Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Stalin’

Panruti Ramachandran thwarted merger of DMK with MGR’s ADMK: Mu Karunanidhi

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 1, 2009

திமுக, அதிமுக இணைவதைக் கெடுத்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன் – கருணாநிதி

திமுகவும், அதிமுகவும் இணைய பிஜூ பட்நாயக் மேற்கொண்ட முயற்சிகள் கூடி வந்த வேளையில், பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆர். மனதை மாற்றி அதைக் கெடுத்து விட்டார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

முரசொலி அறக்கட்டளை சார்பில் 2008-ம் ஆண்டுக்கான கலைஞர் விருது மற்றும் முரசொலி மாறன் சிறப்பு விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் சோலை மற்றும் புகைப்பட நிபுணர் யோகா ஆகியோருக்கு கலைஞர் விருதுகளையும், முரசொலி மாறன் சிறப்பு விருதினை நடிகர் தியாகுவுக்கும் கருணாநிதி வழங்கினார்.

விருது பெற்ற அனைவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கப்பட்டது. முன்னதாக, ஈழத்தந்தை செல்வாவின் 112-வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்தையும் கருணாநிதி திறந்து வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில்,

வீரமணி சொன்ன புதிய செய்தி

உங்களுக்கெல்லாம் ஒரு புதிய செய்தியை இங்கே வீரமணி சொன்னார். ஆனால் அவர் சொல்லும் வேகத்திலே ஒன்றிரண்டை விட்டுவிட்டார் என்று கருதுகின்றேன்.

திமுக-அதிமுக இணைப்பு முயற்சி..

திராவிட இயக்கம் ஒன்றாக விளங்க வேண்டும் என்று, அதனை இரண்டாக ஆக்கியவர் (எம்ஜிஆர்) எண்ணினார்- அதற்கு முயற்சி மேற்கொண்டோம் என வீரமணி குறிப்பிட்டார். ஒன்றாக ஆகவேண்டும் என்று அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முயற்சி மேற்கொண்டு, அதற்கு தமிழர் தலைவர் வீரமணியை நீங்கள் அந்த காரியத்தை செய்ய வேண்டுமென்று கேட்டபோது, நடந்த சில விஷயங்களை முழுமையாக சொல்ல விரும்புகிறேன்.

அப்படி ஒரு முயற்சியை ஒரு தேர்தல் நேரத்தில்-நம்முடைய அன்புக்கும், மதிப்புக்கும் உரிய பிஜு பட்நாயக் அந்த முயற்சியை மேற்கொண்டு, ஏன் திமுகவும், அதிமுகவும் ஒன்றாகக் கூடாது என்று கேட்டார். இது யாருடைய சிந்தனை என்று கேட்டபோது, நான் எம்ஜிஆரிடம் பேசிவிட்டேன். உன் நிபந்தனை என்ன என்று கேட்டார்? நீங்கள் பேசியதும் நண்பர் எம்ஜிஆர் ஒப்புக்கொண்டதும் உண்மை என்றால் என் நிபந்தனையை கேளுங்கள் என்றேன்.

எனது நிபந்தனைகள்

இரண்டு கட்சிகளுக்கும் தலைவராக நான் இருப்பேன்.

ஏன் என்றால் இந்த இரண்டு கட்சிகளின் ஆரம்பகாலத்தினுடைய அடிப்படை கொள்கைகளை- கட்டிக்காக்க கூடிய அந்தத் தலைமை என்னிடத்திலே இருந்தால்தான்- அதை கட்டிக் காக்க முடியும். இப்போது இருப்பதைப் போலவே முதல்வர் பொறுப்பில் அவரே நீடிக்கட்டும் என்றேன்.

அப்படியா என்று கேட்ட அவர், பிறகு என்ன நிபந்தனை என்று கேட்டார். ஒன்றும் பெரிய நிபந்தனை அல்ல. கொடியிலே அண்ணாவின் படம் போட்டிருக்கிறார்கள். அது நீடிக்கட்டும். திடீரென அண்ணா படத்தை எடுக்கச் சொன்னால், அண்ணா படத்தை வேண்டுமென்றே கருணாநிதி எடுத்துவிட்டான் என்று சிலர் கோள் மூட்டுவார்கள், ஆகவே அண்ணா படம் கொடியில் அப்படியே இருக்கட்டும் என்று சொன்னேன்.

வேறு என்ன நிபந்தனை என்றார்? பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ, உரிமை பெற, சலுகைகளை அனுபவிக்க, எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய நன்மைகள், அவர்களுக்குக் கிடைக்க, கல்வி, வேலை வாய்ப்புகளில் அவர்கள் சமூகரீதியாக இன்று பெற்று வருகிற இடஒதுக்கீடு-கல்லூரிகளில், பள்ளிகளில், பல்கலைக் கழகங்களில் பெறுகின்ற இடஒதுக்கீடு- இப்போது எம்.ஜி.ஆர். திடீரென கொண்டு வந்திருக்கிற பொருளாதார அடிப்படையில் பாழ்படுகிறது.

ஆகவே, 9 ஆயிரம் ரூபாய் சம்பளம் உள்ளவன் ஒரு சாதி. அதற்கு கீழே வருமானம் உள்ளவன் ஒரு சாதி என்று பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு செய்வது கூடாது, சமூக அடிப்படையில் அவர்களுடைய தகுதியை பிரித்து இந்த, இடஒதுக்கீடு தரப்படவேண்டும்,

அதற்கு ஒத்துக் கொள்கிறாரா? என்று கேளுங்கள் என்றேன்.

என்ன ஆண்டவரே…

நான் இப்போதே போய் எம்.ஜி.ஆரிடம் போய் பேசிவிட்டு வருகிறேன் என்று சொல்லி- இவர் சென்று, சேப்பாக்கம் கெஸ்ட் அவுசுக்கு எம்ஜிஆரை அழைத்துக் கொண்டு வந்தார். அங்கு நான் ஒரு அறையில் இருக்கிறேன். மற்றொரு அறையில் எம்.ஜி.ஆர், நெடுஞ்செழியன், இன்னொருவர் பெயர் சொல்ல விரும்பவில்லை. இருந்தாலும் சரித்திரம் முழுமையாகாது. பண்ருட்டி ராமச்சந்திரன். இவர்கள் இன்னொரு அறையில் இருந்தார்கள்.

எம்.ஜி.ஆருடன் சந்திப்பு

எம்ஜிஆர் என்னுடைய அறைக்கு வந்தார். அவர் என்னை பார்த்தால் என்ன முதலாளி? என்பார், இல்லாவிட்டால் என்ன ஆண்டவனே? என்பார். இப்படித்தான் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வோம். அவர் என்னை பார்த்ததும், என்ன ஆண்டவரே? பிஜு பட்நாயக்கிடம் என்ன சொன்னீர்கள் என்று கேட்டார்.

