Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Jaffna’

Dec: Sri Lanka, LTTE, Eezham: News Updates: War, Attacks, Dead

Posted by Snapjudge மேல் திசெம்பர் 1, 2008

இலங்கையை விட்டு வெளியேற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஞாயிறு காலை தான் இந்தியாவிற்கு பயனம் மேற்கொள்ளவிருந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேற குடிவரவு குடியகல்வு தினைக்களத்தினால் அனுமதி மறுக்கப்பட்டது என கூறியுள்ளார்.

தான் ஏற்கனவே தீர்மானத்திபடி வைத்திய சிகிசைக்காக செல்லவிருந்ததாகவும், அனால் நாட்டை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டட நிலையில் தனது பயணத்தை மேற்கொள்ள முடியாமல் திரும்பியதாகவும் தெரிவிக்கின்றார்.

விமான நிலையத்தில் அனுமதி மறுத்த அதிகாரிகள் தன்னை குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் அழைத்துச் சென்றதாகவும், அங்கிருத்த குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி இது மேலிடத்து உத்தரவு என தனக்கு தெரிவித்ததாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன குறிப்பிடுகின்றார்


இலங்கையின் அம்பாறையில் மோட்டார் சைக்கிள் பயன்பாடு தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள்

மட்டக்களப்பு வரைப்படம்
மட்டக்களப்பு வரைப்படம்

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்திலுள்ள சில பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள் பயன்பாடு தொடர்பாக பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்

பாதுகாப்பு காரணங்களக்காக இக்கட்டுப்பாடு என பாதுகாப்பு தரப்பினரால் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், மோட்டார் சைக்கிள் பாவனையாளர்களைப் பொறுத்த வரை இதனால் தாம் சிரமங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

இக்கட்டுப்பாடு காரணமாக ஒருவரின் உறவினர்கள் உட்பட பெயரில் பதிவு செய்யப்ப்டுள்ள மோட்டார் சைக்கிளை மற்றுமொருவர் செலுத்துவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்றும், இது தொடர்பாக பொலிஸ் மா அதிபதிக்கு அவசர கடிதமொன்றை தான் அனுப்பி வைத்துள்ளதாக கூறும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சோமசுந்தரம் புஷ்பராஜா, இது மனித உரிமை மீறல் என்றும், தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களிலேயே இக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் அம்மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாகவும் கூறுகின்றார்.


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்

புளியங்குளத்தில் அரசப்படையினர்
புளியங்குளத்தில் அரசப்படையினர்

இலங்கையின் வடக்கே, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாகிய வன்னிப்பகுதியில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக 7 படையணிகள் பல முனைகளில் தாக்குதல்களை நடத்திய வண்ணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை நோக்கி முன்னேறி வருவதாகவும், கடந்த இரு தினங்களில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் சண்டைகளில் விடுதலைப் புலிகளின் 14 சடலங்களைப் படையினர் ஆயுதங்களுடன் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

பரந்தனுக்கு மேற்குப் பகுதி, அடம்பன், இரணைமடுவுக்கு மேற்குப்புறம், திருமுறிகண்டி, கொக்காவில், கனகராயன்குளம், புளியங்குளம், ஒலு மடுவின் வடகிழக்குப் பகுதி மற்றும் அலம்பில் ஆகிய முனைகளில் இருந்து அரச படையணிகள் முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், இங்கு இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

வவுனியா நகருக்கு வடக்கே அமைந்துள்ள ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியில் இருந்து ஏ9 வீதியில் இராணுவம் கிளிநொச்சி நகருக்குத் தெற்கே உள்ள கொக்காவில் வரையிலான பெரும் பகுதியைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.

எனினும் இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் இந்த மோதல்கள் காரணமாக யுத்த பிரதேசத்திலிருந்து இதுவரையில் 225 குடும்பங்களைச் சேர்ந்த 654 பேர் இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் யாழ் மாவட்டங்களில் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு வந்துள்ளதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.


மன்னம்பிட்டியில் பயணிகளில் விபரங்கள் பதியப்படும் புதிய நடைமுறை

மட்டக்களப்பில் பயணிகள் பஸ் ஒன்று(ஆவணப்படம்)
மட்டக்களப்பில் பயணிகள் பஸ் ஒன்று(ஆவணப்படம்)

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இருந்து வடமத்திய மாகாணத்தின் ஊடாக பயணம் செய்பவர்கள் மன்னம்பிட்டி என்னும் இடத்தில் தமது விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை புதிதாக அமலுக்கு வந்ததால், பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாவதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

இப்படியாக விபரங்கள் ஒவ்வொருவராக பதியப்படுவதால், பெரும் காலதாமதம் ஏற்படுவதாகவும், அத்துடன் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மாத்திரமே இவ்வாறு பதியப்படுவதாகவும் பயணிகள் குறை கூறுகிறார்கள்.

மன்னம்பிட்டியில் பயணிகளின் பெயர்கள் பதிவு செய்யப்படுவதாகவும், அதன் மூலம் சிறிது காலதாமதம் ஏற்படுவதாகவும் ஒப்புக்கொள்ளும் பொலிஸ் தரப்பு பேச்சாளரான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரான ரஞ்சித் குணசேகர அவர்கள், ஆனால், தமிழர்களும், முஸ்லிம்களும் மாத்திரந்தான் அப்படியாக பதிவு செய்யப்படுகிறார்கள் என்று கூறப்படுவதில் எந்தவிதமான உண்மையும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்

இந்தியாவிலிருந்து வந்துள்ள நிவாரணப் பொருட்கள் இலங்கையின் வன்னிப் பிரதேசத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன

லாரிகளில் எடுத்துச் செல்லப்படும் இந்திய நிவாரணப் பொருட்கள்

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தினுள் போர்ச்சூழலில் சிக்கியுள்ள மக்களுக்காக இந்தியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டு, கொழும்பிலிருந்து வவுனியாவுக்கு எடுத்துவரப்பட்டுள்ள நிவாரண உணவுப் பொருட்களின் முதல் தொகுதி 60 ட்ரக் வண்டிகளில் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரால் வன்னிப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.

இதுபற்றி கருத்து தெரிவித்த வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள், இந்தப் பொருட்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளதாகக் கூறினார்.

வரும் வியாழக்கிழமை மேலும் ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இதற்கிடையில் வன்னிப்பிரதேசத்தில் இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்ற பொதுமக்களைத் தங்கவைப்பதற்காக ஓமந்தை பாடசாலையில் புதிய இடைத்தங்கல் நிலையம் ஒன்று திறக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவை குறித்த மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


கிளிநொச்சியை ஒட்டிய கொக்காவிலை கைப்பற்றியிருப்பதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்

இலங்கையின் வடக்கே வன்னிக்கள முனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச படைகள் கிளிநொச்சி நகருக்குத் தெற்கே முறிகண்டி பிரதேசத்தில் ஏ9 வீதியின் கிழக்குப் பகுதியில் முன்னேறி கொக்காவில் பிரதேசத்தை கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

எனினும், இதுகுறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

கிளிநொச்சி நகருக்கு மேற்கில் உள்ள அக்கராயன்குளம் பகுதியில் இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டு வந்த மூன்று தளங்களின் மீது விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.

இதுபற்றியும் விடுதலைப் புலிகளிடமிருந்து உடனடியாகத் தகவல்கள் வெளியாகவில்லை.

ஆயினும் கிளிநொச்சி நகருக்கு கிழக்கே உள்ள வட்டக்கச்சி பகுதியை நோக்கி இராணுவத்தினர் நடத்திய எறிகணை தாக்குதலில் மாணவி ஒருவர் கொல்லப்பட்டும், 31 வயதுடைய ஆண்மகன் ஒருவர் காயமடைந்தும் இருப்பதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.


இலங்கையின் வடக்கே வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது

இலங்கையின் வடக்கே சுமார் மூன்று லட்சம் பேர் இடம்பெயர்வதற்கு காரணமான வெள்ளம் தற்போது வடியத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ் மாவட்டங்களில் இந்த மழை, வெள்ளம் காரணமாக 9 பேர் பலியாகியுள்ளனர், கிட்டத்தட்ட 800 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்த வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிவருவதாக கூறும் இலங்கை அரசு, வெள்ளத்தின் காரணமாக சேதமடைந்துள்ள சாலைகளை செப்பனிடும் பணிகளில் ஈடுபட்டுவருவதாகவும் கூறியுள்ளது.

1918ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் இலங்கையின் வடபகுதியில் இந்த அளவுக்கு மழை பெய்துள்ளது என்று இலங்கை அரசின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


உலக எய்ட்ஸ் தினம்: இலங்கையில் விழிப்புணர்வு ஊர்வலம்

வெலிக்கடை சிறையின் முன்பு எய்ட்ஸ் விழிப்புணர்வு பதாகைகளுடன் கைதிகள்

எய்ட்ஸ் நோயின் தாக்கம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை சுகாதார அமைச்சும், சிறைச்சாலைகள் திணைக்களமும் இணைந்து சர்வதேச எயிட்ஸ் தினமான திங்களன்று கவனயீர்ப்பு ஊர்வலமொன்றினை மேல் மாகாணத்தில் நடத்தியது.

பாதுகாப்பற்ற பாலியல் உடலுறவினால் பெருமளவில் ஏற்படும் இந்தக் கொடிய நோயின் தாக்கத்திற்கு இலங்கையில் சுமார் 100 குழந்தைகள் உட்பட 1029 பேர் பாதிப்பிற்குள்ளாகியிருப்பதாகவும், சுமார் 200 பேர் வரை மரணத்தினைத் தழுவியிருப்பதாகவும் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் வைத்திய நிபுணர் நவரட்ணசிங்கம் ஜனகன் தழிழோசையிடம் தெரிவித்தார்.

ஆனாலும் இந்த நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்போரின் உண்மையான எண்ணிக்கை இதனைவிட அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுவதாகத் தெரிவித்த டாக்டர் ஜனகன், இலங்கையில் எயிட்ஸ் நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பவர்களில் சுமார் 50 சதவீதமானவர்கள் கொழும்பு, கம்பஹா போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்திலேயே வசித்துவருகிறார்கள் எனவும், இவர்களில் பெரும்பாலானோருக்கு பாதுகாப்பற்ற பாலியல் உறவு காரணமாகவே எச்.ஐ.வி கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் வடக்கே மழைவெள்ளம்

இலங்கையில் வடக்கே மழை வெள்ளம்
இலங்கையின் வடக்கே மழை வெள்ளம்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் மழை வெள்ளம் காரணமாக ஒரு லட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

நீரினால் அடித்துச் செல்லப்பட்டும், வீடுகள் இடிந்ததனாலும், மரங்கள் முறிந்து வீழ்ந்ததனாலும், 12 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

வீதிகளில் வெள்ளம் பாய்வதனால் போக்குவரத்துக்கள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை ஓய்ந்து வெள்ளம் வடியத் தொடங்கியுள்ள போதிலும், வெள்ளத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் இன்னும் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலைமையே காணப்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றார்கள்.

இதுபற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் நேயர்கள் கேட்கலாம்


மட்டக்களப்பில் சந்தேக நபர்களிடம் விசாரணை

மட்டக்களப்பு வரைப்படம்
மட்டக்களப்பு வரைப்படம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமையன்று 12 மணி நேரத்திற்கு பிறப்பிக்கப்பிட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் சிவிலியன் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சனிக்கிழமையன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நேரத்தில், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் என 2000 க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் சுமார் 4103 வீடுகள், 56 வாகனங்கள் மற்றும் 11963 பேரை சோதனையிட்டுள்ளனர்.

இவர்களில் 123 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 117 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதனிடையே கிழக்கு மாகாணத்தில் நிலவும் அச்சம் மற்றும் பாதுகாப்பின்மை குறித்து மட்டக்களப்பு திருகோணமலை மறை மாவட்டங்களின் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை கவலை வெளியிட்டுள்லார். அவரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் உரையை தணிக்கை செய்ததாக இலங்கை அரசு மீது குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வருடாந்திர உரை குறித்த செய்திகளை வழங்கியபோது பிபிசியின் தமிழ் மற்றும் சிங்கள சேவை ஒலிபரப்புகளை இலங்கை அரசு தணிக்கை செய்ததாக இலங்கையின் ஊகட அமைப்புகள் ஐந்து குற்றம்சாட்டியுள்ளன.

கடந்த வியாழக்கிழமை அன்று அரசு கட்டுப்பாட்டிலுள்ள இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்த செய்தித் தணிக்கை நடவடிக்கையானது, இலங்கை மக்களின் தகவல் அறியும் உரிமையையும், ஒரு முக்கிய விடயம் குறித்த மாற்றுக் கண்ணோட்டங்கள் தடையின்றி பரிமாறப்படுவதையும் தெளிவாக மீறியுள்ளது என்று கூறியுள்ளது.

பிரபாகரனின் உரை குறித்த செய்திகள் சென்ற வருடமும் தணிக்கை செய்யப்பட்டிருந்தன என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இக்குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் பதில் தரவில்லை.

Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 Comments »

Nov.: Eezham vs Sri Lanka: War Updates: Foreign relations with India – News Updates

Posted by Snapjudge மேல் நவம்பர் 4, 2008


போர் நிறுத்தம் வேண்டும் என்று இலங்கை அரசுக்கு எச்சரிக்கையாகவே தெரிவிக்க வேண்டும் என்று சென்னை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

தமிழக முதல்வர் மு. கருணாநிதி
தமிழக முதல்வர் மு. கருணாநிதி

இலங்கையில் தொடரும் போரின் காரணமாக தமிழர்கள் பல்வேறு இன்னல்களுக்குள்ளாகிறார்கள், இந்நிலையில் இந்திய மத்திய அரசு போர் நிறுத்தம் தேவை என்பதை வெறும் வேண்டுகோளாக இல்லாமல் இலங்கை அரசுக்கு எச்சரிக்கையாகவே தெரிவிக்கவேண்டும் என்று கூறும் தீர்மானம் இன்று சென்னையில் கூடிய அனைத்துக் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரில் வலியுறுத்துவதெனவும் முடிவெடுக்கப்பட்டதாக, கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

என்னவிதமான நடவடிக்கையினை மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார். எல்லாவற்றையும் விவாதிப்போம் என்று மட்டும் அவர் கூறினார்.

வேறொரு கேள்விக்கு பதிலளிக்கையில் கருணாநிதி இதுவரை இலங்கைத்தமிழர் நிதிக்கு 37 கோடி ரூபாய் இதுவரை திரண்டிருப்பதாகவும், பத்துகோடி ரூபாய்க்கான நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், அவையெல்லாம் முறையாகவே இலங்கைத்தமிழர்க்கு விநியோகிக்கப்படுவதாகவே தமக்கு செய்திகள் வந்திருப்பதாகவும் கூறினார்.

தமிழகத்தில் உள்ள இலங்கைத்தமிழ் அகதிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்துகொடுக்கப்படுவதாகவும் முதல்வர் கூறினார்.

இன்றைய கூட்டத்தினை அ இ அ தி மு க, ம தி மு க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மற்றும் தே மு தி க உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.

இதனிடையே இலங்கையில் போர் நிறுத்தம் கோரி, இன்று இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மாநில அளவில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்தின.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கிழக்கு வன்செயல்கள் குறித்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாட்டு

கிழக்கு இலங்கையில் இலங்கை அரசுக்கு ஆதரவான ஆயுதக்குழுவாக கூறப்படும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினர் தொடர்ச்சியான கொலைகள் மற்றும் கடத்தல்களில் ஈடுபடுவதாக மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்துவந்து தனியாக செயற்படும் இந்த அமைப்பினர் கடந்த செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் 30 கொலைகள் மற்றும் 30 ஆட்கடத்தல்களில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அந்த மனித உரிமைகள் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறார்களாவர்.

