Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Global Warming’ Category

Breath with care – Oxygen Supply, Carbon Monoxide poisoning

Posted by Snapjudge மேல் மே 18, 2007

நெட்டில் சுட்டதடா…: சுவாசிக்கும் முன் யோசி!

ராமன் ராஜா

சென்னையில் ஒரு கார் மெக்கானிக் ஷாப். குளிர் சாதனம் பொருத்திய கார் ஒன்று சர்வீசுக்காக வந்து நிற்கிறது. ராத்திரி முதலாளி வீட்டுக்குக் கிளம்பின பிறகு, பட்டறையில் வேலை செய்யும் இரண்டு சிறுவர்கள் தூங்குவதற்கு ஆயத்தம் செய்கிறார்கள். காரில் ஏறிக் கதவைச் சாத்திக் கொண்டு என்ஜினை ஆன் செய்கிறார்கள். கோடையின் புழுக்கத்துக்கு இதமாக ஏ.ஸியை முழு வேகத்தில் திருப்பிக் கொள்கிறார்கள். நாள் முழுவதும் ஸ்பானர் பிடித்த களைப்பில் சுகமாகத் தூக்கத்தில் நழுவுகிறார்கள்…. ஆனால் காலையில் பார்க்கும்போது இருவரின் உயிரற்ற உடல்கள்தான் காரில் இருக்கின்றன. ஒரு காயமில்லை, ரத்தமில்லை, விஷம் சாப்பிட்ட அறிகுறியும் இல்லை. என்னதான் நடந்திருக்கும்?

சில மாதங்களுக்கு முன்னால் -பூனாவில் ஒரு கல்லூரி ஹாஸ்டல். பத்தொன்பது வயது மாணவி அர்ச்சனா, நள்ளிரவில் தனியாகப் படித்துக் கொண்டிருக்கிறார். டிசம்பர் குளிருக்கு எல்லாக் கதவு ஜன்னலும் நன்றாக அடைத்திருக்கிறது. திடீரென்று பவர் கட். மறுநாள் பரீட்சை என்பதால், ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொண்டு படிப்பைத் தொடருகிறார் மாணவி. வட இந்தியா பக்கமெல்லாம் கிடைக்கும் வாசனை மெழுவர்த்தி; ஓர் அடி நீளம் இருக்கும். பெரிய சுடர்… சற்று நேரத்தில் அர்ச்சனாவின் கண் சொக்குகிறது. அப்படியே ஒரு பத்து நிமிடம் டேபிளில் சாய்ந்து தூங்கலாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் அடுத்த நாள் காலையில் பரீட்சை எழுதுவதற்கு அர்ச்சனா இல்லை. விடுதி வார்டன் கதவை உடைத்துக் கொண்டு போய்ப் பார்த்தபோது கிடைத்த ஒரே சாட்சி, முழுவதும் எரிந்து முடிந்த மெழுகுவர்த்தியின் மிச்சங்கள்தான்.

கத்தியின்றி ரத்தமின்றி ஏற்பட்ட இந்த மூன்று மரணங்களின் மர்மம், போஸ்ட் மார்ட்டத்தில்தான் தெரிய வந்தது. இவர்கள் எல்லோரும் கார்பன் மோனாக்ûஸடு வாயுவை சுவாசித்ததால் இறந்திருக்கிறார்கள். இந்த கார்பன் மோனாக்ûஸடு (சுருக்கமாக கா.மோ.) என்பது கரியும், ஆக்ஸிஜனும் சரிவிகிதத்தில் கலந்தது. எங்கே எது எரிந்தாலும் இந்த வாயு வெளிப்படும். பொருள் எரிவதற்குப் போதுமான காற்று சப்ளை இல்லாவிட்டால் ஏராளமாக கா.மோ வாயுதான் உற்பத்தியாகும். வாகனங்கள், விறகு-கரி அடுப்பு, பர்னர் சரியில்லாத ஸ்டவ், ஜெனரேட்டர் செட்டுகள் எல்லாம் கார்பன் மோனாக்ûஸடைத் துப்பும் எமன்கள்! (சிகரெட் புகைத்தாலும் சுருள் சுருளாக கா.மோ.தான் ஜாக்கிரதை). புகைபோக்கி வைத்துப் பாதுகாப்பாக வெளியே விட்டால் உலகம்தான் குட்டிச்சுவராகுமே தவிர, நமக்கு உடனடி ஆபத்தில்லை. அதுவே மூடின சின்ன அறையில், அல்லது காருக்குள் ஆளைச் சூழ்ந்துகொண்டால் சில நிமிடங்களில் மரணம்தான்.

கார்பன் மோனாக்ûஸடைப் பார்க்க முடியாது. வாசனை எதுவும் இருக்காது என்பதால் கண்டுபிடிப்பது கஷ்டம். ரத்தத்தில் உள்ள ஹிமோக்ளோபினைக் குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டு மூளையைச் செயலிழக்கச் செய்துவிடுவதால், எழுந்து ஜன்னலைத் திறக்கவேண்டும் என்ற எளிய செயலைக் கூடச் செய்ய முடியாமல் கை கால் ஓய்ந்துவிடும். உலகத்தில் வருடா வருடம் சில நூறு பேர் கார்பன் மோனாக்ûஸடைச் சுவாசித்து இறக்கிறார்கள். மேலை நாடுகளில் கா.மோ சூழ்ந்திருப்பதைக் கண்டுபிடிக்கக் கருவிகள் வைத்திருக்கிறார்கள். அதெல்லாம் கூடத் தேவையில்லை; நமக்கு கார்பன் மோனாக்ûஸடு பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறதா என்பதை அறிவது சுலபம்: காற்று புகுந்து புறப்பட இடமில்லாமல் பெட்டி மாதிரி அடைபட்ட அறையில் இருக்கிறீர்களா? அடுப்பு, கணப்பு, ஜெனரேட்டர் செட் ஏதாவது புகைகிறதா? தலை வலி, மறதி, மனக்குழப்பம், அசதி, வாந்தி என்று சித்த வைத்தியசாலை விளம்பரத்தில் வரும் அறிகுறிகள் ஏதாவது தெரிகிறதா? ஆம் எனில் அனேகமாக நீங்கள் அளவுக்கு மீறி கா.மோ.வை சுவாசித்திருக்கக் கூடும். கதவைத் திறந்து வையுங்கள்; காலாற நடந்து போய் சுத்தமான காற்றை நெஞ்சில் நிரப்பிக் கொண்டு வாருங்கள்; சரியாகிவிடும். கார்பன் மோனாக்ûஸடிலிருந்து தப்பிக்க ஒரே வழி, காற்றோட்டம் ஏற்படுத்துவதுதான். காரில் போனால், எஞ்சினை ஓட விட்டுக் கொண்டு ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்கக்கூடாது.

மூடிய அறைக்குள்தான் இந்த ஆபத்து என்றால், நாகரிக உலகில் ஜன்னலைத் திறந்து வைத்தால் வெளியிலிருந்து வேறுவிதமான பேராபத்து காத்திருக்கிறது! போபால் நகரத்தில் யூனியன் கார்பைட் கம்பெனியிலிருந்து விஷவாயு கசிந்து ஆயிரக்கணக்கானவர்கள் இறந்ததை, இறந்து கொண்டிருப்பதை மறக்க முடியுமா? அந்த மரண இரவில், கதவு ஜன்னல்களை டைட்டாக அடைத்துக்கொண்டு ஏ.ஸி. அறையில் தூங்கியவர்கள் பலர் பிழைத்துக் கொண்டார்கள். தொழிற்சாலைகளின் விஷ வெளிப்பாடுகளால் உடனடியாக மரணம் நேர்ந்தால்தான் தலைப்புச் செய்தியாகிறது; ஆனால் பல ஊர்களில், எந்தப் பேப்பரிலும் பிரசுரமாகாமல் தினம் கொஞ்சம் கொஞ்சமாக ஜனம் செத்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களுடைய அவல ஓலத்தைக் கேட்க முடியாமல் அதிகாரிகள் காதில் சில்லறை நாணயங்கள் அடைத்துக் கொண்டிருக்கிறது போலிருக்கிறது.

கடலூருக்குப் பக்கத்தில் சில கிராமங்கள் இருக்கின்றன. அவற்றின் பக்கம் மாலை வேளைகளில் ஒரு கிலோ மீட்டர் வாக்கிங் போனால் விதவிதமான வாசனைகள் மூக்கைத் துளைக்கும். நெயில் பாலிஷ், கொசுவர்த்திச் சுருள், முட்டைக்கோஸ், அழுகின சப்போட்டாப் பழம், செத்த எலி, என்று பத்தடிக்கு ஒரு நறுமணம். அங்கே இருக்கும் சிப்காட் தொழிற்பேட்டையின் ரசாயன ஆலைகளிலிருந்து வெளியாகும் கெமிக்கல் புகைதான் இத்தனை விதத்தில் நாறுகிறது. இடிப்பாரை இல்லாத ஏமரா அரசாங்கம், 1980 வாக்கில் தொழிலை வளர்க்கிறேன் பேர்வழி என்று கண்ட கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கும் வரிவிலக்கு, விதி விலக்கு எல்லாம் கொடுத்துப் புகுந்து விளையாடச் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டுவிட்டது. அவர்கள் அம்மோனியா, அசிடேட் என்று அகர வரிசைப்படி ஆரம்பித்து ஊரிலுள்ள அத்தனை விஷப் பொருள், வேதிப் பொருள்களையும் உற்சாகமாக ஊதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். பொழுதன்னிக்கும் இதைச் சுவாசித்துக் கொண்டிருக்கும் உள்ளூர் மக்களுக்குத்தான் பாவம், போக்கிடமே இல்லை. சில சமயம் அவர்கள் இருமல் தாங்க முடியாமல் காறித் துப்புகிற கோழை கூட பஞ்சுமிட்டாய் நிறத்தில் வருகிறது. பயங்கரம்!

நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்பவர்களுக்கு நிமோகோனியாசிஸ் என்ற வியாதி வரும். கரித் தூசியைச் சுவாசித்து சுவாசித்து, நுரையீரல்கள் முழுவதும் ரயில் இஞ்சினின் பாய்லர் மாதிரி கறுத்துவிடும். சீக்கிரமே வி.ஆர்.எஸ். வாங்கிக் கொண்டு கொடைக்கானல் மாதிரி நிறைய இயற்கைக் காற்று கிடைக்கும் ஊரில் போய் செட்டில் ஆகிவிட்டால் ஓரளவுக்கு உடல் தேற வாய்ப்பு உண்டு. மணல் அள்ளுவது, கல் குவாரி வேலை போன்றவை செய்பவர்களுக்காக இதைவிட அருமையான ஒரு வியாதி இருக்கிறது: ‘நிமோனோ…’ என்று ஆரம்பித்து, இடையில் ஏகப்பட்ட எழுத்துகளை இட்டு நிரப்பி, ‘… கோனியாசிஸ்’ என்று முடியும் 45 எழுத்து வியாதி. இந்த நுரையீரல் நோயின் பெயர்தான் இப்போதைக்கு ஆங்கில அகராதியிலேயே மிக நீளமான வார்த்தை! (பெருமையாகச் சொல்லிக் கொள்ளவாவது உதவும்.)

டோக்கியோ போன்ற பெரு நகரங்களில் டிராபிக் போலீஸ்காரர்கள் நாள் முழுவதும் வாகனப் புகையில் நிற்பதால் அவர்களுக்கு ஆக்ஸிஜன் முகமூடி கொடுத்திருக்கிறார்கள். நம்ம ஊரிலும் இதற்கு சற்றும் குறையாத மாசுதான். தூசுதான். ஆனால் முகத்தில் சும்மா ஒரு கர்சீப் சுற்றிக்கொண்டு காவலர்கள் கடமையாற்றுவதைப் பார்க்கும்போது அனுதாபம் ஏற்படுகிறது. (அடுத்த முறை அந்தப் பத்து ரூபாயைக் கொடுக்க நேரும்போது பல்லைக் கடிக்காமல் கொடுத்தால் என்ன?) மேலை நாடுகளில் ஆக்ஸிஜன் பார்லர்கள் இருக்கின்றன.

இவற்றில் ஒரு கட்டணம் செலுத்தினால் கொஞ்ச நேரம் சுத்தமான காற்றைச் சுவாசித்து விட்டு வரலாம். இப்போது சென்னை உள்படப் பல நகரங்களிலும் வந்துவிட்டது. நாம் சாய்வு நாற்காலியில் ஓய்வாகப் படுத்திருக்க, பின்னணியில் அமைதியான இசை ஒலிக்க, கிராம்பு சந்தனம் என்று மெல்லிய நறுமணம் கலந்த ஆக்ஸிஜன் ஒரு குழாய் வழியே மூக்கில் இறங்க, க்ரெடிட் கார்டு கடன் தொல்லைகளைக் கூட மறந்து மனது அமைதியாகும் அந்த நிலையைத்தான் ஞானிகள் பேரின்பம் என்றார்கள். இதற்காகும் செலவு? அரை மணி மூச்சு விடுவதற்கு இருநூற்றைம்பது ரூபாய் வரை ஆகும்.

கவலைப்படாதீர்கள். இப்போது நாம் குடி தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குவதில்லையா? அது போல மூச்சுக் காற்றையும் எல்லோரும் விலைக்கு வாங்கித்தான் சுவாசிக்க வேண்டும் என்ற நிலை கூடிய சீக்கிரம் வரும்போது, ஆக்ஸிஜன் விலையும் கணிசமாகக் குறைந்துவிடும்.


கல்கத்தா பொலிஸாருக்கு பிராணவாயு ஊக்குவிப்புக் கருவிகள்

கல்கத்தா போக்குவரத்துப் பொலிஸார்
கல்கத்தா போக்குவரத்துப் பொலிஸார்

இந்திய நகரான கல்கத்தாவில் தெருக்களில் பணிபுரியும் போக்குவரத்துப் பொலிஸார், அங்கு சுற்றாடலில் காணப்படும் மாசுபடிந்த வாயுவின் பாதிப்பைத் தவிர்த்துக் கொள்வதற்காக, அவர்களுக்கு பிராண வாயுவின் மட்டத்தை ஊக்குவிக்கும் சிறப்புக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அந்த நகரப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

8 மணிநேர பணியை முடித்த பிறகு குறைந்தபட்சம் பொலிஸார் 20 நிமிடங்களுக்காவது பிராணவாயுவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குப் பணிக்கப்பட்டுள்ளதாக, கல்கத்தாவின் போக்குவரத்துப் பொலிஸின் தலைவர் கூறியுள்ளார்.

அந்த நகரவாசிகளில் சுமார் 70 வீதமானவர்கள், ஒருவகையான சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களில் போக்குவரத்துப் பொலிஸாரும் அடங்குகிறார்கள் என்றும் தேசிய புற்றுநோய் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Posted in Air, Auto, bhopal, Breath, Calcutta, cancer, Carbon, Carbon Monoxide, Coal, emissions, Environment, Factory, Fuel, Fumes, Gas, Global Warming, Health, Healthcare, Kolkata, Lignite, Lung, Mine, mines, Oxygen, Ozone, Petrol, Poison, poisoning, Pollution, Poor, Ramanraja, Tamil, toxic, Tunnel, UCC, vehicle, Warming, Worker | 1 Comment »

Global Warming – Environmental Pollution: Analysis, History, Current Developments

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

வேலியே பயிரை மேயும் நிலை!

ந. ராமசுப்ரமணியன்

உலக வெம்மையின் மூல காரணம் எனக் கருதப்படும் நச்சு வாயுவான கார்பன் வெளியீட்டினால் உலகம் பல்வேறு துயரங்களை எதிர்கொள்ளும் என ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுமம் அச்சம் அடைந்தது.

எனவே 1988-ல் ஒரு சிறப்பு அமைப்பை ஏற்படுத்தியது. இதில் பல்வேறு நாடுகளும் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி, 1997ம் ஆண்டு ஜப்பான் நாட்டு கியோட்டோ நகரில் ஓர் அரசியல் உடன்பாட்டை தயார் செய்தன.

அதன்படி 1990ஆம் ஆண்டு உலக கார்பன் வெளியேற்ற அளவிலிருந்து 5.2 சதவீதம் கார்பன் அளவை 2008ம் ஆண்டிலிருந்து 2012 வரை குறைக்க வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த உடன்பாட்டில் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் கையெழுத்திடவில்லை. 140 நாடுகள் கையெழுத்திட்டு, இந்த ஒப்பந்தம் 2005 பிப்ரவரி 16ம் தேதி அமலுக்கு வந்தது. தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் சீனா, இந்தியா போன்ற நாடுகள் அப்போது பொருளாதார, தொழில் வளர்ச்சியில் மந்த நிலையில் இருந்ததால், கார்பன் அளவு குறைப்புப் பொறுப்பு குறித்து கருத்தில் கொள்ளப்படவில்லை.

ஆக, கார்பன் வெளியீட்டைக் குறைக்க, உலக வெம்மையைத் தணிக்க உலகச் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் புனிதக் கோயிலாக கியோட்டோ நகரம் கருதப்படுகிறது.

சமீபத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பற்றிய சில முக்கிய ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் மிக முக்கிய அறிக்கை 2007 பிப்ரவரியில் ஐ.நா. சபையின் அரசுகளுக்கிடையேயான சீதோஷ்ண மாறுதல் பற்றிய குழு சமர்ப்பித்தது ஆகும்.

இந்த அறிக்கையின் சாராம்சங்களைப் பார்ப்போம்

ஐரோப்பாவில் தாங்க முடியாத அளவுக்கு கோடை வெம்மை அதிகரிக்கும். இந்தோனேஷியாவின் 2000க்கும் மேற்பட்ட தீவுகள் 2030க்குள் மறையும். இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் தென் பகுதிகள் தாழ்வான பகுதியாக இருப்பதாலும், நீண்ட கடற்கரை அமைந்ததாலும் பெருமளவு பாதிக்கப்படும். 2050ல் உலகப் பொருளாதாரம் 0.5 முதல் 1 சதவீதம் வரை பாதிக்கப்படும்.

2500க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளால், 130 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ஆறு ஆண்டு காலத்தில் தயார் செய்யப்பட்ட இந்த ஆய்வறிக்கை, 1990ம் ஆண்டிலிருந்து தயாரிக்கப்பட்ட நான்காவது உலக வெம்மை பற்றிய அறிக்கையாகும்.

இதைப்போல் மற்றோர் ஆய்வறிக்கை பிரிட்டனின் உலக முன்னேற்றத் துறையால் தயாரித்து வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையின்படி, இந்தியாவின் வற்றாத ஜீவநதிகள் எனப்படும் கங்கை, யமுனை, சிந்து, பிரம்மபுத்திரா போன்ற நதிகள் இன்னும் 40 ஆண்டு காலத்தில் வற்றிவிடும்.

உலக வெம்மையின் காரணமாக இமயமலைப் பனிக்கட்டிகள் அதிக அளவில் உருக ஆரம்பித்துவிட்டன. 1962ம் ஆண்டு 2077 சதுர கிலோமீட்டர் அளவிலிருந்து உறைந்த பனிக்கட்டிகள் சுமார் 21 சதவீதம் உருகி தற்போது 1628 சதுர கிலோமீட்டர் அளவு எனக் குறைந்துவிட்டது.

இதன் மற்றொரு விளைவாக 50 கோடி மக்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் என்பது போன்ற மிகவும் கவலை தரக்கூடிய செய்திகள் வெளியாகியுள்ளன.

சுருக்கமாகச் சொல்வதென்றால், கியோட்டோ ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, தனி மனிதர்களுக்கும், உலக நாடுகளுக்கும் உலக வெம்மையைக் குறைப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

ஜப்பானின் தொழில் வளர்ச்சி 1973ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, தற்போது மும்மடங்காகிவிட்டது. இதன் காரணமாக, ஜப்பான் நாட்டில், 1990ம் ஆண்டு இருந்த கார்பன் வெளியீட்டு அளவைவிட தற்போதைய கார்பன் வெளியீடு 14 சதவீதம் அதிகரித்துவிட்டது என்பது அதிர்ச்சி தரும் செய்தியாகும்.

உலகில் கார்பன் வெளியீடு குறைப்பு விவகாரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு வழிகாட்டியான ஜப்பான் நாடும், கியோட்டோ போன்ற நகரங்களும் தங்களது போதனையை தாங்களே நடைமுறைப்படுத்த இயலவில்லை. கார்பன் வெளியீடு அதிகமாகி உலக வெம்மை அதிகரித்துவிட்டது. இந்நிலையில் வேலியே பயிரை மேயும் நிலை வந்துவிட்டதோ?

“”கியோட்டோ நகரமே! நீயுமா?” என்ற கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன.

(கட்டுரையாளர்: நிறுவனர், ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி, மண்ணிவாக்கம், சென்னை).

===================================================

நீர்வளம் காப்போம்!

ஆ. மோகனகிருஷ்ணன்

இன்று உலக நீர்வள நாள்.

ஆண்டில் சில நாள்களைச் சிறப்பாகக் கொண்டாடும் முறை நம்நாட்டிலும் உலக அளவில் அன்னிய நாடுகளிலும் இருந்து வருகிறது.

இதில் மார்ச் மாதம் 22-ஆம் நாளை உலக நீர்வள நாள் என்றும் ஏப்ரல் 22ஆம் நாளை உலக பூமி நாளென்றும் குறிப்பிட்டு வருகிறோம்.

நீரின்றி மண்ணில் தோற்றம் இல்லை. மண்ணின்றி நீருக்குப் பயனில்லை. மண்ணும் நீரும் இணைந்தே செயல்படும். இரண்டுமே நமக்கு இயற்கையாகக் கிடைத்துள்ள அரிய சொத்துகள். காப்பாற்றப்பட வேண்டியவை. வீணாக்கக்கூடாதவை. வழிபட வேண்டியவை.

சூரியனின் வெப்பத்தினால் நீர் ஆவியாகி, மேல்நோக்கிச் சென்று மழையாகப் பொழிந்து மண்ணை வளமாக்குகிறது. அதில் ஒரு பகுதி மண்ணில் ஊடுருவி கீழ்நோக்கிச் செல்ல, மற்றது ஓடைகளிலும் ஆறுகளிலும் பாய்ந்து பயன்படுத்தியது போக மிஞ்சியது கடலில் சங்கமம் ஆகிறது. இதைத்தான் “நீரின் சுழற்சி’ எனக் கொள்கிறோம். இச் சுழற்சி எங்கும் எப்போதும் இடையறாது நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

புவியில் வாழும் எல்லா உயிர்களுக்கும் இன்றியமையாத நீரைப் பெறுவதற்கு ஒரே ஆதாரம், பெய்யும் மழைதான். அந்த மழையும் காலத்திலும் இடத்திலும் மாறி வருவதால், மழையினால் பெருகும் நீர்வளமும் வேறுபட்டே காணப்படும். பூமியின் மேற்பரப்பில் நிகழும் நீரோட்டமும் நிலத்தடியில் நகரும் நீரும் மழையைப் பொறுத்தே அமையும்.

இன்றைய நிலையில் உலக அளவில் கண்டம் வாரியாக நீர்வளத்தைத் தோராயமாகக் கணக்கிட்டால், ஆண்டொன்றிற்கு ஐரோப்பிய கண்டத்தில் 3,210 பில்லியன் கனமீட்டரென்றும், ஆசிய கண்டத்தில் 14,410 பில்லியன் கனமீட்டரென்றும், ஆப்பிரிக்க கண்டத்தில் 4,570, வடஅமெரிக்காவில் 8,200, தென் அமெரிக்காவில் 11,760, கடலில் ஆங்காங்கே பரவியுள்ள சில தீவுகளிலெல்லாம் சேர்த்தால் 2,388 என்றும் ஆக மொத்தம் 44,538 பில்லியன் கனமீட்டரென்று கொள்ளலாம்.

இதைப் பார்த்தோமானால், ஆசிய கண்டத்தில்தான் மிக அதிகமான நீர்வளம் இருப்பதை அறிகிறோம். ஆனால் ஆசியாவின் மக்கள்தொகை, உலக மக்கள்தொகையில் 59 சதவீதம். நபரொன்றுக்குக் கணக்கிட்டால் ஆண்டில் கிடைப்பது 4,745 கனமீட்டர் என்றாகும். அடுத்தபடி நீர்வளம் மிகுந்த கண்டம் தென் அமெரிக்கா.

ஆண்டில் ஒரு நபருக்குத் தேவையான நீர் அளவு 1,700 கன மீட்டர் ஆகும். அந்த அளவு நீர் கிடைத்தால் வாழ்க்கை வளமுடன் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு நாட்டில் 1000 கனமீட்டர் தான் பெறமுடியுமென்றால் அந்த நாடு நீர்வளம் குன்றிய நாடென்றே கொள்ள வேண்டுமென்றும், 1000 கனமீட்டருக்கும் குறைந்தால் அந்நாட்டில் நீர்ப்பற்றாக்குறையோடு பஞ்சம் ஏற்படும் நிலை உண்டாகுமென்றும் உலகளவில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாட்டின் நீர்வளம் அதற்கீடான பல நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து திருப்திகரமாகவே உள்ளது எனலாம். நாட்டின் நிலப்பரப்பு உலக நிலப்பரப்பின் 2.45 சதவீதம், நீர்வளம் சுமார் 4 சதவீதம். ஆனால் மக்கள்தொகையோ 16 சதவீதம். எனவே, பெருகிவரும் மக்கள்தொகையை முடிந்தவரை கட்டுப்படுத்தி, கிடைக்கும் நீர்வளத்தை மாசுபடாமல் காத்து, வீணாக்காமல், மக்கள் பயனுள்ள வகையில் உபயோகிக்க வழிவகை செய்ய வேண்டும்.

இதில் யாருக்குப் பொறுப்பு என்று தேடாமல் எல்லோருக்கும் பொறுப்புண்டு என்பதை உணர வேண்டும். நீர்வளத்தை ஒருங்கிணைத்து மேலாண்மை செய்யும் செயல்பாடுகளில் அனைவரும் தொடர்ந்து ஈடுபட வேண்டும். இந்த நீர்வள நன்னாளில் இதற்கான உறுதியை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நீர்ப்பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக இருந்து வருவதை நாம் அறிவோம். தமிழ்நாட்டின் நிலப்பரப்பு இந்திய நாட்டின் பரப்பில் 4 சதவீதம். ஆனால் மக்கள்தொகையோ 7 சதவீதம். நீர்வளம் 2.4 சதவீதம்தான். 2001-ல் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நீர்வளம் ஒரு நபருக்கு ஆண்டிற்கு 575 கனமீட்டரே. இதனால்தான் நீர்வளம் மிகுந்த அண்டை மாநிலங்களை அணுகி நீரைப் பெறும் கட்டாயத்தில் நாம் உள்ளோம். பெற்று வந்த நீரைப் பறிபோகாமல் காக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

பின் சந்ததியாரும் நலமாக வாழ, நாம் நீர் உபயோகத்தைக் கட்டுப்படுத்தி, கிடைக்கும் நீரை வீணாக்காமல், ஒவ்வொரு துளியும் நற்பயனைத் தர ஆவன செய்ய வேண்டுமென்று உலக அளவில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஐக்கிய நாடுகள் அமைப்பு, வளர்ந்து வரும் மக்கள்தொகையையும் குறைந்து வரும் நீர் வளத்தையும் கருத்தில் கொண்டு, 1977-ல் முதன்முறையாக தானே முன்வந்து ஒரு பெரிய கருத்தரங்கை நடத்தியது.

அதன் விளைவாக “”சர்வதேச குடிநீர் மற்றும் துப்புரவு” செயல்திட்டம் கடைப்பிடிக்கப்பட்டு, பல நாடுகளில் அதற்கான பணிகளை மேற்கொள்ள நிதி உதவியும் தந்தது. அச்சமயம் இந்திய நாடும் சிறிது பயன்பெற்றது.

இதைத் தொடர்ந்து 1992ஆம் ஆண்டில் “”நீரும் சுற்றுப்புறச் சூழலும் மனித வளர்ச்சியும்” என்ற தலைப்பில் விவாதிக்க ரியோடி ஜெனிரோ நகரில் ஒரு மாபெரும் சர்வதேச மாநாட்டைக் கூட்டி, அதில் சில கொள்கை முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவும் அதில் பங்கேற்றது. இவை யாவும் இயற்கையில் நமக்குக் கிடைக்கும் நீரினைச் சிறந்த முறையில் மேலாண்மை செய்ய வலியுறுத்தின. அதன் விளைவே ஐக்கிய நாடுகள் குழுமம் நிறுவிய “”உலக நீர்வளக் கூட்டாண்மை” தோற்றுவித்த, “”ஒருங்கிணைந்த நீர்வள ஆதார மேலாண்மை”.

மண்ணுக்கும் மழைக்கும் இணைப்பு உள்ளதால்தான் இப்புவியில் உயிர்கள் தோன்றி, வளர்ந்து, மடிகின்றன. நீரின் பயன்பாடு பல வகை. குடிக்க சுத்தமான நீர், குளிக்க, துப்புரவுக்காக, மற்ற உபயோகத்திற்காக நீர், உணவு உற்பத்திக்காக பாசன நீர், தொழிற்சாலைகளில் உபயோகம், நீர்மின் நிலையங்களில் உபயோகம். இப்படி பல உபயோகங்கள்.

ஆனால் அத்தனை உபயோகங்களுக்கும் தேவையான நீர் போதுமானதாக கிடைக்காத நிலை நேரலாம். நீரை ஆள்பவர்களும் மேலாண்மை செய்ய கடமைப்பட்டவர்களும் பல நிறுவனங்களாகவோ, பல அரசுத் துறைகளாகவோ இருக்கலாம். ஆயினும் அவர்கள் செயல்பாடுகள் அனைத்தும் பயனீட்டார்களின் நலனைக் கருதி அவர்களின் முழு ஒத்துழைப்புடன் அமைய வேண்டும்.

நீரும் நிலமும் இதர வாழ்வாதாரங்களும் ஒன்றோடு ஒன்று சார்ந்து வளர்வதை ஊக்குவிக்கும் ஒரு செயல்முறையே ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை எனலாம்.

இதற்கு அடிப்படையாக நீரைப் பங்கிடுவோரிடமும், நீரைப் பயன்படுத்துவோரிடமும், முரண்பாடுகளின்றி ஒத்துழைப்பு வளர வேண்டும். இதை வளர்க்கும் பொறுப்பு நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு என உலக நீர்வள நாளான இந்நன்னாளில் நாம் யாவரும் உணருவோமாக.

(கட்டுரையாளர்: நீர்வள ஆலோசகர்- தமிழக அரசு).

Posted in Al Gore, Alternate, An Incovenient Truth, Analysis, Biofuel, Carbon, Developments, Economy, emissions, energy, Environment, EU, Europe, Fuel, Gas, Global Warming, History, Kyoto, Natural, Petrol, Pollution, UN, Water | 2 Comments »

Lake Irrigation – Agriculture water sources: Backgrounder, Analysis & History

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

ஏரிகள் காப்போம்

திண்டிவனம் பஸ் நிலையத்தை ஏரியில் அமைப்பது தொடர்பாக ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் காரசாரமான அறிக்கைப் போர் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த விஷயத்தில் அரசியலை ஒதுக்கிவிட்டு தமிழக ஏரிகளின் இன்றைய நிலைமை, அதன் முந்தைய பயன், ஏரிகளை அரசும் மக்களும் புறக்கணித்ததால் ஏற்பட்டு வரும் இழப்புகள் ஆகியவற்றை ஒருமுறை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.

தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஏரிகள் உள்ளன. ஒவ்வொரு ஏரியும் நிரம்பியவுடன் மதகுகள் திறக்கப்பட்டு அடுத்த ஏரிக்குத் தண்ணீர் செல்லும்படியான அமைப்புகள் கொண்டவை. இந்தத் தொடர்ச்சி குறைந்தபட்சம் 15 ஏரிகள் வரையிலும்கூட இருக்கும்.

ஒவ்வொரு ஏரியும் நூற்றுக்கும் மேற்பட்ட ஹெக்டேர் விவசாய நிலத்துக்குத் தண்ணீர் தரவல்லவை. இவற்றைப் பராமரிக்கும் பணி பயனாளிகளான மக்களிடம் அல்லது பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த ஏரிகள் ஆண்டுதோறும் நிரம்புபவை அல்ல. 5 ஆண்டுகளில் சராசரியாக 3 முறை மட்டுமே நிரம்பின. இதையெல்லாம் மனத்தில் வைத்து, அந்த ஏரிக்குரிய விவசாயிகள் பயிர்களை வகைப்படுத்திக் கொண்டார்கள். நீரைப் பகிர்ந்து கொண்டார்கள்.

தமிழகத்தில் 1960-ம் ஆண்டில்

  • ஆறு, வாய்க்கால் பாசனத்தின் மூலம் 881 ஆயிரம் ஹெக்டேர் (36 சதவீதம்)
  • ஏரிப் பாசனத்தில் 936 ஆயிரம் ஹெக்டேர் (38 சதவீதம்)
  • கிணற்றுப் பாசனத்தில் 597 ஆயிரம் ஹெக்டேர் (24 சதவீதம்)
  • மற்ற பாசனங்களில் 46 ஆயிரம் ஹெக்டேர் (2 சதவீதம்) என
  • மொத்தம் 2462 ஆயிரம் ஹெக்டேரில் விவசாயம் நடைபெற்றது.

புள்ளியியல்துறை தகவலின்படி ஏறக்குறைய அதே பரப்பளவில்தான் 2003-ம் ஆண்டிலும் விவசாயம் நடைபெற்றுள்ளது. ஆனால்,

  • 38 சதவீதமாக இருந்த ஏரிப் பாசனம் 18 சதவீதமாகவும்
  • ஆறு, வாய்க்கால் பாசனம் 26 சதவீதமாகவும் குறைந்துவிட்டது.
  • 24 சதவீதமாக இருந்த கிணற்றுப் பாசனம் 54 சதவீதமாக உயர்ந்துவிட்டது.

அதாவது ஆறு, வாய்க்கால் பாசனத்தில் குறைந்த 10 சதவீதமும் ஏரிப் பாசனத்தில் குறைந்த 20 சதவீதமும் சேர்ந்து 30 சதவீதம் விளைநிலங்கள் கிணற்றுப் பாசனத்துக்கு மாறியுள்ளன.

தமிழக விவசாயத்தில் 30 சதவீதம் கிணற்றுப் பாசனத்துக்கு மாறியுள்ளதால், பம்புசெட் மூலம் நீர் இறைக்கும் இலவச மின்சாரத்தின் அளவு உயர்ந்து மானியத்தின் அளவும் ரூ.3 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக உள்ளது.

தமிழக அரசு- இதில் கட்சிப் பாகுபாடே வேண்டாம்- ஏரிகளைப் பாதுகாத்திருந்தால் 20 சதவீதம் விளைநிலங்களைக் கிணற்றுப் பாசனத்துக்கு மாறாமல் தடுத்திருக்க முடியும்.

1980 முதல் 2005 வரை பல்வேறு அமைப்புகள் மூலம் தமிழகத்தில் 2136 ஏரிகள் ரூ.473 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளன. இதில் உலக வங்கியும் நபார்டும் மட்டுமே ரூ. 150 கோடி வரை செலவிட்டுள்ளன. மாநில அரசு 290 ஏரிகளுக்காக ரூ.62 கோடி செலவிட்டுள்ளது. இந்தப் புள்ளிவிவரமே, அரசு ஏரிகளைக் காப்பதில் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது என்பதற்கு ஒரு சான்று.

ஏரிகள் என்பவை பாசன நீருக்காக மட்டுமல்ல. மண் இழப்பைத் தடுத்தல், வெள்ளத்தைக் கட்டுப்படுத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பயன்பாடுகளும் ஏரிகளால் உள்ளன.

இன்று சேலத்தில் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் ஒரு ஏரிதான். அதன் பெயரே- பஞ்சம்தாங்கி ஏரி. எத்தகைய கடுமையான பஞ்சம் வந்தபோதும் வற்றாத ஏரி என்ற பொருளில் அவ்வாறு அழைத்து வந்தனர். ஆனால் அதற்கான நீர்வரத்துப் பாதைகளை அடைத்துவிட்டு, பல காலமாக நிரம்பாமல் வீணாகக் கிடக்கிறது என்று பொதுப்பணித்துறையின் சான்று பெற்று, பஸ் நிலையமாக மாறிவிட்டது.

இப்படியாகத்தான் எல்லா ஏரிகளையும் இழந்தோம், இழந்து வருகிறோம். இன்றைய தேவை “ஏரி காக்கும் அரசு’

மழைக் காலத்தில் சென்னை நகர் மிதந்ததைக் கண்ட பின்னும் ஏரிகள் மீது அக்கறை செலுத்தாமல் இருக்கலாமா?

====================================================

நன்னீர் பற்றாக்குறையால் திணறும் ஆசியா

கே.என். ராமசந்திரன்

திபெத் பீடபூமியில் ஏராளமான பனி குவிந்து கிடக்கிறது. அது உருகிப் பத்து பெரிய ஜீவநதிகளாகப் பாய்கிறது. திபெத்தின் சராசரி வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதன் காரணமாக அதிக அளவில் பனி உருகி அந்த ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம். கொஞ்ச காலத்துக்குப் பிறகு எல்லாப் பனியும் உருகித் தீர்ந்து அந்த ஜீவநதிகள் மழைக்காலங்களில் மட்டுமே நீர் ஓடும் நதிகளாகிவிடக் கூடும். அதன்பின் மழை பொய்த்தால் வறட்சிதான்.

காடு அழிப்பு, கால்நடைகள் அளவுக்கு மீறி மேய்தல், தவறான நதிநீர் மேலாண்மை, தவறான நீர்ப்பாசன உத்திகள், நீர் மாசு போன்ற காரணங்களால் ஆசியாக் கண்டம் நன்னீர்ப் பற்றாக்குறையால் திணறுகிறது. அளவுக்கு மீறி நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டுச் சுற்றுச்சூழல் சிதைக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவும் சீனாவும் இமயமலையில் உற்பத்தியாகும் நதிகளைப் பெருமளவில் சார்ந்திருக்கின்றன. அவற்றில் நீர் வரத்து குறைந்தால் இரு நாடுகளுக்குமிடையில் தண்ணீர்ப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அவை நதிகளின் போக்கை மாற்றியமைக்க முனைந்தால் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகள் சண்டைக்கு வரும்.

