Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Vehicles’ Category

Newspaper vehicle distributing ‘Thina Murasu’ of EPDP attacked

Posted by Snapjudge மேல் திசெம்பர் 27, 2007

அரச தொலைக்காட்சி நிறுவனத்தினுள் கலகம் விளைவித்த அமைச்சர் தாக்கப்பட்டார்

இலங்கை அரசாங்கத்தின் தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் இன்று உள்நுழைந்து கலகம் விளைவித்த அமைச்சர் மேர்வின் சில்வா மீதும் அவரது குழுவின் மீதும் அந்த நிறுவனத்தின் ஊடகவியலாளர்களும், ஊழியர்களும் மேற்கொண்ட தாக்குதலில் அமைச்சர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவத்தின்போது அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர் ஒருவரும் தாக்கப்பட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிட்ட இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், அந்த அமைப்பின் செய்திப்பணிப்பாளர் டி.எம்.ஜீ. சந்திரசேகர என்பவரை அமைச்சரின் குழுவினர் தாக்கியதாகவும், அதன்பின்னர் அமைச்சர் மேர்வின் சில்வா நிறுவனத்தலைவருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது ஆத்திரமடைந்த நிறுவன ஊட்கவியலாளர்களும், பணியாளர்களும் அந்த அறையினுள் பணயக் கைதியாக பூட்டி வைத்திருந்ததாகவும் தெரிவித்தது.

அத்துடன் அவர்கள் அமைச்சரும் அவரது குழுவினரும் மன்னிப்புக் கோரினால் மாத்திரமே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் நிபந்தனை விதித்ததாகவும் தெரிவித்தது.

இவ்வாறு நிலைமை மோசமடைந்துவரும்வேளை, கலகம் அடக்கும் துருப்பினரும், இராணுவத்தினரும் தொலைக்காட்சி நிறுவனத்தினுள் உள்நுழைந்து சுமார் இரண்டரை மணித்தியாலங்களின் பின்னர் அமைச்சரை விடுவித்தனர். இவரை விடுவித்துக்கொண்டு செல்லும்போதே பணியாளர்கள் சூழ்ந்து தாக்கியதாகவும் அதன் போது அவர் காயமடைந்ததாகவும் தெரியவருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து இலங்கை ஜனாதிபதி விசேட விசாரணையொன்றுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.


விடுதலைப்புலிகளின் தாக்குதலில் தினமுரசு பத்திரிகை விநியோகித்தவர்கள் பலி

சம்பவத்தில் கொல்லப்பட்ட சிறுவனின் சடலத்தின் முன்பாக கதறியழும் உறவினர்கள்
சம்பவத்தில் கொல்லப்பட்ட சிறுவனின் சடலத்தின் முன்பாக கதறியழும் உறவினர்கள்

இலங்கையின் வடக்கே வவுனியாவின் புறநகரப்பகுதியாகிய குருமண்காடு கடைவீதிச் சந்தியில் இன்று பிற்பகல் விடுதலைப் புலிகள் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அதாவது ஈபிடிபி அமைப்பின் உறுப்பினர்கள் மூவரும், இடையிலகப்பட்ட ஒரு சிறுவனும் கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள், வாகன சாரதி, ஈபிடிபி அமைப்பின் மேலும் 3 உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 8 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

பொதுமக்களில் ஒருவர் மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவன் என்றும், ஒருவர் கட்டிடத் திணைக்கள ஊழியர் என்றும் இன்னுமொருவர் தனியார் அஞ்சல் முகவர் நிலையத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமுரசு பத்திரிகையின் விற்பனைக்காகச் சென்ற ஈபிடிபி அமைப்பினரின் வேன் ஒன்றை இலக்கு வைத்து, சைக்கிளில் பொருத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடியைப் பயன்படுத்தியே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்ட வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன், இறந்தவர்களின் சடலங்களையும், காயமடைந்தவர்களையும் வவுனியா வைத்தியசாலையில் பார்வையிட்டு சம்பவம் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்தார்.

ஈபிடிபி கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர், கொல்லப்பட்ட தமது அமைப்பினரின் சடலங்களை நீதிபதிக்கு அடையாளம் காட்டினார். இறந்த சிறுவன் வவுனியா மகாவித்தியாலய மாணவன் என அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டினர்.


மர்வின் சில்வா விவகாரம்: பொலிஸ் விசாரணைகள் மீது நீதிமன்றம் அதிருப்தி

இலங்கை அமைச்சர் மர்வின் சில்வா அவர்களால், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் செய்தியாளர் ஒருவர் வியாழன்று தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பற்றிய பொலிஸ் புலனாய்வு நடவடிக்கைகள் குறித்து இலங்கை நீதிமன்றம் ஒன்று அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இலங்கை எங்கிலும் உள்ள மக்களால் தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்க்கப்பட்டது என்பதால், அது குறித்து பொலிஸார் மிகவும் கரிசனையுடன் செயற்பட வேண்டும் என்று கொழும்பு குற்றவியல் நீதிபதி மக்கி முகமட் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் ஒருவரை மாத்திரமே பொலிஸார் குற்றவாளியாக நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர்.

ஆனால், இப்படியான ஒரு பெரிய சம்பவம் நடைபெற்ற நிலையில், ஏன் ஒருவர் மாத்திரம் இவ்வாறு பொலிஸாரால், கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று கேள்வியெழுப்பிய நீதிபதி, பொலிஸாரின் இது குறித்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்காது என்றும் கூறிவிட்டார்.

நடந்த சம்பவம் குறித்து பொலிஸ் அளிக்கும் அறிக்கையை நீதிமன்றம் ஏற்றால், நீதிமன்றத்தின் மீது பொதுமக்கள் கல் வீசுவார்கள் என்று நீதிமன்றத்தில் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதிபதி, அனைத்து சந்தேக நபர்களையும் பொலிஸார் கைதுசெய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தின்போது செய்தியாளர்களை அமைச்சர் துஷ்பிரயோகம் செய்ததாகவும், எச்சரித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதனையடுத்து செய்தியாளர்களால் சில மணிநேரம் அமைச்சர் அங்கு பிடித்து பணயமாக வைக்கப்பட்டிருந்தார்.

இவை குறித்த தகவல்கள் வியாழனன்று ரூபவாஹினி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பட்டன.

ஆயினும், இந்தத் தொலைக்காட்சி நாடாக்கள் சி.ஐ.டி. பொலிஸாரால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதால், இந்த விடயத்தில் தாம் பலிக்கடாக்கள் ஆக்கப்படலாம் என்று கூறி செய்தியாளர்கள், இன்று ரூபவாஹினி நிறுவனத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


வட இலங்கை மோதல்கள் குறித்து முரண்பட்ட தகவல்கள்

 

யாழ்ப்பாணம், மன்னர் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் வியாழனன்றும் வெள்ளியன்றும் இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்ததாக இருதரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

ஆயினும், இழப்புகள் குறித்து இருதரப்பின் தகவல்களும் முரண்படுகின்றன.

குறிப்பாக முகமாலை, குறிசுட்டகுளம், பெரிய பண்டிவிரிச்சான் ஆகிய இடங்களில் கடும் சண்டை நடைபெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

அதேவேளை கிளாலி பகுதியில் நேற்றைய மோதலில் கொல்லப்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவரின் சடலம் இன்று செஞ்சிலுவைச் சங்கத்தினரின் ஊடாக விடுதலைப்புலிகளால் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற கடற்சமரில் கொல்லப்பட்ட மேலும் ஒரு சிப்பாயின் சடலத்தையும் இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.


திருகோணமலையில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தோருக்கு உணவு உதவி

திருகோணமலையில் வெள்ளம் – பழைய படம்

திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பிரதேசத்தின் வெருகல் ஆறு பெருக்கெடுத்ததால் அங்கிருந்து இடம்பெயர்ந்திருந்த மக்கள்
கடந்த நான்கு தினங்களாக உணவுப் பற்றாக்குறையால்
தவித்துவந்தனர்.

இந்த நூற்று எழுபத்து ஏழு குடும்பங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை,
மாவட்ட அரச அதிபர் சில்வா விடுத்த பணிப்புரையின் பேரில், ஈச்சிலம்பற்று பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தினூடாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

மூன்று தினங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பண்டங்களான அரிசி பருப்பு கோதுமை மாவு என்பன வழங்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பல நோக்கக் கூட்டுறவுச் சங்க தலைவர் சுப்பிரமணியம் அரசரெட்ணம்
தெரிவித்திருக்கின்றார்.

இதன் பிரகாரம் மூன்று தினங்களுக்குப் போதுமான அளவில் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தலா நூற்று ஐம்பது ரூபா பெறுமதியான உணவுப் பண்டங்களும், பத்து வயதுக்கு மேற்பட்டோருக்கு இருநூற்றுப் பத்து ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பண்டங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

தற்போது வெள்ளம் படிப்படியாக வடிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Anura Priyadharshana Yapa, Batticaloa, bodyguards, Claymore, Commandos, Dhina Murasu, DhinaMurasu, Distribution, Eelam, Eezham, EPDP, Freedom, Independence, Journal, Journalists, Kalavanchchikuddi, Kurumankadu, Liberty, LTTE, Mannaar, Mannar, Media, Mervyn Silva, MSM, News, Newspaper, Newspapers, Oppression, Reporters, Roopavahini, Roopawahini, Rupavahini, Rupawahini, Sri lanka, Srilanka, Tamil, Thina Murasu, ThinaMurasu, TV, Vavuniya, Vehicles, wavuniya | 4 Comments »

The dangers lurking behing ethanol & other alternate fuels – Environment & Deforestation Impact

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2007

தாவர எண்ணெயின் விபரீதம்

ந. ராமசுப்ரமணியன்

உலக அரங்கில் கச்சா எண்ணெய்க்கு மாற்று சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தாவர எண்ணெயே எனப் பேசப்பட்டு வருகிறது.

தாவர எண்ணெயால் ஏற்படும் விபரீதங்களை அறியாததே இதற்குக் காரணம்.

வான்வெளியில் கரிமல வாயு உள்ளது. அதை உள்வாங்கி வளரும் தாவரங்கள் மூலம் “எத்தனால்’ மற்றும் “பயோ டீசல்’ போன்ற எரிபொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த எரிபொருள்கள் மூலம் கார்பன் அளவு அதிகரிக்காது. மாறாக, நிலத்திலிருந்து எடுக்கப்படும் நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் உபயோகத்தால் கார்பன் வெளியீடு பல மடங்கு உயர்கிறது என விஞ்ஞான ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஆகவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அதிகரித்து வரும் எரிபொருள் எண்ணெய் தேவை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு கச்சா எண்ணெய்க்கு மாற்று தாவர எண்ணெயே என உலக அளவில் பேசப்பட்டு, அதன் உபயோகமும் அதிகரித்து வருகிறது.

நிலத்தடியில் பல கோடி ஆண்டுகளாகப் புதைந்து கிடந்த தாவர வகைகளே கச்சா எண்ணெயாக மாறுகிறது.

ஆனால் தாவர எண்ணெய், தற்போது விளையும் தாவரங்கள், சூரியகாந்தி, பனை, சோயாபீன்ஸ், கரும்பு, தென்னை, சோளம், கோதுமை, அரிசி மற்றும் நவதானியங்கள் ஆகியவற்றைக் கொண்டு உடனடியாகத் தயாரிக்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி பெற்ற பிரேசில் நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு முதுகெலும்பு கரும்பு பயிரிடுவதும், சர்க்கரை உற்பத்தியுமாகும். கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை பெட்ரோலுடன் 65 சதவீதம் இணைத்து, அந்நாட்டு வாகனங்கள் ஓட்டப்பட்டு வந்தன.

கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் ஆண்டு உற்பத்தி 1790 கோடி லிட்டர் அளவு உள்ளது. பிரேசில் நாட்டில் 83 சதவீதத்திற்கும் மேற்பட்ட கார்கள் எத்தனாலுடன் சேர்க்கப்பட்ட பெட்ரோல் மூலமாக இயங்குகின்றன. மேலும் நாட்டின் மொத்த எரிஎண்ணெய் உபயோகத்தில் எத்தனால் பங்கு 55 சதவீதம் என உள்ளது.

1925-ம் ஆண்டு ஹென்ரி போர்ட் தனது “போர்ட்’ காரை அறிமுகப்படுத்தும்போதே எதில் ஆல்கஹால் எனும் தாவர எண்ணெயை உபயோகித்தார்.

தாவர எண்ணெயே எதிர்கால எரிபொருளாகப் போகிறது எனவும் கணித்தார்.

அதிக அளவில் அமெரிக்காவும் எதனால் தயாரிக்கும் நாடு. ஆனால் பிரேசிலைப்போல அல்லாமல் கோதுமை, அரிசி, ஓட்ஸ், சோளம், சோயா போன்ற பல தானியங்களிலிருந்து அமெரிக்கா தாவர எண்ணெயை உற்பத்தி செய்கிறது.

அமெரிக்க அயோவா மாநிலத்தில் எத்தனால் தயாரிப்பிற்காக 28 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இயங்குகின்றன.

டெக்ஸôஸ் மற்றும் இதர மாநிலங்களிலும் இத்தகைய ஆலைகள் அதிக அளவு இயங்க ஆரம்பித்துவிட்டன.

தற்போது தயாராகும் எத்தனால் காற்றிலுள்ள நீரை உட்கொள்வதால் கார் எந்திரங்கள் விரைவில் துருப்பிடித்துவிடும் என்று கூறப்படுகிறது.

தாவர எண்ணெய் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பு தரும் “பசுமை எண்ணெய்’ என ஒருபுறம் புகழப்படுகிறது.

கார்பன்டை ஆக்ûஸடை இழுத்து, வளரும் தாவரம், அதிலிருந்து எண்ணெய் தயாரிக்கும்போது, கார்பன்டை ஆக்ûஸடை வெளியிட்டு விடுகிறது. இது எப்படிப் பசுமை எண்ணெய் ஆகும் என்ற கேள்வி எழுகிறது.

டச்சு ஆலோசக நிறுவனமான டெல்ப்ட் ஹைட்ராலிக்ஸ், “ஒரு டன் பனைத் தாவர எண்ணெய் தயாரிக்கும்போது 33 டன் கார்பன் வெளியீடு ஏற்படுகிறது. இது பெட்ரோலியப் பொருள்கள் வெளியீட்டை விட பத்து மடங்கு அதிகம்.

இது எப்படி பசுமை எண்ணெய் ஆகும்?’ என்று வினா எழுப்பியுள்ளது.

ஐ.நா. ஆய்வு அறிக்கை ஒன்றில் தாவர எண்ணெய், பெட்ரோலியத்தை விட உலகிற்குக் கேடு அதிகம் விளைவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் “எத்தனால்’ தொழிலால் பல்வேறு பாதகங்கள் ஏற்பட்டுள்ளன. பசுமைப் புல்வெளிகள் மற்றும் காடுகள் அழிக்கப்பட்டு கரும்புத் தோட்டங்களாக மாற்றப்படுகின்றன.

காடுகள் வெட்டப்படுவதால் கார்பன் வெளியீடு அதிகமாகிவிட்டது. இதனால் பல்வேறு உயிரினங்கள், தாவரங்கள் அழிதல், மண் சக்தியிழத்தல் ஆகிய கேடுகள் நடைபெறுகின்றன.

இப்படி தயாரிக்கப்படும் தாவர எண்ணெயை வாங்குதல் தகாது என பல ஐரோப்பிய நாடுகள் முடிவெடுத்துள்ளன.

பிரேசிலில் கரும்பு பயிரிடுவதற்காக மிக அரிய மரங்களையும், சோயா பயிரிடுவதற்காக அமேசான் மழைக் காடுகளையும் அழிக்கத் தொடங்கியுள்ளது பாதகமான செயலாகும்.

மெக்சிக்கோவில் சோளம் போன்ற தானியங்களை தாவர எண்ணெய்க்குப் பெரிதும் பயன்படுத்துவதால், மற்ற உணவுப் பொருள்கள் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது.

இதனால் உணவுக்காகப் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன.

உலகத் தாவர எண்ணெய் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தாவர எண்ணெய் திட்டத்தைக் கைவிடும்படி சீனா, இந்தியா போன்ற நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளன.

சொகுசு கார்களில் செல்வந்தர்கள் பவனி வருவதற்காக உலக மக்களின் சோற்றில் மண்ணைப்போடும் பயங்கரத்திட்டம் தாவர எண்ணெய்த்திட்டம் என்ற எதிர்ப்பு மேலோங்கி வருகிறது.

ஆக கச்சா எண்ணெய்க்கு மாற்று தாவர எண்ணெய் இல்லை என்பது தெளிவாகிறது.

—————————————————————————————————————————————–

பருவநிலை மாற்றம்: தேவை அவசரத் தீர்வு

என். ரமேஷ்

மனித சமுதாயத்தின் நடவடிக்கைகளால் ஏற்பட்டு வரும் புவி வெப்ப அதிகரிப்பால், இதுவரை காணாத அளவுக்கு பருவநிலை மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன.

இதை அறிவியல் உலகம் ஏற்கெனவே உறுதி செய்து விட்டது.

அண்மையில் வெளியிடப்பட்ட, பருவநிலை மாறுபாடுகள் குறித்த பன்னாட்டு அரசுகள் கூட்டமைப்பின் (ஐபிசிசி) நான்காவது மதிப்பீட்டின் தொகுப்பு அறிக்கை இதை உறுதி செய்துள்ளது.

நடப்பாண்டில், வங்கதேசத்தில் ஏறத்தாழ 10 ஆயிரம் பேரை பலி கொண்ட சூறாவளி, பிகாரில் 1.4 கோடி மக்களை வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றிய வெள்ளப் பெருக்கு, இத்தாலியில் எப்போதுமில்லாத வகையில் 300 பேருக்கு சிக்குன் குன்யா நோய்த் தொற்று எனப் பல்வேறு அறிகுறிகள் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டுகின்றன.

மின் உற்பத்தி, போக்குவரத்து போன்றவற்றுக்காக நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற படிவ எரிபொருள்களை எரிப்பதே வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடு உள்ளிட்ட பசுமைக் குடில் வாயுக்களின் அளவு அதிகரிக்கக் காரணம்.

2005 ஆம் ஆண்டு இந்த வாயுவின் அளவு 10 லட்சத்தில் 379 என்ற அளவில் இருந்தது. இது கடந்த 6.5 லட்சம் ஆண்டுகளில் நிலவியதில் உயர்ந்தபட்ச அளவாகும். (தொழில் புரட்சி ஏற்பட்ட 18ஆம் நூற்றாண்டில் – 280).

புவியின் தற்போதைய சராசரி வெப்பநிலை 14.5 டிகிரி சென்டிகிரேட். உலகம் தற்போதைய வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்தால் புவியின் சராசரி வெப்பநிலை 6.4 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு அதிகரிக்கும். கடல் மட்டம் 3.7 மீட்டர் வரை அதிகரிக்கக் கூடும்.

புவி வெப்பம் 2 டிகிரி அளவு அதிகரித்தாலே பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகள் முற்றிலும் மூழ்கிவிடும்; கடற்பகுதியால் சூழ்ந்துள்ள வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும். இந்நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும்.

இத்தகைய புவி வெப்ப அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்படப்போவது உலகின் 60 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள (ஏறத்தாழ 400 கோடி) ஆசியக் கண்டம்தான்.

கடல் நீரால் சூழ்தல், நன்னீர்ப் பற்றாக்குறை, மகசூல் குறைவால் உணவுப் பஞ்சம், நோய் பரப்பும் கொசுக்கள் அதிகரிப்பு எனப் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

இந்தச் சூழ்நிலையில்தான் பசுமைக் குடில் வாயுக்களைக் குறைத்தல், ஏற்கெனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் – நிகழ உள்ள பருவநிலை மாற்றத் தாக்கங்களுக்கு தகவமைத்தல் போன்ற அம்சங்களை விவாதிக்க இந்தோனேசியாவின் பாலி நகரில் டிசம்பர் 3 முதல் 14 வரை ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றத்துக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்ட 195 நாடுகளின் 13-வது மாநாடு நடைபெற உள்ளது.

36 வளர்ச்சியடைந்த நாடுகள் 1990 ஆம் ஆண்டு வெளியிட்ட கரியமில வாயு அளவில் சராசரி 5.2 சதவீதத்தை, 2008-12 ஆம் ஆண்டுகளுக்குள் குறைக்க வகைசெய்யும் கியோட்டோ ஒப்பந்தம் 1997-ல் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்த காலத்துக்குப் பிந்தைய புதிய ஒப்பந்தத்தை உருவாக்க பூர்வாங்கப் பணிகளை இந்த மாநாடு மேற்கொள்ள உள்ளது.

தொழில்புரட்சிக்கு முன்பு நிலவியதைவிட 2 டிகிரி சென்டிகிரேட் வரை மட்டுமே புவி வெப்பம் அதிகரிக்கும் நிலையை உருவாக்க, உலகம் முழுவதும் 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கார்பன்டை ஆக்சைடு அளவில் 50 சதவீதத்தை மட்டுமே 2050 ஆம் ஆண்டில் வெளியிட வேண்டும்.

இதற்கு, வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களது வெளியீட்டில் 80 சதவீதத்தைக் குறைக்க வேண்டும்; இந்தியா போன்ற வளரும் நாடுகள் 20 சதவீதத்தைக் குறைக்க வேண்டும் எனப் பரிந்துரைகள் முன் வைக்கப்படுகின்றன.

(20 சதவீதம் குறைக்க முடியாது; தனிநபர் சராசரி கணக்கில் கொள்ள வேண்டும் என திட்டக்குழுவின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்).

இந்த அளவுக்கு குறைத்தால் “வளர்ச்சி’ தடைபடும் என்ற வாதங்களுக்குப் பதில், இப்போது குறைக்காவிடில் வரும் காலங்களில் பருவநிலை மாறுபாட்டால் விளையும் பேரழிவுகளால் “வளர்ச்சியே’ கேள்விக்குறியாகும் என்பதுதான்.

இந்த இலக்குகளை எட்ட உலக ஒட்டுமொத்த உற்பத்தியில் 1.6 சதவீதத்தைக் குறைத்தால் மட்டும் போதுமானது என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அறிக்கை.

அதுமட்டுமன்றி, மாற்று எரிசக்தி, போக்குவரத்து தொழில்நுட்ப உருவாக்கத்தால் வேலைவாய்ப்பு நிலையைச் சரிக்கட்டிவிட வாய்ப்புள்ளது.

மேலும், வளரும் நாடுகளுக்கு கரியமில வாயுவை வெளியிடாத “தூய்மையான’ தொழில்நுட்பங்களை வளரும் நாடுகள் வழங்குவதற்கு அமைப்பை உருவாக்குவது; ஏற்கெனவே, அளவுக்கதிகமாக வெளியிடப்பட்ட வாயுக்களால் ஏற்பட உள்ள தாக்கங்களைச் சமாளிக்க குறைந்தபட்சம் ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி டாலர் நிதியுதவி அளிக்க ஏற்பாடு செய்வது; வெளியிடப்படும் 20 சதவீத கரியமில வாயுவுக்கு வனங்களின் அழிவு ஒரு காரணம் என்பதால் காடுகளை அழிப்பதைத் தடுப்பதற்கான அமைப்பை உருவாக்குவது ஆகியவை தொடர்பான அம்சங்களையும் பாலி மாநாடு விவாதிக்க உள்ளது.

கியோட்டோ ஒப்பந்த நடைமுறைகள் 2012 – ல் முடிவுக்கு வந்துவிடும் என்ற நிலையில், இடைவெளியின்றி புது ஒப்பந்தம் அமலுக்கு வர வேண்டும்.

இத்தகைய ஒப்பந்தம் 2009 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டால்தான், அதற்கு உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றங்கள் 2012 – க்குள் ஒப்புதல் அளித்து நடைமுறைப்படுத்த முடியும்.

கியோட்டா ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத அமெரிக்கா, கட்டாய இலக்குகளை ஒப்புக்கொள்ள மறுக்கும் இந்தியா போன்ற நாடுகளும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளன.

மாநாட்டின் இறுதிப் நிகழ்ச்சியில் 130 – க்கும் மேற்பட்ட நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

பருவநிலை மாற்றம் காரணமான பாதக விளைவுகள் தொடங்கிவிட்ட நிலையில், பேரழிவுகளிலிருந்து பூவுலகைக் காக்க உள்ள கால அவகாசம் மிகக் குறைவே.

எனவே, பாலி மாநாட்டின் முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக அமைய வேண்டும்.

—————————————————————————————————————————————–

பசுமை இந்தியா சாத்தியமா?

அன்ஷு பரத்வாஜ்

பிலிப்பின்ஸ் நாட்டின் பாலித் தீவில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் விவாதிக்கப்பட்ட புவி வெப்ப மாற்றங்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி, நச்சு இல்லாத புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம் இந்தியா எதிர்பார்க்கும் பொருளாதார முன்னேற்றத்தை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

நாட்டின் மின் சக்தி தேவை 4,000 பில்லியன் கிலோவாட் என்று திட்டக் கமிஷன் மதிப்பிட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டில் 20,000 பில்லியன் கிலோவாட் மின் சக்தி தேவைப்படும் என்றும் மதிப்பீடு செய்துள்ளது,

இந்த அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யப்போகிறோம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய சவாலாகும்.

இந்த மின் உற்பத்தியின் தேவையில் ஒரு பகுதி கரியமில வாயு இல்லாத தொழில்நுட்பங்களின் மூலம் கிடைக்கும்.

நிலக்கரி உள்ளிட்ட மூலப்பொருள்களின் மூலம் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 97 சதவிகிதம் கிடைக்கிறது.

கரியமில வாயு இல்லாத பல மின் உற்பத்தி தொழில்நுட்பங்கள் இதுவரை பெரிய அளவில் உருவாக்கப்படவில்லை. மரபு எரிசக்தித் துறையில் இருந்து மரபுசாரா எரிசக்தித் துறையில் உற்பத்தியை அதிகரிப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

எதிர்காலத் தேவையில், 15 சதவிகித உற்பத்தியை கரியமிலம் இல்லாத தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்குவதை ஒரு வழிமுறையாகக் கொள்ளலாம். இதற்கு என்னென்ன வாய்ப்புகள்தான் உள்ளன?

காற்றாலை மின் உற்பத்தி நல்லதொரு நம்பகமான தொழில்நுட்பம். இந்தியாவில் தற்போது காற்றாலை மூலம் 7,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவில் காற்றாலைகள் மூலம் 45,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் காற்றின் வேகம் குறைவுதான். இதன் காரணமாக காற்றாலை விசிறிகள் முழு வேகத்தில் இயங்க முடியவில்லை.

காற்றாலைகள் மூலம் 45,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்தாலும், இது தேவையில் ஒரு சதவிகிதத்தை மட்டுமே பூர்த்தி செய்யும். இதனால், காற்றாலை மின் உற்பத்தி அதிக முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது.

அடுத்துள்ளது தாவரங்களைக் கொண்டு மின் உற்பத்தி. எண்ணெய் சத்து உள்ள தாவரங்கள் மூலம் பயோடீசலை உற்பத்தி செய்ய முடியும்.

சர்க்கரை ஆலைகளில் மொலாசிஸில் இருந்து எத்தனால் தயாரிக்க முடியும். கரும்புச்சக்கை, உமி போன்றவற்றில் இருந்து மின்சாரத்தைத் தயாரிக்க முடியும்.

மின் உற்பத்திக்கு தாவரங்களையும் பயன்படுத்தலாம். இந்தியாவில் விளைச்சலுக்கு தகுதியான 30 மில்லியன் ஹெக்டேர் நிலம் தரிசாகக் கிடக்கிறது. இதில் 20 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் எண்ணெய் சத்துள்ள தாவரங்களை சாகுபடி செய்ய பயன்படுத்தினால் 25 மில்லியன் டன் தாவர எண்ணெய் உற்பத்தியாகும். இதன் மூலம் 300 பில்லியன் கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும்.

எத்தனால் மூலம் 100 பில்லியன் கிலோவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், இந்தியாவின் மின் உற்பத்தித் தேவையில் 2 சதவிகிதத்தையே பூர்த்தி செய்ய முடியும்.

இந்தியாவில் புனல் மின் நிலையங்கள் மூலம் 84,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யமுடியும். ஆனால், தற்போது 34,000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. புனல் மின் உற்பத்தி மூலம் குறிப்பிட்ட இலக்கை எட்டினாலும், அதுவும் மொத்த தேவையில் 2 சதவிகிதமாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் அபரிமிதமாகக் கிடைப்பது நிலக்கரி. அனல் மின் நிலையங்கள் மூலம் 51 சதவிகித மின் உற்பத்தி செய்யப்படுகிறது. எதிர்காலத்தில், இந்தியாவின் மின் உற்பத்தியில் நிலக்கரியே முக்கிய பங்கு வகிக்கப் போகிறது.

இருந்தாலும், நிலக்கரி மூலம் ஒரு கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்போது. ஒரு கிலோ கரியமில வாயுவும் வெளியேற்றப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொண்டேயாக வேண்டும். இதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். இதற்கான தொழில்நுட்பம் பல மடங்கு செலவை இழுத்துவிடும்.

அணு மின் நிலையங்கள் மூலம் தற்போது 4,120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மொத்த உற்பத்தியில் 3 சதவிகிதத்துக்கும் குறைவுதான்.

உள்நாட்டில் மிகக் குறைந்த அளவே யுரேனியம் கிடைக்கிறது. இதனால் புளுடோனியம், தோரியம் தொழில்நுட்பங்களைக் கொண்டு மின் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா திட்டமிடலாம்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் இலகுரக நீர் மின் உற்பத்தி சாதனங்களை இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது. இதைப் பயன்படுத்தி 24,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும்.

இந்தியாவின் பெரும்பகுதியில் சூரிய சக்தி நன்றாக கிடைக்கிறது. 20 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் சூரிய சக்தி மூலம் 24,000 பில்லியன் கிலோவாட் மின் உற்பத்தி கிடைக்கும். இது நச்சுத்தன்மை கொண்ட கரியமில வாயுவை வெளியிடாது.

சூரிய சக்தி அனல் மின் நிலையங்கள் மற்றொரு வாய்ப்பாகவே அமைகிறது. காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் 20 கி.மீ. சுற்றளவு கொண்ட நிலத்தில் சூரிய சக்தி மூலம் 2,000 மெகாவாட் மின்சாரம் உறபத்தி செய்யமுடியும். இது எட்டு அனல் மின் நிலையங்களின் உற்பத்திக்குச் சமமாகும்.

கரியமில வாயுவை வெளிப்படுத்தாத மின் உற்பத்திக்கு முயற்சிக்க வேண்டும் என்றால், நம்மிடம் உள்ள எல்லா மூலப் பொருள்களையும் நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழில்: டி.எஸ். ஸ்ரீநிவாசன்

Posted in Agriculture, Alternate, Amazon, America, Analysis, Auto, Automotive, Brazil, Cane, Carbon, Cars, CO, CO2, Commerce, Consumption, Corn, Deforestation, Dhals, Diesel, Earth, Eco, Economy, emissions, energy, Environment, ethanol, Farming, Food, Foodgrains, Ford, Forests, Fuel, Gas, Grains, Green, Impact, Industry, Iowa, Land, LNG, Natural, Nature, Oats, oil, Palm, Petrol, Plants, Pollution, Prices, Pulses, Rainforest, Research, rice, Sector, Solar, Sources, Soya, Sugar, Sugarcane, Sunflower, Trees, US, USA, Vegetables, Vehicles, Wheat, Wind | Leave a Comment »

Advertisements – Noise & Light Pollutions

Posted by Snapjudge மேல் ஜூலை 16, 2007

ஒலி, ஒளி, விளம்பரத் தொல்லை

க.ப. அறவாணன்

அயல் நாட்டிலிருந்து நம் நாட்டுக்கு வருவோருக்கும், அயல்நாடு சென்று திரும்புவோருக்கும் அதிர்ச்சியாகவும் அதிசயமாகவும் முதலில் கண்ணில்படுவதும், காதில் விழுவதும் நம் ஊர் வாகனங்கள் எழுப்பும் பேரிரைச்சல். நம் நாட்டில் சுமார் 5 கோடியே 89 லட்சம் வாகனங்கள் நாளும் சாலையில் ஓடுகின்றன. இவற்றுள் சுமார் 4 கோடியே 15 லட்சம் இருசக்கர வாகனங்களும் 76 லட்சம் கார்களும் 7 லட்சம் பஸ்களும் 30 லட்சம் லாரிகளும் இன்னபிற 61 லட்சம் வாகனங்களும் 33 லட்சம் கிலோமீட்டர் நீளமுள்ள நம் சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

நம் வண்டி ஓட்டுநர்கள் வண்டியை எடுத்தவுடன் தம் கையால் பற்றுவது ஒலிப்பான்களைத்தான், சிலர் வைத்த கையை எடுப்பதே இல்லை. சாலைகளில் செல்வோர் அனைவருக்கும் காது கிழிந்துவிடும் அளவிற்கு ஹாரன்களை விடாமல் ஒலித்துக் கொண்டிருப்பார்கள். ஒலி அளவு உலகச் சுகாதார சபை வரையறுத்துள்ள 45 டெசிபலாக க்க்ஷ இருத்தல் வேண்டும் என்ற அளவை நம் நகரங்கள் பலமடங்கு கடந்துவிட்டன. மோட்டார் வாகனங்களைக் கண்டுபிடித்து வடிவமைத்த நாடுகளில் லட்சக்கணக்கில் வாகனங்கள் ஓடினாலும், அவர்கள் ஹாரன்களை ஒலிப்பதே இல்லை. ஒலிப்பது அநாகரிகம் என்பது அவர்கள் கருத்து. வண்டியின் முன்புறமும், பின்புறமும் அமைந்துள்ள வலது, இடது புறச் சிக்னல் விளக்குகளைப் போட்டுவிட்டுத் திரும்புவதையும் முந்திச் செல்வதையும் முறைப்படச் செய்கின்றனர்.

வாகனங்கள் வழி ஒலிமாசை உண்டாக்குவதில் இந்தியா தலைமை இடம் வகிக்கிறது. மனிதர்களின் காதுகளைச் செவிபடச் செய்வதுடன் சாலைகளின் இருமருங்கிலும் உள்ள பறவைகளையும், விலங்குகளையும் தம் இருப்பிடத்தைவிட்டு வாகன இரைச்சல் விரட்டி விடுகிறது. செடிகொடிகள் இயல்பாகத் தழைப்பதைத் தடுக்கிறது. நகர்வன, ஊர்வன, பறப்பன, நடப்பன ஆகிய உயிரினங்களின் இதயத்தை ஒலிமாசு தொடர்ந்து பாதிக்கிறது. குறிப்பாக வாகனங்கள் வெளிப்படுத்தும் கார்பன் – மோனாக்ûஸடு வாழ்நாளைக் குறைத்து நாளடைவில் உயிரையே பறிக்கவல்லது.

ஒலியைப் பெருக்குவதில் வாகனங்களுடன் போட்டி போடுகின்றவை நம் அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுகள். அவர்கள் நடுவீதி மேடைகளின்மேல் முன் உரக்கக் கத்துவதை ஒலிப்பெருக்கிகள் நாலாபுறமும் உச்சஸ்தாயிலில் எடுத்துச் செல்லுகின்றன. நம்மூர்க் கோயில் திருவிழா, பூப்பு, திருமணம், வளைகாப்பு முதலான அனைத்துச் சடங்குகளிலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளைக் கட்டி, பாடல்களைப் போட்டு, பெருத்த தொல்லையை ஏற்படுத்துகிறார்கள். உறக்கம் போகிறது; அமைதியும் போகிறது. காவல்துறையின் அனுமதி என்பது பெயருக்குத்தான்.

நம் ஜனநாயகத் தேர்தல் முறையின் அண்மைப் பிரசவம் ஆட்டோக்களில் ஒலிபெருக்கிகளைக் கட்டித் தெருவெல்லாம் அலற விடுவது, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் இந்த முறையில்தான் ஜனநாயகத்தைக் காப்பாற்றின; காப்பாற்றுகின்றன. மக்கள் இந்தச் சப்தத்தைக் கேட்டா வோட்டு போடுகிறார்கள்? அவ்வளவு அறிவு குறைந்தவர்களா அவர்கள்? ஒருக்காலும் அல்லர்.

மிகச் சப்தமாகப் பேசுவதும், மேடையில் ஒலிபெருக்கிக்கு முன் முழங்குவதும், அதை மேலும் ஒலிபெருக்கி வைத்து நாலாபுறமும் அமைதியை அழிப்பதும், தேர்வுக்குப் படிக்கின்ற குழந்தைகளைப் பற்றியோ, நோயாளிகளைப் பற்றியோ, முதியவர் பற்றியோ எந்தவித அக்கறையும் இல்லாமல் ஒலிபெருக்கிகளை அலறவிடுவதும், சுதந்திர நாட்டில் நம் உரிமைகள் ஆகிவிட்டன.

அயல்நாட்டு ஐந்தாண்டு பணியின்போது ஆப்பிரிக்கக் கண்டத்து செனகால் நாட்டில் நானும், என் குடும்பத்தினரும் ஒரு வீட்டில் தங்கியிருந்தோம். நான், என் மனைவி, ஏழே வயதான என் மகன். புதிதாக வாங்கி வீட்டில் வைத்திருந்த வானொலியையும், தொலைக்காட்சியையும் நம் ஊரைப்போல மிக உரத்து வைப்பது மகனுடைய வழக்கம். இரண்டுநாள் பார்த்தபிறகு எங்கள் வீட்டுக்குப் பின்வீட்டில் இருந்த ஓர் ஆப்பிரிக்கப் பெண்மணி எங்கள் வீட்டிற்கு வந்தார். வாயில் மணியை அடித்துவிட்டு (என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்) என்று ஃபிரெஞ்ச் மொழியில் சொல்லி, வாயிலில் நின்றவர், “”உங்கள் வீட்டில் வானொலியும், தொலைக்காட்சியும் மிக உச்சஸ்தாயில் அலறுகின்றன. அவற்றை ஒலிகுறைத்து வீட்டில் உள்ளவர் மட்டுமே கேட்கும்படியாக வைத்து ரசிக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு விடைபெற்றுவிட்டார்.

ஆப்பிரிக்க, தென்அமெரிக்கக் கண்டங்களில் உள்ள வளரும், வளரா நாடுகளில் கூடத் தேர்தலின் போது இத்தனைக் கூச்சல் இல்லை. தெரு முழக்கம் இல்லை, தெருக்கூட்டம் இல்லை. ஐரோப்பிய, அமெரிக்க ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஜனநாயக நாடுகளில் ஆர்ப்பாட்டம் எதுவுமின்றித் தேர்தல்கள் நடக்கின்றன. நம் நாட்டில் மட்டும் இந்த அளவு சப்தம் ஏன்? ஆர்ப்பாட்டம் ஏன்? இது மட்டுமா? தீபாவளிக்கு மட்டும் வெடிக்க வேண்டிய பட்டாசுகளை அரசியல்வாதிகளின் பிறந்தநாள்களின்போதும், தேர்தல் வெற்றிகளின்போதும், வெடித்துச் சப்தம் எழுப்புகிறார்கள். இச் சப்தம் மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருமா எரிச்சலை ஊட்டுமா என்பது பற்றிச் சிந்திப்பதே இல்லை.

மிகுந்த சப்தத்தைக் கேட்பதிலும், பொறுத்துப் போவதிலும் ஆர்வமும் இயல்பும் இருத்தலைப் போலக் கண் கூசும் வெளிச்சத்திலும் நமக்கு இயல்புக்கு மீறிய மோகம் இருக்கிறது. சாலைகளிலும் சந்திப்புகளிலும் அரசியல் கூட்டங்களிலும் கண்ணைக் கூசச் செய்யும் விளக்குகளைப் பொருத்துவது நம் பழக்கம். கோயில் திருவிழாக்களிலும் அப்படியே. மின்சாரப் பற்றாக்குறை உள்ள நாட்டில் வெற்று ஆர்ப்பாட்டங்களுக்காக, மின்சக்தியை வீணாக்குவது என்ன நியாயம், என்ன சமூக நீதி?

நம் நகர்ப்புறச் சுவர்களுக்கு உயிர் மட்டும் இருக்குமானால் தலையில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழும். அவ்வளவு சுவரொட்டிகள். சுவரொட்டிகளுக்கு மேல் சுவரொட்டிகள். அதுமட்டும்தானா? ஒரு கட்சிப்பிரமுகர் வருகிறார் என்றால் அவர் உருவம் பொறித்த பல கட்அவுட்களும் பல அடி உயரத்தில் வழிநெடுக நிறுத்தப்படுகின்றன. சாலைகளின் இருமருங்கும் தோண்டிக் குழிபறித்து வளைவுகள் அமைக்கப் பெறுகின்றன. இவற்றால் சமூக ஆரோக்கியத்தைக் குலைக்கும், தனிமனித வழிபாடு ஒருவேளை வரலாம். ஆனால் அவ்வழிபாடும் வளருகிற வேகத்தில் மறந்துவிடும். இவற்றால் ஈர்க்கப்பட்டு மக்கள் வோட்டுப் போட்டு விடுவார்களா என்ன? தமக்கோ தொகுதிக்கோ என்னென்ன செய்தார் என்று சீர்தூக்கிப் பார்க்கும் பகுத்தறிவு நம் மக்களிடம் இல்லையா என்ன? விளம்பரம் செய்யத் தொலைக்காட்சிகள் வந்துவிட்டன. வானொலிகள் வந்துவிட்டன. இவற்றைப் பொதுமக்கள் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள். இவற்றை மட்டுமே பயன்படுத்திப் பிரசாரங்களை அரசியல்கட்சிகள் அமைத்துக் கொள்ள வேண்டும். பாதிக்குப்பாதி படிக்காத மக்கள் உடைய நாட்டில் ஆடம்பர வாசகங்களை உடைய சுவரொட்டிகளை ஒட்டுவதால் காசும், காலமும் சுவர்களும்தான் வீணாகின்றன.

காதைப் பிளக்கும் சப்தமும், கண்ணைப் பறிக்கும் வெளிச்சமும், கருத்தைக் குழப்பும் விளம்பரமும், நாம் இன்னும் உரிய பக்குவத்தை அடையவில்லை என்றே காட்டுகின்றன. இவற்றை முற்றுமாக வெறுக்கும் படித்த இளைஞர்கள், பெரியவர்கள், நடுத்தரமக்கள் அறுபது சதவீதத்துக்கு மேலாக இருக்கிறார்கள். மிதமிஞ்சிய சப்தமும், வெளிச்சமும், விளம்பரமும் உரியவர்களைக் கணிசமான மக்களிடமிருந்து அந்நியப்படுத்துகின்றன; அந்நியப்படுத்தும் என்பதே உண்மை!

(கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.)

Posted in Ad, Ads, Advertisement, Banner, Cinema, Disturbance, Elections, Electronic, Environment, Hoardings, Impact, Light, Motor, Nature, Noise, Party, Politics, Polls, Pollution, Sound, Vehicles, Vision | Leave a Comment »