நான் சொன்னேன்- இந்த இரு கழகங்களும் ஒன்றாக இணைந்தால், அண்ணா இட்ட பெயரே, தி.மு.கவே நீடிக்க வேண்டும் என்று சொன்னேன். கொடியை பொறுத்தவரையில் நீங்கள் வைத்த அண்ணாவின் உருவம், நீடிக்கட்டும் என்றேன். நீங்களே முதல்வராக நீடிக்கலாம் என்று சொன்னேன். இந்த 9,000 ரூபாய் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை உடனே வாபஸ் பெறவேண்டும் என்றேன்.

அதற்கு அவர், நான் இன்று வேலூர் போகிறேன். நாளைக்கு பக்கத்தில் ஒரு ஊரில் எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடக்கவுள்ளது. நீங்களும் சென்னையில் அதே நேரத்தில் அவசர செயற்குழுவைக் கூட்டுங்கள். அங்கே, எங்கள் செயற்குழு நடைபெறும் நேரத்தில் நாளை மறுநாள் உங்கள் செயற்குழுவும் இங்கே நடைபெறட்டும்.

நாம் பேசிக் கொண்ட நிபந்தனைகளை வைத்து, ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அதை தொலைபேசியில் எங்களுக்குச் சொல்லச் செய்யுங்கள். நாங்களும் அதே தீர்மானத்தை நிறைவேற்றி, இரு கட்சிகளும் ஒன்றாக ஆகலாம் என்று சொன்னார்.

காரியத்தைக் கெடுத்த பண்ருட்டி ராமச்சந்திரன்…

சொல்லிவிட்டு வேலூர் சென்றார். காரில் சென்றபோது என்ன நடந்ததோ எனக்கு தெரியாது. காரிலே அவரோடு சென்றவர், காதுக்குள்ளே புகுந்தார். கருத்தை மாற்றினார். வேலூர் பொதுக்கூட்டத்திலே எம்ஜிஆர் பேசும்போது, மாலை பத்திரிகையில் நானும், கருணாநிதியும் இணைய போகிறோம். திமுகவும், அதிமுகவும் இணையப்போகின்றன என்று வந்துள்ள செய்தியை யாரும் நம்பாதீர்கள் என்று ஒரு செய்தியை அங்கே வெளியிட்டார்.

காரில் நடந்த மர்மம்

நான் உங்களுக்கு சொல்கிறேன். இது எப்படி விளைந்தது என்று கேட்டால் அப்போதே சொன்னேன்-நான் பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் என்று- அவரும் அந்த காரில் சென்றார். அதனுடைய விளைவு இந்த முடிவுக்கு காரணமாக ஆனது.

ஆக, திராவிட இயக்கம் என்பது ஒரு கொள்கை அடிப்படையில்தான் இயங்க முடியும். ஆனால் ஒரு கொள்கை, ஒரு லட்சியம் இவற்றுக்காக பாடுபடுகின்ற இந்த இயக்கம்-அந்த போரிலே வெற்றி பெறுகிற வரையில் யாருக்கும், எந்த நேரத்திலும் கொள்கையிலே ஒரு துளியும் விட்டுத் தராது, லட்சியத்திலே ஒரு துளியும் விட்டுத் தராது, லட்சியத்திலே சிறிதும் துவண்டுவிடாது.

ஈழத்தந்தை செல்வா

இந்த இனிய விழாவில் நம்முடைய நண்பர் தந்தை செல்வா அவர்களுடைய புதல்வர் சந்திரஹாசன் வருகை தந்து நமக்கெல்லாம் பெருமையை ஏற்படுத்தியிருக்கிறார். தந்தை செல்வா அவர்கள் 1972ம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். எதற்காக? இலங்கையிலே அவதிப்படுகிற மக்களுக்கு- இலங்கையிலே அடிமைப்படுத்தப்பட்டிருக்கிற தமிழ் இனத்துக்கு- உரிமைகளைக் கேட்க-அதற்காக துணைபெற இங்கே பெரியாரை காண, அதைத் தொடர்ந்து என்னைக் காண இங்கே வந்தார்.

அவர் அன்றைக்கு புரிந்த தொண்டின் காரணமாக- ஆற்றிய பணியின் காரணமாக- அடிமைப்பட்டு கிடக்கிற இலங்கை தமிழர்களுக்கு சுதந்திர உணர்ச்சியை உருவாக்க வேண்டும் என்பதற்காக அவர் உருவாக்கிய தமிழ் ஈழம் என்ற அந்த கொள்கை பரவுவதற்காக இங்கே வந்தார். ஆனால் 72ம் ஆண்டிலே வந்தார். பிறகு, ஐந்தாண்டுகளுக்கு பிறகு அவர்கள் மறைந்தார்.

ஈழ வரலாறு தெரியாதவர்கள்

அவர்கள் மறைந்தபோது அதாவது 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய உடன்பிறப்பு கடிதத்தில், செல்வா மறைந்துவிட்டார். எனினும் அவரால் உருவாக்கப்பட்ட ஆற்றல் மிகு தலைவர்கள், தளபதிகள், வீரக்கவிஞர்கள், இலட்சிய காளைகள் பலர் இருக்கிறார்கள். இலங்கை தமிழர்களுக்காக செல்வா ஆற்றிய பணியை அவர் வழியில் மற்றவர்கள் தொடர்வார்கள்.

அவர் காத்திட்ட அமைதி அதேநேரத்தில் தமிழர்களின் நல்வாழ்வுக்கு வழி அமைத்திட அவர் ஓயாது வழங்கிய உழைப்புஇவை என்றென்றும் அந்த தியாக செல்வத்தை உலகத் தமிழர்களின் நெஞ்சத்தில் அணையாத தீபமாக ஆக்கி வைத்திருக்கும் என்பது மட்டும் உறுதி என்று எழுதினேன்.

இந்த வரலாறு தெரியாதவர்கள் செல்வா மறைந்த செய்தி புரியாதவர்கள் செல்வா பட்ட பாடு என்னவென்று படிக்காதவர்கள் இன்றைக்கு இலங்கையை பற்றி நமக்கு என்ன தெரியும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை, ராவணன் ஆண்ட பூமி மாத்திரமல்ல என் தமிழனும் ஆண்ட பூமிதான். அந்த இலங்கையிலே ஈழத் தமிழர்கள் மீண்டு வாழ எந்த ஏற்பாடுகளை உலக நாடுகள் ஒன்று கூடிச் செய்தாலும் அதற்கு வழி வகுக்க, ஆலோசனைகளைக் கூற, அறிவுரைகளை வழங்க, பக்கத் துணை நிற்க என்றென்றும் தமிழகம் தயாராக இருக்கின்றது, திமுகவும் தயாராக இருக்கிறது என்றார் கருணாநிதி.

எம்.ஜி.ஆர் விருப்பம்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனது ஏற்புரையில், “என்னை பாராட்டி மு.க. ஸ்டாலின் பேசும்போது மணப்பெண் போல் தலை குனிந்திருந்தேன். மிசா காலத்தில் சிறையில் நாங்கள் அடைபட்டிருந்தபோது இரவு 9 மணி அளவில், போலீசார் தாக்கி என் மீது ரத்தம் தோய்ந்த நிலையில் தள்ளப்பட்ட ஒரு உருவம்தான் ஸ்டாலின். இந்த இயக்கத்தில் உள்ளவர்கள் கூட்டணி சேர வேண்டும் என்பதற்காக வந்தவர்கள் அல்ல. தி.மு.க.வுடன் அவர்கள் எப்போதும் இருப்பார்கள். எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சரான பிறகு தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் இணைக்க விரும்பினார். அதற்காக நான் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் தூது சென்றேன். அவரிடமும் பேசினேன். ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது. இந்த விழாவில் எனக்கு அளிக்கப்பட்டுள்ள ரூ.1 லட்சத்தை, பெரியார்-மணியம்மை பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறந்த இதழியலாளர்களை உருவாக்குவதற்காக அவர்களுக்கு பயிற்சி வகுப்பினை தொடங்குவதற்காக, வழங்குகிறேன். அந்த பயிற்சி வகுப்புக்கு கலைஞர் புரவலராக இருப்பார்” என்றார்.

மு.க.ஸ்டாலின்

முன்னதாக, பேசிய முரசொலி அறக்கட்டளைத் தலைவர் ஸ்டாலின், “ஒவ்வொரு ஆண்டும் முரசொலி சார்பில் கலைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல் முப்பெரும்விழாவையொட்டி, பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவிப்புப் போட்டியை மாணவர்களுக்கும் நடத்தி பரிசு வழங்கி வருகிறோம். இதுவரை 5,594 மாணவர்கள் பரிசு பெற்றுள்ளார்கள். இதுபோல் இதுவரை 238 சிறந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் ரூ.10.5 லட்சம் பரிசும், விருதும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 40 பேர் கலைஞர் விருது பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு இதுவரை ரூ.40 லட்சம் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த விழாவுக்கு நிதியமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். விருது பெற்றவர்களின் சாதனைக் குறிப்பை வாசித்து, வாழ்த்துரையை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். எஸ்.ஏ.எம். உசேன், நன்றியுரை வழங்கினார். இதில், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், டி.ஆர். பாலு உள்ளிட்ட மத்திய மந்திரிகள், கனிமொழி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராஜாத்தி அம்மாள் மற்றும் முரசொலி அறக்கட்டளை உறுப்பினர் செ.குப்புசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

Posted in Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , | 7 Comments »

DMK Internal Squabbles: Govt told to pay relief for police apathy – Mu Ka Alagiri

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2008

முதல்வர் மகன் அழகிரி தொடர்பான வன்முறைக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

முதல்வரின் புதல்வர் மு.க அழகிரி
முதல்வரின் புதல்வர் மு.க அழகிரி

2000மாவது ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திமுக தொண்டர்கள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து மதுரையில் நிகழ்ந்த வன்முறையின்போது தீக்கிரையான ஒரு தனியார் பேருந்திற்கான இழப்பீட்டை தமிழக அரசு வழங்கவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டிருக்கிறது.

அப்பேருந்தின் உரிமையாளர்களான தனக்கன்குளம் வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சி கழகத்திற்கு 2 லட்ச ரூபாய் இழப்பீட்டை இன்னும் எட்டு வாரங்களுக்குள் செலுத்திவிடவேண்டுமென நீதிபதி சந்துரு கூறியிருக்கிறார்.

அழகிரிக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் மோதல் முற்றிவந்த நேரத்தில் அழகிரியுடன் தொண்டர்கள் தொடர்பை துண்டித்துக்கொள்ளவேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. அப்போது அழகிரி ஆதரவாளர்களின் எதிர்ப்பே பரவலான வன்முறையாக வெளிப்பட்டதாக செய்திகள் கூறின.

வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சிக்கழகம் எரிக்கப்பட்ட பேருந்திற்கு வாகன காப்பீடு இல்லை என்று முறையிட்டும் அதற்கு எவ்வித இழப்பீட்டையும் வழங்க தமிழக அரசு முன்வரவில்லை. கடந்த மூன்றாண்டுகளாக அக்கழகத்தின் மனுவிற்கு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையிலேயே நீதிபதி சந்துரு தனது தீர்ப்பினை அளித்திருக்கிறார்.

அப்போது நிகழ்ந்த வன்முறைகள் குறித்தும், குடிமக்களுக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்காதது குறித்தும் நீதிபதி கடும் அதிருப்தியினை தெரிவித்திருக்கிறார். எந்த ஒரு தனிநபரின் பிரச்சினைகளுக்காகவும் மற்ற குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது, கும்பல்கள் வன்முறையில் இறங்கும்போது ஒன்றும் செய்ய இயலவில்லை என்று அரசு ஒதுங்கிக்கொள்ளமுடியாது என்று நீதிபதி சந்துரு கூறியிருக்கின்றார்.

Posted in DMK, Economy, Govt, Law, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

DMK Women Conference at Cuddalore: Kanimozhi, Azhagiri, MK Stalin – Kumudam Reporter Coverage

Posted by Snapjudge மேல் ஜூன் 20, 2008

22.06.08 ஹாட் டாபிக்

கலக்கலாகவே நடந்து முடிந்திருக்கிறது கடலூர் தி.மு.க. மகளிர் அணியின் முதல் மாநில மாநாடு. ஸ்டாலின் மட்டுமல்ல, அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட மாநாட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை என்ற ஒரு குறைளைத் தவிர.

`கனிமொழிக்காகத்தான் இந்த மாநாடு நடக்கப் போகிறது என்ற எண்ணத்தில், இந்த மாநாட்டை எப்படியாவது நடக்கவிடாமல் செய்ய வேண்டும் என ஸ்டாலின் நினைத்தார். இரண்டுமுறை தேதி தள்ளிப் போனதே தவிர, மாநாட்டை அவரால் நிறுத்த முடியவில்லை’ என்றெல்லாம் பேச்சுகள் இருந்தன. இந்த நிலையில் இரண்டுநாள் மாநாட்டில் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை என்றாலும், அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திலாவது வந்து பேசுவார் என்ற எதிர்பார்ப்பு கடைசிவரை நிலவியது. ஆனால் தப்பித்தவறிக் கூட அது நடக்காமல் போய்விட்டது.

மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக, 14-ம்தேதி காலையில், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கொடியேற்று விழா நடந்தபோது, அதில் எதிர்பார்த்த அளவு கூட்டமில்லை. அய்யோ! அவ்வளவுதான்! மாலையில் நடக்கப்போகும் பேரணியும் அழுதுவடியப் போகிறது என்று அங்கலாய்த்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. பீச் ரோட்டில் மாலை நான்கு மணிக்குத் தொடங்கிய பேரணியில் நல்ல கூட்டம். ஆறு மணி நேரம் வரை நீடித்த பேரணி, முடிந்தபோது இரவு பத்து மணி.

பேரணியைத் தொடங்கி வைத்த கனிமொழி, ஒன்றரை கி.மீ. தூரம் நடந்தே வந்தார். பேரணியைப் பார்வையிட தனிமேடையில் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், தயாளு அம்மாள், ராசாத்தி அம்மாள், அழகிரியின் மகள் கயல்விழி ஆகியோர் புடைசூழ அமர்ந்திருந்தார் கருணாநிதி. அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு மாநாட்டுப் பந்தலை நோக்கி நடந்தார் கனிமொழி. அவரை வழிமறித்த அமைச்சர் எம்.ஆர்.கே, பன்னீர்செல்வம், கலைஞர் இருந்த மேடையில் ஏறச் சொன்னபோது, அதை மறுத்துவிட்ட கனிமொழி, அமைச்சர்கள் ஏறியிருந்த மற்றொரு மேடையில் ஏறி நின்று பேரணியில் வந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தினார்.

பேரணி தொடங்கிய இடத்திலிருந்து குத்தாட்டம் போட்டுக் கலக்கியபடி வந்த ஒரு குழு, கலைஞர் இருந்த மேடை அருகே வந்ததும் நல்ல பிள்ளைகளாக மாறி, அவருக்கு பவ்யமாக மரியாதை செலுத்தி விட்டுக் கடந்தது ரசிக்கும்படியாக இருந்தது. பேரணி முடிய நேரமானதால் அன்று பேச இருந்த கனிமொழி மறுநாள் பேசுவார் என அறிவிக்கப்பட்டது.

மறுநாள் 15-ம்தேதி காலை பத்து மணிக்கே மாநாட்டு மேடைக்கு வந்து விட்டார் கலைஞர். அன்று பெரியார் படத்தைத் திறந்து வைத்துப் பேசிய கனிமொழி, “கருணாநிதிக்கு மார்க் போட யாரும் பிறக்கவில்லை. இனி பிறக்கவும் முடியாது. ஜெயலலிதா போன்றவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் குஜராத்தாகி விடும்” என்பது போன்ற பல பஞ்ச் களுடன் பேசி முடித்தார். கனி மொழி பேசி முடித்ததும் அவருக் குக் கை கொடுத்துப் பாராட் டினார் அமைச்சர் துரைமுருகன். அழகிரி மகள் கயல்விழி அவரது கன்னிப்பேச்சைத் தொடங்குமுன் கருணாநிதியின் கால்களில் விழுந்து வணங்கிவிட்டு, ஏதோ பேச்சுப் போட்டிக்கு வந்த பள்ளி மாணவி போல படபடவென பொரிந்து தள்ளினார். அவர் பேசி முடித்தபோது அழகிரி மட்டுமல்ல; மாநாட்டுக்கு வந்திருந்த அத்தனை பேரும் கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள்.

இறுதியாகப் பேசிய முதல்வர் கருணாநிதி, “பா.ம.க., தொடர்பாக நாங்கள் நான்கு பேர் இங்கே கூடிப்பேசி முடிவெடுக்க முடியாது. 17-ம்தேதி அறிவாலயத்தில் நடக்கும் உயர்நிலை குழுக் கூட்டத்தில் கூடி விவாதித்து தான் முடிவெடுக்கப்படும். யாரோ அவசரப்படுகிறார்கள் என்பதற்காக நானும் அவசரப்பட்டுவிட முடியாது” என்று கூறி பா.ம.க.வுக்கு ஒரு பஞ்ச் வைத்தார். “ஒரு சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு மட்டும் சிலிண்டர் ஒன்றுக்கு முப்பது ரூபாய் குறைக்கப்படும். இதற்கான தொகையை தமிழக அரசே எண்ணெய் நிறுவனங்களுக்குச் செலுத்திவிடும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு நூறுகோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இந்த மாநாட்டால் தமிழக அரசுக்கு நூறுகோடி நஷ்டம். இதை நான் இஷ்டப்பட்டு ஏற்றுக்கொள்கிறேன்” என்று நகைச்சுவையாகப் பேசி முடித்தார் அவர்.

மாநாட்டுக்கு ஸ்டாலின் வராததால் பத்திரிகைகளில் அந்த விஷயம் ஹைலைட்டாகி விடும் என்பதால், அதை மாற்றிக்காட்டும் விதத்தில் இந்த காஸ் சிலிண்டர் விலைக் குறைப்பை மாநாட்டில் முதல்வர் அறிவித்ததாக தி.மு.க. தொண்டர்கள் பலர் பேசிக் கொண்டனர்.

மாநாட்டுக்கு ஸ்டாலின் வரவில்லை என்றாலும் அவரது பேனர்கள், கட்அவுட்டுகளுக்கு அங்கே குறையிருக்கவில்லை. மாநாட்டின் முதல் நாளன்று அழகிரி அவரது மகள் கயல்விழி ஆகியோருக்கு மருந்துக்குக் கூட பேனர், கட்அவுட்டுகள் இல்லை. ஆனால் இரண்டாம் நாள் திடீர்திடீரென பல இடங்களில் இருவரது பேனர்களும் முளைத்திருந்தன. கடலூர் மாவட்ட நிர்வாகிகள் பெயரில் அந்த பேனர்கள் இருந்தன.

`இதுநாள்வரை தென்மாவட்டங்களில் மட்டும் கோலோச்சிக்கொண்டிருந்த அழகிரிக்கு வட மாவட்டங்களில் அவ்வளவாக ஆதரவாளர்கள் இல்லை. இந்த நிலையில், ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான பொன்முடி, கடலூர் மாவட்டத்திலும் மூக்கை நுழைத்து தொடர்ந்து தொல்லை தந்ததால், கடுப்பாகி இருந்த பன்னீர்செல்வத்தை அழகிரி சமயம் பார்த்துத் தன்பக்கம் இழுத்துவிட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு பவர்ஃபுல் இலாகாவான சுகாதாரத் துறையை வாங்கிக்கொடுத்ததே அழகிரிதான். அதற்கு நன்றிக்கடனாகத் தான் பன்னீர்செல்வம் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக்காட்டி இருக்கிறார். இதன்மூலம் அழகிரியின் அரசியல் பரப்பளவு தற்போது வடதமிழகம் வரை விரிந்திருக்கிறது. அழகிரியின் வடமாவட்டத் தளபதியாக பன்னீர்செல்வம் தன்னை முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார்’ என்றெல்லாம் மாநாட்டில் அங்கங்கே தொண்டர்கள் பேசிக் கொண்டதை நம்மால் கேட்க முடிந்தது.

`ஸ்டாலினுக்கு எதிராக அழகிரியும், கனிமொழியும் கரம்கோத்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டிவிட்டார்கள். இதற்கு ஸ்டாலின் எப்படி பதிலடி கொடுக்கப்போகிறார் என்பது போகப்போகத்தான் தெரியும்’ என்றும் சிலர் பேசிக்கொண்டனர். ஸீ

ஸீ எஸ்.கலைவாணன்

19.06.08 ஹாட் டாபிக்

கடலூரில் நடக்க இருக்கும் தி.மு.க.வின் முதல் மகளிரணி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தடபுடலாகத் தொடங்கியுள்ளன. கனிமொழியை முன்னிலைப்படுத்த இருக்கும் இந்த மாநாட்டுக்கான கட்அவுட்,பேனர் என எல்லாவற்றிலும் கனிமொழிக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.இதனால் ஸ்டாலின் ஆதரவாளர்கள் மாநாட்டில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் எட்ட நின்று வேடிக்கை பார்க்கின்றனர்.

கடலூரில் ஒரு மாதத்துக்கு முன்பே நடந்து முடிந்திருக்க வேண்டிய மாநாடு இது.என்ன காரணமோ தெரியவில்லை?பலமுறை தள்ளிவைக்கப்பட்டபின், கடைசியில் ஒரு வழியாக இம்மாதம் 14, 15-ம்தேதிகளில் கடலூரில் இந்த மாநாட்டை நடத்த முடிவானது.

பொதுவாக மாநில மாநாடு என்றால் நகருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பெரிய மைதானத்தைத் தேர்வு செய்து அங்குதான் நடத்துவார்கள். ஆனால், கடலூர் தி.மு.க. மகளிர் அணி மாநாட்டுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், கடலூர் நகரின் நடுவில் உள்ள மஞ்சக்குப்பம் மைதானம். பொதுவாக அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் மட்டுமே நடத்தக்கூடிய இந்த மைதானத்தில்,மகளிர் மாநில மாநாடு நடக்கப்போவது பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.

ஆரம்பத்தில் நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடியில் -ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களைத்தான்,மகளிர் மாநாட்டுக்காக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் முதல்கட்டமாகத் தேர்வு செய்திருக்கிறார். ஆனால் `அந்த இடங்கள் எதுவும் வேண்டாம். மஞ்சக்குப்பம் மைதானத்தில்தான் மாநாட்டை நடத்தியாக வேண்டும்’ என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி வற்புறுத்தியதால், மஞ்சக்குப்பம்தேர்வாகியிருக்கிறது.

இப்படி இந்த மைதானத்தை ஆற்காட்டார் தேர்வு செய்ததன் பின்னணியில் ஒரு சென்டிமெண்ட் காரணம் இருக்கிறது என்கிறார்கள் சிலர். ஜெயலலிதா அ.தி.மு.க.வில் அடியெடுத்து வைத்த காலத்தில் கடலூரில் இந்த மைதானத்தில் நடந்த மாநாட்டில்தான் எம்.ஜி.ஆர். அவருக்கு `கொள்கை பரப்புச் செயலாளர்’ பதவி கொடுத்து அழகு பார்த்தார். அதன்பிறகு ஜெயலலிதா ராஜ்யசபா எம்.பி.யாகி,கடைசியில் முதல்வராகவும்ஆகிவிட்டார். அதேபோல், தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கும் கனிமொழிக்கும் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம் ராசியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இந்த இடத்தை தி.மு.க. தலைமை தேர்வு செய்திருக்கலாம் என்கிறார்கள் சிலர். இந்த மாநாட்டில் கனிமொழிக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பை கருணாநிதி அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் தொண்டர்களிடையே நிலவுகிறது.

மாநாட்டுக்கான எல்லா ஏற்பாடுகளையும் இழுத்துப் போட்டுச் செய்து வருகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அவருடன் கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான ஐயப்பன்,சபா ராஜேந்திரன் ஆகியோரும் போட்டி போட்டுக் கொண்டுஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.

மாநாட்டுத் திடலுக்குள் ஐயப்பன், சபா ராஜேந்திரன் ஆகியோர் அவரவர் பெயரில் கட்அவுட் வைத்திருந்தனர். அமைச்சர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அவற்றை அகற்றச் சொன்னதால், அந்த கட்அவுட்கள் அகற்றப்பட்டன. `தனிப்பட்ட முறையில் யார் பெயரிலும் கட்அவுட், பேனர் வைக்கக் கூடாது. கடலூர் மாவட்ட தி.மு.க. என்றுதான் வைக்க வேண்டும்’ என்று அமைச்சர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ள நிலையிலும், மாநாட்டுத் திடலுக்கு வெளியே ஐயப்பன், சபா ராஜேந்திரன் ஆகியோர் பெயர்களில் கட்அவுட், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்பு தி.மு.க. அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், பேனர் வைப்பது தொடர்பாக ஐயப்பனுக்கும், அமைச்சரின் ஆதரவாளரான நகராட்சி சேர்மன் தங்கராசுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் சூழ்நிலைகூட உருவானது. ஒருபக்கம் மாநாட்டு ஏற்பாடுகள் அமளிதுமளிப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான பொன்முடி தரப்பினர் மட்டும் ஒதுங்கியே நிற்கின்றனர்.

உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடி ஒருமுறைகூட மாநாட்டுத் திடலை வந்து எட்டிப் பார்க்கவில்லை. பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் பொன்முடி ஒதுங்கியே இருக்கிறார். அதுபோல, கடலூர் எம்.பி.யான மத்திய இணை அமைச்சர் வேங்கடபதியும்மாநாட்டுத் திடல் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை. நான்கு முறை கடலூரின் எம்.எல்.ஏ.வாக இருந்த மாநில மாணவர் அணிச் செயலாளர்இள. புகழேந்தியின் கதையும் இதுதான். இவரும் மாநாட்டு ஏற்பாடுகளில் அவ்வளவாக அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் இவரது புதுவீடு மாநாடு நடக்கும் இடத்துக்கு அருகில்தான் இருக்கிறது.

பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சுகாதாரத்துறை அமைச்சர் என்ற பெரும் பொறுப்பை கருணாநிதி அளித்தார். அதற்கு நன்றிக்கடனாக மகளிர் அணி மாநாட்டை சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் பம்பரமாகச் சுழன்று வருகிறார். மாநாட்டுக்காக மூன்று லட்சம் சதுர அடி பரப்பில் மாநாட்டுப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் தங்குவதற்காக ஐம்பது திருமண மண்டபங்கள் மற்றும் தனியார் பள்ளிகள் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளன. அதிநவீன வசதிகளுடன் முந்நூறு கழிவறைகள் மாநாட்டுத் திடலைச் சுற்றி கட்டப்பட்டுள்ளன. பத்து படுக்கைகள் கொண்ட அவசர முதலுதவி மருந்தகமும் அமைக்கப்பட்டுள்ளது. முதல் நாள் நடக்கும் பேரணிக்கு தமிழகம் முழுவதிலுமிருந்து வரும் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால், மாநாட்டுத் திடலில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சில்வர் பீச்சில் பதினைந்து ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மாநாடு நடக்கப்போகும் மஞ்சக்குப்பம் மைதானம், கடலூர் நகரின் மையப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கலெக்டர் அலுவலகம்,எஸ்.பி. அலுவலகம் அருகே இருப்பதால், இரண்டு நாள் மாநாட்டின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஏகப்பட்ட சிக்கல்களை பொதுமக்கள் எதிர்கொள்ள நேரும் என்ற பயம் உள்ளது.

மாநாடு, பொதுக்கூட்டம், பேரணி நடத்தும்போது தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு எந்தவித இடைஞ்சலும் தரக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருப்பதால், இதையே காரணம் காட்டி அ.தி.மு.க.வினர் மாநாட்டுக்குத் தடை வாங்கிவிடப் போகிறார்கள் என்பதால், தேசிய நெடுஞ்சாலையில் பேரணி நடத்தாமல் கடற்கரைப் பகுதியில் பேரணி நடத்த முடிவாகி உள்ளது.

மகளிர் அணி மாநாடு என்பதால் மாநிலம் முழுவதும் செயல்வீரர்கள் கூட்டம் போட்டு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்த சற்குணபாண்டியன், சங்கரிநாராயணன் ஆகியோரது பெயர்கள் எந்த இடத்திலும் முன்னிலைப்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை.முழுக்க முழுக்க கனிமொழிக்கு மட்டுமே இந்த மாநாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இது ஒருபுறமிருக்க, கருணாநிதி குடும்பத்தில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ள இந்த மாநாட்டுக்கு ஸ்டாலின் வருவார் என்றும், வரமாட்டார் என்றும் இரண்டு விதமாக தொண்டர்கள் பகடை உருட்டி வருகிறார்கள். வெளிநாடு சென்றுள்ள ஸ்டாலின் வருவாரா? மாட்டாரா? என்பது மாநாட்டின் போதுதான் தெரியும். ஸீ

ஸீ எஸ். கலைவாணன்

Posted in DMK, Govt, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Mu Ka Azhagiri’s Daughter & M Karunanidhi’s Daughter: DMK Legacy – Thrones, Queens, Monarchy, Dynasty

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2008

கனிமொழி, கயல்விழி -கழகம் செல்லும் புது வழி!

ஆ. ரகுராமன்

சென்னை, ஜூன் 16: தி.மு.க.வில் ஆரம்பம் முதலே சத்தியவாணி முத்து உள்ளிட்ட ஒரு சில பெண்கள் மட்டுமே அமைச்சர் பதவியிலும் கட்சியின் உயர்நிலை அமைப்புகளிலும் இருந்துள்ளனர்.

நெடுநாள்களாக, சக்திவாய்ந்த பெண் தலைவர் எவரும் தி.மு.க.வில் இல்லை. அந்த இடத்தை கனிமொழி, கயல்விழி ஆகியோர் நிரப்புவார்களா என்ற கேள்வியை திமுகவின் கடலூர் மாநாட்டு நிகழ்வுகள் எழுப்புகின்றன.

மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மு.க. அழகிரி மகள் கயல்விழி ஆகியோரை கட்சி ரீதியாக முன்னிறுத்தவே கடலூர் திமுக மகளிரணி மாநில மாநாடு நடத்தப்படுகிறது என்று பரவலான பேச்சு இருந்தது.

தொடக்கம் முதலே மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இதை மறுத்து வந்தார்.

ஆனால் மாநாட்டின் முதல் நாள் திமுக மகளிரணி சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் கனிமொழி முன்னிலைப்படுத்தப்படுவது தெளிவாகத் தெரிந்தது.

மாநாட்டுப் பந்தலில் அமைச்சர்கள், திமுக தலைவர்கள் அனைவரும் முதல்வர் கருணாநிதிக்கு அடுத்து கனிமொழிக்கே அதிக மரியாதை அளித்தனர்.

முதல்வரின் மேடைக்கு அருகிலிருந்த மேடையில் அமைச்சர்களுக்கு நடுவில் கனிமொழி அமர்ந்திருந்தார். கனிமொழியும் கருணாநிதியும் மட்டுமே ஊர்வலமாக வந்த பெண்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தனர்.

மாநாட்டுக்கு முத்தாய்ப்பாக, பெரியார் படத்தைத் திறந்து வைத்துப் பேசிய கனிமொழி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலிலதா, பாமக நிறுவனர் ராமதாஸ், நடிகர் விஜயகாந்த் ஆகியோரை விமர்சித்துப் பேசினார்.

கட்சியில் அவருக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை அவரது பேச்சு உணர்த்துவதாக இருந்தது. மாநாட்டில் எத்தனையோ பேர் பேசினாலும் கனிமொழியின் பேச்சு மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

மாநாட்டிற்கு வைக்கப்பட்ட பேனர்கள், வரவேற்பு வளைவுகளில் கருணாநிதி, அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அடுத்த முக்கியத்துவம் கனிமொழிக்கு வழங்கப்பட்டது.

வரவிருக்கும் திமுக உள்கட்சித் தேர்தலில் கனிமொழிக்கு மகளிரணியில் முக்கிய பொறுப்பு தரும் எண்ணத்தில் முதல்வர் கருணாநிதி இருப்பதாகத் தெரிகிறது. அதற்காகக் கட்சியினரின் அங்கீகாரத்தைப் பெறும் நோக்கத்திலேயே இந்த மாநாடு நடத்தப்பட்டது என்று கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கயல்விழி…. “வள்ளுவமும் வாய்மையும்’ என்ற தலைப்பில் அழகிரியின் மகள் கயல்விழி பேசுவதைக் கேட்கவும் கூட்டத்தினரிடையே ஆவல் இருந்தது.

கட்சியில் மு.க. அழகிரி துணைப்பொதுச்செயலாளர் பதவி கேட்பதாகவும், அவரை சமாதானப்படுத்த அவரது மகள் கயல்விழிக்கு கட்சிப் பதவி வழங்கப்படும் என்றும் கட்சி வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.

இதற்கு முன்னோட்டமாகத்தான், மாநாட்டில் அவர் பேசவைக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

கயல்விழி பேசுவதற்கு முன் பல பேச்சாளர்களுக்கு மகளிரணித் தலைவர் நூர்ஜஹான் பேகம் ஏழு நிமிடங்கள் கூட பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசியும் இதில் அடக்கம். ஐந்து நிமிடங்களிலேயே பேச்சை முடிக்கச் சொன்னதால் தமிழரசி சற்று வேகமாக “நன்றி, வணக்கம்!’ என்று கூறி விடைபெற்றார்.

கயல்விழி 15 நிமிடங்களுக்கும் மேலாகப் பேசினார். அவர் தீவிர அரசியலில் இயங்குவதற்கு ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறார் என்பதைக் குறிக்கும் வகையில் அவரது பேச்சு இருந்தது. அவர் பேசும்போது, எந்தவிதக் குறுக்கீடும் இல்லை.

பெண்கள் எழுச்சிக்காகவும், நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும், கடலூரில் திமுக மகளிரணி மாநாடு நடத்தப்படுவதாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியிருந்தார்.

மாநாட்டில் பேசிய சிலர், வரும் தி.மு.க.வில் கட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தற்போது கட்சிப் பொறுப்பில் இருக்கும் சில பெண்களும் கட்சி நிர்வாகிகளின் உறவினர்களாக மட்டுமே இருக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திமுக தீர்மானம் நிறைவேற்றியதுடன் தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறது. கட்சியிலும் ஆட்சியிலும் பெண்களுக்கு அதிகாரம் மிக்க பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதே இந்த மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலான திமுக பெண் உறுப்பினர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Geetha, Ladies, Varnasramam: Kanimozhi speech in DMK Women Conference at Cuddalore

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2008

கனிமொழி எம்.பி., கூறியதில் குற்றமென்ன?

– கி. வீரமணி

இதோ ஆதாரங்கள்:
ஜாதி (வர்ணமதர்ம) பாதுகாப்பு, கொலை வெறி தூண்டும் நூலே கீதை! கடலூரில் நடைபெற்ற திமுக மகளிரணி மாநாட்டில் தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்துப் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள்,

“இந்த தேசத்தில் வருணாசிரமம் தொடங்கிய அந்தக் காலகட்டத்தி லிருந்து, அதற்கான எதிர்ப்புகளும் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஏன், கீதையே கூட அதன் எதிர்ப்பாகத்தான் எழுதப்பட்டது என்று சொல்லப் படுகிறது.

கீதையில் அர்ச்சுனன் கிருஷ்ணனைப் பார்த்துச் சொல்கிறான்;
பெண்ணின் துர்புத்தியால் தான்
இங்கு வருணாசிரம தர்மம்
அழியப் போகிறது என்று!
அப்படியானால் உங்களுக்கெல்லாம் இருக்கும் பொறுப்பு என்ன என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் மனமாற்றத்தினால்தான் இந்த ஜாதி அழியும் என்ற பொறுப்பை 4000 ஆண்டுகளுக்கு முன்னால், அர்ஜுனன் நம்மீது ஏற்றி வைத்து விட்டுப் போயிருக்கிறான். ஆனால் கீதையே, இப் படி பல இடங்களில் திரும்பத் திரும்ப ஜாதியத்தை வலியுறுத்தி, அது இந்த எதிர்ப்புகளுக்கு எதிர்ப்பான விஷயமாகத்தான் இருந்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். என்று சுட்டிக்காட்டியுள்ளார், கீதை ஒரு கொலை நூல் என்பதை யும் திலகருடைய மேற்கோள் ஒன்றையும்கூட பொருத்தமாகச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார் கவிஞர் கனிமொழி.
இதை எதிர்த்து விநாயகர் வி. முரளி அறிக்கை ஒன்றை இன்றைய (`தினமணி 17.6.2008) நாளேடு ஒன்றில் விடுத்துள்ளார்.
“பகவத் கீதையில் இல்லாததை திரித்துக் கூற வேண்டாம் என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு இந்து இயக்கங்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் விநாயகர் வி. முரளி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:
`பெண்களால்தான் வருணாசிரம தர்மம் அழியும் என்று கீதையில் அர்ஜூனன் கூறுகிறார் என கடலூரில் நடைபெற்ற தி.மு.க., மகளிரணி மாநாட்டில் கனிமொழி பேசியிருக்கிறார்.
இது போன்ற கருத்துகள் பகவத் கீதையில் இல்லை. இவ்வாறு இல்லாத கருத்துகளை திரித்துக் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்று விநாயகர் வி. முரளி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். என்று `தினமணியில் செய்தி வந்துள்ளது.
அப்படி எதுவும் கீதையில் இல்லை; இல்லாததை கனிமொழி கூறியுள்ளார். என்று கூறியுள்ளார். இது உண்மைக்கு மாறான செய்தியாகும். திராவிடர் இயக்கப் பேச்சாளர்களோ, எழுத்தாளர்களோ (திருமதி கனிமொழி உட்பட) ஆதாரமில்லாமல் எதையும் பேச மாட்டார்கள்.
கீதையின் முதல் அத்தியாயத்திலேயே உள்ள சுலோகங்களில் உள்ள கருத்தைத் தான் கவிஞர் கனிமொழி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
“கிருஷ்ணா, அதர்மம் சூழ்ந்துவிட்டால், குலப்பெண்கள் கெடுவர். பெண்கள் கெட்டால் வர்ணசாங்கரியம். (குலங்களின் கலப்பு) ஏற்பட்டு விடும்.

“அதர்மாபிபவாத் க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்திரிய:
ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸ்ங்கர:
(அத்.1 – சுலோகம் – 41)

இந்த உண்மையைத்தான் ஆதாரப்பூர்வமாக கவிஞர் கனிமொழி கூறியுள்ளார்.
கீதையைப் பரப்புபவர்களைவிட எதிர்ப்பவர்கள்தான் உள்ளபடியே படித்து ஆதாரப் பூர்வமாகக் கூறுகிறார்கள் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

கீதையை திரித்துக் கூறவேண்டிய அவசியமில்லை

– கனிமொழி எம்.பி.

சென்னை, ஜூன் 19- பகவத் கீதையை திரித்துக் கூறவேண் டிய அவசியம் தனக்கு இல்லை என்று நாடாளுமன்ற உறுப் பினர் கவிஞர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செவ்வாய்க் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்: ஜூன் 17 அன்று வெளியான தினமணி யில் விநாயகர் வி. முரளி என்பவர் கீதையில் இல்லாத கருத்துகளை கடலூரில் நடந்த தி.மு.க. மகளிரணி மாநாட்டில் கனிமொழி பேசி யிருக்கிறார். இதுபோன்ற கருத்துகள் பகவத்கீதையில் இல்லை என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதர்மாபி பவாத் க்ருஷ் ணப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய; ஸ்தரீஷீ துஷ்டாஸு வார் ஷனேய ஜாயதே வர்னாஸங் கர

இது கீதையின் முதல் அத் தியாத்தில் 40-ஆவது பாடல். கிருஷ்ணனை நோக்கி சொல் வதாக வருகிறது. விருஷ்ணி குலத்தில் பிறந்தவனே, குடும் பத்தில் அறமின்மை தலை யெடுக்கும்போது குடும்பப் பெண்கள் களங்கப்படுகின் றனர். பெண் சீரழிந்து கெட் டுப்போவதால்தான் வருணா சிரம தர்மம் அழிந்து தேவை யற்ற சந்ததிகள் பிறக்கின்றன என்பது அதன் பொருள்.

இந்தக் கடைசி வரியைத் தான் நான் மாநாட்டில் சுட் டிக்காட்டிப் பேசினேன். கீதையை மேற்கோள் காட் டுவதோ, உபநிஷத்தை, மகா பாரதத்தை, ராமாயணத்தை, பைபிளை, குரானை, திருக் குறளை மேற்கோள் காட்டுவ தென்பதோ தடை செய்யப் பட்ட ஒன்றல்ல. கீதையை திரித்துக் கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஒரு கருத்தாக்கமோ, சமூக வழக்கமோ, அது பாரம் பரியமானதாக இருந்தாலும் கூட அதை இன்றைய கால கட்டத்தோடு பொருத்திப் பார்க்கும்போது அதன் நிறை குறைகளை பாதிப்புகளை ஆராய்ந்து பார்க்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

உலகத்தின் அத்தனை மரபு களும், மதங்களும், கோட் பாடுகளும் இன்று ஒரு மறு வாசிப்புக்கு உள்ளாக்கப்பட் டிருப்பதை நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கி றோம்.

மதத்தின் பெயரால், பாரம் பரியத்தின் பெயரால் பழம் பெருமையின் பெயரால் பெண்கள் ஒடுக்கப்பட்டது என்பது நிதர்சனம். அதை எதிர்க்கும் குரல்கள் எழும் போது இப்படிப்பட்ட கண் டனங்கள் எழும் என்பதும் நிதர்சனம். ஆனால், பகவத் கீதை யைக் காக்க கொடி தூக்குப வர்கள், அதில் என்ன இருக் கிறது என்பதைப் படித்துவிட்டு அதைச் செய்வது உத்தமம் என்று அவ்வறிக்கையில் கனி மொழி தெரிவித்துள்ளார்.

Posted in DMK, Govt, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Report on The Government of Tamil Nadu: Public Administration: Accountant General’s Office: IAAS – Indian Audit and Accounts Service

Posted by Snapjudge மேல் மே 20, 2008

மு.க.ஸ்டாலின் துறையில் பல கோடி ரூபாய் முறைகேடு

தமிழக அரசுத் துறைகளில் ரூ. 32 கோடி அளவுக்கு தேவையற்ற மற்றும் முறைகேடான செலவுகள் செய்யப் பட்டுள்ளதாகவும், இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் துறையில் மட்டும் ரூ.13 கோடி அளவுக்கு முறைகேடான செலவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2006-07ம் ஆண்டிற்கான மத்திய தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த தணிக்கை விவரங்களை செய்தியாளர்களிடம் வெளியிட்டு சென்னையில் உள்ள இந்திய தணிக்கை துறை தலைவர் முருகையா பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ஆண்டுதோறும் மாநில அரசின் கணக்கு வழக்குகளை மத்திய தணிக்கை துறை தணிக்கை செய்து மாநில ஆளுநரிடம் சமர்ப்பிக்கும். இந்த அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு பொதுக் கணக்கு குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த அறிக்கையில் உள்ளவற்றை இந்தக் குழு ஆய்வு செய்து அதன்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைசெய்யும். இதன் பேரில் அரசு நடவடிக்கை எடுக்கும்.

  • 2006-07 ஆம் ஆண்டு மாநில அரசின் வருவாய் முந்தைய ஆண்டை விட 20.5 சதவிகிதம் உயர்ந்து 40 ஆயிரத்து 913 கோடியாக உள்ளது.
  • வருவாய் செலவினம் 19.5 சதவிகிதம் உயர்ந்து 38 ஆயிரத்து 265 கோடியாக உள்ளது.
  • கடன் அல்லாத மூலதன வருவாய் 710 கோடி ரூபாயாகவும்,
  • மூலதன செலவு மற்றும் கடன்கள் வழங்கியவை முறையே 1898 கோடி மற்றும் 1214 கோடி ரூபாயாக அதிகரித்ததாலும்
  • இந்த ஆண்டில் வருவாய் பற்றாக்குறை 1705 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டில் அரசின் நிதி பொறுப்பு வருவாயை விட 1.62 மடங்குகூடுதலாக ரூ.66 ஆயிரத்து 320 கோடியாக உள்ளது. நபார்டு வங்கி ஒப்புதல் அளித்த 269 பாசன திட்டங்களில் 251 திட்டங்கள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. பாசனத்துறை ஒப்புதல் பெறாத திட்டங்களில் 2.47 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. கூடுதல் திறன் கொண்ட கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை வடிவமைப்பதில் கூடுதலாக 5.77 கோடி ரூபாய் செலவாகி உள்ளது.

வணிகவரித்துறையில் இலவசமாக கிடைக்கும் மென்பொருளை தனியாரிடமிருந்து வாங்கியதால் 80 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 14 கோடி ரூபாய் செலவு செய்தும் கணினிமயமாக்கும் பணிகள் முற்றுப் பெறவில்லை.

கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் 415 ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனம் ஒன்று எந்தவித கட்டணமும் செலுத்தாமல் அனுபவித்து வருகிறது. பல்வேறு வரிகள் வசூலிப்பதில் சுணக்கம் காரணமாக பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் வாரியத்தில் எந்தவித இடர்பாடுகளும் இல்லாத நிலையிலும் 25 திட்டங்களில் 23 திட்டங்கள் நிறைவு செய்யப்படவில்லை.

பாக்கித் தொகை செலுத்துவதில் தமிழ்நாடு மின்சார வாரியம் நிபந்தனைகளை பின்பற்ற தவறியதால் 24.63 கோடி ரூபாய் ஊக்கத் தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது. பொது விநியோக முறையின் கீழ் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செலவு தொகையை திரும்ப பெற சமர்ப்பித்த தவறான கோரிக்கையின் விளைவாக ரூ.3.99 கோடி முடங்கிப் போயுள்ளது.

இத்துடன் அரசின் பல்வேறு துறைகள் மற்றும் கள அலுவலகங்களில் சோதனை செய்ததில் வீணான செலவினம் மற்றும் இதர முறைகேடுகள் காரணமாக 31.89 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவற்றில் மு.க.ஸ்டாலின் கீழ் உள்ள துறை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் தேவையற்ற மற்றும் பலன் அளிக்காத செலவு 9.63 கோடி ரூபாய் செய்யப்பட்டுள்ளது. தவிர்த்திருக்கக் கூடிய செலவுகள் 3.30 கோடி ரூபாய் செய்யப்பட்டுள்ளது.

இதே போல் பல துறைகளில் பல கோடி ரூபாய்க்கு தேவையற்ற மற்றும் முறைகேடான செலவுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Posted in DMK, Economy, Finance, Govt, India, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Uthayanithy Stalin & Kruthika Uthayanithi: Photo with Tamil Actress Madhumitha

Posted by Snapjudge மேல் மே 15, 2008

‘எம் சினிமா’ பட நிறுவனம் தயாரிக்கும் ‘சொல்ல… சொல்ல… இனிக்கும்’ படத்தின் தொடக்க விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி கலந்துகொண்டு படத்தின் நாயகி மதுமிதாவுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்கிறார். உடன் கிருத்திகா உதயநிதி.
MK Stalin Son with Spouse

Posted in DMK, Govt, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »