Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஓகஸ்ட் 22nd, 2006

LTTE Arms buyers arrested in US

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 22, 2006

விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை கைது செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகிறார்கள்
விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை கைது செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகிறார்கள்

ஆயுதங்களை வாங்க முயன்ற விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை கைது செய்ததாக அமெரிக்கா கூறுகிறது

அமெரிக்காவில், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எஸ் ஏ 18 ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ஏ கே 47 ரக இயந்திர துப்பாக்கிகள் வாங்க முற்பட்டதான குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேர் மீது அமெரிக்க நீதித் துறை நியூயார்க் நகரில் குற்றப் பத்திரிகை பதிவு செய்துள்ளது.

இந்த நான்கு பேரும் ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி நியூயார்க்கின் லாங் ஐலண்ட் என்ற பகுதியில் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித் துறையின் பத்திரிகை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இந்த நான்கு பேரும் விடுதலைப் புலிகளின் உயர் தலைமையின் உத்தரவின் பேரில் செயல்பட்டு வந்ததாகவும் அமெரிக்க அரசு அறிக்கை கூறுகிறது.

இது தவிர அமெரிக்க அரசுத் துறையின் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பினரை நீக்குவதற்கு அமெரிக்க அரசுத் துறை அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சிலர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க எஃப் பி ஐ உளவு நிறுவன அதிகாரிகள் ரகசியமான முறையில் ஆயுத வியாபாரிகள் போல நடித்து பொறி வைத்து இவர்களைப் பிடித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டவர்களில் அமெரிக்க, இலங்கைப் பிரஜைகளைத் தவிர இந்தியப் பிரஜையும் ஒருவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த நாச்சிமுத்து சொக்ரடீஸ் எனப்படும் நபர் வட அமெரிக்காவில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களில் ஒருவர் எனவும் அமெரிக்க நீதித் துறை கூறுகிறது.

ஆனால், அமெரிக்க அரசின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விடுதலைப் புலிகளின் இராணுவத் துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் அவர்களிடம் கேட்ட போது, கைது செய்யப்பட்டவர்களுக்கும் தங்களது இயக்கத்திற்கும் எந்தவிதச் சம்மந்தமுமில்லை என்றும், இந்தக் குற்றச்சாட்டினைத் தாங்கள் முற்றாக மறுப்பதாகவும் தமிழோசையிடம் தெரிவித்தார்.

Posted in Arms, Arrest, BBC, Long Island, Lord of war, LTTE, New York, Srilanka, Tamil, USA | Leave a Comment »

Mumbai’s ‘Hitler Cross’ Restaurant Name should be Changed

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 22, 2006

மும்பை யூதர்களின் கவலை

ஹிட்லருக்கும் சுவஸ்திகாவுக்கும் எதிர்ப்பு
ஹிட்லருக்கும் சுவஸ்திகாவுக்கும் எதிர்ப்பு

மும்பையில் ஹிட்லர் கிராஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு உணவகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று இந்தியாவில் மிகச் சிறிய எண்ணிக்கையில் வாழும் யூதர்கள் கோரியுள்ளனர்.

இந்தப் பெயர்மட்டுமல்லாது, அங்கு வைக்கப்ப்டிருக்கும் ஹிட்லரின் உருவம் மற்றும் நாசிகளின் ஸ்வஸ்திகா சின்னத்துடன் கூடிய பெரிய சுவரோட்டியும், தங்களை புண்படுத்துவதாகவும் யூதர்கள் கூறுகின்றனர்.

விளம்பரம் தேடுவதற்காக செய்யப்பட்ட ஒரு மலிவான தந்திரம் என சிலர் இதை வர்ணித்துள்ளனர்.

ஆனால் இது அறியாமையால் செய்யப்பட்ட ஒரு செயல் என்றும் வேண்டுமென்றே அவமதிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இது செய்யப்படவில்லை என்றும் இந்திய யூதர்கள் கூட்டமைப்பின் ஜோனாதன் சாலமன் தெரிவித்தார்.

இந்த பெயர் இந்த அளவுக்கு சர்ச்சையை தோற்றுவிக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று இந்த உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதே சமயம் இப் பிரச்சனை குறித்து புதன்கிழமையன்று கூடி விவாதிப்பதென இந்திய யூதர்கள் முடிவுசெய்துள்ளனர்.

Posted in BBC, Bombay, Hate, Hitler, Hitler Cross, India, Jews, Mumbai, Nazi, Restaurant, Tamil | Leave a Comment »

Environmental Cleanliness – Better Life with Care

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 22, 2006

சுற்றுப்புறத் தூய்மை-மேலான வாழ்க்கை

யோ. கில்பட் அந்தோனி

நம் வாழ்க்கைத் தரம் மேம்பட நமது சுற்றுப்புறத்தைச் சுகாதாரமாகவும் சுத்தமாகவும் வைப்பது அவசியம். இதற்கு முதலில் குப்பைக் கழிவுகளைச் சரியான முறையில் அகற்றுவது இன்றியமையாதது. இதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். குப்பையை அகற்ற வேண்டுமென்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் அதை எப்படிச் செய்வது? குப்பைகளை அகற்றுவதற்கு மிகவும் எளிதான வழி அதைச் சிறப்பான முறையில் வகைப்படுத்துவதாகும். இதில் மிக முக்கியமான ஏழு வகைகளைப் பார்க்கலாம். இவற்றைத் தனித்தனியே அகற்றுவது, கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

உணவுக் கழிவுகள்: அனைத்து உணவருந்தும் விடுதிகளும் இலை, மீதமுள்ள உணவுகள் ஆகியவற்றை பெருமளவில் பொது இடங்களில் கொட்டுகிறார்கள். இதில் கையேந்தி பவன் என்று சொல்லப்படுகிற நடமாடும் வண்டிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதுபோல் கல்யாண மண்டபங்கள், கேன்டீன்கள், கோயில் வளாகங்கள், குடியிருப்புகள் மற்றும் போக்குவரத்து நிலையங்கள் ஆகியவற்றிலும் இந்த உணவுக் கழிவுகள் அதிகம் காணப்படுகின்றன. இவை சூரிய வெப்பத்தில் காய்ந்து போவதற்கு முன், மிகவும் அழுகிய நிலையில் பெரும் நாற்றத்தையும் கண்களுக்கு மிக மோசமான தோற்றத்தையும் அளிக்கின்றன.

இதை அகற்றத் தேவையான செலவுகளை, இந்தக் கழிவுகளை உண்டாக்கும் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகளிடமிருந்து தனி வரி மூலம் வசூலிக்கலாம். இவர்களுக்குத் தனியாகக் குறியீட்டு எண் கொடுக்கப்பட்டு, மின்சாரக் கட்டணம் வசூல் செய்வதுபோல் வரிவசூல் செய்ய வேண்டும். இந்தக் கழிவைச் சிறிய இயந்திரங்கள் மூலம் அரைத்துக் கூழாக்கி அதைப் பாதாளச் சாக்கடையில் சேர்த்து விடலாம் அல்லது உரங்கள் தயாரிக்கப் பயன்படுத்தலாம். பெரிய உணவு விடுதிகள் மற்றும் கல்யாண மண்டபங்கள், அவற்றின் விடுதிக்குள்ளாகவே இத்தகைய எந்திரங்களை அமைக்கலாம். சொந்த எந்திரங்கள் இல்லாதவர்களிடம், நகராட்சித் துறை தங்களது சிறிய மற்றும் நடுத்தர வகை வாகனங்களில் உணவுக் கழிவுகளை எடுத்து வந்து நகராட்சிக்குச் சொந்தமான எந்திரங்களில் அரைத்துக் கூழாக்கலாம். பெரிய வகை வாகனங்களைத் தவிர்க்க வேண்டும்.

மருத்துவ நிலையக் கழிவுகள்: மருத்துவ நிலையங்களில் ஏற்படும் கழிவுகள் அனைத்தையும் தனியாகக் கொண்டு வருவது அவசியம். அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ரத்தப் பரிசோதனை நிலையங்கள், மருத்துவரின் ஆலோசனை மையங்கள் போன்ற எல்லா நிலையங்களிலும் கழிவுகளைச் சேகரிக்க வேண்டும். முதலில் மருத்துவக் கழிவுகளை ஏற்படுத்தும் அனைவருக்கும் குறியீட்டு எண்கள் வழங்க வேண்டும். இதில் தனியார்களிடம் வரி வசூலித்து, செலவுகளை ஈடு செய்ய வேண்டும். இந்தக் கழிவுகளை அனுமதிக்கப்பட்ட முறையில் குறிப்பிட்ட சில அரசு மருத்துவமனைகளில் நிர்வகிக்கலாம். கழிவுப் போக்குவரத்துக்கு சிறிய மற்றும் நடுத்தர வகை வாகனங்களை மட்டும் பயன்படுத்தலாம்.

சந்தைக் கழிவுகள்: சந்தைகளில் மிகவும் அதிகமாக வருவது உணவுக் கழிவுகளாகும். எல்லா பொது மற்றும் தனியார் சந்தைகளிலும் உணவுக் கழிவுகளை அரைத்துக் கூழாக்கும் எந்திரங்களை அமைக்க வேண்டும். சிறிய சந்தைகளில் எந்திர வசதி இல்லாதபோது, இந்த உணவுக் கழிவுகளை எந்திரவசதி உள்ள இடங்களுக்கு அனுப்பலாம். இதற்கான செலவுகளை சந்தைகளில் வசூல் செய்து கொள்ளலாம். நகராட்சித் துறை இதன் நிர்வாக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாளராக அமையும். உரங்கள் தயாரிக்கவும் சந்தைக் கழிவுகள் பயன்படும்.

காகிதக் கழிவுகள்: அனைத்து வகையான காகிதங்கள், அட்டைகள், அட்டைப் பெட்டிகள், பழைய புத்தகங்கள், ஏடுகள் போன்றவை இந்த வகைக் கழிவில் அடங்கும். இவற்றை மொத்தமாகச் சிப்பம் சிப்பமாகக் கட்டி “பேப்பர் மில்’களுக்கு அனுப்பலாம். மிகவும் சிதைந்த நிலையில் உள்ள பேப்பர்களும், மில்களில் கூழாக்கப்பட்டு பிறகு புதிய பேப்பர்கள் செய்யப் பயன்படுகிறது. ஆகவே பொதுமக்கள் கடைகள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கள் இடத்திலேயே இதனைப் பிரித்து, மொத்தமாகச் சேர்த்து, பின் அதை விற்றுப் பணம் பெறலாம். இதன் போக்குவரத்திற்கு சிறிய மற்றும் நடுத்தர வகை வாகனங்கள் பயன்படுத்தப்படலாம். காகிதக் கழிவுகளை அகற்றும் பொறுப்பு பொதுமக்களைச் சார்ந்ததாகும்.

விறகுக் கழிவுகள்:நமது நாட்டின் பல நகரங்களில் ஏராளமான செடி, கொடி, மரங்கள் உள்ளன. இவற்றிலிருந்து நிறைய விறகுகளும், எரிபொருள்களும் உற்பத்தியாகின்றன. ஆனால் நகரத்து மக்கள் இவற்றை உபயோகப்படுத்தாமல் வீட்டிற்கு வெளியே வீசி விடுகின்றனர். இதனால் இந்த விறகுகளும் ஓலைகளும் குப்பைகளோடு கலந்து விடுகின்றன. இது குப்பைச் சுமையை அதிகப்படுத்துகின்றது. இந்தச் சுமையைக் குறைப்பதற்கு, விறகுகளும் அதனைச் சார்ந்த எரிபொருள்களும் தனியாகச் சேகரிக்கப்பட்டு, அதனை மின் உற்பத்தி போன்ற பயனுள்ள பணிகளுக்குப் பயன்படுத்தலாம். இத்தகைய கழிவுகளுக்கு, தாழ்ந்த தளத்தைக் கொண்ட வாகனங்களைப் பயன்படுத்தலாம். இக் கழிவு அகற்றும் வேலைகளுக்கான செலவுகளை இதைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் நிலையங்கள் கொடுக்குமாறு செய்யலாம்.

மண் மற்றும் கட்டட இடிபாடுகள்: தனியார் மற்றும் அரசுத் துறைகள் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதன் விளைவாக ஏராளமான மண் மற்றும் கட்டட இடிபாடுகள் உற்பத்தியாகின்றன. இவை நகரத்திற்குள்ளும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பள்ளங்களை நிரப்புவதற்கும், சாலைகள் அமைப்பதற்கும் மற்றும் பல கட்டட வேலைகளுக்கும் பயன்படுகிறது. இதைப் பயன்படுத்துபவர்கள் இதனை அகற்றும் செலவுகளை ஏற்றுக் கொள்வார்கள். உடைக்கப்பட்ட செங்கல் சுவர்கள், கான்கிரீட் பகுதிகளை, மதில்சுவர் அடித்தளம் மற்றும் பலவகை தளங்கள் அமைக்கப் பயன்படுத்தலாம். இதன் போக்குவரத்திற்குத் தாழ்ந்த தளத்தையுடைய வாகனங்களைப் பயன்படுத்தலாம்.

மீதமுள்ள கழிவுகளின் கூட்டு: மேற்சொன்ன 6 வகைக் கழிவுகளை ஆரம்ப நிலையிலேயே தனித்தனியே பிரித்து அகற்றி விட்ட பிறகு மீதமுள்ள கழிவுகளைக் கூட்டாக அகற்றி விடலாம். முதலிலேயே பெரும் பகுதி கழிவுகளை அகற்றி விடுவதனால் இந்த மீதமுள்ள கழிவுகளின் அளவு மிகவும் குறைந்து விடும். இந்தக் கழிவுகளில் இருந்து பிவிசி பொருள்கள் தனியே பிரிக்கப்படலாம். இந்தக் கழிவுகள் சாலைகள் அமைக்கப் பயன்படுத்தப்பட்டால் பிளாஸ்டிக் பொருள்களைப் பிரிக்க வேண்டியதில்லை. இவை சாலைகளின் அடித்தள உறுதியைப் பலப்படுத்தும். பெரியவகை வாகனங்களைக் கொண்டு இக் கழிவுகளை அப்புறப்படுத்தலாம்.

முடிவாக, குப்பைகள் அகற்றும் அவசியத்தை, பள்ளி மாணவர்களின் இளம்மனத்தில் பதிய வைக்கலாம். அவர்கள் பிற்காலத்தில் பொறுப்புகள் வகிக்கும்போது தக்க நடவடிக்கைகள் எடுப்பார்கள். குப்பை அகற்றும் பணிகளுக்குத் தேவையான போதிய நிதிகளை அரசு எப்போதும் தாராளமாக ஒதுக்கிட வேண்டும். இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள் ஒவ்வொரு வருடமும் கூடி இவற்றை மிகச் சிறந்த முறையில் செயல்படுத்தும் முறைகளைப் பற்றி ஆராய்ந்து அதனை அறிக்கைகள் மூலம் தெரியப்படுத்த வேண்டும். இந்தத் துறையிலுள்ள நிபுணர்களின் யோசனைகளை அந்த அறிக்கைகளில் இடம் பெறச் செய்ய வேண்டும். நாம் குப்பைகளை அகற்றுவதற்கு முதன்மை முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் மிகவும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படுவோம். ஆகவே குப்பைகளை அகற்றுவோம். மேலான வாழ்க்கை நிலையைப் பெறுவோம்.

Posted in Cleanliness, Constructive, Dinamani, Enivironment, Enviro, Gilbert Antony, Op-Ed, Tamil | Leave a Comment »

Indian Agriculture Revival – Thoughts, Statistics & Opinions

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 22, 2006

மீளுமா இந்திய வேளாண்மை?

எஸ். ஜானகிராமன்

கடந்த சில வருடங்களாக இந்தியப் பொருளாதாரம், ஆண்டுக்கு எட்டு சதவிகித வளர்ச்சியினை அடைந்து வந்தாலும், நாட்டின் வேளாண்துறை வளர்ச்சி, 1997-98 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை, ஆண்டினுக்கு 2 சதவிகித வளர்ச்சியினையே கண்டு வந்துள்ளது. இது 1992-96 ஆம் காலகட்டத்தின் ஆண்டு வளர்ச்சியான 4 சதவிகிதத்தைக் காட்டிலும் குறைவானதாகும். வேளாண் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள இத்தகைய வீழ்ச்சி, தேசத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்குப் பாதகமாக அமையும் என்ற அச்சத்தை எளிதில் புறக்கணிக்க இயலாது. பொதுவாக, வேளாண்துறை வளர்ச்சி மேம்பட வேண்டுமெனில், பொது மற்றும் தனியார் முதலீடுகளின் அளவு உயர்த்தப்படுதல் வேண்டும். ஆனால் வேளாண்மையில் பொது முதலீடு என்பது, இந்தியாவைப் பொறுத்தமட்டில், தொடர்ச்சியாக இறங்குமுகமாகவே இருந்து வருகின்றது. தற்போதைய நிலையில், இதன் அளவு ரூ. 20,000 கோடிக்கும் குறைவாகவே காணப்படுகின்றது. அதேவேளையில், உணவுப்பொருள், உரம், மின்சாரம் மற்றும் நீர்ப்பாசனம் தொடர்பான அரசின் மானியம் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து தற்பொழுது ரூ. 80,000 கோடியினை அடைந்துள்ளது. 1:4 ஆகக் காணப்படும் பொதுமுதலீட்டிற்கும், மானியத்திற்கும் இடையேயான விகித அளவினை 4:1 என அரசு மாற்றியமைக்கும்பட்சத்தில், இந்திய வேளாண்மையில் காணப்படும் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு ஏற்படலாம். மேலும், பொதுவான வளர்ச்சியிலும், வறுமை ஒழிப்பிலும், அரசு மேற்கொள்ளும் பொது முதலீடுகள் ஏற்படுத்தும் தாக்கம், மானிய நடவடிக்கைகளின் தாக்கத்தைக் காட்டிலும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

விவசாயத் தொழிலை நிரந்தரமாகக் கைவிட்டு நகர்ப்புறப் பகுதிகளுக்குச் செல்ல 60 சதவிகித விவசாயிகள் விரும்புகின்றனர் என்பதும், இந்தியாவின் பெரும்பாலான மாவட்டங்கள் வேளாண் வளர்ச்சியில் தொடர்ச்சியான தேக்க நிலையினைச் சந்தித்து வருகின்றன என்பதும் மத்திய அரசின் சமீபத்திய ஆய்வு முடிவுகள். ஆனால் உணவு தானிய அளிப்பில் உள்நாட்டில் காணப்படும் கட்டுப்பாடு மற்றும் வேளாண் தொடர்பான சுற்றுச்சூழல் சீர்கேடு போன்றவற்றை மையமாக வைத்தே இந்திய வேளாண்மையின் பிரச்சினைகள் அணுகப்படுகின்றன. இவையனைத்தும் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டியவை எனினும் இந்திய வேளாண் துறையில் நிலவும் தற்போதைய நெருக்கடி நிலை அகற்றப்பட வேண்டுமெனில், அதன் அடிப்படைப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கவல்ல ஒரு பரந்த அணுகுமுறையினை மத்திய மற்றும் மாநில அரசுகள் கையாள வேண்டியது அவசர அவசியம்.

அரசின் வர்த்தக ரீதியான அணுகுமுறை மற்றும் பன்னாட்டுப் போட்டிக்கு இந்திய வேளாண்மையினை உட்படுத்தியது ஆகியவற்றினால் இந்திய வேளாண் தொழில் வெகுவாகப் பாதிக்கப்படும் என்ற கருத்து மேலோங்கிக் காணப்படுகிறது. ஒரு நாட்டின் வேளாண் துறை பின்தங்கிய மற்றும் அரசின் பாதுகாப்பு சூழலிலிருந்து, சந்தைசார் மற்றும் பன்னாட்டு வர்த்தக நிலையினை அடையும் பட்சத்தில், அவை தொடர்பான சந்தை ஆபத்துகளையும் அது எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்திய வேளாண்துறை இதற்கு விதிவிலக்கல்ல. அதேவேளையில், இத்தகைய சந்தை தொடர்பான ஆபத்துகளின் எதிர்மறையான தாக்கத்தை மட்டுப்படுத்தும் வகையில் புதிய அமைப்புகளை அரசு தொடங்க வேண்டிய கட்டாயம் எழுகின்றது. இவ்வகையில் “”தீர்வைக் கொள்கை” குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாகும்.

வர்த்தக ரீதியாக மதிப்புடைய பழங்கள், காய்கறிகள், பால் பொருள்கள் மற்றும் மீன்களின் பங்களிப்பு ஒட்டுமொத்த வேளாண் உற்பத்தியில் 45 சதவிகிதமாகக் காணப்படினும், இவற்றின் சந்தையாக்கல், அதிக அளவு சந்தை சார் ஆபத்துகளைப் பன்னாட்டு அளவில் எதிர்கொள்கின்றன. ஆனால் அரசின் வேளாண் தொடர்பான கொள்கைகள் அனைத்தும் அடிப்படை உணவு தானியங்களைச் சுற்றியே செயல்படுவது வேதனைக்குரியது. வர்த்தக ரீதியாக மதிப்புடைய இத்தகைய பொருள்களின் பாதுகாப்பிற்கு விரைவாக இயங்கும் கட்டமைப்பு வசதிகளும், புதுமைகளைத் துணிந்து செயல்படுத்தும் அமைப்புகளும் அவசியமாகும். அவ்வாறு இருப்பின், அது மிகச்சிறந்த அளவில் வேளாண் உற்பத்தியாளர்களையும், நுகர்வோரையும் இணைக்கும். சந்தைசார் நிச்சயமின்மையிலிருந்தும் ஆபத்துகளிலிருந்தும் வேளாண் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் இச் செயலை அரசோ அல்லது தனியார் அமைப்புகளோ உடனடியாக மேற்கொள்ளுதல் வேண்டும். மேலும், வேளாண்துறை தொடர்பான அனைத்து அரசு அமைப்புகளின் தரமும், செயல்பாடும் மேம்படுத்தப்படுதல் வேண்டும். பன்னாட்டு அளவில் போட்டியிடும் வகையில் இந்திய விவசாயிகளை அவை தயார்ப்படுத்த ஏதுவான கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளை அரசு முழுமையாக ஏற்படுத்தித் தருதல் அவசியமாகும். இதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர வேளாண் பொருள் உற்பத்தியாளர்கள் பெரிதும் பயனடைவதுடன், இந்திய வேளாண் தொழிலில் நிரந்தரமான வளர்ச்சி மற்றும் வருவாயினை உறுதி செய்து விவசாயத் தொழிலிலேயே இந்திய விவசாயிகளை நீடிக்கச் செய்ய இயலும். இவ்வகையிலான நடவடிக்கைகளுக்கு தென்கிழக்காசிய நாடுகள் இந்தியாவிற்கு மிகச்சிறந்த உதாரணமாகவும், அடிப்படையாகவும் அமைகின்றன.

Posted in Agriculture, Dinamani, India, Jaanakiraman, Ministry, Op-Ed, Suggestions, Tamil, Thoughts | Leave a Comment »