Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Agreement’ Category

Sri Lanka scraps truce pact with LTTE & Ceasefire agreement will end after Thai pongal: Tamil Tigers

Posted by Snapjudge மேல் ஜனவரி 3, 2008

விடுதலைப் புலிகளுடனான போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் உத்தியோகப்பூர்வ முன்னறிவிப்பு

கடந்த 2002ஆம் ஆண்டு பிப்பிரவரி 22 ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்புடன் செய்துகொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் உத்தியோகப்பூர்வமாக 14-நாள் முன்னறிவிப்பினை வழங்கியிருக்கிறது.

போர்நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவதாக இலங்கை அரசாங்கம் கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தது.

இது தொடர்பாக இலங்கை வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், போர்நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் கொடுக்கப்பட்டுள்ள இந்த 14-நாள் முன்னறிவிப்பின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி போர்நிறுத்த உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக முடிவிற்குவரும் என்று தெரிவித்திருக்கிறது.

அத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் 2002ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் திகதி உருவாக்கப்பெற்ற இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் செயற்பாடுகளும் முடிவிற்குவரும் என வெளிநாட்டமைச்சின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை இன்று பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா, பல்லாயிரக்கணக்கான தடவைகள் புலிகள் அமைப்பினரால் மீறப்பட்டு செயலற்றுப்போயுள்ள ஒரு ஒப்பந்தத்தினைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்க அரசு தயாராக இல்லை என்று தெரிவித்தார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் பேச்சுக்களில் ஈடுபடுவது பயனற்றது என்று தெரிவித்த அமைச்சர் யாப்பா, எதிர்காலத்தில் நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, புலிகள் ஆயுதங்களை கீழேவைத்துவிட்டு பேச்சுகளிற்குத் தயார் என்று கூறினால் அது குறித்து பரிசீலிக்க அரசு தயாராக இருக்கிறது என்றும் அதேவேளை அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவினூடாக அரசியல் தீர்வொன்றினைக் காண்பதில் அரசு தீவிரமாக ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

இலங்கை அரசின் இந்த பாரதூரமான முடிவு தமக்குக் கவலையளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள நோர்வேயின் இலங்கைக்கான விசேட சமாதானத்தூதுவர் எரிக் சொல்க்ஹெய்ம், வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு மேலும் வன்முறைகள் அதிகரிக்கவே வழிகோலும் என்றும் அச்சம் வெளியிட்டுள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்ற இலங்கை அரசின் அறிவிப்பு குறித்து இலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இன்னமும் கருத்து எதையும் வெளியடவில்லை. இந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ரவி கருணநாயக அவர்கள் இலங்கை அரசின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக நார்வே அரசுக்கு தெரிவிக்கப்பட்ட பிறகுதான் தங்களது கட்சி இது குறித்து கருத்து வெளியிட முடியுமென்று தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு – கண்டனம்

இரா.சம்பந்தர்

அரசாங்கத்தின் அறிவிப்பு பற்றி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், இலங்கை அரசாங்கம் போர்நிறுத்தத்திலிருந்து விலகியதாக அறிவித்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை ஏனெனில் அந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் அப்பட்டமாக மீறிவந்துள்ளது என்று தெரிவித்தார்.

இராணுவ ரீதியில் ஒப்பந்தம் மீறப்பட்டது மட்டுமின்றி, வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு அவர்கள் சொந்த இடங்களை விட்டு அகதிகளாக வெளியேறும் நிலை இந்த போர்நிறுத்த காலத்தில் ஏற்பட்டதுதான் தாங்கள் இங்கே வலியுறுத்துகின்ற விஷயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் போர்நிறுத்த விலகல் அறிவிப்பு குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா பிரிவின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் யோகராஜன், மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான ராதாகிருஷ்ணன் ஆகியோரது கருத்துகளையும் நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


வட இலங்கை மோதல்கள் – முரண்பட்ட தகவல்கள்

பதுங்கு குழி

மன்னார் பாலைக்குழி பகுதியில் வியாழக்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டைகள் இடம்பெற்றதாகவும், இதில் 6 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் 6 படையினர் காயமடைந்ததாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் 6 பதுங்கு குழிகளைக் கொண்ட முன்னணி பாதுகாப்பு வரிசையொன்றும் படையினரால் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

இந்த மோதல்களை உறுதிப்படுத்தியுள்ள விடுதலைப் புலிகள், மன்னார் பாலைக்குழி அணைக்கட்டு பகுதியில் பெரும் எடுப்பில் முன்னேற முயன்ற இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், இதில் 10 படையினர் கொல்லப்பட்டு 15 பேர் காயமடைந்ததாகவும் தங்கள் தரப்பில் சேதம் எதுவுமில்லை என்றும் அறிவித்திருக்கின்றனர்.

வவுனியா நாவற்குளம் பகுதியில் வியாழனன்று இடம்பெற்ற மற்றுமொரு மோதல் சம்பவத்தில், மேலும் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

இதற்கிடையில், மன்னார் உயிலங்குளம் மணற்குளம் பகுதியில் மோட்டார் குண்டு ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 4 சிவிலியன்கள் காயமடைந்ததாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திலிருந்து ஏவப்பட்ட மோட்டார் குண்டே வீழ்ந்து வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு பெண்களும், 13 வயது சிறுவன் ஒருவனும், 7 வயதுடைய சிறுமி ஒருவருமே இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாக மன்னார் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். காயமடைந்தவர்கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கண்ணி வெடி

இதேவேளை, மணலாறு பதவியா பகுதியில் இராணுவ டிரக் வண்டியொன்று அமுக்க வெடியில் சிக்கியதையடுத்து, 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 4 படையினர் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.


மகேஸ்வரன் கொலையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் கடையடைப்பு

சுட்டுக்கொல்லப்பட்ட மகேஸ்வரன்

கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வளவினுள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாழனன்று வவுனியாவில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. வங்கிகள், அலுவலகங்கள் என்பனவும் இயங்கவில்லை.

யாழ் நகரில் கடைகள் திறக்கப்படாதிருந்ததாகவும், இராணுவத்தினர் வந்து கடைகளைத் திறக்குமாறு உத்தரவிட்டதையடுத்து, கடைகள் யாவும் திறக்கப்பட்டதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சொந்த ஊராகிய யாழ்ப்பாணம் காரைநகரில் கறுப்பு வெள்ளை கொடிகள் கட்டப்பட்டு, கடைகள் அலுவலகங்கள், பாடசாலைகள் என்பன மூடப்பட்டு காரைநகர் பிரதேசம் சோகமயமாகக் காட்சியளித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, மகேஸ்வரனின் கொலை தொடர்பாக, யாழ்பாணத்தைச் சேர்ந்த வசந்தன் என்ற நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நபர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழும், மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது அவருடைய பாதுகாப்பு பணியிலும் இருந்துள்ளார் என்றும் ஆனால் இந்தக் கொலை குறித்து யார் மீதும் இலங்கை அரசு சந்தேகப் படவில்லை என்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக பேசவல்ல இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்கவல்ல தெரிவித்திருந்தார்.

ஆனால் ஈ.பி.டி.பி.யுடனோ தன்னுடனோ வசந்தன் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. இந்த செய்தி எவ்வித அடிப்படையும் இல்லாத பொய் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

Posted in Agreement, Assassin, Assassinations, Attacks, Ceasefire, dead, Douglas, Eelam, Eezham, EPDP, Jaffna, Killed, LTTE, Mahesvaran, Maheswaran, Mannaar, Mannar, Murder, Peace, Ranil, Sri lanka, Srilanka, Tamil, Tamil Tigers, Tigers, Truce, Vavuniya, War, wavuniya, Wawuniya | 1 Comment »

Sri Lanka to ban Tamil Tigers, abrogate CFA, says Gotabhaya

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு விலகல்

இலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பிபிசியிடம் கருத்து வெளியிட்ட இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், கள நிலவரங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை புலிகள் பத்தாயிரம் தடவைகளுக்கும் மேலாக மீறியிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

அமைதி வழியில் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியுமா என்பதை பார்ப்பதற்காகத் தான் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டதாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் அதற்கு மாறாக தேசத்தின் பாதுகாப்பு பலவகையிலும் அச்சுறுத்தப் படுவதாகவும் ரம்புக்கவெல்ல கூறினார்.

ஒவ்வொருநாளும் இத்தகைய அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், இந்த ஒப்பந்தத்தை இனிமேலும் நடைமுறைப் படுத்தும் நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லை என்பதாலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான நடைமுறைகளை இன்றிலிருந்தே தாங்கள் துவங்கி விட்டதாகவும் அவர் கூறினார்.

 


கொழும்பில் குண்டுத்தாக்குதல்-நான்கு பேர் பலி 28 பேர் காயம்

இலங்கையின் தலைநகர் கொழும்பில் இராணுவத்தினர் பயணம் செய்த ஒரு வாகனத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் பலியாகி, இருபத்தி எட்டு பேர் காயமடைந்துள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

கொழும்பின் இதயப் பகுதியான கொம்பனி வீதியில் இராணுவ பஸ் வண்டியை இலக்கு வைத்து, இன்று-புதன் கிழமை காலை நடத்தப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுத்தாக்குதலில் இராணுவ வீரர் ஒருவரும், மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களில் ஒருவர் பெண். பதினொரு இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 28 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலின்போது பொதுமக்கள் பயணிக்கும் பஸ்வண்டியொன்றும் சேதமடைந்திருக்கிறது.

சம்பவ இடத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
சம்பவ இடத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

இராணுவத் தலைமையகம், விமானப்படைத்தலைமையகம் போன்ற பல்வேறு பாதுகாப்புக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையங்களிலிருந்து சில நூறு மீட்டர் தொலைவிலுள்ள நிப்பொன் ஹோட்டல் சந்திக்கு அருகே நடைபெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் நால்வர் மிகவும் மோசமாக காயமடைந்திருப்பதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குண்டுவெடிப்பில் நிப்பொன் ஹோட்டலின் முன்புறம் மோசமாகச் சேதமடைந்திருக்கிறது.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் நூற்றுக்கணக்கான காவல்துறையினரும், ஆயுதப் படையினரும் குவிக்கப்பட்டதோடு, இந்தப்பகுதியின் போக்குவரத்து பல மணிநேரம் பாதுகாப்பு படையினரால் தடை செய்யப்பட்டிருந்தது.

குண்டு தாக்குதலுக்குள்ளான பேருந்து
குண்டு தாக்குதலுக்குள்ளான பேருந்து

இன்றைய சம்பவம் தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு, இன்று கலை சுமார் 9.30 மணியளவில் நோய்வாய்ப்பட்டுள்ள இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ்வண்டியை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் இந்த குண்டு தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறது. ஆனால் புலிகள் இதை மறுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த சக்திவாய்ந்த கிளேமோர் குண்டு நிப்பொன் ஹோட்டலின் குளிரூட்டும் இயந்திரத்தின் வெளிப்பாகத்தின் உட்புறத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்திருப்பதாகவும், பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் குண்டு வெடிப்பு தொடர்பான புலன் விசாரணைகளை காவ்ல்துறையினர் ஆரம்பித்திருக்கிறார்கள்.

 


மகேஸ்வரன் படுகொலை, கொழும்பு குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கண்டனம்

நேற்று, செவ்வாய்க்கிழமை கொழும்பு கொட்டாஞ்சேனை பொன்னம்பலவாணேசர் ஆலயத்தினுள் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இனந்தெரியாத துப்பாக்கி நபரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் படுகொலையையும், இன்று கொழும்பில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையும் அமெரிக்க அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரன்
படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரன்

இது தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம், மகேஸ்வரனின் கொலை தொடர்பில் இலங்கை அரசாங்கம் பூரண விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அதற்குப் பொறுப்பானவர்களைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு தாக்குதல்களின்போதும் கொல்லப்பட்டவர் களினதும், காயமடைந்தவர்களினதும் குடும்பங்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துள்ள அமெரிக்க அரசாங்கம் இலங்கை இனப்பிரச்சனைக்கு சமாதான வழியில் பேச்சுக்களினூடாக அரசியல் தீர்வொன்றினைக்காண சகல தரப்பினரும் முன்வரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இதேவேளை, மகேஸ்வரனின் பூதவுடல் இன்று அதிகாலை வைத்தியசாலையிலிருந்து வெள்ளவத்தையிலுள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நேற்றையதினம் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் அவரது பூதவுடலிற்கு தமது அஞ்சலிகளைத் தெரிவித்துள்ளனர். இவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை கொழும்பில் இடம் பெறவிருப்பதாக கூறப்படுகிறது.

கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் குறித்த விவரங்கள்

மகேஸ்வரனின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர் குறித்து, இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், பிபிசி தமிழோசையிடம் பின்வரும் விவரங்களை தெரிவித்தார்.

அவரது பெயர் வசந்தன் என்றும் அவரது தனிப்பட்ட விபரங்கள் கிடைத்திருப்பதாகவும், ஆனால் அவரிடம் இருந்து வாக்குமூலம் எதையும் பெறவில்லை என்றும் கூறிய கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், வசந்தன் தற்காலிகமாக தங்கியிருந்த வத்தளை வீட்டில் அவர் பயன்படுத்திய மைக்ரோ பிஸ்டலுக்குத் தேவையான தோட்டாக்கள் இருந்ததாகவும் தெரிவித்தார்.

வசந்தன் 1996 அம் ஆண்டு யாழில் இருந்து வெளியேறியதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழ் பணியாற்றியுள்ளதாகவும், மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது அவருடைய பாதுகாப்பு பணியில் இருந்துள்ளதாகவும், அரசுப் பணியில் இருந்துள்ளதாகவும், காவல்துறை பணியில் இருந்திருப்பார் என்று தாம் கருதுவதாகவும் தெரிவித்த கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், அனால் தமக்கு இது குறித்த காவல்துறை உயரதிகாரியின் முழுமையான அறிக்கை கிடைக்கவில்லை என்றும், அந்த அறிக்கை கிடைக்கும் வரை யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

Posted in Agreement, Blasts, Bombs, Ceasefire, Ceylon, CFA, Colombo, Eelam, Eelam People's Revolutionary Liberation Front, Eelam Revolutionary Organisation, Eezham, EPRLF, EROS, Fight, Gotabaya, Gotabhaya, Liberation Tigers of Tamil Eelam, LTTE, Magesvaran, Mageswaran, Mahesvaran, Maheswaran, Murder, Parliamentary Tamil United Liberation Front, Peace, People's Liberation Organisation of Tamil Eelam, plot, PLOTE, Rajapaksa, Rajapakse, Sri lanka, Srilanka, Tamil, Tamil Eelam Liberation Organisation, TELO, Temple, Thimpu, Tigers, TULF, War | Leave a Comment »

Kudos to Manmohan Singh’s Nuclear-Energy U-Turn: India – US Accord

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

சபாஷ், சரியான முடிவு!

பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இடதுசாரிகளின் வற்புறுத்தல்களுக்கு அடிபணிந்து விட்டார். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிடப்பில்போட முடிவெடுத்திருப்பது, இந்த அரசின் பலவீனத்தைத்தான் காட்டுகிறது; அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறாமல் போவதால் தேசநலன் பாதிக்கப்படுகிறது~ இவையெல்லாம் கடந்த இரண்டு நாள்களாக வெளியிடப்படும் கருத்துகள்.

ஏதோ இப்போதாவது பிரதமருக்கும் இந்த அரசுக்கும் நல்ல புத்தி வந்து நல்ல முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதே என்று சந்தோஷப்படுவதை விட்டுவிட்டு, ஒப்பந்தம் ரத்தாகிவிட்டதே என்று ஓலமிடுவது ஏன் என்பது நமக்குப் புரியவில்லை. இன்னொரு விஷயம். மன்மோகன் சிங்கின் “மைனாரிட்டி’ அரசு மிகவும் பலமாக இருந்ததுபோலவும், இப்போது திடீரென்று பிரதமரும் அரசும் பலவீனமாகிவிட்டது போலவும் சிலர் விமர்சிப்பது அதைவிட வேடிக்கையாக இருக்கிறது.

இடதுசாரிகளின் ஆதரவில் ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருக்கும் அரசு, அவர்களின் ஒப்புதல் கிடைக்காது என்று தெரிந்தும், அவர்களைக் கலந்தாலோசிக்காமல் இப்படியோர் ஒப்பந்தத்துக்குத் தயாரானதுதான் தவறே தவிர, அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிடப்பில்போட ஒத்துக்கொள்வதில் எந்தத் தவறுமில்லை என்பதுதான் நமது கருத்து.

காலாகாலத்துக்கும், அன்னிய சக்திகள் நமது இந்திய அணுசக்தி நிலையங்களைச் சோதனையிடும் அதிகாரத்தை அளிக்கும் இதுபோன்ற ஓர் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் தார்மிக அதிகாரம், பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையைப் பெறாத இந்த “மைனாரிட்டி’ அரசுக்குக் கிடையாது என்பதுதான் ஆரம்பம் முதலே நமது கருத்தாக இருந்து வந்திருக்கிறது. அந்த வகையில் தவறு திருத்தப்பட்டிருக்கிறது. அதுதான் சரியான முடிவும்கூட.

அமெரிக்காவுடனான நல்லுறவு என்பது இன்றைய உலகச் சூழலில் தவிர்க்க முடியாதது என்பதைவிட இன்றியமையாதது என்றேகூடக் கூறலாம். அமெரிக்காவுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வது என்பது வேறு, அமெரிக்காவின் நட்பு வட்டத்தில் இணைந்து, கைகோர்த்து அமெரிக்க ஆதரவு நாடாகச் செயல்படுவது என்பது வேறு. இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் அப்படியொரு நிர்பந்தத்தை இந்தியாவுக்கு ஏற்படுத்தும் என்பதுதான் அந்த ஒப்பந்தத்தின் மிகப்பெரிய ஆபத்து. அந்த ஆபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது என்கிற வகையில் சற்று ஆறுதல்.

அணிசாரா நாடுகளுக்குத் தலைமையேற்கும் தார்மிகப் பொறுப்பும், பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய நாடுகளின் உரிமைகளுக்குக் குரலெழுப்பும் கடமையும் உலக சமாதானத்துக்கும் அகிம்சைக்கும் வழிகோலும் சக்திகளுக்கு ஆதரவளிக்கும் கட்டாயமும் இந்தியாவுக்கு உண்டு. அமெரிக்காவுடனோ, வேறு எந்த வளர்ச்சி அடைந்த நாடுகளுடனோ இந்தியா தன்னை இணைத்துக் கொள்ளுமேயானால், பாதிக்கப்பட்ட பின்தங்கிய நாடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.

இந்திய மக்கள் மிகவும் புத்திசாலிகள். முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும் சரி, இப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் சரி, தன்னிச்சையாகச் செயல்பட முடியாத அளவுக்குக் கூட்டணிக் கட்சிகள் மற்றும் இடதுசாரிகளைக் கடிவாளம் பிடிக்க வைத்திருக்கிறார்கள். இதனால் ஆட்சியாளர்கள் பல தவறான முடிவுகளை அவசரப்பட்டு எடுத்துவிட முடியாமல் தடுக்க முடிகிறது. இதனால் வளர்ச்சி பாதிக்கப்படாதா என்று கேட்கலாம். வளர்ச்சி தாமதப்படுவதில் தவறில்லை. விபத்து தவிர்க்கப்படுகிறதே, அதுதான் முக்கியம்.

பிரதமர் மன்மோகன் சிங் அன்றும் இன்றும் ஒரு பலவீனமான பிரதமர்தான். அவரது அரசு அன்றும் இன்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் பதவியில் இருக்கும் ஒரு “மைனாரிட்டி’ அரசுதான். சிலவேளைகளில் அதை அவர் உணராமல் போய்விடுகிறார் என்பதுதான் நமது கருத்து. தற்போது அணுசக்தி ஒப்பந்தத்தைக் கைவிடுவதன் மூலம், தனது ஆட்சியின் உண்மையான பலத்தை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார் அவ்வளவே.

தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகப் பிரதமர் மன்மோகன் சிங் இடதுசாரிகளின் வற்புறுத்தலுக்குப் பணிந்து விட்டார் என்கிற குற்றச்சாட்டில் அர்த்தமே இல்லை. எல்லா பிரதமர்களும் எல்லா அரசியல்வாதிகளும் எதைச் செய்வார்களோ அதை அவரும் செய்திருக்கிறார். இப்போதாவது நமது பிரதமர் மன்மோகன் சிங் ஓர் அரசியல்வாதியாக சிந்திக்கத் தொடங்கியிருக்கிறாரே, அந்த வரையில் மகிழ்ச்சி!

————————————————————————————————-

ஏனிந்தத் தடுமாற்றம்?
October 18, Thursday

ஒரு வழியாக அணுசக்தி ஒப்பந்தத்துக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது என்று நினைத்தால், அப்படியொரு நல்ல காரியம் நடப்பதற்கு அமெரிக்கா அனுமதிக்காது என்று தோன்றுகிறது. தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்குடன் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தொலைபேசியில் தொடர்புகொண்டு உலக வர்த்தக நிறுவனத்தின் உடன்பாடு பற்றி சர்ச்சை செய்ததாகவும், அப்போது அவரிடம் பிரதமர் மன்மோகன் சிங் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை “உடனடியாக’ நிறைவேற்றுவதில் அரசியல் சிக்கல் இருப்பதாகத் தெரிவித்ததாகவும் அரசின் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலிருந்து ஜார்ஜ் புஷ்ஷுடன் தொலைபேசியில் பேசினால், இடதுசாரித் தலைவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்துதான் தென்னாப்பிரிக்காவிலிருந்து பிரதமர் பேசினார் என்று கேலி பேசுபவர்கள் இருக்கட்டும். எங்கிருந்து பேசினால்தான் என்ன, விஷயம் என்னவோ இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்தானே? இந்த ஒப்பந்தம் ஒத்தி போடப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்களே தவிர, கைவிடப்பட்டது என்று ஏன் அரசு திட்டவட்டமாகத் தெரிவிக்கவில்லை என்பதுதான் நமக்குப் புரியாத புதிராக இருக்கிறது.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைப் பொருத்தவரை இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவது என்பது அவருக்கு இருக்கும் அரசியல் நிர்பந்தம். இராக்கின் மீது புஷ் நிர்வாகம் தொடுத்த படையெடுப்பின் பின்விளைவுகளை அவரது குடியரசுக் கட்சி எதிர்கொள்ள வேண்டிய நிலைமை. அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவை அந்தக் கட்சி சந்திக்கும் என்பதுதான் பொதுவான எதிர்பார்ப்பு.

இந்த சூழ்நிலையில், இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளும் அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம், ஒரு மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியிருப்பதாக விளம்பரம் செய்துகொள்ள நினைத்த புஷ் நிர்வாகத்திற்கு, ஒப்பந்தம் ஒத்திபோடப்பட்டதில் ஏக வருத்தம். இந்தியாவைத் தனது துணை நாடாக்கிக் கொள்வதன் மூலம், மீண்டும் பலமடைந்து வரும் ரஷியாவையும், பொருளாதார ரீதியாகப் பெரிய அளவில் தனக்குப் போட்டியாக உருவாகி இருக்கும் சீனாவையும் எதிர்கொள்ள முடியும் என்பது அமெரிக்க வெளியுறவுத் துறையின் கணிப்பு.

இப்படி ஏகப்பட்ட கனவுகள் அமெரிக்காவுக்கு என்றால், அணு ஆயுத சக்தியைப் பெற்றிருக்கும் நாடுகளைப் பொருத்தவரை இந்தியா மேலும் தன்னிச்சையாக அணு ஆராய்ச்சியில் ஈடுபடுவது தடுக்கப்பட வேண்டும் என்பதுதான் இப்போதைய ஒரே குறிக்கோள். அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தில், தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களை அந்த நாடுகள் அழிக்காத வரையில், மற்ற நாடுகள் அணு ஆயுதச் சோதனை நடத்துவதைத் தடுக்கும் உரிமை அவர்களுக்குக் கிடையாது என்பதுதான் இந்திரா காந்தி காலத்திலிருந்து இதுவரை இருந்த அத்தனை பிரதமர்களின் கருத்தும். அதனால்தான் நாம் அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் இதுவரை கையெழுத்திடவில்லை.

இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டின் மூலம், அந்த நாடுகளின் நேரடிச் சோதனைக்கு இந்தியா உட்படுத்தப்படும் என்பதால், ஏறக்குறைய அணு ஆயுதத் தடுப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டாற் போன்ற நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம். இதுதான், அந்த நாடுகளின் எதிர்பார்ப்பு. அணுசக்தி ஒப்பந்தம் ஒத்திபோடப்பட்டிருப்பது அவர்களை ஏமாற்றமடைய வைத்திருக்கிறது.

அமெரிக்காவும், இந்த அணுஆயுத வல்லரசுகளும் என்ன நினைப்பார்களோ என்று பயந்து நம் பிரதமர் செயல்படுவதைவிட, அவரைப் பதவியில் அமர்த்தி அழகு பார்க்கும் இடதுசாரிகள் என்ன செய்வார்களோ என்று அவர் பயப்படுவதுதான் நியாயம். இந்தப் பிரச்னைக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைத்து, இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாடு கிடையாது என்று பிரதமரும் அரசும் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் அல்லது இடதுசாரிகளின் ஆதரவு தேவையில்லை என்று தீர்மானித்துத் தனது பதவியைத் தியாகம் செய்துவிட வேண்டும்.

இந்த விஷயத்தைப் பிரதமர் மேலும் ஒத்திபோடக்கூடாது. தைரியமாக ஒப்பந்தத்தைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போடவேண்டும்! அதுதான் நமது வேண்டுகோள்.

——————————————————————————————————————————–

குளறுபடியான செயல்பாடே மேல்!

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

இந்திய ~ அமெரிக்க அணுசக்தி உடன்பாடு தொடர்பான விவாதங்கள், உண்மையிலேயே இந்திய ~ அமெரிக்க உடன்பாடு பற்றியவையல்ல. அவை தத்துவார்த்தப் பிரச்னைகள் சம்பந்தப்பட்டவை. அதனால்தான் அந்த விவாதங்களில் வெளிச்சத்துக்குப் பதில், வெப்பம் அதிகமாக இருக்கிறது; அதனால்தான் அறிவார்ந்த முறையில் அதற்குத் தீர்வுகாண வழியில்லாமல் போய்விட்டது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அண்மையில் அறிவார்ந்த அணுகுமுறை ஒன்றை முன்வைத்துள்ளார். இந்தியாவில் அபரிமிதமாகக் கிடைக்கக்கூடிய கதிரியக்கக் கனிமமான தோரியத்தைப் பயன்படுத்தும் அணு மின்னுற்பத்தி நிலையங்களை நிறுவுவதன் மூலம் நமது விசைத் தேவையில் நாம் தன்னிறைவை எட்ட முடியும் என்று அவர் கூறியிருக்கிறார்.

இது தொடர்பான ஆய்வில் இந்திய விஞ்ஞானிகள் முன்னேறிய கட்டத்தில் இருக்கின்றனர்; இன்னும் ஐந்திலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் தோரியத்தை அடிப்படையாகக் கொண்ட அணு மின்னுற்பத்தி உலைகளை நாம் தயாரித்துவிடுவோம் என்று கூறுகிறார் அப்துல் கலாம்.

அதாவது, நமது சொந்த இயற்கை வளங்களைக் கொண்டே, நமது சொந்த முயற்சியாலேயே இந்தியாவுக்குத் தேவையான பெருமளவு மின்சாரத்தை உற்பத்தி செய்வது சாத்தியமானதே என்பது அதன் பொருள். விசைத் துறையில் சுயசார்பை எட்ட வேண்டும் என்று கூறிக்கொண்டு அந்த உடன்பாட்டுக்கு வக்காலத்து வாங்குவோரையும், ராணுவத் திட்டங்கள் தொடர்பான நமது சுதந்திரம் பறிபோய்விடும் என்று கூறி அந்த உடன்பாட்டை எதிர்ப்போரையும் திருப்திப்படுத்துவதாக, விசைத்துறையில் தன்னிறைவு அளிக்கும் அத் திட்டம் இருக்கும்.

பிறகு எதற்காக அனல் பறக்கும் இந்த வாக்குவாதங்கள்? அங்குதான் தத்துவார்த்தப் பிரச்னை வருகிறது. முதலாளித்துவத்துக்கு எதிராக கம்யூனிசம் என்னும் வழக்கமான பிரச்னை அல்ல இது. ஏனென்றால், பிரச்னை அதுவாக இருந்திருந்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு சேர்ந்து அந்த உடன்பாட்டை பாரதிய ஜனதா கட்சியும் எதிர்த்துக்கொண்டு இருந்திருக்காது.

அதோடு, இந்தியாவில் எப்பொழுதோ கம்யூனிசமெல்லாம் “ஃபைவ்-ஸ்டார்’ கலாசாரத்தால் கடத்திச் செல்லப்பட்டுவிட்டது; பிரகாஷ் காரத் போன்ற சிலரின் சிந்தனைகளில்தான் கலப்படமில்லாத கம்யூனிசம் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறது.

முதலாளித்துவமும் கம்யூனிசமும் கடந்த காலக் கருத்துகளாகிவிட்டன; இன்றைய மோதல், மேலாதிக்கத்துக்கும் இறையாண்மைக்கும் இடையே நடந்துகொண்டு இருக்கிறது. ஒருபுறம், உலக நாடுகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தத் துடித்துக்கொண்டு இருக்கும் அமெரிக்கா.

சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச உடன்பாட்டில் கையெழுத்திட மறுப்பது, நியூயார்க் நகரக் குப்பைகளையும் மருத்துவமனைக் கழிவுகளையும் சரக்குப் பெட்டகங்களில் போட்டு கொச்சிக்கு அனுப்பி வைத்திருப்பது போன்ற அறிவீனமான செயல்களெல்லாம், அதன் விளைவுகள்தான்.

மறுபுறம், உலகெங்கிலும் வாழும் மக்களின் சுதந்திரத் தாகம். இருப்பினும், உலக வங்கி போன்ற பல அமைப்புகளின் நடவடிக்கைகளால், ஏராளமான இந்தியர்கள் அமெரிக்க வாழ்க்கை முறைக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் மனநிலைக்கு ஆளாகிவிட்டனர்.

மன்மோகன் சிங் அரசு, தான் அமெரிக்க நிர்வாகத்துக்கு கடமைப்பட்டிருப்பது போன்றதொரு எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டது. அணுசக்தி உடன்பாட்டு விவகாரத்தில் அது மேற்கொண்ட மிரட்டல் பாணி அணுகுமுறையானது, மக்களின் அந்த எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்திவிட்டது. இந்தியாவின் இறையாண்மைக்கு அந்த உடன்பாட்டால் குந்தகம் ஏற்பட்டுவிடுமோ என்று மக்கள் மனத்தில் ஏற்பட்டுவிட்ட ஐயத்தைப் போக்குவதில் மன்மோகன் சிங் அரசு வெற்றிபெறவே இல்லை.

கடைசியாக அந்த உடன்பாட்டைக் கைவிட்டுவிடுவது என்ற முடிவுக்கு வந்த பொழுது, அறிவுபூர்வமான நிலையை மேற்கொண்டார் பிரதமர். “அதற்காக வருத்தப்படுகிறேன். ஆனால், பயணம் அதோடுமுடிந்துபோய்விடாது’ என்றார் அவர். ஆனால், அதீத ஆர்வத்தால் அதற்கு ஆதரவு தேடிக்கொண்டிருப்பவர்கள், “இனி இந்தியாவை ஒருவரும் நம்ப மாட்டார்கள்’ என்றும், தமது வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாத பிரதமர், பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் கூறத் தொடங்கிவிட்டனர்.

இது ஒருதரப்பான, நகைப்புக்குரிய வாதமாகும். உண்மையில் சொல்வதானால், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மைக் கருத்துக்குச் செவிமடுத்ததன் மூலம் இந்திய ஜனநாயகத்தின் பலத்தை மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறார் பிரதமர். “இந்தியாவில் மக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் உண்டு; இந்திய ஆட்சியாளர்கள் உணர்ச்சியற்ற பாறையல்ல’ என்பதை அவர் நிரூபித்திருக்கிறார்.

அமெரிக்காவைப் பற்றி யாரும் அவ்வாறு கூற முடியாது. தன்னிச்சையாக யுத்தத்தில் ஈடுபட்டுவரும் புஷ் அரசாங்கத்தின் நடவடிக்கையை அமெரிக்க மக்கள் மீண்டும் மீண்டும் நிராகரித்துக்கொண்டே இருக்கின்றனர். இருந்தபோதிலும் ஈரான்மீது புதிதாகப் போரைத் தொடுப்பது குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார் அந்த மனிதர்.

நமது அரசின் செயல்பாடுகள் குளறுபடியாக இருக்கலாம்; ஆனால், செயல்படாத ஜனநாயகத்தைவிட அது எவ்வளவோ மேல்.

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

Posted in Accord, Agreement, Alliance, America, Atomic, BJP, Bush, Coalition, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, deal, Electricity, energy, GWB, India, Kudos, Left, Manifesto, Manmohan, minority, NDA, Nuclear, Op-Ed, Party, PM, Politics, Power, Principles, Singh, Sonia, UDA, US, USA | Leave a Comment »

India – Pakistan Agreement on Cross Border Terrorism & Kashmir

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006

சந்தேக ஒப்பந்தம்!

இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து பயங்கரவாத எதிர்ப்புக்கான அமைப்பு ஒன்றை நிறுவுவது சாத்தியமா …? சொல்லளவில் இது சாத்தியம் என்று முஷார·ப்பும் மன்மோகன் சிங்கும் உரையாடி ஒப்பந்தமும் போட்டுவிட்டார்கள். ஆனால், செயலளவில்…?

 

கடந்த ஜூலை மாதம் மும்பையில், ஓடும் ரயில்களில் குண்டு வெடித்து அநியாயமாய் உயிர்களைக் கொள்ளை கொண்டபோது, பாகிஸ்தானின் ஆதரவும் அங்கீகாரமும் பெற்ற பயங்கரவாத அமைப்புகளே அதற்குக் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது.

இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் பாகிஸ்தான் என்னும்போது, அந்நாட்டு அரசாங்கமே இந்த பயங்கரவாத அமைப்புகளுக்குப் பொருளுதவியும் ஆயுத உதவியும் செய்கிறது என்னும்போது, அதே பயங்கரவாதத்தை எதிர்க்க அந்நாடு இந்தியாவுடன் கைகோத்து அமைப்பு நிறுவுகிறது என்பது நம்பக் கூடிய விஷயமே அல்ல.

அப்படியே சொன்ன சொல்லைக் காப்பாற்ற ஓர் அமைப்பு நிறுவப்பட்டாலும் அது எவ்வளவு தூரம் வெற்றிகரமாக இயங்கிவிட முடியும்? ‘‘இந்த அமைப்பு சரியாகச் செயல்பட்டுப் பயனளிக்காவிட்டால் பயங்கரவாதத்தை வேறு விதங்களில்தான் முறியடிக்க முயற்சி செய்ய வேண்டும்’’ என்று பிரதமர் ஒப்பந்த மை உலர்வதற்கு முன்பே சொல்லிவிட்டார்.

பரஸ்பரம் சந்தேகத்துடனும் எதிர்ப்புணர்வுடனும் நோக்கும் இரு நாடுகள் உளவுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா..? அது சாத்தியமேயில்லை. கிடைத்த தகவல்கள் முழுமையானவையா, உண்மையானவையா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். எந்த முடிவுக்கும் எளிதில் வந்து, எந்த நடவடிக்கையையும் உறுதியாக எடுக்க முடியாமல் போகும்.

மன்மோகன் சிங் – முஷார·ப், அணிசாரா நாடுகள் உச்சி மாநாட்டில் சந்தித்ததால் விளைந்துள்ள ஒரே நற்செயல், முறிந்துபோன இந்தோ-பாக் பேச்சுவார்த்தை மீண்டும் தொடர்ந்திருப்பதுதான். அயலுறவுத்துறை அமைச்சர் இல்லாத நிலையில், பிரதமர் தமது நட்பான அணுகுமுறையினால் இதைச் சாதித்துள்ளார் என்பதை வரவேற்போம்.

இந்த முன்னேற்றத்தின் காரணமாக, அவர் பாகிஸ்தான் செல்ல இருப்பது மற்றும் ஒரு வரவேற்க வேண்டிய முடிவு. நீட்டப்பட்டுள்ள நேசக்கரத்தைப் பற்றியிருக்கும் பாரதப் பிரதமர், பாகிஸ்தானுடன் உறவுகள் மேம்படுவதற்கு அதைப் பயன்படுத்த வேண்டும். இந்தியா – பாகிஸ்தானிடையே பிரச்னையாக நீடித்துவரும் – எல்லைக்கோடு, பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர், ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களின் கருத்தறித்து அதற்கேற்ப அங்கு அரசியல் தீர்வு காண முயற்சி செய்வது போன்ற அம்சங்களைப் பேசித் தீர்வு காண நல்லதொரு பிடிமானம் இப்போது இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது.

‘பயங்கரவாதத்தை நிறுத்தினால்தான் பேசுவோம்’ என்கிற பா.ஜ.க. அரசின் கோட்பாடிலிருந்து மாறி, இன்றைய மத்திய அரசு நிபந்தனைக்குட்படாத பேச்சு வார்த்தைகளைத் துவக்குவது நல்லது. காஷ்மீர்ப் பிரச்னையைக் கௌரவப் பிரச்னையாகப் பாராமல், அங்குள்ள மக்களின் பிரச்னையாகப் பார்ப்பது அவசியமாகிறது. அவர்களின் கண்ணீரைத் துடைக்கவும் ஆயுதங்களுக்கும் பாதுகாப்புக்கும் இரு நாடுகளுக்கும் ஆகிற செலவைக் குறைத்து அமைதியை நிலைநாட்டவும் தேவையான அளவு விட்டுக் கொடுப்பதில் தவறில்லை.

சென்ற வாரம் கையப்பமான பயங்கரவாதத் தடுப்பு ஒப்பந்தத்தின் வார்த்தை ஜாலங்களை நம்பி, முதலில் அமைதி நிலவட்டும்; அதன் பிறகு அரசியல் தீர்வு பற்றி ஆராயலாம் என்று காத்திருந்தால், அபாயம் அதிகரிக்கவே செய்யும். மாறாக, பாகிஸ்தானுடன் அரசியல் தீர்வு ஏற்பட்டால், அது தொடர்பான பயங்கரவாதத்துக்கு இடமில்லாமலே போகும். இதுவே இந்தியாவை அச்சுறுத்தும் இதர சில பயங்கரவாத அமைப்புகளை வெற்றி கொள்ளவும் உதவும்.

Posted in Agreement, Border, Editorial, Extremism, India, Kalki, Kashmir, Manmohan Singh, Musharaff, Op-Ed, Pakistan, Tamil, Terrorism | Leave a Comment »