Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Prabakaran’ Category

March 30 – LTTE, Eezham, Sri Lanka: News & Updates (BBC Tamil)

Posted by Snapjudge மேல் மார்ச் 30, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 01 ஏப்ரல், 2008

மூதூர் தொண்டர் நிறுவன பணியாளர் கொலைகளை அரசாங்கப் படையினரே செய்ததாக மனித உரிமை அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது

இலங்கையில் சுனாமி நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டு தொண்டு நிறுவனமான அக்ஷன் பெஃய்ம் நிறுவனத்தின் உள்ளூர் பணியாளர்கள் 17 பேர் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் இலங்கை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உறுப்பினர்களின் பெயரை மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் இந்தச் சம்பவத்தை மறைக்க முயற்சிப்பதாகவும் சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

2006 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளுடனான மோதலை அடுத்து மூதூரை கைப்பற்றிய காலப்பகுதியில் நடந்த இந்த கொலைகள் தொடர்பில், இலங்கை ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு ஒன்றும் விசாரணைகளை நடத்தி வருகிறது.

கோபாலசிங்கம் சிறிதரன்
கோபாலசிங்கம் சிறிதரன்

ஆனால், இந்தப் புலன் விசாரணை நடவடிக்கைகளை அரசாங்கம் மறைக்க முயலுவதாகக் குற்றஞ்சாட்டி, இதனைக் கண்காணித்துவந்த, சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு ஒன்று தனது கண்காணிப்புப் பணியில் இருந்து விலகிச் சென்று விட்டது.

துணைப்படையைச் சேர்ந்த ஒரு ஊர்காவற்படைச் சிப்பாயும், இரண்டு பொலிஸ்காரர்களும் இந்தக்கொலைகளைச் செய்ததாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கூறி அவர்களது பெயர்களையும் வெளியிட்டுள்ளது.

இந்த கொலைச் சம்பவங்கள் குறித்த பொதுவிசாரணைகளில் இலங்கை ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு ஈடுபட்டுள்ளதால், மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், அந்த ஆணைக்குழுவின் முன்பாக தமது ஆதாரங்களை காண்பித்து தகவல்களை வெளியிட வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் அமைச்சரான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலளிக்குமுகமாக தமிழோசையிடம் பேசிய மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த கோபாலசிங்கம் சிறிதரன் அவர்கள், இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியை அந்த ஆணைக்குழுவின் முன்பாக ஆஜர் செய்யும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும், ஆனாலும், அந்தச் சாட்சியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மின்னேரியாவில் மின்னல் தாக்கியதில் நான்கு படையினர் மரணம் 59 பேர் காயம்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வட-மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள மின்னேரியா இராணுவத்தளத்திற்கு அண்மையில் அமைந்துள்ள இராணுவமுகாமொன்றினைச் சேர்ந்த ஒரு தொகுதி இராணுவ வீரர்கள் இன்று மாலை பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் மிகவும் சக்திவாய்ந்த மின்னல் ஒன்று தாக்கியதில் சுமார் நான்கு படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் சுமார் 59 படையினர் காயமடைந்து பொலன்நறுவை தளவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் பொலன்நறுவை மாவட்டம் மின்னேரியா கட்டுக்கெலிய இராணுவ முகாம் பகுதியில் வழமையான இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவ அணியினரே இந்த மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அதிதீவிர சத்திர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.

சிறையுடைப்பு முயற்சி

இதேவேளை இன்று மாலை இரத்தினபுரி குருவிட்ட பகுதியிலுள்ள சிறைச்சாலையை உடைத்துத் தப்பி வெளியேறமுயன்ற நான்கு சிறைக்கைதிகள் அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி மரணமாகியிருப்பதாக இரத்தினபுரி பொலிசார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தின் போது மேலும் மூன்று சிறைக்கைதிகள் காயமடைந்து அண்மையிலுள்ள வைத்தியசாலையில் பொலிஸ்காவலுடன் சிகிச்சைபெற்று வருவதாகவும், நிலைமை தற்போது பொலிசாரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் பொலிசார்
தெரிவித்திருக்கின்றனர்.


 

புதுப்பிக்கப்பட்ட நாள்: 31 மார்ச், 2008

இயக்கத்திலிருந்து சிறார் 22 பேரை விடுதலை செய்திருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்

இயக்கத்தில் இளம்பிராயத்தினர் என்பது ஒரு நெடுங்கால சர்ச்சை

விடுதலைப் புலிகள் தமது படையிலிருந்து 22 சிறாரை விடுதலை செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் படையில் நூற்றுக்கணக்கான சிறார் இன்னும் இருப்பதாக யுனிசெஃப் என்ற ஐ.நா.வின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் தெரிவித்திருப்பதையும் புலிகள் மறுத்துரைத்திருக்கின்றார்கள்.

தங்களால் விடுவிக்கப்பட்டுள்ள சிறார் தொடர்பான விபரங்களை யுனிசெஃப் நிறுவனம் உறுதிப்படுத்துவதற்குத் தவறியிருக்கின்றது என்றும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் ஊடாக வெளியிடப்பட்டுள்ள மின்னஞ்சல் வழியாக விடுதலைப் புலிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இருபது சிறாரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் சி.பி.ஏ. என்ற சிறுவர் பாதுகாப்புக்கான தமது அமைப்பின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

நூற்றுக்கணக்கான சிறார் தமது அமைப்பில் இன்னும் இருப்பதாகக் கூறிவரும் யுனிசெஃப் நிறுவனம், இந்தச் சிறார் தொடர்பான பிந்திய தகவல்களை உறுதிசெய்து தனது பட்டியலை மாற்றியமைக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகள் குற்றஞ்சுமத்தியிருக்கின்றார்கள்.

அதேவேளை, தமது அமைப்பில் உள்ள வேறு 41 சிறாருக்கு பெற்றோர்களோ அல்லது பாதுகாவலர்களோ இல்லாத காரணத்தினால் அவர்களை விடுதலை செய்யமுடியாத நிலை தோன்றியிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இது குறித்த மேலதிக விபரங்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை ஏ9 வீதியில் ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி சனிக்கிழமைகளிலும் திறந்திருக்கும்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்

ஓமந்தை சோதனைச் சாவடி

இலங்கையின் வடக்கே ஏ9 வீதியில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மதவாச்சி சோதனைச்சாவடியிலும், வவுனியா, ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியிலும் அரசாங்கத்தினால் மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளினால் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கும், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்திற்கும் இடையிலான பொதுமக்களின் போக்குவரத்து மற்றும் வர்த்தக தேவைகளுக்கான ட்ரக் வண்டிகளின் போக்குவரத்து என்பன தாமதமடைய நேரிட்டிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைக்குழு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருக்கின்றது.

இந்நிலையில் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று சனிக்கிழமைகளிலும் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான வாகனப் போக்குவரத்து நடைபெறுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினர் மேலதிக கடமையில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.

திங்கள் முதல் வெள்ளிவரை என வாரத்தில் 5 தினங்களே ஓமந்தை சோதனைச்சாவடி வழமையாகப் பொதுப் போக்குவரத்துக்காகத் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், சுகாதார அமைச்சினால் அனுப்பப்பட்டு வவுனியாவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள வன்னிப்பிரதேச அரச வைத்தியசாலைகளுக்கான மருந்துப் பொருட்களை வவுனியாவில் இருந்து ஓமந்தை ஊடாகக் கொண்டு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறுவதில் நிலவுகின்ற காலதாமதம் காரணமாக ஓமந்தை சோதனைச்சாவடி சனிக்கிழமைகளிலும் திறக்கப்படுவதனால் பெரிதாகப் பயனேதும் ஏற்படாது என்கிறார் கிளிநொச்சி மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி அவர்கள்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் நேயர்கள் கேட்கலாம்.


இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய இலங்கை வியாபாரிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

இலங்கையிலுள்ள அரிசி வர்த்தகர்கள், தற்போது நாட்டில் நிலவும் அரிசி தட்டுபாட்டை தீர்க்கும் முகமாகவும், வரவுள்ள தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஏற்படும் தேவைகளை சமாளிக்கும் முகமாகவும் இந்தியாவிலிருந்து ஒரு லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய உதவுமாறு இலங்கை ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்கள்.

இது தொடர்பில் தமிழோசையிடம் கருத்து தெரிவித்தார் கொழும்பு பழைய சோணகர் தெரு வர்த்தக சங்கத் தலைவர் பழனியாண்டி சுந்தரம்.

பொதுவாக தங்கள் நாட்டுக்குத் தேவையான அளவுக்கு அரிசியைத் தாங்களே உற்பத்தி செய்துக்கொள்ளக்கூடிய நிலைமை இருக்கும். ஆனால் இந்த முறை மழையில் ஏராளமான பயிர் நாசமடைந்துவிட்டதால், அரிசிக்கான தேவை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அது மட்டுமல்லாமல் இலங்கையிலுள்ள வியாபாரிகள் சோளம் மற்றும் சோயா போன்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் கோழித் தீவனம் மற்றும் கால்நடைத் தீவனங்களை இந்தியாவிலிருந்துதான் பெருமளவு இறக்குமதி செய்ததாகவும், ஆனால் அவற்றின் விலை இரட்டிப்பாகி அரிசி விலையைவிட உயர்ந்துவிட்டதால், கிட்டத்தட்ட 70,000 டன் அரிசி இவ்வாறு தீவனமாக உயயோகிக்கப்பட்டதும் அரிசி பற்றாக்குறைக்கு காரணம் எனவும் அவர் கூறுகிறார்.

சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஏழைகளுக்கு அரிசி வழங்கும் திட்டம் ஒன்றை ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்றும் அத்திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு உதவியாக இறக்குமதி செய்யப்படும் அரிசியின் மீதான தீர்வையையும் அவர் அகற்றியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.


கிழக்கு மாகாண சபைத் தேர்தல்: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை

காத்தான்குடியில் நடந்த கூட்டம்

இலங்கையில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி முஸ்லிம் வேட்பாளர்கள் குறித்து பள்ளிவாசல் சம்மேளனங்களுடன் பிரதேச ரீதியாக பேச்சுவார்ததை நடத்திவருகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பொதுச் செயலாளரான சுசில் பிரேம ஜயந்த், முஸ்லிம் அமைச்சர்கள், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் சகிதம் இப்பேச்சுவார்த்தையை பள்ளிவாசல் சம்மேளனங்களுடன் நடத்திவருகின்றார்.

திங்களன்று மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனத்துடன் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது முஸ்லிம் வேட்பாளர்களைத் தமது கட்சியில் இணைந்து போட்டியிட முன்வருமாறு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவரான எம்.டி.எம். ஹாலித் ஹாஜியார் கூறுகின்றார்.

தமிழர்களும் முஸ்லிம்களும் ஆளும் கட்சியில் இணைந்து போட்டியிடுவதன் மூலம் முதலமைச்சர் பதவியை சுழற்சி அடிப்படையில் பகிர்ந்துகொள்ள முடியும் என்று ஆளும் கட்சியினால் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தமது சம்மேளனமானது அரசியல் சார்பற்ற அமைப்பு என்பதை இக்குழுவினரிடம் தாம் தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.


திருகோணமலை இளம்பெண்ணுக்கு ‘சவுதியரேபியாவில் சித்ரவதை’

மத்திய கிழக்கில் சித்ரவதைக்கு உள்ளாகும் இலங்கைப் பெண்களின் எண்ணிக்கை அதிகம்

சவுதியரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைபார்த்துத் திரும்பியிருக்கும் திருகோணமலை கிண்ணியா மாஞ்சோலைப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், சவுதியில் தான் வேலைபார்த்த வீட்டின் உரிமையாளர் தன்னைக் கொடுமைப் படுத்தியதாக பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

நோய்வாய்ப்பட்ட நிலையில் திருகோணமலை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்ற நலினா உம்மாள் என்ற இளம்பெண், சவுதியரேபியாவிலும் இரண்டுவார காலம் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகக் கூறுகிறார்.

தான் வேலைக்குச் சேர்ந்து ஒரு சில நாட்களில், அந்த வீட்டில் சிறு குழந்தை ஒன்று இறந்துபோகவே. வீட்டின் முதலாளியம்மா, தன்னை தரித்திரம் பிடித்தவள் என்று கூறி பலவித சித்ரவதைக்கும் ஆளாக்கியதாக நலினா தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில், தன்னை குவைத் அனுப்புவதாகச் சொல்லி ஏஜெண்டுகள் சவுதிக்கு அனுப்பிவிட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

இது குறித்து திருகோணமலை செய்தியாளர் ரத்னலிங்கம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 30 மார்ச், 2008

இலங்கை கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு புதிய தமிழ் கூட்டணி

இலங்கையில் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணி ஆகிய தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து தமிழ் ஜனநாயக தேசிய முன்ணணியாக போட்டியிட தீர்மானித்துள்ளது.

தமிழ் ஜனநாயக தேசிய முன்ணணி புதிய அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்று ஞாயிற்றுகிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் போராட்டம் காரணமாகவே 13 வது அரசியல் யாப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டு மாகாண சபை முறை ஏற்படுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், முதலமைச்சராக தமிழரொருவர் வரவேண்டும் என்பதே நியாயமானது என்றும் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு மாகாணம் சட்ட ரீதியாகவே தற்போது பிரிக்கப்பட்டுள்ளதால் இத்தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்று கூறிய அவர் இணைப்பு பற்றி கிழக்கு மாகாண மக்களே தீர்மானிக்க வேண்டியவர்கள் என்றார்.

தமது தமிழ் ஜனநாயக தேசிய முன்னனியில் 5 இடது சாரி கட்சிகள் இணைந்து போட்டியிட முன் வந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்


இலங்கை படையினருக்கு கொசுக்கடியினால் தொற்றுநோய்கள்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் மன்னார், வவுனியா மற்றும் வெலிஓயா எனப்படும் மணலாறு போன்ற வன்னிப்போர்முனைப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட கொசுக்களின் பெருக்கத்தினால் சுமார் 200 துருப்பினர் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

டெங்கு, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட படையினருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு தற்போது நிலைமை முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு அங்கு ஏற்கனவே முகாமிட்டிருக்கும் படையினருக்கும் கொசு வலைகள் போன்றவை கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அப்பகுதிக்கு சென்ற அனுராதபுர வைத்தியசாலை உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள், இந்த தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் பிரிகேடியர் உதயநாணயக்கார கூறினார்.

 


இலங்கையில் விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது குறித்து ஐ நா கவலை

ஐக்கிய நாடுகள் சபை ஆசிய பசிபிக் பகுதிக்கான இந்த ஆண்டின் பொருளாதார சமூக ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ஆசிய பசிபிக் பகுதியில் பல நாடுகள் பொருளாதார நிலையில் வளர்ச்சியடைந்திருந்தாலும் விவசாயத்துறையில் பின்னடைவையே சந்தித்துள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக தெற்காசிய நாடுகளில் இந்த பின்னடைவு கூடுதலாக உள்ளது என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இலங்கையில் விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது பற்றி கவலை வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கை, அது தொடர்பில் கொள்கை வகுப்பாளர்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய தேவையையும் வலியுறுத்தியுள்ளது.

விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது பெருமளவில் வறுமைக்கு வழி செய்யும் எனச் சுட்டிக் காட்டியுள்ள அந்த அறிக்கை, இலங்கை அரசு விவசாயத்துறைக்கு புத்துயிரூட்ட வேண்டியதை வலியுறுத்துவதே கொள்கை வகுப்பாளர்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன்
இலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன்

இலங்கையில் விவசாயத்துறைக்கு பல சலுகைகளை வழங்கியும் கூட விவசாயத்துறையில் உற்பத்தி திறன் அதிகரிக்கவில்லை என சுட்டிக் காட்டுகிறார் இலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன். இதுதான் இலங்கை அரசுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் சவாலாக இருக்கிறது எனவும் அவர் கூறுகிறார்.

விவசாயத்துறையில் பொருளாதார சீர்திருத்தங்களும், விவசாய அணுகுமுறையில் எந்தவிதமான சீர்திருத்தங்களும் ஏற்படாமாலிருப்பததுதான் இதற்கான அடிப்படை காரணம் எனவும் அவர் கருத்து வெளியிடுகிறார். விவசாய நிலங்கள் சீர்திருத்திருத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று என்றும் கலாநிதி சர்வானந்தன் கூறுகிறார்.

அரசும் விவசாயிகளும் நெல் உற்பத்தியில்தான் கூடுதலான கவனம் செலுத்தி வருவதும், பணப்பயிர்களில் கவனம் செலுத்தாததும் விவசாயத்துறையின் தேக்கத்திற்கான காரணங்களாக கருதலாம் எனவும் அவர் தெரிவிக்கிறார். விவசாயிகளுக்கு தொடர்ந்து பயிர் செய்வதற்கு தேவையான நீர் ஆதாரங்களை ஏற்படுத்திக் கொடுத்தி, சந்தை வாய்ப்புகளை அதிகரித்து கொடுத்து, நில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதே உடனடி தேவை எனவும் கலாநிதி சர்வானந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.


இலங்கையின் மொனராகலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் சுட்டுக்கொலை

இலங்கை காவல்துறையினர்
இலங்கை காவல்துறையினர்

இலங்கையின் மொனராகலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் டாக்டர் அண்ணாமலை நாராயணன் முத்துலிங்கம் சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொனராகலை நகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணி முடித்து விட்டு அவர் திரும்பி கொண்டிருந்த வேளை, வேன் ஒன்றில் வந்த ஆயுததாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

இதற்கிடையே, இலங்கையின் கிழக்கு மாகாணசபை தேர்தலில், முஸ்லிம் கட்சிகள் வேறுபாடுகளை மறந்து முதலமைச்சர் பதவியை வெல்வதற்காக ஒன்றுபட்டு தனித்துவமான சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும், அல்லாத பட்சத்தில், மூதூர் பிரதேச முஸ்லிம்கள் தனித்துவமான முறையில் அரசுடன் இணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதாக இன்று சனிக்கிழமை மூதூர் ஆனைச்சேனை திடலில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதேச சபை உறுப்பினர் பி.கே கலில் தெரிவித்துள்ளார்.

 


நீரில் தத்தளிக்கும் விவசாயம் – பெட்டகம்

மழையால் விவசாயம் நாசம்
மழையால் விவசாயம் நாசம்

இலங்கையின் வட மாவட்டங்களிலுள்ள விவசாய நிலங்கள் அண்மையில் பெய்த அடைமழையில் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

வழமைக்குப் புறம்பாக அறுவடைக் காலத்தில் மழை பெய்து பெரும் நஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் ஆற்றாற்றுகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் மட்டும் 12,500 ஏக்கர் விவசாய நிலம் மழை நீரில் மூழ்கி நாசமடைந்ததாக அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகிறது.

வட இலங்கையில் மழைப் பாதிப்புகள் குறித்து வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் தொகுத்தளிக்கும் பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 28 மார்ச், 2008


மனம் மாறும் தற்கொலை குண்டுதாரிக்கு ரொக்கப் பரிசு – கொழும்பில் அனாமதேய சுவரொட்டி

‘தற்கொலை குண்டுதாரியாக நினைப்பவர்கள் மனதை மாற்றிக்கொண்டால் ரொக்கப் பணம் பரிசாகக் கிடைக்கும்’ என்று கூறும் புதிய சுவரொட்டிகள் இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஒட்டப்பட்டுள்ளமை குறித்து பொலிஸார் விசாரணை செய்துவருகிறார்கள்.

கொழும்பில் தமிழர்கள் அதிகம் வாழும் ஒரு பகுதியில் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்தச் சுவரொட்டிகளில் தற்கொலை குண்டுதாரி ஒருவரின் துண்டிக்கப்பட்டத் தலையைக் காட்டி, அதனருகே நீங்களும் வாழப் பிறந்தவர்தான்… ஏன் குண்டுதாரியாகி மடிய வேண்டும்? என்று எழுதப்பட்டுள்ளது.

கரும்புலிகள் என்று சொல்லப்படுகின்ற விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையில் சேர எண்ணம் கொண்டுள்ளவர்கள் தங்களது மனதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் 118 என்று துவங்கும் அரசாங்க தொலைபேசி இலக்கம் ஒன்றை அழைக்க வேண்டும் என்றும் அந்த சுவரொட்டி கூறுகிறது.

அப்படி மனதை மாற்றிக்கொள்பவர்களுக்கு உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க ஒரு கோடி ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தொலைபேசி இலக்கம் இந்தச் சுவரொட்டியில் இடம்பெற்றிருந்தாலும், இப்படி ஒரு திட்டத்தை அரசு அறிவிக்கவில்லை, இது ஏமாற்று வேலை என்று இராணுவம் கூறுகிறது.

இந்தச் சுவரொட்டிகள் குறித்து பொலிஸார் விசாரணை நடத்திவருவதாகக் கூறிய இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயகார, அந்தச் சுவரொட்டியிலுள்ள தொலைபேசி எண்ணை தான் அழைத்தபோது பதிலே இல்லை என்றும் இது ஒரு ஏமாற்று வேலை என்று தான் சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார்.


Posted in A9, BBC, Bombers, Child, Children, dead, Eelam, Eezham, Food, Grains, Hoax, ICRC, Imports, Kids, LTTE, Paddy, Prabakaran, Prabhakaran, rice, Soldiers, Sri lanka, Srilanka, Suicide, UN, War, Warriors | Leave a Comment »

Tamil Tiger chief says peace with Sri Lanka govt impossible – Air force bombs LTTE radio

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2007

Maaveerar Day – LTTE: Happy Birthday Prabhakaran & Heroes’ Day

விடுதலைப் புலிகளின் வானொலி நிலயம் தாக்கப்பட்டது-பலர் பலி

புலிகளின் ஒலிபரப்பு கோபுரங்கள்
சில மாதங்களுக்கு முன்னர் தாக்கப்பட்ட புலிகளின் ஒலிபரப்பு கோபுரங்கள்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனது வருடாந்திர மாவீர்கள் தின உரையை நிகழ்த்தவிருந்த நிலையில், அவர்களின் முக்கிய வானொலி நிலையத்தை இலங்கை அரசின் விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் என்றாலும் , அது பிரபாகரன் அவர்களின் உரை ஒலிபரப்பாவதை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இன்றைய தனது மாவீர் தின உரையில், இலங்கை அரசுடன் சமாதான வழிமுறைகள் சாத்தியமில்லை என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரன் அவர்கள் கூறியுள்ளார்.

இலங்கை அரசு இனப்படுகொலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர், சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு அளித்து வரும் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.


சர்வதேச சமூகத்தின் மீது பிரபாகரன் அதிருப்தி

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தமது அமைப்பின் மாவீரர் தின உரையின் போது, சர்வதேச சமூகத்தின் மீது தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

மாவீரர்களுக்கான அஞ்சலி மற்றும் தமது அமைப்பு முப்படையாக விரிந்து நிற்பது குறித்த பெருமிதம் ஆகியவற்றுடன் தனது உரையை ஆரம்பித்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர், அதில், சர்வதேச நாடுகள் மீதும் இலங்கைக்கு உதவும் இணைத்தலைமை நாடுகள் மீதும் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதுடன், மஹிந்த ராஜபக்ஷ அரசின் மீதும், தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மற்றும், இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை ஆராயும் அனைத்துக் கட்சிக் குழு ஆகியவற்றின் மீது தனது அவ நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப்புலிகள் பின்வாங்கியதை ஒரு தந்திரோபாய நடவடிக்கையாக விபரித்த பிரபாகரன் அவர்கள், அநுராதபுரம் விமானப்படைத்தளத்தின் மீதான தாக்குதல், இலங்கை இராணுவத்துக்கு கொடுக்கப்பட்ட ஒரு பெரிய அடி என்று வர்ணித்தார்.

ஆனாலும் இலங்கை அரசு தொடர்ந்தும் ஆதிக்க வெறியோடு செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், உலக கவனத்தை திசை திருப்பவே அரசு அனைத்துக் கட்சிக்குழுவை ஏற்படுத்தியுள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார்.

அதேவேளை, தமிழர் பிரச்சினையை நீதியான வகையில் தீர்த்து வைக்கும் அரசியல் நேர்மையும், உறுதிப்பாடும் எந்தவொரு தென்னிலங்கை அரசியல் கட்சியிடமும் கிடையாது என்றும் பிரபாகரன் தனது உரையில் குறிப்பிட்டார்.

கிழக்குத் திமோர் மற்றும் மொன்ரி நீக்ரோ ஆகிய நாடுகளில் பிரச்சினைகள் தீர சர்வதேச சமூகம் ஆதரவும் அனுசரணையும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரபாகரன், ஆயினும், தமது தேசியப் பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும், நடவடிக்கைகளும் திருப்தியாக இல்லை என்றும் கூறியுள்ளார்.

இலங்கை அரசின் போக்கை சர்வதேச நாடுகள் கண்டித்திருந்தால் தமிழ்ச்செல்வனின் மரணம் இடம்பெற்றிருக்காது என்று கூறிய பிரபாகரன், இணைத்தலைமை நாடுகளும் சமாதானத்துக்கான பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியா முன்னர் விட்ட தவறையே சர்வதேச நாடுகள் தற்போது விட்டு நிற்கின்றன என்றும் பிரபாகரன் குற்றம் சாட்டினார்.

தமது அமைப்பு இழந்துவிட்ட இறையாண்மைக்காகவும், சுதந்திர தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவும் போராடுவதாகக் கூறிய அவர், தமது மக்கள் அல்லல் பட்ட வேளைகளில் உலகம் கண்ணை மூடி நின்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.

ஆகவே உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமது போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் தனது உரையின் இறுதிப் பகுதியில் கேட்டுக்கொண்டுள்ளார்.


வட இலங்கை தாக்குதல்களில் 20 பேர் பலி

கிளெமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவிகள்
கிளெமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவிகள்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் மற்றும் விடுதலைப் புலிகளின் வானொலி நிலையத்தின் மீது, அரச படையினர் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதல் என்பவற்றில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் மாவீரர் தின வாரத்தின் இறுதி நாளாகிய இன்று அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முக்கியத்துவம் மிக்க தனது கொள்கை விளக்க உரையை ஆற்றுவதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதாக கிளிநொச்சி திருவையாறு பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் வானொலியாகிய புலிகளின் குரல் நிலையக் கட்டிடத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழி குண்டுத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் மீது தாக்குதல்

புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் 5 ஊழியர்களும், அந்த நிலையத்தின் அயலில் உள்ள வீடுகளில் இருந்ததாகக் கூறப்படும் மேலும் 4 பேருமே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மின்னஞ்சல் வழியாக அனுப்பியுள்ள செய்திக் குறிப்பொன்றில் தெரிவித்திருக்கின்றார். இறந்தவர்களில் ஒருவர் 14 வயது சிறுமி என்றும் இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலின் போது விமானப்படையினர் பத்துக்கும் மேற்பட்ட குண்டுகளை அடுத்தடுத்து வீசி வானொலி நிலையத்தைத் தரைமட்டமாக்கியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

புலிகளின் குரல் வானொலி நிலையம் அரச படைகளின் விமானக் குண்டுத் தாக்குதலில் பெரும் சேதமடைந்துள்ள போதிலும் அதன் ஒலிபரப்ப்பு வழமைபோல இடம்பெற்றது என்பதுடன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் உரையும் அந்த வானொலியில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒலிபரப்பாகியுள்ளது.

கிளெமோர் தாக்குதலில் 9 மாணவிகள் பலி

இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் ஐயங்கன்குளம் பாடசாலையைச் சேர்ந்த முதலுவி மாணவர்கள் பயணம் செய்த அம்புலன்ஸ் வண்டி மீது இன்று காலை 11.30 மணியளவில் நடத்தபட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கிளிநொச்சியில் இருந்து மேற்குத் திசையில் 25 கிலோ மீற்றர் தொலைவில் துணுக்காய் – கொக்காவில் வீதியில் மல்லாவி – ஐயங்கேணி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அரச படைகளின் ஆழ ஊடுருவும் அணியினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் 9 மாணவிகளும், அம்புலன்ஸ் வண்டியின் சாரதியும் மற்றும் ஒருவருமே பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இரண்டு மாணவிகள் காயமடைந்திருக்கின்றனர்.

இந்தத் தாக்குதலில் தமக்குத் தொடர்பில்லை என்று இராணுவத்தினர் மறுத்துள்ளனர்.


Posted in Air Force, Airforce, Arms, Attack, Bombs, Communications, dead, Eelam, Eezham, infrastructure, Kilinochi, Kosovo, LTTE, Military, mines, montenegró, Norway, Peace, Prabaharan, Prabakaran, Prabakharan, Radio, Sri lanka, Srilanka, Tigers, Timor, War, Weapons, World | Leave a Comment »

Anandasangaree urges Leaders and people of Tamil Nadu to demonstrate against Prabakaran

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2007

இலங்கை தமிழ் பேசும் மக்களை கைவிட்டுவிட வேண்டாமென தமிழ்நாட்டு தலைவர்களுக்கும் மக்களுக்கும் உருக்கமான வேண்டுகோள்.

தமிழ் நாட்டு தலைவர்களும் மக்களும் இலங்கை பிரச்சினையின் தீர்வுக்கு வழங்கும் ஆதரவானது எவ்வித தீர்வுக்கும் உதவாதது மட்டுமன்றி எதிர் விளைவுகளையே அது ஏற்படுத்தும். ஆகவே ஐக்கிய இலங்கைக்குள் ஒரு நியாயமான தீர்வை காண்பதற்கு தமிழ் நாட்டிலுள்ள சம்பந்தப்பட்ட சகலரும் பல்வேறு வேற்றுமைகளை மறந்து செயற்பட வேண்டுமென மிகுந்த ஆர்வத்துடன் வேண்டுகிறேன். தமிழ்நாட்டில் இயங்கும் சகல அரசியல் கட்சிகளும் ஒருமித்து தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஊக்கமளிக்கக் கூடாது. சர்வதேச சமூகம் பிரிவினையை முற்று முழுதாக எதிர்க்கிறது. இந்தியாவும் இலங்கையின் இறைமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை வலியுறுத்தி வருகின்றது. தொடர்ந்து நாட்டுப் பிரிவினைக்காக போராடுவது காலத்தை வீணடிப்பது மட்டுமல்லாது உயிர்ச்சேதங்களையும், சொத்தழிவுகளையும் ஏற்படுத்தும். இதை ஒவ்வொரு இந்திய மகனும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்ட முதிர்ந்த தமிழரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நான் இனப்பிரச்சனை பற்றியும் அதன் தீர்வு பற்றியும் நன்கு அறிவேன். கிளிநொச்சி தொகுதியை பாராளுமன்றத்தில் 14 ஆண்டுகளுக்கு மேல் பிரதிநிதித்துவப்படுத்தியதும், அதை தனிமாவட்டமாக்கியதும் நானே. எனது இல்லத்திலிருந்து 200 யார் தூரத்திலேயே விடுதலைப் புலிகளின் தலைமைக் காரியாலயம் அமைந்துள்ளது. இந்த வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் உண்மையானதாகவும், அதிகாரபூர்வமானதும் எனக் கொள்வதோடு இதில் எப்பகுதியேனும் பிழையாக இருப்பின் யாரும் மறுப்பு தெரிவிக்க முடியும். 20 மைல் இடைவெளியில் பாக்குநீரிணைக்கப்பால் தமிழ்நாட்டில் வாழும் ஆறு கோடி மக்கள் இலங்கையில் தம் இன மக்கள் பற்றி கவலையடைவது நியாயமானதே. ஆகவேதான் தமிழ்நாடு இலங்கை இனப்பிரச்சiனை தீர்வில் கவனமாகவும். எச்சரிக்கையாகவும் செயற்பட வேண்டுமேயன்றி மனக்கிளர்ச்சியையும், உணர்ச்சியையும் தூண்டக்கூடிய பெச்சுக்களால் மக்கள் தூண்டிவிடப்படக் கூடாது. தமிழ்நாடு நியாயமான தீர்வை காண்பதற்கு விசுவாசமாக விரும்பினால் அது நாட்டின் கள நிலைமை பற்றி சரியாக அறிந்திருக்க வேண்டும்.

தமிழ்ச்செல்வனின் மரணம்

தமிழ்ச்செல்வன் அவர்கள் மகாத்மாகாந்தி போன்றோ, அன்றி மார்ட்டின் லூதர் கிங் போன்றோ மக்கள் கொதித்தெழக்கூடிய வகையில் கொலை செய்யப்படவில்லை. விடுதலைப் புலிகளும் அரசும் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் யுத்த களத்திலேயே அவர் இறந்தார் என்பதையும் மக்கள் உணர வேண்டும். ஒருவரையொருவர் மிஞ்சி செயற்பட வேண்டுமென்று போட்டி போட்டுக் கொண்டனர். தமக்கு தாமே புகழ் தேடக்கூடிய நோக்கோடு விடுதலைப் புலிகள் அண்மையிலும் கூட பல முக்கியஸ்தர்களை கொல்ல முயற்சித்தனர். பாதுகாப்புச் செயலாளர் திரு. கோத்தபாய ராஜபக்ஷவை இலக்கு வைத்து தற்கொலை குண்டுதாரி தாக்கியவேளை மயிரிழையில் அவர் உயிர் தப்பியபோதும் பாதுகாப்பு அதிகாரிகளும், குண்டுதாரியும் அதேயிடத்தில் பலியானார்கள். அதேபோன்று இராணுவத்தளபதி லெப். ஜேனரல். சரத் பொன்சேகா தற்கொலை குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து நீண்டநாள் வைத்தியத்தின் பின் தப்பினார். ஆனால் பல பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், தற்கொலை குண்டுதாரியும் அதேயிடத்தில் பலியானார்கள். இவ்விரு தற்கொலையாளிகள் தம் பெற்றோரிடமிருந்து பலாத்காரமாக பிரித்தெடுக்கப்பட்டு போரிடுமாறு மூளைச்சலவை செய்யப்பட்டு விடுதலைப் புலிகளால் பலியிடப்பட்டுள்ளர். இவ்விரு கொலைகளுக்கும் தமிழ்ச்செல்வன் பெறுப்பேற்க வேண்டாமா என்ற கேள்வி ஒவ்வொருவரின் உள்ளத்திலும் எழ வேண்டும். தமிழ்ச்செல்வனை இலக்கு வைத்தமைக்கு இராணுவத்தை எவ்வாறு குறைகூற முடியும். கொலை குற்றத்திற்காக குறைந்தபட்சம் கொலை செய்ய தூண்டியதற்காகவேனும் தமிழ்ச்செல்வன் குற்றஞ்சாட்டப்பட்டிருக்க வேண்டும். ஒரு காலத்தில் ஒருபகுதி தமிழ் மக்களால் சுதந்திர போராளிகள் என பாராட்டப்பட்டு பிற்காலத்தில் அவர்களுடைய கொடூரச் செயல்களால் மதிப்பிழந்த ஒரு இயக்கத்தின் உப தளபதியாக செயல்பட்ட ஒருவரின் மரணத்துக்கு ஆர்பாட்ட ஊர்வலங்களும், கண்டன கூட்டங்களும் நடத்துவதில் அர்த்தமில்லை. மேலும் இது சம்பந்தமாக இலங்கை தமிழர்களே பெரிதாக அலட்டிக் கொள்ளாத அதேவேளை சர்வதேச சமூகம் கவலைப்பட வேண்டிய அவசியமும் இல்லை. கள நிலைமை பற்றி போதிய விளக்கமின்மையும் புலிகளின் பொய் பிரச்சாரமுமே மூளைச்சலவை செய்யப்பட்டு சுயமாக சிந்திக்கின்ற தன்மையை இழந்த அப்பாவி தற்கொலைதாரிகளை பலிகொடுத்த குற்றச்சாட்டுக்காக வழக்கு தொடரப்பட வேண்டிய ஒருவருக்கு இவ்வாறு பதற்றமும், மிகைப்படுத்தப்பட்ட அனுதாபமும் ஏற்பட காரணமாக இருந்தது நியாயப்படுத்த முடியாத ஆட்சேபனைகளும், ஆர்பாட்டங்களும் வெல்லமுடியாதவொரு யுத்தத்தை தொடர்வதற்கு விடுதலைப் புலிகளுக்கு உற்சாகம் கொடுக்கின்ற ஒரு செயலாகும்.

தமிழ்ச்செல்வனின் கொலை பற்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு கண்டனங்கள் வந்து குவிந்தன. சிலர் சமாதானப் பேச்சுவார்த்தை முறிந்து விட்டது எனக் கூறினர். வேறு சிலர் சமாதானப் புறா கொல்லப்பட்டு விட்டதாக முறைப்பட்டனர். மிகக் கவலைதரும் விடயம் என்னவென்றால் 20 மைல் நீளம் கொண்ட பாக்குத் தொடுவாயால் மட்டும் பிரிக்கப்பட்டுள்ளவர்களுக்குக்கூட இலங்கை நாட்டின் நிலைமை புரிந்துகொள்ள முடியவில்லை. உலகின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் தமிழ் ஊடகங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் பிரதேசங்கள் பற்றிய செய்திகளை வெளியிடுவதில்லை. ஆகவே இலங்கை நிலைமை பற்றி அறியக்கூடிய ஒரேயொரு வழி பல கட்சிகளின் பிரதிநிதிகள் வடக்கு கிழக்கிற்கு வந்து விடுதலைப் புலிகளின் பிரதேசங்கள் உட்பட சகல இடங்களையும் பார்வையிடுவதே.

ஒரு கொடூரமான கிளைக் கதை

தமிழ்ச்செல்வனே முழுபொறுப்பையும் ஏற்க வேண்டிய அவர் இறப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை நாம் இங்கு குறிப்பிட வேண்டும். மரணிக்க இருந்த 21 பேருடன் புகைப்படம் எடுத்துவிட்டு அசிங்கமான அந்த பணியை திரு தமிழ்ச்செல்வனிடம் விட்டுவிட்டு அவருடைய தலைவர் பிரபாகரன் பங்கருக்குள் ஓடி ஒளிந்து கொண்டார். 21 இளஞர்களும், யுவதிகளும் ஏனைய பல்லாயிரக் கணக்கானோரைப் போல பலவந்தமாக சேர்க்கப்பட்டு போரிடுமாறு மூளைச்சலவை செய்யப்பட்டு தலைவருடன் இராப்போசனம் அருந்தி புகைப்படமும் எடுக்கப்பட்ட பெரும் மகிழ்ச்சியை அவர்களுக்கு கொடுத்து உயிருடன் திரும்பி வரமாட்டார்கள் என அறிந்திருந்தும் உயிருடன் அனுராதபுர தாக்குதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கையின் படி ஒரு பெறுமதியான காரணத்துக்காக இறக்காத 21 இளைஞர், யுவதிகளின் சடலங்களை பொறுப்பேற்குமாறு யாரும் கோரிக்கை விடவில்லை. வீரமும் திறமையுமிக்க நாட்டின் பல்வேறு முன்னேற்றத்திற்கு பயன்படுத்தியிருக்கக்கூடிய இந்த 21 இளைஞர் யுவதிகளையும் கொடூரமான முறையில் கொலை செய்த, அல்லது முட்டாள்தனமாக பலிகொடுத்த சமாதானப் புறா என்றழைக்கப்படும் இம் மனிதரை சமுதாயம் மன்னிக்குமா?.

இலங்கையில், இந்தியாவில் அல்லது உலகின் எப்பகுதியிலேனும் ஒரு பெற்றோர் அல்லது விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளாக கருதப்படுகின்ற 22 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் அல்லது ஒரு அரசியல் தலைவர், அல்லது விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்து புலிகளின் கொள்கையை ஆதரிப்பவர் தன்னுடைய ஆண் பிள்ளைகளில் ஒருவரையோ, பெண்பிள்ளைகளில் ஒருவரையோ புலிகளின் தற்கொலை படைக்கு கையளித்து தற்கொலை பணிக்கு அனுப்பி வைக்க முன்வருவாரேயானால் நான் விடுதலைப் புலிகளை சுத்த வீரர்கள் என பாராட்டுவேன். ஆனால் துரதிஷ்டவசமாக எமக்கு கிடைத்த செய்திகளின் படி திரு தமிழ்ச்செல்வன் உட்பட விடுதலைப் புலிகள் தலைவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் கல்வி கற்கின்ற வேளையில் உள்ளுர் ஏழைப் பெற்றோர்களின் பிள்ளைகள் பலாத்காரமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டு மூன்றுமாத பயிற்சியோடு யுத்த களத்துக்கு அனுப்பப்படுகின்றார்கள். அவர்களில் அநேகர் யுத்தக்களத்தில் இருந்து உயிருடன் திரும்புவதில்லை. அவ்வாறு இறந்தவர்களின் சடலங்களுக்கு அனுபவத்துக்கும் வயதுக்கும் ஏற்ப பொருத்தமான பட்டங்கள் வழங்கி கௌரவிக்கின்றனர். பிள்ளைகளை புலிகள் இயக்கத்துக்கு வழங்க மறுக்கின்ற பெற்றோர்கள் கடுமையாக தண்டிக்கப்படுகின்றனர். பிள்ளைகள் சேர்வதை தடுக்க முடியாது போனவர்கள் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். விடுதலைப் புலிகள் சார்பான ஆர்ப்பாட்டங்கள் எதிலும் இனி சேர்பவர்கள் பல தடவை சிந்தித்த பின்பே சேர்வார்கள் என்றெ நான் நம்புகிறேன்.

முறைப்படி பார்க்கும் போது இந்த 21 இளைஞர், யுவதிகளும் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என அறிந்திருந்தும் அவர்களை பலாத்காரமாக அனுராதபுர தாக்குதலுக்கு அனுப்பி வைத்த தமிழ்ச்செல்வனும், பிரபாகரனும் கொலைக் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள். ஆனால் அப்பாவி தமிழ்நாட்டு மக்கள் அவர்களை பெரும் வீரர்களாக கணிக்கும் அளவிற்கு தப்பாக வழிநடத்தப்படுகின்றார்கள். இனி ஒருவரேனும் விடுதலைப்புலிகள் புகழ்ச்சியடைய நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் எதிலும் கலந்து கொள்ளமாட்டார்கள் என நம்புகிறேன். இவர்கள் தற்கொலை பணிக்கு செல்வதற்கு முன்னர் பிரபாகரனுடன் படம் எடுத்துக் கொண்டமைக்கு ஆதாரம் இருப்பதால் இந்த 21 இளைஞர், யுவதிகள் எந்தவிதமாக அனுராதபுரத்தில் இறந்தார்கள் என்பதை உலகத்துக்கு பிரபாகரன் தெரியப்படுத்த வேண்டும். விடுதலைப் புலிகளின் கொடூர செயல்களின் வரலாற்றில் இவர்களுடைய குற்றங்களை நிரூபிப்பதில் முதல் தடவையாக பொருத்தமான சாட்சி கிடைத்திருக்கிறது.. 21 பேருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் விடுதலைப் புலிகளின் இணையத்திலும், உள்ளுர் பத்திரிகைகளிலும் மறுநாளே பிரசுரமானது. இந்த 21 பேரும் கடைசியாக பிரபாகரனுடன் இருந்ததற்கு போதிய சாட்சியாகும். இத்தகையவொரு பாரதூரமான புலிகளின் மனித உரிமை மீறலுக்கு எதிராக சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்ச்செல்வன் கொலையை கண்டித்து ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்திலும் அனுதாப கூட்டத்திலும் கலந்து கொண்ட ஒவ்வொருவரையும் உங்கள் பிள்ளைகளில் ஒருவரை விடுதலைப் புலிகளின் தற்கொலை படையில் சேர்த்துக்கொள்ள தயாரா என விசனத்துடன் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இல்லையெனில் தமது வாயை திறந்து தமது ஆட்சேபனையை தெரிவிக்காது மௌனியாக்கப்பட்ட ஏழைப் பெற்றோருடைய பிள்ளைகளின் மரணத்தின் மூலம் விடுதலைப் புலிகளுக்கு புகழ் தேடும் உரிமை உங்களுக்கு எப்படி கிடைத்து. இலங்கை அரசும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை. சர்வதேச சமூகம் இப்பிரச்சனையை ஐக்கிய நாடுகள் ஸ்தாபன மட்டத்தில் எடுக்க வேண்டும்.

வட பகுதி முஸ்லீம், தமிழ் மக்களுடைய பரிதாப நிலை

தமிழை தாய் மொழியாகக் கொண்ட வட மாகாணத்தில் வாழும் முஸ்லீம் மக்களை புலிகள் நடத்திய கொடூரமான முறைபற்றி தமிழ் நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க தவறின் நான் எனது கடமையிலிருந்து தவறியவனாவேன். பால், வயது என்ற வேறுபாடின்றி சகல முஸ்லீம் மக்களும் வட மாகாணத்திலிருந்து தம் உடமைகள் அனைத்தும் விட்டுவிட்டு குறுகிய நேர அவகாசம் கொடுத்து வெளியேற வேண்டுமென புலிகள் கட்டளைப் பிறப்பித்தனர். சிறு பிள்ளைகளின் காதணிகள்கூட பறிக்கப்பட்டது. கடந்த 17 ஆண்டு காலமாக இன்று வரை 160 அகதி முகாம்களில் தெற்கே சிங்கள மக்களுடன் வாழ்கின்றனர். விடுதலைப் புலிகளின் தலையீடு இன்றி என்றோ ஒரு நாள் தமது இல்லங்களுக்கு திரும்புவோம் என படுபரிதாபகரமான நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். புலிகளின் ஆட் சேர்ப்பு நடவடிக்கைக்கு பயந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் ஏறக்குறைய 300 தமிழ் பிள்ளைகள் மனித உரிமை ஆணைக்குழுவின் பாதுகாப்பில் வாழ்கிறார்கள். இதுதான் அரச கட்டுப்பாட்டின் கீழுள்ள யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நிலையாகும். தமிழ் மக்களில் அரைவாசிப் பேருக்கு மேல் தென்னிலங்கையில் சிங்கள, முஸ்லீம் மக்கள் மத்தியில் வாழ்கிறார்கள். ஆகவே சிங்கள மக்கள் தமிழ் மக்களை இன அழிப்பு செய்கின்றார்கள். என்ற புலிகளின் குற்றச்சாட்டு வெறும் கட்டுக்கதையே. இன்று தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத் தருவோம் என்று கூறிய புலிகளிடமிருந்து தமிழ் மக்கள் விடுதலை பெற வேண்டும். இலங்கையில் என்ன நடக்கிறது. புலிகள் மக்களை எவ்வாறு துன்புறுத்துகிறார்கள் என்பவற்றை தமிழ்நாட்டிலிருந்து ஒரு குழுவினர் இலங்கை வந்து புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம் உட்பட ஏனைய பிரதேசங்களுக்கும் சென்று நேரடியாக அறிய வேண்டும்.

ஒருவரின் மரணத்திலும் நான் மகிழ்ச்சியடைபவன் அல்ல. ஒரு எதிரிக்கும் மரணம் ஏற்படுவதை விரும்பாதவன். எனது கவலையனைத்தும் தமிழீழம் அடைய முடியாது என தெரிந்திருந்தும் ஆயிரக்கணக்கில் எமது இளைஞர்களை விடுதலைப் புலிகள் பலிகொடுப்பதே. அவர்கள் ஏற்கனவே இருபதாயிரம் இளைஞர், யுவதிகளை பெற்றோர் விருப்பத்திற்கு மாறாக பலாத்காரமாக தம்முடன் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களை பலிகொடுத்துள்ளார்கள். தினமும் இளைஞர்களும், யுவதிகளும் யுத்த களத்துக்கு அனுப்பப்பட்டு மரணிக்கிறார்கள். இதைவிட பல்வேறு தமிழ் இயக்கங்களைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். 70,000 இற்கு மேற்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லீம்கள் உயிரிழந்துள்ளார்கள். பல்லாயிரக்கணக்கானோர் அங்க வீனர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். 30,000 மேற்பட்டோர் அநாதைகளாகவும், விதவைகளாகவும் வாழ்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக புலிகளின் இந்த அர்த்தமற்ற யுத்தத்தால் பல கோடி பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

தமிழ்நாட்டு தலைவர்களையும் மக்களையும் நாம் பரிந்து கேட்பது இந்த வேண்டுகோளில் குறிப்பிட்ட அத்தனையும் மிக கவனத்துக்கு எடுத்து உடனடியாக யுத்தத்தை நிறுத்துமாறும், நாட்டுப் பிரிவினையை கைவிட்டு சமஷ்டி அடிப்படையிலோ அதற்குப் பதிலாக இந்திய முறையிலான ஓர் அமைப்பையோ ஏற்றுக்கொண்டு இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும்படி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். அத்தகைய தீர்வுக்கு இலங்கையரில் பெரும்பான்மையினரின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும். தமிழ்நாடு புலிகளை ஆதரித்து ஒரு வரலாற்றுத் தவறை புரியாமல் அனைவரும் தமது அரசியல் வேறுபாடுகளை மறந்து சமாதான முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டுமென தமிழ்நாட்டு தலைவர்களையும், தமிழக மக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ

தமிழர் விடுதலை கூட்டணி (டுல்ப் – TULF) 

Posted in Alternate, Anandasangaree, Anandasangari, Anandasankaree, Anandasankari, Anandsangaree, Anandsangari, Anandsankaree, Anandsankari, Eelam, Eezham, Extremism, Extremists, Freedom, Liberation, LTTE, Oppression, Prabaharan, Prabakaran, Sri lanka, Srilanka, Tamil, Terrorism, Terrorists, TULF | Leave a Comment »