Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Secrets’ Category

Sri Lanka faulted for public use of International Committee of the Red Cross (ICRC)’s confidential findings

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 மார்ச், 2008


கிழக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்துவதில் அவசரம் கூடாது என்கிறார் ஆனந்தசங்கரி

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி

கிழக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்துவதில் இலங்கை அரசாங்கம் மிகுந்த வேகம் காட்டக் கூடாது என்று தமிழர் விடுதலைகூட்டணியின் தலைவரான வீ. ஆனந்தசங்கரி அவர்கள் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில், இன்னமும் ஆயுதக்குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் முழுமையாக களையப்படாத நிலையில், அங்கு மக்கள் சிந்தனை மற்றும் சுதந்திரம் ஆகியவை கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இன்னமும் இருப்பதாகவும் அவர் கூறுகிறார். ஆகவே ஆயுதங்கள் அங்கு களையப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இத்தகைய நிலையில் அவசரமாக அங்கு தேர்தல்களை நடத்துவது உசிதமானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் கருத்தைப் சரியாக பிரதிபலிப்பதாக இருந்தால், கிழக்கு மாகாணத்தில் இன்னமும் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சூழ்நிலை உருவாகவில்லை என்பதே உண்மை என்றும் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 23 மார்ச், 2008

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாது: ஸ்ரீகாந்தா

இலங்கையின் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகந்தா அவர்கள் தமிழோசைக்கு அளித்த சிறப்புச் செவ்வியில் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் தனியாக பிரித்து தேர்தல் நடத்தப்படுவதன் மூலம், வடக்கு கிழக்கை நிரந்தரமாக பிரிப்பதற்கு இலங்கை அரசு முயல்வதாகவும், இந்த முயற்சிக்கு துணை போகக்கூடாது என்பதற்காகவே தமிழ்தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதாகவும் ஸ்ரீகாந்தா அவர்கள் தெரிவித்தார்.

இது தொடர்பில் தமிழோசைக்கு அவர் அளித்த சிறப்புச் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.


வட இலங்கை மோதல்கள்; முரண்பட்ட தகவல்கள்

இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா, மணலாறு மற்றும் முகமாலை, நாகர்கோவில் போர் முன்னரங்குகளில் சனியன்றும் ஞாயிறன்றும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாக இருதரப்பினரும் தெரிவித்திருக்கின்றனர்.

மன்னார் உயிலங்குளத்திற்கு வடக்கில் உள்ள முன்னரங்கப் பகுதிகளில் இராணுவத்தினர் முன்னேறிச் சென்று விடுதலைப் புலிகளிடமிருந்து ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவான பிரதேசத்தைக் கைப்பற்றியதாகத் தெரிவித்துள்ள இராணுவத்தினர், சண்டைகளின்போது இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், அதன்படி, 22 விடுதலைப் புலிகளும் 4 படையினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் 11 உடல்களும், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டிருக்கின்றது.

மன்னார் பாலைக்குழி, இத்திக்கண்டல் ஆகிய பகுதிகளில் இருந்து சனிக்கிழமை அதிகாலையில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு முயன்ற இராணுவத்தினர் மீது மாலை வரையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 55 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

தமது கடுமையான எதிர்த் தாக்குதல்களையடுத்து, படையினர் தமது முன்னேற்ற முயற்சியைக் கைவிட்டு, தமது பழைய நிலைகளுக்குத் திரும்பியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

வவுனியா, மணலாறு, முகமாலை, நாகர்கோவில் ஆகிய முன்னரங்கப் பகுதிகளில் இடம்பெற்ற சண்டைகளில் மேலும் 23 விடுதலைப் புலிகளும் 4 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் சனிக்கிழமை யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா, அங்கு போர் நிலைமைகள் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக இராணுவ உயரதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்துள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

 


 

புதுப்பிக்கப்பட்ட நாள்: 21 மார்ச், 2008


கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவது பற்றிய முடிவு விரைவில்: மாவை சேனாதிராஜா

இலங்கையின் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த சிலநாட்களாக தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது.

சமீபத்தில் நடந்த மட்டக்களப்பு மாநகரபை உள்ளிட்ட சில உள்ளாட்சி மன்றத்தேர்தல்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிடவில்லை. அந்த தேர்தல்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிடாததற்கு கூறப்பட்ட காரணங்கள், கிழக்கு மாகாணசபை தேர்தல்கள் விடயத்திற்கும் பொருந்தும் என்கிறார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜா அவர்கள்.

அதேவேளை, கிழக்கு மாகாணசபை தேர்தல்கள் விடயத்தில் இறுதி முடிவெடுப்பதற்கு முன்பு, கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லீம் தரப்பு கருத்தை அறிய தமிழ்தேசிய கூட்டமைப்பு விரும்புவதாகவும், இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு தற்போது பேச்சு வார்த்தைகள் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்னமும் இரண்டொரு நாட்களில் இது தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு இறுதி முடிவு எடுத்து அறிவிக்கும் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் மாவை சேனாதிராஜா அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய பிரத்யேக செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை முல்லைத்தீவு கடற்பரப்பில் நடந்த குண்டுத் தாக்குதலில் இராணுவ தரப்பில் சேதம்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் நாயாறு கடற்பரப்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் கடற்கண்ணிவெடி தாக்குதல் என்று கருதப்படும், குண்டு வெடிப்பு சம்பவத்தில் கடற்படையின் அதிவேகப்படகு ஒன்று மூழ்கியதாகவும், அதிலிருந்த 16 கடற்படையினரில் 6 பேர் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் காணாமல்போயுள்ள ஏனைய 10 பேரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

எனினும் நாயாறு கடற்பரப்பில் கடற்படையினருடன் இடம்பெற்ற மோதல் ஒன்றின்போது கடற்படையினருக்குச் சொந்தமான அதிவேகப்படகு மூழ்கடிக்கப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றார்கள். தமது தரப்பில் 3 கரும்புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்காரவுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, விடுதலைப் புலிகளின் கடற்கண்ணிவெடியிலேயே கடற்படைக்குச் சொந்தமான அதிவேகப்படகு மூழ்கியதாகத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் கடற்கண்ணிவெடிகளை வைத்திருந்ததாகக் கூறுகின்றீர்களே, இதேபோன்று கடற்படையினரும் கடலில் கண்ணிவெடிகளைப் புதைத்திருப்பதாகவும், இதற்கு இந்தியத் தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கின்றதே என கேட்டதற்கு, நாயாறு கடற்பரப்பில் கண்ணிவெடி வைக்க வேண்டிய அவசியம் கடற்படையினருக்கு இல்லை என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாயாறு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் உள்ள விடுதலைப் புலிகளின் கடற்தளங்கள் மீது விமானப்படையினர் சனிக்கிழமையன்று தாக்குதல்கள் நடத்தியுள்ளனர் என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இந்த மோதல்கள் குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இரகசியத் தகவல்களை இலங்கை வெளியுறவு அமைச்சு தவறாகப் பயன்படுத்தியுள்ளது: செஞ்சிலுவைச் சங்கம் குற்றச்சாட்டு

ஆட்கள் காணாமல்போன சம்பவங்கள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான ஆட்கொலைகள் ஆகியவை குறித்து இலங்கை அரசுக்கு தாம் வழங்கிய தகவல்களை இலங்கை வெளியுறவு அமைச்சு தவறாகப் பயன்படுத்தி விட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

அண்மையில், அமெரிக்க அரசுத்துறை இலங்கை மனித உரிமைகள் நிலவரம் குறித்து வெளியிட்ட அறிக்கை ஒன்றுக்கான பதில் அறிக்கையிலேயே, தாம் வழங்கிய ரகசிய தகவல்களை இலங்கை அரசு பகிரங்கமாக வெளியிட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

காணாமல் போனவர்கள் குறித்து தாம் கண்டுபிடித்த தகவல்களை இருதரப்புக்கும் இடையேயான பரிமாற்றத்துக்கு மாத்திரமானது என்ற அடிப்படையிலேயே தாம் இலங்கை அரசுக்கு ரகசியமாகத் தந்ததாகவும், ஆனால் அதனை இலங்கை அரசு பகிரங்கப்படுத்திவிட்டது என்றும் செஞ்சிலுவைச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

அதேவேளை அவை வெளியிடப்பட்ட வழியிலும் தவறு இடம்பெற்றுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

இத்தகைய தகவல்கள் பகிரங்கமாக விவாதிக்கப்படும் பட்சத்தில், இந்த விடயங்களைக் கையாள்வது சிரமமாகிவிடும் என்றும் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமைப் பேச்சாளர், புளோரியான் வெஸ்வெல் அவர்கள் வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 20 மார்ச், 2008


கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூட்டம்

இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்களை நடத்துவது என்று அரசுமுடிவெடுத்துள்ள சூழலில், இந்த தேர்தலில் போட்டியிடுவதா என்பது குறித்து ஆராய, தலைநகர் கொழும்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடந்தது.

இந்த கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதா, அல்லது தவிர்ப்பதா என்பது குறித்த இரு கருத்துக்களும் ஆராயப்பட்டன என்றும் ஆயினும் இது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வட்டாரங்கள் தமிழோசையிடம் தெரிவித்தன.

எதிர்வரும் ஒரிரு நாட்களில் இது குறித்து மேலும் ஆராய்ந்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

 


ரூபவாஹினி நிர்வாகியாக முன்னாள் இராணுவ அதிகாரியின் நியமனம்: ஊடகங்கள் அதிருப்தி

 

இலங்கை அரசாங்கத்தின் தொலைக்காட்சியான ரூபவாஹினி நிறுவனத்தின் நிர்வாகியாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டது தொடர்பில் தொடர்பூடக உரிமைச் செயற்பாட்டாளர்கள் இலங்கை அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்கள்.

சுதந்திர ஊடக அமைப்பின் அமைப்பாளர் சுனந்த தேசப்பிரிய, இது தொடர்பில் கருத்துக் கூறுகையில், இந்த நடவடிக்கை மூலம், நெருக்கடி நிலைமைகளில், ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் பெரும் ஆளுமையை அரசாங்கம் செலுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள இலங்கையின் ஊடக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்ப அவர்கள், தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாகத்தைப் பலப்படுத்துவது மாத்திரமே இந்த நியமனத்தின் நோக்கம் என்று கூறியுள்ளார்.

தமது 5 சகாக்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, அந்த நிறுவனத்தின் ஊழியர்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ந்தே, இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


 

Posted in Eelam, Eezham, HR, ICRC, IDP, LTTE, missing, Red Cross, rights, Secrets, Sri lanka, Srilanka | Leave a Comment »

Institutions averse to parting with information under RTI: Report

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

தகவல் பெறும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க பல துறைகள் கோரிக்கை

‘அரசு நிர்வாகத்தில் வெளிப்படையான போக்கு இருக்க வேண்டும், ஊழல் குறைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தகவல் பெறும் உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், பல அரசு துறைகள் இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன’ என்று மத்திய தகவல் கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.

மத்திய தகவல் கமிஷனின் ஆண்டு அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கோரி வருகிறது.

தகவல் கொடுப்பதால், நீதித்துறையின் தனித்தன்மை, நீதித்துறையின் நிர்வாகம் பாதிக்கப்படும் என்பது உச்சநீதிமன்றத்தின் வாதமாக உள்ளது.

இதே போல சி.பி.ஐ., மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி.,) ஆகியவையும் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளன.

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை உளவு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கிறது. ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான தகவல்களை தவிர பிற தகவல்களை இரண்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள துறைகள் அளிக்க வேண்டாம். இந்த இரண்டாவது அட்டவணையில் தங்கள் துறையையும் சேர்க்க வேண்டும் என்பது சி.பி.ஐ.,யின் கோரிக்கையாக உள்ளது.

தேர்வு மற்றும் பணி நியமன தகவல்களை வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கோரி வருகிறது. டில்லி மெட்ரோ ரயில் திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்ற வகையில் செயல்பட்டு வருவதால், எவ்வித தகவலும் அளிக்க டி.எம்.ஆர்.சி., முன்வர மறுக்கிறது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் செயல்பட்டால், கூடுதல் சுமை ஏற்படும் என்பது அந்த அமைப்பின் கருத்தாக உள்ளது.

கட்டணம் உயர்வு?

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என நுகர்வோர் விவகாரம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், சுரங்கம் ஆகிய அமைச்சகங்கள் ஆலோசனை வழங்கியுள்ளன. கேட்கப்படும் தகவல் நீண்ட காலத்துக்கு உரியதாக இருந்தால், முறையான அமைப்பில் இடம் பெறாத தகவல்களாக இருந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என அந்த அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால், அதை பாதுகாக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுத்துறை நிறுவனமான பி.எச்.இ.எல்., தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் தகவலை அளிக்க போதிய கட்டமைப்பு வசதி இல்லை என சில துறைகள் தெரிவித்துள்ளன.

மத்திய நகர மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய கட்டடங்கள் கட்டுமான கார்ப்பரேஷன், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தனியார் துறையையும் கொண்டு வர வேண்டும். இல்லாவிடில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

அரசு துறைகளை சேர்ந்தவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்கள் மீது ஏகபோக உரிமை கொண்டாடுகின்றனர். குறைந்த கட்டணத்துக்கு அதிக தகவல்களை தெரிவிப்பதா என்ற எண்ணம் அவர்களிடம் காணப்படுகிறது. இது போன்ற எண்ணம் கொண்ட அதிகாரிகளின் கருத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Posted in Affairs, Afraid, Architecture, authority, Avoid, BHEL, Buildings, CBI, Central Information Commission, CIC, Construction, Consumer, Corruption, Courts, CPSC, Customer, Delays, Delhi, Disclosure, DMRC, Economy, Exempt, Express, family, Fast, Government, Govt, HC, Health, Hide, HR, immunity, Info, Information, Intelligence, Judges, Judiciary, Jury, Justice, kickbacks, Law, Metro, mines, NBCC, Order, OSA, parliament, Protect, Protection, PSU, PSUs, Rails, Railways, Recommendation, rights, RTI, SC, Scared, Secrets, Security, Trains, Transparency, Transport, Violation, Welfare | Leave a Comment »

RAW book row – CBI Raids: Violation of Official Secrets Act

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 5, 2007

நியாயமில்லை, நியாயமேயில்லை…!

ஓய்வுபெற்ற அரசு அதிகாரி குறிப்பிட்ட காலவரம்புக்குப் பிறகு தனது அனுபவங்களையும் பதவிக்காலத்தில் சந்தித்த பிரச்னைகள் மற்றும் சம்பவங்களையும் புத்தகமாக எழுதலாமா கூடாதா? எழுதக் கூடாது என்று தனது துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு ( Research and Analysis Wing).  இந்திய அரசின் வெளியுறவு ரகசியப் புலனாய்வுத் துறைதான் “ரா’ ( RAW) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தப் பிரிவு.

இப்படியோர் உத்தரவு பிறப்பித்ததற்குக் காரணம், இந்தப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் வி.கே. சிங் என்பவர் தனது பணிக்கால அனுபவங்களைப் புத்தகமாக வெளியிட்டதுதான். “ரா’ அமைப்பில் புரையோடிப் போயிருக்கும் ஊழலையும், அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகங்களையும், ரகசியக் கண்காணிப்புக்காக அரசால் ஒதுக்கப்படும் கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான பணம் எப்படி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றியும் தனது புத்தகத்தில் அந்த அதிகாரி குறிப்பிட்டிருந்ததுதான் நமது புலனாய்வுத் துறையினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

புலனாய்வுத் துறையைப் பற்றிய விமர்சனங்கள் எழக்கூடாது என்பதாலும் அதைப் பற்றி பேசினாலோ கேள்வி கேட்டாலோ அது தேசத் துரோகம் என்பதுபோலக் கருதப்படுவதாலும் அதிகாரிகள் எந்தவிதக் கேள்வியும் கேட்கப்படாமல் தன்னிச்சையாகச் செயல்படுகின்றனர் என்கிற அந்த அதிகாரியின் குற்றச்சாட்டு பெரிய சர்ச்சையை எழுப்பியதோ இல்லையோ புலனாய்வுத் துறையினரிடம் கோபத்தை ஏற்படுத்தியதில் ஆச்சரியமில்லை. மத்திய புலனாய்வுத் துறை ( C.B.I) யின் மூலம், அந்த ஓய்வுபெற்ற அதிகாரி மற்றும் அந்தப் புத்தகத்தின் பதிப்பாளர் ஆகிய இருவரின் வீடுகளும் சோதனையிடப்பட்டன.

அந்தப் புத்தகத்தில் இரண்டு முக்கியமான பிரச்னைகளை எழுப்பி இருக்கிறார் மேஜர் ஜெனரல் சிங். முதலாவது, “ரா’ அமைப்பு, ஆட்சியாளர்களால் எதிர்க்கட்சியினருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பது. மக்கள் வரிப்பணம் புலனாய்வு என்கிற பெயரில் கணக்கு வழக்கே இல்லாமல் செலவழிக்கப்படுவதால், “ரா’ அமைப்பின் நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் செலவுகள் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றும் சிங் ஆலோசனை கூறியிருக்கிறார்.

மேஜர் ஜெனரல் கூறியிருக்கும் சம்பவங்களும் குற்றச்சாட்டுகளும் தவறு, உண்மைக்குப் புறம்பானவை என்றால், அவர் மீது கிரிமினல் சட்டப்படி வழக்குத் தொடர்வதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அவர் எழுப்பி இருக்கும் பிரச்னைகளும் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் சம்பவங்களும், அரசு ரகசியத்தை வெளியிட்டிருக்கிறார் என்கிற வரம்பிற்குள் உட்படாது. இந்த நிலையில், அவர் மீது தொடுக்கப்பட்ட மத்திய புலனாய்வுத் துறை சோதனை, அந்தத் துறை எப்படி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும், “ரா’ அமைப்பிலுள்ள அதிகாரிகள் எந்த அளவுக்குத் தங்களைப் பற்றிய குற்றச்சாட்டுகளைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதையும்தான் காட்டுகிறது.

இந்தப் பிரச்னையில் இன்னொரு விஷயமும் அடங்கும். 1923-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசால் அடிமை இந்தியாவை அடக்கியாள உருவாக்கப்பட்ட அரசின் ரகசியக் காப்புச் சட்டம் ( Official Secrets Act) இப்போதும் தொடர வேண்டிய அவசியம்தான் என்ன? எந்தவிதக் கேள்வியும் இல்லாமல், சாட்சிகள் இல்லாமல், சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையில் யாரை வேண்டுமானாலும் தேசநலனுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறிக் கைது செய்து சிறையிலடைக்கும் வெள்ளையர் கால அரசின் ரகசியக் காப்புச் சட்டம் இப்போதும் தொடர்கிறது என்பதிலிருந்து என்ன தெரிகிறது?

இந்தியக் குடியரசின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் சக்திபடைத்த குடிமகன், அடக்குமுறை ஏகாதிபத்திய ஆட்சிக் கால சட்டங்கள் காரணமாக சுதந்திரமாக நடமாட முடியாது என்றால் அது நியாயமில்லை. எந்தவொரு துறையும் மக்களின் கண்காணிப்புக்கு அப்பாற்பட்டதாக இருப்பது என்பது நியாயமே இல்லை.

Posted in Abuses, Airforce, Army, Author, Books, CBI, Center, Contempt, Experiences, FBI, General, Govt, Intelligence, leak, Major, Military, Navy, Non-fiction, Officer, Oppression, OSA, Politics, Power, Publisher, Raids, RAW, Secrets, Singh, Violation, Writer, Writing | 1 Comment »

World Intellectual Property Day – Copyright Protections and Impact on Commerce

Posted by Snapjudge மேல் மே 5, 2007

அறிவுசார் பொருளாதார வளர்ச்சி

பி.கே. மனோகரன்

சர்வதேச வர்த்தகத்தில் இன்று அதிக அளவில் பேசப்படுவது அறிவுசார் சொத்துரிமை தொடர்பானதாகும்.

அன்றாட வாழ்விலும் சமூக, பொருளாதார மேம்பாட்டிலும் அறிவுசார் சொத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆண்டுதோறும் “உலக அறிவுசார் சொத்து தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் “படைப்பாற்றலை ஊக்குவித்தல்’ என்பதாகும்.

அறிவுசார் சொத்து என்பது ஒருவர் தன் மூளையைப் பயன்படுத்தி உருவாக்கும் புதிய, புதுமையான, சமுதாயத்திற்குப் பயன்படுகிற ஒன்றை உருவாக்குவதற்கான படைப்பாற்றல் ஆகும். பொன்னையும் பொருளையும் போல அறிவும் மதிநுட்பமும் ஒருவகையான சொத்தாகக் கருதப்படுகிறது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலம், உழைப்பு, மூலதனம் ஆகியவற்றை மட்டுமே சார்ந்தது என்ற கருத்து பழங்கதையாகி அறிவுத்திறனே முக்கியக் காரணி என்ற கருத்து உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. அறிவு வளத்தைப் பயன்படுத்தி, பொருள் வளத்தைப் பெருக்கி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே 21-ம் நூற்றாண்டின் அறிவுசார் பொருளாதாரத்தின் இலக்காகும்.

அறிவு என்பது என்ன? நமது மூளையில் சேகரிக்கப்பட்டு வரும் தகவல் மற்றும் புள்ளி விவரங்களை, அனுபவம் மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் எப்படிச் சொல்லுதல், எதைத் தெரிந்து கொள்வது, ஏன் தெரிந்து கொள்வது, எப்படித் தெரிந்து கொள்வது போன்றவற்றை உள்ளடக்கிய ஒன்றாகும். கட்டமைப்பு வசதிகள், இயற்கை வளங்கள், மனித ஆற்றல் ஆகியவை அறிவு சார் பொருளாதாரத்தின் மூலம் சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது.

வேத காலத்திலேயே நமது பாரத தேசம் அறிவுத்திறன் மிக்க வல்லரசாகத் திகழ்ந்தது. இன்றும் கணிதம் இந்தியாவின் நுண்கலை என்றே அழைக்கப்பெறுகிறது.

உலகளவில் அறிவுசார் ஆளுமையில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிறுவனங்களின் ஆராய்ச்சி மையங்களில் இந்தியர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளதில் இருந்தே இதனை அறியலாம். விண்வெளித்துறை, பாதுகாப்பு தொழில் நுட்பம், உயிரிய தொழில்நுட்பம், மென்பொருள் மேம்பாடு மற்றும் மருத்துவம் போன்ற அனைத்துத் துறைகளிலும் இந்தியர்கள் முக்கிய இடம் பெற்றுள்ளனர்.

நாட்டின் ஒரு பகுதி மக்களுக்கு மட்டுமே உதவுவதான வளர்ச்சி உண்மையான அறிவுசார் வளர்ச்சி ஆகாது. சமுதாய ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, இயற்கையோடு இயைந்து செல்லும் அறிவுசார் வளர்ச்சியே அழிவுப் பாதையிலிருந்து நம்மைக் காப்பாற்றி ஆக்கப் பாதைக்கு இட்டுச் செல்லும்.

அறிவுசார் சொத்துரிமை பெற ஒரு கண்டுபிடிப்பு புதுமைத் தன்மை, புதினத்தன்மை மற்றும் மூலத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். இதனை மேற்கொண்டவரின் அறிவார்ந்த திறமையை அங்கீகரிக்கும் பொருட்டும், அவற்றை வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதற்காகவும் சட்ட வடிவில் அளிக்கப்படக்கூடிய உரிமைகளே அறிவுசார் சொத்துரிமை எனப்படும்.

அறிவுசார் சொத்துரிமை தொடர்பாக பல சர்வதேச உடன்பாடுகள் உள்ளன. எனினும் “டிரிப்ஸ்’ என்றழைக்கப்படும் “வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமை’ இவ்வகை உரிமைகள் அனைத்தையும் உள்ளடக்கிய பலதரப்பு ஒப்பந்தம் ஆகும். இதில் ஏழு அம்சங்கள் உள்ளன.

  • 1. காப்புரிமை,
  • 2. பதிப்புரிமை,
  • 3. வர்த்தக சின்னங்கள்,
  • 4. பூகோள அடையாளங்கள்,
  • 5. தொழிலியல் வடிவமைப்புகள்,
  • 6. மின்னணு ஒருங்கிணைந்த இணைப்புச்சுற்று டிசைன்கள் மற்றும்
  • 7. தொழில் ரகசியங்கள். இவற்றுள் முக்கியமானது காப்புரிமையாகும்.

காப்புரிமை புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுவதாகும். காப்புரிமை பெறுவது கட்டாயமல்ல. ஆனால் காப்புரிமை பெற்றால் மட்டுமே சம்பந்தப்பட்ட புதிய தொழில்நுட்பத்தை மற்றவர்கள் பயன்படுத்துவதற்கு எதிராக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க முடியும். காப்புரிமை கோரி விண்ணப்பிக்க்பபடும் நாளிலிருந்து 20 ஆண்டுகளுக்கு காப்புரிமை அமலில் இருக்கும்.

காப்புரிமை பெறும் விஷயத்தில் இந்தியாவின் நிலை மிகவும் பின்தங்கி உள்ளது. எடுத்துக்காட்டாக

  • வேம்பிலிருந்து தயாரிக்கப்படும் 40 வகை பொருள்களுக்கு அமெரிக்காவும்,
  • மேலும் 50 பொருள்களுக்கு பிற நாடுகளும் காப்புரிமை பெற்றுள்ளன.
  • ஆனால் வேப்ப மரத்தின் தாய்வீடான இந்தியாவில் வெறும் 3 பொருள்களுக்கு மட்டுமே காப்புரிமை பெறப்பட்டுள்ளது.
  • மஞ்சளிலிருந்து தயாரிக்கப்படும் 30 பொருள்களுக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றுள்ளது.
  • ஆனால் இந்தியா 8 பொருள்களுக்கு மட்டுமே பெற்றுள்ளது.
  • மேலும் இந்தியாவில் பெருமளவில் விளையும் கடுகு, மிளகு, மாதுளை போன்றவற்றுக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றுள்ளது.

இந்தியாவில் ஒரு பொருளுக்கு காப்புரிமை பெற குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி உள்ளது. அமெரிக்காவில் அதிகபட்சம் 2 ஆண்டுகளில் காப்புரிமை தரப்படுகிறது. இந்தியாவில் காப்புரிமை பெற விண்ணப்பித்த 25 ஆயிரம் மனுக்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே ஆராய்ச்சிப் பணிகளுக்குச் செலவிடப்படுகிறது. அமெரிக்காவில் இது 16 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோள்களின் பயணத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டவர்கள் இந்தியர்கள். ராமாயண, மகாபாரத காவியங்களில் கற்பனையானவை என்று சொல்லப்பட்ட பல கூற்றுகளை இன்றைய அறிவியல் உண்மையாக்கி காட்டுகின்றன. அறிவுசார் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க மற்ற நாடுகளை விட இந்தியாவிற்கே வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவேதான் இன்றும்கூட அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தில் பெரும்பாலான விஞ்ஞானத் தொழில் நுட்ப வல்லுநர்கள் இந்தியர்களாக உள்ளனர். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பணியாற்றும் இந்திய மருத்துவர்கள் தாயகத்துக்கு திரும்பி விட்டால் அந்நாட்டு மருத்துவக் கட்டமைப்பே கவிழ்ந்து விடும்.

இந்தியா அறிவுத்திறன் மிக்க வல்லரசாக, மக்கள் நலன் பேணும் நல்லரசாகத் திகழ மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும். அறிவுசார் வளர்ச்சி ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆதிக்கம் செலுத்தும் வகையில் இல்லாமல் எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ பாதை அமைக்க வேண்டும்.

அறிவுத்திறன் மிக்க சமுதாயமே ஆரோக்கியமான சமுதாயம். அறிவே ஆற்றல், அறிவே உண்மையான வளர்ச்சிக்கு வழி.

(கட்டுரையாளர்: இணைப் பேராசிரியர், சி.பி.எம். கல்லூரி, கோவை.)

Posted in Biotech, Commerce, Competition, Copyright, Court, Design, Economy, Expenses, Finance, Infringement, Innovation, Intellectual, Intellectual Property, Intelligence, Invent, Invention, Inventor, IP, Juice, Law, Lawsuit, Medicine, Order, Pomegranate, Property, Protection, Research, Secrets, service, Servicemarks, Sesame, SM, Stifle, Technology, TM, Trade, Trademarks, Turmeric | 1 Comment »