Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘History’

சாருகேசி :: நதிகளை இணைக்கும் நாரத கான சபா!

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 24, 2008

வருடா வருடம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் நாட்டிய விழா நடத்துவது நாரத கான சபாவின் குறிப்பிடத் தகுந்த பணிகளில் ஒன்று.

சென்ற ஆண்டு “úக்ஷத்திர பரதம்’ என்ற தலைப்பில் சுமார் ஒரு டஜன் புண்ணிய úக்ஷத்திரங்களை பரதநாட்டிய வடிவத்தில் பாடல்களுடனும், பஜன்களுடனும் நாட்டிய ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இந்த ஆண்டு கிட்டத்தட்ட அதன் தொடர்ச்சி போல, “தீர்த்த பரதம்’ என்ற தலைப்பில், ஏழு புண்ணிய நதிகளைப் பற்றி பரதநாட்டிய வடிவில் ஒரு வாரவிழா நடத்துகிறது நாரதகான சபா.

நடனக் கலைஞர்கள் நடனம்தான் ஆடமுடியும். நதி எங்கே தோன்றுகிறது. எங்கே முடிகிறது. வழியில் என்னென்ன úக்ஷத்திரங்கள் இருக்கின்றன. எந்தெந்தப் பாடல்கள் எந்தெந்தப் பின்னணிகளில் பாடப்பட்டன, புராண-சரித்திர விவரங்கள், தகவல்கள் என்னென்ன என்று அவர்கள் எப்படி அறிவார்கள் என்று கேள்வி எழும்.

இந்தச் சிக்கலைச் சமாளிக்க நாரதகான சபா ஏற்கெனவே ஒரு வழியைக் கண்டுபிடித்து வெற்றிகரமாகச் செயல்படுத்தியும் வந்திருக்கிறது.

ஆராய்ச்சிக் கட்டுரைகளில் திறமையும், ஆர்வமும் உள்ள நிபுணர்களை அணுகி அவர்களிடம் நாட்டியக் கலைஞர்களுக்குத் தேவைப்படும் அத்தனை விவரங்களையும் கொடுத்து, நிகழ்ச்சிக்குத் தேவையான பாடல்களையும் தேர்ந்தெடுத்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டது.

இந்த வருடம் நாட்டியரங்கம் வழங்கிய “தீர்த்தபரதம்’ நிகழ்ச்சிக்கு இப்படிக் கைகொடுத்து உதவ முன்வந்தவர்கள் அவரவர் துறைகளில் சிறந்து விளங்கும் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்ல; சொற்பொழிவாளர்களும்கூட.

லலிதா ராமகிருஷ்ணா கர்நாடக இசை பற்றிய நுணுக்கமான தகவல்களைச் சேகரித்து புத்தகங்கள் எழுதியவர். இவர் பிரம்மபுத்திரா நதி பற்றியும், அதன் கிளை நதிகள், வழித்தடங்களில் உள்ள கோயில்கள், அந்தப் பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் பரம்பரை பாடல்கள் என்று ஓர் ஆராய்ச்சியே செய்திருக்கிறார் இந்த நதி பற்றி. பிரம்மபுத்திரா மட்டுமே ஆண் நதி என்று உங்களுக்குத் தெரியுமோ?

யமுனை பற்றி, கல்யாணபுரம் ஆராவமுதாச்சாரியார் அவர்கள் முக்கியமான குறிப்புகளையும் தகவல்களையும் பொறுக்கி எடுத்துக் கொடுத்திருக்கிறார். (கங்கை நதிதான் ரொம்பவும் உயர்ந்தது என்று சொல்லுபவர்கள், கிருஷ்ணர் ஆடிக்களித்த யமுனைதான் மிக உயர்ந்தது என்று இவர் சொல்லுவதைக் கேட்டு புருவம் உயர்த்தக் கூடும்!)

டாக்டர் சுதா சேஷய்யன், தமது சொற்பொழிவுக்கே சாதாரணமாக எக்கச்சக்க ஆதாரங்களையும் பாடல்களையும் மடை திறந்த மாதிரி சொல்லக்கூடிய ஆற்றல் மிக்கவர்.

(நர்மதா நதி பற்றி அவர் செய்த ஆராய்ச்சியை வைத்துக்கொண்டு, வடக்கத்திய நடனக் கலைஞர் வைபவ் அரேக்கர் நடனம் ஆடப் போகிறார்!)

டாக்டர் பிரேமா நந்தகுமார் தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் புலமை பெற்ற எழுத்தாளர், பேச்சாளர். கோதாவரி நதி பற்றி இவர் தொகுத்துக் கொடுத்திருக்கும் செய்திகளும், பாடல்களும் நடனக் கலைஞர் நளினி பிரகாஷுக்கு உதவியிருக்கின்றனவாம்.

டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியம் தமிழ் வாசகர்களுக்கும், சரித்திர ஆராய்ச்சி ஆர்வலர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். காவிரி நதி பற்றி அவர் தொகுத்து அளித்திருக்கும் தகவல்களும், பாடல்களும்தாம் இந்த நாட்டிய விழாவில் நடனக் கலைஞருக்கு உதவப் போகின்றன.

டாக்டர் சித்ரா மாதவன் சரித்திர ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல; தொல்பொருள் துறை ஆராய்ச்சியாளரும்கூட. இவருடைய ஆங்கிலச் சொற்பொழிவுகள் எங்கெல்லாம் நடக்கின்றனவோ, அங்கெல்லாம் இவருடைய ரசிகர்கள் ஆர்வத்துடன் திரண்டு வருவது ஒன்றே இவருடைய திறமையை உணர வைக்கும். (இவர் இந்த நடன நிகழ்ச்சிக்குத் தேவையான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக, கண்ணால் காண்பதே மெய் என்று, நேரடியாக தாமிரபரணி நதி பாயும் இடங்களுக்குச் சென்று, அங்குள்ள திருக்கோயில்கள் மற்றும் ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடிய பாடல்களையும் அறிந்து வந்திருக்கிறார்!)

இத்தனை ஆதாரங்கள், தகவல்கள் எல்லாம் ஒரு நடன நிகழ்ச்சியோடு போய் விடக்கூடாதே என்று நாரதகான சபா இந்த ஏழு நதிகள் பற்றிய ஏழு கட்டுரைகளையும் ஓர் அழகான தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கிறது.

கங்கை பற்றி சுஜாதா விஜயராகவன் எழுதியிருக்கும் முதல் கட்டுரை தொடங்கி, டாக்டர் சித்ரா மாதவன் தாமிரபரணி பற்றி எழுதியிருக்கும் அத்தனை கட்டுரைகளும் சுவாரஸ்யமானவை.

நடனத்தை மட்டும் கண்டு ரசித்துச் செல்பவர்கள் ஒரு பக்கம் இருக்க, இவை போன்ற நுணுக்கமான ஆய்வுக் கட்டுரைகளில் ஆர்வம் காண்பிக்கும் ரசிகர்களுக்காகவே இந்த நூல் வெளியிடப்படுகிறது. பிரதி வேண்டுவோர் சபாவைத் தொடர்பு கொள்ளலாம்.

நடன நிகழ்ச்சி பற்றி விரிவாக அடுத்த வாரம் பார்ப்போம்!

எந்தப் பெற்றோராவது, பள்ளியில் படிக்கும் தங்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு, “இவங்க எதிர்காலத்தை நினைச்சாலே பயங்கரமா இருக்கு!’ என்று சொன்னால், அவர்களை உடனே எஸ்.பி.காந்தன் இயக்கி, நடிகர் மாது பாலாஜி தயாரித்திருக்கும் “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்’ என்ற குறும்படத்தை வாங்கச் சொல்லி சிபாரிசு செய்கிறேன்.

திருவள்ளூர் என்.சி.ஸ்ரீதரன் பத்திரிகையாளர், பல பன்னாட்டு நிறுவனங்களின் ஆலோசகர் மட்டுமல்ல. சிறந்த கல்விச் சிந்தனையாளர். அவரும் அவர் துணைவி ராதா ஸ்ரீதரனும் அமர்ந்து குழந்தைகளின் கல்வி, அவர்கள் வளர்ச்சி, எதிர்காலம் பற்றி உரையாடும் டிவிடி-தான் இது. ஆனால் ஒரேயடியாக டிவி உரையாடல் மாதிரி இல்லாமல், அங்கங்கே படங்களையும், சித்திரங்களையும் பொருத்தமாகச் சேர்த்திருக்கிறார் காந்தன்.

உரையாடல் மிக இயல்பாக அமைந்திருக்கிறது என்பதோடு, தெளிவாக இருக்கிறது. வளரும் குழந்தைகளின் கல்வி சார்ந்த அத்தனை விவரங்களையும் ஒவ்வோர் அம்சமாக எடுத்துக்கொண்டு 3 நிமிடம், 5 நிமிடம், 8 நிமிடம் என்று பிரித்துக்கொண்டு சுவாரசியமாகத் தயாரித்திருக்கிறார்.

“தாரே ஜமீன்பர்’ திரைப்படத்திற்குப் பிறகு பரவலாகப் பேச்சில் அடிபடும் டிஸ்லெக்சியா பற்றியும் ஒரு பகுதி இருக்கிறது. (அது நோயல்ல; கவனக் குறைவுதான்!) கூடவே டிஸ்க்ராஃபிலியா, டிஸ்காங்குலியா போன்ற சிறு குறைபாடுகள் பற்றியும் உரையாடலில் விளக்கியிருக்கிறார் ஸ்ரீதரன்.

வலது மூளை -இடது மூளை, யோகாவின் அவசியம், படிக்கும் பழக்கம் எவ்வாறு உதவுகிறது, குழந்தைகள் எப்படி சரளமாக ஆங்கிலம் பேசலாம், எட்டு வகை புத்திசாலித்தனங்கள் என்று வெகு நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது டிவிடி. பெற்றோர் மட்டுமல்ல, ஒவ்வொரு பள்ளிக்கூட ஆசிரியரும் அவசியம் கவனமாகப் பார்க்க வேண்டிய பல அம்சங்கள் கொண்ட இந்தக் குறும்படம், பலருக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

வரலாற்று இல்லங்கள்! — சாருகேசி

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 24, 2008

“சென்னை வாரம்’ தொடர்பாக நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில், மெட்ராஸ் புக் கிளப் நடத்திய நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும், சரித்திர-தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் சித்ரா மாதவன் சென்னையில் அதிகம் அறியப்படாத ஆலயங்கள் பற்றிய உரையும் குறிப்பிடத்தகுந்தவை.

வி.ஸ்ரீராம் எழுதி, கலம்க்ரியா பதிப்பித்திருக்கும் “சென்னையின் வரலாறு படைத்த இல்லங்கள்’ வெளியீட்டு விழா ஏராளமான பார்வையாளர்களை ஈர்த்தது. இடப்புறம் ஓவியர் விஜயகுமார் வரைந்த கட்டடமும், வலப்புறம் ஆங்கிலப் பகுதியோடு பத்மா நாராயணனின் தமிழ் மொழிபெயர்ப்பும் அச்சிடப்பட்ட இந்த நூலில் வரலாறு படைத்த 50 வீடுகளைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் நிறைய இருக்கின்றன.

கல்கி கார்டன்ஸ், அன்னை இல்லம், ப்ராடீகாஸில், செட்டிநாடு மாளிகை, பாரதி இல்லம், சி.வி.ராமன் இல்லம். “ஜலதரங்கம்’ ரமணய்ய செட்டி இல்லம். டாக்டர் ராதாகிருஷ்ணன் வீடு, வீணை தனம்மாள் வீடு, உட்லண்ட்ஸ், திருவொற்றியூர் தியாகய்யர் இல்லம், ஓவியர் ராஜம் வீடு என்று தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்டிக்கிறது.

நூல் ஆர்வலர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது இந்நூல்.

சித்ரா மாதவன், கபாலி கோயில் தொடங்கி, சுமார் முப்பது கோயில்களைப் பற்றி பேசும்போது, குடமுழுக்கு என்ற பெயரில் அக்ரிலிக் வர்ணத்தைப் பூசி பழைமையை மாற்றுவதையும், தொல்பொருள் ஆய்வாளர்களுக்குத் தேவையான கல்வெட்டுக்களை முழுமையாக மறைத்துவிடுவதுபோல பாத்ரூம் டைல்களைப் பதிப்பதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டார். அழகான சிற்பங்கள் சில தூண்களில் இருப்பதைப் பலரும் காணாமலே இருந்து விடுவதைச் சுட்டிக்காட்டினார். அனாவசியமாகப் புதிய கட்டுமானங்கள் கட்டி பழைமையை அழிக்கும் பழக்கத்தைச் சொல்லிக் குறைப்பட்டுக் கொண்டார்.

“சேமியர்ஸ்’ விடுதியில் நடந்த இந்தச் சொற்பொழிவுக்குப் பின், பலரும் இந்தக் கோயில்களைப் பார்க்க ஒரு முழு நாளை ஒதுக்கவும், சித்ரா மாதவனுடன் சென்று பார்க்கவும் விருப்பம் தெரிவித்தனர்.

மியூசிக் அகடமி, அறக்கட்டளைச் சொற்பொழிவுகளையும், இசை நிகழ்ச்சிகளையும் மாதம்தோறும் நடத்தி வருகிறது.

தேவார மூவர் பற்றி கபாலி ஓதுவார் வழங்கிய உரையில் அவர் தெளிவாக எடுத்துரைத்த நிகழ்ச்சிகளும், அவர் பாடிய தேவாரப் பாடல்களும் மனத்தைத் தொட்டன. அப்பர், சுந்தரர், சம்பந்தர் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டும் சொல்லி, அவர்கள் அந்த சந்தர்ப்பங்களில் பாடிய பதிகங்களைப் பாடினார் கபாலி ஓதுவார். “மடையில் வாளை பாய மாதரார், மறையுடையாய் தோலுடையாய், மாதர் மடப்பிடியும், கொட்டமே கமழும், அவ்வினைக்கு இவ்வினையாம், மட்டிட்ட புன்னையும், தொழுது தூமலர் தூவி’ என்று பதிகங்களையும், திருத்தாண்டகத்தையும் பாடி நெகிழ்வித்தார். ராகங்களை அந்தக் காலப் பண் பெயரில் எப்படி வழங்கினார்கள், அதற்கு இணையான இன்றைய ராகம் எது என்று கூடுதல் தகவல்களையும் அளித்தார். (உதாரணத்துக்கு, மாதர் மடப்பிடியும் என்ற பதிகம் மேகராகக் குறிஞ்சியில் அமைந்திருக்கிறது என்றும், அடாணா என்ற இன்றைய ராகப் பெயரையும் குறிப்பிட்டார். ஆனால் இதை யாழ்முறி அமைப்பு என்றும் அன்றைக்குக் குறிப்பிட்டார்கள்)

ஜானகி ராமானுஜம் வழங்கிய சமஸ்கிருத சாகித்தியங்கள் நிகழ்ச்சியும் வித்தியாசமாக இருந்தது. அரங்குகளில் அதிகம் பாடப்படாத பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடினார் ஜானகி ராமானுஜம். (நடுவே பந்துவராளி ஆலாபனைக்குப் பிறகு “ஞான மொசகராதா’ என்ற தியாகராஜரின் தெலுங்கு கிருதியைப் பாடியபோது தூக்கி வாரிப் போட்டது! ஆனால் அகடமி செயலர்களில் ஒருவரான பப்பு வேணுகோபால் ராவ் மளமளவென்று ஒரு துண்டுச் சீட்டில் குறிப்பு எழுதி மேடைக்கு அனுப்பியதைப் பாராட்ட வேண்டும்.)

மூன்றாவது நாள் நிகழ்ச்சியில் பத்ராசலம் ராமதாசர் இயற்றிய தெலுங்குப் பாடல்களைக் கோட்டப்பள்ளி வந்தனா என்ற பாடகி பாடினார். நல்ல உச்சரிப்பு, இனிமையான குரல் இரண்டும் இவருடைய ப்ளஸ் பாயின்ட்டுகள்.

ஒரு குறிப்பிடத் தகுந்த அம்சம், இந்த மூன்று நாட்களுமே அயல்நாட்டு (அமெரிக்க, ஜப்பானிய) இசை ரசிகர்கள் வந்திருந்து அமர்ந்து ரசித்ததுதான்.

தென்மண்டல கலாசார மையம் ஏற்பாடு செய்து, பாரதிய வித்யாபவன் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிகார் மற்றும் ஹரியாணா மாநில நாட்டுப்புறக் கலைஞர்கள் பாடலைப் பாடி, அவற்றுக்கு அந்த மாநிலக் கலைஞர்கள் நடனமும் ஆடினர்.

கணவர் மகிழ்ச்சியாக இருக்க மனைவி பாடி ஆடும் நடனம் பிகார் கலைஞர்கள் வழங்கிய நிகழ்ச்சி. குஜராத் மாநில கர்பா நடனம் போல இது இருக்கும் என்று அறிவித்தாலும், குழு நடனம் என்பதைத் தவிர, அப்படி ஒன்றும் பெரிய ஒற்றுமையைக் காண முடியவில்லை. ஹரியாணா கலைஞர்களின் நடனம் கிட்டத்தட்ட பஞ்சாப் மாநில பங்க்ரா போல இருந்தாலும், அறுவடை முடிந்து ஆடும் நடனம் என்ற வகையில் அதன் தனித்தன்மை வெளிப்பட்டது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Dasavatharam & Hindu outfits: Kamal vs Vaishnavism – KS Ravikumar

Posted by Snapjudge மேல் மே 14, 2008

“தசாவதாரம் படத்தில் மத உணர்வு காட்சிகள் இல்லை’: நீதிமன்றத்தில் தணிக்கை குழு பதில்

சென்னை, மே 13:   “தசாவதாரம்’ படத்தில் மத உணர்வை தூண்டக்கூடிய காட்சிகள் இல்லை. அப்படத்தை நன்கு தணிக்கைக்கு உட்படுத்திய பின்னரே “யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் தணிக்கைக்குழு தெரிவித்துள்ளது.

“தசாவதாரம்’ என்ற தலைப்பை யாரும் காப்புரிமை செய்யவில்லை என்பதால் அதனை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளார்.

“ஆஸ்கார் பிலிம்ஸ்’ தயாரித்து, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி கமலஹாசன் நடித்த “தசாவதாரம்’ படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து சுவாமி கோவிந்த ராமானுஜ தாசா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மத உணர்வை தூண்டும் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளன. இவற்றை நீக்கிய பின்னரே தசாவதாரம் படத்தை வெளியிட வேண்டும். “தசாவதாரம்’ என பெயர் வைக்கவும் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக தணிக்கை குழு மண்டல அலுவலர் பாபு ராமசாமி உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதன் விபரம்:

“தசாவதாரம்’ என்ற தலைப்பு ஏன், எப்படி? இந்து மத நம்பிக்கைக்கு எதிராக உள்ளது என்பதை மனுதாரர் விளக்கவில்லை. இந்த தலைப்பு சினிமா ஒளிப்பதிவு சட்டத்தை மீறுவதாக இல்லை. இதற்கு முன் “நவராத்திரி’, “கல்கி’, என்ற பெயரிலும் படங்கள் வெளியாகி உள்ளன.

சைவத்திற்கும், வைஷ்ணவத்திற்கும் இடையே மோதல்கள் ஏற்படுவது போன்ற காட்சிகள் படத்தில் இல்லை. பிரணவ மந்திரத்தின் மேல் கமலஹாசன் ஏறுவது போன்றோ, பகவத் கீதையை கிழிப்பது போன்றோ காட்சிகள் இல்லை. அதற்கு சான்றிதழும் வழங்கப்படவில்லை.

சைவத்தின் மீது பற்றுடைய இரண்டாம் குலோத்துங்க சோழன் எப்படி வைஷ்ணவத்தையும் சார்ந்து இருந்தான் என்பது தொடர்பான காட்சிகளே இடம் பெற்றுள்ளன. இதன் அடிப்படையில் படத்திற்கு “யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ராமானுஜர் வேடத்தில் கமல் நடிக்கவில்லை. ரங்கராஜன் நம்பி என நடித்துள்ளார்.

படம் குறித்த தகவலை முழுமையாக அறியாமல், கற்பனையாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பதில் மனு:

“தசாவதாரம்’ படத்தை தகுதி வாய்ந்த அமைப்பு பார்த்த பின்னரே அதற்கு “யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தை பார்க்காமல் அதன் ஒரு சில காட்சிகளை மட்டும் பார்த்து விட்டு வழக்குப் போட்டுள்ளனர். இது கேலிக்கூத்தானது.

12-ம் நூற்றாண்டின் வரலாற்று அடிப்படையில் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் சமய மோதல் காட்சிகள் இல்லை. “தசாவதாரம்’ தலைப்பு தவறாக பயன்படுத்தவில்லை. இத் தலைப்பிற்கு யாரும் காப்புரிமை பெறவில்லை. எனவே தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை

படத்தின் கதை ராமானுஜர் வாழ்க்கைப் பற்றியோ அல்லது ஸ்ரீரங்கம் கோயிலைப் பற்றியதோ இல்லை. ராமானுஜரை, ஸ்ரீரங்கநாதர் சிலையுடன் கட்டி கடலில் வீசுவது போன்ற காட்சிகள் இல்லை.

எனவே தணிக்கை குழுவால் “யு’ சான்றிதழ் அளிக்கப்பட்ட காட்சிகளை நீக்கவேண்டியதில்லை. கருத்து சுதந்திரம் தடுக்கப்படக்கூடாது. படத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

ரிலீஸ் தேதி முடிவாகவில்லை:

நீதிபதிகள் எம்.சத்யநாராயணன். ராஜசூர்யா அடங்கிய விடுமுறை கால பெஞ்ச் முன் “தசாவதாரம்’ பட வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது படம் வெளியாகும் தேதி முடிவாகி விட்டதா? என நீதிபதிகள் கேட்டனர். இன்னும் முடிவாகவில்லை என தெரிவித்ததால் அடுத்த வாரத்திற்கு வழக்கை தள்ளி வைத்தனர். இதனால் “தசாவதாரம்’ படம் மே 15-ம் தேதி வெளியாவது தள்ளி போகிறது.

Posted in Law, Order, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

The man behind ‘Anand’ & ‘Little Anand’: G Umapathy – Rajaraja Chozhan to Agni natchathiram

Posted by Snapjudge மேல் மே 5, 2008

திரைப்பட வரலாறு 913
ஜி.உமாபதி உருவாக்கிய “ராஜராஜ சோழன்”
தென்னாட்டின் முதல் `சினிமாஸ்கோப்’ படம்

சிவாஜிகணேசன் நடித்த “ராஜராஜசோழன்”, தென்னாட்டின் முதல் சினிமா ஸ்கோப் படம். இதைத் தயாரித்த ஜி.உமாபதி, உழைப்பால் உயர்ந்த தொழில் அதிபர்.

சென்னையில், ஒரு எளிய ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் உமாபதி. தந்தை பெயர் கோவிந்தசாமி முதலியார். பள்ளிக்கூடம் சென்று படிக்க விரும்பினாலும், ஏழ்மை அதற்கு இடம் கொடுக்கவில்லை.

குழந்தைத் தொழிலாளி

12-வது வயதில், ஒரு அச்சகத்தில் வேலைக்கு சேர்ந்தார். கடினமாக உழைத்தார். அச்சுத் தொழில் நுட்பங்களை நன்கு கற்றுக்கொண்டார்.

பிறகு சொந்தமாக அச்சகம் தொடங்கினார். அதுதான் “உமா அச்சகம்.” பிறகு, அட்டைப்பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கினார். அதன் மூலம், வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்தார்.

அரசியல்

இளைஞர் உமாபதிக்கு அரசியலிலும் ஆர்வம் வந்தது. காந்தி, நேதாஜி, காமராஜர், அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோருடைய அரசியல் பணி கள் அவரை ஈர்த்தன. சிலம்புச் செல்வர் ம.பொ.சி. தொடங்கிய தமிழரசு கழகத்தில் சேர்ந்து, அதன் முக்கியத் தலைவர்களில் ஒருவரானார். திருத்தணியை மீட்க நடந்த போராட்டத்திலும், தேவிகுளம் பீர்மேடு மீட்பு போராட்டத்திலும் கலந்து கொண்டு, 2 முறை சிறை சென்றார்.

“உமா” இலக்கிய இதழ்

இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட உமாபதி, “உமா” என்ற இலக்கிய மாத இதழைத் தொடங்கி நடத்தினார்.

வண்ண ஓவியங்கள் வரைவதில் தனிச்சிறப்பு பெற்ற கே.மாதவன் வரைந்த படங்களையே தொடர்ந்து அட்டைப் படங்களாக வெளியிட்டார்.

நவீன தியேட்டர்

கட்டிடக் கலையில் ஆர்வம் மிக்கவரான உமாபதி, சினிமா தியேட்டர் ஒன்றை நவீன வடிவமைப்பில் அமைக்க விரும்பினார். இதற்காக அவர் மும்பை சென்றார். அங்கு இந்தியாவிலேயே முதன் முதலாக நவீன வடிவமைப்பில் பிரமாண்டமாகக் கட்டப்பட்ட “மராத்தா மந்திர்” தியேட்டரை பார்த்து, அதற்கான செலவு முதலான விவரங்களை கேட்டறிந்தார்.

சிவாஜிகணேசனும், உமாபதியும் நல்ல நண்பர்கள். சென்னையில் ஒரு நவீன திரையரங்கம் கட்டவேண்டும் என்ற தன் விருப்பத்தை உமாபதியிடம் சிவாஜி தெரிவித்தார். தியேட்டரை அமைக்கும் பொறுப்பை உமாபதி ஏற்றார்.

சாந்தி தியேட்டர்

அதன்படி கட்டப்பட்டதுதான், அண்ணா சாலையில் உள்ள “சாந்தி தியேட்டர்.” சினிமாஸ்கோப் படங்களை திரையிடுவதற்கென்றே அகன்ற திரை அமைக்கப்பட்டது. 1,212 பேர் அமர்ந்து படம் பார்க்க முடியும். `பால்கனி’யில் மட்டும் 419 பேர் உட்காரலாம்.

இந்த பிரமாண்டமான “ஏசி” தியேட்டரை, பெருந்தலைவர் காமராஜர் 1960-ல் திறந்து வைத்தார்.

இதுபற்றி உமாபதியின் மகன் `இளம்பாரி’ கருணாகரன் கூறியதாவது:-

“சிவாஜி கேட்டுக்கொண்டதன் பேரில்தான் சாந்தி தியேட்டரை என் தந்தை கட்டினார். சிலர், `இந்த திரை அரங்கை கட்டிய உமாபதி, அதை நடத்த முடியாமல் சிவாஜிக்கு விற்றுவிட்டார்’ என்று கூறினார்கள்.

இது என் தந்தையை உசுப்பி விட்டது. தனக்கு என்று ஒரு தியேட்டரை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதன் விளைவாக, அண்ணா சாலையில் ஆயிரம் விளக்குப் பகுதியில் கட்டப்பட்டதுதான் “ஆனந்த் தியேட்டர்.” இதை, 1963-ல் பெருந்தலைவர் காமராஜர் திறந்து வைத்தார்.

இதுதான், தென்னாட்டில் கட்டப்பட்ட முதலாவது “70 எம்.எம்” தியேட்டர்.

ஆனந்த் தியேட்டர் வளாகத்திலேயே, “லிட்டில் ஆனந்த்” என்ற மற்றொரு திரையரங்கத்தையும் கட்டினார்.

இதில் முதன் முதலாக திரையிடப்பட்ட படம் “ஆராதனா.” ராஜேஷ் கன்னா – சார்மிளா டாகூர் நடித்த இந்த இந்திப்படம் 100 வாரங்கள் ஓடி, சாதனை படைத்தது.”

இவ்வாறு கருணா கரன் கூறினார்.

ராஜராஜசோழன்

உமாபதிக்கு அரசியல் தலைவர்களுடன் மட்டுமின்றி, திரைஉலகக் கலைஞர்களிடமும் நட்பு உண்டு.

எனவே, திரைப்படம் தயாரிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. தான் தயாரிக்கும் படம் வணிக ரீதியான படமாக இருக்கக்கூடாது, தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக்காட்டும் கலைப்படைப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதன்படி உருவானதுதான் “ராஜராஜசோழன்.” தென்னாட்டின் முதல் “சினிமாஸ்கோப்” படம்.

இந்த காலக்கட்டத்தில், இந்தி நடிகை மீனாகுமாரி தயாரித்து நடித்த “பகீஜா” என்ற இந்தி சினிமாஸ்கோப் படம் இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடியது. உமாபதி தன் மகன் கருணாகரனை மும்பைக்கு அனுப்பி, சினிமாஸ்கோப் படத்தின் தொழில் நுட்பங்களை அறிந்து வரச்செய்தார்.

பிரபல எழுத்தாளர் அரு.ராமநாதன் கதை-வசனம் எழுதி, டி.கே.சண்முகம் சகோதரர்களால் நாடகமாக நடிக்கப்பட்டு வந்ததுதான் “ராஜராஜசோழன்.”

திரைப்படத்துக்கான திரைக்கதை – வசனத்தையும் அரு.ராமநாதன் எழுதினார். சிவாஜிகணேசன் ராஜராஜசோழனாக நடித்தார்.

மற்றும் டி.ஆர்.மகாலிங்கம், முத்துராமன், சிவகுமார், எம்.என்.நம்பியார், எஸ்.வரலட்சுமி, லட்சுமி ஆகியோரும் நடித்தனர். படத்தை ஏ.பி.நாகராஜன் டைரக்ட் செய்தார். குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைத்தார்.

பெரியகோவில்

தஞ்சை பெரியகோவிலை கட்டியவர் ராஜராஜசோழன். எனவே, கோவில் கட்டப்படும் காட்சியை பிரமாண்டமாக எடுக்க உமாபதி விரும்பினார்.

ஆனால் கோவிலுக்குள் படப்பிடிப்பை நடத்த மத்திய அரசு அனுமதிக்கவில்லை.

எனவே, வாசு ஸ்டூடியோவில் பிரமாண்டமான “செட்” போட்டு, அக்காட்சியை படமாக்கினார்கள்.

“ராஜராஜசோழன்” சென்னையில் ஆனந்த் தியேட்டரில் திரையிடப்பட்டது. தமிழ்நாட்டின் பல முக்கிய நகரங்களில் உள்ள தியேட்டர்களில், “சினிமாஸ்கோப்” படங்களை திரையிடும் வசதி அப்போது இல்லை. இதன் காரணமாக, உமாபதியே பல நகரங்களுக்கு ஆட்களை அனுப்பி தன் சொந்த செலவில் தியேட்டர்களில் திரை, “லென்ஸ்” ஆகியவற்றை மாற்றி அமைத்து படத்தைத் திரையிட்டார்.

“ராஜராஜசோழன்” சென்னையில் நூறு நாட்கள் ஓடியது என்றாலும், மொத்தத்தில் கணக்கு பார்த்தபோது லாபமும் இல்லை; நஷ்டமும் இல்லை.

வணிக ரீதியில் வெற்றி பெறாவிட்டாலும், தமிழ்நாட்டின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் சிறந்த படத்தைத் தயாரித்ததில் பெருமை அடைந்தார், ஜி.உமாபதி.

திரைப்பட வரலாறு :(914)
மணிரத்னம் இயக்கிய “அக்னி நட்சத்திரம்” படத்தில் உமாபதி நடித்தார்!

பிரபல டைரக்டர் மணிரத்னம் இயக்கிய “அக்னி நட்சத்திரம்” படத்தில் ஜி.உமாபதி நடித்தார்.

இந்தப்படத்தில் பிரபு, கார்த்திக் இருவரும் இணைந்து நடித்தனர்.

சிவகாமியின் சபதம்

“ராஜராஜசோழன்” படம் வெளிவந்தபின், எம்.ஜி.ஆரும், உமாபதியும் சந்தித்தனர். இதுபோன்ற பிரமாண்டமான சரித்திரப்படத்தில் நடிக்க தனக்கு ஆர்வம் இருப்பதாக எம்.ஜி.ஆர். கூறினார்.

“கல்கி”யின் “சிவகாமியின் சபதம்” கதையை படமாக்குவது பற்றி பரிசீலனை நடந்தது. ஆனால், இந்தத் திட்டம் நிறைவேறவில்லை.

மணிரத்னம் அழைப்பு

உமாபதி கம்பீரத்தோற்றம் உள்ளவர். பேசுகிற முறையிலும் தனி பாணி இருந்தது.

பட அதிபர் `ஜிவி’, டைரக்டர் மணிரத்னம் ஆகியோரின் தந்தையான ரத்னம் அய்யரும், உமாபதியும் நண்பர்கள். இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசுவது வழக்கம்.

அப்போது உமாபதியை மணிரத்னம் பார்த்திருக்கிறார். தனது “அக்னி நட்சத்திரம்” படத்தில் உமாபதியை நடிக்க வைக்க விரும்பினார்.

தன் நண்பரின் மகன் என்பதாலும், பெரிய டைரக்டர் என்பதாலும், மணிரத்னத்தின் கோரிக்கையை உமாபதியால் தட்ட முடியவில்லை. நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். என்றாலும் சில நிபந்தனைகளை விதித்தார். “நான் எப்போதும் அணிகிற வெள்ளை வேட்டி-சட்டையில்தான் நடிப்பேன். எந்தவித மேக்கப்பும் போட்டுக்கொள்ள மாட்டேன். இதற்கு சம்மதித்தால், நடிக்கிறேன்” என்றார், உமாபதி.

அதற்கு மணிரத்னம் சம்மதித்தார்.

படத்தில், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் உமாபதி பேசுவதுபோல் ஒரு காட்சி வரும். அப்போது, “நானும் குடும்பஸ்தன்தான். எனக்கு 6 பிள்ளைகள் இருக்கிறார்கள். நான் நல்லவன். என்னைக் கெட்டவனாக மாற்றிவிடாதே” என்பார்.

இது, டைரக்டர் எழுதிக் கொடுத்த வசனம் அல்ல; உமாபதி அவராகப் பேசியது! படத்துக்குப் பொருத்தமாக இருந்ததால், மணிரத்னம் “ஓகே” சொல்லிவிட்டார்.

பிரபு, கார்த்திக் இணைந்து நடித்த “அக்னி நட்சத்திரம்”, வெற்றிப்படமாக அமைந்தது. இதுபற்றி உமாபதி மகிழ்ச்சி அடைந்தார்.

ஆயினும், உமாபதி நடித்தது வில்லன் போன்ற பாத்திரம். ஆதலால், அவருடைய மகள்கள் வருத்தம் அடைந்தனர். அதற்கு, “அது வெறும் நடிப்புதானே” என்று உமாபதி சமாதானம் கூறினார்.

ஆனாலும், தன் நண்பர்களிடம் பேசும்போது, “சினிமாவில் நடித்ததில் எனக்கு பாதி மகிழ்ச்சி; பாதி வருத்தம். ஒரு வில்லன் போல நடிக்க வேண்டியிருந்ததில் வருத்தம்; ஒரு படத்தில் முகம் காட்டிய நிலையிலேயே எல்லோருக்கும் தெரிந்தவனாகி விட்டது மகிழ்ச்சி. நான் எவ்வளவோ சிரமப்பட்டேன். போராட்டங்களில் கலந்து கொண்டேன்; சிறை சென்றேன்; திரையரங்குகள் கட்டினேன்; படம் எடுத்தேன்; பல அரசியல் தலைவர்களுடன் பழகியிருக்கிறேன். பத்திரிகை நடத்தியிருக்கிறேன். அப்போதெல்லாம் கிடைக்காத புகழும், அடையாளமும் ஒரு படத்தில் நடித்ததன் மூலம் கிடைத்துவிட்டது” என்று கூறுவது வழக்கம்.

எதிர்பார்க்கக்கூடாது

கடைசிவரை, யாரையும் எதிர்பார்த்து வாழக்கூடாது என்பது உமாபதியின் கொள்கை. பிள்ளைகளிடம் கூட எதிர்பார்த்து நிற்கக்கூடாது என்பார்.

அவர் கடைசியாக மருத்துவமனைக்கு செல்லும்போதுகூட, ஒரு குறிப்பிட்ட தொகையை முன்னதாகவே செலுத்திவிட்டுத்தான் `அட்மிட்’ ஆகியிருக்கிறார். இதுபற்றி குடும்பத்தினரிடமும் சொல்லவில்லை. அவர் மறைவுக்குப் பின்னர், மீதித் தொகையை ஆஸ்பத்திரி நிர்வாகம் அனுப்பி வைத்தது. அப்போதுதான் குடும்பத்தினருக்கே தெரியும்.

கருணாகரன்

உமாபதி மறைக்குப் பிறகு ஆனந்த் தியேட்டரை நிர்வாகித்து வந்த அவர் மகன் உ.கருணாகரன், தியேட்டருக்கு பதிலாக வணிக வளாகம் அமைப்பதில் ஈடுபட்டுள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

“டெலிவிஷன் வந்த பிறகு, சினிமா தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் வழக்கம் பொதுமக்களிடம் குறைந்து விட்டது. சினிமா படங்களைவிட, சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை (சீரியல்) விரும்பிப் பார்க்கிறார்கள்.

இதன் காரணமாக சனி, ஞாயிறு தவிர இதர 5 நாட்களும் பெரும்பாலான தியேட்டர்கள் நஷ்டத்தில்தான் நடக்கின்றன.

வணிக வளாகம்

எனவே தியேட்டருக்கு பதிலாக, வணிக வளாகம் கட்டுகிறோம்.

வணிக நிறுவனங்களுடன், அதிநவீனமான சிறிய தியேட்டர்களையும் அமைக்க எண்ணியுள்ளோம். வணிக வளாகங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து போவார்கள் என்பதால், சிறிய தியேட்டர்கள் நஷ்டம் இல்லாமல் செயல்பட முடியும்.”

இவ்வாறு கருணாகரன் கூறினார்.

Posted in Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | 1 Comment »

Director Vittalacharya: Jeganmohini – Tamil Movie History

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 29, 2008

திரைப்பட வரலாறு :(910)
“மாயாஜால மன்னன்” விட்டலாச்சாரியா
“ஜெகன்மோகினி” மூலம் சாதனை படைத்தவர்

மாயாஜாலப் படங்கள் எடுத்து, பெரும் புகழ் பெற்றவர் விட்டலாச்சாரியா. இவர் தெலுங்கில் எடுத்த “ஜெகன்மோகினி”, தமிழில் “டப்” செய்யப்பட்டு நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படத் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் புகழ் பெற்று விளங்கிய விட்டலாச்சாரியா, 1920-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி கர்நாடக மாநிலம் உடுப்பி அருகில் உள்ள பெல்லே என்ற ஊரில் பிறந்தார்.

தந்தை பெயர் பத்மநாபா ஆச்சாரியார். இவர் ஆயுர்வேத வைத்தியர்.

தாயார் பெயர் சீதம்மா.

தெருக்கூத்து

கர்நாடக மாநிலத்தில், கிராமங்களில் “பைலாட்டா” என்ற கலை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இது, நம் ஊர் தெருக்கூத்து போன்றது. இதில் பங்கேற்பவர்கள், ஒப்பனையிலும் ஆட்டத்திலும் `கதகளி’ நடனக் கலைஞர்கள் போலத் தோன்றுவார்கள்.

இந்த கலை நிகழ்ச்சியில், விட்டலாச்சாரிக்கு மிகுந்த ஆர்வம். விடிய விடிய வேடிக்கை பார்ப்பார். இது, அவரது தந்தைக்கு கொஞ்சமும் பிடிக்காது.

பெல்லே கிராமம், கடற்கரைக்கு அருகே இருந்தது. விட்டலாச்சாரி 10வயது சிறுவனாக இருக்கும்போதே, மீனவர்களுடன் கட்டு மரத்தில் ஏறி கடலுக்குள் போய் விடுவார். மாலையில்தான் வீடு திரும்புவார்.

ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறந்த தன் மகன் இப்படி தெருக்கூத்தில் ஆர்வம் காட்டுவதும், மீனவர்களுடன் சேர்ந்து கொண்டு அபாயகரமான கட்டுமரப்பயணம் மேற்கொள்வதும், தந்தைக்கு கோபத்தை அளித்தன. விட்டலாச்சாரிக்கு அடிக்கடி அடி-உதை விழும். ஆனாலும், அவர் தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.

150 மைல் நடந்தார்!

ஒருநாள் தந்தை கடுமையாகத் திட்டிவிடவே கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார், விட்டலாச்சாரியா. கட்டிய வேட்டி – சட்டையுடன் புறப்பட்டவர், உடுப்பியிலிருந்து மைசூருக்கு 150 மைல் தூரம் நடந்தே போய்விட்டார்! அப்போது அவருக்கு வயது 18 இருக்கும்.

விட்டலாச்சாரியாவுக்கு சிறு வயது முதலே உடற்பயிற்சிகளில் ஆர்வமுண்டு. உடம்பை கட்டுமஸ்தானாக வைத்திருப்பார். மைசூருக்குப் போய், அங்கு தனக்குத் தெரிந்த நண்பர்களைச் சந்தித்தார்.

மைசூரில் அவர் நண்பர்கள் 8 பேர் சேர்ந்து டூரிங் டாக்கீஸ் நடத்தி வந்தார்கள். தங்கள் கூட்டணியில் இவரையும் சேர்த்துக் கொண்டார்கள். எதற்காக இவரைச் சேர்த்துக் கொண்டார்கள் தெரியுமா? அப்போதெல்லாம் அந்த டூரிங் டாக்கீஸ் நடமாடும் திரையரங்காக பல பகுதிகளுக்கு இடம் பெயரும் – சர்க்கஸ் மாதிரி.

ஒவ்வொரு நாளும் வசூலாகும் பணத்தை, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். நள்ளிரவில் கொண்டு போகும் பணத்துக்கு, பாதுகாப்பாக ஓர் ஆள் இருக்கட்டும் என்றுதான் விட்டலாச்சாரியாவை சேர்த்துக் கொண்டார்கள்.

அதுமட்டுமல்ல; படத்தை திரையிடும்போது ஏற்படும் பிரச்சினைகள், கூட்டத்தில் நடக்கும் தகராறுகள் ஆகியவற்றை சமாளிக்கும் பொறுப்பையும் இவர் ஏற்றுக்கொண்டார்.

ஏற்கனவே கலை ஆர்வம் கொண்டவர் ஆதலால், திரையரங்கில் ஓடிய படங்களை ஒன்று விடாமல் பலமுறை பார்த்து, தன் ரசனையை வளர்த்துக் கொண்டார்.

அந்த 8 பேர் கூட்டணியில் விட்டலாச்சாரியா சேர்ந்ததும், வசூல் குவிந்தது. ஒரு டூரிங் டாக்கீஸ், மூன்றாக வளர்ந்தது. ஒரே சமயத்தில் வெவ்வேறு 3 இடங்களில் படங்கள் ஓடும். வசூலின்போது, விட்டலாச்சாரியா பணப் பாதுகாப்பு பொறுப்பில் இருப்பார். இப்படி ஊர் ஊராக இடம் பெயர்ந்து, ஆங்காங்கே 1 மாதம், 2 மாதம் என்று முகாம் இட்டு படங்களை திரையிட்டு வந்தார்கள்.

வி.சாந்தாராம்

ஒருமுறை மைசூருக்கு பிரபல இந்திப்பட இயக்குனர் வி.சாந்தாராம் வந்திருந்தார். தன் “ஜனக் ஜனக் பாயல் பாஜே” படத்தின் படப்பிடிப்பு நடத்துவதற்கு ஏற்ற இடங்களை பார்க்க அவர் வந்திருந்தார்.

அவரை விட்டலாச்சாரி யா பல இடங்களுக்கு அழைத்துக்கொண்டு போய் காட்டினார். இத னால் சாந்தாராமுடன் நெருக்கமானார். படப்பிடிப்பு நடந்தபோது அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பை பெற்றார்.

ஏற்கனவேசினிமா ஆர்வம் உள்ளத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. படப்பிடிப்பை கண்கூடாக பார்க்கும் வாய்ப்பு அவருக்கு பெரிய ஈடுபாட்டை தூண்டியது. திரைப்படம் உருவாகும் முறையை கண்டு, கேட்டு, உற்று நோக்கி, விசாரித்து அறிந்து கொண்டார்.

டூரிங் டாக்கீஸ் தொழில் நன்றாக நடந்து கொண்டிருந்தாலும், ஒரு கட்டத்தில், `எத்தனை நாள்தான் எப்படி ஊர் ஊராக சுற்றுவது’ என்று யோசித்த நண்பர்கள் ஒரு முடிவெடுத்தனர்.

சினிமா ஸ்டூடியோ

தியேட்டர்களை நல்ல லாபத்துக்கு விற்றனர். இந்த 9 பேரும் சேர்ந்து “நவஜோதி ஸ்டூடியோ” என்று மைசூரில் ஒரு ஸ்டூடியோவை தொடங்கினார்கள்.

ஒரு கட்டத்தில் அதிலிருந்து விட்டலாச்சாரியாவும், அவரது நண்பர் சங்கர்சிங் என்பவரும் வெளியேறி, “மகாத்மா பிக்சர்ஸ்” என்ற திரைப்பட நிறுவனத்தை தொடங்கினார்கள்.

அப்போது சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. காந்தி மீது ஈடுபாடு கொண்டதால் அவரது பெயரை தங்கள் நிறுவனத்துக்கு வைத்தார்கள்.

காந்தியின் கொள்கையில் பற்றும், ஆர்வமும் கொண்ட விட்டலாச்சாரியா, சுதந்திரப் போராட்ட மறியல்களில் ஈடுபட்டதால், கைது செய்யப்பட்டுச் சிறை சென்றார். சிறையில் 6 மாதங்கள் இருந்தபின், விடுதலையானார். `வன்முறை கிளர்ச்சிகள் கூடாது’ என்று மகாத்மா காந்தி சொன்னதால் வன்முறை போராட்டங்களை தொண்டர்கள் கைவிட்டனர். விட்டலாச்சாரியாவும் மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கினார்.

முதலில் எடுக்கப்பட்ட படம் `சீனிவாச கல்யாணம்’ என்கிற கன்னடப்படம். அதைத்தொடர்ந்து 7 படங்கள் தயாரித்தார். பிறகு, சங்கர்சிங்கை விட்டுப் பிரிந்தார்.

அதன் பிறகு, யாருடனும் கூட்டு சேர்வது தனக்குச் சரி வராது என்று முடிவெடுத்து, 1951-ல் தன் பெயரில் “விட்டல் புரொடக்ஷன்ஸ்” தொடங்கினார்.

அவருக்கு 25 வயதில் திருமணமானது. சொந்தப்பட நிறுவனம் ஆரம்பித்தபோது அவரது வயது 30.

தந்தை இறந்து விடவே, வீட்டுக்கு மூத்த பிள்ளையான இவர் மீது குடும்பப் பொறுப்பு விழுந்தது. தங்கைகள் நால்வர். ஒரு தம்பி. எல்லாரையும் கவனித்துக் கொண்டார்.

திரைப்பட வரலாறு 911
என்.டி.ராமராவை வைத்து 18 படங்கள் எடுத்தார்

தெலுங்குப்பட உலகின் சூப்பர் ஸ்டார் என்.டி. ராமராவை வைத்து, 18 படங்கள் எடுத்தவர், விட்டலாச்சாரியா.

இவர் முதன் முதலாக எடுத்த படம் “ஜெகன்மோகினி” (கன்னடம்).

முதல் படத்திலேயே இவருக்கும் டைரக்டருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. எனவே தான் தயாரிக்கும் படங்களை தானே இயக்குவது என்று முடிவெடுத்தார்.

பிரம்மாண்டமான அரங்க அமைப்புகள் அலங்காரமான உடைகள், தந்திரக் காட்சிகள் ஆகியவை விட்டலாச்சாரியாவின் படங்களின் சிறப்பு அம்சங்கள்.

சமூகக் கதைகள்

ஆரம்ப காலத்தில் `கன்னியாதானா’, `மனே தும்பிதே ஹென்னோ’ போன்ற சமூகக் கதைகளை இயக்கினார். விருதுகள் கூட கிடைத்தன. ஆனால், வெற்றி கிட்டவில்லை. எனவே, சரித்திரப் பின்னணியுடன் பிரமாண்ட கதைக்களமே தன் பாணியென்று முடிவு செய்தார்.

கன்னடப் படங்களைத் தொடர்ந்து, தெலுங்கில் கவனம் செலுத்தினார். என்.டி.ராமராவை வைத்து நாகிரெட்டி `பாதாள பைரவி’யை தெலுங்கில் எடுத்தார். அதை கன்னடத்தில் “டப்” செய்ய, தொழில் நுட்பம் சார்ந்த பொறுப்புகளை விட்டலாச்சாரியா ஏற்றுக்கொண்டார். என்.டி.ராமராவுக்கு கன்னடத்தில் குரல் கொடுத்தவர் ராஜ்குமார். அப்போது ராஜ்குமார் நடிக்க ஆரம்பிக்கவில்லை.

இந்த டப்பிங் வேலைகள், சென்னை ஸ்டூடியோக்களில்தான் நடைபெற்றன. விட்டலாச்சார்யாவின் ஈடுபாடும், உழைப்பும் தெலுங்குத் திரையுலகில் பலரையும் கவர்ந்தன.

கன்னடத்தில் வெற்றி பெற்ற சில சமூகக் கதைகளை தெலுங்கில் இயக்கினார். அவை வெற்றி பெறவில்லை. பெயர் மட்டுமே கிடைத்தது. இந்நிலையில் குடும்பத்துடன் சென்னையில் குடியேறினார்.

1959 முதல், தெலுங்கில் காலூன்றினார். முதலில் காந்தாராவ் நாயகன். கிருஷ்ணகுமாரி (சவுகார்ஜானகியின் தங்கை) நாயகி என வைத்து `ஜெயவிஜயா’ என்றொரு படம் இயக்கினார். சரித்திரப் பின்னணியும் மாயாஜாலக் காட்சிகளும் கொண்ட படம் இது. இதே ஜோடியை வைத்து `கனகதுர்கா பூஜாமஹிமர்’ இயக்கினார்.

பிறகு `வரலட்சுமி விரதம்’, `மதனகாமராஜ கதா’ என காந்தாராவை வைத்து பல படங்களை எடுத்தார்.

என்.டி.ராமராவ்

காந்தாராவைத் தொடர்ந்து என்.டி.ராமராவை வைத்து முதலில் `பந்திபோட்டு’ என்றொரு படம் இயக்கித் தயாரித்தார். இதே கதையை ஒரே நேரத்தில் கன்னடத்தில் ராஜ்குமாரை வைத்து `வீரகேசரி’ என்று உருவாக்கினார். இன்றும்கூட “வீரகேசரி” படம், கர்நாடக ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த படமாகும்.

என்.டி.ராமராவுக்கு இவரது திறமையின் மீது மதிப்பு வரவே, தொடர்ந்து கால்ஷீட் கொடுத்து நடித்து வந்தார்.

`அக்கிப்பிடுகு’, `அக்கிப்பராட்டா’, `கந்திகோட்ட ரகஸ்யம்’, `அக்கி வீருடு’, `அரிபாயா நலபை தொங்கலு’ போன்ற 18 படங்களில் ராமராவ் நடித்தார். இதில் ஜெயலலிதா இணைந்து நடித்தவை 4 படங்கள். சரோஜாதேவி, தேவிகா, கே.ஆர்.விஜயா போன்ற முன்னணி நடிகைகள் பலரும் நடித்தார்கள்.

ராமராவ் படம் முடிந்து, கிடைக்கும் இடைவெளி காலத்தில், காந்தாராவ் நடித்து குறுகிய காலத் தயாரிப்பில் படங்கள் வரும். “வீரத்திலகம்”, “மாயமோதிரம்”, “மந்திரிகுமாரன்” போன்றவை அப்படி வெளிவந்தவைதான்.

வீரத்திலகம்

1964-ல், பொங்கலன்று எம்.ஜி.ஆர். நடித்த “வேட்டைக்காரன்”, சிவாஜிகணேசன் நடித்த “கர்ணன்” ஆகிய படங்கள் ரிலீஸ் ஆயின. அதே நாளில் வெளிவந்த விட்டலாச்சாரியாவின் “வீரத்திலகம்” படமும், அந்தப் படங்களைப்போல் நூறு நாட்கள் ஓடியது.

வரலாறு படைத்த படம்

முதன் முதலாக கன்னடத்தில் எடுத்த “ஜெகன்மோகினி” கதையை 1978-ல் தெலுங்கில் எடுத்தார். மாயாஜாலங்களும், விசித்திரமான வேதாளங்களும் கொண்ட இப்படத்தில் நரசிம்மராஜ×, ஜெயமாலினி ஆகியோர் நடித்தனர்.

தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற இப்படத்தை தமிழில் அதே பெயரில் “டப்” செய்து வெளியிட்டார்.

“ஜெகன்மோகினி” மாபெரும் வெற்றிப் படமானது. சென்னையிலும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வசூலை குவித்தது. தினமும் “ஹவுஸ்புல்” காட்சிகள்!

தொடர்ந்து, விட்டலாச்சாரியாவின் “கந்தர்வக்கன்னி”, “நவமோகினி”, மோகினி சபதம்” ஆகிய டப்பிங் படங்கள் தமிழ்நாட்டில் சக்கை போடுபோட்டன.

நேரடி தமிழ்ப்படம்

விட்டலாச்சாரியா டைரக்ட் செய்த நேரடி தமிழ்ப்படம் ஒன்றே ஒன்றுதான்.

“பெண் குலத்தின் பொன் விளக்கு” என்ற பெயர் கொண்ட இப்படத்தில் ஜெமினிகணேசன், எம்.என்.ராஜம், ஸ்ரீரஞ்சனி, எம்.என்.நம்பியார் ஆகியோர் நடித்தனர். 10-7-1959-ல் இப்படம் வெளிவந்தது.

டப்பிங் படங்களில் வெற்றி பெற்ற விட்டலாச்சாரியா, நேரடி தமிழ்ப்படத்தில் வெற்றி பெற முடியாமல் போனது பெரிய ஆச்சரியமே!

திரைப்பட வரலாறு 912
சிங்கத்தைக்கண்டு அஞ்சாத விட்டலாச்சாரியா
வீட்டில் புலிக்குட்டிகளை வளர்த்தார்!

விட்டலாச்சாரியா, காட்டு மிருகங்களுக்கு அஞ்சாதவர். அவருடைய படங்களில் சிங்கம், புலி, கரடி, பாம்பு போன்றவை நிறைய இடம் பெற்றன. 2 புலிக்குட்டிகளை வீட்டில் வளர்த்தார்.

வீரசாகசங்களில் ஆர்வம் உள்ளவர், விட்டலாச்சாரியா. தன் நண்பர்களுடன் வேட்டையாடச் செல்வதுண்டு.

புலி வேட்டை

ஒருமுறை காட்டுக்கு வேட்டையாடப் போனபோது, ஒரு புலியை வேட்டையாடினார். அந்தப் புலி போட்டிருந்த
2 குட்டிகளை தூக்கிக்கொண்டு வந்தார். வீட்டில் வளர்த்தார். அந்தப் புலிக்குட்டிகள் நன்றாகப் பழகின. நாய்க்குட்டி போலவே செல்லமாக வைத்திருந்தார்.

குட்டிகள் வளர்ந்ததும் அவற்றின் குணத்தைக் காட்ட ஆரம்பித்தன. வீட்டிலிருந்த பூனைகளை அடித்துச் சாப்பிட்டன. வீட்டில் உள்ளவர்கள் பயந்தார்கள்.

எனவே, 2 புலிக்குட்டிகளையும் மைசூர் மிருகக்காட்சி சாலைக்கு கொடுத்துவிட்டார்.

விலங்குகளைப் பயன்படுத்தி நிறைய படங்கள் எடுத்தார். கொடிய விலங்குகளான சிங்கம், புலி, சிறுத்தை போன்றவை நடிக்கும் போதெல்லாம், எல்லாரும் அச்சப்படுவார்கள். படப்பிடிப்புக்குழுவே பயந்தாலும் இவர் மட்டும் அஞ்சாமல் இருப்பார்.

ஒருமுறை `நவகிரகபூஜை’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. காந்தாராவும் வாசந்தியும் நடித்த படம்.

ஒரு குழிக்குள் சிங்கம் இருக்கும். அதில் கதாநாயகனின் மகன் தள்ளப்பட வேண்டும். கதாநாயகன் தன் மகனைக் காப்பாற்ற குழிக்குள் இறங்கி, சிங்கத்துடன் சண்டையிட வேண்டும். இதுதான் எடுக்கப்படவேண்டிய காட்சி.

சிங்கம் வந்தது

பையனும் சிங்கமும் சேர்ந்து இருப்பது மாதிரியான காட்சிகள் முதலில் படமாக்கப்பட்டன. அதன்பிறகு கதாநாயகன் குழிக்குள் இறங்கிச் சண்டையிட வேண்டும்.

எல்லாரும் அடுத்த காட்சி எடுக்க ஆயத்தமானார்கள். ஆனால், திடீரென்று சிங்கம் அந்தப் பள்ளம் போன்ற செட்டை விட்டு குதித்து மேலே வந்துவிட்டது! படப்பிடிப்புக் குழுவினர் அலறியடித்து சிதறி ஓடினர்.

ஆனால், விட்டலாச்சாரியா மட்டும் பதற்றப்படாமல் ஒரு நாற்காலியில் அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். மேலே சிங்கம் வந்ததைப் பார்த்தவர், தன்னருகே இருந்த சிகப்பு மின் விளக்கை அதன் பக்கம் திருப்பி வைத்தார். ஒளி அதன் கண்களை கூசச் செய்ததால், சிங்கம் அப்படியே அசையாமல் நின்றது.

தூரமாக நின்று பார்த்தவர்கள் வியந்து போனார்கள். மெல்ல மெல்ல நெருங்கி வந்தார்கள். மீண்டும் பள்ளத்தில் சிங்கம் விடப்பட்டு படப்பிடிப்பு நடந்தது.

“எப்படி உங்களால் பயப்படாமல் இருக்க முடிந்தது?” என்று எல்லாரும் கேட்டபோது, “எனக்கு விலங்குகளின் மனோதத்துவம் தெரியும். பிரகாசமான ஒளி கண்ணில் படும்போது, சிங்கம் அப்படியே நின்றுவிடும். நகராது. அதைத்தான் நான் செய்தேன். நீங்கள் பயந்து ஓடினீர்கள். அது ஒன்றும் செய்யாது என்று எனக்குத் தெரியும். என் சிகரெட்டைப் பாருங்கள். அதன் சாம்பல்கூட உதிரவில்லை” என்று தான் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டைக்காட்ட, எல்லாரும் அசந்துவிட்டார்கள்.

விட்டலாச்சாரியா படங்களில் அவர் மட்டும் (அதாவது டைரக்டர்)தான் கதாநாயகன். கப்பலின் மாலுமி போல மொத்த குழுவினருக்கும் அவரே தலைவராக இருப்பார். சகல கட்டுப்பாடுகளும் அவர் கையில்தான் இருக்கும்.

படம் தயாரிக்கத் தொடங்கியதிலிருந்து கடைசிவரை துணிவையே மூலதனமாகக் கொண்டிருந்தார். “ஒன் மேன் ஆர்மி”யாகவே கடைசிவரை இருந்தார்.

படப்பிடிப்பில் பரபரப்பு பெரிய சத்தம் என்று இருப்பவர், வீடு சென்றுவிட்டால் அமைதியாக இருப்பார். இவரது வருகைக்குப்பின் வீடு நிசப்தமாகிவிடும். வீட்டிலிருக்கும் போது எந்நேரமும் யோசனையில் ஆழ்ந்து இருப்பார். அப்போது யாராவது குறுக்கிட்டால் கோபம் வரும். எனவே, அவர் யோசித்துக் கொண்டிருக்கும்போது யாரும் அருகில் வரமாட்டார்கள்.

அவர் அதிகமாக யோசிப்பது பிரமாண்ட காட்சிகள் சம்பந்தமாக மட்டுமல்ல. `நகைச்சுவை காட்சிகளுக்காகவும்தான் இந்த சிந்தனை’ என்பார். தன் படங்களில் மாயாஜால அம்சங்கள் போல, நகைச்சுவைக் காட்சிகளும் பேசப்படும்படி இருக்க விரும்புவார்.

ரசிகர்கள் ஆர்வம்

ராஜ்கபூரின் “பாபி” இந்திப்படம் சென்னை மிட்லண்ட் திரையரங்கில் ஓடியபோது, வெளிïர் ரசிகர்கள் தபால் மூலம் பணம் அனுப்பி டிக்கெட் எடுத்துக்கொண்டு படம் பார்த்தது வரலாறு.

இதேபோல, விட்டலாச்சாரியாவின் “வீரகேசரி”, “ஜெகன் மோகினி” ஆகியவை வெளியானபோது, கிராமப்புற ரசிகர்கள் மாட்டு வண்டி, கட்டுச்சோறு என்று பயணமாக வந்து, படம் பார்த்தனர்!

“ஓரளவுக்கு மேல் பணம் சேர்க்கக்கூடாது. எவ்வளவு தேவையோ அதையே வைத்துக் கொள்ள வேண்டும். பணம் அதிகம் வந்தால், மனிதனின் குணம் மாறிவிடும்” என்று அடிக்கடி கூறுவார்.

விருதுகள், விழாக்கள் என்று எவ்வளவோ வந்தபோதும் எல்லாவற்றையும் மறுத்தார். `புனே திரைப்படக் கல்லூரி’யின் தலைவர் பதவிகூட தேடி வந்தது. இவர் விரும்பவில்லை. “எனக்கு சினிமா ஒரு தொழில். என் பிழைப்புக்காகப் படம் எடுக்கிறேன். நான் என் வியாபாரத்துக்காக – வருமானத்துக்காகவே படம் எடுக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள்” என்றே கூறுவது வழக்கம்.

குடும்பம்

விட்டலாச்சாரியாவின் மனைவியின் பெயர் ஜெயலட்சுமி. 14 வயதில் வாழ்க்கைப்பட்டவர். இவர்களுக்கு 4 மகன்கள், 4 மகள்கள்.

கடைசிவரை யாரையும் சாராமல் இருந்து திரையுலகில் சாதனை படைத்த விட்டலாச்சாரியா, தன் 79-வது வயதில் 28-5-1999-ல் காலமானார்.

மரணத்தைக் கண்டு அவர் அஞ்சவில்லை. முழு வாழ்க்கை வாழ்ந்த திருப்தியுடன் இறந்தார். தன் கடைசி நிமிடங்களில் குடும்பத்தினரை அருகில் அழைத்து, “நான் முழுமையான வாழ்க்கை வாழ்ந்தேன். திருப்தியாக வாழ்ந்த சந்தோஷத்துடன் போகிறேன்” என்று கூறி, தனக்குப் பிடித்த பஜனைப் பாடல்களைப் பாடச் சொன்னார். குடும்பமே பரவசத்தில் பாட, ஒரு புன்னகை உதட்டில் தவழ உயிர் பிரிந்துவிட்டது.

விட்டலாச்சாரியா இயக்கித் தயாரித்த படங்கள், மொழி மாற்றம் செய்த படங்களின் எண்ணிக்கை 80. இதில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டவை 20.

மகன்கள்

தந்தையின் மறைவுக்குப்பின் 4 மகன்களில் மூத்தவர் பி.வி.சீனிவாசன் மட்டும் திரைப்படத்துறையில் ஆர்வம் காட்டினார். தமிழில் “பெண்ணை நம்புங்கள்”, “தாய்ப்பாசம்”, “அவள் ஒரு அதிசயம்” என்று 3 படங்களையும், தெலுங்கில்
4 படங்களையும் இயக்கினார். “ஜெய் வேதாளம்” என்கிற படத்தை இயக்கித் தயாரித்தார். இந்தியாவின் 2-வது முப்பரிமாண (`3டி) படம் அது. அதன்பின் படங்கள் இயக்கவில்லை. மைசூரில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.

தன் தந்தையுடன் தயாரிப்பு பணியில் இருந்த இன்னொரு மகன் பத்மநாபன் சென்னையில் வசிக்கிறார். 1973 முதல் தந்தையுடன் இருந்து வந்தவருக்கு படம் தயாரிக்க ஆர்வம் உண்டு. ஆனால் திரையுலகின் தற்போதைய சூழ்நிலை அவருக்கு ஒத்து வராததால், திரையுலகை விட்டு விலகியிருக்கிறார்.

இன்னொரு மகன் சசிதரன் அமெரிக்காவில் டாக்டராக இருக்கிறார்.

முரளிதரன் “மல்டி நேஷனல் கம்பெனி” ஒன்றில் மண்டல நிர்வாகியாக இருக்கிறார்.

இப்படி நான்கு மகன்களுமே திரையுலகில் சம்பந்தப்படாமல் இருக்கிறார்கள்.

Posted in Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | 1 Comment »