப்பாளர், தலைவர் என்று வாழ்க்கைக் குறிப்பில் உள்ளது. அந்த ஆலைபற்றி எழுத ஆரம்பித்ததும் அறிவிப்பு வருகிறது -அவருக்கும் சர்க்கரை ஆலைக்கும் சம்பந்தம் இல்லை என்று!கூட்டுறவு வங்கி, சர்க்கரை ஆலை இரண்டிலிருந்தும் விலகிய பிரதிபா, தனது நேரம், உழைப்பு அனைத்தையும் கல்விப்பணிகளிலேயே செலவிட்டிருப்பார் என்று நம்பலாம்.பிரதிபா பாட்டீலும் அவருடைய குடும்பத்தாரும் சங்கம் அமைத்து சில பள்ளிக்கூடங்களை நடத்தினர். அதில் பணியாற்றுகிறவர்கள் நிர்வாகத்தின் மீது மிகுந்த கசப்புணர்வோடு இருக்கின்றனர். அவர்களோடு பணியாற்றிய கிசான் தாகே என்ற ஆசிரியர் எப்படி நடத்தப்பட்டார், அவர் எப்படி தற்கொலைக்குத் தள்ளப்பட்டார் என்பதை ஆவணங்களோடு அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கெல்லாம் பிரதிபாவின் கணவர் தேவிசிங் ஷெகாவத்தும் அவருடைய சகாக்களும்தான் காரணம் என்கின்றனர்.ஷெகாவத்துகள் நடத்தும் பள்ளிக்கூடத்தில் 1977-ல் கிசான் தாகே பணிக்குச் சேர்ந்தார். உதவி ஆசிரியர் என்ற பதவியில் அமர்த்தப்பட்டார். ஊதியம் தராமலும் உரிய மரியாதை கொடுக்காமலும் அவமதிக்கப்பட்ட அவர் 1998 நவம்பர் 15-ல் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் என்பதை ஒரு காகிதத்தில் எழுதி வைத்திருந்தார். அதுவன்றி ஒரு பத்திரமும் அவரிடம் இருந்தது. போலீஸôர் அவற்றையெல்லாம் கைப்பற்றிக்கொண்டு, பிரேத பரிசோதனை நடத்தினர். தேவிசிங்கும் அவருடைய நண்பர்களும் எப்படி தன்னைச் சிறுமைப்படுத்தினார்கள், ஊதியம் தராமலும், பள்ளிக்கூட சங்கத்துக்குச் சொந்தமான கடன் சங்கத்திலிருந்து கடன்கூட வாங்க முடியாமலும் எப்படியெல்லாம் அலைக்கழித்தனர் என்றெல்லாம் விவரமாக அதில் எழுதியிருந்தார்.கிசான் தாகே உயிரோடு இருந்தபோது பட்ட துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அவருடைய மகன், கல்வி உதவித்தொகை பெறுவதற்காக தேர்வு எழுத விண்ணப்ப மனுகூட கிடைக்கவொட்டாமல் தடுத்தனர். வேலைபார்த்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் “உபரி’யாக இருப்பதாகக் கூறி, தொலை தூரத்தில் உள்ள வேறொரு பள்ளிக்கூடத்துக்கு மாற்றினர். அங்கு ஆசிரியர் வேலையே காலி இல்லை என்றதும், விடுதி மேலாளராக வேலைபார்க்குமாறு கூறினர்.

அமராவதி நகரில் உள்ள சமூகநலத்துறை அதிகாரிக்கு இதுபற்றிக் கடிதம் எழுதினார் தாகே. ஆசிரியர் பணியிடமே இல்லாத இடத்துக்கு ஒருவரை மாற்றுவது சட்டவிரோதமான செயல் என்று சமூகநலத்துறை அதிகாரி 1998 ஜனவரி 27-ல் பள்ளிக்கூட நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதினார். அந்த மாறுதலுக்கு தன்னுடைய ஒப்புதலைத் தர முடியாது என்றும் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பிறகு அவருக்கு ஊதியம் தருவதை முற்றாக நிறுத்திவிட்டது நிர்வாகம்.

இதற்கிடையே, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாகபுரி கிளையில் 1998 ஜனவரி 19-ல் மனு தாக்கல் செய்தார். தன்னைச் சட்டத்துக்குப் புறம்பாக மாற்றியது குறித்து குறிப்பிட்டிருந்தார். அவரை மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளுமாறும் ஊதியம் தருமாறும் 1998 அக்டோபர் 8-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 1997 ஆகஸ்ட் 25 முதல் அவருக்கு நிலுவை ஊதியத்தையும் தருமாறு அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டது. அதன் பிறகும் ஊதியம் பெற அவர் நிர்வாகத்திடம் நடையாய் நடந்தார். இந்த கட்டத்தில் அவருடைய உடல் நலிவடைய ஆரம்பித்தது. டாக்டர் அளித்த சான்றுடன் விடுமுறை கேட்டு விண்ணப்பித்தார். அதையும் நிர்வாகம் ஏற்கவில்லை. தாகேயின் பரிதாப நிலை கண்டு சக ஆசிரியர்கள் மிகவும் வருந்தினர். அவர்களால் பரிதாபப்படுவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை.

இதற்கிடையே வீட்டில் உள்ள பண்ட, பாத்திரங்களையும் மனைவியின் நகைகளையும் விற்றுத்தீர்த்துவிட்டதால் இனி வேறு வழியே இல்லை என்ற நிலையில், தற்கொலை முடிவை எடுத்து நிறைவேற்றிவிட்டார் தாகே. தாகேவின் மனைவி மங்கள்பாய் போலீஸில் புகார் செய்தார். போலீஸôர் பாராமுகமாக இருந்துவிட்டனர்.

மங்கள்பாயின் மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், “தாகேவைச் சிறுமைப்படுத்தியது, வேலையே இல்லாத இடத்துக்கு மாற்றியது, பிறகு ஊதியம் தராமல் நிறுத்தியது, மருத்துவ விடுப்பைத் தர மறுத்தது, உயர் நீதிமன்றம் ஆணையிட்டும் அதை எதிர் மனுக்கள் மூலம் தாமதம் செய்தது’ என்று எல்லாவற்றையும் நீதிமன்றமே சுட்டிக்காட்டியது. இதில் முதல் நோக்கில் தவறு யார் மீது என்று தெரிகிறது, போலீஸôர் உரிய வகையில் வழக்கைப் பதிவுசெய்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டது. 2000 அக்டோபர் 6-ம் தேதி அந்த ஆணை வெளியானது. அதற்குள், ஊதியம் இல்லாமல் 3 ஆண்டுகள், தாகேவே இல்லாமல் 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த ஆணையையும் எதிர்த்து கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பள்ளிக்கூட நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் ஏ.ஏ. நந்தகாவோன்கர் அளித்த தீர்ப்பு, பள்ளிக்கூட நிர்வாகத்தை, கன்னத்தில் அறைந்தாற்போல இருந்தது. தேவிசிங் மீதும் அவருடைய சகாக்கள் மீதும் மனுதாரர் செய்த புகார்கள் உண்மையானவை என்பது நடந்த சம்பவங்களிலிருந்தும் கிடைத்துள்ள ஆவணங்களிலிருந்தும் தெரிகிறது, எனவே இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 306, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். அது 2005 ஜூலை 22-ல் வெளியானது.

அதன் பிறகாவது சட்டம் தன் வேலையைச் செய்திருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கவிருக்கும் இந்த நாட்டின் முதல் குடிமகளின் கணவர் அவ்வளவு லேசுப்பட்டவரா என்ன? அந்த ஆணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.

சமூக நலத்துறை அதிகாரி, உயர் நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு அடுத்தபடியாக, இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்த நீதிபதியும், கன்னத்தில் அறைந்தாற்போல ஒரு தீர்ப்பை அளித்தார். இந்த தற்கொலை வழக்கில், சந்தர்ப்ப சாட்சியங்களும், ஆவணங்களும் தற்கொலைக்குத் தூண்டியது யார் என்பதை சந்தேகமற தெரிவிக்கின்றன; அப்படியிருக்க அவர்களுடைய மனுக்கள் பரிசீலனைக்கே ஏற்றவை அல்ல என்று கூறி தள்ளுபடி செய்தார். இந்த ஆணை 2007 பிப்ரவரி 7-ம் தேதி வெளியானது. தாகே 1998 நவம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டார். இன்னும் இந்த வழக்கில் விசாரணையே ஆரம்பமாகவில்லை!

ஆதரவற்ற அப்பாவியான தாகே இறந்துவிட்டார்; அநாதையாகிவிட்ட அவருடைய மனைவி மங்கள்பாய் இனி அங்கும் இங்கும் அலைய முடியாதபடிக்குச் சோர்ந்துவிட்டார். இந்த விஷயத்தில் முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள தேவிசிங் ஷெகாவத், குடியரசுத் தலைவர் மாளிகையில் நுழைவதற்குத் தயாராகிவிட்டார். தேவிசிங் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டீர்களா?

——————————————————————————————-

பிரதிபா பற்றிய எல்லா தகவல்களும் தலைமைக்குத் தெரியும்! – பிரதிபா முகத்திரையை விலக்கினால்… (5)

அருண் சௌரி

ரஜனி பாட்டீல் தில்லி செல்கிறார், சோனியா காந்தியை 2006 ஜனவரியில் சந்திக்கிறார். தனது கணவர் எப்படி கொல்லப்பட்டார், யாரால் கொல்லப்பட்டார், ஏன் கொல்லப்பட்டார் என்ற தகவல்கள் அனைத்தையும் தெரிவிக்கிறார். அகமது படேல், சுசீல் குமார் ஷிண்டே, மார்கரெட் ஆல்வா போன்ற தலைவர்களையும் சந்திக்கிறார்.

அவர்கள் யாரும் சுட்டு விரலைக்கூட ரஜனிக்காக அசைக்கவில்லை. மாறாக, இந்தக் கொலைக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் 2 பேர் மீதான முதல் தகவல் அறிக்கை திரும்பப் பெறப்பட்டது.

இந்தக் கொலை வழக்கு விசாரணையை முதலில் உள்ளூர் போலீஸôரிடமிருந்து எடுத்து மாநில சி.ஐ.டி. போலீஸôரிடம் ஒப்படைத்து, பிறகு அவர்களிடமிருந்தும் எடுத்து சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தனர். இந்த வழக்கை ஏற்பது குறித்து சி.பி.ஐ. பதில் அளிக்கவே 3 மாதங்கள் ஆனது.

“எங்களுக்கு பணிப்பளு அதிகம், இந்த வழக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, சர்வதேச அளவில் விசாரிக்கப்பட வேண்டிய அவசியமும் இல்லை எனவே எங்களுடைய விசாரணை இதற்கு அவசியம் இல்லை’ என்று சி.பி.ஐ. பதில் அளித்தது.

வழக்கு விசாரணையை ஊனப்படுத்தவும் தொடர்புடையவர்களைத் தப்பவைக்கவும் நடந்ததே இந்த நாடகம். ரஜனி பாட்டீல் உயர் நீதிமன்றத்தின் ஒüரங்காபாத் பெஞ்சில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தார்.

“இந்த வழக்கில் விஷ்ராம் பாட்டீலின் அரசியல் எதிரிகள்தான் இந்தக் கொலைக்குப் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை’ என்று சி.ஐ.டி. விசாரணை அதிகாரி தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ரஜனி பாட்டீலின் குற்றச்சாட்டே அதுதான்; முக்கிய எதிரிகள் என்று குறிப்பிடப்படுகிறவர்களைப் போலீஸôர் அழைத்து விசாரிக்கவே இல்லை, கைது செய்யப்பட்டவர்களிடமும் இந்தக் கோணத்தில் விசாரணை நடைபெறவில்லை.

ராஜு மாலி, ராஜு சோனாவானே ஆகியோர் 3.1.2006-ல் எழுதிய கடிதத்துக்கும் அந்த அதிகாரி பதில் அளிக்கவில்லை. “”எங்களை நிர்பந்திக்கிறார்கள்; குற்றங்களை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளியுங்கள் இல்லாவிட்டால் விஷ்ராம் பாட்டீலுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும் என்று எங்களை மிரட்டுகிறார்கள்” என்று அந்தக் கடிதத்தில் மராத்தியில் இருவரும் எழுதியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று சி.பி.ஐ. அளித்த பதிலை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் 2007 பிப்ரவரி 23-ல் நிராகரித்தது. “உங்களுடைய பணிப்பளுவும், இந்த வழக்கின் தன்மையும் எங்களுக்குத் தெரியும். இருதரப்பு வழக்கறிஞர்களின் உதவியோடு ஆவணங்களைப் பரிசீலித்ததில் இது வித்தியாசமான வழக்கு என்பதைப் புரிந்து கொண்டோம். எனவே சி.பி.ஐ. இதை விசாரிப்பதே சரியானது’ என்று நீதிமன்றம் ஆணையிட்டது.

2007 மார்ச் 5-ம் தேதி ரஜனி பாட்டீல் மீண்டும் ஒருமுறை வழக்கு பற்றிய குறிப்புகளுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினார். எனது குடும்பமே கொல்லப்படும் என்று அஞ்சுகிறேன் என்று கூட அதில் குறிப்பிட்டிருந்தார். சோனியாவிடமிருந்து பதிலே வரவில்லை.

பிறகு இதையெல்லாம் மீண்டும் ஒருமுறை தொகுத்து, குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும் மனு அளித்தார். பிறகு எதுவும் நடைபெறாததால், “”பிரதிபா பாட்டீல்தான் மும்பை, தில்லியில் உள்ள தனது அரசியல் செல்வாக்கு காரணமாக அண்ணன் டாக்டர் ஜி.என். பாட்டீலைக் கைது நடவடிக்கையிலிருந்து காப்பாற்றி வருகிறார்” என்று குற்றஞ்சாட்டினார்.

எதிர் குற்றச்சாட்டு: பிரதிபா பாட்டீலுக்கு இணையான தகுதி படைத்த வேட்பாளர் தங்களுக்குக் கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் பாரதீய ஜனதா தவறான பிரசாரத்தில் இறங்கியிருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

பிரதிபா பாட்டீல் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய கட்சிக்காரர்கள் அளித்த பேட்டிகள், வெளியிட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்திலும், போலீஸôரிடமும், தில்லியிலும், மும்பையிலும் அவர்கள் அளித்த புகார் மனுக்கள் அம்பலப்படுத்துகின்றன. இவை பாரதீய ஜனதாவின் மூளையில் உதித்த கட்டுக்கதைகள் அல்ல. இது பொய்ப் பிரசாரம் என்றால் “”ஆஜ்-தக்” ஒளிபரப்பிய பேட்டி பற்றி என்ன சொல்கிறீர்கள்?

இத்தனை நாள்கள் விட்டுவிட்டு, பிரதிபாவை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்த பிறகு ஏன் இதையெல்லாம் சொல்கிறீர்கள் என்பது அவர்களின் அடுத்த கேள்வி.

எல்லா மாவட்டங்களிலும் இதைப்போல ஆணவத்தோடு நடந்துகொள்ளும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், அவர்களில் எவரும் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறவரோ, அல்லது அவருடைய உறவினரோ அல்ல. எனவே நாட்டின் உயர் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போகிறவரின் தகுதியை ஆராய்வதிலும் ஆட்சேபம் தெரிவிப்பதிலும் என்ன தவறு? இந்த மோசடிகளை இப்போது அம்பலப்படுத்தாவிட்டால் பிறகு எப்போதுதான் இவை வெளியே வரும், அதனால் என்ன பலன் இருக்கும்?

சோனியாவுக்கு எதுவுமே தெரியாதா? சோனியாவுக்கு பிரதிபா குறித்து எதுவுமே தெரியாது, அதனால் தேர்வு செய்துவிட்டார் என்று மட்டும் கூறாதீர்கள். மகாராஷ்டிரத்தில் ஒரு மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவராக ஒரு முறை அல்ல -3 முறை இருந்தவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அதுபற்றி அவருடைய மனைவியும் கட்சித் தலைவர்களும் அலையலையாக தலைமைக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள், பேட்டி தருகிறார்கள். உள்ளூர் பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இது எதுவுமே தெரியாது என்று சொல்லும் அளவுக்கு, இது “”சகஜமான” விஷயமா?

அப்படியானால் சோனியாவுக்கு பிரதிபா குறித்து எல்லாம் தெரிந்துதான் அவரை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தாரா? ஆமாம் -அதில் சந்தேகமே வேண்டாம்.

அரசியலில் செல்வாக்கு இல்லாத மன்மோகன் சிங்கைப் பிரதமராக பதவியில் அமர்த்தினார். அவருக்கு அரசியல் சாதுரியம் இல்லாவிட்டாலும், இன்னமும் கறைபடியாத கரத்துக்குச் சொந்தக்காரராக இருக்கிறார். நாளையே அவர், சோனியா சொன்னபடி கேட்காமல் சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கிவிட்டால் பிரச்னையாகிவிடும்.

எனவே காங்கிரஸ் கட்சித்தலைவரின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், குடியரசுத் தலைவராக வருகிறவரும் சொந்த செல்வாக்கு இல்லாதவராக இருக்க வேண்டும்; அது மட்டும் போதாது, “”தலைமையின் தயவில்தான்” அவருடைய பதவியே நீடிக்க வேண்டும். இதற்குப் பிரதிபாவைவிட வேறு நல்ல வேட்பாளர் கிடைப்பாரா?

———————————————————————————–

கூட்டுறவு வங்கி ஊழல்: பிரதீபா பட்டீலுக்கு பா.ஜ.க. 3 கேள்வி

புதுடெல்லி, ஜுலை. 5-

ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் பிரதீபா பட்டில். வருகிற 19-ந் தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது. பிரதீபா பட்டீல் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிரதீபாபட்டீல் உறவினர்கள் மீது எழுந்துள்ள கூட்டுறவு வங்கி ஊழல் குற்றச்சாட்டுக்களை கையி லெடுத்து அவருக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது.

தனக்கும் அந்த கூட்டுறவு வங்கியில் நடந்த ஊழலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் உள் நோக்கம் கொண்டவை என்றும் பிரதீபாபட்டீல் அறிக்கை விடுத்திருக்கிறார்.

பிரதீபா பட்டீலுக்கும் திவாலான பெண்கள் கூட்டுறவு வங்கிக்கும், அதில் நடந்த ஊழலுக்கும் தொடர்பு உண்டு என்று கூறி அது சம்பந்தமாக மூன்று கேள்விகளை பிரதீபாபட்டீல் முன்பு எழுப்பி யுள்ளார் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்களில் ஒருவர். அந்த மூன்று கேள்விகள் வருமாறு:-

பிரதீபாபட்டீலின் உறவினர்களுக்கு கடன் கொடுத்ததால் திவாலாகிப்போன பிரதீபா பெண்கள் கூட்டுறவு வங்கியை தான் நிறுவவில்லை என்று பிரதீபாபட்டீலால் கூற முடியுமா?

1990-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி அந்த வங்கியின் இயக்குனர்கள் கூடி பிரதீபாபட்டீலின் உறவினர்களுக்கு கடன் கொடுக்க சவுகர்யமான தீர்மானத்தை எடுத்துள்ளனர். இந்த தீர்மானத்தில் பிரதீபாபட்டீல் கையெழுத்திட்டுள்ளார். இதை அவரால் மறுக்க முடியுமா?

கடந்த 2002-ம் ஆண்டு ஜனவரி 22-ந்தேதி வங்கியின் இயக்குனர்கள் குழு ஒன்று கூடி வங்கியின் தலைமை செயல் அலுவலரை நியமிக்கும் அதிகாரத்தை உங்களுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதை உங்களால் மறுக்க முடியுமா?

மேற்கண்ட மூன்று கேள்விகளை பா.ஜ.க. பிரதீபாபட்டீல் முன்பு வைத்துள்ளது.

வங்கியில் நடந்த முறை கேடுகளுக்கு பிரதீபா பட்டீலே பொறுப்பு என்று கூறும் பா.ஜ.க. அது சம்பந்தமான ஆதாரங்களை புத்தகமாக வெளியிட்டு பிரதீபா பட்டீலுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது.

——————————————————————————————————-

எம்.பி. தொகுதி நிதி ஒதுக்கீட்டில் பிரதிபா விதிமீறல்

புதுதில்லி, ஜூலை 8: குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரதிபா பாட்டீல் எம்.பி.யாக இருந்த போது அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் ஏற்படுத்திய அறக்கட்டளைக்கு விளையாட்டு வளாகம் கட்ட எம்.பி. தொகுதி நிதியிலிருந்து ரூ.36 லட்சம் ஒதுக்கியதாக மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜியிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணி உயர் தலைவர்கள் சனிக்கிழமை மனு அளித்தனர். விதிமுறைகளைப் புறக்கணித்து குடும்ப அறக்கட்டளைக்கு எம்.பி. உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து பிரதிபா பாட்டீல், நிதி ஒதுக்கிய விவகாரத்தை நாடாளுமன்ற உரிமைக் குழு அல்லது நெறிமுறைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புமாறும் அவர்கள் மக்களவைத் தலைவரிடம் வலியுறுத்தினர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், மக்களவையில் பாஜக துணைத் தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா மற்றும் ஷாநவாஸ் ஹுசைன், கே.எஸ்.சங்வன், ரக்பீர் சிங் கௌசல் உள்ளிட்டோர் மக்களவைத் தலைவரை அவரது அலுவலகத்தில் சந்தித்த குழுவில் இடம் பெற்றிருந்தனர். மகஜரில் அவர்கள் கூறியிருந்தாவது:

மகாராஷ்டிரத்தின் அமராவதி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக பிரதிபா பாட்டீல் 1991-1996-ம் ஆண்டுகளில் இருந்தார். அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் ஏற்படுத்திய அறக்கட்டளை “வித்யா பாரதி சிக்ஷான் சன்ஸ்தா’. இதற்கு ஒரு கல்லூரி அருகே விளையாட்டு வளாகம் கட்ட எம்.பி. உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.36 லட்சத்தை 1995-ம் பிரதிபா பாட்டீல் அளித்தார். சம்பந்தப்பட்ட இடம் அறக்கட்டளைக்கு சொந்தமானதாக இல்லாத நிலையில் அங்கு விளையாட்டு வளாகம் கட்ட உள்ளூர் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

எம்.பி.க்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் தொடர்புடைய சங்கத்துக்கோ, அறக்கட்டளைக்கோ எம்.பி. தொகுதி நிதியிலிருந்து நிதி அளிக்கக்கூடாது என்று வழிகாட்டு விதிமுறையை பிரதிபா மீறி செயல்பட்டுள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரதிபா போட்டியிடுகிறார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. இப்போது இந்த மிக மோசமான முறைகேடு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனிடையே, மகாராஷ்டிர மாநில அரசு அந்த அறக்கட்டளைக்கு கல்லூரி அருகே 25,000 சதுர அடி இடத்தை கடந்த ஏப்ரலில் வழங்கியது. பிரதிபா பாட்டீல் 12 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கிய ரூ.36 லட்சத்தை பயன்படுத்தி அங்கு விளையாட்டு வளாகம் கட்டவும் அடுத்த மாதமே மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிவிட்டது.

பிரதிபா பாட்டீல் 1996 வரை எம்.பி.யாக இருந்தார். அவர் எம்.பி.யாக இருந்த போது ஒதுக்கி பயன்படுத்தப்படாத நிதியை 10 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட நிலையில் இப்போது பயன்படுத்த எவ்வாறு அனுமதிக்கலாம்?.

விதிமீறல் தொடர்பாக பிரதிபா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகஜரில் குறிப்பிட்டுள்ளனர். மகஜரை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தங்களிடம் உறுதி அளித்ததாக பாஜக மூத்த தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

“ஊழல், கிரிமினலை பாதுகாத்தல், எம்.பி.யாக இருந்தபோது நிதி ஒதுக்கீட்டில் விதிமீறல் போன்ற புகாரில் பிரதிபா பாட்டீல் சிக்கியுள்ளார். அவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமா என்பதை வாக்களிக்க உரிமை பெற்ற எம்.பி., எம்.பி.க்கள் மனசாட்சி அடிப்படையில் சிந்தித்து செயல்பட வேண்டும்’ என்றும் மல்ஹோத்ரா கேட்டுக் கொண்டார்.

—————————————————————————————————

From Unmai Online:

மகளிருக்கு மரியாதை

முதல் பெண் குடியரசுத் தலைவர்

மனித சமூகத்தின் சரிபகுதி பெண்ணினம் எல்லாத் துறைகளிலும் கால் பதிப்பதற்கு போராட்டத்தைத்தான் மேற்கொள்ள வேண்டி-யிருக்கிறது. சென்ற நூற்றாண்டின் தொடக்-கத்தில் தென்னகத்திலிருந்து பெரியாரின் குரல் மட்டும்தான் பெண்ணுக்கு நீதி வழங்கும் என்று உரத்து ஒலித்தது.

நீதி, நிருவாகம், சட்டமியற்றுதல், காவல், ராணுவம், அரசியல், அறிவியல், தொழில்-நுட்பம் என பல்துறைகளிலும் பெண்கள் மெல்ல மெல்ல கால்பதித்து சாதனை படைத்-திருந்தாலும் நாட்டின் உச்சபட்ச பொறுப்புக்கு ஒரு பெண் இப்போது தான் வரப்போகிறார்.

அறுபதாண்டு கால சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் குடிமகனாக (ளாக) bஙுவூகு. ðபூகுðட் ðட்ஙீர்™ ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்-படுவதற்கான வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது.

அதுவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒரு பெண் என்பது மகிழ்ச்சிக்குரியதாகும். இந்தத் தேர்வில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் பங்கு முதன்மையாக இருந்தது எனும்போது வரலாறு இன்னொரு முறை கலைஞரின் மூலமாக பெரியாரைப் பதிவு செய்து கொள்கிறது எனலாம்.

குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படப் போகும் திருமதி பிரதிபா பாட்டில் அவர் ஒரு பெண் என்பதற்காக மட்டுமே தேர்வா-கவில்லை. மகாராஷ்டிரா அரசியலில் நுழைந்த நாள் முதல் தோல்வியே காணாத வெற்றியாளராக அவர் இருந்து வந்துள்ளார்.

அவருடைய தனித்தன்மையைப் பற்றி கூறும் பலரும், “தன்னை பிரபலமாக்கிக் கொள்ளாத விளம்பரத்தை விரும்பாத அரசியல் வாதி” என்றே கூறுகின்றனர். 1962ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ்ன் சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதல்-முறையாக வெற்றி பெற்ற பிரதிபா பாட்டில் இப்போது தனது 71ஆம் வயதில் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராகப் போகிறார்.

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கை வலுவாக ஒலித்து வரும் காலகட்டத்தில் பிரதிபா பாட்டில் இந்தியக் குடியரசுத் தலைவராக வரப்போகிறார் என்பது வரவேற்க வேண்டிய செய்தி. ஆனால் இதற்குச் சில பெண்களே எதிர்நிலை எடுப்பதும் அவதூறு பரப்புவதும் எத்தகைய அருவருக்-கத்தக்கது என்பதையும் இந்திய வரலாறு பதிவு செய்தே வருகிறது. என்றாலும், “சுதந்திர இந்தியாவின் 60 வருட காலத்தில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்” என்று சோனியா காந்தி கூறியுள்ளது முற்றிலும் பொருத்தமானது ஆகும்.

1947-இல் அந்நியர் ஆட்சி அகன்று 60 ஆண்டுகளுக்குப் பின்பு, முதன்முறையாக இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக ஒரு பெண் வருகிறார் என்பது பாலியல் நீதி. அப்பெண் ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்-தவர் என்பது சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி; பிரதிபா பிறந்த சோலங்கி ஜாதி ஒரு பிற்படுத்தப்பட்ட ஜாதியாகும். இதற்கு முன் இருந்த 11 குடியரசுத் தலைவர்களில் ஒவ்வொரு முறை மட்டுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் அப்பத-வியை வகித்துள்ளனர்; 110 கோடியுள்ள இந்திய மக்களில் இவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 90 கோடிக்கு மேல் ஆகும்.

1934 டிசம்பர் 19-இல் பிறந்த பிரதிபா எம்.ஏ; மற்றும் சட்டத்தில் பட்டம் பெற்றவர்; மகாராஷ்டிராவின் வடக்கில் உள்ள ஜல்-கோயன் எனும் ஊரில் வழக்குரைஞர் தொழில் செய்தார். அங்கு பொறியியல் கல்லூரியை ஏற்படுத்திக் கிராமத்து மாணவர்களுக்குப் பயன்தரும் வகையில் நடத்துகிறார். பார்-வையற்றோருக்கு அந்நகரில் தொழில் பயிற்சி பள்ளியையும், ஏழை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்குப் பள்ளி ஒன்றையும் நடத்துகிறார்.

கிராமியப் பொருளாதார மேம்பாட்டிலும், பெண்கள் முன்னேற்றத்திலும் தனி அக்கறை செலுத்துகிறார். பெண்கள் கூட்டுறவு வங்கியை ஜல்கோயன் நகரில் உருவாக்கியுள்ளார். அவர்களுக்கு என மும்பை, மற்றும் டில்லியில் தனி விடுதிகளை நடத்துகிறார்.

பள்ளி, கல்லூரியில் பயிலும்பொழுது விளையாட்டுப் போட்டிகளில் கலந்து-கொண்டு பரிசுகள் பெற்ற பிரதிபா பாட்டில், 1962-இல் சீன ஆக்கிரமிப்பின்போது துணைக் காவல் படையின் தளபதியாக இருந்தார்.

1966-இல் டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத் எனும் வேதியியல் பேராசிரியரை, ஜாதி மறுப்பு மணம் செய்து கொண்டார்; இது பெற்றோர் ஏற்பாட்டில் நடந்த திருமணம். ஒரு மகனும் மகளும் இவர்களுக்குப் பிள்ளைகள். தேவிசிங் ஷெகாவத், வித்யபாரதி மகாவித்-யாலயா எனும் கல்வி நிறுவனத்தை, மகாராஷ்-டிரத்தின் வடகிழக்கில் விதர்பா பகுதியைச் சேர்ந்த அமராவதி நகரில் நடத்துகிறார். அதே நகரில் உழவர் அறிவியல் மய்யம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு மழலையர் (நர்சரி) பள்ளியை பிரதிபா அம்மையார் நடத்துகிறார்.

பிரதிபா அம்மையாரின் துணைவர் தேவிசிங் கூறும் செய்தி ஒன்று கவனத்தில் கொள்ளத்தக்கது. ராஜ°தான் மாநிலத்தில் இருந்து விதர்பா பகுதியில் குடியேறியுள்ள அவர் குடும்பம், மகாராஷ்டிர அரசியலில் செல்வாக்காக இருந்ததில்லை. ஆனால், அவருடைய துணைவியாரின் (பிரதிபாவின்) பெரிய தந்தையார் வழக்கறிஞராகவும், அப்பொழுதைய பம்பாய் மாகாண சட்டப் பேரவையின் உறுப்பினராகவும் இருந்த, தோங்கர்சிங் பாட்டில் ஆவார். அவர் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திவான் பகதூர் விருது பெற்றவர்.

திவான் பகதூர் தோங்கர்சிங் பாட்டில், சிவசேனாவின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேயின் தந்தை பிரபோதன் தாக்கரேயுக்கு மிக நெருங்கியவர் எனத் தெரிவிக்கிறார். இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பிரபோதன் தாக்கரே பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தில் மிக ஈடுபாடு காட்டினார் என்பதும், பார்ப்பனீயத்தை மறுத்தவர் என்பதும்தான். அவருக்கு `மிக நெருக்கமாக’ இருந்த பிரதிபாவின் பெரிய தந்தையார் பார்ப்பனர் அல்லாதவர் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டி-ருந்தார் என்பது பெறப்படுகிறது.

இன்னொரு முக்கியச் செய்தியை, பிரதிபா பாட்டிலின் துணைவர் தருகிறார். மண்டல் ஆணையம் நிறைவேற்ற ஆணை வந்த பொழுது, மகாராஷ்டிரத்தில் கலவரத்தைத் தூண்டப் பெரு முயற்சி நடந்தது. ஆனால், நாக்பூரில் கூடிய மகாராஷ்டிரச் சட்டப் பேரவையில் சுமார் மூன்று மணி நேரம் புள்ளி விவரங்களுடன் பேசி அக்கலவர முயற்சியை முறியடித்து, அமைதியை நிலை நாட்டினார், பிரதிபா பாட்டில்.

இந்தப் பின்னணியில் பார்க்கும்பொழுது தான் 1962 முதல், மாநிலக் காங்கிரசின் தலைவராக, சட்டப் பேரவை உறுப்பினராக, அமைச்சராக, நாடாளுமன்ற மாநிலங்களவைத் துணைத் தலைவராக, மக்களவை உறுப்-பினராக, பல்வேறு நாடுகளில் நடந்த பல-வகைப் பன்னாட்டு அரங்குகளில் பங்கேற்ற-வராக, ஒரு மாநிலத்தின் ஆளுநராக, அப்பழுக்-கற்ற பொது வாழ்வினராக, மதச் சார்-பற்றவராக, சிறந்த நிர்வாகி என மெய்ப்-பித்தவராக உள்ள ஒருவரைப் பார்ப்பன ஏடுகள் ஏன் பரிகசிக்கின்றன என்பது தெரியவரும்.

——————————————————————————————————

திருமதி. பிரதிபா பாட்டில்
வாழ்க்கைக் குறிப்பு

தந்தை பெயர்: நாராயணராவ்

பிறந்த தேதி: டிசம்பர் 19, 1934

பிறந்த இடம்: மகராஷ்டிரா மாநிலம் ஜல்காவ்ன்

துணைவர் பெயர்: டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத்

குழந்தைகள்: பிரதிபா-ஷெகாவத் தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கல்வித் தகுதி: எம்.ஏ. எல்.எல்.பி. கற்று வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளார்.

பொது வாழ்வில் ஈடுபட்டு சமூகப் பணியாற்றி வந்த பிரதிபா பாட்டில் 1962 முதல் 1985 வரை தொடர்ந்து 23 ஆண்டுகள் மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலில் துணை அமைச்சராகவும் பின்னர் அமைச்சராகவும் பொறுப்பேற்றுப் பணிபுரிந்துள்ளார். குடிமைப் பொள் வழங்கல், மக்கள் நலவாழ்வு, சுற்றுலா, வீட்டுவசதி, சமூக நலம், ஊரக வளர்ச்சி, மதுவிலக்கு, மறுவாழ்வு மற்றும் பண்பாடு, கல்வித் துறை என பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பணியாற்றியுள்ளது சிறப்பான தகுதிகளாகும்.

1985 முதல் 1990 வரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலங் களவைத் துணைத் தலைவராகப் பணியாற்றி யுள்ளார்.
1991இல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டு பணியாற்றினார்.

கடந்த 2004ஆம்ஆண்டு ராஜ°தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

சமூக மற்றும் பண்பாட்டுத் துறைகளில் பெண்கள் நலம், பணியாற்றும் மகளிருக்கு விடுதிகள் ஏற் படுத்துதல், கிராமப்புற இளைஞர் நலன், பார்வை யற்றோருக்கான பள்ளிகள் போன்றவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி வந்துள்ளார்.

கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்துதல், பெண்கள் நலனை மேம்படுத்துதல் ஆகியவைக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றுவது தனது விருப்பம் என்பது பிரதிபாட்டிலின் கருத்து ஆகும்.

பல்வேறு உலக நாடுகள் சுற்றி வந்த பிரதிபா பாட்டில் சமூக நலம் குறித்த உலக அளவிலான மாநாடுகளில் பங்கேற்றுள்ளதுடன் பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக மகளிர் மாநாட்டில் பங்கேற்றார்.
——————————————————————————————————

பதவியின் கௌரவத்தைக் குலைப்பது யார்?

எஸ். குருமூர்த்தி
“”எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பிரசாரமானது நாட்டின் மிக உயர்ந்த பதவியின் மதிப்பைக் குலைப்பதாக இருந்துவிடக் கூடாது” -இப்படிக் கூறி இருப்பவர், குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீல்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்த அளவுக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் பேசப்பட்டதன் காரணமே, அத்தனை விவகாரங்களில் பிரதிபா பாட்டீல் சம்பந்தப்பட்டிருப்பதும், அவை தொடர்பாக நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் வழக்குகளும் முதல் தகவல் அறிக்கைகளும் பதிவாகியிருப்பதால்தான்.

இவையெல்லாம் வெறும் புகார்கள்தானா? இந்த குற்றச்சாட்டுகளைக் கூறியவர்கள் யார்? தேசிய ஜனநாயக கூட்டணியா, பாரதீய ஜனதாவா? பரபரப்புக்காக செய்தி ஊடகங்களே அவற்றைப் பரப்பிவிட்டனவா?

பேராசிரியர் வி.ஜி. பாட்டீல் என்பவரின் கொலைக்குப் பின்னால் மூளையாகச் செயல்பட்டவர் பிரதிபா பாட்டீலின் சகோதரர் ஜி.என். பாட்டீல் என்று குற்றம் சாட்டியவர் ரஜனி பாட்டீல். அவர்தான் வி.ஜி. பாட்டீலின் மனைவி; ஜலகாமைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியை.

வி.ஜி. பாட்டீல், ஜி.என். பாட்டீல் இருவருமே சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஜலகாம் மாவட்டப் பிரமுகர்கள். பேராசிரியர் வி.ஜி. பாட்டீல், ஜி.என். பாட்டீலை ஜலகாம் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் தோற்கடித்தவர். சுனாமி நிவாரணத்துக்காகவும், பிரதிபா பாட்டீல் ராஜஸ்தான் மாநில ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கொண்டாடுவதற்கும் லட்சக்கணக்கான ரூபாய்களைத் திரட்டி, அதை உரிய வகையில் செலவழிக்காமல் பிரதிபாவும் அவரது சகோதரர் ஜி.என். பாட்டீலும் ஏமாற்றியதை அம்பலப்படுத்தப் போவதாக எச்சரித்தார் அவர். “”உங்களைக் கொல்ல, அடியாள்களை ஏவிவிட்டுள்ளனர்” – வி.ஜி. பாட்டீலுக்கு 3 எச்சரிக்கைக் கடிதங்கள் வந்தன.

கிரிமினல் சட்டப்படி, ஒருவர் ஒரு கொலையைச் செய்தாலோ, செய்யத் தூண்டினாலோ அதில் அவருக்கு ஒரு தனிப்பட்ட ஆதாயம் இருக்க வேண்டும். இந்த வழக்கில் அது பிரதிபா பாட்டீலை நோக்கியே இருந்தது.

இந்த ஆதாரம் சரியில்லை என்று கருதினாலும்கூட, 2005 செப்டம்பரில் வி.ஜி. பாட்டீலைக் கத்தியால் குத்திக் கொன்றவர்களில் ஒருவன், சிறைச்சாலையிலேயே உண்ணாவிரதம் இருந்தான். “”இந்தக் கொலையில் நீங்கள் அடியாள்கள்தான் என்றால் உங்களை ஏவிவிட்டவர்கள் யார்?” என்று கேட்டபோது அவர்கள், “”ரஜனி பாட்டீல் யார் யார் மீது குற்றஞ்சாட்டுகிறாரோ அவர்கள்தான்” என்று பதில் அளித்தான். பின்னர் அந்த “”சாட்சியமும்” மறைந்துபோனது. சிறையில் போலீஸôரின் காவலிலேயே அந்தக் கைதி மர்மமாக இறந்தார்.

பிரதிபாதான் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிற்கப்போகிறார் என்று யாரும் கற்பனை செய்துகூட பார்த்திராத அந்த நாளில் வி.ஜி. பாட்டீலின் கொலையையும், அதில் தொடர்புள்ளதாகக் கருதப்படும் ஜி.என். பாட்டீலும் அவருடைய அரசியல் சகாவும், அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்களால் சட்டத்தின் பிடியில் சிக்கிவிடாமல் எப்படி காப்பாற்றப்படுகிறார்கள் என்று “ஆஜ்-தக்’ டி.வி. நிருபர் படம்பிடித்துக் காட்டினார்.

ஜலகாமிலிருந்து 2 முறை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவராக பிரதிபா இருந்திருந்தும் மாவட்ட காங்கிரஸ் தலைவரான வி.ஜி. பாட்டீல் படுகொலை செய்யப்பட்டது தெரிந்தும் அவருடைய மனைவியான ரஜனியிடம் அனுதாபம் தெரிவித்துக் கூட பிரதிபா ஒரு வார்த்தைகூட பேசியதே இல்லை என்பது ஆச்சரியமாக இல்லை?

2005 தொடக்கத்திலும் 2007-ம் ஆண்டிலும், காங்கிரஸ் கட்சி என்ற பெரிய குடும்பத்தின் தலைவரான சோனியா காந்திக்கு தனது கணவரின் படுகொலை குறித்து 2 முறை கடிதம் எழுதினார் ரஜனி. ஜி.என். பாட்டீலை அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்கள் காப்பாற்றுகிறார்கள் என்று இருமுறை நேரில் சந்தித்தும் முறையிட்டார். சோனியாவின் மனம் இளகாததால் உயர் நீதிமன்றத்தின் ஒüரங்காபாத் கிளையில் புகார் மனு தாக்கல் செய்தார்.

பிரதிபா உள்ளிட்டவர்களின் பெயர்கள் அடங்கிய அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இந்த வழக்கை சி.பி.ஐ. தான் விசாரிக்க வேண்டும் என்று 2007 பிப்ரவரியில் உத்தரவிட்டது.

குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறவரின் சகோதரர் இப்போது சி.பி.ஐ.யின் பார்வையில். சகோதரர் செய்த கொலைக்கு பிரதிபா எப்படி பொறுப்பாவார் என்று கேட்கலாம். சந்தேகத்துக்கு உரியவரை அவருடைய சகோதரியே காப்பாற்றுகிறார் என்று நீதிமன்றமே கூறியிருக்கிறதே, அதற்குப் பிறகும் இந்த விஷயத்தில் நாம் எப்படி பிரதிபாவை சந்தேகப்படாமல் இருக்க முடியும்?

பிரதிபா குடியரசுத் தலைவர் ஆகிவிட்டால் அவருடைய சகோதரரை சி.பி.ஐ.யால் எப்படி விசாரிக்க முடியும்? நாட்டின் மிக உயர்ந்த பதவியின் மதிப்பைக் குலைக்க முயல்வது யார்? கொலை விசாரணையிலிருந்து சகோதரரைக் காப்பாற்றியவரா? பொதுமக்களிடம் அதை அம்பலப்படுத்தியவர்களா?

1973-ல் பிரதிபா பாட்டீல் தனது சொந்தப் பெயரில், தன்னையே நிறுவனர் தலைவராகவும் தனது உறவினர்களை இயக்குநர்களாகவும் கொண்டு கூட்டுறவு வங்கியொன்றை தொடங்கினார்.

சில ஆண்டுகள் கழித்து அந்த வங்கி -காய்கறி விற்பவர்கள், வீட்டு வேலை செய்கிறவர்கள், தினக்கூலிகள் மற்றும் இவர்களைப் போலவே கடுமையாக உழைத்து சம்பாதிப்பவர்களிடமிருந்து ரூ.760 லட்சத்தை டெபாசிட்டாகத் திரட்டியது. 1990-ல் அந்த வங்கி, பிரதிபாவின் உறவினர்கள் உள்பட பலருக்கும் கடன் வழங்கியது. பெண்களுக்கு மட்டும்தான் கடன் தர வேண்டும் என்பது அந்த வங்கியின் முக்கியமான விதி. ஆனால் பயன்பெற்றவர்களில் பிரதிபாவின் உறவினர்கள் பலர் இருந்தனர். அத்தனை பேரும் ஆண்கள் என்பதுதான் வேடிக்கை.

பிரதிபாவின் உறவினர்கள் வாங்கிய கடனுக்கான வட்டித் தொகை ரூ.33 லட்சம் ரத்து செய்யப்பட்டது; இந்த குறிப்பைப் புரிந்துகொண்ட அவர்கள், அசல் ரூ.225 லட்சத்தையும் திருப்பித் தராமல் தங்களிடமே வைத்துக் கொண்டனர்.

பிரதிபாவின் மற்றொரு சகோதரர், வங்கிக்கு உரிய தொலைபேசியை வீட்டுக்கு எடுத்துச்சென்று பங்குச் சந்தை தரகர்களுடன் அன்றாடம் பேசி 20 லட்ச ரூபாய் பில் வருமாறு சமூகத்துக்கு சேவை செய்தார்.

இதைப்போன்ற முறைகேடுகளும், சுரண்டல்களும் வங்கியின் நிதியில் 37%-ஐ கரைத்துவிட்டன. வேறு வழியில்லாமல் வங்கி நொடித்து விழுந்தது. ஏழை முதலீட்டாளர்கள் தங்களுடைய சேமிப்பு, வட்டி எல்லாவற்றையும் இழந்தனர். பிரதிபாவின் உறவினர்களோ அவர்களுடைய இழப்பிலிருந்து லாபம் பார்த்துவிட்டனர்.

2002-ல் அந்த வங்கியின் நிதி நிர்வாகத்தை ஆழ்ந்து ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி, வங்கியின் உரிமத்தை 2003-ல் ரத்து செய்தது. இனி இந்த வங்கியைத் தொடர்ந்து இயங்க அனுமதிப்பது மக்களின் நலனுக்கு எதிரானது என்ற முடிவுக்கு அது வந்தது. 2002 ஜூன் 18-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரகசிய அறிக்கையில், உறவினர்களுக்கே கடனும் சலுகையும் வழங்கியிருப்பது பெரும் மோசடியே என்று சாடியிருக்கிறது. பிரதிபா உள்ளிட்ட நிர்வாகிகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

வங்கி ஊழியர்களில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகளை சட்டப்படி குறிப்பிட்ட எண்ணிக்கையில் இட ஒதுக்கீட்டின்படி நியமிக்காமல், முழுக்க தங்களுக்கு வேண்டியவர்கள், உறவினர்களையே நியமித்துவிட்டனர். வங்கி நிர்வாகத்துக்கும் பிரதிபாவுக்கும் தொடர்பே இல்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால் 2002 ஜனவரி 22-ல் நடந்த இயக்குநர்கள் கூட்டத்தில்கூட, தலைமை நிர்வாகியை நியமிக்கும் அதிகாரத்தை பிரதிபாவுக்கு வழங்கியிருக்கின்றனர்.

இவையெல்லாம் குற்றச்சாட்டுகள் அல்ல, உண்மைகள். வங்கியை இப்படி முறைகேடாக நிர்வகித்ததற்காக விசாரணை நடத்தினால் பிரதிபா உள்பட அனைத்து இயக்குநர்கள் மீதும் கிரிமினல் வழக்கு தொடரப்படும். பிரதிபா பாட்டீல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அரசியல் சட்டம் 361 (2) பிரிவின்படி அவர் மீது வழக்கு தொடுக்க முடியாது.

சந்தேகத்துக்குரிய குற்றவாளி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தப் பதவியில் அமர்ந்தால் அதனால் அந்தப் பதவிக்கு கெüரவம் அதிகரிக்கும் என்பதுதான் பிரதிபாவின் வாதம் போலிருக்கிறது. தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் உள்ள வங்கியில் முறைகேடான செயல்களை அனுமதிக்கிறவர் குற்றவாளியா, அல்லது அதை வெளி உலகுக்குத் தெரிவித்து வாக்களிக்கப் போகும் மக்கள் பிரதிநிதிகளையும், நாட்டின் குடிமக்களையும் முன்கூட்டி எச்சரிப்பவர்கள் குற்றவாளிகளா?

——————————————————————————————————————-
Part II

பிரதிபாவின் பெயரில் தொடங்கிய வங்கி மட்டும் திவாலாகவில்லை; அவர் தன்னையே நிறுவனராகவும் முதன்மை ஊக்குவிப்பாளராகவும் கொண்டு தொடங்கிய கூட்டுறவு சர்க்கரை ஆலையும் அதேபோல நொடித்துப்போனது. மகாராஷ்டிர மாநிலத்தின் கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை 1999-ல் சோனியா காந்தியால் தொடங்கப்பட்டது. அதிக அளவு சர்க்கரையை உற்பத்தி செய்யாமலேயே ஆலை நொடித்தது. பிரதிபாவின் வங்கி உள்பட சில வங்கிகள் சேர்த்து அளித்த ரூ.20 கோடி திரும்ப வராமலேயே நஷ்டமாகிவிட்டது. ஊரக வளர்ச்சிக்காக நாட்டு மக்கள்தான் இந்த நஷ்டத்தையெல்லாம் ஏற்று ஈடுகட்ட வேண்டும். சர்க்கரை ஆலையின் தலைவரும், முதன்மை ஊக்குவிப்பாளருமான பிரதிபாவுக்கும் அந்த ஆலைக்கும் தொடர்பு கிடையாது என்று இப்போது அவருடைய நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள மிக உயர்ந்த பதவியின் கெüரவத்தைக் குலைப்பது யார்? பொதுமக்களின் 20 கோடி ரூபாயை விழுங்கிய கூட்டுறவு ஆலையா அல்லது அதை நாட்டுக்கு அம்பலப்படுத்திய எதிர்க்கட்சிகளா?

சகோதரருடன் கூட்டு சேர்ந்து கூட்டுறவு வங்கியையும் சர்க்கரை ஆலையையும் நடத்தினார். கணவர், மகள்களின் உதவியோடு கல்வி நிலையங்களையும் உழைக்கும் மகளிருக்கான விடுதிகளையும் நடத்தினார். பிரதிபாவின் கணவர் தேவிசிங் ஷெகாவத் செய்த சாதனைகளைத்தான் பாருங்களேன்! கிசான் தாகே என்ற ஏழை பள்ளிக்கூட ஆசிரியரை, உரிமையை வலியுறுத்தினார் என்ற ஒரே காரணத்துக்காக சம்பளம் கொடுக்காமலும், வேலையே இல்லாத தொலைதூர கிராமப் பள்ளிக்கு மாற்றியும் அலைக்கழித்தார். வேதனை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்குக் காரணம் தேவிசிங்தான் என்று அவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு இறந்தார்.

ஆனால் போலீஸôர், தாகேவின் மரணம் தொடர்பாக தேவிசிங் மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்யக்கூட மறுத்துவிட்டனர். பேராசிரியர் பாட்டீல் கொலை வழக்கில் எப்படி பிரதிபாவின் அண்ணன் மீது வழக்குப்பதிவு செய்ய மறுத்தனரோ அப்படியே இந்த வழக்கிலும் போலீஸ்காரர்கள் நடந்து கொண்டனர். இந்த வழக்கிலும் நீதிமன்றம் ஒரு முறையல்ல, 3 முறை தலையிட்டது. சந்தர்ப்ப, சாட்சியங்களை வைத்துப் பார்க்கும்போது தேவிசிங்தான் முதல் குற்றவாளி என்று அது திட்டவட்டமாகக் குறிப்பிட்டது.

இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். உயர்ந்த பதவிக்கு இழுக்கு என்று பிரதிபா எதைக் கூறுகிறார்? அவருடைய கணவரின் கிரிமினல் நடவடிக்கைகளையா? அல்லது அவற்றை மக்கள் அறிய அம்பலப்படுத்தும் பத்திரிகைகளையும் எதிர்க்கட்சிகளையுமா?

அடுத்தது அவருடைய குடும்பத்துக்குச் சொந்தமான சில அறக்கட்டளைகளின் அளப்பரிய சேவைகளைப் பற்றியது. ஷ்ரம் சாதனா டிரஸ்ட் (எஸ்.எஸ்.டி.), மகாராஷ்டிர மகிளா உதயம் டிரஸ்ட் (எம்.எம்.யு.டி.) என்ற அந்த இரண்டுக்குமே பிரதிபா பாட்டீல்தான் தலைவர், அவருடைய மகள் ஜோதி ரதோர்தான் நிர்வாக அறங்காவலர். இந்த இரு அமைப்புகளும் சேர்ந்து 5 உழைக்கும் மகளிர் விடுதிகளையும், 2 பள்ளிகளையும், ஜலகாமில் ஒரு பொறியியல் கல்லூரியையும் நடத்துகின்றன.

அவர்களுடைய உழைக்கும் மகளிர் விடுதி ஒன்று மும்பை-புணே நெடுஞ்சாலையில் பிம்ப்ரி என்ற இடத்தில், அரசு கொடுத்த நிலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த விடுதிகள் மத்திய, மாநில அரசுகள் தந்த மானியங்களில்தான் கட்டப்பட்டுள்ளன. ஆண்டு வருமானம் ரூ.16,000-க்கு மேல் சம்பாதிக்காத ஏழைகளுக்குத்தான் இந்த விடுதியில் இடம் தர வேண்டும் என்பது முதல் விதி. ஆனால் அங்கு தங்கியுள்ள மகளிரில் பலர் தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த, அதிக வருவாய் உள்ள பெண்கள். தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்படும் 22.5% இடங்களும் கூட மற்றவர்களுக்கே வழங்கப்படுகின்றன. ஆக இந்த அறக்கட்டளையின் நோக்கம் “”அறம்” அல்ல, எல்லாவற்றிலும் “”லாபம் தேடு” என்பதுதான். இந்த விவகாரத்தில் பிரதிபாவின் நடத்தையால் அந்த உயர்ந்த பதவியின் மாண்பு குலைகிறதா அல்லது அதை அம்பலப்படுத்தும் ஊடகங்களாலா?

குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அவரைத் தேர்ந்தெடுப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக, அதாவது 2007 ஏப்ரல் 26-ல், மகாராஷ்டிர மாநில அரசு 25 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பை பிரதிபாவின் கணவருடைய கல்விச் சங்கத்துக்கு அளித்தது. அங்கு விளையாட்டு அரங்க வளாகத்தைக் கட்டுவதற்காக அந்த நிலம் தரப்பட்டது. அதற்கு ரூ.36 லட்சம் தரப்பட்டது. 1996-ல் தனக்கு தரப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இத் தொகையை பிரதிபா வழங்கினார். உறவினர்கள் அறங்காவலர்களாக இருக்கும் அறக்கட்டளைகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை அளிக்கக்கூடாது என்று அரசு விதி குறிப்பிடும் நிலையிலும் இந்த முறைகேடு நடந்திருக்கிறது.

தொகுதி மேம்பாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய பிரதிபாவின் செயலால் உயர் பதவியின் கெüரவத்துக்கு இழுக்கா அல்லது அதை அம்பலப்படுத்திய பத்திரிகைகளின் நடவடிக்கையால் இழுக்கா?

தனியார் கல்லூரிகளில் நன்கொடை என்ற பெயரில் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று எல்லா மாநில அரசுகளும் சட்டம் இயற்றுகின்றன. இந் நிலையில் பிரதிபாவின் குடும்பத்துக்குச் சொந்தமான இரு அறக்கட்டளைகளும் சட்ட விரோதமாக கூடுதல் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு, அதை நன்கொடை என்ற கணக்கில் எழுதிக்கொண்டன. இந்த முறைகேட்டை வருமான வரித்துறை கண்டுபிடித்து, வரி போட்டது.

இதில் எது உயர் பதவியின் மாண்பைக் குறைக்கிறது? கூடுதல் கல்விக் கட்டணத்தை நன்கொடை என்ற பெயரில் மறைத்து வரி ஏய்ப்பு செய்ததா அல்லது அதை பத்திரிகைகளும் எதிர்க்கட்சிகளும் அம்பலப்படுத்தியதா? இன்னும் பல ஊழல்கள் இருந்தாலும் எழுத இடம் போதாது என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.

குடியரசுத்தலைவர் பதவியின் மாண்பை, அந்தப் பதவிக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிபா பாட்டீல்தான் குலைக்கிறாரே தவிர, அதை அம்பலப்படுத்தும் பத்திரிகைகளோ இதர செய்தி ஊடகங்களோ அல்ல. வேட்பாளர் என்று அவரை அறிவித்தபோதே இத்தனை ஊழல்களும் அணிவகுத்து முன் நிற்கிறதே, அவர் குடியரசுத்தலைவராகவே ஆகிவிட்டால் அப்புறம் என்னவெல்லாம் நடக்கும்?

தேர்தலுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் பதவி என்பதே கேலிக்குரியதாகிவிடும். குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களைப் பற்றி பேசாதீர்கள் என்று பிரதிபா வேண்டுகோள் விடுப்பதன் மூலம், பதவியின் மாண்பைக் காப்பாறிவிட முடியாது! தேர்தலுக்குப் பிறகும் இந்த விவகாரங்கள் பேசப்படும். நீதிமன்றத்தில் இது வழக்காக வந்தால், கேலி இன்னமும் உச்சத்துக்குப் போகும். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் உடன்பாட்டுக்கு வந்தால்கூட, இத்தனை முறைகேடுகளைச்செய்துள்ளதால் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முடியாது.

சுயநல நோக்கில் அவர் விடுத்துள்ள இந்த வேண்டுகோளே, அவர் குற்றம் செய்ததை நிரூபிக்கும் ஒப்புதல் வாக்குமூலம் ஆகும். இந்தப் பதவிக்குரிய கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்று பிரதிபா உண்மையிலேயே விரும்பினால் போட்டியிலிருந்து அவர் விலகுவதுதான் ஒரே வழி.

———————————————————————————-
இந்தியக் குடியரசும் இங்கிலாந்து முடியரசும் ஒன்றா?

இரா. செழியன்

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்களைப் பரிசீலித்து, தகுதியற்றவைகளை நிராகரித்த பிறகு பிரதிபா தேவிசிங் பாட்டீல், பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோர் மட்டுமே இப்போது களத்தில் நிற்கின்றனர்.

பிரிட்டனில் அமலில் உள்ள “வெஸ்ட்மினிஸ்டர்’ பாணி அரசியல் அமைப்பு முறையே நமக்கும் இருக்க வேண்டும் என்று இந்திய அரசியல் நிர்ணய சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்பியதால், மத்திய அமைச்சரவை எடுக்கும் முடிவுகளின்படி செயல்பட வேண்டிய -அடையாளச் சின்னமாக மட்டும் -நாட்டின் தலைவரான குடியரசுத் தலைவர் பதவி இந்தியாவில் உருவாக்கப்பட்டது. பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிப்பதிலும், நாடாளுமன்றத்தைக் கலைப்பதிலும் மட்டும் ஓரளவுக்கு இவர் சுதந்திரமாகச் செயல்படுகிறார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டும் வாக்களித்து குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வகையில் வரைவு வாசகத்தை, அப்போதைய அரசியல்சட்ட ஆலோசகர் பி.என். ராவ் வடித்திருந்தார்.

நேருஜி அதை ஏற்கவில்லை. “இது எளிமையாக இருக்கும் என்பது உண்மையே, ஆனால் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும். நாடாளுமன்றம் என்பது ஒரு கட்சி அல்லது குழுவின் ஆதிக்கத்தில் இருக்கும். அப்போது அந்தக் கட்சி அல்லது குழு தங்களைச் சேர்ந்த ஒருவரை மட்டுமே குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் நிலைமை ஏற்பட்டுவிடும். இதுவே அலங்காரப் பதவிதான், மிகக் குறைந்தவர்கள் தேர்ந்தெடுத்தால் இது அப்பட்டமான “”கைப்பாவை” பதவியாகிவிடும். குடியரசுத் தலைவரும் மத்திய அமைச்சரவையும் ஒரே எண்ணங்களைப் பிரதிபலிப்பார்கள்’ என்று சுட்டிக்காட்டினார்.

அதன் பிறகு, அரசியல் சட்ட நிர்ணய சபையில் மீண்டும் இது விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும், சட்டமன்றங்களின் எல்லா உறுப்பினர்களும் சேர்ந்து வாக்களிக்க வேண்டும், மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் வாக்குகளுக்கு மதிப்பு போடப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

இங்கிலாந்தில் அரசர் எப்படியோ இந்திய ஜனநாயகத்தில் குடியரசுத் தலைவரும். சம்பிரதாயமான தலைவர்தான்! ஆயினும், பிரதமர் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரின் தலைவராகவே இந்தியாவில் குடியரசுத் தலைவர் பார்க்கப்படுகிறார். நாடு சுதந்திரம் அடைந்தது தொடங்கி முதல் 20 ஆண்டுகளுக்கு பாபு ராஜேந்திர பிரசாத், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஜாகீர் உசேன் போன்ற பழுத்த அனுபவம் வாய்ந்த திறமைசாலிகள் அந்தப் பதவியை அலங்கரித்தனர்.

1969-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்குள் } தலைவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ஏற்பட்ட கலவரத்தாலும், மனசாட்சிப்படி வாக்களிப்பது என்ற கருத்தை பிரதமரே கையாண்டதாலும் அந்தப் பதவிக்குரிய கெüரவமும், கண்ணியமும் பாதிப்படைந்தது. குடியரசுத் தலைவர் என்ற பதவி வெறும் பொம்மை போன்றதாக இருக்கும் என்ற அச்சம், நிஜமாகிவிட்டது.

இப்போது நடைபெறவுள்ள 12-வது குடியரசுத் தலைவருக்கான தேர்தலைப் பொருத்தவரை, இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகுதி வாய்ந்த பலர் காங்கிரஸ் கட்சியில் இருக்கின்றனர்.

முதலில், பிரணாப் முகர்ஜியை எடுத்துக் கொள்வோம். திறமை, அனுபவம் ஆகிய இரண்டும் கலந்த அவரைவிடத் தகுதி வாய்ந்தவர் யாரும் இல்லை. அவர்தான் தேர்வு செய்யப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில், “”அவர் இல்லை -அவர் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் தேவைப்படுகிறார்” என்ற அறிவிப்பு கட்சி மேலிடத்தால் வெளியிடப்பட்டது.

மிகுந்த திறமைசாலி என்பதை கட்சித் தலைமையே ஒப்புக்கொண்டது பெருமைக்குரிய விஷயம்தான் என்றாலும், மத்திய அமைச்சராக இருப்பதற்குத்தான் தகுதி தேவை, குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்படி எதுவும் அவசியம் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கருதுவதுபோலத் தெரிகிறது. பொது வாழ்வில், “”தகுதியே” தகுதிக்குறைவாகவும் இதைப்போல, ஆகிவிடுவது உண்டு.

அதன் பிறகு பலருடைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, அதே வேகத்தில் நிராகரிக்கவும்பட்டன. எதைச் செய்வது என்று புரியாமல் ஒரு குழப்பத்தில், ராஜஸ்தான் மாநில ஆளுநர் பிரதிபா பாட்டீலை நிறுத்துவது என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும்- இடதுசாரி கட்சிகளும் ஒப்புக்கொண்டன.

இதில் தவறு ஏதும் இல்லை. 1950-களில் குடியரசுத் தலைவர் பதவி என்பதை மிகுந்த மரியாதைக்குரிய, பெருமைக்குரிய பதவியாகக் கருதினார் ராஜேந்திர பிரசாத். கட்சியிலோ, மத்திய அமைச்சரவையிலோ வகிக்கும் பதவியைவிட குடியரசுத் தலைவர் பதவி பெரிது என்று அவர் நினைத்தார். மெதுவாக அந்த நிலைமை மாறி, ஆளுங்கட்சித் தலைவர் பதவி என்பது பிரதமர், குடியரசுத் தலைவர் பதவிகளைவிட சக்திவாய்ந்தது என்று இப்போது ஆகிவிட்டது.

பிரதிபா பாட்டீல் மீது உச்ச நீதிமன்றத்திலும் தேர்தல் கமிஷனிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரதிபா மட்டும் அல்லது அவர்களுடைய உறவினர்களின் செயல்கள் குறித்தும் புகார்கள் செய்யப்படுகின்றன. வேட்பாளர்களின் சொத்து, கடன் விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்குநாள் வலுத்து வருகிறது.

சட்டப்பேரவை, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்குப் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் இருப்பவர்களும் -“”அரசியல் சட்டத்துக்கு விசுவாசமாக இருப்பேன், நாட்டின் ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் கட்டிக்காப்பேன்” என்று உறுதி அளிக்க வேண்டும் என்று “”தேசிய ஒருமைப்பாடு-பிராந்தியவாதம்” தொடர்பாக ஆராய 1962-ல் நியமிக்கப்பட்ட சர் சி.பி. ராமஸ்வாமி ஐயர் கமிட்டி பரிந்துரை செய்தது.

ஆனால், 16-வது திருத்தச்சட்டம் என்ற புதிய அரசியல் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அதை அந்த நாளில் திமுகவுக்கு எதிரான சட்டம் என்றே அழைத்தார்கள். மக்களவை, சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கட்டிப்போட அந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

2003 மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவின்படி, மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய படிப்பு, சொத்து, கடன், தங்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், விசாரணையில் உள்ள வழக்குகள் போன்ற விவரங்களை உரிய படிவங்களில் தெரிவிக்க வேண்டியவர்களானார்கள். இதை எல்லாப் பதவிகளுக்கும் கட்டாயமாக்குவது நல்லது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், சிவசேனை ஆகியவற்றுக்கு உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் பிரதிபா பாட்டீல்தான் வெற்றி பெறுவார்; 1969-ல் கடைப்பிடிக்கப்பட்ட மனசாட்சிப்படி வாக்களிக்கும் உத்தி கடைப்பிடிக்கப்பட்டால் இந்த முடிவு மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அரசியல் ஆதரவைவிட பிரதிபா பாட்டீலுக்கு ஆன்மிக ஆதரவு இருக்கிறது. பிரம்ம குமாரிகள் சங்கத்தை நிறுவிய பாபா லேக்ராஜின் பரிபூரண ஆசி (1969-ல் அவர் இறந்துவிட்டார்) பிரதிபாவுக்கு இருக்கிறது. மவுண்ட் அபுவில், பிரம்ம குமாரிகள் சங்கத் தலைவருடன் சமீபத்தில் பேசியபோது, “”மிகப்பெரிய பொறுப்பை ஏற்க நீ தயாராக இருக்க வேண்டும்” என்று பாபா லேக்ராஜ் கூறியிருக்கிறார். அதன் பிறகே, கட்சித் தலைவர் சோனியா காந்தியிடமிருந்து அவருக்கு அந்த இனிய அழைப்பு போயிருக்கிறது, குடியரசுத் தலைவர் தேர்தலில் நீங்கள்தான் வேட்பாளர் என்று.

பிரிட்டிஷ் வரலாற்றைப் படித்தவர்களுக்கு ஞாபகம் இருக்கும், முதலாவது ஜேம்ஸ் என்ற மன்னன், கடவுள் தன்னிடம் பேசி தனக்களித்த ஆசியினால், “”தெய்வீக உரிமையோடு” மக்களை ஆள்வதாக அறிவித்தார்.

பிரிட்டனில் மன்னர் எப்படி தேசத்தின் அடையாளத் தலைவரோ, அப்படி குடியரசுத் தலைவர் இங்கு அடையாளத் தலைவராகப் பதவி வகிக்கிறார். அதற்காக இங்கிலாந்து மன்னரைப்போலவே தனக்கும் “”தெய்வீக உரிமை” இருப்பதாகக் கூறி மக்களைத் தொல்லை செய்யாதிருப்பாராக!

(கட்டுரையாளர்: முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்.)

————————————————————————————————————

மிஸ்டர் பிரதிபா பாட்டீல்…
Prathibha patil husband devisingh shekawath

குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீலின் வருகைக்காக தனது இல்லம் முன்பு காத்திருக்கும் கணவர் தேவிசிங் ஷெகாவத்.

புது தில்லி, ஜூலை 23: இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீல் இனி தனது குடும்பத்திற்கும் தலைவியாக செயல்படுவார் என அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் கூறினார்.

குடும்பத் தலைவி மட்டுமில்லாது எங்களின் குலத்தலைவியாகவும் அவர் இருப்பார் என அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசுகையில் அவர் இதை நகைச்சுவையாக குறிப்பிட்டார். ஜூலை 25 முதல் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு குடிபுக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் தங்களின் குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வரும் கல்வி நிறுவனங்களை தங்களின் மகன்களில் ஒருவர் இரண்டாண்டுகளுக்கு முன்னர் நிர்வகித்து வந்தார். தற்போது அதில் அவர் தலையிடுவது இல்லை என்றார்.

குடியுரசுத் தலைவரின் கணவராக இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்கையில், தான் ஒரு சாதாரண மனிதன் தான் என அவர் தெரிவித்தார்.

Posted in Abdul Kalam, Abdulkalam, abuse, Accusations, Accused, Advani, Akbar, Allegation, Alliance, APJ, Attorney, Aurangazeb, Babar, Bajpai, bank, BJP, Bribe, Bribes, BSP, Burqa, candidate, Chandrasekar, Chandrasekhar, Chezhiyan, Co-operative, Condemn, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Cooperative, Corrupt, Corruption, CPI, CPI(M), Dalit, Desai, Devisingh, DMK, Elections, Emergency, Fakhruddin, Fakhrudheen, Fakruddin, Fakrudheen, Fakrudhin, Fakrudin, Female, Finance, Giri, Governor, Governor-general, Gurumoorthy, Gurumurthy, Hindu, Hinduism, History, Hussain, Hussein, Independence, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Islam, Issues, Jailsingh, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, JD, Kalaam, Kalam, kickbacks, KR Narain, Lady, Law, Lawyer, Loans, Lok Saba, Lok Sabha, LokSaba, maharashtra, Mahila Sahakari Bank, Manmohan, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MLA, Mogals, Moghuls, Moguls, Moraarji, Morarji, Moslem, MP, Mukhals, Muslim, Narain, Narayan, Narayanan, NDA, Neeraja, Neeraja Choudhri, Neeraja Choudhry, Neeraja Chowdhri, Neeraja Chowdhry, Neeraja Chowdhury, Neeraja Chowdry, Nehru, nexus, Nomination, Order, Party, Patil, Pilani, PM, Polls, Post, Power, Pradhiba, Pradhibha, Pradiba, Pranab, Pranab Mukherjee, Pranav, Prathiba, Pratiba, Pratibha, Pratibha Devisingh Patil, PRATIBHA MAHILA BANK, PRATIBHA MAHILA SAHAKARI BANK, Pratibha Patil, President, Prez, Propaganda, Purqa, Radhakrishnan, Raj, Rajaji, Rajasthan, Rajeev, Rajeev Gandhi, Rajendra, Rajendra Prasad, Rajiv, Rajiv Gandhi, Rajiv Gandi, Rajya Saba, Rajya Sabha, Rajyasaba, Rajyasabha, Rashtrapathi, Rashtrapathy, Reddy, Religion, Republic, SAHAKARI BANK, Sanjeev, Sanjeev Reddy, Sanjeeva reddy, Sarma, Scam, Scandal, SD Sharma, Sezhiyan, Shankar Dayar Sharma, Sharma, Shekavat, Shekavath, Shekawat, Shekawath, Shinde, Shivraj, Shivraj Patil, Shourie, Sikhs, Speaker, Speech, support, Sushil Kumar Shinde, TMMK, UPA, Vajpayee, Vajpayi, Veil, Venkatraman, vice-president, Victory, Vote, VP, VP Singh, Winner, Women, Zail singh, Zailsingh, Zakir | 6 Comments »

Rajasthan CM – Gujjars talks: Quota’s macabre face in Rajasthan Gujjar ire and police brutality

Posted by Snapjudge மேல் ஜூன் 4, 2007

குர்ஜார் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மீனா சமூகத்தினர் எதிர்ப்பு

ஜெய்ப்பூர், மே 30: பழங்குடியினர் பட்டியலில் குர்ஜார் சமூகத்தினரைச் சேர்த்தால் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மீனா சமூகத்தினர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

‘ராஜஸ்தானில் மீனா சமூகத்தினர் மட்டுமே பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். அதில் பிற பிரிவினரைச் சேர்ப்பதை ஏற்க முடியாது. அவ்வாறு சேர்ப்பதைத் தடுக்க எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக தியாகங்களைச் செய்ய தயாராக உள்ளனர்’ என்று ராஷ்ட்ரீய மீனா மகாசபை தலைவர் பன்வர் லால் மீனா கூறினார்.

குர்ஜார் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் வசுந்தரா ராஜே அரசு சேர்த்தால் அவர் மீண்டும் பதவிக்கு வர முடியாது என்றும் அவர் கூறினார்.

தௌசா, பண்டி மாவட்டங்களில் நடந்த தீவைப்பு சம்பவங்களுக்கு மீனா சமூகத்தைச் சேர்ந்த காவல்துறையினரே காரணம் என்று கூறப்படுவது குறித்து கேட்டபோது, “இது ஆதாரமற்ற, முட்டாள்தனமான குற்றச்சாட்டு” என்றார்.

———————————————————————————————-
07.06.07 ஹாட் டாபிக்
குமுதம் ரிப்போர்ட்டர்
நேற்று நந்திகிராம்
இன்று ராஜஸ்தான்

தொடரும் துப்பாக்கிச்சூடு கலாசாரம்

இருள் விலகி கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது. சரக்கு லாரிகளும், ஏர் பஸ்களும் சீரான இடைவெளியில் ராஜஸ்தான் மாநிலம் தௌசாவின் _ ஜெய்ப்பூர் _ ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தன. அத்தனை அதிகாலையில் அந்த நெடுஞ்சாலையில் திடீரென பொதுமக்கள் குழும ஆரம்பித்தனர். பேருந்தில் சென்றவர்கள் எல்லாம் ஒன்றும் புரியாமல் யோசித்தபடியே சென்று கொண்டிருந்தனர். அதிகாலை ஐந்து மணிக்கு வெறும் நான்காயிரம் பேர்தான் கூடியிருந்தனர். அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் பொதுமக்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்தது.

விஷயம் கேள்விப்பட்ட காவல்துறை, சம்பவ இடத்துக்கு விரைந்தது. என்ன ஏது என்று விசாரித்ததில் அவர்கள் எல்லாம் குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் தங்கள் இனத்தை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபடவே குழுமியிருப்பதாகவும் தெரிய வந்தது. அவ்வளவுதான். அடுத்த அரை மணி நேரத்தில் தடியடி. கண்ணீர்ப் புகை. துப்பாக்கிச்சூடு. கலவரம். ரத்தத் தெறிப்பு. எல்லாம் வரிசைக்கிரமமாக நடந்தது. இரண்டு காவலர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக பதினான்கு உயிர்கள் காவு வாங்கப்பட்டன.

நந்திகிராமத்தில் நடந்ததற்குக் கொஞ்சமும் சளைக்காமல் நடந்துள்ள இந்தச் சம்பவம் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. துணை ராணுவப்படை எல்லாம் குவிக்கப்பட்டுள்ளது. பதற்றம் கொஞ்சமும் குறையாமல் இருக்கிறது. ராஜஸ்தானின் முக்கிய மாவட்டங்களான டோங்க், ஜெய்ப்பூர், தௌசா, புண்டி, சவாய் மதோபூர், கரௌலி ஆகியவற்றில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன? யார் இந்த குஜ்ஜார் மக்கள்? அவர்களுடைய பின்னணி என்ன?

குஜ்ஜார் என்பது கிழக்கு ராஜஸ்தானில் அதிக அளவில் வசிக்கும் மக்களின் இனப்பெயர். குர்ஜார் என்றும் சொல்வார்கள். இவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, ஒசாமா பின்லேடன் புகழ் ஆப்கானிஸ்தானிலும் இருக்கிறார்கள். பர்வேஸ் முஷாரப் இருக்கும் பாகிஸ்தானிலும் இருக்கிறார்கள். இந்த இனத்தில் சுமார் ஐநூறு உட்பிரிவுகளும் இருக்கின்றன. ஆரம்பத்தில் குஜ்ஜார் இனத்தில் இந்துக்கள் மட்டும்தான் இருந்தனர். பின்னர், அராபிய முஸ்லிம்கள் இந்த இனத்தால் கவரப்பட்டு, அந்த இனத்தோடு உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். அதன்பிறகு, தங்கள் பெயரோடு குஜ்ஜார் என்பதையும் சிலர் இணைத்துக் கொண்டனர். உதாரணம் குஜ்ரன் வாலா, குஜார் கான். இதனால் இந்தியாவில் இந்த இனம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிந்தது. இந்து குஜ்ஜார்கள், முஸ்லிம் குஜ்ஜார்கள். இவை எல்லாமே எட்டாம் நூற்றாண்டில் இருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை நடந்த சங்கதிகள்.

இந்தியாவில் மட்டும் இந்த இன மக்களின் எண்ணிக்கை மூன்று கோடியைத் தாண்டும். இவர்கள் அனைவருக்கும் பொதுவான மொழி கோஜ்ரி. ஆனால், தாங்கள் வசிக்கும் இடத்தில் என்ன மொழி புழக்கத்தில் இருக்கிறதோ, அதைப் பழகிக் கொண்டனர். சர்தார் வல்லபபாய் படேல், இந்தர் குமார் குஜ்ரால், ஃபக்ருதீன் அலி அகமது, ராஜேஷ் பைலட் ஆகிய அரசியல் ஜாம்பவான்கள், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் போன்றோர் இந்த இனத்தவர்கள்தாம். இந்த இன மக்களின் முக்கியத் தொழில் விவசாயம், மாடு வளர்ப்பு, பால் விற்பனை.

கிழக்கு ராஜஸ்தானில் மிகப்பெரிய வாக்கு வங்கியைக் கொண்டுள்ள இவர்கள் அனைவருமே காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள். கண்ணை மூடிக் கொண்டு கை சின்னத்துக்கு வாக்களிப்பவர்கள். ராஜஸ்தானில் குஜ்ஜாரைப் போலவே மேலும் இரண்டு இனங்கள் இருக்கின்றன. ஜாட் மற்றும் மீனா. இவர்களில் ஜாட் இனத்தை 1999_ல் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தனர்.

ஏற்கெனவே தங்கள் இனம் அரசு வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுகிறது, ஜாட் இன மக்களே உயர்பதவிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள் என்று மனம்புழுங்கிக் கொண்டிருந்த குஜ்ஜார் மக்களை, இந்த அறிவிப்பு சிந்திக்க வைத்தது. ‘இனிமேல் வேலைவாய்ப்பு விவகாரங்களில் ஜாட் இனத்தவரோடு போட்டி போட வேண்டியிருக்கும். இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்குச் சமம். ஆகவே, எங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துவிடுங்கள்’ என்று போராட ஆரம்பித்தனர்.

இந்தச் சமயத்தில்தான் ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல் வந்தது. அப்போது குஜ்ஜார் இனத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தான் உதவுவதாக வசுந்தரா வாக்குறுதி அளிக்கவே, அதுநாள்வரை காங்கிரஸை ஆதரித்த அவர்கள் தாமரைக்குக் கை நீட்டினர். ஆட்சிக்கு வந்தார் வசுந்தரா ராஜே. அவ்வளவுதான். அத்தோடு எல்லாவற்றையும் மறந்துவிட்டு தனது பணிகளில் பிஸியாகிவிட்டார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த குஜ்ஜார்கள் போராட்டத்தில் குதித்தனர். விளைவு.. இப்போது பன்னிரண்டு உயிர்கள் பலிவாங்கப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தத் தாக்குதல் குறித்து குஜ்ஜார் சங்கர்ஷ் சமிதியின் தலைவர் பைய்ஸ்லா, “எங்கள் மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு நிகரானது’’ என்று கொதித்துள்ளார்.

“சாலை மறியலில் ஈடுபடுவது நமது போராட்ட முறைகளுள் ஒன்று. இதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தி மரண தண்டனை கொடுத்திருக்கிறது பா.ஜ.க. அரசு. இதற்குத் தகுந்த பதிலை அவர்கள் சொல்லியாக வேண்டும்’’ என்று ஆவேசப்பட்டிருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சின் பைலட். இவரும் குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்தவர்தான்.

“நான் எந்த வாக்குறுதியையும் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. இது முழுக்க முழுக்க மத்திய அரசு சட்டத் திருத்தம் செய்து, சரிசெய்யவேண்டிய விஷயம். இருந்தாலும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நான்கு அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளேன். இதுகுறித்து ஒரு முடிவெடுக்க குறைந்தது 15 நாட்களாவது அவகாசம் தேவை. அதுவரை பொறுமை காப்பது அவசியம்’’ என்று கூறியுள்ளார் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா.

ஆனால், இதுகுறித்து மத்திய அரசுக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பாதவரை போராட்டம் நிறுத்தப்படாது என்று கூறியிருக்கின்றனர் குஜ்ஜார் அமைப்பினர்.

‘இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் விதமாக குஜ்ஜார் இனத்தை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தால் நாங்கள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ என்று திடீரென போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றனர் ராஜஸ்தானின் மீனா இன மக்கள். இவர்கள்தாம் ராஜஸ்தானில் இருக்கும் ஒரே பழங்குடியின மக்கள். ஆக, ஒரு பிரச்னையின் தீர்வு அடுத்த பிரச்னைக்கான ஆரம்பமாக இருக்கக்கூடாது. ஆகவே, மிகவும் எச்சரிக்கையாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ராஜஸ்தான் அரசு! ஸீ

– ஆர். முத்துக்குமார்

—————————————————————————-

அன்னியப்பட்ட ஆட்சியாளர்கள்!

நீரஜா சௌத்ரி – தமிழில்: சாரி

ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜர் என்ற சமூகத்தவர் தங்களையும் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி, வன்செயல்களுடன் மேற்கொண்ட கிளர்ச்சி உச்ச கட்டத்தை அடைந்திருப்பதைப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்து வருகிறோம்.

ஆண்டுக்கு 9.5% பொருளாதார வளர்ச்சியை எட்டிவரும் நாட்டில், 21-வது நூற்றாண்டில் கால்பதித்துள்ள நிலையில் நடைபெறக்கூடிய சம்பவங்கள் அல்ல இவை. ஆனால் அப்படிப்பட்ட சம்பவங்கள்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறன.

அரசு வேலை வாய்ப்புக்காகத்தான் குஜ்ஜர்கள் திடீரென்று இப்படியொரு வன்முறைக் கிளர்ச்சியில் இறங்கினார்கள் என்பது நம்பும்படியாக இல்லை. அரசுப் பணியிலும் அரசுத் துறைகளிலும் மட்டும் அல்லாது தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அவசியம் என்று வலியுறுத்திவரும் நேரம் இது.

இட ஒதுக்கீட்டுக்காக இப்படி வன்முறையில் இறங்க வேண்டிய அவசியம் குஜ்ஜர்களுக்குக் கிடையாது. அப்படியானால் வன்செயல்கள் ஏன் நிகழ்ந்தன, அவர்களுடைய உண்மையான நோக்கம்தான் என்ன?

மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, பிற்பட்ட வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவது என்று வி.பி. சிங் தலைமையிலான அரசு எடுத்த முடிவையடுத்து காங்கிரஸ், பாரதீய ஜனதா போன்ற கட்சிகள் பின்னாலிருந்து தூண்டிவிட்டு, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கிளர்ச்சிகள் நடந்தன.

ஆனால் பிறகு தேர்தலில் வெற்றிபெற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளும் அவசியம் என்பதால் காங்கிரஸ், பாரதீய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே இட ஒதுக்கீட்டு கொள்கையை ஏற்று, அமல்படுத்த ஆரம்பித்தன.

ராஜஸ்தானில் ஜாட் சமூகத்தவருக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற அந்தஸ்தை வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் அளித்தது.

இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று முதலில் தீர்மானித்த வி.பி. சிங்கால் கூட அமல்படுத்த முடியாத காரியம் அது. ஜாட் சமூகத்தவருக்கு இட ஒதுக்கீட்டுச் சலுகையை அளித்திருந்தால் தேவிலாலின் ஆதரவு வி.பி. சிங்குக்குத் தொடர்ந்திருக்கும், மத்திய ஆட்சியும் பிழைத்திருக்கும். வட இந்திய அரசியல் வரலாறுகூட மாறியிருக்கும்.

வாக்கு வங்கிகள் மூலமே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதால், இட ஒதுக்கீடு என்பதை இனி எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று புரிகிறது. நேற்று ஜாட் சமூகத்தவர் போராடிப் பெற்றனர். இன்று குஜ்ஜர்கள் போராடுகின்றனர். நாளை மற்றொரு சமூகம் போராடத் தொடங்கலாம்.

குஜ்ஜர்கள் சமீபகாலமாக மிகவும் கொந்தளிப்பாக இருக்கின்றனர் என்பது உண்மையே. ராஜஸ்தான் மாநில மக்கள் தொகையில் 5% ஆக இருக்கும் குஜ்ஜர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதப்படுகின்றனர்.

ஜாதீய அடுக்கில் மேலே உள்ள ஜாட்டுகளுக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற அந்தஸ்து தரப்பட்டதும், இட ஒதுக்கீட்டின்கீழ் வரும் பதவிகளையும் இடங்களையும் அவர்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டனர். எனவேதான் குஜ்ஜர்கள் இப்போது பழங்குடி அந்தஸ்து கேட்டுப் போராடுகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் இமாசலத்திலும் குஜ்ஜர்கள் பழங்குடி சமூகத்தவராகவே பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் ராஜஸ்தான் மக்கள் தொகையில் 10% ஆக இருக்கும் “”மீனா” வகுப்பினர், குஜ்ஜர்களுக்கு பழங்குடி அந்தஸ்து தரப்படுவதைக் கடுமையாக எதிர்க்கின்றனர். அப்படித் தந்தால் தங்களுக்குரிய இடம் குறைந்துவிடும் என்பதுதான் அவர்களுடைய அச்சம்.

தெüசா மாவட்டத்தில் மீனா-குஜ்ஜர் இடையிலான மோதலில் 8 பேர் இறந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் இவ்விரு சமூகத்தவரும் அருகருகில் வசிக்கின்றனர். இருவரும் க்ஷத்திரியர்கள். எனவே மோதல் தீவிரமானால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு முன்னால், குஜ்ஜர்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தவர் வசுந்தரா ராஜ சிந்தியா என்பது உண்மை. ஆட்சிக்கு வந்த பிறகு அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த விஷயம் குறித்துப் பரிசீலிக்க 18 மாதங்களுக்கு முன்னால் ஒரு கமிட்டியை நியமித்தார். அதைப்பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்புகூட வெளியிடப்படவில்லை. அந்தக் கமிட்டியில் இருக்கிறோம் என்பதே சில உறுப்பினர்களுக்குத் தெரியாது!

வாக்குறுதிகளைத் தருவதும் ஆட்சிக்கு வந்தபிறகு அதை மறப்பதும் ஆட்சியாளர்களுக்குக் கைவந்த கலை. ஆனால் சில அரசியல்வாதிகள், இப்படிப்பட்ட நிலைமை தோன்றியவுடனேயே சுதாரித்துக் கொண்டு, நிலைமை முற்றாமல் ஏதாவது செய்துவிடுவார்கள். ஆனால் வசுந்தராவோ அகந்தையின் உச்சத்தில் இருக்கிறார். அவரை கட்சித் தொண்டர்கள்கூட எளிதில் பார்க்க முடிவதில்லை.

தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயகத்தில் அனுமதித்துள்ளபடி கிளர்ச்சி செய்தனர் குஜ்ஜர்கள். ஆட்சியாளர்கள் சொல்லாமல் போலீஸôர் அடித்து நொறுக்கமாட்டார்கள். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்த சிலருடைய மார்பிலே குண்டுகள் பாய்ந்துள்ளன. வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்துவதாக இருந்தால்கூட காலில்தான் சுட்டிருக்க வேண்டும்.

இச் சம்பவம் நடந்த 48 மணி நேரத்துக்குப் பிறகுகூட, “”கிளர்ச்சிக்காரர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்” என்று முதல்வர் பேசியிருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதைப் போல இருந்தது. பிறகு பாரதீய ஜனதாவின் தேசியத் தலைவர்கள் தில்லியிலிருந்து அளித்த நெருக்குதல் காரணமாக, குஜ்ஜர் சமூகத் தலைவர்களுடன் பேச குழுவை நியமித்தார். பிறகு வழக்கமாக அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளை எடுத்தார்.

இட ஒதுக்கீட்டின்படி ஒதுக்கிய இடங்கள் முழுவதையும் ஜாட் சமூகத்தவரே கைப்பற்றிவிடாமல் தடுக்க, பிகார் பாணியில் “”இணைப்பு 1”, “”இணைப்பு 2” என்று ஜாட்டுகளுக்கும் குஜ்ஜர்களுக்கும் தனித்தனியாக இட ஒதுக்கீட்டுச் சலுகைகளை அளித்திருக்கலாம். ஆனால் குஜ்ஜர்களும் இந்த இட ஒதுக்கீட்டை வேலைக்காக மட்டும் கேட்கவில்லை.

இப்போது ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பழங்குடிகளுக்கென்று 31 தனித் தொகுதிகள் உள்ளன. அவற்றை மீனாக்கள் பெற முடிகிறது. பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிலுமே சேர்த்து மொத்தம் 7 குஜ்ஜர்கள்தான் வெற்றிபெற முடிந்தது. இதனால் அரசியல்ரீதியாக அதிகாரம் செலுத்தும் இடத்தில் குஜ்ஜர்கள் இல்லை. இதற்காகத்தான் அவர்கள் தீவிரமான போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்திய சமுதாயத்திலே புதிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அரசியல் கட்சி வாரியாக மக்கள் இப்போது அணி திரள்வதில்லை. அவரவர் சமூகத்தின் பின்னணியில்தான் அணியாக உருவெடுத்து வருகின்றனர்.

கலிங்க நகர், சிங்கூர், நந்திகிராமம், தெüசா ஆகிய இடங்களில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி உணர்த்துவது இதுதான். புதிய பொருளாதார வளர்ச்சியின் பலன் மக்களுக்குக் கிடைக்கவில்லை.

சமுதாயரீதியாக ஒடுக்கப்பட்ட ஒரே சமூகமான மக்கள் தங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்திக்கொண்டு உரிமைகளுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் போராட ஆரம்பித்துள்ளனர்.

இதை உணரமுடியாத அளவுக்கு ஆட்சியாளர்கள் மக்களிடமிருந்து மிகவும் அன்னியப்பட்டு நிற்கின்றனர். இது நம்நாட்டு ஜனநாயக முறைக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

Posted in AA, abuse, Agitation, Ashok Gehlot, Assembly, Attack, Banjaras, BC, BJP, brutality, Caste, Community, Conflict, Congress, Crisis, Dausa, dead, Devi lal, Devilal, Education, EEO, Elections, Employment, FC, Gadia Lohars, Gujar, Gujjar, Gujjar Sangharsh Samiti, Gujjars, Himachal Pradesh, HP, institution, J&K, Jaipur, Jammu, Jammu & Kashmir, Jammu and Kashmir, Jobs, Karauli, Kashmir, Kirori Lal Meena, Law, Lohars, Mandal, Mathur, MBC, Meena, Meena-Gujjar, Meenas, Nadhigram, Nandhigram, Nandigram, OBC, OC, Order, Police, Polls, Power, Protest, Quota, Rajasthan, Raje, Rajnath, Rajnath Singh, Reservation, SC, scheduled tribes, Shiv Charan Mathur, ST, State, Talks, Tribes, UPA, Vasundhra, Vasundhra Raje, Violence, VP Singh | 3 Comments »

Health ministers meeting on polio eradication on June 6

Posted by Snapjudge மேல் ஜூன் 3, 2007

போலியோ பாதிப்பு அதிகம் உள்ள 10 மாநிலங்களுக்கு சுகாதாரத்துறை அழைப்பு

புது தில்லி, ஜூன் 3: போலியோ பாதித்த 10 மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

போலியோ குறித்து ஆராயவும், வரும் காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்க இந்த கூட்டம் கூட்டப்படுகிறது. வரும் ஜூன் 6-ம் தேதி தலைநகர் தில்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.

இது குறித்து தேசிய போலியோ ஒழிப்பு திட்டம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டு நாடுமுழுவதும் 60 பேருக்கு போலியோ பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

  • உத்தரப் பிரதேசம்,
  • பிகார்,
  • தில்லி,
  • ஹரியாணா,
  • பஞ்சாப்,
  • குஜராத்,
  • ராஜஸ்தான்,
  • ஆந்திர பிரதேசம்,
  • மகாராஷ்டிரம் மற்றும்
  • மத்திய பிரதேசம்

ஆகிய மாநிலங்களில் இந்த நோயின் தாக்கம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றில்

  1. உ.பி.யில் 36 பேரும்,
  2. பிகாரில் 16 பேரும்,
  3. உத்தரகண்டில் 3 பேரும்,
  4. ஆந்திரத்தில் 2 பேரும்,
  5. ஹரியாணா,
  6. குஜராத்,
  7. மகாராஷ்டிரம்,
  8. ராஜஸ்தான் ஆகியவற்றில் தலா ஒருவரும் போலீயோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு 674 பேர் போலீயோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டனர். இந்த ஆண்டு 66 பேருக்கு போலியோ இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்குமேயானால் உலக அளவில் நைஜீரியாவுக்கு அடுத்த படியாக போலீயாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.

உலக அளவில் இந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி வரை போலியோவால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை 111 ஆகும். இதில் 54 பேர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்களாவர்.

செப்டம்பர்-நவம்பர் மாதங்களில் இந்த போலியோ வைரஸின் தாக்கம் இருக்கும். போலியோவை கட்டுப்படுத்தும் பொருட்டு, தாக்கம் அதிகமாக உள்ள மாநிலங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Posted in Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Andhra, Andhra Pradesh, AP, Bihar, Delhi, Eradication, Gujarat, Haryana, Health, Healthcare, Immunization, Immunize, Madhya Pradesh, maharashtra, medical, MP, New Delhi, Nigeria, Outbreak, Polio, Prevention, Punjab, Rajasthan, Shot, UP, Utharkhand, Uttar Pradesh, Uttarkhand, Uttrakand | Leave a Comment »

Raje morphs into goddess; BJP not amused

Posted by Snapjudge மேல் மே 27, 2007

வாஜ்பாய், அத்வானி, ராஜ்நாத்தை மும்மூர்த்தியாக்கிய போஸ்டருக்கு எதிர்ப்பு

ஜோத்பூர் (ராஜஸ்தான்), மே 27: முன்னாள் பிரதமர் வாஜ்பாய், துணை பிரதமர் எல்.கே. அத்வானி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோரை இந்து கடவுள்களாக, மும்மூர்த்திகளாக சித்திரித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிக்கு பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

ராஜஸ்தானில் பாஜக ஆட்சிப்பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஏப்ரல் 15-ம் தேதி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் பிரம்மாவாக வாஜ்பாய், விஷ்ணுவாக அத்வானி, சிவனாக ராஜ்நாத் சிங்கையும் மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவை இந்து கடவுள் அன்னபூரணியாகவும் சித்திரித்திருந்தனர்.

“ஜெய் அன்னபூர்ணி மகாராணி வசுந்தரா’

“ஜெய் அன்னபூர்ணி மகாராணி வசுந்தரா’ என்று சுவரொட்டிக்கு தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.

மாநில மூத்த கேபினட் அமைச்சர் எல்.என். தவேயை குபேரனாகவும், மற்றொரு கேபினட் அமைச்சர் எச்.எஸ். குமாரியாவை இந்திரனாகவும், மற்ற அமைச்சர்களை தேவர்களாகவும், எம்எல்ஏக்கள், எம்.பி.க்களை பக்தர்களாகவும் சித்திரித்திருந்தனர்.

இந்த சுவரொட்டிகளை பாஜக தொண்டர் ஒருவரும் உள்ளூர் பூஜாரியும் தயாரித்தனர். ஜோத்பூர் பாஜக எம்எல்ஏ சூர்யகாந்த வியாஸ் மற்றும் பாஜக தலைவர்கள் இந்த சுவரொட்டியை வெளியிட்டுள்ளனர். இவர்கள் அனைவர் மீதும், இந்த சுவரொட்டிகளை அச்சடித்த அச்சக உரிமையாளர் மீதும் ஜஸ்வந்த் சிங்கின் மனைவி சீதள கன்வர் புகார் கொடுத்துள்ளார்.

“”அரசியல்வாதிகளை தெய்வங்களாக சித்திரித்து ஒட்டியுள்ள சுவரொட்டிகளால் மத உணர்வுகள் புண்படுகின்றன. ஆகவே புகாருக்குரிய அனைவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“”புகாரை பெற்றுள்ளோம். ஆனால் இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். கோதாரா இப்புகார் குறித்து பரிசீலித்து வருகிறார். அவருடைய பரிந்துரையின் பேரில் புகாரை பதிவு செய்வதா இல்லையா என்று முடிவு செய்யப்படும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் எச்.எஸ். குமாரியா தெரிவித்தார். ஒரு மாதத்துக்கு முன் காங்கிரஸ் தொண்டர் ஒருவரும் இத்தகைய புகாரை கொடுத்துள்ளார். அதன்மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Advani, Annapurna, Banner, BJP, Brahma, CM, Congress, Devi, Hindu, Hinduism, Hindutva, Jaswant Singh, Jodhpur, L K Advani, Offensive, Party, Photoshop, Poster, Rajasthan, Rajnath, Rajnath Singh, Religion, RSS, Sheetal Kanwar, Shiva, Siva, Suryakanta Vyas, Vajpai, Vajpayee, Vasundhara Raje, Vishnu | Leave a Comment »

Sikhs seek apology from dera chief: Punjab tense after clashes

Posted by Snapjudge மேல் மே 17, 2007

டேரா பாபாவைக் கைது செய்ய கோரிக்கை:மாநிலங்களவையில் கடும் கண்டனம்

ஜம்முவில் “”டேரா சச்சா செüதா” என்ற அமைப்பின் தலைவர் பாபா குர்மீத் சிங் ராமை கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சீக்கியர்கள்.

புது தில்லி, மே 17: சீக்கியர்களின் மனம் புண்படும் வகையில் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்ட “”டேரா சச்சா செüதா” என்ற அமைப்பின் தலைவர் பாபா குர்மீத் சிங் ராம் என்பவரைக் கைது செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் உறுப்பினர்கள் புதன்கிழமை கோரிக்கை விடுத்தனர்.

சீக்கியர்களால் மிகவும் மதிக்கப்படும் 5 பெரிய குருமார்களில் (பஞ்ச பியாரா) ஒருவரான குரு கோவிந்த சிங்கைப் போல உடையணிந்து, ஒப்பனை செய்துகொண்டு தெருவில் ஊர்வலம் சென்றார் பாபா குர்மீத்சிங் ராம். இதனால் சீக்கியர்கள் வெகுண்டு அதை ஆட்சேபித்தனர். அப்போது தலையிட்ட போலீஸôருக்கும் பாபாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பும் மோதலும் நடைபெற்றது. பாபா குர்மீத்சிங் ராம், ஹரியாணா மாநிலத்தில் வசிக்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்து மாநிலங்களவையில் புதன்கிழமை பாரதீய ஜனதா, சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சி உறுப்பினர்கள் கவலையும் கண்டனமும் தெரிவித்தனர். பாபாவைக் கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

“இது மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பஞ்சாபில் இருக்கும்போது மத்திய அரசால் ஏதும் செய்ய முடியாது’ என்று உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதில் அளித்தார்.

“பாபா இப்போது ஹரியாணாவில் வசிக்கிறார். ஹரியாணாவில் ஆட்சி செய்யும் அரசு ஒத்துழைப்பு அளித்தால்தான் அவரைக் கைது செய்ய முடியும்’ என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

(பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல் தலைமையில் அகாலிதளம்-பாஜக கூட்டணி அரசும், ஹரியாணாவில் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையில் காங்கிரஸ் அரசும் ஆட்சி செய்கின்றன).

“ஹரியாணா அரசிடம் இதுகுறித்துப் பேசிவிட்டேன், யார் யாரிடம் என்னென்ன கூற வேண்டுமோ அவை கூறப்பட்டுவிட்டன, எல்லாவித உதவிகளையும் வழங்க அரசு தயாராக இருக்கிறது’ என்று சிவராஜ் பாட்டீல் அதற்குப் பதில் அளித்தார்.

“நாட்டின் ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கும் செயல் இது; இது நாட்டை முன்னேற்றப் பாதையில் செல்லவிடாமல் தடுக்கும் முட்டுக்கட்டை போன்றது; இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது’ என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார்.

“சீக்கியர்களை வாத்துகள் என்று நினைத்துவிடாதீர்கள், இதைப் போன்ற செயல்களால் வட இந்தியா முழுக்க கலவரம் வெடிக்கும்’ என்று தர்லோசன் சிங் என்ற சுயேச்சை உறுப்பினர் எச்சரித்தார்.

“கற்பழிப்பு, கொள்ளை, பணம் பறித்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் அந்த பாபா மீது பதிவு செய்யப்பட்டு, வழக்குகள் நிலுவையில் உள்ளன’ என்று சுட்டிக்காட்டினார் எஸ்.எஸ். அலுவாலியா (பாஜக).

அரசியல் லாபத்துக்காக மதத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று ஃபரூக் அப்துல்லா (தேசிய மாநாடு) எச்சரித்தார்.


பஞ்சாபில் வேலை நிறுத்தம்

சீக்கியர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்
சீக்கியர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களுக்கும், தேரா சச்சா சௌதா என்னும் மதப்பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் இடையே கடந்த ஒரு வாரத்துக்கும் அதிகமான காலப்பகுதியில் நடந்த வன்செயல்களை அடுத்து, இன்று அங்கு ஒரு பொது வேலை நிறுத்தம் அனுட்டிக்கப்பட்டுள்ளது.

சீக்கியர்களால் போற்றப்படும் ஒரு சீக்கிய புனிதரின் உடையை அணிந்து, இந்த சௌதா மதப்பிரிவின் தலைவர் விளம்பரங்களில் தோன்றியதால், சீக்கியர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டதை அடுத்தே இந்த பிரச்சினைகள் ஆரம்பமாகின.

இந்தக் குழுவின் இடங்கள் ஞாயிற்றுக்கிழமையுடன் மூடப்பட வேண்டும் என்று சீக்கியத் தலைவர்கள் கேட்டனர்.

தம்மை மத சார்பற்ற ஒரு குழுவாக இவர்கள் வர்ணிப்பதாகக் கூறுகிறார் பஞ்சாபைச் சேர்ந்த ஒரு செய்தியாளரான அசிட் ஜொலி.

அந்தக் குழு சீக்கிய மதம், இந்து மதம் ஆகியவற்றின் பெரும்பாலும் தலித்துகள், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்களை தன்னுள் ஈர்த்துள்ளது. ஹரியானாவுடனான, பஞ்சாபின் எல்லையில் இதன் முக்கிய தளம் அமைந்துள்ளது.

பல்வேறு மதங்களில் இருந்து வந்தவர்களே இந்த தெரா சச்சா சௌதா பிரிவில் உள்ளனர்
பல்வேறு மதங்களில் இருந்து வந்தவர்களே இந்த தெரா சச்சா சௌதா பிரிவில் உள்ளனர்

இந்த அமைப்பின் சர்ச்சைக்குரிய தலைவரின் பெயர் பாபா குர்மீட் ராம் ரஹீம் சிங் என்பதாகும். அனைத்து மத பெயர்களையும் தன்னுடன் இணைத்துள்ளார் அவர்.

குர்மீட் ராம் ரஹீம் சிங் மீது அவருக்கு நெருக்கமான சகாக்கள் மீது சிபிஐ பல புகார்கள் குறித்து விசாரித்து வருகிறது. இவற்றில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற குற்றச்சாட்டுகளும் அடங்கும். ஒரு பத்திரிகையாளரைக் கொலை செய்த குற்றச்சாட்டும் அதில் அடங்கும். ஆனால் இவை அனைத்தும் இன்னமும் நீதிமன்றத்தில்தான் இருக்கின்றன. சீக்கிய மத சின்னங்களை இவர் ஒரு விளம்பரத்தில் பயன்படுத்தினார் என்ற காரணமே அண்மைய வன்செயல்களுக்கு வழி செய்தன. இது சீக்கியர்களின் மன உணர்வுகளைத் தூண்டிவிட்டது. ஆனால், இது தொடர்பாக முழுமையான மன்னிப்புக் கோரவும் அந்தக் குழு மறுத்துவிட்டது.

Posted in Akal Takht, Akali, Akali dal, Akalidal, Amritsar, Arya Samaj, Baba, Badal, Baluchistan, Ban, Bandh, BJP, clash, clergy, Community, Damdami Taksal, Defamation, dera, Dera Sacha Sauda, Divya Jyoti Jagran Sansthan, DSS, Gobind Singh, Gurdwara, Gurmeet, Gurmit, Gurmit Ram Rahim, Guru, Haryana, Hindu, Hindutva, Impersonation, J&K, Jammu, Jammu and Kashmir, Kashmir, Law, Ludhiana, Order, Panch Pyaara, Panch Pyara, Patiala, Police, Politics, priests, Protest, Punjab, Rajasthan, Religion, Sacrilege, SAD, SGPC, Shah Mastana, Shrine, Sikh, Singh, Temple, Tension | Leave a Comment »

Pranabh or Sushil Kumar Shinde or Karan Singh – First Among Equals?

Posted by Snapjudge மேல் மே 14, 2007

மாயாவதியின் மகத்தான வெற்றியால் குடியரசுத் தலைவர் தேர்தலில் புதிய வியூகம் அமைக்கும் இடதுசாரிகள்: பிரணப் முகர்ஜிக்கு வாய்ப்பு கிடைக்கும்?

புதுதில்லி, மே 14: உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி பெரும்பலத்துடன் ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் புதிய வியூகம் அமைக்க இடதுசாரி கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிகிறது.

இந்நிலையில் எந்த ஒரு கட்சியும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் பெயரை திட்டவட்டமாக அறிவிக்க முடியாத நிலையில் உள்ளது.

இதற்கிடையே குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக தேர்தல் கமிஷன் எந்த நேரத்திலும் அறிவிக்கை வெளியிடக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

உ.பி. தேர்தல் முடிவுக்காக காத்திருந்த காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இப்போது பொது வேட்பாளரை நிறுத்த முயன்றுவருகின்றன.

இடதுசாரிகளைப் பொருத்தவரையில் இரண்டாவது முறையாக கலாமை பதவியில் நீடிக்கச் செய்வதிலும், துணைக் குடியரசுத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத்தை வேட்பாளராக நிறுத்தச் செய்வதற்கும் விருப்பமில்லை.

இந்நிலையில், அரசியலிலும் ஆட்சியிலும் நீண்டகால அனுபவம் பெற்றுள்ள வெளியுறவு அமைச்சர் பிரணப் முகர்ஜியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக காங்கிரஸ் பரிந்துரைக்கும்பட்சத்தில், அதை ஏற்றுக்கொள்ள இடதுசாரிகளுக்கு நெருடல் எதுவும் இருக்காது என்று கூறப்படுகிறது.

இடதுசாரிகளுடனான பேச்சின்போது மத்திய அமைச்சர்கள்

  • பிரணப் முகர்ஜி,
  • சுஷில் குமார் ஷிண்டே,
  • முன்னாள் மத்திய அமைச்சர் கரண் சிங் ஆகியோரின் பெயர்களை பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

மாயாவதி தற்போது மேல்சாதியினர் ஆதரவையும் பெறுவதில் குறியாக இருப்பதால், குடியரசுத் தலைவர் தேர்தலில் தலித் வேட்பாளரை மட்டும் தான் ஆதரிப்பார் என்று கூற முடியாது.

உ.பி. முதல்வர் மாயாவதியின் ஆதரவில்லாமல் குடியரசுத் தலைவர் தேர்தலை சுமுகமாக நடத்த முடியாது என்பதில் காங்கிரஸ் தெளிவாக இருக்கிறது.

முக்கிய எதிர்க்கட்சியான பாஜக, கலாமை மீண்டும் வேட்பாளராக நிறுத்தலாம் என்று கடந்த ஆண்டு வெளிப்படையாக கூறி வந்தது. ஆனால் இடதுசாரிகள் எதிர்ப்பு காரணமாக மவுனமாக இருந்து வருகிறது.

தற்போதைய நிலையில் இடதுசாரி கட்சிகள் காங்கிரஸýடன் பேரம் செய்துகொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி வேட்பாளரை ஆதரிப்பது எனவும், பதிலுக்கு குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜிக்கு ஆதரவைப் பெறுவது எனவும் இடதுசாரிகள் திட்டமிடக்கூடும்.

—————————————————————————————————–

குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளர் யார்?

நீரஜா சௌத்ரி

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கை வெளியிட ஒரு மாதத்துக்கும் குறைவான அவகாசமே இருக்கும் இந்த நிலையில்கூட, அந்தப் பதவியை அலங்கரிக்கப் போகிறவர் யார் என்பதைத் தேர்வு செய்ய முடியாத அரசியல் குழப்ப நிலைமை காணப்படுவது நமது துரதிருஷ்டம்தான்!

“”கூட்டணி அரசுகள்தான் இனி” என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டதால், நமது அரசியல் முறைமையிலேயே ஒரு நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுவிட்டது. எந்த முக்கிய முடிவென்றாலும் அதை முதலில் ஆளும் கூட்டணிக் கட்சிகள் ஏற்க முதல் கட்டத்திலும், எதிர்க்கட்சிக் கூட்டணி ஆதரிப்பதற்கு அடுத்த கட்டத்திலும் காய்களை நகர்த்த வேண்டியிருக்கிறது.

முன்பெல்லாம், குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணி -அப்பதவி முடிவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவும், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணி -6 மாதங்களுக்கு முன்னதாகவும் தொடங்கிவிடும் என்று அனுபவஸ்தர்கள் கூறுகின்றனர்.

1987 ஜூலையில் குடியரசுத் தலைவரான ஆர்.வெங்கட்ராமனுக்கு அவர்தான் அடுத்து அந்தப் பதவிக்கான வேட்பாளர் என்பதை 1986 அக்டோபர் 4-ம் தேதியே தெரிவித்துவிட்டார் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி. பிரதமர் முதலில் எதிர்க்கட்சியினரையும் பிறகு தன் கட்சியினரையும் ஆலோசனை கலந்துவிட்டு கட்சியின் ஆட்சிமன்றக் குழுவில் தெரிவித்து ஒப்புதல் வாங்கியது அந்தக் காலம்.

ஆந்திர முதலமைச்சராகப் பதவி வகித்தபோது தன்னுடைய அரசைக் கலைத்தவர்தான் சங்கர் தயாள் சர்மா என்ற வருத்தம் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவுக்கு இருந்தபோதிலும், குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் அவர்தான் என்பதை குடியரசு துணைத் தலைவர் பதவி வகித்த சர்மாவிடம் முன்கூட்டியே தெரிவித்தார் நரசிம்ம ராவ்.

கே.ஆர். நாராயணன்தான் குடியரசு துணைத் தலைவராகப் போகிறார் என்பதும் அவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்தான், “”பதவி கிடைக்கட்டும் அதுவரை எதுவும் நிச்சயம் இல்லை” என்று உள்ளூர அவநம்பிக்கையுடன் இருந்தார்; அதற்குக் காரணமும் உண்டு. 1991-ல் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கு கே.ஆர். நாராயணனைத்தான் நரசிம்ம ராவ் தேர்வு செய்திருந்தார். ஆனால் கே. கருணாகரன் அதை விடாப்பிடியாக தடுத்து நிறுத்தினார். கருணாகரன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த சமயம் பார்த்து, குடியரசு துணைத் தலைவராக கே.ஆர். நாராயணனைத் தேர்வு செய்துவிட்டார் நரசிம்ம ராவ்.

அப்போதெல்லாம் ஒரு கட்சி ஆட்சிதான் நடந்தது; தனது அரசியல் உதவியாளர்கள் தயாரித்த 4 அல்லது 5 பேர் கொண்ட பட்டியலிலிருந்து ஒருவரை குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்வது பிரதமருக்கு எளிதாக இருந்தது. இப்போது அப்படி செய்ய முடியாதே?

இப்போதைய கூட்டணி அரசில் பிரதமரால் மட்டும் எதையும் தீர்மானிக்க முடியாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிகூட தீர்மானிக்கும் நிலையில் இல்லை. இந்தக் கூட்டணி அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும்; அடுத்து மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவையும் பெற வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தேர்வு செய்யும் வேட்பாளரை ஆதரிக்கும் மன நிலையிலேயே மாயாவதி இருக்கிறார் என்பது நிம்மதி தரும் விஷயமாகும்.

குடியரசுத் தலைவர் பதவிக்கு பைரோன் சிங் ஷெகாவத் போட்டியிட்டால், தங்களுடைய கூட்டணியில் இருப்பவர்கள்கூட அணி மாறி வாக்களித்துவிடுவார்களே என்ற கவலை காங்கிரஸ் தலைவர்களுக்கு இருக்கிறது. அவர் எல்லா கட்சியினராலும் விரும்பப்படுகிறவர் என்பது மட்டும் காரணம் அல்ல, அவர் நிறுத்தப்பட்டால் எல்லா கட்சிகளிலும் உள்ள தாக்குர்கள் அவருக்கே வாக்களித்துவிடுவார்கள்.

இதனால்தான்

  • அர்ஜுன் சிங்,
  • பிரணாப் முகர்ஜி,
  • சுசீல்குமார் ஷிண்டே,
  • நாராயண் தத் திவாரி,
  • சிவராஜ் பாட்டீல் என்று பல பேர்கள் அடிபடுகின்றன. இதில் இடம்பெறாத யாராவதுகூட கடைசி நேரத்தில் வேட்பாளராகிவிடலாம் என்றும் பேசப்படுகிறது.

ஷெகாவத்தைச் சமாளிக்கும் அளவுக்கு அரசியல் செல்வாக்கு படைத்தவர் பிரணாப் முகர்ஜி. ஆனால் அவர் குடியரசுத் தலைவர் ஆன பிறகு ஆளும் கூட்டணித்தலைமை விரும்புகிறபடிதான் எப்போதும் நடப்பார் என்று சொல்ல முடியாது. அதுமட்டும் இல்லாமல் ஆளும் கூட்டணியில் 40-க்கும் மேற்பட்ட அமைச்சரவைக் குழுக்களில் இடம் பெறும் அளவுக்கு அவர் முக்கியமான நிர்வாகி. அவருடைய அனுபவமும் வழிகாட்டலும் ஆளும் கூட்டணிக்குத் தொடர்ந்து தேவைப்படுகிறது.

ஷிண்டேவையோ சிவராஜ் பாட்டீலையோ நிறுத்த சோனியா காந்திக்கு விருப்பம் அதிகம். ஆனால் இவ்விருவருக்கும் மாற்றுக் கட்சிகள், அணிகளிலிருந்து வாக்குகள் கிடைப்பது அரிது.

தலித்துகளின் தேசியத் தலைவராக உருவாகிவரும் மாயாவதி, இன்னொரு தலித்தை (ஷிண்டே) தேசத்தலைமைப் பதவியில் அமர்த்துவதை எப்படி வரவேற்பார் என்ற சந்தேகம் இருந்தது. அவரோ காங்கிரஸ் தேர்வு செய்கிறவருக்கு என் ஆதரவு உண்டு என்று குறிப்பால் உணர்த்திவிட்டார். எனது கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களை ஆலோசனை கலந்துவிட்டு முடிவைத் தெரிவிக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் யாரை ஆதரிப்பார்கள் என்பது அடுத்து முக்கியமானது. எனவேதான் தயாநிதி மாறனுக்குப் பிறகு மத்திய அமைச்சரவையில் திமுக விரும்பிய மாற்றங்களை உடனுக்குடன் செய்து தந்தனர் சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும்.

கட்சிகளுக்குள் உள்ள போட்டிகள், கூட்டணிக்குள் காணப்படும் இழு-பறிகள், இருவேறு கூட்டணிகளின் பலம் ஆகியவை முக்கியத்துவம் பெற்றுவிட்டதால் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் உள்பட எந்த முக்கிய முடிவையும் எடுப்பது எளிதாக இல்லை. எனவே இந்த முயற்சிகளை வெகு சீக்கிரமாகவே தொடங்கிவிட வேண்டும். இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி சமீபத்திய அனுபவத்திலிருந்துகூட பாடம் கற்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது!

தமிழில்: சாரி.

Posted in BJP, BSP, Byron Singh Shekawat, Chatterjee, Communist, Congress, CPI, CPI(M), Dalit, Elections, Kalam, Karan, Karan Singh, KR Naraian, KR Narayan, Marxist, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, Naraiyan, Narasimha Rao, Narasimma Rao, Narasmha Rao, Narayan, NDA, Polls, Pranab, Pranab Mukarjee, Pranab Mukerjee, Pranab Mukerji, Pranab Mukharjee, Pranab Mukherjee, Pranabh, President, PV Narasmha Rao, PVNR, Rajasthan, Rao, Sarma, SD Sharma, Shankar Dayal Sharma, Sharma, Shekavat, Shekavath, Shekawat, Shekawath, Shinde, Somnath, Somnath Chatterjee, SP, Speaker, Sushil, Sushilkumar, Sushilkumar Shinde, Thakur, UP, UPA, vice-president, VP | 1 Comment »

Rs 50 crore rental arrears for unauthorised occupation of government bungalows

Posted by Snapjudge மேல் மே 2, 2007

அரசு பங்களாக்களை ஆக்கிரமித்து குடியிருப்பு அரசியல்வாதிகள், அதிகாரிகளின் வாடகை பாக்கி ரூ.50 கோடி

புதுதில்லி, மே 2: அரசு பங்களாக்களை அங்கீகாரம் இல்லாமல் ஆக்கிரமித்துத் தங்கியுள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 400 பேர் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி ரூ.50 கோடி என உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இதில் பாஜக தலைவர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் ஜஸ்வந்த் சிங் ஆகியோர் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி முறையே ரூ.16.83 லட்சம் மற்றும் ரூ.18.97 லட்சமாகும். அங்கீகாரம் இல்லாமல் அரசு பங்களாக்களில் குடியிருப்பவர்களிடம் இருந்து வாடகை வசூலிப்பது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடந்த ஜனவரி 17-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் அது தொடர்பான பிரமாண வாக்குமூலத்தை உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மற்றும் மறைந்த காங்கிரஸ் எம்.பி. சுனில் தத் ஆகியோரின் குடும்பத்தினர், பிகார் முன்னாள் ஆளுநர் புட்டா சிங் வாடகை பாக்கியை செலுத்தத் தவறி விட்டனர். காஷ்மீர், ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள், தில்லியில் அங்கீகாரம் இல்லாமல் ஆக்கிரமித்துள்ள பங்களாக்களுக்கு செலுத்த வேண்டிய வாடைகை பாக்கி முறையே ரூ.13.45 லட்சம், ரூ.9.60 லட்சம் மற்றும் ரூ.13.19 லட்சத்தை செலுத்தவில்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்கள் 3 பேர், உரிமக் கட்டணம் / சேதங்களுக்காக செலுத்த வேண்டிய தொகை ரூ.1.10 கோடி. காங்கிரஸ் மற்றும் பாஜக-வின் தில்லி மாநில பிரிவுகள் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி முறையே ரூ.50.15 லட்சம் மற்றும் ரூ.19.31 லட்சம். நிலுவையில் உள்ள வாடகைத் தொகையை வசூலிக்க அரசு தொடர்ந்து தீவிர முயற்சி எடுத்து வருகிறது. சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Posted in abuse, Bihar, BJP, Buta Singh, Congress, Court, Dutt, encroachment, Governor, J&K, Jammu and Kashmir, Jaswant, Jaswant Singh, Jaswanth, Jharkhand, K P S Gill, Kashmir, Law, Lok Saba, Lok Sabha, LokSaba, M S Bitta, MP, Order, P V Narasimha Rao, Power, PVNR, Rajasthan, Rajnath, Rajnath Singh, Rajya Sabha, Rao, Sanjay Dutt, SC, Sunil Dutt, Urban Development | 1 Comment »

Rich deposits of gold found by Australian company in Rajasthan

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

ராஜஸ்தானில் 3.85 கோடி டன் அளவுக்கு மாபெரும் தங்கப் படிவம் கண்டுபிடிப்பு

ஜெய்பூர், பிப். 22: ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில், 3.85 கோடி டன் அளவுக்கு மாபெரும் தங்கப் படிவங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தங்கப் படிவ ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள, இன்டோ கோல்டு மைன்ஸ் (ஐஜிஎல்) லிமிடெட் என்ற ஆஸ்திரேலிய தனியார் நிறுவனம் இதைக் கண்டுபிடித்துள்ளது.

அந் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மைக் ஹிக்கின்ஸ் ஜெய்பூரில் நிருபர்களிடம் புதன்கிழமை இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

பன்ஸ்வாரா மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்கம் உலகத் தரம் வாய்ந்தது. அங்கு ரூ.2,000 கோடியில், நவீன தொழில்நுட்பத்துடன் தங்கச் சுரங்கம் அமைக்கப்படும். இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் அங்கு ஆண்டுக்கு 8 டன் வீதம் தங்கம் வெட்டி எடுக்கும் பணி துவக்கப்படும்.

தங்கச் சுரங்கம் அமைக்கும் பணியில், மெட்டல் மைனிங் இந்தியா (எம்எம்ஐ) பிரைவேட் லிமிடெட் என்ற இந்திய நிறுவனத்துடன் இணைந்து எங்கள் நிறுவனம் கூட்டாகச் செயல்படும்.

தங்கச் சுரங்கம் அமைப்பதற்காக மொத்தம் 2,135 சதுர கி.மீ. நிலப் பரப்பு எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகமும் அனுமதி அளித்துவிட்டது.

நேரடியாகவும் மறைமுகமாகவும் நூற்றுக் கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ராயல்டி தொகையால் ராஜஸ்தான் மாநில அரசுக்கு பயன் கிடைக்கும் என்றார் மைக் ஹிக்கின்ஸ்.

தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு உற்பத்திச் செலவு அதிகரித்ததன் காரணமாக கோலார் தங்கச் சுரங்கம் கடந்த 2003-ல் மூடப்பட்டது. அதற்குப் பிறகு இந்தியாவில் தங்க உற்பத்தி வெகுவாகக் குறைந்துவிட்டது.

Posted in Australia, Banswara, Brisbane, Deposits, Gold, Hutty, Indo Gold, Jagpura, Karnataka, Kolar, Metal Mining India, Minerals, mines, Rajasthan, Raw Materials | Leave a Comment »

Development plans in Rajasthan – Vasundhara Raje

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 13, 2007

சத்தீஸ்கரிலிருந்து நிலக்கரி தரவேண்டும்: பிரதமரிடம் ராஜஸ்தான் முதல்வர் வலியுறுத்தல்

புது தில்லி, பிப். 13: “”ராஜஸ்தானின் அனல் மின் நிலையங்களுக்கு தொலைதூரத்தில் உள்ள ஒரிசா, ஜார்க்கண்டிலிருந்து நிலக்கரி வேண்டாம்; அருகில் உள்ள சத்தீஸ்கரிலிருந்து ஒதுக்கச் சொல்லுங்கள், இதனால் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி ரயில் சரக்குக் கட்டணம் எங்களுக்கு மிச்சமாகும்” என்ற முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் கோரிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றார்.

இத் தகவலை வசுந்தராவே தில்லியில் நிருபர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தார். கடந்த 2 ஆண்டுகளாக ராஜஸ்தான் வற்புறுத்தி வந்த நிலையிலும் தொடர்ந்து தொலைதூர மாநில நிலக்கரி சுரங்கங்களிலிருந்தே நிலக்கரி வாங்கி வருகிறோம் என்றார் அவர்.

“2011-ம் ஆண்டுக்குள் ராஜஸ்தான் மாநிலத்தில் மின்சார உற்பத்தியில் உபரி என்ற நிலையை எட்ட இலக்கு நிர்ணயித்திருக்கிறோம்; அதற்குத் தேவைப்படும் நிலக்கரி போதிய அளவில் கிடைத்தால் மட்டும் போதாது, உற்பத்திச் செலவும் கட்டுப்படியாகும் வகையில் அருகிலிருந்து கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இம் முறை நிலக்கரித்துறை பிரதமர் வசமே இருப்பதால் அவர் இக் கோரிக்கையை உடனே நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்’ என்றார் வசுந்தரா.

13 மெகா மின்னுற்பத்தி திட்டங்கள்: ராஜஸ்தானில் விவசாயம், தொழில்துறை ஆகியவற்றுக்கு போதிய அளவில் மின்சாரம் கிடைக்க 13 பெரிய திட்டங்களைத் தீட்டி நிறைவேற்ற ஆரம்பித்திருக்கிறோம். பழுப்பு நிலக்கரி, இயற்கை நிலவாயு, நிலக்கரி ஆகியவற்றை எரிபொருளாகப் பயன்படுத்தவிருக்கிறோம்.

100 கோடி போதாது: பார்மர், ஜெய்சால்மர் உள்பட 16 மாவட்டங்களில், வரலாறு காணாத வகையில் பெய்த மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டு பெரிய பாதிப்பு நேரிட்டது. இதற்கு மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வெறும் 100 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது. இத்தொகை போதவே போதாது. வெள்ளப் பகுதிகளை சோனியா காந்தியே நேரில் பார்த்திருக்கிறார். சேதமுற்ற பகுதிகளில் நிவாரணப்பணிகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. மொத்தம் ரூ.3,200 கோடி வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டிருக்கிறேன்.

கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டம்: தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை அமல்படுத்த நாடு முழுவதும் 200 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆனால் ராஜஸ்தானில் 6 மாவட்டங்களை மட்டுமே தேர்வு செய்துள்ளனர். மகாராஷ்டிரம், ஆந்திரத்தில் 32 மாவட்டங்களைத் தேர்வு செய்துள்ளனர். நிலப்பரப்பு அளவில் ராஜஸ்தான் மிகப்பெரியது. தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகள் அதிகம் உள்ள மாநிலமும் ராஜஸ்தான்தான். எனவே இந்த திட்டத்தின் கீழ் வரும் மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியிருக்கிறேன்.

நிதிச் சீர்திருத்தம்: நிதிச் சீர்திருத்த அமலில் ராஜஸ்தான் முன்னிலை வகிக்கிறது. இதற்காகவே சிறப்பு ஒதுக்கீடாக ரூ.400 கோடியை தருமாறு கோரியிருக்கிறேன் என்றார் வசுந்தரா.

Posted in BJP, Charges, Chattisgar, Chattisgarh, Chhattisgar, Chhattisgarh, CM, Coal, Commissions, Cost, Development plans, Electricity, Factory, Fees, Freight, Industry, Jaisalmer, Jharkand, Jharkhand, Lignite, Megawatt, Orissa, Power, Price, Rajasthan, State, Thermal, Vasundhara Raje | Leave a Comment »

Long Distance Medical camps for the Suburban rural villages to be setup across India

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2007

நாடு முழுவதும் அரசு ஒத்துழைப்புடன் கிராம தொலை மருத்துவ மையங்கள்சென்னை, ஜன. 12: நாடு முழுவதும் அரசு ஒத்துழைப்புடன் 16 கிராம தொலை மருத்துவ மையங்களை ஏற்படுத்த தில்லியிலுள்ள சர் கங்காராம் மருத்துவமனை திட்டமிட்டுள்ளதாக அம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பி.கே. ராவ் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது:

கிராமங்களில் உள்ள சுகாதார மையங்களில் இந்த மையங்கள் செயல்படும். இத்திட்டம் முதற்கட்டமாக, ராஜஸ்தான் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

இதன்படி, கிராமப் பகுதியில் சர் கங்காராம் மருத்துவமனையின் தொலை மருத்துவ நிலையம் நிறுவப்படும். இம் மையத்தில் பணிபுரிய கங்காராம் மருத்துவமனையின் சார்பில் மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

அம் மையத்துக்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், அவர் குறித்த மருத்துவத் தகவல்கள் தில்லியிலுள்ள கங்காராம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதன் மூலம் அந்நோயாளியின் இடத்திலிருந்து கொண்டே உலகத் தரத்தில் மருத்துவ ஆய்வு மற்றும் சிகிச்சையைப் பெற முடியும் என்றார் டாக்டர் பி.கே. ராவ்.

Posted in Doctor, Gangaram Hospital, Haryana, Healthcare, India, medical, Physcial, Rajasthan, Rao, Rural, Suburban, Tamil, Villages | Leave a Comment »

‘Her highness’ creates India row – “Shrimant” Yashodhara Raje Scindia

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

“ஸ்ரீமந்த்’ பட்டம் கிளப்பியுள்ள புதிய சர்ச்சை!

நீரஜா சௌத்ரி
தமிழில்: சாரி.

மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் யசோதரா ராஜே சிந்தியாவுக்கு, “”ஸ்ரீமந்த்” என்ற பட்டத்தை வழங்குவது என்று மத்தியப் பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஸ்ரீமந்த் என்றால் செல்வப் பெருந்தகை என்று பொருள். அக்காலத்தில் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்களை விளிக்கும் மரியாதைச் சொல்லாகவே இது இருந்தது. யசோதரா ராஜே சிந்தியா, மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராஜமாதா விஜயராஜே சிந்தியாவின் மகள். ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவின் சகோதரி. அதைவிட முக்கியம், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மாதவராவ் சிந்தியாவின் சகோதரி.

35 ஆண்டுகளுக்கு முன்னால் ராஜ வம்சத்தவர்களுடைய பெயர்களுடன் இணைத்து ஒலித்த இந்த பட்டங்களையும் பதவிகளையும் இந்திரா காந்தி தனது ஆட்சிக் காலத்தில் ஒழித்தார். மன்னர் மானியங்களையெல்லாம் ஒழிக்க மசோதா கொண்டு வந்தார். மாநிலங்களவையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் அது தோற்றது. பிறகு அவசரச் சட்டமாக அதைக் கொண்டு வந்தார். உச்ச நீதிமன்றம் அது செல்லாது என்று அறிவித்தது. பிறகு மக்களவையைக் கலைத்து நாடாளுமன்றத்துக்குப் பொதுத் தேர்தலை நடத்தி பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய ஆட்சியை அமைத்தார். அப்போது மன்னர் மானியம் ஒழிப்பு, சிறப்பு பட்டங்கள் ஒழிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இப்போதோ மத்தியப் பிரதேச ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் முதல்வர் சிவராஜ் செüஹான், தனது அரசில் பணிபுரியும் இளைய அமைச்சரான யசோதரா ராஜே சிந்தியாவுக்கு ஸ்ரீமந்த் என்ற பட்டத்தை வழங்கத் தீர்மானித்திருக்கிறார்.

3 காரணங்கள்: இதற்கு 3 காரணங்கள் உள்ளன என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குவாலியர் பிரதேசத்தில் ராஜ குடும்பத்தினரும் அவர்களுடைய விசுவாசிகளும் அதிகம். அவர்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக செüஹான் இப்படி விருது வழங்கியதாக ஒரு வட்டாரம் தெரிவிக்கிறது. காங்கிரஸ் பறித்த பட்டங்களை வழங்கி ராஜ வம்சத்தை கெüரவிக்க பாரதீய ஜனதா தயாராக இருக்கிறது என்பதை மறைமுகமாக உணர்த்தவே இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு என்று அவ் வட்டாரம் சுட்டிக்காட்டுகிறது.

சிந்தியா குடும்பத்துக்குள்ளேயே சொத்துச் சண்டை தீராமல் இருக்கிறது. இந் நிலையில் யசோதராவுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தப் பட்டம், மாநில அரசு அவருக்கு ஆதரவாக இருப்பதை உணர்த்துவதாக மற்றொரு வட்டாரம் சுட்டிக்காட்டுகிறது.

விதிஷா, படே மலேரா தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றிருந்தாலும், காங்கிரஸýக்கு அடுத்த இடத்தை உமா பாரதியின் கட்சி பெற்றிருக்கிறது. அவர் ராஜமாதா விஜய ராஜே சிந்தியாவால் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டவர். எனவே ராஜ வம்சத்தவரும் அவருடைய ஆதரவாளர்களும் உமா பாரதி பக்கம் சாய்ந்து விடக்கூடாது என்பதற்காக இப் பட்டம் தரப்பட்டதாக மற்றொரு வட்டாரம் தெரிவிக்கிறது.

எது எப்படியோ, மத்தியப் பிரதேச அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆர்எஸ்எஸ்ஸின் ஆசி நிச்சயம் உண்டு. ராஜ குடும்பத்தவர்களை மீண்டும் தன் பக்கம் ஈர்க்க ஆர்எஸ்எஸ் முயற்சிகளைச் செய்து வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் மெüனம்தான் இப்போது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஏனெனில் மன்னர் மானிய ஒழிப்பையும், பட்டங்கள் ஒழிப்பையும் தனது முக்கிய கொள்கையாக இந்திரா காந்தி கொண்டிருந்தார்.

சுதந்திரமான குடியரசு நாட்டில் மக்கள் அனைவரும் சமம். அதில் யாருக்கும் சிறப்பு பட்டங்களோ, பெயர்களோ கூடாது என்று அறிவித்தவர் இந்திரா காந்தி. ஆனால் இப்போது சிறப்பு பட்டங்களையும் பெயர்களையும் கூறி அழைப்பது வழக்கமாகி வருகிறது. ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்களும் பெரும் தொழிலதிபர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகி ஆட்சி அதிகாரத்தில் ஓர் அங்கமாகிவரும் பருவம் இது. மக்களிடையேயும் இது பெரிய சலசலப்பை ஏற்படுத்திவிடவில்லை. ராஜ குடும்பத்து பாரம்பரியங்களை ஏற்கும் மன நிலையில் மக்கள் இருப்பதையே இப்போதைய நிகழ்வுகள் பறைசாற்றுகின்றன.

  • வி.பி. சிங்கை “”ராஜா சாஹேப்” என்று அழைப்பது,
  • மாதவராவ் சிந்தியாவை “”மகாராஜா” என்று அழைத்தது,
  • திக்விஜய் சிங்கை “”ராஜா” என்று அழைப்பது அனைத்துமே மக்களின் இம் மனோபாவத்தையே உணர்த்துகின்றன.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்துவது என்பதே “”நவீன ஜமீன்தார்களை” உருவாக்கும் நடவடிக்கையே அல்லவா! சமத்துவம் என்ற கொள்கை இப்போது கேலிக்குரியதாகிவிட்டது. சில குடும்பங்களும் வம்சங்களும் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள், சலுகைகளைப் பெறத் தகுதி உள்ளவர்கள் என்ற கருத்து அரசியலில் வேர்விட ஆரம்பித்துவிட்டது. சமதர்மக் கொள்கைக்கு இது வேட்டுவைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

தமிழில்: சாரி.

Posted in Feudal, Honor, Madhya Pradesh, Neeraja Chowdhry, Op-Ed, Rajasthan, Shrimant, Srimanth, Title, yashodhara raje scindia, yasodhara raje scindia | Leave a Comment »