Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Polls’

ஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை?

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 7, 2009

கருணாநிதி விளக்கம்

ஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கடித வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுமுகம்

2009-ம் ஆண்டு மே திங்கள் 13-ம் நாள் நடைபெறும் 15-வது நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு. கழகத்தின் சார்பில் போட்டியிடுகின்ற 21 வேட்பாளர்களின் பட்டியலை-பரபரப்பு எதுவுமின்றி-பத்திரிகையாளர் சந்திப்பு இன்றி-தட்டச்சு செய்து ஏடுகளுக்கு அனுப்பப்பட்டு-அது ஏடுகளிலும் வெளிவந்துள்ளது. நமது அணியின் தோழமைக் கட்சிகள் சார்பில் மற்ற 19 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ளது.

ஒவ்வொரு தேர்தலிலும் புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை எழுவதும்- செய்தியாளர்கள் அதனை ஒரு கேள்வியாகக் கேட்பதும்- புது முகங்களும் இருப்பார்கள் என்று பதில் சொல்வதும் வாடிக்கையான ஒன்று. இந்த முறையும் அந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்பட்டு, புது முகங்களுக்கு நிச்சயமாக வாய்ப்பு அளிக்கப்படும் என்று பதில் கூறியிருந்தேன்.

தேர்தலையொட்டி நான் கூறிய இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதை பட்டியலைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆமாம், 21 பெயர்கள் கொண்ட இந்தப் பட்டியலில் 13 பேர் 14-வது நாடாளுமன்றத்தில் இடம் பெறாதவர்கள்- கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த 15 பேர்களில் 8 பேர்கள் மட்டுமே தற்போதைய பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள். அதாவது பழைய முகம் 8 – புதிய முகம் 13.

வருத்தம் அளிக்கிறது

கடந்த முறை பட்டியலிலே இடம் பெற்றிருந்த ஏழு பேர்களுக்கு இந்த முறை வாய்ப்பளிக்கப் படவில்லை என்பதில் எனக்கு மிகவும் வருத்தம்தான். இதற்கும் அண்ணா கூறிய உவமையைக் கூற வேண்டுமென்றால்- பீரோ நிறைய ஏராளமான பட்டுப் புடவைகள் இருந்த போதிலும்- இன்று செல்லும் இந்தத் திருமணத்திற்கு இந்தக் கலர் பட்டுப் புடவையை எடுத்துக் கட்டிக்கொள்கிறேன் என்றால், அடுத்து இன்னொரு திருமணத் திற்குச் செல்லும்போது மற்றொரு புடவையை எடுத்துக் கட்டிக்கொள்வேன். இன்று இதனைக்கட்டிக்கொள்வதால் மற்றது எல்லாம் பிடிக்காது என்று அர்த்தமல்ல என்று சொன்னதைப் போல இந்தத் தேர்தலுக்கு இவர்கள் வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த முறை உறுப்பினர்களாக இருந்த ஏழு பேர்களுக்கு இந்த முறை வாய்ப்பளிக்கப்படவில்லை என்று எழுதியதில்- தம்பி ரகுபதி, தம்பி வேங்கடபதி, தங்கை சுப்புலட்சுமி ஜெகதீசன், தங்கை ராதிகா செல்வி ஆகியோர் அமைச்சர்களாகவே பங்கேற்று திறம்பட செயல்பட்டவர்கள்.

இவர்களில் தங்கை சுப்புலட்சுமி ஜெகதீசன் தேர்தலுக்கு பதினைந்து நாட்களுக்கு முன்பாகவே என்னைச் சந்தித்து- “இந்த முறை குடும்ப சூழ்நிலை காரணமாக நான் போட்டியிடவில்லை, வேறு ஒருவருக்கு வாய்ப்பளிக்கலாம்” என்று கைப்பட கடிதமே எழுதி கொடுத்தபோது-இப்படியே ஒவ்வொருவரும் இருந்தால் என்று ஒரு கணம் நினைத்தேன்.

அமைச்சராக இருந்த தம்பி ரகுபதியின் புதுக்கோட்டை தொகுதியே இந்த முறை காணாமல் போய்- புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியே திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குப் போய்விட்டது. அதோடு திருச்சி நாடாளுமன்றத் தொகுதி- தம்பி வேங்கடபதி போட்டியிட்ட கடலூர் நாடாளுமன்றத் தொகுதி- தங்கை ராதிகாசெல்வி கோரிய திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி ஆகிய மூன்றும் தொகுதி உடன்பாட்டின்போது காங்கிரஸ் கட்சிக்கு பகிர்ந்து கொள்ளப்பட்டுவிட்டது.

பெண்களுக்கு முக்கியத்துவம்

இவர்கள் தவிர கடந்தமுறை நாடாளுமன்றத்தில் கழக உறுப்பினர்களாக இருந்த தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் தலைவர்- பாட்டாளிகளின் நம்பிக்கை நட்சத்திரம் தம்பி குப்புசாமிக்கு; வயது, உடல் நிலை காரணமாகவும்-ஒரு பெண்ணுக்கு இத்தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக தம்பி கிருஷ்ணசாமிக்கும் – புதியவர் ஒருவருக்கு ராமனாதபுரம் தொகுதியிலே வாய்ப்பு தர வேண்டுமென்பதற்காக; தங்கை பவானி ராஜேந்திரனுக்கும் இம்முறை வாய்ப்பளிக்க முடியாமல் போய் விட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் இப்போது பயன்படுத்தப்படாவிட்டாலும், வருங்காலத்தில் அடுத்தடுத்து வரும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் இவர்கள் வாய்ப்புக்கு உரியவர்களாவார்கள். குறிப்பாக தம்பி கிருஷ்ணசாமி நேற்று காலையில் என்னை சந்தித்து வாய்ப்பு கேட்டபோது- இந்தமுறை பெண்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க முடியாமல் இருக்கிறது, உன் தொகுதியிலாவது உனக்குப் பதிலாக ஒரு பெண்ணை நிறுத்தலாம் என்று நினைக்கிறேன், யாரை நிறுத்தலாம் என்று நீயே யோசனை கூறு என்று சொன்னவுடன், சரி அண்ணே, அழைத்து வருகிறோம் என்று கூறி அவரும் மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி சிவாஜியும் சென்று- தற்போது நிறுத்தப்பட்டுள்ள சகோதரி காயத்ரி ஸ்ரீதரனை அழைத்து வந்தார்கள்.

அந்தக் காயத்ரி யார் தெரியுமா? பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராகவும், பிறகு என்னுடனே சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த பழம்பெரும் கழக நண்பர் கிண்டி கோபாலின் பேத்தி என்கிறபோது நான் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

எந்த அளவிற்கு தம்பி கிருஷ்ணசாமி பெருந்தன்மையோடு நடந்து கொண்டார் என்பதை எண்ணி நான் எனக்குள்ளேயே பெருமைப்பட்டுக் கொண்டேன். இன்னும் சொல்லப்போனால் அவரது செயல்பாட்டில் எனக்கோ, கழகத்திற்கோ எந்தவிதமான குறைபாடும் இல்லை. இருந்தாலும் தனக்கு வாய்ப்பு தரப்படவில்லை என்பதை அவர் பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டார்.

தூத்துக்குடி

இது போலவே தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி பெரியசாமியின் புதல்வர் போட்டியிட மனு செய்திருந்தார். அந்தத் தொகுதியிலிருந்து வந்திருந்த மாவட்டக் கழக நிர்வாகிகள் எல்லாம் அவரைத்தான் பரிந்துரையும் செய்திருந்தார்கள். அதற்குப் பக்கத்து தொகுதியான திருநெல்வேலிக்கு மனு செய்திருந்த சகோதரி ராதிகா செல்விக்கு அந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்குப் பகிர்ந்து கொள்ளப்பட்டுவிட்ட காரணத்தால்-தூத்துக்குடி தொகுதியிலாவது வாய்ப்பு தரலாமா என்றும் யோசிக்கப்பட்டது. அவரிடமும் அதுபற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.

அவர் தனக்கு வாய்ப்பு தரவேண்டும் என்பதைவிட, அந்தத் தொகுதியிலே கழகம் வெற்றிபெற வேண்டியது முக்கியம் என்பதை நினைவூட்டினார். பின்னர் மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி பெரியசாமியை வரவழைத்துப் பேசினேன். அப்போது அவர் அண்ணே, நானோ மாவட்டக் கழகச் செயலாளர், என் பெண்ணோ அமைச்சராக இருக்கிறார், இதிலே என் மகனுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்றால் ஒரு சிலர் அசூயை கொள்ள நேரிடும் என்று அவரே முன்வந்து கூறியதோடு எழுதியும் கொடுத்தார்.

வாய்ப்பு

பின்னர் நான் அவரிடம் நீயே யோசனை சொல், யாரை நிறுத்தலாம் என்று கேட்டபோது, அவரே ஒருவரை அழைத்து வந்து, இவரை நிறுத்தலாம், வெற்றிக்கனியைக் கொண்டு வருகிறேன் என்று சொன்னதின் பேரில்-தன் குடும்ப நலனைவிட, கழகத்தின் நலனைப் பெரிதாகக் கருதிய அந்தத் தம்பியை வாழ்த்திவிட்டு, அவர் அழைத்து வந்தவரையே அந்தத் தொகுதியிலே வேட்பாளராக நிறுத்தியிருக்கிறோம்.

அவரைப் போலவே வாய்ப்பு கிடைக்காத மற்றவர்களும் பெருந்தன்மையாக இந்தமுறை வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அடுத்தமுறை நிச்சயம் கிடைக்கும் என்று நினைத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் 1999-ம் ஆண்டு கடலூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தம்பி ஆதிசங்கருக்கு 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக தம்பி வேங்கடபதிக்கு அந்தத் தொகுதியிலே வாய்ப்பு தரப்பட்டு அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தார்.

கடந்தமுறை வாய்ப்பு தரப்படவில்லை என்பதற்காக தம்பி ஆதிசங்கர் கோபித்துக் கொண்டு சோர்வுற்றுவிடவில்லை. முறையாக கழகப் பணிகளை ஆர்வமுடன் தொடர்ந்து ஆற்றி வந்தார். இப்போது மீண்டும் ஆதி சங்கருக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. எனவே அண்ணா சொன்னதைப் போல மாறி மாறி வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கும்.

தாங்க முடியாத வலி

நேர்காணல் பணிக்காக இரண்டு நாட்கள் காலை முதல் இரவு வரை சக்கர நாற்காலியை விட்டு நான் இறங்காமல் உட்கார்ந்திருந்ததை உடன்பிறப்பே, நீ நன்கறிவாய். பேராசிரியர் போன்றவர்கள், நீங்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள், நாங்கள் பார்க்கிறோம் என்று சொன்னபோது கூட, நான் கேட்கவில்லை. ஏனென்றால் தகுந்தவர்களை தேர்வுசெய்து வேட்பாளர்களாக உன்முன் கொண்டு வந்து நிறுத்தினால், நீ மக்களிடம் சென்று அவர்களுக்காக வாக்குகளை முறையாகச் சேர்க்க முடியுமென்பதற்காகத் தான் என் சிரமத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அமர்ந்திருந்தேன்.

அப்படி அமர்ந்திருந்ததின் விளைவை நேற்று அதிகாலை 3 மணி அளவில் என்னால் உணர முடிந்தது. ஆமாம், அறுவை சிகிச்சை செய்துகொண்ட இடத்திற்கு கீழே இடுப்பு மற்றும் கால் பகுதியில் கடுமையான வலி. வீட்டாரிடமும், மருத்துவரிடமும் வலி பற்றி கூறினால்- தொடர்ந்து பலமணி நேரம் உட்கார்ந்திருந்ததைக் கூறி; அவர்கள் நம்மைத் தான் கோபிப்பார்கள் என்பதற்காக வலியைப் பொறுத்துக் கொள்ளப் பார்த்தும் முடியவில்லை. வலியையும் பொறுத்துக் கொண்டு-இரண்டு மூன்று தொகுதிகளுக்கு சரியான வேட்பாளரை நிர்ணயிக்க முடியவில்லையே என்பதற்காக அந்த இரவு நேரத்தில் தம்பி துரைமுருகனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரையும், சில மாவட்டக் கழகச் செயலாளர்களையும் வரச்செய்து பேசினேன். தொடர்ந்து அதே நேரத்தில்தான் திருவள்ளூர் தொகுதி பற்றி சிந்தித்து, மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி சிவாஜியையும், தம்பி கிருஷ்ணசாமியையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களை நேரில் வரச்செய்து, அந்த தொகுதி பற்றி முடிவெடுத்து அறிவித்தோம்.

பட்டதாரிகள்

கழகத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள 21 வேட்பாளர்களில் ஒருவரைத் தவிர அனைவருமே பட்டதாரிகள்- ஒரு சிலர்பட்ட மேற்படிப்பு படித்தவர்கள். கழகத் தலைமையின் சார்பில் தோழமைக் கட்சிகளோடு கலந்து பேசி தொகுதி உடன்பாடு கண்டு-தேர்தல் அறிக்கை வெளியிட்டு-வேட்பாளர்களையும் தேர்வு செய்து அறிவித்துவிட்டோம். வாக்காளர்களிடம் சென்று மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளைப் பட்டியலிட்டு-இத்தகைய சாதனைகள் மேலும் தொடர்ந்திட இந்த அணியினை ஆதரிக்க வேண்டுமென்று கேட்டு வெற்றியைத் தேடித்தர வேண்டிய பொறுப்பு கூட்டணிக் கட்சிகளின் முன்னணி தோழர்களுக்கும் இருக்கிறது. அந்தப் பணியிலே அவர்கள் எல்லாம் ஈடுபட வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன்.

அதற்கான உந்து சக்தியை நமது தோழமைக் கட்சிகளான அனைத்துக் கட்சி உடன்பிறப்புகளுக்கும் வழங்க வேண்டிய பொறுப்பு உனக்கு உண்டு என்பதை மறவாதே – தேர்தல் களம் அழைக்கிறது, புறப்படு!

இவ்வாறு அறிக்கையில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

Posted in Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | Leave a Comment »

Bihar raw deal: Tit for tat: Cong seals deal with JMM in Jharkhand: Shibu Soren to fight both LS and assembly polls

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2009

ஜார்க்கண்டில் பங்கீடு: காங்கிரஸ்-7, ஜே.எம்.எம்.-5

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 7 மக்களவைத் தொகுதியிலும், சிபு சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 5 இடங்களிலும் போட்டியிடும். லாலு பிரசாத் கட்சிக்கு எஞ்சிய 2 தொகுதிகள் விடப்பட்டுள்ளன. இம் மாநிலத்தில் மொத்தமே 14 மக்களவைத் தொகுதிகள்தான்.

பிகாரில் காங்கிரஸ் கட்சியை அவமதிக்கும் வகையில் அதற்கு 3 தொகுதிகளை மட்டுமே விட்டுவைத்துவிட்டு எஞ்சியவற்றை லாலு பிரசாதும் ராம்விலாஸ் பாஸ்வானும் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டனர். அதற்குப் பதிலடி தருவதைப்போல இந்த ஒதுக்கீடு அமைந்திருக்கிறது. இதற்கு முன்பு நடந்த பேச்சில் காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகளும் லாலு கட்சிக்கு 3 தொகுதிகளும் தரப்படும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் இப்போது லாலு கட்சிக்கு ஓரிடத்தைக் குறைத்து, காங்கிரஸ் கட்சிக்கு ஓரிடத்தை அதிகப்படுத்திவிட்டனர்.

லாலு இதை ஏற்பாரா என்று தெரியவில்லை.

கோதர்மா, ஹஸôரிபாக் ஆகிய இரு தொகுதிகள் யாருக்கு என்பதில்தான் காங்கிரஸ் ஆர்ஜேடி ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையில் கடும் போட்டி இருந்தது. கடந்த முறை கோதர்மாவில் பாபுலால் மராண்டியும், ஹஸôரிபாக் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வென்றன. பாபுலால் மராண்டி முன்னாள் பாஜக தலைவர். சுயேச்சையாக கோதர்மாவில் வென்றார். ஹஸôரிபாக்கில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலேயே இல்லை. எனவே இத் தொகுதிகளைப் பெறுவதில் இரு கட்சிகளுக்கும் இடையில் போட்டி நிலவியது.

இந்த இரண்டைத் தவிர எஞ்சிய 12 தொகுதிகளும் காங்கிரஸ் ஜேஎம்எம் ஆர்ஜேடி ஆகிய 3 கட்சிகளுமே போட்டியிட்டு வெற்றி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in India, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | Leave a Comment »

Reporters Woes in covering the upcoming India Elections 2009: Media Pass from EC

Posted by Snapjudge மேல் மார்ச் 18, 2009

நிருபர்களுக்கு தடை போடுகிறது தேர்தல் ஆணையம்

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளுக்கு மட்டுமின்றி பத்திரிகையாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் கடுமையான கெடுபிடிகளை அமல்படுத்தி வருகிறது.

வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை நியாயமாக, நேர்மையாக நடக்கிறதா என்பதற்கு பத்திரிகைகளும், ஊடகங்களும்தான் சாட்சி. ஆனால், மே மாதம் நடக்கும் மக்களவைத் தேர்தலில் அந்த சாட்சிகள், முன்பு போல வாக்குச் சாவடிக்குள்ளோ, வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள்ளோ எளிதில் சென்று எதையும் பார்க்க முடியாது.

ஒரு தொகுதிக்கு ஒரு நிருபர், ஒரு புகைப்படக்காரர் என்ற அளவில் முன்பு தேர்தல் ஆணையம் அங்கீகார அட்டை கொடுத்ததால் பல பகுதிகளுக்குச் சென்று செய்தி சேகரிக்க முடிந்தது. நிருபர்கள், புகைப்படக்காரர்கள் நடமாட்டம் இருக்கும் என அரசியல் கட்சிகளும் சற்று கவனமாகவே இருந்தன.

ஆனால், இப்போது ஒரு மாவட்டத்துக்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிருபர் அல்லது புகைப்படக்காரர் மட்டும்தான் இந்த அங்கீகார அட்டை பெற முடியும்.

சென்னை மாவட்டத்தில் 3 தொகுதிகள் உள்ளன. வாக்கு எண்ணிக்கை வெவ்வேறு இடங்களில் நடக்கும். ஆனால் ஒருவர் மட்டும் எல்லா இடங்களையும் பார்ப்பது சிரமம்.

இது அரசியல் கட்சிகளுக்கு மிகவும் வசதியான ஏற்பாடாக அமைந்துவிடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதிலும்கூட தொலைக்காட்சிகளுக்கு இரண்டு பேருக்கு அங்கீகார அட்டை தர முன்வந்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

நியாயமான, நேர்மையான தேர்தல் நடப்பதை உறுதி செய்கிறோம் என்று கூறி, வேட்பாளருடன் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு வரம்பு, செலவுக்கு வரம்பு, பிரசாரத்துக்கு வரம்பு என அறிவித்துவிட்டு, அதைக் கண்காணிப்பதில் உதவியாக இருக்கும் செய்தியாளர்களுக்கு தடை விதித்ததைப் போன்ற நிலையை உருவாக்குவது சரியில்லை என்று நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.

தேர்தல் ஆணையம் இதுபற்றி மறு பரிசீலனை செய்து முன்புபோல தாராளமாக வாக்குச் சாவடி, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் சென்று வர அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டை தருவதற்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கலாமே தவிர, எண்ணிக்கையைக் குறைப்பது சரியாக இருக்காது என்பது நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.

Posted in Govt, India, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | 1 Comment »

CPI(M) Election Manifeto released

Posted by Snapjudge மேல் மார்ச் 17, 2009

ஆட்சியில் பங்கு பெறுவோம்: காரத்

தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத். உடன் கட்சியின் முன்னணித் தலைவர்கள் (இடமிருந்து) பிருந்தா காரத், சீதாராம் யெச்சூரி, எம்.கே. பாண்டே, முகமது அமின்.

புது தில்லி, மார்ச் 16: மத்தியில் மூன்றாவது அணி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்தால், அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.

மத்தியில் பாஜக, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக கூறிய அவர், அதை விவரிக்க மறுத்து விட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை தில்லியில் திங்கள்கிழமை வெளியிட்டு அவர் மேலும் கூறியது:

மூன்றாவது அணி ஆட்சியமைத்தால் வழக்கம்போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிலிருந்து ஆதரவு தருமா? அல்லது அமைச்சரவையில் இடம்பெறுமா? என்று கேட்டதற்கு, அமைச்சரவையில் சேரும் வாய்ப்புகளை புறக்கணிக்க முடியாது என்றார்.

இதற்கு முன்னர் ஏற்பட்ட காங்கிரஸ் அல்லாத மத்திய அமைச்சரவையில் (தேவ கெüட மற்றும் ஐ.கே. குஜ்ரால்) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி (ஆர்எஸ்பி) இடம்பெறவில்லை. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றது.

மூன்றாவது அணியில் மேலும் சில கட்சிகள் சேரும் என்று குறிப்பிட்ட காரத், இந்த அணிக்கு யார் வருவார்கள், யார் வரமாட்டார்கள் என்பதை இப்போதே கூற முடியாது. மூன்றாவது அணி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தால் அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். அதேபோல இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தில் நமது நாட்டை பாதிக்கும் விஷயங்கள் மாற்றப்படும்.

ஸ்விட்சர்லாந்து வங்கியில் கோடிக்கணக்கில் பணம் போட்டுள்ள இந்தியர்களின் பட்டியலை வெளிக் கொணர காங்கிரஸ் அரசு முயற்சிக்க வேண்டும். மூன்றாவது அணியில் ஒன்று திரண்டுள்ள கட்சிகள் அனைத்தும் ஒரு பொது நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இணைந்துள்ளன. தில்லியில் மாயாவதி ஞாயிற்றுக்கிழமை அளித்த விருந்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை என்றாலும், விருந்தில் பேசப்பட்ட விஷயங்கள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகளில் அவருக்கு முழு உடன்பாடு உள்ளது.

மதச்சார்பின்மையைக் காப்பது, கட்டுப்படுத்தப்பட்ட தாராளமயம், சுயசார்புடனான வெளியுறவுக் கொள்கை ஆகியன மூன்றாவது அணி ஏற்றுக் கொண்ட முக்கியமான கொள்கைகளாகும்.

குறைந்தபட்ச செயல்திட்டத்தை அமல்படுத்தும் ஒரு அணியாக மத்தியில் மூன்றாவது அணி ஆட்சியமைக்கும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்தபோதிலும், தொடர்ந்து எதிர்ப்பையும் மீறி பணக்காரர்களுக்கு சாதகமான கொள்கைகளையே மன்மோகன் சிங் செயல்படுத்தினார் என்று கடுமையாக சாடினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாகிவிட்டனர். குறைந்தபட்ச செயல்திட்டத்திலிருந்து விலகியதே இதற்குக் காரணம். நாட்டில் ஏழை, பணக்காரர்களிடையிலான இடைவெளி அதிகரித்ததற்கு மன்மோகன் சிங் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான் காரணமாகும்.

இருப்பினும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததால்தான் தனியார் வங்கிகளின் முதலீட்டு வரம்பை 74 சதவீதமாக உயர்த்தாமல் விட்டனர். அதேபோல காப்பீட்டு நிறுவனங்களில் அன்னிய முதலீடு 49 சதவீதமாக உயர்த்துவது தடுக்கப்பட்டது.

பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே தேர்தலை சந்திப்பது புதிய விஷயமல்ல. இந்த முடிவை கடந்த செப்டம்பரிலேயே மாயாவதி கூறிவிட்டார். மூன்றாவது அணியில் உள்ள கட்சிகள் தேர்தலுக்குப் பிறகு ஒன்றிணைவது என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியுடன் கம்யூனிஸ்ட் கூட்டு சேருமா? என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் காரத்.

சந்தர்ப்ப வசத்தால் பாஜகவுடன் கூட்டு சேர்ந்திருந்த தெலுங்கு தேசம் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் முந்தைய கூட்டணியிலிருந்து பாடம் கற்றுவிட்டன. அவை கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நிச்சயம் இருக்கும்.

ஜார்க்கண்ட் விகாஸ் மஞ்ச் மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சிகள் தற்போது மூன்றாவது அணியில் இணைந்துள்ளது மேலும் வலுசேர்த்துள்ளது என்றார் காரத்.

பொது விநியோகத் திட்டம் நாடு முழுவதும் ஒரே சீராக அமல்படுத்தப்படும். பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைக்கப்படும். சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் நுழைவது தடுக்கப்படும். காப்பீட்டுத் துறை தனியார் மயமாகாது. ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தடுக்கப்படும். தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும். கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க சட்டம் கொண்டு வரப்படும். தேர்தலுக்கு தனி நிதியம் ஏற்படுத்தப்பட்டு அரசியல் கட்சிகளுக்கு தனியார் நிறுவனங்கள் நிதி அளிப்பது தடுத்து நிறுத்தப்படும். ஒட்டுமொத்த உற்பத்தியில் 6 சதவீதம் கல்வி வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Posted in Economy, India, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | 1 Comment »

PMK Alliance: Anbumani Ramdoss DMK Affiliation vs ADMK Victory Calculations

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2009

திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதி கேட்கிறது பாமக?

மறுவரையறை தொகுதிகளால் சோகத்தில் ஆழ்ந்துள்ள அரசியல்வாதிகள்திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பாமக கூடுதல் தொகுதி கேட்டு வருவதாகத் தெரிகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. இதில்

  • திமுக-16,
  • காங்கிரஸ்-10,
  • பாமக-6,
  • மதிமுக-4,
  • இரு கம்யூனிஸ்டுகள்-4

என்ற ரீதியில் தொகுதிகளை பங்கிட்டுக் கொண்டன.

பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டது. அப்போது திமுக கூட்டணியில் இருந்த மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது அக் கூட்டணியில் இல்லை. அக் கட்சிகளுக்கு வழங்கிய 8 தொகுதிகள் திமுக கூட்டணியில் கூடுதலாக உள்ளன.
இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள் பாமகவிடம் கூட்டணி குறித்து பேசியுள்ளனர். அவர்களிடம் கூடுதலாக உள்ள எட்டு தொகுதியில் இருந்து தங்களுக்கு இரு தொகுதிகளை வழங்க வேண்டும் என்று பாமக கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது. குறைந்தபட்சம் 7 நாடாளுமன்றத் தொகுதி, ஒரு மாநிலங்களவைத் உறுப்பினர் பதவியாவது வழங்க வேண்டும் என்று பாமக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக மற்றும் காங்கிரஸ் வட்டாரங்களை கேட்டபோது தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. மேலும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புக்கும் இம் முறை தொகுதி ஒதுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே பாமக கூடுதல் தொகுதி ஒதுக்கக் கோருவது குறித்து உடனடியாக பதில் அளிக்கப்படவில்லை என்றனர்.

