Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘JVP’ Category

42 SLA killed in Mannaar clashes – LTTE; Mahindra & Mahindra to develop US$ 100m IT park

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2008

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- ஜேவிபி இடையே கருத்து முரண்பாடு

இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு நடவடிக்கைகள் தொடர்பிலான ஜேவிபி கட்சியின் நிலைப்பாட்டைக் கண்டித்துள்ள இந்தியாவின் முக்கிய இடதுசாரிக் கட்சியான இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதனைக் காரணம் காட்டி, தமது கட்சியின் தேசிய மாநாட்டுக்கு ஜேவியின் பிரதிநிதிகளை, சகோதர பிரதிநிதிகளாக அழைப்பதை தவிர்த்துள்ளது.

ஒரு இடதுசாரிக் கட்சியாக தன்னை விபரிக்கும் ஜேவிபி, இலங்கை தமிழர் விவகாரத்தில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றை எதிர்ப்பதுடன், ஒற்றை ஆட்சியின் கீழ்தான் இந்த விவகாரம் கையாளப்பட வேண்டும் என்று கூறிவருகிறது.

இதனைக் கண்டித்துள்ள இந்திய மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான டபிள்யூ. ஆர். வரதராஜன் அவர்கள், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தமிழர்களுக்கு கூடிய அதிகாரங்களுடனான சுயாட்சி முறையை வழங்குவதை எதிர்க்கும் ஜேவிபின் நிலைப்பாட்டுடன் தாம் முரண்படுவதாக கூறியுள்ளார்.

அதேவேளை, இந்த விவகாரத்தில், ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டையும் ஜேவிபி எதிர்த்தது என்று கூறுகின்ற வரதராஜன் அவர்கள், இது தமது கட்சியின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணானது என்றும் கூறுகிறார்.

அகில உலக மட்டத்தில் சர்வதேச ஏகாதிபத்தியத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஜேவிபியின் நிலைப்பாட்டுடன் தாம் உடன்படுகின்ற போதிலும், இந்தியாவையும், அதனை அண்டிய பிராந்தியத்தையும் பொறுத்த வரை தற்போதைய நிலையில், இலங்கை தமிழர் பிரச்சினையே முன்னிலையில் இருப்பதாகவும், ஆகவே அந்த விவகாரத்தில் தமக்கு ஜேவிபியுடனான முரண்பாட்டை அடுத்தே, தாம் அந்தக் கட்சியின் பிரதிநிதிகளை, தமது கட்சி மாநாட்டுக்கு இந்தத் தடவை அழைக்கவில்லை என்றும் வரதராஜன் தெரிவித்தார்.

இலங்கை தமிழர் விவகாரத்தில் ஜேவிபியின் நிலைப்பாடு, ஏகதிபத்தியத்துக்கு ஆதரவாக அமைந்துவிடும் என்று எச்சரித்துள்ள வரதராஜன் அவர்கள், தமிழர் பிரச்சினையில், பேச்சுவார்த்தை மூலமான, வடக்குக் கிழக்குக்கு கூடிய அதிகாரங்களுடனான தீர்வு ஒன்றே அனைவருக்கும் பலன் தரும் என்றும் கூறினார்.

 


மன்னார் தள்ளாடியில் முகாம் மீதான தாக்குதலில் 6 இராணுவத்தினர் பலி

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள இலங்கை அரசாங்க இராணுவத்தின் முக்கிய முகாம் ஒன்றின் மீது விடுதலைப்புலிகள் தாக்கியதில் 6 சிப்பாய்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 10 பேர் காயமடைந்ததாகவும் இலங்ககை இராணுவம் கூறுகிறது.

இந்தத் தாக்குதலில் தேவாலயம் ஒன்றில் சிரமதானத்தில் ஈடுபட்டிருந்த படையினரே கொல்லப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் பீரங்கித் தாக்குதல் காரணமாக மன்னார் நகரில் பெரும் பதற்றநிலை காணப்பட்டதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.

கடுமையான பீரங்கி மோதல்களை அடுத்து மன்னாருக்கான போக்குவரத்து சில மணிநேரம் துண்டிக்கப்பட்டதாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசிக்குத் தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை வட இலங்கையில் நடந்த மோதல்களில் 40 விடுதலைப்புலிகளும், 10 அரசாங்க சிப்பாய்களும் கொல்லப்பட்டதாகவும் இராணுவம் கூறுகிறது.

விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து இது தொடர்பாக கருத்து எதுவும் வரவில்லை.

தமது தரப்பில் கடுமையான இழப்புகளை இலங்கை இராணுவம் ஒப்புக்கொள்வது குறைவு என்று கொழும்புக்கான எமது செய்தியாளர் கூறுகிறார்.


இலங்கையில் நவீன தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை உருவாக்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா

ஒப்பந்தம் கைச்சாத்தான போது
ஒப்பந்தம் கைச்சாத்தான போது

இலங்கையில் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியில் நவீன தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை உருவாக்கும் நோக்கில் இந்தியாவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் இன்று இலங்கை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருக்கின்றது.

இலங்கைக்கு மூன்று நாட்கள் விஜமொன்றினை மேற்கொண்டிருக்கும் இந்திய இணை வர்த்தக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் முன்னிலையில் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் சரத் அமுனுகமவும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் சார்பில் அதன் பிரதித் தலைவர் ஆருண் நந்தாவும் இன்று காலை இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைக்கப்படவுள்ள இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா குறித்து கருத்து வெளியிட்ட மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் பிரதித் தலைவர் ஆருண் நந்தா, இலங்கை முதலீட்டு சபை இதற்காக சுமார் 53 ஏக்கர் நிலத்தை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் ஒதுக்கியிருப்பதாகவும், இதன் நோக்கமெல்லாம் சர்வதேச தகவல் தொழில்நுட்ப கம்பனிகளை இந்தப் பிரமாண்டமான பூங்காவில் முதலீடு செய்வதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதாகும் என்று தெரிவித்தார்.

Posted in Army, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, dead, Eelam, Eezham, investments, IT, JVP, Left, Lifespace, LTTE, M&M, Mahindra, Mannaar, Mannar, SEZ, Sri lanka, Srilanka | Leave a Comment »

CWC files Fundamental Rights Violation petition against mass arrest, detention of Tamils

Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2007

தமிழர் கைதை எதிர்த்து இ.தொ.கா அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல்

இலங்கையில் தமிழர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, இலங்கை அரசாங்க அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மலையகக் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு ஒன்றை இலங்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

அதேவேளை இன்று நாடாளுமன்றத்தில் நடந்த அவசரகால நிலையை நீடிப்பதற்கான வாக்கெடுப்பிலும் அந்தக் கட்சி கலந்துகொள்ளவில்லை.

இப்படியான கைதுகள் இனிமேல் நடக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்தவும், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுக்கு நட்டஈடு பெறவுமே இந்த அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஸ்ட துணைத் தலைவரான ஆர். யோகராஜன் தமிழோசைக்குத் தெரிவித்தார்.

தென்னிலங்கை பூசா முகாமில் மாத்திரம் சுமார் 450 தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் பல இடங்களில் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறும் யோகராஜன், இந்த நிலைமை இனித் தொடரக்கூடாது என்றும் கூறினார்.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இது பற்றிய யோகராஜன் அவர்களின் செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கெப்பித்திக்கொல்லாவ தாக்குதல்கள் குறித்து விடுதலைப்புலிகள் மீது இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டு

தாக்குதலில் காயமடைந்த ஒருவர்
தாக்குதலில் காயமடைந்த ஒருவர்

இலங்கையின் அநுராதபுர மாவட்டத்திலுள்ள கெப்பித்திக்கொல்லாவ பகுதியிலுள்ள அபிமானபுர என்னும் இடத்தில், பொதுமக்கள் பேருந்து மீது நேற்று நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கை அரசாங்கம் இதனை தமிழீழ விடுதலைப் புலிகளே மேற்கொண்டதாக இன்று குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தத் தாக்குதலின்போது இதில் பயணம் செய்துகொண்டிருந்த மூன்று பெண்கள் உட்பட 15 பொதுமக்கள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும், மேலும் காயமடைந்த 23 பேரில் ஒருவர் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டபின் சிகிச்சைகள் பயனளிக்காமல் இறந்ததாகவும் பாதுகாப்புப் படையினர் இன்று அறிவித்திருக்கிறார்கள்.

தாக்குதலில் காயமடைந்த ஒருவர்
தாக்குதலில் காயமடைந்த ஒருவர்

இந்த நிலையில் இன்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா, விடுதலைப்புலிகள் மிகுந்த விரக்தியடைந்த நிலையிலேயே, பொதுமக்கள் மீதான இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.

இலங்கையில் பயங்கரவாதத்தை பூண்டோடு அழிப்பதற்கு அரசங்கம் சித்தமாக இருப்பதாகவும் கூறிய ஊடகத்துறை அமைச்சர், இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள், பொதுமக்களினதும், படையினரினதும் மனோதைரியத்தினை எவ்விதத்திலும் சிதைக்காத வகையில் பொறுப்புடன் செயற்படவேண்மென்றும் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை, நேற்றைய கிளேமோர் குண்டுத் தாக்குதலில் காயமடைந்த 23 பேரில் 18 சிவிலியன்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருப்பதாகவும், இவர்களில் இருவரின் நிலைமை இன்னமும் மோசமாகவே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.


இந்திய முகாம்களில் உள்ள இலங்கைப் பிரஜா உரிமையற்றவர்களுக்கு அதனை வழங்குவதற்கான தெரிவுக்குழு

நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன்
நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன்

இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களில் பிரஜா உரிமை அற்ற சுமார் இருபத்தியெட்டாயிரம் பேருக்கு பிரஜா உரிமை வழங்குவது தொடர்பாக ஆராயுமுகமாக இலங்கை நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தெரிவுக்குழுவுக்குத் தலைவராக மலையகத்தைச் சேர்ந்தவரும், ஜேவிபி அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தெரிவுக்குழுவின் முதலாவது சந்திப்பு இம்மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

1970 களுக்குப் பிறகு இலங்கையில் நடந்த வன்செயல்களில் இடம்பெயர்ந்த சுமார் எண்பதினாயிரம் பேர் தற்போது இந்திய அகதி முகாம்களில் தங்கியுள்ளனர் என்றும் அவர்களில் சுமார் இருபத்தெட்டாயிரத்து ஐந்நூறு பேருக்கு எந்த நாட்டின் பிரஜா உரிமையும் கிடையாது என்று கூறும் சந்திரசேகரன், அவர்களுக்கு பிரஜா உரிமையை வழங்குவது குறித்தே இந்த தெரிவுக்குழு ஆராயும் என்றும் குறிப்பிட்டார்.

 


Posted in Allegations, Arrests, Ceylon Workers’ Congress, Citizens, Colombo, CWC, Displaced, Eelam, Eezham, Emergency, Fundamental, IDP, JVP, Law, LTTE, Order, Petition, Police, Refugees, rights, Sri lanka, Srilanka, Tamils, Violation | Leave a Comment »

Sri Lanka releases Tamil suspects detained after Colombo bombings

Posted by Snapjudge மேல் திசெம்பர் 4, 2007

இலங்கை கைதுகள் குறித்து அரசாங்கம் விளக்கம்

கொழும்பில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களில் பெரும்பாலானோரை விடுவித்து விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

தமிழர்களை இலக்கு வைத்து இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுவதையும் அரசு மறுத்திருக்கிறது.

இலங்கையில் தலைநகர் கொழும்பிலும், புறநகர்ப் பகுதியிலும் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து கொழும்பிலும், அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் கடுமையான சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினரும் பொலிஸாரும் பலநூற்றுக்கணக்கான தமிழர்களை கைது செய்திருந்தனர்.

இவர்களில் பலர் அந்தந்தப்பகுதி பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அதேவேளை, மேலும் பலர் காலி மாவட்டத்திலுள்ள பூசா தடுப்புச் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.

அமைச்சர் பெர்ணாண்டோ புள்ளே
அமைச்சர் பெர்ணாண்டோ புள்ளே

தமிழர்கள் வகை தொகையின்றி கைதுசெய்யப்பட்டு ஆங்காங்கே அடிப்படை உணவு, உடை மற்றும் மலசலகூட வசதிகளின்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாக கூறும் தமிழ்க் கட்சிகள் பலவும் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அது குறித்து குரல் எழுப்பியிருந்தன.

இதனைவிட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்ணணி எனப்படும் ஜே.வி.பியும் அரசின் இந்த நடவடிக்கை மனிதாபிமானமற்ற செயல் என்று தெரிவித்திருந்தன.

அத்துடன் அவர்களை விடுவிப்பதற்கு உதவக்கோரி ஜனாதிபதியிடமும், சர்வதேச சமூகத்திடமும் முறையீடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த விடயம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஊடகங்களிற்கு தெரியப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் பிரதான கொறடாவும், அமைச்சருமான ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே இன்றுமாலை கொழும்பிலுள்ள பாதுகாப்பு விவகாரங்களிற்கான ஊடக மத்திய நிலையத்தில் விசேட பத்திரிகையாளர் மாநாடொன்றினை நடாத்தினார்.

அங்கு எதிர்க்கட்சிகளும், தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை மறுத்த அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே நாட்டினதும், சகல சமூகங்களினதும் பாதுகாப்பினை உறுதிசெய்யும் ஒரே நோக்குடனேயே இந்த நடவடிக்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டது என்றும், பொலிஸாரினாலும் பாதுகாப்புப் படையினராலும் வார இறுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின்போது சிங்கள இனத்தவர்கள் சிலரும், முஸ்லிம் இனத்தவர் ஒருசிலரும்கூட விசாரணைகளிற்காக கைது செய்யப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் 202 பேர் தவிர ஏனைய அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தமிழோசைக்குத் தெரிவித்தார்.

தமிழர்கள் இலக்குவைத்து பாரியளவில் கைது செய்யப்பட்டார்கள் என்பதை மறுத்தலித்துப் பேசிய அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே தேவையேற்படும் போதெல்லாம் அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.


வடபகுதிக்கான போக்குவரத்து நிலைமைகளில் முன்னேற்றம் இல்லை

பெரும் சிரமங்களுடனான வடபகுதிப் பயணங்கள்
பெரும் சிரமங்களுடனான வடபகுதிப் பயணங்கள்

இலங்கையின் தலைநகரப்பிரதேசத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களையடுத்து, மட்டுப்படுத்தப்பட்ட வடபகுதிக்கான போக்குவரத்து நடைமுறைகளில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவுக்கும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பகுதிக்கும் இடையே ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான தபால் விநியோக சேவை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வியாழக்கிழமை முதல் பாதிக்கப்பட்டிருந்த இந்த சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக வன்னிப்பிராந்திய இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுக்கள் நடத்தி அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.

எனினும் நோயாளர்களின் போக்குவரத்து மற்றும் வன்னிப்பிரதேசத்திலிருந்து பொதுமக்கள் வவுனியா பகுதிக்குள் வருவது போன்ற விடயங்களில் நிலவும் கட்டுப்பாடுகள் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான போக்குவரத்து நிலைமைகள், மற்றும், வடபகுதிக்கான ரயில் சேவை அநுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதனால் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகச் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை என்பன குறித்து வவுனியா மேலதிக அரச அதிபர் திருமதி சாள்ஸ் அவர்களின் செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


Posted in Anuradapura, Anuradhapura, Anuradhapuram, Anurathapura, Arrest, Bombs, Bus, Colombo, Eelam, Eezham, Govt, Islam, Jail, JVP, LTTE, Muslim, Prison, Roads, Sinhala, Sri lanka, Srilanka, Suspects, Tamil, Tamils, Trains, Transport, Transportation, Vanni, Vavuniya, Wanni, wavuniya | Leave a Comment »

Katcha Theevu – Issue & History: Indian Naval Strategy

Posted by Snapjudge மேல் மே 10, 2007

கச்சத்தீவைக் கை கழுவியதால்…?

தி. இராசகோபாலன்

காஷ்மீர், பாரதத் தாயின் முகமென்றால், கச்சத்தீவு கால்விரல் மெட்டி எனலாம்.

கச்சத்தீவின் நீளம் ஒரு கல்; அகலம் அரை கல். யாழ்ப்பாணத்திலிருந்து 70 கி.மீ., ராமேசுவரத்திலிருந்து 18 கி.மீ. கச்சத்தீவில் “டார்குயின்’ எனும் பச்சை ஆமைகள் அதிகம். கச்சம் என்றால் ஆமை என்பர். எனவே பச்சைத் தீவு நாளடைவில் கச்சத்தீவு ஆயிற்று. 1882ஆம் ஆண்டிலிருந்து எட்டுத் தீவுகளும் 69 கடற்கரை ஊர்களும் ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தமாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் கச்சத்தீவும் ஒன்று.

கிழக்கிந்திய கம்பெனியினர் ராமநாதபுரம் சேதுபதியிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில், குத்தகை நிலமாக கச்சத்தீவைப் பெற்றனர். இலங்கையின் அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரிஸ், “விக்டோரியா மகாராணியின் அரசறிக்கைப்படி கச்சத்தீவு இலங்கையைச் சேர்ந்ததன்று; அது ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தம்” என உறுதிப்படுத்தினார். என்றாலும், இலங்கை அரசு 1955, 56-ல் தன்னுடைய கடற்படைப் பயிற்சிக்குத் தகுந்த இடமாகக் கச்சத்தீவைத் தேர்ந்தெடுத்து, தன்னுடைய பணியையும் அங்கு தொடங்கியது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் அத்துமீறலை நாடாளுமன்றத்தில் எழுப்பியபோது, இந்த விவகாரம் பற்றிப் போதிய தகவல்கள் இல்லை… இந்தச் சிறு தீவுக்காக இரு நாடுகளும் போராடும் என்ற கேள்விக்கு இடமில்லை.

இந்தப் பிரச்சினையில் இந்தியாவின் தன்மானம் கலக்கவில்லை; அதுவும் நம் பக்கத்து நாடான இலங்கையுடன்” எனப் பிரதமராக இருந்த நேரு பதிலுரைத்தார். காஷ்மீர் என்ற முகத்தில் ஒரு சிறு கவலை ரேகை படர்ந்தாலும், அலறித் துடிக்கின்ற மைய அரசு, கச்சத்தீவு என்ற கால்விரல் மெட்டியை இலங்கை அரசு கழற்றியபொழுது கண்டுகொள்ளவே இல்லை. இது முதற் கோணல்.

பின்னர், ஜே.வி.பி. என்ற சிங்கள தீவிரவாத இயக்கம், இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடர்ந்து இலங்கையில் பரப்பி வந்தது. அதைக் குறைப்பதற்காக கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்கக் கொள்கையளவில் இந்திய அரசு முடிவு செய்தது.

பின்னர் 1974ஆம் ஆண்டு இந்தியா அணுகுண்டை வெடித்தது. அதனால், சர்வதேச அரங்கில் இந்தியாவின் மீது கண்டனக் கணைகள் வீசப்பட்டன.

ஐ.நா. அவையில் இருந்த 15 உறுப்பினர்களைக் கொண்ட தாற்காலிகக் குழு மூலமாக, இந்தியாவைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்ற பாகிஸ்தான் முயன்றது. அப்போது அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்த இலங்கையின் ஆதரவோடு, இந்தியா அந்த முயற்சியை முறியடித்தது. இச் சூழ்நிலையில் இலங்கை அரசு கேட்டவுடன், நன்றிக்கடனாக இந்தியா கச்சத்தீவைக் கை கழுவ இசைந்தது.

கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க முன் வந்த இந்திய அரசு, எட்டு நிபந்தனைகளையும் விதித்தது. அதில் ஐந்தாவது விதி: “”இந்திய மீனவர்களும் வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சத்தீவுக்கு இதுநாள் வரை வந்துபோனதுபோல் வந்து போவதற்கும், கச்சத்தீவைப் பயன்படுத்தவும் முழு உரிமை உடையவர்கள். இதற்காகச் சிங்கள அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதிகளோ இவர்கள் பெற வேண்டியதில்லை.”

ஆனால், இந்த ஒப்பந்தம் நிறைவேறிய நாளிலிருந்து ராமேசுவரம் மீனவர்களுக்கும் இலங்கைக் கடற்படை வீரர்களுக்கும் தகராறு நடக்காத நாளே இல்லை. கச்சத்தீவை வழங்கியதால், ராமேசுவரத்து மீனவர்கள் வடிக்கும் கண்ணீரும் கடலைப்போல.

மைய அரசு, மேற்கு வங்கத்திற்குச் சொந்தமான “டின்பிகா’ எனும் தீவை, வங்கதேசத்திற்குக் குத்தகைக்குத் தரும்போது எடுத்துக்கொண்ட முன்னெச்சரிக்கையையும் அக்கறையையும் ஏன் கச்சத்தீவில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான், நமது வருத்தம். டின்பிகாவை வங்க தேசத்திற்குக் குத்தகைக்குத் தந்தாலும், அதன் இறையாண்மை அல்லது ஆட்சியுரிமை இந்தியாவிடம்தான் இருக்கும். மேலும், எந்தக் காரணத்தைக் கொண்டும், அத்தீவை ராணுவத் தளமாகப் பயன்படுத்தக் கூடாது. “டின்பிகா’ ஒப்பந்தத்தில் கடைப்பிடித்த அணுகுமுறையைக் கச்சத்தீவில் கையாளாதது ஏன்?

கச்சத்தீவினால் ஏற்படக்கூடிய நன்மைகளைச் சிந்தித்துப் பார்த்தால், நாம் செய்த வரலாற்றுப் பிழை தெரியும். கச்சத்தீவின் நடுவிலுள்ள கல்லுமலை அருகேயுள்ள ஆழ்கிணற்றின் குடிநீரால், ராமேசுவரத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கலாம். சித்தமருத்துவத்திற்குத் தேவையான “உமிரி’ போன்ற மூலிகைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. கச்சத்தீவுக் கடலில் கிடைக்கும் இறால் மீன்கள் உலகத்தரம் வாய்ந்தவை.

கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் நூறாண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் வளம் இருப்பதாக சோவியத் கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர். கச்சத்தீவு – குமரிமுனைக்கு இடைப்பட்ட கடலுக்கடியில் யுரேனியம், பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த கனிமக்கூறுகள் கிடைப்பதாக நிலத்தடி ஆய்வாளர்கள் அறிக்கை தந்துள்ளனர். தாற்காலிகமாக இவற்றையெல்லாம் இழந்து நிற்கும் நாம், நிரந்தரமாகவே இழக்க வேண்டுமா? நீர்மூழ்கிக் கப்பல்களையும் போர்ப்படகுகளையும் செப்பனிடும் தளம் அமைப்பதற்கும், நீர்மூழ்கிக் கப்பல் படையினருக்குப் பயிற்சிக்களம் அமைப்பதற்கும், தகுதி வாய்ந்த இடமாகக் கச்சத்தீவு விளங்குகின்றது.

அணுப்படைத்தளம் அமைப்பதற்கேற்ற சூழலைக் கொண்டதாகவும், போர் விமானங்கள் தாற்காலிகமாக இறங்குவதற்குரிய திட்டாகவும் கச்சத்தீவு இருக்கிறது. ஏவுகணைத் தளமாகவும் இத்தீவைப் பயன்படுத்தலாம்.

கடலின் எச்சரிப்புக் கருவிகளாகப் பயன்படும் மிதவைகளுக்கு இங்கொரு மையம் அமைக்கலாம். ராணுவத்திற்குத் தேவையான தகவல்-தொடர்பு மையங்களையும், “ராடார்’ போன்றவற்றையும் நிர்மாணிக்கலாம். பாக் சந்தி, மன்னார் வளைகுடா ஆகியவற்றில் கப்பற்படை அரண் அமையும்போது கச்சத்தீவும் அதன் மையங்களில் ஒன்றாக அமையலாம்.

பிலிப்பின்ஸ் நாட்டின் எல்லையிலுள்ள “பால்மஸ் மியான்ஜஸ்’ எனும் தீவு, நெதர்லாந்து மக்களுக்குச் சொந்தமானது. ஆனால், நெதர்லாந்து மக்கள் நீண்டகாலம் புழங்காமல் இருந்த காரணத்தால், அந்தத் தீவை ஸ்பெயின் கைப்பற்றியது. பின்னர், அதனைப் பிரெஞ்சுக்காரருக்குத் தாரை வார்த்தது. ஆனால், நெதர்லாந்து மக்கள் உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இழந்த உரிமையை மீண்டும் பெற்றனர். அதுபோல, கச்சத்தீவில் உரிமையை ஏன் இந்தியா மீண்டும் பெறக் கூடாது?

ராமேசுவரத்தைச் சுற்றி வாழ்கின்ற மீனவர்களுக்கு அது மண் மட்டுமன்று; கண்ணும்கூட. கச்சத்தீவை நாம் கழற்றிவிட்டது முதற்கோணல்; முற்றிலும் கோணல் ஆகாமல் காக்க வேண்டியது, மானுடம் பேசுகின்றவர்களுடைய மகத்தான கடமை.

(கட்டுரையாளர்: தாகூர் கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர்).

————————————————————————————————————
கடலுக்குள் செயற்கைப் பவளப் பாறை

பா. ஜெகதீசன்

சென்னை, ஆக. 8: தமிழகக் கடல் பகுதிகளில் மீன் வளத்தைப் பெருக்குவதற்காக “செயற்கைப் பவளப் பாறைகள்’ உருவாக்கப்பட்டு, கடலுக்கு அடியில் நிறுவப்படுகின்றன.

சென்னைக்கு அருகே உள்ள பழவேற்காடு கடல் பகுதியில் மீனவர்களின் பங்கேற்புடன் முதல்முறையாக இந்த செயற்கைப் பவளப் பாறைகளை நிறுவும் பணி அடுத்த சில நாள்களில் தொடங்குகிறது.

பருவமழை தவறிப் பெய்வது, 2004-ல் சுனாமி தாக்கியது, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகள் கலப்பது உள்ளிட்ட காரணங்களால், தமிழகக் கடல் பகுதிகளில் மீன் வளம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

மிகச் சிறிய மீன்களைக் கூட பிடித்து விடும் திறன் படைத்த வலைகளை மீனவர்களில் ஒரு தரப்பினர் பயன்படுத்துகின்றனர். வளர்ந்து கொண்டிருக்கக் கூடிய நிலையில் உள்ள சிறிய மீன்கள், மீன் குஞ்சுகள், சிறிய இறால்கள் போன்றவை அத்தகைய வலைகளில் சிக்கி விடுகின்றன. இதனால் படிப்படியாக மீன் வளம் அந்தக் குறிப்பிட்ட பகுதிகளில் சுரண்டப்பட்டு, அடியோடு குன்றி விடுகிறது. இந்த நிலையை மாற்ற கடலுக்கு அடியில் செயற்கைப் பவளப் பாறைகளை உருவாக்க உத்தேசிக்கப்பட்டது.

வழி காட்டிய முல்லம்: பவளப் பாறைகள் அதிகம் இல்லாத பகுதிகளில் பழங்காலத்தில் மீன்களைத் தாற்காலிகமாகக் கவர்ந்து இழுக்க “முல்லம்’ என்கிற அமைப்பை மீனவர்கள் பயன்படுத்தினர்.

பனை ஓலையால் சுற்றப்பட்ட பனை வெல்லம், புன்னை மரம், வாகை மரத் துண்டுகள், தென்னங்கீற்றுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்த “முல்லம்’ அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு, பழைய முல்லம் அமைப்புகளைப் பயன்படுத்த முடியாது. அதற்குப் பிறகு, புதிய முல்லம் அமைப்புகளைத் தயாரித்து பயன்படுத்த வேண்டும்.

பழங்கால முல்லம் அமைப்பை முன் மாதிரியாகக் கொண்டு, தற்போது செயற்கைப் பவளப் பாறைகள் உருவாக்கப்படுகின்றன. கான்கிரீட்டால் ஆன இந்த செயற்கைப் பவளப் பாறைகள் மூன்று வெவ்வேறு வகையான தோற்றங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்படுகின்றன.

தலா ஒரு டன் எடை: மூன்று அல்லது நான்கு பெரிய வளையங்கள் ஒன்றோடொன்று இணைந்ததைப் போன்ற வடிவத்திலும், முக்கோண வடிவிலான கூண்டில் 6 பெரிய குழாய்கள் பொருத்தப்பட்ட தோற்றத்திலும், ஏராளமான துளைகள் போடப்பட்ட பெரிய செவ்வகக் கூண்டு வடிவமைப்பிலுமாக 3 வகைகளில் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் உருவாக்கப்படுகின்றன.

இப்படி உருவாக்கப்படும் செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் தலா ஒரு டன் எடை கொண்டவையாக இருக்கும். அந்த அளவுக்கு எடை இருந்தால் தான் கடல் நீரோட்டச் சக்தியைத் தாங்கும் திறன் இருக்கும். இந்த அமைப்புகள் சுற்றுச் சூழலைப் பாதிக்காதவையாகவும் இருக்கும்.

இவற்றைக் கடற்கரையில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் கடலுக்கு அடியில் 20 அடி ஆழத்தில் ஆங்காங்கே போட்டு விடுவார்கள். முதலில் கடல் வாழ் நுண்ணுயிரிகளும், பாசிகளும் இந்த அமைப்புகளின் மீது படர்ந்து வளரும்.

இந்தப் பாசியை உண்ண இந்த அமைப்புகளை மீன்கள் நாடி வரும். இந்த மீன்கள் இந்த செயற்கைப் பவளப் பாறை அமைப்புகளில் கூட்டம், கூட்டமாகத் தங்கி, இளைப்பாறி, முட்டையிட்டு, இனப் பெருக்கம் செய்யும்.

மீன்களின் உறைவிடங்கள்: சிறிதுகாலத்தில் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் மீன் உற்பத்தி தளமாகவும், மீன்களின் உறைவிடங்களாகவும் மாறி விடும்.

இவை அமைந்துள்ள பகுதிகளில் மீன் வளம் அதிகரிக்கும். “முல்லம்’ போன்று தாற்காலிக அமைப்பாக இல்லாமல், பல ஆண்டுகளுக்கு இந்த செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் நீடித்து உழைக்கும்.

இந்த செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் இடம் பெற்றுள்ள கடல் பகுதிகளில் மற்ற இடங்களில் மீன் பிடிப்பதைப் போல, வலைகளை வீசக் கூடாது. மாறாக, தூண்டில் முறையைப் பயன்படுத்தி தான் மீன்களைப் பிடிக்க வேண்டும்.

தொண்டு நிறுவனத்தின் முயற்சி: சென்னைக்கு அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு கடல் பகுதியில் இத்தகைய செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் அடுத்த சில நாள்களில் நிறுவப்பட உள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை அம்பத்தூர் விஜயலட்சுமிபுரத்தில் உள்ள “பிளான்ட்’ தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. மீனவர்கள், நலிந்த பிரிவினர் ஆகியோருக்கு உதவும் பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் பெரிய படகுகளின் மூலம் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் கடலுக்குக் எடுத்துச் சென்று நிறுவப்படும். எந்தெந்தப் பகுதிகளில் இவற்றைக் கடலில் நிறுவ வேண்டும் என்பது தொடர்பாக மீனவர்கள், வல்லுநர்கள் உள்ளிட்டவர்களுடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

முதல் நாளில் பழவேற்காடு பகுதியில் 30 இடங்களில் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் கடலுக்குள் நிறுவப்படும். பிறகு, படிப்படியாக மேலும் 70 அல்லது 80 செயற்கைப் பவளப் பாறைகள் அதே பகுதியில் வெவ்வேறு இடங்களில் கடலுக்குள் நிறுவப்படும். இதற்கு கிடைக்கும் பலனைப் பொருத்து, பிற மாவட்டங்களின் கடல் பகுதிகளிலும் இத்தகைய அமைப்புகளை நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு plant@plantindia.org என்கிற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

Posted in Army, Artificial, Batticaloa, Border, Boundary, Ceylon, defence, Defense, DK, DMK, Eelam, Eezham, Environment, ethnic, Extremism, Extremists, Fish, Fisheries, Fisherman, fishermen, Fishery, Gandhi, global, History, Indira, Indra, Industry, Jade, Jaffna, Jayalalitha, JVP, KACCHA THEEVU, Katcha Theevu, Liberation Tamil Tigers of Eelam, maritime, MDMK, Nature, Naval, Navy, Nehru, Ocean, Palk Straits, Plant, plantindia, Premadasa, Rain, Ramanad, Ramanadhapuram, Ramanathapuram, Rameswaram, Ramnad, Ramnadhapuram, Refugees, Sea, Sirimavo, Sri lanka, Srilanka, Strategy, Terrorism, Terrorists, TN, Tsunami, UN, VaiGo, VaiKo, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Violence, Vituthalai Puli, Vituthalai Pulikal, Waters | 8 Comments »

President reshuffles cabinet, his party gains absolute majority in parliament

Posted by Snapjudge மேல் ஜனவரி 30, 2007

இலங்கையில் கட்சித் தாவல்

இலங்கையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 20 எம்.பி.க்கள் கட்சி மாறி ஆளும் இலங்கை சுதந்திரக் கட்சியில் சேர்ந்து பதவி பெற்றுள்ளதன் விளைவாக இலங்கை அரசியலில் புதிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒன்றுபட்ட தீர்வு காணும் முயற்சிக்குப் பின்னடைவை உண்டாக்கலாம் என்று கருதப்படுகிறது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரின் கட்சித் தாவல் எதிர்பார்க்காமல் நிகழ்ந்த ஒன்று அல்ல. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஆளும் இலங்கை சுதந்திரக் கட்சிக்கும் இடையே கடந்த அக்டோபரில் ஒத்துழைப்புக்கான உடன்பாடு ஏற்பட்டது. நாட்டை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளில் ஒன்றுபட்டு தீர்வு காண்பது என்பதே இந்த உடன்பாட்டின் முக்கிய அம்சம். அப்போதிலிருந்தே எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் அரசில் பங்கு பெற வேண்டும் என்று கோரி வந்தனர்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சி பிளவுபட்டது. ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சியில் பகிரங்கமாகவே எதிர்ப்பு கிளம்பியது. இவரை எதிர்த்தவர்கள் கட்சியில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என ஏற்கெனவே கோரி வந்தவர்கள். இவர்கள் ஆளும் கட்சிக்குத் தாவுவதைத் தடுக்க கடைசி நேரம்வரை முயற்சி நடந்தது. புத்த பிக்குகளும் தலையிட்டு சமரசம் செய்ய முயன்றனர்.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த 25 எம்.பி.க்கள் ஆளும் கட்சிக்குத் தாவ விரும்பியதாகவும் ஆனால் 20 பேருக்கு மேல் வர வேண்டாம் என்று இலங்கை அதிபர் ராஜபட்சய கூறியதாகவும் சொல்லப்படுகிறது. 20 பேருக்கு மேல் கட்சி மாறினால் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்க நேரிட்டிருக்கும். அப்போது தீவிரப் போக்குக் கொண்ட சிங்களர் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுணாவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துவிடும். இதை ராஜபட்சய விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுணாவுடன் கூட்டு சேர்ந்துதான் இலங்கை சுதந்திரக் கட்சியானது ஆட்சியைப் பிடித்தது. இனி அக் கட்சியை ராஜபட்சய நம்பி நிற்க வேண்டி இராது. அந்த நிலை வரக்கூடாது என்பதற்காக, எதிர்க்கட்சி உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று ஜனதா விமுக்தி பெரமுணா தீவிரமாக எதிர்த்தது.

இதற்கிடையே கட்சி தாவிய எம்.பி.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. இப்போது 20 எம்.பி.க்கள் கட்சி தாவியுள்ளதன் மூலம் ஆளும் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது என்பது உண்மையே. ஆனால் ராஜபட்சயவுக்கு தமது கட்சிக்குள் தலைவலி காத்து நிற்கிறது என்று கூறலாம். இதுவரை வெளியுறவு அமைச்சராக இருந்த சமரவீரா, அதிபர் ராஜபட்சயவுடன் கருத்து வேறுபாடு கொண்டவர். இப்போது சமரவீராவிடமிருந்து வெளியுறவுத் துறை பறிக்கப்பட்டுள்ளது.

இதுஒருபுறமிருக்க, இலங்கை அரசில் தற்போது அமைச்சர்களின் எண்ணிக்கை 104-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 52 பேர் காபினட் அந்தஸ்து கொண்டவர்கள். சின்னஞ்சிறிய நாடான இலங்கைக்கு இவ்வளவு அமைச்சர்கள் தேவையா என்று கேட்கலாம். ஆனால் ஆட்சி அதிகாரம் என்று வரும்போது இதெல்லாம் கவனிக்கப்படுவதில்லை.

கட்சித் தாவலைத் தொடர்ந்து கடந்த அக்டோபரில், ஆளும் கட்சியுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு முறிந்து விட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

ஆகவே, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் எதிர்க்கட்சியினர் அரசுடன் ஒத்துழைக்க முன்வராமல் போகலாம்.

Posted in Anura Priyadarshana Yapa, Communist, Dinamani, Eezham, Jantha Vimukthi Peramuna, Jathika Hela Urumaya, JHU, JVP, Karuna, LTTE, Mahinda Rajapakse, Marxist, Op-Ed, Opinion, Opposition, parliament, Party, Peace, Politics, President, SLFP, SLMC, Sri lanka, Sri Lanka Freedom Party, Sri Lanka Muslim Congress, Srilanka, Tamil Tigers, Tissa Attanayake, United National Party, UNP, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal | Leave a Comment »

17 Volunteers of Action Against Hunger Killed – Responsible Party

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2006

போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் அறிக்கை தவறு மற்றும் ஆதாரமற்றது – இலங்கை அரசு

இலங்கை திருகோணமலை மாவட்டம் மூதூரில் ஆகஸ்ட் 4 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டு ஆக்சன் எகெய்ன்ஸ்ட் ஹங்கர் என்ற தன்னார்வத்தொண்டர் அமைப்பின் 17 உள்ளூர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு அரச ஆயுதப்படையினரே காரணம் என யுத்த நிறுத்தக்கண்காணிப்புக் குழு நேற்றையதினம் வெளியிட்ட அறிக்கையினை அடுத்து, இலங்கையில் ஐ.நா அமைப்பு தனது பணிகளை இடைநிறுத்தக்கூடும் என அந்த அமைப்பு வெளியிட்ட கருத்துக் குறித்து உடனடியாகக் கருதுக்கள் எதனையும் வெளியிட மறுத்துள்ள இலங்கை அரசு, கண்காணிப்புக் குழுவினது அறிக்கையினை தவறு என்றும் ஆதாரமற்றது என்றும் சாடியிருக்கிறது.

இந்த விவகாரத்தினை வெளிநாட்டமைச்சும், சமாதான செயலகப் பணியகமும் கையாளவுள்ளது என்றும் ஐ.நா வின் இந்த நிலைப்பாடு குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றியும் கருத்துக்களைப் பற்றிக் அரசின் கருத்தினைத் தெரிவிப்பதற்கு இன்னமும் காலம் தேவைப்படுகிறது. என்று அரசின் சார்பில் பேசவல்ல அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, பிரேத பரிசோதனையை நடத்திய அனுராதபுரம் மாவட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் இந்த 17 பேரும் ஆகஸ்ட் 3ஆம் திகதி பிற்பகலோ அன்றி 4 ஆம் திகதி அதிகாலையோ தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இக்காலப்பகுதியின் போது மூதூர் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருந்தது என்றும், 5ஆம் திகதி தான் இராணுவம் அப்பகுதிகளை மீளவும் கைப்பற்றியது என்றும் கூறினார்.

Posted in 17, Action Against Hunger, Anuradhapuram, August 4, Ceylon, Eelam, Eezham, France, JVP, LTTE, Moodhur, Moodoor, Moothur, Party, Prabhakaran, Responsible, Sri lanka, Srilanka, Tamil, Triconamalee, Volunteering | Leave a Comment »

Sinhala Govt. Atrocities against India

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 25, 2006

மன்னிப்பதும்… மறப்பதும்…அரவணைப்பதும்…

மறவன்புலவு க.சச்சிதானந்தன்

சுவாமி விவேகானந்தர் மேற்குலக வெற்றிப் பயணத்தை முடித்துவிட்டு இலங்கை வழி இந்தியா திரும்புகையில், 1897-ல் அநுராதபுரத்துக்குப் போகிறார். சிங்கள-புத்தத் துறவிகள் அவரைத் தாக்க முனைகின்றனர். ஈழத்தமிழரான குமாரசுவாமி அவரைக் காப்பாற்றிப் பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறார்.

கீழக்கரை, காயல்பட்டினம், இராமநாதபுரம், நாகப்பட்டினம் ஆகிய தமிழக நகரங்கலில் இருந்து தமிழரான முஸ்லிம்களும் மும்பையிலிருந்து போராக்கள், பார்சிகள், சிந்திகளான முஸ்லிம்களும் கொழும்பு நகரிலும் சிங்களக் கிராமங்களிலும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். 1915-ல் முஸ்லிம்களுக்கு எதிரான மாபெரும் கலவரம் மூண்டது. முஸ்லிம்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புமாறு, பின்பு இலங்கைப் பிரதமரான சேனநாயக்கா உள்ளிட்ட மூத்த சிங்களத் தலைவர்கள் அக்காலத்தில் திரண்டெழுந்தனர்.

1927-ல் காந்தியடிகளின் இலங்கைப் பயணத்தின்போது சிங்களத் தீவிரவாதிகள் காட்டிய எதிர்ப்புகளையும் ஈழத்தமிழரும் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸýமாக அளித்த வரவேற்பையும் இந்திய விடுதலைப் போருக்காகக் காந்தியடிகளிடம் தமிழர் அளித்த நன்கொடைகளையும் மகாதேவ தேசாய் விரிவாக எழுதியுள்ளார்.

மலையகத் தேயிலைத் தோட்டங்களில் பணிக்காகச் சென்ற தமிழகத் தொழிலாளர்களையும் கொழும்புத் துறைமுகத்தில் பணிக்காகச் சென்ற கேரளத்து தொழிலாளர்களையும் திருப்பி அனுப்புமாறு தொடர்ச்சியாகப் பல போராட்டங்களைச் சிங்களவர் நடத்தினர். 1920-களில் சிங்களத் தீவிரவாதியான ஏ.இ.குணசிங்கா தலைமையில் முளைவிட்ட இந்தப் போராட்டங்கள் 1930களில் கூர்மை அடைந்தன.

மலையாளிகளைத் திருப்பி அனுப்பக் கோரிய சிங்களவரின் போராட்டத்தின் கடுமையைத் தணிக்கும் நோக்குடன், கேரளப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவரான ஏ.கே.கோபாலன், 1939-ல் கொழும்புக்குச் சென்றார். வெள்ளவத்தையில் அவர் பங்கேற்ற மேதினக் கூட்டத்தை சிங்களத் தீவிரவாதிகள் குலைக்க முயன்றனர். அதன் பின்னர் 1940-களின் தொடக்கத்தில் மலையாளிகள் கொழும்பிலிருந்து முற்றாக வெளியேறினர்.

மலையகத் தமிழ்த் தொழிலாளருக்குச் சிங்களவர் தொடர்ச்சியாக இழைத்து வந்த கொடுமையைத் தணிக்க, மகாத்மா காந்தியின் சார்பில் ஜவாஹர்லால் நேரு இலங்கைக்குச் சென்றார். இலங்கை இந்தியக் காங்கிரûஸ நிறுவினார். 1939 ஜூலை 26 அன்று கொழும்பு, காலிமுகத் திடலில் அவர் பங்கேற்று உரையாற்றிய கூட்டத்தைச் சிங்களத் தீவிரவாதியான ஏ.இ. குணசிங்காவின் அடியாள்கள் குழப்பினர்.

1948-ல் இலங்கை விடுதலை பெற்றதும் சிங்களப் பெரும்பான்மை நாடாளுமன்றத்தின் ஆயத்தப் பணிகளுள் ஒன்றுதான், தமிழகத்திலிருந்து சென்று மலையகத் தோட்டங்களை வளப்படுத்திய தொழிலாளரின் குடி உரிமையைப் பறித்த சட்டமாகும். மலையகத் தமிழ்த் தொழிலாளர் அனைவரையும் திருப்பி அழைக்க வேண்டுமென இந்தியாவிடம் சிங்களவர் கூறினர்; இந்தியா மறுத்தது; அவர்களை நாடற்றவர்களாக்கியது சேனநாயக்கா அரசு.

நேரு காலத்தில் பலமுறை முயன்று தோற்றதை, சாஸ்திரி காலத்திலும் இந்திரா காலத்திலும் இலங்கை பெற்றுக்கொண்டது. சிறீமாவோ-சாஸ்திரி மற்றும் சிறீமாவோ- இந்திரா ஒப்பந்தங்கள் சிங்களவரின் இந்திய எதிர்ப்புக் கொள்கைகளின் வெற்றி முகங்கள். நான்கு இலட்சம் தமிழரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவும் கச்சத் தீவை இலங்கை எல்லைக்குள் அடக்கவும் இந்தியா ஒப்புக்கொண்டதல்லவா?

மலையகத் தமிழர்களைத் திரும்பப் பெற இந்தியா ஒப்பியதற்கு நன்றியாக, 1977லிலும் 1983லிலும் இனக்கலவரத்தில், கொழும்பில் வணிகம் செய்த இந்திய முதலாளிகளைக் கொலை செய்து, அவர்களின் சொத்துகளைச் சிங்களக் காடையர் சூறையாடினர். நாடற்றவர்களான மலையகத் தமிழர் பலரையும் கொன்றுகுவித்தனர்.

கச்சத் தீவைக் கொடுத்ததற்கு நன்றியாகத் தமிழக மீனவரின் உயிர்களைப் பலி கேட்டுக்கொன்று குவித்து, தமிழக மீனவரின் படகுகளைச் சேதாரமாக்கி, வலைகளை அறுத்தெறிந்து, பிடிபட்ட மீன்களையும் இன்றுவரை இலங்கைக் கடற்படை பறித்தெடுத்துச் சென்றுவருகிறது.

1971 ஏப்ரலில் ஜேவிபியின் ஆயுதப் புரட்சியை அடக்க, இந்தியா படைகளை அனுப்பியது. நன்றிக் கடனாக, 1971 டிசம்பர் வங்கப்போரில், இந்திய வான் பகுதிமேல் பறக்க முடியாத பாகிஸ்தான் விமானங்கள், இந்தியாவுக்கு எதிராகக் கொழும்பு விமான நிலையத்தில் தங்கிப்போக, ஈழத்தமிழரின் எதிர்ப்பையும் மீறிச் சிங்கள அரசு பாகிஸ்தானுக்கு உதவியது. அதுமட்டுமல்ல, இந்தியாவில் வெளியாகும் இதழ்களையும் நூல்களையும் குப்பைகள் என இழித்து, அவற்றின் இறக்குமதியை 1971 முதல் கட்டுப்படுத்தியது.

1983– முதலாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் பலமுறை தாக்குதலுக்குள்ளாயது; தூதரக வாகனங்கள் கொளுத்தப்பட்டன.

1987-ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஒப்பமிட, ராஜீவ் கொழும்பு செல்கிறார். அப்போதைய பிரதமரான பிரேமதாசா, ராஜீவை அவமதிக்கத் திட்டமிட்டு கொழும்பை விட்டு நீங்கித் தாய்லாந்தில் பயணித்தார். ராஜீவை அவமதித்த பிரேமதாசாவின் அரசியல் குரு, 1939 ஜூலை 26-ல் நேரு பேசிய கூட்டத்தைக் குலைக்க வந்த ஏ.இ.குணசிங்கா.

கொழும்பில், குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் ராஜீவுக்குப் பிரியாவிடை… கடற்படைச் சிப்பாய் ஒருவன், ராஜீவின் முதுகில் துப்பாக்கிப் பிடியால் கடுமையாகத் தாக்குகிறான். குற்றவாளியான அவனை நீதிமன்றம் சிறையில் அடைக்க, அரசோ அவனை விடுதலை செய்கிறது.

1983 முதலாக, பல இலட்சம் ஈழத்தமிழர் இந்தியாவில் தஞ்சம் புகுந்து, இந்திய மக்களின் வரிப்பணத்தில் வாழ்வை ஓட்டவேண்டிய, இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைக்கும் சிங்களப் படையின் வெறியாட்டமே காரணமாகும்.

ஆசிய நாடுகளின் வாக்குகளைப் பிரித்து, இந்திய வேட்பாளர் ஐ.நா. தலைமைச் செயலராக வெற்றி பெற முடியாதவாறு தானும் ஒரு வேட்பாளரைக் களத்தில் இறக்கி, அவருக்காக உலகெங்கும் சென்று ஆதரவு திரட்டுகிறது இலங்கை அரசு.

விவேகானந்தர் காலம் தொடங்கி இன்று வரை, ஏறத்தாழ 100 ஆண்டுகளாக, சிங்கள இனத்தவரின் அரசும், அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் தனி மனிதர்களும் இந்தியாவின் முகத்தில் திட்டமிட்டே பலமுறை கரி பூசி வந்துள்ளனர். அவற்றைப் பொருளெனக் கொள்ளாது, நிகழ்வுகளை மறந்து, அவர்களின் அடாச் செயல்களை மன்னித்து, தொடர்ந்தும் சிங்களவருக்கு நன்மையையே செய்து வருகிறது இந்தியா. இந்த மாதத்தில் இலங்கைப் படைக்கு ராடார் கருவிகளை அன்பளிப்பாகவும் கொடுத்துள்ளது. மறப்பதும் மன்னிப்பதும், அவர் நாண நன்னயம் செய்தலும் இந்திய மண்ணோடு கலந்த மரபுகள். 999 மனிதத் தலைகளைக் கொய்த அங்குலிமாலாவை மன்னித்துப் பண்பட்ட மனிதனாக்கித் தன் சீடராக்கியவர் புத்தர்.

இந்தியாவே ஆயுதங்களைக் கொடுத்தது; பயிற்சியை வழங்கியது; நிதியும் வழங்கியது. அதைத் தொடர்ந்த 1987-91 காலத்திய நிகழ்வுகளால் இந்தியாவின் கடுஞ் சினத்துக்கு ஈழத்தமிழர் ஆளாகினர். 13 சங்கப் பாடல்களைத் தந்த ஈழத்துப் பூதந்தேவனார் முதலாக, ஆறுமுக நாவலர், விபுலானந்த அடிகள் ஊடாக, இன்றைய அறிஞர், புலவர், படைப்பாளிகள் வரை, கடந்த இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கூடாக, ஈழத்தமிழரும் இந்தியாவும் எவ்வித பகைமையோ, உரசலோ, எதிர்ப்புணர்வோ இல்லாது கொண்டும் கொடுத்தும் ஒருவரை ஒருவர் ஆட்கொண்டு, வாழ்ந்து வருகின்றனர். இடையில் ஈழத்தமிழர் உணர்ச்சிவயத்தால், பொருந்தாச் செயல் செய்திருப்பின் மன்னிப்பதும் மறப்பதும் மீண்டும் அரவணைப்பதும் இந்தியாவின் கடனல்லவா? நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து உரசியும் கடுமையாக எதிர்த்தும் வரும் சிங்களவரோடு பெருந்தன்மையோடு நடப்பதுபோல், இடையில் ஒரு சில ஆண்டுகள் இணக்கமற்றிருந்ததற்காக வருந்தும் ஈழத்தமிழருடனான கசப்புகளை மன்னித்து மறந்து பெருந்தன்மையோடு நடப்பது இந்தியாவின் கடன்.

Posted in AK Gopalan, Arms, Ceylon, Dinamani, Eezham, Fights, Gunasinha, India, Jantha Vimukthi Pramuna, JVP, Katcha Theevu, Kumaraswamy, LTTE, Premadasa, Rajeev, Rajiv Gandhi, Senanayake, Sirimavo, Sri lanka, Srilanka, Tamil | 1 Comment »