ஆனால், தமது பிராந்தியத்தில், கொலைகளும், ஆட்கடத்தல்களும் குறைந்துவருவதாகக் கூறுகின்ற கிழக்கு மாகாண அமைச்சரான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள், அவற்றை முற்றாக தடுப்பதற்கான முயற்சிகளில் தாம் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்த அமைச்சர் ஹிஸ்புல்லாவின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மட்டக்களப்பில் இன்று மாத்திரம் 9 பேர் பலி

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் 9 பேர் வரை கொல்லப்பட்டதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று இரவு 7.30 மணியளவில் களுவாஞ்சிக்குடிக்கு அருகே எருவில் பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற கிராம அதிகாரி ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அந்த அதிகாரியான சாமித்தம்பி திருச்செல்வம், அவரது மகன் மற்றும் தாயார் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

மேலும் களுவாஞ்சிக்குடிப் பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், சந்தைகுத்தகைதாரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை இன்று காலை எருவில் கோடைமேடு அணைக்கட்டோரம், இராணுவ மோட்டார் சைக்கிள் தொடரணி மீது நடத்தப்பட்ட கிளெமோர் தாக்குதலில் இரண்டு இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டதாக பாதுக்காப்புத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தை அடுத்து, குறுமண்வெளி மற்றும் எருவில் பகுதியில் பாதுகாப்புத்தரப்பினரால் சுற்றிவளைப்புத்தேடுதல் நடத்தப்பட்டு பலர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இப்படி அழைத்துச் செல்லப்பட்டவர்களில் நூற்றுக்கு மேற்பட்டோர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து உறவினர்களால் தனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே படுவான்கரையில் கரவெட்டிபகுதியில் இன்று நண்பகல் விசேட அதிரடிப்படையினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புத்தேடுதலின் போது, அவர்களினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

பாதுகாப்பு தரப்பினருடனான மோதலின் போது கொல்லப்பட்டதாகக்கூறப்படும் இந்த மூவரும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று பாதுகாப்புத்தரப்பு கூறுகிறது.

சடலங்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


வட இலங்கையில் கனமழை மற்றும் வெள்ளம்

இலங்கையின் வடக்கே பெய்து வருகின்ற அடைமழை காரணமாக போரினால் இடம்பெயர்ந்துள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வன்னி்ப்பிரதேசத்தில் போர்ச்சூழலில் சி்க்கியுள்ள மக்களுக்கான நிவாரண உணவு விநியோக பணிகளும் மழை காரணமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றார்கள்.

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பகுதிகயில் தாழ்ந்த நிலப்பிரதேசத்தில் அடைக்கலம் புகுந்திருந்த இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கியிருந்த கூடாரங்களுக்குள் மழை நீர் புகுந்துள்ளதையடுத்து, சுமார் மூவாயிரம் குடும்பங்கள் பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தங்க வைக்கப்பட்டு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் நான்கு நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக பருத்தித்துறை, காரைநகர், கரவெட்டி, சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிக்கப்பட்டுள்ள 458 குடும்பங்கள் பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக யாழ் செயலக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

யாழ் குடாநாட்டுப் பகுதி எங்கும் வெள்ளக்காடாகக் காட்சியளிப்பதாகவும், மழை காரணமாக இன்று பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு, மாணவர்கள் வேளைக்கே வீடுகளுக்கு அனுப்பி் வைக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கில் பணிக்கு திரும்புவது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை

இலங்கையின் கிழக்கே அண்மையில் சிங்கள மருத்துவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பெரும்பாலான மருத்துவர்கள் அங்கு தமக்கு பாதுகாப்பு இல்லை என்கிற காரணத்தினால் கடந்த சில தினங்களாக பணிக்கு வராமல் இருந்தனர்.

இந்நிலையில் இது குறித்து விவாதிக்க இலங்கை அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உயர்மட்டக் கூட்டம் ஞாயிறன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. அதில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டு திங்கட்கிழமையன்று சுகாதாரத் துறை செயலரை சந்திக்கவுள்ளார்கள் மருத்துவ அதிகாரிகள்.

ஞாயிறன்று நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து சங்கத்தின் பேச்சாளரான டாக்டர் சிவப்பிரியனிடம் கேட்ட போது, கூட்டத்தில் பாதுகாப்பு, விசேஷ கொடுப்பனவுகள், காப்புறுதிகள் போன்ற விடயங்கள் குறித்து தீர்மானித்து இருப்பதாகவும், இருந்தப் போதிலும் திங்கட்கிழமையன்று நடைபெறும் கூட்டத்தில் தான் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்


இலங்கையின் கிழக்கில் விவசாயிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக புகார்

விவசாயி
விவசாயி

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு சில பிரதேசங்களில் இன்னமும் பாதுகாப்பு தரப்பினரால் கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் விதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாணம் முழுமையாக விடுவிக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும், இப்படியான கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் காரணமாக தமது சொந்த வயல்களுக்கு சுதந்திரமாகச் சென்று தங்கியிருந்து வேளான்மைச் செய்கையில் ஈடுபடக் கூடிய சூழ்நிலை இன்னமும் ஏற்படவில்லை என பொதுவாக அப்பிரதேச விவசாயிகள் மத்தியில் கவலை வெளியிடப்பட்டுகின்றது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் மாதுறு ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் விவசாயச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைப் பொறுத்த வரை, பிரதான வீதியிலுள்ள இராணுவ முகாமில் புகைப்படங்களுடன் விபரங்களைப் பதிந்து விசேட அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறை பாதுகாப்பு தரப்பினரால் அமுல்படுத்தப்படுகின்றது.

இந் நடைமுறை காரணமாக அனுமதிப்பத்திரமின்றி வயல் நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறும் அப்பிரதேச விவசாயிகள், வயலில் தங்கியிருப்பது உழவு மற்றும் எரிபொருட்களை எடுத்தச் செல்வது, வேலையாட்களை அழைத்துச் செல்வது தொடர்பாகவும், பாதுகாப்பு தரப்பினரால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்



இந்திய நிவாரணப் பொருட்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிப்பு

இந்திய உதவிப் பொருட்களை வழங்கும் இந்தியத் தூதர்
இந்திய உதவிப் பொருட்களை வழங்கும் இந்தியத் தூதர்

இலங்கை போரில் பாதிக்கப்பட்ட வன்னிப்பகுதி தமிழர்களுக்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப்பொருட்களை, இலங்கைக்கான இந்திய தூதர் அலோக் பிரசாத் அவர்கள், தலைநகர் கொழும்பில் வியாழக்கிழமையன்று வைபவரீதியாக கையளித்தார்.

இந்த நிகழ்வின்போது பேசிய அலோக் பிரசாத் அவர்கள், ஆயிரத்து அறுநூற்று எண்பது டன் நிவரணப்பொருட்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் கையளிக்கப்படுவதாகக் கூறினார்.

இந்த நிவாரண பொட்டலங்களில் உலர் உணவு, உடைகள் மற்றும் சுகாதாரத்திற்கு தேவைப்படும் பொருட்கள் இருப்பதாகக் கூறிய அவர்
கூடுதலான நிவாரணப் பொருட்கள் தேவைப்பட்டால், அது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவி்ல் இருந்து அனுப்பப்பட்ட உணவுப் பொருட்கள்
இந்தியாவி்ல் இருந்து அனுப்பப்பட்ட உணவுப் பொருட்கள்

இந்த நிவாரணப்பொருட்களை பெற்றுக்கொண்ட சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் பால் காஸ்டெல்லா அவர்கள் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். இப் பொருட்கள் அங்கேயுள்ள மக்களின் தேவையை ஒரளவு பூர்த்தி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, இந்த நிவாரணப்பொருட்கள் இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் தான் விநியோகிக்கப்படும் என்று கூறினார் இலங்கை அரசின் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ் பி திவாரட்ண அவர்கள்.


புலிகளின் முன்னரங்க நிலையை கைப்பற்றியதாகக் கூறுகிறது இராணுவம்

விடுதலைப் புலிகளின் ஒரு முன்னரங்க நிலை
விடுதலைப் புலிகளின் ஒரு முன்னரங்க நிலை

இலங்கையில் பல நாட்கள் தொடர்ந்த சண்டைகளின் பின்னர் யாழ் குடா நாட்டில், விடுதலைப்புலிகளினால் மிகவும் கடுமையாக பாதுகாக்கப்பட்ட, தூர வடக்கில் இருக்கின்ற அவர்களது நிலை ஒன்றை தாம் கைப்பற்றியயிருப்பதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது.

ஆங்காங்கே பங்கர்களைக் கொண்ட 8 கிலோ மீட்டர் நீளமான மணற் சுவரை கைப்பற்றுவதற்கான இந்தச் சண்டையில், பத்து இராணுவச் சிப்பாய்களும், 50 விடுதலைப்புலிகளும் கொல்லப்பட்டதாக இராணுவத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரம், மோதல்களால் இடம்பெயர்ந்த இரண்டரை லட்சம் மக்களுக்கான உதவிகளை இராணுவத்தினர் தடுத்ததாக சர்வதேச அபய ஸ்தாபனம் கூறிய குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

நான்கு உதவி வாகனத்தொடரணிகள் அண்மையில் அனுப்பப்பட்டதாகவும், அதில் கடைசியாக சென்றதில், 600 தொன்கள் உணவுப்பொருட்கள் அனுப்பப்பட்டதாகவும், பிபிசிக்கான செவ்வியில், இலங்கை வெளியுறவுத்துறைச் செயலர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நிலைமைகளை கவனித்து வருவதாகவும், அங்கு மக்கள் பட்டினி நிலைமையயை அண்மித்துள்ளார்கள் என்பதற்கான எந்த சமிக்ஞையும் கிடையாது என்றும் அவர் கூறினார்.

சோதனைச் சாவடி: பேச்சுவார்த்தையில் ஈடுபட ஐசிஆர்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் நடைபெறும் மோதல்களின் காரணமாக, இந்த இரு தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு இடையே மக்கள் கடந்து செல்ல ஏதுவாக இருக்கும் ஒரு இடம் குறித்து விவாதிக்க, ஒரு நடுநிலையான மத்தியஸ்தர் என்கிற வகையிலும் இருதரப்பினரின் நம்பிக்கையை பெற்றவர்கள் என்கிற வகையிலும் இது தொடர்பில் அவர்கள் பேசுவதற்கான ஏற்பாடுகளை தாங்கள் செய்துவருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

இந்த இரு தரப்பாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு இடையே சென்று வரும் பொதுமக்கள், மருத்துவ வாகனங்கள், உணவு வண்டித் தொடர்களின் பயணம் மற்றும், மோதல்களின் காரணமாக இருதரப்பிலும் உயிரிழப்பவர்களின் உடல்களை பெற்றுக் கொள்வது போன்ற பல விடயங்கள் தொடர்பாக இரு பக்கமும் சென்று வருவதற்கு பாதுகாப்பான ஒரு வழிமுறையை கண்டறிவது அவசியமாகிறது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

அவ்வாறு கடந்து செல்வதற்கு ஏற்ற இடம் எது, திறந்திருக்கும் நேரம், ஒருவர் மற்றவர்களின் பகுதிகளுக்கு சென்று வருவதற்கான நடைமுறைகள் ஆகியவை குறித்து இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் இணக்கப்பாடு காண வேண்டும் என்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

ஓமந்தை சோதனைச் சாவடி வழியாக சென்று வரும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களுக்கு பாதுகாப்பு உறுதிபடுத்தப்படாத வரையில் தம்மால் அங்கு பணிக்கு செல்ல இயலாது என்று அந்த அமைப்பின் தலமையகம் கூறியுள்ளது.

எனினும் ஓமந்தை சோதனைச் சாவடியில் தாங்கள் கடமையில் இல்லாவிட்டலும் இலங்கையில் நடைபெறும் மோதல்களினால் வன்னிப் பகுதியில் சிரமங்களை எதிர் கொள்ளும் மக்களுக்கு நாங்கள் அளித்து வரும் பாதுகாப்பும் உதவி நடவடிக்கைகளும் பாதிப்படையவில்லை என்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.


இலங்கை அரசு வன்னிப் பகுதிகளுக்கு நிவாரணம் கிடைக்காமல் தடுக்கிறது என்று அம்னெஸ்டி அமைப்பு குற்றச்சாட்டு

அம்னெஸ்டி அமைப்பின் சின்னம்
ம்னெஸ்டி அமைப்பின் சின்னம்

இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் வன்னிப்பிரதேசத்தில் தற்போது நடக்கும் மோதல்களால் இடம்பெயர்ந்துள்ள சுமார் 3 லட்சம் மக்களுக்கு மனித நேய நிவாரண உதவி கிடைக்காமல் தடுக்கும் கொள்கையை இலங்கை அரசு உடனடியாகக் கைவிடவேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இண்டர்னேஷனல் வலியுறுத்தியிருக்கிறது.

பருவ மழை தொடங்கும் நிலையில், குறைந்தது 20,000 குடும்பங்களாவது மழையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உறைவிடம் இன்றி இருப்பதாக அது கூறியிருக்கிறது.

புலிகள் மீதும் கண்டனம்

இடம் பெயர்ந்த ஒரு குடும்பம்
இடம் பெயர்ந்த ஒரு குடும்பம்

வன்னிப்பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு பொதுமக்கள் தங்களது வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்து, விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில் முகாம்களில் தற்போது வாழ்ந்துவருவதாகவும், விடுதலைப்புலிகள் இம்மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதை தடுக்கும் வண்ணம் ஒரு கடுமையான அனுமதி முறையை அமல்படுத்தியிருப்பதாகவும் அம்னெஸ்டி கூறியிருக்கிறது.

விடுதலைப்புலிகளின் இந்த நடைமுறைகள், அரசு படைகளுக்கு எதிராக சிவிலியன் மக்களை ஒரு பாதுகாப்பு அரணாக வேண்டுமென்றே பயன்படுத்தும் நோக்கிலானவை போல் தோன்றுவதாக அது கூறியிருக்கிறது.

இந்திய அரசு அனுப்பியுள்ள உணவுப்பொருட்கள் அரசு சாரா நிறுவனங்களின் உதவியின்றி , உதவி மிக அதிகமாகத் தேவைப்படும் மக்களைச் சென்றடைகிறது என்று உறுதிப்படுத்த முடியாது என்று கூறும் அம்னெஸ்டி, வன்னியில் சிக்குண்டுள்ள மக்களின் தேவைகளைப் பற்றி கணிப்பீடு செய்து , அங்கு உணவு மற்றும் பிற பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுகின்றன என்பதை உறுதி செய்ய, இலங்கை அரசும் , விடுதலைப்புலிகள் இயக்கமும் சர்வதேச கண்காணிப்பாளர்களை அங்கு அனுமதிக்கவேண்டும் என்று கோரியிருக்கிறது.



தமிழர் புனர்வாழ்வுக் கழக அமைப்பின் பணத்தை அரசுடமையாக்கியது இலங்கை

புலிகளுக்கு உதவுவதாக டிஆர்ஓ மீது குற்றச்சாட்டு
புலிகளுக்கு உதவுவதாக டிஆர்ஓ மீது குற்றச்சாட்டு

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு சார்பானதென்று குற்றஞ்சாட்டப்படும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் நிதியான சுமார் 71 மில்லியன் ரூபாய்களை பயங்கரவாத சட்டத்தின் கீழ் முடக்கிவைப்பதாக கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்த இலங்கை மத்திய வங்கி, அந்தநிதியை இப்போது அரசுடைமையாக்குவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கிறது.

இலங்கையில் ஓர் அரச சார்பற்ற தொண்டு நிறுவனமாக இயங்கிவந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான பணிகளுக்கு என்று கூறி நிதி சேகரிப்பு நடவடிக்கைகளைச் சர்வதேச ரீதியாக மேற்கொண்டு வந்தது.

ஆனால் சர்வதேச ரீதியில் பல்வேறு நாடுகளில் கிளைகளை அமைத்து பாதிக்கப்பட்ட மக்களிற்கான மனிதாபிமான பணிகளுக்கு என்று கூறி பல்வேறு சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களிடமிருந்தும், நிதிஅமைப்புக்களிடமிருந்தும், தனியாரிமிருந்தும் இந்த அமைப்பு சேகரித்த பெருமளவு நிதி நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தவே பெரிதும் பயன்படுத்தப்பட்டுவருவதாக புலனாய்வு அறிக்கைகளை மேற்கோள் காட்டி இலங்கை மத்திய வங்கி கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த அமைப்பு இலங்கை மத்திய வங்கியில் வைத்திருந்த நிதிகளை முடக்கியிருந்தது.

அத்துடன் தடைசெய்யப்பட்ட தமிழர் புனர்வாழ்வ கழகத்துடனோ, அல்லது அதனது உறுப்பினர்களுடனோ நிதி ரீதியான தொடர்புகளிலோ அல்லது பரிமாற்றங்களிலோ ஈடுபடுவது ஒரு கிரிமினல் குற்றமாகும் என்றும் மத்திய வங்கி பொதுமக்களிற்கு எச்சரித்திருக்கிறது.


இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முயற்சிகளில் த.தே.கூட்டமைப்பையும் இணைக்க வேண்டும் என்கிறார் ரணில்

இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அந்த முயற்சியில், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இலங்கை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் வி்க்ரமசிங்கே அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வாரம் இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் செய்த நிலையில், மூன்று நாள் பயணமாக திங்கட்கிழமை புதுடெல்லி சென்ற ரணில் விக்ரமசிங்கே அவர்கள், இலங்கை நிலவரம் தொடர்பாக அங்கு பல்வேறு தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

திங்கட்கிழமை இரவு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹாவைச் சந்தித்து இலங்கை நிலவரம் குறித்து நீண்ட ஆலோசனை நடத்தினார். இன்று காலை, பாஜகவைச் சேர்ந்த முன்னாள் வெளியுறவு அமைச்சரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ஜஸ்வந்த் சிங்கை சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்கேவிடம், விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்குத் தயார் என அறிவித்திருந்தாலும், போர் நிறுத்தத்துக்கு வாய்ப்பில்லை என்று கடந்த வாரம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் புதுடெல்லியில் திட்டவட்டமாக அறிவித்திருப்பது பற்றி கேட்டபோது, “ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்து, இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இரண்டு பிரதான கட்சிகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயல்பட வேண்டும். ஏற்கனவே அனைத்துக் கட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும். ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் உள்ளே கொண்டுவர வேண்டும். அதன் பிறகு, இலங்கையில் அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினை, போரினால் இடம்பெயர்ந்த பொதுமக்களைப் பாதுகாப்பது எப்படி என்பதுதான். அவர்களுக்கு எல்லா வசதிகளும் கிடைக்க வேண்டும்’’ என்றார் ரணில் விக்ரமசிங்கே அவர்கள்.

போர் நிறுத்தத்துக்கு தற்போது வாய்ப்பு இருப்பதாக தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், பிரதமரைச் சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் தெரிவித்தார்.



கிழக்கு மாகாண வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது

கிழக்கு மாகாண சபை அமர்வு
கிழக்கு மாகாண சபை அமர்வு

இலங்கையின் கிழக்கு மாகாணம் உருவாக்கப்பட்ட பின்னர், அந்த மாகாணத்துக்கான 2009 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டப் பிரேரணை இன்று அங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.

அடுத்த வருட மாகாண செலவீனங்களுக்காக 15,000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாகாண அமைச்சரவையின் பேச்சாளரான எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

இதற்கான பிரேரணை மாகாண முதலமைச்சரும், நிதி அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனினால், சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை கிழக்கு மாகாணத்துக்கான நிதியை வரிகள் போன்றவற்றின் மூலம் திரட்டுவதற்கான நிதிச் சட்டமும் இன்று அங்கு நிறைவேற்றப்பட்டதாகவும் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.


மாங்குளத்தை கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் முக்கிய நிலைகளில் ஒன்றாகக் கூறப்படும் மாங்குளம் பகுதியை தாம் கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவத்தினர் இன்று அறிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மற்றுமொரு முக்கிய பிரதேசமான பூநகரியைக் கைப்பற்றியதை அடுத்து, இன்று யாழ் குடாநாட்டை இலங்கையின் தென்பகுதியுடன் இணைக்கும் ஏ 9 பாதையில் அமைந்துள்ள மாங்குளத்தையும் இலங்கை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மாங்குளம்- ஒட்டிசுட்டான் வீதியில் சில பகுதிகளை கைப்பற்றிய இலங்கை இராணுவத்தினர் இன்று மாங்குளம் நகரை முற்றாக தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை இராணுவத்தளபதி சரத்பொன்சேகா
இலங்கை இராணுவத்தளபதி சரத்பொன்சேகா

இது தொடர்பாக இலங்கை இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவும் இலங்கையின் அரசாங்க தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார்.

மாங்குளத்துக்கு அப்பால் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பணிக்கன்குளம் பகுதியையும் இராணுவத்தினர் இன்று கைப்பற்றியுள்ளதாகவும் இராணுவத்தளபதி அறிவித்தார்.

இந்த இராணுவ நடவடிக்கைகள் குறித்து இலங்கையின் இராணுவ ஆய்வாளர்களில் ஒருவரான பத்திரிகையாளர் இக்பால் அத்தாஸின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மட்டக்களப்பில் சிங்கள மருத்துவ அதிகாரி கொலை

மருத்துவத்துறை ஊழியர்களின் போராட்டம்
மருத்துவத்துறை ஊழியர்களின் போராட்டம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்திலுள்ள நாவற்காட்டில் நேற்றிரவு சிங்கள வைத்தியரொருவரும் மற்றுமொருவரும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

வைத்தியர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து மாவட்டத்திலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் கடமையாற்றி வந்த சிங்கள வைத்தியர்கள் அங்கிருந்து வெளியேறத் தொடங்கியதால், அங்கு வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கொலையைக் கண்டித்துப் போராட்டம்
கொலையைக் கண்டித்துப் போராட்டம்

கண்டி மாவட்டம் கம்பளையைச் சேர்ந்த 26 வயதான எஸ்.டபிள்யு பாலித பத்மகுமார என்னும் மருத்துவர் அரசினர் வைத்தியசாலை வளாகத்திற்குள்ளும், அடுத்தவர் அவரது வீட்டில் வைத்தும் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வைத்தியர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கணடித்தும், சுகாதார மற்றும் வைத்திய சேவை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் மட்டக்களப்பு நகரில் இன்று குறிப்பிட்ட மருத்துவத்துறைசார்ந்த ஊழியர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

கொலையைக் கண்டித்துப் போராட்டம்

போதனா வைத்திசாலையிலிருந்து மாத்திரம் 62 சிங்கள வைத்தியர்கள் வெளியேறுவதனால் 60 சத வீதம் அங்கு வைத்திய சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறும் பொலிசார் கொலையாளிகளோ அதற்கான பின்னணியோ இதுவரை கண்டறியப்படவில்லை என்கின்றனர்.


நிவாரணப் பொருட்கள் அடங்கிய முதல் இந்திய கப்பல் கொழும்பில்

இலங்கையின் வடப்பகுதியில் மோதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்தியாவில் திரட்டப்பட்ட நிவாரண பொருட்கள் அடங்கிய முதல் கப்பல் கொழும்புவிற்கு வந்தடைந்துள்ளதாக இந்திய தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 1700 டன் எடை உள்ள இந்தப் பொருட்கள் இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான கப்பல் மூலமாக வந்துள்ளதாகவும், இந்த பொருட்களையும் இறக்கும் பணி திங்கட்கிழமை ஆரம்பிக்கும் என்றும் தூதரகத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்த பொருட்கள் வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலங்கை அரசின் அணுசரனையுடன், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக விநியோகிக்கப்படும் என்றும் இந்திய தூதுரக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்த நிவாரணப் பொருட்கள் விநியோகம் தொடர்பாக நாளை திங்கட்கிழமை, இந்திய தூதரகத்தில், சர்வதேச செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகள் மற்றும் இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறவிருப்பதாகவும், இலங்கை அரசின் அத்தியாவசிய சேவைகள் ஆணையர் திவாரட்ண பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரின் கிடங்கில் பொருட்களை தாங்கள் இறக்குவதற்கு திட்டமிடுவதாகவும், அங்கிருந்து லாரிகள் மூலம் வவுனியாவிற்கு பொருட்கள் எடுத்து செல்லப்பட்டு, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கு பொருட்கள் எடுத்து செல்லபடும் என்றும் அவர் கூறினார். மேலும் இந்த விநியோகம் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மேற்பார்வையில் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.


இலங்கையின் கிழக்குப் பகுதியில் இன்னமும் பாதுகாப்பு குறித்த கவலைகள் நிலவுகின்றன

இலங்கை இராணுவம்
இலங்கை இராணுவம்

இலங்கையின் கிழக்குப் பகுதியை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டுவிட்டதாக அரசு அறிவித்த பிறகு அங்கு மாகாண சபை தேர்தல்தல்கள் நடைபெற்று அங்கு ஜனநாயக முறையில் தேர்தெடுக்கப்பட்டுள்ள அரசு பதவியேற்று ஆறுமாதங்களாகின்றன.

இந்த மாகாண சபையின் முதல் வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் செவ்வாய்கிழமையன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் அங்கு பாதுகாப்பு தொடர்பான கவலைகள் இன்னமும் தொடரவே செய்கின்றன என்று மாகாண சபை உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆறு மாதகாலத்தில், கிழக்கு மாகான சபையின் நடவடிக்கைகள் எவ்வாறு இருந்துள்ளன, மாகாணத்தில் அபிவிருத்தி மற்றும் அதிகாரப் பரவலாக்கம் என்ன நிலையிலுள்ளன என்று பல்கட்சி உறுப்பினர்கள் வெளியிடும் கருத்துக்களை உள்ளடக்கி எமது மட்டக்களப்புச் செய்தியாளர் உதயகுமார் வழங்கும் செய்திக் குறிப்பினை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து ஆலோசிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்

கம்யூனிஸ்ட்கள்
கம்யூனிஸ்ட்கள்

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அடுத்த கட்டமாக தமிழகத்திலிருந்து என்ன செய்யலாம் என்பது குறித்து விவாதிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாளை திங்கட்கிழமை சென்னையில் அனைத்துக் கட்சிகூட்டம் ஒன்றைக்கூட்டி இருக்கிறது.

தமிழக கட்சிகளின் ஒருமித்தக் கோரிக்கையான போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை என்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே திட்டவட்டமாகக் கூறியிருக்கும் நிலையில், அடுத்த கட்டநடவடிக்கை குறித்து முடிவெடுக்கவே நாளைய கூட்டம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் தா.பாண்டியன் கூறி இருக்கிறார்.

ஆனால் எத்தனை கட்சிகள் நாளைய கூட்டத்தில் கலந்துகொள்ளும் என்பது தெளிவாக இல்லை. இது குறித்து கோவையில் செய்தியாளர்கள் கேட்டபோது முதல்வர் கருணாநிதி அந்தக்கூட்டத்திற்கும் திமுகவிற்கும் தொடர்பில்லை என்று மட்டும் கூறினார்.

இதனிடையே தமிழக காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜி.கே.வாசன் காங்கிரசார் ராஜீவைக் கொன்ற விடுதலைப்புலிகளை மறக்கவும் இல்லை, மன்னிக்கவும் இல்லை எனக் கூறி இருக்கிறார்.

விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீக்கக் கோரும் கட்சிகளை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

பூநகரியை கைப்பற்றியதாக அரசு அறிவிப்பு

இரண்டு தசாப்தங்களிற்கும் மேலாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதான நகரான பூநகரியை தமது படையினர் இன்று சனிக்கிழமை காலை கைப்பற்றியிருப்பதாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது.

இது தொடர்பில் கருத்துவெளியிட்டுள்ள பாதுகாப்பமைச்சு, வடக்கில் கொழும்பு-கண்டி ஏ-9 பிரதான வழங்கற் பாதைக்கு மேற்காக மன்னாரிலிருந்து கரையோரமமக ஏ-32 பாதைவழியாக கடந்த சிலமாதங்களாக முன்னேற்ற நகர்வுகளில் ஈடுபட்டிருந்த துருப்பினர் பூநகரிக்கு தெற்குப்புறமாகவுள்ள சதுப்பு நிலங்களைத்தாண்டி வெள்ளிக்கிழமையிரவு பூநகரி-பரந்தன் பீ-69 பாதையில் நல்லூரிற்கு அடுத்துவுள்ள பிரதேசங்களை கைப்பற்றியதாகவும், அதன் பின்னர் சுமார் பீ-69 வீதியில் சுமார் 10 கிலோமீற்றர் வரை நகர்ந்த படையினர் இன்று பொழுது புலரும் முன்னரே பூநகரியின் நகர்ப்பகுதியினை படையினர் அடைந்ததாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆனாலும் அந்தப் பகுதியில் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதலிற்குப் படையினர் முகம் கொடுத்ததாகவும், ஆங்காங்கே உக்கிர மோதல்கள் இந்தப் பகுதியில் இன்னமும் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறது.

இதேவேளை, சனிக்கிழமை காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா பூநகரியைப் படையினர் கைப்பற்றிய செய்தியை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்திருக்கிறார்.

இதன் பின்னர், தேசிய தொலைக்காட்சியூடாக நாட்டு மக்களிற்கு உரையாற்றிய முப்படைகளின் தளபதியும், பாதுகாப்பு அமைச்சரும், ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஷ புலிகள் தமது ஆயுதங்களைக் கீழேவைத்துவிட்டு, தனது அரசுடன் பேச்சுக்களில் ஈடுபட முன்வரவேண்டும் என்றும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்தார்.

முப்படையினரிற்கும், நாட்டுமக்களிற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிகள் அவ்வாறு ஆயுதங்களைக் கீழேவைத்துவிட்டு சரணடைவதே அதன் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களிற்குச் செய்யக்கூடிய பாரிய சேவையாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.


ரகு கொலையில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பில்லை – கிழக்கு மாகாண முதலமைச்சர்

ரகு உடலுக்கு அஞ்சலி
ரகு உடலுக்கு அஞ்சலி

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியில் தலைவராக குறிப்பிடப்பட்டுள்ள ரகு எனப்படும் குமாரசாமி நந்தகோபனின் படுகொலைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்புகள் இருப்பதாக தான் கருதவில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறியிருக்கின்றார்.

முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளராகவும் சேவையாற்றிய ரகு எனபப்டும் குமாரசாமி நந்தகோபன் வெள்ளிகிழமை கொழும்பிற்கு வெளியே ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இவரது பூதவுடல் சனிக்கிழமை மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி மண்டபத்தில் பொமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அங்கு நடை பெற்ற இரங்கலுரையின் போது இதனை தெரிவித்த மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், சம்பவம் இடம்பெற்ற இடத்தை நேரில் சென்று தான் பார்வையிட்ட சமயம் அங்கு புலப்பட்ட சில விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இதனை தான் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்


இலங்கை வரவுசெலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது

இலங்கை நாடாளுமன்றம்
இலங்கை நாடாளுமன்றம்

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட அவரது அரசின் நான்காவது வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது கட்ட வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சனிக்கிழமையன்று 42 மேலதிக வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசின் நான்காவது வரவுசெலவுத்திட்டம் கடந்த 6ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கபட்டதனையடுத்து இதன் மீதான விவாதம் கடந்த ஒருவாரகாலமாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வந்தது.

அதன் இரண்டாம் கட்ட வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சனிக்கிழமை மாலை இடம்பெற்றபோது, 225 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் இதற்கு ஆதரவாக 127 வாக்குகளும், எதிராக 85 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புடன் சேர்ந்து ஜே.வி.பியிலிருந்து பிரிந்து சென்ற விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு ஆதரவாகவும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் இதற்கு எதிராக வாக்களித்தன.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவுசெலவுத்திட்டத்தின்பிரகாரம் அடுத்த ஆண்டில் அரசின் உத்தேச மொத்தவருமான 855 பில்லியன் ரூபாய்களாகவும், உத்தேச மொத்தச் செலவு 1191.67 பில்லியன் ரூபாய்களாகவும், இதனால் துண்டுவிழும் தொகை 336.67 பில்லியன் ரூபாய்களாகவும் காட்டப்பட்டிருந்தது.

கடந்த அக்டோபர் முற்பகுதியில் அரசினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த உத்தேச மதிப்பீட்டின்படி அடுத்த ஆண்டிற்கான உத்தேச பாதுகாப்பு செலவினங்களாக சுமார் 177.1 பில்லியன் ரூபாய்களாக காட்டப்படிருக்கிறது. கடந்தவருடம் மேற்கொள்ளப்பட்டிருந்த உத்தேச பாதுகாப்பு செலவினங்கள் 166.44 பில்லியன் ரூபாய்களுடன் ஒப்பிடும்போது இது சுமார் 7 சதவீத அதிகரிப்பாகும்.

வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாவது கட்ட வாசிப்பு மீதான விவாதம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் 8ம் திகதி இடம்பெறவிருக்கிறது.

முதலில் பயங்கரவாதம் ஒழிக்கப்படவேண்டும் -இலங்கை ஜனாதிபதி

இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னதாக, பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும், விடுதலைப் புலிகளை ராணுவ நடவடிக்கைகள் மூலம்தான் ஒடுக்க வேண்டும் என்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற வங்காள விரிகுடா நாடுகளுக்கிடையிலான பல்முனை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பேசும்போதும், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போதும் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

ஏழு நாடுகளைக் கொண்ட பிம்ஸ்டெக் எனப்படும் அந்தக் கூட்டமைப்பின் மாநாட்டில் பேசிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், “கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, விடுதலைப் புலிகளின் கொடூரமான நடவடிக்கைகளால் ஜனநாயக ரீதியான வாழ்க்கை முறையில் இலங்கை கடும் சவால்களைச் சந்தித்து வருகிறது. அப்படிப்பட்ட குழுக்களை ராணுவ நடவடிக்கை மூலம்தான் கையாள வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில், பயங்கரவாதிகள் தங்கள் நடவடிக்கைகளுக்கு நியாயம் சேர்ப்பதற்காக எந்த காரணத்தை அடிப்படையாகக் கூறுகிறார்களோ, அந்தப் பிரச்சினைகளை அரசியல் ரீதியாகத் தீர்க்க வேண்டும். நாங்கள் அரசியல் தீர்வு காண்பதற்கான வழியில் உறுதியாகச் சென்று கொண்டிருக்கிறோம்’’ என்றார் இலங்கை ஜனாதிபதி.

பயங்கரவாதிகளின் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க வங்காள விரிகுடா பகுதியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இருதரப்பு ஆலோசனைகள்

பிற்பகலில், மன்மோகன் சிங்கும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் இருதரப்புப் பிரச்சினைகள் தொடர்பாக தனியாக ஆலோசனை நடத்தினார்கள். சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பின்போது, இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விவரித்ததாகத் தெரிகிறது. அதே நேரத்தில், இந்தியத் தரப்பில் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக கவலைகள் தெரிவிக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மத்திய அரசிடம் தெரிவித்த கவலைகளையும் ராஜபக்ஷ அவர்களிடம் மன்மோகன் சிங் எடுத்துரைத்ததாகத் தெரிகிறது.

இந்தச் சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம், போர் நிறுத்தத்துக்குத் தயார் என விடுதலைப் புலிகள் அறிவித்திருப்பது குறித்துக் கேட்டபோது, “கடந்த 20 ஆண்டுகளாக போர் நிறுத்த ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் விடுதலைப் புலிகள் அதைப் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதுடன், தங்களது ஆட்களுக்கும் பயிற்சி கொடுத்து, திருப்பித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நாங்கள் தயார். ஆனால் அதற்கு முன்னதாக அவர்கள் தங்களது ஆயுதங்களைக் கீழே போட வேண்டும்’’ என்றார் ராஜபக்ஷ் அவர்கள்.

இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காணப் போகிறீர்கள் என்று கேட்டபோது, “ முதலில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். அதன் பிறகு அரசியல் தீர்வு காண வேண்டும். பயங்கரவாதத்தை அடுத்த சந்ததிக்கு நாம் கொடுக்கக் கூடாது’’ என்றார் இலங்கை ஜனாதிபதி.

தமிழர்களின் பாதுகாப்பு குறித்து இந்தியப் பிரதமரிடம் உறுதி அளித்தீர்களா என்று கேட்டபோது, “பிரதமருக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கே சொல்லிக் கொள்கிறோம். தமிழர்களை நாங்கள் பாதுகாப்போம். அவர்களுக்கு எந்தத் தீங்கும் நடக்காது. எங்கள் மக்களை நாங்கள் பாதுகாக்கிறோம். அது எனது கடமை’’ என்றார் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்.

இந்திய மீனவர்கள் படகுகள் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களைக் கடத்துவதாக ஏற்கெனவே மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குற்றம் சாட்டியிருந்தார். அதுபற்றி இந்தியப் பிரதமரிடம் எடுத்துக் கூறியதாகவும் தெரிவித்தார்.

தமிழக உதவிப் பொருட்கள் இலங்கை அரசு மூலமே வினியோகம்

இலங்கைத் தமிழர்களுக்கு திரைப்பட நட்சத்திரங்கள் உட்பட பலர் நிதி வழங்கியுள்ளனர்
இலங்கைத் தமிழர்களுக்கு திரைப்பட நட்சத்திரங்கள் உட்பட பலர் நிதி வழங்கியுள்ளனர்

மனிதாபிமான அடிப்படையில் இந்தியா அனுப்பும் நிவாரணப் பொருட்களை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், அந்தப் பொருட்கள் சர்வதேச அமைப்புக்கள் மூலம் அனுப்பப்படும் என்றும், இறுதி முனையில் இலங்கை அரசு அவற்றைப் பெற்று மக்களுக்கு விநியோகிக்கும் என்றும் கூறினார்.

இதனிடையே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் இன்று புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்கள். அப்போது, விடுதலைப் புலிகளை ராணுவ நடவடிக்கை மூலம் ஒடுக்கிய பிறகு, இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என இலங்கை ஜனாதிபதி பிம்ஸ்டெக் மாநாட்டில் பேசியது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஸ்ரீகாந்தா, “அப்படிச் சொல்வதன் மூலம் அரசியல் தீர்வு காண்பதாக இலங்கை அரசு சொல்வது பாசாங்கு, ஏமாற்று நாடகம் என்பது தெளிவாகிறது’’ என்றார்.



சம்பூர் பாதுகாப்பு வலயத்தின் எல்லைகளில் மாற்றம்

சம்பூர் பகுதி
சம்பூர் பகுதி

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் மூதார் கிழக்கு மற்றும் சம்பூர் அதியுயுர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பாக ஏற்கனவே இலங்கை ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தங்களை செய்யும் வகையில் மற்றுமொரு அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாதுகாப்பு வலயங்களின் எல்லைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

2008 ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட அறிவித்தலின் படி 11 கிராம சேவையாளர்கள் பிரிவுகளிலுள்ள 25 கிராமங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது.புதிய திருத்தத்தின் படி சம்பூர் கிழக்கு,சம்பூர் மேற்கு, கூனித்தீவு, கடற்கரைச்சேனை, நவரட்னபுரம் ஆகிய 5 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 9 கிராமங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த திருத்தமானது ஏற்கனவே மீள் குடியமர்த்தப்பட்டுள்ள யுத்த அகதிகளுக்கு ஆறுதல் அளித்தாலும் இது வரை மீளக் குடியமர்த்தப்படாத குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1700 குடும்பங்கள் தமது இருப்பிடங்களையும் காணிக்ளையும் இழக்கச் செய்வதாக மூதூர் கிழக்கு இடம் பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கத்தின் தலைவரான குமாரசாமி நாகேஸ்வரன் தமிழோசையிடம் கூறினார்.

இலங்கையின் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் எனக் கோரும் ஒரு தீர்மானம் இன்று(புதன்கிழமை) தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் முன்மொழிந்த இந்தத் தீர்மானம் சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்துக்கு பிறகு ஏகமனதாக நிறைவேறியது.

இலங்கையின் தமிழர்கள் படும் இன்னல்களுக்கு தீர்வு காண உடனடியாக அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என தமிழக சட்டமன்றத்தின் தீர்மானம் கூறியுள்ளது.

அங்கு ஒரு தரப்பினர் போர் நிறுத்தத்துக்கு தயார் என்று அறிவித்துள்ள நிலையில், இலங்கை அரசும் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் அந்தத் தீர்மானம் கோரியுள்ளது.

போர் நிறுத்தம் ஏற்பட்டு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அரசு முன்வர வேண்டும் எனவும் தமிழக சட்டமன்றத் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவின் மத்திய அரசும் தனது செல்வாக்கை பயன்படுத்தி போர் நிறுத்தம் ஏற்பட உதவ வேண்டும் எனவும் தமிழக முதல்வரால் முன்மொழியப்பட்டு ஏகமனதாக நிறைவேறிய தமிழக அரசின் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.


ஓமந்தை சோதனைச் சாவடியிலிருந்து தற்காலிகமாக ஐசிஆர்சி விலகல்

ஓமந்தை சோதனைச் சாவடி
ஓமந்தை சோதனைச் சாவடி

இலங்கையின் வடக்கே ஏ-9 சாலையில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச் சாவடியில் தமது பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து பிபிசியிடம் தெரிவித்த அந்த அமைப்பின் பேச்சாளரான அலெக்ஸாண்ட்ரா மட்டியேவிச் அவர்கள் அந்தப் பகுதியில் செவ்வாய்கிழமை(11.11.08)அன்று நடைபெற்ற சில சம்பவங்களே காரணம் என்று தெரிவித்தார்.

எனினும் அவை என்ன சம்பவங்கள் என்கிற தகவலுக்குள் தாம் செல்ல விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

திங்கட்கிழமையன்று அந்தப் பகுதியில் இடம் பெற்று வரும் ஆயுத மோதல்கள் அதிகரித்தன என்றும், அதன் காரணமாக அந்த வழியாக பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் தமது பணியாளர்களின் பாதுகாப்பு இல்லாத நிலை தோன்றியதாலேயே இவ்வாறான ஒரு முடிவை தாங்கள் எடுக்க வேண்டி வந்தது என்றும் தெரிவித்தார்.

தாங்கள் மீண்டும் அங்கு பணிக்கு திரும்பும் முன்னதாக இலங்கையின் பாதுகாப்பு படையினர் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகியோரிடமிருந்து புதிய பாதுகாப்பு உத்திரவாதங்களை பெறவேண்டியுள்ளது என்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பேச்சாளர் அலெக்ஸாண்ட்ரா மட்டியேவிச் கூறினார்.


இலங்கையில் மனித உரிமைகள் நிலமைகள் மோசமாக உள்ளன

சுனிலா அபேசேகர
சுனிலா அபேசேகர

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மிகவும் அதிகரித்து காணப்படுகின்றன என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்சின் விருதை வென்றுள்ள சுனிலா அபேசேகர கருத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பிபிசியின் சந்தேஷ்யவுக்கு வழங்கிய ஒரு பிரத்தியேகப் பேட்டியில், இலங்கையின் தமிழர்கள் அனைவருமே தீவிரவாதிகளாக பார்க்கப்படும் நிலை உள்ளது என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல் செயல்கள் பன்னாட்டு பார்வைக்கு பெரிய அளவில் வருவதில்லை என்றும், தமக்கு கிடைத்திருக்கும் விருதின் மூலமாக உலகத்துக்கு அவை தெரிய வரும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கருத்து கூறியுள்ளார்.

தாம் மட்டுமல்லாமல் இலங்கையின் நட்பு நாடாகிய ஜப்பான் போன்ற நாடுகளும், ஐக்கிய நாடுகள் அமைப்பும் கூட இது குறித்து சுட்டிக் காட்டியுள்ளார்.

மனித உரிமைகள் மீறல் தொடர்பான கருத்துக்களை வெளியிடுபவர்களையும் தீவிரவாதிகளாக வர்ணிக்கும் போக்கும் அங்கு காணக் கூடியதாக இருக்கிறது என்றும் சுனிலா அபேசேகர அவர்கள் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர் விவகாரம்

இலங்கைத் தமிழர் நிலை குறித்து பல்வேறு கட்சித்தலைவர்களும் இன்று தமிழக சட்டமன்றத்தில் தங்கள் கவலையினைத் தெரிவித்தனர்.

ஐந்து நாள் குளிர்காலக் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று, கேள்வி நேரம் முடிந்தவுடன் இலங்கைத்தமிழர் பிரச்சினை குறித்து தாங்கள் கொடுத்திருந்த கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் என்னவாயிற்று என்று பல தரப்புக்களிலிருந்தும் கேள்விகள் எழுந்தன.

பேரவைத்தலைவர் ஆவுடையப்பன் நேரடி பதில் எதுவும் தராததனால் அவையில் கூச்சல் அதிகரித்தது. பின்னர் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளின்பேரில் கட்சித்தலைவர்கள் சுருக்கமாக பேச அனுமதிக்கப்பட்டனர்.

விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்திற்குத் தயார் என்று அறிவித்தும், இலங்கை அரசு அவ்வாறு செய்ய முன்வராமல் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்குள்ளாகும் வண்ணம் போரைத் தொடர்கிறது, இந்நிலையில் அதனையும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு மத்திய அரசுதான் மஹிந்தா அரசை நிர்ப்பந்திக்க வேண்டுமென இன்று பேசிய கட்சித்தலைவர்கள் வலியுறுத்தினர்.

காங்கிரஸைச் சேர்ந்த ஞானசேகரன் இலங்கைத்தமிழர் இன்னல்கள் களையப்படவேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை ஆனால், அதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு, தமிழகத்தில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் தங்கள் விருப்பம்போல் செயல்பட அனுமதிக்கப்படக் கூடாதென்றார்.

முதலமைச்சர் கருத்தெதுவும் தெரிவிக்கவில்லை. இலங்கைப் பிரச்சினை குறித்த தீர்மானம் எப்போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என பேரவைத்தலைவர் தெரிவிக்கவில்லை.


தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அலுவலகத்தின் மீது தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மங்கிகட்டு என்னும் இடத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் அலுவலகம் ஒன்றில் நேற்று இடம்பெற்ற மோதலில், இருவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றார்கள்.

அந்த அலுவலகத்தில் இருந்த 4 பேர் ஏனையவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் சார்பில் பேசவல்ல ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆனால், விடுதலைப்புலிகளினாலேயே இந்தத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார்.

இந்த அலுவலகத்தின் மீது தாம் தாக்குதல் நடத்தியதாக உறுதிப்படுத்தியுள்ள விடுதலைப்புலிகள், சில ஆயுதங்களும் அங்கிருந்து மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இவைகுறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


போர் நிறுத்தம் இல்லை என்கிறது இலங்கை அரசு

இலங்கை அமைச்சர் மைத்ரிபால சிறிசேன, விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களைக் கையளிக்கும் வரையில் அந்த இயக்கத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ளபோவதில்லை, போர் நிறுத்தமும் செய்துகொள்ளப்போவதில்லை என்று நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.

ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது, விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் நடேசன் தமது அமைப்பு யுத்த நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாக கூறியிருப்பது குறித்து கேள்வியெழுப்பிய போதே, மூத்த அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலருமாகிய மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்.

அதேவேளை தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள், விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்துக்கு தயார் என்று கூறியிருக்கும் நிலையில், இலங்கை அரசும் போர் நிறுத்தத்துக்கு வருமாறு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என்று கோரியிருக்கிறார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கிராஞ்சி பகுதியை கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரப்பகுதியில் உள்ள கிராஞ்சி என்ற முக்கிய இடத்தை இலங்கை இராணுவத்தினர் இன்று விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாகப் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

கடும் சண்டைகளின் பின்னர் இந்தப் பகுதி வெற்றிகொள்ளப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப்புலிகளிடமிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதேவேளை, கிளிநொச்சி அக்கராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற சண்டைகளின்போது கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 7 சடலங்கள் இன்று வவுனியா வைத்தியசாலையில் வைத்து சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சடலங்கள் உடனடியாகவே ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக விடுதலைப் புலிகளிடம் ஒப்படைப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்டதாக செஞ்சிலுவைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையில் வன்னிப்பிரதேசத்தில் யுத்தச் சூழல் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு விநியோகிப்பதற்காக 47 ட்ரக் வண்டிகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இன்று எடுத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றில் உலக உணவுத் திட்டத்தின் ட்ரக் வண்டிகள் கூடுதலாக இடம்பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய உதவிப்பொருட்கள் இந்த வாரத்தில் இலங்கை வருகை

இலங்கையின் வன்னிப்பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் சிவிலியன்களுக்கு இந்தியாவினால் அனுப்பப்படவுள்ள நிவாரண உதவிப்பொருட்கள் இவ்வாரமளவில் இலங்கை வரவிருப்பதாகவும், அவை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினூடாக பாதிக்கப்பட்ட மக்களிற்கு பகிர்ந்தளிக்கப்படவிருப்பதாகவும் இலங்கைக்கான இந்தியத்தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய நிவாரணப்பொருட்களில் சுமார் 1000 டன்களை ஏற்றிய முதலாவது கப்பல் இவ்வாரம் கொழும்பு வரவிருப்பதாகவும் அவை இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினூடாக பாதிக்கப்பட்ட வன்னிப்பகுதி மக்களிற்கு விநியோகிக்கப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை இந்த நிவாரப்பொருட்கள் அனுப்பப்படுவது குறித்து மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக கடந்த வாரம் தமிழ் நாடு சென்ற இலங்கை சர்வதேச செஞ்சிலுவைக் குழு அதிகாரியொருவர் இவை பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளையும், பாரம்பரியங்களையும் பிரதிபலிப்பதாகவும், நல்ல நிலையிலுள்ள இந்தப் பொருட்கள் சர்வதேச நியமங்களிற்கு அமைவாக இருப்பதாகவும், அதன் ஊடக அதிகாரி சரசி விஜேரட்ண பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.


கருணா அமைப்பினர் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளில் இணைவதற்கு மாறுப்பட்ட கருத்துக்கள்

த.ம.வி.பு தலைவர் கருணா
த.ம.வி.பு தலைவர் கருணா

தனது அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் இலங்கையின் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளில் இணைக்கப்படுவார்கள் என்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கருணா தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் தான் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அவர் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால், முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்துவந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை அரசாங்க பொலிஸ் படையில் சேர்ப்பது குறித்து பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் ஏனையோர் மத்தியில் இருந்து மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இவை குறித்து இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வன்னி போர்முனைகளில் கிளிநொச்சிக்கு மேற்கே உள்ள அக்கராயன்குளம் பகுதியை முழுமையாகக் கைப்பற்றியுள்ள படையினர் மேற்குக் கரையோரப் பகுதியாகிய பூனகரியை நோக்கி முன்னேறி வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. இதேவேளை கிளிநொச்சி நகருக்குத் தெற்கில் உள்ள பாரதிபுரம் மற்றும் கிழக்கில் உள்ள களமுனைகளிலும் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

எனினும் இதுபற்றி விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையே, வடக்கே வவுனியா தோணிக்கல் பகுதியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்றில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

சனிக்கிழமை இரவு 10 மணியளவில் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் குண்டு ஒன்றைப் பொருத்திக்கொண்டிருந்த போதே இந்த குண்’டு வெடிப்புச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் இதில் கொல்லப்பட்டவர் வவுனியாவில் உள்ள அரச திணைக்களத்தி்ன் சாரதியாகப் பணியாற்றிய ஒருவர் என்றும், இவர் அண்மையில் முல்லைத்தீவு பகுதியில் இருந்து இங்கு இடம் மாற்றம் பெற்று வந்ததாகவும் பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நேரம் ஞாயிற்றுக்கிழமை மதியம் பரந்தன் பகுதியில் நடைபெற்ற வான் தாக்குதலில் ஐந்து சிவிலியன்கள் காயமடைந்து தர்மபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


வகுப்பறையில் இயங்கும் மருத்துவமனைகள்

இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் கட்டு்ப்பாட்டுப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான வைத்திய சேவைகளை ஆற்றி வருகின்ற மருத்துவ மனைகள் பாடசாலை கட்டிடங்களிலேயே இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வகுப்பறைகள் நோயாளர்களின் விடுதிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. இவற்றில் கல்வி கற்ற மாணவர்களுக்கு பாடசாலைக்கு அருகிலேயே அதிகாரிகள் கொட்டில்களில் வகுப்பறைகளை அமைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தர்மபுரம், விசுவமடு ஆகிய இடங்களி்ல் உள்ள பாடசாலை வளவுகளில் பாடசாலைகளும் மருத்துவமனைகளும் இணைந்து செயற்பட்டு வருகின்றன. இவற்றிற்குத் தனித்தனியான நுழைவாயில்கள் அமைக்கப்பட்டு, பாடசாலை சமூகத்துடன் இணைந்து இரண்டு நிறுவனங்களையும் அதிகாரிகள் முடிந்த அளவில் சிறப்பாகச் செயற்படுத்தி வருவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பளார் டாக்டர் ரீ.சத்தியமூர்த்தி தெரிவிக்கின்றார்.

இதுபற்றிய மேலதிக விபரங்களடங்கிய வவுனியா செய்தியாளர் பி. மாணிக்கவாசகம் அவர்களின் செய்திப்பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



அக்கராயன்குளத்தை பிடித்துவிட்டதாக இராணுவம் அறிவிப்பு

வெப் ஜெனரல் சரத் பொன்சேகா
வெப் ஜெனரல் சரத் பொன்சேகா

கிளிநொச்சி நகருக்கு மேற்கே உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தளமாகிய அக்கராயன்குளம் பகுதியை முழுமையாக இராணுவம் கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

மேலும் இலங்கையின் வடக்கே மாங்குளம் பகுதியில் புதிதாக தரையிறக்கப்பட்டுள்ள இராணுவ அணி, அங்கிருந்து ஏ9 வீதியை நோக்கி முன்னேறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், இந்த முயற்சியின்போது பனிக்கன்குளம் பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று பல மணித்தியாலங்கள் உக்கிர சண்டைகள் நடைபெற்றதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இந்தச் சண்டைகளின் பின்னர் படையினர் நடத்திய தேடுதலின்போது மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 7 சடலங்கள் இராணுவத்தி்னரால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

எனினும் வியாழக்கிழமையன்று பனிக்கங்குளம் சண்டைகள் பற்றியோ, அக்கராயன்குளம் பகுதி படையினர் வசமாகியுள்ளது பற்றியோ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையில், வவுனியாவுக்கு வெள்ளிக்கிழமை காலை விஜயம் செய்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா வன்னிக்கள முனைகளின் தற்போதைய நிலைமைகள் குறித்து வன்னிப்பிராந்திய ஆயுதப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவுடனும், முக்கிய களமுனைத் தளபதிகளுடனும் விரிவாகக் கலந்துரையாடியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது



முல்லைத் தீவில் மருத்துவ உதவிப் பொருள் தட்டுப்பாடு

இலங்கையின் வடக்கே இராணுவத்திற்கும் வி்டுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டைகள் நடைபெற்று வருகின்ற வன்னிப்பிரதேசத்தில் யுத்தச்சூழலில் சிக்கியுள்ள மக்களுக்குரிய அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றபோதிலும், அப்பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு உரிய மருந்துப்பொருட்கள், எரிபொருள் என்பன போதிய அளவில் இன்னும் சென்றடையவில்லை எனக் கூறப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வவுனியாவில் இருந்து 2 லொறிகளில் அனுப்பிவைக்கப்பட்ட மருந்துப் பொருட்கள் ஓமந்தை சோதனைச்சாவடியிலிருந்து திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்டத்தின் பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும், தொற்றுநோய்த்தடுப்பு அதிகாரியுமாகிய டாக்டர் ஒஸ்மான் சாள்ஸ் அவர்கள் கூறுகின்றார்.

முல்லைத்தீவு மாவட்டப் பொது வைத்தியசாலையுடன், புதுக்குடியிருப்பு, மூங்கிலாறு ஆகிய இடங்களில் 2 பிரதேச வைத்தியசாலைகளும், அத்துடன் மேலும் 5 சிறிய வைத்தியசாலைகளும் பற்றாக்குறைகள், சிரமங்களுக்கு மத்தியிலேயே இயங்கிவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த மாவட்டத்தில் நிலவுகின்ற எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த வைத்தியசாலைகளின் உள்நோயாளர்களுக்கான விடுதிகளில் இரவில் சில மணித்தியாலங்கள் மாத்திரமே மின்சார வெளிச்சம் வழங்கப்படுவதாகவும், அதன் பின்னர் அரிக்கன் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே வைத்திய சேவைகள் இடம்பெறுவதாகவும் டாக்டர் சாள்ஸ் தெரிவிக்கின்றார்.


‘இலங்கைக்கான இந்திய உதவிப் பொருட்கள் தூதரகம் மூலமாக சர்வதேச உதவி அமைப்புகளிடம் வழங்கப்படும்’

இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் அனைத்தையும், கொழும்பிலுள்ள இந்தியத் தூதுர்தான் பெற்றுக்கொள்வார் என்று இந்திய அரசு கூறியுள்ளதாக தமிழக அரசு தெரிவிக்கிறது.

இந்த நிவாரணப் பொருட்கள் கொழும்பு சென்றடைந்த பிறகு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் என்று இந்திய வெளியுறவுச் செயலரின் கடிதத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

இது தொடர்பில் தமிழ்நாட்டில் எழுந்த ஐயங்கள் காரணமாக இந்தியப் பிரதமரிடம் விளக்கம் கேட்டு தமிழக முதல்வர் திங்கட்கிழமையன்று எழுதிய கடிதத்துக்கு பதிலாக, இந்திய வெளியுறவு அமைச்சக செயலரிடமிருந்து தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு வந்துள்ள கடிதத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.


‘இலங்கையின் வடக்கே கடற்புலித் தளங்கள் மீது விமானப் படையினர் குண்டுவீச்சு’

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள வெற்றிலைக்கேணியிலும், கட்டைக்காடு பகுதியிலும் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் இரண்டு கடற்புலித் தளங்கள் மீது விமானப்படையினர் குண்டுவீசி அழித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த இலக்குகள் மீது சரியான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் கட்டைக்காடு தளம் மீதான தாக்குதலையடுத்து, அது தீப்பற்றி எரிந்ததாகவும் விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜானக்க நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.

இதற்கிடையில் மாங்குளம் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களில், மேலும் ஒரு புதிய இராணுவ தாக்குதல் அணியொன்று களமிறக்கப்பட்டிருப்பதாகவும், இந்த அணிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையி்ல் வன்னிவிளாங்குளம் பகுதியில் மோதல்கள் இடம்பெற்றதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

தொண்டமான்நகர், புதுமுறிப்பு, செல்வாநகர் உட்பட்ட பிரதேசங்கள் மீது இராணுவத்தினர் எறிகணை தாக்குதல்களை நடத்தியதாகவும், இதனால், 16 வீடுகளும், 18 கடைகளும் அழிவுக்குள்ளாகியிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.


டி.எம்.வி.பி. உட்கட்சி முரண்பாடுகள் தீவிரமடைகின்றன

இலங்கையிலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்குள் பிள்ளையான் அணியினருக்கும் கருணா அணியினருக்கும் இடையில் உட்கட்சி விரிசல்களும் முரண்பாடுகளும் முற்றிவருவதாகத் தெரிகிறது.

அக்கட்சியின் மாகாண சபை உறுப்பினரான பிரதீப் மாஸ்டர், தனது அரசியல் அலுவலகத்தை கருணா ஆதரவாளர்கள் தாக்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

கருணா ஆதரவாளரான எறாவூர் பிரதேச சபை உறுப்பினர் அன்புமணி தலைமையில் வந்த ஆயுததாரிகளே தனது அலுவலகத்தைத் தாக்கி அங்கிருந்தவர்களை விரட்டியடித்ததாக அவர் தெரிவித்தார்.

ஆனால் கருணாவின் உத்தரவின் பேரில் அன்புமணி தலைமையில் சென்றவர்கள் அவ்வலுவலகத்தில் ஒழுக்காற்று நடவடிக்கையைதான் மேற்கொண்டிருந்தனர் என்று அம்பாறை மாவட்ட டி.எம்.வி.பி. பொறுப்பாளர் இனியபாரதி தெரிவித்துள்ளார்.

பிரதீப் மாஸ்டர் மற்றும் இனியபாரதி ஆகியோரின் செவ்விகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


Posted in Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Sri Lankan Cabinet minister, Maithripala Sirisena escapes suicide blast: Assassination attempt on his life by LTTE: British, Norway ambassadors visit Jaffna

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 10, 2008

தேவைப்பட்டால் ராஜினாமா செய்வோம் – த.தே.கூ

இலங்கை தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு இந்திய மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரி தமிழகத்தில் திமுக வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இராஜினாமாவை திமுக தலைவர் கருணாநிதியிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கைக்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தேவைப்படும் பட்சத்தில் தங்களது பதவிகளை துறக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தயாராக இருப்பதாக அதன் தலைவர் இரா.சம்மந்தர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

எனினும் தாங்கள் இராஜினாமா செய்தால், அவ்விடங்களுக்கு தங்களுடைய கைப்பாவைகளை இலங்கை அரசு நியமிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், அதன் மூலம் உலகை ஏமாற்ற இலங்கை அரசு முயற்சிக்கும் என்றும் அவர் கருத்து வெளியிட்டார்.

இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையின் கிழக்கே வட்டமடுவில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை – அமைச்சர்

இலங்கை வரைப்படம்
இலங்கை வரைப்படம்

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்திலுள்ள வட்டமடு பகுதியில் விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கான பாதுகாப்பான சூழ்நிலை இன்னமும் அங்கு இல்லை என கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சரான நவரட்னராஜா கூறியுள்ளார்.

இப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை 4 விவசாயிகள் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கு விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ள அச்சநிலை தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர்,
சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு, மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டு பாதுகாப்பு தரப்பினரால் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டாலும் அது சாத்தியப்படக் கூடியது அல்ல என்றும் தமிழோசைக்கு தெரிவித்துள்ளார்.


இலங்கையின் வடகே தொடரும் மோதல்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன்குளம் பகுதியில் விடுதலைப்புலிகளின் மீது இருமுனைகளில் சனிக்கிழமை காலை இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் விடுதலைப்புலிகளின் அதி தீவிர பாதுகாப்புக்குள் இருந்த முக்கிய நீண்ட பெரும் மண் அரணின் 3 கிலோ மீட்டர் பகுதியைத் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்திருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

கைப்பற்றப்பட்ட பகுதியில் இருந்த விடுதலைப்புலிகளின் பலத்த பாதுகாப்புமிக்க 13 பதுங்கு குழிகளையும் இராணுவத்தினர் தமது வசப்படுத்தியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

அக்கராயன்குளத்திற்கு மேற்குப் புறமாக முன்னேறிய படையினர் விடுதலைப் புலிகளின் மண் அரணின் 2 கிலோ மீட்டர் பகுதியையும், கிழக்குப் புறத்திலிருந்து முன்னேறிய இராணுவத்தினர், இந்த அரணின் ஒரு கிலோ மீட்டர் பகுதியையும் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.

இந்த முன்னகர்வின்போது இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர சண்டைகள் நடைபெற்றதாகவும் இதன்போது படைத்தரப்பில் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இதேபோல விடுதலைப் புலிகள் தரப்பிலும் பலத்த உயிர்ச்சேதம் மற்றும் உடைமைச் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

எனினும் இது தொடர்பில் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

இலங்கை தமிழ் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது – இந்திய பிரதமர் கோரிக்கை

இலங்கை இராணுவத்துக்கும் தமிழ் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்ததுவரும் சண்டையில் சாமானியத் தமிழர்கள் பாதிக்கப்படாதிருப்பதை இலங்கை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டுமென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடிய இந்தியப் பிரதமர், இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமானச் சூழல் மோசமடைந்துவருவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் சமூகத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை இலங்கை அதிகாரிகள் மேற்கொண்டுவருவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


இலங்கையின் வன்னிப் பிரதேசத்திற்கு செல்லும் சாலையை சீர்திருத்த அரசாங்கம் நிதி ஒதுக்கீடு

ஒமந்தை சோதனைச்சாவடி
ஒமந்தை சோதனைச்சாவடி

இலங்கையின் வடக்கே, ஓமந்தை சோதனைச்சாவடிக்கு அப்பால் புளியங்குளத்திலிருந்து நெடுங்கேணி வழியாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற வன்னிப்பிரதேசத்திற்குச் செல்லும் வீதியில் திருத்த வேலைகளை மேற்கொள்வதற்கு அரசு 30 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கியுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ் தெரிவித்தார்.

புளியங்குளத்தில் இருந்து நெடுங்கேணி ஊடாக ஒட்டுசுட்டான் வரையிலான பகுதியில் சுமார் 20 கிலோ மீட்டர் நீளமான வீதி மோசமாக இருப்பதாக அரசாங்கத்தின் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டுவந்திருந்தனர்.

புளியங்குளத்திற்கு அப்பால் பாலம் ஒன்று உடைந்ததனால் கடந்த வாரம் முதற்தடவையாக இந்த வீதிவழியாக உணவுப் பொருட்களை ஏற்றிச்சென்ற ட்ரக் வண்டிகள் பிரயாணத்தை மேற்கொள்ள முடியாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வெள்ளிகிழமை இடம்பெற்ற கடும் சண்டைகளில் பல விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த மோதல்கள் குறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.



