Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Census’

Report on The Government of Tamil Nadu: Public Administration: Accountant General’s Office: IAAS – Indian Audit and Accounts Service

Posted by Snapjudge மேல் மே 20, 2008

மு.க.ஸ்டாலின் துறையில் பல கோடி ரூபாய் முறைகேடு

தமிழக அரசுத் துறைகளில் ரூ. 32 கோடி அளவுக்கு தேவையற்ற மற்றும் முறைகேடான செலவுகள் செய்யப் பட்டுள்ளதாகவும், இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் துறையில் மட்டும் ரூ.13 கோடி அளவுக்கு முறைகேடான செலவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2006-07ம் ஆண்டிற்கான மத்திய தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த தணிக்கை விவரங்களை செய்தியாளர்களிடம் வெளியிட்டு சென்னையில் உள்ள இந்திய தணிக்கை துறை தலைவர் முருகையா பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ஆண்டுதோறும் மாநில அரசின் கணக்கு வழக்குகளை மத்திய தணிக்கை துறை தணிக்கை செய்து மாநில ஆளுநரிடம் சமர்ப்பிக்கும். இந்த அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு பொதுக் கணக்கு குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த அறிக்கையில் உள்ளவற்றை இந்தக் குழு ஆய்வு செய்து அதன்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைசெய்யும். இதன் பேரில் அரசு நடவடிக்கை எடுக்கும்.

  • 2006-07 ஆம் ஆண்டு மாநில அரசின் வருவாய் முந்தைய ஆண்டை விட 20.5 சதவிகிதம் உயர்ந்து 40 ஆயிரத்து 913 கோடியாக உள்ளது.
  • வருவாய் செலவினம் 19.5 சதவிகிதம் உயர்ந்து 38 ஆயிரத்து 265 கோடியாக உள்ளது.
  • கடன் அல்லாத மூலதன வருவாய் 710 கோடி ரூபாயாகவும்,
  • மூலதன செலவு மற்றும் கடன்கள் வழங்கியவை முறையே 1898 கோடி மற்றும் 1214 கோடி ரூபாயாக அதிகரித்ததாலும்
  • இந்த ஆண்டில் வருவாய் பற்றாக்குறை 1705 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டில் அரசின் நிதி பொறுப்பு வருவாயை விட 1.62 மடங்குகூடுதலாக ரூ.66 ஆயிரத்து 320 கோடியாக உள்ளது. நபார்டு வங்கி ஒப்புதல் அளித்த 269 பாசன திட்டங்களில் 251 திட்டங்கள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. பாசனத்துறை ஒப்புதல் பெறாத திட்டங்களில் 2.47 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. கூடுதல் திறன் கொண்ட கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை வடிவமைப்பதில் கூடுதலாக 5.77 கோடி ரூபாய் செலவாகி உள்ளது.

வணிகவரித்துறையில் இலவசமாக கிடைக்கும் மென்பொருளை தனியாரிடமிருந்து வாங்கியதால் 80 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 14 கோடி ரூபாய் செலவு செய்தும் கணினிமயமாக்கும் பணிகள் முற்றுப் பெறவில்லை.

கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் 415 ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனம் ஒன்று எந்தவித கட்டணமும் செலுத்தாமல் அனுபவித்து வருகிறது. பல்வேறு வரிகள் வசூலிப்பதில் சுணக்கம் காரணமாக பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் வாரியத்தில் எந்தவித இடர்பாடுகளும் இல்லாத நிலையிலும் 25 திட்டங்களில் 23 திட்டங்கள் நிறைவு செய்யப்படவில்லை.

பாக்கித் தொகை செலுத்துவதில் தமிழ்நாடு மின்சார வாரியம் நிபந்தனைகளை பின்பற்ற தவறியதால் 24.63 கோடி ரூபாய் ஊக்கத் தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது. பொது விநியோக முறையின் கீழ் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செலவு தொகையை திரும்ப பெற சமர்ப்பித்த தவறான கோரிக்கையின் விளைவாக ரூ.3.99 கோடி முடங்கிப் போயுள்ளது.

இத்துடன் அரசின் பல்வேறு துறைகள் மற்றும் கள அலுவலகங்களில் சோதனை செய்ததில் வீணான செலவினம் மற்றும் இதர முறைகேடுகள் காரணமாக 31.89 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவற்றில் மு.க.ஸ்டாலின் கீழ் உள்ள துறை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் தேவையற்ற மற்றும் பலன் அளிக்காத செலவு 9.63 கோடி ரூபாய் செய்யப்பட்டுள்ளது. தவிர்த்திருக்கக் கூடிய செலவுகள் 3.30 கோடி ரூபாய் செய்யப்பட்டுள்ளது.

இதே போல் பல துறைகளில் பல கோடி ரூபாய்க்கு தேவையற்ற மற்றும் முறைகேடான செலவுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Posted in DMK, Economy, Finance, Govt, India, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »