Archive for the ‘wavuniya’ Category
Posted by Snapjudge மேல் ஜனவரி 3, 2008
விடுதலைப் புலிகளுடனான போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் உத்தியோகப்பூர்வ முன்னறிவிப்பு
கடந்த 2002ஆம் ஆண்டு பிப்பிரவரி 22 ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்புடன் செய்துகொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் உத்தியோகப்பூர்வமாக 14-நாள் முன்னறிவிப்பினை வழங்கியிருக்கிறது.
போர்நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவதாக இலங்கை அரசாங்கம் கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தது.
இது தொடர்பாக இலங்கை வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், போர்நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் கொடுக்கப்பட்டுள்ள இந்த 14-நாள் முன்னறிவிப்பின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி போர்நிறுத்த உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக முடிவிற்குவரும் என்று தெரிவித்திருக்கிறது.
அத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் 2002ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் திகதி உருவாக்கப்பெற்ற இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் செயற்பாடுகளும் முடிவிற்குவரும் என வெளிநாட்டமைச்சின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதேவேளை இன்று பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா, பல்லாயிரக்கணக்கான தடவைகள் புலிகள் அமைப்பினரால் மீறப்பட்டு செயலற்றுப்போயுள்ள ஒரு ஒப்பந்தத்தினைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்க அரசு தயாராக இல்லை என்று தெரிவித்தார்.
தற்போதுள்ள சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் பேச்சுக்களில் ஈடுபடுவது பயனற்றது என்று தெரிவித்த அமைச்சர் யாப்பா, எதிர்காலத்தில் நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, புலிகள் ஆயுதங்களை கீழேவைத்துவிட்டு பேச்சுகளிற்குத் தயார் என்று கூறினால் அது குறித்து பரிசீலிக்க அரசு தயாராக இருக்கிறது என்றும் அதேவேளை அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவினூடாக அரசியல் தீர்வொன்றினைக் காண்பதில் அரசு தீவிரமாக ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
இலங்கை அரசின் இந்த பாரதூரமான முடிவு தமக்குக் கவலையளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள நோர்வேயின் இலங்கைக்கான விசேட சமாதானத்தூதுவர் எரிக் சொல்க்ஹெய்ம், வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு மேலும் வன்முறைகள் அதிகரிக்கவே வழிகோலும் என்றும் அச்சம் வெளியிட்டுள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்ற இலங்கை அரசின் அறிவிப்பு குறித்து இலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இன்னமும் கருத்து எதையும் வெளியடவில்லை. இந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ரவி கருணநாயக அவர்கள் இலங்கை அரசின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக நார்வே அரசுக்கு தெரிவிக்கப்பட்ட பிறகுதான் தங்களது கட்சி இது குறித்து கருத்து வெளியிட முடியுமென்று தமிழோசையிடம் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு – கண்டனம்
 |
|
இரா.சம்பந்தர் |
அரசாங்கத்தின் அறிவிப்பு பற்றி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், இலங்கை அரசாங்கம் போர்நிறுத்தத்திலிருந்து விலகியதாக அறிவித்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை ஏனெனில் அந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் அப்பட்டமாக மீறிவந்துள்ளது என்று தெரிவித்தார்.
இராணுவ ரீதியில் ஒப்பந்தம் மீறப்பட்டது மட்டுமின்றி, வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு அவர்கள் சொந்த இடங்களை விட்டு அகதிகளாக வெளியேறும் நிலை இந்த போர்நிறுத்த காலத்தில் ஏற்பட்டதுதான் தாங்கள் இங்கே வலியுறுத்துகின்ற விஷயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் போர்நிறுத்த விலகல் அறிவிப்பு குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா பிரிவின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் யோகராஜன், மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான ராதாகிருஷ்ணன் ஆகியோரது கருத்துகளையும் நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
வட இலங்கை மோதல்கள் – முரண்பட்ட தகவல்கள்
 |
|
பதுங்கு குழி |
மன்னார் பாலைக்குழி பகுதியில் வியாழக்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டைகள் இடம்பெற்றதாகவும், இதில் 6 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் 6 படையினர் காயமடைந்ததாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.
விடுதலைப் புலிகளின் 6 பதுங்கு குழிகளைக் கொண்ட முன்னணி பாதுகாப்பு வரிசையொன்றும் படையினரால் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.
இந்த மோதல்களை உறுதிப்படுத்தியுள்ள விடுதலைப் புலிகள், மன்னார் பாலைக்குழி அணைக்கட்டு பகுதியில் பெரும் எடுப்பில் முன்னேற முயன்ற இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், இதில் 10 படையினர் கொல்லப்பட்டு 15 பேர் காயமடைந்ததாகவும் தங்கள் தரப்பில் சேதம் எதுவுமில்லை என்றும் அறிவித்திருக்கின்றனர்.
வவுனியா நாவற்குளம் பகுதியில் வியாழனன்று இடம்பெற்ற மற்றுமொரு மோதல் சம்பவத்தில், மேலும் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
இதற்கிடையில், மன்னார் உயிலங்குளம் மணற்குளம் பகுதியில் மோட்டார் குண்டு ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 4 சிவிலியன்கள் காயமடைந்ததாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திலிருந்து ஏவப்பட்ட மோட்டார் குண்டே வீழ்ந்து வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு பெண்களும், 13 வயது சிறுவன் ஒருவனும், 7 வயதுடைய சிறுமி ஒருவருமே இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாக மன்னார் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். காயமடைந்தவர்கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 |
|
கண்ணி வெடி |
இதேவேளை, மணலாறு பதவியா பகுதியில் இராணுவ டிரக் வண்டியொன்று அமுக்க வெடியில் சிக்கியதையடுத்து, 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 4 படையினர் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
மகேஸ்வரன் கொலையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் கடையடைப்பு
 |
|
சுட்டுக்கொல்லப்பட்ட மகேஸ்வரன் |
கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வளவினுள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாழனன்று வவுனியாவில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. வங்கிகள், அலுவலகங்கள் என்பனவும் இயங்கவில்லை.
யாழ் நகரில் கடைகள் திறக்கப்படாதிருந்ததாகவும், இராணுவத்தினர் வந்து கடைகளைத் திறக்குமாறு உத்தரவிட்டதையடுத்து, கடைகள் யாவும் திறக்கப்பட்டதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சொந்த ஊராகிய யாழ்ப்பாணம் காரைநகரில் கறுப்பு வெள்ளை கொடிகள் கட்டப்பட்டு, கடைகள் அலுவலகங்கள், பாடசாலைகள் என்பன மூடப்பட்டு காரைநகர் பிரதேசம் சோகமயமாகக் காட்சியளித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, மகேஸ்வரனின் கொலை தொடர்பாக, யாழ்பாணத்தைச் சேர்ந்த வசந்தன் என்ற நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நபர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழும், மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது அவருடைய பாதுகாப்பு பணியிலும் இருந்துள்ளார் என்றும் ஆனால் இந்தக் கொலை குறித்து யார் மீதும் இலங்கை அரசு சந்தேகப் படவில்லை என்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக பேசவல்ல இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்கவல்ல தெரிவித்திருந்தார்.
ஆனால் ஈ.பி.டி.பி.யுடனோ தன்னுடனோ வசந்தன் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. இந்த செய்தி எவ்வித அடிப்படையும் இல்லாத பொய் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
Posted in Agreement, Assassin, Assassinations, Attacks, Ceasefire, dead, Douglas, Eelam, Eezham, EPDP, Jaffna, Killed, LTTE, Mahesvaran, Maheswaran, Mannaar, Mannar, Murder, Peace, Ranil, Sri lanka, Srilanka, Tamil, Tamil Tigers, Tigers, Truce, Vavuniya, War, wavuniya, Wawuniya | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008
இலங்கையில் இராணுவ வண்டித்தொடர் மீது தாக்குதல்
 |
|
இராணுவத்தினரின் பேருந்துகள் மீது முன்னரும் பல தடவைகள் தாக்குதல் நடந்துள்ளன |
இலங்கையின் வடக்கே வவுனியா செட்டிகுளம் கல்லாறு பகுதியில் இன்று மதியம் விடுதலைப் புலிகள், இலங்கை இராணுவத்தினர் பயணம் செய்த பேருந்து வண்டித் தொடர் மீது நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் கடற்படைச் சிப்பாய் ஒருவரும் 3 இராணுவத்தினரும் காயமடைந்ததாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது.
மன்னாரில் இருந்து புத்தாண்டிற்காக விடுமுறையில் சென்ற படையினர் பிரயாணம் செய்த பேருந்துத் தொடரணி மீது கல்லாறு பாலத்தருகில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பேருந்து வண்டியொன்று சிக்கி சேதமடைந்ததாகவும் அதன்போதே இந்த அனர்த்தம் நேர்ந்ததாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
இதனிடையில் விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய முல்லைத்தீவு மாவட்டம் முத்தையன்கட்டு பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றின் மீது, இன்று காலை அரச விமானப்படையினர் வான்வழி தாக்குதல் நடத்தி அந்த முகாமை அழித்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.
இந்தத் தாக்குதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
Posted in Eelam, Eezham, LTTE, Mannaar, Mannar, mines, Mullai Theevu, MullaiTheevu, Sri lanka, Srilanka, Vavuniya, wavuniya | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 28, 2007
தென்னிலங்கையில் இராணுவச் சோதனைச் சாவடியை படம்பிடித்தாகக் குற்றம்சாட்டி பிரான்ஸ் ஊடகவியலாளர்கள் கைது
இலங்கையில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் காலி மாவட்டத்திலுள்ள பூசா தடுப்பு முகாமிற்கு செல்லும் வழியிலுள்ள இராணுவச் சோதனைச் சாவடியொன்றினை படம்பிடித்ததாகக் குற்றஞ்சாட்டி பிரான்ஸ் நாட்டு தொலைக்காட்சி நிறுவனமொன்றைச் சேர்ந்த இரண்டு பெண் ஊடகவியலாளர்கள், இலங்கைப் படையினாரால் கைதுசெய்யப்பட்டு ரத்கம பொலிசாரினால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
இது குறித்து சுதந்திர ஊடக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், காலி மாவட்டத்திலுள்ள பூசா தடுப்பு முகாமிற்கு செல்லும் தமிழ்க் குடும்பம் ஒன்றினை படம்பிடிக்கும் நோக்குடன், பிரான்ஸ் 24 என்ற தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த இந்தப் பத்திரிகையாளர்களும், அந்த தமிழ்க் குடும்பத்துடன் அந்த முகாமிற்கு செல்லும் வழியில் ரத்கம எனும் பொலிஸ் பகுதியில் இந்த சம்பவம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றதாகத் தெரிவித்திருக்கிறது.
கிறிஸ்துமஸ் தினமான இன்று இந்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள், அவர்களுடன் சென்ற தமிழ் குடும்பத்துடன் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்ததையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டி தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தினை இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான செய்திகளை வெளியிட்டுவரும் வெளிநாட்டு ஊடகங்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல் என்று வர்ணித்துள்ள சுதந்திர ஊடக அமைப்பு, தமிழ்க்குடும்பம் ஒன்றை படம்பிடிப்பது சட்டவிரோதமான செயல் அல்ல என்றும் இவர்கள் மீதான விசாரணைகளைத் துரிதப்படுத்தி, இவர்கள் கூடிய சீக்கிரத்தில் விடுவிடுக்கப்பட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இந்தக் கைது தொடர்பாகக் கருத்துவெளியிட்ட உயர் பொலிஸ் அதிகாரியொருவர், பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதனை உறுதி செய்திருப்பதுடன், அவர்கள் பத்திரிகையாளர்கள் என்பதற்கான ஆவணங்கள் எதனையும் தம் வசம் வைத்திருக்கவில்லை என்றும், படம்பிடிக்க அனுமதிக்கப்படாத இடங்களில் அவர்கள் படம்பிடித்ததனாலேயே கைதுசெய்யப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக கொழும்பின் சுதந்திர ஊடக இயக்கத்தைச் சேர்ந்த சிவகுமாரன் தெரிவிக்கும் கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் நேயர்கள் கேட்கலாம்.
திருகோணமலையில் மழையை அடுத்து வெள்ளம்; மக்கள் பரிதவிப்பு
 |
|
இலங்கையில் வெள்ளம் – பழைய படம் |
இலங்கையில் நாடளாவிய ரீதியில் பெய்த கடுமையான மழை தற்போது ஓரளவு ஓய்ந்துள்ள போதிலும், திருகோணமலை மாவட்டத்தில், மழையை அடுத்து காட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஈச்சலம்பற்று பிரதேச செயலர் பிரிவில் – குறிப்பாக வெருகல் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்து மாவடிச்சேனை பாடசாலையில் தஞ்சம் அடைந்துள்ளதாக பிரதேச
செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கே மட்டக்களப்பு மாவட்டத்துடனும், வடக்கே திருகோணமலையுடனும் வெருகல் பிரதேசம் போக்குவரத்தின்றி துண்டிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிகழ்ச்சியில், இவை குறித்த தகவல்களை தொகுத்துத் திருகோணமலை செய்தியாளர் ரட்ணலிங்கம் தொகுத்து வழங்கக் கேட்கலாம்.
வட இலங்கை மோதல்: 3 சிவிலியன்கள் கொலை
 |
|
இலங்கை அரச படையினர் |
இலங்கையின் வடக்கே வவுனியாவில் திங்கள் இரவு இடம்பெற்ற வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 3 சிவிலியன்கள் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வவுனியா பொலிசார் தெரிவிக்கின்றனர்.
வவுனியா இராசேந்திரன்குளம் பகுதியில் இரண்டு உழவு இயந்திரங்களில் மரக்குச்சிகளைக் களவாடி ஏற்றிவந்த இருவர் மீது குளக்கட்டு பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அந்த இருவரும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா செக்கடிபிலவு பகுதியில் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகள் இருவர், வீட்டிலிருந்த ஒரு குடும்பஸ்தரைத் தேடிவந்து, அவரை வீட்டிற்கு வெளியே அழைத்துச்சென்று சுட்டுக்கொன்றுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதற்கிடையில் மன்னார், மற்றும் முகமாலை மோதல் முன்னரங்கப் பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் திங்களன்று இடம்பெற்ற மோதல்களின்போது 13 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், 5 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
3 வருடங்களாகியும் மட்டக்களப்பில் சுனாமியில் வீடிழந்தவர்கள் பலருக்கு நிரந்தர வீடில்லை – பெட்டகம்
 |
|
படம் சுனாமி அகதி முகாம் |
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 3 வருடங்களாகிவிட்ட நிலையில் பெரிதும் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் வீடுகளை இழந்திருந்த குடுமபங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொடர்ந்தும் நிரந்தர வீடுகளின்றி தற்காலிக கொட்டில்களிலேயே தங்கியிருக்கின்றனர்.
65 மீட்டர் கடலோர பிரதேசங்களில் வசித்து வந்த இக்குடும்பங்களுக்கு வேறு இடங்களில் நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.
அதிகாரிகளின் தகவல்களின்படி, 65 மீட்டர் கடலோர பிரதேசத்திற்குள் வசித்த வந்த 4900 குடும்பங்களில் இதுவரை 2300 குடும்பங்களுக்கு மட்டுமே நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அநேகமான பிரதேசங்களில் ஒரு பகுதியினருக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்டப்டுள்ள அதேவேளை சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடுகளை இழந்திருந்த 815 குடும்பங்களில் ஒரு குடும்பத்திற்குக்கூட இதுவரை நிரந்தர வீடு வழங்கப்டப்டவில்லை.
இதனை ஏற்றுக் கொண்டுள்ள பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பொருத்தமான காணிகளை தெரிவு செய்தல், மண் போட்டு நிரப்புதல் போன்ற சில காரணங்களினால் தமது பிரதேசத்தில் வீடமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி மீள்கட்டுமானப் பணிகளின் நிலை குறித்த பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
Posted in Boossa, Channels, Colombo, Conflict, Downpour, Eelam, Eezham, Environment, Floods, Freedom, Galle, LTTE, Media, MSM, Nature, Rains, Sinhalese, Sri lanka, Srilanka, Triconamalee, triconmalee, Trincomalee, Tsunami, TV, Vavuniya, Water, wavuniya | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 27, 2007
அரச தொலைக்காட்சி நிறுவனத்தினுள் கலகம் விளைவித்த அமைச்சர் தாக்கப்பட்டார்
இலங்கை அரசாங்கத்தின் தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் இன்று உள்நுழைந்து கலகம் விளைவித்த அமைச்சர் மேர்வின் சில்வா மீதும் அவரது குழுவின் மீதும் அந்த நிறுவனத்தின் ஊடகவியலாளர்களும், ஊழியர்களும் மேற்கொண்ட தாக்குதலில் அமைச்சர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்தச் சம்பவத்தின்போது அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர் ஒருவரும் தாக்கப்பட்டிருக்கிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிட்ட இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், அந்த அமைப்பின் செய்திப்பணிப்பாளர் டி.எம்.ஜீ. சந்திரசேகர என்பவரை அமைச்சரின் குழுவினர் தாக்கியதாகவும், அதன்பின்னர் அமைச்சர் மேர்வின் சில்வா நிறுவனத்தலைவருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது ஆத்திரமடைந்த நிறுவன ஊட்கவியலாளர்களும், பணியாளர்களும் அந்த அறையினுள் பணயக் கைதியாக பூட்டி வைத்திருந்ததாகவும் தெரிவித்தது.
அத்துடன் அவர்கள் அமைச்சரும் அவரது குழுவினரும் மன்னிப்புக் கோரினால் மாத்திரமே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் நிபந்தனை விதித்ததாகவும் தெரிவித்தது.
இவ்வாறு நிலைமை மோசமடைந்துவரும்வேளை, கலகம் அடக்கும் துருப்பினரும், இராணுவத்தினரும் தொலைக்காட்சி நிறுவனத்தினுள் உள்நுழைந்து சுமார் இரண்டரை மணித்தியாலங்களின் பின்னர் அமைச்சரை விடுவித்தனர். இவரை விடுவித்துக்கொண்டு செல்லும்போதே பணியாளர்கள் சூழ்ந்து தாக்கியதாகவும் அதன் போது அவர் காயமடைந்ததாகவும் தெரியவருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து இலங்கை ஜனாதிபதி விசேட விசாரணையொன்றுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
விடுதலைப்புலிகளின் தாக்குதலில் தினமுரசு பத்திரிகை விநியோகித்தவர்கள் பலி
 |
|
சம்பவத்தில் கொல்லப்பட்ட சிறுவனின் சடலத்தின் முன்பாக கதறியழும் உறவினர்கள் |
இலங்கையின் வடக்கே வவுனியாவின் புறநகரப்பகுதியாகிய குருமண்காடு கடைவீதிச் சந்தியில் இன்று பிற்பகல் விடுதலைப் புலிகள் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அதாவது ஈபிடிபி அமைப்பின் உறுப்பினர்கள் மூவரும், இடையிலகப்பட்ட ஒரு சிறுவனும் கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள், வாகன சாரதி, ஈபிடிபி அமைப்பின் மேலும் 3 உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 8 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
பொதுமக்களில் ஒருவர் மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவன் என்றும், ஒருவர் கட்டிடத் திணைக்கள ஊழியர் என்றும் இன்னுமொருவர் தனியார் அஞ்சல் முகவர் நிலையத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமுரசு பத்திரிகையின் விற்பனைக்காகச் சென்ற ஈபிடிபி அமைப்பினரின் வேன் ஒன்றை இலக்கு வைத்து, சைக்கிளில் பொருத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடியைப் பயன்படுத்தியே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்ட வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன், இறந்தவர்களின் சடலங்களையும், காயமடைந்தவர்களையும் வவுனியா வைத்தியசாலையில் பார்வையிட்டு சம்பவம் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்தார்.
ஈபிடிபி கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர், கொல்லப்பட்ட தமது அமைப்பினரின் சடலங்களை நீதிபதிக்கு அடையாளம் காட்டினார். இறந்த சிறுவன் வவுனியா மகாவித்தியாலய மாணவன் என அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டினர்.
மர்வின் சில்வா விவகாரம்: பொலிஸ் விசாரணைகள் மீது நீதிமன்றம் அதிருப்தி
இலங்கை அமைச்சர் மர்வின் சில்வா அவர்களால், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் செய்தியாளர் ஒருவர் வியாழன்று தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பற்றிய பொலிஸ் புலனாய்வு நடவடிக்கைகள் குறித்து இலங்கை நீதிமன்றம் ஒன்று அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இலங்கை எங்கிலும் உள்ள மக்களால் தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்க்கப்பட்டது என்பதால், அது குறித்து பொலிஸார் மிகவும் கரிசனையுடன் செயற்பட வேண்டும் என்று கொழும்பு குற்றவியல் நீதிபதி மக்கி முகமட் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் ஒருவரை மாத்திரமே பொலிஸார் குற்றவாளியாக நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர்.
ஆனால், இப்படியான ஒரு பெரிய சம்பவம் நடைபெற்ற நிலையில், ஏன் ஒருவர் மாத்திரம் இவ்வாறு பொலிஸாரால், கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று கேள்வியெழுப்பிய நீதிபதி, பொலிஸாரின் இது குறித்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்காது என்றும் கூறிவிட்டார்.
நடந்த சம்பவம் குறித்து பொலிஸ் அளிக்கும் அறிக்கையை நீதிமன்றம் ஏற்றால், நீதிமன்றத்தின் மீது பொதுமக்கள் கல் வீசுவார்கள் என்று நீதிமன்றத்தில் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதிபதி, அனைத்து சந்தேக நபர்களையும் பொலிஸார் கைதுசெய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தின்போது செய்தியாளர்களை அமைச்சர் துஷ்பிரயோகம் செய்ததாகவும், எச்சரித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அதனையடுத்து செய்தியாளர்களால் சில மணிநேரம் அமைச்சர் அங்கு பிடித்து பணயமாக வைக்கப்பட்டிருந்தார்.
இவை குறித்த தகவல்கள் வியாழனன்று ரூபவாஹினி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பட்டன.
ஆயினும், இந்தத் தொலைக்காட்சி நாடாக்கள் சி.ஐ.டி. பொலிஸாரால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதால், இந்த விடயத்தில் தாம் பலிக்கடாக்கள் ஆக்கப்படலாம் என்று கூறி செய்தியாளர்கள், இன்று ரூபவாஹினி நிறுவனத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட இலங்கை மோதல்கள் குறித்து முரண்பட்ட தகவல்கள்
யாழ்ப்பாணம், மன்னர் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் வியாழனன்றும் வெள்ளியன்றும் இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்ததாக இருதரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
ஆயினும், இழப்புகள் குறித்து இருதரப்பின் தகவல்களும் முரண்படுகின்றன.
குறிப்பாக முகமாலை, குறிசுட்டகுளம், பெரிய பண்டிவிரிச்சான் ஆகிய இடங்களில் கடும் சண்டை நடைபெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
அதேவேளை கிளாலி பகுதியில் நேற்றைய மோதலில் கொல்லப்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவரின் சடலம் இன்று செஞ்சிலுவைச் சங்கத்தினரின் ஊடாக விடுதலைப்புலிகளால் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற கடற்சமரில் கொல்லப்பட்ட மேலும் ஒரு சிப்பாயின் சடலத்தையும் இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
திருகோணமலையில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தோருக்கு உணவு உதவி
 |
|
திருகோணமலையில் வெள்ளம் – பழைய படம் |
திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பிரதேசத்தின் வெருகல் ஆறு பெருக்கெடுத்ததால் அங்கிருந்து இடம்பெயர்ந்திருந்த மக்கள்
கடந்த நான்கு தினங்களாக உணவுப் பற்றாக்குறையால்
தவித்துவந்தனர்.
இந்த நூற்று எழுபத்து ஏழு குடும்பங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை,
மாவட்ட அரச அதிபர் சில்வா விடுத்த பணிப்புரையின் பேரில், ஈச்சிலம்பற்று பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தினூடாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
மூன்று தினங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பண்டங்களான அரிசி பருப்பு கோதுமை மாவு என்பன வழங்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பல நோக்கக் கூட்டுறவுச் சங்க தலைவர் சுப்பிரமணியம் அரசரெட்ணம்
தெரிவித்திருக்கின்றார்.
இதன் பிரகாரம் மூன்று தினங்களுக்குப் போதுமான அளவில் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தலா நூற்று ஐம்பது ரூபா பெறுமதியான உணவுப் பண்டங்களும், பத்து வயதுக்கு மேற்பட்டோருக்கு இருநூற்றுப் பத்து ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பண்டங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
தற்போது வெள்ளம் படிப்படியாக வடிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Posted in Anura Priyadharshana Yapa, Batticaloa, bodyguards, Claymore, Commandos, Dhina Murasu, DhinaMurasu, Distribution, Eelam, Eezham, EPDP, Freedom, Independence, Journal, Journalists, Kalavanchchikuddi, Kurumankadu, Liberty, LTTE, Mannaar, Mannar, Media, Mervyn Silva, MSM, News, Newspaper, Newspapers, Oppression, Reporters, Roopavahini, Roopawahini, Rupavahini, Rupawahini, Sri lanka, Srilanka, Tamil, Thina Murasu, ThinaMurasu, TV, Vavuniya, Vehicles, wavuniya | 4 Comments »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2007
மோதல்கள், ஆட்கடத்தல்கள் குறித்து இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு கவலை
வடக்கு இலங்கை மோதல்கள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆட்கள் காணாமல் போதல் ஆகியவை குறித்து, டிசம்பர் மாதம் 16 ஆம் திகதியுடன் முடிவடையும் வாரத்துக்கான தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு, அவை குறித்து கவலையும் வெளியிட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு மற்றும் அடம்பனுக்கு அருகில் உள்ள பகுதிகளிலும் மற்றும் யாழ் குடாநாட்டின் முகமாலையிலும் இடம்பெற்ற கடுமையான மோதல்கள் குறித்து தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் யாழ்ப்பாணத்தில் பெருமளவு மக்கள் பாதுகாப்புக் கோரி மனித உரிமைகள் ஆணையத்தில் தஞ்சம் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மன்னார் மற்றும் வவுனியா மோதல்களில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு, வன்னியில் இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுத்தாக்குதல் காரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுளமுனை மகாவித்தியாலயம் மற்றும் அலம்பில் றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலயம் ஆகியவற்றில் இடம்பெற்ற கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இந்தப் பரீட்சையில் சுமார் 300 மாணவர்கள் தேற்றியிருந்தனர்.
அதேவேளை கிழக்கு மாகாணத்தில் ஆட்கள் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளதாகவும் அது கூறியுள்ளது.
கிழக்கு பிராந்தியத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் உட்பட 11 பேர் இந்த காலகட்டத்தில் கடத்தப்பட்டதாகவும், வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பை அடுத்து அந்த மூன்று பேரும் விடுவிக்கப்பட்டதாகவும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆட்கடத்தல்கள் சில தொடர்பில் தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் எனப்படும் கருணா அணியினர் சப்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுவதாகவும் கண்காணிப்புக்குழு கூறியுள்ளது.
தாம் கடத்திய சிலருக்கு இந்த அணியினர் ஆயுதங்களை கொடுத்து பலவந்தமாக ரோந்தில் ஈடுபடப் பணித்ததாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என்று கண்காணிப்புக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் கருணா அணியின் தலைவரான கருணா, லண்டனில் கைது செய்யப்பட்டதை அடுத்து, பிள்ளையான் மற்றும் கருணா பிரிவினருக்கு இடையே கிழக்கு மாகாணத்தில் மோதல்கள் அதிகரித்துள்ளதாகவும் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.
வவுனியா, மன்னார், வெலிஓயா, முகமாலை பிரதேசங்களில் கடும் மோதல்
இலங்கையின் வடக்கே இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், விடுதலைப் புலிகளுடன் மோதல்களில் ஈடுபட்ட படையினரில் இராணுவச் சிப்பாய் ஒருவர் முகாமுக்குத் திரும்பவில்லை என்றும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
வவுனியா, மன்னார், வெலிஓயா, முகமாலை பிரதேசங்களில் உள்ள இராணுவ முன்னரங்கப் பகுதிகளிலேயே இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.
மன்னார் மற்றும் யாழ் முன்னரங்கப் பகுதிகளில் புதன்கிழமை இராணுவத்தினருடன் ஏற்பட்ட சண்டைகளில் 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.
வவுனியா தாலிக்குளம் பகுதிக்கு வாகனம் ஒன்றில் சென்றபோது, அடையாளம் தெரியாதவர்களினால் கடந்த புதன்கிழமை கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் ஒருவரது சடலம் வாரிக்குட்டியூர் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர் கண்டி பகுதியைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பான புலன் விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, யாழ் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து பெய்த அடைமழை இன்று ஒய்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் கிளிநொச்சி கல்லாறு மற்றும் கண்டாவளை பகுதிகளில் பெய்த அடைமழை காரணமாக 400 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அப்பிரதேச வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், இதனால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இலங்கை படையினரின் குறுக்கீடின்றி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வழிவேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை
தமிழக மீனவர்கள், இலங்கை பாதுகாப்புப் படையினரின் குறுக்கீடுகள் இல்லாமல், இந்தியக் கடற்படையின் பாதுகாப்புடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று புதுடெல்லியில் நடந்த மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் கருணாநிதியின் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டது. உடல்நலக்குறைவு காரணமாக, கருணாநிதி இந்த மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை. அவரது சார்பில், மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு, முதல்வரின் உரையை வாசித்தார்.
இந்திய மீனவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நடப்பு ஆண்டில் இந்திய மீனவர்கள் மீது நடத்தப்பட்ட 26 தாக்குதல் நிகழ்வுகளில் 8 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 13 பேர் காயமடைந்திருக்கிறார்கள் என்று கருணாநிதியின் உரையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
தெளிவாக எல்லை வரையறுக்கப்பட்ட பகுதிகளில், இலங்கைப் படையின் குறுக்கீடு இல்லாமல், இந்திய மீனவர்களுக்கு மீன் பிடிப்பதில் உள்ள பாரம்பரிய உரிமைகள் அளிக்கப்பட வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது. இதில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்வது, கடல் பகுதியில் மனிதர்களாலும், பிற பொருள்களாலும் சட்டத்துக்குப் புறம்பாக நடைபெறும் எந்த ஒரு நடவடிக்கையையும் கட்டுப்படுத்துவதற்கு உதவும் என கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அகதிகள் வருகை, தமிழகத்தால் எதிர்கொள்ளப்படும் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்றாக வடிவெடுத்துள்ளதாக கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார். கடந்த 1983-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இதுவரை நான்கு கட்டங்களில் தமிழகத்துக்கு வந்த 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள், 25 மாவட்டங்களில் உள்ள 117 முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
இலங்கை அகதிகளுக்காக மாநில அரசு செலவிடும் தொகையை மத்திய அரசு திருப்பித்தர வேண்டும் என்றும், அகதிகளுக்காக கிலோ 57 காசு என்ற மானிய விலையில் அரிசி வழங்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கருணாநிதி கோரிக்கை விடுத்திருக்கிறார்.
Posted in Boats, DMK, Eelam, Eezham, Fisheries, Fisherman, fishermen, Fishery, Jaffna, LTTE, Mannaar, Mannar, MK, Mugamaalai, Mugamalai, Muhamaalai, Muhamalai, Mukamaalai, Mukamalai, murders, Sri lanka, Srilanka, Vavuniya, War, wavuniya | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 7, 2007
வவுனியா மன்னார் மோதல்கள்: 10 விடுதலைப் புலிகள் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல்
இலங்கையின் வடக்கே வவுனியா மற்றும் மன்னார் இராணுவ முன்னரங்கப் பகுதிகளில் வெள்ளிக்கிழமையும் வியாழக்கிழமையும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 10 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
மன்னார் முன்னரங்கப் பகுதியொன்றில் இடம்பெற்ற மற்றுமொரு மோதல் சம்பவத்தின் போது காணாமல் போனதாக படையினரால் தெரிவிக்கப்பட்ட 4 இராணுவத்தினரின் சடலங்கள் நேற்று சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரால் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியில் படை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
போர்முனைச் சண்டைகளின்போது காணாமல் போயுள்ள வேறு இரண்டு இராணுவத்தினரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் புதன்கிழமை வரையிலான சில தினங்களில் மன்னார் மாவட்டப் போர்முனைகளில் இராணுவத்தினருடனான மோதலின் போது 11 விடுதலைப் புலிகள் உயிரிழந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.
இப்பகுதியில் தற்செயலாக இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றில் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.
முல்லைத்தீவுக்கு மேற்கே வற்றாப்பளை என்னுமிடத்தில் விடுதலைப் புலிகளின் இரகசிய சந்திப்புத் தளம் ஒன்றை விமானப்படையினர் நேற்று மாலை குண்டு வீசித் தாக்கியுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.
எனினும் வற்றப்பளை மக்கள் குடியிருப்புக்கள் மீதே விமானப்படையினர் நேற்று தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் பல வீடுகள் சேதமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
Posted in Clashes, Eelam, Eezham, LTTE, Mannaar, Mannar, Mullai, Mullai Theevu, MullaiTheevu, News, Sri lanka, Srilanka, Updates, Vavuniya, War, wavuniya | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2007
அநுராதபுரத்தில் பொதுமக்கள் பேருந்து மீது தாக்குதல்: 15 பேர் பலி
இலங்கையின் அநுராதபுரம் மாவட்டம் கெப்பிட்டிக்கொல்லாவ பகுதியில் பொதுமக்கள் போக்குவரத்து பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட கிளெமோர் கண்ணிவெடித் தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 25 பேர் காயமடைந்ததாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரத்தில் இருந்து பதவியா ஜானகபுரவுக்குச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தே இந்தத் தாக்குதலுக்கு உள்ளானதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கெப்பிட்டிக்கொல்லாவவில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் அபிமானிபுர என்ற இடத்திலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார முன்னதாக தமிழோசைக்குத் தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் கெப்பிட்டிக்கொல்லாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வட இலங்கையில் மோதல்கள் அதிகரிக்கின்றன: இரு தரப்பிலும் இழப்புகளும் அதிகரிப்பு
 |
 |
மோதல்கள் அதிகரித்துள்ளன |
இலங்கையின் வடக்குப் போர்முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அதிகரித்துச் செல்லும் மோதல்களில் இன்று மாத்திரம் குறைந்தது 7 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.
இந்த மோதல்களில் 30 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் உள்ள சின்னசிப்பிக்குளம் பகுதியில் படையினர் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில், 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள், படையினரின் எதிர்த்தாக்குதலில் முறியடிக்கப்பட்டதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
இதே பகுதியில் பிற்பகல் 12.50 மணியளவில் உழவு இயந்திரம் ஒன்றில் பயணம் செய்த இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில், 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 2 சிப்பாய்கள் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்திருக்கின்றது.
மன்னார் அடம்பன் மேற்கு, முள்ளிக்குளம் பரப்பாங்கண்டல் மற்றும் நரிக்குளம் ஆகிய வெவ்வேறு இடங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான மோதல்களின்போது, 30 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
அதேவேளை மன்னார் நரிக்குளம், யாழ்ப்பாணம் முகமாலை, கிளாலி, நாகர்கோவில் ஆகிய முன்னரங்கப் பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களின்போது, 20 விடுதலைப் புலிகளும், 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இந்த மோதல்களில் 2 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் அது கூறுகிறது.
கிளாலி முன்னரங்க பகுதியில் நேற்று பிற்பகல் சுமார் ஒரு மணியிலிருந்து இரண்டு மணித்தியாலங்கள் இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாக இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் தெரிவித்திருக்கின்றனர். இந்த மோதலில் 13 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ள போதிலும், தமது தரப்பில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும், தமது பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு இராணுவத்தினர் மேற்கொண்ட முயற்சி கடுமையான எதிர்த்தாக்குதலின் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
வவுனியாவில் தொண்டர் அமைப்பு பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு
இதற்கிடையில், வவுனியா மாவட்டத்தில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் தமது பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி இன்று ஒரு நாள் அடையாள பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தனர்.
அடையாளம் தெரியாதவர்களின் அச்சுறுத்தல்கள், கப்பம் கோரி விடுக்கப்படும் எச்சரிக்கைகள் போன்றவற்றினால் இந்த பணியாளர்கள் அச்சமடைந்துள்ளதாகவும், இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மனித நேய பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, சம்பந்தப்பட்டவர்கள், இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்கள் சுதந்திரமாக, அச்சமின்றி பணிகளில் ஈடுபடக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என வவுனியா மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் கோரியிருக்கின்றது.
மீண்டும் வவுனியாவுக்கு ரயில் சேவை
கடந்த ஒரு வார காலமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த இலங்கையின் வடபகுதிக்கான ரயில் சேவை உடனடியாக வழமைக்குத் திரும்பும் எனவும், ஜனாதிபதியின் அனுமதியோடு இதற்கான பணிப்புரை ரயில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டிருப்பதாகவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.
இதனை உறுதி செய்த ரயில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், இரண்டு ரயில்கள் இன்றிரவு வவுனியாவை வந்தடையும் என்றும் நாளை காலை முதல் அனைத்து ரயில்களும் வழமைபோல வவுனியாவில் இருந்து கொழும்புக்குச் சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவித்தனர்.
இதற்கிடையில் வவுனியா ஒமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய வன்னிப்பகுதிக்கு இடம்பெற்று வந்த பொதுப் போக்குவரத்து நடைமுறையில் படையினர் ஏற்படுத்தியிருந்த கட்டுப்பாடுகள் இன்று தளர்த்தப்பட்டதாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.
வவுனியாவிலிருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்குச் செல்பவர்களை படையினர் அனுமதித்திருந்தார்கள் எனினும் வன்னிப்பகுதியில் இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய வவுனியாவுக்குள் வருவதற்குப் பொதுமக்கள் எவரையும் படையினர் அனுமதிக்கவில்லை.
இந்த கட்டுபபாடுகள் இன்று தளர்த்தப்பட்டிருக்கின்றன. இதனையடுத்து, விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய புளியங்குளம் பகுதியில் பலநாட்களாகக் காத்துக்கிடந்த பொதுமக்களில் ஒரு தொகுதியினர் இன்று வவுனியாவை வந்தடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.
இது பற்றி இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான பொதுப் போக்குவரத்து இன்று முதல் தொடர்ந்து வழமைபோல நடைபெறும் என அவர் கூறினார்.
Posted in Aid, Anuradapura, Anuradhapura, Anuradhapuram, Anurathapura, Attacks, Bribery, Bus, Corruption, dead, Economy, Eelam, Eezham, Extortions, Finance, Help, kickbacks, LTTE, Mannaar, Mannar, Mine, mines, Money, NGO, Rails, Railways, ransom, relief, Security, service, Sri lanka, Srilanka, Threats, Trains, Transport, Transportation, TRO, UN, UNESCO, Vanni, Vavuniya, Vawuniya, Volunteer, Volunteering, Wanni, wavuniya, Wawuniya, Wounded | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 4, 2007
இலங்கை கைதுகள் குறித்து அரசாங்கம் விளக்கம்
கொழும்பில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களில் பெரும்பாலானோரை விடுவித்து விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
தமிழர்களை இலக்கு வைத்து இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுவதையும் அரசு மறுத்திருக்கிறது.
இலங்கையில் தலைநகர் கொழும்பிலும், புறநகர்ப் பகுதியிலும் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து கொழும்பிலும், அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் கடுமையான சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினரும் பொலிஸாரும் பலநூற்றுக்கணக்கான தமிழர்களை கைது செய்திருந்தனர்.
இவர்களில் பலர் அந்தந்தப்பகுதி பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அதேவேளை, மேலும் பலர் காலி மாவட்டத்திலுள்ள பூசா தடுப்புச் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.
 |
 |
அமைச்சர் பெர்ணாண்டோ புள்ளே |
தமிழர்கள் வகை தொகையின்றி கைதுசெய்யப்பட்டு ஆங்காங்கே அடிப்படை உணவு, உடை மற்றும் மலசலகூட வசதிகளின்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாக கூறும் தமிழ்க் கட்சிகள் பலவும் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அது குறித்து குரல் எழுப்பியிருந்தன.
இதனைவிட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்ணணி எனப்படும் ஜே.வி.பியும் அரசின் இந்த நடவடிக்கை மனிதாபிமானமற்ற செயல் என்று தெரிவித்திருந்தன.
அத்துடன் அவர்களை விடுவிப்பதற்கு உதவக்கோரி ஜனாதிபதியிடமும், சர்வதேச சமூகத்திடமும் முறையீடு செய்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த விடயம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஊடகங்களிற்கு தெரியப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் பிரதான கொறடாவும், அமைச்சருமான ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே இன்றுமாலை கொழும்பிலுள்ள பாதுகாப்பு விவகாரங்களிற்கான ஊடக மத்திய நிலையத்தில் விசேட பத்திரிகையாளர் மாநாடொன்றினை நடாத்தினார்.
அங்கு எதிர்க்கட்சிகளும், தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை மறுத்த அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே நாட்டினதும், சகல சமூகங்களினதும் பாதுகாப்பினை உறுதிசெய்யும் ஒரே நோக்குடனேயே இந்த நடவடிக்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டது என்றும், பொலிஸாரினாலும் பாதுகாப்புப் படையினராலும் வார இறுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின்போது சிங்கள இனத்தவர்கள் சிலரும், முஸ்லிம் இனத்தவர் ஒருசிலரும்கூட விசாரணைகளிற்காக கைது செய்யப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் 202 பேர் தவிர ஏனைய அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தமிழோசைக்குத் தெரிவித்தார்.
தமிழர்கள் இலக்குவைத்து பாரியளவில் கைது செய்யப்பட்டார்கள் என்பதை மறுத்தலித்துப் பேசிய அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே தேவையேற்படும் போதெல்லாம் அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
வடபகுதிக்கான போக்குவரத்து நிலைமைகளில் முன்னேற்றம் இல்லை
 |
 |
பெரும் சிரமங்களுடனான வடபகுதிப் பயணங்கள் |
இலங்கையின் தலைநகரப்பிரதேசத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களையடுத்து, மட்டுப்படுத்தப்பட்ட வடபகுதிக்கான போக்குவரத்து நடைமுறைகளில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவுக்கும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பகுதிக்கும் இடையே ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான தபால் விநியோக சேவை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வியாழக்கிழமை முதல் பாதிக்கப்பட்டிருந்த இந்த சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக வன்னிப்பிராந்திய இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுக்கள் நடத்தி அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.
எனினும் நோயாளர்களின் போக்குவரத்து மற்றும் வன்னிப்பிரதேசத்திலிருந்து பொதுமக்கள் வவுனியா பகுதிக்குள் வருவது போன்ற விடயங்களில் நிலவும் கட்டுப்பாடுகள் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான போக்குவரத்து நிலைமைகள், மற்றும், வடபகுதிக்கான ரயில் சேவை அநுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதனால் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகச் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை என்பன குறித்து வவுனியா மேலதிக அரச அதிபர் திருமதி சாள்ஸ் அவர்களின் செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
Posted in Anuradapura, Anuradhapura, Anuradhapuram, Anurathapura, Arrest, Bombs, Bus, Colombo, Eelam, Eezham, Govt, Islam, Jail, JVP, LTTE, Muslim, Prison, Roads, Sinhala, Sri lanka, Srilanka, Suspects, Tamil, Tamils, Trains, Transport, Transportation, Vanni, Vavuniya, Wanni, wavuniya | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 2, 2007
இலங்கை அரசுக்கான ஆதரவை மறுபரீசிலனை செய்வோம் – மலையக மக்கள் முன்ணணி
கொழும்பில் கடந்த சில தினங்களாக கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், இலங்கை அரசுக்கான தங்களது ஆதரவை மறுபரிசீலனை செய்வது குறித்து தமது கட்சி சிந்தித்து வருவதாக மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஆளும் கூட்டணியில் அமைச்சராகவும் உள்ள பெ.இராதாகிருஷ்ணன் தமிழோசையிடம தெரிவித்தார்.
திங்கட்கிழமையன்று நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதத்தின் போது தமிழ் பேசும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து தமிழ் மக்களின் இந்தப் பிரச்சின குறித்து குரல் கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஞாயிறு அன்றும் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளர்கள் என்றும், அவர்களை தாம் பல போலீஸ் நிலையங்களில் சென்று பார்வையிட்டு, அவர்களின் விடுதலை தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஆளும் கூட்டணியில் தமது கட்சி அங்கம் வகித்தாலும், நாடாளுமன்றக் கூட்டத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் தமது கட்சி எண்ணியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது உள்ள சூழலில், அரசாங்கத்துடன் தொடர்ந்து இருக்க முடியுமா என்கிற பெரிய கேள்விக் குறியும் எழுந்துள்ளதாகவும், திங்கட்கிழமை அது குறித்த பதில் தெரியவரும் எனவும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அரசாங்கத்துக்கான ஆதரவை மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு தமது கட்சியான மலையக மக்கள் முன்னணி தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பிரச்சனைகள் குறித்து புகார்
கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர் நோக்குவதாகக் கூறப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சில பிரச்சினைகள் தொடர்பாக விரைவில் தீர்வொன்றை பெற்றுத்தர வேண்டும் என கிழக்கு மாகாண அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்று முன் வைக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை பெரிய பள்ளிவாசலில் வெள்ளிகிழமை கூடிய கிழக்கு மாகாண அனைத்து பள்ளிவாலச்கள் சம்மேளனத்தின் விசேட கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்டப்டுள்ளதாக சம்மேளனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இனைப்பாளரான யு.எல்.எம்.முபீன் கூறுகின்றார்.
கிழக்கு மாகாணம் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட பின்பும் கடத்தல், கொள்ளை உட்பட பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முஸ்லிம்கள் எதிர் நோக்குவதாகவும் குறிப்பிட்ட அவர், நீதிமன்ற உத்தரவு காரணமாக பள்ளிவாசல்களில் இரவு நேர ஒலி பெருக்கி பாவனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, இறைச்சிக்காக கர்நடைகளை எடுத்துச் செல்லுதல் மற்றும் வெட்டுதல் போன்றமை தொடர்பாக எதிர் நோக்கும் பிரச்சினைகள், முஸ்லிம் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடியேற்ற முயற்சிகள் போன்றவற்றையும் எதிர் நோக்குவதாகவும் கூறினார்.
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்ட 3 வது வாக்கெடுப்பிற்கு முன்னதாக இது பற்றி ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமான பேச்சுவார்ததையொன்றை நடத்த வேண்டும் என்ற மற்றுமொரு தீர்மானமும் அக்கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் வடக்கில் தொடரும் மோதல்கள்
இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் வெலிஓயா பிரதேசங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சனிக்கிழமை இடம்பெற்ற கடுமையான நேரடி மோதல்களில் குறைந்தது 60 விடுதலைப் புலிகளும் 6 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.
வெலிஓயா பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க பகுதிகளில் இரண்டு இடங்களில் தாக்குதல் நடத்துவதற்கு முற்பட்ட இராணுவத்தின் முயற்சி தமது எதிர் தாக்குதலின் மூலம் முறியடிக்கப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மன்னார் மாவட்டத்தில் அடம்பனுக்குத் தெற்கில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னரங்க பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் இரவு வரையில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றதாகவும், இதில் 28 விடுதலைப் புலிகளும் 5 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது, இதில் 57 விடுதலைப் புலிகளும் 26 இராணுவத்தினரும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது,
மன்னார் பெரியதம்பனை பகுதியில் விடுதலைப் புலிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 20 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதுடன், 25 புலிகளும், 9 இராணுவத்தினரும் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது,
இதற்கிடையில் கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசனுக்கும் யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அவர்களுக்கும் இடையில் ஞாயிற்றுக்கிழமை காலை சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Posted in Eelam, Eezham, Islam, Kilinochi, LTTE, Mannar, Moslem, Moslems, Muslim, Muslims, Northeast, Sri lanka, Srilanka, Vavuniya, wavuniya | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2007
கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையிலான ரயில் சேவை அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது
 |
 |
இலங்கை ரயில் |
நாட்டின் தலைநகரமாகிய கொழும்பு பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து, கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையில் நடைபெற்று வந்த ரயில் சேவை, இன்று அனுராதபுரம் நகருடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி அதிகாலை புறப்படுகின்ற யாழ்தேவி ரயில் மாத்திரம் மதவாச்சி வரையில் சேவையில் ஈடுபடுவதாகவும், ஏனைய ரயில் சேவைகள் யாவும் அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ரயில் சேவை நேற்று மதவாச்சி வரையில் மாத்திரமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இரண்டாவது நாளாக இன்று வெள்ளிக்கிழமையும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இருந்து பொதுமக்கள் எவரும் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக, வவுனியா நகரம் உட்பட தென்பகுதிக்கு வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலைமை காரணமாய் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா மாவட்ட பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு கடமைக்காகச் சென்ற அரச ஊழியர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பி வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இன்று வெள்ளிக்கிழமை இவர்களில் ஒரு தொகுதியினர் மாத்திரம் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக வவுனியா நகரப்பகுதிக்குள் வருவதற்கு படையினர் அனுமதி வழங்கியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், இலங்கையின் வடக்கே இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இராணுவ சிப்பாய் ஒருவர் மிதிவெடியில் சிக்கிக் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் யாழ்ப்பாணம் முகமாலை பகுதியில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து அரச தரப்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இலங்கை யுத்தத்தில் பொதுமக்கள் அதிகம் கொல்லப்படுவது குறித்து யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு அதிர்ச்சி
 |
 |
யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு அலுவலக பதாகை |
இந்த வாரத்தின் முதல் நான்கு தினங்களில், இலங்கையின் வடக்கிலும் கொழும்பிலும் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களின்போது சுமார் 49 சிவிலியன்கள் கொல்லப்பட்டதோடு, சுமார் 60 பேர்வரையில் காயமைடைந்திருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்றும், இது குறித்து தாம் மிகுந்த கவலையடைந்திருப்பதாகவும் இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு தெரிவித்திருக்கிறது.
இந்தச் சம்பவங்கள் குறித்து இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் விசேட அறிக்கையொன்றில், இம்மாதம் 25 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரையான குறுகிய காலப்பகுதியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் பெருந்தொகையான சிவிலியன்கள் கொல்லப்பட்டிருப்பதோடு, படுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறது.
இந்த சம்பவங்கள் குறித்து இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், இச்சம்பவங்களும் அதன்போது ஏற்பட்ட இழப்புக்களும் 2002 ஆம் ஆண்டு யுத்தநிறுத்த ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்பிருந்த நிலைமையை ஒத்ததாகக் காணப்படுவதாகவும் அது தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
கொழும்புத் தாக்குதல்கள் குறித்து ஐ.நா தலைமைச் செயலர் கண்டனம்
இலங்கையின் தலைநகர் கொழும்பில் நேற்று நடந்த இரண்டு குண்டுத் தாக்குதல்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கி மூண் அவர்கள் கண்டித்துள்ளார்.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலரின் அலுவலகம், கிளிநொச்சியில் நேற்று முன் தினம் உலக உணவுத்திட்டத்தின் அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல் குறித்தும் ஐ.நா தலைமைச் செயலர் கவலை தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது.
அதேவேளை கொழும்புத் தாக்குதல்களைக் கண்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை மோதல்களில், வன்னியிலும், கொழும்பிலும் ஏனைய இடங்களிலும், அகப்பட்டுள்ள பொதுமக்களின் நிலைமை குறித்து தனது கவலையை வெளியிட்டுள்ளது.
கொழும்புத் தாக்குதல்கள் குறித்து விடுதலைப்புலிகள் மீது இலங்கை ஜனாதிபதி குற்றச்சாட்டு
 |
 |
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ |
இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடந்த குண்டுத் தாக்குதல்களை இன்றைய தினம் இரானிலிருந்து நாடு திரும்பிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.
இந்தத் தாக்குதல்களுக்கு தமீழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரே காரணம் எனக்குற்றஞ்சாட்டியுள்ள ஜனாதிபதி, பயங்கரவாதத்தின் மாற்றமடையாத இந்த வழிகள் குறித்து சர்வதேச சமூகம் அதிக கவனம் கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்ததாக, ஜனாதிபதி செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறது.
அத்துடன் இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கும்படி அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு அவர் பணித்திருக்கிறார்.
இதேவேளை, நேற்றைய குண்டுவெடிப்பின் பின்னர் கொழும்பின் பாதுகாப்பினை மேலும் அதிகரித்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள், புதிய சில நடைமுறைகளையும் அறிமுகப்படுத்தியிருப்பதாக அறிய முடிகிறது.
இதன் ஒரு அங்கமாக கொழும்பிலிருந்து வவுனியாவிற்கான ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரைக்கும் மதவாச்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
மட்டக்களப்பில் சிங்கள வியாபாரிகள் கொலை
 |
 |
அடையாளம் தெரியாத ஆட்களால் கொலை |
மட்டக்களப்பு மாவட்டம் ஐயன்கேனியில் இன்று முற்பகல் மரத்தளபாட சிங்கள வியாபாரிகள் இருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.
பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் வழமை போல் அந்த பகுதிக்கு வியாபாரத்தின் நிமித்தம் சென்றிருந்த சமயம் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸார் கூறுகின்றனர்.
மேலும் அம்பாறை மாவட்டம் பக்மிட்டியாவ என்னுமிடத்தில் இன்று முற்பகல் விசேட அதிரடிப் படையினர் பயணம் செய்த கவச வாகனமொன்று விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கானதில் 4 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Posted in Anuradapura, Anuradhapura, Anuradhapuram, Anurathapura, Arms, Attacks, Batticaloa, Blasts, Bombs, Cleansing, Colombo, Communications, Concerns, dead, Douglas, Eelam, Eezham, ethnic, EU, Extremism, Extremists, Freedom, LTTE, Mobility, Rails, Railways, reactions, Security, Sri lanka, Srilanka, Suicide, Terrorism, Terrorists, Trains, Transport, Vavuniya, Vidudhalai, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Violence, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, wavuniya, Weapons | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 23, 2007
தொடரும் மோதல்களில் மேலும் பலர் பலி
 |
 |
மோதல்கள் தொடருகின்றன |
இலங்கையின் வடக்கே வவுனியா மன்னார் மாவட்டங்களின் எல்லைப்புறமாகிய முள்ளிக்குளம் இராணுவ முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் தொடர்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பெய்யும் மழைக்கு மத்தியிலும் இந்த இரு தரப்பினரும் சண்டையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில் நேற்றும் இன்றும் வன்னிப்பிரதேசம் மற்றும் முகமாலை இராணுவ முன்னரங்க பகுதிகளில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களில் குறைந்தது 32 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 6 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்திருக்கின்றது.
யாழ் முகமாலை, மன்னார் கட்டுக்கரைக்குளத்தின் வடபகுதி, அடம்பன் தெற்கு ஆகிய முன்னரங்க பகுதிகளில் இன்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களின்போது 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது, வவுனியா கல்மடு, நாவற்குளம், மன்னார் குறிசுட்டகுளம், விளாத்திக்குளம் போன்ற இராணுவ முன்னரங்க பகுதிகளில் நேற்று மோதல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தகவல் வெளியிட்டிருக்கின்றது.
இதனிடையில் கல்மடு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சண்டையின்போது கொல்லப்பட்ட 4 விடுதலைப் புலிகளின் சடலங்கள் இன்று வவுனியா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இலங்கையின் வடபகுதியிலிருந்து போர் சூழல் காரணமாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வெளியேறியுள்ளனர் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் ஆசியப் பிரிவுக்காக பேசவல்ல அதிகாரியான கார்லா ஹாடட் அவர்களின் பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
Posted in Arms, dead, Displaced, Eelam, Eezham, LTTE, Mugamalai, Muhamalai, Mukamaalai, Mukamalai, Soldiers, Sri lanka, Srilanka, Vanni, Vavuniya, Wanni, War, wavuniya, Weapons | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2007
 |
 |
எரிக்கப்பட்ட பத்திரிகை அச்சகம் |
இலங்கையின் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் அச்சு இயந்திரங்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளால் தீக்கிரை
இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான இரத்மலானை பகுதியில் அமைந்திருக்கும் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்துக்குள் இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்த ஆயுதக் குழுவொன்று, அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான அச்சு இயந்திரங்களுக்கு தீவைத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துக்களையும், செய்திகளையும் வெளியிட்டுவரும் இந்த பத்திரிகை நிறுவனத்திலிருந்து சண்டே லீடர், மோர்னிங் லீடர் மற்றும் இரிதா பெரமுன என்ற சிங்களமொழி வார இதழ்கள் அச்சிட்டு வெளியிடப்படுகின்றன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பான பத்திரிகையாகப் பரவலாகக் கருத்தப்படும் இந்தப் பத்திரிகை நிறுவனத்துக்குள், இன்று அதிகாலை சுமார் இரண்டு மணியளவில் அத்துமீறி உள்நுழைந்த முகமூடியணிந்த ஆயுததாரிகள் சுமார் 15 பேர், அங்கு அச்சிடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியாளர்களை உட்கார்ந்து இருக்கும்படி உத்தரவிட்டுவிட்டு அங்கிருந்த அச்சிடும் இயந்திரங்களுக்கும், ஏற்கனவே இன்றைய வெளியீட்டிற்காக அச்சிடப்பட்டிருந்த மோர்னிங் லீடர் பத்திரிகை இதழ்களுக்கும் பெற்ரோல் ஊற்றி எரியூட்டியதாக அந்த நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.
அத்துடன் இந்த சம்பவம் மிகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த இரத்மலானை விமானப்படைத்தளத்துக்கு அண்மையில் அமைந்துள்ள அலுவலக வளவினுள்ளேயே இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இவை குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இதுவரை எவரையும் இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்ததாகத் தெரியவில்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புகூட இதேமாதிரியானதொரு சம்பவம் இந்த நிறுவனத்துக்கு, இதே இடத்தில் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈச்சலம்பற்றை வாசிகள் சிலர் மீண்டும் இடம்பெயர்வு
 |
 |
அகதிகள் முன்னர் மீளக்குடியமரச் சென்றபோது பிடிக்கப்பட்ட படம் |
இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்ட மோதல்களை அடுத்து மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்து, பின்னர் மீளக்குடியமர்த்தப்பட்ட ஈச்சலப்பற்றை வாசிகளில் சிலர் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார்கள்.
அண்மையில் தமது பகுதிகளில் ஏற்பட்ட சில சம்பவங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாகவே தாம் இவ்வாறு மீண்டும் இடம்பெயர நேர்ந்ததாக அவர்களில் சிலர் கூறியுள்ளனர்.
ஆயினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவர்களை மீண்டும் முகாம்களில் பதிவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவை குறித்து இடம்பெயர்ந்த சிலரது கருத்துக்கள் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் கருத்துக்கள் அடங்கலான செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு
 |
 |
வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் |
வவுனியா தவசிகுளத்தில் அண்மையில் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 இளைஞர்களின் மரணங்கள் தொடர்பான வழக்கு விசாரணையில், வவுனியா வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 34 இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் இன்று பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.
இந்த இளைஞர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற விசாரணையின்போது, அவர்களது உறவினர்கள், இராணுவத்தினர் மீது சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கொல்லப்பட்ட இளைஞர்களில் ஒருவர் சம்பவ தினத்தன்று மாலை 6 மணியளவில் வேப்பங்குளம் இராணுவ முகாமில் தன்னை இராணுவத்தினர் வைத்திருப்பதாகத் தொலைபேசியில் தெரிவித்ததாக இறந்தவரின் மனைவி நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
மேலும் 3 இளைஞர்களை இராணுவத்தினர் குறிப்பிட்ட இராணுவ முகாமினுள் சம்பவ தினத்தன்று கொண்டு சென்றதைக் கண்டவர்கள் மூலமாகத் தாங்கள் அறிந்ததாகவும் இறந்தவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பின்னணியில் வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 15 இராணுவத்தினரின் துப்பாக்கிகள் ஏற்கனவே நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
ஐந்து இளைஞர்களும் சடலங்களாகக் காணப்பட்ட இடத்திலிருந்து பொலிசாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ள 16 வெற்றுத் தோட்டாக்களும், இந்த துப்பாக்கிகளுடன் ஒத்து இணங்குகின்றனவா என்பதைக் கண்டறிந்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் வவுனியா மாவட்ட நீதிபதி, இன்றைய வழக்கு விசாரணையின்போது, அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.
இதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களாக இரத்துச் செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான தனியார் விமான சேவைகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த விமான சேவை இடைநிறுத்தப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராகிய திலீபனின் உருவச்சிலை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தவேளை, திங்கட்கிழமை இரவு அடையாளம் தெரியாதவர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை யாழ் மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம், யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் என்பன கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கின்றன.
Posted in Airforce, Arms, Asia Tribune, Attack, Blasts, Bombs, Burnt, Colombo, dead, Death, Deface, defence, Defense, Democracy, Dhileepan, Displaced, Editor, Eelam, Eezham, equipment, Extremism, Extremists, Fire, Freedom, Govt, HSZ, IDP, Independence, Irudina, Jaffna, Journal, journalism, journalist, Karuna, Lasantha, Law, Leader, LTTE, Mag, magazine, Magazines, Magz, Media, Military, Morning Leader, News, Newspaper, Office, Opposition, Oppression, Order, owner, paramilitary, Passport, Pillaiaan, Pillaian, Pillaiyaan, Pillaiyan, Police, Press, Propaganda, Rajapaksa, Rajapakse, Rajasingam, Rajasingham, Rajasinkam, Ransack, Rathmalana, Ratmalana, Rebel, Refugees, Reporter, Samarasinghe, Security, Sinhala, Sonali, Statue, Sunday, Sunday Leader, Suppression, Terrorism, terrorist, Terrorists, Thamilselvan, Thileepan, Triconamalee, triconmalee, Vavuniya, wavuniya, Weapons, Wikramatunga | Leave a Comment »