Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Alakiri’

‘Why people are afraid of my son Mu Ka Alagiri in Madurai?’: Karunanidhi Explains to Marxists

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 8, 2009

‘அழகிரியை கண்டு ஏன் இப்படி அஞ்சுகிறார்கள்?’ – கருணாநிதி கேள்வி

சமீபத்திய (இரண்டு வருடம் பழைய) செய்தி:

1. Attack Pandi – Sun TV & Dinakaran Madurai office ransacking: How the innocent employees got butchered? « Tamil News: “மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத் தாக்குதலில் 3 பேர் இறந்தது எப்படி?”

2. Kalainjar Karunanidhi & Sun TV Maran bros: Oh Pakkangal – Njaani in Kumudham: “தன் அரசியலுக்காக தன் குடும்பத்தை கலைஞர் பயன்படுத்துவதும், குடும்பம் தன் நலனுக்காக அந்த அரசியலைப் பயன்படுத்திக் கொள்வதும் தொடர் நிகழ்ச்சிகளாகிவிட்டன.”

அழகிரியை கண்டு ஏன் இப்படி அஞ்சுகிறார்கள் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கூனி குறுகி…

வீட்டோரத்தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைப்பறவைகள் பதம் பார்த்து விடாமல் இருப்பதற்காக ஒரு கலயத்தில் கண்ணும் மூக்கும் எழுதி-அதை ஒரு கொம்பில் குத்தி -அந்தக் கொம்பை ஒரு பானையில் பொருத்தி, அதற்கு ஒரு கிழிந்த சட்டை போட்டு; அந்தப் பூச்சாண்டிப் பொம்மையை தோட்டத்து நடுவில் சிலர் நாட்டி வைப்பார்கள்.

அதாவது அதைப் பார்த்து பயந்து போய், பழங்களைக் கொத்த வரும் பறவைகள் அருகில் நெருங்காமல் அஞ்சி நடுங்கிப் பறந்து போய் விடும் என்பது அந்தச் சில பேரின் எண்ணம். ஆனால் அதற்கு மாறாகத் தோட்டத்துப் பக்கம் பறந்து வரும் சில பறவைகள் காவலுக்கு வைக்கப்பட்ட அந்தப் பூச்சாண்டிப் பொம்மையின் மீதே உட்கார்ந்து எச்சமிட்டுக் கொண்டிருக்கிற காட்சிகளையும் கண்டிருக்கிறோம்.

இந்த நிகழ்ச்சி பற்றி ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்; இப்போது தான் திக்கித் திணறி, தெண்டனிட்டு – “கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்று `சவடால்’ அடிக்கும் சில வீராதி வீரர்கள் – துளியோண்டு தொகுதிகளைப் பெறுவதற்கு அம்மையாரிடம் அலையாய் அலைந்து- கூனிக் குறுகி – கும்பிட்டுத் தொழுது-பெற்று விட்டு பெருமூச்சு விடக் கூட நேரமில்லை!

முன் கூட்டியே முடிவு

ஆசுவாசப்படுத்தி களைப்பு நீக்கிட அருகில் ஆள் கூட இல்லை-அதற்குள் தொகுதி தரும் தோட்டத்துப் பழங்களை, காய்கறிகளை எந்தப்பறவையாவது கொத்தி விடுமென்று “பூச்சாண்டி” பொம்மை காட்டிக் கூத்தடிக்கிறார்கள்.

அய்யோ பாவம், முன்கூட்டியே முடிவை அறிந்து கொண்டு விட்டதால்; பழியை யார் மீது போடலாம் என்று ஆள் தேடுகிறார்கள் – அவர்கள் யார் தெரிகிறதா? ஆம்; ஆலவாயப்பனுக்கும், அன்னை மீனாட்சிக்கும் வைகைக் கரையோரம் அமைந்த தங்கக்கோபுரக் கலசம் போல் தகதகவெனப் பளபளக்கும் கோடிச் செல்வர் குமார மங்கல மாளிகையில் மழலைகளாய்த் தவழ்ந்து; பாட்டனார்- தந்தையார் – மகனார் என்று வம்ச வழி வழித் தோன்றல்களாய் வாய்த்தவர்களுக்குத் தளகர்த்தராய் வாய்த்தவர்கள்.

மறக்க முடியுமா?

பொன்மலை குவித்த பொதுவுடைமை வாதிகள் – நம் தயவினால் புதுச்சேரி பாராளுமன்றத் தொகுதி பெற்றிருந்த போது; அந்தப் புனிதர்கள், புத்தர்கள்; கணக்கின்றி வாரி யிறைத்த கரன்சி காகிதங்களில் காந்தியடிகள் உருவம்; படமாகத் திகழ்ந்து சிரித்த காட்சி இன்னமும் பசுமையாகத் தெரிகிறது.

மதுரையில் சங்கரராக நின்று சவுராட்டிரர்களின் வாக்குகளைப் பெற்றிட அள்ளிக் கொட்டிய வெள்ளிப்பணம் பற்றித் தெரியாதா யாருக்கும்-அந்தத் தொகுதியில் மனம் கூசாமல் இஸ்லாமியர் வாக்குகளைப் பெற்றிட குல்லாய் அணிந்து சென்ற காட்சியை மதுரை மக்கள் தான் மறக்க முடியுமா?

ஏன் அஞ்சுகிறார்கள்

நமது அழகிரி அங்கே போட்டியிட விரும்பித் தலைமையிடம் விண்ணப்பித்திருக்கிறார் என்றதும்; ஏ யப்பா; என்ன குதி குதிக்கிறார்கள்-அழகிரி; பாவம் அந்தப் பிள்ளையைக் கண்டு ஏன் இவ்வளவு அஞ்சுகிறார்கள்?

அழகிரியைப் பற்றி எனக்கே அல்லவா அச்சமாக இருக்கிறது! போட்டிக்கு நாள் குறிப்பதற்கு முன்பே புஜங்களைத் தட்டிக் கொண்டல்லவா; பொய்ப் புகார்களை அடுக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள்; வங்கத்தில் துப்பாக்கியேந்தி வாக்கு சேகரிக்கும் தொண்டர்கள்!

அழகிரியை என்ன செய்வார்களோ; ஏது செய்வார்களோ; அழகிரி எதற்கும்- எந்தத் தியாகத்துக்கும் தயார்-என் மகன்களில் ஒருவன்; மதுரையில் சிலரது கண்களை உறுத்துவதை இந்த மாநிலம் அறியும்.

“இருப்பது ஓர் உயிர்; அது போகப் போவதும் ஒரு முறை; அது ஒரு நல்ல காரியத்துக்காகப் போகட்டுமே” என்று அறிஞர் அண்ணா சொன்ன வாசகம் நம் செவிகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டு தானிருக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

Posted in Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

ஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை?

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 7, 2009

கருணாநிதி விளக்கம்

ஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கடித வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுமுகம்

2009-ம் ஆண்டு மே திங்கள் 13-ம் நாள் நடைபெறும் 15-வது நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு. கழகத்தின் சார்பில் போட்டியிடுகின்ற 21 வேட்பாளர்களின் பட்டியலை-பரபரப்பு எதுவுமின்றி-பத்திரிகையாளர் சந்திப்பு இன்றி-தட்டச்சு செய்து ஏடுகளுக்கு அனுப்பப்பட்டு-அது ஏடுகளிலும் வெளிவந்துள்ளது. நமது அணியின் தோழமைக் கட்சிகள் சார்பில் மற்ற 19 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ளது.

ஒவ்வொரு தேர்தலிலும் புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை எழுவதும்- செய்தியாளர்கள் அதனை ஒரு கேள்வியாகக் கேட்பதும்- புது முகங்களும் இருப்பார்கள் என்று பதில் சொல்வதும் வாடிக்கையான ஒன்று. இந்த முறையும் அந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்பட்டு, புது முகங்களுக்கு நிச்சயமாக வாய்ப்பு அளிக்கப்படும் என்று பதில் கூறியிருந்தேன்.

தேர்தலையொட்டி நான் கூறிய இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதை பட்டியலைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆமாம், 21 பெயர்கள் கொண்ட இந்தப் பட்டியலில் 13 பேர் 14-வது நாடாளுமன்றத்தில் இடம் பெறாதவர்கள்- கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த 15 பேர்களில் 8 பேர்கள் மட்டுமே தற்போதைய பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள். அதாவது பழைய முகம் 8 – புதிய முகம் 13.

வருத்தம் அளிக்கிறது

கடந்த முறை பட்டியலிலே இடம் பெற்றிருந்த ஏழு பேர்களுக்கு இந்த முறை வாய்ப்பளிக்கப் படவில்லை என்பதில் எனக்கு மிகவும் வருத்தம்தான். இதற்கும் அண்ணா கூறிய உவமையைக் கூற வேண்டுமென்றால்- பீரோ நிறைய ஏராளமான பட்டுப் புடவைகள் இருந்த போதிலும்- இன்று செல்லும் இந்தத் திருமணத்திற்கு இந்தக் கலர் பட்டுப் புடவையை எடுத்துக் கட்டிக்கொள்கிறேன் என்றால், அடுத்து இன்னொரு திருமணத் திற்குச் செல்லும்போது மற்றொரு புடவையை எடுத்துக் கட்டிக்கொள்வேன். இன்று இதனைக்கட்டிக்கொள்வதால் மற்றது எல்லாம் பிடிக்காது என்று அர்த்தமல்ல என்று சொன்னதைப் போல இந்தத் தேர்தலுக்கு இவர்கள் வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த முறை உறுப்பினர்களாக இருந்த ஏழு பேர்களுக்கு இந்த முறை வாய்ப்பளிக்கப்படவில்லை என்று எழுதியதில்- தம்பி ரகுபதி, தம்பி வேங்கடபதி, தங்கை சுப்புலட்சுமி ஜெகதீசன், தங்கை ராதிகா செல்வி ஆகியோர் அமைச்சர்களாகவே பங்கேற்று திறம்பட செயல்பட்டவர்கள்.

இவர்களில் தங்கை சுப்புலட்சுமி ஜெகதீசன் தேர்தலுக்கு பதினைந்து நாட்களுக்கு முன்பாகவே என்னைச் சந்தித்து- “இந்த முறை குடும்ப சூழ்நிலை காரணமாக நான் போட்டியிடவில்லை, வேறு ஒருவருக்கு வாய்ப்பளிக்கலாம்” என்று கைப்பட கடிதமே எழுதி கொடுத்தபோது-இப்படியே ஒவ்வொருவரும் இருந்தால் என்று ஒரு கணம் நினைத்தேன்.

அமைச்சராக இருந்த தம்பி ரகுபதியின் புதுக்கோட்டை தொகுதியே இந்த முறை காணாமல் போய்- புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியே திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குப் போய்விட்டது. அதோடு திருச்சி நாடாளுமன்றத் தொகுதி- தம்பி வேங்கடபதி போட்டியிட்ட கடலூர் நாடாளுமன்றத் தொகுதி- தங்கை ராதிகாசெல்வி கோரிய திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி ஆகிய மூன்றும் தொகுதி உடன்பாட்டின்போது காங்கிரஸ் கட்சிக்கு பகிர்ந்து கொள்ளப்பட்டுவிட்டது.

பெண்களுக்கு முக்கியத்துவம்

இவர்கள் தவிர கடந்தமுறை நாடாளுமன்றத்தில் கழக உறுப்பினர்களாக இருந்த தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் தலைவர்- பாட்டாளிகளின் நம்பிக்கை நட்சத்திரம் தம்பி குப்புசாமிக்கு; வயது, உடல் நிலை காரணமாகவும்-ஒரு பெண்ணுக்கு இத்தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக தம்பி கிருஷ்ணசாமிக்கும் – புதியவர் ஒருவருக்கு ராமனாதபுரம் தொகுதியிலே வாய்ப்பு தர வேண்டுமென்பதற்காக; தங்கை பவானி ராஜேந்திரனுக்கும் இம்முறை வாய்ப்பளிக்க முடியாமல் போய் விட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் இப்போது பயன்படுத்தப்படாவிட்டாலும், வருங்காலத்தில் அடுத்தடுத்து வரும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் இவர்கள் வாய்ப்புக்கு உரியவர்களாவார்கள். குறிப்பாக தம்பி கிருஷ்ணசாமி நேற்று காலையில் என்னை சந்தித்து வாய்ப்பு கேட்டபோது- இந்தமுறை பெண்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க முடியாமல் இருக்கிறது, உன் தொகுதியிலாவது உனக்குப் பதிலாக ஒரு பெண்ணை நிறுத்தலாம் என்று நினைக்கிறேன், யாரை நிறுத்தலாம் என்று நீயே யோசனை கூறு என்று சொன்னவுடன், சரி அண்ணே, அழைத்து வருகிறோம் என்று கூறி அவரும் மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி சிவாஜியும் சென்று- தற்போது நிறுத்தப்பட்டுள்ள சகோதரி காயத்ரி ஸ்ரீதரனை அழைத்து வந்தார்கள்.

அந்தக் காயத்ரி யார் தெரியுமா? பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராகவும், பிறகு என்னுடனே சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த பழம்பெரும் கழக நண்பர் கிண்டி கோபாலின் பேத்தி என்கிறபோது நான் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

எந்த அளவிற்கு தம்பி கிருஷ்ணசாமி பெருந்தன்மையோடு நடந்து கொண்டார் என்பதை எண்ணி நான் எனக்குள்ளேயே பெருமைப்பட்டுக் கொண்டேன். இன்னும் சொல்லப்போனால் அவரது செயல்பாட்டில் எனக்கோ, கழகத்திற்கோ எந்தவிதமான குறைபாடும் இல்லை. இருந்தாலும் தனக்கு வாய்ப்பு தரப்படவில்லை என்பதை அவர் பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டார்.

தூத்துக்குடி

இது போலவே தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி பெரியசாமியின் புதல்வர் போட்டியிட மனு செய்திருந்தார். அந்தத் தொகுதியிலிருந்து வந்திருந்த மாவட்டக் கழக நிர்வாகிகள் எல்லாம் அவரைத்தான் பரிந்துரையும் செய்திருந்தார்கள். அதற்குப் பக்கத்து தொகுதியான திருநெல்வேலிக்கு மனு செய்திருந்த சகோதரி ராதிகா செல்விக்கு அந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்குப் பகிர்ந்து கொள்ளப்பட்டுவிட்ட காரணத்தால்-தூத்துக்குடி தொகுதியிலாவது வாய்ப்பு தரலாமா என்றும் யோசிக்கப்பட்டது. அவரிடமும் அதுபற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.

அவர் தனக்கு வாய்ப்பு தரவேண்டும் என்பதைவிட, அந்தத் தொகுதியிலே கழகம் வெற்றிபெற வேண்டியது முக்கியம் என்பதை நினைவூட்டினார். பின்னர் மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி பெரியசாமியை வரவழைத்துப் பேசினேன். அப்போது அவர் அண்ணே, நானோ மாவட்டக் கழகச் செயலாளர், என் பெண்ணோ அமைச்சராக இருக்கிறார், இதிலே என் மகனுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்றால் ஒரு சிலர் அசூயை கொள்ள நேரிடும் என்று அவரே முன்வந்து கூறியதோடு எழுதியும் கொடுத்தார்.

வாய்ப்பு

பின்னர் நான் அவரிடம் நீயே யோசனை சொல், யாரை நிறுத்தலாம் என்று கேட்டபோது, அவரே ஒருவரை அழைத்து வந்து, இவரை நிறுத்தலாம், வெற்றிக்கனியைக் கொண்டு வருகிறேன் என்று சொன்னதின் பேரில்-தன் குடும்ப நலனைவிட, கழகத்தின் நலனைப் பெரிதாகக் கருதிய அந்தத் தம்பியை வாழ்த்திவிட்டு, அவர் அழைத்து வந்தவரையே அந்தத் தொகுதியிலே வேட்பாளராக நிறுத்தியிருக்கிறோம்.

அவரைப் போலவே வாய்ப்பு கிடைக்காத மற்றவர்களும் பெருந்தன்மையாக இந்தமுறை வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அடுத்தமுறை நிச்சயம் கிடைக்கும் என்று நினைத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் 1999-ம் ஆண்டு கடலூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தம்பி ஆதிசங்கருக்கு 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக தம்பி வேங்கடபதிக்கு அந்தத் தொகுதியிலே வாய்ப்பு தரப்பட்டு அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தார்.

கடந்தமுறை வாய்ப்பு தரப்படவில்லை என்பதற்காக தம்பி ஆதிசங்கர் கோபித்துக் கொண்டு சோர்வுற்றுவிடவில்லை. முறையாக கழகப் பணிகளை ஆர்வமுடன் தொடர்ந்து ஆற்றி வந்தார். இப்போது மீண்டும் ஆதி சங்கருக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. எனவே அண்ணா சொன்னதைப் போல மாறி மாறி வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கும்.

தாங்க முடியாத வலி

நேர்காணல் பணிக்காக இரண்டு நாட்கள் காலை முதல் இரவு வரை சக்கர நாற்காலியை விட்டு நான் இறங்காமல் உட்கார்ந்திருந்ததை உடன்பிறப்பே, நீ நன்கறிவாய். பேராசிரியர் போன்றவர்கள், நீங்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள், நாங்கள் பார்க்கிறோம் என்று சொன்னபோது கூட, நான் கேட்கவில்லை. ஏனென்றால் தகுந்தவர்களை தேர்வுசெய்து வேட்பாளர்களாக உன்முன் கொண்டு வந்து நிறுத்தினால், நீ மக்களிடம் சென்று அவர்களுக்காக வாக்குகளை முறையாகச் சேர்க்க முடியுமென்பதற்காகத் தான் என் சிரமத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அமர்ந்திருந்தேன்.

அப்படி அமர்ந்திருந்ததின் விளைவை நேற்று அதிகாலை 3 மணி அளவில் என்னால் உணர முடிந்தது. ஆமாம், அறுவை சிகிச்சை செய்துகொண்ட இடத்திற்கு கீழே இடுப்பு மற்றும் கால் பகுதியில் கடுமையான வலி. வீட்டாரிடமும், மருத்துவரிடமும் வலி பற்றி கூறினால்- தொடர்ந்து பலமணி நேரம் உட்கார்ந்திருந்ததைக் கூறி; அவர்கள் நம்மைத் தான் கோபிப்பார்கள் என்பதற்காக வலியைப் பொறுத்துக் கொள்ளப் பார்த்தும் முடியவில்லை. வலியையும் பொறுத்துக் கொண்டு-இரண்டு மூன்று தொகுதிகளுக்கு சரியான வேட்பாளரை நிர்ணயிக்க முடியவில்லையே என்பதற்காக அந்த இரவு நேரத்தில் தம்பி துரைமுருகனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரையும், சில மாவட்டக் கழகச் செயலாளர்களையும் வரச்செய்து பேசினேன். தொடர்ந்து அதே நேரத்தில்தான் திருவள்ளூர் தொகுதி பற்றி சிந்தித்து, மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி சிவாஜியையும், தம்பி கிருஷ்ணசாமியையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களை நேரில் வரச்செய்து, அந்த தொகுதி பற்றி முடிவெடுத்து அறிவித்தோம்.

பட்டதாரிகள்

கழகத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள 21 வேட்பாளர்களில் ஒருவரைத் தவிர அனைவருமே பட்டதாரிகள்- ஒரு சிலர்பட்ட மேற்படிப்பு படித்தவர்கள். கழகத் தலைமையின் சார்பில் தோழமைக் கட்சிகளோடு கலந்து பேசி தொகுதி உடன்பாடு கண்டு-தேர்தல் அறிக்கை வெளியிட்டு-வேட்பாளர்களையும் தேர்வு செய்து அறிவித்துவிட்டோம். வாக்காளர்களிடம் சென்று மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளைப் பட்டியலிட்டு-இத்தகைய சாதனைகள் மேலும் தொடர்ந்திட இந்த அணியினை ஆதரிக்க வேண்டுமென்று கேட்டு வெற்றியைத் தேடித்தர வேண்டிய பொறுப்பு கூட்டணிக் கட்சிகளின் முன்னணி தோழர்களுக்கும் இருக்கிறது. அந்தப் பணியிலே அவர்கள் எல்லாம் ஈடுபட வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன்.

அதற்கான உந்து சக்தியை நமது தோழமைக் கட்சிகளான அனைத்துக் கட்சி உடன்பிறப்புகளுக்கும் வழங்க வேண்டிய பொறுப்பு உனக்கு உண்டு என்பதை மறவாதே – தேர்தல் களம் அழைக்கிறது, புறப்படு!

இவ்வாறு அறிக்கையில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

Posted in Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | Leave a Comment »

DMK Internal Squabbles: Govt told to pay relief for police apathy – Mu Ka Alagiri

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2008

முதல்வர் மகன் அழகிரி தொடர்பான வன்முறைக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

முதல்வரின் புதல்வர் மு.க அழகிரி
முதல்வரின் புதல்வர் மு.க அழகிரி

2000மாவது ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திமுக தொண்டர்கள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து மதுரையில் நிகழ்ந்த வன்முறையின்போது தீக்கிரையான ஒரு தனியார் பேருந்திற்கான இழப்பீட்டை தமிழக அரசு வழங்கவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டிருக்கிறது.

அப்பேருந்தின் உரிமையாளர்களான தனக்கன்குளம் வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சி கழகத்திற்கு 2 லட்ச ரூபாய் இழப்பீட்டை இன்னும் எட்டு வாரங்களுக்குள் செலுத்திவிடவேண்டுமென நீதிபதி சந்துரு கூறியிருக்கிறார்.

அழகிரிக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் மோதல் முற்றிவந்த நேரத்தில் அழகிரியுடன் தொண்டர்கள் தொடர்பை துண்டித்துக்கொள்ளவேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. அப்போது அழகிரி ஆதரவாளர்களின் எதிர்ப்பே பரவலான வன்முறையாக வெளிப்பட்டதாக செய்திகள் கூறின.

வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சிக்கழகம் எரிக்கப்பட்ட பேருந்திற்கு வாகன காப்பீடு இல்லை என்று முறையிட்டும் அதற்கு எவ்வித இழப்பீட்டையும் வழங்க தமிழக அரசு முன்வரவில்லை. கடந்த மூன்றாண்டுகளாக அக்கழகத்தின் மனுவிற்கு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையிலேயே நீதிபதி சந்துரு தனது தீர்ப்பினை அளித்திருக்கிறார்.

அப்போது நிகழ்ந்த வன்முறைகள் குறித்தும், குடிமக்களுக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்காதது குறித்தும் நீதிபதி கடும் அதிருப்தியினை தெரிவித்திருக்கிறார். எந்த ஒரு தனிநபரின் பிரச்சினைகளுக்காகவும் மற்ற குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது, கும்பல்கள் வன்முறையில் இறங்கும்போது ஒன்றும் செய்ய இயலவில்லை என்று அரசு ஒதுங்கிக்கொள்ளமுடியாது என்று நீதிபதி சந்துரு கூறியிருக்கின்றார்.

Posted in DMK, Economy, Govt, Law, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

Mu Ka Azhagiri’s Daughter & M Karunanidhi’s Daughter: DMK Legacy – Thrones, Queens, Monarchy, Dynasty

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2008

கனிமொழி, கயல்விழி -கழகம் செல்லும் புது வழி!

ஆ. ரகுராமன்

சென்னை, ஜூன் 16: தி.மு.க.வில் ஆரம்பம் முதலே சத்தியவாணி முத்து உள்ளிட்ட ஒரு சில பெண்கள் மட்டுமே அமைச்சர் பதவியிலும் கட்சியின் உயர்நிலை அமைப்புகளிலும் இருந்துள்ளனர்.

நெடுநாள்களாக, சக்திவாய்ந்த பெண் தலைவர் எவரும் தி.மு.க.வில் இல்லை. அந்த இடத்தை கனிமொழி, கயல்விழி ஆகியோர் நிரப்புவார்களா என்ற கேள்வியை திமுகவின் கடலூர் மாநாட்டு நிகழ்வுகள் எழுப்புகின்றன.

மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மு.க. அழகிரி மகள் கயல்விழி ஆகியோரை கட்சி ரீதியாக முன்னிறுத்தவே கடலூர் திமுக மகளிரணி மாநில மாநாடு நடத்தப்படுகிறது என்று பரவலான பேச்சு இருந்தது.

தொடக்கம் முதலே மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இதை மறுத்து வந்தார்.

ஆனால் மாநாட்டின் முதல் நாள் திமுக மகளிரணி சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் கனிமொழி முன்னிலைப்படுத்தப்படுவது தெளிவாகத் தெரிந்தது.

மாநாட்டுப் பந்தலில் அமைச்சர்கள், திமுக தலைவர்கள் அனைவரும் முதல்வர் கருணாநிதிக்கு அடுத்து கனிமொழிக்கே அதிக மரியாதை அளித்தனர்.

முதல்வரின் மேடைக்கு அருகிலிருந்த மேடையில் அமைச்சர்களுக்கு நடுவில் கனிமொழி அமர்ந்திருந்தார். கனிமொழியும் கருணாநிதியும் மட்டுமே ஊர்வலமாக வந்த பெண்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தனர்.

மாநாட்டுக்கு முத்தாய்ப்பாக, பெரியார் படத்தைத் திறந்து வைத்துப் பேசிய கனிமொழி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலிலதா, பாமக நிறுவனர் ராமதாஸ், நடிகர் விஜயகாந்த் ஆகியோரை விமர்சித்துப் பேசினார்.

கட்சியில் அவருக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை அவரது பேச்சு உணர்த்துவதாக இருந்தது. மாநாட்டில் எத்தனையோ பேர் பேசினாலும் கனிமொழியின் பேச்சு மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

மாநாட்டிற்கு வைக்கப்பட்ட பேனர்கள், வரவேற்பு வளைவுகளில் கருணாநிதி, அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அடுத்த முக்கியத்துவம் கனிமொழிக்கு வழங்கப்பட்டது.

வரவிருக்கும் திமுக உள்கட்சித் தேர்தலில் கனிமொழிக்கு மகளிரணியில் முக்கிய பொறுப்பு தரும் எண்ணத்தில் முதல்வர் கருணாநிதி இருப்பதாகத் தெரிகிறது. அதற்காகக் கட்சியினரின் அங்கீகாரத்தைப் பெறும் நோக்கத்திலேயே இந்த மாநாடு நடத்தப்பட்டது என்று கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கயல்விழி…. “வள்ளுவமும் வாய்மையும்’ என்ற தலைப்பில் அழகிரியின் மகள் கயல்விழி பேசுவதைக் கேட்கவும் கூட்டத்தினரிடையே ஆவல் இருந்தது.

கட்சியில் மு.க. அழகிரி துணைப்பொதுச்செயலாளர் பதவி கேட்பதாகவும், அவரை சமாதானப்படுத்த அவரது மகள் கயல்விழிக்கு கட்சிப் பதவி வழங்கப்படும் என்றும் கட்சி வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.

இதற்கு முன்னோட்டமாகத்தான், மாநாட்டில் அவர் பேசவைக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

கயல்விழி பேசுவதற்கு முன் பல பேச்சாளர்களுக்கு மகளிரணித் தலைவர் நூர்ஜஹான் பேகம் ஏழு நிமிடங்கள் கூட பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசியும் இதில் அடக்கம். ஐந்து நிமிடங்களிலேயே பேச்சை முடிக்கச் சொன்னதால் தமிழரசி சற்று வேகமாக “நன்றி, வணக்கம்!’ என்று கூறி விடைபெற்றார்.

கயல்விழி 15 நிமிடங்களுக்கும் மேலாகப் பேசினார். அவர் தீவிர அரசியலில் இயங்குவதற்கு ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறார் என்பதைக் குறிக்கும் வகையில் அவரது பேச்சு இருந்தது. அவர் பேசும்போது, எந்தவிதக் குறுக்கீடும் இல்லை.

பெண்கள் எழுச்சிக்காகவும், நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும், கடலூரில் திமுக மகளிரணி மாநாடு நடத்தப்படுவதாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியிருந்தார்.

மாநாட்டில் பேசிய சிலர், வரும் தி.மு.க.வில் கட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தற்போது கட்சிப் பொறுப்பில் இருக்கும் சில பெண்களும் கட்சி நிர்வாகிகளின் உறவினர்களாக மட்டுமே இருக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திமுக தீர்மானம் நிறைவேற்றியதுடன் தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறது. கட்சியிலும் ஆட்சியிலும் பெண்களுக்கு அதிகாரம் மிக்க பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதே இந்த மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலான திமுக பெண் உறுப்பினர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »