Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Sinhalese’ Category

Police arrest 2 French journalists for filming Sri Lanka military checkpoint: Rights group

Posted by Snapjudge மேல் திசெம்பர் 28, 2007

தென்னிலங்கையில் இராணுவச் சோதனைச் சாவடியை படம்பிடித்தாகக் குற்றம்சாட்டி பிரான்ஸ் ஊடகவியலாளர்கள் கைது

இலங்கையில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் காலி மாவட்டத்திலுள்ள பூசா தடுப்பு முகாமிற்கு செல்லும் வழியிலுள்ள இராணுவச் சோதனைச் சாவடியொன்றினை படம்பிடித்ததாகக் குற்றஞ்சாட்டி பிரான்ஸ் நாட்டு தொலைக்காட்சி நிறுவனமொன்றைச் சேர்ந்த இரண்டு பெண் ஊடகவியலாளர்கள், இலங்கைப் படையினாரால் கைதுசெய்யப்பட்டு ரத்கம பொலிசாரினால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

இது குறித்து சுதந்திர ஊடக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், காலி மாவட்டத்திலுள்ள பூசா தடுப்பு முகாமிற்கு செல்லும் தமிழ்க் குடும்பம் ஒன்றினை படம்பிடிக்கும் நோக்குடன், பிரான்ஸ் 24 என்ற தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த இந்தப் பத்திரிகையாளர்களும், அந்த தமிழ்க் குடும்பத்துடன் அந்த முகாமிற்கு செல்லும் வழியில் ரத்கம எனும் பொலிஸ் பகுதியில் இந்த சம்பவம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றதாகத் தெரிவித்திருக்கிறது.

கிறிஸ்துமஸ் தினமான இன்று இந்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள், அவர்களுடன் சென்ற தமிழ் குடும்பத்துடன் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்ததையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டி தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தினை இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான செய்திகளை வெளியிட்டுவரும் வெளிநாட்டு ஊடகங்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல் என்று வர்ணித்துள்ள சுதந்திர ஊடக அமைப்பு, தமிழ்க்குடும்பம் ஒன்றை படம்பிடிப்பது சட்டவிரோதமான செயல் அல்ல என்றும் இவர்கள் மீதான விசாரணைகளைத் துரிதப்படுத்தி, இவர்கள் கூடிய சீக்கிரத்தில் விடுவிடுக்கப்பட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இந்தக் கைது தொடர்பாகக் கருத்துவெளியிட்ட உயர் பொலிஸ் அதிகாரியொருவர், பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதனை உறுதி செய்திருப்பதுடன், அவர்கள் பத்திரிகையாளர்கள் என்பதற்கான ஆவணங்கள் எதனையும் தம் வசம் வைத்திருக்கவில்லை என்றும், படம்பிடிக்க அனுமதிக்கப்படாத இடங்களில் அவர்கள் படம்பிடித்ததனாலேயே கைதுசெய்யப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக கொழும்பின் சுதந்திர ஊடக இயக்கத்தைச் சேர்ந்த சிவகுமாரன் தெரிவிக்கும் கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் நேயர்கள் கேட்கலாம்.


திருகோணமலையில் மழையை அடுத்து வெள்ளம்; மக்கள் பரிதவிப்பு

இலங்கையில் வெள்ளம் – பழைய படம்

இலங்கையில் நாடளாவிய ரீதியில் பெய்த கடுமையான மழை தற்போது ஓரளவு ஓய்ந்துள்ள போதிலும், திருகோணமலை மாவட்டத்தில், மழையை அடுத்து காட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஈச்சலம்பற்று பிரதேச செயலர் பிரிவில் – குறிப்பாக வெருகல் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்து மாவடிச்சேனை பாடசாலையில் தஞ்சம் அடைந்துள்ளதாக பிரதேச
செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கே மட்டக்களப்பு மாவட்டத்துடனும், வடக்கே திருகோணமலையுடனும் வெருகல் பிரதேசம் போக்குவரத்தின்றி துண்டிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்ச்சியில், இவை குறித்த தகவல்களை தொகுத்துத் திருகோணமலை செய்தியாளர் ரட்ணலிங்கம் தொகுத்து வழங்கக் கேட்கலாம்.


வட இலங்கை மோதல்: 3 சிவிலியன்கள் கொலை

இலங்கை அரச படையினர்

இலங்கையின் வடக்கே வவுனியாவில் திங்கள் இரவு இடம்பெற்ற வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 3 சிவிலியன்கள் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வவுனியா பொலிசார் தெரிவிக்கின்றனர்.

வவுனியா இராசேந்திரன்குளம் பகுதியில் இரண்டு உழவு இயந்திரங்களில் மரக்குச்சிகளைக் களவாடி ஏற்றிவந்த இருவர் மீது குளக்கட்டு பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அந்த இருவரும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா செக்கடிபிலவு பகுதியில் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகள் இருவர், வீட்டிலிருந்த ஒரு குடும்பஸ்தரைத் தேடிவந்து, அவரை வீட்டிற்கு வெளியே அழைத்துச்சென்று சுட்டுக்கொன்றுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதற்கிடையில் மன்னார், மற்றும் முகமாலை மோதல் முன்னரங்கப் பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் திங்களன்று இடம்பெற்ற மோதல்களின்போது 13 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், 5 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


3 வருடங்களாகியும் மட்டக்களப்பில் சுனாமியில் வீடிழந்தவர்கள் பலருக்கு நிரந்தர வீடில்லை – பெட்டகம்

படம் சுனாமி அகதி முகாம்

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 3 வருடங்களாகிவிட்ட நிலையில் பெரிதும் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் வீடுகளை இழந்திருந்த குடுமபங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொடர்ந்தும் நிரந்தர வீடுகளின்றி தற்காலிக கொட்டில்களிலேயே தங்கியிருக்கின்றனர்.

65 மீட்டர் கடலோர பிரதேசங்களில் வசித்து வந்த இக்குடும்பங்களுக்கு வேறு இடங்களில் நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.

அதிகாரிகளின் தகவல்களின்படி, 65 மீட்டர் கடலோர பிரதேசத்திற்குள் வசித்த வந்த 4900 குடும்பங்களில் இதுவரை 2300 குடும்பங்களுக்கு மட்டுமே நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

அநேகமான பிரதேசங்களில் ஒரு பகுதியினருக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்டப்டுள்ள அதேவேளை சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடுகளை இழந்திருந்த 815 குடும்பங்களில் ஒரு குடும்பத்திற்குக்கூட இதுவரை நிரந்தர வீடு வழங்கப்டப்டவில்லை.

இதனை ஏற்றுக் கொண்டுள்ள பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பொருத்தமான காணிகளை தெரிவு செய்தல், மண் போட்டு நிரப்புதல் போன்ற சில காரணங்களினால் தமது பிரதேசத்தில் வீடமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி மீள்கட்டுமானப் பணிகளின் நிலை குறித்த பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


Posted in Boossa, Channels, Colombo, Conflict, Downpour, Eelam, Eezham, Environment, Floods, Freedom, Galle, LTTE, Media, MSM, Nature, Rains, Sinhalese, Sri lanka, Srilanka, Triconamalee, triconmalee, Trincomalee, Tsunami, TV, Vavuniya, Water, wavuniya | Leave a Comment »

Karuna’s trial for “war crimes” urged – Sri Lanka unveils biggest war budget as fighting escalates

Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2007

வட இலங்கையில் கடும் மோதல்; உயிர்ச்சேதம் குறித்து அரசு-புலிகள் தரப்புகளிலிருந்து முரண்பட்ட தகவல்கள்

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில், முகமாலை முதல் கிளாலி வரையிலான இராணுவ முன்னரங்க பகுதியில் புதன்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது இருதரப்பினருக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இத்தாக்குதல்கள் பற்றிக் கூறுகையில், அதிகாலை 5.30 மணியளவில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தை நோக்கி முன்னேறிச் சென்று அவர்களது முன்னரங்க பகுதிகளைக் கைப்பற்றி புலிகளின் 6 பதுங்குகுழிகளை அழித்து, அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரையில் முன்னேறிச் சென்று சேதங்களை ஏற்படுத்திவிட்டு காலை 7 மணியளவில் படையினர் தமது நிலைகளுக்குத் திரும்பியுள்ளார்கள் என்று கூறினார்.

கிளாலி முதல் முகமாலை வரையிலான பகுதிகளில் ஏ9 வீதிக்கு வடக்காகவும், தெற்காகவும் இந்தச் சண்டைகள் நடைபெற்றன. இதில் 52 விடுதலைப் புலிகளும் 11 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். மேலும் 41 படையினர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என உதய நாணயக்கார தெரிவித்தார்.

அதேநேரம் இந்த மோதல் சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகளின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன், கிளாலி முதல் முகமாலை வரையிலான பகுதிகளில் இன்ற இராணுவத்தினர் பெரும் எடுப்பில் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியை விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளார்கள் என்றும், இதன்போது 20க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாகவும், விடுதலைப் புலிகள் தரப்பில் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சண்டையின்போது இராணுவத்தினருக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்றும் உதவியாக தாக்குதலில் ஈடுபட்டதாகவும், இராணுவத்தின் டீ55 ரக யுத்த டாங்கியொன்று தங்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்திடமிருந்து பெருமளவு ஆயுதத் தளவாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.


இலங்கை வரவு செலவுத் திட்டம்: அரசு செலவினங்கள் அதிகரித்தது

மஹிந்த ராஜபக்ஷ
ஜனாதிபதி பட்ஜெட் உரையை வாசிக்கிறார்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளிற்கு மத்தியில் இலங்கை நிதியமைச்சரும், ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஷ 2008 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினை புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கும் மூன்றாவது வரவு செலவுத்திட்டம் இது.

அடுத்த நிதியாண்டிற்கான அரசின் மொத்த உத்தேச வருமானமாக சுமார் 750.74 பில்லியன் ரூபாய்களும், மொத்த உத்தேச செலவினங்களாக 1044.18 பில்லியன் ரூபாய்களும் காட்டப்பட்டிருப்பதோடு, துண்டுவிழும் தொகை சுமார் 293.44 பில்லியன் ரூபாய்களாகவும் கணக்கிடப்பட்டிருக்கின்றன.

கடந்த மாதம் அரசு முன்வைத்த நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தின்படி, 2008 ஆண்டு தேசிய பாதுகாப்பு செலவினங்களிற்காக 166.44 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது 2007ஆம் ஆண்டிற்கான உத்தேச தேசிய பாதுகாப்பு செலவினங்களுடன் ஒப்பிடும்போது ஏறத்தாழ 20 சதவீத அதிகரிப்பாகும்.

இலங்கையில் கடந்த இரண்டு வருடகால பொருளாதார வளர்ச்சி வீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதமாகக் காணப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த வருடம் இந்த வளர்ச்சி வீத்ததினை 7.5 வீதமாக உயர்த்த சகலரினது ஒத்துழைப்பையும் கோரினார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பினைப் பேணுவதில் தனது அரசிற்கு உண்டான தீவிர கவனத்தினை வெளியிட்டுப் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வினைக் காணுவதற்கு முன்பாக நாட்டிலுள்ள பயங்கரவாதம் முற்றாக ஒழிக்ப்படுவது இன்றியமையாதது என்றும் தெரிவித்தார்.

இந்த வரவு செலவுத்திட்டத்தினை ஒரு யுத்த வரவு செலவுத்திட்டம் எனக் குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபையைப் புறக்கணித்திருந்தார்கள்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வரும் ஆண்டில் 7.5 சதவீதம் இருக்கும் என்று இந்த வரவு செலவுத்திட்டத்தில் மதிப்பிடப்பட்டிருக்கிறது.

போர்ச்சூழலில் இந்த வளர்ச்சியை எட்டமுடியுமா? மேலும், பொதுமக்களை பாதிக்கும் பணவீக்கம்,விலைவாசி உயர்வு போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் இந்த திட்டத்தில் இருக்கின்றனவா? போன்ற கேள்விகளுக்கு கொழும்பில் உள்ள பொருளாதாரப் பகுப்பாய்வாளர் முத்துக்கிருஷ்ணன் சார்வானந்தன் பதிலளிப்பதையும் நேயர்கள் கேட்கலாம்.


லண்டனில் கைதான கருணாவை சித்ரவதை குற்றங்களுக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

கர்ணல் கருணா
விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய தளபதியாக இருந்தவர் கர்ணல் கருணா

சித்திரவதை செய்தது, சிறார் போராளிகளை பயன்படுத்தியது உட்பட பல்வேறு குற்றங்களை செய்ததாக கர்ணல் கருணா மீது பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் குற்றம்சுமத்துகின்றன.

மனித உரிமை அமைப்புகளை சேர்ந்தவர்கள், கருணாவுக்கு எதிரான ஆதாரங்களை திரட்ட முயன்று வருகிறார்கள்.

இப்படி திரட்டப்படும் ஆதாரங்களை பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் கையளித்து, அவர் மீது வழக்கு தொடர முடியும் என்கிற நம்பிக்கையுடன் இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

இலங்கையில் நடந்த மனித உரிமை துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பான அந்நாட்டின் முக்கிய நபர்களில் ஒருவர் கருணா என்று வர்ணிக்கிறார் ஹூமன் ரைட்ஸ் வாட்ச் என்கிற மனித உரிமை அமைப்பின் சட்ட மற்றும் கொள்கை விவகாரங்களுக்கான இயக்குநர் ஜேம்ஸ் ரோஸ்.

கருணா மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்று தாங்கள் உறுதியாக நம்பு வதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் கருணா நடத்திய மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பாகவும், போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் அவர் மீது இலங்கையில் வழக்கு தொடரப்படும் என்பதில் தங்களுக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை என்றும், காரணம், இலங்கை அரசு, குறிப்பாக ராணுவ தளபதிகள் கருணா குழுவுக்கு ஆதரவாக இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கருணா மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து வழக்கு தொடுக்கக்கூடிய அளவுக்கு தேவையான ஆதாரங்கள் இருக்கிறது என்று பிரிட்டிஷ் அதிகாரிகளை இணங்க வைக்கக்கூடிய வலுவான ஆதாரங்களை திரட்டுவது என்பதும், அந்த ஆதாரங்களை கேணல் கருணா பிரிட்டனில் இருக்கும்போதே பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் அளிப்பது என்பதும் மனித உரிமை அமைப்புகள் முன்பிருக்கும் தற்போதைய சவால்.

பிரிட்டனின் குடிவரவு குடியகல்வு பிரிவின் தடுப்புக்காவலில் கருணா தற்போது தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக, பிரிட்டிஷ் உள்துறை அலுவலகம் உறுதி செய்துள்ளது.

இவர் மீதான வழக்கு குறித்து மேலதிகமாக பேசுவதற்கு அதிகாரிகள் தயாராக இல்லை.

Posted in Abductions, Airforce, Budget, Conflict, Crime, crimes, Defense, enquiry, Extremism, Fight, Freedom, Govt, HR, Independence, Inquiry, Karuna, Law, LTTE, Mahinda, majority, Military, minority, murders, Navy, Order, Peace, Rajapakse, Rebels, Sinhala, Sinhalese, Soldiers, Sri lanka, Srilanka, Tamils, Terrorism, TMVP, Torture, troops, Vidudhalai, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, War | Leave a Comment »