இச் சூழ்நிலையில் திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து பாமக வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்து வருகிறது. விரும்பிய எண்ணிக்கையில் இடங்கள், விரும்பிய தொகுதிகள் தங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து பாமக பொதுக்குழு கூட்டப்பட்டு உடனடியாக அறிவிப்பு வெளியிடப்படலாம் என்கின்றன.

Posted in Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Who will win? Congress vs BJP: Neeraja Chowdhry: India Elections 2009 Analysis

Posted by Snapjudge மேல் மார்ச் 12, 2009

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பின்னடைவு

நீரஜா சௌத்ரி

கடந்த வாரம் பத்திரிகையாளரும் பாரதீய ஜனதா எம்.பி.யுமான சந்தன் மித்ரா, புவனேசுவரத்துக்கு அவசரப் பயணம் மேற்கொண்டபோது பாஜக -பிஜு ஜனதாதளம் இடையிலான கூட்டணி முறிந்துபோகும் என்று கனவில்கூட எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்.

ஒரிசாவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணி முறிந்தால் தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவும். பிஜு ஜனதாதள அரசும் சரியாகச் செயல்படவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வென்று தனிப்பெருங்கட்சியாக உருவாக வாய்ப்புள்ளது என்பது தெரியவந்ததால்தான் மித்ரா, புவனேசுவரம் சென்றார்.

இந்த கருத்துக்கணிப்புகளுடன்தான் மித்ரா, முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார். இருவரும் சுமார் இரண்டரை மணி நேரம் பேச்சு நடத்தினர். மித்ரா சொன்ன தகவல்களைக் கேட்ட நவீன் பட்நாயக், பாஜகவுடன் கூட்டணி தொடர்ந்தால் மீண்டும் முதல்வராக முடியாது என்பதை உணர்ந்து கொண்டார்.

மித்ராவை உடனடியாகத் திரும்பிச் செல்ல வேண்டாம் என்றும் ஒரு நாள் தங்கிச் செல்லுமாறும் பட்நாயக் கேட்டுக் கொண்டார். அடுத்த நாள் மித்ரா, பட்நாயக்கை சந்திக்கச் சென்றபோது, “உங்கள் கட்சிக்கு சட்டப்பேரவைக்கு 31 தொகுதிகளும், மக்களவைக்கு 5 தொகுதிகளும்தான் தர முடியும்’ என்று கூறினார் (தற்போது பாஜகவுக்கு 32 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 9 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன).

தற்போது நவீன் பட்நாயக், பாஜகவுக்கு தர முன்வந்துள்ள தொகுதிகளை தேர்தலில் பாஜக கைப்பற்றிவிடுமா என்பதையும் உறுதியாகச் சொல்வதற்கில்லை. ஆனால், எங்களால் இதுதான் முடியும் என்பதை அவர் தெளிவாகச் சொல்லிவிட்டார். இந்த முடிவை பாஜக ஏற்றுக்கொள்ளாது என்பதும் அவருக்குத் தெரியும்.

பாஜகவுக்கு 31 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 5 மக்களவைத் தொகுதிகளும் ஒதுக்க பிஜு ஜனதாதளம் முன்வந்துள்ளதை அக்கட்சித் தலைமை ஏற்க முன்வராவிட்டால் என்ன செய்வது என்று மித்ரா கேட்டதற்கு, இதை ஏற்பதா, நிராகரிப்பதா என்பதை அவர்கள்தான் (பாஜக) முடிவு செய்யவேண்டும் என்று நவீன் தெரிவித்துவிட்டார்.

ஒரிசா மாநிலத்தில் தற்போதுள்ள அரசியல் உண்மை நிலவரத்தை கணக்குப் போட்டு பார்த்த பின்னர்தான் நவீன் இந்த முடிவுக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

தேர்தல் கூட்டணியை மீண்டும் உறுதி செய்யும் நோக்கில்தான், சந்தன் மித்ரா, பாஜக தலைவர் எல்.கே.அத்வானியின் சிறப்புத் தூதராக புவனேசுவரம் சென்றார். பாஜகவுக்கு தர முன்வந்துள்ள தொகுதிகள் குறித்து, நான் அத்வானியிடம் ஆலோசனை கலந்த பிறகுதான் எதுவும் சொல்ல முடியும். அதுவரை அவசரப்பட்டு கூட்டணிக்கு எதிரான முடிவு எதையும் எடுக்கவேண்டாம் என்று மித்ரா, நவீன் பட்நாயக்கிடம் கூறியிருந்தார். ஆனால், அதுவரை காத்திருக்க முடியாது என்று கூறி அவர் மறுத்துவிட்டார்.

நவீன் பட்நாயக் இந்த முடிவுக்கு வர பிஜு ஜனதாதளம் கட்சி எம்.பி.யான ஜெய் பாண்டாவும் பிஜு பட்நாயக்கிடம் முன்னர் முதன்மைச் செயலராக இருந்த பி.மோகன் மகாபாத்ராவும்தான் காரணம் என்று பாஜக கருதுகிறது.

கடந்த ஆண்டு கந்தமால் மாவட்டத்தில் வகுப்பு மோதல் நடந்ததிலிருந்தே சங்கப் பரிவாரங்களின் முன்னணி அமைப்பான பாஜக மீது, நவீன்பட்நாயக் அதிருப்தி கொண்டிருந்தார் என்பது வெளிப்படையான விஷயம்.

இப்போது பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டதன் மூலம் வரும் தேர்தலில் அவர் “ரிஸ்க்’ எடுக்கத் தயாராகி வருகிறார். இடதுசாரிக் கட்சிகள், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்துகொள்ளவும் அவர் முன்வந்துள்ளார்.

தேர்தலுக்குப் பிறகு தனது கட்சியின் வெற்றியைப் பொருத்து மூன்றாவது அணியுடன் கூட்டு சேரவும் அவர் முற்படலாம். நவீன் பட்நாயக்கின் இந்த திடீர் முடிவு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரான எல்.கே.அத்வானிக்கு பலத்த அடியாகும்.

கடந்த மக்களவைத் தேர்தலில் அத்வானியின் கட்சி 138 இடங்களில் வென்றிருந்தது. இந்தத் தேர்தலில் எப்படியும் 180 இடங்களைக் கைப்பற்றிவிடலாம் என்று எண்ணியிருந்த பாஜக, இனி அதிக இடங்களை வெல்ல கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

உத்தரப் பிரதேசத்தில் அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோகதளம் கட்சி, ஹரியாணாவில் ஓம்பிரகாஷ் சௌதாலாவின் இந்திய தேசிய லோகதளம் கட்சி, அசாமில் அசாம் கணபரிஷத் கட்சி ஆகியவை பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிதாக இடம்பெற்றுள்ளன. இருந்தபோதிலும் பிஜு ஜனதாதளத்துடன் கூட்டணி முறிந்தது, அதற்கு பலத்த பின்னடைவாகும்.

மகாராஷ்டிரத்தில் பாஜகவும் சிவசேனையும் கூட்டணி வைத்துள்ளன. ஆனால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பிரதமராக ஆதரவு அளிப்போம் என்று சிவசேனை கூறிவருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக எல்.கே.அத்வானி உள்ளார். எனவே அவரைத்தான் சிவசேனை ஆதரிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் கூறிவருகின்றனர்.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டால்தான் பாஜக-சிவசேனை இடையிலான கூட்டணியின் தொகுதிப் பங்கீடு வெளிப்படையாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி பாஜக கூட்டணியிலிருந்து விலகாது என்றாலும், அதிக இடங்கள் ஒதுக்கக் கோரி அது பாஜகவை நிர்பந்திக்கலாம். பிகாரில் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், பாஸ்வானின் லோக ஜனசக்தி, காங்கிரஸ் ஆகிய மூன்றும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதால் நிதீஷ்குமார் கடும் போட்டியைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் சில அரசியல் கட்சிகள் கூட்டு சேருவதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே வரும் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

2009 தேர்தலில் அத்வானி தவிர, பிரதமராகும் வாய்ப்பு மூன்று பேருக்கு உள்ளது. இதை அந்தந்த அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தால் மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராக வாய்ப்பு உள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க முற்பட்டு அதற்கு இடதுசாரிகள் ஆதரவு தெரிவிக்க முன்வந்தால், மன்மோகன் சிங்கை அவர்கள் பிரதமராக ஏற்க முன்வர மாட்டார்கள். அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை பிரதமர் பதவிக்குத் தேர்ந்தெடுக்குமாறு சோனியாவை வற்புறுத்தலாம்.

இந்தச் சூழ்நிலையில் சோனியாவுக்கு நம்பகமானவரும், தலித் வகுப்பைச் சேர்ந்தவருமான சுஷில் குமார் ஷிண்டே பிரதமராக வாய்ப்பு உள்ளது. பிரணாப் முகர்ஜியோ அல்லது ப.சிதம்பரமோ பிரதமராக வருவதில் சோனியாவுக்கு அவ்வளவு விருப்பம் இல்லை.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சியுடனும், கர்நாடகத்தில் தேவ கௌடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியுடனும் காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்படவில்லை. இந்த இரு மாநிலங்களிலும் கூட்டணி ஏற்பட்டால் காங்கிரஸ் தனது வெற்றி எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், தமிழகத்தில் திமுக ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தாலும் 2004-ம் ஆண்டு தேர்தலில் கிடைத்த வெற்றி தொடருமா என்பதை உறுதிபடக் கூறமுடியாது. இந்தச் சூழ்நிலையில் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளரை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே.

கடந்த முறை இடதுசாரிக் கட்சிகள் காங்கிரஸ் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது. ஆனால், இந்த முறை காங்கிரஸ், பாஜகவை இடதுசாரிகள் ஆதரிக்கத் தயாராக இல்லை. தங்களுடன் கூட்டணி வைக்காவிட்டாலும் மாயாவதி பிரதமர் ஆவதை அவர்கள் ஆதரிக்கக்கூடும். இவையெல்லாமே மக்களவைத் தேர்தல் முடிவுகளைப் பொருத்தது.

மாயாவதி கட்சிக்கு 65 இடங்கள் வரை கிடைத்து, மற்ற பிராந்தியக் கட்சிகள் அவரை ஆதரிக்க முன்வந்து பிரதான கட்சிகளில் ஒன்றும் அவரை ஆதரிக்க முன்வந்தால் மாயாவதி பிரதமராக சாத்தியக் கூறுகள் உள்ளன.

மாயாவதியைப் போலவே பிராந்தியக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கக்கூடிய தலைவர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார். சிவசேனை கட்சி, பவார் பிரதமர் ஆவதை ஆதரிக்கிறது.

மேலும் சமாஜவாதி கட்சித் தலைவர்களில் ஒருவரான அமர்சிங்கும் பவார் பிரதமர் ஆவதை ஆதரிக்கத் தயாராக இருக்கிறார்.

அரசியல் உலகில் பவாருக்கு நண்பர்கள் பலர் உள்ளனர். கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு பல சமயங்களில் அவர் நிதியுதவி அளித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவர் தேவ கௌடா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களுடன் அவருக்கு நெருங்கிய உறவு இருக்கிறது. ஒரிசா மாநிலத்தில்கூட ஒன்று அல்லது இரு இடங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சி போட்டியிட தொகுதி ஒதுக்கீடு செய்ய பிஜு ஜனதாதளத்தின் நவீன் பட்நாயக் முன்வந்துள்ளார்.

ஒரிசாவில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் மூன்றாவது அணிக்கு ஆறுதலாக இருக்கும்.

தற்போதுள்ள சூழ்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இன்னும் சொல்லப்போனால் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு 2004-ம் ஆண்டு தேர்தலில் கிடைத்த இடங்களைவிட குறைவான இடங்களே இந்தத் தேர்தலில் கிடைக்கும். அதாவது 15-வது மக்களவையும் தொங்கு நாடாளுமன்றமாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

நீரஜா சௌத்ரி

கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரை சந்தித்த போது, “கூட்டணி அமைப்பதற்கு நான் எதிரானவன். இது எனது தனிப்பட்ட கருத்து’ என்று கூறினார். ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டுமானால் கட்சியைப் பலப்படுத்த வேண்டும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டால் 2014 வரை எதிர்க்கட்சி வரிசையில் இருப்பது நல்லது என்றும் அவர் கூறினார்.

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நெருக்கமானவரும், பிறகட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி ஏற்பட முக்கிய பங்கு வகிப்பவருமான அந்த மூத்த தலைவர் கூறிய கருத்து எனக்கு வியப்பை அளித்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான். இதேபோல ஏழை மக்களின் நலனுக்காக தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நாடு முழுவதும் கொண்டுவந்து செயல்படுத்தியதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான்.

கடந்த 5 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏழை மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. ஆனால், காங்கிரஸ் தனது சாதனைகளை தொண்டர்கள் மூலம் அனைத்து மக்களிடமும் தகுந்த நேரத்தில் விளம்பரப்படுத்தத் தவறிவிட்டது.

மக்களவைக்குத் தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி இப்போது செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்கள் கொடுத்து மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக் கூறிவருகிறது.

வாசகர்களில் ஒருசிலர் காங்கிரஸ் அரசின் சாதனைகளைப் படித்து மகிழ்வார்கள். ஆனால், பொருளாதாரச் சரிவு, நிதி நெருக்கடி இருக்கும் நேரத்தில் இதுபோன்று மக்கள் பணத்தை வீணடிக்கலாமா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

மீண்டும் மூத்த காங்கிரஸ் பிரமுகர் கூறிய கருத்துக்கு வருவோம். பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதைவிட தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதே மேல் என்பது அவரது கருத்து.

நாட்டில் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ், எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டு எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் பரவாயில்லை என்று தேர்தல் சமயத்தில் முடிவுக்கு வருவது அவ்வளவு நல்லதல்ல.

சில ஆண்டுகளுக்கு முன்னரோ அல்லது சில மாதங்களுக்கு முன்னரோ தொடங்கப்பட்ட கட்சியைப் பற்றி நாம் இப்போது பேசவில்லை. காங்கிரஸ் நீண்டகாலமாக இருந்துவரும் கட்சி. அதன் வலிமை அனைவருக்கும் தெரியும். எனவே புதிய கட்சியாக இருந்தால்தான் எதிர்க்கட்சி அந்தஸ்தாவது கிடைக்கட்டும் என்று காத்திருக்கலாம்.

பஞ்சமர்ஹி முதல் சிம்லா வரையில் நடைபெற்ற பல்வேறு கட்சி மாநாடுகளில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி, அது செயல்படும் முறை, தேர்தல் உத்தி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதே மேல் என்று ஒரு காலத்தில் கூறிவந்த காங்கிரஸ், இப்போது கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதில் தவறில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது.

2009-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? எந்த ஒரு கட்சியும் தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது. கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு முன் உள்ள முதல் சவால், தேர்தலில் அதிக இடங்களில் வென்று தனிப்பெருங்கட்சியாக வருவது யார் என்பதுதான். அப்படியொரு நிலை காங்கிரஸýக்கோ அல்லது பாஜகவுக்கோ ஏற்பட்டால், ஆட்சியமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் அழைப்பார். அதன் பின் ஆட்சியமைப்பதற்கு பிராந்தியக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவது முடிவு செய்யப்படும்.

தேர்தலுக்கு முன் கூட்டணி ஏற்பட்டாலும், தேர்தலுக்குப் பின் அணி மாறும் வாய்ப்பு உள்ளது என்பதை அனைத்து அரசியல் கட்சிகளுமே உணர்ந்துகொண்டுள்ளன.

காங்கிரஸ், பாஜக போன்ற பெரிய கட்சிகள் தேர்தலுக்கு முன் கூட்டணி அமைத்துக் கொள்வதே தங்களின் வெற்றி எண்ணிக்கையை உயர்த்திக் கொள்வதற்குத்தான். இது அனைவரும் அறிந்த உண்மை.

பாஜக ஏற்கெனவே தேர்தல் கூட்டணி அமைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்கெனவே அகாலிதளம், சிவசேனை, பிஜு ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவை தவிர இந்திய தேசிய லோக தளம் (ஹரியாணா), அசாம் கணபரிஷத் (அசாம்) ஆகியவையும் இக் கூட்டணியில் சேர்ந்துள்ளன.

2004 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியிலிருந்து அஇஅதிமுக, தெலுங்கு தேசம் கட்சி, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை வெளியேறிவிட்டன.

அஇஅதிமுகவும், தெலுங்கு தேசம் கட்சியும் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்துள்ளன. காங்கிரஸýடன் தேர்தல் கூட்டுக்குத் தயாராக இருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தேர்தல் கூட்டணியைப் பொருத்தவரை பாஜகவைவிட காங்கிரஸ் வலுவானதாக உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தமிழ்நாட்டில் திமுகவும், பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதாதளமும், மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளன.

இது தவிர மேலும் மூன்று மாநிலங்களில் கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடனும், கர்நாடகத்தில் தேவகௌட தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியுடனும், உத்தரப்பிரதேசத்தில் முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சியுடனும் தேர்தல் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ள காங்கிரஸ் முயன்று வருகிறது.

பிகாரில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளத்தை சமாளிக்கும் வகையில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம், பாஸ்வானின் லோக் ஜனசக்தி ஆகிய மூன்றும் கூட்டணி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியும், திரிணமூல் காங்கிரஸýம் தேர்தல் கூட்டு வைத்துக் கொள்ள சாத்தியக்கூறுகள் உள்ளன. அண்மையில் பிரணாப் முகர்ஜி மேற்குவங்க மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் எதையும் சாதிக்கும் திறன் படைத்தவர்.

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியுடன் பேசி அக்கட்சியுடன் அவர் தேர்தல் கூட்டுவைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பார். இந்த விஷயத்தில் அவர் சோனியாவின் ஒப்புதல் இல்லாமல் எதையும் செய்யமாட்டார்.

2008-ல் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலை கணக்கிட்டுப் பார்த்தால் சில விஷயங்கள் புரியவரும். அங்கு மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 12 இடங்களில் வெல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதேபோல காங்கிரஸ் 3 அல்லது 4 இடங்களில் வெற்றிபெறக்கூடும்.

காங்கிரஸýடன் தேர்தல் கூட்டு வைத்துக் கொள்வது தனது கட்சிக்கு நலன் பயக்கும் என்பதை மம்தா பானர்ஜி நன்கு உணர்ந்து கொண்டுள்ளார். ஏன் தான் போட்டியிடும் தெற்கு கோல்கத்தா தொகுதியில் வெற்றிபெற காங்கிரஸ் உதவிகரமாக இருக்கும் என்பது அவரது எண்ணம்.

கர்நாடக மாநிலத்தில் 2008-ல் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன. அங்கு பாஜக ஆட்சியமைத்துள்ள போதிலும் பாஜகவைவிட காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் அதிகமானதாகும். அங்கு காங்கிரஸ் 28 மக்களவைத் தொகுதிகளில் 14 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு உள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 10 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் 4 இடங்களிலும் வென்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி, மதச் சார்பற்ற ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் அதிக இடங்களை வெல்லக்கூடும்.

மேலும் இவ்விரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பாஜகவுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும். அங்கு பாஜக இப்போது ஆட்சியில் இருந்தாலும் 2004-ம் ஆண்டு தேர்தலில் வென்ற 18 இடங்களை அது தக்கவைத்துக் கொள்ளுமா என்பது சந்தேகமே.

ஹிந்தி பேசும் மக்கள் அதிகம் உள்ள மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜவாதி கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டால் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி எப்படியும் 45 முதல் 50 இடங்களை வென்றுவிடும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.

காங்கிரஸ் கட்சியும், முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் மாயாவதி கட்சிக்கு 30 இடங்களுக்கு மேல் கிடைக்காது.

சமாஜவாதியுடன் கூட்டணி அமைக்க வேண்டுமானால் தங்களுக்கு 25 இடங்களாவது ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. தேர்தல் கூட்டு பற்றி இரு கட்சிகளும் தலைவர்களும் அடிக்கடி பேசி வருகிறார்களே தவிர இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. உ.பி. மாநில அரசியல் நிலவரத்தைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் முடிவு செய்வது நல்லது.

மேற்குறிப்பிட்ட நான்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் பிராந்தியக் கட்சிகள் தேர்தல் கூட்டு ஏற்படுத்திக் கொண்டாலும் அதனால் அதிக பலன் அடையப் போவது பிராந்தியக் கட்சிகள்தான். ஆனால், அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சியும் தனது எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்பது வெளிப்படையான உண்மை.

இந்த கூட்டணி மூலம் காங்கிரஸ் கட்சிக்கு 15 இடங்கள் கிடைத்தால்கூட அது அதிக இடங்களில் வென்ற தனிப்பெரும் கட்சியாக உருவாகி ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால், காங்கிரஸ் கட்சி இப்போதே தன்னை “பெரியண்ணன்’ போல் நினைத்துக் கொண்டு செயல்படுகிறது. அதாவது இன்னும் சொல்லப்போனால், 2004-ம் ஆண்டு தேர்தலில் “இந்தியா ஒளிர்கிறது’ என்று பாஜக அதீதமாக செயல்பட்டதைப் போல காங்கிரஸ் நிலை உள்ளது. காங்கிரஸ் தனது நிலையை உணர்ந்து தேர்தல் கூட்டணி அமைத்துச் செயல்பட்டால் அது வெற்றிக்கு வலுசேர்க்கும். இதை காங்கிரஸôர் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

Posted in India | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , | 1 Comment »

Tirupur or Namakkal: EVKS Ilangovan

Posted by Snapjudge மேல் மார்ச் 11, 2009

“பனியன்’ நகரில் களமிறங்குகிறார் ஜவுளி அமைச்சர்?

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பூர் தொகுதியில், மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

ஈரோடு மாவட்டத்தின் கோபி மக்களவையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இளங்கோவன், மத்திய அமைச்சரவையில் முதலில் வர்த்தக இணை அமைச்சராக இருந்தார். தற்போது ஜவுளித் துறை இணை அமைச்சராக உள்ளார்.

தொகுதி சீரமைப்புக்குப் பிறகு கோபி மக்களவையில் இருந்த

  • பெருந்துறை,
  • பவானி,
  • அந்தியூர்,
  • கோபிசெட்டிப்பாளையம்,
  • திருப்பூர் வடக்கு,
  • திருப்பூர் தெற்கு

பேரவைத் தொகுதிகளை இணைத்து புதிதாக திருப்பூர் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இருந்த கோபி தொகுதியில் அதிமுக 7 முறையும், காங்கிரஸ் 4 முறையும், திமுக ஒரு முறையும் வென்றுள்ளன.

காங்கிரஸýடன் முதல் முறையாக எம்ஜிஆர் கூட்டணி அமைத்து 1980-ல் மக்களவைத் தேர்தலைச் சந்தித்தபோது தமிழகத்தில் 2 தொகுதிகளில் மட்டுமே இந்த அணி வெற்றி பெற்றது. அப்போது கோபி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜி.சின்னசாமி வெற்றி பெற்றார்.

அதைத் தொடர்ந்து காங்கிரஸýக்கு வலுவான அடித்தளம் உள்ள தொகுதிகளின் பட்டியலில் கோபியும் இருந்து வருகிறது.

2004-ல் அதிமுக வேட்பாளரை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் வென்றார். அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக எம்.பி.க்களில் இளங்கோவனும் ஒருவர்.

தொகுதி சீரமைப்பில் கோபி மக்களவை நீக்கப்பட்டுள்ளதால் வேறு தொகுதிக்கு மாற வேண்டிய நிலையில் உள்ளார். ஈரோடு, நாமக்கல், திருப்பூர் ஆகிய தொகுதிகளுக்கு வாய்ப்பு இருந்தாலும் அவரது விருப்பம் திருப்பூராகவே உள்ளது. ஈரோடு தொகுதியை திமுக கேட்டு வருவதால், அத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு குறைவு.

முக்கியமாக, திருப்பூரில் இளங்கோவன் போட்டியிட காங்கிரஸýக்குள் எதிர்ப்பு இருக்காது. அதேபோல அதிமுக வாக்கு வங்கி அதிகமாக இருப்பதால், இத்தொகுதியில் போட்டியிட திமுகவும் விரும்பாது.

“திருப்பூர் தொகுதியில் இடம்பெற்றுள்ள 6 பேரவைத் தொகுதிகளில் 2 தொகுதி மட்டுமே புதியவை. மற்றவை அவருக்கு வெற்றியை அளித்தவைதான். ஆகவே, திருப்பூரில் போட்டியிடவே விரும்புகிறார்’ என்கின்றனர் இளங்கோவனின் ஆதரவாளர்கள்.

திருப்பூர் மக்களவையில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய தொகுதிகள் மட்டுமே காங்கிரஸýக்கு வாய்ப்புக் குறைந்தவை. இருப்பினும் பிற 4 தொகுதிகளில் காங்கிரஸ், திமுகவுக்கு வாய்ப்பு அதிகம் என்பதால் இளங்கோவன் இத் தொகுதியை விரும்புவதாகவும் அக் கட்சியினர் கூறுகின்றனர்.

திருப்பூர் தொகுதி கிடைக்காதபட்சத்தில் நாமக்கல்லில் போட்டியிடுவார் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Posted in Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

The former chief of the Swadeshi Jagran Manch, Muralidhar Rao appointed adivser to BJP chief Rajnath Singh

Posted by Snapjudge மேல் மார்ச் 10, 2009

பாஜக தலைவரின் ஆலோசகராக முரளீதர் ராவ் நியமனம்

புது தில்லி, மார்ச் 9: பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஆலோசகராக முரளீதர் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆர்எஸ்எஸ் கொள்கைகளில் அதீத ஈடுபாடு கொண்ட முரளீதர் ராவ், சுதேசி ஜாக்ரண் மஞ்ச் அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராவார்.

ஏற்கெனவே பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஆலோசகராக பிரபாத் ஜா உள்ளார், அவருடன் இணைந்து முரளீதர் ராவும் ஆலோசகராக செயல்படுவார் என பாஜக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக கடந்த மாதம் சேர்க்கப்பட்ட முரளீதர் ராவ், பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் கட்சிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார்.

மேலும் பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜனின் மிக நெருங்கிய சகாவாக விளங்கிய சுதன்ஷு மிட்டல், தற்போது பாஜகவின் வடகிழக்கு மாநிலங்களின் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இத்துடன் எஸ்.எஸ். அலுவாலியாவுக்குத் தேவையான உதவிகளையும் இவர் மேற்கொள்வார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் கண பரிஷத் கட்சியுடன் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக உடன்பாடு எட்டுவதில் சுதன்ஷு, மிகச் சிறந்த பணியாற்றியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , | Leave a Comment »

Anbumani Ramadoss Constituency? DMK vs PMK in Cuddalore: Vanniyar Votes, Alliance

Posted by Snapjudge மேல் மார்ச் 9, 2009

கடலூர் மக்களவை தொகுதி பாமகவுக்கா?

Dinamani நிருபர்

கடலூர், மார்ச் 8: மக்களவைத் தேர்தலில், கடலூர் தொகுதியில் பாமக போட்டியிடுவது நிச்சயம் எனத் தெரிகிறது.

கடலூர் மக்களவைத் தொகுதி தொடக்கம் முதல் காங்கிரஸ் வசம் இருந்து வந்துள்ளது.

பி.ஆர்.எஸ். வெங்கடேசன் 3 முறை எம்.பி.யாக இருந்தார். ஒருமுறை அதிமுக வசமும் அதைத் தொடர்ந்து இருமுறை திமுக வசமும் இருந்துள்ளது.

ஆனால் இந்தத் தேர்தலில் அதிமுக அணியில் இருந்தாலும், திமுக அணியில் இருந்தாலும் கடலூர் மக்களவைத் தொகுதியைக் கேட்பதில் பாமக தலைமை உறுதியாக இருக்கிறது.

மாவட்ட ஒருங்கிணைந்த பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, கட்சித் தலைமையை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள்.

தொகுதி மறுசீரமைப்பே இதற்கு முக்கியக் காரணியாக அமைந்து இருக்கிறது. முந்தைய தேர்தல்களில்

  • கடலூர்,
  • நெல்லிக்குப்பம்,
  • பண்ருட்டி மற்றும்
  • விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை,
  • ரிஷிவந்தியம்,
  • சங்கராபுரம்

ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் கடலூர் மக்களவைத் தொகுதியில் இடம்பெற்று இருந்தன.
தேர்தல் ஆணையம் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொண்ட பின்,

  • கடலூர்,
  • பண்ருட்டி,
  • நெய்வேலி,
  • குறிஞ்சிப்பாடி,
  • திட்டக்குடி,
  • விருத்தாசலம்

ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்டதாக கடலூர் மக்களவைத் தொகுதி மாறியிருக்கிறது.
சாதகமான நிலை

உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் தொகுதிகளில் வன்னிய சமூகத்தினர் மிகவும் குறைவாக இருந்ததால்தான், முந்தைய கடலூர் மக்களவைத் தொகுதியில் வன்னியர் அல்லாதோர் வெற்றிபெற முடிந்தது.

தற்போது அந்த 3 தொகுதிகளும் நீக்கப்பட்டு, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி தொகுதிகள் கடலூர் மக்களவைத் தொகுதியில் இணைக்கப்பட்டு இருப்பது, நிரந்தரமாக பாமகவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி இருப்பதாக அக் கட்சியினர் தெரிவித்தனர்.

எனவேதான் கடலூர் மக்களவைத் தொகுதியை கேட்பதில், பாமக உறுதியாக இருப்பதாக அக் கட்சியினர் தெரிவித்தனர்.

வேட்பாளர் யார்?

பாமக சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிட

  • அன்புமணி ராமதாஸ்,
  • திண்டிவனம் எம்.பி. தன்ராஜ்,
  • காடுவெட்டி குரு,
  • விருத்தாசலம் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.கோவிந்தசாமி

ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. அன்புமணியைப் பொருத்தவரை ராஜ்யசபா உறுப்பினராக இன்னும் ஓராண்டு நீடிக்க முடியும். மேலும் கடலூர் தொகுதி வேட்பாளர் என்று ஆகிவிட்டால், மற்ற தொகுதிகளில் தேர்தல் பணி ஆற்றுவது சிரமம்.அதனால் அவர் போட்டியிட வாய்ப்பில்லை என்றே பாமகவினர் கூறுகின்றனர்.
திண்டிவனம் தொகுதி நீக்கப்பட்டு, விழுப்புரம் தனித் தொகுதியாக மாற்றப்பட்டு இருப்பதால் தற்போதைய எம்.பி. தன்ராஜ் அங்கு போட்டியிட வாய்ப்பில்லை.

எனவே அவருக்குக் கடலூர் தொகுதி ஒதுக்கப்படலாம் என்றும் பாமக முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். காடுவெட்டி குருவுக்கும் கடலூர் தொகுதி ஒதுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக அக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

Posted in Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , | Leave a Comment »

BSP to contest all 39 Lok Sabha seats in Tamil Nadu: Writer and IAS officer P. Sivakami joins Bahujan Samaj Party

Posted by Snapjudge மேல் மார்ச் 9, 2009

தமிழகத்தில் போட்டியிடும் பி.எஸ்.பி. வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை, மார்ச். 9-

உத்தரப் பிரதேச மாநில முதல்-மந்திரி மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.சி.) நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. பாராளுமன்ற வேட்பாளர் தேர்வு தொடர்பாக தேசிய பொது செயலாளர் சுரேஷ் மானே தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் கு.செல்வபெருந்தகை, மாநில முதன்மைச் செயலாளர் ப.சிவகாமி, மாநில அமைப்பாளர் கே.ஆம்ஸ்ட்ராங் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு 12 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பெயர் பட்டியலை பொது செயலாளர் சுரேஷ் மானே வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

  1. சென்னை தெற்கு – முன்னாள் எம்.பி ஸ்ரீதரன்,
  2. மத்திய சென்னை-யூனுஸ்கான்,
  3. கன்னியாகுமரி – முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ப.சிவகாமி,
  4. தருமபுரி- முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.வி.புருசோத்தம்மன்,
  5. மயிலாடுதுறை – முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி எல்.வி.சப்தரிஷ’,
  6. ஆரணி-சங்கர்,
  7. ஸ்ரீபெரும்புதூர்-பி.ராஜப்பா,
  8. திருச்சி-என்.கல்யாணசுந்தரம்,
  9. சேலம்-பாலசுப்பிரமணியம்,
  10. மதுரை-தர்பார்ராஜா,
  11. தூத்துக்குடி-ஜ“வன்குமார்,
  12. கோவை-ராமசுப்பிரமணியம்.

சுரேஷ் மானே நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி இல்லாமல் போட்டியிடுவது என்பது கட்சியின் தேசிய கொள்கை ஆகும். அதன்படி, பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறோம். கட்சித் தலைவர் மாயாவதி முதல்கட்டமாக பிரசாரத்தை கேரளாவில் தொடங்குகிறார். தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (ஏப்ரல்) பிரசாரம் செய்ய உள்ளார். அதற்கு முன்பாக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிடும். அனைத்து தொகுதிகளிலும் எங்கள் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி பொறுப்புக்கு வந்தால் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு உறுதியாக தீர்வு காணப்படும். இவ்வாறு சுரேஷ் மானே கூறினார்.

Posted in Tamil Nadu, Therthal 2009 | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | Leave a Comment »

Ruling party wins Zambia presidential race: VETERAN diplomat Rupiah Banda sworn in as Zambia’s president after narrow election victor

Posted by Snapjudge மேல் நவம்பர் 3, 2008


ஜம்பியாவின் அதிபராக ருப்பய்யா பண்டா

ருப்பய்யா பண்டா
ருப்பய்யா பண்டா

ஜம்பியா நாட்டின் இடைக்கால அதிபராக இருந்த ருப்பய்யா பண்டா அவர்கள் அதிபராகப் பதவியேற்றுள்ளார்.

கடந்த வியாழன் நடந்த தேர்தலில் அவர் சிறு வித்தியாசத்தில் வென்றதாகத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட இரண்டு மணிநேரத்துள் இரவரது பதவியேற்பு நடந்துள்ளது.

வறுமையையும் ஊழலையம் எதிர்த்துப் போராடுவேன் என்றும் வெளிநாட்டு முதலீட்டுகளுக்கு ஆதரவாக இருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிபர் தேர்தலில் இவருக்கு எதிராகப் போட்டியிட்ட பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் மைக்கல் சத்தா அவர்கள் வாக்குகள் திரும்ப எண்ணப்பட வேண்டும் என்று கேட்டு நீதிமன்றத்திடம் போகவிருப்பதாகக் கூறியுள்ளார்.

ஆளும் கட்சியான எம்.எம்.டி கட்சி இது உணர்ச்சிகள் கொந்தளிக்கக் கூடிய ஒரு காலகட்டம் என்று கூறி, ஜம்பிய மக்கள் அனைவரையும் குழம்பாமல் இருந்து தேசிய ஐக்கியத்துக்கும் அமைதிக்கும் உதவும்படி கேட்டுள்ளது.

கலவரங்கள் மூளலாம் என்ற அச்சத்தில் தலைநகர் லுசாக்காவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் அதிபர் லெவி முவனவாஸ அவர்கள் இறந்ததைத் தொடர்ந்து பண்டா அவர்கள் இடைக்கால அதிபராகப் பதவியேற்றிருந்தார்.


Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , | Leave a Comment »

Malaysia bans ethnic Indian protest group: Hindraf branded as security threat: Hindu Rights Action Force Outlawed

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2008

மலேசியாவில் ஹிண்ட்ராப் அமைப்புக்கு தடை

மலேசியாவில் வாழும் சிறுபான்மை இந்திய வம்சாவளிகளுக்கு அதிக உரிமைகள் வேண்டும் என்று கோரி போராடி வரும் ஹிண்ட்ராப் அமைப்பை மலேசிய அரசு தடை செய்துள்ளது.

ஹிண்ட்ராப் எனப்படும் இந்து மக்கள் உரிமை நடவடிக்கை குழு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக உள்துறை கூறியுள்ளது. மலேசியாவில் வாழும் இருபது லட்சம் இந்திய வம்சாவளிகளுக்கு வேலைகளிலும், கல்வி வாய்ப்புகளிலும் அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து ஹீண்ட்ராப் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தது.

மலேசியாவின், உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஹிண்ட்டிராப் அமைப்பின் 5 தலைவர்கள் காலவரையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வரலாறு காணாத பெருமளவிலான மக்கள் பங்கேற்ற எதிர்புப்பு போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்தமைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்ட இந்திய வம்சாவளியினர் காவல் துறையுடன் மோதியும் உள்ளனர்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

Japan’s PM quits post after less than a year: Taro Aso confirms bid to replace Yasuo Fukuda

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 2, 2008

ஜப்பானிய பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு

ஜப்பானியப் பிரதமர் யசுஒ ஃபகுடா தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் பதவியேற்று ஒரு ஆண்டு கூட நிறைவடைந்திருக்கவில்லை.

எதிர்க்கட்சியினரின் கட்டுப்பாட்டிலுள்ள நாடாளுமன்ற மேலவையில் முட்டுக்கட்டை நிலை ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே தான் பதவி விலகுவதாகவும், அணிக்கு ஒரு புதிய தலைமை தேவையென்றும் அவர் கூறியுள்ளார்.

ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சி ஒரு உட்கட்சித் தேர்தலை நடத்தி அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாக இக்கட்சியின் செல்வாக்கு வேகமாக சரிவடைந்துவருகிறது கட்சியைச் சரிவிலிருந்து மீட்க ஃபகுடா தவறியுள்ளார்.

வழமைக்கு முன்பாக பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென எதிர்கட்சியினர் கோரியுள்ளனர்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , | Leave a Comment »

Amid war, United Peoples Freedom Alliance – Rajapaksa’s coalition, Sri Lankan ruling party wins local elections: North Cenral and Sabaragamuwa Polls

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 24, 2008


புத்தபிக்குகள் குழுவுக்கு இலங்கை உயர்நீதிமன்றம் கண்டனம்

தனது விகாரையிலிருத்து இரவில் ஒலிபரப்பெருக்கி மூலம் ஒலிபரப்பி ஒலிமாசடைதல் நடவடிக்கையில் ஈடுபட்டார்  என்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பௌத்த மதகுரு ஒருவரை பிணையில் செல்ல அனுமதிக்கக்கோரி சக மதகுருமார் குழுவொன்று சமர்பித்திருந்த விண்ணப்பத்தினை இலங்கை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்திருப்பதோடு, நீதிமன்றத்திற்கு அந்த சக மதகுருமார் குழு அபகீர்த்தி விளைவித்தனரென்றும் அவர்கள் மீது தனது  கண்டனத்தையும்  அதிருப்தியையும் வெளியிட்டிருகிறது.

இலங்கை உயர்நீதிமன்றம்
இலங்கை உயர்நீதிமன்றம்

கொழும்பின் புறநகர்பகுதியான ராஜகிரியவில்  அமைந்துள்ள பௌத்த விகாரையொன்றின் பன்னல பஞ்ஞாலோக தேரரே இவ்வாறு தனது விகாரையிலிருத்து இரவில் ஒலிபரப்பெருக்கி மூலம் ஒலிபரப்பினார்  என்ற குற்றச்சாட்டின்பேரில் நீதிமன்ற விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கினை பிரதம நீதியரசர் தலைமையிலான மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மன்றே விசாரணை செய்தது.

உயர் நீதிமன்ற வட்டாரங்களின் தகவல்களின்படி, இவரது பிணை மனுவை இன்று விசாராணைக்கு எடுத்துக்கொள்ள பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உயர்நீதிமன்றத்திற்கு வருகைதந்தபோது பிணைமனுத்தாக்கல் செய்யவந்திருந்த சுமார் நூறு பௌத்தபிக்குகள் ஆசனத்திலிருந்து எழுந்துநிற்கவில்லை என்றும் இது நீதிமன்றத்திற்கு அபகீர்த்தியினை ஏற்படுத்தும் செயல் என்று கூறிய பிரதம நீதியரசர் இவர்களை நீதிமன்றக்கட்டிடத்திற்கு வெளியே சென்று மீண்டும் உள்நுழையும் படி அவர்களது சட்டத்தரணி மூலமாக அறிவுறுத்தல் விடுத்திருக்கிறார்.

ஆனால் பிரதம நிதியரசரின் இந்த அறிவுறுத்தலை இந்த பௌத்த பிக்குமார்கள் உதாசீனம் செய்தனர். இந்தச் செயல் உயர் நீதிமன்றத்திற்கும், நீதித்துறைக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயலென்றும் இதனால் இவர்கள் சார்பில் முன்வைக்கப்படும் பிணை மனுவினை ஏற்க முடியாது என்று தெரிவித்த  பிரதம நீதியரசர்,  பன்னல பஞ்ஞாலோக தேரரை எதிர்வரும் 15ம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


வன்னி, யாழ் மோதல்களில் 36 புலிகள், 5 ராணுவத்தினர் பலி, 16 ராணுவத்தினர் காயம்

இலங்கையின் வடக்கே வன்னி மற்றும் யாழ்ப்பாணம் களமுனைகளில் வியாழக்கிழமை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் முப்பத்தி ஆறு விடுதலைப் புலிகளும், ஐந்து இராணுவத்தினரும் உயிரிழந்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் எட்டு சடலங்கள் படையினரால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

வன்னிக் களமுனைகளில் கடும் சண்டைகள் இடம்பெற்றதாகவும், இதில் மேலும் பதினாறு படையினர் காயமடைந்திருப்பதாகவும்
இராணுவ தலைமையகம் தனது இணைய தள அறிக்கையொன்றில் கூறியிருக்கின்றது.

இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் சடலங்களில் நான்கு சடலங்கள் நேற்று மாலை வவுனியா வைத்தியசாலையில் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவம் தகவல் வெளியிட்டிருக்கின்றது.

வடக்கே கடும் மோதல்கள் இடம் பெறுகின்றன
இலங்கையின் வடக்கே கடும் மோதல்கள் தொடர்கின்றன

இதற்கிடையில் வியாழக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்த 48 மணிநேர காலப்பகுதியில் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினர் இராணுவத்தினரின் முப்பது சடலங்களை ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியில் உள்ள படை அதிகாரிகளிடம் கையளித்திருப்பதாகத் தெரிவித்துள்ள இராணுவ தலைமையகம், கடந்த நான்கு தினங்களாக கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன்குளம் பிரதேச களமுனைகளில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற உக்கிரச் சண்டைகளில் காணாமல் போயிருந்த படையினர் சிலரது சடலங்களும் இவற்றிலிருந்து அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றது.

இரண்டாவது தொகுதியாக நேற்று மாலை ஓமந்தை படையதிகாரிகளிடம் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரால் கையளிக்கப்பட்டிருந்த பதினோறு சடலங்களும் அடையாளம் காண்பதற்காக அனுராதபுரம் மாவட்டம் பதவியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அந்தச் சடலங்களில் பல உருக்குலைந்தும், சிதைந்தும் இருப்பதனால் உரிய இராணுவத்தினரை அடையாளம் காண்பதில் சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் இராணுவம் தனது இணைய தள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.

வடபகுதி மோதல்களில் பலரை காணவில்லை என்று இலங்கை இராணுவம் கூறுகிறது

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுடன் நடக்கும் கடும் மோதல்களில் மேலும் 18 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் கூறுகிறது.

நாச்சிகுடாப் பகுதியில் இடம் இடம்பெற்றுவரும் மோதல்களில் பல இராணுவத்தினரை காணவில்லை என்றும் அவர்கள் விரைவில் தமது சக்காக்களுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இவ்வாறு காணாமல் போயுள்ள இராணுவத்தினருக்கு என்ன நடந்திருக்கின்றது என்பது இன்னமும் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது எனவும் இராணுவத் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாகர்கோவில், முகமாலை போர் முனைகளில் மூன்று விடுதலைப் புலிகள் இராணுவத்தினரின் தாக்குதல்களில் பலியாகியுள்ளதாகவும் இராணுவம் கூறுகிறது.

முறிகண்டிப் பகுதிக்குள் இராணுவம் முன்னேறியுள்ளதாகத் தகவல்

வடக்கே கடும் மோதல்கள்
வடக்கே கடும் மோதல்கள் இடம் பெறுகின்றன

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் கடும் எதிர் தாக்குதல்களுக்கு மத்தியிலும் இராணுவத்தினர் வன்னிப்பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதற்காக முன்னேறி வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இத்தகைய முன்னேற்றத்தின் மேலும் ஒரு படியாக முறிகண்டி பொதுப்பிரதேசத்தினுள் இன்று இராணுவத்தினர் முன்னேறியிருப்பதாகவும் அந்தப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் பின்னர் 4 விடுதலைப் புலிகளின் சடலங்களைப் படையினர் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

இது குறித்து கருத்து தெரிவித்த இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, இராணுவம் அக்கராயன்குளம் பகுதியில் ஏற்கனவே நிலைகொண்டிருப்பதாகவும், அக்கராயன்குளத்தின் தெற்கில் உள்ள முறிகண்டி பொதுப்பிரதேசத்தினுள் இராணுவம் இன்று முன்னேறியிருப்பதாகவும் கூறினார்.

எனினும் இது குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


வன்னிப் பகுதியில் பல பாடசாலைகள் திறக்கப்படவில்லை

ஆளில்லா பாடசாலை
ஆளில்லா பாடசாலை

இலங்கையில் இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறைக்காலம் முடிவடைந்து, மூன்றாம் தவணைக்காக இன்று கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

ஆயினும், இலங்கையின் வடக்கே போர்ப் பதட்டம் நிலவுகின்ற வன்னிப்பிரதேசத்தில் பாடசாலைகள் முழுமையாக இன்று ஆரம்பிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வன்னிப்பிரதேசத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகளும் சுமார் 40 ஆயிரம் வரையிலான மாணவர்களும் இடம்பெயர்ந்திருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வவுனியா மாவட்டத்தின் வடக்கு கல்வி வலயத்தில் 55 பாடசாலைகள் இடம்பெயர்ந்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தஞ்சம் புகுந்திருப்பதனால் இந்தப் பாடசாலைகள் இன்று ஆரம்பமாகவில்லை என வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் கோட்டக்கல்விப் பணிப்பாளர் அருளம்பலம் வினாயகமூர்த்தி கூறுகின்றார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள 2000 குடும்பங்கள் 32 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றும் இவர்களுக்கு மாற்றிடங்களில் வாழ்விட வசதிகள் செய்து கொடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகள் முடிவடைந்ததும் இந்தப் பாடசாலைகள் ஆரம்பமாகும் என்றும் கூறுகிறார் கிளிநொச்சி அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் அவர்கள்.

இது குறித்த மேலதிக விபரங்களை எமது வவுனியா செய்தியாளர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கேட்கலாம்.


பதுளைப் பகுதியில் பல சிறுவயதுப் பெண்கள் கர்பம்

ஒரு இளம் கர்பிணி
ஒரு இளம் கர்பிணி

இலங்கையின் பதுளை மாவட்டத்தில் பாடசாலை செல்லும் மாணவ பருவத்துடைய சுமார் 30 இளவயது பெண்கள் கர்பமாக இருப்பதாகவும், இது அப்பகுதியில் ஒரு சமூகப் பிரச்சினையாக மாறிவருவதாகவும் பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண திசாநாயக்க பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரச் சூழல் காரணமாக இவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை என்பது மட்டுமல்லாமல், சிறுவயதிலேயே காதல் வயப்பட்டு மதுப்பழக்கத்துக்கும் அடிமையாவதும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் பல வகையான ஊடகங்கள் மூலமும் இவர்கள் வழிதவறிச் செல்வதைக் காணக் கூடியதாகவும் இருப்பதாகவும் பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் சுகாதர அமைச்சகம் மற்றும் இதர அரச நிறுவனங்கள், போலீசார் ஆகியோருடன் இணைந்து ஒரு செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் ரோஹன திசாநாயக்க கூறினார்.


இலங்கையின் வடக்கே கடும் மோதல்கள்: இருதரப்பிலும் பெரும் இழப்புகள் என்று அறிவிப்பு

இலங்கையின் வடக்கே இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் கடும் மோதல்களில் இருதரப்பிலும் பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செவ்வாய்கிழமை நடைபெற்ற மோதல்களில் மட்டும் 46 விடுதலைப் புலிகளும் 6 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் கூறுகிறது.

இதனிடையே திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை ஆகிய இருதினங்களில் இராணுவத்தரப்பில் குறைந்தது 75 பேர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் கூறுகிறார்கள்.

வடக்கே நடைபெறும் மோதல்களில் இறந்தவர்களின் உடல்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக இருதரப்பினராலும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் 22 சடலங்களும், இராணுவத்தினரின் 19 சடலங்களும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் அதிகாரியான சரசி வியேரட்ண தமிழோசையிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.


வன்னிப் பகுதியில் மனிதாபிமான உதவிகளுக்கு ஆதரவு அளிக்கத் தயார் என ஐ நா கூறுகிறது

வன்னி மக்களுக்கு உதவ ஐ நா முன்வந்துள்ளது
வன்னி மக்களுக்கு உதவ ஐ நா முன்வந்துள்ளது

இலங்கையில் வடக்கே கடுமையான மோதல்கள் நடந்துவருகின்ற வன்னி பெருநிலப்பரப்பில் தங்கியிருப்போருக்கும், அங்கிருந்து வெளியேறுவோருக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளக்கூடிய சகல முயற்சிகளுக்கும் முழுமையான ஆதரவினை வழங்க ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான ஐ.நாவின் அலுவலகம் புதன்கிழமையன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பொன்றிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

வன்னிப் பகுதியிலிருந்து பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் நகர்வதற்கு இலங்கை அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அறிவித்துள்ளதையும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் வரவேற்றுள்ளது.

புலிகளுக்கும் கோரிக்கை

இட்ம பெயர்ந்த நிலையில் ஒரு குடும்பம்
இடம் பெயர்ந்த நிலையில் ஒரு குடும்பம்

பொதுமக்கள் சகல தருணங்களிலும் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குச் சுதந்திரமாக செல்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்ற விடயம் பற்றி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரிடமும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தனது அவசரமான கரிசனையை வெளியிட்டுள்ளதாகவும் கொழும்பிற்கான ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆயுத நெருக்கடியில் சம்பந்தப்பட்ட மக்கள் தொடர்பான சர்வதேச கடப்பாடுகளின்படி, தாம் எங்கெங்கே உதவிகளையும் பாதுகாப்பினையும் தேடவேண்டும் என்பதனை மக்களே தனிப்பட்டரீதியிலும் சுதந்திரமாகவும் தேர்வு செய்ய அனுமதிப்பது என்பது மிகமுக்கியமானது என்பதனையும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அறிக்கை கோடிட்டு காட்டியுள்ளது.


‘மல்லாவியை கைப்பற்றியது இலங்கை இராணுவம்’

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் மிக்க மல்லாவி நகரப்பகுதியை இலங்கை இராணுவத்தினர் செவ்வாயன்று முழுமையாகக் கைப்பற்றியிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

பல வாரங்களாக விடுதலைப் புலிகளின் கடும் எதிர்த்தாக்குதல்களுக்கு மத்தியிலும் இராணுவத்தினர் முன்னேறிச் சென்று மல்லாவி நகரப்பகுதியைக் கைப்பற்றியிருப்பதாகவும், கடந்த மாதம் 22ஆம் திகதி துணுக்காய் பகுதியைக் கைப்பற்றியதன் பின்னர் இராணுவத்தினர் அடைந்துள்ள முக்கிய வெற்றியாக இதனைக் கருதுவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

மல்லாவி கைப்பற்றப்பட்டது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

ஆயினும் கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா பகுதியில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட இராணுவத்தினரை எதிர்த்து நேற்று பிற்பகல் 2 மணிமுதல் இன்று அதிகாலை 2 மணிவரையில் தாங்கள் நடத்திய கடும் தாக்குதல்களில் 34 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், கொல்லப்பட்டவர்களில் 7 சடலங்களும் இராணுவ தளபாடங்களும் தங்களால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.

எனினும், கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா உட்பட்ட வன்னிக்களமுனைகளில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் 44 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. நாச்சிக்குடா பகுதியில், விடுதலைப் புலிகளுடன் கடும் மோதல்கள் இடம்பெற்றதாகவும், முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கு ஆதரவாக விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது இன்று அந்தப் பகுதியில் விமானக்குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

இதற்கிடையே இலங்கையின் கிழக்கே அப்பாறை மாவட்டத்தில் பொத்துவில்- பாணமை வீதியில் விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை பாதுகாப்புப் படையை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.


இலங்கையில் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு தண்டனை

பிரிகேடியர் உதய நாணயக்கார
பிரிகேடியர் உதய நாணயக்கார

இலங்கை இராணுவத்திலிருந்து தப்பியோடிய முன்னூறுக்கும் மேற்பட்டோருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 106 பேர் செவ்வாய்கிழமை தண்டிக்கப்பட்டுள்ளதாகவும், புதன்கிழமையன்று மேலும் 199 பேர் தண்டிக்கப்படுவார்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

இராணுவத்தில் இருந்து தப்பி ஒடியவர்கள் மீண்டும் தங்களுடைய ராணுவ ரெஜிமெண்டுகளுக்கே வந்து சரணடையக் கூடிய ஏற்பாடுகளை செய்யப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவர்கள் சரணடையாததன் காரணமாக இராணுவமும் போலீசாரும் அவர்களைக் கைதுசெய்து இராணுவ சட்ட நடைமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்களை தண்டிப்பது இது முதல் முறையல்ல என்றாலும் கிட்டத்தட்ட 300 பேர் ஒரே நேரத்தில் தண்டிக்கப்படுவது இது தான் முதல் முறை என்றும் பிரிகேடியர் உதய நாணயகார தமிழோசையிடம் தெரிவித்தார்.

இராணுவத்தில் இருந்து தப்பி ஒடியவர்கள் தங்களுடைய ரெஜிமெண்களுக்கு வந்து சரணடைந்தால் அவர்களை வரவேற்கப்படுவார்கள் என்றும் பிரிகேடியர் தெரிவித்தார்.

இன்று தண்டிக்கப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இராணுவத்தில் இருந்து ஒடியவர்கள் என்றும் அவர் கூறினார்.


மல்லாவியின் முக்கால்வாசியை கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பிரதேசத்தின் முக்கால் வாசிப்பகுதியை தாம் கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து கூறிய இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்கள், கடந்த ஒருவாரமாக நடத்தப்பட்ட வெற்றிகரமான இராணுவ நடவடிக்கையின் மூலம் இது நிகழ்த்தப்பட்டிருப்பதாகக் கூறினார்.

மல்லாவி ஒரு சிறிய நகரந்தானே, அதில் முக்கால் வாசியைப் பிடித்ததாகக் கூறுகிறீர்களே என்று கேட்டதற்கு பதிலளித்த, பிரிகேடியர் உதய நாணயக்கார, அது ஒரு பெரிய நகரம், அங்கு மல்லாவி ஆதார வைத்தியசாலை சில வங்கிகள், பீங்கான் தொழிற்சாலை, பெரிய வெதுப்பகம் மற்றும் புலிகளின் முக்கிய அலுவலகம் ஒன்று ஆகிய அனைத்தும் அங்கு இருக்கின்றன என்று கூறினார்.

விடுதலைப்புலிகளின் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிகள் பற்றிய அரசாங்க அறிவிப்பு குறித்துக் கேட்டதற்கு பதிலளித்த பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்கள், தற்போதைக்கு பொதுமக்கள் வவுனியாவுக்கு வரவேண்டுமானால், ஏ 9 பாதையூடாகத்தான் வரவேண்டும் என்றும், ஆனால், தற்போது தாம் பாதுகாப்பான வழி ஒன்றை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அவை பூர்த்தியானதும் அதுபற்றிய விபரங்கள் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.


வட இலங்கையில் தொடரும் மோதல்கள்

இடம்பெயரும் மக்கள்(ஆவணப்படம்)
இடம்பெயரும் மக்கள்(ஆவணப்படம்)

இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் மிகவும் மும்முரமான மோதல்கள் இடம்பெறும் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எறிகணைத்தாக்குதல்களில் சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்டதாக வவுனியாவில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

வவுனியா ஓமந்தைக்கு வடக்கே ஏ9 வீதியில் உள்ள கனகராயன்குளம் பகுதியில் ஞாயிறு மாலை இடம்பெற்ற எறிகணைத் தாக்குதலில் 53 வயதுடைய சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்த எறிகணைத் தாக்குதலை இராணுவத்தினரே நடத்தியிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றனர்.

ஆனால், இதனை இராணுவத்தினர் மறுத்திருக்கிறார்கள்.

இராணுவ சடலங்களைக் கையளித்ததாக புலிகள் அறிவிப்பு

வன்னிக் களமுனைகளில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் 4 சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினரின் ஊடாக இராணுவத்தினரிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

இதனிடையே, வன்னிப்பகுதியில் தற்போது பெய்யத் தொடங்கியுள்ள மழை காரணமாக வீதியோரங்களில் கொட்டில்களிலும் பொது இடங்களிலும் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடம்பெயர்ந்த மக்களை இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா பிரதேசத்திற்குள் வருமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்ற போதிலும், அந்த அழைப்பையேற்று எவரும் வவுனியா அல்லது மன்னார் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் வந்ததாக தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

பதுங்கு குழிகளை அமைக்குமாறு புலிகள் வலியுறுத்தல்

அதேவேளை, வன்னிப்பகுதியில் இருக்கின்ற மக்கள் எறிகணை வீச்சுக்களில் இருந்து தம்மைத் காத்துக்கொள்வதற்காக பதுங்குகுழிகளை அமைத்து அவற்றில் தங்கியிருக்குமாறு விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவின் சார்பில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் அறிக்கை ஒன்று கோருகிறது.

அனைத்து இடங்களிலும் பதுங்குகுழிகள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்ற அந்த அறிக்கையில், எறிகணைவீச்சுக்கள் மற்றும் வான் தாக்குதல் நிகழும் சந்தர்ப்பங்களில் உடனடியாகவே மக்கள் பதுங்குகுழிகளில் பாதுகாப்புத் தேட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இலங்கையின் வடக்குக் களமுனைகளில் நேற்று இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்திய பல்வேறு தாக்குதல்களில் 42 விடுதலைப்புலிகளும், 6 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது. இந்த மோதல்களில் 17 படையினர் காயமடைந்திருப்பதாகவும் இராணுவம் கூறியிருக்கின்றது.

எனினும் வவுனியா பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதியில் மும்முனைகளில் முன்னேறுவதற்கு முயன்ற இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் 12 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.

இலங்கை கிளிநொச்சியில் எறிகணை தாக்குதலில் பொதுமக்கள் பலி

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டம் புதுமுறிப்பு என்னுமிடத்தில் சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற எறிகணை தாக்குதலில், குழந்தைகள் உட்பட 5 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் கிளிநொச்சி நகரில் இருந்து சுமார் 4 கிலோ மீ்ட்டர் தொலைவில் இடம்பெற்றிருப்பதாகக் கூறியிருக்கும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம், பொதுமக்கள் மீதான இந்த எறிகணை தாக்குதலை இராணுவத்தினரே நடத்தியிருப்பதாகக் குற்றம் சுமத்தியிருக்கின்றது.

இந்த குற்றச்சாட்டுக்கான பதிலை இலங்கை இராணுவத்தினரிடம் இருந்த பெற முடியவில்லை.

மன்னார் மாவட்டம் மடு பிரதேசத்தில் உள்ள பரப்புக்கடந்தான் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சி புதுமுறிப்பு பகுதியில் தஞ்சமடைந்திருந்த இடத்திலேயே இநத அசம்பாவித சம்பவம் நடைபெற்றிருப்பதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றார்கள்.

பலியானவர்களின் உடல்கள் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.


கொழும்பு குண்டுவெடிப்பில் 45 பேர் காயம்

கொழும்பு குண்டுவெடிப்பு
கொழும்பு குண்டுவெடிப்பு

இலங்கையின் சனசந்தடி நிறைந்த கொழும்பு புறக்கோட்டை பகுதியில் சனிக்கிழமை மதியம் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் 45 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துவெளியிட்ட புறக்கோட்டை பொலிசார், இன்று சுமார் 12.15 மணியளவில் புறக்கோட்டைப் பாதையோரத்தில்  அரசமரதடிப்பகுதிக்கு சற்றுத்தொலைவில் அமைந்துள்ள கடிகாரம் விற்கும் சிறிய கடையொன்றில்  இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றதாகத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சுமார் 45 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இவர்களில் ஒரு சிலருக்கே பாரிய காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், அந்த வைத்தியசாலையின் விபத்துக்கள் சேவைப் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.


புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேறச் சொல்லும் பிரசுரங்களை கிளிநொச்சியில் வீசியுள்ளனர் விமானப் படையினர்

இலங்கையின் வடபகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரும் துண்டுப் பிரசுரங்களை இலங்கையின் விமானப் படையினர் வானிலிருந்து வீசத்துவங்கியுள்ளனர். இறுதிப்போர் என்று நம்பப்படும் தாக்குதலுக்கு முன்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இரவு நேரத்தில் ஹெலிகாப்டர் ஒன்று கிளிநொச்சி நகரப்பகுதியில் தாழப்பறந்து ஆயிரக்கணக்கான இந்த துண்டுப்பிரசுரங்களை வீசியதாக, புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் கிளிநொச்சியிலிருக்கும் பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர்.

தமிழில் எழுதப்பட்டிருக்கும் இந்த துண்டுப்பிரசுரங்களில், விடுதலைப்புலிகள் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்து வருவதாகவும், எனவே பொது மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை விட்டு அரசு கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு செல்வதன் மூலம் தங்களின் உயிர்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


மட்டக்களப்பு சிறையில் குண்டுவெடிப்பு

மட்டக்களப்பு சிறை

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் 5 பேர் உட்பட 7 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்

ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் தனியாக வைக்கப்பட்டிருந்த சிறைக் கூடத்திற்குள் இக்குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாகக் கூறும் பொலிசார், அங்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது மற்றுமொரு கைக்குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தைக் கைதிகள் தப்பியோடுவதற்கான முயற்சியாகவே தாம் சந்தேகிப்பதாகக் கூறும் சிறைச்சாலை அத்தியட்சகரான லால் விக்கிரமசிங்க, சிறைச்சாலைக்குள் குண்டுகள் எப்படி கொண்டு வரப்பட்டன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்கிறார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக ஈ.பி.டி.பி குற்றம்சுமத்துகின்றனர். ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அதனை மறுத்துள்ளனர்.



நளினி விடுதலையை எதிர்ப்பது ஏன்? – தமிழக அரசு விளக்கம்

நளினி – பழைய படம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவரும் நளினி விடுதலை செய்யப்படுவதற்கு எதிரான ஆட்சேபணைகளை தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றின் மூலம் விளக்கியிருக்கிறது.

ஆயுட்தண்டனை என்பதை பொதுவாக 14 ஆண்டுகள் என்ற ரீதியில் புரிந்துகொண்டு, தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வது வழக்கமாக இருந்து வருவதை சுட்டிககாட்டி, நளினி விடுதலை கோரி மனுதாக்கல் செய்தார்.

மாநில ஆலோசனை வாரியம் முதற்கட்டத்தில் அவரது கோரிக்கையினை நிராகரித்தது. அந்நிராகரிப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நளினி மனுச்செய்தார்.

இந்நிலையில் தமிழக அரசு ஆலோசனை வாரியத் தீர்ப்பில் தனக்கு முழு உடன்பாடுதான் என்றும், நளினி விடுதலையை கோரப்போவதில்லை என்றும் கூறியது. அது குறித்த விளக்கமான மனு இன்று தாககல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்க்லாம்.

இன்று நீதிபதி நாகமுத்து முன் நளினியின் மனு பரிசீலனைககு வந்தபோது விளக்கமான மனுவினை தமிழக அரசு தாக்கல் செய்தது.


திருகோணமலை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளின் விமானம் குண்டுவீசியுள்ளது

இலங்கையின் கிழக்கே திருகோணலை துறைமுகத்தை இலக்குவைத்து விடுதலைப் புலிகளின் விமானம் செவ்வாய் இரவு ஒரு தாக்குதலை நடத்தியிருந்தது.

விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று இரண்டு குண்டுகளை வீசி விட்டுச் சென்றதில் சிலர் கொல்லப்பட்டதாகவும், பல படையினர் காயமடைந்ததாகவும் ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டாலும், உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று இலங்கை அரசு கூறுகிறது.

இந்த தாக்குதல் குறித்து இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கருத்து வெளியிடுகையில், “விடுதலைப் புலிகளின் ஒரு விமானம் திருகோணமலை துறைமுகப் பகுதியில் இரண்டு குண்டுகளை வீசியது. இரண்டு குண்டுகளும் வெடித்தன. இதில் பத்து கடற்படையினர் காயமடைந்தனர். ஆனால் கப்பல் தளத்தில் உள்ள கட்டிடங்களுக்கு எவ்வித சேதமும் இல்லை” என்றார்.

“சிறிய விமானத்தில் வந்து குண்டுகளை வீசுவது என்பது பெரிய அச்சுறுத்தல் கிடையாது. விடுதலைப் புலிகளின் நோக்கம் நாட்டு மக்களை பீதியடையச் செய்வதுதான்.ஆனால் இந்த தாக்குதல்களில் அவர்கள் இலக்குகளை அழிக்கமுடியவில்லை.” என்றும் அவர் குறிபிப்பிட்டார்

அவர் தெரிவித்த பிற கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


வட இலங்கையில் கடும் மோதல்கள் நீடிக்கின்றன

இலங்கை படையினர்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கைகளில் குறைந்தது 32 விடுதலைப் புலிகளும் 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் மேலும் 16 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் இலங்கையின் படைத்துறைத் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.

வவுனியா, முல்லைத்தீவு, வெலிஒயா மற்றும் யாழ்ப்பாணம் கிளாலி பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய்க்கு வடக்கிலும் இராணுவத்தினர் தமது பகுதிக்குள் முன்னேறுவதற்கு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள விடுதலைப் புலிகள், இங்கு இடம்பெற்ற சண்டைகளில் கொல்லப்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவரின் சடலத்தையும் ஆயுதத் தளபாடங்களையும் தாங்கள் கைப்பற்றியிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் புத்துவெட்டுவான் பகுதியில் நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் சிவிலியன் ஒருவர் கொல்லபட்டுள்ளதாகவும், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.


திருகோணமலை கடற்படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகள் விமானத்தாக்குதல்

இலங்கையின் கிழக்கே திருகோணமலை கடற்படை தளத்தின் மீது செவ்வாய்கிழமை இரவு 9.20 மணியளவில் விடுதலைப்புலிகளின் விமானங்கள் குண்டு வீச்சுத்தாக்குதலை நடத்தியதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

இந்தத் தகவலை உறுதி செய்துள்ள இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம், கடற்படைத்தளத்தின் மீது இரண்டு குண்டுகளை வீசிய பின்னர் விடுதலைப்புலிகளின் விமானங்கள் அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளது.

இருப்பினும் அந்தத்தாக்குதல்கள் தோல்வியில் முடிந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளம் கூறியுள்ளது.

அதேவேளை, திருகோணமலை துறைமுகப் பகுதியில் ஒரு பெரிய குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், அதனையடுத்து துப்பாக்கி வேட்டுக்கள் மற்றும் பீரங்கி வேட்டுக்கள் ஆகியன தொடர்ந்து வெடித்ததாகவும் திருகோணமலை வாசிகள் கூறுகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் காயத்துக்கு இலக்கான கடற்படையினர் குறைந்தது 10 பேர் திருகோணமலை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலையடுத்து தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் விமானங்களை தேடியழிப்பதற்காக வன்னி பிரதேசத்துக்கு விமானப் படையின் குண்டு வீச்சு விமானங்கள் சென்று வந்ததாக வடபகுதியிலிருக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானப் படையின் இந்த வான்வழித் தாக்குதல்களினால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.


கிழக்கிலங்கை பல்கலைக்கழக பாதுகாப்பு பொலிஸாரிடம்

கிழக்கு பல்கலைக்கழகம்
கிழக்கு பல்கலைக்கழகம்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு பொலிஸாரின் கீழ் கொண்டுவரப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் சிங்கள மாணவரொருவர் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பும் இன்று முதல் பொலிசாரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நேற்றுக் கூட்டிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸாரால் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் பிரகாரம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் 60 பொலிஸாரை உள்ளடக்கிய பொலிஸ் காவல் நிலையமொன்று புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது

பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிக்கும் சகலரும் இனிமேல் சோதனையின் பின்பே நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என இப் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்

இப்புதிய பாதுகாப்பு நடைமுறையின் கீழ் மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் அதன் திருகோணமலை வளாகம் அம்பாறை தென் கிழக்கு பல்கலைகழகம் ஆகியவற்றின் பாதுகாப்பை இன்று முதல் பொலிஸார் பொறுப்பேற்றூள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



வட இலங்கை மோதல்களில் 7 இராணுவத்தினர் பலியானதாக பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே வன்னிப் பகுதி மோதல்களில் இலங்கை இராணுவத்தினர் 7 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 18 சிப்பாய்கள் காயமடைந்ததாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, தமது படையினர் அங்கு தொடர்ந்து முன்னேறி வருவதாகவும், விடுதலைப்புலிகள் தரப்பில் 18 பேர் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

முல்லைத்தீவின் மேற்கு முனை, கிளிநொச்சியின் தென்பகுதி, நாச்சிக்குடா, முல்லைத்தீவு கிழக்கு, ஆண்டான்குளம் ஆகிய இடங்களில் பல மோதல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு தனது இணைய அறிக்கையில் கூறியுள்ளது.

இருந்தபோதிலும், இவை குறித்து விடுதலைப்புலிகளின் கருத்துக்களை உடனடியாகப் பெறமுடியவில்லை.


இலங்கை கிழக்கு பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைப்பு

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களை வடக்கு கிழக்கிற்கு வெளியேயுள்ள வேறு பல்கலைக்கழகங்களுடன் தற்காலிகமாக இணைக்க உயர் கல்வி அமைச்சு முடிவெடுத்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பல்லைக்கழக வளாகத்திற்குள் சிங்கள மாணவரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அச்ச நிலையையடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இப் படுகொலைச் சம்பவமானது துரதிர்ஷ்டவசமானது என பி.பி.சி தமழோசைக்கு கூறிய உயர் கல்வி அமைச்சரான பேராசிரியர் விஸ்வ வர்ணபால, அங்கு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை இருப்பதாகவும், இதன் காரணமாகவே பெற்றோர்களால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பேரில் தற்காலிகமாக இம் மாணவர்களை வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மற்றும் வெலிஓயா பிரதேச போர்முனைகளில் ஞாயிற்றுகிழமையன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல்களில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 16 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் நாச்சிக்குடா பிரதேசத்தில் ஞாயிறு காலை 6 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாகவும், இதன்போது 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் 10 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் இந்தப் பிரதேசத்தில் வேறோரிடத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது 3 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல்களில் 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 3 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.



இலங்கையில் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி

இலங்கை ஜனாதிபதி
மக்களுக்கு கிடைத்த வெற்றி – இலங்கை ஜனாதிபதி

இலங்கையின் சபரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் சனிக்கிழமை இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தல்களில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பு வெற்றி பெற்று இரண்டு மாகாணசபைகளிலும் தனது ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

ஞாயிற்றுகிழமை தேர்தல் செயலகத்தினால் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் பிரகாரம், இருமாகாணங்களிலுமாக மொத்தமுள்ள 77 இடங்களில் 45 இடங்களை ஆளும் கூட்டணி கைப்பற்றியுள்ளது. வெற்றி பெறும் கட்சிக்கும் வழங்கப்படும் போனஸ் இடங்களும் இதில் அடங்கும். ஆளும் கூட்டணி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 7,80,246.

இதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மொத்தம் 29 இடங்களையும், ஆளும் கூட்டணியின் முன்னாள் பங்காளிக் கட்சியான ஜே.வி.பி. 38,425 வாக்குகளை மாத்திரம் பெற்று மூன்று இடங்களையும் மட்டும் பெற்றன.

இந்தத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தோல்விபெற்றிருக்கின்ற போதிலும், கடந்த மாகாணசபைத் தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடும் போது, இம்முறை அந்தக் கட்சி நான்கு மேலதிக இடங்களை பெற்றுள்ளது.அதேவேளை, ஆளும் கட்சி நான்கு இடங்களை இழந்திருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தல் வெற்றி குறித்துக் கருத்துவெளியிட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷ, இந்தத் தேர்தல் வெற்றியானது நாட்டுமக்கள் அனைவரிற்கும் கிடைத்தவெற்றியென்றும், இந்த வெற்றியானது பயங்கரவாதத்திற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கு அளவிடமுடியாத சக்தியினையும், ஊக்கத்தினையும் வழங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.


இலங்கையின் மட்டக்களப்பில் தேசிய நல்லிணக்க செயலகம்

செயலகம் திறப்பு
செயலகம் திறப்பு

இலங்கையில் மூவினங்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில், மாகாண முதலமைச்சரின் கீழ் அமையவிருக்கும் மாகாண மற்றும் மாவட்ட ரீதியிலான இன நல்லிணக்கச் செயலகத்தின் முதலாவது செயலகத்தை, மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஞாயிற்றுகிழமை மட்டக்களப்பில் ஆரம்பித்து வைத்தார்

மாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்து சமய, சமூக தலைவர்கள் உட்பட பல்வேறு பிரமுகர்கள் முன்னிலையில் இதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மாகாண முதலமைச்சர், காணி, மீள் குடியேற்றம், தொழில் மற்றும் கல்வி உட்பட பல்வேறு விடயங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றை அரசியலுக்கு அப்பால் காண்பதே இச்செயலகத்தின் நோக்கம் என்றார்.

மூவினங்களையும் சேர்ந்தவர்கள் மாவட்ட மற்றும் மாகாண ரீதியாக செயல்படவிருக்கும் இந்த இன நல்லிணக்கச் செயலகத்தில் அங்கம் வகிப்பார்கள் என்றும், முதலமைச்சரின் செயலகத்தில் இதற்கென தனியான நிறைவேற்றுப் பணிப்பாளரொருவர் நியமிக்கப்ப்டுள்ளார் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டு இது பற்றிய விளக்கமும் அளிக்கப்பட்டது.


இலங்கையின் வடக்கில் தொடரும் மோதல்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களிலும் வெலிஓயா பிரதேசத்திலும் விடுதலைப்புலிகளுக்கு எதிராகத் தொடரும் இராணுவ நடவடிக்கைகளில் சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 28 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவி்த்திருக்கின்றது. இந்த மோதல்களில் மேலும் 16 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாக இராணுவம் கூறியிருக்கின்றது.

வவுனியா பாலமோட்டை – கிளிநொச்சி வன்னேரிக்குளம் பிரதேசத்தில் இராணுவத்தினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடத்திய எதிர்த்தாக்குதல்களில் 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதற்கிடையில் யாழ்குடாநாட்டில் வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 833 இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்துவது என இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள உயர் மட்டக்குழு முடிவு செய்துள்ளது.


இலங்கையில் வெடிகுண்டுக்கான சாதனங்கள் மற்றும் வெடிகுண்டு கண்டெடுப்பு

கைப்பற்றப்பட்ட இலத்திரனியல் சாதனங்கள்

இலங்கையில் தலைநகர் கொழும்பின் புறக்கோட்டை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றிலிருந்து தற்கொலையங்கிக்குப் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மற்றும் இலத்திரனியல் சாதனைக்களைக் கண்டுபிடித்திருப்பதாக கொழும்பு பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

கொழும்பு புறக்கோட்டை ஓல்கோட் மாவத்தையில் அமைந்துள்ள புனித பிலிப்ஸ் கிறிஸ்தவ தேவாலய வளவினுள் இருந்து சுமார் 19 டெட்டோனேட்டர்கள், 23 ஆளிகள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலைக்குண்டு அங்கியொன்றினை பொருத்துவதற்காக இவை கொண்டுவந்து மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர்.

இது தொடர்பில் இதுவரை யாரும் கைதுசெய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

இதேவேளை, இலங்கையின் மத்திய மலைநகரமான கண்டியின் புறநகர்ப் பகுதியான பலகொல்லவில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவொன்று வீடொன்றின் அருகிலிருந்த மணல்மேடு ஒன்றிலிருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள வெடிகுண்டு ஒன்றைக் கண்டெடுத்துள்ளது.

அக்குண்டு செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது.


துணுக்காய், உயிலங்குளம், அக்கராயன்குளம் ஆகியவற்றைக் கைப்பற்றியிருப்பதாக இலங்கை இராணுவம் கூறுகிறது

இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்திற்கு மேற்கே உள்ள துணுக்காய், அதனை அண்டிய உயிலங்குளம் மற்றும் அக்கராயன்குளம் பிரதேசத்தின் தென்பகுதி ஆகியவற்றை இராணுவத்தினர் வெள்ளியன்று விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

துணுக்காய் நகரப் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியதையடுத்து இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவ தலைமையகத்தின் முக்கிய இராணுவ அதிகாரிகளுடன் வவுனியாவில் உள்ள வன்னிப் பிராந்திய ஆயுதப்படைகளின் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார். முக்கிய களமுனை இராணுவ தளபதிகளுடன் அவர் கலந்துரையாடியுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

துணுக்காய் நகரப் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பது பற்றி விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

வட இலங்கை மோதல் நிலவரம் குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை கிழக்கு பல்கலைக்கழக்கத்தில் சிங்கள மாணவர் சுட்டுக் கொலை

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலையில் கிழக்கு பல்கலைக்கழக சிங்கள மாணவர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் இறுதியாண்டு கல்வி பயிலும் மாணவரான பசன் சமரசிங்க என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பல்கலைக்கழக சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்தச் சம்பவம் காரணமாக அங்கு கல்வி பயிலும் சிங்கள மாணவர்களிடையே பாதுகாப்பு தொடர்பான அச்ச நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளதாக பல்லைக்கழக நிர்வாகம் கூறுகின்றது.

பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறும் சிங்கள மாணவர்கள்

மறு-அறிவித்தல் வரும்வரை பல்கலைக்கழகத்தின் அனைத்து விரிவுரைகளும் இடைநிறுத்தப்படவேண்டும் என்றும் மாணவர்கள் தத்தமது வீடுகளுக்கு திரும்புமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புடன் சிங்கள மாணவர்கள் குருநாகல் வரை விசேட வாகனங்களில் அனுப்பிவைக்கப்டப்டுள்ளார்கள்.

இச்சம்பவத்தையடுத்து பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், சிங்கள மாணவர்களையும் நிர்வாகத்தினரையும் சந்தித்து உரையாடினார். சிங்கள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அவர் தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



மௌலவி ஆசிரியர்களை நியமிக்க இலங்கை அரசு மீண்டும் முயற்சி

இலங்கையில் அரசாங்கப் பாடசாலைகளில் சேவையாற்றுவதற்கு சுமார் 15 வருடங்களின் பின்பு மௌலவி ஆசிரியர்களை நியமிக்க அரசாங்கம் முடிவுசெய்து அதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

இஸ்லாம் பாடம் கற்பிப்பதற்கு முக்கியமான நியமனம் என கருதப்படும் இந்நியமனம் தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதிகளினாலும் அமைப்பகளினாலும் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தபோதிலும் தற்போது தான் இது தொடர்பான அறிவித்தலை அரசாங்கம் விடுத்துள்ளது.

இஸ்லாம் என்பது அரபு மொழியுடன் தொடர்புடையது என்பதால், அரபு மொழியை உச்சரிக்கக் கூடியவர்களே அப்பாடத்தை கற்பிக்க வேண்டும் என ஜாமியத்துல் உலமா சபைகளின் பொதுவான கருத்தாகும்.

மௌலவி அல்லாத ஏனைய பாட ஆசிரியர்கள் இஸ்லாம் கற்பிப்பதால், அரபு மொழியை சரியாக உச்சரிக்க தவறுவதாக கூறும் அரபு மொழி உதவிக் கல்விப் பணிப்பாளர்களில் ஒருவரான ஏ.எல்.எம்.முபாரக் மௌலவி.

இதன் காரணமாக பரீட்சை பெறுபேறுகள் கூட பாதிக்கப்படுகின்றது என்கிறார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மௌலவி ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்ற போதிலும் சுமார் 425 ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்க செயலாளரான எம்.அனஸ் சுட்டிக் காட்டுகின்றார்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , | Leave a Comment »

Thuglaq – Cover Image on Congress Govt’s Parliamentary Practices

Posted by Snapjudge மேல் ஜூலை 24, 2008

Thanks: http://aruvaibaskar.blogspot.com/2008/07/blog-post_23.html

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »