Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘dead’

‘Self Immolations for Tamil Eelam: Congress is Responsible’ – Pazha Nedumaran on 14 dead

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2009

14 பேர் உயிரிழந்ததற்கு மத்திய அரசே பொறுப்பு: பழ. நெடுமாறன் குற்றச்சாட்டு

இலங்கைத் தமிழர்களுக்காக 14 பேர் தீக்குளித்து இறந்ததற்கு மத்திய அரசுதான் பொறுப்பாளி என்று குற்றம்சாட்டினார் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன்.

அரியலூர் மாவட்டம், தத்தனூர் கீழவெளியில் ஞாயிற்றுக்கிழமை மாலை, இலங்கைத் தமிழருக்காகத் தீக்குளித்து இறந்த பாமக தொண்டர் செ. ராஜசேகரனின் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இதில் பழ. நெடுமாறன் மேலும் பேசியது:

“”தியாகிகளின் தியாகங்களை மதிக்காவிட்டாலும் கொச்சைப்படுத்தக்கூடாது.

தமிழகத்தில் 5 நாள்களுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர்கள் 14 பேரின் உயிரிழப்புக்கும் பொறுப்பாளி மத்திய அரசுதான். இதன் விளைவு வரும் மக்களவைத் தேர்தலில் உணர்த்தப்படும். ராஜசேகரனின் மரணம் ஈடுசெய்ய முடியாததுதான் என்றாலும், அவரது குடும்பச் சூழல் கருதி சிறு உதவியாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அவரது குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் விரைவில் வழங்கப்படும்” என்றார் பழ. நெடுமாறன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்: “”இவையெல்லாமும் சகித்துக் கொள்ள முடியாத கொடுமை என்றாலும்கூட, தீயில் வெந்து சாக வேண்டும் என்று அவர்கள் எடுத்த முடிவு, அவர்களது மன வேதனையின் உச்சத்தைக் காட்டுகிறது.

பாமக தலைவர் கோ.க. மணி: முத்துக்குமார் தொடங்கி ராஜசேகரன் வரை தீக்குளித்து உயிரிழந்தவர்களின் நோக்கங்கள் நிறைவேறும் வரை வீரமுள்ள, மானமுள்ள தமிழர்கள் தொடர்ந்து போராட வேண்டும்.

Posted in Govt, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , | Leave a Comment »

Dec: Sri Lanka, LTTE, Eezham: News Updates: War, Attacks, Dead

Posted by Snapjudge மேல் திசெம்பர் 1, 2008

இலங்கையை விட்டு வெளியேற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஞாயிறு காலை தான் இந்தியாவிற்கு பயனம் மேற்கொள்ளவிருந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேற குடிவரவு குடியகல்வு தினைக்களத்தினால் அனுமதி மறுக்கப்பட்டது என கூறியுள்ளார்.

தான் ஏற்கனவே தீர்மானத்திபடி வைத்திய சிகிசைக்காக செல்லவிருந்ததாகவும், அனால் நாட்டை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டட நிலையில் தனது பயணத்தை மேற்கொள்ள முடியாமல் திரும்பியதாகவும் தெரிவிக்கின்றார்.

விமான நிலையத்தில் அனுமதி மறுத்த அதிகாரிகள் தன்னை குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் அழைத்துச் சென்றதாகவும், அங்கிருத்த குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி இது மேலிடத்து உத்தரவு என தனக்கு தெரிவித்ததாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன குறிப்பிடுகின்றார்


இலங்கையின் அம்பாறையில் மோட்டார் சைக்கிள் பயன்பாடு தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள்

மட்டக்களப்பு வரைப்படம்
மட்டக்களப்பு வரைப்படம்

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்திலுள்ள சில பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள் பயன்பாடு தொடர்பாக பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்

பாதுகாப்பு காரணங்களக்காக இக்கட்டுப்பாடு என பாதுகாப்பு தரப்பினரால் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், மோட்டார் சைக்கிள் பாவனையாளர்களைப் பொறுத்த வரை இதனால் தாம் சிரமங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

இக்கட்டுப்பாடு காரணமாக ஒருவரின் உறவினர்கள் உட்பட பெயரில் பதிவு செய்யப்ப்டுள்ள மோட்டார் சைக்கிளை மற்றுமொருவர் செலுத்துவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்றும், இது தொடர்பாக பொலிஸ் மா அதிபதிக்கு அவசர கடிதமொன்றை தான் அனுப்பி வைத்துள்ளதாக கூறும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சோமசுந்தரம் புஷ்பராஜா, இது மனித உரிமை மீறல் என்றும், தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களிலேயே இக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் அம்மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாகவும் கூறுகின்றார்.


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்

புளியங்குளத்தில் அரசப்படையினர்
புளியங்குளத்தில் அரசப்படையினர்

இலங்கையின் வடக்கே, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாகிய வன்னிப்பகுதியில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக 7 படையணிகள் பல முனைகளில் தாக்குதல்களை நடத்திய வண்ணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை நோக்கி முன்னேறி வருவதாகவும், கடந்த இரு தினங்களில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் சண்டைகளில் விடுதலைப் புலிகளின் 14 சடலங்களைப் படையினர் ஆயுதங்களுடன் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

பரந்தனுக்கு மேற்குப் பகுதி, அடம்பன், இரணைமடுவுக்கு மேற்குப்புறம், திருமுறிகண்டி, கொக்காவில், கனகராயன்குளம், புளியங்குளம், ஒலு மடுவின் வடகிழக்குப் பகுதி மற்றும் அலம்பில் ஆகிய முனைகளில் இருந்து அரச படையணிகள் முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், இங்கு இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

வவுனியா நகருக்கு வடக்கே அமைந்துள்ள ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியில் இருந்து ஏ9 வீதியில் இராணுவம் கிளிநொச்சி நகருக்குத் தெற்கே உள்ள கொக்காவில் வரையிலான பெரும் பகுதியைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.

எனினும் இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் இந்த மோதல்கள் காரணமாக யுத்த பிரதேசத்திலிருந்து இதுவரையில் 225 குடும்பங்களைச் சேர்ந்த 654 பேர் இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் யாழ் மாவட்டங்களில் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு வந்துள்ளதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.


மன்னம்பிட்டியில் பயணிகளில் விபரங்கள் பதியப்படும் புதிய நடைமுறை

மட்டக்களப்பில் பயணிகள் பஸ் ஒன்று(ஆவணப்படம்)
மட்டக்களப்பில் பயணிகள் பஸ் ஒன்று(ஆவணப்படம்)

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இருந்து வடமத்திய மாகாணத்தின் ஊடாக பயணம் செய்பவர்கள் மன்னம்பிட்டி என்னும் இடத்தில் தமது விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை புதிதாக அமலுக்கு வந்ததால், பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாவதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

இப்படியாக விபரங்கள் ஒவ்வொருவராக பதியப்படுவதால், பெரும் காலதாமதம் ஏற்படுவதாகவும், அத்துடன் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மாத்திரமே இவ்வாறு பதியப்படுவதாகவும் பயணிகள் குறை கூறுகிறார்கள்.

மன்னம்பிட்டியில் பயணிகளின் பெயர்கள் பதிவு செய்யப்படுவதாகவும், அதன் மூலம் சிறிது காலதாமதம் ஏற்படுவதாகவும் ஒப்புக்கொள்ளும் பொலிஸ் தரப்பு பேச்சாளரான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரான ரஞ்சித் குணசேகர அவர்கள், ஆனால், தமிழர்களும், முஸ்லிம்களும் மாத்திரந்தான் அப்படியாக பதிவு செய்யப்படுகிறார்கள் என்று கூறப்படுவதில் எந்தவிதமான உண்மையும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்

இந்தியாவிலிருந்து வந்துள்ள நிவாரணப் பொருட்கள் இலங்கையின் வன்னிப் பிரதேசத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன

லாரிகளில் எடுத்துச் செல்லப்படும் இந்திய நிவாரணப் பொருட்கள்

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தினுள் போர்ச்சூழலில் சிக்கியுள்ள மக்களுக்காக இந்தியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டு, கொழும்பிலிருந்து வவுனியாவுக்கு எடுத்துவரப்பட்டுள்ள நிவாரண உணவுப் பொருட்களின் முதல் தொகுதி 60 ட்ரக் வண்டிகளில் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரால் வன்னிப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.

இதுபற்றி கருத்து தெரிவித்த வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள், இந்தப் பொருட்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளதாகக் கூறினார்.

வரும் வியாழக்கிழமை மேலும் ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இதற்கிடையில் வன்னிப்பிரதேசத்தில் இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்ற பொதுமக்களைத் தங்கவைப்பதற்காக ஓமந்தை பாடசாலையில் புதிய இடைத்தங்கல் நிலையம் ஒன்று திறக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவை குறித்த மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


கிளிநொச்சியை ஒட்டிய கொக்காவிலை கைப்பற்றியிருப்பதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்

இலங்கையின் வடக்கே வன்னிக்கள முனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச படைகள் கிளிநொச்சி நகருக்குத் தெற்கே முறிகண்டி பிரதேசத்தில் ஏ9 வீதியின் கிழக்குப் பகுதியில் முன்னேறி கொக்காவில் பிரதேசத்தை கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

எனினும், இதுகுறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

கிளிநொச்சி நகருக்கு மேற்கில் உள்ள அக்கராயன்குளம் பகுதியில் இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டு வந்த மூன்று தளங்களின் மீது விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.

இதுபற்றியும் விடுதலைப் புலிகளிடமிருந்து உடனடியாகத் தகவல்கள் வெளியாகவில்லை.

ஆயினும் கிளிநொச்சி நகருக்கு கிழக்கே உள்ள வட்டக்கச்சி பகுதியை நோக்கி இராணுவத்தினர் நடத்திய எறிகணை தாக்குதலில் மாணவி ஒருவர் கொல்லப்பட்டும், 31 வயதுடைய ஆண்மகன் ஒருவர் காயமடைந்தும் இருப்பதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.


இலங்கையின் வடக்கே வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது

இலங்கையின் வடக்கே சுமார் மூன்று லட்சம் பேர் இடம்பெயர்வதற்கு காரணமான வெள்ளம் தற்போது வடியத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ் மாவட்டங்களில் இந்த மழை, வெள்ளம் காரணமாக 9 பேர் பலியாகியுள்ளனர், கிட்டத்தட்ட 800 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்த வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிவருவதாக கூறும் இலங்கை அரசு, வெள்ளத்தின் காரணமாக சேதமடைந்துள்ள சாலைகளை செப்பனிடும் பணிகளில் ஈடுபட்டுவருவதாகவும் கூறியுள்ளது.

1918ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் இலங்கையின் வடபகுதியில் இந்த அளவுக்கு மழை பெய்துள்ளது என்று இலங்கை அரசின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


உலக எய்ட்ஸ் தினம்: இலங்கையில் விழிப்புணர்வு ஊர்வலம்

வெலிக்கடை சிறையின் முன்பு எய்ட்ஸ் விழிப்புணர்வு பதாகைகளுடன் கைதிகள்

எய்ட்ஸ் நோயின் தாக்கம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை சுகாதார அமைச்சும், சிறைச்சாலைகள் திணைக்களமும் இணைந்து சர்வதேச எயிட்ஸ் தினமான திங்களன்று கவனயீர்ப்பு ஊர்வலமொன்றினை மேல் மாகாணத்தில் நடத்தியது.

பாதுகாப்பற்ற பாலியல் உடலுறவினால் பெருமளவில் ஏற்படும் இந்தக் கொடிய நோயின் தாக்கத்திற்கு இலங்கையில் சுமார் 100 குழந்தைகள் உட்பட 1029 பேர் பாதிப்பிற்குள்ளாகியிருப்பதாகவும், சுமார் 200 பேர் வரை மரணத்தினைத் தழுவியிருப்பதாகவும் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் வைத்திய நிபுணர் நவரட்ணசிங்கம் ஜனகன் தழிழோசையிடம் தெரிவித்தார்.

ஆனாலும் இந்த நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்போரின் உண்மையான எண்ணிக்கை இதனைவிட அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுவதாகத் தெரிவித்த டாக்டர் ஜனகன், இலங்கையில் எயிட்ஸ் நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பவர்களில் சுமார் 50 சதவீதமானவர்கள் கொழும்பு, கம்பஹா போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்திலேயே வசித்துவருகிறார்கள் எனவும், இவர்களில் பெரும்பாலானோருக்கு பாதுகாப்பற்ற பாலியல் உறவு காரணமாகவே எச்.ஐ.வி கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் வடக்கே மழைவெள்ளம்

இலங்கையில் வடக்கே மழை வெள்ளம்
இலங்கையின் வடக்கே மழை வெள்ளம்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் மழை வெள்ளம் காரணமாக ஒரு லட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

நீரினால் அடித்துச் செல்லப்பட்டும், வீடுகள் இடிந்ததனாலும், மரங்கள் முறிந்து வீழ்ந்ததனாலும், 12 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

வீதிகளில் வெள்ளம் பாய்வதனால் போக்குவரத்துக்கள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை ஓய்ந்து வெள்ளம் வடியத் தொடங்கியுள்ள போதிலும், வெள்ளத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் இன்னும் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலைமையே காணப்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றார்கள்.

இதுபற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் நேயர்கள் கேட்கலாம்


மட்டக்களப்பில் சந்தேக நபர்களிடம் விசாரணை

மட்டக்களப்பு வரைப்படம்
மட்டக்களப்பு வரைப்படம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமையன்று 12 மணி நேரத்திற்கு பிறப்பிக்கப்பிட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் சிவிலியன் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சனிக்கிழமையன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நேரத்தில், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் என 2000 க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் சுமார் 4103 வீடுகள், 56 வாகனங்கள் மற்றும் 11963 பேரை சோதனையிட்டுள்ளனர்.

இவர்களில் 123 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 117 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதனிடையே கிழக்கு மாகாணத்தில் நிலவும் அச்சம் மற்றும் பாதுகாப்பின்மை குறித்து மட்டக்களப்பு திருகோணமலை மறை மாவட்டங்களின் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை கவலை வெளியிட்டுள்லார். அவரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் உரையை தணிக்கை செய்ததாக இலங்கை அரசு மீது குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வருடாந்திர உரை குறித்த செய்திகளை வழங்கியபோது பிபிசியின் தமிழ் மற்றும் சிங்கள சேவை ஒலிபரப்புகளை இலங்கை அரசு தணிக்கை செய்ததாக இலங்கையின் ஊகட அமைப்புகள் ஐந்து குற்றம்சாட்டியுள்ளன.

கடந்த வியாழக்கிழமை அன்று அரசு கட்டுப்பாட்டிலுள்ள இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்த செய்தித் தணிக்கை நடவடிக்கையானது, இலங்கை மக்களின் தகவல் அறியும் உரிமையையும், ஒரு முக்கிய விடயம் குறித்த மாற்றுக் கண்ணோட்டங்கள் தடையின்றி பரிமாறப்படுவதையும் தெளிவாக மீறியுள்ளது என்று கூறியுள்ளது.

பிரபாகரனின் உரை குறித்த செய்திகள் சென்ற வருடமும் தணிக்கை செய்யப்பட்டிருந்தன என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இக்குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் பதில் தரவில்லை.

Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 Comments »

Gaza shut to fuel and journalists: Middle East: Gaza food aid to be cut unless key supplies allowed in says UN

Posted by Snapjudge மேல் நவம்பர் 12, 2008


காஸாப் பகுதியில் மீண்டும் சண்டை

காஸாப் பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தினர்.
காஸாப் பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தினர்.

மத்திய கிழக்கின் காசாப் பகுதியில், பாலத்தீன இஸ்லாமியவாத ஹமாஸ் குழுவுக்கும் இஸ்ரேலியத் துருப்புக்களுக்கும் இடையில் நடந்த சண்டையில் ஹமாஸ் குழுவைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலுடனான எல்லையில் வெடி மருந்துகளை வைக்க இவர்கள் முயன்றார்கள் என்று இஸ்ரேல் கூறுகிறது. காசாப் பகுதியில் ஐந்து மாதங்களுக்கு முன்னரே இஸ்ரேல் ஹமாஸ் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.

ஆனாலும் இங்கு பதற்ற நிலை இன்னமும் நிலவுகிறது என்று எமது செய்தியளார் கூறுகிறார்.



‘காசா மீதான தடை வெட்கத்துக்குரிய செயல்’- ஐ.நா அலுவலர்கள்

இஸ்ரேலினால் காசா நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடை நடவடிக்கைகளை, வெட்கத்துக்குரிய செயல் என்று அங்குள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிதாக உணவுப் பொருட்கள் வருவதை இஸ்ரேல் அனுமதிக்காவிட்டால், ஐ.நாவின் உணவு விநியோக இடங்களில் இன்னும் இரு தினங்களில் உணவுப் பொருட்கள் தீர்ந்து போகும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஒரு வரா காலமாக காசா நிலப்பரப்புக்குள் உணவு, மருந்து உள்ளிட்ட அனைத்து வகைப் பொருட்களின் போக்குவரத்தையும் இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. இதனால் காசா பகுதியில் உள்ள ஒரே மின் உற்பத்தி நிலையமும் திங்கட்கிழமை இரவில் இருந்து இயங்கவில்லை.

தற்போது குறைந்த அளவிலான எரிபொருட்கள் காசா பகுதிக்குள் கொண்டு செல்லப்படுவதை இஸ்ரேல் அனுமதித்துள்ளது. ஆனால் உணவுப் பொருட்களை அங்கு கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , | Leave a Comment »

South Waziristan suicide attack: A Bomb Kills 8 Pakistanis, and It Is Seen as a Warning: Petraeus signals US priorities with Pakistan visit

Posted by Snapjudge மேல் நவம்பர் 3, 2008


வஸிரிஸ்தானில் 8 படையினர் பலி

பாகிஸ்தான் படையினர்
பாகிஸ்தான் படையினர்

ஆஃப்கன் எல்லைப்புறத்துக்கு அருகே உள்ள பாக்கிஸ்தானின் தெற்கு வஸிரிஸ்த்தான் பகுதியில் இருக்கும் வானா பகுதியில் பாகிஸ்தானப் பாதுகாப்புப் படைகளின் வண்டித் தொடர் மீது நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றில் குறைந்தது எட்டுப் படையினர் கொல்லப்பட்டுப் பலர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான இராணுவத்தின் சார்பில் பேசும் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

போராளிகளின் நடவடிக்கைகள் இப்பகுதியில் அதிகரித்ததைத தொடர்ந்து பாக்கிஸ்தானப் படைகள் இங்கு நிறுத்தப்பட்டுள்ளன.

ஆஃப்கன் எல்லைக்கு அருகே உள்ள பழங்குடிப் பகுதியின் மீது அமெரிக்கா நடத்தியதாகக் கருதப்படுகின்ற எறிகணைத் தாக்குதலில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட சம்வம் நடந்து சில நாட்களுக்குள் இந்தத் தற்கொலைத் தாக்குதல் நடந்துள்ளது.

Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

India suspects Islamist militants in Assam bombings: Toll in Assam blasts rises to 76: ULFA denies hand in blasts

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2008

அஸ்ஸாமில் தொடர் குண்டுவெடிப்பு -குறைந்தது 60 பேர் பலி

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் வியாழக்கிழமை காலை ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் குறைந்தபட்சம் 60 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்புக்கள், பெரும்பாலும் தலைநகர் குவாஹாட்டியில் நடந்துள்ளன. அவற்றில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.

இந்தச் சம்பவங்களுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. பிரிவினைவாத அமைப்பான உல்ஃபா மீது போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஆனால் இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று உல்ஃபா மறுத்திருக்கிறது.

முற்பகல் 11 மணிக்குப் பிறகு, குவாஹாட்டி, கோக்ரஜார், பார்பேடா சாலை மற்றும் பொங்கைகான் ஆகிய இடங்களில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றன.

குண்டுவெடிப்பு நடந்த இடம்
குண்டுவெடிப்பு நடந்த இடம்

குவாஹாட்டியில் துணை கமிஷனர் அலுவலகம் முன்பு நடைபெற்ற முதல் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டார்கள். மாநில தலைமைச் செயலகம் அருகே நடைபெற்ற இரண்டாவது சம்பவத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டார்கள். மத்திய குவாஹாட்டியில் பான்பஜார் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டார்கள். அதேபோல் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில், மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் குண்டிவெடிப்புக்கள் நடந்துள்ளன.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த பெண்மணி ஒருவர் கூறும்போது, தான் பயணம் செய்துகொண்டிருந்த பேருந்துக்கு முன்பு பயங்கர சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்ததில், பஸ்ஸின் முன்பகுதியில் தீப் பிடித்துக் கொண்டதாகவும், பலருக்கு குண்டு காயமும் பலருக்கு தீ்க் காயமும் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து பொதுமக்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டார்கள். போலீசார் மீதும் போலீஸ் மற்றும் தீயணைப்புபத்துறை வாகனங்கள் மீதும் மக்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினார்கள். தீயணைப்புத்துறையினரும் போலீசாரும் உதவி செய்யவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறினார்கள்.

பல குண்டுகல் காரில் வைக்கப்பட்டிருந்தன
பல குண்டுகல் காரில் வைக்கப்பட்டிருந்தன

பெரும்பாலான குண்டுகள் கார்களில் வைக்கப்பட்டிருந்ததாகவும், உல்ஃபா அமைப்பைத் தவிர வேறு யாரும் இதைச் செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார் அஸ்ஸாம் மாநில காவல்துறைத் தலைவர் ஆர்.என். மாதூர். ஆனால், உல்ஃபா அமைப்பு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், தங்களுக்கு இன்றைய சம்பவங்களில் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் யாருக்குத் தொடர்பு இருக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது என்ற அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய் அவர்கள், பல அண்டை நாடுகள் அஸ்ஸாமின் எல்லையில் இருப்பதால் பயங்கரவாதத் தாக்குதல் நடப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகக் கூறினார்.

இதனிடையே, நிலைமையை நேரில் ஆய்வு செய்ய, பிரதமர் மன்மோகன் சிங் நாளை குவாஹாட்டி செல்கிறார். மன்மோகன் சிங், அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Posted in India | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Senior Al Qaeda member killed in US raid in Syria, officials say: Eight people dead after US attack on Syrian town, says Damascus

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 28, 2008


எட்டு பேர் கொல்லப்பட்ட ஹெலிகாப்டர் தாக்குதலுக்கு சிரியா கண்டனம்

தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது

சிரியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஹெலிகாப்டரிலிருந்து நடத்தப்பட்டிருந்த ஒரு தாக்குதல் குறித்து விசாரிக்கப்பட வேண்டுமென அமெரிக்காவிடமும் இராக்கிடமும் சிரியாவின் வெளியுறவு அமைச்சர் வாலித் அல்மொஅல்லம் வலியுறுத்தியுள்ளார்.

எட்டு பேர் கொல்லப்பட்ட இந்தத் தாக்குதலை அமெரிக்கர்கள்தான் நடத்தியதாக சிரியா பழிசுமத்தியுள்ளது.

இத்தாக்குதல் ஒரு குற்றச்செயல் என்றும் ஒரு பயங்கரவாத அடாவடித்தனம் என்றும் லண்டனில் பேசிய அமைச்சர் மொஅல்லம் வருணித்துள்ளார். இதுபோன்ற தாக்குதல் மறுபடியும் நிகழுமானால், தனது நிலப்பரப்பை சிரியா தற்காத்துக்கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் குறித்து அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்றாலும் பெயர் வெளியிட விரும்பாத இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி வாஷிங்டனிலிருந்து வெளியாகும் தகவல்கள், இத்தாக்குதல் அல்கைதாவினருடன் தொடர்புடைய வெளிநாட்டு போராளிகளை இலக்குவைத்து அமெரிக்க விசேடப் படையினரால் நடத்தப்பட்டிருந்ததாகக் கூறுகின்றன.


Posted in Govt, Law, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Russians ambushed in Ingushetia: Three soldiers killed in Caucasus ambush

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2008


இங்குஷெட்டியாவில் ரஷ்ய படையினர் மீது தாக்குதல்

இங்குஷெட்டியா வரைப்படம்
இங்குஷெட்டியா வரைப்படம்

பதட்டம் மிகுந்த வடக்கு காகசஸஸ் பகுதியான இங்குஷெட்டியாவில் ரஷ்ய இராணுவ வாகன தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் இரண்டு படையினர் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்துள்ளதாகவும், இந்த தாக்குதலுக்கு உள்ளூர் முஸ்லிம் பிரிவினைவாதிகளே காரணம் என ரஷ்ய அதிகாரவட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இங்குசெட்டியாவில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள், இந்த தாக்குதல் இங்குஷெட்டியாவின் பிராந்திய தலைநகரான நஸ்ரானிற்கு அருகே நடந்ததாகவும், இதில் நாற்பது ரஷ்ய படையினர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

உள்த்துறை அமைச்சக துருப்புகள் மீது எறிகுண்டுகள் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


Posted in Govt, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Suicide attack on Pakistan tribal gathering kills 85: Pak. tribes raze Taliban houses after bombing: Orakzai jirga

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 12, 2008


பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 15 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில், பழங்குடியின நிர்வாக சபை ஒன்றின் கூட்டத்தில் தற்கொலையாளி ஒருவர் குண்டை வெடிக்கச் செய்ததில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் அதில் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

அந்தப் பகுதியில் இயங்கும் தலிபான்களுக்கு எதிராக ஒரு பழங்குடியின ஆயுதக்குழுவை உருவாக்குவதற்காகவே இந்தக் கூட்டம் ஒரக்ஸாய் பிராந்தியத்தில் கூட்டப்பட்டது.

600 பேர் கலந்துகொண்ட கூட்டத்துக்குள் நடந்து சென்ற தற்கொலையாளி குண்டை வெடிக்கச் செய்ததாக ஒரு பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | Leave a Comment »

Sri Lankan Cabinet minister, Maithripala Sirisena escapes suicide blast: Assassination attempt on his life by LTTE: British, Norway ambassadors visit Jaffna

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 10, 2008

தேவைப்பட்டால் ராஜினாமா செய்வோம் – த.தே.கூ

இலங்கை தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு இந்திய மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரி தமிழகத்தில் திமுக வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இராஜினாமாவை திமுக தலைவர் கருணாநிதியிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கைக்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தேவைப்படும் பட்சத்தில் தங்களது பதவிகளை துறக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தயாராக இருப்பதாக அதன் தலைவர் இரா.சம்மந்தர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

எனினும் தாங்கள் இராஜினாமா செய்தால், அவ்விடங்களுக்கு தங்களுடைய கைப்பாவைகளை இலங்கை அரசு நியமிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், அதன் மூலம் உலகை ஏமாற்ற இலங்கை அரசு முயற்சிக்கும் என்றும் அவர் கருத்து வெளியிட்டார்.

இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையின் கிழக்கே வட்டமடுவில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை – அமைச்சர்

இலங்கை வரைப்படம்
இலங்கை வரைப்படம்

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்திலுள்ள வட்டமடு பகுதியில் விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கான பாதுகாப்பான சூழ்நிலை இன்னமும் அங்கு இல்லை என கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சரான நவரட்னராஜா கூறியுள்ளார்.

இப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை 4 விவசாயிகள் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கு விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ள அச்சநிலை தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர்,
சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு, மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டு பாதுகாப்பு தரப்பினரால் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டாலும் அது சாத்தியப்படக் கூடியது அல்ல என்றும் தமிழோசைக்கு தெரிவித்துள்ளார்.


இலங்கையின் வடகே தொடரும் மோதல்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன்குளம் பகுதியில் விடுதலைப்புலிகளின் மீது இருமுனைகளில் சனிக்கிழமை காலை இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் விடுதலைப்புலிகளின் அதி தீவிர பாதுகாப்புக்குள் இருந்த முக்கிய நீண்ட பெரும் மண் அரணின் 3 கிலோ மீட்டர் பகுதியைத் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்திருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

கைப்பற்றப்பட்ட பகுதியில் இருந்த விடுதலைப்புலிகளின் பலத்த பாதுகாப்புமிக்க 13 பதுங்கு குழிகளையும் இராணுவத்தினர் தமது வசப்படுத்தியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

அக்கராயன்குளத்திற்கு மேற்குப் புறமாக முன்னேறிய படையினர் விடுதலைப் புலிகளின் மண் அரணின் 2 கிலோ மீட்டர் பகுதியையும், கிழக்குப் புறத்திலிருந்து முன்னேறிய இராணுவத்தினர், இந்த அரணின் ஒரு கிலோ மீட்டர் பகுதியையும் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.

இந்த முன்னகர்வின்போது இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர சண்டைகள் நடைபெற்றதாகவும் இதன்போது படைத்தரப்பில் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இதேபோல விடுதலைப் புலிகள் தரப்பிலும் பலத்த உயிர்ச்சேதம் மற்றும் உடைமைச் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

எனினும் இது தொடர்பில் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

இலங்கை தமிழ் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது – இந்திய பிரதமர் கோரிக்கை

இலங்கை இராணுவத்துக்கும் தமிழ் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்ததுவரும் சண்டையில் சாமானியத் தமிழர்கள் பாதிக்கப்படாதிருப்பதை இலங்கை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டுமென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடிய இந்தியப் பிரதமர், இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமானச் சூழல் மோசமடைந்துவருவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் சமூகத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை இலங்கை அதிகாரிகள் மேற்கொண்டுவருவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


இலங்கையின் வன்னிப் பிரதேசத்திற்கு செல்லும் சாலையை சீர்திருத்த அரசாங்கம் நிதி ஒதுக்கீடு

ஒமந்தை சோதனைச்சாவடி
ஒமந்தை சோதனைச்சாவடி

இலங்கையின் வடக்கே, ஓமந்தை சோதனைச்சாவடிக்கு அப்பால் புளியங்குளத்திலிருந்து நெடுங்கேணி வழியாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற வன்னிப்பிரதேசத்திற்குச் செல்லும் வீதியில் திருத்த வேலைகளை மேற்கொள்வதற்கு அரசு 30 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கியுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ் தெரிவித்தார்.

புளியங்குளத்தில் இருந்து நெடுங்கேணி ஊடாக ஒட்டுசுட்டான் வரையிலான பகுதியில் சுமார் 20 கிலோ மீட்டர் நீளமான வீதி மோசமாக இருப்பதாக அரசாங்கத்தின் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டுவந்திருந்தனர்.

புளியங்குளத்திற்கு அப்பால் பாலம் ஒன்று உடைந்ததனால் கடந்த வாரம் முதற்தடவையாக இந்த வீதிவழியாக உணவுப் பொருட்களை ஏற்றிச்சென்ற ட்ரக் வண்டிகள் பிரயாணத்தை மேற்கொள்ள முடியாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வெள்ளிகிழமை இடம்பெற்ற கடும் சண்டைகளில் பல விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த மோதல்கள் குறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.



வன்னிப் பகுதிக்கான இரண்டாவது தொகுதி ஐ.நா. உணவு உதவிப் பொருட்கள் சென்றடைந்துள்ளன

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கென ஐ.நா.வின் உலக உணவுத் தி்ட்டத்தினால் வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கு இரண்டாவது தொகுதியாக 750 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற 50 டிரக் வண்டிகளும் வெள்ளியன்று எவ்வித பிரச்சனையும் இன்றி அப்பகுதிகளுக்கு சென்று உணவுப் பொதிகளை அங்கே இறக்கியுள்ளன.

முல்லைத் தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் உணவுப் பொருட்களை இறக்கும் பணிகளை கண்காணித்துவரும் உலக உணவுத் திட்டத்தின் அதிகாரி மார்க் வைல்ட் ஸ்டிரக், எடுத்துவரப்பட்ட 750 டன்களில் உணவுகளில் 300 டன்கள் முல்லைத் தீவுக்கும், 450 டன்கள் கிளிநோச்சிக்கும் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தாங்கள் வழங்கும் பொருட்கள் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டு பல்நோக்கு கூட்றவு சங்கங்கள் மூலமாகவிநியோகிக்கப்படுகின்றன. ஆதலால் அப்பொருட்கள் விடுதலைப் புலிகளுக்கு செல்கின்றன என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்க வாய்ப்பில்லை என்று தான் கருதுவதாக அவர் தெரிவித்தார்.


திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைவரிடம் இராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்

தமிழகத்தில் ஆளும் திமுவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் இராஜினாமா கடிதங்களை கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதியிடம் அளித்துள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.

இலங்கை விவாகாரத்தில் இந்தியா தலையிட்டு அக்டோபர் 29ஆம் தேதிக்குள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டுவராவிட்டால், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்று கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து கருணாநிதியின் மகள் கனிமொழி, நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் இராஜினாமா கடிதத்தை ஏற்கனவே கருணாநிதியிடம் கொடுத்துவிட்டார். வெள்ளியன்று அமைச்சர்கள் உள்ளிட்ட பிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இராஜினாமா கடிதத்தை கருணாநிதியிடம் அளித்துள்ளதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட திமுகவைச்சேர்ந்த தயாநிதி மாறன் ராஜினாமா கடிதம் கொடுத்தாரா என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்திய சட்டப்படி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் தங்கள் இராஜினாமா கடிதங்களை மக்களவை சபாநாயகருக்கும், மாநிலங்களவை உறுப்பினர்கள் அந்த அவையின் தலைவருக்கும் அனுப்ப வேண்டும்.



இலங்கை நிலவரம் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது

இந்திய வெளியுறவுச் செயலர் ஷிவ்ஷங்கர் மேனன்

இந்திய வெளியுறவுச் செயலர் ஷிவ்ஷங்கர் மேனன் அவர்கள் இந்தியாவுக்கான இலங்கை தூதர் குணசிங்கே அவர்களை தமது அலுவலகத்திற்கு அழைத்து இலங்கை நிலவரம் குறித்து இந்தியாவின் கவலைகளை தெரியப்படுத்தியுள்ளார்.

வெள்ளியன்று நடந்த இந்த சந்திப்பின்போது, இந்த விவகாரத்தில் இந்தியாவின் கவலைகளை போக்கத்தக்க முறையான நடவடிக்கைகளை இலங்கை எடுக்கவேண்டும் என ஷிவ்ஷங்கர் மேனன் கோரியதாக இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தொல்லைக்குள்ளாகும் சம்பவங்கள் மற்றும் கொல்லப்படும் சம்பவங்கள் குறித்தும் இந்தியாவின் கவலைகளையும் அவர் அப்போது தெரியப்படுத்தியிருந்தார்.

இலங்கையில் தொடரும் மோதல்களின் காரணமாக இதில் சம்பந்தப்படாத பொதுமக்கள் சந்திக்கும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் வியாழனன்று தெரிவித்திருந்த பின்னணியில், இன்றைய இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பொதுமக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் தாக்குதல்களிலிருந்து பாதுக்காக்கப்பட வேண்டும் என்றும் பிரணாப் முகர்ஜி அவர்கள் கோரியிருந்தார். மேலும், அத்தியாவசியப் பொருட்கள் அவர்களை சென்றடைய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் பிரணாப் முகர்ஜி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இராணுவ ரீதியிலான வெற்றிகள் இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தாது என்றும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூக மக்களும் சமமாக வாழக்கூடிய அரசியல் ரீதியான தீர்வே சமாதானத்தை கொண்டுவரும் எனவும் அவர் வலியுறித்தியிருந்தார்.


இலங்கையின் வடக்கே மருத்துவ சேவையில் தட்டுப்பாடுகள்

கிளிநொச்சி நகரை ஒட்டி சமீபத்தில் அதிகரித்த தாக்குதல் சம்பவங்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கிழக்குப் பிரதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ள மக்கள் தமது சுகாதார தேவைகளுக்கு தர்மபுரம் மருத்துவ மனையை நாடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் நோயாளர்களின் அதிகரிப்பை சமாளிக்க அந்த மருத்துவமனையால் இயலவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இடம்பெயர்ந்துள்ள மக்கள் மத்தியில் வயிற்றோட்ட நோயும் பாம்புக்கடியும் அதிகமாகக் காணப்படுவதாக தர்மபுரம் வைத்தியசாலையின் பதில் மருத்துவ பொறுப்பதிகாரி டாக்டர் பிரசாத்நாயகம் பிரைட்டன் அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்திருக்கிறார்.

கடந்த வாரத்தி்ல் 200 பேருக்குமேல் பாம்புக்கடிக்கு உள்ளாகியிருப்பதாகவும் 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

வயிற்றோட்டம் பாம்புக்கடி ஆகியவற்றிற்குத் தேவையான முக்கிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் டாக்டர் பிரைட்டன் கூறுகின்றார்.

இது குறித்து தர்மபுரம் மருத்துவமனையின் பதில் பொறுப்பு வைத்திய அதிகாரி பிரதாப் நாயகம் பிரைட்டன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.


வன்னிக்கான உணவுத் தொடரணி மோதலால் திரும்பியது

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப்பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கென ஐநாவின் உலக உணவுத் தி்ட்டத்தினால் வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கு இரண்டாவது தொகுதியாக 750 மெட்றிக் டன் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற 50 ட்ரக் வண்டிகளும் ஓமந்தை சோதனைச்சாவடியைக் கடந்து புளியங்குளம் பிரதேசம் வரையில் சென்றதன் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக வவுனியாவுக்கே மீண்டும் திரும்பி வந்ததாக ஐ நாவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐநாவின் உதவி அமைப்புக்களும், சர்வதேச தொண்டு நிறுவனங்களும் போர் நெருக்கடிகள் சூழ்ந்துள்ள வன்னிப்பிரதேசத்திலிருந்து பாதுகாப்பு காரணங்களைக்காட்டி, அங்கிருந்து அரசாங்கத்தினால் வெளியேற்றப்பட்டதன் பின்னர் கடந்த 2 ஆம் திகதி உலக உணவுத் திட்டத்தின் முதல் தொகுதியாக 51 ட்ரக் வண்டிகளில் 750 மெட்றிக் டன் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் உள்ள ஐநாவின் உலக உணவுத் திட்ட களஞ்சியசாலையில் இராணுவத்தினரால் முழுமையாகச் சோதனையிடப்பட்டதன் பின்னர் இந்த 50 ட்ரக் வண்டிகளும் இன்று பகல் 12.30 மணியளவில் வன்னிப்பகுதியை நோக்கி ஐநாவின் கொடியுடன், உலக உணவுத் திட்ட அதிகாரிகளின் வழித்துணையோடு புறப்பட்டுச் சென்றன. எனினும் ஓமந்தைக்கு அப்பால் நிலவிய பாதுகாப்பற்ற நிலைமை காரணமாக இந்த ட்ரக் வண்டிகள் மீண்டும் வவுனியாவுக்கு சில மணித்தியாலங்களின் பின்னர் திரும்பி வந்து சேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வாகனத் தொடரணி புளியங்குளம் சந்தியைக் கடந்தபோது. விடுதலைப் புலிகள் ஏவிய மோட்டார் குண்டுகள் அந்தப் பிரதேசத்தில் வந்து வீழ்ந்து வெடித்ததனால், 50 ட்ரக் வண்டிகளும் தமது பயணத்தைக் கைவிட்டு திரும்பி வந்ததாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

இதேவேளை, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாட்டங்களுக்கென அத்தியாவசிய உணவுப் பொருட்களை வவுனியாவிலிருந்து ஏற்றிச் சென்ற 18 ட்ரக் வண்டிகளும் ஓமந்தை சோதனைச்சாவடியில் சோதனையிடப்பட்டதன் பின்னர் புளியங்குளம் நெடுங்கேணி வீதி வழியாகத் தமது பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டதாக வவுனியாவில் உள்ள அரச அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு மற்றும் விடுதலைப் புலிகளிடமிருந்து பாதுகாப்பு உத்திரவாதங்களைப் பெற்றுக் கொண்டு மீண்டும் இந்த வாகனத் தொடரணி வன்னிக்குச் செல்லும் என்று இலங்கையில் உள்ள ஐ நா பேச்சாளர் கார்டன் வைஸ் நம்பிக்கை வெளியிட்டார்.


புலிகளின் இரண்டு முக்கியத் தலைவர்களைக் கொன்றுவிட்டதாக இலங்கை இராணுவம் கூறுகிறது

முகமாலை பகுதியில் உள்ள புலிகளின் நிலைகள்
முகமாலை பகுதியில் உள்ள புலிகளின் நிலைகள்

இலங்கையின் வடக்கே முகமாலை முன்னரங்கப் பகுதியில் இன்று ராணுவத்தினர் விடுதலைப்புலிகள் மீது தொடுத்த தாக்குதல் ஒன்றில் புலிகளின் இரண்டு தலைவர்கள் கொல்லப்பட்டு, விடுதலைப்புலிகளுக்கு பெரும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டதாக ராணுவத் தலைமையக் விடுத்துள்ள இணையச் செய்திக்குறிப்பு கூறுகின்றது.

படைத்தரப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் , 9 பேர் காயமடைந்ததாகவும் அது கூறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ள தகவலில், மோதல்கள் நடந்ததை உறுதி செய்து, ஆனால் ராணுவத்தின் முன் நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டதாக கூறியிருக்கின்றனர். இந்த மோதல்களில் 15 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இரு தரப்பு கருத்துக்களையும் பக்கச்சார்பற்ற முறையில் உறுதிசெய்ய முடியவில்லை.


இலங்கைப் பிரச்சனையை முன்நிறுத்து வரும் 21 ஆம் தேதி சென்னையில் மனித சங்கிலி

முதல்வர் கருணாநிதி
முதல்வர் கருணாநிதி

இலங்கைத்தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு போர் நிறுத்தத்திற்கு முயற்சிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்துக் கட்சி கூட்டதீர்மானங்களை வலியுறுத்தி, சென்னையில் எதிர்வரும் அக்டோபர் 21ஆம் நாளன்று மனிதச்சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என
தமிழக முதல்வர் கருணாநிதி, அறிவித்திருக்கிறார்.

தமிழகம் முழுவதிலிருந்தும் மக்கள் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

திமுகவின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியில் கருத்து வெளியிட்டுள்ள கருணாநிதி, அ இ அ தி மு க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் அறிக்கையினை இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் ஆலோசகர் பாசில் ராஜபக்சே வரவேற்றிருப்பதை சுட்டிக்காட்டி, சிங்களர்களுக்கு ஆதரவாகவே ஜெயலலிதா செயல்படுகிறார் எனவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.


இலங்கை நிலவரம் தொடர்பில் இந்தியா மீண்டும் கவலை வெளியிட்டுள்ளது

இலங்கை நிலை குறிதத்து இந்தியா கவலை
இலங்கை நிலை குறிதத்து இந்தியா கவலை

இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் மோதல்களின் காரணமாக பொதுமக்கள் மீது ஏற்படும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து இந்தியா மீண்டும் கவலை தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் தாக்குதல்களிலிருந்து பாதுக்காக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

மேலும், அத்தியாவசியப் பொருட்கள் அவர்களை சென்றடைய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் பிரணாப் முகர்ஜி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இராணுவத் தீர்வு பிரச்சினைகளுக்கு தீர்வாகது என்றும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் ரீதியான தீர்வே காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறித்தியுள்ளார்.

இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் என்று கோரியுள்ள அவர் இந்திய அரசு இதை உறுதி செய்ய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

வன்னிப் பகுதிக்கு உணவுப் பொருட்களை ஏற்றிவந்த வண்டிகள் வழியிலேயே நிற்கின்றன

இலங்கையில் வன்னிப் பகுதிக்கு அவசரமாக உணவுப் பொருட்களுடன் அனுப்பிவைக்கப்பட்ட 20 ட்ரக் வண்டிகள் வழியிலேயே தேங்கி நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் வடக்கே மோதல்கள் இடம்பெற்றுவருகின்ற வன்னிப் பகுதிக்கும், வவுனியாவுக்கும் இடையிலான போக்குவரத்துப் பாதையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தை அடுத்து, உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்படுகின்ற இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களை அங்கு அனுப்பிவைக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த உணவுப் பொருட்கள் அவசரமாக அனுப்பப்பட்டிருந்தன.

புளியங்குளம் பகுதியில் அந்த வாகனத் தொடரணி தேங்கி நிற்பதாக அதனுடன் வவுனியாவிலிருந்து பிரயாணம் செய்த முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் அவர்கள் கூறுகின்றார்.

வவுனியாவுக்கும் வன்னிப்பகுதிக்கும் இடையில் ஏ9 வீதியில் நடைபெற்று வந்த போக்குவரத்து யுத்த மோதல்கள் காரணமாக மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதிக்கு மாற்றப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை இந்த போக்குவரத்து மார்க்கத்திலும் மாற்றம் செய்யப்பட்டு நெடுங்கேணி வழியாக பிரயாணம் செய்யுமாறு அறிவிக்கப்பட்ருந்தது. எனினும் இந்தப் புதிய வீதிவழியாக உணவுப் பொருட்களை அனுப்பிவைப்பதில் உலக உணவுத் திட்ட அதிகாரிகள் உடனடியாக உடன்படவில்லை.

இந்த நிலையிலேயே அராசங்கத்தின் உத்தரவுக்கமைய இன்று வன்னிப் பகுதிக்கு 20 ட்ரக் வண்டிகளில் அவசரமாக உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராகிய திருமதி பி.எஸ்.எம்.சார்ல்ஸ் அவர்கள் கூறினார்.

இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


விடுதலைப் புலிகள் சரண் அடைந்து ஜனநாயக வழிக்கு திரும்பவேண்டும் – இலங்கை ஜனாதிபதி கோரிக்கை

கூட்டத்தில் கலந்து கொண்ட த.ம.வி.பு தலைவர் கருணா, ஜனாதிபதியுடன்
கூட்டத்தில் கலந்து கொண்ட த.ம.வி.பு தலைவர் கருணா, ஜனாதிபதியுடன்

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கைவிட்டு, படையினரிடம் சரணடைந்து, தேசிய ஜனநாயக வழிக்குத் திரும்ப வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

சனிக்கிழமையன்று விசேட அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்றினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் கூட்டியிருந்தார்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளிற்கு மத்தியில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் தற்போதைய சூழ்நிலை குறித்தும், பயங்கரவாதத்தினை முற்றாக ஒழித்துக்கட்டி, நாட்டின் சகல பாகங்களிலும் அமைதியினையும் ஜனநாயகத்தினையும் ஏற்படுத்த தனது அரசு எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் கருத்து வெளியிட்டார்.

இந்தக் அனைத்துக்கட்சிக் கட்சிக் கூட்டத்தினை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், மூன்றாவது பெரிய அரசியல் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி எனப்படும், ஜே.வி.பியும் புறக்கணித்திருக்கின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கு இதில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் இந்தக் கூட்டத்தில் கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா அம்மான் கலந்து கொண்டார்.


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்

உடலை பார்த்து கதறியழும் உறவினர்கள்
உடலை பார்த்து கதறியழும் உறவினர்கள்

இலங்கையின் வடக்கே வவுனியா நகரில், ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளராகிய மகேஸ்வரன் தவச்செல்வம் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வவுனியா பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

வவுனியா ரயில்நிலைய வீதியில் அவரது வீட்டிற்கு அருகாமையில் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது சனிக்கிழமை பிற்பகல் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மோட்டார் சைக்கிளில் வந்ததாகத் தெரிவிக்கப்படும் ஆயுதபாணிகள் இவரைச் சுட்டுக்கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக பொலிசார் கூறியிருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை வன்னிக்களமுனைகளிலும், யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வெள்ளிகிழமை இடம்பெற்ற வெவ்வேறு சண்டைகளில் 5 இராணுவத்தினரும், 19 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டிருப்பதாகப் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எனினும், இந்தச் சண்டைகள், உயிர் இழப்புகள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


தற்கொலை குண்டுத் தாக்குதலில் தப்பினார் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர் பகுதியான பொறலஸ்கமுவ பகுதியில் வியாழன் பிற்பகல் இலங்கையின் மூத்த அமைச்சரவை அமைச்சரின் வாகனத் தொடரணிமீது மேற்கொள்ளப்பட்டுள்ள பெண் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் அமைச்சர் உயிர் தப்பியிருக்கிறார்.

ஆனாலும் அமைச்சரின் வாகனத் தொடரணிக்கு பாதுகாப்பாகச் சென்றுகொண்டிருந்த வாகனமொன்று இதில் சேதமடைந்திருக்கிறது.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிற்பகல் சுமார் 1.15 மணியளவில் களுத்துறை மாவட்டத்திலுள்ள பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற தேசிய விவசாய நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு கொழும்பு திரும்பிக்கொண்டிருந்த விவசாயத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை இலக்கு
வைத்தே இந்தத விடுதலைப்புலிகள் அமைப்பின் இந்தப்பெண் தற்கொலைக் குண்டுதாரி இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.

ஆனாலும் இதிலிருந்து அமைச்சரின் வாகனமும், அமைச்சரும் எவ்வித பாதிப்புக்களுமின்றி தப்பியிருப்பதாகவும், இந்த வாகனத்தொடரணியில் பயணித்துக்கொண்டிருந்த விவசாயத்துறை பிரதி அமைச்சர் சிறிசேன கம்லத் சிறிய காயங்களிற்கு உள்ளாகியிருப்பதாகவும் பிரிகேடியர் நாணயக்கார தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருந்த ஒருவர் பின்னர் கடுமையான காயம் காரணமாக பின்னர் உயிரிழந்ததாகவும், ஏனையோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


யாழ்குடா பகுதிக்கு வெளிநாட்டு தூதர்கள் விஜயம்

யாழ் மீனவர்கள்
யாழ் மீனவர்கள்

இலங்கையின் வடக்கே யாழ்குடாநாட்டிற்கு பிரித்தானியா மற்றும் நோர்வே நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் புதன் கிழமை விஜயம் செய்து, அங்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகள் குறித்து அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவராகிய யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரீ.விக்னராஜா அவர்களிடம் கேட்டறிந்துள்ளனர். இந்தத் தூதுவர்களுடன் ஐநாவின் அகதிகளுக்கான தூதரகத்தின் தலைமை வெளிக்கள அலுவர் ஈடா ஷூட் அவர்களும் சென்றிருந்தார்.

இந்தச்சந்திப்பு குறித்து, தசவல் தெரிவித்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரீ.விக்னராஜா அவர்கள், வலிகாமம் வடக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அங்கிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், முதற்கட்டமாக 24 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதுடன், மேலும் 133 குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்காக அவர்களின் காணிகள் அடையாளம் காணப்பட்டு அவற்றில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரித்தானியா மற்றும் நேரர்வே நாட்டு தூதுவர்களிடம் தெரிவித்ததாகக் கூறினார்.

மீள்குடியேற்றம் செய்யப்படும் மக்களின் வாழ்க்கை அங்கு சீரான முறையி்ல் இருப்பதற்குரிய தொடர்ச்சியான உதவிகள் அவர்களுக்கு வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை குறிப்பாக ஐநாவின் அகதிகளுக்கான தூதரக அதிகாரியிடம் எடுத்துக் கூறியதாகவும் இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைக்கான உயர் மட்டக்குழுவின் தலைவராகிய யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரீ.விக்னராஜா தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர்’ பீட்டர் ஹெய்ஸ், நோர்வே தூதுவர் டோ ஹெற்றரம் ஆகியோர் தலைமையில் 6 பேர் அடங்கிய இந்தக் குழுவினர் யாழ் அரசாங்க அதிபர் கே.கணேஷ் மற்றும் யரழ் ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆகியோரையும், யாழ் மாவட்ட நீதிக்கும் சமாதானத்திற்குமான குழுவினரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்கள்.



கிளிநொச்சிக்கு வடக்கே விமானப் படை குண்டுவீச்சு

விமானப் படை குண்டுவீச்சில் சிறுவன் காயமடைந்ததாக விடுதலைப் புலிகள் கூறுகின்றனர்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி நகருக்கு வடக்கே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பரந்தன் பகுதியில் குமரபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது வெள்ளியன்று விமானப் படையினர் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதலில் ஆசிரியை ஒருவரும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்.

அவ்வாசிரியையின் கணவனும் மற்றுமொரு மகனும் உட்பட 7 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இறந்தவர்களின் உடல்களும் கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருப்பதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

எனினும் பரந்தன் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய இலக்குகள் மூன்றின் மீது விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.


இலங்கை வடமாகாண ஆளுநராக டயல பண்டார நியமனம்

இலங்கையின் வடமாகாணத்தின் புதிய ஆளுனராக டிக்சன் டயல பண்டார அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷவினால் வெள்ளியன்று நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற வைபவமொன்றின்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டு டயல பண்டார பதவியேற்றிருக்கிறார்.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து ஒரு அதிகார அலகாக இணைக்கப்பட்டிருந்த வடகிழக்கு மாகாணம், கடந்த வருடம் நீதிமன்றத் தீர்ப்பொன்றின் பிரகாரம் வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாண அலகுககளாகப் பிரிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு மாகாணத்தின் முதலாவது ஆளுநராக முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா சில மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஜனாதிபதி செயலக வட்டாரங்களின் தகவல்களின்படி, விக்டர் பெராவின் பதவிவிலகலினால் எழுந்த வெற்றிடத்திற்கு ரத்தினபுரி மாவட்டத்தினைச் சேர்ந்த டயல பண்டார நியமிக்கப்படிருக்கிறார்.

விக்டர் பெரேராவின் பதவி விலகலுக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை.


இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த தமிழக அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிக்கப்போகிறோம்: அதிமுக, மதிமுக

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்கவென தமிழக முதலமைச்சர் கருணாநிதி எதிர்வரும் அக்டோபர் 14ஆம் நாளன்று கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை புறக்கணிக்கப்போவதாக அ.இ.அ.தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் அறிவித்திருக்கின்றன.

இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு தனது முழு ஆதரவும் உண்டு என்று கூறி வியாழனன்று நீண்டதொரு அறிக்கை வெளியிட்டிருந்த அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வெள்ளியன்று அனைத்துக் கட்சி கூட்டம் ஒரு கண் துடைப்பு நாடகம், தமிழ் மீனவர்கள் தாக்கப்படும்போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் கருணாநிதிக்கு உண்மையிலேயே இலங்கைத் தமிழர் மீது அக்கறை இருக்குமானால் மத்திய கூட்டணி அரசிலிருந்து விலகவேண்டும், இப்படிக் கூட்டம் நடத்துவதால் எவ்வித பயனும் இல்லை எனக் கூறி இருக்கிறார்.

இலங்கைத் தமிழர்க்கு ஆதரவாக சென்னையில் பேரணி ஒன்றை வெள்ளியன்று நடத்திய ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ, இலங்கை அரசுக்கு இந்தியா ராணுவ மற்றும் நிதி உதவி செய்வதைத் தடுத்து நிறுத்தாத கருணாநிதிக்கு இப்படி ஒரு கூட்டத்தினைக் கூட்ட உரிமை இல்லை எனக் கூறி இருக்கிறார்.

தமிழகத் தலைவர்களை சந்தித்துள்ளனர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்

தமிழகத்தில் இலங்கை தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவிருக்கின்ற நிலையில், தமிழ்தேசியக் கூட்டமைப்பினை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சென்னை சென்றுள்ளது.

அக்குழுவில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தமிழோசையிடம் கூறும்போது, தாங்கள் தமிழகத்தின் பல்வேறு முக்கிய தலைவர்களையும் சந்தித்து இலங்கை தமிழர்களின் பிரச்சனை குறித்து எடுத்துரைத்தாக கூறினார்.

அத்தோடு தற்போது இலங்கையில் நடைபெறும் யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும், ஐ.நா மன்றத்தின் தொண்டர் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து அனைத்துக் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் நேரில் சென்று நிலவரங்களை ஆராய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், யுத்தம் நிறுத்தப்பட்டு இந்தியா தலையீட்டு பேச்சுக்களை நடத்த வேண்டும் என்றும், இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தமிழகத் தலைவர்களிடம் தாங்கள் கூறியதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறினார்.

இந்த சந்திப்பு தொடர்பான மேலதிக செய்திகளையும், இவ்வாறான முன்னெடுப்புகள் எதிர்ப்பார்த்த பலனை அளிக்குமா என்பது குறித்தும் இலங்கை பகுப்பாய்வாளர் பேராசிரியர் கீதபொன்கலன் அவர்களின் கருத்துக்களையும் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையின் வடக்கே வன்னியில் 26 ஆயிரம் மாணவர்கள் இடம்பெயர்வு

இடம்பெயர்வால் கல்வி பாதிப்பு
இடம்பெயர்வால் கல்வி பாதிப்பு

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் குருகுலராஜா அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

இந்த மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிகக் கொட்டில்களை அமைக்க வேண்டியிருப்பதாகவும் அவற்றில் 40 கொட்டில்களை மிகவும் அவசரமாக உடனடியாக நிர்மாணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

இதற்குரிய உதவிகளைப் பெற்றுத் தருமாறு கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் அவர் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தேவைகள் குறித்து கிளிநொச்சி அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் அவர்களிடம் கேட்டபோது இந்தத் தேவைகளை கொழும்பில் உள்ள சிஎச்ஏ எனப்படும் மனிதாபிமான சேவைகளுக்கான நிலையத்தின் ஊடாகப் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இதுபற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டனர்

மீனவர்கள்
மீனவர்கள்

கடந்த முப்பது தினங்களாக கடலில் தவித்து கொண்டிருந்த தமிழகத்தின் சென்னையை சேர்ந்த ஆறு மீனவர்களை திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மீட்டு கரை சேர்ந்துள்ளனர்.

திருகோணமலை நீதிபதி மனாப் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட அவர்கள், அனைவரையும் குடிவரவு திணைக்களத்தின் ஊடாக இந்திய தூதுரக அதிகாரிகளிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டார்.

தமது நலன்கள் விடயத்தில் தமிழக கட்சிகள் எடுத்துள்ள முடிவுக்கு இலங்கையிலுள்ள தமிழ் கட்சிகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு

இந்த முன்னெடுப்புகளை தமது அமைப்பு வரவேற்கிறது என்றும் இது தொடர்பில் இந்திய அரசு செவிமடுக்கும் என தாங்கள் நம்புவதாகவும் அதன் நாடாளுமன்ற உறுப்பின்ர துரை ரட்ணசிங்கம் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்திய அரசு ஒரு முடிவை எடுத்து இலங்கை அரசுக்கு ஒரு அழுத்தம் கொடுத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, இருதரப்பினரையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்து தங்களுக்கு ஒரு நியாயமான தீர்வை தரவேண்டும் என்பதே தமது கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்கிற நம்பிக்கையும் தங்களுக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்

சித்தார்த்தன்
சித்தார்த்தன்

போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட வேண்டும் என தங்கள் அமைப்பும் விரும்புவதாக தெரிவித்த சித்தார்த்தன் அவர்கள், அவ்வாறு ஏற்படும் போது வன்னிப் பகுதியிலுள்ள மக்கள் தமது விருப்பபடி வெளியேறிச் செல்ல புலிகள் அனுமதிக்க வேண்டும் எனவும் தாங்கள் கோருவதாகவும் கூறினார்.

மேலும் போர் நிறுத்த உடன்பாடு ஒன்று ஏற்படுமானால், அது யுத்தம் நிரந்தரமாக முடிவுக்க வர வழிவகுக்க வேண்டும் என்பதே தமது அமைப்பின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

இலங்கை ஜனாதிபதியுடன் கருணா அவர்கள்
இலங்கை ஜனாதிபதியுடன் கருணா அவர்கள்

தமிழகத்திலே தேர்தல் காலங்கள் நெருங்குகிற போதெல்லாம் அங்குள்ள கட்சிகள் இலங்கை தமிழர்கள் நலன் என்கிற விடயத்தை பெருமளவில் முன்னெடுப்பதை காணக் கூடியதாக இருக்கிறது என்று கருத்து வெளியிட்டுள்ளார் இந்த அமைப்பின் தலைவரான கருணா எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன்.

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளும் மக்களும் இலங்கை தமிழ் மக்கள் மீது காட்டுகின்ற அக்கறை விடுதலைப் புலிகளை காப்பாற்றும் வெளிப்பாடாக இருக்கக் கூடாது என்பது தமது அமைப்பின் கருத்தாகும் எனவும் அவர் கூறினார்.

இந்திய அரசாங்கம் தற்போது வட இலங்கையில் நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு கூறுவது இலங்கைக்கு ஆபத்தாக அமையும் என தாங்கள் கருதுவதாகவும் கருணா கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் இறையாண்மையை மதித்து இந்திய தனது வெளிவிவகார கொள்கைகளை முன்னெடுக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறுகிறார்.

தமிழ் மக்களுக்கு உதவு இந்தியா முன்வந்தால் அதை இலங்கை அரசின் மூலம் செய்யப்படுவதையே தாங்கள் வரவேற்பதாகவும் கருணா கூறுகிறார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

ரவூஃப் ஹக்கீம்
ரவூஃப் ஹக்கீம்

இலங்கை தமிழர்கள் நலன் விடயத்தில் தற்போது தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் எடுத்து வரும் முன்னெடுப்புகள் போலித் தனமானது என தாங்கள் கருதுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூஃப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

எனிமும் தமிழக கட்சிகளின் நடவடிக்கைகளின் மூலம் இந்திய அரசு ஏதாவது முன்னெடுப்புகளுக்கு முன்வருமாயின் அதை வறவேற்பதாகவும் அவர் கூறுகிறார்.

இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்திய அரசு முஸ்லிம்களின் பரிமாணம் குறித்து தொடர்ந்தும் ஒரு பார்வையை கொண்டிருக்காதது பற்றி தாங்கள் வேதனைப் படுவதாகவும் ரவூஃப் ஹக்கீம் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான இராதாகிருஷ்ணன் ஆகியோர் உட்பட அனைவரும் வெளியிட்ட கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்கள் கவலையளிப்பதாக இருக்கின்றன: இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் புதன்கிழமையன்று இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்க நாடுகளின் உச்சிமாநாட்டின் முடிவில் அந்நாட்டுத் தலைவர்களுடன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, மன்மோகன் சிங் இக்கருத்தைத் தெரிவித்தார்.

இலங்கையில் இரண்டு வாரங்களுக்குள் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர இந்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பதவி விலகுவார்கள் என்று தமிழகத்தில் செவ்வாய்கிழமை மாலை திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தக் கூட்டத்தில், அதிமுக, மதிமுக, பாஜக, தேமுதிக கட்சிகள் பங்கேற்கவில்லை.

இந் நிலையில், இலங்கை நிலவரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மன்மோகன் சிங் அவர்கள் இலங்கையில் நிலவும் சூழ்நிலை, இந்திய அரசுக்கு மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என்று தெரிவித்தார்.

அங்கு அதிகரித்து வரும் மோதல்கள் குறித்தும், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்தும், உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தவர்கள் அதிகரித்திருப்பது குறித்தும், இந்திய மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும்போது அவர்கள் துன்புறுத்தப்படுவது மற்றும் கொல்லப்படுவது குறித்தும் கவலை கொள்வதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இராணுவ நடவடிக்கை தீர்வாகாது

இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இலங்கையில் நிலவும் சூழ்நிலைக்கு ராணுவ வெற்றி தீர்வாகாது என்றும், இலங்கையின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு உட்பட்டு, பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இந்தியா எப்போதும் நம்புகிறது. அதே நேரத்தில், தமிழ் சிறுபான்மையினரின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கருத்துத் தெரிவித்தார்.

வெளியுறவு கொள்கை குறித்து மாநில அரசுகள் மத்திய அரசை வற்புறுதக் கூடாது என்று கூறுகிறது காங்கிரஸ்

இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கருத்துத் தெரிவிக்கும்போது, நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவை என்று தெரிவித்தார்.

எங்கு தவறு நடந்தாலும் அதைக் கண்டிக்கும் அதே வேளையில், அதைவிடக் கூடுதலாக எதையும் செய்யவோ, செய்யுமாறு மத்திய அரசிடம் கேட்கவோ கூடாது. ஏனென்றால், இவை மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள். என்றார் அபிஷேக் சிங்வி.

இலங்கையின் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும்: பாஜக

பாஜகவைப் பொருத்தவரை, இலங்கையின் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு அமைதி ஏற்பட வேண்டும். அதே நேரத்தில், தமிழ் மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினையை இலங்கை அரசிடம் இந்திய அரசு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Attack on UNP Headquarters in Anuradhapura Sri Lanka takes the Life Of Major General Janaka Perera, his Wife & 26 Others – Tamil Tiger rebel commander TMVP Karuna in parliament, JVP going to Court

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 7, 2008

அநுராதபுரத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல்; முன்னாள் இராணுவ அதிகாரி ஜானக்க பெரேரா உட்பட 28 பேர் பலி

இலங்கையின் வடமத்திய மாகாணத் தலைநகராகிய அநுராதபுரத்தில் திங்களன்று காலை இடம்பெற்ற நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத் திறப்பு விழா வைபவம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் மாகாண மட்டத்திலான முக்கிய அரசியல்வாதிகள் 3 பேர் உட்பட 28 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

வடமத்திய மாகாண சபையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராகிய முன்னாள் இராணுவ அதிகாரியாகிய மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேராவும் அவரது மனைவியாரும், மேலும் இரண்டு மாகாண சபை உறுப்பினர்களும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக அநுராதபுரம் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில் தொலைக்காட்சி நிலையம் ஒன்றின் உள்ளுர் செய்தியாளராகிய ரஷ்மி மஃறூப் அவர்களும் கொல்லப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் 84 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்திருக்கின்றார்கள். காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் 15 பேர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் அநுராதபுரம் மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்திருக்கின்றார்.

ஜானக்க பெரேரா

வடமத்திய மாகாண சபையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராகிய மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேரா அவர்களுக்கான புதிய அலுவலகத் திறப்பு விழா நடைபெற்று முடிந்து, முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி பேசிக்கொண்டிருந்தபோது அங்கு அவசர அவசரமாகக் கூட்டத்தினுட்புகுந்து வந்துசேர்ந்த தற்கொலைக் கொலையாளியே இந்தக் குண்டுத் தாக்குதலை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகளே நடத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.


இலங்கை தமிழர்கள் பாதிப்புகுள்ளாவது குறித்து இந்திய அரசு கரிசனை

இலங்கையின் வடபகுதியில் இடம்பெறும் தற்போதைய மோதல்களில் தமிழ் பொதுமக்கள் பலியாவது அதிகரித்துவருவதாக விபரித்து, அது தொடர்பாக புதுதில்லிக்கான இலங்கை துணைத் தூதரை அழைத்து, அவை தொடர்பிலான தமது கரிசனைகளை இந்தியா வெளியிட்டுள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணனுக்கும், இலங்கை இராஜதந்திரியான பாலித கனேகொடவுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பில், இலங்கை பெரிய அளவில் சுயகட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சிறுபான்மை தமிழ் மக்களிடையே அதிகரித்துவரும் பாதுகாப்பற்ற உணர்வுகளைப் போக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் கேட்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று கூறுகின்றது.

வடக்கில் தற்போது நடக்கும் இலங்கை படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இரு நாடுகளையும் பிரிக்கும் பாக்குநீரிணை பகுதியில், இலங்கை கடற்படையினர் என்று கூறப்படுபவர்களால், இந்திய மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்வதாகவும் இந்திய அதிகாரிகள் கடுமையான கவலையை வெளியிட்டுள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து தெற்காசிய அரசியல் விவகார ஆய்வாளரான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் சஹாதேவன் வழங்கும் ஆய்வுக் செவ்வியை நேயர்கள் கேட்கலாம்.

பிரதமருடன் தமிழக முதல்வர் தொலைபேசி உரையாடல்

முன்னதாக, தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு இலங்கைத் தமிழர் பாதிக்கப்பட்டுவருவது குறித்து இந்திய அரசு இலங்கைத் தூதரை அழைத்து தனது கவலையையும் கண்டனத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.

இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா தலையிட்டு போர்நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டுமென்று கோரி தமிழக மக்கள் இந்தியப் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டுமென கருணாநிதி ஞாயிறன்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஞாயிறன்றைய அறிக்கையிலும் திங்களன்றைய தொலைபேசி உரையாடலிலும் இலங்கையில் நடப்பதை ‘இனப்படுகொலை’ என்று கருணாநிதி வருணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


கருணா நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம்

கருணா

கருணா அம்மான் என்று அழைக்கப்படுகின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான விநாயக மூர்த்தி முரளிதரன், நாட்டை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்திருந்த ஜே.வி.பி. என்றழைக்கப்படும் மக்கள் சுதந்திர முன்னணி கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த சமரசிங்க வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததால் உருவான வெற்றிடத்திற்கே தற்போது கருணா நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக தான் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கருணா தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரைகள் மீண்டும் ஆரம்பம்

கிழக்கு பல்கலைக்கழகம்

இலங்கையின் கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர் ஒருவரின் படுகொலையை அடுத்து கடந்த ஒன்றரை மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த விரிவுரைகள் திங்களன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் இறுதியாண்டு மாணவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இரவு பல்லைக்கழக வளாகத்திற்குள் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக மறுஅறிவித்தல் வரை அனைத்து விரிவுரைகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இப்பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கபட்டிருந்த சகல சிங்கள மாணவர்களும் தற்காலிகமாக வேறு பல்கலைக்கழகங்களில் இடம்பெயர்ந்த மாணவர்களாக அனுமதி பெற்றுள்ளதாக உபவேந்தர் கலாநிதி என்.பத்மநாதன் தமிழோசைக்கு தெரிவித்தார்.

திங்களன்று பல்கலைகழகத்திற்கு சமூகமளித்திருந்த மாணவர்கள் பொலிசாரின் சோதனையோடு அடையாள அட்டை சமர்ப்பித்து பதிவுசெய்த பின்பே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் திங்களன்று மாணவர் வரவு குறைவாகவே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in DMK, Law, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

India’s northeast: Agartala market bombings: Serial blasts in Tripura, 2 dead, 100 injured

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 1, 2008

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திருபுராவில் குண்டு வெடிப்பில் இருவர் பலி

திரிபுராவில் இந்திய வங்கதேச எல்லைப் பகுதி
திருபுராவில் இந்திய வங்கதேச எல்லைப் பகுதி

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுரா தலைநகர் அகர்தலாவில் புதன்கிழமை இரவு நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

மக்கள் கூட்டம் மிகுந்த மார்க்கெட் பகுதி, பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இந்த குண்டுவெடிப்புக்கள் நடந்துள்ளன. மொத்தம் நான்கு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புக்களில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள்.

அங்கு பண்டிகை காலமாக இருப்பதால் தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கூடியிருந்த நேரத்தில் இந்த குண்டுகள் வெடித்திருக்கின்றன. அதனால், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்த குண்டுகள் குறைந்தசக்தி கொண்டவை என்று ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்குக் யார் காரணம் என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்திய–வங்கதேச எல்லையில் உள்ள திரிபுரா மாநிலத்தில், வங்கதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , | Leave a Comment »

Damascus: Hizbollah sees Israeli involvement: Car Bomb Kills 17 in Syria Near Intelligence Office: Worst attack in decades

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 28, 2008


சிரியாவில் குண்டுத்தாக்குதல்

கார்குண்டுத் தாக்குதல்
கார்குண்டுத் தாக்குதல்

சிரியாவில் டமாஸ்கஸ் விமானநிலையத்திற்கு செல்லும் பிரதான சாலையில் நடத்தப்பட்ட கார்குண்டு தாக்குதலில் குறைந்தப்பட்சம் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரான், இராக் மற்றும் லெபனானை சேர்ந்த யாத்தீரிகர்கள் இடையே பிரபலமாக இருக்கும் ஷியா முஸ்லிம் வழிப்பாட்டு இடம் ஒன்றுக்கு செல்லும் பாதையில் இருக்கும் காவல்நிலையம் அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பொதுமக்கள் என கூறப்படுகிறது. இது போன்ற தாக்குதல்கள் சிரியாவில் மிக அரிதாக நடைபெற்றுள்ளது என்றாலும், கடந்த ஆண்டு சிரியாவில் இரண்டு பெரும் கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.


Major attacks are rare in Syria, a tightly-controlled country with powerful security forces, but there have been a number of incidents in recent years, most of which have been blamed on Sunni Muslim groups.

April 1986: A string of co-ordinated attacks around the northern fishing port of Tartus and several other towns kill at least 144 people and injure another 149.

Syrian officials blame Saddam Hussein, the then-president of neighbouring Iraq.

December 1996: An explosion on a bus in a Damascus neighbourhood kills 13 people and wounds 40 others.

April 2004: Three assailants, a policeman and a woman passer-by die in a gun battle in an area of Damascus which includes a number of diplomatic missions.

The government blames al-Qaeda, but the attack is claimed by a group which says it wants to avenge the government crackdown on the Muslim Brotherhood in Hama in 1982.

September 2004:
A car bomb in southern Damascus kills an official of the Palestinian Hamas movement and three passers-by. Both the  government and Hamas blame Israel.

September 2006: Three armed men and a member of the security forces are killed and 14 people wounded in a failed attempt to set off a car bomb outside the US embassy in Damascus.

February 12, 2008: Imad Moghaniyah, a senior Hezbollah commander linked to attacks against Western and Israeli targets in the 1980s and 1990s, is killed by a car bomb in Damascus.

Hezbollah blames Israel, but it denies any involvement.

August 6, 2008: Syria confirms the assassination of Mohammed Sleiman, an army general described in the Arab media as having been the government’s liaison with the Hezbollah movement in Lebanon.

September 27, 2008: Seventeen civilians die in a car bomb blast on a road leading to the Damascus’s airport.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , | Leave a Comment »

Italian inquiry into India murder: CEO of Greater Noida firm battered to death: Dismissed employees of the Graziano Trasmissioni turn violent; 63 under arrest

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2008

ஊழியர்களால் தலைமை அதிகாரி அடித்துக்கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இத்தாலிய நிறுவனம் விசாரணை

இந்தியாவில் இயங்கும் ஒரு இத்தாலிய நிறுவனத்தின் தலைமை அதிகாரி அதில் வேலை செய்யும் பணியாளர்களாலேயே அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் புகார் தொடர்பில், அந்த நிறுவனம் சுயமாக ஒரு விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறியுள்ளது.

கிரேஸியானோ டிரான்ஸ்மிஷியோனி இந்தியா எனும் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான லலித் சௌத்ரி அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களுடன் நடத்திய கூட்டத்தில் வன்முறை வெடித்தில் அவர் இறக்க நேரிட்டது.

கிராசியானோ நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இந்தியாவில் தாம் பணியாளர்களை நடத்திய விதத்தை நியாயப்படுத்தியுள்ளது. மேலும் சௌத்ரி அவர்களின் இழப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் கூறியுள்ளது.

தமது நிறுவனத்துக்கு எதிராக அச்சுறுத்தல் இருந்தபோதிலும் இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர் என்கிற கவலையை இத்தாலி வெளியிட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் சுமார் முன்னூறு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டதற்கான பணியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அந்த நிறுவனத்தின் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | Leave a Comment »

Nalini release: HC quashes advisory board order on Nalini’s plea

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2008

நளினி விடுதலை தொடர்பில் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

நளினி மற்றும் அவரது கணவர் முருகன்
நளினி மற்றும் அவரது கணவர்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் நளினியை விடுதலை செய்வது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு விதிமுறைகளின்படி அமைக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது.

விதிமுறைகளின்படி புதிய குழுவை அமைத்து, நளினியை விடுதலை செய்யக் கோரும் மனுவைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 16 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என நளினி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், நீதிபதி நாகமுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தார்.

இதுகுறித்து, நளினியின் வழக்கறிஞர் எஸ். துரைசாமி அவர்களின் பேட்டியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

Posted in India, Law, Order, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | Leave a Comment »

Finland’s gun culture: Gunman murders 10 of his fellow students: School Shooting – Armed student opens fire at college

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 24, 2008

ஃபின்லாந்தில் பள்ளிக் கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி

துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடம்
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடம்

ஃபின்லாந்து நாட்டில் சமையல் கலை மற்றும் தொழிற்பயிற்சிக்கான பள்ளிக்கூடம் ஒன்றில், ஒரு துப்பாக்கிதாரி சுட்டதில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர்.

தன்னைத்தானே துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்ட அந்த துப்பாக்கிதாரி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமானார்.

தான் ஒரு துப்பாக்கி பயிற்சியிடத்தில் இருப்பதான வீடியோவை இணையத்தில் ஏற்றிக்கொண்டிருந்தபோது திங்கழன்று கைது செய்யப்பட்ட அந்த நபர் பொலிஸாரால் விசாரிக்கப்பட்ட போதிலும், கைது செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கௌகாஜோகி நகரில் நடந்த இந்த சம்பவம், கடந்த ஒரு வருடத்தில், ஃபின்லாந்தில் நடந்த இதுபோன்ற இரண்டாவது சம்பவமாகும்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , | Leave a Comment »