Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘TN’

‘Self Immolations for Tamil Eelam: Congress is Responsible’ – Pazha Nedumaran on 14 dead

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2009

14 பேர் உயிரிழந்ததற்கு மத்திய அரசே பொறுப்பு: பழ. நெடுமாறன் குற்றச்சாட்டு

இலங்கைத் தமிழர்களுக்காக 14 பேர் தீக்குளித்து இறந்ததற்கு மத்திய அரசுதான் பொறுப்பாளி என்று குற்றம்சாட்டினார் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன்.

அரியலூர் மாவட்டம், தத்தனூர் கீழவெளியில் ஞாயிற்றுக்கிழமை மாலை, இலங்கைத் தமிழருக்காகத் தீக்குளித்து இறந்த பாமக தொண்டர் செ. ராஜசேகரனின் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இதில் பழ. நெடுமாறன் மேலும் பேசியது:

“”தியாகிகளின் தியாகங்களை மதிக்காவிட்டாலும் கொச்சைப்படுத்தக்கூடாது.

தமிழகத்தில் 5 நாள்களுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர்கள் 14 பேரின் உயிரிழப்புக்கும் பொறுப்பாளி மத்திய அரசுதான். இதன் விளைவு வரும் மக்களவைத் தேர்தலில் உணர்த்தப்படும். ராஜசேகரனின் மரணம் ஈடுசெய்ய முடியாததுதான் என்றாலும், அவரது குடும்பச் சூழல் கருதி சிறு உதவியாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அவரது குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் விரைவில் வழங்கப்படும்” என்றார் பழ. நெடுமாறன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்: “”இவையெல்லாமும் சகித்துக் கொள்ள முடியாத கொடுமை என்றாலும்கூட, தீயில் வெந்து சாக வேண்டும் என்று அவர்கள் எடுத்த முடிவு, அவர்களது மன வேதனையின் உச்சத்தைக் காட்டுகிறது.

பாமக தலைவர் கோ.க. மணி: முத்துக்குமார் தொடங்கி ராஜசேகரன் வரை தீக்குளித்து உயிரிழந்தவர்களின் நோக்கங்கள் நிறைவேறும் வரை வீரமுள்ள, மானமுள்ள தமிழர்கள் தொடர்ந்து போராட வேண்டும்.

Posted in Govt, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , | Leave a Comment »

Tirupur or Namakkal: EVKS Ilangovan

Posted by Snapjudge மேல் மார்ச் 11, 2009

“பனியன்’ நகரில் களமிறங்குகிறார் ஜவுளி அமைச்சர்?

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பூர் தொகுதியில், மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

ஈரோடு மாவட்டத்தின் கோபி மக்களவையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இளங்கோவன், மத்திய அமைச்சரவையில் முதலில் வர்த்தக இணை அமைச்சராக இருந்தார். தற்போது ஜவுளித் துறை இணை அமைச்சராக உள்ளார்.

தொகுதி சீரமைப்புக்குப் பிறகு கோபி மக்களவையில் இருந்த

  • பெருந்துறை,
  • பவானி,
  • அந்தியூர்,
  • கோபிசெட்டிப்பாளையம்,
  • திருப்பூர் வடக்கு,
  • திருப்பூர் தெற்கு

பேரவைத் தொகுதிகளை இணைத்து புதிதாக திருப்பூர் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இருந்த கோபி தொகுதியில் அதிமுக 7 முறையும், காங்கிரஸ் 4 முறையும், திமுக ஒரு முறையும் வென்றுள்ளன.

காங்கிரஸýடன் முதல் முறையாக எம்ஜிஆர் கூட்டணி அமைத்து 1980-ல் மக்களவைத் தேர்தலைச் சந்தித்தபோது தமிழகத்தில் 2 தொகுதிகளில் மட்டுமே இந்த அணி வெற்றி பெற்றது. அப்போது கோபி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜி.சின்னசாமி வெற்றி பெற்றார்.

அதைத் தொடர்ந்து காங்கிரஸýக்கு வலுவான அடித்தளம் உள்ள தொகுதிகளின் பட்டியலில் கோபியும் இருந்து வருகிறது.

2004-ல் அதிமுக வேட்பாளரை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் வென்றார். அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக எம்.பி.க்களில் இளங்கோவனும் ஒருவர்.

தொகுதி சீரமைப்பில் கோபி மக்களவை நீக்கப்பட்டுள்ளதால் வேறு தொகுதிக்கு மாற வேண்டிய நிலையில் உள்ளார். ஈரோடு, நாமக்கல், திருப்பூர் ஆகிய தொகுதிகளுக்கு வாய்ப்பு இருந்தாலும் அவரது விருப்பம் திருப்பூராகவே உள்ளது. ஈரோடு தொகுதியை திமுக கேட்டு வருவதால், அத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு குறைவு.

முக்கியமாக, திருப்பூரில் இளங்கோவன் போட்டியிட காங்கிரஸýக்குள் எதிர்ப்பு இருக்காது. அதேபோல அதிமுக வாக்கு வங்கி அதிகமாக இருப்பதால், இத்தொகுதியில் போட்டியிட திமுகவும் விரும்பாது.

“திருப்பூர் தொகுதியில் இடம்பெற்றுள்ள 6 பேரவைத் தொகுதிகளில் 2 தொகுதி மட்டுமே புதியவை. மற்றவை அவருக்கு வெற்றியை அளித்தவைதான். ஆகவே, திருப்பூரில் போட்டியிடவே விரும்புகிறார்’ என்கின்றனர் இளங்கோவனின் ஆதரவாளர்கள்.

திருப்பூர் மக்களவையில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய தொகுதிகள் மட்டுமே காங்கிரஸýக்கு வாய்ப்புக் குறைந்தவை. இருப்பினும் பிற 4 தொகுதிகளில் காங்கிரஸ், திமுகவுக்கு வாய்ப்பு அதிகம் என்பதால் இளங்கோவன் இத் தொகுதியை விரும்புவதாகவும் அக் கட்சியினர் கூறுகின்றனர்.

திருப்பூர் தொகுதி கிடைக்காதபட்சத்தில் நாமக்கல்லில் போட்டியிடுவார் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Posted in Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Anbumani Ramadoss Constituency? DMK vs PMK in Cuddalore: Vanniyar Votes, Alliance

Posted by Snapjudge மேல் மார்ச் 9, 2009

கடலூர் மக்களவை தொகுதி பாமகவுக்கா?

Dinamani நிருபர்

கடலூர், மார்ச் 8: மக்களவைத் தேர்தலில், கடலூர் தொகுதியில் பாமக போட்டியிடுவது நிச்சயம் எனத் தெரிகிறது.

கடலூர் மக்களவைத் தொகுதி தொடக்கம் முதல் காங்கிரஸ் வசம் இருந்து வந்துள்ளது.

பி.ஆர்.எஸ். வெங்கடேசன் 3 முறை எம்.பி.யாக இருந்தார். ஒருமுறை அதிமுக வசமும் அதைத் தொடர்ந்து இருமுறை திமுக வசமும் இருந்துள்ளது.

ஆனால் இந்தத் தேர்தலில் அதிமுக அணியில் இருந்தாலும், திமுக அணியில் இருந்தாலும் கடலூர் மக்களவைத் தொகுதியைக் கேட்பதில் பாமக தலைமை உறுதியாக இருக்கிறது.

மாவட்ட ஒருங்கிணைந்த பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, கட்சித் தலைமையை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள்.

தொகுதி மறுசீரமைப்பே இதற்கு முக்கியக் காரணியாக அமைந்து இருக்கிறது. முந்தைய தேர்தல்களில்

  • கடலூர்,
  • நெல்லிக்குப்பம்,
  • பண்ருட்டி மற்றும்
  • விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை,
  • ரிஷிவந்தியம்,
  • சங்கராபுரம்

ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் கடலூர் மக்களவைத் தொகுதியில் இடம்பெற்று இருந்தன.
தேர்தல் ஆணையம் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொண்ட பின்,

  • கடலூர்,
  • பண்ருட்டி,
  • நெய்வேலி,
  • குறிஞ்சிப்பாடி,
  • திட்டக்குடி,
  • விருத்தாசலம்

ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்டதாக கடலூர் மக்களவைத் தொகுதி மாறியிருக்கிறது.
சாதகமான நிலை

உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் தொகுதிகளில் வன்னிய சமூகத்தினர் மிகவும் குறைவாக இருந்ததால்தான், முந்தைய கடலூர் மக்களவைத் தொகுதியில் வன்னியர் அல்லாதோர் வெற்றிபெற முடிந்தது.

தற்போது அந்த 3 தொகுதிகளும் நீக்கப்பட்டு, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி தொகுதிகள் கடலூர் மக்களவைத் தொகுதியில் இணைக்கப்பட்டு இருப்பது, நிரந்தரமாக பாமகவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி இருப்பதாக அக் கட்சியினர் தெரிவித்தனர்.

எனவேதான் கடலூர் மக்களவைத் தொகுதியை கேட்பதில், பாமக உறுதியாக இருப்பதாக அக் கட்சியினர் தெரிவித்தனர்.

வேட்பாளர் யார்?

பாமக சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிட

  • அன்புமணி ராமதாஸ்,
  • திண்டிவனம் எம்.பி. தன்ராஜ்,
  • காடுவெட்டி குரு,
  • விருத்தாசலம் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.கோவிந்தசாமி

ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. அன்புமணியைப் பொருத்தவரை ராஜ்யசபா உறுப்பினராக இன்னும் ஓராண்டு நீடிக்க முடியும். மேலும் கடலூர் தொகுதி வேட்பாளர் என்று ஆகிவிட்டால், மற்ற தொகுதிகளில் தேர்தல் பணி ஆற்றுவது சிரமம்.அதனால் அவர் போட்டியிட வாய்ப்பில்லை என்றே பாமகவினர் கூறுகின்றனர்.
திண்டிவனம் தொகுதி நீக்கப்பட்டு, விழுப்புரம் தனித் தொகுதியாக மாற்றப்பட்டு இருப்பதால் தற்போதைய எம்.பி. தன்ராஜ் அங்கு போட்டியிட வாய்ப்பில்லை.

எனவே அவருக்குக் கடலூர் தொகுதி ஒதுக்கப்படலாம் என்றும் பாமக முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். காடுவெட்டி குருவுக்கும் கடலூர் தொகுதி ஒதுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக அக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

Posted in Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , | Leave a Comment »

BSP to contest all 39 Lok Sabha seats in Tamil Nadu: Writer and IAS officer P. Sivakami joins Bahujan Samaj Party

Posted by Snapjudge மேல் மார்ச் 9, 2009

தமிழகத்தில் போட்டியிடும் பி.எஸ்.பி. வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை, மார்ச். 9-

உத்தரப் பிரதேச மாநில முதல்-மந்திரி மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.சி.) நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. பாராளுமன்ற வேட்பாளர் தேர்வு தொடர்பாக தேசிய பொது செயலாளர் சுரேஷ் மானே தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் கு.செல்வபெருந்தகை, மாநில முதன்மைச் செயலாளர் ப.சிவகாமி, மாநில அமைப்பாளர் கே.ஆம்ஸ்ட்ராங் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு 12 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பெயர் பட்டியலை பொது செயலாளர் சுரேஷ் மானே வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

  1. சென்னை தெற்கு – முன்னாள் எம்.பி ஸ்ரீதரன்,
  2. மத்திய சென்னை-யூனுஸ்கான்,
  3. கன்னியாகுமரி – முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ப.சிவகாமி,
  4. தருமபுரி- முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.வி.புருசோத்தம்மன்,
  5. மயிலாடுதுறை – முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி எல்.வி.சப்தரிஷ’,
  6. ஆரணி-சங்கர்,
  7. ஸ்ரீபெரும்புதூர்-பி.ராஜப்பா,
  8. திருச்சி-என்.கல்யாணசுந்தரம்,
  9. சேலம்-பாலசுப்பிரமணியம்,
  10. மதுரை-தர்பார்ராஜா,
  11. தூத்துக்குடி-ஜ“வன்குமார்,
  12. கோவை-ராமசுப்பிரமணியம்.

சுரேஷ் மானே நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி இல்லாமல் போட்டியிடுவது என்பது கட்சியின் தேசிய கொள்கை ஆகும். அதன்படி, பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறோம். கட்சித் தலைவர் மாயாவதி முதல்கட்டமாக பிரசாரத்தை கேரளாவில் தொடங்குகிறார். தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (ஏப்ரல்) பிரசாரம் செய்ய உள்ளார். அதற்கு முன்பாக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிடும். அனைத்து தொகுதிகளிலும் எங்கள் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி பொறுப்புக்கு வந்தால் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு உறுதியாக தீர்வு காணப்படும். இவ்வாறு சுரேஷ் மானே கூறினார்.

Posted in Tamil Nadu, Therthal 2009 | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | Leave a Comment »

Nadars: Era Manigandan

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2009

07.01.09    தொடர்கள்
ந்தச் சமுதாய மக்களாக இருந்தாலும் உறவின்முறையோடு `அண்ணாச்சி’ என்று அன்போடு அழைக்கும் நாடார் சமூகத்தார், தாங்கள் இடுப்புக்குமேல் ஆடை உடுத்தக் கூடாது என்று பிரகடனப் படுத்தியதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தாங்கள் சத்திரிய குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கப் புறப்பட்டுவிட்டார்கள்.இதனால் பல்வேறு இடங்களில் புதிதாக கலகம் மூண்டது. நாடார்கள் ஒன்று சேர்ந்து கலகத்தில் ஈடுபட்டனர். சுமார் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தப் போராட்டம் நடந்தது. ஆட்சியாளர்களின் அடக்குமுறையை எதிர்த்து ஆண்களும், பெண்களும் இடுப்புக்கு மேலே ஆடை உடுத்திக்கொண்டனர். பொது இடங்களில் தங்களது மேல் ஆடையைப் பறிக்க முயன்றவர்களை எதிர்த்துத் தாக்கினர். இதில் பலர் கொல்லப்பட்டனர். ஆதிக்க சாதிகள் நாடார் இனமக்களின் வீரத்தைக் கண்டு அஞ்சி நடுங்கத் தொடங்கினர்.

கலவரம் மேலும் மேலும் பரவி பலர் கொல்லப்படுவதைக்கண்டு  சென்னை அரசே அஞ்சியது. அதனால் உடனே தலையிட்டு, 1859_ல் `நாடார் பெண்கள் மேலாடை அணியக்கூடாது’ என்ற பிரகடனத்தை அரசு ரத்து செய்தது. இதன் அடிப்படையில் பெண் கல்விக்கென நாகர்கோவிலில் ஆங்கிலேயரால் ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழகத்தில் பெண் கல்விக்காக மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி இது.

தங்கள் இனம் இப்படி பல இன்னல்களுக்கு ஆட்படுவதற்குக் காரணமே, தங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதை நாடார் மக்கள் உணர்ந்தனர். அதன் பொருட்டு உருவாக்கப்பட்டதுதான் `நாடார் உறவின் முறை’ என்ற அமைப்பு.அனைத்து வழக்குகளிலும் போலீசைத் தலையிடவிடாமல் உறவின் முறையே விசாரித்து தீர்ப்பு கூறியது.

நாடார் மக்களின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க, தங்களது பரம்பரை பழக்கவழக்கங்களையும் சடங்கு சம்பிரதாயங்களையும் மாற்றியமைக்க முற்பட்டனர். ஆண்கள் பார்ப்பனர் போன்று வேட்டி கட்டவும்,  பூணூல் போடவும் தொடங்கினர். பெண்கள் பாரம்பரியமான கனத்த ஆபரணங்களையும், காது வளையங்களையும்  தவிர்த்தனர்.

விதவைகள் வெள்ளைச் சீலை கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். விதவைகள் மறுமணம் தடை செய்யப்பட்டது. (இப்போது மறுமணத்தை ஆதரிக்கிறார்கள்.) பெண்கள் தண்ணீரை தலையில் எடுத்துச் செல்வதைத் தடுத்து, இடுப்பில் எடுத்துவரப் பணிக்கப்பட்டனர்.

திருமண ஊர்வலங்களின்போது செல்வ செழிப்பினைக் காட்ட பல்லக்குகளைப் பயன்படுத்தினர். பெரும்பாலான நாடார்கள் சைவ மதத்தைச் சார்ந்தவர்கள். சிலர் வைணவர்களாகவும் இருந்தனர். முருகக் கடவுள் நாடார் சமூகத்தின் சிறப்பு தெய்வம். பத்ரகாளி, மாரியம்மன், அய்யனார் என்று சிறுதெய்வ வழிபாடும் இவர்களிடம் உண்டு. கோயில் திருவிழாவின்போது முளைப்பாரி எடுப்பது பிரசித்தம்.

நாடார் திருமணத்தின்போது தாய்மாமனுக்கு முக்கியத்துவம் உண்டு. கன்னியாகுமரி, சிவகாசி, விருதுநகர் பகுதிகளில் பெண் வீட்டார் கிலோ கணக்கில் நகை போடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தங்களுக்கு எவ்வளவு பெரிய சொந்தம் இருக்கிறது என்பதைக் காட்ட திருமணத்தின்போது நடத்தப்படும் `அலந்தரம் செய்வது’ என்ற சடங்கு மிக முக்கியமானது.

கோயில்களுக்கு நன்கொடைகளை  வாரி வழங்கினர். சிவன் கோயில்கள் கட்டினர். தங்களை சத்திரியர்கள் என்று அடையாளம் காணும்படி நடந்துகொண்டனர்.நாடார்குலத்தின் பொருளாதார உயர்வும், பொதுமதிப்புக்காக அவர்கள் செய்த முயற்சியும் உயர்சாதிக்காரர்களுக்கு எரிச்சலைத் தந்தது. அதனால் பிரச்னை உருவானது.

அதன் விளைவாக, 1890ஆம் ஆண்டு  ஆதிக்க சாதியினருக்கும் நாடார்களுக்கும் இடையே சிவகாசியில் மிகப் பெரிய கலவரம் மூண்டது. இக்கலவரத்தை நாடார் இனமக்கள் `சிவகாசிப் போர்’ என்றே அழைக்கிறார்கள்.

ஆலயத்திற்குள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ய தங்களுக்கும் உரிமை வேண்டும் என்று நாடார்கள்  கேட்டதுதான் கலவரத்திற்குக் காரணம். மற்ற ஆதிக்க சாதியினர், `நாடார்கள் கோயில்களுக்கு நுழையவே கூடாது’ என்று எதிர்த்ததோடு   கோயிலையும் மூடிவிட்டார்கள். அன்று இரவே  கோயில் கதவை உடைத்து நாடார்கள் கோயிலுக்குள் புகுந்துவிட்டதாக வதந்தி பரவியது. இதனால் கொதித்தெழுந்த ஆதிக்க சாதியினர் நாடார் வீடுகளுக்குத் தீ வைத்தனர். சிவகாசி நகரில் இருக்கும் நாடார்களை வேரோடு கருவருக்கவேண்டும் என்ற மூர்க்கத்தனத்தோடு  சிவகாசி மீது தாக்குதல் நடத்தினர். சுற்று கிராமங்களைக் கொள்ளை அடித்தனர். ஆனால் இதில் நாடார் இனமக்கள் ஆண் பெண் குழந்தைகள் என்ற பாகுபாடு இன்றி எதிர்த்துப் போராடினார்கள். கலவரக்காரர்களை ஓட ஓட விரட்டியடித்தார்கள்.  பலர் மடிந்தார்கள். இறுதியில் நாடார்களே இந்தப் போரில் வெற்றி பெற்றார்கள்.

1899ஆம் ஆண்டு ஜூலை மாதம் ராணுவம் கலவரத்தைக் கட்டுப்படுத்தியபோது, 150 கிராமங்கள் தாக்குதலுக்கு உள்ளாயிருந்தன. சுமார் 4000 வீடுகள் அழிக்கப்பட்டன. இரு தரப்பிலும் பலர் இறந்து போனார்கள். சிவகாசியில் நடந்த சோக சம்பவத்தை  இந்தியா முழுவதிலுமுள்ள பத்திரிகைகள் முதற்பக்கத்தில் வெளியிட்டு நாடார்களின் நியாயத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லின.

நிலைமைகளை நன்கு உணர்ந்த நாடார்கள் தங்களுக்குப் பாதுகாப்பு பெற அரசியல் அதிகாரத்தில் நேரடி அங்கம் பெற முயன்றனர்.
பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியன், வி.வி.ராமசாமி (நீதிக்கட்சி) போன்றோர் அரசியல் கதவைத் திறந்துவிட்டனர். தலைவர் கோசல்ராம் தலைமையில் ஆறுமுகநேரி, குலசேகரப்பட்டினம் போன்ற இடங்களில் உப்பு சத்தியா கிரகங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய தேசிய விடுதலைக்காக காம ராஜர் நடத்திய போராட்டங்களும் அரசியலில் அவர் காட்டிய வழிகாட்டல்களும் நாடார் சமூக மக்களை மிக உயர்ந்த இடத்திற்கு உயர்த்தியது.

நாடார் சமூகம் கல்வி முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தையே முழுவதுமாக நம்பியிருக்கவில்லை. நெல்லை மாவட்டத்தில் கிருஸ்தவ மதத்திற்கு மாறிய நாடார்களின் முன்னேற்றத்திற்காக மதகுருமார்கள் கல்வியின் சிறப்பினை அவர்களுக்குக் கற்பித்தனர். 19ஆம் நூற்றாண்டுகளில் `மகமை நிதி’ உதவியால் ஆரம்ப உயர்நிலைப் பள்ளிகளைத் தென்மாவட்டங்களில் தொடங்கினர். 20ஆம் நூற்றாண்டில் பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரி உள்ளிட்ட பல முக்கிய கல்லூரிகளையும் தொடங்கினர். நாடார்கள் சமூகத்தினரோடு மற்ற சமூகத்தினரும் அதனால் பலன் அடைந்தனர்.

“நாடார்கள் நாடாண்டவர்கள் என்பதை இன்று நிரூபித்துக்கொண்டு வருகிறார்கள். இடைவிடா உழைப்பினாலும் சிக்கனத்தாலும் நாடார்கள் சாதாரண மளிகைக்கடை முதல் கம்ப்யூட்டர் துறை வரை உலகளவில் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள். மற்ற சமூகத்தவரும் பயன்பெறும் வகையில் நாடார் சமூகம் உழைத்துக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை. நாடார்களின் வெற்றி ரகசியமும் அதுவே” என்கிறார் சென்னை, நெல்லை_தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத் தலைவர் க்ஷி.ஜி.பத்மநாபன் நாடார்.

உண்மைதான்.   இன்று நாடார்கள்  சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் தங்கள் செல்வாக்கினை நிலைநாட்ட ஆரம்பித்துவிட்டனர்..

படங்கள் : சித்ரம் மத்தியாஸ்
அரண்மனைசுப்பு

`தினத்தந்தி’யைத் தந்து தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் பாமரர்கள் எழுத்துக்கூட்டி தமிழைப் படிக்க வைத்தவர் ஆதித்தனார். நாடார் மகாஜன சங்கம் உருவாகக் காரணமாய் இருந்தவர் பொறையார் ரத்னசாமி நாடார்.   நம் நாட்டிற்கு `தமிழ்நாடு’ என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த சங்கரலிங்க நாடாரின் தியாகத்தை மறக்கமுடியாது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது குலசேகரபட்டினத்தில் லோன் துரை என்ற வெள்ளைக்காரனைக் கொன்ற குற்றத்திற்காக தூக்குத் தண்டனை பெற்ற காசிராஜன், தூக்குமேடை ராஜகோபால் ஆகியோரின் வீரம் பலருக்கு எடுத்துக்காட்டு. வானம் பார்த்த சிவகாசி பூமியில் தீப்பெட்டித் தொழிற்சாலைகளையும் பட்டாசு தொழிற்சாலைகளையும் உருவாக்கி `குட்டி ஜப்பான்’ என்று சொல்ல வைத்து அனைத்து இனமக்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தவர்கள் சிவகாசி பி.அய்யநாடாரும் ஏ.சண்முகநாடாரும் ஆவர்.

நீதிக்கட்சி வி.வி.ராமசாமி, விருதுநகர் சீமான் எம்.எஸ்.பி.ராஜா.  வெள்ளைச்சாமி நாடார், ஏ.வி.தாமஸ், ஜெயராஜ் நாடார், டாக்டர் சந்தோஷம் என்று  உழைப்பில் உயர்ந்த நாடார்களில் எண்ணற்றவர்களைக் காட்டலாம்.காவல் துறைக்கு பெருமை சேர்த்த அருள் ஐ.ஜி.யை எந்த சமூகத்தவரும் மறக்கமாட்டார்கள்.

இன்று கணினி உலகில் நுழைந்து உலகப் பணக்காரர்களுள் ஒருவராகத் திகழும் சிவ்நாடார், பழுத்த அரசியல் தலைவர் குமரிஅனந்தன், அரசியல் தலைவரும் நடிகருமான சரத்குமார் என்று பலரை இந்த சமூகத்தின் நட்சத்திரங்களாகக் காட்டலாம்.

31.12.08   தொடர்கள்
`நான் தமிழன்’ சாதிகளைப் பற்றியது அல்ல! நம் முன்னோர்களின் கலாசாரங்கள், பண்பாடுகள், வாழ்க்கை முறைகள் பற்றி அடுத்த தலைமுறைகள் தெரிந்துகொள்வதற்கான தேடல். அவர்களின் வீரத்தையும் உழைப்பையும் ஒழுக்கத்தையும் அடுத்த தலைமுறைக்கு உணர்த்தும் ஒரு வாய்ப்பு. ஒரு உண்மையான வரலாற்றை மறந்து விடாமலும் மறக்கடிக்கப்படாமலும் காக்க வைக்கும் முயற்சி.

இந்திய வரலாற்றிலேயே இல்லாத அடக்கு முறை அது. உயர்சாதியினரிடமிருந்து 36 அடிதூரம் விலகி நின்றுதான் அவர்கள் பேசவேண்டும். அவர்கள் குடை எடுத்துச் செல்லக்கூடாது. செருப்புப் போடக் கூடாது. தங்க ஆபரணங்கள் அணியக்கூடாது. மாடி வைத்து வீடு கட்டக் கூடாது. பசுக்களை வளர்க்கலாம். ஆனால் அதிலிருந்து பால் கறக்க அனுமதி இல்லை. அவர்களின் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துக்கொண்டு செல்லக்கூடாது. ஆண்களும் பெண்களும் இடுப்புக்கு மேலே மேலாடை அணிந்து கொள்ளக் கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கத்திடமும் உயர்சாதியினரிடமும் சம்பளம் வாங்காமலே அவர்களுக்கு உழைக்கவேண்டும்.

இப்படி நாளுக்கு நாள் அவர்கள் மீதான அடக்குமுறைகள் அதிகமாகிக்கொண்டே போனதன் விளைவு? பல நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்ட அந்த சமூகம் வீறுகொண்டு எழுந்தது. தங்களை அடக்கியவர்களையும் ஒடுக்கி வைத்திருந்தவர்களையும் எதிர்த்து அவர்கள் போராடினார்கள். வென்றார்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலை எத்தனை உயிர்கள், எத்தனை இன்னல்கள், எவ்வளவு அவமானங்கள். அதனால்தான் இன்றைக்கு உலகளவில் பொருளாதாரத்திலும் சமூக அந்தஸ்திலும் மிக உயர்ந்த இடத்தை அவர்களால் பிடிக்க முடிந்தது. வரலாறு காணாத அந்தப் புரட்சியை செய்தவர்கள் நாடார் சமூக மக்கள்.

திருநெல்வேலி, இராமநாதபுரத்து மண்ணின் மைந்தர்கள் இவர்கள். மதுரை, கோவை, தஞ்சாவூர், ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை என்று அவர்கள் பரந்து கிடக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிறிஸ்துவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நாடார்களே.

சான்றார், சான்றோர், நாடாள்வார் என்றழைக்கப்படும் நாடார்களிடையே கற்றறிந்தோரும், போர் வீரர்களும், வர்த்தகரும், பதனீர் இறக்குவோரும் இருந்தனர்.

மதுரையை ஆண்ட பாண்டியர்கள், இவர்களுள் ஒரு உட்பிரிவினர் எனப் பரவலாக நம்பப்படுகிறது. மகாவம்சத்தில் காணப்படும் குறிப்புகளும் சேர அரசில் பணிபுரிந்தவர்களின் பல பெயர்களும் நாடார்கள் போர்வீரர்கள் என்பதை உறுதி செய்கின்றன.

நாயக்கர்களின் படையெடுப்பால் அதிக இன்னல்களுக்கு ஆளான நாடார்கள், தங்கள் பூர்வீக பூமிகளான சிவகாசி, கமுதி, விருதுநகர், மதுரை ஆகிய ஊர்களைவிட்டு வெளியேறி திருச்செந்தூர் போன்ற வறண்ட பகுதிகளுக்கு இடம் பெயர வேண்டியதாயிற்று. அங்கு பனை மரங்களிலிருந்து பதனீர் இறக்கி வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை.
பதனீர் இறக்கி வாழ்ந்த காலம் இவர்களின் இருண்ட காலமாகக் கருதப்படுகிறது. எனினும் பனைமரம் நாடார்களின் புனித மரமாக எண்ணப்படுகிறது. பனைமரத்தை நுனி முதல் வேர் வரை பயனுள்ளதாக்கிக் காட்டியவர்கள்.

தேவகன்னிகளுக்கும் சத்திரிய மகரிஷிக்கும் இடையே பிறந்த ஏழு குழந்தைகளை பத்திரகாளி அம்மன் எடுத்து வளர்த்ததாகவும் அவர்களே நாடார்கள் என்றும் சொல்லப்படுகிறது.  `பத்திரகாளியின் மைந்தர்கள்’ என்றே இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

தங்களை உயர்ந்த எண்ணம் உள்ளவர்களாக நாடார்கள் போற்றிக் கொண்டாலும் கோயில்களுக்குள் சென்று சாமி கும்பிட உரிமை, அன்று மறுக்கப்பட்டது. அடக்குமுறை மண்டிய இந்த இருண்ட காலத்தில்தான் நாடார்களிடம் இந்த சமூகக் கொடுங்கோன்மையை எதிர்க்கும் எண்ணம் உதயமாயிற்று. சிலர் ஆதிக்க சாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சி கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். ஆனால் அங்கேயும் மேலாடை  மறுக்கப்பட்டது கண்டு மக்கள் கொதித்து எழுந்தனர். அதனால், 1820_ல் அது சமூக விடுதலைக்கான போராட்டமாக வெடித்தது.

பெண்களை மேலாடை அணிய வைத்து பொது இடங்களில் நடமாடச் செய்தனர்.இதனால் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளான நாயர்கள், 1882 மே மாதம் சந்தைகளுக்கு வந்த நாடார் பெண்களின் ஆடையைக் கிழித்து எறிந்தார்கள். திருவிழாவிற்கு வந்த பெண்களின் மேலாடைகளை அறுத்து எறிந்தார்கள். இடுப்புக்கு மேல் ஆடையில்லாமல் மற்ற ஆண்கள் முன் தாங்கள் நிற்கும் நிலையைக் கண்டு நாடார் பெண்கள் கூனிக் குறுகிப் போனார்கள். எதிர்த்த நாடார் ஆண்கள் கட்டி வைத்து அடிக்கப்பட்டனர். கொலையும் செய்யப்பட்டனர். சம்பளம் இல்லாமல் வேலை செய்ய மறுத்த ஆண்களை கொடுமைப்படுத்தினர். கோயில்களையும் பள்ளிகளையும் தீயிட்டனர். நெய்யாற்றின் கரை, எரணியல், பத்மனாபபுரம் என்று நாடார் சமூகம் வாழும் பல இடங்களில் சிறுசிறு கலகம் மூண்டது. சிலர் கொல்லப்பட்டனர்.

இதுபோதாது என்று, திருவாங்கூரை ஆண்ட ராணி பார்வதிபாய் (1815_1829) “நாடார் பெண்கள் மேலாடை அணிவது அறிவுக்குப் பொருத்தமற்றதாதலின் இனி அவர்கள் எதிர்காலத்தில் தங்கள் உடலின் மேல் பாகத்தை மூடிக்கொள்ளக்கூடாது” என்று பிரகடனம் செய்தார்.

இப்பிரகடனம்தான் நாடார் குலமக்களின் கோபத்தீயை வானளாவில் வளர்த்துவிட்டது. இனியும் பொறுக்க முடியாது என்று நாடார் சமூக மக்கள் வெகுண்டு எழுந்தார்கள். எதிரிகளை நோக்கிப் புறப்பட்டார்கள்..

படங்கள் : ஆர்.சண்முகம்,
அரண்மனை சுப்பு

`உழைத்தால் உயரலாம்’ என்பதற்கு முன் உதாரணம் நாடார் சமூகம்தான். நாடார் மக்களிடையே பெரும் சாதனை படைத்தவர்கள் மிகப் பலர்.

அய்யா வைகுண்டசுவாமி: எளிய நாடார் குடும்பத்தில் முத்துக்குட்டி என்ற பெயரில் பிறந்தவர். திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் நடந்த தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தவர். நாடார் உள்ளிட்ட சமூக மக்கள் இடுப்புக்குமேல் ஆடை உடுத்தக் கூடாது என்ற அடக்குமுறைக்கு எதிராக எல்லோரையும் தலைப்பாகை கட்ட வைத்து சாதி வெறியை எதிர்த்துப் போராடியவர்.

மார்ஷல் நேசமணி: குமரித் தந்தை, குமரி மாவட்டத்தின் சிற்பி. 1956ல் நாஞ்சில் நாட்டை கேரளாவோடு இணைக்க வேண்டும் என்று முயற்சித்த போது `நாங்கள் தமிழர்கள். இந்த மண்ணின் மைந்தர்கள். தமிழ் மரபுக்கு சொந்தக்காரர்கள்’ என்று மார் தட்டியதோடு, தமிழ் மரபு சீர் குலைந்துவிடக் கூடாது என்று போராடி நாஞ்சில் நாட்டைத் தமிழகத்தோடு இணைத்த தீரர்.

காமராஜர்: தமிழ் இனத்தில் ஒரு சாதாரண நாடார் குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் `கிங்மேக்கரான’ மாமனிதர்; பச்சைத் தமிழர். அவர் முதலமைச்சராக இருந்தபோதுதான் ஏழைகளுக்கு `கல்விக்கண்’ திறக்கப்பட்டது. சத்துணவு கிடைத்தது. சுதந்திரத்திற்காகப் போராடிய வீரர். எல்லா சமூகத்தாருக்காகவும் உழைத்த கர்ம வீரர். `நாம் பெற்ற செல்வம்’ என்று ஒவ்வொரு நாடாரையும் பெருமை கொள்ளச் செய்தவர். நாடார் இனத்துக்கே பெருமை சேர்த்தவர்.

கே.டி.கோசல்ராம்: பாலைவனம் போல் வறண்டு கிடந்த பூமி. கால்நடைகளுக்குக் கூட தண்ணீர் இல்லை. இருண்ட வாழ்வோடு மக்கள் சுருண்டு வாழத் தொடங்கிய போது மழை மேகமாய் வந்து, மணிமுத்தாறு அணையை, தன் சொந்த முயற்சியில் நாடார் சமூக மக்களிடமிருந்து வசூலித்து கட்ட வைத்த கடமை வீரர். சுதந்திரப் போராட்ட தியாகி.

பட்டிவீரன்பட்டி சௌந்தர பாண்டியன்:மற்ற இனத்தவருக்கு இருப்பது போல் நாடார் சமூகத்திற்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று போராடி முதல் மேல்சபை உறுப்பினரானவர். பேருந்துகளில் காலி இருக்கைகள் இருந்தாலும் தாழ்த்தப்பட்டோர் அமரக் கூடாது என்று இருந்த நிலையை உடைத்தெறிந்து அவர்களை சரிசமமாக உட்கார வைத்தவர். சென்னையில் உள்ள பாண்டிபஜார் இவரது பெயரில் உருவானதே.

Posted in Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | 4 Comments »

Nov.: Eezham vs Sri Lanka: War Updates: Foreign relations with India – News Updates

Posted by Snapjudge மேல் நவம்பர் 4, 2008


போர் நிறுத்தம் வேண்டும் என்று இலங்கை அரசுக்கு எச்சரிக்கையாகவே தெரிவிக்க வேண்டும் என்று சென்னை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

தமிழக முதல்வர் மு. கருணாநிதி
தமிழக முதல்வர் மு. கருணாநிதி

இலங்கையில் தொடரும் போரின் காரணமாக தமிழர்கள் பல்வேறு இன்னல்களுக்குள்ளாகிறார்கள், இந்நிலையில் இந்திய மத்திய அரசு போர் நிறுத்தம் தேவை என்பதை வெறும் வேண்டுகோளாக இல்லாமல் இலங்கை அரசுக்கு எச்சரிக்கையாகவே தெரிவிக்கவேண்டும் என்று கூறும் தீர்மானம் இன்று சென்னையில் கூடிய அனைத்துக் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரில் வலியுறுத்துவதெனவும் முடிவெடுக்கப்பட்டதாக, கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

என்னவிதமான நடவடிக்கையினை மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார். எல்லாவற்றையும் விவாதிப்போம் என்று மட்டும் அவர் கூறினார்.

வேறொரு கேள்விக்கு பதிலளிக்கையில் கருணாநிதி இதுவரை இலங்கைத்தமிழர் நிதிக்கு 37 கோடி ரூபாய் இதுவரை திரண்டிருப்பதாகவும், பத்துகோடி ரூபாய்க்கான நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், அவையெல்லாம் முறையாகவே இலங்கைத்தமிழர்க்கு விநியோகிக்கப்படுவதாகவே தமக்கு செய்திகள் வந்திருப்பதாகவும் கூறினார்.

தமிழகத்தில் உள்ள இலங்கைத்தமிழ் அகதிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்துகொடுக்கப்படுவதாகவும் முதல்வர் கூறினார்.

இன்றைய கூட்டத்தினை அ இ அ தி மு க, ம தி மு க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மற்றும் தே மு தி க உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.

இதனிடையே இலங்கையில் போர் நிறுத்தம் கோரி, இன்று இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மாநில அளவில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்தின.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கிழக்கு வன்செயல்கள் குறித்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாட்டு

கிழக்கு இலங்கையில் இலங்கை அரசுக்கு ஆதரவான ஆயுதக்குழுவாக கூறப்படும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினர் தொடர்ச்சியான கொலைகள் மற்றும் கடத்தல்களில் ஈடுபடுவதாக மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்துவந்து தனியாக செயற்படும் இந்த அமைப்பினர் கடந்த செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் 30 கொலைகள் மற்றும் 30 ஆட்கடத்தல்களில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அந்த மனித உரிமைகள் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறார்களாவர்.

ஆனால், தமது பிராந்தியத்தில், கொலைகளும், ஆட்கடத்தல்களும் குறைந்துவருவதாகக் கூறுகின்ற கிழக்கு மாகாண அமைச்சரான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள், அவற்றை முற்றாக தடுப்பதற்கான முயற்சிகளில் தாம் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்த அமைச்சர் ஹிஸ்புல்லாவின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மட்டக்களப்பில் இன்று மாத்திரம் 9 பேர் பலி

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் 9 பேர் வரை கொல்லப்பட்டதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று இரவு 7.30 மணியளவில் களுவாஞ்சிக்குடிக்கு அருகே எருவில் பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற கிராம அதிகாரி ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அந்த அதிகாரியான சாமித்தம்பி திருச்செல்வம், அவரது மகன் மற்றும் தாயார் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

மேலும் களுவாஞ்சிக்குடிப் பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், சந்தைகுத்தகைதாரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை இன்று காலை எருவில் கோடைமேடு அணைக்கட்டோரம், இராணுவ மோட்டார் சைக்கிள் தொடரணி மீது நடத்தப்பட்ட கிளெமோர் தாக்குதலில் இரண்டு இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டதாக பாதுக்காப்புத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தை அடுத்து, குறுமண்வெளி மற்றும் எருவில் பகுதியில் பாதுகாப்புத்தரப்பினரால் சுற்றிவளைப்புத்தேடுதல் நடத்தப்பட்டு பலர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இப்படி அழைத்துச் செல்லப்பட்டவர்களில் நூற்றுக்கு மேற்பட்டோர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து உறவினர்களால் தனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே படுவான்கரையில் கரவெட்டிபகுதியில் இன்று நண்பகல் விசேட அதிரடிப்படையினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புத்தேடுதலின் போது, அவர்களினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

பாதுகாப்பு தரப்பினருடனான மோதலின் போது கொல்லப்பட்டதாகக்கூறப்படும் இந்த மூவரும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று பாதுகாப்புத்தரப்பு கூறுகிறது.

சடலங்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


வட இலங்கையில் கனமழை மற்றும் வெள்ளம்

இலங்கையின் வடக்கே பெய்து வருகின்ற அடைமழை காரணமாக போரினால் இடம்பெயர்ந்துள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வன்னி்ப்பிரதேசத்தில் போர்ச்சூழலில் சி்க்கியுள்ள மக்களுக்கான நிவாரண உணவு விநியோக பணிகளும் மழை காரணமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றார்கள்.

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பகுதிகயில் தாழ்ந்த நிலப்பிரதேசத்தில் அடைக்கலம் புகுந்திருந்த இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கியிருந்த கூடாரங்களுக்குள் மழை நீர் புகுந்துள்ளதையடுத்து, சுமார் மூவாயிரம் குடும்பங்கள் பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தங்க வைக்கப்பட்டு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் நான்கு நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக பருத்தித்துறை, காரைநகர், கரவெட்டி, சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிக்கப்பட்டுள்ள 458 குடும்பங்கள் பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக யாழ் செயலக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

யாழ் குடாநாட்டுப் பகுதி எங்கும் வெள்ளக்காடாகக் காட்சியளிப்பதாகவும், மழை காரணமாக இன்று பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு, மாணவர்கள் வேளைக்கே வீடுகளுக்கு அனுப்பி் வைக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கில் பணிக்கு திரும்புவது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை

இலங்கையின் கிழக்கே அண்மையில் சிங்கள மருத்துவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பெரும்பாலான மருத்துவர்கள் அங்கு தமக்கு பாதுகாப்பு இல்லை என்கிற காரணத்தினால் கடந்த சில தினங்களாக பணிக்கு வராமல் இருந்தனர்.

இந்நிலையில் இது குறித்து விவாதிக்க இலங்கை அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உயர்மட்டக் கூட்டம் ஞாயிறன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. அதில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டு திங்கட்கிழமையன்று சுகாதாரத் துறை செயலரை சந்திக்கவுள்ளார்கள் மருத்துவ அதிகாரிகள்.

ஞாயிறன்று நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து சங்கத்தின் பேச்சாளரான டாக்டர் சிவப்பிரியனிடம் கேட்ட போது, கூட்டத்தில் பாதுகாப்பு, விசேஷ கொடுப்பனவுகள், காப்புறுதிகள் போன்ற விடயங்கள் குறித்து தீர்மானித்து இருப்பதாகவும், இருந்தப் போதிலும் திங்கட்கிழமையன்று நடைபெறும் கூட்டத்தில் தான் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்


இலங்கையின் கிழக்கில் விவசாயிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக புகார்

விவசாயி
விவசாயி

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு சில பிரதேசங்களில் இன்னமும் பாதுகாப்பு தரப்பினரால் கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் விதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாணம் முழுமையாக விடுவிக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும், இப்படியான கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் காரணமாக தமது சொந்த வயல்களுக்கு சுதந்திரமாகச் சென்று தங்கியிருந்து வேளான்மைச் செய்கையில் ஈடுபடக் கூடிய சூழ்நிலை இன்னமும் ஏற்படவில்லை என பொதுவாக அப்பிரதேச விவசாயிகள் மத்தியில் கவலை வெளியிடப்பட்டுகின்றது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் மாதுறு ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் விவசாயச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைப் பொறுத்த வரை, பிரதான வீதியிலுள்ள இராணுவ முகாமில் புகைப்படங்களுடன் விபரங்களைப் பதிந்து விசேட அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறை பாதுகாப்பு தரப்பினரால் அமுல்படுத்தப்படுகின்றது.

இந் நடைமுறை காரணமாக அனுமதிப்பத்திரமின்றி வயல் நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறும் அப்பிரதேச விவசாயிகள், வயலில் தங்கியிருப்பது உழவு மற்றும் எரிபொருட்களை எடுத்தச் செல்வது, வேலையாட்களை அழைத்துச் செல்வது தொடர்பாகவும், பாதுகாப்பு தரப்பினரால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்



இந்திய நிவாரணப் பொருட்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிப்பு

இந்திய உதவிப் பொருட்களை வழங்கும் இந்தியத் தூதர்
இந்திய உதவிப் பொருட்களை வழங்கும் இந்தியத் தூதர்

இலங்கை போரில் பாதிக்கப்பட்ட வன்னிப்பகுதி தமிழர்களுக்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப்பொருட்களை, இலங்கைக்கான இந்திய தூதர் அலோக் பிரசாத் அவர்கள், தலைநகர் கொழும்பில் வியாழக்கிழமையன்று வைபவரீதியாக கையளித்தார்.

இந்த நிகழ்வின்போது பேசிய அலோக் பிரசாத் அவர்கள், ஆயிரத்து அறுநூற்று எண்பது டன் நிவரணப்பொருட்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் கையளிக்கப்படுவதாகக் கூறினார்.

இந்த நிவாரண பொட்டலங்களில் உலர் உணவு, உடைகள் மற்றும் சுகாதாரத்திற்கு தேவைப்படும் பொருட்கள் இருப்பதாகக் கூறிய அவர்
கூடுதலான நிவாரணப் பொருட்கள் தேவைப்பட்டால், அது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவி்ல் இருந்து அனுப்பப்பட்ட உணவுப் பொருட்கள்
இந்தியாவி்ல் இருந்து அனுப்பப்பட்ட உணவுப் பொருட்கள்

இந்த நிவாரணப்பொருட்களை பெற்றுக்கொண்ட சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் பால் காஸ்டெல்லா அவர்கள் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். இப் பொருட்கள் அங்கேயுள்ள மக்களின் தேவையை ஒரளவு பூர்த்தி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, இந்த நிவாரணப்பொருட்கள் இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் தான் விநியோகிக்கப்படும் என்று கூறினார் இலங்கை அரசின் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ் பி திவாரட்ண அவர்கள்.


புலிகளின் முன்னரங்க நிலையை கைப்பற்றியதாகக் கூறுகிறது இராணுவம்

விடுதலைப் புலிகளின் ஒரு முன்னரங்க நிலை
விடுதலைப் புலிகளின் ஒரு முன்னரங்க நிலை

இலங்கையில் பல நாட்கள் தொடர்ந்த சண்டைகளின் பின்னர் யாழ் குடா நாட்டில், விடுதலைப்புலிகளினால் மிகவும் கடுமையாக பாதுகாக்கப்பட்ட, தூர வடக்கில் இருக்கின்ற அவர்களது நிலை ஒன்றை தாம் கைப்பற்றியயிருப்பதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது.

ஆங்காங்கே பங்கர்களைக் கொண்ட 8 கிலோ மீட்டர் நீளமான மணற் சுவரை கைப்பற்றுவதற்கான இந்தச் சண்டையில், பத்து இராணுவச் சிப்பாய்களும், 50 விடுதலைப்புலிகளும் கொல்லப்பட்டதாக இராணுவத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரம், மோதல்களால் இடம்பெயர்ந்த இரண்டரை லட்சம் மக்களுக்கான உதவிகளை இராணுவத்தினர் தடுத்ததாக சர்வதேச அபய ஸ்தாபனம் கூறிய குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

நான்கு உதவி வாகனத்தொடரணிகள் அண்மையில் அனுப்பப்பட்டதாகவும், அதில் கடைசியாக சென்றதில், 600 தொன்கள் உணவுப்பொருட்கள் அனுப்பப்பட்டதாகவும், பிபிசிக்கான செவ்வியில், இலங்கை வெளியுறவுத்துறைச் செயலர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நிலைமைகளை கவனித்து வருவதாகவும், அங்கு மக்கள் பட்டினி நிலைமையயை அண்மித்துள்ளார்கள் என்பதற்கான எந்த சமிக்ஞையும் கிடையாது என்றும் அவர் கூறினார்.

சோதனைச் சாவடி: பேச்சுவார்த்தையில் ஈடுபட ஐசிஆர்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் நடைபெறும் மோதல்களின் காரணமாக, இந்த இரு தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு இடையே மக்கள் கடந்து செல்ல ஏதுவாக இருக்கும் ஒரு இடம் குறித்து விவாதிக்க, ஒரு நடுநிலையான மத்தியஸ்தர் என்கிற வகையிலும் இருதரப்பினரின் நம்பிக்கையை பெற்றவர்கள் என்கிற வகையிலும் இது தொடர்பில் அவர்கள் பேசுவதற்கான ஏற்பாடுகளை தாங்கள் செய்துவருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

இந்த இரு தரப்பாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு இடையே சென்று வரும் பொதுமக்கள், மருத்துவ வாகனங்கள், உணவு வண்டித் தொடர்களின் பயணம் மற்றும், மோதல்களின் காரணமாக இருதரப்பிலும் உயிரிழப்பவர்களின் உடல்களை பெற்றுக் கொள்வது போன்ற பல விடயங்கள் தொடர்பாக இரு பக்கமும் சென்று வருவதற்கு பாதுகாப்பான ஒரு வழிமுறையை கண்டறிவது அவசியமாகிறது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

அவ்வாறு கடந்து செல்வதற்கு ஏற்ற இடம் எது, திறந்திருக்கும் நேரம், ஒருவர் மற்றவர்களின் பகுதிகளுக்கு சென்று வருவதற்கான நடைமுறைகள் ஆகியவை குறித்து இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் இணக்கப்பாடு காண வேண்டும் என்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

ஓமந்தை சோதனைச் சாவடி வழியாக சென்று வரும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களுக்கு பாதுகாப்பு உறுதிபடுத்தப்படாத வரையில் தம்மால் அங்கு பணிக்கு செல்ல இயலாது என்று அந்த அமைப்பின் தலமையகம் கூறியுள்ளது.

எனினும் ஓமந்தை சோதனைச் சாவடியில் தாங்கள் கடமையில் இல்லாவிட்டலும் இலங்கையில் நடைபெறும் மோதல்களினால் வன்னிப் பகுதியில் சிரமங்களை எதிர் கொள்ளும் மக்களுக்கு நாங்கள் அளித்து வரும் பாதுகாப்பும் உதவி நடவடிக்கைகளும் பாதிப்படையவில்லை என்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.


இலங்கை அரசு வன்னிப் பகுதிகளுக்கு நிவாரணம் கிடைக்காமல் தடுக்கிறது என்று அம்னெஸ்டி அமைப்பு குற்றச்சாட்டு

அம்னெஸ்டி அமைப்பின் சின்னம்
ம்னெஸ்டி அமைப்பின் சின்னம்

இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் வன்னிப்பிரதேசத்தில் தற்போது நடக்கும் மோதல்களால் இடம்பெயர்ந்துள்ள சுமார் 3 லட்சம் மக்களுக்கு மனித நேய நிவாரண உதவி கிடைக்காமல் தடுக்கும் கொள்கையை இலங்கை அரசு உடனடியாகக் கைவிடவேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இண்டர்னேஷனல் வலியுறுத்தியிருக்கிறது.

பருவ மழை தொடங்கும் நிலையில், குறைந்தது 20,000 குடும்பங்களாவது மழையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உறைவிடம் இன்றி இருப்பதாக அது கூறியிருக்கிறது.

புலிகள் மீதும் கண்டனம்

இடம் பெயர்ந்த ஒரு குடும்பம்
இடம் பெயர்ந்த ஒரு குடும்பம்

வன்னிப்பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு பொதுமக்கள் தங்களது வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்து, விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில் முகாம்களில் தற்போது வாழ்ந்துவருவதாகவும், விடுதலைப்புலிகள் இம்மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதை தடுக்கும் வண்ணம் ஒரு கடுமையான அனுமதி முறையை அமல்படுத்தியிருப்பதாகவும் அம்னெஸ்டி கூறியிருக்கிறது.

விடுதலைப்புலிகளின் இந்த நடைமுறைகள், அரசு படைகளுக்கு எதிராக சிவிலியன் மக்களை ஒரு பாதுகாப்பு அரணாக வேண்டுமென்றே பயன்படுத்தும் நோக்கிலானவை போல் தோன்றுவதாக அது கூறியிருக்கிறது.

இந்திய அரசு அனுப்பியுள்ள உணவுப்பொருட்கள் அரசு சாரா நிறுவனங்களின் உதவியின்றி , உதவி மிக அதிகமாகத் தேவைப்படும் மக்களைச் சென்றடைகிறது என்று உறுதிப்படுத்த முடியாது என்று கூறும் அம்னெஸ்டி, வன்னியில் சிக்குண்டுள்ள மக்களின் தேவைகளைப் பற்றி கணிப்பீடு செய்து , அங்கு உணவு மற்றும் பிற பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுகின்றன என்பதை உறுதி செய்ய, இலங்கை அரசும் , விடுதலைப்புலிகள் இயக்கமும் சர்வதேச கண்காணிப்பாளர்களை அங்கு அனுமதிக்கவேண்டும் என்று கோரியிருக்கிறது.



தமிழர் புனர்வாழ்வுக் கழக அமைப்பின் பணத்தை அரசுடமையாக்கியது இலங்கை

புலிகளுக்கு உதவுவதாக டிஆர்ஓ மீது குற்றச்சாட்டு
புலிகளுக்கு உதவுவதாக டிஆர்ஓ மீது குற்றச்சாட்டு

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு சார்பானதென்று குற்றஞ்சாட்டப்படும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் நிதியான சுமார் 71 மில்லியன் ரூபாய்களை பயங்கரவாத சட்டத்தின் கீழ் முடக்கிவைப்பதாக கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்த இலங்கை மத்திய வங்கி, அந்தநிதியை இப்போது அரசுடைமையாக்குவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கிறது.

இலங்கையில் ஓர் அரச சார்பற்ற தொண்டு நிறுவனமாக இயங்கிவந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான பணிகளுக்கு என்று கூறி நிதி சேகரிப்பு நடவடிக்கைகளைச் சர்வதேச ரீதியாக மேற்கொண்டு வந்தது.

ஆனால் சர்வதேச ரீதியில் பல்வேறு நாடுகளில் கிளைகளை அமைத்து பாதிக்கப்பட்ட மக்களிற்கான மனிதாபிமான பணிகளுக்கு என்று கூறி பல்வேறு சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களிடமிருந்தும், நிதிஅமைப்புக்களிடமிருந்தும், தனியாரிமிருந்தும் இந்த அமைப்பு சேகரித்த பெருமளவு நிதி நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தவே பெரிதும் பயன்படுத்தப்பட்டுவருவதாக புலனாய்வு அறிக்கைகளை மேற்கோள் காட்டி இலங்கை மத்திய வங்கி கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த அமைப்பு இலங்கை மத்திய வங்கியில் வைத்திருந்த நிதிகளை முடக்கியிருந்தது.

அத்துடன் தடைசெய்யப்பட்ட தமிழர் புனர்வாழ்வ கழகத்துடனோ, அல்லது அதனது உறுப்பினர்களுடனோ நிதி ரீதியான தொடர்புகளிலோ அல்லது பரிமாற்றங்களிலோ ஈடுபடுவது ஒரு கிரிமினல் குற்றமாகும் என்றும் மத்திய வங்கி பொதுமக்களிற்கு எச்சரித்திருக்கிறது.


இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முயற்சிகளில் த.தே.கூட்டமைப்பையும் இணைக்க வேண்டும் என்கிறார் ரணில்

இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அந்த முயற்சியில், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இலங்கை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் வி்க்ரமசிங்கே அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வாரம் இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் செய்த நிலையில், மூன்று நாள் பயணமாக திங்கட்கிழமை புதுடெல்லி சென்ற ரணில் விக்ரமசிங்கே அவர்கள், இலங்கை நிலவரம் தொடர்பாக அங்கு பல்வேறு தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

திங்கட்கிழமை இரவு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹாவைச் சந்தித்து இலங்கை நிலவரம் குறித்து நீண்ட ஆலோசனை நடத்தினார். இன்று காலை, பாஜகவைச் சேர்ந்த முன்னாள் வெளியுறவு அமைச்சரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ஜஸ்வந்த் சிங்கை சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்கேவிடம், விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்குத் தயார் என அறிவித்திருந்தாலும், போர் நிறுத்தத்துக்கு வாய்ப்பில்லை என்று கடந்த வாரம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் புதுடெல்லியில் திட்டவட்டமாக அறிவித்திருப்பது பற்றி கேட்டபோது, “ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்து, இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இரண்டு பிரதான கட்சிகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயல்பட வேண்டும். ஏற்கனவே அனைத்துக் கட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும். ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் உள்ளே கொண்டுவர வேண்டும். அதன் பிறகு, இலங்கையில் அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினை, போரினால் இடம்பெயர்ந்த பொதுமக்களைப் பாதுகாப்பது எப்படி என்பதுதான். அவர்களுக்கு எல்லா வசதிகளும் கிடைக்க வேண்டும்’’ என்றார் ரணில் விக்ரமசிங்கே அவர்கள்.

போர் நிறுத்தத்துக்கு தற்போது வாய்ப்பு இருப்பதாக தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், பிரதமரைச் சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் தெரிவித்தார்.



கிழக்கு மாகாண வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது

கிழக்கு மாகாண சபை அமர்வு
கிழக்கு மாகாண சபை அமர்வு

இலங்கையின் கிழக்கு மாகாணம் உருவாக்கப்பட்ட பின்னர், அந்த மாகாணத்துக்கான 2009 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டப் பிரேரணை இன்று அங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.

அடுத்த வருட மாகாண செலவீனங்களுக்காக 15,000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாகாண அமைச்சரவையின் பேச்சாளரான எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

இதற்கான பிரேரணை மாகாண முதலமைச்சரும், நிதி அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனினால், சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை கிழக்கு மாகாணத்துக்கான நிதியை வரிகள் போன்றவற்றின் மூலம் திரட்டுவதற்கான நிதிச் சட்டமும் இன்று அங்கு நிறைவேற்றப்பட்டதாகவும் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.


மாங்குளத்தை கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் முக்கிய நிலைகளில் ஒன்றாகக் கூறப்படும் மாங்குளம் பகுதியை தாம் கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவத்தினர் இன்று அறிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மற்றுமொரு முக்கிய பிரதேசமான பூநகரியைக் கைப்பற்றியதை அடுத்து, இன்று யாழ் குடாநாட்டை இலங்கையின் தென்பகுதியுடன் இணைக்கும் ஏ 9 பாதையில் அமைந்துள்ள மாங்குளத்தையும் இலங்கை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மாங்குளம்- ஒட்டிசுட்டான் வீதியில் சில பகுதிகளை கைப்பற்றிய இலங்கை இராணுவத்தினர் இன்று மாங்குளம் நகரை முற்றாக தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை இராணுவத்தளபதி சரத்பொன்சேகா
இலங்கை இராணுவத்தளபதி சரத்பொன்சேகா

இது தொடர்பாக இலங்கை இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவும் இலங்கையின் அரசாங்க தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார்.

மாங்குளத்துக்கு அப்பால் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பணிக்கன்குளம் பகுதியையும் இராணுவத்தினர் இன்று கைப்பற்றியுள்ளதாகவும் இராணுவத்தளபதி அறிவித்தார்.

இந்த இராணுவ நடவடிக்கைகள் குறித்து இலங்கையின் இராணுவ ஆய்வாளர்களில் ஒருவரான பத்திரிகையாளர் இக்பால் அத்தாஸின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மட்டக்களப்பில் சிங்கள மருத்துவ அதிகாரி கொலை

மருத்துவத்துறை ஊழியர்களின் போராட்டம்
மருத்துவத்துறை ஊழியர்களின் போராட்டம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்திலுள்ள நாவற்காட்டில் நேற்றிரவு சிங்கள வைத்தியரொருவரும் மற்றுமொருவரும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

வைத்தியர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து மாவட்டத்திலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் கடமையாற்றி வந்த சிங்கள வைத்தியர்கள் அங்கிருந்து வெளியேறத் தொடங்கியதால், அங்கு வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கொலையைக் கண்டித்துப் போராட்டம்
கொலையைக் கண்டித்துப் போராட்டம்

கண்டி மாவட்டம் கம்பளையைச் சேர்ந்த 26 வயதான எஸ்.டபிள்யு பாலித பத்மகுமார என்னும் மருத்துவர் அரசினர் வைத்தியசாலை வளாகத்திற்குள்ளும், அடுத்தவர் அவரது வீட்டில் வைத்தும் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வைத்தியர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கணடித்தும், சுகாதார மற்றும் வைத்திய சேவை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் மட்டக்களப்பு நகரில் இன்று குறிப்பிட்ட மருத்துவத்துறைசார்ந்த ஊழியர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

கொலையைக் கண்டித்துப் போராட்டம்

போதனா வைத்திசாலையிலிருந்து மாத்திரம் 62 சிங்கள வைத்தியர்கள் வெளியேறுவதனால் 60 சத வீதம் அங்கு வைத்திய சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறும் பொலிசார் கொலையாளிகளோ அதற்கான பின்னணியோ இதுவரை கண்டறியப்படவில்லை என்கின்றனர்.


நிவாரணப் பொருட்கள் அடங்கிய முதல் இந்திய கப்பல் கொழும்பில்

இலங்கையின் வடப்பகுதியில் மோதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்தியாவில் திரட்டப்பட்ட நிவாரண பொருட்கள் அடங்கிய முதல் கப்பல் கொழும்புவிற்கு வந்தடைந்துள்ளதாக இந்திய தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 1700 டன் எடை உள்ள இந்தப் பொருட்கள் இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான கப்பல் மூலமாக வந்துள்ளதாகவும், இந்த பொருட்களையும் இறக்கும் பணி திங்கட்கிழமை ஆரம்பிக்கும் என்றும் தூதரகத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்த பொருட்கள் வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலங்கை அரசின் அணுசரனையுடன், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக விநியோகிக்கப்படும் என்றும் இந்திய தூதுரக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்த நிவாரணப் பொருட்கள் விநியோகம் தொடர்பாக நாளை திங்கட்கிழமை, இந்திய தூதரகத்தில், சர்வதேச செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகள் மற்றும் இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறவிருப்பதாகவும், இலங்கை அரசின் அத்தியாவசிய சேவைகள் ஆணையர் திவாரட்ண பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரின் கிடங்கில் பொருட்களை தாங்கள் இறக்குவதற்கு திட்டமிடுவதாகவும், அங்கிருந்து லாரிகள் மூலம் வவுனியாவிற்கு பொருட்கள் எடுத்து செல்லப்பட்டு, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கு பொருட்கள் எடுத்து செல்லபடும் என்றும் அவர் கூறினார். மேலும் இந்த விநியோகம் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மேற்பார்வையில் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.


இலங்கையின் கிழக்குப் பகுதியில் இன்னமும் பாதுகாப்பு குறித்த கவலைகள் நிலவுகின்றன

இலங்கை இராணுவம்
இலங்கை இராணுவம்

இலங்கையின் கிழக்குப் பகுதியை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டுவிட்டதாக அரசு அறிவித்த பிறகு அங்கு மாகாண சபை தேர்தல்தல்கள் நடைபெற்று அங்கு ஜனநாயக முறையில் தேர்தெடுக்கப்பட்டுள்ள அரசு பதவியேற்று ஆறுமாதங்களாகின்றன.

இந்த மாகாண சபையின் முதல் வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் செவ்வாய்கிழமையன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் அங்கு பாதுகாப்பு தொடர்பான கவலைகள் இன்னமும் தொடரவே செய்கின்றன என்று மாகாண சபை உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆறு மாதகாலத்தில், கிழக்கு மாகான சபையின் நடவடிக்கைகள் எவ்வாறு இருந்துள்ளன, மாகாணத்தில் அபிவிருத்தி மற்றும் அதிகாரப் பரவலாக்கம் என்ன நிலையிலுள்ளன என்று பல்கட்சி உறுப்பினர்கள் வெளியிடும் கருத்துக்களை உள்ளடக்கி எமது மட்டக்களப்புச் செய்தியாளர் உதயகுமார் வழங்கும் செய்திக் குறிப்பினை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து ஆலோசிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்

கம்யூனிஸ்ட்கள்
கம்யூனிஸ்ட்கள்

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அடுத்த கட்டமாக தமிழகத்திலிருந்து என்ன செய்யலாம் என்பது குறித்து விவாதிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாளை திங்கட்கிழமை சென்னையில் அனைத்துக் கட்சிகூட்டம் ஒன்றைக்கூட்டி இருக்கிறது.

தமிழக கட்சிகளின் ஒருமித்தக் கோரிக்கையான போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை என்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே திட்டவட்டமாகக் கூறியிருக்கும் நிலையில், அடுத்த கட்டநடவடிக்கை குறித்து முடிவெடுக்கவே நாளைய கூட்டம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் தா.பாண்டியன் கூறி இருக்கிறார்.

ஆனால் எத்தனை கட்சிகள் நாளைய கூட்டத்தில் கலந்துகொள்ளும் என்பது தெளிவாக இல்லை. இது குறித்து கோவையில் செய்தியாளர்கள் கேட்டபோது முதல்வர் கருணாநிதி அந்தக்கூட்டத்திற்கும் திமுகவிற்கும் தொடர்பில்லை என்று மட்டும் கூறினார்.

இதனிடையே தமிழக காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜி.கே.வாசன் காங்கிரசார் ராஜீவைக் கொன்ற விடுதலைப்புலிகளை மறக்கவும் இல்லை, மன்னிக்கவும் இல்லை எனக் கூறி இருக்கிறார்.

விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீக்கக் கோரும் கட்சிகளை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

பூநகரியை கைப்பற்றியதாக அரசு அறிவிப்பு

இரண்டு தசாப்தங்களிற்கும் மேலாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதான நகரான பூநகரியை தமது படையினர் இன்று சனிக்கிழமை காலை கைப்பற்றியிருப்பதாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது.

இது தொடர்பில் கருத்துவெளியிட்டுள்ள பாதுகாப்பமைச்சு, வடக்கில் கொழும்பு-கண்டி ஏ-9 பிரதான வழங்கற் பாதைக்கு மேற்காக மன்னாரிலிருந்து கரையோரமமக ஏ-32 பாதைவழியாக கடந்த சிலமாதங்களாக முன்னேற்ற நகர்வுகளில் ஈடுபட்டிருந்த துருப்பினர் பூநகரிக்கு தெற்குப்புறமாகவுள்ள சதுப்பு நிலங்களைத்தாண்டி வெள்ளிக்கிழமையிரவு பூநகரி-பரந்தன் பீ-69 பாதையில் நல்லூரிற்கு அடுத்துவுள்ள பிரதேசங்களை கைப்பற்றியதாகவும், அதன் பின்னர் சுமார் பீ-69 வீதியில் சுமார் 10 கிலோமீற்றர் வரை நகர்ந்த படையினர் இன்று பொழுது புலரும் முன்னரே பூநகரியின் நகர்ப்பகுதியினை படையினர் அடைந்ததாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆனாலும் அந்தப் பகுதியில் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதலிற்குப் படையினர் முகம் கொடுத்ததாகவும், ஆங்காங்கே உக்கிர மோதல்கள் இந்தப் பகுதியில் இன்னமும் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறது.

இதேவேளை, சனிக்கிழமை காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா பூநகரியைப் படையினர் கைப்பற்றிய செய்தியை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்திருக்கிறார்.

இதன் பின்னர், தேசிய தொலைக்காட்சியூடாக நாட்டு மக்களிற்கு உரையாற்றிய முப்படைகளின் தளபதியும், பாதுகாப்பு அமைச்சரும், ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஷ புலிகள் தமது ஆயுதங்களைக் கீழேவைத்துவிட்டு, தனது அரசுடன் பேச்சுக்களில் ஈடுபட முன்வரவேண்டும் என்றும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்தார்.

முப்படையினரிற்கும், நாட்டுமக்களிற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிகள் அவ்வாறு ஆயுதங்களைக் கீழேவைத்துவிட்டு சரணடைவதே அதன் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களிற்குச் செய்யக்கூடிய பாரிய சேவையாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.


ரகு கொலையில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பில்லை – கிழக்கு மாகாண முதலமைச்சர்

ரகு உடலுக்கு அஞ்சலி
ரகு உடலுக்கு அஞ்சலி

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியில் தலைவராக குறிப்பிடப்பட்டுள்ள ரகு எனப்படும் குமாரசாமி நந்தகோபனின் படுகொலைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்புகள் இருப்பதாக தான் கருதவில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறியிருக்கின்றார்.

முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளராகவும் சேவையாற்றிய ரகு எனபப்டும் குமாரசாமி நந்தகோபன் வெள்ளிகிழமை கொழும்பிற்கு வெளியே ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இவரது பூதவுடல் சனிக்கிழமை மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி மண்டபத்தில் பொமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அங்கு நடை பெற்ற இரங்கலுரையின் போது இதனை தெரிவித்த மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், சம்பவம் இடம்பெற்ற இடத்தை நேரில் சென்று தான் பார்வையிட்ட சமயம் அங்கு புலப்பட்ட சில விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இதனை தான் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்


இலங்கை வரவுசெலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது

இலங்கை நாடாளுமன்றம்
இலங்கை நாடாளுமன்றம்

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட அவரது அரசின் நான்காவது வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது கட்ட வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சனிக்கிழமையன்று 42 மேலதிக வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசின் நான்காவது வரவுசெலவுத்திட்டம் கடந்த 6ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கபட்டதனையடுத்து இதன் மீதான விவாதம் கடந்த ஒருவாரகாலமாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வந்தது.

அதன் இரண்டாம் கட்ட வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சனிக்கிழமை மாலை இடம்பெற்றபோது, 225 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் இதற்கு ஆதரவாக 127 வாக்குகளும், எதிராக 85 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புடன் சேர்ந்து ஜே.வி.பியிலிருந்து பிரிந்து சென்ற விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு ஆதரவாகவும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் இதற்கு எதிராக வாக்களித்தன.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவுசெலவுத்திட்டத்தின்பிரகாரம் அடுத்த ஆண்டில் அரசின் உத்தேச மொத்தவருமான 855 பில்லியன் ரூபாய்களாகவும், உத்தேச மொத்தச் செலவு 1191.67 பில்லியன் ரூபாய்களாகவும், இதனால் துண்டுவிழும் தொகை 336.67 பில்லியன் ரூபாய்களாகவும் காட்டப்பட்டிருந்தது.

கடந்த அக்டோபர் முற்பகுதியில் அரசினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த உத்தேச மதிப்பீட்டின்படி அடுத்த ஆண்டிற்கான உத்தேச பாதுகாப்பு செலவினங்களாக சுமார் 177.1 பில்லியன் ரூபாய்களாக காட்டப்படிருக்கிறது. கடந்தவருடம் மேற்கொள்ளப்பட்டிருந்த உத்தேச பாதுகாப்பு செலவினங்கள் 166.44 பில்லியன் ரூபாய்களுடன் ஒப்பிடும்போது இது சுமார் 7 சதவீத அதிகரிப்பாகும்.

வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாவது கட்ட வாசிப்பு மீதான விவாதம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் 8ம் திகதி இடம்பெறவிருக்கிறது.

முதலில் பயங்கரவாதம் ஒழிக்கப்படவேண்டும் -இலங்கை ஜனாதிபதி

இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னதாக, பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும், விடுதலைப் புலிகளை ராணுவ நடவடிக்கைகள் மூலம்தான் ஒடுக்க வேண்டும் என்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற வங்காள விரிகுடா நாடுகளுக்கிடையிலான பல்முனை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பேசும்போதும், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போதும் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

ஏழு நாடுகளைக் கொண்ட பிம்ஸ்டெக் எனப்படும் அந்தக் கூட்டமைப்பின் மாநாட்டில் பேசிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், “கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, விடுதலைப் புலிகளின் கொடூரமான நடவடிக்கைகளால் ஜனநாயக ரீதியான வாழ்க்கை முறையில் இலங்கை கடும் சவால்களைச் சந்தித்து வருகிறது. அப்படிப்பட்ட குழுக்களை ராணுவ நடவடிக்கை மூலம்தான் கையாள வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில், பயங்கரவாதிகள் தங்கள் நடவடிக்கைகளுக்கு நியாயம் சேர்ப்பதற்காக எந்த காரணத்தை அடிப்படையாகக் கூறுகிறார்களோ, அந்தப் பிரச்சினைகளை அரசியல் ரீதியாகத் தீர்க்க வேண்டும். நாங்கள் அரசியல் தீர்வு காண்பதற்கான வழியில் உறுதியாகச் சென்று கொண்டிருக்கிறோம்’’ என்றார் இலங்கை ஜனாதிபதி.

பயங்கரவாதிகளின் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க வங்காள விரிகுடா பகுதியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இருதரப்பு ஆலோசனைகள்

பிற்பகலில், மன்மோகன் சிங்கும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் இருதரப்புப் பிரச்சினைகள் தொடர்பாக தனியாக ஆலோசனை நடத்தினார்கள். சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பின்போது, இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விவரித்ததாகத் தெரிகிறது. அதே நேரத்தில், இந்தியத் தரப்பில் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக கவலைகள் தெரிவிக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மத்திய அரசிடம் தெரிவித்த கவலைகளையும் ராஜபக்ஷ அவர்களிடம் மன்மோகன் சிங் எடுத்துரைத்ததாகத் தெரிகிறது.

இந்தச் சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம், போர் நிறுத்தத்துக்குத் தயார் என விடுதலைப் புலிகள் அறிவித்திருப்பது குறித்துக் கேட்டபோது, “கடந்த 20 ஆண்டுகளாக போர் நிறுத்த ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் விடுதலைப் புலிகள் அதைப் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதுடன், தங்களது ஆட்களுக்கும் பயிற்சி கொடுத்து, திருப்பித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நாங்கள் தயார். ஆனால் அதற்கு முன்னதாக அவர்கள் தங்களது ஆயுதங்களைக் கீழே போட வேண்டும்’’ என்றார் ராஜபக்ஷ் அவர்கள்.

இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காணப் போகிறீர்கள் என்று கேட்டபோது, “ முதலில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். அதன் பிறகு அரசியல் தீர்வு காண வேண்டும். பயங்கரவாதத்தை அடுத்த சந்ததிக்கு நாம் கொடுக்கக் கூடாது’’ என்றார் இலங்கை ஜனாதிபதி.

தமிழர்களின் பாதுகாப்பு குறித்து இந்தியப் பிரதமரிடம் உறுதி அளித்தீர்களா என்று கேட்டபோது, “பிரதமருக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கே சொல்லிக் கொள்கிறோம். தமிழர்களை நாங்கள் பாதுகாப்போம். அவர்களுக்கு எந்தத் தீங்கும் நடக்காது. எங்கள் மக்களை நாங்கள் பாதுகாக்கிறோம். அது எனது கடமை’’ என்றார் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்.

இந்திய மீனவர்கள் படகுகள் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களைக் கடத்துவதாக ஏற்கெனவே மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குற்றம் சாட்டியிருந்தார். அதுபற்றி இந்தியப் பிரதமரிடம் எடுத்துக் கூறியதாகவும் தெரிவித்தார்.

தமிழக உதவிப் பொருட்கள் இலங்கை அரசு மூலமே வினியோகம்

இலங்கைத் தமிழர்களுக்கு திரைப்பட நட்சத்திரங்கள் உட்பட பலர் நிதி வழங்கியுள்ளனர்
இலங்கைத் தமிழர்களுக்கு திரைப்பட நட்சத்திரங்கள் உட்பட பலர் நிதி வழங்கியுள்ளனர்

மனிதாபிமான அடிப்படையில் இந்தியா அனுப்பும் நிவாரணப் பொருட்களை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், அந்தப் பொருட்கள் சர்வதேச அமைப்புக்கள் மூலம் அனுப்பப்படும் என்றும், இறுதி முனையில் இலங்கை அரசு அவற்றைப் பெற்று மக்களுக்கு விநியோகிக்கும் என்றும் கூறினார்.

இதனிடையே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் இன்று புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்கள். அப்போது, விடுதலைப் புலிகளை ராணுவ நடவடிக்கை மூலம் ஒடுக்கிய பிறகு, இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என இலங்கை ஜனாதிபதி பிம்ஸ்டெக் மாநாட்டில் பேசியது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஸ்ரீகாந்தா, “அப்படிச் சொல்வதன் மூலம் அரசியல் தீர்வு காண்பதாக இலங்கை அரசு சொல்வது பாசாங்கு, ஏமாற்று நாடகம் என்பது தெளிவாகிறது’’ என்றார்.



சம்பூர் பாதுகாப்பு வலயத்தின் எல்லைகளில் மாற்றம்

சம்பூர் பகுதி
சம்பூர் பகுதி

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் மூதார் கிழக்கு மற்றும் சம்பூர் அதியுயுர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பாக ஏற்கனவே இலங்கை ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தங்களை செய்யும் வகையில் மற்றுமொரு அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாதுகாப்பு வலயங்களின் எல்லைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

2008 ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட அறிவித்தலின் படி 11 கிராம சேவையாளர்கள் பிரிவுகளிலுள்ள 25 கிராமங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது.புதிய திருத்தத்தின் படி சம்பூர் கிழக்கு,சம்பூர் மேற்கு, கூனித்தீவு, கடற்கரைச்சேனை, நவரட்னபுரம் ஆகிய 5 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 9 கிராமங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த திருத்தமானது ஏற்கனவே மீள் குடியமர்த்தப்பட்டுள்ள யுத்த அகதிகளுக்கு ஆறுதல் அளித்தாலும் இது வரை மீளக் குடியமர்த்தப்படாத குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1700 குடும்பங்கள் தமது இருப்பிடங்களையும் காணிக்ளையும் இழக்கச் செய்வதாக மூதூர் கிழக்கு இடம் பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கத்தின் தலைவரான குமாரசாமி நாகேஸ்வரன் தமிழோசையிடம் கூறினார்.

இலங்கையின் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் எனக் கோரும் ஒரு தீர்மானம் இன்று(புதன்கிழமை) தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் முன்மொழிந்த இந்தத் தீர்மானம் சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்துக்கு பிறகு ஏகமனதாக நிறைவேறியது.

இலங்கையின் தமிழர்கள் படும் இன்னல்களுக்கு தீர்வு காண உடனடியாக அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என தமிழக சட்டமன்றத்தின் தீர்மானம் கூறியுள்ளது.

அங்கு ஒரு தரப்பினர் போர் நிறுத்தத்துக்கு தயார் என்று அறிவித்துள்ள நிலையில், இலங்கை அரசும் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் அந்தத் தீர்மானம் கோரியுள்ளது.

போர் நிறுத்தம் ஏற்பட்டு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அரசு முன்வர வேண்டும் எனவும் தமிழக சட்டமன்றத் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவின் மத்திய அரசும் தனது செல்வாக்கை பயன்படுத்தி போர் நிறுத்தம் ஏற்பட உதவ வேண்டும் எனவும் தமிழக முதல்வரால் முன்மொழியப்பட்டு ஏகமனதாக நிறைவேறிய தமிழக அரசின் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.


ஓமந்தை சோதனைச் சாவடியிலிருந்து தற்காலிகமாக ஐசிஆர்சி விலகல்

ஓமந்தை சோதனைச் சாவடி
ஓமந்தை சோதனைச் சாவடி

இலங்கையின் வடக்கே ஏ-9 சாலையில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச் சாவடியில் தமது பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து பிபிசியிடம் தெரிவித்த அந்த அமைப்பின் பேச்சாளரான அலெக்ஸாண்ட்ரா மட்டியேவிச் அவர்கள் அந்தப் பகுதியில் செவ்வாய்கிழமை(11.11.08)அன்று நடைபெற்ற சில சம்பவங்களே காரணம் என்று தெரிவித்தார்.

எனினும் அவை என்ன சம்பவங்கள் என்கிற தகவலுக்குள் தாம் செல்ல விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

திங்கட்கிழமையன்று அந்தப் பகுதியில் இடம் பெற்று வரும் ஆயுத மோதல்கள் அதிகரித்தன என்றும், அதன் காரணமாக அந்த வழியாக பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் தமது பணியாளர்களின் பாதுகாப்பு இல்லாத நிலை தோன்றியதாலேயே இவ்வாறான ஒரு முடிவை தாங்கள் எடுக்க வேண்டி வந்தது என்றும் தெரிவித்தார்.

தாங்கள் மீண்டும் அங்கு பணிக்கு திரும்பும் முன்னதாக இலங்கையின் பாதுகாப்பு படையினர் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகியோரிடமிருந்து புதிய பாதுகாப்பு உத்திரவாதங்களை பெறவேண்டியுள்ளது என்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பேச்சாளர் அலெக்ஸாண்ட்ரா மட்டியேவிச் கூறினார்.


இலங்கையில் மனித உரிமைகள் நிலமைகள் மோசமாக உள்ளன

சுனிலா அபேசேகர
சுனிலா அபேசேகர

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மிகவும் அதிகரித்து காணப்படுகின்றன என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்சின் விருதை வென்றுள்ள சுனிலா அபேசேகர கருத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பிபிசியின் சந்தேஷ்யவுக்கு வழங்கிய ஒரு பிரத்தியேகப் பேட்டியில், இலங்கையின் தமிழர்கள் அனைவருமே தீவிரவாதிகளாக பார்க்கப்படும் நிலை உள்ளது என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல் செயல்கள் பன்னாட்டு பார்வைக்கு பெரிய அளவில் வருவதில்லை என்றும், தமக்கு கிடைத்திருக்கும் விருதின் மூலமாக உலகத்துக்கு அவை தெரிய வரும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கருத்து கூறியுள்ளார்.

தாம் மட்டுமல்லாமல் இலங்கையின் நட்பு நாடாகிய ஜப்பான் போன்ற நாடுகளும், ஐக்கிய நாடுகள் அமைப்பும் கூட இது குறித்து சுட்டிக் காட்டியுள்ளார்.

மனித உரிமைகள் மீறல் தொடர்பான கருத்துக்களை வெளியிடுபவர்களையும் தீவிரவாதிகளாக வர்ணிக்கும் போக்கும் அங்கு காணக் கூடியதாக இருக்கிறது என்றும் சுனிலா அபேசேகர அவர்கள் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர் விவகாரம்

இலங்கைத் தமிழர் நிலை குறித்து பல்வேறு கட்சித்தலைவர்களும் இன்று தமிழக சட்டமன்றத்தில் தங்கள் கவலையினைத் தெரிவித்தனர்.

ஐந்து நாள் குளிர்காலக் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று, கேள்வி நேரம் முடிந்தவுடன் இலங்கைத்தமிழர் பிரச்சினை குறித்து தாங்கள் கொடுத்திருந்த கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் என்னவாயிற்று என்று பல தரப்புக்களிலிருந்தும் கேள்விகள் எழுந்தன.

பேரவைத்தலைவர் ஆவுடையப்பன் நேரடி பதில் எதுவும் தராததனால் அவையில் கூச்சல் அதிகரித்தது. பின்னர் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளின்பேரில் கட்சித்தலைவர்கள் சுருக்கமாக பேச அனுமதிக்கப்பட்டனர்.

விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்திற்குத் தயார் என்று அறிவித்தும், இலங்கை அரசு அவ்வாறு செய்ய முன்வராமல் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்குள்ளாகும் வண்ணம் போரைத் தொடர்கிறது, இந்நிலையில் அதனையும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு மத்திய அரசுதான் மஹிந்தா அரசை நிர்ப்பந்திக்க வேண்டுமென இன்று பேசிய கட்சித்தலைவர்கள் வலியுறுத்தினர்.

காங்கிரஸைச் சேர்ந்த ஞானசேகரன் இலங்கைத்தமிழர் இன்னல்கள் களையப்படவேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை ஆனால், அதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு, தமிழகத்தில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் தங்கள் விருப்பம்போல் செயல்பட அனுமதிக்கப்படக் கூடாதென்றார்.

முதலமைச்சர் கருத்தெதுவும் தெரிவிக்கவில்லை. இலங்கைப் பிரச்சினை குறித்த தீர்மானம் எப்போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என பேரவைத்தலைவர் தெரிவிக்கவில்லை.


தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அலுவலகத்தின் மீது தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மங்கிகட்டு என்னும் இடத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் அலுவலகம் ஒன்றில் நேற்று இடம்பெற்ற மோதலில், இருவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றார்கள்.

அந்த அலுவலகத்தில் இருந்த 4 பேர் ஏனையவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் சார்பில் பேசவல்ல ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆனால், விடுதலைப்புலிகளினாலேயே இந்தத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார்.

இந்த அலுவலகத்தின் மீது தாம் தாக்குதல் நடத்தியதாக உறுதிப்படுத்தியுள்ள விடுதலைப்புலிகள், சில ஆயுதங்களும் அங்கிருந்து மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இவைகுறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


போர் நிறுத்தம் இல்லை என்கிறது இலங்கை அரசு

இலங்கை அமைச்சர் மைத்ரிபால சிறிசேன, விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களைக் கையளிக்கும் வரையில் அந்த இயக்கத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ளபோவதில்லை, போர் நிறுத்தமும் செய்துகொள்ளப்போவதில்லை என்று நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.

ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது, விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் நடேசன் தமது அமைப்பு யுத்த நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாக கூறியிருப்பது குறித்து கேள்வியெழுப்பிய போதே, மூத்த அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலருமாகிய மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்.

அதேவேளை தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள், விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்துக்கு தயார் என்று கூறியிருக்கும் நிலையில், இலங்கை அரசும் போர் நிறுத்தத்துக்கு வருமாறு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என்று கோரியிருக்கிறார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கிராஞ்சி பகுதியை கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரப்பகுதியில் உள்ள கிராஞ்சி என்ற முக்கிய இடத்தை இலங்கை இராணுவத்தினர் இன்று விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாகப் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

கடும் சண்டைகளின் பின்னர் இந்தப் பகுதி வெற்றிகொள்ளப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப்புலிகளிடமிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதேவேளை, கிளிநொச்சி அக்கராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற சண்டைகளின்போது கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 7 சடலங்கள் இன்று வவுனியா வைத்தியசாலையில் வைத்து சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சடலங்கள் உடனடியாகவே ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக விடுதலைப் புலிகளிடம் ஒப்படைப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்டதாக செஞ்சிலுவைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையில் வன்னிப்பிரதேசத்தில் யுத்தச் சூழல் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு விநியோகிப்பதற்காக 47 ட்ரக் வண்டிகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இன்று எடுத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றில் உலக உணவுத் திட்டத்தின் ட்ரக் வண்டிகள் கூடுதலாக இடம்பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய உதவிப்பொருட்கள் இந்த வாரத்தில் இலங்கை வருகை

இலங்கையின் வன்னிப்பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் சிவிலியன்களுக்கு இந்தியாவினால் அனுப்பப்படவுள்ள நிவாரண உதவிப்பொருட்கள் இவ்வாரமளவில் இலங்கை வரவிருப்பதாகவும், அவை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினூடாக பாதிக்கப்பட்ட மக்களிற்கு பகிர்ந்தளிக்கப்படவிருப்பதாகவும் இலங்கைக்கான இந்தியத்தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய நிவாரணப்பொருட்களில் சுமார் 1000 டன்களை ஏற்றிய முதலாவது கப்பல் இவ்வாரம் கொழும்பு வரவிருப்பதாகவும் அவை இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினூடாக பாதிக்கப்பட்ட வன்னிப்பகுதி மக்களிற்கு விநியோகிக்கப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை இந்த நிவாரப்பொருட்கள் அனுப்பப்படுவது குறித்து மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக கடந்த வாரம் தமிழ் நாடு சென்ற இலங்கை சர்வதேச செஞ்சிலுவைக் குழு அதிகாரியொருவர் இவை பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளையும், பாரம்பரியங்களையும் பிரதிபலிப்பதாகவும், நல்ல நிலையிலுள்ள இந்தப் பொருட்கள் சர்வதேச நியமங்களிற்கு அமைவாக இருப்பதாகவும், அதன் ஊடக அதிகாரி சரசி விஜேரட்ண பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.


கருணா அமைப்பினர் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளில் இணைவதற்கு மாறுப்பட்ட கருத்துக்கள்

த.ம.வி.பு தலைவர் கருணா
த.ம.வி.பு தலைவர் கருணா

தனது அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் இலங்கையின் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளில் இணைக்கப்படுவார்கள் என்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கருணா தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் தான் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அவர் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால், முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்துவந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை அரசாங்க பொலிஸ் படையில் சேர்ப்பது குறித்து பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் ஏனையோர் மத்தியில் இருந்து மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இவை குறித்து இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வன்னி போர்முனைகளில் கிளிநொச்சிக்கு மேற்கே உள்ள அக்கராயன்குளம் பகுதியை முழுமையாகக் கைப்பற்றியுள்ள படையினர் மேற்குக் கரையோரப் பகுதியாகிய பூனகரியை நோக்கி முன்னேறி வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. இதேவேளை கிளிநொச்சி நகருக்குத் தெற்கில் உள்ள பாரதிபுரம் மற்றும் கிழக்கில் உள்ள களமுனைகளிலும் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

எனினும் இதுபற்றி விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையே, வடக்கே வவுனியா தோணிக்கல் பகுதியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்றில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

சனிக்கிழமை இரவு 10 மணியளவில் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் குண்டு ஒன்றைப் பொருத்திக்கொண்டிருந்த போதே இந்த குண்’டு வெடிப்புச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் இதில் கொல்லப்பட்டவர் வவுனியாவில் உள்ள அரச திணைக்களத்தி்ன் சாரதியாகப் பணியாற்றிய ஒருவர் என்றும், இவர் அண்மையில் முல்லைத்தீவு பகுதியில் இருந்து இங்கு இடம் மாற்றம் பெற்று வந்ததாகவும் பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நேரம் ஞாயிற்றுக்கிழமை மதியம் பரந்தன் பகுதியில் நடைபெற்ற வான் தாக்குதலில் ஐந்து சிவிலியன்கள் காயமடைந்து தர்மபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


வகுப்பறையில் இயங்கும் மருத்துவமனைகள்

இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் கட்டு்ப்பாட்டுப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான வைத்திய சேவைகளை ஆற்றி வருகின்ற மருத்துவ மனைகள் பாடசாலை கட்டிடங்களிலேயே இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வகுப்பறைகள் நோயாளர்களின் விடுதிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. இவற்றில் கல்வி கற்ற மாணவர்களுக்கு பாடசாலைக்கு அருகிலேயே அதிகாரிகள் கொட்டில்களில் வகுப்பறைகளை அமைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தர்மபுரம், விசுவமடு ஆகிய இடங்களி்ல் உள்ள பாடசாலை வளவுகளில் பாடசாலைகளும் மருத்துவமனைகளும் இணைந்து செயற்பட்டு வருகின்றன. இவற்றிற்குத் தனித்தனியான நுழைவாயில்கள் அமைக்கப்பட்டு, பாடசாலை சமூகத்துடன் இணைந்து இரண்டு நிறுவனங்களையும் அதிகாரிகள் முடிந்த அளவில் சிறப்பாகச் செயற்படுத்தி வருவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பளார் டாக்டர் ரீ.சத்தியமூர்த்தி தெரிவிக்கின்றார்.

இதுபற்றிய மேலதிக விபரங்களடங்கிய வவுனியா செய்தியாளர் பி. மாணிக்கவாசகம் அவர்களின் செய்திப்பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



அக்கராயன்குளத்தை பிடித்துவிட்டதாக இராணுவம் அறிவிப்பு

வெப் ஜெனரல் சரத் பொன்சேகா
வெப் ஜெனரல் சரத் பொன்சேகா

கிளிநொச்சி நகருக்கு மேற்கே உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தளமாகிய அக்கராயன்குளம் பகுதியை முழுமையாக இராணுவம் கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

மேலும் இலங்கையின் வடக்கே மாங்குளம் பகுதியில் புதிதாக தரையிறக்கப்பட்டுள்ள இராணுவ அணி, அங்கிருந்து ஏ9 வீதியை நோக்கி முன்னேறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், இந்த முயற்சியின்போது பனிக்கன்குளம் பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று பல மணித்தியாலங்கள் உக்கிர சண்டைகள் நடைபெற்றதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இந்தச் சண்டைகளின் பின்னர் படையினர் நடத்திய தேடுதலின்போது மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 7 சடலங்கள் இராணுவத்தி்னரால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

எனினும் வியாழக்கிழமையன்று பனிக்கங்குளம் சண்டைகள் பற்றியோ, அக்கராயன்குளம் பகுதி படையினர் வசமாகியுள்ளது பற்றியோ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையில், வவுனியாவுக்கு வெள்ளிக்கிழமை காலை விஜயம் செய்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா வன்னிக்கள முனைகளின் தற்போதைய நிலைமைகள் குறித்து வன்னிப்பிராந்திய ஆயுதப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவுடனும், முக்கிய களமுனைத் தளபதிகளுடனும் விரிவாகக் கலந்துரையாடியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது



முல்லைத் தீவில் மருத்துவ உதவிப் பொருள் தட்டுப்பாடு

இலங்கையின் வடக்கே இராணுவத்திற்கும் வி்டுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டைகள் நடைபெற்று வருகின்ற வன்னிப்பிரதேசத்தில் யுத்தச்சூழலில் சிக்கியுள்ள மக்களுக்குரிய அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றபோதிலும், அப்பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு உரிய மருந்துப்பொருட்கள், எரிபொருள் என்பன போதிய அளவில் இன்னும் சென்றடையவில்லை எனக் கூறப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வவுனியாவில் இருந்து 2 லொறிகளில் அனுப்பிவைக்கப்பட்ட மருந்துப் பொருட்கள் ஓமந்தை சோதனைச்சாவடியிலிருந்து திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்டத்தின் பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும், தொற்றுநோய்த்தடுப்பு அதிகாரியுமாகிய டாக்டர் ஒஸ்மான் சாள்ஸ் அவர்கள் கூறுகின்றார்.

முல்லைத்தீவு மாவட்டப் பொது வைத்தியசாலையுடன், புதுக்குடியிருப்பு, மூங்கிலாறு ஆகிய இடங்களில் 2 பிரதேச வைத்தியசாலைகளும், அத்துடன் மேலும் 5 சிறிய வைத்தியசாலைகளும் பற்றாக்குறைகள், சிரமங்களுக்கு மத்தியிலேயே இயங்கிவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த மாவட்டத்தில் நிலவுகின்ற எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த வைத்தியசாலைகளின் உள்நோயாளர்களுக்கான விடுதிகளில் இரவில் சில மணித்தியாலங்கள் மாத்திரமே மின்சார வெளிச்சம் வழங்கப்படுவதாகவும், அதன் பின்னர் அரிக்கன் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே வைத்திய சேவைகள் இடம்பெறுவதாகவும் டாக்டர் சாள்ஸ் தெரிவிக்கின்றார்.


‘இலங்கைக்கான இந்திய உதவிப் பொருட்கள் தூதரகம் மூலமாக சர்வதேச உதவி அமைப்புகளிடம் வழங்கப்படும்’

இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் அனைத்தையும், கொழும்பிலுள்ள இந்தியத் தூதுர்தான் பெற்றுக்கொள்வார் என்று இந்திய அரசு கூறியுள்ளதாக தமிழக அரசு தெரிவிக்கிறது.

இந்த நிவாரணப் பொருட்கள் கொழும்பு சென்றடைந்த பிறகு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் என்று இந்திய வெளியுறவுச் செயலரின் கடிதத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

இது தொடர்பில் தமிழ்நாட்டில் எழுந்த ஐயங்கள் காரணமாக இந்தியப் பிரதமரிடம் விளக்கம் கேட்டு தமிழக முதல்வர் திங்கட்கிழமையன்று எழுதிய கடிதத்துக்கு பதிலாக, இந்திய வெளியுறவு அமைச்சக செயலரிடமிருந்து தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு வந்துள்ள கடிதத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.


‘இலங்கையின் வடக்கே கடற்புலித் தளங்கள் மீது விமானப் படையினர் குண்டுவீச்சு’

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள வெற்றிலைக்கேணியிலும், கட்டைக்காடு பகுதியிலும் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் இரண்டு கடற்புலித் தளங்கள் மீது விமானப்படையினர் குண்டுவீசி அழித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த இலக்குகள் மீது சரியான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் கட்டைக்காடு தளம் மீதான தாக்குதலையடுத்து, அது தீப்பற்றி எரிந்ததாகவும் விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜானக்க நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.

இதற்கிடையில் மாங்குளம் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களில், மேலும் ஒரு புதிய இராணுவ தாக்குதல் அணியொன்று களமிறக்கப்பட்டிருப்பதாகவும், இந்த அணிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையி்ல் வன்னிவிளாங்குளம் பகுதியில் மோதல்கள் இடம்பெற்றதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

தொண்டமான்நகர், புதுமுறிப்பு, செல்வாநகர் உட்பட்ட பிரதேசங்கள் மீது இராணுவத்தினர் எறிகணை தாக்குதல்களை நடத்தியதாகவும், இதனால், 16 வீடுகளும், 18 கடைகளும் அழிவுக்குள்ளாகியிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.


டி.எம்.வி.பி. உட்கட்சி முரண்பாடுகள் தீவிரமடைகின்றன

இலங்கையிலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்குள் பிள்ளையான் அணியினருக்கும் கருணா அணியினருக்கும் இடையில் உட்கட்சி விரிசல்களும் முரண்பாடுகளும் முற்றிவருவதாகத் தெரிகிறது.

அக்கட்சியின் மாகாண சபை உறுப்பினரான பிரதீப் மாஸ்டர், தனது அரசியல் அலுவலகத்தை கருணா ஆதரவாளர்கள் தாக்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

கருணா ஆதரவாளரான எறாவூர் பிரதேச சபை உறுப்பினர் அன்புமணி தலைமையில் வந்த ஆயுததாரிகளே தனது அலுவலகத்தைத் தாக்கி அங்கிருந்தவர்களை விரட்டியடித்ததாக அவர் தெரிவித்தார்.

ஆனால் கருணாவின் உத்தரவின் பேரில் அன்புமணி தலைமையில் சென்றவர்கள் அவ்வலுவலகத்தில் ஒழுக்காற்று நடவடிக்கையைதான் மேற்கொண்டிருந்தனர் என்று அம்பாறை மாவட்ட டி.எம்.வி.பி. பொறுப்பாளர் இனியபாரதி தெரிவித்துள்ளார்.

பிரதீப் மாஸ்டர் மற்றும் இனியபாரதி ஆகியோரின் செவ்விகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


Posted in Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

DMK Internal Squabbles: Govt told to pay relief for police apathy – Mu Ka Alagiri

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2008

முதல்வர் மகன் அழகிரி தொடர்பான வன்முறைக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

முதல்வரின் புதல்வர் மு.க அழகிரி
முதல்வரின் புதல்வர் மு.க அழகிரி

2000மாவது ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திமுக தொண்டர்கள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து மதுரையில் நிகழ்ந்த வன்முறையின்போது தீக்கிரையான ஒரு தனியார் பேருந்திற்கான இழப்பீட்டை தமிழக அரசு வழங்கவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டிருக்கிறது.

அப்பேருந்தின் உரிமையாளர்களான தனக்கன்குளம் வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சி கழகத்திற்கு 2 லட்ச ரூபாய் இழப்பீட்டை இன்னும் எட்டு வாரங்களுக்குள் செலுத்திவிடவேண்டுமென நீதிபதி சந்துரு கூறியிருக்கிறார்.

அழகிரிக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் மோதல் முற்றிவந்த நேரத்தில் அழகிரியுடன் தொண்டர்கள் தொடர்பை துண்டித்துக்கொள்ளவேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. அப்போது அழகிரி ஆதரவாளர்களின் எதிர்ப்பே பரவலான வன்முறையாக வெளிப்பட்டதாக செய்திகள் கூறின.

வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சிக்கழகம் எரிக்கப்பட்ட பேருந்திற்கு வாகன காப்பீடு இல்லை என்று முறையிட்டும் அதற்கு எவ்வித இழப்பீட்டையும் வழங்க தமிழக அரசு முன்வரவில்லை. கடந்த மூன்றாண்டுகளாக அக்கழகத்தின் மனுவிற்கு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையிலேயே நீதிபதி சந்துரு தனது தீர்ப்பினை அளித்திருக்கிறார்.

அப்போது நிகழ்ந்த வன்முறைகள் குறித்தும், குடிமக்களுக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்காதது குறித்தும் நீதிபதி கடும் அதிருப்தியினை தெரிவித்திருக்கிறார். எந்த ஒரு தனிநபரின் பிரச்சினைகளுக்காகவும் மற்ற குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது, கும்பல்கள் வன்முறையில் இறங்கும்போது ஒன்றும் செய்ய இயலவில்லை என்று அரசு ஒதுங்கிக்கொள்ளமுடியாது என்று நீதிபதி சந்துரு கூறியிருக்கின்றார்.

Posted in DMK, Economy, Govt, Law, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

வரலாற்று இல்லங்கள்! — சாருகேசி

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 24, 2008

“சென்னை வாரம்’ தொடர்பாக நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில், மெட்ராஸ் புக் கிளப் நடத்திய நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும், சரித்திர-தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் சித்ரா மாதவன் சென்னையில் அதிகம் அறியப்படாத ஆலயங்கள் பற்றிய உரையும் குறிப்பிடத்தகுந்தவை.

வி.ஸ்ரீராம் எழுதி, கலம்க்ரியா பதிப்பித்திருக்கும் “சென்னையின் வரலாறு படைத்த இல்லங்கள்’ வெளியீட்டு விழா ஏராளமான பார்வையாளர்களை ஈர்த்தது. இடப்புறம் ஓவியர் விஜயகுமார் வரைந்த கட்டடமும், வலப்புறம் ஆங்கிலப் பகுதியோடு பத்மா நாராயணனின் தமிழ் மொழிபெயர்ப்பும் அச்சிடப்பட்ட இந்த நூலில் வரலாறு படைத்த 50 வீடுகளைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் நிறைய இருக்கின்றன.

கல்கி கார்டன்ஸ், அன்னை இல்லம், ப்ராடீகாஸில், செட்டிநாடு மாளிகை, பாரதி இல்லம், சி.வி.ராமன் இல்லம். “ஜலதரங்கம்’ ரமணய்ய செட்டி இல்லம். டாக்டர் ராதாகிருஷ்ணன் வீடு, வீணை தனம்மாள் வீடு, உட்லண்ட்ஸ், திருவொற்றியூர் தியாகய்யர் இல்லம், ஓவியர் ராஜம் வீடு என்று தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்டிக்கிறது.

நூல் ஆர்வலர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது இந்நூல்.

சித்ரா மாதவன், கபாலி கோயில் தொடங்கி, சுமார் முப்பது கோயில்களைப் பற்றி பேசும்போது, குடமுழுக்கு என்ற பெயரில் அக்ரிலிக் வர்ணத்தைப் பூசி பழைமையை மாற்றுவதையும், தொல்பொருள் ஆய்வாளர்களுக்குத் தேவையான கல்வெட்டுக்களை முழுமையாக மறைத்துவிடுவதுபோல பாத்ரூம் டைல்களைப் பதிப்பதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டார். அழகான சிற்பங்கள் சில தூண்களில் இருப்பதைப் பலரும் காணாமலே இருந்து விடுவதைச் சுட்டிக்காட்டினார். அனாவசியமாகப் புதிய கட்டுமானங்கள் கட்டி பழைமையை அழிக்கும் பழக்கத்தைச் சொல்லிக் குறைப்பட்டுக் கொண்டார்.

“சேமியர்ஸ்’ விடுதியில் நடந்த இந்தச் சொற்பொழிவுக்குப் பின், பலரும் இந்தக் கோயில்களைப் பார்க்க ஒரு முழு நாளை ஒதுக்கவும், சித்ரா மாதவனுடன் சென்று பார்க்கவும் விருப்பம் தெரிவித்தனர்.

மியூசிக் அகடமி, அறக்கட்டளைச் சொற்பொழிவுகளையும், இசை நிகழ்ச்சிகளையும் மாதம்தோறும் நடத்தி வருகிறது.

தேவார மூவர் பற்றி கபாலி ஓதுவார் வழங்கிய உரையில் அவர் தெளிவாக எடுத்துரைத்த நிகழ்ச்சிகளும், அவர் பாடிய தேவாரப் பாடல்களும் மனத்தைத் தொட்டன. அப்பர், சுந்தரர், சம்பந்தர் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டும் சொல்லி, அவர்கள் அந்த சந்தர்ப்பங்களில் பாடிய பதிகங்களைப் பாடினார் கபாலி ஓதுவார். “மடையில் வாளை பாய மாதரார், மறையுடையாய் தோலுடையாய், மாதர் மடப்பிடியும், கொட்டமே கமழும், அவ்வினைக்கு இவ்வினையாம், மட்டிட்ட புன்னையும், தொழுது தூமலர் தூவி’ என்று பதிகங்களையும், திருத்தாண்டகத்தையும் பாடி நெகிழ்வித்தார். ராகங்களை அந்தக் காலப் பண் பெயரில் எப்படி வழங்கினார்கள், அதற்கு இணையான இன்றைய ராகம் எது என்று கூடுதல் தகவல்களையும் அளித்தார். (உதாரணத்துக்கு, மாதர் மடப்பிடியும் என்ற பதிகம் மேகராகக் குறிஞ்சியில் அமைந்திருக்கிறது என்றும், அடாணா என்ற இன்றைய ராகப் பெயரையும் குறிப்பிட்டார். ஆனால் இதை யாழ்முறி அமைப்பு என்றும் அன்றைக்குக் குறிப்பிட்டார்கள்)

ஜானகி ராமானுஜம் வழங்கிய சமஸ்கிருத சாகித்தியங்கள் நிகழ்ச்சியும் வித்தியாசமாக இருந்தது. அரங்குகளில் அதிகம் பாடப்படாத பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடினார் ஜானகி ராமானுஜம். (நடுவே பந்துவராளி ஆலாபனைக்குப் பிறகு “ஞான மொசகராதா’ என்ற தியாகராஜரின் தெலுங்கு கிருதியைப் பாடியபோது தூக்கி வாரிப் போட்டது! ஆனால் அகடமி செயலர்களில் ஒருவரான பப்பு வேணுகோபால் ராவ் மளமளவென்று ஒரு துண்டுச் சீட்டில் குறிப்பு எழுதி மேடைக்கு அனுப்பியதைப் பாராட்ட வேண்டும்.)

மூன்றாவது நாள் நிகழ்ச்சியில் பத்ராசலம் ராமதாசர் இயற்றிய தெலுங்குப் பாடல்களைக் கோட்டப்பள்ளி வந்தனா என்ற பாடகி பாடினார். நல்ல உச்சரிப்பு, இனிமையான குரல் இரண்டும் இவருடைய ப்ளஸ் பாயின்ட்டுகள்.

ஒரு குறிப்பிடத் தகுந்த அம்சம், இந்த மூன்று நாட்களுமே அயல்நாட்டு (அமெரிக்க, ஜப்பானிய) இசை ரசிகர்கள் வந்திருந்து அமர்ந்து ரசித்ததுதான்.

தென்மண்டல கலாசார மையம் ஏற்பாடு செய்து, பாரதிய வித்யாபவன் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிகார் மற்றும் ஹரியாணா மாநில நாட்டுப்புறக் கலைஞர்கள் பாடலைப் பாடி, அவற்றுக்கு அந்த மாநிலக் கலைஞர்கள் நடனமும் ஆடினர்.

கணவர் மகிழ்ச்சியாக இருக்க மனைவி பாடி ஆடும் நடனம் பிகார் கலைஞர்கள் வழங்கிய நிகழ்ச்சி. குஜராத் மாநில கர்பா நடனம் போல இது இருக்கும் என்று அறிவித்தாலும், குழு நடனம் என்பதைத் தவிர, அப்படி ஒன்றும் பெரிய ஒற்றுமையைக் காண முடியவில்லை. ஹரியாணா கலைஞர்களின் நடனம் கிட்டத்தட்ட பஞ்சாப் மாநில பங்க்ரா போல இருந்தாலும், அறுவடை முடிந்து ஆடும் நடனம் என்ற வகையில் அதன் தனித்தன்மை வெளிப்பட்டது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Thuglaq Cartoons: Political satire on current issues by Cho, Satya & Sri

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2008

Posted in DMK, Govt, India, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Arputharaj: Political conferences & Public hassle – Disturbing normal life with Abundant Exuberance

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2008

அற்புதராஜுக்கு நன்றி!

அரசியல் கட்சிகள் தங்களது செல்வாக்கை வெளிப்படுத்தவும், தங்கள் பின்னால் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று அரசியல் தலைவர்கள் தங்களைத் தாங்களே தைரியப்படுத்திக் கொள்ளவும் மாநாடு, பேரணி என்று நடத்தி விடுகிறார்கள். இதனால் எத்தனை லட்சம் ரூபாய்கள் விரயமாக்கப்படுகின்றன, எத்தனை மணிநேர மனித உழைப்பு வீணாகிறது என்பதைப் பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை.

இந்த மாநாடுகளும், பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் இன்றைய ஊடகப்புரட்சிக்குப் பிறகு தேவைதானா என்பது சந்தேகம்தான். தொலைக்காட்சிப் பெட்டிகள் மூலம் தமிழகத்திலுள்ள 95% மக்களை நேரில் சந்தித்துத் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கும் வாய்ப்பு ஏற்பட்ட பிறகும் இதுபோன்ற தேசிய விரயங்களில் அரசியல் கட்சிகள் ஈடுபடுவது என்பது எந்த அளவுக்கு நமது தலைவர்கள் பொறுப்பற்ற விதத்தில் செயல்படுகிறார்கள் என்பதைத்தான் எடுத்துக் காட்டுகிறது.

வேடிக்கை என்னவென்றால், அநேகமாக எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுக்கென தொலைக்காட்சிச் சேனல்களையே வைத்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான். அந்த தொலைக்காட்சிச் சேனல்களில் தங்கள் முகத்தையே திருப்பித் திருப்பிக் காட்டித் திருப்தி அடைவது மட்டுமல்லாமல், தொலைக்காட்சி வாடிக்கையாளர்களை வேறு வெறுப்படையச் செய்து விடுகிறார்கள். இத்தனையும் போதாதென்று பொதுக் கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகள் எல்லாம் எதற்கு?

கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்த என்கிற வாதத்திலும் உண்மை இல்லை. இதுபோன்ற மாநாடுகளில் முக்கால்வாசிப் பேர் பணம் கொடுத்து அழைத்து வரப்படுபவர்கள்தான் என்பதை அந்தக் கூட்டத்தினரைப் பார்த்தாலே தெரியும். ஊர் சுற்றிப் பார்க்க வரும் அப்பாவி மக்கள் சிலர். சாப்பாடும் பணமும் கிடைக்கிறதே என்கிற ஆசையில் வருபவர்கள் பலர்.

அது போகட்டும். கட்சி சாராத நம்மைப் போன்ற பொதுமக்களின் நிலைமைதான் இதுபோன்ற மாநாடுகள் மற்றும் பேரணிகள் நடக்கும்போது மிகவும் பரிதாபம். ஓரிடத்துக்கு நிம்மதியாகப் பயணிக்க முடியாது என்பது மட்டுமல்ல, அந்தந்த ஊர்களில் அன்றாட வாழ்க்கை வேறு பாதிக்கப்பட்டு விடுகிறது. தெருவெல்லாம் இவர்கள் வைக்கும் கட்-அவுட்டுகள், கொடிகள் மற்றும் போஸ்டர்கள் முகம் சுளிக்க வைப்பதுடன், போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் இருக்கின்றன.

பொதுக்கூட்ட மேடைகளுக்கும், “கட்-அவுட்’டுகளுக்கும் ரகசியமாக மின்சாரத்தைத் திருடும் சாகசம் நடப்பது தனிக்கதை.

இந்தப் பேரணிகள் முடிந்த பிறகு வீசி எறியப்படும் உணவுப் பொட்டலங்கள், மதுபான பாட்டில்கள், பீடி, சிகரெட் துண்டுகள், கழிவுகள் என்று அந்த நகரமே நரகமாக்கப்பட்டு விடுகிறது. அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஒருபுறம் இருக்க, நகராட்சி மற்றும் மாநகராட்சித் துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தேவையில்லாத அதிகரித்த வேலைப்பளு!

இதற்கெல்லாம் விடிவுகாலம் பிறக்காதா, இந்த அரசியல் கட்சிகளின் பொறுப்பற்ற செயல்களை யாராவது கண்டித்துக் கடிவாளம் போட மாட்டார்களா என்று ஏங்கிய அப்பாவிப் பொதுமக்களின் சார்பில் போர்க்கொடி தூக்கினார் சென்னை ஸ்ரீகஜலெட்சுமி காலனி குடிசைப்பகுதி மக்கள் நல்வாழ்வுச் சங்கத் தலைவரான 72 வயது அற்புதராஜ். அவர் தொடுத்த பொதுநல வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு அனைத்துத் தரப்பினரின் ஏகோபித்த கரகோஷ வரவேற்புக்கு உரியது.

உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி அசோக் குமார் கங்குலியும், நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாவும் அளித்திருக்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில், ஏழு முக்கிய நிபந்தனைகளை அரசியல் கட்சிகளுக்கு விதித்திருக்கிறார்கள். அதன்படி இனிமேல் இரவு பத்து மணிக்கு மேல் சென்னை போன்ற நகரங்களில் பொதுக்கூட்டங்கள் தடை செய்யப்படுகின்றன. மூன்று மணி நேரத்துக்கு மேல் ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை என்பது மட்டுமல்ல, போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத வகையில்தான் ஊர்வலங்கள் நடத்தப்படவும் வேண்டும்.

பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகள் முடிந்ததும் அரசியல் கட்சிகள் தங்களது பேனர்கள் மற்றும் கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றும்போது பொதுச்சொத்துகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தக் கூடாது என்கிற கண்டிப்பான உத்தரவும் பிறப்பிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, இதுபோன்ற மாநாடுகள் மற்றும் பேரணிகளுக்கு அனுமதி வழங்கும்போது முன்பணமாக ஒரு தொகை பெறப்பட வேண்டும் என்றும், பொதுச்சொத்துக்குச் சேதம் ஏற்படுமானால் அந்தத் தொகை ஈடாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு தெளிவாக்குகிறது.

ஒரு விஷயத்தை மட்டும் தீர்ப்பு ஏனோ விட்டுவிட்டது. இதுபோன்ற மாநாடுகள் மற்றும் பேரணிகள் நடத்தும் கட்சிகளிடமிருந்து சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் துப்புரவுக் கட்டணம் பெற வேண்டும் என்பதுதான் அது.

கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இதுபோன்ற மாநாடுகள், பேரணிகள் முறைப்படுத்தப்பட வேண்டும்.

Posted in Govt, India, Law, Order, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Report on The Government of Tamil Nadu: Public Administration: Accountant General’s Office: IAAS – Indian Audit and Accounts Service

Posted by Snapjudge மேல் மே 20, 2008

மு.க.ஸ்டாலின் துறையில் பல கோடி ரூபாய் முறைகேடு

தமிழக அரசுத் துறைகளில் ரூ. 32 கோடி அளவுக்கு தேவையற்ற மற்றும் முறைகேடான செலவுகள் செய்யப் பட்டுள்ளதாகவும், இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் துறையில் மட்டும் ரூ.13 கோடி அளவுக்கு முறைகேடான செலவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2006-07ம் ஆண்டிற்கான மத்திய தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த தணிக்கை விவரங்களை செய்தியாளர்களிடம் வெளியிட்டு சென்னையில் உள்ள இந்திய தணிக்கை துறை தலைவர் முருகையா பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ஆண்டுதோறும் மாநில அரசின் கணக்கு வழக்குகளை மத்திய தணிக்கை துறை தணிக்கை செய்து மாநில ஆளுநரிடம் சமர்ப்பிக்கும். இந்த அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு பொதுக் கணக்கு குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த அறிக்கையில் உள்ளவற்றை இந்தக் குழு ஆய்வு செய்து அதன்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைசெய்யும். இதன் பேரில் அரசு நடவடிக்கை எடுக்கும்.

  • 2006-07 ஆம் ஆண்டு மாநில அரசின் வருவாய் முந்தைய ஆண்டை விட 20.5 சதவிகிதம் உயர்ந்து 40 ஆயிரத்து 913 கோடியாக உள்ளது.
  • வருவாய் செலவினம் 19.5 சதவிகிதம் உயர்ந்து 38 ஆயிரத்து 265 கோடியாக உள்ளது.
  • கடன் அல்லாத மூலதன வருவாய் 710 கோடி ரூபாயாகவும்,
  • மூலதன செலவு மற்றும் கடன்கள் வழங்கியவை முறையே 1898 கோடி மற்றும் 1214 கோடி ரூபாயாக அதிகரித்ததாலும்
  • இந்த ஆண்டில் வருவாய் பற்றாக்குறை 1705 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டில் அரசின் நிதி பொறுப்பு வருவாயை விட 1.62 மடங்குகூடுதலாக ரூ.66 ஆயிரத்து 320 கோடியாக உள்ளது. நபார்டு வங்கி ஒப்புதல் அளித்த 269 பாசன திட்டங்களில் 251 திட்டங்கள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. பாசனத்துறை ஒப்புதல் பெறாத திட்டங்களில் 2.47 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. கூடுதல் திறன் கொண்ட கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை வடிவமைப்பதில் கூடுதலாக 5.77 கோடி ரூபாய் செலவாகி உள்ளது.

வணிகவரித்துறையில் இலவசமாக கிடைக்கும் மென்பொருளை தனியாரிடமிருந்து வாங்கியதால் 80 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 14 கோடி ரூபாய் செலவு செய்தும் கணினிமயமாக்கும் பணிகள் முற்றுப் பெறவில்லை.

கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் 415 ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனம் ஒன்று எந்தவித கட்டணமும் செலுத்தாமல் அனுபவித்து வருகிறது. பல்வேறு வரிகள் வசூலிப்பதில் சுணக்கம் காரணமாக பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் வாரியத்தில் எந்தவித இடர்பாடுகளும் இல்லாத நிலையிலும் 25 திட்டங்களில் 23 திட்டங்கள் நிறைவு செய்யப்படவில்லை.

பாக்கித் தொகை செலுத்துவதில் தமிழ்நாடு மின்சார வாரியம் நிபந்தனைகளை பின்பற்ற தவறியதால் 24.63 கோடி ரூபாய் ஊக்கத் தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது. பொது விநியோக முறையின் கீழ் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செலவு தொகையை திரும்ப பெற சமர்ப்பித்த தவறான கோரிக்கையின் விளைவாக ரூ.3.99 கோடி முடங்கிப் போயுள்ளது.

இத்துடன் அரசின் பல்வேறு துறைகள் மற்றும் கள அலுவலகங்களில் சோதனை செய்ததில் வீணான செலவினம் மற்றும் இதர முறைகேடுகள் காரணமாக 31.89 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவற்றில் மு.க.ஸ்டாலின் கீழ் உள்ள துறை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் தேவையற்ற மற்றும் பலன் அளிக்காத செலவு 9.63 கோடி ரூபாய் செய்யப்பட்டுள்ளது. தவிர்த்திருக்கக் கூடிய செலவுகள் 3.30 கோடி ரூபாய் செய்யப்பட்டுள்ளது.

இதே போல் பல துறைகளில் பல கோடி ரூபாய்க்கு தேவையற்ற மற்றும் முறைகேடான செலவுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Posted in DMK, Economy, Finance, Govt, India, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »