Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Mannar’

Dec: Sri Lanka, LTTE, Eezham: News Updates: War, Attacks, Dead

Posted by Snapjudge மேல் திசெம்பர் 1, 2008

இலங்கையை விட்டு வெளியேற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஞாயிறு காலை தான் இந்தியாவிற்கு பயனம் மேற்கொள்ளவிருந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேற குடிவரவு குடியகல்வு தினைக்களத்தினால் அனுமதி மறுக்கப்பட்டது என கூறியுள்ளார்.

தான் ஏற்கனவே தீர்மானத்திபடி வைத்திய சிகிசைக்காக செல்லவிருந்ததாகவும், அனால் நாட்டை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டட நிலையில் தனது பயணத்தை மேற்கொள்ள முடியாமல் திரும்பியதாகவும் தெரிவிக்கின்றார்.

விமான நிலையத்தில் அனுமதி மறுத்த அதிகாரிகள் தன்னை குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் அழைத்துச் சென்றதாகவும், அங்கிருத்த குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி இது மேலிடத்து உத்தரவு என தனக்கு தெரிவித்ததாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன குறிப்பிடுகின்றார்


இலங்கையின் அம்பாறையில் மோட்டார் சைக்கிள் பயன்பாடு தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள்

மட்டக்களப்பு வரைப்படம்
மட்டக்களப்பு வரைப்படம்

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்திலுள்ள சில பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள் பயன்பாடு தொடர்பாக பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்

பாதுகாப்பு காரணங்களக்காக இக்கட்டுப்பாடு என பாதுகாப்பு தரப்பினரால் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், மோட்டார் சைக்கிள் பாவனையாளர்களைப் பொறுத்த வரை இதனால் தாம் சிரமங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

இக்கட்டுப்பாடு காரணமாக ஒருவரின் உறவினர்கள் உட்பட பெயரில் பதிவு செய்யப்ப்டுள்ள மோட்டார் சைக்கிளை மற்றுமொருவர் செலுத்துவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்றும், இது தொடர்பாக பொலிஸ் மா அதிபதிக்கு அவசர கடிதமொன்றை தான் அனுப்பி வைத்துள்ளதாக கூறும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சோமசுந்தரம் புஷ்பராஜா, இது மனித உரிமை மீறல் என்றும், தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களிலேயே இக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் அம்மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாகவும் கூறுகின்றார்.


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்

புளியங்குளத்தில் அரசப்படையினர்
புளியங்குளத்தில் அரசப்படையினர்

இலங்கையின் வடக்கே, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாகிய வன்னிப்பகுதியில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக 7 படையணிகள் பல முனைகளில் தாக்குதல்களை நடத்திய வண்ணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை நோக்கி முன்னேறி வருவதாகவும், கடந்த இரு தினங்களில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் சண்டைகளில் விடுதலைப் புலிகளின் 14 சடலங்களைப் படையினர் ஆயுதங்களுடன் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

பரந்தனுக்கு மேற்குப் பகுதி, அடம்பன், இரணைமடுவுக்கு மேற்குப்புறம், திருமுறிகண்டி, கொக்காவில், கனகராயன்குளம், புளியங்குளம், ஒலு மடுவின் வடகிழக்குப் பகுதி மற்றும் அலம்பில் ஆகிய முனைகளில் இருந்து அரச படையணிகள் முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், இங்கு இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

வவுனியா நகருக்கு வடக்கே அமைந்துள்ள ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியில் இருந்து ஏ9 வீதியில் இராணுவம் கிளிநொச்சி நகருக்குத் தெற்கே உள்ள கொக்காவில் வரையிலான பெரும் பகுதியைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.

எனினும் இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் இந்த மோதல்கள் காரணமாக யுத்த பிரதேசத்திலிருந்து இதுவரையில் 225 குடும்பங்களைச் சேர்ந்த 654 பேர் இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் யாழ் மாவட்டங்களில் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு வந்துள்ளதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.


மன்னம்பிட்டியில் பயணிகளில் விபரங்கள் பதியப்படும் புதிய நடைமுறை

மட்டக்களப்பில் பயணிகள் பஸ் ஒன்று(ஆவணப்படம்)
மட்டக்களப்பில் பயணிகள் பஸ் ஒன்று(ஆவணப்படம்)

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இருந்து வடமத்திய மாகாணத்தின் ஊடாக பயணம் செய்பவர்கள் மன்னம்பிட்டி என்னும் இடத்தில் தமது விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை புதிதாக அமலுக்கு வந்ததால், பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாவதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

இப்படியாக விபரங்கள் ஒவ்வொருவராக பதியப்படுவதால், பெரும் காலதாமதம் ஏற்படுவதாகவும், அத்துடன் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மாத்திரமே இவ்வாறு பதியப்படுவதாகவும் பயணிகள் குறை கூறுகிறார்கள்.

மன்னம்பிட்டியில் பயணிகளின் பெயர்கள் பதிவு செய்யப்படுவதாகவும், அதன் மூலம் சிறிது காலதாமதம் ஏற்படுவதாகவும் ஒப்புக்கொள்ளும் பொலிஸ் தரப்பு பேச்சாளரான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரான ரஞ்சித் குணசேகர அவர்கள், ஆனால், தமிழர்களும், முஸ்லிம்களும் மாத்திரந்தான் அப்படியாக பதிவு செய்யப்படுகிறார்கள் என்று கூறப்படுவதில் எந்தவிதமான உண்மையும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்

இந்தியாவிலிருந்து வந்துள்ள நிவாரணப் பொருட்கள் இலங்கையின் வன்னிப் பிரதேசத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன

லாரிகளில் எடுத்துச் செல்லப்படும் இந்திய நிவாரணப் பொருட்கள்

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தினுள் போர்ச்சூழலில் சிக்கியுள்ள மக்களுக்காக இந்தியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டு, கொழும்பிலிருந்து வவுனியாவுக்கு எடுத்துவரப்பட்டுள்ள நிவாரண உணவுப் பொருட்களின் முதல் தொகுதி 60 ட்ரக் வண்டிகளில் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரால் வன்னிப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.

இதுபற்றி கருத்து தெரிவித்த வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள், இந்தப் பொருட்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளதாகக் கூறினார்.

வரும் வியாழக்கிழமை மேலும் ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இதற்கிடையில் வன்னிப்பிரதேசத்தில் இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்ற பொதுமக்களைத் தங்கவைப்பதற்காக ஓமந்தை பாடசாலையில் புதிய இடைத்தங்கல் நிலையம் ஒன்று திறக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவை குறித்த மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


கிளிநொச்சியை ஒட்டிய கொக்காவிலை கைப்பற்றியிருப்பதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்

இலங்கையின் வடக்கே வன்னிக்கள முனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச படைகள் கிளிநொச்சி நகருக்குத் தெற்கே முறிகண்டி பிரதேசத்தில் ஏ9 வீதியின் கிழக்குப் பகுதியில் முன்னேறி கொக்காவில் பிரதேசத்தை கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

எனினும், இதுகுறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

கிளிநொச்சி நகருக்கு மேற்கில் உள்ள அக்கராயன்குளம் பகுதியில் இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டு வந்த மூன்று தளங்களின் மீது விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.

இதுபற்றியும் விடுதலைப் புலிகளிடமிருந்து உடனடியாகத் தகவல்கள் வெளியாகவில்லை.

ஆயினும் கிளிநொச்சி நகருக்கு கிழக்கே உள்ள வட்டக்கச்சி பகுதியை நோக்கி இராணுவத்தினர் நடத்திய எறிகணை தாக்குதலில் மாணவி ஒருவர் கொல்லப்பட்டும், 31 வயதுடைய ஆண்மகன் ஒருவர் காயமடைந்தும் இருப்பதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.


இலங்கையின் வடக்கே வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது

இலங்கையின் வடக்கே சுமார் மூன்று லட்சம் பேர் இடம்பெயர்வதற்கு காரணமான வெள்ளம் தற்போது வடியத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ் மாவட்டங்களில் இந்த மழை, வெள்ளம் காரணமாக 9 பேர் பலியாகியுள்ளனர், கிட்டத்தட்ட 800 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்த வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிவருவதாக கூறும் இலங்கை அரசு, வெள்ளத்தின் காரணமாக சேதமடைந்துள்ள சாலைகளை செப்பனிடும் பணிகளில் ஈடுபட்டுவருவதாகவும் கூறியுள்ளது.

1918ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் இலங்கையின் வடபகுதியில் இந்த அளவுக்கு மழை பெய்துள்ளது என்று இலங்கை அரசின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


உலக எய்ட்ஸ் தினம்: இலங்கையில் விழிப்புணர்வு ஊர்வலம்

வெலிக்கடை சிறையின் முன்பு எய்ட்ஸ் விழிப்புணர்வு பதாகைகளுடன் கைதிகள்

எய்ட்ஸ் நோயின் தாக்கம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை சுகாதார அமைச்சும், சிறைச்சாலைகள் திணைக்களமும் இணைந்து சர்வதேச எயிட்ஸ் தினமான திங்களன்று கவனயீர்ப்பு ஊர்வலமொன்றினை மேல் மாகாணத்தில் நடத்தியது.

பாதுகாப்பற்ற பாலியல் உடலுறவினால் பெருமளவில் ஏற்படும் இந்தக் கொடிய நோயின் தாக்கத்திற்கு இலங்கையில் சுமார் 100 குழந்தைகள் உட்பட 1029 பேர் பாதிப்பிற்குள்ளாகியிருப்பதாகவும், சுமார் 200 பேர் வரை மரணத்தினைத் தழுவியிருப்பதாகவும் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் வைத்திய நிபுணர் நவரட்ணசிங்கம் ஜனகன் தழிழோசையிடம் தெரிவித்தார்.

ஆனாலும் இந்த நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்போரின் உண்மையான எண்ணிக்கை இதனைவிட அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுவதாகத் தெரிவித்த டாக்டர் ஜனகன், இலங்கையில் எயிட்ஸ் நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பவர்களில் சுமார் 50 சதவீதமானவர்கள் கொழும்பு, கம்பஹா போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்திலேயே வசித்துவருகிறார்கள் எனவும், இவர்களில் பெரும்பாலானோருக்கு பாதுகாப்பற்ற பாலியல் உறவு காரணமாகவே எச்.ஐ.வி கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் வடக்கே மழைவெள்ளம்

இலங்கையில் வடக்கே மழை வெள்ளம்
இலங்கையின் வடக்கே மழை வெள்ளம்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் மழை வெள்ளம் காரணமாக ஒரு லட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

நீரினால் அடித்துச் செல்லப்பட்டும், வீடுகள் இடிந்ததனாலும், மரங்கள் முறிந்து வீழ்ந்ததனாலும், 12 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

வீதிகளில் வெள்ளம் பாய்வதனால் போக்குவரத்துக்கள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை ஓய்ந்து வெள்ளம் வடியத் தொடங்கியுள்ள போதிலும், வெள்ளத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் இன்னும் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலைமையே காணப்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றார்கள்.

இதுபற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் நேயர்கள் கேட்கலாம்


மட்டக்களப்பில் சந்தேக நபர்களிடம் விசாரணை

மட்டக்களப்பு வரைப்படம்
மட்டக்களப்பு வரைப்படம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமையன்று 12 மணி நேரத்திற்கு பிறப்பிக்கப்பிட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் சிவிலியன் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சனிக்கிழமையன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நேரத்தில், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் என 2000 க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் சுமார் 4103 வீடுகள், 56 வாகனங்கள் மற்றும் 11963 பேரை சோதனையிட்டுள்ளனர்.

இவர்களில் 123 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 117 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதனிடையே கிழக்கு மாகாணத்தில் நிலவும் அச்சம் மற்றும் பாதுகாப்பின்மை குறித்து மட்டக்களப்பு திருகோணமலை மறை மாவட்டங்களின் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை கவலை வெளியிட்டுள்லார். அவரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் உரையை தணிக்கை செய்ததாக இலங்கை அரசு மீது குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வருடாந்திர உரை குறித்த செய்திகளை வழங்கியபோது பிபிசியின் தமிழ் மற்றும் சிங்கள சேவை ஒலிபரப்புகளை இலங்கை அரசு தணிக்கை செய்ததாக இலங்கையின் ஊகட அமைப்புகள் ஐந்து குற்றம்சாட்டியுள்ளன.

கடந்த வியாழக்கிழமை அன்று அரசு கட்டுப்பாட்டிலுள்ள இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்த செய்தித் தணிக்கை நடவடிக்கையானது, இலங்கை மக்களின் தகவல் அறியும் உரிமையையும், ஒரு முக்கிய விடயம் குறித்த மாற்றுக் கண்ணோட்டங்கள் தடையின்றி பரிமாறப்படுவதையும் தெளிவாக மீறியுள்ளது என்று கூறியுள்ளது.

பிரபாகரனின் உரை குறித்த செய்திகள் சென்ற வருடமும் தணிக்கை செய்யப்பட்டிருந்தன என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இக்குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் பதில் தரவில்லை.

Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 Comments »

Aug 17, 18 – SriLanka Updates: LTTE, Eezham

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 18, 2008

இலங்கையில் மாகாணச் சபைத் தேர்தல்கள்

மாகாண சபைத் தேர்தல்கள்
மாகாண சபைத் தேர்தல்கள்

இலங்கையின் சபரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான மாகாணசபைத் தேர்தல்கள் சனிக்கிழமையன்று நடைபெற்றுள்ளது. இதில் ஆங்காங்கே சில வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

சுமார் 21 லட்சம் வாக்காளர்களை கொண்ட இந்த தேர்தலில், சுமார் 65 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 77 பிரதிநிதிகளை தேர்தெடுக்க நடைபெற்ற இந்த தேர்தலில் சுமார் 1698 வேட்பாளர்கள் பங்கேற்றனர். இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது பிரதான அரசியல் கட்சிகள் பல்வேறு விதமான வன்முறையில் ஈடுப்பட்டதாக சுயாதீன தேர்தல் அமைப்புகள் கருத்து வெளியிட்டு இருந்தன.


இலங்கையின் வடக்கே தொடரும் இடம்பெயரல்கள்

இடம்பெயர்ந்த மக்கள்
இடம்பெயர்ந்த மக்கள்

இலங்கையின் வடக்கே – மன்னார் மாவட்டத்தின் வடபகுதியிலிருந்தும் – முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்குப் பிரதேசத்திலிருந்தும் – கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் ஜெயபுரம் வன்னேரிக்குளம் ஆனைவிழுந்தான் அக்கராயன் ஸ்கந்தபுரம் போன்ற பகுதிகளிலிருந்தும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்திருக்கின்றார்.

இவற்றில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை 22 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றன. அடுத்த மாதம் 8 ஆம் திகதி 3 ஆம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தக் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றி வேறிடங்களில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்டிருப்பதாகவும் கிளிநொச்சி அரசாஙக அதிபர் கூறியிருக்கின்றார்.

இடம்பெயர்ந்த மக்களுக்குரிய நிவாரண உதவிகளைச் செய்வதற்குத் தேவையான எரிபொருள் மற்றும் அவர்களுக்கான நிவாரண உணவு போன்றவற்றிற்குப் பற்றாக்குறை நிலவுவதாகவும் கிளிநொச்சி அரசாங்க அதிபர் தெரிவித்திருக்கின்றார்.

இதற்கிடையே, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் திடீரென பொது நிர்வாக அமைச்சுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இன்னும் ஒரு மாதகாலத்தில் எஸ்.சண்முகம் பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார் என்பதும் – வவுனியா மாவட்டத்தில் சுமார் நான்கு வருடங்கள் அரசாங்க அதிபராகப் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


துணுக்காய், உயிலங்குளம், அக்கராயன்குளம் ஆகியவற்றைக் கைப்பற்றியிருப்பதாக இலங்கை இராணுவம் கூறுகிறது

இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்திற்கு மேற்கே உள்ள துணுக்காய், அதனை அண்டிய உயிலங்குளம் மற்றும் அக்கராயன்குளம் பிரதேசத்தின் தென்பகுதி ஆகியவற்றை இராணுவத்தினர் வெள்ளியன்று விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

துணுக்காய் நகரப் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியதையடுத்து இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவ தலைமையகத்தின் முக்கிய இராணுவ அதிகாரிகளுடன் வவுனியாவில் உள்ள வன்னிப் பிராந்திய ஆயுதப்படைகளின் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார். முக்கிய களமுனை இராணுவ தளபதிகளுடன் அவர் கலந்துரையாடியுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

துணுக்காய் நகரப் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பது பற்றி விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

வட இலங்கை மோதல் நிலவரம் குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை கிழக்கு பல்கலைக்கழக்கத்தில் சிங்கள மாணவர் சுட்டுக் கொலை

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலையில் கிழக்கு பல்கலைக்கழக சிங்கள மாணவர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் இறுதியாண்டு கல்வி பயிலும் மாணவரான பசன் சமரசிங்க என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பல்கலைக்கழக சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்தச் சம்பவம் காரணமாக அங்கு கல்வி பயிலும் சிங்கள மாணவர்களிடையே பாதுகாப்பு தொடர்பான அச்ச நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளதாக பல்லைக்கழக நிர்வாகம் கூறுகின்றது.

பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறும் சிங்கள மாணவர்கள்

மறு-அறிவித்தல் வரும்வரை பல்கலைக்கழகத்தின் அனைத்து விரிவுரைகளும் இடைநிறுத்தப்படவேண்டும் என்றும் மாணவர்கள் தத்தமது வீடுகளுக்கு திரும்புமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புடன் சிங்கள மாணவர்கள் குருநாகல் வரை விசேட வாகனங்களில் அனுப்பிவைக்கப்டப்டுள்ளார்கள்.

இச்சம்பவத்தையடுத்து பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், சிங்கள மாணவர்களையும் நிர்வாகத்தினரையும் சந்தித்து உரையாடினார். சிங்கள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அவர் தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



இலங்கையில் வெடிகுண்டுக்கான சாதனங்கள் மற்றும் வெடிகுண்டு கண்டெடுப்பு

கைப்பற்றப்பட்ட இலத்திரனியல் சாதனங்கள்

இலங்கையில் தலைநகர் கொழும்பின் புறக்கோட்டை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றிலிருந்து தற்கொலையங்கிக்குப் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மற்றும் இலத்திரனியல் சாதனைக்களைக் கண்டுபிடித்திருப்பதாக கொழும்பு பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

கொழும்பு புறக்கோட்டை ஓல்கோட் மாவத்தையில் அமைந்துள்ள புனித பிலிப்ஸ் கிறிஸ்தவ தேவாலய வளவினுள் இருந்து சுமார் 19 டெட்டோனேட்டர்கள், 23 ஆளிகள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலைக்குண்டு அங்கியொன்றினை பொருத்துவதற்காக இவை கொண்டுவந்து மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர்.

இது தொடர்பில் இதுவரை யாரும் கைதுசெய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

இதேவேளை, இலங்கையின் மத்திய மலைநகரமான கண்டியின் புறநகர்ப் பகுதியான பலகொல்லவில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவொன்று வீடொன்றின் அருகிலிருந்த மணல்மேடு ஒன்றிலிருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள வெடிகுண்டு ஒன்றைக் கண்டெடுத்துள்ளது.

அக்குண்டு செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உடனடி உதவிகள் தேவை: யாழ் ஆயர்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையேயான மோதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உடனடியாக உதவி வழங்குமாறு யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யுத்தம் காரணமாக ஒரு லட்சத்து 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக குறிப்பிட்ட யாழ் ஆயர், விரைவில் மழைக்காலம் துவங்கவுள்ள நிலையில், ஆதரவற்று திறந்தவெளியில் இருக்கும் மக்களுக்கு இருப்பிடங்களை அமைத்து தருவது உடனடித் தேவை என்று குறிப்பிட்டார்.

உணவு மற்றும் மருந்துப் பொருட்களை தடையற்ற முறையில் கொண்டுவருவதற்கு அரசு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதேநேரம் விடுதலைப் புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற அம்னேஸ்ட்டி இன்டர்னேஷனலின் குற்றச்சாட்டு குறித்து கூறுகையில், இக்குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை இருப்பதாக கூறிய ஆயர், அதேநேரத்தில் இருதரப்பினரும் இச்செயலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்கள் அவர்கள் விரும்பும் பகுதிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், குடும்பத்தில் ஒருவர் கட்டாய இராணுவப் பயிற்சிக்கு உட்படுத்தப்படுவதால், அந்தப் பகுதிகளில் இருந்து அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் அனைவரையும் புலிகளாக அரசு சந்தேகிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் நிலவும் சூழல் குறித்து யாழ் ஆயர் வெளியிட்ட கருத்துக்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


துணுக்காயைச் சுற்றிவளைத்துள்ளோம்: இலங்கை இராணுவம்

இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தளமாகிய துணுக்காய் நகரப்பகுதியை புதன் அதிகாலை முதல் இராணுவத்தினர் சுற்றிவளைத்து தாக்குதல்களை நடத்தி வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

துணுக்காய் நகரத்தின் வடக்கு மற்றும் மேற்குத் திசைகளில் இருந்து நகர்ந்துள்ள படையினர், புதன் காலை இடம்பெற்ற மோதல்களில் 2 விடுதலைப் புலிகளின் சடலங்களைக் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

மாங்குளம் – வெள்ளாங்குளம் வீதியில் அமைந்துள்ள துணுக்காய் நகர் விடுதலைப் புலிகளின் அதிமுக்கிய இடமாகக் கடந்த 25 வருடங்களாகத் திகழ்ந்து வந்துள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையத்தள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது விமானப்படையினர் தொடர்ச்சியாக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், ஓமந்தை பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் அடையாளம் காணப்பட்ட இலக்குகள் மீது உலங்கு வானூர்தி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

ஓமந்தைக்கு வடமேற்கே 7 கிலோ மீற்றர் தொலைவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா பகுதியில் புதன்கிழமை விடுதலைப் புலிகளின் நான்கு இலக்குகள் மீது விமானப்படையினர் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக வன்னிப் பிரதேசத்தில் இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் நேற்றைய சண்டைகளில் 14 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையதள அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் போர்முனைகளிலும், வெலிஓயா மற்றும் யாழ்ப்பாணம் கிளாலி பகுதிகளிலும் இந்த மோதல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.


இலங்கை அமைச்சர் மெர்வின் சில்வா நீதிமன்றத்தில் சரண்

இலங்கை நீதிமன்றம் ஒன்றினால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வா வியாழனன்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கு ஒன்றில் அவர் மீது கடந்த வாரம் இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அதேவேளை, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த பொலிஸார் தயக்கம் காட்டுவதாக குற்றஞ்சாட்டியும், அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது செய்யக் கோரியும் செய்தியாளர்களின் அமைப்புகள் வியாழனன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தின.

ஆயினும் அந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே அமைச்சர் நீதிமன்றில் சரணடைந்துவிட்டதாக கொழும்பில் இருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.


இலங்கையின் வடமத்திய மற்றும் சப்ரகமுவ தேர்தல் பிரச்சார இறுதி தினத்தில் வன்முறைகள்

இலங்கையின் தென்பகுதியில் எதிர்வரும் சனிக்கிழமை தேர்தல் நடக்கவிருக்கின்ற இரண்டு மாகாண சபைகளான வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் முடிவுக்கு வருகின்றன.

அரசியல் கட்சிகளும் மற்றும் சுயேச்சைக் குழுக்களும் தமது இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் இன்று ஈடுபட்டிருந்த அதேவேளை, அந்த மாகாணங்களில் இன்று பல்வேறுபட்ட வன்முறைகள் குறித்தும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அதிலும் குறிப்பாக இன்று தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி தினத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் உட்பட கணிசமான வன்செயல்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரும் மற்றும் உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களும் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், தீவைப்புகள், அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் மீதான தாக்குதல்கள் என்பன உட்பட கடந்த 24 மணி நேரத்துக்குள் மாத்திரம் பத்துக்கும் அதிகமான வன்செயல்கள் இந்த இரு மாகாணங்களிலும் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக அநுராதபுரம் மாவட்டத்தில் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் பிரதி அமைச்சர் துமிந்த திஸாநாயக்காவின் இணைப்பதிகாரி ஒருவர் உட்பட 2 பேர் காயமடைந்துள்ளனர்.

”தமிழர்களில் கணிசமானோரின் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்று குற்றச்சாட்டு”

இதேவேளை இலங்கையின் தென்பகுதியில் தமிழர்களை வாக்காளர்களாக பதிவதில் காட்டப்படும் பாரபட்சத்தின் காரணமாக சப்ரகமுவ மாகாணத்திலும் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியினர் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.

இதன்காரணமாக தோட்டத்தொழிலாளர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் அந்த கட்சியின் உபதலைவரான கணபதி கனகராஜ்

தேர்தல் திணைக்களம் இந்த விடயத்தில் காட்டும் அசிரத்தையும், தோட்டத்தொழிலாளர்களின் அக்கறையீனமுமே இதற்கு காரணம் என்றும் அவர் கூறுகிறார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


வவுனியாவில் சமுர்த்தி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் சமுர்த்தி பணியாளர்கள்
ஆர்ப்பாட்டத்தில் சமுர்த்தி பணியாளர்கள்

இலங்கையில் மக்கள் மத்தியில் வறுமையைத் தணித்து வாழ்க்கையை மேம்படுத்தும் சமுர்த்தி அதிகார சபையின் கீழ் பணியாற்றும் வவுனியா மாவட்ட சமுர்த்தி அலுவலர்கள் பதவி மற்றும் சம்பள உயர்வு கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பை விடுத்திருந்தது.

இதில் வவுனியா மாவட்ட தமிழ் சிங்கள நிர்வாக பிரிவுகளைச் சேர்ந்த சமுர்த்தி அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

இது பற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்


மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டம்

அமைதிப் போராட்டத்தில் மாணவர்கள்
அமைதிப் போராட்டத்தில் மாணவர்கள்

இலங்கையில் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு செல்ல மறுத்த தென்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் கொழும்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாப்பு காரணங்களால் வடக்கு மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாத நிலையில், தமக்கு தென்பகுதியில் உள்ள பல்கலைக்கழகங்களில் அனுமதி வழங்குமாறு பெரும்பாலான சிங்கள மாணவ, மாணவிகள் கோரியிருந்தனர்.

ஆயினும், இதுவரை அவர்களுக்கு இதுகுறித்து எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இவை குறித்த செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களின் நலனுக்கான சட்டமூலம்

இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான பாதுகாப்பு குறித்த சட்டமூலம் ஒன்றினை வரைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அதனை சட்டமாக்குவதற்காக உரிய அமைச்சரிடம் கையளித்துள்ளது.

இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களைப் பாதுகாப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்து அதனை ஒரு சட்டமூலமாக்குவதற்கான முயற்சிகளில் மனித உரிமைகள் ஆணையகம் ஈடுபட்டிருக்கின்றது.

பல வருடங்களாகத் தொடரும் உள்நாட்டு யுத்தம் மற்றும் சுனாமித் தாக்கம், இயற்கை அனர்த்தங்கள், பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவற்றினால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்திருக்கின்றார்கள்.

இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளவர்களில், போர்ச் சூழலினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்திருப்பவர்கள், நாட்டில் உள்ள ஏனைய மக்களைப் போன்று கௌரவமிக்க சுதந்திரமான வாழ்க்கையை வாழ முடியாதவர்களாக இருப்பதாகவும், மனித உரிமைகள் ஆணையகம் குறிப்பிடுகின்றது.

இந்த நிலையில் இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவற்றை மேம்படுத்துவதற்குமான சட்டமூலம் ஒன்றை அது வரைந்திருக்கின்றது.

இதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவிடம் அதனைக் கையளித்திருப்பதாக மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்திருக்கின்றது.

இடம்பெயருகின்ற மக்களின் உரிமைகளைப் பல்வேறு நிலைகளிலும் பாதுகாத்து, சமூக பொருளாதார அடிப்படையில் அவர்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதே இந்த சட்ட வரைவின் முக்கிய நோக்கமாகும் என்றும், இந்த வரைவு குறித்து பொது மக்களின் கருத்துகளைத் திரட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த ஆணையகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


வடக்கு அகதிகளுக்கு உதவுவது என்று கிழக்கு மாகாண சபை முடிவு

கிழக்கு மாகாண சபை
கிழக்கு மாகாண சபை

இலங்கையின் வடக்கே போர் இடம்பெறும் பகுதிகளில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அவசர நிவாரண உதவிகளை வழங்குவதற்கான தீர்மானம் ஒன்றை கிழக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ளது.

மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் கிளிநொச்சி மற்றும் அதனருகே உள்ள பகுதிகளைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு அவசர உதவிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பது என்றும் கிழக்கு மாகாண சபை முடிவெடுத்துள்ளது.

இவை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து பேசுவது என்றும் அங்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

எத்தகைய உதவிகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஜனாதிபதியைச் சந்தித்து பேசிய பின்னரே முடிவு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.


கட்புல வலுவிழந்தோருக்கான கிரிக்கட்

இந்திய கிரிக்கட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணியுடன் விளையாடிவரும் நிலையில் போர்மேகம் சூழ்ந்துள்ள இலங்கையின் வடக்கே வவுனியாவில் பார்வையிழந்தவர்களுக்கான கிரிக்கட் விளையாட்டுப் பயிற்சி நடைபெற்றுள்ளது.

வடக்கு கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இந்தப் பயிற்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டதாக இந்தப் பயிற்சியை வழங்கிய கட்புல வலுவிழந்தவர்களுக்கான தேசிய கிரிக்கட் கழகத்தின் தலைவர் ரியன்ஸி பெனடிக்ட் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சியை வவுனியா வலுவிழந்தோருக்கான புனர்வாழ்வு நிறுவனத்தின் தலைவர் வி.சுப்பிரமணியம் அவர்கள் ஒழுங்கு செய்திருந்தார்.

”ஒருவர் பார்வை இழந்திருக்கின்றார் என்பதற்காக அவரது – விளையாட்டுத்துறை சார்ந்த திறமைகள் பண்புகள் என்பன பாதிக்கப்படக் கூடாது, அவ்வாறு கட்புல வலுவிழந்தவர்களை ஊககுவிக்க வேண்டும்” என்பதே தமது கழகத்தின் நோக்கம் என்றும் கட்புல வலுவிழந்தவர்களுக்கான தேசிய கிரிக்கட் கழகத்தின் தலைவர் ரியன்ஸி பெனடிக்ட் கூறுகின்றார்.


வட இலங்கை நிலவரம் தொடர்பில் புலிகள் பொய்ப் பிரச்சாரம்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இலங்கையின் வடக்கில் யதார்த்த நிலை வேறு விதமாக இருக்க, வெளியுலகுக்கு பொய்யான பிரச்சாரம் செய்யப்படுகிறது என்றும், இடம்பெயர்ந்துள்ள மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர் என்றும் இலங்கை அரசின் சமூக சேவைகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கிழக்கில் செய்தது போலவே மக்களை மீட்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது என்றும், இது தொடர்பில் அந்தப் பகுதியிலுள்ள மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் தான் தொடர்பில் இருப்பதாகவும், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை களைவதில் அரசுக்கு மட்டுமல்ல விடுதலைப் புலிகளுக்கும் பொறுப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

தற்போது வடக்கு பகுதியில் ஆயிரக்காண ஏக்கர்கள் அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், அந்த நடவடிக்கையும் தடைபட்டுள்ளது குறித்து கொழும்பிலிருந்து கொண்டு அரசால் மட்டுமே பெரிய அளவில் எதுவும் செய்துவிடமுடியாது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டார்.


விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துகின்றனர்: அனைத்துலக அபய ஸ்தாபனம்

விடுதலைப்புலிகள் அமைப்பினர் இலங்கை அரசாங்கப் படைகளுக்கு எதிராக பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துவதன் மூலம், சர்வதேச சட்டங்களை மீறுவதாக மனித உரிமை அமைப்பான அனைத்துலக அபய ஸ்தாபனம் கூறுகிறது.

இலங்கை இராணுவ நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் வகையில், விடுதலைப்புலிகள் மக்களை பலவந்தமாக தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் தடுத்து வைத்துள்ளது குறித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அனைத்துலக அபய ஸ்தாபனத்தின் ஆய்வாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு உதவுவதற்கு அரசாங்கமும் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் நீண்ட காலமாக தொடரும் மோதலில், இராணுவ இலக்குகளை எட்டுவதற்காக இலங்கையில் போரில் ஈடுபடுகின்ற இரண்டு தரப்பினரும் பொதுமக்களை ஆபத்தில் விடுவதாக அபய ஸ்தாபனம் கூறியுள்ளது.

அபய ஸ்தாபனத்தின் தற்போதைய அறிக்கை குறித்து அந்நிறுவனத்தின் இலங்கை விவகார ஆய்வாளர் யோலாண்டா ஃபாஸ்டர் தமிழோசைக்குத் தெரிவித்தக் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



மன்னார் மடு ஆலயத்தில் ஆவணித் திருவிழாவை ஒட்டி திருப்பலி பூசை

இலங்கையின் வடமேற்கே இராணுவத்தின் வசமாகியுள்ள மடுக்கோவிலின் ஆவணி மாதத் திருநாளையொட்டி வெள்ளியன்று எளிமையான முறையில் திருப்பலி பூசை ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கின்றது.

நான்கு மாதங்களின் பின்னர் இந்த ஆலயத்தை திருச்சபையினரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான யாத்திரிகர்கள் இங்கு சென்றுவர அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

ஆயினும் வெள்ளிக்கிழமை விசேட தினமாதலால் நாட்டின் தென்பகுதியில் இருந்து 700 பேர் அங்கு வந்திருந்ததாக மடு பரிபாலகர் அருட்திரு எமிலியானுஸ்பிள்ளை அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார்.

வடபகுதியில் இருந்து யாத்திரிகர்கள் எவரும் இன்று வரவில்லை என்றும் அவர் கூறினார்.

சேதமடைந்திருந்த மடுக்கோவிலின் கட்டிடங்கள் திருத்தப்பட்டுள்ள போதிலும், பல்வேறு வசதியீனங்களுக்கு மத்தியிலேயே தாங்கள் அங்கு தங்கியிருப்பதாக அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளை தெரிவிக்கின்றார்.


விடுதலைப் புலிகளின் முக்கிய பயிற்சித் தளத்தை கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் கூறுகிறது

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஜீவன் தளம் எனப்படும் முக்கிய பயிற்சித் தளத்தை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் பிரசித்தி பெற்ற தளமாகிய ஒன்ஃபோர் தளம் எனப்படும் முகாமின் முக்கிய பகுதிகளில் ஜீவன் தளமும் ஒன்று என பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.

கைப்பற்றப்பட்டுள்ள இந்த தளத்தில் 1250 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நான்கு கட்டிடங்களும், 100 பதுங்கு குழிகளும், 35 கழிப்பறைகளும் இருப்பதாகவும், இந்தப் பகுதியில் உயிரிழந்த விடுதலைப் புலிகள் 69 பேரின் கல்லறைகள் காணப்பட்டதாகவும், பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையத்தள அறிக்iயில் தெரிவித்திருக்கின்றது.

எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

வவுனியா பாலமோட்டை, துணுக்காய், வெலிஓயா ஆகிய களமுனைகள் உட்பட்ட வன்னிப் போர்முனைகளில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 38 விடுதலைப் புலிகளும் 5 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

எனினும் வவுனியா பாலமோட்டை பகுதியில் இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியை முறியடித்துள்ளதாகத் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள் இங்கு இராணுவத்தினருடன் இடம்பெற்ற சண்டைகளில் 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளனர்.


வன்னியில் ஒன்றரை லட்சம் மக்கள் இடம்பெயர்ந்து அல்லப்படுவதாக புகார்

இடம்பெயர்ந்த மக்கள்
இடம்பெயர்ந்த மக்கள்

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக அந்தப்பிரதேசத்தினுள் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் இடம்பெயர்ந்து மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வீதியோரங்களில் மர நிழல்களில் பொது இடங்களில் தங்கியுள்ள இவர்கள் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருவதாகவும் இவர்களுக்குத் தேவையான அடிப்படை சுகாதார வசதிகளை வழங்குவது கடினமாகியிருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்ச்சியான எறிகணை வீச்சுக்கள், விமானக் குண்டுத் தாக்குதல்கள் காரணமாகவும் வேறு பல்வேறு பிரச்சினைகள் காரணமாகவும் உளவியல் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

வன்னிப்பிரதேசத்து நிலைமைகள் குறித்து அவர் எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகத்திடம் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


வன்னி பகுதிக்கு மனிதாபிமான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோரிக்கை

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரத்தினம்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரத்தினம்

இலங்கையில் வடக்கே வன்னிப் பிரதேசத்தில் தொடரும் இராணுவ நடவடிக்கை காரணமாக இடம் பெயர்விற்குள்ளாகியிருக்கும் மக்களின் துயர் துடைக்க, கிழக்கு மாகாண சபை அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் கோரிக்கையொன்று முன் வைக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கையை முன் வைத்து கடிதமொன்றை தமிழ் ஜனநாயக தேசியக்கூட்டமைப்பை சேர்ந்த மாகாண சபை உறுப்பினரான இரா.துரைரத்தினம் அனுப்பி வைத்துள்ளார்.

வன்னிப் பிரதேசத்தில் ஏற்கனவே இடம் பெயர்ந்தவர்களும், நிரந்தர வசிப்பாளர்களும் என ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்விற்கு உள்ளாகி அல்லல்படுவதாகவும், உணவு, உடை, குழந்தைகளுக்கான பால்மா உட்பட இவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைப்பது குறித்து அக் கடிதத்தில் தான் முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார்.

அத்தோடு மக்களை வெளியேறவிடாமல் விடுதலைப் புலிகள் தடுத்து மனிதக் கேடயமாக பயன்படுத்துவார்களானால் அது கண்டிக்க வேண்டியது என்றும்,
அதே போல மக்கள் குடியிருப்பு பகுதிகள் மீது அரசாங்கத்தினால்
மேற்கொள்ளப்படும் தாக்குதல்களினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் கூறுகின்றார்.


இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 1 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பெரும்போக விவசாயம்

பெரும்போக விவசாயத்திற்கு இலக்கு
பெரும்போக விவசாயத்திற்கு இலக்கு

இலங்கையின் கிழக்கு மாகாணப் பகுதியில் தற்போது சிறுபோக வேளாண்மைச் செய்கை முடிவடைந்து, பெரும்போக விவசாயச் செய்கையினை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்றன.

இந்த நிலையில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் ஒரு இலட்சம்
ஹெக்டேர் விவசாய விளைநிலத்தில் விவசாயம்
செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருவதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா தெரிவித்திருக்கின்றார்.

அத்தோடு விவசாயிகளுக்கு நிதி உதவி, விதை நெல் உதவி, நில மேம்பாடு மற்றும் இதர வசதிகளை விவசாய அமைச்சு செய்து கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விளைப்பொருட்களை சந்தைபடுத்தல் என்பது சுலபமான விஷயமாக தான் இருக்கும், என்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா தெரிவித்திருக்கின்றார்.

கல்விளான் மற்றும் முழங்காவில் ஆகியவற்றைக் கைப்பற்றியதாக இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கல்விளான் சிற்றூரையும், கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்தில் உள்ள முழங்காவில் பகுதியையும் விடுதலைப் புலிகளிடமிருந்து அரச படைகள் இன்று கைப்பற்றியிருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடமாகிய துணுக்காய்க்கு தென்மேற்கில் உள்ள கல்விளான் பகுதியை நோக்கி முன்னேறிய படையினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் கடுமையான பலநாள் எதிர் தாக்குதல்களுக்குப் பின்னர், இந்தப் பிரதேசத்தை இராணுவம் கைப்பற்றியிருப்பதாகக் கூறியுள்ள பாதுகாப்பு அமைச்சகம், நேற்று இந்தப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் 2 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.

எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

விடுதலைப்புலிகள்
விடுதலைப்புலிகள்

ஆயினும் வவுனியா நவ்வி, குஞ்சுக்குளம் பகுதிகளில் நேற்று இராணுவத்தினருக்கு எதிராக தாங்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் 18 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்தப் பகுதியில் முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

ஆனால், வவுனியா பாலமோட்டை பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் நேற்று மேற்கொண்ட நடவடிக்கைகளில் 9 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், இராணுவச் சிப்பாய் ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் இலங்கை இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

வவுனிக்குளம் மற்றும் வெலிஓயா களமுனைகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நேற்று மேற்கொண்ட தாக்குதல்களில் 5 விடுதலைப் புலிகளும், 4 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

நலன்புரி நிலையத்தில் மீண்டும் தீ

இரண்டாவது தடவையாக தீ விபத்து
இரண்டாவது தடவையாக தீ விபத்து

வவுனியா, பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் இன்று பகல் ஏற்பட்ட தீயினால் அந்த நலன்புரிநியைத் தொகுதியின் இரண்டு பிரிவுகளில் உள்ள 80 வாழ்விடங்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியிருப்பதாக வவுனியா பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில் 70 குடும்பங்கள் வசிப்பிடங்களை இழந்துள்ளதாகவும், சுமார் 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் தெரிவித்திருக்கின்றார்.

கடந்த மாதம் 17 ஆம் திகதியும் இதே இடத்தில் ஒரு தீ விபத்து ஏற்பட்டதும், அதிலும் நூற்ருக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதாகவும், இந்த நலன்புரிநிலையத் தொகுதியில் உள்ள பாடசாலை மண்டபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியோடு இந்த குழும்பங்களுக்குத் தேவையான அடுத்த கட்ட உதவிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் தெரிவித்தார்.



கிழக்கு இலங்கையில் ஆட்கடத்தல்கள், கொலைகள்

அம்பாறை மாவட்டம் கல்முனையில் ஒரு தாயும் மகனும் ஆயுதக் குழுவொன்றினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மேலும் மட்டக்களப்பு கொத்தியாவளை கிராமத்தில் புதன் நள்ளிரவு கடத்தப்பட்ட விவசாயியொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இருப்பினும் இக்கடத்தல்கள் மற்றும் கொலைக்கான பின்னனியோ, சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களோ இதுவரை கண்டறியப்படவில்லை என்று பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டம் நிலாவெளிப் பகுதியில் உள்ள காட்டுப் பிரதேசத்தில், புதன் மாலை விறகு வெட்டச் சென்ற இருவர் சுட்டுக்கொல்லபட்டுள்ளார்கள்.

விடுதலைப்புலிகளே இவர்களை சுட்டுக்கொன்றதாக ஆரம்கட்ட விசாரணைகளில் தெரியவந்ததாக படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் விடுதலைப்புலிகள் தரப்பில் இது குறித்து கருத்துக்கள் எதுவும் வரவில்லை.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

NorthEast Secretariat on Human Rights (NESoHR): 70,000 new Internally Displaced People (IDP) in Vanni in 60 days; SLA shelling targets another hospital zone in Vanni, IDP killed; Sri Lankan Soldiers Kill 15 Tamil Tigers; Jets Raid Rebel Bases

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 10, 2008

வட இலங்கை மோதல்களில் விடுதலைப் புலிகள் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளில், வன்னிக் களமுனைகளிலும், யாழ்ப்பாணத்தில் கிளாலி களமுனைகளிலும் சனியன்று இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 28 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா பாலமோட்டை முன்னரங்க பகுதிகளிலும், வெலிஓயா பகுதியிலும் இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது நேற்று நடத்திய தாக்குதல்களில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் விபரம் வெளியிட்டுள்ளது. பாலமோட்டை பகுதியில் இடம்பெற்ற சண்டைகளின் பின்னர் இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதலில் 2 விடுதலைப் புலிகளின் சடலங்களும் ஆயுதத் தளபாடங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

யாழ்ப்பாணம் கிளாலி பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது இராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதல் ஒன்றில் 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

முகமாலை பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு தாக்குதல் சம்பவத்தில் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

ஆனால் விடுதலைப் புலிகள் தரப்பு தகவல்களோ, வவுனியா பாலமோட்டை, குஞ்சுக்குளம், நவ்வி ஆகிய பகுதிகளில் இருந்து மும்முனைகளில் முன்னேறுவதற்கு முயன்ற இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன. இந்த மோதல்களில் 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.


மடு தேவாலயம் திரும்பியது மாதா திருச்சொரூபம்

மாதா திருச்சொரூபம்
மாதா திருச்சொரூபம்

இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தின் வசமாகியுள்ள மடுக்கோவிலுக்கு, மன்னார் ஆயர் இல்லத்தில் இதுவரை வைக்கப்பட்டிருந்த மடு மாதாவின் திருச்சொரூபம், சனிக்கிழமை மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டு கொலுவேற்றப்பட்டுள்ளதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்தார்.

கடந்த நான்கு மாதங்களாக உரிய பராமரிப்பின்றி இருந்த மடுக்கோவிலின் திருத்த வேலைகள் முடிக்கப்பட்டு உட்கட்டமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை, மடுக்கோவிலை பூஜை வழிபாட்டுக்குரிய புனிதமாக்கும் சமய வைபவங்களை மேற்கொள்வதற்காக கத்தோலிக்க மதகுருமார்கள் திங்கட்கிழமை அங்கு செல்லவிருப்பதாகவும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் தெரிவித்தார்.


வட இலங்கையில் அறுபதினாயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதை இலங்கை அமைச்சர் உறுதி செய்துள்ளார்

அமைச்சர் ரிசாத் பதியுதீன்
அமைச்சர் ரிசாத் பதியுதீன்

இலங்கைப் படையினருக்கும், விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும் இடையில் இலங்கையின் வட பகுதியில் தொடரும் மோதல்கள் காரணமாக அப்பகுதியில் அறுபதினாயிரம் மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் சபையின் முகவராண்மை கூறியதை இலங்கையின் மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஒப்புக்கொண்டுள்ளார்.

இருந்த போதிலும், அங்குள்ள மக்களுக்கான நிவாரண உதவிகள் ஆகஸ்டு மாதம் 15 திகதி வரைக்குமான அளவுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆனாலும், அங்குள்ள அரசாங்க அதிகாரிகளை தற்போதைய சூழ்நிலையில் தொடர்புகொண்டு மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதில் சில சிரமங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவை குறித்து அமைச்சர் ரிசாத் பதியுதீனின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


விமானக் குண்டுவீச்சில் விடுதலைப்புலிகளின் தளங்கள் அழிக்கப்பட்டதாக இராணுவம் கூறுகிறது- பொதுமக்கள் கொல்லப்பட்டதாக விடுதலைப்புலிகள் அறிவிப்பு

விமானக் குண்டு வீச்சு( ஆவணப்படம்)
விமானக் குண்டு வீச்சு( ஆவணப்படம்)

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய வன்னிப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட இலக்குகள் மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவிலும், சனிக்கிழமை காலையிலும் விமானப்படையினர் வான்வழி தாக்குதல்களை நடத்தி விடுதலைப் புலிகளுக்கு சேதம் ஏற்படுத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புக்கு மேற்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்தள்ள விஸ்வமடுக்குளம் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் ஒன்றின் மீது சனிக்கிழமை காலை 10 மணிக்கும், புதுக்குடியிருப்புக்கு வடக்கே உள்ள இரணைப்பாலையில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவு தளம் ஒன்றின் மீது இன்று காலை 9.55 மணிக்கும் விமானப்படையினர் விமானக்குண்டுத் தாக்குதல்களை நடத்தி அந்தத் தளங்களை அழித்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

பூநகரி பகுதியில் உள்ள நாகதேவன்துறைக்கு அருகில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் கண்காணிப்பு நிலையத்தையும், அதனோடு இருந்த படகுகள் நிறுத்துமிடத்தையும் விமானப்படையின் எம்.ஐ.24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகள் குண்டு வீசி தாக்கி அழித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டிருக்கின்றது.

எனினும் இரணைப்பாலை பகுதியில் இன்று காலை விமானப்படைக்குச் சொந்தமான தாக்குதல் விமானங்கள் மக்கள் குடியிருப்புக்கள் மீதே குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதில் ஆசிரியர் ஒருவர் உட்பட 2 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும், 12 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

ஆனால், அக்கூற்றினை விமானப்படையினர் மறுத்துள்ளனர். இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Two Indian fishermen killed: Sri Lanka Navy denies shooting the Indian Citizens

Posted by Snapjudge மேல் ஜூலை 13, 2008

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இரு தமிழக மீனவர்கள் பலி

தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டம் ஆற்காட்டுத் துறை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு காரணமாக உயிரிழந்ததாகவும், மூன்றவது மீனவர் படுகாயமடைந்ததாகவும் அப்பகுதி மீனவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து நாகப்பட்டிணம் ஆற்காட்டுத் துறை மீனவர் தலைவர் மயில்வாகனன் அவர்கள் கூறும் போது, சேது சமுத்திர திட்டத்திற்கான அகழ்வு பணிகள் நடைபெற்ற இடத்தில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு வந்த இலங்கை படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டு ஒருவர் காயமடைந்ததாக கூறினார்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தமிழக மீன் வளத் துறை அமைச்சர் கே பி பி சாமி அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்த சம்பவம் இந்திய எல்லையில் நடைபெற்றது போல தெரிகிறது என்றும், இருந்தாலும் இதனை விசாரணை மூலம் உறுதிப்படுத்த வேண்டியிருப்பதாகவும் கூறினார். கடந்த இரண்டாண்டு ஆண்டுகளில் இது போல பல சம்பவங்கள் இலங்கை படையினரால் நடத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் குறித்து இலங்கை அரசின் விளக்கத்தைப் பெற சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதர் பி எம் அம்சா அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இது குறித்த கேள்விகளுக்கு தற்போது தம்மால் பதில் கூற முடியாது என்றும்- ஒரு விளக்கத்தை மட்டுமே அளிக்க முடியும் என்றும், இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் குறித்து விசாரிக்கப்படுகின்றது என்ற விளக்கத்தை மட்டுமே அளிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இது குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


புதிய குடியேற்ற இடங்களை நிராகரித்துள்ளனர் சம்பூர் மக்கள்

இடம்பெயர்ந்தோர்
இடம்பெயர்ந்தோர்

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை இறால்குழியிலும், சின்னகக்குளத்திலும், குடியமர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இவ்விடங்களை ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் வழித்துணையுடன் நேரில் சென்று பார்வையிட்ட சம்பூர் பிரதேச குடியிருப்பாளர்கள் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த அகதிகளாக தங்கியிருக்கின்றார்கள்.

மூதூர் கிழக்கு இடம் பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கத்தின் தலைவரான குமாரசாமி நாகேஸ்வரன், புதிய குடியேற்றத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ள இடம், மக்கள் வாழ்வதற்கோ, தொழில் செய்வதற்கோ, சம்பூர் பிரதேசத்துடன் ஒப்பிடும் போது பொருத்தமற்றது என்றார்.

இடம் பெயர்ந்துள்ள குடும்பங்கள் விருப்பத்திற்கு மாறான இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட மாட்டார்கள் என மீள் குடியேற்றத்துறை அமைச்சரான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.


மன்னார் மற்றும் முல்லைத்தீவில் இருந்து 1400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்வு

இலங்கையின் வடக்கே வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரச படைகள் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இது வரையில் 1400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளதாக கிளிநொச்சி செயலகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள 600க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்டவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம், முழங்காவில், கரியாலை நாகபடுவான் பகுதிகளில் இருப்பதாக கிளிநொச்சி செயலகம் தெரிவித்திருக்கின்றது.

மன்னார் மாவட்டத்தில் தற்போது தீவிரமடைந்துள்ள மோதல் நிலைமைகளினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் இருந்து, இந்த மாதத்தில் மாத்திரம் 800 குடும்பங்களசை; சேர்ந்த 3500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் குடும்பங்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன், ஸ்கந்தபுரம் பகுதிகளுக்கு வந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவிக்கின்றார்.

தொடர்ந்து நடைபெற்று வரும் இடம்பெயர்வுகள் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உணவு வழங்கல் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது இது குறித்த செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையில் மொபைல் தொலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு புதிய நடைமுறைகள்

பயன்பாட்டாளர்களுக்கு புதிய நடைமுறைகள்
பயன்பாட்டாளர்களுக்கு புதிய நடைமுறைகள்

இலங்கையில் தேசிய பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி மொபைல் தொலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு மிகவும் இறுக்கமான நடைமுறைகளை இலங்கைத் தொலை தொடர்பு சீராக்கல் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.

இது தொடர்பாக, இலங்கை தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், மொபைல் தொலைபேசியை பாவிக்கும் ஒரு வாடிக்கையாளர், அந்த “சிம் கார்ட்” (Subscriber Identity Module) இணைப்பினை வழங்கிய நிறுவனத்தினால் வழங்கப்பட்ட உரிமைச் சான்றிதழை எப்போதுமே வைத்திருக்க வேண்டும் எனவும், மற்றமொரு நபரின் சிம்கார்டை பயன்படுத்தக் கூடாது என்றும் தொலைத் தொடர்புகள் சீராக்கல் ஆணைக்குழு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

பொறுப்பற்ற முறையில் தொலைபேசி இணைப்புக்களை பயன்படுத்துவோரால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களைக் குறைத்துக்கொள்வதற்கும், சட்டரீதியற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கங்களின் அடிப்படையிலேயே
இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தொலைத் தொடர்புகள் சீராக்கல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக சிங்கள மாணவர்கள் சேர்ப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழகம்
தென்கிழக்கு பல்கலைக்கழகம்

இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் எதிர் வரும் கல்வியாண்டு சிங்கள மாணவர்களை அனுமதிப்பது என பல்கலைக்கழ மானிய ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானத்தையடுத்து மட்டக்களப்பிலுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு 41 சத வீதமும் அம்பாறையிலுள்ள தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு 27 சத வீதமும் சிங்கள மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழத்திற்கு தெரிவாகியுள்ள 743 பேரில் தமிழர் – 358,சிங்களவர்கள் – 306 ,முஸ்லிம்கள் – 79 என்றும், தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள 518 பேரில் முஸ்லிம்கள் – 361 ,சிங்களவர்கள் 140 ,தமிழர்கள் – 17 என இந்த எண்ணிக்கை அடங்குவதாக பல்பலைக்கழக நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் மாணவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் சிங்கள மாணவர்கள் தெரிவாகியிருப்பது இதுவே முதற் தடவையாகும்.

இது தொடர்பாக அப்பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி ஹுசேன் இஸ்மாயில் மற்றும் உயர் கல்விப் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா ஆகியோர் வெளியிட்ட கருத்துக்களளைத் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இந்திய அரசு சோள ஏற்றுமதிக்கு தடை விதித்து இருப்பதால் இலங்கையில் கோழிப் பண்ணை தொழில் பாதிப்பு

கோழிப்பண்ணை தொழில் பாதிப்பு
கோழிப்பண்ணை தொழில் பாதிப்பு

இந்திய அரசு சோள ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதால், இலங்கையில் கோழிப் பண்ணைத் தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஏற்றுமதி தடை கால்நடைத் துறைக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலிருந்து சோள இறக்குமதி நின்று போயுள்ளதால் கோழித் தீவன உற்பத்தி இலங்கையில் பெரும் வீழ்ச்சியை சந்திக்கிறது என்று அகில இலங்கை கோழிப்பண்ணை சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று இலங்கையின் கால்நடை துறைக்கான பிரதி அமைச்சர் அப்துல் பாயிஸ் அவர்கள் பிபிசி தமிழோசையிடம் கருத்து தெரிவிக்கும் போது, தாங்கள் இது தொடர்பாக இந்திய அதிகாரிகளிடம் உடனடியாக தொடர்பு கொண்டு சோள ஏற்றுமதி தொடர்வதற்கான வழிவகைகளை ஆராயவிருப்பதாகவும், அதே சமயம் உள்நாட்டிலேயே சோள உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை தாங்கள் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரம் குறித்து விவாதிக்க திமுகவின் உயர்நிலைக் குழு கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.

இது குறித்து திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், எல்லை தாண்டி மீன்பிடிக்கின்றனர் என்பதை சாக்காக வைத்து, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர், இக்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மத்திய அரசை வற்புறுத்த மாநில அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது குறித்து முடிவெடுக்க உயர்நிலைக் குழு கூட்டம் எதிர்வரும் ஜூலை 17ஆம் நாள் நடைபெறும் எனக் கூறியிருக்கிறார்.

இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 9 நாட்களாக மீன்பிடிக்கச் செல்லாமல் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இண்டு தினங்களுக்கு முன்பு வேதாரண்யம் பகுதி மீனவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர், ஞாயிறன்றும்கூட துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் மிரட்டியதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் இராமேஸ்வரத்தில் பெரும் ஆர்ப்பாட்டடத்தை ஞாயிறன்று நடத்தியிருக்கிறார். தொடர்ந்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தமிழக அரசு மெத்தனமாக இருக்கிறது என கண்டன அறிக்கை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரிக்குமாறு கோரும் காங்கிரசிடம் பல்வேறு கட்சிகளும் பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்துவரும்போது, மீனவர்கள் பிரச்சினைக்காக ஏன் திமுக இன்னும் அழுத்தமாக குரல்கொடுக்கக்கூடாது என கேள்விகள் பல தரப்புகளிலிருந்தும் எழும் பின்னணியிலேயே திமுக கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை தொடர்வதன் அடிப்படைக் காரணங்கள் குறித்து திருவனந்தபுரத்திலிருந்து இயங்கும் தென்னிந்திய மீனவர் கூட்டுறவு அமைப்புகளின் சம்மேளனத்தில் கடல்வள மேலாண்மை துறை இயக்குநரும் இலங்கைக்கு இந்த பிரச்சினை குறித்து ஆராய சென்றுவந்தவருமான டாக்டர் பி.சுப்ரமணியன் வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


கொழும்பு புறநகர்ப் பகுதியிலிருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக குடிமக்கள் வெளியேற்றம்

இலங்கை முஸ்லிம்கள் – கோப்புப் படம்

இலங்கைத் தலைநகர் கொழும்பில் கொம்பெனித் தெருவில் வசிக்கும் பல நூறு குடும்பங்களை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியேற சொல்லியிருப்பதாக இலங்கை ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நடவடிக்கை ஏன் என்பது குறித்து இலங்கை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் செயலர் பிரதாப் ராமானுஜன் தமிழோசையில் கருத்து வெளியிடுகையில், சார்க் மாநாடு நடைபெறவிருக்கும் நிலையில், தலைநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்படுகின்றன என்றும் கொம்பெனித் தெரு பகுதியானது அதி உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் வருகின்றபடியால் அங்கிருப்பவர்களை வெளியேற்ற வேண்டிய ஒரு சூழல் உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொம்பெனித் தெருவில் கட்டப்பட்டுள்ள வீடுகள், ரயில்வே துறைக்கு சொந்தமான நிலத்தில் முறையான அனுமதியின்றி கட்டப்பட்ட வீடுகள் என்றும், இங்கு வசிப்பவர்களுக்கு மாற்றிடத்தில் வீடுகள் கட்டித்தருகின்ற பணி நடந்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது கொம்பெனித் தெருவில் வசிக்கும் மக்களுக்கு மாற்றிடத்தில் கட்டப்பட்டுவரும் நிரந்தர வீடுகள் கிடைக்கும் வரையில், அவர்கள் தாங்களாக பார்த்துச் செல்லும் வீட்டுக்கு வாடகை கொடுப்பதில் அரசாங்கம் உதவி செய்யும் என்றும், அல்லது அரசாங்கம் அமைத்துள்ள தற்காலிக குடியிருப்பில் அவர்கள் தங்கலாம் என்றும் ராமானுஜம் கூறினார்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

JVP call for the island wide strike in Sri Lanka; Opposition MP Joseph Michael Perera blames army for attacks on media

Posted by Snapjudge மேல் ஜூலை 10, 2008

09 ஜுலை, 2008

இலங்கையில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு ஜே வி பி அழைப்பு

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவிற்கு முகம் கொடுக்கும் நோக்கில் அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களிற்கு 5000 ரூபா மாதாந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படவேண்டும், தோட்டத்துறை ஊழியர்களுக்கு நாளாந்த சம்பளம் 500 ரூபாவாக அதிகரிக்கப்படவேண்டும் என்பனபோன்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி வியாழக்கிழமை நாடுதழுவிய ரீதியில் பொதுவேலை நிறுத்தப் போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

இந்த ஏற்பாடுகள் குறித்து கருத்துவெளியிட்டுள்ள ஜே.வி.பி யின் தொழிற்சங்கங்களின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கே.டி.லால்காந்த, அரச துறையிலுள்ள சுமார் 90 சதவீதமான தொழிற்சங்கங்கள் நாளைய தினம் இடம்பெறவுள்ள பொதுவேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ள சம்மதித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் இது ஒரு அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் மட்டுமே எனக்கூறியுள்ள லால்காந்த இந்தப் போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்காது போனால் இவ்வாறான போராட்டங்கள் எதிர்காலத்தில் தொடரும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் இலங்கையின் அரசியலமைப்பின் 14வது சரத்திற்கு அமைய மேற்கொள்ளப்படும் இந்தப் போராட்டத்தினைத் தடுத்து நிறுத்தும் வகையில் அரசு பொய்யான பிரச்சாரங்களிலும், எதிர் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருவதாகவும் ஜே.வி.பி குற்றஞ்சாட்டியிருக்கிறது.

ஜே.வி.பியின் இந்த பொதுவேலை நிறுத்த அழைப்பிற்கு பிரதான எதிர்க்கட்சியான ஜக்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், ஆளும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கம் இதனை முறியடிக்கும்படி தனது உறுப்பினர்களிற்கு இன்று அழைப்பு விடுத்திருக்கிறது.


செய்தியாளர்கள் மீதான தாக்குதலுக்கு இலங்கை இராணுவத் தளபதியே காரணம் என்று குற்றச்சாட்டு

இலங்கை இராணுவத் தளபதி ஃபொன்சேகா
இராணுவத் தளபதி லெப். ஜென். சரத் ஃபொன்சேகா

இலங்கையில் செய்தியாளர்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு அந்நாட்டின் மிக மூத்த இராணுவ அதிகாரியே காரணம் என்று முக்கிய எதிர்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற கொறடாவான ஜோசப் மைக்கேல் பெரேரா, இவ்வாறு செய்தியாளர்கள் மீதான தாக்குதலை நடத்துவதற்காகவே ஒரு சிறப்பு குழு இராணுவத் தளபதி லெப்டிண்ட் ஜெனரல் சரத் ஃபொன்சேகா அவர்களின் கட்டுப்பாட்டில் செயல்படுவதாக கூறியுள்ளார்.

ஆனால் இராணுவப் பேச்சாளர் இதை மறுத்துள்ளார்.

இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு முழு யுத்தத்தை அரசு நடத்தி வரும் நிலையில், ஊடகச் சுதந்திரம் குறித்து மனித உரிமை அமைப்புகளின் அதிகரித்து வரும் கவலைகளுக்கு இடையே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி மீதான இந்தக் குற்றச்சாட்டை எதிர் கட்சி உறுப்பினரான ஜோசப் மைக்கேல் பெரேரா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவரது இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார இது குறித்த ஆதாரம் நாடாளுமன்ற உறுப்பினர் வசம் இருக்குமாயின் அவர் போலீஸிடம் அதை எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கடந்த வாரம், எந்த ஒரு நிறுவனத்தையும் சாராமல், ராணுவ விவகாரங்கள் குறித்து எழுதி வரும் ஒரு தனிப்பட்ட செய்தியாளரும் கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரியும் ஒரு வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தப்போது மறைந்திருந்தவர்களால் உருட்டுக் கட்டைகளினால் தாக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் செய்தியாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர். 2005 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடக்கம் இதுவரை ஊடகத்துறையைச் சேர்ந்த 12 பணியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

போர் செய்திகளை வெளியிடுபவர்கள் துரோகிகள்

இலங்கையின் வடக்கே கடும் போர் நடைபெற்றுவருகிறது
இலங்கையின் வடக்கே கடும் போர் இடம்பெறுகிறது

இதனிடையே நாட்டில் நடைபெற்று வரும் போர் தொடர்பான செய்திகளை, ஒருதலைப் பட்சமாகவும் பொறுப்பற்ற வகையிலும் வெளியிடுவதாக தாம் கருதுவதற்கு எதிராக தமது கடுமையான ஆட்சேபணைகளை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

போரின் போது விடுதலைப் புலிகள் தரப்பில் ஏற்படும் இழப்புகள் குறித்து அதிகாரபூர்வமாக இராணுவம் வெளியிடும் தகவல்கள் குறித்த கேள்விகளை எழுப்புவது, இராணுவத்தில் வழங்கப்படும் பதவி உயர்வுகளை வினவுவது, இராணுவ தளவாடங்கள் வாங்குவதில் ஊழல் ஏற்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டுவது போன்ற செய்திகளை வெளியிடுபவர்களை துரோகிகள் என்றும் விரோதிகள் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் முத்திரை குத்தியுள்ளது.


யாழிலிருந்து கொழும்பு செல்ல புதிய கட்டுப்பாடுகள்

யாழ் பஸ் நிலையம்
யாழ் பஸ் நிலையம்

இலங்கையின் வடக்கே இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ் பிரதேசத்திலிருந்து வெளியிடங்களுக்குச் செல்வதற்குப் படையினரால் வழங்கப்படும் பிரயாண அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாற்றம் காரணமாக பிரயாண அனுமதி பெறுவதற்கு சுமார் 2 வாரம் காலம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு செல்லும் ஒருவர் தனது பிரயாணத்திற்கான காரணத்தை ஆதாரபூர்வமாகத் தெளிவுபடுத்தும் அதேவேளை, அங்கு தங்கியிருக்கப் போகும் உறவினர் அல்லது நண்பர்கள், தெரிந்தவர்களின் முழு விபரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்பதுடன், இந்த விபரங்கள் பொலிசாரின் ஊடாக அங்கு சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதிப்படுத்தப்பட்டு அது தொடர்பான அறிக்கை யாழ்ப்பாணத்தில் உள்ள படையினருக்குக் கிடைத்த பின்பே பிரயாண அனுமதி வழங்கப்படும் என்று யாழ்ப்பாணத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் பாக்கி

இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் பனம் இல்லை
கிரிக்கெட் வாரியத்திடம் பணம் இல்லை?

சமீபத்தில் ஆசியக் கோப்பையில் வெற்றிவாகை சூடிய, இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று இப்போது தெரியவந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் முந்தைய ஒப்பந்தம் பிப்ரவரிமாதத்தில் முடிவுக்கு வந்தது. கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய தலைவர் பொறுப்பேற்றதாலும், அணி வீரர்கள் வெளிநாடுகளுக்கு விளையாட சென்றிருந்ததாலும் இந்த காலதாமதம் ஏற்பட்டதாக கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்தார்.

கிரிக்கெட் வாரிய அதிகாரிகளும் விளையாட்டு வீரர்களும் இந்த பிரச்சினை குறித்து வியாழக்கிழமையன்று விவாதிக்கவுள்ளனர்.


07 ஜுலை, 2008

மன்னார் படுகை எண்ணெய் அகழ்வாய்வு: இலங்கை அரசுடன் இந்திய நிறுவனம் உடன்படிக்கை

மன்னாய் படுகையில் எண்ணெய் மற்றும் இயற்கை வாயுவை அகழ்வாய்வு செய்யும் அனுமதிக்கான பெட்ரோலிய வள உடன்படிக்கையொன்றில் இலங்கை அரசாங்கமும், கெயின் இந்தியா நிறுவனமும் திங்களன்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் மூத்த அமைச்சர்மார் முன்னிலையில் கைச்சாத்திட்டுக்கொண்டன.

அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட வைபவமொன்றில் இலங்கை அரசின் சார்பில் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியும், கெயின் இந்தியா நிறுவனத்தின் சார்பின் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளரும், பிரதம நிதி அலுவலருமான இந்திரஜித் பனர்ஜியும் கைச்சாத்திட்டனர்.

பின்னர் இடம்பெற்ற ஊடவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய இந்திரஜித் பனர்ஜி, இலங்கைக் கடற்பரப்பில் மன்னார் படுகை அகழ்வாய்விற்கு உட்படுத்தப்படவில்லை என்பதால் அந்த வகையில் அது ஒரு முன்னிலை பெட்ரோலிய வலயத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.

அத்துடன் ஆசியப் பிராந்தியத்தில் எண்ணெய் அகழ்வாய்வு வேலையில் அனுபவம்மிக்க தமது நிறுவனம், இங்கே வர்த்தகப்படுத்தக்கூடிய அளவிற்கு ஹைட்ரோகாபன் இருக்கிறதா என்பதனை உறுதிப்படுத்த பல மில்லியன் டாலர்கள்களை முதலீடுசெய்து, சிறந்த தொழில்நுட்பங்கள், மற்றும் தொழில்துறை நடைமுறைகளை பிரயோகிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


ஓமந்தை சோதனைச் சாவடி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

இலங்கையின் வடக்கே கடந்த ஒரு வார காலமாக மூடப்பட்டிருந்த ஓமந்தை சோதனைச் சாவடி பொதுமக்களின் போக்குவரத்துக்காக திங்களன்று பிற்பகல் திறக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சோதனைச் சாவடியில் உள்ள தமது அலுவலகத்தை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் மூடியிருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக பிரயாணம் செய்யும் பொதுமக்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைக் குழு பிரதிநிதிகள் ஆகியோரின் பாதுகாப்பு உரிய அதிகாரிகளினால் உறுதிப்படுத்தப்படும் வரையில் இந்த சோதனைச் சாவடியில் இருந்து தாங்கள் தற்காலிகமாக விலகியிருக்கப்போவதாக என்று சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் கூறியிருந்தனர்.

தற்போது ஓமந்தை சோதனைச் சாவடி தொகுதியில் பொதுமக்களினதும், தமது பிரதிநிதிகளினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, புதன் பிற்பகல் 3 மணிக்கு சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் ஓமந்தை சோதனைச் சாவடிக்குத் திரும்பியுள்ளதாக அந்தக் குழுவின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ண தெரிவித்தார்.

சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் கடமைக்குத் திரும்பியதை அடுத்து திறக்கப்பட்ட ஓமந்தை சோதனைச் சாவடி திங்களன்று சுமார் ஒரு மணித்தியாலம் மாத்திரமே திறந்திருந்ததாகவும், அரச ஊழியர்கள், பொதுமக்கள் என சுமார் 50 பேர்வரையில் மாத்திரமே வன்னிப்பகுதிக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் ஓமந்தை சோதனைச்சாவடிக்குச் சென்று தமது பிரயாணத்தைத் தொடரமுடியாமல் மீண்டும் வவுனியா நகருக்குத் திரும்பி வந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வன்னிப்பிரதேசத்திலிருந்து எவரும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இன்று வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் நாளை முதல் பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் வன்னிப் பிரதேசத்திற்கான அத்தியாவசிய பொருள் விநியோகம், வாகனப் போக்குவரத்து என்பன வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Posted in Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Italian Dragnet Arrests 28 for Financing Tamil Tigers; Sri Lankan Gun Battles Kill 25 Rebels, 7 Soldiers

Posted by Snapjudge மேல் ஜூன் 18, 2008

TamilNet: 16.06.08 Italian Tamils express support for Eezham homeland: “Diaspora Tamils in Northern Italy gathered Sunday for Pongku Thamizh rally held in Piazza Argentina in Milan, one of the largest cities in Italy, from 3:00 p.m. to 6:00 p.m., and voiced their support for Eezham Tamil homeland, Tamils right to self-determination, and protested against the Sri Lankan state’s aerial bombardment of Tamil civilians and rights violations of the Tamil people in Sri Lanka. Burani Vainer, a renown lawyer in Italy for his legal defence of freedom struggles, addressed the audience as a chief guest, on the principles of the right to self determination.

Around 50,000 Sinhalese expatriates live in Northern Italy. ”

இத்தாலியில் விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டில் முப்பதுக்கும் அதிகமானோர் கைது

விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் முப்பதுக்கும் அதிகமானோரை இத்தாலி எங்கிலும் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையொன்றின் போது அந்த நாட்டுப் பொலிஸார் புதன்கிழமை கைது செய்திருக்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால், விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கின்ற நிலையில், இத்தாலியில், உள்ள மக்களிடம் விடுதலைப்புலிகள் அமைப்புக்காக, மிரட்டிப் பணம் பறித்தார்கள் என்ற சந்தேகத்தின் மீது, இலங்கை தமிழர்களான இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இருநூறுக்கும் அதிகமான பொலிஸாரால் நடத்தப்பட்ட இந்த தேடுதல் வேட்டையின் மூலம், இத்தாலியில் விடுதலைப்புலிகளின் வலையமைப்பு நிர்மூலம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இத்தாலியின் வடக்கே ஜெனோவா நகர் முதல், மத்திய தரைக்கடலின் தீவான சிசிலியின், பலர்மோ நகர் வரை, அதிகாலைப் பொழுதில் ஒரே நேரத்தில், எட்டு வெவ்வேறு நகரங்களில் இருக்கின்ற விடுதலைப்புலிகளின் மறைவிடங்களில் இத்தாலியப் பொலிஸார் தேடுதல் நடத்தினார்கள்.

இத்தாலியில் வாழும் இலங்கைத் தமிழர்களிடம் விடுதலைபுலிகளின் ஆதரவாளர்கள் மிரட்டிப் பணம் பறித்து, இலங்கையில் மோதலில் ஈடுபடும் விடுதலைப்புலிகளின் தலைமைக்கு அனுப்புவதாக கடந்த இரண்டு வருடங்களாக இத்தாலியில் வாழும் இலங்கையரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் தாம் புலன் விசாரணை செய்து வந்ததாக பொலிஸார் கூறுகிறார்கள்.

இத்தாலிய வட்டகையில் இருந்து ஒளிபரப்பான விடுதலைப்புலிகளின் சட்டவிரோத பிரச்சார தொலைக்காட்சி ஒன்றை மூன்று மாதங்களுக்கு முன்னர் இத்தாலிய அதிகாரிகள் மூடினார்கள்.

இத்தாலியில் சுமார் ஐம்பதினாயிரம் இலங்கையர்கள் குடியேறி வாழ்கிறார்கள்.

பெரும்பாலும் சட்டவீரோதமாக அங்கு வந்த அவர்கள், அங்கு வேலை மற்றும் வதிவிட அனுமதியைப் பெற்று வாழ்கிறார்கள்.


வட இலங்கை மோதல்களில் பலர் பலி

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடமேற்கே மன்னார் நகரப் பொது விளையாட்டரங்கு காவல் நிலை மீது இன்று அதிகாலை விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மற்றுமொருவர் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

சிறிய ரக ஆயுதங்களைக் கொண்டு விடுதலைப் புலிகள் நடத்திய இந்தத் தாக்குதலை அந்த காவல்நிலையில் கடமையிலிருந்த பொலிஸாரும், இராணுவத்தினரும் எதிரத்தாக்குதல் நடத்தி முறியடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

வவுனியா ஓமந்தை இராணுவ முகாம் மீது நேற்றிரவு விடுதலைப் புலிகள் நடத்திய மோட்டார் தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவரும், இராணுவ முகாமில் பணியாற்றிய சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

இதேவேளை, இலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா, வெலிஓயா, முகமாலை நாகர்கோவில் ஆகிய முன்னரங்க பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களில் 25 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், இன்று அதிகாலை வரையிலான இந்தத் தாக்குதல் சம்பவங்களில் இராணுவ தரப்பில் மொத்தமாக 7 இராணுவத்தினரும், இராணுவ ஊழியரான சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகவும், 10 படையினர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

மன்னார் பெரியமடு பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 3 சடலங்கள் மற்றும் ஆயுத தளபாடங்களையும் இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கி;ன்றது, இந்த மோதல்கள் குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


Posted in Govt, Law, Order, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Heavy fighting in Mannaar, Sri Lanka: The war dividend; SLA cordon, search in Vadamaraadchi, Thenmaraadchi

Posted by Snapjudge மேல் மே 19, 2008

இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ள ஆளும் கட்சி உறுப்பினர்களிடையே மோதல் வலுக்கிறது.

இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கு தேர்தெடுக்கப்பட்ட பின்னர் முதல்வர் பதவிக்கு போட்டியிட்டு அது கிடைக்காமல் போன ஹிஸ்புல்லா அவர்களும் மேலும் இரு உறுப்பினர்களும் தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள பிள்ளையான் அவர்களுக்கு தாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லை என்று கூறி தனியாகச் செயல்படப் போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் தேர்தெடுக்கப்பட்டுள்ள மேலும் இரண்டு உறுப்பினர்கள் தமது தரப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக ஹிஸ்புல்லா அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார். அமைச்சர் அதாவுல்லா அவர்களின் தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர் எனவும், சில காரணங்களுக்காக அவர்களின் பெயரை தற்போது வெளியிட இயலாது எனவும் ஹிஸ்புல்லா கூறினார்.

எனினும் இவ்வாறான நடவடிக்கை தமிழ் மக்களுக்கோ அல்லது தற்போதைய முதல்வருக்கோ எதிரான ஒரு நடவடிக்கை இல்லை எனவும் அவர் தெரிவித்தார். அவரது பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்கள்

இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் திட்டமிட்டபடி இராணுவ நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் மன்னார் பாலம்பிட்டி பகுதியை அரச படைகள் கைப்பற்றி அங்கு தமது நிலைகளை பலப்படுத்தி வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

இது குறித்து இராணுவத்தின் தரப்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்கார கூறும்போது, இராணுவத்தினர் தற்போது மன்னார் பிரதேசத்தில் அடம்பன் பகுதிக்குள் முன்னேறியிருக்கின்றார்கள் என்றும், இப்போது இராணுவம் அடம்பனுக்கு வடக்கே செயற்பட்டு வருகின்றது என்றும் கூறினார்.

இதனிடையில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தின் வருடாந்திர விழாவையொட்டி, ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி இன்றும் ஞாயிற்றுகிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையில் திறந்திருந்தது என்றும் நாளையும் திங்கட்கிழமை ஓமந்தை சோதனைச்சாவடி காலை முதல் திறந்திருக்கும் என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறினார்.


வட இலங்கையில் உக்கிர மோதல்கள் நீடிக்கின்றன

இலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா, மணலாறு, முகமாலை ஆகிய முன்னரங்குகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இராணுவத்தினர் பரவலாக மேற்கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின்போது, இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இருதரப்பிலும் சேர்த்து குறைந்தது 82 பேர் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

ஞாயிறன்றைய சண்டைகளில் 58 விடுதலைப் புலிகளும் 21 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும், 3 இராணுவத்தினரைக் காணவில்லை என்றும் அந்த ஊடகத் தகவல் மையம் விபரம் வெளியிட்டிருக்கின்றது.

ஆனால் விடுதலைப் புலிகளோ, மன்னார் கருங்கண்டல்குளம் பகுதியில் தமது பிரதேசத்தை நோக்கி முன்னேறிய இராணுவத்தினருடன் நடைபெற்ற சண்டைகளில் 25க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும். 50க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

கொல்லப்பட்டவர்களில் 6 இராணுவத்தின் சடலங்கள் மற்றும் ஆயுதத் தளபாடங்கள் என்பவற்றையும் தாங்கள் கைப்பற்றியிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

இது குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

May 9 – Sri Lanka Updates: Eezham, LTTE

Posted by Snapjudge மேல் மே 10, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 12 மே, 2008

கிழக்கு மாகாண முதலமைச்சர் யார்?

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆகக்கூடுதலான இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில், எந்தக் கட்சி ஆகக்கூடுதலான இடங்களை பெற்றுள்ளதோ, அந்தக் கட்சிக்கே முதலமைச்சர் பதவியை வழங்குவது என்று தேர்தலுக்கு முன்னதாக உடன்பாடு காணப்பட்டதாக அந்தக் கூட்டமைப்பின் செயலாளரான அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் யார் என்று தமிழோசையின் சார்பில் கேட்கப்பட்டதற்குப் பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் அவர்கள், இந்த உடன்பாட்டின் அடிப்படையில், தமது கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பில் முதலமைச்சர் யார்?, என்ற இறுதி முடிவு எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து இந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற முஸ்லிம் உறுப்பினர்களில் ஒருவரான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கூறுகையில், கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக இடங்களைப் பெறுகிறார்களோ, அவர்களில் ஒருவரே முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்று முன்னமே உடன்பாடு ஏற்பட்டிருந்ததாகவும், ஆகவே முஸ்லிம்களே இந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் அதிகம் வெற்றிபெற்றதால், தானே முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இவர்கள் இருவரும் தமிழோசைக்கு வழங்கிய செவ்விகளை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கிழக்கு மாகாணத் தேர்தல் மோசடியானது என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்

வாக்கு மோசடியின் அடிப்படையிலேயே கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபைத்தேர்தல் முடிவுகள் குறித்து தமிழோசையிடம் பேசிய அவர், இந்த தேர்தலில் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மக்களின் அபிலாசைகள் மறுக்கப்பட்ட நிலையில், மக்கள் விரும்பாத நிலையிலுமே இந்தத் தேர்தல் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். அவரது முழுமையான செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையில் கிழக்கு மாகாண சபைக்கு நடந்த தேர்தலில் மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மூன்று மாநிலங்களையும் சேர்த்து மாகாண சபையில் உள்ள 37 இடங்களுக்கு (போனஸ் இடங்கள் 2 உள்ளடங்க) நடந்த இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு 20 இடங்களும், முக்கிய எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சித் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கு 15 இடங்களும், தமிழ் ஜனநாயக தேசிய முன்னணி ஒரு இடமும், ஜே.வி.பி. எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு இடமும் பெற்றுள்ளன.

மாவட்ட அளவில் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:

மட்டக்களப்பு

  • ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி – 6
  • ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி – 4
  • தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டணி – 1

அம்பாறை

  • ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி – 8
  • ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி – 6

திருகோணமலை

  • ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி – 5
  • ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி – 4
  • மக்கள் விடுதலை முன்னணி – 1

மாகாண அளவில் முக்கியக் கட்சிகளின் வாக்கு வீதம்

  • ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி – 52.21%
  • ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி – 42.38%
  • மக்கள் விடுதலை முன்னணி – 1.59%
  • தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டணி – 1.30%

இருபது ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் கிழக்கு மாகாண சபைக்கு தற்போது தேர்தல்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் முடிவடைந்துள்ளன

இலங்கையில் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. கிழக்கு மாகாணத்திற்கு தேர்தல் நடத்தி அதிகாரத்தை அளிப்பதன் மூலம் கிழக்கு மற்றும் வடக்கில் தனி நாடு கோரி வரும் விடுதலைப் புலிகளுக்கு முட்டுக்கட்டை போட முடியும் என அரசாங்கம் எண்ணுகிறது.

இந்தத் தேர்தலில் கடந்த 2004 ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த வேட்பாளர்களும் பங்ககேற்றுள்ளனர். இவர்கள் அதிபர் மஹிந்த ராஜ பக்ஷ அவர்களின் ஆளும் கட்சியின் கூட்டணியில் சேர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இன்றைய தேர்தலின் போது ஆங்காங்கே வன்முறைகள் இடம்பெற்றதாகவும், வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்டதாகவும் எதிர்கட்சி தலைவர் ரவூஃப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார். அத்தோடு தங்களுடைய குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் ஏற்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர் நஜீப் ஏ மஜீத் மறுக்கிறார்.


திருகோணமலையில் கடற்படை கப்பல் மூழ்கடிப்பு

இச்சம்பவம் திருகோணமலையில் நடந்துள்ளது
இச்சம்பவம் திருகோணமலையில் நடந்துள்ளது

இலங்கையின் கிழக்கே துறைமுக நகரான திருகோணமலையில் கடற்படைக்கு சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்றை விடுதலைப் புலிகள் வெடிவைத்து மூழ்கடித்துள்ளனர்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பிப்பதற்கு சில மணி நேரம் முன்பாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இலங்கை கடற்படை சார்பாகப் பேசவல்ல தளபதி தஸ்ஸநாயக இச்சம்பவம் பற்றிக் குறிப்பிடுகையில், புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர் நீருக்குள் மூழ்கி கப்பலுக்கடியில் வெடிவைத்துள்ளார் என்று தாங்கள் நம்புவதாகவும் ஆனால் இந்தச் சம்பவத்தில் ஆட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

வட இலங்கையில் மோதலில் ஈடுபட்டுவரும் அரச படையினருக்கான வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் அந்தக் கப்பலில் இருந்ததாக விடுதலைப் புலிகள் கூறுகின்றனர்.

இந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் குறித்த செய்திகளை நேயர்கள் இன்றைய தமிழோசையில் கேட்கலாம்.


இலங்கையின் வடக்கில் தொடரும் மோதல்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் நெடுங்கேணிக்கு வடக்கே விமானப்படை விமானங்கள் சனிக்கிழமை பிற்பகல் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் எறிகணை வீச்சு பீரங்கி நிலையொன்று அழிக்கப்பட்டுள்ளதாகத் இலங்கை அரசின்தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

இந்தப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் மணலாறு பிரதேசத்தில் உள்ள சிங்ளக் கிராமங்கள் மீது எறிகணை தாக்குதல்களை நடத்தி வருவதனாலேயே இந்த நிலைமீது படையினர் தாக்குதல் நடத்தியதாக அந்த ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது. எனினும் இந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் உடனடியாகத் தகவல் எதனையும் வெளியிடவில்லை.

இதனிடையில் மன்னார் கறுக்காய்க்குளம் பகுதியில் இராணுவத்தினருடன் வெள்ளிகிழமை இடம்பெற்ற உக்கிர சண்டைகளில் கொல்லப்பட்ட இராணுவத்தின் 5 சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்படுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மன்னார் கறுக்காய்க்குளத்திற்கு அடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் ஆலங்குளம் பகுதியில் நேற்று விடுதலைப் புலிகளுடன் பல மணித்தியாலங்கள் இடம்பெற்ற கடும் சண்டைகளில் 33 விடுதலைப் புலிகளும் 8 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது. விடுதலைப் புலிகள் வசமிருக்கும் இந்தப் பிரதேசத்தில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவான பகுதியை வெள்ளிகிழமை இடம்பெற்ற இந்தச் சண்டைகளின்போது படையினர் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 10 மே, 2008 – பிரசுர நேரம் 16:59 ஜிஎம்டி

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருணா மீது வழக்கு தொடர போதிய ஆதாரம் இல்லை என பிரித்தானிய அரசு தரப்பு கூறியுள்ளது

கருணா மீது மேலதிக வழக்குகளை தொடருவதற்கான போதிய ஆதாரங்கள் கிடையாது என்று பிரித்தானிய அரச வழக்கு தொடுப்பு சேவை கூறியுள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற கருணா என்ற வினாயகமூர்த்தி முரளீதரன், பிரிட்டனில் அடையாள ஆவணங்கள் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டு, ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதில் ஒரு பகுதிக் காலத்தை கழித்த நிலையில், கடந்த வியாழனன்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவரை குடிபுகல் துறை தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக தகவல்கள் வந்திருக்கின்றன. இந்த நிலையில் அவர் இலங்கையில் போர்க்குற்றங்கள் இழைத்தார் மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகளை எழுப்பிய மனித உரிமை அமைப்புகள் அவர் மீது இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று குரல் எழுப்பியிருந்தன.

ஆனால் பிரிட்டனின் அரசு வழக்கு தொடுப்பு துறையான கிரவுன் பிராசிக்யூஷன் சர்வீஸ், கருணா மீது மேலும் எந்த ஒரு குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கித் தருமளவுக்கு யதார்த்த ரீதியான வாய்ப்புகளைத் தரும் ஆதாரம் போதிய அளவில் இல்லை என்று லண்டன் பெருநகர காவல் துறைக்கு அறிவுறுத்தியிருப்பதாக பிபிசி தமிழோசைக்குக் கூறியிருக்கிறது.

எனவே இந்த நிலையில், கருணா இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் சாத்தியக்கூறு அதிகமாகியிருக்கிறது.

பிரிட்டிஷ் அரசின் இந்த முடிவு குறித்து மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இண்டர்னேஷனல், ஏமாற்றம் தெரிவித்திருக்கிறது. இன்று அது வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், சித்ரவதை செய்தது, பணயக்கைதிகளை பிடித்து வைத்திருந்தது, சிறார்களை படையில் சேர்த்தது, சிறார்களை போரில் பயன்படுத்தியது உள்ளிட்ட போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒரு உடனடியான, முழுமையான, பக்கச்சார்பற்ற மற்றும் சுதந்திரமான விசாரணையை சர்வதேச சட்டப்படி பிரிட்டன் நடத்தவேண்டும் என்று கூறியிருக்கிறது.


அம்பாறையில் குண்டுவெடிப்பு; 11 பேர் பலி

குண்டு வெடித்த சமயத்தில் விடுதியில் கூட்டம் அதிகம் இருந்தது

இலங்கையில் சனிக்கிழமையன்று தேர்தல் நடக்கவுள்ள கிழக்கு மாகாணத்தின் மாவட்டங்களில் ஒன்றான அம்பாறையில், வெள்ளியன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு ஒன்றில் 11 பேர் கொல்லப்பட்டும் 24 பேர் காயமடைந்தும் இருப்பதாக வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அம்பாறை நகரத்தில் பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள சிட்டி கபே என்னும் உணவு விடுதியிலேயே இந்த குண்டு வெடித்ததாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார கூறியுள்ளார்.

கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பலர் அந்த விடுதியில் அமர்ந்திருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இது பார்சல் குண்டாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


மன்னார் மாவட்டத்தில் உக்கிர சண்டை

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் கட்டுக்கரைக் குளத்திற்கு வடக்கே உள்ள ஆலங்குளம் பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர சண்டைகளில் குறைந்தது 33 விடுதலைப்புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. இந்த மோதல்களில் 5 படையினர் காணாமல் போயிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

வெள்ளியன்று விடுதலைப் புலிகளின் பலம் பொருந்திய முன்னரங்கு பகுதிகளை உடைத்துக்கொண்டு முன்னேறுவதற்காக இராணுவத்தினர் பல முனைகளில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின்போது இரு தரப்பினருக்கும் மோதல்கள் மூண்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

படையினருக்கு உதவியாக எம்.ஐ 24 ரக தாக்குதல் உலங்கு வானூர்தியும் தாக்குதல் விமானங்களும் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தி அவர்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியதாகக் கடற்படை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மன்னார் கறுக்காய்க்குளம் பகுதியில் வெள்ளியன்று இராணுவத்தினருடன் கடும் மோதல்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், இராணுவத் தரப்பில் 30க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதாகவும், 5 இராணுவத்தினரின் சடலங்களையும், இராணுவ தளபாடங்களையும் தாங்கள் கைப்பற்றியிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டம் அடம்பன் நகரப்பகுதியை இன்று காலை 9 மணியளவில் இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

பல மணித்தியாலங்கள் விடுதலைப் புலிகளுடன் இப்பகுதியி;ல் நடைபெற்ற சண்டைகளில் குறைந்தது 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், இராணுவ தரப்பில் 2 படையினர் கொல்லப்பட்டு, மேலும் 7 பேர் காயமடைந்ததாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

மன்னார் கட்டுக்கரைக்குளத்திற்கு வடக்கே அடுத்தடுத்து அமைந்துள்ள ஊர்களான ஆலங்குளம் மற்றும் கறுக்காய்க்குளம் பகுதியில் இருதரப்பினருக்கும் இடம்பெற்ற இந்தச் சண்டைகள் பற்றிய தகவலை விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார்.

அவர் தெரிவித்த மற்ற விபரங்கள் அடங்கிய செய்திக் குறிப்பினை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கையின் கிழக்கே துறைமுக நகரான திருகோணமலையில் கடற்படைக்கு சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்றை விடுதலைப் புலிகள் வெடிவைத்து ழூழ்கடித்துள்ளனர்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பிப்பதற்கு சில மணி நேரம் முன்பாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இலங்கை கடற்படை சார்பாகப் பேசவல்ல தளபதி தஸ்ஸநாயக இச்சம்பவம் பற்றிக் குறிப்பிடுகையில், புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர் நீருக்குள் மூழ்கி கப்பலுக்கடியில் வெடிவைத்துள்ளார் என்று தாங்கள் நம்புவதாகவும் ஆனால் இந்தச் சம்பவத்தில் ஆட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

வட இலங்கையில் மோதலில் ஈடுபட்டுவரும் அரச படையினருக்கான வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் அந்தக் கப்பலில் இருந்ததாக விடுதலைப் புலிகள் கூறுகின்றனர்.

இந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் குறித்த செய்திகளை நேயர்கள் இன்றைய தமிழோசையில் கேட்கலாம்.

Posted in Govt, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , | Leave a Comment »