இப்போதே சீனா சட்லஜ் நதி உற்பத்தியாகும் இடத்துக்கருகில் ஓர் அணையைக் கட்டியிருக்கிறது. அத்துடன் பிரம்மபுத்ரா நதியிலிருந்து வடக்கேயுள்ள மஞ்சள் நதிக்கு நீரை எடுத்துச் செல்லவும் திட்டமிடுகிறது. சீனாவின் நீர்த்தேவை முழுவதையும் திபெத்திலிருந்து நிறைவு செய்து கொள்ள அது முனையும்போது, இந்தியாவுடன் மோதல் ஏற்படுவது உறுதி.

ஆசிய நாடுகள் எல்லாவற்றிலுமே இதேபோன்ற எல்லைப் பிரச்சினைகளும் நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகளும் எழும். நாடுகளுக்கிடையில் போர்கள் கூட மூளலாம்.

திபெத்தில் சீனா ஏராளமான கனிமச் சுரங்கங்களைத் தோண்டி வருகிறது. அத்துடன் அங்குள்ள பனிமலைகள் மறைந்து தண்ணீர்ப் பஞ்சமும் ஏற்பட்டால் திபெத்தின் சுற்றுச்சூழலே முற்றிலுமாக வீணாகிப் போகும்.

இந்தியாவின் கங்கை – காவிரி இணைப்புக் கனவும் ஈடேறாது. உலகளாவிய வெப்பநிலை உயர்வின் காரணமாக இந்தியத் துணைக் கண்டத்தில் சராசரி மழையளவு பன்மடங்கு அதிகமாகும் என்று சொல்லப்படுவது ஓர் ஆறுதலான செய்தி. அதை வீணாகாமல் சேகரித்து வைக்க பெரிய ஏரிகளையும் அணைகளையும் உடனடியாக உருவாக்கியாக வேண்டிய கட்டாயம் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.

உலகளாவிய வெப்பநிலை உயர்வின் காரணமாகக் கடல் நீர் மட்டம் உயர்ந்து உள்நாட்டுக்குள் பரவுவது, பெருமழையால் ஏற்படும் வெள்ளங்கள், கோடைகளில் கடும் வறட்சி போன்ற பேரிடர்கள் ஏற்படும் என்று சொல்கிறார்கள். அதன் காரணமாக மக்கள், குறிப்பாக ஏழை எளிய மக்கள் உள்நாட்டில் பத்திரமான இடங்களுக்குக் குடிபெயர்வார்கள். அது பல சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். இப்போதே வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாகச் சுமார் இரண்டு கோடி மக்கள் இந்தியாவில் குடியேறியிருக்கிறார்கள். கடல் மட்டம் உயர்ந்தால் வங்கதேசம் முழுவதுமே மூழ்கிப் போகலாம். அதேபோல மாலத்தீவுகளும் மூழ்கி விடும்.

நெய்தல் நிலப்பகுதி வேலைவாய்ப்புகளும், உற்பத்திகளும் கடுமையாகப் பாதிக்கப்படும். டெல்டா பகுதிகளிலும், தாழ்வான நிலப்பகுதிகளிலும் நடைபெற்று வந்த விவசாயம் அழியும் ஆபத்தும் உண்டு. அதன் காரணமாக வேலையிழக்கும் பல்லாயிரம் தொழிலாளர்கள் நகரங்களை நோக்கிப் படையெடுப்பார்கள். அவர்கள் வழக்கம்போல ஏரிகளையும் குளங்களையும் ஆக்கிரமித்துக் குடியேறுவார்கள். குளிர்காலங்களில் குளிர் குறைவாவது நோய்க்கிருமிகளைப் பரப்பும். கொசு போன்ற பூச்சிகளின் இனப்பெருக்கத்துக்கும் உதவும். மேலும் கதகதப்பான வானிலையை உண்டாக்கும். நோய்கள் பெருகி அரசின் சுகாதாரப் பராமரிப்புச் சுமையை அதிகமாக்கும். தொழிலாளர்களும் பணியாளர்களும் நோய்வாய்ப்பட்டு சேவைத் துறைகளும் உற்பத்தித் துறைகளும் முடங்கும்.

உலகளாவிய வெப்பநிலை 6 செல்சியல் டிகிரி வரை உயர முடியும் எனப் பயமுறுத்துகிறார்கள். பசுங்குடில் வாயுக்கள் எனப்படும் கரியமில வாயு, மீத்தேன் போன்றவைதான் உலகளாவிய வெப்பநிலை உயர்வுக்குக் காரணம். அந்த வாயுக்களை வளிமண்டலத்தில் பரப்புவதை நிறுத்திவிட்டால் கூட, இன்று வரை வளிமண்டலத்தில் கலக்கப்பட்டிருக்கிற கரிம வாயுக்கள் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு வளிமண்டல வெப்பநிலையைத் தொடர்ந்து உயர வைத்துக் கொண்டேயிருக்கும்.

2099-ம் ஆண்டுக்குள் உலகளாவிய வெப்பநிலையில் 1.1 செல்சியஸ் டிகிரி வரை உயர்வு ஏற்படுவதைத் தடுக்கவே முடியாது.

Posted in ADMK, Agriculture, AIADMK, Analysis, Backgrounder, Bus Stand, China, Dhindivanam, Dindivanam, Dinduvanam, DMK, Drought, Environment, Farming, Global Warming, Himalayas, History, Ice, Irrigation, Lake, Lakes, Land, Pollution, Pumpset, River, Salem, Scarciity, SEZ, Snow, Statistics, Sutlej, Thindivanam, Tibet, Water, WB, Well water, world bank | Leave a Comment »

Bharathidasan University’s Professor gets ‘Young Scientist’ award

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007

பாரதிதாசன் பல்கலை. விரிவுரையாளருக்கு இளம் விஞ்ஞானி விருது

திருச்சி, பிப். 14: பாரதிதாசன் பல்கலைக்கழக தொலை உணர்வு மைய விரிவுரையாளர் சொ. இலக்குமணனுக்கு மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம் “இளம் விஞ்ஞானி’ விருது வழங்கியுள்ளது.

இவருக்கு ஆய்வு நிதியாக ரூ. 10.80 லட்சமும் வழங்கப்படுகிறது.

தமிழக கடலோரப் பகுதிகளில் தொழிற்சாலைக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும், சுனாமி பேரழிவு, இயற்கைப் பேரிடர்கள் போன்றவற்றால் கடலோர வேளாண் நிலங்கள், சதுப்பு நிலங்கள், இறால் வளர்ப்புப் பகுதிகள், மக்கள் குடியிருப்புப் பகுதிகள் ஆகியன எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளன என்றும், இவற்றுக்கான மறுசீரமைப்பு ஏற்பாடுகள் குறித்தும் இவர் ஆய்வு செய்ய இருக்கிறார். இந்த ஆய்வை செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்ட நுண்ணிய புகைப்படங்களைக் கொண்டும், புவியியல் தகவல் அமைப்பு தொழில்நுட்பத்தின் மூலமும் மேற்கொள்ள உள்ளார்.

Posted in Agriculture, Award, Bharathidasan University, Environment, Factory waste, Forest, Global Warming, Impact, Lakshmanan, Pollution, Prize, Recognition, Research, S Lackumanan, scientist, Seashore, So Lakkumanan, Technology | Leave a Comment »

Cauvery Delta Climate changes & Environmental Analysis – Study, History & Backgrounders

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

காவிரி டெல்டாவின் பரிணாமமும் பல்லுயிர்ப் பெருக்கமும்

பாலசுப்ரமணியன்

நாகரிகத்தின் உச்சியில் நின்று கொண்டுள்ள மனிதன், நவீனமயமாதல், நகரமயமாதல் போன்ற செயல்களால் இயற்கைத் தாவரங்களையும், விலங்குகளையும் சிறிது சிறிதாக அழித்து வருகிறான்.

உலக அளவில் இச்செயல் தொடர்ந்து நடைபெறுவதால், பல தாவர மற்றும் விலங்குச் சிற்றினங்கள் இன்று அழியும் தருவாயில் உள்ளன. உலகிலுள்ள 12 மிக முக்கிய உயிரின வாழிடங்களில் இந்தியாவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் பல்லுயிர்ப் பெருக்கத்தையும் இயற்கையையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

மற்ற டெல்டாக்களுடன் ஒப்பிடும்போது காவிரி டெல்டாவின் புவியியல் கூறு, சூழ்நிலை அமைப்பு, பரிணாம வளர்ச்சி ஆகியவை முற்றிலும் மாறுபட்டது.

தற்போது காணப்படும் காவிரி டெல்டா இயற்கையாலும், மனிதனாலும் உருவாக்கப்பட்டு புதியதாகத் தோன்றி, வளர்ச்சியடைந்த ஒரு பகுதியாகும்.

கால அட்டவணையின்படி சுமார் 315 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, காவிரி டெல்டா பகுதி கடல் நீரால் சூழப்பட்டிருந்தது எனத் தெரிகிறது. காலப்போக்கில் ஏற்பட்ட தட்பவெப்பநிலை மாற்றங்களால் கடல் நீர் குறைந்து, உவர் மண் நிரம்பிய சதுப்பு நிலங்கள் தோன்றியுள்ளன. மேலும் காவிரி ஆறு, சில இயற்கை மாற்றங்களால் தனது போக்கை கிழக்கு மற்றும் தென்கிழக்காக மாற்றிக் கொண்டுள்ளது.

இதன் காரணமாக வண்டல் மண்படிவுகள் சிறிது சிறிதாக ஏற்பட்டு, தற்போதைய டெல்டா உருவானது. ஆயினும் காவிரி டெல்டாவின் தென்கிழக்குப் பகுதிகளான முத்துப்பேட்டை, வேதாரண்யம், கோடியக்காடு போன்றவற்றில் தற்போது சதுப்பு நிலங்கள் உள்ளன. விவசாய முன்னேற்றத்துக்காக தற்காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நீர்ப்பாசனக் கால்வாய்களும், சங்ககால சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கல்லணை மற்றும் கல்லணைக் கால்வாயும் ஆங்கிலேயர் காலத்தில் விரிவுபடுத்தப்பட்ட நரசிங்க காவிரி, வடவாறு, உய்யக்கொண்டான் கால்வாய், முல்லையாறு விரிவு, மேல் மற்றும் கீழ் அணைக்கட்டுகள் போன்றவை இன்றைய புதிய காவிரி டெல்டா உருவானதற்கு முக்கியக் காரணமாகும்.

பல்லுயிர் வகை: இந்த டெல்டாவில் கடற்கரையை ஒட்டிய ஒரு சில சதுப்பு நிலக் காடுகளும், கோடியக்காட்டில் உள்ள வறண்ட பசுமை மாறாக் காடும் சில முட்புதர் காடுகளையும் தவிர வேறு குறிப்பிடத்தக்க காடுகள் ஏதும் இல்லை.

தற்போது ஆற்றுப்படுகைகளில் அரசின் தீவிர முயற்சியால் தோன்றியுள்ள தேக்கு, டால்பர்ஜியா சிசு போன்ற மரங்களின் சமூகக் காடுகள் ஓரளவு பசுமைத் தாவரங்களை அதிகரித்துள்ளன.

எங்கும் பரந்து விரிந்து, பச்சைக் கம்பளம் போல் நெல்வயல்கள் நிறைந்து காணப்படும் மருத நிலமான காவிரி டெல்டாவில் பல்வேறு வகையான பறவையினங்கள், பூச்சியினங்கள், விலங்குகள் மற்றும் மருத்துவக் குணமுள்ள பல தாவரங்கள் காணப்படுகின்றன.

ஆனால் தற்காலத்தில் தொடர்ச்சியாக விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் செயற்கை உரங்களும், பூச்சி மருந்துகளும், இங்குள்ள நீர் மற்றும் மண் மாசுபாட்டைத் தோற்றுவிக்கின்றன.

மேலும் அனைத்து ஆறுகளிலிருந்தும் இன்று மணல் முற்றிலுமாக எடுக்கப்பட்டு, அது டெல்டாவின் பல பகுதிகளில் வீடுகளாகவும், வணிக வளாகங்களாகவும் மாறிவிட்டன. மணல் எடுக்கப்பட்டதால் அவ்விடங்கள் அனைத்திலும் அடர்த்தியாக பரவியுள்ள காட்டாமணக்கு தாவரமானது, ஆற்றில் வரும் சிறிதளவு நீருக்கும் வழிவிடாமல் அடைத்துக் கொண்டு பாசனத்திற்குத் தடை ஏற்படுத்துகிறது.

கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சி, நிலத்தடி நீர் பற்றாக்குறை, மழையின்மை காரணமாக பல விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன. நன்செய் நிலங்கள் இவ்வாறு மாறிவிட்ட நிலையில், புன்செய் நிலங்களிலோ பூத்துக் குலுங்குவது காட்டுக்கருவை எனப்படும் வேலிக்காத்தான் தாவரம். இது காவிரி டெல்டாவின் பல பகுதிகளில், தரிசு நிலங்களில், தன்னிச்சையாகப் பரவியுள்ளது.

வேலிக்காத்தான் தாவரம் வளரும் இடங்களில், மற்ற தாவரங்கள் வளர்வதைத் தடை செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. இதனால் இந்தப் பகுதிகளில் இயற்கையாக வளரும் பல மருத்துவக் குணமுள்ள தாவரங்கள் வளர முடியாமல் அழிந்து வரும் அபாயம் உள்ளது. உதாரணமாக கொடி வகையைச் சார்ந்த ஆடுதின்னாப்பாலை, வேலிப்பருத்தி எனப்படும் உத்தாமணி, பிரண்டை, செங்கலை, கரு ஊமத்தை, பேய் சுரை, ஓரிதழ் தாமரை… போன்றவை இன்று தன்னிச்சையாக வளர்வது குறைந்துவிட்டது. அது மட்டுமல்லாமல் வேலிகளில் நடப்பட்டு வந்த நாட்டுத் தேக்கு எனப்படும் பூவரசு மரங்களும் குறைந்துவிட்டன.

ஒருகாலத்தில் இந்த டெல்டாவில் தோப்புகளாகக் காணப்பட்ட இலுப்பை மற்றும் புளிய மரங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. மேலும் பல புளிய மரங்கள் இன்று சாலைகளை அகலப்படுத்தும் பொருட்டு வெட்டப்பட்டு விட்டன. மருத்துவக் குணமுள்ள மருத மரங்களோ, எங்காவது ஒரு சில இடங்களில் இருந்தால் உண்டு.

இன்று இப்பகுதிகளில் நவீன விவசாயக் கருவிகளாலும், குளிரூட்டப்பட்ட பால் விற்பனையாலும், எருதுகள் மற்றும் கறவை மாடுகளை வளர்ப்போர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது. இதனால் இயற்கையான தொழு உரம் வயல்களுக்குப் போதுமான அளவு கிடைக்காமல், செயற்கை உரங்கள் இடப்படுகின்றன.

மழைக் காலங்களில் காணப்படும் “செண்பகம்’ எனப்படும் காக்கை இனத்தைச் சார்ந்த பறவைகளை தற்போது அதிகமாகக் காண முடிவதில்லை. நகரமயமாக்கலால் பல பாசனக் கால்வாய்கள் துண்டிக்கப்பட்டு, மழைநீர் செல்லும் பாதைகளும் தகர்க்கப்பட்டுள்ளன. சில இடங்களில் சமுதாய நிலங்களும், குளங்களும், சிற்றோடைகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அவற்றை அரசு கையகப்படுத்தி, தகுந்த இயற்கைச் சூழ்நிலையை உருவாக்க வழிகோல வேண்டும்.

நீர் நிலைகளில் பல்கிப் பெருகிவிட்ட வெங்காயத் தாமரை, காட்டாமணக்கு போன்ற இடர்தரும் தாவரங்களைக் களைந்து சீரான நீர் ஆதாரங்களைப் பல்லுயிர் பெருக உதவும் வகையில் மாற்ற வேண்டும்.

இனியாவது, ஒவ்வொரு பகுதியிலும் இயற்கையாக இருந்து வரும் தாவரங்களையும் விலங்குகளையும் அழியாமல் காப்போம்.

காவிரி டெல்டாவின் பசுமையைக் காக்க பயன் தரும் மரங்களை அனைத்துப் பகுதிகளிலும் உயிர் பெறச் செய்வோம். மாசுபாடற்ற விவசாய முறைகளைக் கையாண்டு, பல்லுயிர்கள் இந்நிலத்தில் பெருக வழி செய்வோம்!

Posted in Analysis, Cauvery, Changes, Chozhas, Climate, Delta, Environment, Geography, Global Warming, Kavery, Kaviri, Kodiyakaadu, Kodiyakkaadu, Kodiyakkadu, Mullai River, Muthupettai, Muthuppettai, Narasinga Cauvery, Opinion, Pollution, River, Sea, Study, Urbanization, Uyyakkondaan, Uyyakondaan, Vadavaaru, Vedharanyam, Water | Leave a Comment »

Global Warming – Environmental Pollution: Reports, History, Current Developments

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007

“உலக வெம்மை’ ஏமாற்று வேலையா?

ந.ராமசுப்ரமணியன்

மனித குலத்திற்கே மிகப் பெரிய எதிரியாகவும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிய தடைக் கல்லாகவும் “குளோபல் வார்மிங்’ எனும் உலக வெம்மைதான் விளங்கப் போகிறது என பல விஞ்ஞான ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

“கார்பன்’ வெளியீட்டினால் ஏற்படும் உலக வெம்மை அதிகரிப்பைத் தடுக்க வேண்டும் என்று உலக நாடுகள் முடிவெடுத்து, கியூட்டோ ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன.

கியூட்டோ நகரம் ஜப்பானில் உள்ளது. இந்நகரில்தான் கியூட்டோ ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் 150-க்கும் அதிகமான நாடுகள் கையெழுத்திட்டன.

ஆனால் உலக வெம்மைக்குப் பெரிய காரணகர்த்தாவான அமெரிக்கா “கியூட்டோ’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டது. வளர்ச்சி பெற்ற ஆஸ்திரேலியாவும் கையெழுத்திடவில்லை.

தற்போது மிக முக்கியமான இயற்கையின் தீவிரவாதம் உலக வெம்மைதான். இதற்கு மனித இனத்தின் பொறுப்பற்ற செயல்களே காரணம் என விஞ்ஞான உலகம் அறிவித்துவிட்டது.

உலக வெம்மையால் ஏற்பட உள்ள அபாயங்கள்: அதிக கார்பன் வெளியீட்டால் உண்டாகும் ராட்சத சக்தி கொண்ட “எல்நினோ’வினால் பயங்கரமான சூறாவளிகள் ஏற்படும் என அமெரிக்க நாசா விஞ்ஞானிகளும், அமெரிக்க விஞ்ஞான தேசிய அகாதெமியும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

30 ஆண்டு காலத்தில் ஆண்டுக்கு 0.2 செல்சியஸ் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு துயரங்களை உலகம் சந்திக்க இருக்கிறது என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

“நிலத்தின் நண்பர்கள்’ எனும் சமூக ஆர்வலர் நிறுவனம், நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞான, பொருளாதார ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆராய்ந்து 2100-ம் ஆண்டு நிறைவடைந்ததும் உலகப் பொருளாதாரம் ஆண்டுக்கு ரூ.900 லட்சம் கோடி அளவு பொருளாதார இழப்பை எதிர்கொள்ளும் எனக் கணித்துள்ளது.

நாசாவின் காட்டர்ட் விண்வெளி ஆய்வு நிலையம், தனது 2005-ம் ஆண்டு அறிக்கையில், தொழிற் புரட்சி தொடங்கியபோது பத்து லட்சத்துக்கு 280 கார்பன் துகள்கள் விண்வெளியை மாசுபடுத்தின; தற்போது இதன் அளவு 10 லட்சத்துக்கு 380 கார்பன் துகள்களாக அதிகரித்து, மேலும் தொடர்ந்து அதிகரிக்க உள்ளது.

மேலும் மனிதனால் ஏற்படும் கார்பன் தீங்கினால் உலக வெம்மை இன்னும் 1 டிகிரி செல்சியஸ் என்று அதிகரித்தால், 10 லட்சம் ஆண்டுகளில் உலகம் காணாத அளவுக்கு, உலக வெம்மை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.

பொருளாதார ரீதியாக 2050-ம் ஆண்டு வாக்கில் உலகம் ரூ.315 லட்சம் கோடிகளை (அதாவது உலக பொருளாதார வளர்ச்சியில் 20%) இழக்கும்.

விவசாய உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டு, நோய்கள் ஏராளமாகப் பரவும், மின் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படும் என ஸ்டர்ன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஹாக்கி மட்டை வரைபடம்: மைக்கேல் மேன் என்பவர், கி.பி. 900 ஆண்டு முதல் உலக வெம்மை எவ்வாறு அதிகரித்துள்ளது என்பது பற்றிப் பல்வேறு சோதனைகளை நடத்தியுள்ளார். பல்வேறு சாதனங்களைக் கொண்டும், மரவளையம் போன்றவற்றை வைத்தும், வெம்மை அதிகரிப்பைக் கணக்கிட்டுள்ளார். இதன்படி உலக வெம்மை மிகவும் அதிகரித்துள்ளது.

உலக வெம்மை எனும் மோசடி: இந்நிலையில் உலகப் பிரசித்தி பெற்ற அமெரிக்க நாட்டு “வால் ஸ்’டிரீட் ஜெர்னல்’ எனும் பத்திரிகை 2006 ஜூலை மாதம் 14-ம் தேதி இதழில் “ஹாக்கி மட்டை வரைபடம் வெறும் பிதற்றல்’ என்று தலையங்கம் எழுதியுள்ளது.

பல கற்பனைகளுடன், இரண்டுங்கெட்டான் வழிமுறைகளைப் பின்பற்றி, விஞ்ஞான உண்மைகளுக்குப் புறம்பான வகையில் “ஹாக்கி மட்டை வரைபடம்’ ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. உலக வெம்மை என்பது விஞ்ஞான பூர்வமான விளக்கமில்லை என்று கொல்ம்பியா பல்கலைக் கழக புவியியல் ஆய்வு நிறுவன இயக்குநர் ஜெப்ரிசாச் கடுமையாகச் சாடியுள்ளார்.

1960-களில் சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள இடைவெளி அதிகமாகிறது. இது அதிகரித்து குளிர்மிகுந்து, உலகம் குளிர்ச்சி அதிகரிப்பால் உறைந்து அழியும் என்ற ஒரு விஞ்ஞான ஆய்வுக் கட்டுரை வெளியானது.

1945-லிருந்து 30 ஆண்டுகள் அதாவது 1975 வரை உலகம் மிகவும் குளிர்ச்சியடைந்தது. இதையொட்டி 1975-ல் “நியூஸ் வீக்’ எனும் உலகப் புகழ் பெற்ற பத்திரிகை அட்டைப் படக் கட்டுரையாக “அடுத்த ஊழிப் பனிக்காலம் உலகத்தை நெருங்குகிறது’ என்ற விஞ்ஞான ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டது.

தற்போது உலக வெம்மை என்று பேசப்படுகிறது. அப்படியானால், உலகம் குளிர்ந்து போகும் என்ற விஞ்ஞான ஆய்வுக்கு அர்த்தமென்ன?

ஆக இத்தகைய கணிப்புகள் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. 1970களில் “உலகக் குளிர்ச்சி’ என்ற கணிப்பு எவ்வாறு சரியில்லையோ, அதேபோல தற்போதைய கணிப்பான “உலக வெம்மை’ என்பதும் விஞ்ஞான அடிப்படையில் அமைந்ததல்ல. இவைகளெல்லாம் சோதிடம் போன்றதே.

“கியூட்டோ’ ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திடாதது சரியே. இந்தியாவும் உலக வெம்மை என்ற விஞ்ஞானத்திற்கு ஒவ்வாத வாதத்தை ஒதுக்கி விட்டு, உற்பத்தி அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி என்ற வகையில் முனைப்பைக் காட்ட வேண்டும்.

உலக வெம்மையால் 2100-ல் உலகம் பல்வேறு பயங்கர இழப்புகளை சந்திக்கும் என்பது மோசடியே என்ற வகையிலும் பல ஆய்வுக் கட்டுரைகள் தற்போது வெளியாகின்றன.

(கட்டுரையாளர், சென்னை மண்ணிவாக்கம், ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிறுவனர்).

Posted in Actions, Al Gore, Auto, Carbon Cost, Cars, emissions, Environment, Global Warming, History, Kyoto, Plan, Pollution, Report | Leave a Comment »

India’s Rice production hampered by Global Warming

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2006

சீதோஷணநிலை காரணமாக இந்தியாவில் நெல் உற்பத்தி பாதிப்பு

சீதோஷணநிலை மாற்றத்தால் நெல் உற்பத்தி பாதிப்பதாக ஆய்வு
தஞ்சையில் உள்ள ஒரு நெல் வயல்

கரும்புகை போன்ற மாசு ஏற்படுத்தும் வாயுக்கள் மற்றும் புவி வெப்பமடைவதற்கு காரணமாக இருக்கும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் ஆகியவைகள் சீதோஷ்ணநிலை மீது ஏற்படுத்திய தாக்கம் மட்டும் இல்லாதிருந்தால், 1990களில் இந்தியாவின் நெல் உற்பத்தி, இன்னும் 25 சதவீதம் வரை அதிகமாக இருந்திருக்கும் என்று அமெரிக்க அறிவியல் சஞ்சிகை ஒன்றில் பிரசுரமான ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

தெற்காசியாவெங்கும் காணப்படும், பழுப்பு நிற மேகங்கள் சூரிய வெளிச்சத்தையும் மழைபொழிவையும் குறைத்ததன் மூலம், அரிசி உற்பத்திமீது எதிர்மறையான தாக்கத்தை விளைவித்ததாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

சீனா மற்றும் இந்தோனேசியா போன்ற சுற்றுப்புற சூழல் மாசுபட்டுள்ள பிற நாடுகளிலும், இதே போன்ற ஆய்வை மேற்கொள்ள இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Posted in Agriculture, China, emissions, Environment, Farming, Global Warming, Greenhouse, India, Indonesia, Irrigation, Pollution, Production, Rain, rice, South Asia, Sun, Water | Leave a Comment »

Islands sinking in Sunderbans near Kolkata

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

கொல்கத்தா அருகே இரண்டு தீவுகள் கடலில் மூழ்கின

கொல்கத்தா, நவ. 1: பூமியின் தட்பவெப்பநிலை மாறிவருவதால் கடல்நீர் மட்டம் அதிகரிக்கிறது. இதன் விளைவாக மேற்கு வங்க மாநிலத்தை ஒட்டிய சுந்தரவன டெல்டா பகுதியில் இரண்டு தீவுகள் கடலில் மூழ்கிவிட்டன.

இதுகுறித்து ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தின் கடல் ஆராய்ச்சி பிரிவு இயக்குநர் சுகதா ஹஸ்ரா கூறியது:

பூமியின் தட்பவெப்ப நிலை மாறிவருகிறது. இதன்காரணமாக கடல்நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. அத்துடன் கடல் அரிப்பும் தொடர்கிறது. இதன்காரணமாக மேற்கு வங்க மாநிலத்தை ஒட்டியுள்ள சுந்தரவன டெல்டா பகுதியில் உள்ள நூறு தீவுகளில் இரண்டு தீவுகள் கடலில் மூழ்கிவிட்டன. இவற்றை செயற்கை கோள்கள் மூலமும் கண்டுபிடிக்க முடியவில்லை.

1940 களில் இருந்து இந்தத் தீவுகள் மூழ்கி வருகின்றன. லோகசாரா எனற தீவில் உள்ள மக்கள் ஏற்கெனவே பத்திரமான பகுதிக்கு மாற்றப்பட்டனர். சாகர் என்ற தீவின் 30 கிலோமீட்டர் தூரம் கடல் அரிப்பு காரணமாக காணாமல் போய்விட்டது என்றார்.

சுந்தரவனப் பகுதியில் உள்ள நூறு தீவுகளில் 10 ஆயிரம்பேர் வசிக்கின்றனர்.

Posted in Bedford, Biosphere Reserve, Calcutta, climate change, Environment, Global Warming, Global wraming, Jadavpur University, Lohachara, School of Oceanographic Studies, Sugata Hazra, Sunderbans, Suparibhanga | Leave a Comment »

Environmental Impact – 10 More Years Left

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 9, 2006

உலகம் பேரழிவைச் சந்திக்க இன்னும் பத்தே ஆண்டுகள்தான்!

கே.என். ராமசந்திரன்

ஒரு பரிசலை கொஞ்சமாகச் சாய்த்தால் அது தானாக நேராகி விடும். அதை ஓரளவுக்கு மேல் சாய்த்தால் கவிழ்ந்து விடும். அத்தகைய ஒரு கவிழ் வரம்பை (tipping point்) உலகம் வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் பயமுறுத்தியிருக்கிறார்கள். ஜேம்ஸ் லவ்லாக் (James Lovelock) என்ற விஞ்ஞானி Gaia என்று ஒரு கொள்கையை வெளியிட்டுப் பூமி தன்னைத்தானே சரிப்படுத்திக் கொள்ளும் திறமையுள்ள ஓர் உயிரி என்று வர்ணித்தார். அவரே இப்போது நாம் மீள முடியாத வரம்புகளைத் தாண்டிப் போய் விட்டோம் என்கிறார். இதுவரை விஞ்ஞானிகள் தென் துருவத்திலும் வட துருவத்திலும் 2 முதல் 3 கிலோமீட்டர் வரை தடிமனுள்ள நிரந்தரப் பனிப்பாளங்கள் உலகளாவிய வெப்பநிலை உயர்வு காரணமாக மெல்ல மெல்லத்தான் உருகும் என்றும் அவை முழுவதுமாக உருகப் பத்தாயிரம் ஆண்டுகளாவது ஆகும் என்றும் நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நிரந்தரப் பனிப்பாளத்தில் பல விரிசல்கள் இருக்கும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. பனிப்பாளங்களின் மேல்பரப்பில் உருகும் நீர், விரிசல்களில் இறங்கிப் பத்தே விநாடிகளுக்குள் பனிப்பாளங்களுக்கடியில் உள்ள தரைப்பரப்பை எட்டி விடுகிறது. பனிப்பாளம் தரையை விட்டு நீரில் மிதக்கத் தொடங்கி வேகமாகக் கடலை நோக்கி நகர ஆரம்பிக்கிறது. கிரீன்லாந்தின் பனியாறுகள் இந்த விதமாகக் கடலை நோக்கி ஓடத் தொடங்கிவிட்டன. அட்லாண்டிக் கடலுக்குள் விழும் பனியாறுகளின் பருமம் 1996-ஆம் ஆண்டிலிருந்த ஆண்டுக்கு 100 கன கிலோமீட்டர் என்ற அளவிலிருந்து 2005-இல் 220 கன கிலோமீட்டராக உயர்ந்திருக்கிறது. சைபீரியாவின் வட பகுதியிலும் பனியாறுகள் அதிக அளவில் உருகத் தொடங்கியுள்ளன. இங்கிலாந்திலுள்ள வனவிலங்குகள் வளிமண்டல வெப்பநிலை உயர்வு காரணமாக வடக்கு நோக்கிக் குடிபெயர்ந்து கொண்டிருக்கின்றன. வழக்கமாக உறைந்து போகும் பல காயல்களில் கப்பல் போக்குவரத்து சாத்தியமாகும் அளவுக்கு நீர் நிறைந்திருக்கிறது. துருவப் பனிமலைகள் கண்ணெதிரே காணாமற் போய்க் கொண்டிருக்கின்றன.

துருவப் பனிப்படலங்கள் தம் மீது விழும் சூரிய வெப்பத்தில் 80 சதவீதம் வரை வானில் திருப்பியனுப்பி விடுகின்றன. கடல் நீர் 7 சதவீத வெப்பத்தைத்தான் பிரதிபலிக்கிறது. பனிப்படலங்கள் பரப்பு குறைவதும் கடல்களின் பரப்பு அதிகமாவதும் இவ்வாறு திருப்பியனுப்பப்படும் வெப்பத்தைக் குறைத்து உலகளாவிய வெப்பநிலையை அதிகமாக்கும்.

துருவப்பகுதிகளின் நிரந்தரப் பனிப்பாளங்களில் சுமார் 450 பில்லியன் டன் அளவுக்குக் கரிம வாயுக்கள் சிக்கியுள்ளன. வட சைபீரியாவின் பனிப்பாலைகளில் மீதேன் விரைவாக வெளியே கசிந்து வருவதாக அலாஸ்கா பல்கலையைச் சேர்ந்த கேட்டிவால்டர் (Katey Walter) கண்டுபிடித்திருக்கிறார். கரிம வாயுக்கள் பசுமைக்குடில் வாயுக்கள். அவை உலகளாவிய வெப்பநிலையை அதிகமாக்கும்.

மண்ணிலும் கிருமிகள் மீதேன் வாயுவை உற்பத்தி செய்கின்றன. தரை வெப்பநிலை உயர்ந்தால் அவ்வாறு உருவாகும் மீதேனின் அளவும் அதிகமாகும். பனிமலைகள் உருகினால் அவற்றிலிருந்து ஏராளமான பசுமைக்குடில் வாயுக்கள் வெளிப்பட்டுப் பூமியின் சராசரி வெப்பநிலையை மேலும் உயர்த்தும். இது ஒரு நச்சுச் சூழலாக மாறி விடும்.

உலகளாவிய வெப்பநிலை 3 செல்சியஸ் டிகிரி உயர்ந்தால் உலகிலுள்ள காடுகளில் பாதிக்கு மேல் அழிந்து சிதைந்து கரிம வாயுக்களை வெளியிடத் தொடங்கும். இன்றிலிருந்து உடனடியாகப் பசுமைக்குடில் வாயுக்களை வெளிப்படாமல் தடுத்து நிறுத்தினால்கூட வளிமண்டல வெப்ப நிலையில் 2 செல்சியஸ் டிகிரி வரை உயர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்பட்டு வரும் வெள்ளம், வறட்சி போன்ற உற்பாதங்கள் பத்தாண்டுகளுக்கொரு முறை நிகழத் தொடங்கும். இந்த நிலை நீடித்தால் துருவங்களில் முதலைகளும் நீர் யானைகளும் வசிக்கத் தொடங்கி விடும். பூமத்திய ரேகைப் பகுதியில் கடல் கொதித்து ஆவியாகிக் கொண்டிருக்கும். 135 கோடியாண்டுகளுக்கு முன் பூமியின் நிலை அப்படித்தான் இருந்தது. இன்று வெள்ளிக்கிரகத்தில் அதேபோன்ற நிலை நிலவுகிறது. இதற்கெல்லாம் காரணம் பசுமைக்குடில் வாயுக்கள் எனப்படும் மீதேனும் கரியமில வாயுவும்தான். அவை ஓரளவுக்குச் சூரிய வெப்பத்தைப் பிடித்து வைத்துக்கொண்டு உலகம் ஒரேயடியாகக் குளிர்ந்து போய்விடாமல் செய்கின்றன என்றாலும் அதுவே அளவுக்கு மீறும் போது ஆபத்தாகி விடுகிறது.

1765-ஆம் ஆண்டில் ஜேம்ஸ்வாட் நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்துத் தொழிற்புரட்சியைத் தொடங்கி வைத்தது முதல் கரியையும் எண்ணெயையும் எரித்து மனித இனம் வளி மண்டலத்தில் பசுமைக்குடில் வாயுக்களைப் பரப்பத் தொடங்கிவிட்டது. பீட்டர் காக்ஸ் (Peter Cox்) என்ற ஆங்கிலேய வானிலை வல்லுநர் ஊர்திகளும் விமானங்களும் மின்னுற்பத்தி நிலையங்களும் வெளியிடும் கரியமில வாயுவை வளிமண்டலம் சமாளிக்க முடியாமல் போகிற நிலை இன்னும் பத்தே ஆண்டுகளுக்குள் வந்துவிடலாம் என்கிறார். தற்போது மனித நடவடிக்கைகளால் உருவாக்கப்படும் கரிம வாயுக்களில் கிட்டத்தட்டப் பாதியளவைத் தரையும் தாவரங்களும் கடலும் உட்கவர்ந்து கொள்கின்றன. வெப்பநிலை உயர்ந்தால் அவை அந்த வாயுக்களை வெளிப்படுத்தத் தொடங்கிவிடும். சில விநாடிகளில் பல பில்லியன் டன் கரிம வாயுக்கள் கடலிலிருந்து பொங்கி வெளிப்பட்டு வளி மண்டலத்தில் கலந்து விட முடியும். இதேபோன்ற ஒரு சம்பவம் 5.5 கோடியாண்டுகளுக்கு முன் நிகழ்ந்து பல கோடி உயிரிச் சிற்றினங்கள் முற்றாய் அழிந்து போயின.

இந்த நிலைமைச் சீரழிவைத் தடுக்கப் பலரும் பல வழிகளைப் பரிந்துரைக்கிறார்கள். வானில் பல கோடி டன் அளவுக்குக் கந்தக டையாக்சைடைப் பரப்பினால் அது சூரிய வெப்பத்தைப் பிரதிபலித்துத் திருப்பியனுப்பி விடும் என்று சிலர் யோசனை கூறியிருக்கிறார்கள். பலூன்கள் மூலம் அவ்வாறு பரப்பலாம். ஆனால் அது பெரும் செலவு பிடிக்கிற விஷயம். அத்துடன் அது ஓசோன் படலத்தைச் சேதப்படுத்தி விடக் கூடும்.

விண்வெளியில் சூரியனுடைய நிறையீர்ப்பும் பூமியின் நிறையீர்ப்பும் சமமாக உள்ள இடத்தில் இரண்டடி அகலமுள்ள லென்சுகளைக் கோடிக்கணக்கில் பரப்பிச் சூரிய வெப்பத்தில் ஒரு பகுதி பூமிக்கு வராமல் திசைதிருப்பி விடலாம் என ஒரு யோசனை சொல்லப்பட்டிருக்கிறது. இது தொழில்நுட்பச் சிக்கல்கள் நிறைந்த நடவடிக்கை.

வானில் கடல்நீரைப் பீய்ச்சி ஆவியாக்கி நிறைய மேகங்கள் உருவாகும்படி செய்தால் அவை அதிக அளவில் சூரிய வெப்பத்தைப் பிரதிபலித்துத் திருப்பியனுப்பி விடும் என்று ஒரு கருத்து வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் அத்தகைய மேகங்கள் சில நாட்களே நீடிக்கும். கடல்நீரைத் தொடர்ந்து வானத்தில் பீய்ச்சிக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கும்.

கடலிலும் தரையிலும் ஏராளமான பிரதிபலிப்புப் பொருள்களைப் பொருத்தி ஓரளவு வெப்பத்தைத் திருப்பியனுப்பலாம். வெள்ளையான பிளாஸ்டிக் நுரைப்பலகைகளைக் கடல்களிலும் பாலைவனங்களிலும் பரப்பி வைக்கலாம் என்று சிலர் யோசனை சொல்லுகிறார்கள். ஆனால் அவற்றின் வெள்ளை நிறம் அதிக காலம் நீடிக்காது. அவற்றின் செயல்திறன் குறைந்துவிடும்.

கடல்களில் இரும்புச் சத்தைக் கலந்தால் பைட்டோபிளாங்டன்கள் என்ற நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகிக் கரியமில வாயுவை உட்கவர்ந்து கொள்ளும். அவை இறந்ததும் கடலடித் தரையில் போய்க் குவிந்துவிடும். அதனால் கரியமில வாயு பல நூற்றாண்டுகளுக்கு அங்கேயே தங்கியிருக்கும் என்று சிலர் யோசனை சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் அதை நம்ப முடியாது.

நமது வாழ்க்கை நடவடிக்கைகளை உடனடியாக மாற்றிக்கொண்டு பசுமைக்குடில் வாயுக்கள் வளிமண்டலத்தில் கலப்பதைத் தடுக்க வேண்டும். அப்படிச் செய்யத் தயங்கினால் உலகம் இன்னும் பத்தே ஆண்டுகளில் பேரழிவைச் சந்திக்கும். ஏழை நாடுகளுக்குப் பணம் கொடுத்து அவற்றிலுள்ள காடுகள் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தப் பணக்கார நாடுகள் முன்வர வேண்டும் என காக்ஸ் கூறுகிறார்.

Posted in Antartic, Arctic, Carbon dating, Cleanliness, emissions, Environment, Global Warming, Green, Recycle, tipping point, Trash, waterworld | Leave a Comment »

Environment Issues Topples World Governments – N Ramasubramanian

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 18, 2006

ஆட்சிகளைக் கவிழ்க்கும் சூழல் பிரச்சினை

என். ராமசுப்ரமணியன்

பலவகை மாசுகள் நம் நாட்டைப் பயமுறுத்தினாலும், கார்பன் வாயு வெளியீடு இந்தியாவிலிருந்து 3% என்றும், தொழில் உற்பத்தி நிலை அதிகரித்த நிலையிலும், இந்த அளவே “”கார்பன் வெளியீடு” என்பது கட்டுக்குள் இருக்கும் நிலையே என்று உலகச் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கணித்திருக்கின்றார்கள்.

இருப்பினும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மையால் இந்தியா உள்பட உலகின் பல நாடுகளும் தொடர்ந்து, பல்வேறு துயரங்களுக்கு ஆட்பட்டு வருகின்றன. இப் பிரச்சினை உலகையே மிகவும் பயமுறுத்தும் விஷயமாகப் பேசப்படுகின்றது.

சமீபத்தில், இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதலால் சொத்துகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட உயிரிழப்பு என்பது மிகவும் கொடுமையானது. இந்தச் சுனாமி நமது நாட்டையும் தாக்குமோ என்ற அச்சநிலை நிலவியது. நல்ல வேளை இம் முறை நாம் தப்பித்தோம்!

அடிக்கடி இந்தோனேசியப் பகுதியில் கடல் கொந்தளிப்பு, பூகம்பம் எனப் பல்வேறு பாதகங்கள் ஏற்பட்டு வருகின்றன. அமெரிக்க நாட்டுத் தென் பகுதிகளில் சூறாவளிகள் காலம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலியாவில் சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று பேய்க்காற்று வீசிப் பெரும் பீதியையும் நஷ்டத்தையும் ஏற்படுத்தியது. ஜப்பான் நாடு தொடர்ந்து இயற்கைச் சீற்றத் தாக்குதலுக்கு ஆளாகின்றது.

சென்ற ஆண்டு, கத்ரீனா, ரீட்டா போன்ற சூறாவளிகளால் அமெரிக்கா நிலை குலைந்து போய்விட்டது. 2004ஆம் ஆண்டு இறுதியில் சுனாமி எனும் பேரலைத் தாக்கம் இந்தியாவின் பல பகுதிகளிலும், இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து போன்ற பல நாடுகளிலும் பேரழிவை ஏற்படுத்தியது.

இமயமலைப் பனிப்பாறைகள் உருகி திடீர்ப் பெருவெள்ளம், ஆர்டிக் அண்டார்டிக் பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் உயர்தல் என்று பல்வேறு சோதனைகளை உலகம் சந்திக்கின்றது.

இத்தகைய பாதகங்கள் மனிதன் இயற்கையைப் பெருமளவு மாசுபடுத்தியதால் ஏற்பட்ட விளைவுகள் – உலகவெம்மை அதிகரிப்பு, ஓசோன் படலத்தில் ஓட்டை என்று கண்டறிந்து, இனியாவது இயற்கையோடு இணைந்து வாழவில்லையெனில், இயற்கையின் தண்டனையை உலகால் தாங்க இயலாததாக இருக்கும் என்று விஞ்ஞான உலகம் உறுதிபடக் கூறி வருகின்றது.

கார்பன் வெளியீட்டைக் குறைக்க வகை செய்யும் கியூடோ ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தராத அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்குப் பெருத்த எதிர்ப்பு அந் நாட்டிலேயே ஏற்பட்டுள்ளது. அமெரிக்கத் துணை அதிபராகப் பணியாற்றி, ஆறு வருடத்திற்கு முன் அமெரிக்க அதிபர் தேர்தலில் மயிரிழை வித்தியாசத்தில் தோல்வியுற்ற அல்கோர், விரைவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அமெரிக்கக் கடமையும் என்ற வகையில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த புத்தகம் வெளியிட உள்ளார்.

உலகின் முதல் மிகப் பெரிய நிறுவனங்களான எக்ஸôன் மொபில் மற்றும் ஷெல், ஷெவ்ரான் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி உலக மக்களுக்கே எடுத்துச் சொல்லிய வண்ணம் உள்ளன.

உலக அளவில் நடைபெறும் பொருளாதார, அரசியல் உச்சி மாநாடுகளில் இரண்டு விஷயங்கள் நிச்சயமாகப் பேசப்படுகின்றன.

1) ஏழை நாடுகளுக்கு எவ்வளவு, எவ்வாறு உதவுவது என்பது

2) சுற்றுச்சூழல் பாதுகாப்பு.

இந்தப் பேச்சுகளெல்லாம் வரவரச் சடங்குகள், சம்பிரதாயங்கள் போல ஆகிவிட்டன என்று உலகப் புகழ்பெற்ற பத்திரிகைகள் தலையங்கம் எழுதுகின்றன.

வெறும் பேச்சுடன் இல்லாமல், சுற்றுச் சூழல் பாதுகாப்பில் முனைப்புடன் செயலாக்கம் இல்லையென்றால், அரசுகள் கவிழும் என்று சில சமீபத்திய வரலாறுகள் தெரிவிக்கின்றன.

சூடான் நாட்டு அனுபவம்: ஆப்பிரிக்க நாடான சூடானின் மேற்குப் பகுதியிலுள்ள டர்ஃபர் மழைப்பொழிவு அதிகமற்ற வறண்ட பூமியைக் கொண்ட பகுதி. இங்கு வாழும் மக்கள் கால்நடைகள், ஆடு, ஒட்டகம் போன்றவற்றை மேய்ச்சல் பகுதிகளில் வளர்த்து, குறைந்த மழையில் கிடைக்கும் தண்ணீரில் விவசாயம் செய்து வந்தனர். அங்கு சுற்றுச் சூழலுக்குப் பங்கமேற்பட்டு மழை பொழிவது மிகவும் குறைந்ததால், ஏழ்மை அதிகரித்து, மக்கள் கூட்டம் இரு பிரிவாகி ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டு கொல்வது 1980-ல் தொடங்கி, அரசியல் மற்றும் ராணுவக் கலவரங்கள் மிகவும் பெருகி விட்டன. இது தற்போது உலக அளவில் கவலையுடன் பேசப்படுகின்ற விஷயமாகிவிட்டது.

ஈக்குவேடார்: சுற்றுச் சூழல் பாதுகாப்பின்மையால் உண்டாகும் “”எல் நினோ” என்பதால் வெள்ளப் பெருக்கு அல்லது பெரும் வறட்சிகள் ஏற்படுகின்றன. 1998-ல் இந்த “எல் நினோ’வினால் ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்கினால், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய உணவுப் பண்டங்கள், மீன் பண்ணைகள் அழிவினால் வங்கிகளிடமிருந்து வாங்கிய கடன்கள் திருப்பிக் கட்டப்படாததால், பொருளாதாரச் சரிவு ஏற்பட்டது. இதன் விளைவாக, ஈக்குவேடார் நாட்டை அப்போது ஆண்ட அரசு தூக்கி எறியப்பட்டது.

இந்தோனேசியா: எல் நினோவின் இந்தோனேசியத் திருவிளையாடல், வரலாறு காணாத வறட்சி. இந்நிலையில் ஆசிய நிதிச் சந்தையும் நிலை குலைந்தது. இதன் விளைவு 31 வருடம் ஆட்சி புரிந்த சுகர்தோவின் அரசுக்கு முடிவு கட்டப்பட்டது.

தட்பவெப்ப மாறுதல்களால், பெரும் வறட்சி, வெள்ளப்பெருக்கு, புயல்கள், பல்வேறு வியாதிகள் அதிகரிப்பு என்று பல கொடிய விளைவுகள் ஏற்படுகின்றன.

ஆயினும் பொது மேடைகளில் அரசியலுக்கே முக்கியத்துவம் தருகின்றோம். சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிய சம்பிரதாயமாக ஏதோ பேசுகிறோம். ஆக அரசும் பொதுமக்களும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி சரியாக உணர்ந்ததாகத் தெரியவில்லை.

பொருளாதார வளர்ச்சி, நாட்டுப் பாதுகாப்பு ஆகியவைகளுக்குச் சுற்றுச் சூழல் பாதுகாப்பும் மிக அவசியமாகின்றது.

“”இனி யார் சுற்றுச் சூழலை உண்மையாகப் பாதுகாக்கத் தேர்தல் வாக்குறுதி தருகின்றார்களோ அவர்களுக்கே நமது ஓட்டு (Vote for environment)’’ என்று பொது மக்கள் முடிவெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. அமெரிக்காவில் 20% மக்கள் இப்படிப்பட்ட எண்ணம் கொண்டுள்ளனர் என்று ஒரு கணிப்பு டியூக் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது.

பல்வேறு பொருளாதார, நாட்டு நலப் பணித் திட்டங்களைப் பற்றி பேசும் அரசியல் கட்சிகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மிக அவசியம் என்று உண்மையாக உணர்ந்து, செயலாக்கம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். இதைப்பற்றி உணரத் தவறினால், மக்களின் நலனுக்கும், நாட்டிற்கும் துரோகம் இழைப்பவர்களாகவே ஆவார்கள். மக்கள் இதைப் பற்றி, தீவிரமாகச் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால், ஆட்சி மாற்றங்கள் கட்டாயம் ஏற்படும்.

இது உலக நாடுகள் அனைத்துக்கும் சொல்லப்படுகின்ற அறிவுரை.

ஐ.நா. மிலினியம் ப்ராஜக்ட் இயக்குநர், ஜெஃப்ரி டி.சாச் இது பற்றி எழுதியுள்ள மிகத் தெளிவான, ஆழமான, ஆய்வுக்கட்டுரையை, உலக நாடுகளிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் படித்து, தகுந்த செயல்முறை வடிவங்கள் அமைப்பது, அரசியல் அமைதிக்கு வழிவகுக்கும்.

இயற்கையின் தீவிரவாதம் சுற்றுச் சூழல் பாதுகாப்பின்மையால் ஏற்படும் என்பது உறுதி. இதன் சக்தி முன் யாரும் எதிர்த்து நிற்க முடியாது என்பதும் உறுதி.

இந்நிலையில், “”சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்று தேவையில்லாமல் பயமுறுத்துவோர் எண்ணிக்கையில் அதிகமாகி விட்டனர், இதெல்லாம் சுத்த வெங்காயம், புகைபிடிப்பது ஒன்றும் கெடுதியில்லை, நமக்குப் பிடித்த எந்த உணவையும் (துரித உணவு – Fast food,  Junk food, தண்ட உணவு  ) ஒதுக்காமல் நாவிற்குப் பிடித்ததைச் சாப்பிடுங்கள். போலி ஆர்வலர்களைக் கண்டு மிரளாதீர்கள். இருக்கிற சில நாள் அனுபவிப்போமே! எதுதான் குறைந்து விடும்” என்றும் ஒருசாரார் வாதிட ஆரம்பித்துள்ளனர்.

இது எப்படி இருக்கு? கழுதைக்கு உபதேசம் காததூரமோ?

Posted in Carbon Emissions, Chevron, Earthquakes, Ecuador, El Nino, Environment, Exxon Mobil, Global Warming, Governments, Hurricanes, Indonesia, N Ramasubramanian, Oil Companies, Ozone, Shell, Sudan, Tamil, Tropical Storms, Tsunami, Vote for environment, World | Leave a Comment »

Technology & Electronics Trach – Recycle

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 28, 2006

குப்பையோ குப்பை… மின்னணுக் குப்பை!

வைகைச் செல்வி

தகவல் தொழில் நுட்பம் மற்றும் மின்னணுச் சந்தையின் வளர்ச்சி அதீத வேகத்தில் நடைபெறுகையில், இன்றைக்குப் புதியதாக வாங்கும் ஒரு பொருள், நாளையே அரதப் பழசாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரே பொருளின் புதுப் புது மாடல்கள் புற்றீசல் போல நுகர்வோரை மொய்க்கின்றன. மின்னணுச் சந்தையில் புதிய பொருள்கள் உருவாக உருவாக, பழைய பொருள்களின் கழிவும் மின்னல் வேகத்தில் அதிகரிக்கிறது.

பல்வேறு மின்னணு மற்றும் மின் கருவிகள் அவற்றின் உடைமையாளர்களுக்குப் பயன்படாமல் போகும் பட்சத்தில் அவை மின்னணு குப்பையாக உரு மாறுகின்றன. ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்டத் துறை 2005-ல் நடத்திய ஆய்வானது, உலகில் ஒவ்வோர் ஆண்டும் 20 முதல் 50 மில்லியன் டன்கள் மின் குப்பை உருவாகிறது எனத் தெரிவிக்கிறது. மின்னணுக் கருவிகளின் ஆயுள்காலம் அவ்வளவு அதிகமில்லை. உதாரணத்திற்கு ஒரு கம்ப்யூட்டரின் ஆயுள் 5 முதல் 6 ஆண்டுகள்.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் மின்னணுக் கருவிகள் கம்ப்யூட்டர், தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வாஷிங் மெஷின்கள் ஆகும். இவற்றிலிருந்து உருவாகும் கழிவுகள் 2004-2005ல் 1,46,180 டன்கள் எனக் கணக்கிடப்பட்டு, 2012ஆம் ஆண்டில் இது 16,00,000 டன்களாக உயரும் எனக் கணிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், தில்லி, கர்நாடகம், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலிருந்து உருவாகிறது.

நகரங்கள் என்று பார்க்கையில் மும்பை, தில்லி, பெங்களூர், சென்னை, கோல்கத்தா, அகமதாபாத், ஹைதராபாத், புனே, சூரத் மற்றும் நாக்பூராகும். சமீபகாலமாக அதிகரித்து வருவது செல்பேசிக் குப்பையாகும். ஓர் ஆய்வின்படி 2005ல் மட்டும் உலகில் 130 மில்லியின் செல்பேசிகள் கழித்துப் போடப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் கழிவுகள், அதாவது பாட்டரிகள் மற்றும் சார்ஜர்களையும் சேர்த்து, ஆண்டொன்றிற்கு 65,000 டன்கள் ஆகும்.

மின் குப்பையில் அபாயகர வேதிப்பொருள்கள் இருப்பதாலேயே அவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதாயிருக்கிறது. இக் கழிவுகளைச் சரியான முறையில் கையாளாவிட்டால், சுற்றுச்சூழல் கேடுகளும் சுகாதாரக் கேடுகளும் பின்னிப் பிணைந்துவிடும். அது மட்டுமல்லாது, வீடுகளில் இருந்து உருவாகும் மின் குப்பையும் எல்லாக் குப்பையோடும் சேர்ந்து, பெரும்பாலும் சாக்கடைக்கோ அல்லது நகராட்சிக் கழிவிற்கோ செல்லுகிறது. தாமிரம் போன்ற உலோகங்களை மீட்டெடுக்க கேபிள் மற்றும் வயர்களைத் திறந்த வெளியில் மனம் போன போக்கில் எரிக்கையில் நச்சு வாயுக்களால் காற்று மண்டலம் மாசுபடும். இக்குப்பையை யாரோ உருவாக்க, யாரோ பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

இவற்றில் மிகவும் அக்கறை செலுத்தப்பட வேண்டிய கழிவுகள் என்னவெனில், கம்ப்யூட்டர் கழிவுகளே. இவற்றின் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்படுத்தப்படுகிறது. கம்ப்யூட்டர்களின் விலை குறைந்து கொண்டே வருவதாலும், கடன் வசதிகள் பெருகியுள்ளதாலும், நடுத்தரக் குடும்பத்தினரால்கூட எளிதில் கம்ப்யூட்டர் வாங்க இயலுகிறது. தகவல் தொழில் நுட்பத்தில் அசுர வேகத்தில் பயணிக்கும் நம் நாட்டில் ஓர் ஆண்டிற்கு சுமார் 40 மில்லியன் கம்ப்யூட்டர் பாகங்கள் கழிக்கப்படுகின்றன. இதே வேகத்தில் கழிக்கப்பட்டால் 2010 ஆம் ஆண்டிற்குள் இது 100 மில்லியனாக உயரும் எனக் கணிக்கப்படுகிறது.

பெங்களூர் மட்டும் ஒரு வருடத்திற்கு 8000 டன்கள் கம்ப்யூட்டர் கழிவுகளை உருவாக்குவதாகக் கூறப்படுகிறது. இங்கு தகவல் தொழில்நுட்பத் தொழிற்சாலைகளிலிருந்து மட்டும் ஒரு வருடத்தில் 30,000 கம்ப்யூட்டர்கள் பயனற்றதாகக் கழிக்கப்படுகின்றன.

ஒரு கணினியில் உள்ள நச்சுப் பொருள்களின் பட்டியலைப் பார்த்தால் அசந்து போக நேரிடும். தற்சமயம் பிரபலமாயுள்ள தட்டை ஸ்கிரீன் கம்ப்யூட்டரில் பாதரசம் உள்ளது. பொதுவாக கணினி உதிரி பாகங்களில் காரீயம் மற்றும் காட்மியம் என்ற நச்சுத்தன்மை வாய்ந்த கன உலோகங்கள் உள்ளன. மேலும் டயாக்சின் மற்றும் ஃப்யூரான் ஆகிய நச்சு வாயுக்களை வெளிப்படுத்தும் பாலி வினைல் குளோரைடு கேபிள் இன்சுலேஷன்களில் உள்ளது. ஓசோன் படலத்தை மெலிவடையச் செய்யும் ரசாயன நச்சுப்பொருள்கள் உள்ளன. ஒரு கம்ப்யூட்டரில் 20 சதவிகிதம் பிளாஸ்டிக் உள்ளது. இத்தகு நச்சுப் பொருள்கள் எல்லாம், பயனற்ற கம்ப்யூட்டர்கள் தவறான முறையில் கழிக்கப்படுகையில் வெளியாகின்றன.

தகவல் தொழில் நுட்பத்துறை எவ்வளவு வேகமாக வளர்கிறதோ, அவ்வளவு வேகமாய் மின்னணுக் குப்பை விகிதமும் அதிகரிக்கிறது. எனினும், இக் குப்பைக்கு சந்தையில் ஒரு மதிப்பு உள்ளது. ஒரு விலை உள்ளது. மின் குப்பையில் நச்சுத்தன்மை வாய்ந்த உலோகங்களோடு தங்கம் போன்ற விலையுயர்ந்த உலோகங்களும் கிடைக்கின்றன. “குப்பையே செல்வம்’ என்ற கோட்பாட்டிற்கு உதாரணமாக மின் குப்பையைச் சொல்லலாம். பல கழிவுப் பிரச்சினைகளுக்கு ஆதாரமாக விளங்கும் அதே மின் குப்பை மறுசுழற்சி செய்கையில் ஒரு லாபகரமான தொழிலாகவும் மாறலாம். ஆனால் விஞ்ஞானபூர்வமற்ற முறையில் மறுசுழற்சி செய்கையில், தொழிலாளர்களுக்கு சுகாதாரக் கேட்டை விளைவிப்பதோடு, சுற்றுச்சூழலையும் நச்சாக்குகிறது.

வளர்ந்த நாடுகள், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மின்னணுக் குப்பையை “பின் வாசல்’ வழியாகக் கொட்டுகின்றன. அதாவது ஏற்கெனவே பயன்படுத்திய கம்ப்யூட்டர்களை “டொனேஷன்’ என்ற பெயரில் மறுபயன்பாட்டிற்காகத் தொண்டு நிறுவனங்களுக்கோ அல்லது பள்ளிகளுக்கோ தானமாக இங்கு அனுப்புகின்றன. சிறிது காலத்திற்குப் பின் இவை குப்பைகளே. வளர்ச்சியடைந்த நாடுகளில் இக்கழிவை மறு சுழற்சி செய்ய அதிகச் செலவாகும். ஆனால் இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் குறைந்த செலவில் மறு சுழற்சி நடைபெறுவதால் இக்கழிவுகள் இங்கே தள்ளிவிடப்படுகின்றன. எனவே, இந்நாடுகளில் சுற்றுச்சூழலும் சுகாதாரமும் கெடுகிறது.

அபாயகரக் கழிவுகளை உலகின் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அனுப்புவதை முறைப்படுத்த உலக நாடுகளிடையே பேசல் ஒப்பந்தம் உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பேசல் செயல் திட்டத்தின் (Basel Action Network) அறிக்கையின்படி, அமெரிக்காவில் உருவாகும் மின்னணுக் குப்பையில் 50 முதல் 80 சதவிகிதம் வளரும் நாடுகளுக்கு, மறுசுழற்சி செய்வதற்காகத் தள்ளிவிடப்படுகிறது. மின் குப்பைக்கென நம் நாட்டில் தனியே சட்டம் இல்லாத நிலையில் மத்திய அரசு ஜூலை 2004-ல் தேசிய மின்னணு மற்றும் மின் கழிவிற்கான பணிக்குழுவை (National Waste of Electronic and Electrical Equipment Task Force) நியமித்துள்ளது.

நகராட்சிக் கழிவுகளையே இன்னும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்துப் போடும் மனநிலையில் இல்லாத பொது மக்கள் மின்னணுக் குப்பையைச் சரியான முறையில் கையாளுவது சிரமம். எனவே “சுற்றுச்சூழல் சீர்கேட்டினை உண்டுபண்ணுபவரே, அதற்கான இழப்பை ஈடு செய்ய வேண்டும்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இச்சாதனங்களின் உற்பத்தியாளரே இக்கழிவுகளை விஞ்ஞான முறையில் சுத்திகரித்து இறுதி நிலைக்குத் தள்ள வேண்டும் என்பதையும் பரிசீலனை செய்யலாம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் தற்சமயம் காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர மற்றும் உயர் நிலைத் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளன. சென்னையிலுள்ள தரமணி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் போன்ற இடங்களில் பல தொழில்நுட்பப் பூங்காக்கள் அமையவுள்ளன. மின்னணுக் கழிவுகளை முறையாகக் கையாள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து தமிழ்நாட்டில் உருவாகும் மின்னணுக் கழிவுகளின் அளவைக் கண்டறிய தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒரு குழுவை அமைத்துள்ளது. பொதுவாக இக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு எளிதான, செலவு குறைந்த தொழில் நுட்பமே இந்தியாவைப் போன்ற வளரும் நாடு களுக்குத் தேவை.

Posted in Analysis, Anti-dumping, cell phones, Cities, computers, Dumping, Electronics, Environment, Global Warming, India, Laws, Op-Ed, Recycle, States, Statistics, Tamil, Technology, Trash, Vaigai Chelvi, Vaigai Selvi, Waste Management | Leave a Comment »