07.01.09 தொடர்கள் | |||
எந்தச் சமுதாய மக்களாக இருந்தாலும் உறவின்முறையோடு `அண்ணாச்சி’ என்று அன்போடு அழைக்கும் நாடார் சமூகத்தார், தாங்கள் இடுப்புக்குமேல் ஆடை உடுத்தக் கூடாது என்று பிரகடனப் படுத்தியதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தாங்கள் சத்திரிய குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கப் புறப்பட்டுவிட்டார்கள்.இதனால் பல்வேறு இடங்களில் புதிதாக கலகம் மூண்டது. நாடார்கள் ஒன்று சேர்ந்து கலகத்தில் ஈடுபட்டனர். சுமார் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தப் போராட்டம் நடந்தது. ஆட்சியாளர்களின் அடக்குமுறையை எதிர்த்து ஆண்களும், பெண்களும் இடுப்புக்கு மேலே ஆடை உடுத்திக்கொண்டனர். பொது இடங்களில் தங்களது மேல் ஆடையைப் பறிக்க முயன்றவர்களை எதிர்த்துத் தாக்கினர். இதில் பலர் கொல்லப்பட்டனர். ஆதிக்க சாதிகள் நாடார் இனமக்களின் வீரத்தைக் கண்டு அஞ்சி நடுங்கத் தொடங்கினர்.![]() கலவரம் மேலும் மேலும் பரவி பலர் கொல்லப்படுவதைக்கண்டு சென்னை அரசே அஞ்சியது. அதனால் உடனே தலையிட்டு, 1859_ல் `நாடார் பெண்கள் மேலாடை அணியக்கூடாது’ என்ற பிரகடனத்தை அரசு ரத்து செய்தது. இதன் அடிப்படையில் பெண் கல்விக்கென நாகர்கோவிலில் ஆங்கிலேயரால் ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழகத்தில் பெண் கல்விக்காக மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி இது. தங்கள் இனம் இப்படி பல இன்னல்களுக்கு ஆட்படுவதற்குக் காரணமே, தங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதை நாடார் மக்கள் உணர்ந்தனர். அதன் பொருட்டு உருவாக்கப்பட்டதுதான் `நாடார் உறவின் முறை’ என்ற அமைப்பு.அனைத்து வழக்குகளிலும் போலீசைத் தலையிடவிடாமல் உறவின் முறையே விசாரித்து தீர்ப்பு கூறியது. நாடார் மக்களின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க, தங்களது பரம்பரை பழக்கவழக்கங்களையும் சடங்கு சம்பிரதாயங்களையும் மாற்றியமைக்க முற்பட்டனர். ஆண்கள் பார்ப்பனர் போன்று வேட்டி கட்டவும், பூணூல் போடவும் தொடங்கினர். பெண்கள் பாரம்பரியமான கனத்த ஆபரணங்களையும், காது வளையங்களையும் தவிர்த்தனர். விதவைகள் வெள்ளைச் சீலை கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். விதவைகள் மறுமணம் தடை செய்யப்பட்டது. (இப்போது மறுமணத்தை ஆதரிக்கிறார்கள்.) பெண்கள் தண்ணீரை தலையில் எடுத்துச் செல்வதைத் தடுத்து, இடுப்பில் எடுத்துவரப் பணிக்கப்பட்டனர். திருமண ஊர்வலங்களின்போது செல்வ செழிப்பினைக் காட்ட பல்லக்குகளைப் பயன்படுத்தினர். பெரும்பாலான நாடார்கள் சைவ மதத்தைச் சார்ந்தவர்கள். சிலர் வைணவர்களாகவும் இருந்தனர். முருகக் கடவுள் நாடார் சமூகத்தின் சிறப்பு தெய்வம். பத்ரகாளி, மாரியம்மன், அய்யனார் என்று சிறுதெய்வ வழிபாடும் இவர்களிடம் உண்டு. கோயில் திருவிழாவின்போது முளைப்பாரி எடுப்பது பிரசித்தம். நாடார் திருமணத்தின்போது தாய்மாமனுக்கு முக்கியத்துவம் உண்டு. கன்னியாகுமரி, சிவகாசி, விருதுநகர் பகுதிகளில் பெண் வீட்டார் கிலோ கணக்கில் நகை போடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தங்களுக்கு எவ்வளவு பெரிய சொந்தம் இருக்கிறது என்பதைக் காட்ட திருமணத்தின்போது நடத்தப்படும் `அலந்தரம் செய்வது’ என்ற சடங்கு மிக முக்கியமானது. கோயில்களுக்கு நன்கொடைகளை வாரி வழங்கினர். சிவன் கோயில்கள் கட்டினர். தங்களை சத்திரியர்கள் என்று அடையாளம் காணும்படி நடந்துகொண்டனர்.நாடார்குலத்தின் பொருளாதார உயர்வும், பொதுமதிப்புக்காக அவர்கள் செய்த முயற்சியும் உயர்சாதிக்காரர்களுக்கு எரிச்சலைத் தந்தது. அதனால் பிரச்னை உருவானது. அதன் விளைவாக, 1890ஆம் ஆண்டு ஆதிக்க சாதியினருக்கும் நாடார்களுக்கும் இடையே சிவகாசியில் மிகப் பெரிய கலவரம் மூண்டது. இக்கலவரத்தை நாடார் இனமக்கள் `சிவகாசிப் போர்’ என்றே அழைக்கிறார்கள். ஆலயத்திற்குள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ய தங்களுக்கும் உரிமை வேண்டும் என்று நாடார்கள் கேட்டதுதான் கலவரத்திற்குக் காரணம். மற்ற ஆதிக்க சாதியினர், `நாடார்கள் கோயில்களுக்கு நுழையவே கூடாது’ என்று எதிர்த்ததோடு கோயிலையும் மூடிவிட்டார்கள். அன்று இரவே கோயில் கதவை உடைத்து நாடார்கள் கோயிலுக்குள் புகுந்துவிட்டதாக வதந்தி பரவியது. இதனால் கொதித்தெழுந்த ஆதிக்க சாதியினர் நாடார் வீடுகளுக்குத் தீ வைத்தனர். சிவகாசி நகரில் இருக்கும் நாடார்களை வேரோடு கருவருக்கவேண்டும் என்ற மூர்க்கத்தனத்தோடு சிவகாசி மீது தாக்குதல் நடத்தினர். சுற்று கிராமங்களைக் கொள்ளை அடித்தனர். ஆனால் இதில் நாடார் இனமக்கள் ஆண் பெண் குழந்தைகள் என்ற பாகுபாடு இன்றி எதிர்த்துப் போராடினார்கள். கலவரக்காரர்களை ஓட ஓட விரட்டியடித்தார்கள். பலர் மடிந்தார்கள். இறுதியில் நாடார்களே இந்தப் போரில் வெற்றி பெற்றார்கள். 1899ஆம் ஆண்டு ஜூலை மாதம் ராணுவம் கலவரத்தைக் கட்டுப்படுத்தியபோது, 150 கிராமங்கள் தாக்குதலுக்கு உள்ளாயிருந்தன. சுமார் 4000 வீடுகள் அழிக்கப்பட்டன. இரு தரப்பிலும் பலர் இறந்து போனார்கள். சிவகாசியில் நடந்த சோக சம்பவத்தை இந்தியா முழுவதிலுமுள்ள பத்திரிகைகள் முதற்பக்கத்தில் வெளியிட்டு நாடார்களின் நியாயத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லின. நிலைமைகளை நன்கு உணர்ந்த நாடார்கள் தங்களுக்குப் பாதுகாப்பு பெற அரசியல் அதிகாரத்தில் நேரடி அங்கம் பெற முயன்றனர். நாடார் சமூகம் கல்வி முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தையே முழுவதுமாக நம்பியிருக்கவில்லை. நெல்லை மாவட்டத்தில் கிருஸ்தவ மதத்திற்கு மாறிய நாடார்களின் முன்னேற்றத்திற்காக மதகுருமார்கள் கல்வியின் சிறப்பினை அவர்களுக்குக் கற்பித்தனர். 19ஆம் நூற்றாண்டுகளில் `மகமை நிதி’ உதவியால் ஆரம்ப உயர்நிலைப் பள்ளிகளைத் தென்மாவட்டங்களில் தொடங்கினர். 20ஆம் நூற்றாண்டில் பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரி உள்ளிட்ட பல முக்கிய கல்லூரிகளையும் தொடங்கினர். நாடார்கள் சமூகத்தினரோடு மற்ற சமூகத்தினரும் அதனால் பலன் அடைந்தனர். “நாடார்கள் நாடாண்டவர்கள் என்பதை இன்று நிரூபித்துக்கொண்டு வருகிறார்கள். இடைவிடா உழைப்பினாலும் சிக்கனத்தாலும் நாடார்கள் சாதாரண மளிகைக்கடை முதல் கம்ப்யூட்டர் துறை வரை உலகளவில் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள். மற்ற சமூகத்தவரும் பயன்பெறும் வகையில் நாடார் சமூகம் உழைத்துக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை. நாடார்களின் வெற்றி ரகசியமும் அதுவே” என்கிறார் சென்னை, நெல்லை_தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத் தலைவர் க்ஷி.ஜி.பத்மநாபன் நாடார். உண்மைதான். இன்று நாடார்கள் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் தங்கள் செல்வாக்கினை நிலைநாட்ட ஆரம்பித்துவிட்டனர்.. படங்கள் : சித்ரம் மத்தியாஸ் `தினத்தந்தி’யைத் தந்து தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் பாமரர்கள் எழுத்துக்கூட்டி தமிழைப் படிக்க வைத்தவர் ஆதித்தனார். நாடார் மகாஜன சங்கம் உருவாகக் காரணமாய் இருந்தவர் பொறையார் ரத்னசாமி நாடார். நம் நாட்டிற்கு `தமிழ்நாடு’ என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த சங்கரலிங்க நாடாரின் தியாகத்தை மறக்கமுடியாது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது குலசேகரபட்டினத்தில் லோன் துரை என்ற வெள்ளைக்காரனைக் கொன்ற குற்றத்திற்காக தூக்குத் தண்டனை பெற்ற காசிராஜன், தூக்குமேடை ராஜகோபால் ஆகியோரின் வீரம் பலருக்கு எடுத்துக்காட்டு. வானம் பார்த்த சிவகாசி பூமியில் தீப்பெட்டித் தொழிற்சாலைகளையும் பட்டாசு தொழிற்சாலைகளையும் உருவாக்கி `குட்டி ஜப்பான்’ என்று சொல்ல வைத்து அனைத்து இனமக்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தவர்கள் சிவகாசி பி.அய்யநாடாரும் ஏ.சண்முகநாடாரும் ஆவர். நீதிக்கட்சி வி.வி.ராமசாமி, விருதுநகர் சீமான் எம்.எஸ்.பி.ராஜா. வெள்ளைச்சாமி நாடார், ஏ.வி.தாமஸ், ஜெயராஜ் நாடார், டாக்டர் சந்தோஷம் என்று உழைப்பில் உயர்ந்த நாடார்களில் எண்ணற்றவர்களைக் காட்டலாம்.காவல் துறைக்கு பெருமை சேர்த்த அருள் ஐ.ஜி.யை எந்த சமூகத்தவரும் மறக்கமாட்டார்கள். இன்று கணினி உலகில் நுழைந்து உலகப் பணக்காரர்களுள் ஒருவராகத் திகழும் சிவ்நாடார், பழுத்த அரசியல் தலைவர் குமரிஅனந்தன், அரசியல் தலைவரும் நடிகருமான சரத்குமார் என்று பலரை இந்த சமூகத்தின் நட்சத்திரங்களாகக் காட்டலாம்.
|
Posts Tagged ‘Kumudam’
Nadars: Era Manigandan
Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2009
Posted in Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: இனம், சாதி, ஜாதி, நாடார், மதம், Caste, Community, Kumudam, Kumudham, Kumutham, Manigandan, Manikandan, Naadaar, Naadar, Nadar, TamilNadu, TN | 4 Comments »
Pillaimaar: Ira Manikandan
Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2009
21-01-09 தொடர்கள் | |||
கோட்டைப் பிள்ளை மார் வைதீகப்பற்று மிக்கவர்களாக இருந்தனர். பாண்டிய மன்னர்கள் பட்டமேற்கும் விழாக்களில் முடிசூடுவதற்கு முடியை எடுத்துக் கொடுக்கும் உரிமை தங்களுக்கு இருந்ததாகக் கூறுகிறார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்கள் தங்கள் குலப்பெண்களை கோட்டையை விட்டு வெளியில் அனுப்பாததை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் சமீப காலத்தில் அந்த முறையில் சிற்சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, கோட்டைப் பிள்ளைமார் இனப் பெண்கள் வெளியில் வரத் தொடங்கினர். கல்வி கற்கத் தொடங்கினர். இந்த சமுதாயத்தில் பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைகள் அந்தப் பெண்ணின் வழித் தோன்றலாகவே கருதப்படுகிறது. பொதுவாக பிள்ளைமார் சமூகத்தில் வரதட்சணை கேட்பதும் இல்லை. கொடுப்பதும் இல்லை. தொடக்கத்தில் பிள்ளைமார் சமூகத்தார் தங்கள் சொந்தத்திலேயே திருமண உறவு கொண்டிருந்தனர். உறவு விட்டுப் போய் விடக் கூடாது என்பதால் இப்படி இருந்தனர். ஆனால் இப்போது தங்கள் சொந்தங்களில் நல்ல வரன் கிட்டாதபோது மற்ற பிள்ளைமார்களுடனும் திருமண உறவு கொள்ளும் வழக்கம் வந்து விட்டது. திருமணங்களை இரண்டு வீட்டாரும் பேசி முடிக்கிறார்கள். இரு வீட்டாருக்கும் சம்மதம் என்றவுடன் வெற்றிலை மாற்றிக் கொள்கிறார்கள். பந்தக்கால் நடுவது, மாப்பிள்ளை அழைப்பு உட்பட அனைத்திற்கும் அன்றே நாள் குறிக்கிறார்கள். திருமணத்தை நடத்துவது பெண் வீட்டாரின் பொறுப்பாகவே இன்றும் உள்ளது. முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு நடக்கும். திருமணத்திற்கு அரைமணி நேரத்திற்கு முன்புதான் நிச்சயதார்த்தம் நடக்கிறது. தேசிகர் ஒருவர் சைவமுறைப்படி மந்திரங்கள் ஓதி திருமணத்தை நடத்தித் தருகிறார். மாப்பிள்ளை, சகலை, மைத்துனர் என்று மூன்று பேர் அமர்ந்திருக்க, மணமான புதுப் பெண் வாழை இலை போட்டு அவர்களுக்குப் பரிமாற வேண்டும். இதனை `சட்டரசம் பரிமாறுதல்’ என்கின்றனர். திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை பெண்ணை தேங்காய் உருட்டச் சொல்லுதல், தலையில் வைத்து அப்பளம் உடைத்தல் போன்ற விளையாட்டுக்களை ஆடச் செய்வது, பல பிள்ளைமார் சமூகத்தாரிடம் இன்றும் காணப்படும் வழக்கம். மணப்பெண் வீட்டிலும் மாப்பிள்ளையின் மறுவீட்டு அழைப்பிலும் விருந்து உபசாரம் தடபுடலாக இருக்கும். இவர்களின் திருமண விருந்தில் சொதி சாப்பாடும் அவியலும் மிகப் பிரசித்தம். பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த பெண் பூப்படைந்த முப்பதாம் நாளில் சடங்கு நடக்கும். தாய்மாமன் சீலை எடுத்துக் கொடுத்து இந்தச் சடங்கை நடத்த வேண்டும். இந்தச் சடங்கிற்குப் பின், அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது. ஆனால் இப்போது இந்த முறை மாறி, காலத்திற்குத் தக்கபடி நடக்கத் தொடங்கிவிட்டனர். பெரும்பாலான பெண்கள் முன் கொசுவம் வைத்து சேலை கட்டுவது வழக்கம். காதில் `பாம்படம்’ அணிய காதுகளை நீண்ட அளவிற்கு வளர்ப்பது இவர்களது வழக்கம்.இன்று நாகரிகம் கருதி இந்த வழக்கம் குறையத் தொடங்கி விட்டது. விதவைகள் திருமணத்திற்கு அனுமதி மறுத்து வந்த இவர்கள், இப்போது அதற்கு அனுமதி வழங்க ஆரம்பித்து விட்டனர். விதவைகள் வெள்ளைச் சேலை அணியும் வழக்கமும் அருகி வரத் தொடங்கி விட்டது. கணேசருக்கு செவ்வாய் பூஜை செய்வது வழக்கம். பெண்கள் மட்டுமே இந்த பூஜை செய்வதாக சொல்லப்பட்டது. இதில் ஆண்கள், சிறுவர்கள் அனுமதி கிடையாது. அய்யனார், காளி முதலிய கிராம தெய்வ வழிபாடும் இவர்களிடம் உண்டு. சுதந்திரப் போராட்டக் காலத்தில் இச்சமூகத்தினர் ஆற்றிய பங்கு மிகப் பெரியது. இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது ஒரு வீர வரலாறு. இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றார்கள். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இதில் ஈடுபட்டோரில் பிள்ளை மார்களின் பங்கு மகத்தானது. உறங்கிக்கிடந்த தமிழ் மக்களைத் தட்டி எழுப்பி, நாமிருக்கும் நாடு நமக்குச் சொந்தமானது என்று மக்களை எழுச்சிபெறச் செய்தவர் வ.உ.சி. நாமே கப்பல் ஓட்டி கடல் ஆதிக்கத்தைக் கைப்பற்ற முடியும் என்று முனைந்து வெள்ளையனுக்கு எதிராக சுதேசிக் கப்பல் நிறுவனத்தை நிறுவி இரண்டு கப்பல்களை விட்டார். சுதந்திரப்போரில் தென்னகத்தின் தளபதியாக இருந்து ஆங்கிலேயரை ஆட்டம் காண வைத்தார். அதனாலேயே வெள்ளையரின் அடக்குமுறைக்கு ஆளாகி, சொத்து சுகங்களை இழந்து செக்கிழுத்து கல் உடைத்து சொல்லொணாத் துன்பங்களைச் சுமந்தார். நமது பாரதநாட்டின் விடுதலை வரலாற்றில் மாவீரர் சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் பெயர் அழுத்தமாகப் பதிந்துள்ளது. தமிழ்நாட்டில் நிகழ்ந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் தளபதியாக இருந்து வெள்ளையர்களை அச்சுறுத்தியதால் பலமுறை சிறை சென்றார். காந்தியடிகளின் தலைமையின்கீழ் போராடிய அகிம்சா வீரர். பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய பிள்ளைமார் சமூகத்தவர்களின் பட்டியல் மிகப் பெரியது. அதேபோல், இச் சமூகத்தினர் சைவத்திற்கும் தமிழுக்கும் ஆற்றிய தொண்டு அளப்பரியது.
|
Posted in India, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: கலாசாரம், கலாச்சாரம், சமூகம், சாதி, ஜாதி, தமிழ்நாடு, பிள்ளை, பிள்ளைமார், Caste, Community, Custom, Kumudam, Kumudham, Marriages, Pillai, Pillaimaar, Rituals, Weddings | 15 Comments »
Kumudam Cartoons: Congress Govt & BJP Election Campaign Strategy – Inflation, Nuclear Accord
Posted by Snapjudge மேல் ஜூன் 27, 2008
Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: Cartoons, Kumudam | Leave a Comment »
Having Kannagi & Madhavi on Stage with Kovalan Karunanidhi: Njaani
Posted by Snapjudge மேல் ஜூன் 20, 2008
ஓ பக்கங்கள் 20
நன்றி : குமுதம்
காடுவெட்டி (அ) கூட்டணி வெட்டி ?
காடுவெட்டி குரு என்கிற வன்னிய சங்கத் தலைவர், பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் கருணாநிதி, ஆற்காடு வீராசாமி முதலியோரை அவன் இவன் என்று அநாகரிகமாக ஏசிப் பேசியதும், தி.மு.க. எம்.எல்.ஏ.வைக் கொன்று விடுவோம் என்று மிரட்டிப் பேசியதும், மிரட்டல் வசூல் செய்யத்தான் செய்வோம் என்று அறிவித்துப் பேசியதும் ஒரு சி.டி.யில் பதிவு செய்யப்பட்டு, அதன் விளைவாகவே தி.மு.க. பா.ம.க. கூட்டணி உறவு முறிகிறது என்று சொல்லப்படுவதை நான் நம்பத் தயாராக இல்லை.
குருவின் பேச்சு பொது மேடையில் பேசியது அல்ல. அவர் கட்சிக்குள் பொதுக்குழுவில் பேசியது. பெரும்பாலான கட்சிப் பொதுக் குழுக்களில், செயற்குழுக்களில், கட்சிப் பிரமுகர்களின் தனிப் பேச்சுக்களில் இதை விடக் கேவலமாகவும் ஆபாசமாகவும் ஆணவமாகவும் பேசும் மரபு இருந்து வருகிறது என்பதை பத்திரிகையாளர்கள் அறிவார்கள்.
தி.மு.க., அ.தி.மு.க. பொதுக் கூட்ட மேடைகளில் தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான், வண்ணை ஸ்டெல்லா, எஸ்.எஸ்.சந்திரன் வகையறாக்கள், பொது மக்கள் முன்பாகவே எவ்வளவு ஆபாசமாகவும் அவதூறாகவும் கடந்த 50 வருடங்களாகப் பேசி வந்திருக்கிறார்கள் என்பதை வேறெவரையும் விட, பொது வாழ்க்கையில் 70 வருடங்களாக இருந்து வரும் கலைஞர் கருணாநிதி நன்றாகவே அறிவார்.
பா.ம.க.வில் காடுவெட்டி குரு என்றொரு `முரட்டுப் பிரமுகர்’ இருந்து வருவது ஒன்றும் தி.மு.க.வுக்கும் ஆற்காட்டாருக்கும் கருணாநிதிக்கும் நேற்று காலைதான் தெரிய வந்த விஷயம் அல்ல. இரு கட்சிகளும் உறவு வைப்பதற்கு முன்பும் பின்னரும் தெரிந்த விஷயம்தான். குருவின் பேச்சும் 6 மாதம் பழைய பேச்சு.
குரு போன்ற பிரமுகர்கள் இல்லாத கட்சிகளே இன்று தமிழ்நாட்டில் இல்லை. மதுரையை எடுத்துக் கொள்வோம். சாரி.. நான் அழகிரி பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை.அவர் பேசுவதே அபூர்வம். கருணாநிதிக்கு சவாலாக எம்.ஜி.ஆர். 1972ல் புறப்பட்டபோது எம்.ஜி.ஆரின் `உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை ஓட விடமாட்டேன் என்று எதிர் சவால் சொல்லித் தொடை தட்டிப் புறப்பட்ட கழகக் கண்மணி மதுரை முத்து அன்று கலைஞர் கருணாநிதியின் ஆதரவாளர்தான்.
குடும்பச் சண்டைக்காக மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யச் சென்ற கும்பல்களை வழிநடத்தியவர்களில், தி.மு.க.வின் நகர மேயர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இருந்தார்கள். அந்த ஆர்ப்பாட்டங்கள் பெரும் வன்முறையில்தான் முடிந்தன.
வன்முறையிலும், அராஜகத்திலும் மிரட்டல் வசூல்களிலும் தமிழகத்தின் அத்தனை பெரிய கட்சிகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். `அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா’ என்று இவற்றையெல்லாம் சகித்துக் கொள்ளும் மனநிலைக்கு அவர்கள் கடந்த 50 வருடங்களில் தள்ளப்பட்டுவிட்டார்கள் என்பதுதான் உண்மை.
ஒரு காலத்தில் அரசியல் தலைவர்கள் தாங்களே நேரடியாக ரவுடித்தனங்களில் இறங்கத் தயங்கினார்கள். காரணம், ஆரம்ப கால அரசியல் தலைவர்கள் பலரும் நிலப்பிரபுத்துவ பின்னணியில் இருந்து வந்தவர்கள். பண்ணையார்கள் அடியாட்களைத்தான் ஏவி விடுவார்களே தவிர, தாங்களே தங்கள் கைகளை அழுக்குப்படுத்திக் கொள்வதில்லை. அதனால்தான் கீழ் வெண்மணியில் விவசாயக்கூலிகள் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கில் கூட ஒரு நீதிபதி, மிராசுதார் தானே சென்று நெருப்பு வைத்தார் என்பதை நம்ப முடியாது என்று சொல்லி அவரை விடுதலை செய்தார். நெருப்பு வைக்க ஆளை ஏவினாரா இல்லையா? என்பதைப் பற்றிச் சொல்லவில்லை.
அரசியலில் எழுபதுகளுக்குப் பின்னர், குறிப்பாக சஞ்சய் காந்தி, எம்.ஜி.ஆர். போன்றோரின் வருகைக்குப் பின் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களில் ஒன்று, அடியாட்கள் தாங்களே ஏன் தலைவர்களாகிவிடக்கூடாது என்று சிந்திக்கத் தொடங்கியதுதான். இன்று எல்லா கட்சிகளிலும் தாதாக்கள் வெவ்வேறு மட்டங்களில் தலைவர்களாகவே ஆகி இருக்கிறார்கள்.
இதுதான் யதார்த்த நிலை. எனவே ஒரு காடுவெட்டி குருவின் பேச்சு தி.மு.க தலைமையை நிலைகுலையச் செய்துவிட்டது; வருத்தப்படுத்தி விட்டது;வேதனைப்படுத்தி விட்டது என்பதெல்லாம் சும்மா ஒரு நாடகம்தான்.
தி.மு.க., அதி.மு.க. மட்டுமல்ல…. தமிழகத்தின் எல்லா பிரதான கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்ற ஞானோதயத்துக்கு இப்போது நான் வந்துவிட்டேன்.
இதிலிருந்து விடுதலையும் விமோசனமும் இன்று பிறந்திருக்கும், இனி பிறக்கப்போகும் குழந்தைகள் காலத்தில்தான் சாத்தியம்.
கடலூர் சொல்லும் செய்திகள்..
வருங்கால, நிகழ்காலக் குழந்தைகளை நினைத்தாலும் கவலையாக இருக்கிறது. காரணம் சில பெற்றோர்கள்தான். நேற்று இரவு 11 மணிக்கு கதவைத் தட்டினார்கள், எங்கள் வீட்டில் வேலை செய்யும் அம்மாவும் குழந்தைகளும். வழக்கமான பிரச்னை. கணவர் குடித்துவிட்டு வந்து எல்லாரையும் கடுமையாக அடித்ததைத் தாங்க முடியாமல் இரவு தங்க வந்திருக்கிறார்கள்.
இதே போல சில தினங்கள் முன்பு ரயிலில் இரவு 11 மணிக்கு செகண்ட் ஏ.சி. கோச்சில் குடித்து விட்டு வந்திருந்த ஆண் பயணிகள் இருவரின் டார்ச்சரிலிருந்து தங்களைக் காப்பாற்றக் கோரிய சக பெண் பயணிகள் நினைவுக்கு வந்தனர்.
தமிழகம் முழுவதும் குடித்துவிட்டு ரகளை செய்யும் ஆண்கள் தரும் தொல்லை நமது பெண்களுக்கு இன்று பிரதான பிரச்னைகளில் ஒன்றாகியிருக்கிறது. இதில் சாதி, வர்க்க வேறுபாடுகள் இல்லை அதிக வேதனை ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கும் என்பதைத் தவிர.
தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக தி.மு.க. மகளிர் அணி நடத்திய முதல் மாநில மாநாட்டில் இந்த முக்கியமான பிரச்னை குறித்து சமுதாய சீர்திருத்தக் கருத்தரங்கிலே விவாதிப்பார்கள் என்று……… எதிர்பார்த்திருந்தால் அது என் தப்பாகத்தான் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். எனவே எதிர்பார்க்கவில்லை.
ஆனால், டாக்டர் ராமதாஸ் மதுவிலக்குப் பிரச்னையைத் தொடர்ந்து எழுப்பி வருவதாலும், பா.ம.க. மகளிர் அணியினர் மதுக்கடைகளை மூடக் கோரி ஆர்ப்பாட்டங்கள் செய்து வருவதாலும், அதற்குப் பதில் சொல்லும் விதமாக, கடலூரில் கனிமொழி மதுவிலக்கு பற்றி ஏதாவது சொல்லுவார் என்று சின்னதாக எதிர்பார்த்தேன். அந்த எதிர்பார்ப்பு கூட தப்புதான். தமிழகப் பெண்களை உலுக்கும் பிரச்னை மதுவா என்ன, ராமர் பாலம்தானே.
என்றாலும், தொலைக்காட்சிகளில் பெண்களை ஆபாசமாகக் காட்டுவதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது டாக்டர் ராமதாசுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். அவர் கடுமையாக விமர்சித்து வரும் `மானாட, மார்பாட…. மன்னிக்கவும் மயிலாட’ நிகழ்ச்சியை இனி கலைஞர் டி.வி நிறுத்தி விடும் என்று எதிர்பார்க்கலாம். கனிமொழி சொன்னால் சன் டி.வி கேட்காவிட்டாலும், கலைஞர் டி.வி கேட்கும் இல்லையா.
கடலூர், தமிழக அரசியல் வரலாற்றில் தவறான காரணங்களுக்காக இடம் பிடிப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. கடலூர்க்காரர்களுக்கு என் அனுதாபங்கள். ஜெயலலிதா, கனிமொழி இருவரும் அங்கேதான் தங்கள் அரசியலின் அடுத்த கட்ட ப்ரமோஷனைப் பெற்றிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். தன் வாரிசாக ஜெயலலிதாவை அடையாளம் காட்டினார். கலைஞரின் அரசியல் வாரிசாக ஏற்கெனவே அடையாளம் காட்டப்பட்ட ஸ்டாலினுக்கு ஒதுக்கிய நேரத்தில் கனிமொழி பேச வைக்கப்பட்டிருப்பது ப்ரமோஷன்தானே.
முதல்முறையாக மாநில அளவில் ஒரு மாநாடு நடத்தியதில் தி.மு.க. தமிழகப் பெண்களுக்கு சொல்லியிருக்கும் செய்திதான் என்ன ?
செய்தி 1 : மாநாட்டு வளாகத்தில் வைக்கப்பட்ட ஒரே சிலை கண்ணகிக்குத்தான். கண்ணகிக்கு இரு முகங்கள் உண்டு. அரசனிடம் அஞ்சாமல் நீதி கேட்ட முகம் ஒன்று. இந்த முகத்தை தி.மு.க. இப்போது வலியுறுத்தவேண்டிய அரசியல் தேவை எதுவும் இல்லை. ஏனென்றால் அதுவேதான் ஆளுங்கட்சி. கண்ணகியின் இன்னொரு முகம்? அதுதான் பிரதான முகம். கணவன் எப்படிப் பட்டவனாக இருந்தாலும் சகித்துக் கொண்டு அவனுக்காகக் காத்திருந்து, அவனுக்கு தன் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் அர்ப்பணித்து, அவனிடம் தனக்கான நீதியைக் கேட்காமல், அவனுக்காக அரசிடம் நீதி கேட்டுப் போராடும் முழு அடிமையின் முகம் அது. இந்த முகத்தைத்தான் தமிழ்ப்பெண்களுக்கு கழகம் முன்வைக்கிறதோ?
செய்தி 2: வரலாற்றில் முதல்முறையாக ஒரே மேடையில் கலைஞர் கருணாநிதி தன் மனைவி, துணைவி இருவருடன் தோன்றினார். பிறந்த நாளன்று கூட அவர் இப்படி ஒரே மேடையில் அவர்களுடன் தோன்றியதில்லை. மகளிர் ஊர்வலத்தைப் பார்வையிட்ட மேடையில் கண்ட இந்தக் காட்சி மகளிருக்கு அளிக்கும் செய்தி என்ன? கண்ணகியின் இரண்டாவது முகத்தை எல்லாரும் ஏற்கச் சொல்லுவதா?
செய்தி 3: கலைஞர் கருணாநிதிக்கு யாரும் மார்க் போட முடியாது; அதற்கு இதுவரை யாரும் பிறக்கவில்லை. பிறக்கவும் போவதில்லை என்று கனிமொழி முழங்கியது இன்னொரு முக்கியமான செய்தி. பெரியாரையும் காந்தியையுமே விமர்சிக்கும் நாடு இது. இங்கே கருணாநிதியின் ஆட்சிக்கு மார்க் போடும் தகுதி யாருக்கும் இல்லை என்று சொல்வது அப்பட்டமான பாசிசம். கருணாநிதி, ஜெயலலிதா இருவரிடமும் இருக்கும் பாசிட்டிவ்களின் கலவையாக கனிமொழி என்ற அரசியல்வாதி உருவாகலாம் என்ற நம்பிக்கை போய்விட்டது. இருவரிடமும் இருக்கும் நெகட்டிவ்களின் கலவையாகிவிடுவாரோ என்ற கவலையே ஏற்படுகிறது.
செய்தி 4: மாநாட்டில் கலைஞர் செய்த ஒரே முக்கியமான அறிவிப்பு எரிவாயு சிலிண்டர் விலையில் சலுகை பற்றியது. சமையலறை சமாசாரம்தான் பெண்கள் வாழ்க்கையில் முக்கியமானது என்ற சம்பிரதாய அணுகுமுறையின் இன்னொரு அடையாளமே இது. `என்னால் முடிந்தது எரிவாயு விலைக் குறைப்பு. ராமதாஸ் 2011ல் வந்து மதுக்கடைகளை மூடுவார்’ என்றாவது தலைவர் சொல்லியிருக்கலாமே.
ஒரு பின்குறிப்பு: விமர்சகனின் விமர்சகர்களே, கட்டுரையைப் படித்து முடித்துவிட்டு அவசர அவசரமாக பார்ப்பனிய எதிர்ப்பு வாட்களை உருவத் தொடங்குமுன்பு தயவுசெய்து பொறுமையாக இன்னொரு முறை படிக்கவும். பகுத்தறிவுக்கு விரோதமாக ஒரு வரி இருந்தாலும், பிராயச்சித்தமாக மஞ்சள் சால்வை அணியத் தொடங்கிவிடுவேன் என்று உறுதியளிக்கிறேன்.
இந்த வாரப் பூச்செண்டு
சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு மாதக்கசிவு நேரங்களில் பயன்படுத்துவதற்கான நேப்கின்களை இலவசமாக அளிக்க முடிவு செய்ததற்காக, சென்னை மாநகராட்சிக்கு இ.வா.பூ. இந்த நேப்கின் சப்ளையை பெரும் நிறுவனங்களிடம் தராமல், அவற்றைத் தயாரிக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் ஒப்படைத்தால் இன்னொரு பூச்செண்டும் தருவேன்.
இந்த வாரக் குட்டு
எனக்கே. குறைந்தது ஐந்து வாரமாவது தி.மு.க, கலைஞர் தொடர்பான எதைப் பற்றியும் கட்டுரை எழுதக் கூடாது என்று கொண்டிருந்த விரதத்தை முறித்ததற்காக இ.வா.குட்டு.
நன்றி : குமுதம்
Posted in DMK, Govt, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: Affairs, Alliance, Ammal, Anbumani, Arcot, Conference, Cuddalore, Dhayalu, DMK, Females, Guru, Jaya, Jeya, JJ, Kaaduvetti, Kaaduvetty, Kaduvetti, Kaduvetty, Kanimoli, Kanimozhi, Kanimozi, Kannagi, Kannaki, Karunanidhi, Kumudam, Kumudham, Lady, Love, Marriage, MK, MuKa, O, Object, PMK, Rajathi, Ramadas, Ramadoss, She, Teddy Bears, Wedding, Wife, Women | Leave a Comment »
Pa Raghavan’s Terrorist & Extremist Organizations series – Root of all Evils
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 17, 2008
மாயவலை #200
குமுதம் ரிப்போர்ட்டர்
பா ராகவன்
17.04.08 தொடர்கள்
இன்றைய தேதியில் உலகில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் இயக்கங்கள் என்று 42 இயக்கங்களைச் சொல்லலாம். அவற்றுள் இருபத்தாறு இயக்கங்கள் மத்தியக் கிழக்கைச் சேர்ந்தவை. சிறியதும் பெரியதுமாக. வீரியம் மிக்கதும் வீரியம் குறைந்ததுமாக. எட்டு இடதுசாரி இயக்கங்கள். ஐந்து வலது சாரி இயக்கங்கள். ஒன்றிரண்டு உதிரிகள்.
இவை அனைத்தைக் குறித்தும் ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. இணையத்தில் பல கட்டுரைகள் இருக்கின்றன. அமெரிக்க உளவுத்துறையின் தளத்தில் ஒவ்வொன்றினைக் குறித்தும் நீண்ட அறிமுகமும் ஜாதகமும் ராகு கேது இடங்களும் இன்னபிறவும் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. சம்பந்தப்பட்ட இயக்கங்களில் சில தங்களுக்கென்று இணைய தளங்கள் அமைத்து தமது கொள்கை கோட்பாடுகளைப் பட்டியலிட்டிருக்கின்றன. அல் காயிதா போன்ற சூப்பர் ஸ்டார் இயக்கங்களுக்கென பல ரசிகர் மன்றங்களே இருக்கின்றன. வெளியார் நுழையமுடியாத றிணீssஷ்ஷீக்ஷீபீ றிக்ஷீஷீtமீநீtமீபீ தளங்களில் இவர்கள் பேசிக்கொள்கிறார்கள். விவாதம் செய்கிறார்கள். ஆவணங்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள்.
தீவிரவாதம் தனது அடுத்த பரிமாணத்தை இணையத்தில் பெற்றிருக்கிறது. ஒருசில மின்னஞ்சல் முயற்சிகளில் இன்றைக்கு எந்த ஓர் இயக்கத்தையும் அணுகிவிட முடியும். அதிர்ஷ்டம் இருந்தால் அவற்றின் முக்கியஸ்தர்களுடனேயே நேரடியாகப் பேசவும் முடியும். பல மாத தாடியுடன் அழுக்கு ஆடையில் காட்டுப்பகுதிகளில் துப்பாக்கி ஏந்தி அலைந்து திரியும் தீவிரவாதிகளின் காலம் மலையேறிவிட்டது. இது தொழில்நுட்ப உலகம். தீவிரவாதம் ஒரு தொழில்நுட்பமாகிவிட்டது. அந்த இயக்கங்களின் தலைவர்கள் கோட் சூட் அணிந்து லேப் டாப்பில் திட்டங்களை வகுக்கிறார்கள். சாட்டிலைட் டெலிபோனும் இண்டர்நெட்டும் இன்ன பிறவும் சர்வசாதாரணம்.
அரசாங்கத்தை நம்பிப் பலனில்லை என்ற முடிவுக்கு வந்த பெரும் தொழிலதிபர்கள், இவர்களுக்கு ஆண்டுத் தவணையாகப் பல கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுக்கிறார்கள். அரசு கொடுக்காத பாதுகாப்பை இந்த இயக்கங்கள் அளிக்கும் என்கிற நம்பிக்கை. மத்தியக் கிழக்கு தேசங்களில் செயல்படும் ஒவ்வோர் இயக்கத்துக்கும் குறைந்தது நூறு நிறுவனங்களாவது ஆண்டுதோறும் பெரிய அளவில் நன்கொடைகள் அளிக்கின்றன. மிரட்டிப் பெறப்படும் நன்கொடைகளல்ல இவை. தாமாகவே விருப்பப்பட்டு அளிக்கப்படுபவை. மிரட்டல் மூலமும் பெறப்படுவதுண்டு. ஆனால், இன்றைய தேதியில் அப்படிப் பெறப்படும் தொகை பெருமளவுக் குறைந்துவிட்டது.
தவிர்க்க முடியாத தொந்தரவுகளை ஏற்று வாழப் பழகும் அடிப்படை மனித குணாதிசயமன்றி இது வேறில்லை. ஒரு கட்டத்தில் இது தொந்தரவு என்பதே மறந்து அல்லது மரத்துப் போய்விடும் போலிருக்கிறது. மனிதன் பழக்கங்களின் அடிமை.
ஈ.டி.ஏ.வுக்கு ஐரோப்பிய தொழில் நிறுவனங்கள் நிதியளிக்கின்றன என்றால் ஹிஸ்புல்லாவுக்கு இரானிலும் லெபனானிலும் உள்ள நிறுவனங்கள் அள்ளிக்கொடுக்கின்றன. ஹமாஸ§க்கு அனைத்து மத்தியக் கிழக்கு தேசங்களிலும் உதவி புரியும் நிறுவனங்கள் உண்டு. அவர்களே வசூலில் ஈடுபட்டுக் குவித்ததும் உண்டு. அல் காயிதாவுக்கு உலகம் முழுதும் ஏஜெண்டுகள். உலகம் முழுதும் வருமான வாய்ப்புகள். ஜமா இஸ்லாமியாவுக்குத் தென்கிழக்கு தேசங்கள் அனைத்திலும் பணம் விளைகிறது. காஷ்மீர் இயக்கங்களுக்கு பாகிஸ்தான் உதவுகிறது. எல்லா இயக்கங்களுக்கும் ஏதாவது ஒரு கட்டத்தில் அமெரிக்கா உதவுகிறது.
தீவிரவாதம் என்பது அதிருப்தியில் பிறக்கும் குழந்தை. போதாமைகளின் விளைவு. வெறுப்பு மற்றும் விரக்தியின் விபரீத விளைவு. இல்லாமை, ஏழைமை, கல்விக்குறைபாடு, வேலைவாய்ப்பின்மை போன்ற எளிய காரணங்களுக்குள் இதனை வரையறுத்துவிட முடியாது.
அவையும் காரணங்களே. ஆனால் ஓரெல்லை வரை மட்டும்தான். அடிப்படையில் சுதந்திர தாகமும் வேகமும், அதற்காக உயிரையும் கொடுக்கத் துணியும் மனோநிலையும் கைவரப்பெற்றவர்கள்தான் போராளிகளாகிறார்கள். போராளியாக மலரும் பொழுதில் அற்ப வெற்றிகளிலும் எளிய சுகங்களிலும் மனம் பறிகொடுத்து, இலக்கு மாறியவர்கள் தீவிரவாதிகளாகத் தேங்கிப் போகிறார்கள்.
இந்த வகையில் ஒரு தாவூத் இப்ராஹிமையோ சார்ல்ஸ் சோப்ராஜையோ நம்மால் தீவிரவாதி என்றுகூடச் சொல்ல முடியாது. அவர்கள் வெறும் கிரிமினல்கள்.
இந்தத் தொடரில் மேற்சொன்ன நாற்பத்திரண்டு இயக்கங்களில் அதி முக்கியமாக கவனித்தாக வேண்டிய சில இயக்கங்களைப் பற்றி விரிவாகப் பார்த்திருக்கிறோம். இந்த இயக்கங்கள் ஒன்றுக்கு ஒன்று எவ்வாறு தொடர்பு கொண்டிருக்கின்றன, எப்படி இயங்குகின்றன, என்ன லட்சியத்தை முன்வைத்துத் தமது செயல்பாடுகளை வகுத்துக்கொண்டிருக்கின்றன என்பதையெல்லாம் கண்டோம். ஒவ்வோர் இயக்கத்தின் செயல்பாட்டுக்கும் பின்னால் இருந்து இயக்குகின்ற அந்தந்த தேசங்களின் அரசியல் சூழலையும் பார்த்தோம்.
என்ன புரிந்துகொண்டோம்?
ஸ்திரமற்ற அரசியல் சூழலும் அச்சுறுத்தல்களும் மேலாதிக்கமும் புறக்கணிப்பும் அதன் விளைவான துக்கமும் அரசாங்கங்களுக்கு எதிராக மக்களை ஆயுதமேந்தச் செய்கின்றன. ஒரு மறுமலர்ச்சியை உத்தேசித்தே பெரும்பாலான போராளி இயக்கங்களும் தீவிரவாத அமைப்புகளும் தமது பயணத்தைத் தொடங்குகின்றன.
வசதி மற்றும் வாய்ப்புகளைப் பொறுத்து அவர்களுடைய லட்சியம் நிறைவேறுவதும் தோல்வியுறுவதும் அமைகிறது. சமயத்தில் சில புத்திசாலித்தனமான முடிவுகளும்.
தொண்ணூறுகளில் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபத் ஆயுதங்களுக்கு ஓய்வு கொடுத்து கொஞ்சம் பேசிப்பார்க்கலாம் என்று முடிவு செய்திராவிட்டால், பி.எல்.ஓ.வும் ஹமாஸ§ம் பிறகு ஆட்சி அதிகாரத்தின் வாசலுக்கு வந்து சேர்ந்திருக்க முடியாது என்பதை இங்கே நினைவுகூரலாம். அராஃபத்தின்மீது ஆயிரம் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவரது அந்த முடிவு செயல்படுத்தப்படாது போயிருந்தால், இன்றைக்குவரை பாலஸ்தீனில் முஸ்லிம்கள் தீராப்பிரச்னையுடன்தான் காலம் தள்ள வேண்டியிருந்திருக்கும்.
இப்போது பிரச்னையில்லை என்பதல்ல விஷயம். முன்னளவுக்கு அதன் தீவிரம் இல்லை என்பதுதான் கவனிக்கப்படவேண்டியது.
யோசித்துப் பார்த்தால், அல் காயிதாவுக்கு மட்டும்தான் ஒரு குறிப்பிட்ட தேசம் என்றில்லாமல் உலகு தழுவிய பிரச்னையின்பால் அக்கறையும் ஆர்வமும் இருக்கிறது. மற்ற இயக்கங்களின் நோக்கம் எல்லாம் தத்தமது தேச எல்லையுடன் முடிவடைந்துவிடக்கூடியவை. பாலஸ்தீன் ஒரு சுதந்திர, தனி தேசமாக இஸ்ரேலின் இடையூறே இல்லாத தேசமாக ஆகிவிட்டால், பாலஸ்தீன் போராளி இயக்கங்களுக்கு அதன்பின் என்ன வேலை? தனி ஈழம் அமைந்துவிட்டால் எல்.டி.டி.ஈ. எதற்காகப் போராடவேண்டும்? பாஸ்க் தேசம் உருவாகிவிட்டால், ஈ.டி.ஏ.வின் பணி என்ன?
அல் காயிதாவையே கூட இந்தவகையில், மத்தியக் கிழக்கிலிருந்து அமெரிக்கா முற்றிலும் வெளியேறிவிட்டால் செயல்பட விஷயமில்லாத இயக்கமாகச் சொல்லிவிட முடியும். அல்லது சர்வதேச முஸ்லிம் மக்களுக்கு எதிராக அத்தேசத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்படுமானால், அல் காயிதா செயல்பட என்ன அவசியம் இருக்கிறது?
தொன்னைக்கு நெய்யும் நெய்க்குத் தொன்னையும் ஆதாரம். மாயவலையின் முதல் கண்ணியைத் தேடிக்கொண்டிருப்பதைக் காட்டிலும் முழுக்கண்ணியையும் பிணைக்கும் ஆதாரப்புள்ளியை ஆராய்வதே சாலச்சிறந்தது.
ஒரு காலத்தில் வல்லரசு என்பது கையிலிருந்த பணத்தைக் கொண்டு தீர்மானிக்கப்பட்ட பதவியாக இருந்தது. பிறகு அதுவே, ஆயுத பலத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டது. இன்றைக்குத் தொழிலும் வர்த்தகமும் ஆட்சியின் ஸ்திரத்தன்மையும் தேசத்தின் கட்டுக்கோப்பும் அதனைத் தீர்மானித்துக்கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சர்வதேச அரங்கில் உள்ள கவனத்தையும் முக்கியத்துவத்தையும் நினைவு கூர்ந்து இதனைப் புரிந்துகொள்ளலாம். திபெத் விஷயத்தில் என்னதான் அதன் நியாயங்கள் உலகு முழுமைக்கும் புரிந்தாலும் சீனாவுக்கு எதிராக ஏன் யாரும் ஒருவார்த்தை பேச பயப்படுகிறார்கள்? யோசிக்கலாம். யோசிக்கத்தான் வேண்டும்.
நவீன உலகில் ஆயுதமேந்திப் போராடுபவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான வாய்ப்புகள் வெகு சொற்பம் என்பது உலகம் முழுதும் பல இடங்களில் அடிக்கடி நிரூபணமாகியபடியேதான் இருக்கிறது. இது பேச்சுவார்த்தைகளின் காலம். நல்லுறவுகளின் காலம். புரிந்துகொள்ளல் மற்றும் விட்டுக்கொடுத்தலின் காலம். வளர்ச்சிக்கு எதிரான எந்த ஒரு செயல்பாடும் எடுபடாது என்பதே நவீன யுகத்தின் தாரக மந்திரமாக இருந்துவருகிறது.
இதனை முழு விழிப்புணர்வுடன் புரிந்துகொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயமாகியிருக்கிறது. சண்டையிட்டுக்கொண்டு சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த தேசங்களையும் சண்டையிட்டுக்கொண்டிருந்த ஐரோப்பிய தேசங்கள் தமக்குள் பொதுவாக ஒரு நாணயத்தையே உருவாக்கிக்கொண்டு வாழ்வதையும் இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம். யார் வளர்கிறார்கள்? யார் தேங்குகிறார்கள்?
அந்தந்த தேசங்களின் சூழலும் பிரச்னையும் வேறு வேறு என்பதை மறுக்க முடியாது. ஆனால், ஒவ்வொரு காலத்துக்குமென்று ஆதாரமாகச் சில வாழ்வியல் சூத்திரங்கள் இயல்பாக அமைந்துவிடுகின்றன. புறக்கணிக்க முடியாத, புறக்கணிக்கக்கூடாத சூத்திரங்கள். அது மீறப்படும்போதுதான் பிரச்னைகள் பூதாகாரமாகிவிடுகின்றன. உலகில் போர்களும் தீவிரவாதச் செயல்பாடுகளும் தலையெடுக்கின்றன. அவற்றில் சிலர் குளிர் காய்கிறார்கள். அதைப் புரிந்துகொள்ளாமல் இயக்கங்கள் மேலும் மேலும் படுகுழியில் விழுகின்றன.
இதற்குமேல் பேச இதில் என்ன இருக்கிறது? முடித்துக் கொள்ளலாம்.
இருநூறு இதழ்களாக இதனை ஆர்வம் குறையாமல் வாசித்து, அவ்வப்போது கருத்துத் தெரிவித்து வந்திருக்கும் வாசகர்களுக்கு நன்றி கூறவேண்டிய தருணம் இது. உலகம் முழுவதிலுமிருந்து இந்தக் காலகட்டத்தில் எனக்கு வந்த கடிதங்களும் மின்னஞ்சல்களும் ஏராளம்.
ஒரு கட்டத்தில் சில வாசகர்களே தமக்குத் தெரிந்த தீவிரவாத இயக்கங்கள் குறித்தும் அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் நான் மறந்த காரணத்தால் விடுபட்ட செய்திகள், தகவல்கள் குறித்தும் எனக்கு எடுத்துச் சொல்லி உதவத் தொடங்கினார்கள். இந்த அனுபவம் மிகவும் புதிது. அனைவருக்கும் நன்றி. பெயர் குறிப்பிட்டு மாளாத நூற்றுக்கணக்கான முகமறியாத நண்பர்களின் உதவியின்றி இந்தத் தொடர் இத்தனை பெரிய அளவில் வளர்ந்து நிறைவடையச் சாத்தியமில்லை.
இத்தொடரில் இடம்பெற்ற மிக மிக முக்கியமான இரண்டு ஆவணங்கள் அல் காயிதாவின் பயிற்சிக் கையேடு மற்றும் தாலிபன்களின் சட்டப்புத்தகம் இரண்டையும் எனக்கு அனுப்பியவர் சவூதி அரேபியாவில் வசிக்கும் நண்பர் ஜாஹிர் ஹ§ஸைன்.
‘ஜெருசலேம் போஸ்ட்’ இதழின் செய்தியாளர்கள் இருவரும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ இதழில் பணிபுரியும் உதவியாசிரியர் ஒருவரும் (இவர்கள் யாவரும் வலைப்பதிவுகளின்மூலம் அறிமுகமானார்கள்) அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அரசுகள் தொடர்பான பல விஷயங்களை விவாதித்துத் தெளிவுபெற உதவியாக இருந்தார்கள்.
அனைத்துக்கும் மேலாக, இத்தனை நீண்ட, சீரியஸான தொடரைப் பொறுமையுடன் வாசித்து அவ்வப்போது கருத்துச் சொல்லி, என்னை ஊக்குவித்த வாசகர்களுக்கு நன்றியைச் சொல்லவேண்டுமா என்ன? அது என்றுமிருப்பது.
Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: Extremism, Extremists, Kumudam, Mayavalai, Para, Raghavan, Reporter, Terrorism, Terrorists | Leave a Comment »