வன்னிப் பகுதிக்கான இரண்டாவது தொகுதி ஐ.நா. உணவு உதவிப் பொருட்கள் சென்றடைந்துள்ளன

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கென ஐ.நா.வின் உலக உணவுத் தி்ட்டத்தினால் வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கு இரண்டாவது தொகுதியாக 750 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற 50 டிரக் வண்டிகளும் வெள்ளியன்று எவ்வித பிரச்சனையும் இன்றி அப்பகுதிகளுக்கு சென்று உணவுப் பொதிகளை அங்கே இறக்கியுள்ளன.

முல்லைத் தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் உணவுப் பொருட்களை இறக்கும் பணிகளை கண்காணித்துவரும் உலக உணவுத் திட்டத்தின் அதிகாரி மார்க் வைல்ட் ஸ்டிரக், எடுத்துவரப்பட்ட 750 டன்களில் உணவுகளில் 300 டன்கள் முல்லைத் தீவுக்கும், 450 டன்கள் கிளிநோச்சிக்கும் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தாங்கள் வழங்கும் பொருட்கள் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டு பல்நோக்கு கூட்றவு சங்கங்கள் மூலமாகவிநியோகிக்கப்படுகின்றன. ஆதலால் அப்பொருட்கள் விடுதலைப் புலிகளுக்கு செல்கின்றன என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்க வாய்ப்பில்லை என்று தான் கருதுவதாக அவர் தெரிவித்தார்.


திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைவரிடம் இராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்

தமிழகத்தில் ஆளும் திமுவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் இராஜினாமா கடிதங்களை கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதியிடம் அளித்துள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.

இலங்கை விவாகாரத்தில் இந்தியா தலையிட்டு அக்டோபர் 29ஆம் தேதிக்குள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டுவராவிட்டால், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்று கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து கருணாநிதியின் மகள் கனிமொழி, நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் இராஜினாமா கடிதத்தை ஏற்கனவே கருணாநிதியிடம் கொடுத்துவிட்டார். வெள்ளியன்று அமைச்சர்கள் உள்ளிட்ட பிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இராஜினாமா கடிதத்தை கருணாநிதியிடம் அளித்துள்ளதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட திமுகவைச்சேர்ந்த தயாநிதி மாறன் ராஜினாமா கடிதம் கொடுத்தாரா என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்திய சட்டப்படி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் தங்கள் இராஜினாமா கடிதங்களை மக்களவை சபாநாயகருக்கும், மாநிலங்களவை உறுப்பினர்கள் அந்த அவையின் தலைவருக்கும் அனுப்ப வேண்டும்.



இலங்கை நிலவரம் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது

இந்திய வெளியுறவுச் செயலர் ஷிவ்ஷங்கர் மேனன்

இந்திய வெளியுறவுச் செயலர் ஷிவ்ஷங்கர் மேனன் அவர்கள் இந்தியாவுக்கான இலங்கை தூதர் குணசிங்கே அவர்களை தமது அலுவலகத்திற்கு அழைத்து இலங்கை நிலவரம் குறித்து இந்தியாவின் கவலைகளை தெரியப்படுத்தியுள்ளார்.

வெள்ளியன்று நடந்த இந்த சந்திப்பின்போது, இந்த விவகாரத்தில் இந்தியாவின் கவலைகளை போக்கத்தக்க முறையான நடவடிக்கைகளை இலங்கை எடுக்கவேண்டும் என ஷிவ்ஷங்கர் மேனன் கோரியதாக இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தொல்லைக்குள்ளாகும் சம்பவங்கள் மற்றும் கொல்லப்படும் சம்பவங்கள் குறித்தும் இந்தியாவின் கவலைகளையும் அவர் அப்போது தெரியப்படுத்தியிருந்தார்.

இலங்கையில் தொடரும் மோதல்களின் காரணமாக இதில் சம்பந்தப்படாத பொதுமக்கள் சந்திக்கும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் வியாழனன்று தெரிவித்திருந்த பின்னணியில், இன்றைய இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பொதுமக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் தாக்குதல்களிலிருந்து பாதுக்காக்கப்பட வேண்டும் என்றும் பிரணாப் முகர்ஜி அவர்கள் கோரியிருந்தார். மேலும், அத்தியாவசியப் பொருட்கள் அவர்களை சென்றடைய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் பிரணாப் முகர்ஜி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இராணுவ ரீதியிலான வெற்றிகள் இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தாது என்றும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூக மக்களும் சமமாக வாழக்கூடிய அரசியல் ரீதியான தீர்வே சமாதானத்தை கொண்டுவரும் எனவும் அவர் வலியுறித்தியிருந்தார்.


இலங்கையின் வடக்கே மருத்துவ சேவையில் தட்டுப்பாடுகள்

கிளிநொச்சி நகரை ஒட்டி சமீபத்தில் அதிகரித்த தாக்குதல் சம்பவங்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கிழக்குப் பிரதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ள மக்கள் தமது சுகாதார தேவைகளுக்கு தர்மபுரம் மருத்துவ மனையை நாடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் நோயாளர்களின் அதிகரிப்பை சமாளிக்க அந்த மருத்துவமனையால் இயலவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இடம்பெயர்ந்துள்ள மக்கள் மத்தியில் வயிற்றோட்ட நோயும் பாம்புக்கடியும் அதிகமாகக் காணப்படுவதாக தர்மபுரம் வைத்தியசாலையின் பதில் மருத்துவ பொறுப்பதிகாரி டாக்டர் பிரசாத்நாயகம் பிரைட்டன் அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்திருக்கிறார்.

கடந்த வாரத்தி்ல் 200 பேருக்குமேல் பாம்புக்கடிக்கு உள்ளாகியிருப்பதாகவும் 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

வயிற்றோட்டம் பாம்புக்கடி ஆகியவற்றிற்குத் தேவையான முக்கிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் டாக்டர் பிரைட்டன் கூறுகின்றார்.

இது குறித்து தர்மபுரம் மருத்துவமனையின் பதில் பொறுப்பு வைத்திய அதிகாரி பிரதாப் நாயகம் பிரைட்டன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.


வன்னிக்கான உணவுத் தொடரணி மோதலால் திரும்பியது

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப்பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கென ஐநாவின் உலக உணவுத் தி்ட்டத்தினால் வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கு இரண்டாவது தொகுதியாக 750 மெட்றிக் டன் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற 50 ட்ரக் வண்டிகளும் ஓமந்தை சோதனைச்சாவடியைக் கடந்து புளியங்குளம் பிரதேசம் வரையில் சென்றதன் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக வவுனியாவுக்கே மீண்டும் திரும்பி வந்ததாக ஐ நாவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐநாவின் உதவி அமைப்புக்களும், சர்வதேச தொண்டு நிறுவனங்களும் போர் நெருக்கடிகள் சூழ்ந்துள்ள வன்னிப்பிரதேசத்திலிருந்து பாதுகாப்பு காரணங்களைக்காட்டி, அங்கிருந்து அரசாங்கத்தினால் வெளியேற்றப்பட்டதன் பின்னர் கடந்த 2 ஆம் திகதி உலக உணவுத் திட்டத்தின் முதல் தொகுதியாக 51 ட்ரக் வண்டிகளில் 750 மெட்றிக் டன் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் உள்ள ஐநாவின் உலக உணவுத் திட்ட களஞ்சியசாலையில் இராணுவத்தினரால் முழுமையாகச் சோதனையிடப்பட்டதன் பின்னர் இந்த 50 ட்ரக் வண்டிகளும் இன்று பகல் 12.30 மணியளவில் வன்னிப்பகுதியை நோக்கி ஐநாவின் கொடியுடன், உலக உணவுத் திட்ட அதிகாரிகளின் வழித்துணையோடு புறப்பட்டுச் சென்றன. எனினும் ஓமந்தைக்கு அப்பால் நிலவிய பாதுகாப்பற்ற நிலைமை காரணமாக இந்த ட்ரக் வண்டிகள் மீண்டும் வவுனியாவுக்கு சில மணித்தியாலங்களின் பின்னர் திரும்பி வந்து சேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வாகனத் தொடரணி புளியங்குளம் சந்தியைக் கடந்தபோது. விடுதலைப் புலிகள் ஏவிய மோட்டார் குண்டுகள் அந்தப் பிரதேசத்தில் வந்து வீழ்ந்து வெடித்ததனால், 50 ட்ரக் வண்டிகளும் தமது பயணத்தைக் கைவிட்டு திரும்பி வந்ததாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

இதேவேளை, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாட்டங்களுக்கென அத்தியாவசிய உணவுப் பொருட்களை வவுனியாவிலிருந்து ஏற்றிச் சென்ற 18 ட்ரக் வண்டிகளும் ஓமந்தை சோதனைச்சாவடியில் சோதனையிடப்பட்டதன் பின்னர் புளியங்குளம் நெடுங்கேணி வீதி வழியாகத் தமது பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டதாக வவுனியாவில் உள்ள அரச அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு மற்றும் விடுதலைப் புலிகளிடமிருந்து பாதுகாப்பு உத்திரவாதங்களைப் பெற்றுக் கொண்டு மீண்டும் இந்த வாகனத் தொடரணி வன்னிக்குச் செல்லும் என்று இலங்கையில் உள்ள ஐ நா பேச்சாளர் கார்டன் வைஸ் நம்பிக்கை வெளியிட்டார்.


புலிகளின் இரண்டு முக்கியத் தலைவர்களைக் கொன்றுவிட்டதாக இலங்கை இராணுவம் கூறுகிறது

முகமாலை பகுதியில் உள்ள புலிகளின் நிலைகள்
முகமாலை பகுதியில் உள்ள புலிகளின் நிலைகள்

இலங்கையின் வடக்கே முகமாலை முன்னரங்கப் பகுதியில் இன்று ராணுவத்தினர் விடுதலைப்புலிகள் மீது தொடுத்த தாக்குதல் ஒன்றில் புலிகளின் இரண்டு தலைவர்கள் கொல்லப்பட்டு, விடுதலைப்புலிகளுக்கு பெரும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டதாக ராணுவத் தலைமையக் விடுத்துள்ள இணையச் செய்திக்குறிப்பு கூறுகின்றது.

படைத்தரப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் , 9 பேர் காயமடைந்ததாகவும் அது கூறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ள தகவலில், மோதல்கள் நடந்ததை உறுதி செய்து, ஆனால் ராணுவத்தின் முன் நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டதாக கூறியிருக்கின்றனர். இந்த மோதல்களில் 15 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இரு தரப்பு கருத்துக்களையும் பக்கச்சார்பற்ற முறையில் உறுதிசெய்ய முடியவில்லை.


இலங்கைப் பிரச்சனையை முன்நிறுத்து வரும் 21 ஆம் தேதி சென்னையில் மனித சங்கிலி

முதல்வர் கருணாநிதி
முதல்வர் கருணாநிதி

இலங்கைத்தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு போர் நிறுத்தத்திற்கு முயற்சிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்துக் கட்சி கூட்டதீர்மானங்களை வலியுறுத்தி, சென்னையில் எதிர்வரும் அக்டோபர் 21ஆம் நாளன்று மனிதச்சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என
தமிழக முதல்வர் கருணாநிதி, அறிவித்திருக்கிறார்.

தமிழகம் முழுவதிலிருந்தும் மக்கள் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

திமுகவின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியில் கருத்து வெளியிட்டுள்ள கருணாநிதி, அ இ அ தி மு க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் அறிக்கையினை இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் ஆலோசகர் பாசில் ராஜபக்சே வரவேற்றிருப்பதை சுட்டிக்காட்டி, சிங்களர்களுக்கு ஆதரவாகவே ஜெயலலிதா செயல்படுகிறார் எனவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.


இலங்கை நிலவரம் தொடர்பில் இந்தியா மீண்டும் கவலை வெளியிட்டுள்ளது

இலங்கை நிலை குறிதத்து இந்தியா கவலை
இலங்கை நிலை குறிதத்து இந்தியா கவலை

இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் மோதல்களின் காரணமாக பொதுமக்கள் மீது ஏற்படும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து இந்தியா மீண்டும் கவலை தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் தாக்குதல்களிலிருந்து பாதுக்காக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

மேலும், அத்தியாவசியப் பொருட்கள் அவர்களை சென்றடைய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் பிரணாப் முகர்ஜி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இராணுவத் தீர்வு பிரச்சினைகளுக்கு தீர்வாகது என்றும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் ரீதியான தீர்வே காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறித்தியுள்ளார்.

இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் என்று கோரியுள்ள அவர் இந்திய அரசு இதை உறுதி செய்ய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

வன்னிப் பகுதிக்கு உணவுப் பொருட்களை ஏற்றிவந்த வண்டிகள் வழியிலேயே நிற்கின்றன

இலங்கையில் வன்னிப் பகுதிக்கு அவசரமாக உணவுப் பொருட்களுடன் அனுப்பிவைக்கப்பட்ட 20 ட்ரக் வண்டிகள் வழியிலேயே தேங்கி நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் வடக்கே மோதல்கள் இடம்பெற்றுவருகின்ற வன்னிப் பகுதிக்கும், வவுனியாவுக்கும் இடையிலான போக்குவரத்துப் பாதையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தை அடுத்து, உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்படுகின்ற இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களை அங்கு அனுப்பிவைக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த உணவுப் பொருட்கள் அவசரமாக அனுப்பப்பட்டிருந்தன.

புளியங்குளம் பகுதியில் அந்த வாகனத் தொடரணி தேங்கி நிற்பதாக அதனுடன் வவுனியாவிலிருந்து பிரயாணம் செய்த முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் அவர்கள் கூறுகின்றார்.

வவுனியாவுக்கும் வன்னிப்பகுதிக்கும் இடையில் ஏ9 வீதியில் நடைபெற்று வந்த போக்குவரத்து யுத்த மோதல்கள் காரணமாக மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதிக்கு மாற்றப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை இந்த போக்குவரத்து மார்க்கத்திலும் மாற்றம் செய்யப்பட்டு நெடுங்கேணி வழியாக பிரயாணம் செய்யுமாறு அறிவிக்கப்பட்ருந்தது. எனினும் இந்தப் புதிய வீதிவழியாக உணவுப் பொருட்களை அனுப்பிவைப்பதில் உலக உணவுத் திட்ட அதிகாரிகள் உடனடியாக உடன்படவில்லை.

இந்த நிலையிலேயே அராசங்கத்தின் உத்தரவுக்கமைய இன்று வன்னிப் பகுதிக்கு 20 ட்ரக் வண்டிகளில் அவசரமாக உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராகிய திருமதி பி.எஸ்.எம்.சார்ல்ஸ் அவர்கள் கூறினார்.

இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


விடுதலைப் புலிகள் சரண் அடைந்து ஜனநாயக வழிக்கு திரும்பவேண்டும் – இலங்கை ஜனாதிபதி கோரிக்கை

கூட்டத்தில் கலந்து கொண்ட த.ம.வி.பு தலைவர் கருணா, ஜனாதிபதியுடன்
கூட்டத்தில் கலந்து கொண்ட த.ம.வி.பு தலைவர் கருணா, ஜனாதிபதியுடன்

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கைவிட்டு, படையினரிடம் சரணடைந்து, தேசிய ஜனநாயக வழிக்குத் திரும்ப வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

சனிக்கிழமையன்று விசேட அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்றினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் கூட்டியிருந்தார்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளிற்கு மத்தியில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் தற்போதைய சூழ்நிலை குறித்தும், பயங்கரவாதத்தினை முற்றாக ஒழித்துக்கட்டி, நாட்டின் சகல பாகங்களிலும் அமைதியினையும் ஜனநாயகத்தினையும் ஏற்படுத்த தனது அரசு எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் கருத்து வெளியிட்டார்.

இந்தக் அனைத்துக்கட்சிக் கட்சிக் கூட்டத்தினை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், மூன்றாவது பெரிய அரசியல் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி எனப்படும், ஜே.வி.பியும் புறக்கணித்திருக்கின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கு இதில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் இந்தக் கூட்டத்தில் கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா அம்மான் கலந்து கொண்டார்.


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்

உடலை பார்த்து கதறியழும் உறவினர்கள்
உடலை பார்த்து கதறியழும் உறவினர்கள்

இலங்கையின் வடக்கே வவுனியா நகரில், ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளராகிய மகேஸ்வரன் தவச்செல்வம் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வவுனியா பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

வவுனியா ரயில்நிலைய வீதியில் அவரது வீட்டிற்கு அருகாமையில் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது சனிக்கிழமை பிற்பகல் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மோட்டார் சைக்கிளில் வந்ததாகத் தெரிவிக்கப்படும் ஆயுதபாணிகள் இவரைச் சுட்டுக்கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக பொலிசார் கூறியிருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை வன்னிக்களமுனைகளிலும், யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வெள்ளிகிழமை இடம்பெற்ற வெவ்வேறு சண்டைகளில் 5 இராணுவத்தினரும், 19 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டிருப்பதாகப் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எனினும், இந்தச் சண்டைகள், உயிர் இழப்புகள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


தற்கொலை குண்டுத் தாக்குதலில் தப்பினார் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர் பகுதியான பொறலஸ்கமுவ பகுதியில் வியாழன் பிற்பகல் இலங்கையின் மூத்த அமைச்சரவை அமைச்சரின் வாகனத் தொடரணிமீது மேற்கொள்ளப்பட்டுள்ள பெண் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் அமைச்சர் உயிர் தப்பியிருக்கிறார்.

ஆனாலும் அமைச்சரின் வாகனத் தொடரணிக்கு பாதுகாப்பாகச் சென்றுகொண்டிருந்த வாகனமொன்று இதில் சேதமடைந்திருக்கிறது.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிற்பகல் சுமார் 1.15 மணியளவில் களுத்துறை மாவட்டத்திலுள்ள பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற தேசிய விவசாய நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு கொழும்பு திரும்பிக்கொண்டிருந்த விவசாயத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை இலக்கு
வைத்தே இந்தத விடுதலைப்புலிகள் அமைப்பின் இந்தப்பெண் தற்கொலைக் குண்டுதாரி இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.

ஆனாலும் இதிலிருந்து அமைச்சரின் வாகனமும், அமைச்சரும் எவ்வித பாதிப்புக்களுமின்றி தப்பியிருப்பதாகவும், இந்த வாகனத்தொடரணியில் பயணித்துக்கொண்டிருந்த விவசாயத்துறை பிரதி அமைச்சர் சிறிசேன கம்லத் சிறிய காயங்களிற்கு உள்ளாகியிருப்பதாகவும் பிரிகேடியர் நாணயக்கார தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருந்த ஒருவர் பின்னர் கடுமையான காயம் காரணமாக பின்னர் உயிரிழந்ததாகவும், ஏனையோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


யாழ்குடா பகுதிக்கு வெளிநாட்டு தூதர்கள் விஜயம்

யாழ் மீனவர்கள்
யாழ் மீனவர்கள்

இலங்கையின் வடக்கே யாழ்குடாநாட்டிற்கு பிரித்தானியா மற்றும் நோர்வே நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் புதன் கிழமை விஜயம் செய்து, அங்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகள் குறித்து அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவராகிய யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரீ.விக்னராஜா அவர்களிடம் கேட்டறிந்துள்ளனர். இந்தத் தூதுவர்களுடன் ஐநாவின் அகதிகளுக்கான தூதரகத்தின் தலைமை வெளிக்கள அலுவர் ஈடா ஷூட் அவர்களும் சென்றிருந்தார்.

இந்தச்சந்திப்பு குறித்து, தசவல் தெரிவித்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரீ.விக்னராஜா அவர்கள், வலிகாமம் வடக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அங்கிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், முதற்கட்டமாக 24 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதுடன், மேலும் 133 குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்காக அவர்களின் காணிகள் அடையாளம் காணப்பட்டு அவற்றில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரித்தானியா மற்றும் நேரர்வே நாட்டு தூதுவர்களிடம் தெரிவித்ததாகக் கூறினார்.

மீள்குடியேற்றம் செய்யப்படும் மக்களின் வாழ்க்கை அங்கு சீரான முறையி்ல் இருப்பதற்குரிய தொடர்ச்சியான உதவிகள் அவர்களுக்கு வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை குறிப்பாக ஐநாவின் அகதிகளுக்கான தூதரக அதிகாரியிடம் எடுத்துக் கூறியதாகவும் இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைக்கான உயர் மட்டக்குழுவின் தலைவராகிய யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரீ.விக்னராஜா தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர்’ பீட்டர் ஹெய்ஸ், நோர்வே தூதுவர் டோ ஹெற்றரம் ஆகியோர் தலைமையில் 6 பேர் அடங்கிய இந்தக் குழுவினர் யாழ் அரசாங்க அதிபர் கே.கணேஷ் மற்றும் யரழ் ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆகியோரையும், யாழ் மாவட்ட நீதிக்கும் சமாதானத்திற்குமான குழுவினரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்கள்.



கிளிநொச்சிக்கு வடக்கே விமானப் படை குண்டுவீச்சு

விமானப் படை குண்டுவீச்சில் சிறுவன் காயமடைந்ததாக விடுதலைப் புலிகள் கூறுகின்றனர்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி நகருக்கு வடக்கே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பரந்தன் பகுதியில் குமரபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது வெள்ளியன்று விமானப் படையினர் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதலில் ஆசிரியை ஒருவரும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்.

அவ்வாசிரியையின் கணவனும் மற்றுமொரு மகனும் உட்பட 7 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இறந்தவர்களின் உடல்களும் கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருப்பதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

எனினும் பரந்தன் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய இலக்குகள் மூன்றின் மீது விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.


இலங்கை வடமாகாண ஆளுநராக டயல பண்டார நியமனம்

இலங்கையின் வடமாகாணத்தின் புதிய ஆளுனராக டிக்சன் டயல பண்டார அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷவினால் வெள்ளியன்று நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற வைபவமொன்றின்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டு டயல பண்டார பதவியேற்றிருக்கிறார்.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து ஒரு அதிகார அலகாக இணைக்கப்பட்டிருந்த வடகிழக்கு மாகாணம், கடந்த வருடம் நீதிமன்றத் தீர்ப்பொன்றின் பிரகாரம் வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாண அலகுககளாகப் பிரிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு மாகாணத்தின் முதலாவது ஆளுநராக முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா சில மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஜனாதிபதி செயலக வட்டாரங்களின் தகவல்களின்படி, விக்டர் பெராவின் பதவிவிலகலினால் எழுந்த வெற்றிடத்திற்கு ரத்தினபுரி மாவட்டத்தினைச் சேர்ந்த டயல பண்டார நியமிக்கப்படிருக்கிறார்.

விக்டர் பெரேராவின் பதவி விலகலுக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை.


இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த தமிழக அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிக்கப்போகிறோம்: அதிமுக, மதிமுக

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்கவென தமிழக முதலமைச்சர் கருணாநிதி எதிர்வரும் அக்டோபர் 14ஆம் நாளன்று கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை புறக்கணிக்கப்போவதாக அ.இ.அ.தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் அறிவித்திருக்கின்றன.

இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு தனது முழு ஆதரவும் உண்டு என்று கூறி வியாழனன்று நீண்டதொரு அறிக்கை வெளியிட்டிருந்த அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வெள்ளியன்று அனைத்துக் கட்சி கூட்டம் ஒரு கண் துடைப்பு நாடகம், தமிழ் மீனவர்கள் தாக்கப்படும்போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் கருணாநிதிக்கு உண்மையிலேயே இலங்கைத் தமிழர் மீது அக்கறை இருக்குமானால் மத்திய கூட்டணி அரசிலிருந்து விலகவேண்டும், இப்படிக் கூட்டம் நடத்துவதால் எவ்வித பயனும் இல்லை எனக் கூறி இருக்கிறார்.

இலங்கைத் தமிழர்க்கு ஆதரவாக சென்னையில் பேரணி ஒன்றை வெள்ளியன்று நடத்திய ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ, இலங்கை அரசுக்கு இந்தியா ராணுவ மற்றும் நிதி உதவி செய்வதைத் தடுத்து நிறுத்தாத கருணாநிதிக்கு இப்படி ஒரு கூட்டத்தினைக் கூட்ட உரிமை இல்லை எனக் கூறி இருக்கிறார்.

தமிழகத் தலைவர்களை சந்தித்துள்ளனர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்

தமிழகத்தில் இலங்கை தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவிருக்கின்ற நிலையில், தமிழ்தேசியக் கூட்டமைப்பினை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சென்னை சென்றுள்ளது.

அக்குழுவில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தமிழோசையிடம் கூறும்போது, தாங்கள் தமிழகத்தின் பல்வேறு முக்கிய தலைவர்களையும் சந்தித்து இலங்கை தமிழர்களின் பிரச்சனை குறித்து எடுத்துரைத்தாக கூறினார்.

அத்தோடு தற்போது இலங்கையில் நடைபெறும் யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும், ஐ.நா மன்றத்தின் தொண்டர் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து அனைத்துக் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் நேரில் சென்று நிலவரங்களை ஆராய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், யுத்தம் நிறுத்தப்பட்டு இந்தியா தலையீட்டு பேச்சுக்களை நடத்த வேண்டும் என்றும், இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தமிழகத் தலைவர்களிடம் தாங்கள் கூறியதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறினார்.

இந்த சந்திப்பு தொடர்பான மேலதிக செய்திகளையும், இவ்வாறான முன்னெடுப்புகள் எதிர்ப்பார்த்த பலனை அளிக்குமா என்பது குறித்தும் இலங்கை பகுப்பாய்வாளர் பேராசிரியர் கீதபொன்கலன் அவர்களின் கருத்துக்களையும் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையின் வடக்கே வன்னியில் 26 ஆயிரம் மாணவர்கள் இடம்பெயர்வு

இடம்பெயர்வால் கல்வி பாதிப்பு
இடம்பெயர்வால் கல்வி பாதிப்பு

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் குருகுலராஜா அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

இந்த மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிகக் கொட்டில்களை அமைக்க வேண்டியிருப்பதாகவும் அவற்றில் 40 கொட்டில்களை மிகவும் அவசரமாக உடனடியாக நிர்மாணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

இதற்குரிய உதவிகளைப் பெற்றுத் தருமாறு கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் அவர் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தேவைகள் குறித்து கிளிநொச்சி அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் அவர்களிடம் கேட்டபோது இந்தத் தேவைகளை கொழும்பில் உள்ள சிஎச்ஏ எனப்படும் மனிதாபிமான சேவைகளுக்கான நிலையத்தின் ஊடாகப் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இதுபற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டனர்

மீனவர்கள்
மீனவர்கள்

கடந்த முப்பது தினங்களாக கடலில் தவித்து கொண்டிருந்த தமிழகத்தின் சென்னையை சேர்ந்த ஆறு மீனவர்களை திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மீட்டு கரை சேர்ந்துள்ளனர்.

திருகோணமலை நீதிபதி மனாப் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட அவர்கள், அனைவரையும் குடிவரவு திணைக்களத்தின் ஊடாக இந்திய தூதுரக அதிகாரிகளிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டார்.

தமது நலன்கள் விடயத்தில் தமிழக கட்சிகள் எடுத்துள்ள முடிவுக்கு இலங்கையிலுள்ள தமிழ் கட்சிகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு

இந்த முன்னெடுப்புகளை தமது அமைப்பு வரவேற்கிறது என்றும் இது தொடர்பில் இந்திய அரசு செவிமடுக்கும் என தாங்கள் நம்புவதாகவும் அதன் நாடாளுமன்ற உறுப்பின்ர துரை ரட்ணசிங்கம் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்திய அரசு ஒரு முடிவை எடுத்து இலங்கை அரசுக்கு ஒரு அழுத்தம் கொடுத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, இருதரப்பினரையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்து தங்களுக்கு ஒரு நியாயமான தீர்வை தரவேண்டும் என்பதே தமது கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்கிற நம்பிக்கையும் தங்களுக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்

சித்தார்த்தன்
சித்தார்த்தன்

போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட வேண்டும் என தங்கள் அமைப்பும் விரும்புவதாக தெரிவித்த சித்தார்த்தன் அவர்கள், அவ்வாறு ஏற்படும் போது வன்னிப் பகுதியிலுள்ள மக்கள் தமது விருப்பபடி வெளியேறிச் செல்ல புலிகள் அனுமதிக்க வேண்டும் எனவும் தாங்கள் கோருவதாகவும் கூறினார்.

மேலும் போர் நிறுத்த உடன்பாடு ஒன்று ஏற்படுமானால், அது யுத்தம் நிரந்தரமாக முடிவுக்க வர வழிவகுக்க வேண்டும் என்பதே தமது அமைப்பின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

இலங்கை ஜனாதிபதியுடன் கருணா அவர்கள்
இலங்கை ஜனாதிபதியுடன் கருணா அவர்கள்

தமிழகத்திலே தேர்தல் காலங்கள் நெருங்குகிற போதெல்லாம் அங்குள்ள கட்சிகள் இலங்கை தமிழர்கள் நலன் என்கிற விடயத்தை பெருமளவில் முன்னெடுப்பதை காணக் கூடியதாக இருக்கிறது என்று கருத்து வெளியிட்டுள்ளார் இந்த அமைப்பின் தலைவரான கருணா எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன்.

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளும் மக்களும் இலங்கை தமிழ் மக்கள் மீது காட்டுகின்ற அக்கறை விடுதலைப் புலிகளை காப்பாற்றும் வெளிப்பாடாக இருக்கக் கூடாது என்பது தமது அமைப்பின் கருத்தாகும் எனவும் அவர் கூறினார்.

இந்திய அரசாங்கம் தற்போது வட இலங்கையில் நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு கூறுவது இலங்கைக்கு ஆபத்தாக அமையும் என தாங்கள் கருதுவதாகவும் கருணா கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் இறையாண்மையை மதித்து இந்திய தனது வெளிவிவகார கொள்கைகளை முன்னெடுக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறுகிறார்.

தமிழ் மக்களுக்கு உதவு இந்தியா முன்வந்தால் அதை இலங்கை அரசின் மூலம் செய்யப்படுவதையே தாங்கள் வரவேற்பதாகவும் கருணா கூறுகிறார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

ரவூஃப் ஹக்கீம்
ரவூஃப் ஹக்கீம்

இலங்கை தமிழர்கள் நலன் விடயத்தில் தற்போது தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் எடுத்து வரும் முன்னெடுப்புகள் போலித் தனமானது என தாங்கள் கருதுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூஃப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

எனிமும் தமிழக கட்சிகளின் நடவடிக்கைகளின் மூலம் இந்திய அரசு ஏதாவது முன்னெடுப்புகளுக்கு முன்வருமாயின் அதை வறவேற்பதாகவும் அவர் கூறுகிறார்.

இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்திய அரசு முஸ்லிம்களின் பரிமாணம் குறித்து தொடர்ந்தும் ஒரு பார்வையை கொண்டிருக்காதது பற்றி தாங்கள் வேதனைப் படுவதாகவும் ரவூஃப் ஹக்கீம் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான இராதாகிருஷ்ணன் ஆகியோர் உட்பட அனைவரும் வெளியிட்ட கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்கள் கவலையளிப்பதாக இருக்கின்றன: இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் புதன்கிழமையன்று இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்க நாடுகளின் உச்சிமாநாட்டின் முடிவில் அந்நாட்டுத் தலைவர்களுடன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, மன்மோகன் சிங் இக்கருத்தைத் தெரிவித்தார்.

இலங்கையில் இரண்டு வாரங்களுக்குள் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர இந்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பதவி விலகுவார்கள் என்று தமிழகத்தில் செவ்வாய்கிழமை மாலை திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தக் கூட்டத்தில், அதிமுக, மதிமுக, பாஜக, தேமுதிக கட்சிகள் பங்கேற்கவில்லை.

இந் நிலையில், இலங்கை நிலவரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மன்மோகன் சிங் அவர்கள் இலங்கையில் நிலவும் சூழ்நிலை, இந்திய அரசுக்கு மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என்று தெரிவித்தார்.

அங்கு அதிகரித்து வரும் மோதல்கள் குறித்தும், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்தும், உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தவர்கள் அதிகரித்திருப்பது குறித்தும், இந்திய மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும்போது அவர்கள் துன்புறுத்தப்படுவது மற்றும் கொல்லப்படுவது குறித்தும் கவலை கொள்வதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இராணுவ நடவடிக்கை தீர்வாகாது

இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இலங்கையில் நிலவும் சூழ்நிலைக்கு ராணுவ வெற்றி தீர்வாகாது என்றும், இலங்கையின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு உட்பட்டு, பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இந்தியா எப்போதும் நம்புகிறது. அதே நேரத்தில், தமிழ் சிறுபான்மையினரின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கருத்துத் தெரிவித்தார்.

வெளியுறவு கொள்கை குறித்து மாநில அரசுகள் மத்திய அரசை வற்புறுதக் கூடாது என்று கூறுகிறது காங்கிரஸ்

இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கருத்துத் தெரிவிக்கும்போது, நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவை என்று தெரிவித்தார்.

எங்கு தவறு நடந்தாலும் அதைக் கண்டிக்கும் அதே வேளையில், அதைவிடக் கூடுதலாக எதையும் செய்யவோ, செய்யுமாறு மத்திய அரசிடம் கேட்கவோ கூடாது. ஏனென்றால், இவை மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள். என்றார் அபிஷேக் சிங்வி.

இலங்கையின் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும்: பாஜக

பாஜகவைப் பொருத்தவரை, இலங்கையின் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு அமைதி ஏற்பட வேண்டும். அதே நேரத்தில், தமிழ் மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினையை இலங்கை அரசிடம் இந்திய அரசு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

JVP call for the island wide strike in Sri Lanka; Opposition MP Joseph Michael Perera blames army for attacks on media

Posted by Snapjudge மேல் ஜூலை 10, 2008

09 ஜுலை, 2008

இலங்கையில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு ஜே வி பி அழைப்பு

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவிற்கு முகம் கொடுக்கும் நோக்கில் அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களிற்கு 5000 ரூபா மாதாந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படவேண்டும், தோட்டத்துறை ஊழியர்களுக்கு நாளாந்த சம்பளம் 500 ரூபாவாக அதிகரிக்கப்படவேண்டும் என்பனபோன்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி வியாழக்கிழமை நாடுதழுவிய ரீதியில் பொதுவேலை நிறுத்தப் போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

இந்த ஏற்பாடுகள் குறித்து கருத்துவெளியிட்டுள்ள ஜே.வி.பி யின் தொழிற்சங்கங்களின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கே.டி.லால்காந்த, அரச துறையிலுள்ள சுமார் 90 சதவீதமான தொழிற்சங்கங்கள் நாளைய தினம் இடம்பெறவுள்ள பொதுவேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ள சம்மதித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் இது ஒரு அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் மட்டுமே எனக்கூறியுள்ள லால்காந்த இந்தப் போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்காது போனால் இவ்வாறான போராட்டங்கள் எதிர்காலத்தில் தொடரும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் இலங்கையின் அரசியலமைப்பின் 14வது சரத்திற்கு அமைய மேற்கொள்ளப்படும் இந்தப் போராட்டத்தினைத் தடுத்து நிறுத்தும் வகையில் அரசு பொய்யான பிரச்சாரங்களிலும், எதிர் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருவதாகவும் ஜே.வி.பி குற்றஞ்சாட்டியிருக்கிறது.

ஜே.வி.பியின் இந்த பொதுவேலை நிறுத்த அழைப்பிற்கு பிரதான எதிர்க்கட்சியான ஜக்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், ஆளும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கம் இதனை முறியடிக்கும்படி தனது உறுப்பினர்களிற்கு இன்று அழைப்பு விடுத்திருக்கிறது.


செய்தியாளர்கள் மீதான தாக்குதலுக்கு இலங்கை இராணுவத் தளபதியே காரணம் என்று குற்றச்சாட்டு

இலங்கை இராணுவத் தளபதி ஃபொன்சேகா
இராணுவத் தளபதி லெப். ஜென். சரத் ஃபொன்சேகா

இலங்கையில் செய்தியாளர்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு அந்நாட்டின் மிக மூத்த இராணுவ அதிகாரியே காரணம் என்று முக்கிய எதிர்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற கொறடாவான ஜோசப் மைக்கேல் பெரேரா, இவ்வாறு செய்தியாளர்கள் மீதான தாக்குதலை நடத்துவதற்காகவே ஒரு சிறப்பு குழு இராணுவத் தளபதி லெப்டிண்ட் ஜெனரல் சரத் ஃபொன்சேகா அவர்களின் கட்டுப்பாட்டில் செயல்படுவதாக கூறியுள்ளார்.

ஆனால் இராணுவப் பேச்சாளர் இதை மறுத்துள்ளார்.

இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு முழு யுத்தத்தை அரசு நடத்தி வரும் நிலையில், ஊடகச் சுதந்திரம் குறித்து மனித உரிமை அமைப்புகளின் அதிகரித்து வரும் கவலைகளுக்கு இடையே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி மீதான இந்தக் குற்றச்சாட்டை எதிர் கட்சி உறுப்பினரான ஜோசப் மைக்கேல் பெரேரா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவரது இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார இது குறித்த ஆதாரம் நாடாளுமன்ற உறுப்பினர் வசம் இருக்குமாயின் அவர் போலீஸிடம் அதை எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கடந்த வாரம், எந்த ஒரு நிறுவனத்தையும் சாராமல், ராணுவ விவகாரங்கள் குறித்து எழுதி வரும் ஒரு தனிப்பட்ட செய்தியாளரும் கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரியும் ஒரு வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தப்போது மறைந்திருந்தவர்களால் உருட்டுக் கட்டைகளினால் தாக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் செய்தியாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர். 2005 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடக்கம் இதுவரை ஊடகத்துறையைச் சேர்ந்த 12 பணியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

போர் செய்திகளை வெளியிடுபவர்கள் துரோகிகள்

இலங்கையின் வடக்கே கடும் போர் நடைபெற்றுவருகிறது
இலங்கையின் வடக்கே கடும் போர் இடம்பெறுகிறது

இதனிடையே நாட்டில் நடைபெற்று வரும் போர் தொடர்பான செய்திகளை, ஒருதலைப் பட்சமாகவும் பொறுப்பற்ற வகையிலும் வெளியிடுவதாக தாம் கருதுவதற்கு எதிராக தமது கடுமையான ஆட்சேபணைகளை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

போரின் போது விடுதலைப் புலிகள் தரப்பில் ஏற்படும் இழப்புகள் குறித்து அதிகாரபூர்வமாக இராணுவம் வெளியிடும் தகவல்கள் குறித்த கேள்விகளை எழுப்புவது, இராணுவத்தில் வழங்கப்படும் பதவி உயர்வுகளை வினவுவது, இராணுவ தளவாடங்கள் வாங்குவதில் ஊழல் ஏற்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டுவது போன்ற செய்திகளை வெளியிடுபவர்களை துரோகிகள் என்றும் விரோதிகள் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் முத்திரை குத்தியுள்ளது.


யாழிலிருந்து கொழும்பு செல்ல புதிய கட்டுப்பாடுகள்

யாழ் பஸ் நிலையம்
யாழ் பஸ் நிலையம்

இலங்கையின் வடக்கே இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ் பிரதேசத்திலிருந்து வெளியிடங்களுக்குச் செல்வதற்குப் படையினரால் வழங்கப்படும் பிரயாண அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாற்றம் காரணமாக பிரயாண அனுமதி பெறுவதற்கு சுமார் 2 வாரம் காலம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு செல்லும் ஒருவர் தனது பிரயாணத்திற்கான காரணத்தை ஆதாரபூர்வமாகத் தெளிவுபடுத்தும் அதேவேளை, அங்கு தங்கியிருக்கப் போகும் உறவினர் அல்லது நண்பர்கள், தெரிந்தவர்களின் முழு விபரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்பதுடன், இந்த விபரங்கள் பொலிசாரின் ஊடாக அங்கு சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதிப்படுத்தப்பட்டு அது தொடர்பான அறிக்கை யாழ்ப்பாணத்தில் உள்ள படையினருக்குக் கிடைத்த பின்பே பிரயாண அனுமதி வழங்கப்படும் என்று யாழ்ப்பாணத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் பாக்கி

இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் பனம் இல்லை
கிரிக்கெட் வாரியத்திடம் பணம் இல்லை?

சமீபத்தில் ஆசியக் கோப்பையில் வெற்றிவாகை சூடிய, இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று இப்போது தெரியவந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் முந்தைய ஒப்பந்தம் பிப்ரவரிமாதத்தில் முடிவுக்கு வந்தது. கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய தலைவர் பொறுப்பேற்றதாலும், அணி வீரர்கள் வெளிநாடுகளுக்கு விளையாட சென்றிருந்ததாலும் இந்த காலதாமதம் ஏற்பட்டதாக கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்தார்.

கிரிக்கெட் வாரிய அதிகாரிகளும் விளையாட்டு வீரர்களும் இந்த பிரச்சினை குறித்து வியாழக்கிழமையன்று விவாதிக்கவுள்ளனர்.


07 ஜுலை, 2008

மன்னார் படுகை எண்ணெய் அகழ்வாய்வு: இலங்கை அரசுடன் இந்திய நிறுவனம் உடன்படிக்கை

மன்னாய் படுகையில் எண்ணெய் மற்றும் இயற்கை வாயுவை அகழ்வாய்வு செய்யும் அனுமதிக்கான பெட்ரோலிய வள உடன்படிக்கையொன்றில் இலங்கை அரசாங்கமும், கெயின் இந்தியா நிறுவனமும் திங்களன்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் மூத்த அமைச்சர்மார் முன்னிலையில் கைச்சாத்திட்டுக்கொண்டன.

அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட வைபவமொன்றில் இலங்கை அரசின் சார்பில் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியும், கெயின் இந்தியா நிறுவனத்தின் சார்பின் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளரும், பிரதம நிதி அலுவலருமான இந்திரஜித் பனர்ஜியும் கைச்சாத்திட்டனர்.

பின்னர் இடம்பெற்ற ஊடவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய இந்திரஜித் பனர்ஜி, இலங்கைக் கடற்பரப்பில் மன்னார் படுகை அகழ்வாய்விற்கு உட்படுத்தப்படவில்லை என்பதால் அந்த வகையில் அது ஒரு முன்னிலை பெட்ரோலிய வலயத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.

அத்துடன் ஆசியப் பிராந்தியத்தில் எண்ணெய் அகழ்வாய்வு வேலையில் அனுபவம்மிக்க தமது நிறுவனம், இங்கே வர்த்தகப்படுத்தக்கூடிய அளவிற்கு ஹைட்ரோகாபன் இருக்கிறதா என்பதனை உறுதிப்படுத்த பல மில்லியன் டாலர்கள்களை முதலீடுசெய்து, சிறந்த தொழில்நுட்பங்கள், மற்றும் தொழில்துறை நடைமுறைகளை பிரயோகிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


ஓமந்தை சோதனைச் சாவடி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

இலங்கையின் வடக்கே கடந்த ஒரு வார காலமாக மூடப்பட்டிருந்த ஓமந்தை சோதனைச் சாவடி பொதுமக்களின் போக்குவரத்துக்காக திங்களன்று பிற்பகல் திறக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சோதனைச் சாவடியில் உள்ள தமது அலுவலகத்தை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் மூடியிருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக பிரயாணம் செய்யும் பொதுமக்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைக் குழு பிரதிநிதிகள் ஆகியோரின் பாதுகாப்பு உரிய அதிகாரிகளினால் உறுதிப்படுத்தப்படும் வரையில் இந்த சோதனைச் சாவடியில் இருந்து தாங்கள் தற்காலிகமாக விலகியிருக்கப்போவதாக என்று சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் கூறியிருந்தனர்.

தற்போது ஓமந்தை சோதனைச் சாவடி தொகுதியில் பொதுமக்களினதும், தமது பிரதிநிதிகளினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, புதன் பிற்பகல் 3 மணிக்கு சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் ஓமந்தை சோதனைச் சாவடிக்குத் திரும்பியுள்ளதாக அந்தக் குழுவின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ண தெரிவித்தார்.

சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் கடமைக்குத் திரும்பியதை அடுத்து திறக்கப்பட்ட ஓமந்தை சோதனைச் சாவடி திங்களன்று சுமார் ஒரு மணித்தியாலம் மாத்திரமே திறந்திருந்ததாகவும், அரச ஊழியர்கள், பொதுமக்கள் என சுமார் 50 பேர்வரையில் மாத்திரமே வன்னிப்பகுதிக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் ஓமந்தை சோதனைச்சாவடிக்குச் சென்று தமது பிரயாணத்தைத் தொடரமுடியாமல் மீண்டும் வவுனியா நகருக்குத் திரும்பி வந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வன்னிப்பிரதேசத்திலிருந்து எவரும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இன்று வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் நாளை முதல் பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் வன்னிப் பிரதேசத்திற்கான அத்தியாவசிய பொருள் விநியோகம், வாகனப் போக்குவரத்து என்பன வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Posted in Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Sri lanka: Ambarai District – Two policemen murdered

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2008

அம்பாறையில் இரு போலீசார் கொலை

அம்பாறை நகர்
அம்பாறை நகர்

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் கல்முனை நகரப் பகுதியில் இன்று காலை இரண்டு பொலிஸ்காரர்கள், அடையாளம் தெரியாத ஆட்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள்.

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இவர்கள் இருவரும், கல்முனை நீதிமன்றத்துக்கு கடமையின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில், தரவை பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில், மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கி தாரிகளினால் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விடுதலைப்புலிகள் மீதே பொலிஸார் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர், அதாவது கடந்த 40 நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 7 பேரும், அம்பாறை மாவட்டத்தில் இரண்டு பேருமாக மொத்தம் 9 பொலிஸார் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, திருகோணமலை மாவட்டம், மூதூர் மணற்சேனை என்னும் இடத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவைச் சேர்ந்த ஒருவரைத் தாம் சுட்டுக்கொன்றதாக இலங்கை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

அந்தப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை ஒன்றின்போது, கொல்லப்பட்டவர், விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்டத்துக்கான தென்பிராந்திய புலனாய்வுப் பிரிவுத் தலைவரான, தங்கன் என்று அழைக்கப்படும் சௌந்திரராஜன் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


Posted in Govt, Law, Order, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Earaavoor tense, Police imposes curfew & Consecration of Deputy Bishop held in Batticaloa

Posted by Snapjudge மேல் மே 25, 2008

ஏறாவூரில் பதட்டம் தொடர்கிறது

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கிழக்கு மாகாண சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கலாநிதி. வெள்ளைதம்பி அமீரூதின் அவர்கள், காணாமல் போன இருவரும் பணி நிமித்தமாக மட்டக்களப்புக்கு சென்று மீண்டும் ஏறாவூர் திரும்பும் போதே காணாமல் போனதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக பொலிஸ் மற்றும் அரச அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டப்போது, இரண்டு தினங்களாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என தமிழோசையிடம் தெரிவித்தார். மேலும் தற்போது இருக்கின்ற நிலையில் எந்த அமைப்பின் மீதும் சந்தேகப்பட கூடிய நிலையில் இல்லை என்றும் அவர் கூறினார்.


இலங்கையில் கிழக்கிலிருந்து முதலாவது ஆயர் நியமனம்

துணை ஆயர் பொன்னையா ஜோசப்
துணை ஆயர் பொன்னையா ஜோசப்

இலங்கையில் கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் கிழக்கு மாகாணத்திலிருந்து முதலாவது ஆயராக நியமனம் பெற்ற மட்டக்களப்பு தன்னாமுனையைச் சேர்ந்த பேரருட் திரு பொன்னையா ஜோசப் அவர்கள் சனிக்கிழமை திருகோணமலை மறை மாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் விசேட திருப் பலிப்பூசை
நடைபெற்று திருநிலை ஒப்புக் கொடுத்தல் நிகழ்வு சனிக்கிழமையன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான வாட்டிகன் பிரதிநிதி வண.மரியோ செனாரி மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் கத்தோலிக்க ஆயராக
முதற்தடவையாக நியமிக்கப்பட்டுள்ளமை அம்மாகாண கத்தோலிக்கர்களை பொறுத்தவரை சிறப்பு வாய்ந்த நிகழ்வாகவே கருதப்படுகிறது.

இம்மாகாணத்தில் வாழும் மூவின மக்களும் ஒற்றுமையுடனும் ஐக்கியத்துடனும் வாழ வேண்டும் யுத்தத்தின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதே மக்களுக்கு தான் விடுக்கும் செய்தி ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட ஜோசப் பொன்னையா ஆண்டகை குறிப்பிடுகின்றார்.


Posted in Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »