Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Psychology’ Category

Mental Illness and Society – Treatment of Emotional Disorders

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

60 லட்சம் மனநோயாளிகள்!

நெல்லை சு. முத்து

இந்தியாவில் அறுபது லட்சம் பேர் மனநோயாளிகள். சென்னையில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டின் அபாய அறிவிப்பு இது.

உலகில் சராசரி நூற்றுக்கு ஏழு பேர் மனநோயாளிகள். அதாவது மனச்சிதைவு மற்றும் அது தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நாற்பது கோடி பேர். இந்தியாவிலும் இதே கணக்குதான். அதிலும் பத்தில் ஒரு நபர் மட்டுமே சிகிச்சைக்கு வருகிறாராம். ஆக, அறுபது லட்சம் பேர் இங்கு அங்கீகரிக்கப்பட்ட மன நோயாளிகள்.

அப்படியானால் ஏறத்தாழ ஐந்தரை கோடி இந்தியர்கள் பதிவு செய்யப்படாத மன நோயாளிகள். இதற்கிடையில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குச் சிறப்புப் பள்ளிகள் வேறு உருவாகி வருகின்றன. பிறப்பிலேயே பாதிப்பு, மனம் சார்ந்த நோய், உடல் உறுப்புச் செயல் இழப்பு, பேச்சு மற்றும் மொழிக் குறைபாடு, புரிதலின்மை எனப் பல்வேறு குறைகள்.

இந்த மன நோயாளிகளுக்கு மருத்துவச் சிகிச்சை வழங்கினால் மட்டும் போதாது. சிகிச்சைக்குப் பின் மறுவாழ்வு, வேலைவாய்ப்பு ஆகியவை முக்கியம். ஆனால் நம் நாட்டில் இதற்கான கட்டமைப்பு வசதிகள் போதாது என்றும் அந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

நமக்கு அதற்கு எல்லாம் நேரம் ஏது?

ஏதாயினும் தனிமனித மன வியாதி போலவே, இன்றைக்குச் சமுதாய மன வியாதி ஒன்றும் இருக்கிறது. தீவிர வியாதி. பண்டைக் காலத்தில் வேந்தர் படைகள் நால்வகைப்படும். காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை. இன்றைக்கும் நாம் அறிந்த படைகள் நான்கே. ராணுவப்படை, விமானப் படை, கடற்படை ஆகியவற்றுக்கு எதிராகத் தற்கொலைப் படை என்று ஆகிவிட்டது.

இதில் ஒரு சில சக்திகளைத் தீய வழிகளில் அடைய முயல்வது கருவிவாதத் தீமை. இது சுயநல நோக்கத்துக்காகவே அமையும். இங்கு பொய், திருட்டு, பித்தலாட்டம், போர்க்குணம் போன்ற தீயவழிகளை இவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பின்பற்றுவர்.

லட்சியவாதத் தீமை என்றால் பிறர்க்குத் துன்பம் தருவதோடு மட்டும் அல்ல. பிறரையும் தம் வழியில் இழுக்கும் உத்தி. இவர்கள் தீவிரவாதிகள் என்பதைவிட அதி பயங்கரவாதிகள்.

இதற்கிடையில் உலகிலேயே அமெரிக்காவில்தான் வன்முறைக் கும்பல்கள் உச்சத்தில் இருக்கின்றனர் என்கிறது பான் அமெரிக்க சுகாதார நிறுவன ஆய்வு. 1996ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கிட்டத்தட்ட 31 ஆயிரம் பயங்கரவாதக் குழுக்களாம். இதற்கு மது, போதைப் பழக்கம், கல்வி அறிவின்மை, வேலைவாய்ப்பு இன்மை, அதிக எதிர்பார்ப்பு, சிறு வயதில் கொடுமைக்கு ஆளாகுதல் போன்ற பல காரணங்களாம்.

நம் நாட்டிலும் இதே அடிப்படைக் காரணங்கள் பொருந்தும். அன்றியும் மதம், சாதி, மொழி, கட்சி என்ற பெயரில் ஆட்டிப் படைக்கத் துடிப்பதும் ஒருவகையில் மனவியாதிதான். ஆதிக்கம் ஒன்றே குறியாய் அலைகிறார்கள்.

தீவிரவாதம் நாட்டுக்கே நச்சு. ரஷியாவில் ஒரு சம்பவம். 2005 டிசம்பர் வாக்கில் செசன்யாவின் ஷெல்கோவ்ஸ்க் பகுதியில் ஒரு பள்ளியில் பலருக்குத் திடீரென்று ஒட்டுமொத்த மூச்சுத்திணறல். மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட நூறுபேர் அவதிக்கு உள்ளானார்கள்.

சாப்பாட்டில் அங்கு பல்லி விழுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. சத்துணவுக்கூடமே கிடையாதே! அப்படியானால் பள்ளிக்குப் பக்கத்தில் துர்நாற்றச் சாக்கடை ஏதும் இருந்ததா? அதில் விஷ வாயுப் பூதம் கிளம்பி இருக்குமா? அதற்கு எல்லாம் பள்ளிக்கூடம் அருகே கூவம் இருந்தால்தானே!

பல்வேறு கோணங்களில் புலன் விசாரணை நடந்து முடிந்தது. இறுதியில் ஓர் அதிர்ச்சி உண்மை. அவர்கள் அனைவருக்கும் மனநிலை பாதிப்பாம். காப்தா அக்மேதோவா என்னும் உளவியல் நிபுணப் பெண்மணி ஆராய்ந்து உரைத்தார். பொது நரம்புத் தளர்வுநோய் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். கும்பல் கும்பலாகப் பாதிக்கும்போல.

உள்ளபடியே இது ஒரு வகை நரம்பு நச்சு வியாதி. சமுதாயத்தின் நம்பிக்கைகள், நாட்டு நடப்புகள், பயங்கரவாதங்களைப் பிரதிபலிக்கும் உயிரித் தீவிர வியாதியாம். லண்டன், மன்னர் கல்லூரியில் ராணுவத்தினர் உடல்நல ஆராய்ச்சிக்கான அரசர் மையத்தின் மனநலப் பேராசிரியர் சிம்சன் வெஸ்லி கண்டுபிடிப்பு.

ஒருகாலத்தில் ஆந்த்ராக்ஸ் பீதி, செப்டம்பர் 11 சம்பவம் என மேலை நாடுகளில் கும்பலாகப் பரவிய சமுதாய மனத் தளர்வு நோய் கிடக்கட்டும்.

போர்க் கொடுமைகளால் ஏற்பட்ட மனநிலைப் பாதிப்பே அங்கு அதிகம். வியத்நாம் யுத்தத்தின் குண்டு வெடிப்பு, கொலை வெறிகளை நேரடியாகக் கண்டு மண்டையில் மரை கழன்ற வீரர்கள் பலர். இது ஒருவிதத்தில் விபத்துக்குப் பிந்தைய மன இறுக்கக் கோளாறு போன்றது.

இது குறித்துத் தனியொரு நூலே வெளிவந்துவிட்டது. “மனநிலைக் கோளாறு நோயறிதல், புள்ளிவிவரக் கையேடு’ என்பது தலைப்பு.

இன்னும் சொல்லப்போனால் சமீபத்திய இராக் போர்க்களம் விட்டுத் தாய்நாடு திரும்பிய அமெரிக்க வீரர்கள் நிலைமை பரிதாபம். அவர்களில் நூற்றுக்கு 19 பேர் ஓராண்டுக்கு உள்ளாகவே மனநிலைக் கோளாறுக்கு உள்ளாயினர்.

ஆப்கானிஸ்தான் யுத்தக் களம்விட்டுத் திரும்பியவர்களில் நூற்றுக்கு 11 பேர் கதியும் இதுதானாம். நெஞ்சில் நிழலாடும் அகோர யுத்தக் காட்சிகள், கண்விழித்துக் கிடக்கும் இரவுநேர துன்பங்கள், குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழும் உளைச்சல்கள் இப்படி.

மொத்தத்தில் 3 லட்சம் ராணுவ, கடற்படை வீரர்களைத் தேர்ந்தெடுத்து நடத்திய ஆய்வு முடிவு. இது அமெரிக்க மருத்துவக் கழக சஞ்சிகையின் 2006 மார்ச் 1 இதழில் வெளியானது.

அதன் முக்கியச் செய்தி. ஒரு விமானப்படை அதிகாரியின் அனுபவம். பாக்தாத் நகரில் தெரு விளக்கில் சாய்ந்து நின்று கொண்டு இருந்த இராக்கியச் சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை. அந்த வீதியில் ஒரு கார் குண்டு வெடித்தது. சிறுவனின் தொண்டைக் குழி தெரிய வலது கீழ்த்தாடை பிய்ந்து எகிறிப் பறந்தது. அவன் அதிகாரியை நோக்கி உதவி நாடி வந்தவன்போல் “”அமெரிக்கரே, அமெரிக்கரே, அமெரிக்கரே” என்று கதறினான். ஆனால் போர்க் களேபரத்தில் அதிகாரி அதற்குள் அந்த இடத்தை விட்டு அகலும்படி ஆயிற்றாம்.

நாடு திரும்பிய அந்த அமெரிக்க அதிகாரிக்குச் சிறுவனின் சிதைந்த முகம் மனத்தை விட்டு அகலவே இல்லை. விபத்துக்குப் பிந்தைய மன நிலைக் கோளாறு அவரைப் பீடித்தது என்கிறார் ஆலன் பீட்டர்சன் என்கிற உளவியல் நிபுணர்.

வளர்ந்த நாடுகளின் நிலைமை இப்படி. நம் நாட்டில் ரயில்கள், பேருந்துகள், பள்ளிக்கூடங்கள், மனநலக் காப்பகங்கள் எங்கும் கரிக் கட்டைகளாய் கிடக்கும் சடலங்கள், சாலை விபத்தில் கூழான உடல்கள், கார் குண்டுச் சிதிலங்கள், தலை துண்டான பிண்டங்கள் என்று பத்திரிகைகளில் ஒரு முறை படிக்கலாம். ஆனால் நொடிக்கு நூறு தடவை மாறிமாறிப் படம்போட்டுக் காட்டும் சின்னத்திரைகளால் மனநலம் பாதித்தவர்கள் எத்தனை கோடியோ?

(கட்டுரையாளர்: விஞ்ஞானி, திட உந்து பொறிகள் திட்டக் குழுவகம், சத்தீஷ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிக்கோட்டா).

Posted in diagnosis, Doctor, emotional disorders, Handicapped, Ill, Medicine, Mental Health, Patient, Prozac, Pshycho Analyst, psychiatrist, psychiatry, Psychology, Schizophrenia, Shrink, Treatment | 1 Comment »

LTTE ideologue Anton Balasingham passes away due to bile duct cancer (cholangiocarcinoma)

Posted by Snapjudge மேல் திசெம்பர் 14, 2006

அன்டன் பாலசிங்கம் காலமானார்

அன்டன் பாலசிங்கம்
அன்டன் பாலசிங்கம்

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகரும் தலைமைப் பேச்சுவார்த்தையாளருமான ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் இன்று இலண்டன் நகரில் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 68.

இருபத்தைந்து ஆண்டு காலத்துக்கும் மேலாக விடுதலைப் புலிகள் அமைப்பின் பல்வேறு முக்கிய அரசியல் நிகழ்வுகளில் முக்கிய பங்காற்றியதாகக் கருதப்படும் ஆண்டன் பாலசிங்கம் அவர்கள், இலங்கை அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில், விடுதலைப் புலிகள் குழுவின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராகவும் அவர் இருந்திருக்கிறார்.

பல ஆண்டு காலமாக இலண்டன் நகரில் வசித்து வரும் ஆண்டன் பாலசிங்கம் சில மாதங்களாகவே கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.

விடுதலைப் புலிகளின் இரங்கல்

தமிழீழத்தின் ராஜகுருவாக திகழ்ந்த அன்டன் பாலசிங்கத்தை பிரிந்து தமிழ் இனம், ஆற்றுப்படுத்த முடியாத துயரில் மூழ்கியுள்ளது என்று அன்டன் பாலசிங்கத்தின் இல்லத்தில் இருந்து விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்டன் பாலசிங்கம் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் நிலைத்து நிற்பார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாலசிங்கத்தின் மறைவால் தமிழ் தேசமே சோகத்தில் முழ்கியுள்ளதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

விமர்சகர் கருத்து

பாலசிங்கத்தின் மறைவு விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கும் என்று கனடாவில் இருக்கும் பத்திரிகையாளரும் ஆய்வாளருமான டி பி எஸ் ஜெயராஜ் தெரிவித்தார்.

 பாலசிங்கத்தின் மறைவால் தமிழ் தேசமே சோகத்தில் மூழ்கியுள்ளது

 

விடுதலைப் புலிகள்

முதலில் இடது சாரி சிந்தனையாளராக இருந்த பாலசிங்கம், பிறகு தமிழ் தேசிய சிந்தனையாளராக மாறியதாகக் குறிப்பிட்ட டி பி எஸ் ஜெயராஜ், போராட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு சிக்கல்கள் வரும்போதெல்லாம், அந்த சிக்கலில் இருந்து புலிகளை அரசியல் ரீதியாக மீட்க பாலசிங்கம் பாடுபட்டார் என்றார்.

ஆனால் அதே சமயம், ஆயுதப் போராட்டத்தை அரசியல்ரீதியாக வழிநடத்துவதற்கு பதிலாக, ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது கூறப்பட்டதாகவும் டி பி எஸ் ஜெயராஜ் தெரிவித்தார்.

Posted in Adele Ann, Anton Balasingham, Australia, bloodshed, British High Commission, cancer, cholangiocarcinoma, Colombo, diabetes, Eelam, Eezham, insulin, IPKF, Jaffna, journalist, London, LTTE, Marxism, moderate, Negotiator, Norway, Peace, Prabhakaran, Psychology, Rajiv Gandhi, Sri lanka, Stanislaus, strategist, Tamil Eelam, Tamil nationalism, Viduthalai Puli, Viduthalai Puligal | 2 Comments »

Motivation to Achieving Achievements

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 31, 2006

சாதனை-சாதனையாளர்கள்

வி.எஸ். ஸ்ரீதரன்

இப்போதெல்லாம் அடிக்கடி “சாதனை’ என்ற வார்த்தையைக் கேள்விப்படுகிறோம். தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் மேடைகளிலும் சாதனையாளர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் பேசப்படுகின்றன.

சாதனை செய்யும் உணர்வு கீழ்க்கண்ட காரணங்களால் வரலாம்:

1. தான் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு நிற்க வேண்டும் என்ற உணர்வு.

2. தன்னிடம் உள்ள கலை, அறிவு, எழுத்தாற்றல், பேச்சாற்றல் மற்றும் பிற திறமைகளை வெளி உலகுக்குக் காட்ட வேண்டும் என்ற உந்துதல்.

3. சிலசமயங்களில் பிற சாதனையாளர்களால் உந்தப்பட்டு தானும் சாதிக்க வேண்டும் என்று எண்ணுதல்.

4. வாழ்வின் லட்சியம் என்று தேடும்போது எதையாவது சாதிப்பது என்ற இலக்கை வைத்துக் கொள்வது.

5. எந்திரத்தனமாய்ப் போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாதனை என்று ஒன்றைச் செய்ய எண்ணும் மனப்போக்கு.

6. புகழின் மேல் உள்ள நாட்டம்.

7. சமூகத்துக்குத் தான் உபயோகமானவனாக இருக்க வேண்டும் என்ற ஆதங்கம்.

8. தோல்விகளையும் தடங்கல்களையும் வென்று, பிரச்சினைகளோடு போராடி வாழ்க்கையில் – தொழிலில் – பொருளாதார நிலையில் உயர்ந்து நிற்க வேண்டும் என்ற எண்ணம்.

ஆகவே, வெவ்வேறு காரணங்கள் சாதனைக்குப் பின்னணியாய் இருக்கக் கூடும். இயற்கை சிலருக்குச் சில கலைத்திறமைகளை அல்லது அனுகூலமான விஷயங்களைத் தந்திருக்கிறது. அதைக் கண்டறியும்போது, அவர்கள் அதில் தொடர்ந்து முயற்சித்து வெற்றி பெறுகிறார்கள். சிலருக்கு அதுவே தொழிலாகவும் ஆகிப்போய் விடுகிறது. அதாவது, பொருளாதார பலமாகவும் ஆகிறது.

சாதனை உணர்வு மனிதர்களை ஆக்கபூர்வமானவர்களாகவும் படைப்பாளிகளாகவும் மாற்ற உதவுகிறது என்ற அளவில் சிறந்தது. அதேசமயத்தில் அதில் முழுவதும் தன்னைக் கரைத்துக் கொள்வதிலும் சிக்கல்கள் உள்ளன. பேரும் புகழும் தாமாகவே தேடி வர வேண்டும். அவையே ஒருவரின் நோக்கமாக இருக்கக் கூடாது. அதேபோல் அகங்காரம் மிகுந்துவிடக் கூடாது.

சாதனையாளர்களைப் பற்றித் தெரிந்து கொள்பவர்கள் மேற்போக்காக அவர்களைப் பார்த்துத் தாங்களும் அப்படி ஆக வேண்டும் என்று நினைப்பது இயல்பே. ஆனால், அவர்கள் எத்தனை கசப்பான அனுபவங்கள் – உழைப்பு – தடைகள் – மேலும் பல சூழ்நிலைகளைக் கடந்து வந்திருப்பார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் – நினைத்துப் பார்க்க வேண்டும்.

சிலர் அவர்கள் உண்டு – அவர்கள் வாழ்க்கை உண்டு என்றிருப்பார்கள். அதில் சாதனை என்ன இருக்கிறது என்றுகூட நினைப்பார்கள். ஆனால் தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்து கொண்டு வருபவர்களும் சாதனையாளர்கள்தான். புகழ் என்ற பெயரில் வெளிச்சத்துக்கு வரவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அவர்களைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. சில பிரபலமான சாதனையாளர்கள் கூடப் பேசும்போது, நான் சிறந்த மனிதனாக இருக்க வேண்டும்…. சிறந்த மனுஷியாக இருக்க வேண்டும்… என்று கூறுகிறார்கள். அவர்கள் துறையில் அவர்கள் சாதனை படைத்திருந்தாலும், அதைவிடப் பெரியதாக நல்ல மனிதனாக – நல்ல மனுஷியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். காரணம், சாதனையாளனாக இருப்பது வேறு; சிறந்த மனிதனாக இருப்பது வேறு.

ஒருகாலத்தில் ஒரு துறையில் சாதனை புரிந்தவர்கள் இன்னொரு காலகட்டத்தில் அதையெல்லாம் விட்டுவிட்டு வேறு எதிலாவது கவனம் செலுத்துவார்கள். சில படைப்பாளிகள் தங்களுடைய மிகச்சிறந்த படைப்பை இனிமேல்தான் தர வேண்டும் என்பார்கள்.

சில குடும்பங்களில் பல சவாலான சூழ்நிலைகளில் பெண்களும் ஆண்களும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் முன்னேற்றத்துக்காகவும் நல்வாழ்வுக்காவும் தியாகங்களைச் செய்கிறார்கள் – உழைக்கிறார்கள் – சோதனைகளைத் தாங்கிக் கொள்கிறார்கள். சிலர் பிறருக்கு உதவும் சுபாவம் கொண்டவர்கள். சிலர் மற்றவர்களின் நன்மதிப்பைப் பெற்று மற்றவர்களுடன் நட்பையும் உறவையும் நன்றாக வைத்துக் கொள்கிறார்கள். வயதான காலத்தில் கூட சில அப்பாக்களும் தாத்தாக்களும் அம்மாக்களும் பாட்டிகளும் குடும்பப் பொறுப்புகளைக் கவனிக்கிறார்கள்; பிரச்சினைகளைத் தலையில் சுமக்கிறார்கள். அவர்கள் எல்லோருடைய பெருமையும் போற்றத்தக்கதுதான்.

ஆகவே, சாதனை என்பது தனிமனிதன் வாழ்விலும் குடும்ப வாழ்விலும்கூட நிகழக்கூடியதுதான். எனவே, வெளிச்சத்துக்கு வராதவர்கள்கூட அவரவர் வட்டத்தில் சாதனையாளர்கள்தான்.

இந்தச் சாதனைகளை எல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு வேறு ஒரு சாதனையைப் பற்றி நினைக்க வேண்டும். மனிதன் தன் மகிழ்ச்சியை நிலைநிறுத்திக் கொள்ளவும், கூடியவரை உலக விஷயங்களால் பாதிப்பு அடையாமலும் இருக்கப் பழகிக் கொண்டால் அது வேறுவிதமான சாதனை. உலக விஷயங்கள் சம்பந்தப்பட்ட சாதனைகளில் நாட்டம் குறையக் குறைய – மெய்யறிவைப் பற்றிய நாட்டம் அதிகரிக்கும். அதுதான் மிகப்பெரிய சாதனையாய் இருக்கும். மனத்தை அடக்கி அமைதியை அனுபவிப்பது மாபெரும் சாதனை என்று ஞானிகள் கூறுகிறார்கள். “நான் இனிமேல் எதையும் அடையத் தேவை இல்லை’ என்னும் அளவுக்கு மனம் அமைதி அடைவதுதான் நிரந்தரமான சாதனை.

Posted in Achievements, Dinamani, Heroism, Motivation, Philosophy, Psychology, Saathanai, Sridharan, Tamil, Think, Thoughts | Leave a Comment »